ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

       பொதுக்காலம் 33ஆம் வாரம் - ஞாயிறு

    திருப்பலி முன்னுரை

வருடாந்த
ஞாயிறு வாசகம்
    pdf/Calendrier-litrugique2021.pdf
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
அச்சம் தவிர்க்க அருள் வேண்டி வந்திருக்கும் அன்பு நெஞ்சங்களே!
B தவக்காலம்1
வாழ்க்கையை வசந்தமாக்கும் வார்த்தைகள் அத்தனையும் ஒன்று கூடி இதய வாசல் கதவைத் தட்டி இந்த திருப்பலிக்கு நம்மை வரவேற்கின்றன. அழியும் வாழ்க்கையை இருள் வந்து மூடிவிடுமோ என அஞ்சும் நெஞ்சுக்கு விண்ணும் மண்ணும் அழிந்து போகும் ஆனால் என் வார்த்தையோ அழியவே அழியாது என்ற ஆறுதல் வார்த்தைகளால் ஒத்தடம் கொடுக்கிறது இங்த 33 ஆம் ஞாயிறு...

கதிரவன் ஒளிகொடாது, விண்மீன் பாதை மாறி பயணிக்குமாம் மூன்றுநாள் முழு இரவாய் மாறிவிடுமாமே? அச்சம் மிக்க பேச்சு திரும்பும் பக்கமெல்லாம் ஒலிக்கிறது! ஆனால் இப்படியான நிகழ்வுகள் எப்போது என தந்தையைத் தவிர யாருக்கும் தெரியாது அப்படி இருக்க நமக்குள் ஏன் வீண் கலக்கம்?; எந்த மாதிரி இருள் வந்து தாக்கினாலும் தப்பிக்க இறைவனின் அழியா வார்த்தை ஒளி நமக்கு இருக்கு. இருளின் செயலை விரட்ட அருளின் ஒளியை நாடுவோம். ஒளிமிகு செயலை செய்ய முன் வருவோம். மெழுகாய் உருகி அயலாரை அரவணைப்போம். வெற்றியின் வெளிச்சத்தைத் தொட அன்பின் வெளிச்சத்தில் நடப்போம். அழிவைப் பற்றிய பேச்சுக்கள் அத்தனையும் ஒழியட்டும். ஒளியின் வரங்கள் அத்தனையும் கிடைக்கட்டும்.

நமது வாழ்வு மகிழ்ச்சியின் ஒளியால் மிளிர்ந்திட, இதயத்தில் அருள் ஒளியை ஏற்றிட திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
 1. என்றும் வாழும் இறைவா
திருச்சபைத் தலைவர்கள் ஒளிமிகு செயல்களால் திருச்சபையைச் சூழும் இருளை விரட்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. வானகத் தந்தையே இறைவா!
வாழும் நாட்கள் கொஞ்சமே. அந்த கொஞ்ச நாட்களில் தீமையெனும் இருளின் பாதையை விட்டு விலகி நன்மைமிகு செயல்களை செய்து வெளிச்சத்தில் நடக்க நாடுகளின் தலைவர்களுக்கு அருள் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. விண்ணும் மண்ணும் ஒழிந்து போகும் என் வார்த்தையோ ஒழியவே ஒழியாது என்று சொன்ன இறைவா
உமது வார்த்தையை அறிவிக்கும் எங்கள் பங்குத் தந்தையை உமது அருளின் ஒளியால் நிரப்ப வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அச்சத்தை அகற்றும் இறைவா!
என்ன நிகழுமோ என அச்சத்தில் மூழ்கி தவிக்கும் மக்கள் தீமைதரும் இருளின் செயல்களைக் களைந்து எல்லாச் சூழ்நிலையிலும் விழிப்போடு மகிழ்ச்சியின் ஒளியில் மிளிர்ந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 
பா.சேவியர் - ஞானஒலி


பொதுக்காலத்தின் 33-ஆம் ஞாயிறு (17.11.2024)
தானி. 12:1-3, எபி. 10:11-14,18, மாற் 13:24-32

திருப்பலி முன்னுரை :
அன்பின் துணைகொண்டு நல்வழியில் நடக்கவும், மற்றவரையும் நல்வழிக்குக் கொண்டுவரவும் வரம் வேண்டி வருகை தந்துள்ள அன்பு இறைமக்களே, உங்கள் அனைவரையும் பொதுக்காலத்தின் 33-ஆம் ஞாயிறு வழிபாட்டிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.

திருவழிபாட்டு ஆண்டின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் நமக்கு இன்றைய திருவழிபாடு உலக முடிவைப் பற்றியும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியும் எடுத்துரைக்கிறது.

நீதிக் கடவுளாகிய கிறிஸ்து அண்மையில் இருக்கிறார். அவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அவரது வருகைக்கு நேரமும் காலமும் கிடையாது. அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறோமா? அவரைச் சந்திக்கத் தயாராய் இருக்கிறோமா? என்பது குறித்துச் சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.

உலக முடிவு பற்றியும், இறைவனின் இரண்டாம் வருகை பற்றியும், அதன் அறிகுறிகளையும், அது வரவிருக்கும் நேரத்தையும் எடுத்துக் கூறி நாம் மனம் திரும்புவதற்கான விழிப்புணர்ச்சியைத் தூண்டுகின்றன இன்றைய வாசகங்கள்.

சிலுவையில் தொங்கி நம்மையெல்லாம் மீட்ட அதே இறைவன்தான் இன்று நற்கருணை வழியாக நம்முள்ளத்தில் எழுந்து வரவிருக்கின்றார். மரணம் என்பது முடிவுரையல்ல, அது வானக வாழ்வுக்கு முகவுரை என்பதை உணர்ந்து மரண பயத்தை அகற்றி, இறுதித் தீர்ப்பை எதிர்கொள்ளும் மனதிடத்தை வேண்டி இத்திருப்பலியில் பங்குகொள்வோம்.

முதல் வாசக முன்னுரை :

உலகின் இறுதி நாளில் இறந்தோர் உயிர்த்தெழுதல், இறுதித் தீர்ப்பு, உலக முடிவு என்ற மூன்று நிகழ்வுகளை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. இறுதி நாளை நமக்கு நினைவுப் படுத்தி, நம்மை தயார்படுத்தி, நம் வாழ்வை நெறிப்படுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை :

உலக மக்களின் பாவங்களுக்காக மரித்து தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்த இயேசுவின் பலியைவிட சிறந்த பலி வேறு எதுவும் இல்லை என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் விளக்குகிறது. கிறிஸ்து நிறைவேற்றிய வல்லமை மிக்க புதுப்பலியை விவரிக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.


மன்றாட்டுகள் :

உறங்காமல் கண் அயராமல் எம்மைக் காக்கும் அன்பு இறைவா, வாழ்வின் வாழ்வோரின் நூலில் எங்கள் பெயர்கள் இடம் பெற எம்மை நெறிப்படுத்தி வழிநடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், எம் பங்குத் தந்தையர், அருட்பணியாளர்கள் அனைவரும் பக்குவப்பட்ட அருட்பணியாளர்களாய், உண்மை ஊழியர்களாய், உடல் உள்ள ஆரோக்கியத்துடன் வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த இறைவா, எம்மை வழி நடத்தும் தேசத் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். அவர்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும், நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதிலும் முழு கவனம் செலுத்தி கடமையாற்றவும், தாழ்ச்சி பொறுமை, எளிமை, ஒழுக்கம் ஆகிய நற்பண்புகளைக் கொண்டவர்களாய் வாழவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நீதி வழுவாத ஆண்டவராகிய இறைவா, உம் நீதி அரியணைக்கு முன் நாங்கள் அனைவரும் பாவிகளே என்பதை உணர்ந்து உமக்கு எதிராகவும், எம் சகோதரருக்கு எதிராகவும் செய்த பாவங்களுக்காக உம்மிடம் மன்னிப்புக் கேட்கிறோம். வாழ்வோரின் புத்தகத்தில் எங்கள் பெயரும் பதியப்படும் விதமாக பாவத்தை அகற்றி நல்வாழ்வு வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அமைதியை அருளும் அருட்கொடையே, உம் திருமகன் இயேசுவால் நல்லோராக தூயோராக வாழ்ந்தாலும், மனித பலவீனம், உலக இன்பம், ஆசை போன்றவற்றால் மீண்டும் அசுத்தமானவர்களாய் மாறிவிடுகிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலை தொடராமல், விழிப்புள்ளவர்களாய், பாவ நாட்டத்திற்கு இரையாகாதவராய் என்றும் வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
 
ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்கும் இடத்திற்கு வந்தான்.'' நான் ஒரு குடிகாரன் நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா'' என்று கேட்டுக் கொண்டான். அதற்கு ஞானி ''நாளை மாலை என்னை வந்து பார் அப்போது சொல்கிறேன் என்றார்.

மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து ''ஐயோ என்னை விட்டு விடு'' என்று கத்திக் கொண்டிருந்தார். உடனே குடிகாரன் ''நீங்கள் தானே தூணைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். அதை விட்டுவிடுங்கள்'' என்றான்.

உடனே ஞானி சிரித்துக் கொண்டே ''தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல நீதான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே விட்டு விடு'' என்றார்
அழியும் உலகில் வாழும் நாம் நம்மை அழிக்கும் தீமைகளை விட்டுவிட்டு நன்மையின் பாதையில் நடப்போம்.

அந்த காட்டில் வசிக்கும் ரோஸி என்ற மானுக்கு வலது பக்கத்து கண் குருடாகிவிட்டது. ரோஸி இடது கண்ணை வைத்துக்கொண்டு எப்போதும் தன் வாழ்க்கையை நடத்தி வந்தது. மேயச் சென்றால் வலது கண் பக்கம் எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்ளும். வலது கண்; குருடாகி இருப்பதால் அந்தப் பக்கமிருந்துவிNhதி வலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சம். ஒருநாள் மலை உச்சிக்கு சென்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு வேடன் மலையை ஒட்டியிருந்த கடலின் பக்கம் துப்பாக்கியோடு வேட்டைக்குச் சென்று கொண்டிருந்தான். வேடன் கண்களில் தென்பட்ட மானை சுட்டான் மான் செத்து கீழே விழுந்தது. மனித வாழ்க்கையும் இப்படித்தான் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. அழிவு நிச்சயம் ஆனால் எப்போது என்று தெரியாது. ஆனால் வாழ்வது ஒருமுறைதான் என்றாலும் தலைமுறை தாண்டி பேசப்படும் வாழ்க்கை வாழ்வது தான் நம் தலைவர் இயேசுவக்குப் பிரியமானது!

வாழும் குறுகிய காலத்தில் நல்ல வாழ்க்கை வாழ அழைக்கப்படுகிறோம்.
 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.
வருகை என்னும் வரம்
இறக்கும் போது நமக்கு வேண்டாதவரையும் பார்க்க விரும்புகிறோம். இருக்கும் போது நமக்கு வேண்டியவரையும் பார்க்க மறுக்கிறோம். இதுதான் நம்முடைய வாழ்வின் நிலை. இது இப்படி இருக்க, யாருடைய வருகை நமக்கு வரமா இருக்கின்றது என்பதனை பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகின்றோம்.

பேரரசர் அக்பர், பீர்பாலிடம் ஒருநாள், "கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாக சொல்கின்றார்களே ஏன் தன்னுடைய தூதுவர்களை அனுப்பக் கூடாது" என்று கேட்டார். இது மிகவும் ஆழமான கேள்வி இதற்கு இப்போது என்னால் பதில் சொல்ல முடியாது. நேரம் வரும் போது சொல்கிறேன் என்று சொல்லி விட்டார் பீர்பால்.

சில மாதங்கள் கழித்து அரண்மனையில் உள்ள அனைவரும் படகில் உல்லாச பயணம் மேற்கொண்டனர். அக்பர், அவரது குடும்பத்தார் மற்றும் பீர்பாலும் உடன் இருந்தனர். திடீரென்று அக்பரின் பேரன் தண்ணீரில் விழுந்து விட அக்பர் உடனே நீரில் குதித்து தன்னுடைய பேரனைக் காப்பாற்றினார். இதனைப் பார்த்த பீர்பால், அரசே பணியாளர்களும் காவலர்களும் உங்களைச்சூழ்ந்து நிற்க அவர்களுக்கு ஆணையிட்டு குழந்தையைக் காப்பாற்ற சொல்லாமல் நீங்களே நீரில் விழுந்து ஏன் காப்பாற்றினீர்கள் என்று கேட்டார். அதற்கு அக்பர் இது என்னுடைய பேரன் அவனைக் காப்பாற்ற வீரர்களுக்கு ஆணையிடுவதை விட நானே குதித்து காப்பாற்றுவது தான் நல்லது என தோன்றியது. அதனால் தான் நான் காப்பாற்றினேன் என்றார்.

உடனே பீர்பால் மனித பிறவிகளாகிய நமக்கே இப்படி தோன்றுகிறது என்றால் கடவுள் இந்த உலக மக்கள் அனைவரையும் படைத்தவர், தனது மக்களை மீட்க அவரே நேரடியாக வருவது தானே முறை? என்று கேட்டார். தக்க சூழ்நிலையில் தன்னுடைய சந்தேகம் தெளிவானது பற்றியும் பீர்பாலின் அறிவுக் கூர்மை கண்டும் மகிழ்ந்தார் அரசர் அக்பர்.

ஆம் அன்புக்குரியவர்களே, உலகைப் படைத்த கடவுள் அதனை மீட்க தானே மனு உரு எடுத்து மீண்டும் வர இருக்கின்றார். அவரது இரண்டாம் வருகையைப் பற்றிய செய்திகளே நமக்கு இன்று வாசகப் பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளன. வருகை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வுகளைத் தருகின்றது.

கொரோனாவின் வருகையால் பள்ளிகள் மூடப்பட்டன.
தடுப்பு மருந்துகளின் வருகையால் இயல்பு நிலை திரும்ப தொடங்கியது.
எப்போது பள்ளிகள் திறக்கும் ? மாணவர்கள் எப்போது வருவர் என்று எதிர்பார்த்து இருந்தனர் பள்ளி நல விரும்பிகள்.

மழையின் வருகையால் தொடங்கப்பட்டு
சில நாளிலேயே அதுவும் நின்று போனது.
நண்பர்களின் வருகை மகிழ்வைத் தருகிறது.
எதிரிகளின் வருகை மன வருத்தத்தைத் தருகின்றது.
சிலரின் வருகை இன்பம்.
சிலரின் வருகை துன்பம்.

இப்படியாக ஒவ்வொருவரின் வருகையும் ஒவ்வொரு விதமான உணர்வுகளையும் எண்ணங்களையும் நமக்குத் தருகின்றது. இந்த மழைக் காலத்தில் ஒரு சில தலைவர்களின் வருகையும் பார்வையிடுதலும் மகிழ்வையும் ஆறுதலையும் அளிக்க, மற்றும் சிலரின் வருகையும் செயலும் முகம் சுளிக்க வைக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் மெசியாவின் இரண்டாம் வருகையின் போது நடக்க இருக்கும் இன்ப துன்பங்களை தெளிவாக எடுத்துரைக்கின்றார் இறைவாக்கினர் தானியேல். விடுவிக்கப்படுவர், ஒளி வீசித் திகழ்வர்: துன்பத்தில் இருந்து விடுவிக்கப்படுவர். பெயர் எழுதப்பட்டோர் மீட்கப்படுவர். இறந்தவர் முடிவில்லா வாழ்வு பெறுவர். ஞானிகள் விண்மீன்களைப் போல் ஒளி வீசுவர். சிலர் வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் ஆளாவர். ஆக இரண்டாம் வருகை எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை. ஒரு சிலருக்கு இன்பம், மற்றும் சிலருக்கு துன்பம். இதில் நாம் யாராக இருக்கப் போகின்றோம் என்பதனை முடிவு செய்வது நமது வாழ்வும் செயலும் தான்.

அதற்கு உதவியாக நமக்கு அறிவுரை கூறுவது போல அமைந்துள்ளது இன்றைய திருப்பாடல் வரிகள் . ஆண்டவரை நம்முடைய உரிமைச்சொத்தாக நாம் எண்ணும் பொழுது நமக்கு நிறைவான மகிழ்ச்சி கிடைக்கின்றது. அவரும் நம்மை துன்பம் அணுகாமல் எப்பொழுதும் மகிழ்வுடன் பார்த்துக் கொள்வார்.

ஆண்டவரை உரிமைச்சொத்தாக கொண்டு தனது வாழ்வை இன்பமாக மாற்றி பிறரும் அது போல வாழ்ந்து காட்ட வழி செய்தவர் இயேசு. செடி கொடிகளின் வளர்ச்சியைப் போன்றே மனித வாழ்வின் வளர்ச்சியும் இருக்கும் என்று அறிவுறுத்துகிறார். வசந்த காலத்தில் பூக்கள் பூப்பதும் இலைகள் தளிர்ப்பதும் எப்படி இயல்போ அது போல, இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்ந்து போவதும் இயல்பு. அந்த அந்த காலத்தின் இயல்பு அறிந்து நாம் நம்முடைய வாழ்க்கை நிலையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

அவரது வருகை எப்போது வேண்டுமானாலும் வரலாம் அது எப்போது என்று அவருக்கே தெரியாது. எனவே வாழுகின்ற வாழ்க்கையை அன்றே இனிமையாக வாழ முயற்சிப்போம்.

ஆக இரண்டாம் வருகை எப்படிப்பட்டது அதை எதிர்கொள்ள எத்தகைய மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும் அதற்கு நமக்கு முன்னுதாரணம் யார் என்பதை பற்றி ஒவ்வொரு வாசகங்களும் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன. நன்மை செய்பவர்களுக்கும் நன்மை செய்ய காரணமாக இருப்பவர்களுக்கும் அவர் வருகை வரமாக அமைகின்றது. மகிழ்வைத் தருகின்றது. பிறருக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கும் கேடு செய்பவர்களுக்கும் அது துன்பமாக அமைகின்றது.

ஆண்டவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நாம் , நமது வருகையால் நம்மை சுற்றி இருப்பவர்களை மகிழ்விப்போம். நம்மைப் படைத்த கடவுள் நம்மேல் கொண்ட அன்பால் நம்மை மீட்க அவரே வரும் பொழுது நாமும் நமது வாழ்வை மாற்றி அமைப்போம். எங்கு எப்படி எப்போது வருவார் என்று தெரியாது. எனவே எல்லா நாளும் எல்லா நேரத்திலும் நமது வாழ்வை மகிழ்வோடு வாழ்வோம். ஆண்டவர் என்னும் மகிழ்வை நமது உரிமைச் சொத்தாக்கிக் கொள்ள முயல்வோம். நமது வாழ்வால் நம் உடன்இருப்பை வரமாக்கி, ஆண்டவரின் வருகையை வரமாக்க முயல்வோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.


 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.

 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 
உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள்!


'பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்.
நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்' (சஉ 3:2) என்று சொல்லும் எபிரேயக் கவிஞர் சபை உரையாளர் என்றாலும் சரி,
'பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்' என்று சொல்லும் தமிழ் ஞானி பட்டினத்தார் என்றாலும் சரி,

வாழ்வின் இருதுருவ நிலைகளை மிக அழகாக உணர்ந்தவர்களாகவும், உணர்த்தியவர்களாகவும் இருக்கின்றனர்.
இந்த உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

நாம் இரண்டு மணி நேரங்கள் பார்க்கும் சினிமா, அல்லது இரண்டு நாள்கள் படிக்கும் நாவல் கூட, 'முடிவு எப்படி இருக்கும்?' என்ற ஆவலை நம்மில் எழுப்பிவிடும்போது, நாம் 70 ஆண்டுகள், 80 ஆண்டுகள் வாழும் வாழ்க்கை, 'என் முடிவு எப்படி இருக்கும்?' என்ற கேள்வியையும், பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்துவரும் இப்பிரபஞ்சத்தின் முடிவு எப்படி இருக்கும்? என்ற கேள்வியையும் நம்மில் எழுப்பாமல் இருக்காதா?

உலகம் முடியுமா? முடியாதா? எப்போது முடியும்? எப்படி முடியும்? மனித இனம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளுமா? அல்லது அண்ட சராசரத்தின் ஆக்கம், அழிவு போல பூமி தானாகவே அழிந்து விடுமா? கடவுள் வருவாரா? எப்படி வருவார்? எல்லாருக்கும் தீர்ப்பு வழங்குவாரா? நம் இந்தியப் பின்புலத்தில் கேள்விகள் இன்னும் அதிகமாகின்றன: எந்தக் கடவுள் வருவார்? கிறிஸ்தவரல்லாதவருக்கு என்ன நடக்கும்? ஒருவேளை எல்லாக் கடவுளர்களும் சேர்ந்து வருவார்களா?

'சட்டென்று மாறுது வானிலை' என்பதுபோல, 'இதெல்லாம் பார்க்க நாம இருக்க மாட்டோம்' என்ற எண்ணமும் நம் மூளையில் மின்னி மறைகின்றது.

ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் என அழைக்கப்படுகின்ற மத்தேயு, மாற்கு, லூக்கா என்னும் மூவரும் உலகின் இறுதி பற்றியும், மானிடமகனின் இரண்டாம் வருகை பற்றியும் பதிவு செய்கின்றனர். யோவான் இறுதி நாட்கள் பற்றியும், செம்மறியின் இரண்டாம் வருகை பற்றியும் திருவெளிப்பாடு என்ற புதிய நூலையே படைக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 13:24-32) காணப்படும் பகுதி 'வெளிப்பாட்டு நடை' என்னும் இலக்கியக் கூற்றைப் பயன்படுத்தி எழுதப்பட்டடிருந்தாலும், இப்பகுதியில் வரும் நிகழ்வுகள் அனைத்தும் தனி மனித வாழ்வில் நடக்கின்றன என்றும் நாம் உருவகித்துக்கொள்ள முடியும்.

'அந்நாள்களில்' - 'நம் வாழ்வின் இறுதி நாள்களில்'
'வேதனைகளுக்குப் பிறகு' - 'நாம் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பிறகு'
'கதிரவன் இருண்டுவிடும்' - 'நம் கண்கள் மூடிவிடும் அல்லது மங்கிவிடும்'
'நிலா ஒளிகொடாது' - 'நம் உடலில் வெப்பம் இருக்காது'
'விண்மீன்கள் வானத்திலிருந்து விழும்' - 'நாம் பெற்ற அனைத்து உறவுகளும் நம்மைவிட்டு அகலும்'
'வான்வெளிக் கோள்கள் அதிரும்' - 'நாம் வாழும் குடும்பத்தில், சமூகத்தில் ஒரு வெற்றிடம் ஏற்படும்'
'மானிடமகன் மாட்சியோடு மேகங்கள் மீது வருவார்' - 'நம் உயிர் தன்னைப் படைத்த இறைவனிடம் திரும்பிச் செல்லும்'

இந்த உருவகம் சாத்தியமா என்று நாம் கேட்கலாம்?
சாத்தியம். ஏனெனில், இத்தகைய உருவகத்தைத்தான் நாம் சஉ 12:1-6ல் வாசிக்கின்றோம்.
ஆக, இயேசு குறிப்பிடும் நிகழ்வுகள் எல்லாம் என் வாழ்விலும், உங்கள் வாழ்விலும் நடந்தேறும் நிதர்சனமான நிகழ்வுகள்.

இவ்வறிகுறிகளைச் சொல்லிவிட்டு, 'அத்திமரத்திலிருந்திலிருந்து உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள்' என்கிறார். அந்த உண்மை என்ன?

இலையுதிர்காலத்தில் தன் இலைகளை எல்லாம் இழந்து, பனிக்காலத்தில் வெறும் குச்சிகளாக நின்று பனியைத் தாங்கி, வசந்தகாலத்தில் மெதுவாக தளிர்விட்டு, கோடைகாலத்தில் பச்சைப் பசேலென இருக்கிறது அத்திமரம். ஆனால், இப்பச்சை இலைகள் நிரந்தரமல்ல. மீண்டும் சக்கரம் சுற்றும். இலைகள் உதிரும், மலரும், மலரும், உதிரும். வாழ்க்கையின் ஓட்டத்தை 'ஃப்ரீஸ்' செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அது இறந்துவிடும். (இறந்ததை மட்டும்தான் நாம் ஃப்ரீஸ் செய்கிறோம். இல்லையா?)

ஆக, அத்திரமரம் நமக்கு உணர்த்தும் உண்மை என்ன?
'மாற்றம் ஒன்றே நிலையானது'
மாற்றத்திற்கு ஒத்துழைக்கும் உயிர்தான் வாழ முடியும். மறுவாழ்விற்குப் பிறக்க முடியும்.

மேலும், என் உடலின், மனதின் மாற்றம் என்னைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. ஆக, மாற்றம் என்பது ஒரு தனிநபர் அனுபவம்.

இறந்தன உயிர்க்கும், இருப்பன இறக்கும் என்ற இதே செய்தியைத்தான், இதே மாற்றத்தைத்தான் இன்றைய முதல் வாசகத்திலும் (காண். தானி 12:1-3) நாம் வாசிக்கிறோம். பல்த்தசார் என்று அழைக்கப்பட்ட தானியேல், பாரசீக மன்னன் சைரசின் காலத்தில் காட்சி ஒன்று காண்கின்றார். அந்தக் காட்சியில் முடிவின் காலம் அவருக்கு அறிவிக்கப்படுகிறது. அந்த முடிவின் காலம் எப்படி இருக்கும் என்று தென்திசை மன்னனுக்கு (பெயரில்லாத மன்னன்!) தானியேல் அறிவிப்பதே இன்றைய முதல் வாசகம். இன்றைய முதல் வாசகம் இறுதிநாளைப் பற்றிச் சொல்லும்போது ஐந்து கூறுகளைக் குறிப்பிடுகிறது: (அ) தலைமைக் காவலர் மிக்கேல் எழும்புவார், (ஆ) துன்ப காலம் வரும், (இ) வாழ்வின் நூலில் பெயர் எழுதப்பட்டவர்கள், (ஈ) நல்லவர்கள் பரிசு பெறுவர், மற்றும் (உ) கெட்டவர்கள் தண்டனை பெறுவர். இன்ப காலம் மறைந்து துன்ப காலமும், அது முடிந்து மீண்டும் இன்ப காலமும் வருவதைச் சொல்கிறது தானியேலின் காட்சி.

'பிறப்பு இறப்பு' 'வளர்ச்சி தளர்ச்சி' 'இன்பம் துன்பம்' எனச் சுற்றிவரும் வாழ்க்கைச் சக்கரத்தை நாம் எப்படி நகர்த்துவது?

இன்றைய இரண்டாம் வாசகமும் (காண். எபி 10:11-14,18), பதிலுரைப் பாடலும் (திபா 16:5) நமக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றன:

1. 'ஒரே பலியைச் செலுத்துவது'
கடந்த 6 வாரங்களாக நாம் வாசித்துக்கொண்டுவரும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடல் பகுதி இன்று நிறைவு பெறுகிறது. இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் ஆசிரியர், பழைய ஏற்பாட்டுக் குரு நாள்தோறும் செலுத்தும் பலியையும், இயேசுவின் ஒரே பலியையும் ஒப்பிடுகின்றார். இந்த ஆன்மீகச் செய்தியை நம் வாழ்வுப் பாடமாக எப்படி மாற்றுவது? நம் வாழ்க்கையை இரண்டு நிலைகளில் வாழ நம்மால் முடியும்: (அ) நாள்தோறும் ஒரே மாதிரி வாழ்வது - இவ்வகை வாழ்வில் புதுமை இருக்காது. எல்லாரையும் போல மற்றவர்கள் எதிர்பார்ப்பதை மட்டும் நாம் செய்துவிட்டு ஓய்ந்திருப்போம். (ஆ) ஒரே முறை வாழ்வது - இனிமையாக, முழுமையாக வாழ்வது. இவ்வகை வாழ்வில் புதுமையும், புத்துணர்ச்சியும் இருக்கும். இந்த வாழ்க்கை நம் கையெழுத்தைப் போல நமக்கே உரிய தனிப்பட்ட ஒன்றாக இருக்கும்.

நாள்தோறும் ஒரே மாதிரி வாழ்வது எளிது. ஏனெனில் இத்தகைய வாழ்வு சாவி கொடுத்த பொம்மை போல ஒரே இடத்தில் ஆடிக்கொண்டிருப்பது போல, அல்லது ஒரே இடத்தில் ஆடிக்கொண்டிருக்கும் ஓய்வுநாற்காலி போல இருக்கும். ஓய்வுநாற்காலி விடிய விடிய ஆடினாலும் ஒரு இன்ச் கூட நகர்வதில்லை. ஆனால், ஒரே முறையில் தள்ளப்படும் நடைவண்டி புதிய இடத்திற்குப் போவது மட்டுமல்லாமல், அது குழந்தை நடை பழகுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. மேலும், நாம் ஒரே முறை செய்யும் செயலில் நம் முழு மனம், சிந்தனை, மற்றும் ஆற்றலைப் பயன்படுத்துகிறோம்.

ஆக, நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி: 'நாள்தோறும் போல வாழ்கிறேனா?' அல்லது 'ஒரே முறை போல வாழ்கிறேனா?'

2. 'நிறைவுள்ளவரா(க்கு)தல்'
செடியில் மலரும் ஒரு பூ அப்படியே வாடிவிட்டால் அது வாடிவிட்டது என்கிறோம். ஆனால், அது பிஞ்சாகி பழுத்துவிட்டால் வெம்பிவிட்டது என்கிறோம். ஆனால், முழுவதும் கனியானால் அதை இரசிக்கிறோம். ஆக, கனி என்பது வேரின் நிறைவு. அதுபோலவே, இறப்பு என்பது பிறப்பின் நிறைவு. இந்த நிறைவு உண்மையிலேயே நிறைவாக இருத்தல் வேண்டும். 'இறப்பு உன்னிடம் வரும்போது உயிரோடு இரு' என்பது ஆப்பிரிக்க பழமொழி. அதாவது, வாழும்போதே இறந்துவிடாதே! அல்லது உன்னை நீயே அழித்துவிடாதே! அல்லது வெறும் நடைபிணம் போல வாழாதே!

நேற்றைய என் நாளை விட நான் இன்று நிறைவுள்ளவனாக இருக்க வேண்டும். அதுதான் வளர்ச்சி. நேற்று நான் எடுத்த முடிவுகள் இன்று நான் எப்படி இருக்கிறேன் என்பதை உறுதி செய்கின்றன. அதுபோல, இன்று நான் எடுக்கும் முடிவுகள் நாளை நான் எப்படி இருப்பேன் என்பதை உறுதி செய்கின்றன. அப்படி என்றால், என் முடிவுகளும், தெரிவுகளும் சரியானதாக இருக்க வேண்டும். நேற்றைய காரணத்தால் இன்றைய காரியம் நடக்கிறது. காரியத்தை நான் கட்டுப்படுத்த காரணத்தைக் கட்டுப்படுத்த வேண்டும. இறப்பு என்னும் காரியத்தை நான் கட்டுப்படுத்த வாழ்க்கை என்ற காரணத்தை நான் கட்டுப்படுத்த வேண்டும். ஆக, ஒவ்வொரு பொழுதும் நான் நிறைவு பெறுகிறேனா? என்று கேட்க வேண்டும். அதே நேரத்தில், நம் குறைவுத்தன்மையை அறிந்து உணர்ந்து, அதை நிறைவின் காரணியாகப் பார்த்தல் நலம்.

3. 'ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து. அவரே என் கிண்ணம். எனக்குரிய பங்கைக் காப்பவர் அவரே.'
நம் வாழ்க்கை இனிமையான அனுபவமாக இருக்க கடவுள், விதி, மறுபிறப்பு என எதையாவது ஒன்றை நம்பியே ஆக வேண்டும். இந்த நம்பிக்கையில் நாம் திரும்பிப் பார்க்கும்போதுதான் வாழ்வின் ஒவ்வொரு புள்ளிகளும் மிக அழகாக இணையும். என் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புள்ளியாக வளர்ந்துகொண்டே வரும். அது கடவுள், விதி, மறுபிறப்பு என்னும் ஒற்றைப் புள்ளியில் இணையும். வெறும் கோலமாவை அள்ளித் தெளிப்பதால் கோலம் வந்துவிடுமா? இல்லை. நிதானமாக, அளந்து, பொருத்தி வைக்கப்படும் புள்ளிகளே கோலத்தை உருவாக்கும்.

என் வாழ்வின் சொத்து என நான் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொன்றை நினைக்கிறேன். சிறு குழந்தையாக இருந்தபோது நிறைய சிகரெட் அட்டைகள் வைத்திருக்கும் சிறுவன் விளையாட்டில் பணக்காரன் எனக் கருதப்படுவான். ஆனால், வயது வந்து நான் வளர்ந்தவடன் சிகரெட் அட்டைகள் சேகரித்தால் அது விளையாட்டுத்தனமாகத் தெரியும். வளர்ந்த நான் நிறைய ரூபாய் நோட்டுக்களைச் சேகரிக்க ஆரம்பிக்கிறேன். மற்றவர்கள் என்னைப் பணக்காரன் என்று சொல்வார்கள். ஒரு காலத்தில் நானே எண்ணிச் சேகரித்த சிகரெட் அட்டைகளை இன்று நான் ஏன் குப்பையில் போடுகிறேன்? வாழ்வில் சேகரிக்கும் சொத்துக்கள் அனைத்தும் மாறக்கூடியவை. என் உடல் நலம், அழகு, படிப்பு, வேலை, பதவி, சமூக நிலை, உறவு என நான் சேகரிக்கும் அனைத்தும் ஒருநாள் காலாவதியாய்ப் போகும். நான் ஓடி ஓடி நிறைக்கும் கிண்ணம் கடைசியில் வெறுமையாய் இருக்கும். நான் இவ்வளவு நாள் போட்டது இந்த ஓட்டைக் கிண்ணத்திலா? என்று மனம் குற்றவுணர்வு கொள்ளும். ஆனால், ஆண்டவரை உரிமைச் சொத்தாகவும், அவரைத் தன் கிண்ணமாகவும் கொண்டிருப்பவர் பேறுபெற்றோர். அவர் ஏமாற்றமடையார். ஏனெனில் அவரின் பங்கைக் காப்பவர் கடவுள்.

உலகம் முடியுமா? முடியாதா? மானிட மகன் வருவாரா? வரமாட்டாரா? என்ற கவலையும், ஏக்கமும் வேண்டாம். 'இதோ சீக்கிரம் வருகிறார்' என யாராவது தெருவில் முழக்கமிட்டுப் போனால், நீங்கள் பதற வேண்டாம். 'மனம் மாறு. அவரிடம் திரும்பி வா' என எவராவது கத்தினால் பயப்பட வேண்டாம். நிதானமாகவும், பொறுமையாகவும் நம் வாழ்வு முடிவு பெறுவதை எண்ணிப் பார்ப்போம்.

'நன்றாக நல்ல வேலை செய்த நாள் நல்ல தூக்கத்தைத் தருவதுபோல, நன்றாக நல்ல நிலையில் வாழ்ந்த வாழ்க்கை நல்ல இறப்பைத் தரும்' என்பார் டாவின்சி.

வரட்டும் அவர் எப்போது வேண்டுமானாலும்! அவருக்கே தெரியாது அவரின் வருகை!
பின் ஏன் நாம் கவலைப்பட வேண்டும்?

அத்திமரத்திலிருந்து நாம் கற்கும் உண்மை இதுதான்: தளர்வன வளரும், வளர்வன தளரும்!
 

நான் அசைவுறேன்!


ஆண்டின் பொதுக்காலத்தின் இறுதி ஞாயிறு இன்று. வருகின்ற ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. இன்றைய ஞாயிற்றை ஏழைகள் அல்லது வறியோர்க்கான (8-ஆவது உலக நாள்) ஞாயிறு என்றும் நாம் சிறப்பிக்கின்றோம். வறியோர் ஆண்டுக்கான செய்தியாக நம் திருத்தந்தை வழங்கியுள்ள தலைப்பு: ' வறியோரின் செபம் இறைவனை நோக்கி எழுகிறது' (சீஞா 21:5). யூபிலி 2025-க்கான தயாரிப்புக்காக வழங்கப்பட்டுள்ள ' இறைவேண்டல்' என்னும் கருத்துருவே இத்தலைப்பின் பின்புலத்தில் உள்ளது.

இன்றைய நாளின் வாசகங்கள் உலகத்தின் இறுதி நாள்கள் பற்றிப் பேசுகின்றன.

முதல் வாசகம் தானியேல் நூலின் இறுதிப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. திருவெளிப்பாட்டு நடை என்னும் இலக்கியக் கூற்றை நாம் இங்கே காண்கிறோம். இந்த நடையில் நிறைய உருவகங்களும், அடையாளங்களும், குறிச்சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன. துன்பம், போர், வன்முறை, வறுமை, பசி, பஞ்சம், இயற்கைப் பேரிடர்கள் என வருந்தும் உலகம் நொடிப்பொழுதில் முடியும் அல்லது மாறும் என மொழிகிறது இந்த நடை. செலூக்கிய அரசர் நான்காம் எபிஃபேனஸ் காலத்தில் யூதர்கள் அனுபவித்த துன்பங்களின் போது தானியேல் காட்சி காண்கின்றார். நீதித் தீர்ப்பின்போது என்ன நடக்கும் என்பதைக் காட்சியாகக் காண்கிறார் தானியேல். மிக்கேல் என்னும் அதிதூதர் யூத நாட்டின் காவல் தூதராக இருக்கின்றார். மக்களின் கருத்துகளைக் கடவுள்முன் கொண்டு செல்பவர் இவரே. கடவுளின் கட்டளைகளை உடனடியாக நிறைவேற்றுபவரும் இவரே. உலக முடிவில் தீமைக்கு முடிவு கட்டுவதற்காக கடவுள் மிக்கேல் அதிதூதரை அனுப்புகிறார். இந்த நேரத்தில் இறந்தோர் உயிர் பெறுவர். நல்லோர் எனவும், தீயோர் எனவும் இரு குழுக்களாக அவர்கள் பிரிக்கப்படுவர். தானியேல் நூலைப் பொருத்தவரையில் நல்லோர் என்பவர் கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இருந்து, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, துன்பங்களை ஏற்றுக்கொண்டோர் ஆவர்.

இரண்டாம் வாசகத்தில், எருசலேமில் வாழ்ந்த தலைமைக் குருக்களுக்கும் ஒப்பற்ற தலைமைக் குருவாம் இயேசுவுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தொடர்ந்து பட்டியலிடுகின்றார் ஆசிரியர். ஒரே பலியால் தன் உடலால் நிறைவுள்ளவராக்குகிறார் இயேசு. நிறைவுள்ளவராக்குதல் என்பது பலி செலுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுதலைக் குறிக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில், மாற்கு நற்செய்தியில் உள்ள திருவெளிப்பாட்டு நடைப் பகுதியை உலக இறுதியை வாசிக்கின்றோம். உலக இறுதியின்போது வான்வெளியில் நிகழும் மாற்றங்களையும், மானிட மகனின் வருகையையும் முன்மொழிகின்ற இயேசு (மாற்கு), ' விண்ணும் மண்ணும் ஒழிந்து போகும். என் வார்த்தைகள் ஒழிய மாட்டா' என்கிறார். மேலும், அந்த நாள் வானகத் தந்தைக்கு மட்டுமே தெரியும்.

ஆக, தொடங்கியது அனைத்தும் முடிவுறும் என்றும், இறுதியில் நல்லோர் வெல்வர் என்றும், இயேசுவின் வழியாக நாம் அனைவரும் நிறைவுள்ளவராக்கப்படுவோம் என்றும் முன்மொழிகின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

உலகம் அழிந்தாலும், வான்கோள்கள் அதிர்ந்தாலும், நல்லோர்-தீயோர் எனப் பிரிக்கப்பட்டாலும், நமக்கு இவை அனைத்தும் அச்சம் தந்தாலும், ' நான் அசைவுறேன்!' எனத் துணிவோடும் உறுதிபடவும் கூறுகின்றார் பதிலுரைப் பாடல் ஆசிரியர் (திபா 16). ' ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன். அவர் என் வலப் பக்கம் உள்ளார். எனவே, நான் அசைவுறேன்' என்கிறார் பாடல் ஆசிரியர். ஆண்டவரைத் தன் கண்முன் வைத்துள்ளவர்கள் அசைவுறுவதில்லை.

இன்றைய வாசகங்கள் நமக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றன:

(அ) டிவோஷன். தமிழில், ' அர்ப்பணம்' என்று சொல்லலாம். ஆண்டவருக்கும், வாழ்க்கைக்கும், நம் அழைப்புக்கும் நாம் கொடுக்கும் பதிலிறுப்பே டிவோஷன். தானியேல் காலத்தில் சிலர் தங்கள் ஆண்டவராகிய கடவுளின் கட்டளைகளைப் பற்றிக்கொண்டனர். அப்படி அவர்கள் பற்றிக்கொண்டதே அர்ப்பணம்.

(ஆ) டெடிகேஷன். ' அர்ப்பணம்' என்பது ' உணர்வு' என்றால், ' ஈடுபாடு' என்பது செயல். எடுத்துக்காட்டாக, நான் இறைவனுக்கு அர்ப்பணமாக இருந்தால், அவர்சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டுவேன். குடும்ப உறவில், கணவன் மனைவியிடமும் மனைவி கணவரிடமும் அர்ப்பணத்தோடு இருந்தால், அவர்கள் தாங்கள் செய்கின்ற அனைத்திலும் ஈடுபாட்டுடன் விளங்குவர்.

(இ) டிஸிப்லின். ' ஒழுக்கம்' என்று இதை மொழிபெயர்க்கலாம். தீர்க்கமான முடிவும் அந்த முடிவைச் செயல்படுத்துதலுமே ஒழுக்கம். ஒழுக்கம் என்பது அறநெறி சார்ந்த ஒன்று அல்ல. மாறாக, அது அன்றாட வாழ்வியல் சார்ந்தது.

அர்ப்பணம், ஈடுபாடு, ஒழுக்கம் என்னும் அணிகலன்கள் நம்மை அலங்கரித்தால், நாம் எச்சூழலிலும் அசைவுறாமல் நிலைத்து நிற்க முடியும்.

இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 16), வறியோர்க்கான உலக நாள் கருத்துருவோடு இணைந்து செல்கிறது. ' இறைவா, என்னைக் காத்தருளும். உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்' எனப் பாடுகிறார் ஆசிரியர். ஆசிரியரின் இச்சொற்கள் அவருடைய கையறுநிலையையும், இறைவன்மேல் கொண்டுள்ள சார்புநிலையையும் எடுத்துரைக்கின்றன.

சார்பு நிலையை உணர்பவர்கள் ஏழைகள். வறுமை அல்லது ஏழ்மை அல்லது வறிய நிலை என்பது இடம், நேரம், நபர், மதிப்பீடு சார்ந்தது. எடுத்துக்காட்டாக, ரூபாய் 1 இலட்சம் மாத ஊதியம் பெறுகிற ஒருவர் நம் ஊரில் செல்வர் எனக் கருதப்படுவார். ஆனால், இதே வருமானம் உடைய ஒருவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வருமானம் போதாதவர் எனக் கருதப்படுவார். வறுமை என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. ஆன்மிக வறுமை, அறிவு வறுமை, உணர்வு வறுமை என நாம் பல நிலைகளில் வறியோர்களாகவே இருக்கிறோம்.

ஆக, ' வறிய நிலை' என்பது ' வெறுமை நிலை.' இந்த வெறுமையை நிரப்ப வல்லவர் ஆண்டராகிய கடவுள் ஒருவரே. கடவுள்மேலும் ஒருவர் மற்றவர்மேலும் சார்புநிலையை வளர்த்துக்கொள்ளும் நாம், திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து, ' நான் அசைவுறேன்!' எனச் சொல்வோம்!

இன்றைய நாளில் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோமை நகரில் ஏறக்குறைய 1300 ஏழை மக்களோடு உணவருந்துகிறார். உரோமையில் ஏழ்மையா? என்னும் கேள்வி உடனே எழலாம். ஏழ்மை என்பது போதாத நிலை. ' இதுவே போதும் என்றால் அது செல்வம்! எதுவும் போதாது என்றால் அது வறுமை!' நாமும் ஏதாவது ஒரு நிலையில் வறியவர் ஒருவருக்கு நம் உதவிக்கரம் நீட்டுவோம்!

நான் அசைவுறேன் ஏனெனில், நான் கடவுள்மேல் சாய்ந்துள்ளேன்!
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
பொதுக்காலம் 33ஆம் வாரம் - 17 நவம்பர் 2024


" மானிட மகன் கதவை நெருங்கி வந்துவிட்டார்"
நிகழ்வு: " அம்மா! உங்களுக்கு இயேசுவின் இரண்டாம் வருகையில் நம்பிக்கை இருக்கிறதா? இப்படியொரு கேள்வியைக் கேட்டுவிட்டுத் தன் அம்மாவின் பதிலுக்காகக் காத்திருந்தாள் பத்து வயது ஜெசி.

" இயேசு மீண்டும் வருவார் என்பதில் எனக்கு முழுநம்பிக்கை இருக்கின்றது. அது சரி, நீ ஏன் திடீரென்று என்னிடத்தில் இப்படியொரு கேள்வியைக் கேட்கின்றாய்?" என்று ஜெசியின் அம்மா அவளைப் பார்த்துக் கேட்டாள். " இன்றைய " ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில், இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி மறைக்கல்வி ஆசிரியர் கற்பித்தார். அதனால்தான் நான் இந்தக் கேள்வியை உங்களிடத்தில் கேட்கின்றேன்" என்று சொல்லிவிட்டு, ஜெசி தன் அம்மாவிடம், " இன்றைக்கு இயேசு வருவாரா?" என்றாள். " ஆமாம்" என்று தன் அம்மாவிடமிருந்து பதில் வந்தும், " இன்னும் சிறிது நேரத்தில் இயேசு வருவாரா?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள் ஜெசி.

அதற்கும் ஜெசியின் அம்மா, " ஆமாம்" என்றதும், " அப்படியானால், உடனே நீங்கள் என்னுடைய தலையை வாரி, எனக்குப் பொட்டு வைத்துப் பூச் சூடுவீர்களா?" என்றாள் ஜெசி. " ஏன்?" என்று ஜெசியின் அம்மா அவளிடம் கண்கள் விரியக் கேட்டபொழுது, ஜெசி மிகவும் தீர்க்கமான குரலில், " அப்பொழுதுதானே, இயேசு மீண்டுமாக வருகின்றபோது, அவரை எதிர்கொள்வதற்கு நான் தயாராக இருக்க முடியும்!" என்றாள்.

டான் ஹுசாங் (Don Hussong) என்ற எழுத்தாளர் சொல்லக்கூடிய இந்த நிகழ்வு, நாம் ஒவ்வொருவரும் இயேசு மீண்டுமாக வருகின்றபோது, அவரை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. பொதுக்காலத்தின் முப்பத்து மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய மானிடமகனுடைய வருகைக்காக நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்ற செய்தியை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

அமைதிக்கு முன்பு புயல்
" புயலுக்குப் பின்னே அமைதி" என்று நாம் சொல்லக் கேட்டிருப்போம். இதையே நாம் வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், " அமைதிக்கு முன்பு புயல்" என்று சொல்லலாம். " அமைதிக்கு முன்பு புயல்" என்ற இந்தச் சொல்லாடலை இயேசுவின் இரண்டாம் வருகையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். ஆம், அமைதி என்ற இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன்பு, புயல் என்ற இதுவரை இருந்திராத துன்பக் காலம் வரும். அத்துன்பக் காலத்தில், இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்வது போல், கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமாயிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.

வானில் தோன்றும் இந்த அடையாளங்கள் எல்லாம், ஒருவகையில் நமக்கு அச்சமூட்டுபவையாக, திகிலூட்டுபவையாக இருந்தாலும், இன்னொரு வகையில் இவையெல்லாம் இயேசுவின் இரண்டாம் வருகையை வெளிப்படுத்தும் அடையாளங்கள் ஆகும். ஆகையால், அமைதி என்ற இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன்பாகப் புயல் என்ற துன்பங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியதைத் தவிர்க்க முடியாது.

கால்மனை ஆக்கப்படுவர்
மானிட மகனுடைய வருகைக்கு முன்பு இதுவரை இருந்திராத துன்பக் காலம் இருக்கும் என்று இன்றைய இறைவார்த்தை எடுத்துரைக்கும் அதே வேளையில், அவருடைய பகைவர் கால்மனை ஆக்கப்படுவர் என்ற மற்றொரு செய்தியையும் எடுத்துரைக்கின்றது.

" பகைவர் கால்மனை ஆக்கப்படுவர்" என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்தாளப்படுகின்ற வார்த்தைகள், திருப்பாடல் 110:1 இல் இடம்பெறுகின்றன. மெசியாவைக் குறித்துத் தாவீது மன்னர் பாடும் இப்பாடல், மெசியாவின் பகைவர்கள் அனைவரும் வீழ்த்தப்பட்டுக் கால்மனையாக்கப்படுவர் என்ற செய்தியைத் தருகின்றது. இங்கே குறிப்பிடப்படும் மானிட மகனின் பகைவர்கள் என்பவர்களை அவர்மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள், அவரைப் புறக்கணித்தவர்கள், அவருடைய விழுமியங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் ஆகியோரோடு நாம் தொடர்புபடுத்திப் பார்த்துக் கொள்ளலாம். இத்தகையயோர் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவர் என்பது உறுதி.

வாழ்வின் நூலில் பெயர் பொறிக்கப்பட்டோர் மீட்கப்படுவர்
மானிட மகனுடைய வருகைக்கு முன்பு அவருடைய பகைவர் கால்மனை ஆக்கப்படுவர் எனில், அவருடைய வருகையின்போது அவர்மீது நம்பிக்கை கொண்டோர் அல்லது வாழ்வின் நூலில் இடம்பெற்றோர் மீட்கப்படுவர். இதைத் தானியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது.

வாழ்வின் நூலைப் பற்றிய குறிப்பு திருவெளிப்பாட்டில் இடம்பெறுகின்றது. இந்நூலில் இறந்தோரின் செயல்கள் எழுதப்பட்டிருந்ததால், அவர்களுக்கு அவர்களுடைய செயல்களுக்கேற்பத் தீர்ப்பு வழங்கப்பட்டது என்று அங்கே சொல்லப்படுகின்றது (திவெ 20:12). இன்றைய முதல் வாசகம், வாழ்வோரின் நூலில் பெயர் பொறிக்கப்படுவர் மீட்கப்படுவர் என்றும், அந்த வாழ்வின் நூலில் இடம்பெறும் ஞானிகளும், பலரை நல்வழிக்குக் கொண்டுவந்தோரும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசுவர் என்கிறது.

வாழ்வின் நூலில் இடம்பெறும் " ஞானிகளை" ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு அவர் வழியில் நடந்தவர்களோடு ஒப்பிடலாம். இவர்கள் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு, நல்லன செய்ததால் வாழ்வு பெறுகின்றார்கள் (யோவா 5:29). ஆகையால், நாம் வாழ்வின் நூலில் இடம்பெறுவதற்கும், அதனால் வாழ்வு பெறுவதற்கும் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழ்வது மிகவும் இன்றியமையாதது.

இங்கே நாம் ஒரு முக்கியமான செய்தியைத் தெரிந்துகொள்ள வேண்டும். அது என்னவெனில், மானிடமகன் வரும் நாளையும் வேளையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது என்பதுதான். இன்றைக்குப் பலர் " மானிட மகன் இதோ வந்துவிட்டார்" , அதோ வந்துவிட்டார்" என்று சொல்லி மக்களைத் திசை திருப்பிக் கொண்டிருக்கின்றார்கள். பவுல் எபேசு நகர் மூப்பர்களிடம் சொன்னதுபோன்று, கொடிய ஓநாய்கள் போன்ற போலி இறைவாக்கினர்கள் இறைமக்கள் நடுவில் நுழைந்து மந்தையைச் சிதறடிக்கின்றனர்; மந்தையைக் கடுமையாகத் தாக்குகின்றனர் (திப 20:29). இப்போலி இறைவாக்கினர்களிடமிருந்து இறைமக்களைக் காத்து, அவர்களை நல்வழிக்கு இட்டுச் சென்று, நாமும் நல்வழியில் நடப்பது அவசியமாக இருக்கின்றது. இவ்வாறு செய்தால், நாம் வாழ்வின் நூலில் இடம்பெற்று, முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசுவோம் என்பது உறுதி. ஆதலால், நாம் மானிடமகன்மீது ஆழமான நம்பிக்கை வைத்து, நாமும் நல்வழியில் நடந்து, மற்றவரையும் நல்வழிப்படுத்தி, என்றும் ஒளிவீசும் விண்மீன்கள் ஆவோம்.

சிந்தனை
" உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதைப் பாதுகாப்பாயாக" (1 திமொ 6:20) என்று பவுல் திமொத்தேயுக்குக் கூறுவார். எனவே, நாம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்களை நல்வழிக்குக் கொண்டு வந்து, நாமும் ஆண்டவர்மீதுகொண்ட நம்பிக்கையின் மூலம் நல்வழியில் நடந்து, வாழ்வின் நூலில் இடம்பெறுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்
 
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
இறுதித் தீர்ப்பு

இறுதித் தீர்ப்பு என்று சொன்னதும் நமக்கு மரண பயம்தான் ஏற்படும். இறுதித் தீர்ப்பு என்பது இயேசுவை நாம் முகமுகமாக தரிசிப்பதே ஆகும். மரண பயத்தை அகற்றிவிட்டால் இறுதித் தீர்ப்பைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

அறுவை சிகிச்சை அறைக்கு அடுத்த அறையில் 48 வயது மதிக்கத்தக்க நோயாளி ஒருவர் இருந்தார். அவரது கையில் இரத்தம் ஏறிக் கொண்டிருந்தது. மூக்கின் வழியாய் நன்றாய் சுவாசிக்க பிராணவாயு கொடுக்கப்பட்டது. உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கை யாருக்குமே இல்லை. சிறிது நேரத்தில் கண் விழித்த அவர், உதவிக்கு பக்கத்தில் இருந்த நர்ஸைப் பார்த்து இதையெல்லாம் எடுத்துவிடுங்கள் என்றார். ஆனால் அந்த நர்ஸ் அவரிடம், இவற்றை எடுத்துவிட்டால் நீங்கள் இறந்துவிடுவீர்கள், நான் அந்த காரியத்தை செய்ய மாட்டேன் என்று மறுத்தார். அதற்கு அந்தப் பெரியவர், ஒரு மணி நேரத்துக்கு முன்னே நான் இயேசுவைக் காணச் செல்வது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? என்று கேட்டாராம்.

இந்த பெரியவர், தனது இறப்பை, இயேசுவை நேரடியாக காண்பதற்கு ஒரு வாய்ப்பாக எண்ணினார். அதனால்தான் அவரிடம் மரண பயமே இல்லை. இறுதி என்னும் சொல் நமது வாழ்வில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. திருவிழாவின் இறுதி நாளில்தான் மிக சிறப்பான நிகழ்ச்சிகள் அரங்கேறும். மாணவன் தனது இறுதித் தேர்வைத் தான் நன்றாக எழுத வேண்டும் என்ற திட்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். விளையாட்டு வீரன் தனது இறுதியாட்டத்தில்தான் தனது திறமைகள் அத்தனையும் பயன்படுத்துகிறான். ஏன்? மனிதனின் இறுதி ஊர்வலத்தில்தான் நீண்ட அமைதி நிலவுகிறது.

இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும் இறுதித் தீர்ப்பு சீக்கிரமாக நம்மை வந்து சேரும் என்றும், நமது இறப்பிற்குப் பின் நாம் அனைவருமே தீர்ப்புக்கு உள்ளாக்கப்படுவோம் என்றும் கூறுகின்றன. மரணத்தை அடுத்தே இறுதித் தீர்ப்பு வரும். எனவே மரண பயத்தை அகற்றி நல்மரணமடைய நாம் இப்போதிருந்தே நற்காரியங்கள் பல செய்ய வேண்டும்.

மரணத்தை எப்படிப் புரிந்து கொள்வது! இந்த உலகிற்கு வழிப்போக்கர்களாக வந்த நாம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிப் போக வேண்டும். கல்லறைத் தோட்டத்திலே இருந்த ஒரு கல்லறையில் நான் ஒரு வழிப்போக்கன் என்று எழுதியிருந்தது. இவர் தமது வாழ்வையும், மரணத்தையும் புரிந்து கொண்டவர். முதலில் நாம் நமது சிந்தனையைச் சீர்படுத்த வேண்டும். உலகத்தில் நான் ஒரு வழிப்போக்கன் என்ற சிந்தனை வேண்டும்.

நான் ஒரு பயணி . நாம் அனைவரும் பயணம் செய்து கொண்டே இருக்கிறோம். சிலர் சின்ன வயதிலேயே தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்வதுண்டு. சிலருக்கு 55 வயதில் பயணம் முடியும். வேறு சிலருக்கு 90ம் 100மாக வாழ்நாள் அமையும். எத்தனை நாள் வாழ்கிறோம் என்பது இங்கு முக்கியமல்ல. எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.

நாம் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களல்ல என்றே நமது வாழ்நாளைக் கழிக்க வேண்டும் (பிலி 3:20). இதைத்தான் இயேசு யோவா. 18:38-இல் அருமையாகக் கூறுகிறார்: என் அரசு இவ்வுலக அரசைப் போன்றதல்ல என்று. கிறிஸ்தவர்களாகிய நாம், நமதாண்டவர் இயேசுவை நேரடியாகச் சந்திக்க நம்மை நாமே தயாரிக்க வேண்டும். நாம் கிறிஸ்துவுக்கே சொந்தம். ஒரு நாள் அழிந்து போகும் இந்த உலகிற்குச் சொந்தமல்ல. வள்ளுவர் இதைத்தான் பற்றற்றது பற்றுக என்று இந்த உலகைப் பற்றிக் கூறுகிறார்.

சிலுவையில் தொங்கி, நம்மையெல்லாம் மீட்ட அதே இறைவன்தான் நற்கருணை வழியாக நம்முள்ளத்தில் எழுந்து வரவிருக்கிறார். மரணம் என்பது வானக வாழ்வுக்கு முகவுரை என்பதை உணர்ந்து மரண பயத்தை அகற்றி, இறுதித் தீர்ப்பை எதிர்கொள்ள அவரிடம் திடன் கேட்போம்.
 
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
வாழ ஆசை!

நமது எதிர்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ள நம் எல்லாருக்குமே ஆசை உண்டு! நமது எதிர்காலத்தைப் பற்றிய நற்செய்தி ஒன்று இன்று நமக்கு அறிவிக்கப்படுகின்றது : "இயேசு மீண்டும் வருவார். அவர் வரும்போது தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்." நம்மை தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாக மாற்றப்போவது எது? இயேசுவின் விருப்பம். இயேசு அவருக்குப் பிரியமானவர்களைத் தேர்ந்தெடுப்பார். இயேசு யோவான் 15:16-இல் "நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்" என்கின்றார். யாரைக் கடவுள் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ள விரும்புகின்றாரோ அவர்களை இயேசு தேர்ந்தெடுத்து, அவர்களது பாவங்களையெல்லாம் மன்னித்து, அவர்களைப் புனிதராக்கி, அவர்களைக் கடவுளுக்கு ஏற்புடையராக்குவார் (எபே 1:3-10).

கடவுள் யாருமே அழிந்துபோகக்கூடாது என்று விரும்புகின்றவர் (யோவா 17:12). அனைவரையும் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ள அவர் ஆசைப்படுபவர். அவரது ஆசையோடு ஒத்துழைப்பவர்கள் அத்தனைபேரும் அழியா வாழ்வைப் பெறுவர்.

ஒரு மனிதன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான்!

இளகிய மனம் கொண்ட இறைவன் அவன் முன்னால் தோன்றி, பக்தா! உன் தவத்தை மெச்சினோம். உனக்கு என்ன வேண்டும்? என்றார். இறைவா இரண்டே இரண்டு வரங்கள் வேண்டும். இரண்டே இரண்டு வரங்கள்தானே! தந்தோம். என்ன வரங்கள்? ஒன்று, நான் தூங்கும்போது சாகும் வரம் வேண்டும். சரி, இன்னொன்று? நமட்டுச் சிரிப்புடன் சொன்னான் பக்தன் : நான் தூங்காமல் வாழும் வரம் வேண்டும்.

மனிதனுக்கு இந்த உலகத்திலே உயிரோடு வாழ எவ்வளவு ஆசை பாருங்கள்! இம்மையில் நாம் வாழ ஆசைப்படும் அளவுக்கு மறுமையிலும் நாம் வாழ ஆசைப்படுவது நல்லது! நாம் இயேசுவால் | தேர்ந்துகொள்ளப்பட்டால் நமக்கு முடிவில்லா காலத்திற்கும் ஒளி வீசும் வாழ்வு கிடைக்கும் (முதல் வாசகம்). | தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாக மாற நாம் செய்ய வேண்டியது என்ன? இயேசு நம்மைத் தேடிவரும்போது அவருடைய விருப்பத்தோடு, மரியாவைப் போன்று (லூக் 1:38), திருத்தூதர்களைப் போன்று (லூக் 5:11) ஒத்துழைக்கவேண்டும்.

மேலும் அறிவோம் :

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும் (குறள் : 367).

பொருள் : ஆசை உண்டாகாதபடி ஒருவன் அதனை முழுமையாக அகற்றிவிட்டால், எப்போதும் அழியாமல் நிலைத்திருக்கும் ஆற்றல் பெறுவான்!
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை உடனடியாக திகழப் போகிறது என்பதை வலியுறுத்தி, "இயேசு வருகிறார்" என்ற தலைப்பைத் தாங்கிய துண்டுப் பிரசுரங்களைப் பெந்தகோஸ்து சபையினர் ஒரு பேருந்து நடத்துனரிடம் கொடுத்தார். அவரோ, "யார் வந்தாலும் வரட்டும்; ஆனால் மரியாதையாய் பயணச் சீட்டு வாங்கிய பிறகே பேருந்தில் பயணம் செய்ய முடியும்" என்றார்.

பேருந்தில் பயணம் செய்யப் பயணச்சீட்டுத் தேவைப்படுவது போல, விண்ணகப் பேருந்தில் பயணம் செய்யவும் பயணச் சீட்டுத் தேவை. அப்பயணச் சீட்டு: நம்பிக்கையும் அன்புமாகும். ஆனால் காலம் செல்லச் செல்ல இந்த இரண்டு தற்பண்புகளும் மக்களிடம் இல்லாமற்போகும் அல்லது குறைந்து போகும் என்று கிறிஸ்துவே முன்னறிவித்துள்ளார், "மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையை காண்டாரோ?" (லூக் 18:8). "நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும்" (மத் 24:12).

உலகம் எப்போது எப்படி முடியும் என்று பலர் இன்று கேட்கின்றனர், வாழ்க்கையின் உண்மைத் தன்மையை (நிலையாமையை) ஆராயாதவர்கள், கோடிக்கணக்கான எண்ணங்களை எண்ணுவா் என்கிறார் வள்ளுவர்.

ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல (குறள் 337)

இருப்பினும் திருவழிபாட்டு ஆண்டின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் நமக்கு இன்றைய திருவழிபாடு உலக முடிவைப் பற்றியும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியும் எடுத்துரைக்கிறது,

இன்றைய முதல் வாசகமாகிய தானியேல் நூலில் சொல்லப்பட்டுள்ள வைகளும், நற்செய்தியில் கிறிஸ்து கூறியுள்ளவைகளும் திருவெளிப்பாடு இலக்கிய வகையைச் சார்ந்தவை. அவற்றைச் சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ளாமல், அவற்றில் பொதிந்துள்ள உண்மைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும், அவ்வுண்மைகளில் சில பின்வருமாறு: "இவ்வுலகு இப்போது இருப்பதுபோல் நெடுநாள் இராது" (1 கொரி 7:21), இவ்வுலகம் ஒரு முடிவுக்கு வரும். அதற்குமுன் கிறிஸ்துவின் சீடர்கள் துன்புறுத்தப்படுவர், போலி இறைவாக்கினர்கள் தோன்றி மக்களை ஏமாற்றுவர், இயற்கையில் அச்சத்துக்குரிய மாற்றங்கள் பல நிகழும். ஆனால் கிறிஸ்துவின் சீடர்கள் அச்சமடையக்கூடாது. ஏனெனில், எல்லாம் கடவுளின் கையில்தான் உள்ளது. கிறிஸ்துவே வரலாற்றின் நாயகன். உலகின் கதியையும் மனிதரின் கதியையும் நிர்மாணிப்பவர் அவரே. அவர் மீண்டும் வருவார்: நீதி வழங்குவார், புதிய வானகமும் புதிய வையகமும் மலரும் கிறிஸ்துவின் சீடர்கள் நம்பிக்கை இழுக்கலாகாது, "இறுதிவரை உறுதியாய் இருப்பவர் மீட்புப் பெறுவர்" (மத் 24:13).

கிறிஸ்து தமது இரண்டாம் வருகையைக் காலம் தாழ்த்துவதாக நாம் கருதலாம். ஆனால், பேதுரு கூறுகிறார்: ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் உள்ளது (2 பேது 3:8) கிறிஸ்து இன்னும் வராததால் அவர் வர மாட்டார் என்று நினைப்பது அபத்தமாகும். திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "விண்ணகமே நமது தாய்நாடு. அங்கிருந்து கிறிஸ்து வருவார் எனக் காத்திருக்கின்றோம்* (பிலி 3:20). கோடைகாலத்தில் மரங்களின் இலைகள் உதிர்ந்த பிறகு புதிய தளிர்கள் தோன்றுவது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியானது கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. இதுதான் அத்திமரம் உவமை உணர்த்தும் உண்மை .

உலகம் எப்பொழுது முடியும் என்பது நமக்குத் தெரியாது என்று கிறிஸ்து கூறுவதன் நோக்கம்: உலக முடிவைப்பற்றித் தெரிவது நமக்கு நன்மை பயக்காது. நாம் எப்போதும் விழிப்புடன் இருந்து நமது கடமையைச் செய்ய வேண்டும்,

வாக்குரிமை இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இல்லையென்றால், நாம் தேர்தலின்போது வாக்களிக்க முடியாது. அவ்வாறே "வாழ்வு நுலில்" நமது பெயர் இல்லையென்றால் நம் மீட்படைய முடியாது. "நூலில் யார்யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்" (தானி 12:1) என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. கிறிஸ்து தம் சீடர்களிடம், "உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்" (லூக் 10:20) என்கிறார். "வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாதோர் தெருப்பு ஏரியில் எறியப்பட்டார்கள்" (திவெ 20:15) என்று திருவெளிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது,

வாழ்வு நூலில் இடம்பெற வேண்டுமென்றால் , நம்மிடம் நம்பிக்கையும் அன்பும் செயல்வடிவம் பெற வேண்டும். கிறிஸ்தவ வாழ்வு என்பது " அன்பின் வழியாகச் செயலாற்றும் நம்பிக்கை " (கலா 5:3). "அன்பு செய்பவர்கள் சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளனர்" (1 யோவா 3:10) நமது இறுதித் தீர்ப்பு அன்பின் அடிப்படையில் அமையும் (மத் 25:34-40),

ஒரு காலத்தில் அன்புக்கு அழுத்தம் கொடுத்து நீதியைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. தற்போது நீதிக்கு அழுத்தம் கொடுத்து அன்பு ஓரம் கட்டப்பட்டுள்ளது, நீதி இருக்கும் இடத்தில் அன்பு இல்லாமற்போனாலும், அன்பு உள்ள இடத்தில் நீதி கட்டாயம் இருக்கும். ஏனெனில் நீதி என்பது குறைந்த அளவு அன்பு என்பதை உணர்க, அன்பைச் செயலில் காட்ட வேண்டும் (1 யோவா 3:18). அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக, நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும் (1 யோவா 4:18)

அன்பில் நாம் வாழும்போது உலக முடிவைப்பற்றி நாம் அச்சம் அடையத் தேவையில்லை . உலக முடிவு என்பது படைப்பின் அழிவாக இருக்காது, மாறாக அதன் நிறைவாக இருக்கும். கிறிஸ்துவின் முதல் வருகையை ஏற்று, அவரது இரண்டாம் வருகையை எதிர்பார்த்துள்ள நாம், வாரும் ஆண்டவராகிய இயேசுவே வாரும்' (திவெ 22:20) என்ற மன்றாட்டுடன் இத்திருவழிபாட்டு ஆண்டை நிறைவு செய்வோம்.
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
ஞானம்‌ இங்கே விற்கப்படுகிறது

ஆங்கில மேதை செஸ்டர்டன்‌ ஞாபக மறதி உள்ளவர்‌. ஒரு மயம்‌ அவர்‌ ரயிலில்‌ பயணம்‌ செய்து கொண்டிருந்த போது டிக்கெட்‌ பரிசோதகர்‌ வந்து அவரது பயணச்‌ சீட்டைக்‌ கேட்டார்‌. அங்குமிங்கும்‌ தேடிப்பார்த்த பின்னும்‌ அது கிடைத்தபாடில்லை. பெரிய மனிதரைத்‌ தொந்தரவு செய்ய விரும்பாத பரிசோதகர்‌, " சரி, தேடிப்பார்த்து வையுங்கள்‌. நான்‌ அடுத்த பெட்டிக்குப்‌ போய்விட்டு வருகிறேன்‌ " என்று சொல்லிப்‌ புறப்பட்டார்‌. அதற்கு செஸ்டர்டன்‌ " எனக்கு எண்‌ பயணச்‌ சீட்டை எங்கே வைத்தேன்‌ என்பது மறந்து போய்விட்டது கூட பெரிய பிரச்சனை இல்லை. நான்‌ எந்த ஊருக்குப்‌ போய்‌ சேர வேண்டும்‌ என்பதே மறந்துவிட்டதே! அதுதான்‌ இப்போதைய பெரிய பிரச்சனை" என்றாராம்‌.

வாழ்வின்‌ நோக்கம்‌ என்ன? வாழ்க்கைப்‌ பயணத்தில்‌ நம்‌ இலக்கு என்ன? என்பதையே நம்மில்‌ எத்தனை பேர்‌ மறந்து வாழ்கிறோம்‌!

கிரேக்க நாட்டுத்‌ தத்துவ ஞானி தியோஜினஸ்‌. ஏத்தன்ஸ்‌ மாநகரத்தின்‌ வீதியில்‌ ஒரு நாள்‌ கூடாரம்‌ அமைத்து கடை வைத்தார்‌. அந்தக்‌ தடையின்முன்‌ ஒரு பெரிய விளம்பரப்‌ பலகையைப்‌ பொருத்தியிருந்தார்‌. " ஞானம்‌ இங்கே விற்கப்படுகிறது" என்ற அறிவிப்பு அது. அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த பணக்காரன்‌ ஒருவன்‌ அந்த விளம்பரத்தைப்‌ படித்துவிட்டு ஏளனமாகச்‌ சிரித்தான்‌. உடனே தன்‌ வேலையாளை அழைத்து மூன்று நாணயத்தைக்‌ கொடுத்து கொஞ்சம்‌ ஞானம்‌ வாங்கிவருமாறு பணித்தான்‌. வேலையாள்‌ ஞானியிடம்‌ சென்று பணத்தைக்‌ கொடுத்து ஞானத்தைக்‌ கேட்டான்‌. பணத்தைத்‌ தன்‌ பையில்‌ போட்டுக்‌ கொண்ட ஞானி ஒரு காகிதத்‌ துண்டில்‌ பின்வருமாறு எழுதிக்‌ கொடுத்தான்‌: " நீ எதைச்‌ செய்தாலும்‌ உன்‌ கண்‌ முன்பாக இறுதி முடிவைக்‌ கொண்டிரு.

இந்த அறிவுரை அடங்கிய காகிதத்‌ துண்டைப்‌ பெற்றுக்‌ கொண்ட அந்தப்‌ பணக்காரன்‌ தொடக்கத்தில்‌ அதை வேடிக்கையாக, விளையாட்டாக நினைத்தாலும்‌, காலப்போக்கில்‌ அதில்‌ உண்மையிலேயே ஞானம்‌ இருப்பதை உணர்ந்து அவ்வார்த்தைகளில்‌ அடங்கியுள்ள உண்மையை, தான்‌ மட்டுமன்றி மற்றவர்களும்‌ அறிந்து உணர்ந்து பயனடைய வேண்டுமென்பதற்காக அதனைத்‌ தங்கத்‌ தகட்டில்‌ பொறித்துக்‌ கதவு நிலையில்‌ மாட்டி வைத்தானாம்‌.

தலையில்‌ வழுக்கை. தடவிப்‌ பார்த்துச்‌ சிரித்துக்‌ கொண்டே ஒருவர்‌ சொன்னார்‌, " உதிர்ந்து விழும்‌ ஒவ்வொரு முடியும்‌ இன்று இறுதிச்‌ சந்திப்பு நெருங்கி வருகிறது என்பதை நினைவூட்டுகிறது'" என்று. காலத்தின்‌ அறிகுறிகளை அறிந்து உணர்ந்து அதற்கு ஏற்ற முறையில்‌ வாழ்வைச்‌ சீர்படுத்திக்‌ கொள்ள நினைப்பவர்‌ அவர்‌. எதிர்காலம்‌ பற்றிய எதுவுமே நிச்சயமில்லை. ஆனால்‌ ஒன்று மட்டும்‌ உறுதி. இறுதியாக ஒருநாள்‌ இறைவனைச்‌ சந்திப்போம்‌. அது தனி மனித இறப்பிலோ உலக முடிவிலோ, தனித்‌ தீர்வையிலோ பொதுத்‌ தீர்வையிலோ நடக்கும்‌. அந்தச்‌ சந்திப்பு ஆனந்தம்‌ தரும்‌ ஒன்றாக இருக்குமா, இல்லை அச்சுறுத்துகின்ற ஒன்றாக இருக்குமா - அது நாம்‌ இன்று வாழும்‌ வாழ்க்கையைப்‌ பொருத்தது.

திருடன்‌ எப்போது வருவான்‌ என்று யாருக்குத்‌ தெரியும்‌? விபத்து எப்போது நிகழும்‌ என்று யாருக்குத்‌ தெரியும்‌? இறப்பு எப்போது வரும்‌ என்று யாருக்குத்‌ தெரியும்‌?

ஆண்டவரின்‌ நாள்‌ பற்றி ஆமோஸ்‌ இறைவாக்கினர்‌ குறிப்பிடுவார்‌. " அந்த நாள்‌ சிங்கத்திடமிருந்து தப்பியோடிய ஒருவனைக்‌ கரடி ஒன்று எதிர்கொண்டாற்போலும்‌. அவன்‌ தப்பியோடி வீட்டிற்குள்‌ நுழைந்து சுவரில்‌ கைவைத்துச்‌ சாய்ந்தபோது பாம்பு ஒன்று கடித்தார் போலும்‌ இருக்கும்‌" (ஆமோ. 5:19). அந்த நாள்‌ மனிதன்‌ எதிர்பாராத நாளாக இருக்கும்‌. " மண்ணுலகில்‌ மனிதர்‌ செய்யும்‌ தீமை பெருகுவதையும்‌ அவர்களின்‌ இதயச்‌ சிந்தனைகள்‌ எல்லாம்‌ நாள்‌ முழுவதும்‌ தீமையையே உருவாக்குவதையும்‌ கண்டார்‌. மண்ணுலகில்‌ மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர்‌ மனம்‌ வருந்தினார்‌. அவரது உள்ளம்‌ துயரமடைந்தது' (தொ. நூ. 6:5,6). விளைவு? நோவா காலத்துப்‌ பெருவெள்ளம்‌, பேரழிவு. அதுபோல அந்த நாள்‌ தெய்வ சினத்தின்‌ நாளாகக்கூட இருக்கும்‌.

இயேசுவும்‌ அந்த நாளைப்‌ பற்றிப்‌ பேசுவார்‌. " இதுபற்றி நீங்கள்‌ வியப்புற வேண்டாம்‌. காலம்‌ வருகிறது. அப்போது கல்லறைகளில்‌ உள்ளோர்‌ அனைவரும்‌ அவரது குரலைக்‌ கேட்டு வெளியே வருவர்‌. நல்லன செய்தோர்‌ வாழ்வு பெற உயிர்த்தெழுவர்‌. தீயன செய்தோர்‌ தண்டனைத்‌ தீர்ப்புப்‌ பெற உயிர்த்தெழுவர்‌" (யோ. 5:28-29).

இறைவன்‌ மாட்சியோடு வரும்போது " " இறந்து போய்‌ மண்புழுதியில்‌ உறங்குகிற அனைவருள்‌ பலர்‌ விழித்தெழுவர்‌. அவருள்‌ சிலர்‌ முடிவில்லா வாழ்வு பெறுவர்‌. வேறு சிலரோ வெட்கத்திற்கும்‌ முடிவில்லா இழிவுக்கும்‌ உள்ளாவர்‌" " என்று முதல்‌ வாசகத்தில்‌ முழங்கும்‌ தானியேல்‌ (12:2). அதற்கு முன்‌ " நூலில்‌ யார்‌ யார்‌ பெயர்‌ எழுதப்பட்டுள்ளதோ அவர்கள்‌ அனைவரும்‌ மீட்கப்படுவார்கள்‌. (12:1) என்கிறார்‌. வாக்குரிமை இருந்தாலும்‌ வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ இல்லைவயன்றால்‌ தோதலின்போது எப்படி வாக்களிக்க மூடியும்‌?

இந்த நூல்‌ யாது? இதுதான்‌ யோவான்‌ கண்ட " வாழ்வின்‌ நூல்‌" (தி.வெ. 20:12). 72 சீடர்களும்‌ நற்செய்திப்‌ பணியில்‌ தங்கள்‌ சாதனைகளையெல்லாம்‌ பெருமிதத்துடன்‌ எடுத்துக்‌ கூறியபோது, " வானத்திலிருந்து சாத்தான்‌ மின்னலைப்‌ போல விழக்‌ கண்டேன்‌... ஆயினும்‌ தீய ஆவிகள்‌ உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம்‌. மாறாக உங்கள்‌ பெயர்கள்‌ விண்ணகத்தில்‌ எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்‌" (லூக்‌ 10: 12-20) என்று அறிவுறுத்துகிறார்‌ இயேசு.

சிதறிய விண்மீன்களையெல்லாம்‌ சேர்த்திணைத்து வானத்தில்‌ தன்‌ பெயரைக்‌ காண்பாராம்‌ சிறுமலர்‌ தெரசா. சிறு வயதிலேயே அவ்வளவு முதிர்ச்சி!

வாழ்வு நூலில்‌ எழுதியுள்ளது என்றால்‌ தேர்ந்து கொள்ளப்பட்டவர்களின்‌ கூட்டத்தில்‌ சேர்த்துக்‌ கொள்ளப்படுவது என்று பொருள்‌. அழைக்கப்பட்டவர்கள்‌ பலர்‌. தேர்ந்து கொள்ளப்பட்டவர்‌ சிலரே! இந்தப்‌ பின்னணியில்‌ யோவான்‌ கண்ட காட்சியைத்‌ தெளிவாகப்‌ புரிந்து கொள்ளலாம்‌ (தி.வெ. 20:12-15). இப்பொருளில்‌ தான்‌ சீனாய்‌ மலையடியில்‌ பொற்கன்றுக்‌ குட்டியை வழிபட்ட இஸ்ரயேல்‌ மக்களைக்‌ கண்டித்தார்‌. " எவன்‌ எனக்கு எதிராகப்‌ பாவம்‌ செய்தானோ, அவனையே என்‌ நூலிலிருந்து நீக்கி விடுவேன்‌" (வி.ப. 32:33).

வானகத்தில்‌ இருக்கும்‌ வாழ்வு நூலில்‌ நமது பெயரை இறைவன்‌ எழுதுவதாம்‌ எழுதாமல்‌ விடுவதும்‌ அவருடைய விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப அன்று, நமது வாழ்வில்‌ நாம்‌ எடுக்கும்‌ முடிவுகளைப்‌ பொருத்தது. எனவே இயேசுவின்‌ வருகையின்போது இறைவன்‌ அல்ல தீர்ப்பிடுவது, நாம்‌. நம்மையே தீர்ப்பிட்டுக்‌ கொள்கிறோம்‌ என்பதே உண்மை.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வோம்‌. இரக்கத்தின்‌ காலமான நிகழ்காலத்திலேயே இறைவனுக்கு ஏற்ற செயல்களில்‌ ஈடுபடுவோம்‌.

இயற்கையின்‌ ஒவ்வொரு நிகழ்வுக்கும்‌ ஒரு பொருள்‌ இருக்கிறது; ஏதோ ஒன்றுக்கு அடையாளமாகவும்‌ இருக்கிறது. மனிதன்‌ இந்த நிகழ்வுகளைக்‌ கொண்டே நடக்க இருப்பவற்றைக்‌ கணித்துத்‌ தன்னைக்‌ காத்துக்‌ கொள்ளவும்‌. தேவையான முன்னேற்பாடுகளைச்‌ செய்து கொள்ளவும்‌ பழகிக்‌ கொள்கிறான்‌. விண்ணும்‌ மண்ணும்‌ யாவும்‌ ஒழிந்து போனாலும்‌ அதை உருவாக்கிய இறைச்சக்தி, இறைவனின்‌ திருவார்த்தை நிலைத்து நிற்பது, மாற்றம்‌ கொணரும்‌ ஆற்றல்‌ மிக்கது!

தூக்கம்‌ கலைவதல்ல விழிப்பு. வாழ்க்கை தூங்கி விடாமல்‌ பார்த்துக்‌ கொள்வதே விழிப்புணர்வு
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
மறையுரை புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌ பெங்களூர்
பொதுக்காலம்‌ 33-ஆம்‌ ஞாயிறு
முதல்‌ வாசகப்‌ பின்னணி (தானி. 12:1-3)

இஸ்ராயேல்‌ மக்கள்‌ வாழ்ந்த நாட்டை அந்நிய நாட்டு மன்னர்கள்‌ தங்களுடையதாக்கிக்‌ கொண்டுயிருந்த நேரம்‌ மக்களை பலவாறு துன்பப்படுத்துகிறார்கள்‌. " ஒண்ட வந்த (ஒதுங்க) பிடாரி ஊர்‌ பிடாரியை விரட்டியதாம்‌" என்ற பழமொழி சொல்வார்கள்‌. அதே போல்தான்‌ நான்கு திசையிலும்‌ இருந்து வரும்‌ அரசர்கள்‌, தங்கள்‌ படை வலிமையால்‌ யூதர்களை அழித்தனர்‌. அனைத்து உடமைகளும்‌, பொருளுடைமைகளும்‌, செல்வங்களும்‌ கொள்ளையடிக்கப்பட்ட காலத்தில்‌ தான்‌, மக்கள்‌ மிகுந்த நம்பிக்கையோடு இறைவனின்‌ வருகைக்காக காத்திருக்கின்றனர்‌. இறைவன்‌ வந்து அராஜக மன்னர்களை வீழ்த்தி மீண்டும்‌ புது. வாழ்வு தருவார்‌ என்ற நம்பிக்கை தருவதாக அமைகிறது இவ்‌வாசகம்‌. இறைவன்‌ வரும்போது மூன்று நிகழ்வுகள்‌ நடக்கும்‌ என ஆசிரியர்‌ கூறுகின்றார்‌. 1. இறந்தோர்‌ உயிர்த்தெழுவர்‌. 2 இறுதி தீர்ப்பு 3 உலக முடிவு. எனவே உலக முடிவு என்பது துன்பம்‌, வேதனை, இடர்பாடு, நிம்மதியற்ற வாழ்வு முடிந்து, நல்லவர்கள்‌ ஒன்று சேர்க்கப்பட்டு அனைவரும்‌ மகிழ்வோடு வாழ்வோம்‌ என்ற நம்பிக்கை தரும்‌ வாசகமாக அமைந்துள்ளது.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (எபி. 10:11-14,18).

இந்த வாசகமானது நம்முடைய பாவங்களுக்காக மரித்து தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்த இயேசுவின்‌ பலியை விட சிறந்த பலி இல்லை என்று எடுத்துக்‌ கூறுகின்றது. அவரின்‌ இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு என மூன்றையும்‌ உள்ளடக்கியதுதான்‌ அவரது பலி. தம்‌ பகைவர்‌ தமக்கு கால்மனையாக்கப்படூம்‌ வரை காத்திருக்கிறார்‌ என்றால்‌ நம்‌ பாவங்களுக்கு முக்கிய காரணமான அகங்காரம்‌, ஆணவம்‌, சுயநலம்‌, பொறாமை, ஏலனம்‌ பேசுதல்‌, தரக்குறைவாக நினைத்தல்‌ போன்றவைதான்‌ கடவுளின்‌ பிள்ளைகளாகிய நம்‌ எதிரிகள்‌. நமக்கு எதிரிகளான இவை இயேசுவுக்கும்‌ எதிரிகளே. எனவே இரண்டாம்‌ வருகையின்‌ போது நம்முடைய சொந்த எதிரிகளை வீழ்த்தக்‌ கூடிய வல்லமை தருவார்‌ என்ற உயர்ந்த விசுவாசத்தை தருவதாக அமைகின்றது.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி (மாற்கு 13:24:32)

பதின்மூன்றாம்‌ பிரிவின்‌ தொடக்கத்திலே (13:1,2) இயேசு எருசலேம்‌ கோவிலின்‌ அழிவு பற்றி முன்னறிவிக்கின்றார்‌. உடனே சீடர்கள்‌ அவரிடம்‌ சில கேள்விகள்‌ கேட்கின்றனர்‌:
1. நீர்‌ கூறியவை எப்போது நிகழும்‌?
2. இவை அனைத்தும்‌ நிறைவேறும்‌ காலத்திற்கான அறிகுறி என்ன? (13:4)

இந்த இரண்டு கேள்விக்கான பதிலைத்தான்‌ நற்செய்தியில்‌ "காண்கிறோம்‌. மத்தேயு நற்செய்தியிலே விரிவான கேள்விகளாக இருப்பதை பார்க்கலாம்‌ (மத்தேயு 24:3). உமது வருகைக்கும்‌ "உலக முடிவுக்கும்‌ அறிகுறி என்ன என்று சீடர்கள்‌ கேட்கின்றனர்‌. எனவே தனது வருகையை இயேசு உறுதி செய்யும்‌ விதமாக இன்றைய நற்செய்தியில்‌ விளக்குகின்றார்‌.

மறையுரை

சாதரணமாக காகம்‌ ஒன்று நம்‌ வீட்டு முன்பு காலையில்‌: கத்துகிறது என்றால்‌, யாராவது விருந்தினர்கள்‌ வருவார்கள்‌ என்று யூகிக்கின்றோம்‌. வீட்டு மூலைகளில்‌ பல்லி கத்தினால்‌ அது கத்தும்‌: திசையை பொருட்டு ஏதாவது நிகழும்‌. உள்ளங்கை அறித்தால்‌ ஊருக்கு போக சொல்லும்‌ போன்ற யூகங்களை சாதராண மக்கள்‌ நாம்‌ துறிந்துள்ளோம்‌. அதுபோல இயேசு அன்று வாழ்ந்த மக்க- ளுக்கும்‌ தனது இரண்டாம்‌ வருகையை பலவிதமான இயற்கை நிகழ்வுகளால்‌ அறிந்து கொள்ள செய்கின்றார்‌. அவரின்‌ வருகையை இயேசு மட்டூம்‌ முன்னறிவிக்கவில்லை.

மாறாக பழைய ஏற்பாட்டு காலத்திலே இறைவாக்கினர்கள்‌ "வழியாக முன்னறிவிக்கபட்டது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இறைமகனின்‌ வருகை ஏன்‌? எதற்காக அவர்‌ வரவேண்டும்‌? வந்த பின்‌ என்ன நடக்கும்‌? கொடிய வேதனைகளை யார்‌ அனுபவிப்பர்‌? அவரால்‌ தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள்‌ மட்டும்‌ தப்புவர்‌ என்று யாரை குறிப்பிடுகின்றார்‌? போன்ற பலவிதமான கேள்விகள்‌ நம்‌ மனதில்‌ எழுகின்றன, இவை அனைத்தையும்‌ இரண்டு பிரிவுகளாக பார்ப்போம்‌. 1, கிறிஸ்து வருகையின்‌ நோக்கம்‌ மற்றும்‌ 2. அவர்‌ வந்த பின்‌ என்ன நடக்கும்‌?
3) கிறிஸ்து வருகையின்‌ நோக்கம்‌:

இன்றைய வாசகத்தில்‌ முன்பு உள்ள அதாவது பனிரண்டாம்‌ பிரிவை வாசித்தால்‌ அதில்‌ கிறிஸ்து பரிசேயர்களையும்‌ மறைநூல்‌ அறஞர்களையும்‌ காண்பிக்கிறார்‌. காரணம்‌, சாதராண மக்களை அன்று வாழ்ந்த சமுதாயத்தின்‌ உயர்குடி மக்கள்‌, பொருளாதாரத்தில்‌ உயர்ந்தவர்கள்‌, அடக்கியாளுகின்றனர்‌. ஏழைகளுடையதை பிடுங்கி கொள்கின்றனர்‌ (12:40). எனவே அத்தகைய கொடியவர்களை அடக்குபவர்களை அழிக்கவே அவரின்‌ வருகை அமைந்துள்ளது. இறைவாக்கினர்‌ எசாயா நூல்‌ 13:10-13-இல்‌ வாசிக்கின்றோம்‌, " உலகை அதன்‌ தீயச்செயலுக்காகவும்‌, தீயோரை அவரின்‌ கொடுஞ்செயலுக்காகவும்‌ ஆண்டவர்‌ வந்து தண்டிப்பார்‌. மேலும்‌ ஆணவக்காரர்களின்‌ அகந்தையையும்‌, இறுமாப்பையும்‌ அழிக்க ஆண்டவர்‌ வருவார்‌" என்றும்‌ இறைவாக்கினர்‌ எசாயா கூறுகின்றார்‌.

நற்செய்தியாளர்‌ லூக்காவும்‌ இச்செய்தியை விவரிக்கின்றார்‌. அதாவது உண்டு, குடித்து களியாட்டம்‌ செய்து இறைவனை அறிந்து வாழ்ந்த மக்களை இறைவன்‌ கந்தகத்தீயாலும்‌, நெருப்பாலும்‌ அழித்தார்‌. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்‌ என அச்சுறுத்துகின்றார்‌ (லூக்கா 17:29,30). இவையனைத்தும்‌ இன்றும்‌ நிகழ்ந்து கொண்டு தானே இருக்கின்றது. பரந்து விரிந்த இந்த உலகில்‌ சுருங்கிப்‌ போன இதயம்‌ கொண்டவர்கள்‌ இருக்கத்‌ தானே செய்கிறார்கள்‌. சிறுகுடும்பத்தில்‌ உதயமாகி உலகின்‌ எல்லா இடங்களிலும்‌ ஆணவம்‌ தலைவிரித்தாடூவதைப்‌ பார்க்கின்றோம்‌. முன்னேறிய நாடூகள்‌ பிற நாடுகளின்‌ வளர்ச்சியை தாங்கிக்‌ கொள்ள இயலாததால்‌ தான்‌ ஆணவப்‌ போர்‌ தொடுத்து அடக்குகின்றன. எங்கே தங்களைப்‌ பொருளாதார அளவில்‌ பிற நாடுகள்‌ முந்திவிடுமோ என்று எண்ணி பயந்து பிறநாட்டு மக்களைக்‌ கொல்ல சதித்‌ திட்டம்‌ தீட்டுகின்றது.

நாட்டின்‌ நிலப்பரப்பை பெரிதுபடுத்திக்‌ கொள்ள வேண்டும்‌ என்ற பேராசையால்‌ நாடுகளுக்குள்‌ தினமும்‌ சண்டையிட்டுக்‌ கொண்டு அழிவின்‌ பாதையை நோக்கிப்‌ பயணிக்கின்றனர்‌. ஏன்‌! நமது நாட்டிலும்‌ அரசியல்‌ அராஜகம்‌ காரணமாக, சாதாரண குடிமக்கள்‌ துன்பப்படுவது நமக்குத்‌ தெரியும்‌. ஒவ்வொரு குடும்பத்திலேயும்‌, ஒவ்வொரு கிராமத்திலும்‌, மாவட்டத்திலும்‌, மாநிலத்திலும்‌ துன்புறும்‌ மக்கள்‌ இருக்கிறார்கள்‌. காரணம்‌ செருக்குற்றவர்கள்‌ மட்டும்‌ வாழ நினைப்பதுதான்‌.

பக்கத்து வீட்டில்‌ புது 7:47 வாங்கினா, அடுத்த வீட்டில பழைய 7:77 வெளியே உடையும்‌. பக்கத்து வீட்டு பையன்‌ தன்‌ பையனை விட ஒரு மார்க்‌ அதிகமா வாங்கினாலும்‌ தன்‌ பையனுக்கு அடிவிழும்‌. உடன்‌ பிறப்புகளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாதிருப்பது புதிதல்ல நமக்கு. வாய்க்கால்‌ சண்டை, வரப்புச்‌ சண்டை, மோட்டார்‌ சண்டை, நடைபாதைச்‌ சண்டை, தண்ணீர்‌ சண்டை என எல்லாமே நம்மிலும்‌ உள்ளது. நமக்குள்ளே உருவாகும்‌ இந்த சிறுதுளி ஆணவம்‌, பொறாமை, வன்குணம்‌ ஆகியவை வெளியில்‌ வரும்‌ போது பிறரைத்‌ துன்புறுத்தி வாழும்‌ நிலைமையாகின்றது. நம்மை விட எளியவரை வாட்டி வதைத்து, அச்சுறுத்தி வாழ முயல்கின்றோம்‌. இவற்றைப்‌ போக்கத்தான்‌ ஆணடவர்‌ இயேசுவின்‌ வருகை அமைந்துள்ளது. தீய சிந்தனைகள்‌ படைத்த உலகம்‌ கிறிஸ்துவின்‌ வருகையில்‌ அழிக்கப்பட வேண்டும்‌. இல்லையெனில்‌ மாற்றம்‌ நிகழ இறைத்‌ திட்டத்திற்கு செவிசாய்க்க மறுக்கின்றோம்‌.

யாரெல்லாம்‌ அழிவுக்குட்படுத்தப்படாதவர்கள்‌.

வேதனைகள்‌, துன்பங்கள்‌ நிறைந்த உலகம்‌ முடிவுறும்‌ போது வான தூதர்களின்‌ மூலம்‌ ஆண்டவர்‌ தாம்‌ தேர்ந்து கொண்ட மக்களை பாதுகாப்பில்‌ அணைத்துக்‌ கொள்வார்‌. யாரெல்லாம்‌ மனம்‌ திரும்பி ஆண்டவர்‌ பக்கம்‌ வருகின்றார்களோ அவர்கள்‌ உயிர்‌ வாழ்வர்‌. இறைவனால்‌ தேர்ந்து கொள்ளப்‌ படூபவர்கள்‌ வேறு யாருமில்லை நாம்‌ தான்‌. நாம்‌ அவரின்‌ பிள்ளைகள்‌ தானே! அதனால்தான்‌ இன்னும்‌ நாம்‌ உயிர்‌ வாழ்கிறோம்‌. யோவேல்‌ இறைவாக்கினர்‌ கூறுகிறார்‌ (2:31-32) " ஆண்டவர்‌ திருப்பெயரைச்‌ சொல்லி வேண்டுவோர்‌ யாவரும்‌ தப்பிப்‌ பிழைப்பர்‌, ஆணடவரால்‌ அழைக்கப்‌பட்டவர்களே தப்பிப்‌ பிழைப்பர்‌." இதைதான்‌ தி.ப. 2:19,20-இல்‌ காண்கின்றோம்‌. எப்போது அவரை நம்‌ உள்ளத்தில்‌ அனுமதிக்கின்‌றோமோ, அப்போது நாம்‌ பிழைக்கத்‌ தகுதியுள்ளவர்களாகின்றோம்‌.

நாம்‌ தவறு செய்யும்‌ போதும்‌, தீயவழியில்‌ செல்லும்‌ போதும்‌ நம்‌ மனசாட்சியானது அல்லல்படூகிறதென்றால்‌, அதற்காக நாம்‌ மனம்‌ வருந்துகின்றோம்‌ என்றால்‌, அதுதான்‌ இறையேசுவின்‌ வருகைக்காக நாம்‌ செய்யும்‌ தயாரிப்பு. அவ்வாறு சிந்தனை, எண்ணமே இல்லையெனில்‌ நமதுள்ளம்‌ மழுங்கிப்‌ போய்விட்டது. என்றுதான்‌ அர்த்தம்‌. தவறு செய்வது மனித இயல்புதான்‌. ஆனால்‌ அதை திருத்திக்‌ கொள்வதும்‌ மனிதனால்‌ இயலாதது இல்லையே. நம்‌ மனது தூய்மையாக இருக்குமானால்‌ நமது எண்ணம்‌, சிந்தனை, சொல்‌, செயல்‌ யாவும்‌ தூய்மையாக இருக்கும்‌, அங்கே தூய இறைவனும்‌ குடிகொள்வார்‌.

அவரின்‌ வருகைக்கு பின்‌ என்ன நடக்கும்‌?

1. தான்‌ தேர்ந்து கொண்டவர்களை இறைவன்‌ என்றுமே கைவிடுவதில்லை. இந்த நாளில்‌ நம்பிக்கையோடு அவரது இவ்வுலகத்‌ துன்பங்களின்‌ சோதனையால்‌ மன உறுதியுடன்‌ இருந்து (மாற்கு 13:13) அல்லும்‌ பகலும்‌ ஆண்டவர்‌ பெயரைச்‌ சொல்லிக்‌ கூப்பிட்‌டால்‌ மட்டுமே அவர்‌ நீதி வழங்குவார்‌, மீட்பு தருவார்‌ (லூக்கா 18:7-8).
2. இவ்வுலக பார்வையில்‌ தீயவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக, ஏழைகளாக கருதப்படுபவர்களை ஆண்டவர்‌ உயர்த்துவார்‌. தம்மால்‌ தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள்மேல்‌ யாரும்‌ குற்றம்‌ சுமத்த அனுமதிக்கவே மாட்டார்‌. (உரோ. 8:34)
3. தூய பவுல்‌ கூறுகின்றார்‌, " நீங்கள்‌ கடவுளால்‌ தேர்ந்து கொள்‌ளப்பட்டவர்கள்‌, அவரது அன்பிற்குரிய இறைமக்கள்‌. எனவே அதற்குரிய இரக்கம்‌, நல்லெண்ணம்‌, மனத்தாழ்மை, கனிவு, " பொறுமை ஆகியப்‌ பண்புகளை அணிந்து கொள்ளுங்கள்‌. (கொலோ. 3:12)

ஆண்டவரின்‌ வருகையின்‌ போது துன்புறும்‌ உலகம்‌ முடிவுறும்‌ போது புது மனிதர்களாக, புதுப்படைப்பாக மாற்றப்படுபவர்கள்‌ தூயவரால்‌ தேர்ந்து கொள்ளப்பட்டவர்களே!

இறையேசு மீண்டும்‌ வரும்போது நம்‌ பாவங்கள்‌ அனைத்தையும்‌ 'போக்கிடுவார்‌. ஏனெனில்‌ ௮வர்‌ நமக்காகவே நம்‌ பாவங்களை தாங்கிக்‌ கொண்டார்‌. யோவான்‌ 1:29. இதோ கடவுளின்‌ ஆட்டுக்‌: குட்டி, இவரே உலகின்‌ பாவங்களைப்‌ போக்குவார்‌ என்று கூறுகின்றார்‌.

இன்றைய இரண்டாம்‌ வாசகம்‌ கூறுவது போல கிறிஸ்து நமக்காக பலியாக்கப்பட்டூள்ளார்‌. அவரது ஒரே பலி எப்போதும்‌ மீட்புக்கு வழியாய்‌ உள்ளது. எபிரேய திருமுக ஆசிரியர்‌ கூறுகின்றார்‌, " கிறிஸ்து மீண்டும்‌ தோன்றுவார்‌, ஆனால்‌ பாவத்தின்‌ பொருட்டு அல்ல, தமக்காக காத்திருப்பவர்களுக்காக மீட்பு அருளும்‌ பொருட்டே தோன்றுவார்‌" (எபி. 9:28)

இயேசுவை நாம்‌ சந்திக்கும்‌ நாள்‌ நம்‌ ஒவ்வொருவரையும்‌ பொறுத்தது. வழக்கமாக நம்‌ வீட்டு முக்கிய நிகழ்வுகளுக்கு விருந்தினர்கள்‌ யார்‌ யார்‌ வருவர்‌ என்று அறிந்துதான்‌ விருந்து ஏற்பாடு செய்வோம்‌. கிறிஸ்துவும்‌ தன்‌ வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்‌ (மத்தேயு 24:30, தி.ப. 1:10). அவரைச்‌ சந்திக்கும்போது நம்‌ உள்ளம்‌ தூய்மை அடையும்‌. " இயேசு' என்ற சொல்‌ வெறும்‌ வார்த்தை மட்டுமல்ல. நம்‌ மனக்‌ காயங்களை, பாவங்களை அகற்றி தூய்மையாக்கும்‌, மீட்புக்கு வழிவகுக்கும்‌ வார்த்தை.
பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

1. கிறிஸ்து மானிடமகன்‌
மாற்கு 13:26
மத்தேயு 8:20
2 கடவுளின்‌ வார்த்தை உயிருள்ளது
மாற்கு 13:31
 
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி

 
ஞாயிறு மறையுரை அருள்பணி. குழந்தை இயேசு பாபு சிவகங்கை
ஆண்டின் பொதுக்காலம் 33 ஞாயிறு
முதல் வாசகம்
மு.வா: தானி: 12: 1-3
ப.பா : திபா: 16: 5,8. 9-10. 11
இ.வா: எபி: 10: 11-14,18
ந. வா : மாற்: 13: 24-32


இறைவனின் நினைவூட்டல்களை ஏற்கத் தயாரா?


அன்பு இறைமக்களே திருவருகைக் காலத்தை நாம் எதிர்கொள்ள இன்னும் இரு வாரங்களே இருக்கின்றன. அதற்கு நம்மையே தயாரிக்கும் விதமாகவே இந்நாட்களின் வாசகங்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன. ஆனால் வருடந்தோறும் வரும் திருவருகைக் காலத்திற்கான தயாரிப்பாக மட்டும் இதை எண்ணாமல் நாம் நினையாத நேரத்தில் நம் மனதின் கதவைத் தட்டி உள்வரக் காத்திருக்கும் நம் ஆண்டவரின் வருகைக்கு எப்போதுமே நம்மை தயாராகவும் தகுதியோடும் வைத்திருக்க வேண்டிய நல்லார்வத்தோடு இன்றைய நாள் வாசகங்களை நாம் ஆழமாக தியானித்து சிந்திக்க முயலுவோம்.


இன்றைய நாட்களில் பலதரப்பு மக்களிடமிருந்து பல தகவல்களை நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். விஞ்ஞானிகள் இயற்கையில் நடைபெறும் மாற்றங்களை அறிவியல் ரீதியாக விளக்குகிறார்கள். புவிவெப்பமடைதல், பனிப்பாறைகள் உருகுதல், அல்லது நோய்கள் உருவாகக் காரணமான நுண்ணுயிரிகள் போன்றவற்றைப் பற்றி ஆதாரப்பூர்வமான அறிவியல் காரணங்களை அவர்கள் விளக்குகிறார்கள். மறுபுறம் ஆன்மீகவாதிகள் நடைபெறும் அடையாளங்கள் அனைத்தும் உலக முடிவிற்கான அறிகுறிகள் என வேத நூல்களைக் காட்டி விளக்குகிறார்கள். எல்லாரும் சொல்வது நாம் உலக முடிவில் இருக்கிறோம் என்பதைத் தான். 2000ல் உலகம் அழிந்துவிடும், 2020 ல் அழிந்துவிடும் என நாம் பல நாட்களாகவே கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
இவற்றையெல்லாம் நாம் கேட்டுக்கொண்டே இருக்கிறோமே தவிர அச்செய்திகள் வெளிப்படுத்தும் உண்மையை உணர நாம் முற்பட்டிருக்கிறோமா ? இத்தகைய நிலைகளை மாற்ற முயற்சி எடுத்திருக்கிறோமா?

எவ்வளவு தான் புவிவெப்பமானாலும் இன்னும் வாகனங்கள் வாங்குவதையும் தொழிற்சாலைகள் அமைப்பதையும் நாம் குறைக்கவில்லை. விளைநிலங்களையும் காடுகளையும் மலைகளையும் அழிப்பதை நாம் நிறுத்தவில்லை. கொரோனா கட்டுப்பாடுகளை நம்மில் எத்தனைபேர் கண்டிப்புடன் கடைபிடித்திருக்கிறோம் என்றால் விடை கேள்விக்குறி.
அதேபோல நமது ஆன்மீக வாழ்விற்கான தேடலையும் நாம் துரிதப்படுத்தவில்லை. ஏனெனில் எல்லாவற்றையும் இலேசாக எடைபோட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம். நமது விருப்பம் போல பயணித்துக் கொண்டிருக்கிறோம் இவ்வுலகில். இன்று அப்பயணத்தை சற்று நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்து நம் பாதையை சரிசெய்ய நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் இறைவருகையின் போது ஏற்படும் அடையாளங்களைப் பற்றி நமக்குக் கூறுகிறது. அதிலும் குறிப்பாக நற்செய்தி வாசகமானது மானிடமகனின் வருகையின் போது ஏற்படும் இயற்கை மாற்றங்களைக் குறிப்பிடுகிறது. ஆனால் இவைகளை மட்டுமே கொண்டு நாம் மானிடமகனின் வருகையைத் தீர்மானிக்க முடியுமா என்றால் இல்லை. ஏனெனில் மானிடமகனின் வருகையைப் பற்றி தந்தை கடவுளுக்கு மட்டுமே தெரியும். அப்படியென்றால் இவ்வடையாளங்களெல்லாம் எதற்காக என்ற கேள்வி நம்மில் எழலாம். இவையெல்லாம் இவ்வுலக வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை நமக்கு உணர்த்தவே. நிலையற்ற இவ்வாழ்வில் மூழ்கி நிலையான மீட்பை நாம் இழந்துவிடக்கூடாது என நம்மை நினைவூட்டவே இவை அனைத்தும் நிகழ்கின்றன. நம்மையே நாம் தகுதிப்படுத்தவும் சீரமைக்கவும் நமக்குள் நாம் பயணிக்கும் போது நல்லவராக நம்மையே நாம் கண்டுணரவும் வேண்டும் என்பதற்காக நமக்கு இறைவனால் தரப்படும் நினைவூட்டல்களே உலகிலும் நம் வாழ்விலும் ஏற்படும் அத்தனை அடையாளங்களும். நம் மனக்கண்களைத் திறந்து இவ்வடையாளங்களை இறைவனின் நினைவூட்டல்கள் என உணர்ந்துகொண்டு நம் வாழ்வுப்பாதையை மாற்றுவதே மானிட மகனின் வருகைக்கு நம்மையே தயார் செய்யும் உன்னதமான செயலாகும்.

நம் பாவங்களுக்கெளெல்லாம் பலியாக கிறிஸ்து தம்மையே முதலும் முடிவுமாக பலிதந்துவிட்டார். நம் குற்றங்களெல்லாம் நம்மை விட்டு அகற்றப்பட்டுவிட்டன என இரண்டாம் வாசகம் கூறுகிறது. ஆம். கிறிஸ்து இயேசு நம் பாவங்களுக்குக் கழுவாயாக இறந்தார். அவர் பெற்றுத் தந்த அந்த தூய வாழ்வை நம்முடைய தொடர் மனமாற்றத்தால் நிலைப்படுத்தி, இறைவன் இயற்கை வழியாகவும் வாழ்வின் நிகழ்வுகள் வழியாகவும் தரும் நினைவூட்டல்களை மனதில் கொண்டு இறைவருகையை எதிர்கொள்ளத் தயாராவோம். மானிடமகன் நம் மீட்பர் இயேசு நம் கதவைத் தட்ட எப்போது வேண்டுமானாலும் வருவார். தாயாரா?


இறைவேண்டல்

அன்பு இறைவா! எமக்கு மீட்புத் தரக் காத்திருக்கும் உமது வருகையை எதிர்கொள்ள எப்போதுமே எம்மை நாங்கள் தயாராக வைத்திருக்க உதவி புரியும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
 
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
பொதுக்காலம்‌ - முப்பத்‌து மூன்றாம்‌ ஞாயிறு
முதல்‌ வாசகம்‌ : தானி 12 : 1-3

உடல்‌ உயிர்ப்பு, ஒருவர்‌ செய்த செயல்களுக்கு மறுவுலகில்‌ கைம்மாறு பெறல்‌ ஆகியவை பற்றி எடுத்துக்கூறும்‌ ஒரு சில ப.ஏ. மேற்கோள்களில்‌ இன்றைய வாசகமும்‌ ஒன்று (காண்‌ : 2 மக்‌ 7 : 9-14 முதலிய). திருவழிபாட்டு ஆண்டின்‌ கடைசி வாரங்களில்‌ உயிர்ப்பு, மறு உலகு பற்றிய வாசகங்கள்‌ இறுதிநாளை நமக்கு நினைவுறுத்துகின்றன.

இறுதிக்காலம்‌

" ஆண்டவருடைய பெரும்‌ கோபத்தின்‌ நாள்‌" (புல 1 : 12); " துன்பத்தின்‌ காலம்‌" (எரே 30 :7), " இருளும்‌ காரிருளும்‌ கவிந்த நாள்‌; மப்பும்‌ மந்தாரமும்‌ சூழ்ந்த நாள்‌" (யோவே. 2 : 2) என்று இறுதிநாள்‌ அழைக்கப்படுகிறது. அது ஆண்டவருடைய நாள்‌; அவர்‌ மக்களினங்களுக்குத்‌ தீர்ப்பளிக்கும்‌ நாள்‌. " மக்களினம்‌ தோன்றியது முதல்‌ அக்காலம்‌ வரை இருந்திராத துன்ப காலம்‌ வரும்‌" (தானி 12:1). இத்தகைய இறுதிக்காலம்பற்றிய நினைவு நம்‌ மனத்தில்‌ எப்போதும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. நம்மை அச்சப்படுத்துவதற்காக அல்ல; அன்புள்ள ஆண்டவராகிய கடவுள்‌ நீதி வழுவாதவர்‌ என்று நாம்‌ உணர்வதற்காக. அவர்‌ நீதி அரியணைக்குமுன்‌ நாம்‌ அனைவரும்‌ பாவிகளே என்று உணர்ந்து நம்‌ பாவங்களுக்காக ஒவ்வொரு நாளும்‌ காலையிலும்‌ மாலையிலும்‌ அழுவோம்‌. பிறர்‌ பாவங்களுக்காகவும்‌ இறைவனிடம்‌ மன்னிப்பு விழைவோம்‌. அந்நாள்‌ நம்‌ எல்லோருக்கும்‌ நல்ல நாளாய்‌ அமைய வேண்டுமாயின்‌, இந்நாட்களில்‌ பாவத்தை அகற்றி வாழ்வோம்‌.
நல்‌லோர்‌ வாழ்வர்‌

வாழ்வின்‌ புத்தகத்திலே பெயர்‌ எழுதப்பட்டோர்‌ (அதாவது, இவ்வுலகில்‌ அன்பு வாழ்வு வாழ்ந்தோர்‌) மீட்புப்பெற்று, இறைப்பிரசன்னத்திலே இருப்பர்‌. " உம்‌ கண்கள்‌ கருமுளையில்‌ என்‌ உறுப்புகளைக்‌ கண்டன; நீர்‌ எனக்குக்‌ குறித்து வைத்துள்ள நாள்கள்‌ எல்லாம்‌ எனக்கு வாழ்நாள்‌ எதுவுமே "இல்லாத காலத்திலேயே உமது நூலில்‌ எழுதப்பட்டுள்ளன" (திபா. 139 : 16). " எருசலேமில்‌ வாழ்வோரும்‌, 'புனிதர்‌' எனப்படுவர்‌" (எசா. 4 : 3) என்பதற்கொப்ப நம்முடைய வாழ்நாட்கள்‌ அமையவேண்டும்‌. வாழ்வு எவ்வழியோ சாவும்‌ அவ்வழி தானே. சாய்ந்த பக்கம்‌ தானே மரம்‌ விழும்‌! எனவே வாழ்வோரின்‌ புத்தகத்தில்‌ நம்‌ பெயர்‌ எழுதப்படக்கூடிய வண்ணம்‌ நம்‌ வாழ்வை வாழ்கின்றோமா? புனித வாழ்வு என்பது அன்றாடம்‌ ஒவ்வொரு மணித்துளியும்‌ இறைவனுக்காக, இறைமக்களுக்காக வாழ்வது ஆகும்‌. இவ்வாறு வாழ்பவர்கள்‌ " என்றென்றும்‌ வாழுமாறு அனைத்துலக அரசர்‌ எங்களை உயிர்த்தெழச்‌ செய்வார்‌" (2 மக்‌ 7 :8) என்று நம்ப இடமுண்டு. இறவா வாழ்வு நாம்‌ இறந்தபின்‌ நமக்குக்‌ கிடைக்கும்‌ பரிசுமட்டுமன்று; இவ்வுலகில்‌ இருக்கும்போதே நாம்‌ வாழும்‌ இறைவாழ்வே, இறைமக்களுக்காக, நம்மைப்‌ பலியிட்ட அன்பு வாழ்வே என்பதை உணர்ந்து, நம்‌ வாழ்வைச்‌ சீர்திருத்துவோமா?

தீயோர்‌ சாவர்‌

தீயோரைப்‌ பற்றிக்‌ கூறும்போது " *மெய்வாழ்வுக்குரியோரின்‌ அட்டவணை யிலிருந்து அவர்களுடைய பெயர்களை நீக்கிவிடும்‌! அவற்றை நேர்மையாளரின்‌ பெயர்களோடு சேர்க்காதேயும்‌" " (திபா.69 : 28) என்பார்‌. மறுவுலகில்‌ மட்டுமன்று, இவ்வுலகிலும்‌ தீயோர்‌ மகிழ்ச்சியான வாழ்வை வாழ இயலாது. பழகின ஒவ்வொரு பாவமும்‌, தீமையும்‌ மேலும்‌ மேலும்‌ அதே பாவத்திற்கும்‌ தீமைக்குமே மக்களை இட்டுச்‌ செல்கின்றன. இவ்வுலகிலே துன்பம்‌; மறுவுலகிலும்‌ " முடிவில்லாத இழிவும்‌ நிந்தையுமே" ' (தானி 12 :3); " அவர்களை அரிக்கும்‌ புழு சாவதில்லை; அவர்களை எரிக்கும்‌ நெருப்பு அணைந்து போவதில்லை" (எசா. 65: 24) இறுதிக்கால வாழ்வு நம்மை நன்மை செய்யத்‌ தூண்டாவிட்டாலும்‌, இறுதிக்கால அழிவு நம்மைப்‌ பாவ வழியினின்று மனம்‌ திருப்பாதா?

நல்லவை செய்வோம்‌, அல்லவை தவிர்ப்போம்‌. பிறரையும்‌ நல்வழியில்‌ திருப்ப முயல்வோம்‌. ஏனெனில்‌ இன்னோர்‌ " வானத்தின்‌ பேரொளியைப்‌ போலவும்‌, விண்மீன்களைப்‌ போலவும்‌, என்றென்றும்‌ முடிவில்லாக்‌ காலத்திற்கும்‌ ஒளிவீசித்‌ திகழ்வர்‌" (தானி 12 : 3). நம்‌ வாழ்வு பிறருக்கு முன்மாதிரியாக அமைவது எப்போது?
யார்‌ யார்‌ பெயர்‌ நூலில்‌ எழுதப்பட்டுள்ளதோ அவர்கள்‌ அனைவரும்‌ மீட்கப்பெறுவர்.

இரண்டாம்‌ வாசகம்‌ :எபி 10 :11-14,8

ப.ஏ. இல்‌ பல தலைமைக்‌ குருக்கள்‌ பலமுறை பலிகளை நிறைவேற்றினர்‌. அவற்றால்‌ பாவங்கள்‌ முழுதும்‌ கழுவப்படவில்லை. பு.ஏ. இலோ கிறிஸ்து ஒரே முறை தம்மையே பலியிட்டு உலக மக்கள்‌ அனைவரின்‌ பாவங்களையும்‌ போக்கிவிட்டார்‌. இத்தகைய வல்லமைமிக்க புதுப்பலியைப்‌ பற்றி இன்றைய வாசகம்‌ எடுத்துக்‌ கூறுகிறது.

பழைய பலிகள்‌


ப.ஏ. பலிகள்‌, பு.ஏ. பலியின்‌ நிழல்கள்‌ மட்டுமே (எபி 10: 1. அவை ஒவ்வொரு ஆண்டும்‌ பாவப்‌ பரிகார நாளில்‌ செலுத்தப்பட்டதிலிருந்து, பாவங்கள்‌ முழுவதும்‌ கழுவப்படவில்லையென்பது புலனாகின்றது. இப்பலிகளை ஏற்படுத்திய சட்டங்களும்‌ வல்லமையற்றன என்பதும்‌ தெளிவு (எபி10 :1). காளை மாடுகள்‌, ஆட்டுக்கடாக்களின்‌ இரத்தம்‌ பாவங்களைப்‌ போக்க முடியாது (எபி 10 : 4). எனவே தான்‌ இப்பலிகளால்‌ வழிபடுபவர்கள்‌ ஒரே முறையில்‌ எக்காலத்திற்குமே தூய்மை அடையமுடியவில்லை. பாவங்களினின்று விடுதலை அடைய முடியவில்லை (எபி 10 : 2). இன்றும்‌ இதுவே உண்மை. ஆண்டவர்‌ விரும்புவது நம்‌ பலிகளையல்ல; நம்முடைய நல்ல உள்ளங்களையே. " எண்ணற்ற உங்கள்‌ பலிகள்‌ எனக்கு எதற்கு? என்கிறார்‌ ஆண்டவர்‌. ஆட்டுக்கிடாய்களின்‌ எரி பலிகளும்‌, கொழுத்த விலங்குகளின்‌ கொழுப்பும்‌ எனக்குப்‌ போதுமென்றாகிவிட்டன; காளைகள்‌, ஆட்டுக்குட்டிகள்‌ வெள்ளாட்டுக்‌ கிடாய்கள்‌ இவற்றின்‌ இரத்தத்திலும்‌ எனக்கு நாட்டமில்லை....நன்மை செய்யக்‌ கற்றுக்கொள்ளுங்கள்‌; நீதியை நாடித்‌ தேடுங்கள்‌; ..... உங்கள்‌ பாவங்கள்‌ கடுஞ்சிவப்பாய்‌ இருக்கின்றன; எனினும்‌ உறைந்த பனிபோல அவை வெண்மையாகும்‌.'' வெற்றுச்‌ சடங்கான பலிகளைத்‌ தவிர்ப்போமா? அன்புப்‌ பணியான பலியை மட்டும்‌ நிறைவேற்றுவோமா?
புதிய பலி

இது இயேசுவின்‌ பலி. அவர்‌ தம்மையே மக்களுக்காகக்‌ கையளித்த சிலுவைப்‌ பலி. மக்களுடைய பாவங்களைக்‌ கழுவிப்போக்கிய பலி. பிற உதவிப்‌ பொருள்கள்‌ இல்லாது தன்‌ இரத்தத்தையே தந்தைக்கு அளித்த பலி. இறைத்‌ தந்தையால்‌ என்றும்‌ ஏற்றுக்கொள்ளப்பட்ட பலி. எனவேதான்‌ " கடவுளின்‌ வலப்பக்கத்தில்‌ அமர்ந்துள்ளார்‌" (எபி 10:12). பாவங்கள்‌ அனைத்தையும்‌ எக்காலத்திற்கும்‌ அழித்தொழிக்கக்கூடிய பலி. எனவேதான்‌ " தம்‌ பகைவர்‌ தமக்குக்‌ கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார்‌ (எபி 10 : 13) எனக்‌ கூறப்படுகிறது (தோல்லவியுற்றவர்களைக் குப்புறமுழந்தாளிட வைத்து, அவர்களைப்‌ படியாகக்கொண்டு வெற்றி வாகனத்தில்‌ ஏறுவது மன்னர்களின்‌ வழக்கு. இக்கருத்து கிறிஸ்துவின்‌ மேல்‌ ஏற்றிக்‌ கூறப்படுகிறது). கிறிஸ்துவின்‌ ஒப்புமையற்ற இப்பலியினால்‌ நாம்‌ பரிசுத்தராகிறோம்‌; நிறைவுள்ளவர்களாகிறோம்‌ (எபி 10 : 14). " உங்கள்‌ விண்ணகத்‌ தந்‌தை நிறைவுள்ளவராய்‌ இருப்பதுபோல நீங்களும்‌ நிறைவுள்ளவராய்‌ இருங்கள்‌ " (மத்‌ 5 : 48) என்று கூறிய ,இயேசு தம்முடைய சிலுவைப்‌ பலியால்‌ நம்‌ எல்லோரையும்‌ நிறைவுள்ளவர்களாக்குகிறார்‌. " அவர்கள்‌ உண்மையினால்‌ உமக்கு உரியவர்‌ ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்‌'' (யோ 17 : 19) என்ற முறையிலே இயேசு நம்மைப்‌ புனிதப்படுத்துகிறார்‌. ஒவ்வொரு நாளும்‌ திருப்பலியிலே கிறிஸ்துவின்‌ அர்ச்சனையை நினைவு கூர்கிறோம்‌. " எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்‌ ' (லூக்‌.22 : 9) என்ற இயேசுவின்‌ கட்டளைக்கேற்பத்‌ திருப்பலி என்றும்‌ நடைபெறுகிறது. நாம்‌ ஞாயிற்றுக்‌ கிழமைக்‌ கிறிஸ்தவர்கள்‌ தானா? திருப்பலியில்‌ பங்கு பெறுவது ஒரு கடமை மட்டும்தானா? திருப்பலியின்பால்‌ நமது ஈடுபாடு எந்நிலையிலுள்ளது? " நாம்‌ அர்ச்சிக்கப்‌ பெறும்படி கிறிஸ்துவின்‌ அர்ச்சனையில்‌ பங்கு பெறுகிறோமா?
ஒரே பலியினால்‌ நம்மை என்றென்றைக்கும்‌ நிறைவு உள்ளவராக்கினார்‌. ‌
நற்செய்தி: மாற்கு 13: 24-32

திருவழிபாட்டு ஆண்டின்‌ இறுதி வாரங்களில்‌ உலக முடிவு பற்றியும்‌ இறைவனின்‌ இறுதி வருகை பற்றியும்‌ வாசகங்கள்‌ நமக்கு எடுத்துக்‌ கூறுகின்றன. திருவெளிபாட்டு இலக்கிய நடைமுறையில்‌ இறுதிக்‌ காலம்‌ விளக்கமுறுகிறது. "இன்றைய வாசகம்‌ இறுதிக்கால வருகையின்‌ அறிகுறிகளையும்‌ அது வரவிருக்கும்‌ நேரத்தையும்‌ எடுத்துக்கூறி மக்கள்‌ மனம்‌ திரும்புவதற்கான விழிப்புணர்ச்சியைத்‌ தூண்டுகிறது.
ஆண்டவர்‌ அண்மையில்‌ இருக்கிறார்‌

இன்றைய வாசகத்தில்‌ கூறப்படும்‌ அறிகுறிகளும்‌, இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவங்களும்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்தன அல்ல. இவை திருவெளிபாட்டு இலக்கிய மரபைச்‌ சார்ந்தன. ஆனால்‌ கிறிஸ்து வருவார்‌, அவர்‌ எந்நேரமும்‌ வரக்கூடும்‌, அவரின்‌ வருகைக்காக நம்மைத்‌ தயார்‌ செய்ய வேண்டும்‌ என்பது மட்டும்‌ உண்மை.

கிறிஸ்து அண்மையிலிருக்கிறார்‌ என்பது முதற்பொருளிலே கி.பி. 70-ஆம்‌ ஆண்டில்‌ தேவாலயம்‌ அழிவுற்றதைச்‌ சுட்டியது. பின்னர்‌. ஒவ்வொருவர்‌ வாழ்விலும்‌ நீதிக்‌ கடவுளாகிய கிறிஸ்து வரவிருப்பதைச்‌ சுட்டுகிறது எனலாம்‌. இவ்வருகைக்கு நேரமும்‌ காலமும்‌ கிடையாது. எந்நேரமும்‌ (சிறப்பாக, நாம்‌ எதிர்பாராத வேளையிலே) இயேசு நம்மை எதிர்ப்படலாம்‌. அவரை எதிர்ப்பட நாம்‌ தயாரா? அண்மையில்‌ இருக்கிறார்‌ என்பதால்‌ (காண்‌ : " வாசலிலேயே இருக்கிறார்‌'" 13 : 29) நாம்‌ நினைக்கும்‌ ஒவ்வொரு செயலும்‌ அவருடைய நீதித்‌ தீர்ப்புக்குமுன்‌ அவரைச்‌ சார்ந்ததாகவோ அல்லது அவருக்கு எதிராகவோ வெளிப்படும்‌ என்று பொருள்படும்‌. ஆண்டின்‌ இறுதிக்காலத்தில்‌ இருக்கிறோம்‌. நம்‌ வாழ்வின்‌ ஒவ்வொரு கணமும்‌ இவ்‌ இறுதிக்காலத்தின்‌ வெளிப்பாடு என்பதை உணர்ந்து நம்‌ வாழ்வைச்‌ சீர்ப்படுத்துவோமா? " ஆண்டவர்தாம்‌ கடவுள்‌ என்றால்‌, அவரைப்‌ பின்பற்றுங்கள்‌! பாகால்தான்‌ என்றால்‌, அவன்‌ பின்னே செல்லுங்கள்‌" (1 அர 18 :21) என்னும்‌ சொற்கள்‌ நம்மைப்‌ பார்த்துக்‌ கூறப்பட்டன என்பதை உணர்வோமா? ஆண்டவர்‌ அருகிலுள்ளார்‌. இன்னும்‌ இருமனத்தினராய்‌ நொண்டிக்‌ கொண்டிருப்போமா? அல்லது " மற்றோர்‌ தெய்வம்‌ கனவிலும்‌ நினையாது... என்பு நைந்துருகி நெக்கு நெக்கேங்கி, அன்பெனும்‌ ஆறு கரையது பாள, நன்புலன்‌ ஒன்றி, நாதா" என்று இறைவன்தாழ்‌ பணிவோமா? (திருவா : போற்றித்‌ திருஅகவல்‌)
இறைவார்த்தை அழியாது, பொய்க்காது

இறுதி நாள்‌ தீர்ப்பு ஒவ்வொரு நாளும்‌ நாமே நமக்கு இட்டுக்கொள்ளும்‌ தீர்ப்பே. இத்தீர்ப்பிலிருந்து நாம்‌ தப்பவே முடியாது என்பது ஆண்டவருடைய வார்த்தைகளாகும்‌. இறைவனின்‌ வார்த்தை பொய்க்கவே மாட்டாது. விண்ணும்‌ மனாணும்‌ அழிந்தாலும்‌ இறைவார்ததை என்றும்‌ உண்மைப்படும்‌. ஏனெனில்‌ " கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது; ஆற்றல்‌ வாய்ந்தது'' (எபி 4 : 12). இறைவார்த்தைக்குச்‌ செவிமடுப்போமா? மனம்‌ திரும்பி நம்‌ வாழ்க்கையைச்‌ செம்மைப்படுத்துவோமா? " ஆண்டவரே பேசும்‌; உன்‌ அடியவன்‌ நான்‌ கேட்கின்றேன்‌." மகனுக்கும்‌ கூட இந்நாள்‌ பற்றித்‌ தெரியாது (13 : 32) என்பதன்‌ மூலம்‌ இயேசு இந்நாளைத்‌ தெரிவிக்க விரும்பவில்லை என்பதும்‌, எந்நாளும்‌ எந்நேரமும்‌ இந்நாளின்‌ வெளிப்பாடே என்பதும்‌, எனவே, எப்போதும்‌ தயாராயிருக்க வேண்டும்‌ என்பதும்‌ புலனாகின்றன. எந்நேரமும்‌ இறைவன்‌ நம்மையும்‌ நாம்‌ இறைவனையும்‌ நீதித்‌ தீர்ப்பில்‌ எதிர்ப்படுவதாக நினைத்து, நம்‌ நினைவு சொல்‌ செயல்களைச்‌ சீர்ப்படுத்துவோம்‌. இன்னும்‌ சிலநாட்களில்‌ கிறிஸ்துவின்‌ திருவருகைக்‌ காலத்தைக்‌ கொண்டாடவிருக்கும்‌ நாம்‌, அத்திருவருகை இன்றும்‌ நம்மில்‌ நிறைவேற நம்மையே அர்ப்பணிப்போம்‌. " அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும்‌ தெரியாது'" (13 : 32) என்பது எப்போதும்‌ நம்‌ காதுகளில்‌ ஒலித்துக்கொண்டிருப்பதாக.
அவர்‌ அண்மையில்‌ இருக்கிறார்.‌
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ