அருகில் நிற்பவரை வாழ்த்த வருகை தந்திருக்கும் அன்பு உறவுகளே!
பிறரை வாழ்த்தி நாம் வளர இன்றைய திருப்பலி நம்மை வரவேற்கிறது!
வாழ்த்தும் போதெல்லாம் வளர்கின்றோம். எதிரில் நிற்பவரை
வாழ்த்தும் போது நமதுவளர்ச்சி ஏகமாக அமையும்!
அன்பு கொண்டு வாழ்த்தும் போது அருமையாய் வளர்வோம்.. பாசம்
கொண்டு வாழ்த்தும் போது பசுமையாய் வளர்வோம். நேசம் கொண்டு
வாழ்த்தும் போது நேர்மையாய் வளர்வோம். அக்கறை கொண்டு
வாழ்த்தும் போது கறையின்றி வளர்வோம்.
ஆசிகொண்டு வாழ்த்திய அன்னை மரியாள் அகிலத்தின் அரசியாய் வளர்ந்தார்.
நாம் எப்படி வாழ்த்தப் போகிறோம்? யாரை வாழ்த்தப் போகிறோம்?
வளமிகு சொற்களால் வருடிக் கொடுப்பதால்,
தன்மையான சொற்களால் தட்டிக்கொடுப்பதால்
பண்பான சொற்களால் பாராட்டு கொடுப்பதால்
நாம் யாரென்று பிறர்க்கு நம்மை வெளிப்படுத்துகிறோம்!
எலிசபெத்தை தேடி அன்னை மரியாள் ஓடினார்.
ஆசிகொண்டு வாழ்த்திய அன்னை மரியாள் அகிலத்தின் அரசியாய் வளர்ந்தார்.
நாம் எப்படி வாழ்த்தப் போகிறோம்? யாரை வாழ்த்தப் போகிறோம்!
பிறரின் நற்செயல் கண்டு மணம் குளிர வாழ்த்தவும் நமக்கு இறையருள்
தேவை. அதை இன்று இந்த திருப்பலி நமக்குத் தருகிறது. நல்லதைக்
காணும் போதெல்லாம் வாழ்த்தும் மனம் தா இறைவா என மனமுருகி
வேண்டுவோம்.
1. திருமுழுக்கு யோவானை மரியின் வாழ்த்தொலி கேட்டு
தாயின் வயிற்றில் துள்ளிக் குதிக்கச் செய்த அன்புதெய்வமே
எம் இறைவா!
திருச்சபையின் செயல்பாடுகள் அனைத்தும் இறைமக்கள் இதயங்களில்
விசுவாசத்தை துள்ளிக் குதிக்கச் செய்ய வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
2. இயற்கையின் வேந்தனே!
இயற்கை தந்த கொடைகளைப் பேணிப்பாதுகாத்து மக்களின் நலவாழ்வுக்கு
நாடுகளின் தலைவர்கள் உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
3. வாழ்த்துங்கள் இறை செயலை என அறிவிக்கும் எம் இறைவா!
உம்மையும் உமது சாயலான எங்கள் அயலாரையும் வாழ்த்தும்
போது நாங்கள் மகிழ்வோம் என்ற செய்தியை எமதாக்க பங்கில்
செயல்படும் எமது பங்குத்தந்தையை உமது வாழ்த்தொலியால்
நிரப்ப வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்களது துன்பங்களை இன்பங்களாக்க வந்த தெய்வமே!
வாழ்க்கையில் வாடும் உள்ளங்களின் நடுவே இடைவிடாது இன்ப
வாழ்த்தொலி கேட்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அவர் ஒரு அற்புதமான விவசாயி. தன் தோட்டத்தில் புதிய புதிய
பயிர்ககை விளையச் செய்து பரிசுகள் பெற்றார். நல்ல விளைச்சலை
அவர் பெறுவதைக் கண்டு மற்றவர்கள் அவரைக் காரணம் வினவிய
போது என் தோட்டத்துக்கு அருகில் உள்ள மற்ற தோட்டங்களுக்கும்
மரமான விதைகளைநானே தருவேன்! அதொடு காலையும் மாலையும் என்
தோட்டத்து பயிர்களின் அருகே நின்று அவைகளோடு பேசுவேன்! அவைகளை
வாழ்த்திக் கொண்டே இருப்பேன் என்று சொன்னாராம்!
வாழ்த்தும் போது நல்ல விளைச்சல் மட்டுமல்ல நல்ல மகிழ்ச்சியும்
என் மனதுக்குள் குடிவருகிறது. என மகிழ்ந்த மனிதராய் நாமும்
மகிழ மனம் நிறைய பிறரை வாழ்த்துவோமே!
நம் பிள்ளைகளை நன்றாக படித்துக் கொண்டிருக்கிறாய் நீ என்னை
பேணிப் பாதுகாப்பாய் என நல்ல வார்த்தைகளை மனதுக்கு உகந்த
சொற்களை சொல்லும் போது அங்கே நம் மனது மட்டுமல்ல பிள்ளைகளின்
மனதும் மகிழ்ச்சியில் வளரத் தொடங்கும்.
ஒருவரை வாழ்த்தும் சொற்கள் வாழ்த்துச் சொல்பவரின் மனதை எடுத்துக்
காட்டும்! வாழ்த்தும் சொற்கள்; வாழ்த்து பெறுபவரின் உடலை
மட்டுமல்ல உள்ளத்தையே அசையச் செய்யும்!
மறையுரைச்சிந்தனை
அருட்சகோதரி: மெரினா
O.S.M.
மறையுரைச்சிந்தனை - சகோ. செல்வராணி Osm
திருவருகைக்காலம்
நான்காம் ஞாயிறு
அமைதியின் ஆண்டவர் நம்மோடு......
திருவருகைக்காலத்தின் இறுதியில் இருக்கும் நாம் நம்பிக்கை,
அன்பு, மகிழ்ச்சி என வாரம் ஒரு மதிப்பீட்டை அடிப்படையாக
வைத்து , இறைவனின் வருகைக்காக நம்மையே நாம் தயாரித்துக்
கொண்டிருக்கிறோம். மெசியாவின் வருகைக்கு இன்னும் சில
நாட்களே இருக்கின்றன என்ற போதிலும், இந்த வாரத்தை அமைதியின்
வாரமாகக் கொண்டாட நாம் அழைக்கப்படுகிறோம். 'அமைதி எனும்
ஒளியேற்றி' ஆண்டர் இயேசுவை நம் உள்ளத்தில் வரவேற்க நம்
மனங்களைத் திறந்து வைப்போம்.
நாட்டில்அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி
பெறுபவர்களுக்கு பரிசு வழங்குவது அந்நாட்டு மன்னனின்
வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து
தத்ரூபமாக வரையப்படும் சிறந்த ஓவியத்திற்கு பரிசு வழங்கப்படும்
அரசன் அறிவித்தான். இதனை கேள்வியுற்று முன்னனி ஒவியர்கள்
எல்லாரும் அமைதி பற்றி மிக தத்ரூபமாக வரைந்து அரண்மனைக்கு
எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக
பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொருவரும்
ஒவ்வொரு மாதிரி வெளிப்படுத்தினார்கள். ஒருவர் ஒரு அழகான
ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில்
அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து
பார்ப்பதற்கே மிகவும் ரம்மியமாக இருந்தது அந்த ஓவியம்.
வேறொருவர் மலர்களை வரைந்திருந்தார். மிகவும் அருமையான
காட்சியாக அமைந்திருந்தது. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு
வகையில் தங்களுக்குத் தோன்றியவாறு அமைதியைக்
குறிக்கும் ஓவியத்தை வரைந்து வந்தார்கள். ஒரு ஓவியத்தில்
அருவியிலிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர் வீழ்ச்சியின்
படம் வரையப்பட்டிருந்தது. அது மட்டுமா இடியுடன் கூடிய
மழை வேறு பெய்துகொண்டிருந்தது அந்த ஓவியத்தில். சற்று
உற்று பார்க்கும் போது நீர் வீழ்ச்சியின் கீழே இருந்த
மரம் ஒன்றில் பறவையானது கூடு கட்டி தனது குஞ்சுகளுடன்
காணப்பட்டது. இதில் அமைதியே தென்பட வில்லை என்று
நினைத்த மன்னர் , இந்த ஓவியத்தை வரைந்து யார்? எனக்
கேட்டார்.
அதை வரைந்த ஓவியர் மன்னனை உற்றுப் பார்த்துக் கொண்டே
மன்னா.... சப்தமும், போராட்டமும் , பிரச்சனையும் இல்லாத
இடத்தில் இருப்பது அமைதி அல்ல. இவை எல்லாம் இருக்கும்
இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல்,
இவை எதுவும் தன்னை பாதிக்க விடாமல் உள்ளுக்குள் அமைதியாக
இருப்பதே உண்மையான அமைதி, இல்லையா.... மன்னா...? அப்படி
பார்க்கும் போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்தப் பறவையே
பரிபூரணமான அமைதியில் இருக்கிறது. அப்போதுதான் மன்னனுக்கு
உண்மை உறைத்தது. சபாஷ்..... அமைதிக்கு அற்புதமான விளக்கம்
என்று கூறி கைதட்டினான் மன்னன். அது மட்டுமல்லாமல் அந்த
ஓவியத்திற்கே அமைதிக்கான முதல் பரிசையும் கொடுத்தான்
மன்னன்.
அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற்று, எந்தவொரு இடையூறு,
பிரச்சனையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதி அல்ல.
ஆயிரம் துன்பத்திற்கு நடுவேயும், படைத்த ஆண்டவர் நம்மோடு
இருக்கிறார் என்ற மனதைரியத்துடனும், நிச்சயம் ஒரு நாள்
விடியும் என்ற நம்பிக்கையுடனும் இருப்பவர்களே மன அமைதியை
அனுபவிக்கிறார்கள். எத்தனை தொல்லைகள் யார் தந்தாலும்,
எனக்கு நேரும் மான அவமானங்களை விட, நான் எட்ட வேண்டிய
இலக்கே பெரிது என்று நினைத்து யார் செயல்படுகிறார்களோ,
அவர்கள் உள்ளத்தில் இருப்பதுதான் உண்மையான அமைதி.
இத்தகைய உண்மையான அமைதியை அனுபவித்து, அமைதியின் ஆண்டவரை
நம் உள்ளத்தில் வரவேற்கவே இந்த வாரம் நமக்கு அழைப்பு
விடுக்கின்றது. இன்றைய நற்செய்தியில் அன்னை மரியாவுக்கு
ஆண்டவரின் வாக்கு , கபிரியேல் வானதூதர் வழியாக அருளப்பட்டது.
அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க, ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்
, நீ இறைவனின் அருளால் கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்,
அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். அவர் கடவுளின் மகன்
எனப்படுவார் என்றார் வானதூதர். இதனைக் கேட்டு மனக் கலக்கம்
கொண்ட மரியா, இது எப்படி நிகழ முடியும்? நான் கன்னியாயிற்றே!
என்றாள் மரியா. ஆனாலும் கபிரியேல் வானதூதர் விடுவதாக
இல்லை. மரியாவின் அச்சம் நீங்கும் வரை உரையாடிக்
கொண்டிருந்தார். வானதூதரின் பேச்சில் தெளிவு பெற்ற மரியா
" இதோ நான் ஆண்டவரின் அடிமை உமது விருப்பம் எதுவோ அதுவே
நிறைவேறட்டும்" என்றாள். இப்படியாக மரியா அமைந்த மனதுடன்
ஆண்டவரின் வார்த்தையை ஏற்றுக் கொண்டார்கள். இப்படியெல்லாம்
தனக்கு நடக்கும் என மரியா, கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
எதிர்பாரா விதத்தில் நடந்த இந்த நிகழ்வு, மரியாவுக்கு
முதலில் அச்சத்தை தந்தாலும், "ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்"
என்ற இறைவார்த்தையே , அன்னைமரியாவை இறுதி வரை அமைதிடன்
வாழ வழிக்காட்டியது.
மனிதனைப் படைத்தக் கடவுள், மனிதர்கள் மீட்பை அனுபவித்து,
முழ மன அமைதியுடன் வாழ வேண்டும் என்பதற்காகதான் இறைவாக்கினர்கள்,
நீதித் தலைவர்கள், அரசர்கள் போன்றோர்கள் வழியாக மக்களை
வழிநடத்த திருவுளம் கொண்டார். ஆனால் மக்கள் கடவுளின்
அன்பை மறந்து, தங்கள் மன அமைதியை இழந்து, தவறான
பாதையில் சென்ற போதும், அவர்களை அப்படியே விட்டு விடாமல்,
தம் அன்புக்குரிய ஓரே மகனை இம்மண்ணுலகிற்கு அனுப்பி,
பாவத்தின் தளையிலிருந்து விடுபட்டு மன அமைதியுடன், மகிழ்ச்சியுடன்
வாழ வழிகாட்டினார்.
நாம் திசைமாறி போகும் போதும், நிம்மதியற்ற வாழ்க்கை
வாழும் போதும், இறைவன் பல வழிகளில் நம்மை தேடி வந்து
தேற்றுகிறார். இறைவனின் திருவுளத்தைக் கண்டு கொள்ள
நாம் தான், விழிப்புணர்வு பெற்றவர்களாக வாழ வேண்டும்.
அமைதியின்றி இருக்கும் மனம் எதையும் சாதிப்பதில்லை. அது
சஞ்சலப்பட்டுக்கொண்டே தான் இருக்கும். அதனால் தான்
வீடும் நாடும் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டுமென்று
நாம் ஆசைப்படுகிறோம். அமைதி என்பது சத்தமில்லாத சூழல்
அல்ல. சப்தம் இல்லாத சூழலை நிசப்தம் என்றுதான் சொல்ல
வேண்டுமே தவிர அமைதியென்று சொல்ல முடியாது. மொழியற்ற
நிலமை கூட மவுனம் தானே தவிர அமைதியாகாது. அமைதி
வெளிப்புறத்தில் அல்ல, நமகுள்ளே இருக்கிறது. அதனால்
தான் அன்னை மரியாள், "நான் ஆண்டவரின் அடிமை" என்று
சொன்ன நாளிலிருந்து தனக்கு ஏற்பட்ட அத்தனை நிகழ்வுகளிலும்
இறைவனின் திருவுளத்தைக் கண்டுணர்ந்து, தனது உள்ளத்தை
இறைக்கு அர்ப்பணித்து, அனைத்தையும் தன் மனதில் வைத்து
சிந்தித்தவர்களாய் முழு மன அமைதியுடன் வாழ்ந்தார்கள்.
நாமும் அப்படிப்பட்ட மனஅமைதியை பெற்று வாழ வேண்டும் என்பதே
இறைவிருப்பம்.
பல்வேறு போராட்டங்கள், பிரச்சனைகள், பிள்வுபட்ட உறவுகள்
இப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்கு மத்தியில் வாழும் நாம்,
மன அமைதியை இழந்து தவிக்காமல் , இறைவன் என் கூடவே இருக்கிறார்
என்ற நம்பிக்கையோடு வாழவேண்டும். நாம் இருக்கும் இடங்களில்
அமைதியை ஏற்படுத்துபவர்களாக வாழவேண்டும். ஏனெனில் அமைதியை
ஏற்படுத்துபவர்களே கடவுளின் மக்களாக இருக்க முடியும்
என்கிறார் இறைமகன் இயேசு. காற்றையும் கடலையும் அடக்கிய
அமைதியின் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார். அதனால் அன்னை
மரியைப் போல் இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி
வாழ்ந்து, அமைதியை அனுபவிப்போம்... அதை மற்றவர்களுக்கும்
கொடுப்போம். அமைதியின் ஆண்டவர் என்றும் நம்மோடு இருப்பாராக
ஆமென்.
மறையுரைச்சிந்தனை
- அருள்பணி ஏசு கருணாநிதி
எனக்கு நிகழட்டும்!
நம் வாழ்வின் நிகழ்வுகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம்: (அ)
நாமே நிகழ்த்துகிற நிகழ்வுகள் இந்நிகழ்வுகளில் செயலாற்றுபவர்
நாமே. நாமே திட்டமிட்டுச் செய்கிற செயல்கள், பயணங்கள், முயற்சிகள்,
முன்னெடுப்புகள் ஆகியவை இவற்றில் அடங்கும். இந்நிகழ்வுகள்
நம் கட்டுக்குள் இருக்கின்றன. அவற்றின் போக்கை நிறுத்தவோ,
மாற்றவோ நம்மால் இயலும். ஆனால், இந்நிகழ்வுகள்மேல் நமக்கு
உள்ள அதிகாரமே நமக்கு பதற்றத்தையும் பரபரப்பையும் கலக்கத்தையும்
ஏற்படுத்துவிடுகின்றன. (ஆ) நமக்கு நிகழ்கிற நிகழ்வுகள்
இந்நிகழ்வுகளைப் பொருத்தவரையில் நாம் செயப்படுபொருள்களே.
எதிர்பாராமல் கிடைக்கும் உதவி, நமக்கு ஒருவர் காட்டும் இரக்கம்
தாராள உள்ளம் ஆகியவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இந்நிகழ்வுகள்
நம் கட்டுக்குள் இருப்பதில்;லை. இவற்றின் போக்கை நிறுத்தவோ
மாற்றவோ பெரும்பாலும் இயலாது. இருந்தாலும், இவ்வகை நிகழ்வுகள்
நமக்குச் சுதந்திரத்தைக் கொடுப்பதோடு இவை நம் வாழ்வை
மேன்மைப்படுத்துகின்றன.
நாமே நிகழ்த்துகிற நிகழ்வுகளை விடுத்து, நமக்கு நிகழ்கிற
நிகழ்வுகளைப் பற்றிக்கொள்ளுமாறு நம்மை அழைக்கிறது இன்றைய
இறைவார்த்தை வழிபாடு.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நாசரேத்தில் வாழ்ந்த கன்னி மரியாவுக்கு
அறிவிக்கப்படும் நிகழ்வை நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம்.
கன்னி மரியாவுக்கு நிகழ்கிற சிலவற்றைப் பட்டியலிடுகிறார்
ஆசிரியர்: "
அருள்மிகப் பெற்றவர்,"
"
ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்,"
"
கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்,"
"
கருவுற்று ஒரு மகனைப்
பெறுவீர்,"
"
உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்"
.
மரியாவின் பதிலிறுப்பு நமக்கு வியப்பு தருகிறது. "
உம் சொற்படியே
எனக்கு நிகழட்டும்"
என்கிறார் மரியா. "
உம் சொற்படியே நான்
செய்கிறேன்"
என்றோ, "
நான் செய்கிறேன்"
என்றோ அவர் சொல்லவில்லை.
முதல் வாசகத்தில் நாம் காண்கிற தாவீது, "
ஆண்டவருக்காக நான்
செய்கிறேன்,"
"
அவருக்காக நான் ஓர் இல்லம் காட்டுகிறேன்"
என்று
முன்வருகிறார். நாத்தான் வழியாக தாவீது அரசரிடம் உரையாடுகிற
ஆண்டவராகிய கடவுள் தாம் அவருக்குச் செய்த அனைத்து நிகழ்வுகளையும்
அவருக்கு நினைவூட்டுகிறார்: "
ஆடுமேய்த்துக்கொண்டிருந்த உன்னை
அழைத்தேன்,"
"
எதிரிகளை அழித்தேன்,"
"
புகழ்பெறச் செய்தேன்."
ஆடு மேய்க்கிற ஒருவர் இஸ்ரயேலின் அரசராக மாறுமாறு
செய்கிறார் கடவுள்.
ஆக, "
நான் செய்கிறேன்"
என்னும் மனப்பாங்கை விடுத்து, "
நீரே
செய்யும்"
என்று ஆண்டவரிடம் சரணாகதி அடையுமாறு தாவீது தூண்டப்படுகிறார்.
மேலும், ஆண்டவராகிய கடவுள் அவருக்கு ஒரு வாக்குறுதி தருகிறார்:
"
ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போகிறார்."
இங்கே, வீடு
என்பது தாவீதின் வழித்தோன்றலைக் குறிக்கிறது. மெசியா
வாசிப்பில், இன்றைய நற்செய்தி வாசகத்தில் இந்த வாக்குறுதி
நிறைவேறுகிறது: "
அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய
கடவுள் அவருக்கு அளிப்பார்."
நாமே நிகழ்த்துகிற நிகழ்வுகளை விடுத்து, நமக்கு நிகழும் நிகழ்வுகளுக்கு
நம்மையே கையளிக்க அழைக்கிறார்கள் தாவீதும் மரியாவும். நம்
வாழ்வில் நாம் எதையாவது செய்ய வேண்டும் என நினைத்துச் செயல்பட்டுக்கொண்டே
இருக்கிறோம். அடுத்தடுத்து ஓடுகிறோம். கடவுளுக்காக எதையாவது
செய்ய வேண்டும் என நினைத்தும் செயல்படுகிறோம். இந்தப்
பரபரப்பிலும் கலக்கத்திலும் ஆண்டவராகிய கடவுள் நம்
வாழ்வில் செயல்பட அவரை அனுமதிக்க மறந்துவிடுகிறோம்.
ஆண்டவராகிய கடவுள் தம்மில் செயலாற்றுமாறு அனுமதிக்கிற மரியா,
"
எனக்கு நிகழட்டும்"
எனச் சரணாகதி அடைகிறார். எதுவும்
செய்யாமல் இறைவனின் கைகளில் நம்மைச் சரணாகதி ஆக்குதல் நலம்.
இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வாக்களிக்கப்பட்ட
நாட்டை நோக்கி அழைத்துச் செல்கிற ஆண்டவராகிய கடவுள், அவர்கள்
செங்கடலைக் கண்டு பயந்தபோது, "
ஆண்டவரே உங்களுக்காகப்
போரிடுவார். நீங்கள் சும்மாயிருங்கள்"
(காண். விப 14:14)
என்கிறார். கடவுள் செயலாற்றுமாறு அவர்கள் அனுமதித்தாலே
போதும்! அவர்கள் வெற்றி பெறுவார்கள்.
இன்று நாம் ஏற்றுகிற மெழுகுதிரி "
அன்பு"
என்னும் மதிப்பீட்டைக்
குறிக்கிறது. அன்பிலும் மேற்காணும் இரு நிகழ்வுகள் உண்டு:
"
நாமே நிகழ்த்துகிற அன்பு,"
"
நமக்கு நிகழ்கிற அன்பு."
நாமே
நிகழ்த்துகிற அன்பில் தயக்கம், அச்சம், முற்சார்பு எண்ணம்,
ஏமாற்றம் இருக்கும். ஆனால், நமக்கு நிகழ்கிற அன்பு ஒரு
கொடையாக மட்டுமே நம்மை நோக்கி வரும்.
"
உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்!"
என்னும் சரணாகதி மனப்பான்மை
நம்மில் பிறக்க இன்று முயற்சி செய்வோம். தாவீதின் ஏக்கம்,
மரியாவின் அச்சம் போக்கக் காரணமாக இருந்தது இந்த மனப்பான்மையே.
இந்த மனப்பான்மை பிறப்பதால் நாம் அடையும் நன்மைகள் எவை?
(அ) கட்டின்மை அல்லது சுதந்திரம் நமக்குக் கிடைக்கும்.
கீழ்ப்படிதலால் கிடைக்கும் பெரிய பலன் கட்டின்மையே.
சாலையைக் கடக்கும் தந்தைக்கு அது ஒரு பொறுப்பு. ஆனால், அத்தந்தையின்
விரல் பிடித்து நடக்கும் குழந்தைக்கு அது ஒரு விளையாட்டு.
(ஆ) பொறுமையும் சகிப்புத்தன்மையும் வளரும். நமக்கு வருகிற
நிகழ்வுகளை மட்டுமல்ல, அவற்றோடு தொடர்புடைய மனிதர்களையும்
விருப்பத்துடன் ஏற்றுக்கொள்வோம்.
(இ) நம்மால் அனைத்தும் இயலாது என்னும் தாழ்ச்சி பிறக்கும்.
சில நேரங்களில் எல்லாவற்றையும் நாமே செய்ய வேண்டும் என
நினைக்கிறோம். இந்த எண்ணம் பரபரப்பை உருவாக்கி தேவையற்ற அச்சங்களை
ஏற்படுத்துகிறது.
இந்த மனப்பான்மை அடையத் தடைகள் எவை?
(அ) அதீத நம்பிக்கை கொள்வது தாவீதிடம் இருந்த பிரச்சினை
இதுவே. தன் அரசு, வளர்ச்சி, புகழ் அனைத்தும் தன்னால் வந்தது
என எண்ணியவராக, "
என்னால் ஓர் ஆலயமும் கட்ட முடியும்!"
எனச்
சொல்கிறார். அவருடைய அதீத நம்பிக்கையை மறைமுகமாகக் கடிந்துகொள்கிற
ஆண்டவர் தாவீதின் எளிய பின்புலத்தைச் சுட்டிக்காட்டி, அதீத
நம்பிக்கையை, நம்பிக்கையாக மாற்றுகிறார்.
(ஆ) "
இது எங்ஙனம் ஆகும்?"
என்ற மரியாவின் கேள்வி நம்மிலும்
எழுவதுண்டு. அப்படி எழுகிற நேரங்களில், இந்தக் கேள்வியை ஆண்டவரை
நோக்கிக் கேட்பதற்குப் பதிலாக நமக்கு நாமே கேட்டுக்கொண்டு
நாமே அதற்கு விடை காண நினைக்கிறோம். விளைவு, அவசரம் நம்மைப்
பற்றிக்கொள்கிறது.
(இ) அனைத்தையும் நம் கட்டுக்குள் கொண்டுவர நினைப்பது. நம்மைச்
சுற்றியிருக்கும் அனைத்தும் அனைவரும் நம் கட்டுக்குள் இருக்க
வேண்டும் என அடிக்கடி நினைக்கிறோம். ஆனால், அமர்ந்து
யோசித்துப் பார்த்தால் இத்தகைய எண்ணம் நம் அமைதிiயைக்
குலைக்கிறது என்பதை உணர்கிறோம்.
"
தந்தையின் இதயத்தோடு"
(Patris Corde, 2020)என்னும்
திருத்தூது மடலில் யோசேப்பைப் பற்றிப் பேசுகிற திருத்தந்தை
பிரான்சிஸ், தன் படகின் போக்கை மாற்றுகிற சுக்கானைக் கடவுளிடம்
கொடுத்துவிட்டு அமைதியாக அமர்கிறார் யோசேப்பு என்கிறார்.
"
உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்! என்னும் துணிச்சலைப்
பெற அன்னை கன்னி மரியாவும் யோசேப்பும் நமக்காகப் பரிந்துபேசுவார்களாக!
I 2 சாமுவேல் 7: 1-5, 8b-12, 14-16 II உரோமையர் 16: 25-27
III லூக்கா 1: 26-38
"
நான் உமது அடிமை"
புனித பிலிப்பு நேரி வாழ்ந்த காலத்தில், உரோமைக்கு அருகில் இருந்த
ஒரு துறவுமடத்தில் புனிதத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு பெண் துறவி
வாழ்ந்து வருகின்றார் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். இச்செய்தியை
அப்போதிருந்த திருத்தந்தை கேள்விப்பட்டார். அவர் பிலிப்பு நேரியை
அழைத்து, தான் கேள்விப்பட்ட செய்தி உண்மையா என்பதை அறிந்துவர அவரை
அனுப்பி வைத்தார்.
திருத்தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க, பிலிப்பு நேரி அந்தப் பெண்துறவி
வாழ்ந்து வந்த துறவு மடத்திற்குக் கால்நடையாகவே நடந்து சென்றார்.
இவர் அந்தத் துறவுமடத்திற்குச் சென்றபொழுது மழை பெய்து,
வழியெங்கும் ஒரே சேறும் சகதியுமாய் இருந்தது. இவர் அதன்வழியாக நடந்து
சென்றதால், இவர் அணிந்திருந்த காலணி அழுக்கானது. ஒருவழியாக இவர் துறவுமடத்தை
அடைந்தார். இவர் துறவுமடத்தை அடைந்தபொழுது, யார் வந்திருக்கின்றார்
என்று பார்ப்பதற்காக "
புனிதத்திற்கு எடுத்துக்காட்டான அந்தப் பெண்
துறவி"
வெளியே வந்தார். அவரிடம் இவர், "
வழியெங்கும் ஒரே சேறும் சகதியுமாய்
இருந்ததால், என்னுடைய காலணிகள் அழுக்காகிவிட்டன. அவற்றைக் கழுவிச்
சுத்தம் செய்ய, கொஞ்சம் தண்ணீர் ஊற்ற முடியுமா?"
என்று கெஞ்சிக்
கேட்டார். பிலிப்புநேரி இப்படிச் சொன்னதும், அந்தப் பெண் துறவி,
"
உங்களுடைய காலணிகளில் இருக்கும் அழுக்கைப் போக்குவதற்குத் தண்ணீர்
ஊற்ற, நான் என்ன உங்கள் வீட்டு வேலைக்காரியா?"
என்றார்.
இதற்குப் பிலிப்பு நேரி அவரிடம் மறுவார்த்தை பேசாமல், நேராகத்
திருத்தந்தையிடம் வந்தார். "
இவ்வளவு சீக்கிரத்தில் ஒருவர் புனிதமானரா?
இல்லையா? என்று நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்களா?"
என்று திருத்தந்தை
பிலிப்பு நேரியிடம் கேட்டதற்கு, இவர் திருத்தந்தையிடம், "
ஒருவர்
புனிதமானவரா? இல்லையா? என்று தெரிந்துகொள்வதற்குத் தாழ்ச்சி என்ற
அளவுகோல் இருக்கின்றது. அந்த அளவுகோலைக் கொண்டு அளந்துபார்த்தபொழுது
அந்தப் பெண்துறவி புனிதத்திற்கு எடுத்துக்காட்டு இல்லை என்பது
தெரிந்தது. அதனால்தான் இவ்வளவு விரைவாக வந்துவிட்டேன்"
என்றார்.
ஆம், எவர் ஒருவர் தாழ்ச்சியில் சிறந்து விளங்குகின்றாரோ, அவர் புனிதத்திலும்
சிறந்து விளங்குவார். திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று
நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் ஒவ்வொருவரும் மரியாவைப்
போன்று தாழ்ச்சியோடு வாழ்ந்து, இறைவனின் திருவுளம் நிறைவேற நாம் ஒத்துக்க
வேண்டும் என்றோர் அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கடவுளைத் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப வளைத்த தாவீது
நாம் இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கலாம்; பணபலம், படைபலத்தில்கூட
பெரியவர்களாக இருக்கலாம். அதற்காக நாம் இறைவனை நம்முடைய விருப்பத்திற்கு
ஏற்ப வளைக்கக்கூடாது. அப்படிச் செய்வது இறைவனின் விருப்பத்திற்கு
எதிராகச் செயல்படுவதற்குச் சமமாகும். இஸ்ரயேலை ஆண்ட மன்னர்களில் ஆண்டவரின்
நெஞ்சத்திற்கு நெருக்கமாக இருந்தவர் தாவீது மன்னர். இவர் தம் அரண்மனையில்
குடியேறியதும், ஆண்டவரின் விருப்பத்தை அறியாமல், அவருக்கென கோயில்
கட்ட விருப்புகின்றார். அப்பொழுது ஆண்டவர் இறைவாக்கினர் நாத்தான்
வழியாக, "
ஆண்டவர்தாம் உம் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கின்றார்"
என்கிறார். தாவீது மன்னர் ஆண்டவரின் விருப்பத்தை அறிய விரும்பாமல்
"
நான்தான் மிகப்பெரியவன் ஆயிற்றே"
என எண்ணத்தில் ஆண்டவருக்கெனக்
கோயில்கட்ட நினைத்ததால், அது முடியாமல் போனது ஒரு பக்கம் என்றால்,
இன்னொரு பக்கம் அவர் மிகுதியான குருதியைச் சிந்தியிருந்தார் (1
குறி 22:8). அதனாலும் அவரால் ஆண்டவருக்கென கோயிலைக் கட்ட முடியவில்லை.
மேலும் தாவீது மன்னர் ஆண்டவருக்கென கற்களாலான கோயிலையே கட்ட
விரும்பினார்; ஆனால் ஆண்டவராகிய கடவுள் என்றுமுள்ள அரசைக் கட்டப்
போவதாக வாக்குறுதி அளிக்கின்றார். இவ்வாறு தாவீது மன்னர் ஆண்டவரின்
விருப்பத்தை அறிய விரும்பாமல், "
தான் மிகப்பெரிய மன்னன்"
என்ற மமதையில்
ஆண்டவருக்கென கோயில் கட்ட விரும்பியதால், அவரால் கோயில் கட்ட
முடியாமலேயே போகின்றது.
கடவுளின் விருப்பத்திற்கேற்ப வளைந்து கொடுத்த மரியா
மரியா சிறுவயதிலிருந்தே ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்து, அவருக்கு
மிக நெருக்கமாக இருந்தவர்தான். ஆனாலும் அவர் தாவீது மன்னரைப்
போன்று இறைவனைத் தன்னுடைய விரும்பத்திற்கு வளைக்கவில்லை. மாறாக, இறைவனின்
விருப்பத்திற்கு வளைந்து கொடுக்கின்றார். இன்றைய நற்செய்தி வாசகத்தில்
முதன்மை வானதூதர் மரியாவிற்குத் தோன்றி, இறைவனின் மீட்புத் திட்டத்தைச்
சொல்லி முடிந்ததும் அவர், "
நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே
எனக்கு நிகழட்டும்"
என்கின்றார். மரியா முதன்மை வானதூதர் கபிரியேலிடம்
சொல்லும் இச்சொற்களில் இரண்டு உண்மைகள் அடங்கியிருக்கின்றன. ஒன்று,
மரியா, இறைவனிடம் திருவுளம் நிறைவேற இசைவு தந்தது அல்லது ஆம் என்று
சொன்னது. இரண்டு, இறைவனின் திருவுளத்தைத் தாழ்ச்சியோடு நிறைவேற்றத்
தான் தயார் என்று சொன்னது. ஆம், மரியா இறைவனின் திருவுளம் நிறைவேறுவதற்கு
ஓர் அடிமையைப் போன்று தம்மைத் தாழ்த்திக் கொண்டார். இதன்மூலம் இறைவனின்
என்றுமுள்ள அரசு கட்டியெழுப்பப்பட அவர் காரணமாக இருந்தார்.
தாழ்ச்சியுள்ளோரின் உள்ளத்தில் ஆண்டவர்
இதுவரையில், இறைவனைத் தன்னுடைய விரும்பத்திற்கேற்ப வளைத்த தாவீது
மன்னரையும், இறைவனின் விரும்பத்திற்கு வளைந்து கொடுத்த அல்லது
தாழ்ச்சியோடு ஆம் என்று சொன்ன மரியாவையும் குறித்துச் சிந்தித்துப்
பார்த்திருக்கின்றோம். இவர்கள் இருவரில் நாம் யாராக இருக்கப்
போகின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்பது நம்முடைய கடமையாகும்.
"
இறைவனுக்கு இரண்டு உறைவிடங்கள் உள்ளன. ஒன்று, விண்ணகம். மற்றொன்று,
தாழ்ச்சியுள்ளவரின் உள்ளம்"
என்று கூறுவார் புனித அகுஸ்தின். மரியா
தாழ்ச்சியுள்ளவராய், இறைவனின் விரும்பத்திற்கு ஆம் என்று சொல்லி,
அவருடைய மீட்புத் திட்டம் நிறைவேறக் காரணமாக இருந்தார். இதனால் அவர்
இயேசுவைத் திருவயிற்றில் சுமந்து, எல்லாத் தலைமுறையும் பேறுபெற்றவர்
என அழைக்கும் சிறப்பினைப் பெற்றார் (லூக் 1:48) நாமும் மரியாவைப்
போன்று தாழ்ச்சி உள்ளவர்களாய், இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்தோமெனில்,
இறைவனிடமிருந்து ஆசி பெறுவோம் என்பது உறுதி. ஆகையால், நாம் நம்முடைய
அன்றாட வாழ்க்கையில் தாவீது மன்னரைப் போன்று அல்லாமல், மரியாவைப்
போன்று தாழ்ச்சியோடு வாழ்ந்து, இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப
வாழ்ந்து, அவர் தருகின்ற ஆசியைப் பெற்று மகிழ்வோம்.
சிந்தனை
"
தன்னை அல்ல, கடவுளை மாட்சிப்படுத்தியதில்தான் புனித கன்னி மரியாவின்
மகத்துவம் அடங்கியிருக்கின்றது"
என்பார் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
(An Invitation to Faith). ஆகையால், நாம் புனித கன்னி மரியாவைப்
போன்று நம்மை அல்ல, கடவுளை நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும்
மாட்சிப்படுத்துவோம். அதற்குத் தாழ்ச்சியோடு வாழ்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறையுரைச்சிந்தனை
-
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
மெசியா வருவார். விடுதலை தருவார்
இன்றைய நற்செய்தியில் இயேசுவின் பிறப்பு முன் அறிவிக்கப்படுகிறது.
மெசியா வருவார். விடுதலை தருவார் என்று ஏங்கியவர்களுக்கு
இது மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும். தாவீதின் குலத்தில்
வழி வந்த ஒரு பெண் உலகை நல்வழிப்படுத்த வந்த இயேசுவுக்குத்
தாயாக வேண்டும் என்பது இறைத் திட்டம். மீட்பர் தன்னிடம்தான்
பிறப்பார் என்று அக்காலப் பெண்கள் பலர் கனவு கண்டுகொண்டிருந்தபோது,
கடவுளின் திட்டம் வானதூதர் வழியாக மரியாளின் இதயத்தில்
மட்டும், நனவாக்கப்படுகிறது. மரியாளின் அடக்கமும், பணிவும்,
பொறுமையும், அருள் வாழ்வும் இயேசுவின் மீட்புப் பணிக்கு
உறுதியாக இருந்தது. இறைத்திட்டத்தில் மரியாவை உயர்த்தப்பட்டவளாகத்
தேர்ந்து கொண்டார் இறைவன். ஆண்டவர் உம்முடனே அருளால்
நிரப்பப்பட்டவ்ளே! ஆசீர்வதிக்கப்பட்டவளே (லூக்:1:28) என்ற
அழியா முத்திரையை மரியாவில் வானதூதர் வழியாக இறைவன்
புதுப்பிக்கிறார். இதோ, ஆண்டவரின் அடிமை. உமது
வார்த்தையின் படி எனக்கு ஆகட்டும் (லூக்:1:38) எனப் பதிலுரைக்கிறார்
மரியா.
தன்னிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடுத்தால் அது இரக்கம்
(லூக்:10:34-35) எனப்படும்.
தன்னிடம் உள்ளதை முழுவதும் கடவுளுக்குக் கொடுத்தால் அது
காணிக்கை (லூக்:21:1-4)
தன்னையே முழுவதும் கையளித்தால் அது அர்ப்பணம்
(லூக்:1:38) ஆம்! அன்னை மரியா தன்னையே இறைவனுக்கு அர்ப்பணமாக்கினாள்.
ஒரு மன்னன் புதிய அரண்மனையைக் கட்டி அதைச் சுற்றி நிறைய
மரங்களை நட்டு வைத்தான்.. இதைப் பார்த்த மக்களும், தங்கள்
வீடுகளைச் சுற்றி மரக்கன்றுகளை நட்டு வளர்த்தார்கள். பசுமையாக
மாறிவிட்ட இந்த மரங்களைப் பார்த்து மகிழ அரசன் மாறுவேடத்தில்
வெளியே வந்தான். அப்போது சந்தித்த ஒரு முதியவர் சிறிய
விதையில் இருந்து ஆலமரம் பெரிதாக தோன்றினாலும் புயல்
அடித்தால் வேரோடு சாய்ந்து விடுகிறது. பலருக்குக் குணமாகும்
மருந்தாக வேப்பமரம் இருந்தாலும், கசப்பு - என்று மக்கள்
அதைக் கண்டுகொள்வதில்லை. புளிய மரத்தை சூடு என்று சொல்லி
ஒதுக்கிவிடுகிறார்கள் மக்கள். இலையுதிர் காலத்தில் எல்லா
மரங்களும் இலையுதிர்ந்து காணப்படும்போது, மகிழமரம் மட்டும்
இலைகளை, மஞ்சள் பூக்களைத் தருகிறது. கோடை காலங்களில் நிழலைக்
கொடுக்கிறது என்று அதிகமாக மகிழமரமே நட்டுள்ளோம் என்று
அரசனிடம் மகிழ்ச்சியுடன் கூறினார். மகிழ மரத்தைப்போல இயேசுவின்
திட்டத்தில் இறுதிவரை நிலைத்து நின்றவர் அன்னை மரியா.
ஆகட்டும் என்ற வார்த்தைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர்
அன்னை மரியா.
ஒரு மந்திரவாதி செத்தவர்களுக்கு உயிர் கொடுப்பேன், என்னிடம்
அபூர்வ சக்தி உள்ளது என்று கூறிக்கொண்டிருந்தான். இப்படி
ஊருக்குச் சென்று கொண்டிருந்தபோது, கல்லறை பிளந்தது, போடா
வேலையற்றவனே! செத்துப் போனவர்களை எழுப்புவது முக்கியமல்ல.
இருப்பவர்களைச் சாகடிக்காமல் வாழ வைப்பதுதான் முக்கியம்
என்ற குரல் கல்லறையிலிருந்து வெளி வந்தது.
ஆம்! உயிர் வாழ்வோர்க்கெல்லாம் தாய் ஏவாள் (தொ.நூ.3:
20)
விசுவாசிகளுக்கெல்லாம் தாய் சாராள் (தொ.நூ.17.16)
மனித குலத்திற்கெல்லாம் மீட்பின் தாய் மரியா
(லூக்:1:43)
எனவே மரியாளின் விசுவாசம், அர்ப்பணம், துணிவு,
மீட்புப் பணியில் இறுதிவரை ஈடுபாடு, புனித வாழ்வு, பரிந்துரை
போன்றவைகளை நம் இதயத்தின் இருப்பிடமாகக் கொள்வோம். ஆண்டவருக்கு
எப்போதும் ஆம் என்று சொல்வோம்.
அருட்திரு. D. பீட்டர் ஜெயக்காந்தன் S.S.S
என் இறைவன் ஆலயத்திலா?.....அனுபவித்திலா..?
கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே,
திருவருகைக்காலத்தின் நான்காம் வாரத்திற்கு உங்களை அன்போடு
அழைக்கின்றேன்.
முதல் ஞாயிறு எங்கே நான்? இருக்கின்றேன்... என்ற
கேள்வியோடு நிகழ்கால நிகழ்வுகளில் நம் வாழ்வை அமைத்துக்கொள்வதைப்பற்றி
சிந்தித்தோம்.
இரண்டாம் ஞாயிறு எப்படி நான்...பதுங்கியவாழ்க்கையா?
தெளிந்தவாழ்க்கையா? என்று நம்மில் கேள்வி எழுப்பி பாலைவனத்தை
விட்டு வெளியே வந்து தெளிந்துவாழ அழைக்கப்பட்டோம்.
மூன்றாம் ஞாயிறு என் மகிழ்ச்சி எத்தகையதில் அமைகிறது? என்று
சிந்தத்தோம்.
இறுதி மற்றும் நான்காம் வாரமான இன்று என் இறைவனை வெறும்
ஆலயத்தில் தேடுகிறேனா? அல்லது தொடர்ந்து அன்றாடஅனுபவத்திலும்
காண்கின்றேனா என சிந்திக்க அழைக்கப்படுகின்றோம்.
ஏன் ஆலயத்திற்கு வெளியே மிதியடிகளை கழற்றி வைக்கிறோம்? என்ற
கேள்விக்கு ஒருவர் சொன்ன பதில்- என் வாழ்வின் அன்றாட கஷ்டங்களை
மற்றும் போராட்டங்களை ஆலயத்திற்கு வெளியே வைத்துவிட்டு இறைவனோடு
உறவாடுவதற்கே-அவர் மேலும் சொன்னது ஆலயத்திலயாவது அனைத்து
குடும்ப தொந்தரவுகளையும் மறந்து நிம்மதியாக இருக்கவே நான்
ஆலயத்திற்கு தனியாக வருவதுண்டு என்றார்.
இறைவன் நற்கருணையில் பிரசன்னமாக இருக்கிறார் ஆனால் அந்ந இறைவனை
நான் ஒரு கட்டடத்திற்குள் கட்டுப்படுத்தி வைக்கமுடியாது.
இறைவன் பயணம் செய்கின்ற இறைவன் இயங்குகின்ற இறைவன் அனைத்திலும்
நிரம்பியிருக்கின்ற இறைவன் என இன்றைய வழிபாட்டு வாசகங்கள்
நமக்கு உணர்த்துகிறது. முதல் வாசகத்தில் தாவீது அரசர் இறைவனுக்கு
ஆலயம் கட்ட நிரந்தர இருப்பிடம் கொடுக்க விரும்பி இறைவாக்கினர்
நாதானிடம் இவ்விருப்பத்தை உறுதிசெய்கிறார். தாவீது அரசர்
பிரிந்துயிருந்த யூதா மற்றும் இஸ்ராயேல் அரசுகளை ஒன்றிணைக்கிறார்.
ஜெபுசயேர்களிடமிருந்து மீட்கிறார். தனக்கு நல்ல அரண்மனைவீட்டை
கட்டுகிறார் இறுதியாக 200வருடங்களாக செல்கின்ற இடங்களுக்கு
தாங்கள் சுமந்துசெல்கின்ற கடவுளின் பேழையை ஒரு கூடாரத்தில்
இருக்ககூடாது மாறாக இறைவனுக்கு நிரந்தரமாக ஒரு ஆலயம் கட்டவேண்டும்
அதில் இறைவன் பேழையை வைத்து அதை இறைவனின் நிரந்தர இருப்பிடமாக்கவேண்டும்
என திட்டமிட்டு நாதானிடம் வெளிப்படுத்துகிறார். நாதானோ துவக்கத்தில்
அதை ஆமோதித்து ஏற்றுக்கொண்டாலும் பின்பு இறைவன் வெளிப்படுத்தியபின்பு
மறுக்கிறார். இறைவன் வெளிப்டுத்தியது-நான் என் மக்களோடு
பயணம் செய்கின்ற இறைவன் எகிப்தில் உங்களோடு பயணம் செய்தேன்
பாலைநிலத்தில் உங்களோடு தங்கினேன்-கானான் தேசத்தில் உங்களோடு
குடிகொண்டேன்-பாபிலோனிய அடிமைத்தனத்தில் உங்களோடு இருந்தேன்
மீண்டும் எருசலேம் நோக்கி பயணம் செய்தேன்-ஆடு மேய்க்கும்
சிறுவனாக உன்னை அழைத்து இன்றுவரை ஒவ்வொரு முயற்சியிலும் உன்
உடன்இருக்கின்றேன் என்னை ஒரு ஆலயத்தில் ஒரு இருப்பிடத்தில்
வைத்து கட்டுபடுத்தவேண்டாம் நான் எல்லோருக்கும் இறைவன் எனச்சொல்கிறார்.
மேலும் தாவீதை நோக்கி நான் உன்னை உயர்;த்துவேன்-உன் அரசு
என்றென்றும் இருக்கும்-உன் இனத்தோடு என்றென்றும் இருப்பேன்
என உறுதியளிக்கிறார்.
நற்செய்தியில் லூக்கா புறஇனத்தவர்களுக்கு மனிதத்தை தேடிவருகின்ற
இறைவனை எடுத்துரைக்கிறாh.; மரியாளின் நிலைமையில் யாராகஇருந்தாலும்
அவர்கள் குடும்பத்தவர்களே அவமானத்திலிருந்து விடுபட.தந்தை
மற்றும் சகோதரர்கள் சேர்ந்து கொல்வார்களாம் கடவுள் அறியப்படாத
மரியாளையும் மற்றும் சமூகபேச்சுக்கு பழகிப்போன எலிசபெத்தையும்
அழைத்து வரலாற்றுக்கு உட்படுத்துகின்றார் இவர்கள் உலக மனிதம்
இறைவனை அனுபவிக்க கருவியாக்கப்டுகின்றனர். இருவரும் ஆம் என்று
சொன்னது அவர்கள் சொந்த குடும்பஉறவின் பலனுக்காக அல்ல மாறாக
உலகம் இறைவனை மனிதமாக அனுபவிக்கவே. நம் அன்றாட வாழ்வில் இறைவன்
இறைமகனாய் நம்மோடு ஒன்றாகின்றார்.
ஆலயத்தில் இறைவனை நாம் ஆராதிக்கின்றோம் அதன்பின் அங்கேயே
இருந்துவிடக்கூடாது மாறாக ஆராதித்த இறைவனை நம் அன்றாட அனுபவமாக்கவேண்டும்.
ஆசீர்வதிக்கப்பட்ட அன்னைதெரேசா அவர்கள் சொன்னது கிறிஸ்துபிறப்பு
விழா நமது இதயத்திலும்-ஏழைகளிடமும் மற்றும் நாம் சந்திக்கின்ற
முகங்களிலும் கிறிஸ்துவை காண அழைத்து செல்லவேண்டும் என்றார்.
தாவீதிற்கு பிறகு சாலமோன் எருசலேம் ஆலயத்தை கட்டினார் ஆனால்
அது 379ஆண்டுகளே நிலையாக இருந்தது. ஆனால் இயேசு கட்டிய மனித
சமூக திருச்சபையோ2011 ஆண்டுகள் வளர்ச்சியைநோக்கி-உயர்வை
நோக்கி சாட்சி பகர்ந்து இயங்குகின்ற இறைவன் இயேசுவோடு தொடர்ந்து
பயணம் செய்கின்றது.
ஒருவர் குருவானவரை அணுகி அருட்தந்தையே என்னால் ஏற்றக்கொள்ளமுடியாது
கடவுள் உங்களை அழைத்தார் என்பதை நீங்கள் மக்களுக்கு உங்களுடைய
ஆறதலுக்காக சொல்லுகின்றஒரு பொய் உங்களால் நிருபிக்கமுடியாது.
உங்கள் சூழ்நிலைக்காகத்தானே நீங்கள் இந்தவாழ்க்கையைத்
தேர்ந்தெடுத்தீர்கள். நான் பல அருட்தந்தையர்களோடு தர்க்கம்
செய்திருக்கிறேன்என்றார். அருட்தந்தையோ உம் மகன் எங்கே என
மைதானத்திலே விளையாடுகிறான் என பதில்சொன்னார் அங்கே போவோம்
என ஆழ்ந்த யோசனையுடன் நடந்தார் மைதானம் சென்றதும் அங்கே
சிறுவர்கள் பட்டம் விட்டு விளையாடுவதை கண்டார் பின்பு அந்த
மனிதர் பக்கம் திரும்பி உம் மகன் எங்கே கூப்பிடும் என பல
சிரமங்களுக்குப்பிறகு 20 நிமிடம் கழித்து மகனைஅழைத்துவரஅவனும்
நூற்கண்டோடு வந்து குட் ஈவ்னிங் ப்பாதர் என்றான். அருட்தந்தை
அவனிடம் என்ன செய்கிறாய் என்ன பட்டம் விடுகிறேன் என பதில்
சொன்னான் நீ விட்ட பட்டம் எங்கே என அவனோ ஆகாயத்தில ரொம்ப
உயரத்தில இருக்குது மேகக்கூட்டம் இருக்கிறதனால தெரியாது
ப்பாதர் என்றான் நீ பொய் சொல்ற மற்றம் பட்டம் உன் பட்டத்தை
வெட்டியிருக்கிறது காணாமற் போய்விட்டது அதுதான் உண்மை என அருட்தந்தை
சொல்ல இல்ல ப்பாதர்இருக்குது என் பட்டம் உயரபறக்குது என அழுத்திச்சொல்ல
எப்படி நிருபி என அருட்தந்தை கேட்க அவன் உடனே தன் கையில்
இருக்கிற நூற்கணடை காண்பித்து இதன்அழுத்ததிலிருந்து
பிடியிலிருந்து நான் உணர்கிறேன் அனுபவிக்கறேன் நிச்சயம் என்
பட்டம் எங்கோ பறக்கின்றது என்று சொல்லி அவன் ஒடியவுடன் அருட்தந்தை
அம்மனிதரைப்பார்த்து உம் மகன் எங்கோ மறைந்து இருக்கின்ற தன்பட்டத்தின்
பிடியை உணர்ந்து அனுபவிப்பதுபோல அழைத்த இறைவனின் பிடியை
நான் உணர்கின்றேன் தினமும் அனுபவிக்கின்றேன் என அம்மனிதர்
என் கண்களைத் திறந்தீர்கள் இறைவன் ஒரு அனுபவம் அன்றாட
வாழ்க்கை அனுபவம். சாரி ப்பாதர் என்றார்.
திருப்பாடல்139:7 உமது திருமுன்னிலையிலிருந்து நான் எங்கே
தப்பியோடமுடியும்?நான் வானத்திற்கு ஏறிச்சென்றாலும் நீர்
அங்கே இருக்கின்றீர்..பாதாளத்தில் படுக்ககையை அமைத்துக்கொண்டாலும்
நீர்அங்கே இருக்கின்றீர்...ஆம்
இறைவன்அருகாமையில்இருக்கின்றார்
இறைவன்அன்றாடஅனுபவத்தில் இருக்கின்றார்
இறைவன்அடுத்தமனிதத்திடம் இருக்கின்றார்
இறைவன் அனுதின போராட்டத்தில்இருக்கின்றார்
இறைவன் அனைத்து சூழலிலும் இருக்கின்றார்
ஏனெனில் இறைவன்ஒரு அனுபவம் அதன் பிடியை உணர்வோம் இறுகப்பற்றிக்கொள்வோம்-ஆமென்.
என் மெசியா..இயங்குகிறார்..
கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய
உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே இறைவனின் நாளில்
உங்கள் அனைவரையும் இன்றைய நற்கருணை திருவிருந்திற்கு
அழைக்கின்றேன். ஒவ்வொரு ஞாயிறும் நாம் தனியாக இங்கு வருவதுகிடையாது
மாறாக குடும்பங்களாக இறைசமூகங்களாக இனணந்து
கூடுகிறோம். இது நமது பலமும் ஆதரவும் ஆகும். இத்திருவருகைக்காலத்தின்
கடந்து மூன்று வாரங்களாக நாம் சிந்தித்தது: இன்றும்-என்றும்
மாரனாதா! சீரான என்விடுதலைப்பயணம் மகிழ்ச்சியின்
குரலாவோம் என்ற சிந்தனைகளாகும். நான்காவது-இறுதிவாரத்தில்
நாம் குடும்பமாக மற்றும் சமூகமாக அழைத்தலை ஏற்க அழைக்கப்படுகிறோம்.
ஆலயம் என்பது ஒரு கட்டிடமோ ஒரு நிறுவனமோ அல்ல மாறாக இறைமக்கள் விரும்பி ஒன்றித்திருக்கும் இடமே தருணமே ஆலயம் ஆகும். வெறும்
ஆலயத்தை அல்ல மாறாக இறைவன் தங்கும் வாழும் மற்றும்
இயங்கும் மக்களின் சமூகங்களை கட்டி எழுப்புவதே நம்முடைய
அழைப்பும் பொறுப்புமாகும்.
ஞாயிற்றுகிழமை ஆலயம் முழுவதும் மக்கள் நிரம்பியிருந்தனர்.
அருட்பணியாளர் நற்செய்தி வாசகத்தை முடித்து மறையுரையை
துவங்கபோகும் தருணம். அனைவரும் உட்கார்ந்தபொழுது இரண்டுபேர்
மட்டும் நின்றுகொண்டிருந்தனர். திடீரென இரண்டுபேரில்
ஒருவன் ஆலயத்தின் நுழைவாயின்பக்கம் மக்கள் உட்கார்ந்துயிருக்கும்
இடத்தில் சென்றுநிற்க மற்றொருவன் பீடத்திற்கு முன்பாகச்சென்று
பாக்கெட்டிலுள்ள துப்பாக்கியை கையில் எடுத்து
யாரெல்லாம் இயேசுவுக்காக குண்டுகளை தாங்க சந்திக்க
விருப்பப்படுகிறீர்களோ அவர்கள் எல்லாம் உங்கள் இடத்தில்
உட்காருங்கள் என்ற அழைப்பிற்குபிறகு கூட்டம் கூட்டமாக
மக்கள் விரைந்து வெளியேறினார்கள். பாடற்குழுவினரும் தொடர்ந்து
வெளியேறினர். இனணப்பங்கு தந்தையும் மக்களோடு
வெளியேறினார் இறுதியாக இருபதுபேர் மட்டும்இருக்க
துப்பாக்கிஏந்திமுன்னால் இருந்தவன் துப்பாக்கியை
பாக்கெட்டில் வைத்துவிட்டு சொன்னது _ ப்பாதர் வெளிவேடக்காரர்கள்
எல்லாம் வெளியேறிவிட்டார்கள் இனிமேல் நீங்க மறையுரையை
துவங்கலாம் என்றான். கடமைக்காக பெற்றோரின் கட்டாயத்திற்காக
அவர்களின் திருப்திக்காக ஆலயம் வருவோர் பலர்.
கோயில் கட்டுபவர் கட்டடங்கள் கட்டுபவர் நல்ல அருட்தந்தை......ஆனால்
நன்கொடை கொடுங்கள் தாரளாமாக தாருங்கள் என எப்பொழுதும்
ஏதாவது கட்டடம் கட்டணும் என்று பேசுபவர் நல்ல அருட் தந்தை
அல்ல. ஆலயம் கட்டப்பட்டு புதிதாக தோற்றமளிக்கிறது ஆனால்
அன்பியங்கள் செயலற்று இருக்கிறது. வழிபாட்டுநேரங்களில்
ஆலயம் முழுவதும் நிரம்பாமல் வெறுமையாகயிருக்கிறது. இறைவனை
வெறும் ஆலயத்தில் மட்டும் காணுகிறேன் என்பது சரியா? என்னைப்பார்த்து
ஒருவர் ப்பாதர் நீங்கள் பங்கு பணியாளராக 7வருடங்கள் இருந்தீர்கள்
என்பதன் அடையாளமாக ஒரு சிற்றாலயம் கட்டினால் நன்றாகயிருக்குமே
என்றார். நான் யோசித்தேன் சிற்றாலயம் என் தேவையாஇறைமக்கள்
தேவையா? என்னை மையப்படுத்த ஆலயம் கட்டுவது என் அழைப்பா?
அல்லது ஆலயவழிபாட்டையும் இறைமக்களின் ஒன்றிப்பையும் இணைத்து
இறைபிரசன்னத்தை காண்பது என் பணியா!.
இன்றைய இறைவார்த்தைகள் நம் குடும்பங்களில் நம் சமூக
உறவுகளில் வாழுகின்ற இயங்குகின்ற மெசியாவை இறைவனை காண
அழைப்புவிடுக்கின்றது. மிகவும் சுவாரசியமான உரையாடலை
இன்றைய முதல்வாசகம் நம்முன் வைக்கிறது. இந்த உரையாடல்
இஸ்ராயேலில் பெயரும் புகழோடும் ஆண்ட தாவீது அரசருக்கும்
இறைவனின் வார்த்தையை எடுத்துரைக்கும் இறைவாக்கினர்
நாதானுக்கும் இடையே ஏற்படுகிறது. தாவீதின் தொடர் சாதனைகளான:
எருசலேமை ஜெபுசேயர்களிடமிருந்து கைப்பற்றி அதை தன் அரசியல்
தலைநகராக அறிவித்து பெருமைகொணர்ந்தது தன் தந்தை சவுலரசரின்
பாதையில் தொடர்ந்து முயற்சிசெய்து பிரிந்திரிந்த இரு
அரசுகளான இஸ்ராயேல் மற்றும் யூதாவை அதன்மக்களை ஒன்றுசேர்த்தது
இவ்வாறு தாவீது பல்வேறு நிர்வாக திறமைகளை வெளிப்படுத்தி
பல்வேறு அரசுகளின் தாக்குதலை எதிர்த்து நின்று
வெற்றிகொண்டது இவை அனைத்தும் தாவீதை ஒரு நிலையான
யாரும் அசைக்கமுடியா அரசை நிலைநாட்டிவிட்டேன் என்ற ஒரு
அபரித தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொடுத்தது. இந்த அசைக்கமுடியா
நிலையான அரசின் தன்னம்பிக்கை உணர்வு அவரில் தன்க்கென்று
புதிதான சிறப்பான அனைவரும் அதிசயப்படக்கூடிய பிரமாண்டமிகு
அரண்மனையை உருவாக்க தூண்டியது இந்த அரண்மனையை கட்டிமுடித்து
அதில் தானும் தன் குடும்பமும் தங்கள் சொகுசான உயரிய
வாழ்வை வாழத்தெடங்கினர்.
அனைத்து வசதிகளும் நிரம்பிய அரண்மனையிலிருந்துகொண்டு
தாவீது ஒருநாள் தன் கவனத்தை அதிக நேரம் கூடாரத்தில் தனிப்படையாக
வைக்கப்பட்டிருந்த வாக்குறுதி பெட்டகத்தை
நோக்குகின்றார். இறைபிரசன்னம் எவ்ளவு நாட்கள் இவ்வாறு
தனித்துயிருப்பது. என் அரசு நிலையாகயிருக்க இறைபிரசன்னமும்
நிலையாகயிருக்கவேண்டும் என விரும்பி ஒருபெரிய ஆலயம் எழுப்பி
அதில் வாக்குறுதி பெட்டகத்தை வைக்கவிரும்பினார். இந்த
ஆவலை விருப்பத்தை நாதான் இறைவாக்கினர் கேட்டபிறகு தொடக்கத்தில்
மிகஆழமாக சிந்தித்து தாவீதுக்கு இவ்வாறு இறைவனின் சவாலை
முன்வைக்கிறார். தாவீது உன்னிடமிருப்பது எல்லாம் இறைவன்
கொடுத்தது சிறுவயதிலிருந்தே உன்னை அழைத்து அனைத்து ஆசீரை
வலிமையை மனத்திடனை வெற்றிகளை தந்தது யாவே இறைவனே.
நெருப்பு நீர் மலைஉச்சி என எங்கோ இறைவனி;ன சக்தியை
தேடிய தன்மக்களுக்கு யாவே இறைவன் வெளிப்படுத்திய அந்த
பத்து படிப்பினைகளின் பலகைகளையும் ஆரோனின் கைத்தடியையும்
மன்னா உணவையும் தாங்கிய வாக்குறுதி பேழையை வாழும் உங்களோடு
உறையும் பிரசன்னமுமாக கடந்த 200 ஆண்டுகளாக எடுத்துச்சென்றீர்கள்
உங்களோடு பயணம் செய்த இறைவனை ஏன் ஓரிடத்தில் தனித்து
வைக்கமுயற்சிசெய்கின்றாய். இறைவனின் இடத்தை நீ
சுருக்கி குறுகிவைக்கமுடியாது நிலையான உன் அரசை அல்ல
இறையரசை மக்களின் அரசை அவர் நிலைநாட்டுவார். இறைவனாகிய
ஆண்டவரின் பிரைசன்னத்தை வாக்குறுது பேழையை உன் சிந்தனைக்குள்
வரையறுக்காதே மாறாக வாழுகின்ற தொடர்து இயங்குகின்ற இறைவனின்
பிரசன்னத்தை பிருக்கு எடுத்துககூறு வாழ்ந்துகாட்டு என
அழைக்கின்றார்.
இன்றைய நற்செய்தியாளர் லூக்கா திருத்தூதர் பவுலின்போதனையில்
கவரப்பட்டு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கி.பி50முதல் அவரோடு
பயணத்திலும் துணையிருந்து இயேசுவின் வாழ்வை நற்செய்தியை
இறையரசை கற்று அறிந்தவர். இந்நற்செய்திபகுதியை உரோமையர்கள்
தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்தி எருசலேமை கி.பி 70ல் அழித்த
சமயத்தில் யூதரல்லாது கிறிஸ்துவ சமூகத்தில் இணைந்திருந்த
மக்கள் மெசியாவாகிய இயேசுவின் பிறப்பு நிகழ்வை
முழுமையாக அறியாமலிருந்தனர். அவர்களுக்கு தன்நற்செய்தியில்
வாக்குறுதியின் நிறைவாக உலகுக்கு மீட்பராக நமக்கு அனுப்பப்பட்டு
நம்மத்தியில் வந்தவரே இயேசு கிறிஸ்து. நம்மத்தியில் மனிதமாக
நம் நிலையில் நம்மை ஏற்றுக்கொண்டவரே இறைதந்தையின் மகனாகிய
மீட்பராகிய இயேசு. இதுவே அவர் பிறப்பின் சிறப்பு என விளக்குகிறார்.
லூக்கா இயேசுவின் பிறப்பு நற்செய்தியில் மரியாவை மையமாக
வைத்து எடுத்துரைக்கிறார். வானதூதரின் அறிவிப்புமுதல்
கல்வாரி வரை ஏன் திருத்தூதர்களை திடப்படுத்தி தொடக்க
கிறிஸ்தவ சமூகத்தின் வளர்ச்சிவரை மரியா இயங்குகின்ற இறைபிரசன்னமாக
இறைவெளிப்பாடாக பயணிக்கின்ற வாக்குறுதி பெட்டகமாக
வாழ்கின்றாள் எனச்சுட்டிகாட்டுகின்றார். அவளுடைய ஆம்
ஆகட்டும் நிகழட்டும் இதோ உமது அடிமை நான் உம்மோடு பயணிக்க
நடக்க தயார் என்ற பதில் அனைத்து இறைவாக்கினர்கள் அழைக்கப்பட்ட
தலைவர்களின் வாழ்வில் நாம் காண்கின்றோம் ஆம் இதோ இருக்கின்றேன்
நிகழட்டும் ஆகட்டும் என்பது ஒரு சமூகத்திற்கு ஒரு சமூக
அழைப்பிற்கு ஆம் என்ற பொறுப்பை உணர்வதாகும். மனித குலத்தின்
சார்பாக நிகழட்டும் என்ற மரியா இஸ்ராயேல் மக்கள் எடுத்துச்சென்ற
வாக்குறுதிபெட்டகத்தை தாங்கிசென்றாள் -. என்னை அழைத்த
என்னில் உறைகின்ற இறைவன் இயங்குகின்ற இறைவன் என தன்
பயணத்தை தளராது நசரேத்திலிருந்து பெத்லேகமுக்கு சென்று
பின் எகிப்துக்கு பயணம் செய்து பின் எருசலேம் வரை இயங்குகின்ற
இறைவனை வெளிப்படுத்தினாள். நாமும் நற்கருணையில்
திருவழிபாட்டில் திருஅருட்சாதனங்களில் அனுபவிக்கின்ற
இறைவனை நம் குடும்பங்களில் சமூக உறவுகளில் காண வாழ அவரோடு
பயணிக்க அழைக்ப்படுகிறோம்.
ஆலயங்கள் தகர்க்கப்படலாம்........கிறிஸ்தவர்கள் தாக்கப்படலாம்
ஆனால் தொடர்ந்து பயணித்து சமூகங்களில் இயங்குகின்ற இறைவனை
நிறுத்த யாராலும் இயலாது. என் அரசு என்றும் நிலையானது
என்றும் இயங்கும் என்பது இன்றைய உலகில் அறிவியல்
தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதம் பொருளை மற்றொரு மனிதத்தை
ஏன் ஏவுகணைகளை தன்விருப்பத்திற்கு ஏற்ப இயக்குகிறது ஆனால்
இயங்குகின்ற இறைவனை அனைத்தையும் இயக்குகின்ற இறைவனை
நாம் நம்மத்தியல் காண்போம் அவரோடு பயணித்து செயல்படுவோம்.
குடிலில் மட்டுமல்ல கோவிலில் குடும்பங்களில் இயங்கும்
மெசியாவை காண்போம்.
புதிதாக ஏற்படுத்தபட்ட பங்குதளத்தில் அருட்பணியாளர் ஒருவளாகத்தில்
திருப்பலி நிறைவேற்றிவருகையில் மக்கள் ப்பாதர் ஏன்
கோயில்கட்டதுவங்ககூடாது என அவர்சொன்னது. நம் பங்குதளம்
அறிவிக்கப்பட்டு மூன்றுமாதம் தான் ஆகியிருக்கிறது முதலில்
இயங்குகின்ற இறைபிரசன்னத்தால் நம் சமூகத்தை கட்டுவோம்
பின் இறைசமூகமாய் ஆலயம் கட்ட அவர் நம்மை இயக்குவார் என்றார்.
என்னை மெசியா எவ்வாறு இயக்குகின்றார்! எனக்கு அருகாமையில்
எங்கு மெசியா இயங்குகின்றார்.-ஆமென்.
நேரம் வந்தது கடவுள் பிறக்கும் நேரம் வந்தது ! நேரம்
வந்தது - கடவுள் ஒரு பெண்ணைத் தாயாக தேர்ந்தெடுக்கும்
நேரம் வந்தது. நேரம் வந்தது - கபிரியேல் என்னும் வானதூதர்
நாசரேத்து கன்னி முன்னால் தோன்றும் நேரம் வந்தது!
வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, அருள்மிகப் பெற்றவரே
வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார் என்றார். அருள்நிறைந்த
பெண்ணுக்கு, கன்னிக்கு கடவுளின் தாயாகும் பேறு கிடைத்தது;
கடவுளைப் பெற்றெடுத்தார்! இயேசு நம் நடுவே பிறக்கப்
போகின்றார் இன்னும் ஒரு சில நாள்களிலே! இந்த உலகத்திற்குள்
பிறக்கப்போகும் இயேசு நமது உள்ளத்திற்குள் பிறப்பாரா?
நமது உள்ளம், நமது மனம் அருள் நிறைந்ததாக, அதாவது முழுவதும்,
நூற்றுக்கு நூறு பரிசுத்தமாக இருந்தால் நமது உள்ளத்திற்குள்,
மனத்துக்குள் இயேசு பிறப்பார். உங்கள் விண்ணகத்தந்தை
நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவராய்
இருங்கள் (மத் 5:48) என்றவர் இயேசு. என்னிடம் பாவம் உண்டு
என்று உங்களுள் யாராவது என்மேல் குற்றம் சுமத்த
முடியுமா? (யோவா 8:46) என்று கேட்டவர் இயேசு.
கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவிற்கு அலங்காரம் தேவை
வெளி அலங்காரத்தைவிட உள் அலங்காரம் தேவை!
நம்மைப் பரிசுத்தர்களாக வாழவிடாமல் தடுப்பது எது? பாவம்!
பாவம் என்றால் என்ன என்பதை விளக்க இதோ ஒரு கதை ! ஒரு
குளத்திலே நண்டு ஒன்று வாழ்ந்து வந்தது! அந்தக் குளத்தங்கரையிலே
ஒரு மரம். அந்த மரத்திலே இரண்டு குருவிகள். அந்தப் பறவைகளும்,
குளத்தில் வாழ்ந்த நண்டும் நண்பர்கள்! கோடைகாலம் பிறந்தது!
குளத்தில் தண்ணீர் வற்றத் தொடங்கியது. தண்ணீரிருக்கும்
இடத்திற்குப் பறந்து செல்ல பறவைகள் திட்டமிட்டன! என்னையும்
நீங்கள் போகும் இடத்திற்குக் கொண்டு செல்லுங்கள் என்றது
நண்டு! ஒரு காய்ந்த குச்சியைக் கொண்டுவந்து, நண்டைப்
பார்த்து, இந்தக் குச்சியை இரண்டு பக்கமும் நாங்கள் எங்கள்
அலகுகளால் பிடித்துக்கொள்கின்றோம். நீ இந்தக்
குச்சியின் நடுப்பகுதியைப் பிடித்துக்கொள். நாங்கள் உன்னைத்
தூக்கிச் சென்று தண்ணீர் நிறைந்த குளத்தில்
விட்டுவிடுகின்றோம் என்றன பறவைகள். பயணம் ஆரம்பமானது!
பள்ளிக்கூட மாணவர்கள் பள்ளிவிட்டு வெளியே வந்தார்கள்.
வானத்தைப் பார்த்தார்கள், நண்டு பறக்கின்றது, நண்டு
பறக்கின்றது என்றார்கள்! நண்டோ, நான்தான் பறக்கின்றேன்.
பின் எதற்கு இந்தக் குச்சியும், பறவைகளும்? எனக்
கேட்டு குச்சியை விட்டுவிட்டது கீழே விழுந்து உடைந்து,
சிதறியது!
கதையிலே வந்த நண்டைப் போலத்தான் ஆதாமும், ஏவாளும்
செய்தார்கள். கடவுள் தமது அருளாலும், அன்பாலும் அவர்களைத்
தூக்கிச் சென்றார். ஆனால் அவர்களோ சாத்தானின் சோதனைக்கு
உட்பட்டுத் தங்கள் மீது மட்டும் நம்பிக்கை வைத்து கடவுளை
மறந்து துன்பக் கடலுக்குள் விழுந்தார்கள்! கடவுளை மறந்து,
தன்னை மட்டுமே நினைப்பதற்குப் பெயர்தான் பாவம் தன்னை
மறந்து கடவுளை மட்டுமே நினைந்து வாழ்வதற்குப் பெயர்தான்
அருள் வாழ்வு! எப்பொழுதுமே கடவுளை
நினைத்துக்கொண்டிருப்பவரின் உள்ளத்திற்குள் ஒருபோதும்
பாவம் நுழையாது. அவர்கள் எப்பொழுதும் அருள் நிறைந்தவர்களாக
வாழ்வார்கள். அவர்கள் உள்ளத்திலே இயேசு பிறப்பார்; அவர்களோடு
வாழ்வார்.
நமது கடவுள் மக்கள் நடுவே வாழ ஆசைப்படும் கடவுள். இதனால்தான்
முதல் வாசகத்திலே கடவுள் மக்கள் நடுவே வாழும், வாழ ஆசைப்படும்
கடவுளாகக் காட்சியளிக்கின்றார். நம்மோடு வாழ ஆசைப்படும்
கடவுள் நம்மோடு வாழ வந்துகொண்டிருக்கின்றார். அவரது
உடனிருப்பால் நமது உள்ளமும். இல்லமும் நிரப்பப்பட இன்றைய
இரண்டாம் வாசகத்தில் வரும் திருத்தூதர் பவுலடிகளாரின்
அறிவுரையால் நம்மையே நாம் உறுதிப்படுத்திக்கொள்வோம்:
தூய்மையாக்கிக்கொள்வோம் : நீங்கள் நன்மை செய்வதில் ஞானம்
உடையவர்களாயும், தீமை என்றால் என்ன என்றே தெரியாத கபடற்றவர்களாயும்
இருக்க வேண்டும் என விழைகின்றேன். அமைதி தரும் கடவுள்
சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கிப் போடுவார். நம் ஆண்டவர்
இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக (உரோ 16:19-20).
மேலும் அறிவோம் :
எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து (குறள் : 125)
பொருள்: செருக்கு எதுவும் இன்றி அடக்கமாக வாழ்வது அனைவர்க்கும்
நலம் பயக்கும் எனினும், ஏற்கெனவே செல்வம் மிக்கவர்க்கு
அப்பண்பு மேலும் ஒரு செல்வமாகத் திகழும்!
ஓர் ஊரிலே பங்குக் கோயில் பழுதடைந்து
விட்டதால், புதுக் கோயில் கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட,
பங்குத்தந்தை பங்குப் பேரவையைக் கூட்டினார். பேரவை உறுப்பினர்கள்
பின்வருமாறு தீர்மானம் நிறைவேற்றினர்: "எந்த இடத்தில்
பழைய கோயில் இருக்கின்றதோ, அந்த இடத்தில்தான்
புதுக்கோயில் கட்டப்பட வேண்டும். புதியக் கோயில் கட்டி
முடிக்கும்வரை பழைய கோயிலை இடிக்கக்கூடாது. பழைய
கோயிலின் கற்கள், செங்கற்களைக் கொண்டே புதுக்கோவில் கட்ட
வேண்டும்." இது நடக்கக்கூடிய காரியம் அல்ல
மனிதர் கடவுளுக்குக் கோயில் கட்டுவதைவிட, கடவுளே மனிதர்க்கு
வீடு கட்டித் தருவதே முக்கியம் என்ற வித்தியாசமான கருத்தை
இன்றைய வார்த்தை வழிபாடு வலியுறுத்துகிறது. கடவுளே மன்னன்
தாவீதுக்கு வீட்டைக் கட்டப்போவதாக வாக்களிக்கிறார்,
தாவீது மன்னன் தன் வாழ்விலே அரிய பெரிய காரியங்களைச்
செய்து முடித்தார். ஆனால் கடவுளுக்கு ஓர் ஆலயம் கட்ட
வேண்டும் என்ற அவரது எண்ணம் நிறைவேறவில்லை. அது அவருக்கு
மன வேதனையை அளித்தது. அந்நிலையில் கடவுள் இறைவாக்கினர்
நசத்தான் வாயிலாகத் தாவீதிடம் கூறுகிறார்: "நானே உன்
வீட்டைக் கட்டுவேன், உன் வழித்தோன்றலின் அரரை நான்
நிலைநாட்டுவேன் உனது அரசு என்றும் நிலைத்திருக்கும்"
(முதல் வாசகம், 2 சாமு 1:116), இன்றைய பதிலுரைப்பாடல்
கூறுகிறது: "கடவுள் தாவீதுக்கு ஆணையிட்டுக் கூறியது.
உன் அரியனையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச்
செய்வேன்" (திபா 99: 3-4).
கடவுள் வாக்களித்தத் தாவீதின் அரசு அவரது வழிமரபில்
தோன்றிய மெசியாவாகிய கிறிஸ்துவில் கட்டி எழுப்பப்பட்டது.
அது என்றும் நிலைத்திருக்கும். இதை இன்றைய நற்செய்தியில்
வானதூதர் கபிரியேல் வழியாகக் கடவுள் மீட்பரின் தாயாகிய
மரியாவுக்கு அறிவிக்கின்றார். "மரியா, அஞ்ச வேண்டாம்
... இதோ கருவுற்று ஒரு மகளைப் பெறுவீர் ... அவருடைய தந்தை
தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்
.. அவரது ஆட்சிக்கு முடிவே இராது" (லூக் 1:31-33), மரியா
வழியாகவே கடவுளுடைய திட்டம் நிறைவேறியது. "நான் ஆண்டவரின்
அடிமை, உம் சொற்படியே எனக்கு திகழட்டும்" (லூக் 1:38)
என்று மரியா கூற, "வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே
குடிகொண்டார்" (யோவா 1:14)
திருவருகைக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் இருக்கும்
நாம் அன்னை மரியா கடவுளின் இல்லம் என்ற விவிலிய உண்மையைப்
பற்றிச் சிந்திப்போம், கடவுளின் ஆலயத்தில் கடவுளுடைய
பிரசன்னமும் மாட்சிமையும் குடிகொண்டதாகப் பழைய ஏற்பாட்டில்
வாசிக்கிறோம். இது மேகத்தின் வாயிலாக வெளிப்பட்டது.
"மோசே மலைமேல் ஏறிச்செல்ல ஒரு மேகம் மலையை மூடிற்று.
ஆண்டவரின் மாட்சி சீனாய் மலைமேல் தங்கிற்று" (விப
24:15-16), அவ்வாறே சாலமோன் கட்டிய ஆலயத்தையும் ஒரு மேகம்
நிரப்ப, ஆண்டவரின் மாட்சி ஆலயத்தை நிரப்பிற்று (1 அர
8:10-11). இயேசு கிறிஸ்து உயர்ந்த மலையில் தம் மூன்று
சீடர்களின் முன்பு தோற்றம் மாறியபோது, 'ஒளிமயமான மேகம்
வந்து அவர்கள் மேல் நிழலிட்டது" (மத் 17:1-5), எனவே,
விவிலியத்தில் மேகம் என்பது இறைப்பிரசன்னத்திற்கும் இறை
மாட்சிமைக்கும் அடையாளமாகத் திகழ்கிறது.
மரியா இறைவனின் ஆலயம். ஏனெனில் அவரிடத்திலும் இறைப்பிரசன்னமும்
இறைமாட்சிமையும் வெளிப்பட்டன. இயேசுவின் பிறப்பை மரியாவுக்கு
அறிவித்த வானதூதர் கபிரியேல் மரியாவிடம் கூறினார்: "உன்னத
கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்" (லூக் 1:35). எனவே,
விவிலியப் பார்வையில் மரியா இறைவனின் ஆலயம் என்பது
தெளிவாகிறது.
மரியாவைப் பற்றிய இறையியல் உண்மை நமக்கும் பொருத்தும்.
நாமும் கடவுளின் ஆலயம். "கடவுளின் கோவில் தூயது; நீங்களே
அக்கோவில் (1 கொரி 3:17), "உங்கள் உடல் ... தூய ஆவி தங்கும்
கோவில் என்ற தெரியாதா? உங்கள் உடலால் கடவுளுக்குப்
பெருமை சேருங்கள்" (1 கொரி 6:19-20),
நமது நாட்டு ஞானிகள் உடலை வெறுத்தனர். உடலைப் பொய் என்றும்,
புழுக்கூடு என்றும் வர்ணித்தனம், பொய்யான இவ்வுடலை
மெய் என்றழைப்பது தவறு என்கிறார் தாயுமானவர்,
"பொய்யெல்லாம் ஒன்றாகப் பொறுத்திவைத்த இப்புழுக்
கூட்டை மெய் என்றால் மெய்யாய் விடுமோ பராபரமே." ஆனால்
திருமூலர் உடலை உத்தமர் கோவில் என்றழைக்கிறார். "உடம்புள்ளே
உத்தன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யான் இருந்து
ஓம்புகின்றேனே" (திருமந்திரம் 705).
ஓர் இளம் பெண் தன் தோழியிடம், "அந்த கிஷோர் என் இதயத்தைத்
திருடிக்கொண்டு போய்விட்டான்" என்றதற்குத் தோழி அவளிடம்,
"ஜன்னல் வைத்த ஜாக்கெட் போடாதே என்ற நான் சொன்னேன், நீ
கேட்கவில்லை. இப்ப அவன் ஜன்னல் ஜாக்கட் வழியாக உன்
இதயத்தைத் திருடிக் கொண்டான்" என்றாள். நாம் நமது இதயத்தை
எவரும் ஆக்கிரமிக்காமல் அதைத் தூயதாக வைத்துக்கொள்ள
வேண்டும். மரியாவின் இதயம் எப்பொழுதும் தூயதாக இருந்தது.
ஏனெனில் அவர் கிறிஸ்துவின் பிறப்பை ஒட்டி நிகழ்ந்தவற்றைத்
தம் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தார் (லூக் 2:19).
"பாவத்திற்குக் கிடைக்கும் சம்பளம் (கலி) சாவு என்றால்
(உரோ 623), பாவத்திற்குப் போனஸ் உண்டா என்று ஒருவர் என்னிடம்
கேட்டபோது, அவர்க்கு தான் கூறிய பதில் "திச்சயம் உண்டு,
அதுதான் உயிர்க்கொல்லி தோயாகிய 'எய்ட்ஸ்' இன்று எய்ட்ஸ்
நோய்க்குப் பலர் பலியாகின்றனர். திருமணத்திற்கு
முந்தியும், திருமணத்திற்கு வெளியேயும் அவர்கள் தவறான
முறையில் உடலுறவு கொள்வதே 'எய்ட்ஸ்' நோயுக்குக் காரணம்,
உடல் பரத்தமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும்
உடலுக்கே உரியவர்" (1 கொரி 6:13).
ஞானம் நிறைக் கன்னியும் நாதனைத் தாங்கிய ஆலயமுமான மரியன்னை
தமது உடலையும் உள்ளத்தையும் பாவம் அனைத்திலுமிருந்து
பாதுகாத்து, கிறிஸ்து பிறப்பு விழாவைத் தக்க விதத்தில்
கொண்டாடத் துணைபுரிவாராக! கடவுளின் கோவில் தூயது நீங்களே
அக்கோவில் (1 கொரி 1:17)
மறையுரை
அருள்பணி. குழந்தை இயேசு பாபு சிவகங்கை
இறைவன் உறையும் ஆலயங்கள் ஆவோமா?
ஒரு ஏழைக் கிறிஸ்தவக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்
ஞாயிற்றுக் கிழமைகளில் கூட அவர்களுக்கு ஓய்வில்லை. வேலை
செய்தால் தான் அன்று அவர்களுக்கு உணவு. உடல் நிலை சரியின்றி
ஒரு நாள் வேலைக்குச் செல்லாவிட்டாலும் அவர் அனைவரும் அன்று
பட்டினிதான். ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இக்குடும்பத்தை
சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் ஞாயிற்றுக்கிழமை
கோயிலுக்குக் கூட போகாமல் அப்படி என்ன வேலை? கடவுள் பக்தி
இல்லாததால்தான் இவர்கள் வருமையில் வாடுகின்றார்கள் என்று
அக்குடும்பத்தார் காது படவே பேசினார்கள். ஒருநாள் அண்டை
வீட்டார் ஒருவர் அவ்வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது.சென்ற
அவருக்கு பெரும் வியப்பு. வேலைக்குச் சென்றுவிட்டு களைப்பாக
வந்த போதும் அவ்வீட்டார் ஒன்றிணைந்து ஜெபிப்பதைப்
பார்த்தார்.
முடிவில் சிறுவர் முதல் பெரியவர் வரை ஒருவர் மற்றவரிடம் ஆசிர்
பெற்றுச் சென்றனர். எதற்காக இப்பழக்கம் என்று கேட்ட போது
எங்களுடைய குடும்ப வறுமையும் வேலைப்பளுவும் எங்களை
கோவிலுக்குச் செல்ல அனுமதிக்காவிட்டாலும் கடவுள் எங்கள்
வீட்டிலும் எங்கள் ஒவ்வொருவரிலும் உறைகிறார் என நாங்கள் நம்புகிறோம்.
எங்கள் உள்ளத்தில் உறையும் இறைவனை தினமும் வணங்கிவிட்டு
வேலை செய்வதால்தான் எங்கள் பிரச்சினைகளையும் உங்களைப் போன்றவர்கள்
எங்களைப் பற்றிக் கூறும் வசைமொழியையும் எங்களால்
பொறுத்துக்கொள்ள முடிகிறது என்று சொன்னாரார்களாம்.
இன்றைய முதல் வாசகத்தில் தாவீது ஆண்டவருக்காக கோயில் கட்ட
விரும்பிய நிகழ்வை வாசிக்கிறோம். கடவுள் இறைவாக்கினர்
நாத்தான் வழியாக அவருடைய ஆசைக்கு ஆசி வழங்குவதையும் நாம்
வாசிக்கிறோம். அத்தோடு தாவீதுக்கு இறைவன் செய்த எல்லா வல்ல
செயல்களையும் அவர் நினைவு கூறும்படி எடுத்துக்கூறுகிறார்.
புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அரச குலத்தைச்
சாராத ஒரு சாதாரண மனிதனை தன் உடன்படிக்கை மக்களுக்கு தலைவனாக்கியதல்லாமல்
அவருடைய எதிரிகளையும் அழித்து புகழுறச் செய்தார் இறைவன்.
இவ்வாறு இறைவன் தகுதியற்றவர்களைத் தமக்கென அழைத்து அவர்களைத்
தகுதியாக்கித் தன் அழைத்தலின் மேன்மையை உணரச்செய்கிறார்.
நற்செய்தி வாசகத்தில் தூதர் வழியாக மரியாவுக்கு மங்கள
வார்த்தை சொன்னதை நாம் தியானிக்கிறோம். தாவீது கடவுளுக்காக
ஆலயம் கட்ட ஆசித்தார் என்றால் இங்கு அன்னை மரியா கடவுளின்
ஆலயமாகவே மாறும் நிகழ்வை நாம் காண்கிறோம். முதலில் இது எப்படி
நிகழும் எனத் தயங்கினாலும் ஆவியின் வல்லமையால் தூண்டப்பட்டு
இதோ ஆண்டவரின் அடிமை என்ற வார்த்தைகளைக் கூறி இறைவன் வாசம்
செய்யும் இல்லிடமாக முதல் நற்கருணைப் பேழையாக மாறுகிறார்
அன்னை மரியா
.
இந்நிகழ்வுகள் நமக்குக் கூறும் செய்தி நாமும் கடவுள் உறையும்
ஆலயங்களாக மாறவேண்டும். கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்குதல்
நமது வாழ்வுக்கு மிக மிக அவசியம். ஆனால் அதைவிட கடவுளின்
கோவிலாக நாமே திகழ்வதுதான் நமக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு
அழைப்பு. எவ்வாறு கடவுள் உறையும் கோவிலாக நாம் திகழ்வது?
அன்புடன் வாழ்வது வழியாகவும்,பகைமை பாராட்டாமல் மன்னிப்பதன்
வழியாகவும், தவறு செய்தாலும் மனம் மாறுவது வழியாகவும்,துன்பத்தில்
இருப்பவர்க்கு ஆறுதலும் தேறுதலும் தருவதன் வழியாகவும், பிறருக்கு
நம் சொல்லாலும் செயலாலும் நன்மையை மட்டுமே அளிக்கும்
போதும் நாம் கடவுள் உறையும் ஆலயங்களாக ஏன் அதையும் தாண்டி
கடவுளின் நடமாடும் உருவங்களாக மாறிவிடுகிறோம்.
இவற்றிற்காக நாம் வாய்ப்புக்களைத் தேடி அலையத் தேவையில்லை.
செய்ய இயலாத அளவுக்கு அவை மிகக் கடினமாக காரியங்களும் இல்லை.நம்முடைய
சுய நலத்தை சிறிதளவு குறைத்து நம் அன்றாட வாழ்வில் வரும்
வாய்ப்புக்களைப் பயன்படுத்த முயன்றாலே போதும். தான் சொகுச
அரண்மனையில் வாழ்ந்தால் போதும் என்று மட்டும்
நினைத்திருந்தால் தாவீதுக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற
விருப்பம் இருந்திருக்காது. தான் சந்திக்கப் போகும்
துன்பங்களை முன்னிறுத்தி இறைத்திட்டத்திற்குப்
பணியாதிருந்திருந்தால் உலகத்தை மீட்கும் மெசியா
பிறந்திருக்க மாட்டார். எனவே நாமும் நம் சுயநலன்களை சற்று
விலக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இறை ஆலயமாக வாழ நமக்குக் கிடைத்த அழைப்பே ஒரு நற்செய்தி.
இரண்டாம் வாசகத்தில் கூறப்பட்டது போல இந்நற்செய்திக்கு
ஏற்ப வாழ நம்மைத் தகுதிப்படுத்துவதில் கடவுள் வல்லவராய்
இருக்கிறார். கிறிஸ்து பிறப்பு விழாவை நெருங்கிக்
கொண்டிருக்கும் நாம் இவ்வழைப்பை ஏற்று இறைவன் உறையும்
இல்லங்களாக வாழ நம்மைத் தகுதிப்படுத்துமாறு இறைவனிடம்
அருள் வேண்டுவோம். நமது உள்ளக்குடிலில் இயேசு
பிறக்கட்டும்.
இறைவேண்டல்
அன்பே உருவான இறைவா நீர் எங்களுள் உறைய ஆவலாய்
இருக்கிறீர். நாங்களோ பல சமயங்களில் இதை உணராமல் எங்கள்
சுயநலப்போக்கினால் அன்றாட வாழ்வில் உமது ஆலயமாக வாழும்
வாய்ப்புக்களைத் தவற விடுகிறோம். எம்மை மன்னித்துத்
தகுதிப்படுத்தும். உமது உயிருள்ள ஆலயங்களாக எம்மை
மாற்றும். ஆமென்.
அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்
திருவருகைக் காலம் 4 ஆம் வாரத்தில் காலடி வைக்கின்றோம். ஆண்டவரின்
வருகைக்காக நம்மை நாமே எவ்வாறு தயார் செய்துள்ளோம்? நமது
கரடு முரடான வழிகளைச் செம்மையாக்கினோமா? நமது ஆன்மீக
வாழ்க்கையில் காணப்பட்ட ஏற்றத் தாழ்வுகளை ஆய்வு செய்து ஒளியான
இறைவனின் அருளைப் பெற்றுக் கொண்டோமா? மனம் மாற்றம் பெற்று
இறைவனுடன் ஒப்புரவு செய்து கொண்டோமா? நமது வாழ்க்கையில் இறைவனுக்கும்
அடுத்திருப்பவர்களுக்கும் எதிராக உள்ள பிளவுகளை சரி
செய்யும் போதுதான் ஆண்டவர் நம்மோடு இருப்பார் என்பது உண்மை.
இம்மானுவேலாகிய இறைவன் நம்மோடு நமது உள்ளத்தில் உள்ளார் என்பதை
உணர்ந்து நன்றாக அறிந்திருக்க வேண்டும். இறைமகன் இயேசு உண்மையில்
வாழ்கின்றார். அவரைக் அழைக்கும்போது உடனிருந்து செயலாற்றுபவர்.
அவருக்கு விருப்பமான செயல்களைச் செய்வதற்கு நமக்கு ஆவியானவரின்
துணை தேவை. திருப்பாடல் 127 முதல் வசனம் கூறுவது "
ஆண்டவரே
வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு
வீணாகும் என்று மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. ஆண்டவருக்காக
கட்டப்படும் ஆன்மீகம் அவருடைய துணையால்தான் கட்டி எழுப்ப
முடியும். மனித பலத்தால் கட்டப்பட்டால் அது கண்டிப்பாக கட்டமுடியாது.
இறைவன் கையில் நமது விருப்பத்தையும், வேண்டுதல்களையும்
விட்டுக் கொடுத்து அவருடைய வார்த்தையின்படி வளர வேண்டும்.
நமது விருப்பம் இறைவனுக்கு ஏற்றதாக இருக்கின்றதா? இறைவன்
நம்மோடு இருக்கின்றாரா? நமது குடும்பத்திலும், சமுதயாத்திலும்,
வாழ்க்கைச் சூழ்நிலையிலும் இறைவனுடைய அருள் பிரசன்னத்தை
உணர்கின்றோமா? இறைவாக்கினர் நாத்தான், ஆண்டவரின் தூதராகிய
கபிரியேல் கூறியது போல் ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார் என்று
மற்றவர்களிடம் கூறுகின்றோமா? அல்லது மற்றவர்கள் நம்மைப்
பார்த்து கூறுகின்றார்களா? சிந்திப்போம்.
இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் தன்னுடைய மீட்பின் திட்டத்தில்
இரண்டு மிகமுக்கியமான நபர்களின் வாழ்க்கையில் எவ்வாறு இறைவன்
செயலாற்றுகின்றார் என்பதை விளக்குகின்றது. இறைவனால் அபிசேகம்
செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட தாவீது அரசருடைய
வாழ்க்கையிலும், அன்னைமரியாளினுடைய வாழ்க்கையிலும் ஆண்டவர்
உடனிருந்து செயலாற்றினார் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்ற
உண்மையே. தாவீது அரசர் கேதுரு மரங்களாலான அரண்மனையில் தான்
மட்டும் வாழ்வதை உணர்கின்றார் ஆனால் இறைவனுடைய பேழையோ கூடாரத்தில
குடியிருக்கின்றது என்று வருத்தத்துடன் இறைவாக்கினர்
நாத்தானை நோக்கி கேட்கின்றார். அப்போதுதான் அவர் தாவீது
அரசரிடம் கூறுகின்றார் "
நீ விரும்பியது அனைத்தையும்
செய்துவிடும் ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார் என்று
கூறுகின்றார். தாவீது அரசர் இறைவனுக்கு ஆலயம் எழுப்ப
விரும்புகின்றார் ஆனால் இறைவன் இறைவாக்கினர் நாத்தான்
வழியாக ஒரு வார்த்தைக் கூறுவதைக் சற்று கவணிப்போம். நீ
சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன் என்று. இதற்கு அர்த்தம்
தான் ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார். இறைவாக்கினர் மோசேயிடமும்,
யோசுவாவிடமும் இறைவன் கூறியதும் இதுதான். எனது பிரசன்னம்
உன்முன்பாகச் செல்லும். உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ
செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன் என்று வாக்கு தருகின்றார்.
மேலும் திருவெளிப்பாடு நூல் அதிகாரம் 21, 3 ஆம் இறைவசனம்
கூறுவது, "
இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது.
அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவரகள் அவருக்கு மக்களாய்
இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார், அவரே அவர்
களுடைய கடவுளாய் இருப்பார் "
என்று. தாவீது அரசர்
விரும்பினாலும் அவரால் இறைவனுக்கு ஆலயம் எழுப்பமுடியவில்லை
ஆனால் ஆண்டவரே சாலமோன் வழியாக ஆலயத்தைக் கட்டி எழுப்பினார்.
இறைவனின் திருவுளம் வேறு மனிதனின் திருவுளும் வேறு என்பதை
இதனால் அறியமுடிகின்றது.
அன்னை மரியாள் இம்மானுவேலாகிய இறைவனை தனது உதரத்திலே
தாங்கி இறைவனுக்கு ஆலயமாக விளங்கினார். ஆண்டவரின் தூதர் இவ்வாறு
கூறுகின்றார், அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு
இருக்கின்றார் என்று வாழ்த்துகின்றார். அன்னை மரியாள் இறைவனுடைய
அருளைக் கண்டடைந்துள்ளார். உன்னத இறைவனின் வல்லமையால் நிழலிட்ட
தூய்மை நிறைந்த அன்னை. அவர் பெற்றெடுக்கும் குழந்தைக்கு இயேசு
என்னும் பெயரிடுவீர் என்றும். அவருடைய ஆட்சி முடிவே இராது
என்று கூறகின்றார். அன்னை மரியாள் இறைவனுடைய அழைப்பை தயங்காமல்
ஏற்று, அவருடைய திருவுளத்திற்கு அடிபணிந்து, மீட்பரை உலகிற்கு
தந்தவர். அன்னை மாியாள் இறைவனிள் அருளைப் பெற்றிருந்தாலும்
பலவகையான இன்னல்களுக்கும் அவமானங்களுக்கும் ஆளாகி இறுதியில்
வெற்றி பெற்று பரலோக பூலோக ராணியாக விளங்குகின்றார். அன்னை
மரியாள் அருள்நிறைந்த உறைவிடமாக இருந்தது போல் நானும் நீங்களும்
இன்று வாழவேண்டும். மனம் என்னும் குகையில் இம்மானுவேலாகிய
இறைவன் குடிகொண்டிருக்க வேண்டும். அப்போது அமைதியும் அன்பும்
நம்மில் வளரும்.
இறைவனின் உருவத்தை பெற்றுள்ள நாம் அனைவரும் இறைவன் வாழும்
கோவில் என்று இறைவார்த்தை கூறுகின்றது. இந்த புனிமான
கோவிலை அருட்சாதனங்கிளின் வழியாக அலங்காரம் செய்து இம்மானுவேலனாகிய
இறைவனை வரவேற்க வேண்டும். இன்று நம்மைக் காணும் பிறர் எப்பொழுதாவது
கூறியிருக்கின்றார்களா? ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார்.
நீங்கள் கடவுளின் அருளைக் கொண்டுள்ளீர்கள் என்று.
சிந்தித்து செயலில் இறங்குவோம். காலம் தாழ்த்த வேண்டாம்.
இறைவன் நம்மோடு இருக்கும் போது நம்மால் அனைத்தும் செய்ய
முடியும். குயவன் கையிலுள்ள களிமண்ணைப்போல நாம் அனைவரும்
இறைவன் கையில் இருந்தால் அவர் நம்மை அவருடைய விருப்பம்போல்
உள்ள கலமாக மாற்றி அமைப்பார். இறைமகன் இயேசுவின் பிறப்பபை
கொண்டாடுவதற்கு முன்பு முதலில் உள்ளார்ந்த மாற்றத்தைப்
பெற்று இறைவன் வாழும் கோவிலாக நம்மை கட்டி எழுப்ப அவரிடம்
முழுமையாக சரணடைவோம்.
என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன், மதிப்புமிக்கவன்.
நான் உன்மேல் அன்பு கூர்கிறேன். எசாயா 43:4a
தானியேல் லார்டு என்பவர் ஒரு கத்தோலிக்கக் குருவானவர். புகழ்பெற்ற
பல புத்தகங்களுக்கு ஆசிரியர். இளைஞர் நலனுக்காக
வாழ்நாளெல்லாம் தன்னையே அர்ப்பணம் செய்தவர். 1954 ஜனவரி
இவரது 66வது வயதில் இவருக்குப் புற்றுநோய். இன்னும் சில மாதங்களில்
இவர் இறந்து விடுவார் என்பது நிச்சயமானது. இந்தச் செய்தி
கேட்டு உலகமே அதிர்ச்சி அடைந்தது. ஆனால் அவரது முகமோ அதிர்ச்சியின்
ரேகை எதுவும் படராமல் அமைதி பூத்தது. வானொலி நிலையத்திலிருந்து
நேர்முகம் காண வந்த நிருபர் ஒருவர் "தந்தையே, உங்கள் பணியால்
வளம் பெற்ற இளைஞர் உலகுக்கு இறுதியாக ஏதாவது அறிவுரை
சொல்லுங்கள். ஒலிபரப்பக் காத்திருக்கிறோம் என்றனர்.
இறைவன் தமது இரக்கப் பெருக்கத்தால் எனக்கு என் மரணத்தை
முன்னறிவித்திருக்கிறார். சிந்திப்பதற்கும், செபிப்பதற்கும்
வாழ்க்கைக் கணக்கைச் சரிசெய்வதற்கும் முடியாத வேலைகளை
யெல்லாம் முடிப்பதற்கும் எனக்கு அவகாசம் தந்துள்ளார் என்று
கூறினார் அந்தக்குரு.
மரணத்தைச் சந்திக்கும் மனப்பான்மை, நோயை பிணியை - துன்ப
துயரத்தைப் பார்க்கின்ற பக்குவம், இறைவனின் திருவுளத்தை ஏற்றுக்
கொள்ளும் பாங்கு.... எவ்வளவு வியப்புக்குரியது! ஆபிரகாம்,
அன்னை மரியா இவர்கள் வாழ்வில் வெளிப்பட்ட எளிய விசுவாசத்தின்
ஏற்றமிகு பிரதிபலிப்பு!
ஒரு சமயம் சீனர்களுக்கும் உரோமையர்களுக்குமிடையே சித்திரப்
போட்டி ஒன்று நடைபெற்றது. போட்டிக்கான நாட்களைக்
குறிப்பிட்டு இருசாராருக்கும் ஒரே அறையில் நேருக்குநேர் எதிரான
இரு சுவர்களை ஒதுக்கியிருந்தார்கள். ஒரு சாரார் வரைவதை இன்னொரு
சாரார் பார்க்க முடியாதபடி இடையே திரை ஒன்றைத் தொங்க
விட்டிருந்தார்கள். இரு நாடுகளிலும் உள்ள திறன் வாய்ந்த ஓவியர்கள்
வரிந்து கட்டிப் போட்டியில் இறங்கினர்.
இறுதிநாள் நெருங்கியது. அதற்கு முந்திய நாளிலேயே உரோமையர்
அழகுமிக்க அற்புதமான ஓவியத்தை வரைந்து முடித்திருந்தார்கள்.
சீனர் இன்னும் வரையவே தொடங்கவில்லை. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட
சுவரை மெருகேற்றிக் கொண்டிருந்தார்கள். கண்ணாடி போல் பளபளப்பாக்கிக்
கொண்டிருந்தார்கள்,
தீர்ப்பு நாள். நடுவர்கள் உள்ளே நுழைந்தனர். உரோமையர்கள்
வரைந்திருந்த ஓவியத்தைக் கண்டனர். வியப்பில் வாய் பிளந்து
நின்றனர். பின்னர் சீனர்களின் ஓவியத்தைக் காண அவர்களுக்கான
பகுதிக்குள் சென்றனர். அதே நேரத்தில் சீனன் ஒருவன் நடுவே
தொங்கிய திரையை அறுத்து விட்டான். திரை கீழே விழுந்தது. நடுவர்கள்
பார்த்தார்கள். சீனர்களுக்கே பரிசு என்று முடிவு செய்தார்கள்.
பரிசுக்குரிய ஓவியமாக சீனர்கள் அப்படித் தீட்டியிருந்தது
என்ன? எதுவுமில்லை. உரோமர்களின் அழகான, கற்பனை வளமான,
சித்திரம், நேர் எதிரே இருந்த, சீனர்கள் கண்ணாடி போல்
பளபளப்பாக்கி இருந்த சுவரில் மின்னிப் பிரதிபலித்தது. மூல
ஓவியத்தைவிடச் சிறப்பாக மெருகேறிப் பொலிந்தது.
மாமரி வாழ்க்கையின் வெற்றிக்கான இரகசியமே இதுதான். திட்டமிடுவதும்
வாழ்க்கை ஓவியம் தீட்டுவதும் இறைவனே! ஓவியச் சுவரான நம்
வாழ்வை மெருகேற்றுவதும் பளபளப்பாக்குவதுமே நமது வேலை.
அன்னை மரியா வாழ்நாளெல்லாம் இதையே செய்தாள். நல்ல மனித
வாழ்க்கை என்பது இறைத்திட்டத்திற்கு 'ஆம்' என்பதுதானே! மரியா
சொன்ன 'ஆம்': நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு
நிகழட்டும்" (லூக்.1:38) இயேசு சொன்ன 'ஆம்' : என் விருப்பப்படி
அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும் (லூக்.22:42)
கடவுளுக்காக என்று எதையெல்லாமோ செய்யத் திட்டமிடு கிறோம்;
செய்து திருப்தி அடைகிறோம். மகத்தானது என்று நினைத்துக்
கடவுளுக்காகச் செய்யும் செயல்பாடு கூட கடவுளுக்கு விருப்பமற்றதாக
இருக்கலாம். மன்னன் தாவீது கடவுளுக்கு ஆலயம் கட்ட
விரும்பினார். இதை அறிந்த இறைவன் "நீயா நான் தங்குவதற்காக
ஒரு கோவில் கட்டப் போகிறாய்?" என்று கேட்கிறார். புரியாமல்
குழம்பிய தாவீதுக்கு, பிறகு இறைவன் பதில் தருகிறார்: நாமே
உன் வீட்டைக் கட்டி எழுப்புவோம்".
கட்டப்பட வேண்டியது நமது வீடு, நமது வாழ்வு, நமது சமுதாயம்
- இறைவனின் ஆலயம் அன்று. அதையும் கட்டுவது இறைவனே. நாம் அல்ல.
உடனுழைக்கும் பெருமை மட்டுமே நமக்கு!
நாம் சொல்ல வேண்டியதெல்லாம் ஆகட்டும் என்பதுதான். தாயின்
வயிற்றிலிருந்து வெளிவரும் போதே ஒவ்வொரு குழந்தையும் வாழப்போகும்
தனது வாழ்க்கைக்கு 'ஆம்' சொல்லிக் கொண்டே தான் வெளிவருகிறது
என்கிறார் உளவியல் அறிஞர் யூஜின் கென்னடி, இந்த 'ஆம்'
வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் - அனைத்து நிகழ்வுகளிலும்,
அனுபவங்களிலும் மனிதர்களிலும், நன்மை தீமை இரண்டாலும் அதிகம்
பாதிக்கப்படாமல், அவை இரண்டும் அடிமையாக்கிவிடாமல் அதனையும்
சமாளிக்கச் சவால் விடுக்கும் வீர அழைப்பே இந்த ஆம்'.
ஆகட்டும் என்றார் கடவுள்; உலகம் பிறந்தது!
ஆகட்டும் என்றார் மரியா; இயேசு பிறந்தார்!
ஆகட்டும் என்றார் இயேசு; மீட்புப் பிறந்தது!
ஆகட்டும் என்போம் நாம், புதிய சமுதாயம் பிறக்கும்!
சிந்தனைப் பயணம்:
அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச
வாழ்வை மாற்றும் தருணம்!
இன்று இரவு, நாம் கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.
பிறக்கவிருக்கும் தெய்வீகக் குழந்தையை வரவேற்க
காத்திருக்கும் இவ்வேளையில், நாசரேத்தைச் சேர்ந்த இளம்
பெண் மரியாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வைச்
சிந்திக்க அழைக்கப்படுகிறோம். மரியாவின் வாழ்க்கையில் நடந்த
அந்நிகழ்வு, அவரது தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமல்ல, மனித
வரலாற்றையே புரட்டிப்போட்ட ஒரு தருணம்.
வாழ்வைப் புரட்டிப்போட்ட நிகழ்வுகள் பலருக்கு ஏற்பட்டிருக்கும்.
அவர்களில் ஒருவர், பிரான்ஸ் நாட்டின் Strasbourg நகரில்,
இறையியல் பேராசிரியராகவும், புகழ்பெற்ற இசைக்கலைஞராகவும்
வாழ்ந்தவர். ஒரு நாள் மாலையில், அந்த இளம் பேராசிரியர், தன்
அறையில் அமர்ந்து, அன்று தனக்கு வந்திருந்த கடிதங்களைப்
பிரித்துக்கொண்டிருந்தார். இறையியலிலும், இசையிலும்
மேதையாக விளங்கிய அந்த இளம் பேராசிரியருக்கு, பாராட்டுக்களும்,
அழைப்புக்களும் கடித வடிவில் வந்திருந்தன. அந்தக் கடிதக்கட்டில்,
ஒரு மாத இதழும் வந்திருந்தது. அந்த மாத இதழ், வேறு ஒருவருக்குச்
செல்லவேண்டிய இதழ். தவறுதலாக, இந்த இளம் பேராசிரியரின் கைகளுக்கு
வந்து சேர்ந்தது. அந்த இதழின் பக்கங்களைப் புரட்டிக்
கொண்டிருந்தபோது, ஒரு கட்டுரை, இளையவரின் கவனத்தை ஈர்த்தது.
"காங்கோ பணித்தளத்தின் தேவைகள்" என்று தலைப்பிடப்பட்டிருந்த
அந்த கட்டுரையை அவர் வாசித்தபோது, பின்வரும் வரிகள் அவரைக்
கட்டியிழுத்தன: "இங்கு தேவைகள் மிக அதிகம். மத்தியக்
காங்கோவின் கபோன் (Gabon) மாநிலத்தில் பணியாற்ற ஒருவரும்
இல்லை. நான் இக்கட்டுரையை எழுதும்போது, என் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும்
செபம் ஒன்றே... கடவுள் ஏற்கனவே தேர்ந்துள்ள ஒருவர், இந்த
வரிகளை வாசிக்கவேண்டும், அதன் விளைவாக, அவர் எங்களுக்கு
உதவிசெய்ய இங்கு வரவேண்டும்." கட்டுரையின் இந்த வரிகளை
வாசித்த அந்த இளம் பேராசிரியர், மாத இதழை மூடினார். பின்னர்,
தன் "
டயரி"
யைத் திறந்து, "என் தேடல் முடிவுற்றது" என்று எழுதினார்.
வாழ்வில் நாம் பல தேடல்களில் ஈடுபடுகிறோம். அத்தேடல்களுக்கு
பல்வேறு வழிகளில் விடைகள், தீர்வுகள் வந்து சேருகின்றன. இந்தத்
தீர்வுகள், பல வேளைகளில் நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத
வடிவத்தில் வந்து சேருவதையும் நாம் உணர்ந்திருக்கிறோம்.
இளம் பேராசிரியரின் முகவரிக்கு வராத ஒரு மாத இதழ்; அவ்விதழின்
ஏதோ ஒரு பக்கத்தில் வெளியான ஒரு கட்டுரை; அக்கட்டுரையில்
பதிந்த அவரது கவனம்... இவை யாவும் எதேச்சையாக நடந்தனவா? இல்லை
என்றே சொல்லத் தோன்றுகிறது.
இயேசு, தன் பணிவாழ்வை 30வது வயதில் துவக்கியதுபோல், தானும்
30வது வயதில், தனக்காக அல்ல, அடுத்தவருக்காக வாழ முயற்சிகள்
எடுக்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் வாழ்ந்து வந்தார் அந்த
இளம் பேராசிரியர். அவர் எடுத்திருந்த தீர்மானத்தின்மீது தன்
முத்திரையைப் பதிக்க, இறைவன், அந்த மாத இதழ் வழியே அவரைச்
சந்திக்க வந்தார். அந்த இதழை அவர் வாசித்தபோது அவருக்கு
வயது 30. அந்த இளம் பேராசிரியரின் பெயர், Albert
Schweitzer. அவரது வாழ்வின் எஞ்சிய 60 ஆண்டுகளை, அவர் ஆப்ரிக்காவில்,
வறிய மக்கள் நடுவே உழைப்பதற்கென அர்ப்பணித்தார்.
அம்மக்களின் முக்கியத் தேவை, மருத்துவ உதவி என்பதை அறிந்த
ஆல்பர்ட் அவர்கள், அடுத்த ஏழு ஆண்டுகள் மருத்துவப் படிப்பை
மேற்கொண்டார். இறையியலிலும், இசையிலும் பல புகழ் உச்சிகளை
அடைந்திருந்த ஆல்பர்ட் அவர்கள், அந்தச் சிகரங்களிலிருந்து
இறங்கி, யாருக்கும் தெரியாத ஆப்ரிக்கக் காட்டில் தன் மருத்துவப்
பணிகளைத் துவக்கினார். இதுவே, இறைவன் தனக்குத் தந்த தனிப்பட்ட
அழைப்பு என்பதை அவர் முற்றிலும் உணர்ந்தார்.
இறைவன் தந்த அழைப்பு, அந்த அழைப்பு, வாழ்வில் உருவாக்கியத்
தலைகீழ் மாற்றங்கள், அந்த மாற்றங்களைத் தொடர்ந்து வந்த பல
சவால்கள், துன்பங்கள்... என்ற கோணங்களில், மருத்துவர்
Albert Schweitzer அவர்களின் வாழ்வை எண்ணிப்பார்க்க நம்மைத்
தூண்டுவது, இன்றைய நற்செய்தி. நாசரேத்து என்ற கிராமத்தில்,
மரியா என்ற ஓர் இளம்பெண்ணுக்கு இறைவன் தந்த அழைப்பு, இன்றைய
நற்செய்தியாகத் (லூக்கா 1:26-38) தரப்பட்டுள்ளது.
உலக மீட்பர் பிறக்கப்போகிறார் என்று வானதூதர் கபிரியேல் அன்று
சொன்ன செய்தியும், அதற்கு இளம்பெண் மரியா "
ஆகட்டும்"
என்று
சொன்ன பதிலும், இன்று மீட்பின் வரலாறாக, நற்செய்தியாக
மாறியுள்ளன. எந்த ஒரு வரலாற்று நிகழ்வும் புத்தகத்தில் பதியும்போது,
அந்த நிகழ்வின் அருமை, பெருமைகள் மட்டுமே நம் கண் முன் அதிகம்
தோன்றும். அந்நிகழ்வின் பின்புலத்தில் உருவான காயங்கள்
பெருமளவு மறக்கப்படும்; அல்லது, மறைக்கப்படும்.
விவிலியத்தில் பதிந்துள்ள வரலாற்று நிகழ்வுகளை நாம் திருப்பலியில்
வாசகங்களாக வாசிக்கும்போது, மேன்மை, புனிதம் போன்ற உணர்வுகள்
அதிகம் மேலோங்குவதால், அந்நிகழ்வுகளின் வேதனைகள், காயங்கள்
ஆகியவற்றை நாம் மறந்துவிட வாய்ப்புண்டு. அதனால்தான் இன்று
நாம் இப்பகுதியின் இறுதியில், துணிவோடு, "இது இறைவன் வழங்கும்
நற்செய்தி" என்று சொன்னோம். ஆனால், ஆழமாகச் சிந்தித்தால்,
வானதூதர் கபிரியேலுக்கும், இளம்பெண் மரியாவுக்கும் இடையே,
இந்த நிகழ்ச்சி நடைபெற்ற வேளையில், இது நற்செய்தியாக இருந்திருக்க
முடியாது என்பதை உணர்வோம்.
கிறிஸ்மஸ் விழா நெருங்கிவரும் நாட்களில், பல பள்ளிகளில்,
பங்குத்தளங்களில் கிறிஸ்மஸ் நாடகங்கள் அரங்கேறும். நடிப்பவர்கள்
பெரும்பாலும் குழந்தைகள் என்பதால், நாம் இரசிப்போம்,
சிரிப்போம். இந்த நாடகங்களில், மரியாவுக்கு வானதூதர்
தோன்றுவது, மரியா எலிசபெத்தைச் சந்திப்பது, பின்னர்,
மாட்டுத் தொழுவம், இடையர், மூவேந்தர் என்று... அரை மணி நேரத்தில்
அழகழகான காட்சிகள் தோன்றி மறையும். இவற்றைப்
பார்க்கும்போது மனம் மகிழும். குறிப்பாக, மங்களவார்த்தை
சொல்லப்பட்ட அந்தக் காட்சியில், மரியாவுக்கு வானதூதர்
செய்தியைச் சொன்னதும், மரியா உடனே பணிந்து, 'ஆகட்டும்' என்று
சொல்வதுபோலவும், வானதூதர் சென்றதும், அவர் தன் வீட்டிலோ,
அல்லது, எலிசபெத்து வீட்டிலோ, 'என் ஆன்மா இறைவனைப் புகழ்கிறது'
என்ற பாடலை நடனமாடுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
மரியாவின் புகழ்பாடலைக் கேட்டு மனம் மகிழ்வோம்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன், ஒரு கிறிஸ்மஸ் நாடகம் முடிந்து
திரும்பிவரும் வழியில், ஒரு நண்பர் திடீரென, "முதல் கிறிஸ்மஸ்
இவ்வளவு அழகாக, மகிழ்வாக இருந்திருக்குமா?" என்று
கேட்டார். அந்தக் கேள்வி என்னைச் சிந்திக்க வைத்தது. வரலாற்றில்
நடந்த முதல் கிறிஸ்மஸ் எப்படி இருந்திருக்கும்? இவ்வளவு
அழகாக, சுத்தமாக, மகிழ்வாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில்,
அந்தச் சூழல் அப்படி. அந்தக் கொடுமையானச் சூழலைப்பற்றி பல
கோணங்களில் பேசலாம். நமது இன்றைய சிந்தனைக்கு, ஒரே ஓர் அம்சத்தைப்பற்றி
சிந்திப்போம்.
யூதேயா முழுவதும் உரோமைய அடக்குமுறை, அளவுக்கதிகமாக மக்களை
வதைத்து வந்தது. இந்த அடக்கு முறையை நிலைநாட்ட, உரோமைய அரசு,
படைவீரர்களை அதிகம் பயன்படுத்தியது. அடுத்த நாட்டை அடக்கியாளச்
செல்லும் படைவீரர்களால் அதிகம் பாதிக்கப்படுவது, அந்நாட்டில்
வாழும் பெண்கள். பகலோ, இரவோ, எந்நேரத்திலும், இப்பெண்களுக்கு,
படைவீரர்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம்.
ஆப்கானிஸ்தான், ஈராக், வியட்நாம், பல இலத்தீன் அமெரிக்க
நாடுகள் என 68 நாடுகளை, அமெரிக்க ஐக்கிய நாட்டு படைகளும்,
ஐரோப்பிய படைகளும் ஆக்ரமித்தபோது, அந்நாட்டுப் பெண்களுக்கு
ஏற்பட்ட ஆபத்துக்களை முற்றிலும் அறிய வாய்ப்பில்லை.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்தவர், இளம் கிராமத்துப்
பெண் மரியா. சொந்த நாட்டிலேயே இரவும் பகலும் சிறையில் வதைக்கப்பட்டதைப்போல்
உணர்ந்த மரியா, "இந்த அவல நிலையிலிருந்து தப்பிக்க ஒரு
வழியைக் காட்டமாட்டாயா இறைவா?" என்று தினமும் வேண்டுதல்களை
எழுப்பி வந்திருப்பார். அவரது வேண்டுதல்களுக்கு, இறைவன்
விடை அளித்தார். மணமாகாத மரியாவை, இறைவனின் தாயாகும்படி அழைத்தார்.
இது அழைப்பு அல்ல. தீர்ப்பு. மரணதண்டனைத் தீர்ப்பு. மணமாகாத
இளம் பெண்கள் கருவுற்றால், அவர்களை ஊருக்கு நடுவே இழுத்துவந்து,
கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்பது யூதர்களின் சட்டம்.
இதை நன்கு அறிந்திருந்தார் மரியா. தன் தோழிகளில் ஒரு சிலர்,
உரோமையப் படை வீரர்களின் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகி,
கருவுற்று, ஊருக்கு நடுவே கல்லால் எறியப்பட்டு இறந்ததை மரியா
பார்த்திருப்பார். அதையொத்த ஒரு நிலைக்கு தான் தள்ளப்படுவதை
மரியா உணர்ந்தார். மணமாகாத தன்னை, தாய்மை நிலைக்கு கடவுள்
அழைத்தது, பெரும் இடியாக மரியாவின் செவிகளில் ஒலித்திருக்கும்.
இறைவன் தந்த அந்த அழைப்பிற்கு சரி என்று சொல்வதும், மரணதண்டனையைத்
தனக்குத் தானே வழங்கிக் கொள்வதும், விருப்பப்பட்டு
தூக்குக் கயிறை எடுத்து, கழுத்தில் மாட்டிக் கொள்வதும்...
எல்லாம் ஒன்றுதான். இருந்தாலும், அந்த இறைவன் மேல் அத்தனை
அதீத நம்பிக்கை அந்த இளம் பெண்ணுக்கு. 'இதோ உமது அடிமை' என்று
சொன்னார் மரியா. தன் வழியாக, தனது சமுதாயத்திற்கும், இந்த
உலகிற்கும் மீட்பு வரும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்த மரியா,
அந்த வாய்ப்புடன் வந்த பேராபத்தில் இறைவனின் உதவி தனக்குக்
கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 'ஆகட்டும்' என்று பதில்
சொன்னார். பெரும் போராட்டத்திற்குப் பின் வந்த பதில் அது.
இன்று நாம் வாசித்த நற்செய்தியின் இறுதியில், "
நான் ஆண்டவரின்
அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்"
(லூக்கா 1:38) என்று
மரியா சொல்லும் அந்த வார்த்தைகளே, இந்த முழுப் பகுதியையும்
நற்செய்தியாக மாற்றியுள்ளன. இந்த நம்பிக்கை சொற்கள் இல்லையெனில்,
இன்றைய விவிலியப் பகுதியை "
நற்செய்தி"
என்று சொல்வது மிகக்கடினம்.
மரியா சொன்ன 'அப்படியே ஆகட்டும்' என்ற இந்த அற்புத
வார்த்தைகள் இத்தனை நூற்றாண்டுகளாக பலருக்கு, பல வழிகளில்
நற்செய்தியாக ஒலித்துள்ளன.
உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு கொடுமைகள் நாள்தோறும்
அரங்கேறிய வண்ணம் உள்ளன. அநீதிகளாலும், கொடுமைகளாலும்
நொறுக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில், அனைவருமே, அத்துயரங்களைக்
கண்டு துவண்டுபோகாமல், அவர்களில் ஒருவர் எடுக்கும் துணிவான
ஒரு முடிவு, அந்த சமுதாயத்தின் வரலாற்றையே மாற்றியுள்ளது
என்பதற்கு, இளம் கிராமத்துப் பெண் மரியா, ஓர் எடுத்துக்காட்டு.
மரியாவுக்கு இந்தத் துணிவை அளித்தது, அவரது சொந்த சக்தி அல்ல,
மாறாக, இறைவன் மட்டில் அவர் கொண்டிருந்த ஆணித்தரமான, அசைக்கமுடியாத
நம்பிக்கை.
இதேபோல், தன் தனிப்பட்ட வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து,
அதனால் மனம் வெறுத்து, கொடியப் பழக்கங்களுக்கு அடிமையாகி
இருக்கும் ஒருவர், ஆண்டவன் தரும் ஆயிரம் அழைப்புக்களில் ஒரே
ஓர் அழைப்பை உணர்ந்து, 'ஆகட்டும்' என்று ஆண்டவனிடம் சரண்
அடையும்போது, அங்கும் புதிய சக்தியும், விடுதலையும் பிறக்கும்.
தனிப்பட்ட வாழ்வானாலும் சரி, சமுதாய வாழ்வானாலும் சரி, நமக்குத்
தேவை, இறைவனிடம் சரணடையும் பணிவு; தகுந்த முடிவுகள் எடுக்கும்
துணிவு. வானதூதர் மரியாவைச் சந்தித்த அந்நிகழ்வில் காணப்படும்
பணிவையும், துணிவையும், இந்த கிறிஸ்மஸ் காலத்திலும், புலரும்
புத்தாண்டிலும், நாம் அனைவரும் பெறுவதற்கு, அன்னை மரியாவின்
பரிந்துரையோடு இறைவனை மன்றாடுவோம்.