ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

        பொதுக்காலம் 12ம் ஞாயிறு

    திருப்பலி முன்னுரை


வருடாந்த
ஞாயிறு வாசகம்
    pdf/Calendrier-litrugique2021.pdf
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
இறைஇயேசுவில் அன்பிற்குரியவர்களே,
B தவக்காலம்1
இன்று பொதுக்காலம் 12ம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள்.

நம் வாழ்வின் இன்றைய காலக் கட்டங்களில், பரப்பரப்பான இந்த உலகில், உறங்க நேரம் இல்லாமல் பலர் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி ஓடி ஓடி, உழைத்து பலர் உடல், மன ரீதியாக பல நோய்களை, மன உளைச்சல்களை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதைச் சரியாக கடைப்பிடிக்கும்போது நம் உடல், மனம் இரண்டுமே புத்துணர்ச்சி பெற்று அடுத்த பணிகளை செய்ய புத்துணர்ச்சியை, உற்சாகத்தை நமக்குக் கொடுக்கும். பலர் தூங்க நேரமில்லாமல் உழைத்துக் கொண்டிருக்க, மற்றும் பலர் தூங்குவதையே தொழிலாகக் கொண்டு, சோம்பேறியாக சுற்றி வருவார்கள். "சோம்பேறிகளே, இன்னும் எவ்வளவு நேரம் படுத்திருப்பீர்கள்? தூக்கத்திலிருந்து எப்போது எழுந்திருப்பீர்கள்? இன்னும் சிறிது நேரம் தூங்குங்கள், இன்னும் சிறிது நேரம் உறங்குங்கள், வறுமை உங்கள் மீது வழிப்பறிக் கள்வரைப்போல் பாயும். ஏழ்மை நிலை உங்களைப் போர்வீரரைப்போல் தாக்கும்" என நீதிமொழிகள் 08ம் அதிகாரம் 06-10 வரை உள்ள இறைவார்த்தைகள் கூறுகிறது. ஆகையால், தூக்கத்தைக் குறைத்து, சோம்பேறித்தனத்தை விட்டொழித்து, நன்கு உழைத்து வாழ்வதுவே நல்லது. தூக்கத்திலிருந்து ஒரு துணை எழுத்தை எடுத்து விட்டால் துக்கமே மிஞ்சும். துக்கம் வராத அளவிற்கு, சரியான நேரங்களில் தூங்கி, உடல், மனம் இரண்டையும் பாதுகாப்போம்.

நம் வாழ்வில் சோதனைகள் என்னும் புயல் தாக்கலாம். இன்னல்கள், இடர்கள் அலையாக எழலாம். கண்ணீர், நிறைந்திருக்கலாம். நம் வாழ்வை அச்சுறுத்தும், இத்தனை இரைச்சல்களையும் கண்டு, மனம் சோர்ந்திடாது, தளர்ந்திடாது, அவற்றையெல்லாம் அடக்கி, அமைதியை ஏற்படுத்தும் இறைவன் நம்மோடு பயணிக்கின்றார் என்ற ஆழமான விசுவாச உணர்வு நம்மிலே வேண்டும்.

"இயேசு தூங்கினார்" என்றால், அவர் எத்தகைய அச்சமும், கலக்கம் கொள்ளவில்லை. ஏனென்றால், தந்தையாகிய இறைவன், நம்மை கைவிடமாட்டார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை அவரிலே இருந்தது. ஆனால், சீடர்களுக்கு அத்தகைய விசுவாசம் இல்லாமல் போனது. அதனால், இயேசு, சீடர்களுக்குக் விசுவாசத்தை கற்றுக் கொடுக்கின்றார். தானியேல் சிங்கக் குகையில் தள்ளப்பட்ட போதும், பவுலும், சீலாவும் சிறைக்கூடத்திலிருந்த போதும், எதற்கும் கலங்காமல், இறைவனை முழுமையாக நம்பினர். விடுதலையும் பெற்றனர். அத்தகைய விசுவாசம் நிறைந்த உள்ளத்தை நாமும் பெற்றிட, இத்தெய்வீகத் திருப்பலியில் நம்மையே ஒப்புக் கொடுப்போம்.

முதல் வாசக முன்னுரை: யோபு 38: 1, 8-11

இறைவனுக்குரியவர்களே,
துன்பத்திற்கு காரணம் சொல்ல முடியாது, இது ஏன் வருகிறது என கேட்க முடியாது. ஆனால், இறைவனை நம்பும் போது, அவர் ஞானத்தைக் கொடுப்பார். அப்போது, அதன் வழியாக நாம் இந்த உலகத்தையும், அதன் நிலைகளையும் புரிந்து கொண்டு, ஏற்று வாழ முடியும் என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. குறைவான விசுவாசம் இல்லாமல் உறுதியான ஆழ்ந்த விசுவாசத்துடன் வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: 2 கொரிந்தியர் 5:14-17

இறைவனுக்குரியவர்களே,
நாம் வாழ்வதும், இயங்குவதும், இருப்பதும் அவரிலே தான். எனவே வெறும் மனித இயல்பினால் தூண்டப்பட்ட வாழ்வை வாழ்வதை காட்டிலும், நமக்காக மரித்து, உயிர்த்தெழுந்த இயேசுவுக்காக வாழ வேண்டும் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் அறிவுறுத்துகிறார். இயேசுவை நம் வாழ்வின் மையமாக கொண்டு வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.
 
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

தாயும், தந்தையுமான இறைவா,
உம் பணிக்காய் நீர் தேர்ந்தெடுத்து, அர்ச்சித்திட்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட் சகோதரிகள். துறவறத்தார் அனைவரும், தங்கள் பணிவாழ்வில் உமதன்பு வாழ்வை, வார்த்தையாக இல்லாமல் வாழ்வாக பிரதிபலித்து, முன்மாதிரியான சாட்சிய வாழ்வு வாழந்து, மக்களை நல்வழியில் வழிநடத்தி, இறையாட்சியை எங்கும் வளரச் செய்திட, தூய ஆவியின்; ஆற்றலையும், வல்லமையையும் நிறைவாகப் பொழிந்து, காத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அரணும், கோட்டையுமான இறைவா,
எங்கள் வாழ்வில் வரும் துன்பங்கள், துயரங்கள், சோதனைகளைக் கண்டு, மனம் சோர்ந்து, தளர்ந்து, வாழ்வை முடித்துக் கொள்ளும் கோழைத்தனமான, முட்டாள்தனமான முடிவுகளை எங்கள் மனதிலிருந்து அகற்றி, நீர் எங்களோடு என்றும் உடனிருக்கின்றீர், பயணிக்கின்றீர், எங்கள் வாழ்வை வளமாக்குவீர் என்ற ஆழமான விசுவாசத்தை, நம்பிக்கையை நாங்கள் பெற்று, வாழ்வின் பயணத்தை உம் கரம் பிடித்து, நடந்திடக் கூடிய உறுதியான உள்ளத்தைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

உலகின் ஒளியே இறைவா,
வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரை உம்மிடம் ஒப்புக் கொடுக்கின்றோம். இந்த உலகம் காட்டும் மாயக் கவர்ச்சியான பணம், பதவி, புகழ், மது, மாது என்ற போதையில் தங்கள் வாழ்வை தொலைத்திடாது. தடம் புரண்டிடாது, உண்மை இறைவன் உம்மை விட்டு விலகி, பாவத்திலே வீழ்ந்திடாது, இருளின் ஆட்சிக்குரிய தவறான செயல்களிலிருந்து விடுபட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய செயல்களை உணர்ந்து, அதன் வழியில் தங்கள் வாழ்வைத் தொடர்ந்திடக் கூடிய தெளிவான மனதினைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வாழ்வு வழங்கும் வள்ளலே இறைவா,
அன்று வயது முதிர்ந்த சாரா, அன்னா, எலிசபெத் இவர்களின் கண்ணீரின் வேண்டுதல்களை ஏறெடுத்து, அவர்களுக்கு மக்கட்பேற்றினை அளித்தீரே, இன்று திருமணமாகி பல ஆண்டுகள் கடந்து, குழந்தைச் செல்வத்திற்காக ஏங்கித் தவிக்கும் தம்பதியரின் வேண்டுதல்களை கண்ணோக்கிப் பாரும். அவர்களின் கண்ணீரை கண்ணுற்று, அவர்களுக்கு நல்ல மக்கட்பேற்றினை அளித்து, அவர்கள் அக்குழந்தையை உமக்கும், இச்சமூகத்திற்கும் உகந்தவர்களாக வளர்த்து ஆளாக்கிடக் கூடிய, பொறுப்புள்ள பெற்றோர்களாக வாழந்திட வரமருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

இரக்கத்தின் ஊற்றே இறைவா.
வறுமை, ஏழ்மையினால் துயருறும் மக்களுக்கு, அவர்களின் தேவைகளையறிந்து, உதவிடவும், எங்களிடம் இருப்பதை, இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழவும், விபத்து, ஆபத்துக்களில் சிக்கித் தவிப்பவர்களை கண்டும் காணாததுபோல், "நமக்கேன் வம்பு" என விலகிச் செல்லாமல், நல்ல சமாரியனைப் போல் உடனிருந்து உதவிடவும், அநீதிகளைக் கண்டு, தட்டிக் கேட்காமல், கோழைத்தனமாக வாழாது, தவற்றினைச் சுட்டிக் காட்டி, நீதியை நிலைநாட்டவும் கூடிய, துணிவு நிறைந்த உள்ளத்தை தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



 
மறையுரை சிந்தனைகள்

 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.

 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 
யோபு 38:1, 811
2 கொரிந்தியர் 5:1417
 மாற்கு 4:3541

உன் அலைகள் எங்கே?

'நான் என் சுண்டுவிரலை நகர்த்தும்போது எங்கோ இருக்கின்ற நட்சத்திரத்தை நகர்த்துகிறேன்' என்பது தாவோ எண்ணம். அதாவது, நானும் பிரபஞ்சமும் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றோம். செல்டிக் பண்பாட்டின் புரிதல்படி நாம் வானில் காண்கின்ற விண்மீன்கள் யாவும் இந்த உலகைக் கடந்து சென்றவர்கள் ஏற்படுத்திச் சென்ற பிரபஞ்சத் துவாரங்கள். அவற்றின் வழியே அவ்வுலகின் ஒளி இவ்வுலகை நோக்கிக் கடந்து வருகின்றது. அவர்கள் அவ்வுலகிற்குச் சென்றாலும் அத்துவாரங்கள் வழியே இவ்வுலகைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்கள். நம்முடைய பிரபஞ்சமும் நாமும் ஏதோ ஓர் ஒருங்கமைவு இணைப்பில் இருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. நாள் விடிகின்றது, நாள் முடிகின்றது. நாம் பிறக்கின்றோம், நாம் இறக்கின்றோம். ஏதோ ஒரு பாடலின் இசை போல, ஓவியத்தின் ஒளி-இருள் போல எல்லாம் அதனதன் நேரத்தில் நடந்துகொண்டிருக்கின்றது.

இந்த ஒருங்கியக்கத்தில் ஏதாவது ஒரு தடை வரும்போது நம் மனம் பதைபதைக்கின்றது. அப்படி வரும் தடைகளை பதற்றமின்றி நாம் எப்படி எதிர்கொள்வது என்பதை இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குக் கற்றுத் தருகிறது. இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் இன்னொருவருடன் இணைந்திருக்கின்றோம். ஒருவர் மறையும்போது அவரைச் சுற்றி பிண்ணப்பட்ட வலை கிழிந்து போவதோடு, அதைத் திரும்பப் புதுப்பிக்க முடியாத நிலையும் உருவாகிவிடுகிறது.

நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் சீடர்களை நோக்கி, 'அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்!' என்றழைத்து, அவர்களோடு இணைந்து படகில் ஏறுகின்றார். அந்த நேரத்தில் புயல் அடிக்கின்றது. கெனசரேத்து ஏரி என அழைக்கப்படும் கலிலேயக் கடல் உண்மையில் ஓர் ஏரி. சுற்றிலும் மலை சூழ்ந்திருப்பதாலும், கடல்மட்டத்திற்குக் கீழே இருப்பதாலும் பெருங்காற்று வீசும்போது இந்நீர்த்தேக்கத்தில் ஏறக்குறைய 20 அடி உயரத்திற்கு அலைகள் எழுவதுண்டு. இயேசுவின் சீடர்களில் பெரும்பாலானவர்கள் மீன்பிடித்தொழில் செய்தவர்கள், அல்லது இக்கடலைச் சுற்றி வாழ்ந்தவர்கள். ஆக, அவர்கள் அலைகளை அடிக்கடி எதிர்கொண்டதுண்டு. இந்த நிகழ்வில், பெரும் புயல் அடித்தது எனச் சொல்கின்ற மாற்கு, அங்கு நிலவிய இரண்டு சூழல்களை நம்முன் கொண்டு வருகின்றார்: ஒன்று, அமைதியான சூழல். அந்தச் சூழலில் இயேசு படகில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருக்கின்றார். அதற்கு எதிர்மாறான சூழல் இரண்டாவது. பரபரப்பான சூழல். அங்கே சீடர்கள் பரபரப்பாக, பயந்து போய் இருக்கின்றனர். 'போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?' எனக் கேட்கின்றனர். இவர்கள் இயேசுவை வெறும் போதகராக (ரபி) பார்க்கின்றனர். மேலும், தங்கள் கவலையில் இயேசுவையும் இணைத்துக்கொள்ள முயற்சி செய்கின்றனர்.

இயேசு எழுந்து கடலைக் கடிந்துகொள்கின்றார். 'இரையாதே! அமைதியாயிரு!' என்பது பேயோட்டுவதற்கான வாய்ப்பாடு. அதே வார்த்தைகளைச் சொல்லி இயேசு கடலை அமைதியாக்குகின்றார். ஏனெனில், யூத மக்களைப் பொருத்தவரையில் கடல் என்பது பேய்கள் வாழும் இடமாகக் கருதப்பட்டது. தொடர்ந்து தன் சீடர்களைக் கடிந்துகொள்கின்றார் இயேசு: 'ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?' இவ்வார்த்தைகள் வழியாக அவர்களின் நம்பிக்கையின்மையைக் கடிந்துகொள்கின்றார் இயேசு. அதாவது, இயேசு தங்களோடு இருக்கும்போது தங்களுக்கு இறப்பு இல்லை என்பதை அவர்கள் நம்ப மறுத்தனர். இதுதான் அவர்களின் நம்பிக்கைக் குறைவான நிலை. இந்தக் கேள்விகள் சீடர்களைப் பார்த்து மட்டும் கேட்கப்படவில்லை. இந்நிகழ்வை வாசிக்கும் நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்கப்படுகின்றன. இவ்விரண்டு வினாக்களுக்கும் நானும் நீங்களும் தனித்தனியாக விடை அளிக்க வேண்டும். நாம் அளிக்கும் விடையைப் பொருத்தே, 'படகில் தூங்குபவரும் காற்றைக் கடிந்துகொள்பவரும் யார்?' என்ற வினாவுக்கான விடை அமையும்.

தங்களுடைய வாழ்க்கை இயல்பாகக் கடந்து போன போது இரண்டு துன்பங்களை எதிர்கொள்கின்றனர் சீடர்கள்: ஒன்று, 'அக்கரைக்குச் செல்கின்றனர்.' இக்கரையில் இருந்த தங்களுடைய பெற்றோர், பிள்ளைகள், உடன்பிறந்தோர், உறவினர்கள், நண்பர்கள், தொழில், மக்கள் ஆகிய அனைத்தையும், அனைவரையும் விடுத்து, முன்பின் தெரியாத அக்கரை நோக்கிச் செல்கின்றனர். இரண்டு, இயல்பான அமைதியில் இருக்கின்ற கடல் இயல்பு நிலையை இழந்து கொந்தளிக்கிறது. இவ்விரண்டு துன்பங்களும் அவர்களுக்கு அச்சமும் கவலையும் அளிக்கின்றன. ஆகையால்தான், 'போதகரே, சாகப்போகிறோமே!' என்கின்றனர்.
முதல் வாசகத்தில், யோபுவுக்கு ஆண்டவராகிய கடவுள் சூறாவளியினின்று அருளிய பதிலின் ஒரு பகுதியை வாசிக்கின்றோம். 'நேர்மையாளர் துன்புறுவது ஏன்?' என்ற கேள்வியைக் கேட்டு விடையைத் தேடுகிறது யோபு நூல். நேர்மையாளர் துன்புறுதலுக்கான விடையை யோபுவின் மூன்று நண்பர்கள் பாரம்பரிய இறையியலைக் கொண்டு தர முயற்சி செய்கின்றனர். அவர்களின் விடை யோபுவுக்கு ஏற்புடையதாக இல்லை. சூறாவளியில் தோன்றுகின்ற ஆண்டவர் யோபுவின் கேள்விக்கு விடையளிக்காமல் சுற்றி வளைத்து நிறையக் கேள்விகளைத் தொடுக்கின்றார். தானே அனைத்துக்கும் ஆண்டவர் என்றும், வாழ்வின் மறைபொருள் அனைத்தவர் தான் மட்டுமே என்றும் யோபுவை உணரச் செய்கின்றார். விளைவு, யோபு சரணடைகின்றார். கடல்மேல் ஆண்டவராகிய கடவுள் கொண்டிருக்கின்ற ஆற்றலை இவ்வாசகப் பகுதியில் காண்கின்றோம்.
யோபுவின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது. அவர் தனக்குரியது அனைத்தையும் அனைவரையும் இழந்து இறந்தவர் போல, அல்லது இறப்புக்குத் துயரப்படுவது போல சாம்பலில் அமர்ந்திருக்கின்றார். பிரபஞ்சத்திற்கும் தனக்குமான நெருக்கம் உடைக்கப்பட்டது போல உணர்ந்த அந்த நேரத்திலும் இறைவனின் உடனிருப்பைக் காண்கின்றார் யோபு.

இரண்டாம் வாசகத்தில், தன்னுடைய நற்செய்தியின் மேன்மை குறித்து கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற பவுல் தான் படுகின்ற துன்பங்கள் அனைத்தையும் முன்வைக்கின்றார். தான் படுகின்ற துன்பங்கள் அனைத்தையும் இயேசுவின் உயிர்ப்பின் ஒளி கொண்டு காண்கின்றார் பவுல். கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழியாக பழையது மறைந்து புதியது பிறக்கின்றது என அறிக்கையிடுகின்றார்.
பெருந்தொற்றின் இரண்டாம் அலை மெதுவாக ஓய்ந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், நம் அன்புக்குரிய பலரை நாம் அன்றாடம் இழந்துகொண்டிருக்கும் வேளையில், இரண்டாம் அலையைப் பார்த்து, ஆண்டவராகிய கடவுள், 'உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!' என்று கட்டளையிடுகின்றார்.
நாம் இன்று கேட்க வேண்டிய கேள்வி எல்லாம், 'போதகரே, நாங்கள் சாகப்போகிறோமே!' என்பதல்ல, மாறாக, 'ஆண்டவரே, நாங்கள் வாழப்போகிறோமே! நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்பதுதான்.
நமக்கும் கடவுளுக்கும், நமக்கும் ஒருவர் மற்றவருக்கும், நமக்கும் பிரபஞ்சத்திற்குமான ஒருங்கியக்கம் தடைபடும்போதெல்லாம் இறைவன் அங்கே இருக்கின்றார் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். சில நேரங்களில் அவர் யோபுவிடம் பேசியது போல இறங்கிவந்து பேசுகின்றார். சில நேரங்களில் தலையணை வைத்துத் தூங்குகின்றார்.
திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து, 'ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு ... புயல் காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார். கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன' (திபா 107) என்று பாடுவோம்.
அக்கரைக்கு நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. அவருடைய உடனிருப்பு நம் இருத்தலையும் இயக்கத்தையும் உறுதி செய்கிறது.




++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பொதுக்காலத்தின் 12ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
யோபு 38:1.8-11
2 கொரிந்தியர் 5: 14-17
மாற்கு 4:35-41


அலைகளும் ஆண்டவரும்!

அன்று மாலை ஆல்பர்ட் தனியாகக் கடலுக்குச் சென்றான். இவனுடைய படகிலிருந்து வெகு தூரத்தில் சில படகுகள் நிற்பதைக் கண்டான். தூரத்தில் ஆள்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் இன்னும் கொஞ்ச தூரம் சென்றான். சற்று நேரத்தில் இருட்டத் தொடங்கியது. தூரத்தில் தெரிந்த படகுகள் கண்களிலிருந்து மறைந்தன. கரையும் எட்டாமல் தெரிந்தது. திடீரென்று காற்று வீசத் தொடங்கி அலைகள் பொங்கி எழுந்தன. மழைச்சாரலும் விழுந்தது. உள்ளுக்குள் சற்றே பயம் தொற்றிக்கொண்டது. தன் வீட்டில் சண்டை போட்டுவிட்டு கடலுக்குள் வந்துவிட்டான். தன் கோபத்தை தானே கடிந்துகொண்டான். எப்படியாவது வீடு திரும்ப வேண்டும் என்னும் ஆசை அவனுள் இருந்தது. சிறிய வயதில் தன் பாட்டி சொன்ன கதை அவனுக்கு நினைவில் வந்தது. இயேசு கலிலேயக் கடலில் ஏற்பட்ட புயலை அடக்கிய கதையைச் சொன்ன பாட்டி, "ஆண்டவர் நம் படகில் இருந்தால் அலைகள் ஓய்ந்துபோகும்!" என்று பாடம் சொன்னாள். கண்களை மூடி ஒரு நிமிடம் செபித்தான் ஆல்பர்ட். "ஆண்டவரே! என் படகுக்குள் வாரும்!" என்றான். கண்களைத் திறந்த சற்று நிமிடங்களில் தூரத்தில் "லைட் ஹவுஸ்" தெரிந்தது. திசை தெரிந்துவிட்ட மகிழ்ச்சியில் கரை நோக்கிக் கடந்தான். அலைகள் மெதுவாக ஓயத் தொடங்கின. அவனுடைய இதயத்தின் கோப அலைகளும் ஓய்ந்தன.

நிற்க.

இயேசு காற்றையும் கடலையும் கடிந்துகொள்ளும் நிகழ்வை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். மாற்கு நற்செய்தியின் பாடச் சூழலில் நற்செய்தி வாசகத்தைப் பார்க்கும்போது, உவமைகள் பகுதி முடிந்து இங்கே வல்ல செயல்கள் (அறிகுறிகள் அல்லது புதுமைகள்) பகுதி தொடங்குகிறது. வல்ல செயல் அடிப்படையில் இது "இயற்கை வல்லசெயல்" வகையைச் சார்ந்தது (மற்ற வகைகள், பேய் ஓட்டுதல், நோய் நீக்குதல் ஆகும்). இயேசு இயற்கையின்மேல் ஆற்றல் கொண்டவராக இருந்தார் என்பதை இந்த வல்ல செயல் சுட்டிக்காட்டுகிறது. மேலும், இப்பகுதியை உவமை என்றும் எடுத்துக்கொள்ளலாம். அதாவது, இந்நிகழ்வில் இயேசு தலையணை வைத்துத் தூங்குகிறார். "தூக்கம்" என்பது "இறப்பு" அல்லது "இல்லாமையை" குறிக்கிறது. இயேசுவின் இறப்பு அல்லது விண்ணேற்றத்துக்குப் பின்னர் மாற்குவின் குழுமத்தார் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கைபைப் பயணம் (படகுப் பயணம்) இனிதாக இல்லை. ஒரு பக்கம் அலைகள்போல வெளியிலிருந்து துன்பங்கள் வந்தாலும், இன்னொரு பக்கம் "கடவுளின் இல்லாமையை" அவர்கள் உணர்கிறார்கள். கடவுள் தங்களைவிட்டு நீங்கிவிட்டார் என்னும் சோர்வில் இருந்த மக்களுக்கு இந்நிகழ்வு வழியாக, ஊக்கம் தருகிறார் மாற்கு. அதாவது, இயேசு நம்மைவிட்டு நீங்கிவிட்டாலும் (தூங்கிவிட்டாலும்) நம்மேல் அக்கறை கொண்டவராக இருக்கிறார். அவருடைய உடனிருப்பில் நாம் எவ்வித துன்பத்தையும் எதிர்கொள்ள முடியும்.

நற்செய்தி வாசகத்தின் தொடக்கத்தில், "அக்கரைக்குச் செல்கிறோம்" என்கிறார் இயேசு. அக்கறையோடு அவர் அக்கரைக்கு அவர்களை நடத்திச் செல்கிறார். வாழ்வின் நிகழ்வுகளில் நாம் உறைந்துபோகும்போது நம்மை "அக்கரைக்குச் செல்கிறோம்" என அழைக்கிறார் இயேசு. நாம் அடிக்கடி எழுந்து அக்கரைக்குச் செல்ல வேண்டும்.

அந்த நேரத்தில் புயல் அடிக்கின்றது. கெனசரேத்து ஏரி என அழைக்கப்படும் கலிலேயக் கடல் உண்மையில் ஓர் ஏரி. சுற்றிலும் மலை சூழ்ந்திருப்பதாலும், கடல்மட்டத்திற்குக் கீழே இருப்பதாலும் பெருங்காற்று வீசும்போது இந்நீர்த்தேக்கத்தில் ஏறக்குறைய 20 அடி உயரத்திற்கு அலைகள் எழுவதுண்டு. இயேசுவின் சீடர்களில் பெரும்பாலானவர்கள் மீன்பிடித்தொழில் செய்தவர்கள், அல்லது இக்கடலைச் சுற்றி வாழ்ந்தவர்கள். ஆக, அவர்கள் அலைகளை அடிக்கடி எதிர்கொண்டதுண்டு. இந்த நிகழ்வில், பெரும் புயல் அடித்தது எனச் சொல்கின்ற மாற்கு, அங்கு நிலவிய இரண்டு சூழல்களை நம்முன் கொண்டு வருகின்றார்: ஒன்று, அமைதியான சூழல். அந்தச் சூழலில் இயேசு படகில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருக்கின்றார். அதற்கு எதிர்மாறான சூழல் இரண்டாவது. பரபரப்பான சூழல். அங்கே சீடர்கள் பரபரப்பாக, பயந்து போய் இருக்கின்றனர். "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?" எனக் கேட்கின்றனர். இவர்கள் இயேசுவை வெறும் போதகராக (ரபி) பார்க்கின்றனர். மேலும், தங்கள் கவலையில் இயேசுவையும் இணைத்துக்கொள்ள முயற்சி செய்கின்றனர். இயேசுவையும் பரபரப்புக்கு உள்ளாக்குகிறார்கள்.

இயேசு எழுந்து கடலைக் கடிந்துகொள்கின்றார். "இரையாதே! அமைதியாயிரு!" என்பது பேயோட்டுவதற்கான வாய்ப்பாடு. அதே வார்த்தைகளைச் சொல்லி இயேசு கடலை அமைதியாக்குகின்றார். ஏனெனில், யூத மக்களைப் பொருத்தவரையில் கடல் என்பது பேய்கள் வாழும் இடமாகக் கருதப்பட்டது. தொடர்ந்து தன் சீடர்களைக் கடிந்துகொள்கின்றார் இயேசு: "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" இவ்வார்த்தைகள் வழியாக அவர்களின் நம்பிக்கையின்மையைக் கடிந்துகொள்கின்றார் இயேசு. அதாவது, இயேசு தங்களோடு இருக்கும்போது தங்களுக்கு இறப்பு இல்லை என்பதை அவர்கள் நம்ப மறுத்தனர். இதுதான் அவர்களின் நம்பிக்கைக் குறைவான நிலை. இந்தக் கேள்விகள் சீடர்களைப் பார்த்து மட்டும் கேட்கப்படவில்லை. இந்நிகழ்வை வாசிக்கும் நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்கப்படுகின்றன. இவ்விரண்டு வினாக்களுக்கும் நானும் நீங்களும் தனித்தனியாக விடை அளிக்க வேண்டும். நாம் அளிக்கும் விடையைப் பொருத்தே, "படகில் தூங்குபவரும் காற்றைக் கடிந்துகொள்பவரும் யார்?" என்ற வினாவுக்கான விடை அமையும்.


இங்கே இயேசுவின் அக்கறையைக் காண்கிறோம். முதலில் அமைதி ஏற்படுத்துகிறார். பின் சீடர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார். முதலில் துன்பம் களைகிறார்.

முதல் வாசகத்தில், யோபுவுக்கு ஆண்டவராகிய கடவுள் சூறாவளியினின்று அருளிய பதிலின் ஒரு பகுதியை வாசிக்கின்றோம். "நேர்மையாளர் துன்புறுவது ஏன்?" என்ற கேள்வியைக் கேட்டு விடையைத் தேடுகிறது யோபு நூல். நேர்மையாளர் துன்புறுதலுக்கான விடையை யோபுவின் மூன்று நண்பர்கள் பாரம்பரிய இறையியலைக் கொண்டு தர முயற்சி செய்கின்றனர். அவர்களின் விடை யோபுவுக்கு ஏற்புடையதாக இல்லை. சூறாவளியில் தோன்றுகின்ற ஆண்டவர் யோபுவின் கேள்விக்கு விடையளிக்காமல் சுற்றி வளைத்து நிறையக் கேள்விகளைத் தொடுக்கின்றார். தாமே அனைத்துக்கும் ஆண்டவர் என்றும், வாழ்வின் மறைபொருள் அனைத்தவர் தாம் மட்டுமே என்றும் யோபுவை உணரச் செய்கின்றார். விளைவு, யோபு சரணடைகின்றார். கடல்மேல் ஆண்டவராகிய கடவுள் கொண்டிருக்கின்ற ஆற்றலை இவ்வாசகப் பகுதியில் காண்கின்றோம்.

யோபுவின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது. அவர் தனக்குரியது அனைத்தையும் அனைவரையும் இழந்து இறந்தவர் போல, அல்லது இறப்புக்குத் துயரப்படுவது போல சாம்பலில் அமர்ந்திருக்கின்றார். பிரபஞ்சத்திற்கும் தனக்குமான நெருக்கம் உடைக்கப்பட்டது போல உணர்ந்த அந்த நேரத்திலும் இறைவனின் உடனிருப்பைக் காண்கின்றார் யோபு.

ஆண்டவராகிய கடவுள்தாமே அலைகளை, "இதற்குமேல் வராதே!" என்று வரையறுத்தவர். அப்படி எனில், இயற்கை கடவுளுக்குக் கட்டுப்பட்டதாக இருக்கிறது.

இரண்டாம் வாசகத்தில், தன் திருத்தூதுப் பணியின் உண்மைத் தன்மை பற்றி கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகிற பவுல், "கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது" என்கிறார். படகில் அலைகளால் அச்சுறுத்தப்பட்ட சீடர்களை கிறிஸ்துவின் பேரன்பே ஆட்கொள்கிறது. இவ்வாறாக, "பழையன கழிந்து புதியன வருகிறது" அலைகள் ஓய்ந்து அமைதி பிறக்கிறது.

வாழ்க்கைப் பாடங்கள் எவை?
(அ) அலைகளும் ஆண்டவரும் நம் வாழ்வின் எதார்த்தங்கள். நமக்கு முன்னால் அலைகளும் நமக்குப் பின்னால் ஆண்டவரும் என்றுதான் வாழ்வின் நிகழ்வுகள் நகர்கின்றன. பல நேரங்களில் நம் பார்வை நமக்கு முன்னால் இருக்கிற அலைகள்மேல்தாம் இருக்கிறதே தவிர, நமக்குப் பின்னால் தூங்குகிற ஆண்டவர்மேல் இல்லை. சற்றே நம் உள்ளங்களைத் திருப்பினால் போதும்! அவர் நம் படகின் தலைவராகிவிடுவார். "உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!" என அவரே அலைகளுக்கும் நம் துன்பங்களுக்கும் கட்டளையிடுகிறார்.

(ஆ) சீடர்கள் தங்களுடைய அச்சத்தால், "போதகரே, நாங்கள் சாகப்போகிறோமே!" எனக் கூக்குரல் எழுப்புகிறார்கள். நம் குரல் சற்றே வித்தியாசமாக இருக்கட்டும்: "ஆண்டவரே, நாங்கள் வாழப்போகிறோமே! நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" கடவுளின் உடனிருப்பில் இறப்புக்கு இடமில்லை.

(இ) கிறிஸ்துவின் பேரன்பு நம்மை எப்போதும் ஆட்கொள்ளட்டும். நம் உறவுநிலைகளில் நாம் எவ்விதமான எதிர்மறையான அனுபவம் பெற்றாலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும், தனித்துவிடப்பட்டாலும், தனிமையில் இருந்தாலும் அவருடைய அன்பின்கீழ் நம்மையே தாழ்த்திக்கொள்வோம். அவர் நம்மை உயர்த்துவார்.

திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து, "ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு புயல் காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார். கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன" (திபா 107) என்று பாடுவோம்.

அக்கரையை நோக்கிய நம் பயணத்தில் ஆண்டவர் நம்மோடு!
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
அபயம் தரும் இயேசு

ஒரு சமயம் வழிப்போக்கன் ஒருவன் பாக்தாத் நகர் நோக்கி நடந்து போய்கொண்டிருந்தான். அப்போது அவனைக் கடந்து "பிளேக் நோயானது" போய்க்கொண்டிருந்தது. அதைத் தடுத்து நிறுத்திய வழிப்போக்கன் அதனிடம், "எங்கு போகின்றாய்?, என்ன விஷயமாய் போகின்றாய்?"என்று கேட்டான். அதற்கு பிளேக் நோய் அவனிடம், "நான் பாக்தாத் நகர் நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றேன். அங்கே 5000 பேரைக் கொன்றொழிக்கப் போகிறேன்"என்றது. இதைக் கேட்டு திடுக்கிட்டுப் போன வழிப்போக்கன் பாக்தாத் நகர் நோக்கி நடப்பதை நிறுத்திவிட்டு, வேறோர் பக்கமாய் நடக்கத் தொடங்கினான்.

சில நாட்கள் கழித்து அந்த வழிப்போக்கன் பாக்தாத்திலிருந்து வந்த வேறொரு வழிபோக்கனைச் சந்தித்தான். அப்போது முன்னவன் பின்னவனைப் பார்த்து, "நீ பாக்தாத்திலிருந்துதானே வருகின்றாய், அங்கே சில நாட்களுக்கு முன்பாக வந்த பிளேக் நோயினால் எத்தனைப் பேர் இறந்தனர்?" என்று கேட்டான். அதற்குப் பின்னவன் அவனிடம், "ஐயா! அந்த கொடிய பிளேக் நோயினால் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துபோனார்கள்" என்றான். "ஐம்பதாயிரமா?, என்னிடத்தில் ஐயாயிரம் என்றுதானே பிளேக் நோய் சொல்லிவிட்டுப் போனது"என்று மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டான். பின்னர் முதலாவது வழிப்போக்கனிடமிருந்து இரண்டாமவன் விடைபெற்றுச் சென்றான்.

இன்னும் சில நாட்கள் கழித்து வழிப்போக்கன் ஓர் ஊருக்குப் போய்க்கொண்டிருக்கும் வழியில், அதே பிளேக் நோயைச் சந்தித்தான். உடனே அவன் அதனிடம், "பாக்தாத் நகரில் ஐயாயிரம் பேரைத்தானே கொல்வதாகச் சொன்னாய், எதற்காக ஐம்பதாயிரம் பேரைக் கொன்றாய்?"என்று கேட்டான். அதற்கு பிளேக் நோய் அவனிடம், "நான் அங்கு ஐயாயிரம் பேரைத்தான் கொன்றேன். மீதிப்பேர் பயத்தினாலே இறந்துபோனார்கள்" என்று சொல்லிவிட்டு வேகமாகப் போனது.

பயம், அதுதான் மனித இனத்தை ஆட்டிப்படைக்கும் மிகக்கொடிய நோய் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நாம் இப்படி பயந்து பயந்து வாழ்ந்து, நம்முடைய வாழ்வையே சீரழித்துக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் ஆண்டவர் இயேசு, "அஞ்சாதீர்"என்று சொல்லி நம்மைத் தேற்றுபவராக இருக்கின்றார்.

பொதுக்காலத்தின் பனிரெண்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் "அச்சத்தை விடுத்து, ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை கொள்வோம், அபயம் தரும் இயேசு" என்னும் உண்மையை நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றன. நாம் அதனைக் குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் கடலில் போய்க்கொண்டிருக்கின்றார்கள். அப்போது திடிரென்று புயல் அடிக்கின்றது; காற்று கடுமையாக வீசுகின்றது. இதனால் கடல்தண்ணீர் அவர்கள் பயணம் செய்த படகிற்குள் புகுந்து அவர்களைப் பயங்கொள்ளச் செய்கிறது. ஆனால், இவற்றுக்கு மத்தியில் இயேசு கிறிஸ்து படகின் பின்னால் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருக்கின்றார். கடல் தண்ணீர் படகிற்குள் புகுந்ததால் தாங்கள் சாவது உறுதி என நினைத்த சீடர்கள், "போதகரே!, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?"என்று சொல்லி அவரை எழுப்புகிறார்கள். இயேசுவோ, "இரையாதே, அமைதியாயிரு"என்று சொல்ல அவை அமைதியாகின்றன. உடனே சீடர்கள், "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்படிகின்றவே, இவர் யாரோ"என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்கிறார்கள்.

இயேசு காற்றையும் கடலையும் அடக்கிய இந்த நிகழ்வு நமக்கு ஒருசில உண்மைகளை மிகத் தெளிவாக விளக்குகின்றது. அவை என்னவென்று இப்போது பார்ப்போம்.

பொதுவாக மாற்கு நற்செய்தியில் இயேசு கிறிஸ்து ஒவ்வொரு அருமடையாளத்தைச் செய்கின்றபோதும் மக்கள் இயேசுவைக் குறித்து "இவர் யார்?" என்று பேசிக்கொள்வார்கள். இன்றைய நற்செய்தியிலும் இயேசு காற்றையும் கடலையும் அடக்குகின்றபோது, சீடர்கள் இவர் யாரோ என்றுதான் பேசிக்கொள்கின்றார்கள். மாற்கு நற்செய்தியாளர் இப்படி மக்கள்/சீடர்கள் இவர் யாரோ என்று கேட்பதாகக் குறிப்பிடும் அதே நேரத்தில், இயேசு உண்மையில் யார் என்பதையும் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

மாற்கு நற்செய்தியாளர், இயேசு காற்றையும் கடலையும் அடக்குகின்ற நிகழ்ச்சியைக் குறிப்பிடுவதன் வழியாக, அவர் இயற்கையின்மீது/ ஏன் எல்லாவற்றின்மீது அதிகாரம் கொண்டிருக்கின்றார் என்னும் உண்மையை நமக்கு மிகத் தெளிவாக விளக்குகின்றார். ஆம், இயேசுவுக்கு விண்ணிலும் மண்ணிலும் எல்லா அதிகாரமும் இருக்கின்றது (மத் 28:18). அவர் ஒருவார்த்தை சொல்ல காற்றும் கடலும் ஏன் தீய ஆவியும் அவருக்கு அடிபணிவது அதனால்தான்; உடல் நலமாற்றோரிடமிருந்து நோய் நீங்குவது அதனால்தான். ஆகவே, இயேசுவுக்கு எல்லாவற்றின்மீதும் அதிகாரம் உண்டென்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

யோபு புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் எத்துணை உயர்ந்தவர், அவருக்கு எல்லாமே கட்டுப்படும் என்னும் உண்மை மிகத் தெளிவாக விளங்குகின்றது. அங்கு நாம் இவ்வாறு படிக்கின்றோம், "கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஓடியபொழுது அதனைக் கதறவிட்டு அடைத்தார் யார்?"என்று. உடைபெடுத்து ஓடிய கடலை அடைத்தது ஆண்டவர்தானே அன்றி வேறு யாராக இருக்கமுடியும்?. இங்கே ஆண்டவருக்கு எல்லாமே கட்டுப்படும் என்பது தெளிவாகின்றது. நற்செய்தியில் எப்படி ஆண்டவர் இயேசுவுக்கு காற்றும் கடலும் கட்டுப்படுகின்றதோ அதுபோன்று இங்கு கடலும் அலைகளும் கடவுளுக்குக் கட்டுபடுவதாக இருக்கின்றன. எனவே, இறைவனுக்கு முன்னால், அவர் மகன் இயேசுவுக்கு முன்னால் காற்றும் கடலும் ஒன்றுமில்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இயேசு காற்றையும் கடலையும் அடக்குகின்ற நிகழ்வு நமக்கு உணர்த்தும் இரண்டாவது உண்மை இயேசு/ இறைவன் இயற்கை இடர்களிலிருந்து நம்மை நிச்சயம் காப்பாற்றுவார் என்பதாகும். கடலில் புயல் அடித்தது, அலைகள் பொங்கி எழுந்தது. கடல்தண்ணீர் இயேசுவும் அவருடைய சீடர்களும் பயணம் செய்த படகுக்குள் வந்தது. ஆனால், அவற்றால் சீடர்களுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. காரணம் இயேசு அவர்களோடு இருந்தார். நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் நாம் துன்பங்களை, சவால்களை, இடர்களைச் சந்திக்கின்றபோது இறைவன் நம்மைவிட்டுத் தூர விலகி நிற்காமல், நம்மோடு இருக்கின்றார் என்பதுதான் நிதர்சனம்.

இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்தில் படிக்கின்றோம், "நீர்நிலைகள் வழியாக நீ செல்லும்போது நான் உன்னோடு இருப்பேன்; ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா; தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்படமாட்டாய்; நெருப்பு உன்மேல் பற்றி எரியாது. ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் நான்"(எசா 43:2,3). ஆம், நம் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றபோது நமக்கு என்ன கவலை என்பதை உணர்ந்தவர்களாய் வாழவேண்டும் என்னும் செய்தியைத் தான் மேலே உள்ள இறைவார்த்தை நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. துன்ப வேளையில் நாம் இறைவனின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் உணர்ந்திருக்கின்றோமா? என்பது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

ஒருமுறை லாரன்ஸ் பிரதர்டன் என்பவரும் அவருடைய மனைவியும் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தார்கள். அங்கு சென்ற அவர்கள் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு முன்பாக இருந்த ஒரு பாலத்திலிருந்து, மிக உயரத்திலிருந்து ஆர்ப்பரித்து விழுந்த நீர்வீழ்ச்சியைக் கண்டு ரசித்தார்கள். அவர்கள் நின்றுகொண்டிருந்த பாலத்திற்குக் கீழோ தண்ணீர் மணிக்கு 60 மெயில் வேகத்தில் மிக வேகமாகப் பாய்ந்தோடியது. யாராவது தப்பித் தவறி உள்ளே விழுந்தால், உயிர் பிழைப்பது கடினம் என்பதாகவே நிலைமை இருந்தது.

இவ்வாறு நீர்வீழ்ச்சியையும், அதன் வேகத்தையும் கண்டுகழித்துக் கொண்டிருந்த லாரன்ஸ் பிரதர்டன் கொஞ்ச தூரம் தள்ளி, அவ்வளவு வேகமாகப் போய்க்கொண்டிருக்கும் தண்ணீருக்குள் வாத்துகள் நீந்திக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அக்காட்சி அவருடைய சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது. குறிப்பாக அக்காட்சி அவரை, படகில் இயேசு தன்னுடைய சீடர்களோடு கடலில் பயணம் செய்கின்ற நிகழ்ச்சியை நினைவூட்டியது. அப்போது அவர், "ஐந்தறிவு படைத்த இந்த வாத்துக்கூட்டமே (இறைவனின் பாதுகாப்பை உணர்ந்து), வேகமாக ஓடும் தண்ணீரிலும் அமைதியாக இருக்கும்போது, இயேசு தங்களோடு இருந்தபோதும் சீடர்களால் மட்டும் எப்படி கடலில் திடிரென்று ஏற்பட்ட புயலில் அஞ்சி நடுங்கியது முடிந்தது?"என்று நினைத்துக்கொண்டார். இறைவன் நமக்கு எப்போதும் துணையாக இருக்கின்றார், நாம்தான் அதனை உணராதவர்களாக இருக்கின்றோம் என்பதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

இயேசு நம்மை ஆபத்திலிருந்தும் எல்லா இடர்களிலிருந்தும் காப்பாற்றுகின்றார் என்றால் அதற்கு அவர் நம்மீது கொண்ட அன்புதான் காரணம். அதைத்தான் தூய பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில், "கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கின்றது"என்கிறார். ஆகவே, இயேசுவும் அவரது அன்பும் நம்மோடு இருக்கும்போது நாம் எதைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை என்ற மனநிலையோடு வாழக் கற்றுகொள்வோம்.

நிறைவாக நற்செய்தி வாசகம் உணர்த்தும் உண்மை நாம் ஆண்டவரிடம் எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கவேண்டும் என்பதாகும். சீடர்கள் இயேசு தங்களோடு இருக்கிறார் என்பதைக் கூட அறியாமல், அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் இருந்தார்கள். அதனால்தான் அவர்கள் அப்படி அஞ்சி நடுங்கினார்கள். நாம் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டிருக்கும்போது எதற்கும் அஞ்சிடத் தேவையில்லை. ஏனென்றால் நம்பிக்கை இருக்கும் இடத்தில் அச்சத்திற்கு இடமில்லை.

ஆகவே, நாம் நம்முடைய வாழ்க்கையில் இறைவனின் பராமரிப்பை எப்போதும் உணர்ந்தவர்களாய் வாழ்வோம், எல்லா அச்சத்திலிருந்தும் விடுதலை பெறுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
பொதுக்காலத்தின் 12ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
யோபு 38:1.8-11
2 கொரிந்தியர் 5: 14-17
மாற்கு 4:35-41


விசுவாசம்

இறையேசுவில் அன்புக்குரியவர்களே!
ஆண்டவர் இயேசு மாலைப் பொழுதிலே, கடலிலே பயணம் செய்வதாகப் பார்க்கிறோம். அதுவும் புயலும், காற்றும், சூறாவளியும் சூழ்ந்த கொந்தளிப்பில் தூங்கிக்கொண்டிருக்கிறார். நற்செய்தி ஏட்டிலே இந்த ஓர் இடத்தில் மட்டும்தான் இயேசு தூங்கியதாக வாசிக்கிறோம். அதேநேரத்தில் அமைதியிலே ஆண்டவர் இயேசு நித்திரை கொள்ள, சீடர்கள் படபடத்து, திக்குமுக்காடி, நாங்கள் மடியப் போகின்றோம், எங்களைக் காப்பாற்றும் என்று கதற இயேசு காற்றையும் கடலையும் கடிகிறார். அங்கே பேரமைதி உண்டாகிறது. சீடர்கள், இவர் யார்? என்னே இவரது வலிமை என்று வாயிலே கை வைத்து வியந்து நிற்கிறார்கள். இயேசுவோ ஏன் இந்தப் பயம். உங்கள் விசுவாசம் எங்கே ? என்று கடிந்துகொண்டார்.

ஆண்டவர் இயேசு சொன்னார்: "இரையாதே சும்மா இரு; காற்று நின்றது. பேரமைதி உண்டாயிற்று."

அன்று இறந்த லாசரை நோக்கி வெளியே வா என்றார், வந்தான் அல்லவா!

உலகத்தின் ஆரம்பத்திலே இறைவன் ஒளி உண்டாகுக் என்றார். ஒளி உண்டாயிற்று.

நான்கு நிலைகள்
1. மாலைப் பொழுதில் அக்கரைக்குப் போவோம் என்றார்.

2. இருட்டு. அலைகள் எழுந்ததால் கண்டுகொள்ள முடியாத நிலை. பகல் நேரத்தில் போய் இருக்கலாமே! ஏன் இந்த இரவுப் பயணம்? இதேபோல் நாம் காலத்தைக் கணக்கிடுவ. தில்லையா? ஒருவர் சொன்னார்: சுவாமி இந்த 20-ஆம் நூற்றாண்டு திருச்சபைக் கெட்டுவிட்டது என்று. நான் அவரைப் பார்த்து நீ 18, 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தீரா என்று கேட்டேன். பதில் இல்லை.

3. கடலில் சென்ற படகு அங்கே அலைகளால் அலைமோத தண்ணீர் உள்ளே பாய , ஐயோ நாங்கள் மடியப் போகின்றோம் என்று அபயக் குரல் எழுப்புகிறார்கள் சீடர்கள்.

அதேபோல் இன்றைய உலகில் திருச்சபை கெட்டுவிட்டது. குருக்கள் சரியில்லை, கன்னியர் சரியில்லை, இவன் சரியில்லை . அவன் சரியில்லை . ஆம் உண்மைதான். ஆனால் நீ சரியாக இருக்கிறாயா? ஏதோ திருச்சபை கெட்டுவிட்டதாகவும், ஆவியானவர் ஏதோ ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பது போலவும், இயேசு தூங்குவது போலவும் நினைப்பவர் பலர் உண்டு.

உலகம் முடிவுவரை உங்களோடு எந்நாளும் இருக்கிறேன் (மத். 28:20) என்றாரே இயேசு . இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். நரகத்தின் வாயில்கள் மேற்கொள்ளா என்றாரே (மத். 16:18).

ஆலமரத்தின் அடியிலே துண்டு விரித்துப் படுத்திருந்த வியாபாரி, ஆலமரமோ பெரிது. அதன் விதையோ சிறிது. இது கூடவா இறைவனுக்குத் தெரியாது. இந்தப் பெரிய மரத்திற்கு ஏற்ற விதையாக உண்டாக்கி இருக்க வேண்டாமா? என்று சொன்னான். அதன்பின் அயர்ந்து தூங்கினான். பழம் அவன் கண்ணில் விழ, விழித்தான். ஆம் கடவுளின் ஞானம் அளவு கடந்தது. பெரிய பழமாக இருந்திருந்தால் என் நிலை என்னவாயிருக்கும். என்றான்.

உங்கள் விசுவாசம் எங்கே? என்று கேட்கிறார் சீடர்களைப் பார்த்து. ஏனெனில் ஐந்து அப்பங்கள் கொண்ட புதுமையைக் கண்டவர்கள், கானாவூரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைக் கண்டவர்கள், 38 ஆண்டுகளாக ஆட்டுக் குளத்தில் நடக்காத மனிதனை நடக்க வைத்தது, விதவையின் மகனுக்கு உயிர்கொடுத்த நிகழ்ச்சி இவையெல்லாம் கண்ட சீடர்கள், இயேசு இந்தக் கடலில் மூழ்கி சாகமாட்டார் என்பதை உணர முடியவில்லையே!

நமது வாழ்வில் நம் விசுவாசம் எந்த நிலையில் உள்ளது? ஒரு சிறுதுன்பம், நோய்வந்தால் எங்கேயோ ஓடுகிறோம்! நம் விசுவாசம் எங்கே? எப்படியெல்லாம் புலம்புகிறோம்!

உங்கள் கவலைகள் அனைத்தையும் அவர் மேல் சுமத்தி விடுங்கள். உங்கள் மீது அவருக்கு அக்கறை உண்டு (1 பேதுரு 5:7).

4. ஏனெனில் நம் கண்களுக்கு நீ விலையேறப் பெற்றவன். மதிப்புக்குரியவன். உன்மேல் மிகுந்த அன்பு கொண்டோம் (எசாயா 43:4).

இவர் யார்? என்று வியந்து கேட்டார்கள். நீர் யார் என்று கேட்க துணிவில்லை. சமமானவரைத் தனக்குக் கீழ்ப்பட்டவனை பார்த்துதான் ஒருவன் நீ யார்? என்று கேட்பான். ஆனால் இங்கே துணிவற்ற நிலையில் இவர் யாராக இருக்கலாம் என்று வியந்த காட்சி. உங்களையும் என்னையும் பார்த்து, இவர் யாராக இருக்கலாம், என்னே இவரிடம் உள்ள வல்லமை என்று சொல்வார்களா?

கதை

ஒரு தோட்டத் தொழிலாளி தான் பயிரிட்ட தோட்டத்தில் ஒரு செடியின் பூவை விரும்புகிறான். தினமும் அதைப் பார்த்து ரசித்தான். ஆனால் ஒருநாள் அந்தப் பூவைக் காணோம். வந்தது எரிச்சல், கோபம் தோட்டக்காரனுக்கு. ஆனால் தோட்டத்தின் உரிமையாளர் நான்தான் அந்தப் பூவைக் கொய்து கொண்டேன் என்றார். ஆம் இயேசு கிறிஸ்து உலகத்திற்குச் சொந்தமானவர். சில நேரங்களில் நம்மிடத்தில் சிலவற்றைக் கேட்கலாம். எதிர்பார்க்கலாம். துன்பத்தைத் தரலாம். நாம் கொடுக்கத் தயாராக இருக்கிறோமா?
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
பொதுக்காலத்தின் 12ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
யோபு 38:1.8-11
2 கொரிந்தியர் 5: 14-17
மாற்கு 4:35-41


நம்புவோம் நலம் பெறுவோம்

புயலோடு துவங்கி புயலோடு முடிகின்ற வாழ்க்கை நமது வாழ்க்கை ! புயல் என்றால் துன்பம், துயரம், சோதனை, வேதனை, விபத்து, ஆபத்து!

குழந்தை பிறக்கின்றது! மூச்சுத் திணறலால் அழுகின்றது! கடைசி நேரம்! அங்கேயும் மூச்சுவிட முடியாமல் மனிதன் அழுகின்றான்!

வளர்ந்த குழந்தை பள்ளிக்கூடம் செல்லும் முதல் நாள் ! அங்கே ஒரு புயல்! மீண்டும் அழுகைப் புயல்!

வளர்ச்சி அடைந்த இளைஞன் : வெட்ட வெயில்! பட்டப்பகல்! என் வாழ்க்கையோ இருட்டறையில்! என்கின்றான்! இளம்பெண்ணோ : பல்லவி இல்லாமல் பாடுகின்றேன்! பாதை இல்லாமல் ஓடுகின்றேன்! ஊமைக் காற்றாய் வீசுகின்றேன்! உறங்கும்போது பேசுகின்றேன் என்கின்றாள்!

இளமை இல்லறத்தையோ, துறவறத்தையோ, தனியறத்தையோ, தேடுகின்றது! பெரும்பாலானோர் திருமணம் செய்துகொள்கின்றார்கள்!

திருமண வீட்டில் அழுத மணமகளைச் சுட்டிக்காட்டி சிறுவன் ஒருவன் அவனுடைய தாயிடம், ஏம்மா பொண்ணு அழுவுது? என்றான். அதற்குத் தாய், அது ஆனந்தக் கண்ணீர் கண்ணா என்றாள். அதற்குச் சிறுவன், ஏம்மா மாப்பிள்ளை அழலே? என்று கேட்டான். அதற்குத் தாய், அவரு இனிமேதாண்டா அழுவாரு என்றாள்.

கணவன் மனைவியைப் பார்த்து, சொர்க்கத்திலே கணவன், மனைவி சொந்தம் இருக்காதாமே! என்றான். அதற்கு மனைவி, அதனாலேதான் அதை சொர்க்கம்னு அழைக்கிறாங்க என்றாள்.

வீட்டுக்குள் வீசும் புயல் நாட்டுக்குள்ளும் எதிரொலிக்கின்றது.

இல்லாமை, கல்லாமை, அறியாமை போன்ற எல்லாவிதமான புயல்களிலிருந்தும் விடுபட்டு நாம் அமைதியான வாழ்க்கை வாழ வழியே இல்லையா?

ஏன் இல்லை? இருக்கின்றது வழி! உங்கள் நம்பிக்கை நிறைந்த கண்களை காற்றையும், கடலையும் அடக்கிய இயேசுவின் பக்கம் திருப்புங்கள் என்கின்றது இன்றைய நற்செய்தி.

இந்த உலகம் முழுவதும் இறைவன் கையில் (முதல் வாசகம்) (திபா 107:28-29) உள்ளது. அவரின்றி எதுவும் இந்த உலகத்தில் நடக்காது. இப்படிப்பட்ட இறைவன் தன் மகன் இயேசு வழியாக இந்த உலகத்தின் மீது அவரது பேரன்பைப் பொழிந்துகொண்டிருக்கின்றார். (இரண்டாம் வாசகம்). நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே!

இயேசுவின் ஆற்றல் மீது. வல்லமை மீது, சக்தி மீது நாம் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். பிறவியிலிருந்து பார்வையற்றவர்களின் வாழ்க்கையில் வீசிய நோய் என்னும் புயல் (மத் 9:27-31) இயேசுவின் மீது நம்பிக்கை வைத்ததால் ஓய்ந்தது.

இயேசுவின் மீது நம்பிக்கை வைத்த பாவியொருத்தியின் வாழ்க்கையில் வீசிய பாவம் என்னும் புயல் ஓய்ந்தது (லூக் 7:36-50).

இயேசுவின் மீது நம்பிக்கை வைத்த மார்த்தா, மரியா வாழ்க்கையில் வீசிய மரணம் என்னும் புயல் ஓய்ந்தது (யோவா 11:1-44).

எந்தப் புயலாலும் இயேசுவை எதிர்த்து நிற்க முடியவில்லை !

ஆகவே நாமும் அவரை நம்புவோம் ; நாளும் நலம் பெறுவோம்!

மேலும் அறிவோம் :

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (குறள் : 3).

பொருள் : அன்பால் இறைவனை நினைந்து போற்றுபவர் உள்ளமாகிய தாமரையில் வீற்றிருப்பவன் இறைவன். அந்த இறைவன் திருவடிகளைப் பின்பற்றி, நல்ல நெறியில் செல்வோர் பூவுலகில் நெடுங்காலம் புகழுடன் வாழ்வர்.
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
பொதுக்காலத்தின் 12ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
யோபு 38:1.8-11
2 கொரிந்தியர் 5: 14-17
மாற்கு 4:35-41


புயல் காற்றையும் பூத்தென்றலாக்கினார்

கணக்குப் பாடத்திற்கும் வரலாற்றுப் பாடத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? என்று ஒரு மாணவனை ஆசிரியர் கேட்டதற்கு அவன் கூறிய பதில்; "கணக்குப் பாட வகுப்பில் விட்டுவிட்டுத் தூங்குவேன்; வரலாற்றுப் பாட வகுப்பில் விடாமல் தூங்குவேன் " ஆம், வாழ்க்கையில் சிலர் விட்டுவிட்டுத் தூங்குகிறார்கள்; வேறு சிலர் விடாமல் தூங்குகின்றனர். மனிதருடைய வாழ்வு தூக்கத்தில் பாதி, ஏக்கத்தில் பாதியாகக் கழிகிறது.

மனிதர் தூங்கினால் பரவாயில்லை ; ஆனால் கடவுள் தூங்கலாமா? இன்றைய நற்செய்தியில் இயேசுவும் அவர் சீடர்களும் சென்ற படகு கடல் கொந்தளிப்பால் அலைக்கழிக்கப்பட்டு, சீடர்கள் சாவின் பயத்தில் இருக்கும் வேளையிலும் கிறிஸ்து படகில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார். சீடர்கள் அவரை எழுப்பி விடுகின்றனர்.

கடவுள் தூங்குவாரா? பேருந்தில் நடத்துனர் தூங்கினால் பயணிகள் எவரும் பயணச் சீட்டு வாங்கமாட்டார்கள்; ஆனால் ஓட்டுனர் தங்கினால் அனைவரும் பயணச்சிட்டு வாங்கிவிடுவார்கள்; எமலோகம் சென்றுவிடுவார்கள், அப்படியானால் கடவுள் தூங்கினால் இவ்வுலகின் கதி என்ன ஆகும். இக்கேள்விக்குத் திருப்பா 121 கூறும் பதில் "இஸ்ரயேலைக் காக்கின்றவர் கனனயர்வதுமில்லை; உறங்குவதுமில்லை " (திபா 121:4), கடவுள் தூங்கினால் இவ்வுலகமே இயங்காது.

அடுத்து, கடவுளுக்கு மனிதர்மேல் கவலை உண்டா ? சீடர்கள் இயேசுவிடம், "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?" என்று கேட்கின்றனர் இதே கேள்வியை பலரும் கேட்கின்றனர். இக்கேள்விக்கு பேதுரு கூறும் பதில்: "உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனெனில் அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்" (1 பேது 5:7).

எங்கள் மேல் கவலையில்லையா? என்ற தம்மைக் கேட்ட சீடர்களிடம் இயேசு கேட்ட கேள்வி: "என் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" (மாற் 4:40) என்று கேட்கிறார். கடவுளுக்கு நம்மேல் அக்கறை உனாடு, ஆனால் நமக்குத்தான் கடவுள் மேல் நம்பிக்கையில்லை. கடவுளிடம் தமக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும், பிள்ளைக்குரிய நம்பிககை இருக்க வேண்டும்.

'காசாபியான்கா' என்ற சிறுவனைப் பற்றிய ஓர் ஆங்கிலக் கவிதையுண்டு, அதன் சுருக்கம் வருமாறு: பிரஞ்சு கப்பல் ஒன்று கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அக்கப்பல் திடீரென்று தீப்பிடித்துக் கொள்ள, பயணிகள் உயிர்காக்கும் கருவியாகிய "லைப் போட்" மூலம் கரைக்குச் செல்ல. 'காசாபியானகா' கப்பலின் மேல் தட்டில் கவலையின்றி விளையாடிக் கொண்டிருக்கிறான். அவன் கூறியது "என் அப்பா இக்கப்பலின் மாலுமி; எனக்கு எந்த ஆபத்தும் வராது." இதுதான் பிள்ளைக்குரிய நம்பிக்கை.

அஞ்சி அஞ்சிச் சாகும் நமக்குக் கடவுள் கொடுக்கும் துணிவு: *அஞ்சாதே! நான் உன்னோடு இருக்கிறேன். கடலில் நடந்தாலும் தீ மூழ்கிப் போகமாட்டாய்; தீயும் உன்னைச் சுட்டெரிக்காது" (எசா 43:1-2). எனவே, தமக்கு இருக்க வேண்டிய மனநிலை, "ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு: யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம், யாருக்கு தான் அஞ்சி நடுங்க வேண்டும்?" (திபா 2711)

அதே நேரம், கடவுள் மனிதர்கள் வழியாகத்தான் நமக்கு உதவி செய்கிறார். அவைகளைப் பெறாமல் நாம் துன்புற்றால், அது கடவுளைச் சோதிப்பதாகும். ஓர் ஊரிலே பேய்மழை பெய்து ஒரு கைம்பெண் வீட்டைச் சூழ்ந்து கொண்டது. அவரை மீட்பதற்காக படகோட்டி இருமுறை முன்வந்தும் அப்பெண், "கடவுள் என்னைக் காப்பாற்றுவார்" என்று கூறி படகில் ஏற மறுத்துவிட்டார். வெள்ளம் உயர உயா, அவர் வீட்டு மாடியில் நின்றார். சிறிய வானவூர்தி ஒன்று அவரைக் காப்பாற்ற முன்வந்தும் அப்பெண், "கடவுள் என்னைக் காப்பாற்றுவார்" என்று கூறி அதில் ஏற மறுத்துவிட்டார். வெள்ளம் அவர் தலைக்குமேல் செல்ல, அவா இறந்து விண்ணகம் சென்று பேதுருவிடம், "கடவுள் ஏன் என்னைக் காப்பாற்றவில்லை?" என்று கேட்டார். பேதுரு அவரிடம், *கடவுள் உன்னைக் காப்பாற்ற இரு முறை படகையும், ஒருமுறை வானவூர்தியையும் அனுப்பினார். நீதான் அவற்றைப் பயன்படுத்தவில்லை" என்று கூறி அவரைக் கடித்து கொண்டார். அக்கைம்பெண்ணின் தம்பிக்கை மூட நம்பிக்கை, அது உண்மையான நம்பிக்கை இல்லை.

கடவுளே, எங்கள் மேல் அக்கறை இல்லையா? இது போன்று கடவுளைக் கேள்வி கேட்க நமக்கு உரிமை உண்டா? இக்கேள்விக்கு முதல் வாசகம் பதில் தருகிறது. யோபு மகான் தனது உடைமை அனைத்தும் இழந்து, சுகத்தை இழந்த நிலையில், தன்னை நிரபராதி என்று வாதிட்டு கடவுளிடம் பல கேள்விகளைக் கேட்கிறார். ஆனால் கடவுள் அவரிடம் திருப்பிக் கேட்கிறார். நான் கடலைப் படைத்து அதன் எல்லையை வரையறுத்த போது நீ எங்கிருந்தாய்? நான் இயற்கைக்கு ஒழுங்குமுறைகளைப் படைத்தபோது நீ எங்கிருந்தாய்? என்று கேட்கிறார். யோபு தன் தவற்றை உணர்ந்து கடவுளிடம், "என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன்... இனிப் பேசவே மாட்டேன்" (யோபு 40:4-5) என்று கூறிக் கடவுளிடம் சரணடைகிறார்.

திருத்தூதர் பவுல் கூறுகிறார்: களிமண்பாண்டம் தன்னை உருவாக்கிய குயவனை எப்படி கேள்வி கேட்க முடியாதோ, அதுபோல மனிதரும் கடவுளை கேள்விகேட்க முடியாது (உரோ 9:20); ஏனெனில் கடவுளுடைய செயல் முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை (உரோ 11:32), இருப்பினும், கடவுளிடம் ஒரு சில விளக்கம் தேடுவது குற்றமில்லை. மரியா கன்னியாக இருந்து கொண்டே மீட்பரின் தாயாக வேண்டும் என்று வானது தர் கபிரியேல் கூறியபோது. இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே" (லூக் 1:34) என்று விளக்கம் கேட்டார். வானதுதர் கொடுத்த விளக்கத்தை ஏற்று, கடவுளுடைய திட்டத்திற்குத் தன்னைக் கையளித்தார் மரியா.

புனித அகுஸ்தினார் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் கூறுகிறார்: விளக்கம் பெறவேண்டும் என்பதற்காக நம்புகிறேன்; நம்பிக்கை பெறவேண்டும் என்பதற்காக விளக்கம் தேடுகிறேன். முதலில் நம்புகிறோம். அதன் பிறகு விளக்கம் தேடுகிறோம். தமது நம்பிக்கைக்கு விளக்கம் தருவதே இறையியல், "உங்கள் நம்பிக்கை குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள்" (1 பேது 3:15). இக்கால அறிவியல் விடும் சவால்களைச் சமாளிக்கத் தேவையான விவிலிய மறைக்கல்வி காலத்தின் கட்டாயமாகும்.

இன்றையப் பதிலுரைப் பாடல் கூறுகிறது: "புயல் காற்றையும் பூத்தென்றலாக்கினார், கடல் அலைகளும் ஓய்த்துவிட்டன (திபா 107:29), கிறிஸ்து கடலைப் பார்த்துக் கூறினார்: 'இரையாதே. அமைதியாயிரு' (மாற் 4:39). கடவுள் புயல் காற்றையும் பூந்தென்றலாக்க வல்லவர் என்று நம்புவோம். நமது வாழ்வில் அலைகள் ஓய்ந்து அமைதி குடிகொள்ளும்!
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
பொதுக்காலத்தின் 12ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
யோபு 38:1.8-11
2 கொரிந்தியர் 5: 14-17
மாற்கு 4:35-41


யாமிருக்கப் பயமேன்?


யூதர்களைத் துரத்தித் துரத்தி வேட்டையாடுகிறது ஜெர்மனி நாட்டுப்படை. தங்கள் அடையாளங்களை அழித்துக் கொண்டு அவர்கள் நாடு நாடாக ஓடுகிறார்கள். இடிந்து போன வீட்டுச் சுவரில் யூத இளைஞன் ஒருவன் கரித்துண்டால் கிறுக்கிக் கொண்டிருக்கிறான்:

''எனக்குத் தெரியும். இங்கே இருள் என்றாலும் எங்கோ சூரியன் இருக்கிறான் எனக்குப் பிடிக்கும். இதயத்தில் இருந்தாலும் நீ உதடு திறந்து உச்சரிக்காத உன் காதல் நான் நம்புகிறேன்: கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் கடவுள் உண்டு "

கொந்தளிக்கும் வாழ்க்கைக் கடலில், படகு போல் அலைக்கழிக்கப்படுகிறான் மனிதன். புயல் இல்லாத வாழ்க்கை ஏது? அப்பொழுதெல்லாம் "போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?" (மார்க். 4:38) என்று கூக்குரல் இடுகிறான். அந்தக் கடவுளோ உரிமையோடு கடிந்து கொண்டு கேட்பது, ''ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" (மார்க் 4:40) என்பதுதான்.

மனிதன் மீது அக்கறை இல்லாதவரா கடவுள்? விடுதலைப் பயணம் 3:7இல் ஆண்டவர் கூறியது: "எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன். அடிமை வேலை வாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலைக் கேட்டேன். ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்"

"அவனைப் போல் மாசற்றவனும் நேர்மையானவனும் கடவுளுக்கு அஞ்சித் தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை" (யோபு. 1:8) என்று இறைவனே பெருமிதம் கொண்ட யோபுவின் இறை நம்பிக்கையே கொஞ்சம் ஆட்டம் கண்டபோது ஆண்டவர் சூறாவளியினின்று யோபுவுக்கு அருளிய பதிலே முதல் வாசகம். "கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஓடியபோது அதனைக் கதவிட்டு அடைந்தவர் யார்? மேகத்தை அதற்கு மேலாடையாக்கி, காரிருளைப் பொதி துணியாக்கி எல்லைகளை நான் அதற்குக் குறித்து கதவையும் தாள்ப்பாளையும் பொருத்தி இதுவரை வருவாய் இதற்கு மேல் அல்ல. உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க' என்று நான் இயம்பிய போது எங்கிருந்தாய் நீ?" (யோபு. 38:8-11).

வாழ்வினில் இழப்புகள் , இடர்பாடுகள், விபத்துக்கள், வேதனைகள் போன்றவற்றைச் சந்திக்கும் போது நாம் மனம் உடைந்து போகிறோம். அதிலும் காரணமின்றி இழப்புக்களைச் சந்திக்கும்போது, நேர்மையாக வாழ்ந்தும் இடர்களுக்கு ஆளாகும்போது நம் இறை நம்பிக்கை அசைக்கப்படுகிறது; ஆட்டம் காண்கிறது. இத்தகைய சூழல்களில் இறைவனின் அன்பை, ஆற்றலை, உடனிருப்பை மறந்து விடக்கூடாது என்பதே இன்றைய வழிபாடு சொல்லும் செய்தி! " உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனெனில் அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்" (1 பேதுரு 5:7)

செல்வச் செழுமைமிக்க வணிகர் அவர். அதே வேளையில் நேர்மையான இறை நம்பிக்கையாளர். கடற்கரை மணலில் நடந்து கொண்டிருந்தார். யாரோ தன்னைத் தொடர்வது போன்ற உணர்வு. திரும்பிப் பார்க்கிறார். யாருமில்லை. ஆனால் நான்கு காலடித்தடங்கள் காணப்படுகின்றன. கடவுளே தன்னோடு நடந்து வருவதாக எண்ணிக் கடவுளைப் போற்றத் தொடங்கினார். காலங்கள் கடந்தன. வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்புக்கும் இடர்களுக்கும் உள்ளானார். அமைதி இழந்து கடற்கரையில் நடக்கிறார். அப்போது திரும்பிப் பார்க்க வழக்கமான நான்கு காலடிச் சுவடுகளைக் காணோம். இரண்டு காலடித் தடங்கள் மட்டுமே காணக்கிடக்கின்றன. கடவுளை நோக்கிப் புலம்பத் தொடங்கி விட்டார். "என் அருமைத் தெய்வமே, என் வாழ்வில் எப்பொழுதும் நீ என்னோடு நடந்து வருகிறாய் என்ற நம்பிக்கையில் நிறைவும் நிம்மதியும் கண்டவன் நான். ஆனால் இந்தத் துன்ப நேரத்தில் மனிதர்கள் தான் கைவிட்டு விட்டனர் என்றால் நீரும் என்னைக் கை நெகிழ்ந்துவிட்டீரே. என்னோடு நடந்து வரும் உன் காலடிச் சுவடுகள் எங்கே?" என்று தனது தவிப்பை வெளிப்படுத்தினார். அப்போது கடவுளின் குரல் ஒலித்தது: "மகனே, நீ காணும் காலடித் தடங்கள் உன்னுடையது என்றா நினைக்கிறாய் ? நடக்க இப்போது உனக்கேது சக்தி? நீ காணும் அந்தத் தடங்கள் உன்னுடையவையல்ல. அவை என்னுடையவை. துவண்டு நிற்கும் உன்னை நான் என் தோளில் சுமந்து அல்லவா நடக்கிறேன்!''

''நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை. குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை. துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை. வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை " (2 கொரி. 4:8-9) என்ற திருத்தூதர் பவுலின் மன உறுதிக்குக் காரணம் இயேசு அவரோடு இருந்து செயலாற்றுகிறார் என்ற உணர்வுதான்.

மனிதன் தூங்கலாம். கடவுள் தூங்கலாமா? கடவுள் தூங்கினால் இவ்வுலகம் இயங்குமா? அதனால் தான் ''உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிட மாட்டார். இதோ இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண் அயர்வதும் இல்லை. உறங்குவதும் இல்லை" (தி.பா. 121 : 3-4). ஆனால் " அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிந்தார்" (மார்க். 4:38) என்கிறது நற்செய்தி. கடலின் கொந்தளிப்பில், அலைகளின் பேரிரைச்சலில், படகின் அலைக்கழிப்பில் ஒருவரால் உறங்க முடியுமா? இறைவனின் புரியாத * இந்தச் செயல்பாட்டைத்தான் தமிழன் திருவிளையாடல்' என்கிறானா?

இங்கிலாந்து நாடு, பனிக்காலம். நடுக்கும் குளிர் ஏழைத்தாய் ஒருத்தி கந்தையில் பொதிந்த மழலையைக் கையில் ஏந்தி காட்டின் வழியே நடந்து கொண்டிருந்தாள். அந்த நேரம் அவ்வழியே வந்த ஜட்கா அவளைக் கண்டதும் நின்றது. ஏறிக் கொண்டாள். வண்டி வேகமாக ஓடியது. உறைய வைக்கும் குளிரின் வேகம் வேறு. குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டாள். அவளது பற்கள் வெட வெட என ஆடின. முடிவில் இறுகக் கட்டிக் கொண்டன. வண்டிக்காரன் திரும்பிப்பார்த்தான். "அம்மா" என்றான். அவளால் வாய்திறக்க முடியவில்லை. நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி "கீழே இறங்கு'' என்றான் அதட்டலுடன். பயந்து நடுங்கி அவள் இறங்கிக் கொண்டிருந்தாள். வெடுக்கென பிள்ளையைப் பிடுங்கிக் கொண்டு குதிரையைத் தட்டிவிட்டான். சிட்டாகப் பறந்தது. அவளோ "என் பிள்ளை , என் பிள்ளை " என்று கதறிக் கொண்டு வண்டிக்குப் பின்னாலேயே ஓடினாள். சிறிது தூரம் சென்றதும் வண்டியை நிறுத்திப் பதறிக் கொண்டு வந்த அவளிடம் பிள்ளையைக் கொடுத்தான்.

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. நிமிர்ந்து "ஏன் பா இப்படிச் செய்தாய் ? " என்று கேட்க, அவன் "இப்ப குளிருதா?" என்றான். ''இல்லை நன்றாக வியர்த்துவிட்டது" என்று அவள் சொல்ல, சிரித்துக் கொண்டே அவன் சொன்னான் : "இதற்காகத்தான் ஓடவைத்தேன்"

ஓடு ஓடு என்றால் நாம் ஓட மாட்டோம். அதனால் கடவுள் சிலசமயம் ஓட்டம் காட்டுகிறார்.

தெய்வத்தின் இந்தத் திருவிளையாடலைப் பற்றித்தான் திருப்பாடல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்: "நானோ கலக்கமுற்ற நிலையில் உமது பார்வையினின்று விலக்கப்பட்டேன் என்று சொல்லிக் கொண்டேன். ஆனால் நான் உம்மிடம் உதவிக்காக வேண்டின் போது நீர் என் கெஞ்சும் குரலுக்குச் செவி சாய்த்தீர்." (தி.பா. 32:22)

காக்கும் கடவுள் நம்மோடு பயணிப்பதை நம்பிக்கையின் வெளிச்சத்தில் பார்க்காமல் அவநம்பிக்கை கொள்ளும் போது அச்சத்தின் அலைகளால் அலைக்கழிக்கப்படுகிறோம். நம் இயேசு வல்லவர் உடனிருப்பவர்.

இயேசுவின் மெளனத்தைப் புரிந்து கொள்ளாதவன் அவரது வார்த்தையைப் புரிந்து கொள்ள முடியாது. கடவுளின் வமளனத்துக்கு எப்போதும் அருத்தம் உண்டு. கடவுளின் மெளனத்துக்கு அருத்தம் தேடும் முயற்சியே மனிதனின் இறை நம்பிக்கை.
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
பொதுக்காலத்தின் 12ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
யோபு 38:1.8-11
2 கொரிந்தியர் 5: 14-17
மாற்கு 4:35-41


புயல் வீசிக்கொண்டிருந்தது. இயேசு தூங்கிக் கொண்டிருந்தார்.
புயலில் சிக்கிய ஒரு படகில் இயேசு தூங்கிக்கொண்டிருந்த நிகழ்வு, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும், ஒவ்வொரு நற்செய்தியிலும் அவரது தூக்கம் வெவ்வேறாக கூறப்பட்டுள்ளது.

இயேசு தூங்கிக் கொண்டிருந்தார் (மத். 8:24) என்று மத்தேயுவும், அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார் (லூக். 8:23) என்று லூக்காவும் சொல்லும்போது, மாற்கு இன்னும் சிறிது கூடுதலாக, அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார் (மாற். 4:38) என்று இந்தக் காட்சியைச் சித்திரிக்கிறார்.

புயலுக்கு நடுவிலும் ஒருவரால் தூங்க முடியுமா? மனசாட்சியோடு மல்யுத்தம் செய்யாமல், மன நிம்மதியோடு தூங்கச் செல்பவர்கள் நன்றாகத் தூங்கமுடியும். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் குழந்தையைப் பார்த்திருக்கிறீர்களா? அவ்வப்போது குழந்தையின் உதட்டோரத்தில் ஒரு சின்னப் புன்னகை தோன்றும். சம்மனசுகள் வந்து குழந்தையிடம் பேசுகின்றன என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள். அப்படி ஒரு தூக்கம் இயேசுவுக்கு.

நாள் முழுவதும் மக்கள் பலரைக் குணமாக்கிய திருப்தி அவருக்கு. உடல் நலம் மட்டுமல்ல. உள்ள நலமும் அவர்களுக்குத் தந்த திருப்தி. தான் சொன்ன வார்த்தைகள் பலருடைய மனதையும் குணமாக்கியிருக்கும் என்று அவர் நம்பினார். நாள் முழுவதும் நல்லவற்றையே செய்து வந்த இயேசு, உடலளவில் களைத்துப் போனார். மனதளவில், மனசாட்சி அளவில் 'தெம்பாக' இருந்தார். உடல் களைப்பு, உள்ளத் தெம்பு... நல்ல தூக்கத்திற்கு இந்த இரண்டும் தேவை.

நம்மில் பலருக்கு ஒரு நாள் முடியும்போது, உடல் சோர்ந்து விடுகின்றது. மனமோ தேவையான, தேவையற்ற நினைவுகளைச் சமந்து, அலைபாய்கிறது. எனவே, உடல் தூங்க முனைந்தாலும், உள்ளம் தூங்க மறுப்பதால், போராட்டம் ஆரம்பமாகிறது. ஒரு சிலர் இந்த போராட்டத்திற்கு காணும் ஒரு தீர்வு?... தூக்க மாத்திரைகள் அல்லது மது பானங்கள். இவை நல்ல தூக்கத்திற்கு வழிகளா? சிந்திப்பது நல்லது.

எனக்குத் தெரிந்த ஒரு வழியைச் சொல்கிறேன். நாள் முழுவதும் நமது சொல், செயல் இவற்றால் மனதில் பாரங்கள் சேராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படியே, நம்மையும் மீறி, வந்து சேரும் பாரங்களை முடிந்தவரை கடவுள் பாதத்திலோ அல்லது வேறு வழிகளிலோ இறக்கி வைக்க முயலவேண்டும்.

நமக்கெல்லாம் தெரிந்த ஒரு ஆங்கிலப் பழமொழி: A joy shared is doubled, a sorrow shared is halved. அதாவது, இன்பத்தைப் பகிர்ந்தால், இரட்டிப்பாகும்; துன்பத்தைப் பகிர்ந்தால் பாதியாகக் குறையும். பாரங்கள் பாதியான, அல்லது பாரங்களே இல்லாத மனதைப் படுக்கைக்குச் சுமந்து சென்றால், சீக்கிரம் தூக்கம் வரும்.

தூக்கத்தைப் பற்றி அதிகம் பேசிவிட்டோமோ? தயவுசெய்து விழித்துக்கொள்ளவும்.
புயல் வீசியது, இயேசு தூங்கிக்கொண்டிருந்தார். புயலையும் மீறி, சீடர்கள் எழுப்பிய கூப்பாடு, இயேசுவை விழித்தெழ செய்தது. இயேசு எழுந்தார், புயல் அடங்கிப் போனது. அதன் பிறகு தன் சீடர்களைப் பார்த்து, "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" (மாற்கு 4:40) என்று கேள்வி கேட்கிறார்.

இயேசுவின் இக்கேள்வி, புயலையும், நம்பிக்கையையும் சேர்த்துப் பார்க்க ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது. புயல் வீசும் நேரத்தில் நம் நம்பிக்கை எங்கே போகிறது? ஆழ் மனதில் அதுவும் தூங்கிக் கொண்டிருக்கிறதா? அல்லது, எழுந்து நின்று சப்தம் போட்டு இறைவனை அழைக்கிறதா? அல்லது புயல் வரும்போதெல்லாம் நம்பிக்கை நமக்கு "டாட்டா" காட்டிவிட்டு, நடுக்கடலில் நம்மைத் தத்தளிக்க விட்டுவிடுகிறதா?

புயல் நேரத்தில் இயேசுவின் சீடர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் பழக்கமான சூழ்நிலையில்தான் இருந்தனர். தினமும் மீன் பிடித்து வந்த அதே ஏரி. தினமும் பயன்படுத்தி வந்த அதே படகு. ஏறக்குறைய எல்லாமே பழக்கமானவைதாம்.

பழக்கமான சூழ்நிலையில் திடீரேனே எதிபாராதவை நடக்கும்போது, நமக்கு அதிர்ச்சி அதிகமாகும். தெரியாத, புரியாத சூழ்நிலை என்றால் எல்லாருமே கவனமாகச் செயல்படுவோம். அந்நேரத்தில், எதிர்பாராதவை நடந்தால்... அவற்றைச் சந்திக்க நாம் தயாராக இருப்போம். ஆனால், தினம், தினம், திரும்ப, திரும்ப பார்த்து பழகிவிட்ட இடம், ஆட்கள் என்று வரும்போது நமது கவனம் தீவிரமாக இருக்காது. அந்நேரத்தில் எதிபாராத ஒன்று நடந்தால், பெரும் அதிர்ச்சியாக இருக்கும். நம் எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கும். நாம் வாழ்ந்து பழக்கப்பட்ட வீட்டில் ஏற்படும் ஒரு விபத்து, நமது நெருங்கிய நண்பர் ஒருவர் எதிர்பாராத விதமாக நடந்துகொள்ளும் முறை... இப்படி அதிர்ச்சிகளை நாம் சந்தித்திருக்கிறோம். இந்த அதிர்ச்சிகள் புயல் போன்றவை.

வீசும் புயலில் பல ஆண்டுகளாய் வேரூன்றி நின்ற மரங்கள் சாய்வதில்லையா? அது போல, நமது இடம், நமது உறவுகள், நண்பர்கள் என்று நாம் வேர் விட்டு வளர்ந்த பிறகு, வருகின்ற அதிர்ச்சி, வேரோடு நம்மைச் சாய்த்து விடுகிறது. அந்நேரங்களில், முடிந்தவரை, நமக்குத் தெரிந்த, பழக்கமான மற்ற துணைகளைத் தேடி செல்வோம். ஆனால் ஒருவேளை அந்தத் துணைகளும் மாறிவிடுமோ அந்த நண்பர்களும் நம்மை ஏமாற்றி விடுவார்களோ என்ற கலக்கம் நமக்கு இருக்கத்தானே செய்யும்.

புயல் வீசும் நேரத்தில் நமது நம்பிக்கை எங்கே இருக்கிறது?
புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ? என்று கவிஞர் வைரமுத்து எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன. புயல் வரும்போது சுயம்வரத்தைப் பற்றி, அல்லது மற்ற நல்ல காரியங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கமுடியுமா? முடியும். இந்தப் புயல் போய்விடும், அமைதி வரும் என்று நம்புகிறவர்கள், சுயம்வரம், திருமணம் என்று திட்டமிடலாம். ஆனால், புயலை மட்டும் மனதில், பூட்டிவைத்து போராடும்போது, வாழ்க்கையும் புயலோடு சேர்ந்து அடித்துச் செல்லப்படும்.

புல்லைப் பற்றிய ஓர் ஆங்கில கவிதை.. எனக்கு மிகவும் பிடித்த கவிதை... கதை என்றும் சொல்லலாம். அண்ணனும் தம்பியும் ஒரு நாள் வீதியில் நடந்து போய்கொண்டிருந்தபோது, திடீரென தம்பிக்கு ஒரு சந்தேகம். "தைரியம்னா என்னாண்ணே?" என்று அண்ணனிடம் கேட்டான். அண்ணன் தனக்குத் தெரிந்த மட்டும் விளக்கப் பார்த்தான். புலி, சிறுத்தை, யானை என்று தனக்குத் தெரிந்த மிருகங்களை வைத்து தைரியத்தை விளக்கப் பார்த்தான். தம்பிக்கு விளங்கவில்லை என்பதை அவன் முகம் காட்டியது. அவர்கள் நடந்து சென்ற பாதையில் யாரோ ஒருவர் புல்தரை ஒன்றை எரித்து விட்டிருந்தார். முற்றிலும் எரிந்து போன புல்தரையின் நடுவில் ஒரு சின்னப் புல் மட்டும் தலை நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தது. அண்ணன் தம்பியிடம் அந்த புல்லைக் காட்டி, "தம்பி இதுதான் தைரியம்" என்றான்.

கவிதை இதோடு முடிகிறது. தம்பிக்கு விளங்கியதா இல்லையா என்பதெல்லாம் நமது கவலை இல்லை. அந்த காட்சி நமக்கு முக்கியம். முற்றிலும் எரிந்து போன ஒரு புல்தரையின் நடுவே நின்றுகொண்டிருக்கும் புல் நமக்கு ஒரு பாடம். தன்னைச் சுற்றி எல்லாமே அழிந்தாலும், அந்த அழிவில் கலந்து மறைந்து போகாமல் தலை நிமிர்ந்து நிற்கும் புல்லை, ஆங்கிலக் கவிஞர் தைரியம் என்றார். நான் நம்பிக்கை என்கிறேன்.

புயல் வரும் வேளையில் பூவொன்று சுயம்வரத்துக்குப் புறப்படுவதும் இதுபோன்ற ஒரு நம்பிக்கை தரும் செயல்தானே.
2004ம் ஆண்டு, டிசம்பர் 26, ஆசிய நாடுகளில் சுனாமியால் ஏற்பட்ட அழிவுகள் நம்மில் பலருக்கு இன்னும் ஆறாத காயங்களாய் வலித்துக் கொண்டிருக்கும். அந்தப் பேரழிவின் நடுவிலும் எத்தனையோ விசுவாச அறிக்கைகள் வெளியாயின. கடவுள், மதம் என்ற பின்னணிகளே இல்லாமல் பார்த்தாலும் அந்நேரத்தில் நடந்த பல அற்புதங்கள் மனித சமுதாயத்தின் மேல் நமது நம்பிக்கையை வளர்க்கும் விசுவாச அறிக்கைகளாக வெளி வந்தன. அப்படி வந்த விசுவாச அறிக்கைகளில் ஒன்றை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

சுனாமியில் தன் குழந்தைகள் மூவரையும் சேர்த்து, தன் குடும்பத்தில் பத்து பேரை இழந்த பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். டிசம்பர் 26, பரமேஸ்வரனின் பிறந்த நாள். நாகப்பட்டினம் கடற்கரையில் அதைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது வந்த சுனாமி, அவரது மூன்று குழந்தைகளையும் மற்ற உறவினர்களையும் கடலுக்கு இரையாக்கியது. குழந்தைகளை இழந்த பரமேஸ்வரன் - சூடாமணி தம்பதியர் நம்பிக்கை இழந்து, வெறுப்பைச் சுமந்து கொண்டு போகவில்லை. மாறாக, ஒரு சுயம்வரம் ஆரம்பித்தார்கள்... சுயம்வரம் என்பது மனதுக்குப் பிடித்தவர்களைத் தேர்ந்தேடுப்பதுதானே. அந்த சுனாமியால் பெற்றோரை இழந்து தவித்த 16 அனாதை குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
சுனாமி அவர்கள் குடும்பத்தை அழித்தாலும், அவர்களது மனித நேயத்தை அழித்துவிடவில்லை. குழந்தைகளின் மதம், இனம், இவற்றையெல்லாம் கடந்து, மனித நேயம் என்ற அடிப்படையில் மட்டுமே குழந்தைகளைத் தத்தேடுத்தார்கள். 3 வயது முதல் 16 வயது வரை உள்ள 16 பேரைத் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். நம்பிக்கை இழந்து தவித்த அந்த குழந்தைகளுக்கும், இளையோருக்கும் நம்பிக்கை தந்தனர். அதுமட்டுமல்ல, மனித குலத்தின் மேல் நமக்குள்ள நம்பிக்கையை வளர்த்திருக்கின்றனர், பரமேஸ்வரன் - சூடாமணி தம்பதியர்.

புயலுக்கு முன்னும், பின்னும் அமைதி வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். பரமேஸ்வரனுக்கும், சூடாமணிக்கும் புயலுக்கு நடுவிலிருந்து அமைதி வந்தது. நம்பிக்கை வந்தது. புயலுக்கு நடுவே, நமது நம்பிக்கை எங்கே போகிறது? சிந்தித்துப் பார்க்கவேண்டும். அந்தப் புயல் நடுவில் இறைவன் இருக்கிறார் என்ற ஒரு நம்பிக்கை நமக்கெல்லாம் வேண்டும். ஒருவேளை அவர் உறங்கிப் போனதுபோல் தெரிந்தாலும், அவர் அங்கே இருக்கிறார் என்பதே ஒரு பெரும் நிம்மதியைத் தரும்.

இறைவன் எழுந்ததும், புயல் தூங்கிவிடும்.
இறைவன் எழுவார். புயலை அடக்குவார்.
புயல் நேரங்களிலும் நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்வோம். புயல் நேரங்களிலும் மனம் தளராமல், நல்லவற்றையேத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரத்தை நடத்துவோம்.

இறுதியாக, இரு எண்ணங்கள், வேண்டுதல்கள்... ஜூன் 20, புலம்பெயர்ந்தோர் உலக நாளைக் கடைபிடித்தோம். ஜூன் 16, ஞாயிறன்று, தந்தை தினத்தைக் கொண்டாடுகிறோம். மே மாதம் இரண்டாம் ஞாயிறை அன்னை தினமாகவும், ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறை தந்தை தினமாகவும் நாம் கொண்டாடுகிறோம்.
புலம் பெயர்ந்தோர் நாளையும், அன்னைதினம், அல்லது, தந்தை தினம் இவற்றையும் இணைத்துச் சிந்திக்கும்போது, நமது அன்னையரும் தந்தையரும் நம் குடும்பங்களிலேயே புலம்பெயர்ந்தோராய் மாறி வரும் துயரத்தையும் சிந்திக்கவேண்டும். புலம்பெயர்ந்தோர் தங்கள் நாட்டைவிட்டு, அல்லது, உள்நாட்டுக்குள்ளேயே ஆதரவு ஏதுமின்றி அலைகழிக்கப்படுகின்றனர். அன்னையரும், தந்தையரும் வீட்டுக்குள்ளேயே உறவுகள் அறுக்கப்பட்டு, அல்லது, வீட்டைவிட்டு முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டு அகதிகளாய் வாழ்கின்றனர்.

1907ம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் Monongah என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 362 தொழிலாளிகள் இறந்தனர். இதனால், பல நூறு குடும்பங்கள் தந்தையை இழந்து தவித்தன. இந்த நாளை நினைவுகூரும் விதமாக, 1908ம் ஆண்டு முதல் தந்தை தினம் அறிவிக்கப்பட்டது.

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, தாய்க்கு ஒரு தினம், தந்தைக்கு ஒரு தினம் என்று நாம் கொண்டாடி வருகிறோம். இந்தக் கொண்டாட்டங்கள் வருடத்தின் இரு நாள்களோடு முடிந்துவிடுவது நியாயமா? அன்னை தினம், தந்தை தினம் இரண்டும், மலர்களாலும், வாழ்த்து அட்டைகளாலும் நிறைந்து போன வியாபாரத் திருநாள்களாக மாறிவிட்டன. வயது முதிர்ந்த காலத்தில், தாயையும், தந்தையையும் முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு, இந்த நாளில் மட்டும் அவர்களைச் சென்று பார்த்து மலர்களையும், மற்ற பரிசுகளையும் தருவதால் நமது கடமைகள் முடிந்துவிடுகின்றனவா? ஆண்டின் இரு நாள்களில் மட்டுமல்ல. ஆண்டின் ஒவ்வொரு நாளும் அவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். அவர்கள் இவ்வுலகில் வாழும் எஞ்சிய நாட்கள் அனைத்தும், அவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

உலகில் வீசும் வன்முறைப் புயல்களால் புலம்பெயர்ந்துள்ள குடும்பங்களை, அதிலும் குறிப்பாக, தாய், தந்தை என்ற ஆணிவேர்கள் அகற்றப்பட்டு, காய்ந்த சருகுகள் போல புயலில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரம் குழந்தைகளுக்காக இன்று இறைவனிடம் உருக்கமான வேண்டுதல்களை எழுப்புவோம்.
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
மறையுரைச் சிந்தனை - அருள்பணி . குழந்தை இயேசு பாபு
பொதுக்காலத்தின் 12ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
யோபு 38:1.8-11
2 கொரிந்தியர் 5: 14-17
மாற்கு 4:35-41

7. மறையுரைச் சிந்தனை - அருள்பணி . குழந்தை இயேசு பாபு

மனமே இரையாதே! அமைதியாயிரு!


தாய் வீட்டிலே பரபரப்பாக வேலைசெய்து கொண்டிருந்தாள். குழந்தையோ தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தது. அத்தாய் தீடீரென சமையலுக்குத் தேவையான மசாலாவை அரைக்க மிக்ஸியை இயக்கினார். அந்த சப்தத்தைக் கேட்ட குழந்தையோ அவ்விரைச்சலைக் கேட்டு அலறி அழுதது. குழந்தையின் அழுகுரலைக் கேட்டவுடன் தாயானவள் வேகமாக ஓடிச்சென்று குழந்தையைத் தூக்கி தன் தோள்மீது சாய்த்து சாந்தப்படுத்திவிட்டு மீண்டும் தன் வேலையை தொடர்ந்தார். இப்பொழுதும் அதே மிக்ஸி இயக்கப்பட்டது. அதே இரைச்சல் சப்தம் கேட்டது. ஆயினும் அக்குழந்தை அழவில்லை. காரணம் குழந்தை தன் தன் தாயின் அரவணைப்பை உணர்ந்த நிலையில் அவ்வளவு இரைச்சலுக்கு மத்தியிலும் அமைதியாகத் தன் உறக்கத்தைத் தொடர்ந்தது.

இரைச்சல் மிகுந்த உலகம் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வுலகம். போராட்டம் நிறைந்தது தான் நாம் வாழும் வாழ்க்கை. ஒரே சமயத்தில் பல பிரச்சினைகளைச் சமாளிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. எந்தப்பிரச்சினையை முதலில் தீர்ப்பது எதனை முதன்மைப்படுத்துவது என்ற சிக்கல் நடுக்கடலில் புயலில் சிக்கிய படகைப் போன்ற உணர்வை நம் வாழ்வில் ஏற்படுத்துகின்றன. இப்பிரச்சினைகளின் அழுத்தம் நம் மனஅமைதியைக் கெடுத்து பல நேரங்களில் நிம்மதியாக நம்மை உறங்கக் கூட விடுவதில்லை. நம்மில் பலருக்கு இது எதார்த்தமான அல்லது வாழ்க்கை வழக்கமாகவே மாறிவிட்டது.

இன்றைய நற்செய்தியில் கடலில் வீசிய பெருங்காற்றின் இரைச்சலால் அமைதியை இழந்து வாழ்வைத் தொலைத்துவிடுவோமோ எனப் பதறியச் சீடர்களை நாம் காண்கிறோம். அந்தச் சூழ்நிலையில் யாராயிருந்தாலும் பயமும் அச்சமும் ஆட்கொள்ளத்தான் செய்யும். அப்படி என்றால் சீடர்களின் பயமும் பதைபதைப்பும் நியமானதே. ஆனால் இயேசுவோ சீடர்களின் பயத்தை, உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவர்களின் நம்பிக்கையின்மையைச் சுட்டிக்காட்டி கடிந்து கொள்கிறார். அதற்கான காரணத்தை நாம் சற்று ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

சீடர்கள் கடலில் தத்தளித்த போது இயேசுவும் அவர்களோடு இருந்தார். இயேசு தீய ஆவி பிடித்தவரை குணமாக்கியதையும், காய்ச்சலால் அவதியுற்ற பேதுருவின் மாமியாரை குணப்படுத்தியதையும் சீடர்கள் நேரில் கண்டார்கள். ஊரார் ஒதுக்கிவைத்த தொழுநோயாளரைக் குணமாக்கியதையும்,இன்னும் முடக்குவாதமுற்றவர், கை சூம்பியவர் என பலரை இயேசு குணமாக்கிய போது இயேசுவோடு சீடர்கள் உடனிருந்தார்கள். ஏன் அவருடைய வல்ல செயல்கள் கூட சீடர்கள் இயேசுவைப் பின்தொடர உந்துதலாக இருந்திருக்கும் அல்லவா? இப்படிப்பட்ட இயேசு தங்களோடு இருந்த போதிலும் அவர்கள் நம்பிக்கை இழந்து தவித்தனர். எனவே தான் இயேசு அவர்களைக் கடிந்து கொண்டார்.

சோதனைகளும், வேதனைகளும், இடறல்களும், சறுக்கல்களும், நம்முடைய சொந்த பலவீனங்களும் நம்வாழ்வில் பேரிரைச்சலைத் தரும்போது, சீடர்களைப் போலவே நாமும் கடந்து வந்த இறைநம்பிக்கை அனுபவங்களை மறந்து மனஅமைதியை இழந்து விடுகிறோம் என்பது தான் உண்மை. அச்சமயங்களில் இயேசுவின் பெயரால் நம் மனதை "இரையாதே, அமைதியாயிரு" என அடக்கி அமைதியுடனும் இயேசுவின் மேல் நம்பிக்கையுடனும் சிந்தித்து செயல்பட்டால் நமது வாழ்க்கைப் பயணம் இனிமையாகவே தொடரும். பிரச்சினைகள் என்னும் புயல் நம்மை அடக்காது. மாறாக நாம் அதை அடக்கி ஆள்வோம். தேவையற்ற மன இரைச்சல்களை இயேசுவின் பெயரால் அமைதிப்படுத்துவோமா?

இறைவேண்டல்
இயேசுவே! உம் உடனிருப்பை நம்பி எவ்வித இக்கட்டான சூழலையும் மனஅமைதியுடன் வென்றிட வரம் தாரும். ஆமென்
 
 பொதுக்காலத்தின் 12ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
யோபு 38:1.8-11
2 கொரிந்தியர் 5: 14-17
மாற்கு 4:35-41


"முதல்‌ வாசகப்‌ பின்னணி (யோபு 3:1,8-11)
யோபு என்பவர்‌ கடவுளுக்கு ஏற்ற நீதிமானாக வாழ்ந்து வந்தார்‌. பெரிய பணக்காரர்‌. கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர்‌. ஆனால்‌ காலத்தின்‌ சோதனை சாத்தான்‌ கடவுளின்‌ அனுமதியோடு யோபுவை சோதிக்கின்றான்‌. இதனால்‌ யோபு தொழுநோய்‌ பெறுகிறார்‌. மனைவி, மக்கள்‌, சொத்து சுகம்‌, வசதி வாய்ப்பு எல்லாம்‌ இழந்தவரானார்‌. பழைய ஏற்பாட்டு பின்னணியின்‌ படி அவ்வாறே சமுதாயத்தால்‌ கருதப்பட்டார்‌. எவ்வாறு நீதிமான்‌ துன்ப படமுடியும்‌? என்ற கேள்விக்கு பதில்‌ தரும்‌ வகையில்‌ எழுதப்பட்ட நூல்‌ இது. இதில்‌ நாம்‌ காணும்‌ முதல்‌ வாசக பகுதியின்‌ பின்னணியானது கடவுள்‌ யோபுவுக்கு தோன்றி உலகின்‌ நிலைகளை சுட்டிக்காட்டி இதில்‌ நீ என்ன புரிந்து கொள்கின்றாய்‌ என்று கேட்டார்‌. யோபுவால்‌ பதில்‌ சொல்ல முடியாத நிலையை உணர்கிறார்‌. தனது அறிவின்‌ தராதாரத்தை உணர்கிறார்‌. எனவே துன்பத்திற்கு காரணம்‌ சொல்ல முடியாது. இது ஏன்‌ வருகிறது என கேட்க முடியாது. ஆனால்‌ இறைவனை நம்பும்‌ போது அவர்‌ ஞானத்தைக்‌ கொடுப்பார்‌. அப்போது அதன்‌ வழியாக நாம்‌ இந்த உலகத்தையும்‌, அதன்‌ நிலைகளையும்‌ புரிந்து கொண்டு, ஏற்று வாழ முடியும்‌ என்பதை இவ்வாசகம்‌ கூறுகிறது.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (2கொரி. 5:14-17)

இரண்டாம்‌ வாசகத்தில்‌ பவுலின்‌ உள்ளத்தையும்‌, உணர்வுகளையும்‌ புரிந்து கொள்ள முடிகிறது. போலி போதகர்களின்‌ ஆர்ப்பாட்டம்‌, ஆதிக்கம்‌ அதிகமானது. பவுல்‌ இயேசுவின்‌ அப்போஸ்தலராக இருக்க தகுதியற்றவர்‌ என்றனர்‌. இந்த சூழ்நிலையில்‌ பவுல்‌ தீத்துவை கொரிந்துக்கு அனுப்பி இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணச்‌ செய்கின்றார்‌. தீத்துவின்‌ முயற்சியால்‌ கொரிந்து மக்களிடம்‌ மனமாற்றமும்‌, மறுமலர்ச்சியும்‌ ஏற்படுகின்றது. இந்த சூழலில்‌ பவுல்‌ இந்த கடிதத்தை எழுதுகிறார்‌. இதன்‌ வழியாக. அங்குள்ள கிறிஸ்தவ மக்களை உறுதிப்படுத்துகிறார்‌. இதை இரண்டாம்‌ வாசகத்தில்‌ பார்க்க முடிகிறது. இதில்‌ கடவுளின்‌ அன்பு கிறிஸ்து வழியாக நம்மை முழுமையாக ஆட்கொண்டுள்ளது.

எனவே கிறிஸ்துவுக்கு ஏற்ற சாட்சிய வாழ்வு வாழ வேண்டும்‌ என்பதை உணர வேண்டும்‌ என வலியுறுத்துகிறார்‌. நாம்‌ கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்‌ போது புதுப்படைப்பாக்கப் படுகின்றோம்‌ என எடுத்துக்‌ கூறுகின்றார்‌. எனவே கிறிஸ்துவுக்காக பாடுகளையும்‌, மரணத்தையும்‌ ஏற்க நாம்‌ தயாராக இருக்க வேண்டும்‌ என கேட்டுக்‌ கொள்கின்றார்‌.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி (மாற்கு 4:35-41)
பாடுகள்‌ பட்டு இந்த பாவ உலகத்தை மீட்கக்‌ கடவுள்‌ திருவுளம்‌ கொண்டார்‌. எனவே பாடுகளையும்‌, துன்பங்களையும்‌ எப்படி எதிர்கொள்ள வேண்டும்‌ என்பதை மையக்‌ கருத்தாகக்‌ கொண்டு அமைகிறது இந்நற்செய்தி வாசகம்‌. நற்செய்தியில்‌ படகு திருச்சபையைக்‌ குறிக்கிறது. இயேசு பேதுருவின்‌ படகை தேர்ந்‌தெடுத்து அதில்‌ நின்று கொண்டு போதிப்பது பேதுருவின்‌ தலைமையில்‌ திருச்சபை நிறுவப்படுவதை குறிக்கின்றது. கடல்‌ துன்பங்களை குறிக்கிறது. கடந்து அக்கரைக்கு செல்வது துன்பங்களையும்‌, சவால்களையும்‌ சந்தித்து மறுகரையான மறுவாழ்வை அடைவது, பலபடகுகள்‌ கடந்துசெல்வது திருச்சபையின்‌ பிரிவுகளைகாட்டுகிறது இயேசு ஓய்வு இல்லாமல்‌ இரவும்‌ பகலும்‌ போதித்ததால்‌ இளைப்‌பாரும்‌ வண்ணம்‌ தூங்கிக்கொண்டு இருப்பது அவர்‌ 100% மனிதனாக இருந்தார்‌ என்பதை காட்டுகிறது. புயலுக்கும்‌ அலைகொந்தலிப்புக்கும்‌ மத்தியில்‌ தூங்கிக்‌ கொண்டு இருந்தது அவர்‌ கடவுளின்‌ மீது கொண்ட நம்பிக்கையை குறிக்கிறது. சீடர்களின்‌ அச்சமும்‌, அங்கலாய்பும்‌ அவர்களின்‌ பலவீனத்தை குறிக்கின்றது. இயேசு எழுந்து "இரையாதே அமைதியாயிரு", என்று சொன்னார்‌ உடனே அமைதி ஏற்பட்டது. இது அவரது வல்லமையை காட்டுகிறது. தூய மாற்கு இத்தகைய கருத்துக்களை உள்ளடக்கி எழுதியதற்கு காரணம்‌ அவரது காலத்தில்‌ கிறிஸ்தவ மக்களுக்கு எற்பட்ட துன்பங்களுக்கும்‌, கொடுமைகளுக்கும்‌, ஆறுதலும்‌, தேற்றுதலும்‌ கொடுக்கும்‌ வகையில்‌ எழுதுகிறார்‌.

மறையுரை
"உன்‌ பலவீனம்‌ உன்னை வெல்வதற்குள்‌ ஆண்டவரிடம்‌‌ தஞ்சம்‌ புகுவதே நலம்‌. அப்போது அவரது பலம்‌ உன்னுள்‌ வல்லமையோடு செயல்படும்‌".

இந்த மையக்‌ கருத்தை மனதில்‌ கொண்டு இன்றைய வாசகங்களோடு பயணம்‌ செய்ய உங்களை அன்புடன்‌ அழைக்கின்றேன்‌. பொதுவாக பலவீனம்‌ என்றால்‌ அதை இரண்டு வகையாக பீரிக்கலாம்‌ 1. உடல்‌ பலவீனம்‌ 2. உள்ள பலவீனம்‌. உடல்‌ பலவீனம்‌: சோர்வு, களைப்பு, வியாதிகள்‌, தளர்ச்சி, முதுமை. இயலாமை இவைகளை சம்பாதிக்கும்‌. உள்ள பலவீனம்‌ பலத்தை சம்பாதிக்கும்‌. ஆனால்‌ இரண்டு பலவீனங்களும்‌ மனிதனை வாழ வைக்க மறுக்கின்றது. உடல்‌ பலவீனம்‌ இவ்வுலகில்‌ வாழ மறுக்‌கின்றது. உள்ள பலவீனம்‌ மறு உலகில்‌ வாழ மறுக்கின்றது. ஆனால்‌ இந்த நிலை நீடித்தால்‌ வாழ்க்கை ஒரு கேள்வி குறித்தான்‌. மனம்‌ தளர வேண்டாம்‌ இன்றைய வாசகங்கள்‌ நமக்கு விடைக்‌ கொடுக்க காத்திருக்கின்றது. முதலில்‌ விவிலிய பொது கண்ணோட்டத்திலிருந்து. இன்றைய வாசகங்களின்‌ உட்பொருளுக்கு கடந்து செல்வோம்‌. பழைய ஏற்பாட்டில்‌ பார்த்தோம்‌ என்றால்‌ ஆதி பெற்றோர்களின்‌ கீழ்படியாமை என்ற பலவீனம்‌ பலத்தையும்‌, மரணத்‌தையும்‌ உலகிற்குள்‌ கொண்டு வந்தது. காயினின்‌ பொறாமை என்ற பலவீனம்‌ ஆபேலை கொல்ல தூண்டியது. ஆபிரகாமின்‌ உயிர்‌ பயம்‌ என்ற பலவீனம்‌ தன்‌ மனைவியை தங்கையன சொல்ல செய்தது. மோயிசனின்‌ குறை விசுவாசம்‌ என்ற பலவீனம்‌ கானான்‌ தேசத்தை காணமுடியாததை பார்க்கிறோம்‌. தாவீதின்‌ கவர்ச்சி என்ற பலவீனம்‌ உரியாவின்‌ மனைவியிடம்‌ தவறாக நடக்க செய்தது. இஸ்ராயேல்‌ மக்களின்‌ விசுவாசமின்மை கடவுளின்‌ உடன்‌படிக்கை உறவிலிருந்து பிரித்தது. புதிய ஏற்பாட்டில்‌ பார்த்தோம்‌ என்றால்‌ சக்கரியாவின்‌ குறை விசுவாசம்‌ பேச முடியாமல்‌ செய்தது. யூதாசின்‌ பண ஆசை இயேசுவை காட்டிக்கொடுக்க தூண்டியது. பேதுருவின்‌ உறுதியற்ற இதயம்‌ இயேசுவை மறுதலிக்க செய்தது. பிலாத்துவீன்‌ பதவி ஆசை இயேசுவுக்கு மரண தண்டனையை அளித்தது. சீடர்களின்‌ மரண பயம்‌ இயேசுவை பிடிக்கும்போது பின்வாங்கி ஓட செய்தது. இல்வாறு ஆதியிலிருந்து இன்றுவரை பலவீனம்‌ எதாவது ஒரு ரூபத்தில்‌ நம்மை தாக்கி, ஆட்டி படைத்து ஆட்சி செய்கின்றது. இன்றைய வாசகங்களை கவனித்தீர்கள்‌ என்றால்‌ சீடர்களும்‌ உறுதியற்ற இதயம்‌ கொண்டவர்களாய்‌ இயேசுவின்‌ மீது முழுமையான நம்பிக்கை இல்லாதவர்களாய்‌, பலவீன உறவு நிலையோடுதான்‌ வாழ்ந்து இருக்கின்றார்கள்‌. இதை நற்செய்தி பல இடங்களில்‌ சுட்டிக்காட்டுகிறது. இங்கு கூட புயல்காற்றும்‌, அலை கொந்தளிப்பு ஏற்பட்ட போது உடனே மனம்‌ தளர்ந்தவர்களாய்‌, ஜயோ சாக போகிறோமே என்று கூச்சலிட்டு கத்துகிறார்கள்‌. இது அவர்களின்‌ பலவீனத்தை படமிட்டு காட்டுகின்றது. ஆனால்‌ பாருங்கள்‌ அவர்கள்‌ இயேசுவை அனுகி தஞ்சம்‌ புகுக்கின்றனர்‌. எங்களை காப்பாற்றும்‌, உமக்கு அக்கரையில்லையா? நாங்கள்‌ உம்மை நம்பிதானே இருக்கிறோம்‌ என்று புலம்புகின்றனர்‌. உடனே இயேக சும்மா இருக்கவில்லை; காற்றையும்‌ கடலையும்‌ ஒரே சொல்லால்‌ இரையாதே, அமைதியாயிரு என்று கட்டளையிட்டு அமைதிபடுத்திவிட்டு சீடர்களை நோக்கி ஏன்‌ அஞ்சகிறீர்கள்‌? நம்பிக்கை கெட்டவர்களே? என்று அவர்களை தன்‌ மீது நம்பிக்கை. கொள்ளுமாறு உறுதிபடுத்தி, அவர்களை திடப்படுந்துகிறார்‌.

நமது வாழ்க்கைக்கு வருவோம்‌. நம்மிடமுள்ள பலவீனம்‌. என்ன? என்று நம்மையே பரிசோதிப்போம்‌. கோபமா? வெறுப்பா? பகையா? பொறாமையா? வியாதியா? துன்பமா? கடன்தொல்லையா? கஷ்டமா? மன்னிக்கமுடியாத மனமா? உதலி செய்யாத உள்ளமா? குடியழக்கமா? தீயபழக்கமா? இல்லாமையா? இயலாமையா? முதுமையா? முடியாமையா? பாசங்கா? பணமா? பேராசையா? அவநம்பிக்கையா? எதுவேண்டுமாலலும்‌ உங்கள்‌ வாழ்க்கை பயணத்தில்‌ ஒரு அலையாக, புயல்‌ காற்றாக வரலாம்‌. ஆனால்‌ ஆண்டவர்‌ இயேசுவிடம்‌ தஞ்சம்‌ புகுந்திட மறந்திடாதர்கள்‌. அவர்‌ ஒருவரால்‌ மட்டும்‌ தான்‌ நம்மை நித்தியத்திற்கும்‌ காக்க முடியும்‌. அவர்‌ ஒருவரால்‌ மட்டும்‌ தான்‌ நம்மை நித்தியத்திற்கும்‌, நிரந்தரமான ஆறுதலையும்‌, மனநிறைவையும்‌ தர முடியும்‌ அவராலன்றி நம்மால்‌ இந்த பலவீனங்களை கடந்து கலை சேர முடியாது. இன்றைய முதல்‌ வாசகத்தில்‌ யோபுவின்‌ உறுதியான நம்பிக்கை ஒரு பாடம்‌. சாத்தான்‌ கடவுளிடம்‌ அனுமதிகேட்டு யோபுவை சோதிக்கிறான்‌. தொழு நோய்‌ அவனை ஆட்கொண்டது. மனைவி, மக்கள்‌, சொந்தம்‌, பந்தம்‌, சொத்து, வசதிவாய்ப்பு எல்லாம்‌ அவனை விட்டு அகன்றது. வெறுமையாக்கப்பட்டான்‌. ஆனால்‌ சாதராண காய்ச்சல்‌ குழந்தைக்கு வந்தால்‌ கோயிலுக்கு எடுத்துச்‌ செல்கிறோம்‌. கல்யாணம்‌ காட்சியினு வந்தால்‌ சாதகம்‌ பார்க்க ஓடுகின்றோம்‌. துன்பம்‌, கவலை வந்தால்‌ பில்லி சூனியம்‌ போக்க மந்தரவாதியிடம்‌ ஓடுகிறோம்‌. கவலையை மறக்க சிலர்‌ ஒயின்‌ ஷாப்புக்கு ஒடுகின்றோம்‌. ஆனால்‌ யோபு இத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும்‌ ஆண்டவரின்‌ அன்பை வீட்டுவிலகவில்லை. முழுநம்பிக்கையோடு உறுதியான இதயத்தோடு இருந்தான்‌. அவனது நம்பிக்கையை பாராட்டி கடவுள்‌ அவனுக்கு இரட்டிப்பான ஆசீர்வாதத்தை கொடுப்பதையும்‌, பிறகு 140 ஆண்டுகள்‌ மகிழ்சியோடு, மனைவி, மக்களுடன்‌ வாழ்ந்தான்‌ என விவிலியம்‌ நமக்கு எடுத்து சொல்கிறது.

நாம்‌ எதில்‌ பலவீனமாய்‌ இருக்கின்றோம்‌ என சிந்திப்போம்‌. நம்மையே நாம்‌ இறைதிட்டத்திற்கு ஒப்புகொடுப்போம்‌ பிரச்சனைகளை இயேசுவிடம்‌ சொல்லி செபிப்போம்‌. குடும்பம்‌ குடும்பமாய்‌ கூடி ஜெபியுங்கள்‌. இறைபிரசணத்தை உங்கள்‌ இதயத்‌திலும்‌, இல்லத்திலும்‌ ஏற்படுத்துங்கள்‌. இயேசுவின்‌ மீது உறுதியான நம்பிக்கை கொள்ளுங்கள்‌. அவர்‌ உங்களோடு பயணம்‌ செய்கிறார்‌. எனவே எதுவும்‌ அவரது விருப்பமின்றி நடக்காது என்ற உறுதியான இதயத்தோடு வாழுங்கள்‌. இத்தகைய உறுதிப்பாட்டினை இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ பவுல்‌ அடிகளார்‌ கொரிந்திய மக்களுக்கு கூறி தேற்றுகிறார்‌. காரணம்‌ அங்கு கிறிஸ்தவர்கள்‌ துன்புறுத்தபட்ட காலம்‌ அது. எனவே கிறிஸ்துவின்‌ பேரன்பால்‌ ஆட்கொள்ளபட வேண்டும்‌. நமக்காக இறந்த இயேசுவுக்காக வாழ வேண்டும்‌. கிறிஸ்துவுக்குள்‌ புதுபடைப்பாக மாறவேண்டும்‌ என்று தேற்றுகிறார்‌. நாமும்‌ இத்தகைய உறுதியில்‌ நிலைத்து நிற்போம்‌. துன்பத்தை கண்டு துவண்டு விடாமல்‌, பலவீனத்தை கண்டு பயந்து விடாமல்‌, நம்‌ எல்லா பலவீனத்தையும்‌, ஆண்டவரிடம்‌ ஒப்புக்கொடுத்து அவரிடம்‌ சரணடைவோம்‌. அவரே எனக்கு தஞ்சம்‌, அவரே எனக்கு பாதுகாப்பும்‌, அரணும்‌, கேடையமும்‌ என்று அவரில்‌ தஞ்சம்‌. புகுவோம்‌. கிறிஸ்துவுக்குள்‌ புது படைப்பாக வாழ முற்படுவோம்‌.

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

துன்ப நேரத்தில்‌ ஆண்டவரை கூப்பிடுங்கள்‌. அவர்‌ உங்கள்‌ குரலுக்கு செவிகொடுப்பார்‌.
சோதனைகள்‌ வரும்போது நம்பிக்கையோடு இருங்கள்‌. உங்கள்‌ நம்பிக்கை உங்களை காக்கும்‌.
வாழ்க்கை போர்களத்தில்‌ இயேசுவோடு சேர்ந்து போரிடுவோம்‌. வெற்றி நிச்சயம்‌.
இயேசுவின்றி நமக்கு மீட்பு கிடையாது. அவரே நம்மை மீட்க வல்லவர்‌, அவரில்‌ திடம்‌ கொள்வோம்‌ வாழ்வு பெறுவோம்‌.









பொதுக்காலத்தின் 12ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
யோபு 38:1.8-11
2 கொரிந்தியர் 5: 14-17
மாற்கு 4:35-41

முதல் வாசகம் யோபு 38:1,8-11
உலகில்‌ துன்பங்கள்‌ ஏன்‌? நல்லவர்‌ துன்புற, தீயவர்‌ வசதியுடன்‌ வாழ்வதன்‌. இரகசியம்‌ யாது? என்ற வினாவுக்கு விடைகாண கற்பனை நயத்துடன்‌ எழுதப்பட்ட நீதிநூல்‌ யோபு ஆகமம்‌. யோபு வசதியுடன்‌ வாழ்ந்தவர்‌; என்றும்‌ இறை புகழ்‌ பாடியவர்‌. எல்லாம்‌ இழந்தால்‌ இறைவனைத்‌ தூற்றுவார்‌ என்பது சாத்தானின்‌ வாதம்‌. அவரைச்‌ சோதித்தறிய அனுமதி அளிக்கப்படுகிறது. துன்பத்திலும்‌ துதிபாடி, பொறுமையின்‌ வடிவாய்த்‌ திகழ்ந்த ஒரு மகானை போபுவில்‌ காண்கிறோம்‌.

துன்பத்தின்‌ எல்லையைக்‌ கண்டார்‌ யோபு.

யோபு தன்‌ மக்களை இழந்தார்‌; செல்வமெல்லாம்‌ அழிந்தது; தொழுநோயால்‌ பீடிக்கப்பட்டு, மனைவியால்‌ இகழப்பட்டு குப்பை மேட்டில்‌ கிடந்தார்‌. "துன்பத்திற்குக்‌ காரணம்‌ பாவம்‌; நீ இப்பொழுது துன்பறுகிறாய்‌; ஆகவே நீ பாவம்‌ செய்திருக்க வேண்டும்‌" என்று நண்பர்கள்‌ கூறுகின்றனர்‌. "நான்‌ பாவம்‌ செய்யவில்லை? என்‌ மனமே அதற்கு சாட்சி, நான்‌ அநியாயமாகத்‌ தண்டிக்கப்பட்டுள்ளேன்‌. இறைஞானத்தை என்னால்‌ புரிந்து கொள்ள முடியவில்லை" என்று சலிப்படைகிறார்‌ யோபு. இயற்கையின்‌ இயல்பினை அறிய முடியாத மனிதன்‌ - படைப்பாளரின்‌ செயல்பாட்டினை, அவரது ஞானத்தை எப்படி அறிய முடியும்‌ என்று எதிர்வினா விடுக்கிறார்‌ இறைவன்‌. நீலக்கடலைப்‌ படைத்து, குழந்தையைத்‌ துணியால்‌ போர்த்துவது போல்‌ மேகத்தை அதற்கு ஆடையாக அளித்துப்‌ பாதுகாப்பவர்‌ இறைவன்‌. குழந்தை வளர்ந்து, இராட்சச உருவெடுத்துத்‌ தீமை புரிவதுபோல்‌, கடல்‌ கொந்தளித்து உலகை அழிக்காதிருக்க அதற்கு எல்லை வகுத்து, இதற்கு மேல்‌ நீ செல்லக்‌ கூடாதென ஆணையிட்டவரும்‌ கடவுள்தான்‌. நெருப்பும்‌ நீரும்‌, ஆக்கும்‌ சக்தியாகவும்‌ அழிக்கும்‌ சக்தியாகவும்‌ செயல்படுவதை அறிய இயலாத மனிதன்‌, இறை ஞானத்தை குறை கூறுவது எவ்வளவு பேதமை என்ற உண்மையை யோபு உணரும்படி செய்கிறார்‌. எனவே இறைவனின்‌ செயல்களில்‌ குறை காண்பதை மனிதன்‌ தவிர்க்க வேண்டும்‌ என்ற மறையுண்மையை நாம்‌ உணர வேண்டும்‌. இன்பமும்‌ துன்பமும்‌ இவ்வுலகில்‌ கலந்தே காணப்படுகின்றன. இன்பந்தை நாம்‌ மகிழ்வைன்‌ வரவேற்பது வோட துன்பத்தைய்‌ ஈந்த வேண்டும்‌ என்ற உண்மையை இறையன்‌ உணர்த்துகின்றார்.

துன்பம்‌ ஏன்‌?
முற்பிறவியில்‌ நாய்‌ செய்த தீமையே தன்பத்திற்குக்‌ காரணம்‌ என்பர்‌ சிலர்‌. நன்மையை நல்ல ஆவியும்‌, தீமையை தீய ஆவியும்‌ தோற்றுவிக்கின்றன என்பர்‌ வேறுசிலர்‌. இறைவன்‌ நன்மைத்தனத்தின்‌ வடிவு. அவரிடமிருந்து தீமைவர முடியாதென்பதுமறுக்க முடியாத உண்மை பாவத்தின்‌ விளைவே தீமை. இறைவனின்‌ கட்டளையை முதல்‌ மனிதன்‌ மீறியதால்‌, உலகில்‌ சாவு புகுந்தது, சாவுடன்‌ கூடிய அனைத்து தீமைகளும்‌ பாவத்தின்‌ விளைவுகள்‌. 'பாவத்தின்‌ கூலியாகிய மரணத்தையே" தழுவி, கடவுள்‌ குமாரன்‌ பாவத்தின்‌ மறு வெற்றி கொண்டார்‌. சிலுவை மீட்பின்‌ கருவியாயிற்று. நமது வாழ்றிறும்‌ நுன்பங்கள்‌ மீட்பின்‌ சருனியாகின்றன.. துன்ப வேளையில்தான்‌ மனிதன்‌ இறைவனை நினைக்கிறான்‌; அவரிடம்‌ சரண்‌ அடைகின்றான்‌. மரணத்திற்கும்‌ பின்னர்‌ தன்நிலை என்ன என்பதை எண்ணிப்பார்க்கிறான்‌. எனவே துன்பங்கள்‌ விண்ணக வாழ்வை நமக்கு நினைவுகூறும்‌ எச்சரிக்கைகளாகின்றன, வேதனையின்‌ முழுவிளக்கத்தை சிலுவையில் தான்‌ காண முடியும்‌.

சிலுலையைப்பற்றிய ஞானத்தை அறியாத யோபு இறைவனின்‌ ஞானத்தை ஏற்கத்‌ தயங்கியது உண்மை. ஆனால்‌ இறுதியில்‌ அவரோ ஆண்டவரின்‌ திட்டத்திற்கு அடிபணிந்தார்‌. "நீர் எல்லாம்‌ செய்ய வல்லவர்‌ என்பதையும்‌, எந்தத்‌ திட்டமும்‌ உம்‌ ஆற்றலுக்கு அப்பாற்பட்டதன்று எனவும்‌ நான்‌ அறிவேன்‌.

நம்மைத்‌ தொடர்ந்துவரும்‌ துன்பங்களில்‌ - சோதனைகளில்‌ இறைவளின்‌ கரத்தைக்‌ காண்கின்றோமா? நமது துன்பங்கள்‌ நமது மீட்பின்‌ கருவிகள்‌ என்பதை உணர்கின்றோமா?

அறிவில்லாத சொற்களால்‌ நம்‌ ஆலோசனையை இருளாக்கும்‌ இவன்‌ யார்‌? வீரனைப்‌ போல்‌ உன்‌ இடையை வரிந்நு கட்டிக்‌ கொள்‌. நாம்‌ உன்னை வினவுவோம்‌, நீ விடை கூறு.

இரண்டாம் வாசகம் 2 கொரி 5:14-17

பவுல்‌ மனம்‌ மாறுமுன்‌, கிறிஸ்துவை ஊனக்கண்‌ கொண்டு மட்டுமே பார்த்தார்‌. கழுமரத்தில்‌ மாண்டவர்‌ மெசியாவாக, மீட்பராக இருக்க முடியாதென்பதே அவரது கணிப்பு. எனவேதான்‌ கிறிஸ்துவையும்‌ அவரது திருச்சபையையும்‌ ஒழித்துவிட பவுல்‌ முயன்றார்‌. ஆனால்‌ ஆண்டவரால்‌ தடுத்தாட்கொள்ளப்பட்ட பின்னர்‌, பவுலின்‌ கண்ணோட்டமே மாறிவிட்டது. தன்‌ உள்ளத்தைக்‌ கவர்ந்து தனக்கு நல்வழி காட்டியவர்‌ நாசரேத்தூர்‌ நாயகன்‌ என்பதை உணர்ந்தார்‌. தான்‌ புதுப்படைப்பு ஆகிவிட்டதை நன்றியுடன்‌ குறிப்பிடுகின்றார்.

அன்பு ஆட்கொள்ளுகிறது
கிறிஸ்துவின்‌ அன்பின்‌ ஆழத்தையும்‌ நீளத்தையும்‌ அகலத்தையும்‌ 'அளந்தறிய முடியாது. நாம்‌ பகைவர்களாயிருந்த போதும்‌, தன்னையே நமக்காகப்பலியாக்கிய அன்பு அது. இதுவே பவுலின்‌ மறைபரப்புப்பணியின்‌ ஆதாரமும்‌ தூண்டுகோலும்‌. இயேசு எனக்காகத்‌ தன்னையே பலியாக்கினார்‌ என்று உள்ளம்‌ உருகிக்‌ கூறுகிறார்‌. "கிறிஸ்துவோடு சிலுவையில்‌ அறையப்பட்டிருக்கிறேன்‌. எனவே இனி வாழ்பவன்‌ நான்‌ அல்ல; கிறிஸ்துவே என்னுள்‌ வாழ்கிறார்‌" என்று இறைமகனோடு ஐக்கியமாகி விடுகின்றார்‌ பவுல்‌ (கலா. 2 : 19-20). "நேர்மையாளருக்காக ஒருவர்‌ தம்‌ உமிரைக்‌ கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர்‌ ஒருவருக்காக யாரேனும்‌ தம்‌ உயிரைக்‌ கொடுக்கத்‌ துணியலாம்‌. ஆனால்‌ நாம்‌ பாவிகளாய்‌ இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத்‌ தம்‌ உயிரைக்‌ கொடுத்தார்‌, இவ்வாறு கடவுள்‌ நம்மீது கொண்டுள்ள தம்‌ அன்பை எடுத்துக்காட்டியள்ளார்‌ " (உரோ. 5:8)

கிறிஸ்து நம்‌ அனைவர்‌ சார்பிலும்‌ மரித்ததால்‌, நாமும்‌ அவருடன்‌ மரிக்கிறோம்‌. தம்மில்‌ நம்‌ அனைவரையும்‌ இணைத்து நமது பாவப்‌ பலியானார்‌ இயேசு. எனவே இயேசுவின்‌ பலி, நம்‌ அனைவரின்‌ பலி; அவரது மரணம்‌ நம்‌ அனைவரின்‌ மரணம்‌. கிறிஸ்துவின்‌ மரணத்தில்‌ ஒன்றிக்கும்‌ நாம்‌ அனைவரும்‌ அவரது உயிர்ப்பிலும்‌ பங்கு பெறுகிறோம்‌. கிறிஸ்துவோடு நாம்‌ இறந்தோமாயின்‌, அவரோடு வாழ்வோம்‌ என்பது நமது விசுவாசம்‌". கிறிஸ்து தனக்காக வாழவில்லை. நமக்காக வாழ்ந்தார்‌; பலியானார்‌. நாமும்‌ அவரைப்‌ பின்பற்றி நமக்கென வாழாது. பிறர்க்கென வாழ்ந்தாக வேண்டும்‌.

புதிய படைப்பு
கிறிஸ்துவை இரு கோணங்களில்‌ அறியலாம்‌. யூத குலத்தில்‌, தாவீது கோத்திரத்தில்‌ தோன்றி, பாலஸ்தீன்‌ மண்ணிலே வாழ்ந்து நன்னெறியைப்‌ போதித்து, அதற்காகப்‌ பகைவர்களால்‌ பழிவாங்கப்பட்ட கிறிஸ்து - இது மனிதக்‌ கண்ணோட்டம்‌, இறைமகனாயிருந்தும்‌ தன்னையே வெறுமையாக்கி, மனிதனாகப்‌ பிறந்து, சிலுவைச்‌ சாவை ஏற்று நம்மை மீட்டவர்‌ இயேசு என்பது விசுவாசக்‌ கண்ணோட்டம்‌. தன்‌ மனமாற்றத்திற்குழுன்‌ பவுல்‌ மனிதக்‌ கண்ணோட்டத்தில்தான்‌ இயேசுவைக்‌ கண்டார்‌. ஆனால்‌ மனம்‌ மாறிய நாளிலிருந்து தூய ஆவியின்‌ ஒளியில்‌ கிறிஸ்துவைக்‌ கண்டு, அவரில்‌ அவருக்காக வாழ்வதையே தன்‌ இலட்சியமாகக்‌ கொண்டுவிட்டார்‌. கிறிஸ்துவுக்குள்‌ ஒரு புதுவாழ்வைப்‌ பெற்றுவிட்டார்‌. "கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப்‌ பெற்ற நீங்கள்‌ அனைவரும்‌ கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள்‌" என்று (கொலோ. 3: 27) தன்‌ அனுபவத்தைக்‌ குறிப்பிடுகின்றார்‌. நாம்‌ அனைவரும்‌ கிறிஸ்துவில்‌ புதுப்பிறவிகள்‌ ஆகியள்ளோம்‌. எனவே பழைய இயல்பையும்‌, அதற்குரிய செயல்களையும்‌ களைந்துவிட்டு, நீதியிலும்‌ புனிதத்திலும்‌ வளர வேண்டும்‌ (கொலோ. 3:9-10). இப்புதியபடைப்பை நாம்‌ நம்‌ ஊனக்கண்ணால்‌ காண்பதில்லை. எனினும்‌ அநீதி - ஊழல்‌ - வறுமை - தன்னலம்‌, வன்முறைகள்‌ இவற்றின்‌ மத்தியிலும்‌ தூயஆவி உருவாக்கும்‌ புதிய வானமும்‌ புதிய வையகமும்‌ தோன்றியுள்ளது என்பது விசுவாசக்‌ கண்ணுக்குப்‌ புலனாகும்‌. கிறிஸ்து மீண்டும்‌ வரும்பொழுது இப்புதுப்படைப்பின்‌ நிறைவும்‌ பொழிவும்‌ தெளிவு பெறும்‌. கிறிஸ்துவின்‌ இரு வருகைகள்‌ இவ்வுலகைப்‌ பெரிதும்‌ பாதித்துள்ளன. பழையன கழிந்து போயின: இதோ புதியன தோன்றியுள்ளன (காண்‌ எசா. 43:18-19; 65:17-18). பதுப்பிறப்படைந்து - புதிய ஆடையை அணிந்துகொண்ட நாம்‌ அதற்கேற்ப செயல்புரிய வேண்டும்‌.

ஒருவன் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்தால், புதியதொரு படைப்பாகிவிட்டான்.
நற்செய்தி : மாற்கு 4:35-41
இயேசு நோய்களைப்‌ போக்கினார்‌; பேய்களை விரட்டினார்‌; இறந்தவரை எழுப்பினார்‌. காற்றையும்‌ கடலையும்‌ படைத்தவரே அவற்றைக்‌ கட்டுப்படுத்தும்‌ வல்லமையும்‌ பெற்றிருந்தார்‌ என்பதை இன்றைய புதுமை நிரூபிக்கிறது. "அவர்‌ வழியாகவே அனைத்தும்‌ உண்டாயின; உண்டான தெதுவும்‌ அவராலேயன்றி உண்டாகவில்லை " என்ற அருள்‌ வாக்குக்குச்‌ சான்றாக அமைகின்றது புயலை அடக்கும்‌ புதுமை.

புயலில்‌ சீக்கிய சீடர்கள்‌
ஏரிக்கரையில்‌ பேதுருவின்‌ படகில்‌ அமர்ந்தே ஆண்டவர்‌ போதித்தார்‌. போதனை முடிந்ததும்‌ அப்படகிலேயே தனிமையைத்‌ தேடி அக்கரைக்குப்‌ பயணமானார்‌. இருட்டத்‌ தொடங்கியது. போதனைக்‌ களைப்பால்‌, படகின்‌ பின்னணியத்தில்‌ கட்டயையே தலையணையாகக்‌ கொண்டு இயேசு தூங்கினார்‌. அவரும்‌ பசி, தாகம்‌, களைப்பு இளைப்பாற்றி ஆகியவற்றால்‌ பாதிக்கப்பட்ட மனிதன்தானே!

மலைகளால்‌ சூழப்பட்ட கலிலேயக்‌ கடலில்‌ திடீர்ப்புயல்‌ எழுவது இயல்பு, அன்று கடுமையான புயல்‌, கடல்‌ அனுபவமுள்ள சீடர்களே தடுமாறினர்‌. இயேசுவோ அமைதியாகத்‌ தூங்கிக்‌ கொண்டிருந்தார்‌. "என்‌ தலைவா! கிளர்ந்தெழும்‌, ஏன்‌ உறங்குகின்றீர்‌? விழித்தெழும்‌; எங்களை ஒருபோதும்‌ ஒதுக்கித்‌ தள்ளிவிடாதேயும்‌. நீர்‌ ஏன்‌ உம்‌ முகத்தை மறைத்துக்‌ கொள்கின்றீர்‌? எங்கள்‌ சிறுமையையும்‌ துன்பத்தையும்‌ ஏன்‌ மறந்துவிடுகின்றீர்‌?" என்ற திருப்பாடலை (43: 23-25) அவர்கள்‌ நினைவு கூர்ந்திருக்க வேண்டும்‌. எனவே ஆண்டவரை அச்சத்துடனும்‌, ஆத்திரத்துடனும்‌ எழுப்பினர்‌. பல்வேறு மக்களின்‌ துயர்‌ துடைத்த இத்தூயவர்‌ தமக்கும்‌ உதவுவார்‌ என்ற நம்பிக்கையில்‌ எழுப்பினர்‌; தம்மால்‌ ஆனமட்டும்‌ முயன்றும்‌, முடியாத நிலையில்‌ அவரை ஏழுப்பினர்‌. அவர்களது. செயலில்‌ ஆண்டவர்‌ குறை காணவில்லை. நம்மால்‌ ஒன்றும்‌ இயலாத நிலையில்‌ அவரிடந்தான்‌ சரண்‌ அடைய வேண்டும்‌. எனினும்‌ "போதகரே மடிந்து போகின்றோமே, உமக்கு அக்கறை இல்லையா?" என்ற அவர்களது கூற்று அவர்களின்‌ விசுவாசக்‌ குறைவைக்‌ காட்டியது. எனவே தான்‌ "அற்ப விசுவாசமுள்ளவர்களே! நாம்‌ இருக்க பயமேன்‌?" என்று அவர்களைக்‌ கடிந்து கொள்ளுகிறார்‌. நமது உலகத்‌ தொல்லைகட்கிடையில்‌ மனக்குழப்பத்தின்‌ மத்தியில்‌, தீய சக்திகள்‌ நம்மை விழுங்கிவிட முயலும்‌ பொழுது ஆண்டவரிடம்‌ செல்வோம்‌.

இயேசுவின்‌ ஆற்றல்
ஆண்டவரின்‌ ஆற்றலைச்‌ சுட்டிக்காட்டி இறைபுகழ்‌ இசைக்கின்றது திருப்பாடல்‌. "படைகளின்‌ கடவளாகிய ஆண்டவரே! உம்மைப்போல்‌ ஆற்றல்‌ மிக்கவர்‌ யார்‌?... கொந்தளிக்கும்‌ கடல்மீது நீர்‌ ஆட்சி செலுத்துகின்ற; பொங்கியெழும்‌ அதன்‌ அலைகளை அடக்குகின்றீர்‌" (திபா.89 :8-9) கடலைப்‌ படைத்த தெய்வத்‌ திருமகன்‌ தான்‌ காற்றைக்‌ கடிந்து கடலை நோக்கி "இரையாதே, சும்மாயிரு" என்றார்‌. சீடர்களின்‌ மனக்‌ கொந்தளிப்பும்‌ மறைந்தது. "மலைகளை நோக்கி என்‌ கண்களை உயர்த்துகின்றேன்‌! எங்கிருந்து எனக்கு உதவி வரும்‌? விண்ணையும்‌ மண்ணையும்‌ உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்‌. அவர்‌ உம்‌ கால்‌ இடறாதபடி பார்த்துக்கொள்வார்‌; உம்மைக்‌ காக்கும்‌ அவர்‌ உறங்கிவிடமாட்டார்‌ " (காண்‌ திபா. 121).

சீடர்கள்‌ இப்புதுமையால்‌ இயேசுவின்‌ ஆற்றலை உணர்கின்றனர்‌. "காற்றும்‌ கடலும்‌ இவருக்குக்‌ கீழ்ப்படிகின்றனவே; இவர்‌ யாராயிருக்கலாம்‌?" என்று வினாக்களை வியப்புடன்‌ எழுப்புகின்றனர்‌. சிறிது சிறிதாக இப்புதுமைகள்‌ வழியே இறை இயேசுவில்‌ சீடர்களின்‌ விசுவாசம்‌ வளர்கிறது. ஒவ்வொரு புதுமையும்‌ நமது விசுவாசத்தை வளர்க்கும்‌ கருவியாக உள்ளதா?

பேதுருவாகிய பாறையை அடிக்கல்லாக அமைத்து நாசரேத்தூர்‌ நாயகன்‌ தெய்வத்‌ தச்சனால்‌ உருவாக்கப்பட்ட திருச்சபையை பக்தர்கள்‌ படகாக உருவகித்துள்ளனர்‌. வேதகலாபனை இத்திருச்சபையை அழிக்க எழுந்த போதெல்லாம்‌, அன்று கடலிலே சிக்கிய படகுபோல, இத்திருச்சபையும்‌ துன்பப்பட்டது உண்மை. எனினும்‌ "ஆண்டவர்‌ அயர்வதுமில்லை; உறங்குவதுமில்லை" என்ற வேத வாக்கு பொய்த்துவிடவில்லை. ஆண்டவர்‌ உறங்கினாலும்‌ சரி, விழித்திருந்தாலும்‌ சரி நம்முடன்‌ இருந்தாலே போதும்‌. அவரே நமது அரண்‌.

ஆண்டவரே மடிந்து போகிறோம்: உமக்கு அக்கறை இல்லையா?

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ