ஆண்டின் பொதுக்காலம்
17 ஆம் ஞாயிறு திருப்பலி
முன்னுரை - 3ம் ஆண்டு
இயேசுவின் மீது கொண்ட உறவை ஆழப்படுத்த வந்திருக்கும்
அன்புள்ளங்களே!
காலத்தாலும் கடலாலும் அழிக்க முடியாத செபம் ஒன்று, இன்று நம்மை இந்த
திருவழிபாட்டு நிகழ்வுக்கு அழைக்கின்றது. இறைமகன் இயேசு தம்
சீடர்களுக்கு கற்றுத்தந்த செபம்தான் அது! இந்த இனிய செபத்தில்
இடைவிடாமல் இறைவனைப் புகழவும், அவரது அரசை வரவேற்கவும் விண்ணகத்தின்
நிலவரம் மண்ணகத்தில் நிலவவும், அமைதியும், உணவும் பாதுகாப்பும் அருளும்
படியாகத்தான் கேட்கின்றோம்.
பெருங்குரலெடுத்துத் தம்மைக் கூவி அழைப்போருக்கு பெருமகன் இயேசு
செவிகொடுத்து உதவுகின்றார்.
அருள் பொழிந்து நலம் தருகின்றார்.
இறைவனின் வியத்தகு செயல்களுக்காக அவரைப் போற்றுவோம்.
செபிக்கக் கற்றுத்தந்ததற்கு நன்றி சொல்லுவோம்.
நம் தவறுகளுக்காக அவரின் இரக்கத்தை மன்றாடுவோம்.
அவரைத் தேடி நம் ஆன்மீகத் தாகத்தை தீர்த்துக் கொள்வோம்.
நம்மைப் படைத்த அவரை சார்ந்து வாழ முன் வருவோம்.
அவர் துணையின்றி நம்மால் எதுவும் செய்ய இயலாது என்பதை உணர்ந்து
வாழ்வோம். அவரது திருவுளத்தைப் புரிந்து கொள்ள செபத்தில் வளர்ச்சி அடைய நாம் இன்று
செபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்!
கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும். என இயேசு உறுதி மொழி ஒன்று
தருகின்றார். நாம் மட்டும் கட்டாயம் கேட்டால் கிட்டாதது கிட்டும்.
எட்டாதது எட்டும். இந்த திருப்பலியில் நன்றி நிறைந்த உறுதியான உள்ளத்தை
செபிக்கத் தூண்டும் நெஞ்சத்தைப் பெற்றுக் கொள்ள இறைவன் இயேசு தாம்
கற்றுத் தந்த செபத்தின் வழியாக நமக்குத் தருகின்றார் அன்புடன்
செபிப்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே!
இறை ஆட்சியை நோக்கி இதயத்தை திருப்பவும் நீதியை நோக்கி வழி நடக்கவும்
இயேசு செபிக்க கற்றுக் கொடுத்த பாதையில் திருச்சபையை வழி நடத்தும்
அருளை திருச்சபை தலைவர்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்
2. எங்களை அட்சி புரியும் பேரரசரே!
ஆட்சியுரிமை பெற்றவர்களுக்கு உம் மாபெரும் ஆற்றலைப் பொழிந்து உமது அரசு
விண்ணகத்தில் இருப்பது போல மண்ணகத்தில் கட்டி எழுப்பத் துணைபுரிய
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு அன்றாடம் தருகின்ற இறைவா!
எல்லா நாடுகளிலும் அமைதி நிலவவும், மனித உரிமைகள் மதிக்கப்படவும்
வளங்கள் அனைத்தும் தாராளமாக பகிர்ந்து கொள்ளப்படவும், உணவின்றி
தவிப்போருக்கு உணவு கிடைக்கவும் அருள் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
4. எங்கள் பாவங்களைப் பொறுத்து எங்களை காப்பவரே!
வருகின்ற நாட்களில் நாங்கள் செய்கின்ற தவறுகளில் இருந்து திருந்தி
வாழவும் பிறர் செய்கின்ற தீமைகளை பொறுத்துக் கொண்டு வாழவும், பிறருக்கு
ஒரு போதும் தீமைசெய்யாமல் வாழவும் அருள் பொழிய வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
5. நாங்கள் செபிக்க ஆற்றல் தரும் இறைவா!
காலையில், பகலில், இரவில், வெளியே செல்லுமுன், வீடு திரும்பியதும்,
வேலையைத் தொடங்கு முன், வேலையை முடித்தபின், வெற்றியின் போதும்,
தோல்வியின் போதும், இன்பத்தில், துன்பத்தில், சோதனையில், வேதனையில்,
நோயில், நலத்தில், உழைப்பில், ஓய்வில் எப்பொழுதும் செபிக்க ஆற்றல் தர
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
பல அரிய சாதனங்களைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் நவீன
கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். அதன் மூலம்
யாரிடமும் எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். எந்தக்
கேள்விக்கும் அந்தக் கம்ப்யூட்டர் பதில் சொல்லும் என்று மகிழ்ச்சியில்
மிதந்தனர். அவர்கள் ஆவலோடு முதல்கேள்வியை செலுத்தினர். இறைவா
முதன்முதலில் உலகம் எப்படி உருவானது'? என்று கேட்டவுடன் அவர்களுக்கு
வந்த பதில் "விவிலியத்தில் ஆதி ஆகமத்தைப் பார்".
இறைவா! என்றும் எப்பொழுதும் நாங்கள் செபிக்க வேண்டிய முறையில் நான்
செபிக்க அருள்புரியும்" என செபிப்போம்
சிறுமியர் படிக்கும் பள்ளி ஒன்றுக்கு ஆரோக்கிய மேரி என்ற மாணவியை அவரது
பாட்டி அழைத்துக் கொண்டு வந்தார். ஆரோக்கிய மேரி தனது மகளுடைய மகள்
என்றும், அவளது தாய் அவள் பிறந்த போது இறந்து விட்டார். அவளது
தந்தையும் விபத்து ஒன்றில் இறந்து விட்டார். அந்த பாட்டி தான் அவளை
வளர்ப்பதாகவும், அவளை வளர்க்க போதுமான வசதியில்லை என்றும், பள்ளித்
தலைமை சகோதரியிடம் ஒரு வேலை வேண்டும் என்றும் கேட்டார். தற்சமயம் வேலை
ஒன்றும் இல்லை, பிறகு பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பி வைத்தார் தலைமை
சகோதரி. பாட்டி தினமும் அந்த தலைமை சகோதரியை சந்தித்து தனக்கு ஒரு வேலை
வேண்டும் என நச்சரிக்கத் தொடங்கிவிட்டார். பாட்டிக்கு கொடுப்பதற்கு
ஏற்ற வேலை எதுவும் இல்லை என்று சொல்லிப் பார்த்தார் தலைமை சகோதரி.
பாட்டி விடுவதாக இல்லை. விடாப்பிடியாக கேட்டுக் கொண்டே இருந்ததால்
அவருக்கு பள்ளிக் குழந்தைகளை பராமரிக்கும் ஆயா வேலையை கொடுத்து விட்டார்.
இவரின் தொல்லையில் இருந்து விடுபட அவருக்கு ஆயா வேலையை கொடுத்து
விட்டார்.
நற்செய்தி வாசகத்தில் இரவு வேளையில் கதவைத் தட்டி நண்பரிடம் அப்பம்
கடன் கேட்ட நிகழ்வு பாட்டியைப் பார்க்கும் போது நினைவுக்கு வருவதாக தன்
சக ஆசிரியர்களிடம் தலைமை சகோதரி பகிர்ந்து கொள்கிறார்.
கேட்பது தான் செபம். கேட்பது கிடைக்கலாம்.. கிடைக்காமல் போகலாம்.
கேட்காதது கிடைக்கலாம்.. கேட்டது கிடைக்காதது பற்றி முணுமுணுக்காமல்
கேட்காதது கிடைத்ததை விரும்பி ஏற்கும் ஆற்றலைக் கேட்பதுவும் செபம்.
விண்ணகத் தந்தை தந்ததை, விரும்பி ஏற்கும் ஆற்றலை தருபவர் தூய ஆவி.
விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்பவருக்கு தூய ஆவியை தருவது நிச்சயம்.
லூர்து நகருக்கும் வேளாங்கன்னிக்கும் பல்வேறு செபவழிபாட்டு
நிகழ்வுகளுக்கும், திருத்தலங்களுக்கும் திருயாத்திரையாக விரும்பிச்
செல்வோர் இத்தகைய வியத்தகு அனுபவத்தைப் பெறுகிறோம். நமக்கோ நம்மைச்
சார்ந்தோருக்கோ இறைவன் தர வேண்டும் எனக் கேட்டவை கிடைக்காவிடினும்
நல்லதொரு மாற்றமும் மன அமைதியும் கிடைக்கிறது. நம்பிக்கை கூடுகிறது.
உள் மன ஆறுதல் மிகுதியாகின்றது. கேட்டது கிடைக்கவில்லை என நினைப்பதைவிட
கேட்காதது கிடைத்தது நினைத்து மகிழ்வோம்.
அப்பம் கேட்டால் கல்லைக் கொடுத்து உண்ணச் செய்யும் கல் நெஞ்சரல்ல,
கடவுள். மீனுக்குப் பதிலாய் பாம்பையும், தேளையும் தருபவரல்ல நம்
தெய்வம்.
நீயே துணை, என் அன்பேசு நாதா, உம் திருவடி சரணம் ஐயா என இறைவனிடம் சரண்
அடைவோம்.
கரங்களை விரித்து தேவைகளை சொல்லி செபிபோம். அவர் விரும்புவதைத்
தரட்டும்! நாம் கேட்காதது கிடைத்தால் அது கடவுள் விரும்பியது அல்லவா
கிடைத்திருக்கிறது. அதற்காய் நன்றி சொல்லி செபிப்போம்.
வீழ்ந்து கிடக்கும் மனிதனை பாய்ந்தெழச் செய்யும் வலிமை செபத்திற்கு
உண்டு. இயேசு கற்றுத் தந்த செபம் இதயப் பூர்வமான ஒரு உரையாடல்.
செபிக்க இயலாவிட்டாலும் செபிக்க இயலவில்லை இறைவா என்று கூட சொல்லுவோம்.
எந்த இடத்திலும் செபிக்கத் தெரிந்திருப்பது நல்லது. இருந்தாலும்
அமைதியான இடத்தில் செபிப்பது நலம் பயக்கும்?
எந்த நேரத்திலும் செபிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்வது நல்லது.
இருப்பினும் செபிப்பதற்கென்று அமைதியான ஒரு நேரத்தை தேர்ந்தெடுப்பது
நலம் பயக்கும்.
எம் மனம் விரும்புவதை கொடுக்கும் இறைவா உம்மிடம் எம் மனம் திறந்து
உரைக்கும் முன்னே உலகில் எம் தேவை என்னவென நீர் அறிவீர்.
குழந்தையின் உள்ளம் எமக்குத் தாரும் மற்றவருக்கான நன்மைகளையும் எம்
நலன்களையும் மனம் விரும்பி உம் மலரடியில் வைத்திடச் செய்யும்
வாழ்வில் விருப்பும் ஜெபத்தில் பொறுப்பும் வழங்கிடும் தந்தையே!!
ஜெபிக்கும் மனநிலை தாரும்.
எம் ஜெபம் பொருள்பொதிந்ததாக இருக்கச் செய்யும்..
செபம் அல்லது இறைவேண்டல். இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் என்னில்
நிறையக் கேள்விகள் எழுவது உண்டு: எதற்காக நாம் செபிக்க வேண்டும்?
கடவுள் எல்லாவற்றையும் அறிந்தவர் என்றால், அவர் நம்மைப் பாதுகாப்பவர்
என்றால், அந்த வேலையை அவர் சரியாகச் செய்யலாமே! நாம் தினமும் அவரிடம்,
என்னைக் காப்பாற்று! என்று நினைவுபடுத்திக்கொண்டே இருக்க
வேண்டுமா? கடவுள் தம்மிடம் செபிப்பவர்களைப் பாதுகாக்கிறார்,
செபிக்காதவர்களை அழிக்கின்றார் என்றால், அவரின் கடவுள் குணம் நம்
செபத்தால் வரையறை செய்யப்பட்டதா? தம்மைப் புகழாதவர்களை அவர் பழிவாங்குகின்றார்
என்றால், மனிதரைப் போலத்தானே அவரும் செயல்படுகிறார். இல்லையா? நம்
வாழ்வில் நடக்கும் எல்லாம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டன. அப்படி
இருக்க நம் செபம் நம் வாழ்வின் போக்கை எப்படி மாற்ற முடியும்?
செபிப்பது என்றால், எப்படி செபிப்பது? திருஅவை வரையறுத்துக்
கொடுத்த செபங்கள் வழியாகவா? அல்லது நானாக என் மனத்தின் ஆழத்திலிருந்தா?
அமைதியாக செபிப்பது சரியா? சத்தம் போட்டு செபிப்பது சரியா? கடவுள்
எல்லா இடத்திலும் இருக்கிறார் என்றால், நான் ஏன் ஆலயத்திற்கு வந்து
செபிக்க வேண்டும்? என் வீட்டிலும், நான் பயணம் செய்யுமிடத்திலும்,
பணி செய்யும் இடத்திலும் இயல்பாக செய்யும் செபத்தை அவர் கேட்க
மாட்டாரா?
நிற்க.
விடைகளை விட கேள்விகளே நிறைய இருப்பது போலத் தோன்றினாலும், இன்றைய
இறைவாhர்த்தை வழிபாடு சொல்லும் சுருக்கமான விடைகள் இரண்டு:
ஒன்று: இறைவேண்டல் அல்லது செபம் என்பது
ஒரு உறவு. இறைவனைத் தந்தையாகவும், நம்மையே மகனாகவும், மகளாகவும்
பாவித்து ஒருவர் மற்றவரோடு பேசிக் கொள்ளும் உரையாடல் தளமே செபம்.
இரண்டு: சிரிப்பு, சிந்தனை போன்ற உணர்வுகள்
எப்படி மனித இனத்திற்கு மட்டுமே உரித்தானதோ, அப்படியே செபமும் மனித
இனத்திற்கு மட்டுமே உரித்தானது. கோழிகள் செபம் செய்வதாகவோ,
நாய்க்குட்டிகள் முழங்கால்படியிட்டு இறைவேண்டல் செய்வதாகவோ நாம்
பார்த்ததில்லை. ஏனெனில் அவை தங்களின் வரையறையை (லிமிட்) அனுபவிக்க
முடியாது. நம்மால் மட்டுமே நம் வரையறையை அனுபவிக்க முடியும். நம்மால்
நம் வரையறையை அனுபவிப்பது மட்டுமல்லாமல், அந்த வரையறையைக் கடந்து
சிந்திக்கவும் முடியும். எடுத்துக்காட்டாக, நான் ஒருவரிடம் 1 லட்சம்
கடன் பட்டிருக்கிறேன் என வைத்துக்கொள்வோம். அதை திருப்பிச் செலுத்த
இன்றே கடைசி நாள். ஆனால் என்னிடம் இன்று வெறும் 10 ரூபாய் மட்டுமே
இருக்கின்றது. இந்த 10 ரூபாய்க்கு மேல் என்னால் ஒரு ரூபாய் கூட இன்று
புரட்ட முடியாது என்பது என் வரையறை அனுபவம். அதே வேளையில், இன்று
நான் கடனைத் திரும்ப செலுத்தாததால் நாளை நான் சிறைக்கு அனுப்பப்படுவேன்
என்று, நாளை நடப்பதை இன்றே என்னால் சிந்திக்க முடியும். என் வரையறையைக்
கடந்து சிந்திக்க என்னால் முடியும்போது, நான் என்னை அறியாமாலே என்
மனத்தை இறைவனிடம் எழுப்புகின்றேன். இதுவே இறைவேண்டல்.
மெம்ரே என்ற இடத்தின் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமை மூன்று மனிதர்கள்
சந்தித்ததை கடந்த ஞாயிறன்று வாசிக்கக் கேட்டோம். அந்த நிகழ்வின் தொடர்ச்சியே
இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 18:20-32). ஆபிரகாமைச் சந்தித்த
மனிதர்கள் நேராக சோதோம், கொமோரா நகரங்கள் நோக்கிச் செல்கின்றனர்.
அந்த இரண்டு நகரங்களிலும் பாவம், குறிப்பாக பாலியல் பிறழ்வு
பெருகியிருந்ததால், அதை அழிக்கப் புறப்பட்டுச் செல்கின்றனர் இந்த
இறைமனிதர்கள். அவர்கள் அவ்விதம் போய்க்கொண்டிருக்க, சோதோம்-கொமோரா
அழிவைப் பற்றி கடவுள் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துவதும்,
சோதோம்-கொமோரா நகரங்களின் நீதிமான்களுக்காக ஆபிரகாம் இறைவனிடம் பரிந்து
பேசுவதுமே இன்றைய முதல் வாசகம்.
மூன்று தூதர்கள் ஆபிரகாமின் இல்லத்திற்கு வந்திருந்தாலும் (காண்.
18:2), சோதோம்-கொமோரா நகரங்களை நோக்கிச் சென்ற தூதர்கள் இரண்டுபேர்
(காண். 19:1) மட்டுமே. மூன்றாம் நபராகிய கடவுளே அல்லது அவரின் தூதரே
இப்போது ஆபிராமுடன் உரையாடுபவர். ஆபிரகாம் நீதிமானாகவும், நேர்மையாளராகவும்
இருந்ததால், கடவுள் தாம் செய்யவிருப்பதை அவருக்கு வெளிப்படுத்துகின்றார்
(காண். 18:19). ஆபிரகாம் இறைவன் திருமுன் நின்று கொண்டிருப்பது அவரின்
பரிந்து பேசும் செயலையும், இறைவேண்டலையும் அடையாளப்படுத்துகிறது.
தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்துவிடுவீரோ? என்று தொடங்குகிறது
ஆபிரகாமின் உரையாடல். இந்தக் கேள்வியின் பின்புலத்தில் இருப்பது முதல்
ஏற்பாட்டு தோரா நூல்களின் இறையியல். தீயவர்கள் அழிவார்கள்.
நீதிமான்கள் வாழ்வார்கள் என்றும் தீயவர்களை அழிக்கும் கடவுள்
நீதிமான்களை அழிக்க மாட்டார் என்பதே அந்த இறையியல். ஆக, பாவம்
செய்தால் அழிவு. நீதியாக நடந்தால் வாழ்வு. இந்தப் பின்புலத்தில் 50
நீதிமான்கள், 45 நீதிமான்கள், 40 நீதிமான்கள், 30 நீதிமான்கள், 20
நீதிமான்கள், 10 நீதிமான்கள் இருந்தாலும் அந்நகரங்களை அழித்துவிடுவீரோ
என்று பேரம் பேசுகின்றார் ஆபிரகாம். 10 நீதிமான்கள் இருந்தால்கூட
அந்நகரங்களை அழிக்க மாட்டேன் என வாக்குறுதி தருகின்றார் இறைவன்.
ஆபிரகாமின் இந்த உரையாடல் அல்லது செபம், அவருக்கும் இறைவனுக்கும்
இருந்த உறவின் நெருக்கத்தைச் சுட்டிக் காட்டுகின்றது. ஆனால், ஆபிரகாமின்
செபம் கடவுளின் மனத்தை மாற்றவில்லை. நகரங்களை அழிப்பதற்காக தூதர்கள்
புறப்பட்டுச் செல்கின்றனர். 10 நீதிமான்கள் கூட அந்நகரங்களில் இல்லை
என்பதைக் காட்டவே இந்நிகழ்வு எழுதப்பட்டது போல இருக்கிறது.
ஆபிரகாம் கடவுளின் முன்னிலையில் நின்று இறைவனிடம் பரிந்து
பேசினாலும், கடவுளுக்கும் அவருக்கும் இடையே ஒரு திரை இருக்கின்றது.
இந்தத் திரை இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பின் வழியாக அகற்றப்பட்டுவிட்டது
என்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 2:12-14).
கிறிஸ்துவால் வரும் நிறைவாழ்வு பற்றி கொலோசை நகரத் திருச்சபைக்கு
அறிவுறுத்தும் பவுல், திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவோடு இறந்தவர்கள்,
அவரோடு உயிர்பெற்று எழுந்துள்ளார்கள் எனவும் சொல்லிவிட்டு, இறப்பு,
கடன் பத்திரம் என்ற இரண்டு உருவகங்கள் வழியாக, இறைவனுக்கும் மனிதருக்கும்
நடுவே இருக்கும் திரை அகற்றப்பட்டதை விளக்குகின்றார்.
இறப்பு என்பது ஒரு திரை. ஏனெனில் அந்தத் திரைக்குப் பின் என்ன நடக்கும்
என்பது நமக்குத் தெரியாது. ஆனால், கிறிஸ்துவை அறிந்தவர்கள் அவரோடு
இறப்பதால், அவர் உயிர்ப்பைக் கண்டுகொண்டதுபோல இவர்களும் கண்டுகொள்வார்கள்.
அதுபோல, கடன் பத்திரம் என்பது ஒப்பந்த விதிகள் கொண்டது. ஒப்பந்தம்
கடவுள்-மனித உறவுக்கு நடுவே திரையாக இருக்கின்றது. கிறிஸ்து நம்
குற்றங்களை மன்னித்ததால் அந்த கடன் பத்திரம் கிழிக்கப்பட்டு திரை
அகற்றப்படுகிறது.
இவ்வாறாக, முதல் ஏற்பாட்டில் இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே
நின்ற திரை கிறிஸ்து வழியாக கிழிக்கப்பட்டதால்தான், நம்மால் கடவுளை
அப்பா, தந்தையே என அழைக்க முடிகிறது.
தந்தையே எனக் கடவுளை அழைத்து அவரோடு உரையாடுதல் பற்றியும், அந்த
உரையாடலுக்குத் தேவையான காரணிகள் பற்றியும் சொல்கிறது இன்றைய நற்செய்தி
வாசகம் (காண். லூக் 11:1-13). இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று
பிரிவுகளாக உள்ளது: (அ) ஆண்டவர் கற்றுக் கொடுத்த செபம் (11:2-4),
(ஆ) வெட்கமில்லாத நண்பர் பற்றிய உவமை (11:5-8), மற்றும் (இ) கடவுள்
நம் செபங்களைக் கேட்கிறார் என்ற வாக்குறுதி (11:9-13).
இயேசு தன் சீடர்களுக்கு செபிக்கக் கற்றுக் கொடுக்கும் நிகழ்வு மத்தேயு
நற்செய்தியில் மலைப்பொழிவின் ஒரு பகுதியாக (மத் 6:9-13) இருக்கிறது.
ஆனால், லூக்காவில் அப்படி இல்லை. இயேசுவை இறைவனிடம்
வேண்டிக்கொண்டிருப்பவராக (11:1) முன்வைத்து, அந்த இறைவேண்டலின் தொடர்ச்சியாக
அவர் தன் சீடர்களுக்குச் செபிக்கக் கற்றுக்கொடுப்பதாக எழுதுகின்றார்
லூக்கா. எங்கள், விண்ணகத்திலிருக்கும், உம் திருவுளம் விண்ணுலகில்
நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக, எங்களைத்
தீமையிலிருந்து விடுவித்தருளும் என்னும் சொல்லாடல்கள் லூக்கா எழுதும்
செபத்தில் இல்லை. இரண்டு புகழ்ச்சி (தூயது உம் பெயர், உமது ஆட்சி
வருக, மூன்று விண்ணப்பம் (உணவு, மன்னிப்பு, விடுதலை) என இரண்டு
பகுதிகளாக அமைந்திருக்கிறது லூக்காவின் செபம். இறைவனின் மேன்மையை
அறிக்கையிடுவதும், அவரிடம் நம் உடல், உள்ள நலனுக்காக வேண்டுவதாகவும்
இருக்கின்றது இச் செபம்.
செபத்தைக் கற்றுக்கொடுத்த இயேசு, தொடர்ந்து ஓர் உவமையைச்
சொல்கின்றார். இரண்டு நண்பர்கள். ஒரு நண்பருக்கு அப்பம் தேவையாக இருக்கின்றது.
அதைக் கடனாகப் பெறுவதற்காக மற்ற நண்பரின் வீட்டுக் கதவைத் தட்டுகிறார்.
முதலில் எழ மறுக்கும் அந்நண்பர், இந்நண்பரின் விடாத தட்டுதலால்,
நட்பின் பொருட்டு அல்ல, மாறாக, தொல்லையின் பொருட்டு அப்பங்களைக்
கடன் கொடுக்கிறார்! (11:8). இங்கே நாம் பார்க்க வேண்டிய ஒரு
கிரேக்க வார்த்தை அநைடெய்யா. இதை விடாமுயற்சி, துணிச்சல்,
வெட்கத்தை விட்டு என மொழிபெயர்க்கலாம். இந்த உவமையில் வெட்கத்தை
இழந்த நண்பர் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருப்பவரே. நாளை இந்த நண்பரை
அவர் வெளியில் சந்திக்கும்போது எந்த முகத்துடன் அவரைச் சந்திப்பார்?
தன் தூக்கம் மற்றும் சுகத்திற்காக தன் நட்பை அவர் விட்டுக் கொடுத்தது
ஏன்?
இந்த உவமையை மட்டும் சொல்லிவிட்டு அது தரும் செய்தியைச் சொல்லாமல்
விடுகின்றார் இயேசு.
நண்பர்கள் தங்கள் மேலான நட்பை மறுதலித்தாலும் இறைவன் தன்னிடம்
கேட்கும் பிள்ளைகளை மறுதலிக்காதவர் என்பதே பாடம். ஆக, நட்பையும்
மிஞ்சுவது இறைவனின் உறவு. நண்பர்கூட உறங்கி விடுவார். ஆனால்,
இஸ்ரயேலைக் காக்கும் இறைவன் கண்ணயர்வதுமில்லை, உறங்குவதுமில்லை
(திபா 121:4).
மேற்காணும் உவமை, விடாமுயற்சிக்கான எடுத்துக்காட்டாக இருந்தாலும்,
தொடர்ந்து இயேசு விடாமுயற்சி பற்றி பேசுகின்றார்: கேளுங்கள்,
தேடுங்கள், தட்டுங்கள் எனச் சொல்லும் இயேசு, விடாமுயற்சியுடன்
கேட்கவும், தேடவும், தட்டவும் அழைக்கின்றார்.
அடுத்ததாக, கடவுள் நம் செபங்களைக் கேட்டு, நாம் கேட்பதை நமக்கு அருள்கிறார்
எனத் தொடர்கின்றார் இயேசு. உங்கள் தந்தை மீனுக்குப் பதிலாக
பாம்பையும், முட்டைக்குப் பதிலாக தேளையும் கொடுப்பாரா? எனக்
கேட்கும் இயேசு, தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள்
அளிக்க அறிந்திருக்கிறீர்கள் என்று சுட்டிக்காட்டி, தன் தந்தையை
நல்லவராகவும், நற்கொடைகள் அளிப்பவராகவும் முன் நிறுத்துகின்றார்.
எல்லா நற்கொடைகளிலும் மேலாக இருக்கின்ற தூய ஆவியானவரை கொடையாக அளிப்பார்
வானகத் தந்தை.
இவ்வாறாக, தந்தையே என கடவுளை அழைக்கக் கற்றுத் தரும் இயேசு, அந்த
அழைப்பில் நாம் கொண்டிருக்க வேண்டிய விடாமுயற்சியையும், அந்த அழைப்பின்
கொடையாகிய தூய ஆவியையும் பற்றிச் சொல்கின்றார்.
நட்பு செய்ய முடியாததை செபம் செய்து முடிக்கிறது. நட்புக்காக திறக்காத
கதவு நண்பனின் விடாமுயற்சிக்காகத் திறக்கிறது. நட்பை மிஞ்சுகிறது
செபம். தந்தையின் விரலை எட்டித் தொட நாம் கொடுக்கும் குரலே செபம்.
நாம் முதலில் கேட்ட கேள்விகளுக்கு விடை என்ன?
இறைவேண்டல் என்பது ஓர் உறவு
மனிதர்கள் நாம் ஒருவர் மற்றவரோடு உறவு கொள்ள படைக்கப்பட்டாலும், பல
நேரங்களில் நம் உறவு நம் வரையறையாக இருக்கிறது. நம் உறவைவிட நாம்
மேலெழும்பிச் செல்ல நினைத்தாலும் நம்மால் முடிவதில்லை. மற்றொரு பக்கம்,
நாம் நம்பியிருக்கும் உறவுகள் நமக்குப் பல நேரங்களில் கை கொடுப்பதில்லை.
நம்மை நம்பியிருக்கும் உறவுகளுக்கு நாம் கைகொடுப்பதில்லை. இதில்
யாரும் மற்றவர்களைக் குறை சொல்லத் தேவையில்லை. ஏனெனில் நாம் எல்லாருமே
வரையறைக்குட்பட்டவர்களே. ஆக, வரையறைக்குட்படாதவரின் உறவுதான் செபத்தின்
அடித்தளம். இந்த உறவுக்காரர் என்னும் இறைவன் எப்படிப்பட்டவர் என்பதைத்தான்
விளக்குகிறது இன்றைய முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும். தன் உள்ளத்தில்
இருப்பதை தன் பணியாளர் ஆபிரகாமுடன் பகிர்ந்து கொள்கிறார் இறைவன்.
தன் பிள்ளைகள் தட்டியவுடன் கதவைத் திறந்து அப்பம் அளிக்கின்றார் இறைவன்.
இறைவன் என் தந்தை. அவருக்கும் எனக்கும் உள்ள உறவே செபம். தங்கள் வரையறையை
உணர்ந்தவர்களும், கடவுளை தந்தை என ஏற்றுக்கொள்பவர்களும் மட்டுமே
செபிக்க முடியும்.
செபம் என்பது மந்திரக்கோல் அல்ல!
செபம் என்பது அலாவுதீனின் அற்புத விளக்கோ, அலிபாபா குகை வாசலோ, மாயவித்தைக்காரனின்
கோலோ அல்ல! செபத்தால் எல்லாவற்றையும் மாற்றி விடலாம் என நினைப்பது
சால்பன்று. பிள்ளைக்குரிய திறந்த மனம் செபத்தில் மிக அவசியம்.
எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என நம் பிள்ளைகள் நம்மிடம்
கேட்கின்றன. ஆனால், அவர்கள் கேட்டது அவர்களுக்குக் கிடைக்கவில்லையென்றாலும்
அதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நம்மோடு அவர்கள் உறவை
முறித்துக்கொள்வதில்லை. வயது வந்தவுடன் சிலர் முறித்துக்கொள்கிறார்கள்!
குழந்தைகளாக இருக்கும் வரை நம்மிடம் சார்பு எண்ணம் (டிபென்டன்சி)
மேலோங்கி இருக்கிறது. இந்த உணர்வுதான் நமக்கு திறந்த மனத்தையும் தருகின்றது.
செபத்தில் நாம் எதைக் கேட்டாலும் நம்மிடம் இந்த உள்ளமே இருக்க
வேண்டும். அடுத்ததாக, இயேசு கற்றுக்கொடுத்த இறைவேண்டல் என்பது மந்திரம்
அல்ல. 100 தடவை இதை எழுதினால், அல்லது சொன்னால் நான் விரும்பியது
கிடைக்கும் என நினைத்தல் கூடாது. இந்த செபம் நமக்கும் கடவுளுக்கும்
உள்ள உறவை நமக்கு நினைவுபடுத்துகிறது. அவ்வளவுதான்!
கேளுங்கள் தேடுங்கள் தட்டுங்கள்
நம் கடவுள் கொடுப்பவர், கண்டடையச் செய்பவர், திறப்பவர். இந்த
வார்த்தைகள் திறந்த காசோலை போன்றவை. நாம் இதை கருத்தாய்ப் பொருள்
கொள்ளல் வேண்டும். கடவுள் நம் விண்ணப்பங்களுக்குச்
செவிகொடுக்கிறார் என்று இயேசு சொல்கிறாரே தவிர, நாம் கேட்கும் அனைத்தும்
கிடைக்கும் என்று நமக்கு உத்திரவாதம் தரவில்லை. நம் கேட்டல், தேடல்,
தட்டுதல் அனைத்தும் மேலான ஒரு மதிப்பீட்டிற்காக இறையாட்சிக்காக
இருத்தல் நலம் (காண். 12:31-32). நாம் மட்டுமல்ல. கடவுளும் நம்மிடம்
கேட்கின்றார். நம்மைத் தேடி வருகின்றார். நம்மைத் தட்டுகின்றார்.
நாம் அவரின் கேட்டலுக்கும், தேடலுக்கும், தட்டுதலுக்கும் பதில் தருதல்
அவசியம்.
விடாமுயற்சி
முதல் வாசகத்தில் ஆபிரகாம் சோதோம்-கொமோரா நகரங்களுக்காகப் பரிந்து
பேசுவதில் மனந்தளரவில்லை. இந்த மனந்தளரா நிலையைத் தான் நண்பர்கள்
உவமையிலும், கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் என்னும் கட்டளை
வழியாகவும் சொல்கின்றார். இரண்டு நண்பர்களுக்கிடையே நடக்கும் இந்த
கொடுக்கல்-வாங்கலை நமக்கு நாமே ஏன் ஒப்பீடு செய்து பார்க்கக்
கூடாது. எடுத்துக்காட்டாக, எதையுமே தள்ளிப் போட்டுக்கொண்டே
சோம்பித்திரியும் என் மனத்தோடோ, அல்லது விடமுடியாத ஒரு பழக்கத்தோடோ
(குடிப்பழக்கம்), இல்லை! நான் இனிமேல் சுறுசுறுப்பாக இருப்பேன்.
குடிக்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டே வந்தால் அந்த மனம் நம்
தொந்தரவின் பொருட்டாவது மாறும் என்பது நிச்சயம். விடாமுயற்சி இறைவேண்டலில்
மட்டுமல்ல. நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலும் இருத்தல் அவசியம்.
தந்தை உள்ளம்
மண்ணுலகின் தந்தையரே தம் பிள்ளைகள் நன்மை கேட்டால் தீமை செய்யத்
துணியாதபோது வானகத்தந்தை இன்னும் எவ்வளவு மேன்மையானவராக இருப்பார்?
வானகத் தந்தையின் தாராள உள்ளம் இன்று நமக்குக் கற்றுக்கொடுப்பது
உறவுகளில் தாராள மனம். மற்றொரு வகையில் நாம் வேண்டும் செபங்களும்,
ஒப்புக்கொடுக்கும் திருப்பலிகளும், மேற்கொள்ளும் திருயாத்திரைகளும்
நம் எண்ணங்களை நிறைவு செய்யாதபோது வானகத் தந்தை மறுத்துவிட்டார்
என்று இறைவன்மேல் கோபமாக மாறுகின்றதா? ஏமாற்றமாக உருவெடுக்கின்றதா?
அல்லது இறைவன் நாம் கேட்கும் நலன்களைவிட மேலானதைத் தருவார் என்ற நம்பிக்கையை
உதிக்கச் செய்கிறதா? இறைவேண்டலில் ஏமாற்றம் ஏற்பட்டாலும் பரந்த உள்ளத்தோடு
இருப்பதை ஏற்றுக்கொள்ளலாமே!
இறுதியாக, இதுதான் நான்! என்று இறைவனின் பிரசன்னத்தில் அமர்ந்து,
என் இயல்பை, என்னால் இயல்பவற்றை, இயலாதவற்றை அவரிடம் கொண்டுவருவதும்,
அவர் என்னைப் பார்க்கிறார், நான் அவரைப் பார்க்கிறேன் என்று ஒருவர்
மற்றவரின் கண்கள் பணிப்பதும், எழுவதும்தான் செபம். என் வரையறை இதுதான்
என்று என் வாழ்க்கை சொல்ல, அந்த கையறு நிலையிலிருந்து எட்டி என் தந்தையின்
விரல் தொட நான் எழுப்பும் என் ஏக்கப் பெருமூச்சே செபம்! விரல்
தொடும் குரல் செபம்! அந்த விரல் மேல் நோக்கி இருந்தாலும் கீழ்
நோக்கி இருந்தாலும்!
அருள்திரு யேசு கருணாநிதி, மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி அமெரிக்காவின் வரலாற்றிலே மறக்க
முடியாத அதிர்ச்சித் தரும் சோக நாள். உலகிலே உயர்ந்த சக்தி வாய்ந்த
நாடு, வல்லரசு (Serower) நாங்கள் தான். பணத்தாலும்,
பொருளாதாரத்தாலும், தொழிற்துறை விஞ்ஞான ரீதியிலும் நாங்களே
உயர்ந்தவர்கள் என்று நினைப்பவர்கள் அமெரிக்கர்கள். ஆனால் நாட்டின்
பாதுகாப்பு என்று சிந்திக்கின்றபோது, பணமும், ஆயுதமும், விஞ்ஞான
வளர்ச்சியும் என்ன செய்ய முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு
விட்டார்கள். ஏனெனில் நியூயார்க் நகரில் உள்ள ஒப்பற்ற இரண்டு
கட்டடங்கள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு, தவிடு பொடியாகி எண்ணற்ற
உயிர்களையே பலியாக்கியபோது நாடே பயந்தது. தன் பலவீனத்தை உணர
ஆரம்பித்தது. எதிர்காலம் எப்படி அமையுமோ என்ற பயம் அமெரிக்காவையே
கவ்விப் பிடித்தது. இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை. எதுவும்
எந்த நேரத்திலும் நடக்கலாம் என்ற நிலையற்ற உணர்வு அமெரிக்கர்கள்
மனதில் பதிந்தது. எனவேதான் ஆலயம் தேடாத மக்கள் எல்லாம் இறைவனை.
ஆலயங்களைத் தேட ஆரம்பித்தார்கள். இறைவனிடம் மன்றாட வேண்டும் என்ற
சிந்தனை ஏற்பட்டது. கும்பகோணத்தில் 90-க்கும் மேலான குழந்தைகள்
தீயில் கருகியபோதும் நம் பலவீனத்தைத் தான் இது படம்பிடித்துக்
காட்டியது. எல்லா மதத்தினரும் இறைவனிடம் மன்றாடத்
தொடங்கியுள்ளார்கள் இந்தப் பச்சிளம் சிட்டுகளுக்காக!
மனிதனுக்கு அடிப்படைத் தேவையாக விளங்குவது சமூக வாழ்க்கை. இதனால்
பிறரோடு பழகுதல், உரையாடுதல், தருதல், பெறுதல் என்பது மனித சமூக
வாழ்வின் செயல்பாடுகள். இத்தகையச் செயல்பாடுகள் இல்லாத மானிட
வாழ்க்கையை நாம் நினைக்க முடியாது. ஆனால் மானிட சமூக உறவுக்கு
அப்பாற்பட்ட ஒரு உறவு உண்டு. அதுதான் கடவுள்- மனித உறவு. கடவுளை
ஏற்றுக்கொள்ளுதல், அவரை நம்புதல், அவரைப் போற்றிப் புகழ்தல்,
அவரிடம் வேண்டுதல் செய்தல் போன்றவை கடவுள் மனித உறவின் கூறுகளாக
உள்ளன. இன்றும் நாம் வாசிக்கக் கேட்ட விவிலிய வாசகங்கள் இறை மனித
உறவின் ஓர் இன்றியமையாத கூறு. பண்பு என்று தெளிவாக்குகிறது.
செபத்தைப் பற்றியத் தெளிவான சில சிந்தனைகளைத் தருகிறது.
இந்த உலகில் மக்கள் சிலர் எவ்வாறு செபத்தை நோக்குகிறார்கள் என்று
சிந்திப்பது நல்லது.
சமூகத்தில் மற்றும் பொருளாதார தளத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்குக்
கடவுள் ஏதாவது புதுமை செய்து குறுக்கு வழிகாட்டமாட்டாரா என்று
பிரச்சனையைத் தீர்க்கும் ஆயுதமாகச் செபத்தைச் சிலர்
கருதுகிறார்கள்.
தனியாகவோ, அல்லது குழுவாகவோ அமர்ந்து கைதட்டி சப்தமாக பாடி
செபித்தால் தன் மனப்பாரம் குறையும், உடல் வலியும் மாறும் என்று
செபத்தை ஒரு மருந்தாகக் கருதி அணுகுபவர்கள் உண்டு.
ஆண்டவரே நான் இத்தனை முறை உம்மிடம் வந்துள்ளேன். இத்தனை தடவை
தவறாமல் நவநாட்களில் கலந்துள்ளேன். எனவே நான் விரும்பும் காரியத்தை
எனக்குக் கட்டாயம் தரவேண்டும் என்று கடவுளை மடக்குவது போல,
செபத்தைக் கையூட்டாக, பேரம் பேசி லஞ்சம் கொடுப்பதாகச் சிலர்
நினைக்கிறார்கள்.
சிலர் கடவுளை ஒரு கடுமையான நீதிபதியாக, காவல் துறை அதிகாரியாகக்
கருதி, தண்டனையிலிருந்து தப்பிக்க, காணிக்கை, பாதயாத்திரை, ஆடு,
கோழி வெட்டுதல், முடி எடுத்தல் என்றெல்லாம் கடவுளின் கோபத்தைத்
தணிப்பதாகச் செபத்தோடு இணைத்துச் செய்கிறார்கள்.
ஆனால் இன்றைய வாசகங்கள், உண்மையான செபம் என்ன? எத்தகைய மனநிலையோடு
செபிக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஆபிரகாம் இறைவனோடு
பேசுவது ஒரு நண்பனோடு பேசுவதுபோல உறவின் வெளிப்பாடாக இருக்கிறது.
நல்லவர்கள் சிலர் இருந்தால் அதற்காக அந்த நகரையே, ஊரையே
அழிக்கவேண்டாம் என்று கடவுளிடம் உரிமையோடு மன்றாடுகின்றார்.
செபம் என்பது கடவுளுக்கும் நமக்கும் இடையே நடக்கும் ஒரு உறவின்
உரையாடல். செபம் என்பது மனித உள்ளத்தை இறைவன்பால் உயர்த்துவது.
மனித உள்ளம் இறைவனோடு இரண்டறக் கலப்பது. இதனால் கடவுளோடு
கொண்டிருக்கும் நெருக்கமான உறவின் வெளிப்பாடுதான் செபம். இதைத்தான்
ஆபிரகாம் ஆண்டவரோடு வாதாட, கடவுள் கருணை, இரக்கம் உள்ளவர்
என்பதையும், அதேநேரத்தில் நீதியும் நிறைந்தவர் என்பதையும் இன்றைய
முதல் வாசகம் காட்டுகிறது.
இன்று நற்செய்தியில் வாசித்ததுபோல (லூக். 11:1-2) திருமுழுக்கு
யோவான் தன் சீடர்களுக்குக் கற்றுத் தந்ததுபோல எங்களுக்கும் கற்றுத்
தாரும் என்று இயேசுவின் சீடர்கள் கேட்டார்கள். ஏனெனில் இயேசு தன்
தந்தையோடு உறவாடுவதையும், அதனால் அவர் அனுபவிக்கும் நெருக்கமான
உறவையும் அவர்களால் உணர முடிந்தது. அந்த நேரத்தில்தான் இயேசு ஒரு
சிறப்பான செபத்தை வடிவமைத்துக் கொடுத்தார். இதில் செபம்
இறைநோக்கும் அதே சமயத்தில் மனித நோக்கும் கொண்டதாக இருக்க வேண்டும்
எனக் காட்டுகிறார். செபத்தில் புகழ்தல், நன்றி கூறல், ஆராதித்தல்,
மன்றாடுதல் தேவை. இதை உள்ளடக்கிக் கடவுளைப் போற்றிப் புகழவும்,
இரண்டாவது மானிடத் தேவைகளை உள்ளடக்கியும் அழகான செபத்தை நமக்கு
இயேசு கற்றுத் தந்துள்ளார். இதை வாயால் மட்டும் செபிப்பதல்ல. மாறாக
வாழ்க்கையில் இடம் பெறும் செபமாக மாற்ற வேண்டும்.
ஆனால் நான் செபிக்கும்போது நான் கேட்டது கிடைக்க வில்லையே என்று
நினைப்பவர்கள் பலர் உள்ளனர். இதனால் இனி நான் கோவிலும்
செல்வதில்லை, ஆலயமும் போவதில்லை என்பவர்கள் ஏராளம்!
நம்மிடம் உள்ள தடைகள் என்ன? பாவத்தோடு இருக்கிறோமா?
ஒரு தாய் அலுவலக வேலை முடித்து வீடு திரும்பும்போது தன்
குழந்தைக்குத் தின்பண்டம் வாங்கி வருகிறாள். தாயைக் கண்ட மகன்
ஓடோடி வந்து தாயின் கையில் உள்ள தின்பண்டத்தைப் பறிக்கப்
பார்க்கிறான். தாய் கொடுக்க மறுக்கின்றாள். மகனே! வீட்டுக்கு வா.
வீதியில் விளையாடி உன் கையெல்லாம் ஒரே தூசி. முதலில் கையைக் கழுவு.
அதன்பின் இந்தப் பண்டத்தைத் தருவேன் என்கிறாள் அந்த அன்புத் தாய்.
ஆம்! நாம் பாவத்தோடு எதையும் இறைவனிடம் பெற முடியாது. நமது
குற்றங்களுக்காக முதலில் இறைவனிடம் மன்னிப்புப் பெற வேண்டும்
(கொலோ.2:13).
புனித பேதுரு (1 பேதுரு 1:15) கூறுவதுபோல உங்களை அழைத்தவர்
தூய்மையுள்ளவராக இருப்பதுபோல நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம்
தூய்மை உள்ளவராக இருங்கள்.
உங்கள் வானகத் தந்தை நிறைவுள்ளவராக இருப்பதுபோல நீங்களும்
நிறைவுள்ளவராக இருங்கள் என்கிறார் இயேசு (மத்.6:48)
தூய உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்
(மத். 5:8)
நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள். கேட்டாலும் அடைவதில்லை
(யாக். 4:3)
இரண்டாவது, பிறரை மன்னிக்கும் உள்ளம் கொண்டவர்களாய் இருந்தால்தான்
செபிக்க முடியும். செபிப்பதையும் பெற முடியும்.
நீங்கள் உங்கள் பகைவரிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களுக்கு நன்மை
செய்யுங்கள் (லூக். 6:35)
உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம்
உள்ளவராக இருங்கள் (லூக். 6:36) எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே
அளவையால்தான் உங்களுக்கும் அளக்கப்படும் (லூக்.6:38)
அப்பா பிதாவே! இவர்களை மன்னியும். ஏனெனில் இவர்கள் செய்வது
இன்னதென்று தெரியாது செய்கிறார்கள் (லூக். 23:34)
நாமும் கர்த்தர் கற்பித்த செபத்தில் சொல்லுகிறோம். நாங்கள் பிறரை
மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னித்தருளும் (லூக். 11:4)
காணிக்கைச் செலுத்த வரும்போது மனத்தாங்கல் இருந்தால் முதலில்
சமாதானம் செய் (மத். 5:23-24)
மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில், உங்கள் வானகத் தந்தையும்
உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார் (மத். 6:15)
மூன்றாவதாக, நாம் பரிசுத்த உள்ளத்தோடு கேட்கலாம். சில நேரத்தில்
கேட்டும் பெறாமல் இருக்கலாம். ஏனெனில் அது நமக்குத் தேவையா என்பதை
அறியாமல் இருப்போம். அறிந்த இறைவன் நமக்குத் தேவை இல்லையென்றால்
தராமல் இருக்கலாம்.
நான்கு வயது சிறுவன் தன் தாயோடு இரயில் பிரயாணம் செய்தான்.
வண்டியில் உட்கார்ந்ததும் அம்மாவிடம் இது என்ன! அது என்ன? என்று
ரயிலில் உள்ள பொருட்களைப் பார்த்துக் கேள்வி கேட்க ஆரம்பித்தான்.
குறிப்பாக சங்கிலியைப் பார்த்து அது என்ன என்று கேட்டான். இதற்கு
அபாயச் சங்கிலி என்று பெயர். இதைப் பிடித்து இழுத்தால் ஓடுகின்ற
ரயில் நிறுத்தப்படும் என்றாள் தாய். ரயிலில் விளையாடிக்
கொண்டிருந்த சிறுவனின் பொம்மை கீழே விழுந்துவிட்டது. அம்மா!
சங்கிலியைப் பிடித்து இழுங்கள் என அழுதான், அடம் பிடித்தான்,
ஒப்பாரி வைத்தான். ஆனால் தாயோ இழுக்கவில்லை. குழந்தையின்
வேண்டுதலுக்குச் செவி கொடுக்கவில்லை. ஏனெனில் இந்தச் சிறு
பொம்மைக்காக அத்தனை பேருடைய பயணத்தையும் தடை செய்ய விரும்பவில்லை
அந்தத் தாய். அதுபோலத்தான் இறைவனும் சில வேளைகளில் இவ்வாறு
செயல்படுவது உண்டு.
உலகத் தந்தையர்கள் தம் பிள்ளைகளின் தேவைகளை அறிந்திருக்கிறார்கள்
என்றால் நம் வானகத் தந்தை நம் தேவைகளை நன்றாக முழுமையாக
அறிந்திருக்கிறார்.
செபத்தின் முக்கியம்
இயேசு வேண்டுவதற்காக, ஒரு மலைக்குப் போனார். அங்கு கடவுளிடம்
வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார் (லூக். 6:12)
சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து செபியுங்கள் (மத். 26:41)
இடைவிடாது செபியுங்கள் (1 தெச. 5:17)
செபமற்ற வாழ்வு செத்த வாழ்வு
குடும்ப செபம் இல்லாத வீடு கூரை இல்லாத வீடு
நம் செபம் அறிவுப்பூர்வமாக மட்டும் இருக்கக் கூடாது; மாறாக
உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும்
அன்னை தெரெசா இத்தனை ஆயிரம் பேரை வைத்து எவ்வாறு பராமரிக்க
முடிந்தது என்று கேட்டபோது, நற்கருணை நாதருக்காக நாங்கள் ஒவ்வொரு
நாளும் ஒரு மணி நேரம் செலவிடுகிறோம். அவர் எங்களை வழிநடத்துகிறார்
என்றார்.
காந்தி மகான் ஒவ்வொரு வெள்ளியும் மௌன விரதம் இருந்து செபித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் வேளாங்கண்ணிப் பங்கிலே நடந்த
நிகழ்ச்சி இது. ஆந்திராவிலிருந்து தமிழ் தெரிந்த
தாயொருவர் தன் மகனோடு வேளை நகருக்கு வந்திருந்தார்.
சுமார் பன்னிரெண்டு வயது நிரம்பிய தன் மகனுக்கு
புதுநன்மை கொடுக்கவேண்டும் என்றார். உங்களுடைய பங்குத்
தந்தையின் கடிதம் இருந்தால்தான் புதுநன்மை
கொடுக்கமுடியும் என்றேன். அதற்கு அந்தத் தாய்,
புதுநன்மை கொடுப்பதுபற்றி எனது பங்குத் தந்தையிடம்
பேசிவிட்டேன். ஆனால் என்னால் கடிதம் வாங்க
முடியவில்லை. காரணம், நான் இங்கு புறப்பட்டபோது அவர்
பங்கு இல்லத்தில் இல்லை என்றார். அதற்கு நான், சரி,
பிறகு வந்து பாருங்கள் என்றேன். அந்தச் சிறுவனும்,
ஃபாதர், தயவு செய்து எனக்குப் புதுநன்மை கொடுங்கள்.
சட்டையெல்லாம் தச்சி எடுத்துகிட்டு வந்துட்டோம்
என்றான்.
மறுநாள் என் அறைக்குள் தாயும், மகனும்! சரி, உங்கள்
பங்குத் தந்தையின் ஃபோன் நம்பராவது தெரியுமா? என்றேன்.
அந்தத் தாய் தவறான நம்பர் ஒன்றைக் கொடுத்தார். முயற்சி
செய்தேன்; எந்தப் பயனும் இல்லை. நீங்களே இந்த
நம்பருக்குப் ஃபோன் செய்து உங்கள் பங்குத் தந்தையை
என்னோடு பேசச் சொல்லுங்கள் என்றேன். அன்று மாலை
முயற்சி செய்து பார்த்துவிட்டு, என்னால் பங்குத்
தந்தையோடு பேசமுடியவில்லை என்றார் அந்தத் தாய்!
ஆந்திராவிலிருந்த, எனக்குத் தெரிந்த, அருள்பணியாளர்
ஒருவரோடு தொலைபேசியில் பேசினேன். அவர் ஒரு தொலைபேசி
எண்ணைக் கொடுத்து அந்த எண்ணோடு தொடர்புகொள்ளச்
சொன்னார். நானும் அப்படியே செய்தேன். எப்படியோ,
கடைசியாக அந்தத் தாயின் பங்குத் தந்தையோடு பேசினேன்.
உத்தரவு கிடைத்தது. அந்தச் சிறுவனுக்கு புதுநன்மை
அளிக்கப்பட்டது.
மூன்று நாள்கள் என் அறைக் கதவைத் தட்டிக்கொண்டேயிருந்த
அந்தப் பெண்ணுக்கு அவர் விரும்பியது கிடைத்தது. இந்தப்
பெண்ணைப் போன்ற நண்பனொருவனை இன்றைய நற்செய்தியிலே நாம்
சந்திக்கின்றோம்.
கதவு சாத்தப்பட்டிருந்தது! ஆனால் நண்பனோ, நண்பா!
கதவைத் திற என்றான்.
கதவைத் தட்டுவதை அவன் நிறுத்தவே இல்லை ! இறுதியாகக்
கதவு திறந்தது. தொல்லையின் பொருட்டு கதவைத் திறந்த
நண்பன், தன் நண்பன் கேட்டதைக் கொடுத்தான்.
இந்த உவமை நமக்குச் சுட்டிக்காட்டும் உண்மை என்ன?
இறைவன் தமது மனத்தைச் சில நேரங்களில்
மாற்றிக்கொள்வதுண்டு ! யோனா நூலில் 3:10 - இல் கடவுள்
தம் மனத்தை மாற்றிக்கொண்டார் என்று படிக்கின்றோம்.
யோவான் நற்செய்தியில் 2:4 -இல் எனது நேரம் இன்னும்
வரவில்லையே என்கின்றார் இயேசு. ஆனால் 2:7 - இல்
தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் என்கின்றார். இயேசு
தனது மனத்தை மாற்றிக்கொள்வதைக் காண்கின்றோம்.
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் ஆபிரகாமின்
வேண்டுதலுக்கிணங்க அவரது மனத்தை மாற்றிக்கொள்வதைப்
பார்க்கின்றோம். பத்து நல்லவர்கள் இருந்தால் கூட
சோதோம், கொமோராவை அழிப்பதில்லை என்று ஆண்டவர்
ஆபிரகாமிடம் கூறுவதைக் காண்கின்றோம்.
இந்த உண்மை நமது மன்றாட்டு வாழ்வில் நாம் மனம்
தளர்ந்து போகாமல் நாம் மன்றாட உறுதுணையாக
இருக்கவேண்டும். இவ்வளவு வேண்டியும் இன்னும் இது
நடக்கவில்லையே என எண்ணி நாம் நமது மன்றாட்டிற்கு
முற்றுப்புள்ளி வைத்துவிடக்கூடாது.
இன்றைய இரண்டாவது வாசகத்தில் புனித பவுல் அடிகளார்,
கடவுள் உங்களை அவரோடு (கிறிஸ்துவோடு) உயிர்பெறச்
செய்தார்; நம் குற்றங்கள் அனைத்தையும்
மன்னித்தருளினார் (கொலோ 2:13) என்று கூறுகின்றார். இது
என் வாழ்வைப் பொருத்தவரையில் உண்மையே என நம்
ஒவ்வொருவராலும் இன்று சொல்ல முடியுமா?
முடியும் என்றால் இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
இல்லையென்றால் நாம் அழிவுறாதபடி இடைவிடாது மன்றாடி
இறைவனிடமிருந்து பாவமன்னிப்பைப் பெற்று புண்ணிய
வாழ்விற்கு உயிர்த்தெழுந்து வளமுடன் வாழ்வோம்.
ஒரு மனைவி தன் கணவரைப் பற்றி
பின்வருமாறு கூறுகிறார்: " என் கணவர் கடவுளைப் போன்றவர்;
ஏனெனில் நான் என்ன சொன்னாலும் அதைக் காதில் வாங்கிக்
கொள்ளமாட்டார்." ஒருசிலர் கடவுளைப் பற்றி இவ்வாறு
நினைக்கின்றனர். கடவுள் நமது செபத்தைக் கேட்கின்றாரா?
அல்லது காது கேளாத செவிடரா? இக்கேள்விக்குக் கடவுள் கூறும்
பதில் என்ன? "செவியைப் பொருத்தியவர் கேளாதிருப்பாரோ?"
(திபா 94:9), மனிதருக்குக் கேட்கும் செவியைக் கொடுத்த அவர்
மனிதருடைய குரலைக் கேட்கின்றார். அவர் செவிடர் அல்ல.
இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது: ' ஆண்டவரே. நான்
மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்" (திபா 138:3).
கடவுளிடம் நாம் கேட்பதை மனந்தளராமல் கேட்க வேண்டும். என்று
இன்றைய நற்செய்தியில் வலியுறுத்துகிறார் இயேசு. நண்பர்
ஒருவர் அப்பம் கேட்டுத் தன் வீட்டின் கதவை நள்ளிரவில்
விடாமல் தட்டிக் கொண்டிருந்ததால் அவரின் தொல்லை தாங்காமல்
அவருக்குத் தேவையான உணவைக் கொடுக்கிறார் ஒருவர். ஒரு
மனிதனே தன்னிடம் விடாமல் கேட்ட ஒருவருடைய வேண்டுகோளை
நிறைவேற்றினால், நல்ல கடவுள் நாம் அவரிடம் இடைவிடாமல்
கேட்கும்போது, நிச்சயமாக நாம் கேட்பதைக் கொடுப்பார். எனவே,
நாம் கேட்க வேண்டும். அதாவது தட்டிக் கொண்டே இருக்க
வேண்டும். கேட்பதையோ தட்டுவதையோ நிறுத்தக்கூடாது.
கடவுளிடம் பேரம்பேச முடியுமா ? இன்றைய முதல் வாசகத்தில்
ஆபிரகாம் கடவுளிடம் பேரம் பேசுகிறார்: கடவுளும் அவருடைய
பேரத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வருகிறார். ஆனால்
சோதோம் நகரில் 10 நீதிமான்கள் கூட இல்லாததால் அந்நகர்
தீக்கிரையானது. இக்காலத்தில் நிலைமை மாறிவிட்டது என்று கூற
முடியுமா? "மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக்
காண்பாரோ?" (லூக் 18:8) என்று ஒரு பெரிய கேள்வியை
எழுப்பிவிட்டுச் சென்றுள்ளார் இயேசு. கடவுளின் நன்மைத்
தன்மை கடுகளவும் குறைவதில்லை; ஆனால் மக்களின்
நம்பிக்கைதான் குறைந்துகொண்டே வருகிறது. நம்புவோர்க்கு
எல்லாம் கைகூடும்.
புனித ஜான் மரிய வியான்னி என்பவர் செபத்தின் வல்லமையைப்
பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்: "கடவுள் உலகையே
ஆளுகிறார்; ஆனால் செபிக்கத் தெரிந்த மனிதரோ கடவுளையே
ஆளுகிறார். கடவுள் 'முடியாது' என்று சொன்னபோதிலும்,
செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளை 'முடியும்' என்று சொல்ல
வைக்கிறார்."
அப்பா பெரியவரா? அம்மா பெரியவரா? இந்தக் கேள்விக்கு ஒரு
சிறுவன் கூறும் பதில்: "நிச்சயமாக அம்மாதான் பெரியவர். என்
அப்பா அவருடைய தொழிற்சாலையில் ஆயிரம்பேரை அடக்கி வேலை
வாங்குகிறார். ஆனால் வீட்டிலோ என் அம்மா என் அப்பாவையே
அடக்கி வேலை வாங்குகிறார்."
செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளையே ஆளுகிறார் என்று புனித
ஜான் மரிய வியான்னி கூறியது உண்மை என்பதைக் கானாவூர்
திருமணத்திலே நாம் காண்கின்றோம். மரியா இயேசுவிடம் "
திராட்சை இரசம் தீர்ந்து விட்டது" (யோவா 2:3) என்று
கூறியபோது, இயேசு மரியாவிடம். "எனது நேரம் வரவில்லை" (யோவா
2:4) என்கிறார். அதாவது, புதுமை செய்ய முடியாது"
என்கிறார். ஆனால், மரியா மனந்தளராமல் பணியாளர்களிடம் "அவர்
உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவா 2:5) என்று
கூறுகிறர், புதுமை அரங்கேறுகிறது. தண்ணீர் திராட்சை
இரசமாகிறது. செபத்தின் வல்லமை வெளிப்படுகிறது. 'முடியாது'
என்று சொன்ன இயேசுவை மரியா தமது வேண்டுதலால் 'முடியும்'
என்று சொல்ல வைக்கிறார்.
மகன் அப்பாவிடம் 'ஸ்கூட்டர்' கேட்கின்றான். அப்பா வாங்கிக்
கொடுக்க மறுக்கிறார். அம்மா தலையிட்டு, " இந்தாங்க! அவன்
கேட்கிறத வாங்கிக்கொடுங்க" என்கிறார். அப்பா மறுத்துப்
பேசாமல் மகனுக்கு "ஸ்கூட்டர்" வாங்கிக் கொடுக்கிறார்.
ஏனெனில் அவர் தன் மனைவி கிழிச்சக் கோட்டை ஒருபோதும்
தாண்டவே மாட்டார்! "இந்தாங்க" என்ற சொல்லுக்கு எவ்வளவு
சக்தி!
நாம் செபிக்கும்போது நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற
உரிமையுடன் செபிக்க வேண்டும். நாம் அடிமைகள் அல்ல;
கடவுளின் பிள்ளைகள், எனவே கடவுளை "அப்பா தந்தையே"
அழைக்கின்றோம் (உரோ 8:15), தம் மகனையே கையளித்த கடவுள்,
தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளுவார் (உரோ 8:32)
இன்றைய நற்செய்தியில் இயேசு தெளிவாகக் கூறுகிறார்! கடவுள்
தம்மிடம் கேட்பவருக்குத் தூய ஆவியைக் கொடையாகக்
கொடுக்கிறார். (லூக் 11:13), கொடையை விட கொடையாளியே
முக்கியம் என்பதை நாம் அறிய வேண்டும்.
முடிவாக வாழ்வுக்கும் செபத்துக்கும் நெருங்கிய தொடர்பு
உண்டு. "நாம் எப்படி வாழ்கின்றோமோ அப்படியே
செபிக்கின்றோம். நாம் நன்றாக வாழ்வதில்லை; ஏனெனில் நாம்
நன்றாகச் செபிப்பதில்லை. நம் நன்றாக செபிப்பதில்லை,
ஏனெனில் நாம் நன்றாக வாழ்வதில்லை."
முழுமையாகச் செபிக்கின்றவர். முழுமையான மனிதர்:
அரைகுறையாகச் செபிக்கின்றவர். அரைகுறையான மனிதர்:
ஒருபோதும் செபிக்காதவர், மனிதரே இல்லை.
"எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம்
வேண்டுங்கள். எல்லாக் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்
(1தெச 5:16)
இறைவனை வேண்டி ஒருவன் தவமிருந்தான். ஒருநாள் இறைவன் அவன்
முன் தோன்றி "உனக்கு என்ன வேண்டும்?" எனக் கேட்டார். ":நான்
கேட்பதை நீங்கள் தருவீர்களா? என முதலில் அவன் பீடிகை
போட்டான்.
இறைவனோ "தருவேன். ஆனால் உனக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறதோ
அது பூமியில் உள்ள அனைவருக்குமே கிடைப்பதாகத்தான் வரம்
தருவேன். எனவே அதை மனதில் கொண்டு என்ன வேண்டுமானாலும் நீ
கேள் என்றார்.
நமக்குக் கிடைப்பது அனைவருக்கும் கிடைக்கும் என்று இறைவன்
சொல்கிறாரே என்று அந்த மனிதன் மனதுக்குள் வருத்தமாக
இருந்தாலும் இப்போது நாம் கேட்கவேண்டியதைக் கேட்காவிட்டால்
இறைவன் மறைந்துவிடுவார் என நினைத்து ":என் வீட்டில் உள்ள
பொருள்கள் எல்லாம் தங்கக்காசுகளாக மாறிட வேண்டும்" என்று
கேட்டான்.
"அப்படியே ஆகட்டும்" என்று கூறிவிட்டு இறைவனும் மறைந்தார்.
அந்த மனிதன் உற்சாகம் பீறிட வீட்டுக்கு ஓடிப்போய்
பார்த்தான். அங்கே எல்லாமே தங்கக்காசுகளாக மாறி இருந்தன.
கை நிறையத் தங்கக்காசுகளை அள்ளிக்கொண்டு தனக்குத்
தேவையானவற்றை வாங்க கடைவீதிக்கு ஓடினான்.
ஆனால் அங்கோ அரிசிக்கடைக்கு ஓடினால் அங்கே அரிசி இல்லை.
எல்லாமே தங்கக்காசுகளாய் மாறிக் கடைக்காரன்
சோர்வுற்றிருந்தான். துணிக்கடைக்கு ஓடினால் அங்கும்
துணிகள் இல்லை. எல்லாம் தங்கக்காசுகளாய் மாறிக் கடைக்காரன்
விழித்துக் கொண்டிருந்தான்.
ஏமாற்றத்தால் அந்த மனிதன் திகைத்துப் போய் ஆண்டவனைத் தேடி
ஓடினான்.
ஆண்டவனும் அவன் முன் தோன்றி, "பைத்தியக்காரனே, உனக்கு
நடப்பது போல ஊருக்கும் நடக்கும் என்று சொன்னேனே, இப்போது
உன்னிடம் தங்கக்காசுகள் மட்டும்தானே இருக்கின்றன. இதை
வைத்துச் சாப்பிட முடியுமா? உடுத்த முடியுமா? உனக்குக்
கிடைப்பது எல்லாருக்குமே கிடைக்கும் என்று நான் சொன்னதை
வைத்து நீ புத்திசாலித்தனமாக எனக்கு உழைப்பு மேல் ஆர்வம்
வேண்டும், உழைக்கத் தேவையான சக்தி வேண்டும், உழைப்புக்கு
ஏற்ற பலன் வேண்டும் என்று கேட்டிருந்தால், உலகத்தில்
எல்லோருக்கும் உழைப்பின் மேல் ஆர்வம் ஏற்பட்டு அதன் மூலம்
அனைவரும் உழைத்துத் தேவையான செல்வங்களைப் பெருக்கி
இருக்கலாமே! புதிய சமுதாயமே உருவாகியிருக்குமே" என்று
அறிவுரை கூறி மறைந்தார்.
இறைவன் தன் எல்லையற்ற ஆற்றலை நம்மோடு பகிர்ந்து கொள்ளக்
கையாளும் வழிகளில் ஒன்று செபம். சிந்திக்கும் மனிதன்
இறைவன் தந்த ஆற்றலைக் கொண்டு எப்படிப் புதிய உலகைப் படைக்க
முடியுமோ, அதுபோல செபிக்கும் மனிதன் இறையாற்றலைப்
பகிர்ந்து கொண்டு புதிய வாழ்வை; புதிய உலகைப் படைக்க
முடியும்.
சிந்திக்கக் கொஞ்சம் அறிவாளியாக இருக்க வேண்டும். செபிக்க
அந்த அளவு தேவையில்லை. எல்லா மனிதரும் எளிதாகச் செபிக்க
முடியும். கொஞ்சம் செபிக்கக் கற்றிருக்க வேண்டும்.
"ஆண்டவரே ... இறைவனிடம் வேண்ட... எங்களுக்கும் கற்றுக்
கொடும்" (லூக். 11:1).
நீ கேட்பது எதுவாகவும் இருக்கட்டும் - கேள். அது உனக்கு
உகந்ததா என்று இறைவன் தீர்மானிக்கட்டும்.
நீ கேட்பது புதிதாகவே இருக்கட்டும் - கேள். அது உனக்குச்
சரியானதா என்று அவர் விடை கூறட்டும்.
நீ கேட்பது அரிதாகவே இருக்கட்டும் - கேள். அது உனக்கு
முறையானதா என்று அவர் பதில் சொல்லட்டும்.
நீ கேட்பது பெரிதாகவே இருக்கட்டும் - கேள். அது உனக்குப்
பொருந்துமா என அவர் முடிவு செய்யட்டும்.
கேளுங்கள். உங்கள் சரியான தேவைகளை செபத்தில் கேளுங்கள்.
அது ஆண்டவரால் தரப்படும்.
செபம் என்பது ஓர் அன்புப் பரிமாற்றம். செபத்துக்கு
வார்த்தைகள் முக்கியமல்ல. உணர்வும் உறவும் முக்கியம்.
"நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர்
நம்மோடு உள்ளார். அவரைப் போல் மக்களுக்கு மிகவும்
நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?
(இ.ச.4:7). இப்படி மோசே சீனாய் மலை அனுபவங்களை மக்களோடு
பகிர்ந்து கொள்கிறார். சமய நம்பிக்கை என்பது இறை
அனுபவங்களின் வழி வளர்வது.
வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனி முதல் செய்தியாய்
வானொலியில் பேசியது என்ன தெரியுமா? ":எனது இளமையில் நான்
மாதாக் கோவில் வழிபாட்டுக்குச் சென்றிருக்கிறேன். அங்கே
உள்ள பாதிரியார் 'விண்ணகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே'
என்று விளித்து மன்றாடுவார். அப்போது நான் நினைப்பது
உண்டு, பூமியிலிருந்து நாம் வேண்டுவதெல்லாம் விண்ணில் உள்ள
தந்தையின் காதில் எப்படி விழும் என்று. அவர் என்ன ஒயர்லெஸ்
கருவியா வைத்திருக்கிறார்? இங்கிருந்து விண்ணகம் என்ன
கூப்பிடும் தூரத்திலா இருக்கிறது? என்றெல்லாம்
கிண்டலடித்திருக்கிறேன். ஆனால் அற்ப மனிதனாகிய நான் இன்று
எங்கோ இருந்து பேசும் என் வார்த்தைகளை எங்கோ கண்டம்
விட்டுக் கண்டம் வாழும் நீங்கள் கேட்க முடிகிறது என்று
உணரும்போது நாம் எழுப்பும் எந்த வேண்டுதலையும் ஆற்றல்
மிக்க வானகத்தந்தை கட்டாயம் கேட்பார் என்று உறுதியாக
நம்புகிறேன்".
நாம் நினைப்பதற்கும் கேட்பதற்கும் மேலாக நற்கொடைகளையும்
கனிகளையும் அருளுகின்ற தாராளத் தந்தை அவர். "பிள்ளை மீனைக்
கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது பாம்பைக் கொடுப்பாரா?
முட்டையைக் கேட்டால் மீனுக்குப் பதிலாகப் அவர் தேளைக்
கொடுப்பாரா? தீயோராகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு
நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால்
விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக்
கொடுப்பது எத்துணை உறுதி!" (லூக். 11:11-13).
நம்பிக்கையோடு செபிக்கின்றபோது கொடைகளுக்கெல்லாம் ஊற்றாகிய
தூய ஆவியையே இறைவன் அளிப்பார் என்று இயேசு உணர்த்துகிறார்.
இறைவன் நமது தேவைகளை (ஆசைகளை அல்ல) நிறைவேற்றும் பாசமிகு
தந்தை. ஆனால் நாம் இறைவனின் கொடைகளைப் பெறாமல் இருக்கக்
காரணம் என்ன? செபிக்கும் விதத்தை மறு சிந்தனை செய்ய
வேண்டுமோ!
செபம் என்றால் என்ன?
"இறைவன் திருமுன் திறந்த கைகளோடு நின்று கொண்டிருப்பது".
அதாவது ":ஆண்டவரே என்னை ஆட்கொள்ளும். இதோ, என் எத்தனை
கனவுகள், எண்ணங்கள், ஆசைகள், ஏக்கங்கள்! அவற்றில் உமக்குப்
பிடிக்காதவற்றை அகற்றவும் திறந்த கைகள். அவற்றில்தான்
பிடித்தவற்றைக் கொடுக்கவும் உமக்கு முழு உரிமை உண்டு.
செயல்படும் என்ற மனநிலையில் அவர் முன் நிற்பது.
"இஸ்ரயேலே, நீ திரும்பி வருவதாக இருந்தால் என்னிடம்
திரும்பி வா என்கிறார் ஆண்டவர். அருவருப்பானவற்றை
அகற்றிவிட்டால் என் திரு முன்னிலிருந்து அலைந்து திரிய
மாட்டாய்" (எரே.4:1)
எப்படி செபிக்க வேண்டும் என்று இயேசு கற்றுத் தருகிறார்.
"விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, எனது பெயர் அல்ல,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக. எனது ஆட்சி அல்ல,
உமது ஆட்சி வருக. எனது விருப்பம் அல்ல, உமது திருவுளம்
நிறைவேறுக".
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
செபத்தின் அரிச்சுவடி
ஆசைகள், அச்சங்கள், ஏக்கங்கள், கனவுகள், திட்டங்கள், இவை
அனைத்தும், மனிதராய்ப் பிறந்த நம் அனைவரின் வாழ்க்கையோடு
கலந்துவிட்ட உண்மைகள். மத நம்பிக்கை கொண்டவர்கள், இவற்றை,
இறைவனிடம் விண்ணப்பங்களாக அனுப்ப முயல்வர். இந்த
விண்ணப்பங்களை நாம் பொதுவாகச் செபங்கள் என்று அழைக்கிறோம்.
செபிப்பது, அனைவருக்கும், இயல்பான, எளிதான அனுபவம் அல்ல.
இதில் போராட்டங்கள் பல நிகழும். குறிப்பாக, நாம் எழுப்பும்
விண்ணப்பங்களுக்கு எதிர்பார்த்த பதில்கள் கிடைக்காதபோது,
பல்வேறு கேள்விகள் நம்மைச் சூழும். ஏன் செபிப்பது?
எதற்காகச் செபிப்பது? எப்போது, எங்கே, எப்படி
செபிப்பது?... என்ற கேள்விகள் நம்மில் எழுகின்றன.
செபத்தைப் பற்றிய கேள்விகளுக்கு, குழந்தைகள், தங்களுக்கே
உரிய வழியில் சில பதில்கள் தருவதை நாம் காண முடியும்.
எதைப்பற்றியும் செபிக்கலாம், கடவுளிடம் எதையும் கேட்கலாம்
என்று சொல்லித் தருவதற்கு, குழந்தைகள் சிறந்த ஆசிரியர்கள்
என்பதை மறுக்க முடியாது. ஐஸ் க்ரீம் வேண்டும் என்ற
சில்லறைத்தனமான வேண்டுதல்களையும் கேட்கலாம்; உலகில்
நீதியும், அமைதியும் நிலவ வேண்டும் என்ற உன்னதமான
வேண்டுதல்களையும் கேட்கலாம். கேட்பது, சில்லறைத்தனமானதா,
அல்லது, உன்னதமானதா என்பதை அந்த விண்ணப்பத்தை எழுப்பும்
உள்ளம்தான் தீர்மானிக்க வேண்டும்.
செபிக்கக் கற்றுத்தாருங்கள் என்று தன்னை அணுகிய சீடருக்கு,
செபத்தைப் பற்றிய நீண்டதொரு இறையியல் விளக்கத்தை இயேசு
சொல்லித் தரவில்லை. அவர் சொல்லித் தந்ததெல்லாம் ஒரு செபம்,
ஒரு கதை, ஒரு நம்பிக்கைக் கூற்று. இயேசு சொல்லித் தந்த ஒரே
செபமான 'பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே' என்ற செபம்,
இன்றைய நற்செய்தியாக (லூக்கா 11: 1-13) நம்மை
வந்தடைந்துள்ளது. இச்செபத்தைக் கொஞ்சம் ஆய்வு செய்தால்,
ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளலாம். கடவுளின் அரசு வர
வேண்டும் என்ற உன்னதமான கனவுடன் ஆரம்பமாகும் இச்செபத்தில்,
எங்களுக்கு உணவைத் தாரும், எங்கள் குற்றங்களை
மன்னித்தருளும், மன்னிப்பது எப்படி என்று சொல்லித் தாரும்,
தீமைகளிலிருந்து காத்தருளும்... என்று, இயேசு
சொல்லித்தரும் பல விண்ணப்பங்கள், வாழ்க்கைக்குத் தேவையான,
மிக, மிக எளிமையான, விண்ணப்பங்கள். எளிமையையும்,
உன்னதத்தையும் இணைத்துச் செபிக்க, நமக்குக் குழந்தை மனம்
தேவை.
இன்றைய முதல் வாசகம் (தொடக்க நூல் 18: 20-32) செபத்தின்
வேறுசில அம்சங்களை உணர்த்துகிறது. செபம் என்பது, கடவுளுடன்
நாம் மேற்கொள்ளும் உரையாடல். சில வேளைகளில், இந்த
உரையாடல், உரசலாகி, உஷ்ணமாகி, வாக்குவாதமாகவும் மாறும்.
சோதோம் நகரைக் காப்பாற்ற, ஆபிரகாம், இறைவனுடன் பேரம்
பேசும் இந்த முயற்சி, ஒரு செபம். 50 நீதிமான்கள் இருந்தால்
இந்த நகரைக் காப்பாற்றுவீர்களா? என்று ஆரம்பித்து, 45, 40
பேர் என்று படிப்படியாகக் குறைத்து, இறுதியில் 10 பேர்
என்ற அளவுக்கு இறைவனை இழுத்து வருகிறார், ஆபிரகாம்.
சந்தையில் நடக்கும் பேரம் போல இது தெரிந்தாலும், ஒரு
நகரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆபிரகாமின் ஆதங்கம், இதை
ஒரு செபமாக மாற்றுகிறது. நல்லதொன்று நடக்க வேண்டும் என்ற
ஆர்வத்தில், ஆபிரகாம் நச்சரிக்கிறார். இறைவனும்,
பொறுமையாய், அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து
கொடுக்கிறார். இந்தப் பேரம் பேசும் போட்டியில், யார்
வென்றது, யார் பெரியவர், கடவுளா, ஆபிரகாமா? என்ற
கேள்விகளெல்லாம் அர்த்தமற்றவை. நல்லது நடக்கவேண்டுமென
மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும், அவை, செப
முயற்சிகளாய் இருந்தாலும் சரி, பிற முயற்சிகளாய்
இருந்தாலும் சரி, அந்த நல்லெண்ணமே அம்முயற்சிகளைச் செபமாக
மாற்றும் வலிமை பெற்றவை. தன்னை மையப்படுத்தாமல்,
மற்றவர்களை மையப்படுத்தி ஆபிரகாம் மேற்கொள்ளும் இந்தச்
செபத்தை, பரிந்துரை செபம் (Intercessory Prayer)
என்றழைக்கிறோம். நீதிமான்களை முன்னிறுத்தி ஆபிரகாம்
இப்பரிந்துரை செபத்தை மேற்கொள்வது, மேலும் ஓர் உண்மையை
நமக்கு உணர்த்துகிறது. தீமைகளை இவ்வுலகில்
கட்டவிழ்த்துவிடும் சக்திகள் வெற்றிபெறுவதுபோல்
தோன்றினாலும், அவற்றை முறியடிக்க, ஒரு சில நீதிமான்களின்
நன்மைத்தனம் போதும் என்ற நம்பிக்கையை, ஆபிரகாமின்
பரிந்துரை செபம் நமக்கு உணர்த்துகிறது.
பரிந்துரை செபம், இயேசு கூறும் உவமையிலும் இடம் பெறுகிறது.
நள்ளிரவில் உதவிகேட்டு வந்த நண்பர், தன்னுடைய பசியைத்
தீர்க்கத் தன் நண்பர் வீட்டின் கதவைத் தட்டவில்லை. மாறாக,
தன்னை நம்பி வந்த மற்றொரு நண்பரின் பசியைப் போக்கவே அந்த
அகால நேரத்தில், அடுத்தவர் வீட்டுக் கதவைத் தட்டினார்.
இந்த உவமைக்கு முன்னர் இயேசு சொல்லித் தந்த அந்த அற்புத
செபத்துடன் இந்த நண்பரின் முயற்சியை இணைத்துச்
சிந்திக்கலாம். அந்த அழகிய செபத்தில், 'எங்கள் அனுதின உணவை
எங்களுக்குத் தாரும்' என்று வேண்டுகிறோம். 'என்னுடைய உணவை
எனக்குத் தாரும்' என்ற தன்னல வேண்டுதல் அ
ல்ல இது. இது ஒரு சமுதாய வேண்டுதல். அந்த வேண்டுதலின் ஓர்
எடுத்துக்காட்டாக, தன் நண்பரின் உணவுத் தேவையை நிறைவேற்ற,
நள்ளிரவு என்றும் பாராது, உதவி கேட்டுச் செல்லும் ஒருவரை
இயேசு தன் உவமையில் சித்திரிக்கிறார்.
நமது சொந்தத் தேவைகளை நிறைவு செய்ய, பிறரிடம் உதவிகேட்டுச்
செல்வது கடினம் என்றாலும், நமது தேவை, நம்மை உந்தித்
தள்ளும். ஆனால், அடுத்தவர் தேவைக்கெனப் பிறரது உதவியைத்
தேடிச் செல்வதற்கு, கூடுதல் முயற்சி தேவை. அதுவும்,
மூடப்பட்ட கதவு, உதவி தர மறுக்கும் அடுத்த வீட்டுக்காரர்
என்ற தடைகளையெல்லாம் தாண்டி, இந்த உதவியைக் கேட்பதற்கு,
மிக ஆழமான உறுதி தேவை.
உலகில், ஒவ்வொரு நாளும், பல கோடி மக்கள் பசியோடு
படுத்துறங்கச் செல்கின்றனர். அவர்கள் பசியைப் போக்க நாம்
முயற்சிகள் எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அடுத்தவர்
பசியைப் போக்க நம்மிடம் ஒன்றும் இல்லாதபோதும், மனம் தளராது
மற்றவர் உதவியை நம்மால் நாட முடிந்தால், இறை அரசு
இவ்வுலகில் வருவது உறுதி.
"எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு
பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு
படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர
முடியாது..." (லூக்கா 11:7) என்று, காரண காரியங்களோடு,
இவ்வுவமையில் சொல்லப்படும் மறுப்பை, பல வழிகளில் நாமும்
சொல்லி, நம்மையே சமாதானப்படுத்தி, உறங்கியிருக்கிறோம்.
இந்த வார்த்தைகளில் பொதிந்துள்ள மற்றோர் ஆபத்தையும்
இங்குச் சிந்திப்பது நல்லது. பகிர்ந்து தரவோ,
அடுத்தவருக்கு உதவவோ நமக்கு மனமில்லை என்பதோடு நாம்
நிறுத்திவிடாமல், நம் பிள்ளைகளின் முன்னிலையில் இவ்வகையில்
நாம் சொல்வது, அவர்களுக்கும் தன்னலப் பாடங்களைச் சொல்லித்
தர வாய்ப்பாக அமைகிறது.
இத்தகைய ஒப்புமைப் புள்ளிவிவரங்களை நாம் இன்று முழுவதும்
பட்டியலிட முடியும். அது நமது நோக்கமல்ல. இயேசு கூறும்
இந்த உவமையில் நாம் யாராக வாழ்கிறோம்? அடுத்தவர் பசியைப்
போக்க முயற்சிகள் மேற்கொள்ளும் மனிதராக வாழ்கிறோமா? பிறர்
பசியைப் போக்கும் வாய்ப்புக்கள், நம் வாசல் கதவைத்
தட்டினாலும், கதவை மூடிவிட்டு, உறங்கும் மனிதராக
வாழ்கிறோமா? என்ற கேள்வியை ஓர் ஆன்மீக ஆய்வாக
மேற்கொள்வோம். மூடப்பட்ட கதவுகளுக்குப் பின் நாம் உறங்கிக்
கொண்டிருந்தால், மற்றவர் தேவைகளை நிறைவேற்ற, மனக்கதவைத்
திறந்து, மனிதராக முயல்வோம்.
மறையுரை
முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க்
கழகம் பெங்களூர்
பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (தொ.நூ. 18:16-33)
(இப்பகுதியில் ஆபிரகாம் சோதோம் நகருக்காக மட்டும்
வாதாடவில்லை. கடவுளுடைய நீதித்தீர்ப்பினை அறிந்துகொள்வதன்
பொருட்டு வாதாடூவதாகக் கூறப்படுகிறது. கடவுளுடையத்
தண்டனை தீர்ப்பிலிருந்து ஒருநகர் காப்பாற்றப்பட
வேண்டுமாயின், குறைந்த பட்சம் பத்திற்கு மேற்பட்ட
நேர்மையாளர்கள் அந்நகரில் வசித்தல் அவசியம் என்ற
பழங்கால நம்பிக்கையை ௯றுகிறது.
இரண்டாம் வாசகப் பின்னணி கொலோ. 2:12-14)
இப்பகுதியானது திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களின் போது
பாடப்பெறும் ஒருபாடலாக இருந்திருக்கக் கூடும். எனினும்
இக்கூற்று முழுமையாக எண்பிக்கப்பட வில்லை. பொதுவாக
உயிப்பைப் பற்றி இரு கருத்துக்கள் உள்ளன. முதலாவது,
திருமுழுக்கின் வழியாக உலகிற்கு நாம் இறந்தோம் நமது
உயிர்ப்பு இறுதிநாளில் (அதாவது மரணத்திற்குப் பிறகு)
நிகழும் (காண்க உரோ. 6:3). இரண்டாவதாக, திருமுழுக்கின்
வழியாய் இறந்த நாம், அவரோடு (கிறிஸ்துவோடு) உயிர்த்து
விட்டோம். திருமுழுக்கிற்குப் பிறகு வாழும் வாழ்வு
உயிர்ப்பின் வாழ்வு. இந்த இரண்டாவதுக் கருத்தே இங்கு
இழையோடியிருக்கின்றது. ":கடன் பத்திரத்தை... . என்ற
சொல்லாட்சியானது அன்றையக் காலத்து பழக்கத்தைக்
குறிக்கிறது. தன் உடைமைகளை (அ) தன்னையே விற்கும் எவரும்
ஒப்பந்தமிட்டே விற்றுக் கொள்ள வேண்டும். எனவே அவ்வொப்-
பந்தத்தின்படி அவரது பொருட்களோ (அ) அந்த நபரோ அடிமை-
யாக்கப்படுவார்கள். இதுபோல ஆதிப்பெற்றோரின் பாவத்தினால்
மனிதயினம் முழுவதும் ஒப்பந்தத்தின் பேரில்
அடிமையாகிவிட்டன. கிறிஸ்துவின் மரணம் இந்த ஒப்பந்தத்தை
அழித்து விட்டதென இவ்வாசகம் கூறுகிறது.
நற்செய்தி வாசகப் பின்னணி
":கர்த்தர் கற்பித்தச் செபம் என அழைக்கப்படுகின்ற
இச்செபமானது மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியில் இடம்
பெற்றுள்ளது. இதுதான் எல்லா கிறிஸ்துவ செபங்களில்
பழமையானது, இயேசுவின் இறப்பு, உயிர்ப்பு மற்றும்
விண்ணேற்றத்திற்குப் பின் திருத்தூதர்கனால் முதல்
கிறிஸ்தவர்- களுக்குக் கற்பிக்கப்பட்டது. கி.பி. 65-ஆம்
ஆண்டில் கிரேக்க மொழியில் மொழிப்பெயர்க்கப் பட்டிருக்க
வேண்டும். புனித லூக்கா நற்செய்தி எழுத்துரு பெறும் போது
இச்செபம் அதில் சேர்க்கப்பட்டி- ருக்க வேண்டும்.
இச்செபம் மிகவும் புனிதமாகக் கருதப்பட்டது. ஆகையால்
பிற விசுவாச சகோதரர்களுக்கு இந்த செபத்தைச் ் சொல்லித்தர
மறுத்தனர். திருமுழுக்குப் பெற விரும்பியவர்களுக்கும்
இச்செபமானது இறுதியாகக் கற்றுக் கொடுக்கப்பட்டது.
இவ்வாறு இதன் புனிதம் போற்றப்பட்டது.
மறையுரை
ஒரு தாய் என்னிடம் வந்து ":இந்தக் காலத்து பசங்க ரொம்ப
கெட்டுபோயிட்டாங்க என்று புலம்பினார்கள். நான்
அவர்களிடம் ":இது எப்படிச் சொல்றீங்க என வினவினேன்.
அதற்கு அந்தத் தாய் ":நேத்து என் 8 வயது பையன் கோவிலிலே
சத்தம் போட்டான். அவனிடம் ":சத்தம் போடாதே! அமைதியா
செபம் பண்ணு' என்று சொன்னேன் என்று சொன்னவர் கொஞ்சம்
நிறுத்துவது போல் தெரிந்தது. உடனே குறுக்கிட்டு ":நீங்க
நல்லது தானே சொன்னீங்க அதற்கு உங்க பையன் என்ன சொன்னான்
என்று வினவி, நான் ஆர்வமாய் இருப்பதைக் காட்டிக்
கொண்டேன்.
":அவன் என்னை ஒரு கேள்வி கேட்டான் என்று பதில்
சொல்லிவிட்டு, அந்த கேள்வியையும் என்னிடம் கூறினார்
":செபமுன்னா என்ன? என்றார். நான் அமைதியாக இருக்க அவர்,
":செபம் என்பது கடவுளோடு பேசக் கூடியது என்றதாகவும்,
அதற்கு அவரது மகன் சொன்ன பதில் விசித்திரமானதாக
இருந்ததாகவும் கூறினார். நான் இந்த விடையை அறியும்
பொருட்டு ":அப்படி என்ன சொன்னான் உங்க பையன் என்று
வினவினேன்.
அதற்கு ௮வர் ":நீ கடவுளோடு அமைதியா பேசுற, நான் சத்தம்
போட்டு பேசுறேன் என்று சொன்னதாகக் கூறினார்.
மறுமொழியாக ":செபம் என்பது உண்மையாகவே உரையாடல் என்றால்,
உங்க பையன் சொன்னதுல தப்பு இல்லை என்றேன். ":நீங்களே
இப்படிச் சொன்னீங்கனா? என்று ஆச்சிரியமாகக் கூற,
அவர்களிடம் நான், ":செபம் என்பது வெறும் உரையாடல்
மட்டுமல்ல, உண்மையாக உறவாடல் என்றேன். அதற்கு அவர்கள்
! ":உறவாடலா? என்னது? என்று கேட்டார்கள். அவர்களிடம்
சொன்ன பதிலைத்தான் இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ள
போகிறேன். உண்மையான உறவுகளின்றி, உரையாடல் நிகழலாம்.
அவ்வாறு நிகழ்ந்தாலும் அவை நல்ல பயன்தராது. இன்றைய
இறைவார்த்தை வழிபாட்டிலே செபம் என்பது ஆபிரகாமிற்கும்
கடவுளுக்குமிடையே நிகழ்ந்த உரையாடலைக் குறிக்கின்றது.
இதுதான் விவிலியத்திலே இடம் பெற்றுள்ள முதல் பரிந்துரை
மன்றாட்டு என நம்பப்படுகிறது. இம்மன்றாட்டு சாத்தியமானது
ஆபிரகாம் கடவுளோடு கொண்டிருந்த உறவால் தான்,
பொதுவாக உண்மையான உறவுகள் இருக்குமிடத்தில் ஒளிவு மறைவு
என்ற பேச்சுக்கே இடமில்லை, எல்லாமே திறந்த மனப்பான்மையோடு
சுதந்தரத்துடன் பரிமாறப்படும். இதுமாதிரியான ஒரு
பரிமாற்றம் கடவுளுக்கும் ஆபிராகாமிற்குமிடையே
நிகழ்ந்தது.
":நான் செய்ய விரும்புவதை ஆபிரகாமிடமிருந்து மறைப்பேனோ?
(தொ. நூ. 18:17) என்று தன்னைத் தானே கேட்டுக். கொண்டு,
தனது திட்டத்தை வெளிப்படுத்துகின்றார் இறைவன். ஆபிரகாமோ,
கடவுளிடம் அந்நகரை அழிவிலிருந்துக் காப்பாற்ற
உரிமையுடனும் அதேச் சமயத்தில் மதிப்புடனும்
வாதாடுகிறார். இதன் விளைவாகப் ":பத்து நல்லவர்கள்
இருந்தால், அந்நகரை அழிக்க மாட்டேன் என வாக்குறுதி
தருகிறார் இறைவன். இவ்வாறு இந்த உரையாடலில் திறந்த
மனப்பான்மை, மதிப்பு கலந்த உரிமை இருந்தது. இவைகள்
உறவின் மூலமாய் மலருகின்ற உரையாடலுக்குத் தேவை.
இது மாதிரியான செபத்தை இஸ்ராயேல் மக்களிடம், கடவுள்
தொடர்ந்து எதிர்பார்த்தார். ஆனால் அவர்களோ செபத்தை
உரையாடலாகச் சுருக்கி, அதனை மேலும் சடங்குகளாக
மாற்றிவிட்டனர். கடவுள் தன் ஏக்கத்தைப் பல்வேறு
இறைவாக்கினர் வாயிலாக வெளிப்படுத்தினார்.
இறைவாக்கினர்களும் இறைவனின் ஏக்கத்தைப் பல்வேறு
உவமைகள், உருவகங்கள், உறவு மாதிரிகள் வாயிலாக
விளக்கினார்கள். இஸ்ராயேல் மக்கள் வணங்காக் கழுத்தின்
என இறைவனே கூறுமளவுக்குக் கடின உள்ளத்தின- ராய்
வாழ்ந்தனர். அதிலும் சிறப்பாகத் தங்களுக்கென்று
தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டு தங்களதுச் செபத்தைச்
சடங்காக மாற்றிவிட்டனர்.
இந்த நிலையில் தனது ஏக்கத்தை வெளிப்படுத்த, தனது ஒரே
பேறான மகனை தந்தை கடவுள் அனுப்பினார். அவரும் தனது
போதனையால், பழைய, வீண், குருட்டு சடங்குகளுக்கு
ஆணையிடுதலைப் பற்றியும் நோன்பு, செபம் மற்றும் ஓய்வு
நாள் சடங்குப் பற்றியும் அறிய மத்தேயு 23:37-52). சாவு
மணி அடித்தார். தனது புதுமைகளால் உறவை இழந்து தவித்த
மானிட இனத்திற்கு விடுதலை அளித்தார். தனது பாடுகள்,
மரணம் மற்றும் உயிர்ப்பு மூலம் மனிதம் முழுமைக்கும்
உயரிய மதிப்பையும் மாண்பையும் நல்கினார்.
பவுலடிகளாரின் பார்வையில் கிறிஸ்துவின் மீட்புச்
செயலானது படைப்புகளுக்குக் கூட உயர்வைத் தந்தது (காண்க.
உரோ. 8:19-22; கொலோ. 1:28). இந்த மாண்பில் சீடர்கள்
நிலைத்து நிற்க மூன்று காரணிகளைத் தந்தார். அவைகளாவன:
தூய ஆவி, நற்கருணை மற்றும் செபம். தூய ஆவியும்,
நற்கருணையும் நம்மில் செயலாற்ற நம்மை
தயார்படுத்துவதுதான் செபம். இந்தச் செபத்தைத்தான்
இன்று வாசிக்கக் கேட்டோம்.
இயேசு கற்றுக்கொடுத்த செபமானது வார்த்தைகளை அடக்கி கொண்டு
போகும் வார்த்தை விளையாட்டு அல்ல. மாறாக இது இரு நோக்கு
உறவுகளைக் கொண்ட ஒரு பெட்டகம். முதலாவது உறவு, நாம்
கடவுளோடு கொள்ள வேண்டிய மேல் நோக்கு உறவு. இந்த உறவு
எப்படி இருக்க வேண்டும் என்பதையும் இந்தச் செபத்தில்
காணலாம்.
":தந்தையே! என அழைப்பதன் மூலம் கடவுளுக்கும்
நமக்குமிடையே உள்ள உறவு ":தந்தை-மகன்(ள்)' உறவாக இருக்க
வேண்டும் என்கிறது. ஏனென்றால் இவ்வுலகில் பெற்றோ-
ருக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள உறவை விட மிக நெருக்கமான,
புனிதமான உறவு உலகில் வேறு எதுவுமில்லை. இப்படிப்பட்ட
உரிமையான, உன்னதமான உறவை நமக்கு உண்டாக்கிவிடுகிறது.
என்றைக்காவது இந்த உணர்வுமிக்க உறவை உணர்ந்தவர்களாய்ச்
செபித்திருக்கின்றோமா? மேலும், ":எங்கள் தந்தையே என்று
அழைக்க கற்றுக்கொடுத்தது இறைவன் செபத்தைச் சொல்பவருக்கு
மட்டுமல்ல, அச்செபத்தைச் சொல்லும் எல்லா மனிதருக்கும்
அவர் தந்தையாக இருக்கிறார் என்பதை விளக்குகிறது.
இரண்டாவது, நாம் பிற மனிதர்களிடம் கொள்ள வேண்டிய
சமநோக்கு உறவு. ":எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள்
வரிகளின் மூலமாக இரத்தினச் சுருக்கமாக ஓர் ஆழமான
உண்மையை எடுத்துரைக்கிறது இச்செபம்,
அதாவது நாம் பாவத்திலிருந்து விடுதலைப் பெறுவதும்,
வீணாகப் பாவத்திலே கட்டூண்டு கிடப்பதும் நம் கரத்திலே
உள்ளது. எவ்வாறெனில் நாம் பிறரை மன்னித்தால்தான் நாம்
மன்னிப்பு அடைகிறோம். இதனால்தான் என்னவோ,
":மன்னிக்கும்போது நாம் மன்னிப்பு அடைகிறோம்? என புனித
பிரான்சிஸ் அசீசியார் சொன்ணாரா? எனத் தெரியவில்லை.
மண்ணில் மன்னிப்பு பெறுவதற்கு மட்டுமன்று, இன்பத்துடன்
வாழ்வதற்கும் பிறரது உறவு தேவைப்- படுகிறது.
இவ்வாறு கிறிஸ்துவின் செபம் இருநோக்கு உறவுகளைப்
பெற்றது. ஒவ்வொரு முறையும் செபிக்கும் போது இந்த
உறவுகளைப் புதுபித்துக்கொள்கிறோம். எனவேதான் நமது
தாயாம் திருச்சபை செபத்தை உறவாடல் என்று இன்று
வழங்குகிறது.
நம்மேல் அக்கறை கொண்டுள்ள ஒரு அன்பரை நாம் சந்திக்கச்
செல்லவிருந்தால் எப்படி நம்மையே நாம் தயாரிப்போம் என !
சிந்தியுங்கள், அவரிடம் என்னென்ன பேச வேண்டும்?
அவருக்கு என்னென்ன பிடிக்குமோ, அவைகளை எல்லாம் நம்மால்
முடிந்தளவுக்கு எடுத்துக் கொண்டுள்ளோமா? என
முன்தயாரிப்புகள் பல செய்து செல்வோமல்லவா! அதுபோலத்தான்
செபத்தின் வழியாய் கடவுளும் நம்மோடு உறவாடுகிறார்.
அவரைச் சந்திக்க நாம் முன் தயாரிப்பு ஏதேனும்
செய்கிறோமா?
துன்பத்தை மட்டுமல்ல இன்பத்தை, வெற்றியை, நமது சாதனையை
நம் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்வோம். அவர்களோடு
இருக்கும் ஒவ்வொரு விநாடியும் நமக்கு எல்லையில்லா
இன்பத்தை நல்கும். இதுபோன்ற உணர்வுகள் நமது செபத்தில்
இருக்கின்றதா? ஆம் என்றால் கடவுளுக்கு நன்றி கூறுவோம்.
இல்லையென்றால் நமக்கு செபம் சடங்காக இருக்கின்றது.
செபத்தை உறவாக மாற்ற வேண்டுமெனில் பின்வரும் உண்மைகளை
நினைவில் இருத்திக் கொள்வோம்,
1. செபம் நம்மேல் சுமத்தப்பட்ட கடமையல்ல, மாறாக உரிமை.
2. செபத்தை எண்ணத்தின் மூலமாகவோ அல்லது சொற்களின்
மூலமாகவோ தான் செய்யமுடியும் என்ற வீண் நம்பிக்கையைக்
கைவிட்டு, நமது செயல்களின் மூலமாகக் ௯ட செய்ய முடியும்
என்பதை உணர்வோம்.
புனித மார்ட்டின் என்பவர், ஒரு சமயம் தனது மேலாடையை ஒரு
ஏழையோடு பகிர்ந்து கொண்டார். அன்றிரவே இயேசு அவரதுக்
கனவில் தோன்றி அந்த மேலாடையைத் தந்தமைக்காக நன்றி
கூறினாராம். அவர் சொன்ன 1,000 செபங்களைவிட, அந்த ஒரு
சின்ன அன்பின் செயல் இயேசுவை மகிழ்வித்ததாம்.
அதிலிருந்து அவர் தனது செபத்தைச் செயல் வடிவத்திலேயே
செய்தாராம். எனவே எப்போழுது நமது செபத்தை உரிமையென்றும்,
அதனை செயல் வடிவமாக்கக் கூட முடியும் என்பதையும்
தீர்க்கமாக உணர்கிறோமோ அப்பொழுதுதான் நமது செபம்
உறவுகளையெல்லாம் செபமாய் மாற்றும்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
செபத்தின் வல்லமை.
கர்த்தர் கற்பித்தச் செபத்தின் மேன்மை.
செபமும் செயலும் இணைந்த வாழ்வு மேலானது.
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான்
பாப்டிஸ்ட் பெங்களூர்
பொதுக் காலம் பதினேழாம் ஞாயிறு
இன்றைய முதல் வாசகத்தையும் நற்செய்தியையும் 'இறை வேண்டல்'
எனும் கருத்தாக்கம் ஒன்றிணைக்கின்றது. முதல் வாசகத்தில்
ஆபிரகாம் சோதோம் கொமோரா மக்களுக்காக, அவர்களை
அழிவிலிருந்து காப்பாற்ற இறைவனிடம் 'பரிந்துரை இறை
வேண்டல்' செய்கின்றார். நற்செய்தியில் இறைவனிடம் வேண்டக்
கற்றுக்கொடுக்கும்படி கேட்ட தம் சீடர்களுக்கு, இயேசு
இவ்வாறு செபியுங்கள்' என ஒரு செபத்தைக் கற்றுத்தந்து,
செபத்தைப் பற்றிய சில சிந்தனைகளையும் பகிர்ந்து
கொள்கிறார். இன்றைய நற்செய்தியின் பின்னணியையும்
இறைவேண்டல் பற்றி அது தரும் செய்தியையும் இவண் காண்போம்.
பின்னணி
இன்றைய நற்செய்தி பகுதிக்கு முந்தைய பகுதியைப் போலவே
இப்பகுதியும் இயேசு எருசலேமை நோக்கிப் போகும் போது
நிகழ்கின்றது. இயேசு எருசலேமை நோக்கி ஓர் இறை வாக்கினராக
செல்கின்றார். எனவே அப்போது போதனைப் பணியையும்
செய்கின்றார். எனவே இன்றைய நற்செய்தி நிகழ்ச்சிப்
பகுதியையும், போதனைப் பகுதியையும் இணைத்துள்ளது.மத்தேயு
இப்போதனைகளை இயேசுவின் மலைப் பொழிவுப் பகுதியில்
வைத்துள்ளார். ஆனால் லூக்கா இதை இயேசுவின் பயணப் பகுதியில்
அமைத்துள்ளதால் இது இயல்பாய் தெரிகின்றது.
1. இறைவனிடம் வேண்டக்கற்றுக்கொடும்.
லூக் 10ஆம் அதிகாரத்தில் இயேசு இறைவனை நோக்கி ":தந்தையே
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே என்று செபித்தார்.
சீடர்கள் அதைக்கண்டார்கள் (லூக் 10:21), மேலும்
'தந்தையாரென்று மகன் வெளிப்படுத்துவார்' என்று இயேசு
கூறியதையும் அவர்கள் கேட்டார்கள் (காண். லூக் 10:22)
இறுதியாக இந்த அதிகாரத்தின் தொடக்கத்தில் இயேசு இறை வனிடம்
வேண்டுவதையும் கண்டார்கள் (வச. 1). இவையெல்லாம் சீடர்களை
இயேசுவிடம் இறைவேண்டல் செய்யக் கற்றுத்தரும் படி (வச.1)
கேட்கத் தூண்டியது.
திருமுழுக்கு யோவான் சீடருக்கு இறைவனிடம் வேண்டக்
கற்றுக்கொடுத் ததைப் பற்றிக் குறிப்பிட்டது, இயேசுவும்
இந்த 'இறைவாக்கினர் வழிமரபில்' வருகிறார் என்பதை நிரூபிக்
கின்றது. 'கடவுளோடு தொடர்பு கொள்ளும் சிறப்பான வழி முறையை,
அறிவை அளிப்பதும்' இறைவாக்கினரின் ஒரு பண்பாகும்.
இவையெல்லாம் இயேசு உண்மையான இறை வாக்கினர் என்பதை எண்பிக்க
உதவுகின்றன.
2. இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல்
இயேசு கற்றுத் தந்த இந்த இறைவேண்டல் மத்தேயு நற்
செய்தியிலும் காணப்படுகின்றது (காண். மத் 6:9-13). இது
லூக்கா நற்செய்தியில் அளிக்கப்பட்டுள்ளதைவிட நீண்டதாகவும்
அதிக வார்த்தைகளைக் கொண்டதாகவும் உள்ளது. லூக்காவின் 'இறை
வேண்டல்' குறுகியதாகவும், ஐந்து நேரடியான குறுகிய
மன்றாட்டுகளைக் கொண்டதாகவும் அமைகின்றது. அவற்றுள் முதல்
இரண்டு இறைவனின் புனிதம் பற்றியும், அவர் ஆட்சி
பற்றியதாகவும் அமைந்துள்ளன. அடுத்த மூன்று அன்றாட உணவு,
பாவ மன்னிப்பு, சோதனை மற்றும் தீயோனிடமிருந்து
காப்பாற்றப்படல் ஆகியவற்றைப் பற்றி அமைந்துள்ளன. இந்த
இறைவேண்டலில் பேசப்படும் விடயங்களான 'தந்தை' 'அவரது பெயர்'
'அவரது ஆட்சி, மானுடத் தேவைகள் (உணவு), பாவ மன்னிப்பு,
சோதனை ஆகியவை இயேசுவின் இறைவாக்கினர் பணியின் முக்கிய
விடயங்களாகவும் இருந்தன. எனவே இயேசு தான் வாழ்ந்ததைச்
செபமாக்கினார், தான் செபித்ததையே வாழ் வாக்கினார். எனவே
செபமும் வாழ்வும் இயேசுவில் ஒன்றாய் இணைந்து சென்றன.
3. இறைவேண்டல் குறித்த உவமை
இயேசு கூறிய உவமை இடைவிடாது செபிப்பதன் அவசியத்தை
வலியுறுத்துகின்றது. இக்கருத்தைக் கடனை தள்ளு படிசெய்த
கடன் கொடுப்பவர் உவமையும் (காண். லூக் 7:41-42), பொல்லாத
நடுவனும் கைம்பெண்ணும் உவமையும் (காண். 18:1-8) நன்று
வெளிக் கொணர் கின்றன.
இயேசு இந்த உவமையைக் கூறி இறுதியாக ":கேளுங்கள்,
உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடை
வீர்கள்; தட்டுகள் உங்களுக்குத் திறக்கப்படும் (வச 9)
எனக் கூறி முடிப்பது இந்த உவமையின் செய்தியை மிக இயல்பாகக்
கேட்பவர் மற்றும் வாசிப்பவர் மனத்தில்
பதியவைத்துவிடுகின்றது. உவமையின் செய்தியை எளிதாய்
விளக்கியும் விடுகின்றது.
4. மண்ணகத் தந்தை... விண்ணகத் தந்தை
இன்றைய நற்செய்தியின் இறுதிப் பகுதி ":கேளுங்கள்
உங்களுக்குக் கொடுக்கப்படும்... (வச. 9) எனத் தொடங்கும்
மூன்று அறிவுரைகளின் முதலாவதான ஒன்றை எடுத்து அதை விரிவாக
விவரித்துக் கூறுகின்றது. அப்போது மண்ணகத் தந்தைக்கும்
விண்ணகத் தந்தைக்கும் உள்ள வித்தியாசத்தையும்
தெளிவுபடுத்தி விடுகிறார். மண்ணகத் தந்தையர் (தாய்மாரும்
கூட) தீயவர்களாய் இருந்தும்கூட தங்கள் தங்கள் பிள்ளை
களுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்துள்ளனர். அப்படி யானால்
விண்ணகத் தந்தை வெறும் நற்கொடைகளை மட்டுமல்ல அதைவிட
அதிகமாய், உயர்ந்ததாய் தூய ஆவியை அருள்வார் என நிறைவு
செய்கிறார் இயேசு. இதை தம் திருத்தூதர் பணிகள் நூலில்
லூக்கா விவரமாய் விவரிப்பார் (காண். திப 1:8; 2:33;
10:44).
எனவே, நமது செப வாழ்வும், செபத்தின்போது நாம் சரியான,
உயர்வான மனநிலைகளைக்கொண்டு செபிப்பதும் மிக மிக அவசியம்.
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி
சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
பொதுக்காலம் - பதினேழாம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு
முதல் வாசகம்: தொ. 18:20-32
சோதோம் நகரின் அழிவு (தொநூ. 19) இங்கு
முன்னறிவிக்கப்படுகிறது. பாவம் நிறைந்த சோதோம் நகருக்காக,
சோதோம் மக்களுக்காக ஆபிரகாம் இறைவனிடம் இறைஞ்சுகிறார்.
செபத்தின் பல பண்பாடுகளும் இறைவனின் இரக்கப் பெருக்கும்
இங்குப் படம் பிடித்துக் காட்டப்படுகின்றன.
ஆபிரகாமின் செபம்
"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப் படும்" (மத். 7: 7)
என்பதன் பொருள் ":கேட்டுக்கொண்டேயிருங்கள்; தொடர்ந்து
கேளுங்கள், விடாது. கேளுங்கள்; உங்களுக்குக்
கொடுக்கப்படும்" என்பதாகும். எனவேதான், நாம் மனம் தளராது
செபிக்க வேண்டுமென்பதற்காக இயேசுவே 2 உவமைகளைக் கூறினார்
(காண் லூக். 11:5-8; 18:1-5). இவ் உவமைகளில்
"தொல்லைப்படுத்துவது, ":தொந்தரை செய்வது என்ற தொடர்கள்
வருவது குறிப்பிடத்தக்கன.
ஆபிரகாமின் செபம் இத்தன்மை வாய்ந்தது. 50 பேர், 40 பேர்,
30 பேர், 20 பேர், 10 பேர் என்று செபம் தொடர்கிறது.
இன்னும் ஒரு முறை வேண்டுகிறேன்; மீண்டும் வேண்டுகிறேன்
என்று திரும்பத் திரும்பக் கூறுகிறார். இவை ஆபிரகாம்
இறைவனைத் ":தொல்லைப்படுத்த, "தொந்தரை செய்ய தயங்கவில்லை
என்பதைச் சுட்டுகின்றன. ஆபிரகாமின் தொடர்ந்த செபம் எங்கே?
நமது "திடீர்ச் செபம் எங்கே? செபத்தில்
நிலைத்திருக்கின்றோமா?
அடுத்து, ஆபிரகாமின் செபம் தாழ்ச்சி மிகுந்த செபம். இறைவன்
முன் தன் இயலா நிலையை, தாழ்நிலையை எடுத்துக் கூறி
வேண்டுகிறார். ":புழுதிக்கும் சாம்பலுக்கும் சமமாயிருக்கிற
அடியேன்" (18:27) என்று தன்னைக் குறிப்பிடுகிறார். இறைவன்
திருமுன் நிற்கப் பாவிகளாகிய நாம் தகுதியற்றவர்கள் என்பதை
உணர்ந்து, "ஆண்டவரே, பாவி என்மீது இரக்கமாயிரும்" என்று
நம் செபங்களைத் துவக்குகிறோமா? திருப்பலியின் துவக்கத்தில்
பாவமன்னிப்பு வேண்டுவது இதையன்றோ குறிக்கிறது? ஆபிரகாமின்
செபம் இறைவனுடைய மகிமையை எடுத்துக்கூறி, அவரைப்
புகழ்கிறது. ஆண்டவர் நீதிமான்; எனவே அவரது நீதியை
எடுத்துக்கூறும் செபமாக அமைகிறது (18: 24). "தீயவனையும்
நீதிமானையும் சமமாக நடத்துவது உமக்குத் தூரமாயிருப்பதாக"
(18:25} என்பது ஆண்டவரின் நீதித்தன்மையைப்
புகழ்ந்துரைப்பதன்றோ? மேலும், "மண்ணகம் முழுவதும் நடுவர்
நீர்" என்றும் புகழ்ந்துரைக்கின்றார். இவ்வாறு, அவருடைய
மன்றாட்டுச் செபத்திலே இறைப்புகழும் அமைவது நம்
செபங்களுக்குப் பாடமாயமைய வேண்டும்.
இறைவனின் இரக்கம்
பாவி தம்மிடம் திரும்பிவர வேண்டுமென்பதே இறைவனின்
திருவுளமன்றி, அவன் அழிந்துவிட வேண்டுமென்பது அன்று.
"பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ?
கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம்
காட்டாதிருப்பாளோ?" (எசா. 49 : 15) என்று கூறியவரன்றோ நமது
ஆண்டவர்? ஐம்பது நீதிமான்களுக்காக மட்டுமன்று, ஒரு
நீதிமான் இருந்தாலும் அவனுக்காக இறைவன் மக்களின் பாவங்களை
மன்னிப்பார் என்பதையன்றோ இன்றைய வாசகம் கூறுகின்றது!
"நீதியைக் கடைப்பிடித்து உண்மையை நாடும் ஒரு மனிதரைக்
கண்டுபிடிக்க முடியுமாவென எருசலேமின் தெருக்களில்
சுற்றிப்பார்த்துத் தெரிந்துகொள்; அவளுடைய பொது இடங்களில்
கவனமாய்த் தேடிப்பார்; கண்டுபிடித்தால், அவளுக்கு
மன்னிப்பு அளிப்பேன்" (எரே. 5:1). "எனக்கும் இந்நாட்டு
மக்களுக்குமிடையே ஒரு சுவரை எழுப்பி, அதன்மூலம் நான் இந்த
நாட்டு மக்களை அழிக்காதபடி தடுப்பவன் ஒருவனை அவர்களிடையே
தேடினேன். ஆயினும் யாரும் கிட்டவில்லை" (எசே. 22: 30) என்ற
சொற்கள் சுட்டுவது இறைவனின் இரக்கப் பெருக்கையன்றோ? ஆம்,
இவரே ":அந்நகரை அழிக்கமாட்டோம்" என்று திரும்பத் திரும்பக்
கூறுகிறார். நம் கடவுள் இரக்கமிகுந்தவர் என்பதை உணர்ந்து
அவரிடம் செல்வோம். ":இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம்
கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்" அவர் (விப. 34:6).
நம்பிக்கையோடு அவரிடம் வருவோம். அவர் புகழ் பாடுவோம்,
அவரிடம் நம் தேவைகளை எடுத்துக் கூறுவோம்.
ஆண்டவரே அருள்கூரும்.
இரண்டாம் வாசகம் : எபே. 2:12-14
கிறிஸ்துவே, மனிதருக்கும் சரி, விண்ணவருக்கும் சரி,
தனிப்பெரும் தலைவராவார். அதே வேளையிலே, கிறிஸ்துவில்
திருமுழுக்கிலே அவரோடு இணையும்போது அவரது சாவிலும்
உயிர்ப்பிலும் பங்கு பெறுகிறோம். பாவத்திற்கு இறக்கிறோம்,
வாழ்வுக்கு உயிர்க்கிறோம். இவ் இறப்பு - உயிர்ப்பு
அன்றாடம் நம் வாழ்விலே தொடர்கிறது; தொடர வேண்டும் என்று
அழைப்பு விடுக்கிறது இன்றைய வாசகம்.
கிறிஸ்துவில் வாழ்வு இறப்பு வாழ்வு
கிறிஸ்து உண்மையாகவே சிலுவையில் அறைபட்டு இறந்தார். நாம்
பெற்ற திருமுழுக்கில், நாம் தண்ணீரில் அமிழ்த்தப்படுவது
(பழந்திருச்சபை வழக்கு இது), நாமும் கிறிஸ்துவோடு
பாவத்திற்கு இறப்பதைச் சுட்டுகிறது. ":திருமுழுக்கில்
அவரோடு புதைக்கப்பட்டிருக்கிறீர்கள்" (2:12) என்பது, நாம்
பாவத்திற்குச் செத்துவிட்டோம் என்பதைத் தான் கூறுகிறது.
எனவே திருமுழுக்கு வாழ்வானது பாவத்தை ஒதுக்கிய வாழ்வாக
நமக்கு அமைய வேண்டும். 'சாத்தானை விட்டு விடுகிறீர்களா?
அவனது செயல்களை விட்டுவிடுகிறீர்களா.....?' (பெரிய சனி
இரவு} என்ற வினாக்கள் அன்றாட வாழ்விலே நாம் பாவங்களை
ஒழிக்க விடப்படும் சவால். எனவே, திருமுழுக்கு, நம்
வாழ்வில் நடந்து கழிந்த ஒரு சடங்கன்று; அன்றாடம்
பாவங்களைத் தவிர்க்கவும் விலக்கவும் விடப்படும் அழைப்பு.
சொல், செயல், நினைவுகள் வழி நாம் செய்யும் கணக்கற்ற
பாவங்கள் என்னே? "பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில்
இறந்தவர்கள்" (உரோ. 6:11) என்பது நமக்குப் பொருந்துமா?
கிறிஸ்துவில் வாழ்வு உயிர்ப்பு வாழ்வு
கிறிஸ்து உண்மையாகவே கல்லறையினின்று உயிர்த்தார். கடவுளின்
வல்லமையானது அவரை உயிர்ப்பிக்கச் செய்தது (உரோ. 1: 4; 8:
11). திருமுழுக்கில் நீரில் அமிழ்த்தப்பட்டு, பின் வெளியே
வருவது, நமது உயிர்ப்பைச் சுட்டுகிறது எனலாம். எனவே,
பவுல், ":இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி
உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச்
செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே
சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்" (உரோ
8 : 11) என்பார் (காண் கொலோ. 2: 13). இவ் உயிர் பெறுதலானது
எதிர்கால விண்ணக வாழ்வை மட்டும் குறிக்காது. "அவரோடு
நீங்களும் உயிர்த்தெழுந்தீர்கள்... மீண்டும் அவரோடு
உயிர்பெறச் செய்தார்" (2:12-13) என்னும் சொற்கள்,
திருமுழுக்கிலே நாம் பாவ மன்னிப்பு அடைந்து உயிர்
பெற்றதைக் குறிக்கும். ":நம் குற்றங்களை எல்லாம்
மன்னித்துவிட்டார், நம் கடன் பத்திரத்தை அழித்துவிட்டார்,
சிலுவையில் அதை அறைந்து ஒழித்துவிட்டார்." (2: 13-14)
என்பதைக் காண்க... எனவே, கிறிஸ்தவ வாழ்வு, ஆவியாரின்
வாழ்வு. இவ் ஆவியாரின் வாழ்வோ அன்பு வாழ்வு (கலா. 5:22).
எனவே நம் உயிர்ப்பு வாழ்வு அன்பு வாழ்வாய் அமைய வேண்டும்.
இறையன்பு, பிறரன்பிலே நம் வாழ்வு அமையும் போதுதான் நாம்
உயிர்ப்பு வாழ்வு வாழ்பவர்கள் ஆவோம். "அன்பின் வழியது
உயிர்நிலை; அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு" (குறள்
80).
கிறிஸ்துவில் வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வு
நாம் கிறிஸ்து அவர்கள்; கிறிஸ்துவை அணிந்து கொண்டவர்கள்
என்பார் பவுல். கிறிஸ்துவை அணிவதென்பது நாம் வெறும்
துணிகளை அணிவது போன்றன்று. ஆள் பாதி ஆடை பாதியென்றாலும்
ஆடை நாமாக, நாம் ஆடையாக மாறிவிடுவதில்லை. கிறிஸ்துவை
அணிதல் என்பது கிறிஸ்துவின் வாழ்வை, அவரது படிப்பினைகள்,
மதிப்பீடுகளை வாழ்ந்து காட்டுவதாகும். "கிறிஸ்துவோடு
சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். எனவே இனி வாழ்பவன் நான்
அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்" (கலா.2:20) என்று
கூறக் கூடிய நிலையில் வாழ்வதாகும். நம் சிந்தை, சொல்,
செயல் அனைத்திலும் கிறிஸ்து வெளிப்படும் போதுதான் நாம்
கிறிஸ்துவில் வாழ்பவர்களாவோம். "தாயினும் நல்ல தயாளுவே,
நின்னை உன்னித் தீயின் மெழுகு ஒத்து உருகும் சிந்தை வரக்
காண்பேனோ (தாயுமா) என்று வேண்டுவோம்.
குறிப்பு:
"கடன் பத்திரம் (2: 14) என்பது சட்டத்தைச் சுட்டும்.
கடமைகளையும், மீறுதல்களையும் சுட்டிக்காட்டி நமக்குச்
சுமையாயமைகிறது சட்டம். எனவே "கடன் பத்திரம்
எனப்படுகிறது.
இன்றைய வாசகம் 3 பகுதிகளைக் கொண்டது. முதற்பகுதி (1-4)
இயேசு சுற்றுத் தந்த செபம்; இரண்டாம் பகுதி (5-8) தொடர்ந்த
செபம் பலன் அளிக்கும் என்பதை விளக்கும் உவமை; மூன்றாம்
பகுதி (9-13) நாம் செபத்தில் கேட்பதை இறைவன் அளிப்பார்
என்று இயேசு நமக்குத் தரும் உறுதி.
இறைவன் நம் நண்பன்
"முகநக நட்பது நட்பன்று, நெஞ்சத்து அகநக நட்பது நட்பு"
(குறள் 786) என்றபடி நட்பு என்பது செயலிலே வெளிப்பட
வேண்டிய ஒன்று. நண்பனுக்காக எதையும் செய்யத்
தயாராயிருப்பதே உண்மை நட்பின் இலக்கணமாகும். இயேசு தம்
நண்பர்களாகிய நமக்காகத் தம் உயிரையே கொடுத்தார் என்று
அறிவோம். இன்றைய வாசக உவமையிலே வரும் இருவரும் நண்பர்கள்.
இரண்டு அப்பம் கேட்டு வந்தவன் அகால நேரத்திலே வருகிறான்.
வீட்டினுள் இருப்பவன் அயர்ந்து தூங்கிவிட்டான். சங்கடமான
நிலை. எனினும், நண்பன் என்பதற்காக இல்லாவிடினும்
தொந்தரவுக்காகத் தன் தூக்கத்தையும் கலைத்து எழுந்து வந்து
அவனுக்கு உதவுகிறான். இயேசு நமது நண்பர். அவருக்கு நேரமோ
காலமோ கிடையாது. நம் தேவைகளை நம்பிக்கையோடு அவர்முன்
வைக்கும்போது, "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண்
களைவதாம் நட்பு" (குறள் 788) என்ற முறையிலே, அவர் நமக்கு
உதவிடுவார் என்பது திண்ணம். நண்பன் என்ற முறையில் அவருக்கு
நம் தேவைகள் தெரியும் என்றாலும், நாம் அவரிடம் அவற்றைக்
கேட்டுப் பெற வேண்டும் என்று விரும்புகிறார். நம்
செபங்களில் நமது தேவைகளை எடுத்துச்சொல்லி ":அவரைத்
தொல்லைப்படுத்துகிறோமா?" நாம் அவரைத் தொல்லைப் படுத்த
வேண்டுமென்றே இயேசு விரும்புகிறார். எனவே தொடர்ந்து
செபிப்போம்; விடாது வேண்டுவோம். காலம், நேரம், தவணைகளைக்
கணக்கிடாது செபிப்போம். கேட்பது கிடைக்கும்.
மேலும், அப்பம் கேட்டு வந்தவன் தனக்காக வரவில்லை; தன்
வீட்டிற்கு வந்த விருந்தினனுக்காக வேண்டுகிறான். இதே
போன்று நமது செபமும், சிறிது நம்மை மறந்த நிலையிலே, பிறர்
தேவைகளுக்காக, பிறர் நற்சுகத்திற்காக, பிறர் நலனுக்காக
அமையும்போது, இறைவன் அவற்றைக் கட்டாயம் கேட்பார் என்ற
நம்பிக்கை நம்மிடம் வளர வேண்டும். நமது செபங்களிலே
பிறருக்காக நாம் ஒதுக்கும் இடம் யாது?
இறைவன் நம் தந்தை
இறைவனை "தந்தாய் என்று நாம் அழைக்க வேண்டுமென்று இயேசு
விரும்புகிறார் (11: 1, 13). தந்தைக்குப் பிள்ளைகளின் தேவை
தெரியும். எனினும், ":எங்கள் அன்றாட உணவை அளித்தருளும்,
எங்கள் பாவங்களை மன்னித்தருளும், எங்களைச் சோதனைக்கு
உட்படுத்தாதேயும்" (11:3-4) என்று நாம் வேண்ட வேண்டுமென்று
இயேசு விரும்புகிறார். எனவேதான், தந்தையிடம் ":கேளுங்கள்,
உங்களுக்குக் கொடுக்கப்படும்" (11:6) என்பார். இங்கு
"கேளுங்கள்... தேடுங்கள்... தட்டுங்கள்" என்பது தொடர்
வினையில், அதாவது, "கேட்டுக்கொண்டேயிருங்கள்..." "தேடிக்
கொண்டயிருங்கள்..." "தட்டிக்கொண்டேயிருங்கள்" என்ற
பொருளில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாம் உணர வேண்டும்.
ஆம், இவ்வாறு நாம் தொடர்ந்து வேண்டும்போது, நம் விண்ணகத்
தந்தை நாம் வேண்டிக் கேட்பதைத் தராதிரார். உலகத் தந்தையரே
தம் மக்கள் வேண்டுவதை விரும்பிக் கொடுப்பார்களென்றால்
"வானகத்திலுள்ள நம் தந்தை, தம்மிடம் கேட்பவர்களுக்கு,
எவ்வளவோ அதிகமாகப் பரிசுத்த ஆவியை அளிப்பார்" (11:13) என்ற
இயேசுவின் சொற்கள் கவனிக்கத்தக்கன. நாம் கேட்பதை
மட்டுமன்று, அதற்கு மேலாக, உயிர்த்த கொடையான பரிசுத்த
ஆவியாரையே நமக்கு அளிப்பார் என்கிறார். எனவே, ஆழ்ந்த
நம்பிக்கையோடு இறைத் தந்தையை அணுகுவோம். "நீங்கள் என்
பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குத்
தருவார். இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை.
கேளுங்கள்; பெற்றுக்கொள்வீர்கள்" (யோ. 16 : 23 - 24) என்ற
இயேசுவின் சொற்களில் நம்பிக்கை வைப்போம். ":அழுத பிள்ளைதான்
பால் குடிக்கும் அழுது கேட்போம்; அளவிலாது பெறுவோம்.
கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ