இன்று நாம் இயேசுவின் விண்ணேற்பு விழாவைக் கொண்டாடுகிறோம். இயேசு
மண்ணுலக வாழ்வை முடித்துவிட்டு விண்ணகம் செல்கின்றார். நாமும் உயர
வேண்டும் பிறரையும் உயர்த்த வேண்டும் என்பதை, விண்ணேற்பு விழா விளக்குகிறது.
இதைத் தான் இயேசு பிறந்தது முதல் இறந்து, உயிர்த்து விண்ணகம்
செல்லும் வரை
போதித்தும், சாதித்தும் காட்டிச் சென்றார்.
எவ்வாறு பாடுகளுக்கு முன் 40 நாள் தியானத்துடன் பாடுகளை ஆரம்பித்தாரோ
அவ்வாறே உயிர்த்த பின் 40- நாள் மகிழ்ச்சியுடன் சீடர்களைத் திடப்படுத்தி
விண்ணேற்றம் அடைந்தார்.
இயேசு விண்ணகம் சென்றுவிட்டார் என்றால், அவர் இன்று நம்முடன் இல்லை
என்று அர்த்தமில்லை. மாறாக உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களோடு
இருக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.
விண்ணகம் என்பது உயர்ந்த இடம்;. உயர்ந்த செயல்களை செய்தவர்கள் மட்டுமே
இடம் பெறக்கூடிய இடம். உயர்வான செயல்களை செய்து இயேசு அந்த உயர்ந்த
இடத்திற்கு சென்றார். தான் சென்ற இடத்திற்கு தாம் நேசிக்கும் மக்களும்
வர வேண்டும் என ஆசிக்கிறார்.
விண்ணகம் செல்ல வழிகாட்டும் உயர்ந்த செயல்கள் எவை என நமக்குச்
சொல்லிக் கொடுக்கிறார்.
விண்ணேற்றம் அடைந்த இயேசு, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம்
நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" என்கிறார்.
அவரின் வார்த்தையை அறிவித்து அவரை மகிமைப்படுத்துவது நம் ஒவ்வொருவரின்
கடமையாகும். நமது வாழ்க்கை நிலைக்கு ஏற்றபடி நாம் நற்செய்திப் பணியில்
ஈடுபடுவோம்.
மேலும் "உலகின் கடையெல்லைவரை எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள்" என்கிறார்.
நாம் தரம் உயர்ந்த கிறிஸ்துவர்களாக வாழ்ந்து, நமது வார்த்தையாலும்,
வாழ்க்கையாலும், பிறரை அன்பு செய்வதன் வழியாகவும் கிறிஸ்துவை உலகம்
அறிந்து கொள்ளுமாறு கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வோம்.
விண்ணேற்பின் வல்லமையை புரிந்து கொள்வோம்!
விண்ணேற்பின் சக்திகளாக வாழ்ந்து காட்டுவோம்!
விண்ணேற்பின் பலனை இப்பலியில் வேண்டுவோம்!
1.கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்ப
திருத்தொண்டர்களை ஏற்படுத்திய இறைவா!
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர்,
பொதுநிலையினர் ஆகிய அனைவரும் கிறிஸ்துவிடம் காணப்பட்ட
நிறைவான ஆற்றலையும், நம்பிக்கையும் பெற்று கிறிஸ்துவிடம்
உடலாகிய திருச்சபையை நன்முறையில் அமைத்து வழி நடத்திட
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2.நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்
என்று மொழிந்த இறைவா!
எம் தேசத்தை வழிநடத்தும் நாட்டுத்தலைவர்கள்,
சமூகத்தலைவர்கள் அனைவரும் தூயஆவி அருளும்
ஒருமைப்பாட்டைப் பெற்று முழுமனத்தாழ்மையுடனும்,
கனிவோடும், பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன்
தாங்கி தங்கள் அழைப்புக்கேற்ப வாழ இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
3.படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்
என்று மொழிந்த இறைவா!
உம் மீட்புப் பணியை உலகில் ஆற்றவும், உம் நற்செய்தியை
பறைசாற்றவும் தன்னை ஒரு கருவியாக அர்ப்பணித்துக் கொண்ட
எம் பங்குத் தந்தைக்கு பொறுமையையும், இரக்கத்தையும்
கொடுத்து துறவற வாழ்வில் உமக்கேற்றபடி உண்மையாக வாழ
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. பல தெளிவான சான்றுகளால் உயிர்ப்பை உறுதிப்படுத்திய
இறைவா!
எங்களுக்காக மரித்து, உயிர்த்து, விண்ணேற்றம் அடைந்த
உம்மை நாங்கள் பற்றிக்கொண்டு உம்மை விட்டு நீங்காமல்,
முழுநம்பிக்கையுடன் உம்மிடம் நாங்கள் கேட்டறிந்த
தந்தையின் வாக்குறுதியும், உமது இரண்டாம் வருகையும்
நிறைவேறும் வரை அதனை நாங்கள் எதிர்நோக்கிக்
காத்திருக்க வரம்வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5.நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ
அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று மொழிந்த இறைவா!
எம் பங்கின் இளைஞர், இளம்பெண்களையும், குழந்தைகளையும்
ஆசீர்வதியும். இளமை துள்ளும் இக்காலத்தில் உலக
மாயைகளுக்கு அவர்கள் இடம்தராமல் எல்லாருக்கும்
மேலானவரும், எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவருமான
தந்தையிடம் நம்பிக்கை கொண்டு அவர் அருளைப் பெற்று
உலகின் கடையெல்லைவரை உமக்கு சாட்சிகளாய் இருக்க தூய
ஆவியின் துணைவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
புனிதமிக்க துறவி ஒருவர் ஒரு மலையில்
குகையொன்றில் வந்து புதிதாக குடியேறினார். விண்ணகத்தில் இருந்து
அவர் வந்திருக்கிறார் என்றும், விண்ணகம் செல்வதற்கு
வழிகாட்டுகின்றார் என்றும் அந்தப் பக்கம் உள்ள மக்கள் அவரைப் பற்றி
பேசிக் கொண்டார்கள்.
இதைக் கேள்விப்பட்ட செல்வர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். வயது
மூத்த பணியாள் ஒருவர் செல்வரை வரவேற்றுக் குடிலுக்குள் அழைத்துச்
சென்றார். நேராக உள்ளே அழைத்து கொல்லைப்புறம் வழியாக வெளியே அழைத்து
வந்தார்.
"புனிதமான மனிதர் எங்கே? அவரைப் பார்த்துப் பேசி விண்ணகம் செல்ல
வழி கேட்க வேண்டும்" என்றார், செல்வர். முதியவர் சொன்னார், நீங்கள்
பார்க்கும் ஒவ்வொரு மனிதரும் புனிதர். எனவே அனைவரும் புனிதர்கள்
தான். இப்படிப் பார்த்தால் எந்த சிக்கலும் இல்லாமல் எல்லோரும்
விண்ணகம் செல்லலாம்.
நமது வாழ்க்கைப் பயணம் தடையின்றித் தொடர உயர்ந்த கண்ணோட்டத்தோடு
செயல்படுவோம். அப்போது நாமும் உயர்வோம், பிறரையும் உயர்த்துவோம்
நமது மதிப்பும் சமூகத்தில் உயர்ந்து கொண்டே போகும்.
நிலை உயர உயர ஆணவம் வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பணிவாய்
நடந்து கொள்ள வேண்டும். அப்போது விண்ணகம் நம் வசமாகும், நாம்
விண்ணகத்தின் வசமாவோம்.
" நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்". மத்தேயு
28:12
இயேசு மனிதனாய்ப் பிறந்து, பாடுபட்டு, மரித்து, உயிர்த்து,
விண்ணேற்பு அடைந்தபோது, வானதூதர்கள் அனைவரும் இயேசுவைப் பார்த்து,
"உம்முடைய மீட்புப்பணி உலகில் நிறைவேறிற்றா?"என்று கேட்க, அதற்கு
இயேசு, "நிறைவேறிற்று" என்றார்.
மீண்டும் வானதூதர்கள் இயேசுவைப் பார்த்து, "நீர் தொடங்கிய
மீட்புப்பணி உலகில் தொடர்ந்து நடைபெறுமா? அப்பணியை யாரிடம்
ஒப்படைத்துவிட்டு வந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டனர். அதற்கு
இயேசு, "சில சாதாரண மனிதர்களிடம் எனது பணியை ஒப்படைத்துவிட்டு
வந்திருக்கிறேன்" என்றார்.
மீண்டும் வானதூதர்கள் இயேசுவைப் பார்த்து, "அந்த சாதாரண மனிதர்கள்
அந்த வேலையைச் செய்யவில்லை என்றால் என்ன செய்வது?" என்று கேட்டனர்.
அதற்கு இயேசு, "அவர்கள் எனது மீட்புப் பணியைச் சரிவர செய்வார்கள்
என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அவர்கள் அதைச் செய்யவில்லை என்றால்,
வேறுவழி எதுவுமில்லை" என்று கூறினார்.
இயேசு நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களிடமே தமது மீட்புப் பணியை
ஒப்படைத்திருக்கின்றார். நாம் ஒவ்வொருவரும் அவரது மீட்புப் பணியில்
பங்கேற்று, அவரது மீட்புப் பற்றிய நற்செய்தியை அனைவருக்கும்
அறிவிக்க வேண்டும். இதுவே நமது முதற் கடமையாகும்.
அன்போடு அடுத்தவரை அரவணைக்கும் போது இயேசுவின் மீட்புப் பணியை
செய்ய ஆரம்பிக்கிறோம்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு உழைக்கும் போதும் அவர்களின்
நலனுக்காக குரல் உயர்த்தும் போதும் இயேசுவாய் பவனிவர
ஆரம்பிக்கிறோம்.
நாமும் உயர வேண்டும் பிறரையும் உயர்த்த வேண்டும் என்பதே
விண்ணேற்பு விழாவின் சுருக்கம்.
நமக்குள்ளே ஒரு பேராற்றல் உள்ளது. அதுதான், நம்மை நாமே
உயர்த்திக் கொள்வதும், பிறரின் உயர்வுக்கு மாபெரும் தூண்டுகோலாக
இருப்பதும்.
இந்த உலகையும், உலக இயக்கங்களையும், குடும்பங்களையும், தனி
நபரையும் மாபெரும் சக்தி ஒன்று இயக்குகிறது. அதுதான் நமது
முன்னேற்றம், பிறரின் முன்னேற்றம்.
ஓர் அலுவலகத்தில் 100 பேர் இருக்கிறார்கள். அதன் தலைவர் பதவியால்
உயர்ந்தவர். அவர் மற்றவர்களை அடிமையாக நடத்தினால் மற்ற 99 பேரின்
சிந்தனையும், படைப்பாற்றலும், ஈடுபாடும் அந்த நிறுவனத்தின்
வளர்ச்சிக்கோ, உயர்வுக்கோ வித்திடாது.
ஒரு குடும்பத்தில் வெற்றியும். மகிழ்ச்சியும் நிலவ வேண்டுமானால்
கணவனும், மனைவியும், பிள்ளைகளும் ஒருவரை ஒருவர் மதிக்கவும். சமமாக
நடத்தவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வில் எவருக்கும் அடிமையாக மாட்டோம்,
எவரையும் அடிமைப்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.
நாம் உயரும் போதெல்லாம் பிறரை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தை
இதயத்தில் நிறைத்து வைத்துக் கொள்வோம்.
நமது பதவி உயர்வோ, பொருளாதார உயர்வோ, கல்வி உயர்வோ, சமூக
அந்தஸ்து உயர்வோ கடவுள் கொடுத்த கொடை. இதனால் ஆணவம் தலைக்கேறாமல்
நம்மைச் சுற்றியிருப்பவர்களின் உயர்வுக்கு வழிகாட்டுவதாக அமைய
வேண்டும்.
வாழும் நாட்களை வரலாறாக்குவோம்.
விண்ணகம் நம்மை வரவேற்கும். நாமும் விண்ணேற்பு பெறுவோம்.
குடும்பத்தில், குவலயத்தில், பணித்தளத்தில் அடுத்தவரின்
உயர்வுக்காய் ஓய்வின்றி உற்சாகமாய் உழைக்கும் போது விண்ணகம் நம்
அருகில் இருக்கும்.
நம்மோடு பணி புரிபவரிடம் நல்ல விதத்தில் பழகுவது அவர்களின் வேலை
சம்பந்தமான உதவிகளைச் செய்வது நம் கடமை என்றாலும் அதை உள்ளன்போடும்
முழு ஈடுபாட்டுடனும் செய்வதும் உயர்வுக்கான வழி.
நாம் பிறந்துள்ளது பிறருக்கு உதவி மகிழ்வதற்கே ஆகும். உதவும்
போதெல்லாம் உயர்வோம்.
நாம் மற்றவரின் கண்ணீரைத் துடைக்க விரல்களை நீட்டினால் நம்முடைய
கண்ணீரைத் துடைக்க ஆண்டவன் கைகளை நீட்டுவார் என்று ஞானிகள்
சொல்வார்கள்.
மனநிறைவு பெறுவதற்கும் இறைவனின் கருணையை பெறுவதற்கும் பிறருக்கு
உதவ வேண்டும்.
உதவி செய்வதன் மூலம் உறவுகள் மலரும். உறவுகள் மூலம் வாழ்க்கைத்
தரம் உயரும்.
உயர்ந்த எண்ணங்களும் சொற்களும் வலிமையானவை.
கற்களைத் தூவினால் அவை காயப்படுத்தும்.
பூக்களைத் தூவினால் மாலையாய் விழும்.
விண்ணேற்றம் அடைய எதைத் தூவப் போகிறோம்.
நற்கருணையை தகுதியோடு உண்ணும் போது புனிதர்களாய் உயர்வோம்.
வண்ணம் கலந்தால் ஓவியம் மலரும்.
எண்ணம் உயர்ந்தால் வாழ்க்கை உயரும். வாழ்க்கை உயர்ந்தால்
விண்ணகம் உயர்வோம்.
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
விண்ணேற்பு பெருவிழா
I. திருத்தூதர் பணி 1:1-11
எபேசியர் : 4: 1- 13
மாற்கு 16: 15-20
எழுச்சி தரும் ஏற்றம் (விண்ணேற்றம்)
இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே நமதாண்டவரின்
விண்ணேற்பு பெருவிழாவை கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கக் கூடிய
வேளையில் விண்ணேற்பு நாயகனாம் இயேசுவின் விழுமியங்களை நமதாக்க இன்றைய
நாளில் அழைக்கப்படுகின்றோம். மாற்றங்களை ஏற்றுக் கொள்பவரின்
வாழ்வில் ஏற்றம் நிச்சயம் உண்டு என்பர். அவ்வகையில் நமது வாழ்வில்
அன்றாடம் பல்வேறு மாற்றங்களை நாம் சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
விலை ஏற்றம் வரி ஏற்றம் என்று பல்வறு விதமான ஏற்றங்கள் நம்மை
மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக்கின. அது போக கொள்ளை நோயின்
பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை ஏற்றம் வேறு நம்மை நாளுக்கு
நாள் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தகைய ஏற்றங்களுக்கு மத்தியில்
இறை இயேசுவின் விண்ணேற்றம் நமது வாழ்விற்கு எழுச்சி தர இருக்கின்றது.
பொதுவாக ஏற்றம் என்றாலே கீழிருந்து மேலே செல்வது . அதிலும் நமதாண்டவர்
இயேசு கிறிஸ்து தன்னை அனுப்பிய தந்தையிடமே திரும்பி செல்கிறார். மண்ணுலகிலிருந்து
விண்ணுலகிற்கு ஏறிச்செல்கின்றார்.
கீழிருந்து மேல் நோக்கி செல்லும் அனைத்தும் தன்னுடைய பதிவுகளை
விட்டு செல்லும். அல்லது அதன் இணைப்பு கீழே எதனுடனாவது இணைக்கப்பட்டிருக்கும்.
விமானம், விண்வெளியில் செலுத்தப்படும் ஏவுகணைகள் நாம் விடும் பட்டம்,
பறவைகள், வண்ணத்துப்பூச்சி என அனைத்தும் கீழிருந்து மேலே செல்கின்றன.
இவற்றின் புறப்பாடுகளைக் காண்பது நமக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அது கீழிருந்து மேலே ஏறிச்செல்வதை
மிகவும் ரசித்து காண்பர். இவ்வாறு ஏற்றம் காணும் நிகழ்வுகள் நமக்கு
அந்த ஒரு நேரம் மட்டும் மகிழ்வைத் தந்துவிட்டு செல்கின்றன. முதல்
முறை இவற்றைக் கண்டவர் என்றால், அதை பலரிடமும் கூறி மகிழ்வதுண்டு.
இதுவே நாமே பறந்த தருணம் என்றால் சொல்லவே வேண்டாம். பகிரப்படும்
நபரின் பட்டியலும், நாளும் நீண்டு கொண்டே இருக்கும். ஆக சாதாரணமான
ஒரு ஏற்றமே நம்மை மகிழ்விக்கும் பொழுது இயேசுவின் விண்ணேற்றம் நமக்கு
மட்டில்லா மகிழ்ச்சியை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இயேசு விண்ணேற்றம் அடையும் முன் தம் சீடர்களிடம் நான்கு விசயங்களைக்
கூறுகின்றார்.
1. காத்திருங்கள், 2. தூய ஆவியை பெறுங்கள், 3. சாட்சிகளாய் விளங்குங்கள்,
4. கவலை கொள்ளாதீர்கள்.
1. காத்திருங்கள்:
நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம் தந்தையின் வாக்குறுதி
நிறைவேறும் வரைக் காத்திருங்கள் என்கின்றார். காத்திருப்பு பல்வேறு
அனுபவங்களை நமக்கு தருகிறது. கேட்டவுடன் கிடைக்கும் பொருளை விட, தாமதித்து
காத்திருந்து கிடைக்கப்பெறும் பொருளுக்கு மதிப்பு அதிகம். எனவே
தான் இயேசு தன்னுடைய சீடர்களிடம் காத்திருங்கள் என்கின்றார்.
காத்திருப்பவர்களின் ஆர்வம் அந்த நாட்களில் மிக அதிகமாக இருக்கும்.
அவர்களின் எண்ணம் ஏக்கம் அனைத்தும் அதுவாகவே இருக்கும். அதைப்பற்றிய
கனவும் சிந்தனையும் அதிகமாக இருக்கும். இப்படிக் காத்திருக்கும்
போதே தங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில் கிடைக்கப்படும்
வேலையும் பொருளும் மிக அதிகமாக செய்யப்படும் பராமரிக்கப்படும். எவ்வாறு
கூட்டுப்புழு காத்திருந்து தன்னைத் தாயரித்து பட்டாம் பூச்சியாக தன்னை
வெளியே கொண்டு வருகிறதோ அது போல காத்திருந்து செய்யப்படும் நமது
வாழ்வும் சிறப்பாக மிளிரும். இங்கு இயேசு தந்தையின் வாக்குறுதி
நிறைவேறும் வரை சீடர்களைக் காத்திருக்க சொல்கின்றார்.
தந்தையின் திருவுளம் நமது வாழ்விலும் செயல்படுகிறது. அது என்ன என்று
தெரியாமலும், விரும்பாமலும் பல நேரங்களில் நாம் காத்திருக்க
விரும்புவதில்லை. உடனடி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நமக்கு
அனைத்தும் உடனடியாக கிடைக்க வேண்டும் என்றே எண்ணுகின்றோம். உடனடியாக
கிடைக்கப்படும் அனைத்தும் நிலைத்து இருப்பதில்லை. நமக்கு தேவையற்ற
வேண்டாத விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. நல்லவை தாமதாகவே வரும்
நீடித்து நிலைத்து நிற்கும். உடனடியாக கிடைப்பவை மாயமாய் மறைந்து
போகும்.
2. தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.:
தூய ஆவி நம் உள்ளத்திற்கு திடமும் தேற்றுதலும் கொடுப்பார். அவரது
செயல்பாடு எல்லையற்றது. பழைய ஏற்பாடு முதல் புதிய ஏற்பாடு வரை ஏன்
இன்றளவும் தூய ஆவியின் செயல்பாடு நம் வாழ்வில் நிகழ்ந்து கொண்டு
தான் இருக்கின்றது. இயேசுவின் வாழ்விலும் தூய ஆவியின் செயல்பாடு இன்றியமையாத
பங்காற்றியது. இன்பத்திலும் துன்பத்திலும் அவருக்கு மிக உறுதுணையாக
இருந்தது அவரே. இயேசுவின் வாழ்வில் மட்டுமன்றி சீடர்களுடைய
வாழ்விற்கும் வளம் சேர்க்க அத்தகைய தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்
என்கின்றார். தூய ஆவியினால் திருமுழுக்கு பெற்று நிறை வல்லமையுடன்
செயல்பட அறிவுறுத்துகிறார்.
ஆவியின் செயல்பாட்டை நமது வாழ்விலும் உணர்ந்து செயல்படுவோம். திடமுள்ளவர்களாய்
பிறரையும் திடப்படுத்துபவர்களாய் வாழ்வோம். ஆறுதல் பெறுபவர்களாக மட்டும்
இல்லாமல் ஆறுதல் கொடுப்பவர்களாகவும் வாழ்வோம்.
3. சாட்சிகளாக வாழுங்கள்:
நமது வாழ்வு பிறருக்கு சான்று பகரக் கூடிய வாழ்வாக இருக்க
வேண்டும். சீடர்களின் வாழ்வு இயேசுவின் போதனைக்கும் வாழ்விற்கும்
சான்றாக அமைந்தது. சீடர்களைப் பார்த்த மக்கள் இவர்கள் இயேசுவின்
சீடர்கள், அவருக்கு இருக்கும் வல்லமை இவர்களுக்கும் என்று நம்பினர்.
அதன்படியே நோயாளர்களை அவர்களிடம் அழைத்து வந்து சுகமடையச் செய்ய
வேண்டினர். இயேசுவின் சீடர்கள் அவரைப் போலவே வாழ்ந்தனர். தங்களது
சொல்லாலும் செயலாலும் தாங்கள் இயேசுவின் சீடர்கள் என்பதை வெளிப்படுத்தினர்.
இருப்பினும் இயேசு அவர்களை தன்னுடைய விண்ணேற்புக்கு பின்பும்
சான்று பகர சாட்சியமுள்ள வாழ்வு வாழச்சொல்கின்றார்.
அவருடைய இன்றைய கால சீடர்களாகிய நம்மிடமும் அவர் கூறுவது இதுவே.
சாட்சிகளாக வாழுங்கள். சான்று பகருங்கள் உங்களது சொல்லால் செயலால்.
4. கவலை கொள்ளாதீர்கள்:
இஸ்ரயேலுக்கு ஆட்சியுரிமை கொண்டு வரும் காலம் இது தானா? என்று சீடர்கள்
கேட்க அதற்கு இயேசு அது என் தந்தையின் விருப்பம் அதை பற்றி அறிந்து
கொள்ளவோ கவலையுறவோ வேண்டாம் என்கின்றார். அவர்களைப் பற்றி கவலைப்படாமல்
தேவையற்ற சிந்தனை உடையவர்களாய் சீடர்கள் இருக்கின்றனர். எனவே அவர்களிடம்
தந்தையின் அலுவல் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்கின்றார்.
நாமும் பல நேரங்களில் நமக்கு தேவை இல்லாத வேலைகள் பற்றி கவலைப்பட்டுக்
கொண்டிருக்கிறோம். நாளைய நாள் பற்றிய கவலை, நோய் நம்மை பாதித்து
விடுமோ என்ற கவலை, இப்படியே என் வாழ்நாள் போய் விடுமோ என்ற கவலை.
இப்படியாக பல கவலைகளில் நாம் மூழ்கிக் கிடக்கின்றோம். இந்தக் கவலைகளை
விட்டுவிடுங்கள் என்கின்றார்.
விண்ணேற்றமடையும் இறை இயேசு நமக்கு சொன்ன இந்த நான்கு வகை கருத்துக்களையும்
மனதில் கொண்டு வாழும் போது, நாமும் எழுச்சி மிகு ஏற்றங்கள் பல காணலாம்.
எதைப் பற்றியும் தேவையற்ற கவலை கொள்ளாது இறைத்திருவுளத்தின் மேல்
நம்பிக்கை கொண்டு தொடர்ந்து வாழும் போது ஏற்றங்கள் காண முடியும்.
காத்திருப்போம் நல்ல பல நிகழ்வுகளுக்காக, சாட்சியுள்ள வாழ்வு
வாழ்வோம். தூய ஆவியின் வல்லமை பெற்று பிறருக்கு திடமும் தேற்றரவும்
கொடுப்போம். விண்ணேற்றமடைந்த இயேசுவின் அருள் ஆற்றலும் பிரசன்னமும்
நம் ஒவ்வொருவரோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருந்து நம்மை
ஆசீர்வதிப்பதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருட்சகோதரி: செல்வராணி O.S.M.
விண்ணேற்றப் பெருவிழா
சீடராவோம்... சீடராக்குவோம்....
இறையேசுவில் பிரியமானவர்களே! இன்று நம் ஆண்டவர் இயேசு உயிர்த்து,
நாற்பது நாட்கள் நிறைவு பெற்று, இன்று விண்ணகம் சென்றதை
நாம் சிறப்பிக்கின்றோம். இன்று நாம் கொண்டாடுவது விண்ணேற்றப்
பெருவிழாவா ? அல்லது விண்ணேற்பு பெருவிழாவா ? ஆகஸ்டு 15 அன்று
அன்னைமரியாவின் விண்ணேற்பு பெருவிழாவை சிறப்பிக்கிறோம். அன்னை
மரியாள் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டார். அதனால்
அது விண்ணேற்பு பெருவிழா. இன்று நாம் கொண்டாடுவது விண்ணேற்றப்
பெருவிழா. இயேசு தாமாக விண்ணகம் சென்றார். அதனால் விண்ணேற்றப்
பெருவிழா. தம் மண்ணகப் பணி வாழ்வு முடிந்து, இன்று விண்ணகம்
செல்கிறார் இயேசு. அனைவருக்கும் விண்ணகப் பெருவிழா
வாழ்த்துக்கள்.
இயேசு மனிதனாக மண்ணுலகம் வர மனுவுரு எடுத்தது போல, இன்று
இறைவனின் மகனாக விண்ணகம் நோக்கிச் செல்கிறார். இயேசு நாற்பது
நாட்கள் பாலைவன அனுபம் பெற்று. மூன்றாம் நாள் உயிர்பெற்று
நாற்பது நாட்கள் இம்மண்ணுலகில் வாழ்ந்து, தனது
உடனிருப்பையும், உயிர்ப்பின் ஆற்றலையும் தம்முடைய சீடர்களுக்கு
கொடுத்தார். வெளியூருக்குச் செல்லும் தாயானவள், தன் பிள்ளைகளிடம்
பல நற்காரியங்களை சொல்லிச் செல்வாள். அறிவுரை கூறுவாள்.
தான் திரும்பி வரும்வரை இதெல்லாம் செய்து முடித்துவிடனும்
செல்லமே` என்று அன்போடும், அக்கறையோடும், தாய்குரிய பாசத்தோடும்
சொல்லிச் செல்வது வழக்கம். அதுபோல தாம் உயிர்த்தெழுந்து
நாற்பது நாட்கள் தம் சீடர்களுடன் உண்டு, உறவாடி, மகிழ்ந்து
,இறுதியாக விண்ணகம் செல்ல தயாராகும் இயேசு, தம் அன்பு சீடர்களுக்கு
பலவற்றைப் பற்றி அறிவுறுத்துகின்றார். உலகெங்கும் சென்று
படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள், தந்தை, மகன்,
தூய ஆவியால் அவர்களுக்கு திருமுழுக்கு கொடுங்கள், எல்லா மக்களினத்தாரையும்
என் சீடராக்குங்கள். நோய்களை குணமாக்குங்கள், பேய்களை ஓட்டுங்கள்,
என பலவற்றை எடுத்துக் கூறி, இவற்றையெல்லாம் செய்யுமாறு தம்
சீடர்களிடம் பணிக்கிறார். சீடர்களும் தங்கள் குருவாம் இயேசுவின்
போதனைகளை உலகெங்கும் பறைசாற்ற ஆற்றல் பெற்று எழுந்தார்கள்.
சீடர்களின் முன்மாதிரியான வாழ்க்கையினாலும், அவர்களின் போதனையினாலும்
தான் இவ்வுலகம் கிறிஸ்துவை அறிந்து கொண்டது.
சீடத்துவ வாழ்வு :
குரு, சீடர்களின் உறவு உன்னதமானது, புனிதமானது. தொடக்கக்
காலத்தில் சீடர்கள் தான், குருவை தேடிச் சென்று, அவருடன்
தங்கி, நற்சிந்தனைகளையும், நற்பயிற்சியையும் கற்றுக்
கொண்வார்கள். இதைத் தான் நாம் குருகுல கல்வி என அறிந்திருக்கின்றோம்.
ஆனால் நம் குருவாம் இயேசு சற்று வித்தியாசமானவர் அதனால்
தான், தானே சீடர்களைத் தேடிச் சென்று, நற்போதனைகளை கற்றுக்
கொள்ள அழைத்தார். இயேசுவால் தேடிச் சென்று, தேர்ந்தெடுக்கப்பட்ட
சீடர்கள், அவருடன் தங்கினார்கள். அவருடைய போதனைகளும்,
புதுமைகளும் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதால், பிறகு இயேசுவை
சீடர்கள் தேடிச் சென்றன. இயேசு சென்ற இடமெல்லாம் ,சீடர்களும்
சென்று தங்கள் வாழ்க்கை முழுவதையும் இறையாட்சிப் பணிக்காக
அர்ப்பணித்தார்கள். மூன்று ஆண்டுகள் இயேசுவோடு கூட இருந்து,
நன்கு பயிற்சி பெற்ற சீடர்கள், இறுதியில் தேர்வை சந்திக்கும்
காலத்தை நெருங்குகிறார்கள். அதுதான் இயேசுவின் விண்ணேற்றம்.
நான் உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களுடன் இருக்கிறேன்
என்று சொன்ன இயேசுவின் உடனிருப்பையும், உயிர்ப்பு சக்தியையும்
பெற்றுக் கொண்ட சீடர்கள், இயேசு தங்களிடம் பணித்த படியே,
உலகெங்கும் சென்று, நற்செய்திக்கு சான்று பகர்ந்து, அனைவரும்
இயேசுவின் சீடர்களாக வாழ அழைப்பு விடுத்தார்கள். அவர்களின்
அழைப்பாலும், போதனையாலும் நாம் கிறிஸ்துவின் பிள்ளைகளாகவும்,
அவரின் சீடர்களாகவும் வாழ அழைப்புப் பெற்றிருக்கிறோம். இயேசுவின்
சீடர்களாக வாழ அழைப்புப் பெற்ற நாம், அவரின் சீடர்களாக
வாழ்கின்றோமா ? நம்மையே நாம் கேள்வி கேட்டுக்கொள்வோம்.
சோதனைகளை வென்று, சாதனைகள் புரிந்த இயேசுவின் சீடர்கள்
நாம் என்றால், அவர் வழியில் சென்று, அவரைப் போல வாழ நம்மை
தயார்படுத்திக் கொள்ளவேண்டும், தகுதிபடுத்திக்கொள்ள
வேண்டும். சீடத்துவ வாழ்வு என்பது, தூண்டில் போட்டு மீன்
பிடிப்பது அல்ல. மாறாக ஆற்றில் குதித்து மீனைப் படிப்பது
போன்றதாகும். தூண்டில் போட்டவுடன் மீன் கிடைத்துவிடும் ஆனால்
ஆற்றில் குதித்து மீன் பிடிப்பது என்பது கஷ்டமான காரியம்.
சீடத்துவ வாழ்க்கையும் இதைப் போன்றதே. இத்தகையதொரு கடினமான
வாழ்க்கை வாழ்ந்து, மற்றவர்களையும் இயேசுவின் சீடராக்கியவர்கள்
தான், அவரின் பன்னிரெண்டு சீடர்களும்.
தொடர் ஓட்டத்தில் ஒரு வீரரின் கையிலிருந்து, மற்ற வீரனின்
கைக்கு மாறும் குச்சி போல, இயேசு தம் சீடர்களிடம் ஒப்படைத்த
இறையாட்சிப் பணி, இன்று நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இயேசு நம்மிடம் ஒப்படைத்த பணி என்னவென்றால், நாம் இயேசுவின்
சீடர்களாக வாழ்ந்து, மற்றவர்களையும் அவரின் சீடராக்குவதாகும்.
இப்பணியை நாம் எப்படி செய்து கொண்டிருக்கிறோம்
சிந்தித்துப் பார்ப்போம். உலகெங்கும் சென்று நற்செய்தியை
பறைசாற்றுங்கள் என்றார் இயேசு. ஆனால் இன்று பக்கத்து
வீட்டிற்கே போக முடியாத சூழ்நிலையில், அச்சத்தோடும் , நடுக்கத்தோடும்,
பயத்தோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட
நிலையில் நாம் எப்படி மற்றவர்களை இயேசுவின் சீடர்களாக
மாற்ற முடியும் ? மற்றவர்களை மாற்ற முயற்சிப்பதை விடுத்து,
நாம் இயேசுவின் சீடர்களாக வாழ முற்படுவோம். நாம் இருக்கும்
இடத்திலேயே, இயேசு நமக்கு கற்றுக் கொடுத்த மதிப்பீடுகளை கடைபிடிப்போம்.
இறைவேண்டல் செய்வதிலும், இறைவார்த்தை வாசிப்பதிலும் , அன்புப்
பணி புரிவதிலும், சீடருக்குரிய பண்பு நலனை வெளிப்படுத்துவோம்.
அன்போடும், கரிசனையோடும் செய்யும் நாம் செய்யும் செயல்களால்,
மற்றவர்களையும் இயேசுவின் சிடராக்க முற்படுவோம்.
இறைவனின் அருளும், ஆசீரும் என்றும், நம்மோடும், நம் நலம்
விரும்புவோரோடும் இருந்து ஆசீர்வதிப்பதாக ஆமென்.
திருத்தூதர் பணிகள் 1:1-11
எபேசியர் 4:1-13
மாற்கு 16:15-20
"ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர்,
பாவத்தையும் இறப்பையும் தோற்கடித்த வெற்றி வீரர்,
வானதூதர் வியப்புற வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார்.
இவ்வாறு அவர் சென்றது
எங்கள் தாழ்நிலையை விட்டு அகல வேண்டும் என்பதற்காக அன்று.
மாறாக, எங்கள் தலைவரும் முதல்வருமாகிய அவர்
முன்னரே சென்ற அவ்விடத்திற்கு
அவர் உறுப்பினர்களாகிய நாங்களும்
அவரைப் பின் தொடர்ந்து செல்வோம் என்று
நம்பிக்கை கொள்வதற்காகவே"
இன்றைய திருப்பலியின் தொடக்கவுரையில் (பழைய மொழிபெயர்ப்பு)
நாம் காணும் தூய அகுஸ்தினாரின் இவ்வார்த்தைகள் இன்றைய
நாளின் பொருளை மிக நேர்த்தியாக நமக்கு எடுத்துரைக்கின்றன.
இயேசுவின் விண்ணேற்றம் பற்றி இரண்டாம் ஏற்பாட்டில் நாம்
மூன்று இடங்களில் வாசிக்கின்றோம்: மாற்கு 16:19-20, லூக்கா
24:50-53 மற்றும் திப 1:9-11. இதில் விநோதம் என்னவென்றால்
விண்ணேற்றத்தின்போது உடனிருந்த சீடர்களான மத்தேயுவும்,
யோவானும் இந்த நிகழ்வை பதிவு செய்யாமலே விடுகின்றனர்.
மேலும், மாற்கு 16:9-20 இறைவாக்குப் பகுதியை (இன்றைய நற்செய்தி
வாசகப் பகுதி) விவிலியத்தில் பார்த்தால் இந்தப் பகுதி அடைப்புக்குறிகளுக்குள்
இருக்கும். காரணம், இது மாற்குவின் உண்மையான நற்செய்திப்
பகுதியில் இல்லை. மாறாக, பின்னர் அவரது சீடர்கள்
சேர்த்துக்கொண்ட பிரதியில்தான் இருக்கிறது. மத்தேயு நற்செய்தியாளர்
ஏன் பதிவு செய்யவில்லை? என்ற கேள்விக்கு ஆய்வாளர்கள்
சொல்லும் பதில் என்னவென்றால், "கடவுள் நம்மோடு" என வந்த இயேசு
எப்படி திரும்பிச் செல்ல முடியும்? அவர் என்றும் நம்மோடுதான்
இருக்கிறார் என்று மத்தேயு இதன் வழியாக இயேசுவின் உடனிருப்பைச்
சொல்கிறாராம் நமக்கு.
லூக்கா தன் நற்செய்தியிலும், தன் திருத்தூதர் பணிகள்
நூலிலும் இந்த நிகழ்வை எழுதுகின்றார். ஆனால், இரண்டு இடங்களிலும்
வௌ;வேறு விதமாக எழுதுகின்றார். விண்ணேற்றம் பெத்தானியாவில்
நிகழ்வதாக நற்செய்தியில் எழுதும் லூக்கா, திருத்தூதர் பணிகள்
நூலில் எருசலேமில் நிகழ்வதாக எழுதுகிறார். (மதுரைக்கும்,
தூத்துக்குடிக்குமான தூரம் இது!) நற்செய்தியில் இயேசு ஆசீ
கூறுகின்றார். ஆனால், இங்கே பேசிக்கொண்டிருக்கிறார். அங்கே
சீடர்கள் வணங்கிவிட்டு எருசலேம் திரும்புகிறார்கள். ஆனால்
இங்கே வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மிக
முக்கியமாக, அங்கே இயேசுவே விண்ணிற்கு ஏறிச்செல்கின்றார்
(செய்வினை). ஆனால் இங்கே அவர் விண்ணிற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றார்
(செயப்பாட்டுவினை).
இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட பதிவுகள் இருக்க இயேசு
விண்ணேற்றம் அடைந்தாரா? என்ற கேள்வியும் எழுகின்றது.
இயேசுவின் விண்ணேற்றம் ஒரு வரலாற்று நிகழ்வு என்று சொல்வதை
விட இறையியல் நிகழ்வு என்றே நான் சொல்வேன். லாஜிக் இதுதான்!
கீழே வந்த இயேசு, மேலே ஏறிச்செல்ல வேண்டும். அவர் இறக்க
முடியாது. ஏன்னா அவர் கடவுள். இங்கேயே இருக்கவும்
முடியாது. ஏன்னா, வர்ற யாரும் இங்கே நிரந்தரமாகத் தங்கிவிடமுடியாதுதானே.
ஆக, இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட ஒன்றுதான் விண்ணேற்றம்.
முதல் ஏற்பாட்டில் முதன்முதலாக விண்ணேற்றம் அடைந்தவர் ஏனோக்கு
என்றாலும் (தொநூ 5:24), தொடர்ந்து வந்த மோசே (இச 34) மற்றும்
எலியா (2 அரச 2:2) தான் விண்ணேற்றம் அடைந்தவர்கள் எனச்
சொல்லப்படுகின்றனர். மோசேயின் இறப்பு பற்றியும், அவருடைய
கல்லறை எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது என்றும்
இச 34 சொன்னாலும், அவர் விண்ணேற்றம் அடைந்ததாகவே இரபிக்களின்
நூல்கள் சொல்கின்றன. ஆக, இயேசுவின் உருமாற்ற நிகழ்வின்போது
அவருடன் உடனிருந்த மோசே மற்றும் எலியாவைப்போலவே இயேசுவும்
விண்ணேற்றம் அடைந்துவிட்டார் என இயேசுவை புதிய மோசேவா,
புதிய எலியாவாக முன்வைக்கின்றார் லூக்கா.
ஆக, விண்ணேற்றம் இயேசுவுக்கு தேவைப்பட்டதோ இல்லையோ, இயேசுவின்
சீடர்களுக்கும், அவரைத் தொடர்ந்து வந்த திருச்சபைக்கும்
தேவைப்பட்டது. இன்னும் தேவைப்படுகிறது.
விண்ணேற்றம் பற்றிய புரிதலுக்கு மூன்று பின்புலங்கள் தேவை:
பின்புலம் 1: இருதுருவ சிந்தனை
ஒளி-இருள், பகல்-இரவு, நன்மை-தீமை என இருதுருவ சிந்தனைக்குப்
பழக்கப்பட்டது மனித மனம். இந்த இருதுருவ சிந்தனையின் படி,
இறங்கி வரும் யாரும் ஏறிச் செல்ல வேண்டும். ஆக, இறங்குதல்-ஏறுதல்
அவசியம். இயேசு, கடவுளின் மகன், பிறந்து, இறங்கி வந்தார்
என்றால், அவர் இறந்து, ஏறிச் செல்ல வேண்டும். அப்போதுதான்
வாழ்க்கை வட்டம் முழுமை அடையும்.
பின்புலம் 2: அடுக்கு உலக சிந்தனை
கிரேக்க சிந்தனையாளர் பிளேட்டோ தொடங்கி காலங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது
"அடுக்கு உலகம்." அது என்ன அடுக்கு உலகம்? இந்த உலகத்தில்
மூன்று அடுக்குகள் உள்ளன. மேல் அடுக்கு வானம், நடு அடுக்கு
பூமி, கீழ் அடுக்கு பாதாளம். கடவுளர்கள், குட்டிக் கடவுளர்கள்,
தூதர்கள் ஆகியோரின் உறைவிடம் மேல் அடுக்கு. தீயவர்கள்,
கொடியவர்கள், தீமை இவர்களின் உறைவிடம் கீழ் அடுக்கு. இந்த
இரண்டிற்கு நடுவில் உள்ள அடுக்கில் இருப்பவர்கள் இரண்டு பண்புகளையும்
தங்களுக்குள் கொண்டிருப்பவர்கள். ஆனால் இந்த அடுக்கு ஒரு
நிழல் அடுக்கு. இங்கு காணும் எல்லாம் மேல் மற்றும் கீழ் அடுக்குகளின்
ஜெராக்ஸ் பிரதிகள். மேல் அடுக்கிலிருந்து நடு அடுக்கிற்கு
வந்த இயேசு, தன் இறப்பால் கீழ் அடுக்கையும் சந்தித்துவிட்டு,
மீண்டும் மேல் அடுக்கிற்கு ஏறிச் செல்கின்றார். நடு அல்லது
கீழ் அடுக்கு அவரைத் தன்னகத்தே வைத்துக்கொள்ள இயலாது. ஏனெனில்
அவர் மேலடுக்கைச் சார்ந்தவர்.
பின்புலம் 3: மறைதல்-நிறைதல் சிந்தனை
மருத்துவத்தின் முக்கியமான கூறு "மறைதல்-நிறைதல்." புரியலையா?
நமக்கு வரும் நோய்களுக்கு காரணம் என்ன? "இருக்க வேண்டிய ஒன்று
மறைந்தால்" (எ.கா. இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல்) "இருக்கக்
கூடாத ஒன்று நிறைந்தால்" (எ.கா. இரத்தத்தில் சர்க்கரை நிறைதல்)
அது நோய். மருத்துவரின் பணி என்ன? "குறையை நிறைவு செய்வது,"
"நிறைதலை கரைத்துக் குறைப்பது." அதிகம் மறைந்தாலும் ஆபத்து.
அதிகம் நிறைந்தாலும் ஆபத்து. இயேசு மறைய வேண்டும். சீடர்கள்
நிறைய வேண்டும். ஆனால், இயேசுவும் முழுமையாக மறைந்துவிடக்
கூடாது. சீடர்களும் முழுமையாக நிறைந்துவிடக் கூடாது. இந்த
இரண்டையும் சமன்படுத்த தேவை விண்ணேற்றம்.
ஒரு சின்ன அறையில் லேன் நெட்வொர்க் கனெக்ஷன் வழியாக இயேசுவை
சீடர்களோடு இணைத்து வைத்திருந்த நற்செய்தியாளர்கள், அவரை
அப்படியே தூக்கி உயரமான ஒரு வைஃபை ரவுட்டராக
மாற்றிவிடுகின்றார். இப்போது இயேசுவோடு யாரும் தங்களை இணைத்துக்
கொள்ள முடியும். தேவையானதெல்லாம் "நம்பிக்கை" என்ற ஐந்தெழுத்து
பாஸ்கோட் மட்டுமே.
இந்த மூன்றும் விண்ணேற்றம் என்பதைப் புரிந்து கொள்ள நமக்குப்
பின்புலமாக இருந்தாலும், விண்ணேற்றத்தை ஏற்றுக்கொள்ளவும்,
நம்பவும், புரிந்து கொள்ளவும் மூன்று கூறுகள் தடைகளாக
நிற்கின்றன:
தடை 1: இயேசுவின் உடல்
மனித உடல் அல்லது உரு ஏற்றதால் இயேசு பிறந்தார். வளர்ந்தார்.
சாப்பிட்டார். காணாமல் போனார். கிடைத்தார். நடந்தார்.
பேசினார். சிரித்தார். அழுதார். இறந்தார். எப்படியோ உயிர்த்தும்
விட்டார். உயிர்த்தவர் வெறும் ஆவியாக வராமல் உடலோடு வந்தார்.
சீடர்களுக்குத் தோன்றினார். தன் உடலைத் தொட்டுப் பார்க்கச்
சொன்னார். சாப்பிட்டார். வழிநடந்தார். அப்பம் பிட்டார். இதுவரைக்கும்
சரி. ஆனால், விண்ணேற்றம் அடையும்போது அவர் உடலோடு மேலே
சென்றாரா? ஆம் என்று சொல்கிறது எருசலேம் விண்ணேற்ற ஆலயம்.
அங்கே இயேசுவின் இரண்டு அகன்ற பாதத்தடங்கள் இருக்கின்றன.
ஒரு ராக்கெட் மேலெழும்பி செல்வதுபோல, புவிஈர்ப்பு விசையை
வென்று, புவிஈர்ப்பு மண்டலத்தைக் கடந்து அவர் மேலே
சென்றிருக்க வேண்டும். சரி போய்விட்டார். ஆனால், மனித உடலை
வைத்து அவர் அங்கே என்ன செய்வார்? தந்தைக்கு உடல் இல்லை.
தூய ஆவியானவருக்கு உடல் இல்லை. இவருக்கு மட்டும் உடல் இருக்குமா?
இன்னும் அந்த உடலில் காயங்கள் இருக்குமா? (இருக்க வேண்டும்
- ஏனெனில் மாறாதவராக இருந்தால்தானே அவர் கடவுள்!) உடல் என்று
ஒன்று இருந்தால் உடை என்ற ஒன்றும் இருக்க வேண்டும். உடை இல்லாத
மனித உடலை அதுவும் கடவுள்-மனிதனின் உடலை நாம் நினைத்துப்
பார்க்கவும் முடியுமா? மாற்று உடைக்கு இயேசு என்ன
செய்வார்? அல்லது பாதி வழி சென்ற இயேசுவின் உடல் மறைந்து
ஆவியாக மாறிவிட்டதா? மனித உடலோடு இயேசு சென்றார் என்று
நாம் சொல்வதே, மற்ற விலங்குகள், பறவைகள், தாவரங்களின் உடலுக்கு
நாம் இழைக்கும் தீங்கு இல்லையா? மனித உடலே சிறந்தது என
ஹோமோ ஸேபியன்ஸ் ஸேபியன்ஸ் தற்பெருமை கொள்வது முறையா? இவ்வாறாக,
இயேசுவின் உடல் அவரின் விண்ணேற்றத்தை நாம் புரிந்து கொள்ள
தடையாக இருக்கிறது.
தடை 2: காலம்-இடம்; கூறு
மாற்கு நற்செய்தியாளர் இயேசுவின் விண்ணேற்றம் பற்றி எழுதும்போது,
"இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்"
(16:19) என எழுதிவிட்டு, உடனே, "ஆண்டவரும் திருத்தூதர்களோடு
உடனிருந்தார்" (16:20) என முரண்படுகின்றார். காலத்தையும்,
இடத்தையும் கடந்து கடவுளோடு வலப்புறம் அமர்ந்திருக்கும் ஒருவர்,
காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்ட திருத்தூதர்களோடு எப்படி
உடனிருக்க முடியும்? உண்மையாகவே உடனிருந்தாரா? அல்லது உடனிருப்பு
என்பது திருத்தூதர்களின் ஒரு உள்ளுணர்வு போல இருந்ததா? அதாவது,
இறந்து போன என் அப்பா என்னுடன் இருக்கிறார் என்று நான்
சொல்கிறேன் என்றால், "என் கம்ப்யூட்டர் என்னுடன் இருக்கிறது"
என்பது போன்ற "இருப்பு" அல்ல அது. மாறாக, அது ஒரு உள்ளுணர்வு.
ஆக, காலமும்-இடமும் இயேசுவின் உடலை ஒட்டிய இரண்டாம் தடை.
தடை 3: பார்த்தவர்கள் எழுதவில்லை, எழுதியவர்கள் பார்க்கவில்லை
இயேசுவின் விண்ணேற்றம் பற்றி மாற்கும், லூக்காவும் மட்டுமே
எழுதுகின்றனர். மத்தேயுவின் இயேசு இம்மானுவேலன் ("கடவுள்
நம்மோடு") என்பதால், மத்தேயு இயேசுவை நம்மோடு தங்க வைத்து
விடுகிறார். மத்தேயுவின் இயேசு விண்ணேற்றம் அடைவதில்லை
(காண். மத் 28:20). விண்ணேற்றத்தைப் பார்த்த திருத்தூதரும்
நற்செய்தியாளரும் இயேசு அன்பு செய்த சீடருமான யோவான் இந்த
மாபெரும் நிகழ்வு குறித்து மௌனம் காக்கின்றார். "பிள்ளைகளே
சாப்பிட வாருங்கள்" என்று இயேசு அழைத்தார் என சின்ன சின்ன
உரையாடலையும் பதிவு செய்த யோவான் இதைப் பற்றி ஏன் எழுதவில்லை?
அல்லது இயேசு விண்ணேறிச் செல்லவில்லையா? மேலும், இந்த நிகழ்வை
தன் நற்செய்தியிலும் (24:50-53), தன் திருத்தூதர் பணிகளிலும்
(1:6-11) பதிவு செய்யும் லூக்கா, இந்த நிகழ்வு நடந்த நேரத்தை
முரண்டுபட்டு எழுதுகின்றார்: இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப்பு
நாள் அன்று நடந்ததாக நற்செய்தியிலும் (24:51), நாற்பது
நாட்களுக்குப் பின் நடந்ததாக திருத்தூதர் பணிகளிலும்
(1:9-11) எழுதுகின்றார்.
இந்தத் தடைகளை ஒட்டி ஒரு வார்த்தைச் சிக்கலும் இருக்கிறது:
"விண்ணேற்றமா?" (செய்வினை) அல்லது "விண்ணேற்பா?" (செயப்பாட்டுவினை)
முதல் ஏற்பாட்டில் ஏனோக்கு (தொநூ 5:24) மற்றும் இறைவாக்கினர்
எலியாவும் (2 அர 2:2), இரண்டாம் ஏற்பாட்டில் இயேசுவும்
விண்ணேற்றம் அடைந்தனர் என்றும், திருத்தந்தை 12ஆம் பயஸ்
அவர்களின் 1950 நவம்பர் 1 பிரகடனத்தின்படி அன்னை மரியாள்
விண்ணேற்பு அடைந்தார் என்றும் கூறுகின்றோம். இங்கே
"விண்ணேற்றம்" என்பது செய்வினை. "விண்ணேற்பு" என்பது செயப்பாட்டுவினை.
விண்ணேற்றம் அடைந்தவர்கள் தாங்களாகவே, தங்களின் ஆற்றலால்
ஏறிச் செல்கின்றனர். இவர்களுக்கு மற்றவர்களின் துணை
தேவையில்லை. ஆனால் மரியாவோ கடவுளால் அல்லது தூதர்களால் எடுத்துக்
கொள்ளப்படுகின்றார். அவர் ஏறிச் செல்ல மற்றவர்களின் துணை
தேவைப்படுகிறது. முன்னவர்கள் ஆண்கள் என்பதால் தாங்களாகவே
ஏறிச்சென்றார்களோ? ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்த
வார்த்தை மாற்றங்களோ? தெரியவில்லை!
ஆனால், லூக்கா நற்செய்தியில் "அனாஃபெரோ" என்ற வினைச்சொல்
செயப்பாட்டுவினையிலும் ("அனஃபெரெட்டோ"), திருத்தூதர் பணிகளில்
"எபைரோ" என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும் ("எபெர்தெ")
உள்ளது. மேலும், ஒரே நிகழ்வைக் குறிக்க லூக்கா வௌ;வேறு
வினைச்சொற்களைப் பயன்படுத்துவதையும் நாம் கவனத்தில் கொள்ள
வேண்டும். இந்த வார்த்தைகளை நாம் உள்ளபடி மொழிபெயர்த்தால்,
"அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்" என்றும் "அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார்"
என்றும் சொல்ல வேண்டும். ஆக, "இயேசு விண்ணேற்றம் அடைந்தார்"
என்பது நம் புரிதலுக்கான மொழிபெயர்ப்பே அன்றி, பாட மொழிபெயர்ப்பு
அல்ல.
இவ்வளவு தடைகளும், மொழியியல் சிக்கல்களும் இருக்க, இயேசுவின்
விண்ணேற்றத்தை எப்படி புரிந்து கொள்வது?
கேள்வியை மாற்றிக் கேட்டால், பிரச்சினை தீர்ந்துவிடும்.
எப்படி விண்ணேற்பு? என்று கேட்பதை விடுத்து, ஏன்
விண்ணேற்பு? என்று கேட்டால் விண்ணேற்பின் பொருள்
தெரிந்துவிடும்.
விண்ணேற்றம் இயேசுவின் வாழ்வில் மூன்று நிலைகளில் அர்த்தம்
பெறுகின்றது:
1. தன் மண்ணக பணிவாழ்வு முடிந்து, இன்று தன் தந்தையின் இல்லம்
திரும்புகின்றார் (காண். பிலி 2:3-6).
2. தன் சீடர்களிடம் தன் பணியை ஒப்புவிக்கின்றார். தன் இறையரசுப்
பணியைத் தொடர்ந்தாற்ற அவர்களுக்குக் கட்டளையிடுகின்றார்.
விண்ணேற்றம் ஒரு பிரியாவிடை நிகழ்வு. விவிலியத்தில் உள்ள
பிரியாவிடை நிகழ்வுகளில் மூன்று மட்டுமே மிக நீளமானவை: இஸ்ரயேலின்
குலமுதல்வர் யாக்கோபு (தொநூ 49-50), திருச்சட்டம் வழங்கிய
மோசே (இச 33-34), புதிய இஸ்ரயேலின் நம்பிக்கை மற்றும்
திருச்சட்டத்தின் நிறைவாம் இயேசு (திப 1:1-11). இந்த
மூன்று பிரியாவிடைகளும் நான்கு கூறுகளைக் கொண்டுள்ளன: அ)
ஆசியுரை, ஆ) பிரிவு, இ) பார்த்தவர்களின் பதில் மற்றும் ஈ)
கீழ்ப்படிதல் அறிக்கை. இயேசு கைகளை உயர்த்தி ஆசீர் அளிக்கும்
நிகழ்வும் முதல் ஏற்பாட்டு நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே
அமைகின்றது (லேவி 9:22, சீஞா 50:20-21). ஆசியளித்தல் தரும்
மகிழ்ச்சி லூக்கா நற்செய்தியின் முதல் மற்றும் இறுதி நிகழ்வுகளில்
மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது (1:56, 2:20,43,45,
24:9,33, 8:13, 15:7,10). இயேசுவின் சீடர்கள் மகிழ்ச்சியோடு
ஆலயம் திரும்பி இறைவனைப் புகழ்கின்றனர்.
3. துணையாளராம் தூய ஆவியானவரை அவர்கள்மேல் அனுப்புவதாக
வாக்குறுதி தருகின்றார் (திப 1:4-5).
இயேசுவின் உயிர்ப்பைப் போலவே, அவரின் விண்ணேற்றமும் ஒரு நம்பிக்கையின்
மறைபொருளே. "நம்பிக்கை" என்ற இந்த ஒற்றைச் சொல்லை
நீக்கிவிட்டால், இந்த நிகழ்விற்கும் நமக்கும் தொடர்பே இல்லை.
"விண்ணேற்றம் என்னும் நம்பிக்கையை" நாம் எப்படி வாழ்வாக்குவது?
விண்ணேற்றம் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?
பாடம் 1: மறைதலும் மலர்தலும் இறைமை
இயேசுவை மனிதனாக்க அவருக்கு மனுவுருவாதல் தேவைப்பட்டதுபோல,
அவரை இறைவனாக்க அவருக்கு விண்ணேற்றம் தேவை. "தேவை" என்பதால்
இவை உருவாக்கப்பட்டவை என்று பொருள் கொள்ளக் கூடாது. மறைந்திருக்கும்
வரைதான் அவன் பெயர் மறையவன் அல்லது இறைவன். ஆகையால்தான் இறைவனைப்
பற்றிய அறிவை மறை-கல்வி என்கிறோம். தெரிந்துவிட்டால் அவர்
இறைவன் அல்ல. கண்களுக்குத் தெரியாததால் அவர் இல்லை என்பதும்
அல்ல. கண்களுக்குத் தெரியக்கூடியவை எல்லாம் மாறக்கூடியவை.
மாறாதவைகள் கண்களுக்குப் புலனாவதில்லை. நம் உடலின் கண்களை
மறைக்கும் அளவுக்கு நம் கன்னம் வீங்கிவிட்டது என
வைத்துக்கொள்வோம். நம்மால் எதையும் பார்க்க முடியாது. என்னால்
பார்க்க முடியவில்லை என்பதற்காக என் முன் இருப்பவை எல்லாம்,
இல்லாதவை என ஆகிவிடுமா? ஒருபோதும் இல்லை. "ஏனெனில் இப்போது
நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம். ஆனால்
அப்போது நேரில் காண்போம்" (1 கொரி 13:12). இயேசு விண்ணேற்றத்தின்போதுதான்
இறைவனாகின்றார். மறையும்போதுதான் இறைவனாகின்றார். மறைந்த
இயேசு மீண்டும் மலர்கின்றார். எப்படி? "ஆண்டவரும் உடனிருந்து
செயல்பட்டு, நிகழ்ந்து அரும் அடையாளங்களால் அவர்களுடைய
வார்த்தையை உறுதிப்படுத்தினார்" (மாற் 16:20) என பதிவு
செய்கின்றார் மாற்கு. இவ்வாறாக, வாய்ச்சொல்லாக இருந்தவற்றிற்கு
ஒரு பிணைப்பத்திரமாக மலர்கிறது இயேசுவின் உடனிருப்பு.
விண்ணேற்றம் அடைந்து மறைந்த இறைமை திருத்தூதர்கள் வாழ்வில்
உடனிருப்பாக மலர்கிறது.
பாடம் 2: சீடர்களின் பணி
இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன் சீடர்களின் பணி என இயேசு
குறிப்பிடுவது ஒன்றே ஒன்று: "நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்."
"நற்செய்தி" என்ற வார்த்தைக்கான வரைமுறையை "இயேசுகிறிஸ்துவைப்
பற்றிய நற்செய்தியின் தொடக்கம்" (1:1) என்று பதிவு செய்து,
இந்த வசனத்திற்குப் பின் வரும் அனைத்துமே நற்செய்தி என்கிறார்
மாற்கு. ஆக, நற்செய்தி அறிவிப்பு என்பது இNயுசுவின் வரலாற்ற
உடனிருப்பையும், செயல்பாடுகளையும் மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது.
தொடர்ஓட்டத்தில் ஒரு வீரரின் கையிலிருந்து மற்ற வீரரின்
கைக்கு மாறும் குச்சியைப்போல, ஒலிம்பிக் தீப ஓட்டத்தில் ஒருவரின்
கையிலிருந்து அடுத்தவரின் கைக்கு மாறும் தீபம் போல விண்ணரசுப்
பணி இயேசுவின் கையிலிருந்து இன்று நம் கைக்கு மாறுகின்றது.
எந்த அளவிற்கு இது ஒரு கொடையோ, அந்த அளவிற்கு இது ஒரு கடமை.
"விளையாட்டு வீரர் எவரும் விதிமுறைகளுக்குட்பட்டு
விளையாடினால் மட்டுமே வெற்றிவாகை சூட முடியும" (2 திமொ
2:5)
பாடம் 3: எதிர்நோக்கு
"அவர் மீண்டும் வருவார்" (திப 1:11) என்ற வார்த்தைகள்தாம்
நாம் காத்திருப்பதற்கான எதிர்நோக்கை நமக்குத் தருகின்றன.
எதிர்நோக்கில் தயக்கம் அறவே கூடாது (எபி 10:23). நம்
வாழ்வின் ஒவ்வொரு செயலையும் உந்தித் தள்வது எதிர்நோக்கே.
காலையில் எழுவோம் என்ற எதிர்நோக்கு இருப்பதால் தான் இரவு
தூங்கச் செல்லுமுன் "வேக்அப் கால்" வைக்கின்றோம். படிப்பது,
பயணம் செய்வது, வேலை தேடுவது, தேடிய வேலையில் சம்பாதிப்பது,
அருட்சாதனம்
முடிப்பது, அருள்நிலை வாக்குறுதி கொடுப்பது என எல்லா
வாழ்க்கை நிகழ்வுகளிலும், நிழல்களிலும் எதிர்நோக்கி இழையோடியிருக்கின்றது.
இந்த எதிர்நோக்குகளுக்கெல்லாம் தாயாக இருப்பது, "அவர்
மீண்டும் வருவார்" என்ற எதிர்நோக்கும், "நாமும் அங்கு
செல்வோம்" என்ற எதிர்நோக்கும்தான். வெறும் மண்ணோடு மண்ணாக
முடியப்போகும் வாழ்க்கைக்கா நாம் இவ்வளவு மெனக்கெடுகிறோம்?
நாம் மண்ணைச் சார்ந்தவர்கள் அல்லர். விண்ணைச் சார்ந்தவர்கள்.
ஆக, எதிர்நோக்கு என்னும் விளக்கு எந்நேரமும் எரிந்துகொண்டிருக்கட்டும்.
மேலும், நாம் விண்ணைச் சார்ந்தவர்கள் என்பதால் நம் எண்ணங்களும்
உயர்ந்த எண்ணங்களாகவே இருக்கட்டும் (காண். கொலோ 3:1).
பாடம் 4: அண்ணாந்து பார்க்காதீங்க!
"கலிலேயரே, ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்?"
(திப 1:11) என்ற கேள்வி நம்மைப் பார்த்தும் கேட்கப்படுகிறது.
அண்ணாந்து பார்க்கும் ஆன்மீகம் வேண்டாம். குனிந்து
வாழ்வைப் பார்க்கும் ஆன்மீகம் அவசியம். "அவர் வருகிறார்!"
என்பதற்காக அவரைத் தேடி வீட்டைவிட்டு ஓட வேண்டாம். அண்ணாந்து
பார்க்க வேண்டாம். சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து
சாப்பிடுங்கள். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாரித்துக்
கொண்டிருக்கிறீர்களா. தொடர்ந்து செய்யுங்கள். பஸ்ஸில் இருக்கிறீர்களா,
தொடர்ந்து பயணம் செய்யுங்கள். ரேஷன் கடையில் வரிசையில்
நிற்கிறீர்களா, தொடர்ந்து நில்லுங்கள். நோயுற்ற ஒரு நபரோடு
மருத்துவமனையில் பேசிக்கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து
பேசுங்கள். டிவி பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து
பாருங்கள். விளையாடிக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து
விளையாடுங்கள். ஏனெனில், அவர் இவற்றிலும் வருகின்றார். எல்லாவற்றிலும்
அவரால் வர முடியும்.
பாடம் 5: புறப்பட்டுச் செல்தல்
இயேசுவின் பிரிவை அனுபவிக்கும் சீடர்களின் முதல் உணர்வு "அடுத்து
என்ன?" என்பதுதான். நடந்தவற்றை திறனாய்வு செய்துகொண்டோ, அல்லது
"அவர் இன்னும் இங்கே இருந்திருக்கலாம்" என்று புலம்பிக்கொண்டோ
இருக்கவில்லை. உடனே புறப்டுகின்றனர். "அழுதுகிட்டே இருந்தாலும்
உழுதுகிட்டே இருக்கணும்" என்பது கிராமத்துச்
சொல்வடை. அழுகை
நம் பசி தீர்க்குமா? உழுதல்தான் தீர்க்கும். இவ்வாறாக, நம்
அன்றாட வாழ்வில் நாம் பிறர்நோக்கிப் புறப்பட்டுச்சென்று நம்பிக்கையின்
விதையை விதைக்க நம்மை அழைக்கிறார் இயேசு.
"நம்மேல் கொண்ட பரிவினால் அவர் விண்ணிலிருந்து இறங்கி
வந்தார்.
இன்று அவர் தனியே விண்ணேறிச் சென்றாலும், அவரோடு நாமும்
உடன் செல்கிறோம். ஏனெனில் அருளால் நாமும் அவரோடு இணைந்துள்ளோம்!"
(தூய அகுஸ்தினார்)
திருத்தூதர் பணிகள் 1:111
எபேசியர் 4:113
மாற்கு 16:1520
'ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர்,
பாவத்தையும் இறப்பையும் தோற்கடித்த வெற்றி வீரர்,
வானதூதர் வியப்புற வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார்.
இவ்வாறு அவர் சென்றது
எங்கள் தாழ்நிலையை விட்டு அகல வேண்டும் என்பதற்காக அன்று.
மாறாக, எங்கள் தலைவரும் முதல்வருமாகிய அவர்
முன்னரே சென்ற அவ்விடத்திற்கு
அவர் உறுப்பினர்களாகிய நாங்களும்
அவரைப் பின் தொடர்ந்து செல்வோம் என்று
நம்பிக்கை கொள்வதற்காகவே'
புனித அகுஸ்தினாரின் மேற்காணும் வார்த்தைகள் இன்றைய
திருப்பலியின் தொடக்கவுரையாக அமைந்து, இன்றைய நாளின்
முக்கியத்துவத்தை மிக அழகாக நமக்குக் காட்டுகின்றன.
இயேசு திருத்தூதர்களை விட்டு மறைகின்றார். அல்லது இயேசு
அவர்களிடமிருந்து மறைந்து விண்ணேற்றம் அடைகின்றார்.
ஒருவருடைய மறைவை நாம் கொண்டாட முடியுமா? நம்மோடு
உடனிருந்து, நம்மை அழைத்து, தேர்ந்தெடுத்து, வழிகாட்டி,
புதியதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து நம்மிடமிருந்து
ஒருவர் மறைகின்றார் என்றால், அவருடைய மறைவை நாம் கொண்டாட
முடியுமா?
இந்த நாள்களில் நாம் எதிர்கொள்ளும் பெருந்தொற்று மிகப்
பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. நம்
அன்புக்குரியவர்கள் வேகமாக நம்மிடமிருந்து
மறைந்துகொண்டிருக்கிறார்கள். இயேசுவின் உயிர்ப்புக்கும்
விண்ணேற்றத்துக்கும் இடையே இருந்த நாற்பது நாள்கள் இடைவெளி
கூட, ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச்
செல்லப்படுவதற்கும், அவர் இறப்பதற்கும் இடையே இல்லை. நம்
வாட்ஸ்ஆப் செயலியில் மற்றவர் வைக்க நாம் காணும் ஸ்டேடஸில்
ஒரு டிக் டாக் சிரிப்பு வீடியோ கடந்து செல்வது போல, நம்
அன்புக்குரியவர்கள் அடுத்தடுத்த நிழற்படங்களாகக் கடந்து
செல்கிறார்கள். யாருக்கும் யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை.
யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? எல்லார் வீட்டிலும் இழப்பு
என்றால் யார் யாருக்கு தேற்றுதல்மொழி பகர முடியும்?
கடந்த இரு வாரங்களுக்குள் நடந்த இருவரின் இறப்பு என்மேல்
மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. கடந்த மாதம்
27ஆம் தேதி அருள்திரு டோமா ஜோஜி ரத்னாகர், விஜயவாடா
மறைமாவட்ட அருள்பணியாளர், நேற்று (மே 12), அருள்திரு
கிளமென்ட் ஃப்ராங், பெங்களுரு உயர்மறைமாவட்ட
அருள்பணியாளர், இயற்கை எய்தினர்.
நான் புனே பாப்பிறை அருள்பணி பயிற்சி மையத்திற்கு 2000
ஆவது ஆண்டில் சென்றபோது முதன் முதலாகச் சந்தித்த வேற்று
மாநிலத்தவர் ரத்னாகர். ரொம்ப ஸ்டைலாக இருப்பார். அன்று
தொடங்கிய எங்கள் நட்பு உரோமையில் நான் பயின்றபோதும்
தொடர்ந்தது. தன் படிப்புடன் இணைந்து எப்போதும் தன்
குடும்பத்தையும் சிந்திப்பவர். வந்த புதிதில், தனக்கு
இங்கு கிடைக்கும் நல்ல உணவு தன் தங்கைக்கும் தாய்க்கும்
கிடைக்காதே என்று புலம்பிக்கொண்டு, வெறும் தட்டுடன்
சாப்பாட்டு அறையில் அமர்ந்திருப்பார். கடந்த ஆண்டுதான் தன்
முனைவர் பட்ட படிப்பை முடித்து தன் ஊர் திரும்பினார்.
நிறையப் பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்.
கிளமென்ட்-ஐ நான் முதன்முதலாக உரோமையில் உள்ள பாப்பிறை
விவிலியக் கழகத்தில் சந்தித்தேன். நான் அட்மிஷன் போடச்
சென்ற அதே நாளில் அவரும் வந்திருந்தார். 'தமிழாப்பா நீ?'
என்று கேட்டு, மிக அழகாகப் புன்முறுவல் செய்தார். 'நாம
நல்லாப் படிச்சு தமிழ்த்திருச்சபைக்கு நிறையச் செய்யணும்!'
என்று சொன்னார். என்னைவிட வயதில் மூத்தவர். அவருடைய
குடும்பம் அறிமுகம் இல்லை. எனக்கு அருகில் வகுப்பில்
அமர்ந்திருப்பார். ஜெகன், அந்தோனிசாமி, கிளமென்ட், நவீன்,
நான் என்னும் ஐவர் அணி இணைந்துதான் தினமும் கஃபேடேரியா
செல்வோம். ஓடிக்கொண்டே இருப்பார். தன் பங்குப் பணிகள்
அனுபவம் பற்றியும் பகிர்வார். கிடைக்கின்ற கொஞ்ச
நேரத்தையும் நூலகத்தில் செலவிடுவார். கடந்த சில
வாரங்களுக்கு முன்னர்தான் தன் சொந்த மறைமாவட்டம்
திரும்பினார். விவிலியத்தைக் கற்பிப்பதில் நிறைய ஆர்வம்
கொண்டிருந்தார். விவிலிய மற்றும் மேற்கத்தேய மொழிகளை நன்கு
கற்றவர். நிறையப் பயணம் செய்தவர். திருஅவை மேல் மிகுந்த
பற்றுக்கொண்டவர். அன்னை கன்னி மரியா மேல் அவர் கொண்டிருந்த
அதீதப் பற்றுறுதியால் என்னவோ, பாத்திமா அன்னை திருநாள்
அன்றே விண்ணகம் திரும்பிவிட்டார்.
நிற்க.
தங்களுடைய தலைவரும் போதகரும் ஆண்டவருமான இயேசு தங்களை
விட்டு ம
றைந்ததைத் திருத்தூதர்கள் எப்படி
எடுத்துக்கொண்டார்கள்?
'அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நின்றார்கள்'
என்று லூக்கா பதிவு செய்கின்றார். நம் அன்புக்குரியவர்கள்
மண்ணுக்குள் புதைக்கப்பட, நாமோ குனிந்து
பார்த்துக்கொண்டிருக்கிறோம். அண்ணாந்து பார்ப்பதிலும்,
குனிந்து பார்ப்பதிலும் இருக்கும் உணர்வு ஒன்றுதான்.
'எப்படியாகிலும் அவரை நான் எட்டிப் பிடித்துவிட மாட்டேனா?'
என்ற ஏக்கம்தான் அப்போது திருத்தூதர்கள் பார்வையில்
இருந்தது. இன்று நம் பார்வையில் இருக்கிறது. 'அவர்
விண்ணேறிச் சென்றவாறே மீண்டும் திரும்பி வருவார்!' என்று
திருத்தூதர்களுக்கு வானதூதர்கள் ஆறுதல் மொழி சொல்கின்றனர்.
நாமோ இன்று ஆறுதலின்றி நிற்கின்றோம்.
இயேசுவின் விண்ணேற்றம் மூன்று நிலைகளில் முக்கியத்துவம்
பெறுகிறது: (அ) அவர் தன் மண்ணக வாழ்வுப் பயணம் முடித்து
தந்தையின் இல்லம் திரும்புகிறார். (ஆ) திருஅவையின் பணி
இங்கே தொடங்குகிறது. (இ) தூய ஆவியார் உடனிருந்து திருஅவையை
வழிநடத்துகின்றார். தன் விண்ணேற்றத்தின் கொடையாக இயேசு,
அவர் வாக்களித்தவாறே, தூய ஆவியாரை அனுப்புகிறார்.
விண்ணேற்றம் திருத்தூதர்களுக்குச் சொன்ன செய்தி என்ன?
இன்றைய முதல் வாசகத்தில், லூக்கா பதிவு செய்வது போல,
அவர்கள் எருசலேமை விட்டு நீங்குதல் கூடாது. மேலும்,
அவர்கள் கடவுளது வல்லமை பெற்று எருசலேமிலும் யூதேயா,
சமாரியா முழுவதிலும் சாட்சியாக இருப்பார்கள். இயேசு பணியை
நிறுத்திய இடத்திலிருந்து திருத்தூதர்கள் தங்கள் பணியைத்
தொடங்க வேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் மாற்கு
நற்செய்தியாளரும் அப்படியே பதிவிடுகிறார்: 'இயேசு
விண்ணேற்றம் அடைந்த பின்னர் அவர்கள் புறப்பட்டுச் சென்று
எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர்.'
விண்ணேற்றம் நமக்குச் சொல்லும் செய்தி என்ன?
(அ) இயேசுவின் உடனிருப்பு. 'கடவுள் நம்மோடு' என்று இறங்கி
வந்தவர், 'கடவுள் நமக்காக' என்று ஏறிச்செல்கின்றார். அவர்
நம்மை விட்டு நீங்கிவிடவில்லை. இதையே இன்றைய இரண்டாம்
வாசகத்தில், புனித பவுல், 'எங்கும் நிறைந்திருக்கும்படி
எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்ற அவரே சிலரைத்
திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், சிலரை
நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும்
ஏற்படுத்தினார்' என எழுதுகிறார். ஆக, ஆண்டவர் எப்போதும்
எங்கும் நிறைந்திருக்கிறார். அவர் தன் உடனிருப்பை பல்வேறு
நபர்கள் வழியாகவும், திருஅவையில் உள்ள தன் இருத்தலின்
வழியாகவும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்.
(ஆ) இயேசுவின் செயல்பாடு. நற்செய்தி வாசகத்தில்,
'ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும்
அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்'
என மாற்கு பதிவு செய்கின்றார். 'உடனிருப்பு' என்பது
இருத்தல் என்றால், 'செயல்படுதல்' என்பது இயக்கம். ஆண்டவர்
செயல்படுகின்றார். எப்படி? நம் செயல்கள் வழியாக. நம்
செயல்கள் அவருடைய செயல்களாக இருந்தால் அவர் அவற்றை
உறுதிப்படுத்துகின்றார். அவற்றுக்குச் சான்றாக
நிற்கின்றார். எளியோரைத் தூக்கி விடுவதில், உள்ளம்
உடைந்தோரைக் குணமாக்குவதில், ஒருவர் மற்றவரைப்
புரிந்துகொள்வதில், வாழ்வின் சின்னஞ்சிறிய நிகழ்வுகளில்
அவர் நம்மோடு செயல்படுகின்றார்.
ஆக, 'உடனிருப்பும்' 'செயல்படுதலும்' ஆண்டவர் நமக்குத்
தருகின்ற செய்தி.
உடனிருப்பு மட்டும் இருந்து செயல்படுதல் இல்லை என்றால்,
அடுத்தவர் நமக்குச் சுமையாகி விடுவார். செயல்படுதல்
மட்டும் இருந்து உடனிருப்பு இல்லை என்றால், அடுத்தவர்
நம்மை எண்ணத்தை விட்டு எளிதாக மறைந்துவிடுவார். இரண்டும்
இணையும்போது, அங்கே வல்ல செயல் (அரும் அடையாளம்)
நடக்கிறது: பேய்கள் ஓட்டப்படுகின்றன. புதிய மொழிகள்
பேசப்படுகின்றன. பாம்புகள் கைகளால் பிடிக்கப்படுகின்றன.
கொல்லும் நஞ்சு தீங்கிழைப்பதில்லை. நலமற்றவர்கள் மேல்
கைகள் வைக்கப்பட்டவுடன் அவர்கள் நலம் பெறுகின்றனர்.
மறைதல் என்றால் இறைமை. இதையே பவுலும், 'நாங்கள் காண்பவற்றை
அல்ல, நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை
நிலையற்றவை. காணாதவை என்றும் நிலைத்திருப்பவை' (காண். 2
கொரி 4:18) என எழுதுகின்றார். காணக்கூடிய நிலையில் இருந்த
இயேசு திருத்தூதர்களின் பார்வையிலிருந்து மறைகின்றார்.
நிலையற்ற தன்மையிலிருந்து நித்தியத்திற்கு இயேசு கடந்து
செல்கின்றார்.
காண முடியாத நிலைக்குக் கடந்து செல்லும் அனைவரும்
நித்தியத்திற்குள் கடந்து செல்கின்றனர். இனி இவர்கள்
காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவர்கள். எனவே,
இவர்களால் எந்தக் காலத்திற்குள்ளும் எந்த இடத்திற்குள்ளும்
இனி நுழைய முடியும்.
ஆகையால்தான், உயரே ஏறுகின்ற ஆண்டவர் குறித்து, 'அல்லேலூயா'
பாடி அக்களிக்கின்றார் திருப்பாடல் ஆசிரியர் (காண். 47).
இறுதியாக, 'எங்கள் கண்கள் முன்பாக இயேசு
எடுத்துக்கொள்ளப்பட்டார்' எனக் கூறும் முதல் வாசகம், அதே
கண்களை நாம் இந்த உலகத்தின்மேல் பதிக்கவும்,
'கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறும் அளவுக்கு நாம்
முதிர்ச்சியடைவோம்' என்று சொல்லும் இரண்டாம் வாசகம்,
விண்ணேற்றம் என்பது நாம் அடையும் நிறைவு என்றும், இன்றே
நம் எண்ணங்களும் செயல்களும் முதிர்ச்சி பெற்று மேன்மையுடன்
இருக்க வேண்டும் எனவும் ஊக்கம் தருகிறது.
ஆண்டவரின் உடனிருப்பும், செயலாற்றுதலும் இன்றும் என்றும்
நம்மோடு!
நம்மைவிட்டு மறைந்து இறைமையில் கலக்கும் நம்
அன்புக்குரியவர்களின் உடனிருப்பும் செயலாற்றுதலும் என்றும்
நம்மோடு!
இன்று விண்ணேற்றம் அடையும் இறைவன் தன் அரும் அடையாளங்களால்
பெருந்தொற்றிலிருந்து நம்மை விடுவிப்பாராக! மனுக்குலத்தின்
துன்பத்தை அவர் அங்கிருந்து பார்க்கவில்லை. மாறாக, இங்கே
நம்மோடு, நம்மில் ஒருவராக அதை அனுபவித்தார். அவர் நமக்காக
விண்ணேறிச் செல்தல் சிறப்பு.
விண்ணேறிச் சென்று, தந்தையின் வலப்பக்கம் அமர்ந்த இயேசு
ஒரு சமயம் பிரபல மறைபோதகரான பில்லி கிரகாம் (Billy Graham) ஒரு
நகருக்கு போதிக்கச் சென்றார். அவ்வாறு அவர் போதிக்கச் சென்றபோது
உடனடியாக அனுப்பவேண்டிய ஒரு கடிதத்தை அனுப்புவதற்காக அந்நகரில்
இருந்த அஞ்சல்நிலையத்தை நீண்ட நேரமாகத் தேடினார். எவ்வளவுதான்
அவர் கடுமையாகத் தேடினாலும் அவரால் அஞ்சல் நிலையம் எங்கிருக்கின்றது
என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்போது அந்த வழியாக ஓர் இளைஞன் வந்தான். அவனை நிறுத்திய
பில்லி கிரகாம்,
"இந்த நகரில் அஞ்சல் நிலையம் எங்கிருக்கின்றது?"
என்று கேட்டார். அவனும் அஞ்சல் நிலையம் எங்கிருக்கின்றது என்று
மிகத் தெளிவாக சுட்டிக்கட்டினான். அவன் அஞ்சல் நிலையம் எங்கிருக்கின்றது
என்று சரியாகச் சுட்டிக்காட்டியதைக் கண்டு மகிழ்ந்துபோன அவர்,
அவனிடம், "தம்பி! நான் பாப்டிஸ்ட் திருச்சபையைச் சார்ந்த ஒரு
மறைபோதகர். இன்று மாலை இங்கிருக்கும் ஆலயத்தில் மக்களுக்கெல்லாம்
எப்படி விண்ணகம் செல்லலாம் என்பதற்கான வழியைச் சுட்டிக்காட்டப்
போகின்றேன். நீயும் வரலாம்" என்றார்.
அதைக் கேட்ட இளைஞன்,
"நிச்சயம் உங்களால் மக்களுக்கு விண்ணகம்
செல்வதற்கான வழியைச் சுட்டிக்காட்ட முடியாது" என்றான். "ஏன் அவ்வாறு
சொல்கிறாய்?" என்று பில்லி கிரகாம் கேட்க, "உங்களுக்கு அஞ்சல்
நிலையம் எப்படிச் செல்லவேண்டும் என்பதற்கே வழி தெரியவில்லை,
நீங்கள் எல்லாம் எப்படி மக்கள் விண்ணகம் செல்வதற்கான சொல்ல
முடியும்?" என்று கேட்டான். பில்லி கிரகாமால் பதில் சொல்ல முடியவில்லை.
பில்லி கிரகாமிற்கு வேண்டுமானால் விண்ணகம் செல்வதற்கான வழி
தெரியாமல் இருக்கலாம், ஆனால், ஆண்டவர் இயேசுவுக்கு விண்ணகம்
செல்கின்ற வழி தெரியும். ஏனென்றால், அவர்தான் முதன்முதலாக விண்ணகம்
ஏறிச் சென்று, தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து பரிசு
பேசுகின்றார். ஆம், இன்று நாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து
விண்ணகம் சென்ற விழாவை
- விண்ணேற்றப் பெருவிழாவைக்
- கொண்டாடி மகிழ்கின்றோம். இந்நாளில் ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப்
பெருவிழா நமக்குக் கூறுகின்ற செய்தியை ஆழமாக சிந்தித்துப்
பார்ப்போம்.
ஆண்டவர் இயேசு இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின்பு
உடனடியாக விண்ணகம் செல்லவில்லை. அவர் நாற்பது நாட்கள் தன்னுடைய
சீடர்களோடு இருந்து அவர்களைத் தேற்றுக்கின்றார், மறு பயிற்சி
அளித்து, அவர்களை இன்னும் வலுவுள்ளவர்களாக மாற்றுகின்றார். அதன்பின்னே
அவர் விண்ணேற்றம் அடைகின்றார். இயேசு விண்ணகம் சென்றதால் அல்லது
அவர் இந்த மண்ணகம் விட்டுச் சென்றதால் நமக்கு ஏதாவது இழப்பு ஏற்படுமோ
என்றுகூட நாம் நினைக்கலாம். இயேசுவின் விண்ணேற்றத்தினால் நமக்கு
இழப்பு இல்லை, மாறாக அதனால் நாம் நிறைய பலன்களைப் பெறலாம் என்றுதான்
சொல்லவேண்டும்.
இயேசுவின் விண்ணேற்றத்தினால் நாம் அடையும் நன்மைகள் என்னென்ன
வென்று இப்போது பார்ப்போம்.
இயேசுவின் விண்ணேற்றத்தினால் நாம் அடையக்கூடிய முதலாவது நன்மை
தூய ஆவியின் வருகை ஆகும். ஆம், இயேசுவின் விண்ணேற்றத்திற்குப்
பிறகுதான் தூய ஆவியின் வருகையானது நிகழும். யோவான் நற்செய்தியில்
ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாக எடுத்துரைப்பார், "நான்
போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார், நான் போனால் அவரை
உங்களிடம் அனுப்புவேன்" என்று (யோவா 16:7) ஆம், இயேசுவின்
விண்ணேற்றத்திற்குப் பிறகுதான் தூய ஆவியாரின் வருகை நிகழும்,
அதன்பிறகுதான் அவருடைய வழிநடத்துதல் சாத்தியப்படும். ஆகையால்,
இயேசுவின் விண்ணேற்றத்தினால் தூய ஆவியைக் கொடையாகப்
பெற்றுக்கொள்ளலாம் என நாம் மிக உறுதியாகச் சொல்லலாம்.
இப்போது இங்கே ஒரு கேள்வி எழும். து என்னவெனில், "இயேசு
விண்ணேற்றம் அடைந்துவிட்டால், அதன் தொடர்ச்சியாக தூய ஆவியால்
இங்கே வந்துவிட்டால், ஆண்டவர் இயேசுவின் பிரசன்னம் இந்தப் பூவுலகில்
இருக்காதா?" என்பதுதான் அக்கேள்வி. தூய ஆவியானவர் வந்துவிட்டால்,
இயேசுவின் பிரசன்னம் இங்கு இருக்காது என்பதில்லை. அவர் உலகம்
முடியும்வரை நம்மோடு இருப்பார் (மத் 28:20). எனவே, இயேசுவின்
விண்ணேற்றத்தினால், அவர் நம்மை விட்டு முற்றிலுமாக
போய்விட்டார் என நினைக்காமல், அவர் இறுதிவரைக்கும் நம்மோடு இருக்கின்றார்
என்னும் உண்மையை உணர்வோம், அவர் நமக்குக் கொடையாகத் தரும் தூய
ஆவியின் வழிகாட்டுதலை ஆழமாக உணர்ந்துகொள்வோம்.
இயேசுவின் விண்ணேற்றத்தினால் நாம் அடையும் இரண்டாவது நன்மை இயேசுவின்
பரிந்து பேசுதலாகும். ஆம், விண்ணேற்றம் அடைந்த இயேசு தந்தையின்
வலப்பக்கம் அமர்ந்து, அங்கே அவர் தந்தையிடம் நமக்காகப் பரிந்துபேசுகின்றார்
என்று விவிலியம் நமக்கு சான்று பகர்கின்றது (எபி 7: 25). இயேசு
தந்தைக் கடவுளிடம் பரிந்து பேசுகின்றபோது நமக்கு அருளுக்கு
மேல் அருள் கிடைக்கும் என்பதுதான் உண்மை.
தந்தைக் கடவுளோ இரக்கமே வடிவானார். அவர் நமக்குப் பல்வேறு ஆசிர்வாதங்களை
வழங்கக்கூடியவர். அப்படி இருக்கும் சூழ்நிலையில் இயேசு
கிறிஸ்து தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து நமக்காகப் பரிந்துபேசும்போது
நமக்கு இரட்டிப்பு ஆசிர் கிடைக்கும் என நாம் உறுதியாகச் சொல்லலாம்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது ஒரு கல்லூரியிலோ
சேர்வதற்கு சமூகத்தில் இருக்கும் மிக முக்கியப் பிரமுகர்களிடமிருந்து
பரிந்துரைக் கடிதம் பெற்றுச் செல்கின்றோம். அந்தப் பரிந்துரைக்
கடிதம் நாம் நினைத்ததைப் பெற்றுக்கொள்வதற்கு உறுதியாக இருக்கின்றது.
அது போன்று தந்தைக் கடவுளிடமிருந்து நாம் அருளையும் ஆசிரையும்
பெற்றுக்கொள்ளவேண்டும் என்றால், மகனாகிய இயேசுவிடம் பரிந்துபேசினாலே
போதும், நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்பதில் எந்தவொரு
மாற்றுக் கருத்தும் கிடையாது.
இயேசுவின் விண்ணேற்றத்தினால் நாம் பெறுகின்ற மூன்றாவது நன்மை
இயேசுவின் இரண்டாம் வருகையாகும். திருத்தூதர் பணிகள்
நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில்
இயேசு விண்ணேற்றம் அடைவதையே பார்த்துக்கொண்டிருந்த சீடர்களிடம்
வெண்ணுடை அணிந்த இருவர், "கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணார்ந்து
பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து
விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்
என்கின்றனர். ஆகையால், இயேசுவின் விண்ணேற்றம் அவருடைய இரண்டாம்
வருகைக்கான ஓர் அறிவிப்பு என நாம் உறுதியாகச் சொல்லலாம். இயேசுவின்
இரண்டாம் வகுகையில் நாம் இந்த மண்ணகத்தில் நேர்மையாளர்களாக
வாழ்ந்திருக்கும் பட்சத்தில், அவர் அதற்கேற்ற கைமாறை நமக்குத்
தருவார் என்பது உறுதி. இதுவும் நமக்கு ஒரு விதத்தில் நன்மை என்றுதான்
சொல்லவேண்டும்.
எனவே, இயேசுவின் விண்ணேற்றம் நமக்கு இழப்பல்ல, அது ஆசிர்வாதம்தான்
என நாம் உறுதியாக நம்புவோம்.
இதுவரைக்கும் இயேசுவின் விண்ணேற்றத்தினால் நாம் என்ன நன்மைகளைப்
பெற்றுக்கொள்கின்றோம் என்று சிந்தித்த நாம், ஆண்டவர் இயேசுவின்
விண்ணேற்றம் நமக்கு எத்தகைய அழைப்பினைத் தருகின்றது என்று
சிந்தித்துப் பார்ப்போம்.
இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு
விடுக்கின்ற அழைப்பு, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப்
பறைசாற்றுங்கள்" என்பதாகும். ஆம், நற்செய்தி அறிவிப்புதான் இயேசுவின்
சீடர்களுக்கு, இயேசுவைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு அவர்
விடுக்கின்ற முதன்மையான அழைப்பாக இருக்கின்றது. இயேசுவின் சீடர்கள்
அவருடைய அழைப்பினை ஏற்று நற்செய்தியை அறிவித்தார்கள், அதற்காக
தங்களுடைய இன்னுயிரையும் துறந்தார்கள். இயேசுவின் வழியில் நடக்கும்
நாம் நற்செய்தி அறிவிப்பதற்கான முன்னெடுப்புகளை
மேற்கொள்கின்றோமா? நற்செய்தி அறிவிப்பின் மீது தாகம் கொண்டு
வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இயேசு சபைத் தலைவராக (Superior General) பதினைந்து ஆண்டுகளாக
இருந்தவர் அருட்தந்தை அருப்பே அவர்கள். அவர் எப்படி ஆண்டவருடைய
நற்செய்தியை அறிவிக்கும் பணியாளாக மாறினார் என்பதற்காக சொல்லப்படுகின்ற
நிகழ்வு.
அருப்பே அவர்கள் மாட்ரிட் பல்கலைகழகத்தில் மருத்துவப் படிப்பு
படித்துக்கொண்டிருந்தார். படிப்பில் அவர் மிகத் திறமையானவராகவே
விளங்கினார். அவரோடு இருந்த அனைவரும், பிற்காலத்தில் அவர் ஒரு
மிகச் சிறந்த மருத்துவராக உயர்வார் என்று நினைத்தார்கள். 1926
ஆம் ஆண்டு, அதாவது அவருக்கு பத்தொன்பது வயது நடந்துகொண்டிருக்கும்போது
ஒருநாள் அவர் லூர்து நகருக்குச் சென்று, அங்கு நடைபெற்ற வழிபாட்டில்
கலந்துகொண்டார். அப்போது அவருக்குப் பின்னால், ஒரு தாய் நடக்க
இயலாத தன்னுடைய முப்பது வயது மதிக்கத்தக்க மகனை சக்கர
நாற்காலியில் வைத்துக்கொண்டு, "இயேசுவே, நடக்க இயலாத என் மகனுக்கு
இரங்கும்" என்று உரக்கக் கத்தினார். இதைக் கேட்டு வழிபாட்டை
நடத்திக் கொண்டிருந்த ஆயர் நற்கருணை ஆண்டவரை எடுத்துவந்து அந்தத்
தாயின் மகன்மீது வைத்து ஜெபித்தார்.
என்ன ஆச்சரியம்! சிறிது நேரத்திலே நடக்க முடியாத அந்தத் தாயின்
மகன் எழுந்து நடக்கத் தொடங்கினான். இந்த நிகழ்வு அருப்பே
வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் தன்னுடைய
அறைக்கு வந்தபோது அவரால் சரியாகப் படிக்க முடியவில்லை. அவருடைய
நண்பர்கள் எல்லாம், "ஏன் இந்த மாற்றம்?" என்று கேட்டபோது, அவர்,
நிகழ்ந்தவற்றை எல்லாம் எடுத்துச் சொன்னார். அது மட்டுமல்லாமல்,
"ஆண்டவர் இயேசு என்னுடைய உள்ளத்தைத் தொட்டுவிட்டார், அவருக்காகவே
என்னுடைய வாழ்வை அர்ப்பணிக்கப் போகிறன்" என்று சொன்னார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் லயோலாவில் இருந்த இயேசு சபையில்
சேர்ந்து இயேசுவுக்காக, அவருடைய நற்செய்திக்காக தன்னை
முழுமையாய் அர்ப்பணித்தார்.
இயேசுவால் தொடப்பட்ட அருப்பே, அவருடைய நற்செய்திக்காக, தன்னை
முழுமையாய் அர்ப்பணித்தது மிகவும் சிறப்பான ஒன்று. நாம் ஒவ்வொருவரும்
இயேசுவின் சீடர்களைப் போன்று, தந்தை அருப்பே போன்று நற்செய்திக்காக
நம்மை முழுமையாய் அர்ப்பணிக்க வேண்டும் என்பதுதான் இயேசு நமக்கு
அழைப்பாக இருக்கின்றது. நற்செய்தி அறிவிக்கவின்றபோது கடவுளின்
பராமரிப்பு, ஆசிர்வாதம் நமக்கு எப்போதும் உண்டு என்பதை இயேசு
சுட்டிக்காட்டத் தவறவில்லை.
ஆகவே, நாம் ஒவ்வொருவரும் ஆர்வமிக்க ஆண்டவருடைய நற்செய்திப் பணியாளர்
ஆவோம், ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்தில் பெருமகிழ்வோம், அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.