இயேசுவில் பிரியமானவர்களே!
உங்கள் அனைவரையும் தவக்காலத்தின் 2ம்ஞாயிறு திருவழிபாட்டிற்கு அன்போடு
வரவேற்கின்றோம்.
பழைய ஏற்பாட்டில்
கடவுள் - மனித சந்திப்பு பல்வேறு மலைப்பகுதிகளில் நடை பெறுவதை
விவிலியம் சுட்டிக் காட்டுகின்றது.
மோசே - யாவே இறைவனை சீனாய் மலையில் சந்திக்கின்றார்.
ஆபிரகாம் - இறைவனை மோரியாப்பகுதியில் உள்ள மலையில் சந்திக்கிறார்.
எலியா - இறைவனை கார்மேல் மலையில் சந்திக்கின்றார்
புதிய ஏற்பாட்டில்:
யேசுவின் உருமாற்ற நிகழ்ச்சி தபோர்மலையில். கடவுள் - மனித சந்திப்பாக
நடைபெறுகிறது.
கல்வாரி மலையில் - தந்தை - மகன் சந்திப்பு நடை பெறுகின்றது.
அதேபோல் நமது ஆலயங்களில் மலைக்கு அடையாளமாக அமைந்திருக்கும், ஒவ்வொரு
பீடமும் கல்வாரி மலையைச் சுட்டி நிற்கின்றது. ஒவ்வொரு திருப்பலியிலும்
கடவுள்- மனித சந்திப்பு நடைபெறுகின்றது.
மனிதர்களாகிய நாம், நம் குறைகளையும், பலவீனங்களையும், வாழ்க்கைப்
போராட்ங்களையும் ஆலயபீடத்திற்கு கொண்டு வருகின்றோம்.
கடவுளோ, தன்னுடைய நிறைவளத்தையும், ஆற்றலையும், அமைதியையும்கொண்டு
வந்து அவற்றை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
இப்படிப்பட்ட மேலான திருப்பலியில் பங்கு பெறும்போது நமது மனநிலை என்ன?
திருப்பலியில் இறை - மனித சந்திப்பு நடைபெறும் வேளையில், கவனமின்றியோ,
அக்கறையின்றியோ அல்லாமல், கவனத்துடனும், முழுமையான அர்ப்பண உணர்வுடனும்,
பங்கேற்க அழைக்கப்படுகிறோம், என்ற உள்ளத்தோடு எழுந்து நின்று பக்தியோடு
இத்திருப்பலியில் பங்கேற்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1) எல்லாம் வல்ல இறைவா!
எம் திருச்சபையை வழி நடத்தும் திருத்தந்தை, ஆயர்கள்,
குருக்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினர்கள் அனைவரையும்,
உம் கண்ணின் மணிபோல காத்து உமது பணியைத் தொடர்ந்து ஆற்ற,
உமது ஆவியின் அருட்கொடைகளைப் பொழிந்து வழிநடத்தியருள
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2) இரக்கத்தின் ஊற்றே இறைவா!
நாட்டை ஆளும் நாட்டுத் தலைவர்கள் தமது பணிகளை தமது மனக்கண்
கொண்டு, சிறப்போடு செயலபடவேண்டுமென்றும், மக்களை உண்மையுடனும்,
நீதி நேர்மையுடனும் வழிநடத்த நல்ல மனதைத் தரவேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3) நோயற்றவர்களுக்கல்ல நோயுற்றவர்களுக்கே, மருத்துவம்
தேவை என்று கூறிய எங்கள் அன்புத் தெய்வமே!
மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் உடல் உள நோயினால்
பாதிக்கப்பட்டிருக்கும்
ஒவ்வொரு உள்ளங்களுக்கும் நல்ல உடல் நலமும் உள சுகமும்
தர வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4) அன்பின் ஆண்டவரே இறைவா!
எம்முடைய பிள்ளைச் செல்வங்களை உம்பதம் அர்ப்பணிக்கின்றோம்.
இவர்கள் ஞானத்திலும், கல்வியிலும், ஒழுக்கத்திலும்,
கடவுள் பக்தியிலும் உம்மைப்போல் வாழ, வளரத் தேவையான அருளைத்
தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5) இரக்கத்தின் ஊற்றாகிய இறைவா !
இத்தவக்காலத்தில் நாம் அனைவரும் செபத்திலும், தவத்திலும்,
பிறரன்புப்பணிகளிலும் அர்ப்பணத்தோடு ஈடுபட்டு, நம்
வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல மனத்தினைத் தந்தருள
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மறையுரை சிந்தனைகள்
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
தவக்காலம் இரண்டாம் ஞாயிறு
I. தொடக்க நூல் 15:5-12,17-18,21
II. பிலிப்பியர் 3:17-4:1
III. லூக்கா 9:28-36
மூன்று கூடாராம் அமைப்போம் வாரீர்
கூடாரம் பழைய ஏற்பாட்டில் உடன்படிக்கை பேழையின் அடையாளமாக
கருதப்பட்டது. பின் அது மெருகேற்றப்பட்டு திருக்கோயிலாக
உருமாற்றப்பட்டது. தவக்காலத்தின் இரண்டாம் வாரத்தில் நுழையக்
காத்திருக்கும் நாம் கூடாரங்கள் அமைத்து அதன் மூலம்
திருக்கோயில்களாக நமது உள்ளமும் உடலும் மாறி வாழ இன்றைய வாசகங்கள்
அழைப்புவிடுக்கின்றன. கூடாரங்கள் பழைய ஏற்பாட்டு மக்களின் வாழும்
இல்லம். நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் கூடாரங்கள் அமைத்து தங்களின்
வாழ்நாளில் பாதியை சிலர் முழுவதையுமே அதில் செலவழித்து கடந்து
செல்வர். நன்மை, தீமை இன்பம் துன்பம் என அனைத்து உணர்வுகளும்
கலந்து உலவும் இடமாகவே இந்தக் கூடாரங்கள் கருதப்பட்டன.
இப்படிப்பட்ட உணர்வுகளின் சங்கமமாகக் கருதப்பட்ட கூடாரங்களாக நாம்
மாற அழைக்கப்படுகின்றோம்.
மூன்று விதமான கூடாரங்கள் அமைக்கலாம் என்று பேதுரு
இயேசுவின் உருமாற்றத்தின் போது அவரிடம் கூறியதாக நாம்
வாசிக்கக்கேட்டோம். மோசேக்கு ஒன்றும் எலியாக்கு ஒன்றும் நமக்கு (
மூன்று சீடர்கள் + இயேசு ) ஒன்றுமாக மூன்று கூடாரம் அமைக்கக்
கேட்டார். மோசே பழைய ஏற்பாட்டு இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மிக
முக்கியமானவர், எலியா தவறுகளை சுட்டிக்காட்டி விழிப்பு நிலைக்கு
கொண்டு வருபவர், சீடர்களோ மிகுந்த துன்பத்திற்கு பின் இயேசுவின்
இறையரசைப் புரிந்து கொண்டு பறைசாற்றியவர்கள். இவர்களின் பண்பு
நலனைக் கொண்டு நாமும் மூன்று கூடாரங்கள் அமைப்போம்.
1. மூவரில் ஒருவராய் முக்கியமானவராய் இருக்க முதல்
கூடாரம்.
2. தூக்க(கலக்க)த்திற்கு பின் விழிப்படைய இரண்டாம்
கூடாரம்.
3. இருளில் தெளிவாய் செவிமடுக்க மூன்றாம் கூடாரம்.
1. முக்கியமானவராய்......
வாழ்க்கையில் முதலாவதாய் வரவேண்டும் மிக முக்கியமானவராய்
இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. ஆனால் எத்தகைய
பண்பு நலன் கொண்ட முக்கியமானவராய் இருக்க வேண்டும் என்பதில்
ஒவ்வொருவரும் மாறுபட்டிருப்போம். கல்தேய நாட்டிலுள்ள ஊர் என்னும்
கிராமத்தில் எத்தனையோ பேர் இருந்தும் ஆபிரகாம் என்னும் ஒருவர்
மட்டும் யாவே இறைவனின் கண்களுக்கு மிக முக்கியமானவராக பட்டார்.
ஏனெனில் அவர் நீதிமானாய் இறைப்பற்றும் இறை பராமரிப்பில்
நம்பிக்கையும் உடையவராய் இருந்தார். பவுலடியார் தன்னைப் போல் வாழப்
பணிக்கின்றார். தானும் தன் வாழ்வும் இயேசுவை அறிவிக்கும் பணிக்கு
முக்கியம் எனக் கருதினார். இயேசுவைப் பின்பற்றிய சீடர்கள்
ஏராளமானோராய் இருந்தாலும் தனது உருமாற்ற நிகழ்வை காணும் வாய்ப்பை
இயேசு தனது மூன்று சீடர்களுக்கு மட்டும் அளித்தார். ஏனெனில்
அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களது செயல்பாடுகளின் மூலம் இயேசுவின்
கண்களுக்கு நல்லவர்களாக நம்பிக்கைக்குரியவர்களாகத் தென்பட்டனர்.
நாம் நம் இயேசுவுக்கு முக்கியமானவர்களாக இருக்கின்றோமா? நம்மோடு
வாழ்பவர்கள் நம்மை நம்பி செயல்களைச் செய்யும் அளவுக்கு நாம்
நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றோமா? தபசுகாலத்தில் செய்யும் சிறு
சிறு ஒறுத்தல் செயல்கள் மூலமாக நமக்கும் நம்மைச்சுற்றி வாழும்
மக்களுக்கும் நம்மைக் காக்கும் இறைவனுக்கும் முக்கியமானவர்களாய்
மாற வாழ முதல் கூடாரத்தை அமைப்போம்.
2. விழிப்புணர்வாய்.....
தூக்கம் மனிதனுக்கு மிகவும் முக்கியமானது. அதுபோல
கலக்கமும் அவசியமானது. எவ்வாறு தூக்கம் இல்லா மனிதன் துடிப்புடன்
செயல்பட முடியாதோ அதுபோல கலக்கம் என்னும் துன்பம் இல்லா மனிதனும்
கவனமுடன் செயல்பட முடியாது. இங்கு ஆபிரகாமும் தூக்க கலக்கமாய்
இருக்கிறார். சீடர்களும் தூக்க கலக்கமாய் இருக்கின்றனர்.
ஆபிரகாமிற்கு யாவே இறைவனின் வாக்குறுதி எப்படி தன்னில் நிறைவேறுமோ
என்ற கலக்கம் ஆழ்ந்த தூக்கத்திற்கு இட்டுச்செல்கிறது.
சீடர்களுக்கு, இயேசு இரண்டாவது முறையாக தான் பாடுபட்டு எவ்வாறு
இறக்கப்போகிறேன் என்று கேட்டதும் இவர் ஏன் துன்பப்பட்டு சாக
வேண்டும்? என்ன ஆகும் இவர் வாழ்வு? இவரோடு சேர்ந்த நமது வாழ்வு
என்ன ஆகும்? என்ற குழப்பம், தூக்க கலக்கத்திற்கு இட்டுச்செல்கிறது.
இருவருமே ஒருவிதமான துன்பத்தில் தான் தூங்குகின்றனர். ஆனால் தக்க
சமயத்திற்காக காத்திருந்தார்ப் போல விழித்தெழுகின்றனர். அவர்களின்
அந்த விழித்தெழுதல் அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு விடியலாய்
அமைகின்றது. ஆபிரகாம் கடவுளின் ஆசீரைப் பெறுகின்றார். சீடர்கள்
இயேசுவின் உண்மை நிலையை உணர்வுப் பூர்வமாக அறிகின்றனர். தூக்கமும்
கலக்கமும் மனிதனுக்கு இயல்பு ஆனால் அதிலிருந்து விழித்தெழுபவனே
உயரிய நிலையை அடைகின்றான். நமது துன்ப நிலைக்கு பின் ஒரு இன்ப நிலை
வரும் என்பதை உணர்ந்து எந்நிலையிலும் விழிப்புணர்வுடன் வாழ
இரண்டாவது கூடாரத்தை அமைப்போம்.
3. செவிசாய்ப்பாய்.....
அமைதியான (அக, புற,)சூழலில் சப்தங்களைக் கண்டு உணர்வது
எளிது. ஆனால் அதுவே சந்தடி உள்ள இடத்தில் ஒலிகளைக் கருத்தாய்க்
கேட்பது என்பது இயலாத காரியம். மிகவும் கடினம். ஆபிரகாம் ஆழ்ந்த
தூக்கத்தில் இருந்து விழித்தெழுகிறார். தன்னைச்சுற்றிலும் இருள்
பரவி இருப்பதைக் காண்கிறார். தீச்சட்டியின் புகை, தீப்பந்தத்தின்
நெருப்பு சுவாலை, வெட்டப்பட்ட விலங்குகளின் இரத்த வாடை ,
இவற்றிற்கு மத்தியில் இறைவனின் குரலுக்கு செவிமடுக்கின்றார்.
சீடர்கள், இறந்த இருவரோடு (ஆவியோடு) இயேசு பேசிக்கொண்டிருப்பதைக்
காண்கின்றனர். இயேசுவின் இறப்பை பற்றி பேசுவதை கேட்கின்றனர்.
மேகத்தால் சூழப்படுகின்றனர். இப்படிப்பட்ட அச்சுறுத்தும்வேளையில்
வானிலிருந்து ஒரு குரல் கேட்கின்றது இவரே என் அன்பார்ந்த மகன்
என்று.... அவர்கள் அதற்கு செவிமடுக்கின்றனர். நாம் எங்கு எப்படி
இருந்தாலும் இறைவனின் அழைப்பும் ஆசீரும் நமக்கு நிச்சயம் உண்டு.
நாம் செவிசாய்க்க தயாராய் இருந்தால்.... எனவே எந்நிலையிலும் இறை
குரலுக்கு செவிமடுப்பவர்களாய் மாற அருள் வேண்டி மூன்றாம் கூடாரத்தை
அமைப்போம்.
இன்று பெரும்பாலான மனிதர்களுக்கு இத்தகைய கூடாரம் தேவையாய்
இருப்பதில்லை அவர்கள் பணக் கூடாரம், பதவிக் கூடாரம், பேராசைக்
கூடாரம் காமக் கூடாரம் சந்தடிகளின் கூடாரம் என பல கூடாரங்களை
அமைத்து, தங்களையே அதில் மறைத்துக் கொள்கின்றனர். இந்தக்
கூடாரங்கள் திருக்கோயில்களாக ஒரு போதும் மாறாது. மாறாக குப்பைக்
கூளங்கள் போல மக்கி மண்ணோடு மண்ணாகும். இறைத் துணையோடு நாம்
அமைக்கும் கூடாரங்களோ நம்மை திருக்கோயில்களின் சிற்பங்களாய்
மாற்றிவிடும். நாம் கூடாரம் அமைப்பது அங்கேயே தங்கி வாழ்ந்து
மடிவதற்கு அல்ல. மனிதன் உறையும் கூடாரமாய் இருக்கும் நமது உள்ளம்
நாளை இறைவன் வசிக்கும் ஆலயமாக மாறவே.... எனவே அன்பு உள்ளங்களே
கூடாரம் அமைப்போம் இறைவனின் ஆலயமாய் நம் உள்ளத்தையும் உடலையும்
மாற்றுவோம். இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம்
குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
சகோ. செல்வராணி Osm
தவக்காலம் இரண்டாம் ஞாயிறு
மூன்று கூடாரங்கள் உருவாக்குவோம்
பழையஏற்பாட்டில் மோசே சந்திப்புக் கூடாரத்தில்
நுழையும் போதெல்லாம் ஆண்டவரின் தரிசனத்தை பெற்றுத்
திரும்பியதாக நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம்.
கூடாரம் என்பது என்ன? கூடாரம் என்பது
பொழுதுபோக்கிற்காக தற்காலிகமாக கட்டப்பட்டது. இடம்பெயர்ந்த
மக்கள், அகதிகள், வீடுகளை இழந்தவர்கள் அவர்களுடைய
முத்தைய இடத்துக்கு திரும்பமுடியாத சூழ்நிலையில்,
கூடாரங்கள் அமைத்து அதில் தங்குவர். மழை, வெயில்
இவற்றிலிருந்து பாதுகாத்து நிம்மதியான ஓய்வு பெற
கூடாரங்கள் அமைப்பர். வீட்டை விட்டு வெகு
தொலைவில், ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்பவர்கள்,
இப்படி கூடாரங்கள் அமைத்து, அவற்றில் தங்கி ஓய்வு
பெறுவர். இப்படி அமைக்கும் கூடாரங்கள் எல்லாம் தற்காலிகமானது
தான், நிரந்தரம் அல்ல. ஆனால் பழைய ஏற்பாட்டில் ஆண்டவருக்காக
மோசே அமைத்த கூடாரம் மட்டும் தற்காலிகமானதல்ல,
நிரந்தரமானது. இன்றும் அது தொடர்கிறது. அன்று தொடங்கிய
சந்திப்புக் கூடாரங்களே, இன்று நாம் செல்லும் ஆலயங்கள்.
தவக்காலத்தில் இரண்டாம் வாரத்தில் இருக்கும் நமக்கு,
இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் பெற்ற நிகழ்ச்சியே
இன்றைய வாசகமாக கொடுக்கப்பட்டுள்ளது. தன்னுடைய
மரணம் எப்படி நிகழப்போகிறது என்பது குறித்து இயேசு,
மோசேயோடும், எலியாவோடும் உரையாடிக்கொண்டிருந்தார்.
தூக்கக் கலக்கத்தில் இருந்து விழித்தெழுத்த
பேதுரு, மாட்சியோடு விளங்கிய இயேசுவைப் பார்த்து,
ஆண்டவரே நாம் இங்கே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும்,
கூடாங்கள் அமைத்தே பழக்கமான மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு
ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் என்றார்
பேதுரு. ஆனால் இயேசு அதை ஏற்கவில்லை. ஆனால் இன்று
தவக்காலத்தில் இருக்கும் நம்மைப் பார்த்து
அவர் விரும்பும் மூன்று கூடாரங்கள் அமைக்க அறிவுறுத்துகிறார்.
1.இறைவனை சந்திக்கும் கூடாரம்,
2.பிறரை சந்திக்கும் கூடாரம்,
3. நம்மை நாம் சந்திக்கும் கூடாம்.
1.இறையை சந்திக்கும் கூடாரம்:
எங்கும் பரந்து கிடக்கின்ற பொருட்களைப் பார்த்து
இறைந்து கிடக்கின்றன என்று குறிப்பிடுகிறோம். இங்கு
இறை என்பதற்கு `பரந்து` என்பது பொருள். பொதுவாக இறை
என்றால் தங்குதல் அல்லது எங்கும் நிறைதல் என்னும்
பொருளும் உண்டு. எனவே அங்கு, இங்கு என்னாதபடி எங்கும்
நிறைந்த ஒரு பரம்பொருளை இறை அல்லது இறைவன் என்று
சுட்டுவர். இத்தகைய இறைவனை நித்தமும் சந்திக்கும்
`கூடாரம்` அமைத்துக் கொண்டால், நம் வாழ்க்கையில்
நிறைய மாற்றங்களை நம்மால் காணமுடியும். நாம் ஏற்படுத்தும்
இந்த கூடாரம் நமக்கும், இறைவனுக்குமிடையே ஆழ்ந்த
உறவையும், நெருக்கத்தையும் ஏற்படுத்துவதாக
அமைய வேண்டும். இடி, மழை, வெயில் இவற்றிலிருந்து
கூடாரம் நம்மை எப்படி பாதுகாக்கிறதோ, அதுபோல நமக்கும்
இறைவனுக்குமிடையே நாம் ஏற்படுத்தும் கூடாரம், நமது
இக்கட்டான சூழ்நிலையிலிருந்து, தவிர்க்கமுடியாத
கஷ்டத்திலிருந்து, இடைவிடாத பிரச்சனையிலிருந்து நம்மை
விடுவிக்கும்.
இயேசு நாம் இருந்த இடத்தில் இருந்துகொண்டே, உருமாற்றம்
பெறவில்லை, இறைமாட்சியை அடையவில்லை. மாறாக தம்முடை
மூன்று சீடர்களை அழைத்துக்கொண்டு தாபோர் மலையை
நோக்கிப் பயணித்தார். ஏனென்றால் அங்கே தந்தைக் கடவுளை
சந்திப்பதற்காக. தனக்கும், தந்தைக் கடவுளுக்குமிடையே
இயேசு ஏற்படுத்திய கூடாரமே (நெருக்கம். ஆழம், அன்பு)
இயேசுவை சிலுவை சாவுக்கு கையளித்தது.
நம்முடைய வாழ்கையில் நாமும், இறைவனைத் தேடிச் செல்லவேண்டும்.
இறைவனுக்கும், நமக்கும் உள்ள அன்பை, நெருக்கத்தை
ஆழப்படுத்த வேண்டும், அதிகரிக்க வேண்டும்.
பிறரை சந்திக்கும் கூடாரம்:
நாம் ஒவ்வொருவரும், பிறர் நம்மை மதிக்கவேண்டும்,
நேசிக்கவேண்டும் என்று விரும்புகிறோம். இது எதார்த்தமான
உண்மை. அதுபோல நாமும் மற்றவர்களை மதிக்க வேண்டும்,
நேசிக்க வேண்டும் என்பது இறைவன் வகுத்த உண்மை. மற்றவர்களின்
மனங்களை கொள்ளையடிக்க முதன்மையான சாதனம புன்னகை.
ஒருவரைப் பார்த்து, புன்னகைப்பதன் மூலம் அவருக்கு
நாம் சொல்லும் செய்தி " உன்னை சந்திப்பதில் நான்
மகிழ்ச்சியடைகிறேன்" இதை தெரிவிப்பதால் நாம் அவருக்கு
மகிழ்ச்சியைக் கொடுக்கிறோம், நாமும் மகிழ்ச்சி அடைகிறோம்.
நமக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், அறிமுகமானவர்கள்,
அறிமுகமாகாதவர்கள் ஒவ்வொருவரையும் நாம் கடந்து
செல்லும் போது, நமது புன்னகையையும், நல்ல எண்ணங்களையும்
விட்டுச் செல்ல வேண்டும். ஏனென்றால் நாம் விட்டுச்
சென்ற அனைத்தும் நம்மிடமே திரும்பி வரும். நாம் மற்றவரகளோடு
கொண்டுள்ள நல்ல உறவும், நட்பும் நம்முடைய இலக்கை
அடைய உதவிபுரிகின்றன. இயேசு மற்றவர்களை சந்திக்கும்
போதெல்லாம் , அவர்களுக்கு நன்மையை மட்டும் செய்து,
அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி , மக்கள் மனத்தில்
இடம் பிடித்தார். இயேசு தனக்கும், தந்தைக் கடவுளுக்குமிடையே
நெருக்கமான கூடாரத்தை ஏற்படுத்தியது போல, தனக்கும்,
மற்றவர்களுக்குமிடையே நெருக்கமான கூடாரத்தை ஏற்படுத்தினார்.
இதனாலேயே இயேசுவின் போதனை உலகெங்கும் சென்றடைந்து.
இயேசு நாமாக முன் சென்று மக்களைத் தேடிச்
சென்றார். அவர்களின் தேவையை நிறைவேற்றி, அன்பையும்,
சமாதானத்தையும், மகிழ்ச்சியையும், மன்னிப்பையும்
கொடுத்தார்.
பேதுரு, இயேசுவைப் பார்த்து, மூன்று கூடாரங்களை அமைத்துக்
கொண்டு இங்கே இருந்துவிடுவோம், கீழே இறங்கிச் செல்லவேண்டாம்
என்று, இயேசுவின் நோக்கத்திற்கு எதிராக சிந்தனை
செய்தார். நாம் மற்றவர்களின் நோக்கத்திற்கு எதிராக
செயல்படாமல்,அவர்கள் நோக்கம் நிறைவேற உதவி
செய்வேம். மற்றவர்களுக்கு அன்பையும், மகிழ்ச்சியையும்
கொடுப்போம்.
நம்மை நாமே சந்திக்கும்
கூடாரம்:
முதலில் நம்மை நாமே புரிந்து கொள்ள வேண்டும். நமது
இலக்கு என்ன என்பதில் கவனம் செலுத்தி, அதை நோக்கி
பயணிக்க வேண்டும். இயேசு நாம் எதற்காக இம்மண்ணில்
பிறந்தோம் என்பதில் தெளிவாக இருந்தார். அவரின் இலக்கை
நோக்கியே, அவரின் சிந்தனை, சொல்,செயல் அனைத்தும்
இருந்தது. நாமும் நம் இலக்கை தெளிவாக புரிந்து
கொண்டு, அதனை நோக்கி பயணிக்க வேண்டும். நாம் ஒவ்வொருவருமே
நமது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்
விரும்புகிறோம். முதலில் நமது இலக்குகளை
தீர்மானிக்க வேண்டும், இலக்கு இல்லாமல் வேலை செய்வதைவிட
எதையாவது நோக்கி வேலை செய்ய கற்றுக் கொள்ள
வேண்டும். இது நமது வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தும்.
அடுத்து நமது செயலுக்கு நாமே பொறுப்பேற்க
வேண்டும். வெற்றியோ, தோல்வியோ எதுவானாலும்
துணிந்து செயல் படவேண்டும். வாழ்க்கையில் வெற்றி
பெற நிறைய வழிகள் உள்ளன. அவையெல்லாம் ஒவ்வொரு தனிநபரை
பொருத்து மாறுபடுகிறது. எனவே நம்மை நாமே நன்கு
புரிந்து கொண்டும், நமக்கு நாமே திடமான கூடாரம் அமைத்துக்
கொண்டும் வாழ்வோம். தன்னையே அறிந்து தனக்கு ஒரு
கூடாரத்தை ஏற்படுத்திய இயேசுவைப் போல நாமும் நமது
இலக்கை நோக்கிப் பயணிப்போம்.
இவ்வாறாக தவக்காலத்தில் இருக்கும் நாம், இறைவன்
விரும்புகின்ற முன்று கூடாரங்கள் அமைத்து, முழுமுதல்
இறைவனை சரணடைவோம். இறைவனை சந்திக்கவும், மற்றவரில்
நல்ல உறவை ஏற்படுத்தவும், நம்மை நாமே அறிந்துகொள்ளவும்
ஆசைப்படுவோம், ஆண்டவர் இயேசுவின் அருளும் ஆசிரும்
,எந்நாளும் வழிநடத்துவதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி.
உறுதியற்ற
நிலையை எதிர்கொள்ளல்
'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பது எப்படி உண்மையோ, அதுபோலவே,
மனித வாழ்வில் 'உறுதியற்ற நிலையே உறுதியானது' என்பதும்
உண்மையே. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போலவும், இரண்டு
சதவிகித ஹைட்ரஜனும் ஒரு சதவிகித ஆக்ஸிஜனும் இணைந்தால்
தண்ணீர் என்பது போலவும் உள்ள கணித மற்றும் வேதியியல்
வாய்ப்பாடுகளின் உறுதித்தன்மையைப் போல வாழ்வியல்
எதார்த்தங்கள் இருப்பதில்லை.
நன்றாக உழைக்கிறோம். நேர்மையாக இருக்கிறோம். ஆனால்,
வாழ்வில் முன்னேற்றம் இல்லை. எடுத்த காரியம் நிறைவேறுவது
இல்லை. தினமும் ஆலயம் செல்கிறோம். நற்செயல்கள் செய்யத்
தயாராக இருக்கிறோம். ஆனால் எதிர்பாராத ஆபத்துக்கள் வந்தே
தீருகின்றன. நம் குழந்தை நன்றாகப் படிக்கிறார். ஆனால்,
படிப்பிற்கேற்ற பலன் இல்லை. நம் மகன் நன்றாக வேலை
செய்கிறார். ஆனால், வேலையில் அவருக்கு உயர்வே இல்லை.
இம்மாதிரியான நேரங்களில், 'நாம் ஒன்று நினைக்கத் தெய்வம்
ஒன்றும் நினைக்கும்' என்று சொல்லி நம்மையே
தேற்றிக்கொண்டாலும், வாழ்வின் உறுதியற்ற தருணங்கள் நம்
வாழ்வில் நமக்கு அச்சத்தையும், ஏக்கத்தையும்
கொடுத்துக்கொண்டே இருக்கின்றன.நாம் எப்போதும் சறுக்கலான
மணலில் நடப்பதுபோலுவே உணர்கிறோம். உறுதியற்ற நிலையில்
நம்மை வருத்தும் இன்னொரு பிரச்சினை குழப்பம். குறிப்பாக,
தெரிவு செய்வதில் குழப்பம். நன்மையைத் தெரிந்துகொள்வதா?
தீமையைத் தெரிந்துகொள்வதா? என்ற குழப்பத்தைவிட, இரண்டு
நன்மைகளுக்குள் ஒரு நன்மையைத் தெரிவு செய்வதுதான் பெரிய
குழப்பமாக இருக்கிறது. நம் குழப்பத்திற்கும் உறுதியற்ற
நிலைகளுக்கும் விவிலியத்தில் விடை தேடினால், சில
நேரங்களில் குழப்பமும் உறுதியற்ற நிலைதான் இன்னும்
அதிகமாகிறது. 'நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா?'
(தொநூ 4:7) என்று நம்மை நல்லது செய்யத் தூண்டும்
விவிலியம், 'நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும்
ஒன்றுபோலவே நேரிடும்' (சஉ 9:2) என்று சொல்லி, 'அப்படி
என்றால் கெட்டவராய் இருந்தால் என்ன?' என்று நம்மை நம்
மதிப்பீடுகளோடு சமரசம் செய்துகொள்ளவும் தூண்டும்போது, நம்
உறுதியற்ற நிலையும் குழப்பமும் இன்னும் அதிகமாகிறது.
உறுதியற்ற நிலையை எதிர்கொள்ள முடியுமா? எதிர்கொள்ள
வேண்டுமா? அதை எப்படி எதிர்கொள்வது?
தங்கள் வாழ்வில் தாங்கள் சந்தித்த உறதியற்ற நிலைகளை
ஆபிரகாம், பிலிப்பு நகரத் திருச்சபையினர், மற்றும்
திருத்தூதர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதைத்தான்
இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குக் காட்டுகிறது.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 15:1-4), 'உன்னை
பெரிய இனமாக மாற்றுவேன்' என்று ஆபிராமுக்கு ('ஆபிரகாம்'
என்ற பெயர் மாற்றம் அடைவது 17:5ல்தான்) வாக்குறுதி
கொடுக்கும் கடவுள் அவருக்குத் தோன்றுவதைப் பார்க்கிறோம்.
'உன்னை நான் பெரிய இனமாக்குவேன். உனக்கு ஆசி வழங்குவேன்.
உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்' என்று (12:1)
வாக்குறுதி கொடுத்துத் தன்னைத் தன் 'ஊரிலிருந்து'
புறப்படச் செய்த இறைவன் இவ்வளவு நாள்கள் ஆகியும் ஒன்றும்
செய்யாமல் இருக்கிறாரே என்று தன் உள்ளத்தில் குழப்பமும்
ஐயமும் கொள்ள ஆரம்பிக்கின்றார் ஆபிராம். இந்த நேரத்தில்
ஆண்டவர் ஆபிராமை வெளியே (அவரின் கூடாரத்திற்கு வெளியேயும்,
அவரின் மனத்திற்கு வெளியேயும்) அழைத்து, 'வானத்தை
நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார்.
இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்' என்கிறார்.
'ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர்
அவருக்கு நீதியாகக் கருதினார்' என உடனே பதிவு செய்கிறார்
ஆசிரியர். 'நீதி' என்பதற்கு 'மற்றவரோடு சரியான உறவில்
இருப்பது' என்று பொருள். ஆக, ஆபிராம் கடவுளோடு கொள்ளும்
சரியான உறவு நம்பிக்கையில் கட்டப்படுகிறது.
தொடர்ந்து, ஆண்டவர், 'இந்நாட்டை உனக்கு உரிமைச்சொத்தாக
அழிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு
அழைத்து வந்த ஆண்டவர் நானே' என்கிறார். இது முந்தைய
வாக்குறுதியைவிட இன்னும் அதிகம் உறுதியற்றது. நம்ம ஊர்
பேருந்து நிலையத்திற்கு வெளியே சிறிய குடிசை போட்டு
அமர்ந்து ஊசி பாசி பிண்ணிக் கொண்டிருக்கும் ஒரு
நரிக்குறவரிடம் கடவுள், 'உனக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளை
உரிமைச் சொத்தாகத் தருவேன்' என்று சொன்னால் அவர் எப்படி
அதிர்ச்சி அடைந்து புன்னகை பூப்பாரோ அப்படித்தான்
நகைக்கின்றார் ஆபிராம். ஏனெனில், கல்தேயரின் ஊர்
என்றழைக்கப்படும் கானான் அன்று ஒரு பெரிய கனவு நாடாக
இருந்தது. அதன் வளமும், பலமும் பலரின் கண்களை அந்நாட்டை
நோக்கித் திருப்பியது. தான் ஒரு சாதாரண நாடோடி என்பதை
அறிந்திருந்த ஆபிராம், இந்த வாக்குறுதியின் உறுதித்தன்மையை
அறிந்துகொள்ளும் பொருட்டு, 'என் தலைவராகிய ஆண்டவரே, இதை
நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித்
தெரிந்துகொள்வேன்?' எனக் கேட்கின்றார். உடனே ஆண்டவர்
ஆபிராமுடன் உடன்படிக்கை செய்துகொள்ள முன்வருகின்றார்.
உடன்படிக்கை என்பது ஒரு எழுத்துப் பத்திரம் போன்ற ஆவணம்.
இதில் உடன்படிக்கை செய்துகொள்ளும் இரு நபர்களின்
உரிமைகளும் கடமைகளும் எழுதப்பட்டிருக்கும். மேலும், இது
எழுதப்பட்டவுடன் அதன் வெளி அடையாளமாக பலி ஒன்று
ஒப்புக்கொடுக்கப்படும். எபிரேயத்தில், 'உடன்படிக்கை
செய்தல்' என்பதை 'உடன்படிக்கையை வெட்டுதல்' என்று
சொல்கின்றனர். அதாவது, உடன்படிக்கையின்போது பலிப்
பொருள்கள் வெட்டப்படும். வெட்டப்பட்ட பலிப்பொருள்களுக்கு
நடுவே உடன்படிக்கை செய்யும் இருவரும் நடந்து செல்ல
வேண்டும். 'நான் உடன்படிக்கையை மீறினால் நானும் இப்படி
வெட்டப்படுவேன்' என்று இருவரும் உணர்ந்துகொள்வதற்காகவே
(காண். எரே 34:18) அவர்கள் இப்படி நடுவே நடப்பது வழக்கம்.
முதல் வாசகத்தில் கடவுளே உடன்படிக்கை செய்துகொள்ள முதலில்
முன்வருகின்றார். மேலும், கடவுள் மட்டுமே தீச்சட்டி
மற்றும் தீப்பந்தம் வடிவில் அந்தப் பலி கூறுகளுக்கிடையே
நடக்கின்றார். இவ்வாறாக, கடவுள் தன்னை நிபந்தனையற்ற
நிலையில் ஆபிராமோடு தன்னை இணைத்துக்கொள்கின்றார். மேலும்,
தான் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறும் என்ற உறுதியையும்
கடவுள் ஆபிராமுக்குத் தருகின்றார். காணக்கூடிய
அடையாளத்தின் வாயிலாக ஆபிராமின் உறதியற்ற நிலையையும்
குழப்பத்தையும் நீக்குகின்றார் கடவுள்.
ஆக, கடவுள் தனக்கு மொழிந்த குழந்தைப் பேறு மற்றும்
வாக்களிக்கபட்ட நாடு என்னும் வாக்குறுதிகள் பற்றி
உறுதியற்ற நிலையில் இருந்த ஆபிராம், கடவுளின்
உடன்படிக்கைச் செயல்பாட்டால் தன் உறுதியற்ற நிலையை
எதிர்கொண்டு, தன் நம்பிக்கையால் வெற்றியும் காண்கிறார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 3:17-4:1), பவுல்,
பிலிப்பு நகரத் திருஅவையில் விளங்கிய போலிப் போதனையை
எதிர்கொள்கின்றார். பிலிப்பியில் பவுல் நற்செய்தி
அறிவித்தபின், சில போலிப் போதர்கள் - யூதம் தழுவியோர் -
எழுந்து மாற்று நற்செய்தி ஒன்றைப் போதிக்கின்றனர். மேலும்,
கிறிஸ்தவ நம்பிக்கையாளராக ஒருவர் மாறினாலும் யூதச்
சட்டங்களையும், மரபுகளையும், முறைமைகளையும் பின்பற்ற
வேண்டும் என்றும், அச்செயல்களாலேயே ஒருவர் கடவுளுக்கு
ஏற்புடையவர் ஆகமுடியும் என்றும் போதிக்கின்றனர். இப்படியாக
நம்பிக்கையாளர்கள் தங்களின் மீட்பு பற்றிய உறுதியற்ற
நிலைக்கும் குழப்பத்திற்கும் தள்ளப்படுகின்றனர். இதைக்
கேள்வியுறுகின்ற பவுல் போலிப் போதகர்கள்மேல் கோபம் கொண்டு
வெகுண்டெழுகின்றார். அவர்களை, 'நாய்கள்' என்றும், 'கெட்ட
ஊழியர்கள்' என்றும், 'உறுப்பு சிதைப்போர்' என்றும்
சாடுகின்றார் (காண். பிலி 3:2). மேலும், இன்றைய வாசகத்தில்
'வயிறே அவர்கள் தெய்வம்' என்று சொல்லும் பவுல், அவர்கள்
கொடுத்த உணவு சார்ந்த மரபு முறைமைகளைக்
கடிந்துகொள்கின்றார். ஏனெனில், யூத மரபில் நிறைய
உணவுசார்ந்த முறைமைகள் இருந்தன. மேலும், 'மானக்கேடே
அவர்கள் பெருமை' என்று சொல்லும்போது, மற்றவர்கள்
பார்வையில் அருவறுப்பாய் இருந்த விருத்தசேதனத்தை அவர்கள்
தங்கள் பெருமையாகக் கருதியதைக் கடிந்துகொள்கின்றார்.
இறுதியாக, ஒட்டுமொத்தமாக, 'அவர்கள் எண்ணுவதெல்லாம்
மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே' என்கிறார். இவ்வாறாக, யூத
போலிப் போதகர்கள் இவ்வுலக வாழ்விற்குத் தேவையான வாழ்வியல்
முறைமைகளைப் பற்றிப் பேசுவதைச் சாடுகின்றார் பவுல்.
இந்தப் பின்புலத்தில் தன் போதனை பற்றிய சில தெளிவுகளை
முன்வைக்கின்றார் பவுல். நற்செய்திக்கும் யூத
முறைமைகளுக்கும் தொடர்பில்லை என்பதைச் சொல்கின்றார்.
ஏனெனில், கிறிஸ்தவ நம்பிக்கையாளர் பெறுகின்ற மீட்பு
முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்ததே அன்றி செயல்கள்
சார்ந்தது அல்ல என்கிறார். ஏனெனில், விருத்தசேதனம் போன்ற
செயல்கள் வழியாகவும், உணவு மற்றும் உடலியல் முறைமைகளைப்
பின்பற்றுவதால்தான் மீட்பு என்றால், இயேசுவின் சிலுவை
மரணம் முழுமைற்றதாகப் போய்விடும். எனவே, போலிப் போதகர்களை,
'சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர்' என்றழைக்கும் பவுல்,
'நீங்கள் அனைவரும் என்னைப் போல வாழுங்கள்' என்கிறார்.
அதாவது, 'சட்டம்தான் எல்லாம்' என்று நினைத்து சட்டத்திற்கு
எதிராக இருந்த கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களைத் தண்டிக்கச்
சென்ற நான், இப்போது மனமாற்றம் பெற்று இயேசுவை மட்டுமே
பற்றிக்கொண்டிருக்கிறேன். ஆக, 'நீங்களும் என்னைப்போல
இயேசுவை மட்டும் பற்றிக்கொள்ளுங்கள்' என்கிறார் பவுல்.
இந்த உலகு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களை
விண்ணகம் நோக்கியும், இயேசுவின் மீட்புச் செயல் நோக்கியும்
திருப்புகின்றார் இயேசு.
ஆக, போலிப் போதகத்தால் உருக்குலைந்து உறுதியற்ற மற்றும்
குழப்ப நிலையில் இருந்த பிலிப்பி நகர நம்பிக்கையாளர்களை,
தன் போதனையாலும் முன்மாதிரியான வாழ்வாலும்
உறுதியாக்குகின்ற பவுல், 'ஆண்டவரோடுள்ள உறவில்
நிலைத்திருங்கள்' என அறிவுரை பகர்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 9:28-36)
இயேசுவின் உருமாற்ற நிகழ்வை வாசிக்கின்றோம். இயேசுவுக்கு
மிக நெருக்கமான மூன்று திருத்தூதர்கள் - பேதுரு, யோவான்,
யாக்கோபு - இந்நிகழ்வில் இயேசுவுடன் உடனிருக்கின்றனர்.
மலையில் தோன்றிய மோசேயும், எலியாவும், உருமாறிய இயேசுவின்
தோற்றமும் திருத்தூதர்களைக் குழப்பத்திற்குள் தள்ளுகின்றன.
இந்தக் குழப்பத்தில்தான், 'ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது
நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு
ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்' என்கிறார் பேதுரு.
இப்படிச் சொல்வதன் வழியாக, (அ) பேதுரு, இயேசுவை மோசேக்கும்
எலியாவுக்கும் நிகராக்குகின்றார், (ஆ) பேதுரு 'ஆண்டவரே' என
அழைத்து இயேசுவின் முக்கியத்துவத்தை அறிக்கையிடுகின்றார்,
மற்றும் (இ) மலையிலேயே நிரந்தரமான இடத்தைத் தெரிவு செய்ய
நினைக்கின்றார்.
பேதுருவும் மற்ற இரு திருத்தூதர்களும் இயேசு யார் என்ற ஒரு
குழப்பத்திலும் உறுதியற்ற நிலையிலும் இருக்கின்றனர்.
இந்நேரத்தில் அவர்களின் குழப்பத்தை நீக்கும் வண்ணம்,
மேகத்தினின்று, 'இவரே என் மைந்தர். நான் தேர்ந்துகொண்டவர்
இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்' என்ற குரலொலி
கேட்கின்றது. 'மைந்தர்' என்ற நிலையில் இயேசு, மோசே மற்றும்
எலியாவைவிட மேன்மையானவராகின்றார். 'தேர்ந்தகொண்டவர்' என்ற
நிலையில் அவர் மெசியாவாக இருக்கிறார். மேலும், இவருக்குச்
செவிகொடுக்க திருத்தூதர்கள் அழைக்கப்படுகின்றனர்.
ஆக, கடவுளின் குரலும் அவரின் கட்டளையும் திருத்தூதர்களின்
உள்ளத்திலிருந்த உறுதியற்ற நிலையையும், குழப்பத்தையும்
அகற்றி உறுதி தருகின்றது. இயேசு யார்? என்பது பற்றிய
உறுதியை திருத்தூதர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
இவ்வாறாக, கடவுள் தேர்ந்துகொண்டவர்களும், கடவுளைத்
தேர்ந்துகொண்டவர்களும் - ஆபிராம், பிலிப்பு நகர
நம்பிக்கையாளர்கள், திருத்தூதர்கள் - உறதியற்ற நிலையையும்,
குழப்பத்தையும் எதிர்கொள்கின்றனர். எதிர்கொண்ட அவர்கள்
கடவுளின் உடன்படிக்கையால், வாக்குறுதியால், போதனையால்,
கட்டளையால் உறுதியும் பெறுகின்றனர். இதையே இன்றைய
திருப்பாடல் ஆசிரியரும் (காண். திபா 27), தன் உறுதியற்ற
நிலையிலும், தன் குழப்பத்திலும், 'ஆண்டவரே என் ஒளி' என்று
கண்டுகொள்கின்றார்.
கடந்த வாரம், நம் நம்பிக்கையை, நம் நம்பிக்கையால் அறிக்கை
செய்தோம். நம் வாழ்வின் நம்பிக்கையில் உறுதியற்ற நிலை
வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்றைய
இறைவாக்கு வழிபாட்டில் அறிகிறோம். இவ்வறிதல் நமக்குத்
தரும் வாழ்வியல் சவால்கள் எவை?
1. நம்பிக்கை
'ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்' என்ற சொல்கிறது
இன்றைய முதல் வாசகம். 'நம்பிக்கை' என்பது ஐயமற்ற நிலை.
உயரம் தாண்டும் விளையாட்டு வீரர் ஓடிக்கொண்டே
இருக்கும்போது, தனக்கு முன் இருக்கும் அந்தக் குச்சியின்
உயரத்தைத் தான் தாண்டிவிடுவேன் என்ற உறுதியில் ஐயமற்று
இருக்க வேண்டும். 'தாண்டிவிடுவேனா?' என்ற ஐயம் சிறுதுளி
வந்துவிட்டாலே அவரால் உயரே எழ முடியாமல் போய்விடலாம்.
தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் ஆய்வகம் ஒருமுறை தீப்பற்றி
எரிந்துவிட, 'என் பிழைகள் எல்லாம் எரிந்துவிட்டன. என்
நம்பிக்கை எரியவில்லை. மீண்டும் அனைத்தையும் எழுப்புவேன்'
என்று சொல்லி அவர் மீண்டும் உருவாக்கிய ஆய்வகமே இன்று நாம்
அனுபவிக்கும் பல கண்டுபிடிப்புக்களின் தளமாக மாறியது.
'அக்கா, ஒரு பென்சில் வாங்குங்க. அண்ணா, ஒரு பேனா
வாங்குங்க!' என்று சொல்லி பேருந்தைச் சுற்றி சுற்றி வரும்
சின்னக் குழந்தைகளின் கண்களில் இருந்து நம்பிக்கையை நாம்
கற்றுக்கொள்ளலாம். 'இன்று மாலைக்குள் எல்லாப் பேனாக்களும்,
பென்சில்களும் விற்றுவிடும். நாம் மாலையில் நன்றாக
உணவருந்தி உறங்கலாம்!' என்ற நம்பிக்கையே அவர்களை ஒவ்வொரு
பேருந்திற்குள்ளும் ஏறி இறங்க அவர்களை உந்தித் தள்ளுகிறது.
நம்பிக்கை என்ற அந்த நெருப்புத்துளி நம் உள்ளத்தில்
இருக்கும்போது, ஒரு கதவு அடைக்கப்பட்டாலும், மறுகதவு
நோக்கி நம் கால்கள் தாமாகவே நகர்ந்து செல்லும்.
2. உடனடி ரிசல்ட் வேண்டாம்
பிலிப்பி நகர மக்கள் தங்களின் மீட்புக்கு உடனே பரிசு
கிடைக்க வேண்டும் என்று பொறுமையற்ற நிலையில்
இருக்கின்றனர். பொறுமையற்ற நிலையில்தான் நாம் யார்
சொன்னாலும் எதைச் சொன்னாலும் நம்ப ஆரம்பிப்போம். 'விண்ணகமே
நம் தாய்நாடு', எனவே பொறுத்திருங்கள் என அறிவுரை
பகர்கின்றார் பவுல். நம் வாழ்வில் உறுதியற்ற நிலையும்
குழப்பமும் வரக் காரணம் நம்முடைய பொறுமையின்மையே. ஆக,
அதைக் களைதல் அவசியம்.
3. சலனமற்ற மனம்
உருமாற்ற மலையில் சஞ்சலத்தோடு பேசிய திருத்தூதர்கள்
மலைக்குக் கீழே வந்தவுடன் அமைதி காக்கின்றனர். சலனம்
மறைந்து அமைதி பிறக்கும்போது வாழ்வில் பல தெளிவுகள்
பிறக்கும். இந்த அமைதியில்தான் இயேசுவை யார் என்று
அடையாளம் கண்டுகொள்கின்றனர். மீன் மார்க்கெட் மாதிரி
சத்தம் போட்டுக் கொண்டே இருக்கும் நம் மனமும் நூலகம் போல
அமைதியானால்தான் உறுதியற்ற நிலை மறையும். உறுதியற்ற
நிலையிலும், குழப்பத்திலும் இருக்கும்போதும் கொஞ்சம் நம்
பயணத்தை நிறுத்திவிட்டு அல்லது வேகம் குறைத்துவிட்டு,
அமைதி காத்தல் நலம். மனத்தின் சலனம் அடங்கும் வரை
காத்திருந்தால் நம் கண்களுக்குக் காட்சிகள் தெளிவாகும்.
நாம் என்ன பேசுகிறோம் என்பதும் நமக்குத் தெளிவாகும்.
இறுதியாக, நம் நம்பிக்கை வாழ்விலும், அன்றாட நல்வாழ்விலும்
உறுதியற்ற நிலைகளும் குழப்பங்களும் தவிர்க்க முடியாதவை.
ஆனால், நம்பிக்கை, பொறுமை, அமைதி நம் நம்பிக்கையையும்,
நல்வாழ்வையும் உறுதிப்படுத்தும் - இன்றும் என்றும்.
விட்டுவிடு; பற்றிக் கொள்:
தன்னுடைய வாழ்வில் உயர்ந்த இலட்சியங்களை அடைய விரும்பிய அந்த
இளைஞனுக்கு அவனுடைய பாவங்கள் மிகப்பெரிய தடையாய் இருந்தன.
அவற்றை எப்படி விட்டுவிடுவது என்று அவன் சிந்தித்துக்
கொண்டிருக்கையில்தான், அவன் ஒரு துறவியைப் பற்றிக்
கேள்விப்பட்டான். அதனால் அவன் அவரிடம் சென்று, தனக்கு பிரச்சனைக்குத்
தீர்வுகாண முடிவுசெய்தான்.
"சுவாமி! எனக்குப் பெரியதொரு கனவிருக்கின்றது. அதை அடைய
விடாமல், என்னுடைய பாவங்கள் என்னைப் பற்றி இழுத்துக்
கொண்டிருக்கின்றன என்னுடைய பாவங்களை விட்டுவிட நான் என்ன
செய்ய செய்யவேண்டும்?" என்று இளைஞன் துறவியிடம் சொன்னான்.
அவனை அன்பொழுகப் பார்த்த துறவி அவனிடம், "வா! நாமிருவரும்
இந்தத் தோட்டத்தில் சிறிதுநேரம் உலாவிவிட்டு வருவோம்" என்றார்.
பின்னர் துறவி முன்செல்ல, இளைஞன் அவரைப் பின்தொடர்ந்தான்.
வழியில் ஒரு தென்னை மரம் இருந்தது. அதனருகில் சென்ற துறவி,
அதனை இறுகப் பற்றிக்கொண்டு, "இந்தத் தென்னை மரம் என்னை விடமாட்டேன்
என்கிறது" என்று கத்தினார். துறவியின் இச்செயலைக் கண்டு அதிர்ச்சியுற்ற
இளைஞன், "சுவாமி! தென்னை மரத்தை நீங்கள் பற்றிக்கொண்டு, அது
உங்களைப் பற்றிக் கொண்டிருப்பதாகக் கத்துகிறீர்களே! இது
நியாயமா?" என்றான். "இப்போது பேசினாயே! இது நியாயமான
பேச்சு" என்று இளைஞனிடம் பேசத் தொடங்கிய துறவி, "தென்னை
மரமல்ல, நான்தான் தென்னை மரத்தைப் பற்றிக்கொண்டிருக்கின்றேன்.
அதனால் நான்தான் தென்னை மரத்தை விடவேண்டும். இது உனக்கும்
பொருந்தும்! பாவமல்ல, நீதான் பாவத்தைப் பற்றிக்கொண்டிருக்கின்றாய்.
அதனால் நீதான் பாவத்தை விடவேண்டுமே ஒழிய, அது அல்ல" என்றார்.
அப்போதுதான் இளைஞனுக்கு உண்மையை புரிந்தது. அதன்பிறகு அவன்
தன் பாவத்தை விட்டுவிட்டு, உயர்ந்த இலட்சியத்தை அடைந்தான்.
ஆம், உயர்ந்த இலட்சியத்தை அடைய, பாவத்தை விட்டுவிடவேண்டும்.
அது போன்று நமக்கு விண்ணகமே தாய் நாடாக இருப்பதால், மண்ணுலகு
சார்ந்தவை பற்றி எண்ணுவதை விடவேண்டும். அதைத் தவக்காலத்தின்
இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை
நமக்கு உணர்த்துகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
மண்ணுலகைச் சார்ந்தவற்றைப் பற்றியே எண்ணுபவர்கள்:
மனிதர்களில் ஒருசிலர் உண்டு. இவர்களுடைய வாழ்க்கை எல்லாம்
"கண்டதே காட்சி; கொண்டதே கோலம்" என்று இருக்கும். இப்படிப்பட்டவர்கள்
வயிறே பிரதானம் என்று இருப்பார்கள். மட்டுமல்லாமல், மண்ணுலகத்தைத்
தவிர வேறு எதைப் பற்றியும் இவர்கள் எண்ணமாட்டார்கள். இத்தகையோருக்கு
மிகப்பெரிய எடுத்துக்காட்டுகளாக இருப்பவர்கள்தான் இயேசு
சொல்லும் அறிவற்ற செல்வன் உவமையில் வரும் "செல்வனும்"
(லூக் 12: 13-21) செல்வரும் இலாசரும் உவமையில் வரும் செல்வரும்
ஆவர் (லூக் 16: 19-31). இன்னும் இலவோதிக்கேயா திருஅவையில்
வாழ்ந்தவர்களும் இதில் அடங்குவர் (திவெ 3:14-22). இவர்கள்
அனைவரும் மண்ணுலகு சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்தார்களே அன்றி,
விண்ணுலகு சார்ந்த வாழ்க்கையை வாழவில்லை. இதனால் அழிவே இவர்களது
முடிவாய் இருந்தது.
பிலிப்பி நகரிலும் இப்படி ஒருசிலர் சிலுவைக்குப் பகைவர்களாய்
நடந்து, மண்ணுலகு சார்ந்தவை பற்றியே எண்ணிக்
கொண்டிருந்தார்கள். இவர்களைப் பற்றி இன்றைய இரண்டாம் வாசகத்தில்
குறிப்பிடும் பவுல், "அழிவே அவர்களது முடிவு; வயிறே அவர்கள்
தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை" என்கிறார். இப்படிச்
சொல்லிவிட்டுப் பவுல் தொடர்ந்து கூறும்போது, "நமக்கோ விண்ணகமே
தாய்நாடு" என்கிறார்.
"நமக்கோ விண்ணகமே தாய்நாடு" என்று புனித பவுல் சொல்லும்
வார்த்தைகளை, இயேசுவின் வார்த்தைகளோடு இணைத்துச்
சிந்தித்துப் பார்த்தால், அவற்றின் அர்த்தம் இன்னும்
தெளிவாய் விளங்கும். யோவான் நற்செய்தியில் இயேசு, "என் தந்தை
வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன; அப்படி இல்லையெனில்,
"உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்" என்று
சொல்லியிருப்பேனா! (யோவா 14: 2,3) என்பார். தந்தை வாழும்
இடத்தில் உறைவிடங்கள்..." என்று இயேசு சொல்வது விண்ணகத்தைத்தான்.
ஆகையால், புனித பவுல் சொல்வது போன்று, விண்ணகமே நமது
தாய்நாடாக இருப்பதால், அதை அடைய முயற்சி செய்ய செய்யவேண்டும்.
அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று இன்றைய இறைவார்த்தை
நமக்கு மறுமொழி கூறுகின்றது.
இயேசுவிற்குச் செவிசாய்க்கவேண்டும்:
விண்ணகமே நமது தாய்நாடாக இருப்பதால், அதை அடைவதற்கு நாம்
செய்யவேண்டிய முதன்மையான செயல், கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவரும்
அவரது மைந்தருமான இயேசுவுக்குச் செவிசாய்த்து நடப்பதுதான்.
இன்றைய நற்செய்தியில், இயேசுவின் தோற்றமாற்றத்தைக்
குறித்து நாம் வாசிக்கின்றோம். இந்த நிகழ்வின் இறுதியில்,
மேகத்தினின்று ஒலிக்கும் குரல், "இவரே என் மைந்தர்; நான்
தேர்ந்துகொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" என்கிறது.
திருவிவிலியத்தில் மேகம் கடவுளின் உடனிருப்பை உணர்த்துகின்ற
ஒன்று (விப 24:16, 40:34). ஆதலால், மேகத்திலிருந்து ஒரு குரல்
ஒலித்தது என்பதை ஆண்டவர் பேசியதாகக் கொள்ளலாம்.
கடவுள் இயேசுவைப் பார்த்து, "இவரே என் மைந்தர்; இவருக்குச்
செவிசாயுங்கள்" என்றார் எனில், இயேசு, தந்தையின் திருவுளத்தை
நிறைவேற்றி அவரது (அன்பார்ந்த) மைந்தர் ஆனார். அதனால் இயேசுவுக்குச்
செவிசாய்ப்பது என்பது கடவுளுக்குச் செவிசாய்ப்பதற்கு இணையானது.
அதைவிடவும் ஒருவர் இயேசுவுக்குச் செவிசாய்க்கும்போது, அவர்
நமது தாய்நாடாம் விண்ணகத்தை அடைவது உறுதி.
இறைவனிடம் நம்பிக்கை கொள்ளவேண்டும்:
நமது தாய்நாடாம் விண்ணகத்தை அடைவதற்கு இயேசுவிற்குச்
செவிசாய்ப்பது முதன்மையான வழி என்றால், இரண்டாவது வழி, கடவுள்மீது
நம்பிக்கை வைத்து வாழ்வதாகும்.
கடவுள்மீது நம்பிக்கை சாதாரண வந்து விடுவதில்லை. அவரது
வார்த்தையைக் கேட்கவேண்டும் அல்லது கடவுளைப் பற்றி அறிவிக்கப்படுவதைக்
கேட்க வேண்டும் (உரோ 10:17). அந்த அடிப்படையில், இன்றைய முதல்
வாசகத்தில் ஆபிராம் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்கின்றார்.
கேட்டதோடு நின்றுவிடாமல், அவர்மீது நம்பிக்கை
கொள்கின்றார். ஆண்டவர் ஆபிராமிடம், "வானத்தை நிமிர்ந்து
பார்.... இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்" என்கிறார்.
ஆண்டவர் ஆபிராமிடம் இப்படிச் சொன்னபோது அவருக்குக் குழந்தையை
இல்லை. ஆனாலும் ஆபிராம் ஆண்டவருடைய வார்த்தையை நம்பினார்.
அவர் நம்பியது போன்றே அவரது வழிமரபினர் விண்மீன்களைப்
போன்று எண்ண முடியாதவர்களாய் ஆனார்கள்.
ஆதலால், நாம் ஆபிராமைப் போன்று ஆண்டவரின் குரலைக் கேட்க
வேண்டும்; ஆபிராமைப் போன்று ஆண்டவரில் நம்பிக்கை வைக்க
வேண்டும். அப்படி நாம் செய்தால், நாம் மண்ணுலகு சார்ந்தவற்றை
பற்றி எண்ணமாட்டோம். மாறாக, கிறிஸ்து இயேசுவோடு உயிர்த்தெழந்தவர்களாய்,
விண்ணுலகு சார்ந்தவை பற்றியே எண்ணி, அவற்றை நாடுவோம் (கொலோ
3:1), இயேசுவிற்குச் செவிசாய்ப்போம். அப்போது நமது
தாய்நாடான விண்ணகத்தை அடைவோம்.
சிந்தனைக்கு:
"அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும்
நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக்
கொடுக்கப்படும்" (மத் 6:33) என்பார் இயேசு. எனவே, நாம் இறையாட்சியையும்,
இறைவனுக்கு ஏற்புடையவற்றையும் நாடுவோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
உயிரியல் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவர்களுக்கு
கம்பளிப்புழு எப்படி வண்ணத்துப்பூச்சியாக மாறுகிறது என்பது
குறித்து செய்முறைப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அவர்
தன்னுடைய மாணவர்களிடம் கம்பளிப்புழு கூட்டைச்
சுட்டிக்காட்டி, இன்னும் ஒருசில மணித்துளிகளில் இந்தக்
கூட்டில் இருக்கக்கூடிய கம்பளிப்புழு வண்ணத்துப்பூச்சியாக
மாறும், அது எப்படி மாறுகிறது என்பதை கவனித்துக்
கொண்டிருங்கள் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
மாணவர்கள் யாவரும் கம்பளிப்புழு கூட்டையே பொறுமையாக
பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது கூட்டில் இருந்த
கம்பளிப்புழு கஷ்டப்பட்டு வெளியே வந்துகொண்டிருந்தது.
அதைப் பார்த்து இரக்கப்பட்ட மாணவன் ஒருவன், கூட்டிலிருந்து
அதனை வெளியே எடுத்துவிட்டான். ஆனால் சிறுது நேரத்தில்
வெளியே வந்த அந்த கம்பளிப்புழு இறந்துபோனது. மாணவன் என்ன
செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான்.
இந்த நேரத்தில் வெளியே சென்ற ஆசிரியர் வகுப்புக்கு உள்ளே
வந்தார். அவரிடத்தில் மாணவர்கள் அனைவரும் நடந்ததை எல்லாம்
சொன்னார்கள். அதற்கு அவர், அன்பு மாணவர்களே! கம்பளிப்புழு
தன் கூட்டைவிட்டு வெளியேவரக் கஷ்டப்படுகிறது என்று
நினைத்து நீங்கள் அதனை வெளியே எடுத்துவிட்டிருக்கிறீர்கள்.
ஆனால், உண்மையில் அந்த கம்பளிப்புழு கஷ்டப்பட்டு வெளியே
வருகிறபோதுதான் அதனுடைய சிறகுகள் வலுபெறும். ஒரு முழு
வண்ணத்துப்பூச்சியாக மாறும் என்றார். தொடர்ந்து அவர்
அவர்களிடம், நமது வாழ்விலும் இப்படி கஷ்டங்களை, வலிகளை,
துன்பங்களைத் தாங்கிக்கொண்டால்தான் உயர்ந்த லட்சியத்தை
அடையமுடியும் என்றார்.
நாம் சந்திக்கும் துன்பங்கள் நம்மைப் புடமிடுகின்றன;
நமக்கு ஏற்படும் அவமானங்கள் நம்மைச் செதுக்குகின்றன.
எப்படி உளியானது கல்லைச் செதுக்க அது சிற்பமாக மாறுகிறதோ
அதுபோல என்பார் எழுத்தாளர் வெ. இறையன்பு.
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும்
நமக்கு இன்றைய நாள் வாசகங்கள் நமக்குத் தரும் சிந்தனை
பாடுகளின் வழியாகப் பரலோகம் என்பதாகும். அதாவது
சிலுவைச்சாவின் வழியேதான் நமக்கு மீட்பு உண்டு என்பதே
இன்றைய வாசகங்களின் சாராம்சமாக இருக்கிறது. நற்செய்தி
வாசகத்திலே ஆண்டவர் இயேசு உருமாற்றம் அடைகின்றார். அதில்
மோசேயும், இறைவாக்கினர் எலியாவும் உடன் இருக்கிறார்கள்.
எருசலேமில் இயேசு மூப்பர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள்
கையில் ஒப்புவிக்கப்பட்டு, கொலை செய்யப்படவும், மூன்றாம்
நாளில் மாட்சியுடன் உயிர்த்தெழுவதன் முன் அடையாளமாக இந்த
உருமாற்ற நிகழ்வு இருக்கிறது.
ஏற்கனவே சீடர்கள் இயேசு சிலுவைச்சாவைப் பற்றி மூன்றுமுறை
முன்னறிவித்ததால் குழம்பிப்போய் இருந்தார்கள். இதனால்
உருமாற்ற நிகழ்வு ஒருவிதத்தில் அவர்களையும் நம்பிக்கையில்
உறுதிப்படுத்தியது என்றுகூடச் சொல்லலாம்.
இயேசுவின் சீடர்களைப் போன்றுதான் நாமும் பாடுகள்,
துன்பங்கள் இவையெல்லாம் எதற்கு என்று நினைக்கிறோம்;
துன்பமில்லா இன்பமான வாழ்வு வாழ நினைக்கிறோம். ஆனால்
ஆண்டவர் இயேசுவோ பாடுகளின் வழியேதான் நமக்கு மீட்பு என்பதை
நற்செய்தியில் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்.
யோவான் நற்செய்தி 12:24 ல் ஆண்டவர் இயேசு கூறுவார்,
கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே
இருக்கும். மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்
என்று. ஆக கோதுமை மணியைப் போன்று நாமும் மடியவேண்டும்,
பாடுகளை அனுபவிக்கவேண்டும். அப்போதுதான் நாமும் இயேசுவின்
மகிமையில் பங்குபெற முடியும்.
ஆனால் இன்றைக்கு நிலைமை முற்றிலும் வித்தியாசமாக
இருக்கிறது. யாருக்கும் துன்பங்களை, சவால்களை எதிர்கொள்ள
துணிவில்லை. எல்லாவற்றிலும் பாதுக்காப்பு தேடியே நமது
வாழ்வானது ஓடிக்கொண்டிருக்கிறது. பாதுகாப்பான இடம்,
பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்று பழக்கப்பட்ட நமக்கு சாதாரண
ஒரு பிரச்னையையும் எதிர்கொள்ள முடியவில்லை.
ஒருமுறை ஹங்கேரி நாட்டில் ஓர் ஆலயத்தில் பொது ஆராதனை
நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடிரென்று துப்பாக்கி
ஏந்திய தீவிரவாதிகள் சிலர் ஆலயத்திற்குள் நுழைந்தார்கள்.
இதைப் பார்த்த மக்கள் அனைவரும் (குருவானவர் உட்பட) எங்கே
தங்களுடைய உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று
பதறியடித்துகொண்டு ஓடினார்கள்.
ஆனால் அந்த கூட்டத்தில் இருந்த ஒரே ஒரு தாத்தா, பாட்டி
மட்டும் ஆலயத்தைவிட்டு நகராமல் அப்படியே இருந்தார்கள்.
எல்லாரும் அலறியடித்துக் கொண்டு ஓடும்போது, நீங்கள்
மட்டும் ஏன் இந்த ஆலயத்திலேயே இருக்கிறீர்கள்? உங்களுக்கு
உயிர்மேல் பயமில்லையா? என்று அந்த முகமூடி அணிந்த
தீவிரவாதிகள் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள்,
எங்கள் உயிரைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள்
செத்தாலும் இந்த ஆலயத்திலே சாகிறோம் என்றார்கள்.
இதைக்கேட்டு வியந்த அந்த தீவிரவாதிகள் அவர்களிடம்,
நாங்கள் தீவிரவாதிகள் அல்ல, மாறாக யாராரெல்லாம்
கிறிஸ்துவுக்காக எதையும் இழக்கத் துணிந்தவர்கள் என்பதைச்
சோதித்துப் பார்க்க வந்த இயேசுவின் உண்மையான ஊழியர்கள்
என்றார்கள். இயேசுவுக்காக எதையும், ஏன் தங்களுடைய
உயிரையும் இழக்கத் துணியும் இயேசுவின் உண்மையான சீடர்கள்
குறைந்து போய்விட்டார்கள் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு
எடுத்துக்காட்டுகிறது.
இந்த பின்னணியில்தான் நாம் இயேசுவின் உருமாற்றத்தையும்,
அது உணர்த்தும் பாடுகளின் வழியே மீட்பு உண்டு என்று
உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டும். இயேசு சாவைத்
துணிவுடன் ஏற்றுக்கொண்டார். தன்னைப் பின்தொடர்ந்து வரும்
சீடர்களும் சிலுவையை தூக்கிக்கொண்டு வரவேண்டும் என்கிறார்.
பிலிப்பியருக்கு எழுத்தப்பட்ட திருமுகத்திலிருந்து
எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார்
கூறுவார், கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய்
நடப்போர் பலர் உள்ளனர் என்று. ஆம், துன்பமில்லா, இன்பமான
வாழ்வு வாழ நினைக்கும் ஒவ்வொருவரும்; பிறர்நலத்தை நாடாமல்,
தன்னலச் சேற்றில் மூழ்கிக் கிடக்கும் ஒவ்வொருவரும்; இந்த
மண்ணுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுபவர்கள் யாவருமே
இயேசுவின் சிலுவைக்கு பகைவர்கள்தான். ஏனெனில் சிலுவை
மண்ணுலகு சார்ந்தவற்றை அல்ல விண்ணுலகு சார்ந்த
காரியங்களையே நமக்கு நினைவூட்டுகிறது.
ஆகவே இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும்
சிலுவை, பாடுகள், துன்பம் இவையெல்லாவற்றையும்
ஒதுக்கித்தள்ளாமல், அவற்றைத் துணிவுடன் ஏற்றுக்கொண்டு,
இயேசுவின் வழியில் நடக்க முயலுவோம்.
அடுத்ததாக நாம் இயேசுவின் பாடுகளின் வழியில் நடப்பதோடு
மட்டுமல்லாமல், அவரோடு நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ள
முன்வரவேண்டும். இரண்டாம் வாசகத்தில் பவுலடியார்
கூறுகிறார், ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருக்கள்
என்று. இந்த தவக்காலத்திலே ஆண்டவருக்கும், நமக்கும் உள்ள
உறவில் நிலைத்திருப்பது மிகவும் சாலச் சிறந்த ஒன்றாகும்.
ஏனென்றால் நமது வாழ்க்கை வேலை, படிப்பு, உழைப்பு என்று
சுழன்றுகொண்டிருக்கிறது. இதனால் கடவுளோடு உள்ள உறவில்
தொய்வு ஏற்பட்டு, நமது வாழ்வே எந்திரத்தனமானதாக
மாறிப்போய்விடுகிறது. இந்த சூழ்நிலையில்தான் நாம் இறைவனோடு
உள்ள உறவில் வளர்வது மிகவும் தேவையானதாக இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவன் பொதுத்தொலைபேசி
நிலையத்திற்குச் சென்று, வெளியூரில் இருக்கும் தன்னுடைய
நெருங்கிய உறவினருக்கு தொலைபேசி வழியாகப் பேசினான். ஆனால்
மறுமுனையிலிருந்து சத்தம் கேட்காததால் கொஞ்சம் சத்தமாகப்
பேசினான். அப்போதும் அவனுக்கு மறுமுனையில் இருப்பவர்
பேசும் சத்தம் கேட்கவில்லை. இதனால் அவன் இன்னும் அதிக
சத்தமாகப் பேசினான்.
அதற்குள் பொதுத் தொலைபேசி நிலையத்தைச் சுற்றி
பெருங்கூட்டமே கூடிவிட்டது. அவன் எதற்கு இவ்வளவு மக்கள்
கூடியிருக்கிறார்கள் என்று புரியாமல் விழித்தான். அதன்
பின்னர்தான் உண்மையை உணர்ந்தான் தான் தொலைபேசியை மாற்றி
வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று.
மனிதர்களோடு உள்ள தொடர்பு சரியில்லாதபோதே மிகப்பெரிய
குழப்பம் ஏற்படுகிறது என்று சொன்னால், கடவுளுக்கும்,
மனிதருக்கும் இடையே உள்ள உறவு சரியில்லாதபோது அது
மிகப்பெரிய குழப்பத்திற்கும், ஆபத்துக்கும்தான் நம்மை
இட்டுச் செல்லும். அதனால்தான் பவுலடியார், ஆண்டவரோடு உள்ள
உறவில் நிலைத்திருங்கள் என்கிறார்.
இப்படி ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருந்ததற்கு நமக்கு
மிகப்பெரிய உதாரணமாக இருப்பவர் முதல் வாசகத்தில் நாம்
படிக்கக்கேட்கும் நமது முதுபெரும் தந்தை ஆபிரகாம். அவர்
கடவுளின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்தார்; அவர்மீது
ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார். அதனால்தான் கடவுள்
ஆபிரகாமின் நம்பிக்கையைப் பார்த்து, உன் மரபை வானத்து
விண்மீன்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகச்
செய்வேன் என்கிறார்.
எனவே இந்த தவக்காலத்தில் ஆபிரகாம் எப்படி ஆண்டவரோடு உள்ள
உறவில் நிலைத்திருந்தாரோ அதுபோன்று நாமும் நமது
நம்பிக்கையால், கீழ்படிதலுள்ள வாழ்வால் நல்லுறவில்
நிலைத்திருப்போம். அத்தோடு இயேசுவைப் போன்று நமது வாழ்வில்
வரும் துன்பங்களை, பாடுகளை துணிவுடன் ஏற்றுக்கொள்வோம்.
அதன் வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
இதோ என் எதிரிலுள்ள கம்பத்தில் என்னைத் தூக்கிலிட்டாலும்
சரி, துப்பாக்கியால் என்னைச் சுட்டாலும் சரி, நான் என்
கொள்கைகளை எவருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் -
புரட்சியாளர் சேகுவேரா.
தொடக்க நூல். 15:5-12, 17-18
பிலிப்பியர் 3:14:1
லூக்கா 9:28-36
இயேசு தோற்றம் மாறுதல்
ஆசியா கண்டத்திலே மலைகளுக்குச் சிறப்பிடம் உண்டு. ஆழ்நிலை
தியானத்தில் ஈடுபடுவோர் இறைவனைத் தேடி இமயமலையை நாடுகின்றனர்.
காரணம் காலம் காலமாக இறைவனைச் சந்திக்க ஏற்ற இடமாக மலைகள்
கருதப்பட்டன. கடவுள் மேலே இருக்கிறார் என்ற எண்ணத்தில் மலைகளில்
ஏறிச் செல்வதின் மூலமாகக் கடவுளிடம் நெருங்கிச் செல்வதாக
மக்கள் கருதுகிறார்கள். இதனால்தான் இந்தியத் திருநாட்டிலே
கோவில்கள் எல்லாம் மலை மேல் எழுப்பப்பட்டிருப்பதை நாம்
பார்க்கிறோம்.
இரண்டாவது மலைகளில் காணப்படும் இயற்கை எழிலும், அமைதியும்
இறைவனைத் தேடவும், இறைவனோடு ஒன்றிக்கவும் ஏற்ற சூழ்நிலையாக
உள்ளன. சுருங்கக் கூற வேண்டுமானால் இறைவன் - மனித சந்திப்பிற்கு
ஏற்ற இடமாக மலைகள் விளங்குகின்றன.
விவிலியத்தில் பார்த்தால் மலைகள் இறைவனின் பிரசன்னத்தைக்
குறிக்கின்றது. மலைகள் இறைவனைச் சந்திக்கும் இடமாக அமைகின்றன.
அபிரகாம் தன் மகன் ஈசாக்கை மோரியா மலையிலே பலியிட முயன்றபோது
இறைவனைச் சந்திக்கிறார் (தொடக்க நூல் 22:1-19)
இஸ்ரயேல் மக்களின் தலைவனாக இருந்து வழிநடத்திய மோசே இறைவனைச்
சீனாய் மலையில் சந்தித்ததைப் பற்றி விடுதலைப் பயணத்தில்
(வி.ப. 24:12-18) வாசிக்கிறோம்.
எலியாஸ் இறைவாக்கினர் கார்மேல் மலையில் இறைவனைச் சந்தித்ததாக
(1 அரச.18:31-40) அரசராகமத்தில் வாசிக்கிறோம்.
- இத்தகைய பின்னணியில் புதிய ஏற்பாட்டிற்கு நாம் கடந்து
வரும்போது இயேசு மலை மீது ஏறிப் போதித்தார் என்று
வாசிக்கிறோம். இயேசுவின் உருமாற்ற நிகழ்ச்சியும் தபோர்
மலையில் நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல தந்தையும் மகனும்
கல்வாரி மலையில் சந்திக்கிறதை நாம் காண்கிறோம்.
இறைவன் மனிதர்களைச் சந்திக்கிறார் என்று சொல்லும் போது
கண்ணுக்குத் தெரியும் வகையில் மனித உருவில் வந்து
சந்திக்கிறார் என்று பொருள் அல்ல. தன் வார்த்தை வழியாகவோ
இவரே என் அன்பார்ந்த மகன் (லூக் 9:35), இயற்கை அடையாளங்கள்
வழியாகவோ, இயற்கையில் நடந்த மாற்றங்கள் (மத். 27:51, 52)
வழியாகவோ, அல்லது நெருப்பு வடிவிலோ, மேகங்கள் வடிவிலோ
இறைவன் மனிதர்களைச் சந்திக்கிறார். இத்தகையப் பின்னணியில்
இன்றைய உருமாற்ற நிகழ்ச்சியை நாம் காண வேண்டும்.
செபிப்பதற்குத் தனிமையாக பேதுருவையும் யாக்கோபையும்
யோவானையும் அழைத்துக் கொண்டு ஓர் உயர்ந்த மலைக்குச்
சென்றார் இயேசு. அங்கே அவர்கள் முன் உருமாறினார். அவரது
முகத்தோற்றம் மாறியது. ஆடையும் வெண்மையாய் மின்னியது.
இறைவனோடு இயேசுவும் இருக்கிறார் என்றும், இறைவனின்
சித்தப்படி தன் பணியை ஆற்றுகிறார் என்பதையும் எலியாசும்,
மோயீசனும் தோன்றி உரையாடுவதும், இறைதந்தையின் 'இவரே என்
அன்புக்குரிய மைந்தர். நான் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்
இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்' (லூக். 9:35) என்ற
குரலும் வெளிப்படுத்துகிறது.
இந்த நிகழ்ச்சிகள் புகட்டும் பாடம் என்ன? நமக்குத் தரும்
செய்தி என்ன ?
1. நாம் கல்வாரி பலிக்கு வரும்போது இயேசுவைப் போல் நாம்
மலையில் ஏறுவதை உணர வேண்டும். இந்த பலிபீடம் தபோர்,
கல்வாரியை உணர்த்துகிறது. நமது பலவீனங்கள், குறைகள்,
வாழ்க்கைப் போராட்டங்கள் அனைத்தையும் பீடத்திற்கு கொண்டு
வருகின்றோம். இறைவன் தன் நிறை வளத்தையும், ஆற்றலையும்,
அமைதியையும் கொண்டு வந்து நம்மோடு பகிர்ந்துகொள்ளப்
போகிறார். இந்த மேலான திருப்பலியில் நாம் பங்கெடுக்கும்
இந்த வேளையில் தந்தைக்கும் இயேசுவுக்கும் நடந்தது போல்
நமது சந்திப்பு இங்கே நிகழ வேண்டும்.
2. இரண்டாவதாக, தபோர் மலையைப் போல் நம் உள்ளங்கள்
விண்ணகத்தை நோக்கிய வண்ணமாக அமைய வேண்டும். மண்ணோடு மண்ணாக
இருக்கிற குடிவெறி, பொறாமை, சாதிச்சண்டை, சச்சரவு போன்ற
ஆசைகளை விட்டு விலகி உயர்ந்து நிற்க வேண்டும்.
3.மூன்றாவதாக, இரவுக்குப் பின் பகல், அமாவாசைக்கு அடுத்து
பௌர்ணமி, துன்பத்திற்குப் பின் இன்பம் என்பதைப்போல, பெரிய
வெள்ளிக்குப் பின் உயிர்த்த ஞாயிறு வரும். இதேபோல்
இயேசுவின் பாடுகள் அவரது மகிமைக்குத் தேவை. நமது மகிமையான
வாழ்விற்குத் துன்பம் நாணயத்தின் ஒரு பக்கம் என்பதை
மறக்கக் கூடாது என்பதை இன்று நமக்கு நினைவுபடுத்துகிறது.
4. நான்காவதாக இறையனுபவம் நமக்குக் கிடைத்தால் அதில் நாம்
தரிசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவல், ஆசை
தானாகப் பிறக்கும். இதன் வெளிப்பாடாகத்தான் பேதுரு மூன்று
கூடாரம் அமைப்பேன் என்கிறார். இது ஆன்மீக வெளிப்பாடு.
இயேசுவின் உருமாற்ற நிகழ்ச்சியும் நமக்குத் தரும் ஆன்மீகம்
இதுதான்.
ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடி
இருக்க வேண்டும் (திபா. 27:4).
இன்றைய நற்செய்தியில் விண்ணகத் தந்தை இயேசுவுக்கு
செவிசாய்க்குமாறு கட்டளையிடுகின்றார். செவிசாய்த்தல்
என்றால் இயேசு சொல்வதை முழு மனத்தோடும், முழு உள்ளத்தோடும்
கேட்டல்.
இயேசு நமக்குச் சொல்லியுள்ளதையெல்லாம் கூட்டி, பெருக்கி,
வகுத்து, கழித்துப் பார்த்தால், மிஞ்சுவது மூன்றெழுத்து.
அந்த மூன்றெழுத்தின் பெயர் அன்பு.
அன்பு என்றால் என்ன? என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஓர் உண்மை
நிகழ்வு.
1852 - ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 27 - ஆம் தேதி நடந்த
நிகழ்வு இது.
பிர்கெசன் ஹெட் என்ற கப்பல் கிழக்கு ஆப்பிரிக்காவின்
பக்கத்திலுள்ள கடலில் பயணம் செய்துகொண்டிருந்தது. அந்தக்
கப்பலில் 643 பிரயாணிகள் பயணம் செய்தார்கள். அந்தப்
பயணிகளில் 21 பெண்கள், 31 குழந்தைகள் இருந்தார்கள்.
ஒரு நாள் காலைப் பொழுது! யாரும் எதிர்பாராத ஒன்று நடந்தது
! கப்பல் தடுமாறியது! கப்பலின் கீழ்ப்பகுதி எப்படியோ
உடைந்து தண்ணீர் கப்பலுக்குள் புகத் தொடங்கியது.
கப்பல் பணியாளர்களும், அக்கப்பலில் பயணம் செய்த போர்
வீரர்களும் கப்பலைக் காப்பாற்றப் போராடினர். அப்போது
கப்பலில் பயணம் செய்த ஆண்கள் சிறு பிள்ளைகளையும்,
பெண்களையும் உயிர் காக்கும் படகுகளில் ஏற்றினர்.
குழந்தைகளும் பெண்களும் ஏறிச்செல்லும் அளவுக்குத்தான்
படகுகளில் இடமிருந்தது.
குழந்தைகளையும், பெண்களையும் ஏற்றிக்கொண்டு படகுகள்
நகர்ந்தன! அப்போது கப்பலின் ஒரு பகுதி தண்ணீருக்குள்
மூழ்கியது.
கப்பலில் இருந்த அத்தனை பேரும் திமிங்கலங்களுக்கு இரையாகப்
போகின்றார்கள் என்பது நன்றாகத் தெரியும். இருந்தாலும்
அவர்கள் முகத்திலே ஒரு தெய்வீகப் புன்னகை.
643 பேரில் 52 பேர் மட்டும் காப்பாற்றப்பட்டார்கள்! மற்ற
அனைவரும் தண்ணீருக்குள் மூழ்கி இறந்தார்கள்.
தண்ணீருக்குள் மூழ்கி இறந்தவர்கள் கொண்டிருந்த மன
நிலைக்குப் பெயர்தான் அன்பு!
அன்பு என்பது ஒரு மீட்புச் செயல்.
மற்றவர்களுக்காக நமது உயிரைக் கொடுக்கும் அளவுக்கு நமது
அன்பு உயர்ந்து நிற்கவேண்டும்.
அன்பு செய்தால் என்ன கிடைக்கும்?
அன்பு செய்தால் நமது ஆசைகளைக் கடவுள் நிறைவேற்றி வைப்பார்
(முதல் வாசகம்) ; அன்பு செய்தால் நமது தாய் நாடாகிய
(இரண்டாம் வாசகம்) விண்ணகத்தில் நமக்கு இடம் கிடைக்கும்
(மத் 25:31-40).
மேலும் அறிவோம் :
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் : 72).
பொருள் : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே
உரிமை பாராட்டுவர். அன்பு உள்ளம் கொண்டவர் தம் உடல் பொருள்
ஆவி அனைத்தையும் பிறர்க்கு வழங்குவர்.
இயேசு தோற்றம் மாறுதல்
ஆசியா கண்டத்திலே மலைகளுக்குச் சிறப்பிடம் உண்டு. ஆழ்நிலை
தியானத்தில் ஈடுபடுவோர் இறைவனைத் தேடி இமயமலையை தாடுகின்றனர்.
காரணம் காலம் காலமாக இறைவனைச் சந்திக்க ஏற்ற இடமாக மலைகள்
கருதப்பட்டன. கடவுள் மேலே இருக்கிறார் என்ற எண்ணத்தில் மலைகளில்
ஏறிச் செல்வதின் மூலமாகக் கடவுளிடம் நெருங்கிச் செல்வதாக
மக்கள் கருதுகிறார்கள். இதனால்தான் இதனால்தான் இந்தியத்
திருநாட்டிலே கோவில்கள் எல்லாம் மலை மேல் எழுப்பப்பட்டிருப்பதை
நாம் பார்க்கிறோம்.
இரண்டாவது மலைகளில் காணப்படும் இயற்கை எழிலும், அமைதியும்
இறைவனைத் தேடவும், இறைவனோடு ஒன்றிக்கவும் ஏற்ற சூழ்நிலையாக
உள்ளன. சுருங்கக் கூற வேண்டுமானால் இறைவன்-மனித சந்திப்பிற்கு
ஏற்ற இடமாக மலைகள் விளங்குகின்றன.
விவிலியத்தில் பார்த்தால் மலைகள் இறைவனின் பிரசன்னத்தைக்
குறிக்கின்றது. மலைகள் இறைவனைச் சந்திக்கும் இடமாக அமைகின்றன.
ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கை மோரியா மலையிலே பலியிட முயன்றபோது
இறைவனைச் சந்திக்கிறார் (தொடக்க நூல் 22:1-19)
இஸ்ரயேல் மக்களின் தலைவனாக இருந்து வழிநடத்திய மோசே இறைவனைச்
சீனாய் மலையில் சந்தித்ததைப் பற்றி விடுதலைப் பயணத்தில்
(வி. ப. 24:12-18) வாசிக்கிறோம்.
இத்தகைய பின்னணியில் புதிய ஏற்பாட்டிற்கு நாம் கடந்து வரும்போது
இயேசு மலைமீது ஏறிப் போதித்தார் என்று வாசிக்கிறோம். இயேசுவின்
உருமாற்ற நிகழ்ச்சியும் தபோர் மலையில் நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல
தந்தையும் மகனும் கல்வாரி மலையில் சந்திக்கிறதை நாம்
காண்கிறோம்.
இறைவன் மனிதர்களைச் சந்திக்கிறார் என்று சொல்லும் போது கண்ணுக்குத்
தெரியும் வகையில் மனித உருவில் வந்து சந்திக்கிறார் என்று
பொருள் அல்ல. தன் வார்த்தை வழியாகவோ இவரே என் அன்பார்ந்த
மகன் (லூக் 9:35), இயற்கை அடையாளங்கள் வழியாகவோ, இயற்கையில்
நடந்த மாற்றங்கள் (மத். 27:51, 52) வழியாகவோ, அல்லது
நெருப்பு வடிவிலோ, மேகங்கள் வடிவிலோ இறைவன் மனிதர்களைச் சந்திக்கிறார்.
இத்தகையப் பின்னணியில் இன்றைய உருமாற்ற நிகழ்ச்சியை நாம்
காண வேண்டும். செபிப்பதற்குத் தனிமையாக பேதுருவையும்
யாக்கோபையும் யோவானையும் அழைத்துக்கொண்டு ஓர் உயர்ந்த மலைக்குச்
சென்றார் இயேசு. அங்கே அவர்கள் முன் உருமாறினார். அவரது முகத்தோற்றம்
மாறியது. ஆடையும் வெண்மையாய் மின்னியது. இறைவனோடு இயேசுவும்
இருக்கிறார் என்றும், இறைவனின் சித்தப்படி தன் பணியை ஆற்றுகிறார்
என்பதையும் எலியாசும், மோயிசனும் தோன்றி உரையாடுவதும், இறைதந்தையின்
'இவரே என் அன்புக்குரிய மைந்தர். நான் தேர்ந்தெடுத்துக்
கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்' (லூக். 9:35) என்ற
குரலும் வெளிப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சிகள் புகட்டும்
பாடம் என்ன? நமக்குத் தரும் செய்தி என்ன?
1. நாம் கல்வாரி பலிக்கு வரும்போது இயேசுவைப் போல் நாம் மலையில்
ஏறுவதை உணர வேண்டும். இந்த பலிபீடம் தபோர், கல்வாரியை உணர்த்துகிறது.
நமது பலவீனங்கள், குறைகள், வாழ்க்கைப் போராட்டங்கள் அனைத்தையும்
பீடத்திற்கு கொண்டு வருகின்றோம். இறைவன் தன் நிறை வளத்தையும்,
ஆற்றலையும், அமைதியையும் கொண்டு வந்து நம்மோடு பகிர்ந்துகொள்ளப்
போகிறார். இந்த மேலான திருப்பலியில் நாம் பங்கெடுக்கும் இந்த
வேளையில் தந்தைக்கும் இயேசுவுக்கும் நடந்ததுபோல் நமது சந்திப்பு
இங்கே நிகழ வேண்டும்.
2. இரண்டாவதாக, தபோர் மலையைப் போல் நம் உள்ளங்கள் விண்ணகத்தை
நோக்கிய வண்ணமாக அமைய வேண்டும். மண்ணோடு மண்ணாக இருக்கிற
குடிவெறி, பொறாமை, சாதிச்சண்டை, சச்சரவு போன்ற ஆசைகளை
விட்டு விலகி உயர்ந்து நிற்க வேண்டும்.
3. மூன்றாவதாக, இரவுக்குப் பின் பகல், அமாவாசைக்கு அடுத்து
பௌர்ணமி, துன்பத்திற்குப் பின் இன்பம் என்பதைப்போல, பெரிய
வெள்ளிக்குப் பின் உயிர்த்த ஞாயிறு வரும். இதேபோல் இயேசுவின்
பாடுகள் அவரது மகிமைக்குத் தேவை. நமது மகிமையான
வாழ்விற்குத் துன்பம் நாணயத்தின் ஒரு பக்கம் என்பதை மறக்கக்
கூடாது என்பதை இன்று நமக்கு நினைவுபடுத்துகிறது.
4. நான்காவதாக இறையனுபவம் நமக்குக் கிடைத்தால் அதில் நாம்
தரிசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவல், ஆசை தானாகப்
பிறக்கும். இதன் வெளிப்பாடாகத்தான் பேதுரு மூன்று கூடாரம்
அமைப்பேன் என்கிறார். இது ஆன்மீக வெளிப்பாடு. இயேசுவின் உருமாற்ற
நிகழ்ச்சியும் நமக்குத் தரும் ஆன்மீகம் இதுதான்.
ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடி இருக்க
வேண்டும் (திபா. 27:4).
ஞாயிறு இறைவாக்கு
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இயேசுவுக்குச் செவிசாய்ப்போம்
இன்றைய நற்செய்தியில் விண்ணகத் தந்தை
இயேசுவுக்கு செவிசாய்க்குமாறு கட்டளையிடுகின்றார்.
செவிசாய்த்தல் என்றால் இயேசு சொல்வதை முழு மனத்தோடும்,
முழு உள்ளத்தோடும் கேட்டல்.
இயேசு நமக்குச் சொல்லியுள்ளதையெல்லாம் கூட்டி, பெருக்கி,
வகுத்து, கழித்துப் பார்த்தால், மிஞ்சுவது மூன்றெழுத்து.
அந்த மூன்றெழுத்தின் பெயர் அன்பு.
அன்பு என்றால் என்ன? என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஓர் உண்மை
நிகழ்வு.
1852 - ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 27 - ஆம் தேதி நடந்த நிகழ்வு
இது.
பிர்கெசன் ஹெட் என்ற கப்பல் கிழக்கு ஆப்பிரிக்காவின் பக்கத்திலுள்ள
கடலில் பயணம் செய்துகொண்டிருந்தது. அந்தக் கப்பலில் 643 பிரயாணிகள்
பயணம் செய்தார்கள். அந்தப் பயணிகளில் 21 பெண்கள், 31 குழந்தைகள்
இருந்தார்கள்.
ஒரு நாள் காலைப் பொழுது! யாரும் எதிர்பாராத ஒன்று நடந்தது!
கப்பல் தடுமாறியது! கப்பலின் கீழ்ப்பகுதி எப்படியோ உடைந்து
தண்ணீர் கப்பலுக்குள் புகத் தொடங்கியது.
கப்பல் பணியாளர்களும், அக்கப்பலில் பயணம் செய்த போர் வீரர்களும்
கப்பலைக் காப்பாற்றப் போராடினர். அப்போதுபயணம் செய்த ஆண்கள்
சிறுபிள்ளைகளையும், பெண்களையும் உயிர் காக்கும் படகுகளில்
ஏற்றினர். குழந்தைகளும் பெண்களும் ஏறிச்செல்லும் அளவுக்குத்தான்
படகுகளில் இடமிருந்தது. குழந்தைகளையும், பெண்களையும் ஏற்றிக்கொண்டு
படகுகள் நகர்ந்தன! அப்போது கப்பலின் ஒரு பகுதி தண்ணீருக்குள்
மூழ்கியது.
கப்பலில் இருந்த அத்தனைபேரும் திமிங்கலங்களுக்கு இரையாகப்
போகின்றார்கள் என்பது நன்றாகத் தெரியும். இருந்தாலும் அவர்கள்
முகத்திலே ஒரு தெய்வீகப் புன்னகை.
643 பேரில் 52 பேர் மட்டும் காப்பாற்றப்பட்டார்கள். மற்ற
அனைவரும் தண்ணீருக்குள் மூழ்கி இறந்தார்கள்.
தண்ணீருக்குள் மூழ்கி இறந்தவர்கள் கொண்டிருந்த மன
நிலைக்குப் பெயர்தான் அன்பு!
அன்பு என்பது ஒரு மீட்புச் செயல்.
மற்றவர்களுக்காக நமது உயிரைக் கொடுக்கும் அளவுக்கு நமது அன்பு
உயர்ந்து நிற்கவேண்டும்.
அன்பு செய்தால் என்ன கிடைக்கும்?
அன்பு செய்தால் நமது ஆசைகளைக் கடவுள் நிறைவேற்றி வைப்பார்
(முதல் வாசகம்) ; அன்பு செய்தால் நமது தாய் நாடாகிய (இரண்டாம்
வாசகம்) விண்ணகத்தில் நமக்கு இடம் கிடைக்கும் (மத்
25:31-40).
மேலும் அறிவோம் :
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் : 72).
பொருள் : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமை
பாராட்டுவர். அன்பு உள்ளம் கொண்டவர் தம் உடல் பொருள் ஆவி
அனைத்தையும் பிறர்க்கு வழங்குவர்.
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்
குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
ஒரு சிறுவன் தன் அம்மாவிடம், "அம்மா! நீ
ரொம்ப அழகாய் இருக்கிற என்றதற்கு அம்மா அவனிடம், கோபுரம்
பூசு மஞ்சள் தூளின் மகிமைதான் கண்ணா !" என்றார்.
ஒரு கணவர் தமது மனைவியிடம், "உன் நகையெல்லாம் படு ஜோர்"
என்றதற்கு அவர் கணவரிடம், அத்தனையும் கல்யாணி கவரிங் நகை"
என்றார்.
ஒரு வீட்டில் நான்கு பெண் பிள்ளைகளின் தாய்
இறந்துவிட்டார். அவரின் மூன்று மகள்கள், "அம்மா!
போயிட்டீயே" என்று அழுதனர். ஒரு மகள் மட்டும், "தாயே!
போயிட்டீயே" என்று அழுதாள். ஏனெனில் அவள் சிறிது
நேரத்திற்கு முன்பு தான் 'லிப்ஸ்டிக்" உதட்டில்
பூசியிருந்தாள், அது இன்னும் காயவில்லை. அம்மா என்றால்
உதடுகள் ஒட்டிக் கொள்கின்றன. எனவே 'தாயே' என்று அழுதாள்!
பெண்கள் ஒப்பனை மூலம் உருமாற்றம் அடைய விரும்புகின்றனர்.
நாடுகளோ, "உலகமயமாக்குதல்" மூலம் பொருளாதாரத்தில்
உருமாற்றம் அடைய விரும்புகின்றன. ஆனால், இயேசு கிறிஸ்துவோ
பாடுகளின் மூலம் உருமாற்றம் அடையவேண்டும் என்று இன்றைய
நற்செய்தியில் கோடிட்டுக் காட்டுகிறார்.
கிறிஸ்து மலைமீது தோற்றம் மாறிய நிகழ்வின் உட்பொருளை
இன்றைய திருப்பலியின் தொடக்கவுரை பின்வருமாறு கூறுகிறது:
"கிறிஸ்து சீடருக்குத் தம் மரணத்தை முன்னறிவித்து, புனித
மலையில் தமது மாட்சிமையை வெளிப்படுத்தினார். சட்டமும்
இறைவாக்கினரும் சான்று பகர்ந்தவாறு, பாடுகளின் வழியாகவே
தாம் உயிர்ப்பின் மகிமையை அடைய வேண்டும் என்பதை விளங்கச்
செய்தார்",
கிறிஸ்து தமது பாடுகளை முதன் முறையாக முன் அறிவித்த போது
(லூக் 9:22), சீடர்களுக்கு அதைப்புரிந்து கொள்ளவோ,
ஏற்றுக்கொள்ளவோ தேவையான மனப்பக்குவம் இல்லை. எனவேதான்
பேதுரு. ஆண்டவரே, இது (சிலுவைச்சாவு) வேண்டாம். இப்படி
உமக்கு நடக்கக்கூடாது" (மத் 16:22) என்று கூறித் தமது
எதிர்ப்பைத் தெரிவித்தார்.
சிலுவையினால் சீடர்களின் மனதில் எழுந்த இடறலை நீக்க
கிறிஸ்து உயர்ந்த மலையில் தமது மூன்று சீடர்கள் முன் தமது
மாட்சிமையை வெளிப்படுத்தினார். இந்த மூன்று சீடர்கள் தான்
(பேதுரு, யோவான், யாக்கோபு) கிறிஸ்து பூங்காவனத்தில் இரத்த
வியர்வை வேர்க்கும் காட்சியைக் காண இருப்பவர்கள் (மத்
26:37).
பழைய ஏற்பாடு, சட்டம் மற்றும் இறைவாக்கு என்ற இரு
பகுதிகளைக் கொண்டது. இயேசு தோற்ற மாற்றம் அடைந்தபோது,
சட்டத்தின் பிரதிநிதியாக மோசேவும், இறைவாக்கினரின்
பிரதிநிதியாக எலியாவும் இயேசுவுடன் தோன்றுகின்றனர்.
இவர்கள் இருவரும் கிறிஸ்து எருசலேமில் சந்திக்கவிருக்கிற
அவருடைய சிலுவைச் vாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்
என்று லூக்கா குறிப்பிடுகிறார் (லூக் 9:31). மோசே, எலியா
ஆகிய இருவர் மூலமாகச் சட்டமும் இறைவாக்கும் இயேசுவுக்குச்
சான்று பகர்கின்றன. அத்துடன், "இவரே என் அன்பு மைந்தர்.
நான் தேர்ந்து கொண்டவர் இவரே" (லூக் 9:35) என்று விண்ணகத்
தந்தையும் இயேசுவுக்குச் சான்று பகர்கிறார்.
சிலுவைச் சாவு வேண்டாம் என்று கூறிய பேதுரு கிறிஸ்துவின்
மாட்சிமையைக் கண்டு, "ஆண்டவரே நாம் இங்கேயே இருப்பது
நல்லது (லூக் 9:33) என்றார். வேண்டாம் வேண்டாம், சிலுவை
வேண்டாம். வேண்டும்; வேண்டும், மகிமை வேண்டும். இது தான்
பேதுருவின் விருப்பம்: அதுவே நமது விருப்பமும் கூட, ஆனால்
சிலுவை வாயிலாகவே நாம் மகிமையடைய வேண்டும் என்பது கடவுளின்
விருப்பம், அவரது திட்டம்.
| சிலுவையான து. புதுமைகளை விரும்பும் யூதர்களுக்கு ஒரு
தடைக்கல்; ஞானத்தைத் தேடும் கிரேக்கர்களுக்கு ஒரு மடமை,
ஆனால் கடவுளால் அழைக்கப்பட்டவர்களுக்குச் சிலுவை கடவுளின்
வல்லமை; கடவுளின் ஞானம் (1 கொரி 1:22-24).
பள்ளிக்குச் சென்ற ஒரு சிறுவனிடம், "உனக்குப் பள்ளிக்குச்
செல்லுவது பிடிக்கிறதா?" என்று கேட்டதற்கு அவன்,
"பள்ளிக்குச் செல்லுவதும் பிடிக்கிறது: பள்ளியிலிருந்து
வீடு திரும்புவதும் பிடிக்கிறது. ஆனால் இந்த இரண்டிற்கும்
இடையே நடப்பவைதான் ( வகுப்புகள்) பிடிப்பதில்லை " என்றான்.
அவ்வாறே. நமக்குக் கிறிஸ்துவின் பிறப்பும் பிடிக்கிறது:
அபேருடைய உயிர்ப்பும் பிடிக்கிறது. ஆனால் இவை இரண்டிற்கும்
இடையே நிகழ்ந்த அவரின் சிலுவைச் சாவு பிடிக்கவில்லை .
கிறிஸ்துவின் பள்ளியிலே சிலுவைப் பாடம் விருப்பப்பாடமல்ல:
மாறாக, அது கட்டாயப் பாடம். என்னைப் பின்பற்ற விரும்பும்
எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு
என்னைப் பின்பற்றட்டும் (மத் 16:24). நாம் ஒன்றை
இழந்தால்தான் மற்றொன்றைப் பெறமுடியும். இதுதான் இயற்கையின்
நியதி. கோதுமைமணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் அது பலன்
தர முடியும் (யோவா 12:24), பெண் ஒருவர் பேறுகால வேதனை
அடைந்தால் மட்டுமே குழந்தைப் பேற்றை அடைய முடியும் (யோவா
16:21). -
இன்றைய முதல் வாசகத்தில், ஆபிரகாம் தமது ஊரையும்
உடைமைகளையும், உற்றாரையும், உறவினரையும் இழந்தார். எனவே
தான் அவர் புதிய நாட்டைப் பெற்றார். பல இனத்தவருக்குத்
தந்தையானார். ஆபிரகாம் "தாம் எங்கே போக வேண்டும் என்று
தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார் " (எபி
11:8). எனவேதான் அவர் விசுவாசத்தின் தந்தையாக உருமாற்றம்
அடைந்தார், மரியன்னை தமது சுயவிருப்பத்தை இழந்து, கடவுளின்
விருப்பத்துக்குத் தம்மைக் கையளித்த தால்தான் அவர்
மீட்பரின் தாயாக உருமாற்றம் அடைந்தார்.
நாம் இறந்து மண்ணில் புதைக்கப்பட்டால்தான் வேற்றுருப்
பெற்று உயிர்த்தெழ முடியும். இன்றைய இரண்டாம் வாசகத்தில்
திருத்தூதர் பவுல் கூறுகிறார்: கிறிஸ்துவின் இரண்டாம்
வருகையின் போது. அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம்
உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார்
(பிலி 3:20-21).
தவக்காலத்தில் சிலுவைப் பாதையைச் செய்கின்றவர்களாக மட்டும்
இராது, அன்றாட வாழ்க்கைச் சிலுவையைச் சுமப்பவர்களாகவும்
இருப்போம். காட்டு மரங்கள் மனிதர்களிடம் கூறுவது: "நாங்கள்
சிலுவை மரங்களைக் கொடுக்கத் தயார். ஆனால் சிலுவை மரத்தில்
அறையப்படுவதற்குத்தான் எந்த மனிதரும் முன் வருவதில்லை "
"கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன்
இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில்
அறைந்துவிட்டார்கள் (கலா 5:24).
ஒரு பங்குத் தந்தை ஞாயிறு மறையுரையின்போது,
"இந்தப் பங்கு மக்கள் அனைவரும் நரகத்துக்குத்தான்
போவார்கள்" என்று கத்தினார். அதைக் கேட்ட ஓர் இளைஞர்
சிரித்தார். ஏன் அவர் சிரித்தார் என்று பங்குத் தந்தை
கேட்டபோது அவர், "நான் இந்தப் பங்கு, இல்லை;
வெளியூர்ப் பங்கு" என்றார்.
நம்மிலே பலர் மற்றவர்கள்தான் மனம் மாற வேண்டும்; நான்
மனம் மாறத் தேவையில்லை. மற்றவர்கள்தான் நரகத்துக்குப்
போவார்கள். நான் நரகத்துக்குப் போக மாட்டேன் என்று
நினைக்கின்றனர். ஆனால். இன்றைய நற்செய்தியில்,
கிறிஸ்துவிடம் இரண்டு விபத்துக்களில் இறந்தவர்களைப் பற்றிக்
கூறிய போது இரு முறையும் இயேசு கூறியது:
"இவ்விருவிபத்துக்களில் இறந்தவர்கள் தான் பாவிகள், மற்றவர்கள்
நீதிமான்கள் என்று நினைக்காதீர்கள். மனம் மாறாவிட்டால்
அனைவரும் இழிவீர்கள்". ஒவ்வொரு சாவும் கூறும் செய்தி:
மனம் மாறுங்கள்.
மனம் மாற்றம் என்றால் மனதைக் சுட்டுப்படுத்தும் முயற்சியல்ல.
ஓர் இளைஞன் காமவேட்கையால் வேதனையுற்று, காட்டுக்குச்
சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்து கண்களை மூடித் தியானம்
செய்ய முற்பட்டான். காலை 10 மணிக்குக் கண்களைத் திறந்தபோது
அவன் முன் நின்றுகொண்டிருந்த ஓர் அழகிய பெண் அவன்
தியானத்தைக் கலைத்து விட்டாள். இரண்டாம் நாள் அவன் தன்
கண்களை ஒரு "துண்டால் இறுகக் கட்டிக் கொண்டு தியானம்
தொடங்கினாள். காலை: 10 மணிக்கு மறுபடியும் அவன் முன்
நின்ற அந்த அழகியை அவன் கண்ணால் காணவில்லை என்றாலும் அவள்
காலில் அணிந்திருந்த கொலுசின் சத்தம் அவன் தியானத்தைக்
கலைத்துவிட்டது.
மூன்றாம் நாள் அவன் தன் கண்களைத் துண்டால்
மூடியதுடன் தன் இருகாதுகளிலும் பஞ்சை வைத்து அடைத்துத்
தியானம் செய்தான். காலை 10 மணிக்கு அவள் வந்தபோது, அவளை
அவன் கண்ணால் பார்க்கவில்லை, கொலுசு சத்தத்தைக் காதால்
கேட்கவில்லை. எனினும். அவள் கூந்தலின் மல்லிகைப்பூ
அவன் மூக்கைத் துளைத்து அவன் தியானத்தைக்
கலைத்துவிட்டது.
நான்காம் நாள் அவன் தன் கண், காது, மூக்கு
அனைத்தையும் அடைத்துவிட்டுத் தியானம் தொடங்கினான்.
காலை 10 மணிக்கு இவள் வந்தபோது, அவன் அவளைக் கண்ணால்
காணவில்லை, கொலுசு சத்தத்தைக் காதால் கேட்கவில்லை;
மல்லிகைப் பூவை மூக்கால் நுகர வில்லை. இருப்பினும்
அவன் மனம், "பத்து மணி ஆகிவிட்டது. இந்நேரம் அவள்
வந்திருப்பாள்" என்று நினைவூட்டி அவனை வறுத்தெடுத்தது!
மனமாற்றம் என்பது தீய எண்ணங்களுடன் போராடுவது அல்ல,
விவிலிய அடிப்படையில், மனம் மாற்றம் என்பது, நம்மையே
நமது, வாழ்வின் மையமாக வைக்காமல் கடவுளை நம் வாழ்வின்
மையமாக வைப்பது, பாவம் என்பது, கடவுளுக்கு முதுகையும்,
உலகிற்கு முகத்தையும், காட்டுவது. மனம் மாற்றம் என்பது,
கடவுளுக்கு இதயத்தையும், உலகிற்கு முதுகையும் காட்டுவது.
"எனக்கு முகத்தையல்ல முதுகையே சாட்டுகின்றனர்" (எரே
2:27).
மனமாற்றம் அடையக் கடவுளைப் பற்றிய சரியான எண்ணம் தேவை.
கடவுள் யார்? இன்றைய முதல் வாசகத்தில் கடவுள்
மோசேவிடம் "இருக்கின்றவராக இருக்கிறவர் நானே" (விப 3:14
3) என்று தம்மை வெளிப்படுத்துகிறார். மெய்யியல்
அடிப்படையில் கடவுள் என்றும் இருக்கிறவர்; முதலும்
முடிவும் இல்லாதவர். அவரிடம் மாற்றமோ மாற்றத்தின்
நிழலோ கிடையாது (யாக் 1:17) ஆனால் இறையியல்
அடிப்படையில் கடவுள் அன்பே உருவானவர் (1 யோவான் 4:16).
இன்றைய பதிலுரைப் பாடல் கூறுவதுபோல, "ஆண்டவர்.
இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையுள் அவர்
நம் குற்றங்களையெல்லாம் மன்னிக்கிறார். நம்
நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்" (திபா 103).
கடவுள் அன்பினால் மனிதனைப் படைத்தார். அவன் பாவம்
செய்தபோது நீதியின்படி அவனைத் தண்டித்தார். ஆனால்
இரக்கமிகுதியினால் அவனை மீட்டருளினார். கடவுளிடம்.
அன்பு உண்டு; நீதியும் உண்டு. ஆனால். அனைத்துக்கும்
மேலாக அவரிடம் இரக்கம் உண்டு. எனவேதான் அவர் பாவியின்
அழிவை விரும்பாமல், அவன் மனம் மாறி வாழ்வதையே
விரும்புகிறார் (எசே 18:23) கடவுள் நீடிய
பொறுமையுள்ளவர். மூன்று ஆண்டுகளாகக் கனி தொடாத அத்தி
மரத்தை வெட்டி வீழ்த்தாமல், அது கனி தரும் என்று
எதிர்பார்த்து அதற்கு உரமிடுபவர் (லூக் 13:5-9), ஆனால்
அதே நேரத்தில கனி தராத அத்தி மரத்தைச் சபிக்கவும்
செய்கிறார் (மத் 21:18-19) கடவுள் நம்மிடம் என்ன
எதிர்பார்க்கிறார் என்பதை அவரே கூறுவதைக் கேட்போம்.
"நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில்
நாட்டத்தையும், உன் கடவுளுக்கு முன்பாகத், தாழ்ச்சியோடு
நடத்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம்
கேட்கிறார்" (மீக் 6:85) நீதி, நேர்மை, இரக்கம்,
தாழ்ச்சி ஆகிய நற்கனிகளைக் கடவுள் நம்மிடம்
எதிர்பார்க்கிறார். பாவிகளாகிய நாம் நமது ஆணவத்
திமிரைத் தளர்த்தவும், ஏழைகளுக்கு உணவளித்து அவரின்
வள்ளல் தன்மையைக் கண்டுபாவிக்கவும் கடவுள் நமக்குச்
சிறப்பாக 'இத்தவக்காலத்தைக் கொடுத்துள்ளார்.
நாம் நற்கனித்தராவிட்டால் இஸ்ரயேல் மக்களுக்கு நேரிட்ட
அதே அழிவு நமக்கும் நேரிடும். இஸ்ரயேல் மக்கள் ஒரே
ஆன்மீக உணவை உண்டும், ஒரே ஆன்மீகப் பானத்தைப்
பருகியும் அவர்களில் பெரும்பான்மையினர் கடவுளுக்கு
உகந்தவர்களாய் இருக்கவில்லை. அவர்களுக்கு நிகழ்ந்தது
நமக்கு ஓர் எச்சரிக்கை என்கிறார் திருத்தூதர் பவுல் (1
கொரி 10:1-6)
இன்று கிறிஸ்து நமக்கு விடுக்கும் எச்சரிக்கை: "மனம்
மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அழிவீர்கள்" (லூக்
13:3)
பால் நிறைந்த சாடிக்குள் இரண்டு தவளைகள் விழுந்து விட்டன.
ஒரு தவளை கொஞ்ச நேர முயற்சிக்குப் பின் 'இனி வாழ்வில்லை,
வெளியேற வழியில்லை' என நம்பிக்கை இழந்தது. அப்படியே பாலில்
மூழ்கிச் செத்தது!
இன்னொன்று நம்பிக்கை இழக்கவில்லை. எப்படியாவது
கரையேறிவிடலாம், விடுதலை பெறலாம் என விடாமுயற்சியோடு
பாலில் நீந்திக் கொண்டே இருந்தது. நேரம் ஆக ஆகக் காலில்
ஏதோ தட்டுப்படவே அங்கே தயிர்க்கட்டி (வெண்ணெய்) ஒன்று
மிதந்து கொண்டிருப்பதைக் கண்டது. நீண்ட நேரம் நீந்தியதால்,
பால் கடையப்பட்டு வெண்ணெயாகத் திரண்டது. இப்போது அதன்மேல்
எறிக் காலை ஊன்றி எளிதாகத் துள்ளி வெளியேறியது தவளை!
நம்பிக்கை இழந்ததால் ஒரு தவளை மடிந்தது; நம்பிக்கையோடு
இருந்ததால் ஒரு தவளை வாழ்வு கண்டது! உயிர்ப்பின் மகிமை
பற்றிய நம்பிக்கை உலக வாழ்வின் சோர்வை அகற்றும்.
தவளைக்குக் கூட ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் வாழ்வு
பற்றிய தெளிவான பார்வை இல்லை.
இயேசு மறுஉருவானார். அவர் இறந்து உயிர்த்தபின் பெறப்
போகும் மகிமையின் முன் சுவை அந்தத் தோற்ற மாற்றம்!
இயேசு இன்று வாழ்ந்தால் அவரை நாம் மெசியாவாக இனம் கண்டு
கொள்வோமா? மாட்டோம். அவ்வளவு சாதாரண வாழ்க்கை அவருடையது.
இஸ்ரயேல் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஏமாற்றம் தரும்
சாமான்ய வாழ்க்கை அது. அந்த வாழ்க்கையில் இயேசு சந்தித்த
சோதனைகளில் மிகப்பெரிய சோதனை எது தெரியுமா? கடவுளின் அரசை
நிறுவ வந்த தனக்குச் சிலுவைச்சாவு தான் முடிவா? கடவுளின்
அன்பைப் போதிக்க வந்த தனக்குக் கல்வாரி மரணம்தான் பரிசா?
கடவுளின் பராமரிப்பை உணர்த்தச் செயல்பட்ட தனக்குப்
பாடுகளின் ITதைதான் இறுதியா? மனிதனின் பாவத்தையெல்லாம்
தன்மேல் ஏற்று | மன்னிப்பும் விடுதலையும் வாழ்வும் அருளும்
அளிக்க வந்த தனக்கு செம்மறி போலச் சிலுவை மரணத்தை ஏற்பதைத்
தவிர வேறு வழி இல்லையா?
இதுதான் இயேசுவின் பிரச்சனை, போராட்டம்! இயேசு நாற்றுக்கு
நூறு கடவுள். எனினும் நூற்றுக்கு நூறு மனிதன். எனவே
சோதனையில் அவருக்கு ஒரு நம்பிக்கையும் ஊக்கமும் வேண்டும்.
தெளிவும் தெம்பும் வேண்டும். அதற்குத்தான் உருமாற்றம்.
"அவர் சீடருக்குத் தம் மரணத்தை முன்னறிவித்து புனித
மலையில் தமது மாட்சிமையை வெளிப்படுத்தினார். சட்டமும்
இறைவாக்கினரும் சான்று பகரப் பாடுகளின் வழியாகவே அவர்
உயிர்ப்பின் மகிமையை அடைய வேண்டும் என்பதை விளங்கச்
செய்தார்" உருமாறிய நிகழ்வின் உட்பொருள் உணர்த்தும்
திருப்பலியின் தொடக்கவுரை இது.
மறைநூல் சுட்டிக்காட்டும் மெசியா துன்புறும் இறை ஊழியனே!
மறைநூல் என்பது சட்டம், இறைவாக்குக்களின் தொகுப்பாகும்
சட்டத்தின் பிரதிநிதி மோசே. இறைவாக்கினரின் பிரதிநிதி
எலியா. அந்த இருவரில் சட்டமும் இறைவாக்கும் சான்று பகர
"துன்புறும் மெசியாவே தன் அன்பு மகன் என்று வானகத்
தந்தையும் சான்று பகர்கிறார்.
நமக்குத் துன்பமே இறுதியல்ல. மரணமே முடிவல்ல. பாடுகளின்
வழியாகவே உயிர்ப்பின் மகிமை. ஆனால் துன்பம் இல்லாத இன்பம்,
உழைப்பு இல்லாத ஊதியம், தியாகம் இல்லாத செழுமை, சிலுவை
இல்லாத மகிமை... இதுவே மனித இன ஏக்கம்! இத்தகைய சிலுவைக்கு
எதிரிகளாய் உள்ளவர்களை, புழுதியில் இறங்காமல் அறுவடை
தேடுபவர்களை "அழிவே அவர்கள் முடிவு வயிறே அவர்கள் தெய்வம்.
மானக்கேடே அவர்கள் பெருமை" (பிலிப்.3:19) என்று
சரமாரியாகச் சாடுகிறார் திருத்தூதர் பவுல். அவர்கள்
எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே. ஆனால்
துன்பங்களை ஏற்று, மீட்பரை எதிர்பார்த்து துணிவுடன்
வாழ்ந்தால், அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை
மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்ற வல்லவர்
(பிலிப்.3:21)
கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த
விளைச்சலை அளிக்கும் (யோ. 12:24) அதுபோல் கிறிஸ்து எப்போது
மகிமை பெறுகின்றார்? ''உயர்த்தப்படும் போது " (யோ. 12:32)
இங்கே கிறிஸ்துவின் மரணமே அவரது மகிமையாய் மாறுகின்றது.
உலகத்தின் கண்களுக்கு அது தோல்வி. ஆனால் இறைவனின்
திட்டத்தில் அதுவே மகிமை. ''மாட்சிப்படுத்தினேன். மீண்டும்
மாட்சிப்படுத்துவேன்" வானிலிருந்து வந்து இயேசுவை
திடப்படுத்திய தந்தையின் குரல்.
இந்த நியதி கிறிஸ்துவுக்கு மட்டுமல்ல திருச்சபைக்கும்
பொருந்தும். எங்கெல்லாம் அது துன்புற்றதோ அங்கெல்லாம்
துடிப்போடு அது வளர்ந்தது. மறை சாட்சியரின் இரத்தம்
நம்பிக்கையின் வித்து' என்பதே வரலாறு.
இதயமற்ற நீரோ மன்னன் இரக்கமற்றுக் கிறிஸ்தவர்களை வதைத்துக்
கொண்டிருந்தான். விசுவாசத்தை வெளிப்படையாக மறுக்க
மறுத்தவர்களை வெட்டிக் கொன்றான். இத்தகைய இக்கட்டான
சூழ்நிலையில் கூட மனந்தளராது செபத்தில் நிலைத்து,
வரவிருக்கும் வாழ்வின் பொருட்டு பெறப் போகும் மாட்சிமையை
நினைத்து இயேசுவின் சாட்சிகளாகத் திகழ்ந்தனர்.
திருத்தொண்டர் லாரன்ஸ் கொதிக்கும் வாணலிலே வாட்டப்பட
இருப்பதாக அச்சுறுத்தினார்கள். ஆனால் அவர் "நான் பெறப்
போகும் அளவற்ற மகிமையைக் குறித்து இந்தத் துன்பச் சாவைப்
பெருமையோடு ஏற்றுக் கொள்கிறேன்" என்று வீர
முழக்கமிட்டாராம்.
"இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில்
நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத்
தகுதியற்றவை'' (ரோமை.8:18) என்ற திருத்தூர் பவுலின் எண்ணம்
நம் உணர்வுகளாட்டும்!
இந்தச் சோதனை எதற்கு?
சாதனையாளர்களின் பேரும் புகழும் தான் நம் நினைவுக்கு
வருகிறதே தவிர அவர்கள் நடந்து வந்த பாதையில் கடந்து வந்த
சோதனைகளையும் வேதனைகளையும் நாம் நினைத்துப்
பார்ப்பதில்லை.
மாமன்னன் நெப்போலியன் ஒருமுறை அமைச்சரவையைக் கூட்டி ஏதோ
முக்கியமான திட்டம் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தான்.
இந்தக் கலந்துரையாடலில் நெப்போலியன் பேசியபோதெல்லாம்
கடைசி இருக்கைகளில் அமர்ந்திருந்த இரண்டு அமைச்சர்கள்
சிரித்துக் கொண்டனர். சிரிப்பா என்று மன்னனுக்கு
வியப்பு! கூட்டம் முடிந்தபின் அந்த அமைச்சர்
இருவரையும் தனியாக அழைத்து இதுபற்றிக் கேட்டான்.
அவர்களோ உதறல் எடுத்துப் பயத்தில் ஒன்றுமே இல்லை என்று
சத்தியம் செய்தனர். மன்னன் விடுவதாக இல்லை. உண்மையைச்
சொன்னால் தண்டிக்கப் போவதில்லை என்று உறுதி அளித்தான்.
உடனே அந்த அமைச்சர்கள் "அரசே, நீங்கள் பேசும் ஒவ்வொரு
முறையும் இரண்டு தோள்களையும் மேல்நோக்கிக்
குலுக்குகிறீர்கள். அளவுக்கு அதிகமாகக் குலுக்கிக்
கொண்டே பேசுவது பார்ப்பதற்குப் பரிகாசமாய் இருக்கிறது.
எனவே சிரித்து விட்டோம். மன்னித்துங்கள்" என்றனர்.
மன்னன் அவர்களை அனுப்பிவிட்டுத் தன் அறைக்குச் சென்று
யோசித்தான். தீரச் சிந்தித்தவனாய் திடீரென்று எழுந்து
இரண்டு கூரிய வாள்களைத் தன் இரு தோள்களுக்கு மேலே
கட்டித் தொங்க விட்டு கூட்டத்தில் பேசுவதுபோல் பேசத்
தொடங்கினான். தன் இயல்பான, வழக்கமான தோள் குலுங்கல்
அப்போதும் ஏற்பட கூரிய வாள்கள் தோள்களைப் பதம்
பார்த்தன. குருதி கொட்டியது. மன்னன் விடவில்லை.
அப்பழக்கம் தீருமட்டும் பேசி இறுதியில் வெற்றி
கண்டான்.
வாழ்க்கை என்பது சவால். சோதனைகளின்றி போராட்டங்களின்றி
எந்த மனிதனும் மேதையானதில்லை, வீரனானதில்லை,
புனிதனானதில்லை.
இந்தப் பிண்ணனியில் இறைவார்த்தையை நினைத்துப்
பாருங்கள். "பாவத்திற்கு எதிரான போராட்டத்தில்
(சோதனையில்) இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள்
இன்னும் எதிர்த்து நிற்க வில்லை" (எபி.12:4)
ஆலிவ் எண்ணெய் வேண்டுமா? ஒலிவ இலைகள் நசுக்கப்பட
வேண்டும். திராட்சை மது வேண்டுமா? திராட்சைக் கனிகள்
பிழியப்பட வேண்டும். வாசனைத் திரவியங்கள் வேண்டுமா?
மல்லிகை போன்ற மலர்கள் கசக்கப்பட வேண்டும்.
அதுபோலத்தான் நசுக்கப்படாமல், பிழியப்படாமல்,
கசக்கப்படாமல், சோதிக்கப்படாமல் எதையும் சாதிக்க
முடியாது.
புனிதர்கள் எல்லாம சோதனைகளைக் கண்டு புலம்பியதில்லை.
மகிழ்ச்சியோடு ஏற்று தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தும்
அரிய வாய்ப்பாகவே எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
"நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும்
மனம் உடைந்து போவதில்லை. குழப்பமுற்றாலும் நம்பிக்கை
இழப்பதில்லை, துன்புறுத்தப்பட்டாலும், கைவிடப்படுவதில்லை,
வீழ்த்தப்பட்டாலும் அழிந்து போவதில்லை. இயேசுவின் வாழ்வே
எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்கே சென்றாலும்
அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து
செல்கிறோம்" (2 கொரி.4:3-10) என்ற திருத்தூதர் பவுலின்
மனஉறுதி இருந்தால் சோதனைகளைக் கண்டு துவண்டு
விடமாட்டோம்.
லூக்.22:31இல் படிக்கிறோம்: "சீமோனே, சீமோனே, இதோ
கோதுமையைப் போல உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி
கேட்டிருக்கிறான் (யோபு நினைவுக்கு வரட்டும்). ஆனால்
நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன்"
என்றார் இயேசு, சோதனையில் நாம் விழாதபடி, விழுந்தாலும்
உடனே எழுந்துவிட இயேசு நமக்காகச் செபித்துக்
கொண்டிருக்கிறார். அதனால்தான் மறுதலித்த மறுகணம்
பேதுருவால் மனந்திரும்ப முடிந்தது!
மனிதனுக்குச் சோதனைகளை அனுமதிக்கும் இறைவன்,
அனுமதிப்பதோடு வாளாவிருப்பதில்லை. திருத்தூதர் பவுல்
மொழிவது போல் "நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய
வலிமைக்கு மேலே நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்.
சோதனை வரும்போது அதைத் தாங்கிக் கொள்ளும் வலிமையை
உங்களுக்கு அருள்வார்; இதிலிருந்து விடுபட வழிசெய்வார்''
(1 கொரி.10:13)
சோதனைகளும் கீழான எண்ணங்களும் எழும் அதே ஆன்மாவில்தான்
இறைவனும் உள்ளார் என்பதை மறந்து விடுகிறோம். அவர்
நம்மைக் கைநெகிழ்ந்து விட்டது போன்ற உணர்ச்சிக்கும்.
உள்ளாகிறோம்.
இதே உணர்ச்சியின் தாக்குதலுக்கு ஆளான தூய சியன்னா
தத்தரின் ஆண்டவரை வினவினார்: "ஆண்டவரே என் இதயம்
தூய்மையற்ற எண்ணங்களால் நிறைந்தபோது நீர் எங்கே
இருந்தீர்?". அவரோ அவளது இதயத்திலேயேதான் அவ்வமயம்
இருந்ததாகக் கூறினார். அவளால் முதலில் நம்ப
முடியவில்லை. அவர் இருக்கும் இதயத்திலும் அத்தகைய
எண்ணங்களா? பின் ஆண்டவர் அவளிடம் "அச்சோதனைகள் உனக்கு
வேதனை தந்ததா, மகிழ்ச்சி அளித்ததா?" எனக் கேட்க,
தாளமுடியாத வேதனை என்று அவள் கூற, ஆண்டவர் நான் உன்
இதயத்தில் இருந்ததாலேயே நீ வேதனையுற்றாய். நான்
இல்லாதிருந்திருப்பின் அவை உனக்கு மகிழ்ச்சி
அளித்திருக்கும். உனக்குள்ளே இருந்து உன்
எதிரிகளிடமிருந்து உன்னைப் பாதுகாத்தேன்'" என்றார்.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி
மறையுரை
முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க்
கழகம் பெங்களூர்
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான்
பாப்டிஸ்ட் பெங்களூர்
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி
சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
சிந்தனைப் பயணம்.
திரு சின்னப்பன் டிசில்வா. வெலிங்டன் - ஊட்டி
கடவுளின் பீடமாக வாழ்வோம் ( பேதுருவாக- பாறையாக)
கிறிஸ்துவின் அன்பிற்கு பாத்திரமான என் இனிய நண்பர்களே
இன்றைய நாளில் நமக்கு அளிக்கப்பட்ட மூன்று இறை வாசகங்களும்
வாக்குறுதிகளையும், வாக்குறுதிகளை தருபவரின்
நம்பகத்தன்மையையும், அதைப் பெற்றுக் கொள்பவரின்
நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன.
உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டில் வாழ்ந்து
கொண்டிருக்கும் நமக்கு வாக்குறுதிகளை பற்றி அதிகம் கூற
தேவையில்லை நாட்டில் நடக்கும் ஒரு தேர்தல் என்பது
வாக்குறுதிகளின் விளையாட்டாக நிகழ்கிறது அதிகாரத்தில்
வரும் வரை கூறப்படும் வாக்குறுதிகள் அதிகாரத்தில்
அமர்ந்தபின் வெளிப்படுத்தப்படும் மக்களைச் சார்ந்த நன்மை
பயக்கும் திட்டங்களால் அடையாளப்படுத்தப்பட்டு வாக்குறுதி
அளித்த நபரின் நம்பகத் தன்மை கணிக்கப்படுகிறது. இது நாம்
அன்றாடம் சந்திக்கும் ஒரு எதார்த்த நிலை. இன்றைய நற்செய்தி
"எட்டு நாட்களுக்குப் பிறகு" என்று ஆரம்பமாகிறது. இன்றைய
வாசக வெளிப்பாடுகளை முழுமையாக புரிந்துகொள்ள எட்டு
நாட்களுக்கு முன்பு நடந்தவைகளை நினைவு கூர்வது சாலச்
சிறந்தது.
இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு 5
ஆயிரம் மக்களுக்கு (ஆண்கள் மட்டும்) தனது சீடர்களைக்
கொண்டு உணவளித்து மீதமான உணவை பன்னிரெண்டு கூடைகளில்
எடுத்து வைக்க வாய்ப்பு தருகிறார். இதற்கு முன்பும்
இதைப்போல் இதுபோன்ற புதுமை பல ஆண்டவர் இயேசு சீடர்களின்
கண் முன்பாக நிறைவேற்றியிருக்கிறார் சீடர்களுக்கு இந்த
செயல் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கை மேலும் ஒரு படி
உயர்வதற்கு வாய்ப்பைத் தந்திருக்கும். இந்தச் சூழலில் அவர்
தனது மரணத்தைப் பற்றிய வாக்குமூலத்தை அதாவது யூதமத
பெரியவர்களால் எருசலேமில் தனக்கு நிகழப்போகும் கொடுமையான
மரணத்தை சீடர்களுக்கு வெளிப்படுத்துகின்றார்.(லூக்கா 9:
22)
இது சாதாரண ஒரு மனிதனின் நம்பிக்கையின் மனநிலையில்
பார்க்கும்போது ஒரு அச்சத்தை, அதிலும் தங்களுடைய
எதிர்காலத்தை முழுமையாக யாரைக் கொண்டு வழி
நடத்தப்படவேண்டும் என்று சீடர்கள் நம்பி வந்தனரோ அந்த
நம்பிக்கைக்கு உரியவரே தன் மரணத்தின் வாக்குமூலத்தையும்,
மரணத்திற்குப்பின் மூன்றாவது நாள் உயிர்த்தெழுவேன் என்று
தருகின்ற வாக்குறுதியையும் நம்புவது சற்று சிரமமாக,
குழப்பமாக்கூட இருக்கலாம். இயேசு பிறரை உயிர்ப்பித்தது
இவர்கள் சாட்சியாக கண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்
இறந்துவிட்டால் அவரை உயிர்ப்பிக்க யார் வருவார்கள்? என்ற
ஒரு அச்சம் அவர்களுக்குள் எழுந்திருக்கலாம்.
இதுமட்டுமன்றி, இயேசு தனது சீடனாக வாழ விரும்புகிறவர்கள்
தங்களை மறுத்து தங்கள் சிலுவையை தானே சுமந்து கொண்டு
தன்னைப் பின்பற்ற வேண்டும் என்று கூறியதையும்
யோசிக்கிறார்கள். இவர்களுடைய பார்வையில் இயேசு இவர்களுடைய
நம்பிக்கைப்படி சர்வ வல்லவர், அழிவற்றவர், இஸ்ரவேல் மக்களை
அடிமைத்தனத்திலிருந்து மீட்டுடெடுக்கும் மெசியா என்ற
மாமனிதர், மகிமைக்கு உரியவர், அப்படிப்பட்ட இயேசு தனது
மரணத்தைப்பற்றி தானே வாக்குமூலம் தரும்போது நம்பி கூட வந்த
சீடர்கள் குழப்பும் அடைவதை தவிர வேறு என்ன செய்வார்கள்.
முதல் வாசகத்தில் தந்தை ஆபிரகாமுக்கும் இறைவனுக்கும் இடையே
நடந்த வாக்குறுதிகள் ஆச்சரியமூட்டும் வகையாகவும்,
அதிசயங்களை நிகழ்த்த உரையாடலகவும் இருந்தன. வாரிசு அற்ற
ஆபிரகாமிடம் விண்மீன்களை போல் உனது வாரிசுகள் இந்த உலகில்
இருக்கும் என்று ஆண்டவர் கூறுகின்றார். வாழ இடமற்று
நிற்கும் அவரிடம் நீ காணும் இடத்தை உன் நாடாக உன்
வம்சத்தினர் வாழும் இடமாக நான் தருவேன் என்று இறைவன்
கூறுகின்றார். சாதாரண மனிதன் இவ்வார்த்தைகளை நம்ப அடையாளம்
கேட்பது நியாயம்தானே. அப்படிக் கேட்ட ஆபிரகாம், ஆண்டவர்
குறித்த பலிப்பொருள்களை கொண்டு வந்தது மட்டுமில்லாமல்
இறைவனுக்கு உரியது இறைவனுக்கு மட்டுமே என தின்ன வந்த
பறவைகளை விரட்டி பலிப்பொருளை பாதுகாத்தார். நேரம் வந்த
போது இறை வல்லமை தீச்சட்டியாகவும் தீபந்தமாகவும்
பலிப்பொருட்களை கடந்து சென்று வாக்குறுதிகள் நம்பிக்கைக்கு
உரியவருடையன என வெளிப்படுத்தின.
ஆபிரகாம் விசுவாசத்தின்-
நம்பிக்கையின் தந்தை ஆனார்.
நற்செய்தியில் எட்டு நாட்களுக்கு முன்பு, நீங்கள் நான்
யார் என சொல்கிறீர்கள்?" என்று கேட்ட இயேசுவிடம் , "நீர்
கடவுளின் மெசியா" என்று உரைத்த பேதுரு ஆண்டவரின் மரண
வாக்கு மூலத்தையும் உயிர்த்தெழுதலின் வாக்குறுதியையும்
செவிமடுத்தபின் அப்படி நிகழ்வதை விரும்பாமல் இருப்பதை
இருப்பதை அறிந்த இயேசு அவர்கள் தன்மீது கொண்ட நம்பிக்கையை
மேலும் அதிகமாக உறுதி செய்ய அவர்களை எட்டு நாட்களுக்குப்
பின் உயர்ந்த மலைக்கு அழைத்துச் சென்றார். தான் யார்?
தன்னுடன் இருப்பவர் யார்? தன்னுடைய பணி என்ன? என்பதை
சீடர்கள் முழுமையாக புரிந்துகொள்ள தாபோர் மலை உச்சியில்
தனது இறைத்தன்மையை முழுமையாக வெளிப்படுத்தி இயேசு மறுரூபம்
ஆகிறார். ஆபிரகாம் இது எப்படி நிகழும் என்று கேட்டது
இறைவனுக்கு நீதியாக பட்டதைப்போல் சீடர்களின் மன நெருடல்களை
அகற்ற வேண்டியது இயேசுவிற்கு நீதியாகப்பட்டது.
இனி நாம் இயேசுவின் உருமாற்றத்தில் நிகழ்ந்ததைக்
கவனிப்போம்.
மலை உச்சிகள் இறைவனின் அருகாமையை மனிதனுக்கு தருவதாக
நம்பிக்கை பரவலாக உள்ளது. குறிப்பாக நமது நாட்டில் அனேகமாக
ஆலயங்கள் அனைத்தும் மலை உச்சியில்
அமைக்கப்பட்டிருக்கின்றன. விவிலியத்திலும் இறைவனுடைய
காட்சிகளும் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பலிகளும்,
நன்றிக் கடன்களும் மலை உச்சிகளிலேயே நிறைவேறின. இயேசுவின்
கல்வாரி அற்பனபலியும் கல்வாரி மலையின் உச்சியில்தான்
நடந்தது. ஆக இருக்கும் இடத்தில் நம்மைச்சுற்றி நம்மோடு
இணைந்துள்ள சகலத்தையும் விடுத்து, (சீடர்களைப் போல்)
உயர்வாக இறைவனைத் தேடி செல்லும் போது இறை பிரசன்னம்
நம்மீதும் நம் அருகிலும் வருகின்றது என்பதை உணர்ந்து
கொள்வோம் ஆம், இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும்
கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது
ஏறினார்.
(லூக்கா நற்செய்தி 9:28)
இயேசு மலை மீது இறைவனிடம் வேண்டுவதற்காக சென்றார்.
வேண்டுதல் கேட்கப்பட்ட போது., அவரது முகத்தோற்றம் மாறியது;
அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. லூக்கா நற்செய்தி
9:29 நாமோ ஜெபிப்பதை தவிர்த்துவிட்டு புது ஆடைகளையும் அழகு
சாதனங்களையும் தேடித்தேடி வாங்கி நமது தோற்றத்தை மாற்ற
முயற்சி செய்கிறோம். இந்த தவக்காலத்தில் திருஅவை தரும்
முதல் பாடம் ஜெபிக்க வேண்டும் என்பதே. உள்ளத்தில் ஜெப
ஒளி ஏற்றுவோம்.
நானே ஒளி என்றவரை வரவேற்போம்.
இயேசுவின் இறைசாயல் முழுமையாக வெளிப்பட்டபோது, ஒளி வெள்ளம்
முழுமையாக அவரை சூழ்ந்து கொண்ட பொழுது - அவரோடு மோசேயும்
எலியாவும் இணைந்து அவருடைய மீட்பு பணியைப் பற்றி
பேசினார்கள் என்று வாசிக்கின்றோம். ஒரு குறிக்கோளை அடைய
எவர் ஒருவர் தன் ஐம்புலன்களையும் அடக்கி தவ வாஞ்சையோடு
பயணிக்கிறார்களோ அவர்கள் அதில் வெற்றி அடைகிறார்கள். இயேசு
தனது மீட்புப்பணியில் வெற்றியடைந்தார், திருஅவை
ஆகையால்தான் நம்மையும் பார்த்து நமது குறிக்கோளான வான்
வீட்டை அடைவதற்கு ஜெபத்திற்கு அடுத்ததாக. தவ வாழ்க்கையை
ஐம்புலன்களை அடக்கி அனுசரிக்க அழைக்கின்றது.
ஆண்டவர் இயேசு மாந்தர்களின் மீட்பிற்காக தன்னுடைய
இறைமாட்சிமையை தானமாக்கி அடிமைக் கோலம் கொண்டவராக
கல்வாரியில் சிலுவையின் நடுவில் பாவிகளுக்கு ஒப்பானார்.
எதற்காக? நாம் மட்டுமல்ல, பிறரையும் வான்வீடு
அழைத்துச்செல்லவதற்காக. திருஅவை அதனால்தான் இயன்றளவு
தானத்தை தவிர்க்க வேண்டாம் பிறர் வாழ்வு பெற அதைச்
செய்யுங்கள் என்கிறது. இப்படிப்பட்ட ஜெபம், தவம், தானம்
இயேசுவை பின் தொடர்ந்த சீடர்களின் உடமையானது போல்-நமது
உடமைகள் ஆனால் இதோ மேகம் வந்து சீடர்கள் மேல்
நிழலிட்டு சூழ்ந்து கொண்டதைப் போல் நம் மீதும் நிழலிடும்
என்பது உறுதி. அப்போது நாம் செய்யவேண்டியது இறைவன்
வெளிப்படுத்திய கட்டளைக்கு கீழ்படிவது தான். ஆம், அந்த
மேகத்தினின்று, "இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர்
இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒலித்த குரலுக்கு
செவிசாய்த்து கீழ்படிந்து அதை நமது வாழ்வாக்குண்வதுதான்.
(லூக்கா நற்செய்தி 9:28-35) இப்படி மேற்குறிப்பிட்ட
கண்ணோட்டத்தில் ஜெபம், தவம், தானம் . நமதானால் அப்போது
"அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய
தமது உடலின் சாயலாக உருமாற்றவும், அனைத்தையும் தமக்குப்
பணியவைக்க வல்லவரின் உறவில் நிலைத்திருக்கும்"
பாக்கியத்தைப் பெற்றவர்களாக வாழ்வோம்.