மாற்ற முடியாதென நினைத்ததை மாற்றிக் கொள்ள மற்றுமொரு தவக்காலம்
நமக்காகவே வந்திருக்கிறது....
பாதைகள் கரடு முரடு தான் பயணத்திற்கு முன் பாதங்களை சரி செய்யலாமே....
சடங்குகளின் ஆணிவேர்களை சாம்பலாக்கி உயிருள்ள மனசுகளை நேசிக்கச்
சொல்லி நெற்றியில் பூசும் சாம்பல், இத்தவக்காலத்தின்
வெற்றிக்கு அஸ்திவாரமாகிறது...
நோன்பு, செபம், தபம், தருமம் அறநெறிச் செயல்களை அன்றாடம்
செய்யும்போது ஒழுக்கம் நமக்கு நெருக்கமாகிறது...
அயலவரை அன்பு செய்வதால் அர்த்தமுள்ள வாழ்க்கையின் விதி
பூர்த்தியாகிறது...
இறையரசின் கனவு மெய்ப்பட இந்தத் தவக்காலத்தில் நம் பாதங்களை சரி
செய்வோம்...
தவக்காலத்தின் முதல் நாளில் இறை சமூகத்தில் கூடியுள்ள நாம் அனைவரும்
நம்மையே இறைவனுக்கு ஒப்புக் கொடுப்போம். இறைசாயலில் படைக்கப்பட்ட
நம்மை புனிதமாக பரிசுத்தமாக வாழ இறைவன் அழைக்கிறார். நம் தவறுகளை
எல்லாம் நினைத்து மனம் வருந்தி நம் குடும்பத்தில், சமூகத்தில்
இறைவனோடு ஒன்றித்து வாழ நம்மை நாமே தயாரிப்போம்.
நம் மனமாற்றம் வெறும் வெளி வேடமாக காவி உடை அணிவதிலும்,
நெடுந்துரம் நடந்து கோவிலுக்குச் செல்வதிலும் என இருந்து விடாமல்,
நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எதிராக நாம் செய்த பாவங்களை
நினைத்து வருந்துவோம். நம் உறவினர், அக்கம் பக்கம் உள்ளவர்கள்,
ஊரில் உள்ளவர்களை மனம் நோகச் செய்ததை நினைத்து மனம் வருந்துவோம்.
நம் குடும்பத்திலும் நமது வேலைத் தளங்களிலும் நமது கடமையைச்
செய்யாமல் வீண்பேச்சிலும், புறணி பேசுவதிலும், மற்றவர்களின் பெயரைக்
கெடுப்பதிலும் செலவழித்த நேரங்களை எல்லாம் நினைத்து மனம் வருந்துவோம்.
இனிமேல் இப்படிப்பட்ட பாவம் செய்வதில்லை என்ற உறுதிப்பாடு எடுப்போம்.
நல்ல மனிதராக இறைவனுக்கு உகந்தவர்களாக இறை வல்லமையும், இறை ஞானத்தையும்
பெற்றவர்களாக அனைவரையும் அன்பு செய்து வாழ்வோம்.
கடவுள் நம் ஒவ்வொருவரின் செயல்களுக்கு ஏற்பதக்க கைமாறு அளிக்க
காத்திருக்கிறார். நமக்கு கொடுக்கப்பட்ட கடைசி தருணம் இது என்பதை
நினைவில் கொள்வோம். நாம் சேர்த்து வைத்த சொத்துக்கள், பணம்,
பொருள்களை எல்லாம் நாம் எடுத்துக் கொண்டு போவதில்லை. நாம்
செய்யும் ஒவ்வொரு நல்ல செயல்களும், புண்ணியங்களும், தியாக செயல்களும்
தான் நம்மை நிலையான வாழ்விற்கு அழைத்துச் செல்லும் என்பதை நம்
மனதில் கொள்வோம். "மனிதா நீ எதை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தாய்
எதை நீ எடுத்துக் கொண்டு செல்லப் போகிறாய்? நீ வெறும் மண்ணால்
செய்யப்பட்ட பொம்மை தானே? மண்ணால் ஆன பொம்மைகளை இறைவனின் சாயலாகப்
படைத்து அவரின் உயிர் மூச்சையும் கொடுத்துள்ளார். நீ அவரைப்
போல மகிமையோடும், வல்லமையோடும் வாழ முயற்சி செய்" என சாம்பல்
கூட நமக்கு இந்நாளில் கட்டளையிடுகிறது.
எனவே இந்த தவக்காலத்தில் நாம் செய்த பாவங்களை நினைத்து மனம் வருந்துவோம்.
அவற்றிற்கு இறைவனிடம் மன்னிப்புக் கேட்போம். மனம் மாறி இறைவனின்
பிள்ளைகளாக மாறுவோம். இறைவனின் அருளையும் இரக்கத்தையும் பெற்று
மகிழ வழி காட்டும் ஓறுத்தல், செபம், தபம், ஒரு சந்தி போன்ற நன்னெறி
செயல்பாடுகளை மனமுவந்து செய்வோம். அதற்கான கிருபையைக் கேட்டு
இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
1. வழிபாட்டுப் பேரணியை திரட்டுங்கள் என அழைப்பு
விடுக்கும் அருள் நாதரே!
ஆண்டவரின் ஊழியர்களாகிய திருத்தந்தை, ஆயர்கள, குருக்கள,;
துறவியர், இறைமக்கள் அருள்பெற்றுக் கொள்ளும் இந்த
தவக்காலத்தில் புனிதமான உண்ணா நோன்புகளையும், வழிபாட்டுக்
கொண்டாட்டங்களையும் அனுசரித்து, நிந்தைக்கும் பழிச்
சொல்லுக்கும் தப்பித்துக் கொள்ளும் அருளைப் பெற்றுக் கொள்ள
துணைபுரிய வேண்டுமென்று, தெய்வமே உம்மை மன்றாடுகிறோம்.
2. விடுதலை நாளில் எமக்குத் துணையாய் இருக்கும்
அருள்நாதரே! உம்மிடமிருந்து வளங்களைப் பெற்று கொண்ட
நாடுகளின் தலைவர்கள், சமுதாயத்தின் தலைவர்கள் இதுவே தகுந்த
காலம், இதுவே மீட்பின் காலம் என உணர்ந்தவர்களாய், தேவையில்
இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற அளவுக்கு
நல்லன செய்ய பக்குவமான மனநிலை தர வேண்டுமென்று, தெய்வமே
உம்மை மன்றாடுகிறோம்.
3. உங்கள் இதயத்தைக் கிழித்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்
என அழைக்கும் அருள்நாதரே!
எங்கள் இதயத்தை உம் பக்கம் திருப்ப உழைக்கும் எமது பங்கின்
பணியாளர், இரக்கத்தின் காலத்தில் நீர் அருள் நிறைந்தவர்,
இரக்கம் மிக்கவர், செய்யக் கருதிய தீமையைக் குறித்து மனம்
மாறுகின்றவர் என்ற செய்தியை, எங்கள் இதயத்தின் ஆழத்தில்
பதியச் செய்யும் ஆற்றலோடு செயல்பட ஏராளமான அருள்பொழிய
வேண்டுமென்று, தெய்வமே உம்மை மன்றாடுகிறோம்.
4. அறச்செயல்களை செய்ய தவக்காலத்தில் ஞாபகபடுத்தும்
அருள்நாதரே! உம்மைப் புகழும் போதும், பிறருக்கு உதவும்
போதும் பெருமையாக நினைக்காமல் விளம்பரமின்றி எம்மால் இயன்ற
நற்செயல் செய்ய அருள் பொழிய வேண்டுமென்று, தெய்வீக நாதரே
உம்மை மன்றாடுகிறோம்.
5. எம்மீது அருள்பொழிய தவக்காலத்தை தேர்ந்தெடுத்த
அருள்நாதரே!
நாங்கள் வாழ்ந்து வரும் சொகுசான வாழ்க்கைக்கு மத்தியில்
சிறுசிறு ஒறுத்தல் முயற்சிகளாலும் உண்ணா நோன்பினாலும், செப
தவ முயற்சிகளாலும் எங்களது பாவ நாட்டங்களை குறைத்து அருள்
வாழ்வின் பாதையில் வளர அருள் பொழிய வேண்டுமென்று, இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
6. இரக்கமே உருவான இறைவா! தவக்காலத்தை தொடங்கியுள்ள
நாங்கள், குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அன்பு செய்து,
அவர்களின் குறை நிறைகளை பொறுத்து சமாதானத்தை எங்கள்
குடும்பத்தில் நிலைக்கச் செய்ய அருள்தர வேண்டுமென்று,
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
7. கருணையே உருவான இறைவா! ஏழை எளியவர்கள் மீது இரக்கம்
கொண்டு, எங்கள் பகட்டு வாழ்வை விட்டு விட்டு
மற்றவர்களுக்கு உதவி செய்து பகிர்ந்து வாழ கிருபை
தரவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
மன்னன் ஒருவன் வேட்டைக்காக காட்டிற்குச் சென்றான்.
மாலை வேலை என்பதால் தொழுகையை இருந்த இடத்திலேயே ஆரம்பித்தான்.
அந்தபக்கமாக காட்டிற்கு விறகு பொறுக்க வந்த ஒரு பெண்மனி
தன் கணளைத் தேடிக் கொண்டு பதட்டமாக ஓடி அப்போது எதிபாராதவதமாக
தொழுது கொண்டிருந்த மன்னன் மீது மோதிவிட்டாள். சிறிது
நேரம் கழித்து அவ்வழியே அந்தப் பெண்மனியும் அவரது கணவரும்
திரும்பினார்கள். தொழுகையை முடித்திருந்த மன்னன் அந்தப்
பெண்மனியிடம் தொழுகையில் இருந்த போது என் மீது ஏன்
மோதினாய் என சினத்துடன் கேட்டான். நேரம் இருட்டுவதற்குள்
என் கணவனைக் கண்டுபிடித்து வட வேண்டும் என கணவனையே
நினைத்துக் கொண்டு ஓடியதால் உன்னை நான் கவனிக்கவில்லை.
மன்னித்துக் கொள் என்றாள். தொடர்ந்து மன்னனிடம் நீ
தொழுகையில் இருந்த போது உன்னை நான் மோதியதை நீ எப்படி
கவனித்தாய் எனக் கேட்டாள். அப்போது மன்னன் தன் நிலை
உணர்ந்து அவமானத்தால் தலை குனிந்தான்.
தவக்காலத்தை எப்படி ஆரம்பிக்கப் போகிறோம்? தொழுகை நடத்திய
மன்னனைப் போலவா? கணவனை நினைத்து ஓடிய பெண்மனியைப்போலவா?
தவக்காலம் ஓடிக் கொண்டே இருக்கும் நம் சிந்தனையை 40
நாளிலாவது கடவுளுக்கு நெருக்கமாக இருக்க இழுத்துப்
பிடித்து வைக்கிறது. கடவுளை மட்டுமே நினைத்து நமது
வாழ்க்கையை அமைத்தால் யார் மோதினாலும் எந்த பாதிப்பும்
நிகழாது. அப்படியே மோதல் நிகழ்ந்துவிட்டால் கூட வருத்தம்
தெரிவிக்கும், மன்னிப்புக் கேட்கும் மனநிலை தானாகவே உருவாகி
விடும். ஓடிக் கொண்டிருக்கும் நாம் இறைவனை மையமாக
நினைத்து ஓட இந்த தவக்காலம் அழைப்பு விடுக்கிறது.
நமது வாழ்க்கைப் பாதையில் கடவுளை மையமாக வைத்துப் பயணிக்கும்
போது காணுமிடமெல்லாம் மகிழ்ச்சி பூங்காற்று மட்டுமே நம்மீது
வீசும். அப்படியே பலத்த காற்று வீசினால் கூட தாங்கிக்
கொள்ளுவோம்.
இன்று உலகம் போட்டி, பொறாமை சுயநலம், பழிவாங்கும் உணர்வு,
கொலை கொள்ளை, என்ற சிந்தனையை ஏந்திக் கொண்டு பயணிக்கிறது.
இதனால் தான் கவலைப்புயல், துன்பப்புயல் மோதி விழுந்து
விடுகிறோம். தன்னை உணர்ந்து, தன்நிலை மறந்து பிறரைப்பற்றி
கொஞ்சம் சிந்தித்தால் பூங்காற்று தொடுவதை அனுபவிக்கலாம்.
எது எப்படியானாலும் பரவாயில்லை பூங்காற்றை அனுபவிக்க
வாய்ப்பாக வந்திருக்கும் தவக்காலத்தைப் பயன்படுத்துவோம்.
மனமாற்றம் மட்டும் தான் விரும்பும் பலன் கொடுக்கும் என்பதை
முதலில் ஏற்றுக்கொள்வோம்.
எவற்றில் மாறவேண்டும் எப்படி மாறவேண்டும் என
சிந்திப்போம். குடும்பத்தில் இருந்தே ஆரம்பிப்போம்.
குடும்பங்கள் தானே நாம் குடியிருக்கும் கோயில் அதை
பேணிக்காப்போம். குடும்பத்தில் அன்பைக் கொண்டாடும்
போது அதுவே பணித்தளங்களிலும், காணும் இடங்களிலும்,
காணும் மனிதரிலும் எதிரொலிக்கும்.
எப்படி சம்பாதிப்பது? எப்படி சேமிப்பது? எது முக்கியமான
செலவு என குடும்பத் தலைவன், மனைவி, பிள்ளைகள் உட்பட அனைவரும்
கற்றுக் கொள்ள வேண்டும்.
காசு பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாது. சொந்த வீடு,
ருசியான சாப்பாடு இதெல்லாமே சந்தோஷமான விஷயம் தான்.
பணத்தைவிட குடும்ப உறவுதான் சந்தோஷத்துக்கு காரணமாக உள்ளது
குடும்ப உறவுகளுக்கு மதிப்பு கொடுப்போம்.
பணம் சம்பாதிப்பதில் அதிக நேரமும் அன்பு செய்வதில்
குறைந்த நேரமும் செலவிடுவதால் கோடிக்கணக்கில் செல்வம்
இருந்தும் வாழ்வில் திருப்தியும் நிறைவும் இல்லாமல் இருக்கிறது.
எனவே அன்பு செய்ய நிறைய நேரம் செலவிடுவோம்.
குழந்தைகளின் தேவையை அறிந்து நிறைவு செய்வோம். அதிக நேரம்
கணினியில் விளையாட இருக்கும் குழந்தைகள் என்ன
செய்கிறார்கள் எனவும் கவனிப்போம். கனிவையும் கண்டிப்பையும்
ஒன்றாக்கி பிள்ளைகளை வளர்த்தெடுப்போம். பெற்றோர்
பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக இருப்போம். பிள்ளைகள்
பெற்றோருக்கு மிகுந்த கீழ்படிதலுடன் இருப்போம். கட்டாயத்தின்
பேரில் ஒருவருக்கு உதவி செய்ய முடியும். ஆனால் அன்பு
செய்ய முடியாது. அன்புடன் பெற்றோருக்கும் மற்றோருக்கும்
உதவி செய்வோம்.
உலகிலேயே மிக மோசமான பாவச்செயல் தான் நல்லவனென்றும் பிறர்
பாவிகள் என்றும் தீர்ப்பிடுவது. இந்த மோசமான பாவச் செயலை
இந்த நாட்களில் செய்யாமல் இருக்க எல்லோரையும் மனிதாபிமானத்துடன்
நேசிப்போம்.
தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும் அதைத் திருத்திக்
கொள்ளும் பலமும் தான் உண்மையான வெற்றிக்கு வழி. தவறு
செய்யாமல் இருப்போம். தவறு செய்யும் போது மனம் வருந்துவோம்.
மன்னிப்புக் கேட்போம். அப்படியே பிறர் நமக்க எதிராக ஏதேனும்
தவறு செய்தால் உடனே மன்னிப்போம். மன்னிக்காமல் போவதை
விட மெதுவாகவேனும் மன்னிப்பது நல்லது. இது மன்னிப்பின்
காலம் நாம் மன்னிப்பது போலவே மன்னிக்கப்படுவோம்.
வாழ்வின் நூல் மெல்லியது. காலமோ குறுகியது. அடுத்தவருக்கு
முடிந்த வழியில் எல்லாம் நன்மை செய்வோம். அது நமது கடமையல்ல.
அதுவும் ஒரு சந்தோஷம். நமது மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும்
அது மிகுதியாக்கும்.
நன்மை செய்வதற்கு சக்தி இருக்கும் போதே அதை செய்ய
வேண்டியவர்களுக்கு நாம் செய்துவிட வேண்டும்.
பணத்தை விட ஞானம் மேலானது. பணத்தைச் சம்பாதித்தாலும்
நல் ஞானத்தைச் சம்பாதிப்பதும் மேலானது. கோடைக்காலத்தில்
சேமித்து வைப்பவன் புத்தியுள்ளவன் என்பது போல தவக்காலத்தில்
நற்பண்புகளை எல்லாம் சேமித்துப் கொள்வோம். பொல்லாத மனிதர்களின்
நட்பைக் கைவிடுவது நல்லது. தவறான பழக்க வழக்கங்களை தவிர்ப்பது
நல்லது. அதிகமாக நல்ல செயல்களில் நம்பிக்கையுடன் ஈடுபடுவதும்
நல்லது.
நமக்குள் உள்ள வேண்டாத நினைவுகளை, வேண்டாத பழக்க வழக்கங்களை
நீக்கி நமது நல்லெண்ணத்தால் நல்ல மனிதராக பிறரின்
பார்வைக்குள் அகப்படுவோம்.ரோமில் உள்ள விவசாய மற்றும்
உணவுத் துறையின் அறிக்கையில் உலகில் ஏதேனும் ஒரு
மூலையில் உணவின்மையால் பஞ்சத்தால் ஒவ்வொரு ஐந்து
வினாடிக்கும் ஒரு பச்சிளம் பிஞ்சு இறந்து விடுவதாக
குறிப்பிடப்படுகிறது. தவக்கால தர்மத்தாலும், உபவாச செபத்தாலும்
இதுமாதிரியான அவல நிலைக்கு ஆளாகும் பிஞ்சுகளின் இறப்பு
எண்ணிக்கையை தடுக்க முன்வருவோம்.
நம் வாழ்க்கையில் வளங்கள் நிறைப்பதைவிட பிறரின்
வாழ்க்கையில் வளங்கள் நிறைந்திருக்க வழி காட்டும் போது
நம் மனசும் நிறையும் மகிழ்ச்சியும் பெருகும். என்பதை
கவனத்தில் கொள்வோம்.
நாம் படிப்பது நமக்கு மட்டும் கை நிறைய சம்பாதிக்க அல்ல.
தனக்கு போக மிஞ்சியதை பிறருக்கு தர்மம் கொடுக்கவே! பிறருக்கு
கொடுக்க விரும்பாத மனிதன் கடவுளிடமிருந்து எதையும் பெற
முடியாது.
நமக்கு ஏற்படுகின்ற துன்பத்தை தாங்கிக் கொண்டு பிறருக்கு
ஏற்படுகின்ற துயரத்தை நீக்க முன்வரும் போது நமது துன்பத்தின்
வலி வெகுவாக குறையும்.
அடுத்தவர்களிடம் அன்போடு நடந்து கொள்ளும் போது சொர்க்கத்தையே
நேரில் பார்க்க முடியும்.
கடவுள் கருணைக்கடல். அன்பு நிறைந்த பேராழி. ஆனால் அதிலே
மொள்ள நாம் உபயோகிக்கும் வாளிதான் சிறியது. இந்த தவக்காலத்தில்
அவர் அருகில் சென்று நாம் உபயோகிக்கும் வாளியை மிகப்
பெரிதாக மாற்ற தவமிருப்போம். நாம் செய்யும் தவம் நம்மை
மாற்றும். மிகப்பெரிய வாளியைப் பயன்படுத்தி கடவுளின்
அன்பையும் கருணையையும் மொள்ளும் போது கடவுள் நம்மை அதிகம்
அதிகமாய் நேசிப்பார்.
இத்தவக்காலமானது சமூக அக்கறை கொண்டவர்களாக நம்மை மாற்றவும்,
நமது அறநெறி உணர்வுகளை செயல்களாக்கவும் வந்திருக்கிறது.
கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் என்பது இறைமொழி.
ஆனால் இறைவன் மொழியை உச்சரிக்க மறந்து இருளில்
வாழ்கின்றோம். இத்தவக்காலத்தில் எதை எல்லாம் பெற்றுக்
கொள்ள விரும்புகிறோமோ அதை எல்லாம் பகிர்தலாக்கி இறை
மொழியை அதிகமாக உச்சரித்து அதிகமாக அருளின் வெளிச்சத்தில்
பயணிப்போம். அப்போது மெல்லிய மகிழ்ச்சிப் பூங்காற்று
நம் பாதையிலும் தொடரும். அயலார் பாதையிலும் தொடரும்.
தவக்காலப் பயணம் இனிதாக அமையட்டும். இறைவனின் அருள் ஒளியால்
நிரம்பி வழியட்டும்.
"இயேசு, "நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்
பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ
வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு
செய்வர்" என்றார்" (மத்தேயு 6:2)
மத்தேயு நற்செய்தியில் இயேசு வழங்கிய "மலைப் பொழிவு" மைய இடம்
பெறுகிறது (மத் 5:1-7:29). முற்காலத்தில் மோசே இஸ்ரயேல் மக்களுக்குக்
கடவுளின் திருச்சட்டத்தை அறிவித்ததுபோல, இயேசு உலக மக்கள் அனைவருக்கும்
இறையாட்சி பற்றிய நற்செய்தியை "அதிகாரத்தோடு" அறிவித்தார் (மத்
7:29). இயேசுவை நம்பி ஏற்போரிடத்தில் துலங்க வேண்டிய பண்புகள்
யாவை? யூத சமயத்தில் முக்கியமான அறநெறியாகக் கருதப்பட்ட நோன்பு, இறைவேண்டல்,
ஈகை ஆகியவை எத்தகைய மனநிலையோடு செய்யப்பட வேண்டும்? இக்கேள்விகளுக்கு
இயேசு "மலைப் பொழிவின்" போது பதில் வழங்கினார். இயேசு வாழ்ந்த காலத்தில்
ஏழை மக்கள் பலர் இருந்தார்கள். ஆனால் அவர்களது தேவையை நிறைவேற்ற
அரசு திட்டங்கள் இருக்கவில்லை; இலவச மருத்துவ வசதி, சத்துணவுத்
திட்டம், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுத் திட்டம் போன்றவை நடைமுறையில்
இல்லை. நிலைமை இவ்வாறிருந்ததால் பல மக்கள் பிறரிடம் கையேந்தி உதவிபெற்றுத்தான்
வாழ வேண்டியிருந்தது. எனவே, தர்மம் செய்வது உயர்ந்த பண்பு எனவும்,
தர்மம் செய்யாதிருப்பது தவறு எனவும் திருச்சட்டம் இஸ்ரயேலருக்கு
உணர்த்தியது.
இப்பின்னணியில்தான் இயேசு மக்கள் எவ்வாறு தர்மம் செய்ய வேண்டும் என
எடுத்துக் கூறுகிறார். பிறருக்கு நான் தாராள உள்ளத்தோடு உதவினாலும்
அதனால் பிறர் என்னைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என நான் விரும்பி
அவ்வாறு செய்தால் எனக்குக் கைம்மாறு ஏற்கெனவே கிடைத்துவிட்டது. அவ்வாறு
நான் செய்யும் உதவி வெறும் "வெளிவேடம்" என இயேசு கூறுகிறார். தர்மம்
செய்வது தன்னிலேயே நல்ல செயல்தான். ஆனால் எந்த நோக்கத்தோடு அதைச்
செய்கிறோம் என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிறர் நம்மைப்
புகழ வேண்டும் என்பது நமது நோக்கமாக இராமல் கடவுள் நம் செயலைப்
பார்க்கிறார், அதுவே நமக்குப் போதும் என நாம் செயல்பட வேண்டும். அப்போது
கடவுள் நமக்குக் கைம்மாறு வழங்குவார். அவரது கைம்மாறு கிடைக்கும்
என்பதற்காகவன்றி, நாம் செய்யும் தர்மம் கடவுளுக்கு உகந்தது எனவும்
பிறருக்கு நலம் பயப்பது எனவும் நமக்குத் தெரிந்தால் அதுவே போதும்
என இயேசு நமக்குக் கற்பிக்கிறார்.
மன்றாட்டு:
இறைவா, பிறருக்கு உதவும் வேளையில் நாங்கள் தன்னலம் நாடாது செயல்பட
அருள்தாரும்.
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
மறையுரைச்சிந்தனை
- அருள்பணி ஏசு கருணாநிதி.
திருநீறு
மொக்குராய் என்பவர் ஒரு ஜென் துறவி. அவருக்கு டோயோ என்ற 12
வயது மகன் இருந்தான். அவன் மிகவும் புத்திசாலி. எப்போதும்
துறுதுறுவென்று இருக்கக் கூடியவன். தன் தந்தையைப் போலவே
ஜென் தியானம் செய்ய அவனுக்கு மிகவும் ஆசை. தியானம்
செய்யும் இடத்திற்குத் தன்னையும் அழைத்துக் கொண்டு
போகுமாறு சொல்லிக் கொண்டே இருக்கிறான். ஆனால் அவன் தந்தை,
'உனக்கு வயது போதாது. இன்னும் சில ஆண்டுகள் காத்திரு!' எனச்
சொல்லிவிடுகின்றார். ஆனால் டோயோ தன் தந்தைக்கும் தெரியாமல்
ஒரு நாள் தியானம் நடக்கும் இடத்திற்குச் சென்று
விடுகிறான். அங்கே தியானம் சொல்லிக் கொடுக்கும் துறவி சன்சானின்
முன் சென்று மற்றவர்களைப் போலவே மூன்று முறை விழுந்து வணங்குகிறான்.
பின் ஒரு இடம் தேடிச் சென்று அமர்கிறான். சன்சான் தன் போதனையைத்
தொடங்குகிறார்: 'உங்கள் எல்லாருக்கும் இரண்டு கைகள் எழுப்பும்
ஓசை தெரியும். நிச்சயம் கேட்டீருப்பீர்கள்! யாராவது ஒரு கை
எழுப்பும் ஓசையைக் கேட்டிருக்கிறீர்களா?' என்கின்றார்.
டோயோ ரொம்ப நேரம் யோசிக்கின்றான். தன் வீட்டிற்கு அருகில்
ஒரு ஓடையில் தண்ணீர் ஓடும் சப்தம் கேட்கிறது. சன்சானிடம்
போய் 'தண்ணீரின் சப்தமே ஒரு கை எழுப்பும் சப்தம்' என்கிறான்.
'இல்லை. தண்ணீரும், கற்களும் இணைவதால் அது இருகை சப்தம்.
ஒரு கை சப்தமல்ல' என்று மறுத்துவிடுகிறார் சன்சான். 'மணியின்
சப்தம், ஆந்தையின் அலறல், வெட்டுக்கிளியின் சப்தம்!' என
நிறைய சப்தங்களைச் சொல்ல 'இல்லை!' என மறுத்துவிடுகிறார் சன்சான்.
பல ஆண்டுகள் முயற்சி செய்தும் கேட்க முடியவில்லை. இறுதியில்
தியானம் செய்யத் தொடங்குகிறான் டோயா. 'எந்தச் சப்தமுமே
கேட்கவில்லை!' என்று ஒரு கட்டத்தில் சரணடைந்து விடுகிறான்.
'அதுவே ஒரு கை எழுப்பும் சப்தம்!' என்கிறார் சன்சான். ஞானம்
பெற்றான் டோயோ.
இன்று திருநீறு அணிந்து தவக்காலத்தைத் தொடங்குகிறோம். இது
பாவத்தை நினைத்து பரிதவிக்கும் பாவத்தின் காலமோ, பூ வைக்காமல்,
பொட்டு வைக்காமல், முகச்சவரம் செய்யாமல், செருப்பு அணியாமல்
இருக்கும் சோகத்தின் காலமோ அல்ல. இது ஒரு தயாரிப்புக் காலம்.
உயிர்ப்பின் மகிழ்ச்சியை நமதாக்கும் காலம். இந்தக் காலத்தில்
ஆலயத்திலும் பூ வைக்கக் கூடாது என்றெல்லாம் சொல்வார்கள்.
மேலை நாடுகளில் இந்தப் பருவத்தில் பூக்கள் பூக்காது. அதனால்
அவர்கள் பூ வைப்பதில்லை. அவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு
ஏற்படுத்திக் கொண்டதை நாம் ஏனோ வெறும் சடங்காகவே மாற்றிக்
கொண்டுவிட்டோம். நம் நாட்டின் பருவநிலை சமநிலையானது. எல்லா
நாட்களிலும் இங்கு பூக்கள் பூக்கும். எல்லா நாளும் நமக்குத்
திருநாளே. வருடம் எல்லாம் இறைச்சி, வெண்ணெய் எனச்
சாப்பிட்டு கொழுத்துவிட்டு நாற்பது நாட்கள் தவக்காலத்தில்
அவர்கள் நோன்பு இருப்பது உடல்நலத்திற்காகத்தான் அன்றி அதில்
ஆன்மீகம் இல்லை. ஆனால் இங்கே நோன்பு என்பது வருடம் முழுவதும்
ஒரு சில வீடுகளில் பட்டினி என்று தவம் கிடக்கிறது. ஆகையால்
எக்காலம் போல தவக்காலத்திலும் இயல்பாக வாழ்வோம்.
தவக்காலத்தின் தொடக்க நாளாகிய இன்று நாம் வாசித்த வாசகம்
செபம், நோன்பு, பிறரன்புச் செயல் பற்றி இருக்கின்றது. இதை
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் செபம் என்பது 'இறைவனுக்கும்
நமக்கும் உள்ள உறவு', நோன்பு என்பது 'நமக்கும் நமக்கும் உள்ள
உறவு', பிறரன்புச் செயல் என்பது 'நமக்கும் பிறருக்கும் உள்ள
உறவு'. இந்த மூன்று உறவுகளையும் மறுஆய்வு செய்ய தவக்காலம்
நமக்கு அழைப்பு விடுக்கிறது.
இந்த மூன்றிலும் இயேசு முன்வைப்பது என்னவென்றால், 'நாம்
செய்வது நமக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிய வேண்டும்'.
நாம் செய்வது நம்மைப் பற்றிய தம்பட்டம் அடிக்கவோ, நம்மை
நாமே நீதிமான்கள் என்று காட்டுவதற்காகவோ இருக்கக் கூடாது
என்பதுதான். ஜென்னின் வார்த்தைகளில் கூற வேண்டுமென்றால் இந்த
மூன்று செயல்களுமே 'ஒரு கை எழுப்பும் ஓசையாகத்தான் இருக்க
வேண்டுமே' தவிர 'இரு கை எழுப்பும் சப்தங்களாக இருக்கக்
கூடாது'.
நோன்பு - நமக்கும் நமக்கும் உள்ள உறவு. நோன்பு என்பது எல்லா
மதங்களிலும் முன்வைக்கப்படும் ஒன்று. நோன்பு என்பது ஆன்மீக
மதிப்பீடு என்பதைவிட உடலியல் சார்ந்த மதிப்பீடே என்று சொல்லலாம்.
'வாழும் கலை' என்ற தியான மையத்தின் சிந்தனைகளில் ஒன்று என்னவென்றால்
நம் உடலுள் நடக்கும் நிகழ்வுகளைச் சிந்திப்பது. நம் உடலின்
வெளிப்புறத்தை நாம் பாதுகாக்கும் அளவிற்கு நம் உடலின் உட்புறத்தை
நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. 'எல்லாம் நன்றாக நடப்பதால்'
அதைக் கண்டுகொள்வது கிடையாது. சிறுநீரகக் கல் என்று ஒன்று
வந்தால்தான் நம் உடலில் சிறுநீரகம் இருப்பதே தெரிகின்றது.
மாரடைப்பு வந்தால்தான் இதயம் நினைவிற்கு வருகிறது.
மூச்சுத்திணறல் வந்தால் தான் நுரையீரல் நினைவிற்கு வருகிறது.
நம் பிறப்பு முதல் நம் இறப்பு வரை நம் உடன் வருவது நம் உடலில்
உள்புறங்கள். நாம் பிறந்த அன்று நம்மில் தொடங்குகிற இரத்த
ஓட்டம் நாம் இறப்பதற்குள் எத்தனையோ இலட்சம் மைல்கள் பயணம்
செய்கின்றன. நோன்பு நம் உடலைப் பற்றி நினைக்க நமக்கு அழைப்பு
விடுகிறது. உடலின் இயக்கத்திற்கு நாம் தரும் சிறு ஓய்வே
நோன்பு. தவக்காலத்தில் மட்டுமல்ல ஆண்டு முழுவதும் நாம் அடிக்கடி
மேற்கொள்ளும் நோன்பு நமக்கு மிகுந்த பயன் தருகிறது. மேலும்
நோன்பில் நமக்கு நம் பசியும், நமக்கருகில் இருப்பவர்களின்
பசியும் நினைவிற்கு வருகிறது.
இறைவேண்டல் - நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு. நம் உடலின்
இயக்கமாக இருப்பவர் இறைவன். அவர் நம்மை இயக்குவதை நாம் உணரும்
ஒரு வழியே இறைவேண்டல். 'எனக்கு அது வேண்டும், இது
வேண்டும்' என்று கேட்கும் விண்ணப்பம் மட்டும் இறைவேண்டல்
அல்ல. நன்றி, புகழ், மன்னிப்பு என அனைத்துமே இறைவேண்டல்தான்.
இயற்கைக்கும், இயற்கையைக் கடந்த இறைவனுக்கும் இடையே நடக்கும்
உறவே இறைவேண்டல். எப்போதெல்லாம் நாம் இறைவேண்டல்
செய்கிறோம்?
பிறரன்புச் செயல் - நமக்கும் பிறருக்கும் உள்ள உறவு. நாம்
மற்றவர்களுக்கு உதவி செய்ய அழைக்கப்படுகின்றோம். ஆனால் பல
நேரங்களில் நாம் செய்யும் உதவி மேலிருந்து கீழ் செல்லும்
ஒன்றாகத் தான் இருக்கின்றது. நாம் செய்யும் உதவிகள் பல நேரங்களில்
'இருப்பவர் - இல்லாதவர்' என்ற நிலையைத் தொடர்ந்து தக்கவைக்கும்
ஆபத்தும் இருக்கின்றது. உதவி என்றால் பொருளுதவி என்றே பல
நேரங்களில் நாம் நினைக்கிறோம். நம் அனைவருக்குமே பொதுவாக
இருக்கும் அறிவு, ஆற்றல், நேரம் என அனைத்தையும் பிறரோடு பகிர்வதும்
பிறரன்புச் செயலே.