இரண்டு மீன்களும், ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் நம்மை இன்று இந்த
திருப்பலிக்கு அன்புடன் வரவேற்கின்றன! பகிர்வு மனநிலையை நமக்கு அறிமுகம்
செய்து, பகிர்தலின் சிறப்பை அனுபவிக்க அவை அழைப்பும் விடுக்கின்றன!
தேவமைந்தன் இயேசு திருவாய் மலரும் ஒரு வார்த்தைக்காக ஆயிரமாயிரம்
மக்கள் அலையெனத் திரண்டனர்! ஆற்றுப்படுத்தும் அருள் வாக்கினை அள்ளி
வழங்கிய இயேசுவிழி, பேசிய திசையெங்கும் ஒளிவீசியது.
திசையெங்கும் திரண்டிருக்கும் மக்கள் பசி தீர்க்க, பரமனின் பாசம்
மடைதிறந்தது. உணவாய் கூடைகளில் நிறைந்தது. ஐந்து அப்பம், இரண்டு
மீன் அதிசயமாய் பெருகி ஐயாயிரத்திற்கும் அதிகமான பேருக்கு உணவளித்த
அதிசயம் அரங்கேறியது.
பகிர்வு தானே பசிக்கானத் தீர்வு,
உடலுக்கு நல்ல உணவையும் உள்ளத்துக்கு நல்ல வார்த்தையையும் பகிரவேண்டும்.
உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்திற்கும் உணவு தேவை. உடல் உணவு மனிதன்
உயிர் வாழ. உள்ள உணவு மனிதன் நல்லவனாக வாழ. நம் உலகின் பிரச்சனை பகிராக்
குறையேயன்றி பற்றாக் குறையல்ல. நம்மிடம் இருப்பதை பகிரச் சொல்லி
நினைவூட்டுகிறது இன்றைய நற்செய்தி! நமது உழைப்பும், ஒத்துழைப்பும்
இணைந்து கூட்டணி நடத்தினால் வறுமை வெறுமையாகிவிடும். என்பது வாசகங்கள்
வழங்கும் கூடுதல் தகவலாகும்.
நம் இல்லத்தில் இருக்கும் உணவையும், உள்ளத்தில் இருக்கும் வார்த்தைகளையும்
நம் அயலாருக்குப் பகிர்ந்து கொடுக்கும் போது இயேசு செய்த புதுமை நம்
நடுவிலும் அரங்கேறுமே! பகிர்தலில் நமது கரங்களும் இதயங்களும் தாரளமானால்
வானம் திறக்கும் அற்புதம் காணலாமே!
பகிரும் மனநிலையை நமதாக்க அருள்தரும் திருப்பலி இது! பகிர்ந்து
வாழும் மனதைக் கேட்டு இணைந்து செபிப்போம்.
1. பசித்திருப்போருக்கு உணவளிக்கும் பரமனே!
திருச்சபைக்காக மன்றாடுகிறோம், மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல,
கடவுளின் வார்த்தையாலும் உயிர் வாழும் செய்தியை அறிவிக்கும்
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் இறைமக்கள்
அனைவரும் தங்கள் கரங்களையும், இதயங்களையும் தாரளமாகத்
திறந்து பகிர்தலை பணியாக்கிட வரம் வேண்டும் என உம்மை
மன்றாடுகிறோம்.
2. உணவின் வடிவான இயேசுவே!
நாடுகளின் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம்
இன்றைய உலகில் வறுமையால் வாடும் மக்களின் பசிப் பிணி
தீர்க்க, புதிய பொருளாதார திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த,
நாடுகளின் தலைவர்களுக்கு வரம் வேண்டும் என உம்மை மன்றாடுகிறோம்.
3. வார்த்தை உணவால் எமை வாழ்விக்கும் இறைவா!
எங்கள் பங்குத் தந்தைக்காக மன்றாடுகிறோம். பகிர்தலின்
சிறப்பை போதிக்கும் எம்பங்குத் தந்தையின் பணியால்
இறைமக்கள் உள்ளங்களில் பகிர்தல் ஊhற்றாய் பெருகிட வரம்
வேண்டும் என உம்மை மன்றாடுகிறோம்.
4. அப்பங்களைப் பலுகச் செய்தவரே இறைவா!
பிரச்சனையில் இருப்போருக்காக மன்றாடுகிறோம். உலகில்
பல்வேறு நாடுகளில் நிலவும் போர் வன்முறை மறையவும்,
இலங்கை இனப்பிரச்சனை தீரவும், பிரச்சனையால்
பசித்திருப்போருக்கு உணவு கிடைக்கவும் வரம் வேண்டும்
என உம்மை மன்றாடுகிறோம்.
5. வறுமையை வெறுமையாக்கும் இறைவனே!
நோயுற்றோருக்காகவும், வறுமையுற்றோருக்காகவும்
மன்றாடுகிறோம்.
குடும்பங்களில், பங்கில் நோயினால் அவதிப்படுபவர்களை
குணப்படுத்தவும், வறுமையால் வாடுவோரை
நிறைவுள்ளவராக்கவும் வரம் வேண்டும் என உம்மை
மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
மூன்று நண்பர்கள் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது அவர்களுக்கு
சுவை மிகுந்த அல்வாத் துண்டு கிடைத்தது. மூவரும் தனியே அதை
முழுமையாகத் தின்று விடவேண்டும் என்று நினைத்தார்களே தவிர பகிர்ந்து
கொள்ளும் மனம் வரவில்லை. அதனால் அவர்கள் ஒரு முடிவுக்குவந்தார்கள்.
நாம் இப்போதைக்கு இந்த அல்வாவை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி
வைத்துவிட்டு இன்றிரவு தூங்குவோம். மூவரில் யாருக்கு அற்புதமான, சிறந்த
கனவு வருகிறதோ அவருக்கு இந்த அல்வா" என்று தீர்மானித்துக் கொண்டார்கள்.
மறுநாள் காலையில் மூன்று பேரும் தாங்கள் முதல் நாள் ராத்திரி கண்ட
கனவைப் பகிர்ந்து கொள்ள அல்வா இருக்கும் பாத்திரத்தைச் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள்.
முதல் ஆள் "நேற்றிரவு என் கனவில் கடவுள் வந்தார். என்னை அவர் தம்
பூந்தோட்டத்துக்குள் அழைத்துக் கொண்டுபோய் பல அற்புதங்களைச் செய்து
காண்பித்தார்" என்றான். அடுத்தவன் "நேற்றிரவு என் கனவிலும் கடவுள்
வந்தார். ஆனால் அவரை நான் பூந்தோட்டத்துக்கே அழைத்துப்போய் அவருக்கே
பல அற்புதமான விசயங்களைக் காண்பித்தேன்" என்றான். கடைசியாக
மூன்றாம் ஆள் நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். ஆனால் நாங்கள்
உங்களைப் போன்று பூந்தோட்டத்துக்கு எல்லாம் போகவில்லை! கடவுள் என்னைப்
பார்த்து "அடேய் முட்டாளே எதிரிலேயே வைத்துக் கொண்டு கனா கண்டு
கொண்டிருக்கிறாயே தூக்கத்தை விட்டொழி! உடனே எழுந்துபோய் அந்த அல்வாவைச்
சாப்பிடு!" என்று கடுங்கோபத்துடன் கட்டளையிட்டார். கடவுள் சொல்வதை
மீறுவது சரியாகுமா? அதனால் நானும் மறு பேச்சில்லாமல் எழுந்துபோய்
அல்வாவைச் சாப்பிட்டு விட்டேன்" என்று சொன்னேன்.
கடவுள் பகிர்ந்துண்ணச் சொல்வாரே தவிர ஒரு போதும் சுயநலத்துடன்
வாழ வழிகாட்டுவதில்லை. ஆனால் கடவுள் பெயரால் இன்று எல்லாம்
அபகரிக்கப்படுகின்றன என்பதுதான் வேதனை.
கடவுள் மனிதருக்கு உணவளித்து அவர்களை வாழ வைக்கிறார்....
பசி ஏழைகளின் பிறப்புரிமை உனக்கு உரியதைப் பிறருக்குக் கொடு
என்று யாரும் சொல்லவில்லை. மாறாக உன்னிடம் வீணாவதை முன்பாகவே
கணித்து அதை இல்லாதவர்க்குக் கொடுக்கலாமே!
விலங்குகளை கொஞ்சி அவைகளுக்கு அளவுக்கு அதிகமாக செலவு செய்து
உணவளிப்போர் அருகிருக்கும் ஏழையர் பசியாற வழி அமைக்கலாம்.
"இன்றைய சூழலில் பகிரக்கூடாது என்பதல்ல" மாறாக மனித இதயத்தில்
ஏற்படும் ஒருவிதமான விரக்தி மனநிலையே வறுமையாக உலகில் உலவுகிறது.
பகிர முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டு சும்மா இருப்பதை விட
ஒருவருக்காவது அல்லது ஒரு குடும்பத்திற்காவது நம்மால் இயன்ற
உதவிகளைச் செய்வது மேலானது.
கொடுக்கக் கொடுக்க இன்பம். பகிர்ந்து கொடுத்தால் பேரின்பம்.
இருப்பதைக் கொடுக்க கரங்களை, இதயங்களை திறப்போம்.
மனிதன் அப்பத்தின் மட்டுமல்ல கடவுளின் வாயினின்று வரம் ஒவ்வொரு
சொல்லினாலும் உயிர் வாழ்கிறான்.
உயிர் வாழ உணவு தேவை நல்ல மனிதராக வாழ வார்த்தைகள்
தேவை...
நல்ல வார்த்தைகளையும் பகிர்வோம். அன்பும் அமைதியும், ஆக்கமும்
ஊக்கமும், மகிழ்ச்சியும் சமாதானமும் நிறைந்த வார்த்தைகள் உள்ளத்தை
உற்சாகப்படுத்தி மனித நேயத்துடன் வளர வழிகாட்டும்.
பகிர்வோம் உணவை வார்த்தையை இன்றே இப்போதே பகிர்வோம்.
" மிகினும் குறையினும் நோய் செய்யும்..." என்பது வள்ளுவரின் வரிகள்.
மனிதனின் பயன்பாட்டுக்கு உரிய பொருள் எதுவாயினும் அது மிதமான
நிலையில் இருக்க வேண்டும். அது அளவுக்கு அதிகமானாலும் குறைவானாலும்
நோயை உண்டாக்கும். பொருளாக இருந்தால் மன நோய். உணவாக இருந்தால் உடல்
நோய். இதை இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே இயேசு தனது நற்செய்தியில்
தனது அப்பம் பலுகுதல் நிகழ்வின் மூலம் தெள்ளத் தெளிவாக எடுத்துக்
கூறிவிட்டார்.
இயேசு செய்த புதுமைகளும் அரும் அடையாளங்களும் ஏராளம். இருப்பினும்
அப்பம் பலுகுதல் புதுமை சிறப்பான ஒன்று . ஏனெனில் மற்ற புதுமைகள்,
அரும் அடையாளங்களின் போது ஒரு சில மக்களே அவருடன் அருகில் இருந்திருப்பர்,
அவர் செய்த புதுமைகளைக் கண்டிருப்பர். ஆனால் இங்கு ஏறக்குறைய
சுற்றிலுமுள்ள ஊர் மக்கள் அனைவருமே ஒன்றாகக் கூடி இருக்கின்றனர்.
ஆண்களின் எண்ணிக்கையே 5000 என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால்
கண்டிப்பாக பெண்களின் எண்ணிக்கையும் சிறுவர்களின் எண்ணிக்கையும்
இரண்டு மடங்காக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் வீடுகளில்
இருக்கும் பெண்களே, குடும்பத்திலுள்ள அனைவரின் நலனுக்காகவும்
குடும்பத்திற்காகவும் சிறப்பாக செபிப்பர். படிப்பு, வேலை, அருட்சாதனம்
,
உடல் நலன் என அனைத்திற்காகவும் பல கோயில்கள் ஏறி வேண்டுதல் செய்வது
பெண்களே. (அதற்கு சான்று நமது கோவில்களில் திருப்பலி செப வழிபாடுகளுக்கு
இப்போது மட்டுமல்ல எப்போதுமே ஆண்களை விட பெண்களே அதிகம்) பெண்கள்
சென்றால் உடன் தன் பிள்ளைகளையும் கண்டிப்பாக அழைத்துச் சென்றிருப்பர்.
இதற்கு உதாரணம் நமது இன்றைய நற்செய்தியின் முக்கிய கதை மாந்தரான
சிறுவன். சிறுவன் தாயோடு வந்தானோ, இல்லை தானாகவே வந்தானோ
தெரியவில்லை. ஆனால் அவன் கையில் பசிக்கு உணவு வைத்திருந்தான் என்பதிலிருந்து
தாயின் அனுமதியோடோ அல்லது அருகாமையோடோ தான் வந்திருப்பான் என்பது
புலனாகிறது. இப்படி ஒட்டு மொத்த ஊர் மக்களையும் ஒன்றாகக் கூட்டி இயேசு
அவர்கள் முன் இத்தகைய புதுமையைச்செய்கிறார். இதனால் அவரது புகழும்
பெயரும் பட்டி தொட்டி எங்கும் வேகமாகப் பரவுகிறது.
இன்றைய முதல் வாசகமும் எலியா இறைவாக்கினரால் இறைவன் நூறு பேருக்கு
உணவு பரிமாறிய நிகழ்வினை எடுத்துரைக்கிறது. இரண்டு நிகழ்வுகளுக்கு
இடையில் பல ஒற்றுமை வேற்றுமைகள் இருக்கின்றன.
* ஊர் ,பெயர் கொண்ட ஒரு மனிதர் உதவுகிறார். / ஊர், பெயர் இல்லாத ஒரு
சிறுவன் உதவுகிறான்.
* எலியாவிற்கு காணிக்கையாகக் கொடுக்கப்பட்ட உணவு. / சிறுவன் தனது
பசிக்காக வைத்திருந்த உணவு.
* எலியாவின் ஒரு மாத உணவு. 20 வாற்கோதுமை அப்பம் / சிறுவனின் ஒரு
நேரத்து உணவு 5 அப்பம் 2 மீன்.
* எப்படி பரிமறுவேன் என பணியாளர் கேட்கிறார். / இது எப்படி போதும்
என அந்திரேயா கேட்கிறார்.
இப்படி இரண்டு நிகழ்வுகளிலுமே இறைவனின் திருவுளம் வெவ்வேறு நபர்கள்
வழியாக வெவ்வேறு உணர்வுகள் வழியாக நிறைவாக செயல்பட்டு அவரை நாடி வந்தவர்களின்
பசி தீர்க்கப்படுகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் பல கதை மாந்தர்கள்
இடம்பெறுகின்றனர். அவர்களில் ஒரு சிலரின் செயல்களையும் வார்த்தைகளையும்
நமது சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம்.
1 . இயேசு மலை மேல் ஏறி தம் சீடர்களோடு அமர்கிறார்.
2 . மக்கள் கூட்டத்தை நிமிர்ந்து பார்த்தார்.
3 . பிலிப்பு - ஒரு துண்டு கூட கிடைக்காதே
4 . அந்திரேயா - இது எப்படி போதும்
இயேசு தான் மட்டும் மலை மேல் ஏறவில்லை தனது சீடர்களையும் உடன் அழைத்துச்
செல்கிறார். தான் மட்டும் தான் தலைவர். தனக்கு கீழ் தான் பிறர் அனைவரும்
என்று எண்ணாமல் தனது நிலையை அவர்களும் அடையச்செய்கிறார். தனது
பார்வை எப்படி பட்டது, எந்நிலையில் இருந்து அவர் மக்களைப்
பார்க்கிறார் என்று சீடர்களையும் உடன் அழைத்துச்சென்று
காட்டுகிறார். இதனால் சீடர்களுடனான சமத்துவமும் சீடத்துவமும்
வீணாகாதபடிக்கு இந்த நிலையினை மனதினில் சேமித்து வைக்கச்
சொல்கிறார். நமது குருவைப்போல வாழ வேண்டும் என்று எண்ணும் சீடர்களாகிய
நாம், முதலில் குருவைப் போல சூழ்நிலைகளைக் காண முற்பட வேண்டும்.
மக்கள் கூட்டத்தை நிமிர்ந்து பார்க்கிறார் இயேசு. தன்னைச்சுற்றி இருப்பவர்கள்
தன்னை புகழ்ந்து பேசுபவர்கள் என தன் கண்ணின் பார்வைக்கு எட்டியவர்களை
மட்டும் பார்க்கவில்லை இயேசு. மாறாக தன் பார்வையை உயர்த்தி தூரத்தில்
இருப்பவர்களையும் பார்க்கிறார். ஏற்கனவே ஒரு மலைமேல் தான் இருக்கிறார்.
அவரை அனைவரும் பார்க்க முடியும். இருப்பினும் தனது பார்வையை உயர்த்துகிறார்.
இதன் மூலம் தொலைவிலுள்ள மக்களையும் கண்ணோக்குகிறார். இயேசு தன்னைப்
பார்க்கவில்லையோ என்று மக்கள் எண்ணி வருந்தாத அளவுக்கு செயல்படுகிறார்.
இதனால் அவர்களது நம்பிக்கை வீணாகாதவாறு பார்த்துக் கொள்கிறார்.
நாமும் பலநேரங்களில் நம்மைச்சுற்றி, நமக்கு புகழ் பாடும் கூட்டங்களையே
பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கிறோம். தொலைதூரத்தில்
இருக்கும் நமது உறவுகளையும் நட்புகளையும் நாம் பார்ப்பதே இல்லை.
நமது பார்வையை விசாலமாக்குவோம் நம் அன்பர் இயேசு போல.
பிலிப்பு கணக்கு பார்த்து வாழ்பவர் போல செயல்படுகிறார். 200 தெனாரியத்துக்கு
அப்பங்கள் வாங்கினால் கூட ஆளுக்கு ஒரு சிறு துண்டு கூட கிடைக்காதே
என்று கூறுகிறார். இதில் அவரின் வருத்தத்தை விட இவ்வளவு பணம் செலவழித்தாலும்
யாரையும் நிறைவுபடுத்த முடியாதே என்பது தான் அவரது கவலையாக இருந்திருக்கும்.
இயேசு உடன் இருக்கிறார். அவரால் ஆகாதது ஒன்றுமில்லை என்ற நம்பிக்கையில்
குறைபாடுள்ளவராக இருக்கிறார். ஆளுக்கு ஒரு துண்டாவது கிடைக்க
வேண்டுமே என்ற நல்ல எண்ணம் உடையவராய் இருந்தாலும், தயக்கம்
காட்டுகிறார். இயேசு அவரின் நல்ல எண்ணம் வீணாகாதபடிக்கு செயல்படுகிறார்.
அனைவரும் வயிறார உண்ட பின்பு மிஞ்சிய துண்டுகளை பன்னிரண்டு கூடைகளில்
நிரப்பச்சொல்கிறார். எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் நம்மிடத்தில்
இருந்தாலும் இது எப்படி முடியும்? நல்லவர்கள் சோதனைகளை அனுபவித்துத்
தானே ஆக வேண்டும் என்றெல்லாம் கூறி நமது நல்லெண்ண அலைகளை நாமே வீணடித்துக்
கொண்டு இருக்கிறோம். ஆண்டவர் இயேசு அருகிலிருக்க அனைத்தும் நலமாய்
நடக்கும் என்று எண்ணி வாழ முயல்வோம்.
அந்திரேயா உணவு வைத்திருப்பவர் யார், எவ்வளவு வைத்திருக்கிறார்கள்
என்று தெள்ளத்தெளிவாக பார்க்கிறார். சூழ்நிலைக்கு ஏற்ப தெளிவாக செயல்படுகிறார்.
இருப்பினும் இது எப்படி போதும் என்றெண்ணி பின்வாங்குகிறார். பிரச்சனைக்கான
தீர்வைக் காண முயன்றவர். இடையிலேயே மலைத்துப் போய் நிற்கிறார். எந்த
நோக்கத்திற்காக அவர் அனைவரிடமும் உணவு இருக்கிறதா என்று சோதித்தாரோ
அந்த வேலையை பாதியிலேயே விட்டு விடுகிறார். காரணம் இலக்கில்
தெளிவில்லாததால் தான். பிரச்சனையைப் பெரிதாகவும் அதற்கான தீர்வை
சிறு துளியாகவும் எண்ணியதால் வந்த விளைவு, தயக்கம் தடுமாற்றம். இயேசு,
அந்திரேயா கண்டறிந்த அந்த சிறு துளியை வெள்ளமாக மாற்றுகிறார். அவர்
கண்டறிந்த தீர்வு வீணாகாதபடிக்கு பார்த்துக் கொள்கிறார். நாமும் பல
நேரங்களில் பிரச்சனைக்கு தீர்வினை சுலபமாகக் கண்டறிந்தும் அதை
தீர்க்க முயலாமல் தயக்கத்திலும் தடுமாற்றத்திலும் அப்படியே விட்டு
விடுகிறோம். நாம் எடுக்கும் சிறு முயற்சியில் இயேசு முழு ஈடுபாட்டையும்
நமக்கு தருவார் என்று நம்புவோம்.
5000 பேருக்கு உணவளித்த இயேசு ஒன்றும் வீணாகாதபடிக்கு அதை சேர்த்து
வைக்கச் சொன்னார். நமது வாழ்விலும் அன்றாடம் நமக்கு உணவளிக்கிறார்.
வெறும் உடல் உணவு மட்டுமல்ல உள்ள உணவு . அன்றாட நிகழ்வுகளில் நமக்கு
மிச்சமாகும் உணர்வுகளை அனுபவங்களை வீணாகாதபடிக்கு நமது மனங்களில்
எதிர்காலத்துக்கு சேமித்து வைக்கச் சொல்கிறார். நமது நம்பிக்கை, அன்பு,
எதிர்பார்ப்பு, தீர்வு இவை அனைத்தும் வீணாகாதபடிக்கு அதை சேமித்து
வைத்து வாழச்சொல்கிறார். உணவு மட்டுமல்ல நமது உணர்வுகளும் உன்னத அனுபவங்களும்
சேமித்து வைக்கப்பட வேண்டியவையே. இதை உணர்ந்து செயல்பட்டால்
வாழ்க்கை சுகமே. இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள
அனைவர் மீதும் நிறைவாக இருப்பதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருட்சகோதரி: செல்வராணி O.S.M.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
இம்மக்களுக்கு உண்ணக் கொடு!
மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம்
ஆகியவற்றை சமூகவியலாளர் முன்மொழிகின்றனர். இவற்றில் 'உணவுத்
தேவை' இரண்டு நிலைகளில் மற்றவற்றை விட தனித்து நிற்கிறது.
ஒன்று, உணவு மட்டும்தான் நம் தேவைக்கு மேல் நம்மால் எடுத்துக்கொள்ள
இயலாது. எடுத்துக்காட்டாக, மூன்று அல்லது நான்கு தோசை
சாப்பிட்டவுடன் வயிறு, 'போதும்!' என்று சொல்லிவிடும்! அதற்கு
மேல் நாம் எவ்வளவு விரும்பினாலும், ருசித்தாலும் வயிறு அதை
ஏற்காது. ஆனால், உடையும் இருப்பிடமும் நம் தேவைக்கு மேலும்
நம்மால் வைத்துக்கொள்ள இயலும். இரண்டு, உணவு என்னும்
தேவையில்தான் நாம் மற்ற எல்லா உயிரினங்களோடும் இணைந்திருக்கின்றோம்.
எல்லா உயிரினங்களுக்கும் (தாவரங்கள் உட்பட) உணவுத் தேவை இருப்பது
போல நமக்கும் இருக்கிறது. பசி என்னும் உணர்வு நம்மை அனைத்து
உயிரினங்களிலும் நாமும் ஒருவர் என்ற உணர்வைத் தருகின்றது.
இன்று தொடங்கி, வருகின்ற ஐந்து வாரங்களுக்கு, 'வாழ்வுதரும்
உணவு' என்னும் சொல்லாட்சியில் சுழல்கின்றன நற்செய்தி வாசகங்கள்.
ஒருவர் மற்றவருக்கு ஊட்டம் தருவது அல்லது உணவு தருவது என்பதே
இயேசுவின் உரையின் மையமாக இருக்கிறது. அந்தப் பேருரையை அறிமுகம்
செய்யும் நிகழ்வாக அமைகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.
இன்றைய முதல் வாசகம் (2 அர 4:42-44) மிகச் சிறிய ஆனால் மிக
முக்கியமான பகுதியாக இருக்கிறது. இறைவாக்கினர் எலிசாவிடம்
விளங்கிய வல்ல செயல் நிகழ்த்தும் ஆற்றலை வெளிப்படுத்துவதாக
உள்ளது. பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு விவசாயி புது தானியத்தில்
செய்யப்பட்ட வாற்கோதுமை அப்பங்களையும் முற்றிய தானியக் கதிர்களையும்
கடவுளின் அடியவரிடம் கொண்டு வருகின்றார். 'பாகால் சாலிசா'
என்ற பெயரிலிருந்து, எலியாவின் காலத்திற்குப் பின்னரும்
பாகால் வழிபாடு இஸ்ரயேலில் இருந்தது என்பதை நாம் உணர
முடிகின்றது. விளைச்சலின் முதற்கனிகளைக் கடவுளுக்குப் படைக்கும்
நோக்கில் அந்த நபர் அவற்றை வழிபாட்டுத்தலத்திற்குக் கொண்டு
வருகின்றார். வழக்கமாக அப்படிக் கொண்டுவரப்படும் பொருள்கள்
தலத்தில் சேகரிக்கப்பட்டு, அங்கே பணியாற்றுகின்ற குருக்கள்
மற்றும் இறைவாக்கினர்களால் பகிர்ந்துகொள்ளப்படும்.
முதற்கனிகளை அந்த நபரிடமிருந்து பெறுகின்ற எலிசா அவற்றை
கடவுளின் முன் வைக்காமல், அங்கிருந்த மக்களுக்குப் பகிர்ந்து
கொடுக்குமாறு பணிக்கின்றார். ஒரு வேளை, 'பாகால்'
நாட்டிலிருந்து வந்ததால் அதை இஸ்ரயேலின் கடவுளுக்குப் படைக்காமல்
இருந்திருக்கலாம் எலிசா. கடவுளுக்கு மட்டுமே உரித்தான
பொருளை எடுத்து மனிதர்களுக்குக் கொடுப்பது அங்கிருந்தவர்களுக்குப்
பெரிய இடறலாக இருந்திருக்கும். ஆகையால்தான், அங்கிருந்த பணியாளனும்,
'இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?' என்று
தயக்கம் காட்டுகின்றார். இருந்தாலும் எலிசா அவற்றை மக்களுக்கு
அளிக்குமாறு பணிக்கின்றார். மக்கள் அனைவரும் உண்கின்றனர்.
மீதியும் இருக்கின்றது.
இது எலிசாவின் சொற்களால் அல்ல. மாறாக, ஆண்டவரின் வாக்கின்படியே
நிறைவேறுகின்றது. ஆண்டவருடைய வாக்கை எலிசா செயல்படுத்துகின்றார்.
'உண்ட பின்னும் மீதி இருக்கும்' என்று ஆண்டவர் சொன்னதை அப்படியே
சொல்கின்றார் எலிசா. ஆண்டவரின் வாக்கின்படியே நிகழ்கின்றது.
கடவுளின் இல்லத்தில் கூடியிருந்தவர்களின் பசியே கடவுளுக்கு
முதன்மையானதாகத் தெரிகிறதே தவிர, அங்கு வழக்கத்தில் இருந்த
வழிபாட்டு முறைமைகள் அல்ல.
இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 4:1-6), 'ஆண்டவர்
பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக்
கேட்கிறேன்' என எபேசு நகரத் திருஅவையை இறைஞ்சுகின்றார் பவுல்.
சிறையிலிருந்தாலும் எபேசு நகரத் திருஅவையினர் மதிப்பீடுகளில்
வளர வேண்டும் என விரும்பும் பவுல் ஐந்து மதிப்பீடுகளைக்
குறிப்பிடுகின்றார்: 'தாழ்ச்சி' - அதாவது, ஒருவர் மற்றவர்
மேல் அதிகாரம் செலுத்தாமலும் பயமுறுத்தாமலும் இருப்பது. 'கனிவு'
- தேவையில் இருக்கும் மற்றவர்களைப் பற்றிய அக்கறை கொள்வது.
'பொறுமை' மற்றும் 'அமைதி'
- பிரிவுகளும் பிளவுகளும் ஏற்படாத
வண்ணம் நடந்துகொள்வது. மற்றும் 'அன்பு'
- இதன் வழியாக ஒருவர்
மற்றவரைத் தாங்க வேண்டும். மேற்காணும் ஐந்து மதிப்பீடுகள்
ஒரு குழுமத்திற்கான உணவு அல்லது ஊட்டமாக இருக்கின்றன.
நற்செய்தி வாசகம் நமக்கு மிகவும் அறிமுகமான வாசகம். இயேசு
ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிரும் நிகழ்வை
நான்கு நற்செய்தியாளர்களும் பதிவு செய்கின்றனர். முதல் ஏற்பாட்டு
எலிசா போல இயேசு இந்த வல்ல செயலை நிகழ்த்தினாலும், அங்கே
எலிசா, ஆண்டவருடைய பெயரால் வல்ல செயலை நடத்துகின்றார். ஆனால்,
இயேசுவோ, தானே இச்செயலை நிகழ்த்துகின்றார்.
முதல் ஏற்பாட்டின் பின்புலத்தில் இந்நிகழ்வு இரண்டு நிலைகளில்
முக்கியத்துவம் பெறுகிறது: ஒன்று, பாலைநிலத்தில் பசியால்
வாடிய மக்களுக்கு மன்னாவை ஆண்டவராகிய கடவுள் வழங்கியது
போல, இங்கே இயேசு தன்னைப் பின்பற்றி வந்த மக்கள் கூட்டத்திற்கு
உணவு தருகின்றார். இரண்டு, இந்த நிகழ்வு நற்கருணையையும் நற்கருணைக்
கொண்டாட்டத்தையும் நினைவுபடுத்துகின்றது. ஏனெனில், இந்த நிகழ்வின்படி,
மக்கள் பசியாக இருப்பதாக இங்கே எந்தப் பதிவும் இல்லை.
மேலும், 'எங்களுக்கு உணவு தாரும்' என்று யாரும் இயேசுவைக்
கேட்கவும் இல்லை. இயேசுவே முன்வந்து. 'இவர்கள் உண்பதற்கு
நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?' என்று பிலிப்பிடம்
கேட்கின்றார். மேலும், 'பாஸ்கா விழா அண்மையில் இருந்தது'
என்னும் வாக்கியம், நற்கருணையின் முக்கியத்துவத்தை இன்னும்
அதிகப்படுத்துகின்றது. ஏனெனில், ஒத்தமைவு நற்செய்தியாளர்களின்
பதிவின்படி, இயேசு பாஸ்கா விழாவின்போதுதான் நற்கருணையை ஏற்படுத்துகின்றார்.
மேலும், யோவான் நற்செய்தியில் இயேசு நற்கருணையை ஏற்படுத்தும்
நிகழ்வு இல்லை. ஆனால் இங்கே, அதே நிகழ்வில் உள்ள
வினைச்சொற்களை இயேசு பயன்படுத்துவதாக யோவான் பதிவு
செய்கின்றார்: 'அப்பங்களை எடுத்து,' 'கடவுளுக்கு நன்றி
செலுத்தி,' 'அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார்.'
மக்கள் இயேசுவைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். 'உலகிற்கு
வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே!' (காண். இச 18:15)
என்று இறைவாக்கின் நிறைவாக இயேசுவைப் பார்க்கின்றனர். தொடர்ந்து
அவரை அரசராக்க முயற்சி செய்கின்றனர். இயேசு அங்கிருந்து தனியாக
மலைக்குச் செல்கின்றார். இயேசுவின் நோக்கம் மக்களின் வயிற்றுப்
பசி நிறைவேற்றுவது அல்ல என்பது இனிதான் வாசகருக்குப்
புரியும்.
ஆக, முதல் வாசகத்தில் யாரும் கேட்காமலேயே எலிசா மக்கள்
கூட்டத்திற்கு உணவு வழங்க முன் வருகின்றார். இரண்டாம் வாசகத்தில்,
குழுமத்திற்கான ஊட்டம் என்னும் மதிப்பீடுகளைப் பவுல் வழங்குகின்றார்.
நற்செய்தி வாசகத்தில் இயேசு மக்களின் வயிற்றை நிரப்பி, அதிலிருந்து
வயிற்றையும் தாண்டிய உணவு பற்றிப் பேசுவதற்கான தளத்தை உருவாக்குகின்றார்.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குச் சொல்வது என்ன?
ஒன்று, இறைவன்தாமே உணவு வழங்க முன்வருகின்றார். பசியாற்றுதல்
இறைவன் செயல் என்றால், நாம் ஒருவர் மற்றவரின் பசியாற்றும்போது
அதே இறைமைப் பண்பை நம்மில் வெளிப்படுத்துகின்றோம்.
இரண்டு, கடவுள் தரும் உணவு குறைவின்றி இருக்கிறது. எலிசாவின்
பணியாளர்களும் எஞ்சிய உணவைச் சேகரிக்கின்றனர். இயேசுவின்
சீடர்களும் எஞ்சிய உணவைச் சேகரிக்கின்றனர்.
மூன்று, எலிசாவின் பணியாளர்போல, அல்லது பிலிப்பு போல, சில
நேரங்களில், 'இது எப்படி?' என்று தயக்கம் காட்டுகின்றோம்.
மனிதக் கணக்கை விட இறைவனின் மனக் கணக்கு வித்தியாசமாக இருக்கிறது.
இறுதியாக, வயிற்றுக்குரிய உணவையும் தாண்டிய ஓர் உணவு உண்டு
என்பதைத் தன் தனிமையின் வாயிலாக உணர்த்துகின்றார் இயேசு.
இன்றைய பதிலுரைப்பாடலின் ஆசிரியர் (காண். திபா 145), 'எல்லா
உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன. தக்க
வேளையில் நீரே அவற்றுக்கு உணவளிக்கின்றீர்' எனப்
பாடுகின்றார்.
அவரை நோக்கி நம் கண்கள் இருக்கும்போது,
நம் வயிற்றை நிரப்பும் அவர், 'மக்களுக்கு உண்ணக் கொடு!' என்று
நமக்கும் கட்டளை இடுகின்றார்.
உமது கையைத்
திறந்து!
இன்றைய ஞாயிற்றை தாத்தா-பாட்டியர் மற்றும் வயதுநிறைந்தோர்
நாள் எனச் சிறப்பிக்கிறோம். அன்னை கன்னி மரியாவின்
பெற்றோரும் இயேசுவின் தாத்தா-பாட்டியுமான புனிதர்கள்
சுவக்கீம்-அன்னா திருநாளுக்கு நெருக்கமாக வருகிற
ஞாயிற்றுக் கிழமையை தாத்தா-பாட்டியர் மற்றும்
வயதுநிறைந்தோர் ஞாயிறு எனக் கொண்டாடுமாறு 2021-இல் அழைப்பு
விடுத்தார். '
முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்!'
(காண். திபா 71:9) என்னும் திருப்பாடலின் சொற்களை மையமாக
வைத்து இந்த நாளுக்கான (2024) செய்தியை வழங்கியுள்ள
திருத்தந்தை, முதுமையின் தனிமை, வெறுமை, விரக்தி, சோர்வு
பற்றிச் சிந்திக்க அழைக்கிறார்.
திருத்தந்தையின் கருத்தின் பின்புலத்திலும்,
தாத்தா-பாட்டியர்-வயதுநிறைந்தோர் நாளின் பின்புலத்திலும்
இன்றைய ஞாயிறு வாசகங்களைச் சிந்திப்போம்.
ஆண்டவருடைய பராமரிப்பைப் பற்றிப் பேசுகிற திருப்பாடல்
(145) ஆசிரியர் இன்றைய பதிலுரைப்பாடல் '
எல்லா
உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன. தக்க
வேளையில் நீரே அவற்றுக்கு உணவளிக்கிறீர். நீர் உமது கையைத்
திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும்
நிறைவேற்றுகிறீர்!'
எனப் பாடுகிறார்.
'
உமது கையைத் திறந்து'
என்னும் சொல்லாடலை மையக்கருத்தாக
எடுத்துக்கொள்வோம். '
கையைத் திறத்தல்'
என்பது தாராள
உள்ளம், தயார்நிலை, மற்றும் கொடுத்தல் ஆகியவற்றின்
அடையாளமாக இருக்கிறது.
நற்செய்தி வாசகத்தில், இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு
மீன்களையும் ஐயாயிரம் பேருக்கு வழங்கும் நிகழ்வை நாம்
வாசிக்கிறோம். மாற்கு நற்செய்திப் பகுதியை (இரண்டாம் ஆண்டு
வாசகம்) வாசித்துக்கொண்டே வந்தோம். இன்று தொடங்கி நான்கு
வாரங்களுக்கு யோவான் நற்செய்தி 6-ஆம் அலகை வாசிக்கிறோம்.
இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கும் நிகழ்வை நான்கு
நற்செய்தியாளர்களும் பதிவுசெய்கிறார்கள்.
திபேரியக் கடல் என்னும் இடமும், பாஸ்கா விழா நெருங்கி
வருகிறது என்னும் காலமும் நிகழ்வின் சூழலைக் காட்டுகின்றன.
கலிலேயக் கடலுக்கு அருகில் உரோமைப் பேரரசர் திபேரியுவுக்கு
என உருவாக்கப்பட்ட நகரம் ஒன்று இருந்ததால், கலிலேயக்
கடலின் பெயர் திபேரியக் கடல் எனவும் வழங்கப்பட்டது. பாஸ்கா
விழா இஸ்ரயேல் மக்கள் பெற்ற விடுதலை வாழ்வையும் ஆண்டவராகிய
கடவுளின் வியத்தகு உடனிருப்பையும் யூதர்களுக்கு
உணர்த்தியது. பேரரசரின் நகரத்துக்கு அருகில் மக்களுக்கு
உணவு கொடுத்த இயேசு ஒரு பேரரசர் என்றும், புதிய இஸ்ரயேல்
மக்களுக்கான விடுதலை வாழ்வைத் தருகிறவரும் இவரே என
உணர்த்துவதற்காக, இடத்தையும் காலத்தையும் குறிப்பிட்டு
எழுதுகிறார் யோவான்.
பிலிப்புவுக்கும் இயேசுவுக்குமான உரையாடலாகத் தொடங்குகிறது
வல்ல செயல். '
இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்த அப்பம்
வாங்காலம்?'
என்று பிலிப்பிடம் கேட்கிறார் இயேசு. அவரைச்
சோதிப்பதற்காகவே இயேசு அவ்வாறு கேட்கிறார். ஏனெனில்,
கானாவூர் நிகழ்வில் இயேசு தண்ணீரைத் திராட்சை இரசமாக
மாற்றி நிகழ்வு அவர்கள்மேல் நேர்முகமான தாக்கத்தை
ஏற்படுத்துகிறது. இருந்தாலும் சீடர்கள் அதை
மறந்துவிட்டார்கள். ஆகையால்தான், '
இருநூறு தெனாரியத்துக்கு
அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும்
கிடைக்காதே'
என்கிறார் பிலிப்பு.
அந்திரேயா இன்னொரு நிலையில் தீர்வுகாண முயற்சி செய்கிறார்:
'
சிறுவன் ஒருவனிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்
உள்ளன.'
இருந்தாலும் ஐயம் கொள்கிறார்: '
இத்தனை பேருக்கு
இவை எப்படிப் போதும்?'
'
மக்களை அமரச் செய்யுங்கள்'
எனக் கட்டளையிடுகிறார் இயேசு.
'
அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது'
என்று ஒரு
குறிப்பைத் தருகிறார் யோவான். இதுவரை கடலையும் கரையையும்
மலையையும் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் திடீரென தங்கள்
முன்னால் இருந்த புல்தரையைக் காணத் தொடங்குகிறார்கள்.
இதுவே வல்ல செயலின் தொடக்கம்.
'
அப்பங்களை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி
மக்களுக்குக் கொடுக்கிறார்'
இயேசு. நற்கருணையை
ஏற்படுத்துகிற நிகழ்வில் பயன்படுத்தப்படுகிற சொற்களே
இங்கும் பயன்படுத்தப்படுகின்றன. '
அவர்களுக்கு
வேண்டியமட்டும் கிடைத்தது மிச்சமும் இருந்தது!'
இவ்வாறாக, வல்ல செயல் நடந்தேறுகிறது. நிறைந்த வயிறுகளும்
நிறைந்த கூடைகளுமே வல்ல செயல் நிகழ்ந்ததற்கான சான்றுகளாக
அமைகின்றன.
வல்ல செயல் மூன்று நிலைகளில் நடக்கிறது:
ஒன்று, '
நம்மால் இயலாது!'
- பிலிப்புவின் செயல்.
இரண்டு, '
கொஞ்சம் சாத்தியம். ஆனால், எல்லாம்
முடியாது!' - அந்திரேயாவின் செயல்.
மூன்று, '
எல்லாம் சாத்தியம்!'
- இயேசுவின் செயல்.
அதாவது, நம் கரங்களைத் திறப்பதால் அல்ல, மாறாக, கடவுள் தம்
கரங்களைத் திறப்பதால்தான்
- எடுத்து, நன்றி
செலுத்தி, கொடுத்து - வல்லசெயல் நடந்தேறுகிறது!
இன்றைய முதல் வாசகத்திலும், '
அப்பம் பலுகுதல் நிகழ்வு'
நடந்தேறுகிறது. வல்ல செயல்களின் இறைவாக்கினர் என
அழைக்கப்படுகிற எலிசா, இருபது அப்பங்களைக் கொண்டு நூறு
பேருக்கு உண்ணக் கொடுக்கிறார். '
உண்டபின்னும் மீதி
இருக்கும்'
என ஆண்டவர் சொன்னவாறே மீதி இருக்கிறது. தமக்கென
வந்த அப்பங்களை மக்களுக்கென தம் கைகளை
விரித்துக்கொடுக்கிறார் எலிசா.
எலிசா நிகழ்வின் பின்புலத்தில்தான், நற்செய்தி வாசகத்தின்
இறுதியில், வயிறுகள் நிறையப்பெற்ற மக்கள், '
உலகிற்கு
வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே!'
என
அறிக்கையிடுகிறார்கள். இயேசுவை அரசராக்க முயற்சி
செய்கிறார்கள். மக்களுக்கு உணவு தர வேண்டிய திபேரியுப்
பேரரசரின் நகருக்கு அருகில், மக்களுக்கு உணவு தந்த
பேரரசராக இருக்கிறார் இயேசு. இந்த நிகழ்வு பற்றி எழுதுகிற
புனித அகுஸ்தினார், '
என்னே மானிடத்தின் பரிதாபம்! தங்கள்
ஆன்மாவுக்கு உணவு தர வந்த கடவுளை இயேசுவில் காண்பதை
விடுத்து, தங்கள் வயிற்றுக்கு உணவு தரும் அரசரை அவரில்
கண்டார்கள் மக்கள்!'
என எழுதுகிறார்.
'
ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக்
கெஞ்சிக் கேட்கிறேன்'
என்று எபேசு நகரத் திருஅவைக்கு
எழுதுகிறார் பவுல் (இரண்டாம் வாசகம்). கைகள் கட்டப்பட்டுக்
கிடக்கிற பவுல், கைகளைத் திறந்து ஒருவர் மற்றவரைப்
பற்றிக்கொண்டு ஒருமைப்பாட்டுடன் வாழ அழைப்பு விடுக்கிறார்.
'
கடவுள் எல்லாருக்கும் மேலானவர். எல்லார் வழியாகவும்
செயலாற்றுபவர். எல்லாருக்குள்ளும் இருப்பவர்'
என்று
கடவுளின் உள்ளிருத்தலை தம் திருஅவைக்கு எடுத்துக்காட்டி,
கடவுளால்தான் அனைத்தும் இயங்குகின்றன என்னும் நம்பிக்கைப்
பார்வையைத் தந்து, எதிர்நோக்கு என்னும் ஒளியை ஏற்றுகிறார்.
ஆண்டவராகிய கடவுள் நமக்குள் இருப்பதோடு, நம்மைச்
சுற்றியிருக்கிற எல்லார் வழியாகவும் செயல்படுகிறார்.
ஆண்டவர் இவ்வாறாக தம் கரங்களைத் திறந்துகொண்டே
இருக்கிறார்.
இன்றைய நாளின் பாடங்கள் எவை?
(அ) ஆண்டவரின் கரங்களிலிருந்து!
ஒரு சிறு குழந்தை தன் கைகளால் மிட்டாய்களை அள்ளினால்
கொஞ்சமே அதன் கைகளுக்குள் சிக்குகிறது. ஆனால், கடைக்காரர்
அள்ளிக்கொடுத்தால் அதன் கைகள் நிறைந்துவிடுகின்றன. நம்
தெனாரியமும், நம் முயற்சியும் போதும் என நாம்
நினைக்கும்போது நமக்குக் குறைவாகவே கிடைக்கிறது. ஆனால்,
அவரின் கைகள் போதும் என்று சரணடையும்போது நம் கைகளும்
கூடைகளும் நிரம்பி வழிகின்றன. ஆண்டவர் தம் கைகளைத் திறந்து
நம்மை வழிநடத்துகிறார் என்னும் நம்பிக்கைப் பார்வை
பெற்றுக்கொள்வோம்.
(ஆ) நம் கரங்களை நீட்டி!
கடவுளின் கரங்களிலிருந்து பெற்றுக்கொள்கிற நாம், நம்
கைகளையும் சற்றே திறப்போம். '
உன் சகோதரன் ஒருவன் வறியவனாய்
இருந்தால் உன் கையை மூடிக்கொள்ளாதே! அவனுக்கு உன்
கரங்களைத் தாராளமாகத் திறந்து, அவன் தேவைக்கேற்ப கொடு!' என அறிவுறுத்துகிறார் கடவுள் (காண். இச 15:7). நம் கரங்கள்
வெறுமையாக இருந்தாலும், வெற்றுக் கரங்களையாவது நீட்டி
மற்றவரைத் தூக்கி விட முயற்சி செய்வோம்.
(இ) முதியோரின் கரங்கள்!
'
உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக்
கொடுப்பாய்'
என்று பேதுருவிடம் கூறுகிறார் இயேசு (காண்.
யோவா 21:18). நம் தாத்தா-பாட்டியரும் வயதுநிறைந்தோரும்
கைகளை விரித்துக்கொடுக்கிறார்கள். தங்கள் வாழ்க்கை
முழுவதும் தங்களையே நமக்கு வழங்கிய அவர்கள் தங்களுடைய
கையறுநிலையில் இருக்கும்போது நாம் அவர்களைத் தள்ளிவிட
வேண்டாம். அவர்களின் தனிமை, சோர்வு, நோய், துன்பம்
போன்றவற்றில் அவர்களுக்கு நாம் துணைநிற்போம். தங்களுடைய
இயலாமையைத் தாங்கிக்கொள்ள முடியாத அவர்கள் நம்
உடனிருப்பால் அனைத்தும் இயலும் என்னும் நம்பிக்கையைப்
பெற்றுக்கொள்ளட்டும்!
'
ஆண்டவர்தாமே எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும்
நிறைவேற்றுவாராக!'
(திபா 145).
எல்லார்க்குள்ளும்,
எல்லார் வழியாகவும் இறைவன்
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து முடிந்த இரண்டு
நாள்களில் தினமணி இணையதள வலைப்பூவில் கட்டுரை ஒன்று வந்தது.
கட்டுரையின் தலைப்பு, 'வாய்ப்பு நம்மைத் தவறவிட்டால் அது
துரதிர்ஷ்டம். வாய்ப்பை நாம் தவறவிட்டால் ... திமிர்.' கட்டுரை
குரோஷிய அணியின் முன்னணி வீரர் நிக்கோலா காலிநிக் அவர்களைப்
பற்றியது. இவர் குரோஷிய அணியின் மிகச் சிறந்த வீரர்.
குரோஷிய அணி தனது முதல் ஆட்டத்தில் நைஜீரிய அணியை சந்தித்தது.
அந்த ஆட்டத்தில் நிக்கோலா காலிநிக் முதலில் களமிறக்கப்படவில்லை.
ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்களே இருக்கும்போது, குரோஷிய பயிற்சியாளர்
நிக்கோலா காலிநிக்கை மாற்று வீரராக களமிறங்கும்படி
கேட்டுக்கொண்டார். முதலிலிலேயே தன்னை களமிறக்காமல்போனது
தனக்கு நேர்ந்த அவமானமாக நினைத்தார் காலிநிக். அதனால் களமிறங்க
மறுத்துவிட்டார். அது ஒழுங்கீனமான செயல். பிரச்சினை அத்தோடு
முடியவில்லை. காலிநிக் செய்த இந்த தவறுக்காக அவர் பயிற்சியாளரிடம்
'மன்னிப்பு கேட்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டது. அதற்கும்
காலிநிக் உடன்படவில்லை. தொடர்ந்து அவர்மேல ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டது. அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அங்கிருந்து
புறப்பட்ட காலிநிக் விடுமுறையை அனுபவிக்க சென்றுவிட்டார்.
குரோஷியாவைப் பொறுத்தவரையில் இந்த உலகக் கோப்பை வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்த நாடு இறுதிப்போட்டிவரை
முன்னேறியது. இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை பதித்தது.
இதில் பங்கேற்ற வீரர்கள் அனைவரும் வரலாற்றில் தங்கள் பெயரைப்
பதிவுசெய்துவிட்டனர். காலிநிக் அந்தப் பட்டியிலில் இல்லை.
காலிநிக் இப்படி ஒரு முடிவை எடுக்க முக்கிய காரணமாக இருந்தது
அவருடைய ஈகோ. அதனால் விளைந்த கோபம்.
நிற்க.
கால்பந்து விளையாட்டில் இரண்டாம் இடத்தைப் பிடித்;த
குரோஷிய அணியின் பயிற்சியாளர் தங்கள் அணியின் வெற்றிக்குக்
காரணம் என்று சொன்ன ஒற்றை வார்த்தை இதுதான்: 'சினர்ஜி.' அதாவது,
விளையாடிய 11 பேரும் சேர்ந்து விளையாடியதால், அந்த 11
பேருக்கு பக்கபலமாக 5 மாற்று வீரர்களும், அவர்களுக்கு உறுதுணையாக
உடன் பயிற்சியாளர்களும், அவர்களுக்கு உறுதுணையாக நாட்டின்
தலைவர்களும் இருந்ததால் இந்த வெற்றி உறுதியானது என்கிறார்.
ஆக, விளையாடிய நபர்கள், மாற்று வீரர்கள், பயிற்சியாளர்கள்,
நாட்டுத் தலைவர்கள் என தனித்தனியே பிரித்துப் பார்த்தால்
யாருக்கும் ஆற்றல் இல்லை. ஆனால், இவர்கள் எல்லாரும்
சேர்ந்து வரும்போது இவர்களின் ஆற்றல் பன்மடங்கு பெருகுகிறது.
இதுதான் 'சினர்ஜி' ('ஒருங்கியக்கம்,' 'ஒழுங்கியக்கம்,'
'கூட்டாற்றல்') என்பதன் பொருள். இந்த 'சினர்ஜி'
விளையாட்டின் வெற்றிக்கு மட்டுமல்ல. மாறாக, வாழ்வின்
வெற்றிக்குமான ஒரு முக்கியமான ஃபார்முலா.
'சினர்ஜி' என்ற இந்த வார்த்தையை தூய பவுல் உரோமையருக்கு எழுதிய
திருமடல் 8:28ல் நாம் வாசிக்கின்றோம்: 'மேலும், கடவுளிடம்
அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு,
அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் 'ஒருங்கியக்கம்'
செய்கிறார் என்பது நமக்குத் தெரியும்.' அதாவது, ஒருவர் கடவுளிடம்
அன்புகூர்ந்தால், அவர் கடவுளால் அழைக்கப்பட்டவராக இருந்தால்
இந்த பிரபஞ்சமே அவர் நன்மைக்காக செயலாற்றுமாம். அதாவது, எல்லாமே
அவருக்கு நன்மையாகவே மாறும். இப்படியாக எல்லாவற்றையும் அவருக்குச்
சாதகமாக மாற்றுவது தூய ஆவியார் என்கிறார் பவுல்.
இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் மையக்கருத்தும், இன்றைய நம்
மறையுரைப் பொருளும் இதுவே:
'இறைவனே எல்லார் மூலமாகவும், எல்லாருடைய நன்மைக்காகவும் ஒருங்கியக்கம்
செய்கிறார்.'
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 4:1-6) கிறிஸ்தவின்
உடலில் உள்ள ஒற்றுமை என்ற மையக்கருத்தில் ஒற்றுமை பற்றி அறிவுறுத்தும்
பவுல், 'எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே' என்றும்,
'அவர் எல்லாருக்கும் மேலானவர், எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்,
எல்லாருக்குள்ளும் இருப்பவர்' என்றும் சொல்கிறார்.
ஒரு சின்ன உருவகத்தை எடுத்துக்கொள்வோம். என் அலைபேசி அடிக்கிறது.
ஒரு புதிய எண் திரையில் மின்னி மறைகிறது. நான் எடுத்து, 'ஹலோ'
என்கிறேன். மறுபக்கம் இருப்பவர், 'என் பழைய காலத்து நண்பர்.'
அவர் அவருடைய மொபைலில் எண்ணை அழுத்தி, அந்த எண்ணின் இணைப்பு
அவருடைய நெட்வொர்க் சென்று, பின் அது என்னுடைய
நெட்வொர்க்கில் சர்வர் வழியாக இணைப்பு பெற்று, என் சர்வர்
என் சிம்மை தொடர்பு கொண்டு, என் சிம் தன் மொபைலால் சப்போர்ட்
செய்யப்பட்டு, ஒலித்து, நான் அழைப்பை ஏற்றுப் பேசுகிறேன்.
இப்படி பேசும்போது அந்தப் பக்கத்திலிருக்கும் என் நண்பரையும்,
இந்தப் பக்கத்தில் இருக்கும் என்னையும் இணைப்பது கண்ணுக்கே
புலப்படாத ஒரு சர்வர் அல்லது சர்வரின் மென்பொருள். இந்த
மென்பொருள் போன்றவர்தான் இறைவன். நம் எல்லாருக்குள்ளும் இருக்கும்
அவர், எல்லாரையும் இயக்கி, எல்லார் வழியாகவும் செயலாற்றுகிறார்.
இந்தச் செயல்பாட்டைத்தான் நாம் இன்றைய முதல் (காண். 2 அர
4:42-44) மற்றும் மூன்றாம் (காண். யோவா 6:1-5) வாசகங்களில்
பார்க்கின்றோம்.
இன்றைய முதல் வாசகத்தில் எலிசாவின் அரும்செயல் ஒன்றைப் பற்றி
வாசிக்கின்றோம். எலிசா வெறும் இருபது கோதுமை அப்பங்களையும்,
ஒரு கோணிப்பை தானியக் கதிர்களையும் கொண்டு ஏறக்குறைய 100
பேருக்கு உணவளிக்கும் நிகழ்வுதான் இது. நிகழ்வின் தொடக்கத்தில்
பசி இருக்கிறது. நிகழ்வின் இறுதியில் நிறைவு இருக்கிறது.
இது எப்படி சாத்தியமாயிற்று?
முதலில், பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் இருபது அப்பங்களையும்,
கோணிப்பை நிறைய தானியக் கதிர்களையும் கொண்டுவருகிறார்.
கோணிப்பையில் தானியக்கதிர்களை கொஞ்சம்தான் வைக்க முடியும்.
ஆக, மிகக் குறைவான உணவை அவர் கொண்டுவருகிறார். அவர் கொண்டுவந்தது
ஒருவேளை இறைவாக்கினர் எலிசாவுக்கு மட்டுமாக இருக்கலாம். ஆனால்
எலிசா அதைத் தனக்கென வைத்துக்கொள்ளாமல் எல்லாருக்கும் பகிர்ந்து
கொடுக்கச் சொல்கின்றார். அப்பங்களைக் கொண்டு வந்த அந்த நல்ல
மனிதரின் பணியாளுக்கு ஒரு சந்தேகம் வருகிறது: 'இந்த நூறு
பேருக்கு இதை நான் எப்படி பரிமாறுவேன்?' என தயக்கத்தோடு எலிசாவைக்
கேட்கின்றார். 'இவற்றை இம்மக்களுக்கு உண்ணக்கொடு. ஏனெனில்
உண்டபின்னும் மீதி இருக்கும் என்று ஆண்டவர் கூறுகிறார்' என்கிறார்.
பணியாளரும் பரிமாறுகின்றார். ஆண்டவரது வாக்கின்படி
மீதியும் இருந்தது என நிறைவுபெறுகிறது வாசகம்.
மேற்காணும் நிகழ்வில், பசியால் இருந்தவர்கள் நிறைவு பெற காரணமாக
இருந்தது யார்?
- அப்பங்கள் கொண்டு வந்த மனிதரா? அல்லது
- அதை மக்களுக்குக் கொடுக்கச் சொன்ன எலிசாவா? அல்லது
- தயக்கம் காட்டிய பணியாளரா? அல்லது
- 'கொடு, இன்னும் மீதி வரும்' என்று சொன்ன ஆண்டவரா?
அல்லது
- இவர்கள் எல்லாருமா?
இவர்கள் எல்லாரும்தான். இந்த எல்லார் வழியாகவும் செயலாற்றியவர்
இறைவன். ஆக, 'அப்பம் கொண்டுவந்தவர்,' 'எலிசா,' 'பணியாளர்'
என்ற மூன்று நபர்கள் தனித்தனியாக இருந்தாலும், அவர்கள் இணைந்து
வரும்போது அவர்களின் ஆற்றலை பன்மடங்கு பெருக்கியவர் ஆண்டவர்.
ஆக, 'எல்லாருக்கும் மேலான' ஆண்டவர் 'எல்லாருக்குள்ளும்' செயலாற்றி,
'எல்லார் வழியாகவும் செயலாற்றி' எல்லாருடைய பசியையும்
நீக்கி, எல்லாருக்கும் நிறைவு தருகின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம்
பேருக்குப் பகிர்ந்து வழங்கும் நிகழ்வின் யோவான் நற்செய்தியாளரின்
பதிவை வாசிக்கின்றோம். இனி தொடர்ந்து வரும் நான்கு ஞாயிறு
நற்செய்திகளும் 'வாழ்வுதரும் உணவு நானே' என்ற இதன்
நீட்சியாகவே இருக்கும்.
இந்த நிகழ்வு எப்படி நடந்தேறுகிறது? மக்கள் பெருந்திரளாய்
இயேசுவிடம் வருகின்றனர். 'இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து
உணவு வாங்கலாம்?' எனத் தம் திருத்தூதர் பிலிப்பிடம்
கேட்கிறார் இயேசு. தான் செய்யப்போவதை அறிந்திருந்தும் இயேசு
அவ்வாறு கேட்டார் என இடையில் கமெண்ட் செய்கிறார் நற்செய்தியாளர்.
பிலிப்பு பெரிய கணித வாத்தியராக இருக்கிறார். 'இருநூறு
தெனாரியத்திற்கு (அதாவது, 200 நாள் சம்பளத்திற்கு) அப்பம்
வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே' என
தயக்கம் காட்டுகிறார். அந்நேரம் இயேசுவின் மற்ற சீடர் அந்திரேயா,
'இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து
வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன' என்று
கொஞ்சம் இருப்பதை முன்வைத்துவிட்டு, 'இத்தனை பேருக்கு இவை
எப்படிப் போதும்?' என பின்வாங்குகின்றார். ஆனால் இயேசு இதைக்
கேட்டவுடன், 'மக்களை அமரச்செய்யுங்கள்' எனப் பணிக்கின்றார்.
தொடர்ந்து சிறுவன் கொண்டுவந்த அப்பங்களை எடுத்து, நன்றி
செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுக்க, மீன்களையும் அவ்வாறே
கொடுக்க, அங்க அப்பம் பலுகத் தொடங்குகிறது. இந்தப் புதுமை
எப்படி நடந்திருக்கும் என்ற யூகிக்கின்ற இறையியலாளர் ஒருவர்
இதை பின்வருமாறு எழுதுகின்றார்: 'இயேசுவின் போதனை கேட்க வந்தவர்களில்
சிலர் 'உடையவர்கள்,' பலர் 'இல்லாதவர்கள்.' 'ஒன்றுமில்லாத
பலரை' பார்க்கின்ற அந்த சில 'உள்ளவர்கள்' தங்கள் உணவைத் தங்கள்
பைகளில் இருந்து எடுக்க மனமில்லாது இருந்தனர். 'நான் உணவை
வெளியே எடுத்தால் அதை இல்லாத இவனிடம் பகிர வேண்டுமே.
நானும் பசியாகவே இருந்தவிட்டுப் போகிறேன்' என்ற மௌனம்
காக்கின்றனர். இந்த மௌனம் இயேசுவின் கொடுத்தலால் உடைபடுகின்றது.
சிறுவன் தன் கையில் உள்ளதைக் கொடுக்க, அதை இயேசு மற்றவர்களுக்குக்
கொடுக்க, அதைத் தங்களிடம் வாங்கியவர்கள் தங்களோடு உள்ளதையும்
இணைத்து மற்றவர்களிடம் கொடுக்க அரங்கேறுகிறது அந்த அற்புதம்.
பசியால் இருந்தவர்கள் நிறைவு பெறுகின்றனர். ஒன்றும் இல்லா
இடத்தில் 12 கூடைகள் அப்பங்களால் நிறைகின்றன.
மேற்காணும் நிகழ்வில், பசி மறைந்து நிறைவு வர காரணமாக இருந்தவர்
யார்?
- '200 தெனாரியத்திற்கு வாங்கினாலும் முடியாது' என்று
சொன்ன பிலிப்பா? அல்லது
- தன் பிள்ளை பசியாற வேண்டும் என்று 5 அப்பங்களையும், 2
மீன்களையும் கொடுத்தனுப்பிய சிறுவனின் அம்மாவா? அல்லது
- அந்த சிறுவனை அடையாளம் கண்டு இயேசுவிடம் கொணர்ந்த அந்திரேயவா?
அல்லது
- தன் ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் இயேசுவிடம்
கொடுக்க முன்வந்த அந்தச் சிறுவனா? அல்லது
- அவற்றை வாங்கி கடவுளுக்கு நன்றி செலுத்தி பகிர்ந்து
கொடுத்த இயேசுவா? அல்லது
- இயேசுவிடமிருந்து வாங்கி திருத்தூதர்கள், திருத்தூதர்களிடமிருந்து
சீடர்கள், சீடர்களிடமிருந்து வாங்கிய மற்றவர்களா?
அல்லது
- இவர்கள் எல்லாருமா?
இவர்கள் எல்லாரும்தான். இந்த எல்லார் வழியாகவும் செயலாற்றியவர்
இறைவன். 'பிலிப்பு,' 'சிறுவனின் அம்மா,' 'அந்திரேயா,'
'சிறுவன்,' 'இயேசு,' 'பரிமாறியவர்கள்' என்று நபர்கள் தனித்தனியாக
இருந்தாலும், அவர்கள் இணைந்து வரும்போது அவர்களின் ஆற்றலை
பன்மடங்கு பெருக்கியவர் ஆண்டவர். ஆக, 'எல்லாருக்கும்
மேலான' ஆண்டவர் 'எல்லாருக்குள்ளும்' செயலாற்றி, 'எல்லார்
வழியாகவும் செயலாற்றி' எல்லாருடைய பசியையும் நீக்கி, எல்லாருக்கும்
நிறைவு தருகின்றார். இவ்வாறாக, முதல் வாசகத்திலும், நற்செய்தி
வாசகத்திலும் ஆண்டவராம் இறைவனே தன் செயலாற்றுதலால் அனைவரையும்
இணைக்கின்றார். இந்த ஒருங்கியக்கம் ஒருவர் மற்றவருக்கு உதவி
செய்வதோடல்லாமல், ஒருவர் மற்றவரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும்
காரணமாகிவிடுகிறது.
கடவுளின் இந்தச் செயல்பாடு திடீரென்று நடந்துவிடுமா? அல்லது
இந்தச் செயல்பாட்டைத் தூண்ட நாம் முன்வர வேண்டுமா? கடவுளின்
செயல்பாடு மாயாஜாலம் அல்ல. அவரின் ஒருங்கியக்கம் ஒரு
மேஜிக் அல்ல. மாறாக, அது சின்னஞ்சிறியவர்களின், சின்னஞ்சிறு
செயல்களின் தொகுப்பாக இருக்கிறது.
எப்படி?
அ. அனைவரும் தத்தம் அழைப்பிற்கேற்ப வாழ வேண்டும்.
ஆ. முழு மனத்தாழ்மையோடும், கனிவோடும், பொறுமையோடும் ஒருவரையொருவர்
அன்புடன் தாங்க வேண்டும்.
இ. ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
அ. அழைப்பிற்கேற்ப வாழ்தல்
தன் வாழ்க்கை நிலை தன்னிடம் எதை எதிர்பார்க்கிறதோ, அதை
நிறைவு செய்வது. எ.கா. இப்போது என் வாழ்க்கை நிலையில் நான்
ஒரு மாணவன் என்றால், அந்த மாணவனுக்குரிய நிலையை நான் சமரசம்
செய்யாமல் முழுமையாக வாழ வேண்டும். ஆசிரியர், மருத்துவர்,
அருள்பணியாளர், துறவி, இல்லத்தரசி என எல்லாருமே. அழைப்பு
என்பது நாம் செய்யும் வேலை மட்டுமல்ல. வேலை செய்ய முடியாத
குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், உடல்நலமற்றவர்கள் என அனைவருமே
தங்களின் இருப்பு நிலைகளில் தங்களின் முழு ஆளுமையை
வெளிக்கொணர முடியும்.
ஆ. மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, அன்பு கொண்டிருத்தல்
கூட்டு வாழ்க்கைக்கு அல்லது கூட்டியக்கத்திற்குத் தேவையானவை
இந்த நான்கு குணங்கள்தாம். குரோஷிய அணியின் வீரர் காலிநிக்
விளையாட்டிற்குள் நுழைய முடியாமல் அல்லது மற்றவர்களின்
கூட்டாற்றலோடு தன் ஆற்றலைச் சேர்க்க முடியாமல்போகக் காரணம்
அவரிடம் மேற்காணும் பண்புகளில் ஏதாவது ஒன்று குறைவுபட்டதால்தான்.
தான் அணியின் எந்த நிலையில் விளையாட அனுமதிக்கப்பட்டாலும்
தன் திறன் மேல் தனக்கு உள்ள நம்பிக்கையை மையமாக வைத்துத்
தன் திறனை அவர் வெளிக்கொணர்ந்திருக்கலாம். எடுத்துக்காட்டாக,
நம் நற்செய்தியில் வரும் பிலிப்பு. '200 தெனாரியத்திற்கு
அப்பம் வாங்கினாலும் ஒரு சிறு துண்டு கூட கிடைக்காது' என்று
இயேசுவிடம் தயக்கம் காட்டினாலும், தன் கருத்தைச்
சொன்னாலும், அந்திரேயா மற்றதொரு கருத்தைச் சொல்லும்போது அதை
மறுக்காமல் ஏற்றுக்கொள்கின்றார். தான் செய்ததுதான் சரி என்றும்,
தன் கருத்து மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் எனவும் வாதாடவில்லை
பிலிப்பு. இதற்குக் காரணம் அவரிடமிருந்த மனத்தாழ்மையும்,
கனிவும், பொறுமையும், அன்புமே.
இ. ஒருமைப்பாட்டைக் காத்தல்
நாம் கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் இயக்கத்தைக் கவனித்தால்
இது நமக்குப் புரியும். சிறிய கைக்கடிகாரத்தைப் பிரித்துப்
பார்த்தால் அதனுள் சின்னச் சின்னக் கம்பிகளும், சுருள்கம்பிகளும்
இருக்கும். சின்னக் கம்பிதானே. அதில் ஒன்று அறுந்தால் என்ன?
என நாம் நினைக்கலாம். ஆனால், சின்னஞ்சிறிய கம்பிகளின் ஒருமைப்பாடுதான்
ஒட்டுமொத்த கடிகார இயக்கத்திற்குக் காரணமாக இருக்கிறது. கடிகாரத்தின்
பெரிய பகுதிகள் மட்டும்தான் கவனிக்கப்படவேண்டும், சிறிய பகுதிகள்
கவனிக்கப்படத் தேவையில்லை என நினைப்பது தவறு. அந்திரேயா
கொண்டு வந்த சிறுவனால் என்ன பயன்? அவனிடம் இருக்கும் கொஞ்ச
அப்பங்களால் என்ன பயன்? என்று இயேசு சிறுவனை அனுப்பிவிடவில்லை.
அந்தச் சிறுவனையே கிரியா ஊக்கியாக்கி பெரிய அரும் அடையாளத்தை
நடத்துகிறார் இயேசு. ஏனெனில், இயேசுவுக்குத் தெரியும் -
கூட்டத்தின் ஒரு பகுதியான இந்தச் சிறுவனும் முக்கியமானவனே
என்று.
இறுதியாக, இன்று எல்லாருக்கும் மேலான, எல்லார் மூலமாகவும்
செயலாற்றுகின்ற, எல்லாருக்குள்ளும் இறைவன், நம் ஒவ்வொருவர்
வழியாகவும் செயலாற்றுகின்றார். நம் ஒவ்வொருவருக்குள்ளும்
இருக்கிறார் என்பதை மனத்தில் இருத்தி, நாம் செய்யும் செயல்கள்
அனைத்தும் அவருடைய செயல்களே என எண்ணி, அடுத்தவரின் பசி
தீர்க்கும், அடுத்தவருக்கு நிறைவுதரும் செயல்களைச் செய்ய
நம் ஆற்றலைக் கூட்டாற்றல் ஆக்கலாமே!
உங்களுக்குக் குஞ்சரம் அம்மாவைத் தெரியுமா? அப்படியானால்
நீங்கள் 1885 ஆம் ஆண்டிலிருந்து 1890 ஆம் ஆண்டுவரை
தமிழகத்தில் ஏற்பட்ட தாது வருடப் பஞ்சத்தைப் பற்றியும்
தெரிந்திருக்க வேண்டும். உணவு கிடைக்காமல் புற்றில்
எறும்புகள் சேர்த்து வைத்திருந்த அரிசியைத் தின்றும்,
மூன்றுவேளையும் முருங்கைக் கீரையை அவித்துத் தின்ற காலமது.
கண்முன்னே ஒட்டிய வயிறுடன் கணவன், மனைவி, பிள்ளைகள்..
இதில் முதலில் யார் முதலில் இறப்பாரோ என்று உயிரைக் கையில்
பிடித்துக்கொண்டு வாழ்ந்த மிகக் கொடுமையான அந்தக்
காலக்கட்டத்தில், மதுரையில் உள்ள வடக்கு ஆவணி மூல வீதியில்
வாழ்ந்தவர்தான் குஞ்சரம் அம்மா. தாதி குலத்தைச் சார்ந்த
இவரின் அழகில் மயங்காதவர் யாரும் கிடையாது. மேலும்
அக்காலத்தில் இவர் செல்வச் சீமாட்டியாகவே இருந்தார்.
இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மக்கள் பட்டினியால்
செத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து மனம் கசிந்து,
அவர்களுக்குக் கஞ்சி காயச்சி ஊற்ற முடிவு செய்தார் இவர்.
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் கஞ்சி காய்ச்சி ஊற்றி
வந்த இவர், மக்கள் நீண்டதொரு வரிசையில் வருவதைப்
பார்த்துவிட்டு மூன்று பெரிய பாத்திரத்தில் கஞ்சி காய்ச்சி
ஊற்றினார். இதற்காக இவர் தன்னிடமிருந்த இரண்டு பெரிய
வீடுகள், நகைகள், ஆபரணங்கள் என எல்லாவற்றையும் விற்றார்.
ஒருசில பணக்காரர்கள் இவர் செய்துவந்த இரக்கச் செயலைப்
பார்த்துவிட்டு, "
இவருக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை?"
என்றெல்லாம் பேசினர். இவர் அவர்கள் பேசியதைக்
கண்டுகொள்ளாமல், தொடர்ந்து மக்களுக்குக் கஞ்சி காய்ச்சிக்
கொடுத்துக்கொண்டு வந்தார். பஞ்சத்தின் கோர தாண்டவத்தைப்
பார்த்துவிட்டு, அப்பொழுது மதுரையில் மாவட்ட ஆட்சியராக
இருந்தவர், ஆறாவது வாரத்திலிருந்து மூன்று இடங்களில்
காஞ்சி காட்சி ஊற்ற ஏற்பாடு செய்தார். அதற்கெல்லாம்
குஞ்சரம் அம்மாவே மூல காரணமாக இருந்தார். ஏறக்குறைய
பதின்மூன்று மாதங்கள் குஞ்சரம் அம்மாவின் வீட்டில் இருந்த
அடுப்பு அணையாமல் எரிந்தது. அதன்பிறகு அவரிடம்
மக்களுக்குக் கஞ்சி காய்ச்சிக் கொடுக்க எதுவும் இல்லாமல்
போனது.
ஒருவழியாகத் தாது வருடம் முடிந்தது. அதற்குப் பின் வந்த
இரண்டாம் மாதத்தில் குஞ்சரம் அம்மா இருந்தார். அப்பொழுது
வடக்கு ஆவணி வீதியில் கூடிய கூட்டம், மதுரையில்
கொண்டாடப்படும் திருவிழாவிற்கு கூடும் கூட்டத்திற்கு
இணையானதாக இருந்தது குறிப்புகள் சொல்கின்றன. ஆம், குஞ்சரம்
அம்மா மக்களின் துன்பத்தைக் கண்டு மனமிரங்கி, அவர்களுக்கு
உணவு தந்தார். அதனால்தான் அவருடைய இறப்பின்பொழுது, அவ்வளவு
கூட்டம் கூட்டியது. பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறான இன்று
நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, பசியோடு இருப்பவரை
அன்புடன் தாங்கிக்கொள்ள அழைப்புத் தருகின்றது. அது
குறித்து நாம் சிந்திப்போம்.
உணவின்றித் தவித்த தவிக்கும் மக்கள்
ஊர்ப்புறங்களில் இப்படியொரு பழமொழி சொல்வதுண்டு: "
நரி வலம்
வந்தால் என்ன, இடம் வந்தால் என்ன. நம்மீது விழுந்து
பிடுங்காது இருந்தால் போதும்."
யாரும் எப்படியும்
இருக்கட்டும், நான் நன்றாக இருந்தால் போதும் என்பதுதான்
இந்தப் பழமொழி உணர்த்தும் உண்மை. இன்றைக்குப் பலர்,
'நம்முடைய வீட்டில் அடுப்பு எரிந்தால் போதும்; நாம் நன்றாக
இருந்தால் போதும். எவரும் எக்கேடு கெட்டும் போகட்டும்'
என்று தன்னலத்தோடு வாழ்வதைக் காண முடிகின்றது. இன்னும்
ஒருசிலர் தாங்கள் நன்றாக இருப்பதால், எல்லாரும் நன்றாக
இருப்பார்கள் என்ற குறுகிய மனப்பான்மையோடு வாழ்வதையும் காண
முடிகின்றது. இன்றைக்கும் ஒருவேளை உணவுகூடக் கிடைக்காமல்
பட்டினி கிடக்கும் மக்கள் உலகில் ஏராளம் உண்டு. இது யாரும்
மறுக்க முடியாத உண்மை.
இந்நிலை இயேசுவின் காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும்
இருந்திருக்கும். இந்தப் பின்னணியில்தான் இயேசு தன்
சீடர்களிடம், "
இன்று தேவையான உணவை எங்களுக்குத் தரும்"
(மத் 6: 11) என்று இறைவனிடம் வேண்டக் கற்றுத் தருகின்றார்.
தமிழ் இலக்கியத்தில்கூட, "
உண்டி (உணவு) கொடுத்தோர், உயிர்
கொடுத்தோர்"
என்று சொல்லப்படுகின்றது. உயிரைக்கொடுப்பவர்
கடவுள். அப்படியெனில், ஒருவர் பசியோடு இருக்கின்ற
ஒருவருக்கு உணவு கொடுப்பதன் மூலம், அவர் கடவுளாகின்றார்
என்பதே இதில் பொதிந்துள்ள உண்மை. ஆதலால், பசியோடு
இருக்கின்ற மக்களுக்கு உணவிடவேண்டும். அப்படி நாம்
உணவிடுவதன் மூலம் கடவுளின் தூதர்களாக மாறுகின்றோம் என்பது
நம் மனத்தில் பதிய வைக்கவேண்டிய செய்தி.
சீடர்களின் தட்டிக்கழிப்பும், இயேசுவின் பரிவும்
பசியோடு இருப்பவருக்கு உணவதன் மூலம் ஒருவர் கடவுளின்
தூதராக - கடவுளாக மாறுகின்றார் என்று சிந்தித்தோம். இன்றைய
முதல்வாசகத்தில் இறைவாக்கினர் எலியா இருபது வாற்கோதுமை
அப்பங்களைக் கொண்டு நூறு பேருக்கு உணவளிப்பதையும்,
நற்செய்தி வாசகத்தில், இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு
மீன்களையும் கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நீங்கலாக
ஐயாயிரம் பேருக்கு உணவளிப்பதையும் குறித்து
வாசிக்கின்றோம்.
தன்னுடைய போதனையைக் கேட்க வந்த மக்களுக்கு இயேசு
உணவளிப்பதற்கு முன்பாக, இயேசுவின் சீடர்கள் அப்பிரச்சனையை
எப்படி அணுகினார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.
முதலாவதாக, மாற்கு நற்செய்தியின்படி இயேசுவின் சீடர்கள்
அவரிடம், "
...உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக்கொள்ளுமாறு
நீர் மக்களை அனுப்பி விடும்"
(மாற் 6: 35-36)
என்கிறார்கள். இது சீடர்களின் பொறுப்பற்ற தன்மையைக்
காட்டுகின்றது. அடுத்ததாக, பிலிப்பு இயேசுவிடம், "
இருநூறு
தெனாரியத்த்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு
துண்டும் கிடைக்காதே"
(யோவா 6:7) என்கிறார். இது
பணமிருந்தால் எதையும் செய்துவிட என்ன எண்ணத்தை
வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. இதற்கு அடுத்ததாக
அந்திரேயா, "
...ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன.
ஆனால், இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்"
என்கிறார்.
அந்திரேயாவின் வார்த்தைகள் எலியாவின் பணியாளர் பேசும்,
"
இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?"
என்ற
வார்த்தைகளைப் பிரதிபலிக்கின்றன. மேலும் அந்திரேயாவின்
வார்த்தைகளில் இயலாமேயே வெளிப்படுகின்றது.
இப்படித் தன் சீடர்கள் தங்கள் இயலாமையைச் சொல்லிக்கொண்டு
இருக்கும்பொழுது, இயேசு சிறுவன் கொடுத்த ஐந்து
அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்துக் கடவுளுக்கு
நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுக்கின்றார்.
இதனால் எல்லாரும் வயிறார உண்டது மட்டுமல்லாது. எஞ்சியதைப்
பன்னிரண்டு கூடைகளில் நிரம்புகின்றார்கள். இயேசு செய்த
இந்த வல்ல செயல் நான்கு நற்செய்தி நூல்களில் இடம்பெறுவதால்
இது உண்மை என நிரூபணமாகின்றது. மேலும் நம்மிடம் இருப்பது
குறைவாக இருந்தாலும், அதை ஆண்டவரிடம் கொடுத்தால், அது
நிறைவாக மாறும் என்ற உண்மையானது நமக்கு
உணர்த்தப்படுகின்றது
வறியவர்களை அன்போடு தாங்குவோம்
நம்மிடம் இருப்பது குறைவாக இருந்தாலும், அதைக் கடவுளின்
கைகளில் கொடுத்தால் நிறைவாக மாறும்; பட்டினி என்பது
இல்லாமல் போகும் என்பதை நற்செய்தி வாசகமும்; ஏன், முதல்
நமக்கு உணர்த்தியதைக் குறித்துச் சிந்தித்தோம். இப்படி
நம்மிடம் இருப்பதைக் கடவுளின் கையில், அல்லது அவரது
மக்களின் கையில் கொடுப்பதற்கு, இன்றைய இரண்டாம் வாசகத்தில்
புனித பவுல் சொல்வது போன்று, வறியவர்களை அன்புடன்
தாங்குவது தேவையான ஒன்றாக இருக்கின்றது. வறியவரை அன்பு
தாங்குவதற்கு, எனக்கு அடுத்திருப்பவர் கிறிஸ்துவின் உடலில்
ஓர் உறுப்பாக இருக்கின்றார் (1 கொரி 12: 12) என்ற
எண்ணமானது நமக்கு இருக்கவேண்டும். நம்முடைய உடலில் உள்ள
ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டுவிட்டால், அதை வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். மாறாக, அதற்கு ஏதாவது
செய்வோம். அதைப் போன்று கிறிஸ்து என்ற உடலின் உறுப்பாய்
இருக்கும் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கின்றபோது நாம்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் ஏதாவது செய்ய
வேண்டும்; அவரை அன்போடு தாங்க வேண்டும். எனவே, நாம் இயேசு
எப்படி பசியோடு இருந்தவர்மீது பரிவோடு கொண்டு, அவர்களுக்கு
உணவளித்து, அவர்களை அன்புடன் தான்கினாரோ, அப்படி நாமும்
வறியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களை அன்புடன்
தாங்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
'
உன்னால் ஆயிரம் பேருக்கு உணவு கொடுக்க முடியாவிட்டாலும்
ஒருவருக்காவது உணவு கொடுக்கலாமே'
என்பார் கொல்கொத்தா
நகர்ப் புனித தெரசா. ஆகையால், பசியோடு இருப்பவருக்கு
உணவளித்து, பசி பட்டினியில்லா உலகை உருவாக்குவோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்.
ஒரு வங்கியின் மேலாளர் புகை வண்டிக்காகக் காத்திருந்தார்.
புகை வண்டி வரத் தாமதமாகவே செய்தித்தாளைப் படித்துக்
கொண்டே ஒரு பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்துச் சாப்பிட
ஆரம்பித்தார். தன் இருக்கைக்கு அருகில் இருந்த சிறுவனும்
அந்த பிஸ்கட் பாக்கெட்டில் இருந்து பிஸ்கட்டை எடுத்துச்
சாப்பிட ஆரம்பித்தான். இதைப் பார்த்த இந்த வங்கி மேலாளர்,
இப்படியா குழந்தையை வளர்ப்பார்கள் என்று தனக்குள்ளே
சொல்லிக் கொண்டு எரிச்சலோடு கூடிய முகத்தோடு சிறுவனைப்
பார்த்து முகம் சுளித்தார். மீண்டும் சிறுவன் பிஸ்கட்டை
எடுத்துச் சாப்பிட்டான். இறுதியில் ஒரு பிஸ்கட் மட்டும்
இருந்தது. இதையாவது விட்டு வைப்பானா இந்தப் பயல் என்று
பார்த்தார் மேலாளர் . ஆனால் அந்த பிஸ்கட்டை இரண்டாக
உடைத்துப் பாதியை மேலாளருக்கு கொடுத்தான். நாகரிகம் இல்லாத
சிறுவன் என்று முகம் சுளித்தார். ஆனால் புகை வண்டி
வந்தவுடன் அவர் ஏறிக்கொண்டார். பையனின் பெற்றோரோ
எதிர்நோக்கிச் செல்லும் வண்டிக்காகக் காத்திருந்தனர்.
வண்டி ஏறியவுடன் பயணச்சீட்டுப் பரிசோதகர் வந்து, பயணச்
சீட்டைக் கேட்டவுடன் பையைத் திறந்தார் வங்கி மேலாளர்.
அப்போதுதான் பார்த்தார், தான் வாங்கிய பிஸ்கட் பாக்கெட்
பையில் இருப்பதையும், பையனுடைய பிஸ்கட்டைத்தான் தான்
சாப்பிட்டிருக்கிறேன் என்பதையும் அறிந்து வெட்கப்பட்டார்.
ஒரு சிறுவன் தன் பிஸ்கட் பாக்கெட்டைத் தன்னைச் சாப்பிட
அனுமதித்ததும், இறுதியாக இருந்த ஒரு பிஸ்கட்டையும் பாதி
பிட்டுக் கொடுத்ததையும் நினைத்து வியந்து போனார். எனக்கோ
எவ்வளவோ வாய்ப்பு இருந்தும், மற்றவரோடு பகிராமல் சுயநலமாக
உள்ளேனே என்று தன்னைப் பற்றி ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.
இன்றைய நற்செய்தியைப் பாருங்கள். ஒரு சிறுவனிடம் இருந்த 5
வாற்கோதுமை அப்பமும், இரண்டு மீன்களும் 5000 பேருக்கு
மேலாகப் பகிர்ந்தளிக்கப்பட்டு மீதியாக 12 கூடைகளில்
எடுக்கப்பட்டதாக வாசிக்கிறோம்.
பழைய ஏற்பாட்டில் பசியாக இருந்த இஸ்ரயேல் மக்களுக்கு
மன்னாவைக் கொடுத்து அவர்களின் பசியைப் போக்கினார் இறைவன்.
ஆனால் புதிய ஏற்பாட்டில் தன்னையே உணவாக கொடுக்கும் முன் 5
அப்பத்தை பலுக வைத்துப் புதுமை செய்து, பகிர்தலே சிறந்தது
என்பதைச் செய்து காட்டுகிறார் இயேசு. கொடுப்பவர்கள்
இறைவனின் இதயத்தில் நிரந்தர இதயத்தைப் பிடிப்பவர்
ஆவார்கள். புனித லூக்கா (லூக். 21: மாற். 12:41-44)
நற்செய்தியிலே வாசிப்பது போல விதவைப் பெண்ணின் காணிக்கையை
இயேசு வியந்து பாராட்டிய நிகழ்வே இதற்குச் சான்றாகும்.
பகிரா மனநிலைக்கு காரணம் என்ன?
சிலர் பகிராமல் இருப்பதற்குக் காரணம், மனித இதயத்தில்
ஏற்படும் ஒரு விதமான விரக்தி மனநிலை. அதாவது உலகமே
வறுமையால் வாடுகிறது. நான் மட்டும் பகிர்ந்தால் என்ன
மாற்றம் நடைபெறப் போகிறது. எனவே பகிர்தலும், பகிராமல்
இருப்பதும் ஒன்றுதான் என்ற எண்ணம் பலரை ஆட்டிப்படைக்கிறது.
இப்படிப்பட்ட மனநிலையில்தான் அந்திரேயா (யோவா. 6:9)
இயேசுவை நோக்கி இத்தகைய கூட்டத்திற்கு 5 அப்பமும், 2
மீன்களும் எந்த மூலைக்குப் பயன்படும் என்று கேட்கிறார்.
அன்பான சகோதரனே! சகோதரியே! உலகத்தின் பசியை நீக்க
முடியாவிட்டாலும், ஒரு மனிதனுக்கு, ஒரு குடும்பத்திற்காவது
நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது மேலானது. இன்றைய உலகில்
திருச்சபை என்ற சங்க ஏடு (இ. உல. தி .69) கூறுவது போல,
பசியால் மடியும் மனிதனுக்கு உணவளிக்காவிட்டால் நீ அவனைக்
கொன்றவனாவாய். எப்போதெல்லாம் நீ தேவைக்கு அதிகமாகச்
சேர்த்து வைத்து பிறருக்குக் கொடுக்காமல் பதுக்கி
வைக்கிறாயோ, அப்போதெல்லாம் நீ அவர்களை வஞ்சிக்கிறாய்.
தேவைக்கு உரியதை சேகரிப்பது சேமிப்பு. ஆனால் தேவைக்கு
அதிகமாகச் சேகரிப்பது, பிறர் தேவைக்கு உரியதைச் சேமிப்பது
என்பது திருட்டு என்கிறார் புனித பேசில்.
எனவேதான் எசாயா நூலில் கூறப்படுவதுபோல பசித்தோருக்கு
உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லாத
வறியோரை உங்கள் இல்லம் அழைத்து வருவதும்,
உடையற்றவர்களுக்கு உடுத்தக் கொடுப்பதும் அன்றோ நாம்
விரும்பும் நோன்பு என்கிறார் ஆண்டவர். கொடுப்பதால்,
பகிர்வதால் மகிழ்ச்சி பிறக்கிறது. மக்களுக்கு கொடு, உண்ட
பின் மீதி இருக்கும் என்பதற்கு இன்றைய விவிலிய நிகழ்ச்சி
சான்று பகர்கின்றது.
இல்லாதவர்களோடு இருப்பவர் பகிர்ந்துகொண்டால், இருப்பவர்,
இல்லாதவர் என்ற நிலை மாறும். இதைத்தான் ஆதிக்
கிறிஸ்தவர்கள் செய்து, இல்லாதவர் இருப்பவர் என்ற நிலையை
மாற்றினார்கள் (தி.ப. 2:44).
சிந்தனைக்காக
பகிரும் மனநிலை இல்லாமல் போவது பற்றாக்குறையல்ல. ஏனெனில்
இறைவன் தேவைக்கு ஏற்ப அனைத்தையும் படைத்துத் தந்துள்ளார்.
ஆனால் பிறரை நம் உடன்பிறப்பாக, சகோதரனாக, சகோதரியாக காண
முடியாத மனநிலைதான்.
இரண்டாவது முன் கூறியதுபோல, வறுமை மிகுந்த இந்த நாட்டிலே
எனது சிறிய பகிர்வால் என்ன செய்ய முடியும் என்று
விரக்தியில் சுயதிருப்தி செய்து கொள்ளும் நிலை. ஆனால்
இறைவன் கொடுத்த கால்கள் கரங்களை இயேசுவுக்குக் கொடுத்தாலே
இயேசு மக்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு உயர்த்துவார்.
நமது உழைப்பையும், பகிரும் மனநிலையையும் கொடுத்தாலே நம்
வழியாய் நற்செய்தியைப் பரப்பி ஏராளமான உள்ளங்களைச்
சொந்தமாக்கிக் கொள்வார். எனவே பகிர்ந்து செயல்பட
ஆரம்பிக்கும்போது இறைவனும் நம்மோடு இணைந்து செயல்படத்
தொடங்குகிறார் என்பதை உணர்வோம்.
ஒரு வங்கியின் மேலாளர் புகை வண்டிக்காகக் காத்திருந்தார்.
புகை வண்டி வரத் தாமதமாகவே செய்தித்தாளைப் படித்துக்
கொண்டே ஒரு பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தார்.
தன் இருக்கைக்கு அருகில் இருந்த சிறுவனும் அந்த பிஸ்கட்
பாக்கெட்டில் இருந்து பிஸ்கட்டை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான்.
இதைப் பார்த்த இந்த வங்கி மேலாளர், இப்படியா குழந்தையை வளர்ப்பார்கள்
என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு எரிச்சலோடு கூடிய முகத்தோடு
சிறுவனைப் பார்த்து முகம் சுளித்தார். மீண்டும் சிறுவன்
பிஸ்கட்டை எடுத்துச் சாப்பிட்டான். இறுதியில் ஒரு பிஸ்கட்
மட்டும் இருந்தது. இதையாவது விட்டு வைப்பானா இந்தப் பயல்
என்று பார்த்தார் மேலாளர் . ஆனால் அந்த பிஸ்கட்டை இரண்டாக
உடைத்துப் பாதியை மேலாளருக்கு கொடுத்தான். நாகரிகம் இல்லாத
சிறுவன் என்று முகம் சுளித்தார். ஆனால் புகை வண்டி வந்தவுடன்
அவர் ஏறிக்கொண்டார். பையனின் பெற்றோரோ எதிர்நோக்கிச்
செல்லும் வண்டிக்காகக் காத்திருந்தனர். வண்டி ஏறியவுடன்
பயணச்சீட்டுப் பரிசோதகர் வந்து, பயணச் சீட்டைக் கேட்டவுடன்
பையைத் திறந்தார் வங்கி மேலாளர். அப்போதுதான் பார்த்தார்,
தான் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் இருப்பதையும், பையனுடைய
பிஸ்கட்டைத்தான் தான் சாப்பிட்டிருக்கிறேன் என்பதையும் அறிந்து
வெட்கப்பட்டார். ஒரு சிறுவன் தன் பிஸ்கட் பாக்கெட்டைத் தன்னைச்
சாப்பிட அனுமதித்ததும், இறுதியாக இருந்த ஒரு பிஸ்கட்டையும்
பாதி பிட்டுக் கொடுத்ததையும் நினைத்து வியந்து போனார். எனக்கோ
எவ்வளவோ வாய்ப்பு இருந்தும், மற்றவரோடு பகிராமல் சுயநலமாக
உள்ளேனே என்று தன்னைப் பற்றி ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.
இன்றைய நற்செய்தியைப் பாருங்கள். ஒரு சிறுவனிடம் இருந்த 5
வாற்கோதுமை அப்பமும், இரண்டு மீன்களும் 5000 பேருக்கு மேலாகப்
பகிர்ந்தளிக்கப்பட்டு மீதியாக 12 கூடைகளில் எடுக்கப்பட்டதாக
வாசிக்கிறோம்.
பழைய ஏற்பாட்டில் பசியாக இருந்த இஸ்ரயேல் மக்களுக்கு மன்னாவைக்
கொடுத்து அவர்களின் பசியைப் போக்கினார் இறைவன். ஆனால்
புதிய ஏற்பாட்டில் தன்னையே உணவாக கொடுக்கும் முன் 5 அப்பத்தை
பலுக வைத்துப் புதுமை செய்து, பகிர்தலே சிறந்தது என்பதைச்
செய்து காட்டுகிறார் இயேசு. கொடுப்பவர்கள் இறைவனின் இதயத்தில்
நிரந்தர இதயத்தைப் பிடிப்பவர் ஆவார்கள். புனித லூக்கா
(லூக். 21: மாற். 12:41-44) நற்செய்தியிலே வாசிப்பது போல
விதவைப் பெண்ணின் காணிக்கையை இயேசு வியந்து பாராட்டிய நிகழ்வே
இதற்குச் சான்றாகும். பகிரா மனநிலைக்கு காரணம் என்ன?
சிலர் பகிராமல் இருப்பதற்குக் காரணம், மனித இதயத்தில் ஏற்படும்
ஒரு விதமான விரக்தி மனநிலை. அதாவது உலகமே வறுமையால் வாடுகிறது.
நான் மட்டும் பகிர்ந்தால் என்ன மாற்றம் நடைபெறப் போகிறது.
எனவே பகிர்தலும், பகிராமல் இருப்பதும் ஒன்றுதான் என்ற எண்ணம்
பலரை ஆட்டிப்படைக்கிறது. இப்படிப்பட்ட மனநிலையில்தான் அந்திரேயா
(யோவா. 6:9) இயேசுவை நோக்கி இத்தகைய கூட்டத்திற்கு 5 அப்பமும்,
2 மீன்களும் எந்த மூலைக்குப் பயன்படும் என்று கேட்கிறார்.
அன்பான சகோதரனே! சகோதரியே! உலகத்தின் பசியை நீக்க
முடியாவிட்டாலும், ஒரு மனிதனுக்கு, ஒரு குடும்பத்திற்காவது
நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது மேலானது. இன்றைய உலகில்
திருச்சபை என்ற சங்க ஏடு (இ. உல. தி .69) கூறுவது போல, பசியால்
மடியும் மனிதனுக்கு உணவளிக்காவிட்டால் நீ அவனைக் கொன்றவனாவாய்.
எப்போதெல்லாம் நீ தேவைக்கு அதிகமாகச் சேர்த்து வைத்து பிறருக்குக்
கொடுக்காமல் பதுக்கி வைக்கிறாயோ, அப்போதெல்லாம் நீ அவர்களை
வஞ்சிக்கிறாய். தேவைக்கு உரியதை சேகரிப்பது சேமிப்பு. ஆனால்
தேவைக்கு அதிகமாகச் சேகரிப்பது, பிறர் தேவைக்கு உரியதைச்
சேமிப்பது என்பது திருட்டு என்கிறார் புனித பேசில்.
எனவேதான் எசாயா நூலில் கூறப்படுவதுபோல பசித்தோருக்கு உங்கள்
உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லாத வறியோரை உங்கள்
இல்லம் அழைத்து வருவதும், உடையற்றவர்களுக்கு உடுத்தக்
கொடுப்பதும் அன்றோ நாம் விரும்பும் நோன்பு என்கிறார் ஆண்டவர்.
கொடுப்பதால், பகிர்வதால் மகிழ்ச்சி பிறக்கிறது. மக்களுக்கு
கொடு, உண்ட பின் மீதி இருக்கும் என்பதற்கு இன்றைய விவிலிய
நிகழ்ச்சி சான்று பகர்கின்றது.
இல்லாதவர்களோடு இருப்பவர் பகிர்ந்துகொண்டால், இருப்பவர்,
இல்லாதவர் என்ற நிலை மாறும். இதைத்தான் ஆதிக் கிறிஸ்தவர்கள்
செய்து, இல்லாதவர் இருப்பவர் என்ற நிலையை மாற்றினார்கள்
(தி.ப. 2:44).
சிந்தனைக்காக
பகிரும் மனநிலை இல்லாமல் போவது பற்றாக்குறையல்ல. ஏனெனில்
இறைவன் தேவைக்கு ஏற்ப அனைத்தையும் படைத்துத் தந்துள்ளார்.
ஆனால் பிறரை நம் உடன்பிறப்பாக, சகோதரனாக, சகோதரியாக காண
முடியாத மனநிலைதான்.
இரண்டாவது முன் கூறியதுபோல, வறுமை மிகுந்த இந்த நாட்டிலே
எனது சிறிய பகிர்வால் என்ன செய்ய முடியும் என்று விரக்தியில்
சுயதிருப்தி செய்து கொள்ளும் நிலை. ஆனால் இறைவன் கொடுத்த
கால்கள் கரங்களை இயேசுவுக்குக் கொடுத்தாலே இயேசு மக்களுக்கு
உதவி செய்யும் அளவுக்கு உயர்த்துவார்.
நமது உழைப்பையும், பகிரும் மனநிலையையும் கொடுத்தாலே நம்
வழியாய் நற்செய்தியைப் பரப்பி ஏராளமான உள்ளங்களைச் சொந்தமாக்கிக்
கொள்வார். எனவே பகிர்ந்து செயல்பட ஆரம்பிக்கும்போது இறைவனும்
நம்மோடு இணைந்து செயல்படத் தொடங்குகிறார் என்பதை உணர்வோம்.
நடுத்தர வயதுள்ள ஒரு பெண்! அந்தப் பெண்ணைச் சுற்றி அழுகுரல்கள்,
அணைந்து கிடந்த விளக்குகள்!
அந்தப் பெண் தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் பயன்படுத்தி ஒரு
பழைய கட்டடத்தை வாடகைக்கு எடுத்தார். அது ஏழைக் குழந்தைகளின்
பள்ளிக்கூடமாகியது. அந்தக் கட்டடத்தில் அமர எந்த இருக்கையும்
இல்லை, எந்த நாற்காலியும் இல்லை, எந்த மேசையும் இல்லை, எந்தக்
கரும்பலகையும் இல்லை!
அழுக்குப் படிந்த தரை கரும்பலகையானது!
அந்தப் பெண் ஏழை எளியவர்களை அடிமைப்படுத்தியிருந்த வறுமையோடு
போர் தொடுத்தார். என்னால் எது முடியுமோ அதை இந்த மக்களுக்குக்
கொடுப்பேன் எனச்சொல்லி, நாளும் பொழுதும் மக்களின் நலனுக்காக
உழைத்தார். அந்தப் பெண் வேறு யாருமல்ல! அன்னை தெரசாதான்
அவர்!
இன்று எண்பதிற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களையும்
முந்நூற்றுக்கும் மேற்பட்ட நடமாடும் மருந்தகங்களையும் எழுபதுக்கும்
மேற்பட்ட இறப்பவர்களைக் கண்காணிக்கும் இல்லங்களையும் முப்பதுக்கும்
மேற்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் காப்பகங்களையும் நாற்பதாயிரத்துக்கும்
மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்களையும் கொண்டதாக அன்னை தெரசாவால்
நிறுவப்பட்ட துறவற சபை திகழ்கின்றது.
இன்றைய நற்செய்தியிலே வரும் சிறுவனைப் போல, எலிசாவிற்குக்
கீழ்ப்படிந்த பணியாளனைப் போல தன்னிடம் இருந்ததை அன்னை தெரசா
இயேசுவிடம் கொடுத்தார். இயேசுவோ அன்னை தெரசா கொடுத்ததை பலுகிப்பெருகச்
செய்தார்.
1982-இல் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால்
ஸ்காட்லாந்து நாட்டுக்குச் சென்றபோது எடின்பர்க் என்ற நகரிலே
இளைஞர்களைப் பார்த்து இவ்வாறு சொன்னார்: நற்செய்தியில் வந்த
சிறுவன். அவனிடமிருந்த அனைத்தையும் இயேசுவிடம் கொடுக்க, இயேசு
வியத்தகு முறையில் ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார்:
எல்லாரும் உண்ட பிறகு மீதியிருந்தது. நீங்கள் உங்கள்
வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர் உங்களை
ஏற்றுக்கொள்வார்; ஆசியளிப்பார். நீங்கள் எதிர்பார்ப்பதைவிட
அதிகமாக அவர் உங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்திக்கொள்வார்
என்றார்.
இதோ நமது மனவானிலே வலம் வரும் சில ஆசை மேகங்கள்!
வயிறார உண்பதற்கு நல்ல உணவு வேண்டும்!
தெருவோர குழாய்களுக்குச் சுத்தமான தண்ணீர் வேண்டும்!
எல்லாரும் குடியிருக்க விசாலமான வீடுகள் வேண்டும்! கட்டணமின்றி
கற்கின்ற உயர்கல்வி வேண்டும்!
எதிர்பார்க்காது பழகுகின்ற உயர்ந்த நண்பர்கள் வேண்டும்!
ஆத்திரப்படாத கணவர் வேண்டும்!
அன்பு செய்யும் மனைவி வேண்டும்!
நீ சொன்ன ஜோக்கை நினைச்சி சிரிச்சி சிரிச்சி பாதி உயிரு
போயிட்டுது என்றார் மாமியார். மருமகளோ, அப்போ இன்னொரு ஜோக்
சொல்லவா? என்றாள். இவ்வாறு கேட்காத மருமகள் வேண்டும்!
என் மருமகள், என் மறு மகள் என்று சொல்லும் மாமியார்
வேண்டும்!
இதோ இயேசு பேசுகின்றார் : என்னால் எல்லாம் முடியும் என நம்புங்கள்.
உங்களுக்குள் வாழும் இறை ஆவியாரை (இரண்டாம் வாசகம்)
நோக்கிச் செபியுங்கள் (லூக் 11:9-13). அவர் தரும் நம்பிக்கை
என்னும் வரத்தைப் பெற்று (1 கொரி 12:9) வாழ்வாங்கு வாழுங்கள்.
பொருள் : வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து, அவர் மகிழ்வதைக்
கண்டு அருளுடையவர் அடையும் இன்பம் பெரிதாகும். அத்தகைய இன்பத்தைப்
பற்றித் தெரியாதவரே தாம் சேர்த்த பொருளை ஏழை எளியோருக்கு
வழங்காது பிறர் கொண்டு போக இழக்கும் இரக்கம் அற்றவர் ஆவர்!
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு வீட்டிற்குச் சென்றபோது,
அங்கிருந்த ஒரு சிறுவனிடம் இரண்டு 'சாக்லட்' கொடுத்து. அதில்
ஒன்றை எனக்குத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டேன். அவன்
கொடுக்க மறுத்து விட்டான். அப்போது அவனுடைய அக்கா, "என் தம்பிக்கு
மற்றவர்களிடமிருந்து வாங்கத்தான் தெரியும்; கொடுக்கத்
தெரியாது" என்றாள்.
இன்றைய நற்செய்தியில் வருகின்ற சிறுவன் சற்று வித்தியாசமானவன்.
தன்னிடமிருந்த ஐந்து ஆப்பங்களை இயேசுவிடம் கொடுக்க முன் வருகிறான்.
அவனுடைய ஐந்து அப்பங்கள்தான் 5000 அப்பங்களாகப் பலுகுகின்றன
அந்த ஐந்து அப்பங்கள் இல்லாமலேயே இவோ புதுமை செய்திருக்கலாம்.
இருப்பினும் நாம் நமக்குள்ளதைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள
வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தவே இயேசு அச்சிறுவனுடைய ஐந்து
அப்பங்களைப் பெற்றுக்கொண்டு அவற்றைப் பழகச் செய்கிறார்.
நாம் நமக்குள்ளவற்றைப் பிறருடன் பகிரும்போது அவை குறையாமல்
மிகுதியாகும், "கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்
(லூக் 6:38). இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எலிசேயு
24) அப்பங்களைக் கொண்டு 100 பேருக்கு உணவளித்த பின்னும்
நிறைய அப்பங்கள் மீதியிருந்தன, ஏழைக் கைம்பெண் இறைவாக்கினர்
எலியாவுக்குப் பஞ்ச காலத்தில் அப்பம் சுட்டுக்
கொடுக்கிறாள், பஞ்சம் முடியும்வரை பானையில் மாவும், கலயத்தில்
எண்ணெயும் எடுக்க எடுக்க வளர்ந்து கொண்டே இருந்தன {1 அரச
17:10-16), மணிமேகலையின் அமுத சுரபியில் இருந்த உணவும் எடுக்க
எடுக்கக் குறையவில்லை .
உலகில் பலர் பட்டினியால் சாவதைக் காணும்போது நமக்குக் கடவுள்
மேல் கோபம் வருகிறது. இவ்வுலகில் ஒரு சிலர் பிச்சை எடுத்துத்தான்
வாழ வேண்டுமென்று கடவுள் அவர்களைப் படைத்திருந்தால், அக்கடவுளே
பிச்சை எடுத்து அழியட்டும் என்று கடவுளையே சபிக்கிறார் வள்ளுவர்,
"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பரந்துகெடுக உலகு இயற்றியான்" குறள் (362)
ஆனால் எல்லா உயிர்களும் உண்ணவேண்டும் என்பதுதான் கடவுளின்
விருப்பமேயன்றி, எவரும் வெறும் வயிற்றுடன் படுக்கச் செல்ல
வேண்டும் என்பதன்று. "எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே
நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்"
(பதிலுரைப்பாடல், திபா 145:15). எனவே, குறை கடவுளிடம் இல்லை
; மனிதரிடத்தில்தான் உள்ளது. பகிர் ந்து பொழவேண்டிய மனிதர்
பதுக்கி வாழ்கின்றனர்.
இவ்வுலகச் செல்வங்கள் எல்லாம் எல்லாருக்கும் பொதுவானவை. வறுமையில்
வாடுவோருக்கு வளமையில் இருப்பவர் அவசியமானவற்றைக் கொடுக்கக்
கடமைப் பட்டுள்ளனர், அவ்வாறு அவர்கள் கொடுக்கவில்லை என்றால்,
வறுமையுற்றோர் தங்களுக்குத் தேவையானவற்றை மற்றவர்களிடமிருந்து
எடுத்துக்கொள்ள உரிமை பெற்றுள்ளனர்; அவ்வாறு எடுப்பது
திருடாகாது என்று இரண்டாம் வத்திக்கான சங்கம் கூறியுள்ளது.
"ஒருவர் மிகப்பெரும் இடர் நிலையில் உழன்றால், அவர் மற்றவர்களின்
செல்வத்திலிருந்து தமக்குத் தேவையானதை எடுக்கும் இடரிமை
பெற்றுள்ளான். பசியால் மடியும் மனிதருக்கு உணவளி; ஏனென்றால்
அவர்களுக்கு உணவளிக்காவிட்டால் நீ அவர்களைக் கொண்றவளாவாய்"
(இன்றைய உலகில் திருச்சபை, 69)
பிறர்க்கு நாம் உணவனிக்காமல் அவர்கள் இறந்தால், நாம் அவர்களைக்
கொலை செய்தவர்கள்! பயங்கரமான கூற்று!
"தனி ஒருவனுககு, உணவு இல்லையெனில், செகத்தினை அழிந்திடுவோம்"
பாரதியாரின் ஆவேசம்!
கண்ணகி மதுரையைத் தீயால் எரித்துச் சாம்பல் ஆக்கினாள். இருந்து
என்ன தெரிகிறது?" என்று தமிழ் ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டபோது,
அவர்கள், "அக்காலத்தில் தீயணைக்கும் படை இல்லை என்பது
தெரிகிறது என்றார்களாம், அவர்களுக்குக் கண்ணகியின் கற்பின்
திறன் பற்றிக கடுகளவும் தெரியவில்லை.
அவ்வாறே, "இயேசு ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐந்தாயிரம்
பேருக்கு உணவு கொடுத்ததிலிருந்து என்ன தெரிகிறது?" என்று
நம்மை யாராவது கேட்கும்போது, "நமக்குள்ளதை நாம் பிறருடன்
பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது தெரிகிறது என்று நாம் பதில்
சொன்னால், நாம் இப்புதுமையின் இறையியல் உண்மையை உணரத் தவறிவிடுகிறோம்.
இயேசு செய்து, பல்வேறு புதுமைகளில், ஏழே ஏழு புதுமைகளை மட்டும்
யோவான் பொறுக்கி எடுத்துத் தனது நற்செய்தியில் எழுதியுள்ளார்.
மேலும், அவர் இயேசுவின் புதுமைகளை வெறும் புதுமைகளாகக்
காணாமல், 'அரும் அடையாளங்களாகக்' காண்கின்றார், அரும் அடையாளம்
என்றால், புதுமையைக் கடந்து சென்று, அதனுள் பொதிந்துள்ள
ஆழமான இறையியல் உண்மையை உணர்த்தும் சாதனமாகும். அப்படியானால்,
அப்பம் பலுகுகிற புதுமையில் பொதிந்துள்ள ஆழமான இறையியல் உண்மை
என்ன ?
பழைய உடன்படிக்கையில் இஸ்ரயேல் மக்கள் பாலை நிலத்தில் மோசே
தலைமையில் 'மன்னா' என்ற அதிசய உணவை உண்டனர். புதிய உடன்படிக்கையில்,
இயேசு கிறிஸ்து பாலைநிலத்தில் அப்பங்களைப் பலுகச் செய்து
மக்களுக்கு உணவளித்ததின் மூலம். அவரே புதிய மோசே, உலகிற்கு
வரவிருந்த ஒப்புயர்வற்ற இறைவாக்கினர் என்ற ஆழமான இறையியல்
உண்மையை வெளிப்படுத்துகிறார் யோவான்.
மோசே தமது இறுதி உரையில் இஸ்ரயேல் மக்களிடம், 'உன் கடவுளாகிய
ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை
ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு (இச 18:15) என்று
கூறினார். மோசேயால் முன்னறிவிக்கப்பட்ட அந்த இறைவாக்கினர்தான்
இயேசு கிறிஸ்து இயேசுவின் புதுமையைக் கண்ட மக்களும், "உலகிற்கு
வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே" (யோவா 6:14) என்று
கூறினார்கள்.
இயேசு கிறிஸ்து பல்வேறு இறைவாக்கினரில் ஒருவரல்ல. மாறாக,
உலகிற்கு வரவிருந்த ஒப்புயர்வற்ற இறைவாக்கினர் : இறைவனால்
அருள்பொழிவு பெற்ற மெசியா; உலக மீட்பர். இயேசு கிறிஸ்துவே
இறைமகனும் மெசியாவும் ஆவார் என்பதை நம்பி, அவர் பெயரால்
வாழ்வு பெறவேண்டும் என்பதே யோவான் நற்செய்தியின் ஒரே
குறிக்கோளாகும் (யோவா 20:30).
நாமும், இன்றைய நற்செய்தி வாயிலாக, நமக்குள்ளவற்றை மற்றவர்களுடன்
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நமது சமுதாயக் கடமையை உணர்வதோடு
நிறுத்திக்கொள்ளாமல், இயேசுவே கடவுள் உலகிற்கு அனுப்பிய இறுதி
இறைவாக்கினர், கடவுளின் மகன் (எபி 1:1). அவரை நம்பி அவர்
பெயரால் முடிவில்லா வாழ்வு பெறவேண்டும் என்ற ஆழமான இறையியல்
உண்மையையும் உணர்வோமாக.
உங்களுக்குக் குஞ்சரம் அம்மாவைத் தெரியுமா? அப்படியானால்
நீங்கள் 1885 ஆம் ஆண்டிலிருந்து 1890 ஆம் ஆண்டுவரை
தமிழகத்தில் ஏற்பட்ட தாது வருடப் பஞ்சத்தைப் பற்றியும்
தெரிந்திருக்க வேண்டும். உணவு கிடைக்காமல் புற்றில்
எறும்புகள் சேர்த்து வைத்திருந்த அரிசியைத் தின்றும்,
மூன்றுவேளையும் முருங்கைக் கீரையை அவித்துத் தின்ற காலமது.
கண்முன்னே ஒட்டிய வயிறுடன் கணவன், மனைவி, பிள்ளைகள்..
இதில் முதலில் யார் முதலில் இறப்பாரோ என்று உயிரைக் கையில்
பிடித்துக்கொண்டு வாழ்ந்த மிகக் கொடுமையான அந்தக்
காலக்கட்டத்தில், மதுரையில் உள்ள வடக்கு ஆவணி மூல வீதியில்
வாழ்ந்தவர்தான் குஞ்சரம் அம்மா. தாதி குலத்தைச் சார்ந்த
இவரின் அழகில் மயங்காதவர் யாரும் கிடையாது. மேலும்
அக்காலத்தில் இவர் செல்வச் சீமாட்டியாகவே இருந்தார்.
இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மக்கள் பட்டினியால்
செத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து மனம் கசிந்து,
அவர்களுக்குக் கஞ்சி காயச்சி ஊற்ற முடிவு செய்தார் இவர்.
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் கஞ்சி காய்ச்சி ஊற்றி
வந்த இவர், மக்கள் நீண்டதொரு வரிசையில் வருவதைப்
பார்த்துவிட்டு மூன்று பெரிய பாத்திரத்தில் கஞ்சி காய்ச்சி
ஊற்றினார். இதற்காக இவர் தன்னிடமிருந்த இரண்டு பெரிய
வீடுகள், நகைகள், ஆபரணங்கள் என எல்லாவற்றையும் விற்றார்.
ஒருசில பணக்காரர்கள் இவர் செய்துவந்த இரக்கச் செயலைப்
பார்த்துவிட்டு, "
இவருக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை?"
என்றெல்லாம் பேசினர். இவர் அவர்கள் பேசியதைக்
கண்டுகொள்ளாமல், தொடர்ந்து மக்களுக்குக் கஞ்சி காய்ச்சிக்
கொடுத்துக்கொண்டு வந்தார். பஞ்சத்தின் கோர தாண்டவத்தைப்
பார்த்துவிட்டு, அப்பொழுது மதுரையில் மாவட்ட ஆட்சியராக
இருந்தவர், ஆறாவது வாரத்திலிருந்து மூன்று இடங்களில்
காஞ்சி காட்சி ஊற்ற ஏற்பாடு செய்தார். அதற்கெல்லாம்
குஞ்சரம் அம்மாவே மூல காரணமாக இருந்தார். ஏறக்குறைய
பதின்மூன்று மாதங்கள் குஞ்சரம் அம்மாவின் வீட்டில் இருந்த
அடுப்பு அணையாமல் எரிந்தது. அதன்பிறகு அவரிடம்
மக்களுக்குக் கஞ்சி காய்ச்சிக் கொடுக்க எதுவும் இல்லாமல்
போனது.
ஒருவழியாகத் தாது வருடம் முடிந்தது. அதற்குப் பின் வந்த
இரண்டாம் மாதத்தில் குஞ்சரம் அம்மா இருந்தார். அப்பொழுது
வடக்கு ஆவணி வீதியில் கூடிய கூட்டம், மதுரையில்
கொண்டாடப்படும் திருவிழாவிற்கு கூடும் கூட்டத்திற்கு
இணையானதாக இருந்தது குறிப்புகள் சொல்கின்றன. ஆம், குஞ்சரம்
அம்மா மக்களின் துன்பத்தைக் கண்டு மனமிரங்கி, அவர்களுக்கு
உணவு தந்தார். அதனால்தான் அவருடைய இறப்பின்பொழுது, அவ்வளவு
கூட்டம் கூட்டியது. பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறான இன்று
நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, பசியோடு இருப்பவரை
அன்புடன் தாங்கிக்கொள்ள அழைப்புத் தருகின்றது. அது
குறித்து நாம் சிந்திப்போம் .
உணவின்றித் தவித்த தவிக்கும்
மக்கள்
ஊர்ப்புறங்களில் இப்படியொரு பழமொழி சொல்வதுண்டு: "
நரி வலம்
வந்தால் என்ன, இடம் வந்தால் என்ன. நம்மீது விழுந்து
பிடுங்காது இருந்தால் போதும்."
யாரும் எப்படியும்
இருக்கட்டும், நான் நன்றாக இருந்தால் போதும் என்பதுதான்
இந்தப் பழமொழி உணர்த்தும் உண்மை. இன்றைக்குப் பலர்,
'
நம்முடைய வீட்டில் அடுப்பு எரிந்தால் போதும்; நாம் நன்றாக
இருந்தால் போதும். எவரும் எக்கேடு கெட்டும் போகட்டும்'
என்று தன்னலத்தோடு வாழ்வதைக் காண முடிகின்றது. இன்னும்
ஒருசிலர் தாங்கள் நன்றாக இருப்பதால், எல்லாரும் நன்றாக
இருப்பார்கள் என்ற குறுகிய மனப்பான்மையோடு வாழ்வதையும் காண
முடிகின்றது. இன்றைக்கும் ஒருவேளை உணவுகூடக் கிடைக்காமல்
பட்டினி கிடக்கும் மக்கள் உலகில் ஏராளம் உண்டு. இது யாரும்
மறுக்க முடியாத உண்மை. இந்நிலை இயேசுவின் காலத்திலும்
அதற்கு முந்தைய காலத்திலும் இருந்திருக்கும்.
இந்தப் பின்னணியில்தான் இயேசு தன் சீடர்களிடம், "
இன்று
தேவையான உணவை எங்களுக்குத் தரும்"
(மத் 6: 11) என்று
இறைவனிடம் வேண்டக் கற்றுத் தருகின்றார். தமிழ்
இலக்கியத்தில்கூட, "
உண்டி (உணவு) கொடுத்தோர், உயிர்
கொடுத்தோர்"
என்று சொல்லப்படுகின்றது. உயிரைக்கொடுப்பவர்
கடவுள். அப்படியெனில், ஒருவர் பசியோடு இருக்கின்ற
ஒருவருக்கு உணவு கொடுப்பதன் மூலம், அவர் கடவுளாகின்றார்
என்பதே இதில் பொதிந்துள்ள உண்மை. ஆதலால், பசியோடு
இருக்கின்ற மக்களுக்கு உணவிடவேண்டும். அப்படி நாம்
உணவிடுவதன் மூலம் கடவுளின் தூதர்களாக மாறுகின்றோம் என்பது
நம் மனத்தில் பதிய வைக்கவேண்டிய செய்தி.
சீடர்களின் தட்டிக்கழிப்பும்,
இயேசுவின் பரிவும்
பசியோடு இருப்பவருக்கு உணவதன் மூலம் ஒருவர் கடவுளின்
தூதராக - கடவுளாக மாறுகின்றார் என்று சிந்தித்தோம். இன்றைய
முதல்வாசகத்தில் இறைவாக்கினர் எலியா இருபது வாற்கோதுமை
அப்பங்களைக் கொண்டு நூறு பேருக்கு உணவளிப்பதையும்,
நற்செய்தி வாசகத்தில், இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு
மீன்களையும் கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நீங்கலாக
ஐயாயிரம் பேருக்கு உணவளிப்பதையும் குறித்து
வாசிக்கின்றோம்.
தன்னுடைய போதனையைக் கேட்க வந்த மக்களுக்கு இயேசு
உணவளிப்பதற்கு முன்பாக, இயேசுவின் சீடர்கள் அப்பிரச்சனையை
எப்படி அணுகினார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.
முதலாவதாக, மாற்கு நற்செய்தியின்படி இயேசுவின் சீடர்கள்
அவரிடம், "
...உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக்கொள்ளுமாறு
நீர் மக்களை அனுப்பி விடும்"
(மாற் 6: 35-36)
என்கிறார்கள். இது சீடர்களின் பொறுப்பற்ற தன்மையைக்
காட்டுகின்றது. அடுத்ததாக, பிலிப்பு இயேசுவிடம், "
இருநூறு
தெனாரியத்த்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு
துண்டும் கிடைக்காதே"
(யோவா 6:7) என்கிறார். இது
பணமிருந்தால் எதையும் செய்துவிட என்ன எண்ணத்தை
வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
இதற்கு அடுத்ததாக அந்திரேயா, "
...ஐந்து அப்பங்களும் இரண்டு
மீன்களும் உள்ளன. ஆனால், இத்தனை பேருக்கு இவை எப்படிப்
போதும்"
என்கிறார். அந்திரேயாவின் வார்த்தைகள் எலியாவின்
பணியாளர் பேசும், "
இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப்
பரிமாறுவேன்?"
என்ற வார்த்தைகளைப் பிரதிபலிக்கின்றன.
மேலும் அந்திரேயாவின் வார்த்தைகளில் இயலாமேயே
வெளிப்படுகின்றது. இப்படித் தன் சீடர்கள் தங்கள்
இயலாமையைச் சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது, இயேசு சிறுவன்
கொடுத்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்துக்
கடவுளுக்கு நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக்
கொடுக்கின்றார். இதனால் எல்லாரும் வயிறார உண்டது
மட்டுமல்லாது. எஞ்சியதைப் பன்னிரண்டு கூடைகளில்
நிரம்புகின்றார்கள்.
இயேசு செய்த இந்த வல்ல செயல் நான்கு நற்செய்தி நூல்களில்
இடம்பெறுவதால் இது உண்மை என நிரூபணமாகின்றது. மேலும்
நம்மிடம் இருப்பது குறைவாக இருந்தாலும், அதை ஆண்டவரிடம்
கொடுத்தால், அது நிறைவாக மாறும் என்ற உண்மையானது நமக்கு
உணர்த்தப்படுகின்றது.
வறியவர்களை அன்போடு தாங்குவோம்
நம்மிடம் இருப்பது குறைவாக இருந்தாலும், அதைக் கடவுளின்
கைகளில் கொடுத்தால் நிறைவாக மாறும்; பட்டினி என்பது
இல்லாமல் போகும் என்பதை நற்செய்தி வாசகமும்; ஏன், முதல்
நமக்கு உணர்த்தியதைக் குறித்துச் சிந்தித்தோம். இப்படி
நம்மிடம் இருப்பதைக் கடவுளின் கையில், அல்லது அவரது
மக்களின் கையில் கொடுப்பதற்கு, இன்றைய இரண்டாம் வாசகத்தில்
புனித பவுல் சொல்வது போன்று, வறியவர்களை அன்புடன்
தாங்குவது தேவையான ஒன்றாக இருக்கின்றது. வறியவரை அன்பு
தாங்குவதற்கு, எனக்கு அடுத்திருப்பவர் கிறிஸ்துவின் உடலில்
ஓர் உறுப்பாக இருக்கின்றார் (1 கொரி 12: 12) என்ற
எண்ணமானது நமக்கு இருக்கவேண்டும்.
நம்முடைய உடலில் உள்ள ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டுவிட்டால்,
அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். மாறாக,
அதற்கு ஏதாவது செய்வோம். அதைப் போன்று கிறிஸ்து என்ற
உடலின் உறுப்பாய் இருக்கும் ஒருவர்
பாதிக்கப்பட்டிருக்கின்றபோது நாம் வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்காமல் ஏதாவது செய்ய வேண்டும்; அவரை
அன்போடு தாங்க வேண்டும். எனவே, நாம் இயேசு எப்படி பசியோடு
இருந்தவர்மீது பரிவோடு கொண்டு, அவர்களுக்கு உணவளித்து,
அவர்களை அன்புடன் தான்கினாரோ, அப்படி நாமும் வறியவர்களின்
தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களை அன்புடன் தாங்க
முயற்சி செய்வோம்.
சிந்தனை
'
உன்னால் ஆயிரம் பேருக்கு உணவு கொடுக்க முடியாவிட்டாலும்
ஒருவருக்காவது உணவு கொடுக்கலாமே'
என்பார் கொல்கொத்தா
நகர்ப் புனித தெரசா. ஆகையால், பசியோடு இருப்பவருக்கு
உணவளித்து, பசி பட்டினியில்லா உலகை உருவாக்குவோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
பகிர்வதே
மீட்பின் வழி
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த நேரத்தில், போரினால்
அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளை, கூட்டணி நாடுகளின் இராணுவ
வீரர்கள், முகாம்களில் தங்கவைத்தனர். அக்குழந்தைகள்,
பட்டினியால் மிகவும் மெலிந்திருந்ததைக் கண்ட வீரர்கள்,
அவர்களுக்குத் தேவையான உணவளித்தனர். இரவில்,
அக்குழந்தைகளில் பலர், உறங்குவதற்குப் பயந்து,
விழித்திருந்ததைக்கண்ட வீரர்கள், செய்வதறியாது திகைத்தனர்.
அவர்களில் ஒரு வீரர், குழந்தைகள் தூங்கப்போவதற்குமுன்,
அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ரொட்டியைக் கொடுத்தார்.
அக்குழந்தைகள், அந்த ரொட்டியை தங்கள் தலையணைக்கு அடியில்
வைத்தவாறு, அன்றிரவு, அமைதியாக உறங்கினர். இந்நிகழ்வு,
உண்மையில் நிகழ்ந்ததா என்பதை உறுதியாகக் கூற இயலாது.
ஆனால், இந்நிகழ்வு நடந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம்
உண்டு. பெற்றோரையும், இல்லங்களையும் இழந்து,
பாதுகாப்பின்றி வாழ்ந்த குழந்தைகளுக்கு, ஒரு ரொட்டி, ஏதோ
ஒருவகையில் பாதுகாப்பைத் தந்திருக்க வேண்டும். இந்நிகழ்வு,
மனிதவாழ்வைப் படம் பிடித்துக்காட்டும் ஓர் உவமை என்பதை
மறுக்க இயலாது. அடுத்த வேளை உணவு கிடைக்கும் என்ற உறுதி
மட்டும் கிடைத்தால், இவ்வுலகில், கோடான கோடி மக்கள்,
நிம்மதியாக உறங்க முடியும்.
மனிதரின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவை, இயேசு,
மக்களுக்கு வழங்கியப் புதுமையை இன்றைய நற்செய்தியாக
வாசிக்கிறோம். இயேசு, தன் பணி வாழ்வில் ஆற்றிய
புதுமைகளில், ஒரே ஒரு புதுமை மட்டுமே, நான்கு
நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளது. அதுதான், இயேசு,
5000த்திற்கும் அதிகமானோருக்கு உணவளித்தப் புதுமை - (மத்.
14:13-21; மாற். 6:30-44; லூக். 9:10-19; யோவா. 6:1-14).
நான்கு நற்செய்திகளும், இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்
எழுதப்பட்டன என்பதை நாம் அறிவோம். எனவே, சீடர்கள், தங்கள்
நினைவுகளில் பதிந்திருந்த நிகழ்வுகளையும், இயேசுவின்
போதனைகளையும் பதிவு செய்ததே, நான்கு நற்செய்திகளாக நம்மை
அடைந்துள்ளன. எந்த ஒரு நிகழ்வு, நான்கு நற்செய்திகளிலும்
பதிவாகியுள்ளதோ, அந்நிகழ்வு, சீடர்களின் உள்ளங்களில் மிக
ஆழமாகப் பதிந்த நிகழ்வாக, இருந்திருக்கவேண்டும் என்பது,
விவிலிய ஆய்வாளர்களின் கணிப்பு. இயேசு 5000த்திற்கும்
அதிகமானோருக்கு உணவளித்த புதுமை, சீடர்களின் நினைவுகளில்
எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்றால், இப்புதுமையில்
கூறப்பட்டுள்ள எண்ணிக்கைகள் அனைத்தும் நான்கு
நற்செய்திகளிலும் மாற்றம் ஏதுமின்றி, ஒரே அளவு
எண்ணிக்கைகளாக உள்ளன. பெண்களும், சிறுவர், சிறுமியரும்
நீங்கலாக, இப்புதுமையால் பயனடைந்த ஆண்களின் எண்ணிக்கை
5000; இப்புதுமையைத் துவக்கிவைக்கப் பயன்படுத்தப்பட்டவை,
ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும்; அனைவரும் வயிறார
உண்டபின், மீதமிருந்த துண்டுகள், சேகரிக்கப்பட்டது,
பன்னிரண்டு கூடைகளில்... என்று, நான்கு நற்செய்திகளும் ஒரே
எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளது, வியப்பைத் தருகிறது.
அவ்வளவு ஆழமானத் தாக்கம் அது!
இந்தப் புதுமையை, பல கோணங்களில் சிந்திக்க இயலும். இன்றைய
நம் வழிபாட்டில், ஒரு சில கோணங்களை மட்டும் சிந்திக்க
முயல்வோம். மக்களின் பசியைப் போக்க, தங்களிடம் இருக்கும்
உணவு போதுமா என்ற கேள்வி, அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து
எடுக்கப்பட்டுள்ள முதல் வாசகத்திலும், யோவான்
நற்செய்தியிலும் எழுப்பப்படுகிறது. இருந்தாலும், இறைவனை
நம்பி, உணவு பரிமாற்றம் ஆரம்பமாகிறது. இறுதியில், மக்கள்
வயிறார உண்ட பின்னர், மீதம் உணவும் இருக்கிறது என்பதை, இரு
வாசகங்களிலும் காண்கிறோம்.
இவ்விரு நிகழ்வுகளையும் மேலோட்டமாகச் சிந்திக்கும்போது,
ஓர் எண்ணம் தோன்ற வாய்ப்புண்டு. அதாவது, மக்களின் பசியைப்
போக்க, இல்லாதவர்களின் குறையைத் தீர்க்க, இறைவன் நேரில்
வந்து ஏதாவது புதுமைகள் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு
எழுவதற்கு வாய்ப்புண்டு. ஆயினும், இரு வாசகங்களையும் சற்று
ஆழமாக ஆய்வு செய்தால், ஓர் உண்மை தெளிவாகும். இந்த உணவை,
இறைவன், ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கி, பலுகிப்
பெருகச் செய்யவில்லை. ஒரு மனிதரும், ஒரு சிறுவனும்
கொண்டுவந்து கொடுத்த உணவே, இவ்விரு புதுமைகளின் அடித்தளமாக
அமைந்ததைப் பார்க்கலாம்.
அரசர்கள் - இரண்டாம் நூல் 4: 42
பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில்
செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம்
கோணிப்பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின்
அடியவரான எலிசாவிடம் கொண்டு வந்தார்.
என்று இன்றைய முதல் வாசகம் ஆரம்பமாகிறது. ஒருவர் மனமுவந்து
தந்த அந்த உணவு ஒரு நூறு பேருக்குப்
பகிர்ந்தளிக்கப்பட்டது.
பகிர்வைப் பற்றிய அழகியதொரு பாடத்தை, இன்றைய நற்செய்தியில்
இயேசு சொல்லித் தருகிறார். தன்னை நோக்கி பெருந்திரளாய்
வந்த மக்களைக் கண்டதும், 'இவர்கள் உண்பதற்கு நாம்
எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?' (யோவான் 6:5) என்ற எண்ணமே,
இயேசுவின் உள்ளத்தில் முதலில் எழுந்தது. தன்னைத் தேடிவந்த
மக்களைக் கண்டதும், அவர்களுக்கு விருந்து பரிமாற நினைத்த
இயேசுவின் ஆர்வத்திற்கு எதிராக, கேள்விகள் எழுகின்றன;
பின்னர், ஒரு சிறுவனிடம் உணவு உள்ளதென்று சொல்லப்படுகிறது.
சிறுவன் தந்த ஐந்து அப்பம், இரண்டு மீன், இறைமகன் இயேசு
வழங்கிய ஆசீர், இவை இணைந்தபோது, 5000த்திற்கும்
அதிகமானோர், வயிறார உண்டனர்... மீதியும் இருந்தது.
இந்தப் புதுமையை இருவேறு கண்ணோட்டங்களில் சிந்திக்கலாம்.
இயேசு, தனி ஒருவராய் உணவைப் பலுகச்செய்தார் என்று
சிந்திப்பது, நாம் வழக்கமாகக் கருதும் பாரம்பரியக்
கண்ணோட்டம். 'பகிர்தல்' என்ற புதுமையை, இயேசு
துவக்கிவைத்தார் என்ற இரண்டாவது கண்ணோட்டம், ஒரு சில
விவிலிய ஆய்வாளர்கள் சொல்லும் கருத்து. மாறுபட்ட இந்தக்
கண்ணோட்டத்தில் சிந்திப்பதற்கு நம்மைத் தூண்டுவது, சிறுவன்
எதற்காக உணவுகொண்டு வந்திருந்தான்? என்ற ஒரு கேள்வி.
பொதுவாக, வெளியூர் செல்லும்போது, முன்னேற்பாடாக, உணவு
எடுத்துச் செல்லவேண்டும் என்று, குழந்தைகளோ, சிறுவர்களோ
எண்ணிப் பார்ப்பதில்லை. அவர்களுக்குத் தேவையான உணவை
தயாரித்து, எடுத்துச்செல்வது, அல்லது, கொடுத்தனுப்புவது,
பெற்றோரே. இஸ்ரயேல் மக்கள் மத்தியில் இதுபோன்ற
முன்னேற்பாடுகள் கூடுதலாகவே இருந்தன. காரணம் என்ன?
பல தலைமுறைகளாய், இஸ்ரயேல் மக்கள், அடிமை வாழ்வு
வாழ்ந்ததால், உணவின்றி தவித்தவர்கள். எனவே, அவர்கள்
வீட்டைவிட்டு வெளியேறும்போதெல்லாம், மறவாமல், மடியில்
கொஞ்சம் உணவு எடுத்துச்செல்வது, அவர்கள் வழக்கம். அன்றும்,
இயேசுவைத் தேடிச்சென்ற அந்தக் கூட்டத்தில், ஒரு குடும்பம்
இருந்தது. குடும்பமாய்ச் சென்ற அவர்களுக்குத் தேவையான
ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும், குடும்பத்தலைவி
முன்மதியோடு தயாரித்திருந்தார். அந்த உணவு பொட்டலத்தை
சிறுவன் சுமந்து வந்திருந்தான்.
மாலையானதும், பசி, வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. கொண்டு
வந்திருந்த உணவுப் பொட்டலங்களை யார் முதலில் பிரிப்பது?
பிரித்தால், பகிர வேண்டுமே என்ற எண்ணங்கள் அந்த பாலை
நிலத்தில் வலம் வந்தன! இயேசுவின் போதனைகளில் பகிர்வைப்
பற்றி பேசியது பலருக்கு நினைவிலிருந்தது. ஆனால், எப்படி
இத்தனை பேருக்குப் பகிரமுடியும்? நமக்கெனக்
கொண்டுவந்திருப்பதைக் கொடுத்துவிட்டால், நாம் என்ன
செய்வது? இந்தக் கேள்விகளில் பெரியவர்கள் முழ்கி
இருந்தபோது, அங்கிருந்த சிறுவனின் எண்ண ஓட்டம்
வேறுபட்டிருந்தது. அதுவே, அந்தப் புதுமைக்கு வழிவகுத்தது.
தன்னைத் தேடிவந்த மக்களுக்கு உணவளிப்பது பற்றி இயேசு
சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட அச்சிறுவன்,
அம்மா தன்னிடம் கொடுத்திருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு
மீன்களையும் இயேசுவிடம் கொண்டுவந்தான். பின்விளைவுகளைப்
பற்றி சிறிதும் கவலைப்படாமல், கள்ளம் கபடமற்ற ஒரு
புன்னகையுடன், அச்சிறுவன், தன்னிடம் இருந்ததையெல்லாம்
இயேசுவிடம் தந்தான். அச்சிறுவனின் செயலால் தூண்டப்பட்ட
மற்றவர்களும், தாங்கள் கொண்டுவந்திருந்த உணவைப்
பகிர்ந்துகொள்ள முன்வந்தனர். ஆரம்பமானது, ஓர் அற்புத
விருந்து.
அங்கு நடந்த பகிர்வு தந்த மனநிறைவில்,
அங்கிருந்தவர்களுக்கு, பாதிவயிறு நிறைந்திருக்க வேண்டும்.
எனவேதான், அவர்கள் உண்டதுபோக, மீதியான உணவை, 12 கூடைகளில்
சீடர்கள் நிறைத்ததாக இன்றைய நற்செய்தி கூறுகிறது. இயேசு
அன்று திபேரியக் கடல் அருகே நிகழ்த்தியது, ஒரு பகிர்வின்
புதுமை.
தனியொருவராய் இயேசு அப்பங்களைப் பலுகச்செய்தார் என்பது,
புதுமைதான். ஆனால், அதைவிட, இயேசு, மக்களைப்
பகிரச்செய்தார் என்பதை, நாம் மாபெரும் ஒரு புதுமையாகக்
கருதலாம். குழந்தைப்பருவத்தில், பகிர்வதன் அழகைக் குறித்து
பாடங்கள் பல சொல்லித்தரும் நாம், வளர, வளர, பகிர்வதற்குப்
பதில், சேர்ப்பதைக் குறித்து, சேர்த்ததைப் பாதுகாப்பது
குறித்து அதிகப் பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்,
கற்றுத்தருகிறோம்.
நாம் வாழும் இன்றைய உலகில், இந்தப் பகிர்வுப் புதுமை
அதிகம் தேவைப்படுகிறது. இந்தப் புதுமை நிகழவேண்டுமெனில்,
நம் அடிப்படை கண்ணோட்டம் மாறவேண்டும். இதை, நமக்குத்
தெரிந்த ஒரு கதை வழியே புரிந்துகொள்ள முயல்வோம். 'Chicken
Soup for the Soul' என்ற நூலில் சொல்லப்பட்டுள்ள கதை
இது... உணவகத்திற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு
விலையுயர்ந்த காரை, அவ்வழியே வந்த ஓர் ஏழைச் சிறுவன்
வியப்புடன் பார்த்தபடியே நின்றான். காரின் உரிமையாளர்
அங்கு வந்ததும், அவரிடம், "இந்தக் கார் உங்களுடையதா?"
என்று கேட்டான் சிறுவன். அதற்கு அவர், "ஆம், என் அண்ணன்
இதை எனக்குப் பரிசாகத் தந்தார்" என்று சொன்னார்.
அச்சிறுவன் உடனே, "நீங்கள் எதுவும் சிறப்பாகச் செய்ததால்
அவர் உங்களுக்கு இதைக் கொடுத்தாரா?" என்று கேட்டதற்கு,
கார் உரிமையாளர், "இல்லையே... அவருக்கு என் மேல் அதிக
அன்பு உண்டு. எனவே, எனக்கு, கிறிஸ்மஸ் பரிசாக இதைத்
தந்தார்" என்று பதில் சொன்னார். சிறுவன் ஒரு
பெருமூச்சுடன், "ம்... எனக்கும்..." என்று எதையோ சொல்ல
ஆரம்பித்தான். "ம்... எனக்கும் இப்படி ஓர் அண்ணன்
இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்!" என்று சிறுவன்
சொல்லப்போகிறான் என்று கார் உரிமையாளர் நினைத்தார்.
ஏனெனில், அந்தக் காரைப் பார்த்த அவரது நண்பர்கள் பலர்,
தங்களுக்கு இப்படி ஓர் அண்ணன் கிடைக்கவில்லையே என்று
ஏக்கத்துடன் சொன்னதை, காரின் உரிமையாளர் கடந்த சில
நாட்களாகக் கேட்டுவந்தார். எனவே, இச்சிறுவனின் ஏக்கமும்
அதுபோலவே இருக்கும் என்று கற்பனை செய்துகொண்டார். ஆனால்,
அச்சிறுவனோ, "ம்... எனக்கும் உங்கள் அண்ணனைப் போல ஒரு மனம்
இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும். நானும் என்
தம்பிக்கு இதுபோன்ற ஒரு காரை அன்பளிப்பாகத் தர முடியுமே!"
என்று சொன்னான்.
"ம்... எனக்கும் இப்படி ஓர் அண்ணன் இருந்தால், எவ்வளவு
நன்றாக இருக்கும்!" என்று கார் உரிமையாளரைப் போல்
எண்ணுவது, நாம் என்னென்ன பெறமுடியும் என்று கணக்கிடும்
மனம். "ம்... எனக்கும் உங்கள் அண்ணனைப் போல ஒரு மனம்
இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்!" என்று ஏழைச்
சிறுவனைப்போல் எண்ணுவது, நாம் என்னென்ன தரமுடியும் என்று
சிந்திக்கும் மனம். பகிர்வதும், தருவதும், பொதுவாக,
குழந்தைகளுக்கு எளிதில் தோன்றும் எண்ணங்கள். ஆனால்,
அவர்கள் வளர, வளர, மாற்றுப்பாடங்கள் அவர்கள் மனங்களில்
திணிக்கப்படுகின்றன.
வானிலிருந்து இறைவன் இறங்கி வந்து புதுமை செய்தால்தான்,
இவ்வுலகின் பசியைப் போக்க முடியும்; சக்திவாய்ந்த அரசுகள்
மனது வைத்தால்தான், வறுமை நீங்கும்; இருப்பவர்கள்
பகிர்ந்து கொண்டால்தான், இல்லாதவர் நிலை உயரும்
என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருப்பதை விட்டுவிட்டு,
பகிர்வு என்ற புதுமையை, அச்சிறுவனைப் போல் நம்மில் யாரும்
ஆரம்பித்து வைக்கலாம். நற்செய்தியில், நாம் இன்று
சந்திக்கும் அச்சிறுவன் வழியாக, இயேசு சொல்லித்தரும்
பகிர்வுப் பாடங்களைக் கற்றுக்கொள்ள, நமக்கு இறைவன் பணிவான
மனதைத் தரவேண்டுமென்று மன்றாடுவோம். பகிர்வுப் புதுமை
இவ்வுலகில் பலுகிப்பெருகவேண்டும் என்றும் மன்றாடுவோம்.
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
ஞாயிறு மறையுரை அருள்பணி. குழந்தைஇயேசு பாபு சிவகங்கை
பகிர்வே பன்மடங்காகும்!
ஒரு ஏழை மாணவன் மதிய உணவு வேளையின் போது தன் உணவு
பாத்திரத்தை எடுத்து பார்த்தான். அதில் ஒன்றுமே இல்லை. தன்
வீட்டில் இன்று எதுவுமில்லை என உணர்ந்த அவன் யாரிடமும்
எதையும் காட்டிக்கொள்ளாமல் சாப்பிட்டதைப்போல பாவனை செய்து
கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறினான். தண்ணீர் குழாயில்
கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு அங்கும் இங்கும்
நடந்துவிட்டு மீண்டும் வகுப்புக்குள் வந்தான். பின் தன்
உணவு பாத்திரத்தை பைக்குள் வைக்கலாம் என எண்ணி கையிலே
எடுத்த போது அது கனமாக இருந்தது. ஆச்சரியத்துடன் திறந்து
பார்த்த போது தன் வகுப்புத் தோழர்கள் அவர்களுடைய உணைவைப்
பகிர்ந்து வைத்திருப்பதைக் கண்டான். கண்ணீர் மல்க அந்த
உணவை உண்டான்.
அங்கே அனைவரின் மகிழ்வும் நட்பும் உறவும் பன்மடங்காகியது.
பகிர்வு என்ற சிந்தனை இன்றைய வாசகங்களின் மையக்கருத்தாக
விளங்குகிறது. பகிர்வு என்பது கிறிஸ்தவத்தின் அடையாளம்.
பகிர்வதால் எதுவும் குறைபடாது. மாறாக பன்மடங்காகும்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினரின் சொல்கேட்டு தான்
கொண்டுவந்த அப்பங்களை மக்களுக்கு உண்ணக்கொடுத்த மனிதனும்,
தன்னிடமிருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும்
மனமுவந்து எடுத்து கொடுத்த நற்செய்தியில் வரும் சிறுவனும்
பகிர்வு பன்மடங்காகும் எனும் பாடத்தை நமக்கு கற்று
தருகிறார்கள்.
நாம் எவற்றையெல்லாம் பகிர வேண்டும்? நம் அன்பை
....நல்லுணர்வுகளை ....நம்மிடமுள்ள திறமைகளை ....அறிவை
....நற்சிந்தனைகளை ....நம்பிக்கையை ....தேவையில்
இருப்போருக்கு பொருட்களை .....உணவை ....உடனிருப்பை
எல்லாவற்றிற்கும் மேலாக இறைவார்த்தையை நாம் பகிர வேண்டும்.
பகிர்ந்தால் அவை அனுத்தும் பன்மடங்காகும்.
இறைமகன் இயேசு பகிர்வின் சிறந்த அடையாளம். தந்தை கடவுளின்
அன்பையும் அருளையும் நிறைவாகப் பகிர்ந்தளித்தார் அவர்.
இறுதி இரவு உணவின் போது ஒரே அப்பத்தை பகிர்ந்து அதன்
நிறைவாய் சிலுவையில் தன்னையே பகிர்ந்தளித்தார்.
திருப்பலியில் தன்னை நமக்கெல்லாம் பகிர்ந்து கொண்டே
இருக்கிறார். இயேசுவைப் பின்பற்றி பகிர்ந்து வாழ நாம்
அழைக்கப்பட்டிருக்கிறோம்.
நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கேற்ப வாழுங்கள் என்று
இரண்டாம் வாசகம் கூறுகிறது. பகிர்ந்து வாழ்வதே நாம்
பெற்றுக்கொண்ட உயரிய அழைப்பு என்பதை உணர்ந்து நல்லவற்றை
பகிர்ந்து பன்மடங்காக்குவோம். இறையசிரும் நம்மில்
பன்மடகாகும்.
இறைவேண்டல்
இறைவா ...பகிர்ந்து வாழும் நல்மனம் தாரும். அதனால் எம்மிலே
உம்மருள் பன்மடங்காய் பெருகுவதாக. ஆமென்.
மறையுரை புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க்
கழகம் பெங்களூர்
பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (2அர. 4:42-44)
இறைவாக்கினர் எலியா ஆண்டவரிடம் எடுத்துக் கொள்ளப் "பட்டபோது
அவர் போர்த்தியிருந்த போர்வை விழுந்ததும் எலிசா அதை எடுத்தார்.
அதை எடுத்ததும், எலியாவுக்கு கடவுள் கொடுத்த ஆற்றல் எலிசாவுக்கு
வந்தது. அந்த ஆற்றலைக் கொண்டு தான் எலிசா, 20 வாற்கோதுமை
அப்பங்கள் மற்றும் சிறிய தானியக் கதிர்களைக் கொண்டு
100 பேருக்கு உணவளிக்கிறார். இவ்வாறு கடவுள் கொடுத்த வல்லமையை
நமக்கென வைத்துக்கொள்ளாமல் பிறருக்காக பயன்படுத்த
வேண்டும் என்பதை இவ்வாசகம் அறிவு ருத்துகின்றது. ஏனெனில்
கொடுப்பதில் தான் பெற்றுக்கொள்கிறோம்.
இரண்டாம் வாசகப் பின்னணி (எபே. 4:1-6)
கிறிஸ்துவைப் பின்பற்றும் மக்கள் யாவரும் ஒற்றுமையுடன்
வாழ வேண்டும். ஏனெனில் கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசு
கிறிஸ்து தனது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாக ஒன்றுபடுத-
' தப்பட்டவர்கள் (எபே. 2:14-15). எனவே தான், இறைவன் மக்களை
தம்மோடு இணைந்து வாழ அழைக்கிறார். இந்த அழைப்பை ஏற்று வாழ
எபேசு மக்களுக்கு தூய பவுல் இந்த கடிதத்தை எழுதுகிறார்.
மேலும் தூய பவுலை இவ்வாறு எழுத தூண்டியது இறைவார்த்தை
(கொலோ. 3:12-15). ஏனெனில் கிறிஸ்தவர்கள் தாங்கள்
பெற்றுக் கொண்ட அழைப்பை ஏற்று வாழ, அவர்கள் அன்பை மையமாகக்
கொண்டு பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத் தாழ்மை, கனிவு,
பொறுமை ஆகிய பண்புகளால் தங்களை அணி செய்ய வேண்டும் என்று
தூய பவுல் அறைகூவல் விடுக்கிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 6:1-15)
தனது பணியின் நிமித்தமான களைப்பை போக்குவதற்காகவும், இறை
வேண்டல் செய்வதற்காகவும் சில நேரங்களில் இயேசு தனிமையில்
இருப்பது வழக்கம். எனவே கலிலேயக். கடலைக் கடந்து ஒரு மலையில்
அமைதியாக இருக்கும் போது, மக்கள் கூட்டம் தம்மிடம் வருவதைப்
பார்க்கிறார், இயேசு. சிலர் அற்புதங்களினால் உந்தப்பட்டு
அங்கு வந்திருந்தனர். சிலர் அண்மையில் நடக்கயிருக்கிற
யூதர்களுடைய பாஸ்கா விழா- விற்காக எருசலேம் போகின்ற
வழியில் கூட்டமாகப் போய்க் கொண் டருக்கிறார்கள். வயிற்றுப்
பசியாலும், இறைத் தேடலாலும் மக்களின் முகத்தில் எற்பட்ட
களைப்பு இயேசுவின் மனதைத் தொட்டது.
பெத்சாய்தாவிலிருந்து திபெரியக் கடல் பகுதிக்கு நிலம்
வழியாக ஒன்பது மைல் தூரம். உடல் சோர்வையும், வயிற்றுப்
பசியையும் பொருட்படுத்தாமல், இயேசுவை சென்று அடைந்தாலே
போதும் என்ற எண்ணத்தில் மக்கள் ஓடி வருகின்றனர். அவர்கள்
அனைவருக்கும் உணவு அளிக்க வேண்டுமென்றால் ஒரு மனிதனின்
200 நாள் சம்பளமான 200 தெனாரியமே போதாது என்று பிலிப்பு
கூறுகிறார். மேலும் ஒரு சிறுவனிடம் 5 வாற்கோதுமை அப்பங்களும்
2 மீன்களும் இருந்தன. அந்தக் காலத்தில் 5 வாற்கோதுமை அப்பமானது
குறைந்த விலையில் கிடைக்கும், இது ஏழைகளின் உணவு.
அந்த ஏழையின் உணவான 5 வாற்கோதுமை அப்பங்களையும்,
காய்ந்த 2 மீன் துண்டுகளையும் உணவாக 5 ஆயிரம் பேருக்கு
பலுகச்செய்கிறார். பாஸ்கா விழாவின் முன் சுவையாக இந்த
புதுமையை நிறைவேற்றுகிறார் இயேசு. மக்கள் அனை வருக்கும்
தனது இரத்தத்தையும் உடலையும் கொடுப்பதின் முன் அடையாளமாக
இப்புதுமையை நிகழ்த்துகிறார். திருப்பலியின் முன்அடையாளமாக
இப்புதுமை அமைகிறது.
மறையுரை
அப்பம் பலுகுதல் புதுமை - ஒரு திருப்பலி.
ஒவ்வொரு திருப்பலியும் பகிர்வின் அடையாளம் தான், உணவு
உண்பதற்கு மட்டும் நாம் இங்கு அழைக்கப்பபடவில்லை பிறர்க்கு
உணவு ஊட்டுவதற்கும் நாம் கற்பிக்கப்படூகிறோம்.
இறைவா, நான் வாழ எனைத் தந்தாய் திருப்பலியில்
பிறர் வாழ எனைத் தருவேன் வாழ்க்கைப்பலியில்
மக்கள் கேட்டு தெய்வம் படைத்த புதுமைகளும் ஏராளம், அதுபோல்,
மக்கள் கேட்காமலேயே தெய்வம் படைத்த புதுமைகளும் ஏராளம்.
ஆனால் மக்களின் தேவையறிந்து இயேசு செய்த முதல் புதுமை
அப்பம் பலுகுதல்' , நான்கு நற்செய்தியாளர்- களும் இந்த
புதுமையை விளக்குகிறார்கள். சிலர் இந்த புதுமையை பகிர்வின்
அடையாளமாகப் பார்க்கிறார்கள் தவறில்லை. ஆனால் பகிர்வின்
அடையாளம் மட்டுமே என நினைப்பது தவறு.
உதாரணமாக, இயேசு உண்மையாகவே அப்பம் பலுகினார். இந்த நிகழ்வை,
ஏன் மாபெரும் நிகழ்வாகக் காட்ட வேண்டும்? ஏனெனில் அப்பம்
பலுகுதல் இஸ்ராயேல் வாழ்வில் ஒன்றும் புதிதல்ல.
இன்றைய முதல் வாசகத்தில், எலிசா இஸ்ராயேல் மக்கள் 100
பேருக்கு வெறும் 20 வாற்கோதுமை அப்பங்களை வைத்து பலுகி
உணவூட்டியது உங்களுக்கு நினைவிருக்கலாம், மேலும்
பார்த்தால், 1அர. 17:8 முதல் இறைவாக்கினர் எலியா,
சாரிபாத்துக் கைம்பெண்ணின் வீட்டில் அப்பம் பலுகச்
செய்கிறார், எலியா அப்பெண்ணிடம் அப்பம் கொண்டு வரச்
சொல்லுகிற போது. அப்பெண்ணானவள், கையளவு மாவும், சிறிதளவு
எண்ணெயும் தவிர வேறொன்றுமில்லைஎன்று பதிலளித்தார் (1அர.
17:12). அந்நேரத்தில் தான் எலியா கூறுகிறார், பஞ்சக்
காலங்கள் முடிகிற வரை பானையிலுள்ள மாவு தீராது, எண்ணெயும்
குறையாது என்று. இவ்வாறு அவ்வீட்டாரைச் சார்ந்த அனைவரும்
பல நாட்கள் சாப்பிட்டனர்.
மேலும் பழைய ஏற்பாட்டு நூலில் பார்க்கிறோம், வி.ப. 16:1
முதல் மக்கள் தங்கள் உணவுக்காக அழுது புலம்புகிறார்கள்.
இந்நேரத்தில தான் மோயீசன் ஆண்டவரிடமிருந்து இவர்களுக்கு
மன்னா என்ற அப்பத்தை கொடுக்கிறார். அதைத்தான் வி.ப.
16:15- இல் மோயீசன் கூறுகிறார். ஆண்டவர் உங்களுக்கு
உணவாக தந்த அப்பம் இதுவே. இவ்வாறு அப்பம் பலுகுதல் நிகழ்வு
அவர்கள் வாழ்வில் பலமுறைக்கேட்டு அனுபவித்த ஒன்று, இயேசுவும்
இந்நற்செய்தியில் செய்தது போல அப்பம் பலுகி பத்தோடு ஒன்று
பதினொன்று என்று புதுமை இங்கே நிகழ்த்த வில்லை.
தூய யோவான் அப்பம் பலுகுதல் நிகழ்வை புதிய கோணத்தில்
பார்க்கிறார். இந்நிகழ்வை நாம் தினம் கொண்டாடுகிற
திருப்பலியோடு தொடர்புபடுத்துகிறார்.. எவ்வாறு? இயேசு எப்போது
நற்கருணைபலி நிறைவேற்றகிறார்? மத்தேயு, மாற்கு, மற்றும்
லூக்கா நற்செய்திகளில், இயேசு தாம் பாடூபடுவதந்கு முன்பு
இராவுணவின்' போது நற்கருணை பலியை மத்தேயு 26:26-30;
மாற்கு 14:22-26; லூக்கா 22:14-23) நிறைவேற்றுகிறார். ஆனால்
இராவுணவு பற்றி யோவான் நற்செய்தியில் எங்கும் சொல்லப்படவில்லை.
மாறாக இயேசு இராவுணவின் போது செய்ததை இந்த அப்பம் பலுகுதல்
நிகழ்வோடு ஒப்பிட்டு பார்க்கின்றனர் இறையிலாளர்கள். இதை
எப்படி அறிவது? யோவான் 1.4. பாஸ்கா விழா அண்மையில் இருந்தது.
யோவான் நற்செய்தியாளர் மட்டுமே இதை சேர்த்துள்ளார்.
பாஸ்கா விழா என்பது, இஸ்ராயேல் மக்களை அடிமைத்தனத்தி-
லிருந்து மீட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு அழைத்துச்
சென்றதை நினைவு கூறுகிற விழா, விடுதலையின் விழா. அடிமைநிலையிலிருந்து
விடுதலைக்கு கடத்திச் சென்றதின் நினைவாக கொண்டாடப்படூகிற
விழா, அந்த விழாவில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட
பார்லியி- லிருந்து அப்பம் செய்து உண்பார்கள். மேலும்
செம்மறியாட்டை பலியிட்டு அதன் இரத்தத்தை பீடத்தின் மீது
தெளிப்பார்கள்.
இவ்வாறு அப்பத்தையும் இரத்தத்தையும் மையமாகக் கொண்ட
பாஸ்கா விழாவிற்கு போகும் மக்களுக்கு, இயேசு இந்த
புதுமையை நிகழ்த்துகிறார். தன் உடலையும் இரத்தத்தையும்
பாஸ்கா விழாவின் முன்கவையாக இந்த புதுமை வழியாக தருகிறார்.
அதனால் தான் இறையியலார் இந்த பகுதியை நற்கருணையை ஏற்படுத்திய
நிகழ்வு என்று கூறுகின்றனர்.
யோவான் 6:11, அப்பத்தை இயேசுவே தந்தார். லூக்கா 9:16-இல்
இயேசு அப்பத்தை சீடர்களிடம் கொடுத்து பறிமாறுகிறார். ஆனால்
யோவான் நற்செய்தியில் அவரே மக்களுக்கு கொடுக்கிறார்.
திருப்பலியும் ஓர் புதுமைமிகு அப்பம் பலுகுதல்' தான்
அன்று உணவை தந்து உயிரளித்தார். இன்று திருப்பலியில் தன்
உயிரையே உணவாகத் தருகிறார். தினம் கடவுள் உலகிற்கு
உணவளிக்கிறார். அந்திரேயா உதவியுடன் சிறுவனிடமிருந்து அப்பங்களையும்
மீன் துண்டுகளையும் வாங்கி மனிதாபிமானம் காண்கிறார்.
இன்று உங்களையும் என்னையும் கூப்பிட்டு எவ்வாறு பிறர்க்கு
உணவூட்ட வேண்டும் என கற்பிக்கிறார். பிறரின் தேவையை அறிந்து
அவர்களுக்கு நம்மாலான உதவியை செய்வதுதான் நாம்
கொண்டாடும் இத்திருப்பலியை வாழ்ந்து காட்டுவதற்கு அர்த்தம்.
நமது தமிழ் மரபிலே, பிறர் தேவையை அறிந்து உதவிய பல நல்
உள்ளங்கள் இருந்திருக்கின்றன. மனிதர்கள் சிலர் தங்களின்
தேவையை வாய் திறந்து கேட்பார்கள். ஆனால் முல்லைக்
கொழுயும், மயிலும் எங்களுக்கு இது வேண்டுமென்றுக் கேட்கவில்லை,
கேட்க வாய்ப்புமில்லை, வாயுமில்லை, இரப்பவர்க்கு கொடுப்பது
ஈகைதான். ஆனால் இரவாமல் கொடுப்பது உயர்ந்த ஈகை, இரப்பவன்
மானம் இழக்கிறான். இரவாமலேயேக் கொடுப்பவன் ஈகை மட்டுமல்ல,
ஓர் ஏழையின் மானத்தையும் காரீபாற்றுகிறான். இதைதான்
பாரி சாதாரண செடிகளுக்கு செய்கிறான். பாதையில் கிடந்த
முல்லைக் கொடிக்குத் தனது தேரையே கொழு கொம்பாகத் தருகிறான்.
அரணமனைக்குத் திரும்பி சேவகர்களை அனுப்பி முல்லைக்
கொடிக்கு கொழு கொம்பு ஊன்ற சொல்லியிருக்கலாம். ஆனால் அந்நேரத்திற்குள்
இரக்கமற்றவன் எவனாவது கொடியின் மேல் வண்டியை விட்டால்?
எனவேதான் அது நேரத்தின் தேவை- யாக இருந்தது, பாரி உதவினான்.
இதை போல் தான், மயில் குளிரில் நடுங்குகிறது எண்-
றெண்ணி தனது போர்வை கொண்டு போர்த்துகிறாான் பேகன். தனது
இரக்கக் குணத்தால், இன்று நமது தாய்த் திருநாட்டில் 23
கோடியே 77 லட்சம் பேர் ஏழ்மையில் வாடுகிறார்கள்.
1,20,000: குழந்தைகள் பசியால் ஏங்கித் தவிக்கின்றனர்.
60000 பேர் குடிநீர் வசதியில்லாமல் துன்பப்படுகின்றனர்,
20 கோடி பேர் சத்தான உணவு இன்றி இருக்கின்றனர். இல்லாமை
இருந்து கொண்டேதான் இருக்கும் பகிராமை இருக்கும் வரை"
நாம் பாவத்தில் உழன்று செத்துக் கொண்டிருந்த நேரத்தில்
நாம் கட வுளிடம் கேட்கவில்லை, மாநாக அவரே நமக்கு
மீட்புத் தேவையென உணர்ந்தார், தன்னையே தந்தார், வேறு எந்த
தெய்வமாவது உனது மீட்புக்காக தனது உடலையும், உயிரையும்
தருகிறேன் என்று கூறியுள்ளதா? உனது பாவத்திற்காக தான் பலியாகிறேன்
என்று உயிர்விட்டூள்ளதா? இவையனைத்தும் நமக்காக செய்த ஒரே
தெய்வம் ஆண்டவர் இயேசு நாம் கேட்கும் முன்னரே நமது
தேவைகளையெல்லாம் அறிந்துள்ளார். எனவேதான் தன் ஒரு மகனையே
அளிக்கும் அளவுக்கு தந்தை இல்வுலகின் மீது அன்பு
கூர்ந்துள்ளார் (யோவான் 3:16).
இதைதான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல்
கூறுகிறார். தந்தையாகிய இறைவனின் அன்பை மையமாகக் கொண்டு
பரிவு, இரக்கம், மனத் தாழ்மை, முதலிய பண்புகளால் நம்மை
அணி செய்ய வேண்டும் இவ்வாறு ஒரே மனித இனமாக வாழ தூய பவுல்
அழைப்பை கருத்தில் கொண்டு திருப்பலியை வாழ்வாக்குவோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
* மனித வாழ்க்கையில் இறைவன் நுழைகிற பொழுது அனைத்தும்
நிறைவாகிறது. (எ.கா, கானாவூர் திருமணம்: இரசம் நிறைவாக
வந்தது. லூக்கா 5:1-7-இல் திருத்தூதர்களுக்கு நிறைவான (வலை)
மீன்கள்).
* ஏழைகளின் கையில் இருப்பது (முதல்வாசகம்: விவசாயி; நற்செய்தி:
சிறுவன்) ஆற்றல் வாய்ந்தது.
* ஏழை சிறுவனின் தாராள மனது தான் அனைவருக்கும் உணவுட்டியது.
பொதுக்காலம் - பதினேழாம் ஞாயிறு
இரண்டாம் ஆண்டு
முதலாம் வாசகம்: 2அரசர்கள் 4:42-44
2 அரசர் 4- 5 அதிகாரங்களில் இறைவாக்கினர் எலிசா செய்த
புதுமைகள் எடுத்துக் கூறப்படுகின்றன. அவற்றுள் ஒன்று
அவர் அப்பங்களைப் பலுகச் செய்ததாகும். இன்றைய நற்செய்தியில்
நம் ஆண்டவர் அப்பங்களைப் பலுகச் செய்தது கூறப்படுதலின்,
அதற்கு இணையாக, முன் அறிகுறியாக இப்புதுமை இன்றைய முதல்
வாசகத்தில் இடம் பெறுகிறது.
எலிசேயுவின் கட்டளை
பாகால் சாலிசா என்ற ஊரிலிருந்து வந்த மனிதனிடம் இருந்தது
ஒரு சில அப்பங்களும், இருபது வாற்கோதுமை உரொட்டிகளுமே.
இவ் அப்பங்களை மக்களுக்குச் சாப்பிடக் கொடு ' என்கிறார்
எலிசா (4: 42 - 43). அதுவும் இரு முறை கூறுகிறார். தனக்கும்
தன் வீட்டினருக்கும் போதுமானது மட்டுமே அவனிடம் இருந்தது.
எனவே, அதைப் பகிர்ந்து கொடுக்க அவன் தயங்கியது சரியே.
நூறு பேருக்கு இவை எப்படிப் போதும்? என்கிறான்.
எனினும் எலிசாவின் கட்டளை தொடர்கிறது. இக்கட்டளையில்,
அல்லது இந்நிகழ்ச்சியில் எலிசா செய்த புதுமை பெரிதன்று.
அதை நாம் பெரிதுபடுத்துவது தவறு. மாறாக, எலிசா, பசித்திருந்த
பிறர்மேல் கொண்ட அன்பு. பகிர்ந்துண்டால் பசி ஆறும் என்பதை
அறிந்தவர் அவர். இது பாழ்வெளி ஆயிற்றே; நேரமும் ஆகிவிட்டது.
ஊர்களுக்குச் சென்று. உணவு வாங்கிக் கொள்ளும்படி கூட்டத்தை
அனுப்பிவிடும் என்று கூறியவர்களுக்கு, அவர்கள் செல்ல
வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் (மத்.
14: 13 - 18) என்று சொன்ன இயேசுவைப் போன்று, கூட்டத்தின்மீது
மனமிரங்கியவர் அவர் (யத். 14:14).
எலிசா காட்டிய அன்பு, இயேசு காட்டிய இரக்கம் நம்மையும்
ஆட்கொள்ள வேண்டும். நாம் அறிய நமதருகிலேயே எவ்வளவோ ஏழைகள்
ஒருவேளை உணவின்றி வாடுகின்றனர். அவர்களுக்கு உண்டி
கொடுத்து உதவ முன் வருகிறோமா? அன்றாடம் நாம் உணவருந்த
உட்காரும் போது, இச்சோற்றை மக்களுக்கு எடுத்துக்கொடு '
என்ற வார்த்தைகளைக் கேட்கிறோமா? மனிதர் நோக மனிதர்
பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ? என்ற பாரதியார்,
தனியொருவனுக்கு உணவில்லையெனில் செகத்தினை அழித்திடுவோம்
என்றாரே. அவருக்கு இருந்த கோபம் நம்மிடம் இருக்க
வேண்டாமா? அத்தகைய கோபக்கனல் நம்மில் பொங்கி எழாவிட்டாலும்,
நெஞ்சு பொற்க்குதிலையே.... கஞ்சி குடிப்பதற்கிலார், அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமில்லார். பஞ்சமோ பஞ்சமென்றே,
நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்து மடிகின்றாரே, இவர்
துயர்களைத் தீர்க்க ஓர் வழியிலையே என்ற ஏக்கமாவது நம்மை
ஆட்கொள்கிறதா?
மேலும், உணவுகொடுத்தலில் மட்டும் நம் பிறரன்பு அடங்கிவிடக்
கூடாது. நமது நேரம், நமது கேளிக்கைகள், நமது பணம், நமது
அறிவு ஆற்றல் முதலியவற்றையும் பிறரோடு பகிர்ந்துகொள்ள
நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆண்டவரின் அருள்
கொடுங்கள்; உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக்
குலுக்கி சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில்
போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளப்பீர்களோ அதே
அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்' (லூக். 6: 35)
என்று நம் ஆண்டவர் கூறினார். இதுவே இன்றைய இப்புதுமையிலும்
நிறைவேறுகிறது. எலிசாவின் சொல்லைக் கேட்டு, பாகால்
சாலிசா ஊரான் தன் அப்பங்களைப் பிறருக்குப் பகிர்ந்து
அளித்தான். மக்கள் அனைவரும் உண்டனர். ஆண்டவர் சொல்லி
யிருந்தபடி மீதியும் இருந்தது (4: 44). நமக்குரியவற்றை,
நமக்குத் தேவையென்று நினைப்பவற்றை, நாம் பிறரோடு பகிர்ந்துகொள்ளும்போது
இறைவனே அருள் பாலித்து, நம் தேவைகளை நிறைவு செய்வார் என்பது
நாம் நம் அனுபவ வாயிலாக அறிந்ததன்றோ? எனவே, அருள் உள்ளம்
கொண்டவர்களாக வாழ்வோம்; அருள் பெறுவோம். அன்பு
செய்வோம், பதிலன்பு நம்மை வந்தடையும். இரக்கம்
காட்டுவோம், இரக்கம் நமக்குக் கிட்டும். எவ் உயிரும்
என் உயிர் போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருட்கருணை
செய்வாய் பராபரமே (தாயுமா).
(இவ் அப்பங்களை மக்களுக்குச் சாப்பிடக்கொடு.)
இரண்டாம் வாசகம்: எபே. 4:1-6
யூதரும் பிறவினத்தாரும் கலந்திருந்த எபேசியத் திருச்சபையிலே
அவர்களுக்குள் ஒற்றுமையற்ற நிலை இருந்தது பவுலுக்குத்
தெரியும். ஆனால் கிறிஸ்து இயேசுவோ தம்மிலே இவர்களை இணைத்து
ஒன்றுபடுத்தியுள்ளார். மடலின் அறிவுரைப் பகுதியில் அவ்ஒற்றுமைக்கு
அவர்களை அழைக்கிறார். அன்பு, நம்பிக்கை, விசுவாசம் வழி
அனைவருக்கும் தந்தையான இறைவனிடம் உறவாட நம்மை அழைக்கிறது
இன்றைய வாசகம்.
அன்பிலே ஒன்றுபடல்
நரம் பலராயிருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால்
ஒரே உடலாய் இருக்கிறோம் (உரோ. 12: 5). திருமுழுக்குப்
பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள்.
இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள்
என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும்
பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள
நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள் (கலா. 3: 27
- 28) என்னும் பவுலின் சொற்கள் நம் அனைவரையும் அன்பு
வாழ்வுக்கு அழைக்கின்றன. ஊனியல்பின் இச்சைகளுக்கு அடிமைப்படாது,
உரிமை வாழ்வின் பிள்ளைகளாயிருக்க அமைக்கப்பட்டுள்ள நமக்குக்
கொடுக்கப்பட்ட கட்டளை ஒன்றே. அதுவே அன்பு (கலா. 5: 13-14).
இவ் அன்பு வாழ்வு தூய ஆவியார் நமக்கு அளிக்கும் வாழ்வு.
தூய ஆவியாரின் பலன்களான அன்பு, மகிழ்ச்சி, அமைதி,
பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்
(கலா. 5; 22) நம்மிலே வாழ்வுப்பட வேண்டும். எனவேதான், இன்றைய
வாசகமும், நிறைவான தாழ்ச்சியும், சாந்தமும்,
பொறுமையும் உள்ளவர்களாய் நடந்து, அன்பினால் ஒருவரை ஒருவர்
பொறுத்துக் கொள்ளுங்கள் (4: 2) என்று வலியுறுத்தும்.
இவையாவும் தூய ஆவியாரே அளிக்கும் ஒருமைப்பாடு ஆகும். இந்த
ஒருமைப்பாட்டை நமது சமாதான வாழ்வால் பாதுகாத்துக் கொள்ள
முயல்வோமா? அன்பும் பரிவும் எங்குள்ளதோ, அங்கே இறைவன்
இருக்கின்றார் ஏனெனில், அன்பே கடவுள் (1 யோ. 4:7 -
8).
நம்பிக்கையிலே ஒன்றுபடல்
'கிறிஸ்துவிலே ஒரே அழைப்பைப் பெற்றுள்ள நாம் அனைவரும்,
புதிய வானகம், புதிய வையகம், அதாவது புதிய எருசலேமுக்காகக்
காத்திருக்கிறோம் (திவெ. 21 : 1-3), நம் அனைவரின் எதிர்பார்ப்பும்
நம்பிக்கையும் ஒன்றே; அதாவது கடவுளுடைய மாட்சிமையின்
'சுடரொளியில் (எபி . 1 : 4) பங்கு பெறுவதே. இந்த நம்பிக்கை
நம்மை ஒன்றுபடுத்த வேண்டும் ; இந்த நம்பிக்கையே நம் அனைவரையும்
இணைத்து வழி நடத்த வேண்டும். ஒரே நம்பிக்கையில் பங்கு
பெற நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்' (4: 4).
விசுவாசத்திலே ஒன்றுபடல்
நாம் அனைவரும் விசுவசிப்பது ஒரே கடவுளே. இவரே நம்மை
முன் குறித்து வைத்தார், நம்மைத் தேர்ந்து கொண்டார்,
நம்மை அழைத்தார், தம் மகனுடைய இரத்தத்தால் நம் அனைவரையும்
தமக்கு ஏற்புடையவர் களாக்கினார் (உரோ. 8: 28 - 30);
திருமுழுக்கால் நம் அனைவரையும் ஓரினப்படுத்தினார் (கலா.
3: 27 - 28). எனவே திருமுழுக்குப் பெற்றோர் அனைவரும்,
நம்மை அழைத்து வழிநடத்தும் தந்தை கடவுளில் விசுவாசம்
கொள்வோர் அனைவரும் சகோதர சகோதரிகளே. ஒரு தாய் (தகப்பன்)
பிள்ளைகளே, நாம் விசுவசிக்கும் கிறிஸ்து பிளவுபட்டுள்ளாரா?'
(1 கொரி. 1:13). விகவாசத்தில் நாம் பிளவுபடவில்லையென்றால்,
வாழ்வில் எவ்வாறு பிளவுபட்டிருக்க முடியும்?
இறைவனில் ஒன்றுபடல் !
நம்மைப் படைத்துப் பாதுகாத்து, வழி நடத்தி,
வாழ்வளிக்கும் இறைவன் மூவொரு இறைவனன்றோ? தந்தை - மகன் -
ஆவியாரில் நிலவும் ஒன்றிப்பும் உறவும் அல்லவா நமக்கு
எடுத்துக்காட்டாய் அமைய வேண்டும்? ஒரே ஆண்டவர், அவர்
எல்லாருக்கும் தந்தை; ஒரே திருமகன், அவரில் எல்லோரும்
ஏற்புடைமை அடைகிறோம் ; ஒரே ஆவியார், அவரே நமக்குச்
சமாதானம் வழங்கி, இவ் ஏற்புடைமை வாழ்வை நாம் வாழத்
துணை நிற்பவர்.. இஞ்ஞானத்தின் அடிப்படையிலே சாதி,
சமயம், நிறம், இனம், பணம், படிப்பு ஆகியவை அறுபடை
ஒற்றுமையைக் குலைக்காது, வாழ முயல்வோம்.
நற்செய்தி: யோவான் 6:1-15
இயேசு அப்பங்களைப் பலுகச் செய்த நிகழ்ச்சி (காண் மத்.
14: 18-21 மாற். 6:32 - 44; லூக். 9: 10 -17) இன்றைய
நற்செய்தியாகும். யோவான் கண்ணோக்கில் இந்நிகழ்ச்சி
வருணிக்கப்படுகிறது. திவ்ய நற்கருணையை இயேசு ஏற்படுத்திய
நிகழ்ச்சி யோவான் நற்செய்தியில் கிடையாது. அப்பம்
பலுகிய நிகழ்ச்சி பாஸ்காத் திருவிழாவோடு
இந்நற்செய்தியில் இணைந்திருப்பதால் (6 : 4),
இந்நிகழ்ச்சி திவ்ய நற்கருணையின் அறிகுறி என்பர்
ஆராய்ச்சியாளர்.
உடல் உணவு அளிப்பவர் இயேசு
அவர் சொற்களைக் கேட்டு, அவர் செயல்களைக் கண்டு
இயேசுவைப் பெரும் கூட்டம் ஒன்று பின் தொடர்கிறது (6:
2, 5). அவர்கள் ஆயரில்லா ஆடகெள்போல் இருந்ததால்,
இயேசு அவர்கள் மீது பரிவு கொண்டார் மாற். 6: 34). பல
நாட்களாக அவரைச் சுற்றி வரும் அவர்களின் பசிப்பிணியை
நீக்க இயேசு விரும்புகிறார். எனவே, இவர்கள்
எல்லோருக்கும் உணவளிப்பதற்கு எங்கிருந்து அப்பம்
வாங்குவது? (6: 5) என்று வினவி, அவ்வினாவிற்குத் தாமே
பதிலளிக்கிறார். 5 அப்பங்களையும் 2 மீன்களையும் கொண்டு,
அவர்கள் எல்லாரையும் பசியாற உண்ண வைக்கிறார் (6: 9 -
18). இங்கு இயேசுவின் புதுமையைக் கண்டு வியப்படைவதைவிட,
அவர் பசியற்ற மக்களுக்கு உணவளிப்பதை மனத்திலிறுத்தல்
நல்லது. நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு
கொடுத்தீர்கள் (மத். 25: 85) என்று இயேசு நமக்கு
அன்றாடம் சொல்லக் கூடிய முறையில் நம்வாழ்வு அமைய
வேண்டும். உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்
என்கிறோம். பகிர்ந்துண்டால் பசியாறும் என்பதை
உணர்ந்து, ஏழை எளியோருக்கு உணவும் உதவியும் அளிக்க
முன்வருகிறோமா? அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான்பொருள் வைப்புழி (குறள் 226), ஆற்றுவார்
ஆற்றல் பசியாற்றல், அப்பசியை மாற்றுவார் ஆற்றலின்
பின் (குறள் 225) என்பதை உணர்வோமா? உயிர் உணவு
அளிப்பவர் இயேசு
நானே வானினின்று இறங்கிய உயிருள்ள உணவு. இதை எவனாவது
உண்டால், அவன் என்றுமே வாழ்வான் ' (6:59 என்ற சொற்கள்
பாலைவன மன்னா உடற்பசி தீர்க்க வந்தது, இயேசு அளிக்கும்
உணவோ உயிரை (ஆன்மாவை, மனிதமுழுமையை) வளப்படுத்தும் உணவு
என்பதை விளக்குகின்றன. மேலும், திவ்ய நற்கருணையை
ஏற்படுத்திய இயேசு, அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி
அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார் (மாற். 14:
22). இதே இயேசுதான் பந்தியமர்ந்தவர்களுக்குப்
பகிர்ந்தளித்தார் (யோ. 6: 11). சொல் அமைப்பில் இந்த
இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றுபட்டிருப்பது அப்பங்களைப்
பலுகச் செய்த நிகழ்ச்சி திவ்ய நற்கருணை ஏற்பாட்டின்
அறிகுறி என்பதைத் தெளிவாகச் சுட்டுகிறது. மேலும்,
அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். முடிவில்லா
வாழ்வளிக்கும் உணவுக்கே உழையுங்கள். அதை மனுமகன்
உங்களுக்குக் கொடுப்பார் (6 : 27) என்று இயேசு
கூறுவதும் விண்ணக உணவை (திவ்ய நற்கருணையை) சுட்டுவதைக்
காண்க. இவ் உயிர் தரும் உணவு வெறும் பாஸ்காக் கடமை
என்ற நிலையிலேதான் நம் வாழ்வில் ஆண்டுக்கு ஒரு முறை
இடம் பெறுகிறதா? அல்லது, அன்றாட வாழ்க்கை, நீதி வாழ்க்கை,
சமாதான வாழ்க்கைக்கு உரமும் உறுதியும் அளித்திடும்
உணவாக அமைகிறதா? திருப்பந்தியிலே நாம் பங்கு பெறும்போது
இயேசுவை, அவரது சொற்களை, மதிப்பீடுகளை நமது வாழ்க்கையோடு
ஈடுபடுத்துகிறோமா? இயேசு அப்பங்களைப் பிட்டுக் கொடுத்தது
போல நமது வாழ்வையும் பிறர்பணியில் பிட்டு, உடைத்து,
அதன் வழி பிறர் வாழ்ந்திட உதவுகிறோமா? திருப்பந்தியில்
அன்றாடம் பங்கு பெறுவது நம் குறிக்கோள் அற்ற
வாழ்க்கைக்குச் சவாலாயமைகிறதா?
மக்களைப் பந்தியமர்ந்துங்கள்.
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ