ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

பொதுக்காலம் 22ஆம் வாரம் - ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)
ஆண்டின் பொதுக்காலம் 22 ஆம் ஞாயிறு திருப்பலி
முன்னுரை - 3ம் ஆண்டு

இனிய நெஞ்சங்களே!

இனிய விருந்து ஒன்று நம்மை இன்றைய திருப்பலிக்கு அன்போடு அழைக்கிறது. இந்த விருந்தில் சுவை மிகு உணவாக மதிப்புமிகு உணர்வுகள் பரிமாறப்படுகின்றது.

விருந்தில் பரிமாறப்படும் சுவைமிகு உணவு உடலுக்கு வலு ஊட்டுகின்றது. அது போலவே விருந்தில் பரிமாறப்படும் மதிப்புமிகு உணர்வும் உறவுக்கு வலு ஊட்டுகின்றது.

விருந்தில் நல்ல உடையை உடுத்தி பங்கேற்க விரும்பும் நாம் கூடவே நல்ல உணர்வை உடுத்தியும் பங்கேற்க விரும்புவோம். விருந்தில் முதலிடத்தில் அமர விரும்பும் நாம் நம்மைவிட மதிப்புக்கு உரிய ஒருவருக்கு அந்த முதலிடத்தை விட்டுக் கொடுக்கும்போது நமது மதிப்புக் கூடுதலாகும். நாம் அழைக்கும் விருந்தில் ஏழைகள், ஊனமுற்றோர், பார்வையற்றோர் ஆகியோரை அழைத்து அவர்களுக்கும் மதிப்பளித்து விருந்தளிப்போம்.

மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை. உடலை மதிப்பாக உணர்வோம்  நண்பர்களை, உறவுகளை மதிப்பாக உணர்வோம்.

குடும்பத்தில் உள்ள நோயுற்றோரை ஏழைகளை, முதியோரை ஊனமுற்றோரை,  பார்வையற்றோரை மதிப்பாக உணர்வோம். செய்யும் வேலையை மதிப்பாக உணர்வோம்

நம்மிடம் இருக்கும் சிறிய அளவு செல்வத்தை, பணத்தை மதிப்பாக உணர்வோம்.
வாழ்க்கை என்பது உயிர் உள்ளவரை...!!! வாழ்க்கையை மதிப்பாக உணர்ந்து,  உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம்
நாம் கலந்து கொள்ளும் விருந்தையும், நாம் அளிக்கும் விருந்தையும் மதிப்பு மிக்கதாக மாற்றும் உணர்வைப் பரிமாறும் திருப்பலியின் திருவிருந்தை பக்தியுடன் அருந்தி மகிழ்வோம்.
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அனைவரையும் விருந்துக்கு அழைப்பவரே எம் இறைவா!
    திருச்சபையின் தலைவர்கள் தாங்கள் அளிக்கின்ற திருவிருந்து 
    நிகழ்வுகளால் இறைமக்கள் சமூகம் விரும்புகின்ற மாற்றங்களை 
    அரங்கேற்ற செய்ய வேண்டுமென்றும், நலிவுற்றோர் அதனால்
    மிகுதியான நற்பேறு பலன் பெறவும் அருள் பொழிய வேண்டுமென்று
    இறைவா உம்மை மன்றடுகிறோம்



2. செய்வது அனைத்தையும் பணிவோடு செய்வோரை ஆசிர்வதிக்கும்
    இறைவா!

    நாடுகளின் தலைவர்கள் ஏற்பாடு செய்கின்ற நல்ல விருந்து 
    நிகழ்வுகளால் ஏற்றத்தாழ்வுகள் நீங்கிடவும், வறுமை விலகிடவும்,   
    நோய் நீங்கிடவும், நலிவுற்றோர் வேலை வாய்ப்பில்லாதோர் 
    தேவையில் இருப்போர் அனைவருக்கும் பயன் தரவும் உலக  
   அமைதியைத் தூண்டவும் தம் பணியை பணிவோடு செய்து பலன் பெற அருள் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தம்மைத் தாழ்த்துவோரை உயர்த்துகின்ற இறைவா!
    தங்கள் அர்ப்பண வாழ்வு மீது மதிப்புக் கொண்டு பணிபுரியும் 
  அருட்பணியாளர்கள் அன்றாடம் நிறைவேற்றும் திருவிருந்து நிகழ்வுகள், மன ஆறுதலை இழந்து தவிப்போருக்கு ஆறுதலை அளிக்கவும் உள்மனக் காயங்களை ஆற்றவும், புறம் தள்ளப்பட்ட சமூகம் விழித்தெழச்  செய்யவும் அருள் பொழிய வேண்டுமென்று, இறைவா உம்மை   மன்றடுகிறோம்.

4. அன்பையும் உறவையும் வளர்க்கும் விருந்தாகிய இறைவா!
     எங்கள் குடும்பங்களில் கைமாறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கும், புலம் பெயர்ந்து புகலிடமின்றி தவிப்போருக்கும் முதலிடம் தந்து விருந்து அளிக்கவும், எங்களுக்குள் நிலவுகின்ற வேறுபாடுகளை களைந்து அன்பையும், உறவையும் வளர்த்துக் கொள்ளும் விருந்தை சந்திக்கின்ற நிகழ்வுகளில் அருந்தி மகிழவும் அருள் பொழிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இன்னலில் தவிப்போருக்கு துணையாகிய இறைவா!
     இத்தாலியில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் 
    கிடைக்கவும், உறவுகளை உடமைகளை இழந்து தவிப்போருக்கு ஆறுதல்  கிடைக்கவும், அருள் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை  மன்றடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
 மதிப்பைக் கொடுத்து மகிழ்வோம்

ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர். அதில் ஒரு மாணவன் எல்லோரையும் விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக் கொண்டான் . இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே சிறந்தவனாகத் திகழ்ந்தான் . ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட அன்பும், கவனமும் செலுத்தினார். சிறிது காலம் சென்றது.

அவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. எப்போதும் எங்கு சென்றாலும் எல்லா நிகழ்விலும் முதலிடம் தேடி அமரத் தொடங்கினான். எல்லா விருந்துக் கொண்டாட்டங்களிலும், அவனை விட உயர்ந்த்தவர்களுக்கு மரியாதை தர மனமின்றி ஆடம்பரமாகவே சுற்றி வந்தான். தன்னைவிட சிறந்தவர் யாரும் இல்லை என்ற மமதையுடன் எல்லோரையும் ஏளனமாக நோக்க ஆரம்பித்தான். தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை. பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமாகக் கேள்வி கேட்டு, அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து, அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி செய்யத் தொடங்கினான். ஆசிரியரின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது. இந்த அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார்
.

ஒரு நல்ல மாணவன் நாசமாவதை அவர் விரும்பவில்லை. அவனது பிழையை அவனுக்கு உணர்த்த விரும்பினார். நேரடியாக அறிவுரை சொன்னால் அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில் அவரையே கூட எதிர்த்துப் பேசக் கூடும். வேறொரு வழியை யோசித்தார். மறுநாள் அவனை அழைத்தார். "மகனே ! இன்று அதிகாலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர் . பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு. நீ போய் பக்கத்துத் தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய் விவரத்தைச் சொல்லி ஒரு தரமான சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல் . இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத் தேவைப்படுகிறது. இதை உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும்" என்றார். கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனை மிகவும் உற்சாகப்படுத்தி விட்டன. ''இதோ உடனே செய்து முடிக்கிறேன் ஐயா" என்று சொல்லிவிட்டு ஆசாரி வீட்டுக்கு விரைந்தான். ஆசாரி அவனை வரவேற்று அவன் வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும் மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான். ஆசாரி இறந்து போனவரைக் குறித்த விபரங்களைக் கேட்டார்.

அவனும் ஆசிரியர் சொன்னபடியே " அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு." அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆசாரி சூடாகி விட்டார். "ஏன்டா ! இன்னிக்கு நீ பொழுது போக்க நான்தான் கிடைச்சேனா ? செத்த பிணத்தோட விவரம் சொல்லாம வேறென்னமோ உளர்றியே! நீ படிச்சவன்தானா ? " என்றார். இந்தக் கேள்வி அவனை ஆத்திர மூட்டியது " அவரைப் பத்தி இவ்வளவு சொல்லியும் புரியலைன்னு சொன்னா நீங்கதான் ஒரு அடி முட்டாள் " என்றான். ஆசாரி "அடேய் அறிவு கெட்டவனே! என்னதான் படிச்சிருந்தாலும், விருதெல்லாம் வாங்கி இருந்தாலும் எனக்கு அது பிணந்தான். எனக்கு வேண்டியது அதோட உயர, அகலந்தான். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் தான். உனக்குப் பெட்டி வேணும்னா மரியாதையா போய் அளவெடுத்துக் கிட்டு வா" என்றார். எங்கோ பளீரென்று அடி விழுந்தது அவனுக்கு. "மனித அறிவு இவ்வளவுதானா ? இதுக்காகவா இத்தனை பேரை அவமானப்படுத்தினேன்? " அவமானம் பொங்கியது . கூனிக் குறுகியபடியே ஆசியரின் முன்னால் போய் நின்றான் . ஆசிரியர் சிரித்துக் கொண்டே கேட்டார், " என்னப்பா ! சவப்பெட்டி அடிச்சாச்சா". அவன் பதில் சொன்னான். "அடிச்சாச்சு. என்னோட தலை கனத்துக்கு". ஆசிரியர் சொன்னார்: செல்லமே ! என்னதான் படித்தாலும் இது அழியப் போகிற சரீரந்தான். இதை உணர்ந்து மனத்தாழ்மையாய் நடப்பதே உண்மையான ஞானம்...!


வாழ்க்கை என்பது உயிர் உள்ளவரை வாழும் நாட்களில் பிறருக்கு கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுத்து மகிழ்வோம். ஆணவம் தலைக்கு ஏறினால் நம் தலைக் கணமே நமக்கு அழிவைத்தரும். மதிப்பும் மரியாதையும் நாம் தேடிப் போவது இல்லை அவை தானாகவே நம்மைத் தேடிவரும்.

டாட்டாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார். பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரை சந்தித்தார். பேனா மறதியை பற்றி விசாரித்தார். அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது.
நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறோம்
உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.
நண்பனை மதிப்பாக உணர்ந்தால், நண்பனுக்கு மரியாதை கொடுப்போம்.
நம்மிடம் உள்ள பணத்தை மதிப்பாக உணர்ந்தால், அவசிய செலவுகள் மட்டும் செய்வோம்.
நம் உறவுகளை மதிப்பாக உணர்ந்தால், உறவுகளை முறிக்க மாட்டோம்.
செய்யும் வேலையை மதிப்பாக உணர்ந்தால், அர்ப்பணிப்புடன் செய்வோம்.
வாழ்க்கையை மதிப்பாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம். மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை. வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!

ஒரு பணக்கார அம்மா தங்கள் வீட்டில் தன் மகனுக்கு திருமண விருந்து நிகழ்த்த திட்டமிட்டு இருந்தார். துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு அருட்சாதனம் ' ஆகவே, எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் சென்றார்..! சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண் வந்தார். கடைக்காரரிடம் என் முதலாளியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் சென்றார்..!

இன்றைய நாட்களில் இது மாதிரியான மதிப்புக் குறைந்த செயல்பாடுகள், வேற்றுமை உணர்வுகள், ஏற்றத் தாழ்வுகள் மனம் விரும்பாத செயல்பாடுகள் அநேக விருந்து நிகழ்வுகளில் இடம்பெற்று மனதைக் காயப்படுத்துகின்றன. இவைகள் நாம் அளிக்கும் விருந்துகளில் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வோம்.
உறவை வளர்க்கும் விருந்து உறவை முறிக்கும் விருந்தாக அமையாமல் கவனித்துக் கொள்வோம்.
ஏழைகளுக்கு மதிப்புக் கொடுப்போம்.. தேவைக்கு செலவு செய்வோம்.
அனுபவிக்க தகுந்ததை அனுபவிப்போம்.
இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்வோம்.
போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதில்லை.
ஆகவே..அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
எத்தனைதான் அள்ளிக் கொடுத்தாலும் மனித இதயம் திருப்திப் படுவதில்லை. நிரந்தரமான மரியாதை என்பது பணத்தைக் கொண்டு வாங்கும் பொருளுமில்லை. உண்மையான அன்பைப் பிறருக்குக் கொடுப்போம் . அதுவே பலமடங்காக நமக்குத் திரும்பக் கிடைக்கும்.

அக்சீலியா அவள் ஒரு விதவைத் தாய். ஆசியர் பணியை செய்து ஒய்வு பெற்றவர். தனது பிள்ளைகள் நால்வரை இறை நெறியில் அச்சு பிசகாமல் வளர்த்தார். தனது மகன் சைமனுக்கு திருமண விருந்து நிகழ்த்த ஆதரவற்ற குழந்தைகள் வாழும் கொன்சாகா சிறுவர் காப்பகம் ஒன்றை தேர்ந்தெடுத்தார். மணமக்கள் ஆதரவற்ற சிறுவர்கள் காப்பகம் சென்றனர் அவர்கள் முன்னிலையில் அருட்சாதனம் நிகழ்ந்தது. அங்கிருந்த குழந்தைகளுடன் விருந்து அருந்தி மகிழ்ந்தனர். அந்த காப்பகத்தை கண்காணித்து வரும் அருட் சகோதரிகளுக்கும், அங்கே சொல்லொண்ணா மகிழ்ச்சி.

நாம் அளிக்கும் விருந்து நம்மோடு இருக்கும் பிறரின் மகிழ்ச்சியை மிகுதியாக்கட்டுமே!
நாம் விருந்து அளிக்கும் போது ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும், அழைப்போம். அப்போது நாம் பேறுபெற்றோராய் இருப்போம்.அவர்களிடம் நமக்கு கொடுக்க ஒன்றும் இராது. ஆனால் விண்ணகத்தில் நமக்கு கைம்மாறு மிகுதியாக கிடைக்கும்.

இங்கே யார் மதிப்புக்கு உரியவர்கள்?
நமது விருந்துகளில் திரும்பச்செய்ய ஒன்றுமில்லை என வருந்துவோரை நம் வீட்டு விருந்து நிகழ்வுக்கு அழைப்போம்.
நம் வீட்டு குழந்தைகளுக்கு பிறரை மதிக்கக் கற்றுக் கொடுப்போம்.
விருந்துகளில் கலந்து கொள்வது உறவை வளர்ப்பதற்கே என்பதை உணர்த்துவோம்.
விருந்துகளில் கலந்து கொள்ளும்போது நல்லவைகளைப் பாராட்டுவோம்.
மற்றவர்களின் நிலை கண்டு பொறாமைப்படுவதை தவிர்ப்போம்.
அமைதியாக மகிழ்ச்சியோடு மன நிறைவோடு இருப்போம்.
பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டுவோம்.
குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி பேசும் பொழுது அவர்களின் மகிழ்ச்சியை மிகுதியாக்குவோம்.
வாழ்க்கையே கொடுக்கல் வாங்கல் தான்!
எதைக் கொடுக்கிறோமோ அதைத்தான் பெற்றுக் கொள்வோம்.
சமூகம் போற்றும் செயல்களைச் செய்வோம். பணிவோடு நடந்து கொள்வோம்
நம்மை நாம் தாழ்த்திக் கொள்ளும் போது கடவுள் நம்மை உயர்த்துவார்.


மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
கைம்மாறு கருதாத வாழ்வு

பொதுக்காலத்தின் 22 ஆம் ஞாயிற்றில் இருக்கும் நம்மை இன்றைய வாசகங்கள் வழியாக கைம்மாறு கருதாத வாழ்வு வாழ இயேசு அழைக்கின்றார். விருந்தில் முதல் இடத்தைத் தேடாதே. வறியவர்களுக்கு விருந்து வை. பணிவாய் இரு என்னும் மூன்று முக்கியமான பண்புகளில் வளர இயேசு அழைக்கின்றார்.

விருந்தில் முதலிடத்தை தேடாதே.

விருந்து என்பது உறவை வளர்த்தெடுக்கும் அற்புதமான ஒரு நிகழ்வு. குடும்பங்களில் கொண்டாடப்படும் விழாக்களுக்கு நாம் ஒன்று கூடும் போதுதான் உறவுகள் புதுப்பிக்கப்படுகின்றன. நம்முடைய பழைய உறவினர்கள், மறந்து போன சொந்தங்கள் என அத்தனை பேரையும் பார்த்து பழக நமக்கு வாய்ப்பு கிடைக்கின்றது. இப்படிப்பட்ட விருந்து ஒன்றிற்கு ஒருவர் நம்மை அழைக்கின்றார் என்றால் நம்மோடு அவர் கொண்டுள்ள உறவை வளர்ப்பதற்கும் வலுப்படுத்துவதற்குமே. ஊர்களில் அழையாத விருந்திற்கு யாரும் செல்வதில்லை. அதிலும் குடும்ப உறுப்பினர்களில் யாரையாவது மறந்துவிட்டோம் அல்லது பத்திரிக்கை கொடுக்கும் போது விடுபட்டுவிட்டது என்றால் அவ்வளவு தான். விருந்து வருந்தும் இடமாக மாறும் அளவுக்கு சூழல் மாறிவிடும். ஆக விருந்தும் அதற்கு அழைக்கும் முறையும் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. இத்தகைய விருந்திற்கு அழைக்கப்பட்ட நாம், நாமாகவே முன் இருக்கையை தேர்ந்துகொண்டோம் என்றால் அதனால் அவமானம் நமக்கு தான். பந்தியில் முதல் இருக்கையை நாடுதல் நமது மேட்டிமையைக் குறிக்கின்றது. இயேசுவின் காலத்திலும் அருட்சாதனம் திருவிழா போன்ற நற்காரியங்களுக்கு முக்கியமான விருந்தினர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களும் விருந்துகளுக்கு இறுதியாக வருவதையே தங்களது வழக்கமாக்கிக் கொண்டனர்.

இறுதியாக வந்தாலும் அவர்களுக்குரிய முதல் இருக்கை அவர்களுக்கென்று ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்று விரும்பினர். இந்த முக்கியமானவர்கள் எந்த விருந்துகளுக்கு சென்றாலும் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள் அமர்ந்துவிடுவர் அல்லது யாராவது வந்து அடடே நீங்களா உங்களுக்காக தான் இத்தனை நேரம் காத்திருந்தோம் வாங்க வாங்க என்று சொல்லி அவர்களை முன்னிலைப்படுத்தி விழாவையும் விழா நாயகர்களையும் பின்னால் தள்ளி விடுவர் .இப்படி செய்வதனால் விருந்திற்கு இவர்களை அழைத்தவரை சென்று பார்க்கும் பழக்கமோ அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டினை தெரிவிக்கும் பழக்கமோ இவர்களுக்கு இல்லாமல் போய் விடுகின்றது. விருந்து கொடுப்பவர்களே இவர்களை தேடிவந்து வாழ்த்தி நன்றியைத் தெரிவித்து வந்தனர். இது முறையன்று இது விருந்திற்கான நாகரீகமும் அன்று என்று எடுத்துரைக்கின்றார் இயேசு. விருந்து என்பது ஒருவரை ஒருவர் நன்றாக பார்த்து பேசி பழகி தங்களுடைய அன்பையும் உறவையும் ஆழப்படுத்திக் கொள்வதற்காகவே. இதனை மறந்து தங்களுக்கென்று ஒரு வட்டம் அமைத்துக் கொண்டு மற்றவர்கள் அனைவரும் தங்களை வந்துக் காண வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் தவறானது என்கின்றார். தான் மட்டுமே முன்னால் நிற்க வேண்டும் தனக்கு மட்டுமே அத்தனை சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவது தவறானது. என்று வலியுறுத்துகின்றார்.

பணிவாய் இரு.

பணிவு மனிதனை மேன்மைப்படுத்தும் ஒரு சிறந்த குணம். பணிவுடையவனாகவும் இன்சொல்லை உடையவனாகவும் இருப்பதே ஒரு மனிதனுக்கு மிகச்சிறந்த அணிகலன் என்று வள்ளுவர் கூறுவது போல பணிவோடு வாழ இயேசு இன்றைய நாளில் அழைக்கின்றார். தன்னைத் தானே உயர்த்துகிறவன் எவரும் தாழ்த்தப்படுகிறான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுகின்றான். உயரமான மலை ஏறுபவர்கள் நிமிர்ந்து நின்று ஏறுவதில்லை மாறாக குனிந்து தான் ஏறுகின்றனர் அப்படி ஏறும் போது அவர்களுக்கு இன்னும் அதிக உயரத்தை அடைய வலிமை கிடைப்பதாக உணர்கின்றனர். வாழ்க்கையும் அப்படித்தான் பணிந்து போக போக நாம் உயர்வடைகின்றோம். உதிக்கும் சூரியன் தன்னைத்தாழ்த்தி கீழிறங்கி மறைந்தால் தான் அடுத்த நாள் புதிய சூரியனாக பிரகாசிக்கவே முடியும். நான் தான் உலகத்திற்கே ஒளி கொடுக்கின்றேன் நான் மறையவும் மாட்டேன் பணியவும் மாட்டேன் என்று நினைத்தால் நம் கதி என்னவாகும். (12 மணி நேர வெயிலையே நம்மால் தாங்க முடிவதில்லை இதில் முழு நேரமும் வெயில் என்றால் பாதிபேர் ஆப்பிரிக்க நாட்டிற்கு நிறம் மாறி இருப்போம்.)

ஆக நாம் பார்க்கும் இயற்கை படைப்புக்கள் அனைத்தும் தன்னைத்தானே தாழ்த்தி முன்னுக்கு வருகின்றன. எனவே நாம் பணிவோடு செயல்பட குறிப்பாக விருந்திலும் பணிவோடு இருக்க இயேசு வலியுறுத்துகின்றார். நம்மை விருந்திற்கு அழைத்திருந்தாலும் நாம் முதல் இருக்கையை நாடாது பிறருக்கு முன்னுரிமை கொடுத்து வாழ வேண்டும். நாமாக முன்னுரிமையைத் தேடிக்கொண்டால் அது அவமானத்தையும் கஷ்டத்தையும் நமக்குக் கொடுக்கும். அதுவே நம்மைத் தேடி வந்தால் நமக்கு மகிழ்வையும் மன நிறைவையும் தரும்.

கைம்மாறு கருத்தாத உதவி.

நாம் கொண்டாடும் விருந்துகளில் அழைக்கப்படும் விருந்தாளிகள் பெரும்பாலும் நம்மை அவர்களது விருந்துகளுக்கு அழைத்தவர்களாகவே இருப்பர். பரிசுப்பொருட்களை பணமாகவும் பொருளாகவும் கொடுத்தவர்கள் தங்களது இல்ல விழாக்களின் போது அதனை மீண்டும் பெற்றுக் கொள்கின்றனர். கொடுத்தல் வாங்குதலை எதிர்பார்த்து செய்யப்படுவதாகவே பல விருந்துகள் உள்ளன. திருநெல்வேலியில் உள்ள ஒரு தன்னார்வ அமைப்பு வயோதிகர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் உணவு வழங்கும் செயலை வித்தியாசமாக செய்கின்றது. தங்களது குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு, நாட்டில் துன்புறும் ஏழைகளின் நிலையை எடுத்து சொல்லி குழந்தைகளின் சிறுசேமிப்பில் வாங்கிய பொருட்களை அவர்களே நேரடியாக கொடுக்க வைக்கின்றனர். கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை என்பதை வாழ்க்கை அனுபவத்தின் மூலம் கற்றுக் கொடுக்கின்றனர். உனக்கு எத்தனை பரிசுப் பொருட்கள் வந்தது என்று கேட்கும் நிலை மாறி நான் இத்தனை பேருக்கு பரிசளித்தேன் அதுவும் என்னுடைய சிறு சேமிப்பில் இருந்து பரிசளித்தேன் என்று குழந்தைகள் மகிழ்ந்து கூற வழிவகுக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது வறியவர்களின் ஆசை என்னவென்று கேட்டு அதனைப் பூர்த்தி செய்கின்றனர். கிடைப்பதை உண்டு பசியாறி உயிர் வாழும் மக்கள் மத்தியில் சிலர் தங்களது வாழ்வில் மீன் உணவு உண்டதே இல்லை என்றும் அதனை யாரும் அவர்களுக்கு வழங்கியதே இல்லை என்பதையும் அறிந்து மீன் உணவு வகைகளை சமைத்து அவர்கள் அனைவருக்கும் அளித்து மகிழ்ந்திருக்கின்றனர். நம்மிடம் இருப்பதில் இருந்து கொடுப்பதோ அல்லது எஞ்சியவற்றைக் கொடுப்பதோ எல்லாராலும் முடியும். ஆனால் அவர்கள் தேவை ஆசை என்னவென்று அறிந்து கொடுப்பது எல்லாராலும் முடியாது. நன்றி என்ற வார்த்தையையும் கண்களில் ஆனந்தக் கண்ணீரையும் தவிர அவர்களால் வேறு எந்த பரிசுப் பொருட்களையும் கொடுக்க முடியாது . இத்தகைய கைம்மாறு கருதாத செயல்களையே இறைவன் செய்ய சொல்கின்றார். இறுதியாக,

கூர்ந்து கவனித்தல் இங்கு இயேசு ஓய்வு நாளில் என்ன செய்யப்போகிறார் அவரிடம் என்ன குற்றம் காணலாம் என்று பரிசேயர்களும் யூதர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைக் கொண்டு அவரை மடக்கி இக்கட்டில் மாட்டிவைக்க எண்ணினர். மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றனர். அடுத்தவர் என்ன தவறு செய்வார் எப்படி வார்த்தைகளை சிதறவிடுவார் அதைக் கொண்டு அவர்களை எப்படி துன்பத்தில் சிக்க வைக்கலாம் என்று துடித்துக் கொண்டிருப்பர். அதில் அவர்களுக்கு ஒரு ஆனந்தம். இத்தகைய கூர்ந்து கவனித்தல் தேவை இல்லை என்று வலியுறுத்துகின்றார் இயேசு. பிறர் செய்யும் நல்லவற்றை மட்டும் பாருங்கள் அவர்கள் என்ன தவறு செய்கின்றார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கும் பட்சத்தில் நாம் தீய எண்ணங்களாலே நிரப்பப்படுகின்றோம். எனவே இத்தகைய கூர்ந்து கவனித்தலைக் கைவிடுத்து வாழவேண்டும் என்று எடுத்துரைக்கின்றார்.

ஆக முதல் இருக்கையை நாடாது, பணிவோடு, கைம்மாறு கருதாமல், பிறரது குற்றங்களைக் காணாமல் நாம் வாழும் வாழ்வு மிகச்சிறந்த வாழ்வாக இருக்கும் என்று எடுத்துரைக்கின்றார். எனவே அன்பு உள்ளங்களே கைம்மாறு கருதாத வாழ்வு வாழ்ந்து சிறக்க இறைவன் தன்னுடைய அருளையும் ஆசீரையும் நம்மீதும் நம் குடும்பத்திலுள்ள அனைவர் மீதும் நிறைவாகப் பொழிய இறையருளை சிறப்பாக வேண்டுவோம்
.
மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி


மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி.

பணிவும் பரிவும்!
தாழ்ச்சி என்ற மதிப்பீட்டுக்குப் பல நேரங்களில் எடுத்துக்காட்டுக்களை நாம் நமக்கு வெளியில் தேடுகிறோம். ஒபாமா தன்னுடைய உதவியாளருக்கு கை கொடுத்தார், போப் பிரான்சிஸ் தன்னுடைய காவலாளருக்கு நாற்காலி கொடுத்தார், அவர் தன்னுடைய காலணிகளுக்குத் தாமே பாலிஷ் போட்டார், இவர் தன்னுடைய வீரர் ஒருவருக்குத் தானே உதவி செய்தார். இப்படி நாம் நினைக்கும் பெரியவர்கள் தங்கள் வாழ்வில் தாழ்ச்சியாக இருந்த தருணங்களையே எண்ணிப் பார்க்கிறோம். மேற்காணும் நிகழ்வுகளில் தாழ்ச்சி இருப்பது உண்மைதான். ஆனால், தாழ்ச்சியோடு கலந்து பரிவு நமக்கு அருகிலேயே இருக்கிறது.

'ஏம்மா! உனக்கு அறிவே இல்லையா?' என்று கேட்கும் தன் குழந்தையிடம் தாய் ஒருபோதும் தன்னுடைய கல்லூரி கோல்ட் மெடலைக் கொண்டுவந்து காட்டுவதில்லை. அப்படிக் கேட்கும் குழந்தையிடம் சிரித்துக் கொண்டே குனிந்து குழந்தையின் காலணிகளை மெதுவாக அவிழ்ப்பாள் தாய். இதுதான் தாழ்ச்சியுடன் கூடிய பரிவு. அல்லது பரிவுடன் கூடிய தாழ்ச்சி.

வெறும் தாழ்ச்சியாக (பணிவாக) இருப்பதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை? தாழ்ச்சியோடு பரிவும் சேரும்போதுதான் அது மற்றவரின் மேல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாடு பணிவும் பரிவும் இணைந்து செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 3:17-18,20,28-29) இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) அறிவுரைப் பகுதி, (ஆ) பழமொழி. அறிவுரைப் பகுதியில், ஒருவர் பணிவை அல்லது தாழ்ச்சியைத் தனதாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை, ஆசிரியர் மூன்று எளிதான முறைகளாகக் கற்பிக்கின்றார்: (அ) பணிவான அல்லது தாழ்ச்சியான மனிதர் சமூகத்தில் தனக்குள்ள கடமைகளைப் பொறுப்புடன், மனச்சான்றுக்குக் கட்டுப்பட்டும் செய்வார். இதற்கு முரணானவர்கள் தங்களுடைய கடமைகளைப் பற்றி அக்கறையின்றி இருப்பார்கள். (ஆ) பணிவு அல்லது தாழ்ச்சி கொண்ட மனிதர் தன்னுடைய சமூக நிலை அல்லது அந்தஸ்தைப் பயன்படுத்தி மற்றவர்கள்மேல் அதிகாரம் செலுத்த மாட்டார். எந்த அளவுக்குத் தன்னுடைய அந்தஸ்து உயர்கிறதோ அந்த அளவுக்கு அவர் பணிசெய்பவராக இருப்பார். (இ) பணிவுகொண்டிருப்பவர் தன்னுடைய ஆற்றலுக்கும் திறனுக்கும் அப்பாற்பட்ட எதையும் பெற அல்லது செய்ய பேரார்வம் காட்டமாட்டார். இங்கே பணிவு என்பது ஒருவர் தான் பெற்றிருக்கின்ற ஆற்றல்கள் மற்றும் திறன்களை முழுமையாகப் பயன்படுத்துவதையும், தன் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதன்மேல் தன்னுடைய நேரம் மற்றும் ஆற்றலைச் செலவிடாத மனப்பக்குவத்தையும் குறிக்கிறது.

இவ்வறிவுரைகளை முடித்தபின், சீராக், நீதிமொழிகள் அல்லது பழமொழிகளுக்குச் செவிமடுப்பவரைப் பாராட்டுகின்றார். பழமொழிகள் என்பவை ஒருவர் தனிமனித அல்லது சமூக அறநெறியுடன் வாழப் பயிற்றுவிக்கும் ஞானத்தின் சிறிய மாத்திரைகள். சில கிரேக்கப் பதிப்புக்களில், 'எரியும் நெருப்பைத் தண்ணீர் அவிக்கும். தருமம் செய்தல் பாவங்களைப் போக்கும்' என்ற வசனம் 29ஆவது வசனமாகத் தரப்பட்டுள்ளது. தண்ணீரும் தர்மமும் ஒரே ஆற்றலைக் கொண்டிருக்கிறது. நெருப்பு ஒன்றைச் சாம்பலாக்குகிறது. பாவம் ஒருவரைக் கடவுளிடமிருந்து அந்நியமாக்குகிறது. தண்ணீர் நெருப்பை அணைக்கிறது. தர்மம் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் குறைத்துவிடுகிறது. மேலும், கண்டுகொள்ளாத்தன்மை, மேட்டிமை உணர்வு போன்ற பாவங்களையும் தர்மம் அகற்றிவிடுகிறது.

ஆக, ஒருவரின் பணிவு அல்லது தாழ்ச்சி பரிவோடு இணைந்து தர்மம் செய்தல் அல்லது பிறரன்புச் செயல்கள் செய்தல் என்று மாறும்போது அங்கே மாற்றம் உண்டாகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 12:18-19,22-24), எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இரண்டு மலைகளை ஒப்பிடுகின்றார்: சீனாய் மலை, சீயோன் மலை. சீனாய் மலை பயம் அல்லது குற்றவுணர்வை மையப்படுத்தியது என்றும், சீயோன் மலை இரக்கம் அல்லது மன்னிப்பை மையப்படுத்தியது என்றும் எழுதுகின்றார். மேலும், சீயோன் மலையில் நாம் அனைவரும் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையில் நிற்கிறோம். உடன்படிக்கையின் இணைப்பாளராக இயேசு மாறக் காரணம் அவருடைய தாழ்ச்சியான சிலுவை மரணமே. இயேசு சிலுவையில் அறைந்துகொள்ளத் தம்மையே தாழ்த்தினார் என பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் பதிவு செய்கிறார். இயேசுவின் தாழ்ச்சி அவருடைய பரிவில் நிறைவு பெறுகிறது.

ஆக, தாழ்ச்சியோடு கொண்ட பரிவு இயேசுவை உடன்படிக்கையின் இணைப்பாளராக மாற்றுகிறது.

நற்செய்தி வாசகம் (காண். லூக் 14:1,7-14) இயேசு பரிசேயர்களோடு உண்ணும் மூன்றாவது மற்றும் இறுதி உணவு நிகழ்வைப் பதிவு செய்கிறது. மேலும், 'நீங்கள் விருந்துக்குச் சென்றால் என்ன செய்ய வேண்டும்?' 'உங்களை யாராவது விருந்துக்கு அழைத்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்னும் இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது நற்செய்தி வாசகம். இயேசுவின் சமகாலத்தில் விருந்தோம்பல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்பட்டது. விருந்தில் பங்கேற்பவர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நிறைய அறிவுரைகள் இருந்தன. இவ்வறிவுரைகளை நாம் ஞானநூல்களில் நிறைய வாசிக்கின்றோம். மேலும், விருந்திற்கு வருபவர் ஒவ்வொருவரும் எங்கே அமர வேண்டும் என்ற வரிசை அமைப்பும் முன்கூட்டியே தரப்படும். இப்படி இருக்க, இன்றைய நிகழ்வில் விருந்துக்கு வரும் விருந்தினர்கள் வித்தியாசமாகச் செயல்படுகின்றார்கள். முன்னுக்குப் பின் முண்டியடித்துக் கொண்டு முதன்மையான இடத்தை அடைய முயற்சிக்கிறார்கள். மேலும், விருந்திற்கு அழைத்தவரிடம் எதுவும் சொல்லாமல் தாங்களே தங்களுடைய இடத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட செயல்பாடு பொதுவிடத்தில் அவமானத்தையும் வெட்கத்தையும் தரும் என்று சுட்டிக்காட்டுகின்ற இயேசு, முதன்மையான இடத்தில் அமர்ந்திருப்பவர்கள் கீழே இறக்கப்படவும், மற்றவர்முன் அவமானப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகின்றார்.

ஒருவரின் மதிப்பு என்பது அடுத்தவரை ஒதுக்கி வைத்து முடிவுசெய்யப்படுவதல்ல என்கிறார் இயேசு. இந்த நிகழ்வில், விருந்திற்கு அழைத்தவரே ஒவ்வொருவரையும் அவரவர் நிலையில் குறித்து வைக்கிறார். வாழ்விலும் ஒருவர் தன்னைப் பற்றிக் கொண்டிருக்கின்ற எண்ணம் மற்றவரோடு அவர் கொண்டுள்ள உறவோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். இயேசுவைப் பொறுத்தவரையில், ஒருவர் தன்னை மற்றவரோடு இணைத்துப் பார்க்கும்போதுதான் கடவுள் முன்னிலையில் உயர்வு பெறுகிறார். மாறாக, தங்களைத் தாங்களே உயர்வாக நினைப்பவர்கள் தாழ்த்தப்படுவார்கள் என்பது உறுதி. தாழ்ச்சியான நிலையைத் தழுவுபவர்கள் உயர்வைக் கண்டடைவார்கள் என்பதும் உறுதி.

இரண்டாவது பகுதியில் இயேசு அவரது சமகாலத்தில் இருந்த மற்றொரு பண்பை எடுத்துரைக்கின்றார்: விருந்திற்கு கைம்மாறு செய்வது. நம்ம ஊரில் மொய் செய்வது போல. ஒருவர் மற்றவருடைய வீட்டில் விருந்து உண்டு மொய் செய்திருக்கிறார் என்றால், இவரும் ஒரு விருந்து அளித்து அவரை மொய் செய்ய வைக்க எனக்கு கடமையும் உரிமையும் உண்டு. கைம்மாறு செய்ய முடிபவர்களுக்கே விருந்து வைக்காமல் கைம்மாறு செய்ய இயலாதவர்களுக்கு விருந்து வைக்குமாறு சொல்கிறார் இயேசு - ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும். மேற்காணும் தாழ்ச்சி இங்கே பரிவாக வெளிப்படுகின்றது. ஏழைகளுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும், கால் ஊனமுற்றவர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கும் விருந்து அளிப்பது மற்றவர்கள் பார்வையில் தாழ்வானதாகத் தெரியலாம். ஆனால், இவர்களோடு தன்னை இணைத்துக் கொள்ளும் அளவுக்கு ஒருவர் தம்மையே தாழ்த்திக் கொண்டால் கடவுள் முன்னிலையில் அவர் உயர்த்தப் பெறுவார். கடவுளே இவர்களுக்கு விருந்து படைக்கும் பேற்றை இவர்கள் பெறுவர்.

இவ்வாறாக, மேற்காணும் மூன்று வாசகங்களுமே பணிவையும் பரிவையும் மிக அழகாக இணைத்து இவ்விரண்டையும் அணிகலன்களாக அணிந்துகொள்ள நம்மைத் தூண்டுகின்றன. சீராக்கின் ஞானநூலில் ஒருவர் தன்னைப் பற்றி அறியும் பணிவு தர்மம் செய்யும் பரிவாக வெளிப்பட வேண்டும். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலைப் பொறுத்தவரையில் இயேசுவின் சிலுவைச் சாவு அவருடைய பணிவு மற்றும் பரிவின் வெளிப்பாடாக அமைந்து நம்மைக் கடவுளோடு ஒப்புரவாக்குகிறது. நற்செய்தி வாசகத்தில், தன்னை மற்றவரோடு இணைத்துப் பார்த்து தன் நிலையை அறிந்துகொண்டு தன்னைத் தாழ்த்துகிற ஒருவர் மற்றவர் முன்னிலையில் உயர்த்தப் பெறுவார். அந்தத் தாழ்ச்சி அவரைத் தனக்குக் கீழ் இருப்பவர்களோடு இணைத்துக்கொள்ளத் தூண்டியதென்றால் அவருடைய பரிவுக்குக் கடவுளிடமிருந்து கைம்மாறு பெறுவார்.

இன்றைய வாசகங்கள் காட்டும் பணிவையும் பரிவையும் நாம் எப்படி வாழ்வாக்குவது?

1. உனக்கு கடினமாக இருப்பதைத் தேடாதே
இப்படி ஞானநூல் ஆசிரியர் தன் மாணவனுக்கு அறிவுரை கொடுக்கிறார். இது சரியான அறிவுரையா? கடினமாக இருப்பதைத் தேடி, அதற்கு நம் உழைப்பைச் செலுத்தினால்தானே நல்லது. இல்லையா? இல்லை என்கிறார் ஆசிரியர். ஏனெனில், ஆற்றலுக்கு மிஞ்சியதை ஆராய்வதும், தேடுவதும் ஒருவருடைய விரக்தி மற்றும் சோர்வின் நிலையைக் கூட்டிவிடும். மனித உறவிற்கு இதைப் பொருத்திப் பார்க்கும்போது, 'உனக்கு மேலிருப்பவர்களோடு விருந்துண்ணாதே. நீ அவப்பெயரைச் சந்திக்க நேரிடும்' என்கிறது ஞான இலக்கியம். ஒருவர் தன்னைப் பற்றிய சரியான அறிதல் அல்லது புரிதல் இல்லாமல் இருந்தால் அவர் தன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயல்களையும், நபர்களையும் நாடுவார். இதுவே அவருக்கு இறுமாப்பு அல்லது செருக்கு உணர்வைக் கொடுக்கும். இறுதியில் அவர் அவமானப்படுவது உறுதி. இதற்கு மாற்றாக இவர் தன்னை அறிந்தவராய், தன் ஆற்றலை உணர்ந்து செயல்படுபவராய் இருந்தால் ஆண்டவர் முன்னிலையில் அவருக்குப் பரிவு கிடைக்கும்.

2. இரக்கமும் மன்னிப்பும்
சீனாய் மலை போல நெருப்பும் கோபமும் கொண்டிருப்பவர்கள் பணிவாகவும் பரிவாகவும் இருக்க முடியாது. இந்த இடத்தில் பயமும் குற்றவுணர்வுமே இருக்கும். ஆனால், சீயோன் மலை போல இருப்பவர்கள் இரக்கமும் மன்னிப்பும் கொண்டிருப்பார்கள். இரக்கம் கொண்டிருக்கும் ஒருவரே மற்றவரோடு இறங்கிவந்து அவரோடு நிற்க முடியும். மன்னிக்கும் ஒருவரே பரிவு காட்ட முடியும். ஆக, என் வாழ்வில் நான் பணிவும் பரிவும் கொண்டிருக்க இரக்கமும் மன்னிப்பும் கொண்டிருக்கின்றேனா?

3. விட்டுக் கொடுப்பதும் வீட்டுக்கு அழைப்பதும்
விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை என்பது பழமொழி. உடனடியாக இது பலன் தரவில்லை என்றாலும் காலப்போக்கில் பலன் தரும் என்பது உறுதி. எனக்கு மேலிருப்பவருக்கு நான் ஒன்றை விட்டுக்கொடுப்பது எளிது. எடுத்துக்காட்டாக, ஒரு நாற்காலி இருக்கிறது. நானும் என்னுடைய அதிபரும் அங்கே அழைக்கப்பட்டுள்ளோம். நான் உடனடியாக அந்த இருக்கையை என் அதிபருக்கு விட்டுக் கொடுக்கிறேன். ஆனால், நானும் என் மாணவனும் செல்லும் இடத்தில் என்னால் அந்த இருக்கையை அந்த மாணவனுக்கு விட்டுக்கொடுக்க முடியுமா? அப்படி விட்டுக் கொடுப்பதுதான் தாழ்ச்சி. இங்கே மாணவனால் கைம்மாறு செய்ய முடியாது. அங்கே எனக்கு அதிபரிடமிருந்து கைம்மாறு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், எனக்குக் கீழிருப்பவர்களை என்னோடு உறவுகொள்ள, அல்லது என் வீட்டிற்கு விருந்துக்கு அழைக்கும்போது அது என்னுடைய தரத்தைக் குறைக்கலாம். உலகப் பார்வையில் அது தவறு என்றுகூடத் தோன்றலாம். ஆனால், சமூகப் பார்வையை உடைப்பதுதான் இயேசுவின் கருத்தியலாக இருக்கிறது. இன்று நான் யாரை எல்லாம் என்னோடு உறவுகொள்ள அழைக்கின்றேன்? எனக்கு மேலிருப்பவர்களை மட்டுமே - பணத்தில், பதவியில், பலத்தில் - நான் நாடுகிறேனா? அப்படி நாடினால் நான் அவர்களுடைய பரிவில் இருக்கும் நிலைதான் உருவாகுமே தவிர நான் பரிவுகாட்ட இயலாது.

இறுதியாக,
பணிவு, பரிவு என்னும் இவ்விரண்டு வார்த்தைகள் நம் அன்றாட வாழ்வியல் உறவுநிலைகளில் இருந்தால் உறவுகளில் மதிப்பும் உறுதியும் இருக்கும்.

லேய்ஸ் சிப்ஸ் பாக்கெட் போன்று இல்லாத ஒன்றை நான் இருப்பதாகக் காட்டிக்கொண்டால் நான் உடைவதும், என்னுள் இருப்பது மண்ணில் வீழ்வதும் உறுதி.

'கைகள் சுத்தமாக வேண்டுமென்றால் இரு கைகளையும் சேர்த்துக் கழுவு' என்பது ஆப்பிரிக்க பழமொழி. ஒரு கை மற்றொரு கைக்குக் கீழ் பணிந்தால்தான், பரிவு என்னும் தண்ணீர் விழுந்து கைகள் சுத்தமாகும்.

மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு - 28.08.2022

I. சீராக்கின் ஞானம் 3:17-18,20,28-29
II. எபிரேயர் 12:18-19,22-24
III. லூக்கா 14:1,7-14

பணிவும் பரிவும் : ஆணவமும் அழிவும்:
பாரசீக நாட்டுக் கதை இது.
அரண்மனையில் இருந்த ஒரு போர்க்கொடியும் திரைச்சீலையும் பேசிக்கொண்டன. முதலில் போர்க்கொடி பேசத் தொடங்கியது: இரண்டு பேரும் பருத்தியால்தான் நெய்யப்படுகின்றோம். ஆனால், நீ குளு குளு அறையில் மகிழ்ச்சியாக இருக்கின்றாய்; சில சமயங்களில் பணிப்பெண்கள் உதவியால் வாசனைப் பொருள்களால் நிரம்பி வழிகின்றாய். நானோ வெயிலிலும் மழையிலும், காட்டிலும் மேட்டிலும் அலைக்கழிக்கப்படுகின்றேன். சில சமயங்களில் எதிரி நாட்டினர் விடும் அம்புகளால் நான் கிழிபடுகின்றேன். எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை?

போர்க்கொடி சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த திரைச்சீலை அதனிடம், நீயும் நானும் பருத்தியால் நெய்யப்பட்டிருக்கலாம். ஆனால், நீ உன்னுடைய தலையை எப்போதும் உயிர்த்தியே வைத்திருக்கின்றாய்! அதனால்தான் நன்றாகக் கிழிபடுகின்றாய். நான் அப்படியில்லை. என்னுடைய தலையை எப்போதும் தாழ்த்தியே வைத்திருக்கின்றேன். அதனால்தான் நான் குளு குளு அறையில், வாசனைப் பொருள்கள் நிரம்பி வழிய இருக்கின்றேன் என்று மகிழ்ச்சியாகச் சொன்னது.

கற்பனைக் கதையாக இது இருந்தாலும், ஆணவம் கொண்டோர் அழிவுறுவதையும் தாழ்ச்சி கொண்டோர் மகிழ்ச்சியோடு இருப்பதையும் மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது. பொதுக் காலத்தின் இருபத்து இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, பணிவும் பரிவும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

கடைசி இடத்தில் அமருங்கள்:
ஒருசிலர் உண்டு. இவர்கள் தங்களுடைய குடும்பத்தில் எவ்வளவுதான் வறுமை, துன்பம் நிலவினாலும் மற்றவர் முன் தங்களை உயர்வாகக் காட்டிக் கொள்வார்கள். இன்னும் ஒருசிலர் இருக்கின்றார்கள். இவர்கள் எப்போதும் மற்றவர்கள் தங்களை உயர்வாக நடத்தவேண்டும், மதிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். யாருக்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தாலும், மற்றவர் முன் தங்களை உயர்வாகக் காட்டிக்கொள்வது ஒருவிதமான உளவியல் சிக்கல்தான்.

பரிசேயரால் விருந்துக்கு அழைக்கப்பட்ட இயேசு, விருந்து நடக்கும் இடத்திற்குச் சென்றபோது, அங்கே விருந்தினர் முதன்மையான இடத்தைத் தேர்ந்தெடுப்பதைப் பார்க்கிறார். அப்போதுதான் அவர் அவர்களிடம், நீங்கள் (விருந்துக்கு) அழைக்கப்பட்டிருக்கும்போது கடைசியில் இடத்தில் போய் அமருங்கள் என்கிறார். இவ்வாறு சொல்லிவிட்டு இயேசு, தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என்கிறார். இயேசு கூறும் இவ்வார்த்தைகள் நற்செய்தியில் பல இடங்களில் இடம்பெறுகின்றன. (லூக் 9:24, 13:30, 17:33, 18:14, மத் 23:11, 12). ஒரு கருத்தை இயேசு தனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கற்பிக்கின்றார் என்றால், அது எத்துணை முக்கியமானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இங்கே ஒரு கேள்வி எழலாம். அது என்னவெனில், இயேசு கடைசி இடத்தில் அமருங்கள் என்று சொல்கிறாரே! அது சாத்தியமா? என்பதுதான் அந்தக் கேள்வி. இயேசு சொல்வது போல் நம்மால், விருந்தில் கடைசி இடத்தில் அமர முடியும். எப்போது என்றால், புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவது போன்று, உடன்பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டி, பிறர் நம்மை விட மதிப்புக்குரியவர் என எண்ணும்போது! (உரோ 12:10) பிறர் நம்மைவிட மதிப்புக்குரியவர் என எண்ணுவதற்கு உள்ளத்தில் தாழ்ச்சி இருக்கவேண்டும். அந்தத் தாழ்ச்சி இருந்தால், நம்மால் கடைசி இடத்தில் அமர முடியும்.

பணிவோடு செய்!:
பணிவைப் பற்றிச் சிந்திக்கையில், எது போலியான பணிவு, எது உண்மையான பணிவு என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம். மற்றவரிடமிருந்து ஒரு காரியம் ஆகவேண்டும் என்பதற்காக பணிவோடு இருப்பதாக சிலர் காட்டிக் கொள்வார்கள். உண்மையில் அது பணிவே அல்ல; கூழைக்கும்பிடு. இத்தகையோர் காரியம் அல்லது ஒரு செயல் நடப்பதற்காக எந்த எல்லைக்கும் போவார்கள். இவர்களைக் குறித்த கவனம் தேவை. இன்னும் ஒருசிலர் இருக்கின்றார்கள். இவர்கள், அப்படியென்ன பெரிதாகச் சாதித்துவிட்டேன் என்று சொல்லிக்கொண்டே, நற்செய்தியில் இயேசு சொல்லும் பரிசேயர், வரிதண்டுவோர் உவமையில் வரும் பரிசேயர் போன்று தாங்கள் செய்ததையெல்லாம் சொல்லித் தம்பட்டம் அடிப்பார்கள். ஆகவே, இதுவும் உண்மையான தாழ்ச்சியாக இருக்க முடியும்.

உண்மையான தாழ்ச்சி என்பது பிறர் வாழ்வு பெறுவதற்காகவும் உயர்வடையவும் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வருதல், இயேசு எப்படிக் கடவுள் தன்மையில் விளங்கினாலும், நாம் வாழ்வு பெறுவதற்காகத் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்தாரோ (பிலி 2: 6-8), அப்படி நாம் மற்றவர் வாழ்வு பெறவும் உயர்வடையவும் நம்முடைய நிலையிலிருந்து இறங்கி வரவேண்டும்,

சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய் என்கிறது. ஒரு பிள்ளை தன்னுடைய பெற்றோருக்கு எதையும் பணிவோடு செய்ய வேண்டும் என்ற பின்னணியில் இவ்வார்த்தைகள் இருந்தாலும், பெரியவருக்கும் அல்லது எல்லாருக்கும் அனைத்தையும் பணிவோடு செய்யவேண்டும் என்ற அழைப்பினை இவ்வார்த்தைகள் தருகின்றன. இவ்வாறு ஒருவர் தாம் செய்வது அனைத்தையும் பணிவோடு செய்கின்றபோது, இரு வகையான ஆசிகளைப் பெறுகிறார் என்கிறார் சீராக்கின் ஞான நூல் ஆசிரியர். முதலாவது ஆசி, கடவுளுக்கு உகந்தோரிடமிருந்து கிடைக்கும் அன்பு, இரண்டாவது ஆசி, ஆண்டவர் முன்னிலையில் கிடைக்கும் பரிவு.

ஆண்டவர் முன்னிலையில் கிடைக்கும் பரிவு எத்தகையது?
செய்வது அனைத்தையும் பணிவோடு செய்யும் ஒருவருக்கு, ஆண்டவர் முன்னிலையில் பரிவு கிடைக்கும் என்று இன்றைய முதல் வாசகம் சொல்கிறதே, அது எத்தகைய பரிவு என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் தெளிவுபடுத்துகின்றது. செய்வது அனைத்தையும் பணிவோடு செய்கிறவர், அல்லது விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ளோர் கடவுள் முன்னிலையிலும், புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளாகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்பர் என்கிறது இரண்டாம் வாசகம். மானிட மகன் இயேசுவின் முன் நிற்க எல்லாராலும் முடியாது. விழிப்பாயிருந்து மன்றாடுபவரால் முடியும் (லூக் 21:36). அதே நேரத்தில், தாம் செய்வது அனைத்தையும் பணிவோடு செய்கின்ற ஒருவரால் முடியும். இதுவே ஆண்டவரிடமிருந்து பணிவோடு இருப்பவருக்குக் கிடைக்கும் பரிவாகும்.

ஆண்டவர் முன்னிலையில் பரிவு கிடைக்க ஒருவர் வறியவருக்கு உணவளிக்க வேண்டும். அதை இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் இயேசு வலியுறுத்துகின்றார். விருந்துகளில் நண்பர்களுக்கு உணவளிப்பது பெரிதல்ல, அதனால் எந்தக் கைம்மாறும் கிடைக்காது. சிறிது காலத்திற்கு அவர்கள் நம்மைப் பாராட்டலாம். ஆனால், கடவுள் முன்னிலையில் பரிவு கிடைக்க ஒருவர் வறியவருக்கு உணவளிக்கவேண்டும். வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள் (உரோ 12: 13) என்று பவுலும் இதையே நமக்குக் அறிவுறுத்துகின்றார். எனவே, நாம் அனைத்தையும் பணிவோடு செய்து, ஆண்டவரிடமிருந்து பரிவைப் பெறுவோம்.



சிந்தனைக்கு:
பணிவு என்பது நம்மைப் பற்றித் தரக்குறைவாக நினைப்பது அல்ல, மாறாக, நம்மைப் பற்றிக் குறைவாக நினைப்பது என்பார் சி.எஸ்.லெவிஸ் என்ற அறிஞர். எனவே, நாம் பணிவோடு வாழ்ந்து, இறைவனிடமிருந்து பரிவையும் அருளையும் நிறைவாகப் பெறுவோம்.
 
 
 இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனி சென்றபோது ஒரு சிறுவனின் புதுநன்மை விழாவிலும், அவனது தாத்தாவின் 50-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிலும் பங்கெடுக்க வாய்ப்புக் கிடைத்தது. ஏராளமான விருந்தினர்கள் இந்த விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். எல்லா (International food) நாட்டின் உணவையும் உள்ளடக்கிய சுவையான விருந்து தயாரிக்கப் பட்டிருந்தது. சுவையான பல நாட்டு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நல்லதொரு நன்றி அறிதல் திருப்பலிக்குப் பின் விருந்து நடைபெற்றது.
ஆனால் எல்லாப் பிறந்த நாட்கள் கொண்டாட்டங்களைவிட இது வித்தியாசமான ஒன்று. அழைப்பிதழில் நன்கொடைகள். அன்பளிப்புகள் தவிர்க்கப்பட வேண்டும், வாங்கப்படாது என்று தெளிவாகப் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் ஏழை நாடாகிய ஆப்பிரிக்கா, இந்தியாவில் உள்ள அனாதை இல்லங்களுக்கு நன்கொடை கொடுத்தால் அது ஆயர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் வருகை தந்த அனைவரும் தாராள உள்ளத்துடன் தந்த அன்பளிப்புக்கள் 25 லட்சம் கிடைத்தது. அதை இந்திய நாட்டிற்கு அனுப்புவதாக அறிவித்தார்கள். இந்த விருந்தானது நம் ஆண்டவர் படம் பிடித்துக் காட்டும் விருந்துக்கு மிகப் பொருத்தம் ஆகும். நீ விருந்துக்கு அழைக்கப்படும்போது முதல் இடம் தேடாதே ஏனெனில் அழைப்பவன் தான் யாருக்கு எந்த இடம் எனக் குறிப்பிட உரிமை உண்டு. அது நீ அல்ல. இரண்டாவது நீ விருந்து கொடுக்கும்போது ஏழைகள், அனாதைகள், ஊனமுற்றோர் இவர்களை அழைத்து உதவி செய். இவர்கள் உடன் திருப்பித் தரமுடியாதவர்கள். ஆனால் கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என்று தெளிவாக்கப்படுகிறது.

ஆண்டவர் இரண்டு கருத்துகளை இன்று முன் நிறுத்த விரும்புகின்றார்.
நாம் நம்மையே தாழ்த்திக்கொள்ளவில்லை என்றால் பிறரால் தாழ்த்தப்படுவோம் என்ற எச்சரிக்கையைத் தருகிறார்.

தாழ்ச்சி உள்ளவர்கள் மற்றவர்மீது குறிப்பாக ஏழைகள்மீது அக்கறை காட்ட முடியும். வாழ்விலும் ஆன்மீகத்திலும் முதிர்ச்சி அடைந்தவர்கள் தங்களை உயர்த்திக்கொள்ள விரும்புவதில்லை. அறிவியல் கண்டுபிடிப்புக்களை மேற்கொண்ட நியூட்டன் தன் வாழ்வின் இறுதியில் நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன். இங்கே ஒரு கூழாங்கல், அங்கு ஒரு சங்கு எனச் சிலவற்றைக் கண்டுபிடித்திருக்கிறேன் என்று தன்னைப் பற்றித் தாழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

அன்னை தெரெசாவும் தன் அன்பு மற்றும் அறப்பணிகளைப் பற்றிப் பேசும்போது, நாங்கள் செய்யும் எல்லாப் பணிகளையும் இவ்வுலகில் நடைபெறும் பணிகளோடு ஒப்பிடும்போது அவை கடலின் ஒரு துளிக்குச் சமம் என்றார்கள்.

தாழ்ச்சி உள்ளவர்கள் பெறக்கூடிய நன்மைகள் பற்றியும் இன்றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன.

தாழ்ச்சியோடு செயல்படுபவர்கள் கடவுளால் உயர்த்தப்படுவார்கள். எனவே யாக்கோபு தன் திருமடலில் ஆண்டவர் முன் உங்களைத் தாழ்த்துங்கள். அவர் உங்களை உயர்த்துவார். (யாக். 4:10) என்கிறார்.
நீதிமொழிகள் இறுமாப்பு ஒருவரை தாழ்த்தும். தாழ்ச்சி ஒருவரை உயர்த்தும் (நீதிமொழி 29:23) என்கின்றன. அன்னை தெரெசா இதற்குச் சான்று.
தாழ்ச்சி உள்ளவர்களுக்குக் கடவுளின் மறைபொருள் வெளிப்படுத்தப்படுகிறது. எளியோருக்குத்தான் நற்செய்தி என்கிறார் இயேசு. ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு. அதாவது குழந்தை உள்ளம் கொண்டவர்களுக்கு விண்ணரசின் மறைபொருளை கடவுள் வெளிப்படுத்துகிறார் (லூக். 10:21). எளியோருக்குத் தான் ஆண்டவர் தம் மறைபொருளை வெளிப்படுத்துகிறார் (சீராக்
3:19).

தாழ்ச்சி உள்ளவர்கள் ஆண்டவரை மாட்சிமைப்படுத்தும் பேறுபெற்றவர்கள். சீராக் நூலில் கூறப்படுவதுபோல, தாழ்ந்தோரால் அவர் மாட்சிமை பெறுகிறார் (சீராக் 3:20).

இதற்கு உதாரணமாகத் திகழ்பவர் நம் ஆண்டவர் இயேசு (யோவா. 17:4). நம் தாய் மரியா.

தாழ்ச்சி உள்ளவர்கள் வாழ்வில் வீழ்வதில்லை. மாறாக ஆணவம் உள்ளவர்கள்தான் வீழ்த்தப்படுவார்கள். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை சிதறடித்து வருகிறார், வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார் (லூக். 1:53). தாழ்ச்சி உள்ளவர்கள் விட்டுக் கொடுக்கும் மனம் உடையவர்கள். தாழ்ச்சி என்றால் வளைந்து கொடுப்பதாகும்.

மார்ட்டின் லூத்தர் கூறுகிறார். 'ஒரு ஆற்றின் குறுகியப் பாலத்தின் நடுவே இரண்டு மலைகள். ஆடுகள் எதிர் எதிராக நடந்து வந்தன. விலகிச் செல்வதற்கு வழியில்லை. மோதிக்கொண்டால் ஆற்றில் விழ வேண்டும். பின்னோக்கிச் செல்லவும் முடியாது. இந்த நிலையில் ஒரு ஆடு படுத்துக் கொள்ள மற்ற ஆடுகள் அதன்மீது கடந்து சென்றன. தாழ்ச்சி இருந்தால் வாழ்க்கைப் பாலத்தை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் கடப்போம் என்பது உறுதி.''

ஒருமுறை வின்சென்ட் தே பவுல் அவரது அலுவலகத்தில் அமர்ந்து இருந்தார். பெண்ணொருத்தி அவரை அணுகி, என் மகனுக்கு வேலை வேண்டும் என்று கேட்டார். ஆகட்டும். பார்க்கலாம் என்றார். அந்தப் பெண்ணுக்கு வந்தது கோபம். உடனே வேலை கொடுக்காமல் ஆகட்டும் பார்க்கலாம் என்று சொல்வதா எனச் சொல்லி மேசை மீதிருந்த பேப்பர் வெயிட்டைத் தூக்கிப் புனிதர்மீது எறிந்தாள். தலையில் காயம், குருதி கொட்டியது. குருதியைத் துடைத்துக் கொண்டே தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பார்த்து, இந்தப் பெண் இவளது மகனை எவ்வளவு அன்பு செய்கிறாள் பாருங்கள் என்றார். இன்று இந்தப் புனிதர் வணக்கம் பெறுகிறார்.

அருகம்புல் தரையிலே படர்ந்து வளரும் தாவரம். தண்ணீர் உள்ள இடத்தில் தலைதூக்கி நிற்கும். வெயிலிலும், மழையிலும் அழிவுறாத ஒன்று. எல்லாக் காலங்களிலும் கால்நடைகளுக்கு
உணவாகிறது. மனிதருக்கு மருந்தாகிறது. ஆம் தாழ்ச்சியுள்ளவர்கள் அருகம்புல் போன்றவர்கள். தாழ்நிலை பொருளாதாரம் கொண்டவராக இருக்கலாம். ஆனால் இறைவனைப் பற்றிக் கொள்பவர்கள் சார்ந்து இருப்பவர்கள். தன் ஒவ்வொரு செயலையும் இறைவனில் ஊன்றிச் செய்பவர், எப்பொழுதும் ஒரே நிலைப்பாடு கொண்டவர், எல்லாருக்கும் பணிந்திருப்பவர், பணி செய்பவர், நம்பிக்கைக்குரிய மருந்தாக உள்ளவர். இதைத்தான் சீராக் நூல் போற்றுகிறது.

ஆனால் அகந்தை உள்ளவர்கள் திருத்தம் பெற இயலாதவர்கள். தன் எண்ணம், தன் மேம்பாடு, தன் செயல்களே மேலானவை என்று தம்மையே கடவுளாக்கிக் கொள்பவர்கள். இவர்களது வாழ்வு அழிவு சக்திகளாகத்தான் மாறும். சமூக அமைப்பில் வேறுபாட்டைப் புகுத்திச் சமூகம் துண்டாக்கப்படும். பழைய ஏற்பாட்டிலே குருக்கள், பரிசேயர், சதுசேயர், மூப்பர்கள் தங்களை மேலானவர்களாகக் கருதி பிறரை ஏற்காத அகந்தை நிலையில் வாழ்ந்தார்கள். இவர்களைத்தான் இயேசு கடினவார்த்தை கொண்டு சாடினார். (லூக். 18:9-14) ஆயக்காரன் - பரிசேயன் உவமை.
இயேசு முதல் இடம் பிடித்து விருந்துண்ண வந்தவர்களுக்குக் கூறுவதாவது, உங்களுள் முதல்வராக இருக்க விரும்புகிறவர் பணியாளராக இருக்கட்டும் (மத். 20:27). குழந்தைகளாக மாறாவிடில் விண்ணரசில் சேரமாட்டீர்கள் (மத். 18:3) என்றும் கூறுகிறார்.

இரண்டாவது விருந்து படைக்கிறவர்களுக்கு ஓர் அறிவுரை கூறுகிறார். உறவினர்களோடும், அடுத்திருப்போரிடமும், செல்வந்தர்களோடும் பகிர்ந்து கொள்வதைவிட தாழ்நிலை நிற்பவர்களோடு பகிர்தல் மேலானது என்றும் கூறுகின்றார். தாழ்ச்சி என்பது தன்னைத் தாழ்த்திக் கொள்வது, செயல்பாடாக மாறும்போது தன்னை ஏழைகளோடு ஒருவராக மாற்றிக் கொள்வது. கைமாறு எதிர்பாராமல் பணி செய்வது. இது கடினமான பண்பு. இதைச் சிறிது சிறிதாக வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நான் கனிவும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள் (மத். 11:29) என்கிறார் இயேசு. தன்னையே வெறுமையாக்கி அடிமையின் தன்மை பூண்ட இயேசுவின்தாழ்ச்சியைவிட நாம் பின்பற்ற வேறு எதுவும் இல்லை. இதைப் பின்பற்றியவள்தான் நம் தாய் மரியா. இதோ உமது அடிமை. உம் வார்த்தையின்படி நடக்கட்டும் என்றாள் (லூக்.1:38).

இரு தத்துவங்கள்:

தண்ணீரில் நீந்துபவன் கையைக் கீழே அமுக்கினால்தான் மேல்நோக்கி வர முடியும்.
ஆகாயத்திலே பறக்கிற பறவையானது தன் இறக்கைகள் இரண்டையும் கீழே அமுக்குவதால் தான் மேல் நோக்கிப் பறக்க முடியும்.
 
 மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
எதையும் எதிர்பாராமல் தர்மம் செய்வோம் !

ஓ மனிதா!
ஆடிவரும் தென்றலும்
பாடிவரும் பறவையும்
ஓடிவரும் அருவியும்
உலகத்திடமிருந்து எதையுமே
எதிர்பார்ப்பதில்லை!
நீ இயற்கையின் சிகரமல்லவா?
வெளியே வா!
உன் சுயநலச் சிறையை விட்டு
வெளியே வா!
உடைத்தெறி - உடைத்து எரி -
கைம்மாறு கருதி தர்மம் செய்யும்
உன் மனத்தை உடைத்தெறி - உடைத்து எரி -
அப்போது உனக்கு
வானம் கூட வசப்படும்.
இதுதான் இன்றைய நற்செய்தி தரும் அருள்வாக்கு!

இன்றைய நற்செய்தியிலே நாம் யாருக்கு உலகத்திலே விருந்து வைக்க வேண்டும்? யாரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்? என்பதை இயேசு தெளிவாக்குகின்றார். நாம் பேறுபெற்றவர்களாய், அதாவது ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக, உயிர்த்தெழும்போது
அவரிடமிருந்து கைம்மாறு பெறுகின்றவர்களாக வாழ, நாம் இவ்வுலகில் என்ன செய்ய வேண்டும்? என்பதை நமக்கு நம் ஆண்டவர்
சுட்டிக்காட்டுகின்றார்!

இன்று இயேசு நம்மைப் பார்த்து, நீங்கள் செய்த உதவிக்குக் கைம்மாறாக யார் திரும்ப உதவி செய்ய முடியாதோ அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்கின்றார். செல்வரும் இலாசரும் உவமையில் ஆபிரகாம் செல்வரைப் பார்த்து, மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய் ; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகின்றார் ; நீயோ மிகுந்த வேதனைப்படுகின்றாய் (லூக் 16:25) என்று கூறுவதைப் பார்க்கின்றோம்.

நாம் விண்ணகத்தை அடையவோ. விண்ணக எருசலேமை அடையவோ. பல்லாயிரக்கணக்கான வானதூதர் நடுவில் வாழவோ, நேர்மையாளர்களின் கூட்டத்தில் சேரவோ, புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையில் நிற்கவோ (எபி 12:22-24) விரும்பினால். கைம்மாறு கருதாது பிறருக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். கைம்மாறு கருதாது. அதாவது எதையும் எதிர்பார்க்காது, நயாகரா நீர்வீழ்ச்சியைப் போல் நம்மால் வாழ முடியுமா?

நமக்கு முன்னே வாழ்ந்தவர் கோடி உண்டு! இதோ விவிலியத்திலிருந்து இரு உதாரணங்கள்!

அரசர்கள் இரண்டாம் நூலில் ஐந்தாம் இயலில் நாமான் நலம் பெற்றதைப் பற்றி நாம் படிக்கும்போது, செய்த புதுமைக்குக் கைம்மாறாக எதையுமே ஏற்றுக்கொள்ள விரும்பாத எலிசா இறைவாக்கினரைச் சந்திக்கின்றோம்!

சிரியா மன்னனின் படைத்தலைவனான நாமான், எலிசா கூறியபடியே ஏழுமுறை யோர்தான் நதியில் மூழ்கி நலமடைகின்றார். நலமடைந்தவுடன் அவர் எலிசாவிடம் வந்து, இதோ, உம் அடியான்: என் அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளும் (2 அர 5:15) என்றார். அதற்கு எலிசா, நான் பணியும் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன் என்றார். நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை (2 அர 5:16).

எலிசாவின் பணியாளன் கேசகி, எலிசாவிற்குத் தெரியாமல் நாமானிடமிருந்து அன்பளிப்புப் பெற்றபோது அவனைத் தொழுநோய் பிடித்துக்கொண்ட நிகழ்ச்சியை அரசர்கள் இரண்டாம் நூலில் ஐந்தாவது இயலில் நாம் படிக்கின்றோம் (2 அர 5:20-27).

கைம்மாறு கருதாது பிறருக்கு உதவி செய்த எலிசாவைக் கடவுள் மாபெரும் இறைவாக்கினராக, மக்களால் வானளாவப் புகழப்படும் தீர்க்கதரிசியாக உயர்த்தினார். எலிசா நோயினால் பாதிக்கப்பட்டு, சாகக்கிடந்தபொழுது இஸ்ரயேலின் அரசன் யோவாசு எலிசாவைப் பார்த்து, "என் தந்தாய், என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே என்று சொல்லி! கதறி அழுதான்.
எலிசா இற பிறகு ரது எலும்புகள்கூட புதுமை செய்தன (2 அர 13:21ஆ) என்று அறிகின்றோம்.

புதிய ஏற்பாட்டிலே எதையுமே மக்களிடமிருந்து எதிர்பார்க்காது தன்னிடம் உள்ளதைப் பிறரோடு பகிர்ந்துகொண்ட கன்னி மரியாவைச்
சந்திக்கின்றோம். மங்கள வார்த்தைத் திருநாளன்று தன் வாழ்வை உலகுக்குக் கொடுத்தார் (லூக் 1:26-38). கானாவூர் திருமணத்தின்
போது தம் மகன் வழியாகத் திராட்சை இரசத்தை திருமண வீட்டாருக்குக் கொடுத்தார் (யோவா 2:1-11). கல்வாரியில் பாவிகள் மீட்புப்பெற
தம் மகனையே கொடுத்தார் (யோவா 19:25-27).

வாழ்க்கையில் ஒருமுறைகூட அன்னை மரியா தனக்கென்று எதையும் பிறரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை! இப்படிப்பட்ட வாழ்வுக்குப் பரிசாக மரியாவிற்கு எத்தகைய பரிசுகளைக் கடவுள் தந்திருக்கின்றார் என்பதை ஊரறியும், உலகறியும். இன்று அன்னையின் பெயர் சொன்னால் எங்கும் அருள் மணக்கும், எட்டுத்திக்கும் புகழ் மணக்கும்; விண்ணகமும், மண்ணகமும் அருள்நிறை மரியே வாழ்க! என வாழ்த்தும்.

எதையும் எதிர்பார்க்காது பிறருக்கு உதவி செய்கின்றவர்களுக்கு மட்டுமே மறு உலகம் கிடைக்கும்; இரண்டாம் வாசகம் சுட்டிக்காட்டும் விண்ணகத்தில் நமக்கு இடம் கிடைக்கும்.

இம்மை போதும், மறுமையை யார் பார்த்தது? என்ற வெளிப்புலன்களுக்கு உட்பட்ட எண்ண அலைகளுக்குள் நாம் சிக்குண்டு வாழ்ந்தால், அந்தச் சிக்கலிலிருந்து விடுபட இன்றே நாம் தர்மம் செய்யப்புறப்படுவோம். தண்ணீர் நெருப்பை அணைப்பது போல, நம் உள்ளத்தில் பற்றி எரியும் சுயநலத்தை, பாவத்தைத் தர்மம் அணைக்கும் (சீஞா 3:30).

மேலும் அறிவோம்:

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்(டு)
என்னாற்றும் கொல்லோ உலகு (குறள் : 211).

பொருள்: காலம் அறிந்து, உலக மக்கள் வாழ்வதற்காக வான்மழை பொழிகிறது. அதற்கு இவ்வுலகம் எத்தகைய மாற்று உதவியும் செய்வதில்லை. மழை பொழியும் மேகத்தைப் போன்றவர் உலக நலம் கருதும் ஒப்புரவாளர் ஆவர். அவர்கள் எதிருதவி எதையும் எதிர்பாராது
உதவுகின்றனர்.
 
 மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்


ஒரு கணவர் ஓர் அறிஞரிடம் சென்று. "என் மனைவி நான் கிழிச்ச கோட்டைத் தாண்டக்கூடாது. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டதற்கு அறிஞர் கூறியது: "முதலில் கோட்டை எங்கே கிழிப்பது என்பதை உங்கள் மனைவியைக் கேட்டுக் கிழியுங்கள்."

இன்றைய உலகை அச்சுறுத்துவது ஆணவம் என்ற அரக்கன்; கலக்கப் போவது யார்? நீயா? நானா? என்ற அகம்பாவம். யார் பெரியவர்?: கணவரா? மனைவியா?: மாமியா? மருமகளா?; ஆளுங்கட்சியா ? எதிர்க்கட்சியா?: அருள்பணியாளர்களா? பொது நிலையினரா? இப்பின்னணியில் இன்றைய அருள்வாக்கு வழிபாடு தாழ்ச்சியின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. ஆணவத்தால் வீழ்ச்சியுற்ற உலகைத் தமது தாழ்ச்சியால் உயர்த்திய இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்: "தம்மை உயர்த்துபவர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்" (லூக் 14:11) கிறிஸ்துவே தாழ்ச்சிக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு. கிறிஸ்து தம்மையே வெறுமையாக்கி, சாவை. அதுவும் சிலுவைச் சாவை ஏற்றுக் கொள்ளும் அளவுக்குத் தம்மைத் தாழ்த்தினார்; எனவே கடவுள் அவரை எல்லார்க்கும் மேலாக உயர்த்தினார் (பிலி 2: 6 -11). அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது: "நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன் என்று என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்" (மத் 11: 29).

தாழ்ச்சி என்பது ஒருவருடைய மனநிலையைப் பொறுத்தது. தாழ்ச்சியுடையவர் எப்போதும் கடவுளுக்குப் பணிந்திருப்பார்; ஏழை எளியவர்களுடன் தோழமை கொள்வார். கிறிஸ்து தமது விருப்பத்தை நிறைவேற்றாமல் தமது தந்தையின் விருப்பத்தையே நிறைவேற்றினார். வர் மேட்டுக்குடி மக்களோடு பழகாமல் ஏழை எளியவர்களுடன் பழகினார். விவிலியத்தில் 'அனாவிம்' என்ற வர்க்கத்தினர் இருந்தனர். அவர்களிடம் செல்வமோ செல்வாக்கோ இல்லை; அவர்கள் செல்வந்தர்களால் ஒடுக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் முழுக்க. முழுக்கக் கடவுளையே சார்ந்திருந்தனர். இவர்கள் "கடவுளின் ஏழைகள்" என்று அழைக்கப்பட்டனர். இவர்களைப்பற்றி இன்றைய பதிலுரைப்பாடல் பின்வருமாறு கூறுகிறது: "கடவுளே நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர்" (திபா 68: 10).

அனாவிம் வர்க்கத்தினர்தான் கிறிஸ்து தமது மலைப் பொழிவில் குறிப்பிடும் "ஏழையரின் உள்ளத்தோர்" (மத் 5:3) மற்றும் "கனிவுடையோர்" (மத் 5: 5). ஏழைகளும் சாந்தம் உள்ளவர்களும்தான் இறையாட்சியின் அருளடையாளங்கள்; விண்ணரசின் வாரிசுகள். இவர்களைப் பற்றித்தான் அன்னை மரியா பின்வருமாறு பாடியுள்ளார்; "கடவுள் தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்; பசித்தோரை நலன்களால் நிரப்புகிறார்: செல்வரை வெறுங்கையராய் அனுப்பி விடுகிறார்" (லூக் 1:50-53). எனவே தாழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கவேண்டுமென்றால், அனாவிம் வர்க்கத்தினரின் மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய மனநிலை இல்லாதவர்கள் கடவுளுக்கு அன்னியமானவர்கள் என்பதை அறிக. இன்றைய முதல் வாசகத்தில் சீராக் கூறுகிறார்: "நீ பெரியவனாய் இருக்கும் அளவுக்குப் பணிந்து நட" (சீஞா 3:18). ஒருவர் எவ்வளவுக்கு உயர் பதவியில் இருக்கின்றாரோ அவ்வளவுக்குப் பணிவுள்ளவராக இருத்தல் வேண்டும்; அது செல்வர்களுக்கு மிகவும் தேவை; பணிவு என்பது செல்வர்களுக்குக் கூடுதலான செல்வம்; அது அழகுக்கு அழகு சேர்ப்பது போன்றதாகும் என்கிறார் திருவள்ளுவர்.

எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து (குறள் 125)

தாழ்ச்சி என்பது தாழ்வு மனப்பான்மை அல்ல. ஓர் அக்கா தன் தங்கையிடம் கூறியது: "நீ என் தங்கச்சி; நாமிருவரும் ஒரு கட்சி: நம்மால் ஒன்றும் செய்ய முடியாது: ஏனெனில் நாமிருவரும் பொட்டச்சி," இவ்வாறு சொல்வது பெண் குலத்தையே இழிவுபடுத்துவதாகும். மரியன்னையிடம் தாழ்ச்சி இருந்தது. எனவேதான் அவர் கூறினார்: "அவர் (கடவுள்) தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்" (லூக் 1:48). ஆனால் மரியன்னையிடம் தாழ்வு மனப்பான்மை இல்லை. எனவேதான் அவர் தன்னைப் பற்றி இறைவாக்குரைத்தார்: "இது முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்" (லூக் 1:49).

தாழ்ச்சி என்பது உண்மை நிலை. உண்மை நிலை என்ன? " நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளோ விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை: விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை" (1 கொரி 3:6-7). நாம் அடையும் வெற்றியைப்பற்றி இறுமாப்புக் கொள்ளாமல், அவ்வெற்றியை நமக்குக் கொடுத்த இறைவனுக்கு மகிமை அளிப்பதே உண்மையான தாழ்ச்சியாகும். அகநிலையில் தாழ்ச்சியுள்ளவர்களாக இருந்தால், புறநிலையில் ஏழை எளியவர்களுடன் பழகுவோம். இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறும் அறிவுரை: "விருந்துக்குப் பணக்கார உறவினர்களையும் நண்பர்களையும் அழைக்காமல், ஏழை எளியவர்களையும் அழையுங்கள். அப்போது மறுமையில் கைம்மாறு கிடைக்கும்" (லூக் 14:12-14).ஒரு பணக்காரர் தனது திருமண வெள்ளிவிழாவை ஓர் அனாதை இல்லத்தில் கொண்டாடி, அனாதை சிறுவர், சிறுமிகளுக்கு விருந்தளித்தார். நாமும் அவ்வாறு செய்யலாமே! அதற்கு மனமாற்றம் தேவை. இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது: "நாம் இருப்பது சீனாய் மலை அல்ல; மாறாக, சீயோன் மலை," முன்னது அடிமை வாழ்வையும், பின்னது உரிமை வாழ்வையும் குறிக்கின்றன. நாம் ஆணவம் என்னும் அடிமைத்தளையை உதறித் தள்ளிவிட்டு, பணிவு என்னும் உரிமை வாழ்வைக் கடைப்பிடிப்போம்.

"ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார்" ( 2 கொரி 5: 17).
 
 திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை

தலையாயது தாழ்ச்சி

நெப்போலியன் என்றாலே இன்றுகூட நிமிர்ந்து நிற்கும் வீர இள நெஞ்சங்கள். இப்படி ஓர் ஈர்ப்பு அவனுக்கு எப்பொழுதும் உண்டு. ஆனால் அவன் வாழ்க்கையோ...

கண்கண்ட கிறிஸ்துவாக உலகில் திகழ்ந்த திருத்தந்தைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டான். காலங்காலமாக பாப்பரசர் மணிமுடி சூடப் பெருமை கண்ட ஃபிரான்ஸ் நாட்டு மரபை மாற்றி தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டு தனக்கு நிகர் யார் என்ற செருக்கில் இறுமாந்திருந்தான். கட்டிய மனைவியை ஒதுக்கிவிட்டு இன்னொருத்தியோடு குடும்பத்தின் புனிதத் தன்மைக்கே களங்கமாக இருந்தான். முறை கெட்ட அவன் வாழ்வால் பாப்பரசர் திருஅவையை விட்டே அவனைப் புறம்பாக்கினார். தள்ளுண்ட செய்தி கேட்டு அவர் வருந்தவில்லை. ஏளனமாகச் சிரித்தான். இறுமாப்போடு சிரித்தான். "இவர் என்னைப் புறம்பாக்கி விட்டால் என் கையிலோ என் வீரர்களின் கைகளிலோ உள்ள துப்பாக்கிகள் நழுவிக் கீழே விழுந்திடுமோ? இந்த ஏளனச் சிரிப்பு தனக்குத்தானே விதித்துக் கொண்ட தீர்ப்பு என்பதை அவன் அப்போது உணரவில்லை. காலமும் வரலாறும் உணர்த்தின.

வெற்றி மேல் வெற்றி பெற்று வீறுடன் ரஷ்ய-நாட்டை நோக்கிப் படையெடுத்தான். அப்போது ரஷ்யர்கள் எதிர்த்து நிற்கவில்லை. போரிடுவதில் புது முறையைக் கையாண்டனர். தங்கள் நாட்டின் எல்லைப்புறம் தொடங்கி தங்கள் ஊர்களை தகர்த்துக் கொண்டே பின்வாங்கி வந்தனர். அழிந்துபட்ட ஊர்களைக் கைப்பற்றியபோது நெப்போலியன் படைக்கான உணவு கிடைக்கவில்லை. தலைநகர் மாஸ்கோவை நெருங்கியபோது பனிக்காலம் வேறு தொடங்கியது. உலகிலேயே கடுமையானது ரஷ்யக் குளிர். உணவின்றிப் பசியால் அவதி ஒரு புறம். பனியின் குளிரால் நடுக்கம் ஒருபுறம். அவனை அறியாமலேயே அவனது வீரர்களை அறியாமலேயே அத்தனை பேருடைய கைகளிலிருந்தும் துப்பாக்கிகள் நழுவிக் கீழே விழுந்தனவாம். தனக்கு நிகர் யார் என்ற செருக்கின் விளைவு சீரழிவைத் தந்தது.

இது நேற்று இன்று என்றல்ல, நெப்போலியன் காலத்தில் மட்டுமல்ல. படைப்பின் தொடக்கத்திலேயே எழுந்தது. எனக்கு நிகர் யார்? என்ற அறிவின் ஒளிதாங்கி லூசிபெரின் புரட்சிப் புலம்பலை எதிர்த்துப் பொங்கி எழுந்த மிக்கேல் அதிதூதரின் அறைகூவல்தானே "இறைவனுக்கு நிகர் யார்? என்பது! தங்கள் பார்வையில் ஞானிகள் என்றும், தங்கள் கணிப்பில் கூர்மதி வாய்ந்தவர்கள் என்றும் தங்களையே கருதுபவர்களுக்கு ஐயோ கேடு" (எசா. 5:21).

சொல்லுவார்கள்: "கோபம் கொண்டவன் தன்னை இழக்கிறான். பொறாமை கொண்டவன் நண்பனை இழக்கிறான். கர்வம் கொண்டவன் கடவுளை இழக்கிறான். முற்றிலும் உண்மை. ஆணவம் முன் செல்லும். அவமானம் பின்தொடரும். "முதலில் வருவது இறுமாப்பு. அதனை அடுத்து வருவது அழிவு. மேன்மையடையத் தாழ்மையே வழி " (நீ. மொ. 18:12, 11:2). இறையச்ச உணர்வோடு கூடிய தாழ்ச்சி அது. "தாழ்மை உள்ளவர்களுக்கும் ஆண்டவரிடம் அச்சமுள்ளவர்களுக்கும் கிடைக்கும் பயன் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும் (நீ.மொ. 22:4)

தலையாய பாவம் ஆணவம் என்றால் தலையாய புண்ணியம் தாழ்ச்சி. தரைக்குள் மறைந்திருக்கும் இந்த வேரிலிருந்துதான் தளிர்க்கின்றன விண்ணகப் பண்புகள் அனைத்தும்.

தாழ்ச்சி என்பது உண்மை என்பார்கள். தன்னைப் பற்றிய நேர்மையான பார்வை (simply an honest look at myself). நான் இருப்பது போல என்னைப் பார்ப்பது. அது தாழ்வு மனப்பண்மை அல்ல. பிந்தியது தன்னைப் பற்றி நல்லெண்ணம் கொண்டிருப்பதில்லை. எனவே எதையும் விரக்தியுடன் நோக்கும் நமக்கோ பிறருக்கோ வளர்ச்சி தராது. தளர்ச்சியையே தரும்.

தாழ்ச்சிக்கு இயேசுவே நமக்கு முன்னோடி - வழிகாட்டி. "கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்" (பிலிப். 2:5) என்பார் திருத்தூதர் பவுல். இயேசுவின் மனநிலை என்றாலே தாழ்ச்சிதான் - தாழ்ச்சி என்பதுதான் இயேசுவின் அடையாளம்.

ஆணவத்தால்தான் அழிவுற்றான் மனிதன். அவனை மீட்க மாற்றாகத் தாழ்ச்சியைத்தானே இறைவன் தேர்ந்தெடுக்க முடியும்! மனிதத்தன்மையிலிருந்து இறைத்தன்மைக்கு உயர விழைந்தான் மனிதன் (விலக்கப்பட்ட கனியைத் திண்றதன் நோக்கம் அது). ஆனால் இறைவனோ இறைத்தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்குத் தன்னையே தாழ்த்தினார்.

"கிறிஸ்து தம்மையே தாழ்த்தி ... சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு கீழ்ப்படிந்தார். அதனால்தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாக உயர்த்தி எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்" (பிலிப். 2:6-11). தொடக்கக் காலத் திருஅவை திருவழிபாட்டில் பயன்படுத்திய எவ்வளவு பொருத்தமான புகழ்ப்பா இது! இறைமகன் மனிதப் பிறப்பெடுத்த செயலில் மட்டுமல்ல. அவருடைய வாழ்வு முழுவதுமே தாழ்ச்சி என்பது ஒரு தொடர் நிகழ்வாயிற்று. அதனால் கிறிஸ்தவத் தாழ்ச்சி என்பது -

"நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள்'' (மத். 11:29) என்று தன்னைக் குறித்துச் சொன்ன இயேசுவைப் போல் இருப்பது.
தன் சீடர்களின் காலடிகளைக் கழுவும் அளவுக்குத் தன்னைத் தாழ்த்தி, "தொண்டு ஏற்பதற்கல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கு" (மார்க். 10:45) என்று பிறருக்காகவே வாழ்ந்த இயேசுவைப் போல் வாழ்வது.


பூமிதானம் என்ற புரட்சித் திட்டத்துக்கு வித்திட்டவர் வினோபா.1931ஆம் ஆண்டு அவருக்குக் காந்தி அண்ணலிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதைப் பிரித்துப் படிக்கும்போதே அவர் முகம் மாறியது. உடனே கடிதத்தைக் கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டார். அதைப் பார்த்த நண்பருக்கு ஆச்சரியம். அதிரிச்சியும்கூட. குப்பைக் கூடையில் கிடந்த கடிதத்துண்டுகளையெல்லாம் பொறுக்கி எடுத்து ஒன்றிணைத்துப் படித்துப் பார்த்தார். அதில் காந்தி அவர்கள் "தங்களைப் போன்ற மிகப் பெரிய மாமனிதரை நான் இதுவரை கண்டதில்லை என்று எழுதியிருந்தார். என்னங்க இது, பத்திரப்படுத்த வேண்டிய ஒன்றை இப்படிக் கிழித்துப் போட்டீர்களே!" என்று கேட்க, அதற்கு வினோபா "பெரியவர் நம்மேல் வைத்திருக்கும் அன்பு காரணமாக சில தவறுகள் செய்யலாம். அதற்கு முக்கியத்துவம் தரக்கூடாது. பெருந்தன்மையோடு எழுதிய வார்த்தைகளை நான் பாதுகாக்க முனைந்தால் நாளடைவில் அவை என் மண்டைக்குள் புகுந்து என் மனதைப் பாழாக்கி விடாதா? அப்புறம் நான் அகந்தையால் ஒன்றுக்கும் உதவாதவன் ஆகிவிடுவேன் என்றாராம். மாமனிதரே என்றாலும் மனிதர் தரும் பெருமை தேடாத மாண்பு என்னே! "நீ பெரியவனாய் இருக்கும் அளவுக்குப் பணிந்து நட... இறுமாப்புக் கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை. ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றி விட்டது" (முதல் வாசகம் சீராக். 3:18,28).

'ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாக அணிந்திருங்கள். ஏனெனில் செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார். தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார். ஆகையால் கடவுளுடைய வல்லமை மிக்க கரத்தின் கீழ் உங்களைத் தாழ்த்துங்கள் அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்" (1 பேதுரு 5:5,6).

கிறிஸ்துவின் தாழ்ச்சியில் நாம் பங்கு பெற்றோமானால் கிறிஸ்துவின் மாட்சியிலும் பங்கு பெறுவோம். அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு. நிறைகுடம் தழும்பாது என்பது பழமொழி. தாழ்ச்சி என்பது தாழ்நிலையன்று. உயர்ந்த குணம். தாழ்ச்சி நம்மை உயர்த்தும். தற்பெருமை நம்மை வீழ்த்தும். எனவேதான் தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் (லூக்.14:11) என்றார் இயேசு.

ஓர் எச்சரிக்கை: தாழ்ச்சி என்பது கூட அகந்தையின் அடையாளமாகிவிடும் ஆபத்து உண்டு.

உயர்வில் தாழ்ச்சி கொள்வோம்.
தாழ்ச்சியால் உயர்வு காண்போம்.
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
இன்றைய ஞாயிறு நற்செய்தியை மையப்படுத்தி நம் சிந்தனைகளைத் துவக்குவோம். அனைத்து உயிரினங்களின் அடிப்படை தேவை உணவு. மனிதர்களுக்கும் இது ஓர் அடிப்படை தேவைதான். எனினும், உண்ணுதல் என்ற செயல், நம் மத்தியில் பசி என்ற அடிப்படை தேவையைத் தீர்க்கும் கடமை மட்டுமல்ல. மாறாக, கூடிவந்து உணவு உண்ணுதல், உறவை வளர்க்கும் ஒரு கருவியாகவும் உள்ளது. மிருகங்களும் கூடிவந்து உண்கின்றன. ஆனால், அவ்விதம் கூடிவருவது அவை அறிந்து செய்யும் செயலா என்ற கேள்வி எழுகிறது. மனிதர்கள் மத்தியில் மட்டுமே, குழுவாக கூடிவந்து உண்பது ஒரு சமூகக் கலையாக வளர்ந்துள்ளது.

பாவம், தாவரங்கள்... அவை ஒவ்வொன்றும் தனித்து வேரூன்றி நின்ற இடத்திலேயே தினமும் உணவு உண்பது இயற்கை வகுத்த நியதி. தனித்துண்ணும் தாவரங்களைப் போல் மனிதர்களும் மாறிவரும் நிலை மனதை நெருடுகிறது. துரிதமாகச் செல்லும் இன்றைய உலகில், காளாண்களைப்போல் வளர்ந்திருக்கும் துரித உணவகங்களில், மனிதர்களாகிய நாம், தாவரங்களைப் போல் நின்றபடியே அவசர அவசரமாக உணவை முடிக்கும் காட்சிகள் பெருகி வருகின்றன.

இரவும் பகலும் உழைக்கவேண்டியச் சூழலில், சேர்ந்து அமர்ந்து பேசி, சிரித்து மகிழ்வது, சேர்ந்து உண்பது போன்ற குடும்ப செயல்பாடுகள் மிக மிக அரிதாகி வருகின்றன. ஒரு சில இல்லங்களில் இரவு உணவை அனைவரும் சேர்ந்து உண்பது நிகழத்தான் செய்கின்றது. ஆனால், அவர்கள் அப்படி உண்ணும்போது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தபடியே உண்கின்றனர் என்பது பரிதாபமான உண்மை. தாவரங்களைப் போல் தனித்து நின்று துரிதமாக உணவை உண்பது, தொலைக்காட்சி பெட்டிக்கு முன் அமர்ந்து உண்பது, போன்ற பரிதாபப் பழக்கங்களின் பின் விளைவுகளால், மருத்துவர்களை நாம் சந்திக்கும் நேரம் அதிகமாகி வருகிறது.

சேர்ந்துண்பதைப்பற்றி பேசும்போது, நாம் கலந்துகொள்ளும் விருந்துகள் பற்றியும் சிந்திக்கலாம். விருந்தென்று வந்துவிட்டால், விருந்து பரிமாறுவதில், விருந்து உண்பதில் எத்தனையோ வழி முறைகள், விதி முறைகள்... ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பழக்கம், வழி முறை உண்டு. பொதுவாகவே, மிகப்பெரும் செலவில், மிக உயர்ந்த முறையில் நடத்தப்படும் விருந்துகளில், உணவு உண்பதை விட, அங்கு கடைபிடிக்கப்படும் வழிமுறைகள், சாத்திர சம்பிரதாயங்கள் அதிக அளவில் இருக்கும். அந்த விருந்துகளில் எதை எதை எந்தெந்த நேரங்களில் செய்யவேண்டும் என்பதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்துகொண்டு விருந்துக்குச் செல்லவேண்டும், இல்லையேல் அவமானப்பட வேண்டியிருக்கும்.

ஓர் அருள் பணியாளர் என்ற முறையில், பல விருந்துகளில் பங்கேற்றுள்ளேன். சாதாரண, எளிய குடும்பங்களில் எந்தவித சடங்கும் இன்றி விருந்து உண்டு, மன நிறைவோடு வந்திருக்கிறேன். வசதிபடைத்தவரின் விருந்துகளில், எதைச் செய்வது, எதைச் செய்யக்கூடாது, எதை எடுப்பது, எத்தனை முறை எடுப்பது என்று கணக்குப் போடுவதிலேயே விருந்தின் பெரும்பகுதி நேரத்தைக் கழித்திருக்கிறேன். பெரும்பாலான நேரங்களில் இந்த விருந்துகளிலிருந்து திரும்பியபோது வயிறும் நிறையவில்லை, மனதும் நிறையவில்லை.

விருந்தைப் பற்றி ஏன் இவ்வளவு விளக்கம்? இயேசு கலந்துகொண்ட ஒரு விருந்தைப்பற்றி, அந்த விருந்து நேரத்தில் இயேசு சொல்லித்தந்த பாடங்களைப்பற்றி இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. ஒய்வு நாள் ஒன்றில், இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார்... இன்றைய நற்செய்தி இப்படி ஆரம்பமாகிறது. இது சாதாரண விருந்து அல்ல. ஒரு பரிசோதனை விருந்து. இயேசுவைச் சோதிக்கக் கொடுக்கப்பட்ட ஒரு விருந்து.

யூத விருந்து முறைகளில் பல சடங்குகள் உண்டு. வீட்டிற்குள் நுழைவதற்கு முன் தங்களையே சுத்தமாக்கும் சடங்கு. உள்ளே சென்றதும் ஒருவர் ஒருவரை வாழ்த்தும் சடங்கு... விருந்துக்கு முன், விருந்து நேரத்தில், விருந்து முடிந்ததும்... என்று ஒவ்வொரு நேரத்திற்கும் குறிக்கப்பட்டச் சடங்குகள் பல உண்டு. இயேசு இச்சடங்குகளையெல்லாம் அறிந்திருந்தாரா? சரிவரத் தெரியவில்லை. அத்துடன், அர்த்தமற்ற சாத்திர சம்பிரதாயங்கள் இயேசுவுக்குப் பிடிக்காது என்பதும் நமக்குத் தெரிந்த ஓர் உண்மை.

இப்படி சுதந்திரமாக வளர்ந்தவரை, மற்றவர்களையும் அவ்வாறே வளர்க்க நினைத்தவரை, பரிசேயர் தலைவர் ஒருவர் விருந்துண்ண அழைத்திருந்தார். நற்செய்தியில் வரும் அடுத்த வரி, அந்த விருந்தின் உள் நோக்கத்தை நமக்குப் புரிய வைக்கின்றது. "அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்."

சூழ்ந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்ப்பது இயேசுவுக்குப் புதிய அனுபவம் இல்லை. அவர் சென்ற இடங்களிலெல்லாம் இதுபோல் நடந்தது. சாதாரண, எளிய மக்கள் இயேசுவை சுற்றி வந்து அவரைக் கூர்ந்து கவனித்தனர். அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்க, அவரது ஒவ்வொரு செயலையும் கண்டு பிரமிக்க, பின்பற்ற மக்கள் எப்போதும் அவரைக் கூர்ந்து கவனித்தனர். அந்த எளிய மக்கள் கூர்ந்து கவனித்ததற்கும், இப்போது இந்த பரிசேயர் வீட்டில் இயேசுவைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் அவரைக் கூர்ந்து கவனித்ததற்கும் ஏகப்பட்ட வேறுபாடு இருந்திருக்கும்.

இப்படி ஒரு சூழலில் நான் இருந்தால் என்ன செய்வேன்? முடிந்தவரை அச்சூழலில் எந்தத் தவறும் செய்துவிடக்கூடாது என்பதிலேயே என் கவனம் இருக்கும். எதையும் சொல்வதற்கு, செய்வதற்குத் தயங்குவேன். எவ்வளவு விரைவில் அந்த இடத்தைவிட்டு வெளியேற முடியுமோ, அவ்வளவு விரைவில் வெளியேறுவேன்.

இயேசு என்னைப்போன்றவர் இல்லை. அசாத்தியத் துணிச்சல் அவரிடம் இருந்தது. இறைதந்தை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கை, உண்மை மீது அவருக்கிருந்த பற்று இவற்றின் வெளிப்பாடாக வந்த துணிச்சல் அது. எனவேதான், அந்தப் பரிசேயர் வீட்டில், சூழ இருந்தவர்கள் அனைவரும் தன்னைக் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்று தெரிந்தும், தன் மனதில் எழுந்த கருத்துக்களைத் தெளிவாகக் கூறினார்.

அவரது முதல் கருத்து, விருந்துக்கு வந்திருந்த விருந்தாளிகளுக்கு... இரண்டாவது கருத்து விருந்தை ஏற்பாடு செய்திருந்த பரிசேயர் தலைவருக்கு... நமது எண்ண ஓட்டங்களின்படி பார்த்தால், இயேசுவுக்கு இது வேண்டாத வேலை என்பதுபோல் தெரியும். விருந்துக்குப் போனோமா, சாப்பிட்டோமா, வந்தோமா என்று இல்லாமல், ஏன் வீணாக வம்பை விலைக்கு வாங்குகிறார்? என்ற கேள்வி எழும். குறை கண்ட இடத்தில், அந்தக் குறையைத் தன் விருந்தோடு சேர்ந்து விழுங்காமல், அதை எடுத்துச் சொன்னார் இயேசு. இதோ, இயேசு வழங்கிய முதல் பாடம்...

லூக்கா 14: 7-11
விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், நண்பரே, முதல் இடத்திற்கு வாரும் எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.

இயேசுவின் இந்தப் பாடத்தைக் கேட்கும்போதெல்லாம், என் மனத்திரையில் ஒரு கற்பனை காட்சி ஓடும். நான் ஒரு விருந்துக்குப் போகிறேன். விருந்து நடக்கும் அரங்கத்தில் நுழைந்ததும், "கடைசி இடத்தில் அமருங்கள்" என்று இயேசு சொன்னது என் காதில் ஒலிக்கிறது. கடைசி இருக்கைக்குப் போகிறேன். ஆனால், மனதுக்குள் ஓர் ஏக்கத்துடன், எதிர்பார்ப்புடன் அந்த இருக்கையில் சென்று அமர்கிறேன். விருந்துக்கு என்னை அழைத்தவர் நான் கடைசி இடத்தில் அமர்ந்திருப்பதை எப்படியாவது பார்த்து விடுவார், உடனே ஓடிவந்து, "என்ன இங்கே உட்கார்ந்துவிட்டீர்கள்? முதல் இடத்திற்கு வாருங்கள்" என்று அங்கிருந்தவர்கள் முன்னிலையில் என்னை அழைத்துச்செல்வார் என்ற எதிர்பார்ப்புடன் அங்கு நான் அமர்ந்திருக்கிறேன்.

விருந்து ஆரம்பமாகிறது. பலரையும் வாழ்த்தியபடியே வீட்டுத் தலைவர் வருகிறார். என் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. படபடப்பும் அதிகமாகிறது. வீட்டுத் தலைவர் என்னையும் வந்து வாழ்த்துகிறார்... அதற்குப் பிறகு... அவ்வளவுதான்... மற்றபடி "நண்பரே, முதல் இடத்திற்கு வாருங்கள்" என்ற அழைப்பு அவரிடம் இருந்து வரவில்லை. என் மனம் உடைந்து போகிறது. கடைசி இடத்தைத் தேடிச்சென்று அமர்ந்தபோது என்னிடம் இருந்த தாழ்ச்சி அர்த்தமில்லாமல் போகிறது. இந்தக் கற்பனைக் காட்சியைச் சிந்திக்கும்போது, நமக்குள் சிரிப்பு எழுகிறது, உண்மைதான்...

இயேசு கூறிய தாழ்ச்சி இதுவல்ல. முதலிடம் கிடைக்கும் என்ற ஏக்கத்தோடு, எதிர்பார்ப்போடு கடைசி இடத்திற்குச் செல்லுங்கள் என்று அவர் சொல்லவில்லை. அப்படிச் செய்வது, தாழ்ச்சியே இல்லை. தாழ்ச்சி என்ற பெயரில் நடத்தப்பட்ட நாடகம். உயர்குடி மக்களின் விருந்தில் மருந்துக்கும் காண முடியாத தாழ்ச்சியைப் பற்றி இயேசு சொன்ன பாடம் பரிசேயர் வீட்டில் பலரை சங்கடத்தில் நெளிய வைத்திருக்கும்.

இயேசுவின் அடுத்த பாடம் அந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்த பரிசேயர் தலைவருக்கு. இது உண்மையிலேயே மிக அதிகமான துணிச்சல் என்று சொல்லத் தோன்றுகிறது.
செல்வந்தர்கள் நடத்தும் விருந்துகளில் கணக்குகள் நிரம்பி வழியும். யார் யாரை அழைக்கவேண்டும், யார் யாருக்கு எந்தெந்த இருக்கைகள், எத்தனை வகை மது பானங்கள், உணவு வகைகள்... இவ்விதம்... விருந்து கொடுப்பவரின் கணக்கு மிக நீண்டதாக இருக்கும். விருந்தில் கலந்துகொள்பவர்களின் கணக்கு வேறுபட்டிருக்கும்... என்ன உடுத்துவது, என்ன பரிசு தருவது, எவ்வளவு சாப்பிடுவது, யார் யாரைச் சந்திப்பது, யார் யாரைக் கண்டும் காணமல் போவது... இவ்விதம் இவர்கள் கணக்குகள் நீளும். கணக்குப் பார்த்து, பார்த்து அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் செயற்கைத்தனம் அதிகம் பளிச்சிடும்.

ஒரு சில விருந்துகளில், மது அதிகமாகி, மதி குறைந்து போகும். பல வேளைகளில் இத்தகைய விருந்துகளில் நிகழும் விபரீதங்களைப் பற்றி கேள்விப்படும்போது, இவர்கள் மனிதப்பிறவிகள்தானா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. நாளை, ஆகஸ்ட் 29ம் தேதி, திங்களன்று, திருமுழுக்கு யோவான் தலை வெட்டுண்டு உயிர் துறந்த திருநாளைக் கொண்டாடவிருக்கிறோம். அவரது தலை வெட்டப்பட்டது, ஒரு விருந்து நேரத்தில். மதுவின் போதையில், ஏரோது மன்னன் வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்க, அது யோவானின் தலை வெட்டப்படும் அளவுக்கு, அத்துமீறிச் சென்றது. ஒவ்வொரு விருந்துக்கும் சென்றபோதெல்லாம், தன் நெருங்கிய உறவினரான யோவான், ஒரு விருந்து நேரத்தில் கொல்லப்பட்டார் என்ற அந்த வேதனை, இயேசுவின் மனதில் நிழலாடியிருக்கும்.

இப்படிப்பட்ட செயற்கைத்தனமான, அல்லது, வரம்புகளை மீறும் விருந்துகளுக்கு ஒரு மாற்று மருந்தாக, இயேசு கூறும் விருந்து ஒன்று உள்ளது. எந்தக் கணக்கும் பார்க்காமல், எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல், தரப்படும் விருந்து அது. நீதி, அன்பு, உண்மை என்ற அனைத்து சுவைமிக்க ஆன்ம உணவையும் படைக்கும் இத்தகைய விருந்தைப்பற்றி இயேசு கூறும் வார்த்தைகள், இன்றைய நம் சிந்தனைகளை நிறைவு செய்யட்டும்.

லூக்கா 14: 12-14
பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும் என்று கூறினார்.
 
 மறையுரை முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌ பெங்களூர்
 
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌ பெங்களூர்
 
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ