ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
   
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
                  திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - ஞாயிறு
பாலைவனத்துக் கூக்குரலை கேட்டு மனம் மாற வந்திருக்கும் பாசத்திற்கு உரியவர்களே!
B தவக்காலம்1  
நம் இதயத்தை சோலைவனமாக்க பாலைவனத்தில் ஒலிக்கும் கூக்குரலை எதிரொலிக்கச் செய்கிறது, இந்த திருவருகைக்கால இரண்டாம் ஞாயிறு திருப்பலி!

'ஆண்டவருக்கான வழியை ஆயத்தமாக்குங்கள். கடவுள் அருளும் மீட்பை காண வாருங்கள்' என ஒலிக்கும் பாலைவனக் கூக்குரலை கவனமுடன் கேட்டு நம் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் நம் வாழ்க்கையே பாலைவனமாகும்.

கரடு முரடான எண்ணத்தை கைவிடுவோம்! ஏற்றத் தாழ்வான பேச்சுக்களை தள்ளி வைப்போம்!. பள்ளமான உள்ளங்களை நிரம்பி வழியச் செய்வோம். குன்றுகளாய் குடியிருக்கும் தற்பெருமை உணர்வுகளை தகர்ப்போம்  கோணலான வாழ்க்கையை நேராக்குவோம்  சீரழிக்கும் சுயநல சிந்தனைகளை சீராக்குவோம் <<<<<<<<<<<<<

உலகம் சமநிலை பெற, நம் உறவுகள், உணர்வுகள் சமநிலை பெற, உயிருள்ளவை அனைத்தும் சமநிலை பெற வாழும் கலையைக் கற்றுக்கொள்வோம். அப்போது பாலைவனம் கூட சோலைவனமாகும்!

அழைக்கும் திருப்பலியோ, ஓலிக்கும் வார்த்தைகளால் கரடு முரடான வாழ்க்கையை மாற்றி அமைத்திட இறையருள் தருகிறது. ஆண்டவன் அருளும் மீட்பைக் காண இணைந்து செபிப்போம்.

 
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. மிகுந்த வல்லமையோடு வருகின்ற எங்கள் இறைவனே!
பயத்தினாலும், பேராசையினாலும் பிளவுபட்டிருக்கும் இந்த உலகிற்கு மீட்பர் வர வேண்டுமென்று வேண்டுதல் எழுப்பும் எம் திருச்சபையை ஆசிர்வதியும். உமது வருகைதிருச்சபையையும் அதை ஆள்வோரையும் பலப்படுத்தட்டும். நீர் வந்து கதவைத்தட்டும் போது இறைமக்கள் விழிப்போடு கதவைத் திறக்கவும், உறங்கிக் கொண்டிருக்கும் எங்கள் உள்ளத்தை தட்டி எழுப்பி நம்பிக்கையோடு உம்மை சந்திக்கச் செய்யவும் திருச்சபைத் தலைவர்களுக்கு அருள் புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. விழிப்போடு காத்திருப்போருக்கு உம் திரு மகனைக் காணச் செய்கின்ற இறைவா!
நாடுகளின் தலைவர்கள் அமைதிக்காக அன்போடு உழைக்கவும், தற்பெருமை நீக்கி பலவீனம் களைந்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியின் நிறைவு காண ஆளும் அதிகாரத்தைப் பயன்படுத்தவும், நல்லபுரிதலையும் மனப்பக்குவத்தையும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. கனிவுடன் எமைக் காத்து வரும் கனிவான தெய்வமே!
உமது வார்த்தையானவரின் வருகைக்காக எங்கள் இதயக்கதவினைத் திறந்து உம்மை வரவேற்க எமை ஆயத்தமாக்கிடும் எங்கள் பங்குத்தந்தைக்காக உம்மை மன்றாடுகிறோம். மாட்சி மிக்க உமது பிறப்பை நாங்கள் கண்டு மகிழ, அவர் எடுக்கும் முயற்சிகளால் புதுப் படைப்பாக நாங்கள் உருமாற கனிவுடன் அருள்புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உமது வருகையின் அருளால் இவ்வுலகை நிரம்பி வழியச் செய்யும் இறைவா!
நகரங்களிலும் நாட்டுப்புறங்களிலும் பிழைப்புத்தேடி உழைப்போருக்கு, காணாமல் போன உறவுகளை உடமைகளைத் தேடுவோருக்கு, காயம்பட்டவர்களுக்கு, பெருஞ்சுமையைத் தாங்க இயலாதவர்களுக்கு, நோயில் தனிமையில், முதுமையில், வறுமையில் வாடுவோருக்கு, இங்கே உம் திருமுன் கூடி நின்று கண்ணீரோடு தங்கள் விண்ணப்பங்களை கேட்டுக் கொண்டிருப்போருக்கு உமது வருகையின் அருள் புத்துலகின் பாதையைக் காணச் செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. உமது அன்பு மகன் வழியாக எங்களை வழி நடத்துகின்ற இறைவா!
அனைவருக்கும் நீர் செய்த ஆற்றல் மிகு அற்புதங்கள் அனைத்திற்கும் நன்றி கூறுகிறோம். தொடர்ந்து உம் அற்புதங்களை எங்கள் வாழ்வில் அன்றாடம் சந்திக்கவும் எங்கள் குடும்பங்களில் குழந்தைகள் அறிவில் ஆற்றலில் தெய்வீக ஆவியால் வளரவும், குடும்பங்களில் நிலவுகின்ற பிரச்சனைகளில் ஒருவர் ஒருவருக்கு தோள் கொடுத்து தூக்கி விடவும், நலன்களால் அயலாரைத் தாங்கிக் கொள்ளவும் அருள் புரியவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6.அளவற்ற அன்புக்கு அடித்தளமான இறைவா!
இயற்தைச் சீற்றத்தாலும், தொற்று நோயினாலும் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், இழப்புகளிலிருந்தும் எங்களைக் காப்பற்றியருளும். உறவுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிப்போரை அரவணைத்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய இந்த திருவருகைக் காலத்தை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள எங்களுக்கு நல்மனதினைத் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்..
 


 
மறையுரை சிந்தனைகள்
பாலைவனத்தை சோலைவனமாக்குவோம்.!


அது ஒரு மிகப் பெரிய பாலைவனம் ஆள் நடமாட்டமில்லாத இடம். அங்கே ஜிம் மட்டும் எப்போதும் ஆடிப் பாடி ஜம்மென்று திரிவான். தப்பித் தவறி யாரேனும் அந்த பாலைவனப் பகுதியை கடக்கும்போது ஜிம் கண்ணில் பட்டுவிட்டால், கையில் இருப்பதை பறித்துக் கொண்டு அடித்து குற்றுயிரும் குலை உயிருமாய் போட்டுவிடுவான். கொலை கொள்ளைக்கு அடிமையான தன்னைப் பற்றியும், பிறரைப் பற்றியும் வாழ்க்கையில் கவலைப்பட்ட வரலாறே இல்லை!

ஒருமுறை தம்பதியர் ஒருவர் தம் பச்சிளம் குழந்தையுடன் வழிதெரியாது பாலைவனப் பகுதிக்குள் வந்துவிட்டனர். ஜிம் கண்ணில் அகப்பட்டும் விட்டனர். அந்த சின்னக் குழந்தையை கையில் இருந்து பறித்தான். குழந்தையோ கொஞ்சமும் பயமின்றி அவனைப் பார்த்து சிரித்தது! தம்பதியரோ எங்களை ஒன்றும் செய்து விடாதே என்று அழுது புலம்பினர். ஆனால் இரக்கமற்ற ஜிம் அந்த தம்பதியரை கொன்றுவிட்டான்! அப்போதும் அந்தக் குழந்தை சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது. இரவானதும் குழந்தை தூங்கிவிட்டது! ஜிம் அப்படியே அமர்ந்திருந்தான். அப்போது கடவுள் ஜிம் முன் தோன்றினார். " ஜிம் உன்னிடமிருந்து ஒன்றை எனக்குத் தருகிறாயா?" எனக் கேட்டார் அதற்கு ஜிம் " தான் வைத்திருக்கின்ற பொருட்கள் எல்லாவற்றையும் தருகிறேன்" என்று சொன்னான். " நீ வைத்திருப்பது எல்லாம் நானும் வைத்திருக்கிறேன். ஆனால் என்னிடம் இல்லாதது ஒன்று உன்னிடம் உள்ளது. அதை எனக்குத் தா" என்று கேட்டார். ஜிம் திகைத்து " அது என்ன?" என்று கடவுளைக் கேட்டான். அப்போது கடவுள் சொன்னார். " இந்தப் பாலைவனத்தில் நீ நடந்து செல்லும் கரடு முரடான பாதை என்னிடம் இல்லை, அதைத் தா" என்றார். ஜிம் உடனே தனது பாவ வாழ்க்கையை புரிந்து கொண்டான். தனது கடந்த கால வாழ்க்கையை விட்டு விட்டு மனம் திரும்பி புதிய வாழ்க்கை வாழ தன்னை முழுவதும் கடவுளிடம் ஒப்புக் கொடுத்தான். அன்று முதல் ஜிம் தன் வாழ்க்கையை மாற்றி அயலாரை நேசித்து அன்பு கலந்த வாழ்க்கை நடக்கத் துவங்கினான். கடவுளும் அவனது புதிய வாழ்க்கையை பல மடங்கு ஆசீர்வதித்தார்.
நமது வாழ்க்கையில் பாலைவனத்தில் ஒலிக்கும் குரலொலி கேட்கிறதா?
ஜிம் போலத் தான்தோன்றித் தனமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா?
கடவுளைக் கண்ட பின் வாழ்க்கையை மாற்றிக் கொண்ட ஜிம் போல, மாறும் ஆர்வம் நமக்கு உண்டா?
பாவத்தை ஒத்துக் கொண்டு மனம் திரும்பி வாழும் மனநிலை நமக்கிருக்கிறதா?
கரடு முரடான பேச்சுக்கள், கரடு முரடான செயல்பாடுகள் இன்றைய சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறது. அதை மாற்ற என்றாவது சிந்தித்தது உண்டா?
நடந்து செல்லும்போது வழியில் கொள்ளையடிப்பதும், கொலை செய்வதும் அன்றாட நடைமுறை நிகழ்வாக பரவிக் கிடக்கிறது!
நமது இன்றைய வாழ்க்கை நிலையில் எந்த மாதிரியான கரடு முரடுகளில் இருந்து நாம் விலக வேண்டும்.
அன்றாட வாழ்க்கையில் அன்பையும், அமைதியையும், நேர்மையையும், வெளிப்படுத்த தடையாக இருக்கின்ற தன்னல உணர்வை தகர்த்தெறிவோம்.
தீமை தரும் தீய உணர்வுகளை நெறிப்படுத்துவோம்.
நன்னெறி உணர்வுகளை நாற்றுகளாய் நமது குடும்பத்தில் நட்டு வைப்போம்.
சமூகம் அமைத்துள்ள ஏற்றத் தாழ்வுகளுக்குத் துணை போகாது நல்லன செய்ய முன் வரவேண்டும்.
குழந்தைச் செல்வங்களை நன் மாதிரியான வழிகளில் வளர்த்தெடுப்போம்.
கோணலான வாழ்க்கையை நேராக்கி வாழ்வோம்.
பாவ இச்சைகளுக்கு, போதை பழக்க வழக்கங்களுக்கு, தகாத உறவுகளுக்கு அடிமைப்பட்டு கிடந்தால் அவற்றை அகற்றுவோம்.
பிறரைப் பற்றிய தப்பெண்ணங்களை களைவோம்
நீதியும் நேர்மையும் ஒன்றை ஒன்று சந்திக்காமல் அநீதி வேகமாக வெற்றி பெற்று வருகிறது!
ஜாதிகள், ஊரார், இனத்தார் கூடிக் கொண்டு தேவையில்லாத செய்தியை விமர்சிப்பது கூட தவறு என உணர்ந்தோமா?
பெருந்தன்மையோடு பிறரின் நலனுக்கு உகந்த செயல்களை செய்து, நாமும் நமது அயலாரும் இறைவன் அருளும் மீட்பை கண்டு மகிழ்வோம்.
பாலைவனக் கூக்குரலை மனதுக்குள் பூக்குரலாய் ஏற்று நந்தவனமாய் வாழ்க்கையை மாற்றுவோம்
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.

ஆயத்தமா(க்)குவோம் வாருங்கள்
எசாயா 40 1-5, 9-11
2 பேதுரு 3: 8-13
மாற்கு 1; 1-8

அடர்ந்த காடு ஒன்று இருந்தது.
அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் . அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். எனவே தலைவர் போட்டிகளை அறிவிக்கும்படி தன்னுடைய உதவியாளர்களுக்குக் கட்டளையிட்டார். நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இருவருமே வீரத்திலும் , வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்துவிட்டது. இருவரையும் நேரடியாக மோதவிட்டால் , பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி. தலைவருடைய மனம் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே வேறோரு திட்டத்தை முடிவு செய்தார். மறுநாள் இரண்டு வீரர்களையும் அவருடைய இடத்துக்கு வரவழைத்தார். " இளைஞர்களே! இதுவரை உங்களுடைய செயல்களால் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள். இப்போது நடக்கப் போவது இறுதிப் போட்டி. இதில் ஜெயிக்கும் ஒருவன்தான் தலைவனாக முடி சூட்டப்படுவான். இப்போது உங்கள் இருவருக்கும் சில ஆயுதங்களும் , சமையல் பாத்திரங்களும் , நம்முடைய உணவு தானியமான சோளம் ஒரு மூட்டையும் கொடுக்கப்படும். நம்முடைய ஆட்கள் உங்கள் இருவரையும் நம்முடைய காட்டுக்கு அருகிலிருக்கும் வெவ்வேறு தீவுகளில் படகில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து விடுவார்கள். நீங்கள் உங்களிடம் இருக்கும் தானியத்தை சமைத்து சாப்பிட்டு அது தீரும்வரை காட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் . தீர்ந்த பிறகு காட்டில் இருக்கும் மஞ்சள் மரத்தின் கிளைகளை ஒடித்துக் கடற்கரையில் வைத்துக் கொளுத்துங்கள். அதிலிருந்து வரும் புகையைக் கண்டவுடனேயே இங்கிருந்து படகை அனுப்பி உங்களை மீட்டுக் கொள்ளுவோம் . உங்களில் யார், கையில் இருக்கும் தானியத்தை அதிக நாட்கள் பயன்படுத்தி அந்தத் தீவில் தாக்குப் பிடிக்கிறீர்களோ அவன்தான் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்படுவான் " என்றார். மஞ்சள் மரம் என்பது அந்தக் காடுகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு மரம். அதை எரிக்கும் போது எழும்பும் செம்பழுப்பு நிறப் புகை நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

தலைவர் சொன்ன நிபந்தனைகளை இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டு ஆளுக்கொரு தீவுக்குப் பயணமானார்கள் .அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் ஆளுக்கொரு தீவில் விடப்பட்டார்கள். போட்டி ஆரம்பமாகிவிட்டது . இரு இளைஞர்களும் ஆளில்லாத தீவுகளில் வசிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு தீவுகளிலும் எங்கேனும் செம்பழுப்பு நிறப்புகை எழும்புகிறதா என்று பார்த்தபடி எந்நேரமும் படகை எடுத்துச் செல்ல ஆயத்தமாக ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள். நாட்கள் ஓடின. மூன்று மாதம் முடிந்தது. படகுக்காரர்கள் ஏதேனும் தீவிலிருந்து புகை எழும்புகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையிலிருந்து புகை எழும்பியது. உடனே ஒரு படகு புறப்பட்டுப் போய் அங்கே எலும்பும் தோலுமாக இருந்த இளைஞனை அழைத்து வந்தது. அவன் கரைக்கு வந்ததும் மற்றவன் இன்னும் வந்து சேரவில்லை என்பதை அறிந்து திடுக்கிட்டான். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு தலைவரிடம் சொன்னான்." தலைவா, எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சோளம் இரண்டு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தும் நான் சாமர்த்தியமாக இத்தனை நாள் தாக்குப் பிடித்திருக்கிறேன். அவனும் என்னைப் போலத்தாக்குப் பிடித்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே ஓரிரு நாட்கள் பார்த்துவிட்டு எனக்கே பதவியைக் கொடுக்க வேண்டுகிறேன் " என்றான்.

தலைவருக்கு அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் அச்சம் உண்டாகிவிட்டது . இருந்தாலும் இன்னும் சிறிது நாட்கள் பொறுமையாக இருக்க முடிவு செய்தார். இன்னும் சிறிது நாட்கள் ஓடி மறைந்தன. நான்கு மாதங்கள் கழிந்து விட்டன. தலைவருக்கே சந்தேகம் வலுத்து விட்டது. தானே நேரில் சென்று பார்த்து விட முடிவு செய்தார். படகோட்டியை அழைத்து ஒரு படகை எடுக்கச் சொன்னார் .இரண்டு மணி நேரத்தில் படகு அந்தத் தீவை அடைந்து விட்டது. அவனை உயிரோடு காணப் போகிறோமா அல்லது துஷ்ட மிருகங்கள் தின்று தீர்த்த எலும்புக் கூடாய்ப் பார்க்கப் போகிறோமா? என்ற அச்சத்தில் அவருக்கு நெஞ்சு படபடத்தது. ஏனென்றால் தீவுகளுக்குச் சென்ற சிலர் பசியில் இறந்ததும் உண்டு. இந்தப் போட்டியை அறிவித்தது கூடத் தவறோ என்று மனம் கலங்கினார். கொஞ்சதூரம் காட்டுக்குள் நடந்ததுமே தான் கண்ட காட்சியில் திடுக்கிட்டுப் போனார். ஆம் . அங்கே மூங்கிலாலும், ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகான வீடு அவர்களை வரவேற்றது. அதிலிருந்து அவர்கள் தேடி வந்த இளைஞன் ஓடிவந்தான். முன்னை விட நல்ல புஷ்டியாக மாறி இருந்தான். தலைவரை வணங்கி வரவேற்றான்.

" உள்ளே, வாருங்கள் தலைவா " என்று அழைத்துச் சென்று அமர வைத்தான். உள்ளே ஓடிப்போய் சூடான சோள அடையும், மீனும் கொண்டு வந்து கொடுத்தான். தலைவருக்கோ ஒன்றும் புரியவில்லை." உனக்குக் கொடுக்கப் பட்ட சோளம் மூன்று மாதத்துக்குள் முடிந்திருக்குமே . நீ என்னவென்றால் அருமையான சோள அடையால் எங்களை வரவேற்கிறாய். நீயும் நன்கு சாப்பிட்டு கொழுத்திருக்கிறாய். இது எப்படி சாத்தியம் ? " என்றார்.
" கொஞ்சம் என்னோடு வாருங்கள் தலைவரே" என்று அவன் அவரை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றான். அங்கே அழகான சோளக் கொல்லை ஒன்று உருவாக்கப் பட்டிருந்தது. அவன் சொன்னான்," தலைவா, நான் வந்த அன்றே எனது தானியத்திலிருந்து ஒரு பங்கை எடுத்து விதைத்து வைத்து விட்டேன். இரண்டு மாதங்களிலேயே அறுவடைக்குத் தயாராகிவிட்டது. நான் எந்தக் கவலையுமில்லாமல் நிறைவாக சாப்பிட்டேன். இந்த நான்கு மாதம் மட்டுமல்ல . இன்னும் எத்தனை வருடம் வேண்டுமென்றாலும் என்னால் இங்கே சந்தோஷமாய் வாழ முடியும் " என்றான். தலைவர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.
" நீ தடுமாறிப் போவாய் என்று எண்ணி இந்தப் போட்டியை வைத்தேன் . நீயோ உன் அறிவாலும் , உழைப்பாலும் என்னைத் திணறடித்து விட்டாய் . நாட்டுக்கு ஒரு நல்ல தலைவனைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி, என்றார்.

*கையில் கொடுக்கப் பட்டதைத் திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்ளுகிறவர்களே ஜெயிக்கிறார்கள்.
அது பொருளாக இருந்தாலும், வாழ்க்கையானாலும், நேரமானாலும்.*
இக்கதையில் வரும் மனிதன் போல எந்நிலையிலும் ஆயத்தமாயிருந்து கிடைத்ததை கொண்டு நம் வாழ்வை மெருகேற்ற இறைவன் அழைக்கின்றார். நமது பாதையை நேரத்தை செயலை ஆயத்தமாக்குவோம். நாமும் ஆயத்தமாகுவோம். திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரத்தில் இருக்கும் நம்மை ஆயத்தமாக்க, ஆயத்தமாக வாழ இறைவன் அழைக்கின்றார்.

பாதையில் ஆயத்தம்:
முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் வாயிலாக நம் வழியை செம்மைப்படுத்த சொல்கின்றார். நெடுஞ்சாலைகள், பள்ளத்தாக்குகள், மலை குன்றுகள், கரடு முரடான பாதைகள் என அனைத்தையும் சீர்படுத்தச்சொல்கின்றார். ஆயத்தம் என்பது நம் உடலளவில், மனதளவில் என்று அகம் சார்ந்த ஒன்று மட்டுமன்று அது புறம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். பாதைகள் நாம் செல்வதற்கு மட்டுமன்று நம்மைப் போல் பிறரும் செல்ல பயன்படும். கதையில் வரும் மனிதன் தன்னுடைய நாளைய உணவிற்காக அந்த சோளக்கொல்லையை ஏற்படுத்தி இருந்தாலும் தனக்கு பின் வரும் தன்னுடைய சந்ததிகளுக்கும் அவற்றை விட்டுச்செல்கின்றான். நம்முடைய தயாரிப்பும் ஆயத்தமும் நம்மை சார்ந்ததாக மட்டும் இல்லாமல் நமக்கு பின் வருபவர்களுக்கு வழிவகை செய்வதாக அமைய வேண்டும். இன்று இந்தியாவில் விவசாயிகள் தலைநகரில் போராடிக் கொண்டு இருப்பது அவர்களுக்கான பாதைக்கான ஆயத்தம் மட்டுமல்ல, அது தனக்கு பின் வரும் தன்னுடைய சந்ததிகளுக்கான பாதையினை சரிசெய்யும் ஆயத்தம். நாம் செல்கின்ற பாதை யாரோ அன்று உருவாக்கியது. நாம் இன்று உருவாக்கும் பாதை நாளை யாரோ செல்ல பயன்படும்.

நேரத்தில் ஆயத்தம்:
ஆண்டவரின் பார்வையில் ஒரு நாள் என்பது1000ஆண்டுகள் போலவும் 1000 ஆண்டுகள் ஒரு நாள் போலவும் இருக்கின்றன. அவர் நம்முடைய மனமாற்றத்திற்காக பொறுமையோடு காத்திருக்கின்றார். அவர் காலங்களைக் கடந்தவர். அவர் நமக்காகக் காத்திருப்பது போல நாம் அவருக்காக காத்திருக்க அழைக்கின்றார். அவர் வரும் நேரத்தை எதிர் நோக்கி ஆயத்தமாயிருக்க பணிக்கின்றார். அவர் எந்நேரத்திலும் வரலாம் அவர் வரும் நாளோ நேரமோ யாருக்கும் தெரியாது. திருடனைப் போல வரும் என்கின்றார். திருடன் வரும் நேரம் யாரும் அறிய முடியாது. எனவே ஒரு நாளின் எல்லா வேளையிலும் மிக விழிப்பாக இருக்க அழைக்கின்றார். நம்மில் பலர் இன்று நம்முடைய பொன்னான நேரத்தை வீண்பேச்சிலும் வெட்டியான பொழுது போக்குகளிலும் செலவிட்டு கொண்டு இருக்கின்றோம். நம்முடைய நேரத்தை மனமாற்றத்திற்காகவும், பயன்படுத்துவதை விடுத்து நாட்களையும் நேரத்தையும் விரயமாக்கிக் கொண்டு இருக்கின்றோம். அவரது இரண்டாம் வருகையின் போது நாம் வாழ்கின்ற இந்த மண்ணுலகமும் அதன் செயல்பாடுகளும் அழிந்து போகும். எனவே தான் கடவுள் என்றுமே அழியாத தூய இறைப்பற்று உள்ளவர்களாய் நடத்தையில் சிறந்து விளங்க அழைக்கின்றார். எனவே நம்முடைய நேரத்தை இறைவனை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்துவோம். மாசு மறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய் காணும்படி வாழ முயற்சி செய்வோம்.

செயல் ஆயத்தம்;
திருமுழுக்கு அருளப்பர் இயேசுவுக்காக வழியை ஆயத்தம் செய்தார். அவர் பாலை நிலத்தில் இருந்து முழக்கம் இடுகின்றார். பாலை நிலம் அரவம் அற்ற ஒரு இடம் அங்கு எதற்காக முழக்கமிட வேண்டும் என்று நான் எண்ணியதுண்டு. பல நேரங்களில் மேடை நாடகமோ நடனமோ செய்ய இருப்பவர்கள் தங்களுக்கு தாங்களே ஒத்திகை தனிமையில் பார்த்து கொள்வதுண்டு . தன்னுடைய குரலும் செயலும் அரங்கேற்றத்திற்கு சரியானது தான் என்று அவரவர் பரிசோதனை செய்த பிறகே அதனை பிறர் முன் செய்து காட்டுவர். மேலும் அந்த தனிமையில் நம்முடைய செயலின் பிரதிபலிப்பும் குரலின் எதிரொலியும் நமக்கு நம்மிடம் உள்ள குறைகளை வெளிப்படுத்தும். பாலை வனத்தில் யோவானின் குரல் அவரது செயலை சரிவர செய்ய அவருக்கு உதவியது. தன்னை ஆயத்தப்படுத்திய பின் பிறரையும் ஆயத்தமாயிருக்க வலியுறுத்துகின்றார். பாலைவனத்தில் ஒன்று முழங்குகின்றது என்ற எசாயாவின் இறைவாக்கு பல ஆண்டுகள் கழித்து திருமுழுக்கு யோவான் மூலம் நிறைவு பெறுகின்றது. எசாயாவின் குரல் எதிரொலிப்பு, யோவானின் பிரதிபலிப்பாகின்றது. அவரின் செயலால் இயேசுவின் பாதையை சரி செய்கின்றார். நேரத்தை அறிவிக்கின்றார். மனம் மாற அழைக்கின்றார்.

இயேசுவின் வருகைக்காக காத்திருக்கும் நாம் நமது பாதையை, நேரத்தை, செயலை சரி செய்ய ஆயத்தப்படுத்த இறைவன் அழைக்கின்றார். இதனால் தூயவர்களாக இறைப்பற்று உள்ளவர்களாக நாம் மாறுவோம். மாசு மறுவற்றவர்களாய் நல்லுறவு கொண்டவர்களாய் நாம் மாற முயற்சிப்போம் ஆயத்தமாகுவோம் பிறரையும் பிறவற்றையும் ஆயத்தமாக்குவோம். இறைவனின் ஆசீரும் அருளும் என்றும் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவதாக இறையாசீர் என்றும் நம்மோடு. ஆமென்.



 
  மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி Osm
 அன்பினால் வந்த மனமாற்றம்.
              நகருக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார்.  தென்னங்கீற்றுகளால் வேயப்பட்ட கூரைக்கொட்டகை தான் அவருடைய வீடு. தனது வேலைகளையெல்லாம் முடித்து விட்டு, வீட்டிற்கு அருகில் உள்ள ஆலமரத்தில் தினமும் தியானம் செய்வார். அவ்வப்போது துறவிக்கு உணவு கொடுப்பார்கள் அப்பகுதி மக்கள்.  துறவியும் தனக்கு இருக்கும் ஒரே சொத்தான திருவோட்டில் வாங்கிக் கொள்வார். தினந்தோறும் தன்னை நாடி வரும் மக்களுக்கு, வாழ்க்கை பற்றிய எதார்த்தங்களை எடுத்துரைப்பார். அவர்கள் கூறும் பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வை எடுத்துரைப்பார். அவர் போதனையால் பலர் மனமாற்றம் அடைந்தனர். தனது ஆறுதலான வார்த்தைகளால், அன்பான பேச்சால்,  கருணை நிறைந்த பார்வையால் அவ்வூர் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தார்.  இந்த செய்தி அந்நாட்டு மன்னனின் காதுக்கு எட்டியது.  தனது நாட்டில் நிலவிக் கொண்டிருந்த பலவிதமான பிரச்சனைகளுக்கு விடை தேடிக்கொண்டிருந்த மன்னன்,  துறவியின் நற்சிந்தனையைப் பற்றிக் கேள்விப்பட்டு, துறவியை தனது அரண்மனைக்கு அழைத்தான். துறவியும் மன்னனரின் அழைப்பை ஏற்று அரண்மனைக்குச் சென்றார். மன்னரின் பிரச்சனைகளுக்கு, மிகவும் சரியான தீர்வுகளை எடுத்துரைத்து, மன்னரின் மனதை மகிழ்ச்சியால் குளிர்வித்தான் துறவி.  பரவசமடைந்த மன்னன், 2கிலோ எடையுள்ள தங்கத்தால் ஆன திருவோட்டை  பரிசாக வழங்கினான். முதலில் மறுத்த துறவி பிறகு மன்னரின் வற்புறுத்தால் பெற்றுக் கொண்டான்.  பிறகு தனது குடிசைக்கு வந்த துறவி, அன்று இரவு மன்னன் கொடுத்த திருவோட்டை  தலைக்கு, தலையணையாக வைத்து ஆழ்ந்து உறங்கினான். துறவிக்கு தங்க திருவோடு கொடுக்கும் போது பார்த்துக் கொண்டிருந்த அரண்மனை வேலைக்காரன் ஒருவன்,  இந்த திருவோட்டை எப்படியாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டான்.  அதனால் அன்று இரவு துறவி தங்கிருநத குடிசைக்கு வந்தான். அந்த திருவோட்டை துலாவிக்கொண்டிருந்தான் நடுராத்திரியில். ஆள் நடமாட்டம் தனது குடிசைக்குள் இருப்பதை உணர்ந்த துறவி விழித்துக் கொண்டார்.  " யாரப்பா.....அது? " என்று வினவினார் துறவி.  வந்தவன் ஒன்றும் பேசாமல் நின்றான். துறவி மீண்டும்  என்ன தங்க திருவோட்டைத் தேடுகிறாயா?  என்றார்.  வேலைக்காரன் மெல்லிய குரலில் ஆமாம் என்றான்.  இந்தா..... எடுத்துக் கொள்... என்று, தனது தலைக்கு அணையாக வைத்துக் கொண்ட தங்கத் திருவோட்டை எடுத்துக் கொடுத்தார்.  பிறகு அடுத்த நொடியே ஆழ்ந்த நித்திரைக்கு சென்று விட்டார்துறவி.  இருட்டில் தன்னை யாரென்று துறவிக்கு அடையாளம் தெரியாது என்ற மகிழ்ச்சியால்  தனது வீட்டிற்கு திரும்பினான் வேலைக்காரன். ஆனால் வீட்டில் அவனது மனைவியும் ,பிள்ளைகளும் அவரை வெறுப்பாக் பார்க்க ஆரம்பித்தனர்.

                               இரண்டு, மூன்று நாட்கள் கழித்து, அந்த வேலைக்காரன் துறவியின் குடிசைக்கு வந்தான.  திருவோட்டை  துறவியின் கையில் கொடுத்து விட்டு, அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். ஏன் திரும்ப கொடுத்துவிட்டாய் என துறவி வினவிய போது.., சாமி நான் இந்த திருவோட்டை எடுத்துச் சென்றதிலிருந்து, என் தூக்கத்தையும்  நிம்மதியையும் இழந்தேன்,  அச்சத்தாலும், நடுக்கத்தாலும் ஆட் கொள்ளப்பட்டேன். என் உண்மை நிலை என்றாவது ஒரு நாள் தெரிந்து விடும் என்ற பயம், நாளுக்கு நாள் என்னை அச்சுறுத்தியது. என் நிம்மதியை தொலைத்த இந்த தங்க திருவோடு எனக்கு வேண்டவே வேண்டாம் சாமி... என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று அழுதான். திருவோட்டை கொடுத்துவிட்டு நிம்மதியாக உறங்கிய அந்த துறவி சொன்னார்.... மகனே...!  வெளியில் தேடும் எந்தப் பொருளும் நமக்கு நிம்மதியையு, சந்தோஷதையும் தருவதில்லை. மாறாக இறைவனின் அன்பு ஒன்றே நமக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தேடித்தரும் என்று சொன்ன துறவி,  அவனுடைய மனமாற்றத்தை நினைத்து மகிழ்ச்சியடைந்தார் துறவி. நாமும் நமது தவறுகளிலிருந்து மனமாற்றம் பெற்று, இறைவனின் அன்பை அனுபவிக்க அழைக்கப்படுகிறோம்.

                       ஆம்!  திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரத்தில் இருக்கும் நாம், இறைவனின் அன்பை நம் உள்ளத்தில் பெற, அன்பு என்ற ஒளியேற்றி , ஆண்டவரை வரவேற்க,   நம்மை நாமே ஆயத்தப் படுத்த, மனமாற்றம் பெற இறைவன் நம்மை அழைகின்றார்.  கிறிஸ்துவின் வருகைக்காக தயாரித்துக் கொண்டிருக்கும் நாம், வெளித் தயாரிப்புகளுக்கு மத்தியில் உள் தயாரிப்பை மறந்து விடக் கூடாது என்பதற்காகத் தான், திருமுழுக்கு யோவான் கூரை மேல் நின்ற கோழியைப் போல, மனம் மாறுங்கள், ஆண்டவருக்காக பாதையை செம்மையாக்குங்கள் என்று அனைவரின் செவிகளுக்கும் கேட்கும் வகையில்  ஒலிக்கிறார்.  திருமுழுக்கு யோவான் இயேசு வருவதற்காக ஏற்பாடுகளை செவ்வனே செய்கின்றார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் ஒரு நிகழ்விற்கு, சிறப்பு விருந்தினரை அழைத்தோமென்றால், அவர் சிறப்புரையாற்றுவதற்கு முன், அவரைப் பற்றிய நற்பண்புகளை மற்றவர்கள் முன் மகிழ்ச்சியுடன் எடுத்துரைக்கிறோம்.  இத்தகைய  சிறப்புக்குரியவர் உங்கள் முன் உரையாற்ற இதோ.....! என்று நமது உரையை முடிக்கிறோம். கடவுளால் படைக்கப்பட்ட  ஒரு சாதாரண மனிதனின் நற்செயல்களை பற்றி மற்றவர்கள் முன் அறிவிக்கும் போது,  இவ்வுலகை பாவத்திலிருந்து மீட்க , இறைமகன் இயேசு வருவதற்கான ஏற்பாடுகளை முன்னறிவிக்க வேண்டாமா?  அதை தான் திருமுழுக்கு யோவான் செய்கிறார். நம்மையும் அவ்வாறு செய்ய அழைகின்றார்.  தனது வாழ்க்கையால், போதனையால் மற்றவர்களை மனமாற்றிய துறவியைப் போல, நாமும் மனமாற்றம் அடைந்து மற்றவர்களையும் மாற்றம் அடையச் செய்ய நம்மை அழைக்கிறார்.

                 கிறிஸ்தவ மக்களை துன்புறுத்திய பவுல், இறைமகன் இயேசுவால் ஆட்கொள்ளப்பட்டு மூன்று நாள் பார்வையற்றவராய் இருந்தார்.  அந்த மூன்று நாட்களும் தன்னை தகுந்த விதத்தில் தயார்படுத்தி முழு மனமாற்றம் பெற்றதன் விழைவே...தனது வாழ்நாள் முழுவதும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் அன்பை அனுதினமும் அனுபவித்து, அதை மற்றவர்களுக்கும் கொடுத்தார். இயேசுவின் அன்பினால் மனமாற்றம் பெற்ற பவுல், கிறிஸ்துவை அடைவதே தனது ஒப்பற்ற செல்வம் என்று கூறி தன் கடைசி நேரம் வரை நற்செய்தியை பறைசாற்றினார்.

               இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் தனக்கென ஒரு பாதையை தேர்ந்துகொண்டு அதில் பயணம் செய்கிறார்கள். காலச் சூழலில் பாதைகள் தடம் மாறுகின்றன, பயணங்களும் திசைமாறுகின்றன. நமது வாழ்க்கைப் பயணத்தில் நாம் சந்திக்கின்ற நெருக்கடிகள், சவால்கள்,  வலிகள், வேதனைகள், ஏமாற்றங்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் நமது வாழ்க்கைப் பயணம் திசைமாறுகிறது. இருந்த போதிலும், இறைவனை நாம் அடைய வேண்டுமென்றால் திசைமாறிய நமது வாழ்க்கை மனமாற்றம் பெற வேண்டும்,  கோணலான நமது பாதைகள் நேராக்கப்பட வேண்டும்,  கரடு முரடான நமது பயணங்கள் மெம்மைப்படுத்தப்படவேண்டும், மேடு பள்ளங்களைக் கொண்ட நமது வாழ்க்கை முறைகள் சமதளமாக்கப்படவேண்டும். இப்படிப்பட்ட மனமாற்றம் நிறைந்த வாழ்க்கை வாழவே, இறைவன் நம்மை அழைக்கின்றார்.

                    நாமும் மனமாற்றம் பெற்று,  மற்றவர்களும் மாற்றம் பெற திருமுழுக்கு யோவானைப்போல் ஆண்டவரின் அன்பு பணி செய்ய நம்மை நாமே ஆயத்தம் செய்வோம். இறைவன் நம்மை எந்நாளும் ஆசீர்வதித்து காப்பாராக. ஆமென்.           
         
      
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி

தடைகளை நீக்குதல்

திருவருகைக்காலத்தில் நாம் இயேசுவின் மூன்று வருகைகளையும் முதன்மைப்படுத்திச் சிந்திக்கின்றோம். அவருடைய முதல் வருகை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அவருடைய இரண்டாம் வருகை உலக முடிவில் நடக்கும். அவருடைய மூன்றாம் வருகை அன்றாடம் நடந்தேறுகிறது. அவருடைய முதல் மற்றும் இரண்டாம் வருகை காணக்கூடிய அளவில் இருந்தது, இருக்கும். ஆனால், மூன்றாம் வருகையை நாமாக முயற்சி எடுத்தாலன்றிக் காண இயலாது. ஆண்டவரை அன்றாடம் நம் வாழ்வில் வரவேற்க நாம் நிறையத் தடைகளைக் களைய வேண்டும், நம் வாழ்வில் நிறைய மாற்றங்களை உருவாக்க வேண்டும்.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 40:1-5,9-11), இரண்டாம் எசாயா நூலின் தொடக்கப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனிய அடிமைத்தனத்தில் சிக்கியிருக்கும் இஸ்ரயேல் மக்கள் விரைவில் தங்கள் சொந்த நாடு திரும்புவார்கள் என்பதை முன்னறிவிக்கிறார் இறைவாக்கினர். கிமு 587இல் எருசலேம் நகரம் அழிக்கப்பட்டதையும், இஸ்ரயேல் மக்கள் நாடுகடத்தப்பட்டதையும் நேருக்கு நேர் கண்ட இறைவாக்கினர்கள், மக்களாலும் மக்களின் அரசர்களின் தவறான வாழ்வியல் முறைகளால் இந்த அழிவு நேரிட்டது என்பதை எண்ணி வருந்துகின்றனர். மேலும், கடவுளின் உடன்படிக்கையை மக்கள் மீறியதற்காக, கடவுள் அவர்களுக்கு அனுப்பிய தண்டனை என்றும் பலர் கருதினர். கடவுள் தன் மக்களை ஒரேயடியாக ஒதுக்கிவிட்டார் என்று நினைத்துப் புலம்பினர். இத்தகைய சூழலில் இறைவாக்குரைக்கின்ற எசாயா, இந்த நிகழ்வு பற்றிய ஒரு புதிய புரிதலை முன்வைக்கின்றார்.

'ஆறுதல் கூறுங்கள்!' என்பதுதான் கடவுள் தனக்குக் கொடுத்த பணி என்று எசாயா தன் பணியின் இலக்கை வெளிப்படுத்துகின்றார். கடவுள் மூன்று வினைச்சொற்களைப் பயன்படுத்துகின்றார்: 'ஆறுதல் கூறுங்கள்,' 'கனிமொழி கூறுங்கள்,' மற்றும் 'உரக்கச் சொல்லுங்கள்'. கடவுள் பழிதீர்க்கும் கடவுள் அல்லர் என்றும், கடவுள் தூரத்தில் நிற்கும் கடவுள் அல்லர் என்றும், கடவுள் தன் மக்களை ஒருபோதும் கைவிடுபவர் அல்லர் என்றும் இவ்வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. இஸ்ரயேலின் கடவுள் அவர்களோடு என்றும் தங்குகிறார். மேலும், 'ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும். மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர். ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்' எனக் காட்சி காண்கிறார் எசாயா. இதுவே 'நற்செய்தி' என அவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. கடவுள் அவர்களோடு இருந்து அவர்களைக் காத்து வழிநடத்தும் அர்ப்பணத்தை இது அவர்களுக்கு நினைவூட்டுகிறது. கடவுள் மீண்டும் அவர்களை முந்தைய நன்னிலைக்குக் கொண்டுவர விரும்புகிறார் என்பதை ஓர் உருவகம் வழியாக உரைக்கின்றார் எசாயா: 'ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார். அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார். சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.' இந்த உருவகத்தின் வழியாக, ஆண்டவராகிய கடவுளே இஸ்ரயேல் மக்களின் தலைவராக இருப்பார் என்பதும், அடிமைத்தனத்தில் சிதறுண்ட மக்களை ஒன்று சேர்ப்பார் என்பதும், நலிவுற்றவர்களைத் தாங்கிக் கொள்வார் என்பதும், புதிய உயிர்கள் பிறப்பதற்கு அவரே துணை நிற்பார் என்பதும் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.

இந்த வாக்குறுதி நிறைவேற வேண்டுமெனில், 'பாலைநிலத்தில் வழி ஆயத்தமாக்கப்பட வேண்டும்,' 'பாழ்நிலத்தில் நெடுஞ்சாலை சீராக்கப்பட வேண்டும்.' 'பாலைநிலம்' மற்றும் 'பாழ்நிலம்' என்பது இஸ்ரயேல் மக்கள் புதிதாக மேற்கொள்ள வேண்டிய பயணத்தை அல்ல, மாறாக, அவர்கள் ஏற்கெனவே பெற்றிருந்த விடுதலைப்பயண அனுபவத்தை அவர்களுக்கு நினைவூட்டுகின்றன. சீனாய் மலை வழியாக பாலைநிலத்தில் இஸ்ரயேல் மக்கள் மேற்கொண்ட பயணத்தில்தான் கடவுள் அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டு, 'நாம் உங்கள் கடவுளாய் இருப்போம். நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்!' என மொழிந்தார். அங்குதான் அவர்கள் தங்களுடைய கடவுளை முழுமையாக அன்பு செய்யக் கற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய பயங்களும் தவறான எண்ணங்களும் மறைந்து, சந்தேகங்கள் விலகியது அங்கேதான். 'இதோ! உன் கடவுள்!' என்று இஸ்ரயேல் மக்களுக்கு இப்போது சொல்வதன் வழியாக, எசாயா தன் மக்களை எழவும், குரல் எழுப்பவும், மீண்டும் தாயகம் திரும்பவும் அழைக்கின்றார்.

இரண்டாம் வாசகத்தில் (காண். 2 பேது 3:8-14) ஆண்டவரின் வருகையோடு தொடர்புடைய பிரச்சினை பற்றிப் பேசுகின்றார். ஆண்டவரின் இரண்டாம் வருகை இல்லை என்று போதித்துவந்து போலிப் போதகர்களால் கவரப்பட்ட தன் திருச்சபைக்கு எழுதுகின்ற பேதுரு, அவர்கள் இழந்த நம்பிக்கையை மீண்டும் தட்டியெழுப்புகிறார். அவர்களது பொறுமையின்மையைக் கடிந்துகொண்டு, பொறுமையோடு எதிர்நோக்க அழைக்கின்றார். மேலும், அவர்களது பயங்களையும் ஐயங்களையும் களைகின்றார்.

முதலில், ஆண்டவரின் நேரமும் நம் நேரமும் ஒன்றல்ல என்று வரையறுக்கிறார்: 'ஆண்டவரின் பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் போலவும் இருக்கின்றன.' ஆக, 'விரைவில் வருகிறார்' என்பதை மனித கால வரையறையின்படி நாம் அறிந்துகொள்ள முடியாது. இரண்டாவதாக, இரண்டாம் வருகையின் தாமதத்திற்குக் காரணம் கடவுளின் அன்பும் பொறுமையுமே. தன் வருகையைத் தள்ளி வைப்பதன் வழியாக, மற்றவர்கள் மனம் மாறுவதற்கு நேரம் கொடுக்கிறார் கிறிஸ்து. ஆக, நம்பிக்கை கொண்ட இறைமக்கள் காலத்தைக் கணிப்பதை விடுத்துவிட்டு, தங்களையே தயார்படுத்திக்கொள்ளவும் சரிசெய்யவும் வேண்டும். தங்களையே 'மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்' நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண் மாற் 1:1-8), மாற்கு நற்செய்தியின் தொடக்கப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 'கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்' என்று தன் நற்செய்தியைத் தொடங்கும் மாற்கு, எசாயா இறைவாக்கினரின் வாக்கு, திருமுழுக்கு யோவானில் நிறைவுபெறுவதாக எழுதுகின்றார். பாலைநிலத்தில் குரலெழுப்பிய தூதரும், பாவமன்னிப்புக்கான திருமுழுக்கைப் போதித்தவரும் யோவானே என முன்மொழிகின்றார். கடவுளுக்கும் நமக்கும் இடையே உள்ள உறவுக்குத் தடையாகப் பாவம் இருந்ததால், அந்தப் பாவத்தைக் களைந்துவிட்டு, தனிமனித மனமாற்றம் அடைய மக்களை அழைக்கின்றார் யோவான். தடைகளை நீக்குகின்ற நம்பிக்கையாளர்கள் 'தூய ஆவியாரால் திருமுழுக்கு பெறுவர்.'

ஆக,

பயம், ஏமாற்றம், ஐயம் என்னும் தடைகள் நீக்கப்பட்டால், மக்கள் தங்கள் கடவுளோடு தங்களை மீண்டும் இணைத்துக்கொள்ளலாம் என்று முதல் வாசகத்தில் எசாயாவும்,

பரபரப்பும் கலக்கமும் நீங்கி பொறுமையும் விடாமுயற்சியும் பிறந்தால், இறைமக்கள் ஆண்டவரின் இரண்டாம் வருகையை எதிர்கொள்ள முடியும் என்று பேதுருவும்,

பாவத்தை நீக்குதல் தூய ஆவியாரின் அருள்பொழிவைப் பெற வழி என்று திருமுழுக்கு யோவானும் மொழிகின்றனர்.

இன்றைய நாள் நமக்கு வைக்கும் பாடம் என்ன?

கடவுளின் இரக்கப் பெருக்கை மறத்தல், பரபரப்போடு இருத்தல், பாவத்தொற்றிலேயே நிலைத்திருத்தல் போன்றவை இன்றயை நம் தடைகளாக இருக்கலாம். மேற்காணும் தடைகளை நாம் உணர்வதோடு, அவற்றை நீக்க நாம் முழுமுயற்சி செய்ய வேண்டும்.

எப்படி நீக்குவது?

'சிறியவற்றில் பிரமாணிக்கம், பெரியவற்றிலும் பிரமாணிக்கம்.'

'சிறியவற்றில் தோல்வி, பெரியவற்றிலும் தோல்வியே.'

இஸ்ரயேல் மக்கள் ஒரே நாளில் கடவுளின் உடன்படிக்கையை மீறவில்லை. சின்னச் சின்ன விடயத்தில் மீறினார்கள் பெரிய அளவில் துன்பம் அடைந்தார்கள்.

சிறிய பழக்கம், சிறிய தொடர் பயிற்சி, சிறிய ஒழுக்கம் நம்மைப் பெரியவற்றுக்கு இட்டுச்செல்லும். இதன் வழியாக நாம் வலிமையும், ஞானமும், நன்மையும் பெறுவோம். அதே போல, சிறிய பொய் பெரிய பொய்க்கும், சிறிய இன்பநுகர்வு பெரிய துரோகத்திற்கும், சிறிய மதுபாட்டில் பெரிய மதுப்பழக்கத்திற்கும் இட்டுச் செல்லும். ஆக, நாம் எந்தப் பாதையைத் தேர்வு செய்தாலும் அதை நேராக்கவும், சமதளமாக்கவும் வேண்டும். நாம் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவும் நம்மை நன்மைக்கோ அல்லது தீமைக்கோ இட்டுச் செல்லும். சிறிய விளைவுகள் பெரிய விளைவுகளைக் கொண்டுவரும். சங்கிலி போல அது தொடரும்.

நாம் மேற்கொள்ளும் தெரிவுகளின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகைதான் நாம். சரியான முடிவுகள் சரியான விடிவுக்கு இட்டுச்செல்லும்.

தடைகளை நீக்குதல் மெசியாவைக் காண்பதற்கு வழி செய்யும்.

அப்போது, 'நல்லதையே ஆண்டவர் அருள்வார். நல்விளைவை நம் நாடு நல்கும்' (காண். திபா 85).

 



 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி மரிய அந்தோணி பாளையங்கோட்ட
  எசாயா 40:1-5,9-11 II, 2 பேதுரு 3:8-14 III. மாற்கு 1:1-8


மாபரன் இயேசுவும் வருகையும், மனம் மாற்றமும்
நிகழ்வு: கொலைகாரன் ஒருவன் இருந்தான். அவன் தன் கண்ணில் பட்ட ஆண், பெண், சிறியவர், பெரியவர் என யாவரையும் வெட்டிச் சாய்த்தான். இதனால் அவன் வருவது தெரிந்தால், மக்கள் ஓடி ஒளிந்துகொள்வார்கள்.

ஒருநாள் அவன் தன்னுடைய குதிரையில் வேகமாக வருவதைக் கண்டு மக்கள் அனைவரும் ஓடி ஒளிந்துகொண்டார்கள். ஒரு துறவி மட்டும் ஓடாமல் அப்படியே இருந்தார். எல்லாரும் ஓடி ஒளிந்தபொழுது, துறவி மட்டும் ஓடாமல் அப்படியே இருந்ததைக் கண்டு, கடுஞ்சீற்றம் அடைந்த அந்தக் கொலைகாரன் துறவியிடம், " என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? நான் என் வாளை வீசினால், எனக்கு முன்பாக நிற்பவர் யாராக இருந்தாலும், இரண்டு துண்டுகளாகச் சரிந்து கீழே விழுவார்" என்றான். அதற்கு அந்தத் துறவி, " என்னைப் பற்றி உனக்குத் தெரியாதா? நான் என் பார்வையாலேயே எனக்கு முன்பாக இருக்கக்கூடியவரைச் சாய்க்கக் கூடியவன்" என்றார்.

துறவி இப்படிச் சொன்னதும், அந்தக் கொலைகாரன் தன்னுடைய உள்ளத்தில் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தான். பின்னர் அவன், துறவியின் காலில் போய் விழுந்து, " இத்தனை நாள்களும் நான் ஒரு மிகப்பெரிய கொலைகாரனாய் வாழ்ந்துவிட்டேன். இனிமேல் நான் மனம்திருந்தி நடக்க விரும்புகின்றேன். அதனால் என்னை உங்களுடைய சீடராக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்றான். துறவியும் அவனைத் தன்னுடைய சீடனாக ஏற்றுக்கொள்ள, அவன் புதிய மனிதனாக வாழத் தொடங்கினான்.

இந்த நிகழ்வில் வருகின்ற மிகப்பெரிய கொலைகாரன் துறவியின் அமைதியான தோற்றத்தையும், அவருடைய வார்த்தைகளையும் கேட்டு மனம்மாறினான். திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக, மனம்மாறி அவருக்கு உகந்தவர்களாக வாழவேண்டும் என்றோர் அழைப்பினைத் தருகின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மனம் மாற்றம் காலத்தின் கட்டாயம்
திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு என்றாலே, ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக நம்மையே நாம் தயார் செய்யும் வகையில், மனம் மாற்றம் அடையவேண்டும் என்ற செய்தியைத்தான் தாங்கி வரும். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் அத்தகைய செய்தியைத்தான் தாங்கி வருகின்றது.

நற்செய்தியில், ஆண்டவர் இயேசுவின் வருகைக்காகத் திருமுழுக்கு யோவான் மக்களைத் தயார் செய்வதைக் குறித்து வாசிக்கின்றோம். மெசியாவின் வருகைக்கு முன்பாக, தூதர் ஒருவர் தோன்றி மக்களைத் தயார் செய்வார் என்று பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டது (விப 23: 20; எசா 40: 3; மலா 3:1). அதுவே திருமுழுக்கு யோவானின் வழியாக நடந்தது. இந்தத் திருமுழுக்கு யோவான் மக்களிடம் மனம் மாறவேண்டும் என்றோர் அழைப்பு விடுத்தார். அந்த மனம்மாற்றம் என்பது பெயரளவில் மட்டும் இருக்காமல், செயல்வடிவிலும் இருக்கவேண்டும் என்பதற்காக, " நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்" (மத் 3: 8) என்றார். ஆதலால், நாம் மெசியாவாம் இயேசு கிறிஸ்துவின் வருக்கைக்கு நம்மையே நாம் தயார்செய்வதற்கு மனம் மாற்றம் அடைவது காலத்தின் கட்டாயமாக, இன்றியமையாததாக இருக்கின்றது.

மனம்மாறுவதற்காகப் பொறுமையோடு இருக்கும் இறைவன்
மனம் மாற்றம் மிகவும் இன்றியமையாதது என்று இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகின்றபொழுது, இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாகப் புனித பேதுரு, நாம் மனம் மாறுவதற்காகக் கடவுள் பொறுமையோடு இருக்கின்றார் என்கின்றார்.

தொடக்கத் திருஅவையில் இயேசுவின் இரண்டாம் வருகை விரைவில் நிகழும் என்றொரு நம்பிக்கை இருந்தது; ஆனால், இயேசுவின் இரண்டாம் வருகை விரைவில் நிகழாதபொழுது, ஒருசிலர் இயேசுவின் இரண்டாம் வருகையைக் கேள்விக்குள்ளாகினார்கள். அப்பொழுதுதான் புனித பேதுரு அவர்களிடம், " ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர்; ஆனால் அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிருக்கின்றார்" என்கின்றார்.

கடவுளின் விரும்ப மெல்லாம், இறைவாக்கினர் எரேமியா கூறுவது போல, தீயோர் சாக வேண்டும் என்பது கிடையாது; மாறாக அவர்கள் தம் தீய வழியினின்று திரும்பி, வாழவேண்டும் என்பதே ஆகும் (எரே 33: 11). இதையேதான் புனித பேதுரு தன்னுடைய திருமுகத்தில் வலியுறுத்திக் கூறுகின்றார். ஆகவே, நாம் மனம்மாறவேண்டும் என்பதற்காகப் பொறுமையோடு இருக்கும்; நாம் வாழவேண்டும் என்று விரும்பும் கடவுளிடம், நாம் மனம்மாறிச் செல்வது சிறப்பானது.

மனம்மாறுவோருக்கு இறைவன் வெற்றிப் பரிசை அளிப்பார்
நாம் மனம் மாறவேண்டும் என்றும், நாம் மனம்மாறுவதற்காகக் கடவுள் பொறுமையோடு காத்திருக்கின்றார் என்றும் இதுவரை சிந்தித்துப் பார்த்தோம். இப்பொழுது நாம் மனம்மாறி இறைவனுக்கு உகந்தவர்களாய் வாழ்கின்றபொழுது நமக்கு என்னென்ன ஆசிகள் கிடைக்கும் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம், பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்டு, அறுபது ஆண்டுகள் அன்னிய மண்ணில் அடிமைகளாக வாழ்ந்து வந்த யூதேயா நாட்டினருக்கு ஆண்டவராக கடவுள் ஆறுதலின் செய்தியை உரைப்பதாக இருக்கின்றது. யூதேயா நாட்டினர் தாங்கள் செய்த தவற்றினாலேயே நாடு கடத்தப்பட்டனர் என்று கூறும் இறைவாக்கினர் எசாயா, கடவுள் அவர்களுடைய குற்றத்தை மன்னித்து விட்டார் என்றும், தங்களுடைய வழிகளை வாழ்க்கையை சீரமைத்துக்கொண்டு தங்கள் நாட்டிற்கு அவர்கள் திரும்பிச் செல்லும்பொழுது, ஆண்டவரின் மாட்சி அவர்களிடம் வெளிப்படும் என்றும், ஆண்டவர் தம் வெற்றிப் பரிசை அவர்களுக்குத் தருவார் என்றும், ஓர் ஆயரைப் போன்று அவர்களை அவர் மேய்ப்பார் என்றும் கூறுகின்றார்.

முதல் வாசகம், தங்களுடைய வழிகளைத் திருத்திக்கொண்டு, தங்களது நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் யூதேயா நாட்டிற்குக் கிடைக்கும் ஆசிகளை எடுத்துச் சொல்வதாக இருந்தாலும், மனம் மாறி, ஆண்டவருக்கு உகந்த வழியில் நாம் நடக்கும்பொழுது கிடைக்கும் ஆசிகளை மறைமுகமாக எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது. ஆகையால், நாம் மனம்மாறுவதற்குப் பொறுமையோடு இருக்கும் ஆண்டவரிடம் மனந்திருந்தி வந்தால், அவருடைய மாட்சியைக் கண்டு, அவர் அளிக்கும் வெற்றிப் பரிசினைப் பெற்று, அவருடைய ஆடுகளாவோம் என்பது உறுதி. இத்தகைய ஆசிகளை நாம் பெற மனம் மாறத் தயாரா? சிந்திப்போம்

சிந்தனை
" குழந்தை இயேசு கோடிகணக்கான குடில்களில் பிறந்துவிட்டு, நம்முடைய உள்ளத்தில் பிறக்கவில்லை எனில், அதனால் எந்தவொரு பயனும் இல்லை" என்பார் அலெக்சாண்டர் போப் என்ற அறிஞர். ஆதலால், இயேசு நம்முடைய உள்ளத்தில் பிறக்கும் வகையில், நாம் மனம்மாறி, நம்முடைய உள்ளத்தை இறைவன் தங்கும் இல்லடமாக மாற்றுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

 

 
   மறையுரைச்சிந்தனை  - அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
 மனமாற்றும்..

திருவருகைக் காலம் மனமாற்றத்தின் காலம். இதில் நான்கு கூறுகள் உண்டு. 1. மனம் வருந்துதல் 2. மனமாற்றம் 3. இறைவனின் வருகைக்காகக் காத்திருத்தல். 4. அதற்காக தயாரித்தல். இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு இன்று விடுக்கும் சவால் மனமாற்றம்தான். பாபிலோனிய அடிமைத் தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் புறப்பட்ட காலம். ஏனெனில் மக்களின் இதயங்களை நெறிப்படுத்தி, இறைவனின் கருணையை எடுத்துரைத்து, உள்ளம் கலங்க வேண்டாம் என்று நம்பிக்கையூட்டுகிறது முதல் வாசகம் (எசாயா:40:9-11). இதற்காக ஆண்டவன் வழியை ஆயத்தமாக்குங்கள் பள்ளத்தாக்குகள் நிரப்பப்பட்டுக் குன்றுகள் தாழ்த்தப்படட்டும் கரடு முரடானவை சமதளமாக்கப்படட்டும் என்று இந்த மனித உள்ளத்தில், அறை கூவல் விடுக்கிறார் இறைவாக்கினர் (எசாயா:40:3-4). இன்றைய நற்செய்தி அறிவிப்பது போல, பாலைவனத்திற்கு வந்து பாவ மன்னிப்பு பெறுங்கள், மனம் மாறி திருமுழுக்குப் பெறுங்கள் என்று அழைப்பு விடுக்கிறார் திருமுழுக்கு யோவான் (மாற்கு:1:4).

பழைய ஏற்பாட்டிலே இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளிவந்த போது, அவர்கள் பலவற்றை விடவேண்டியிருந்தது. தாங்கள் வழக்கமாக உண்ட மீன், வெங்காயம், கொம்மட்டிக்காய், கீரை, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை விட வேண்டியிருந்தது (எண்:11:4-5). பாலை நிலத்திற்கு வருவது என்பது, நாம் வழக்கமாகச் சார்ந்திருக்கும் பாவநிலையை விட்டுவிட்டு கடவுள் முன் வருவதைக் குறிக்கிறது. ஆகவே பாலை நிலம் போதல் என்பது மனம் திரும்புதலின் முதல் படியாகும்.

நாம், பிறந்த குழந்தையாக இருந்தபோது திருமுழுக்குப் பெற்றுவிட்டோம். இந்த திருவருகைக் காலத்தில் ஒரு திருமுழுக்கு நம்மில் நடைபெற வேண்டும். அதாவது நாம் நம்மையே சரிக்கட்டி, அல்லது ஏமாற்றி ஒளித்து வைத்திருக்கும் தீய பழக்கங்கள், செயல்கள், மற்றும் ஒளித்து வைத்திருக்கும் இடங்களை விட்டு வெளியேற வேண்டும். நம்மில் இருக்கும் பாவம் என்ற பள்ளதாக்குகள் அகற்றப்பட்டு, சரிசெய்யப்பட வேண்டும். நம்மிடம் மலை போல் குவியும் கோபம், விரோதம், பகைமை, பொய்மை, பொறாமை, திருட்டு, காமம், களவு, வஞ்சகம், தீச்செயல்கள் தீக்கிரையாக்கப்பட வேண்டும். இறைவன் படைத்த சாதகப் பறவையானது குளம், குட்டைகளில் தேங்கிக் கிடக்கும் நீரையோ, கழிவு நீரையோ பருகாது. கார் காலத்தில் பெய்யும் மழை நீரை வாய் திறந்து பருகி உயிர் வாழ்கிறது. நாமும் சாதகப் பறவையாக மாற இந்த திருவருகைக் காலம் அழைப்பு விடுக்கிறது. யாரும் அழிந்து போகாமல், எல்லோரும் மனம் மாறவேண்டும் என கடவுள் காத்திருக்கிறார் (2பேதுரு:3:9) என்று புனித பேதுரு இன்றைய இரண்டாம் வாசகத்தில் குறிப்பிடுகிறார்.

அன்பார்ந்தவர்களே! அவன் அப்படி, இவள் இப்படி என்றெல்லாம் மற்றவரை குறை கூறி தீர்ப்பிட்டு அவர்கள் மனம் மாற வேண்டும் என நினைக்கிறோம். மாறாக 80 வயதான ஒருவர், முதலில், இந்த உலகை மாற்றுவேன் என சபதமிட்டு, தோல்வி கண்டார். பின் ஊரையும் என் குடும்பத்தையும் மாற்றுவேன் என கூறி அதிலும் தோல்வியைக் கண்டார். இறுதியாக இறைவா! என்னை மாற்றிட எனக்கு வரம் தாரும் என வேண்டி சிந்திக்கத் தொடங்கினார். ஆம்! இந்த திருவருகைக் காலம் நாம் நம்மில் உள் நோக்கிய ஒரு பயணம் செய்ய அழைப்பு விடுக்கிறது. இது தான் அகப்பார்வை. நாம் நல்லவர்களாக பிறர் முன் காட்டிய போலித் தனமான வெளித்தோற்றத்தைக் களைந்துவிட்டு, சக்கேயுவைப் போல, மரியமதலேனாளைப் போல, கண்ணீர் சிந்தி மனம் மாறிய பேதுருவைப் போல மனமாறுவோமா? கண்ணகியின் காற் சிலம்புக்கு முன் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், நானே கள்வன், நானே குற்றம் செய்தவன் என சுய பரிசோதனை செய்தது போல நாமும் செய்வோமா?
 
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்  - குடந்தை  ஞானி




 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்  - குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி

ஆண்டவரின்‌ ஆசியைப்‌ பெறுவோம்‌.

பிறக்கப்போகும்‌ ஆண்டவர்‌ எப்படிப்பட்டவர்‌ என்பதை இறைவாக்கினர்‌ எசாயா தெளிவாக முதல்‌ வாசகத்தில்‌ சுட்டிக்காட்டுகின்றார்‌: ஆயனைப்போல்‌ தம்‌ மந்தைகளை அவர்‌ மேய்ப்பார்‌; ஆட்டுக்‌ குட்டிகளைத்‌ தம்‌ கையால்‌ ஒன்று சேர்ப்பார்‌; அவற்றைத்‌ தம்‌ தோளில்‌ தூக்கிச்‌ சுமப்பார்‌: சினையாடுகளைக்‌ கவனத்துடன்‌ நடத்திச்‌ செல்வார்‌ (எசா 40:11]. அவர்‌ மிகுந்த பொறுமையைக்‌ கையாள்வார்‌; யாரும்‌ அழிந்து போகாமல்‌ எல்லாரும்‌ மணம்‌ மாறவேண்டும்‌ என்று விரும்புவார்‌ [2 பேது 3:9].

திருமுழுக்கு யோவான்‌ எப்படிப்பட்டவர்‌ என்று நமக்குத்‌ தெரியும்‌. அவர்‌ மனிதராய்ப்‌ பிறந்தவர்களுள்‌ திருமுழுக்கு யோவானைவிடப்‌ பெரியவர்‌ எவரும்‌ தோன்றியதில்லை [மத்‌ 11:11] என்று இயேசுவால்‌ புகழப்பட்டவர்‌. அப்படிப்பட்டவர்‌, தன்னைவிட இயேசு வலிமை மிக்கவர்‌ எனச்‌ சுட்டக்கொட்டுகின்றார்‌ [மாற்‌ 1:7].

ஆக, ஒரு நல்ல ஆயனை, நாம்‌ நலமுடன்‌ வாழவேண்டும்‌ என்று பிரும்புகின்றவரை, வலிமைமிக்கவரை நாம்‌ நம்‌ நடுவே சில வாரங்களில்‌ வரவேற்கப்போகின்றோம்‌. வரவிருக்கும்‌ ஆண்டவரை நாம்‌ தகுதியுடன்‌ வரவேற்க என்ன செய்ய வேண்டும்‌? என்பதை இன்றைய நற்செய்தி சுட்ழக்காட்டுகின்றது.

திருமுழுக்கு யோவான்‌ நம்மைப்‌ பார்த்து: மனம்‌ மாறுங்கள்‌ என்கின்றார்‌: இயேசுவிடமிருந்து தூய ஆவியாரின்‌ வரங்களையும்‌ 1 கொரி 12:8-10], கனிகளையும்‌ (கலா 5:22-23] பற்று நாம்‌ வளமுடன்‌ வாழ நமது மனமாற்றத்தை ஒரு நிபந்தனையாக நம்முன்‌ வைக்கின்றார்‌.

மனம்‌ என்பது ஒரு காசுபோன்றது. அதற்கு இரண்டு பக்கங்கள்‌ உள்ளன. ஒன்று ஆசை, மற்றொன்று அறிவு. அறிவே ஆசைக்கு அழத்தளம்‌. ஆசையே அனைத்திற்கும்‌ காரணம்‌! மனமாற்றம்‌ அடைய விரும்புகின்றவர்கள்‌ காணாமற்போன மகன்‌ போல அறிவுத்‌ தெளிவை (லூக்‌ 15:17] ஆராய்ந்துபார்க்க வேண்டும்‌! மதிப்பீட்டுப்‌ பட்டியல்‌ சரியாக இருக்கின்றதா? என்பதை உய்த்துணர வேண்டும்‌!

இதோ தன்‌ அறிவைத்‌ தெளிவாக வைத்திருந்த ஒரு மனிதனின்‌ கதை. இக்கதை நம்‌ மதிப்பீட்டுப்‌ பட்யலை சரிபார்க்க நமக்கு உதவும்‌.

டெட்சூஜென்‌ (Tetsugen) என்ற ஒரு ஜப்பானியர்‌ தியானத்தில்‌ (Zen) மிகுந்த ஈடுபாடு உடையவர்‌. அப்பொழுது சீன மொழியில்‌ மட்டுமிருந்த புத்தரது சூத்திரங்களை ஜப்பானிய மொழியில்‌ அவர்‌ வெளியிடத்‌ தீர்மானித்தார்‌. மரப்பலகையில்‌ அந்தச்‌ கூத்திரங்களைச்‌ செதுக்கி ஏழாயிரம்‌ பிரதிகளை வெளியிடத்‌ தீர்மானித்தார்‌. நன்கொடை வசூகித்தார்‌. பத்து வருடங்கள்‌ உருண்டோடின! திடிரென யூஜி ஆற்றில்‌ வெள்ளம்‌ வந்து மக்கள்‌ பெரிதும்‌ பாதிக்கப்பட்டனர்‌. சேர்த்த பணத்தை ஏழை மக்களின்‌ பட்டினியைப்‌ போக்கச்‌ செலவழித்தார்‌. மீண்டும்‌ பணம்‌ சேர்த்தார்‌. திடீரென மக்களைத்‌ தொற்றுநோய்‌ பற்றியது. நன்கொடையை தோயுற்றோர்க்குக்‌ கொடுத்தார்‌.. மீண்டும்‌ நன்கொடை வசூலித்து இருபது வருடங்கள்‌ கழித்து மூன்று பிரதிகள்‌ எடுத்தார்‌. அதில்‌ ஒரு பிரதி இன்றும்‌ ஒபாக்கூ (Obaku) மடாலயத்தில்‌ உள்ளது.இதோ தன்‌ அறிவைத்‌ தெளிவாக வைத்திருந்த ஒரு மனிதனின்‌ கதை. இக்கதை நம்‌ மதிப்பீட்டுப்‌ பட்யலை சரிபார்க்க நமக்கு உதவும்‌.

இந்த ஜப்பானியர்‌ மனித வாழ்க்கையைவிட மேலானது எதுவும்‌ இல்லை என்பதை உலக மக்களுக்குச்‌ சுட்டிக்காட்டுகின்றார்‌. மனிதர்கள்‌ வாழவேண்டும்‌ என்பதற்காக நல்லாயனாக உதித்து, பாவிகளாகிய நமக்காக உயிரைக்‌ கொடுத்த உத்தமரைச்‌ சந்திக்க, நாம்‌ அவரைப்‌ போலவே மக்களின்‌ வாழ்க்கைக்கு நமது மதிப்பீட்டுப்‌ பட்டியலிலே முதலிடம்‌ கொடுப்போம்‌.

மனம்‌ எனும்‌ விளக்கினிலே மனமாற்றம்‌ எனும்‌ எண்ணயூற்றி, மனித நேயம்‌ எனும்‌ திரியிட்டு, வாழ்வு எனும்‌ ஒளிதந்து,. இருள்போக்கி - பாவ இருள்போக்கி பெறுவோம்‌ ! ஆண்டவரின்‌ ஆசியைப்‌ பெறுவோம்‌!

மேலும்‌ அறிவோம்‌ :

இருள்நீங்கி இன்பம்‌ பயக்கும்‌ மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு ( குறள்‌ : 352).

பொருள்‌ :
அறியாமை ஆகிய மயக்கம்‌ களைந்து மெய்யறிவு பெற்றவர்க்கு மாசற்ற உண்மை தோன்றும்; அறியாமை இருள்‌ விலகுவதால்‌ இன்பப்‌ பேறு வாய்க்கும்‌!
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
ஒரு வீட்டில்‌ அப்பா ஒரு புத்தகத்தை விறுவிறுப்பாகப்‌ படித்து ரசித்துக்‌ கொண்டிருந்தபோது, அவருடைய எழு வயது மகன்‌ அவரிடம்‌. பல கேள்விகளைக்‌ கேட்டு அவரைப்‌ படிக்க விடாமல்‌ தொந்தாவு செய்து. கொண்டிருந்தான்‌. அவனுடைய அப்பா அவரது மேசைமீது இருந்த உலகப்‌ படத்தைப்‌ பல துண்டுகளாகக்‌ கிழிந்து அவனிடம்‌ கொடுத்து உலகம்‌ கிழிஞ்சு போச்சு, அதை சரிசெய்து கொண்டுவா" . என்றார்‌ அச்சிறுவன்‌ ஐந்தே நிமிடங்களில்‌ உலகைச்‌ சரி செய்தவிட்டான்‌. உலகப்‌ இடத்தை ஒட்ட அவனுக்குத்‌ தெரியவில்லை. ஆனால்‌. உலகம்‌ படத்திற்குப்‌ பின்னால்‌ இருந்த மனிதப்‌ படத்தை ஒழுங்காக ஓட்டினான்‌. முன்னல்‌ இருந்த உலகப்‌ படம்‌ தானாகவே சரியாகிவிட்டது.

இந்நிகழ்வு கூறும்‌. உண்மையென்ன? உலகம்‌ திருந்த வேண்டுமென்றால்‌, மனிதன்‌ திருந்த வேண்டும்‌. புறநானூற்றுப்‌ பாடல் ஒன்று இவவுலகைப்‌ பார்தது பின்வருமாறு கூறுகிறது: நிலமே! நீ ஒர்‌ இடத்தில்‌ நாடாகவும்‌, வேறொரு இடத்தில்‌ காடாகவும்‌ இருக்கின்றாய்‌. ஓர் இடத்தில்‌ மேடாகவும்‌, வேறொரு இடத்தில்‌ பள்ளமாகவும்‌. இருக்கிறாய். நீ நாடாக இருந்தாலும்‌ காடாக இருந்தாலும்‌, நீ மேடாக இருந்தாலும்‌ பள்ளமாக இருந்தாலும்‌ சரி, உன்னிடத்தில்‌ வாழுகின்ற மக்கள்‌‌ நல்லவர்களாக இருக்கின்றார்களோ, அவ்விடத்தில்‌ நீயும்‌ நலல நிலமாக இருக்கின்றாய்‌." எங்கே மக்கள்‌ நல்லவர்களோ அங்கே நிலமும்‌ நல்ல நிலம்‌
.

சுருக்கமாக, உலகம்‌ திருந்த வேண்டுமென்றால்‌ மக்கள் திருந்த வேண்டும்‌, மக்கள்‌ மனமாற்றம்‌ அடைய வேண்டும்‌. தவக்காலத்தைப்‌ போன்று திருவருகைக்‌ காலமும்‌ மனமாற்றத்தின்‌ காலம்‌. திருவருகைக்‌ காலத்தின்‌ தலைசிறந்த போதகர்‌ திருமுழுக்கு போவான்‌. அவர்‌ இன்று "இஸ்ரயேல்‌ மக்களை இறைவாக்கினர்‌ எசாயவை மேற்கோள்‌ காட்டி மனமாற்றத்திற்கு அழைத்ததைப்‌ போன்று இன்று நம்மையும்‌ மனமாற்றத்திற்கு அழைக்கின்றார்‌.

திருமுழுக்கு. யோவான்‌ பாலைநிலத்தில்‌ தனது பணியைத்‌, தொடங்கினார்‌. பாவைதிவம்‌ தனிமையான இடம்‌, அமைதிக்கு ஏற்ற இடம்‌, மனமாற்றத்திற்கு உரிய இடம்‌. நாம்‌ வாழும்‌ பரபரப்பான சந்தடி, இருந்த உலகில்‌ கடவுளுடைய உடனிருப்பையும்‌, அவருடைய குரலையும்‌ கேட்க அமைதி தேவைப்படுகிறது. திருப்பா கூறுகிறது " அமைதி கொண்டு, நானே கடவுள் என்பதை உணர்ந்து கொள்" திபா 46:10

இஸ்ரயேல்‌ மக்கள்‌ கடவுளை விட்டுத் தூரமாகச் சென்று சிலைவழிபாட்டுத்‌ தீட்டில்‌ சிக்கி உழன்றபோது இறைவாக்கினர்‌ வாயிலாக அம்மக்களைப் பார்த்து கூறினார். நான் அவனை நயமாக, கவர்ந்திழுப்பேன்‌; பாலைநிலத்துக்கு அவனைக்‌ கூட்டிப்போவேன்‌; செஞ்சுருக அவனுடன்‌ பேசுவேன்‌" (ஓசே 2:14). நாமும்‌ பாலைநிலம்‌ செல்வோம்‌: அமைதியான சூழ்நிலையை உருவாக்குவோம்‌: கடவுளின் குரலொலியைக் கேட்போம்‌. மனமாற்றம் அடைவோம்.

மனமாற்றத்திற்கு மாபெரும் தடையாகயிருப்பது நமது ஆணவம்‌, "தான்‌". என்ற தன்‌ முனைப்பு, குன்றுகள்‌, தாழ்த்தப்பட வேண்டும்‌, அதாவது நமது ஆணவத்‌ திமிர்‌ என்ற குன்று 'தமைமட்டமாக்கப்பட வேண்டும்‌. திருமுழுக்கு போவான்‌ தன்னையே தாழ்த்துகிறார். என்னைவிட வல்லமைமிக உருவர் எனக்குப் பின் வருகிறார். குனித்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத்‌ தகுதி இல்லை? (மாற்‌ 1:860) "மனிதராய்‌ பிறந்தவர்களில்‌, திருமுழுக்கு யோவானைவிடப்‌ பெரியவர்‌ எவரும்‌ தோன்றவில்லை" (மத் 11:01) என்று கிறிஸ்து திருமுழுக்கு யோவானைப்‌ புகழகின்றார். அவரோ தன்னைத்‌ தாழ்த்தி, "அவருடைய (கிறிஸ்துவுடைய), செல்வாக்குப்‌ பெருக வேண்டும்‌. என் செல்வாக்கு குறைய வேண்டும்‌". (யோவா 3:29:30) என்கிறார்.

யார் பெரியவர்கள்‌? யார்‌ சிறியவர்கள்‌? பெரியவர்கள்‌ பணிந்து போகின்றவர்கள்‌. சிறியவர்கள்‌ தங்களைப்பற்றிப்‌ பெருமையாகப் பேசுகின்றர்கள்‌ என்று ஐயன்‌ வள்ளுவர்‌ இனம்‌ பிரித்துக் காட்டுகிறார்.

பணியுமாம் என்றும் பெருமை: சிறுமை
அணியுமாம் தன்னைவியந்து (குறள்‌ 978)

அலுவலகத்தலிருந்து வீடு திரும்பிய கணவர்‌ கோபத்துடன்‌ தன்‌ மனைவியிடம்‌, "இன்னும்‌ பத்து நிமிடங்களில்‌ குளிக்க‌ச் சுடுதண்ணீர் வைத்துக்‌ கொடுக்காவிட்டால்‌, நடக்கிறதே வேற" என்றார்‌. மனைவி அதே தொனியில், அதே பாணியில்‌, " பத்து நிம்டங்களில்‌ சுடுதண்ணீர் வைத்துக்‌ கொடுக்க முடியாது... எனை நடக்கும்‌?" என்று திருப்பிக்‌ கேட்ட அதற்குக்‌ கணவர்‌ மிகவும சாதுவாக, " அப்ப பச்சைத்‌ தண்ணீர்‌, குளித்துக்‌ கொள்கிறேன்‌" என்றார்‌. பல நேரங்களில்‌ தாம்‌ விட்டுக்‌ கொடுத்தால்தான்‌, நேரடி மோதல்களைத்‌ தவிர்க்க முடியும்‌, விட்டுக்‌ கொடுக்கிறவன்‌ கெட்டுப்போவதில்லை, கெட்டுப்போகிறவண்‌ விட்டுக்‌ கொடுப்பதில்லை.

தன்னுடைய சீடர்கள்‌ தன்னை விட்டுவிட்டுக்‌ கிறிஸ்துவைப்‌ பின் சென்றதைக்‌ கண்ட திருமுழுக்கு யோவான்‌ அது குறித்து வருந்தவில்லை. மாறாக எதையுல்‌ பெற்றுக்கொள்ள முடியாது" (யோவா 3:27), என்கிறார்‌. பிறருடைய கொடைகளைக்‌ கண்டு காழ்ப்புணர்வு, கொள்வதை நிறுத்த வேண்டும்‌. எனெனில்‌ கடவுள்‌ கொடுப்பதை மனிதன்‌ தடுக்க முடியாது. கடவுள்‌ தடுப்பதை மனிதன்‌ கொடுக்க முடியாது.

கிறிஸ்து அழகிய குடிலில்‌ பிறப்பதைவிட, நம்‌ நெஞ்சக்‌ குடிலே பிறப்பதையே விரும்புகிறார்‌. அந்த நெஞ்சக் குடில்‌ தாழ்ச்சி என்னும்‌ குடிலாகத்தான்‌ இருக்க முடியும்‌. " கடவுள்‌ உள்ளத்தில்‌ செருக்குடன்‌ சிநதிப்போரைச்‌ சிதறடித்து வருகிறார்‌. தாழ்திலையில்‌ இருப்போரை உயர்த்துகிறார்‌" (லூக்‌ 1:52:53).
 
 
மறையுறை மொட்டுக்கள்   Rev. Fr. Peter Jayakanthan sss


 
 
மறையுரைச்சிந்தனை  -திருவுரைத் தேனடை அருள்பணி இ.லூர்துராஜ் -
 
 இறைவன் கூக்குரலிடுகிறார்

கோவை நகர். கௌலி ப்ரவுன் சாலை. ஹவுசிங் யூனிட் காம்பவுண்ட்சுவர் அந்த வழியாகச் செல்லும் அனைவரும் நின்று படித்து இரசிக்கும் வண்ணம் சுவர் எழுத்துக்கள் கிண்டலடிப்பது போல கிறிஸ்தவ சமய ஒரு பிரிவினருக்கும் பெரியார் கட்சித் தொண்டர் களுக்கும் இடையே நடைபெற்ற சுவர் எழுத்துப்போட்டி.

"இயேசு சீக்கிரம் வருகிறார்' - அல்லேலூயா இயக்கத்தினர் அதுவரை மக்கள் என்ன செய்வது"-திராவிடக் கழகத்தினர் "அதுவரை பாவம் செய்தலை விட்டுமனந்திரும்பி நட'- அ.இ. 'இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்" தி.க. "நீ மனந்திரும்பட்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்"- அ.இ.

சுவையான, சிந்திக்கத் தூண்டும் சுவர் எழுத்துப் போராட்டம் "ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலம் தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால் அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக உங்களுக்காகப் பொறுமையோடிருக்கிறார். யாரும் அழிந்து போகாமல் எல்லாரும் மனம் மாற வேண்டுமென விரும்புகிறார்" (2 பேதுரு 39) மனிதன் மனந்திரும்பட்டும் என்று கடவுள் காத்துக் கொண்டிருப்பவர் மட்டுமல்ல. கூக்குரல் இடுபவரும் கூட. "பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகின்றது. ஆண்டவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்" (எசா 40:3)

பாலைவனத்தில் ஒரு கூக்குரல் - இது திருமுழுக்கு யோவானின் குரல் என்று நாம் நினைக்கிறோம். உண்மை அதுவல்ல. கூக்குரல் இடுவது இறைவனே. பாலை நிலம் என்பது நமது வாழ்க்கையே! அமைதியாகத் தாழ்ந்த குரலில் பேகம் இறைவன் அவ்வப்போது கூக்குரலிடுகிறார், நம்மை உசுப்புவதற்காக சுனாமியாகச் சுழன்றடித்த பேரிடர் இறைவனின் கூக்குரல் இல்லையா? இயற்கைக்கு ஊறுவிளைவிக்காதே என்பதுதானே அதன் முழக்கம் சுட்டெரிக்கும் வெயிலும் வெப்பமும் கூட இறைவனின் கூக்குரல் அன்றோ சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாதே என்பதுதானே அதன் விளக்கம்.

இயற்கையின் சீற்றமாக மட்டுமல்ல, இறைவாக்கினரின் எச்சரிக்கையாகவும் இறைவன் கூக்குரலிடுகிறார் என்பதுதான் இன்றைய திருவழிபாட்டுச் செய்தி தூங்குபவனை எழுப்பிவிடலாம். தூங்குவது போல் பாசாங்கு செய்பவனை என்ன செய்தும் எழுப்ப முடியாது. இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக இறைவன் எழுப்பும்கூக்குரல் தூங்குகிறஅல்லது தூங்குவது போல் நடிக்கிற நம்மை உலுக்கட்டும் "மனம் மாறி உங்கள் குற்றங்கள் அனைத்தையும் விட்டு விலகுங்கள். எனக்கு எதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும் புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள். மனம் மாறுங்கள் வாழ்வு பெறுங்கள்" (எசேக்.18:30-32) மனந்திரும்பத்தேவையில்லை என்று தான் இன்றைய மனிதனும் நினைக்கிறான். இயேசுவைப் பொறுத்தவரை அவரைக் கொன்றவர்கள், மனந்திரும்ப மறுத்தவர்கள் ஒழுக்கக்கேடு உள்ளவர்கள் அல்ல. தங்களையே நேர்மையாளர்களாக நினைத்த பரிசேயர்களே!

'பாவமே இல்லை என்று சொல்வது தான் இன்றைய உலகின் மிகப்பெரிய பாவம்' என்றார் திருத்தந்தை 6ஆம் பவுல். அழுக்கோடிருக்கும் குழந்தை, அம்மா குளிக்கக் கூட்டிப்போகும் போது அடம்பிடிப்பதைப்போல தன் மன அழுக்குகளைப் பற்றி உணர்வற்று இருக்கிறோம்.

தன்னிலை உணர்தல், தன் தவறுகளை ஏற்றுக் கொள்ளுதல் இதுவே மனந்திரும்புதலின் அச்சாணி, தவறு என்பது முதுகுபோல, தன் தவற்றை எவரும்பார்ப்பதில்லை. அதனால்தான் அடுத்தவன் கண்ணில் உள்ள துரும்பைப் பார்க்கிறோம். நம் கண்ணில் உள்ள விட்டத்தை நம்மால் பார்க்க முடிவதில்லை. உடல் அழுக்கைச் சுட்டிக்காட்டப் பலர் வருவர். மனஅழுக்கை அவரவர் உணர்ந்தால்தான் உண்டு. அப்படியே உணர்ந்தாலும் அதிலிருந்து விடுபட நாம் கையாளும் வழிகள் பெரிதும் பலவீனமானவை.

ஒரு முக்கிய தலைவர் தன் செயலரோடு வெளிநாட்டுக்கு விமானம் ஏறினார். ஒரே துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது? புரியவில்லை. விமானத்தை விட்டு இறங்கி விடுதியில் தங்கியபோது அதே துர்நாற்றம். பிறகுதான் தெரிந்தது அதற்குக் காரணம் தன் செயலரின் காலுறை (Socks) என்று. உடனே கத்தினார். உன் சாக்ஸை மாற்று என்று. உடனே செயலர் மாற்றிக் கொண்டாராம் வலது காலில் இருந்த காலுறையை எடுத்து இடது காலிலும் இடது காலில் இருந்ததை எடுத்து வலது காலிலுமாக.

இப்படித் தான் இருக்கின்றன நமது மனமாற்றங்கள் எல்லாம். சில சமயங்களில் DDT பாவசங்கீர்த்தனங்களில் திருப்தி காண்கிறோம். குளம் ஒன்றில் நாற்றக் குமிழிகள் கொப்புளித்தன. நாற்றம் தாங்காது மக்கள் முறையிட அரசு அதிகாரிகள் வந்தனர். DDT மருந்து அடித்தனர். நாற்றம் குறைந்தது. போய் விட்டனர். பின்னும் குமிழிகள். மறுபடி நாற்றம். மறுபடி அதே மருந்தடிப்பு தற்காலிக நிவாரணம். மீண்டும் நாற்றம். ஒருவன் சொன்னான்: "நீர்க்குமிழிகள் எழுந்தால் குளத்தின் ஆழத்தில் ஏதோ அழுகிக் கிடக்கிறது என்று பொருள்' மூச்சைப் பிடித்து ஆழத்தில் இறங்கி அழுகிய பிணத்தை எடுத்து எறிந்தார்கள். பிறகு குமிழி இல்லை. நாற்றம் இல்லை. நீரும் தெளிந்தது.

"இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிசாய்த்தால் எத்துணை நலம்! அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்" (தி.பா.95:7,8)
 
சிந்தனைப் பயணம்: அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச
 நற்செய்தியாக வாழ அழைப்பு

ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 10ம் தேதி, மனித உரிமைகள் நாளை நினைவுகூருகிறோம். 1948ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவை, மனித உரிமைகளின் உலகளாவிய அறிக்கையை (UDHR) டிசம்பர் 10ம் நாள் வெளியிட்டது. அதன் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 10ம் தேதி, மனித உரிமைகள் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு, 10 டிசம்பர் 2023, மனித உரிமைகளின் உலகளாவிய அறிக்கை வெளியிடப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கின்றோம். இனம், நிறம், மதம், பாலினம், மொழி, ஆகிய எந்த பாகுபாடும் இன்றி, தனி மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமைகளை இந்த அறிக்கை பறைசாற்றி வருகிறது. இந்த அறிக்கை மட்டுமே, உலகில் 500க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

"அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி" என்பது இவ்வாண்டு மனித உரிமைகள் நாளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருளாகும். மனித உரிமைகள் அறிக்கையில் கூறபட்டுள்ள மனித மாண்பு மற்றும் சமத்துவம், அண்மைய சில ஆண்டுகளாக, பல நாடுகளில் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை நாம் அறிவோம். தொற்றுநோய்கள், மோதல்கள், முன்னெப்போதும் இல்லாத அளவு வளர்க்கப்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகள், இனவெறி, காலநிலை மாற்றம் என்ற சவால்களை எதிர்கொள்ளும்போது, சுதந்திரம், சமத்துவம், நீதி மற்றும் பிற அடிப்படை உரிமைகள், கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. பாலஸ்தீனாவின் காசாப்பகுதி, உக்ரைன், சிரியா, ஏமன், மணிப்பூர் ஆகிய இடங்களில், மனசாட்சியற்ற முறையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. குறிப்பாக, உலகின் வருங்காலக் குடிமக்களான குழந்தைகள், இளைஞர்கள், ஆகியோரின் உரிமைகள், எவ்வித தயக்கமும் இன்றி மீறப்படுகின்றன.

உலகெங்கிலும் தற்போது நடந்துவரும் மோதல்களில், குழந்தைகளும், இளம் தலைமுறையினரும் மிக அதிகமான சவால்களை எதிர்கொள்கின்றனர். தங்களுடைய பெற்றோர், உடன்பிறந்தோர் கொல்லப்படுதல், மற்றும் தங்கள் இல்லங்கள், பள்ளிகள் ஆகியவை தகர்க்கப்படுதல் போன்ற அழிவுகள், இந்த இளம் உள்ளங்களில் வேதனை, கோபம், விரக்தி ஆகிய உணர்வுகளை வளர்க்கின்றன. இந்த உணர்வுகள் சரியாக குணமடையாதபோது, அவர்கள் வாழ்நாள் முழுவதும், காயமடைந்த உள்ளத்துடன் வாழவேண்டியுள்ளது. அவர்களது கோபத்தையும், விரக்தியையும் பயன்படுத்திக்கொண்டு, சில போராளிக் குழுக்கள், இந்தக் குழந்தைகளையும் இளைஞர்களையும் எளிதாக் கவர்ந்து, அவர்களை, இராணுவ வீரர்களாகவும், தற்கொலைப் படை வீரர்களாகவும் மாற்றுகிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.

இதற்கு மாறாக, வேறு சில இளைஞர்கள் தங்கள் கோபத்தையும் வேதனையையும் ஆக்கபூர்வமான வழிகளில் செலுத்துகிறார்கள் என்பதையும் நாம் அறிவோம். உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 18 வயதுடைய ஹுசைன் மிர்சா ஹபிபோவ் (Husan Mirza Habibov) என்ற ஓர் இளம் கலைஞர், " ரூபிக்" எனப்படும் கனசதுர வடிவங்களைப் பயன்படுத்தி, காசா மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் தனித்துவமான ஓர் ஓவியத்தை வரைந்துள்ளார். இவரது கலைப்படைப்பு, அவ்விளைஞரின் கலைத் திறமைகளுக்குச் சான்றாக மட்டுமல்லாமல், காசா மோதலில் பாதிக்கப்பட்டவர்களை, குறிப்பாக, குழந்தைகளையும், பெண்களையும் குறித்து அவர் கொண்டிருக்கும் பரிவை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இவரைப்போல, இன்னும் பல இளைஞர்கள் தங்கள் கோப உணர்வுகளை படைப்பாற்றல் மிகுந்த, ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துவார்கள் என்று நாம் நம்புவோம், அவர்களுக்காக செபிப்போம்.

நம் உள்ளங்களை அச்சத்திலும், கோபத்திலும் மூழ்கடிக்கும்வண்ணம், ஒவ்வொரு நாளும், ஊடகங்கள் வழியே வெள்ளமென பெருகிவரும் எதிர்மறைச் செய்திகளுக்கு ஒரு மாற்றாக, ஹுசைன் மிர்சா போன்றவர்கள் 'நல்ல செய்தி'யாக ஒளிர்கின்றனர். திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள வாசகங்கள் (எசாயா 40:1-5,9-11; மாற்கு 1:1-8), " நல்ல செய்திகளால் ஆறுதல் அடையுங்கள்" என்று அழைப்பு விடுக்கின்றன. கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம் (மாற்கு 1:1) என்று ஆரம்பமாகும் மாற்கு நற்செய்தியின் முதல் சொற்கள், நம் சிந்தனையைத் தூண்டுகின்றன.

கிறிஸ்தவ மறையின் உயிர்நாடியென விளங்கும் நான்கு நற்செய்திகளில், மாற்கு நற்செய்தியே முதலில் உருவாக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். நான்கு நற்செய்தியாளர்களில், மாற்கு மட்டுமே முதல் இறைவாக்கியத்தில் 'நற்செய்தி' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். மற்றவர்கள் தங்கள் நற்செய்திகளை வேறு சொற்களுடன் தொடங்குகிறார்கள். 'நற்செய்தி' என்ற சொல்லைச் சற்று ஆழமாகச் சிந்திக்க முயல்வோம். நல்ல, செய்தி என்ற இரு சொற்களின் இணைப்பே 'நற்செய்தி'.

நல்ல, செய்தி, என்ற இவ்விரு சொற்களில், 'செய்தி' என்ற சொல்லைக் கேட்டதும், நாளிதழ், அல்லது, தொலைக்காட்சியில் காண்பவற்றையே நாம் 'செய்தி' என்று கூறிவருகிறோம். நம் குடும்பங்களில் உறவுகளைச் சந்திக்கும்போது, அல்லது, தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்போது, 'என்ன செய்தி?' என்று நம் பரிமாற்றங்கள் அமைவதைக் காண்கிறோம். செய்தித்தாள், தொலைக்காட்சி, நம் குடும்பச் 'செய்தி' என்று நாம் திரட்டும் 'செய்தி'களைத் தொகுத்தால், நம்மிடையே அதிகமாகப் பரிமாறப்படும் 'செய்திகள்', நல்ல செய்திகளா, அல்லது மோசமான செய்திகளா என்ற கேள்வி எழுகிறது.

நல்ல செய்திகளைப் புறந்தள்ளிவிட்டு, மோசமான செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்கள் மிகத் தீவிரமாகச் செயல்படுகின்றன. அத்தகையச் செய்திகளையே " மக்கள் விரும்புகிறார்கள்" என்றும் ஊடகங்கள் கூறி, தங்கள் தவறை மறைத்துவருகின்றன. எனவே, ஊடகங்களைத் திறந்ததும், நம் கண்களையும், காதுகளையும், சிந்தனையையும் நிறைப்பவை, " மோசமான செய்திகளே!

'செய்தி' என்ற சொல்லுக்குள், 'மோசமான செய்தி' என்ற பொருள் இத்தனை ஆழமாக ஊடுருவியுள்ள இவ்வேளையில், நற்செய்தியாளர் மாற்கு 'நல்ல செய்தி' அல்லது, 'நற்செய்தி' என்று சொல்வது, எத்தகைய எண்ணங்களை உள்ளத்தில் விதைக்கின்றது என்ற ஆய்வை மேற்கொள்வது நல்லது.

'இவ்வுலகம் அவ்வளவு மோசமில்லை' என்பதைப் பறைசாற்ற ஒவ்வொரு நாளும், நல்லவை ஆயிரமாயிரம் நடக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும், நூற்றில் ஒன்றாக ஆங்காங்கே நடைபெறும் அக்கிரமங்களை, தேவைக்கதிகமாகப் பெரிதுபடுத்தி, உலகில் நடப்பதெல்லாமே மோசம் என்ற உணர்வை ஊடகங்கள் வளர்த்து, 'செய்தி'களை வியாபாரம் செய்துவருகின்றன. அவ்வப்போது, ஊடகங்களில் " நல்ல செய்தி" கள் வெளியாகின்றன. எனவே, மோசமானவையே பெரும்பாலும் நடைபெறும் இவ்வுலகில், நல்லவையும் எப்போதோ ஒருமுறை நடக்கத்தான் செய்கின்றன என்ற கருத்து நமக்குள் ஆழமாக வேரூன்றி விடுகிறது.

இந்தக் கருத்தை வேரறுக்க, நற்செய்தியாளர் மாற்கு அவர்கள், இந்த ஞாயிறன்று " கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்" (மாற்கு 1:1) என்ற வார்த்தைகளுடன் தன் நற்செய்தியை அறிமுகம் செய்கிறார். 'நற்செய்தி' என்ற வார்த்தைக்கு, 'euanglion' என்ற கிரேக்கச் சொல்லை மாற்கு பயன்படுத்தியுள்ளார். இந்தச் சொல், 'நல்ல செய்தியைச் சொல்பவர்' என்ற பொருளையும் உள்ளடக்கியது. எனவே, மாற்கு, 'நற்செய்தி' என்ற சொல்லால் குறிப்பிடுவது, ஒரு கருத்தை, அல்லது, ஏதோ ஒரு காலத்தில், எங்கோ ஓரிடத்தில் நிகழ்ந்த ஒரு வரலாற்றை அல்ல, அது ஒரு தலைசிறந்த மனிதரை, கடவுளின் தூதரைப் பற்றியது என்பதைச் சொல்கிறார். எனவே, நற்செய்தியாளர் மாற்கு அவர்கள், ஒரு " நற்செய்தி" யை அறிமுகம் செய்கிறார் என்பதைவிட, " நல்ல செய்தியாக வாழ்ந்த ஒருவரை" அறிமுகம் செய்கிறார் என்று சொல்வதே பொருத்தமாகத் தெரிகிறது.

நல்ல செய்தியாக வாழ்ந்தவர் இயேசு. அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்திலும், நம்மைப் போலவே, தன்னைச் சுற்றிலும் ஒவ்வொரு நாளும் மோசமானச் செய்திகளைக் கேட்டும், பார்த்தும் வளர்ந்தவர். பாலஸ்தீனம், உக்ரைன், சிரியா, ஆகிய நாடுகளைப்பற்றி நாம் இன்று பேச ஆரம்பித்தால், அங்கிருந்து நல்ல செய்தி எதுவும் வராது என்ற அளவு, மோசமானவற்றையே கேட்டு நாம் அலுத்துப் போய்விட்டோம். நமக்கே இந்த நிலை என்றால், அங்கு வாழ்பவர்களை எண்ணிப் பார்க்கவேண்டும். அங்கு வாழ்பவர்கள் தங்கள் நம்பிக்கையை எல்லாம் இழந்து, நொறுங்கிப் போயுள்ளனர் என்று அப்பகுதியில் பணியாற்றும் திருஅவைத் தலைவர்கள் சொல்லிவருகின்றனர்.

இயேசு வாழ்ந்த காலத்திலும், பாலஸ்தீனம் உரோமைய ஆக்கிரமிப்பில் நொறுங்கிவந்த காலம். ஒவ்வொரு நாளும் அங்கு நிகழ்ந்த அக்கிரமங்களைக் கண்ட இயேசு, அச்செய்திகளின் பாரத்தால் நசுங்கிப்போகாமல், அச்செய்திகளுக்கு மாற்றாக, நம்பிக்கை தரும் செய்திகளை, தன் சொல்லாலும், செயலாலும் உருவாக்கினார். நல்ல செய்திகளே நிரந்தரமானவை, ஏனைய மோசமான செய்திகள் நிரந்தரமற்றவை என்பதை மக்கள் மனதில் ஆழப்பதிக்க, தன் உயிரையேப் பணயம் வைத்து உழைத்தார். இறுதியில், தன் உயிரைப் பலியாகத் தந்து, இறந்து, உயிர்த்ததால், நல்ல செய்தி என்றும் வாழும் என்ற நம்பிக்கையைத் தந்தார் இயேசு.

இயேசு என்ற நற்செய்தி வாழ்ந்ததால் புண்ணியம் பெற்ற அந்தப் புனிதப் பூமியில், அவரைப் போலவே இன்றும், நற்செய்திகளாக வாழ்ந்துவரும் பலர் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களில் ஒருவர், மருத்துவரான, Izzeldin Abuelaish அவர்கள்.

போர் என்ற பெயரால் வரைமுறையற்ற வன்முறையை வளர்த்துவரும் மனிதர்கள் நடுவில், "இவ்வுலகம் அவ்வளவு மோசமில்லை" என்ற நம்பிக்கையை வளர்ப்பவர்களில் ஒருவர், மருத்துவர் Izzeldin Abuelaish. அவர் எழுதிய " I Shall Not Hate: A Gaza Doctor" s Journey" அதாவது, "நான் வெறுப்பு கொள்ளமாட்டேன்: காசாப் பகுதி மருத்துவரின் பயணம்" என்ற நூல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2014ம் ஆண்டு, புனித பூமியில் பயணம் மேற்கொண்ட வேளையில், அவருக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. அந்நூலில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள், நமக்குப் பல பாடங்களைச் சொல்லித் தருகின்றன.

முதலில், மருத்துவர் Abuelaish அவர்களைப் பற்றி ஒரு சில விவரங்கள்:
இஸ்ரேல் இராணுவமும், பாலஸ்தீனப் போராளிகளும், பல ஆண்டுகளாக, மோதல்களில் ஈடுபட்டுவரும் காசாப் பகுதியில், Jabalia என்ற முகாமில் வளர்ந்தவர் Izzeldin Abuelaish. தன் மருத்துவப் படிப்பை முடித்தபின்னர், இஸ்ரேல் பகுதியில் மருத்துவராகப் பணியாற்றச் சென்ற முதல் பாலஸ்தீனியர் இவரே. இவ்விரு நாடுகளிடையே பாலங்களை உருவாக்க தான் செய்யும் சிறு முயற்சி அது என்று கூறினார். 2009ம் ஆண்டு, இஸ்ரேல் இராணுவம் காசாப் பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில், மருத்துவர் Abuelaish அவர்களின் இல்லம் தாக்கப்பட்டு, Bessan, Mayar, Aya என்ற அவரது மூன்று மகள்களும் கொல்லப்பட்டனர். இதற்குப் பின்னரும் சில ஆண்டுகள் அவர் இஸ்ரேல் பகுதிக்குச் சென்று மருத்துவப் பணிகள் ஆற்றிவந்தார். இன்றுவரை மருத்துவர் Abuelaish அவர்கள், இஸ்ரேல் இராணுவத்தையோ, ஏனையக் குழுக்களையோ தன் துன்பங்களுக்குக் காரணம் என்று குற்றம் சொல்லாமல் வாழ்ந்துவருகிறார்.
"மற்றவர்களைக் குற்றம் சொல்வதற்கு நாம் பயன்படுத்தும் சக்தியை, நல்லது செய்வதற்குப் பயன்படும் சக்தியாக மாற்றினால், நாம் முன்னேறுவதற்கு வாய்ப்புண்டு" என்று மருத்துவர் Abuelaish அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஏவுகணைத் தாக்குதலில் தன் இல்லத்தையும், மூன்று மகள்களையும் பறிகொடுத்த மருத்துவர் Abuelaish அவர்கள், தன் வேதனையை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தினார். நம்மிடம் உள்ள பல்வேறு ஆயுதங்கள் அனைத்தையும்விட மிக வலிமையான ஆயுதம் கல்வியே என்று கூறும் மருத்துவர் Abuelaish அவர்கள், அந்தக் கல்வியை, மத்திய கிழக்குப் பகுதியில் வாழும் பெண்களுக்கு வழங்கும் நோக்கத்தோடு, கொல்லப்பட்ட தன் மகள்களின் நினைவாக, "Daughters for Life", அதாவது, "வாழ்வுக்காக மகள்கள்" என்ற அறக்கட்டளையை நடத்திவருகிறார். "இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே அமைதியை உருவாக்கும் முயற்சிகளுக்கு, என்னுடைய மூன்று மகள்களின் உயிர்கள், இறுதிப் பலிகளாக அமைந்தன என்பதை அறிந்தால், என் மனம் அமைதிபெறும்" என்று மருத்துவர் Abuelaish அவர்கள், "நான் வெறுப்பு கொள்ளமாட்டேன்" என்ற தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனம், இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நடப்பதெல்லாம் அழிவு மட்டுமே என்பதைச் செய்திகளாக வெளியிட்டுவரும் ஊடகங்களை நம்புவதைக் காட்டிலும், அப்பகுதிகளிலும் 'நற்செய்தி'களாக வாழ்பவர்கள் உள்ளனர் என்பதை, அங்கு வாழ்ந்த இயேசு, மற்றும், மருத்துவர் Abuelaish போன்று, அங்கு தொடர்ந்து வாழும் நல்லவர்கள் வழியே அறிய முயல்வோம்.

இந்த நற்செய்திகளை பரப்புவதற்கு ஊடகங்கள் முன்வராது. இருப்பினும், நல்லவை இவ்வுலகில் நடக்கத்தான் செய்கின்றன என்ற நம்பிக்கையை வளர்ப்பது, நாம் ஆற்றக்கூடிய முதல் 'நற்செய்தி'ப்பணி. அமைதியின் இளவரசர் வருவதை எதிபார்த்துக் காத்திருக்கும் இந்தத் திருவருகைக் காலத்தில், அமைதியின் தூதர்களாக ஆயிரமாயிரம் உள்ளங்கள் நம்மைச் சுற்றி வாழ்கின்றனர் என்ற 'நற்செய்தி'யை, நம்மால் முடிந்தவரை இவ்வுலகில் பரப்ப முயற்சிகள் மேற்கொள்வோம்.

வாழ்வில் நாம் நல்லவை சிலவற்றை அனுபவிக்கும்போது, அதை மற்றவர்களுக்குச் சொல்வதில்லையா? நாம் படித்த ஒரு நல்ல நூல், நாம் சுவைத்த ஒரு நல்ல உணவு, நாம் பயன்பெற்ற ஒரு நல்ல மருந்து, அலல்து, நாம் கண்டு இரசித்த ஓர் இடம், ஒரு திரைப்படம்... என்று, நாம் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெறவேண்டும் என்ற முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோமே! நாம் பெற்ற நல்ல அனுபவத்தை மற்றவர்களும் பெறுவதற்கு பரிந்துரைக்கிறோம். அழைப்பு விடுக்கிறோம். அல்லது, குறைந்தபட்சம், நம் அனுபவத்தை ஒரு 'நல்ல செய்தி'யாக அவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

கிறிஸ்தவ மறையின் ஆணிவேராக விளங்கும் இயேசுவையும், அவர் வாழ்வையும் ஒரு 'நற்செய்தி'யாக நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துள்ளோமா? அந்த நற்செய்தியாக நாம் வாழ முற்படுகிறோமா? அல்லது, அந்த 'நற்செய்தி', எப்போதாவது ஒருநாள் தூசி துடைத்துப் புரட்டப்படும் ஒரு நூலாக, நம் வாழ்வில் தேடவேண்டிய ஓர் ஆன்மீக அகராதியாக மட்டும் நம் வாழ்வின் ஏதோ ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கிறதா?
விடைகள் தேடுவோம்! .... பயன்கள் பெறுவோம்!

அமைதியின் இளவரசரான இயேசுவின் பிறப்பை எதிர்நோக்கியிருக்கும் நாம், அண்மைய சில ஆண்டுகளில், நல்ல செய்திகளை மிக அரிதாகக் கேட்டு வருகிறோம். இவ்வேளையில், இன்றைய வழிபாட்டின் முதலிரு வாசகங்களில் நாம் காணும் ஆறுதல் தரும் ஒரு சில வரிகளுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:
எசாயா 40: 1-2, 10-11

"ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்" என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது.... இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; ஆயனைப்போல் தம்மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்."

புனித பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம் 3: 9,13 ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார். அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழுமுயற்சி செய்யுங்கள்.
=========================================================================
 
ஞாயிறு மறையுரை - திரு. சின்னப்பன் டிசில்வா. - வெலிங்டன்.ஊட்டி
" அமைதி"

திருவருகை காலத்தின் இரண்டாம் ஞாயிறை அமைதியின் அடையாளமாக சிறப்பிக்க திரு அவை நம்மை அழைக்கிறது. இந்த மெழுகுவர்த்திக்கு பெத்லகேம் மெழுகுவர்த்தி என பெயரிட்டு, நிறைமாத கற்பிணியான அன்னை மரியாளும் சூசையப்பரும் பெத்தலகேம் பயணித்ததை நினைவு கூறுகின்றது.. நிறைமாத மகவை சுமந்தபடி ஒரு தாய் மலை நாடுகளின் நடுவில் பயணப்படும் ஒரு நிகழ்வை அமைதியின் பின்னணியாக திருஅவை நம் கண் முன் நிறுத்துகின்றது. என்றால்

சற்று யோசிப்போம் அமைதி என்பது என்ன?.என்று.

நமது பார்வையில் செய்யும் செயலில் இருந்து (எந்த வகை செயலாக இருந்தாலும்) விடுபட்டு ஓய்வு கொள்வதை அமைதி என்கிறோம் ஆனால்
இன்றைய முதல் வாசகம் எசாயா 40:1-5,9-11.ல் ஒரு பெரும் போராட்டம் ஆறுதலான கனிமொழிகளுடன், எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் முடிவு பெற்றதைப் படிக்கின்றோம். போராட்டத்திற்குப் பின் அமைதி இருக்க வேண்டும் ஆனால் அங்கு ஆண்டவரின் வழியை ஆயத்தப்படுத்த - பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படவும், மலை, குன்று யாவும் தாழ்த்தப்படவும்; கோணலானது நேராக்கப்படவும், கரடு முரடானவை சமதளமாக்கப்படவும் குரலொளி ஒன்று முழங்குகின்றது. (எசாயா 40:3-4) ஆக, ஆண்டவரால் ஆசி பெற்றவர்கள் அவருடைய குரலுக்கு கீழ்ப்படிந்து செயல்படுவதை அமைதி என்று ஏற்றுக்கொள்வதா?.

ஒவ்வொரு போராட்டத்தின் பின்புலமாக ஒரு நம்பிக்கையும் அதனால் ஏற்படும் எதிர்பார்ப்பும் நிச்சயம் இருக்கும். நமது நம்பிக்கையும் - எதிர்பார்ப்பும் ஆண்டவரின் இரண்டாம் வருகை என்று திருத் தொண்டர் பேதுரு ஆணித்தரமாக கூறுகின்றார். ஒரு கிறிஸ்தவனுக்கு இதில் மாற்று கருத்து இல்லை; அதேவேளை இரண்டாம் வருகையை எதிர்பார்த்திருக்கும் நம்மை அவர் மாசு மறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய் இரண்டாம் வருகையைக் காணும் வகையில் முழுமுயற்சி செய்யுங்கள் (2 பேதுரு 3:14) என்கிறார். அந்நாள் வரும் வரை, ஓய்வும் தொய்வும் அற்ற முழு முயற்சிகள் தேவை என்று நினைவு படுத்துகின்றார். இரண்டாம் வாசகப்படி பேதுரு நமக்கு ஓய்வு - அமைதி என்பது நமது நம்பிக்கையைக் கைக்கொள்ளும் முழு முயற்சி என்கிறார்.
நற்செய்தியில்

மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. (மத்தேயு 11:11) என்று இயேசுவால் சிறப்பு பெற்ற யோவான்: இடர்பாடுகள் நிறைந்த பாலைவனத்தில் எளிய வாழ்வை வாழ்கின்றார். . அவர், அங்கு முதல் வாசகத்தில் கேட்டதைப் போல் மக்களை நேர்வழிப்படுத்த அழைப்பு விடுத்துக்கொண்டு இருக்கின்றார் .

ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்" என யோவானால் பறை சாற்றப் பெற்ற (மாற்கு நற்செய்தி 1:8) இயேசு கிறித்து அமைதியைப் பற்றி பின்வருமாறு யோவான் நற்செய்தி 14:27.ல் அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம், மருள வேண்டாம்.என்று கூறுகின்றார் அப்படியானால்

முடிவாக அமைதி என்பது என்ன?... திரு அவை சூசை, அன்னை மரியாள் இவர்களின் இன்னல் மிகுந்த நெடும் பயணத்தை அமைதியின் அடையாளமாக்குகிறது. முதல், இரண்டாம் வாசகங்கள்- இரண்டிலும் - நம்பிக்கை சார்ந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முழு முயற்சிகளை - செயல்களை அமைதி போல் காட்சிப்படுத்தப் படுகின்றன. நற்செய்தியில் வாழும் இடம், இடர்மிகு பாலை நிலமே ஆனாலும் விழிப்போடு முழு முயற்சியோடு வாழும் வாழ்க்கையை வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டுகிறார் திருமுழுக்கு யோவான். ஆவியால் திருமுழுக்கு கொடுப்பவராகவே இயேசு கிறிஸ்து இருந்தாலும், அவரே அவர் தரும் அமைதி உலகம் தருவதைப் போன்றது அல்ல என்கிறார்.
பின் எது அமைதியாக இருக்கும் ?. ஒரு சிறு கதை வழியாக நம் மனித சிந்தனைகளில் வழியில் யோசிப்போம்.

ஒரு அரசருக்கு அமைதியை எப்படிக் காண முடியும்?.. என சந்தேகம் உண்டாகின்றது. அவர் ஓவியர்களை அழைத்து அமைதியை ஓவியமாக காட்சிப்படுத்தக் கட்டளை இடுகின்றார். கொண்டுவரப்பட்ட ஓவியங்களில் சிறந்தது என மூன்று ஓவியங்கள் அவர் முன் காட்சிக்காக வைக்கப்படுகின்றன. முதல் இரண்டு ஓவியங்கள் இயற்கையின் வண்ணங்களையும் படைப்புகளின் சிறப்பையும் கண் முன் நிறுத்தின இருந்தும் அரசன் அவ்விடம் விட்டு நகர்ந்தான். அடுத்து கண் முன் நின்ற மூன்றாவது ஓவியத்தில் ஆர்ப்பரிக்கும் உயர்ந்த அருவி, இடியும் மின்னலும் வெளிப்படுத்தும் வானம், அருவியின் கரையோரத்தில் காற்றில் ஆடும் உயர்ந்த மரம் என பயமுறுத்தும் நிலைக்கு அதில் வரையப்பட்டிருந்ததைக் காண்கின்றான்.

யார் இதை வரைந்தது?.. என்றான் மன்னன். முன் நிறுத்தப்பட்ட ஓவியரைப் பார்த்து அமைதியை வரையச் சொன்னால் பயத்தை பதிவு செய்திருக்கின்றீர்? என்று கேட்டான். அதற்கு ஓவியர் ஓவியத்தை முழுமையாக பாருங்கள். அதோ அந்த மரக்கிளையில் தன் குஞ்சுகளை பாதுகாத்த வண்ணம் கூட்டில் அமர்ந்திருக்கும் தாய்ப்பறவையின் கடமையையும் தைரியத்தையும் அது வெளிப்படுத்தும் அதன் நம்பிக்கையின் அமைதியையும் உற்றுப் பாருங்கள் என்றான். மேலும், உலகம் தன் வழியே பயணிதாதுக் கொண்டேதான் இருக்கும்; நாம் தான் பொறுப்புடன் நமது வழியை- வாழ்கையை கடந்து செல்ல வேண்டும் இந்த தாய் பறவையின் அமைதியைப் போல என்று பதில் தந்தான். மகிழ்ந்த அரசன் பரிசுகளால் அவனை மகிழ்வித்தான்.

எத்தகைய சூழ்நிலையிலும் தன் சிறகுகளின் நிழலில் குஞ்சுகளை பராமரித்து பாதுகாக்கும் தாய்ப் பறவை அந்தச் சூழலிலும் அமைதியாக விழிப்போடு இருந்து கடமைகளை நிறை மனதோடு முழுமையாக செய்து முடித்ததே முழு அமைதியை அதற்குத் தந்தது.

1) இயலாத நிலையிலும் இதைத்தான் அன்னை மரியாளும் சூசையப்பரும் அரசகட்டளைக்கு கீழ்ப்படிந்தவர்களாக செயலாற்றினார்கள். இறைவாக்குப்படி பெத்தலகேம் உலகின் ஒளியைக் கண்டது.
2) பாலைவனம் ஆனாலும் பயமின்றி திருமுழுக்கு யோவான் செயல்பட்டதால் மீட்பரின் முன்னோடி என்று அறியப்பட்டார.
3) தூய ஆவியால் திருமுழுக்கு தரும் வல்லமை படைத்த இயேசு கிறிஸ்துவாக இருப்பினும் கெத்சமனே கற்றுத்தந்த " என் விருப்பம் அல்ல உமது விருப்பப்படியே ஆகட்டும்" என்ற தாரக மந்திரம் தந்தையே என் ஆவியை உமது கரங்களில் ஒப்படைக்கின்றேன் என்ற நிலைக்கு உயர்த்தப்பட அவருக்கு உறுதியைத் தந்தது.

உலகம் மன்னிப்பையும் மீட்பையும் அதனால் அமைதியையும் கண்டது.

வாருங்கள், அமைதி என்பது நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் உள்வாங்கி முழு முயற்சியுடன் நிறைவேற்றுவதில் தான் நிலை கொண்டு உள்ளது என்பதைப் புரிந்து கொள்வோம். வாழ்வு நிலை தாய்பறவைக்கு அமைந்தது போல், திருமுழுக்கு யோவானுக்கு நிகழ்ந்ததைப் போல் நமக்கும் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். " இருந்தும் என் விருப்பமல்ல உமது விருப்பமே" என்று நாம் அதை கடந்து கொண்டே இருக்க வேண்டும் - அதுவே அமைதி, அதுவே அமைதி நாயகன் தரும் மாறுபட்ட அமைதியும் ஆகும்.

அமைதியின் நாயகனை அவர் தரும் மாறுபட்ட அமைதியுடன் அன்புடன் அரவணைப்போம்.

   உன்னோடு நான் இருக்கின்றேன் சிறுபிள்ளை என்று சொல்லாதே! என்று சொல்லி
என் வாழ்வை நன்கு உயர்த்திடும் ஏணியாக்கினாய்! சுடர் தீபமாக்கினாய்!!