ஆண்டவனைத் தொழ ஆலயம் வந்திருக்கின்ற அன்பு நெஞ்சங்களே!
"நீங்கள் தான் நான் விரும்பும் ஆலயம். எனக்குப் பிரியமான மனித வடிவக்
கோவில்களை அன்பைக் குழைத்துக் கட்டுங்கள்" என்ற ஆண்டவனின் அன்புச்
செய்தியை சிறப்பு அம்சமாக்கி அதையே நமது பரம்பரையின் வம்சமாக்கி
வாழும் தாக்கத்தினை தாங்கி வருகிறது. இந்த ஏழாவது வார ஞாயிறு
திருப்பலி நிகழ்வு.
அன்பை நமக்கு ஏற்ற கோணத்தில் தொடுவதால் வாழ்வில் அதிகமாக அன்பை அனுபவிக்காமல்
இருக்கிறோம். நாம் மற்றவர்களிடம் அன்பை செலுத்தாமல் அவர்கள் மட்டும்
நம்மிடம் அன்பாக இருக்க வேண்டும் என நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?
உண்மை அன்பு ஒருவர் ஒருவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யும். மற்றவர்களிடம்
அன்பையும் நேசத்தையும் செலுத்தும் போது அவர்களிடம் இருக்கும் சக்தி
நிச்சயமாக நமக்காக செயல்படும். அன்பை வைத்து வாழ்க்கையை உயர்த்துவோம்.
நிழல் கூட வெளிச்சம் உள்ளவரை மட்டுமே துணைக்கு வரும். உண்மை அன்பு
உயிருள்ள வரை துணைக்கு வரும். நம் மரணப் படுக்கையில் இரண்டு கேள்விகள்
பெரு மூச்சாய் வரும்.
"நீ யாரை அன்பு செய்தாய்? உன்னை யார் அன்பு செய்தார்கள்"
?
இந்தக் கேள்விக்குரிய பதிலை நாம் நலமாக இருக்கும் போதே தயாரித்துக்
கொள்வோம். பப்பாளியின் மீது நகம் பட்டவுடன் பொசுக்கென்று வடியும்
பாலாய் நம் அன்பு அயலார் மீது வடிய வேண்டும். அன்பு ஆட்சி செய்யுமிடத்தில்
வம்பு ராஜினாமா செய்து விடும். சண்டை சச்சரவு பொறாமை எல்லாம் வெளி
நடப்பு செய்துவிடும் நம் இல்லங்களில் அன்பு ஆட்சி செய்யட்டும். ஒருவர்
ஒருவரை அன்பினால் கட்டி எழுப்பி ஆண்டவனின் இல்லத்தை மாண்புறச்
செய்வோம். அப்போது ஆண்டவனும் இன்புறுவார். நமது குடும்பங்களில் அன்பை
நிரம்பி வழியச் செய்யும் ஆற்றலை நிரப்பி வைத்திருக்கும் இந்த
திருப்பலியில் எங்களையும் எங்களுக்கு அருகில் இருப்போரையும் திருப்பலியில்
கலந்து கொள்ள முடியாது இருப்பவர்களையும் உலகில் உள்ள எல்லோரையும்
உமதன்பினால் ததும்பி வழியச் செய்யும் இறைவா என உள்ளம் உருகி
செபிப்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
நிகழ்காலம் எதிர்காலம் அனைத்துக்கும் உரிய இறைவா!
நாங்கள் கடவுளுக்கு உரியவர்களாக வாழ வேண்டுமென மிகுந்த
அக்கறையோடு உழைக்கும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்,
துறவியர் நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும், விண்ணகத்
தந்தையின் விருப்பங்கள் நிறைவேற உழைக்க அருள் தர
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச்
செய்யும் இறைவா!
இந்த வாசகத்தால் சமத்துவமும், சகோதரத்துவமும்
வேண்டுமென நீர் விரும்புகிறீர். உயர்ந்தோருக்கு ஒரு
விதி, தாழ்ந்தோருக்கு ஒரு விதி என்ற நிலை இல்லாது உதவி
தேவைப்படுவோருக்கெல்லாம் உழைப்பின் மேன்மையை உரியதாக்க
வேண்டும் என்ற உள்ளுணர்வுடன் நாடுகளின் தலைவர்கள் செயல்பட
அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பகைவர்களையும் அன்பு செய்ய அழைக்கும் இறைவா!
இங்கே கூடியுள்ள எங்கள் அனைவரைபும் பழிவாங்கும் எண்ணம்
கொண்டோரிடமிருந்தும் பகைவர்களிடம் இருந்தும் பாதுகாத்தருளும்.
நாங்களும் எங்கள் சகோதரர் சகோதரிகளிடம் பகைமை
பாராட்டாது அன்பு பாராட்டவும் எங்களை துன்பத்துக்கு உள்ளோருக்காக
செபிக்கவும் நல்ல மனம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஆற்றலும் அருளும் நிறைந்த இறைவா!
அன்பு மிகுந்த சமூகமே இறையாட்சி என அடையாளம் காட்டி
தூய்மையும் வாய்மையும் அன்பும் நிறைந்த சமூகமாக எங்களுடைய
குடும்பங்களை மாற்ற அருட்சாதனங்களை வழங்கி இயேசுவின்
மனநிலையில் பணியாற்றும் எங்கள் ஆன்மீகத் தந்தைக்கு ஆற்றலைபும்
அருளைபும் அள்ளிப் பொழிய வேண்டுமென்று வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
வழக்குகளில் நல்ல தீர்ப்பு வழங்கும் வள்ளலே இறைவா!
எங்கள் மீது வழக்கு தொடுப்பவரோடு வாதாடாமல் அவர்கள்
விரும்புவதை பொறுமையோடு கொடுத்து உதவவும், குறிப்பாக
வாழ்க்கையின் அடிப்படை வசதியின்றி வாடும் குடும்பங்களுக்கு
பொருளாதார வளங்கள் கிடைக்கவும், அநீதியால் சிறையில்
வாடுவோர் விடுபடவும், உடல், உள நலமின்றி தவிப்போர் சுகம்
பெறவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
வாய்ப்புள்ள போதே
வாழ்ந்துவிடு.
இறையேசுவில் மிகவும் பிரியமுள்ள அன்பர்களே, பொதுக்காலத்தின்
7ம் ஞாயிறை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கும்
நம்மை, வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தி வாழ இறைவன் அழைக்கின்றார்.
வாய்ப்புக்கள் நமது வாழ்வில் பல நேரங்களில் பல வகைகளில் வருகின்றன.
அதை சரியாகப் பயன்படுத்தி முறையாக வாழ்பவர் முன்னேற்றப்படிக்கட்டுகளில்
ஏறி வெற்றி அடைகின்றனர். பயன்படுத்தாதவர்கள் வீழ்ச்சி அடைகின்றனர்.
இன்றைய வாசகங்கள் அனைத்திலும் இரண்டு விதமான நபர்கள் நமக்கு
எடுத்துக்காட்டப்படுகின்றனர். ஒருவர் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி
முன்னேறியவர். மற்றொருவர் வாய்ப்புக்களை பயன்படுத்தாமல்
பின்தங்கியவர். முதல் வாசகத்தில் தாவீது சவூல் என்னும் இரண்டு
மனிதர்கள் நமக்கு எடுத்துக்காட்டப்படுகின்றனர். ஒருவர் ஆண்டவரின்
அருள் என்னும் வாய்ப்பினைப் பயன்படுத்தி முன்னேறியவர். மற்றவர்
அந்த அருளை பயன்படுத்தாதவர்.
இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், இயேசு- ஆதாம் இருவரையும்
வேறுபடுத்தி ஒப்பிட்டு கூறுகிறார். ஒருவர் முன்னால் தோன்றி
பின்னுக்கு மறைந்தவர். மற்றொருவர் பின்னால் தோன்றி
முன்னால் நிலைத்து நிற்பவர். நற்செய்தி வாசகத்தில் இயேசு,
நீங்கள் யாரைப் போல ??? பாவிகளைப் போலா பரம தந்தையைப் போலா
என்று கேட்கிறார். ஆக அனைத்து வாசகங்களிலும் இரண்டு நபர்களின்
வாழ்வும் வாழ்க்கை முறையும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இரண்டு வாய்ப்புக்கள். இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய இன்றைய
நாளில் நாம் அழைக்கப்படுகின்றோம்.
தாவீதா? சவுலா?
தாவீது சவூல் இருவருமே ஆண்டவரால் அருள் பொழிவு செய்யப்பட்டவர்கள்.
ஆனால் தாவீது மட்டுமே அந்த அருள் தன்னில் தொடர்ந்து
நிலைத்து நிற்கிறது என்பதை உணர்ந்து செயல்பட்டவர். அதனால்
தான் அவருக்கு தொடர் வெற்றி, சவூலுக்கு தொடர் தோல்வி. சவூலைக்
கொல்ல தாவீதுக்கும் , தாவீதைக் கொல்ல சவூலுக்கும்
வாய்ப்புக்கள் கொடுக்கப்படுகின்றன. தங்களது எதிரியைக்
கொன்று வாழ்வின் வழியை சுலபமாக்கிக் கொள்ள வாய்ப்பு கொடுக்கப்படுகின்றது.
சவூல் தன் எதிரியான தாவீதைக் கொன்றால் தன் வாழ்வு சுகமாகும்
என்று எண்ணி கொல்லத்துணிகின்றார். தாவீதோ, எதிரியின் எதிர்ப்பை
தாக்கி தாக்கி வலுவை இழப்பதை விட, அவனின் எதிர்ப்பை தாங்கி
தாங்கி வலுவைப் பெற நினைக்கின்றார். அவரைக் கொல்லாமல் கடவுளின்
கரத்தில் ஒப்படைக்கின்றார். கடவுள் கொடுத்த வாய்ப்பே ஆனாலும்
அதிலும் தனது நிலைப்பாட்டில் உறுதியாய் இருக்கின்றார்.
நாமும் ஒரு சிலரை நமது வாழ்வில் எதிரிகளாக நினைத்து
வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். குடும்பத்தில் குழுவில் உறவில்,
பணியில் பாதையில் என நமது கருத்துக்களுக்கு முரண்பட்டவர்களை
எதிரிகளாக எண்ணுகிறோம். அவர்களை அழித்து நமது
வாழ்வுப்பாதையை செம்மையாக்க எண்ணுகிறோம். எதிரிகள் நம்
வாழ்வின் பாதைக்கு பலம் சேர்க்கும் பாலங்கள். அவர்களுக்கு
தான் நமது பலம் பலவீனம் அனைத்தும் தெரியும். நமது
சிந்திக்கும் திறனை தூண்டிவிட்டு அதிவேகமாக செயல்பட வைப்பவர்கள்
அவர்கள் தான். எனவே தான் இயேசு கூட உங்கள் எதிரிகளை அன்பு
செய்யுங்கள் என்கிறார். தாவீது இயேசுவின் வார்த்தைக்கு
வாழ்க்கை சாட்சியாய் இருக்கி றார்.தனது உயிரைக் கொல்லும்
பகைவனையும் மன்னித்து வாழ்ந்ததினால் தான் இன்று நம் அனைவராலும்
போற்றப்படுகின்றார். இப்படி நமது இன்றைய வாழ்க்கையிலும்
பலர் பகைவரை மன்னித்து வரலாற்றின் பக்கங்களில் இடம்
பிடித்திருக்கின்றனர். புனித அன்னை தெரசா, புனித இரண்டாம்
அருள் சின்னப்பர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள்
தங்களுக்கு கிடைத்த மன்னிப்பு என்னும் வாய்ப்பினை சரியாகப்
பயன்படுத்தி முன்னேறியவர்கள் தாவீதைப் போல. நாமும் நம் பகைவர்களை
மன்னித்து அன்பு செய்து வாழ, கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி
வாழ்வோம்.
இயேசுவா? ஆதாமா?
நாம் மண்ணைச் சார்ந்தவரா? இல்லை விண்ணைச்சார்ந்தவரா? என்ற
கேள்விகளுக்கு பதில் தரும் விதமாக அமைந்துள்ளது இன்றைய இரண்டாம்
வாசகம். ஆதாம் மண்ணிலிருந்து வந்தவர், களிமண்ணால் உருவாக்கப்பட்டவர்,
இயேசு விண்ணிலிருந்து வந்தவர். அன்னை மரியின் கருவில் பாவ
மாசின்றி உருவானவர். ஆதாமிற்கு முதன்முதலில் கடவுளால் உருவாக்கப்பட்ட
முதல் மனிதன் முதல் பெற்றோர் என்ற ஒரு சிறப்பு இருந்தது.
இயேசுவிற்கோ கன்னி கருத்தரித்தார் என்ற பேச்சு இருந்தது.
ஆதாமிற்கு ஏதேன் வனம் முழுதும் கொடுக்கப்பட்டு அனைத்தையும்
ஆண்டு அனுபவிக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் தீர்ப்பளித்து
தீர்ப்புக்கு உள்ளாகிறார். பெண் தான் என்னை சாப்பிடத்
தூண்டினால் எனவும், பாம்பு தான் தன்னை ஏமாற்றியது என்றும்
பிறர் மேல் கண்டனம் கூறி கண்டனம் பெறுகின்றார். எனவே தான்
முதலில் தோன்றியவர் பின்னுக்கு தள்ளப்படுகிறார். மண்ணால்
உருவாக்கப்பட்டவர் மண்ணுக்கே திரும்புகிறார் எந்த பலனும்
கொடுக்காமல்.
இயேசுவிற்கும் இந்த வாய்ப்புக்கள் ஆதாமைப் போல கொடுக்கப்பட்டன.
ஆனால் அவர் சாத்தானின் சோதனைகள் அனைத்தையும் முறியடித்து,
வாய்ப்புக்களை வாழ்வாக மாற்றினார். தனக்கு தண்டனைத் தீர்ப்பளித்தவர்க்கும்
கண்டனம் செய்தவர்க்கும் நன்மையையே செய்தார். மன்னித்தார்,
உதவிகள் செய்தார், திரும்பப்பெறும் எண்ணமின்றி கொடுத்தார்.
பாவிகளையும் அன்பு செய்து வானகதந்தை போல இரக்கம் உள்ளவரானார்.
கடைசியில் தோன்றி முதல்வரானார். விண்ணிலிருந்து வந்தவர்
விண்ணுலக மனிதர் போலானார். இந்த இரண்டு வாய்ப்புக்கள் நம்மிடமும்
கொடுக்கப்படுகின்றன. எங்கிருந்து எப்படி வந்தோம் என்பது
முக்கியமல்ல எங்கு எப்படி செல்லப்போகிறோம் என்பதே முக்கியம்.
நாம் மண்ணிலிருந்து வந்தவர்களானாலும் விண்ணிற்கு
திரும்பும் போதாவது விண்ணுலக மனிதர்கள் போலாவோம். உடையளவில்
அல்லாது உள்ளத்தளவில்....
பாவிகளா? பரமதந்தையா?
இன்றைய நற்செய்தியில் இயேசு பாவிகளின் வாழ்க்கை முறை பரம
தந்தையின் வாழ்க்கை முறை பற்றி எடுத்துரைக்கின்றார். நாம்
யார் ? எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து
கொண்டிருக்கின்றோம் என்பதைப் பற்றி சிந்திக்கும் விதமாய்
அமைந்துள்ளது. பாவிகள் தன்னை அன்பு செய்கிறவர்களை அன்பு
செய்கிறார்கள். நன்மை செய்பவர்களுக்கே நன்மை செய்கிறார்கள்.
கடன் தருபவர்களுக்கே கடன் கொடுக்கிறார்கள். நாமும் இவ்வாறே
செய்து வந்தால் நாமும் பாவிகளே. நாம் பெரும்பாலும் நம்மை
வெறுப்பவர்களை அன்பு செய்வது கிடையாது. நமக்கு தீமை செய்பவர்களுக்கு
நன்மை செய்வது கிடையாது. நமக்கு கடன் தர மறுப்பவர்களுக்கு
நாம் கடன் கொடுப்பது கிடையாது. இப்படி இருக்க எப்படி நாம்
பரம தந்தையைப் போலாவது? நாம் இவர்கள் அனைவரையும் நமது எதிரியாக
உடனே நினைத்துக் கொள்வதால் தான் நம்மால் அவர்களுக்கு
மீண்டும் உதவி செய்ய இயலாமல் போகிறது. ஒன்று மட்டும்
புரிந்து கொள்வோம் நம்மை எதிர்ப்பவர்கள் எல்லாம் எதிரிகளும்
அல்லர். நம்மை ஆதரிப்பவர்கள் எல்லோரும் நம் நண்பர்களும் அல்லர்.
இந்த உண்மை புரிந்து விட்டால் போதும் எல்லோரையும் அரவணைத்து
அன்பு செய்யும் மன்னிக்கும் குணம் நம்மில் பெருகிவிடும்.
நம்மை ஏமாற்றியவர்களை நாம் உடனே ஏமாற்ற நினைக்க வேண்டாம்,
அவர்கள் இன்னொருவரிடம் ஏமாறும்வரை பொறுமையாகக்
காத்திருப்போம் . கைகொட்டி சிரித்து ஏளனப்படுத்த அல்ல. அவர்களுக்கு
கை கொடுத்து தூக்கி நம்மோடு சேர்த்துக் கொள்ள. அப்போது
தான் நமது நிலை அவருக்கும் புரியும். அவரைப் பற்றி நமக்கும்
தெரியும். இப்படிப்பட்ட வாழ்வை நாம் வாழ்ந்து வந்தால் பாவிகளாய்
இருக்கும் நாம் நமது பரம தந்தையைப் போல மாறலாம். அன்று ஏதேன்
தோட்டத்தில் முதல் பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்ட சோதனையும்
இதுதான். இப்பழத்தை உண்டால் நீங்கள் கடவுளைப் போலாவீர்கள்..
இன்று நாமும் அழைக்கப்படுகின்றோம் பகைவரை மன்னித்து அன்பு
செய்து வாழ்ந்தால் கடவுளைப் போலாவீர்கள்.... அந்த சோதனைக்கு
உள்ளானவர்கள் ஜென்ம பாவத்திற்கு ஆளானார்கள் . இந்த சோதனையை
மேற்கொள்பவர்கள் பாவத்தை துறந்து புண்ணிய வாழ்வைப்
பெறுவார்கள். பாவ வாழ்வா புண்ணிய வாழ்வா? இரண்டு
வாய்ப்புக்களில் ஒன்றை தெரிவு செய்வது நமது உரிமை. எதை
தெரிவு செய்து எப்படி வாழப் போகிறோம் என்பதை நாமே முடிவு
செய்து கொள்வோம்.
ஆக தாவீதைப் போல இயேசு போல, பரமதந்தையைப் போல வாழ இன்றைய
வாசகங்கள் அனைத்தும் நமக்கு வாய்ப்பு கொடுக்கின்றன. சவூலைப்
போல, ஆதாமைப் போல பாவிகளைப் போல வாழ வேண்டாம் என எச்சரிக்கை
விடுக்கின்றன. நாம் எதை தெரிவு செய்யப் போகின்றோம்.
வாய்ப்புக்கள் நமது வாழ்வில் பல முறை வருவதில்லை . நல்ல
வாய்ப்புக்கள் ஒரு முறை மட்டுமே நம்மை வந்தடையும் . அதை
பயன்படுத்துவதும் பாழாக்குவதும் நம்மைப் பொறுத்தது.
வாய்ப்புக்கள் இறக்கைகளைக் கொண்ட பறவை போல. அது எப்போது எங்கு
பறந்து வரும் என்று யாருக்கும் தெரியாது. எப்போது பறந்து
போகும் என்றும் தெரியாது. பறவையை நமக்கு பழக்கமாக்கிகொண்டால்
அது நம்மிடமே தங்கவும் வாய்ப்புள்ளது. எனவே வாய்ப்புக்களை
நமதாக்கி வாழ முயல்வோம். யாரைப் போல வாழ்ந்தால் என்ன பயன்
நாம் அடையலாம் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைத்துள்ளன.
நல்லதை தெரிவு செய்து நலமுடன் வாழ முயல்வோம். வாய்ப்புள்ள
போதே வாழ்ந்துவிடுவோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம்
குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
சகோ. செல்வராணி Osm
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி.
கொஞ்சம் எக்ஸ்ட்ரா
கடந்த மாதத்தில், 'எக்ஸ்டரா ஐ, எக்ஸ்ட்ரா இயர், எக்ஸ்ட்ரா
ஹார்ட்' என்ற தலைப்பிட்ட டெட் காணொளி உரையைக் கேட்டேன்.
'டெக்னாலஜி, என்டர்டயின்மெண்ட், டிசைன்' என்று மூன்று ஆங்கிலச்
சொற்களின் முதல் எழுத்துகள் இணைவுதான் 'டெட்'. இந்தியப்
பேச்சாளர்கள் வரிசையில் ஜோசப் அன்னம்குட்டி ஜோஸ் என்ற பாலக்காட்டு
இளைஞர் ஒருவர் மேற்காணும் தலைப்பில் பேசினார். இவர் பண்பலை
ஒன்றின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார். மூன்று கதைகள்
சொல்லி தன் உரையை நிகழ்த்தினார். அதில் முதல் கதை அவருடைய
கல்லூரிப் பருவம் பற்றியது. எம்.பி.ஏ. படித்துக்கொண்டிருந்த
அவர் முதல் பருவத்தில் ஒரு பாடத்தில் தவறி விடுகிறார். அவரால்
அத்தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆசிரியர்கள் கடிந்துகொள்கிறார்கள்.
நண்பர்கள் அவரை ஒதுக்குகிறார்கள். மாலையில் வீட்டிற்கு வந்த
அவர் தன் பெற்றோரை அழைத்து தான் தேர்வில் தவறியதைச்
சொல்கிறார். அப்பாவும், அம்மாவும் அவரை ஒன்றும் சொல்லவில்லை.
அப்பா அவரை அழைத்து, 'வா வெளியே போய்விட்டு வருவோம்' என்று
தோளில் கைபோட்டு இவரை அழைத்துச் செல்கிறார். ஊருக்கு
வெளியே இருக்கின்ற ஒரு சிறிய சாலையோர ஓட்டலுக்குச்
செல்கிறார்கள். அப்பா, 'இரண்டு டீ, ஒரு மசால் தோசை' என்று
ஆர்டர் செய்துவிட்டு அமர்கிறார். இவருக்கு ஒன்றுமே புரியவில்லை.
தன்னை அப்பா தவறாகப் புரிந்துகொண்டாரோ என்றுகூட
நினைக்கிறார். அவர்கள் ஆர்டர் செய்தவை வருகின்றன. மசால்
தோசையை இவர் பக்கம் நகர்த்தி வைக்கும் அப்பா, 'ஜோஸ்,
சாப்பிடு! தோல்வி எப்போதும் முடிவல்ல' என்று டீயைக்
குடிக்க ஆரம்பிக்கிறார். இவருக்கு கண்ணீர் பொங்கி வழிகிறது.
இதுவரைத் தன் தோல்விக்காக அழாதவர் இப்போது தன் தந்தையின்
பரிவின்முன் அழுகிறார். நாட்கள் நகர்கின்றன. இவர் அத்தேர்வை
எழுதி வெற்றி பெறுகின்றார். அத்தேர்வின்போது இவருடைய அடுத்த
பேட்ச் மாணவர்களின் நட்பும் கிடைக்கிறது. ஆக, கல்லூரி செயலராகவும்
தெரிவுசெய்யப்படுகின்றார். 'என் அப்பா அன்று என்னை ஒரு எக்ஸ்ட்ரா
கண் கொண்டு பார்த்ததால், எக்ஸ்டரா காது கொடுத்து நான் பேசியதைக்
கேட்டதால், எக்ஸ்ட்ரா இதயம் கொண்டு என் தோல்வியை ஏற்றுக்கொண்டதால்
என்னால் சாதிக்க முடிந்தது' என உரையின் முதல் பகுதியை
நிறைவு செய்கிறார் ஜோஸ்.
கொஞ்சம் எக்ஸ்ட்ரா, அல்லது இன்னும் கொஞ்சம் - இதுதான் இன்றைய
இறைவாக்கு வழிபாடு நமக்கு வழங்கும் செய்தியாக இருக்கிறது.
நாம் காலையில் கண் விழித்தவுடன் தேடும் பற்பசை தொடங்கி,
நாள் முழுவதும் பயன்படுத்தும் அலைபேசி, இணையதள சேவை எனத்
தொடர்ந்து, இரவில் தூங்குவதற்கு முன் ஏற்றும் குட்நைட்
லிக்விட் வரை, எல்லாவற்றிலும், 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா' என்று
இன்றைய வியாபார உலகம் நம்மை ஈர்த்துக்கொண்டே இருக்கிறது.
ஆனால், இந்த 'எக்ஸ்ட்ராக்கள்' எல்லாம் நம் மேல் சுமத்தப்பட்டவை.
இவைகள் நமக்கு வழங்கப்படும் இலவசங்கள் அல்ல. இவற்றிற்கான
பணமும் நம்மிடமிருந்து வசூலிக்கப்பட்டுவிடுகிறது. மேலும்,
இவைகள் ஒவ்வொன்றும் நிபந்தனைக்கு உட்பட்டவை. இன்றைய இறைவாக்கு
வழிபாடு நம்மை அழைப்பது வியாபார நோக்கம் அற்ற, நிபந்தனைகள்
அற்ற 'கொஞ்சம் எக்ஸ்டராவிற்கு.'
எப்படி?
இன்றைய முதல் வாசகம் (காண். 1 சாமு 26:2,7-9,12-13,22-23)
தன் கைக்குக் கிடைத்த சவுலைக் கொல்லாமல் விடும் தாவீதின்
பெருந்தன்மையையும், அவர் அருள்பொழிவு செய்யப்பட்ட சவுலின்மேல்
வைத்திருந்த மதிப்பையும் எடுத்துரைக்கிறது. சவுல் இஸ்ரயேலின்
முதல் அரசன். சிதறுண்டு கிடந்த இஸ்ரயேலின் பன்னிரு குலங்களை
ஒன்றாகச் சேர்த்து, அன்றைய புதிய மற்றும் ஆற்றல்மிக்க எதிரியான
பிலிஸ்தியரை வெல்வது சவுலின் முதன்மையான பணியாக இருந்தது.
சவுல் இயல்பாகவே நல்லவர். மேலும், தொலைந்து போன கழுதையைத்
தேடி வந்த அவரை ஆண்டவர் அரசராக்குகிறார். ஆக, ஆண்டவரால்
தான் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையை அவர் நன்றாகவே அறிந்திருந்தார்.
பிலிஸ்தியருக்கு எதிரான போரில் தொடக்கத்தில் இவர் வெற்றி
பெற்றாலும், காலப்போக்கில் இறைவாக்கினர் சாமுவேலோடு நடந்த
உரசல்களாலும், தனக்கென்றும் தன் மாட்சிக்கென்றும் அரசாட்சியைப்
பயன்படுத்தியதாலும் கடவுளின் அதிருப்திக்கு ஆளாகின்றார் சவுல்.
சவுல் அரசாட்சியில் இருக்கும்போதே தாவீது அரசராக அருள்பொழிவு
பெறுகின்றார். பெலிஸ்தியன் கோலியாத்தை வென்றதில் தொடங்கி
தாவீதின் ஆற்றல் மற்றும் போரிடும் திறன் மற்றவர்களால் அதிகம்
பேசப்படுகிறது. இது சவுலின் பொறாமையைத் தூண்டி எழுப்புகிறது.
தன் அரச இருக்கை தன்னிடமிருந்து பறிபோhய்விடுமோ என்ற பயத்தில்
தாவீதை பல நேரங்களில் பல இடங்களில் கொல்ல முயல்கிறார் சவுல்.
ஒரு கட்டத்தில் சவுலிடமிருந்து தப்பி பாலைநிலத்தில் தஞ்சம்
புகுகிறார் தாவீது. தாவீதை இவ்வாறு விரட்டிக்கொண்டே
செல்லும் சவுல் ஒரு கட்டத்தில் தாவீதின் கைகளில்
விழுகின்றார். இந்த நிகழ்வைத்தான் இன்றையை முதல் வாசகம் வர்ணிக்கிறது.
சவுல் கூடாரத்திற்குள் தூங்கிக்கொண்டிருக்கின்றார். அவரோடு
இருந்த படைவீரர்களும் தூங்குகின்றனர். பயணக் களைப்பு மற்றும்
மலைப்பாங்கான இடம் என்பதால் மிகவும் அயர்ந்து தூங்குகிறார்கள்.
சவுலின் தலைமாட்டில் ஈட்டி இருக்கிறது. மேலும், தாவீதோடு
உடன் வந்த அபிசாய் தானே சவுலைக் கொன்று தாவீதிடம் 'வெரி
குட்' வாங்க முன் வருகின்றார். ஆக, தனக்கு முன் தூங்கிக்
கொண்டிருக்கும் எதிரி, கையின் அருகில் ஈட்டி, தனக்குப் பதிலாகக்
குத்தக் காத்திருக்கும் அபிசாய் என மூன்று வாய்ப்புக்கள்
இருந்தும், 'அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல்
கைவைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?' என்று
சொல்லிச் சவுலைக் கொல்லாமல் விடுகின்றார். மேலும், தான் அந்த
இடத்திற்கு வந்து, சவுலுக்குத் தீங்கிழைக்க வாய்ப்பு
கிடைத்தும், தான் தீங்கு செய்யாமல் விட்டதன் அடையாளமாக, 'தலைமாட்டில்
இருந்த ஈட்டியையும், தண்ணீர்க் குவளையையும்' எடுத்துக்கொண்டு
போகிறார் தாவீது. காலையில் துயில் எழும்பியதும் சவுல் தேடியவையும்
இவைகளாகத்தான் இருந்திருக்கும். மேலும், மறுநாள், 'அவனவன்
நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப ஆண்டவர் என்னை உம்மிடம் ஒப்புவித்தும்
ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கைவைக்கவில்லை'
என்று உரக்கக் கூறுகிறார் தாவீது.
ஆக, தனக்கு இன்னா செய்த சவுலை ஒறுக்காமல், அவரின் உயிரை
விட்டுவைக்கின்றார் தாவீது. தன் கையில் சவுலின் உயிர்
கிடைத்தும், தனக்கு வாய்ப்புகள் கிடைத்தும், அதைக் கடவுளே
அனுமதித்தும், சவுலுக்குத் தீங்கு செய்ய மறுப்பதன் வழியாக,
'கொஞ்சம் எக்ஸ்ட்ரா' இதயம் கொண்டவராக நமக்கு முன்வைக்கப்படுகிறார்
தாவீது.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 15:45-49) இறந்தவர்
உயிர்பெற்றெழுதல் பற்றிய போதனையின் தொடர்ச்சியாக இருக்கிறது.
இறந்தவர் உயிர்ப்பு பற்றி கொரிந்து நகரத் திருச்சபைக்கு விளக்குகின்ற
பவுல், 'ஆதாம்' 'கிறிஸ்து' என்ற இரண்டு உருவகங்களைப் பயன்படுத்தி,
'மனித' மற்றும் 'ஆவிக்குரிய' இயல்புகளின் குணநலன்களை
முன்வைக்கின்றார். இங்கே, ஆதாம் உயிர் பெற்றவர் என்றும்,
கிறிஸ்து உயிர் தருபவர் என்றும் பவுல் முன்வைக்கின்றார்.
ஆதாம் உயிர் பெற்றார். ஆனால், அவருடைய மனித இயல்பில் அவர்
இருந்ததால் அவரால் மீண்டும் உயிர் தர முடியவில்லை. ஏனெனில்,
மனித இயல்பு அழிவுக்குரியது. அது வரையறைக்குட்பட்டது. ஆனால்,
கிறிஸ்து அப்படி அன்று. அவர் தான் மனுவுரு ஏற்றபோது உயிர்
பெற்றவராக இருந்தாலும், தன் உயிர்ப்பின் வழியாக அவர் உயிர்தருபவராக
மாறுகின்றார். ஏனெனில், அவருடைய இயல்பு ஆவிக்குரியது. அது
வரையறைகள் அற்றது.
ஆக, ஆதாமால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நடக்க முடியவில்லை என்றும்,
கிறிஸ்து தன் உயிர்ப்பால் 'உயிர்தரும்' எக்ஸ்ட்ரா நிலைக்கு
உயர்ந்தார் எனவும் சுட்டிக்காட்டுகின்றார் பவுல். மேலும்,
ஒருவர் தன் ஆதாம் இயல்போடு இணைத்துக்கொண்டால் அவரால் வேறு
ஒன்றும் செய்ய முடியாமல், மண்ணைச் சார்ந்த இயல்பைக் கொண்டவராக
இறந்துவிடுவார் என்றும், ஒருவர் கிறிஸ்து இயல்போடு இணைத்துக்கொண்டால்
அவரால் உயிர்தரும் இயல்பையும் பெற்று கிறிஸ்துவோடு உயிர்க்க
முடியும் என்றும் அறிவுறுத்துகிறார் பவுல்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 6:27-38) கடந்த வார
சமவெளிப்பொழிவின் தொடர்ச்சியாக இருக்கிறது. சாதாரண மனித
மூளைக்கு மிக அசாதாரணமாகவும், கடினமாகவும் தோன்றும் சிலவற்றைப்
பின்பற்றுமாறு தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு.
இயேசுவின் கட்டளை இரண்டு நிலைகளில் இருக்கிறது: (அ) 'பகைவரிடம்
அன்பு, சபிப்பவருக்கு ஆசி, இகழ்ந்து பேசுபவருக்கு இறைவேண்டல்,
கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னம், மேலுடையை எடுத்துக்கொள்பவருக்கு
அங்கி, கேட்பவருக்குக் கொடுத்தல், பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து
திருப்பிக் கேட்காமல் இருத்தல்,' (ஆ) 'பிறருக்கு தீர்ப்பளிக்க
வேண்டாம். மன்னியுங்கள். கொடுங்கள்.' ஒருவர் இந்த இரண்டு
கட்டளைகளையும் பின்பற்ற வேண்டுமானால், அவர் தன்னுடைய தனிப்பட்ட
அறநெறிக்கொள்கையையும், தான் மனித உறவுகளைப் பற்றி
வைத்திருக்கின்ற எண்ணங்களையும் மறுஆய்வு செய்ய வேண்டும்.
இயேசுவின் புதிய கொள்கைத்திரட்டைப் பின்பற்ற அவரே மூன்று
உந்துப்புள்ளிகளையும் தருகின்றார்: (அ) 'பிறர் உங்களுக்கு
என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும்
அவர்களுக்குச் செய்யுங்கள்' - ஆண்டான், அடிமை, இருப்பவன்,
இல்லாதவன், மேலிருப்பவன், கீழிருப்பவன், முதலாளி, வேலைக்காரன்
என எல்லாருக்கும் பொருந்தும் இவ்விதி ஒருவரின் தனிமனித
மாண்பை மையப்படுத்துவதாக இருக்கிறது. (ஆ) 'உங்கள் தந்தை
இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கமுள்ளவராய்
இருங்கள்' - கடவுளைப் போல இருத்தலை ஒரு ஐடியலாக
முன்வைக்கிறார் இயேசு. ஆக, ஒருவரின் மனித இயல்பைச் சற்றே
உயர்த்துகின்றார். (இ) 'நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ
அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்' - ஆக, நான் செய்வது
எனக்கே திரும்பக் கிடைக்கும் என்ற ஆர்வம் அல்லது அச்சத்தினால்
செய்ய அழைக்கிறார் இயேசு.
ஆக, மேற்காணும் இரண்டு கட்டளைகள் மற்றும் மூன்று உந்துபுள்ளிகளின்
நோக்கம் ஒன்றுதான்: 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா வாழ்வது.' இப்படி
வாழ்பவர்கள் 'உன்னத கடவுளின் மக்கள் எனப்படுவார்கள்' என்ற
புதிய பெயரையும் இயேசு தருகின்றார். ஆக, எல்லாரும் செய்வதைப்
போலச் செய்யாமல், கொஞ்சம் அதிகமாக செய்யச் சொல்கிறார் இயேசு.
நம் வாழ்வில் 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா கண், காது, இதயம்' கொண்டு
எப்படி வாழ்வது?
1. பிறரின் நல்வாழ்வு என் இலக்காக வேண்டும்
கொஞ்சம் எக்ஸ்ட்ரா கண், காது, இதயம் கொண்டு வாழ்வதன் இலக்கு
தன்னுடைய நல்வாழ்வு அன்று. மாறாக, எனக்கு அடுத்திருப்பவரின்
நல்வாழ்வு. அல்லது அடுத்தவரின் நல்வாழ்வை இலக்காக வைக்கும்
ஒருவரால்தான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செயல்பட முடியும். அடுத்தவரின்
நல்வாழ்வை இலக்காக வைப்பது என்பது ஒருவருடைய தனிப்பட்ட
வாழ்வை இழக்கத் துணிவது. தூங்கி எழும் சவுல் தன்னை
மீண்டும் துரத்துவார், தன் உயிரைப் பறிக்கத் தேடுவார் எனத்
தெரிந்தும், தன் பாதுகாப்பின்மையிலும் சவுலின் பாதுகாப்பை
முதன்மைப்படுத்துகின்றார். சவுலின் உயிரைக் கொல்லாது
விடுகின்றார். தன் இறப்பின் வழியாகத்தான் மானுடம் மீட்புப்
பெற முடியும் என்று இயேசு மானுட நல்வாழ்வை இலக்காகக்
கொண்டிருந்ததால்தான் அவரால் தன்னுடைய இன்னுயிரை இழக்க
முடிகிறது. இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா என எல்லாவற்றையும்
செய்ய முடிகிறது. இயேசுவின் சீடர்களும், அவருடைய இரண்டு கட்டளைகளைக்
கடைப்பிடிப்பதன் நோக்கம் தங்கள் நல்வாழ்வு அல்ல. மாறாக, பிறரின்
நல்வாழ்வே. ஏனெனில், இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்
அவர்கள் நிறைய துன்பத்தைத் தாங்க வேண்டியிருக்கும். மற்றவர்கள்
தங்களைக் காயப்படுத்துவதை அவர்கள் பொறுத்துக்கொள்ள
வேண்டும். இது அவர்களின் மனச்சுமையை அதிகரிக்கும். கன்னத்தில்
வலி அதிகமாகும். அலமாரியில் ஆடைகள் எண்ணிக்கை குறையும். வங்கிக்
கணக்கில் பணம் குறையும். மற்றவர்களால் 'முட்டாள்' என்று கருதப்படும்
நிலை உருவாகும். மற்றவர்களால் ஏமாற்றப்படும்போது கோபம் வரும்.
இருந்தாலும், இவை எல்லாவற்றிலும் பிறரின் நல்வாழ்வு முதன்மையாக
நிற்பதால் இவர்கள் இவை அனைத்தையும் பொறுத்துக்கொள்ள
வேண்டும்.
2. வலியை வலிந்து ஏற்றல் வேண்டல்
'தெ ஸெல்ஃபிஷ் ஜீன்' என்ற நூலின் ஆசிரியர் ரிச்சர்ட்
டாக்கின்ஸ், மனித உடலின் ஜீன்கள் இயல்பாகவே தன்னலம் நோக்கம்
கொண்டவை என்கிறார். இவைகளால் எந்த நேரத்திலும் தங்களைப் பற்றி
மட்டுமே சிந்திக்க முடியும். மேலும், எந்த ஆபத்து நேரத்திலும்
இவைகள் தங்களைத் தற்காத்துக்கொள்வதிலேயே கவனமாக இருக்கும்
என்கிறார். ஏனெனில், ஜீன்கள் இயல்பாகவே வலியை ஏற்கத் தயங்குபவை.
இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் நாம் காணும் தாவீது, இயேசு,
இயேசுவின் சீடர்கள் இந்த இயல்புக்கு எதிராகச் செல்கிறார்கள்.
வலியைத் தாங்களாகவே ஏற்கிறார்கள். இன்றைய நம் உலகம் வலிகள்
இல்லாமல் வழிகளைக் கற்றுக்கொடுக்க நினைக்கிறது. ஆனால், வலிகளை
வலிந்து ஏற்பதில் வழிகள் தென்படுவதோடல்லாமல், வலிகளும் மறைந்துவிடும்
எனக் கற்பிக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.
3. என் அளவை எது? என்ற தெளிவும் உறுதியும் வேண்டும்.
வாழ்க்கை ஒரே அளவையால் எல்லாருக்கும் அளப்பதில்லை. மேலும்,
நான் பிறருக்கு அளக்கும் அளவையைப் போல அவரும் எனக்கு அளப்பதில்லை.
நான் நன்றாகக் கூலி கொடுக்கும் வீட்டுத் தலைவியாக இருக்க,
என் வீட்டில் வேலை செய்பவர் அதற்கேற்ற வேலை செய்வதில்லை.
ஆசிரியரின் உழைப்பு என்ற அளவைக்கு ஏற்ப மாணவர்கள் உழைப்பதில்லை.
நான் நல்லது செய்ய அதுவே எனக்குத் தீங்காகவும் முடியலாம்.
இம்மாதிரி நேரங்களில் எல்லாம், அளவைகளை மாற்றிக்கொள்ளும்
சோதனை வரும். அச்சோதனையிலிருந்து விடுபட வேண்டும்.
தாவீதுக்கு சோதனை அபிசாய் வடிவிலும், மேலும் தன்னுடைய சிந்தனையாலும்
வருகிறது. 'கடவுளே இதை அனுமதித்தார்' என்று தனக்குத் தானே
நியாயம் சொல்லி சவுலை அவர் கொன்றிருக்கலாம். ஆனால், எந்த
நிலையிலும் தன் தகைமை, தாராள உள்ளம் என்னும் அளவையை அவர்
மாற்றிக்கொள்ளவே இல்லை. இதுதான் கன்சிஸ்டன்ஸி - மாறாத்தன்மை.
ஆகையால்தான், இயேசுவும் 'தந்தை போல இரக்கம் கொள்ளுங்கள்'
என்கிறார். கடவுள் தன் அளவையை ஆள்பார்த்து மாற்றுவதில்லை.
எல்லார்க்கும் பெய்யும் மழையாக அவர் இருக்கிறார். 'என் அளவையை
மாற்றிக்கொள்ள' என் ஆதாம் இயல்பு என்னைத் தூண்டும்போது,
உடனடியாக மாறாத கிறிஸ்து இயல்பை அணிந்துகொள்ள வேண்டும்.
இறுதியாக, இன்று சரிக்குச் சரி, தவறுக்குத் தவறு, அல்லது
சரிக்கும் தவறு, என்ற குறுகிய மனநலப் போக்கே நம் தனிப்பட்ட
மற்றும் சமூக வாழ்வின் மகிழ்வைக் குலைக்கிறது. யாரும் தங்களுக்குக்
குறிக்கப்பட்ட ஒன்றையே செய்யத் தயங்கும் இன்று, 'கொஞ்சம்
எக்ஸ்ட்ரா' சாத்தியமா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால், இயேசுவின்
மாற்றுக்கலாச்சாரம் எப்போதும் சாத்தியமே. இன்றைய பதிலுரைப்
பாடலில் நாம் வாசிப்பது போல (திபா 103), ஆண்டவர் 'எனக்கு
பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச்
சூட்டியிருக்கிறார்' என்றால், நானும் அவருடைய மகனாக, மகளாக,
கொஞ்சம் எக்ஸ்ட்ரா அன்பு, இரக்கம் என வாழ்ந்தால் எத்துணை
நலம்!
கொஞ்சம் எக்ஸ்ட்ரா - என் வாழ்விலும், பணியிலும் - தாவீது
போல, இயேசு போல!
தன்னைச் சபித்தவர்மீது அன்பு:
கிரேக்க மன்னர்களில் பெரிளிக்ஸ் என்ற மன்னருக்கு மக்கள் நடுவில்
எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. அதற்குக் காரணம், அவரிடம்
விளங்கிய நற்பண்புகள்தான்.
ஒருமுறை பெரிளிக்சின் அரண்மனைக்கு வந்த ஒருவர் அவரைக் கடுமையான
வார்த்தைகளால் திட்டவும் சபிக்கவும் தொடங்கினார். இப்படி
அவர் மன்னரை ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ அல்ல,
காலையிலிருந்து மாலை வரைக்கும் திட்டவும் சபிக்கவும்
செய்தார். ஒரு கட்டத்தில் மன்னரைத் திட்டித் திட்டிக் களைத்துப்
போன அந்த மனிதர், இனிமேலும் மன்னரைத் திட்டிப் பயனில்லை என்று
முடிவு செய்துகொண்டு, வீட்டிற்குக் கிளம்பத் தயாரானார்.
அந்நேரம், பொழுது நன்றாக இருட்டியிருந்தது. (மேலும் இன்றைக்கு
இருப்பது போல் அன்றைக்கு மின்சார வசதி கிடையாது அல்லவா!)
இதைக் கவனித்த பெரிளிக்ஸ் மன்னர், தன்னுடைய அரணமனையில் இருந்த
படைவீரர் ஒருவரை அழைத்து அவரிடம், "இவர் வழியில் இடறி
விழுந்து விடக்கூடாது. அதனால் நீ உன்னுடைய கையில் ஒரு தீப்பந்தத்தை
ஏந்திக்கொண்டு, இவரைப் பத்திரமாக இவரது வீட்டில்
விட்டுவிட்டு வா" என்றார்.
ஆம், பெரிளிக்ஸ் மன்னர் தன்னைத் திட்டியவரையும் சபித்தவரையும்
அன்பு செய்தார். அதனாலேயே அவருக்கு மக்கள் நடுவில் ஒரு தனி
இடம் இருக்கின்றது. பொதுக் காலத்தின் ஏழாம் ஞாயிறான இன்று
நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை "விண்ணைச் சார்ந்தவரின்
சாயலைக் கொண்டிருப்போம் என்ற சிந்தனையைத் தருகின்றது.
விண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பது என்றால் என்ன,
அதற்கு என்ன கைம்மாறு கிடைக்கும் என்பன குறித்து நாம்
சிந்திப்போம்.
ஆதாமும் கிறிஸ்துவும்:
கடவுள் உருவாக்கிய அனைத்துமே நன்றாக இருந்தன, ஆதாம் உட்பட
(தொநூ 1:31). இப்படி நன்றாக இருந்த ஆதாம், கடவுளின்
வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் மிகவும் நன்றாக
இருந்திருப்பான். ஆனால், அவன் கடவுளின் வார்த்தைக்குக்
கீழ்ப்படிந்து நடக்காமல், அலகையின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து
நடந்து, பாவம் செய்தான். தவிர, சாவைத் தன்மீது வருவித்துக்
கொண்டான்.
இதற்கு முற்றிலும் மாறாக, புதிய ஆதாமான இயேசு கடவுளின்
வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்து, அவரது திருவுளத்தை
நிறைவேற்றினார். இவ்வாறு அவர் தந்தையின் அன்புக்குரிய மகனான
ஆனது மட்டுமல்லாமல், தனது நற்செயல்களால் அவர் விண்ணைச்
சார்ந்தவர் ஆனார்; விண்ணைச் சார்ந்தவரின் சாயலைக்
கொண்டிருந்தார். ஆகவே, ஒவ்வொருவரும் அலகையின்
வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்த, மண்ணைச் சார்ந்த ஆதாமின்
சாயலைக் கொண்டிருக்காமல், கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து
நடந்த இயேசுவின் சாயலைக் கொண்டிருக்கவேண்டும். இதையே புனித
பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுகின்றார்.
கடவுளின் சாயலைக் கொண்டிருந்த தாவீது:
இஸ்ரயேலை ஆண்ட மன்னர்களில் மிக முக்கியமானவரும், ஆண்டவரின்
நெஞ்சத்திற்கு மிக நெருக்கமானவருமாக இருந்தவர் தாவீது. அவர்
எப்படிக் கடவுளின் சாயலைக் கொண்டவராய்ச் செயல்பட்டார் என்பதை
விளக்கிக் கூறுகின்றது இன்றைய முதல் வாசகம்.
தாவீது போரில் அடைந்த வெற்றியும், அதைத் தொடர்ந்து பெண்கள்
அவரைப் புகழ்ந்து பாடியதும் (1சாமு 18:9) இஸ்ரேலின் முதல்
அரசராக இருந்த சவுலின் உள்ளத்தில் பொறாமையை வரவழைத்தன. இதனால்
சவுல் தாவீதைக் கொல்லத் துணிகின்றார். அதற்காக அவர்
தாவீதைத் தேடி, இஸ்ரயேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம்
பேருடன் செல்கின்றார். சவுல் தாவீதைக் கொல்வதற்காக அவரைத்
தேடிச் சென்றாலும், கடவுள் சவுலைத் தாவீதின் கையில் ஒப்புவிக்கின்றார்.
ஆனால், தாவீது சவுலைக் கொல்லாமல் விட்டுவிடுகின்றார். இவ்வாறு
தாவீது கடவுளின் சாயலைத் தாங்கியவராய்ச் செயல்படுகின்றார்.
பொதுவாக மனிதர்கள் தங்களைத் துன்புறுத்தியவர்களை, தங்களைக்
கொல்லத் துணிந்தவர்களைப் பதிலுக்குத் துன்புறுத்தவும்,
கொல்லவும் விரும்புவார்கள்! ஆனால், தாவீது, திருப்பொழிவு
செய்யப்பட்டவர்மீது கைவைக்கக்கூடாது, அவரைக் கடவுளே
பார்த்துக் கொள்வார் என்று சவுலை மன்னித்து விடுகின்றார்.
இதனால் கடவுள் தாவீதுக்கு ஆசி வழங்கி, அவரது வழிமரபை என்றென்றும்
நிலைத்து நிற்கச் செய்கின்றார்.
கடவுளின் சாயலைக் தாங்கியிருப்போர் அவரது மக்கள்:
கடவுள் பேரன்பும் பேரிரக்கமும் தாராள மனமும் உடையவர். ஆகையால்,
ஒருவர் அன்பும் இரக்கமும் தாராள மனமும்
கொண்டிருக்கும்போது, அவர் கடவுளின் மகனாக, மகளாக
மாறுகின்றார். அதைப் பற்றித்தான் இன்றைய நற்செய்தியில் இயேசு
கூறுகின்றார்.
இன்றைய உலகம் "அடித்தால் திருப்பி அடி", "பழிக்குப் பழி"
"கண்ணுக்குக் கண்", "பல்லுக்குப் பல்" என்று கற்பித்துக்
கொண்டிருக்கின்றது. இதனால் எங்கும் வன்முறையும் கலவரமும்
வெடித்துக் கொண்டிருக்கின்றன. இயேசு இந்த உலகம் கற்பிப்பதற்கு
முற்றிலும் மாறாக, "உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை
வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்" என்கிறார். இயேசு இப்படி
வெறுமனே கற்பித்துவிட்டு, அக்காலத்தில் வாழ்ந்த பரிசேயர்
மற்றும் மறைநூல் அறிஞர்களைப் போன்று கடந்து போய்விடவில்லை
(மத் 23:3) அவர் தன் பகைவர்களை அன்பு செய்து, தன்னை
வெறுப்போருக்கும் நன்மை செய்தார்.
இயேசு தனது பகைவர்களை அன்புசெய்து, வெறுத்தோருக்கு நன்மை
செய்ததன் மூலம், மூன்று முக்கியமான உண்மைகளை நமக்குக் கற்பிக்கின்றார்.
ஒன்று, பகைவரை அன்பு செய்வது கடினமான செயலாக இருந்தாலும்,
இயலாத செயல் இல்லை. இன்றைக்கு ஒருசிலர் பகைவர்களை அன்பு
செய்வது சாத்தியமில்லாதது என்று
சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் இயேசுவின்
முன்மாதிரியைப் பின்பற்றி நடப்பது நல்லது. இரண்டு, இயேசு
பகைவரை அன்பு செய்ய வேண்டும் என்று கற்பித்ததோடு
நின்றுவிடாமல், கடைப்பிடித்தும் வாழ்ந்ததால், அவர்
சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்
(லூக் 24:19). மூன்றாவதாக, ஒருவர் தனது பகைவரை அன்பு
செய்து, தன்னை வெறுப்போருக்கு நன்மை செய்வதன் மூலம் கடவுளின்
மகனாக, மகளாக மாறுகின்றார். ஏனெனில், கடவுள் தன்னை
வெறுப்போருக்கும் நன்மை செய்பவராக இருக்கின்றார்.
எனவே, நாம் இயேசுவைப் போன்று நம்மை வெறுப்போருக்கு நன்மை
செய்து, சபிப்போருக்கு ஆசி கூறுவோம். அதன்மூலம் கடவுளின்
அன்பு மக்களாவோம்.
சிந்தனைக்கு:
"எப்போதெல்லாம் ஒரு பகைவரை எதிர்கொள்கின்றாயோ. அப்போதெல்லாம்
அவரை உனது அன்பால் நண்பராக்கிக் கொள்" என்பார் காந்தியடிகள்.
எனவே, நாம் பகைவர்மீது அன்புகூர்ந்து, அவரை நண்பராக்குவோம்.
அதன்வழியாக நாம் கடவுளின் அன்பு மக்களாகி, இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
மறையுரைச் சிந்தனை: அருள்பணி
மரிய அந்தோணி பாளையங்கோட்டை
உன்னதக் கடவுளின் மக்கள் யார்?
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
நிகழ்வு
முன்பொரு காலத்தில் ப்ரோகுளுஸ் என்றொரு செல்வந்தர் இருந்தார்.
அவரிடத்தில் ஏராளமான அடிமைகள் இருந்தார்கள். அந்த அடிமைகளில்
பாலுஸ் என்ற அடிமையை அவருக்கு மிகவும் பிடிக்கும். பாலுஸ்
தன்னுடைய கடமைகளில் மிகவும் பொறுப்புள்ளவனாகவும் நம்பிக்கைக்குரியவனாகவும்
இருந்தான். அதனாலேயே அவனை ப்ரோகுளுஸிக்கு மிகவும்
பிடித்துப் போனது.
ஒருநாள் ப்ரோகுளுஸ் தன்னோடு பாலூசையும் கூட்டிக்கொண்டு,
புதிதாக அடிமைகளை விலைக்கு வாங்க அடிமைச்சந்தைக்குச்
சென்றார். அடிமைகளை ஏலத்திற்கு விடுவதற்கு முன்பு இருவரும்
எந்தெந்த அடிமைகளையெல்லாம் விலைக்கு வாங்கலாம் என்று ஒரு
பார்வை பார்க்க அடிமைச் சந்தைக்குள்ளே சென்றனர். அப்படிச்
செல்லும்போது மெலிந்த தேகத்துடன் வயதான ஒருவர் காணப்பட்டார்.
அவரைப் பார்த்ததும் பாலுஸ் தன் எஜமானரிடம், ஐயா! இந்த அடிமையை
நாம் விலைக்கு வாங்குவோம்... இவர் இரண்டாள் வேலையைச்
செய்வார் என்றார். பாலுஸ்! நீ சுயநினைவோடுதான்
பேசுகிறாயா... இந்த ஆளைப் பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாக
இருக்கின்றது... அப்படியிருக்கும்போது இவர் இரண்டாள்
வேலையைச் செய்திடுவார் என்று சொல்கிறாயே... எது எப்படி என்று
இழுத்தார் ப்ரோகுளுஸ்.
ஐயா! இவரைப் பார்ப்பதற்குத்தான் அப்படியிருக்கின்றது.
ஆனால், இவர் இரண்டாள் வேலையைச் செய்யக்கூடியவர் என்ற
நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று உறுதியாகச் சொன்னான்
பாலுஸ். சரி, நீ சொல்லிவிட்டாய் என்பதற்காக வாங்குகிறேன்
என்று அடிமைகள் ஏலம் விடப்பட்ட நேரத்த்தில் ப்ரோகுளுஸ்,
மெலிந்த தேகத்தோடு இருந்த அந்த வயதான அடிமையை விலைக்கு
வாங்கிக்கொண்டு போனார்.
நாட்கள் மெல்ல நகர்ந்தன. பாலுஸ் தன் எஜமானர் ப்ரோகுளுஸிடம்
சொன்னதுபோன்றே அந்த அடிமை வந்தபிறகு இருமடங்கு வேலைகள்
நடந்தன. இது ப்ரோகுளுஸிற்கு ஆச்சரியமாக இருந்தன. வயதான,
அதுவும் மெலிந்த தேகத்தோடு இருக்கும் அந்த மனிதரால் எப்படி
இருமடங்கு வேலைகள் நடைபெறுகின்றன?... அது எப்படி என்று
பார்த்துவிடுவோம் என்று ப்ரோகுளுஸ் அந்த மனிதரைக்
கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். அப்போதுதான் தெரிந்தது,
நடந்த வேலைகள் அனைத்தும் அந்தப் பெரியவர் செய்யவில்லை....
பாலுஸ்தான் செய்கிறான் என்று. அது மட்டுமல்லாமல், பாலுஸ்
மற்ற எல்லா அடிமைகளை விடவும் வயதான அந்த அடிமையை அதிக
அக்கறையோடு கவனிப்பதும் தெரியவந்தது.
உடனே ப்ரோகுளுஸ் பாலுசை அழைத்து, இந்தப் பெரியவர்மீது
இவ்வளவு அக்கறை காட்டுகிறாயே! இவரென்ன உன்னுடைய
தந்தையா?... உறவுக்காரரா?... இல்லை தெரிந்தவரா? என்றார்.
அதற்கு பாலுஸ், இவர் என்னுடைய தந்தையோ, உறவுக்காரோ,
தெரிந்தவரோ இல்லை. இவர் எனக்கு எதிரி!... சிறுவயதில்
நானும் என்னோடு பிறந்தவர்களும் என் தந்தையோடு மகிழ்ச்சியாக
வாழ்ந்துகொண்டிருந்தபோது, இவர் எங்களுடைய தந்தையைக்
கொன்றுவிட்டு, எங்கள் அனைவரையும் அடிமைகளாக
விற்றுவிட்டார்... ஆனாலும் கிறிஸ்தவராகிய எனக்கு இவரை
அடிமைச் சந்தையில் பார்த்தபோது பழிவாங்கத் தோன்றவில்லை.
மாறாக, இவருக்கு நல்லது செய்யத் தோன்றியது. அதனால்தான்
இவரை இங்கு அழைத்துக்கொண்டு வந்து, இவர்மீது தனிப்பட்ட
அன்பு கட்டி வருகிறேன் என்றான்.
பாலுஸ் இவ்வாறு பேசுவதைக் கேட்ட அவனுடைய எஜமானன்
ப்ரோகுளுஸ், இப்படியெல்லாம் பகைவர்களை மன்னித்து
அன்புசெய்யும் மனிதர்கள் இருப்பார்களா? என்று பாலுசைப்
பார்த்து வியந்து நின்றார்.
பொதுக்காலத்தின் ஏழாம் ஞாயிற்றுகிழமையில் இருக்கும்
நமக்கு, இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி
வாசகம், நம்மை உன்னதக் கடவுளின் மக்களாக வாழவதற்கு
அழைப்புத் தருகின்றது. அதற்கு நாம் என்ன செய்வது என்று
இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
வன்முறைசெய்வோர் கடவுளின் மக்களாக முடியாது
இந்த உலகத்தில் மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்.
அதில் முதலாவது வகையினர், வன்முறையாளர்கள்.
இப்படிப்பட்டவர்கள் அடித்தால் திரும்பி அடிக்கவேண்டும்,
ஒரு கண்ணை எடுத்தால் பதிலுக்கு ஒரு கண்ணை எடுக்கவேண்டும்
என்ற மனநிலையோடு செயல்படக்கூடியவர்கள். இவர்களுடைய
எண்ணமெல்லாம் வன்முறையால்தான் விடிவு வரும் என்பதாகும்.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த தீவிரவாதக் குப்பலை இதற்கு
எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
இவர்களுடைய எண்ணத்தின்படி, வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு
என்றால், இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது அல்லது
முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்றால், கண்ணில்
விழுந்த முள்ளை முள்ளால் எடுக்குமா?. சாத்தியமில்லைதானே,
அதுபோலத்தான் இந்த உலகத்தில் அமைதி பிறக்க வன்முறை
ஒருபோதும் தீர்வாக இருக்காது; வன்முறையாளர்கள் உன்னதக்
கடவுளின் மக்களாகவும் முடியாது.
எதையும் எதிர்பார்த்து அன்பு செய்பவர்கள் கடவுளின் மக்களாக
முடியாது
வன்முறையாளர்கள் ஒருவகையினர் என்றால், எதையும்
எதிர்பார்த்து அன்பு செய்யக்கூடியவர்கள் இந்த உலகத்தில்
இருக்கின்ற மற்றொரு வகையினராக இருக்கிறார்கள்.
ஒரு பொருளைக் கொடுப்பதிலிருந்து ஒருவரை அன்பு
செய்வதுவரைக்கும் இங்கு எல்லாமே எதிர்பார்ப்போடுதான்
நடைபெறுகின்றன. நான் உனக்கு ஒரு நல்லது செய்தால் பதிலுக்கு
நீ எனக்கு நல்லது செய்யவேண்டும் என்றும் நான் உன்னை அன்பு
செய்கிறேன் என்றால் பதிலுக்கு நீ என்னை அன்பு
செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இந்த உலகமே
இயங்கிக்கொண்டிருக்கின்றது போலும் என்று எண்ணத்
தோன்றுகின்றது. இப்படி எதையும் எதிர்பார்த்து அன்பு
செய்யக்கூடியவர்கள் அல்லது அன்பு செய்பவர்களை மட்டும்
அன்பு செய்பவர்கள் கடவுளின் மக்களாக இருக்கமுடியாது.
இவர்கள் நற்செய்தியில் இயேசு சொல்வதுபோல பாவிகள்தான் (6:
32). பாவிகள்தான் அன்பு செய்பவர்களை அன்பு செய்வார்கள்.
பகைவர்களை அன்புசெய்பவர்களே கடவுளின் மக்கள்
வன்முறையாளர்கள், எதையும் எதிர்பார்த்து அன்பு
செய்யக்கூடியவர்கள் வரிசையில் மூன்றாவது வரக்கூடியவர்கள்
பகைவர்களையும் அன்பு செய்யக்கூடியவர்கள்; தீமைக்கு நன்மை
செய்யக்கூடியவர்கள்.
பகைவர்களை அன்புசெய்வது என்பது இந்த உலகத்தின் போக்குக்கு
எதிராகச் செல்லக்கூடியது. இது எல்லாராலும் முடியாது. தூய
ஆவியின் அருட்பொழிவைப் பெற்றிருக்கின்ற ஒருவரால்தான்
முடியும் (உரோ 5:5). அப்படித் தூய ஆவியின் அருட்பொழிவைப்
பெற்று, பகைவர்களை அன்புசெய்கின்றபோது அல்லது தீமை
செய்பவர்களுக்கு நன்மை செய்கின்றபோது, நாம் உன்னதக்
கடவுளின் மக்களாகின்றோம் என்பதில் எந்தவொரு
மாற்றுக்கருத்தும் கிடையாது. ஏனெனில் கடவுள்தான் தன்னை
வெறுப்போரையும் சபிப்போரையும் அன்பு செய்கின்றவராக
இருகின்றார்.
ஆகையால், நம்மை வெறுப்போரையும் நமக்கு எதிராகத் தீமை
செய்வோரையும் அன்பு செய்வோம். அதன்வழியாக உன்னதக் கடவுளின்
அன்பு மக்களாவோம்.
சிந்தனை
அன்பு ஒன்றும்தான் எதிரியையும் நண்பராக்கும் என்பார்
ஜூனியர் மார்டின் லூதர் கிங். ஆம், தன்னலமற்ற, பிரதிபலன்
பாராத அன்பு பகைவரையும் நண்பராக்கும் அதே நேரத்தில் நம்மை
உன்னதக் கடவுளின் மக்களாகவும் மாற்றும்
ஆகவே, எல்லாரையும் எந்தவொரு எதிர்பார்ப்பில்லாமல்
அன்புசெய்வோம்; தீமை செய்வோருக்கு நன்மை செய்வோம்.
அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
நாய்கள் கடிப்பதும், கழுதை உதைப்பதும், புலிகள்
பாய்வதும், நரிகள் ஏய்த்துப் பிழைப்பதும் இயற்கை. அவைகளின்
பிறவிக் குணம் என்பது நமக்குப் புரியும். ஆனால் மனிதன்
எந்த நேரத்தில் கடிப்பான். எந்த வேளையில் உதைப்பான் என்பது
தெரியாது. மனிதனின் பிறவிக்குணம் இதுதான் என்று நம்மால்
சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் மனிதன் சிறப்பானவன்.
தொடக்க நூல் (தொநூ 1:26, 27) வசனங்களில் கூறப்பட்டிருப்பது
போல, நாம் இறைவனின் சாயல். இந்த உலகிற்கு அடிமை யாகாதபடி
சுதந்திரமாக வாழ, செயல்பட அழைக்கப்பட்டவர்கள். மாறாக எந்த
நேரத்தில் மனிதன் என்ன செய்வான் என்று யாராலும் கணிக்க
முடியாத நிலையை நாம் பார்க்கிறோம்.
1. அமெரிக்க நாட்டிலே ஜனாதிபதி தேர்தலிலே ஆப்ரகாம் லிங்கன்
அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார். ஒவ்வொரு
துறைக்கும் தகுதியான அமைச்சரை நியமனம் செய்து
கொண்டிருந்தார். பாதுகாப்புத் துறைக்கு யாரை நியமிப்பது
என்ற கேள்வி எழுந்தது. ஆப்ரகாம் லிங்கன் ஸ்டான்டன் என்பவரை
இந்தப் பணிக்கு நியமித்தார். ஆனால் அவருடைய நெருங்கிய
நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து, ஜனாதிபதி அவர்களே! உங்களைத்
தாக்கித் தரக்குறைவாகப் பேசிய மனிதனையா நியமிக்கிறீர்கள்
என்று கேட்டார்கள். ஆம் அவர் என்னைத் தாக்கிப்
பேசினார் என்பது நன்றாகத் தெரியும். ஆனால் அவர்
நாட்டுக்குத் தேவை. பாதுகாப்புத் துறை அவருக்குப்
பொருத்தம் என்றார். இதைப் பார்த்த அவரது எதிரியாக இருந்த
ஸ்டான்டன், காலம் தம்மை அழிக்காதபடி லிங்கன் காலத்தை
வென்றுவிட்டார் என்றார்.
2. அமெரிக்கா ஜனாதிபதி ரீகன் சுடப்பட்டு மருத்துவமனைக்கு
எடுத்துச் செல்லப்படும்போது வேதனை இருந்தாலும் அதிகாரிகளோடு
மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டு சென்றாராம். திருத்தந்தை
2-ம் அருள் சின்னப்பர்- தான் சுடப்பட்டு குணமானவுடன்
சிறைக்குச் சென்று சுட்டவனை கட்டித் தழுவி மன்னிக்கின்றேன்
என்றார். இந்த நிகழ்வுகளை விவரிக்கும் ராம் மோகன்
காந்தி என்ற இந்திய பத்திரிக்கையாளர் அழகாக இவ்வாறு எழுதுகிறார்:
ரீகன் மகிழ்ச்சியுடன் சென்ற நிகழ்ச்சி அவர் எந்த அளவிற்கு
மனிதத் தன்மை மிக்கவர் என்பதைக் காட்டுகிறது. ஆனால்
திருத்தந்தை 2-ம் அருள் சின்னப்பரின் செயலோ அவர் எந்த
அளவுக்கு இறைத் தன்மை வாய்ந்தவர் என்பதைக் காட்டுகிறது
என்றார்.
இன்றைய முதல் வாசகத்திலே (1 சாமு. 26:9) கூறப்படுவது போல
தாவீதைக் கொல்ல நினைத்த சவுல் அரசன் கூடாரத்தில்
தூங்கிக் கொண்டிருந்தபோது, தாவீதின் கூட்டாளி அபிசாயி இதோ
உமது எதிரி தூங்குகிறான். நிலத்தில் பதிய ஈட்டியால்
குத்தட்டுமா எனக் கேட்கிறான். தாவீதோ அபிசாயியை நோக்கி:
அவரைக் கொல்லாதே. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப் பட்டவர்
மீது கை வைப்பது குற்றம் என்றார்.
இன்றைய நற்செய்தி இதை முன் வைத்துதான் மூன்று செய்திகளைத்
தருகிறது.
1. மனிதன் முழு மனிதனாக வாழ மன்னிக்கும் மனமுடையவனாக இருக்க
வேண்டும். பொறாமை, பழிவாங்குதல், பகைமை, வெறுப்பு இவையெல்லாம்
மனிதப் பண்பு அல்ல. மன்னிப்பது மனிதனின் முதிர்ச்சி
பெற்ற நிலையைக் காட்டும் வெளிப்பாடு. அன்பின் பிரதிபலிப்பு.
பழிவாங்கும் மனிதன் பரிதாபத்திற்கு உரியவன். வளர்ச்சி
அடையாதவன். அடிப்பவனைத் திருப்பி அடித்தல் மிருகத்தின்
செயல்பாடு. எனவே இயேசு சொல்கிறார் உங்கள் பகைவருக்கு அன்பு
காட்டுங்கள் (மத். 5:4 லூக். 6:27)
2. இரண்டாவதாக மனிதன் நல்லதையே செய்ய வேண்டும். வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் வள்ளலார். சிறுமை
கண்டு பொங்குவாய் என்கிறார் கவிஞன் பாரதியார். இயேசு
சொன்னார், "உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள். உங்களை
இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். உங்களை
ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள்
என்றார்.
பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ
அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (மத்.
7:12, லூக். 6:31) என பொன்விதியாகத் தருகிறார்.
3. மனிதன் என்பவன் சுதந்திரமாக வாழ அழைக்கின்றார். நன்மை
செய்பவனுக்கே நன்மையும், தீமை செய்பவனுக்குத் தீமை செய்வதும்
சிந்திக்கத் தெரியாத, சுதந்திரத்தை மறந்த மிருகச் செயல்.
எனவேதான் இயேசு கேட்கிறார், "உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே
நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் பயன் என்ன?"
(லூக். 6:8 மத். 5:45-46). ஏனெனில் இறைவன் நன்றி
கெட்டோருக்கும் பொல்லாதாருக்கும் நன்மை செய்கிறார்
(லூக். 6:35).
1. கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்பது கிறிஸ்தவ
வாழ்க்கை அல்ல. மாறாக நாம் பகைவருக்கு அன்பு செய்வதின்
மூலம்தான் கடவுளின் இயல்பில் பங்கெடுக்கிறோம். இறை மக்களாக
இருக்க முடியும்.
2. பகைவரை மன்னித்து அன்பு செய்ய ஆரம்பிக்கும்போது நம் உள்ளத்தில்
நிம்மதி நிரம்பி வழிகிறது. பழி வாங்கத் துடிப்பவர்களிடத்தில்
கோபமும், மன உளைச்சலும் ஏற்பட்டு, உடல் நோய்கள்
குறிப்பாக நீரழிவு வியாதி, புற்று நோய்கள் எல்லாம் வந்துவிடுகின்றன.
இது எப்படி என்றால் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர்,
ஒரு மாணவனை நோக்கித் தண்ணீர் நிரம்பிய டம்ளரை அப்படியே
பிடித்துக்கொண்டு நிற்கச் சொன்னார். டம்ளரை அப்படியே ஒருமணி
நேரம் பிடித்த போது மாணவனுக்கு அந்த சிறிய டம்ளர் பெரிய
பாரமாக, ஒருவகையான பாரங்கல் போன்ற கனத்தை உணர வைத்தது.
நாம் பிறர் மீது வைத்திருக்கும் வெறுப்புக்கள் நீண்ட
காலத்திற்கு நம் மனதில் சுமந்தால் அது பாரங்கல்லாகி கனக்கும்.
மாறாக மன்னிப்பு என்பதே நமக்கு விடுதலை தரும். விடுதலையின்
காரணமாக நாம் அமைதியைக் காண்கிறோம்.
3. பகைவர்களை மன்னித்து அன்புகாட்டும் போது நாம்
முதிர்ச்சி அடைந்தவர்களாக மாற ஆரம்பிக்கிறோம். பழிவாங்கல்
நீங்கும் போது மிருகத் தன்மை நம்மை நெருங்காது. ஆன்மீக
முதிர்ச்சியில் வளர ஆரம்பிக்கிறோம். அதே நேரத்தில் நம்
எதிரியில் இருக்கும் மிருகத் தன்மையை வலுவிழக்கச்
செய்கிறோம். இதுதான் முதிர்ச்சி நிலை.
எத்தனை ஆண்டுகள் இந்த உலகில் வாழ்வோம் என்பது முக்கியம்
அல்ல. எப்படியும் வாழலாம் என்பதும் மூடத்தன்மை.
தாயையும் தந்தையையும் தேர்ந்தெடுக்க நமக்கு உரிமை இல்லை.
முக அமைப்பையோ, உடல் நிறத்தையோ, மாற்றவோ, பிறப்பையோ, இறப்பையோ
எடுக்க, நிறுத்த நமக்கு உரிமை இல்லை. ஆனால் நமது கையில்
இருப்பது நமது வாழ்க்கை. மாறாக இப்படித்தான் வாழ
வேண்டும் என்பதை இயேசு இன்று தெளிவுபடுத்துகிறார். இரக்கம்,
ஈகை, அன்பு, பிறருக்கு உதவுதல், மன்னித்தல் போன்ற மதிப்பீடுகளில்
வாழ்ந்து காட்டி நமக்கு மாதிரி தருகிறார். வாழப் புறப்படுவோம்.
ஆமென்.
ஞாயிறு இறைவாக்கு
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
இன்றைய நற்செய்தியைக் கூட்டி, பெருக்கி, வகுத்து, கழித்துப்
பார்த்தால் மிஞ்சுவது மன்னிப்பு! உங்களிடம் அன்பு
செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு
வரும் நன்மை என்ன? (லூக் 6:32] என்று கேட்கின்றார் இயேசு.
நமது பகைவர்களையும் அன்பு செய்யும் அளவுக்கு நமது மன்னிப்பு
உயர்ந்து நிற்க வேண்டும் என்பது இயேசுவின் ஆசை!
ஒரு மலையடிவாரத்தில் ஆடுகள் அவற்றின் குட்டிகளோடு
மேய்ந்துகொண்டிருந்தன! தனது குட்டிக்கு இரைதேடி வந்த
தாய்ப்புலி ஒன்று அந்த ஆடுகளைத் துரத்தத் துவங்கியது. ஆடுகள்
தெரித்தோடின. ஓடமுடியாத ஒரு சிறு ஆட்டுக்குட்டியை கவ்விப்பிழத்தது
அந்தப்புலி! அந்தக் குட்டியின் தாய் ஆடு, புலியின்
பின்னால் ஓடியது. புலியைப் பார்த்து, என் குட்டியை
விட்டுவிடு! என்னை வேண்டுமானால் சாப்பிடு என்றது!
புலியோ குட்டியை விடவில்லை! ஆடுகள் சிதறி ஓடியபோது ஆபத்தை
உணர்ந்த ஆடுகளுக்குச் சொந்தக்காரர்கள் ஈட்டிகளோடும்,
தீப்பந்தங்களோடும் புலியைத் துரத்தத் தொடங்கினார்கள்.
புலி பயந்துபோய் ஆட்டுக்குட்டியைப் போட்டுவிட்டு எங்கோ
ஓடி மறைந்தது!
ஆட்டுக்குட்ழயின் கழுத்தில் பயங்கரக் காயங்கள்! மருத்துவமனையில்
சேர்த்தார்கள்! சரியான நேரத்தில் கொண்டு வந்ததால்
குட்டியைக் காப்பாற்ற முடிந்தது என்றார் டாக்டர். தாய்
ஆடு அன்று மாலை வீட்டிலே சமைக்கப்பட்ட சாப்பாட்டை தனது
குட்டிக்கு வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு
வந்துகொண்டிருந்தது! அப்போது ஒரு புலிக்குட்டியின் முனகல்
சத்தம் கேட்டது! குகை! அதற்குள் ஆடு நுழைந்தது! அதன்
குட்டியைக் கடித்துக் குதறிய புலியின் குட்டி அது என்பதை
அந்த ஆடு அறிந்துகொண்டது.
நடந்ததையெல்லாம் மறந்துவிட்டு ஆடு தன் குட்டிக்குக்
கொண்டு சென்ற உணவை புலிக்குட்டிக்கு ஊட்டிக்கொண்டிருந்தது.
அந்த சமயம் தாய்ப்புலி குகைக்குள் நுழைந்துவிட்டது. ஆடு
பயத்தில் நடுங்கியது! அப்போது அந்தப் புலி, காலையில்
நான் உனது குட்டியைத் தூக்கிச்சென்று அதைக் காயப்படுத்தியேன்!
அதை மறந்து என் குட்டிக்கு உணவூட்டிக்கொண்டிருக்கின்றாய்!
உன் அன்பு - அது பேரன்பு! மன்னிப்பப உருவான உன்
முன்னால் மண்டியிடுகின்றேன். இனிமேல் உன் சந்ததியைத்
தொடமாட்டேன். என்றது.
கதையில் வந்த ஆட்டைப்போன்று வாழ உலகின் பாவங்களைப்
பாக்கும் செம்மறியான இயசு நம்மை அழைக்கின்றார்.
இயேசு காட்டும் வழியில் நம்மால் வாழமுடியுமா? தாவீதைக்
கொல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் சவுல்
அலைந்து திரிந்தார்! சவுலுக்கு தாவீதைக் கொல்ல சந்தர்ப்பம்
கிடைக்கவில்லை! ஆனால் தாவீதுக்கு சவுலைக் கொல்ல சந்தர்ப்பம்
கிடைத்தது ! ஆனாலும் சவுலை தாவீது கொலை செய்யவில்லை! அவரை
மன்னித்துவிட்டார்.
தாவீதைப் போல நம்மால் வாழமுடியுமா?
மனித சாயலில் மட்டும் நாம் வாழ்ந்துகொண்டிருந்தால் நம்மால்
நமக்கு எதிராகக் குற்றம் செய்வோரை மன்னிக்க முடியாது!
மாறாக இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார்
கூறுவது போல நாம் இயேசுவின் சாயலை நமது சாயலாக்கிக்காண்டால்,
அவராக நாம் மாறிவிட்டால் நம்மால் நமது பகைவர்களை மன்னிக்க
முடியும் !
உலகத்திலேயே மிகவும் மதிப்பு வாய்ந்தது மன்னிப்புதான்.
இது தன்னை வழங்குபவருக்கும், பெறுபவருக்கும் பன்மடங்கு
இலாபத்தைத் தரும்!
மன்னிப்பவர்களுக்கு ஏழுவரங்கள் கிடைக்கும் என்று இயேசு
கற்பித்த மன்றாட்டு கூறுகின்றது. மன்னிப்பைப் பெறுபவருக்கு
மனமாற்றம் என்ற மாபெரும் பரிசு கிடைக்கும் [1 சாமு
26:21,25, லூக் 23:47].
ஒருவர் தம் நண்பரிடம், "என் வீட்டில் ஒரே பிரச்சினை.
என் அம்மா ரசம் வைத்தால் என் மனைவிக்குப்
பிடிப்பதில்லை. என் மனைவி ரசம் வைத்தால் என்
அம்மாவுக்குப் பிடிப்பதில்லை" என்றார். நண்பர்
அவரிடம், "நீ என்ன செய்கிறாய்?" என்று கேட்டதற்கு அவர்,
"நான் இரண்டு பேருக்கும் இடையே சமரசம் செய்கிறேன்"
என்றார்!
வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய இன்றியமையாத காரியம்.
மற்றவர்களுடன். குறிப்பாக நம்மை வெறுப்பவர்களுடன்,
சமரசம் செய்வதாகும். "உங்கள் எதிரிகளுடன் உடன்பாடு
(சமரசம்) செய்து, கொள்ளுங்கள்" (மத் 5:25) என்கிறார்
கிறிஸ்து.
கிறிஸ்துவின் பணி மீட்புப் பணி. மீட்புப் பணி என்பது,
ஒப்புரவுப்பணி. அவர் யூத இனத்துக்கும் பிற இனத்துக்கும்
இடையே நின்ற பகைமை என்னும் சுவரைத் தகர்த்து அவ்விரு
இனத்தையும் ஓரினமாக ஒப்புரவாக்கினார் (எபே 2:14).
கிறிஸ்து திருச்சபையிடம் ஒப்புரவுப் பணியை
ஒப்படைத்துள்ளார் (2 கொரி 5:18-19).
இன்றைய அருள்வாக்கு வழிபாடு நாம் நம் பகைவர்களையும்
மன்னித்து அவர்களோடு ஒப்புரவாகும்படி அழைக்கிறது.
முதல் வாசகம் மன்னர் தாவீதின் பெருந்தன்மையைக்
காட்டுகிறது. தாவீது தமது சிறு வயதிலிருந்தே மன்னர்
சவுலுக்கு நன்மைதான் செய்தார். ஆனால், தாவீதின்
பேரும் புகழும் மக்கள் மத்தியில் வளர்வதைக் கண்டு
சவுல் காழ்ப்பு உணர்வு கொண்டு தாவீதைக் கொலை செய்ய
பலமுறை முயற்சி எடுத்தார். ஆனால் தாவீதோ சவுலைக் கொலை
செய்யத் தமக்கு வாய்ப்புக் கிடைத்தும் அவரைக்
கொல்லாமல் காப்பாற்றுகிறார்.
உலகில் சால்பு என்னும் பண்பு கொண்ட சான்றோர்கள்
உள்ளனர். அவர்கள் தீமை செய்பவர்களுக்கும் நன்மை
செய்வர். அவ்வாறு செய்யவில்லை என்றால், சால்பு என்ற
பண்பு பொருளற்றுப் போய்விடும். தாவீது தாம் ஒரு
தலைசிறந்த சான்றோர் என்பதை எண்பிக்கின்றார்.
இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்.
என்ன பயத்ததோ சால்பு?" (குறள் 087)
"கன்னத்தில் முத்தமிட்டால்" என்ற திரைப்படம்
குடியரசுத் தலைவர் விருது பெற்ற படம். "குடியரசுத்
தலைவரிடமிருந்து விருது பெற என்ன செய்ய வேண்டும்?" என்று
ஒருவரைக் கேட்டதற்கு, அவர் "கன்னத்தில் முத்தமிட
வேண்டும்" என்றார்.
ஆனால், கிறிஸ்துவின் விருதுபெறுவதற்குக் கன்னத்தில்
முத்தமிடத் தேவையில்லை. மாறாக, நம்மை ஒரு கன்னத்தில்
அறைபவருக்கு மறு கன்னத்தையும் காட்ட வேண்டும் (லூக்
6:29).
விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும்
நிறைவுள்ளவராய் இருங்கள்" (மத் 5:48) என்று மத்தேயு
நற்செய்தியில் கிறிஸ்து மலைப்பொழிவுக்கு முத்தாய்ப்பு
வைக்கிறார். ஆனால், லூக்கா நற்செய்தியில் "உங்கள்
தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பது போன்று நீங்களும்
இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்" (லூக் 6:86) எனக்
கூறிக் கிறிஸ்து தமது சமவெளிப் பொழிவுக்கு முத்தாய்ப்பு
வைக்கிறார். இரக்சு குணம் நம்மை ஆட்சி செய்து, அதன்
விளைவாக நாம் நமது பகைவர்களை அன்பு செய்து, நம்மை
வெறுப்பவர்களுக்கு, நன்மை செய்து, நம்மைச்
சபிப்பவர்களுக்கு ஆசி கூறுவதன் மூலமாக நாமும் வானகத்
தந்தையைப் போல நிறைவுள்ளவர்களாக முடியும் என்பதை
வலியுறுத்துகிறது லூக்கா நற்செய்தி.
ஒரு சந்நியாசி ஓர் ஆற்றிலிருந்து மேலே வர முடியாமல்
தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு தேளை ஒரு குச்சி மூலம்
வெளியே கொண்டு வந்தார். தேள் குச்சியின் மேல்
வந்ததும் சந்தியாசியின் கையில் கொட்டிவிட்டது. ஆயினும்
அவர் மீண்டும் குச்சி மூலம் தேளை மேலே கொண்டு வந்தார்.
மறுபடியும் அத்தேள் அவரைக் கொட்டிவிட்டது. இதைக்
கவனித்த அருகில் இருந்தவர்கள் சந்நியாசியிடம், "தேள்
திரும்பத் திரும்பக் கொட்டியும் எதற்கு நீங்கள்
அத்தேளுக்கு உதவி செய்கிறீர்கள்?" என்று கேட்டனர்.
அதற்கு சந்நியாசி அவர்களிடம், "தீமை செய்வது தேளுடைய
இயல்பு துன்பப்படுகிறவர்களுக்கு உதவி செய்வது எனது இயல்பு.
தேளுடைய - இயல்பு தீயது என்பதற்காக எனது நல்ல இயல்பை நான்
மாற்றிக் கொள்ளமாட்டேன்" என்றார். தீமை
செய்பவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும்.
ஆபிரகாம் லிங்கன் தம்மை அவதூறாகப் பேசிய ஓர்
அரசியல்வாதியைத் தமது அமைச்சரவையில் ஓர்
அமைச்சராக்கினார். அதைக் கண்ட மற்ற அமைச்சர்கள்,
"உங்கள் பகைவனைப் பழிவாங்காமல் அவரை ஏன்
அமைச்சராக்கினிர்கள்?" என்ற கேட்டதற்கு லிங்கன், "அவரை
தண்டிக்கும் சிறந்த வழி அவர்களுக்கு நன்மை செய்வதாகும்.
அமைச்சராக்கிப் பழி வாங்கிவிட்டேன்" என்றார்.
பகைவர்களைத் தண்டிக்கும் சிறந்த வழி அவாகளுக்க நன்மை
செய்வதாகும்.
வாழ்நாளெல்லாம் நாம் மகிழ்ச்சியாய் இருக்க நாம்
கடைப்பிடிக்க வேண்டிய தங்கமான விதிமுறை: "உன்னைக்
காயப்படுத்தியவரை நேசி; உன்னை நேசிப்பவரைக்
காயப்படுத்தாதே'
சல்லடத்தில் எல்லாமே பொத்தல். அது ஊசியைப் பார்த்து,
"உன் காதில் ஒரு பொத்தல் இருக்கின்றது" என்ற தாம்.
பிறருடைய குற்றங்களை விமர்சிக்கும் நாம் நம்முடைய
குற்றங்களைப் பார்ப்பதில்லை. பிறருடைய குற்றங்கள்
உடைத்து எறியப்பட வேண்டியகண்ணாடி அல்ல, மாறாக நமது
குற்றங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும். பிறரைத்
தீர்ப்பிடுவதையும் கண்டனம் செய்வதையும் இன்றைய
நற்செய்தியில் கிறிஸ்து தடை செய்கிறார்.
ஆதாம் மண்ணைச் சார்ந்தவர்; கிறிஸ்துவோ விண்ணைச்
சார்ந்தவர்: எனவே நாம் ஆதாமின் சாயலை மட்டுமல்ல,
கிறிஸ்துவின் சாயலையும் தாங்கியவர்கள் (இரண்டாம்
வாசகம்). ஆதாமின் மனித இயல்பு பழிவாங்கும் இயல்பு;
கிறிஸ்துவின் தெய்வீக இயல்பு மன்னிக்கும் இயல்பு.
"தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது
என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக் 23:34).
எனவே மன்னிப்போம், மறப்போம்.
1981ஆம் ஆண்டு மே 13ஆம் நாள் மாலையில் நடந்தது அந்தத்
துயர நிகழ்ச்சி. திருத்தந்தை புனித 2ஆம் ஜான்பாலை முகமது
அலி . அகா துப்பாக்கியால் சுட்டான். ஐந்து தோட்டாக்கள்
திருத்தந்தையின் உடலைத் துளைத்தன. ஐந்தரை. மணி, நேரப்
போராட்டத்துக்குப் பின்தான் குண்டுகள்
வெளியேற்றப்பட்டன. மயக்கமடைந்த திருத்தந்தை
மருத்துவமனையில் தன் நினைவுக்கு வந்தவுடன் முதன்
முதலில் உலக மக்களுக்குத் தந்த செய்தி: "என்னைக் கொலை
செய்ய முயன்ற முகமது அலி அஃகாவை" மன்னித்துவிட்டேன். நமது
அந்த சகோதரருக்காகச் செயியுங்கள்". இதைப்பற்றி ராஜ்
மோகன் காந்தி தனது ஹிம்மத் என்ற இதழில் குறிப்பிட்டார்
"போப்ஜான் பால் ஒரு நாள் இறந்துவிடுவார். அவருடைய
இந்த வார்த்தைகள் ஒருநாளும் இறவா". இதுதான் நற்செய்தி!
பழைய ஏற்பாட்டில் யாக்கோபு தந்தையை ஏமாற்றி ஏசாவின்
ஆசீரைக் கைப்பற்றிக் கொண்டான். ஏசாவிடமிருந்து
தப்பிப்பதற்காக பல ஆண்டுகள் தன் தாய்மாமன் லாபான்
வீட்டில் தங்கிவிட்டுத் தன் சொந்த ஊருக்குத்
திரும்பியபோது ஏசா தன்னைப் பழிதீர்த்துவிடுவானோ என்று
அஞ்சினான். ஆனால் ஏசாவோ தன் சகோதரனை மன்னித்து அன்போடு
வரவேற்றான். அப்போது யாக்கோபு கூறிய வார்த்தைகள்: "உமது
முகத்தைக் காண்பது கடவுளின் முகத்தைக் காண்பது போல்
இருக்கிறது" (தொ.நூ. 33:10). "கடவுளின் முகத்தைக்
காட்டும் மன்னிப்பு"!
மன்னிப்பின் மாண்பு இன்றைய உலகில் மதிப்பிழந்து
வருகிறது. திரைப்படங்களில் வரும் கதை நாயகர்களின்
வலிமையை வெளிப்படுத்தப் பழிவாங்குதல் முக்கிய ஒன்றாகச்
சித்தரிக்கப்படுகிறது. வன்முறையை ஒழிக்க வேண்டுமா?
பழிவாங்குதலை ஒழிக்க வேண்டும். காயின் ஆபேலைக் கொன்றது
உலகில் நடந்த முதல் கொலை. அன்றே அதைத் தடுக்க கடவுள்
ஒர் அருமையான வழியைக். கூறினார். "காயினைக் கொல்லும்
எவனும் பழிவாங்கப்படுவான் (தொ.நூ. 4:15) காயின்
நல்லவன் என்பதால் அல்ல அவனுக்கு அந்தப் பாதுகாப்பு,
கொலை கொலையைத் தூண்டும். பழிவாங்கும், சுழன்று சுழன்று
மேல்நோக்கிச் செல்லும் ' திருகுச்சுழல் (மேவி). போன்ற:
எதிர்வினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இவ்வாறு
கூறியிருக்க வேண்டும்.
தாவீது அரசர் மன்னிப்பதில் சிறந்த எடுத்துக்காட்டு.
'தன்னுயிரைக் குடிக்கத் துரத்திவந்த சவுல் அரசனைக்
கொன்று பழிதீர்த்துக் கொள்வதற்கு நல்ல சந்தர்ப்பம்
தாவீதுக்கு இருமுறை கிடைத்தது. (1 சாமு. 24:6-7,
26:11-12). ஆனால் ஆண்டவரால் அருள்பொழிவு பெற்றவர் மேல்
கைவைக்கக் கூடாது என்ற தீங்கு நினைக்காத தாவீதின்
பெருந்தன்மை, பகைவனுக்கு மன்னிப்பு என்ற இயேசுவின்
போதனைக்கான விளக்கமாகும்.
தாவீது அபிசாயியை நோக்கி "அவரைக் கொல்லாதே! ஆண்டவரால்
திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கை வைத்துவிட்டுக்
குற்றமற்று இருப்பவன் யார்?" என்று சொல்லித் தடுத்தார்
(1சாமு. 26:9) அருள்பொழிவு என்பது வெறும் சடங்கு அன்று.
இறைவனின் புனிதத்தையும் அருளன்மையும், உடனிருப்பையும்
பாதுகாப்பையும் வெளிப்படுத்தும் ஒர் அடையாளம்.
குருகுலம் மட்டுமல்ல, ஒவ்வொரு கிறிஸ்தவரும்
திருமுழுக்கால் திருநிலை பெற்றவரே. அப்படியென்றால் -
கிறிஸ்தவன் கிறிஸ்தவனுக்கு எதிராக எப்படிச்
செயல்படலாம்?
தாவீது சவுலை நோக்கி, "என் பொருட்டு ஆண்டவரே உமக்கு. நீதி
வழங்கட்டும்: ஆனால் உமக்கு எதிராக என் கை எழாது.
முன்னோரின் வாய்மொழிக்கேற்ப தயோரிட்மிருந்தே தீமை
பிறக்கும்". என்றார் "(1. சாமு. 24:12-13). ஒரு பொருள்
அடுத்தற்கு தீமை விளைக்கிறது என்றால் அந்தப் பொருள்
ஏற்கனவே கெட்டுவிட்டது என்று. அருத்தம். தண்ணீர் தன்னிலே
கெடாமல், அதனைம் ' 'பருகுபவனுக்கு தீங்கு விளைக்காது.
காற்று, தன்னிலே கெடாமல், சுற்றுச்சூழலால்
பாதிக்கப்படாமல் மனிதனுக்குத் தீங்கு செய்யாது: ஒருவன்
இன்னொருவனுக்குத் தீங்கு நினைக்கிறான், தீங்கு ..
செய்கிறான் என்றால் அவன் ஏற்கனவே கெட்டுவிட்டான்
என்றுதானே பொருள்!
தவறுவது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வ இயல்பு என்று
கூறுகிறோம். தவறு செய்யும் ஒருவன் தன் மனித இயல்பில்
செயல்படுகிறான் என்று உணர்ந்தால் அவனை மன்னிக்க
முடியும். நான் இறைச்சாயலாகப்
படைக்கப்பட்டிருக்கிறேன், எனவே மன்னிப்பது என் இயல்பு
என்று உணர்ந்தாலும் மன்னிக்க முடியும். மன்னிக்கும்போது
நாம் நம்மைக் கடவுள் நிலைக்கு உயர்த்துகிறோம்.
"அப்போது... நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய்
இருப்பீர்கள்" (லுக். 6:35).
மன்னிப்பது பலவீனத்தின் வெளிப்பாடு அல்ல. மன உறுதியும்
பெருந்தன்மையும் உடையவன்தான் மன்னிக்க முடியும்.
தன்னையே. ஆளத் தெரிந்தவனே, தன் உணர்வுகளைத் தன்
கட்டுக்குள் வைத்திருப்பவனே மன்னிக்கும் தன்மை
கொண்டவன். மன்னிக்கும்போது பிறர் திருந்த
வாய்ப்பளிக்கிறோம். அவர் நாண நன்னயம் செய்கிறோம்.
"பழிவாங்குவதும் கைமாறு அளிப்பதும் எனக்கு உரியன"
என்கிறார். ஆண்டவர். நீயோ, உன் எதிரி பசியாய்
இருந்தால் அவனுக்கு உணவு கொடு. அவன் தாகத்தோடு
இருந்தால் அவன் குடிக்கக் கொடு. இவ்வாறு செய்வதால்
அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய். தீமை உங்களை வெல்ல
விடாதீர்கள். நன்மையால் தீமையை வெல்லுங்கள்" (உரோமை.
12:19-21).
நமக்கு வெளியே அல்ல, நமக்கு உள்ளே தான் நம் பகைவன்
இருக்கிறான். நம் மனமே நமக்கு எதிரி. கடுந்தவம் புரிந்த
பக்தன் முன் கடவுள் தோன்றி "உனக்கு என்ன வரம்
வேண்டும்? கேள்" என்றார். அதற்கு பக்தன் "என்
வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் சக்திகளை உன்
கதாயுதத்தால் தாக்கி வீழ்த்தி அழிக்க வேண்டும்"
என்றான்: . . புன்னகை புரிந்த்படி "அதற்கென்ன, அப்படியே
செய்து- விடுகிறேன் " என்று சொல்லிவிட்டு மறைந்தார்
கடவுள். பக்தனுக்கும். திருப்தி இனி நமக்குப் பகைவர்களே
இருக்க மாட்டார்கள் என்று.
சில நொடிகளில் ஆண்டவன் கையிலிருந்த கதாயுதம் வேகமாகப்
பாய்ந்து வந்து வரம் கேட்ட பக்தனின் மார்பைத்
தாக்கியது. வீழ்ந்தான் பக்தன். தடுமாறியபடி ஆண்டவனை
அழைத்தான். "ஓ கடவுளே, என்ன இது? என்
முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் பகைவனை அல்லவா
தாக்கச் சொன்னேன். உன் கதாயுதம் என்னையே
தாக்கிவிட்டதே. உன் குறி தவறிவிட்டதா?" என்று கதறினான்.
அதற்கு ஆண்டவன் "பக்தா, நீ கேட்டபடி தானே ஆயுதத்தை
வீசினேன். தவறாகப் பயன்படுத்தவில்லையே. மற்றவர்களைத்
தாக்க வேண்டும். வீழ்த்த வேண்டும், அழிக்க வேண்டும்
என்று நினைக்கும் உன் மனமே உனக்குப் பகைவன், எதிரி
எல்லாம். அதற்காகத்தான் உன் இதயத்தை நோக்கியே என்
ஆயுத்ததை வீசினேன். என் குறி என்றும் தவறாது,
தவறியதும் இல்லை" என்றார்.
"தங்களை: அடிமைப்படுத்தும் உரோமையர்கள் அழிய வேண்டும்.
அவர்களை அழிப்பதற்காகவே மெசியா வர வேண்டும்". என்று
விரும்பினர் யூதர்கள். உண்மை மெசியா இயேசுவோ "உங்கள்
பகைவர்களையும் அன்பு செய்யுங்கள்" என்கிறார்.
பாலஸ்தீன் அழிய வேண்டும் என்று இஸ்ரயேலும் இஸ்ரயேல்
அழிய வேண்டும் என்று பாலஸ்தீனும், தமிழர் அழிய
வேண்டும் என்று சிங்களரும் சிங்களர் அழிய வேண்டும்
என்று தமிழரும் நினைத்தால், அது சரியா? அதைத்தான் மிருக
வெறி என்கிறோம். "என், இனம் வாழ வேண்டும்" என்பது
விலங்குகளிலும் இருக்கும் இயல்பூக்கம்! எல்லாம்,
எல்லோரும் வாழ வேண்டும் என உணர்வது மனித நேயம்.
இயேசு காட்டும் வழி நம் இதயங்களை மனித நேய மலர்கள்
பூத்துக் குலுங்கும் பூங்காவனங்களாக்கும்.
இல்லையென்றால், நம். நெஞ்சங்கள் கொடிய மிருகங்கள்
வாழும் இருண்ட காடுகளாகிவிடும்.
"அன்பினால் பகைவர்களை நண்பர்களாக அடைய முடியும்". - இது
அண்ணல் காந்தி அவர்களின் அழுத்தமான கூற்று.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி
மறையுரை
முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க்
கழகம் பெங்களூர்
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான்
பாப்டிஸ்ட் பெங்களூர்
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி
சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
சிந்தனைப் பயணம்.
திரு சின்னப்பன் டிசில்வா. வெலிங்டன் - ஊட்டி
முடிவு உங்கள் கைகளில்
மனிதருக்குள் மனித குணம், தெய்வ குணம் என இரண்டு மன
நிலைகள் இருக்கின்றது. மண்ணைச் சார்ந்த மனிதர் போலவே
மண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். விண்ணைச் சார்ந்த
மனிதர் போலவே விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர்.
என்றும், (1 கொரிந்தியர் 15:48). மேலும் மனிதன் என்பவன்
களிமண்ணாலும், இறைஆவியை உள்வாங்கியதாலும் உயிர்பெற்று
மனிதன் ஆனான். ( தொநூ 2:7) என்றும் படிக்கின்றோம். எனவே
நாம் மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பதுபோல
விண்ணைக் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம் என்று
பவுல் அடிகளார் இரண்டாம் வாசகத்தில் கூறுவதையும் கேட்டோம்.
(1கொரிந்தியர்: 15:49). இயேசுவுக்கும் இந்த இரண்டு நிலைகள்
இருந்ததையும் அவர் அதை பயன்படுத்திய முறைகளையும் நாம் கீழே
காண்போம்.
இயேசுவின் புதுமைகளில் அப்பங்களும், மீன்களும் பலுகி
பல்லாயிரம் மக்கள் உண்டு நிறைவடைந்ததை நாம் வியப்புடன்
பார்க்கிறோம் இதற்கு காரணம்:- இயேசு அங்குச் சென்றபோது
அவரைத் தேடி வந்த பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது
பரிவுகொண்டார்; (மத்தேயு நற்செய்தி14:13-20, மற்றும்
மாற்கு 8:1-8 ) என நறசெய்தியாளர்கள் கூறுகின்றனர். தமிழ்
மரபில் இறைவனைத் தாயுமானவர் என்று கூறி பெருமை படுகிறோம்.
இயேசுவுக்குள் இருந்த தாய்மை உணர்வின் (தெய்வீக குணம்)
வெளிப்பாடாக அவராக முன்வந்து மக்கள் மீது பரிவு- இரக்கம்
கொண்டு அவர்களின் பசியைப் போக்கினார். ஆம் ஒரு தாய் தன்
குழந்தை பசியோடு போவதை ஏற்றுக்கொள்ள மாட்டாள்.
. இயேசுவின் மனித குணம் (கோபம்) "உம் இல்லத்தின் மீதுள்ள
ஆர்வம் என்னை எரித்துவிடும்" என்ற மறைநூல் வாக்குப்படி
உச்சத்தை தொட்டபோது (யோவான் நற்செய்தி 2:13-17) கயிறுகளால்
சாட்டை உண்டுபண்ணி ஆலயத்தில் இருந்த வியாபாரிகளை அடித்து
விரட்டுகிறார். மனிதர்கள் இறைவனின் ஆலயத்தின் புனிதத்தை
மாசுபடுத்தியதால் அதைத் தூய்மைபடுத்த அங்கிருந்த மதி
கெட்டவர்களை துவசம் செய்கின்றார். இயேசு, நம்மிடமும்
இருக்கும் அதே இரண்டு குணங்களை எதற்கு?, ஏன்?, எப்படி?
பயன்படுத்தினார் என்பதைப் பார்த்தோம். இடம் ,பொருள், ஏவல்
அறிந்து நாமும் இந்த குணங்களை பயன்படுத்தும்போது - நமக்கு
அளிக்கப்பட்டுள்ள இயேசுவாக வாழும் வாய்ப்பை
பயன்படுத்துகின்றோம் என்பதில் நாம் பெருமை அடைய வேண்டும்.
சவுல் மற்றும் தாவீது இடமும் இந்த இரண்டு குணங்களும்
இருந்தன சவுலிடம் மனித குணம் உச்சத்தை தொட்டதால் அவர்
தாவீதை அழிக்க முன் வருகின்றார். தாவீதிடமோ தெய்வ குணம்
உள்ளத்தின் ஆழத்தில் நிலைத்து நின்றதால் "அவனவன்
நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப ஆண்டவர் சவுலை ஒப்புவித்தும்"
தாவீது அவர் மேல் கை வைக்கவில்லை. சவுலை அழிக்கவில்லை
தாவீதால் வாழ்வு பெற்ற சவுல் நான் பாவம் செய்துள்ளேன்.
நான் மூடத்தனமாய் நடந்து பெரும் தவறு இழைக்கிறேன் என்றார்.
(1 சாமுவேல் 26:21) தாவீது ஆண்டவரின் அபிஷேகத்திற்கு தந்த
முக்கியத்துவம் முழுமையாக தன் தவறை உணர்ந்த ஒரு முழுமனிதனை
- சவுலை மீண்டும் உயிர் பெறச் செய்தது. அதுமட்டுமன்றி
யாரும் அழிந்து போவது இறைவனுக்கு விருப்பமில்லாததால்
சவுலுக்கும் அவரோடு வந்த அனைவருக்கும் ஆழ்ந்த உறக்கத்தை
வரச்செய்து உயிர் இழப்பை தடுத்து நிறுத்தினார்,
ஆகையால்தான் இன்று நம்மிடையே நாம் அழிந்து விடாமல் இருக்க,
சிலுவையில் துஞ்சிய முதற்கனி, கடைசி ஆதாம் இயேசு நமக்கு
உயிர்தரும் தூய ஆவியானார். (1 கொரிந்தியர் 15:45.)
முதல் இரண்டு வாசகங்கள் நம்முள் உயிரோடு இருக்கும் இந்த
இரண்டு மனநிலைகளை இறைமகன் இயேசு, சவுல், தாவீது ஆகியோர்
அவற்றைப் பயன்படுத்தியபோது; அவை எப்படி அனைவர்க்கும்
நன்மையைத் தந்தன என்பதை தெளிவு படுத்தின. இன்றைய
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு நமக்குள் இருக்கும் இந்த
இரண்டு மனநிலைகளை எப்படி எப்போது எங்கு பயன்படுத்துவதால்
மனிதருக்கு நன்மையையும் இறைவனுக்கு மேன்மையும்
உண்டாக்குகின்றன என்பதை வெளிப்படையாக வரிசைப்
படுத்துகிறார் (லூக்கா 6:28-38). குறிப்பாக பிறர்
உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ,
அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். (மனித குணம்)
என்கிறார். (லூக்கா6:31.) ஆம் நாம்தான் நன்மையை மட்டும்
நமதாக்கும் நல்லவர்களாயிற்றே, அயலானுக்கும் இனி நன்மையை
மட்டுமே செய்வோம் ஏனெனில் நன்மைகளை மீண்டும் நமதாக்கிக்
கொள்ள உறுதிகொள்வோம்.
தாவீதைப் போன்று நமக்குள்ளும் உயிர் தரும் ஆவியானவர்
இருப்பதால், உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல
நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். என்கிறார்
ஆண்டவர் இயேசு. (லூக்கா நற்செய்தி 6:36) ஆம், இரக்கம் -
பரிவு என்பது இறைவனின்குணம் என துவக்கத்தில் பார்த்தோம்,
அதைவிட நாம் அனைவரும் இறைசாயலாலும் இறை ஆவியாலும் படைக்கப்
பட்டிருக்கின்றோம் என்பதையும் நாம் மறுக்கமுடியாது என
நன்கு அறிவோம்.
மனித சமூகம் இன்று உறவுகள், நட்பு, பொருளாதாரம், ஏன்
ஆன்மீகம் என அனைத்திலும் தங்களுடைய (தனி மனிதனுடைய)
எதிர்பார்ப்புகளின் பயன்களின் அடிப்படையில் பக்குவமாக
பயணிக்கின்றது. ஒரு திருப்பலி காணிக்கை அர்பணிப்பில்கூட
ஆயிரம் சுயநல எதிர்பார்ப்புகள். நல்லதுதான் சுயநலமில்லாத
பொது நலம் இல்லை ஆனால் பொது நலம் (உலகம்) இல்லை எனில்
சுயமே அங்கு இல்லை இதை எப்படி மறந்து போகிறோம்?...
இறைவனைத் தேடும் போது சுயநலமிக்க, விவேகமுள்ள ஐந்து
கன்னியர்களாக வாழ பழகிக்கொள்வோம் . உதவும் பொழுது குறைந்த
பட்சம் கதவை தட்டும் நண்பரின் தொல்லை தாங்காமல் உதவிய
நண்பனைப் போலாவது உதவ முன்வருவோம். (லூக்கா 11:5-8)
மரியாளைப் போன்று எதிர்பார்ப்பற்ற மனிதநேயத்தை எந்நேரமும்
சுவாசித்து மகிழ்வோம்..
கீழ் வரும் வாக்கியங்களை நாமும், பிறரும் பல முறை உறவோடு,
உரிமையோடு பேசி இருப்போம். அதாவது :- " பாருங்கள் நீங்கள்
எதை செய்ய விரும்புகிறீர்களோ அதை அப்படியே செய்யுங்கள்,
அது உங்களுடைய விருப்பம். மேலும் - நிச்சயம் உங்களுடைய
நன்மைக்காகத்தான் செய்கிறீர்கள் - இருந்தாலும், இப்படிச்
செய்தால் அது இன்னும் நன்றாக இருக்கும். நன்றாக யோசித்துச்
செய்யுங்கள்" - என உரைத்திருப்போம்.
இன்றைய வாசகங்களின் வாயிலாக இயேசு நம் சுய மரியாதையை
மதிப்பவராக இன்று நமக்கும் அதையேதான் கூறுகின்றார்.
யோசிப்போம்
"முடிவு நம் கைகளில்". .
சிந்தனைப் பயணம்.
திரு சின்னப்பன் டிசில்வா. வெலிங்டன் - ஊட்டி
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ