ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

பொதுக்காலம் 14ஆம் வாரம் - ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)
அன்புக்குரியவர்களே!

இறையரசைக் கட்டி எழுப்ப அருள் தர அழைக்கிறது இன்றைய ஞாயிறு வழிபாடு.

அன்பு, அமைதி, உண்மை, நீதி, அக்கறை இவைகளை அடிப்படையாகக் கொண்டது இறையரசு. ஆனால் தன்னலம், பொய்மை, பேராசை, அடக்குமுறை இவைகள் தான் இன்றைய உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

இயேசு இறையரசைக் கட்டி எழுப்ப அமைதியின் ஊற்றாகத் திகழ்ந்தார். நலிந்தோரைத் தொட்டுத் தூக்கினார். தோழராக்கினார். நலமளித்தார். மன்னித்தார். மகிழ்வில் சேர்த்தார். நிலவாத அமைதியை நிலைக்க வைத்தார்.

நாமும் இறையரசில் நிலவும் அன்பு, அமைதி, உண்மை, நீதி, அக்கறை இவைகளை மற்றவருக்கு வழங்கிடும் வாய்க்காலாக மாறுவோம்.

நமது சொல்லாலும், செயலாலும் வாழ்வாலும் பணியாலும் பிறருக்கு தொண்டு செய்வதன் வழியாக வற்றாத அமைதியை எல்லோருக்கும் பாய்ந்தோடச் செய்யும் ஊற்றாகத் திகழ்வோம்.
இயேசு இறையாட்சியை கட்டி எழுப்ப சீடர்களுக்கு கொடுத்த அதே அதிகாரத்தையும் வல்லமையையும் நமக்கும் தருகின்றார். நாம் வாழும் மண்ணில் மக்கள் நடுவிலே நாமும் இறையாட்சியைக் கட்டி எழுப்ப நமக்குத் தரும் அதிகாரத்தையும் வல்லமையையும் பயன்படுத்த இறையருள் கேட்டு இந்த திருப்பலியில் இணைந்து ஜெபிப்போம்.


 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. இறையாட்சிப் பணியைத் திறம்பட செய்வோரை தேர்ந்தெடுத்த இறைவா!
திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் ஆற்றும் திருப்பணிகள் திருச்சபையில் உலகம் தர இயலாத அன்பை அமைதியை நிலைக்கச் செய்ய ஆற்றல் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ஆறு போல் நிறைவாழ்வை பாய்ந்தோட செய்யும் இறைவா!
இறையாட்சிக்கு எதிராக நாட்டில் நிலவும் இனக்கலவரம், தீண்டாமை, வன்முறை அக்கறையின்மை மனித மாண்பின்மை போன்றக் குறைகளை நீக்கி நாடுகளிடையே நிறைவாழ்வை பாய்ந்தோடச் செய்ய தலைமைப் பொறுப்பில் உள்ளோருக்கு ஆற்றல் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இறையாட்சியை கட்டி எழுப்ப ஆற்றல் தரும் இறைவா!
உம் பணியாற்ற நீர் தேர்ந்தெடுத்த எம் பங்குப் பணியாளர்களது வாழ்வில் ஏற்படும் துயர்களை நீக்கி உம்மைச் சார்ந்து செயல்பட ஆற்றல் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. இறையாட்சியை கட்டி எழுப்ப எமை அழைத்த இறைவா!
திரு முழுக்கு பெற்ற நாங்கள் எல்லாரும் தனிமனித ஒழுக்கத்தினாலும், பிறர் நலம் பேணிக்காப்பதாலும். குடும்ப சமாதானத்தாலும், இறைவார்த்தையை நேசித்து வாழ்க்கை நடத்துவதாலும் இறையாட்சியை கட்டி எழுப்ப முடியும் என உணர்ந்து அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஆற்றல் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. விண்ணகத் தந்தையே !
வேதனையில் இருப்போர் தங்கள் மீது நீர் அக்கறை கொண்டுள்ளீர் என்று உணரச் செய்தருளும். துன்புறும் எல்லா மக்களும் உமது ஆறுதலை அனுபவிக்க ஆற்றல் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 
மறையுரை சிந்தனைகள்
 
அக்கறை காட்டுவோம் ...

ஒரு வீட்டில் ஒரு எலி தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக்கொண்டிருந்தது. வளையை விட்டு மெள்ள தலையை உயர்த்திப் பார்த்தது. வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது. அவர்கள் வெளியே எடுத்தது. ஒரு எலிப்பொறி. அதைப்பார்த்ததும் எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.

உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."
கோழி தெனாவட்டாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான். நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."

உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதே பதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன். என்றது.

மனம் நொந்த எலி அடுத்து
பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதே பதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர். ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம். எலி மாட்டிக்கொண்டு விட்டது என்று பண்ணையார் மனைவி ஓடி வந்து எலிப்பொறியைத் தன் கையில் தூக்கினாள். "ஆ " எனக் கத்தினாள்.

எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது. எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்டபின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை. அருகில் இருந்த ஒரு மூதாட்டி " பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது வினை. கோழியை கொன்று சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது. அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.
உறவினர்கள் சிலர் வந்தார்கள். அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை வெட்டினார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது. பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார். இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.

நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.
பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார். எலி தப்பித்து விட்டது.

அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேட்போம். ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம். பிறரின் பிரச்சனையை தீர்க்க முயலாவிட்டாளும் காது கொடுத்து கேட்கவாவது செய்வோம். பிறரின் துன்பத்தில் இதமான ஒருவார்த்தை பேசுவோம்.

மேலே வாசித்த கதை போலவே உண்மை நிகழ்வு ஒன்று அண்மையில் இந்தியாவில் தமிழகத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் சுவாதி என்ற மென்பொறியாளர் காலை வேளையில் வாலிபன் ஒருவனால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அருகில் நின்ற காவல்துறை உட்பட நுற்றுக்கு மேற்பட்ட மக்கள் கொலையை தடுக்கவில்லை. கொலை செய்யப்பட்ட சுவாதிக்கு எந்த முதலுதவியும் செய்யவில்லை. தண்ணீர் தண்ணீர் எனக் கேட்டும் யாரும் தண்ணீர் தரக்கூட முன் வரவில்லை. இதைக் கேள்விப்பட்ட சமூகநல ஆர்வலர் ஒருவர் சுவாதி பேசுவது போல ஒரு கட்டுரையை வாட்ஸ் அப்பில் இப்படி வெளியிட்டுள்ளார்.

நான் தான் சுவாதி பேசுகிறேன். இன்று இறந்துவிட்ட நான் இன்னும் சில நாள் காட்சி ஊடகத்தில் உங்களுடன் வாழத்தான் போகிறேன். அதற்கு முன் உங்களுடன் சிலவற்றை பேசிவிட்டு போய்விட ஆசைப்படுகிறேன். எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதயத்தில் நானும் ஒருத்தி தான். எனக்கான கனவுகள் அதிகம் இல்லை. எல்லோரையும் போன்ற நானும் ஒரு சக மனுஷிதான். இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன். வார இறுதிநாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன். என் அப்பாவும் அப்படித்தான் நினைத்து என்னை அந்த இரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றார்.

உங்களில் எத்தனை பேர் இன்று அந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் உங்களின் மனதிற்கு தெரியும். உங்களில் எத்தனை பேர் பெண்கள் முன்னேற்றத்தை வாய்கிழிய பேசியவர்கள் என்று எனக்கு தெரியாது இன்று நான் வாய்கிழிபட்டு தான் இறந்தேன். உங்களில் ஒருவருக்கு கூட அதை தடுக்க அக்கறை இல்லையே,.

அவனை தடுக்காத உங்களின் கயமை கூட எனக்கு புரிந்தது. ஆனால், அவன் போன பின்பு எனக்கு அடிப்படை சிகிச்சை அளிக்கவோ அல்லது என் தாகத்தை போக்க தண்ணி கொடுக்க கூடவா ஆள் இல்லை. இரண்டு மணி நேரம் என்னை வேடிக்கை பார்த்தீர்களே அந்த கணங்கள் கூட உங்களை சுடவில்லையா?

உங்களின் அதிகபட்ச சமூக அக்கறை இன்று ஒரு நாள் உங்களின் பேசு பொருள் நான். எப்படியும் இன்னும் இரண்டு-மூன்று நாட்களில் என்னை கொன்றவன் எங்கேனும் பிடிபடுவான் இல்லை நீதிமன்றத்தில் சரணைடைவான். என் ஒழுக்கத்தை பற்றி ஒரு நீண்டவாதம் பேசுவான். இல்லை என்னால் ஏமாற்றப்பட்டதாக புலம்புவான். அதையும் விவாத பொருளாக வைத்து விவாதித்து கொண்டே இருங்கள்.

இல்லையேல் ஆளும் வர்க்கம் அவனுக்கு ஒரு தோட்டாவை பரிசாக அளித்து அவனை கொன்றுவிடும் அதையும் பாராட்டி ஒரு பதிவிட்டு உங்கள் சமூக கடமையை ஆற்றிவிடுங்கள். அதையும் மீறீனால் ஒரு கவிஞனின் இரங்கற்பா ஒரு பேச்சாளனின் தொண்டை நீர்வற்ற ஒரு உரை. ஒரு எழுத்தாளனின் ஒரு பக்க கட்டுரை இது தானே என் சாவின் எச்சங்கள்.

நான் நானாக இங்கு வீழ்த்தப்படவில்லை. ஒட்டுமொத்த சமூகமாகவே வீழ்த்தப்பட்டு இருக்கிறேன். அதை மறந்துவிடாதீர்கள்.

அன்பு, நீதி, அக்கறை, இரக்கம். பிறர் நலம் பேணுதல் போன்ற நற்பண்புகள் மனித மனங்களில் நிலவியிருந்தால் இப்படியான ஒரு கொலை நிகழ்வு நிகழ்ந்திருக்காது.
இன்று துன்புறும் மனிதர்களை வேடிக்கை பார்க்கும் சமூகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

ஆபத்து காலத்தில் உதவுவோர் பேரன்பு படைத்தவர்.

பிறர் செய்கின்ற தவறுகளை பொறுத்துக் கொள்வோம்.

நோயுற்றோரை, சிறையில் இருப்போரை, ஆறுதல் தேடுவோரை அக்கறையுடன் அரவணைப்போம்.

ஒரு தவறை தடுக்க முடிந்தும் தடுக்காதவர் அந்த தவறுக்கு துணை போகிறவர்.

மனித உரிமை மீறல் நடைபெற விடாமல் தடுப்பது தவறல்ல.

அநீதி நடக்கும் போது தட்டிக் கேட்போம்.

நல்லது செய்யும் போது பிறரைப் பராட்டுவோம். பிறரை மதிப்போம். விட்டுக்கொடுத்து வாழ்வோம். நாம் எதைக் கொடுக்கிறோமோ அதைத்தான் பெற்றுக் கொள்வோம். நல்லதைக் கொடுத்து நல்லதைப் பெற்றுக் கொள்வோம்.

தனக்கென வாழ்ந்தவர் தாழ்ந்தவர் ஆகிறார். பிறருக்கென வாழ்ந்தவர் பெருவாழ்வு வாழ்கிறார்.

நமது எண்ணங்களும் செயல்களும் நாம் உடுத்தும் உடைகள். அவை கந்தல்கலாகவும் கிழிசல்களாகவும், அழுக்காகவும் இருக்கக்கூடாது. அவை நாம் யார் என நம்மை இனம் காட்டக்கூடியவை.

திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் இறையாட்சியை கட்டி எழுப்பக் கடமைப்பட்டுள்ளோம்.

அன்புக்காகவும், அமைதிக்காகவும், நீதிக்காகவும் உழைக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
மனித மனம் அமைதிக்காக அலைமோதுகிறது. மனிதன் மன அமைதிக்காக ஏங்கித் தவிக்கிறான். அந்த அமைதியை மனித மனங்களில் நிலைக்கச் செய்ய முன் வருவோம்.

நம் மனதை முதலில் அமைதிப் படுத்துவோம். சமூதாயத்தில் குழப்பங்கள் நிலவுகின்ற இடங்களில் அமைதியை ஏற்படுத்த முன்வருவோம்.

தனி மனித ஒழுக்கம் இறையாட்சிப் பணியின் சமூக மாற்றத்தின் முதல் காரணி. நன்றும் தீதும் பிறர் தர வாரா. நம் மனத்தால் கூடப் பிறருக்கு தீங்கு நினைக்காது வாழ்வோம்.
 
ஆசை, கோபம், களவு கொள்பவர் பேசத்தெரிந்த மிருகம். அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவ தெய்வம்.

அன்பு நன்றி கருணை இரக்கம், அக்கறை கொண்டு மனித வடிவ தெய்வமாக நடமாடி இறையாட்சியை கட்டி எழுப்புவோம்.

இறையாட்சி மலர உறவில் உரிமையைக் கொடுப்போம்.
வாழ்வில் நம்பிக்கையைக் கொடுப்போம்.
அன்பில் உண்மையைக் கொடுப்போம்.
நட்பில் நேர்மையைக் கொடுப்போம்.
துன்புறும் ஏழைகளுக்கு இதயத்தை திறப்போம்.

சென்ற இடமெல்லாம் நன்மை செய்த இறைவா! தொண்டு செய்வதில் இன்பம் கொண்டீர். எங்களுக்காகவே உம் உயிரை கொடுத்தீர். கொடுமையான சாவின் போதும் எதிரிகளை மன்னித்தீர். நோயாளிகளிக்கு சுகம் தந்தீர். தொழுநோயாளிகளை தொட்டுத்தூக்கி எடுத்தீர். உம்மைப் போல நாங்களும் வாழ்ந்திட அருள்புரியும். அன்பு செய்து மன்னித்து வாழ உதவிடும். மற்றவர்கள் வாழவும் மனித மாண்புக்கான உரிமை பெறவும் மனதார நாங்கள் எங்களையே செலவிடச் செய்யும். வன்முறைக்கும் இருளுக்கும் நடுவிலே நாங்கள் உமது அன்பையும் அமைதியையும் நிலைக்கச் செய்ய துணைபுரியும்

 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.

I. எசாயா 66:10-14
II. கலாத்தியர் 6:14-18
III. லூக்கா 10:1-12, 17-20
மகிழ்வின் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சி எது தெரியுமா? நம்மால் முடியாது என அடுத்தவர்கள் கூறியதை அவர்கள் முன்னே செய்து காட்டுவது. இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்று சொல்வதை விட வாய்ப்புக்களைப் பயன்படுத்த முயலவில்லை என்று சொல்வதே சரியானது. நாம் இந்த உலகில் பிறந்தது வளர்ந்தது வாழ்ந்தது வாழ்ந்து கொண்டிருப்பது எல்லாமே மகிழ்வினை எப்படியாவது எட்டிப்பிடித்துவிட வேண்டும் அதை நம்முடனே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையினால் தான். இந்த மகிழ்வின் பட்டியலில் நமது பெயர் இடம்பெற்றிருக்கின்றதா? என்பதை கண்டறியவே இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் துன்புற்ற இஸ்ரயேலர் அடையும் மகிழ்வு நிலை பற்றி எடுத்துரைக்கின்றார். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவது போல அவர்கள் தேற்றப்படுவார்கள் என்கிறார். சிறு குழந்தைகள் தங்களது தாயை கட்டி அணைத்து மகிழ்வைத் தெரிவிப்பர். தாய் தனது சீராட்டல் உணவூட்டல் மூலமாக தனது அன்பினை வெளிப்படுத்துவார். அது போல இஸ்ரயேல் மக்கள் சீராட்டப்படுவர் என்று வாக்கு கொடுக்கின்றார்.

இரண்டாம் வாசகத்திலோ பவுலடியார் புதிய படைப்பாவதே இன்றியமையாதது என்கிறார். இதன் மூலம் மீண்டும் பிறந்து மகிழ்வோடு வாழுங்கள் என்கின்றார்.
நற்செய்தி வாசகத்தில் இயேசு மகிழ்வோடு வாழ என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக தனது சீடர்களுக்கு எடுத்துரைப்பதன் மூலம் நாமும் எப்படி மகிழ்வாக வாழ வேண்டுமென்றும் நமக்கும் வெளிப்படுத்துகிறார்.
சீடர்களை பணிக்கு அனுப்பும் பகுதி இன்றைய நற்செய்தி வாசகமாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெறும் சீடர்கள், அவர்களின் செயல்பாடுகள் நமக்கு மகிழ்விற்கான வழியைக் காட்டுகின்றன. அதன்படி நாமும் செயல்பட்டால் நமது பெயர்களும் விண்ணகத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் என்பதில் நாம் மகிழ்வடைவோம்.

கீழ்ப்படிதல் : இயேசு சொன்னவுடன் இருவர் இருவராக தெரியாத ஒரு ஊருக்கு செல்கின்றனர். ஏன் போக வேண்டும் என்றோ? எதற்காக போக வேண்டும் என்றோ? கேட்கவில்லை. நான் இவரோடு போக மாட்டேன் இந்த ஊருக்கு போக மாட்டேன் என்று சொல்லவில்லை மாறாக, உடனடியாக கீழ்ப்படிகின்றனர். இன்று நாம் பல நேரங்களில் உரிமை என்ற பெயரில் தேவையில்லாமல் கேள்விகள் கேட்டு நமது வாய்ப்புக்களை தவறவிடுகின்றோம். நமது கேள்வி கேட்கப்படும் இடம் சூழல் சரிதானா என்று பார்த்து கேட்க வேண்டும்.

செயல்படுதல்: இயேசு சொன்னதை செயலில் காட்டுகின்றார்கள். அவர் சொன்னதெல்லாம் செய்யுங்கள் என்ற வார்த்தைக் கேற்ப வாழ்கின்றார்கள். சரி என்று சொல்லிவிட்டு போகாமலோ, முடியாது என்று சொல்லிவிட்டு சென்றோ இவர்கள் இருக்கவில்லை. மாறாக சொன்னதை செயலில் காட்டுகின்றார்கள். நாம் சில செயல்களை செய்வதற்கு கால தாமதம் செய்கின்றோம். அதை விடுத்து உடனடி செயலில் இறங்க முயல்வோம்.

குணமளித்தல் : தங்களுக்கு கிடைப்பதை உண்டு நிறைவடைந்து தங்களது உடல் உள்ள பலனை அதிகரித்துக் கொள்கின்றனர். அதன் பலனாக தாங்கள் பெற்ற நலனை பிறருக்கும் குணமளிக்கும் வரமாக தருகின்றனர். நம்மிடத்தில் பலரிடம் இன்று சாப்பாட்டில் குறை கூறும் பழக்கம் இருக்கிறது. கொடுப்பதை உண்பதை விட விரும்பியதை கேட்டு உண்பதையே பெருமையாக எண்ணுகின்றோம். இதனால் பலனும் கிடைப்பதில்லை நலனும் கிடைப்பதில்லை.

பறைசாற்றுதல்: பிடித்தவர் பிடிக்காதவர் என்ற வேறுபாடு இன்'றி அனைவருக்கும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்று துணிவுடன் பறைசாற்ற ஆரம்பித்தனர். விரும்பாதவர்களுக்கு எதிராக தூசியை உதறி எதிர்ப்பையும் தெரிவித்தனர். அவர்களது துணிச்சலான பறைசாற்றுதலால் எல்லாம் நலமே நடந்தேறின. நாம் பல நேரங்களில் நற்செய்தியைப் பறை சாற்றவே விரும்புவதில்லை. அப்படியே பறைசாற்றினாலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதில்லை. துணிவுடன் நற்செய்தியை பறைசாற்றி மகிழ்வோம்.


நன்மையை மட்டும் கூறுகின்றனர்.: சீடர்களது பயணத்திலும் பணியிலும் இன்பங்களோடு துன்பங்களும் நிறைந்து இருந்திருக்கும். ஆனாலும் அவர்கள் நன்மையை மட்டுமே இயேசுவிடம் தெரிவிக்கின்றனர். நாமும் நன்மையை மட்டுமே சொல்லிப் பழகுவோம்.

இப்படிப்பட்ட குணங்களோடும் நலன்களோடும் நாம் வாழும் போது நமது பெயர்கள் நிச்சயம் விண்ணகத்தில் இடம்பெற்றிருக்கும். சாதாரண அட்டைகளிலும் பலகைகளிலும் நமது பெயரைப் பார்த்து மகிழும் நாம் விண்ணகத்தின் நுழைவாயிலில் நமது பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் குறித்து பெருமகிழ்வடைவோம். ஏனெனில் நம்மை அடையாளப்படுத்துவது நம் பெயர். நமது பெயர் இடம்பெற்றிருக்கும் இடம் , அது பத்திரிக்கை ஆனாலும் மடலானாலும் வாழ்த்துப் பலகையானாலும் உயரத்திற்கும் வடிவத்திற்கும் ஏற்ப நமக்கு மகிழ்வைத்தரும். ( எனது பெயர் பெரிய எழுத்துக்களில் பதாகைகளில் வரவேண்டும். முன்னாடி பின்னாடி இந்த அடைமொழிகளும் பட்டங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம்.)

இதற்கு எல்லாம் மேலாக நமது பெயர்கள் விண்ணகத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. என்பது குறித்து அகமகிழ்வோம். அதற்கேற்ப நமது பெயரை அப்பட்டியலில் சேர்க்க முயற்சி செய்வோம். மகிழ்வு என்னும் பெயர்ப்பட்டியலில் நமது பெயரையும் சேர்க்க நம்மாலான செயல்களை செய்ய முற்படுவோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.


 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 
பொதுக்காலம் 14ம் ஞாயிறு - 03.07.2022

I . எசாயா 66: 10-14;
II .கலாத்தியர் 6: 14-18;
III.லூக்கா 10: 1-12, 17-20)


அவர் மடியில் மகிழ்ச்சி!


ஒரு குழுவினர். அவர்கள் சென்றார்கள். அவர்கள் வெறுங்கையராய்ச் சென்றார்கள். அவர்கள் ஆட்டுக்குட்டிகளைப் போல சாந்தமாக இருந்தார்கள். அவர்களைச் சுற்றியிருந்தவர்களோ ஓநாய்களைப் போல ஆபத்தானவர்களாய் இருந்தார்கள். அவர்கள் கைகளில் ஒன்றுமில்லை. தோளில் பைகள் இல்லை. மாற்று உடைகள் இல்லை. அரையில் பணம் இல்லை. பாதங்களில் மிதியடிகள் இல்லை. அவர்கள் போகும் வழியில் யாருக்கும் வணக்கம் செலுத்தவில்லை. ஏனெனில் அடுத்தவருக்கு வணக்கம் செலுத்தி முகஸ்துதி செய்யும் குணமும் அவர்களிடம் இல்லை. யாருடைய உறவும் அவர்களுக்குத் தேவையாய் இல்லை. உறவுகளை அவர்கள் சுமைகளாய் நினைத்தார்கள். தங்கள் கண்களில் பட்ட வீட்டிற்குள் நுழைந்தார்கள். அவர்கள் முன் வைக்கப்பட்டதை உண்டார்கள். அங்கிருந்தவர்களின் நோய்களைக் குணமாக்கினார்கள். இறையரசு வந்துவிட்டது என்ற செய்தியைச் சொன்னார்கள். சிலர் கதவுகளைத் திறந்து ஏற்றுக்கொண்டனர். பலர் கதவு இடுக்கின் வழியே இவர்களைப் பார்த்துவிட்டு, கதவுகளைத் திறக்கவில்லை. சிலர் இவர்களோடு வாக்குவாதம் செய்தனர். சிலர் இவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. இவர்களின் வேலை முடிந்து தன் தலைவரிடம், தன்னை அனுப்பியவரிடம் திரும்பினார்கள். இவர்களின் உள்ளத்தில் இனம் புரியாத மகிழ்ச்சி. இவர்களைப் பார்த்தவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். ஒன்றும் இல்லாமல் இருந்தாலும், எல்லாவற்றையும் இழந்தவர்களாக இருந்தாலும் எப்படி இவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது? அவர்களின் தலைவர் அவர்களின் மகிழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்துகின்றார்: 'உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்று மகிழுங்கள்!' என்கிறார். மனிதர்களின் நினைவில் மறைந்துவிடும் இவர்களின் பெயர்கள் அழியாத இடத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.

இன்னொரு குழுவினர். செழிப்பாக வாழ்ந்தார்கள். நிலம், கடவுள், ஓய்வுநாள், திருச்சட்டம் என வாழ்க்கை இனிதே நகர்ந்தது. ஆனாலும், உடன்படிக்கை மீறலால் நாடுகடத்தப்பட்டார்கள். அடிமைகளாக அடுத்த நாட்டிலும், அநாதைகளாக சொந்த நாட்டிலும் திரிந்தனர். அவர்களின் இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற ஆண்டவராகிய கடவுள் அவர்களைத் தன் தோள்மேல் சுமந்து, 'இதோ! என் மகன்! என் மகள்!' என வலம் வருகின்றார். 'உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும்' என்கிறார் அவர்.

இருவருமே இழந்தார்கள்! ஆனால், இழந்த அவர்களை அவர் தன் மடியில் ஏந்திக்கொண்டார். அவரின் மடியில் மகிழ்ச்சி. அவரின் மடியில் மட்டுமே மகிழ்ச்சி!

கடந்த இரண்டு வாரங்களாக இயேசு தரும் சீடத்துவத்தின் பாடங்களைச் சிந்தித்தோம். தன்னை மறுப்பதும், தன் சிலுவையைச் சுமந்து கொண்டு இயேசுவை நாள்தோறும் பின்பற்றுதலுமே சீடத்துவம் என்று கற்பித்த இயேசு தன் சீடர்கள் எழுபத்திரண்டு பேரை இறையரசுப் பணிக்கு அனுப்புவதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 10:1-12, 17-20) வாசிக்கக் கேட்டோம். எல்லாவற்றையும் இழந்தவர்களாய் அவர்களை வழியனுப்பும் இயேசு, இறைவனின் மடியில் தங்கள் மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள அவர்களுக்குக் கற்பிக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 66:10-14), பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட யூதா குலத்தினர் தங்களின் சொந்த நகராம் எருசலேம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையின் செய்தியை விதைக்கின்ற மூன்றாம் எசாயா, எருசலேமை ஒரு தாயாக உருவகித்து அந்தத் தாயை நோக்கி அனைத்து நாட்டினரும் வர வேண்டும் எனவும், அவளின் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும் எனவும் அழைக்கின்றார்.

'தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல நான் உங்களைத் தேற்றுவேன். எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்' (66:13) என்று கடவுளைத் தாயாக உருவகிக்கும் எசாயா, அதே உருவகத்தைக் கொண்டு எருசலேமையும் உருவகிக்கின்றார். 'அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகள்,' 'அவளின் மார்பு,' 'பால்,' 'அவளின் மடி' என்னும் வார்த்தைகள் புதிதாக குழந்தையைப் பெற்றெடுத்த இளம் தாயை நம் கண்முன் கொண்டு வருகின்றன. எருசலேம் நகரம் இயற்கையாகவே மலைப்பாங்கான பகுதி. மலைமுகடுகளை மார்பாக உருவகிக்கின்ற எசாயா, முகடுகளில் வழிந்தோடும் நீரைப் பால் எனவும், முகடுகள் ஏற்படுத்தும் பள்ளத்தாக்குகளை தாயின் மடி என்றும் உருவகிக்கின்றார். முலைகள், மார்பு, பால், மடி போன்றவை குழந்தைக்கு மகிழ்ச்சி, நிறைவு, அல்லது இன்பம் தந்தாலும், இந்த மகிழ்ச்சிக்கு முன்னால் அந்தத் தாய் அனுபவித்த மரண வேதனையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். பேறுகால வேதனையுற்று தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய், புதிய உயிர் இந்த உலகிற்கு வந்துவிட்ட மகிழ்ச்சியில் தன் வேதனையை மறந்துவிடுகின்றாள். பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டதும், அங்கே யூதா நாட்டினர் அனுபவத்த துயரங்கள், இழப்புகளும் பேறுகால வேதனை போன்றவைதாம். ஆனால் இன்று அவை மறைந்துவிட்டன. ஏனெனில் இறைவன் அவர்களை மீண்டும் தங்களின் சொந்த ஊருக்கு அழைத்து வந்துவிட்டார் இறைவன். இறைவன் தரும் மீட்பு மற்றும் விடுதலை என்ற புதிய மகிழ்ச்சி அவர்களின் பழைய இழப்புக்களை மறக்கச் செய்கிறது. இழப்பு அவர்களுக்கு மாபெரும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்துவிட்டது.

'நீங்கள் பால் பருகுவீர்கள்,' 'மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்,' 'மடியில் வைத்து தாலாட்டப்படுவீர்கள்' என மகிழ்ச்சிக்கு மூன்று பரிமாணங்களைத் தருகின்றார் எசாயா. 'பால் பருகுவீர்கள்' - தாய்மையின் நிறைவே இது. ஒரு தாய் தன் இரத்தத்தை பாலாக மாற்றி தன் குழந்தையின் பசி தீர்க்கின்றாள். தன் உடலில் பத்து மாதங்கள் சுமந்து குழந்தைக்கு உடலும், இரத்தமும் கொடுத்த ஒரு தாய் தொடர்ந்து பால் வழியாக தன் உடலையும் இரத்தத்தையும் குழந்தைக்குக் கொடுக்கின்றாள். (தன் உடலையும், இரத்தத்தையும் கொடுக்க வல்லவள் பெண் மட்டுமே. அப்படி இருக்க, இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் எடுத்து, 'இது என் உடல்,' 'இது என் இரத்தம்' என ஓர் ஆண் கொடுப்பதை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்? அப்படி நியாயப்படுத்துவதை இயற்கையை இருட்டடிப்பது போல இருக்கிறதே! சிந்திக்க வேண்டிய கேள்வி.) இறைவனின் இரத்தமும், நாடு திரும்பியவர்களின் இரத்தமும் இனி ஒன்றாகிவிடும். 'மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்' - தாயின் இந்தச் செயல் குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கிறது. மார்பில் அணைத்துச் சுமக்கப்படாத குழந்தைகள் வளர்ந்தவர்களாகும்போது பாதுகாப்பின்மையால் வருந்துகிறார்கள் என்பது உறுதிசெய்யப்பட்ட உளவியல் உண்மை. எதிரிகளின் கைகளில் பாதுகாப்பு இல்லாமல் இருந்தவர்கள் இனி இறைவன் தரும் பாதுகாப்பை பெறுவார்கள். 'மடியில் வைத்து தாலாட்டப்படுவீர்கள்' - எந்த ஒரு ஆபத்தும் இல்லாத நிலையை இது குறிக்கிறது. எந்த ஒரு பதட்டமும், கலக்கமும் இல்லாமல் தரையில் அமர்ந்திருக்கும் தாய் தன் குழந்தையைத் தன் மடியில் அல்லது தொட்டிலில் கிடத்தி தாலாட்டுகிறாள். போரும், வன்முறையும், இயற்கைச் சீற்றமும் இருக்கும் இடத்தில் ஒரு தாயால் அமரவோ, தன் குழந்தையைத் தாலாட்டவோ முடியுமா? இல்லை. ஆக, இனி போர் இல்லை. வன்முறை இல்லை. இயற்கைச் சீற்றம் இல்லை.

ஆக, எல்லாவற்றையும் இழந்தவர்கள் ஆண்டவரின் மடியில் நிறைவான மகிழ்ச்சியைப் பெறுகிறார்கள் முதல் வாசகத்தில்.

தான் அறிவித்த நற்செய்தி, அந்த நற்செய்தியை தான் பெற்ற விதம், தன் பணி, தன் பணியால் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்கள் பெற்ற உரிமை வாழ்வு, அந்த உரிமை வாழ்வால் உந்தப் பெறும் தூய ஆவியானவரின் கனிகள் என எழுதி, கலாத்திய திருஅவையை நம்பிக்கையில் நிலைத்திருக்க அறிவுறுத்தும் பவுல் தன் கடிதத்தை நிறைவு செய்யும் பகுதியே இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கலா 6:14-18). 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒரு போதும் பெருமை பாராட்ட மாட்டேன்' என்னும் பவுல், 'என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதன் அடையாளம்' என்று சொல்லி பெருமிதம் கொள்கிறார்.

இழப்பின், அழிவின், அவமானத்தின் சின்னமாகிய சிலுவையைப் பற்றி பவுல் எப்படி பெருமைப் பட முடியும்? தன் பணியின் தோல்வி மற்றும் தான் அடைந்த துன்பங்களின் அடையாளமான தழும்புகளைக் கொண்டு எப்படி பெருமிதம் கொள்ள முடியும்? மேலும், 'என்னைப் பொறுத்தவரையில் உலகமும், உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்' என்கிறார் பவுல். அதாவது, சிலுவை. அந்தச் சிலுவையின் ஒரு பக்கத்தில் உலகம். மறு பக்கத்தில் பவுல். உலகையும், பவுலையும் இணைப்பது சிலுவையும், அந்தச் சிலுவையில் தொங்கும் இயேசுவும். சிலுவையில் அறையப்பட்டிருப்பது வேதனையை, வலியைத் தந்தாலும், அந்த வலிதான் பவுலை இயேசுவோடும், உலகத்தோடும் இணைக்கிறது.

ஆக, வலி, துன்பம், அவமானம், அழிவு அனைத்தும் இழப்புகள் என்றாலும், அந்த இழப்புகள் பவுலுக்கு மகிழ்ச்சியை நிறைவாகக் கொடுக்கின்றன.

சிலுவை என்பதை சீடத்துவத்தின் நீட்சி என்று போதிக்கும் இயேசு தன் சீடர்கள் எழுபத்திரண்டு பேரை தாம் போகவிருந்த ஊருக்கு தமக்கு முன் இருவர் இருவராக அனுப்புகிறார். இந்த நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சில கிரேக்க பிரதிகள் 'எழுபது பேரை' அனுப்பியதாகக் குறிப்பிடுகின்றன. நோவா காலத்து வெள்ளப் பெருக்கிற்குப் பின் இருந்த 72 (அல்லது 70) நாடுகளையும் (காண். தொநூ 10), அல்லது மோசே தன் உதவிக்காக தெரிவு செய்த 72 (அல்லது 70) பேரையும் (காண். விப 24:1, எண் 11:16, 24) இது குறிக்கலாம். இருவர் இருவராக அனுப்பக் காரணம் மோசேயின் சட்டப்படி இருவரின் சாட்சியமே செல்லும் என்பதற்காகவும் (காண். இச 19:15) அல்லது பாலைநிலப் பகுதிகளின் ஆபத்து காரணமாக இருவர் சேர்ந்து அனுப்பப்படுதல் மரபாகவும் இருந்தது. திருத்தூதர் பணிகள் நூலிலும், பேதுரு மற்றும் யோவான் (8:14), பவுல் மற்றும் பர்னபா (11:30, 13:1), பர்னபா மற்றும் மாற்கு (15:39), பவுல் மற்றும் சீலா (15:40) என திருத்தூதர்கள் இருவர் இருவராகவே பணி செய்கின்றனர்.

'இருவர்' என்னும் இலக்கியக்கூறும் இங்கே கையாளப்படுகிறது. இங்கே இயேசு சொல்லும் பழமொழிகளும் இரண்டு: (அ) 'அறுவடையோ மிகுதி. வேலையாள்களோ குறைவு.' (ஆ) ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டி. மக்கள் சீடர்களை ஏற்றுக்கொள்ளும் விதமும் இரண்டு: (அ) 'நேர்முகமாக ஏற்றுக்கொள்வார்கள்.' (ஆ) 'எதிர்மறையாக உதறித் தள்ளுவார்கள்.' இயேசுவின் போதனையும் இரண்டு: (அ) வீட்டிற்குள் போகும் போது என்ன செய்ய வேண்டும்? (ஆ) நகருக்குள் போகும்போது என்ன செய்ய வேண்டும்?

முதல் ஏற்பாட்டில் அறுவடை என்பது வரப்போகும் இறுதித்தீர்ப்பையும், இஸ்ரயேல் மக்கள் ஒன்றுகூட்டப்படுதலையும் குறித்தது (காண். யோவே 3:13, மீக் 4:11-13). அறுவடைக் காலம் என்பது விறுவிறுப்பான காலம். விறுவிறுப்பும், வேகமும் இல்லையென்றால் அறுவடை சாத்தியமல்ல. அறுவடைக் காலத்தில் சோம்பித் திரிந்தால் அது முதலுக்கே மோசம் கொண்டுவந்துவிடும். அறுவடைக்கால வேகம் இயேசுவின் மற்ற அறிவுரையிலும் வெளிப்படுகிறது: 'எதையும் கொண்டு செல்லாதீர்கள் - ஏனெனில், நீங்கள் எதையாவது கொண்டு சென்றால் உங்கள் கவனமெல்லாம் உங்கள் உடைமையில்தான் இருக்கும்!' 'யாருக்கும் வணக்கம் செலுத்தி நேரத்தை வீணாக்காதீர்கள்!' 'இந்த ஊரு, வீடு ஓகேவா, அந்த ஊரு, வீடு ஓகேவா, என ஒவ்வொரு ஊராக, வீடாக மாறிக் கொண்டு இராதீர்கள்!'

பின் என்னதான் செய்ய வேண்டும் அவர்கள்? சீடர்கள் செய்ய வேண்டியது மூன்று காரியங்கள் மட்டுமே: (அ) 'உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள்' - இதுதான் புதிய நற்கருணைப் படிப்பினை. எதையும் முணுமுணுக்காமல் ஏற்றுக்கொள்ளும், தன்னிடம் உள்ளதை அப்படியே பகிர்ந்து கொடுக்கும் உள்ளம்தான் நற்கருணையைக் கொண்டாட முடியும்! (ஆ) 'உடல்நலம் குன்றியோரைக் குணமாக்குங்கள்' - இறையாட்சிப் பணி என்பது ஆன்மீகப் பணி அல்ல. 'நல்லா இருங்க, சாப்பிடுங்க, நான் உங்களுக்காக வேண்டிக்கிறேன், நீங்களும் எனக்காக வேண்டிக்கோங்க!' என வாயிலேயே அவரைப் பந்தல் போடும் பணி அல்ல. மாறாக, உடல்சார்ந்த தேவைகளையும் நிவர்த்தி செய்தல் - பசித்தோரின் பசி போக்குதல், பிணியுற்றோரின் பிணி போக்குதலே இறையாட்சிப் பணி. (இ) 'இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்' - சில நேரங்களில் இந்தச் செய்தியை சொல்வது நமக்கு கூச்சமாக இருக்கின்றது!

இப்படி எல்லாவற்றையும் இழந்தவர்களாய் இறையாட்சிப் பணிக்குச் சென்ற சீடர்கள் தங்கள் பணி முடிந்து இயேசுவிடம் திரும்புகிறார்கள். இவர்கள் செய்த பணியின் காலம், இடம் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால், அவர்கள் வீடு திரும்பும்போது அவர்களின் உள்ளம் மகிழ்ச்சியால் பூரித்துப் போய் இருக்கின்றது. 'ஐயோ! கையில காசு இல்லாம கஷ்டப்பட்டோம்! வழியில் பாம்பு கடிச்சது! மேலாடை இல்லாமல் ரொம்ப குளிரா இருந்தது! அந்தா அவருக்கு காலில் கல் எத்தியது!' என்ற எந்தப் புலம்பலும் இல்லை. மாறாக, 'பேய்கள் கூட அடிபணிகின்றன!' என்று மகிழ்ச்சியால் துள்ளுகின்றார்கள். சீடர்கள் தீமையின் மேல் ('பாம்பு,' 'தேள்,' 'பகைவரின் வல்லமை,' 'தீய ஆவி') அதிகாரம் பெறுகின்றனர். இதைவிட மேலாக அவர்களின் 'பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன'. இந்த இறுதிக் காரணத்திற்காக அவர்கள் மகிழ வேண்டும்.

ஆக, பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் யாவே இறைவனின் மடியில் மகிழ்ச்சி காண்கின்றனர். திருத்தூதர் பவுல் இயேசுவின் சிலுவையின் மடியில் மகிழ்ச்சி காண்கிறார். இயேசுவின் சீடர்கள் தங்களுடைய பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருப்பது குறித்து மகிழ்கிறார்கள்.

'அவரின் மடியில் மகிழ' நாம் என்ன செய்ய வேண்டும்?

அ. கிறிஸ்துவின் இடத்தில் நாம் இருத்தல் வேண்டும்
'இயேசு தான் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் தமக்கு முன் சீடர்களை அனுப்புகிறார்.' இதை சீடர்கள் உணர்ந்தார்கள். ஒவ்வொருவரும் மறு இயேசுவாக தங்கள் பணியிடத்திற்குச் சென்றார்கள். இன்று நாம் இந்த உலகிற்குள் மறு கிறிஸ்துவாக வந்துள்ளோம். பல நேரங்களில் 'நான்' என்ற 'ஈகோ' அல்லது 'தான்மை' உணர்வு நம்மில் மேலோங்கி இருக்கிறது. ஆனால், நான் கடவுளின் பதிலியாக இங்கு வந்துள்ளேன் என்றால் கடவுள்போல சிந்திப்பேன், மன்னிப்பேன், பரிவு காட்டுவேன். ஆக, ஒவ்வொரு நிகழ்விலும் நான் கிறிஸ்துவைப் போல வாழ வேண்டும். கிறிஸ்துவைப் போல சிந்திக்கவும், செயல்படவும் வேண்டும்.

ஆ. ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகள்
ஓநாய் வன்மையின் அடையாளம். ஆட்டுக்குட்டி மென்மையின் அடையாளம். ஆட்டுக்குட்டி எந்நேரமும் கடிக்கப்படலாம், விழுங்கப்படலாம். அதற்காக, ஆட்டுக்குட்டி தன் இயல்பை விட்டுவிட வேண்டியதில்லை. எதிர்ப்பு அல்லது ஆபத்து எந்நேரமும் நம்மைச் சூழ்ந்தே இருக்கும். இது எதிர்மறைச் செய்தி அல்ல. மாறாக, எதார்த்தச் செய்தி. எல்லாம் நமக்கு நன்றாக இருந்தாலும் நமக்கு மேல் இறப்பு என்ற ஓநாய் தொங்கிக்கொண்டிருக்கிறது. இல்லையா? ஆக, எதிர்மறை உணர்வுகள், எதிர்மறையான மக்கள், எதிர்மறையான நிகழ்வுகள் அனைத்தோடும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

இ. அமைதி உங்களிடம் திரும்பிவிடும்
வீட்டிற்குள் செல்லும் சீடர் அமைதியை அளித்து, அமைதி அங்கே ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அவர் மனம் தளரக்கூடாது. அதற்காக, அவர் தன் அமைதியை இழந்துவிடக் கூடாது. அவருடைய அமைதி அவரிடம் திரும்பிவிடும். இன்று நாம் சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் அமைதி இழக்கிறோம். நாம் அழைத்த நபரின் அலைபேசி பிஸியாக இருந்தால், வாட்ஸ்ஆப்பில் இரண்டு டிக் விழுந்தும் நமக்குப் பதில் வராமல் இருந்தால், கண்டக்டர் சில்லறை தர மறந்தால், சுகர் டெஸ்டில் சில புள்ளிகள் கூட இருந்தால், உடல் எடை கூடினால் குறைந்தால் என எல்லாவற்றிற்கும் அமைதி இழக்கின்றோம். 'என் அமைதி என் உரிமை' என்ற ஒரு புதிய பதாகையை நாம் ஏந்திக்கொள்ளலாமே!

இவ்வாறாக, அவரின் மடியில் கிடைக்கும் மகிழ்ச்சி, இறப்பக்குப் பின் கிடைக்கும் நிலைவாழ்வு அல்ல. இது இப்போதே இங்கே கிடைக்கும் மகிழ்ச்சி. இது இழப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி.

அவரின் மடியில் மகிழ்தல் நலமே!

 
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை

இயேசுவின் தூதுவர்களாய்......
பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஸ்காட்லாந்தில் உள்ள பெல்ஹெல்வி (Belhelvie) என்ற ஊரில் ஜார்ஜ் ஸ்டாட் (George Stott 1835 -1889) என்றோர் ஆசிரியர் இருந்தார். அவர்க்கு ஒரு கால் கிடையாது. இளம்பிள்ளை வாதத்தால்தான் அவர் தன் காலை இழந்திருந்தார். ஆனாலும், அவர் துடிப்புமிக்க ஓர் ஆசிரியராய்ப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சீனாவில் மறைபரப்புப் பணியைச் செய்துவந்த ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் என்பர் என்பவர் ஜார்ஜ் ஸ்டாட் வழக்கமாகச் செல்லும் ஆலயத்திற்கு வந்து, "யாராரெல்லாம் சீனாவில் ஆண்டவரின் நற்செய்தியை அறிவிக்க ஆர்வமாய் இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அவர் இவ்வாறு கேட்டதற்கு ஆலயத்தில் இருந்த யாரும் தங்களுடைய விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை. பின்வரிசையில் உட்கார்ந்திருந்த ஜார்ஜ் ஸ்டாட் மட்டும், "நான் ஆர்வமாய் இருக்கின்றேன்" என்று தன்னுடைய கையை உயர்த்தினார். அதற்கு ஹட்சன் டெய்லர் அவரிடம், "உங்கட்குத்தான் ஓர் கால் இல்லையே! நீங்கள் எப்படி சீனாவிற்கு வந்து நற்செய்தியை அறிவிக்க முடியும்?" என்று கேட்பதற்கு, அவர், "இரண்டு கால்கள் நன்றாக உள்ளவர்கள் சீனாவிற்கு வந்து நற்செய்தி அறிவிக்க விருப்பம் தெரிவிக்காததால், ஒற்றைக் காலுள்ள நான் விருப்பம் தெரிவித்தேன்" என்றார்.

இதைக்கேட்டு ஹட்சன் டெய்லர் மிகவும் மகிழ்ந்துபோய் அவரைக் கட்டித்தழுவி முத்தமிட்டார். பின்னர் அவர் ஜார்ஜ் ஸ்டாட்டிற்கு செயற்கைக் காலினைப் பொருத்தி, சீனாவில் நற்செய்தியை அறிவிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். 1865 ஆம் ஆண்டு சீனாவிற்குச் சென்ற ஜார்ஜ் ஸ்டாட் ஏறக்குறைய இருபத்தி ஆறு ஆண்டுகள் ஆண்டவரின் நற்செய்தியை மிகுந்த உத்வேகத்தோடு அறிவித்து, பலரும் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்குக் காரணமாக இருந்தார். இன்றைக்கு சீனாவில் கிறிஸ்துவம் இந்தளவுக்கு வேரூன்றி இருக்கின்றதென்றால், அதற்கு இவர் ஆற்றிய பணிதான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

தனக்கு ஒரு காலை இல்லை என்பதைக்கூட ஒரு குறையாகக் கருதாமல், ஆண்டவரின்நற்செய்தியை மிகுந்த வல்லமையோடு அறிவித்த ஜார்ஜ் ஸ்டாட் நமது கவனத்திற்கு உரியவர். இவரைப் போன்று நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரின் நற்செய்தியை எல்லா மக்கட்கும் எடுத்துரைவேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை எடுத்துச் சொல்கின்றது. எனவே, நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

நற்செய்தியானது எல்லா மக்கட்கும் அறிவிக்கப்படவேண்டும்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு எழுபத்தி இரண்டு அல்லது எழுபது சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புவதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த நிகழ்விற்கும் இயேசு பன்னிரு திருத்தூதர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்ற நிகழ்விற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். இயேசு பன்னிரு திருத்தூதர்களை பணித்தளங்கட்கு அனுப்புகின்ற நிகழ்வில், அவர் அவர்களைக் கலிலேயாப் பகுதிக்கு அனுப்பி வைக்கின்றார் (மத் 10; லூக் 9: 1-11). ஆனால், இயேசு எழுபத்தி இரண்டு சீடர்களை அனுப்புகின்ற நிகழ்வில் அவர்களை யூதேயப் பகுதிக்கு அனுப்பி வைக்கின்றார். முன்னவர்களோ திருத்தூதர்கள், பின்னவர்களோ சீடர்கள்.

இயேசு எழுபத்தி இரண்டு சீடர்களை அனுப்புகின்ற நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே இடம்பெறுகின்றது. இதன்மூலம் நற்செய்தியாளர் நமக்குச் சொல்லவருகின்ற செய்தி, இயேசுவின் நற்செய்தி எல்லா நாட்டு மக்கட்கும் அறிவிக்கப்படவேண்டும் என்பதாகும். இதை எப்படிப் புரிந்துகொள்வது என்றால், தொடக்க நூல் பத்தாம் அதிகாரத்தில் எழுபது நாடுகள் குறிப்பிடப்படுகின்றன. (அக்காலத்தில் எழுபது நாடுகள்தான் இருந்திருக்கும் போல). இயேசு, அந்த எழுபது நாடுகட்கும் தன் சீடர்களை அனுப்புவதைக் குறிக்கின்ற விதமாக எழுபது அல்லது எழுபத்தி இரண்டு சீடர்களை அனுப்புகின்றார். இவ்வாறு அவர் எல்லா மக்களும் தன்னுடைய நற்செய்தியை அறிந்துகொள்ளச் செய்கின்றார்.

நற்செய்திப் பணி ஆண்டவரை நம்பிச் செய்யப்படவேண்டும் இயேசு தன்னுடைய நற்செய்தியானது எல்லா மக்கட்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார் என்று மேலே பார்த்தோம். இப்பொழுது தன்னுடைய நற்செய்தியை அறிவிக்கக்கூடியவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார் என்று இப்பொழுது பார்ப்போம்.

இயேசு எழுபத்தி இரண்டு பேரை அனுப்புகின்றபோது, தான் போகவிருந்த இடங்கட்கு தனக்கு முன்பாக, தன் சார்பாக அனுப்புவதாக நற்செய்தியாளர் பதிவுசெய்கின்றார். அப்படியானால், இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கின்ற ஒவ்வொருவரும் அவருடைய நற்செய்தியை அறிவிக்கவேண்டுமே ஒழிய, தன்னுடைய நற்செய்தியை அறிவிக்கக்கூடாது. அடுத்ததாக, பயணத்திற்கு பணப்பையோ, வேறு பையோ மிதியடிகளோ எதுவும் எடுத்துச் செல்லவேண்டும் என்று கூறுகின்றார். இதற்குக் காரணம், நற்செய்திப் பணி என்பது ஆண்டவருடைய பணி, ஆண்டவரை நம்பிச் செய்யப்படும் பணி. அப்படிப்பட்ட பணியை பணத்தையோ, பொருளையோ நம்பிச் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் இயேசு அவ்வாறு சொல்கின்றார். மேலும், இயேசு குறிப்பிடுவது போல, "வேலையாள் கூலிக்கு உரிமையுடைவர் (லூக் 10:17). அப்படியிருக்கும்போது, யாராரெல்லாம் நற்செய்தியைக் கேட்கின்றார்களோ அவர்களெல்லாம் நற்செய்தியை அறிவிக்கின்றவர்கட்கு உணவும் உடையும் உறைவிடமும் தருவது அவர்களுடைய கடமையாகும். இயேசு தன்னுடைய சீடர்களிடம், வழியில் எவர்க்கும் வணக்கம் செலுத்தவேண்டாம் என்று குறிப்பிடுகின்றார். அதற்குக் காரணம், அறுவடை அதிகமாக இருக்க, வேலையாட்களோ மிகவும் குறைவாக இருக்கின்றார்கள். இப்படி இருக்கும்போது எல்லார்க்கும் வணக்கம் தெரிவித்துக்கொண்டிருந்தால், நற்செய்திப் பணியைச் செய்து முடிக்கமுடியாது என்பதற்காக அப்படிக் கூறுகின்றார். ஆகையால், விரைவாக அதுவும் ஆண்டவரை நம்பிச் செய்யப்படவேண்டிய நற்செய்திப் பணியை அவரை நம்பிச் செய்வது மிகவும் நல்லதாகும்.

நற்செய்திப்பணி செய்ய ஆண்டவர் ஆற்றலைத் தருகின்றார்

எல்லா மக்களையும் சென்றடைய வேண்டிய நற்செய்திப் பணி எத்துணை முக்கியமானது என்பதைச் சிந்தித்துப் பார்த்த நாம், நற்செய்திப் பணியைச் செய்வோர்க்கு இறைவன் தருகின்ற பாதுகாப்பையும் வல்லைமையும் நாம் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகவும் . நற்செய்திப் பணியைச் செய்கின்றபோது ஓநாய்கள் போன்று பகைவர்களிடமிருந்து எதிர்ப்பும் இன்னலும் இடையூறும் வரலாம். இத்தகைய தருணங்களில் இறைவன் நம்மைக் கைவிட்டு விடமாட்டார் என்பதை இறைவார்த்தை மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது. திருத்தூதர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்றபோது, பேய்களை ஒட்டவும் பிணிகளைப் போக்கவும் இயேசு அதிகாரமும் வல்லமையும் கொடுத்தார் என்று லூக் 9:1 ல் வாசிக்கின்றோம். அத்தகைய வல்லமையையும் அதிகாரத்தையும் உடனிருப்பையும் சீடர்கட்கும் தந்தார் என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். அதனால்தான் சீடர்கள் பணித்தளங்கட்குச் சென்று, திரும்புகின்றபோது, "உம் பெயரைச் சொன்னால் பேய்கள்கூட அடிபணிகின்றன" என்கின்றார்கள்.

ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரும் அவருடைய நற்செய்தியை அறிவிப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை என்பதை உணர்ந்து, அவர்தரும் ஆற்றலையும் வல்லமையும் பாதுகாப்பையும் உணர்ந்து அவருடைய பணியைச் செய்வோம்.

சிந்தனை
"நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்' (எரே 1: 18,20) என்று இறைவாக்கினர் எரேமியாவைப் பார்த்து ஆண்டவர் கூறுவார். இதே வார்த்தைகளைத் தான் நம் ஒவ்வொருவரையும் பார்த்து ஆண்டவர் கூறுகின்றார். ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் அவருடைய நற்செய்திப் பணியை மனவுறுதியோடு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
 
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
 
 
 
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி

 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ