மாற்ற முடியாதென நினைத்ததை மாற்றிக் கொள்ள மற்றுமொரு தவக்காலம்
நமக்காகவே வந்திருக்கிறது....
பாதைகள் கரடு முரடு தான் பயணத்திற்கு முன் பாதங்களை சரி செய்யலாமே....
சடங்குகளின் ஆணிவேர்களை சாம்பலாக்கி உயிருள்ள மனசுகளை நேசிக்கச்
சொல்லி நெற்றியில் பூசும் சாம்பல், இத்தவக்காலத்தின்
வெற்றிக்கு அஸ்திவாரமாகிறது...
நோன்பு, செபம், தபம், தருமம் அறநெறிச் செயல்களை அன்றாடம்
செய்யும்போது ஒழுக்கம் நமக்கு நெருக்கமாகிறது...
அயலவரை அன்பு செய்வதால் அர்த்தமுள்ள வாழ்க்கையின் விதி
பூர்த்தியாகிறது...
இறையரசின் கனவு மெய்ப்பட இந்தத் தவக்காலத்தில் நம் பாதங்களை சரி
செய்வோம்...
தவக்காலத்தின் முதல் நாளில் இறை சமூகத்தில் கூடியுள்ள நாம் அனைவரும்
நம்மையே இறைவனுக்கு ஒப்புக் கொடுப்போம். இறைசாயலில் படைக்கப்பட்ட
நம்மை புனிதமாக பரிசுத்தமாக வாழ இறைவன் அழைக்கிறார். நம் தவறுகளை
எல்லாம் நினைத்து மனம் வருந்தி நம் குடும்பத்தில், சமூகத்தில்
இறைவனோடு ஒன்றித்து வாழ நம்மை நாமே தயாரிப்போம்.
நம் மனமாற்றம் வெறும் வெளி வேடமாக காவி உடை அணிவதிலும்,
நெடுந்துரம் நடந்து கோவிலுக்குச் செல்வதிலும் என இருந்து விடாமல்,
நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எதிராக நாம் செய்த பாவங்களை
நினைத்து வருந்துவோம். நம் உறவினர், அக்கம் பக்கம் உள்ளவர்கள்,
ஊரில் உள்ளவர்களை மனம் நோகச் செய்ததை நினைத்து மனம் வருந்துவோம்.
நம் குடும்பத்திலும் நமது வேலைத் தளங்களிலும் நமது கடமையைச்
செய்யாமல் வீண்பேச்சிலும், புறணி பேசுவதிலும், மற்றவர்களின் பெயரைக்
கெடுப்பதிலும் செலவழித்த நேரங்களை எல்லாம் நினைத்து மனம் வருந்துவோம்.
இனிமேல் இப்படிப்பட்ட பாவம் செய்வதில்லை என்ற உறுதிப்பாடு எடுப்போம்.
நல்ல மனிதராக இறைவனுக்கு உகந்தவர்களாக இறை வல்லமையும், இறை ஞானத்தையும்
பெற்றவர்களாக அனைவரையும் அன்பு செய்து வாழ்வோம்.
கடவுள் நம் ஒவ்வொருவரின் செயல்களுக்கு ஏற்பதக்க கைமாறு அளிக்க
காத்திருக்கிறார். நமக்கு கொடுக்கப்பட்ட கடைசி தருணம் இது என்பதை
நினைவில் கொள்வோம். நாம் சேர்த்து வைத்த சொத்துக்கள், பணம்,
பொருள்களை எல்லாம் நாம் எடுத்துக் கொண்டு போவதில்லை. நாம்
செய்யும் ஒவ்வொரு நல்ல செயல்களும், புண்ணியங்களும், தியாக செயல்களும்
தான் நம்மை நிலையான வாழ்விற்கு அழைத்துச் செல்லும் என்பதை நம்
மனதில் கொள்வோம். "மனிதா நீ எதை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தாய்
எதை நீ எடுத்துக் கொண்டு செல்லப் போகிறாய்? நீ வெறும் மண்ணால்
செய்யப்பட்ட பொம்மை தானே? மண்ணால் ஆன பொம்மைகளை இறைவனின் சாயலாகப்
படைத்து அவரின் உயிர் மூச்சையும் கொடுத்துள்ளார். நீ அவரைப்
போல மகிமையோடும், வல்லமையோடும் வாழ முயற்சி செய்" என சாம்பல்
கூட நமக்கு இந்நாளில் கட்டளையிடுகிறது.
எனவே இந்த தவக்காலத்தில் நாம் செய்த பாவங்களை நினைத்து மனம் வருந்துவோம்.
அவற்றிற்கு இறைவனிடம் மன்னிப்புக் கேட்போம். மனம் மாறி இறைவனின்
பிள்ளைகளாக மாறுவோம். இறைவனின் அருளையும் இரக்கத்தையும் பெற்று
மகிழ வழி காட்டும் ஓறுத்தல், செபம், தபம், ஒரு சந்தி போன்ற நன்னெறி
செயல்பாடுகளை மனமுவந்து செய்வோம். அதற்கான கிருபையைக் கேட்டு
இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
மொக்குராய் என்பவர் ஒரு ஜென் துறவி. அவருக்கு டோயோ என்ற 12
வயது மகன் இருந்தான். அவன் மிகவும் புத்திசாலி. எப்போதும்
துறுதுறுவென்று இருக்கக் கூடியவன். தன் தந்தையைப் போலவே
ஜென் தியானம் செய்ய அவனுக்கு மிகவும் ஆசை. தியானம்
செய்யும் இடத்திற்குத் தன்னையும் அழைத்துக் கொண்டு
போகுமாறு சொல்லிக் கொண்டே இருக்கிறான். ஆனால் அவன் தந்தை,
'உனக்கு வயது போதாது. இன்னும் சில ஆண்டுகள் காத்திரு!' எனச்
சொல்லிவிடுகின்றார். ஆனால் டோயோ தன் தந்தைக்கும் தெரியாமல்
ஒரு நாள் தியானம் நடக்கும் இடத்திற்குச் சென்று
விடுகிறான். அங்கே தியானம் சொல்லிக் கொடுக்கும் துறவி சன்சானின்
முன் சென்று மற்றவர்களைப் போலவே மூன்று முறை விழுந்து வணங்குகிறான்.
பின் ஒரு இடம் தேடிச் சென்று அமர்கிறான். சன்சான் தன் போதனையைத்
தொடங்குகிறார்: 'உங்கள் எல்லாருக்கும் இரண்டு கைகள் எழுப்பும்
ஓசை தெரியும். நிச்சயம் கேட்டீருப்பீர்கள்! யாராவது ஒரு கை
எழுப்பும் ஓசையைக் கேட்டிருக்கிறீர்களா?' என்கின்றார்.
டோயோ ரொம்ப நேரம் யோசிக்கின்றான். தன் வீட்டிற்கு அருகில்
ஒரு ஓடையில் தண்ணீர் ஓடும் சப்தம் கேட்கிறது. சன்சானிடம்
போய் 'தண்ணீரின் சப்தமே ஒரு கை எழுப்பும் சப்தம்' என்கிறான்.
'இல்லை. தண்ணீரும், கற்களும் இணைவதால் அது இருகை சப்தம்.
ஒரு கை சப்தமல்ல' என்று மறுத்துவிடுகிறார் சன்சான். 'மணியின்
சப்தம், ஆந்தையின் அலறல், வெட்டுக்கிளியின் சப்தம்!' என
நிறைய சப்தங்களைச் சொல்ல 'இல்லை!' என மறுத்துவிடுகிறார் சன்சான்.
பல ஆண்டுகள் முயற்சி செய்தும் கேட்க முடியவில்லை. இறுதியில்
தியானம் செய்யத் தொடங்குகிறான் டோயா. 'எந்தச் சப்தமுமே
கேட்கவில்லை!' என்று ஒரு கட்டத்தில் சரணடைந்து விடுகிறான்.
'அதுவே ஒரு கை எழுப்பும் சப்தம்!' என்கிறார் சன்சான். ஞானம்
பெற்றான் டோயோ.
இன்று திருநீறு அணிந்து தவக்காலத்தைத் தொடங்குகிறோம். இது
பாவத்தை நினைத்து பரிதவிக்கும் பாவத்தின் காலமோ, பூ வைக்காமல்,
பொட்டு வைக்காமல், முகச்சவரம் செய்யாமல், செருப்பு அணியாமல்
இருக்கும் சோகத்தின் காலமோ அல்ல. இது ஒரு தயாரிப்புக் காலம்.
உயிர்ப்பின் மகிழ்ச்சியை நமதாக்கும் காலம். இந்தக் காலத்தில்
ஆலயத்திலும் பூ வைக்கக் கூடாது என்றெல்லாம் சொல்வார்கள்.
மேலை நாடுகளில் இந்தப் பருவத்தில் பூக்கள் பூக்காது. அதனால்
அவர்கள் பூ வைப்பதில்லை. அவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு
ஏற்படுத்திக் கொண்டதை நாம் ஏனோ வெறும் சடங்காகவே மாற்றிக்
கொண்டுவிட்டோம். நம் நாட்டின் பருவநிலை சமநிலையானது. எல்லா
நாட்களிலும் இங்கு பூக்கள் பூக்கும். எல்லா நாளும் நமக்குத்
திருநாளே. வருடம் எல்லாம் இறைச்சி, வெண்ணெய் எனச்
சாப்பிட்டு கொழுத்துவிட்டு நாற்பது நாட்கள் தவக்காலத்தில்
அவர்கள் நோன்பு இருப்பது உடல்நலத்திற்காகத்தான் அன்றி அதில்
ஆன்மீகம் இல்லை. ஆனால் இங்கே நோன்பு என்பது வருடம் முழுவதும்
ஒரு சில வீடுகளில் பட்டினி என்று தவம் கிடக்கிறது. ஆகையால்
எக்காலம் போல தவக்காலத்திலும் இயல்பாக வாழ்வோம்.
தவக்காலத்தின் தொடக்க நாளாகிய இன்று நாம் வாசித்த வாசகம்
செபம், நோன்பு, பிறரன்புச் செயல் பற்றி இருக்கின்றது. இதை
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் செபம் என்பது 'இறைவனுக்கும்
நமக்கும் உள்ள உறவு', நோன்பு என்பது 'நமக்கும் நமக்கும் உள்ள
உறவு', பிறரன்புச் செயல் என்பது 'நமக்கும் பிறருக்கும் உள்ள
உறவு'. இந்த மூன்று உறவுகளையும் மறுஆய்வு செய்ய தவக்காலம்
நமக்கு அழைப்பு விடுக்கிறது.
இந்த மூன்றிலும் இயேசு முன்வைப்பது என்னவென்றால், 'நாம்
செய்வது நமக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிய வேண்டும்'.
நாம் செய்வது நம்மைப் பற்றிய தம்பட்டம் அடிக்கவோ, நம்மை
நாமே நீதிமான்கள் என்று காட்டுவதற்காகவோ இருக்கக் கூடாது
என்பதுதான். ஜென்னின் வார்த்தைகளில் கூற வேண்டுமென்றால் இந்த
மூன்று செயல்களுமே 'ஒரு கை எழுப்பும் ஓசையாகத்தான் இருக்க
வேண்டுமே' தவிர 'இரு கை எழுப்பும் சப்தங்களாக இருக்கக்
கூடாது'.
நோன்பு - நமக்கும் நமக்கும் உள்ள உறவு. நோன்பு என்பது எல்லா
மதங்களிலும் முன்வைக்கப்படும் ஒன்று. நோன்பு என்பது ஆன்மீக
மதிப்பீடு என்பதைவிட உடலியல் சார்ந்த மதிப்பீடே என்று சொல்லலாம்.
'வாழும் கலை' என்ற தியான மையத்தின் சிந்தனைகளில் ஒன்று என்னவென்றால்
நம் உடலுள் நடக்கும் நிகழ்வுகளைச் சிந்திப்பது. நம் உடலின்
வெளிப்புறத்தை நாம் பாதுகாக்கும் அளவிற்கு நம் உடலின் உட்புறத்தை
நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. 'எல்லாம் நன்றாக நடப்பதால்'
அதைக் கண்டுகொள்வது கிடையாது. சிறுநீரகக் கல் என்று ஒன்று
வந்தால்தான் நம் உடலில் சிறுநீரகம் இருப்பதே தெரிகின்றது.
மாரடைப்பு வந்தால்தான் இதயம் நினைவிற்கு வருகிறது.
மூச்சுத்திணறல் வந்தால் தான் நுரையீரல் நினைவிற்கு வருகிறது.
நம் பிறப்பு முதல் நம் இறப்பு வரை நம் உடன் வருவது நம் உடலில்
உள்புறங்கள். நாம் பிறந்த அன்று நம்மில் தொடங்குகிற இரத்த
ஓட்டம் நாம் இறப்பதற்குள் எத்தனையோ இலட்சம் மைல்கள் பயணம்
செய்கின்றன. நோன்பு நம் உடலைப் பற்றி நினைக்க நமக்கு அழைப்பு
விடுகிறது. உடலின் இயக்கத்திற்கு நாம் தரும் சிறு ஓய்வே
நோன்பு. தவக்காலத்தில் மட்டுமல்ல ஆண்டு முழுவதும் நாம் அடிக்கடி
மேற்கொள்ளும் நோன்பு நமக்கு மிகுந்த பயன் தருகிறது. மேலும்
நோன்பில் நமக்கு நம் பசியும், நமக்கருகில் இருப்பவர்களின்
பசியும் நினைவிற்கு வருகிறது.
இறைவேண்டல் - நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு. நம் உடலின்
இயக்கமாக இருப்பவர் இறைவன். அவர் நம்மை இயக்குவதை நாம் உணரும்
ஒரு வழியே இறைவேண்டல். 'எனக்கு அது வேண்டும், இது
வேண்டும்' என்று கேட்கும் விண்ணப்பம் மட்டும் இறைவேண்டல்
அல்ல. நன்றி, புகழ், மன்னிப்பு என அனைத்துமே இறைவேண்டல்தான்.
இயற்கைக்கும், இயற்கையைக் கடந்த இறைவனுக்கும் இடையே நடக்கும்
உறவே இறைவேண்டல். எப்போதெல்லாம் நாம் இறைவேண்டல்
செய்கிறோம்?
பிறரன்புச் செயல் - நமக்கும் பிறருக்கும் உள்ள உறவு. நாம்
மற்றவர்களுக்கு உதவி செய்ய அழைக்கப்படுகின்றோம். ஆனால் பல
நேரங்களில் நாம் செய்யும் உதவி மேலிருந்து கீழ் செல்லும்
ஒன்றாகத் தான் இருக்கின்றது. நாம் செய்யும் உதவிகள் பல நேரங்களில்
'இருப்பவர் - இல்லாதவர்' என்ற நிலையைத் தொடர்ந்து தக்கவைக்கும்
ஆபத்தும் இருக்கின்றது. உதவி என்றால் பொருளுதவி என்றே பல
நேரங்களில் நாம் நினைக்கிறோம். நம் அனைவருக்குமே பொதுவாக
இருக்கும் அறிவு, ஆற்றல், நேரம் என அனைத்தையும் பிறரோடு பகிர்வதும்
பிறரன்புச் செயலே.