ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

பொதுக்காலம் 25 ஆம் ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
   
Sr. Gnanaselvi (india)
                                      பொதுக்காலம் 25 ஆம் ஞாயிறு
கடவுளின் ஆட்சியில் முதலிடம் பெற வந்திருக்கும் அன்பர்களே!

கடவுளின் ஆட்சியில் நலிந்தோருக்கும், புறக்கணிக்கப்பட்டோருக்கும் முதலிடம் கிடைக்கின்றது என்பதை, இந்த 25 ஆம் ஞாயிறு நமக்கு நினைவூட்டுகிறது.

வேறுபாடுகள் நிறைந்த இந்த பூமியில், கடவுளின் அருட்துணை வேறுபாடின்றி நம்மை வந்தடைவது, நமக்கு எத்துனை ஆறுதல் நிறைந்த செய்தி. கடவுள் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்கமுடியாது. கடவுள் தடுக்க நினைப்பதையும் யாராலும் கொடுக்கவும் முடியாது. எல்லோருக்கும் உரியவர் கடவுள். பணம் படைத்தோருக்கு ஒரு சொர்க்கம், பணம் இல்லாதோருக்கு ஒரு சொர்க்கம் என்பது அவரது அகராதியில் இல்லை.

உழைப்பை நாம் நேசிக்கும்போதும், உண்மையும, நேர்மையும் நம்மிடம் சம விகிதத்தில் இருக்கும் போதும் வாழ்க்கைச் சவால்களுக்கு அஞ்சத் தேவையில்லை. சமூகத்தின் பார்வையில் புறக்கணிக்கப்பட்டு கடைக் கோடியில் நின்றாலும் கவலையில்லை. கடவுளின் பார்வை நம்மை முதலிடத்தில் கொண்டு போய் நிற்க வைத்தே தீரும். சில சமயங்களில் முடிவுகளை விட, முயற்சிகள் அழகானவை. பலன்களைவிடச் செயல்கள் மேன்மையானவை. நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற முக்கிய நிகழ்வுகள் எதிலும் " சிபாரிசு" செல்லுபடியாவதில்லை. நம் தனித்தன்மையும், நேர்மையும், ஆர்வமும், மட்டுமே நமக்கு சிபாரிசு சான்றிதழ் தரவேண்டும். நாம் பயன்படுத்திக் கொண்டே இருக்கும் போதுதான் உடலும் மூளையும் வளைந்து கொடுக்கும்.

தனக்கான வேலைக்காக யார் தயவையும் எதிர்பார்க்காது, காலை தொடங்கி கனிவோடு காத்திருப்பது கூட மிகப் பெரிய காரியமே! முணுமுணுப்பின்றி, பொறுமையுடன் கடைசிவரை காத்திருந்து தனக்குரியதைப் பெற்றுக் கொள்வதற்கும் கூட, சமத்து தேவைதான். இப்படி ஒரு நிகழ்வைக் கண்ட தலைவரின் பேச்சும், செயலும் ஒன்றாக கூலியை அளந்து கொட்டுகிறது. கடவுள் அளவுகோல் வைத்து அளந்து கொடுப்பவரல்ல. அளவற்ற நன்மைகளை அள்ளிப் பொழிவதே கடவுளுடைய வேலை. மனிதனின் செயலுக்கு ஏற்ப அல்ல. அவனின் தேவைக்கு ஏற்ப கொடுப்பதை தம் வேலையாகக் கொண்டிருப்பதையும், இன்றைய நற்செய்தி மிகத் தெளிவாக நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இப்போது இவை எல்லாம் கேட்ட நாம், சமுதாயத்தில் கடைசி நிலையிலிருந்தால் கூட பரவாயில்லை, கடவுளின் ஆட்சியுரிமையில் முதலிடம்பெற உழைப்பதற்கு, தயாராக, ஆர்வத்துடன் வரிசையில் காத்திருப்போம். உழைப்பும், நேர்மையும், ஆர்வமும் கலந்த நமது நற்செயல், நிச்சயமாக சமுதாயத்தின் பின் வரிசையில் போட்டி பொறாமையின் காரணமாக பின்னுக்கும் தள்ளப்பட்டாலும், கடவுளின் ஆட்சியில் வலுக் கட்டாயமாக முன்னுக்குத் தள்ளப்படுவோம். காத்திருந்து உமது கருணை விழிக்குள் அகப்பட்டு, உமது ஆட்சியுரிமையில் முதலிடம் பெற ஆண்டவா துணைபுரியும் என, கனிவோடு இந்தத் திருப்பலியில் மன்றாடுவோம்.





 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. " எனக்கு உரியதை என் விருப்பப்படி நான் கொடுப்பேன்" என்று மொழிந்த தந்தையே!
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், அனைவரும் இறைமக்களுக்கு என உமது ஆட்சியில் பல முதலிடங்கள் உள்ளதை அறிந்து, அனைவரையும் முதலிடம் நோக்கி அழைத்துச் செல்லும் பணியில் ஆர்வமாய் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். திருச்சபைத் தலைவர்களுக்கு நற்சுகம் தந்து, அவர்களது பணியில் அவர்களுக்கு உரிய நிறைவைக் கண்டு மகிழ ஆற்றல் அருள வேண்டுமென்று, தந்தையே உம்மை இறைஞ்சுகின்றோம்.


2. உயர்ந்த எண்ணங்களை மட்டுமே கொண்ட ஆண்டவரே! இதோ நாடுகளை ஆளும் தலைவர்கள் உமது எண்ணங்களால் ஆட்கொள்ளப்பட்டு, நாட்டுமக்களின் உயர்வுக்காய் உழைக்கும் ஆற்றல் பெற்றிட உமதருள் அருள வேண்டுமென்று, தந்தையே உம்மை இறைஞ்சுகின்றோம்.


3. " கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள்" என மொழிந்த தந்தையே! பயனள்ள பணி செய்ய நீர் விடுத்த அழைப்புக்கு பணிந்து, உமக்காய் தன்னை அர்ப்பணித்த எங்கள் ஆன்மீக இயக்குநர் ஆற்றும் நற்செய்திப் பணியால், சமுதாயத்தில் கடைசியான இடத்தில் மன ஆதங்கத்தோடு இருக்கும் இறைமக்கள் யாவரும், இறையாட்சியில் முதலிடம் பெற்று மகிழ உமதருள் அருள வேண்டுமென்று, தந்தையே உம்மை இறைஞ்சுகின்றோம்.


4. உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அண்மையில் இருக்கும் ஆண்டவரே! எங்கள் வாழ்வில் எல்லாவற்றிலும் முதலிடம் பெற்று மகிழ விரும்பும் நாங்கள், அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள உமதருள் அருள வேண்டுமென்று, தந்தையே உம்மை இறைஞ்சுகின்றோம்.


5. கடைசியானோர் முதலாவார்கள் என்ற செய்தியைத் தந்த ஆண்டவரே!
உழைத்தும் ஊதியம் கிடைக்கவில்லை, உரிமை இருந்தும் அனுபவிக்க இயலவில்லை, எங்கள் மக்கள் விழிகள் வடிக்கும் கண்ணீர் எப்போது நிற்கும், கடைநிலைக்கு தள்ளப்பட்டு வாழும் எமது நிலை என்று மாறும் என மனம் குமுறும் ஈழத்து மக்களுக்கு, விண்ணரசில் முதலிடம் கிடைக்கும் என்ற ஆறுதல் உணர்வால், பிரச்சனைகளுக்கு மத்தியில் நிம்மதியாய் வாழ உமதருள் அருள வேண்டுமென்று, தந்தையே உம்மை இறைஞ்சுகின்றோம்.


 
மறையுரை சிந்தனைகள்
 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.
 
எண்ணம் போல் வாழ்க்கை.

அன்பர் இயேசுவின் ஆசீர்வாதம் பெற ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் அனைவரையும் பொதுக்காலத்தின் 25ம் ஞாயிறு சிந்தனையில் பங்கு பெற அழைக்கிறேன். இன்றைய வாசகங்கள் அனைத்தும் நமது எண்ணங்கள் / இறைவனின் எண்ணங்கள் எப்படி இருக்கின்றன என்பதை எடுத்துரைக்கின்றன. எசாயா இறைவாக்கினர் முதல் பவுலடியார் வரை அனைவரும் அவரவர் எண்ணங்களை இறைவனின் எண்ணங்களோடு ஒப்பிட்டு மதிப்பீடு செய்து கொள்கின்றனர். அதிலும் சிறப்பாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமை மூலமாக நம்முடைய எண்ணங்கள் கடவுளுடைய எண்ணங்களுக்கு எவ்வளவு தூரமானவை நமது எண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதனையும் எடுத்துரைக்கின்றார்.

இந்த உவமையில் நிலக்கிழார் ஆண்டவராகவும், வேலைக்கு அமர்த்தப்படும் வேலையாட்கள் மனிதர்களாகிய நாமாகவும் சித்தரிக்கப்படுகின்றோம். திராட்சைத் தோட்டம் நம் திருச்சபையாகவும், சந்தை வெளி மக்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கின்ற / கழிக்கின்ற பொழுதுபோக்கு இடங்களாகவும் கொள்ளலாம். அல்லது திருச்சபையைப் பற்றி அறிந்திராத அறிய முயற்சி செய்யாத மக்கள் என்று கூட எடுத்து கொள்ளலாம்.

நிலக்கிழாரின் ( ஆண்டவரின்) எண்ணங்கள்:
# தனது திராட்சைத் தோட்டத்திற்கு தேவையான வேலையாட்களை தானே சென்று அழைக்கின்றார். விடியற்காலையில் வெளியே சென்றவர் 9,12,3,5 என தொடர்ந்து சென்று தன் வேலையாட்களை தெரிவு செய்கின்றார்.

# பிறரது முகம் பார்த்தே அவர்கள் தேவையை அறிந்து கொள்பவராக இருக்கின்றார். அதனால் தான் சந்தை வெளியிலும் தெருவிலும் நிற்கும் அவர்கள் வேலையைத் தான் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பதைக் கண்டு கொள்கின்றார்.

# அன்போடு அவர்களிடம் பேசுகின்றார். நீங்களும் என் திராட்சை தோட்டத்துக்கு போங்கள் உங்களுக்குரிய நேர்மையான கூலியை நான் உங்களுக்குக் கொடுப்பேன். ஏன் இங்கே நின்று கொண்டிருக்கின்றீர்கள் நீங்களும் போங்கள் என்று அன்போடு அழைக்கின்றார். அழைப்புவிடுக்கின்றார்.

# அன்றன்றுக்குரிய கூலியை நியாயமாக வழங்கக் கூடிய ஒரு நிலக்கிழாராக இருக்கின்றார். உழைத்தவன் ஒரு போதும் வெறும் கையோடு தன் வீடு திரும்பக் கூடாது மாறாக அவன் செய்த வேலைக்குரிய கூலியை அவன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் படைத்தவராக இருக்கின்றார்.

# வேலை இல்லாமல் தெருவில் நின்று பிறர் உதவியை எதிர்பார்க்கும் மக்களை பிச்சைக்காரர்களாக மதிக்கும் இன்றைய சமூகத்தில், உரிமையாளரோ அவர்களின் மாண்பை மதித்து தொழிலாளர்களாக மாற்றுகின்றார். அவர் நினைத்து இருந்தால் 5 மணிக்கு வேலைக்கு அமர்த்தியவர்களை தர்மம் எடுப்பவர்கள் என்று கருதி அப்பொழுதே அந்த ஒரு தெனாரியத்தைக் கொடுத்து இருக்கலாம் . ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மனிதத்தை மதிக்கும் மாண்பானவர்.

# மேற்பார்வையாளரை நியமித்து அவர்களுக்கான கூலியை கொடுக்க சொல்கின்றார். தனது குணம் போல் தனக்கு கீழ் இருப்பவரும் வளர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்.
தொழிலாளர்களின் (நமது) எண்ணங்கள்:

@ காலை முதல் இவ்வளவு நேரம் வேலை பார்த்தது நாம் தாம்.
@ நமக்கு பின் வந்தவர்கள் நம்மை விட கீழானவர்கள். இணையானவர்களல்ல.
@ வேலைப்பளு, கடும்வெயில் போன்ற துன்பங்களை அனுபவித்தவர்கள் நாங்கள்.
@ நமக்கு பேசப்பட்டதை விட அதிகான தெனாரியம்கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளவர்கள்.
@ முணுமுணுப்பவர்கள்.
@ தனக்கு வேலை கொடுத்த முதலாளியையே குறை கூறும் மனநிலை படைத்தவர்கள்.

நாம் எப்படி இருக்க வேண்டும் என இறைவன் வலியுறுத்துகிறார்.
* எதிர்பார்ப்பின்றி அனைத்தையும் எதிர்கொள்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.

* கடவுளால் படைக்கப்பட்ட நாம் அனைவரும் அவர் முன் சமமே.

* நமது வார்த்தைகளில் கவனம் செலுத்தி முறையான வார்த்தைகளை நாம் உபயோகிக்க வேண்டும்.

* தொழிலாளர்கள் ஒரு வேளை தங்கள், முதலாளியிடம் கொஞ்சம் பரிவுடன் தங்கள் ஊதியத்தை உயர்த்தி கேட்டிருந்தால் கண்டிப்பாக அவர் கொடுத்திருப்பார். வேலையின்றி தெருவோரம் இருந்தவர்களை அழைத்து வேலை வாங்கி கூலி கொடுத்தவர் ,முறையாக வேலைக்கு வந்த இவர்களுக்கு கொடுக்காமல் இருந்திருப்பாரா? கட்டாயம் கொடுத்திருப்பார்.

* யாருடனும் நம்மை ஒப்பிட்டு தாழ்வாகவும் உயர்வாகவும் கருதக் கூடாது.

எண்ணங்களின் சக்தி:
நாம் எதை அதிகமாக நினைக்கின்றோமோ அதுவாகவே நாம் மாறுகின்றோம். நமது எண்ணங்களின் அடிப்படையிலேயே நமது வாழ்க்கை அமைகின்றது. இன்று நாம் இருக்கும் இந்நிலை என்றோ ஒரு நாள் நாம் மனதில் நினைத்தது . அதன்படியே நமது வாழ்க்கை அமைந்து விடுகின்றது. இறைவாக்கினர்களும், அப்போஸ்தலர்களும் இயேசுவும் கூட தாங்கள் நினைத்தபடியே வாழ்ந்தார்கள். இந்த ஆழமான எண்ணங்கள் தான் நம்பிக்கைகளாக உருவெடுக்கின்றன. நமது எண்ணங்கள் இறைவனின் எண்ணங்கள் அல்ல. மண்ணுலகத்தினின்று விண்ணுலகம் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம் இறைவனின் எண்ணங்கள் உயர்ந்தது என்று எசாயா இறைவாக்கினர் கூறுகின்றார். இறைவனைப் போல எண்ண முடியாது ஆனால் இறைவனின் எண்ணங்களுக்கு ஏற்றவாரு நாம் நமது எண்ணங்களை மாற்றி அமைத்துவாழ முயற்சிக்கலாம். இறைவனின் அழைப்பு எந்த நேரத்திலும் எந்த வடிவத்திலும் வரலாம் எனவே நாம் எதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும், தாமதமாக வந்தவர்கள் நேர்மையான கூலியை உங்களுக்கு கொடுப்பேன் என்ற நிலக்கிழாரின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு வேலை செய்தனர் . கூலி பெற்றனர். மகிழ்வடைந்தனர். எனவே இறைவன் நமக்கும் நேர்மையான ஊதியத்தை தருவார் என்ற நம்பிக்கை நல்ல எண்ணம் நமக்கு ஆழப்பட வேண்டும். பவுலடியாரிடம் இருந்த அந்த பேராவல் எதிர்நோக்கு நம்மிடமும் வளர வேண்டும்.

எனவே நாம் நம் எண்ணத்தில் கவனமுடன் இருப்போம். எண்ணங்கள் நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன. எண்ணம் போல் வாழ்க்கை. எண்ணம் போல் தான் வாழ்க்கை. நல்லதை எண்ணி நலத்துடனும் வளத்துடனும் வாழ இறைவன் நிறைவாக ஆசீர் பொழிவாராக ஆமென்.

 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி


கண்ணோட்ட மாற்றம்

'என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல. உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல' என இறைவாக்கினர் எசாயா வழியாக அறிவிக்கிறார் ஆண்டவராகிய கடவுள். எண்ணங்களும் வழிமுறைகளும் மாற்றம் பெற்றால் செயல்பாடுகளில் மாற்றம் வரும். இன்றைய முதல் வாசகப் பகுதி இறைவாக்கினர் எசாயா நூலின் இரண்டாம் பகுதியின் இறுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு நிகழ்த்தப் போகும் வல்ல செயல்கள் மற்றும் மறுவாழ்வுக்கு முன்னுரையாக அமைகிறது இந்தப் பகுதி. இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய அழிவுக்குக் காரணம் தாங்கள் செய்த பாவங்களே என்பதை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மேலும், ஆண்டவராகிய கடவுள் தங்கள் குற்றங்களுக்கு ஏற்ப நடத்துவார் என்று அச்சம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இதன் பின்புலத்தில் இறைவாக்குரைக்கிற எசாயா, 'ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்' எனச் சொல்வதுடன், ஆண்டவருடைய எண்ணங்களும் மனித எண்ணங்களும், அவருடைய வழிமுறைகளும் நம் வழிமுறைகளும் முற்றிலும் மாறுபட்டவை என உரைக்கிறார்.

நம் கண்ணோட்டம் மாற்றம் பெறும்போது இறைவனின் இரக்கத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறையாட்சி பற்றிய உவமை ஒன்றை முன்மொழிகிறார். இது உவமையாக இருந்தாலும், மத்தேயு நற்செய்தியின் உவமைப் பகுதியில் இல்லாமல், அதற்கு வெளியே திருஅவைப் பொழிவில் உள்ளது.

மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில் விளங்கிய பிரச்சினையை இந்த உவமையின் வழியாக நாம் புரிந்துகொள்ள முடிகிறது. முதலில் நம்பிக்கையாளர்களாக மாறியவர்கள் உயர்ந்தவர்கள், தாமதமாக மாறியவர்கள் தாழ்ந்தவர்கள், அல்லது முதலில் வந்த யூதர்கள் சிறந்தவர்கள், தாமதமாக வந்த புறவினத்தார்கள் தாழ்ந்தவர்கள் என்னும் எண்ணம் நிலவிய சூழலில், அனைவரும் ஒன்றே, அனைவருக்கும் வழங்கப்படும் பரிசு ஒன்றே என உரைக்கிறது இந்த உவமை. மேலும், கடவுள் ஒரே நேரத்தில் நீதியும் இரக்கமும் கொண்டவராக இருக்கிறார் என்பதையும் இந்த உவமை எடுத்துக்காட்டுகிறது.

திராட்சைத் தோட்ட வேலையாள்கள் - முதலில் வந்தவர்கள் மற்றும் இறுதியில் வந்தவர்கள், திராட்சைத் தோட்ட மேற்பார்வையாளர் எனப் பல கதைமாந்தர்கள் உவமையில் இருந்தாலும், முதன்மையான கதைமாந்தர் திராட்சைத் தோட்ட உரிமையாளரே. இவர் நிலக்கிழார் (20:1), ஆண்டவர் (20:8), தலைவர் (20:11) என்னும் மூன்று பெயர்களால் அழைக்கப்பெறுகிறார்.

திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்கு அமர்த்துவதற்காக ஆள்களைத் தேடிச் செல்கிறார் தலைவர். எத்தகைய வேலை என்பது இங்கே குறிப்பிடப்படவில்லை. திராட்சைத் தோட்டத்தில் மூன்று வகை வேலைகளுக்கு மட்டுமே அதிக நபர்கள் தேவைப்பட்டனர்: திராட்சைச் செடி நடுவதற்கு, களைகள் பிடுங்கித் தோட்டத்தைப் பரமாரிப்பதற்கு, திராட்சைக் கனிகள் பறிப்பதற்கு. இந்த மூன்று வேலைகளுமே ஒரே நாளுக்குள் முடிக்கப்பட வேண்டியவை. ஆக, நிறைய வேலையாள்கள் இவருக்குத் தேவைப்படுகிறார்கள். அதிகாலையிலேயே வேலையாள்களைத் தேடி இவர் புறப்படுகிறார். ஏனெனில், நன்றாக வேலை செய்யக் கூடியவர்கள் சீக்கிரமாகவே வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவர். இன்று நம் ஊர்களில் இருப்பது போல, நகரின் பொதுவிடத்தில் ஆள்கள் ஒன்றாகக் கூடி நிற்பர். அவர்கள் வேலைக்கான அழைப்பு பெறுவர்.

காலை ஆறு மணி, ஒன்பது மணி, நண்பகல், மாலை மூன்று மணி, ஐந்து மணி என ஐந்து முறை வேலையாள்களைத் தேடிச் செல்கிறார். மாலை ஆறு மணிக்கு அனைவருக்கும் கூலி தரப்படுகிறது. ஆக, முதலில் வந்தவர்கள் 12 மணி நேரங்களும், இரண்டாவது வந்தவர்கள் 9 மணி நேரங்களும், மூன்றாவது வந்தவர்கள் 6 மணி நேரங்களும், நான்காவது வந்தவர்கள் 3 மணி நேரங்களும், ஐந்தாவது வந்தவர்கள் 1 மணி நேரமும் வேலை செய்கிறார்கள். வேலை செய்த நேரம் வேறுபட்டதாக இருந்தாலும் வழங்கப்படும் ஊதியம் அனைவருக்கும் சமமாக (ஒரு தெனாரியம்) இருக்கிறது. இது வேலைக்காரர்களுக்கும் வாசகர்களாகிய நமக்கும் நெருடலை ஏற்படுத்துகிறது. ஆனால், எந்தவொரு நெருடலும் தலைவருக்கு இல்லை. தாம் செய்வதை அறிந்தவராகவும், எந்தக் கட்டாயத்திற்கும் ஆள்படாமல் அதை நிறைவேற்றுபவராகவும் அவர் இருக்கிறார்.

'கடைசியில் வந்தவர் தொடங்கி முதல் வந்தவர் வரை அவர்களுக்குரிய கூலி கொடும்' என்று வரிசையை மாற்றுகிறார் தலைவர். முதலில் வந்தவர் முதலில் வெளியேறுவர் என்பதை மாற்றி, கடைசியில் வந்தவர் முதலில் என மாற்றுகிற தலைவர், அனைவருக்கும் ஒரே ஊதியம் என்றும் வரையறுக்கிறார்.

முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் எனத் தங்களுக்குள் நினைக்கிறார்கள். அவர்களுக்கும் ஒரு தெனாரியம் மட்டுமே வழங்கப்பட்டதால் முணுமுணுக்கிறார்கள். இறுதியில் வந்தவர்களுக்குத் தலைவர் காட்டிய இரக்கம் தங்களுக்கும் இருக்கும் என அவர்கள் நினைத்தபோது, 'நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா?' என்று நீதியை அவர்களுக்குக் காட்டிப் புரட்டிப்போடுகிறார் தலைவர். உவமையின் முதல் பகுதியில் வெளியே ஒவ்வொரு முறை நடந்துசென்ற தலைவர், இரண்டாவது பகுதியில் அவர் ஒரே இடத்தில் நிற்க வேலையாள்கள் அவரிடம் வரிசையாக வருகிறார்கள்.

தம்மை நோக்கி முணுமுணுத்தவர்களைத் 'தோழரே' என அழைக்கிறார் தலைவர். மத்தேயு நற்செய்தியில் 'தோழரே' என்னும் சொல் மூன்று இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருமண விருந்து எடுத்துக்காட்டில் திருமண உடை அணிந்து வராத நபரும் (22:12), இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நிகழ்வில் யூதாசு இஸ்காரியோத்தும் (26:49), 'தோழரே' என அழைக்கப்படுகிறார்கள். அதாவது, தலைவருக்குத் தோழராக இருக்க வேண்டியவர்கள் தோழராக இல்லை என்பதே இங்குக் குறிப்பிடப்படுகிறது.

முதலில் வந்தவர்கள் முணுமுணுப்பதற்கான காரணம் என்ன?

அவர்கள் தங்கள் கண்முன் நின்ற தலைவரைப் பார்ப்பதற்குப் பதிலாக, தங்கள் கைகளிலிருந்த தெனாரியத்தைப் பார்த்தார்கள். தங்கள் தலைவர் ஒரே நேரத்தில் நீதியும் இரக்கமும் காட்டக் கூடியவர் என்பதை மறந்துவிட்டார்கள்.

தலைவரைப் பொருத்தவரையில், தலைவருக்கு அனைத்து வேலையாள்களும் முதன்மையானவர்களாகத் தெரிகிறார்கள். அனைவருடைய தேவையும் ஒன்று என அறிந்தவராக இருக்கிறார் தலைவர்.

பணியாளரின் கண்ணோட்டம் விடுத்து, தலைவரின் கண்ணோட்டம் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

இக்கேள்விக்கான விடையை இன்றைய இரண்டாம் வாசகத்தில் தருகிறார் பவுல். தன் வாழ்வில் இருத்தலுக்கும் இறப்புக்குமான இழுபறி நிலையை உணர்கிற பவுல், இவை இரண்டுக்கும் இடையே தாம் படும் துன்பத்தை உணர்ந்தவராக, 'நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. நான் இறந்தால் அது ஆதாயமே' என்கிறார். அதாவது, தம் இருத்தலுக்கும் இறப்புக்கும் பொருள் தருபவர் கிறிஸ்துவே என்பது அவருடைய புரிதல்.

ஆண்டவரை நாம் பற்றிக்கொள்ளும்போது நம் கண்ணோட்டம் மாறுகிறது.

தெனாரியத்தை சற்றே ஒதுக்கிவிட்டு, தலைவரையும் மற்ற வேலையாள்களையும் நாம் பார்க்கத் தொடங்குகிறோம். வாழ்க்கை அனைவரையும் ஒரே மாதிரி நடத்துவதில்லை என்பதை உணரத் தொடங்குகிறோம். பொறுமை காக்கப் பழகுகிறோம். முணுமுணுத்தலால் ஒரு பயனும் இல்லை என்பதால் புன்னகை பூக்கத் தொடங்குகிறோம். வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிக்கொள்ளப் பழகுகிறோம். கணிதத்தின் லாஜிக் அல்ல கடவுளின் மேஜிக்கே நம் வாழ்வை மாற்றுகிறது என உணரத் தொடங்குகிறோம்.

 
 



 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி மரிய அந்தோணி பாளையங்கோட்ட

I எசாயா 55: 6-9
II பிலிப்பியர் 1: 20c-24, 27a
III மத்தேயு 20: 1-16a


இறைநீதி அநீதி அல்ல; சமநீதி:

கிராமப்புறத்தில் இருந்த மேனிலைப் பள்ளிக்கூடம் அது. அந்தப் பள்ளிக்கூடத்தில் பள்ளி ஆண்டுவிழா அண்மையில் நடைபெறவிருந்தது. அதன் நிமித்தம் பள்ளியில் மாணவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. எல்லாப் போட்டிகளும் முடிந்து இறுதிப் போட்டியாக, 1000 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பல மாணவர்கள் கலந்துகொண்டார்கள். அவர்களோடு தன் வலக்காலில் கட்டுப் போட்டவாறு ஒரு மாணவன் கலந்துகொண்டான். போட்டியை நடத்திய ஆசிரியர், போட்டியில் கலந்துகொண்ட ஏனைய மாணவர்களிடம் " 1000 மீட்டரை யார் முதலில் ஓடிக் கடக்கிறாரோ அவரே வெற்றிபெற்றவர்" என்று சொல்லிவிட்டு, காலில் கட்டுப் போட்டவாறு போட்டியில் கலந்துகொண்ட மாணவரிடம், " தம்பி நீ 800 மீட்டரை வேகமாக ஓடிக் கடந்தால், நீதான் வெற்றி பெற்றவன் ஆவாய்" என்றார். இதைப் பக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்த ஏனைய மாணவர்கள் போட்டியை நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரிடம், " நாங்கள் அனைவரும் 1000 மீட்டர் ஓடவேண்டுமாம்... இவன் மட்டும் 800 மீட்டர் ஓடினால் போதுமாம்! இதில் என்ன நீதி இருக்கின்றது; இது அநியாயம்" என்று சீறினார்கள். அப்பொழுது போட்டியை நடத்திய ஆசிரியர் அவர்களிடம், " தம்பிகளா! இந்த மாணவன் தன் வலக்காலில் கட்டுப் போட்டவாறு இருக்கின்றானே...! இதற்கு யார் காரணம்?" என்றார். அவர்கள் எதுவும் பேசமால் அமைதியாக இருந்தார்கள். ஆசிரியர் அவர்களிடம் மீண்டுமாக அதே கேள்வியைக் கேட்டதும், அவர்களில் ஒரு மாணவன், " போன வாரம் நாங்களெல்லாம் ஒரு கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்பொழுது, இவன் எங்களுக்கு முன்பாகக் கால்மேல் கால் போட்டு தேநீர் அருந்திக்கொண்டிருந்தான். பொருளாதாரத்திலும் சமூகத்திலும் எங்களைவிடப் பின்தங்கியவன் எப்படி எங்களுக்கு நிகராகக் கால்மேல் கால் போட்டு, தேநீர் அருந்தலாம்...? அதனால்தான் நாங்கள் எல்லாரும் சேர்ந்து அவனுடைய காலை உடைத்தோம்" என்றான்.
அந்த மாணவன் சொன்னதை அமைதிக் கேட்டுக்கொண்டிருந்த, போட்டியை நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் அவர்களிடம், " எந்தக் காரணத்திற்காக நீங்கள் எல்லாரும் சேர்ந்து இவனுடைய காலை உடைத்தீர்களோ, அந்தக் காரணத்திற்காகத்தான் இவன் 800 மீட்டர் மட்டும் ஓடப்போகிறான். இது அநீதி கிடையாது; அவனுக்குச் சேர வேண்டிய நீதி" என்றார். இதைக் கேட்டு அந்த மாணவர்கள் எதுவும் பேசாமல் அமைதியானார்கள்.

ஆம், வறியவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள், ஏழைகள் ஆகியோரிடத்தில் (அரசும்) ஆண்டவரும் காட்டும் கரிசனையும் இரக்கமும் அநீதி கிடையாது; அது அவர்களுக்குச் சேர வேண்டிய நீதி. அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும், " இறைநீதி அநீதி அல்ல, அது சமநீதி" என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுளின் எண்ணங்களும் வழிமுறைகளும் உயர்ந்தவை
மனிதர்களாகிய நாம் ஒன்றை எண்ணியிருப்போம்; ஆனால், நாம் எண்ணியதற்கு மாறாக, கடவுள் வேறொன்றைச் செய்து முடித்திருப்பார். அதுபோன்று நமக்கென்று ஒருசில வழிமுறைகளை வைத்திருப்போம். அந்த வழிமுறைகள்தான் சரியானவை; மற்றவை எல்லாம் தவறானவை என்று நினைத்திருப்போம்; ஆனால், ஆண்டவர் நாம் நினைத்ததற்கும் மாறாக வேறொன்றைச் செய்திருப்பார். இதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, ஆண்டவர் சொல்வதாக, " என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல; உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல" என்கின்றார்.

இறைவனின் எண்ணங்களும் வழிமுறைகளும், மனிதனின் எண்ணங்களையும் வழிமுறைகளையும்விட முற்றிலும் வேறாவை. அவை மனித எண்ணங்களையும் வழிமுறைகளையும்விடப் பன்மடங்கு உயர்ந்தவை. இறைவனின் எண்ணங்களும் வழிமுறைகளும், மனித எண்ணங்களையும் வழிமுறைகளையும்விட மேலானவை; பன்மடங்கு உயர்ந்தவை என்பதற்கு மிகப்பெரிய சான்றாக இருப்பதுதான் இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய " திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமை" . இவ்வுவமையின் வாயிலாக இயேசு நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இறைநீதி, அநீதி அல்ல
வழக்கமாக, மனிதர்களாகிய நாம் வேலைக்கேற்ற கூலியைக் கொடுப்போம். ஒருவர் நம்மிடம் எட்டு மணிநேரம் வேலை பார்த்தால் முழுச் சம்பளமும், அதைவிடக் குறைவான நேரம் வேலை பார்த்தால், சம்பளத்தைப் பாதியாகவோ அல்லது கொஞ்சம் பிடித்துக்கொண்டோ கொடுப்போம்; ஆனால், நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமையில் வருகின்ற உரிமையாளர், காலையில் வந்தவருக்கும், மாலை ஐந்து மணிக்கு வந்தவருக்கும் ஒரு தெனாரியம் வீதம் ஒரே கூலியைக் கொடுக்கின்றார். திராட்சைத் தோட்ட உரிமையாளர் இவ்வாறு செய்ததைப் பார்த்துவிட்டு, முதலில் வேலைக்கு வந்தவர்கள், " பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே" என்று முணுமுணுக்கின்றார்கள்.

இவர்கள் இவ்வாறு முணுமுணுப்பதாள், திராட்சைத் தோட்ட உரிமையாளர் இவர்களுக்கு அநீதி இழைத்துவிட்டாரோ என்று நமக்கு எண்ணத் தோன்றலாம். உண்மையில் திராட்சைத் தோட்ட உரிமையாளர் முதலில் வந்தவர்களுக்கு அநீதி இழக்கவில்லை; மாறாக, அவர் அவர்களிடம் பேசியது போன்று ஒரு தெனாரியம் கூலியாகக் கொடுக்கின்றார். அதனால் அது நீதிதான். அதே நேரத்தில் அவர் கடைசியில் வந்தவர்களுக்கும் ஒரு தெனாரியம் கூலி கொடுக்கின்றார் எனில், அது அவர்கள்மீது அவர் கொண்ட இரக்கம், கரிசனையாகும். ஒருவேளை திராட்சைத் தோட்ட உரிமையாளர் கடைசியில் வந்தவர்களுக்கு ஒரு தெனாரியத்திற்கும் குறைவாகக் கூலி கொடுத்தால், அந்த வேலையாளின் கூலியை நம்பி இருக்கும் குடும்பம் பட்டினியில் வாடும் அல்லவா! இதன்பொருட்டே திராட்சைத் தோட்ட உரிமையாளர் கடைசியில் வந்தவருக்கும் ஒரு தெனாரியம் கொடுக்கின்றார். இவ்வாறு திராட்சைத் தோட்ட உரிமையாளர் அல்லது கடவுள் வறியவர்கள், ஏழைகள் ஆகியோர்மீதான தன்னுடைய தனிப்பட்ட இரக்கத்தையும் கரிசனையையும் காட்டுகின்றார்.

ஒப்பிட்டு வாழ்வதை உதறித் தள்ளுவோம்
திராட்சைத் தோட்ட உரிமையாளர், கடைசியில் வந்தவர்களுக்கும் ஒரு தெனாரியம் கொடுத்ததை அல்லது அவர் அவர்கள்மீது இரக்கம் காட்டியைப் பார்த்து, முணுமுணுக்கும் முதலில் வந்த பணியார்களிடம் அவர், " நான் நல்லவனாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?" என்பார். இதை நம்முடைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

கடவுள் ஒருவருக்கு அருள்பாலித்து, அவரை நல்ல நிலையில் வைத்திருந்தால், அதைக்கண்டு நாம் மகிழ்ச்சியுறவேண்டுமே ஒழிய, பொறாமை கொள்ளக்கூடாது. இன்றைக்குப் பலர் அடுத்தவருடைய வளர்ச்சியைக் கண்டு அல்லது ஒருவர் கடவுளின் இரக்கத்தையும் அருளையும் பெற்றுக்கொண்டதைக் கண்டு, அவர்மீது பொறாமை கொள்கின்றார்கள்; அவரைப் பாராட்டவோ அல்லது அவரும் தானும் தனித்தன்மையானவர்கள் என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் இல்லாமல் இருக்கின்றார்கள். இதனாலே பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன. தாவீதின் வளர்ச்சியைக் கண்டு சவுல் மகிழ்ச்சியடையாமல், பொறாமை கொண்டான். இதனாலேயே சவுல் தாவீதைக் கொல்லத் துணிந்தான். கடைசியில் சவுல் தன் பொறாமையாலேயே வீழ்ந்தான். பிறரைப் பொறாமைக் கண்ணோடு பார்ப்பவர்... வறியவராகப் போவதை அவர் அறியார்" (நீமொ 28: 22) என்கின்றது நீதிமொழிகள் நூல்.

ஆகையால், நாம் நம்மிடம் இருக்கின்ற பொறாமையை, ஒப்பிட்டுப் பார்க்கும் மனப்பான்மையை விட்டொழித்து, வறியோர், எளியோர் ஆகியோரிடம் ஆண்டவரைப் போன்று அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்வோம்.

சிந்தனை
" ஆண்டவரின் நீதி நெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை" (திபா 19:9) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் ஆண்டவரின் நீதி நெறிகளுக்கு ஏற்ப வாழ்ந்து எளியோரிடம் அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

 

 
   மறையுரைச்சிந்தனை  - அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை

கடைசியானோர்‌ முதன்மையானவர்‌

ஒவ்வொரு மனிதரும்‌ உழைத்து அதன்‌ மூலம்‌ தங்களுடைய வாழ்வு உரிமையை அமைத்துக்‌ கொள்ளச்‌ சட்டம்‌ வழிவகுக்கிறது. ஆனால்‌ மக்கள்‌ தொகைப்‌ பெருக்கமும்‌, கணினிமயமாக்கலும்‌, தனியார்‌ மயமாக்கலும்‌ இன்றைய வேலையில்லாத்‌ திண்டாட்டத்தைப்‌ பெருக்கி, குடும்பத்தில்‌ பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கிவிடுகின்றது. பணம்‌ படைத்தோர்‌, திறமையுள்ளோர்‌ மட்டும்‌ வாழலாம்‌ என்ற நியதி இன்று ஆட்டிப்படைத்துக்‌ கொண்டிருக்கிறது.
ஆனால்‌ இயேசு இன்று சமூக நீதிக்கு அப்பாற்பட்டு, மனித நேயக்‌ கூறுகளை உள்ளடக்கிய உண்மைகளை இன்றைய . வார்த்தை வழிபாட்டில்‌ நமக்குத்‌ தெரிவிக்கின்றார்‌.

ஒரு நிலக்கிழார்‌ தன்‌ தோட்டத்திலே வேலை செய்ய ஆட்களை அமர்த்துகிறார்‌. பேசிய கூலியோ ஒரு தெனாரியம்‌ (ஒரு டாலர்‌). காலையிலே வேலையில்‌ ஈடுபடுகிறார்கள்‌. வேலையின்றி நின்ற சிலரை பன்னிரெண்டு மணிக்கும்‌, மதியம்‌ மூன்று மணிக்கும்‌, மாலை ஐந்து மணிக்குமாகப்‌ பலரை வேலையில்‌ அமர்த்துகிறார்‌. மாலை ஆறு மணிக்கு கூலி கொடுக்கும்போது கடைசியில்‌ வந்தவர்‌ தொடங்கி முதலில்‌ வந்தவர்‌ வரை ஒரே கூலி கொடுக்கிறார்‌. முதலில்‌ வந்தவர்கள்‌ முணுமுணுக்கிறார்கள்‌. என்ன அநியாயமான கூலி. கடைசியாக வந்தவரோடு எங்களையும்‌ சமமாக்கிவிட்‌டீ ரே என்று முறையிடுகிறார்கள்‌! உங்களுக்கு உரிய கூலியைத்‌ தந்துவிட்டேன்‌. எனக்குரியதை நான்‌ விரும்புகிறபடி கொடுக்கக்‌ கூடாதா? நான்‌ நல்லவனாக இருப்பது உங்களுக்குப்‌ பிடிக்கவில்லையா என்று கேட்கிறார்‌ நிலக்கிழார்‌.

இந்த உவமை ஏதோ இயேசுவின்‌ கற்பனையில்‌ உதித்த ஒன்று அல்ல. மாறாக பாலஸ்தீன்‌ பகுதிகளில்‌ நடந்த உண்மையைத்தான்‌ இமேசு எடுத்துக்காட்டுகிறார்‌. ஏனென்றால்‌ மழைக்காலம்‌ தொடங்குவதற்கு முன்பு பழங்கள்‌ அறுவடை செய்யப்படவில்லை என்றால்‌ பாழாய்ப்‌ போகும்‌. எனவே தொழிலாளர்கள்‌ அதிகமான எண்ணிக்கையில்‌ அமர்த்தப்படுவர்‌. மாலை நேரத்திலும்கூட தொழிலாளர்‌ பணியில்‌ அமர்த்தப்படுவதுண்டு. இந்த பின்னணியில்‌ தான்‌ இன்று ஒரு உண்மையை நம்மிடம்‌ படம்‌ பிடித்துக்‌ காட்ட விரும்புகிறார்‌ இயேசு. எந்த உண்மையை நமக்குக்‌ கற்பிக்க விரும்புகிறார்‌?

எல்லாவற்றிலும்‌ நாங்களே முதன்மையானவர்கள்‌, பாரம்பரியம்‌ மிக்கவர்கள்‌, மேன்மையானவர்கள்‌ என்று பெருமை பாராட்டி வாழ்ந்த சட்ட நிபுணர்கள்‌, வேதபோதகர்கள்‌, பரிசேயர்கள்‌, மூப்பர்கள்‌, குருக்களுக்கு இது ஒரு சாட்டையடியாகும்‌.

எங்களோடுதான்‌ இறைவன்‌ உடன்படிக்கைச்‌ செய்தார்‌. நாங்கள்தான்‌ இறைவனின்‌ மக்கள்‌. எங்கள்‌ கொள்கைக்கு எதிராகச்‌ செயல்படுபவர்கள்‌ இறைவனுக்கு ஏற்புடையவர்‌ அல்ல என்று பெருமையடித்த யூதர்களுக்கு இது ஒரு சாட்டையடியாகும்‌.

ஏன்‌! கிறிஸ்தவர்களாகிய நாங்கள்தான்‌ முதன்மையானவர்கள்‌, நாங்கள்தான்‌ திருமுழுக்குப்‌ பெற்றுள்ளோம்‌, நாங்கள்தான்‌ தோமையார்‌, சவேரியார்‌, அருளானந்தர்‌ கிறிஸ்தவர்கள்‌. பிற இன, மதத்தவரெல்லாம்‌ முதன்மையானவர்கள்‌ அல்லர்‌ என்று உரிமை கொண்டாடும்‌ கிறிஸ்தவர்களுக்கு ஒரு சாட்டையடியாகும்‌.

லூக்கா நற்செய்தி 15ஆம்‌ அதிகாரத்தில்‌ உள்ள ஊதாரி மகனின்‌ உவமையில்‌ காணப்படும்‌ தந்தையின்‌ நற்செயலுக்காக முணுமுணுத்த மூத்த மகனைப்போல்‌ முதலில்‌ வேலைக்கு வந்தவர்களாக, முதன்மையானவர்களாகத்‌ தங்களை நீதிமான்களாக்கி மற்றவரைப்‌ பாவி என்று பட்டம்‌ கட்டி, தீர்ப்பிட்டு முணுமுணுக்கும்‌ கூட்டத்திற்கு இது ஒரு சாட்டையடி.

நிலக்கிழார்‌ பன்னிரெண்டு மணிக்கு, மூன்று மணிக்கு, ஏன்‌ மாலை ஐந்து மணிக்கு வந்தவருக்கும்‌ அதே கூலியைத்தான்‌ கொடுக்கிறார்‌. இங்கே இறைவனின்‌ இரக்கச்‌ சிந்தனையைப்‌ பார்க்கலாம்‌. ஐந்து அப்பங்களைக்‌ கொண்டு 5000 பேருக்கும்‌ மேலாக உணவு கொடுக்க இயேசு சொன்னார்‌. இவர்கள்‌ - பட்டினியால்‌ மடிவார்களே! இவர்கள்மேல்‌ மனம்‌ இரங்குகிறேன்‌. நீங்களே இவர்களுக்கு உணவு கொடுங்கள்‌ என்றார்‌ (மாற்‌. 6:37).

வேலைக்கு அமர்த்தப்பட்ட அனைவரும்‌ சமமாக வேலை செய்யவில்லை. நேரத்திலும்‌ வித்தியாசம்‌ உண்டு. ஆனால்‌ அனைவரும்‌ சம கூலி பெறுகின்றனர்‌. எவ்வளவு நேரம்‌ வேலை செய்தோம்‌ என்பதைவிட எந்த மனநிலையோடு வேலை செய்தோம்‌ என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான்‌ இயேசு விதவைப்‌ பெண்ணின்‌ காணிக்கையைப்‌ பார்த்து இந்த ஏழைக்‌ கைம்பெண்‌ எல்லாரையும்விட மிகுதியான காணிக்கையைப்‌ போட்டாள்‌ (லூக்‌. 21:3) என்றார்‌.

காலையில்‌ வேலைக்கு வந்தவர்‌ தீர்க்கமாகப்‌ பேசி வேலையில்‌ ஈடுபட்டனர்‌. மற்றவர்‌ எல்லாம்‌ வேலை வாய்ப்புக்‌ கிடைத்தாலே போதும்‌. கூலி பிரச்சனை அல்ல என்ற மனநிலையில்‌ வந்தவர்கள்‌. இதில்‌ (1) சமூக நீதியையும்‌ தாண்டி மனித நேயத்தை மதிக்கிறார்‌ இயேசு. இறைவனுடைய நீதி இயற்கைக்கு அப்பாற்பட்டது. அவரது பார்வையில்‌ எல்லா இன மக்களும்‌ அவரது பிள்ளைகள்‌. பணமும்‌, பதவியும்‌, திறமையும்‌ ஒருவனுடைய வாழ்வை நிர்ணயிக்கும்‌ அளவுகோல்கள்‌ அல்ல. எனவே எசாயா நூலில்‌ என்‌ எண்ணங்கள்‌ உங்கள்‌ எண்ணங்கள்‌ அல்ல. உங்கள்‌ வழிமுறைகள்‌ என்‌ வழிமுறைகள்‌ அல்ல (எசாயா 55:8) என்கிறார்‌ ஆண்டவர்‌. (2) திருச்சபையில்‌ ஏற்றத்‌ தாழ்வு என்பது இல்லை. உங்களிடையே யூதன்‌ என்றும்‌, கிரேக்கன்‌ என்றும்‌, அடிமை என்றும்‌, உரிமைக்‌ குடிமக்கள்‌ என்றும்‌ இல்லை (கலா. 3:28).

இன்றைய ஆளும்‌ வர்க்கம்‌, தொழிலாளர்களையே அடக்கும்‌ விதத்தில்‌ விருப்ப ஓய்வு, கட்டாய ஓய்வு என்றெல்லாம்‌ வாழ்வு உரிமையைக்‌. கேள்விக்குரியதாக்கி வருகிறது. இனி வரும்‌ காலங்களில்‌ உற்பத்தித்‌ திறன்‌ கொண்ட மனிதர்‌ மட்டும்தான்‌ உயிர்‌ வாழ முடியும்‌ என்ற நிலைமை வந்தாலும்‌ ஆச்சரியப்படு வதற்கில்லை! கிறிஸ்துவின்‌ நீதியே திருச்சபையின்‌ நீதி .

 
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்  - குடந்தை  ஞானி


பொறாமை ஒழியட்டும்

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையா மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின் குறள் 162

(எவரிடத்திலும் பொறாமை கொள்ளாதிருக்கும் குணத்தை ஒருவன் பெற்றிருந்தால், அவன் பெறுதற்குரிய செல்வங்களுள் அதனை ஒப்பது வேறு இல்லை)

நால்வகை மனிதர்கள்
இந்த உலகில் வாழக்கூடிய மனிதர்களை நான்குவகையாகப் பிரிக்கலாம். முதல்வகையினர் மேன்மக்கள்: இரண்டாவது வகையினர் நல்லவர்கள்: மூன்றாவது வகையினர் கெட்டவர்கள்: நான்காவது வகையினர் மிகவும் கெட்டவர்கள். இவர்களை, பேருந்தைப் பயன்படுத்திப் புரிந்துக்கொள்ளலாம். முதல்வகையினரான மேன்மக்கள் நாம் கஷ்டப்பட்டாலும், அடுத்தவர்கள் கஷ்டப்படக்கூடாது என்று நினைப்பவர்கள்: மிகவும் நல்லவர்கள். உதாரணமாக, பேருந்திலே பயணம் செய்யும் போது, ஒரு முதியவரோ, ஒரு கர்ப்பிணியோ நின்றுக்கொண்டு வரும் போது, உட்கார்ந்திருக்கக்கூடிய இவர், தன் இடத்தை அவருக்கு விட்டுக்கொடுத்து நின்றுக்கொண்டே பயணிப்பார். இவர் மிகவும் நல்லவர். அடுத்தவருக்காக துன்பத்தை அனுபவிக்க தயங்காதவர்.

இரண்டாவது வகையினர் நல்லவர்கள்@ நியாயத்துக்கு கட்டுப்பட்டவர்கள். இவர்கள் அடுத்தவருக்கு கெடுதல் பண்ணமாட்டார்கள்: ஆனால் அதே சமயம் தன்னுடைய நலத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். உதாரணமாக, பேருந்திலே உட்கார்ந்து கொண்டே பயணிக்கிற இவர், முதியவரைக் கண்டு, கர்ப்பிணியைக் கண்டு பரிதாபப்படுவாரே தவிர, தன் இடத்தை விட்டுக்கொடுத்து உதவமாட்டார். " நான் ஒன்ணும் தியாகி இல்லேன்" னு நழுவிவிடுவார். இவர் ஒரு வகையில சேர்க்கலாம். நல்லவர்.

மூன்றாவது வகையினர், தன் சொந்த நலனுக்காக, அடுத்தவங்க நலனை, கெடுக்க துணிந்தவர்கள்: கெட்டவர்கள். பேருந்திலே, ஒர் இருக்கையில் இன்னொருத்தர் துண்டு போட்டு இடத்த பிடிச்சிருந்தாலும், அந்த துண்டை நைசா எடுத்து ஜன்னலுக்கு வெளியே போட்டுட்டு, நல்ல பிள்ளையாட்டம் உட்கார்ந்திருப்பார். துண்டுப் போட்டவர் வந்து கேட்டா " துண்டா நான் பார்க்கலையே" நழுவிவிடுவார். சுயநலக்காரர். கெட்டவர்.

நான்காவது வகையினர், எப்பொழுதும் கெடுதல் பண்ணிக்கிட்டே இருப்பார். இவரு பேருந்துல உட்கார்ந்திருப்பார். பக்கத்து சீட்டுல ஒருத்தர் துண்டு போட்டுட்டு போயிருப்பார். இவரு ஊமைக் குசும்பனாட்டம் அந்த துண்டை எடுத்து, வெளியே போட்டுட்டு, யாராவது அந்த காலியான இடத்திலே உட்காரலாமான்னு கேட்டா, தாரளமா உட்கார வைப்பார். அப்புறம் துண்டைப் போட்டவர் வந்து உட்கார்ந்திருக்கிறவரோட சண்டைப் போடுவார். இரண்டு பேரும் சண்டைப் போடுவதைப் பார்த்து, ரசித்துக்கிட்டே இருப்பார். இவர் மிகவும் கெட்டவர்.

இதற்கும் இன்றைய நற்செய்திக்கும் சம்பந்தம் உண்டு, நிலவுரிமையாளர் ரொம்ப நல்லவர் என்றால், முதலில் வேலைக்கு வந்தவர்கள் மிகவும் கெட்டவர்களாக, நான்காவது வகையினராக இருக்கிறார்கள். இன்றைய நற்செய்தியைக் கூர்ந்து ஆழ்ந்து சிந்திக்கிற போது, பொறாமைக் குணம் வேரறுக்கப்பட வேண்டும் என்பது வலிமையாக வலியுறுத்தப்படுகிறது.

பொல்லாத பொறாமை
பொறாமைதான், ஒரு மனிதனின் அழிவுக்கு வகைச் செய்கிறது. கிராமங்களிலே, " ஆமை புகுந்த வீடு உறுப்படாதது போல, பொறாமையுள்ள மனிதனும் உருப்பட மாட்டான்" என்ற சொல்வதுண்டு. காயின் ஆபேலின் இரத்தத்தைச் சிந்தியதற்கு அடிப்படைக் காரணமே, பொறாமைதான். பொறாமையிலிருந்து புறப்படுகிற அன்பிலாத்தனம், சினத்தில் வேருன்றி, பாவத்தில் பழிவாங்குதலில் முடிவடைகிறது. எனவேதான் வள்ளுவர்கூட, மிக அழகாக,
" அழுக்காறு, அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்" என்று சொல்லி, பொறாமை, ஆணவம், சினம், கடும்சொல் இந்நான்கும்
இல்லாததே அறம் என்கிறார்.. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொல்லி பாடத்திற்கு எதிர்பதமாக, ஆசைக்கு முன்பாக, ஏன் சினத்திற்கு முன்பாக " பொறாமையை" வள்ளுவர் முன்னிலைப்படுத்துவது இங்கே குறிப்பிடத்தக்கது (காண்க நீதி 27:4) பொறாமை என்பது தனிமனித ஆளுமையின் அழுகல் நோயாக இருக்கிறது. பொறாமை உள்ள மனிதர் வாழ்வில் முன்னேறுவதற்கு வழியுமில்லை: செல்வம் சேர்ப்பதற்கு வழி வகையுமில்லை. பொறாமையே ஒரு மனிதனின் அழிவிற்கு அஸ்திவாரமாக அமைகிறது. இது தன்னையும் அழிக்கும்@ தன்னைச் சார்ந்தவரையும் அழிக்கும். இன்றைய நற்செய்தி, இரக்கத்துடன் கூடிய நீதியைப் பற்றி வலியுறுத்தினாலும், அதன் பின்புலத்தில் மனிதர்களிடையே புரையோடிப்போன " பொறாமையின் கோரத்தாண்டவம்" பளிச்சிடுகிறது. " தாங்கள் தங்களுக்குரியதைப் பெற்றுக்கொண்டோம்" என்ற திருப்தி அடையாமல், " தங்களைப் போன்றே அவர்களும் கூலி பெற்றுக்கொண்டனரே" என்று பொறாமைப்படுகின்றனர். மாலை 5 மணிக்கு வந்து கூலி வாங்கியவரைப் பற்றி, மதியம் 3 மணிக்கு வேலைக்கு வந்தவர்களும் மற்றவர்களும் பொறாமைப்படுகின்றனர் 3 மணிக்கு வந்தவர்களைப்பற்றி, பனிரெண்டு மணிக்கு வந்தவர்களும் மற்றவர்களும் பொறாமைப்படுகின்றனர். பனிரெண்டு மணிக்கு வந்தவர்களைப் பற்றி, காலை 9 மணிக்கு வந்தவர்கள் பொறாமைப்படுகின்றனர். பொறாமைதான் அவர்களை ஒருவர் மற்றவருக்கு எதிராக முணுமுணுக்க வைக்கிறது: எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில், அவர்கள் ஒருவர் ஒருவரைப் பற்றி பொறாமைப்படுகின்றனர். இங்கே யாருக்கும் அநீதி இழைக்கப்பட வில்லை. பேசப்பட்ட கூலி பேசியவண்ணம் தரப்படுகிறது. தனக்குரிய முழுமனச் சுதந்திரத்துடன் செயல்படுகிற முதலாளி, இறுதியிலே அவர்கள் நாணிப் போகும்படி கேட்கிற கேள்வி, " நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்பதுதான். இங்கே தொழிலாளிகள் சக தொழிலாளிகள்மீதும், ஒரு கட்டத்தில் அவர் நல்லவராய் இருப்பதால் முதலாளிமீதும் பொறாமைப்படுவதையும் நற்செய்தியில் ஆண்டவர் நாசூக்காகச் சுட்டிக்காட்டுகிறார். " சொந்தக்காரரின் பெருமை அண்டை வீட்டாரின் பொறாமை" என்று ஒனிடா விளம்பர வாசகம் வாழ்க்கையின் எதார்தத்தை, நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்கிற பொறாமை குணத்தைப் படம் பிடிப்பதாக அமைகிறது. (1 கொரி. 3:3) அடுத்தவர் கொஞ்சம் நல்லாயிருந்தால், நாலுப் பணம் சேமித்தால், மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டால், பரிசு வாங்கினால், கொஞ்சம் சொத்து சேர்த்தால், ... அடுத்தவர் படுகின்ற காய்மகாரம் - பொறாமை ஆளையே காலிப்பண்ணிவிடுகிறது. எனவேதான் திருச்சபை காய்மகாரத்தை பொறாமையை தலையான பாவங்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறது.

விவிலியம் காட்டும் உண்மை
அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது (சாஞா2:24).காயின் ஆபேலின் மீது கொண்ட பொறாமை கொலையில் முடிந்தது(தொநூ 4:8). யாக்கோபின் மகன் யோசேப்பின் செல்வாக்கு பதினொரு சகோதரர்களும் பொறாமைப்படும்படி அமைகிறது. இறுதியில் கொலையில் முடியவேண்டிய யோசேப்பின் வாழ்க்கை, பாழடைந்த கிணற்றில் தள்ளப்பட்டு முடிந்தது (தொநூ 37:11). கோலியாத்தைக் கொன்றதால் கொடிகட்டிப் பறந்த தாவீதைக் கண்டு சவுல் பொறாமைக் கொண்டார்: பழிவாங்க துடித்தார்: அரசப்பதவியை இழந்தார் (1சாமு18:6-16). .. இவையெல்லாம் விவிலியத்தில் உள்ள ஒரு சில உதாரணங்கள் மட்டுமே!

இப்படி சமுதாயத்தில் பொறாமையால் அலைகின்ற மக்கள் ஆயிரம் ஆயிரம். தன்னிடம் திறமை இல்லை என்பது ஊரறிய தெரிந்திருந்தும், தன்னிடம் உள்ள அந்த குறையை ஏற்றுக் கொள்ள இயலாமல், அதனை மூடி மறைக்க பொறாமையால் அடுத்தவன் பெயரைக் கொடுப்பார்கள் இல்லாத அவதூறுகளைப் பரப்பிடுவார்கள். மேலதிகாரிகளிடம் பொய்ப்புகார் அளிப்பார்கள்.

பொறாமையின் ஊற்றுக்கண் இயலாமையின் வெளிப்பாடாக, சுய குறைகளை ஏற்றுக்கொள்ளாமையின் வெளிப்பாடாக அமைகிறது. எல்லா தொழிலாளர்களுமே, தாங்களும் வேலையின்றி முற்றத்தில் காத்துக் கிடந்த தினக்கூலிகள் என்ற நிலையை குறையை ஏற்றுக்கொண்டிருந்தால் நிச்சயம் பொறாமை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அப்படியில்லாத காரணத்தினால்தான் பொறாமைப்படுகின்றனர். ஆகையால் பொறாமையால் பகைத்து, பிரிந்து நிற்கிற அவர்களுக்கு பாடம் கற்பிக்கிற விதமாக முதலாளியே, " தோழரே" என்று அழைக்கிறார். " முதலாளி தொழிலாளி" என்ற பேதம் மறைந்து, சமத்துவ சமதாயம் கட்டமைக்கப்படுகிறது. " ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்- என் சகோதரன்" என்ற தோழமையுணர்வு வெளிப்படுத்தப்படுகிறது. அன்பு பொறாமைப்படாது (1 கொரி. 13:4) என்று புனித பவுலடியார் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. ஒரு முதலாளியே தன் தொழிலாளியை " தோழரே" என்று அழைக்கும்போது, ஏன் தொழிலாளி சக தொழிலாளியை தோழராக கருதி பொறாமைப்படாமல் வாழ முடியாது என்பது சிந்திக்க தக்கது.

இவ்வுலகில் பொறாமையால் வாழ்ந்தவர்களைவிட வீழ்ந்தவர்களே அதிகம்! பொறாமை தன்னை அழிக்கும்: அடுத்தவரை அழிக்க சூட்சமத்தைக் கற்றுத்தரும். வீழ்த்துகிறோம் என்று சொல்லி வீழ்பவர்களே அதிகம்! ஒரே கம்பெனியின் தயாரிப்புகள் போலியாக தயாரிக்கப்படுவதற்கு காரணம் பொறாமைதான். எனவே " ஒரிஜினல்" என்ற 3னு ஹோலோகிராம் வில்லைகள் ஒட்டப்படுகின்றன. இப்படி போலிகளின் நடமாட்டத்திற்கு பொறாமைதான் காரணம். பொறாமையை வேரறுக்காத சமூகமும், எந்த ஒரு தனிமனிதனும் முன்னேறியதாக வரலாறு இல்லை. அமெரிக்கா-ரஷ்யா பனிப்போர் நல்ல உதாரணம்.(காண்க சீஞா. 14:8 சீஞா. 30:24 சாஞா. 6:23)

என்ன செய்ய வேண்டும்?
பொறாமையை களைந்திட என்ன செய்ய வேண்டும்? முதலாவதாக, நம்மிடம் உள்ள பொறாமைக் குணத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். இது மாபெரும் சவால். இரண்டாவதாக, உங்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் காணுங்கள்: அதில் நல்ல கவனம் செலுத்துங்கள். உங்களுக்க மேலிருப்பவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். மூன்றாவதாக, நீங்கள் நிர்ணயித்திருக்கிற வாழ்க்கை இலட்சியங்களை அடைய உங்களை நீங்களே ஊக்குவித்துக்கொள்ளுங்கள். நான்காவதாக, மற்றவர்கள் சாதித்திருக்கிற சாதனைகளை அங்கீகரித்து மனமுவந்து பாராட்டுங்கள்: தாழ்ச்சி உங்களிடம் வரும்போது தற்பெருமையும் பொறாமையும் சுக்கு நூறாகிடும். அவர்களுக்கு, மகிழ்ச்சியாக தோன்றுங்கள். ஐந்தாவதாக, பொறாமை உங்களிடம் இருக்கிறது என்று சொன்னால், நல்ல உளவியலாளரிடம் பகிர்ந்து தீர்வு கண்டிடுங்கள். பொறாமை வருகிறது என்ற உடனே அந்த சூழலை நன்றாக உணர்ந்து நின்று நிதானித்து பரிசோதனைச் செய்யுங்கள் வீண் பெருமையைத் தேடாமலும், ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாமலும், ஒருவர்மீது ஒருவர் பொறாமைப்படாமலும் இருப்போமாக! (கலா. 5:26). நீங்கள் 1.மிகவும் நல்லவரா? 2.நல்லவரா? 3.கெட்டவரா? 4. மிகவும் கெட்டவரா? சிந்தித்துப் பாருங்களேன்.
குடந்தை ஞானி
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்  - குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி



நீதியா ? இரக்கமா?

ஒர்‌ அருமையான தாய்‌! அவளுக்கு ஒரே மகன்‌. அவன்‌ ஒரு குறும்புக்காரச்‌ சிறுவன்‌! தாய்‌ எதைச்‌ சொன்னாலும்‌ அதற்கு எதிர்மாறாகத்தான்‌ அவன்‌ செயல்படுவான்‌. அந்தத்‌ தாயும்‌, மகனும்‌ வாழ்ந்த குடிசைக்குப்‌ பக்கத்திலே ஒரு பெரிய ஆறு! அந்த ஆற்றிலே முதலைகள்‌ ஏராளம்‌. அந்த ஆற்றில்‌ தனியாக அந்தச்‌ சிறுவன்‌ குளிக்க விரும்பினான்‌. தாய்‌ எவ்வளவோ தடுத்துப்‌ பார்த்தும்‌ அச்சிறுவன்‌ ஆற்றில்‌ இறங்கி குளித்துக்கொண்டிருந்தான்‌. வீட்லே வேலை செய்து கொண்டிருந்த தாயின்‌ கண்கள்‌ இரண்டில்‌ ஒன்று வேலை மீதும்‌, மற்றொன்று மகன்‌ மீதும்‌ பதிந்திருந்தன!

திடீரென முதலை ஒன்று சிறுவனின்‌ கால்களைப்‌ பிழத்துக்‌ கொண்டது! ஐயோ! அம்மா என்னைக்‌ காப்பாற்றுங்கள்‌. இது ஊதாரிப்‌ பிள்ளையின்‌ கூக்குரல்‌! நீதியின்‌ படி அவன்‌ தண்டனைக்குரியவன்‌! ஆனால்‌ தாயோ ஓடிப்போய்‌ அவனது கைகளைப்‌ பிழத்துக்‌ கொண்டாள்‌. முதலைக்கும்‌, தாய்க்குமிடையே பெரும்‌ போராட்டம்‌! அபயக்குரல்‌ கொடுத்தாள்‌. அதைக்கேட்டு ஓடி வந்தவர்களில்‌ ஒருவர்‌ துப்பாக்கியால்‌ முதலையைச்‌ சுட்டார்‌! அச்சிறுவனை விட்டுவிட்டு அந்த முதலை தண்ணீருக்குள்‌ மறைந்தது. எப்பழயோ சிறுவன்‌ காப்பாற்றப்பட்டான்‌.

இந்தத்‌ தாயைப்‌ போன்றவர்தான்‌ கடவுள்‌. இல்லை! இல்லை! இவளை விட, ஏன்‌ எல்லாத்‌ தாய்களையும்‌ விட அதிகமாக நம்மீது இரக்கமழையைப்‌ பொழிபவர்‌ நம்‌ கடவுள்‌ [எசா 49:15-16). இந்த உண்மையைத்தான்‌ இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துச்‌ சொல்கின்றது, நீதியும்‌, இரக்கமும்‌ ஒன்றுக்‌ கொன்று முரணானவை அல்ல! மாறாக நீதியை விட இரக்கம்‌ ஒரு படி உயர்ந்தது. பழைய ஏற்பாட்டிலே நீதியின்படி தண்டிக்கப்பட வேண்டிய நினிவே மக்கள்‌, இரக்கத்தின்படி மன்னிக்கப்படுகின்றனர்‌ என்பதை நாம்‌ காண்கின்றோம்‌ (யோனா 3:1-10]. புதிய ஏற்பாட்டிலே நீதியின்படி தண்டிக்கப்படவேண்டிய பாவத்தில்‌ பிடிபட்ட பெண்‌, இரக்கத்தின்படி மன்னிக்கப்படுவதைப்‌ பார்க்கின்றோம்‌ (யோவா 81-11).
இதனால்தான்‌ இன்றைய முதல்‌ வாசகத்திலே எசாயா மன்னிப்பதில்‌ கடவுள்‌ தாராள மனத்தினர்‌ [எசா 55:7ஆ) என்கின்றார்‌. இன்றைய நற்செய்தியிலே வரும்‌ நிலக்கிழார்‌ போன்றவர்‌ நம்‌ இறைவன்‌ ; அவர்‌ மிகவும்‌ தாராளமாக தனது அருள்‌ கொடைகளை அவரது மக்களுக்கு வாரி வழங்குபவர்‌. இப்படிப்பட்ட கடவுளின்‌ அற்புதப்‌ புனிதர்களில்‌ ஒருவராக விளங்கியவர்‌ புனித பவுலடிகளார்‌. அவர்‌ இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ விரைவாக இறந்து இயேசுவோடு வாழ ஆசைப்பட்டாலும்‌ அந்த ஆசையை அவரது மக்களுக்காகத்‌ தள்ளிவைக்கத்‌ தயாராக இருப்பதாகக்‌ கூறுகின்றார்‌.

மக்களின்‌ நலனே என்‌ நலன்‌ என்று நாம்‌ ஒவ்வொருவரும்‌ வாழ இன்றைய வாசகங்கள்‌ நமக்கு அழைப்பு விடுக்கின்றன. மன்னர்‌ எதுக்கு மான்‌ மேல ஏறி வர்றாரு? எல்லாருக்கும்‌ அவரு நீதிமான்னு தெரியணுமாம்‌, அதுக்குத்தான்‌. எல்லாரும்‌ நம்மை நீதிமான்‌ என்று வாழ்த்த வேண்டூம்‌ என்று விரும்புகின்றோம்‌. அது போலவே நாம்‌ எல்லாராலும்‌ இரக்கமுடையவர்‌ என்றும்‌ போற்றப்பட ஆசைப்படுவோமாக.

மேலும்‌ அறிவோம்‌ :
புத்தேன் ‌ உலகத்தும்‌ ஈண்டும் பெறல்‌அரிதே
ஒப்பரலின்‌ நல்ல பிற (குறள்‌ : 213)

பொருள்‌: பிறருக்கு உதவும்‌ ஒப்பற்ற பண்பாகிய ஒப்புரவுக்கு நிகரான பிறிதொன்றை வானகத்திலும்‌ வையகத்திலும்‌ காண்பது அரிதாகும்‌.

 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்


கணக்குக்கும் காதலுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? இருபத்து ஒன்றையும் பதினெட்டையும் கூட்டினால் அது கணககு இருபத்து ஒன்று பதினெட்டைக் கூட்டிக்கொண்டு ஓடினால் அது காதல். அதாவது 21 வயது ஆண் 18 வயது பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓடினால் அது காதல், தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உதறித் தள்ளிவிட்டு ஒரு பையனை நம்பி அவனோடு ஒரு பெண் ஓடுவது ஏன்? காதலுக்குக் கண்ணில்லை. மற்றவர்கள் கணிப்பில் காதலர்கள் மடையர்கள். காதலர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் செயல் ஒரு சாதனை.

அன்பே உருவான கடவுளின் காதலுக்கும் கண்ணும் இல்லை, கணக்கும் இல்லை. காதலர்கள் வழி தனிவழி. அவ்வாறே கடவுளின் வழியும் தனிவழி. அவரது வழியும் செயல்பாடுகளும் முற்றிலும் வேறுபட்டவை என்று கடவுளே இன்றைய முதல் வாசகத்தில் கூறுகிறார். "என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல. உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல" (எசாயா 55:3)

கடவுளின் வழிகளும் பண்புகளும் என்ன? என்பதை இன்றைய பதிலுரைப் பாடல் பட்டியலிட்டுக் காட்டுகிறது ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர் பேரன்பு கொண்டவர் ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர் தான் உண்டாக்கிய அனைததின் மீதும் இரக்கம் காட்டுபவர்" (திப 158:9).

கடவுள் நீதியுள்ளவர். ஆனால் அவர் தமது நீதியை இரக்கத்தின் மூலம் காட்டுகிறார். இந்த அடிப்படையான இறையியல் உண்மையைக் கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாள்களை அமர்த்திய நிலக்கிழார் உவமை வாயிலாக வெளிப்படுத்துகிறார் (மத் 20:1-6) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அதாவது 12 மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும் அதே கூலி மாலை 5 முணி முதல் 6 மணி வரை, அதாவது 1 மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும் அதே கூலி கனக்கு அடிப்படையில் அது அப்பட்டமான அநீதி ஆனால் காதல் அடிப்படையில் இது முற்றிலும் சரியானது.

"திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாள்களை அமர்த்திய நிலக்கிழார்" உவமையில் பொதிந்துள்ள இறையியல் உண்மையை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை. அதாவது 12 மணி நேரம் வேலை செய்தவர்கள் இஸ்ரயேல் மக்கள் கடவுள் அவர்களுக்கு மீட்பளிக்கிறார் மாலை 5 மணி முதல் 6 மணி வரை மட்டும் வேலை செய்தவர்கள் பிற இனத்தவர்கள் அவர்களுக்கும் கடவுள் மீட்பளிக்கிறார். இதில் அநீதி ஒன்றுமில்லை.

ஏனெனில் மீட்பு என்பது உழைப்புக்குக் கிடைக்கும் கூலியல்ல மாறாக, அது கடவுள் மனிதருக்கு வழங்கும் இலவசக் கொடை அதை எவரும் தமது சொந்த முயற்சியால் பெற இயலாது.அனைவர்க்கும் இலவசமாக மீட்பை வழங்குவதன் மூலம் கடவுள தமது நீதியை வெளிப்படுத்துகிறார். கடவுள் நீதிவேறு மனித நீதிவேறு. மனித நீதி சட்டத்தை அடிப்படையாகக் கொணடது. கடவுள் நீதி இரக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட பரிசேயரின் ஒழுக்கத்தைவிட அன்பை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டிய கிறிஸ்துவின் சீடர்கள் ஒழுக்கம் உயர்ந்திருக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் விண்ணரசுக்குள் புகமுடியாது என்று கிறிஸ்து தெளிவுபடக் கூறியுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது (மத் 5:20) கடவுளிடம் ஒருதலைச் சார்பு கிடையாது அவர் எல்லார்க்கும் தந்தை அனைவரும் மீட்படைய வேண்டுமென்று அவர் விரும்புகிறார் (திமொ 2:1). கடவுள் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் தமது மழையையும் கதிரவனையும் கொடுக்கிறார் (மத் 5:45) கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை. எல்லா இனத்தவரிலும் கடவுளுக்கு அஞ்சி நடப்போர் மீட்படைவது உறுதி (திப 10:34). கடவுளின் இத்தகைய உலகளாவிய மீட்பின் திட்டத்தைக் கண்டு நாம் பொறாமைப்படக்கூடாது எல்லார்க்கும் சமமான கூலி கொடுத்த நிலக்கிழாரிடம் முணுமுணுத்த வேலையாள்களிடம் நிலக்கிழார்: "நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" (மத் 20:15) என்று கேட்கிறார். ஒருவருடைய பெரிய பகைவன் பொறாமை, அவருக்கு வேறு பகைவர்கள் இல்லையென்றாலும் அவரை அழிப்பதற்கு பொறாமை ஒன்றே போதும் என்கிறார் வள்ளுவர்.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு என்பது (குறள் 65)

நமக்குக் கிடைக்கும் நன்மை பிறருக்கும் கிடைப்பதைக் கண்டு நாம் மகிழ வேண்டும். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதே நமது நிலைப்பாடாக இருக்க வேண்டும் "வானகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நாமும் இரக்கம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும்" (லூக் 8:36)

ஒரு வீட்டிலே மனைவி கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடவில்லை. ஏனெனில் அவருடைய கணவர் அவருக்கும், அவரது மாமியாருக்கும் மற்றும் அவ்வீட்டு வேலைக்காரிக்கும் ஒரே விலையில் பட்டுப்புடவை வாங்கி விட்டார். ஆத்திரம் அடைந்த மனைவி கணவரிடம், "என்னையும் வேலைக்காரியையும் ஒரே மாதிரி நடத்தலாமா?" என்று கேட்டு கணவரைச் சரமாரியாகத் திட்டினார்.
தனக்குக் கிடைத்த புடவை வேலைக்காரிக்கும் கிடைத்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு வீட்டில் ஒருநாள் வேலைக்காரி வேலைக்கு வரவில்லை. மனைவி கணவரிடம், "என்னங்க! வேலைக்காரி வரல எனக்குக் கையே ஒடிஞ்சுபோச்சு" என்றார். ஆனால் கணவர் மனைவியிடம், "உனக்காவது கை ஒடிஞ்சுபோச்சு எனக்கு மனசே ஒடிஞ்சுபோச்சு" என்றார். இதைக் கேட்ட மனைவி தன் தலையில் இடி விழுந்ததைப் போன்று அதிர்ந்து போனார். வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்துக்கொள்வது ஒரு முறைகேடான செயல்: கண்டனத்திற்கு உரியது. ஆனால் வேலைக்காரியையும் மரியாதையுடன் நடத்துவது பாராட்டுதற்குரியது. பிறப்பின் அடிப்படையிலும் மீட்பின் அடிப்படையிலும் அனைவரும் சமம்.

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்
அவ்வாறே மீட்பும் ஒக்கும் எல்லா மனிதர்க்கும். (குறள் 92 )
"இது எனது உடன்படிக்கையின் இரத்தம் பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்" (மத் 26:28).


 
 
மறையுரைச்சிந்தனை  -திருவுரைத் தேனடை அருள்பணி இ.லூர்துராஜ் -

நீதி பற்றி இறைவெளிப்பாடு
கடவுள்‌ மனிதனைத்‌ தம்‌ உருவிலும்‌ தம்‌ சாயலிலும்‌ படைத்தார்‌. (தொ.நூ. 1:26). கடவுளின்‌ சாயல்‌ என்றால்‌ ... ? அவருடைய இயல்பில்‌, பண்பில்‌, உறவு நிலையில்‌ நன்மைத்தனத்தில்‌ பங்குபெற மனிதனை அழைக்கிறார்‌ என்று பொருள்‌. ஆனால்‌ மனிதன்‌ என்ன செய்கிறான்‌?

கடவுளின்‌ எண்ணங்களையும்‌ வழிமுறைகளையும்‌ தனதாக்குவதற்குப்‌ பதிலாகத்‌ தன்‌ எண்ணங்களையும்‌ வழிமுறைகளையும்‌ கடவுளுடையதாக்க முயல்கிறான்‌. இதுதானே சிலை வழிபாடு!

அதனால்தான்‌ இறைவாக்கினர்‌ எசாயா வழியாக இறைவன்‌ மிக அழுத்தமாகச்‌ சொல்கிறார்‌: " என்‌ எண்ணங்கள்‌ உங்கள்‌ எண்ணங்கள்‌ அல்ல. உங்கள்‌ வழிமுறைகள்‌ என்‌ வழிமுறைகள்‌ அல்ல... மண்ணுலகிலிருந்து விண்ணுலகம்‌ மிக உயர்ந்து இருப்பது போல உங்கள்‌ வழிமுறைகளைவிட என்‌ வழிமுறைகளும்‌ உங்கள்‌ எண்ணங்களைவிட என்‌ எண்ணங்களும்‌ மிக உயர்ந்திருக்கின்றன" " (எசா. 95:8,9). அதற்கு எடுத்துக்காட்டு இன்றைய நற்செய்தி.

" எனக்குரியதை நான்‌ என்‌ விருப்பப்படி கொடுக்கக்கூடாதா? அல்லது நான்‌ நல்லவனாய்‌ இருப்பதால்‌ உமக்குப்‌ பொறாமையா?" (மத்‌. 20:15). கடவுளின்‌ பதிலாள்‌ போல்‌ உவமையின்‌ தலைவன்‌ நிலக்கிழார்‌ கட்ட கேள்வி நெஞ்சை உலுக்குகிறது.

உழைப்பை மையப்படுத்தி அல்ல, உழைக்கின்ற மனிதரை மமயப்படுத்திய, அவர்தம்‌ மாண்பினை மையப்படுத்திய, அவர்தம்‌ வாழ்க்கைச்‌ சூழலை மையப்படுத்திய செயல்பாடு. சுருங்கச்‌ சொல்லின்‌ மரபை மீறி மனிதரைத்‌ தேடி, கூலி கொடுத்துவருகிறார்‌. அன்பும்‌ (இரக்கமும்‌ நீதிநியாயங்களுக்குக்‌ கட்டுப்படுவதில்லை.)

பிற்பகலில்‌ அல்லது மாலையில்‌ வந்தவர்கள்‌ எல்லாரும்‌ சோம்பேறிகளா? ஊர்‌ சுற்றிகளா? அல்ல. வேலை வாய்ப்புத்‌ தேடிக்‌ காத்திருப்பவர்கள்‌. வேலை இல்லையே என்று அங்கலாய்ப்பவர்கள்‌. " எங்களை எவரும்‌. வேலைக்கு அமர்த்தவில்லை" (மத்‌. 20:7). வேலையின்மை இன்றைய இளைஞர்களின்‌ வாழ்க்கைப்‌ பிரச்சனை. அது மட்டுமன்று, காலை ஆறு மணிக்கே திராட்சைத்‌ தோட்டத்திற்குச்‌ சென்றவர்கள்‌ கூட எந்த அளவுக்கு நேர்மையோடு உழைத்தார்களோ?

நமது தகுதிக்கு ஏற்பக்‌ கடவுள்‌ செயல்படத்‌ தொடங்கினால்‌ நமது நிலை என்னாகும்‌? நீதிக்கு ஏற்ப அன்று, இரக்கத்திற்கு ஏற்ப இயங்குபவர்‌ நம்‌ கடவுள்‌. மீட்பு என்பதே நமது அறச்செயல்களின்‌ பொருட்டு அன்று, இறைவனின்‌ அருள்‌ வளத்திற்கு ஏற்ப நாம்‌ பெறுவது. " நம்‌ மீட்பராம்‌ கடவுளின்‌ நன்மையும்‌ மனித நேயமும்‌ வெளிப்பட்டபோது, நாம்‌ செய்த அறச்செயல்களின்‌ முன்னிட்டு அன்று, மாறாகத்‌ தம்‌ இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும்‌ நீரினாலும்‌ புதுப்பிக்கும்‌ தூய ஆவியாலும்‌ கடவுள்‌ நம்மை மீட்டார்‌" (தீ.து. 3:4-5) (மேலும்‌ காண்க எபேசி. 2:4-8)

எனக்கு ஒரு கண்‌ போனாலும்‌ சரி, அடுத்தவனுக்கு இரு கண்களும்‌ போக வேண்டும்‌ என்று நினைத்துப்‌ பழக்கப்பட்டவர்கள்‌ நாம்‌. " விரும்புவதைக்‌ கேள்‌. எதுவானாலும்‌ தருகிறேன்‌. ஆனால்‌ உனக்குக்‌ கொடுப்பதை இருமடங்காக உன்‌ அண்டை வீட்டுக்காரனுக்குக்‌ கொடுப்பேன்‌" என்று கடவுள்‌ வாக்களித்தபோது, " எனக்கு ஒரு வீடு வேண்டும்‌ என்றால்‌ பக்கத்து வீட்டக்காரனுக்கு இரண்டு விடல்லவா கிடைக்கும்‌ அது எப்படி" என்று நினைத்த ஒருவன்‌, " எனக்கு ஒரு கண்ணைக்‌ குருடாக்கும்‌" என்று வேண்டிக்‌. கொண்டானாம்‌!

நமக்குக்‌ கிடைப்பதை நாம்தாம்‌ உறுதி செய்கிறோம்‌. ஆக எல்லாம்‌ நம்‌ கையில்தான்‌ இருக்கிறது.

ஒருவருக்கு வீடுகளில்‌ ஒடு மாற்றுகிற வேலை. அது தொடர்பாக போய்க்கொண்டிருந்தபோது வழியில்‌ ஒரு மரத்தடியில்‌ சாமி சிலை ஒன்று " இதோ பாரப்பா, இங்கே வா" என்று அழைத்தது.நடுங்கிக்‌ கொண்டே போனபோது, " பயப்படாதே, உன்‌ காலடியில்‌ சிறிது தோண்டிப்பார்‌'" என்றது சிலை. தோண்டியதும்‌ அவனுக்குத்‌ தலைகால்‌ புரியவில்லை. துவரம்பருப்புப்போல ஒரு பானை நிறைய தங்க மணிகள்‌. பானையில்‌ உள்ளதையெல்லாம்‌ ஒரு துண்டில்‌ கொட்டி மூட்டை கட்டினான்‌. " பானையிலும்‌ நாலு தங்க மணிகளையாவது போட்டுவை" என்று சிலை சொன்னதைக்‌ கேட்டு எண்ணி நான்கு தங்கமணிகளை மட்டும்‌ பானையில்‌ போட்டுப்‌ புதைத்துவிட்டு, தங்கமணி மூட்டையோடு புறப்பட்டுவிட்டான்‌.

வேலை செய்யச்‌ சென்ற இடத்தில்‌ வீட்டு உத்திரத்தில்‌ மூட்டையைக்‌ கட்டித்‌ தொங்கப்போட்டுவிட்டு ஓடு மாற்றத்‌ தொடங்கினான்‌. அந்த வீட்டுக்கார அம்மா சமையல்‌ செய்யத்‌ தொடங்கியபோது துவரம்‌ பருப்பு இல்லாததை உணர்ந்தாள்‌. கடைக்குப்‌ புறப்பட்டபோது மூட்டை கண்ணில்‌ பட, " இது என்னப்பா?" என்று கேட்டாள்‌. " அதுவா, துவரம்‌ பருப்பு வீட்டுக்காக வாங்கி வைத்திருக்கிறேன்‌" என்றான்‌. " சரி, அவசரத்துக்கு கொஞ்சம்‌ எடுத்துக்கிட்டு அப்புறம்‌ வாங்கிக்‌ கொடுத்திடலாம்‌'" என்று நினைத்து மூட்டையைத்‌ திறந்தபோது " அவ்வளவும்‌ தங்கம்‌' என்று கண்டதும்‌ அதை முழுதும்‌ எடுத்துக்‌ கொண்டு, துவரம்‌ பருப்பு வாங்கி அதில்‌ வைத்து விட்டாள்‌.

வேலை முடிந்து பார்த்த அவனுக்கு அதிர்ச்சி. வீட்டுக்காரியிடம்‌ " இதில்‌ தங்கம்‌ இருந்ததே' என்று கேட்டான்‌. " என்ன கனவு காணுறியா?" " என்று கிண்டல்‌ செய்ய, தலையில்‌ கையை (வைத்துக்‌ கொண்டு, சிலையிடம்‌ சென்று முறையிட்டான்‌. உடனே சிலை பேசியதாம்‌. " நான்‌ ஒன்றும்‌ மோசம்‌ பண்ணவில்லை. அந்தத்‌ தங்கம்‌ போக வேண்டியது அந்த அம்மாவிடம்தான்‌. அதைக்‌ கொண்டு போக வேறு ஆள்‌ கிடைக்கல. உன்‌ தலையில்‌ ஏத்தி அனுப்பிவிட்டேன்‌. கவலைப்‌ படாதே. உனக்குரியது அந்தப்‌ பானையில்‌ இருக்கு." இவன்‌ தன்னையே நொந்து கொண்டான்‌. " தரித்திரப்புத்தி ... எனக்கு. அப்பவே கொஞ்சம்‌ நிறைய அள்ளிப்‌ பானையில்‌ போட்டிருக்கக்கூடாதா?" யாருக்கு எது கிடைக்கணுமோ அதுதானே கிடைக்கும்‌!

முதலில்‌ வேலைக்கு வந்தவர்கள்‌ தங்களுக்குக்‌ கூலி குறைந்துவிட்டது என்று முறையிடவில்லை. பின்னால்‌ வந்தவர்களோடு எப்படித்‌ தங்களைச்‌ சமப்படுத்தலாம்‌ என்பதுதான்‌ அவர்களின்‌ முறையீடு. மனிதனுக்கு மனிதன்‌ கொண்டிருக்கும்‌ பொறாமை, பகைமை, போட்டி மனம்‌, காழ்ப்புணர்ச்சி, தன்னலம்‌ ஆகியவை இதன்‌ மூலம்‌ வெளிப்படுகின்றன. மனித உறவைப்‌ பாழ்படுத்தும்‌ இத்திய பண்புகள்‌ இறைவனுக்கு முன்பாகவும்‌ எதிராகவும்‌ முணுமுணுக்கச்‌ செய்கின்றன. (மத்‌. 20:11-12). ஊதாரி மைந்தன்‌ உவமையில்‌ மூத்தமகன்‌ தந்தையிடம்‌ முறையிடுவதை ஒப்பிட்டுப்‌ பார்க்கலாம்‌ (லூக்‌. 15:29-30). இப்படி முணுமுணுப்பவர்களைக்‌ கூட " நண்பா" என்று தலைவன்‌ அழைப்பது அவரது தாராளமனத்தை வியக்க வைக்கிறது.

நீதியும்‌ இரக்கமும்‌ கலந்த சமத்துவச்‌ சமுதாயம்‌ வேண்டும்‌. இதுமட்டும்தானா உவமையின்‌ கருத்து? நற்செய்தி என்பது வெறும்‌ சமூகவியல்‌ நூலன்று. இறைவெளிப்பாட்டை விளக்கும்‌ நூல்‌. இறைவெளிப்பாட்டின்‌ எந்த அம்சத்தை? இதற்கு இயேசுவின்‌ காலத்தில்‌ நிலவிய யூதர்களின்‌ கருத்தை அறிய வேண்டும்‌.

யூதர்கள்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட கடவுளின்‌ செல்லப்பிள்ளைகள்‌. எனவே மேம்பட்டவர்கள்‌. இறையாட்சியில்‌ முதலிடமும்‌ முன்னுரிமையும்‌ பெற வேண்டியவர்கள்‌. பிற இனத்தாருக்கு இணையாக தங்களைக்‌ கருதக்கூடாது என்ற கணிப்பில்‌ வாழ்ந்தவர்கள்‌. எனவே தங்களுக்கு மீட்பு ஒரு வெள்ளிக்‌ காசாகக்‌ கொடுக்கப்பட்டால்‌, பிறருக்கு அதைவிடக்‌ குறைவாகக்‌ கொடுக்கப்பட வேண்டும்‌. பிறருக்கு ஒரு வெள்ளிக்காசு என்றால்‌ தங்களுக்குக்‌ கூடுதலாகக்‌ கொடுக்கப்பட வேண்டும்‌ என்று எதிர்பார்த்தவர்கள்‌. ஆனால்‌, கடவுளின்‌ எண்ணப்படி கடவுளின்‌ அரசில்‌ அனைவரும்‌ சமமே! பூதர்களாயினும்‌ கிரேக்கர்களாயினும்‌ ஆண்‌ ஆயினும்‌ பெண்‌ ஆயினும்‌ அடிமையாயினும்‌ உரிமைக்‌ குடிமகனாயினும்‌ அனைவரும்‌ சமமே!

ஒவ்வொருவரும்‌ தனது திறமைக்கேற்றவாறு பணி செய்ய வேண்டும்‌. ஒவ்வொருவருக்கும்‌ அவரவர்‌ தேவைக்கேற்றவாறு தரப்பட வேண்டும்‌. இதுவே நீதியின்‌ தத்துவம்‌ பற்றிய இறை வெளிப்பாடு.


 
சிந்தனைப் பயணம்: அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச
 

==============================================================
 
ஞாயிறு மறையுரை - திரு. சின்னப்பன் டிசில்வா. - வெலிங்டன்.ஊட்டி


இன்றைய நற்செய்தி மத் 20 : 1- 16a ல் இறை மகன் விண்ணக வாழ்வு என்றாலும் மண்ணக வாழ்வு என்றாலும் நாம் பின்பற்ற வேண்டிய வெற்றியின் வழிமுறைகளை நிழக்கிழார் உவமை வழியாக வரிசைப் படுத்துகின்றார்.

1). தேடல் (மத் 20:1) விடியலின் தேடல்; விடை தரும் தேடல்.
"நிலக்கிழார் விடியற்காலையில் வெளியே சென்று வேலைக்கு ஆட்களை தேடுகின்றார்"

2). ஒப்பந்தம் (மத் 20:2) இணைந்து செயல்பட ஒப்பந்தம் அவசியம்.
உழைப்பதற்கு உரிய கூலி தரப்படும் என்ற ஒப்பந்தத்தில் வேலைக்கு ஆட்களை அமர்த்துகின்றார்.

3). அழைப்பு. (மத் 20:3-6a) அற்பமானது அல்ல, அவசியமானது. ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேலைக்கு ஆட்களை அனுப்புகிறார்.

4). காரணமும் காரியமும். (மத் 20:6b, 7)
யாரும் அழைக்கவில்லை எனவே வேலை கிடைக்கவில்லை‌.

5). நிபந்தனை (மத் 20: 8-9) நிறைவு பெற்றது. கூலி கொடுக்கப் பட்டது கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும் என்றார் (மத் 20: 8b)

6). எதிர்பார்ப்பு‌ (மத் 20:10) ஒப்பந்தத்திற்குள் இருப்பது நன்மை தரும்.
முதலில் வந்து காலை முதல் வேலை செய்தவர்கள் அதிக கூலியை எதிர்பார்த்தார்கள்

7). முறையீடும், ஒப்பீடும் (மத் 20: 11-12) முறையீடு தவறல்ல ஆனால் ஒப்பிடுதல் முறையல்ல. முதலில் வந்தவர்கள், எங்களோடு கடைசியில் வந்த இவர்களையும் இணையாக்கி விட்டீரே" என்றார்கள்.

8). தெளிவு படுத்துதல் (மத் 20:13) ஒப்பந்தம் மீறப்படவில்லை. ஒப்புக்கொண்ட கூலி முறையாக தரப்பட்டது .என் எடுத்துக் கூறி ஐயம் அகற்றப்பட்டது.

9). ஏற்ப்புடமை (மத் 20:14) நமக்குரியதைப் பெற்றுக் கொள்வதே நமக்கு சிறப்பு.

10). உரிமை,விருப்பம் (மத் 20:15) என் உரிமை என் விருப்பம் என்பது நன்மையைச் சார்ந்ததாய் இருக்க வேண்டும்.

11). ஏற்றத்தாழ்வு இல்லா சமநிலை. (மத் 20:16) இறைவன் முன் அனைவரும் சமம். வாழ்வின் வெற்றியின் மதிப்பீடுகளை வரிசைப்படுத்தி தந்த இறைவன்; நிலக்கிழார் வழியாக இன்றைய நவநாகரிக காலகட்டத்தில் அனைவருள்ளும் கேள்வியை எழுப்பும் சிந்திக்க வைக்கும் ஒரு உரிமை போராட்டத்தை நம்முன் நிறுத்துகின்றார்.
மத் 20:15ல் "எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்றார்.
இந்த "என் விருப்பம் என் உரிமை" என்பது நமக்கு புதியது அல்ல.

நமது அன்றாட வாழ்க்கையில் தனி மனிதன் முதல், குடும்பம், சமூகம், நகரம், நாடு என வாழும் அனைத்து மக்களின் மத்தியில் குறிப்பாக வாலிப சமூகத்தில் இந்த என் விருப்பம் என் உரிமை என்ற கோட்பாடு அநேகமாக அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் மாபெரும் கேள்விக்குறியாக இன்று நிற்கின்றது.

இந்த கோட்பாடு தனி மனித சுதந்திரத்தை எவ்வளவு அதிகப்படுத்துகின்றதோ அதைவிட அதிகமாக அடுத்தவர்களின் மதிப்பீடுகளைச் சிறிதும் மதிக்க மறுக்கின்றது. பெற்றோர், பிள்ளைகள், உறவுகள், நண்பர்கள், அதிகாரிகள், ஏன் ஆசான்கள் உட்பட அனைவருக்கும் அதிகமான மன உளைச்சலுக்கு காரணியாக இந்த கோட்பாடு இன்று செயல்படுகின்றது. ஏன்? ஏனெனில் சுயநலம் மிக்கதாக இதனை இன்று பயன்படுத்த முயற்சிப்பதால் வேதனையின் விதையாக விஸ்வரூபம் எடுக்கின்றது.

விவிலியத்தில் கூட என் விருப்பம் என் உரிமை என்ற கோட்பாட்டால் ஊதாரி மைந்தன் உவமையில் வரும் இரு சகோதரர்களும் அவர்களுடைய சுயநல சிந்தனையால் மகிழ்ச்சியை இழந்தவர்களாக நிற்கிறார்கள். அதேவேளை தந்தையின் "மக்கள் நலம் பேனும்" என் விருப்பம் என் உரிமை என்ற கோட்பாடு, திருந்தி திரும்பி வந்த இளையவனை மைந்தன் ஆகவும்; வயலில் உழைத்துவிட்டு வந்து வாயிலில் நின்ற மூத்தவனை அவருடைய சொத்துகளுக்கு உரிமையாளனாகவும் ஆகச் செய்தது.

சுயநல விருப்பங்களால் வேதனைகளை விலைக்கு வாங்காமல் ஊவமையில் வரும் தந்தையைப் போலவும் இன்றைய நற்செய்தியில் வரும் நிலக்கிழார் போலவும் பிறர் நலம் பேணும் என் உரிமை என் விருப்பம் என்ற கோட்பாட்டில் நாமும் நல்லவர்களாக வாழ்ந்திட உறுதி கொள்வோம்.

மேலும் உவமையில் வரும் வேலை ஆட்களைப் போல் தகுந்த தயாரிப்பு மிக்க தகுதியுடன், உரிய இடத்தில், காலம் கனிந்து வரும் வரை, காத்திருக்கும் போது - அழைப்பும் நிச்சயம். அந்த அழைப்பை; முழு மனதுடன் ஏற்று கீழ்ப்படியும் போது‌ உரிய ஊதியமும் நிச்சயம் என்ற நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். குறிப்பாக. பொருளாதாரப் போராட்டத்தை சந்திக்கும் வாலிப உள்ளங்கள் வேலைக்காக மாலை ஐந்து மணிக்கும் காத்திருந்த வேலையாட்களைக் கண்டு இப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

"எச்சரிக்கை" திருமணஆடை (தகுதி) இல்லாததால் அழைக்கப்பட்டவர்கள் பந்தியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அது போல முன் தயாரிப்புடன் - எண்ணையுடன் சென்ற ஐந்து கன்னியர் மட்டுமே மணவாளனுடன் மகிழ்ந்திருக்க அனுமதிக்கப்பட்டார்கள். அது மட்டுமல்ல உரிய இடத்தில் இருந்ததால் சாவின் விளிம்பிலும் நல்ல கள்வனால் விண்ணகத்தைக் காண முடிந்தது.

கடந்த வார நற்செய்தியில் மன்னிப்பைத் தந்த - தரும் எஜமானனாக வாழ அழைத்த இறைவன், இந்த வாரம் நிலக்கிழாராகவோ, வேலையாட்களாகவோ வாழும் வாழ்வை நம் முன் வைக்கின்றார் அதே வேளை அவருடைய பார்வையில் நமது விருப்பமும் நமது உரிமையும் கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு (பிலிப்பியர் 1:27a)

நல்லவர்களுக்கு உரிய நன்மை பயப்பதாக இருக்க வேண்டும் என்பதை நினைவு படுத்துகிறார் . எனவே ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே, அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுவோம். ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். (எசாயா 55:6-7c)
இறைவன் நம்மோடு

 
(மறையுரை) அருட்தந்தை ஜோர்ஜ் பாக்கியசாமி
பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு

நாம் அழைக்கப்படும்போது மகிழ்வுடன் பதிலளித்தல்.

திராட்சைத் தோட்ட வேலையாட்கள் உவமை [Codex aureus Eptemacensis]
திராட்சை தோட்ட நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்தும் உவமை (மத் 20 :1-16). அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.

ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், " நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்" என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.

ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், " நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, " எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை" என்றார்கள். அவர் அவர்களிடம், " நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்" என்றார்.

மிகவும் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், தொழிலாளர்களுக்கு கூலி வழங்க வரும்போது, ​​நாள் முழுவதும் கடினமாக வேலை செய்தவர்களுக்கும் கடைசியாக வந்தவர்களுக்கும் ஒரேயளவு கூலியைக் கொடுத்தார், அவர் யார் முதலில் வந்தவர் மற்றும் யார் கடைசியாக வந்தவர் என்பதைப் பொருட்படுத்தாமல், நேர்மையாகவும் பொருத்தமாகவும் வழங்க அவர் வாக்குறுதியளித்தார். அவர்கள் அனைவருக்கும் முழுமையாகவும், நேர்மையாகவும், நீதியாகவும், சரியாகவும் கூலி வழங்கப்பட்டது. இந்த சுவாரஸ்யமான சூழ்நிலையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

சாதாரணமாக, கடவுளின் பெருந்தன்மையை அளவிட முடியாது. நாம் அவருக்காக " தியாகம்" செய்தாலும், கடைசி நேரத்தில் சேவை செய்ய அழைக்கப்பட்டாலும், இந்த வாழ்க்கையில் 100% திருப்பிச் செலுத்துவதை (இன்னும் அதிகமாக) அவர் நமக்கு உறுதியளிக்கிறார். கடவுளையும் அவருடைய திட்டங்களையும் கணிப்பிடமுடியாது, ஏனெனில் மீண்டும், அவருடைய தாராள மனப்பான்மையை சாதாரணமாக அளவிட முடியாது.

எனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும், ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சென்றேன். நான் முதலாளியின் விருப்பத்திற்குரிய பணியாளர்களில் ஒருவன். அந்த நிறுவனத்தில் ஓரிரு ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, எனது முதலாளி அதே சம்பளத்துடன் மற்றொரு பணியாளரை நியமித்தார். அதற்கும் மேலாக நான் அந்தப் புதிய பணியாளருக்கு பயிற்சி அளிக்க வேண்டியிருந்தது. புதிய பணியாளரும் நான் பெற்றதைப் போன்றே பெற்றதால் நான் பொறாமைப்பட்டேன். எனது அதிருப்தியை வெளிப்படுத்தியபோது, ​​என் முதலாளி தனது உரிமையிலும் விவேகத்திலும் தாராளமானவராக இருப்பதையும் வலியுறுத்தினார். இவ்வாறு நடப்பது நீதியானதல்ல என்று நானே முணுமுணுத்ததை நினைத்துப் பார்க்கிறேன். இன்றைய உவமை எனக்கு அப்போது இருந்த அந்த தருணத்தை சரியாக நினைவூட்டியது.

குருத்துவத்திற்கான எனது அழைப்பிற்கு நான் பதிலளிக்கும்போது, ​​ கிறிஸ்துவுக்கு என்னை கொடுக்க தயாராக இருக்கிறேனா? என்று நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன்;

கிறிஸ்து ஒருபோதும் என்னைக் கட்டாயப்படுத்தியதில்லை; அவருடைய திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய மட்டுமே அவர் என்னை அழைக்கிறார். அவர் தனது திராட்சைத் தோட்டத்திற்கு வாயில்களைத் திறக்கிறார், ஆனால் இறுதி முடிவு என்னிடத்தில் இருக்கிறது.

நாம் அனைவரும் ஆண்டவருடைய திராட்சைத் தோட்டத்தில் சீடர்களாக இருக்க ஏதோ ஒரு வழியில் அழைக்கப்பட்டிருக்கிறோம் . நம்மில் சிலர் நம்மிடம் போதுமான திறமை இல்லை என்று நினைக்கிறார்கள், மற்றவர்கள் இறைவனுக்காக எதையும் செய்ய முடியாத அளவுக்கு இளமையாக இருப்பதாக நினைக்கலாம், மற்றவர்கள் அந்த பணி அவர்களுக்கு மிக அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறார்கள். அவர் எப்போதும் தனது நிலத்தில் வேலை செய்ய தொழிலாளர்களின் பெருந்தன்மையையும் நல்லெண்ணத்தையும் கேட்கிறார். அதன் பின்னர் அவர் மற்ற எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார். அவர் தயாரானவர்களை அழைக்கவில்லை; அவரால் அழைக்கப்படுபவரை தயார்ப்படுத்துகிறார். கனிகளை உற்பத்தி செய்பவர் அவர் ஒருவரே நாமல்ல. அவருடைய ஒருபோதும் முடிவில்லாத திராட்சைத் தோட்டத்தில் ஒரு தொழிலாளராக இருக்க ஆண்டவரால் அழைக்கப்படுவது, குறிப்பாக அவர்மீதுள்ள அன்பினால் நம் பணியை நிறைவேற்றும்போது.

எவ்வளவு ஒரு மகிழ்ச்சியும் பாக்கியமுமாகும்.

நாம் அழைக்கப்படும்போது நாம் மகிழ்ச்சியுடன் மட்டும் பதிலளிக்க வேண்டியிருக்கிறது. அவருடைய நன்மைத்தனத்திற்காகவும், அவருடைய மகத்தான தாராள மனப்பான்மைக்காகவும் நாம் மிகுந்த நன்றியுடன் பதிலளிக்கிறோம். நாம் இறுதியாக அவருடைய திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யப் போகவேண்டியிருக்கையில், அந்த திராட்சைத் தோட்டத்தில், நாம் அவர் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு நேர்மையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்படுவோம். அந்த வேதனையான கடினமான தருணங்களில், நம்பிக்கையற்ற மற்றும் பலவீனம் என்பவற்றில் நாம் அவரை நம்புகிறோம். எனவே, அவருடைய திராட்சைத் தோட்டத்திற்குப் அவரைப் பின்தொடர வேண்டும் என்ற அவரது கனிவான அழைப்புக்கு பதிலளிப்போம்!

நாம் அழைக்கப்படும் தருணத்தில் பதிலளிப்பதே அந்த விடயமாகும். கடவுளின் நன்மைத்தனத்திற்கும் தாராள மனப்பான்மைக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். அவருடைய திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய நமக்கு வாய்ப்பளித்தமைக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். நாம் அவருடைய திராட்சைத் தோட்டத்திலேயே நேர்மையாக உழைக்க, நமது கடமைகளை உண்மையாகச் செய்யத் தொடர்ந்திருக்கிறோம். அங்கே கடினமான மற்றும் பலவீனமான தருணங்கள் காணப்படும் என்பது நமக்குத் தெரியும். நாம் இன்று நமது மனசாட்சியை கடவுளுக்கு உகந்ததாக வைத்திருந்தால், இனிமேல் அவருக்கு நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க தீர்மானித்தால், உவமையில் உள்ள வாக்குறுதிகள் போல அவர் நமக்கு தாராளமுள்ளவராக இருப்பார்.

அருட்தந்தை ஜோர்ஜ் பாக்கியசாமி 20/9/2020
செந்தூல், கோலாலம்பூர்.

   உன்னோடு நான் இருக்கின்றேன் சிறுபிள்ளை என்று சொல்லாதே! என்று சொல்லி
என் வாழ்வை நன்கு உயர்த்திடும் ஏணியாக்கினாய்! சுடர் தீபமாக்கினாய்!!