உயிர்த்த ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவின் ஆசி பெற வந்திருக்கும் அன்பு
நெஞ்சங்களே! |
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார். அல்லேலுயா! அவரின்
உயிர்ப்பிலே அகமகிழ்வோம். அல்லேலுயா! சாவை வென்று வெற்றி
வீரராய் மாட்சியுடன் உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவின் பாஸ்காப் பெருவிழாவை, நாம் இன்று
கொண்டாடுகின்றோம்.
தனது வாழ்விலே உண்மையைப் பேசி, மக்களுக்கு வாழ்வு
கொடுத்ததற்காக இயேசு கொல்லப்பட்டார். இறந்து அடக்கம்
செய்யப்பட்ட இயேசு, மூன்றாம் நாள் கல்லறையில் இருந்து
வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்தார். வெற்றியும் மகிழ்வும்
நிறைந்த இந்த உயிர்ப்பு, நமக்கு நம்பிக்கை தரும்
நிகழ்வாகும்.
ஆதவனை ஆழ் குழியுள் அடக்கி வைக்கலாமோ? ஒளிக் கீற்றுக்கள்
இருளை இல்லாமல் செய்துவிடுமன்றோ! இறைமகன் இயேசு கிறிஸ்து
சாவை வென்றவர். இறப்பைக் கடந்தவர். அவருடைய இந்த மாபெரும்
உயிர்ப்பு நமது மனித இனம் அனைத்திற்கும், பாவத்தில்
இருந்து மீட்புக்கு விடுதலை தருகிறது. துன்ப துயரங்கள்
வேதனைகளை நீக்குகிறது. மகிழ்ச்சி, அமைதி, ஆனந்தம் போன்ற
உயிர்ப்பின் பரிமாணங்களை எடுத்துக் கூறுகிறது. நம்மை
புதுப்பிக்கப்பட்ட வாழ்விற்கு அழைத்துச் செல்கிறது.
கிறிஸ்தவத்தின் அடித்தளம் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு.
உயிர்ப்பு அன்று இல்லை என்றால் கிறிஸ்தவம் இன்று இல்லை.
கிறிஸ்தவர்களின் விசுவாச பேருண்மை இயேசு கிறிஸ்துவின்
இறப்பு, உயிர்ப்பு, மீண்டும் வருகை. இயேசு
உயிர்த்தெழுந்தார் என்று சொல்லும்போது அவர் இன்றும்
என்றும் நம்மோடு வாழ்கிறார் என்பதுதான் பொருள்.
இயேசுவின் சிலுவை சாவிற்கும், அவரது இறுதி அடக்கத்திற்கும்
சாட்சிகளாக இருந்த பெண்களே, அவரது உயிர்த்தெழுதலுக்கும்
சாட்சிகள். நாமும் உயிர்ப்பின் சாட்சிகளாக மாறி,
உயிர்ப்பின் செய்தியை எங்கும் அறிவிக்கும் கருவிகளாவோம்.
பொய்மை, அநீதி, தீயவை இறக்கவும், உண்மை, நீதி, நல்லவை
உயிர்க்கவும் கிறிஸ்துவுக்குள் இணைந்த நற்செய்தியின்
சாட்சிகளாக வாழ வரம் வேண்டி, இந்த தெய்வீக உயிர்ப்பின்
பலியில் முழு மனதுடன் பங்கேற்போம்.
இறைவேண்டல்
1.உயிர்த்தெழுந்து விண்ணக
அரியணையில் வீற்றிருக்கும் திருமகனே எம் இறைவா!
எம் திருச்சபையை உமக்கேற்றபடி வழி நடத்திச் செல்லும் எம்
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொது
நிலையினர் ஆகிய அனைவரையும் ஆசிர்வதியும். உமது இறையாட்சியை,
எளிமையும். அமைதியும் நிறைந்த முறையில் மக்களுக்கு
உணர்த்தவும் மக்களை உயிர்ப்பு பெற்றவர்களாக உருமாற்றவும்
தேவையான வரம் அருள உம்மை மன்றாடுகிறோம்.
2.வாழ்வுக்கு வாசல் அமைத்த திருமகனே
இறைவா!
எம் தாய்த்திரு நாட்டை ஆளும் அரசியல்வாதிகளையும்,
தலைவர்களையும் உம் கரம் தருகின்றோம். அவர்கள் லஞ்சம், ஊழல்,
இனப்பாகுபாடு போன்றவற்றிலிருந்து உயிர்ப்பு பெற்று அவர்கள்
நாட்டையும், மக்களையும் தன்னலம் கருதாது பிறர் நலத்தில்
நாட்டம் கொண்டு நீதி வழியில் நடத்திட தேவையான வரம் அருள
உம்மை மன்றாடுகிறோம்.
3. உயிர்ப்புக்கு உரை எழுதிய
தெய்வீக திருமகனே இறைவா!
எம் பங்கை சிறப்படன் வழிநடத்திச் செல்லும் பங்குத்தந்தையை
ஆசிர்வதியும். மக்களுக்கு பணி செய்ய குருத்துவத்தை
ஏற்றுக்கொண்ட இவர்களுக்கு, நீரே பங்கும் உரிமை சொத்தாகவும்
இருந்து, அவர்கள் மேற்கொள்ளும் காரியத்தில் உடனிருந்து
வெற்றி பெறச்செய்யும். உன்னத இறைவனின் கோவிலுக்குமேல்
ஒளிரும் கதிரவன் போலவும், பளிச்சிடும் வானவில் போலவும்
அவர்கள் திகழ வரம் அருள உம்மை மன்றாடுகிறோம்.
4. சாவை சாகடிக்கச் செய்த தாவீதின்
மகனே இறைவா!
கிறிஸ்தவ மறையின் மூலைக்கல்லான உயிர்ப்புப் பெருவிழாவிலே
பங்குகொண்டு இருக்கும் நாங்கள், உமது அருள் உதவியால்
உயிர்ப்பின் சாட்சிகளாய் மாறி, உயிர்ப்பின் உண்மைச்
செய்தியான மீட்பை, உலகமெங்கும் அறிவிக்கும் கருவிகளாக மாற
வரம் அருள, உம்மை மன்றாடுகிறோம்.
5.சாவை வென்று சாதனைக் காவியம்
ஒன்றை வெளியிட்டவரே எம் இறைவா!
வேகமும் விவேகமுடைய இளைஞர்களை உம் பதம் தருகின்றோம்.
அவர்கள் தங்கள் உடலின் வலிமையால் தீய நாட்டங்களுக்கு
பணியாமல், இதயத்தின் உண்மையான மாண்பின் மூலம் கடவுளுக்கு
பெருமை சேர்க்கவும், உள்ளம் என்னும் ஆன்ம தாகத்தை
வளர்க்கும் தூண்டுகோலாக அவர்களை மாற்றவும், தாங்கள்
உயிர்க்கவும், பிறரை உயிர்ப்பிக்கவும் தேவையான வரம் அருள,
உம்மை மன்றாடுகிறோம்.
6.மாட்சியும் மாண்பும் மிக்க
உயிர்த்த ஆண்டவரே இறைவா!
சிறுவர் சிறுமிகளை ஆசிர்வதியும். தூய ஆவியின் கொடைகளை
அவர்களுக்கு கொடுத்து, அவர்களை தனித்
தன்மையுடையவர்களாகவும், இறைவனின் அழைப்பிற்கு பதில்
கொடுக்க வேண்டியவர்களாகவும், சாதனைகள் பல புரிந்து
உம்முடைய உயிர்ப்பின் தீபங்களாக விளங்க தேவையான வரம் அருள,
உம்மை மன்றாடுகிறோம்.
|
மறையுரை சிந்தனை |
|
குளிர்காலம் பனி கடுமையாக
பொழிந்துகொண்டிருந்தது. சில புறாக்கள் ஒரு வீட்டுக்
கூரையின் அடியில் ஒதுங்கின. அருகிலே சில சிட்டுக்
குருவிகள் வந்து அமர்ந்தன. குளிர் தாங்க முடியாமல் சிட்டு
குருவிகள் நடுங்கின. "பாவம் இந்த சிட்டு குருவிகளை நாம்
காப்பாற்றா விட்டால், இவை இறந்து போகும். நான் காப்பாற்றப்
போகிறேன்" என்று கூறி ஒரு புறா ஒரு குருவியை தன்
சிறகுக்குள் ஒதுங்க அழைத்தது. அதைப் பார்த்து மேலும் சில
புறாக்கள் குருவிகளை அழைத்து தம்மோடு சேர்த்துக் கொண்டனர்.
குருவிகளுக்கு அடைக்கலம் கொடுத்த புறாக்களை பார்த்து, ஒரு
புறா "நீங்கள் முட்டாள்கள்" இந்த குருவிகளை காப்பாற்றும்
முயற்சியில் நீங்கள் செத்துப் போகப் போகிறீர்கள் என்று
எச்சரித்தது. எப்படியும் நாம் சாகத்தான் போகிறோம். நாம்
இறந்தாலும் இவர்களுக்கு உயிர் கிடைக்குமே என்றது ஒரு புறா.
இரவு முழுவதும் பனிக்காற்று கொடுமையாக வீசியது.
விடிந்ததும் அந்த வீட்டுச் சிறுமி ஜன்னலைத் திறந்தாள்.
அப்போது கூரையிலிருந்து ஒரு புறா பொத்தென்று தரையில்
விழுந்தது. தந்தையை அழைத்து வந்தாள். கூரையின் அடியில்
வேறு சில புறாக்கள் இருப்பதையும் பார்த்தார்கள். சிறிது
நேரம் சென்றதும் புறாக்கள் சிறகை அசைத்துக் கூவின.
அவற்றிற்குள் சிட்டுக் குருவிகள் வெளிப்பட்டன. சில
புறாக்கள் அசையாமல் கிடந்தன. சிறுமி அந்த புறாக்களின்
சிறகுகளை விலக்கி பார்த்தாள். அங்கே குருவிகள் இல்லை.
சிறுமியின் தந்தை சொன்னார் "கண்ணே பார்தாயா? குருவிகளுக்கு
அடைக்கலம் கொடுத்த புறாக்கள் சாவிலிருந்து தப்பித்துவிட்டன.
அடைக்கலம் கொடுக்காத புறாக்கள் செத்துப்போய்விட்டன"
என்றார். புறாக்கள் குருவிகளுக்கும், குருவிகள்
புறாக்களுக்கும் வெப்பப் பரிமாற்றம் செய்ய இவை அனைத்தும்
உயிர்பெற்றன.
வாழ்வும் சாவும் நாம் அன்றாடம்
சந்திக்கும் நிகழ்வுகள். வாழ்வு கொடுக்க முன் வரும்போது
சாவு பின் வாங்குகிறது.
தம் தலைவர் உயிர்த்தவுடன் சீடர்கள் அடைந்த மகிழ்ச்சி
அச்சத்தை அகற்றியது. பெற்றுக் கொண்ட பெரு வாழ்வை
பிறருக்காய் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
பிறருக்கு வாழ்வு கொடுக்க தன்னை
இழக்கும் போது...........
பிறருக்கும் வாழ்வு நமக்கும் வாழ்வு.
உறவின் சாட்சியாக உறவில் உயிர்ப்போம்.
அன்பின் சாட்சியாக அன்பில் உயிர்ப்போம்.
நல்லெண்ணத்தின் சாட்சியாக நல்லெண்ணத்தில் உயிர்ப்போம்.
மகிழ்ச்சியின் சாட்சியாக மகிழ்ச்சியில் உயிர்ப்போம்.
கொடுக்கும் போது பெறுவோம்.
எதைக் கொடுக்கிறோமோ அதையே பெறுவோம்.
நல்லதைக் கொடுக்கும் போது நல்லதைப் பெறுவோம்.
வாழ்வைக் கொடுக்கும் போது வாழ்வைப் பெறுவோம்.
உலகம் தீமையோடு, இருளோடு கைகோர்த்து
திரிந்து விடக்கூடாது என்பதற்காகவே இயேசு உயிர்த்தார்.
ஏனென்றால் முடங்கிக் கிடந்த உறவை முன்னேறச் செய்ய வேண்டும்.
அடங்கிக் கிடந்த அன்பை அறிவிக்க வேண்டும்.
நடுங்கிக் கிடந்த நம்பிக்கையை நடக்கச் செய்ய வேண்டும்.
நல்லெண்ணத்துடன் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்.
இறுக்கமான உறவுகளை உடைக்க வேண்டும்.
இருளைக் கிழிக்க வேண்டும்.
அச்சத்தை அகற்ற வேண்டும் என்பதற்காகவே இயேசு உயிர்த்தார்.
இயேசு பட்ட பாடுகள் ஒன்று கூட
வீணாகவில்லை. இது நமக்கு இன்று புதுமையாக, வினோதமான
மகிழ்ச்சியை உறபத்தி செய்வதாக அமைகிறது. அதோடு நாம் நடந்து
போகும் பாதையில் நம்பிக்கை தளிர்களை துளிர்க்கச் செய்கிறது.
வேதனைக்கு வெற்றி உண்டு என வெளிச்சம் போட்டு காட்டியவர்,
இரவில் உயிர்த்த ஆண்டவர்.
நமது விடியாத வேதனைப் பொழுதுகளுக்கு, விடியல் உண்டு என
அர்த்தப்படுத்துவதற்கு தேர்ந்தெடுத்த பொழுது இரவுப் பொழுது.
இன்று அகமகிழ்வோம் ஆர்ப்பரிப்போம்.
ஆனந்தமுடனே அன்பில், நீதியில் நல்லவை அனைத்திலும்
உயிர்த்தெழுந்து, உயிர்த்த இயேசுவுக்கு சாட்சியாக
நாமிருப்போம்! உயிரைக் கொடுத்து உயிரைப் பெறுவோம்.
அயலாரின் நலனுக்காக நாமும், நம் நலனுக்காக அயலாரும்
வெப்பப் பரிமாற்றத்தைப்போல், அன்பை, அமைதியை, நல்லவை
அனைத்தையும் பரிமாற்றம் செய்து, உயிர்ப்பின் சாட்சியங்களை
உலகில் பதிவு செய்வோம்.
|
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M. |
|
|
மறையுரைச்சிந்தனை -
அருட்சகோதரி: செல்வராணி O.S.M. |
|
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி. |
ஈஸ்டர் என்னும் வதந்தி
'இந்நாள்வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது' (மத்
28:15) என்னும் அருள்வாக்கியத்தை நான்
வாசிக்கும்போதெல்லாம் நம்முடைய கிறிஸ்தவ மதம் வதந்தியின்மேல்
கட்டப்பட்ட ஒரு மதமோ அல்லது நெறியோ என்று நிறைய நாள்கள் எண்ணியதுண்டு.
ஆனால், திருத்தூதர்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம், தொடக்க
கிறிஸ்தவர்களுடைய புதிய வாழ்க்கைமுறை, தங்களுடைய சமகாலத்துக்
கலாச்சாரத்திற்கான எதிர்சான்று போன்ற நிகழ்வுகளை விவிலியத்தில்
வாசிக்கும்போது ஈஸ்டர் என்பது வதந்தி அல்ல, மாறாக, அது
வாழ்வு என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு வதந்தி வாழ்வாக
மாறிய நிகழ்வை ஆராய்வதோடு ஈஸ்டர் திருநாளின் வரலாற்றையும்
தேடுதல் இக்கட்டுரையின் நோக்கம்.
1. ஈஸ்டர் பெயர் விளக்கம்
உங்கர் விவிலிய அகராதி, 'ஈஸ்டர்' என்ற சொல் ஒரு ஆங்கிலோ-சாக்ஸன்
சொல்லாடல் என்றும், இதன் மூலம் 'ஈஸ்த்ரா' என்ற வசந்தகாலத்
தேவதையின் பெயர் என்றும், இந்த தேவதைக்கு ஒவ்வொரு ஆண்டின்
பாஸ்கா காலத்திலும் பலிகள் செலுத்தப்பட்டன என்றும், ஏறக்குறைய
எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தப் பெயர் கிறிஸ்துவின்
உயிர்ப்பை அடையாளப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது என்றும் வரையறுக்கிறது.
2. மறுபிறப்பின் அடையாளம் ஈஸ்டர்
குளிர்காலத்தில் 'இறக்கின்ற' கதிரவன் வசந்தகாலத்தில் 'மறுபிறப்பு'
எடுக்கின்றான் என்ற பின்புலத்தில், கதிரவன் உதிக்கும்
திசையான 'ஈஸ்ட்டிலிருந்து' (கிழக்கு) கிறிஸ்து எழுவதால்,
கிறிஸ்துவின் உயிர்ப்பை 'ஈஸ்டர்' என்று அழைப்பவர்கள், இயேசுவின்
இறப்பை 'குளிர்காலத்திற்கும்,' இயேசுவின் உயிர்ப்பை 'வசந்தகாலத்திற்கும்'
ஒப்பிடுகின்றனர்.
முனைவர் டோனி நுஜென்ட், 'ஈஸ்டர் கதையாடல், தம்முஸ் மற்றும்
அவருடைய மனைவி இஷ்தார் என்னும் கதைமாந்தர்களைத் தாங்கிய 'இனன்னாவின்
இறக்கம்' என்ற கிமு 2100ஆம் ஆண்டின் சுமேரிய புராணக்கதையின்
தழுவல்' என்கிறார். இக்கதையின்படி, தன் கணவன் தம்முஸ் இறந்தவுடன்,
மிகவும் வருத்தமுற்ற இஷ்தார் அவரோடு இணைந்து பாதாளத்திற்குச்
செல்கின்றாள். ஏழு வாயில்களைத் தாண்டி அவள் நுழையும்போது
அவள் தன்னுடைய ஆடை அணிகலன்களை இழக்கிறாள். இழிவுபடுத்தப்பட்டு
நிர்வாணமாக்கப்பட்ட அவள் கொல்லப்பட்டு எல்லாரும்
பார்க்குமாறு தொங்கவிடப்படுகிறாள். அவளுடைய இல்லாமையில்
பூமி தன்னுடைய வளமையை இழக்கிறது. தாவரங்கள் வளர இயலாமலும்,
விலங்குகள் பலுக இயலாமலும் நிற்கின்றன. இஷ்தாரைக் காணாத
அவளுடைய பணிப்பெண் மற்ற கடவுளர்களின் துணையை நாடிச்
செல்கிறாள். இறுதியில் என்க்கி வாழ்வின் தாவரம், வாழ்வின்
தண்ணீர் என்னும் இரண்டைப் படைத்து பாதாளத்திற்குள் அனுப்புகின்றார்.
இவை தம்முஸூக்கும் இஷ்தாருக்கும் உயிர்கொடுத்து அவர்களை
சூரிய ஒளியாக மீண்டும் மாற்றி பூமிக்கு அனுப்புகின்றன. ஆறு
மாதத்திற்குப் பின் தம்முஸூம் இஷ்தாரும் மீண்டும் பாதாளத்திற்குச்
செல்ல, தண்ணீர் கடவுள் அவர்களை மீண்டும் மேலே அனுப்புகின்றார்.
இப்படியாக மாறி மாறி வருபவை தான் குளிர்காலத்தின் இறப்பும்
வசந்தகாலத்தின் பிறப்பும். இஷ்தார் என்ற தேவதையே கானான்
நாட்டில் அஸ்தார்த் என்றழைக்கப்பட்டார். அஸ்தார்த்தின்
ஆலயம் இருந்த இடத்தில்தான் இயேசுவின் புனித கல்லறை இருந்ததாக
4ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் கண்டறிந்து அங்கே ஆலயம்
கட்டுகிறார்கள்.
இக்கதையைப் போன்றவைதாம், எகிப்தியக் கடவுள் ஹோரஸின் உயிர்ப்பு,
மித்ராஸின் கதை, பாட்டியால் உயிர்ப்பிக்கப்பட்ட டைனிசியுஸ்
கதை. இக்கதையாடல்களில் வளமை, உயிர் உருவாக்கம், இருளுக்குள்
இறங்குதல், ஒளி இருள்மேலும் நன்மை தீமைமேலும் வெற்றிகொள்தல்
போன்ற கருத்துருக்கள் காணக்கிடக்கின்றன.
3. வசந்தகாலத் தேவதையின் திருநாள்
ஈஸ்டர்
வசந்தகாலத் தேவதையான 'ஈஸ்த்ரா' ('எயோஸ்தர்,' 'ஒஸ்தாரா,' 'அவ்ஸ்த்ரா')
திருநாள் மார்ச் மாதத்தின் 21ஆம் நாள், வசந்தகாலத்தின் உத்தராயணம்
(இரவும் பகலும் சமமான நாள், சூரியன் நிலநடுக்கோட்டைக் கடந்துசெல்லும்
நாள்) அன்று கொண்டாடப்பட்டது. நீண்ட இருள்சூழ் பனிக்காலத்திற்குப்
பின் வெளிச்சத்தைக் கொண்டுவரும் இத்தேவதையை முயல் அடையாளப்படுத்தியது.
ஏனெனில், முயல் என்பது வசந்தகாலத்தையும் வளமையையும் குறித்தது.
க்ரிம் என்ற ஜெர்மானிய புராண ஆய்வாளரின் கூற்றுப்படி, 'உயிர்ப்பு
என்னும் கருதுகோள் ஈஸ்த்ரா திருநாளில் மையம் கொண்டுள்ளது.
ஏனெனில், வைகறையின் கடவுளாம், வசந்தத்தையும் வளமையையும் அறிவித்து,
மகிழ்ச்சியையும் ஆசீரையும் கொண்டுவரும் ஈஸ்த்ராரை தங்களுடைய
கடவுளில் கிறிஸ்தவர்கள் கண்டார்கள்.' சில ஐரோப்பிய மொழிகளில்
'ஈஸ்டர்' என்பது 'பாஸ்கா' (யூதர்களின் பெருவிழா) என்று அழைக்கப்பட்டாலும்,
ஆங்கிலோ-சாக்ஸன் குடும்ப மொழிகளில் 'ஈஸ்டர்' என்ற சொல்லே
வழங்கப்படுகிறது.
4. ஈஸ்டரும் பாஸ்கா பெருவிழாவும்
அடையாளம் மற்றும் பொருளாலும், நாள்காட்டியாலும் யூத
பாஸ்காவும் கிறிஸ்தவ ஈஸ்டரும் இணைந்தே செல்கின்றன. மார்ச்
மாத உத்தராயணத்தைத் தொடர்ந்து வரும் பௌர்ணமிக்கு அடுத்த
ஞாயிறு அன்று ஈஸ்டர் கொண்டாடப்படுவதால் - மார்ச் 22க்கும்
ஏப்ரல் 25க்கும் இடையில் - திருவழிபாட்டு ஆண்டில் இது 'நகரும்
திருவிழா' என அழைக்கப்படுகிறது. இந்த நாளில்தான் 'ஈஸ்டர்'
கொண்டாடப்பட வேண்டும் என்பது பேரரசர் கொன்ஸ்தாந்தின் அவர்கள்
325ஆம் ஆண்டு கூட்டிய நிசேயா திருச்சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அன்றுமுதல் பாஸ்கா பெருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும்
பௌர்ணமி நாளை ஒட்டியே ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. வழிபாடு
மற்றும் சமய நிலைகளில் பெஸா மற்றும் ஈஸ்டர் திருநாள்கள்
வேறுபட்டாலும் இரண்டுமே மறுபிறப்பையும் புதுவாழ்வையுமே
கிறிஸ்தவத்தில் இயேசுவின் உயிர்ப்பாலும், யூத சமயத்தில் இஸ்ரயேல்
மக்கள் அடிமைத்தனத்திலிருந்து பெற்ற வாழ்வாலும் (காண். விப
14-15) - அடையாளப்படுத்துகின்றன.
5. ஈஸ்டர் வழக்கங்களின் தொடக்கம்
உலகெங்கும் இன்று ஈஸ்டர் கொண்டாட்டங்களில் முயலும்
முட்டையும் இடம் பெறுகின்றன. ஏற்கனேவே நாம் குறிப்பிட்டபடி,
'முயல்' என்பது வளமையின் அடையாளமாக இருக்கிறது. மேலும்,
'முட்டை' வசந்தகாலத்தையும், வளமையையும், புதுப்பித்தலையும்
குறிக்கிறது. ஜெர்மானிய புராணம் ஒன்றின்படி, அடிபட்ட பறவை
ஒன்றை ஈஸ்த்ரா முயலாக மாற்றி நலம் தந்தார் என்றும், அதற்கு
நன்றியாக அந்த முயல் முட்டையிட்டது என்றும் சொல்லப்படுகிறது.
பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், 'பண்டைக்கால எகிப்தியர்களும்
பாரசீகர்களும் வசந்தகாலத்தில் வளமையின் அடையாளமான
முட்டையின்மேல் வண்ணம் தடவியும், உண்டும் கொண்டாடினர்' என்று
குறிப்பிடுகிறது. மேலும், எகிப்திய இலக்கியங்களில் முட்டை
சூரியனையும், பாபிலோனிய இலக்கியங்களில் யூப்பிரத்திசு நதியில்
விழுந்த இஷ்தார் தேவதையின் எழுச்சியையும் குறிக்கிறது. இதன்
பின்புலத்தில்தான் முட்டை இயேசுவின் கல்லறைக்கு ஒப்பிடப்பட்டு,
முட்டையை உடைத்துக்கொண்டு வரும் குஞ்சுபோல கல்லறையைத் திறந்துகொண்டு
இயேசு வருகிறார் என்று நாம் முட்டைகளை அலங்கரிக்கவும் பரிமாறவும்
செய்கின்றோம்.
6. ஈஸ்டர் என்னும் வாழ்வு
'ஈஸ்டர்' என்பது வதந்தி போலக் காணப்பட்டாலும், இயேசுவின்
திருத்தூதர்களுக்கு அது வாழ்வியல் நிகழ்வாகவும் அனுபவமாகவும்
இருந்தது. உயிர்ப்புக்குப் பின் தோன்றிய இயேசுவைக் கண்ட
திருத்தூதர்கள் புதிய மனிதர்களாக மாறுகின்றர். பயம், தயக்கம்,
கோபம் மறைந்து, நம்பிக்கை, துணிச்சல், மற்றும் மன்னிப்பு
அவர்கள் உள்ளங்களில் பிறப்பதால் கிறிஸ்து திருத்தூதர்களின்
உள்ளங்களில் உயிர்க்கிறார்' என்று கூறுகின்றார் இறையியலாளர்
ஷில்லிபெக்ஸ். 'கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச்
சீடரும் உள்ளே சென்றார், கண்டார், நம்பினார்' (யோவா 20:8)
என்று வெற்றுக்கல்லறையை உயிர்ப்பின் சான்றாகப் பதிவுசெய்கிறார்
யோவான். 'கல்லறையின் கல் அகற்றப்பட்டது இயேசுவை வெளியேற்றுவதற்காக
அல்ல, மாறாக, திருத்தூதர்களை உள்ளே அனுப்புவதற்காகவே' என
இந்த நிகழ்வை வர்ணிக்கிறார் புனித அகுஸ்தினார். உயிர்த்த
இயேசுவைக் கண்ட சீடர்கள் அமைதியையும், மகிழ்ச்சியையும்
கொடைகளாகப் பெற்றுக்கொள்கின்றனர் (காண். லூக் 24:36, 52).
'கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய
நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்'
(1 கொரி 15:14) என்று கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிநாதமாக உயிர்ப்பை
முன்வைக்கிறார் புனித பவுல். 'கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின்
வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று,
சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்' (பிலி 3:10)
என்பதே இவருடைய பேராவலாகவும் இருக்கிறது.
கிழக்கிலிருந்து எழும் கதிரவன்போல் எழும் கிறிஸ்துவின் உயிர்ப்பு
நம்முடைய வாழ்வாகவும் அனுபவமாகவும் மாற எல்லாம் வல்ல இறைவன்
அருள்கூர்வாராக! வதந்தி போல வந்து மனித வரலாற்றை புரட்டிப்
போட்டு வாழ்வைச் சீரழிக்கும் வைரஸ் போன்றதல்ல ஈஸ்டர். இது
வதந்தி அல்ல. வரலாற்றில் நிகழ்ந்து வாழ்வியல் அனுபவமாக
மாறி மானுடத்திற்கு நம்பிக்கை தரும் நல்விழா.
|
நற்செய்தி வாசகம் லூக்கா 24:1-12
கதிரவன் எழும் வேளையில்!
நேற்றைய இரவு நம் அனைவருக்கும் சோகமாக முடிந்தது. நண்பகல்
முதல் பிற்பகல் மூன்று மணி வரை இருள் உண்டாயிற்று. கதிரவன்
ஒளி கொடுக்கவில்லை. இயேசுவின் சீடர்கள் நிம்மதியாகத் தூங்கவில்லை
- தங்களையும் பிடித்துக் கொண்டு போய்க் கொன்றுவிடுவார்களோ
என்று பயந்துகொண்டிருந்தனர். இயேசுவின் எதிரிகளும் நிம்மதியாகத்
தூங்கவில்லை - 'ஒருவேளை சொன்னபடி உயிர்த்தெழுந்துவிடுவானே
இந்த எத்தன்?' (காண். மத் 5:28) என்று எண்ணி கல்லறைக்குக்
காவல்காத்துக் கொண்டிருந்தனர். இயேசுவின் சிலுவைச் சாவைப்
பார்த்தவர்கள் - 'இன்று இவர், நாளை யாரோ?' என்று அரைத்தூக்கத்தில்
இருந்தனர். இயேசுவின் நண்பர்கள் - விடிந்தும் விடியாமல்
அவரின் கல்லறையை நோக்கி ஓடுகிறார்கள். இயேசுவின் உயிர்ப்பின்
மேல் இவர்களுக்கும் நம்பிக்கை இல்லை. ஆகையால்தான், தாங்கள்
ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக்கொண்டு
செல்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவும் தூங்கவில்லை.
அவர் உயிர்த்துவிட்டார்.
இதையே இன்றைய வாசகத்தில், உரோமை நகருக்கு எழுதும் திருமடலில்,
பவுலடியார், 'இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல்
இறக்கமாட்டார்' என்று எழுதுகின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகமே மிகவும் நம்பிக்கை தரக்கூடிய
வார்த்தைகளோடு தொடங்குகிறது: 'வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில்'.
மாற்கு இதை இன்னும் எளிய வார்த்தைகளில் தருகிறார்: 'வாரத்தின்
முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில்' என எழுதுகின்றார்.
'கதிரவன் எழத் தொடங்கியிருந்தான்' என்ற இதே சொல்லாடல் முதல்
ஏற்பாட்டில் தொடக்கநூல் 32:31ல் வாசிக்கிறோம்: 'யாக்கோபு
பெனியேலுக்கு அப்பால் சென்றவுடன் கதிரவன் தோன்றினான்!'
இஸ்ரயேல் இனத்தின் தலைமகன் யாக்கோபு தன் புதிய வாழ்வைத் தொடங்கியபோது
அங்கே கதிரவன் தோன்றினான். புதிய இஸ்ரயேல் இனத்தின்
தலைமகன் இயேசு இறப்பிலிருந்து உயிர்த்தபோதும் அங்கே
கதிரவன் தோன்றினான். அங்கே, 'யாக்கோபு' என்ற பெயர்
'இஸ்ரயேல்' என்று மாறுகிறது. இங்கே, 'இயேசு' என்ற பெயர்
'கிறிஸ்து' என மாறுகிறது. அங்கே, யாக்கோபின் இயல்பு
முழுவதும் மாறுகிறது. இங்கே இயேசுவின் உடல் இயல்பு
மாறுகிறது. யாக்கோபைப் பொறுத்த வரையில் அது ஒரு தனிநபர்
மனமாற்றம். இயேசுவைப் பொறுத்தவரையில் இது ஒட்டுமொத்த
மனுக்குலத்தின் மன்னிப்பு மாற்றம்.
கிழக்கில் எழுந்த சூரியனாய் இன்று இயேசு உயிர்த்த
பெருவிழாவைத்தான் இன்று நாம் 'ஈஸ்ட்-டர்' (கிழக்கிலிருந்து
உதித்தவர்) என்று கொண்டாடுகின்றோம். முடிவு என்று
எல்லாரும் நினைக்க விடிவு என எழுகிறார் இயேசு. உயிர்ப்பு
என்பது சிலுவையின் மறுபக்கம். உயிர்ப்பு என்பது இறப்பின்
மறுபக்கம். உயிர்ப்பு என் நம் வாழ்வின் மறுபக்கம்.
'இருள் மறைந்து ஒளி பிறக்கும்' என்பதையே இன்றைய
திருவழிபாட்டு நிகழ்வுகள் அடையாளங்களாகவும், இறைவாக்கு
வழிபாடு இறைவார்த்தையாகவும் நமக்கு முன்வைக்கிறது. இன்றைய
திருநிகழ்வின் தொடக்கத்தில் ஆலயத்தின் விளக்குகள்
அணைக்கப்பட, நாம் புதிய நெருப்பிலிருந்து பாஸ்கா திரியை
ஏற்றினோம். மறையுரை முடிந்து நாம் திருமுழுக்கு
வாக்குறுதிகளைப் புதுப்பிக்கும்போதும் எரியும் திரிகளுடன்
நிற்போம். பாஸ்கா காலத்தின் இறுதி ஞாயிறாகிய பெந்தெகோஸ்தே
திருவிழாவில் திருத்தூதர்கள்மேல் இறங்கி வந்த நெருப்பு
நாவுகளோடு நாம் பாஸ்கா மகிழ்ச்சியை நிறைவு செய்வோம். ஆக,
ஒளியில் தொடங்கும் பாஸ்கா ஒளியில் முடிகிறது. இன்றைய
வாசகங்களில் தொடக்க நூல், விடுதலைப் பயண நூல், மற்றும்
லூக்கா நற்செய்தி வாசகங்கள் 'ஒளி' என்ற வார்த்தையை
மையமாகக் கொண்டுள்ளன. படைப்பின் தொடக்கத்தில், மண்ணுலகு
உருவற்று, வெறுமையாக, ஆழத்தின்மேல் இருள்சூழ்ந்து
இருந்தபோது, 'ஒளி தோன்றுக!' என்கிறார் கடவுள். ஒளி
உண்டாகிறது (காண். தொநூ 1:1). விடுதலைப் பயண நிகழ்வில்,
முன்னால் கடல், பின்னால் எகிப்தியர் என்ற இறப்பின்
நிலையில் இஸ்ரயேல் மக்கள் இருந்தபோது, 'எகிப்தில்
சவக்குழிகள் இல்லையென்றா நீர் எங்களைப் பாலைநிலத்தில்
சாவதற்கு இழுத்து வந்தீர்?' (காண். விப 14:11) என்று
மோசேயிடம் முறையிட்டபோது, 'ஆண்டவரே உங்களுக்காகப்
போரிடுவார். நீங்கள் சும்மாயிருங்கள்!' (காண். விப 14:14)
என்று மோசே அவர்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றார். இந்த
நம்பிக்கையை உடனடியாக கடவுள் உறுதிப்படுத்துகிறார்.
எப்படி? 'நெருப்புத்தூண் எகிப்தியருக்கு இருளாகவும்
இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது.இதனால் இரவில்
எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை' (காண். விப
14:20). தொடர்ந்து, இன்றைய நற்செய்தி வாசகத்தில்,
வாரத்தின் முதல் நாள் காலையிலேயே அவர்கள் கல்லறைக்குச்
சென்றபோது, 'கதிரவன் எழத் தொடங்கியிருந்தான்' (காண். மாற்
16:1, லூக் 24:1).
இந்த மூன்று ஒளியின் பின்புலத்தில் நாம் கைகளிலும்
உள்ளத்திலும் நாம் இன்று ஏந்தும் பாஸ்கா ஒளியைச்
சிந்திப்போம்.
1. படைப்பின் தொடக்க ஒளி
தொடக்கநூலில் நாம் இரண்டு படைப்பு நிகழ்வுகளை
வாசிக்கின்றோம். தொநூ 1ன்படி, வெறுமையாய் இருந்த, தண்ணீர்
சூழ்ந்த ஓரிடத்திலிருந்து பூமி ஒளியை நோக்கி எழுகிறது.
தொநூ 2ன்படி மண்ணுலகு மழை பெய்யாத பாலைநிலம் போல
இருக்கிறது. இவை ஒன்றோடொன்று முரண்பட்டது என நினைக்காமல்,
இரண்டையும் இணைத்துப் பார்ப்போம். இம்மண்ணுலகு இவ்விரண்டு
அனுபவங்களுக்கும் உட்பட்டதாகவே இருக்கிறது. சில நேரங்களில்
மழை பொழிந்து வெள்ளமாக நிறைக்கிறது. சில நேரங்களில்
ஒன்றும் இல்லாமல் காய்ந்து பாலையாக வறண்டு கிடக்கிறது.
படைப்பு நிகழ்வு நடக்கும்போது முன்னிருப்பது மறைகிறது.
அதுதான் படைப்பு. முன்னிருந்த இருள் மறைகிறது. முன்னிருந்த
வறட்சி மறைகிறது.
இன்றைய முதல் வாசகம் ஒளி தோன்றுவதற்கு முன் உலகம் இருந்த
நிலையை மூன்று அடைமொழிகளால் சொல்கிறது: 'உருவற்று
இருந்தது,' 'வெறுமையாய் இருந்தது,' 'இருள்
சூழ்ந்திருந்தது.' உருவம் அல்லது வடிவம் என்பது ஒரு
பொருளுக்கு அழகு தருகிறது. அதனால் தான், 'வடிவு' என்றால்
'அழகு' என்று தமிழ் பொருள்கிறது. உருவற்ற நிலை என்பது
அழகற்ற நிலை. அழுகு என்றால் என்ன? 'அழகு என்றால் தன்னிலேயே
முழுமை பெற்றிருப்பதும், மற்றதோடு இசைவாகப் பொருந்துவதும்'
என்கிறார் அகுஸ்தினார். அவரே உதாரணமும் தருகின்றார்.
ஒருவர் ஒரு ஷூ அணிந்திருக்கிறார். அது அவருக்கு
'அழகாயிருக்கிறது' என்று நாம் எப்போது சொல்கிறோம்? அந்த
காலணி தன்னிலேயே முழுமை பெற்றிருக்க வேண்டும். அதே
வேளையில் அது அணிபவரின் காலோடு பொருந்த வேண்டும்.
காலணியின் மேற்பகுதி இல்லாமல் இருந்தாலோ, அல்லது
கிழிந்திருந்தாலோ, அல்லது அணிபவரின் காலுக்குப்
பொருந்தாமல் பெரியதாக இருந்தாலோ நாம் அதை அழகு என்று
சொல்வதில்லை. நாம் அன்றாடம் அழகு என்று வர்ணிக்கும்
பொருள்கள் அல்லது நபரும் அப்படித்தான். ஒரு பெண்ணோ, ஃபோனோ
அழகாக இருக்கிறார்-இருக்கிறது என்று சொல்லும்போது, அங்கே
இருக்கிற முழுமையையும், அதன் பொருத்தத்தையும் வைத்தே
சொல்கிறோம். மண்ணுலகில் எதுவும் நிறைவாகவும் இல்லை,
பொருத்தமாகவும் இல்லை. இரண்டாவதாக, 'வெறுமை' இருந்தது.
'வெறுமை' என்பது 'யாதுமற்ற நிலை.' கடவுளால் மட்டும்தான்
வெறுமையிலிருந்து படைக்க முடியும். ஒரு கவிதை எழுதுபவரை
படைப்பாளி என்கிறோம். ஆனால், அவர் உருவாக்கிய கவிதை
அவருடையது என்றாலும், அவர் பயன்படுத்தும் வார்த்தைகளை அவர்
உருவாக்கவில்லையே. ஏற்கனவே இருந்த ஒன்றிலிருந்துதான் அவர்
மற்றொன்றை உருவாக்குகிறார். 'யாதுமற்ற நிலையை' இன்று
நம்மால் எண்ணிப்பார்க்க முடியாது. அப்படிப்பட்ட
எண்ணத்திற்கு உட்படாத ஒன்றே வெறுமை. மூன்றாவதாக,
'ஆழத்தின்மேல் இருள் பரவியிருந்தது.' ஒளி செல்ல முடியாத
இடமே ஆழம். அப்படிப்பட்ட ஆழத்தில் இன்னும் இருள் இருந்தால்
எவ்வளவு இருளாயிருக்கும். அந்த இடத்தின் குளிர்ச்சியில்
உயிர் எழுதலும் வளர்தலும் சாத்தியமில்லாமல் இருக்கும்.
உருவற்ற நிலை, வெறுமை, இருள் இம்மூன்றும் இஸ்ரயேல் மக்கள்
பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக்கிடந்தபோது அவர்கள்
அனுபவித்த அனுபவங்களே. இவ்வனுபவங்களையே அவர்கள் உருவகமாக
படைப்பு நிகழ்வில் பதிவு செய்கின்றனர். இஸ்ரயேல் என்ற
உருவை அவர்கள் இழந்தார்கள். ஓய்வுநாள், சட்டம், கடவுள்,
ஆலயம், நகரம் என்று எதுவும் இல்லாமல் வெறுமையாக இருந்தனர்.
அந்நிய நாட்டில் மொழி புரியாத இடத்தில் ஊமையாய், உயிரற்ற
இருந்தனர்.
இந்தப் பின்புலத்தில், 'கடவுள் ஒளி தோன்றுக' என்கிறார்.
அவர் சொல்லும்போதே ஒளி தோன்றுகிறது. அழகு பிறக்கிறது.
வெறுமை மறைகிறது. இருள் அகல்கிறது. உயிர் வளர்கிறது.
2. விடுதலைப் பயண நெருப்புத் தூண் ஒளி 'ஒளி' என்ற அடையாளம்
விடுதலைப் பயண நூலின் தொடக்கம், நடு, இறுதி என மூன்று
இடங்களில் முதன்மையாக நிற்கிறது. நூலின் தொடக்கத்தில்,
கடவுள் இஸ்ரயேல் மக்களின் கூக்குரலைக் கேட்டு இறங்கி வந்த,
மோசேயை எகிப்திற்கு அனுப்பும் நிகழ்வில் 'எரியும்
முட்புதரை' பார்க்கிறோம்: 'அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு
முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார்.
அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால்
எரிந்துகொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர்
தீய்ந்துபோகவில்லை' (விப 3:2). நூலின் இறுதியில், 'மேகம்
சந்திப்புக் கூடாரத்தை மூடிற்று. ஆண்டவரின் மாட்சி
திருஉறைவிடத்தை நிரப்பிற்று ... பகலில் ஆண்டவரின் மேகம்
இருப்பதையும் இரவிலோ அதில் நெருப்பு இருப்பதையும் இஸ்ரயேல்
வீட்டார் கண்டார்கள்' (காண். விப 40:34, 38). நூலின்
நடுவில் இன்றைய வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள்
'நெருப்புத்தூணாக' இஸ்ரயேல் மக்களோடு வழிநடக்கின்றார்.
மேலும், இந்நெருப்பு பகைவர்களிடமிருந்து இஸ்ரயேல் மக்களைக்
காப்பாற்றும் அரணாக, வேலியாக இருக்கின்றது.
கடவுள் ஒளியைத் தேர்ந்துகொண்டதன் நோக்கம் என்ன? அவர் ஒரு
தூதராகவோ, ஒரு நபராகவோ, ஒரு வாளாகவோ உடன் வந்திருக்கலாமே?
'ஒளி' அடிமைகளின் வாழ்வில் மிக முக்கியமானது.
பண்டைக்காலத்தில் 'ஒளி' என்பது எல்லாருடைய பயன்பாட்டில்
இருந்தாலும், 'ஒளி' என்பது அரண்மனையை அலங்கரிக்கக்
கூடியதாகவும், 'இருள்' என்பது அடிமைகளின் வீடுகளை
அலங்கரிக்கக்கூடியதாகவும் இருந்தது. நம் ஊரிலேயே
பாருங்களேன். இருபது ஆண்டுகளுக்கு முன் 'ஒளி' என்பது
ஏழைகளின் வீட்டின் அடுப்பில் இருக்குமே தவிர, அவர்களின்
வீட்டின் கூரையில் இருக்காது. 'மின் ஒளி' வந்ததும்தான் நம்
ஊரில் சமத்துவம் வந்தது. கடவுள் எகிப்தியரின் மேல்
கொண்டுவந்த பத்து வாதைகளில் தலைப்பேறு இறப்பதற்கு
முந்தையதாக, ஒன்பதாவது கொள்ளை நோயாக, அதிகம் துன்பம்
தருவதாக எகிப்தியரை வாட்டுவது 'மூன்று நாள் காரிருள்.'
இருளில் இயக்கம் இருப்பதில்லை (தாயின் கருவறையின் இருள்
விதிவிலக்கு). தொடர்ந்து, ஏறக்குறைய இருபத்து நான்கு
இலட்சம் பேர் (ஆறு லட்சம் என்பது சிலரின் கருத்து)
எகிப்திலிருந்து வெளியேறுகின்றனர். இவ்வளவு பேருக்கும் ஒரே
நேரத்தில் தெரியக்கூடியதாக இருக்கின்ற ஒரு அடையாளம்
மேகமும் நெருப்பும் தூணும்தான். ஆக, இங்கே ஒளி என்பது
கடவுள் தருகின்ற பாதுகாப்பாகவும், உடனிருப்பாகவும்
இருக்கின்றது.
ஆக, பாதுகாப்பற்ற இஸ்ரயேல் மக்களுக்கு பாதுகாப்பு தருகிறது
நெருப்புத் தூண். அவர்களோடு பயணத்திலும், பாளையத்திலும்
உடனிருக்கிறது நெருப்புத் தூண்.
3. வாரத்தின் முதல் நாளில் கதிரவனின் ஒளி
லூக்கா நற்செய்தியாளரின் பதிவின் படி கல்லறைக்குச்
செல்பவர்கள் பெண்கள். இவர்கள் நறுமணப் பொருள்களோடு -
அதாவது, அடக்கச் சடங்கின் நிறைவிற்காக - செல்கின்றனர்.
இவர்கள் மூன்று அதிர்ச்சிகளை எதிர்கொள்கின்றனர்: 'கல்லறை
வாயிலிலிருந்த கல் புரட்டப்பட்டுள்ளது,' 'ஆண்டவர்
இயேசுவின் உடலைக் காணவில்லை,' 'மின்னலைப் போன்ற ஒளிவீசும்
ஆடை அணிந்த இருவர் தோன்றுகின்றனர்.' முதலில்
'விடியல்-கதிரவன்' என்று சொன்ன லூக்கா, 'மின்னல்' என்ற
இன்னொரு ஒளியையும் பதிவு செய்கின்றார். 'அவர் இங்கு இல்லை'
என்று சொல்கின்றனர் அந்த இரண்டு பேரும். மேலும், மறைநூலை
அப்பெண்களுக்கு நினைவூட்டுகின்றனர் அவர்கள். பெண்களும்
சென்று பதினொருவருக்கு அறிவிக்கின்றனர். ஆனால்,
திருத்தூதர்கள் பெண்கள் வார்த்தைகளை, 'பிதற்றல்கள்' என
எடுத்துக்கொண்டதால் நம்பவில்லை. மேலும், கல்லறைக்கு
ஓடிவரும் பேதுரு, இயேசுவின் உடலைச் சுற்றியிருந்த துணிகளை
மட்டும் பார்த்துவிட்டு, தமக்குள் வியப்புற்றவராக வீடு
திரும்புகின்றார்.
ஆக, வெளியில் இருந்த கதிரவனும், மின்னலின் ஒளியும்
பெண்களையும், திருத்தூதர்களையும் பாதிக்கவில்லை. இந்த
இடத்தில்தான் அகுஸ்தினார், 'கல்லறையின் கல் புரட்டப்பட்டது
இயேசுவை வெளியேற்ற அல்ல. மாறாக, சீடர்களை உள்ளே அனுப்பவே!'
என்கிறார். கல்லறைக்கு உள்ளே அடித்த வெயில்
திருத்தூதர்களின் உள்ளத்தில் அடிக்கவேயில்லை. யோவான்
மட்டுமே, 'கண்டார், நம்பினார்' எனப் பதிவு செய்கின்றார்.
சீடர்கள் உடனடியாக நம்பவில்லை என்றாலும், அவர்களின்
உள்ளத்தில் அந்த அதிகாலை ஒளி பல நல்ல உணர்வுகளை
எழுப்புகிறது. அடக்கச் சடங்கிற்கு சென்றவர்கள் உடல்
இல்லாமல் வியப்புறுகின்றனர். கல் மூடியிருக்கும் என
நினைத்தவர்களுக்கு கல்லறை திறந்து கிடக்கிறது. அசாதாரண
நிகழ்வுகள் நடக்கின்றன. சாதாரண கதிரவன் தோன்றும் நிகழ்வு
அவர்களுடைய வாழ்வில் அசாதாரணங்களுக்கு அவர்களின் கண்களைத்
திறக்கிறது.
4. பாஸ்கா திரி ஒளி
படைப்பின் ஒளி, விடுதலைப் பயண நெருப்புத் தூண் ஒளி,
விடியற்காலை கதிரவன் ஒளி என்ற மூன்று ஒளியையும் நமக்கு
நினைவுபடுத்துவது இப்போது நாம் ஏந்தி நிற்கும் பாஸ்கா
திரியின் ஒளி. 'பாஸ்கா' என்றால் 'கடத்தல்.' படைப்பு
இருளைக் கடந்த இந்த இரவில், இறைவன் இஸ்ரயேல் மக்களைக்
கடத்திய இந்த இரவில், இயேசு இறப்பைக் கடந்த இந்த இரவில்
நாமும் பாஸ்கா திரியின் ஒளியோடு இரவைக்
கடந்துகொண்டிருக்கிறோம்.
பாஸ்கா திரியைப் புனிதப்படுத்தும் செபத்தில்
அருள்பணியாளர், 'காலங்கள் அவருடையன, யுகங்களும் அவருடையன'
என்கிறார். ஒளியால் காலத்தைப் பிரித்த கடவுள்
ஒவ்வொன்றையும் அதனதன் நேரத்தில் செம்மையாகச்
செய்துமுடிக்கிறார் (காண். சஉ 3:11).
இந்த பாஸ்காத் திரி நமக்குக் கொடுக்கும் பாடங்கள் மூன்று:
1. ஒளி வாழ்வின் உருவகம்
இருளாய் இருந்த திரி ஒளி பெறுகிறது. தொடர்ந்து எரியும்
திரி ஒரு கட்டத்தில் இல்லாமல் இருளுக்குள் மறைந்துவிடும்.
ஆனால், இருக்கும் ஒவ்வொரு பொழுதும் அது தானும் ஒளிர்ந்து
மற்றவர்களையும் ஒளிர்விக்கிறது. ஆக, ஒளி எப்போதும்
இருக்கும் என்ற நம்பிக்கையைத் தரவில்லை பாஸ்கா. ஏனெனில்,
பாலைவனத்தில் இஸ்ரயேல் மக்களை ஒளிர்வித்த ஒளி,
பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டபோது இருண்டது. ஆனால்,
மீண்டும் 'ஒளி உண்டாயிற்று.'ஆக, ஒளியும், இருளும்,
கதிரவனும், நிலவும், பகலும், இரவும் மாறி மாறி
வரக்கூடியவை. இன்று சிலுவை என்றால், நாளை உயிர்ப்பு. நாளை
மறுநாள் மீண்டும் சிலுவை வரலாம். ஆனால், அடுத்த நாள்
உயிர்ப்பு வரும் என்பதுதான் ஒளி தருகின்ற நம்பிக்கை. இதையே
தான் சபை உரையாளரும், 'ஒளி மகிழ்ச்சியூட்டும். கதிரவனைக்
கண்டு கண்கள் களிக்கும். மனிதன் எத்தனை ஆண்டுகள்
வாழ்ந்தாலும் அவன் தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியுடன்
இருக்கட்டும். இருள்சூழ்ந்த நாள்கள் பல இருக்கும் என்பதை
அவன் மறக்கலாகாது' (காண். சஉ 11:7-8) என்கிறார்.
2. ஒளியும் சார்பு நிலையும்
மெழுகுதிரியின் ஒளியோ, எண்ணெய் விளக்கின் ஒளியோ தானாகவே
ஒளிர்வதில்லை. திரி மெழுகோடு அல்லது எண்ணையோடு கொண்டுள்ள
சார்பு நிலையில்தான் ஒளி பிறக்கிறது. ஆக, நம் வாழ்வு
ஒளிர்வதும் அவர்மீதுள்ள சார்புநிலையில்தான். ஒளிக்கு
அருகில் வரும் அனைத்தும் ஒளி பெற்றுவிடுகிறது. ஒளியைச்
சார்ந்து நிற்கும் அனைத்தும் ஒளிர்கிறது. இதையே யோவான்,
'தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள்
தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம்
வருவதில்லை' (காண். யோவா 3:20). ஆக, தாவீதின் மன்றாட்டு
போல இன்று நம் மன்றாட்டு இருக்கட்டும்: 'ஆண்டவரே, நீர் என்
விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர். என் கடவுளே, நீர் என்
இருளை ஒளிமயமாக்குகின்றீர்' (காண். திபா 18:28).
3. திரியின் தோற்றம் அல்ல, ஒளியே முக்கியம்
இயேசு என்ற திரியின் தோற்றம் கண்டு அவரைத் தீர்ப்பிட்டனர்
அவருடைய எதிரிகள். மெழுகுதிரியின் உயரம், தடிமன், வடிவம்,
நிறம் எதுவும் ஒளியைப் பாதிப்பதில்லை. மேலும், மெழுகுதிரி
ஒரு அலங்காரப் பொருள் அல்ல. மேலும், தன்னைச் சுற்றி
எவ்வளவு இருள் இருக்கிறது என்று மெழுகுதிரி பயப்படத்
தேவையில்லை. ஏனெனில், அதிகமான இருளின்தான் அது அதிக
ஒளியுடன் எரியும். ஒளி எரியும்போது தன்னையே இழக்க
நேரிடும். ஆனால், அந்த ஒளி மனிதர் முன் ஒளிரும்போது
'மற்றவர்கள் நம் நற்செயல்களைக் கண்டு விண்ணகத் தந்தையைப்
போற்றிப் புகழ்வார்கள்' (காண். மத் 5:16). அல்லது பவுலின்
வார்த்தைகளில், 'தூங்குகிறவனே, விழித்தெழு. இறந்தவனே,
உயிர்பெற்றெழு. கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்' (காண்.
எபே 5:14).
இறுதியாக,
'இருளிலிருந்து ஒளி தோன்றுக!' என்று சொன்ன கடவுளே நம்
உள்ளங்களில் அவருடைய ஒளியை வீசச் செய்தார் (காண். 2 கொரி
4:6). இந்த ஒளியால் ஒளிபெற்ற நாம் 'உலகில் ஒளிரும்
சுடர்களாகத் திகழ' (காண். பிலி 2:16) இறைவன்
அருள்கூர்வாராக.
|
மறைதலே இறைமை
":ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர்,
பாவத்தையும் இறப்பையும் தோற்கடித்த வெற்றி வீரர்,
வானதூதர் வியப்புற வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார்.
இவ்வாறு அவர் சென்றது
எங்கள் தாழ்நிலையை விட்டு அகல வேண்டும் என்பதற்காக அன்று.
மாறாக, எங்கள் தலைவரும் முதல்வருமாகிய அவர்
முன்னரே சென்ற அவ்விடத்திற்கு
அவர் உறுப்பினர்களாகிய நாங்களும்
அவரைப் பின் தொடர்ந்து செல்வோம் என்று
நம்பிக்கை கொள்வதற்காகவே":
இன்றைய திருப்பலியின் தொடக்கவுரையில் நாம் காணும் புனித
அகுஸ்தினாரின் இவ்வார்த்தைகள் இன்றைய நாளின் பொருளை மிக
நேர்த்தியாக நமக்கு எடுத்துரைக்கின்றன.
":இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை
நோக்கிச் செல்லத் தீர்மானித்து": (9:51) என லூக்கா
இயேசுவின் பயணத்தை முன்கூட்டியே தொடங்கி வைக்கிறார்.
இயேசுவின் வாழ்வில் நிறைவு அவரின் விண்ணேற்றம்.
இயேசுவின் விண்ணேற்றத்தை ஏற்றுக்கொள்ளவும், நம்பவும்,
புரிந்து கொள்ளவும் மூன்று கூறுகள் தடைகளாக நிற்கின்றன:
தடை 1: இயேசுவின் உடல்
மனித உடல் அல்லது உரு ஏற்றதால் இயேசு பிறந்தார்.
வளர்ந்தார். சாப்பிட்டார். காணாமல் போனார். கிடைத்தார்.
நடந்தார். பேசினார். சிரித்தார். அழுதார். இறந்தார்.
உயிர்த்தும் விட்டார். உயிர்த்தவர் வெறும் ஆவியாக வராமல்
உடலோடு வந்தார். சீடர்களுக்குத் தோன்றினார். தன் உடலைத்
தொட்டுப் பார்க்கச் சொன்னார். சாப்பிட்டார். வழிநடந்தார்.
அப்பம் பிட்டார். இதுவரைக்கும் சரி. ஆனால், விண்ணேற்றம்
அடையும்போது அவர் உடலோடு மேலே சென்றாரா? ஆம் என்று
சொல்கிறது எருசலேம் விண்ணேற்ற ஆலயம். அங்கே இயேசுவின்
இரண்டு அகன்ற பாதத்தடங்கள் இருக்கின்றன. ஒரு ராக்கெட்
மேலெழும்பி செல்வதுபோல, புவிஈர்ப்பு விசையை வென்று,
புவிஈர்ப்பு மண்டலத்தைக் கடந்து அவர் மேலே சென்றிருக்க
வேண்டும். சரி போய்விட்டார். ஆனால், மனித உடலை வைத்து அவர்
அங்கே என்ன செய்வார்? தந்தைக்கு உடல் இல்லை. தூய
ஆவியானவருக்கு உடல் இல்லை. இவருக்கு மட்டும் உடல்
இருக்குமா? இன்னும் அந்த உடலில் காயங்கள் இருக்குமா? உடல்
என்று ஒன்று இருந்தால் உடை என்ற ஒன்றும் இருக்க வேண்டும்.
பாதி வழி சென்ற இயேசுவின் உடல் மறைந்து ஆவியாக
மாறிவிட்டதா? மனித உடலோடு இயேசு சென்றார் என்று நாம்
சொல்வதே, மற்ற விலங்குகள், பறவைகள், தாவரங்களின் உடலுக்கு
நாம் இழைக்கும் தீங்கு இல்லையா? மனித உடலே சிறந்தது என
ஹோமோ ஸேபியன்ஸ் ஸேபியன்ஸ் தற்பெருமை கொள்வது முறையா?
இயேசுவின் உடல் அவரின் விண்ணேற்றத்தை நாம் புரிந்து கொள்ள
தடையாக இருக்கிறது.
தடை 2: காலம்-இடம்; கூறு
மாற்கு நற்செய்தியாளர் இயேசுவின் விண்ணேற்றம் பற்றி
எழுதும்போது, ":இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம்
அமர்ந்தார்": (16:19) என எழுதிவிட்டு, உடனே, ":ஆண்டவரும்
திருத்தூதர்களோடு உடனிருந்தார்": (16:20) என
முரண்படுகின்றார். காலத்தையும், இடத்தையும் கடந்து
கடவுளோடு வலப்புறம் அமர்ந்திருக்கும் ஒருவர்,
காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்ட திருத்தூதர்களோடு
எப்படி உடனிருக்க முடியும்? உண்மையாகவே உடனிருந்தாரா?
அல்லது உடனிருப்பு என்பது திருத்தூதர்களின் ஓர் உள்ளுணர்வு
போல இருந்ததா? அதாவது, இறந்து போன நம் நண்பர் அல்லது
உறவினர் இருக்கிறார் என்று நாம் சொல்கிறேன் என்றால், ":என்
கம்ப்யூட்டர் என்னுடன் இருக்கிறது": என்பது போன்ற ":இருப்பு":
அல்ல அது. மாறாக, அது ஓர் உள்ளுணர்வு. ஆக, காலமும்-இடமும்
இயேசுவின் உடலை ஒட்டிய இரண்டாம் தடை.
தடை 3: பார்த்தவர்கள் எழுதவில்லை,
எழுதியவர்கள் பார்க்கவில்லை
இயேசுவின் விண்ணேற்றம் பற்றி மாற்கும், லூக்காவும் மட்டுமே
எழுதுகின்றனர். மத்தேயுவின் இயேசு இம்மானுவேலன் (":கடவுள்
நம்மோடு":) என்பதால், மத்தேயு இயேசுவை நம்மோடு தங்க வைத்து
விடுகிறார். மத்தேயுவின் இயேசு விண்ணேற்றம் அடைவதில்லை
(காண். மத் 28:20). விண்ணேற்றத்தைப் பார்த்த திருத்தூதரும்
நற்செய்தியாளரும் இயேசு அன்பு செய்த சீடருமான யோவான் இந்த
மாபெரும் நிகழ்வு குறித்து மௌனம் காக்கின்றார். ":பிள்ளைகளே
சாப்பிட வாருங்கள்": என்று இயேசு அழைத்தார் என சின்ன சின்ன
உரையாடலையும் பதிவு செய்த யோவான் இதைப் பற்றி ஏன்
எழுதவில்லை? அல்லது இயேசு விண்ணேறிச் செல்லவில்லையா?
மேலும், இந்த நிகழ்வை தன் நற்செய்தியிலும் (24:50-53), தன்
திருத்தூதர் பணிகளிலும் (1:6-11) பதிவு செய்யும் லூக்கா,
இந்த நிகழ்வு நடந்த நேரத்தை முரண்டுபட்டு எழுதுகின்றார்:
இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப்பு நாள் அன்று நடந்ததாக
நற்செய்தியிலும் (24:51), நாற்பது நாள்களுக்குப் பின்
நடந்ததாக திருத்தூதர் பணிகளிலும் (1:9-11) எழுதுகின்றார்.
இந்தத் தடைகளை ஒட்டி ஒரு வார்த்தைச் சிக்கலும் இருக்கிறது:
":விண்ணேற்றமா?": அல்லது ":விண்ணேற்பா?":
முதல் ஏற்பாட்டில் ஏனோக்கு (தொநூ 5:24) மற்றும்
இறைவாக்கினர் எலியாவும் (2 அர 2:2), இரண்டாம் ஏற்பாட்டில்
இயேசுவும் விண்ணேற்றம் அடைந்தனர் என்றும், திருத்தந்தை
12-ஆம் பயஸ் அவர்களின் 1950 நவம்பர் 1 பிரகடனத்தின்படி
அன்னை மரியாள் விண்ணேற்பு அடைந்தார் என்றும் கூறுகின்றோம்.
இங்கே ":விண்ணேற்றம்": என்பது செய்வினை. ":விண்ணேற்பு": என்பது
செயப்பாட்டுவினை. விண்ணேற்றம் அடைந்தவர்கள் தாங்களாகவே,
தங்களின் ஆற்றலால் ஏறிச் செல்கின்றனர். இவர்களுக்கு
மற்றவர்களின் துணை தேவையில்லை. ஆனால் மரியாவோ கடவுளால்
அல்லது தூதர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றார். அவர்
ஏறிச் செல்ல மற்றவர்களின் துணை தேவைப்படுகிறது.
முன்னவர்கள் ஆண்கள் என்பதால் தாங்களாகவே ஏறிச்சென்றார்களோ?
ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்த வார்த்தை
மாற்றங்களோ? தெரியவில்லை!
ஆனால், லூக்கா நற்செய்தியில் ":அனாஃபெரோ": என்ற வினைச்சொல்
செயப்பாட்டுவினையிலும் (":அனஃபெரெட்டோ":), திருத்தூதர்
பணிகளில் ":எபைரோ": என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும்
(":எபெர்தெ":) உள்ளது. மேலும், ஒரே நிகழ்வைக் குறிக்க லூக்கா
வௌ;வேறு வினைச்சொற்களைப் பயன்படுத்துவதையும் நாம்
கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகளை நாம் உள்ளபடி
மொழிபெயர்த்தால், ":அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்": என்றும்
":அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார்": என்றும் சொல்ல வேண்டும்.
ஆக, ":இயேசு விண்ணேற்றம் அடைந்தார்": என்பது நம்
புரிதலுக்கான மொழிபெயர்ப்பே அன்றி, பாட மொழிபெயர்ப்பு
அல்ல.
இவ்வளவு தடைகளும், மொழியியல் சிக்கல்களும் இருக்க,
இயேசுவின் விண்ணேற்றத்தை எப்படி புரிந்து கொள்வது?
கேள்வியை மாற்றிக் கேட்டால், பிரச்சினை தீர்ந்துவிடும்.
எப்படி விண்ணேற்பு? என்று கேட்பதை விடுத்து, ஏன்
விண்ணேற்பு? என்று கேட்டால் விண்ணேற்பின் பொருள்
தெரிந்துவிடும்.
விண்ணேற்றம் இயேசுவின் வாழ்வில் மூன்று நிலைகளில் அர்த்தம்
பெறுகின்றது:
தம் மண்ணக பணிவாழ்வு முடிந்து, இன்று தம் தந்தையின் இல்லம்
திரும்புகின்றார் (காண். பிலி 2:3-6).
தன் சீடர்களிடம் தன் பணியை ஒப்புவிக்கின்றார். தன்
இறையரசுப் பணியைத் தொடர்ந்தாற்ற அவர்களுக்குக்
கட்டளையிடுகின்றார். விண்ணேற்றம் ஒரு பிரியாவிடை நிகழ்வு.
விவிலியத்தில் உள்ள பிரியாவிடை நிகழ்வுகளில் மூன்று
மட்டுமே மிக நீளமானவை: இஸ்ரயேலின் குலமுதல்வர் யாக்கோபு
(தொநூ 49-50), திருச்சட்டம் வழங்கிய மோசே (இச 33-34),
புதிய இஸ்ரயேலின் நம்பிக்கை மற்றும் திருச்சட்டத்தின்
நிறைவாம் இயேசு (திப 1:1-11). இந்த மூன்று பிரியாவிடைகளும்
நான்கு கூறுகளைக் கொண்டுள்ளன: அ) ஆசியுரை, ஆ) பிரிவு, இ)
பார்த்தவர்களின் பதில் மற்றும் ஈ) கீழ்ப்படிதல் அறிக்கை.
இயேசு கைகளை உயர்த்தி ஆசீர் அளிக்கும் நிகழ்வும் முதல்
ஏற்பாட்டு நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே அமைகின்றது (லேவி
9:22, சீஞா 50:20-21). ஆசியளித்தல் தரும் மகிழ்ச்சி லூக்கா
நற்செய்தியின் முதல் மற்றும் இறுதி நிகழ்வுகளில் மிகவும்
முக்கியமானதாக இருக்கின்றது (1:56, 2:20,43,45, 24:9,33,
8:13, 15:7,10). இயேசுவின் சீடர்கள் மகிழ்ச்சியோடு ஆலயம்
திரும்பி இறைவனைப் புகழ்கின்றனர்.
துணையாளராம் தூய ஆவியானவரை அவர்கள்மேல் அனுப்புவதாக
வாக்குறுதி தருகின்றார் (திப 1:4-5).
இயேசுவின் உயிர்ப்பைப் போலவே, அவரின் விண்ணேற்றமும் ஒரு
நம்பிக்கையின் மறைபொருளே. ":நம்பிக்கை": என்ற இந்த ஒற்றைச்
சொல்லை நீக்கிவிட்டால், இந்த நிகழ்விற்கும் நமக்கும்
தொடர்பே இல்லை. ":விண்ணேற்றம் என்னும் நம்பிக்கையை": நாம்
எப்படி வாழ்வாக்குவது? விண்ணேற்றம் தரும் வாழ்வியல்
பாடங்கள் எவை?
பாடம் 1: மறைதலே இறைமை
இயேசுவை மனிதனாக்க அவருக்கு மனுவுருவாதல் தேவைப்பட்டதுபோல,
அவரை இறைவனாக்க அவருக்கு விண்ணேற்றம் தேவை. ":தேவை":
என்பதால் இது உருவாக்கப்பட்டது என்று பொருள் கொள்ளக்
கூடாது. மறைந்திருக்கும் வரைதான் அவன் பெயர் மறையவன்
அல்லது இறைவன். ஆகையால்தான் இறைவனைப் பற்றிய அறிவை
மறை-கல்வி என்கிறோம். தெரிந்துவிட்டால் அவர் இறைவன் அல்ல.
கண்களுக்குத் தெரியாததால் அவர் இல்லை என்பதும் அல்ல.
கண்களுக்குத் தெரியக்கூடியவை எல்லாம் மாறக்கூடியவை.
மாறாதவை கண்களுக்குப் புலனாவதில்லை. நம் உடலின் கண்களை
மறைக்கும் அளவுக்கு நம் கன்னம் வீங்கிவிட்டது என
வைத்துக்கொள்வோம். நம்மால் எதையும் பார்க்க முடியாது.
என்னால் பார்க்க முடியவில்லை என்பதற்காக என் முன் இருப்பவை
எல்லாம், இல்லாதவை என ஆகிவிடுமா? ஒருபோதும் இல்லை.
":ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க்
காண்கிறோம். ஆனால் அப்போது நேரில் காண்போம்": (1 கொரி
13:12). இயேசு விண்ணேற்றத்தின்போதுதான் இறைவனாகின்றார்.
மறையும்போதுதான் இறைவனாகின்றார். இதை இன்றைய இரண்டாம்
வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் பார்க்கின்றோம்.
இரண்டாம் வாசகத்தில் இயேசுவை புதிய உடன்படிக்கையின்
தலைமைக்குருவாக உருவக்கின்ற எபிரேயருக்கு எழுதப்பட்ட
திருமடலின் ஆசிரியர், ":அதனால்தான் கிறிஸ்து மனிதரின்
கையால் அமைக்கப்பட்ட இவ்வலகின் தூயகத்திற்குள் நுழையாமல்,
விண்ணகத்திற்குள்ளேயே நுழைந்திருக்கிறார்": (9:24) என்றும்,
":அவர் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே
வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி": (10:20) என்றும்
எழுதுகின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசு ":ஆசி வழங்கிக்
கொண்டிருந்தார்": (24:51) என எழுதுகின்றார் லூக்கா. ":ஆசி
வழங்குதல்": என்பது தலைமைக்குருவின் பணி மற்றும் உரிமை.
இயேசு மேலே ஏறிச்சென்றவுடன், சீடர்கள் ":நெடுஞ்சாண்கிடையாக":
விழுகின்றனர் (":ப்ரோஸ்குனேயோ":). இது கடவுள் முன் மட்டுமே
மனிதர்கள் செய்யும் செயல். ஆக, சீடர்கள் இங்கே இயேசுவை
இறைவனாக ஏற்றுக் கொள்வதன் வெளி அடையாளமே இந்த
நெடுஞ்சாண்கிடை வணங்குதல். ":கடவுள் நம்மோடு": என இறங்கி
வந்தவர், ":கடவுள் நமக்காக": என ஏறிச் செல்கின்றார்.
பாடம் 2: சீடர்களின் பணி
இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன் சீடர்களின் பணி என இயேசு
குறிப்பிடுவது இரண்டு: ஒன்று, மனமாற்றம். இரண்டு,
மன்னிப்பு. மேலும், ":இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்": (லூக்
24:48) என்கிறார் இயேசு. ":நீங்கள் சாட்சிகள்": என்னும்
சொல்லாடல் இன்றைய முதல் வாசகத்திலும் (திப 1:8) உள்ளது.
":சாட்சி": என்பது நீதிமன்றச் சொல். சாட்சியம்தான்
தீர்ப்பின் போக்கையே மாற்றும். சாட்சி சொல்பவருக்கும்,
சாட்சி சொல்லப்படுபவருக்கும் முரண் இருக்கக் கூடாது.
சாட்சி சொல்பவர் தான் யார் சார்பாக சாட்சி சொல்கிறாரோ,
அவரின் மனநிலையைத்தான் அவர் பிரதிபலித்தல் வேண்டும்.
":மனமாற்றம்,": மற்றும் ":மன்னிப்பு": இந்த இரண்டைத்தான் இயேசு
நம்மிடம் விரும்புகின்றார். நம் இறைவன் கனிவின், கருணையின்
இறைவன். அவர் நம்மைத் தண்டிப்பவர் அல்லர். ஆகையால்தான்
இன்றைய இரண்டாம் வாசகமும், ":ஆதலால், தீய மனச்
சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில்
கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிக
உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக": (எபி
10:22) என்று ஊக்கம் தருகின்றது. ஆக, மனமாற்றம்,
மன்னிப்பு, சாட்சியம் இம்மூன்றும் சீடர்களாகிய நம்
பண்புகளாக இருத்தல் நலம். தொடர்ஓட்டத்தில் ஒரு வீரரின்
கையிலிருந்து மற்ற வீரரின் கைக்கு மாறும் குச்சியைப்போல,
ஒலிம்பிக் தீப ஓட்டத்தில் ஒருவரின் கையிலிருந்து
அடுத்தவரின் கைக்கு மாறும் தீபம் போல விண்ணரசுப் பணி
இயேசுவின் கையிலிருந்து இன்று நம் கைக்கு மாறுகின்றது.
எந்த அளவிற்கு இது ஒரு கொடையோ, அந்த அளவிற்கு இது ஒரு
கடமை. ":விளையாட்டு வீரர் எவரும் விதிமுறைகளுக்குட்பட்டு
விளையாடினால் மட்டுமே வெற்றிவாகை சூட முடியும": (2 திமொ
2:5)
பாடம் 3: எதிர்நோக்கு
":அவர் மீண்டும் வருவார்": (திப 1:11) என்ற வார்த்தைகள்தாம்
நாம் காத்திருப்பதற்கான எதிர்நோக்கை நமக்குத் தருகின்றன.
எதிர்நோக்கில் தயக்கம் அறவே கூடாது (எபி 10:23). நம்
வாழ்வின் ஒவ்வொரு செயலையும் உந்தித் தள்வது எதிர்நோக்கே.
காலையில் எழுவோம் என்ற எதிர்நோக்கு இருப்பதால் தான் இரவு
தூங்கச் செல்லுமுன் ":வேக்அப் கால்": வைக்கின்றோம்.
படிப்பது, பயணம் செய்வது, வேலை தேடுவது, தேடிய வேலையில்
சம்பாதிப்பது, திருமணம் முடிப்பது, அருள்நிலை வாக்குறுதி
கொடுப்பது என எல்லா வாழ்க்கை நிகழ்வுகளிலும், நிழல்களிலும்
எதிர்நோக்கி இழையோடியிருக்கின்றது. இந்த
எதிர்நோக்குகளுக்கெல்லாம் தாயாக இருப்பது, ":அவர் மீண்டும்
வருவார்": என்ற எதிர்நோக்கும், ":நாமும் அங்கு செல்வோம்":
என்ற எதிர்நோக்கும்தான். வெறும் மண்ணோடு மண்ணாக
முடியப்போகும் வாழ்க்கைக்கா நாம் இவ்வளவு மெனக்கெடுகிறோம்?
நாம் மண்ணைச் சார்ந்தவர்கள் அல்லர். விண்ணைச்
சார்ந்தவர்கள். ஆக, எதிர்நோக்கு என்னும் விளக்கு
எந்நேரமும் எரிந்துகொண்டிருக்கட்டும். மேலும், நாம்
விண்ணைச் சார்ந்தவர்கள் என்பதால் நம் எண்ணங்களும் உயர்ந்த
எண்ணங்களாகவே இருக்கட்டும் (காண். கொலோ 3:1).
பாடம் 4: அண்ணாந்து பார்க்காதீங்க!
":கலிலேயரே, ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே
இருக்கிறீர்கள்?": (திப 1:11) என்ற கேள்வி நம்மைப்
பார்த்தும் கேட்கப்படுகிறது. அண்ணாந்து பார்க்கும்
ஆன்மீகம் வேண்டாம். குனிந்து வாழ்வைப் பார்க்கும் ஆன்மீகம்
அவசியம். ":அவர் வருகிறார்!": என்பதற்காக அவரைத் தேடி
வீட்டைவிட்டு ஓட வேண்டாம். அண்ணாந்து பார்க்க வேண்டாம்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து
சாப்பிடுங்கள். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாரித்துக்
கொண்டிருக்கிறீர்களா. தொடர்ந்து செய்யுங்கள். பஸ்ஸில்
இருக்கிறீர்களா, தொடர்ந்து பயணம் செய்யுங்கள். ரேஷன்
கடையில் வரிசையில் நிற்கிறீர்களா, தொடர்ந்து நில்லுங்கள்.
நோயுற்ற ஒரு நபரோடு மருத்துவமனையில்
பேசிக்கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பேசுங்கள். டிவி
பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பாருங்கள்.
விளையாடிக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து விளையாடுங்கள்.
ஏனெனில், அவர் இவற்றிலும் வருகின்றார். எல்லாவற்றிலும்
அவரால் வர முடியும்.
பாடம் 5: மகிழ்ச்சி
இயேசுவின் பிரிவை அனுபவிக்கும் சீடர்களின் முதல் உணர்வு
":பெருமகிழ்ச்சி": (":காராஸ் மெகாலெஸ்":) என்று பதிவு
செய்கின்றார் லூக்கா (லூக் 24:52). இந்தச் சொல்லாடலை
மீண்டும் ஒருமுறை வானதூதரின் வார்த்தையாகப் பதிவு
செய்கின்றார்: ":அஞ்சாதீர்கள். இதோ, எல்லா மக்களுக்கும்
பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு
அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர்
உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்": (லூக்
2:10). இயேசுவின் பிறப்பு, பணி, உயிர்ப்பு, விண்ணேற்றம் என
அவரின் வாழ்வு நமக்குத் தருவது மகிழ்ச்சி ஒன்றே. இந்த
மகிழ்ச்சி நம் உள்ளத்திலும், இல்லத்திலும் நிறைவாக
இருந்து, நாம் செய்வது அனைத்திலும் வெற்றி கண்டு,
வளமோடும், நலமோடும் வாழ்தலே அவருக்கு மாட்சி.
":நம்மேல் கொண்ட பரிவினால் அவர் விண்ணிலிருந்து இறங்கி
வந்தார். இன்று அவர் தனியே விண்ணேறிச் சென்றாலும், அவரோடு
நாமும் உடன் செல்கிறோம். ஏனெனில் அருளால் நாமும் அவரோடு
இணைந்துள்ளோம்!": (புனித அகுஸ்தினார்)
":கடவுள் நம்மோடு": என இறங்கி வந்த இயேசு, ":கடவுள் நமக்காக":
என்று விண்ணேறிச் செல்கிறார் இன்று! |
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை
மறைமாவட்டம். |
I திருத்தூதர் பணிகள் 10: 34a, 37-43
II கொலோசையர் 3: 1-4
III யோவான் 20: 1-9
கிறிஸ்து உயிர்த்தார் அல்லேலூயா!
இரஷ்யாவைச் சார்ந்த மிகப்பெரிய ஆளுமை நிகோலாய் இவானோவிச்
புகாரின் (Nikolai Ivanovich Bukharin 1888-1938). இவர்
1917 ஆம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட போல்ஸ்விக் புரட்சிக்கு
வித்திட்டவர்; கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியப் பொறுப்பை
வகித்தவர்; கடவுள் மறுப்பாளர்
1930 ஆம் ஆண்டு மாஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு
பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இவர், கிறிஸ்துவைக்
குறித்தும், கிறிஸ்தவ மதத்தைக் குறித்தும் கடுமையாகச்
சாடிப் பேசினார். இவர் இவ்வாறு பேசிவிட்டு அமர்ந்ததும்,
கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து, மேடைக்குச் சென்று,
"கிறிஸ்து உயிர்த்தார்" என்று உரக்கக் கத்தினார். மக்களும்
ஒருமித்த குரலில், "ஆம், கிறிஸ்து உயிர்த்தார்" என்று கத்தினார்கள்.
இதைக் கேட்டுவிட்டு இவர், 'மக்கள் இப்படிக்
கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கும்போது, அவரைப்
பற்றி என்ன பேசினாலும், எடுபடாது' என்று தன் மனத்தில்
நினைத்துக் கொண்டார்.
கிறிஸ்துவுக்கு எதிராக யார் என்ன பேசினாலும், அவர் உயிர்த்தார்
என்பதை யாரும் மறுக்கமுடியாது. இன்று நாம் ஆண்டவர் இயேசுவின்
உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழாவில்
நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு என்ன செய்தியைச்
சொல்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது நம்பிக்கையின் அடிப்படை
"கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பறைசாற்றிய
நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையும் பொருளற்றதாகிவிடும்"
(1 கொரி 15: 14) இது திருத்தூதர் புனித பவுல் ஆண்டவர் இயேசுவின்
உயிர்ப்பைக் குறித்துச் சொல்லும் மிக முக்கியமான வார்த்தைகள்.
இவ்வார்த்தைகள் கிறிஸ்துவின் உயிர்ப்பே நமது நம்பிக்கைக்கு
அடிப்படையாக இருக்கின்றது என்பதையும், பொருளைத் தருகின்றது
என்பதையும் எடுத்துக்கூறுகின்றது.
இன்றைப் பலர், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்களைப்
போன்று ஒன்றைச் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள் (மத்
23: 3). ஆனால், ஆண்டவர் இயேசு, தான் இறந்து மூன்றாம் உயிர்த்தெழுவேன்
என்று சொன்னார் (மத் 17: 22; மாற் 8: 31; லூக் 9: 22; யோவா
2: 19). அவர் சொன்னது போன்றே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
இதன்மூலம் அவர் சொல்வீராக அல்ல, செயல்வீரராக விளங்குகின்றார்.
கிறிஸ்துவின் உயிர்ப்பு நமக்குத் தரும் நம்பிக்கை
கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது நம்பிக்கைக்குப் பொருள் தருகின்றது
என்று பார்த்தோம். கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது நம்பிக்கைக்குப்
பொருள் தருவதோடு அல்லாமல், நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம்
என்ற நம்பிக்கையையும் தருகின்றது. இக்கூற்றிற்கு வலுசேர்ப்பதாய்
இருக்கின்றது இயேசு மார்த்தாவிடம் பேசிய வார்த்தைகள். இயேசு
மார்த்தாவிடம் "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம்
நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்" (யோவா 11: 25-26)
என்பார். ஆதலால், நாம் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு
வாழும்பொழுது, அவரைப் போன்று உயிர்த்தெழுவோம் என்பது உறுதி.
இங்கு அமெரிக்காவைச் சார்ந்த கவிஞரும் நாவலாசிரியருமான
பிரெடரிக் பூச்னர் (Frederick Buechner) சொல்லக்கூடிய ஒரு
செய்தி மிகவும் கவனிக்கத்தக்கது. அவர் சொல்கின்றார்:
"இயேசுவின் உயிர்ப்பு, இவ்வுலகில் நாம் எதிர்கொள்கின்ற மிகக்கொடிய
துன்பமும் நிரந்தரமானது அல்ல என்பதை உணர்த்துகின்றது." ஆம்,
அக்காலத்தில் ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட மிகக்கொடிய தண்டனை
சிலுவைச் சாவுதான். அத்தண்டனை ஒரு குற்றமும் செய்யாத இயேசுவுக்குக்
கொடுக்கப்பட்டது. யூதர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்துவிட்டால்,
அவருடைய வாழ்க்கை அத்தோடு முடிந்துவிடும் என்று நினைத்தார்கள்.
இயேசுவோ சிலுவைச்சாவை வென்று உயிர்த்தெழுந்தார். எனவே, மிகக்
கொடிய தண்டனையான சிலுவைச் சாவையே இயேசு வெற்றி கொண்டார் எனில்,
நம்முடைய வாழ்கையில் வரும் மிகக்கொடிய துன்பத்தையும் (இறைவனுடைய
துணையால்) நம்மால் வெற்றிகொள்ள முடியும். னெனில் அக்கொடிய
துன்பமும் நிரந்தரமல்ல!
உயிர்ப்புக்குச் சாட்சிகளாய் விளங்குவோம்
கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது நம்பிக்கைக்குப் பொருளைத் தருகின்றது;
நாமும் ஒரு நாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது
என்று பார்த்தோம். இப்பொழுது கிறிஸ்து உயிர்ப்பு நமக்கு என்ன
அழைப்பினைத் தருகின்றது என்று பார்ப்போம்.
நற்செய்தியில், ஆண்டவர் இயேசு உயிர்த்த செய்தியை மகதலா மரியா
சீடர்களிடம் சொல்கின்றார். முதல்வாசகத்தில் பேதுரு ஆண்டவர்
இயேசுவைப் பற்றிய நற்செய்தியைச் கொர்னலேயுவின் இல்லத்தில்
இருந்தவர்களுக்குச் சொல்கின்றார். இவ்வாறு இவர்கள் உயிர்த்த
இயேசுவுக்குச் சான்று பகர்கின்றார்கள். இவர்களைப் போன்று
நாம் ஒவ்வொருவரும் உயிர்த்த ஆண்டவர் இயேசுவுக்குச் சான்று
பகரவேண்டும். இதை நாம் வார்த்தையால் வெளிப்படுத்திவிட்டால்
போதுமா அல்லது வாழ்வாலும் வெளிப்படுத்த வேண்டுமா? என்ற
கேள்வி எழலாம். இதற்கான பதிலை இன்றைய இரண்டாம் வாசகம் தருகின்றது.
திருத்தூதர் புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில்,
"கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு
சார்ந்தவற்றை நாடுங்கள்" என்பார். முன்னதாக இயேசு, நாம் இவ்வுலகைச்
சார்ந்தவர் அல்ல (யோவா 17: 14) என்று கூறியிருப்பார்.
புனித பவுல் இக்கருத்தோடு சேர்த்து, நாம் மேலுலகு சார்ந்தவற்றை
நாடவேண்டும் என்ற கருத்தினையும் வலியுறுத்திக்
கூறுகின்றார். இன்றைக்கு ஒருசிலர் கிறிஸ்தவர்களாக இருந்துகொண்டு
தன்னலத்தோடும், தான் என்ற ஆணவத்தோடும் தான்தோன்றித் தனமாக
வாழ்வதைக் காணமுடிகின்றது. வேறு சிலர், அடுத்தவர்மட்டில்
எந்தவோர் அக்கறையில்லாமலும், கரிசனை இல்லாமலும் வாழ்வதைக்
காண முடிகின்றது. "ஆன்மாவின் பெருந்தன்மை என்பது நாம் எத்தனை
சந்தர்பங்களில் இரக்கம் காட்டுகின்றோம் என்பதை பொறுத்ததே!"
என்பார் ஆங்கிலக் கவிஞர் பேகன். எனவே, நாம் தன்னலத்தையும்
தான் என்ற அகந்தையும் துறந்து, அடுத்தவர் மட்டில் இரக்கமும்
அன்பும்கொண்டு மேலுலகு சார்ந்த வாழ்ந்து, இயேசுவின் உயிர்ப்புக்குச்
சாட்சிகளாய் விளங்குவோம்.
சிந்தனை:
'நாமெல்லாம் உயிர்ப்பின் மக்கள்; அல்லேலூயா என்பதே நமது பாடல்'
என்பார் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால். எனவே, உயிர்ப்பின்
மக்களாகிய நாம், இவ்வுலகு சார்ந்த வாழ்க்கை வாழாமல், மேலுலகு
சார்ந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவகாப்
பெறுவோம்.
|
I திருத்தூதர் பணிகள் 10: 34, 37-43.
II கொலோசையர் 3: 1-4.
III யோவான் 20: 1-9
"நாம் சாட்சிகள்" - உயிர்ப்பில் நம்பிக்கையில்லாத
பெண்மணி
கிறிஸ்தவராக இருந்தாலும் அந்தப் பெண்மணிக்கு உயிர்ப்பின்மீது
நம்பிக்கை கிடையாது. அப்படிப்பட்டவர் தனது இறப்பு நெருங்கி
வருவதை அறிந்து தன்னுடைய நண்பரிடம், "நான் இறந்தபிறகு என்னுடைய
கல்லறையின்மேல் பெரிய பெரிய சலவைக் கற்களை வைத்துப்
பூசிவிடுங்கள். மேலும், என்னுடைய உடல் இப்போது இருப்பதுபோல்
நான் இறந்த பின்னும் இருக்கவும், அது உயிர்க்காத வண்ணமாய்
இருக்கவும் இரும்புக் கம்பிகள் போட்டு அடைத்துவிடுங்கள்"
என்றார்.
அவர் இவ்வாறு சொன்ன ஒருசில நாள்களிலேயே இறந்தார். அதன்பிறகு
அவர் சொன்னது போன்றே அவரது நண்பர் அவரது கல்லறையின்மீது
பெரிய பெரிய சலவைக் கற்களை வைத்துப் பூசி, அதன்மேல் இரும்புப்
கம்பிகளை வைத்துக் கட்டினார்.
ஆண்டுகள் மெல்ல உருண்டோடின. உயிர்ப்பின்மீது நம்பிக்கை இல்லாமல்
இறந்த அந்தப் பெண்மணியின் கல்லறையில் லேசாக விரிசல் விழுந்தது.
காலப்போக்கில் அந்த விரிசலிலிருந்து ஒரு செடி முளைத்து வளர்ந்து,
அது மிகப்பெரிய மரம் வந்தது. அதைப் பார்த்து விட்டு, அப்பகுதியில்
இருந்த மக்கள் அனைவரும், "உயிர்ப்பின்மீது நம்பிக்கையில்லாத
இந்தப் பெண்மணியின் கல்லறையிலிருந்தே கடவுள் உயிர்ப்புக்குச்
சாட்சியாக இவ்வளவு பெரிய மரத்தைத் தோன்றச் செய்தார்" என்று
அவரைப் போற்றிப் புகழ்ந்தனர்.
ஆம், உயிர்ப்பு என்பது புதிய வாழ்விற்கான தொடக்கம். இன்றைய
நாளில் ஆண்டவருடைய உயிர்ப்புப் பெருவிழாவைக்
கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நமக்குத் தரும் செய்தியும்,
நமக்கு விடுக்கும் அழைப்பும் என்ன என்று சிந்திப்போம்.
சொன்னபடி உயிர்த்த கிறிஸ்து
"இவன் கடவுளுடைய திருக்கோயிலை இடித்து, அதை மூன்று நாளில்
கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்" (மத் 26:61) என்பதுதான்
தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தாரும் இயேசுவின்மீது
சுமத்திய குற்றசாட்டாகும். இயேசு தமது உடலாகிய கோயிலைப் பற்றிச்
சொல்லியிருந்தாலும் (யோவா 2:21), அது அவர்களுக்குப் புரியவில்லை.
ஆனால், இயேசு தாம் சொன்னது போன்றே சாவை வென்று, மூன்றாம்
நாள் உயிர்த்தெழுந்தார்.
தாம் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவது பற்றி இயேசு தம்
சீடர்களுக்குப் பலமுறை முன்னறிவித்திருந்தார் (மத் 16:21;
மாற் 16:21, 9:31; லூக் 9:22) அப்படியிருந்தும் அவர்கள்
அவர் சொன்னதை நம்பாமல் இருந்தார்கள். இந்நிலையில், வாரத்தின்
முதல் நாள், விடியற்காலை வேளையில் இயேசு அடக்கம் செய்து
வைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு வரும் மகதலா மரியா கல்லறையில்
இயேசுவின் உடல் இல்லாததைக் கண்டு, திருத்தூதர்களிடம்
விரைந்து வந்து செய்தியைச் சொல்கிறார். இதன்பிறகு கல்லறைக்கு
வரும் யோவான் இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டு, மற்ற
துணிகளோடு இல்லாமல், ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டு
கண்டு, இயேசு உண்மையாகவே உயிர்த்து விட்டார் என்று நம்புகின்றார்.
இங்கு யோவான் எப்படி இயேசு உயிர்த்துவிட்டார் என நம்பினார்
என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசுவின் நண்பரான இலாசர்
உயிர்பெற்றபோது அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன.
முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது (யோவா 11:44) இயேசு உயிர்த்தெழுந்தபோது,
அவரது தலையை மூடியிருந்த துண்டு, மற்ற துணிகளோடு இல்லாமல்,
ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்து. இதைக்
கண்டு யோவான் இயேசு உயிர்த்தெழுந்து விட்டார் என்று நம்புகின்றார்.
மேலும் ஒருவேளை இயேசுவின் உடலை யாராவது எடுத்துச்
சென்றிருந்ததால், அவரது உடலை மூடியிருந்த துணியோடுதான் எடுத்துச்
சென்றிருக்க வேண்டும். அது அங்கு நடக்கவில்லை. எனவேதான் இயேசு
உயிர்த்தெழுந்துவிட்டார் என்று நம்புகின்றார் யோவான். இவ்வாறு
இயேசு எந்தவோர் ஐயத்திற்கும் இடமில்லாமல் சொன்னபடி உயிர்த்தெழுந்தார்.
சாட்சிகளாக மாறிய சீடர்கள்
ஒருவேளை இயேசு மட்டும் உயிர்த்தெழுந்திருக்காவிட்டால் என்ன
நடந்திருக்கும் என்று சிறிது கற்பனை செய்து பார்ப்போம். சீடர்கள்,
முன்பு தாங்கள் செய்து வந்த வேலையைச் செய்யக் கிளம்பியிருப்பார்கள்.
இயேசுவோடு தாங்கள் இருந்ததால், தங்களுக்கும் அவருக்கு ஏற்பட்ட
நிலைமைதான் ஏற்படும் என்று அஞ்சி அஞ்சி வாழ்ந்திருப்பர்.
சிறிது காலத்திற்கு இயேசுவைப் பற்றி அவர்கள் நினைத்துப்
பார்த்து வருந்தியிருக்கலாம். சிலுவையைப் பற்றிய அச்சம்
அவர்களுக்கு எப்போதும் இருந்துகொண்டே இருந்திருக்கும். ஆனால்,
இயேசுவின் உயிர்ப்பு இவை எல்லாவற்றையும் முற்றிலுமாக
மாற்றிப் போடுகின்றது.
உயிர்த்த ஆண்டவரின் அனுபவத்தைப் பெற்ற சீடர்கள், அதிலும்
குறிப்பாக, உயிருக்கு அஞ்சி அவரை மும்முறை மறுதலித்த
பேதுரு, நாசரேத்து இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச்
செய்தார். இதற்கு நாங்கள் சாட்சிகள் என்று துணிவோடு அறிவிக்கின்றார்.
அதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் வாசிக்கின்றோம். இதுதான்
உயிர்த்த ஆண்டவர் இயேசு தம் சீடர்களிடம் ஏற்படுத்திய மாற்றம்
ஆகும். அன்று இயேசுவின் சீடர்கள், அவரது உயிர்ப்பைத் தங்கள்
வாழ்வாலும் வார்த்தையாலும் அறிவித்து இயேசுவுக்குச் சாட்சிகளாகத்
திகழ்ந்தார். நாம் எவ்வாறு இயேசுவின் உயிர்ப்புக்குச்
சாட்சிக்லாகத் திகழப்போகின்றோம் என்பதுதான் நமக்கு முன்பாக
இருக்கும் கேள்வியாக இருக்கின்றது.
நாம் எப்போது சாட்சிகளாக இருக்கப்போகிறோம்?
புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய இரண்டாம் வாசகத்தில், "நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று
எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்" என்று
வாசிக்கின்றோம். மேலுலகு சார்ந்தவற்றை நாடுவதுதான் இயேசுவுவின்
உயிர்ப்புக்குச் சாட்சியாக வாழ்வதாகும். இது பற்றிப் புனித
பவுல் கீழ்க்காணும் பகுதிகளில் இன்னும் தெளிவாக விளக்குகின்றார்
(உரோ 8:5, 12:2, பிலி 1:23, 4:8)
இயேசுவின் உயிர்ப்புச் சாட்சியாக திகழ்கின்றபோது அல்லது
மேலுலகு சார்ந்தவற்றை நாடுகின்றபோது கடவுள் நமக்கு என்னென்ன
ஆசிகளை வழங்குவார் என்ற கேள்வி எழலாம். இது பற்றிப் பவுல்
இன்றைய இரண்டாம் வாசகத்தின் இரண்டாவது பகுதியில் தெளிவாக
விளக்குகின்றார். நாம் மேலுலகு சார்ந்தவற்றை நாடுகின்றபோது
நிலைவாழ்வை அளிக்கும் கடவுளோடு நமது வாழ்வு இணைந்திருக்கும்.
அதைவிடவும் ஆண்டவர் இயேசு தோன்றும்போது, நாம் அவரோடு
மாட்சி பொருந்தியவர்களாய்த் தோன்றுவோம். இத்தகைய ஆசிகளை
நாம் பெற இயேசுவுக்குச் சாட்சிகளாகத் திகழ்வது இன்றியமையாதது.
எனவே, இயேசுவின் உயிர்ப்பில் பெருமிதம் கொள்வோம். அந்த உயிர்த்த
ஆண்டவர் நமக்கு எல்லா ஆசிகளையும் வழங்க, நாம் அவருக்குச்
சான்று பகர்ந்து வாழ்வோம்.
சிந்தனைக்கு: "இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொள்ளும்
ஒருவரால் முன்பு வாழ்ந்த வாழ்க்கையையே வாழ்ந்து
கொண்டிருக்க முடியாது. அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம்
ஏற்பட்டிருக்க வேண்டும் என்பார் ஜெர்மனியைச் சேர்ந்த
வோல்ஃப்ஹர்ட் பன்னன்பெர்க் (Wolfhart Pannenberg) என்ற அறிஞர்.
எனவே, இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொள்ளும் நாம் மண்ணுலகு
சார்ந்தவற்றை நாடாமல், மேலுலகு சார்ந்தவற்றை நாடுவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்ரோ அமெரிக்க இனத்தைச்
சார்ந்த ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். இதை அறிந்த
ஒருசிலர் அவரிடம், "நீங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறியதன்
காரணம் என்ன?" என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம்,
"நீங்கள் ஓர் ஊருக்குச் செல்கிறீர்கள் என்று
வைத்துக்கொள்வோம். அந்த ஊர் உங்களுக்குப் புதிது... போகிற
வழியில் இரண்டு பாதைகள் பிரிகின்றன. அப்படியிருக்கும்பொழுது
ஒரு பாதையின் ஓரத்தில் பிணமும் இன்னொரு பாதையின் ஓரத்தில்
நன்றாக இருக்கும் ஒரு மனிதரும் இருந்தால், நீங்கள் யாரிடம்
போகும் ஊருக்கான வழியைக் கேட்பீர்கள்?" என்று கேட்டார்.
"இதிலென்ன சந்தேகம் நன்றாக இருக்கும் மனிதரிடம்தான்
கேட்போம்" என்றார்கள் அந்த மனிதரிடம் கேள்வி கேட்டவர்கள்.
உடனே கிறிஸ்தவ மதத்திற்குப் புதிதாக மாறியவர் அவர்களிடம்,
"நீங்கள் சொன்னது மிகவும் சரியான பதில். எப்படி நீங்கள்
புதிதாகப் போகும் ஊருக்கான வழியை ஒரு பிணத்திடம் கேட்காமல்,
நன்றாக இருக்கும் ஒரு மனிதரிம் கேட்பீர்களோ, அதுபோன்றுதான்
நானும், (இறந்தும் உயிர்த்தெழுந்து) இன்றைக்கும்
வாழ்ந்துகொண்டிருக்கின்ற கடவுள் யாரெனத் தேடித்
பார்த்தேன். கடைசியில் நான் தேடுகின்ற கடவுள் இயேசுதான் என்பதை
உணர்ந்து, அவரைப் பின்பற்றத் தொடங்கினேன்" என்றார்.
அந்த மனிதர் சொல்வதுபோன்று இயேசு ஒருவர்தான் சாவை வென்று,
வெற்றிவீரராய் உயிர்த்தெழுந்தவர். அப்படிப்பட்ட ஒருவருடைய
உயிர்ப்பைத்தான் இன்று நாம் பெருவிழாவாகக்
கொண்டாடுகின்றோம். எனவே, இந்நன்னாளில் இயேசுவின் உயிர்ப்பு
எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது? அது நமக்கு உணர்த்தும்
செய்திகள் என்ன என்று சிந்தித்துப் பார்த்து
நிறைவுசெய்வோம்.
இயேசுவின் உயிர்ப்பு கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளம்
தூய பவுல் கூறுவார், "கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை
என்றால், நாங்கள் அறிவித்த நற்செய்தியும் நீங்கள்
கொண்டிருக்கின்ற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்." (1
கொரி 15: 14) தூய பவுலின் இவ்வார்த்தைகள் இயேசுவின் உயிர்ப்புதான்
கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளம் என்பதை உறுதியாக எடுத்துச்
சொல்கின்றன. மேலும் இயேசு தன்னுடைய உயிர்ப்பின்மூலம், தான்
இறைமகன் என்பதை (திப 2: 32-36; உரோ 1:4) கடவுள் தனக்குக்
கொடுத்த, மனிதர்களை கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கும் பணியைச்
(உரோ 4: 24-25) செவ்வனே செய்து, நிறைவுசெய்துவிட்டேன் என்பதையும்
நிரூபித்துக் காட்டுகின்றார்.
இது ஒருபுறமிருக்க, இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள்,
"இயேசு உயிர்த்தெழவில்லை... அவருடைய சீடர்கள்தான் அவரது
உடலைத் திருடிக்கொண்டு போய்விட்டனர்" என்ற பொய்யான
செய்தியை மக்கள் மத்தியில் பரப்பத் தொடங்கினார்கள் (மத்
28: 13). இங்கு இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் சொல்வதுபோன்று,
இயேசுவின் சீடர்கள் அவருடைய உடலைத் திருடிக்கொண்டு போனதற்கான
ஏதாவது சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா? என்றால், இல்லை
என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், இயேசு இறந்து உயிர்த்தெழுவார்
என்பதை இயேசுவின் எதிரிகள் நம்பிய அளவுக்கு (மத் 27:
62-66) அவருடைய சீடர்கள் நம்பவில்லை. இதைவிடவும் படைவீரர்களால்
காவல்காக்கப்பட்ட இயேசுவின் கல்லறைக்குச் செல்லும் அளவுக்கு
இயேசுவின் சீடர்கள் அவ்வளவு துணிச்சல் கிடையாது. காரணம்,
அவர்கள் தங்களை அறைக்குள் அடைத்துக்கொண்டு வாழ்ந்த பயந்தாங்கோழிகளாக
இருந்தார்கள். அப்படி இருக்கையில் இயேசுவின் சீடர்கள் அவருடைய
உடலைத் திருடிக்கொண்டு போவதற்கு வாய்ப்பே இல்லை. மாறாக, இயேசு
தான் சொன்னபடியே (மாற் 8:31; மத் 17:22; லூக் 9:22; யோவா
2:19) உயிர்த்தெழுந்தார் என்பதுதான் உண்மை.
ஆகவே, யாராலும் மறுக்கமுடியாத அளவுக்கு உண்மையிலும் உண்மையாக
இருக்கும் இயேசுவின் உயிர்ப்பு, கிறித்தவ வாழ்வின் அடித்தளம்
என்று சொன்னால் அது மிகையாகாது.
இயேசுவின் உயிர்ப்பு நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற
நம்பிக்கையைத் தருகின்றது
இயேசுவின் உயிர்ப்பு நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற
நம்பிக்கையைத் தருகின்றது என்றால் அது மிகையாகாது.
"இறுதிநாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் (லாசரும்) உயிர்த்தெழுவான்"
என்று சொன்ன மார்த்தாவுக்குப் பதிலளிக்கும் இயேசு,
"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர்
இறப்பினும் வாழ்வார்" என்பார். (யோவா 11: 24-25) இயேசு
கூறும் இவ்வார்த்தைகள், யாராரெல்லாம் அவர்மீது நம்பிக்கை
கொண்டு வாழ்கின்றார்களோ அவர்கள் இறந்தபின்னும் வாழ்வார்கள்
என்பதை எடுத்துச் சொல்கின்றது. தூய பவுலும் இதைத்தான்,
"அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்" (2திமொ 2:11) என்று
கூறுகின்றார். ஆகவே, இயேசுவைப் போன்று நாமும் ஒரு நாள் உயிர்த்தெழ
அவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வது தேவையான ஒன்று.
இயேசுவின் உயிர்ப்பு பாவத்திற்கு இறந்து கடவுளுக்காக
வாழ்வதற்கான ஓர் அழைப்பு
ஒரு தந்தையும் அவருடைய சிறு வயது மகனும் ஒரு கிராமச்
சாலையின் வழியாக, நான்கு சக்கர வாகனத்தில்
சென்றுகொண்டிருந்தார்கள். அப்பொழுது தேன்குளவி ஒன்று சிறுவனுக்கு
முன்பாக அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்தது. அதைப்
பார்த்த பயந்துபோன மகன் தன் தந்தையிடம், அதை அங்கிருந்த விரட்டும்படி
சொன்னான். தந்தையோ அந்தத் தேன்குளவியைப் பிடித்து வெளியே
எறிந்தார். அப்படியும் மகனுக்குத் தேன்குளவியைப் பற்றிய
பயம் போகவில்லை. எனவே, அவன் தன் தந்தையிடம், "அப்பா! அந்தத்
தேன்குளவி தன்னிடம் இருக்கும் கொடுக்கால் என்னைக்
கொட்டினால், வலியில் உயிர்போய்விடும்" என்றான். அதற்குத்
தந்தை அவனிடம், "அந்த தேன்குளவி இனிமேல் உன்னைக் கொட்டுவதற்கு
வாய்ப்பில்லை. ஏனெனில், அது என்னை ஏற்கனவே கொட்டிவிட்டது"
என்று தன்னுடைய கையில் இருந்த அதன் கொடுக்கைக் காட்டினார்.
எப்படி அந்தத் தந்தை தன் மகனைக் தேன்குளவி கொட்டிவிடக்கூடாது
என்பதற்காக தன்மேல் குளவியின் கொட்டினை வாக்கிக் கொண்டாரோ,
அதுபோன்று இந்த மனுக்குலத்தின்மீது பாவம்/சாவு வெற்றிகொள்ளக்கூடாது
என்பதற்காக இயேசு தன்மீது சாவினை ஏற்றுக்கொண்டு, இறுதியில்
அதை வெற்றி கொண்டார். அதனால்தான் தூய பவுல், "சாவே உன்
வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கோ?" என்று
கேட்கின்றார் (1 கொரி 15: 55). அப்படியென்றால் பாவம் அழிக்கப்பட்டு
(உரோ6: 10-11) நாம் அனைவரும் புதுபிறப்பாக
மாறியிருக்கின்றோம் என்பது உண்மையாகின்றது.
எனவே, புதுப்பிறப்பாக மாறியிருக்கும் நாம், மீண்டும் பழைய
பாவ வாழக்கை வாழாமல், புதிய இயல்புகளான (கலா 5:22) அன்பு,
பரிவு, பொறுமை, நம்பிக்கை போன்றவற்றை அணிந்துகொண்டு வாழவேண்டும்.
அப்பொழுதுதான் இயேசு இறந்து, உயிர்த்ததற்கு அர்த்தமிருக்கும்.
அப்படியில்லாமல், நாம் பழைய பாவ வாழ்க்கையை வாழ்ந்தால், இயேசுவின்
உயிர்ப்பு எந்தவிதத்திலும் அர்த்தம் பெறாது.
சிந்தனை
"நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு
சார்ந்தவை நாடுங்கள்" என்பார் தூய பவுல் (கொலோ 3:1). ஆகவே,
இயேசுவின் உயிர்ப்புக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில்,
மேலுலகு சார்ந்த காரியங்களான அன்பு, இரக்கம், மன்னிப்பு
போன்றவற்றால் நம்மை அணிந்துசெய்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய்ப் பெறுவோம்.
|
ஒரு குருவானவர் பாஸ்கா வாரத்தில்
மறைக்கல்வி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, "உன்
வாழ்வில் ஈஸ்டர் பற்றி விவரிக்கும் ஒரு அடையாளத்தை வரை" என்ற
போட்டியைத் தொடங்கினார்.
ஒரு பையன் ஒரு எரியும் பாஸ்கா மெழுகுதிரி வரைந்தான்.
ஒருவன் திருமுழுக்குத் தொட்டியும் அதற்கு அருகில் தீர்த்தம்
நிறைந்த பாத்திரத்தையும் வரைந்தான்.
ஒருவன் காலியான கல்லறையை வரைந்து உயிர்த்தார் இயேசு அல்லேலூயா
என்று எழுதினான். இப்படிப் பலரும் பலவிதமாக வரைந்தனர்.
ஆனால் ஒருவன் எரியும் சிறிய விளக்கை வரைந்து அதன் அருகில்
அழுகின்ற குழந்தையை மடியில் இட்டு அழாதே என்று தாலாட்டும்
தாயை வரைந்து பயப்படாதே மகனே! எல்லாம் சரியாகிவிட்டது என்று
தாய் கூறுவதுபோல் வரைந்தான்.
ஆம்! இதைத்தான் இன்று உயிர்த்த நம் ஆண்டவர் பெருவிழா
நமக்குத் தெரிவிக்கிறது.
ஆண்டவர் இயேசு உயிர்த்த பின் அம்மா! ஏன் அழுகிறாய் என்று
மரிய மதலேனாளுக்கு ஆறுதல் தருகின்றார்.
சீடர்கள் தனியாகக் கதவுகளைப் பூட்டிப் பயந்து உள்ளே
இருந்தபோது அஞ்சாதீர்கள் - உங்களுக்கு அமைதி உரித்தாகுக
என்றார் (யோவா. 20:2 லூக், 24:38). ஏன் பயப்படுகிறீர்கள்?
அவர் சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழ
வேண்டும் என்று சொன்னாரே (லூக். 24:7). அவர் உயிருடன்
எழுப்பப்பட்டார் என்று வானதூதர்கள் அறிவிக்கிறார்கள்.
மரிய மதலேனாள் வெறுமையான கல்லறையைக் கண்டாள். பயந்தாள்.
அழுதாள். இராயப்பர் கல்லறையைக் கண்டார். ஆனால் கலங்கினார்.
பெரிய வெள்ளிக்கிழமை மனப்பான்மையில் இருந்தார். ஆனால்
அருளப்பரோ வெறுமையான கல்லறையைக் கண்டார். விசுவாசம்
கொண்டார்.
ஆம்! நாம் பாவத்தை விட்டால்தான் உயிர்த்த இயேசுவைக் காண
முடியும். உலகிற்குச் சாட்சி பகர முடியும்.
இதைத்தான் புனித பவுல் அடிகளார் மேலே உள்ளவற்றை நாடுங்கள்
(1 கொரி. 3:1-2) என்கிறார். மேல் உள்ளவைகளை நாட நாம்
பாவத்தை விட்டுவிட வேண்டும். முந்த முந்த இறைவனின் இறையரசை
நாம் தேட வேண்டும்.
புனித யோவான் கூறுவதுபோல, கண்ணால் காணக்கூடிய நம் சகோதரனை
நாம் ஏற்று அன்பு செய்ய வேண்டும். அப்போதுதான் கண்ணால்
காணமுடியாத அந்த உயிர்த்த ஆண்டவரை நாம் காண முடியும்.
அன்பு செய்ய முடியும் (1 யோவா. 4:18-20). |
I திருத்தூதர் பணிகள் 10: 34, 37-43.
II கொலோசையர் 3: 1-4.
III யோவான் 20: 1-9
":நாம் சாட்சிகள்":
உயிர்ப்பில் நம்பிக்கையில்லாத பெண்மணி: கிறிஸ்தவராக
இருந்தாலும் அந்தப் பெண்மணிக்கு உயிர்ப்பின்மீது நம்பிக்கை
கிடையாது. அப்படிப்பட்டவர் தனது இறப்பு நெருங்கி வருவதை
அறிந்து தன்னுடைய நண்பரிடம், ":நான் இறந்தபிறகு என்னுடைய
கல்லறையின்மேல் பெரிய பெரிய சலவைக் கற்களை வைத்துப்
பூசிவிடுங்கள். மேலும், என்னுடைய உடல் இப்போது
இருப்பதுபோல் நான் இறந்த பின்னும் இருக்கவும், அது
உயிர்க்காத வண்ணமாய் இருக்கவும் இரும்புக் கம்பிகள் போட்டு
அடைத்துவிடுங்கள்": என்றார்.
அவர் இவ்வாறு சொன்ன ஒருசில நாள்களிலேயே இறந்தார்.
அதன்பிறகு அவர் சொன்னது போன்றே அவரது நண்பர் அவரது
கல்லறையின்மீது பெரிய பெரிய சலவைக் கற்களை வைத்துப் பூசி,
அதன்மேல் இரும்புப் கம்பிகளை வைத்துக் கட்டினார்.
ஆண்டுகள் மெல்ல உருண்டோடின. உயிர்ப்பின்மீது நம்பிக்கை
இல்லாமல் இறந்த அந்தப் பெண்மணியின் கல்லறையில் லேசாக
விரிசல் விழுந்தது. காலப்போக்கில் அந்த விரிசலிலிருந்து
ஒரு செடி முளைத்து வளர்ந்து, அது மிகப்பெரிய மரம் வந்தது.
அதைப் பார்த்து விட்டு, அப்பகுதியில் இருந்த மக்கள்
அனைவரும், ":உயிர்ப்பின்மீது நம்பிக்கையில்லாத இந்தப்
பெண்மணியின் கல்லறையிலிருந்தே கடவுள் உயிர்ப்புக்குச்
சாட்சியாக இவ்வளவு பெரிய மரத்தைத் தோன்றச் செய்தார்": என்று
அவரைப் போற்றிப் புகழ்ந்தனர்.
ஆம், உயிர்ப்பு என்பது புதிய வாழ்விற்கான தொடக்கம். இன்றைய
நாளில் ஆண்டவருடைய உயிர்ப்புப் பெருவிழாவைக்
கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நமக்குத் தரும் செய்தியும்,
நமக்கு விடுக்கும் அழைப்பும் என்ன என்று சிந்திப்போம்.
சொன்னபடி உயிர்த்த கிறிஸ்து
":இவன் கடவுளுடைய திருக்கோயிலை இடித்து, அதை மூன்று நாளில்
கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்": (மத் 26:61)
என்பதுதான் தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தாரும்
இயேசுவின்மீது சுமத்திய குற்றசாட்டாகும். இயேசு தமது
உடலாகிய கோயிலைப் பற்றிச் சொல்லியிருந்தாலும் (யோவா 2:21),
அது அவர்களுக்குப் புரியவில்லை. ஆனால், இயேசு தாம் சொன்னது
போன்றே சாவை வென்று, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
தாம் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவது பற்றி இயேசு தம்
சீடர்களுக்குப் பலமுறை முன்னறிவித்திருந்தார் (மத் 16:21;
மாற் 16:21, 9:31; லூக் 9:22) அப்படியிருந்தும் அவர்கள்
அவர் சொன்னதை நம்பாமல் இருந்தார்கள். இந்நிலையில்,
வாரத்தின் முதல் நாள், விடியற்காலை வேளையில் இயேசு அடக்கம்
செய்து வைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு வரும் மகதலா மரியா
கல்லறையில் இயேசுவின் உடல் இல்லாததைக் கண்டு,
திருத்தூதர்களிடம் விரைந்து வந்து செய்தியைச் சொல்கிறார்.
இதன்பிறகு கல்லறைக்கு வரும் யோவான் இயேசுவின் தலையை
மூடியிருந்த துண்டு, மற்ற துணிகளோடு இல்லாமல், ஓரிடத்தில்
தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டு கண்டு, இயேசு உண்மையாகவே
உயிர்த்து விட்டார் என்று நம்புகின்றார்.
இங்கு யோவான் எப்படி இயேசு உயிர்த்துவிட்டார் என நம்பினார்
என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசுவின் நண்பரான
இலாசர் உயிர்பெற்றபோது அவருடைய கால்களும் கைகளும் துணியால்
சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது
(யோவா 11:44) இயேசு உயிர்த்தெழுந்தபோது, அவரது தலையை
மூடியிருந்த துண்டு, மற்ற துணிகளோடு இல்லாமல், ஓரிடத்தில்
தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்து. இதைக் கண்டு யோவான்
இயேசு உயிர்த்தெழுந்து விட்டார் என்று நம்புகின்றார்.
மேலும் ஒருவேளை இயேசுவின் உடலை யாராவது எடுத்துச்
சென்றிருந்ததால், அவரது உடலை மூடியிருந்த துணியோடுதான்
எடுத்துச் சென்றிருக்க வேண்டும். அது அங்கு நடக்கவில்லை.
எனவேதான் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்று
நம்புகின்றார் யோவான். இவ்வாறு இயேசு எந்தவோர்
ஐயத்திற்கும் இடமில்லாமல் சொன்னபடி உயிர்த்தெழுந்தார்.
சாட்சிகளாக மாறிய சீடர்கள்
ஒருவேளை இயேசு மட்டும் உயிர்த்தெழுந்திருக்காவிட்டால் என்ன
நடந்திருக்கும் என்று சிறிது கற்பனை செய்து பார்ப்போம்.
சீடர்கள், முன்பு தாங்கள் செய்து வந்த வேலையைச் செய்யக்
கிளம்பியிருப்பார்கள். இயேசுவோடு தாங்கள் இருந்ததால்,
தங்களுக்கும் அவருக்கு ஏற்பட்ட நிலைமைதான் ஏற்படும் என்று
அஞ்சி அஞ்சி வாழ்ந்திருப்பர். சிறிது காலத்திற்கு
இயேசுவைப் பற்றி அவர்கள் நினைத்துப் பார்த்து
வருந்தியிருக்கலாம். சிலுவையைப் பற்றிய அச்சம் அவர்களுக்கு
எப்போதும் இருந்துகொண்டே இருந்திருக்கும். ஆனால்,
இயேசுவின் உயிர்ப்பு இவை எல்லாவற்றையும் முற்றிலுமாக
மாற்றிப் போடுகின்றது.
உயிர்த்த ஆண்டவரின் அனுபவத்தைப் பெற்ற சீடர்கள், அதிலும்
குறிப்பாக, உயிருக்கு அஞ்சி அவரை மும்முறை மறுதலித்த
பேதுரு, நாசரேத்து இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச்
செய்தார். இதற்கு நாங்கள் சாட்சிகள் என்று துணிவோடு
அறிவிக்கின்றார். அதை இன்றைய இரண்டாம் வாசகத்தில்
வாசிக்கின்றோம். இதுதான் உயிர்த்த ஆண்டவர் இயேசு தம்
சீடர்களிடம் ஏற்படுத்திய மாற்றம் ஆகும். அன்று இயேசுவின்
சீடர்கள், அவரது உயிர்ப்பைத் தங்கள் வாழ்வாலும்
வார்த்தையாலும் அறிவித்து இயேசுவுக்குச் சாட்சிகளாகத்
திகழ்ந்தார். நாம் எவ்வாறு இயேசுவின் உயிர்ப்புக்குச்
சாட்சிக்லாகத் திகழப்போகின்றோம் என்பதுதான் நமக்கு முன்பாக
இருக்கும் கேள்வியாக இருக்கின்றது.
நாம் எப்போது சாட்சிகளாக இருக்கப்போகிறோம்?
புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து
எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், ":நீங்கள்
கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு
சார்ந்தவற்றை நாடுங்கள்": என்று வாசிக்கின்றோம். மேலுலகு
சார்ந்தவற்றை நாடுவதுதான் இயேசுவுவின் உயிர்ப்புக்குச்
சாட்சியாக வாழ்வதாகும். இது பற்றிப் புனித பவுல்
கீழ்க்காணும் பகுதிகளில் இன்னும் தெளிவாக விளக்குகின்றார்
(உரோ 8:5, 12:2, பிலி 1:23, 4:8)
இயேசுவின் உயிர்ப்புச் சாட்சியாக திகழ்கின்றபோது அல்லது
மேலுலகு சார்ந்தவற்றை நாடுகின்றபோது கடவுள் நமக்கு
என்னென்ன ஆசிகளை வழங்குவார் என்ற கேள்வி எழலாம். இது
பற்றிப் பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தின் இரண்டாவது
பகுதியில் தெளிவாக விளக்குகின்றார். நாம் மேலுலகு
சார்ந்தவற்றை நாடுகின்றபோது நிலைவாழ்வை அளிக்கும் கடவுளோடு
நமது வாழ்வு இணைந்திருக்கும். அதைவிடவும் ஆண்டவர் இயேசு
தோன்றும்போது, நாம் அவரோடு மாட்சி பொருந்தியவர்களாய்த்
தோன்றுவோம். இத்தகைய ஆசிகளை நாம் பெற இயேசுவுக்குச்
சாட்சிகளாகத் திகழ்வது இன்றியமையாதது. எனவே, இயேசுவின்
உயிர்ப்பில் பெருமிதம் கொள்வோம். அந்த உயிர்த்த ஆண்டவர்
நமக்கு எல்லா ஆசிகளையும் வழங்க, நாம் அவருக்குச் சான்று
பகர்ந்து வாழ்வோம்.
சிந்தனைக்கு: ":இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொள்ளும்
ஒருவரால் முன்பு வாழ்ந்த வாழ்க்கையையே வாழ்ந்து
கொண்டிருக்க முடியாது. அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய
மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பார் ஜெர்மனியைச்
சேர்ந்த வோல்ஃப்ஹர்ட் பன்னன்பெர்க் (Wolfhart Pannenberg)
என்ற அறிஞர். எனவே, இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை
கொள்ளும் நாம் மண்ணுலகு சார்ந்தவற்றை நாடாமல், மேலுலகு
சார்ந்தவற்றை நாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்.
|
இறைவாக்கு
ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள்
பாளையங்கோட்டை |
பெரியவர் ஒருவர் மரணப் படுக்கையில்
இருந்தார். சாவின் காரணமாகவும், முதுமையின் காரணமாகவும் முனங்கல்
சப்தத்தில் இருந்தார். மூடிய கண்களோடு இருந்தவர், மூத்த
மகன் எங்கே? என்று கேட்டார். அப்பா, உங்கள் கால்
மாட்டில்தான் நிற்கிறேன் என்றான். அடுத்ததாகப் பெரியவர் என்
நடுமகன் எங்கே என்று கேட்டார். உங்கள் அருகில் தான்
நிற்கிறேன் என்றான். இளைய மகன் எங்கே என்று மூன்றாம்
முறையாகக் கேட்டார். அவனோ, அப்பா! உங்கள் தலைமாட்டில்தான்
நிற்கிறேன் என்று பதில் கொடுத்தான். கவலைப்படாதீர்கள் என்றும்
சொன்னான். பெரியவரோ எரிச்சலோடு மூன்று பேரும் இங்கே சும்மா
ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள். நான் நடத்திய பெட்டிக்கடையை
நடத்துவது யார்? என்று கேட்டார். தான் நடத்திய வியாபாரத்தைத்
தொடந்து நடத்த வேண்டும் என்று அந்த பெரியவர் எதிர்பார்த்தது
தவறு அல்ல. இவ்வுலகில் பெரும்பாலான மனிதர்கள், தங்கள் பணியை,
தங்கள் வாரிசுகள் தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இயேசுவுக்கு இது விதிவிலக்கல்ல. மூன்று ஆண்டுகள் இரவும்,
பகலும் கடினமாக உழைத்து இறையரசுக்குப் பணி ஆற்றினார். உவமைகள்,
புதுமைகள், போதனைகள், பாடுகள், துன்பங்கள் பல பட்டு மக்களுக்கு
இறையரசைப் போதித்தார். தன் இறையரசுப் பணியைத் தம் சீடர்கள்
தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்,
நோக்கம்.
உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்
(மாற். 16:15) என்றார். எனவேதான் இன்றைய முதல் வாசகம்
திருத்தூதர் பணியில் வானதூதர் சீடர்களை நோக்கி: கலிலேயரே!
நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே
நிற்கிறீர்கள்? (தி.ப. 1:11). புறப்பட்டு இதற்கு சாட்சியாக
நீங்கள் செல்லுங்கள் (லூக். 24:48) என்றார்.
I. இன்றைய விண்ணேற்பு விழா நமக்கு உணர்த்துவது என்ன?
1. கிறிஸ்தவ வாழ்வு என்பது ஒரு தொடர் ஓட்டம். தொடர் ஓட்டத்தில்
ஒருவர் ஓடி முடிந்த பின் மற்றொருவர் அவரிடமிருந்து கொடிக்
குச்சியை வாங்கிக் கொண்டு ஓடுகிறார். இந்தத் தொடர் ஓட்டத்தில்
ஒருவர் சரியாக ஓடவில்லை என்றால் ஒட்டுமொத்த வெற்றிக் கனியை
எட்ட முடியாது. இயேசுவின் பணிவாழ்வு முடிந்தபின் அவரது பணியைத்
தொடர்ந்து ஆற்ற சீடர்களும், இன்று நாமும் அழைக்கப்படுகிறோம்.
நாம் இந்தப் பணியைச் சரியாகச் செய்யவில்லை என்றால் இயேசுவின்
இறையரசுப் பணியில் தொய்வும் தடையும் ஏற்படும். இன்று இயேசு
நம்மைப் பார்த்து உன் கரங்களே என் கரங்கள். உன் கால்களே என்
கால்கள்.அன்பு செய்ய உன் இதயமே என் இதயம் என்கிறார்.
2. இரண்டாவது தன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுத்து எதை எதை
கட்டுவீர்களோ அது கட்டப்படும். எதை எதையெல்லாம் கட்டு அவிழ்ப்பீர்களோ
அவை அவிழ்க்கப்படும் (மத். 18:18) என்று அதிகாரப் பகிர்வு
செய்கிறார். இந்தப் பகிர்வு திருச்சபையில் குருக்கள்
பொதுநிலையினரிடமும், கணவன் மனைவியிடமும், மாமி மருமகளுக்கும்,
பெற்றோர் பிள்ளைகளுக்கும் அதிகாரப் பகிர்வு செய்தால் வளர்ச்சி
உண்டு என்பதை இன்றைய விழா நமக்குக் காட்டுகிறது..
3.மெசியா தாம் மாட்சி அடைவதற்கு முன் இத்துன்பங்களைப் பட
வேண்டும் அல்லவா (லூக். 24:26). ஆம் இயேசு பாடுபட்டு மரித்து
உயிர்த்த பின் மாட்சியுடன் தந்தையின் வலப்பக்கம்
வீற்றிருக்கிறார். இதேபோல்தான் நமது வாழ்விலும் கோதுமை
விதையானது மண்ணிலே விழுந்து மடிந்தால் தான் பலன் தரும். சந்தனக்
கட்டையை மாவாக்கித் தண்ணீரில் கலக்கும் போதுதான் மணம்
வீசுகிறது. தங்கத்தைப் புடம் போடும் போதுதான் வேண்டிய புது
உருவத்தைப் படைக்க முடிகிறது. அதேபோல் நமது வாழ்விலும்
துன்பம் இன்றி இன்பம் இல்லை, பாடுகள் இன்றி மாட்சிமை இல்லை
என்பதை இயேசு நமக்குக் காட்டிவிட்டார்.
4.தலையாகிய இயேசு மாட்சிமை அடைந்தார் என்றால் அவரது உடலாகிய
நாம் மாட்சிமை பெறுவோம் என்ற நம்பிக்கை சாசனத்தை இயேசு நமக்கு
விட்டுச் சென்றார்.
II. நற்செய்தியாளர் புனித யோவான் நமக்குக் காட்டியது என்ன
?
1. இயேசுவின் இறையரசைக் கட்டி எழுப்ப அழைக்கப்பட்ட பன்னிருவரில்
ஒருவர் யோவான். இயேசுவுக்கு உறவினர், நெருக்கமானவர், அன்புச்
சீடர் என்ற செல்லப் பெயரையும் பெற்றவர். இவர் செய்தது என்ன?
2. தன் அழைப்பில் இலட்சியத் தெளிவு கொண்டிருந்தார். ஒன்றை
இழந்தால் தான் மற்றொன்றை அடைய முடியும் என்ற இலட்சியத்
தெளிவு கொண்டிருந்தார். நடந்து செல்லும் பாதை குறுகிய பாதை
என்பதை அறிந்திருந்தார்.
3. இரண்டாவதாக, இலட்சிய தயாரிப்பில் மூன்று ஆண்டுகள் இயேசுவின்
போதனையில் தன்னையே அர்ப்பணித்து ஆவியின்
திருமுழுக்குக்குத் தன்னையே தயாரித்தவர்.
4. மூன்றாவதாக, இலட்சிய உறவில் இயேசுவோடு இரண்டறக் கலந்தவர்.
என்னை விட்டு உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது (யோவா.
15:5) என்பதை நன்கு உணர்ந்தவர். ஆவியானவரின் புதுப்படைப்பாக
இயேசுவின் விண்ணேற்புக்குப் பின் மாற்றம் பெற்றவர்.
இறுதியாக இலட்சியப் பயணம் செய்தவர். மற்ற சீடர்கள் அனைவரும்
ஓடிவிட்டாலும் இயேசுவோடு கல்வாரி மட்டும் இருந்தவர். ஏனெனில்
இயேசுவின் அன்புச் சீடன் அல்லவா? |
|
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை
ஆயர் F.அந்தோனிசாமி |
மகிழ்வோம்
மறைக்கல்வி வகுப்பு ஒன்றில் மறைக்கல்வி ஆசிரியர்
ஒருவர் +2 படிக்கும் மாணவ மாணவிகளைப் பார்த்து ஒரு
கேள்வி கேட்டார்.
மாணவ மாணவிகளைப் பார்த்து, உங்களுக்குக் கிறிஸ்துவ
மறையைப் பிடிக்குமா? என்றார். எல்லாரும்,
பிடிக்கும் என்றார்கள். உங்களுக்குக் கிறிஸ்துவ மறையைப்
பிடிக்க என்ன காரணம் என்று சொல்ல முடியுமா? என்றார்.
ஒரு மாணவி, விண்ணகத்தை அடைய மிக எளிமையான வழியை,
அன்பு வழியை எனக்குக் கிறிஸ்துவ மறை தந்திருக்கின்றது
என்றாள்.
ஒரு மாணவன், உலக மக்களைத் திருத்த அழுத்தம் திருத்தமாக
கிறிஸ்துவ மறை பத்துக்கட்டளைகளையும் திருச்சபைக்
கட்டளைகளையும் கொடுத்திருக்கின்றது என்றான்.
இப்படிப் பல பதில்கள் வந்தன! கடைசியாக ஒரு மாணவன்
எழுந்து, கிறிஸ்துவ மறை மகிழ்ச்சியோடு, கிறிஸ்து
பிறப்போடு துவங்கி, மகிழ்ச்சியோடு, கிறிஸ்துவின்
உயிர்ப்போடு முடிகின்றது. எனக்கு மகிழ்ச்சி என்றால்
மிகவும் பிடிக்கும்! ஆகவே கிறிஸ்துவ மறையை எனக்கு
மிகவும் பிடிக்கும் என்றான்.
ஆசிரியர். அவனைப் பாராட்டி அனைவரையும் சிந்திக்க
வைக்கும் பதில் இது என்றார்.
கிறிஸ்துவ மறையைப் பொறுத்தவரையில் துன்பம் என்பது
இரண்டு மகிழ்ச்சி நிகழ்வுகளுக்கு இடையே வருகின்ற
ஓர் இடை வேளை!
கிறிஸ்து பிறந்தபோது வானதூதர் இடையர்களைப்
பார்த்து, அஞ்சாதீர்கள், இதோ எல்லா மக்களுக்கும்
பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு
அறிவிக்கின்றேன் என்று சொல்லி இடையர்களை மகிழ்ச்சி
வெள்ளத்தில் மிதக்க வைத்தனர்.
கிறிஸ்து உயிர்த்தபோது வானதூதர்கள் நறுமணப் பொருள்களோடு
கல்லறைக்கு வந்தவர்களைப் பார்த்து, உயிரோடு இருப்பவரைக்
கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை, அவர் உயிருடன்
எழுப்பப்பட்டார் (நற்செய்தி) என்று சொல்லி இயேசுவைத்
தேடியவர்களை ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம், பேரானந்தம்
எனப் பாடவைத்தனர்! மகிழ்ச்சியில் துவங்கி மகிழ்ச்சியில்
முடியும் அழகான மறை கிறிஸ்துவ மறை.
வாழ்க்கை என்பது ஓர் அழகிய பழ மரம் போன்றது! அதில்
பழம் ஒன்று பழுத்த பிறகு அது பழம் தருமா? தராதா?
என்ற சந்தேகமே நமது மனத்தில் எழக்கூடாது!
இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பவர் அனைவருமே அவரைப்
போலவே உயிர்த்தெழுவர் (யோவா 11:25 ). இந்த உண்மை,
நமக்கு சாவு இல்லை என்ற நம்பிக்கையை உருவாக்கி நம்மை
மகிழ்ச்சியோடு வாழவைக்க உதவி செய்ய வேண்டும்! உறங்கி
விழிப்பது போன்றது சாவு.
மோசே வழியாக விண்ணகத் தந்தை இஸ்ரயேல் நாட்டு மக்களுக்கு
உதவி செய்தது போல, சாவு என்னும் கடலைக் கடக்க இயேசுவின்
வழியாக நமக்கு உதவி செய்வார்! இயேசுவை நம்புவோர்
அனைவரும் உயிர்த்தெழுந்து முடிவில்லா மகிழ்ச்சியை
அனுபவிப்பர்.
கிறிஸ்து உயிர்த்து விட்டார். அவர் இனிமேல் இறக்கமாட்டார்
(உரோ 6:9). தன்னிடம் இல்லாததை ஒருவரால் மற்றவர்களுக்குக்
கொடுக்க முடியாது! இயேசுவிடம் உயிர்ப்பு இருக்கின்றது.
ஆகவே அந்த உயிர்ப்பை நமக்கு அவரால் கொடுக்க
முடியும்.
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை; பசும்புல்
வெளிமீது அவர் எனை இளைப்பாறச் செய்வார்; அமைதியான
நீர்நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்வார்; அவர்
எனக்கு புத்துயிர் அளிப்பார் என திருப்பாடல் (திபா
23:1-3அ) ஆசிரியரோடு பாடி மகிழ்வோம்.
மேலும் அறிவோம் :
கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (குறள் : 2).
பொருள் :
நூல்கள் பலவற்றைக் கற்று அறிஞராக விளங்குபவர், தூய
தத்துவப் பேரறிஞனாகிய இறைவனது திருவடிகளைத் தொழுது
பயன்பெற வேண்டும். அத்தகைய பணிவு இல்லையென்றால் கல்வியறிவால்
உரிய பயன் கிடைக்காது.
|
இயேசுவின் மீது முழு நம்பிக்கையையும்
வைப்போம்
இன்றைய நற்செய்தியின் வழியாக இயேசு, என் குரலுக்குச்
செவிமடுத்தால், நீங்கள் என் ஆடுகள் என்கின்றார். நாம்
இயேசுவினுடைய ஆடுகளாக, உண்மைச் சீடர்களாக வாழ விரும்பினால்
நாம் அவருடைய குரலுக்கு, என் மீது நம்பிக்கை வையுங்கள்
என்ற குரலுக்குச் செவிமடுக்கவேண்டும்.
இயேசுவின் அன்புக்கு அடிபணிந்து அவர் மீது நம்பிக்கை
வைத்தால் அவர் நமக்கு என்றுமே அழியா வாழ்வைத் தருவார்!
அழியா வாழ்வு - அது எப்படியிருக்கும்? என்பதற்கு இன்றைய
இரண்டாம் வாசகத்தில் புனித யோவான் அருமையான விளக்கம்
ஒன்றைத் தருகின்றார். நிலை வாழ்வு! அங்கே பசி இருக்காது,
தாகம் இருக்காது, எவ்வகை வெப்பமும் அங்கேயிருப்பவர்களைத்
தாக்காது. தேவ ஆட்டுக்குட்டி அனைவரையும் வாழ்வு அளிக்கும்
நீருற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். அனைவரின் கண்ணீர்
அனைத்தையும் கடவுள் துடைத்துவிடுவார் (திவெ 7:16-17).
நிலையற்ற வாழ்வின் மீது, மரணத்தின் மீது தனக்கு ஆற்றல்
உண்டு என்பதை இயேசு மூன்று பேரை உயிர்த்தெழ வைத்து
உலகுக்கு நிரூபித்துக்காட்டினார்.
மூன்று உயிர்ப்புகளும் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தவர்
நடுவில் நடந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
மத் 9:23-26 : சிறுமி ஒருத்தி இறந்துவிட்டாள்! அந்த
வீட்டிற்குள் இயேசு நுழைந்தார். சிறுமி இறக்கவில்லை,
உறங்குகின்றாள் என்றார் இயேசு. அதைக்கேட்டு சிரித்தவர்
உண்டு ! ஆனால் அங்கேயிருந்த ஐந்து பேருக்கு இயேசுவின் மீது
நம்பிக்கை இருந்தது. பேதுரு, யாக்கோபு, யோவான், சிறுமியின்
தாய், தந்தை ஆகியோர் இயேசுவை நம்பினர். அங்கே சிறுமி
உயிர்த்தாள். ஆம். நம்பிக்கை இருக்கும் இடத்தில் உயிர்ப்பு
இருக்கும், வாழ்வு இருக்கும்.
லூக் 7:11-17: நயீன் ஊர் கைம்பெண்ணின் மகன்
இறந்துவிடுகின்றான். அவனைப் பாடையிலே தூக்கிச்
சென்றார்கள். தாயைப் பார்த்து, அழாதீர், என்று
சொல்லிவிட்டு, பாடையின் அருகில் சென்று பாடையை இயேசு
தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நான்கு பேரும் ஏன்?
எதற்கு? என்று எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை!
அவர்களுக்கு இயேசுவின் மீது அவ்வளவு நம்பிக்கை! அங்கே
புதுமை நடக்கின்றது! இறந்த இளைஞன் எழுந்து பேசினான். எங்கே
நம்பிக்கை இருக்கின்றதோ அங்கே உயிர்ப்பு நிகழும்.
யோவா 11:1-44 : இயேசுவைச் சுற்றி ஒரே கூட்டம். அந்தக்
கூட்டத்திலே இயேசுவை நூற்றுக்கு நூறு நம்பிய பெண்ணொருத்தி
இருந்தார். அந்தப் பெண்ணின் பெயர் மார்த்தா. மார்த்தா
இயேசுவைப் பார்த்து, ஆண்டவரே, நீர் இங்கேயிருந்திருந்தால்
என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். இப்போது கூட நீர்
கடவுளிடம் கேட்பதை எல்லாம் உமக்குக் கொடுப்பார் என்பது
எனக்குத் தெரியும் என்கின்றார். அவருக்கு இயேசுவின் மீது
அவ்வளவு நம்பிக்கை. அங்கே புதுமை நடக்கின்றது! இலாசர்
உயிர்த்தார்! எங்கே நம்பிக்கை இருக்கின்றதோ அங்கே
உயிர்ப்பு நிகழும்.
இப்படி மூன்று புதுமைகளைச் செய்து, இறுதியாக தானே
உயிர்த்தெழுந்து மறுவாழ்வு அளிக்கும் ஆற்றல் தனக்கு உண்டு
என்ற உண்மையை இயேசு உலகுக்குப் பிரகடனப்படுத்தினார்.
இயேசுவின் அழகான குரல் இது: உயிர்தெழுதலும் வாழ்வும் நானே.
என்னிடம் நம்பிக்கைக் கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.
உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கைக் கொள்ளும்
எவரும் என்றுமே சாகமாட்டார் (யோவா 11:25, 26).
நிலைவாழ்வுக்கு நம்மையே நாம் தகுதியுள்ளவர்களாக்கிக்
கொள்வோம் ; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்து
அவர் மீது முழு நம்பிக்கை வைப்போம் (முதல் வாசகம்).
மேலும் அறிவோம்: கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை (குறள் : 9).
பொருள் : இயங்காத உடல், பேசாத வாய், நுகராத மூக்கு, காணாத
கண், கேளாத செவி ஆகியவற்றால் பயன் எதுவும் விளையாது.
அதுபோன்று எண்ணரிய பண்புகளின் இருப்பிடமாகத் திகழும்
இறைவனின் திருவடியை வணங்கி நடவாதவரின் தலைகளின் நிலையும்
பயன் அற்றவை ஆகும்.
|
மறையுறை
மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ் |
பக்திமிக்க ஒருவரிடம் கடவுள், "ஏதாவது
இரண்டு வரங்கள் கேளுங்கள். ஆனால், சாகாவரம் மட்டும் கேட்கக்
கூடாது" என்றார். பக்தர் கடவுளிடம். "கடவுளே! நான்
தூங்கும் போது சாக வேண்டும்' என்று கேட்டார். கடவுள் அவரிடம்,
"சரி, நீங்கள் தூக்கத்தில் சாவீர்கள், இரண்டாவது வரம் என்ன?"
என்று கேட்டதற்கு அவர், "கடவுளே! எனக்குத் தூக்கமே வரக்
கூடாது" என்று கேட்டுக் கடவுளையே குழப்பிவிட்டார்.
நாம் அனைவருமே சாகாமல் இருக்க விரும்புகிறோம். ஆனால், கடவுள்
ஆதாமுக்குக் கொடுத்த சாபம்: "நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்குத்
திரும்புவாய்" (தொநூ 3:19), கடவுள் மனிதனுக்குக் கொடுத்த
சாபத்தைக் கிறிஸ்து எற்றுக் கொண்டு அவரே சாபத்துக்கு உள்ளானார்.
"மரத்தில் தொங்கவிடப்பட்டோர் சபிக்கப்பட்டோர்" (இச 21:23:
கலா 3:13). ஆனால் அவர் இறந்த மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார்.
"உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும்
பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு" (யோவா 10:18).
கிறிஸ்து தமது சாவினால் நமது சாவை அழித்தார். "சாவே கடைசிப்
பகைவன். அதுவும் அழிக்கப்பட வேண்டும்" (1 கொரி 15:26).
திருமணமான ஒருவர் குளவியினால் கொட்டப்பட்டு இறந்தார். அவர்
இறந்த ஒருவாரம் கழித்து அவரைக் கொட்டிய அதே குளவி அவருடைய
சிறுமகனைக் கொட்ட வந்தது. அவன் பயந்து கொண்டு அம்மாவைக் கட்டிப்பிடித்தான்.
அம்மா அவனிடம், "மகனே! பயப்படாதே; உன் அப்பாவை இக்குளவி
கொட்டிய போது அது தன் கொடுக்கை இழந்துவிட்டது. உன் அப்பா
அதன் கொடுக்கைக் கொண்டு போய் விட்டார். இனிமேல் இக்குளவியால்
உனக்குத் தீங்கு விளைவிக்க முடியாது" என்றார்.
ஆம், கிறிஸ்து இறந்தபோது சாவின் கொடுக்கை
முறித்துவிட்டார். "சாவு முற்றிலும் ஒழிந்தது. வெற்றி
கிடைத்தது. சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?"
(1 கொரி 15:54-55) கிறிஸ்துவின் உயிர்ப்பு கிறிஸ்தவ
வாழ்வின் அடித்தளம். நற்செய்தி கிறிஸ்துவின் உயிர்ப்பை விளக்குகிறது
என்பதைவிடக் கிறிஸ்துவின் உயிர்ப்பே நற்செய்தியை விளக்குகிறது.
ஏனெனில் கிறிஸ்து உயிர்க்கவில்லையென்றால், நமது நம்பிக்கை
பொருளற்றது (1 கொரி 15:14)
இன்றைய முதல் வாசகத்தில் உள்ளபடி, பேதுருவின் போதனையின்
சுருக்கம்: "கிறிஸ்து கழுமரத்தில் அறையப்பட்டு இறந்தார்;
கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தார். அதற்கு நாங்கள்
சாட்சிகள்" (திப 10:39-41).
கிறிஸ்து உயிர்த்ததைக் காணும் பேறு இரவுக்கு மட்டுமே
கிடைத்தது. "ஓ மெய்யாகவே பாக்கியம் பெற்ற இரவே! கிறிஸ்து
உயிர்த்தெழுந்த காலத்தையும் நேரத்தையும் அறிய நீ மட்டுமே
பேறுபெற்றாய்" (பாஸ்கா புகழுரை). ஆனால், இன்றைய நற்செய்தியில்
திருத்தூதர் யோவான் காலியாகக் கிடந்த கல்லறைக்குள்
சென்றார். கண்டார், நம்பினார்" (யோவா 20:8), காலியாகக் கிடந்த
கல்லறை கூறிய செய்தி: "உயிரோடு இருப்பவரைக் கல்லறையில்
தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்"
(லூக் 24:6), மறைநூலின் சாரம்: "மெசியா துன்புற்று இறந்து
மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும்" (லூக் 24:45).
கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது உயிர்ப்புக்கு ஓர் அச்சாரம்,
நாம் கல்லறையில் புதைக்கப்படுவதில்லை; மாறாக, விதைக்கப் படுகிறோம்.
"நாம் யாவரும் சாகமாட்டோம்; ஆனால் அனைவரும் வேற்றுருப்
பெறுவோம்..... அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக
வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்து கொள்ள
வேண்டும்" (1 கொரி 15:51-53).
உயிர்ப்பின் மகிமையை இம்மையிலேயே நாம் பெற்று விட்டோம் என்பது
நற்செய்தியாளர் யோவானின் புதுமையான செய்தியாகும். "என்
வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர்...... ஏற்கெனவே
சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள்" (யோவா 5:24),
கடவுளை நம்பிக் கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போர்
இம்மையிலேயே மறுமையின் மகிமையை முன் சுவைக்கின்றனர்.
உயிர்த்த ஆண்டவர் என்றும் நம்மோடு இருக்கிறார். "இதோ! உலக
முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன" (மத்
28:20).
ஒருநாள் நான் வீதியில் அங்கி அணிந்து சென்றபோது ஒருவர் என்னைப்
பார்த்தவுடன் தனது காலணிகளைக் கழற்றிவிட்டு, சிலுவை அடையாளம்
வரைந்து, "இயேசு ஜீவிக்கிறார்; அல்லேலூயா" என்றார். அதைக்
கேட்டபோது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி உண்டானது. ஆம், இயேசு
உயிர் வாழ்கிறார்; நம்முடன் இருக்கிறார்; நம்மோடு உடன் நடக்கிறார்;
மறை நூல் விளங்கும்படி நமது மனக்கண்களைத் திறந்து
விடுகிறார். நாம் உயிர்ப்பின் மக்கள். நமது கீதம் அல்லேலூயா,
இயேசுவின் உடனிருப்புக்கு நாம் அடையாளங்களாகத் திகழ்வோம்.
ஒருவர் உயரமான ஒரு கொடிக் கம்பத்தில் ஏறிவிட்டு, கீழே தரையைப்
பார்த்தபோது அவர் தலை சுற்றியது. "ஐயோ! செத்தேனே" என்றார்.
கீழே இருந்தவர்கள் அவரிடம், "கீழே பார்க்காமல், மேலே
பார்த்துக் கொண்டே இறங்கு" என்றனர். அவரும் அவ்வாறே
செய்தார் நாம் மண்ணைப் பார்த்தால் மயக்கம் தான் வரும்.
நாம் விண்ணைப் பார்ப்போம். இன்றைய இரண்டாம் வாசகம். நாம்
மேலுலகை நோக்கும் படி நம்மை அழைக்கிறது. ஏனெனில் அங்குதான்
கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார் (கொலோ
3:1-3).
பாஸ்கா ஞாயிறு நமது திருமுழுக்கின் ஆண்டு நினைவுநாள். இன்று
நாம் அனைவரும் நமது திருமுழுக்கு வாக்குறுதிகளைப்
புதுப்பிக்கின்றோம். ஒருமுறை குளித்தவர்கள் மீண்டும்
குளிக்கத் தேவையில்லை; காலடிகளைக் கழுவினால் போதுமானது
(யோவா 13:10), அவ்வாறே. ஒருமுறை திருமுழுக்குப் பெற்றவர்கள்
மீண்டும் திருமுழுக்குப் பெறத் தேவையில்லை. திருமுழுக்கு
வாக்குறுதிகளைப் புதுப்பித்தாலே போதுமானது. குழந்தைத்
திருமுழுக்கில் பொதிந்துள்ள இறையியல் உண்மை: "நாம் கடவுளைத்
தெரிவு செய்யும் முன்பே அவர் நம்மைத் தெரிவு செய்து
கொண்டுள்ளார். " இது கடவுளின் முன் செயல். நம் கண்ணுக்கு
வியப்பே!
திருமுழுக்கு வாயிலாக நாம் பாவத்துக்குச் செத்து
புதுவாழ்வுக்கு உயிர்த்துள்ளோம். இனி நாம் பாவத்துக்கு அடிமைகள்
அல்ல. பாவம் நம்மீது ஆட்சி செலுத்த இடம் கொடுக்கக்கூடாது (உரோ
6:1-14).
கிறிஸ்து தமது உயிர்ப்பின் மூலம் புதியதொரு படைப்பை உருவாக்கியுள்ளார்.
ஆதாமின் பாவத்தால் நாம் இழந்ததைவிடக் கிறிஸ்துவின்
மீட்பால் நாம் பெற்றுக் கொண்டது அதிகமானது. "பாவம் பெருகிய
இடத்தில் அருள் பொங்கி வழிந்தது" (உரோ 5:20). எனவே,
"ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்,
அகமகிழ்வோம்" (திபா 118:24).
|
ஆண்டவரின் விண்ணேற்றம்
ஓர் இந்தியர் ஓர் அமெரிக்கரிடம், ":அமெரிக்கர்களாகிய
நீங்கள் நிலவுக்குத் தான் போனீர்கள். ஆனால்,
இந்தியர்களாகிய நாங்கள் சூரியனுக்கே போகப் போகிறோம்":
என்றார். அமெரிக்கர் அவரிடம், ":அது எப்படி முடியும்?
சூரியனுக்குப் போகும் பாதி வழியிலேயே வெந்து சாம்பலாகி
விடுவீர்களே": என்றார். இந்தியர், ":நாங்கள் இரவோடு
இரவாகச் சூரியனுக்குப் போய்விட்டுத் திரும்பிவிடுவோம்":
என்று கூறிச் சிரித்தார்.
இவ்வுலகில் ஒவ்வொருவரும் மற்றவர்களைவிட அரிய, பெரிய
சாதனைகளைப் படைக்க வேண்டும். 'கின்னஸ்' புத்தகத்தில்
இடம் பெறவேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். 'எவரெஸ்ட்'
சிகரத்தை எட்டிப்பிடிக்கும் முயற்சியில் சிலர் தங்கள்
உயிரையே இழந்துள்ளனர். ஆனால், இயேசு கிறிஸ்து
'எவரெஸ்ட்' சிகரத்தை அல்ல, விண்ணகத்தையே எட்டிப்பிடித்து
விட்டார். ":ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர்,
பாவத்தையும் சாவையும் தோற்கடித்த வெற்றி வீரர்,
வானதூதர் வியப்புற இன்று வானங்களின் உச்சிக்கு ஏறிச்
சென்றார் (இன்றைய திருப்பலிக்கான தொடக்கவுரை).
இயேசு கிறிஸ்து விண்ணகம் சென்றது இவ்வுலக வாழ்வின் துன்ப
துயரங்களிலிருந்து விடுதலை பெறுவதற்காக அல்ல. மாறாக, நமது
தலைவரும் முதல்வருமாகிய அவர் சென்ற அதே இடத்திற்கு
நாமும் ஒருநாள் செல்வோம் என்ற நம்பிக்கையை நம்மிடம்
உருவாக்குவதற்கே. கிறிஸ்து திருச்சபைக்குத் தலை: நாம்
அவருடைய மறையுடலின் உறுப்புகள். தலையையும் உடலையும்
பிரிக்க இயலாது. எனவே, கிறிஸ்துவின் விண்ணக மகிமையில்
நாமும் ஒருநாள் பங்கு பெறுவோம் என்பது உறுதி. கிறிஸ்து
விண்ணகம் சென்று, அங்கு நமக்காக ஓர் இடத்தை ஏற்பாடு
செய்தபின், திரும்பி வந்து நம்மையும் அழைத்துக் கொண்டு
போவார். அப்போது அவர் இருக்கும் இடத்திலேயே நாமும்
இருப்போம் (யோவா 14:1-39).
கிறிஸ்து விண்ணகத்தில் கடவுளின் வலப்பக்கம்
அமர்ந்துள்ளார் மோற் 16:19). கடவுளின் மகிமையில் சரி
நிகராக இருக்கிறார். அங்கு நமக்காகப் பரிந்து
பேசுகிறார் (உரோ 8:34). திருத்தூதர் யோவான்
கூறுகிறார்: நாம் பாவம் செய்யீக்கூடாது. அப்படியே நாம்
பாவம் செய்தாலும் நமக்காகத் தந்தையிடம் கிறிஸ்து
பரிந்து பேசுகிறார் (1 யோவா 2:1). கிறிஸ்து நமக்காகப்
பரிந்து பேசுவதற்காகவே உயிர் வாழ்கிறார் என எபிரேயர்
திருமுகம் கூறுகிறது (எபி 7:25) இன்றைய இரண்டாம் வாசகம்
கூறுகிறது: கிறிஸ்து விண்ணகம் நுழைந்து நம் சார்பாகக்
கடவுளின் முன் நிற்கிறார். எனவே உறுதியான
நம்பிக்கையுடன் அவரை அணுகிச் செல்லவேண்டும். ஏனெனில்
அவர் நம்பிக்கைக்கு உரியவர் (எபி 10:22-23).
கிறிஸ்து விண்ணகம் சென்றபோது தமது கைகளை உயர்த்திச்
சீடர்களுக்கு ஆசி வழங்கினார் என்று இன்றைய நற்செய்தி
கூறுகிறது (லூக் 24:50). அவருடைய ஆசி என்றும் நம்முடன்
இருக்கின்றது. ஒவ்வொரு திருப்பலியிலும் அவர் தமது
திருப்பணியாளர்கள் வழியாகத் தம் கைகளை உயர்த்தி ஆசி
வழங்கிக் கொண்டே இருக்கிறார். கிறிஸ்து
விண்ணகத்திலிருந்து மண்ணகத்திற்கு வந்தபோது அவர் தமது
தந்தையைவிட்டுப் பிரியவில்லை. அவ்வாறே அவர்
மண்ணகத்திலிருந்து விண்ணகம் சென்றபோது அவர் நம்மை
விட்டுப் பிரியவில்லை; இவ்வுலகம் முடியும்வரை அவர்
என்றும் நம்மோடு இருக்கிறார் (மத் 28:20).
ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம், ":சூரியன் பூமியைச்
சுற்றுகிறதா? அல்லது பூமி சூரியனைச் சுற்றுகிறதா? எது
எதைச் சுற்றுகிறது?": என்று கேட்டதற்கு, ஒரு மாணவன்,
":சார்! தலை சுத்துகிறது": என்றான். நமது பல்வேறு
பிரச்சினைகளால் தலை சுற்றுகிறது.
நடுத்தர வயதுள்ள ஒரு பெண்மணி டாக்டரிடம், ":டாக்டர்!
காலையில் எழுந்தவுடனே அரை மணி நேரம் என் தலை
சுத்துகிறது": என்றதற்கு, டாக்டர் அவரிடம், ":அப்ப, அரை
மணி நேரம் பிந்தி எழுந்திருங்க": என்றார். நாம்
காலையில் எவ்வளவு நேரம் கழித்து எழுந்தாலும் நமது
பிரச்சினைகள் நம்மோடு எழுகின்றன; தலை சுற்றுகிறது.
இதற்குத் தீர்வு கிடையாதா? கிறிஸ்து கூறுகிறார்:
":உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும்
துணிவுடன் இருங்கள். நான் உலகின் மீது வெற்றி கொண்டு
விட்டேன்": (யோவா 16:33). எனவே, மனத் துணிவு பெறுவோம்.
கிறிஸ்துவுடன் இணைந்து நம்மால் சமாளிக்கமுடியாத
பிரச்சினைகள் எதுவுமில்லை.
ஒரு மனைவியிடம் இருந்து கணவர் பிரிந்துவிட்டார்.
அக்கணவரை நினைத்து, ":சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி
தெரியுமா? என்னை விட்டு பிரிந்த கணவர் இன்னும் வீடு
திரும்பலை": என்று பாடுகிறார். நம்மை விட்டுப் பிரிந்த
இயேசு திரும்பி வருவாரா? எப்போது வருவார்?
விண்ணகம் சென்ற இயேசு மீண்டும் வருவார் (திப 1:11).
நமக்கு வானகமே தாய்நாடு; அங்கிருந்து மீட்பர் வருவார்
எனக் காத்திருக்கிறோம் (பிலி 3:20). தொடக்கக்
கிறிஸ்தவர்களின் ஏக்கம்: ":மாரனாத்தா":, ஆண்டவரே வருக (1
கொரி 16:22). விவிலியத்தின் இறுதி வேண்டுகோள்:
":ஆண்டவராகிய இயேசுவே வாரும் (திவெ 22:20). கிறிஸ்துவின்
வருகையை நாம் மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கிறோம். பேதுரு
கூறுகிறார்: அவர் காலம் தாழ்த்தவில்லை; பொறுமையோடு
இருக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம்
மாற விரும்புகிறார் (2 பேது 3:6-9).
ஒரு மனைவியிடம் இருந்து கணவர் பிரிந்துவிட்டார்.
அக்கணவரை நினைத்து, ":சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி
தெரியுமா? என்னை விட்டு பிரிந்த கணவர் இன்னும் வீடு
திரும்பலை": என்று பாடுகிறார். நம்மை விட்டுப் பிரிந்த
இயேசு திரும்பி வருவாரா? எப்போது வருவார்?
விண்ணகம் சென்ற இயேசு மீண்டும் வருவார் (திப 1:11).
நமக்கு வானகமே தாய்நாடு; அங்கிருந்து மீட்பர் வருவார்
எனக் காத்திருக்கிறோம் (பிலி 3:20). தொடக்கக்
கிறிஸ்தவர்களின் ஏக்கம்: ":மாரனாத்தா":, ஆண்டவரே வருக (1
கொரி 16:22). விவிலியத்தின் இறுதி வேண்டுகோள்:
":ஆண்டவராகிய இயேசுவே வாரும் (திவெ 22:20). கிறிஸ்துவின்
வருகையை நாம் மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கிறோம். பேதுரு
கூறுகிறார்: அவர் காலம் தாழ்த்தவில்லை; பொறுமையோடு
இருக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம்
மாற விரும்புகிறார் (2 பேது 3:6-9).
கிறிஸ்து எப்போது வருவார் என்று வானத்தை அண்ணாந்து
பார்க்காமல், அவர் நமக்கு விட்டுச் சென்ற பணியைத்
தொடர்ந்து ஆற்றுவது நமது கடமை. அவர் நமக்கு விட்டுச்
சென்ற பணிகள்: படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை
அறிவியுங்கள்: எல்லா இனத்தாரையும் என் சீடராக்குங்கள்;
மண்ணுலகின் இறுதி எல்லைவரை என் சாட்சிகளாய் இருங்கள்;
பேய்களை விரட்டுங்கள்; நோய்களைக் குணமாக்குங்கள் (மாற்
16:15-18).
இவ்வாறு செய்ய நம்மால் இயலுமா? என்ற கேள்வி எழுகிறது.
நம்மால் நிச்சயமாகச் செய்ய முடியும். ஏனெனில்
சீடர்கள் நற்செய்தியை அறிவித்தபோது, அவர்களுடன் கிறிஸ்து
இருந்து செயல்பட்டார்: அரும்அடையாளங்களால் அவர்களுடைய
வார்த்தையை உறுதிப்படுத்தினார் (மாற் 16:19-20). எனவே,
நாம் சிறுமந்தையாக இருந்தாலும், கிறிஸ்துவின் உடன்
இருப்பிலும், வல்லமையிலும் நம்பிக்கை வைப்போம்.
நற்செய்தி விழுமியங்களான அன்பு, நீதி, சமத்துவம்,
சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளை நிலைநாட்டி உலகுக்குக்
கிறிஸ்துவின் உருவைக் கொடுப்போம். மாரனாத்தா - ஆண்டவரே
வாரும்!
|
திருவுரைத்
தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை |
கல்லறைக்கு அப்பால்
'வார்த்தை மீது வாசல்கள்' (Windows on the Word) என்ற ஆங்கில
நூலில் காணும் நிகழ்ச்சி இது.
டாக்டர் தேஹான் என்பவர் தனது இரு மகன்களுடன் பசுமையான வயல்வெளி
வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். எங்கிருந்தோ வேகமாகப்
பறந்து வந்த தேனீ ஒன்று மூத்தமகன் ரிச்சர்டின் கண்களுக்குமேல்
- கண்ணிமையில் கொட்டி விட்டது. அந்தத் தேனீயைக் கீழே உதறித்
தள்ளிவிட்டு அங்கிருந்த புல்தரையில் ரிச்சர்ட் விழுந்து
கதறினான், அலறினான் வலி தாங்க இயலாமல்.
அதையெல்லாம் கண்டு அதிர்ந்து நின்றான் சின்னவன் மெர்வின்.
சிறிதுநேரத்தில் அதே தேனி அவனைச் சுற்றி வட்டமிட்டது. தன்
அண்ணன் துடித்த துடிப்பை நினைத்தான். அழத் தொடங்கினான். அது
தன்னைக் கொட்டிவிடுமோ என்று மிரண்டான். அதே புல்தரையில் உருண்டான்,
புரண்டான். அப்போது அவனுடைய தந்தை ஓடிவந்து மெர் வினைக் கைகளில்
அணைத்துக் கொண்டு "மெர்வின், பயப்படாதே. தைரியமாயிரு. அந்தத்
தேனீ உன்னை ஒன்றும் செய்ய முடியாது. அது ஏற்கனவே தன்
கொடுக்கை இழந்து விட்டது. அந்தத் தேனீ உன்னை வளைய வளைய வட்டமிடலாம்.
அச்சுறுத்தலாம். உன் அண்ணனைக் கொட்டியபோதே அதன் கொடுக்கு
முறிந்து விட்டது" என்றார்.
நம்மைப் பொறுத்தவரை இயேசு சாவின் கொடுக்கை முறித்து
விட்டார். ''சாவு, வீழ்ந்தது. வெற்றி கிடைத்தது. சாவே, உன்
வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே? (1 கொரி. 15;55)
என்ற திருத்தூதர் பவுலின் ஆவேச வார்த்தைகள் எவ்வளவு ஆழமானவை!
அர்த்தமுள்ளவை!
கிறிஸ்துவின் உயிர்ப்பில் திருத்தூதர் வைத்துள்ள நம்பிக்கை,
உறுதிப்பாடு வியப்புக்குரியவை. "பாவமே சாவின் கொடுக்கும்.
ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த
வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி" என்று திருத்தூதர்
பவுலோடு கிறிஸ்தவ உலகமே ஆர்ப்பரிக்கும் பாஸ்கா இரவு இது!
சாவின் மீது வெற்றி, சாவுக்குக் காரணமான பாவத்தின் மீது
வெற்றி, பாவத்துக்குக் காரணனான சாத்தானின் மீது வெற்றி, இம்முப்பெரும்
வெற்றிக்காக உயிர்த்த ஆண்டவரைக் கைகுலுக்கிப்
பாராட்டுவோம். இயேசு பெற்ற அம்முப்பெரும் வெற்றியில் நமக்கும்
பங்களிப்பதற்காக அவருக்கு நன்றி கூருவோம்.
1. இயேசு பாவத்தை வென்றார். அவரது உயிர்ப்பு பாவத்தின் மயக்கத்திலிருந்து
நம்மை விடுவிக்கிறது. கல்வாரிப் பலியே பாவப் பரிகாரப் பலிதான்.
கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே, மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே
இருந்த உறவுக்கான தடைச் சுவர்களை உடைத்தெறிந்த பலி,
"கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு ஒரே
முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை
தோன்றுவார். ஆனால் பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக்
காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே
தோன்றுவார்'' (எபி.9:28)
2. இயேசு சாவை வென்றார். அவரது உயிர்ப்பு சாவின் தூக்கத்திலிருந்து
நம்மை எழுப்புகிறது. "பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு.
மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு" (உரோமை 6:23). "எல்லாப்
பகைவரையும் அடிபணிய வைக்கும் அவரை அவர் ஆட்சி செய்தாக
வேண்டும். சாவே கடைசிப் பகைவன். அதுவும் அழிக்கப் படும்"
(1 கொரி.15:25, 26) திருத்தூதர் உரத்துச் சொன்ன வார்த்தைகள்
இவை. இயேசு வந்ததே, வாழ்வு சாவை விட வலிமையானது என்பதை உணர்த்தவே!
3. இயேசு அலகையை வென்றார். அவரது உயிர்ப்பு அலகையின்
மாயையிலிருந்து நம்மைத் தெளிவிக்கிறது. ''கடவுளின் அருளால்
அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது...
ஊனும் இரத்தமும் கொண்ட அப்பிள்ளைகளைப் போல் அவரும் அதே இயல்பில்
பங்கு கொண்டார். இவ்வாறு சாவின் மேல் ஆற்றல் கொண்டிருந்த
அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார். வாழ்நாள் முழுவதும்
சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப் பட்டிருந்தவர்களை
விடுவித்தார்" (எபி.2:9, 14, 15). ஏற்கனவே பாலை வனத்திலும்
தொழுகைக் கூடத்திலும் சாத்தானை விரட்டியடித்தவர் தானே இயேசு!
"உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். முடிவில்லா வாழ்வை நம்புகிறேன்"
- இது நமது நம்பிக்கைக் கோட்பாட்டின் தெளிவு. உயிர்ப்பு என்பது
கிறிஸ்தவக் கோட்பாட்டின் மையம். கிறிஸ்தவ நம்பிக்கைக்கும்
வாழ்வுக்கும் ஓர் உந்துசக்தி.
சிறந்த கிறிஸ்தவரும் அறிவியல் அறிஞருமான மைக்கேல் பாரடே
மரணப்படுக்கையில் இருந்தார். "சாவுக்குப் பிறகு கிடைக்கும்
வாழ்வு எப்படியிருக்கும்?" என்று கேட்டபோது அவர் சொன்னார்:
"எனக்குத் தெரியாது. ஆனால் நான் நிலையானவற்றில் நம்பிக்கை
கொண்டுள்ளேன். காரணம், நான் நம்பும் மீட்பர் உயிர்த்து
இன்றும் வாழ்கின்றார். எனவே நான் வாழ்வேன் என்பது உறுதி ".
உயிர்ப்பு என்பது மேலோட்டமாகப் பார்த்தால் புரியாத
புதிராக, அறிவுக்குப் புலப்படாததாகத் தோன்றும். ஆழமான
நம்பிக்கை கொண்டு பார்த்தால் இம்மறைபொருள் காட்டும்
மேன்மையை உணர முடியும்.
திருத்தூதர் தெளிவுபடுத்துவது இதுதான்: "இறந்தோர்
உயிர்த்தெழ மாட்டார் எனில் கிறிஸ்துவும் உயிருடன்
எழுப்பப்படவில்லை என்றாகி விடும். கிறிஸ்து உயிருடன்
எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய
நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும்
பொருளற்றதாயிருக்கும்" (1கொரி. 15:13,14)
ஆம், இயேசு உயிர்த்து விட்டார். நமது உயிர்ப்பு
வாழ்வுக்கும் உறுதி தந்துவிட்டார். அவரோடு நாமும்
உயிர்க்கின்றோம்.
- பொய்யைவிட உண்மை மேலானது என்பதை இயேசுவின்
உயிர்ப்புஎண்பிக்கிறது.
- தீமையைவிட நன்மை உறுதியானது என்பதை இயேசுவின் உயிர்ப்பு
எடுத்து இயம்புகிறது.
- பகைமையை விட அன்பு, மன்னிப்பு உயர்ந்தது என்பதை
இயேசுவின் உயிர்ப்பு உணர்த்துகின்றது.
- சாவை விட வாழ்வு சக்தியானது என்பதை இயேசுவின் உயிர்ப்பு
உறுதிசெய்கின்றது.
உயிர்ப்பு நமக்கு அனுபவமாகட்டும். அல்லேலூயா!
|
கடைசி எல்லையா கல்வாரி? புளியம்பட்டி, தூய அந்தோனியார்
திருத்தலத்தில் நான் பணியாற்றிய ஆறரை ஆண்டுகளில் நல்லவை என்று
நான் ஏதாவது சாதித்திருந்தால் அவற்றில் முதலிடம் பெறுவதாக
நான் கருதுவது என்ன தெரியுமா?
"நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும்" என்ற
மென்மையான உணர்வைத் தென்றலாய், திருத்தலக் குரலொலியாய்,
மெல்லிசையாய், விருதுவாக்காய்த் திருப்பயணிகளின் நெஞ்சமெல்லாம்
தவழவிட்டதுதான்.
எத்தனையோ பேரின் இதைப் பற்றிய பாராட்டு மொழிகளுக்கு இடையில்
நம்பிக்கையாம், செபமாம், நல்லது நடக்குமாம் என்ற
முணுமுணுப்பும் உறுத்தாமல் இல்லை.
நம்பிக்கை தானே வாழ்க்கையின் அடித்தளம். அடித்தளத்தையே அசைத்துவிடும்,
நம்பிக்கையையே நலியச் செய்யும் விபத்து நேர விடலாமா? - அதுவும்
ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்வில்? காலம் ஒருநாள் மாறும், நம்
கவலைகள் எல்லாம் தீரும். நோவும் சாவும் இல்லாத, வேதனையும்
விழிநீரும் இல்லாத, அநீதி மாய்ந்து அன்பு ஆளும் இறையாட்சி
ஒருநாள் மலரும். நாளைய உலகை நோக்கி நம்பிக்கைத் தீபம் ஏற்றி
நடைபோடுவோம்.
என்றாலும் எதார்த்தங்கள்.....!
இன்றைய மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் எத்தனை புதிய கண்டுபிடிப்புகள்...
புதிய புதிய மருந்துகள் மட்டுமல்ல, புதிய புதிய நோய்கள்,
புதிரான நோய்கள்! சாவில்லா, நோயில்லா ஓர் உலகம் சாத்தியமா?
வறுமை ஒழியட்டும், வளங்கள் பெருகட்டும். முழங்கத்தான் நம்மால்
முடிகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழே ஏழைகளின் எண்ணிக்கை
பெருகவன்றோ செய்கிறது!
அக்கிரமம், அநியாயம், ஊழல், சுரண்டல், பொய்மை, போலித் தனம்,
பித்தலாட்டம், இனவெறி, வன்முறை இல்லாத காலம் ஒன்று வர
வாய்ப்பு இருக்கிறதா?
இவையெல்லாம் பெரிய வெள்ளிக்கிழமையின் வெவ்வேறு வடிவங்கள்தாம்.
ஆனால் பெரிய வெள்ளியோடு எல்லாம் முடிந்து போனதா? கல்வாரிதான்
நமது கடைசி எல்லையா?
இன்றைய நிலை இவ்வளவு மோசமாக இருக்கும்போது நாளைக்கு எல்லாம்
நன்மையாக இருக்கும் என்பதற்கு என்ன ஆதாரம்?
இயேசு உயிர்த்தார் என்பதுதான் ஆதாரம்! பெரிய வெள்ளிக்கு அடுத்து
உயிர்ப்பு ஞாயிறு புலரவில்லையா? இயேசுவின் உயிர்ப்பில்
சிலுவை புதுப்பொருள் பெறவில்லையா? சிலுவை என்பது வன்முறைக்கும்
பகைமைக்கும் கிடைத்த வெற்றியா? அன்பும் மன்னிக்கும் மனமும்
சாவைவிட வலிமையானது என்பதன் வெளிப்பாடன்றோ!
இன்றைய கோணலான, குதர்க்கமான கோடுகளினின்றும் ஓர் அழகிய ஓவியத்தை
இறைவனால் உருவாக்கமுடியும்.
ஓர் அரசன் உயிருக்குயிராய் மதித்த விலையுயர்ந்த ஒரு பெரிய
இரத்தினக் கல்லை வைத்திருந்தான். எதிர்பாராத உராய்வால் கீறலாக
ஒரு கோடு விழுந்துவிட்டது. பல நிபுணர்களைக் கலந்து ஆலோசித்தும்
அதைச் சீராக்க வழிதெரியவில்லை. இறுதியாக ஒரு பெரியவர் இரத்தினக்
கல்லை வாங்கிப் புரட்டிப் பார்த்தார். பின் கீழே அமர்ந்து
கீறலான கோட்டினை ஒரு ரோசாச் செடியின் நடுத்தண்டாகவும்,
முட்களாகவும் வைத்துப் பூக்களையும் மொட்டுக்களையும் இலைகளையும்
கல்லின் மேல் மெல்லிய சிற்றுளி ஒன்றால் செதுக்கினார். கீறல்
விழுந்த இரத்தினக்கல் ஒரு மகத்தான வேலைப் பாடாயிற்று; கலைப்
படைப்பாயிற்று.
பிரான்ஸ் நாட்டுப் பேரரசன் நெப்போலியனுக்கும் ஆங்கிலேயருக்கும்
இடையே போர். அதில் நெப்போலியன் தோல்வி கண்டு நாடு கடத்தப்பட்டான்.
அவனுடைய வீரர்கள் சிதறடிக்கப் பட்டவர்களாய், முடிவில் ஆங்கிலேயர்
படையில் சேர்ந்து கொண்டனர். சில மாதங்களுக்குப் பின் ஆங்கிலேயர்
அந்த பிரஞ்சு வீரர்களை அணிவகுத்து வரச் செய்தபோது, திடீரென
நெப்போலியன் அவர்கள் முன் நிற்கிறான். நெப்போலியனைச்
சுட்டுவிடும்படி, ஆங்கிலேயத் தளபதிகள் ஆணையிட, பிரஞ்சு
வீரர்கள் துப்பாக்கியின் துளை வழியாக நெப்போலியன்
முகத்தைப் பார்க்கிறார்கள். நெப்போலியன் உயிரோடு
வந்துவிட்டான் என்பதை அவர்களால் நம்பமுடியவில்லை. அப்போது
"உங்கள் அரசனை நீங்கள் சுடப் போகிறீர்களா? நான் தான்
நெப்போலியன்" என்று நெப்போலியன் கத்துகிறான். உடனே பிரஞ்சு
வீரர்கள் அனைவரும் நெப்போலியன் பக்கம் சேர, ஆங்கிலேயத்
தளபதிகள் ஓடிவிடுகின்றனர்.
நெப்போலியன் திரும்பி வந்தது, அந்த வீரர்களுக்கு
நெப்போலியன் உயிர்த்து வந்தது போன்ற உணர்வைத்தான்
கொடுத்தது. தோல்வியால் சோர்ந்து தலைவனற்ற நிலையில் உயிரற்ற
வாழ்வு வாழ்ந்தவர்கள் நெப்போலியன் வருகையால் புது உயிர்
பெற்றார்கள்.
இயேசுவின் உயிர்ப்பை நினைக்கும்போது இந்த நெப்போலியன்
கதையே நினைவுக்கு வருகிறது. ஏனென்றால் இயேசு சிலுவையில்
இறந்த போது சீடர்கள் சிதறடிக்கப்பட்டனர். இனிவாழ்வில்லை
என்று நினைத்தார்கள். ஆனால் இயேசு உயிர்த்து அவர்கள் முன்
தோன்றி "நான் தான் இயேசு" என்று சொன்னபின்தான் உணர்வும்
உயிரும் பெற்றார்கள். உயிர்த்த இயேசுவோடு ஒருங்கிணைந்து
உயிர்ப்பின் சக்தியைப் பெற்றார்கள்.
இயேசு உயிர்த்த நாள் வெற்றியின் நாள். விடுதலையின் நாள்.
அதனால் மகிழ்ச்சியின் நாள்.
இருளின் சக்திகள் இயேசுவை வெற்றி கொள்ள இயலவில்லை.
உண்மையைப் பொய்மை வெற்றி கொள்ள இயலாது. அன்பை வெறுப்பு
வெற்றி கொள்ள இயலாது. நீதியை அநீதி வெற்றி கொள்ள இயலாது
என்ற உண்மைக்கு இயேசுவின் உயிர்ப்பு ஓர் உயிருள்ள சான்று.
தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும் ஆனால் தர்மம் மறுபடி
வெல்லும்.
ஆண்டவர் மட்டும் உயிர்க்கவில்லை. அவரோடு அவருடைய சீடர்கள்
உயிர்த்தனர். அவரது மதிப்பீடுகள் உயிர்த்தன. மனித
நம்பிக்கைகள் உயிர்த்தன. நம்பிக்கையின்மையிலிருந்து
நம்பிக்கைக்கும் கோழைத்தனத்திலிருந்து அச்சமின்மைக்கும்
கடந்து சென்றார்கள்.
"கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால்.... மேலுலகு
சார்ந்தவை பற்றி எண்ணுங்கள்" (கொலோ.3:1-2) என்ற
திருத்தூதர் பவுலின் அழைப்பு நம் நெஞ்சில் நீங்காமல்
இருக்க வேண்டும்.
புதிய ஓர் உலகம் பிறந்துள்ளது. புதிய ஒரு வாழ்வு
விடிந்துள்ளது. கிறிஸ்து உயிர்த்தார். கிறிஸ்து உயிர்
வாழ்கிறார். அல்லேலுயா!
|
நெஞ்சை விட்டு நீங்காதவை
இயேசுவின் விண்ணேற்ற நிகழ்வு பற்றி லூக்கா தரும் இரண்டு
குறிப்புகள். ஒன்று நற்செய்தி நூலின் முடிவாக. இன்னொன்று
திருத்தூதர் பணிகள் நூலின் தொடக்கமாக.
இயேசுவின் விண்ணேற்றம் :
- இயேசுவின் வாழ்விலும் திருச்சபையின் வரலாற்றிலும் ஒரு
முக்கிய கட்டம்.
- இயேசுவின் பாடுகள், மரணம் இவற்றைத் தந்தையான கடவுள்
அங்கீகரித்தார், ஏற்றுக் கொண்டார் என்பதன் அடையாளம்.
இயேசுவின் விண்ணேற்றம்:
- இயேசுவின் ஊனுடல் வரலாற்றுக்கு ஒரு முடிவு.
இயேசுவின் மறையுடல் வரலாற்றுக்கு ஒரு தொடக்கம்.
- கிறிஸ்துவின் நேரடிப் பணிக்கு ஒரு முடிவு,
திருத்தூதர், கிறிஸ்தவர் பணிக்கு ஒரு தொடக்கம்.
- போதனை வாழ்வுக்கு முடிவு போல
சாட்சிய வாழ்வுக்கு ஆரம்பமாக.
ஆக இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழா இரு பெரும் சிந்தனைகளை
முன் வைக்கிறது.
1. இயேசுவின் மண்ணகப் பணி நிறைவு: இயேசுவின் மானிட
உருயேற்றலும் விண்ணேற்றமும் நேரடித் தொடர்புடையவை. எந்த
நோக்கத்திற்காக இயேசு விண்ணகம் துறந்தாரோ அதே நோக்கத்தின்
நிறைவாக விண்ணேறுகிறார் என்பது. தந்தையான இறைவனின்
விருப்பத்தையும் அவரது இறையாட்சிப் பணியையும் உலகில்
நிலைநிறுத்திய இயேசு, உலகப் பணியின் நிறைவாக விண்ணகம்
ஏறினார் என்பது அவருக்குப் பணி முழுமை எவ்வாறு
சாத்தியமாயிற்று? இயேசு தமக்கென இறைவன் தந்த பணியினைப்
பற்றிய தெளிவும் ஆர்வமும் கொண்டிருந்தார். எச்சூழலிலும்
எவ்விதத்திலும் பணியிலிருந்து விலகிச் செல்லவில்லை. இறைவன்
தந்த பணியை நிறைவேற்றுவதே இயேசுவின் தனிப்பெரும் ஒரே
குறிக்கோளாயிருந்தது. ''என்னை அனுப்பியவரின் திருவுளத்தை
நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே
என் உணவு" (யோவான் 4:34). அத்தோடு இறையாட்சிப் பணியில்
அவர் சந்தித்த தடைகள், தடங்கல்கள், எதிர்ப்புகள்,
ஏமாற்றங்கள் அனைத்தையும் துணிந்த மனநிலையுடன்
எதிர்கொண்டார். மேலாக அவர்தம் பணியின் உச்சம் சிலுவைச்
சாவு என அறிந்தும் மன உவப்புடன் தன்னை ஈந்தார். எனவே அவரது
வாழ்வின் பரிசு அவரின் உயிர்ப்பு, பணியின் நிறைவு
விண்ணேற்றம்.
2. இயேசுவின் பணியில் அவருடைய சீடர்கள் கொண்டிருக்க
வேண்டிய பங்கேற்பு பற்றிய நினைவூட்டல். இயேசு தொடங்கிய
இறையாட்சிப் பணியைத் தொடர வேண்டிய கடமை இப்போது
சீடர்களுடையது. அவர் செயலாற்றியதை வீரியம் குறையாமல்
துணிவோடு செயல்படுத்த வேண்டிய பொறுப்பும் அவர்களுடையது.
அவர் மீண்டும் வரும் வரை மறவாமல் இம்மண்ணகத்தில் இயேசுவின்
மீட்புப் பணியை ஆற்றுவதே தேவை. "கலிலேயரே, நீங்கள் ஏன்
வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த
இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்கள்
அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்" (தி.ப.1:11). எனவே
விண்ணேற்றப் பெருவிழா இயேசுவின் இறையாட்சிப் பணியை அவரை
நம்பித் தொடர்கின்றவர்கள், தொடர வேண்டிய அவசியத்தை, பணிப்
பகிர்வினை , அப்பணியினை ஆழமாக ஆற்ற உருவாக்க வேண்டிய
பங்கேற்பு அமைப்புகளைப் பற்றிய சிந்தனைகளை ஆழப்படுத்த
அழைக்கிறது.
இந்த இறையாட்சிப் பணியைத் தனி ஆளாக அல்ல, கூட்டாக,
கூட்டொருமிப்பாக, குழுக்களாகச் செயலாற்றுங்கள் எனப்
பணிக்கிறார். இப்பணியை அவரை நம்புகிறவர்கள் தாங்கள் வாழும்
இடங்களில் வாழ்ந்து காட்ட முனைய வேண்டும் என அறைகூவல்
விடுக்கிறார். தொடக்கக் காலத் திருச்சபையில் பார்க்கிறோம்.
அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும்,
அப்பம் பிடுவதிலும், இறை வேண்டலிலும் உறுதியாய்
நிலைத்திருந்தார்கள்... நம்பிக்கை கொண்டோர் அனைவரும்
ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும் பொதுவாய்
வைத்திருந்தனர்... அனைவருக்கும் அவரவர் தேவைகளுக் கேற்ப
பகிர்ந்தளித்தனர். ஆண்டவரும் தாம் மீட்டுக் கொண்டவர்களை
நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக் கொண்டே இருந்தார்".
(தி.ப. 2:42-27). இன்று, இயேசு தொடங்கிய இறையாட்சிப் பணியை
நாம் தொடர்ந்தாற்ற வேண்டிய தேவையை உணர்வோம். அருள்
பணியாளர்களை மையப்படுத்தியோ, அல்லது குறிப்பிட்ட இனத்தினரை
, மொழியின்ரை முன்னிலைப்படுத்தியோ அல்ல, நம்பிக்கை கொண்ட
யாவருமே பணிப்பகிர்ந்து செயல்படுவோம்.
இயேசுவின் விண்ணேற்றத்தில் சீடர்களின் நெஞ்சை விட்டு
நீங்காதவைகள் இரண்டு:
1. இயேசு தந்த பொறுப்பு (நற்செய்தி அறிவிப்பு + நற்சான்று
வாழ்க்கை ) (தி.ப.1:8) நமது பணி வானத்தை அண்ணாந்து
பார்த்துக் கொண்டிருப்பது அல்ல. மாறாக அவர் விட்டுச் சென்ற
பணியைத் தொடர்ந்து ஆற்றுவது. இயேசு கனவு கண்ட புதிய உலகை
உருவாக்குவது. இனி இயேசு மட்டுமல்ல, நாமும் உலகின் ஒளி,
பூமியின் உப்பு, மனித வாழ்வின் புளிப்பு மாவு.
திருச்சபையில் எத்தனை ஆயிரம் புனிதர்கள்! அத்தனை பேரும்
ஓர் அச்சில் வார்த்தெடுக்கப்பட்டவர்கள் போல் ஒரே விதத்தில்
சான்று பகர்ந்தவர்கள் அல்ல. வானவில்லின் வண்ண நிறங்கள் போல
ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் வேறுபட்ட சூழல்களில்
சான்று பகர்ந்தவர்கள். அந்தப் பணியில் இயேசுவே நம்மோடு
இருந்து நம்மில் செயல்படுகிறார் என்பதுதான் தனிச்சிறப்பு
(மார்க் 16:20)
2. இயேசு தந்த வாக்குறுதி (இயேசு மீண்டும் வருவார்.
ஆவியைத் தருவார்) ''இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்ற
மடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும்
வருவார்": (தி.ப.1:11, பிலிப்.3:20). இயேசுவின்
உடனிருப்புக்கும் வல்லமைக்கும் ஓர் அழியாமை உண்டு.
ஊனுடலில் நடமாடிய போது அவர் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில்
மட்டும் இருந்தார். விண்ணகம் சென்றபின் தூய ஆவியின் வழியாக
அண்ட கோளங்கள் அனைத்திலும் இருக்கிறார். மண்ணில்
விண்ணகத்தை உருவாக்க மனிதர்களைக் கருவியாக்கிக் கொள்வார்
என்பதே விண்ணேற்ற விழாச் சொல்லும் செய்தி.
|
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி |
ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா
இயேசுவின் வாழ்வையும், பாடுகளையும் மையமாகக் கொண்டு, பல
திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில், இயேசுவின் உயிர்ப்பை
மையமாகக்கொண்டு, 2016ம் ஆண்டு வெளிவந்த 'Risen' என்ற
திரைப்படம் ஒரு சில அதிர்வலைகளை உருவாக்கியது. இயேசுவின்
உடல் கல்லறையில் இல்லை என்ற செய்தியை உரோமைய அரசு அதிகாரிகள்
எவ்வாறு சந்தித்தனர் என்பதை இத்திரைப்படம் விவரித்தது.
கல்வாரியில் இயேசுவின் மரணத்தை நேரடியாகக் கண்டதோடு, அதை
உறுதிசெய்வதற்கு, இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்த உத்தரவிட்ட
உரோமையப் படைத்தலைவன் கிளாவியுஸ் என்பவர், இயேசுவின் உடலை
யூதர்கள் கடத்திச் சென்றுவிட்டனர் என்ற எண்ணத்துடன், இயேசுவை
பின்தொடர்ந்த அனைவரையும் வேட்டையாடி வதைப்பது, இத்திரைப்படத்தில்
காட்டப்பட்டுள்ளது. இறுதியில், கிளாவியுஸ், இயேசுவைச் சந்தித்து,
அவருடைய சீடர்களில் ஒருவராக மாறுவது போன்று இத்திரைக்கதை
உருவாக்கப்பட்டுள்ளது. இயேசுவின் உயிர்ப்பை நம்பாமல், பின்னர்
அவரது உயிர்ப்புக்கு சாட்சியாக மாறிய கிளாவியுஸ், நற்செய்திகளில்
இடம்பெறாத ஒருவர் என்றாலும், கோடான கோடி மக்களின் பிரதிநிதியாக
அவர் இருக்கிறார் என்பதை மறுக்க இயலாது.
இத்திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி, உயிர்ப்பை நம்
நம்பிக்கையின் அடித்தளமாகக் கொண்டு வாழும் நம்மைக் குறித்த
சிந்தனைகளை துவக்கி வைக்கிறது. இயேசு மீண்டும் உயிர்த்துவிட்டார்
என்ற செய்தி கலகத்தை உருவாக்கும் என்ற விவாதம், கிளாவியுஸ்
முன்னிலையில், ஆளுநர் பிலாத்தின் அரண்மனையில் நடைபெறுகிறது.
அப்போது, பிலாத்து, "மக்கள் இதை நம்புவார்களா?" என்ற
கேள்வியை எழுப்புகிறார். அவர் அருகில் நிற்கும் மதத் தலைவர்
ஒருவர், "சக்தியற்ற கும்பல் இதை நம்பும்" என்று பதில்
சொல்கிறார்.
கடந்த 20 நூற்றாண்டுகளாக, 'சக்தியற்ற கும்பலாக' கருதப்படும்
கிறிஸ்தவர்களாகிய நாம், இயேசு உயிர்த்துவிட்டார் என்ற
செய்தியை, மிகப்பெரும் விழாவாகக் கொண்டாடி வருகிறோம். நம்மைச்
சுற்றி, அனைத்தும் அழிந்துவிட்டதைப்போன்ற உணர்வைத் தரும்
நம்பிக்கையற்ற சூழலிலும், நம்பிக்கை தருவதற்கு, கிறிஸ்தவ
மறையின் ஆணிவேராக விளங்கும் இயேசுவின் உயிர்ப்பு என்ற உண்மை,
கடந்த 20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக நம்மை வழிநடத்தி வந்துள்ளது.
அனைத்தும் அழிவுற்ற நிலையிலும், நம்பிக்கையை வழங்கும் ஒரு
சில செய்திகள், அண்மையக் காலங்களில், நம்மை வந்தடைந்துள்ளன.
இதோ, அவற்றில் ஒரு சில:
கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி, மதியிழந்த இரஷ்ய அரசுத்தலைவன்
விளாடிமீர் புடின் அளித்த அநீதியான ஆணைக்கு உட்பட்டு, இரஷ்ய
இராணுவம் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல்களை துவங்கியது.
உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் (Kyiv) மீது பயங்கரத்
தாக்குதல்கள் நடைபெற்ற பிப்ரவரி 25ம் தேதி இரவில், அந்நகரின்
சுரங்க இரயில் நிலையங்களில் மக்கள் பதுங்கியிருந்தனர். அவ்வேளையில்,
அங்கிருந்த 23 வயதான இளம்பெண்ணுக்கு பிரசவ வேதனைத் துவங்கியது.
அவர் எழுப்பிய அழுகுரலைக் கேட்ட காவல்துறையினர், அப்பெண்ணுக்குத்
தேவையான உதவிகள் செய்ததால், அவர் ஒரு பெண் குழந்தையைப்
பெற்றெடுத்தார். பின்னர் தாயும், சேயும் ஒரு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டனர். உயிருக்குப் பயந்து, சுரங்க இரயில் நிலையத்தில்
தங்கியிருந்த இளம் பெண்ணின் விரலை, அவரது குழந்தையின்
பிஞ்சுக் கரம் பற்றியிருந்த புகைப்படம், சமூக வலைத்தளத்தில்
வெகு வேகமாகப் பரவியது. அழிவை எதிர்நோக்கியிருக்கும் சூழலில்,
'நம்பிக்கையின் ஒளிவிளக்கு' என்ற தலைப்புடன் இந்தப் புகைப்படம்
சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.
2011ம் ஆண்டு, அக்டோபர் 23, ஞாயிறன்று, துருக்கி நாட்டின்
Van என்ற நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் (7.2 ரிக்டர் அளவு)
பல நூறு கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. அன்றைய நிலவரப்படி,
300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்; 2000த்திற்கும் அதிகமானோர்
காயமுற்றனர். ஒரு வாரத்தில், இறந்தோரின் எண்ணிக்கை 604 என்றும்,
காயமடைந்தோரின் எண்ணிக்கை 4,100 என்றும் கூறப்பட்டது. மரணங்களின்
எண்ணிக்கை குறித்த செய்திகள் வெளிவந்த அதே நாள்களில்,
வாழ்வைப்பற்றிய ஒரு செய்தியும் வெளியானது. பிறந்து, 2 வாரங்களே
ஆகியிருந்த, Azra Karaduman என்ற குழந்தை, நிலநடுக்கம் ஏற்பட்டு
48 மணி நேரங்கள் சென்று, இடிபாடுகளின் நடுவிலிருந்து
காப்பாற்றப்பட்டது. அதுமட்டுமல்ல, அக்குழந்தை காப்பற்றப்பட்ட
அதே இடத்தில், குழந்தையின் தாயும் (Semiha), பாட்டியும் (Gulsaadet)
மீட்கப்பட்டனர்.
இக்குழந்தையை, "நம்பிக்கையின் முகம்" என்று ஊடகங்கள் அழைத்தன.
Azra என்ற அக்குழந்தையின் பெயருக்கு, "பாலைநிலத்து மலர்"
என்பது பொருள் என்றும், 2 வாரக் குழந்தை, இரு தலைமுறைகளைக்
காப்பாற்றியது என்றும், இந்நிகழ்வை, ஊடகங்கள் விவரித்தன.
அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனம் (CBS) இச்செய்தியை ஒளிபரப்பியபோது,
Mark Philips என்ற செய்தித் தொடர்பாளர், அழகான ஒரு கருத்தை
பதிவுசெய்தார்: "பெரிய, பெரிய புள்ளிவிவரங்களைக்
காட்டிலும், சின்னச் சின்ன மனிதாபிமானக் கதைகள் நம் கற்பனையைக்
கவர்கின்றன" என்று அவர் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில், துருக்கியில், ஜப்பானில் (2011),
ஹெயிட்டியில் (2010), பல ஆசிய நாடுகளில் (2004), ஏற்பட்ட
நிலநடுக்கம், சுனாமி ஆகிய இயற்கைப் பேரிடர்களில் இறந்தோர்,
காயமுற்றோர் ஆகியோரின் புள்ளிவிவரங்கள் நம் மனதில் பதிந்ததைவிட,
அந்த அழிவுகளின் நடுவிலிருந்து, உயிர்கள் மீட்கப்பட்டச்
செய்திகள், நம்மை அதிகம் கவர்ந்தன என்பதையும், அவை, நம் உள்ளங்களில்,
நம்பிக்கை விதைகளை நட்டுவைத்தன என்பதையும் மறுக்கமுடியாது.
கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக, கோவிட்-19 பெருந்தொற்று,
நிலநடுக்கமாக, சுனாமியாக, சூறாவளியாக, எரிமலை வெடிப்பாக,
இவ்வுலகை பெருமளவு சிதைத்துவருகிறது. இப்பெருந்தொற்றினால்
பாதிக்கப்பட்டோர், மற்றும், இறந்தோரின் எண்ணிக்கையை,
ஊடகங்கள், ஒவ்வொரு நாளும், நம் எண்ணங்களில்
வலுக்கட்டாயமாகத் திணித்து, நம் உள்ளங்களை கல்லறைகளாக
மாற்றிவருகின்றன. ஊடகங்களின் கல்லறைச் செய்திகளிலிருந்து
உயிர்த்தெழ, இன்றைய ஞாயிறு நற்செய்தி நமக்கு உதவியாக
இருக்கும் என்ற நம்பிக்கையுடன், நம் சிந்தனைகளைத்
தொடர்வோம்.
2010ம் ஆண்டு, சனவரி மாதம், ஹெயிட்டியில் நிலநடுக்கத்தால்
எற்பட்ட இடிபாடுகளிலிருந்து, பதினாறு நாட்களுக்குப் பின்,
Darline Etienne என்ற இளம்பெண் உயிரோடு மீட்கப்பட்டது, ஓர்
உயிர்ப்பு என்று கூறப்பட்டது. அதே 2010ம் ஆண்டு, சிலே
நாட்டு சுரங்க விபத்தில் அகப்பட்ட 33 தொழிலாளிகள், 69
நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்டது, உயிர்ப்பெனக்
கொண்டாடப்பட்டது.
2010ம் ஆண்டு, ஆகஸ்ட் 5ம் தேதி, சிலே நாட்டின் அட்டக்காமா
(Atacama) பாலைநிலத்தில் அமைந்துள்ள, தாமிர, தங்கச்
சுரங்கம் ஒன்றில் சிக்கிக்கொண்ட 33 தொழிலாளர்கள், அக்டோபர்
12ம் தேதி, அதாவது, 69 நாட்களுக்குப் பின்,
மீட்கப்பட்டனர். இந்தச் சாதனை முடிந்ததும், சிலே நாட்டின்
ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Alejandro Karmelic அவர்கள்,
"சிலே நாடு, இன்று உயிர்ப்பின் நம்பிக்கைக்குச் சான்று
பகர்ந்துள்ளது" என்று கூறினார்.
ஆயர் Karmelic அவர்கள், உயிர்ப்பைக் குறித்து, அக்டோபர்
மாதத்தில் குறிப்பிட்டது பொருத்தமாகத் தெரிகிறது.
உயிர்ப்புக்கும், வசந்தகாலத்திற்கும் தொடர்பு உள்ளது
என்பதை அறிவோம். பூமியின் வட பாதி கோளத்தில் (Northern
hemisphere), மார்ச், ஏப்ரல் மாதங்களில் வரும்
வசந்தகாலத்தையொட்டி, திருஅவையில் தவக்காலமும், உயிர்ப்புத்
திருநாளும் கொண்டாடப்படுகின்றன. பூமியின் தென் பாதி
கோளத்தில் (Southern hemisphere), அமைந்துள்ள சிலே
நாட்டில், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வசந்தகாலம்
வரும். எனவே, அந்த சுரங்கத் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்ட
அக்டோபர் மாதத்தில், அவர்கள் உயிர்ப்புத் திருநாளைக்
கொண்டாடியிருந்தாலும், பொருத்தமாகவே இருந்திருக்கும்.
கல்வாரிக் கொடுமைகளுக்குப் பின், சாத்தப்பட்ட அறையை, ஒரு
கல்லறையாக மாற்றி, அதில், தங்களையே பூட்டி வைத்துக்கொண்ட
சீடர்கள், இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின், அச்சமின்றி,
இயேசுவை உலகறியச் செய்தனர். அதேபோல், பாறைகளால் முற்றிலும்
மூடப்பட்டு, இனி உயிரோடு மீளமாட்டோம் என்ற அச்சத்தில்,
சந்தேகத்தில் புதையுண்டிருந்த சிலே நாட்டு சுரங்கத்
தொழிலாளிகள், வெளியே வந்தபின், பல நாடுகளுக்குச் சென்று
இயேசுவை உலகறியச் செய்தனர். கோவிட்-19 பெருந்தொற்றைக்
குறித்த செய்திகளால், இவ்வுலகின்மீது வைக்கப்பட்டுள்ள
"நம்பிக்கையின்மை": என்ற பாறைகளை அகற்றுவதிலும்,
மரணத்தைவிட, வாழ்வைக் குறித்து பேசுவதிலும், நம் சக்தியை
பயன்படுத்த, உயிர்த்த இறைவன் நம்மை அழைக்கிறார்.
இங்கு நாம் குறிப்பிட்ட 'உயிர்ப்பு நிகழ்வுகள்' ஊடகங்களில்
செய்திகளாக வெளிவந்தவை. ஆனால், ஊடகங்களில் செய்திகளாக
வராமல், நம் ஒவ்வொருநாள் வாழ்விலும், உயிர்ப்பு,
சின்னச்சின்ன நிகழ்வுகள் வழியே நடந்தவண்ணம் உள்ளன. இவை
எதுவும் நம் கவனத்தை ஈர்ப்பது கிடையாது. இயேசுவின்
உயிர்ப்பு முதல்முறை நிகழ்ந்தபோதும், அது யாருடைய
கவனத்தையும் ஈர்க்கவில்லை. இத்தகைய உயிர்ப்பு நிகழ்வுகளைக்
காண்பதற்கு அன்பின் விழிகள் அவசியம். அன்பின் விழிகள்
கொண்டிருப்பதன் அவசியம் குறித்து, இறையியலிலும்,
ஆன்மீகத்திலும் புலமைபெற்ற அருள்பணி Ronald Rolheiser
அவர்கள், "உயிர்ப்பைக் காண" என்ற தலைப்பில்
பகிர்ந்துகொண்டிருக்கும் கருத்துக்கள், நம்மை சிந்திக்க
அழைக்கின்றன.
இறைவன் நம் சுதந்திரத்தைப் பறித்து, தன் வலிமையைத்
திணித்து, நம்மை வலுக்கட்டாயமாக ஒன்றைக் காணும்படி
செய்வதில்லை. நம் சுதந்திரத்தை எப்போதும் மதிப்பவர் அவர்.
இறைவனின் இந்தப் பண்பு, இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வில்
மிகத் தெளிவாகத் தெரிகிறது. உயிர்ப்பு நிகழ்வு, கண்ணையும்,
கருத்தையும் பறிக்கும் பிரம்மாண்டமான நிகழ்வாக, தலைப்புச்
செய்தியாக நிகழவில்லை. இயேசுவின் பிறப்பைப் போலவே, அவரது
உயிர்ப்பும் மிக அமைதியாக நிகழ்ந்தது.
இயேசுவின் உயிர்ப்பை ஒரு சிலர் கண்டனர். மற்றவர்களால்
அவரைக் காண இயலவில்லை. உயிர்ப்பு என்ற பேருண்மை ஒரு
சிலரில் பெரும் மாற்றங்களை உருவாக்கியது. வேறு சிலரோ, அந்த
பேருண்மையைப் புரிந்துகொள்ள மறுத்ததோடு, அதை அழிக்கவும்
முயற்சிகள் செய்தனர். இந்த வேறுபாடு ஏன்? 12ம்
நூற்றாண்டில் வாழ்ந்த புனித விக்டரின் ஹுகோ என்பவர்
கூறுவது இதுதான்: "அன்பின் கண்களால் காணும்போது, சரியான
முறையில் காண முடியும். பேருண்மைகளை சரியான முறையில்
புரிந்துகொள்ள முடியும்."
அன்பின் கண்கள் கொண்டு பார்த்த மகதலாவின் மரியா, உயிர்ப்பு
நாளன்று விடியற் காலையில் தன் அன்புத் தலைவனின் உடலுக்கு
உரிய மாண்பை வழங்க நறுமணத் தைலத்துடன் கல்லறைக்குச்
சென்றார் என்பதை உயிர்ப்பு விழாவின் நற்செய்தியாக
வாசிக்கிறோம். மனமெங்கும் நிறைந்திருந்த அன்புடன்
கல்லறைக்குச் சென்ற மரியா, உயிர்ப்பு என்ற பேருண்மையின்
முதல் திருத்தூதராக மாறினார். ஏனைய சீடர்கள் தங்கள்
கவலைகளாலும், அச்சத்தாலும் மூடிய கதவுகளுக்குப் பின்
பதுங்கியிருந்த வேளையில், மகதலாவின் மரியா துணிவுடன்
கல்லறைக்குச் சென்றார். உயிர்த்த இயேசுவை சந்தித்த முதல்
சீடராக மாறினார்.
நம்மைச் சுற்றி ஒவ்வொருநாளும் நிகழ்ந்துவரும் அழிவுச்
செய்திகளின் விளைவாக, உயிர்ப்பின் நம்பிக்கை நம்மைவிட்டு
விலகிச் செல்கிறது. இத்தனை அழிவுகளின் நடுவிலும், அன்பின்
கண்கள் கொண்டு பார்க்கப் பழகினால், நம்மைச் சுற்றி
சின்னச்சின்ன உயிர்ப்புகள் நிகழ்வதைக் காணமுடியும்.
இத்தகைய வரத்தை, உயிர்த்த கிறிஸ்து நமக்கு வழங்கவேண்டும்
என்று மன்றாடுவோம்.
|
பறைசாற்றுதலும், சான்று பகர்தலும்
சிறந்த இசை நாடகங்களை (Opera) உருவாக்கியதால் புகழ்பெற்ற
இத்தாலியக் கலைஞர், ஜியாக்கமோ புச்சீனி (Giacomo Puccini)
அவர்கள், 1922ம் ஆண்டு, ":துராந்தோத்": (Turandot) என்ற இசை
நாடகத்தை உருவாக்கத் துவங்கினார். அதே வேளையில், அவருக்கு,
தொண்டையில் புற்றுநோய் இருந்ததென கண்டுபிடிக்கப்பட்டது.
தனது மரணத்திற்கு நாள் குறித்தாயிற்று என்பதை உணர்ந்த
புச்சீனி அவர்கள், தன் இறுதி இசை நாடகத்தை முடிப்பதற்காக,
இரவும், பகலும் அயராது உழைத்தார். அவரது குடும்பத்தினர்,
நண்பர்கள், மாணவர்கள் அனைவரும் எவ்வளவோ சொல்லியும், அவர்
தன் பணியை ஓய்வின்றி தொடர்ந்தார்.
ஒருநாள், அவர், தன் மாணவர்களை அழைத்து, "ஒருவேளை, நான்
இந்த இசை நாடகத்தை முடிப்பதற்கு முன் இறந்துபோனால்,
நீங்கள் இந்த நாடகத்தை முழுமையாக்கவேண்டும்" என்று
கேட்டுக்கொண்டார். அவர் பயந்தபடியே, ":துராந்தோத்": இசை
நாடகத்தை முடிப்பதற்கு முன், 1924ம் ஆண்டு, புச்சீனி
அவர்கள் மரணமடைந்தார். தங்கள் குருவின் மரணத்தைத்
தொடர்ந்து, அவரது மாணவர்கள் ஒன்று சேர்ந்து, ":துராந்தோத்":
இசை நாடகத்தை எழுதி முடித்தனர்.
1926ம் ஆண்டு, இத்தாலியின் மிலான் நகரில் இந்த இசை நாடகம்
முதன்முறையாக அரங்கேறியது. புச்சீனி அவர்களின்
பாசத்திற்குரிய மாணவர் Toscanini என்பவர், அந்த இசை
நாடகத்தின் இசைக்குழுவை இயக்கினார். புச்சீனி அவர்கள்
உருவாக்கிய முதல் பகுதி அற்புதமாக அரங்கேறியது. அப்பகுதி
முடிவுற்றபோது, நடிகர்கள், இசைக் குழுவினர் அனைவரும் இசை
நாடகத்தை நிறுத்தினர். அதுவரை, இசைக்குழுவை இயக்கிவந்த
Toscanini அவர்கள், தன் கையிலிருந்த கோலை
கீழேவைத்துவிட்டு, மக்கள் பக்கம் திரும்பி, "இதுவரை
நீங்கள் இரசித்த இப்பகுதியை எங்கள் குரு உருவாக்கினார்;
பின்னர், இவ்வுலகைவிட்டு மறைந்தார்" என்று, கண்களில்
கண்ணீர் பொங்க சொன்னார். அரங்கத்தில் ஆழ்ந்த அமைதி
நிலவியது. சில நிமிடங்கள் சென்று, Toscanini அவர்கள், தன்
கண்ணீரைத் துடைத்தபடி, "ஆனால், அவரது சீடர்களாகிய நாங்கள்,
எங்கள் குருவின் பணியை முழுமையாக்கியுள்ளோம்" என்று
சொல்லி, இசைக்குழுவை வழிநடத்தும் கோலை மீண்டும் கையில்
எடுத்து, இசை நாடகத்தைத் தொடர்ந்தார். நாடகம் முடிந்தபின்,
அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று, தொடர்ந்து,
நீண்டநேரம் கரவொலி எழுப்பினர். குருவும், சீடர்களும்
இணைந்து உருவாக்கிய ":துராந்தோத்": இசை நாடகம், இன்றும்
இசையுலகில் தனியிடம் பெற்ற ஒரு கலைப்படைப்பு.
குருவாகிய கிறிஸ்துவும், அவரது சீடர்களும் இணைந்து
உருவாக்கிய 'நற்செய்தி' என்ற அற்புதப் படைப்பைச்
சிந்திக்க, இஞ்ஞாயிறு நமக்கு ஒரு வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. இன்று, இயேசுவின் விண்ணேற்ற விழாவைக்
கொண்டாடுகிறோம். அதே வேளையில், இயேசுவின் பணியை இவ்வுலகில்
தொடர்ந்து நிறைவேற்றிய சீடர்களின் அர்ப்பணத்தையும், அயரா
உழைப்பையும், துணிவையும் இந்நாளில் கொண்டாடுகிறோம்.
இயேசுவின் விண்ணேற்ற நிகழ்வு, மத்தேயு, மாற்கு, லூக்கா
ஆகியோரின் நற்செய்திகளிலும், திருத்தூதர் பணிகள் நூலிலும்
கூறப்பட்டுள்ளது. இந்நூல்களில் காணப்படும் விண்ணேற்ற
நிகழ்வை ஒப்புமைப்படுத்திப் பார்த்தால், பல வேறுபாடுகள்
இருப்பதை உணரலாம். இந்நிகழ்வு, எருசலேமில், கலிலேயாவில்
அல்லது பெத்தானியாவில் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.
இயேசுவின் விண்ணேற்றம், உயிர்ப்புக்குப் பின் உடனே
நிகழ்ந்ததா, அல்லது 40 நாட்கள் கழிந்து நிகழ்ந்ததா,
என்பதிலும் தெளிவு இல்லை. இந்நிகழ்வு எங்கே, எப்போது
நிகழ்ந்தது என்பதில் வேறுபாடுகள் இருந்தாலும்,
இந்நிகழ்வின்போது இயேசு கூறிய செய்தியில் ஓரளவு ஒப்புமைகள்
உள்ளன. மிகவும் ஆழமான, சக்தி வாய்ந்த செய்தி அது.
இயேசுவின் விண்ணேற்ற நிகழ்வை, ஒரு வரலாற்றுப் பதிவாகக்
காட்டுவதில் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள், அதிக கவனம்
செலுத்தாமல், இந்நிகழ்வின்போது இயேசு கூறிய செய்தியில்
அதிகக் கவனம் செலுத்தியுள்ளனர் என்பதை நாம் உணரலாம்.
நற்செய்தியைப் பறைசாற்றுவதும், நற்செய்திக்குச் சாட்சிகளாக
வாழ்வதும், இயேசு தன் சீடர்களுக்கு விடுத்த அழைப்பு,
அல்லது, பணி என்பதை, மூன்று நற்செய்திகளும், திருத்தூதர்
பணிகள் நூலும் வெவ்வேறு வார்த்தைகளில் கூறியுள்ளன.
":உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப்
பறைசாற்றுங்கள்": என்று இயேசு தன் விண்ணேற்பிற்குமுன் கூறிய
வார்த்தைகள், கிறிஸ்தவ வரலாற்றில் பலவழிகளில் பொருள்
கொள்ளப்பட்டுள்ளன. இதனால் நன்மைகள் விளைந்துள்ளன.
பிரச்சனைகளும் எழுந்துள்ளன. நற்செய்தியை யார்
பறைசாற்றுவது? அதை எப்படி பறைசாற்றுவது? என்ற கேள்விகள்,
கிறிஸ்தவ வரலாற்றில் அடிக்கடி எழும் கேள்விகள்.
பொதுவாக, நற்செய்தியைப் பறைசாற்றுதல் என்றதும்,
கோவில்களில், மேடைகளில் முழங்கக்கூடிய ஒரு சக்திவாய்ந்த
மறையுரையாக இதை நாம் எண்ணிப்பார்க்கிறோம். இந்தக்
கோணத்தில் இவ்வார்த்தைகளை நாம் சிறைப்படுத்திவிடுவதால்,
குருக்கள், துறவியர், என்ற ஒரு குறுகிய குழுவுக்கு இந்தப்
பணியை ஒதுக்கிவைத்து விடுகிறோம். 'நற்செய்தியைப்
பறைசாற்றுங்கள்' என்று இயேசு யாரிடம் கூறினாரோ,
அக்குழுவில் இருந்தவர்கள் யாரும் அருள்பணியாளரோ, துறவியோ
அல்ல. அவர்கள் அனைவரும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த
சாதாரணத் தொழிலாளிகள். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால்,
நாம் அனைவரும் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கு
அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணரலாம்.
மாற்கு நற்செய்தியில், 'நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'
என்று இயேசு கூறிய அதே மூச்சில், அந்தப் பறைசாற்றுதலின்
பல்வேறு விளைவுகளையும் கூறுகின்றார். நற்செய்தியில்
நம்பிக்கை கொண்டவர்கள், பேய்களை ஓட்டுவர், உடல்நலமற்றோரைக்
குணமாக்குவர், பாம்போ, கொடிய நஞ்சோ அவர்கள் உயிரைப்
பறிக்காது என்ற அடையாளங்களை இயேசு இணைத்துக் கூறுகிறார்
(காண்க. மாற்கு 16: 16-18). மேடைகளில், கோவில்களில்
முழங்கப்படுவதோடு நற்செய்தியின் பறைசாற்றுதல் நின்று
விடுவதில்லை. குணமளிக்கும் பணிகள், தீய சக்திகளை
உலகினின்று விரட்டியடிக்கும் பணிகள் ஆகியவற்றின்
வழியாகவும், நற்செய்தியை நாம் பறைசாற்ற வேண்டும் என்பதை,
இயேசு தெளிவுபடுத்துகிறார்.
வாய் வார்த்தைகளால் மேடைகளில் பறைசாற்றப்படும்
நற்செய்தியைக் காட்டிலும், வாழ்க்கையால் உணர்த்தப்படும்
நற்செய்திகள் இன்னும் ஆழமான தாக்கங்களை உருவாக்கும் என்பதை
நாம் அனைவரும் அறிவோம். வாழ்க்கையால் நற்செய்தியைப்
பறைசாற்றிய பலரில், உலகப் புகழ்பெற்ற Albert Schweitzer
என்ற மருத்துவரும் ஒருவர். இவர் வாழ்க்கையில் நடந்த
நிகழ்ச்சியொன்று இப்போது நம் நினைவை நிறைக்கிறது. ஆல்பர்ட்
அவர்கள், ஆப்ரிக்காவில், மிகவும் வறுமைப்பட்ட,
பின்தங்கியப் பகுதிகளில் மேற்கொண்ட அற்புதமான மருத்துவப்
பணிகளுக்காகவும், அணு ஆய்வுகள் இவ்வுலகிற்குத் தேவையில்லை
என்ற எண்ணத்தை உலகில் வளர்க்க அவர் மேற்கொண்ட
முயற்சிகளுக்காகவும் 1952ம் ஆண்டு, நொபெல் அமைதி விருது
அவருக்கு வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெற்ற அடுத்த ஆண்டு,
அவர் அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு இரயிலில் சென்றார்.
அவரை வரவேற்க பத்திரிக்கையாளர்களும், பெரும் தலைவர்களும்,
இரயில் நிலையத்தில் காத்திருந்தனர். ஆல்பர்ட் அவர்கள்,
இரயிலைவிட்டு இறங்கியதும், கரவொலியும், காமிரா
ஒளிவிளக்களும் அந்த இடத்தை நிறைத்தன. தன்னை சிறிது நேரம்
மன்னிக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொண்ட ஆல்பர்ட்
அவர்கள், அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு விரைந்தார்.
இரயில் நிலையத்தில் இரு பெட்டிகளைச் சுமந்தபடி, தடுமாறி
நடந்துகொண்டிருந்த வயதான, கறுப்பின பெண்மணி ஒருவருக்கு
உதவிசெய்து, அவரை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டபின், ஆல்பர்ட்
அவர்கள், தனக்காகக் காத்திருந்த கூட்டத்திடம் வந்தார்.
நடந்ததைக்கண்ட ஒரு பத்திரிகையாளர், மற்றொருவரிடம், "நான்
இதுவரை கோவில்களில் மறையுரைகளைக் கேட்டிருக்கிறேன்.
இதுதான் முதல்முறையாக, ஒரு நடமாடும் மறையுரையைப்
பார்க்கிறேன்" என்று கூறினார்.
Albert Schweitzer அவர்கள், 25 வயது இளைஞனாக இருந்தபோது,
மறையுரை வழங்குவதில், இறையியல் வகுப்புக்கள் நடத்துவதில்
தன்னிகரற்ற புகழ் பெற்றிருந்தார். ஆப்ரிக்க நாடுகளில்
நிலவிவந்த தேவைகளைப் பற்றி கேள்விப்பட்ட ஆல்பர்ட் அவர்கள்,
தனது 30வது வயதில், பேராசிரியர் பதவியை விட்டுவிட்டு,
மருத்துவம் படித்து, ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய ஒரு
பகுதியில் மருத்துவ மனையொன்றை நிறுவி பணிசெய்யத்
துவங்கினார். பல்வேறு இடர்கள், சிறைவாசம் என்று அவர்
வாழ்வில் சவால்கள் வந்தாலும், வறுமையில் வாடிய ஆப்ரிக்க
மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவப் பணிகளைச்
செய்துவந்தார். இளமையில் நற்செய்தியை வார்த்தைகளாய்
முழங்கிப் புகழ்பெற்ற ஆல்பர்ட் அவர்கள், தன் வாழ்வின்
பிற்பகுதியில், தன் வாய் வார்த்தைகளால் அல்ல, மாறாக,
வாழ்வால் நற்செய்தியைப் பறைசாற்றினார்.
கோவில்களில், பிரசங்க மேடைகளில் பறைசாற்றப்படும்
நற்செய்தியைவிட, இவ்வுலகை இறையரசாக மாற்றவேண்டும் என்ற
அர்ப்பண உணர்வுடன் பணியாற்றிய ஆல்பர்ட் அவர்களைப் போன்ற
பல்லாயிரம் உன்னத உள்ளங்களின் வாழ்வு பறைசாற்றியுள்ள
நற்செய்தியே, இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக, அதிகமாய்,
ஆழமாய் இவ்வுலகில் வேரூன்றியுள்ளது என்று சொன்னால், அது
முற்றிலும் உண்மை. வாழ்வால் நற்செய்தியைப்
பறைசாற்றுவதற்குப் பெரும் அறிவாளிகள், பேச்சாளர்கள்
தேவையில்லை. இயேசுவின் சீடர்களே இதற்குச் சிறந்த
எடுத்துக்காட்டுகள்.
இயேசு விண்ணேற்றம் அடைந்ததும் நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படும்
ஒரு கற்பனைக் கதை இது. இயேசு விண்ணகம் சென்றதும்,
தலைமைத்தூதர் கபிரியேல், அவரைச் சந்தித்தார். "உங்கள்
பணியைத் திறம்பட முடித்துவிட்டீர்கள். உலகில் உங்கள்
நற்செய்தியைத் தொடர்ந்து பரப்புவதற்கு என்ன திட்டங்கள்
வைத்துள்ளீர்கள்?" என்று கேட்டார்.
"என்னுடையப் பணியைத் தொடரும்படி, ஒரு சில மீனவர்களிடமும்,
வரி வசூலிப்பவர்களிடமும் சொல்லியிருக்கிறேன்" என்று இயேசு
சொன்னதும், கபிரியேல் தூதர் அவரிடம், "யார்... அந்தப்
பேதுரு, தோமா இவர்களைப்பற்றிச் சொல்கிறீர்களா? அவர்களைப்
பற்றித்தான் உங்களுக்கு நன்கு தெரியுமே... ஒருவர் உங்களைத்
தெரியாது என்று மறுதலித்தார், மற்றொருவர் உங்களை
நம்பவில்லை. இவர்களை நம்பியா இந்தப் பணியை
ஒப்படைத்தீர்கள்? கட்டாயம் வேறு சில நல்ல திட்டங்கள்
உங்கள் எண்ணத்தில் இருக்கவேண்டும், இல்லையா?" என்று
கேட்டார்.
இயேசு அவரிடம் அமைதியாக, "நற்செய்திப் பறைசாற்றும் பணியை,
இவர்களை நம்பியே நான் ஒப்படைத்துள்ளேன். இவர்களைத்தவிர,
என்னிடம் வேறு எந்தத் திட்டமும் கிடையாது" என்று
பதிலளித்தார்.
இருபது நூற்றாண்டுகளைத் தாண்டி நற்செய்தி இன்றும்
இவ்வுலகில் அர்த்தம் உள்ளதாக இருக்கிறது என்றால், அதற்குக்
காரணம், தங்கள் அறிவுத்திறன் கொண்டு, வார்த்தைப் புலமை
கொண்டு, நற்செய்தியைப் போதித்தவர்கள் அல்ல...
நற்செய்தியும், அதன் மையமான இயேசுவும்தான் காரணம்.
இயேசுவும், அவரது நற்செய்தியும், மையங்கள் என்பதை
மறந்துவிட்டு, நற்செய்தியைப் போதிப்பவரின் புகழ், அவரது
பேச்சுத்திறன் இவற்றை மையங்கள் என்று நாம்
நம்பியபோதெல்லாம் பிரச்சனைகள் எழுந்துள்ளன என்பதை,
கிறிஸ்தவ வரலாறு மீண்டும், மீண்டும், நமக்குச்
சொல்லித்தருகிறது.
வார்த்தைகளை அதிகம் கூறாமல், நற்செய்தியை வாழ்ந்து காட்டிய
அசிசி நகர் புனித பிரான்சிஸ், மருத்துவர் Albert
Schweitzer, புனித அன்னை தெரேசா என்று பல்லாயிரம் உன்னதப்
பணியாளர்களின் வாழ்வால், நற்செய்தி இன்றும் நம்மிடையே
வாழ்கிறது என்பதை எண்ணி, இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
வாழ்வாக மாறிய இந்த நற்செய்திகள் நமது மத்தியில்
உலவும்போது, நஞ்சாகப் பரவிவரும் தீய சக்திகள் நம்மை
அழித்துவிட முடியாது என்பதை மனதார நம்புவோம்.
|
மறையுரைச்சிந்தனை
-அருள்பணி. குழந்தைஇயேசு பாபு சிவகங்கை |
இயேசுவின் உயிர்ப்பு நம் புதுவாழ்வின் பிறப்பு!
இன்று நாம் உயிர்ப்பு ஞாயிறைக் கொண்டாடி மகிழ்கிறோம்.
சிலுவையிலே அறையுண்டு மரித்த மெசியா மறைநூல்
வாக்குகளின் நிறைவாய் உயிர்த்தெழுந்து உலகின்
மீட்பைக் கொணர்ந்த தினம் இது. இன்றைய நாள் கிறிஸ்தவர்களாகிய
நமக்கு மிக மிக முக்கியமான நாள். நாம் எத்தனையோ
திருவிழாக்களை கொண்டாடினாலும் அனைத்திற்கும் மேலான
திருநாள் இந்நாள் தான். ஏன் அனைத்து திருநாள்களும்
இந்த புனிதமான நாளுக்கே நம்மை வழிநடத்துகின்றன என்று
சொன்னால் மிகையாகாது. இயேசுவின் உயிர்ப்பு மனுகுலம்
முழுமைக்கான உயிர்ப்பு. இப்பிரபஞ்சத்தின் புதுப்பிறப்பு.
புது வாழ்வின் தொடக்கமும் இதுவே.
விதைக்கப்பட்ட இரண்டு விதைகள் தங்களுக்குள்ளே
பேசிக்கொண்டனவாம். முதலாவது விதை " ஐயோ என்னை இப்படிப்
புதைத்து விட்டார்களே. இந்த மண்ணிற்கடியில் காற்று
இல்லை. வெப்பம் அதிகமாக இருக்கிறது. இந்த மண்ணும்
எனக்கு பாரமாக இருக்கிறது. என்னை கொல்லுகிறார்களே"
என்றதாம் . இரண்டாவது விதையோ " உன்னைப் போலவே தான்
நானும் துன்புறுகிறேன். ஆனால் சகித்துக்கொள்கிறேன்.
ஏன் தெரியுமா? நான் புது உரு எடுக்கப்போகிறேன்.
விதையாக இருக்கும் நான் செடியாக பூவாக காயாக கனியாக
வித்தியாசமான புதிய வாழ்வை வாழப்போகிறேன். " என்றதாம்.முதலாம்
விதை " அதெல்லாம் எங்கு நடக்கும். எனக்கு சாவு
நிச்சயம் " என்று சொன்னதாம்.சொன்னபடியே முதல்விதை
மடிந்தது. துன்பங்களை நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டு
காத்திருந்த இரண்டாம் விதையும் மடிந்தது. ஆனால்
செடியாக பூவாக காயாக கனியாக புது உரு எடுத்தது.
இரண்டாம் விதையை இயேசுவோடு நாம் ஒப்பிடலாம்.
நேற்றைய நாளில் தான் இயேசுவின் துன்பங்களையும்
பாடுகளையும் கண்ணீர் மல்க நாம் தியானித்தோம்.
அத்தனை துன்பங்களையும் இயேசு கட்டாயத்தின் பேரில்
ஏற்றுக்கொண்டாரா? நிர்பந்தப்படுத்தப்பட்டாரா?
இல்லை. தாமாக ஏற்றுக்கொட்டடார். தன்முன்னே
காத்திருக்கும் மக்களின் மீட்பு எனும் மகிழ்ச்சியை
அடைய அனைத்தையும் தாமாக ஏற்றுக்கொண்டார். அதன்
விளைவு என்ன? மக்களின் மீட்பராய் உயிர்த்து
எழுந்தார். போதகராக, வல்ல செயல் செய்பவராக, உணவு
அளிப்பவராக, பாவிகளின் நண்பனாக, இறுதி தருணங்களில்
குற்றவாளியாக புதைக்கப்பட்ட அவர் மறைநூலின்
நிறைவாக, மீட்பராக, உலகனைத்தின் ஆண்டவராக, புது
வாழ்வின் வெளிச்சமாக முளைத்து எழுந்தார்.
இன்றைய நற்செய்தியில் மகதலா மரியா துக்கம் கொண்டாட
கல்லறைக்கு சென்றபோது கல்லறையை மூடியிருந்த கல்
விலக்கப்பட்டிருந்ததைக் கண்டார் என நாம்
வாசிக்கிறோம். கல்லறையை கல் மூடியிருந்த போது
அந்தக் கல்லறைக்குள்ளே இருளும் புழுக்கமும்
துர்நாற்றமும் இருந்திருக்கும். இவை அனைத்தும்
இயேசு என்னும் புதுவாழ்வை தன்னகத்தே அடைத்து
வைத்திருக்க இயலவில்லை. எவ்வாறு விதை முளைத்து எழ
இறுக்கமான மண்கூட வழிவிட்டுக்கொடுக்கிறதோ, அவ்வாறு
கல்லறையின் வாயில் புதுவாழ்வுக்காய் திறந்தது.
இப்போது அங்கே புழுக்கமோ இருளோ துர்நாற்றமோ இல்லை.
கல்லறை வெற்றிடமானது. உலகத்தை புதுவாழ்வு
நிரப்பியது.
ஆம் அன்புக்குரியவர்களே
இயேசுவின் உயிர்ப்பு நமக்கு சொல்வது இதுதான்.
வாழ்வில் நம்மை பூமிக்கடியில் புதைப்பது போல பல
அனுபவங்கள் வரலாம். மனமெல்லாம் இருளாகலாம்.
மூச்சுவிட முடியாத அளவுக்கு வாழ்வில்
நெருக்கடியும் புழுக்கங்களும் எழலாம். பயம்,
வெறுப்பு, பகை, பலவீனம் அனைத்தும் நம் வாழ்வை
துர்நாற்றமுடையதாய் மாற்றலாம். ஆனால்
இவையனைத்தையும் நம் மனதிலே போட்டுக்கொண்டு
புழுங்கிக்கொண்டிருந்தால் புதுவாழ்வை நாம் காண
இயலாது.மாறாக இயேசுவைக் கொண்டிருந்த கல்லறையின்
கல் விலக்கப்பட்டது போல நம் மனதைத் திறந்து தீயவை
வெளியேற அனுமதிக்க வேண்டும். இயேசுவின் ஒளி நம்
உள் நுழையட்டும். அவரே நம் சுவாசமாகட்டும்.
அப்போதுதான் நம் வாழ்வு புதுமையாகும். இயேசுவின்
உயிர்ப்பு நம் புதுவாழ்வின் பிறப்பு என்பதை
உணர்ந்து உயிர்ப்பின் சாட்சிகளாய் துன்பங்களைத்
தாண்டி முளைத்து எழுவோம்.
இறைவேண்டல் புதுவாழ்வின் ஊற்றே இறைவா!
முளைத்து எழும் விதைகளைப்போல, எம் வாழ்வில்
ஏற்படும் அனைத்தையும் நம்பிக்கையோடு கடந்து
புதுவாழ்வை பெற்று உயிர்ப்பின் சாட்சிகளாய் வாழ
அருள்தாரும். ஆமென்.
|
மறையுரைச்சிந்தனை
-அருள்பணி.
- திருத்தொண்டர் வளன் அரசு |
செய், சொல்
இயேசுவின் உயிர்ப்பு நமது நம்பிக்கையின்
மூலைக்கல், ஆதாரம். அதை நம்புவதும், அடுத்தவருக்கு
அறிவிக்க பெண்களைப்போல நற்செய்தியாளர்களாய்,
திருத்தூதர்களாய் செயல்படுவதும் நமது கடமை.
இயேசுவின் உயிர்ப்பே இன்று நம் அனைவரையும் ஒன்று
கூட்டி வைத்திருக்கின்றது. மரணத்தை வென்றவர்கள்
தான் நாம். காரணம் சாவின் கொடுக்குகளை
வெட்டியெறிந்து விட்டார் நம் இயேசு. இதனை நாம்
கொண்டாட கூடியுள்ளோம். மனித இனத்தின் மிகவும்
மோசமான எதிரி சாவு. இச்சாவினை இயேசுதன் சாவினைக்
கொண்டு வீழ்த்தி விட்டார். நற்செய்தி கிறிஸ்துவின்
உயிர்ப்பை விளக்குகிறது என்பதைவிடக் கிறிஸ்துவின்
உயிப்ப்பே நற்செய்தியை விளக்குகிறது.ள ஏனெனில்
கிறிஸ்து உயிர்க்கவி;ல்லையென்றால் நமது
நம்பிக்கைப் பொருளற்றது. ( 1 கொரி 15:14)
ஆண்டவரின் உயிர்ப்பு செய்தி முதன்முறையாகப்
பெண்களுக்குத் தான் அறிவிக்கப்பட்டது. அவர்கள்
மூலமாகவே உண்மையானது உலகிற்கு எடுத்துச்
செல்லப்படுகிறது. யூத சமுதாயத்தில் பெண்களின்
சாட்சிசெல்லவே செல்லாது. ஆனால் தொடக்க முதல்
இறுதிவரை ஒடுக்கப்பட்டவர்களையும்,
ஒதுக்கப்பட்டவர்களையும் தேர்ந்தெடுக்கின்ற இயேசு,
இங்கும் அவர்களையே தேர்ந்தெடுக்கின்றார்.
பெண்ணிடமிருந்து பிறந்தவர் தாம் உயர்த்தெழுந்த
செய்தியைப் பெண்களுக்கு அறிவிக்கின்றார்.
இயேசுவின் பிறப்பும் பெண்ணை மையப்படுத்தியே
தொடங்குகிறது. உயிர்ப்பும் பெண்ணை மையப்படுத்தியே
தொடங்குகிறது. சனிக்கிழமையானது கடவுளின் நாளாக
கருதப்பட்டது யூதர்களின் கலாச்சாரத்தில். ஆனால்
இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு
ஞாயிற்றுக்கிழமையே கடவுளிக் நாளாக மாறியது. காரணம்
இயேசு இந்த ஞாயிற்றுக்கிழமையில்தான் மரணத்தை
வென்றார். படைப்பின் தொடக்கத்தை பழைய ஏற்பாட்டில்
முதல் நாள் வெளிப்படுத்தியது. ஆனால்
அழிவுக்குள்ளான அப்படைப்பு இயேவுலின் உயிர்ப்பின்
மூலம் புதுப்படைப்பாகின்றது. இதையே இன்றைய
நற்செய்தியில் பார்க்கிறோம். ": வாரத்தின் முதல்
நாள் விடியற்காலை": என்று. பழையன கழிந்து புதியன
புலரும் இப்புதிய நாளில்தான் நமதாண்டவர்
உயிர்த்தார். பாவ வாழ்வு அனைத்தும் கல்லறையில்
புதைக்கப்பட்டு, ":புதிய வானம்": புதிய பூமி":
ஆரம்பமாகும் அரிய நாளே ஆண்டவர் உயிர்த்த நாள்.
என்னைப் பொறுத்தவரையில் இயேசுவின் உடலானது
கல்லறையில் வைக்கப்படவில்லை, அது ஒரு கருவறை.
காரணம் அது ஒரு புதிய கல்லறை. இங்கு இருந்து தான்
இவ்வுலகத்தின் இரட்சகர் பிறக்கிறார்.
இவ்வாறு இயேசுவின் இறப்போடு நம் பழைய பாவவாழ்வு
அனைத்தும் அழிக்கப்படுகிறது. நாம் அனைவரும்
புதுப்படைப்பாக, விடுதலைப் பெற்றவர்களாக,சாவை
வென்றவர்களாக, இறையாட்சியை நோக்கி நடைபோடுவோம்.
இதன் அடிப்படையில் தான் நாம் நம் திருமுழுக்கினைப்
புதுப்பிக்கிறோம். இந்த உயிர்ப்பின் நாளில் இதனையே
பிறரிடம் எடுத்து செசல்வோம். எடுத்துச் சொல்வோம்.
- திருத்தொண்டர் வளன் அரசு
|
மறையுரைச்சிந்தனை
-அருள்பணி.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர் |
இறைவார்த்தையின் மீது
நம்பிக்கை
இயேசு தனது போதனையிலே எவ்வளவோ வாக்குறுதிகளைத்
தந்திருக்கிறார். அவரது போதனையில்
நிலைத்திருக்கிறவர்கள் அரும்பெரும் செயல்களைச்
செய்வார்கள் என்று சொல்லியிருக்கிறார். தனது
மழைப்பொழிவிலே, நீதியின்நிமித்தம் துன்பங்களைச்
சந்திக்கிறவர்கள் விண்ணரசில் இடம்பெறுவார்கள்
எனப்போதித்து இருக்கிறார். நம்பிக்கையோடு
கடவுளிடம் கேட்கும்போது நிச்சயம் நாம்
பெற்றுக்கொள்வோம் என்று
நம்பிக்கையூட்டியிருக்கிறார். தாழ்ச்சியோடு
வாழ்கிறவர்களை கடவுள் உயர்த்துவார் என்று,
தாழ்ச்சியுள்ளவர்களை மேன்மைப்படுத்தியிருக்கிறார்.
இந்த போதனைகள் அனைத்துமே நடக்குமா? நிறைவேறுமா?
என்று கேட்டால், நம்மில் பலபேருக்கு அது சந்தேகம்
தான். கடவுளை நம்புகிற நம்மில் பலபேர், அவர்
சொன்னதெல்லாம் நடக்கும், இறைவார்த்தையில்
சொல்லப்பட்டதெல்லாம் நடந்தேறும் என்று நம்பிக்கை
கொள்வதில்லை. ஆனால், இன்றைய நற்செய்தி கடவுளின்
வார்த்தை உண்மையானது, அது நிச்சயம் நடந்தேறும்
என்பதை தெளிவாக்குகிறது.
இயேசு உயிர்த்தார் என்கிற செய்தி நிச்சயம்
பலபேருக்கு நம்பக்கூடிய செய்தியாக
இருந்திருக்காது. ஏனென்றால், இதுவரை எத்தனையோ
மனிதர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்கள் மீண்டும்
திரும்பி வந்தது கிடையாது. இப்போது இயேசு தான்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று வாக்குறுதி
கொடுத்திருக்கிறார். அதனை வெறுமனே
வார்த்தைகளாகத்தான் எடுத்திருப்பார்களேயொழிய, அதனை
உண்மையான வார்த்தைகளாக யாரும் எடுத்திருக்க
மாட்டார்கள். ஆனால், இன்றைக்கு இயேசு
உயிர்த்திருக்கிறார். ஆக, கடவுளின் வார்த்தை
உண்மையாயிருக்கிறது. நடக்காது, நடக்கவே முடியாது
என்று நினைத்திருந்த வாக்குறுதி
நடந்தேறியிருக்கிறது. எனவே, இயேசுவின் வார்த்தைகள்
உண்மையானவை என்கிற, ஆழமான செய்தியை இது நமக்குத்
தருகிறது.
இன்றைக்கு நாமும் கூட திருப்பலியிலே வாசகங்கள்
வாசிக்கப்படுகிறபோது அதனை கருத்தூன்றிக்
கேட்காததற்கு காரணம், நமது நம்பிக்கையின்மையும்
ஒரு காரணம். கடவுளை நாம் நம்பினாலும்,
இறைவார்தையை, கடவுளின் வார்த்தையை நாம்
நம்புவதற்கு தயாராக இல்லை. அந்த
நம்பிக்கையின்மையிலிருந்து, நம்பிக்கை வாழ்விற்கு,
இந்த உயிர்ப்பு நம்மை அழைத்துவரட்டும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
|
மறையுரை
முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க்
கழகம் பெங்களூர் |
|
விண்ணேற்பு பெருவிழா
முதல் வாசகப் பின்னணி (தி.ப. 1:1-11)
இப்புத்தகத்தை தூய லூக்கா, தியோபிலுக்கு
எழுதுகிறார். இந்தத் தியோபில், லூக்காவின்
நண்பராகவோ, அல்லது உரோமை உயர் அதிகாரியாகவோ
இருந்திருக்கலாம். இந்தத் தீயோபில் கிறிஸ்துவில்
நம்பிக்கைக் கொண்டவராகவோ அல்லது புதிய மனமாற்றம்
பெற்றவராகவோ இருக்கலாம். இயேசு இன்றும் மீட்புப்
பணியைத் தொடர்ந்து செய்கிறார் என்பதை லூக்கா
மையப்படுத்துகிறார். முதல் 5 வசனங்களில்,
இயேசுவின் மண்ணகப் பணியும், அவரது உறுதிப்பாடும்
அழுத்தம் பெறுகின்றன. 6 முதல் 11 வசனங்கள், இயேசு
விண்ணேறிச் சென்ற நிகழ்வுகளை விவரிக்கிறது. இயேசுவின் விண்ணேற்பு எத்தகைய வல்லமையையும்
செய்தியையும் மக்களுக்கு உணர்த்தியது என்பதை
இப்பகுதி விளக்குகிறது.
இரண்டாம் வாசகப் பின்னணி (எபே. 1:17-23)
கடவுளை அறிந்துகொள்ள வேண்டும் என்றால்
கிறிஸ்துவைப் பற்றிய அறிவு இருக்க வேண்டும்.
இந்தக் கடவுள் கிறிஸ்துவின் தந்தை மற்றும்
மாட்சியும் மகிமையும் நிறைந்தவர் என்பதை இறைமக்கள்
உணர வேண்டும். மனிதன் தீமைகளை வெல்ல
வேண்டுமென்றால் கடவுளின் அருளைப் பெற்றுக்கொள்ள
வேண்டும். சமூகத்தின் அவல நிலையை அகற்றவும்,
மனிதனுக்குக் கடவுளின் வல்லமைத் தேவைப்படுகிறது.
கடவுள் தன் வல்லமையை, அருளை மனிதனுக்குத் தர
வாக்குறுதி அளிக்கிறார். அவ்வல்லமையைப்
பெற்றுக்கொள்ள மனிதன் இயேசுவின் பால் நம்பிக்கைக்
கொள்ள வேண்டும். எபேசு நகர மக்கள் கிறிஸ்துவ
அறிவில் வளர வேண்டும் என்றும், கிறிஸ்துவை
முழுமையாக அனுபவித்து உணர வேண்டும் என்றும் புனித
பவுல் செபிக்கிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (லூக். 24:46-53)
தூய லூக்கா இயேசுவின் விண்ணேற்றத்தோடு நற்செய்தியை
நிறைவு செய்கிறார். இயேசுவின் விண்ணேற்றம் அவரின்
மண்ணுலகப் பணியை நிறைவு செய்கிறது. இயேசுவின்
மண்ணுலகப் பயணத்தை நிறைவு செய்யும் அதிகாரமே
அவரின் விண்ணேற்ற நிகழ்வு. மறுபுறம், இயேசுவின்
விண்ணகப்பணி தொடங்குகிறது. அவர் நமக்காகப் பரிந்து
பேசவும், நமக்குக் கடவுள் முன் சாட்சியாய்த்
திகழப்- போகின்றார். இயேசுவின் விண்ணேற்றத்திற்கு
இரண்டு காரணங்களை லூக்கா குறிப்பிடுகிறார்
1. திருத்தூதர்களை ஆசிர்வதிக்க.
2. திருத்தூதர்களிடம் நம்பிக்கையை அதிகரிக்க.
திருத்தூதர்களின் செயல்பாடுகளிலிருந்து மூன்று
செய்திகளை உணரலாம்.
1. திருத்தூதர்கள் கிறிஸ்துவை வழிபட்டார்கள்.
2. திருத்தூதர்கள் மகிழ்ச்சியாய் இருந்தனர்.
3. திருத்தூதர்கள் கோவிலிலேயே இருக்கின்றனர்.
மறையுரை
இன்றைய தினம் தாய்த் திருச்சபையானது இயேசுவின்
விண்ணேற்றப் பெருவிழாவைச் சிறப்பிக்கின்றது. மற்ற
பெருவிழாக்களோடு ஒப்பிடும் போது, விண்ணேற்றப்
பெருவிழா அதிக முக்கியத்துவம் பெறாமல் போனது
நல்லதல்ல. இயேசுவின் விண்ணேற்பு இயேசுவுக்குப் பணி
ஓய்வைப் பெற்றுத் தரவில்லை. மாறாக, மானிட அன்பின்
விளைவாகப் பாடுகளும், சிலுவைச் சாவும், தந்தை
கடவுளால் விண்ணேற்றத்தின் போது, மகிமைப்படுத்தப்-
படுகிறது. இயேசுவின் வாழ்வு அவரின் சிலுவைச்
சாவோடு முடிந்துவிட்டது என்ற எதிரிகளின்
கொண்டாட்டம் துக்கமாக மாற்றப்பட்டது, இயேசுவின்
உயிர்ப்பால். இயேசுவின் உயிர்ப்பும்,
விண்ணேற்றமும் ஒரே நாளில் நிகழ்ந்தது என்ற
கருத்தும் நிலவுகிறது. ஆனால் திருத்தூதர்
லூக்காவின் கருத்துப்படி இயேசு, உயிர்த்தபின் 40
நாட்கள் தம்முடைய திருத்தூதர்களை உண்மை மறையில்
திடப்படுத்தி கொண்டிருந்தார் என்று கூறுகிறார். 40
என்பது இறைவனின் திட்டத்தில் முக்கிய எண்ணாகக்
கருதப்படுகிறது. இயேசு உயிர்த்தபின் 40 நாட்கள்
தன்னுடைய திருத்தூதர்களை, தூய ஆவியைப் பெற்றுக்
கொள்ளத் தயார் செய்தார். பழைய ஏற்பாட்டில்,
எகிப்திலிருந்து புண்ணிய பூமியை அடைய இஸ்ராயேல்
மக்களுக்கு 40 ஆண்டுகள் ஆனது. 40 நாட்கள்
பயணத்தின் விளைவாக, ஒரேபு மலையை அடைந்த
இறைவாக்கினர் எலியா கடவுள் அனுபவத்தைப்
பெற்றுக்கொண்டார். இயேசுவின் தன்னுடைய
இறைப்பணியைத் தொடங்கும் முன் 40 நாட்கள்
செபத்தோடும், தவத்தோடும் தன்னையேத் தயார்
செய்தார்.
ஒலிவ மலையில் விண்ணேற்றம் நிகழ்ந்தது. இந்த ஒலிவ
மலையின் உச்சியிலிருந்து பார்த்தால், எருசலேம்
நகரம் முழுவதும் தெளிவாகத் தெரியும். இந்த மலைக்கு
இயேசு அடிக்கடிச் சென்று, தனிமையில் செபம் செய்து
வந்தார். இந்த மலையில்தான் இயேசு,
திருத்தூதர்களுக்குச் செபம் செய்யக் கற்றுக்
கொடுத்தார். இந்த மலையின் அடிவாரத்தில்
அமைந்திருந்தக் கெத்சமெனி தோட்டத்தில்தான் இயேசு
இரத்த வியர்வை சிந்தினார். எனவே ஒலிவ மலை
இயேசுவின் வாழ்வில் முக்கிய இடம் பெறுகிறது.
இயேசுவின் மண்ணக வாழ்வு, விண்ணேற்றத்தோடு
நிறைவுற்றது. அவரது பணியைத் தொடர, தூய ஆவி
வருகைக்கு இயேசுவின் விண்ணேற்றம் வழிவகுத்தது.
மேலோட்டமாக, இயேசு விண்ணேற்றமடைந்தாலும், தூய
ஆவியின் வழியாக இன்றும் நம்மோடு உறவு
கொண்டிருக்கிறார்.
இயேசு விண்ணகம் சென்றதாக நாம் வாசித்தோம். இந்த
விண்ணகம் மேலேயோ, கீழேயோ இல்லை. மாறாக, கடவுள்
எங்கே இருக்கிறாரோ, அங்கேதான் விண்ணகம்
இருக்கிறது. கடவுளின் வலப்புறத்தில் இயேசு
வீற்றிருக்கிறார் என்பது இருக்கையைக்
குறிப்பதில்லை. மாறாக, இயேசுவின் மாட்சியைக்
குறிக்கிறது. இவர் கடவுள் மற்றும் மனிதன் என்ற
அந்தஸ்தைப் பெற்றுக்-கொண்டதோடு, அகில உலகின்
அதிபதியாகவும், வானதூதர், மனிதர்கள் மற்றும்
அனைத்துப் படைப்புகளின் தலைவராகவும்
உயர்த்தப்பட்டார்.
இயேசுவுக்கு இறைத்தந்தை மீட்புப் பணியை
ஒப்படைத்-திருந்தார். இந்த மீட்புப் பணியை,
விண்ணேற்றத்தின்போது, தன்னுடைய திருத்தூதர்களிடம்
ஒப்படைத்தார் இயேசு. விவிலியத்தில் ஆசிர்வாதம்
என்பது தன்னுடைய அதிகாரத்தையும், உடைமைகளையும்
ஒப்படைப்பது ஆகும். இயேசு கைகளை உயர்த்தி ஆசி
வழங்கியதாகக் காண்கிறோம். (லூக்கா 24:50) இந்தச்
செய்கை மூலம் நற்செய்தியை அறிவிக்கும் பணி
திருத்தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமக்கு நெருக்கமானவர்களைப் பிரிவது என்பது
மகிழ்ச்சியான செய்தி கிடையாது. ஆனால்
திருத்தூதர்கள் பெருமகிழ்ச்சியோடு எருசலேம்
திரும்பியதாக லூக்கா குறிப்பிடுகிறார். (லூக்கா
24:52) காரணம், இயேசு தாம் விண்ணகம் சென்றபின் தூய
ஆவியை அனுப்புவதாக வாக்குறுதி அளிக்கிறார்.
மீட்புப்பணி என்பது மனிதனால் முடியாதக் காரியம்.
ஏனென்றால், மனிதன் குறைபாடு உள்ளவன். இந்தக்
குறைபாடு உள்ள மனிதன் தெய்வீகப் பணியைத் தொடர, தூய
ஆவி மனிதர்களுக்குத் துணையாக வருகிறார். "தூய
ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணை
நிற்கிறார். தூய ஆவியார் தாமே சொல்வடிவம்
பெறமுடியாத நம்முடையப் பெரு மூச்சுகளின் வாயிலாய்
நமக்காகப் பரிந்து
பேசுகிறார்." (உரோ 8:26-27).
இயேசு இரண்டு பணிகளை திருத்தூதர்களிடம்
ஒப்படைக்கிறார். முதலாவது நற்செய்தியை உலகில்
எல்லாருக்கும் அறிவிக்க வேண்டும் (லூக்கா 24:47).
இரண்டாவது, தன்னுடைய சாட்சிய வாழ்வு மூலம் தாம்
போதிப்பதற்கு ஏற்றவாறு சான்று பகர வேண்டும்
(லூக்கா 24:48, 1:8).
இரண்டு காரணங்களுக்காகத் தூய ஆவியை அனுப்புவதாக
இயேசு வாக்குறுதி அளிக்கிறார். முதலாவது,
இயேசுவின் போதனைகளின் அர்த்தத்தை
திருத்தூதர்களுக்குப் புரிய வைக்க. காரணம் தாம்
அறியாத ஒன்றுக்கு எவனும் சான்று பகர முடியாது.
கடவுளைப் பற்றி நற்செய்தியை அறிவிக்க, நாம்
கடவுளைப் பற்றி முழுமையாக அறிந்துக் கொள்ள
வேண்டும். தூய ஆவியார் கடவுளின் அறிவை நமக்குப்
புகுத்துகிறார்.
இரண்டாவது, நற்செய்திக்கேற்ப வாழ்க்கை நடத்துவது
எளிதான காரியம் அல்ல. மாறாக, எண்ணற்ற
எதிர்ப்புகளையும் இடர்பாடுகளையும் நாம் சந்திக்க
வேண்டும். தூய ஆவியின் கொடைகளையும், கனிகளையும்
பெற்றுக் கொள்வதன் மூலம் சான்று வாழ்வு நம்மால்
வாழ முடியும்.
இயேசுவின் விண்ணேற்பு நமக்குக் கூறும் செய்தி
என்ன? இறைமகன் இயேசு கிறிஸ்து, தந்தையின்
திருவுளத்தை நிறைவேற்ற, மானிட மகனாய்ப் பிறந்து,
மனிதரைப்போல் வாழ்ந்து, பாடுகள் பட்டு, சிலுவையில்
அறையப் பட்டு அடக்கப்பட்டார். இயேசு தன்னுடையக்
கடமையை நிறைவேற்றி வெற்றி வீரராய், விண்ணகம்
சென்றார். இன்றையத் தினம் நாமும் கிறிஸ்துவைப்போல
நம்முடையக் கடமைகளை நிறைவேற்றி விண்ணகம் செல்ல
அழைக்கப்படுகிறோம்.
நம்முடையக் கடமை என்ன? ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கு
இரண்டு முக்கியக் கடமை உண்டு.
1. நற்செய்தியை அறிவித்தல்
2. நற்செய்திக்குச் சான்று பகர்தல்
என்ன நற்செய்தி? "கடவுள் நம்மை அன்பு செய்கிறார்.":
''தம் ஒரே மகன் மீது நம்பிக்கைக் கொள்ளும் எவரும்
அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே
அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு
கூர்ந்தார்." (1யோவான் 3:16)
இயேசு நம்மை எவ்வாறு அன்பு செய்தாரெனில்,
"கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்"
(1யோவான் 3:6). இதுதான் நாம் பெற்று கொண்ட
நற்செய்தி. இந்த நற்செய்தியை அறிவிப்பது எப்படி?
நம்முடைய சான்றுவாழ்வு மூலம்தான் நற்செய்தியை
அறிவிக்க முடியும்.
கடவுள் நம்மை அன்பு செய்கின்றாரெனில்,
முதலில் நாம் கடவுளை அன்பு செய்ய வேண்டும்.
இரண்டு, தன்னைத்தான் அன்பு செய்வது போலப்
பிறரையும் அன்பு செய்ய வேண்டும்.
நம்முடைய அன்பு எத்தகையதாய் இருக்கிறது? சில
சமயங்களில் கடவுளை அன்பு செய்வதாக நினைத்துக்
கொள்கிறோம். மற்றவர்களை வெறுத்து ஒதுக்குகிறோம்.
கோவிலில் உண்டியல் போடுகிறோம், பூசை வைக்கிறோம்,
பக்தி முயற்சிகளில் பங்கேற்கிறோம். ஆனால் அயலானில்
அக்கறைக் காட்ட மறுக்கிறோம். கலிலேயரே, நீங்கள்
ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே
இருக்கிறீர்கள்? (தி.ப. 1:11). இந்தக்
கேள்வியைத்தான் இறைவன் இன்று நம்மிடம் கேட்கிறார்?
ஏன் கடவுளை அன்பு செய்கிறேன் என்று சொல்லிக்
கொண்டிருக்கிறீர்கள், சென்று உங்கள் அயலானில்
அக்கறைக் கொள்ளுங்கள். உங்கள் பகைவரை அன்பு
செய்யுங்கள். உங்களைத் துன்புறுத்துவோருக்காக
மன்றாடுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் விண்ணேற்ற
மடைந்த இயேசு திரும்பி வரும்போது அவருடைய
மாட்சியில் பங்கு பெறுவீர்கள், உயிர்த்த ஆண்டவரின்
துணையால் கடமைகளை நிறைவேற்றி, நற்செய்தியை
அறிவிப்போம். கடவுளை அன்பு செய்வதென்பது, நம்
அயலாரைஅன்பு செய்வது என்பதை உணர்வோம். ஒரு நாள்
நாமும் விண்ணேற்றம் அடைவோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
அனைவரும் நிலைவாழ்வு பெற நாம் உதவ முன் வருவோம்.
மண்ணக நிலையிலிருந்து விண்ணக நிலைக்கு உயருவோம்.
இயேசுவைப் பற்றி அறிவதில் ஆர்வம் கொள்வோம். நாம்
தூய ஆவியை வாழ்வின் துணையாகக் கொள்வோம்.
|
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான்
பாப்டிஸ்ட் பெங்களூர் |
ஆண்டவரின் விண்ணேற்ற விழா
பின்னணி
இன்று ஆண்டவரின் விண்ணேற்ற விழா. இன்றைய முதல்
வாசகத்திலும் நற்செய்தியிலும் லூக்கா இதை
விவரிக்கின்றார். இன்றைய நற்செய்தி லூக்கா தனது
முதல் நூலை முடித்து, தம் இரண்டாம் நூலான
திருத்தூதர் பணிகள் நூலுக்கு முகவுரையாகவும்
அமைகின்றார். ":இயேசு தாம் தெரிந்து கொண்ட
திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணை
யோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்திய
பின் விண்ணேற்றமடைந்தார்": (திப 14) எனும்
திருத்தூதர் பணியின் முதல் வசனம் இன்றைய
நற்செய்தியின் சுருக்கம் எனலாம். இந்தப்
பின்னணியில் இன்றைய நற்செய்தி திருத்தூதர்
பணியில் நிகழ இருப்பதையும் அதன் முக்கிய
விவாதக் கருத்துக்களையும் இங்கே எப்படி முன்
குறித்துக் கோடிட்டுக் காட்டுகின்றது
என்பதையும், அடுத்து இந்த நிகழ்வு எவ்வாறு இயேசு
தோற்ற மாற்ற நிகழ்வோடும், மோசே, எலியா ஆகிய
இறைவாக்கினரோடும் பின்னோக்கிய தொடர்பு கொண்டு
உள்ளது என்பதையும் இங்கு காண்போம்.
1. திருத்தூதர் பணி நூலுடன் தொடர்பு
லூக்கா தனது நற்செய்தியின் இறுதியில்
விவரிக்கின்ற இயேசுவின் விண்ணேற்றத்தை தனது
திருத்தூதர் பணிகள் நூலின் தொடக்கத்திலும்
விவரிக்கின்றார். இவ்வாறு இவ்விரு நூல்களும்
இணைத்தே வாசிக்கப்படவேண்டும் என்பதைத்
தெளிவுபடுத்து கின்றார். மேலும் லூக் 24:47-49
ல் திருத்தூதர் பணிகளில் பல நிகழ்வுகள்
முன்னமே அறிவிக்கப்படுகின்றன அல்லது இங்கு
கூறப்படும் பல திருத்தூதர் பணிகளில்
நிறைவேறுகின்றன:
1. பறைசாற்றுதல் (வச. 47; மேலும் காண். திப
8:5; 9:20; 19:13; 20:25; 28:31),
2 மனமாற்றம் (வச. 47; மேலும் காண். திப 5:31,
11:18; 19:24; 20:21; 26:20),
3. பாவமன்னிப்பு (வச. 47; மேலும் காண். திப
2:38; 5:31; 10:43; 13:38; 28:18),
4. இயேசுவின் பெயர் (வச. 47, மேலும் காண். திப
2:38; 3:6,16; 4:7, 10, 12, 30; 5:28,40-41; 8:16; 9:15-16, 27-28: 10:43, 48; 15:14,
26; 16:18; 19:5, 17; 21:13; 22:16),
5. அனைத்து நாடுகள் (வச. 27, மேலும் காண். திப
9:15; 10:35, 45; 11:71, 18;
13:46-47: 14:16, 27; 15:3, 7, 12, 14, 19;
17:26; 18:6; 21:25; 22:21; 26:23; 28:28),
6.எருசலேம் (வச. 47; மேலும் காண். திப 1:8;
11:2; 12:25; 15:2; 18:21; 19:1, 27 20:16, 22:
21:13),
7. சாட்சிகள் (வச. 48; மேலும் திப 1:8, 22;
2:32; 3:15; 5:32; 10:39-41; 13:31; 22:15, 20;
26:16),
8. தந்தை வாக்களித்த வல்லமை (வச. 49; திப 2).
2. இயேசுவின்
தோற்ற மாற்ற நிகழ்வோடு தொடர்பு
இந்த நற்செய்திப் பகுதியில் பயன்படுத்தப்படும்
பல சொல்லாடல்கள் இதை இயேசுவின் தோற்ற மாற்ற
நிகழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்கத்
தூண்டுகின்றன. இங்கு எருசலேம்
குறிப்பிடப்படுவதைப்போலவே (காண். வச. 49, 52;
லூக் 9:31), இயேசுவின் விண்ணேற்றமும்,
தோற்றமாற்றமும் மாட்சியின் நேரங்கள் (காண்.
வச. 57-52; 9:31: 34-36). மோசேவும் எலியாவும்
இயேசு எருசலேமில் நிகழ்த்த இருக்கின்ற அவரது
கடத்தலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்
(லூரக் 9:31 ":அவருடைய இறப்பை": ":கடத்தல்":
என்றும் மொழிபெயர்க்கலாம். ஆங்கில மொழி
பெயர்ப்புகளை ஒப்பிட்டுக் காண்க). இயேசுவின்
தோற்ற மாற்ற நிகழ்வின் இறுதியில் இயேசுவின்
விண்ணேற்றத்தைப் பற்றிய ஒரு குறிப்பை லூக்கா
தருகின்றார் (இயேசு விண்ணேற்றம் அடையும் நாள்
நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத்
தீர்மானித்து (லூக் 9:51)). ஆக தோற்ற மாற்றம்
எப்படி, மகிமையின் நேரமோ அதுபோல விண்ணேற்றமடைந்த
நேரமும் இயேசுவின் மகிமையை வெளிப்படுத்தும்
நேரம்.
3. மோசே, எலியாவோடு தொடர்பு
இயேசு இவ்வுலகிலிருந்து கடந்த போன நிகழ்வு நமக்கு
மோசே, எலியா அகியோரின் இறுதி நாள்களையும்,
அவர்கள் இவ்வுலகிலிருந்து கடந்துபோன
விதத்தையும், அவர்கள் தத்தமது சீடர் அல்லது
வழித்தோன்றல்கள் மேல் ஏற்படுத்திய
தாக்கத்தையும் நமக்கு நினைவூட்டுகின்றது.
"நூனின் மகனாகிய யோசுவாவின்மேல் மோசே தம் கைகளை
வைத்ததால், அவர் ஞானத்தின் ஆவியால் நிரப்பப்
பெற்றிருந்தார். இஸ்ரயேல் மக்கள்
யோசுவாவுக்குச் செல் கொடுத்து, மோசேக்கு
ஆண்டவர் கட்டளையிட்டபடி. நடதார்கள்": (இச 34:9)
எனும் வசனம் மோசேயின் வல்லமை யோசுவாவுக்கு
அளிச்கப்பட்டதைக் கூறுகின்றது. யோசுவா மோசேவைத்
தொடர்ந்து இஸ்ரயேலரை வாக்களிக்கப்பட்ட
நாட்டுக்குள் கொண்டு சென்றார் (காண்.யோசு),
மோசே செய்ததுபோல பல செயல்களை யோசுவா தன்
வாழ்விலும் செய்தார் (உம் (யோர்தானைக்
கடத்தல்). அதேபோல எலிசாவும் தன் தலைவர் எலியா
அவரை விட்டுப் பிரியும்போது அவரின் ஆவி தன்மீது
இருமடங்கு இருக்க வேண்டும். என்று
வேண்டிக்கொண்டார் (காண்.2.அர 2:9) எலியாவின்
கடத்து போதலைக் கண்டு கதறினார். (காண், 2 அர
2:11-12). பின் எலியாவின் போர்வையை எடுத்துக்
கொண்டார். அது அவர் எலியாவின் வழித்தோன்றல்
என்பதற்கு. அடையாளம். இவரும் தன் தலைவரின்
ஆற்றல் பெற்று அவரைப் போல பல பணிகள் ஆற்றினர்.
இதேபோல இருத்தூதர்களும் தங்களின். தலைவரின்
ஆற்றலைத் தூய ஆவி வடிவில் பெற்று, அவரின்
பணியைத் தொடரந்தாற்றினர். இருத்தூதர் பணிநூல்
அதை விரிவாக விவரிக்கன்றது. இந்த வழிநின்று
இன்றும் திருஅவை விண்ணேற்ற மடைந்த இயேசு தந்த
ஆற்றலை, தூய ஆவியைப் பெற்று இறையாட்சிப்
பணியைத் தொடர்ந்தாற்றி வருகின்றது.
|
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி
சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச. |
இயேசுவின் விண்ணேற்றம்
முதல் வாசகம் : திப 1 : 1-11
இன்று இயேசுவின் விண்ணேற்றவிழா. இயேசு உயர்த்தபின்
நாற்பது நாள்கள் மீண்டும் உலகிலேயே இருந்து
அவ்வப்போது ஆங்காங்கே தோன்றி, காட்சி அளித்தார்.
இந்த உயிர்த்த இயேசுவின் காட்சிகள் இயேசு
உயிர்த்துவிட்டார், மீண்டும் தொடர்ந்து வாழ்கிறார்
என்ற மாபெரும் உண்மைக்கு அடையாளங்களாகவும்
சான்றுகளாகவும் விளங்கின. இப்படிப்பட்ட
சான்றுகளும், அடையாளங்களும் 40 நாள்கள் நீடித்தன
என்று குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இயேசுவின் பாலைவனத் தவம் 40 நாள்கள் நீடித்தது.
இஸ்ரயேல் மக்களின் பாலைவன வாழ்வு 40 ஆண்டுகள்
நீடித்தது. இந்த முழுமைதான் உயிர்த்த இயேசுவின்
மண்ணக வாழ்விலும் உள்ளது.
இயேசு தான் விண்ணகம் செல்லுமுன் தூய ஆவியாரை
அனுப்பப் போவதாக வாக்களித்துச் செல்லுகிறார்.
தன்னுடைய உதவி ஆவியானவரின் வழியாக என்றுமே தொடரும்
என்று வாக்குறுதி தந்துவிட்டு இயேசு செல்கிறார்.
உயிர்ப்பின் நிறைவு விண்ணேற்றம்
இயேசுவின் விண்ணேற்பு நிகழ்ச்சி மிகச் சுருக்கமாக
விவரிக்கப் பட்டிருந்தாலும் அதில் பல ஆழ்ந்த
கருத்துக்கள் உள்ளன. மேகம் ஒன்று அவரை மேலே
எடுத்துச் சென்றதாக வாசிக்கிறோம். விவிலிய
பாரம்பரியத்தில் மேகம் என்பது இறைமாட்சியைக்
குறிக்கும் சொல். கடவுள் மோசேயைச் சந்தித்து
சீனாய் மலையில் உடன்படிக்கை செய்துகொண்ட போது
அங்கே மேகம் வந்து தங்கியதாக வாசிக்கிறோம் (விப
19:16). ஏன், 40 ஆண்டுகள் பாலைவன யாத்திரையில்
இஸ்ரயேல் மக்களைப் பகலில் ஒரு மேகமும் இரவில்
நெருப்புத் தூணும் வழிநடத்தினவே! (விப 13:21,
14:19). இயேசு உருமாறியபோது கூட மேகம் அவரை
மூடிக்கொண்டது (மத் 17:5; மாற்கு 9:9; லூக் 9:34).
அதுமட்டுமல்ல; இயேசு மீண்டும் இரண்டாம் முறை
திரும்பி வரும்போது, தான் மேகங்களில் வரப்
போவதாகவும் அவரே கூறியுள்ளார் (மத் 26:64, மாற்கு
14:62). ஆகவே இயேசுவின் விண்ணேற்பு ஒரு வகையில்
அவர் உயிர்ப்பில் பெற்ற மகிமையின் முழுமையேயாகும்.
தந்தையின் சக்தி இயேசுவிடம்
இயேசு விண்ணேற்பு அடைந்த பின் தந்தையின் வலது
பக்கத்தில் தன் முழு வல்லமையோடும்
வீற்றிருக்கிறார் என்ற கருத்தும் விவிலியத்தில்
பரவலாகக் காணப்படுகிறது. இதுவும் இயேசுவின்
மாட்சிமைக்கும் வல்லமைக்கும் ஓர் அடையாளம் (திபா
111 : 1; திப 2:34, உரோ 8:34, 1 3 : 22 6 1: 3, 8
: 1, 10 : 12).
"அவர் மகத்துவ மிக்கவரது அரியணையின் வலப்புறத்திலே
வானகத்தில் அமர்ந்துள்ளார்": (எபி 8: 1) என்ற
சொற்கள் பரமதந்தை அனைத்தையும் அவருக்கு
அடிபணியச்செய்து அனைத்திற்கும் மேலாக அவரைத்
திருச்சபைக்குத் தலையாய் ஏற்படுத்தினார் என்ற
உண்மையை உணர்த்துகின்றன.
நற்செய்திப் போதனை தொடர வேண்டும்
இயேசு விண்ணேறிச் சென்றபோது, சீடர்கள் வானத்தை
அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது
வானதூதர், விண்ணகம் சென்ற இயேசு மீண்டும் வருவார்
என்று ஆறுதல் கூறியதாகவும் வாசிக்கிறோம் (திப 1 :
11). இயேசுவின் விண்ணேற்றத்தையும் அவரது இரண்டாம்
வருகையையும் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது.
இது ஓர் ஆழ்ந்த இறையியல் கருத்து.
இயேசு விண்ணகம் சென்றார். அவருடைய சீடர்களும்
உலகெங்கும் செல்ல வேண்டும் என்று கட்டளை
கொடுத்துவிட்டே சென்றார். இயேசுவின் பணி
முடிந்தது. திருச்சபையின் பணி துவங்கிவிட்டது (மத்
28:17, மாற்கு 16:5, யோவா 20 : 17, லூக் 24 : 47,
திப 1: 8). சீடர்கள் சென்று போதிக்க வேண்டும்.
நற்செய்தி அறிவிக்க வேண்டும். அதன் பிறகுதான்
இயேசு வருவார்.
இயேசுவின் வருகைக்காக நாம் தயாரிக்க
வேண்டுமென்றால் நற்செய்தியைப் போதிக்க வேண்டும்.
மண்ணுலகில் இறுதி எல்லைவரை நீங்கள் என் சாட்சிகளாக
இருப்பீர்கள்.
நற்செய்தி : லூக் 24 : 46-53
தாம் விண்ணகம் செல்லுமுன் இயேசு விட்டுச் சென்ற
இறுதி வார்த்தைகளும், அதன்பின் சீடர்களுடைய
நடைமுறைகளும் லூக்கா நற்செய்தியின் இறுதியில்
கூறப்பட்டிருப்பது இன்றைய வாசகமாயமைகிறது.
இயேசுவின் இறுதிச் சொற்கள்
மறைநூல் தூய ஆவியாரால் உந்தப்பட்டு
எழுதப்பட்டது.மறைநூலில் உள்ளது எல்லாம் நமது
மீட்புக்காக, நமது வாழ்க்கைக்காக எழுதப்
பட்டுள்ளன. சிறப்பாக, மறைநூல் முழுவதும் விளக்கம்
தரும் அடிப்படை உண்மை, கடவுள் மக்களை அன்பு
செய்கிறார் என்பதே. மற்றவை அனைத்தும் இவ்வுண்மையை
விளக்கும் சித்திரங்களே. எனவே இயேசு, "மறைநூலில்
எழுதியுள்ளது இதுதான். மெசியா பாடுபட்டு,
இறந்தோரிடமிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்.
பாவ மன்னிப்படைய மனம் திரும்ப வேண்டும்"
(24:46-47) என்பார். மறைநூலை ஆர்வத்தோடு
வாசிக்கின்றோமா? அவ்வாசகத்திலே உயிர்த்த இயேசுவை
எதிர்ப்படு கின்றோமா? அவ்வாசகம் நம் ஆன்மாவின் உள்
ஆழத்தையும் ஆவியின் உள் ஆழத்தையும் ஊடுருவுகிறதா?
நம் உள்ளத்தின் எண்ணங்களையும் கருத்துக்களையும்
சீர்தூக்கிப் பார்க்கிறதா? (எபி 4:12-13). அதாவது
விவிலிய வாசகம் நமக்குச் சவாலாயமைகிறதா? நம்மைச்
சுடுகிறதா? அல்லது அதுவும் பிறவாசகங்களோடு
'பத்தோடு பதினொன்றாகவே' இருக்கிறதா? விண்ணகம்
சென்றுள்ள ஆண்டவர் மறைநூல் வழி நம்மிடம்
பேசுகிறார் என்பதை உணர்கிறோமா?
விண் செல்லும் இயேசு சீடருக்கு இறுதிச் சொற்கள்
மட்டுமன்றி, இறுதிப் பரிசும் அளித்துச்
செல்கிறார். அப்பரிசே ":வல்லமை": (24:49), தூய
ஆவியார். அவரின் துணையின்றி நாம் நல்வாழ்வு
வாழ்வதென்பது அரிது. எனவே, ஆவியாரின் வல்லமையை
நமக்கு நிரம்பத் தந்திட இயேசுவிடம் வேண்டுவோம்.
செபித்திருந்த திருச்சபைக்குத் தான் தூய ஆவியை
அளித்தார் தந்தை (திப 1:14; 2:2-4; 13:2-4).
அவ்வல்லமையில் தான் வல்ல பல செயல்கள் செய்து
நற்செய்தியைப் பரப்பினர் சீடர்கள். திருச்சபையும்
இறைமக்களும் இவ்வல்லமையால் நடத்தப்பட வேண்டும் என
விண்ணேறிய வல்லவரிடம் வேண்டுவோம்.
சீடர்களின் பதில்
இயேசுவின் வாழ்க்கையின் மைய இடம் எருசலேம் (லூக்
9:51-53; 13:22; 33- 34; 19:11-28...). அவரது பணி
வாழ்வு, பாடுகள், உயிர்ப்பு நடைபெற்ற இடம்
எருசலேம். அங்குத்தானே சீடர்களும் இருக்க
வேண்டும்! ஆம், அங்கேயே திரும்புகின்றனர். நாமும்
எருசலேமுக்குத் திரும்ப வேண்டும்.
பாலஸ்தீனத்திலுள்ள எருசலேமுக்கல்ல. நமது
வாழ்க்கையிலே நாம் இயேசுவை எதிர்ப்பட்டு, அவரால்
ஆட்கொள்ளப்பட்ட நிலைக்குச் செல்வோம். அது
திருமுழுக்கு, துறவற வார்த்தைப்பாடுகள்,
திருநிலைப் படுத்தப்பட்டது என ஒவ்வொருவருக்கும்
வேறுபட்டு அமையலாம். எனினும் அந்த எருசலேமுக்குச்
சென்று அன்றைய மனநிலையைப் பெற முயல்வோம். "இதுவே
இறைவனின் இல்லம் ; இதுவே வானக வாயில்" (தொநூ
28:17). இத்தோடு வேறுபல எருசலேம்களையும் நாம் நாட
வேண்டும். அன்புப் பணி செய்தல், நீதிக்காகப்
போராடல் போன்றவற்றில் நாம் இறைச் செயல்களையே
செய்வதால் அவை எல்லாம் நமக்கு எருசலேம்களே.
வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு எருசலேம் செல்வோமா?
வாழ்வைக் கண்ணீர்க் கணவாய் என்பர். நமது
துயரத்தாலும் புலம்பலாலும் அதைக் கடலாக்கக்
கூடாது. உயிர்த்த கிறிஸ்துவைப் பின்பற்றும் நமக்கு
மகிழ்ச்சி ஒரு பிறப்புரிமை. சீடர்கள் பெரும்
மகிழ்ச்சியோடு இடைவிடாது இறைப்புகழ்
சாற்றுகின்றனர் (24:52-53). நாமும்
மகிழ்ந்திருப்போம் ; மகிழ்ச்சியின் தூதுவர்களாக
இருப்போம். "எப்போதும் மகிழ்ச்சியா யிருங்கள்"
(1தெச 5:16) ":ஆண்டவருக்குள் என்றும் அகமகிழுங்கள்,
மீண்டும் கூறுகிறேன் அகமகிழுங்கள்" (பிலி 4:4-5)
என்பன நமக்குக் கூறப்பட்டன. பாவ மன்னிப்படைய மனம்
திரும்ப வேண்டும். |
|
மறையுரைச்சிந்தனை
-அருள்பணி.
குமார்ராஜா |
|
அன்பு அச்சத்தை வெல்லும்!
"சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது, இயேசு உயிர்த்தார்,
அல்லேலூயா" என்னும் வெற்றிப் பாடல் நம் உள்ளங்களில் இன்று
ஒலிக்கின்றது.
இயேசுவின் உயிர்ப்பின் செய்தியை முதலில் அறியும் பேறு
மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகிய
பெண்களுக்குத்தான் கிடைத்தது. ஆண்களே பெண்களைவிட வீரமும்,
துணிவும் நிறைந்தவர்கள் என்னும் போலிப் பரப்புரையை
வரலாற்றில் பல பெண்கள் உடைத்தெறிந்திருக்கிறார்கள். இந்தப்
பெண்களும் அவ்வாறே!
ஆண் சீடர்கள் அஞ்சி நடுங்கி, ஒளிந்துகொண்டபோது, இந்தப்
பெண்கள் துணிவுடன் "காலையிலேயே கதிரவன் எழும் வேளையில்
கல்லறைக்குச் சென்றார்கள்". எங்கே அன்பு உள்ளதோ, அங்கே
அச்சம் இல்லை என்னும் யோவானின் (1 யோவா 4: 18)சொற்களை
இவர்கள் எண்பித்துள்ளனர். இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார்
என்னும் நற்செய்தியை வானதூதர் வழியாக இவர்கள்
பெற்றுக்கொண்டனர்.
அன்பு அச்சத்தை வெல்கிறது, அன்பு சாவையும் வெல்கிறது.
இயேசு தந்தையின்மீது கொண்ட அன்பினால் சாவின்மீதிருந்த
அச்சத்தை வென்றார். சாவையும் வென்றார். மகதலா மரியா
இயேசுவின்மீது கொண்ட அன்பினால் சாவு, இருள், கல்லறை,
பிலாத்துவின் வீரர்கள் என்னும் அனைத்து அச்சங்களையும்
வென்றார். இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை முதன்முதல்
அறிந்துகொண்டார்.
இதுவே உயிர்ப்பு விழா இன்று நமக்குத் தரும் செய்தி.
இறைவனையும், மனிதரையும் அன்பு செய்வோம். அச்சமின்றி
வாழ்வோம், சாவை வெல்வோம்.
மன்றாடுவோம்: அன்பினால் சாவை வென்ற வெற்றி நாயகனான
இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் இதயங்களை உமது
அன்பினால் நிரப்பியருளம், அச்சத்தை அகற்றியருளும். உமக்கே
புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
- பணி குமார்ராஜா
|
|
 |
|