ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

        பொதுக்காலம் 18ம் ஞாயிறு

    திருப்பலி முன்னுரை


வருடாந்த
ஞாயிறு வாசகம்
    pdf/Calendrier-litrugique2021.pdf
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
நிலையான வாழ்வு நோக்கி பயணிக்க வந்திருக்கும் அன்புள்ளங்களே!
B தவக்காலம்1  
நிலையான, நிறைவான, வாழ்வு நோக்கிப் பயணிக்க ரகசிய விதி ஒன்று சொல்லித்தர வரவேற்கிறது இந்த ஞாயிறு வழிபாடு....

வாழும் மனிதன் வளமாக வாழ பணம், பொருள்;, பட்டம், பதவி, உறவு, எனப் பலவற்றைத் தேடி அலைகின்றான். தேடலின் முடிவில் எட்டியதை எல்லாம் அனுபவித்து வாழ்கின்றான். அவனது தேடல் அத்தனையும் வயிற்றின் நிறைவுக்கு வழி அமைக்கின்றன. வாழ்க்கை என்பது வயிற்றின் நிறைவு மட்டுமல்ல இதயத்தின் நிறைவும் உள்ளடங்கியதே!

இறைவனைத் தேடினால் இறை மதீப்பீடுகளைத் தேடினால் இதயத்தின் நிறைவு வெளிப்படும். மாறாக இறைவனை மறந்து உலகப் போக்குகளைத் தேடினால் நிறைவற்ற மனநிலை வெளிப்படும்.

அழிந்து போகும் உணவுக்காக அல்ல, அழியாத உணவுக்கான உழைப்பாக நம் உழைப்பு அமைய வேண்டும். உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது. உணவுக்காக உழைக்கும் நாம் அழிவில்லாத உணவுக்காக உழைக்கும் போது நிறைவான, நிலையான வாழ்க்கையின் பாதையில் பயணம் செய்ய ஆரம்பிக்கிறோம்.

வயிற்று பசி தீர்க்கும் உணவுக்கு உழைக்கும் நாம் வாழ்வு தரும் உணவுக்காக உழைக்க வேண்டும். நாம் சம்பாதிக்கும் உணவால் நமது வயிறு;றுப் பசி தீரும். ஆனால் பசித்தோருக்கு உணவு தரும் போது இதயம் நிறையும்.

நானே வாழ்வு தரும் உணவு என்று சொன்ன தேவன் நம் ஒவ்வொருவரையும் தன் உடலாக்கி நம்மையே பசியால் பிணியால் வாடுவோரைத் தேடிச் சென்று ஆறுதலாக நம்மையே பகிர்ந்து வாழ அழைக்கின்றார்.

இப்படியான தேடலை நமக்கு சுட்டிக் காட்டவும், நம் தேடலை பொருள் உள்ள தேடலாக்கவும் அருள் தரும் திருப்பலி இது......

இந்த திருப்பலியில் என் தேடல் நீ என் தெய்வமே நீ இன்றி என் வாழ்வு நிறம் மாறுமே!
என் வாழ்வை நிறமாக்க, நிஜமாக்க, நிறைவாக்க, நிலையானதாக்க வரம் தாரும் என மன்றாடுவோம்.
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. என்றும் வாழும் இறைவா!
உம்முடைய திருவிருந்திலே ஒரே குடும்பமாக பங்குகொள்ளும் எமது திருச்சபைச் சமூகம் என்றும் ஒன்றித்துவாழ அருள்புரியும்படி ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

2. கருணையின் இறைவா!
அழிந்து போகும் உணவிற்காகவும் உலகத் தேவைகளுக்காகவும் நாங்கள் அதிகம் கவலைப்பட்டு எங்கள் வாழ்க்கையை இழந்து விடாமல் நிலை வாழ்வுக்கான உணவிற்காக உழைத்திட ஆர்வத்தைத் தரும்படி ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

3. ஆற்றல் மிக்க இறைவா!
எங்கள் வாழ்க்கையின் எதிர்வரும் சோதனைகள் துன்பங்களை உம்மீது நம்பிக்கை வைத்து துணிவுடன் எதிர்கொள்வதற்கான ஆற்றலைத் தரும்படி ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பின் இறைவா!
எமது நாட்டை வழி நடத்தும் அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் நேரிய வழியில் மக்களுக்கு பணிபுரிந்து நாட்டினை சீரான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அருள்புரியும்படி ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
 
மறையுரை சிந்தனைகள்
 
மாலை வேளை ஒருமுறை முல்லா தெருமுனையில் நின்று எதையோ தேடிக் கொண்டிருந்தார். அவரைத் தேடி வந்த அவரது நண்பர் அவர் தேடும் பொருளை கண்டுபிடித்துத் தரும் வண்ணம் கூடவே சேர்ந்து தேட ஆரம்பித்தார்.

இவர்களுடைய தேடலைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் நண்பரிடம் என்ன தேடுகிறீர்கள் என்று கேட்டார்? அதற்கு நண்பர் முல்லா தேடுகிறார் நானும் தேடுகிறேன் என்றார். வழிப் போக்கர் முல்லாவிடம் என்ன தேடுகிறீர், என்று கேட்டபோது வீட்டுச்சாவி என்று சொன்னார். எங்கே தொலைத்தீர் எனக் கேட்டபோது ' வீட்டுவாசலில்' என்று சொன்னார். வீட்டுவாசலில் தொலைத்த சாவியை பின் ஏன் இங்கு தேடுகிறீர் எனக் கேட்டபோது வெளிச்சம் இங்கே தானே இருக்கிறது என்றார்.

நமது தேடலும் இப்படித்தான் இன்று உள்ளது.
என்ன தேட வேண்டும்?
எங்கே தேட வேண்டும்?
நமது தேடலில் தெளிவு வேண்டும்.தெளிவான தேடல் தான் சுகம் தரும். நமது தேடலின் நோக்கம் எது என நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
எல்லாரும் தம்மைச் சார்ந்தவற்றைத் தேடுகிறார்களேத் தவிர இயேசு கிறிஸ்துவைச் சார்ந்தவற்றைத் தேடவில்லை.
கிறிஸ்து என்ற ஒப்பற்ற செல்வத்தை நாம் தேடவேண்டும்.
நற்கருணைனயைத் தேடவேண்டும். இறைவார்த்தையைத் தேடவேண்டும்.
அழிவைத் தரும் உணவுக்காக, அழிவைத்தரும் செல்வங்களுக்காக உழைக்கக் கூடாது.
இறைவனைத் தேடிவந்தால், நற்கருனையை நாடிவந்தால் நமது ஆன்மாவின் பசியும் தாகமும் தீர்ந்து போகும்.
இயேசுவைத் தேடுவோம். அவரில் வாழ்வு பெறுவோம்.


பணம் இல்லாவிட்டாலும் பணக்காரனாக வசதி உள்ளவனாக வாழச் சிலர் ஆசைப்படுகிறார்கள். பணம் இருந்தும் சிலர் ஏழையாக எளிமையாக வாழ ஆசைப்படுவதுண்டு. இன்னும் சிலர் படிப்பும் புகழும் இருந்தும் வசதியில்லையே என்று இல்லாத ஒன்றுக்கு ஆசைப்படுவதுண்டு. விடுதலை வாழ்வு இருந்தும் அடிமை வாழ்வுக்கு ஆசைப்பட்டார்கள் இஸ்ரயேல் மக்கள். இறைவன் தம் மக்கள் இன்னல் இடையூறுகளால் அவதிப்படுகிறார்களே அவர்களை மீட்க வேண்டும். விடுதலை வாழ்வை அவர்களும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மோசேயைத் தேர்ந்தெடுத்து ஆரோனை அவருக்குத் துணையாக அனுப்பி எகிப்தியப் பார்வோன் கையினின்று இஸ்ரேயல் மக்களை விடுதலை வாழ்வுக்கு அழைத்து வருகின்றார். பார்வோன் அரசனிடமிருந்து மீட்டு வருவது என்பது என்ன அவ்வளவு எளிமையானதா?

அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலை வாழ்வு தரும் அழியாத உணவுக்காக உழையுங்கள்.
(யோவான்.6.27)

அடிமை வாழ்வு நமக்கு வேண்டாம். அழிந்து போகும் வாழ்வும் நமக்கு வேண்டாம்.
அழியாத வாழ்வு, நிலையான வாழ்வு நமக்குக் கிடைக்க நம் தேடலைத் தேடுவோம்.

 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.



 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 
கீழானதை விடுத்தல்

' உயரம் தாண்டுதல்' விளையாட்டை நாம் விளையாடியிருப்போம், அல்லது பார்த்திருப்போம். ஒரு நீண்ட குச்சியை ஊன்றி உயரத்தைத் தாண்டுகிற ஒருவர் உயரத்துக்குச் சென்றவுடன் தான் சுமந்து சென்ற குச்சியை விட வேண்டும். அப்படி அவர் விடும்போதுதான் மற்ற பக்கத்திற்கு தாண்டிச் செல்ல முடியும். தான் பிடித்து ஏறிய குச்சியைப் பற்றிக்கொண்டே இருக்கிற நபர் தன் பக்கமே மீண்டும் விழுவார் அல்லது இலக்குக் குச்சியைத் தாண்டமாட்டார்.

' நிறைவானது வரும்போது குறைவானது மறைந்துபோகும்' என்கிறார் பவுல். குறைவானதை நாம் களையும்போதுதான் நிறைவானது நம்மை நிரப்பிக்கொள்ளும்.

தாழ்வானவற்றையும் கீழானவற்றையும் விடுத்து உயர்வானவற்றையும் மேலானவற்றையும் பற்றிக்கொள்ள இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் சூழல் இயேசுவைத் தேடிய மக்கள் கூட்டம். கடந்த வார நற்செய்தி வாசகத்தில், இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்து கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக, ' நானே வாழ்வுதரும் உணவு!' என்னும் பேருரையை ஆற்றுகிறார் இயேசு. இந்தப் பேருரையின் தொடக்கப் பகுதியே இன்றைய நற்செய்தி வாசகம். திபேரியக் கடலின் கரையருகே உணவு உண்ட மக்கள் இயேசுவைத் தேடி கப்பர்நகூம் செல்கிறார்கள். தங்களுடைய உடலுக்கு உணவு தேடிச் சென்றவர்களுடைய உள்ளங்களைத் தம்மை நோக்கித் திருப்புகிறார் இயேசு.

' ரபி, எப்போது இங்கு வந்தீர்?' என்னும் கேள்வியோடு தொடங்குகிறது நிகழ்வு. ' எப்போது' என்பது நேரத்தைக் குறிப்பதாக இருந்தாலும், மனுவுருவான காலத்தைக் குறிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். ' ரபி' என்னும் அழைப்பு, இயேசுவை மக்கள் போதகர் என ஏற்றுக்கொண்டதைக் குறிக்கிறது. தொடர்ந்து, ' நாங்கள் என்ன செய்ய வேண்டும்? நீர் காட்டும் அறிகுறி என்ன?' எனக் கேட்கிறார்கள் மக்கள். அவர்களுடைய முன்னோர் பாலைவனத்தில் உண்ட மன்னா என்னும் உணவை எடுத்துக்காட்டு அறிகுறியாக முன்மொழிகிறார்கள். இறுதியாக, ' வாழ்வுதரும் உணவு நானே' எனத் தன்னையே வெளிப்படுத்துகிறார் இயேசு.

வயிற்றுக்கான உணவு என்னும் தாழ்வான தேடலை விடுத்து, நிலையான வாழ்வுக்கான உணவை மக்கள் தேட வேண்டும். மன்னா என்னும் உணவு பாலைவனப் பயணத்தில் மட்டுமே பசிபோக்கியது. இயேசு என்னும் உணவோ வாழ்க்கை முழுவதும் பசி போக்கும் அல்லது பசி போக்கி வாழ்வைத் தரும்.

மூன்று நிலைகளில் ' தாழ்வானதை' விட்டு அவர்கள் நீங்க வேண்டும்? (அ) ' ரபி' (' போதகர்' ) என்னும் தலைப்பை விடுத்து இயேசுவை ' நானே' (' யாவே' ) என ஏற்றுக்கொள்ள வேண்டும். (ஆ) ' உடலுக்கு உணவு' என்னும் நிலையிலிருந்து எழும்பி, ' ஆன்மாவுக்கு வாழ்வு' என்னும் நிலைக்கு உயர வேண்டும். (இ) ' அறிகுறி தேடுதல்' என்னும் நிலை விடுத்து, ' நம்பிக்கை கொள்தல்' நிலைக்குச் செல்ல வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வியத்தகு முறையில் மன்னாவும் காடையும் வழங்குகிறார். எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் தாங்கள் பெற்ற விடுதலை வாழ்வை மறந்துவிட்டு, தாங்கள் அடிமைத்தனத்தில் உண்ட உணவை நினைவில் ஏற்று கடவுளுக்கு எதிராக முணுமுணுக்கிறார்கள். உணவா? விடுதலை வாழ்வா? என்று தங்களுக்குள் கேள்வியைக் கேட்டு, ' உணவு' ஒன்றே அவசியம் என்று முடிவுசெய்துகொள்கிறார்கள். ஆண்டவராகிய கடவுளிடம் சரணாகதி அடைவதை விடுத்து, பாரவோனிடம் மீண்டும் திரும்ப முயற்சி செய்கிறார்கள்.

செங்கடலைக் கடந்து அவர்கள் தொடர்கின்ற பயணத்தில் இன்று இரண்டாம் முறையாக முணுமுணுக்கின்றனர். முதலில், தண்ணீருக்காக அவர்கள் முணுமுணுத்தனர் (காண். விப 15:22-27). இரண்டாவது முணுமுணுப்பு முன்னதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள், எகிப்தில் நைல் நதியின் கரைகளில் விளைச்சலைக் கண்டு, அதன் நிறைவை உண்டவர்கள், இப்போது பாலைவனத்தின் குறைவையும், வெறுமையையும், பாதுகாப்பின்மையையும் தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக மாறுகின்றனர். உணவுத் தேவை குறித்த அவர்களுடைய அங்கலாய்ப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும், எகிப்தின் உணவே தங்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கை ' இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து' ஏற்புடையது அல்ல.

தங்கள் கற்பனையில் மட்டுமே இருந்த இறைச்சிப் பாத்திரத்தின் நிறைவின்மேல் விருப்பம் கொள்வதும், கானல் நீர் போலிருந்த அப்பத்தை உண்டு நிறைவுகொள்வதில் நாட்டம் கொள்வதும் எகிப்தில் அவர்கள் பட்ட அடிமைத்தனத்தின் நினைவுகளை மறைத்துவிட்டது. எகிப்தின் உணவுக்காக, தங்கள் ஆண்டவராகிய கடவுள் தந்த விடுதலையை மறந்துவிட்டு, மீண்டும் பாரவோனுக்கு அடிமைகளாகிட அவர்கள் விரும்பினர். கடவுள் அவர்கள் செய்த அனைத்தையும் அப்படியே துடைத்து எடுத்து தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்துவிடுவது போல இருந்தது அவர்களுடைய செயல். கடவுள் அவர்களுக்கு விடுதலை தந்தார், அதை இலவசமாகத் தந்தார். ஆனால், இப்போது அவர்கள் மீண்டும் அடிமைகளாக இருந்தனர். அதற்காக தங்கள் இன்னுயிரையும் விலையாகத் தர முயன்றனர். பாலைவனத்தில் நிலவிய உணவுப் பற்றாக்குறை கடவுளுடைய அரும்பெரும் செயல்களை மறந்துவிட அவர்களைத் தூண்டியது. மேலும், கடவுள் தங்களைத் தொடர்ந்து பராமரிப்பாரா? என்ற அவநம்பிக்கைநிறை கேள்வியையும் அவர்கள் உள்ளத்தில் எழுப்பியது.

அவர்கள் தங்கள் மனத்தளவில் எகிப்து நாட்டையே விரும்பி ஆண்டவருக்குத் துரோகம் செய்தாலும், ஆண்டவர் தன் பிரமாணிக்கம் மற்றும் பற்றுறுதிநிலையில் தவறவில்லை. முணுமுணுக்கும் அந்த மக்களுக்கு மன்னாவும் காடையும் வழங்குகின்றார். எபிரேயத்தில், ' மன்னா' என்றால், ' அது என்ன?' என்பது பொருள். பாலைவன மரங்கள் சுரத்த பிசின் போன்ற உணவு வகையே மன்னா. அதிகாலையில் மரத்தில் வடியும் அது மதிய வெயிலில் மறைந்து போகும். காடைகள் பாலைவனத்தை ஒரே வேகத்தில் கடக்க முடியாமல், சோர்வடைந்து ஆங்காங்கே தரையிறங்கி நின்று ஓய்வெடுக்கக்கூடியவை. இவற்றை உணவாகத் தந்ததன் வழியாக, கடவுள் இயற்கையின் வழியாக அவர்களுக்கு ஊட்டம் தருகின்றார்.

' விண்ணகத்தின் கொடையான' மன்னா அவர்களுக்கு தினமும் கிடைக்கும். அதைச் சேகரித்து வைக்கவோ, சேமித்து வைக்கவோ வேண்டாம் என்று கடவுள் அவர்களை எச்சரித்தார். ஓய்வுநாளுக்கு முந்திய நாள் மட்டும் அவர்கள் ஓய்வுநாளுக்காகச் சேமித்துக்கொள்ளலாம். இப்படியாக, அவர்கள் ஆண்டவராகிய கடவுளின் பராமரிப்புச் செயலில் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அத்தகைய பற்றுறுதியும் கீழ்ப்படிதலும் கடவுளின் மக்கள் கொள்ள வேண்டிய அடிப்படைப் பண்புகளாக இருந்தன. இப்படியாக, தங்களுடைய கற்பனை உணவையும், திட்டமிடுதலையும் விட்டு இறைவனின் விரலைப் பிடித்துக்கொண்டு அவர்கள் பயணம் செய்ய வேண்டியதாக இருந்தது. தொடர்ந்து அவர்களுக்கு உணவு கொடுத்ததன் வழியாக கடவுள் தன் மக்களுக்குப் பிரமாணிக்கமாக இருந்தார். ஆனால், மக்களோ உள்ளத்தில் உறுதியற்றவர்களாக இருந்தனர் ஒரு பக்கம் ஆண்டவர் தரும் உணவையும் உண்டனர், இன்னொரு பக்கம் கருணையற்ற தங்களுடைய எகிப்தியத் தலைவர்களின் உணவின்மேலும் நாட்டம் கொண்டவர். ஆண்டவருக்கும் பாரவோனுக்கும் இடையே ஆடிக்கொண்டிருந்த ஊசல் போல இருந்தது அவர்களுடைய வாழ்க்கை.

இரண்டாம் வாசகம் (காண். எபே 4:17,20-24), இரண்டு வகையான வாழ்க்கை முறைகளை வேறுபடுத்திக் காட்டுகிறது: கிறிஸ்தவ முறை மற்றும் புறவினத்தார் முறை. இந்த இரண்டு முறைகளுக்கும் இடையே இருக்கின்ற தெரிவை எபேசிய நகரத் திருஅவைக்கு முன்மொழிகின்றார் பவுல். சமரசமற்ற ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றார். ' இது அல்லது அது. இடைப்பட்டது எதுவும் இல்லை' என்று நேரிடையாக அவர்களுக்குச் சவால் விடுகின்றார். புறவினத்து முறைமேல் உள்ள ஈர்ப்பை வெல்வது அவர்களின் அன்றாடப் போராட்டமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார். பழைய வழிகளை விட்டுவிட்டு, தங்கள் மனப்பாங்கை அவர்கள் புதுப்பித்து, ' கிறிஸ்துவை அணிந்துகொள்ள' அழைக்கின்றார்.

நம் வாழ்வில் ஒவ்வொரு கட்டமும் கீழானதுக்கும் மேலானதுக்குமான இடையில் நின்று நாம் தெரிவை மேற்கொள்வது கட்டாயமாக இருக்கிறது. தள்ளிப்போடுதலுக்கும் வேலையைச் செய்வதற்குமான தெரிவு, உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுவதற்கும் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்குமான தெரிவு, அடிமைத்தனத்திற்கும் விடுதலை வாழ்வுக்குமான தெரிவு. ஒன்றைப் பற்றிக்கொண்டு மற்றதை விடுக்க வேண்டும். எப்படி?

(அ) தேர்ந்து தெளிதல். மேலானதைக் கீழானதலிருந்து வேறுபடுத்திப் பார்க்கும் முதிர்ச்சி.

(ஆ) பற்றிக்கொள்தல். எந்தவொரு சமரசமும் செய்யாமல் மேலானதைப் பற்றிக்கொள்தல்.

(இ) விடாமுயற்சி. மேலானதைப் பற்றிக்கொள்தலை ஒரு தொடர் செயல்பாடாகக் கொள்தல்.


' ஆண்டவர் அவர்களுக்கு வானகத்து உணவை வழங்கினார்!' எனப் பாடுகிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 78). மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லாலும் உயிர் வாழ்கிறார். அப்பம் நம் உடலுக்கு நிறைவு தருகிறது. ஆண்டவரின் சொல்லோ நம் ஆன்மாவுக்கு வாழ்வு தருகிறது. கீழானதை விடுத்து மேலானதைப் பற்றிக்கொள்தல் நலம்.

(ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி, அருள்பணியாளர்களின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னியின் திருநாளைக் கொண்டாடுகிறோம். கடவுளிடம் மட்டுமே வேரூன்றி, மேய்ப்புப் பணியில் அக்கறை காட்டும் அருள்பணியாளர்களாக வாழ நாம் தூண்டப்படுவோமாக!)

 


உங்கள் மனப்பாங்கு

விவிலியத்தில் இயேசு கையாளும் ஓர் உருவகத்தோடு இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம். விண்ணரசு பற்றிய பல உவமைகளைத் தன் சீடர்களுக்கு எடுத்துச் சொல்லும், விளக்கும் இயேசு, இறுதியாக, 'இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?' என்று கேட்க, அவர்களும், 'ஆம்,' என்கின்றனர். அந்நேரம் அவர், 'விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட அனைவரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளர்போல இருக்கின்றனர்' என்கிறார். 'கருவூலத்திலிருந்து வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளர்' - இதுதான் நாம் இங்கே தேர்ந்துகொள்ளும் உருவகம். ஒரு பெரிய வீட்டைக் கற்பனை செய்துகொள்வோம். அந்த வீட்டில் என்னவெல்லாம் இருக்கும்? வெளியே தெருவிற்கு அருகில் சுற்றுச்சுவரோடு இணைந்த வாசல். அடுத்து கொஞ்சம் முற்றம். பின் வீட்டின் நுழைவாயில். நுழைந்தவுடன் வரவேற்பரை. வரவேற்பரையை ஒட்டிய அல்லது தாண்டிய செப அறை, சமையலறை, உணவறை. பின் படுக்கையறை. நம்மிடம் இருக்கின்ற மிக முக்கியமான ஆவணங்கள், பணம், நகை போன்றவற்றை நாம் எங்கே வைப்போம்? நாம் வாழ்கின்ற அறை அல்லது ஓய்வெடுக்கின்ற அறை அல்லது தனியாக ஒரு சேமிப்பு அறை என அங்கே அவற்றைப் பத்திரப்படுத்துகின்றோம். ஒவ்வொரு அறைக்குள்ளும் மனிதர்கள் வருவதற்கு ஒவ்வொரு வரையறை வைத்திருக்கின்றோம். பால்காரர் சுற்றுச்சுவர் வாசலோடு நிற்கிறார். வாகன ஓட்டுநர் முற்றத்தோடு நிற்கிறார். பணிப்பெண் வீட்டு வாசலோடு நிற்கிறார். வேலை அல்லது சந்திப்பு நிமித்தம் வருபவர்கள் வரவேற்பறையோடு நின்றுகொள்கின்றனர். விருந்தினர்கள் சாப்பாட்டு அறை மற்றும் விருந்தினர் அறையோடு நின்றுகொள்கின்றனர். ஆனால், வீட்டு உரிமையாளர் மட்டுமே வாழ்கின்ற அல்லது ஓய்வு அல்லது சேமிப்பு அறைக்குள் நுழைகின்றார். வெளியே வருகின்றார். தான் விரும்புபவற்றைச் செய்கிறார். மற்றவர்கள் அந்தச் செயலைச் செய்தால் அது அத்துமீறல் அல்லது திருட்டு எனக் கருதப்படுகின்றது. மேலும், ஒரு வீட்டில் விருந்தினராக இருப்பவர் தன் வீட்டில் உரிமையாளராக இருப்பார். அங்கே அவருக்கு முழு உரிமையும் கிடைக்கும். எல்லா அறைகளையும்விட மிக முக்கியமான அறை கருவூலம் என்று சொல்லப்படும் சேமிப்பு அறை. இந்த அறைதான் மற்ற எல்லா அறைகளையும் இயக்குகிறது. இந்த அறையில் பழையது, புதியது என எல்லா நல்ல மற்றும் முக்கியமாக (புதிய, பழைய) பொருள்களும் இருக்கும். கருவூலத்தை வளர்க்கிறவர் தன் வீட்டை வளர்க்கிறார்.

வீட்டு உரிமையாளர் என்பவர் நான் என்றால் என் உள்ளம்தான் கருவூலம். ஒரு வீட்டைபோலவே என்னிலும் பல அறைகள் இருக்கின்றன. நான் எந்த அறையிலிருந்து செயலாற்றுகிறேன் என்பது மிக முக்கியம். எல்லா அறைகளும் ஒன்றுபோல இருப்பதில்லை. எல்லா அறைகளுக்கும் நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வெளிவாசலில் கரையான் அரித்தால் நான் கண்டுகொள்வதில்லை. ஆனால், கருவூலத்தில் கரையான் அரித்தால் நான் பதறிவிடுகிறேன்.

மற்றொரு உருவகத்தில் சொல்ல வேண்டுமானால், கடலில் மிதக்கும் பனிப்பாறை போல இருப்பவன் நான். பனிப்பாறை நகர்வது போல நான் நகர்கிறேன். நிற்கிறேன். வளர்கிறேன். தேய்கிறேன். பனிப்பாறை கடல்மட்டத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருப்பது வெறும் 10 சதவிகதம்தான். மற்ற 90 சதவிகிதம் கடலில் மூழ்கி யாருக்கும் தெரியாமல் இருக்கிறது. மேலே தெரியும் 10 சதவிகிதம்தான் நான் மற்றவருக்கு வெளிப்படுத்தும் என் செயல்கள், திறன்கள், ஆற்றல்கள், அடையாளங்கள். ஆனால் இந்த 10 சதவிகிதத்தை இயக்குவது மறைந்திருக்கும், பெரிய 90 சதவிகிதம்தான். மறைந்திருந்து இயக்கும் அந்தப் பனிப்பாறையே என் கருவூலம்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு உள்ளம் என்ற இந்தக் கருவூலத்தை, 90 சதவிகிதம் மறைந்திருக்கும் இந்தப் பனிப்பாறையை நாம் புதுப்பித்துக்கொள்ள அழைப்புவிடுகிறது. உள்ளம் என்ற கருவூலத்திற்கு இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் 'உள்ளப்பாங்கு' என மிக அழகான வார்த்தையைப் பயன்படுத்துகின்றார். 'கிறிஸ்துவில் புதுவாழ்வு' என்ற தலைப்பில் எபேசு நகரத் திருச்சபைக்கு தன் அறிவுரையை வழங்கும் பவுல், 'உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்பட வேண்டும்' என அறிவுறுத்துகின்றார். 'உடல்,' 'மூளை,' 'உள்ளம்' என நான் என்னையே பகுப்பாய்வு செய்தால், என்னிலே உயர்ந்து நிற்பது 'உள்ளம்.' நான் என் உடலை புதுப்பிக்க நன்றாக உண்கிறேன், உடற்பயிற்சி செய்கிறேன். மூளையைப் புதுப்பிக்க நிறைய வாசிக்கிறேன், பல அறிவுரைகள் கேட்கிறேன். ஆனால், உள்ளத்தை எப்படி புதுப்பிப்பது? உள்ளம் புதுப்பிக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்? என்ற கேள்விகளை நான் பல நேரங்களில் கேட்பது கிடையாது.

இன்றைய முதல் (காண். விப 16:2-4,12-15) மற்றும் நற்செய்தி (யோவா 6:24-35) வாசகங்களில் நாம் 'உடலுக்கும்,' 'மூளைக்கும்,' 'உள்ளத்திற்கும்' நடக்கும் போராட்டத்தையே பார்க்கிறோம்.

முதல் வாசகத்திலிருந்து தொடங்குவோம்.
எகிப்தில் 400 ஆண்டுகளாக பாரவோன் மன்னனுக்கு அடிமைகளாக இருக்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். இவர்கள் எழுப்பும் அவலக்குரலைக் கேட்டு, இவர்களை விடுவிக்க இறங்கி வருகின்ற கடவுள், மோசே மற்றும் ஆரோனை எகிப்திற்கு அனுப்புகின்றார். பாரவோனின் இதயம் கடினமாகிவிட இஸ்ரயேல் மக்களை அவன் விடுவிக்க மறுக்கின்றான். தொடர்ந்து ஆற்றில் இரத்தம் தொடங்கி தலைப்பேறு மரணம் என பத்துக் கொள்ளை நோய்கள் வழியாக எகிப்தியரைத் தண்டித்து, தானே அரசருக்கெல்லாம் அரசன் என எண்பித்து அவர்களை விடுதலை செய்கின்றார் இறைவன். அவர்களின் விடுதலைப் பயணத்தில் செங்கடல் தடையாக இருக்கிறது. அதையும் வியத்தகு முறையில் கடக்கச் செய்த இவர்களைப் பின்தொடர்ந்த பாரவோனின் படைகளையும் கடலில் மூழ்கடித்துக் காக்கின்றார் கடவுள். விடுதலை அடைந்த மக்கள், 'ஆண்டவரே, உம்மைப்போல உண்டா!' என்று பாட்டுப்பாடி (விப 15) கொண்டாடிவிட்டு, பாட்டுச் சத்தம் அடங்குவதற்குமுன் கடவுளை நோக்கி முணுமுணுக்கின்றனர்.

'இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருந்திருக்கும்! ஆனால், இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டுபோகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்தீர்கள்' என்று மோசேயிடமும், ஆரோனிடமும் முணுமுணுக்கின்றனர் இஸ்ரயேல் மக்கள்.

இந்த முணுமுணுத்தலில் அவர்களின் 'உடல்,' 'மூளை,' 'உள்ளம்' என மூன்று அறைகளும் செயலாற்றுகின்றன.

உடல்: 'இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து'
- இந்த மக்களுக்கு பாரவோனிடமிருந்து விடுதலை கிடைத்தது பெரிதாகத் தெரியவில்லை. மாறாக, இறைச்சிப் பாத்திரமும், அப்பமும்தான் பெரிதாகத் தெரிந்தது. என்ன ஒரு சின்ன மனிதர்களாக இவர்கள் இருந்திருக்கிறார்கள்! அடிமைகளாக இருந்தாலும் வயிறு நிரம்பியதே என்ற ப்ராக்டிகல் மக்களாகவும் இருக்கிறார்கள். பசியால் இருக்கிறவனுக்கு விடுதலையினால் என்ன பயன்!

மூளை: 'இப்பாலைநிலத்தில் நாங்கள் மாண்டுபோகவா எங்களைக் கூட்டிக்கொண்டு வந்தீர்'
- நம்ம உடம்புல இருக்கிறதுல மிகவும் மோசமானது இந்த மூளை. அது 'பேனைப் பெருமாளிக்கிவிடும்' - சின்னதைப் பெரியதாகவும், பெரியதைச் சிறியதாகவும், இருப்பதை இல்லாததாகவம், இல்லாததை இருப்பதாகவும் ஆக்கி, 'இப்படியாக்கும்! அப்படியாக்கும்!' 'இப்படி ஆயிடும்! அப்படி ஆயிடும்!' என்று கூப்பாடு போடுவது இந்த மூளைதான். மூளையை ஒருபோதும் நாம் நம்பிவிடக்கூடாது. மூளை விரைவாக நம்மை ஏமாற்றிவிடும். கொஞ்சம்தான் இஸ்ரயேல் மக்களுக்குப் பசிக்கிறது. ஆனால், அதற்குள், 'நாங்க செத்துப்போயிடுவோம். எல்லாரும் இங்கேயே கல்லறை ஆகிடுவோம். இது பாலைவனம். இங்கே ஒண்ணும் கிடைக்காது' என கூப்பாடு போடுகிறது இவர்கள் மூளை.

உள்ளம்: 'ஆண்டவரின் கையால்'
- பசியால் உடலும், மூளையும் ஆளுக்கொருபக்கம் இழுத்தாலும், இவர்களின் உயர்ந்த நிலையான 'உள்ளம்' கொஞ்சம் வேலை செய்கிறது. பசி மற்றும் புலம்பல் நேரத்திலும்கூட இவர்கள் 'ஆண்டவரின் கையை' நினைக்கின்றனர்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இதற்கு ஒப்புமையான ஒரு நிகழ்வையே வாசிக்கின்றோம். கடந்த வார நற்செய்தி வாசகத்தில் இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு வழங்கி நிறைவளித்த நிகழ்வை வாசித்தோம். அதன் தொடர்ச்சிதான் இன்றைய நற்செய்தி வாசகம். இயேசு உணவு கொடுத்து எல்லாரையும் அனுப்பிவிடுகின்றார். அடுத்த நாள் இயேசுவையும் அவருடைய சீடர்களையும் தேடி ஒரு கூட்டம் வருகிறது. 'நேற்று நாம இங்கதான சாப்பிட்டோம். அங்கேயே போவோம்' என்று முதலில் அந்தக் கூட்டம் திபேரியக் கடற்கரைக்குச் செல்கிறது. அங்கே அப்பமும் இல்லை. இயேசுவும் இல்லை. சீ;டர்களும் இல்லை. 'எங்க போயிருப்பாங்க?' என்று கேட்டுக்கொண்டே தேடிய கூட்டம் இயேசுவையும், சீடர்களையும் கப்பர்நகூமில் கண்டுபிடிக்கிறது. தன்னைத் தேடி வந்திருப்பவர்களைப் பார்த்து மகிழ்ச்சி அடையாத இயேசு அவர்களைக் கடிந்துகொள்கின்றார். தன்னை இவ்வளவுபேர் தேடுகிறார்களே என்று மகிழாமல், இவர்களை அப்படியே ஓட்டு வங்கியாக மாற்றாமல், குறுக்குவழியால் அரசன் ஆகாமல் அவர்களைக் கடிந்துகொள்கின்றார் இயேசு. இயேசுவுக்கும், மக்களுக்கும் இடையே உள்ள உரையாடலில் அவர்களின் 'உடல்,' 'மூளை,' 'உள்ளம்' போராட்டம் மிக அழகாக பதிவுசெய்யப்படுகிறது.

உடல்: 'ரபி, எப்போது இங்கு வந்தீர்?' ... 'நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல. மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள்'

- நேற்றைக்கு உண்டு இன்றைக்குச் செரித்துக் கழிவாகிவிடும் உணவிற்காக அவர்கள் உழைப்பதாகவும், அந்த உணவிற்காக அவரைத் தேடுவதாகவும் கடிந்துகொள்கிறார் இயேசு.

மூளை: 'எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'

- இவர்களின் மூளை 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்கிறது. ஆனால், பல நேரங்களில் மூளை தான் கேட்கும் அனைத்தையும் அப்படியே செய்வதில்லை. எடுத்துக்காட்டாக, மதியம் 30 நிமிடம் இருக்கிறது. நூலகத்திற்குப் போகலாம் என நினைக்கிற மூளை, 'படிச்சு என்ன ஆகப்போகுது! தூங்கினால் நல்லது' என தூங்கச் சென்றுவிடுகிறது. ஆக, மூளை தான் நினைக்கிற அனைத்தையும் செய்துவிடுவதில்லை.

உள்ளம்: 'ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்!'

- உடலும், மூளையும் கேள்விகள் கேட்க, 'எங்களுக்குத் தாரும்' என்ற விண்ணப்பதோடு சரணடைகிறது இவர்களின் உள்ளம். 'வாழ்வுதரும் உணவாகிய இயேசுவே எங்களோடு இரும்!' என விண்ணப்பித்துப் பணிகின்றனர் மக்கள்.

மேற்காணும் முதல் மற்றும் நற்செய்தி வாசகங்களில் 'உடல்,' 'மூளை,' 'உள்ளம்' என்ற மூன்று நிலைகளுக்கும் உள்ள போராட்டத்தை நாம் பார்க்கிறோம். 'உடல்' ஒரு பக்கம், 'மூளை' ஒரு பக்கம், 'உள்ளம்' ஒரு பக்கம் என்ற மூன்று குதிரைகள் ஒவ்வொரு மனிதரையும் இங்குமங்கும் அலைக்கழிக்கின்றன. இந்தப் போராட்டத்தில்தான் தீமைகள் உருவாகின்றன. விவிலியத்தில் எடுத்துக்கொள்வோமே. சிறந்த உதாரணம் நீதித்தலைவர் சிம்சோன் (நீத 14-16). தன் வாழ்க்கை முழுவதும் தன் 'உடல்' சார்ந்த நாட்டங்களோடும், 'மூளையின்' சிந்தனைகளோடும், தன் 'உள்ளத்தில்' உள்ளிருக்கும் இறைப்பிரசன்னத்தோடும் போராடுகிறார் சிம்சோன். 'உடல்' சொல்வதைக் கேட்கவா? 'மூளை' சொல்வதைக் கேட்கவா? 'உள்ளம்' சொல்வதைக் கேட்கவா? என்று அங்கலாய்க்கிறார்.

இந்தப் போராட்டத்திற்கான தீர்வை இன்றைய இரண்டாம் வாசகம் நமக்குத் தருகிறது:

'உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும்'

'புதுப்பிக்கப்படுதல்' என்றால் என்ன?
அமேசான் போன்ற இணையதளங்களில் 'ரிஃபர்பிஷ்ட்' பொருள்கள் விற்கப்படுகின்றன. அதாவது, பயன்பாட்டு நிலையை இழந்த ஒரு ஐஃபோனைச் சரிசெய்து, மேலே புதிய கவர் போட்டு, இப்படி, அப்படி பேக்கிங் செய்து விற்கப்படும் ஐபோன், 'ரிஃபர்பிஷ்ட்' ஃபோன் என அழைக்கப்படுகிறது. இது புதுப்பிக்கப்பட்ட ஃபோன்தான். ஆனால், கவர் மட்டும்தான் புதுசு.மற்றதெல்லாம் பழசு.

பவுல் சொல்லும் புதுப்பிக்கப்படுதல் இவ்வகை அல்ல.
மாறாக, இளையநிலைக்குத் திரும்புதல். கணிணியில் 'ரிஸ்டோர்' என்ற ஆப்ஷன் உண்டு. இன்று காலை என் கணிணியில் வைரஸ் வந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். நான் சொல்லும் வேலைக்குப் பதிலாக வேறு வேலையைச் செய்கிறது கணிணி. நான் அதைச் சரி செய்ய நினைக்கிறேன். நான் செய்ய வேண்டியதெல்லாம் என்ன? கடந்த மாதத்திற்கு, அல்லது கடந்த வாரத்திற்கு, அல்லது கணிணியை நான் வாங்கியபோது இருந்த வைரஸ் அற்ற நிலைக்கு என் கணிணியை 'ரிஸ்டோர்' செய்துகொள்ளலாம். அப்படிச் செய்யும்போது வைரஸ்கள் நீங்கி, மீண்டும் புதிய நிலைக்கு - ஆனால் இளைய நிலைக்கு - என் கணிணி ட்யூன் ஆகிவிடும்.

பவுல் முன்வைக்கும் புதுப்பிக்கப்படுதல் இத்தகைய நிலையே. 36 வயதிற்கு வளர்ந்துவிட்ட நான் என் வாழ்வை சரி செய்ய நினைக்க, நான் நல்ல நிலையில் இருந்த 20 அல்லது 15 வயதிற்கு என்னையே ரிஸ்டோர் செய்துகொள்வதுதான் இளையநிலை. அல்லது புதுப்பித்தல் நிலை.

நாம் எந்த நிலைக்கு ரிஸ்டோர் ஆக விரும்புகிறார் பவுல்?
'கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பு' - இந்த இயல்பிற்கு நாம் ரிஸ்டோர் ஆக வேண்டும் என அழைக்கின்றார் பவுல். இந்த இயல்பு பற்றி நாம் தொநூ 1:27ல் வாசிக்கின்றோம்: 'கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார். கடவுளின் சாயலிலேயே அவர்களைப் படைத்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.' 'ஆணும்,' 'பெண்ணும்' வேறு வேறு என்றாலும் இருவருக்குள்ளும் இங்கே ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமத்துவம் வரக்காரணம் என்ன? அவர்களில் இருந்த கடவுளின் சாயல். ஆக, கடவுளின் சாயலுக்கு ஒருவர் ரிஸ்டோர் செய்யப்பட்டால் அவரிடம் போராட்டம், பிளவு, வேற்றுமை என எதுவும் இருக்காது. அமைதியான, சாந்தமான ஓர் ஒழுங்கு இருக்கும்.

'பழைய மனிதருக்குரிய இயல்பை' களைந்துவிட்டு, 'புதிய மனிதருக்குரிய இயல்பை' - முதல் மனிதரின் இயல்பை அணிந்துகொள்ள அழைக்கின்றார் பவுல். ஆக, மனப்பாங்கு அல்லது உள்ளம் புதுப்பிக்கப்படுதல் என்பது வெறும் வெளிப்படையான சட்டை மாற்றம் அல்ல. மாறாக, அது வலிநிறைந்த ஒரு பயணம். கணிணி புதுப்பிக்கப்படுவதும் ஒரு வலி நிறைந்த பயணமே. அது ஒவ்வொரு அடுக்காக தன்னையே களைந்துகொண்டு வரவேண்டும்.

என்னிடம் மேலடுக்கு உடல், அடுத்த அடுக்கு மூளை, அடுத்த அடுக்கு உள்ளம் என இருக்கிறது. என் மாற்றம் வெறும் மேல் அல்லது அடுத்த அடுக்கில் நின்றுவிடாமல், உள்ளம் என்னும் மையம் நோக்கிச் செல்ல வேண்டும். அந்த மையம்தான் இறைமையம். அந்த மையம்தான் பிறர்மையம். அந்த மையத்திலிருந்து நான் இயங்கும்போது என் இயக்கத்தில் மகிழ்ச்சியும், நிறைவும் இருக்கும். அந்த மையத்திற்கு நான் பயணிப்பதே என் மனப்பாங்கை புதுப்பித்துக்கொள்வதாகும்.

என் மனப்பாங்கு புதுப்பிக்கப்பட்டுள்ளதா அல்லது நான் உள்ளம் என்னும் மையத்திலிருந்து செயலாற்றுகிறேனா என்பதற்கு இரண்டு அளவுகோல்களைத் தருகின்றார் பவுல்:

அ. நீதி
ஆ. தூய்மை

'நீதி' என்றால் 'ஒவ்வொன்றிற்கும் அதனதன் இடம், நேரம் கொடுப்பது.' 'தூய்மை' என்றால் 'என் இயல்பில் இருப்பது.' இந்த இரண்டும் உண்மை என்ற ஆணியில் மையம்கொண்டிருத்தல் வேண்டும். 'உண்மை' என்பது 'சித்.' இந்தச் 'சித்' என்பதுதான் நம் 'இயல்பு.' 'இது இல்லை,' 'அது இல்லை' என்ற நான் என்னையே ஒவ்வொரு அடுக்காக நீக்கிக்கொண்டே கடந்துபோகும்போது இறுதியில் வந்துநிற்கும் நிலைதான் இது.

ஆக, இன்று என் மனப்பாங்கு புதுப்பிக்கப்பட நான் முயற்சி செய்ய வேண்டும். இறுதியாக, நாம் அடிக்கடி டிவியில் பார்க்கும் ஒரு விளம்பரத்தோடு நிறைவுசெய்கிறேன். பாண்ட்'ஸ் நிறுவனத்தின் 'ஒயிட் ப்யூட்டி' க்ரீமுக்கான விளம்பரம் அது. ஃபேஷன் ஷோ ஒன்றில் நிறைய இளவல்கள் கேட்வாக் செய்வார்கள். நான்காவதாக வரும் இளவல் ஒன்றின் ஹைஹீல்ஸ் ஸ்லிப் ஆகி, அவர் அப்படியே சரிந்துவிடுவார். எல்லாரும் வேகமாக இருக்கையை விட்டு எழுவார்கள். முன்னால் நடந்தவர்கள் பதற்றமாக திரும்புவார்கள். இவரைப் பயிற்றுவித்தவர் தான் தோற்றதாகப் பதறுவார். ஆனால், அந்த இளவல் மெதுவாக கையை ஊன்றி எழுந்து, இலேசாகப் புன்முறுவல் செய்துவிட்டு, தொடர்ந்து நடப்பார். அரங்கம் கரவொலியால் நிறையும்: 'ஆட்டிட்யூட் மேட்டர்ஸ்' ('மனப்பாங்கே முக்கியம்') என நிறைவடையும் விளம்பரம்.

அவரின் மனப்பாங்கின் வெளிப்பாடே அந்த எளிய புன்னகை. தான் செய்யும் செயலையும், தனக்கு வெளியில் தெரியும் தன் உடல் அழகையும் தாண்டி அவரிடம் மேலோங்கி இருந்தது அவரின் மனப்பாங்கு.

ஆக, மனப்பாங்கு என்பது கருவூலம். இந்தக் கருவூலத்திலிருந்து பழையது, புதியது என மதிப்புமிக்க அனைத்தும் புறப்படுகின்றன. 90 சதவிகிதம் மறைந்திருக்கும் இந்த உள்ளத்தை நான் உருமாற்றும்போது என் 10 சதவிகித மேற்புற செயல்களும், திறன்களும், வெளிப்பாடுகளும் மாற்றம்பெறும்.

'ஆண்டவரின் கையே' அனைத்திலும் செயலாற்றுகிறது என்றும், 'ஆண்டவரிடமே என் தேடுதலின் நிறைவு உண்டு' என்றும், 'அவரின் சாயலே என் சாயல்' என்றும் உணர்வதே, வாழ்வதே புதுப்பிக்கப்பட்ட மனப்பாங்கு.
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
 
" அழிந்து போகும் உணவிற்காக அல்ல, நிலைவாழ்வு தரும் உணவிற்காகவே உழையுங்கள்"

டோனி டிமெல்லோ சொல்லக்கூடிய ஒரு வேடிக்கையான கதை.
ஓர் ஊரில் முடிதிருத்தும் தொழிலாளி ஒருவன் இருந்தான். அவன் தனக்குக் கிடைத்த சொற்ப வருமானத்தைக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். ஒருநாள் அவன் பக்கத்து ஊருக்கு வேலை விசயமாகப் போய்க்கொண்டிருந்தான். அப்போது அவன் ஒரு பெரிய ஆலமரத்தருகே நடந்துபோய்க்கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு குரல், " உனக்கு ஏழு பானை தங்கம் வேண்டுமா?" என்று கேட்டது. அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் அங்கு இல்லை. ஏதோ ஒரு மனப்பிரமைதான் என நினைத்துக்கொண்டு, நடையைக் கட்டடத் தொடங்கினான். ஆனால், மீண்டுமாக அதே குரல், " உனக்கு ஏழு பானை தங்கம் வேண்டுமா?" என்று கேட்டதும், ஒருவிதமான ஆசை அவனுக்குள் வர அவன், " ஆமாம், எனக்கு ஏழு பானைத் தங்கம் வேண்டும்" என்றான். " ஏழு பானைத் தங்கம் வேண்டும் என்றால், நீ உன்னுடைய வீட்டுக்குப் போ, அங்கே உன் வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள புதரில் ஏழு பானைத் தங்கம் இருக்கும், எடுத்துக்கொள்" என்று சொல்லிவிட்டு அந்தக் குரல் மறைந்து போனது.

உடனே அவன் வீட்டுக்கு ஓடிச்சென்று, வீட்டுக்குப் பின்புறத்தில் இருந்த புதரில் தேடித்பார்த்தான் அங்கே ஏழு பானைத் தங்கம் இருந்தது. ஆனால், ஒரே ஒரு பானையில் மட்டும் பாதித் தங்கம்தான் இருந்தது. இதைப் பார்த்ததும் அவனை ஒருவிதமான வருத்தம் கவ்வத் தொடங்கியது. எப்படியாவது அந்தப் பானையை தங்கத்தால் நிரப்பவேண்டும் என்று முடிவு செய்தான். அதற்காக அவன் தன்னுடைய வீட்டில் இருந்த பணத்தை எல்லாம் தங்கமாக மாற்றி, அதில் போட்டான். அப்போதும் அந்தப் பானை நிரம்பவில்லை. இராப்பகலாய் பாடுபட்டு உழைத்துச் சேர்த்த செல்வத்தையெல்லாம் கூட தங்கமாக மாற்றி அந்தப் பானையில் போட்டுப் பார்த்தான். அப்போதும் அந்தப் பானை நிரம்புவதாக இல்லை. இறுதியாக தான் வேலைபார்க்கும் அரசனிடம் சென்று, தன்னுடைய ஊதியத்தை உயர்த்துமாறு கேட்டான். அரசனும் அவன்மீது இரக்கப்பட்டு அவனுடைய ஊதியத்தை இருமடங்கு உயர்த்தினார். அவ்வாறு அரசன் கொடுத்த இருமடங்கு ஊதியத்தைத் தங்கமாக மாற்றி, அந்தப் பானையில் போட்டபோதும்கூட, அந்தப் பானை நிரம்பவே இல்லை. இதனால் மன நிம்மதி இழந்தான், உடல் மெலிந்து போனான்.

அவனுடைய நடவடிக்கைகளைக் கவனித்த அரசன் ஒருநாள் அவனைக் கூப்பிட்டு, " உனக்கு என்ன ஆயிற்று?, குறைவான ஊதியத்தை நீ வாங்கியபோதுகூட நிம்மதியாக இருந்தாயே, இப்போது இருமடங்கு ஊதியம் பெறுகின்றாய், பிறகு எதற்கு இப்படி நிம்மதியின்றி, உடல் மெலிந்து காணப்படுகின்றாய்?, ஒருவேளை நீ ஊருக்கு வெளியே உள்ள ஆலமரத்தடியில் இருக்கும் சாத்தான் கொடுத்த ஏழு பானைத் தங்கத்தைப் பெற்றுக்கொண்டாயோ?" என்று கேட்டான். அதற்கு அந்த முடிதிருத்தும் தொழிலாளி, " ஆம் அரசே! எப்படி சரியாகச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டான். அரசரோ, " ஒரு காலத்தில் நானும் அந்த சாத்தான் கொடுத்த ஏழு பானைத் தங்கத்தைப் வாங்கினான். அதன்பின்னர்தான் அந்த ஏழு பானைத் தங்கம் நம்மை மேலும் மேலும் பணத்தைத் தேடியலைய வைக்குமே தவிர, நிம்மதியாக இருக்க வைக்காது என்னும் உண்மையை உணர்ந்தேன். எனவே, அந்த ஏழு பானைத் தங்கத்தையும் சாத்தானிடம் கொடுத்துவிட்டேன். இப்போது நிம்மதியாக இருக்கின்றேன். நீயும் அந்த ஏழு பானைத் தங்கத்தை சாத்தானிடமே கொடுத்துவிட்டு, நிம்மதியாக இரு" என்று புத்திமதி சொல்லி அவனை அனுப்பி வைத்தார். அரசன் சொன்ன அறிவுரையைக் கேட்டு, அந்த முடிதிருத்தும் தொழிலை தான் வைத்திருந்த ஏழு பானைத் தங்கத்தையும் சாத்தானிடம் கொடுத்துவிட்டு நிம்மதியாக வாழத் தொடங்கினான்.

பணம், பொருள், செல்வம் இவற்றால்தான் நமக்கு நிம்மதி கிடைக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டு, அதற்காக இராப்பகலாய் பாடுபட்டு உழைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால், அவற்றால் நமக்கு நிம்மதி இல்லை என்பதைத்தான் இதை கதையானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் பதினெட்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக் கேட்ட வாசகங்கள் ' அழிந்து போகும் உணவிற்காக அல்ல, நிலைவாழ்வு தரும் உணவிற்காகவே உழையுங்கள்' என்னும் உண்மையை நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. நாம் அதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையில் ஆண்டவர் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்த நிகழ்வினைக் குறித்து வாசித்து, சிந்தித்துப் பார்த்தோம். இயேசு அப்பங்களைப் பலுகச் செய்ததால், அவருக்குப் பின்னால் சென்றால், எப்படியாவது உணவு கிடைக்கும் என்ற நினைப்பில் மக்கள் அவருக்குப் பின்னால் செல்கின்றார்கள். இன்றைய நற்செய்தியில் மக்கள் அவரிடம் கேட்கக்கூடிய, " ரபி, எப்போது இங்கு வந்தீர்?" என்ற வார்த்தைகள் இயேசுவால் தங்களுக்கு உணவு கிடைக்கும் என்ற நினைப்பில்தான் மக்கள் அவரைத் தேடிவந்திருக்கின்றார்கள். என்பதை நிரூபிப்பதாய் இருக்கின்றன. இயேசு அவர்களுடைய எண்ணங்களைப் புரிந்தவராய், நீங்கள் அருமடையாளங்களைக் கண்டதால் அல்ல, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகின்றீர்கள்" என்கின்றார்.

தொடர்ந்து அவர் அவர்களிடம் சொல்லக்கூடிய வார்த்தைகள்தான் அழிந்து போகும் உணவிற்காக அல்ல, நிலைவாழ்வு தரும் உணவிற்காகவே உழையுங்கள் என்பதாகும். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களைப் போன்றுதான் இன்று நாம் நம்முடைய சொந்த தேவைகளைப் பூர்த்திச் செய்துகொள்வதற்கு ஆண்டவரைத் தேடிச் செல்கின்றோம் என்று நினைத்துப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கின்றது. மேலும் சாதாரண உடல் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்வதற்காக இவ்வளவு மதிகெட்டு அலைகின்றோம் என்பது இன்னும் வருத்தத்தைத் தருவதாக இருக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று சொல்லி, " நாங்கள் எகித்து நாட்டில் இறைச்சிப் பாத்திரத்தின் அருகே அமர்ந்து வயிறார உண்டாமே, இங்கு நாங்கள் பட்டினி கிடந்தது சாகவா எங்களை அழைத்துக்கொண்டு வந்தீர்கள்?" என்று மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முணுமுணுகிறார்கள், அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு எதிராகக் கலகம் செய்கிறார்கள். உடனே மோசே கடவுளிடம் வேண்ட, கடவுள் அவர்களுக்கு மன்னாவையும் காடையையும் உணவாகத் தருகின்றார்.
மன்னா என்பது தேனீ போன்ற ஒருவிதமான ஈயின் உடலிலிருந்து கசியும் இனிப்புப் பொருள். அவை சீனாய்ப் பாலைவனப் பகுதியில் மழைக் காலங்களில் அதிகமாகக் கிடைத்தன. இதனை இதுவரை உண்டிராத இஸ்ரயேல் மக்களுக்கு அவ்வுணவு தேனாய் இனித்தது. அது போன்று காடைகள் ஆப்பிரிக்காவிலிருந்து நீண்ட கடல் பயணத்திற்குப் பின் களைப்பினால் இஸ்ரயேல் மக்கள் தங்கியிருந்த கூடாரங்களின் பக்கத்தில் தரை இறங்கின. இவ்வாறு இயற்கையாகவே இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு உணவு கிடைக்கச் செய்தார். கடவுள் நினைத்தால், மக்களுக்கு எப்படியும் உணவு தரமுடியும். ஆனால், மக்களோ உணவுக்காக மோசேக்கு எதிராகவும் கடவுளுக்கு எதிராகவும் கலகம் செய்தார்கள் என்பதுதான் வேடிக்கையாக இருக்கின்றது. நற்செய்தியில் மக்கள் உணவுக்காக இயேசுவைத் தேடி வந்ததும், இங்கு (முதல் வாசகத்தில்) உணவுக்காக மக்கள் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்வதும், நாம் இன்னும் மேலான காரியங்களை அதாவது நிலைவாழ்வு தருவதை நாடாது, அழிந்து போவதற்காக அடித்துக்கொண்டு சாவதைத்தான் நினைவூட்டுகின்றது.

மனித வாழ்க்கை என்பது வெறுமனே உணவுக்காக அடித்துக்கொண்டு சாவதும், பொருள் தேடி அலைவதும் கிடையாது. அப்படிப்பட்ட வாழ்க்கை விலங்குகளின் வாழ்க்கையை ஒத்தது. நாம் விலங்குகள் கிடையாது, ஆறறிவு படைத்த மனிதர்கள், ஆகவே, நாம் உணவினை, உடல் இச்சைகளை நிவர்த்திச் செய்கின்ற காரியங்களை நாடாமல், அதை வித உயர்வான காரியங்களை நாடவேண்டும். அதுதான் மனித வாழ்க்கை அர்த்தப்படுத்தும், அப்படிப்பட்ட வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கையாகும்.

பவுலடியார் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் (இன்றைய இரண்டாம் வாசகம்) இதைத்தான், " உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள். உங்கள் மனப்பாங்கு புதுபிக்கப்படவேண்டும். கடவுளது சாயலாய் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள்" என்கிறார். ஆம், நாம் ஒவ்வொருவரும் உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்வதை விடுத்து, நிலைவாழ்வைத் தரக்கூடிய ஆண்டவர் ஒருவரைத் தேடிவாழ்கின்ற வாழ்க்கையினை வாழவேண்டும். இறைவாக்கினர் ஆமோஸ் "ஆண்டவரைத் தேடுங்கள், வாழ்வடைவீர்கள்" என்கிறார் (5:4). ஆண்டவரைத் தேடவேண்டும் அதுவும் நல்ல உள்ளத்தோடு தேடவேண்டும்; அவருடைய போதனைகளை வாழ்வாக்கி, அவர் கண்ட கனவினை நனவாக்குகின்றபோதுதான் நாம் வாழ்வடைய முடியும்.

எனவே, நாம் நம்மிடம் இருக்கும் பழைய பாவப் பழக்கவழக்கங்களை விட்டொழித்து, புதிய இயல்பை, அதாவது கிறிஸ்துவை அணிந்துகொண்டு அவரைப் போன்று வாழ முயற்சி செய்வோம்.

காபிஸ்டிரனோ (Capistrano) என்னும் நகரில் ஜான் என்னும் இளைஞன் வாழ்ந்து வந்தான். இவன் வாழ்ந்த தாறுமாறான வாழ்க்கையைப் பார்த்து மக்கள் எல்லாம், ' இவனுக்கு ஒரு சாவு வரமாட்டேன் என்கிறதே' என்றுதான் புலம்பித் தள்ளினார்கள். ஆனால், இவன் யார் சொல்வதைப் பற்றியும் கவலைப்பாடாமல், அடாவடியாக, அதே நேரத்தில் அருவருக்கத்தக்க வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

ஒரு சமயம் பக்கத்துக்கு ஊருக்கும் ஜான் வாழ்ந்து வந்த காபிஸ்டிரனோ நகருக்கும் இடையே மிகப்பெரிய கலவரம் வெடிக்க, காவல்துறையினர் கலகக்காரர்களைப் பிடித்து சிறையில் போடும்போது தெரியாமல் ஜானையும் பிடித்து சிறையில் போட்டுவிட்டார்கள். சிறையில் இருந்த நாட்களில் ஜான் தன்னுடைய வாழ்க்கையை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்தான். அவனுடைய வாழ்க்கை சரியானதாக இல்லை என்பதை உணர்ந்தார். எனவே, தன்னுடைய தவறை உணர்ந்து, திருந்திய மனிதனாக வாழத் தொடங்கினான். இதனால் சிறையில் அவனுடைய நடவடிக்கைகளைக் கவனித்த சிறை அதிகாரிகள் விரைவில் அவனை சிறையிலிருந்து விடுதலை செய்து அனுப்பினார்கள்.

ஜான் தான் திருந்திய மனிதன் என்பதை உலகுக்குக் காட்ட ஒரு பெரிய தாளில் தொப்பி செய்து, அதில் அவனுடைய பாவங்களை எல்லாம் பட்டியலிட்டு, ' பாவங்களுக்காக மனம் வருந்துகிறேன்' என்று எழுதி வைத்துகொண்டு, ஒரு கழுதையில் பின்பக்கம் திரும்பி அமர்ந்துகொண்டு, காபிஸ்டிரனோ நகர்வீதிகளில் சென்றான். மக்கள் எல்லாரும் அவனை வித்தியாசமாகப் பார்த்தார்கள், ஒருசிலர் அவன் மீது கல்லெறிந்தார்கள், இன்னும் ஒருசிலரோ ஜான் உண்மையிலே மனம்மாறிவிட்டான் என்று நம்பினார்கள். சில நாட்கள் இப்படியே திரிந்த ஜான், ஒருநாள் ஊருக்கு வெளியே இருந்த ஒரு துறவறமடத்திற்குச் சென்று, துறவற வாழ்க்கை வாழத் தொடங்கினான். துறவறமடத்தில் அவன் மிகச் சிறந்த போதகராக விளங்கினான். இதனால் மக்கள் அவனுடைய போதனையைக் கேட்க கூட்டம் கூட்டமாய் சென்றார்கள். பலர் அவனுடைய போதனையைக் கேட்டு மனம் மாறினார்கள். இவ்வாறு ஜான் பாவத்திலிருந்து விலகி தூய வாழ்க்கை வாழ்ந்ததனால் பிற்காலத்தின் புனிதராக மாறினான்(ர்).

பழைய இயல்பைக் களைந்துவிட்டு, புதிய இயல்பை அணிந்துகொண்டு, மறு கிறிஸ்துவாகவே வாழ்ந்த ஜான் நமக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டு. நாம் ஒவ்வொருவரும் அழிந்துபோகும் செல்வத்திற்குப் பின்னால், சிற்றின்ப நாட்டங்களுக்குப் பின்னால், அலைந்து திரியாமல் நிலைவாழ்வைத் தரும் இயேசுவுக்கு பின்னால் செல்லவேண்டும் என்பதைத்தான் ஜானின் வாழ்கை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

எனவே, நாம் உலக இன்பங்களுக்குப் பின்னால் செல்லாமல், உண்மையான இறைவனை, நல்லுள்ளதோடு தேடிச் செல்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வினைக் கொடையாகப் பெறுவோம்.
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
நிலையான இன்பம்

அன்றொரு நாள் பள்ளி மாணவர்கள் உரையாடிக் கொண்டிருப்பதைக் காது கொடுத்துக் கேட்டேன். நான் தாமிரபரணி ஆற்றிலே மூழ்கிக் குளிப்பதில் தான் இன்பமும், சுகமும் காண்கின்றேன் என்றான் ஒரு மாணவன். இல்லை . மூழ்குவதால் நாமும் மூழ்கி உள்ளே சிக்கி மடிவோம். மாறாக குற்றால அருவியிலே தலை நீட்டி குளிப்பதில் தான் எனக்கு இன்பமும் சுகமும் உண்டு என்றான் இன்னொருவன். இதில் எனக்கு இன்பம் இல்லை. ஏனெனில் ஓடி வருகின்ற அருவியில் மின்சாரம் பாய்ந்து வருவதால் அது என் உடலைத் தாக்கும். எனவே என் வீட்டில் உள்ள குழாயில் பூப்போல் விழுகின்ற நீரிலே குளிப்பதில் தான் எனக்கு இன்பமும் சுகமும் உண்டு என்றான் மூன்றாம் மாணவன்.

இந்த வேறுபட்ட பதில்களைத் தருவது என்ன? நிலையற்ற உலகில் மனிதன் அடையும் இன்பமும் நிலையற்றவைதானே! மனிதன் பசியாக இருப்பதை நன்றாக உணருகின்றான். ஆனால் அந்த பசியும் தாகம் உண்டாக்கும் உண்மை நிலை என்ன என்பதை அறிய முடியாதவனாக வாழ்கின்றான். வயிராற உண்டால் பசி மாறிவிடும் என நினைக்கிறான் ஒருவன். போதை வர குடித்தால் போதும் என நினைக்கிறான் ஒருவன். சிற்றின்ப வாழ்விலே மூழ்கிவிட்டால் பேரின்பம் காண்பேன் எனக் கனவு காண்கின்றான் இன்னொருவன். ஏன் ! பணம் திரட்டி பொருள் சேர்ப்பதில் தான் இன்பம் காண்பேன் என நினைக்கிறான் இன்னும் ஒருவன். ஆனால் இவையனைத்தும் இன்று மனிதனுக்கு நிறைவு தருவதில்லையே! யோவான் நற்செய்தி 6:27 - இல் அழிந்துபோகும் உணவுக்காக உழைக்காதீர்கள். முடிவில்லா நிலையான வாழ்வு தரும் உணவிற்காக உழையுங்கள். அன்று வனாந்தரத்தில் இஸ்ரயேல் மக்கள் மன்னாவை உண்டார்கள். ஆனால் மடிந்தார்கள். நான் தரும் உணவை உண்பவனோ என்றுமே வாழ்வான் என்றாரே இயேசு! எதைக் குறிப்பிட்டுச் சொன்னார்?

ஆயிரக்கணக்கான மின் விளக்குகள் அரங்கேற்றப்பட்ட இடம் அழகாகக் காட்சித் தரலாம். வெளிச்சம் மிகுதியாக இருக்கலாம். ஆனால் அவையனைத்தும், உதயமாகும் சூரியனுக்கு முன்னே எம்மாத்திரம்! இந்த இடத்தில் இயேசுவின் அமுத வார்த்தைகளை ஆணித்தரமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். நானே வாழ்வு தரும் உணவு, என்னிடம் வருபவனுக்கு என்றுமே பசியிராது (யோவா. 6:35) என்பது இயேசு கூறிய உயிருள்ள வார்த்தைகள் என்பதை இன்று சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.

அன்றொரு நாள் ஆற்றங்கரை ஓரத்திலே தனிமையில் வாழ்ந்த முனிவர் விலையேறப்பெற்ற ஒரு வைரக்கல்லைக் கண்டெடுத்தார். இதைப் பார்த்த வழிபோக்கன், ஐயா முனிவரே இக்கல்லை எனக்குத் தாரும் என்று கேட்க முனிவரும் மனம் உவந்து உடன் கொடுத்தார். என்ன பைத்தியக்காரத்தனம் இந்த முனிவருக்கு. இதன் மதிப்பு தெரியாது தந்துவிட்டாரே என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். சில வாரங்கள் சென்று அந்த முனிவர் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தான் இந்த வழிப்போக்கன். ஐயா! விலையேறப்பட்ட வைரக் கல்லைக் கொடுத்த நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களே! ஆனால் வைரக் கல்லைப் பெற்ற நான் மகிழ்ச்சி இழந்து நிற்கிறேனே என்றான் கண்ணீர் நிறைந்த கண்களோடு. மகனே! இந்த உயிரற்ற வைரக் கற்களெல்லாம் உன் உள்ளத்திற்கு நிறைவு தராது என்றார் அந்த முனிவர்.

இதுதான் இயேசு சபையைத் தோற்றுவித்த புனித இஞ்ஞாசியார் நமக்குக் கற்றுத் தரும் பாடம். நான் மாவீரனாக விளங்கினால் உலகில் புகழோடு வாழ்வேன் என்று கனவு கண்ட இஞ்ஞாசியார், வெறுமையைத்தான் கண்டார். எனவே மனம் திரும்பினார் - திருந்தினார். இயேசுவைத் தன் உள்ளத்தில் அரியணை ஏற்றினார். வாழ்வில் நிறைவும் கண்டார். இவரைப் போல நாமும் வாழ்வு தரும் இயேசுவை அண்டி வருவோமா?
 
நிலையான இன்பம்

அன்றொரு நாள் பள்ளி மாணவர்கள் உரையாடிக் கொண்டிருப்பதைக் காது கொடுத்துக் கேட்டேன். நான் தாமிரபரணி ஆற்றிலே மூழ்கிக் குளிப்பதில் தான் இன்பமும், சுகமும் காண்கின்றேன் என்றான் ஒரு மாணவன். இல்லை . மூழ்குவதால் நாமும் மூழ்கி உள்ளே சிக்கி மடிவோம். மாறாக குற்றால அருவியிலே தலை நீட்டி குளிப்பதில் தான் எனக்கு இன்பமும் சுகமும் உண்டு என்றான் இன்னொருவன். இதில் எனக்கு இன்பம் இல்லை. ஏனெனில் ஓடி வருகின்ற அருவியில் மின்சாரம் பாய்ந்து வருவதால் அது என் உடலைத் தாக்கும். எனவே என் வீட்டில் உள்ள குழாயில் பூப்போல் விழுகின்ற நீரிலே குளிப்பதில் தான் எனக்கு இன்பமும் சுகமும் உண்டு என்றான் மூன்றாம் மாணவன்.

இந்த வேறுபட்ட பதில்களைத் தருவது என்ன? நிலையற்ற உலகில் மனிதன் அடையும் இன்பமும் நிலையற்றவைதானே! மனிதன் பசியாக இருப்பதை நன்றாக உணருகின்றான். ஆனால் அந்த பசியும் தாகம் உண்டாக்கும் உண்மை நிலை என்ன என்பதை அறிய முடியாதவனாக வாழ்கின்றான். வயிராற உண்டால் பசி மாறிவிடும் என நினைக்கிறான் ஒருவன். போதை வர குடித்தால் போதும் என நினைக்கிறான் ஒருவன். சிற்றின்ப வாழ்விலே மூழ்கிவிட்டால் பேரின்பம் காண்பேன் எனக் கனவு காண்கின்றான் இன்னொருவன். ஏன் ! பணம் திரட்டி பொருள் சேர்ப்பதில் தான் இன்பம் காண்பேன் என நினைக்கிறான் இன்னும் ஒருவன். ஆனால் இவையனைத்தும் இன்று மனிதனுக்கு நிறைவு தருவதில்லையே! யோவான் நற்செய்தி 6:27 - இல் அழிந்துபோகும் உணவுக்காக உழைக்காதீர்கள். முடிவில்லா நிலையான வாழ்வு தரும் உணவிற்காக உழையுங்கள். அன்று வனாந்தரத்தில் இஸ்ரயேல் மக்கள் மன்னாவை உண்டார்கள். ஆனால் மடிந்தார்கள். நான் தரும் உணவை உண்பவனோ என்றுமே வாழ்வான் என்றாரே இயேசு! எதைக் குறிப்பிட்டுச் சொன்னார்?

ஆயிரக்கணக்கான மின் விளக்குகள் அரங்கேற்றப்பட்ட இடம் அழகாகக் காட்சித் தரலாம். வெளிச்சம் மிகுதியாக இருக்கலாம். ஆனால் அவையனைத்தும், உதயமாகும் சூரியனுக்கு முன்னே எம்மாத்திரம்! இந்த இடத்தில் இயேசுவின் அமுத வார்த்தைகளை ஆணித்தரமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். நானே வாழ்வு தரும் உணவு, என்னிடம் வருபவனுக்கு என்றுமே பசியிராது (யோவா. 6:35) என்பது இயேசு கூறிய உயிருள்ள வார்த்தைகள் என்பதை இன்று சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.

அன்றொரு நாள் ஆற்றங்கரை ஓரத்திலே தனிமையில் வாழ்ந்த முனிவர் விலையேறப்பெற்ற ஒரு வைரக்கல்லைக் கண்டெடுத்தார். இதைப் பார்த்த வழிபோக்கன், ஐயா முனிவரே இக்கல்லை எனக்குத் தாரும் என்று கேட்க முனிவரும் மனம் உவந்து உடன் கொடுத்தார். என்ன பைத்தியக்காரத்தனம் இந்த முனிவருக்கு. இதன் மதிப்பு தெரியாது தந்துவிட்டாரே என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். சில வாரங்கள் சென்று அந்த முனிவர் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தான் இந்த வழிப்போக்கன். ஐயா! விலையேறப்பட்ட வைரக் கல்லைக் கொடுத்த நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களே! ஆனால் வைரக் கல்லைப் பெற்ற நான் மகிழ்ச்சி இழந்து நிற்கிறேனே என்றான் கண்ணீர் நிறைந்த கண்களோடு. மகனே! இந்த உயிரற்ற வைரக் கற்களெல்லாம் உன் உள்ளத்திற்கு நிறைவு தராது என்றார் அந்த முனிவர்.

இதுதான் இயேசு சபையைத் தோற்றுவித்த புனித இஞ்ஞாசியார் நமக்குக் கற்றுத் தரும் பாடம். நான் மாவீரனாக விளங்கினால் உலகில் புகழோடு வாழ்வேன் என்று கனவு கண்ட இஞ்ஞாசியார், வெறுமையைத்தான் கண்டார். எனவே மனம் திரும்பினார் - திருந்தினார். இயேசுவைத் தன் உள்ளத்தில் அரியணை ஏற்றினார். வாழ்வில் நிறைவும் கண்டார். இவரைப் போல நாமும் வாழ்வு தரும் இயேசுவை அண்டி வருவோமா?

- அருள்பணி முனவர் ம.அருள்.


 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
புதிய மனிதர்களாவோம்.

கடவுளுக்கு எற்றவர்களாக நம்மால் வாழ முடியுமா? (நற்செய்தி)

முடியும். அதற்கு முதலாவதாக நாம் நமது தவறுகளை நியாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

ஒல்லி உடம்புக்காரர் ஒருவர் தாடியுடன் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். புதிதாக மணமான ஒருவன் அவரிடம் கேட்டான்:

'நீ சிகரெட் பிடிப்பாயா?' - 'மாட்டேன்'
'குடிப்பாயா?' 'மாட்டேன்'
'சூதாடுவாயா?' 'மாட்டவே மாட்டேன்'
'சரி என் வீட்டுக்கு வா. நூறு ரூபாய் தருகின்றேன்.'


மணவாளன் அவனது மனைவிக்கு முன்னால் பிச்சைக்காரரை நிறுத்தி, "கண்ணே ! சிகரெட் பிடிக்காதே, குடிக்காதே, சூதாடாதேன்னு அடிக்கடி சண்டை போடுறியே! ... இதெல்லாம் இவரு செய்கிறதில்லை! இவரு நிலையைப் பார்..." என்றான்.

நாம் செய்யும் தவறுகளை நியாயப்படுத்துவதற்கு ஆயிரம் உதாரணங்களைச் சுட்டிக்காட்டலாம். ஆயினும் நாம் செய்யும் தவறுகளை சரி என்று நியாயப்படுத்த முயற்சி செய்வது தவறு!

இரண்டாவதாக நமது தவறான சிந்தனைகள், சொற்கள், செயல்கள் ஆகியவற்றை விட்டுவிட முன்வர வேண்டும். சாதாரணமாகத் தவறுகள் நம்மைப் பிடித்துவைத்திருப்பதில்லை, நாம்தான் அவற்றை பிடித்துவைத்திருக்கின்றோம்.

நாம் ஒவ்வொருவரும் இறைவனின் அன்பார்ந்த மகனாக, மகளாக வாழ முற்படும் போது, கடவுளின் கட்டளைகளைப் பின்பற்ற முன்வரும் போது (முதல் வாசகம்), நமது மனம் மாறும்; நமது உள்ளம் உள்ளொளி பெறும்; அகத்தின் அழகு முகத்தில் தெரியும் (இரண்டாம் வாசகம்). மேலும் அறிவோம் :

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (குறள் : 706).

பொருள் : தன்னை நெருங்கி வருபவரது வடிவத்தையும் வண்ணத்தையும் தெளிவாகக் காட்டுவது கண்ணாடி. அது போன்று ஒருவரது உள்ளத்தில் மிகுந்து தோன்றும் உணர்வை அவரது முகமே வெளிப்படையாகக் காட்டிவிடும்!

 
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
சர்க்கரை நோயாளி ஒருவர் டாக்டரிடம் செல்ல, டாக்டர் அவரிடம், "இரண்டு கப் சாதம் மட்டும் சாப்பிடுங்கள்' என்றார். அவர் டாக்டரிடம், இந்த இரண்டு கப் சாதத்தை எப்போது சாப்பிடுவது? சாப்பிடுவதற்கு முன்பா? அல்லது சாப்பிட்ட பிறகா?" என்று கேட்டாராம். அவருடைய பசியோ யானைப்பசி; இரண்டு கப் சாதம் அவருக்குச் சோளப்பொறி. யானைப் பசிக்கு சோளப்பொறி கட்டுப்படியாகுமா?
பல்வேறு பசிகள் மனிதரை வாட்டி வதைக்கின்றன; பசி வந்தாலே மானம், குலம், கல்வி, வன்மை , அறிவுடமை, தானம், தவம், முயற்சி, தாளாமை (வாக்கம்), காதல் ஆகிய பத்தும் பறந்துவிடும், இஸ்ரயேல் மக்களுக்குப் பாலை நிலத்தில் பசி வந்தவுடன் பத்தும் பறந்துவிட்டன. அதாவது பரமனுடைய பத்துக் கட்டளைகளும் பறந்து போய்விட்டன. எஞ்சி இருந்தது அவர்களுடைய வயிறும் வயிற்றுப் பசியுமே. பாலை லக்கில் பட்டினி கிடந்து சாவதைவிட, எகிப்து நாட்டில் வயிராற உண்டு அடிமைகளாக வாழ்வதையே விரும்பினர். எனவே, மோசேயிடம் செயயாட்டிற்காகக் கூப்பாடு போட்டனர். கடவுளும் அவர்களுக்கு 'மாயா' என்ற அற்புத உணவை, வானத்து உணவை அளித்தார்,

புதிய உடன்படிக்கையின் இணைப்பாளரும் புதிய மோசேயுமாகிய கிறிஸ்து ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு அற்புதமான முறையில் உணவளித்தார். யூதர்கள் தங்கள் முன்னோர்கள் உண்ட மன்னா என்ற உனவை நினைவு கூர்ந்தனர், இந்நிகழ்ச்சி மறு ஒலிபரப்பு என்று எண்ணினர், ஆனால் கிறிஸ்து நிகழ்ச்சி முற்றிலும் வேறுபட்டது. அழிந்துபோகும் உணவுக்காக அலையாமல் அழியாத உணவைத் தேடிட அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். அவர்தான் நிலைவாழ்வளிக்கும், உண்மையான உயிருள்ள உணவு என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் (நற்செய்தி).

இயேசு யூதர்களிடம், "என்னிடம் வருபவருக்குப் பசியே இராது: என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது" (யோவா 6:35) என்கிறார், அவ்வாறே சமாரியப் பெண்களிடமும், நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது (யோவா 4:14) என்று கூறுகிறார். கூடாரப் பண்டிகையின் இறுதி நாளில் இயேசு எருசலேம் ஆலயத்தில் உரத்த குரலில், " யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும். என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்" (யோவா 7:37) என்று மக்களை அழைத்தார்.

நாம் நமது பசியையும் தாகத்தையும் தணிக்க நாயாக அலைகிறோம்; மாடாக உழைக்கிறோம்; இடாக இளைக்கிறோம், ஆனால் நம் பசி தீரவில்லை: தாகம் தணியவில்லை. மாறாக அவை பன்மடங்கு கொழுந்துவிட்டு எரிகின்றன. ஆகாய் இறைவாக்கினர் வழியாக இறைவன் கூறியது நமது வாழ்வில் உண்மையாகிறது, *நீங்கள் விதைத்தது மிகுதி: அறுத்ததோ குறைவு, நீங்கள் உண்கிறீர்கள், ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை ; நீங்கள் குடிக்கிறீர்கள், ஆலால் நீங்கள் நிறைவடைவதில்லை. ஆடை அணிகிறீர்கள், ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை. வேலையாள் தன் கூலியாக வாங்கிய பணத்தைப் பொத்தலான பையில் போடுகிறான்" (ஆகாய் 1.6)

நாம் சாண் ஏறினால் முழம் வழுக்குகிறது! ஏன்? ஏனெனில் கடவுளை ஓரங்கட்டிவிட்டு, நாம் உயரப் பறக்கப் பார்க்கிறோம். மனசாட்சியை மழுங்கடித்துவிட்டு, குறுக்கு வழியில் சென்று குபேரர்களாக மாற விரும்புகிறோம். அங்காடியின் சிலை வழிபாட்டிற்கும் நுகர்வு வெறிக் கலாச்சாரத்திற்கும் அடிமைகளாக இருக்கிறோம். தேவைகளைக் குறைப்பதற்குப் பதிலாகத் தேவைகளைப் பெருக்குகின்றோம். மன அமைதியை இழந்து, மரண தேவதையைத் தழுவுகிறோம். சுருக்கமாக, உயிருள்ள தண்ணீர் சுரக்கும் கடவுளை கைவிட்டுவிட்டு, தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத ஓட்டைத் தொட்டிகளைக் கட்டிக் கொள்கிறோம் (எரே 2:13)

நமது இதயத் தாகத்தைத் தணிக்க வல்லவர் இயேசு ஒருவரே. நிலை வாழ்வு பெற கடவுளுக்கு ஏற்புடைய செயலை நாம் செய்ய வேண்டும். கடவுளுக்கு ஏற்ற செயல் என்பது அவருடைய மகனில் நம்பிக்கை கொள்வது. நற்கருணை நம்பிக்கையின் மறைபொருள். நற்கருணையை நாம் இயேசுவின் உடல் என்று உட்கொண்டால் மட்டும் போதாது. நற்கருனையிலுள்ள இயேசுவை நம்பி, அவரிடம் சரணடைய வேண்டும், மனிதன் அதிகமாகத் துன்புறுவது மனக் கவலையாலும் மன அழுத்தத்தாலுமே. மற்ற எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு. ஆனால் மனக் கவலையைப் போக்க வல்ல ஒரே மருந்து கடவுளிடம் சரணடைவதே.

தனக்கு உவமை இல்லாதாள்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் 7)
இறைவா எம் நெஞ்சங்கள் உமக்காகவே படைக்கப் பட்டுள்ளன; உம்மில் இளைப்பாறும் வரை அவற்றிற்கு அமைதி இல்லை - புனித அகுஸ்தீன்

ஒரு விவசாயிடம் இருந்த ஐந்து ரூபாய் பெறாத ஒரு தாமரை மலரை, ஐம்பது முதல் ஐநூறு ரூபாய் வரையில் விலை கொடுத்து வாங்கப் பலர் முன் வந்தனர். ஏன் என்று கேட்டதற்கு, காட்டில் தவம் செய்து கொண்டிருந்த புத்தருக்கு அம்மலரைப் படைக்க வேண்டும் என்று அவர்கள் பதில் சொன்னார்கள், தானே நேரில் புத்தரிடம் அம்மலரைக் கொடுத்தால் இன்னும் அதிகமாகப் பணம் கிடைக்கும் என்ற பேராசையுடன் அவவிவசாயி காட்டிற்குச் சென்று புத்தர் காலடியில் அம்மலரைப் படைத்தார், புன்னகை பூத்த முகத்துடன் அம்மலருக்கு எவ்வளவு பணம் வேண்டுமென்று புத்தர் விவசாயியைக் கேட்க, அவர் "பணமே வேண்டாம்; உங்களைப் பார்த்ததே போதும்" வென்றார். புத்தர் அவவிவசாயியின் பேராசையை அடியோடு ஒழித்து, அவரையும் நிர்வாண நிலையை அடையச் செய்தார்,

நற்கருணைப் பேழை முன் அமர்ந்து, ஆண்டவரை உற்று நோக்கும்போது, ஆண்டவர் நம் ஆசைகளை மடை மாற்றம் செய்கிறார். சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்திற்கு அழைத்துச் செல்கிறார், இன்றை இரண்டாவது வாசகத்தில் பவுலடியார் கூறுவதுபோல், பாவ நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் நமது பழைய இயல்பைக் களைந்துவிட்டு, உண்மையிலும், நீதியிலும் படைக்கப்பட்ட புதிய இயல்பை (எபே 4:22-24) கிறிஸ்து நமக்கு அளிக்கிறார்.

எனவே, கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பதுபோல், உயிருள்ள இறைவன்மீது தாகம் கொள்வோம் (திபா 42:1-2). ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பார்ப்போம் (திபா 34:8).
-அருள்பணி Y. இருதயராஜ்.
 

 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
அன்றாட நலனும் - அருள் அடையாளமும்

நான் படித்துச் சுவைத்த பசி பற்றிய பாடல் இது.
அறியாத வயதினிலே அன்புக்கே ஏங்கி நின்றேன்
அறிந்து விட்ட வாலிபத்தில் பொருளுக்கே ஏங்கி நின்றேன்
இரண்டும் கெட்ட இப்பொழுதோ இல்வாழ்வில் குழம்புகின்றேன்
என்னதான் நடக்கும் என்று எதிர்நீச்சல் போடுகின்றேன்
உல்லாச மாளிகையில் முப்பொழுதும் காமப்பசி
இல்லாத குடிசையிலே எப்பொழுதும் வயிற்றுப்பசி
ஆராயும் மனிதனுக்கோ அடங்காத அறிவுப்பசி
அப்பனிடம் சென்றுவிட்டால் எப்பசியும் எடுப்பதிலை.
"இறைவா, உமக்காக எங்கள் இதயங்களைப் படைத்தீர். உம்மிலன்றி வேறு எதில் அவை நிம்மதி காண முடியும்? நிறைவு அடைய முடியும்?'' என்பார் புனித அகுஸ்தீன். மனித ஏக்கங்களுக்கெல்லாம் தீர்வு தரும் வகையில் இயேசு சொல்கிறார்: "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது. என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது" (யோ. 6:35)

மனிதனுடைய அடிப்படை இன்றியமையாத் தேவைகளில் முதலிடம் வகிப்பது வயிற்றுப் பசி. எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம் - இது அந்தக் காலம். எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம் என்பதே இன்றைய எதார்த்தம்!

உண்ணாமல் உயிர் வாழ முடியாது என்றாலும் மனிதர்கள் உண்பதற்காக மட்டுமே பிறந்தவர்கள் அல்ல. உண்பதற்காகவே உயிர் வாழ்பவர்கள் வெந்ததைத் தின்று வந்ததைப் பேசி விதி வந்தால் சாகுபவர்கள். உயிர் வாழ்வதற்காக உண்பவர்களே பெற்ற வாழ்வுக்குப் பெருமை சேர்ப்பவர்கள்.

பொதுவாக மனிதர்கள் நாம் மூன்று தளங்களில் வாழ்கிறோம்.
1. முதல் தளம் உடல் பசி, தாகம், காமம் எல்லாம் இந்தத் தளத்திற்கு உரியவை.
2. இரண்டாவது தளம் மனம்! காதல், புகழ், கலை, இலக்கியம், அன்பு, மதிப்பு, இவையெல்லாம் இத்தளத்தில் வாழ்பவர்களின் தேடல் .
3. மூன்றாவது தளம் ஆன்மா இது உடல், மனம், அறிவு என்ற எல்லா நிலைகளையும் கடந்து செல்லும் ஓர் உச்சநிலை. இதனையே ஆன்மீகத் தேடல் , அருள் வேட்கை என்று சொல்கிறோம்.

இந்த உன்னதமான மூன்றாவது கட்டத்திற்குத்தான் பெரும்பான்மையினர் வந்து சேர்வதில்லை. அது பற்றிச் சிந்திப்பதும் இல்லை என்பதுதான் மிகப் பெரிய சோகம். இப்படிப்பட்ட மக்களைத்தாம் அடையாளம் கண்டு , "நீங்கள் அருள் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள்" (யோ. 6:26) என்று இயேசு உறுதிபடக் கூறுகிறார்.

நற்செய்தியாளர் யோவானின் பார்வையில் இயேசு செய்த ஒவ்வொரு புதுமையிலும் இரண்டு கூறுகள் உண்டு. 1. மக்கள் பெறும் நன்மை . 2. அருள் அடையாளம். அப்பம் பலுகிய புதுமையில் கடவுளின் பரிவையும் மக்களின் பகிர்தலையும் மக்கள் உணர வேண்டுமென்று இயேசு விரும்புகிறார். ஆனால் மக்களோ தங்கள் வயிறு நிரம்பியதையே நினைத்து மீண்டும் தங்கள் வயிற்றை நிரப்புவதற்கே இயேசுவைத் தேடிச் செல்கிறார்கள்.

முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களின் மனநிலையும் அப்படித்தான். விடுதலை என்ற உன்னதமான மதிப்பீட்டை மறந்து வயிற்றுக்கான உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கிறோம். உணவு இல்லையே என்ற முணுமுணுப்பு, முறையீடு! இப்படி உணவற்ற நிலையில் வாடுவதைவிட, எகிப்தில் அடிமைகளாக இருந்தால் வயிற்றுக்குச் சோறாவது கிடைக்குமே!.... இங்கே கடவுள் அவர்களுக்கு கொடுக்க விரும்பியது விடுதலை என்ற உயர்ந்த விழுமியத்தை. ஆனால் பசி வந்ததும் மக்கள் அந்த மதிப்பீட்டை மறந்து விடுகின்றனர் - எங்களுக்கு விடுதலை வேண்டாம், வெறும் உணவு போதும் என்று கேட்பது போல. உடல் சார்ந்த ஒரு சிறிய மதிப்பீட்டுக்காக, விடுதலை என்னும் உயர்ந்த அடிப்படையான மதிப்பீட்டையே விட்டுக் கொடுக்கத் தயாராகி விடுகிறார்கள்.

நற்செய்தியிலும் இதே நிலை. இயேசு அப்பம் பகிர்தல் என்னும் நிகழ்ச்சி வழியாக பகிர்தல்' என்ற உன்னதமான பண்பை - அரும் அடையாளத்தைக் காட்டிப் பகிர்தலே 'நிறைவாழ்வுக்கு வழி என்று உணர்த்தினார். ஆனால் மக்கள் அதை உணராமல் ஓசியில் உணவு தேடி வருகிறார்கள். எனவே 2ஆம் வாசகத்தில் கேட்டது போல இனியாவது ''உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதனுக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்" (எபேசி. 4:23-24) என்ற திருத்தூதர் பவுலின் கூற்றுக்கேற்ப கடவுளின் மதிப்பீடுகளுக்காக வாழ்வோம்.

உலகில் வாழும் மக்கள் அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு நோக்கம் கொண்டு செயல்படுகின்றனர். சிலர் உடல் இன்பத்தைத் * தேடுகின்றனர். சிலர் பணத்தை, பதவியைத் தேடுகின்றனர். சிலர் புகழை, வீண் பெருமையைத் தேடுகின்றனர். பெரும்பான்மையினர் உயிர்வாழ வழிவகைகளைத் தேடுகின்றனர். நோக்கு எப்படியோ போக்கு அப்படியே! மக்கள் எதைத் தேடுகிறார்களோ அதற்கு ஏற்ப அவர்களுடைய வாழ்க்கை முறையும் உயர்வானதாகவோ அல்லது தரம் குறைந்ததாகவோ இருக்கும்.

வயிற்றில் கடுமையான பசி என்பதற்காக வயிற்றை கல்லாலோ, மண்ணாலோ, ஏன் தங்கக்கட்டியாலோ கூட நிரப்பி திருப்தி காணமுடியுமா? அதுபோல மனப்பசியை ஆன்மப்பசியை உலகம் தொடர்பானவற்றால் தீர்த்துக் கொள்ள இயலாது. அதனால்தான் இன்று இயேசு சொல்கிறார்: "அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்" (யோ. 6:27). உணவு அளிப்பவராக மட்டுமல்ல இறைமகன் இயேசுவே அவ்வுணவாக இருப்பார். " வாழ்வு தரும் உணவு நானே" (யோ. 6:35)

இறைமையை நோக்கி நமது தேவைகளை நிறைவு செய்வோம் ஆபிரகாம் மாஸ்லோ என்ற உளவியலார் "தேவைகளின் படிக்கட்டு" (Hiararchy of Needs) என்னும் ஒரு சிந்தனையை வழங்கியுள்ளார். அதன்படி மனிதர்களுக்கு அடிப்படைத் தேவைகள் (உணவு, உடை, உறைவிடம்), பாதுகாப்புத் தேவைகள், உறவுத் தேவைகள், அன்புத் தேவைகள் மற்றும் ஆளுமை நிறைவுத் தேவைகள் என ஐந்து வகையான தேவைகள் படிப்படியாக ஒவ்வொரு தேவையாக நிறைவேற்றப்படும் போது மனிதர்கள் ஆளுமை நிறைவு அடைகிறார்கள் என்கிறார் அவர்.

இதே சிந்தனைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செயல் வடிவம் கொடுத்துள்ளார் இயேசு . மனிதர்களின் அடிப்படைத் தேவையான உணவை வயிறார அளித்த பிறகு அவர்களின் ஆன்மீக நிறைவுத் தேவையான நிலை வாழ்வு தரும் அழியாத உணவுக்காக உழைக்க அழைக்கிறார். " மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல. மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்'' (மத். 4:4) என்கிறார்.

நரி முயலைத் துரத்தியது. வேகமாக ஓடி நின்ற முயலைப் பார்த்து நரி கேட்டது "உன்னால் எப்படி இவ்வளவு வேகமாக ஓட முடிகிறது?" முயல் சொன்னது, "நீ வயிற்றுக்காக ஓடினாய். நான் உயிருக்காக ஓடினேன்" என்று.

எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றுவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" எனச் சிலர் கேட்டதற்கு , "கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்" என்றார் இயேசு. அது அழிந்து போகும் உணவுக்காக உழைக்காது, மாறாக நிலைவாழ்வு தரும் உணவுக்காக உழைப்பதாகும். அந்த அழியாத உணவான இயேசுவைத் தேடினால் இறைவார்த்தையிலும் நற்கருணையிலும் நமது ஆன்ம பசியையும் ஆன்ம தாகத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும்.
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி

ஆகஸ்ட் மாதம் ஆரம்பமானதும், நம் நினைவுகளில், வேதனையோடு வலம் வருபவை, அணுகுண்டுத் தாக்குதல்கள். ஆம், 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6, 9 ஆகிய இரு நாட்கள், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, அணுகுண்டுகளை வீசி, பல்லாயிரம் அப்பாவி மக்களைக் கொன்றது. இக்கொடுமையால் இறந்தோரின் நினைவாக உருவாக்கப்பட்ட ஹிரோஷிமா அமைதிப்பூங்காவில், "Let all the souls here rest in peace; For we shall not repeat the evil" அதாவது, "அனைத்து ஆன்மாக்களும் இங்கு அமைதியில் இளைப்பாறட்டும்; ஏனெனில், தீமையை மீண்டும் செய்யமாட்டோம்" என்ற சொற்கள், கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.

1945ம் ஆண்டுக்குப்பின், அணுகுண்டுகளை வீசி, மக்களை நேரடியாகக் கொல்லும் தீமை நடைபெறவில்லை, உண்மைதான். ஆனால், அணுகுண்டு சோதனைகள், பூமிக்கடியிலும், கடலுக்கடியிலும் நடத்தப்பட்டு, அதன் ஆபத்தான விளைவுகளை, பூமித்தாயும், அப்பாவி மனிதர்களும் இன்றும் சந்தித்து வருகின்றனர். அணுசக்தியை, குண்டுகளாக மாற்றி, அழிவுக்குப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அந்தச் சக்தியை, பிற சக்திகளாக மாற்றும் அணு உலைகளை உலக அரசுகள் நிறுவின. இங்கும், அழிவுகள் தொடர்கின்றன.

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு (1945) அழிவுகள், செர்னோபிள், (1986) புக்குஷிமா (2011) அணு உலை விபத்துகள் ஆகியவற்றைக் கண்ட பின்னரும், நமது அரசுகள், அணுசக்தியை இன்னும் நம்பியுள்ளனவே என்ற கவலையை, இறைவனிடம் ஏந்திவருகிறோம், இந்த ஞாயிறு வழிபாட்டில்.

அணுசக்தியை, அணுஉலைகளைப் பற்றிய சிந்தனைகள், ஒரு ஞாயிறு வழிபாட்டிற்கு தேவையா என்ற கேள்வி எழலாம். நம் வாழ்வை, இன்று, பெருமளவில் பாதிக்கும் ஓர் ஆபத்தை, கிறிஸ்தவர்கள் என்ற முறையில், விசுவாசக் கண்ணோட்டத்துடன் சிந்திப்பதற்கு, ஞாயிறு வழிபாடு நல்லதொரு தருணம். அணுசக்தியைப் பற்றி, இரு எண்ணங்களை நாம் இன்று அலசுவது பயனளிக்கும். அணு சக்தியை காப்பாற்ற, அரசுகள், மக்களிடம் பொய்களைக் கூறி ஏமாற்றுகின்றன என்பது, முதல் எண்ணம். அணுசக்தியின் ஆபத்துக்களைப் பற்றிய உண்மைகள், மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன என்பதற்கு, வரலாற்று சான்றுகள் பல உள்ளன. ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்க அரசு அணுகுண்டுகளை வீசியபோது, மனசாட்சியுள்ள பல்லாயிரம் அமெரிக்க மக்கள் சங்கடமான கேள்விகளை எழுப்பினர். அவர்களது குரலை அடக்கியவர்கள், James Conant, Harvey Bundy, Henry Stimson என்ற மூவர். இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டுவர, அணுகுண்டு தாக்குதல்கள் தேவைப்பட்டன என்று, இம்முவரும், அரசின் சார்பில் பேசி, மக்களை நம்பச்செய்தனர். ஆயினும், அன்றுமுதல், இன்றுவரை, அமெரிக்க மக்கள், அந்தப் பொய்யை, சீரணிக்கமுடியாமல் தவிக்கின்றனர்.

அணுகுண்டு தாக்குதல்களைப் பற்றி பொய்கள் சொல்லப்பட்டதுபோல், உலகில் உள்ள அணுஆயுதங்களைப் பற்றியும் பல்லாயிரம் பொய்களை அரசுகள் சொல்லி வருகின்றன. உலகில் உள்ள அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இந்த உலகை ஐந்து முறைக்கும் அதிகமாக நாம் அழிக்கலாம் என்று கூறப்படுகிறது. "இவ்வுலகை முற்றிலும் அழிப்பதற்கு, எங்களிடம் உள்ள 3 அல்லது 4 குண்டுகள் போதும்" என்று தன் அணு ஆயுத சக்தியைப் பற்றி சென்ற ஆண்டு வடகொரியா அறிவித்ததைக் கேட்டபோது, நாம் வேதனையில், வெந்துபோனோம். யார் பலசாலி என்று பறைசாற்ற விரும்பும் பள்ளிச் சிறுவர்களைப் போல், இரு நாட்டின் அரசுத்தலைவர்கள், தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களைப்பற்றி, கடந்த ஆண்டு, ஊடகங்களில், பொறுப்பற்ற முறையில், அறிவிப்புக்கள் விட்டதைக் கண்டு, உண்மையிலேயே கலங்கி நின்றோம்.

உலகை அழிப்பதற்கு அணு ஆயுதங்கள் மட்டும் போதாதென்று, உலகின் பெரும்பாலான நாடுகள், அணு உலைகளைக் கட்டிவருகின்றன. அரசுகள் அமைத்துவரும் அணு உலைகளைப் பற்றியும், இதுவரை, அணு உலைகளில் ஏற்பட்டுள்ள விபத்துக்களைப் பற்றியும் ஏகப்பட்ட பொய்கள் தொடர்ந்து கூறப்படுகின்றன. தமிழகத்தின் கூடங்குளத்தில் உருவாக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தைப்பற்றிய முழு விவரங்களையும் வெளிப்படுத்துமாறு மக்கள் போராடினர். முழு விவரங்களும் இதுவரைச் சொல்லப்படவில்லை. கூடங்குளத்தில் மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளிலுமே, அணு உலைகளைப்பற்றியும், அவற்றில் நிகழ்ந்துவரும் விபத்துக்கள் குறித்தும், முழு உண்மைகள் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு வருகின்றன. அணுசக்தியை உலகில் காப்பாற்ற வேண்டுமெனில், பொய்யையும் நாம் கண்ணும்கருத்துமாய் காப்பாற்ற வேண்டியிருக்கும்.

இவ்வளவு ஆபத்தான அணுசக்தி நமக்குத் தேவைதானா? மாற்று சக்திகளை நாம் பயன்படுத்த முடியாதா? என்ற கேள்விகள், நமது இரண்டாவது எண்ணத்தை ஆரம்பித்து வைக்கின்றன. அணுசக்திக்கு மாற்றாக, எத்தனையோ வகை இயற்கைச் சக்திகளை நாம் பயன்படுத்தமுடியும். நீர், காற்று, சூரியஒளி என்ற அனைத்தையுமே நாம் சக்திகளாக மாற்றமுடியும். அவ்விதம் நாம் உருவாக்கும் இயற்கைச் சக்திகளைக்கொண்டு, நமது தேவைகளை, நாம் நிறைவு செய்துகொள்ளலாம். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், கட்டுக்கடங்காமல் வளர்ந்திருக்கும் நமது பேராசைகளை நிறைவு செய்யும் ஆற்றல், இந்தச் சக்திகளுக்குக் கிடையாது. இதுதான் பிரச்சனை.

பேராசைகளை நீக்கிவிட்டு, தேவைகளை மட்டும் நிறைவுசெய்யும் எளிமையான வாழ்வை ஒவ்வொருவரும் பின்பற்றினால், நமக்கு இத்தனை பொருட்கள் தேவையில்லை. தேவையற்றப் பொருட்களை உருவாக்கும் தொழிற்சாலைகள் தேவையில்லை. அத்தொழிற்சாலைகளை இயக்கும் அணுசக்தியும் தேவையில்லை. எப்போது நாம், தேவைகளை மட்டும் தீர்த்துக்கொள்ளும் மனிதர்களாக வாழ்வதற்குப் பதில், பேராசை வெறியர்களாய் மாறினோமோ, அப்போது, அந்த வெறிகளைத் தீர்க்க, இயற்கைச் சக்திகளைத் தாண்டி, அணுசக்தியைத் தேடினோம். பேராசை வெறியால் நாம் திரட்டிவைத்துள்ள செல்வங்களைக் காக்க, அணு ஆயுதங்களையும் உருவாக்கினோம்.

இயற்கைச் சக்திகளைக் கொண்டு வாழமுடியும் என்று சிந்திப்பது, 21ம் நூற்றாண்டில் வாழும் நமக்கு ஒத்துவராத கனவு என்று பலர் நினைக்கலாம். இயற்கைச் சக்திகளை நம்பி வாழ்ந்தால், கற்காலத்திற்குத் திரும்பவேண்டியிருக்கும் என்ற எண்ணம் நம்மில் ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளதால், இயற்கைச் சக்திகளைக் குறித்த எண்ணத்தை, நாம் எள்ளி நகையாடலாம். ஆனால், முன்னேற்றம் என்ற பெயரில், உருவாகி வரும் பல பிரச்சனைகளின் ஆணிவேர், கட்டுக்கடங்காத நமது பேராசைகள் என்றும், அடுத்தத் தலைமுறையைப்பற்றி கவலை ஏதுமின்றி, சுற்றுச்சூழலையும், பூமிக்கோளத்தையும் நிரந்தரமான ஆபத்துக்கு உள்ளாக்குகிறோம் என்றும் பல உலகக் கருத்தரங்குகளில் பேசிவருகிறோம். நாம் வளர்த்துக்கொண்டுள்ள பேராசைகள், நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்கின்றனவா என்பது கேள்விக்குறியே! அணு ஆயுதங்களுக்கு எதிராக ஆரம்பத்திலிருந்து கண்டனக்குரல் எழுப்பிவந்த, அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்கள், நாம் செல்லும் முன்னேற்றப்பாதையைக் குறித்து சொன்ன கருத்து இப்போது நினைவுக்கு வருகிறது: " I do not know with what weapons World War III will be fought, but World War IV will be fought with sticks and stones." - Albert Einstein "மூன்றாம் உலகப்போரில் எவ்வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான்காம் உலகப்போரில், கழிகளும் கற்களும் பயன்படுத்தப்படும்."

அணு உலைகள் என்ற கோவில்களைக் கட்டி, அணுசக்தியை வழிபடும் நமது பேராசை வெறிகளை நீக்கிவிட்டு, தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்ளும் எளிய வாழ்வை நாம் அமைத்துக் கொள்ளமுடியும் என்று கனவு காண்பதில் தவறில்லையே! இந்தக் கனவை நமக்குள் விதைப்பவை, இன்றைய ஞாயிறு வாசகங்கள். எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படைத் தேவையாக இருக்கும் பசியைப்பற்றி முதல் வாசகமும், நற்செய்தியும் பேசுகின்றன. வேற்று உயிரினங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகள் நிறைவுற்றால், அமைதியாக வாழும். ஆனால், மனிதர்கள் மட்டும் தங்கள் அடிப்படைத் தேவைகள் நிறைவேறினாலும், நிறைவேற்றமுடியாத தங்கள் பேராசையைத் தீர்ப்பதற்கு, வேறு வழிகளை, குறிப்பாக, குறுக்கு வழிகளைத் தேடுவர்.

சில ஆண்டுகளுக்குமுன், ஓர் அழகான குறும்படம் வெளியானது. இரு சிறுத்தைகளும் ஒரு மானும் இப்படத்தின் நாயகர்கள். இருசிறுத்தைகள், ஒரு மான் என்றதும், நம்மில் பலர், இந்தக் கதையின் முடிவை, ஏற்கனவே எழுதி முடித்திருப்போம். பாவம், அந்த மான். இரு சிறுத்தைகளும் அந்த மானை அடித்துக்கொன்று சாப்பிட்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்திருப்போம். ஆனால், அக்காட்சியில் நாம் காண்பது, நம்மை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அவ்விரு சிறுத்தைகளும், மானும், அழகாக விளையாடுவதாக, அங்கு காட்டப்பட்டுள்ளது. அந்த அற்புத காட்சியின் இறுதியில், திரையில் தோன்றும் வரிகள் இவை: "மிருகங்களுக்குப் பசியில்லாதபோது, வன்முறையும் இல்லை. மனிதர்கள் மட்டும் ஏன் காரணம் ஏதுமின்றி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்?" என்ற கேள்வியுடன் அந்தக் குறும்படம் முடிவுறுகிறது.

பசி என்பது ஓர் அடிப்படைத் தேவை. அந்தத் தேவை நிறைவேறியபின், நாம் நிம்மதி அடைய வேண்டும். ஆனால், மனிதர்கள் நிறைவும், நிம்மதியும் அடைவதென்பது மிக, மிக, மிக அரிதாகிவிட்டது. நிம்மதி அடைவதற்குப் பதில், வேண்டும், இன்னும் வேண்டும் என்ற வெறியை நாம் வளர்த்துவருவதாலேயே, நாம், இத்தனைப் பிரச்சனைகளைச் சந்திக்கிறோம். தீராத வன்முறைப் பசியை இளையோரில் வளர்க்கும் சுயநலத் தலைவர்களை, இளையோர் விரைவில் அடையாளம் கண்டுகொள்வது, வருங்காலத்திற்கு நல்லது.

இன்றைய முதல் வாசகத்தில், பசியால் வாடும் இஸ்ரயேல் மக்கள், இறைவனுக்கும், மோசேக்கும் எதிராக முணுமுணுப்பதைக் காண்கிறோம். இறைவன் மோசே வழியாக அம்மக்களுக்குத் தரும் பதிலுரை இதுதான்:

விடுதலைப்பயண நூல் 16: 4
" இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்."

இறைவன் தந்த இக்கூற்றில், தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும் என்ற சொற்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. வாக்களிக்கப்பட்ட நாட்டில் வளமுடன் வாழ்வது எவ்வாறு என்பதைப்பற்றியப் பாடங்களை, இறைவன், பாலைநிலத்தில், தன் மக்களுக்குச் சொல்லித்தந்தார். சொல்லித்தந்த பாடங்களை அவர்கள் பயின்றனரா என்பதைப் பரிசோதிக்க, தேர்வும் வைத்தார். இம்மக்கள் தங்கள் தேவைகளை மட்டும் நிறைவுசெய்து வாழும் மக்களாக இருப்பார்களா, அல்லது, பேராசையால் அதிகம் சேர்த்துவைக்கும் மக்களாக இருப்பார்களா என்பதே, இறைவன் தந்த முதல் சோதனை. இச்சோதனையில் வென்றவரும் உண்டு, தோற்றவரும் உண்டு. அடுத்த நாளுக்குச் சேர்த்தவர்களின் உணவு, புழுவைத்து, நாற்றமெடுத்தது என்று, இதே 16ம் பிரிவின் பிற்பகுதியில் (வி.பயணம் 16:20) நாம் வாசிக்கிறோம்.

அன்றும் சரி, இன்றும் சரி... தேவைக்கும் அதிகமாகச் சேர்த்துவைப்பது, மனிதர்கள் மத்தியில் ஒரு நோயாக உருவெடுத்துள்ளது. சேர்த்துவைப்பதையே ஒரு நோய் என்று சொன்னால், மலைபோல் குவித்துவைப்பதை என்னென்று சொல்வது? குவித்துவைக்கும் தீராத நோயில் சிக்கித்தவிக்கும் பல நாட்டுத் தலைவர்களை, தலைவிகளைப் பற்றி நாம் கேள்விப்படும் செய்திகள் நம்மை வேதனையில் நிறைக்கின்றன. பல்லாயிரம் காலணிகளை, நகைகளை, புடவைகளைச் சேர்த்துவைத்த ஒரு தலைவி, பஞ்சு மெத்தையில், பஞ்சுக்குப் பதிலாக, பணக்கட்டுக்களைப் பதுக்கிவைத்திருந்த அரசியல் தலைவர், குளிக்கும் தொட்டியைத் தங்கத்தில் செய்திருந்த ஓர் அரசுத் தலைவர்... என்று, வரலாறு கூறும் இந்த பட்டியல், மிக நீளமானது. இத்தலைவர்களின் பேராசை நோயினால், நாட்டு மக்கள், முக்கியமாக வறியோர் அடையும் துன்பங்கள் ஏராளம்.

சேகரித்து வைக்கும் பேராசை நோய் பல்வேறு அளவுகளில் நம் ஒவ்வொருவரிலும் உள்ளது. இந்த நோயின் பக்கநோயாக இருப்பது, குறுக்கு வழியைத் தேடும் நோய். இந்த நோயைப்பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். தன்னைத் தேடிவந்த மக்களைப்பார்த்து இயேசு கூறும் சொற்கள், நாம் அனைவரும் குறுக்கு வழியை விரும்புகிறவர்கள் என்பதை நமக்கு நினைவுறுத்துகின்றன.

யோவான் நற்செய்தி 6: 24-26
" நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று இயேசு அன்று கூறிய எச்சரிக்கை, குறுக்கு வழிகளில் சுகம் தேடும் அனைவருக்கும் தரப்படும் எச்சரிக்கை. குறுக்கு வழிகள் என்ற மாயையையும், பேராசை வெறிகளையும் போக்குவதற்கு இயேசு சொல்லித்தரும் ஓர் அழகான வழி இதோ:

யோவான் நற்செய்தி 6: 27
அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்.

பேராசை வெறிகளைக் களைந்து, தேவைகளை மட்டும் தீர்த்துக்கொள்ளும் பக்குவத்தை நாம் பெறவும், நம் தேவைகளை இறைவன் தீர்ப்பார் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் இந்த ஞாயிறு வழிபாட்டில் உருக்கமாக மன்றாடுவோம். தேவைகளைப் பெருக்கி, பேராசை வெறியர்களாக நாம் மாறினால், ஆண்டவனை ஒதுக்கிவைத்துவிட்டு, அணுசக்திக்குக் கோவில் கட்டி கும்பிட வேண்டியிருக்கும், எச்சரிக்கை!!!
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
மறையுரை புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌ பெங்களூர்
பொதுக்காலம்‌ 18-ஆம்‌ ஞாயிறு

முதல்‌ வாசகப்‌ பின்னணி (எசே. 16:2-4,12-15)

இஸ்ராயேல்‌ பிரமாணிக்கம்‌ அற்ற மணமகளாக இங்கே சித்தரிக்கப்படுகின்றாள்‌. இதைதான்‌ இறைவாக்கினர்கள்‌ எரேமியாவும்‌, ஓசாயாவும்‌ ஏற்கனவே முன்மொழிந்து உள்ளார்கள்‌. இந்த உருவகத்தின்‌ மூலம்‌ மக்களின்‌ முழுவரலாற்றையும்‌ எசேக்கியேல்‌ படம்பிடித்து காட்டுகின்றார்‌. இஸ்ராயேல்‌ மக்கள்‌ மற்ற கடவுளை வழிபடுவதின்‌ மூலம்‌ ஆன்மீக விபச்சாரத்தில்‌ ஈடுபட்டுள்ளதாகவும்‌, மற்ற சமய படிப்பினைகளின்படி பலிகளை மேற்கொள்வதன்‌ மூலம்‌ உடல்‌ ரீதியான விபச்சாரத்தில்‌ ஈடுபட்டூள்ளதாகவும்‌, மேலும்‌ வலிமைமிகு அரசர்களை தேடி சரண்‌ அடைந்ததால்‌ அரசியல்‌ விபச்சாரத்தில்‌ ஈடுபட்டுள்ளதாகவும்‌, அவர்களை இறைவாக்கினர்‌ குற்றம்‌ சாட்டுகின்றார்‌. இவ்வாறு இறைவாக்கினர்‌ இஸ்ராயேல்‌ மக்களை எச்சரிக்‌கின்றார்‌.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (எபி. 4:17,20-24)

இந்த பகுதியிலே இக்கடிதத்தின்‌ ஆசிரியர்‌ கிறிஸ்துவுக்குள்‌ புது வாழ்க்கை முறையை பற்றி விவரிக்கிறார்‌. புதிதாக மனம்‌ மாறிய அனைவரும்‌ எந்த காரணத்தை முன்னிட்டும்‌ பழைய நிலைமைக்கு திரும்ப கூடாது என்பதை கண்டிப்பாக கூறுகிறார்‌. இயேசு கிறிஸ்துவைப்‌ பின்பற்றும்‌ அனைவரும்‌ முழுமையாக மனமாற்றத்தைப்‌ பெற்றிருக்க வேண்டும்‌ என்பதை இரண்டு உருவகங்களின்‌ மூலம்‌ வலியுறுத்துகிறார்‌: இருளின்‌ செயல்பாடுகள்‌, ஒளியின்‌. செயல்பாடுகள்‌. இவை மனம்‌ மாறி புது வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்‌ என்ற கருத்தை எடுத்துக்‌ கூறுகின்றன. இந்த இரண்டு. உருவகங்கள்‌ திருமுழுக்கு வழிபாட்டு மன்றாட்டுகளிலிருந்து. எடுக்கப்பட்டவை ஆகும்‌.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி (யோவான்‌ 6:24-35)

மக்கள்‌ இயேசுவை தேடி கப்பர்நாகூமுக்கு வந்த போது இயேசு அவர்களிடம்‌ " நீங்கள்‌ அருள்‌ அடையாளங்களைக்‌ கண்டதால்‌ அல்ல மாறாக அப்பங்களை வயிறாக உண்டதால்தான்‌ என்னை தேடுகின்றீர்கள்‌ என்று உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்‌" என்றார்‌. (6:26) ஏனெனில்‌ அவர்கள்‌ இறைமகன்‌. இயேசுவை முழுமையாக. புரிந்து கொள்ளவில்லை. இன்றும்‌. உலகத்தில்‌ சுயநலத்திற்காக மதத்தைப்‌ பின்பற்றுபவர்கள்‌ இருக்கிறார்கள்‌. அழிந்து போகும்‌ உணவிற்காகவோ பொருட்களுக்‌'காகவோ நம்‌ வாழ்வை செலவிட வேண்டாம்‌ என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்‌. மாறாக நாம்‌ அனைவரும்‌ வாழ்வுதரும்‌ ஆன்மீக உணவிற்‌காக உழைக்க வேண்டும்‌. " வாழ்வு தரும்‌ செயல்‌ எது?" என்று மக்கள்‌ கேட்கும்‌ போது, இயேசு அவர்களிடம்‌ " கடவுள்‌ அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்‌" என்கிறார்‌. (6:29) இறைமகன்‌ இயேசுவை நாம்‌ உட்கொள்ள வேண்டுமென்றால்‌ அவர்‌ மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்‌. இறைநம்பிக்கை என்பது கடவுள்‌ அனுப்பிய இறைமகன்‌ இயேசுவின்‌ மேல்‌ கொள்ளும்‌ நம்பிக்கையே ஆகும்‌.

அவரை தேடி வந்த மக்கள்‌ அவரை இறைவாக்கினர்‌ மோசே போலே நினைத்திருக்கலாம்‌. ஆனால்‌ இயேசு நற்கருணையின்‌ மகிமையை வலியறுத்துகின்றார்‌. மன்னாவையும்‌ விட சிறந்த வாழ்வு தரும்‌ உணவு தன்‌ உடல்‌ என்பதை மக்களுக்கு எடுத்துக்‌ கூறு- கிறார்‌. கடவுளால்‌ நாமனைவரும்‌ வாழ்வு பெறும்பொருட்டு வழங்கப்‌பட்ட உணவு, தனது உடலும்‌ இரத்தமும்‌ என்பதை உறுதியுடன்‌ கூறுகிறார்‌. எல்லாவற்றிற்கு மேலாக இறைமகன்‌ இயேசு தாமே. வாழ்வு தரும்‌ உணவு என்பதை வெளிப்படுத்துகிறார்‌. " வாழ்வு தரும்‌ உணவு நானே என்னிடம்‌ வருபவருக்குப்‌ பசியே இராது. என்னிடம்‌ நம்பிக்கைக்‌ கொள்பவர்க்கு என்றுமே தாகம்‌ இராது'" (6:35) இயேசுவின்‌ மீது நம்பிக்கைக்‌ கொண்டு நற்கருணையை உட்‌கொள்ளும்‌ அனைவரும்‌ வாழ்வு பெறுவர்‌.

மறையுரை

" உன்‌ கடவுளாகிய ஆண்டவர்‌ நாமே! நம்மைத்‌ தவிர வேறு. கடவுள்‌ இல்லாமல்‌ போவதாக" , இநத முதலாவது கட்டளையைக்‌ கேட்டவுடன்‌ நாம்‌ பலவகையாக எண்ணலாம்‌. முதலாவதாகவும்‌, இறுதியாகவும்‌. ஒரு கேள்வி மனதில்‌ எழலாம்‌. அதே கேள்விதான்‌ ஒரு பேராசிரியர்‌ மனதையும்‌ பாடாய்படுத்தியது. அவர்‌ ஒருநாள்‌ வயல்‌ வழியாக போய்க்கொண்டிருந்தபோது, வயலில்‌ மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு விவசாயிடம்‌, " கடவுள்‌ இருக்கிறாரா?" என்று கேட்டதற்கு, " அவர்‌ நிச்சயமாக இருக்கிறார்‌" . " அதற்கு. என்ன ஆதாரம்‌?" என்று பேராசிரியர்‌ மீண்டும்‌ கேட்டார்‌. விவசாயி சொன்னார்‌. " நான்‌ மேய்க்கின்ற மாட்டின்‌ நிறம்‌ கருப்பு. அது மேய்கின்ற புள்ளின்‌ நிறம்‌ பச்சை, அது தருகின்ற பாலின்‌ நிறம்‌ வெள்ளை. ஆகவே கடவுள்‌ இருக்கிறார்‌ என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம்‌ தேவை?" எனறு கேட்டார்‌. பேராசிரியர்‌ வாயடைத்து நின்றார்‌. கடவுள்‌ நம்முடன்‌ இருக்கின்றார்‌. அவர்‌ ஒருவரேக்‌ கடவுள்‌, என்பதை இன்றைய வாசகங்கள்‌ நமக்குத்‌ தெளிவைத்‌ தருகின்றன.

நாம்‌ அனைவரும்‌ ஒரே கடவுளின்‌ குழந்தைகளாய்‌ அவரையே நாம்‌ ஆராதிக்க வேண்டும்‌. நம்‌ ஒரே கடவுளையே நாம்‌ அணுகும்‌போது மூடநம்பிக்கைகளையும்‌, தேவையற்ற வழிபாடுகளையும்‌ நாம்‌ களைக்‌ கேட்டுள்ளார்‌. அதனை நாம்‌ நிறைவேற்றவில்லை என்றால்‌ நாம்‌ அவரைவிட்டு விலகிச்செல்கிறோம்‌. சுருக்கமாகச்‌ சொன்னால்‌ வாழ்வை இழந்து விடுவோம்‌.

நம்‌ கடவுள்‌ விடுதலையளிப்பார்‌

எசேக்கியேல்‌ இறைவாக்கினர்‌ இறைவன்‌ இஸ்ராயேலருக்கு அளித்த விடுதலையை ஒரு அருமையான 'உருவகத்துடன்‌ நமக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்‌. ஒரு தாயைப்‌ போல இறைவன்‌ அன்று அவர்களை வழிநடத்தியுள்ளார்‌. இஸ்ராயேல்‌ பிறந்த. அன்று தொப்புள்‌ கொடி அறுக்கப்படவில்லையாம்‌? நீராட்டப்பட்டு தூய்மையாக்கப்‌ படவில்லையாம்‌! உப்பு நீரில்‌ கழுவப்படவில்லையாம்‌! துணிகளால்‌ அகற்றப்படவில்லையாம்‌ ஆனால்‌ இறைவன்‌. அவர்களை நீராட்டி, அவர்கள்மேல்‌ இருந்த இரத்தத்தை துடைத்து. எண்ணெய்‌ பூசி அணிகலன்களால்‌ அவர்களை அழகு செய்தார்‌. அவரின்‌ மாட்சி அவர்கள்‌ மேல்‌ படச்‌ செய்து அவர்களின்‌ அழகு. நிறைவு பெற விளங்கிடச்‌ செய்தார்‌. என்ன ஒரு அருமையான இறைவன்‌. இஸ்ராயேல்‌ மக்கள்‌ கொடுத்து வைத்தவர்கள்‌. கடவுள்‌ தாமே இறங்கி வந்து அவர்களின்‌ அடிப்படைத்‌ தேவை முதல்‌ அனைத்துத்‌ தேவைகளையும்‌ பூர்த்தி செய்து தானும்‌ அவர்களின்‌ குடும்பத்தில்‌ ஒரு உறுப்பினராக இருந்து கூடவே வாழ்ந்து வந்தவர்‌.

இறைவன்‌ இஸ்ராயேல்‌ மக்களின்‌ அவல நிலையை உணர்ந்து அவர்களை அன்பு. செய்து. விடுதலை வழங்கினார்‌. நாம்‌ எத்தகையோராகவும்‌ இருக்கலாம்‌. ஆனால்‌ நம்‌ ஒரே இறைவனை அணுகினோம்‌ என்றால்‌ நாமும்‌ வாழ்வு பெறுவோம்‌. கடவுள்‌ பாரவோனைக்‌ கொல்லவில்லை. மாறாக இஸ்ராயேல்‌ மக்களுக்கு புது உலகைக்‌ கொடுத்தார்‌. தீமை இவ்வுலகில்‌. கொடி கட்டி பறக்கலாம்‌.. ஆனால்‌ நாம்‌ இறைவனை கண்டோமென்றால்‌ நாம்‌ கானான்‌ தேசம்‌ அடைவோம்‌. கடவுள்‌ என்றும்‌ மாறாதவர்‌. ஆனால்‌ அந்தோ பரிதாபம்‌! இஸ்ராயேல்‌ மக்கள்‌ இறைவனின்‌ அருளை உணர மறந்து தங்கள்‌ சொந்த பலத்தின்‌ மேல்‌ நம்பிக்கை கொண்டனர்‌. மார்தட்டிக்‌ கொண்டனர்‌. இறுதியாக கடவுளையும்‌ மறந்தார்கள்‌. விடுதலையின்‌ இறைவனை மறந்தார்கள்‌.

நம்‌ கடவுள்‌ வாழ்வின்‌ கடவுள்‌

நம்‌ கடவுள்‌ வாழ்வின்‌ கடவுள்‌. மனிதனின்‌ மனம்‌ பாவ வாழ்க்கையில்‌ கரையலாம்‌. கடவுளின்‌ மனம்‌ அன்பில்‌ கரையும்‌. அதனால்‌ என்னவோ நாம்‌ என்றும்‌ வாழ்வைக்‌ காண கிறிஸ்துவை நமக்குத்‌ தந்தார்‌. கிறிஸ்து நம்‌ அனைவருக்கும்‌ வாழ்வின்‌ நெறி- முறைகளை கற்றுத்‌ தந்தார்‌. தம்‌ வாழ்க்கையின்‌ மூலம்‌ நம்‌ அனைவரையும்‌ முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச்‌ சென்றுள்ளார்‌. இதையேதான்‌ இன்றைய இரண்டாம்‌ வாசகமும்‌ நற்செய்தியும்‌ நமக்கு அறிவுறுத்துகின்றது.

நாம்‌ நம்முடைய பழைய நடத்தையை மாற்றி தீமைகளால்‌ ஏமார்ந்து அழிவுறுவதைத்‌ தவிர்க்க வேண்டுமானால்‌ கடவுளது சாயலால்‌ படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து. கொள்ள வேண்டும்‌. நாம்‌ அனைவரும்‌ புதிய மனப்‌ பாங்குடன்‌. வாழ்கிறோம்‌. இறைவன்‌ நம்மோடு இருக்கிறார்‌ என்பதற்கு அத்தாட்சி நமது உண்மையான நீதியிலும்‌ தூய்மையிலும்‌ வெளிப்படும்‌.

நம்மைப்‌ படைத்த இறைவன்‌ அறிவுரை மட்டும்‌ கூறிவிட்டு வாழுங்கள்‌ என்று சொல்லவில்லை. மாறாக தன்‌ மகனையே நமக்கு வாழும்‌ போது. வருகின்ற இக்கட்டான சூழ்நிலைகளில்‌ மனம்‌ தளராமல்‌ தொடர்ந்து வெற்றிநடை போட தேவையான அருளையும்‌ சக்தியையும்‌ வழங்கும்‌ ஒரு உன்னதமான பரிசுதான்‌ இறைமகன்‌ இயேசுவின்‌ உடலும்‌ இரத்தமும்‌. உடலைப்‌ பேண பலவகையான உணவு முறைகளைக்‌ கையாளும்‌ நாம்‌ நம்‌ மனதைப்‌ பேண இறைமகன்‌ ஏசுவின்‌ உடலும்‌ இரத்தமும்‌ விலைமதிப்பற்ற உயரிய மூலமாகும்‌. நம்‌ இறைவன்‌ நம்மை என்றுமே கைவிடாதவர்‌. கடவுளைக்‌ காண விரும்பும்‌ எவரும்‌ புதிய மனநிலையுடன்‌ சமுதாயத்தில்‌ உலா வருகின்ற மனிதரைக்‌ கண்டு தெரிந்து கொள்ளட்டும்‌. அன்று இயேசுவைக்‌ கண்டு இவர்‌ உண்மையிலேயே கடவுளின்‌ மகன்‌ என பறைசாற்றிய உதடுகள்‌ போல்‌ நம்மையும்‌ உண்மை யிலேயே இவர்கள்‌ கடவுளின்‌ மக்கள்‌ என்று அனைவரும்‌ சாற்றுவர்‌.

நம்‌ கடவுள்‌ விடுதலையின்‌ கடவுள்‌ வாழ்வின்‌ கடவுள்‌. அவர்‌ ஒருவரை நாம்‌ அனைவரும்‌ வழிபடவேண்டும்‌. இல்லையேல்‌ இன்றைய முதல்‌ வாசகத்தில்‌ இறைவன்‌ இஸ்ராயேல்‌ மக்களைப்‌ பறைசாற்றுவது போல நம்மையும்‌ நோக்கி பறைசாற்றுவார்‌.. விடுதலையின்‌ கடவுள்‌ வாழ்வின்‌ கடவுளை நாம்‌ என்றுமே ஆராதிக்க வேண்டும்‌. அதுவே உண்மையான விசுவாசியின்‌ முதல்‌ அவரை நாம்‌ நம்‌ கடவுளாக ஏற்றுக்‌ கொள்கிறோம்‌ என்றால்‌. அவர்‌ நம்‌ மீட்பராக இருக்கிறார்‌. நம்‌ ஆராதனை நம்‌ முழு அர்ப்‌பணிப்பை காட்டுகிறது. அன்னை மரியாள்‌ போல்‌ நாம்‌ அனைவரும்‌ இறைவனின்‌ மேன்மையை உணர்ந்தவர்களாய்‌ போற்றிப்‌ புகழ்ந்து பாடுவோம்‌.

கடவுளுக்கும்‌ செல்வத்திற்கும்‌ நாம்‌ ஊழியம்‌ செய்ய செல்வத்தைப்‌ பின்‌ தொடர்ந்தால்‌ மரணம்‌ கிடைக்கும்‌. " எவ்வகைப்‌ பேராசைக்கும்‌ இடங்கொடாதவாறு எச்சரிக்கையாக இருங்கள்‌. மிகுதியான உரிமைகளைக்‌ கொண்டிருப்பதால்‌ ஒருவருக்கு வாழ்வு வந்து விடாது" . தீமைகள்‌ தலைவிரித்தாடக்‌ காரணம்‌ பொருளாசையே! " பொருளாசையினால்‌ சிலர்‌ விசுவாசத்தினின்று பிறிந்து திரிந்து பல சோதனைகளை தாங்கள
ாகவே தங்கள்‌ மேல்‌ வருவித்துக்‌ கொள்கிறார்கள்‌." (1திமோ. 6:10) வாழ்வு வேண்டுமென்‌-. நால்‌ ஒரே கடவுளை விசுவசிப்போம்‌.
பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

1.அன்பே கடவுள்‌.
2.பொருளாசை அழிவின்‌ பிறப்பிடம்‌.
 
 
 
 
 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ