ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

தமதிருத்துவப் பெருவிழா

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)
தமதிருத்துவப் பெருவிழா ஆசிபெற வந்திருக்கும் பிரியமானவர்களே!

நமது உறவை உரசிப் பார்க்க அழைக்கும் திருவிழா இது!
தந்தை அன்பைப் பொழிபவர், மகன் நட்பை வலுப்படுத்துபவர் தூய ஆவியோ திடம் தருபவர், மூன்று ஆட்கள் தனித்தனியே, நற்பண்பின் மையங்கள். இணைப்பின் பாலங்கள்

ஆனால் மூவரும் ஒரேமாதிரியான ஒற்றுமையின் வடிவங்கள், அன்பின் அடையாளங்கள், நட்பின் நம்பிக்கைகள்,  வித்தியாசங்களைக் காணமுடியாத நிலை! மூவரும் தமக்குள் ஒருவராக இணைந்து உறவோடு செயலாற்றும் நிலை.

இந்த நிலை மதம், மொழி, இனம், நாடு, பொருளாதாரம், கலாச்சாரம், குடும்பம் என வேறுபாடு நிறைந்த சூழலில் வாழும் நமது உறவின் ஆழத்தை அலசிப்பார்க்க ஆசிக்கிறது.! நாம் சற்றே நமது அன்பை, நட்பை, உறவை, ஒற்றுமையை, உற்றுப்பார்ப்போம். நாம் காண்பிக்கும் வேற்றுமை உணர்வுகளை தகர்த்தெறிவோம்.

மேன்மையான உணர்வுகளோடு ஒருவரை ஒருவர் தாங்கிப்பிடிப்போம்.
மேன்மையான சிந்தனைகளோடு ஒருவரை ஒருவர் சந்திப்போம்.
மேன்மையான சொற்களோடு ஒருவரை ஒருவர் வருடுவோம்.
மேன்மையான செயல்களோடு ஒருவரை ஒருவர் தொடர்வோம்.
'தந்தாய் நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக' என நமக்காக மன்றாடிய இயேசு வேறுபாடுகள் நிறைந்த சமுதாயத்தில் வித்தியாசக் கூடுகளைக் களைந்துவிட்டு ஒருமைப்பாட்டுக் கனவுகளை பலிக்கச் செய்யவே மூவொரு கடவுளின் அவதாரமாக நம் நடுவே நடமாடுகிறார்.

"இன்று நாங்கள் வாழும் உலகுக்குத் தேவையான உறவு உண்மை உறவு, அதை வழங்கி வாழ்விக்க எமது நட்புகளோடு, குடும்பத்தோடு, எமது ஊரோடு உறவினரோடு ஒன்றாய் இருக்க மூவொரு கடவுளே அருள் தாரும்" என செபிப்போம்.


 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கு முன் எமைப் படைத்த இறைவா!
நீர் படைத்தப் படைப்பைப் பேணிப் பாதுகாக்க நீர் தேர்வு செய்த திருத்தந்தை பிரான்ஸிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர், திருப்பணியாளர்கள் அனைவருக்கும், உடலுக்கும் ஆன்மீகத்திற்கும் தேவையான வரங்களைத் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பூவுலகின் பரந்த வெளியை உண்டாக்கி எங்கும் மகிழ்ந்து செயலாற்றிய இறைவா!
மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்ட உம்மைப் போல நாடுகளின் தலைவர்கள் மக்ளின் மகிழ்ச்சிக்காக பணிசெய்து அவர்களின் மகிழ்ச்சியை கண்டடையச் செய்ய அருள் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தூய ஆவியின் வழியாக அன்பை எம் உள்ளங்களில் பொழியும் இறைவா!
முழு உண்மையை நோக்கி எமை வழி நடத்தும் எமது பங்குத்தந்தையை உமது உண்மையின் ஆவியால் அர்ச்சித்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. துன்பத்தால் மனஉறுதியைத் தரும் இறைவா!
ஏங்கள் நடுவே நிகழ்ந்த கொடுமைகளால் உருக்குலைந்து கிடக்கும் மக்களுக்கு துன்பத்தை தாங்கும் மன உறுதியைத் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. மூவொரு இறைவனாய் எம்மிடையே வலம் வரும் இறைவா!
மூவொரு இறைவனின் அன்பு உறவே பூமியில் எமது குடும்ப உறவு என உணர்ந்து உண்மை அன்போடும், உண்மை உறவோடும் வேறுபாடுகளைக் கடந்து நட்பு பாராட்டி மகிழ்ச்சியாக வாழ இங்கே கூடி நிற்கின்ற அனைவருக்கும் அருள் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 
மறையுரை சிந்தனைகள்
 
மூவொரு இறைவனின் அன்புறவை நமது வாழ்வாக்குவோம்!
சந்தோஷ் புகழ்வாய்ந்த தொழிற்சாலையின் பிரதிநிதியாகப் பணிபுரிந்தார். பணியின் காரணமாக கடல் கடந்து பயணம் ஒன்றை மேற்கொண்டார். ஆவர் பயணம் செய்த கப்பலை கடற் கொள்ளையர்கள் பிடித்துவிட்டதாகவும், அதில் பயணம் செய்தவர்கள் கதி என்ன ஆனது எனத் தெரியவில்லை என்றும் தொழிற்சாலைக்குத் தகவல் வந்தது.
சந்தோஷ் மகன் வசந்த் ஒரு வேலைக்காரப் பையனாக ஒரு தொழிற்சாலையில் பயிற்சி பெற்றான். தந்தையைப் போல தொழிற்சாலைப் பிரதிநிதியாக வேலைக்கு அமர்த்தப்பட்டான். நல்ல வருமானம் கிடைத்தது. பணம் சேமித்தும் வைத்தான்.
ஒரு நாள் தன் தந்தை டர்க்கி நாட்டில் அடிமையாக இருக்கின்றார் என்று வசந்துக்கு தெரிய வந்தது. தான் வைத்திருந்த சொத்து முழுவதையும் விற்று பணத்தை எடுத்துக்கொண்டான். பயணத்தின் போது அவனது செலவுக்காக கப்பலில் ஒரு வேலைக்கு மனுச் செய்தான். டர்க்கி நாட்டில் இறங்கி அங்கு தன் தந்தையை அடிமையாக வைத்திருக்கிற ஒரு பெரிய செல்வந்தன் வீட்டிற்கு சென்றான். துன் தந்தையை மீட்க வந்திருப்பதாக அவனிடம் சொன்னான்.

செல்வந்தன் அடிமையை தன் முன்னே கொண்டு வந்து நிறுத்த பணியாளர்களிடம் சொன்னான். அடிமையும் கொண்டு வரப்பட்டார். துன் மகன் வசந்த் எதற்காக வந்திருக்கிறான் என்று தந்தை அறிந்ததும்மகனின் விருப்பத்திற்கு இணங்க மறுத்துவிட்டார்.

ஆனால், அந்த நல்ல மகன் தந்தையிடம் "அருமைத் தந்தையே, உங்களுக்குப் பதிலாக நான் இந்த அடிமைச் சங்கிலியை தரித்துக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். என் உயிரையே உங்களுக்காகக் கொடுக்கவும் தயாராக உள்ளேன். உங்களை விடுவிக்க நான் கொண்டு வந்த பணம் ஊருக்குத் திரும்ப உங்களுக்கு உதவும்" என்றான்.
அவரை அடிமையாக வைத்திருந்த டர்க்கி நாட்டு செல்வந்தன் தந்தை மகன் உரையாடலைக் கேட்டு வியந்து நீ உண்மையிலேயே மிகவும் அற்புதமான அருமை மகன் ஆகவே பணம் எதுவும் வாங்காமல் உன் தந்தையை நான் விடுதலை செய்கிறேன். மேலும் நானே மேற்கொண்டு நிறைய பணம் தருகிறேன். இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நீங்கள் இன்னும் பெரிய தொழில் நடத்தலாம். ஏனெனில் கடவுளுடைய திட்டத்திற்கேற்ப தகப்பனுக்கு ஒரு உண்மையுள்ள நல்ல மகனாய் நடந்திருக்கிறாய் என்று கூறினான்.

மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்ட இறைவன் மகிழ்ந்திருக்கவே நம்மைப்படைத்தார். எப்பொழுதும் மகிழ்ந்திருப்போம்.
துன்பங்கள் விளைவது மனஉறுதியை விளையச் செய்யவே துன்பங்களை மனஉறுதியோடு ஏற்றுக் கொள்வோம்.
குடும்ப உறவில் ஒற்றுமையை மையமாக்கும் சிந்தனை இன்றைய நாளுக்கு உரியது. நமது குடும்ப உறவுகளில் ஒற்றுமை நிலவுகிறதா? என்ற சிந்தனையை நமதாக்குவோம்.

மூவொரு இறைவன் பிளவின்றி உறவோடு செயல்படுகின்றார்கள். உண்மை உறவை வாழ்வாக்குகிறர்கள். பிறரிடம் நாம் காட்டும் உறவு நட்பு அன்பு நமது தேவைக்காக மட்டுமே என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். உதவி தேவைப்படும் வரை வேலை வாங்கிக்கொண்டு பிறகு அவர்களைப்பற்றிய தவறுகளை மிகையாக்கி தகாத வார்த்தைகளால் பேசும் போது உண்மை நட்பு எப்படி உறுதிப்படும். பொருட்களுக்காக வேலைக்காக நம்மிடையே நட்பு பாராட்டுவது சமீபகாலங்களில் மிகுதியாக உள்ளது. குடும்பத்தில் பணத்துக்காக, சொத்துக்காக உறவில் ஏற்படும் விரிசலும் இன்று மிகுந்து காணப்படுகிறது. இதைத் தவிர்க்க மூவொரு கடவுளின் நட்புறவு நம் நடுவே நிலவ செபிப்போம்.

நாடு, மொழி, இனம், மதம் என வேறுபாடு இரத்தத்தை உறையச் செய்யும் கொடூர செயல் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது. தீவிரவாதத்தால் நிகழும் வன் கொடுமைகள் அனைத்தும் வேற்றுமையினால் கருத்தரிக்கப்பட்டவையே இன்று நமது தாயகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற கண்ணீர்க் கதைகளின் பின் புலத்தை இயக்கிக் கொண்டிருப்பது இந்த வேற்றுமை உணர்வே! நமது தாயகத்தில் வேற்றுமைகளுக்கு நடுவே ஒற்றுமை நிலவ தியாகத்துடன் கூடிய செபத்தை ஏறெடுப்போம்.!

வேற்றுமையில் ஒற்றுமை காண்பது மூவொரு இறைவனின் தனிச்சிறப்பு! இந்தச்சிறப்பை நாம் பெற்று மகிழ அருள் தருவது இன்றைய விழாவின் தனிச்சிறப்பு! எங்கெல்லாம் வேற்றுமை தலை விரித்தாடுகிறதோ அங்கெல்லாம் அமைதி நிலவ தனித்து செபிப்போம்!

உலகில் பல்வேறு இனங்கள், மொழிகள், நிறங்கள், சமயங்கள் நாடுகள் கலாச்சாரங்கள், வாழ்க்கை முறைகள் உள்ளன. இவை அனைத்தும் மனித நன்மைக்கே. ஆனால்இதனடிப்படையில் பாகுபாடு பார்க்கும் போது தீமை நிகழ்கிறது. திரித்துவத்தில் மூவரும் தமது அடையாளத்தில் தனித்தும் அதே சமயத்தில் அருட்கொடைகளில் ஓன்றாகவும் இருப்பது போல நாம் பிறரை ஏற்று வாழ முன் வரவேண்டும்.


 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.


மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி Osm


மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
மூவொரு கடவுளின் பெருவிழா

இன்றைய வாசகங்கள்:
நீதிமொழிகள் 8:22-32
உரோமையர் 5:1-5
யோவான் 16:12-15

5. ஞாயிறு சிந்தனை - அருள்பணி ஏசு கருணாநிதி

ஏன் கடவுள்? என் கடவுள்!
நாம் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போது, நம் நண்பர்களைச் சந்திக்கும்போது, 'எப்படி இருக்குற?' என்று கேட்கிறோம். என்றாவது ஒருநாள் அவர்களிடம், 'ஏன் இருக்குற?' என்று கேட்டுப்பார்த்தால் அது விபரீதத்தில் போய் முடியும். இல்லையா? ஓர் ஆய்வகத்தில் இருக்கிறோம். தண்ணீரின் மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கண்டுபிடிக்கிறோம். 'தண்ணீர் உருவாவது எப்படி?' என்று கேட்டால், 'ஒரு பகுதி ஆக்ஸிஜனும், இரு பகுதி ஹைட்ரஜனும் இணையும்போது தண்ணீர் உருவாகிறது' என்று பதில் சொல்லலாம். ஆனால், இதையே கொஞ்சம் மாற்றி, 'தண்ணீர் ஏன் உருவாகிறது?' என்று கேட்டால் நமக்குப் பதில் தெரியாது. ஆக, மனிதர்கள் மற்றும் இயற்பியல்சார் உலகில், 'எப்படி?' என்ற கேள்விக்குத்தான் பொருள் கிடைக்குமே தவிர, 'ஏன்?' என்ற கேள்விக்கு அல்ல.

ஆனால், கடவுள் மற்றும் இறைசார் உலகு இதற்கு எதிர்மாறானது. இங்கே, 'ஏன்?' என்ற கேள்விக்குத்தான் விடையே தவிர, 'எப்படி?' என்ற கேள்விக்கு விடையில்லை. 'ஏன் விண்ணேற்றம்?' என்று கேட்கலாம். 'எப்படி விண்ணேற்றம்?' என்று கேட்க முடியாது. 'ஏன் நற்கருணை?' என்று கேட்கலாம். 'எப்படி நற்கருணை?' என்று கேட்க முடியாது. 'ஏன் மூவொரு இறைவன்?' என்று கேட்கலாம். 'எப்படி மூவொரு இறைவன்?' என்று கேட்க முடியாது.

இன்று நாம் மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

'இவ்வாறு உண்மையான, நிலையான கடவுள் தன்மையை நாங்கள் அறிக்கையிடும்போது வகையில் தனித்தன்மையையும் இறை இயல்பில் ஒருமையையும் மாண்பில் சமத்துவத்தையும் போற்றுகின்றோம்' என்று பாடும் இன்றைய திருப்பலியின் தொடக்கவுரை ஓரளவுக்கு மூவொரு இறைவன் என்னும் மறையுண்மையை விளக்கினாலும் நம்மால் இதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

நான் புனேயில் இறையியல் பயின்றபோது, மூவொரு இறைவன் பற்றி ஓர் ஆயர் வகுப்பெடுக்க, அங்கிருந்த மாணவர் ஒருவர், 'ஆயரே! மூவொரு இறைவன் பற்றித்தான் நம்மால் அறிந்துகொள்ள முடியாதே. அப்படி இருக்க அவர் மூன்று பேராக இருந்தால் என்ன? நான்கு பேராக இருந்தால் என்ன? வாட் டஸ் இட் மேட்டர்?' என்று கேட்டார்.

'வாட் டஸ் இட் மேட்டர்?' என்று நம் மூளை ஒதுங்கிக்கொள்ளவே நினைக்கிறது.

'தந்தை-மகன்-தூய ஆவியார்' என்று நாம் பயன்படுத்தும் வார்த்தைகளும் இன்றைய நாள்களில் ஏற்புடையவை அல்ல. இவ்வார்த்தைகள் கடவுள் ஆண்பாலைச் சார்ந்தவர் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன. கடவுளை எப்படி பாலினத்திற்குள் அடக்க முடியும்?

மேலும், 'மூவொரு இறைவன்' என்பது 'கடவுளைப் புரிந்துகொள்வதற்கான' ஓர் 'ஒர்க்கிங் மாடல்.' அவ்வளவுதான். நாம் பள்ளியில் படிக்கும்போது, மிக்ஸி போன்ற ஒரு மாடல் செய்கிறோம் என வைத்துக்கொள்வோம். அதில் ஒரு சிறிய மோட்டார், ஒரு சிறிய கத்தி என்று வடிவமைக்கிறோம். இதை 'ஒர்க்கிங் மாடல்' என்கிறோம். இது என்னதான் அழகாக, நேர்த்தியாக இருந்தாலும், இந்த 'மாடலை' வைத்து நாம் சட்னி அரைக்க முடியுமா? அல்லது 'மூவொரு இறைவனின் தந்தை மகனை அன்பு செய்கிறார்' எனச் சொல்கிறோம். ஆனால், வீட்டில் என் அப்பா என்னை அன்பு செய்யவே இல்லை என்றால், கண்டிப்பாக என்னால் தந்தையையும் அன்பு செய்பவராக ஏற்றுக்கொள்ள முடியாது.

கிளாவர் மலர், தண்ணீர்-பனிக்கட்டி-நீராவி, அப்பா-அம்மா-மகன், வெப்பம்-ஒளி-கதிர்வீச்சு என எவ்வளவோ உருவகங்களைப் பயன்படுத்தினாலும், திருவிவிலியத்திலிருந்து மேற்கோள்கள் காட்டினாலும் நம்மால் இம்மறைபொருளைப் புரிந்துகொள்ளவே முடியாது.

ஆக, 'எப்படி மூவொரு இறைவன்?' என்று கேட்பதை விடுத்து, 'ஏன் இறைவன்?' அல்லது 'ஏன் மூவொரு இறைவன்?' என்று கேட்கலாம்.

இன்று கடவுள் நமக்குத் தேவையா? கடவுள் இல்லாமல் நம்மால் இருக்க முடியாதா?
நாம் கடவுள் தேவையை மூன்று நிலைகளில் அல்லது வழிகளில் உணர்கின்றோம்: (அ) நம்முடைய வரையறை அனுபவம். 'என்னால் ஐம்பது கிலோதான் தூக்க முடியும்' என வைத்துக்கொள்வோம். ஆனால், அறுபது கிலோ தூக்க வேண்டும் என்ற நிர்பந்தம் வரும்போது, நம் மனம் இயல்பாகவே கடவுளை நோக்கி எழும்புகிறது. என்னால் முடியாத ஒன்றைச் செய்ய நான் இறைவனின் துணையை நாடுகிறேன். (ஆ) தனிமை. விலங்குகள் ஒருபோதும் தனிமையை உணர்வதில்லை. அவை எதிரிகளைக் கண்டுதான் பயப்படுமே தவிர தனியாய் இருக்கப் பயப்படுவதில்லை. ஆனால், நாமோ எதிரிகளோடு விருந்துண்டு, பயணம் செய்து, வழி நடந்து, இருந்தாலும் மனதில் தனிமையாய் உணர்வதண்டு. கடவுள் ஆதாமிடம் விரும்பாத உணர்வும் தனிமை தான். தனிமைக்குத் துணையாக ஏவாள் படைக்கப்பட்டாலும், முதற்பெற்றோரின் தனிமையைப் போக்குபவராக கடவுள் இருக்கிறார். (இ) நினைவு. கடவுள் பற்றிய உணர்வு நம்முடைய நினைவில் இருக்கிறது. இந்த நினைவு தனிநபர் சார்ந்ததாக இருக்கலாம். அல்லது ஒட்டுமொத்த குழும உணர்வாக இருக்கலாம். என்னுடைய அம்மாவும், அப்பாவும் 'கடவுள் என்றால் இது அல்லது இவர்' என்று தங்கள் நினைவில் இருந்ததை எனக்கு கொடுக்கிறார்கள். அவர்கள் அதை ஒட்டுமொத்த குழும நினைவிலிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். ஆக, நினைவு இருக்கும் வரை தான் கடவுள் இருப்பார். எனக்கு நினைவு போய்விட்டால் என்னைப் பற்றியே எனக்குத் தெரியாதபோது கடவுளைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?

ஆக, நம்முடைய வரையறை அனுபவம், தனிமை, நினைவு இம்மூன்றும் கடவுள் என்னும் தேவையை அறியவும், தேடவும் நம்மைத் தூண்டுகின்றன.

'கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை. தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்' (காண். யோவா 1:18) என யோவான் நற்செய்தியாளர் அறிக்கையிடுகின்றார். ஆக, காணக்கூடிய இயேசுவிடமிருந்து நாம் காணக்கூடாத இறைவனை நோக்கிச் செல்கின்றோம். இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. எடுத்துக்காட்டாக, இயேசு சிலுவையில் அறையப்பட்ட அன்று அவர் அவருடைய மனித தன்மையில் அறையப்பட்டாரா அல்லது இறைத்தன்மையில் அறையப்பட்டாரா? மனிதத் தன்மையில் அறையப்பட்டார் என்றால் அவர் இறைவன் இல்லையா? இறைத்தன்மையில் அறையப்பட்டார் என்றால் அவர் இறந்த அன்று மூவொரு இறைவனில் ஒரு ஆள் இறந்துவிட்டாரா? அல்லது மூவொரு இறைவனுமே இறந்துவிட்டாரா? இவை நம் கேள்விகள் அல்ல. வரலாற்றில் ஆரியஸ் போன்றவர்கள் கேட்ட கேள்விகளே.

ஆக, இயேசுவிடமிருந்து அல்லது இயேசு வழியாக மூவொரு இறைவனை அறிந்துகொள்வதும் கடினமாக இருக்கிறது.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு ஒரு வழியைக் காட்டுகிறது. மூவொரு இறைவனின் மூன்று பண்புகளை இது பட்டியல் இடுகிறது: (அ) இணைச்சார்புநிலை, (ஆ) இணைவுநிலை, மற்றும் (இ) உள்முகப்பார்வை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். நீமொ 8:22-31) 'ஞானம் என்னும் பெண்' தன் வரலாறு கூறுகிறாள். இந்த ஞானமே படைப்புச் செயலில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒழுங்கற்ற உலகில் ஒழுங்கை ஏற்படுத்தும் நில வரைபடமாக இருக்கின்றாள் ஞானம். இவள் வழியாகவே கடவுள் உலகை உருவாக்கி அதற்கு உயிர் கொடுக்கிறார். நீதிமொழிகள் ஆசிரியர் படைப்புச் செயல் பல நிலைகளில் நடந்ததாக எழுதுகிறார். முதலில், ஞானம் படைக்கப்படுகிறாள். படைக்கப்பட்ட ஞானம் கடவுள் முன் அகமகிழ்கிறாள். மூவொரு இறைவனின் முதல் நபராக இருக்கின்ற தந்தையாகிய கடவுள் ஞானத்தைப் பெற்றெடுக்கிறார். இங்கே இரண்டும் வேறு வேறு அல்ல. உதாரணத்திற்கு, சிலந்தியின் வாயிலிருந்து வரும் ஒருவித பிசுபிசுப்பான பசை சிலந்திக் கூடாக மாறுகின்றது. சிலந்திக் கூட்டின் ஒரு நுனியைப் பிடித்து நாம் கவனமாகச் சென்றால் சிலந்தியை அடைந்து விடலாம். சிலந்தியும் பசையும் வேறு வேறு எனத் தோன்றினாலும், அவை வேறல்லவே. ஞானம் கடவுளின் பிரதிபலிப்பாகவும் வெளிப்பாடாகவும் இருக்கிறது. தந்தை தன்னிடமிருந்தே ஞானத்தைப் படைத்தாலும், உலகைப் படைப்பதற்காக, அவர் ஞானத்தோடு இணைச்சார்புநிலையில் இருக்கின்றார்.

இரண்டாம் வாசகம் (காண். உரோ 5:1-5) இரண்டாம் நபரான இயேசுவை மையப்படுத்தியதாக இருக்கிறது. கடவுளுடைய படைப்பு மனிதர்களின் பாவத்தால் பாழ்படுகிறது. இதனால் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு நிலை பாதிக்கப்படுகிறது. முதற்பெற்றோரின் பாவத்திற்குப் பின் பயமும் குற்றவுணர்வும் மனிதர்களைத் தொற்றிக்கொள்ள, இறப்பும் அழிவும் தவிர்க்கமுடியாதவையாகின்றன. கடவுள் தன் மக்களை மீட்டு மீண்டும் தன்னோடு இணைத்துக் கொண்டதை, பவுல், 'ஏற்புடையவராதல்' என்ற வார்த்தையால் விளக்குகின்றார். பவுலைப் பொருத்தவரை, 'நாம் நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவராகி, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம்' (காண். உரோ 5:1). இயேசுவின் வழியாக நாம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகின்றோம். இந்த எதிர்நோக்கு நாம் இவ்வுலக வாழ்வை இனிதே வாழத் துணைசெய்கிறது. இயேசு, பாவத்தால் ஏற்பட்ட பிரிவை அகற்றி, கடவுளக்கும் நமக்கும், நமக்கும் மற்றவர்களுக்கும் இணைவுநிலையை உருவாக்குகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 16:12-15) தமதிருத்துவத்தின் மூன்றாம் நபரான தூய ஆவியாரை மையமாகக் கொண்டுள்ளது. தூய ஆவியார் திருத்தூதர்களை உண்மையை நோக்கி வழிநடத்துவதோடு, அவர் இயேசுவையும் மாட்சிப்படுத்துகிறார். ஆவியார் ஒரு மனிதரின் உள்இயல்பாக மாறி, உண்மையை நோக்கி அவருடைய இதயத்தைத் திருப்புகிறது. வெளிநோக்கிய ஒரு நபரை உள்நோக்குப் பார்வை கொள்ளச் செய்கிறார் தூய ஆவியார்.

மூவொரு இறைவன் இன்றைய நம் வாழ்வுக்குத் தரும் பாடங்கள் எவை?
அ. ஆதிக்கத்திலிருந்து இணைச்சார்புநிலைக்கு
இன்று நம் உறவுகள் - குடும்பம், சமூகம் - சீக்கிரம் கசந்துபோவதற்குக் காரணம் ஆதிக்கம். சிறு வயதில் காதல், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், சோர்வு, விரக்தி போன்று இளையோரும் ஒருவர் மற்றவரை உரிமையாக்கிக் கொள்ள நினைக்கும் பண்பு அதிகமாகிறது. மேலும், என் உறவுக்கு நானே பொறுப்பு, என் வாழ்வுக்கு நானே பொறுப்பு என்ற மனநிலையில், அதை உரிமையாக எடுத்துக்கொண்டு அடுத்தவர்மேல் ஆதிக்கம் செலுத்தும் போக்கு வளர்கிறது. உறவு நிலையில் இருப்பவர் மற்றவர்மேல் உள்ள உரிமையை முன்னிறுத்தி, மற்றவரைத் தன்னுடைய உடைமை எனக் கருதும் போக்கும் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கிறது. மூவொரு இறைவன் ஒருவர் மற்றவர்மேல் ஆதிக்கம் செலுத்தும் நபர்கள் அல்லர். மாறாக, ஒருவர் மற்றவரோடு இணைச்சார்புநிலை கொண்டிருப்பவர்.

ஆ. அந்நியப்படுத்துதலிலிருந்து இணைவிற்கு
பாவத்தால் ஒருவர் மற்றவரிடமிருந்து அந்நியப்பட்டு நின்று நம்மை ஒருவர் மற்றவரோடும், கடவுளோடும் இணைக்கிறார் இயேசு. அந்நியப்படுதல் என்பது விலகி நிற்றல். இன்று தகவல் தொழில்நுட்பம் நம்மை எந்த அளவிற்கு அருகில் கொண்டுவந்திருக்கிறதோ அந்த அளவிற்கு நம்மை ஒருவர் மற்றவரிடமிருந்து அந்நியப்படுத்தியிருக்கிறது என்பதும் உண்மை. இணைவை நோக்கி நாம் செல்ல ஒருவர் மற்றவருக்கு அருகில் வந்து நிற்கும் நற்குணம் பெறுதல் வேண்டும்.

இ. வெளிப்புறப்பார்வையிலிருந்து உள்முகப்பார்வைக்கு
நாம் அனைவரும் வெளிப்புறத்தில் தோற்றத்தில் ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபட்டு இருந்தாலும் நம்மிடையே குடிகொண்டிருக்கும் கடவுள் ஒருவர்தான். இதையே, 'தத்வமசி' என்கிறது உபநிடதம். நான் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போது, என்னில் இருக்கும் கடவுள் அவரில் இருக்கும் கடவுளைச் சந்திக்கிறார். ஆக, அடுத்தவரை நான் வெளிப்புறத் தோற்றம் மற்றும் பின்புலம் கொண்டு மதிப்பிடாமல், அவரின் உள்முகத்தைக் கண்டு அன்பு செய்தல் நாம் கற்க வேண்டிய மூன்றாவது பாடம்.

இறுதியாக, மூவொரு இறைவன் என்னும் மறைபொருள் கடவுளுக்குத் தேவையோ, இல்லையோ, அது நம் ஒவ்வொருவருக்கும் தேவை. இம்மறைபொருளில் நாம் கடவுளை அல்ல. நம் ஒவ்வொருவரையுமே கண்டுகொள்கிறோம். இப்படிக் கண்டுகொள்ளும் நாம் பகிர்வு, சார்பு, சமத்துவம் என்று ஒருவர் மற்றவரை அரவணைக்கிறோம். ரொம்ப பிராக்டிகலாக சொல்ல வேண்டுமென்றால், மூவொரு இறைவனின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் மேலோர்-கீழோர் என்று வேற்றுமை பாராட்டுவதில்லை, சாதி வித்தியாசம் பார்ப்பதில்லை, மூட நம்பிக்கைகள் கொண்டிருப்பதில்லை, தங்களுடைய சமய மரபுகளைப் பிடித்துக்கொண்டிருப்பதில்லை, தான் செய்வதே சரி என்று சொல்வதில்லை, யார்மேலும் வன்முறை பாராட்டுவதில்லை. அவர்கள் அனைவரையும் மதிப்பர், கனிவோடு நடத்துவர், தன்னைப் போல நடத்துவர்.

மூவொரு இறைவனைப் பற்றி அறிந்து கொள்வது என்பது, என்னைத் துரத்திக்கொண்டே ஒரு மரத்தைச் சுற்றிக்கொண்டு நான் ஓடுவது போன்றது. நான் எத்துணை வேகமாக ஓடினாலும், என்னை நான் பிடிக்க முடியாது. ஏனெனில் 'நான்' என்பதும், 'எனது' என்பதும் ஒன்றே. இவ்வாறே, மூவொரு இறைவனைப் பற்றிப் புரிந்து கொள்ள முயலும் ஒவ்வொரு நொடியும் நான் என்னையே புரிந்துகொள்கிறேன். என்னையும், என்னைச் சுற்றி இருக்கும் சமூகத்தையும் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு நொடியும் நான் என் மூவொரு இறைவனையே புரிந்து கொள்கிறேன். ஏனெனில், ஏன் கடவுள்? என்ற கேள்வியிலிருந்து என் கடவுள் யார் என்று நான் கண்டுகொள்கின்றேன்.

உங்களையும், என்னையும் போலவே மூவொரு இறைவனும் ஒரு மறைபொருள்!


மறையுரைச்சிந்தனை  -
அருள்பணி மரிய அந்தோணி பாளையங்கோட்ட




மறையுரைச்சிந்தனை  -
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை

இன்றைய நற்செய்தியில் இயேசு சீடர்களைப் பார்த்து அவர்களுக்கு சொல்ல வேண்டியவை இன்னும் பல உண்டு என்கிறார். அவருக்குப் பின் வரப் போகிறவர் ஒருவர் உண்டு, அவர் பெயர் தூய ஆவியார் என்கிறார். மேலும் தந்தையுடையதெல்லாம் அவருடையதே என்கிறார்.

ஆக, இங்கே நாம் மூவொரு கடவுளைச் சந்திக்கின்றோம். தந்தை, மகன், தூய ஆவியார்.

கடவுளின் ஞானம்தான் கிறிஸ்து (மத். 11:19). புனித பவுலும் இயேசுவைக் கடவுளின் ஞானம் என்று அழைக்கின்றார் (1 கொரி. 1:30).

முதல் வாசகத்தில் வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோது. நான் அங்கே இருந்தேன்.... நான் அவர் அருகில் அவருடைய சிற்பியாய் இருந்தேன்.... (நீ.மொ. 8:27-30) என்று ஞானம் கூறுவதை நாம் படிக்கின்றோம். ஆக, இயேசு என்றும் இறைவனோடு இருப்பவர்.

நமது காலத்தில் மனுவுரு எடுத்தது இந்த ஞானமே, இந்த இயேசுவே. இயேசு மட்டுமல்ல, தூய ஆவியாரும் மீட்புப் பணியிலே, படைப்பிலே பங்கு கொள்கிறார் என்பதைத் திருப்பாடல்கள் நமக்குக் கற்பிக்கின்றன: உமது ஆவியை நீ அனுப்ப அவை படைக்கப்பெறுகின்றன. மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர் (தி.பா. 104:30).

ஆக, தந்தை, மகன், தூய ஆவியார் மூவரும் இந்த உலகம் உண்டாகக் காரணமாயிருக்கிறார்கள் என்பது தெளிவு.

படைப்புப் பொருள் ஒவ்வொன்றிலும் மூவொரு தேவனின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எல்லா உயிர்களும் ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் சான்று பகரக் கடமைப் பட்டுள்ளன.

கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நம்புகின்ற எந்த தனி மனிதனும், சமுதாயமும் பிரிவினையைப் பற்றி, பிளவைப் பற்றி, சண்டை, சச்சரவுகள் பற்றி, வைராக்கியம், வர்மம் பற்றி கனவில்கூட நினைத்துப் பார்க்கக் கூடாது.

தந்தை, மகன், தூய ஆவியார் மூவரும் எப்படி நிறைவான உறவில் நிலைத்திருந்து, ஆக்கப் பணியில் ஈடுபடுகிறார்களோ அதேபோல மனிதர்கள் அனைவரும் அருள்நிலையில் வாழ்ந்து அனைவரோடும் ஒற்றுமையாக வாழ முன்வர வேண்டும்.

புனித பவுல் கூறுவதுபோல மூவொரு இறைவனின் உண்மைக் குழந்தைகளாக வாழ பரம தந்தை நமது இதயத்திற்குள் அன்பின் ஆவியைப் பொழிந்துள்ளார்.

ஒருவேளை நம்முடைய ஆற்றலால் நாம் மூவொரு தேவனின் முத்தான குழந்தைகளாக வாழ முடியாமல் தவிக்கலாம்! ஆனால் நம்மை நாளும் வழிநடத்தும் ஆவியாரின் அன்புக் கடலில் நமது இதயத்தை, நமது உணர்வுகளை கலக்கவிட்டால் நாம் நீதிக் கடலில், நேர்மைக் கடலில், மகிழ்ச்சிக் கடலில், சமாதானக் கடலில், சமத்துவக் கடலில் சகோதரத்துவக் கடலில், சுதந்திரக் கடலில் சங்கமமாகப் போவது உறுதி.

நீல நிற மை கலந்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு. அதற்குள் தண்ணீரை ஊற்றிக் கொண்டேயிருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

அங்கே என்ன நிகழும்? ஓர் சங்கமம் நிகழும்.

ஊற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க பாத்திரத்திலிருக்கும் நீரிலுள்ள நீல நிறம் மறைந்து, பாத்திரத்திலிருக்கும் தண்ணீர் நிறமற்ற நிலையை அடைவதை நாம் காண்போம்.

இவ்வாறே அன்பே உருவான தேவ ஆவியின் அருளை நாம் நமது இயத்திற்குள் ஊற்ற, ஊற்ற நமது இதயத்தில் நிறமாற்றம் ஏற்பட்டு நமது இதயம் ஆவியாரின் இதயமாக மாறிவிடும். அதாவது நமது குணம் ஆவியாரின் குணமாக மாறிவிடும். குணமே வாழ்வு!

மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்  - குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
மூவொரு கடவுளுக்கு சமாதானம் பிடிக்கும்

இன்று தந்தை, மகன், தூய ஆவியராய் வாழும் ஒரே கடவுளின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

இந்த மூன்றுபேருக்கும் எது பிடிக்குமோ அதை அவர்களுக்குக் கொடுத்து, நமக்கு எது பிடிக்குமோ அதை மூவொரு கடவுளிடமிருந்து பெற்றுக் கொள்வோம்!

நம்மிலே சிலருக்கு ஆடுவது பிடிக்கும்!
சிலருக்குப் பாடுவது பிடிக்கும்!
சிலருக்கு உண்பது பிடிக்கும்!
சிலருக்கு உறங்குவது பிடிக்கும்!
சிலருக்குப் பணம் பிடிக்கும்!
சிலருக்குப் பதவி பிடிக்கும்!
சிலருக்குப் பட்டம் பிடிக்கும்!
சிலருக்குப் பரிசு பிடிக்கும்!
சிலருக்குப் பாதாம்கீர் பிடிக்கும்!
சிலருக்கு ரோஸ்மில்க் பிடிக்கும்!
சிலருக்குப் பழைய பாடல்கள் பிடிக்கும்!
சிலருக்குப் புதிய பாடல்கள் பிடிக்கும்!
மூவொரு கடவுளுக்கு எது பிடிக்கும்? சமாதானம் பிடிக்கும்!
திருப்பாடல் 120:7 இறைவன் விரும்புவது சமாதானமே என்று கூறுகின்றது.

தந்தை, மகன், தூய ஆவியார் மூன்றுபேருக்கும் சமாதானம் என்றால் பிடிக்கும்! அதுவும் மகனுக்கு, இயேசுவிற்கு சமாதானம் என்றால் மிகவும் பிடிக்கும்!

சண்டையை சச்சரவை, சமாதானமின்மையை இயேசு ஒருபோதும் விரும்புவதில்லை.

இயேசு எல்லா பாவத்தையும் மன்னித்தார். ஆனால் ஒரே ஒரு பாவத்தை மட்டும் அவர் மன்னிக்கத் தயங்கினார்!

யோவான் 8:1-8: பாவத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தியை இயேசுவின் முன் கொண்டுபோய் நிறுத்தினார்கள். இயேசு அந்தப் பெண்ணை பார்த்து, நீர் போகலாம் இனி பாவம் செய்யாதீர் என்றார்.

லூக் 19:1-10: சக்கேயு ! அவர் ஒரு தேசத் துரோகி! உரோமையர்கள் யூதர்களை அடிமைப்படுத்தி வாழ்ந்தார்கள்! சக்கேயு -அவர் ஒரு யூதர்! அவர் யூத மக்களிடையே வரி வசூலித்து அதை உரோமையர்களிடம் கொடுத்து அவர்கள் கொடுத்த பணத்தில் பணக்காரராக வாழ்ந்து தனது சொந்த மக்களையே சுரண்டியவர்.

ஆனால் அப்படிப்பட்ட பாவியைக் கூட இயேசு மன்னித்து அவர் வீட்டில் விருந்தாடினார்.

லூக் 23:38-43: சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த திருடன்! அவன் ஒரு பெரிய கொள்ளைக்காரன் ! ஆனால் அவன் அவனது குற்றத்தை ஒப்புக்கொண்டபோது அவனை இயேசு மன்னித்து அவனுக்கு விண்ணக வாழ்வை அளித்தார்.

யோவா 21:15-19: தன்னை மூன்று முறை மறுதலித்த பேதுருவை இயேசு மன்னித்தார்.

இப்படிப் பெரும் பாவிகளையெல்லாம் மன்னித்த இயேசு ஒரு சிலரை மட்டும் பார்த்து, என் அருகில் வராதீர் என்றார்! யாரைப் பார்த்து இயேசு அப்படிச் சொன்னார்? யார் மற்றவர்களோடு சமாதானத்தோடு வாழவில்லையோ அவர்களைப் பார்த்து. நீங்கள் காணிக்கை செலுத்த வரும்போது யாராவது உங்கள் மீது மனத்தாங்கல் கொண்டு வாழ்வதாக உங்கள் நினைவுக்கு வந்தால், உங்கள் காணிக்கையை பீடத்தின் முன்னால் வைத்துவிட்டு யார் உங்கள் மீது மனத்தாங்கல் கொண்டுள்ளனரோ அவர்களோடு சமாதானம் செய்துகொண்ட பிறகு வந்து எனக்குக் காணிக்கை செலுத்துங்கள் என்கின்றார் [மத் 5:23-24).

ஆம். இயேசு விரும்புவது சமாதானமே! இயேசுவுக்குச் சமாதானம் என்றால் மிகவும் பிடிக்கும்! இயேசு பிறந்தபோது விண்ணவர், உலகில் அவருக்கு (கடவுளுக்கு) உகந்தோருக்கு அமைதி உண்டாகுக என்று சொல்லி கடவுளைப் புகழ்ந்தனர்.

அவர் உயிர்த்த போது சீடர்களைப் பார்த்து, உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்றார் இயேசு. இன்று நமக்குள் எத்தனைச் சண்டை சச்சரவுகள் ! பல சமயங்களிலே நாம் சமாதானத்தோடு வாழ விரும்பினாலும் நம்மால் வாழ முடிவதில்லை ! என்ன செய்யலாம்? உலகம் தராத சமாதானத்தை உங்களுக்கு நான் தருகின்றேன் என்ற இயேசுவிடம் சமாதானத்தை இன்று வரமாகக் கேட்போம்.

இதுவே நமது மன்றாட்டாக இருக்கட்டும் :
மூவொரு இறைவா, எங்களுக்கு உங்களது சமாதானத்தைத் தந்தருளும்! ஆமென்.

மேலும் அறிவோம் :

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்(று) உலகு (குறள் : 874).

பொருள்:
பகைமை பாராட்டுபவரையும் நண்பராகக் கருதிப் பழகும் பெருந்தகையின் பண்புச் சிறப்பை இவ்வுலகம் போற்றிப் பாராட்டும்!



மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்

கடவுள் பக்தியற்ற கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த கடவுள் பக்தியுள்ள ஒரு விவசாயிடம், "நீங்கள் கடவுளை நம்புவதற்குக் காரணம் என்ன?" என்று கேட்டார். இக்கேள்விக்கு விவசாயி கொடுத்த பதில்: "நான் மேய்த்துக் கொண்டிருக்கும் இம்மாட்டின் நிறம் கருப்பு: அது மேய்கின்ற புல்லின் நிறம் பச்சை; அது கொடுக்கின்ற பாலின் நிறம் வெள்ளை, கருப்புநிறப் பசு பச்சை நிறப்புல்லைத் தின்று, வெள்ளை நிறப்பாலைக் கொடுக்கிறது. இது போதாதா கடவுளை நம்புவதற்கு? பேராசிரியர் விவசாயின் பதிலைக் கேட்டு வியப்படைந்தார்.

இயற்கை இருக்கும் வரை எவரும் இறைவனை மறுக்க இயலாது. வானகமும் வையகமும் அவருடைய மாட்சிமையால் நிறைந்துள்ளன. தாயின்றிச் சேயில்லை, படைத்தவரின்றிப் படைப்பு இல்லை, வானம், நிலா. விண்மீன்கள் அனைத்தும் கடவுளுடைய கைவேலைப்பாடு என்கிறது இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 8).

கடவுள் ஒருவர் இருப்பதைப் பகுத்தறிவால் அறியமுடியும். ஆனால் ஒரே கடவுள் மூன்று ஆள்களாக (தந்தை-மகன் ஆவி) இருப்பதை அறிய பகுத்தறிவு மட்டும் போதாது. அதற்கு இறைவெளிப்பாடு தேவை. மூவொரு கடவுளைப் பற்றிக் கிறிஸ்துவே நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

"தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்" (மத் 11:27). "நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன்; இப்போது உலகை விட்டுத் தந்தையிடம் செல்கிறேன்" (யோவா 16:28). "என் பெயரால் தந்தை அனுப்பப் போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்" (யோவா 14:26). "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்" (மத் 28:20). எனவே, கிறிஸ்துவே மூவொரு கடவுளைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளதால், நாம் அதை நம்பிக்கையின் மறையுண்மையாக ஏற்றுக்கொள்கிறோம்.

மூவொரு கடவுளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன? கடவுள் தந்தையாக இருந்து நம்மை அன்பு செய்து. நம்மைப் பாதுகாத்துப் பராமரித்து வருகிறார். கடவுள் மகனாக, வார்த்தையாக இருந்து நம்மோடு பேசி, நமக்காகத் தன் உயிரையே பலியாக்கி, நம்மைப் பாவத் தளையிலிருந்து விடுவித்து நம் மீட்பராகத் திகழ்கிறார். கடவுள் ஆவியாராக இருந்து நம்மைப் புனிதப்படுத்தி நம்மை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்; நிறையுண்மையை நோக்கி வழிநடத்துகிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், கடவுளது அன்பு தூய ஆவியின் வழியாக நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது எனக் கூறுகிறார் திருத்தூதர் பவுல் (உரோ 5:5). தந்தையாகிய கடவுள் தமது அருளன்பை நம்மீது என்றும் பொழிந்து கொண்டேயுள்ளார். வானம் பொய்த்தாலும் கடவுளுடைய அன்பு ஒருபோதும் பொய்க்காது.

இவ்வுலகில் மிகவும் நெருக்கமான அன்பாகக் கருதப்படும் காதல் கூட மாறிவிடுகிறது. ஓர் இளைஞன் ஒரு பெண்ணைக் காதலித்தான். பிறகு அவளைக் கைவிட்டுவிட்டு அவளின் தங்கையைக் காதலித்தான், மூத்தபெண் அவனிடம் ஏன் அவன் அவ்வாறு செய்தான் என்று கேட்டதற்கு அவன் கூறியபதில்: "உன்னைப் பார்த்த போது என்னை மறந்தேன். உன் தங்கையைப் பார்த்த போது உன்னை மறந்தேன்". மனித அன்பு மாறக் கூடியது.

ஆனால், கடவுளன்பு ஒருபோதும் மாறாது, மறையாது. குன்றாது. குறையாது. "மலைகள் நிலை சாயினும், குன்றுகள் இடம் பெயரினும். உன் மீது நான் கொண்ட பேரன்போ நிலைசாயாது" (எசா 54:10). கடவுள் நம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்; நம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். அவர் நாம் வெளியே போகும் போதும் உள்ளே வரும்போதும், இப்போதும் எப்போதும் நம்மைக் காத்தருள்வார். (திபா 121).

இன்றைய முதல் வாசகம் ஞானத்தை ஓர் ஆளாக உருவகப்படுத்துகிறது (நீமொ 8:22-31). "கிறிஸ்துவே கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்" (1 கொரி 1:24). ஞானம் இருவகைப்படும்: ஒன்று பசு ஞானம்; மற்றொன்று பதி ஞானம். பசுஞானம் மண்ணைச் சார்ந்தது; பதிஞானம் விண்ணைச் சார்ந்தது. முன்னது வளர்ந்து கொண்டே போகிறது, பின்னது தேய்ந்து கொண்டே போகிறது. விஞ்ஞானம் வளர்கிறது. விசுவாசம் தேய்கிறது. "இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாக உள்ளது" (1 கொரி 3:19).

கடவுள் தரும் விண்ணக ஞானம் இம்மண்ணக நலன்களை வெறுக்கச் சொல்லவில்லை; மாறாக இம்மண்ணக நலன்களை விண்ணக நலன்களோடு தொடர்புபடுத்துகிறது. உலகம் இருப்பது நமக்காக; நாம் இருப்பது கிறிஸ்துவுக்காக; கிறிஸ்து இருப்பது கடவுளுக்காக (1 கொரி 3:21-23) இப்படி முறை நிலையக் காண்பது தான் உண்மையான ஞானம். விண்ணகத்தை மண்ணகத்தோடு இணைத்தவர்தான் கிறிஸ்து, இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல, கிறிஸ்துவே மனித வரலாற்றின் இறுதிக் குறிக்கோள்; அவரே மனித குலத்தின் மையம் (இன்றைய உலகில் திருச்சபை, எண் 45) கிறிஸ்துவைக் கடவுளின் ஞானமாக ஏற்று அவர் காட்டிய அன்பு நெறியில் நடப்போமாக.

தூய ஆவி நம்மைப் புதுப்பிக்கிறார், "உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்படும். மண்ணகத்தில் முகத்தைப் புதுப்பிக்கின்றீர் (திபா 104:30), உலர்ந்து போன எலும்புகளுக்கு உயிர் கொடுத்து வாழ வைப்பவர் தூய ஆவியார் (காண். எசே 37:1-14). எந்நிலையிலும் மனவிரக்தி அடையாது தூய ஆவியாரின் துணை கொண்டு வாழ்க்கைச் சவால்களை மனஉறுதியுடன் சமாளிப்போம்.

மூவொரு கடவுளிடையே ஆள்வகையில் தனித்தன்மை நிலவினாலும், கடவுள் தன்மையில் அவர்களிடையே சமத்துவம் நிலவுகிறது. இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார்; "தந்தையுடையவை யாவும் என்னுடையவையே" (யோவா 16:15). தந்தை மகனை மகிமைப்படுத்துகிறார்; மகனோ தந்தையையும் , ஆவியானவரோ மகனையும் மகிமைப் படுத்துக்கின்றனர். மூவொரு கடவுளிடையே நிலவும் அன்புறவைப் பின்பற்றி, மற்றவரின் தனித்தன்மையை மதித்து பன்மையில் ஒருமையை நிலைநாட்டுவோம்.

திருப்பலியின் உச்சக்கட்டமாகி " இறுதிப்புகழுரையில்" தந்தையாகிய கடவுளுக்கு, கிறிஸ்து வழியாக, தூய ஆவியின் ஒன்றிப்பில் மகிமை செலுத்துகின்றோம். இதுதான் இறைஅஞ்சலி, நிறைஅஞ்சலி மூவொரு கடவுளை அறிக்கையிடும் இப்புகழுரையை குரு மட்டுமே முன்மொழிய, மக்கள் 'ஆமென்' என்று கூறி வழிமொழிகின்றனர். எனவே இப்புகழுரையை அனைவரும் சேர்ந்து பாடுவதும்,

அல்லது இப்புகழுரைக்குப்பின் வேறொரு புகழுரையைப் பாடுவதும் ஒரு முறைகேடான செயலாகும் என்பதை அறிந்திருப்பது நல்லது. இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவருமான தந்தை, மகன், தூய ஆவிக்கு மகிமை உண்டாகுக (திவெ 1:8).


மறையுரைச்சிந்தனை  -திருவுரைத் தேனடை அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை

சூரியன் ஒளிர்வது எதற்காக?

கற்றது ஒரு துளியளவு. கல்லாதது பெருங்கடலளவு. அறிவியல் ஞானி ஐசக் நியூட்டன் சொல்வாராம்: "எனக்கு எதிராகக் கண்டுபிடிக்கப்படாத உண்மைகள் சமுத்திரம் போல் இருக்கின்றன. நானோ கடற்கரை அருகில் சில கிளிஞ்சல்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்".

ஒரே கடவுள் மூன்று ஆட்களாய் எப்படி இருக்க முடியும் என்ற கேள்வியை மனதில் எழுப்பி ஆழ்ந்த சிந்தனையில் கடற்கரையில் நடந்து பெற்ற தூய அகுஸ்தினாரின் அனுபவம் நினைவுக்கு வருகிறது. சிறுவன் ஒருவன் கடல் கிளிஞ்சலைக் கொண்டு கடல்நீரை அள்ளி சிறுகுழி ஒன்றில் ஊற்றிக் கொண்டிருந்தான். என்ன செய்கிறாய்? என்று கேட்ட போது அவன் சொன்னான்: "இந்த கடல் நீர் முழுவதையும் இந்தச் சிறு குழிக்குள் ஊற்றப் போகிறேன்", இதைக் கேட்டு ஏளனமாகச் சிரித்துக் கொண்டே "இது முடிகிற காரியமா? கடல் எவ்வளவு பெரியது. இந்தக் கிளிஞ்சல் எவ்வளவு சிறியது. கடலின் கொள்ளளவு என்ன, இந்தக் குழியின் கொள்ளளவு என்ன?" என்று கேள்விக்குமேல் கேள்வியாக அடுக்க அந்தச் சிறுவன் உருவில் தோன்றிய வானவர் அகுஸ்தினாரிடம் சொன்னார்: "ஒருக்கால் இந்தச் சிறிய கிளிஞ்சலைக் கொண்டு இவ்வளவு கடல்நீரையும் சிறுகுழியில் நிரப்பினாலும் உம் அற்ப சொற்ப அறிவைக் கொண்டு மூவொரு கடவுளை முழுமையாக அறிந்து உணர முடியாது". சொல்லி விட்டுச் சிறுவன் மறைந்த கதை அனைவரும் அறிந்ததே.

மூவொரு கடவுள் என்ற கோட்பாடு புரியாத புதிராகத் தோன்றினாலும், நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையான, ஆழமான பொருள் செறிந்த உண்மைகளில் முதன்மையானது.

தந்தை மகன் தூய ஆவி - மீட்புத் திட்டத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் இணைந்து செயல்படுகிறார்கள். ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை என்பது மூவரிடமும் விளங்கிய அன்புறவை, தனித்துவத்தை, சமத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

ஒரே மரத்தினைப் பகுத்துப் பார்த்தால் அதில் வேர், தண்டு, கனி என்ற கூறுகள் உண்டு ஆனால் மரம் என்று கூறும் போது வேர், தண்டு, கனி அனைத்தையும் சேர்த்துத்தான் மரம் என்கிறோம்.

சூரியன்-அதன் கதிர் - அதன் வெப்பம் எல்லாவற்றையும் சேர்த்துத்தான் சூரியன் என்று கூறுகிறோம், உணர்கிறோம். தந்தை, மகன், ஆவி இவர்கள் மூன்று ஆளாக இருந்தாலும் ஒரே இறைவன் தான். சூரியனின் இயக்கத்தைப் புரிந்து கொண்டாலும் கூட, மூவொரு கடவுள் என்ற மறைபொருளைப் புரிந்து கொள்வது கடினம்தான். அதனால்தான் "கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை நீர் அறிய முடியுமா? எல்லாம் வல்லவரின் எல்லையைக் கண்டுணர முடியுமா?" (யோபு 11:7) என்று வியந்து நிற்கிறார் யோபு.

சூரியன் ஒளிர்வது எதற்காக? தன்னை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவா? அல்ல. மாறாக அதன் ஒளியில் நாம் மற்ற பொருட்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவன்றோ! மூவொரு கடவுள் சூரியனைப் போலத்தான். தான் மூன்று ஆட்களாய் இருப்பதை வெளிப்படுத்தியது எதற்காக? அவர் எப்படி மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்பதை ஆராய்வதற்காக அல்ல. நடுவானில் சுடரும் சூரியனைக் கண்களால் காண முடியுமா? மூவொரு கடவுளின் மறையுண்மையை மனித அறிவால் புரிந்து கொள்ள முடியுமா? முடியாது. எனவே இறைவனின் இவ்வொளியில் மனிதன் தன் வாழ்வை ஆராய வேண்டும்.

ஒருமையில் பன்மை, ஒற்றுமையில் வேற்றுமை, தனித்துவத்தில் சமத்துவம். இதுதானே மூவொரு கடவுளின் வெளிப்பாடு. இது எப்படி இயலும் என்று சிந்திப்பதை விடுத்து இவ்விழா தருகின்ற செய்தி என்ன, அதுவிடுக்கும் அழைப்பு என்ன என்று தேர்ந்து தெளிந்து செயல்படுவதே சிறப்பானது, அறிவார்ந்தது.

மூவொரு கடவுள் பற்றிய வெளிப்பாடு வெறும் கோட்பாடு அல்ல. அது அன்புறவில் எழும் தெய்வீக வாழ்க்கை முறை. ஓர் அறையில் மூன்று மெழுகுதிரிகள் தனித்தனியாக எரிந்தாலும், அவற்றின் ஒளியைப் பிரித்துப் பார்க்க முடியுமா? ஒரே ஒளியைத்தான் கொடுக்கின்றன. அதேபோல் மூன்று ஆட்களாக இருந்தாலும் இறைத்தன்மை ஒன்றுதான்.

தனித்துவம் மதித்துச் சமத்துவம் வளர்க்க வேண்டிய உறவுகள் எப்படியெல்லாம் சீரழித்து கிடக்கின்றன. சீராக்கின் ஞானம் சொல்கிறது: "என் மனத்துக்குப் பிடித்தமானவை மூன்று. அவை ஆண்டவர் முன்னும் மனிதர் முன்னும் அழகுள்ளவை. அவை:
1.உடன்பிறப்புக்களிடையே காணப்படும் ஒற்றுமை.
2. அடுத்திருப்பாரோடு ஏற்படும் நட்பு.
3. தங்களுக்குள் ஒன்றி வாழும் கணவர் மனைவியர்" (சீராக்.25:1)

மூவொரு கடவுள் என்ற பேருண்மை இதயம் தொடர்பானது. மூளைதொடர்பானதல்ல. மூவொரு கடவுளை நினைந்து சிலுவை அடையாளம் வரையுங்கள். இதயம் மூளை தொடர்பான கோளாறுகள் நீங்கும். தூய்மைபெறும்.

எல்லா செபங்களிலும் வழிபாட்டுக் கொண்டாட்டங்களிலும் அதிகமாக நினைவு கூறும் மூவொரு கடவுள் மறையுண்மையும் சிலுவை அடையாளமும் நாம் எத்தகைய மனநிலையோடு வழிபாடுகளில் பங்கேற்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.

தந்தை என்று சொல்லி நம் நெற்றியில் கைவைக்கிறோம். நெற்றி என்பது நமது மூளையின் இருப்பையும் செயல்பாட்டையும் கொண்ட இடம். எனவே தந்தையாகிய இறைவனிடம் நமது மூளை எண்ணங்கள், சிந்தனைகள், மனக்காயங்கள் முதலியவற்றை முழுமையாக ஒப்படைக்க அழைக்கப்படுகிறோம்.

மகன் என்று சொல்லி நமது நெஞ்சில் கைவைக்கிறோம், இதயம், அது தொடர்பான அன்பு, பாசம், கோபம், வெறுப்பு, பழி வாங்கும் உணர்வு முதலியவற்றை ஆண்டவர் இயேசுவிடம் முழுமையாக ஒப்படைக்க அழைக்கப்படுகிறோம்.

தூய ஆவி என்று சொல்லி நம் தோள் பட்டைகளில் நம் கையை வைக்கிறோம். தோள்பட்டை உடல்வலிமையின் அடையாளம். எனவே தூய ஆவியிடம் நமது உடல், அதன் வலிமை, ஆற்றல் பலம், பலகீனம், திறமைகள், நோய்கள் அனைத்தையும் முழுமையாக ஒப்புக் கொடுத்து வாழ அழைக்கப்படுகிறோம்.

இவ்வாறு நமது மனம், இதயம், உடல் மூன்றையும் மூவொரு கடவுளிடம் ஒப்புக் கொடுத்து அவரது ஆற்றலாலும் சக்தியாலும் வல்லமையாலும் நம்மை நிரப்பிக் கொள்வோம்.

மறையுரைச்சிந்தனை  -திரு சின்னப்பன் டிசில்வா. வெலிங்டன் - ஊட்டி


மறையுரைச்சிந்தனை  -
அருள்பணி. குழந்தைஇயேசு பாபு சிவகங்கை
 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ