உடலுக்கு சுகம் தரவும், அதே சமயத்தில் நமது உடல் சுகம் பிறருக்கு
நற்பணி செய்வதற்கு-என்ற சிந்தனையைத் தரவும், இந்த சுகம் தரும்
ஞாயிறு நம்மை அழைக்கிறது!
ஒரு தாய் சுகவீனமுற்ற தன் பிள்ளையை மார்போடணைத்து, கண்விழித்து
காப்பது போல, பலவீனமாக இருக்கும் நம்மை, தம் மார்போடு அனைத்து
பலம் தருபவர் நம் தேவன் மட்டுமே! இறந்து போன லாசருக்காக கண்ணீர்
சிந்தியது கூட, தன் நண்பன் உடல் சுகமின்றி இறந்து விட்டான் என்பதற்காகவே!
உடல் உள்ள நோiயை சுமந்து இங்கே வந்திருக்கின்ற நம்மைப்
பார்த்து "உங்களுக்கு சுகம் கொடுக்க நானே இங்கு வந்திருக்கிறேன்"
என சொல்கின்றார்.
இராயப்பரின் வீட்டிற்கு இயேசுவே செல்கின்றார். இராயப்பரின்
மாமியாரை சுகப்படுத்திய இறைவன், நாம் சுகமின்றி இருக்கும் போது
நம்மைத் தேடிவந்து சுகம் தரமாட்டாரா? இராயப்பரின் மாமியோ சுகம்
பெற்றவுடன் இயேசுவுக்கும் அவரது சீடர்களுக்கும் பணிவிடை
செய்கின்றார். நம்மைத் தேடிவந்து நமக்கு சுகம் தரும் தேவன்,
நாமும் நமது அயலாருக்கு பணிவிடை செய்ய வேண்டும் என
விரும்புகிறார்.
சென்ற இடமெல்லாம் நோயின் பிடியில் இருந்தும், பேயின் பிடியில்
இருந்தும் மக்களைப் பாதுகாத்த இறைவா! எங்கள் நடுவில் உலவும்
நோயையும், பேயையும் விரட்டி, நற்செய்தியை எங்கள் பேச்சிலும்
மூச்சிலும் பிரதிபலிக்க அருள் கேட்டு வந்திருக்கும் எங்களை
உற்றுப் பார்த்து, நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய
நற்செய்திகளால், இந்த திருப்பலியில் நனைத்து எடும் என நினைத்து
வேண்டுதல் செய்வோம். நற்சுகத்துடன் நற்செய்தி அறிவிப்போம்.
1.எங்கள் கண்கள் மீண்டும் நன்மைகளை காணச் செய்யும் நாயகனே!
நமக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால், நம்மைச் சுற்றி நல்லதே
நடக்கச் செய்ய வேண்டும் என்ற நற்சிந்தனையால் நிரம்பி,
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், உடல் உள்ள நலத்துடன்
நற்செய்தி அறிவிக்க ஆற்றல் தர, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2.நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்ய எமை இயக்கும் நாயகனே!
நற்செய்தி அறிவிப்பதற்காகவே தங்களிடம் பொறுப்புகள் மிகுந்த
பதவி உள்ளது என நாடுகளின் தலைவர்கள் உணர்ந்து, மக்கள் எல்லோருக்கும்
எல்லா வளமும் கிடைக்கச் செய்யும் நற்செய்தியாளர்களாக,
நாட்டுத் தலைவர்கள் நாட்டில் நடமாட ஆற்றல் தர, இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
3.நற்செய்தியை பறைசாற்றுவோரை தேடி ஆசிர்வதிக்கும் நாயகனே!
நாடுவிட்டு நாடு வந்து நடமாடும் எங்களுக்கு நற்செய்தியை பறைசாற்ற,
நீர் அனுப்பி வைத்துள்ள எம் ஆன்மீகத்தந்தையர்கள் இதற்காகவே
பிறந்துள்ளார் என்பதை தம் நற்செயல்களால் அறிவிக்கவும், எங்கள்
மத்தியில் நாங்கள் படிக்கும் நற்செய்தியாக வாழவும், அவர்களுக்கு
உடல் உள்ள சுகம் தரவும், உம்மை மன்றாடுகிறோம்.
4. எல்லோரும் உம்மைத்தேட வேண்டும் என ஆசிக்கும் நாயகனே!
ஒப்பனை மிகுந்த உலகில் உள்ளத்தை அழகுபடுத்துவதும், உடல் உள்ள
சுகத்துடன் பிறருக்கு நற்செய்தி அறிவிப்பதும் எங்கள் பணி
என உணர்ந்து, எங்கள் குடும்பங்களில், நண்பர்கள் நடுவில்,
அலுவலகங்களில் எங்கள் பேச்சிலும் மூச்சிலும் உண்மையான
அன்பு, பாசம், நேர்மையான செயல்கள், சகிப்புத்தன்மை,
புறணிபேசாமை போன்ற நற்செய்தியின் விழுமியங்களை
எதிரொலிக்கச் செய்ய அருள் தர, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5.நோயாளிகளை, பேய்பிடித்தவர்களை குணப்படுத்திய நாயகனே!
உடல் நலக் குறைவோடு இருக்கின்ற எல்லா நோயாளிகளையும், மூட
நம்பிக்கைளால் முடங்கிக் கிடக்கின்ற மக்களின்
உள்ளங்களையும் தொட்டு சுகம் தந்து, மண்ணகத்தில் விண்ணகத்தை
காணச்செய்யும் நற்செய்தியை, ஒருவர் மத்தியில் ஒருவர்
பகிர்ந்து கொண்டு வாழ வளர அருள் தர வேண்டுமென்று, ஆண்டவரே
உம்மை மன்றாடுகிறோம்.
6. ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டினை மறவாமல்
செய்திருக்கின்ற நாயகனே!
உடலாலும் உள்ளத்தாலும் குறைபாடுடன் இருக்கின்ற எம் சகோதர
சகோதரிகளை சுமையாகக் கருதாமல், அவர்களை நேசத்துடன்
பராமரிக்கவும், மாற்றுத் திறனாளிகள் மனச் சோர்வின்றி
தங்கள் இயல்பை, சாதிக்கும் திசையில் கொண்டு செல்லவும்
அருள் தர வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு.
உறவுகளை மதிப்போம். உன்னதரை
நேசிப்போம்.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற
செல்வம்" இவ்வுலகில் நிறைவான வாழ்வு வாழ, ஆரோக்கியம் இன்றியமையாதது.
ஆரோக்கியமற்ற மனிதரால் விரும்பினாலும் மகிழ்ச்சியாக வாழ
முடிவதில்லை. அவர் தானும் துன்புற்று தன்னை நேசிப்பவர்களையும்
துன்பத்தில் ஆழ்த்துகின்றார். இன்றைய நவநாகரிக யுகத்தில்
விளைந்த நவீன வாழ்வியல் முறைகளும், விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளும், மனித வாழ்வை பல வழிகளில் முன்னேற்றப்பாதைக்குச்
இட்டுச் செல்கின்றன என்பது உண்மைதான் என்றாலும், நோயற்ற
வாழ்வை தந்துள்ளன என்று நம்மால் நிறைவு கொள்ள முடிவதில்லை.
பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதைப் போன்று , நாளுக்கு
நாள் புதுப் புது நோய்களை கண்டுபிடித்து அவற்றிற்கு பெயர்
வைக்கின்றது இன்றைய விஞ்ஞான உலகம்.
இன்று மட்டும் அல்ல, இயேசு வாழ்ந்த காலத்திலும், நோய் நொடியினால்
பாதிக்கப்பட்டு, துன்பத்தில் உழன்றவர்கள் ஏராளம். இன்றைய
நற்செய்தியில், கடும் காய்ச்சலாய் படுக்கையில் கிடந்த
பேதுருவின் மாமியாரை , இறைமகன் இயேசு குணமாக்குகிறார்.
தீய ஆவி பிடித்திருநதவரை குணமாக்கிய இயேசு, தொழுகைக்
கூடத்தை விட்டு வெளியே வருகின்றார். பேதுருவின் சொந்த ஊர்
கப்பர்நாகும் என்பதாலும், அவருடைய வீடு
தொழுகைக்கூடத்திற்கு அருகில் இருந்தாலும், இயேசுவும்
அவருடைய சீடர்களும் பேதுருவின் வீட்டிற்குள்
நுழைந்தார்கள். அப்போதுதான் இயேசுவிடம் சொல்கிறார்கள்,
பேதுருவின் மாமியார் காய்ச்சலாய் படுக்கையில்
கிடத்தப்பட்டிருக்கிறார் என்று. அன்றும் சரி, இன்றும் சரி
காய்ச்சல் என்பது மரணத்தை கொண்டு வரும் கடுமையான நோயாகவும்
இருக்கிறது. அப்படிப்பட்ட கடும் காய்ச்சலில்
பாதிக்கப்பட்டவராகத்தான் பேதுருவின் மாமியார் இருந்திருக்க
வேண்டும்.
திருச்சபையின்
தலைவராக இயேசு ஏற்படுத்திய பேதுருவின் குடும்ப நிலையைப்
பற்றி சிந்திக்கும் போது, நாமும் குடும்ப உறவுகளை
இப்படியாக மதிக்க வேண்டும் என எண்ணத்தோன்றுகிறது.
அந்திரேயா, பேதுருவின் வீட்டிற்கு இயேசு சென்றார் என
சிந்திக்கும் போது, பேதுருவின் குடும்பம் கூட்டுக்
குடும்பமாக இருந்திருக்கிறது. உடன்பிறப்புகளாகிய
அந்திரேயா, பேதுரு இருவரும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை
வாழ்ந்ததன் வழியாக, உறவுகளை நேசித்து, மனிதர்களை
மதிப்பவர்கள் என்னும் பட்டியலில் இடம் பெறுபவர்கள்
ஆகின்றார்கள். யூத சமூகத்தில் பெற்றோர்கள் முதிர் நிலை
அடைந்த பிறகு, அவர்களை பராமரிக்கும் பொறுப்பு ஆண்
பிள்ளைகளையேச் சாரும். அந்த வகையில் பேதுரு தன் மாமியாரை
தன் வீட்டில் வைத்துப் பாதுகாத்திருக்கிறார்யென்றால்,
அவரின் மனைவிக்கு உடன்பிறந்த சகோதரர்கள் இல்லையென்று
நம்மால் நம்ப முடிகிறது.
உறவுகளை
மாண்போடு மதித்த பேதுரு, உன்னதர் இயேசுவைக் கண்டவுடன்
அவரைப் பின்தொடர்ந்து, உலகத்தின் உறவுகளை அன்பு செய்ய, அத்தனை உறவுகளையும் உன்னதரின் பாதத்தில் ஒன்று சேர்க்க, தன் சொந்த உறவுகளை விட்டு விட்டு, என்றும் விட்டு விலகாத
இயேசுவின் உறவைப் பற்றிக் கொண்டு, அவருக்காக இறுதி வரை
வாழ்ந்தார். நம்முடைய வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப்
பார்ப்போம். நாம் எப்படிப்பட்ட உறவுகளோடு
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? நமது உறவுகளை எப்படி
மதிக்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்போம். இயேசு பேதுரு
மாமியாரின் அருகில் சென்று அவர் கையைப் பிடித்து
தூக்கினார். தீய ஆவியை கடிந்து கொண்டவர் இயேசு, காற்றையும்
, கடலையும் கடிந்து கொண்டவர் இயேசு, இப்போது காய்ச்சலையும்
கடிந்து கொண்டார். காய்ச்சல் அவரைவிட்டு நீங்கியது. நோய்
நீங்கியவுடன் அவர்களுக்கு பணிவிடை செய்தார்.
இயேசுவை நாம் அழைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் அவரை நம்
உள்ளத்தில் அழைக்க வேண்டும். அவர் இருக்கும் இடத்தில்
அமையும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். நமது
வாழ்க்கையில் நாம் பலவிதமான காய்ச்சலால்
துன்புற்றுக்கொண்டிருக்கும் போது இயேசுவை அணுக வேண்டும்.
அவர் தரும் ஆன்மீக உணவை உட்கொள்ள வேண்டும், இயேசுவின்
தொடுதல் வேண்டும், அவரின் அருகாமை வேண்டும். இயேசு நம்
அருகில் வந்து நம் கரம் பிடிக்கும் போது ,நமது மனம்
வலுவடையும், சிந்தனை தெளிவடையும், செயல்கள் உயர்வடையும்.
ஆக நம்முடன் இருக்கும் உறவுகளை மதிப்போம், உன்னதராம்
இயேசுவை நேசித்து அவர் பணியை தொடர்ந்து செய்வோம். இறைமகன்
இயேசு நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவாராக ஆமென்.
மனநிறைவோடும் மனமகிழ்வோடும் வாழ்
நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது நம்மைச்சுற்றி வாழ்பவர்களும்
மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைத்து உதவி செய்து
வாழ்பவர்கள் தான் மனநிறைவுடன் வாழ்பவர்கள். "
மனநிறைவு என்பது
இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாமே
தேடிக்கொள்ளும் வறுமை"
என்று கூறுவார் அறிஞர் சாக்ரடீஸ்.
ஏழையான ஒருவன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.
காலையில் வயலுக்கு சென்று கடுமையாக உழைப்பது, மாலையில்
வீட்டுக்கு வந்ததும் மனைவி குழந்தைகளுடன் மகிழ்ந்து உரையாடி,
உறங்குவது என்று வாழ்ந்து வந்தான். இவன் இப்படி மகிழ்வாக
வாழ்வதைக் காண பொறுக்காத அந்த ஊரின் பண்ணையார், அவனை சந்தோசமாக
வாழவிடக்கூடாது என்று எண்ணினான். அவனுக்கு பிற இதர செல்வங்களின்
மேல் ஆசையைத் தூண்டினார். அவன் எதற்கும் மடியவில்லை. அவனது
மனைவிக்கு நகை, புடவை, சொத்து என்று பிற பெண்கள் வழியாக ஆசையை
ஏற்படுத்தினான். எதுவும் நடக்கவில்லை. இறுதியாக ஒரு தந்திரக்காரனிடம்
ஆலோசனைக் கேட்டு அதன்படி நடக்க முயன்றான். இரவோடு இரவாக ஏழைக்குடியானவன்
வீட்டின் முன் 99 பொற்காசுகள் அடங்கிய பணமூட்டையை
வைத்தான்.
மறுநாள் காலையில் வேலைக்குச்செல்லும் முன் அந்தக் குடியானவன்,
அவனது வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த மூட்டையைக் கண்டு
ஆச்சர்யம் அடைந்தான். வீட்டிற்குள் எடுத்துச் சென்று
மூட்டையில் என்ன இருக்கின்றது என்று பார்த்தவன் வியந்தான்.
அதில் உள்ள பொற்காசுகளை பலமுறை எண்ணினான். எவ்வளவு எண்ணியும்
அதில் 99 பொற்காசுகளே இருந்தன. எப்படி ஒரு மூட்டையில் 99
பொற்காசுகள் வைத்திருப்பார். முழுமையாக 100 காசுகள் தானே
வைத்திருப்பார். ஒரு பொற்காசு எங்கோ விழுந்திருக்கும் அதைத்தேடிக்
கண்டுபிடிப்போம் என்று எண்ணினான். அன்று அவன் வயலுக்குச்
செல்லவில்லை. தனது மனைவி, பிள்ளைகள் என அனைவரையும் வீடு
முழுக்க, வீட்டிற்கு வெளியே என எல்லா இடங்களிலும் தேடச்
சொன்னான். நாள் முழுவதும் தேடியும் பொற்காசு கிடைக்கவில்லை.
இரவானது சோர்வில் அனைவரும் தூங்கினர். மறுநாள் எழுந்ததும்
குடியானவன், இந்த முட்டையை முழுமையாக்க மீதமுள்ள ஒரு
பொற்காசை எப்படியாவது உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று
எண்ணினான். கடுமையாக வேலை செய்தான். அவனது சொத்துக்கள் எல்லாவற்றையும்
விற்றாலும் கூட அந்த ஒரு பொற்காசை அவனால் வாங்க முடியவில்லை.
மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானான் அதனால் நோய்வாய்ப்பட ஆரம்பித்தான்
குடியானவன். குடியானவனது மகிழ்ச்சியைப் பறித்து விட்ட மகிழ்வில்
பண்ணையார் மிகவும் மகிழ்ந்தார்.
மூட்டையில் இருக்கும் 99 பொற்காசுகள் குடியானவனுக்கு மகிழ்வைத்
தரவில்லை மாறாக விடுபட்ட அந்த ஒற்றைப் பொற்காசே அவனுக்கு
மிக உயர்வாகப்பட்டது. இருப்பதில் நிறைவுகாண்பதை
விட்டுவிட்டு இல்லாத ஒன்றிற்காக ஏங்கும் மனநிலை கொண்டதால்
இருப்பதையும் இழந்தான். நம்மிடம் இருப்பதில் ஒருபோதும்
நிறைவு அடையாது இல்லாத ஒன்றிற்காக நாம் நமது ஆற்றலை நேரத்தை
வீணாக்குகின்றோம். மனநிறைவு என்பது அவரவர் மனநிலை பொருத்தது.
வாழ்வில் ஒவ்வொருவரும் எத்தனை தான் வசதி படைத்தவர்களாக இருந்தாலும்,
மனநிறைவினை எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர்களால் வாங்க
முடியாது. பொதுக்காலத்தின் ஐந்தாம் வாரத்தில் இருக்கும்
நமக்கு இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் மனநிறைவுடன் மகிழ்வுடன்
வாழ வலியுறுத்துகின்றார். இன்பத்திலும் துன்பத்திலும் கடவுளைப்
போற்றி மனநிறைவுடன் வாழ்ந்த யோபு, மக்கள் அனைவரையும்
கிறிஸ்துவிற்குள் கொண்டு வரவேண்டும் என்று வாழ்ந்த தூய பவுல்,
தன்னை நாடி வந்த மக்களின் குறைகளைத் தீர்த்து அவர்களை
நிறைவுள்ளவர்களாக மாற்றிய இயேசு என இன்றைய வாசகங்கள்
வழியாக நாமும் மனநிறைவு கொண்டவர்களாக மனமகிழ்வுடன் வாழ அழைக்கின்றார்
இறைவன்.
மனநிறைவுடன் வாழ்ந்த யோபு
கடவுளின் அருளால் எல்லா வளங்களையும் பெற்று மிக செல்வச்செழிப்புடன்
வாழ்ந்தவர் யோபு. அத்தனையும் இழந்த பின்னும் கடவுளைப்
போற்றி மனநிறைவுடன் தனது வாழ்க்கையை வாழ்ந்த அவர், தனது உள்ளக்குமுறலை
பலவாறாக வெளிப்படுத்துகின்றார். யோபு கடவுளுக்கு மிகவும்
பிரமாணிக்கமுள்ளவராகவும், கடவுள் முன் நேர்மையானவராகவும்
விளங்கினார். தனக்குக் கிடைத்த அனைத்தும் கடவுளால் தான் என்று
முழுமையாக நம்பியதால் அவை தன்னைவிட்டு போனபோதும் கூட அவையும்
கடவுளால் நிகழ்ந்தது என்று நம்பி அத்தனையையும் ஏற்றுக்கொண்டார்.
தன் நிலை அறிந்து புலம்பல்களாக தன் எண்ணங்களை வெளிப்படுத்திய
யோபு அடிமையாக வேலையாளாக தன்னைக் கருதுகின்றார். அடிமைகள்,
வெயில், குளிர் என்று பாராமல் கடினமான வேலைகளைச் செய்யப்
பணிக்கப்பட்டார்கள். அத்தகைய அடிமையைப் போலவும், வேலையாள்
போலவும், தன்னை ஒப்புமைப்படுத்துகின்றார். தறியின் ஓடுகட்டை
இடைவிடாது ஓடுவது போல, தானும் இடைவிடாது துன்பத்தில் உழல்வதாக
எடுத்துரைக்கின்றார்.
கடுமையான வெயிலில் உழைத்து சோர்வடைந்த அடிமை நிழலுக்காக ஏங்கி
இருக்கும் நிலையில் இறைவனின் இரக்கத்திற்காக
வேண்டுகின்றார். அடிமையின் தலைவன் நினைத்தால் அவனுக்கு இளைப்பாறுதல்
அளிக்க முடியும். அவ்வகையில் இறைவனை தனக்கு தலைவனாகவும்,
தன்னை அடிமையாகவும் கருதி தனது நிலையினை எடுத்துரைக்கின்றார்.
கூலிக்காக காத்திருக்கும் பணியாள் போன்றும் தன்னை உருவகப்படுத்துகின்றார்.
அவர் எடுத்துரைக்கும் அனைத்திலும் மனநிறைவு காண ஏங்கும் மனிதரின்
உளப்பாங்கு வெளிப்படுகின்றது. இருளைத் தரும் இரவைத் தொடர்ந்து
கட்டாயம் ஒளிதரும் பகல் இருக்கும். தறியின் ஓடுகட்டை
விரைவாக நிற்காமல் ஓடுவது அழகான வேலைப்பாடு கொண்ட துணி
கிடைக்கப்படுவதற்காக. அடிமை, கூலியாள் என அனைவரும் தலைவன்
தங்களுக்கு நல்ல இளைப்பாறுதலை தருவார் என்ற நம்பிக்கையில்
இருக்கின்றனர். எவ்வளவு தான் துன்பங்கள் அனுபவித்தாலும் அத்தனையும்
கடவுளின் செயல் என எண்ணுகின்றார். மனநிறைவுடன்
வாழ்கின்றார் இவை அனைத்தும் கடவுளை இகழும் பொருட்டில் அல்ல
மாறாக தனது உள்ளக்கிடக்கை அவருக்கு வெளிப்படுத்தும் வண்ணம்
எடுத்துரைக்கின்றார். ஆக யோபு இறைவன் என்னும் தலைவனிடம் தன்
நிலையை எடுத்துரைத்து மனநிறைவிற்காக வேண்டுகின்றார். அது
கட்டாயம் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரது அருளினை
நாடுகின்றார்.
யோபு தன் வாழ்வில் தனக்குக் கிடைத்த அனைத்தும் இறைவனாலேயே
தனக்குக் கிடைத்தது என்று எண்ணுகின்றார். அதனால் தான் செல்வம்
செழிப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனநிறைவுடன்
வாழ்கின்றார். யோபுவின் மனநிலையை நமதாக்க முயல்வோம். இருப்பிலும்
இல்லாமையிலும் இறைவனின் கரம் செயல்படுவதை நாம் உணர ஆரம்பித்து
விட்டோமானால் மனநிறைவும் மகிழ்வும் நம்மில் நீங்காது
குடியிருக்கும்.
மனநிறைவைக் கைம்மாறாகப் பெற்ற தூய பவுல்
உயிர்த்த இயேசுவால் ஆள்கொள்ளப்பட்டு அனைவரையும் அவர்
பக்கம் கொண்டுவர மனநிறைவுடன் பணிகள் செய்தவர் தூய பவுல்.
சட்ட வல்லுனராக திகழ்ந்து மறைநூல்களை நன்கு கற்றிருந்த
பவுல், நம்பிக்கைக் கொண்ட அனைத்து மக்களையும்
கிறிஸ்துவிற்குள் கொண்டு வர, அடிமை போல ஆனேன் என்று
கூறுகின்றார். கிறிஸ்துவை அறிக்கையிட்டு வந்தவர்களை கைது
செய்வதற்காக தமஸ்கு நகர் நோக்கி சென்று கொண்டிருந்தவர்
உயிர்த்த இறைவனாலேயே ஆள்கொள்ளப்படுகின்றார். இறைவனால்
ஆள்கொள்ளப்பட்டவரின் வாழ்க்கையானது முற்றிலும் மாறிவிடும்
என்பதற்கு முழுமையான எடுத்துக்காட்டு தூய பவுல்.
நற்செய்தியை அறிவிக்காவில் ஐயோ எனக்குக் கேடு என்று
கூறுமளவிற்கு அதன் மீது அளவற்ற பற்று கொண்டவரானார்.
ஒவ்வொருவரும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பொறுப்பாக
நற்செய்தி அறிவித்தலைக் கருத வேண்டும் என்று
எண்ணுகின்றார். அதற்கு கைம்மாறாக மனநிறைவை நாம்
பெற்றுக்கொள்வோம் என்று கூறுகின்றார். நற்செய்தியை நாம்
முழுமனதுடன் அறிவிக்கும் பொழுது மனநிறைவு நமக்கு
கைம்மாறாகக் கிடைக்கும்.
நற்செய்தி அறிவித்தல் என்பது திருவிவிலியத்தை வாசித்து
அதனை மக்களுக்கு வார்த்தையால், வாயால் எடுத்துரைப்பது
மட்டுமல்ல. நமது அன்றாட வாழ்வில் நாம் செய்யும் பணியில்,
பழகும் மனிதர்களில், நமது செயல்கள் வழியாக அன்பினால்
செய்யப்படும் ஒவ்வொரு செயலும் நற்செய்தி அறிவிப்பே. எனவே
தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இயேசுவை
சந்திப்பவர்களின் இதயங்களும் முழு வாழ்க்கையும்
நற்செய்தியின் மகிழ்ச்சியால் நிரப்பப்படுகின்றது. அவரால்
மீட்கப்படுவதற்கு அனுமதிப்பவர்கள் பாவம், சோகம், உள்மன
வெறுமை, தனிமையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று
தனது மறைக்கல்வி உரையில் எடுத்துரைத்துள்ளார்.
ஆக மனநிறைவை நமது வாழ்வின் கைம்மாறாக பெற விரும்பும் நாம்
முழுமையான மகிழ்வுடன் உள்ளத்துடன் நற்செய்தியைப் பிறருக்கு
அறிவிக்கவேண்டும். எல்லாருக்கும் எல்லாமாய் இருப்பதாக
எடுத்துரைத்த தூய பவுல் வலுவற்றவர்களுக்கு வலுவற்றவராக
வாழ்ந்தார். நாமும் முழுமன நிறைவுடன் நமது சொல்லால்
செயலால் நற்செய்தியை அறிவிப்போம். எந்த ஒரு செயலையும்
விரும்பிச்செய்தால் பல நன்மைகள் ஏற்படும் என்று கூறிய தூய
பவுலைப்போல விரும்பி நற்செய்தியை அறிவிப்போம். மனநிறைவுடன்
வாழ முயற்சிப்போம்.
மனநிறைவின் உச்சமாய் வாழ்ந்த இயேசு
யோபு, பவுல் என நாம் மேற்சொன்னவர்கள் எல்லாரையும் விட,
பிறப்பு முதல் உயிர்ப்பு வரை மனநிறைவுடன் வாழ்ந்து,
பிறரையும் அதன்படி வாழ வலியுறுத்தியவர் இயேசு. மனநிறைவு
என்பது நாம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்காமல்
நம்மைச் சுற்றி உள்ளவர்களும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்
என்று நினைத்து உதவி செய்து வாழ்வது. இத்தகைய மனநிலை
கொண்டவர் இயேசு. தன்னோடு எல்லா இடங்களுக்கும் உடன் வந்து,
இறைவார்த்தையைப் பறைசாற்ற உதவிய தனது சீடர்களின் நலனையும்
கவனிக்கத் தவறவில்லை. அவர்கள் நலமாக இருக்க அவர்களது
குடும்பத்தார் நலமாக இருக்க விரும்புகின்றார். கடவுளுக்காக
தன்னை அர்ப்பணிப்போர் குடும்ப காரியங்களில் அதிகமாக
ஈடுபட்டு வந்தால் நம்மிடையே சொல்லப்படும் ஒரு வழக்கு சொல்
ஒன்று உண்டு. நாம் அதிகமாக நம் குடும்பத்தை கவனித்தால்
கடவுள் நம் குடும்பத்தை கவனிக்க மாட்டார். ஏனென்றால் அவர்
கவனிப்பதற்கு பதிலாக நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம்
என்று எண்ணி விட்டுவிடுவார். அதுவே நாம் கடவுள்
காரியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழும்போது,
கடவுள், தனக்காக குடும்பத்தை துறந்து பணிசெய்யும் இவன்
குடும்பத்தை, நாம் தான் காக்கவேண்டும் என்று எண்ணி
கவனிப்பார். இது உண்மையும் கூட. இயேசுவைப் பின் தொடர்ந்த
சீடர்கள் தங்கள் குடும்பத்தையும் உறவினர்களையும் விட்டு
விட்டு அவரைப் பின்பற்றியவர்கள்.
இயேசு சீமோன் பேதுருவின் மாமியார் காய்ச்சலால் உடல்
நலமற்று இருப்பதை அறிந்து அவரது இல்லம் செல்கின்றார்.
தனியாக செல்லவில்லை சீடர்கள் நால்வரோடு செல்கின்றார். தான்
மட்டும் சீடர்களின் குடும்பத்தாரோடு நல்லுறவு
கொண்டிருந்தால் போதாது. தனது சீடர்களும் அவர்களுடன்
நல்லுறவு கொள்ள வேண்டும். குடும்பமாக வாழவேண்டும் என்பதனை
எடுத்துரைக்கின்றார். பெண்கள் மிகவும் கீழாக நடத்தப்பட்ட
யூத சமுதாய சூழலில் மாமியாரின் கைகளைத் தொட்டு அவரைத்
தூக்குகின்றார். அவரது உடற்பிணியினின்று அவரை
மீட்கின்றார். இயேசுவால் குணம்பெற்ற ஆற்றலை மீண்டும் பெற்ற
அவரும் உடனே எழுந்து இயேசுவிற்கும் சீடர்களுக்கும்
பணியாற்ற முற்படுகின்றார். இதுவரை மருமகன் மட்டும் செய்து
வந்த செயலை மாமியாரும் முழுமனதுடன் செய்கின்றார். சீமோனின்
மாமியார் இருந்த ஊரில் வாழ்ந்த நோயாளிகள் அனைவரையும் இயேசு
காலை முதல் மாலை வரைக் குணப்படுத்துகின்றார். அதிகாலையில்
கடவுளின் ஆற்றலைப்பெற தனித்திருந்து செபிக்கின்றார். அவரது
குணப்படுத்தும் வல்லமை அறிந்து அவரைப் புகழ்ந்த, அந்த
ஊரிலேயே தங்காமல் வேறு ஊர்களுக்கும் செல்வோம் வாருங்கள்
என்று தனது சீடர்களை அழைக்கின்றார்.
அனைத்தும் நிறைந்து இருப்பதல்ல மனநிறைவு, இருப்பதில்
நிறைவு காண்பது மனநிறைவு என்பதனை தன் வாழ்வில்
எடுத்துரைத்தவர் இயேசு. குடும்ப உறவை வலுப்படுத்துதல்,
கீழான நிலையில் இருப்பவர்களையும் கண்ணோக்குதல், எல்லா
வேளையிலும் இறைவனின் துணையை நாடுதல், புகழ் இருக்கும்
இடத்தில் நின்று விடாது தொடர்ந்து முன்னேறிக்கொண்டே
இருத்தல் என்பன போன்றவை மனநிறைவிற்கான வழிகளாக இயேசு
எடுத்துரைக்கின்றார். தன்னம்பிக்கையில் கிடைக்கும்
மனநிறைவு வேறெதிலும் கிடைப்பதில்லை.
எனவே தன்னம்பிக்கையோடு முன்னேறுவோம். மனநிறைவோடு வாழ்வோம்.
பிறரும் வாழ வழிகாட்டுவோம். இறையருள் என்றும் நம்மோடும்
நம் குடும்பத்தார் அனைவரோடும் இருப்பதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை
- அருள்பணி ஏசு கருணாநிதி.
தறியின் ஓடுகட்டை
உருவகங்கள் என்றும் ஆச்சர்யம் தருபவவை. உருவகங்கள் அதை உருவாக்கியரின்
கைகளில் இருந்து விலகியவுடன் அது தனக்கென்று ஒரு பொருளை
கைக்கொள்ளும் ஆற்றல் பெற்றுவிடுகிறது. அதைப் பயன்படுத்தும்
இடம், நபர், காலம், சூழல் பொறுத்து அது தன் பொருளை அழகாக
விரித்துக்கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக, 'ஆண்டவர் என்
ஆயர். எனக்கேதும் குறையில்லை' (திபா 23:1) என்ற இறைவசனத்தில்
'ஆயர்' என்பது 'ஆண்டவருக்கான' ஓர் உருவகம். மகிழ்ச்சியில்,
நன்றியில் திக்குமுக்காடும் ஒருவர் இதை வாசித்தால் 'ஆயர்'
என்ற உருவகம் அவருக்குள் நேர்முகமான உணர்வைத் தட்டி அவருக்கு
இன்னும் உற்சாகம் அளிக்கிறது. அதே வேளையில் இழப்பு, கவலை,
வெறுமை என சோர்ந்து நிற்கும் ஒருவருக்கு இதே உருவகம் அவருக்குள்
எதிர்நோக்கையும், 'அனைத்தும் மாறிவிடும்' என்ற நம்பிக்கை
உணர்வையும் தருகிறது. நாம் ஒவ்வொருவருமே ஏதோ ஒரு உருவகமாக
ஏதோ ஒரு உருவகத்தை வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதே நம்
வாழ்வியில் எதார்த்தம்.
இன்றைய முதல் வாசகத்தில் (யோபு 7:1-4, 6-17) நாம் காணும்
ஓர் உருவகம் என்னை மிகவும் கவர்கின்றது. அதிலிருந்து நம்
சிந்தனையை இன்று தொடங்குவோம்: 'என் வாழ்நாள்கள் தறியின் ஓடுகட்டையிலும்
விரைந்தோடுகின்றன!' (யோபு 7:6). எந்நேரமும் கைத்தறிகளின்,
விசைத்தறிகளின் சத்தங்களுக்கு நடுவில் நான் பிறந்த வளர்ந்ததால்
என்னவோ இந்த உருவகம் என்னை மிகவும் கவர்கின்றது. தறியில்
ஓடுகட்டை மிக முக்கியமான ஒன்று. கைத்தறியின் அந்தப் பக்கத்தில்
நூல் பாவு இருக்கும். தறியின் இந்தப் பக்கம் அதை தன் கைகளால்
இயக்குபவர் அமர்ந்திருப்பார். அவரின் ஒரு கை நூல்
கோர்க்கும் கட்டையையும் மறு கை ஓடு கட்டையையும் இயக்கும்.
இந்த ஓடு கட்டையின் நடுவில் நூல்கண்டு இருக்கும். ஓடுகட்டையின்
இரு முனைகளிலும் உலோக மூக்கு இருக்கும். ஓடு கட்டையின் சக்கரங்கள்
வழுவழுப்பான சக்கரத்தில் இருக்கும். ஓடுகட்டைக்கு சரியான
வேகம் தரப்பட வேண்டும். அதிகமான வேகம் தந்தால் அது தறியைவிட்டு
வெளியே பாய்ந்துவிடும். குறைவான வேகம் தந்தால் பாதியில்
நின்றுவிடும். சீரான வேகத்தில் இயங்கும் இந்த தறிகட்டைதான்
ஒரு கைத்தறியின் இயக்கத்தின் அடையாளம்.
தன் வாழ்நாள்களை தறியின் ஓடுகட்டையோடு ஒப்பிடுகின்றார். ஏன்?
தன் வாழ்வின் வேகம் அப்படி இருப்பதாக அவர் எழுதுகின்றார்.
இந்த ஒப்பீட்டுக்கு முன் அவர் மேலும் இரண்டு உருவகங்களைப்
பயன்படுத்துகின்றார்:
அ. நிழலுக்கு ஏங்கும் அடிமை
ஆ. கூலிக்கு காத்திருக்கும் வேலையாள்
வெயிலில் வேலை செய்யும் அடிமை நிழலுக்காக ஏங்குவான். அப்படி
அவன் நிழலில் சற்றுநேரம் இளைப்பாறினாலும் அவன் இன்னும்
பார்க்க வேண்டிய வேலை வயலில் இருப்பதால் அவன் மீண்டும்
வெயிலுக்கே செல்வான். வெயிலில் நிற்கும் அவன் மீண்டும் நிழல்
தேடுவான். ஒரு பக்கம் தான் தேடி அலையும் நிழல். மறுபக்கம்
தான் பார்க்க வேண்டிய வேலை. இந்த இரண்டிற்கும் இடையே அவன்
ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
அதே போல, கூலிக்கு காத்திருக்கும் வேலையாள். இது எனக்கு தனிப்பட்ட
அனுபவமாகவே இருந்திருக்கிறது. என் அம்மாவுக்கு பள்ளிக்கூடத்தில்
சமையலுக்கு வேலை கிடைக்காத நாள்களுக்கு முன் அவர் பருத்தி
எடுக்க காட்டுக்குச் செல்வார். மாலையில் 5 மணிக்கு 6
ரூபாய் கூலி தரப்படும். 6 ரூபாய் கைகளில் ஏந்தி வீட்டிற்கு
வருவதற்குள் பால், எண்ணெய், காய்கறி, அரிசி என அன்றைய இரவுக்கும்,
அடுத்தநாள் காலைக்குமான உணவிற்கான பொருள்களை வாங்க
வேண்டியிருப்பதால் வீட்டிற்குள் நுழையும்போது வெறும் 20,
50 சில்லறைக்காசுகளே மிஞ்சும். உடனே அடுத்த நாள் தேவை
என்னும் கவலை பற்றிக்கொள்ளும். இரவு தூங்கும்போதுகூட
அடுத்தநாள் தனக்கு அதே பருத்திக்காட்டில் வேலை கிடைக்குமா?
அல்லது இன்னும் தூரம் செல்ல வேண்டுமா? என்ற கவலை
வந்துவிடும் அவருக்கு. ஆக, ஒரு வேலையின் அல்லது உழைப்பின்
கனியை இரசித்து ருசிப்பதற்குள் அடுத்த நாள் வேலை அல்லது
கவலை வந்துவிடுகிறது.
இதே கவலைதான் தனக்கும் இருப்பதாக யோபு எழுதுகின்றார்:
'இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது
எப்போது எழலாம் என்பேன். இரவோ நீண்டிருக்கும். விடியும்வரை
புரண்டு உழல்வேன்.'
இரவில் கவலைகள். பகலில் உழைப்பு. மாலையில் கூலி. மறுபடி
கவலைகள். மறுபடி உழைப்பு. மறுபடி கூலி. இப்படி
சுழன்றுகொண்டிருக்கும் வாழ்க்கை என்றுமே மாறாது என்ற
நம்பிக்கையின்மை வந்துவிடுகிறது யோபுவிற்கு. 'என் கண்கள்
மீண்டும் நன்மையைக் காணா!' என விரக்தியடைகின்றார்.
கொஞ்சம் நம் வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திப்பார்க்கவே நமக்கு
பயமாக இருக்கிறது. இல்லையா? நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
பகல் முழுவதும் வேலை. வேலை பார்த்துவிட்டு
ஓய்ந்திருக்கலாம் என இரவில் தூங்க வீட்டிற்கு வந்தால்,
'அடுத்த நாளிலிருந்து பேருந்து கட்டணம் உயர்வு, டீசல்
கட்டணம் உயர்வு, மின் கட்டனம் உயர்வு' என டிவி செய்தியில்
வயிற்றில் புளியைக் கரைத்து தூங்கவிடாமல்
ஆக்கிவிடுகிறார்கள். மேலும், அடுத்த நாளைப் பற்றிய
திட்டமிடலில் ஆழ்ந்துவிடுகிறோம். இன்று இந்த உலகம் நம்மை
'பிஸியாகவே' இருக்க வேண்டும் எனச் சொல்கிறது. நாம்
'பிஸியாக இருந்தால்தான்' நாம் 'ப்ரொடெக்டிவாக' இருக்கிறோம்
என்ற கற்பனையையும் இத்தோடு கட்டிவிடுகிறது. நாள்காட்டி,
திட்டமிடல், வேக் அப் டைமர், ஸ்டாப் வாட்ச் என
சின்னஞ்சிறியவற்றிலும் நாம் திட்டமிடத் தொடங்கிவிட்டோம்.
நம் குழந்தைகள் நமக்குமேல் பிஸியாக இருக்கிறார்கள்.
காலையில் யோகா அல்லது கராத்தே. பகல் முழுவதும் பள்ளி.
மாலையில் டியூஷன், வீட்டுப்பாடம். இரவில் ப்ராஜக்ட்.
வீக்எண்டில் ஸ்விம்மிங், ஸ்கேடிங், கர்ஸிவ் ரைட்டிங் என
நிறைய செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்தி அவர்களின்
விளையாட்டு, கற்பனைத்திறன், படைப்பாற்றல் என அனைத்தையும்
இழக்கச் செய்கிறோம்.
நாம் இப்படி பிஸியாக இருக்க என்ன காரணம் என்பதை யோபுவைப்
போன்ற ஞானநூல் அறிஞர் சபை உரையாளர் இப்படி பதிவு
செய்கிறார்:
'மனிதர் ஏன் இவ்வளவு பாடுபட்டு உழைக்கின்றனர் என்பதையும்
கண்டறிந்தேன். இதற்குக் காரணம் மனிதரிடையே காணப்படும்
போட்டி மனப்பான்மையாகும். இது வீண் செயல். காற்றைப்
பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும். தம் கைகளைக் கட்டிக்கொண்டு
பட்டினிகிடந்து மடிகிறவர் மடையர் எனச் சொல்லப்படுகிறது.'
(சஉ 4:4-5).
ஆக, அடுத்தவர் என்னை 'மடையன்' என்று சொல்லிவிடுவார்கள்
என்ற பயத்தில் நான் ஓடி ஓடி உழைக்கின்றேன். என் வேலைகளை
விறுப்பாகச் செய்கின்றேன். அடுத்தவரை நான் 'மடையர்' என்று
சொல்லாதவண்ணம் அவரும் ஓடிக்கொண்டே இருக்கின்றார்.
இந்த ஓட்டத்திற்கான, பரபரப்புக்கான தீர்வை யோபு தரவில்லை.
ஆனால், சபை உரையாளர் தொடர்ந்து எழுதுகின்றார்: 'உழைப்பு
இரு கை நிறைய இருப்பதைவிட மன அமைதி ஒரு கையளவு இருப்பதே
மேல்.'
இவ்வாறாக, யோபுவின் வாழ்க்கை ஓட்டம் தறியின் ஓடுகட்டை போல
இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த முனையை
தொடும் ஓடுகட்டை நின்று ஓய்வெடுக்காமல் மீண்டும் அடுத்த
முனை நோக்கி ஓடுகிறது. 'நிழல்' என்று கொஞ்ச நேரம்
நிற்கவும் முடியவில்லை. 'வேலை' என்று வெயிலில்
நின்றுகொண்டே இருக்கவும் முடியவில்லை.
இதுதான் மனிதரின் உழைப்பா? இவ்வளவுதான் மனித வாழ்க்கையா?
நம் உழைப்பு வெறும் காற்றா? நம் உழைப்பு பயனற்றதா? நம்
வாழ்வு பொருளற்றதா? உழைப்பில் மகிழ்ச்சி என்பதே இல்லையா?
இப்படி எல்லாம் நமக்கு இப்போது கேள்விகள் எழலாம். இப்படிக்
கேள்விகள் கேட்டு விரக்திக்கு நாம் உள்ளாகிக்கொள்ள
வேண்டாம்.
ஏனெனில், இந்தக் கேள்விகள் தரும் விரக்தியை அப்படியே
நம்பிக்கைத் துளிகளாக மாற்றி நம்மேல் தூரல்
பெய்யச்செய்கிறது இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற்
1:29-39). இயேசுவின் ஒரு நாள் புரோகிராமை அல்லது அவருடைய
ஒருநாள் டாஸ்க் லிஸ்டை மாற்கு நற்செய்தியாளர் பதிவு
செய்கின்றார்.இன்றைய நற்செய்தி வாசகத்தை கால அட்டவணையாக
இப்படி போடலாம்:
இடம்: கப்பர்நகூம்
நாள் 1
காலை 09:00 மணி தொழுகைக்கூடத்தில் போதனை, தீய ஆவி
பிடித்தவர் நிகழ்வு
மாலை 03:00 மணி தேநீர், பேதுருவின் இல்லம்
மாலை 03:30 மணி பேதுருவின் மாமியாருக்கு காய்ச்சலிலிருந்து
நற்சுகம் தருதல்
மாலை 03:45 மணி மாமியாரின் பணிவிடை, இயேசுவும் சீடர்களும்
ஓய்வெடுக்கின்றனர். (மாமியார் அவர்களுக்கு பணிவிடை
புரிந்தார் என பதிவு செய்கின்றார் மாற்கு. ஒருவேளை
சீடர்கள் குளிப்பதற்காக அல்லது பாதங்கள் கழுவுவதற்காக
சுடுதண்ணீர் வைத்திருப்பார் மாமியார். இது மிகவும்
சாத்தியம். ஏனெனில் காய்ச்சலில் தண்ணீரைத் தொட முடியாமல்
இருந்த மாமியார் இப்போது தண்ணீர் காய்ச்சுகின்றார். ஆக,
அவருக்கிருந்த காய்ச்சல் தண்ணீருக்கு வந்ததால் தண்ணீர்
கொதிக்கிறது!)
மாலை 06:00 மணி பேதுருவின் வீட்டின்முன் கூட்டம். பலர்
நலம் பெறுகின்றனர்
மாலை 09:00 மணி இரவு உணவு
நாள் 2
காலை 03:00 மணி துயில் எழுதல், இயேசு செபிக்கச் செல்லுதல்
காலை 06:00 மணி சீடர்கள் தேடி வருதல்
காலை 09:00 மணி 'நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம்'
இவ்வாறாக இயேசுவின் நாள் தறியின் ஓடுகட்டைபோல ஓடுகின்றது.
ஆனால், யோபுவைப் போல ஏன் இயேசு விரக்தி அல்லது சோர்வு
அடையவில்லை? இயேசுவால் எப்படி ஒவ்வொரு நாளையும் இனிமையாக
வாழ முடிந்தது? ஆக, பிஸியாக இருந்தாலும் அதை நல்லதாக
மாற்றிக்கொள்ளலாம் என்பது இயேசுதரும் படிப்பினையாக
இருக்கிறது.
யோபுவிடம் இருந்த பரபரப்பு இயேசுவிடம் சாந்தம் என்ற
நிலையாக எப்படி மாறியது? இயேசுவால் எப்படி நிழலையும்,
வேலையையும் சமமாகப் பார்க்க முடிந்தது. இதற்கு நாம் மூன்று
காரணங்களை இன்றைய நற்செய்தி வாசகத்தில் கண்டுகொள்ள
முடிகிறது:
அ. மனித உறவுகளோடு நேரம் செலவிட்டு அவர்களின் நலம் நாடுதல்
மனிதர்களோடு செலவிடும் நேரம் ஒருபோதும் செலவல்ல, அது ஒரு
முக்கியமான முதலீடு என்பதை அறிந்திருந்தார் இயேசு. இதை
மாற்கு நற்செய்தியாளரும், 'இயேசுவும் மற்ற சீடர்களும்
தொழுகைக்கூடத்தைவிட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன்,
சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்' என
பதிவு செய்கின்றார். இயேசுவை எப்போதும் மக்கள்
சுற்றிக்கொண்டே இருக்கின்றனர். யாக்கோபு, யோவான், சீமோன்,
அந்திரேயா ஆகிய நால்வரும் ஒரே ஊர்க்காரர்கள். ஆக சீமோனின்
மாமியார் இவர்கள் 4 பேருக்கும் நன்கு அறிமுகமானவர்.
சீமோனின் மாமியாரைக் குணமாக்குவதற்காக இயேசு அவரின்
வீட்டிற்குச் செல்கின்றார். மாமியார் நோயுற்றிருப்பது
அங்குதான் அவரிடம் சொல்லப்படுகின்றது. இதைச் சொன்னவர்கள்
தயங்கி தயங்கித்தான் சொல்லியிருப்பார்கள். அல்லது 'தீய
ஆவியை விரட்டிய இவரால் நோயை விரட்ட முடியுமா?' என்று
சோதித்துப்பார்ப்பதற்காகக் கூட அவர்கள் இப்படிச்
சொல்லியிருப்பார்கள். சொல்லப்பட்ட உடன் இயேசு அருகில்
சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை
விட்டு நீங்குகிறது. அவர் அவர்களுக்குப் பணிவிடை
செய்கிறார்.
இவ்வாறாக, இயேசுவின் பிரசன்னம் அடுத்தவரின் குறையை நிறைவு
செய்கிறது. மனித உறவுகளில் நாம் செய்ய வேண்டியது இதுதான்.
'இவன் நம்ம சீடன்தான! இவருடைய வீட்டிற்கெல்லாம் ஏன்
போகணும்?' என நினைக்கவில்லை இயேசு. ஒருவரின் வீட்டிற்குள்
நுழைவது எப்பது ஒருவரின் வாழ்க்கைக்குள் நுழைவது.
எல்லாரையும் நாம் நம் வீட்டிற்குள் வரவிடுவதில்லை. இந்த
நேரத்தில் என் அருள்பணி நிலையின் மேன்மை புரிகிறது.
'அருள்பணியாளர்' என்று நான் என்னை அறிமுகப்படுத்தினால்
அடுத்தவர் என்னை உடனே தன் வீட்டிற்குள் அழைக்கின்றார்.
இப்படி அழைக்கப்படுவது எனக்கு தரப்படும் மேன்மைதானே! இதில்
மிகப்பெரிய பொறுப்புணர்வு இருக்கிறது. இல்லையா?
சீமோனின் மாமியாரின் வீட்டிற்குள் செல்கின்ற இயேசு அங்கே
இருக்கின்ற குறையை நிறைவு செய்கின்றார். ஆக, நான்
அடுத்தவரின் வீட்டிற்குள் செல்லும் என் பிரசன்னமும்
அடுத்தவரின் குறையை நிறைவுசெய்வதாக இருக்க வேண்டும். நாம்
மற்றவரோடு கொண்டிருக்கின்ற உறவு, 'அருகில் செல்லுதல்,'
'கையைப் பிடித்தல்,' 'தூக்குதல்' என்ற மூன்று நிலைகளாக
இருக்க வேண்டும். இன்று நம் உறவுகள் நம்மிடம் பணம், பொருள்
என எதுவும் எதிர்பார்ப்பதில்லை. நாம் செய்ய
வேண்டியதெல்லாம், 'அருகில் இருப்பதும்,' 'அரவணைப்பதும்,'
'கைதூக்கிவிடுவதும்' தான்.
இவ்வாறாக, தன் உழைப்பையும், நேரத்தையும், ஆற்றலையும் நாம்
அடுத்தவரின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தினால் அது ஒருபோதும்
வீணாகவும், விரக்தியாகவும் மாறாது.
ஆ. திரும்ப எதிர்பார்க்காத உழைப்பு
கடந்த மாதம் அருள்பணியாளர் பேராசிரியர் ஒருவரைச்
சந்தித்தேன். அவர் ஒரு துறவற சபையைச் சார்ந்தவர். அவர்
மாதம் 2 லட்சம் சம்பளம் வாங்குவதாகச் சொன்னார். அப்படிச்
சொன்னவர் என்னைப் பார்த்து, 'நீ மறைமாவட்டக் குருவாய்
இருப்பதால் வெறும் பூசை மட்டும்தான் வைக்க முடியும்!'
என்று நக்கலாகச் சொன்னார். இரண்டு மூன்று நாள்களாக என்
சிந்தனை அவர் சொன்னதை வைத்தே ஓடியது. நாள் முழுவதும் நான்
பிஸியாக இருக்கிறேன். திருப்பலி வைக்கிறேன். மக்களை
சந்திக்கிறேன். நோயுற்றவர்களைத் தேடிச் செல்கிறேன்.
இறந்தவர்களை அடக்கம் செய்கிறேன். ஆனால், மாத இறுதியில்
எனக்கென்று சம்பளம் 2 லட்சம் இல்லை. அப்படி என்றால் என்
உழைப்பு வீணா?
என் கேள்விக்கான பதில் இன்றைய நற்செய்தி வாசகத்தில்
இருக்கிறது. இயேசு நிறைய வேலைகளைச் செய்கிறார். 'பலரை
குணமாக்குகின்றார். பல பேய்களை ஓட்டுகின்றார்.' இவர்
இதற்கென்று எந்த கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. தன் நல்ல
உள்ளத்திற்கு மக்களால் ஒருபோதும் கூலி தரமுடியாது என
நினைக்கின்ற இயேசு அனைத்தையம் இலவசமாகக் கொடுக்கின்றார்.
ஆக, இங்கே இயேசுவின் தன்மதிப்பையும் பார்க்கலாம். அவரின்
உழைப்பை அவர் ஒருபோதும் விலைபேசவில்லை. நான் உடல்நலம்
சரியில்லாமல் இருக்கும்போது என்னை மருத்துவமனைக்கு
அழைத்துச்செல்லும் என் நண்பருக்கு நான் ஊதியம் கொடுக்க
முடியுமா? அல்லது நான் அப்படிச் செய்யும்போது அதற்கு கூலி
பெற முடியுமா?
இயேசு ஒருபோதும் தன் வாழ்வை கூலிக்காக வாழவில்லை. இதே
மனநிலை இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 9:16-19,
22-23) தூய பவுலிடமும் விளங்குவதைப் பார்க்கின்றோம்:
'அப்படியானால், எனக்கு கைம்மாறு என்ன? உங்களுக்கு
எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதில் உள்ள மனநிறைவே
அக்கைம்மாறு. நான் நற்செய்தி அறிவுப்போருக்குரிய உரிமையைக்
கொஞ்சம்கூட பயன்படுத்திக்கொள்ளவில்லை.' என்ன ஒரு பெரிய
மனது பவுலுக்கு? தான் உழைப்பின் கூலிக்கு உரிமையுடையவர்
என்றாலும், தான் பெறும் மனநிறைவே அக்கைம்மாறு அல்லது கூலி
என நினைக்கின்றார். இப்படி நினைப்பதற்கு நிறைய
துணிச்சலும், அதைவிட நிறைய கடவுள் பராமரிப்பின்மேல்
நம்பிக்கையும் வேண்டும்.
ஆக, நான் செய்யும் எந்த நற்செயல்களுக்கும் அதற்குரிய
கூலியை திரும்ப எதிர்பார்க்காமல் நான் உழைக்கும்போது என்
உழைப்பு விரக்தி தருவதில்லை.
இ. முதன்மையானதை முதன்மையானதாக வைப்பது
'நாம் ஒருநாளில் செய்யும் செயல்களில் முக்கியமானவற்றை
நாளின் முதலிலேயே செய்துவிட வேண்டும்' என்றும்,
'அடுத்தவருக்கான நேரத்தை நாம் அடுத்தவருக்குக்
கொடுப்பதைவிட நமக்குரிய நேரத்தை நமக்குக் கொடுக்க
வேண்டும்' என்றும் சொல்கிறது மேலாண்மையியல். தன் வாழ்வில்
முக்கியம் என கருதும் இறைவேண்டலை நாளின் முதல் வேலையாக
வைத்திருக்கின்றார் இயேசு. இயேசு தன் பேட்டரியை சார்ஜ்
செய்யும் நேரம் இதுதான். மேலும் இயேசு தனக்குரிய
ஓய்வைக்கூட தனக்குக் கொடுக்காமல் தன் வானகத்தந்தைக்காக
கொடுக்கின்றார். இயேசுவான் இந்த ஓய்வை எடுக்க
முடிந்ததால்தான் நாள்முழுவதும் அவரால் படைப்பாற்றலோடு
செயல்பட முடிகிறது.
ஈ. அடுத்தவருக்காக உன்னை மாற்றிக்கொள்ளாதே
இது மிக முக்கியமான பாடம். தனியாக மலையில்
செபித்துக்கொண்டிருக்கின்ற இயேசுவைச் சந்திக்கின்ற
சீடர்கள், 'எல்லாரும் உம்மைத் தேடுகிறார்கள்'
என்கிறார்கள். இயேசு இதைக் கேட்டு மகிழ்ச்சியடையவில்லை.
'அப்படியா, எங்கே அவர்கள்?' என்று அவர்களைத்
தேடிச்செல்லவில்லை. அருள்பணியாளர் வாழ்வில் வரும்
மிகப்பெரிய சோதனை இதுதான். 'ஃபாதர் உங்கள எல்லாரும் எங்க
ஊர்ல தேடுறாங்க!' என்றும், 'நீ நல்லா வேலை செய்ற!
உன்னைவிட்டால் யாரால் இந்த வேலையை செய்ய முடியும்?',
'நீங்கதான் பூசைக்கு வரணும். எல்லாரும் மீட்டிங்ல உங்க
பேரைத்தான் சொன்னாங்க!,' 'உங்களாலதான் இந்த ஸ்கூல நடத்த
முடியும்!' இதெல்லாம் சீடர்களின் வார்த்தைகளைப் போல வரும்
சோதனைகள்.
மக்களின் மனது மாறக்கூடியது என்றும், அவர்களின்
விருப்பங்கள் மாறிக்கொண்டே இருக்கும் என்றும், தன்னைவிட
மற்றொருவர் தன்வேலையை நன்றாகச் செய்வார் என இயேசு
அறிந்திருந்ததாலும்தான், 'அடுத்த ஊருக்குப் போவோம்!'
என்கிறார் இயேசு. நம் வாழ்வில் 'போர் அடிக்குது!' என்று
சில நேரங்களில் சொல்வதற்குக் காரணம் நாம் ஒரே வேலையைச்
செய்வதுதான். அல்லது ஒரே ஊருக்குள் இருப்பதுதான். 'அடுத்த
ஊருக்குப் போவோம்!' என்று நான் துணிந்தால் எத்துணை நலம்.
இறுதியாக,
நாம் எல்லாருமே தறியின் ஓடுகட்டைகள்தாம்! விரைவாக
ஓடிக்கொண்டிருக்கிறோம்தான்!
ஆனால், நமக்குள்ளேயே ஓடினால், ஊதியம் தேடி ஓடினால்,
நீடித்த நிழல்தேடி அமர்ந்தால் நம் வாழ்வு யோபுவின்
வார்த்தைகள் போல் விரக்தியாகும்.
ஆனால், அடுத்தவரை நோக்கி, அடுத்தவரின் நலன்நோக்கி,
முதன்மையானது நோக்கி நகர்ந்தால் அது நிறைவே - இயேசுவின்
வாழ்வு போல!
I யோபு 7: 1-4, 6-7
II 1 கொரிந்தியர் 9: 16-19, 22-23
III மாற்கு 1: 29-39
நற்செய்திக்காக எல்லாவற்றையும்
செய்வோம்
கடலில் பயணம் செய்துகொண்டிந்த பெரிய கப்பல் ஒன்று,
திடீரென்று வீசிய பெரும்புயலில் சிக்கிச் சின்னாபின்னமானது.
இதனால் கப்பலில் பயணம் செய்த பலர் கடலுக்குள் மூழ்கி உயிரிழந்தார்கள்.
ஒருசிலர் மீன்களுக்கு இரையானார்கள். அந்தக் கப்பலில் பயணம்
செய்த ஒருவர் மட்டும் எப்படியோ தப்பித்து அருகில் இருந்த
தீவில் ஒதுங்கினார். தீவில் இருந்தவர்களோ பழங்குடி மக்கள்;
ஆனாலும் அவர்கள் அவரை நல்லமுறையில் உபசரித்தார்கள். பின்னர்
அவர் அவர்களோடு பேசும்பொழுதுதான் தெரிந்தது, அவர்கள் அனைவரும்
கிறிஸ்தவர்கள் என்று.
இது தெரிந்ததும் அவர் அவர்களிடம், "
நீங்கள் ஏன் கிறிஸ்தவ
மதத்திற்கு மாறினார்கள். மதம் என்பது போதை என்பதும், மூட
நம்பிக்கைகளின் மொத்த வடிவம் என்பதும், அது உங்களைக்
சோம்பேறிகளாக்கிவிடும் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?"
என்று சீறினார். அதற்கு அந்தப் பழங்குடி மக்களின் தலைவர்
அவர்களிடம், "
ஐயா! நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்கு விளங்கவில்லை;
ஆனால், ஒன்று மட்டும் உறுதி. ஒருகாலத்தில் மனிதர்களைப்
பிடித்துச் சாப்பிடுபவர்களாக இருந்த எங்களுக்கு இங்கு வந்த
அருள்பணியாளர் ஒருவர் தம் உயிரைப் பணயம் வைத்து, இயேசுவைப்
பற்றிய நற்செய்தியை அறிவித்து, எங்களை நல்லவராக்கினார். ஒருவேளை
அவர் மட்டும் இங்கு வராமலும், நற்செய்தி அறிவிக்காமலும் இருந்திருந்தால்,
நாங்கள் மனிதர்களைப் பிடித்துச் சாப்பிடுபவர்களாகவே இருந்திருப்போம்.
நீங்களும் இந்நேரம் ரைக்கும் இங்கு உயிரோடு இருந்திருக்க
மாட்டீர்கள்"
என்றார்.
ஆம். யாரோ ஓர் அருள்பணியாளர் தம் உயிரையும் பயணம் வைத்து
நற்செய்தி அறிவித்ததால்தான், தீவில் இருந்த மனிதமாமிசம்
சாப்பிடுபவர்கள் நல்லவர்களாக மாற முடிந்தது. பொதுக்காலத்தின்
ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை,
நற்செய்திக்காக யாவற்றையும் அல்லது எல்லாவற்றையும்
செய்வோம் என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அது
குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஊர்கள் தோறும் நற்செய்தி அறிவித்த இயேசு:
மாற்கு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி
வாசகம், இயேசுவின் பணிவாழ்வில் ஒருநாள் எப்படி இருந்தது என்பதை
எடுத்துச் சொல்கின்றது. இதில் குறிப்பாக நாம் கவனிக்கவேண்டியது,
இயேசு தன் சீடர்களிடம் சொல்கின்ற, "
நாம் அடுத்த ஊர்களுக்குப்
போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்றவேண்டும்.
ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கின்றேன்"
என்ற வார்த்தைகளாகும்.
திருமுழுக்கு யோவான் கைது செய்யப்பட்ட பின் (மாற் 1: 14)
நற்செய்தியைப் பறைசாற்றத் தொடங்கி இயேசு, ஊர்கள் தோறும் நற்செய்தி
அறிவித்தார். மட்டுமல்லாமல், "
நற்செய்தி அறிவிப்பதற்காகவே
வந்திருக்கின்றேன்"
என்கின்றார்.
இயேசு ஏன் தன் சீடர்களிடம் இவ்வாறு சொல்லவேண்டும் என்ற
கேள்வி எழலாம். இந்தக் கேள்விக்குப் பதிலாய் இருப்பதுதான்
இன்றைய முதல் வாசகமும், இன்றைய நற்செய்தியின் முதற்பகுதியும்
ஆகும். முதல் வாசகத்தில் யோபு தனது பிள்ளைகள், உடைமைகள் யாவற்றையும்
இழந்தபின்பு, தொழுநோயால் பாதிக்கப்பட்டவராய் தன் நாள்கள்
எப்படி வேதனையோடு கழிகின்றன என்பதைப் பற்றிப்
பேசுகின்றார். யோபுவைப் போன்று மனத்தளவிலும், இன்றைய நற்செய்தியில்
வருகின்ற பலவிதமான நோயாளர்களைப் போன்று உடலளவிலும் பலரும்
இன்றைக்குப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு
ஆறுதலையும், உடல் உள்ள நலனையும் அளிக்க இயேசு ஊர்கள்தோறும்
நற்செய்தி அறிவித்தார்.
நற்செய்திப் பணியை ஒவ்வொருவரும் கட்டாயம் செய்யவேண்டும்
ஊர்கள் தோறும் நற்செய்தி அறிவித்த இயேசு, தன் சீடர்களையும்
ஊர்கள்தோறும் நற்செய்தி அறிவிக்க அனுப்பி வைக்கின்றார். அத்தோடு
அவர் அவர்களிடம், "
உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப்
பறைசாற்றுங்கள்"
(மாற்கு 16: 15) என்ற கட்டளையைக்
கொடுக்கின்றார். இயேசுவின் இந்தக் கட்டளைக்கேற்ப அவருடைய
சீடர்கள், அவர்களுடைய வழிவந்தவர்கள் யாவரும்... உலகெங்கும்
சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவித்தார்கள். அப்படிப்
பல இடங்களுக்குச் சென்று, நற்செய்தியை அறிவித்தவர்தான்
திருத்தூதர் புனித பவுல். இவர் இன்று நாம் படிக்கக்கேட்ட
இரண்டாம் வாசகத்தில், நற்செய்தியை அறிவிக்கின்றபொழுது ஒவ்வொருவரும்
எத்தகைய மனநிலையோடு அறிவிக்கவேண்டும் என்பதை மிகத் தெளிவாக
எடுத்துக் கூறுகின்றார்.
"
நான் நற்செய்தியை அறிவிக்கின்றேன் என்றாலும், அதில் நான்
பெருமைப்பட ஒன்றுமில்லை"
என்று சொல்லும் புனித பவுல்,
"
இதைச் செய்யவேண்டிய கட்டாயம் அல்லது பொறுப்பு எனக்கு உள்ளது"
என்கின்றார். அப்படியெனில், நற்செய்தியை அறிவிப்பது ஒவ்வொருவருடைய
கடமையாக இருக்கின்றது. இன்றைக்கு ஒருசிலர் நற்செய்தி அறிவிப்புப்
பணி என்பது அருள்பணியாளர்களும் அருள்சகோதரிகளும் துறவிகளும்
மட்டுமே செய்யவேண்டிய பணி என்று
நினைத்துக்கொண்டிருக்கின்றார். உண்மையில் நற்செய்தி அறிவிப்புப்
பணி என்பது திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் செய்யவேண்டிய
பணியாகும். இம்மாபெரும் பணிக்காக ஒருவர் புனித பவுல் சொல்வது
போன்று யாவற்றையும்; ஏன் உயிரையும் இழக்கத் தயாராக இருக்கவேண்டும்.
நன்மைகளைப் பெற்றோர் அவற்றைப் பிறருக்குக் கொடுக்க
வேண்டும்.
தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்து பலரும் அறிவித்த நற்செய்தியைக்
கேட்போர் அல்லது கடவுளிடமிருந்து நன்மைகளைப் பெறுவோர், அவற்றைத்
தங்களுள்ளே வைத்துக் கொள்ளாமல், பிறருக்கும் கொடுக்கவேண்டும்.
இது இன்றைய இறைவார்த்தை நமக்குச் சொல்லும் மிக முக்கியமான
செய்தியாக இருக்கின்றது.
நற்செய்தியில் இயேசு, சீமோன் பேதுருவின் மாமியாருடைய
காய்ச்சலைப் போக்கியதும், அவர் இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும்
பணிவிடை செய்தார் என்று வாசிக்கின்றோம். அவ்வாறெனில், இறைவனிடமிருந்து
நன்மைகளை (அது நற்செய்தியோ நலமான வாழ்வோ) பெறுகின்ற நாம்,
அவற்றைப் பிறருக்கும் வாழவேண்டும். ஒருவேளை நாம் இறைவனிடமிருந்து
நன்மைளையும் நலமான வாழ்வையும் பெற்றுக்கொண்டு, அவற்றைப் பிறருக்கு
வழங்கவில்லை என்றால், நம்மைப் போன்ற தன்னலவாதிகள் யாரும்
இருக்க முடியாது! இதைத்தான் கவிக்கோ அப்துல் ரகுமான்,
"
இவ்வுலகிற்குப் பிச்சைக்காரர்களாய் வந்துவிட்டு, கடன்காரர்களாய்
போகாதீர்கள்"
என்பார். இந்த உலகம் அல்லது கடவுள் தந்த எல்லா
வளங்களையும் அனுபவித்துவிட்டு, இந்த உலகிற்கு எதையும்
செய்யாதவர்கள் கடன்காரர்கள்தானே! எனவே, நாம் பெற்ற நன்மைகளை,
நலமான வாழ்வை, நற்செய்தியை மற்றவர்களுக்கும் வழங்கி இயேசுவுக்குச்
சான்று பகர்வோம்.
சிந்தனை:
நாம் இயேசுவின் நண்பர்களாக, அவரது சீடர்களாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளோம்
என்பதே நற்செய்தி அறிவிப்பில் உள்ள மகிழ்ச்சி என்பார்
திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் இயேசுவின் சீடர்களாக,
அவரது நண்பர்களாக இருந்து, அவரது நற்செய்தி அறிவித்து, அதனால்
வருகின்ற ஆசியில் பங்கு பெற்று, இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
வீதி வழியாக சென்றுகொண்டிருந்த ஒருவன் தவறி ஒரு ஆழமான
குழியில் விழுந்துவிட்டான். அவ்வழியே சென்ற ஒருவன்
குழியில் விழுந்து கிடப்பவனைப் பார்த்து உனக்கு இரண்டு கண்கள்
இருந்தும் பார்த்துப் போகத் தெரியலையா! இனிமேலாவது
பார்த்துப் போகக் கற்று கொள் என புத்தி சொல்லி நகர்ந்துவிட்டார்.
இரண்டாவது அதேவழியே வந்த ஒருவன் ஐயோ சகோதரா! குழியில்
விழுந்துவிட்டாயா? எப்படியாவது கற்களைப் பிடித்து வெளியே
வர முயற்சி செய் என்று கூறி அவனும் நகர்ந்து விட்டான்.
மூன்றாவதாக வந்தவரோ, கீழே இறங்கி அந்த மனிதனை மேலே
தூக்கிக் கொண்டு வந்தார்.
ஆம்! அவர்தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அவர் அறிவுரை
மட்டும் கூறவில்லை. விலகிச் செல்லவில்லை. மக்கள் மீது பரிவுகாட்டியதோடு
நழுவவில்லை. மாறாக மக்களின் நிலைக்கு இறங்கி வந்து அவர்களை
எல்லாவிதத் துன்பங்களிலும் இருந்துவிடுவித்தார். எனவே எசாயா
மிகத் தெளிவாகச் சொல்கிறார்: அவர் நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார்.
நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார் (எசாயா 53:4).
இன்றைய நற்செய்தியில் இயேசு கிறிஸ்து சீமோன் பேதுருவின்
மாமியாரைக் குணப்படுத்துகிறார். பல்வேறு பிணிகளால் அவதிப்பட்ட
மக்களையும் குணப்படுத்துகிறார். எல்லா இடங்களிலும், எல்லா
நேரங்களிலும் உதவிக்கரம் நீட்டுகிறார். எனவே திருத்தூதர்
பணியிலே புனித லூக்காஸ் கூறுகிறார்: அவர் எங்கும் நன்மை
செய்துகொண்டே சென்றார் (தி.ப. 10:38):
இரண்டாவது, இயேசு செபத்தையும், செயலையும் இணைப்பதைப்
பார்க்கிறோம். இவை இரண்டும் நாணயத்தின் பிரிக்க முடியாத இரு
பக்கங்கள் போல இயேசுவின் வாழ்வில் வெளிப்படுகிறது. நன்மையான
காரியங்களை ஓய்வின்றி செய்து கொண்டே போகிறார். அதே நேரத்தில்
தனிமையான இடம் தேடிச்சென்று இரவில் மலையில் இறை வேண்டல்
செய்கிறார். எந்த அளவுக்கு செபத்தில் ஈடுபட்டாரோ அந்த அளவுக்குப்
பணியிலும் ஈடுபட்டார்.
மூன்றாவது, கிறிஸ்து மனிதருடைய ஆன்மீகத் தேவை களையும், உடல்
சார்ந்த தேவைகளையும் வெவ்வேறாகப் பிரிக்காமல் இரண்டையும்
ஒன்றாக இணைக்கிறார்.
ஐந்து அப்பங்களைக் கொண்டு மக்களுக்கு உணவளிக்கிறார். தானே
உயிர்தரும் உணவு என்பதையும் உணர்த்துகிறார்.
பார்வை இன்றி இருந்த குருடனைப் பார்க்க வைக்கிறார்.
உடன் தானே உலகின் ஒளி என்பதையும் வெளிப்படுத்துகிறார்.
இறந்துபோன லாசரை உயிர் பெற்று எழச் செய்கிறார். தானே உயிர்த்து
எழுதலும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
(இயேசுவைப்போல திருச்சபையும் மக்களின் துயர் துடைக்கும் பணியில்
தன்னை அர்ப்பணித்துள்ளது)
இன்றைய முதல் வாசகத்திலே யோபுவைப் பாருங்கள். துன்பச் சுமை
தாங்க முடியாமல் நெஞ்சம் குமுறுகிறார். அமைதியில்லை. தூக்கம்
இல்லை. கண்களில் ஒளியில்லை. வாழ்வில் நம்பிக்கை இல்லை. ஆனால்
இறுதியில் துன்பம் அவருடைய நம்பிக்கையை வலுப்பெறச் செய்கிறது.
காயப்படுத்தினாலும் கட்டுப் போட்டவர் அவரே! அடித்தாலும் ஆற்றுகின்றவர்
அவரே (யோபு5:18) என்ற ஆழமான உண்மையை உணர்ந்தார் யோபு.
ஓர் இளைஞர் ஒரு பங்கு தந்தையிடம், நாள் முழுவதும் என்ன
செய்கிறீர்கள் என்று கேட்க, அவர் கோபத்துடன் என் வீட்டில்
இருக்கிறேன், நடப்பேன், உட்காருவேன், சாப்பிடுவேன், படுப்பேன்,
சுருட்டு பிடிப்பேன் அதைக் கேட்பதற்கு நீர் யார்? என்று
கேட்டார். சிறிது நேரம் சென்று பங்குத் தந்தை அந்த இளைஞனிடம்,
நாள் முழுவதும் கடவுள் என்னப்பா செய்து கொண்டிருக்கிறார்
என்று கேட்டார். அவனோ, கடவுள் அவர் வீட்டில் இருப்பார் -
நடப்பார் - உட்காருவார் - சாப்பிடுவார் - படுப்பார் அதை
கேட்க நாம் யாரு சாமி? என்றான்.
ஆம், இவ்வாறுதான் நாம் கடவுளைப் பற்றி நினைக்கிறோம். அவரோ
வானகத்தில் நிம்மதியாக இருக்க, நாமோ வையகத்தில் துன்பம்
தாங்காமல் பெருமூச்சு விடுவதாக நினைக்கிறோம்.
அன்பார்ந்தவர்களே! கடவுள் நம்மோடு இருக்கிறார். நம்மோடு
வெயிலில் காய்கிறார். மழையில் நனைகிறார். அவரே நம் பிணிகளை
ஏற்று, நம் நோய்களைச் சுமந்துகொள்கிறார்.
உங்கள் கவலைகளை எல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள்.
ஏனென்றால் அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார் (1 பேதுரு
5:7).
இந்த உண்மையானது நமது துன்பத்தில் நமக்கு ஆறுதல் தருகிறது.
குழியில் விழுந்துவிட்ட நம்மைத் தூக்கி எடுப்பவர் அவரே.
ஆனால் ஓர் உண்மையை நாம் நன்கு உணர வேண்டும். அமெரிக்காவில்
ஜனாதிபதியாக ஆப்ரகாம் லிங்கன் இருந்த போது உள்நாட்டுப்
போர் ஏற்பட்டது. சோகமான முகத்தோடு காணப்பட்ட லிங்கனைப்
பார்த்து அமைச்சர் ஒருவர் - நீங்கள் ஒன்றும்
பயப்படாதீர்கள். கடவுள் நம் பக்கம் இருக்கிறார். வெற்றி
நமதே, தோல்வி நம்மை அணுகாது என்றார்.
அதற்கு லிங்கன் அமைதியாக, கடவுள் நம் பக்கம் இருக்கிறாரோ,
இல்லையோ அது எனக்குத் தெரியாது. ஆனால் நானும் இந்த நாடும்
அவர் பக்கம் இருக்க வேண்டுமே. நாம் அவர் அருகில்
இருந்தால்தான் நமக்குத் தோல்வி அணுகாது என்றார்.
முடியுரை:
செபிப்பவர் பக்கத்தில் கடவுள் இருப்பார். செபத்தால்
இறைவனோடு இணைகிறோம். நானே திராட்சைச் செடி, நீங்கள் அதன்
கிளைகள். ஒருவர் என்னுடனும், நான் அவருடனும்
இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னை விட்டுப்
பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது (யோவா. 15:5)
என்றார் இயேசு.
எனவே காலையிலும், மாலையிலும், பகலிலும், இரவிலும்
எப்போதும் செபிப்போம். இறைவல்லமையைப் பெறுவோம் (1 தெச.
5:17). ஆமென்.
இன்றும் வரம் தந்துகொண்டிருக்கின்றேன்
என்கின்றார் இயேசு. அன்று யோபு புலம்பியது போல (முதல் வாசகம்)
இன்றும் புலம்புகின்ற மனிதர்கள் நம் நடுவே உண்டு மலருக்கு
மணமழகு தேனுக்குச் சுவையழகு கடலுக்கு நீரழகு நீருக்கு மீனழகு!
மீனுக்குக் கண்ணழகு! கண்ணுக்கு இமையழகு என் வாழ்வில் எந்த
அழகும் இல்லை! நான் செல்லும் பயணத்தில் பாதுகாப்பு இல்லை!
நான் நடத்தும் குடும்பத்தில் சமாதானம் இல்லை! இதோ ஒரு
புதுக்கவிதை விதை விதைத்தான் விவசாயி வளர்ந்தது - விதையல்ல
வாங்கிய கடனுக்கு வட்டி கடன் தொல்லை! கற்பனை தொல்லை! நான்
என்ன செய்வேன்? எங்கு செல்வேன்? ஒன்றுமே புரியவில்லை!
எல்லாவற்றிற்கும் மேலாக
உடலிலும் நோய்!
உள்ளத்திலும் நோய்!
ஒரு பக்கம் நோயின் தொல்லை!
மறு பக்கம் பேயின் தொல்லை!
இதோ இப்படி அழுது புலம்புகின்றவர்களுக்கு அன்று மட்டுமல்ல
(நற்செய்தி) இன்றும் வரம் தந்துகொண்டிருக்கின்றேன் என்ற நற்செய்தியை
இயேசு தருகின்றார் (இரண்டாம் வாசகம்).
இதோ ஆண்டவராம் இயேசு இன்றும் மக்களின் பிணிகளைக்
(நற்செய்தி) குணமாக்குகின்றார் என்பதற்கு ஓர் உதாரணம்.
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்பர் பிலிப்பைன்ஸ்
நாட்டில் வாழும் திருமதி மேரி சரோஜா என்பவர் பாவம்
அந்தப்பெண் எல்லா வசதிகளும் இருந்தும் உடலிலே நோய்! என்ன
நோயென்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை! எத்தனையோ
மருத்துவர்கள், எத்தனையோ மருந்துகள்! எந்தப் பலனும் இல்லை!
இறுதியாக மேரி சரோஜாவின் கண்கள் வேளாங்கண்ணி புனித
ஆரோக்கியமாதாவின் பக்கம் திரும்பின.
பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து தம் கணவரோடு மேரி சரோஜா
வேளாங்கண்ணிக்கு வந்தார். அன்னையை நோக்கி உருக்கமாகச்
செபித்தார். அம்மா ஆரோக்கிய மாதாவே வெகுதூரத்திலிருந்து
உமது உதவியை நாடிவந்திருக்கும் என்னை கடைக்கண் பாருமம்மா!
எனக்கு என்ன வியாதி என்று யாராலும் கண்டுபிடிக்க
முடியவில்லை தாயே! உன்னையன்றி எனக்கு வேறு தஞ்சமில்லை
தாயே! எப்படியாவது என்னை குணமாக்குமம்மா! உமது திருமகன்
இயேசுவிடம் எனக்காகப் பரிந்துபேசுமம்மா என்று மெழுகாக
உருகிச் செபித்தார்.
செபித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு தீய ஆவி அவரைவிட்டு
ஓடியது. புனித ஆரோக்கியமாதா மேரி சரோஜாவிற்காகப் பரிந்து
பேச, மன்றாட செபிக்க, வல்லமை மிக்க இயேசு மேரி சரோஜாவைப்
பிடித்திருந்த தீய ஆவிக்கு ஆணையிட்டார்.
தீய ஆவி மேரி சரோஜாவை மேலே தூக்கி கீழே போட்டது. கீழே
விழுந்த மேரி சரோஜா எழுந்தார். கொஞ்ச நேரம் மூச்சுத்திணறல்
மூடியிருந்த கண்கள் மெதுவாகத் திறந்தன பூரண சுகம். ஆம்.
இன்றும் இயேசு நம் நடுவே அரும் அடையாளங்களைச்
செய்துகொண்டுதான் இருக்கின்றார். இன்று நமக்கு
வேண்டியதெல்லாம் அன்று இயேசுவைத் தேடிவந்த மக்களிடம்
நின்று நிலவிய ஆழமான, மறையாத மங்காத நம்பிக்கையொன்றே!
பொருள்:
அறக்கடலாகத் திகழும் சான்றோனாகிய இறைவன் அடியொற்றி
நடப்பவர், ஏனைய பொருளும் இன்பமும் ஆகிய கடல்களை எளிதாகக்
கடந்து செல்வர் ஏனையோர் பிற துன்பங்களிலிருந்து மீள
முடியாது தவிப்பர்.
வீதிவழியாகச் சென்று கொண்டிருந்த ஒருவர்
தவறி ஒரு குழியில் விழுந்து விட்டார். அவ்வழியே மூவர் சென்றனர்.
முதலாவது நபர் குழியில் விழுந்துகிடந்தவரைப்பார்த்து, "உனக்கு
இரண்டு கண்கள் இருந்தும் பார்த்துப்போகத் தெரியலையே! இனிமேலாவது
பார்த்துப் போகக் கற்றுக்கொள்' என்று அறிவுரை வழங்கி அகன்று
விட்டார். இரண்டாவது நபர், ஐயோ சகோதரா குழியில் விழுந்து
விட்டாயா? எப்படியாவது வெளியே வர முயற்சி செய்யேன்" என்று
கூறி அவர்மேல் தமக்கு இருந்த பரிவைக் காட்டி நழுவிவிட்டார்.
மூன்றாவது நபரோ குழியில் இறங்கி அவரை வெளியே
தூக்கிவிட்டார். அந்த மூன்றாவது நபர்தான் நம் ஆண்டவர் இயேசு
கிறிஸ்து அவர் மக்களுக்கு அறிவுரை மட்டும் வழங்கி அகன்று
போகவில்லை; மக்கள் மீது பரிவு காட்டியதோடு நழுவவில்லை.
மாறாக, அவரே மக்களுடைய நிலைக்கு இறங்கி வந்து அவர்களை எல்லாவிதத்
துன்பங்களிலிருந்தும் விடுவித்தார். உண்மையில், அவர் நம்
பிணிகளை ஏற்றுக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து
கொண்டார் (எசாயா 53:4).
இன்றைய நற்செய்தியில் இயேசு கிறிஸ்து சீமோன் பேதுருவின்
மாமியாரைக் குணப்படுத்தியதுடன், பல்வேறு பிணிகளாலும் தீய
சக்திகளாலும் துன்புற்ற பலரையும் குணப்படுத்துகிறார். அவர்
எல்லா மக்களுக்கும், எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும்,
எல்லாவிதங்களிலும் உதவிக்கரம் நீட்டினார். சுருக்கமாக, அவர்
எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். (திப 19:38).
கிறிஸ்து செபத்தையும் செயலையும் வெவ்வேறாகப் பிரிக்காமல்,
அவை இரண்டையும் ஒன்றிணைக்கிறார். இரவில் மலைக்குச் சென்று
தனிமையில் இறைவேண்டல் செய்கின்றார். பகலில் மக்களிடம்
சென்று அவர்களுக்குப் பணிபுரிகிறார். அவர் எந்த அளவுக்கு
செபத்தில் ஈடுபட்டாரோ அந்த அளவுக்கு மக்கள் பணியிலும் ஈடுபட்டார்.
அவருடைய செபவாழ்வு அவருடைய செயல்வாழ்வுக்கு எவ்விதத்திலும்
தடையாக அமையவில்லை. அவ்வாறே அவரது பணிவாழ்வு அவரது செபவாழ்வுக்கு
எவ்விதத்திலும் இடையூறாக அமையவில்லை. கிறிஸ்து மனிதருடைய
ஆன்மீகத் தேவைகளையும் உடல் சார்ந்த தேவைகளையும் வெவ்வேறாகப்
பிரிககாமல், அவை இரண்டையும் ஒன்றிணைக்கிறார். மக்களுடைய
உடற் பிணிகளைக் குணமாக்கியதோடு அவர்களுடைய பாவங்களையும் மன்னிக்கிறார்.
ஆன்மா - உடல் என்று மனிதனைக் கூறுபோடாமல் முழுமனிதனுக்கும்
நலமளிக்கிறார்.
கிறிஸ்து இம்மை வாழ்வையும் மறுமை வாழ்வையும் வெவ்வேறாகப்
பிரிக்காமல், அவை இரண்டையும் ஒன்றிணைக்கிறார். ஐந்து அப்பங்களைக்
கொண்டு மக்களுக்கு உணவளித்த அவர், 'நானே உயிர் தரும் உணவு'
என்பதை உணர்த்தினார். பார்வையின்றிப் பிறந்த ஒருவருக்குப்
பார்வை அளித்த அவர் 'நானே உலகின் ஒளி' என்பதைச் சுட்டிக்
காட்டினார். இறந்துபோன இலாசரை உயிர்த்தெழச் செய்த அவர்
'நானே உயிரும் உயிர்ப்பும்' என்பதை உணர்த்தத் தவறவில்லை.
இயேசுவின் அடியொற்றி நாமும் செபத்தோடு செயலையும், ஆன்மீகத்
தேவைனளுடன் உடலின் தேவைகளையும், இம்மை நலன்களோடு மறுமை நலன்களையும்
ஒன்றிணைத்து, எல்லாருக்கும் எல்லாவிதத்திலும் பணிபுரிவோம்.
சுருககமாக, எல்லாருக்கும் எல்லாம் ஆகுவோம் (1 கொரிந்தியர்
9:22)
இயேசுவைப் போலவே திருச்சபையும் மக்களின் துயர்துடைக்கும்
பணியில் தன்னை அர்ப்பணித்துள்ளது. இருப்பினும் துன்பம் ஒரு
தொடர் கதையாகவே உள்ளது. துன்பமே இல்லாதவர் இரண்டே பேர்
ஒருவர் இன்னும் பிறக்கவில்லை; மற்றொருவர் ஏற்கெனவே
இறந்துவிட்டார். அப்படியானால் மண்ணில் வாழும் அனைவரும்
துன்புறுகின்றனர். இது இயற்கையின் நியதி. பறவை பிறந்தது
பறப்பதற்காக. மனிதன் பிறந்தது துன்புறுவதற்காக.
இன்றைய முதல் வாசகத்தில் யோபு துன்பத்தின் சுமை தாங்
முடியாமல் நெஞ்சம் குமுறுகிறார்.அவருக்கு அமைதியில்லை,
தூக்கமில்லை; கண்களில் ஒளியில்லை; வாழ்வில்
நம்பிக்கையில்லை. ஆனால் இறுதியில் துன்பம் அவருடைய கடவுள்
நம்பிக்கையை வலுப்பெறச் செய்கிறது. காயப்படுத்தினாலும்
கட்டுப்போடுபவர் அவரே; அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே
(யோபு 5.18) என்ற ஆழமான இறையியல் உண்மையை அவர் உணர்ந்தார்.
ஒர் இளைஞன் தன் பங்குத்தந்தையிடம், 'நாள் முழுவதும் என்ன
செய்கிறீர்கள்?' என்று கேட்க, அவர் கோபத்துடன் 'என்
வீடடில் நான் இருக்கிறேன்: நடப்பேன், உட்காருவேன்.
படுப்பேன், சுருட்டுப் பிடிப்பேன், குடிப்பேன்
அதைப்பற்றிக் கேட்பதற்கு நீ யாருடா? என்று கேட்டார்.
சிறிதுநேரம் கழித்து பங்குத் தந்தை அந்த இளைஞனிடம், 'நாள்
முழுவதும் கடவுள் என்னடா செய்துகொண்டிருக்கிறார்? என்று
கேட்டதற்கு, அவன் 'கடவுள் அவர் வீட்டில் இருக்கிறார். அவர்
நடப்பார். உட்கார்வார். படுப்பார், சுருட்டுப் பிடிப்பார்.
குடிப்பார் அதைப்பற்றிக் கேட்க நாம் யாரு சாமி? : பதிலடி
கொடுத்தான்.
இவ்வாறு தான் நாம் கடவுளைப் பற்றி நினைக்கிறோம். அவர்
வானகத்தில் நிம்மதியாயிருக்க, நாமோ வையகத்தில் துன்பம்
தாங்காமல் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம்.
கடவுள் இருக்கின்றாரா அவருக்கு உண்மையிலேயே நம்மீது அக்கறை
உண்டா? என்று வினவுகின்றோம்.
நம் கடவுள் நம்மோடு இருக்கிறார். நம்மோடு வெயிலில்
காய்கிறார். மழையில் நனைகிறார். நம் துன்பத்தைத் தாங்கிக்
கொள்வதற்குச் சக்தியையும் கொடுக்கிறார். நம் சக்திக்கு
அப்பாற்பட்ட துன்பத்தை ஒரு போதும் அவர் நம்மீது
சுமத்தமாட்டார். நம்மைக் குழியில் விழச் செய்பவர் கடவுள்
அல்ல; குழியில் விழுந்து விட்ட நம்மை வெளியே துக்கி
விடுகின்றவரே கடவுள்!
அவரே நம் பிணிகளை ஏற்று, நம் நோய்களைச் சுமந்து
கொள்கிறார். அடித்தாலும் அரவணைக்கிறார்.
காயப்படுத்தினாலும் குணமாக்குகிறார். இவ்வுண்மையானது நம்
துன்பத்தில் நமக்கு ஆறுதல் அளிப்பதாக அவர் என்னைக்
கொன்றாலும் அவரிடத்தில் நம்பிக்கை வைப்பேன்" என்ற யோபுவின்
நம்பிக்கையுணர்வு நம் உள்ளத்தில் வேரூன்றி வளர்வதாக
துன்பம் நம்மைத் தூய்மைப்படுத்தி நமது விசுவாசப் பார்வையை
மேலும் கூர்மைப்படுத்துவதாக.
துன்பம் தொடர்ந்துவந்தபோதும்-நாம்
சோர்ந்துவிடலாகாது பாப்பா
அன்பு நிறைத் தெய்வம் உண்டு துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா - (பாரதி)
எத்தனை எதிரிகள் நமக்கு - நமக்குள்ளும் நம்மைச்
சுற்றிலும்! -
உடலுக்குப் பகையான நோய்கள், பிணிகள்.
மனதுக்குப் பகையான கவலைகள், சஞ்சலங்கள்.
ஆன்மாவுக்குப் பகையான பாவங்கள், பலவீனங்கள்.
அனைத்துக்கும் பின்னே இருந்து நம்மை ஆட்டி அலைக்கழிக்கும்
அலகையான தீய சக்திகள். இந்தச் சூழலில், "
"
அந்தோ! இரங்கத்
தக்க மனிதன் நான்! சாவுக்குள்ளாக்கும் இந்த உடலினின்று
என்னை விடுவிப்பவர் யார்?"
(உரோ. 7:24) என்று திருத்தூதர்
பவுலோடு நாமும் சேர்ந்து கதறுகிறோம். "
நம் ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள் தாம் விடுவிப்பார்'"
(உரோ.
7:25). புற இனத்துத் திருத்தூதரின் பிசிறடிக்காத இறை நம்பிக்கை!
நீதிமன்றத்திலே கொலை வழக்கு நடந்து கொண்டிருந்தது. தன்னுடைய
கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று வழக்கறிஞர் ஒருவர்
வாதாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு தந்தி வந்தது.
அதை வாங்கிப் பிரித்துப் படித்தார். பின்பு முகத்தில்
எவ்விதச் சலனமும் இல்லாமல் அதை மடித்துத் தன் சட்டைப்
பையில் வைத்துவிட்டுத் தொடர்ந்து வாதாடினார். இறுதியில்
அவருடைய கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
எல்லாம் முடிந்தபிறகு அவருடைய நண்பர்களான வழக்கறிஞர்கள்
அவரைச் சூழ்ந்துகொண்டு அவர் கைகளைக் குலுக்கி அவரைப்
பாராட்டினார்கள். அப்போது ஒருவர், "
தந்தி ஒன்று வந்ததே
என்ன விடயம்?"
என்று கேட்க, தன்னுடைய மனைவி இறந்துவிட்டதாகத்
தந்தி வந்திருக்கிறது என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சிக்கும்
ஆச்சரியத்திற்கும் ஆளானார்கள்.
"
என்னங்க, மனைவி இறந்ததை விடவா வழக்கு உங்களுக்கு முக்கியமாய்ப்
போயிற்று? நீதி அரசரிடம் தெரிவித்துவிட்டு நீங்கள் கிளம்பியிருக்கலாமே!"
என்று கேட்டனர். அதற்கு அவர் சொன்னார்: "
இறந்து போன மனைவி
மீண்டும் உயிரோடு வரப்போவதில்லை. ஆனால் நான் தொடர்ந்து
வாதாடாவிட்டால், குற்றமற்ற என் கட்சிக்காரரின் உயிர்
அநியாயமாகப் போயிவிடுமே! அதனால்தான் நான் தொடர்ந்து
வாதாடினேன்"
. இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? இவர்தான்
நமது நாட்டின் "
இரும்பு மனிதர்"
என்று அழைக்கப்பட்ட சர்தார்
வல்லபாய் பட்டேல்!
வாழ்க்கையில் நாம் எல்லோருமே போராட்டங்களைச் சந்தித்துக்
கொண்டே இருக்கின்றோம். "
மண்ணில் வாழ்வதே மனிதருக்குப்
போராட்டம்தானே"
. (யோபு. 7:1) "
இன்னல்மிகு இரவுகள் எனக்குப்
பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன். இரவோ
நீண்டிருக்கும். விடியும் வரை புரண்டு உழல்வேன்"
(7:3-4) என்பது யோபுவின் கண்ணீர்க்கதை. ஆனால் அந்தப்
போராட்டங்களில் மூழ்கி வாழ்க்கையைத் தொலைத்துவிடாமல் இருப்பதுதான்
உண்மையான அருத்தம் நிறைந்த வாழ்வு.
"
காயப்படுத்தினாலும்கட்டுப்போடுபவர் அவரே. அடித்தாலும்
ஆற்றுகின்ற கை அவரதே"
(யோபு. 5:18). இதுவே யோபுவின் தளராத
நம்பிக்கை. திருத்தூதர் பவுல் நற்செய்தியை அறிவிப்பதில்
தனது வாழ்க்கைக்கு அருத்தம் தேடிக்கொண்டார் (2ஆம் வாசகம்).
ஏதோ ஒரு விதத்தில் வலுவிழந்த மக்களுக்கு.வளமும் வலுவும்
சேர்ப்பதில் தனது வாழ்வுக்குப் பொருளும் பொலிவும் கண்டார்.
அதோடு ஓர் இடத்தில் ஒடுங்கிப் போகாமல் எல்லா மக்களோடும்
சரி நிகராய் பழகுவதில், உலகளாவிய சகோதரத்துவத்தில்
வாழ்வின் அருத்தத்தைக் கண்டு கொண்டார்.
இயேசுவின் பணி விடுதலைப்பணி. உடல் நோய்களிலிருந்து
விடுதலை, மனச் சுமைகளிலிருந்து விடுதலை,
பாவக்கட்டுக்களிலிருந்து விடுதலை, அலகையின்
ஆதிக்கத்திலிருந்து விடுதலை. இந்த விடுதலைப் பணிக்கு
உரமூட்டுவதாக அமைவது இயேசு தன் தந்தையுடன் கொண்ட உறவு.
இறை வேண்டலில் தன் பணியின் தெளிவையும் ஊக்கத்தையும்
பெற்றார் இயேசு. நாமும். செபிக்க வேண்டும் என்று
வலியுறுத்தினார். "
சோதனைக்கு உட்படாதபடி செபியுங்கள்"
"
(லூக். 22:40) "
மனந்தளராது எப்போதும் விழித்திருந்து
செபியுங்கள்"
(லூக். 18:1-8).
"
உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார். அவர்களின்
காயங்களைக் கட்டுகின்றார்'"
(தி.பா. 147:3). எனவே
நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது
என்றுபதிலுரைப்பாடல் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
உடைந்த உள்ளம் துன்பத்தின் அடையாளம். இறைவன் ஒருவரே
ஆறுதல் அளிக்கக்கூடியவர். புனித அந்தோனியார்
திரைப்படத்தில் "
ஆனந்தமானது அற்புதமானது"
என்று
தொடங்கும் பாடலில் நம்பிக்கையூட்டும் நான்கு வரிகள்:
நம்பிக்கையுடனே இறைவனைத் தேடு
நாளையப் பொமுதே அவன் வருவான்
நன்மை தீமையில் அவனை நாடு
நன்மை மட்டுமே அவன் தருவான்
எல்லா ஆசீருக்கும் ஆணிவேர் நம்பிக்கையே! "
நம்பிக்கை
நார் மட்டும் நம் கையில் இருந்தால் உதிர்ந்த பூக்கள்
கூட ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக் கொள்ளும்"
என்கிறார்
கவிஞர் ஒருவர்.
கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்த யோபுவுக்குத் துன்பத்திற்கு
மேல் துன்பம். மனைவியே யோபுவிடம் "
இன்னுமா
மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்? கடவுளைப் பழித்து
மடிவதுதானே!"
என்று சாடியபோது, "
நீ அறிவற்ற பெண் போல்
பேசுகிறாய். நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம்,
ஏன் தீமையைப் பெறக் கூடாது?"
என்று கூறி ஆழமான இறை
நம்பிக்கையை வெளிப்படுத்தினார். விளைவு? இழந்த
அனைத்தையும் இருமடங்காகப் பெறவில்லையா? "
"
அவரிடம்
நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும்
கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளிப்பவர்"
: (யோ. 1:12)
நம் கடவுள்.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது என்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
நம்பிக்கை பிறக்கும்.
இன்றைய நற்செய்தி நம் வாழ்வுக்கும் பல பாடங்களைக்
கற்றுத் தருகிறது.
4. இயேசு மெசியா என்பது கடவுளின் திட்டப்படி உரிய
காலத்தில் உரிய முறையில் வெளிப்பட வேண்டும். எனவே
தீமையின் தலைவன் தவறான நேரத்தில் தவறான முறையில் இயேசு
மெசியா என்று அறிக்கையிட இயேசு அனுமதிக்கவில்லை (மார்க்.
1:34).
5. பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான
இடத்திற்குச் சென்றார். (மார்க். 1:35). இயேசுவுக்குத்
தனிமையும் செபமும் தேவை என்றால், நமக்கு எவ்வளவு
அதிகமாகத் தேவை?
6. இறையாட்சிப் பணி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில்
முடங்கிக் கிடக்கின்ற ஒன்று அல்ல (மார்க் 1:38). "
நாம்
அடுத்த ஊர்களுக்கும் போவோம். அங்கும் நான்
நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்."
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி
உடைந்த உள்ளத்தோரை ஆண்டவர் குணப்படுத்துகிறார்
தமிழ்நாட்டின் ஓரியூரில் தலை துண்டிக்கப்பட்டு மறைசாட்சியாக
உயிர் துறந்த இயேசு சபை துறவியான புனித அருளானந்தரின்
(ஜான் டி பிரிட்டோவின்) விழாவை, ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி
4ம் தேதி, கொண்டாடுகிறோம். இன்று, பிப்ரவரி 4,
ஞாயிற்றுக்கிழமை என்பதால், இப்புனிதரின் விழாவைக்
கொண்டாடுவதில்லை. இருப்பினும், இந்த ஆண்டு, இந்த
விழாவை நினைவுகூர ஒரு சிறப்பு காரணம் உள்ளது. ஓரியூரில்,
புனித அருளானந்தரின் திருத்தலத்தலமாக அமைந்திருக்கும்
ஆலயம், அண்மையில் (நவம்பர் 9, 2023), திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களால் மைனர் பசிலிக்கா (Minor
Basilica) என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில்
பணிபுரியும் அனைத்து இயேசு சபைத் துறவிகளின் பாதுகாவலராகவும்,
மதுரை உயர்மறைமாவட்டம், மற்றும், சிவகங்கை மறைமாவட்டம்
ஆகியவற்றின் பாதுகாவலராகவும் விளங்கும் புனித அருளானந்தரின்
பரிந்துரையால், கிறிஸ்துவுக்கும் அவருடைய நற்செய்திக்கும்
துணிவுள்ள சாட்சிகளாக நாம் வாழ்வோமாக!
கடந்த இரு ஞாயிறு வழிபாடுகளில், இறை வார்த்தை, நற்செய்தி
மற்றும் நற்செய்தியை பறைசாற்றும் அதிகாரம் உள்ளவர்கள்
என்ற கருத்துக்களைச் சிந்தித்தோம். நற்செய்தியைப் பறைசாற்றுவதில்
ஒரு முக்கிய அம்சமாக இருப்பது, குணமளிக்கும் பணி. இயேசு
தான் வாழ்ந்த நாள்களில், நற்செய்தியை, வாய்வழி
வார்த்தைகளால் மட்டுமல்லாமல், தன் வாழ்வாலும், செயல்களாலும்
பறைசாற்றினார். குறிப்பாக, அவரது குணமளிக்கும் பணி,
அவர் பறைசாற்றிய நற்செய்தியின் முக்கிய அம்சமாகத் திகழ்ந்தது.
நாம் அனைவரும் குணமளிக்கும் கருவிகளாக வாழ்வது எப்படி
என்பதைச் சிந்திக்க, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.
பல்வேறு வழிகளில் சிதைந்து, உருக்குலைந்திருக்கும் இன்றைய
உலகிற்கு குணமளிக்கும் பணி மிக அவசியத் தேவையாக உள்ளது
என்பதை யாரும் மறுக்க இயலாது. குணமடைதல் என்பது, முதலில்
நம்மிடமிருந்து ஆரம்பமாகவேண்டும். அது, பின்னர், குணமளிக்கும்
பணியாக, அடுத்தவர்களையும் சென்றடையும். குணமடைவோம் என்ற
நம்பிக்கை, நமக்குள் துளிர்விடுவதே, நலமடைவதன் முதல்
படி. இந்த எண்ணத்தைப் புரிந்துகொள்ள, பள்ளி ஆசிரியர்
ஒருவரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு உதவியாக இருக்கும்.
அந்த ஊர் பள்ளியில், ஓர் இளம் பெண், புதிதாக
வேலைக்குச் சேர்ந்தார். அந்த வார இறுதியில், பள்ளியின்
நிர்வாகி அவரை அழைத்து, கூடுதலாக ஒரு பணியை
கொடுத்தார். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை, அவர், அருகில்
இருந்த மருத்துவமனைக்குச் சென்று, அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த
ஒரு சிறுவனுக்கு கணக்குப் பாடம் சொல்லித் தரவேண்டும்
என்பதே அந்தப் பணி. புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர் என்பதால்,
நிர்வாகி சொன்னதற்கு மறுப்பு சொல்லமுடியாமல், அந்தப்
பெண் அடுத்த நாள் மருத்துவ மனைக்குச் சென்றார். படுக்கையில்
கிடந்த அந்தச் சிறுவனைப் பார்த்ததும், அவருக்குப்
பெரும் அதிர்ச்சி. ஒரு தீ விபத்தால் உடலெங்கும்
வெந்துபோய் படுத்துக்கிடந்தான் அச்சிறுவன். இவனுக்குக்
கணக்குப் பாடம் சொல்லித்தர வேண்டுமா என்று, அந்த இளம்
பெண்ணின் மனம் தடுமாறியது. இருந்தாலும், இவ்வளவு தூரம்
வந்துவிட்டோமே என்பதாலும், நிர்வாகி சொல்லிவிட்டார் என்பதாலும்,
அவனுக்கு அரைமணி நேரம் கணக்குப் பாடம் சொல்லித் தந்தார்.
தீக்காயங்களுடன் கிடந்த அவனை நிமிர்ந்து பார்க்கவும்
தைரியம் இல்லாமல், ஏதோ சமாளித்து, அவனுக்குப் பாடம்
சொல்லித்தந்தார், அந்த இளம்பெண். வேதனையில் முனகிக்
கொண்டிருந்த அச்சிறுவன், அவ்வப்போது தலையை ஆட்டினான்.
மீண்டும் அடுத்த ஞாயிறு வருவதாகச் சொல்லி புறப்பட்டார்,
இளம்பெண். உடலெல்லாம் எரிந்து, உயிருக்குப்
போராடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு, கணக்குப் பாடம்
சொல்லித்தந்தது, அவருக்கே வேதனையாக இருந்தது. அடுத்த
ஞாயிறு, பள்ளி நிர்வாகியிடம், ஏதாவது சாக்குபோக்கு
சொல்லி தப்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணியபடியே,
வீட்டுக்குத் திரும்பினார்.
இருந்தாலும், அடுத்த ஞாயிறு வந்தபோது, அந்த இளம்பெண்
அச்சிறுவனைப் பார்க்க எண்ணினார். அவனுக்குப் பாடம்
சொல்லித் தரவில்லையென்றாலும், அவனைப் பார்க்க
வேண்டும்போல் தோன்றியது அவருக்கு. அவர் அங்கு சென்றபோது,
மருத்துவமனை வாசலிலேயே அச்சிறுவனுடைய அம்மா அந்த இளம்பெண்ணைச்
சந்தித்தார். "நீங்கள்தான் என் மகனுக்கு போன வாரம் கணக்கு
சொல்லித் தந்தீர்களா?" என்று கேட்டார். உயிருக்குப்
போராடிக்கொண்டிருக்கும் ஒரு சிறுவனுக்கு கணக்கு
சொல்லித்தந்தது எவ்வளவு பைத்தியக்காரத்தனமான செயல் என்பதை
அந்தத் தாய் தன்னிடம் சொல்லப்போகிறார் என்று எதிர்பார்த்து,
அந்த இளம்பெண் பயந்தார். "கணக்குப் பாடம் சொல்லித் தரவேண்டும்
என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததால்தான் நான் அப்படிச்
செய்தேன்..." என்று தயங்கி, தயங்கி அந்த இளம் பெண் சமாதானம்
சொல்ல ஆரம்பித்தார். அந்தத் தாயோ, இளம்பெண்ணின் கரங்களை
இறுகப் பற்றிக்கொண்டார். அவர் கண்களில் கண்ணீர்
பெருக்கெடுத்து ஓடியது. "நீங்கள் எவ்வளவு பெரிய உதவி
செய்துள்ளீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது" என்று
அந்தத் தாய் சொன்னதும், இளம்பெண்ணுக்கு ஒரே ஆச்சரியம்.
அந்தத் தாய் தொடர்ந்தார்: "சென்ற ஞாயிறு, நீங்கள் வருவதற்கு
முன், என் மகன், தான் உயிர் பிழைக்கமாட்டோம் என்று,
அவனே தீர்மானித்துவிட்டான். எனவே, உண்ண மறுத்தான், மருந்து
சாப்பிட மறுத்தான். ஆனால், நீங்கள் கணக்குப்பாடம்
சொல்லித்தந்த நாளிலிருந்து என் மகனிடம் நல்ல மாற்றங்கள்
ஏற்பட்டுள்ளன. 'எனக்கு கணக்குப் பாடம் சொல்லித்தர ஓர்
ஆசிரியரை என் பள்ளி அனுப்பியுள்ளது என்றால், நான் கட்டாயம்
மீண்டும் பள்ளிக்குத் திரும்புவேன் என்று என் பள்ளியில்
உள்ளவர்கள் நம்புகிறார்கள் என்றுதானே அர்த்தம்!' என்று
என் மகன் சொல்ல ஆரம்பித்துவிட்டான். நீங்கள் வந்து
சென்ற நாளிலிருந்து, தான் பிழைத்துக்கொள்வோம் என்ற அசைக்கமுடியாத
நம்பிக்கை, என் மகனுக்குப் பிறந்துவிட்டது. இந்த ஒரு
வாரத்தில் அவனிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டு,
டாக்டர்களே ஆச்சரியப்படுகின்றனர். எல்லாம் நீங்கள்
செய்த அற்புதம்" என்று, அந்தத் தாய் கண்ணீரோடு சொல்லச்
சொல்ல, அந்த இளம்பெண்ணின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
ஒருவர் குணம் அடைவது, அவரது ஆழ்மனதில் எழும் நம்பிக்கையில்
ஆரம்பமாகிறது என்ற அடிப்படை உண்மை, இக்கதையில் வெளிச்சமாகிறது.
இதையே இன்றைய ஞாயிறு வாசகங்களும் நமக்குச் சொல்லித்தருகின்றன.
2020ம் ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்று மனித குலத்தை ஆட்டிப்படைக்கத்
துவங்கியது முதல், இன்றுவரை, நோயுறுதல், குணமாதல் என்ற
எண்ணங்கள் நம்மிடையே மிக அதிகமாகப் பேசப்படுகின்றன. இனி,
கோவிட்-19 கிருமி அவ்வப்போது, நம்மைச் சுற்றிச்சுற்றி
வரும், அத்துடன் வாழப்பழகிக்கொள்வது நல்லது என்ற மனநிலை
நம்மில் உருவாகியிருப்பதையும் மறுப்பதற்கில்லை.
கோவிட்-19 கிருமியைவிட, அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள
வெறுப்பு, வன்முறை, போர், சுற்றுச்சூழல் சீரழிவு ஆகிய
மிக ஆபத்தானக் கிருமிகளையும் நாம் சமாளிக்கவேண்டியுள்ளது.
இத்தகைய ஒரு சூழலில், நோய்களைக் குறித்த நம் கண்ணோட்டத்தையும்,
அவற்றை நாம் எதிர்கொள்ளும் வழிகளையும் புரிந்துகொள்ள,
இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்கு உதவியாக உள்ளன.
நமது நோய்கள் குணமாவதற்குக் காரணங்கள் என்னென்ன? மருந்து,
மாத்திரை, மருத்துவ சிகிச்சை இவற்றால் மட்டும் ஒருவர்
குணமாகமுடியாது. நலமடைவோம் என்ற நம்பிக்கை, ஒருவர் மனதில்
உதிப்பதுதான், அவருக்குத் தேவையான, மிக அவசியமான, முதல்
படி. அந்த நம்பிக்கையை, மருத்துவர் தரவேண்டும் என்று,
பொதுவாக நாம் எதிர்பார்க்கிறோம். நோயுற்றவரோ, அல்லது,
அவரது குடும்பத்தினரோ, மருத்துவர்களிடம், "உங்களை, கடவுள்போல
நம்பியிருக்கிறோம்" என்று சொல்வதையும், அந்த மருத்துவர்களில்,
கடவுள் நம்பிக்கையுள்ள ஒரு சிலர், "நான் மருந்தும்,
மாத்திரையும் தான் தரமுடியும், கடவுள்தான் குணம் தரமுடியும்"
என்ற உள்ளார்ந்த உண்மையைச் சொல்வதையும் நாம்
கேட்டிருக்கிறோம், அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம். மருத்துவர்கள்
மீதும், மருந்துகள் மீதும் நம்பிக்கை இருப்பது அவசியம்தான்.
ஆனால், அவற்றை விட, நம்மீதும், நம்மைக் காக்கும் கடவுள்
மீதும் நம்பிக்கை கொள்வது மிகவும் அவசியம்.
சில வேளைகளில், இந்த நம்பிக்கை எதிர்பாராத வழிகளில் வந்து
சேர்வதையும் நாம் அறிவோம். தீக்காயங்களுடன் போராடி,
மனம் வெறுத்து, மரண வாயிலை நோக்கி நடந்துகொண்டிருந்த
அச்சிறுவனுக்கு, கணக்குப்பாடம் சொல்லித் தரவந்த ஆசிரியர்,
அவரையும் அறியாமல், அச்சிறுவனுக்கு நம்பிக்கை பாடங்களைச்
சொல்லித்தரவில்லையா? நம்பிக்கைப் பாடங்களை நாம் கற்றுக்கொள்ள,
இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.
குணம் பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாதபோது, நலமடைவது
கடினமாகிப் போகிறது. முடிவில், இயலாமலும் போகலாம்.
நம்பிக்கையற்ற நிலையில் இருக்கும் ஒருவருக்குள்
உருவாகும் மன அழுத்தங்களை இன்றைய முதல் வாசகம்
நமக்குக் காட்டுகிறது. யோபு நூலிலிருந்து எடுக்கப்பட்ட
இந்த வாசகம், துன்பங்களால் நொறுங்கிப்போன ஒருவரது
உள்ளத்திலிருந்து எழும் அவலக் குரலாய் ஒலிக்கிறது.
மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே?...
இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது
எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்;
விடியும்வரை புரண்டு உழல்வேன். (யோபு 7: 1,3-4)
இப்போது நாம் கேட்ட இந்த வரிகளை நம்மில் பலர்,
பலநேரங்களில், பலவிதங்களில் சொல்லியிருக்கிறோம்.
துன்பங்கள் நம்மைச் சூழும்போது, நம்மிடமிருந்து
முதலில் விடைபெறுவன, உணவும், உறக்கமும். துன்பம், ஒரு
சூறாவளிபோல நம்மைத் தாக்கும்போது, வேரோடு
பிடுங்கப்பட்ட மரத்தைப்போல... சுழல்காற்றில் சிக்கிய
ஒரு சருகைப் போல... புயலில் சிக்கியப் படகைப் போல...
என்றெல்லாம் நாம் நம்மையே உருவகப்படுத்திக்
கொள்கிறோம். துன்பங்களால் நிலைகுலைந்து அலைபாயும்
வாழ்வை யோபும் ஓர் உருவகத்தால் கூறியுள்ளார். என்
நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை
நம்பிக்கையின்றி முடிவடைகின்றன (யோபு 7:6) என்று
கூறியுள்ளார்.
உருவகங்களில் நாம் பேசிக் கொண்டிருப்பதால், மற்றுமோர்
உருவகத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்கலாம்.
துன்பம், புதைமணலைப் போன்றது. புதைமணலில்
சிக்கியவர்கள், புதைமணலிலேயே தங்கள் கவனம் முழுவதையும்
செலுத்தி, அங்கேயே தங்கி, போராடிக் கொண்டிருந்தால்,
அந்தப் புதைமணலுக்குள் இன்னும் ஆழமாகப் புதைந்துபோகும்
ஆபத்து உண்டு. புதைமணலில் இருந்து நாம் கரையேற
வேண்டுமெனில், உறுதியான ஓர் இடத்தில் நிற்கும்
மற்றொருவரின் உதவி நமக்குத் தேவை. அவர், நமது கரம்
பற்றி, நம்மை மேலே இழுத்தால், நாம் அங்கிருந்து
வெளியேற முடியும். புதைமணலில் சிக்கியிருந்த யோபு
அங்கேயே தங்கிவிடவில்லை. இறைவன் மீது அவர் கொண்ட
நம்பிக்கை அவரை, புதைமணலிலிருந்து விடுவித்து,
உறுதியான பாறையின் மீது நிறுத்தியது என்பதை நாம்
அறிவோம். யோபைப் போல, இறைவன் மீது ஆழ்ந்த நம்பிக்கை
கொள்ள, இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கிறது.
உடல் நோயாலும், மன நோயாலும் பாதிக்கப்பட்ட பலருக்கு,
இயேசு குணமளிக்கும் நிகழ்ச்சியை, மாற்கு நற்செய்தியில்
(மாற்கு 1:29-39) நாம் கேட்கிறோம்.
இன்றைய நற்செய்தியில், இரு பகுதிகள், நம் கவனத்தை
ஈர்க்கின்றன. குணமளிக்கும் இந்தப் புதுமைகளை இயேசு
ஒய்வுநாளில் செய்தார் என்பது ஒரு பகுதி. ஒய்வுநாளன்று
எந்த வேலையும் செய்யக்கூடாது என்பது யூதர்களின்
முக்கியமான ஒரு சட்டம். இயேசு அதை மீறினார். அவரைப்
பொருத்தவரை, குணமளிப்பது என்பது, வேலையே அல்ல; அது,
உண்பது உறங்குவது போன்ற ஒரு தினசரி கடமை என்று இயேசு
எண்ணியதால், தன் கடமையை, தயங்காது செய்தார். மேலும்,
ஒரு மனிதரைக் குணமாக்க, எந்தச் சட்டத்தையும் மீறலாம்
என்பதையும் இயேசு தெளிவுபடுத்தினார்.
அடுத்து, இன்றைய நற்செய்தியின் இறுதிப் பகுதி நம்மை
சிந்திக்க அழைக்கிறது. சீமோனின் மாமியார் குணமான
செய்தி அந்த ஊரில் காட்டுத் தீயைப்போல் பரவியதால், ஊர்
முழுவதும் திரண்டு வந்திருந்தது. அவர்களுக்குக்
குணமளிப்பதை தன் கடமையாகக் கருதி இயேசு பணியாற்றினார்.
அன்றைய கடமைகளை நிறைவு செய்த இயேசு, மக்கள் கூட்டம்
தந்த புகழில் மயங்கிப் போகாமல் இருக்க, இறைவனை நாடிச்
சென்றார். அடுத்தநாள் அவரைத் தேடிச்சென்ற சீடர்கள்,
"
எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்"
(மாற்கு 1:37) என்று கூறி, அவரை மீண்டும் ஊருக்குள்
அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், இயேசுவோ,
'நற்செய்தியைப் பறைசாற்றவே தான் வந்திருப்பதாகக்
கூறி, தன் பணிகளைத் தொடர, வேறு இடங்களுக்குப்
புறப்பட்டார்.
எவ்வித புகழையும் தேடாமல், இயேசு அமைதியாக தன்
குணமாக்கும் பணியைத் தொடர்ந்தார். பலனை, புகழை
எதிர்பாராமல் பணிகள் செய்பவர்களைப்பற்றி
சிந்திக்கும்போது, கதையொன்று நினைவுக்கு வருகிறது:
மற்றவர்களுக்கு நன்மைகள் செய்வதையே தன் வாழ்வின்
மூச்சாகக் கொண்டு வாழ்ந்த ஒரு மகானுக்கு முன் இறைவன்
தோன்றினார். அந்த மகானின் அற்புத வாழ்வுக்குப் பரிசாக,
அவருக்கு பிடித்த ஒரு வரத்தை கேட்கச் சொன்னார் இறைவன்.
தனக்கு எதுவும் வேண்டாம் என்று, அந்த மகான் மறுத்தார்.
இருந்தாலும், இறைவன் விடுவதாகத் தெரியவில்லை.
இறுதியாக, அந்த மகான், "இறைவா, என் நிழலைத் தொடும்
அனைவரும் குணம் பெறும்படி வரம் தாரும்" என்று
கேட்டார். இறைவன் அந்த வரத்தை மகிழ்வோடு தருவதாகச்
சொன்னார். உடனே மகான் ஒரு நிபந்தனையைச் சொன்னார்...
"எப்போதெல்லாம் என் நிழல் எனக்குப் பின்னே விழுகிறதோ,
அந்த நிழலுக்கு மட்டுமே இந்தச் சக்தியை நீர்
தரவேண்டும்" என்று அந்த மகான் வேண்டிக்கொண்டார்.
இவ்வாறு, தனக்குப்பின் அற்புதங்கள் நிகழ்கின்றன என்பதை
அறியாமல் வாழ்ந்த அந்த மகானின் பெயரையும் மக்கள்
மறந்துவிட்டனர். எனவே அவரை "
புனித நிழல்"
என்றே
அழைத்துவந்தனர்
.
நாம் இன்று இறைவனிடம் மூன்று வரங்களுக்காக
மன்றாடுவோம்:
முதலாவது, குணம் பெறவேண்டும் என்ற நிலையில் நாம்
இருந்தால், அல்லது நமது நெருங்கிய உறவுகள் இருந்தால்,
நாம் குணம் பெறுவோம், அவர்கள் குணம் பெறுவார்கள் என்ற
நம்பிக்கை நமக்குள் விதைக்கப்பட வேண்டும் என்று
மன்றாடுவோம்.
இரண்டாவது, தீயில் வெந்துகிடந்த அச்சிறுவன்
குணமாவதற்கு உதவிகள் செய்கிறோம் என்பதே தெரியாமல்
உதவிசெய்த அந்த இளம்பெண்ணைப் போல, தனக்குப் பின்விழும்
நிழலால் மக்கள் குணமாகவேண்டும் என்று வேண்டிக்கொண்ட
அந்த மகானைப்போல, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல்,
பிறருக்கு நன்மைகள் செய்யும் மனநிலையை இறைவன் நமக்கு
வழங்கவேண்டும் என்று செபிப்போம்.
மூன்றாவதாக, நலமளிக்கும் பணிகளுக்கு இடையூறாக வரும்
நிபந்தனைகள், சட்டங்கள் போன்றவற்றை புறம்தள்ளி, நமது
பணிகளைத் தொடரும் உறுதி, நமக்குள் உருவாகவேண்டும்
என்றும் மன்றாடுவோம்.
இன்றைய வழிபாட்டில் நாம் பயன்படுத்தும்
பதிலுரைப்பாடலில் ஒலிக்கும் அழகிய, ஆறுதலான சொற்கள்
இன்றும் இனி வரும் நாள்களிலும் நம் உள்ளங்களிலும்,
இல்லங்களிலும் ஒலிக்கவேண்டும்.
நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப்
புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது. உடைந்த
உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின்
காயங்களைக் கட்டுகின்றார். (திருப்பாடல் 147:1,3)
மறையுரைச்சிந்தனை திரு.
சின்னப்பன் டிசில்வா.வெலிங்டன்.ஊட்டி
ஞாயிறு மறையுரை அருள்பணி. குழந்தைஇயேசு
பாபு சிவகங்கை
எல்லார்க்கும் எல்லாமுமாக!
மூளை வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகளுக்காக பணிசெய்யும் சகோதரி
ஒருவரிடம் நான் "இந்த பணி உங்களுக்கு சவாலாக இல்லையா? கஷ்டமாக
இல்லையா? " என்று கேட்டேன். அப்போது அந்த சகோதரி என்னிடம்
இந்த வார்த்தைகளைக் கூறினார். "சவால் தான். கொஞ்சம் கஷ்டம்
தான். இருந்தாலும் இப்பணியில் நான் பல பரிமாணங்களை உணர்வதால்
ஆசிர்வாதமானதாக மனநிறைவு உள்ளதாக உணர்கிறேன்" என்று
கூறினார். மேலும் நான் விளக்கம் கேட்பதற்கு முன் தாமாகவே "
என்னுடைய இந்த பணியில் என்னிடம் வரும் குழந்தைகளுக்கு ஆசிரியராக
மட்டுமின்றி, தாயாக, தோழியாக, பராமரிப்பவராக தேவைக்கேற்ப
மாறுகிறேன். அவர்களுடைய பெற்றோர்களுக்கு ஒரு வழிகாட்டியாக,
சகோதரியாக, ஆறுதல் தருபவராக இருக்கிறேன்." இந்த ஆனந்தம் சவால்களை
சந்திக்க உதவுகிறது " என்று கூறிய முடித்தார்.
இவ்வார்த்தைகளை கேட்ட போது பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தில்
கூறிய எல்லாருக்கும் எல்லாமும் ஆனேன் என்ற வார்த்தைகளை
நான் நினைவுகூர்ந்தேன்.
அன்புக்குரியவர்களே நாம் வாழும் சமூகத்தில் ஒருவரை ஒருவர்
சார்ந்து இருக்கும் போது எல்லாருக்கும் எல்லாமுமாக நாம் இருந்தால்
அது எப்படிப்பட்ட மகிழ்ச்சியான சமூகமாக இருக்கும். அதுவல்லவா
இறைச்சமூகம். எல்லாருக்கும் எல்லாமுமாக என்ற வார்த்தை நமக்கெல்லாம்
பெரிய காரியமாகத் தோன்றுவதால் நாம் அதை தள்ளி
வைத்திருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. நம் அன்றாட
வாழ்க்கையில் நாம் காண்கின்ற, பழகுகின்ற மனிதர்களிடத்தில்
அவருடைய சூழலையும் தேவையையும் அறிந்து நம்மால் இயன்ற சின்னச்
சின்ன காரியங்களை செய்யும் போது நாம் எல்லாருக்கும் எல்லாமுமாக
மாறுகிறோம் என்பதே உண்மை. அதை பிறர் உணர வேண்டும்
சொல்லிக்காட்ட வேண்டும் என்பது அவசியமில்லை. நம் மனதே அதன்
நிறைவை பெறும்.
தனிமையில் இருப்பவர்களோடு சிலநிமிடம், பசித்தோருக்கு உணவு,
கவலைப்பட்டோர்க்கு ஆறுதல், தவறியோருக்கு வழிகாட்டல், முயல்வோர்க்கு
உற்சாகம் என தேவைக்கும் சூழலுக்கும் தகுந்தாற்போல நாம் பல
பரிமாணங்களை சுமக்கும் போது பவுல் கூறிய இறைவார்த்தை நம்மிலும்
நிறைவுபெறும்
.
அதற்கு நாம் இருமுக்கிய பண்புகளை நமதாக்க வேண்டும். 1.இறைவனோடு
இணைந்திருப்பது 2.எல்லாரையும் சமமாய் கருதுவது
இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர் நம் ஆண்டவர்
இயேசு. இன்றைய நற்செய்தியில் தன்னுடைய பணிகளையெல்லாம்
முடித்தபின் இறைவனோடு ஒன்றிணைந்து உறவாடும் இயேசுவை நாம்
காண்கிறோம். அத்தோடு யூதர்களை மட்டுமல்லாது அனைவரையும் சமமாகக்
கருதி ஒரு இடத்தில் மட்டுமல்ல ஊர் ஊராக சென்று மக்களின் பிரச்சினைகளையும்
துன்பங்களையும் சரிசெய்து "எல்லாருக்கும் எல்லாமுமாக விளங்குகிறார்
இயேசு.
இயேசுவைப்போல பவுலை போல நம்மோடு உள்ளவர்களுக்கு எல்லாமுமாய்
வாழ முயல்வோமா? !
இறைவேண்டல்
எல்லாமுமான இறைவா! எங்களால் இயன்ற அளவாவது தேவையறிந்து
சூழலறிந்து "எல்லாருக்கும் எல்லாமுமாக " விளங்க எமக்கு உம்
அருள் வரங்களைத் தாரும். ஆமென்.