ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

 தவக்காலம் 1ம் ஞாயிறு  

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)
சோதனையை வெல்ல சக்தி கேட்டு வந்திருக்கும் அன்புள்ளங்களே !

நமது வாழ்க்கையில் அன்றாடம் நம்மோடு இருக்கின்ற சோதனைகள் இன்று நம்மை இந்த திருப்பலிக்கு வரவேற்கின்றன! ஆண்டவர் இயேசு தனக்கு வந்த சோதனைகளை மிக அற்புதமாக இனம் கண்டு வெற்றி பெற்றார். நம்மையும் நாம் அனுபவிக்கும் சோதனைகளை இனம் கண்டு வெற்றி பெற்று வாழச் சொல்கிறார். அன்றாட வாழ்க்கையில் சோதனையை வெல்வதற்கு இறைவனின் துணை வேண்டும். ஒவ்வொரு சோதனையும் நமக்கு ஒரு அனுபவமே.

நமது சோதனைக்களமே நமது உயர்வுகான சாதனை களம்
மீனுக்கு நிலம் சோதனைக் களம்.
பூவுக்கு மணம் சோதனைக் களம்
பறவைக்கு வலை சோதனைக் களம்
மனிதனுக்கு உலகமே சோதனைக் களம்

இன்றைய உலகில் நாம் காணும் பொருட்கள் எல்லாம் நம் சோதனையைத் தூண்டும் தூண்டுகோலாக அமைந்துள்ளது. பணம், பாசம், உறவு, நட்பு, பதவி இவைதான் சோதனையின் மையக் கூடம். இவைகளைக் கையாள்வதில் விழிப்போடு செயல்பட்டால், சோதனை தனது பலத்தை இழந்து விடும். தவத்தின் வலிமையால் சாத்தானையும் வெல்லலாம் என்பது இன்றைய திருப்பலி நமக்குத் தரும் பாடம்.

துன்பம் வந்தால் அது திறமைக்கு சோதனை
தோல்வி வந்தால் அது வலிமைக்குச் சோதனை
எதிர்ப்பு வந்தால் அது துணிவுக்குச் சோதனை
வறுமை வந்தால் அது நேர்மைக்கு சோதனை
நோய் வந்தால் அது உடலின் வலுவுக்கு சோதனை
பகை வந்தால் அது உறவுக்கு சோதனை
பதவி வந்தால் அது அதிகாரத்திற்கு சோதனை

இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சோதனை எந்த வகை? என சிந்திப்போம். எந்த வகையாக இருந்தாலும் இறையருளை நாடும் போது அது ஒன்றுமில்லாமல் போய்விடும் என்பதை நம்புவோம். நோன்புடன் கூடிய செபத்தை கையில் எடுத்து நம்மைத் தொடரும் சோதனைகளை ஓட, ஓட விரட்டுவோம். நமது செபத்திற்கு வலுவூட்டி சோதனையை வெல்ல அருள்தரும் திருப்பலியில் பங்கேற்று பலன் பெறுவோம்!!
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. சோதனையை வென்று சாதனை படைத்த இறைவா!
திருச்சபைக்கு ஏற்படுகின்ற துன்பத்தை சாதனையாக்கும் பலத்தை திருச்சபைத் தலைவர்களுக்குத் தர வேண்டுமென்றும் புதிய கலாச்சார சூழலை எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்க திருத்தந்தையை தேர்வு செய்ய தூய ஆவி துணைபுரிய வேண்டுமென்றும் இறiவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்திற்கு மக்களை வமிநடத்த மோசேயை ஏற்படுத்திய இறைவா!
அளவற்ற நலன்கள் நிறைந்த பாதையில் மக்களை வழிநடத்த நாடுகளின் தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்த அருள் தர வேண்டுமென்று இறiவா உம்மை மன்றாடுகிறோம்.

3. நான் விரும்பியவருக்கு விரும்பிய வரங்களைக் கொடுப்பேன் ஒன்று மொழிந்த இறைவா!
உமது விருப்பத்தை தனது விருப்பமாக்கி பணிசெய்து கொண்டிருக்கும் எல்லா குருக்களையும் ஆசீர்வதியும். திருப்பலி நிறைவேற்றும் எமது ஆன்மீகத் தந்தை இந்த தவக்காலத்தில் மக்கள் வாழ்வில் வழிபாட்டு நிகழ்வுகள் வழியாக சோதனையை வெல்ல வழிகாட்ட சக்தி தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வாழ்வில் வரும் சோதனையை இனம் காணத் துணைபுரியும் இறைவா!
இங்கே கூடியிருக்கும் எங்கள் பங்கு மக்களிடையே கணவன் மனைவி குடும்ப உறவு சோதனை, வேலை வாய்ப்பின்மை சோதனை, வரன்தடை, குழந்தைப்பேறின்மை பணப்பிரச்சனை, பிள்ளைகளின் எதிர்காலம், தகாத நட்பு என மனதுக்குள் புதைந்து கிடக்கும் சோதனைகள் அனைத்தும் நீங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 
மறையுரை சிந்தனைகள்

முதலாம் உலகபோரில் அந்த இளைஞர் இராணுவத்தில் சேர்ந்தார் மலைப்பகுதியில் தன் சகவீரர்கள் சிதறியோடுவதைக் கண்டு துள்ளியெழுந்தார் குரல் கொடுத்து அனைவரையும் அழைத்தார் உற்சாகம் கொடுத்தார். அன்றிரவு அவருக்கு இரண்டு விஷயங்கள் புரிந்தன. ஒன்று தனக்கிருக்கும் உடல் வலிமையின் உரம் மற்றொன்று தலைமைப் பண்பின் திறம்.  அந்தச் சம்பவத்திற்கு பிறகு தன் தகுதிகளைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டார். அவர்தான் பின்னாளில் அமெரிக்க அதிபராக உயர்ந்த ஹாரிட்ருமென்.

சோதனைகள் நம்மையே நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் எனவே சோதனைகளை விழிப்போடு எதிர்கொள்ளுவோம்
நடுக்கடலில் இருந்து ஒரு சின்ன அலை முதல் முதலாகப் புறப்பபட்டு வந்து கொண்டிருந்தது. அதற்கு மிகவும் உற்சாகம் தந்தது. கரையை நெருங்க நெருஙக அதிர்ந்து போனது முன்னர் சென்ற அலைகளெல்லம் கரையில் விழுந்து நொறுங்குவதை அதனால் தாங்க முடியவில்லை. கரை நம்மை நொறுக்கி விடுமா? பக்கத்து அலையைக் கேட்டது. அந்த அலை சொன்னது "அலையொன்றும் கடலுக்கு அந்நியமில்லை, நீ கடலின் ஒரு பாகம், மீண்டும் வருவாய்" என்றது.

மனிதர்கள் தங்களை வாழ்வின் பாகமாக உணர்வார்கள் என்றால் தோல்வியில் விழும்போது துவண்டு விடமாட்டார்கள்.

இயேசு தனது சோதனையை இனம் கண்டார். நம்மால் சோதனையை இனம் காணமுடிகிறதா?

இயேசு சோதனையை மிகுந்த செபத்தோடு எதிர்த்தார். தவக்காலம் நமது சோதனையை எதிர்க்க நமக்கு வாய்ப்பளிக்கிறது.

நமது பிள்ளைகளே நமக்கு சோதனையாக இருக்கிறார்கள் என கணவன் மனைவி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பதவியை தக்க வைக்க இனம், மொழி, உறவை தவறாக பயன்படுத்துகின்றார்கள் ?

ஆள்பார்த்து லஞ்சம் வாங்கிக் கொண்டு தகுதி இல்லாதவர்க்கு வேலை போட்டு கொடுத்து விட்டார்கள்.

நல்ல உறவு என்று பழகினேன் அது கள்ள உறவுக்கு வழியாகிவிட்டது.

உணவைக் குறைத்து உடல்நலம் பேணவேண்டும்.

தீராத நோயே எனக்கு பிரச்சனையாக உள்ளது.

எனக்கு சோதனை

இந்த தவக்காலத்தில் நமக்கு ஏற்பட்டுள்ள சோதனையை இனம் காண, இவைகளை தவிர்க்க நடத்தப்படும் வழிபாட்டு நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்போம்.

வானமும் பூமியும் படைத்த ஆண்டவர் நாம் தொடங்கியிருக்கும் தவ முயற்சிகளைத் தொடர்ந்து நடத்த துணைபுரியவும், நாம் உடலில் மேற்கொண்டுள்ள தவ ஒழுக்கத்தை உள்ளத்திலும் நேர்மையோடு கடைபிடிக்கவும் அருள்புரியட்டும். அப்போது சோதனைகளைத் தாண்டி சாதனையின் பாதையில் பயணிப்போம்.

 
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.


I. இணைச் சட்டம் 26:4-10
II. உரோமையர் 10:8-13
III. லூக்கா 4:1-13

முயற்சிக்க பயிற்சி......

முயற்சிக்கும் பயிற்சிக்கும் என்ன வேறுபாடு என்று ஒரு கல்லூரி மாணவனிடம் கேட்டபோது, ஒரு பெண்ணிடம் ஐ லவ் யூ என்று சொன்னால் அது முயற்சி . அதுவே பல பெண்களிடம் சொன்னால் அதுதான் பயிற்சி என்றான். இப்போதெல்லாம் முயற்சியும் பயிற்சியும் இப்படித்தான் இருக்கின்றன. இந்த முயற்சியையும் பயிற்சியையும் பற்றி நான் சொல்ல வரவில்லை. தவக்காலத்தின் முதல் வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் நம்மை இன்றைய வாசகங்கள் அனைத்தும் முயற்சி செய்ய பயிற்சிக்க அழைக்கின்றன. தவக்காலம் அருளின் காலம். நம்மை நாமே ஒறுத்து பாவ செயல்பாடுகள் தீய எண்ணங்களிலிருந்து நம்மை விடுவித்து இறை அன்பை அனுபவிக்கும் காலம். இந்த காலத்தை தக்க விதத்தில் பயன்படுத்தி இறை அருளை பெற்றுக் கொள்ளும் அருளின் காலமாக அமைத்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை. விளையாட்டு வீரர்கள் விளையாடத் தொடங்குமுன் சில பயிற்சிகளைச் செய்து தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்வது போல, நாமும் உயிர்ப்பு என்னும் அருளினைப் பெற நம்மை தயார்படுத்திக் கொள்ளும் காலமே இத்தவக்காலம். இதனை உணர்ந்து நம்மை, "முயற்சிக்க பயிற்சி செய்" என அழைப்பு விடுக்கின்றன இன்றைய வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகத்தில் 40 ஆண்டுகளாக பாலை நிலத்தில் இறைவனால் வழிநடத்தப் பட்ட இஸ்ரயேல் மக்கள் இறைவனுக்கு செலுத்த வேண்டிய நன்றிப்பலி பற்றி கூறப்பட்டுள்ளது. இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் இயேசு இறந்த பின்பு 40 நாட்கள் சீடர்களுக்கு காட்சி அளித்து அவர்களை மீட்படையச்செய்த மீட்பின் பலி பற்றி எடுத்துரைக்கின்றது. இறுதியாக நற்செய்தியில் இயேசு 40 நாட்கள் பாலைவனத்தில் சோதிக்கப்பட்டு, வெற்றி அடைந்த வாழ்க்கைப்பலி உருவாக காரணமான நிகழ்வு பற்றி எடுத்துரைக்கின்றது. நமக்கும் இந்த 40 நாட்கள் வருடம் முழுவதும் வருகின்றன. நாம் நமது இந்த நாட்களை எப்படி பயனுள்ள விதமாக ஆக்குகின்றோம் என்பதை சிந்திப்போம். நமது வாழ்வு நன்றிப்பலி செலுத்துகிறதா ? மீட்பின் பலியை உணர்கிறதா? இல்லை வாழ்க்கைப்பலியாக வாழ்கிறதா?

நன்றிப்பலி:

இஸ்ரயேல் மக்கள் 40 ஆண்டுகள் பாலைவனத்தில் கால்கடுக்க நடந்து இறைவன் காண்பித்த நாட்டை அடைகின்றனர். கானான் நாட்டை சென்றடையும் வரை அவர்களுக்குள் ஏராளமான பிரச்சனைகள் தகராறுகள் வேதனைகள் சோதனைகள்.. அது அனைத்தையும் பொறுமையோடு ஏற்று முன்னேறிச் சென்றவர்களே வளமையான கானான் நாட்டை அடைந்தனர். மற்றவர்கள் பாலைநிலத்திலேயே மாண்டு மடிந்தனர். எகிப்து நாட்டில் துன்புற்றபோது அவர்கள் இறைவனை நோக்கி கூக்குரலிடுகின்றனர். இறைவனும் அவர்களது குரலைக் கேட்டு செவிமடுக்கின்றார். அவர்கள் குரலைக் கேட்கிறார், அவர்கள் படும் துன்பத்தைக் கண்ணால் காண்கிறார். அவர்களை மீட்டு பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்துச்செல்கின்றார். 40 ஆண்டுகள் பாலைவனப்பயணத்திலும் இவ்வாறு பல முறை அவர்கள் இறைவனுக்கு எதிராக முணுமுணுத்துக் கொண்டும் புலம்பிக்கொண்டும் இருந்திருப்பர். ஆனாலும் இறைவன் அவர்களைக் கண்ணும் கருத்துமாய் காத்து வழிநடத்தி வருகின்றார். இப்படிப்பட்ட இறைவனுக்கு விளைச்சலின் முதல் பலனைக் காணிக்கையாகக் கொடுக்க பணிக்கின்றார் மோயீசன்.

நம்மில் பலரும் இந்த தவக்காலத்தில் பல விதமான தப முயற்சிகளை மேற்கொண்டும், நற்செயல்கள் செய்தும் தங்களது வேண்டுதல்களையும் கோரிக்கைகளையும் இறைவன் முன் வைப்பர். இவை அனைத்தும் நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற ஆசையோடு நின்று விடாமல் அதையும் தாண்டி நமது வாழ்வுநிலை முன்னேற்றமடைய வேண்டும் என்ற குறிக்கோளோடு செய்யப்பட வேண்டும். சிலர் 40 நாட்கள் மட்டும் புனிதர்கள் போல தூய வாழ்வு வாழ்வர். அதன்பின் பழைய குருடி கதவைத் தொறடி என்பது போல பழைய வாழ்வு என்னும் சேற்றில் புதைந்துவிடுவர். சிலருக்கு தவக்காலம் என்பது வேண்டுவது அனைத்தும் உடனடியாக கிடைக்க மன்றாடும் காலமாக இருக்கின்றது. அப்படி அல்ல . மோயீசன், இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தைக் கடந்து கொண்டிருக்கும் போதே அவர்களுக்கு நினைவுறுத்துகிறார். நீங்கள் சென்றடையும் இடம் பாலும் தேனும் பொழியும் கானான் தேசம் அங்கு சென்றதும் நிலத்தின் விளைச்சலில் முதல் பலனைக் கடவுளுக்கு காணிக்கையாக செலுத்துங்கள் என்று சட்டமாக அறிவிக்கின்றார். கடவுளால் வழிநடத்தப்படும் நாம் கண்டிப்பாக வளமையான நாட்டிற்குள் தான் வாழவைக்கப்படுவோம் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. இன்று அதே நம்பிக்கை நம்மிடம் தேவை என்பதை வலியுறுத்துகிறார்.
அந்த நம்பிக்கையை முயற்சித்து வாழ்வில் பயிற்சித்து நன்றிப்பலி செலுத்த முயல்வோம்
கேட்டது அனைத்தும் கிடைக்கப்பெற்றது என்ற நம்பிக்கையோடு செபிப்போம்..

மீட்பின் பலி:

சீடர்கள் இயேசு இறந்த பின்பு நிலைகுலைந்து போகின்றனர். நம்பிக்கை இழந்து போகின்றனர். அந்த நிலையில் இயேசு தொடர்ந்து 40 நாட்கள் அவர்களுக்கு காட்சி கொடுத்து திடப்படுத்துகிறார். அந்த திடம் அவர்களது வாழ்வை மாற்றிப்போடுகிறது. அவரை நம்பியவர்கள் அவருக்கு ஏற்புடையவர்களாகின்றனர். அவரைப் பின்பற்றியவர்கள் மீட்படைந்தவர்களாகின்றனர். அந்த நாற்பது நாளும் அவர்களுக்கு பல விதமான பிரச்சனைகள் ஆள்பவர்களாலும் அதிகாரிகளாலும் என பிரச்சனைகளின் நடுவே வாழ்ந்த போதும் இயேசுவின் காட்சியால் திடப்படுத்தப்படுகின்றனர். இயேசுவைக் கண்ணால் கண்டு உடன் வாழ்ந்தவர்களைக் காட்டிலும் அவரது சீடர்களின் வல்லமையான சாட்சியால் இயேசுவையும் அவர்தம் போதனைகளையும் பின்பற்றியவர்களே அதிகம். ஊருக்கு பயந்து வீட்டிற்குள்ளும் குகைகளுக்குள்ளும் பயந்து வாழ்ந்த அவர்கள் 40 நாள் அனுபவத்திற்கு பிறகே வல்லமையுள்ள மனிதர்களாக உருமாறுகின்றனர். மீட்படைந்து பிறரும் மீட்படைய வழிவகுக்கின்றனர்.

நமது இந்த நாற்பது நாட்கள் இயேசுவின் சீடர்கள் போல துன்பம் நிறைந்ததாக இருக்கப்போவதில்லை. ஆனால் அவர்கள் போல மீட்படைய வழிவகுக்கலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்மை உருமாற்ற அவருக்கு முழு அனுமதி கொடுக்க வேண்டும். தன்னில் மாற்றம் காண விழைபவர்களே மீட்படைய முடியும். நாம் யாராக இருந்தாலும் எப்படிப்பட்டவராக இருந்தாலும் நமது குறைகளையும் பாவங்களையும் நினைத்து மனம் வருந்தி இறைவனிடம் அறிக்கையிட்டு மன்றாடுகையில் நாமும் மீட்படைவோம். நாம் மனம் மாற முயற்சி செய்வோம். முடியும் வரை அல்ல நாம் நினைத்தது நடந்து முடிக்கும் வரை..அப்போது தான் நம்மாலும் மீட்பின் பலியினை உணர முடியும்..

வாழ்க்கைப்பலி:

இயேசு நாற்பது நாள் பாலைவனத்தில் சாத்தானால் சோதிக்கப்பட்டு தனது பணிவாழ்வுக்குள் நுழைகின்றார். மனிதனின் அடிப்படை தேவைகளாக கருதப்படும் உணவு செல்வம், பாதுகாப்பு என்னும் மூன்றின் அடிப்படையில் அவருக்கு இந்த சோதனைகள் நடைபெறுகின்றன. சாதாரண மனிதருக்கு தான் இவை மூன்றும் தேவை. இயேசுவோ இறைவனின் மைந்தன். அவருக்கு இவை தேவை இல்லை தான் என்றாலும் மானிடமகனாக வந்து மனுக்குலத்தை மீட்க பாடுபடும் அவரை மனிதர் போலவே சோதிக்கிறது சாத்தான். 40 நாளும் உணவின்றி வாடும் இயேசுவிடம் அவர் பசியுற்ற நேரம் பார்த்து, சோதிக்கிறது. நமக்கும் சில நேரம் பட்ட காலிலே படும் என்பது போல ஒரு துன்பம் வரும் போது தான் பிற துன்பங்களும் சேர்ந்து வந்து நம்மை வாட்டி வதைக்கும். ஆனால் துணிவோடிருந்தால் சோதனைகளையும் சாதனைகளாக்கும் வல்லமை பெறுவோம். இல்லையென்றால், சோதனைகள் பயிற்சி செய்யப் பயன்படும் பரிசோதனைக் கூடமாகிவிடுவோம். இன்று வீட்டில் சும்மா இருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி? செல்வம் பெருக செய்ய வேண்டியவை என்ன என்று வலைதளத்தில் தேடிப்பார்த்து முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் இயேசு, இந்த செல்வம் அழிந்து போகக் கூடியது அதன் பின் போகாதே என்று எச்சரிக்கின்றார். மனிதனையும் அவன் படைத்த உபகரணங்களையும் ஆராதித்து, பணம் பொருள் சேர்க்காதே மாறாக ஆண்டவரை வணங்கு அவர் இறைவார்த்தையின்படி நட என்கிறார். உணவோ பணமோ செல்வமோ பதவியோ உன் நிலையை வாழ்வை மாற்றாது இறைவார்த்தையும் அவரது வாழ்வும் தான் உன்னை மாற்றக் கூடியது என்கிறார். இதை உணர முயற்சி செய்வோம் . முயன்று பார்த்தால் வேதனை தான் கிடைக்கும் அந்த வேதனையையும் கடந்து பார்ப்போம் வெற்றி கிடைக்கும். அதனால் நமது வாழ்வு இறைவனுக்கு உகந்த வாழ்க்கைப்பலியாக மாறும் .

தபசு காலம், வேகமாக விரைந்து ஓடிக்கொண்டிருக்கின்ற நமது வாழ்க்கையை சற்று நின்று நிதானித்து பார்க்க உதவும் காலம். நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்து சரிசெய்யாது விட்டு வந்த வேலைகளை திரும்பச்செய்ய நமக்கு கொடுக்கப்பட்ட காலம். செய்த தவறுகளைத் திருத்தி நம்மை புதுப்பிக்கும் காலம். இக்காலத்தில் நமது வாழ்க்கையை நன்றிப்பலியாக்குவதும் மீட்பின் பலிக்கு ஆயத்தபடுத்துவதும், அதை நமது வாழ்க்கைப்பலியாக்குவதும் நமது கையில் தான் உள்ளது. நம்மை நாமே மாற்றத்திற்கு உட்படுத்த நாம் செய்ய வேண்டியது முயற்சி . அதற்கு தேவை இடைவிடாத பயிற்சி... முயற்சிப்பதும் பயிற்சிப்பதும் நமது கடமை எட்டிப்பார்க்கும் தூரத்தில் வெற்றி இல்லை . அதை விட்டுவிடும் எண்ணத்தில் நாமும் இல்லை என்ற மனநிலையோடு முன்னேறுவோம் . முயற்சிக்க பயிற்சிப்போம். வெற்றி என்னும் இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவர் மேலும் இருப்பதாக ஆமென்..

 
மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி Osm

தவக்காலம் முதலாம் ஞாயிறு

சோதனைகளை வெல்வோம்


தவக்காலம் அருளின்காலம், இரக்கத்தின் காலம், ஆண்டவர் இயேசுவின் அன்பை அனுபவிக்கும் அன்பின் காலம். இந்த தவக்காலம் பல்வேறு சவால்களை நம் முன் வைக்கிறது. ஒறுத்தல்கள் செய்ய, நேரிய வழியில் நடக்க, மனமாற்றம் பெற, அடுத்தவர்களை அன்பு செய்ய, பாவத்திலிருந்து விடுதலைப்பெற, எல்லாச் சோனைகளிலிருந்தும் விடுபட்டு, இறைவனிடம் நெருங்கி வர இத்தவக்காலம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இயேசு தம் பணிவாழ்வைத் தொடங்கும் முன் நாற்பது நாட்கள் பாலைநிலத்தில் தனித்திருந்து, இறையோடு உறவாடி, சோதனைகளை வென்று, பல சாதனைகளைச் செய்யும் இறையனுபத்தைப் பெற்றுக்கொண்டார். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல்வேறு சோதனைகளை வென்று, இறைவனிடம் திரும்பி வர, தவக்காலதின் முதல் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

சோதனைகளே வாழ்வின் சாதனைகள், சோதனைக் கற்களைத் தாண்டாமல் இந்த உலகத்தில் யாரும் சாதனைகள் புரிந்ததாக சரித்திரம் இல்லை. இயேசு கற்றுக் கொடுத்த செபத்தில்... சோதனைகள் வேண்டாம் என்று சொல்லாமல், சோனைகளிலிருந்து விடுவித்தருளும் என்று தான் சொல்கிறார். ஆக சோதனைகள் நிச்சயமாக நம்மைத் தொடரும். அவற்றிலிருந்து விடுதலை பெற விருப்புபவர்கள் இறைவனை நாடிச் செல்ல வேண்டும். வருகின்ற நம்மை- தீமைகள் ஒவ்வொன்றும் இறைவனின் கவனத்திற்குச் செல்லாமல் மனிதனை அணுகுவதில்லை. மனதை கசக்கிப் பிழியும் ஒவ்வொரு துயர சம்பவங்களிலிருந்தும், பல புதிய பாடங்களை இறைவன் கற்றுத் தருகிறார்.
இயேசு பாலைநிலத்தில் அலகையினால் மூன்று விதமான சோதனைகளுக்கு ஆட்கொள்ளப்பட்டார்

1.இயேசுவின் பிறரன்புக்கு வந்த சோதனை.

2. இறைநிலையிலிருந்து விலகியிரு.

3. பாடுகள் இன்றி வெற்றி பெற- குறுக்கு வழியில்


1. இயேசுவின் பிறரன்புக்கு வந்த சோதனை

சென்ற இடமெல்லாம் நன்மையே செய்த இயேசு, தன்னுடைய பணிவாழ்வில் எல்லாத் தருணங்களிலும், தனது வல்லமையை தந்தைக் கடவுளின் விருப்பத்திற்கு பயன்படுத்தினாரே தவிர, தனது சுய தேவைக்காக பயன்படுத்த வில்லை. உண்டு குடிக்காமல் இருந்த இயேசுவின் பசியை அறிந்த அலகை, "இந்த கற்றகளை அப்பமாக்கி உண்ணும்" படி சோதித்தது. ஆனால் வல்லமை நிறைந்த இயேசு, தன்னுடைய பசியைப் போக்கிக் கொள்ள தனது வல்லமையை பயன்படுத்தவில்லை. அவர் நினைத்திருந்தால் கற்களை அப்பமாக மாற்றி உண்டிருக்கலாம். ஆனால் இயேசு அப்படிச் செய்யவில்லை. மாறாக, மனிதன் அப்பத்தினால் மட்டும் உயிர் வாழ்வதில்லை, இறைவார்தை ஒவ்வொன்றினாலும் உயிர் வாழ்கின்றான் என்று கூறுகின்றார். ஆக எல்லாச் சூழ்நிலையிலும் இறைவார்த்தையே நம் வாழ்வின் முக்கிய அங்கம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். நம்முடைய வாழ்க்கையிலும், பொது நலத்திற்காக கொடுக்கப்பட்ட நன்மைகளை, சுய நலத்திற்கு பயன்படுத்துவதற்கான சோதனைகள் வரலாம். இயேசுவைப் போன்று இறைவார்த்தையின் வழி வெல்ல வேண்டும்.

2. இறையைவிட்டு விலகும் சோதனை:

இயேசுவுக்கு வந்த இரண்டாவது சோதனை,.. அலகை இயேசுவிடம் " நீர் என்னை வணங்கினால் உலக அரசுகள் அனைத்தும் உம்முடையதாகும் " என்றது. உன் முழு இதயத்தோடும், முழு மனதோடும், உன் ஆன்மாவோடும் இறைவனை அன்பு செய்வதே முதன்மையான கட்டளை என்று சொன்ன இயேசு, அலகையிடமும், இறைவன் ஒருவரையே அன்பு செய்ய வேண்டும் என ஆணித்தரமாக கூறுகின்றார். நமக்கு வருகின்ற சோதனைகளின் பொருட்டு, நாம் இறைவனைப் விட்டுப் பிரிந்து செல்லாமல், இறைவன் அருகில் செல்லும் போது எத்தகைய சோதனைகளையும் வெல்லும் ஆற்றலையும் இறைவன் நமக்குத் தருவார். அதனால் இறைவனின் வார்த்தையில் நம்பிக்கை வைப்போம்.

3. பாடுகள் இன்றி வெற்றி பெற- குறுக்கு வழி.
இயேசுவுக்கு வந்த மூறாவது சோதனை: பாடுகள் இன்றி மாட்சியடைவதற்கான சோதனையாக இருக்கிறது. அலகை இயேசுவிடம் "உம் கால் கல்லின் மேல் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்" என்று சொல்லி எருசலேம் கோவிலின் உச்சியிலிருந்து குதிக்கச் சொல்கிறது. மனிதப் பிறப்பெடுத்து, பாடுகள் பட்டு, சிலுவையில் அறையுண்டு உயிர் துறந்து, பின்பு மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்பதே இறைத்திருவுளம். அப்படியிருக்க இயேசு தன்னை சோதித்த சாத்தானை கடிந்து கொண்டு அதட்டுகிறார்.  நம்முடைய வாழ்விலும் குறுக்கு வழியில் முன்னேறுவதற்கான சோதனைகள் வரலாம். அவற்றையெல்லாம், இயேசுவைப்போல் முறியடிக்க வேண்டும்.

ஆகவே நமக்கு சோதனைகள் வரும் போது பொறுமையாக இருந்து, இறைவனின் உதவியை நாடவேண்டும். அவற்றிலிருந்து வெற்றி பெற இறைவன் உதவார். சோதனைகளை வெல்வோம், இறைவனைத் தேடிச் செல்வோம். இறைவன் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பாராக ஆமென்.
 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி.


நம்பிக்கை(யால்) அறிக்கை

நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோனில் புதிய செயலி (ஆப்) ஒன்றை நிறுவும்போது, கூகுள் ப்ளேஸ்டோர் அல்லது ஐட்யூன்ஸ் ஸ்டோர் நமக்கு ஒரு ஃபார்மைத் தந்து, 'ஏற்றுக்கொள்கிறேன்' அல்லது 'நிராகரிக்கிறேன்' என்ற தெரிவுகளை முன்வைக்கிறது. 'ஏற்றுக்கொள்கிறேன்' என்று டச் செய்தவுடன் செயலி நம் ஃபோனுக்குள் வருகிறது. புதிய மின்னஞ்சல் முகவரி, புதிய டுவிட்டர் அல்லது வாட்ஸ்ஆப் அல்லது ஃபேஸ்புக் கணக்குகளைத் தொடங்கும்போதும் நாம் இத்தகைய ஃபார்ம்களை வாசிக்காமல் 'ஏற்றுக்கொள்கிறோம்.' எல்லாம் ஒன்றும் நடக்காது என்ற நம்பிக்கையால்தான். இல்லையா? வங்கியில் நாம் இடும் கையெழுத்து, புதிய கணக்கு அல்லது புதிய வைப்பு நிதி, அல்லது வரி விலக்கு படிவங்களில் நாம் இடும் கையெழுத்துக்கள் அனைத்தும் நம்பிக்கையால்தான்!

திருமணத்தில் கணவனும், மனைவியும், 'இன்பத்திலும், துன்பத்திலும், உடல்நலத்திலும், நோயிலும் நான் உனக்குப் பிரமாணிக்கமாயிருந்து' என்று சொல்லும் வாக்குறுதியும், அருள்பணி நிலை ஏற்கும் இனியவர், 'இதோ! வருகிறேன்!' என்று சொல்லும் முன்வருதலும், 'இறைவனின் துணையால் விரும்புகிறேன்' என்று சொல்வதும், 'வாக்களிக்கிறேன்' என்று வாக்குறுதி கூறுவதும் நம்பிக்கையால்தான்.

ஆக, நம் அன்றாட வாழ்வில் சாதாரண செயலியை பதிவிறக்கம் செய்வதிலிருந்து, வாழ்க்கைத் தெரிவுகள் வரை நிறைய நிலைகளில் நாம் 'ஆம்' என்று அறிக்கை செய்கின்றோம். இந்த ஆம் என்ற வார்த்தையின் பின்னால் இருப்பது 'நம்பிக்கை' என்ற அந்த ஒற்றைச் சொல். மேலும், இவ்வாக்குறுதிகள் பெரும்பானவற்றை நாம் கடைப்பிடிக்கவும் செய்கிறோம். நாம் 'ஆம். ஏற்றுக்கொள்கிறேன்' என்று அறிக்கையிடும்போது, அந்த அறிக்கை நமக்கு சில உரிமைகளைப் பெற்றுத்தருகிறது. செயலியைப் பயன்படுத்தி எல்லாரோடும் உரையாடுவதே அவ்வுரிமை. அதே போல, திருமணத்திலும், துறவறத்திலும் உரிமைகள் உண்டு. உரிமைகளோடு சேர்ந்து கடமைகள் இருந்தாலும், உரிமைகள் இவ்வறிக்கை வழியாக நமக்குக் கொடையாகக் கிடைக்கின்றன.

ஆக, மனிதர்கள்மேல் நாம் நம்பிக்கை கொண்டு செய்யும் அறிக்கைகளே நமக்கு இவ்வளவு உரிமைகளைப் பெற்றுத்தருகிறது என்றால், கடவுள்மேல் நாம் நம்பிக்கை கொண்டு செய்யும் அறிக்கைகள் நமக்கு இன்னும் உரிமைகளைப் பெற்றுத்தரும் என்ற செய்தியைத் தருகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. நம்பிக்கையால் நாம் அறிக்கையிடும்போது நம் நம்பிக்கை தொடர் வலுப்பெறுகிறது.

இன்றைய முதல் வாசகம் (காண். இச 26:4-10), இஸ்ரயேல் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற வாரங்களின் திருவிழா அல்லது முதற்கனிகள் திருவிழாவின் பின்புலத்தில் அமைந்திருக்கிறது. இந்த நாளில்தான் இஸ்ரயேல் மக்கள், கடவுள் தங்களுக்குக் கொடையாக வழங்கிய நிலத்திற்காகவும், அவரின் சட்டத்திற்காகவும், சீனாய் மலையில் அவர் தங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கைக்காகவும் நன்றிகூறுகின்றனர். தன் நிலத்தின் பலன்களையும் கனிகளையும் ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு வருகின்ற இனியவர் ஆலயத்தின் முகப்பில் அவற்றை வைக்க வேண்டும். ஆலயத்தில் இருக்கும் குரு அக்கூடையை எடுத்துக்கொண்டு போய் பீடத்தின்முன் வைப்பார். அந்த நேரத்தில், இந்த இனியவர் பின்வரும் நம்பிக்கை அறிக்கையைச் செய்ய வேண்டும்: 'நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு ... இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனைக் கொண்டு வந்துள்ளேன்.' கடவுள் இஸ்ரயேல் மக்களை ஓர் இனமாக, நாடாக உருவாக்கிய மூன்று நிகழ்வுகள் இந்த அறிக்கையில் அடிக்கோடிடப்படுகின்றன: ஒன்று, 'நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை' அல்லது 'நாடோடியான தந்தை' - இது ஆபிரகாமையும் மற்ற குலமுதுவர்களையும் குறிக்கிறது. இவர்கள் நாடோடிகளாக இருந்தனர். இவர்களைக் கடவுள் தெரிந்துகொள்கிறார். இரண்டு, விடுதலைப் பயணம். எகிப்தில் பாரவோனுக்கு அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை மோசேயின் தலைமையில் விடுவிக்கும் கடவுள், பல அருஞ்செயல்களை நிகழ்த்தி, தம் வலிய புயத்தால் அவர்களை வழிநடத்துகின்றார். மூன்று, பாலும் தேனும் பொழியும் நாடு. இஸ்ரயேல் மக்களின் மூதாதையருக்கு நிலத்தை வாக்களித்த கடவுள், பாலும் தேனும் பொழியும் நாட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்று அங்கே அவர்களைக் குடியேற்றுகின்றார்.

ஆக, முதற்கனிகளை ஆண்டவராகிய கடவுளுக்கு அர்ப்பணிக்க அவரின் இல்லம் வரும் இனியவர் இந்த நம்பிக்கை அறிக்கையைச் சொல்லும்போது, அல்லது கடவுள்மேல் கொண்ட நம்பிக்கையால் அறிக்கையிடும்போது, தன் இருப்பும், தன் இயக்கமும் கடவுளின் கொடை அல்லது கடவுள்தந்த உரிமை என்பதை அறிக்கையிடுகிறார். ஆக, சாதாரண நாடோடி இனத்தை ஓர் இனமாக, நாடாகக் கட்டி எழுப்பியது ஆண்டவரின் அருளே. அவரின் அருளே இவர்களைத் தெரிவு செய்து, விடுதலை செய்து, நாட்டில் குடியமர்த்தியது. எனவே, முதற்கனிகளை ஆண்டவருக்குப் படைக்க வந்த இஸ்ரயேல் மக்கள் கடவுள் தந்த உரிமைகளை நினைவுகூர்ந்து இவ்வறிக்கை செய்தனர்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். உரோ 10:8-13), 'மீட்பு எல்லாருக்கும் உரியது' என்று பவுல் இறையியலாக்கம் செய்யும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் எப்படி மீட்பு பெறுகிறார்? என்ற கேள்விக்கு பவுல் இரண்டு வழிகளைச் சொல்கின்றார். ஒன்று, 'இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிடுதல். இரண்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நம்புதல். இங்கே, வாயார அறிக்கையிடுதலும், உள்ளார நம்புவதலும் இணைந்தே செல்கின்றன.

முதலில், 'இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிடுதல். இதைப் பவுலின் சமகாலத்துச் சூழலில் புரிந்துகொள்ள வேண்டும். இயேசுவின் சமகாலத்தவரைப் பொருத்தமட்டில், குறிப்பாக அவரை எதிர்த்தவர்களைப் பொருத்தமட்டில், அவர் ஒரு தோல்வி. உரோமையர்களால் சிலுவையில் அறையப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட ஒரு குற்றவாளி. இந்தப் பின்புலத்தில், 'இயேசுவே ஆண்டவர்' என பொதுவான இடத்தில் அறிக்கையிடுவது நம்பிக்கையாளருக்கு அவ்வளவு எளிய காரியம் அல்ல. ஏனெனில், 'குற்றவாளி' எனக் கருதப்படும் ஒருவரை, 'ஆண்டவர்' (அதாவது, 'கடவுள்') என எப்படி அறிக்கையிட முடியும்? யூதர்கள் தங்களுக்கு யாவே தவிர வேறு ஆண்டவர் இல்லை என நம்பினர். ஆக, அவர்கள் இந்த அறிக்கையை எதிர்ப்பார்கள். புறவினத்தார்கள் - குறிப்பாக, உரோமையர்கள் - தங்களுக்கு சீசரே ஆண்டவர் என நம்பினர். அவர்களும் இந்த அறிக்கையை எதிர்ப்பார்கள். இவ்வாறாக, அறிக்கையிடும் நம்பிக்கையாளர் அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதிக்க நேரிடும். இந்த அறிக்கைக்காக அவர் தண்டிக்கவும் கொலைசெய்யவும் படலாம். துணிச்சல் கொண்டிருக்கும் ஒருவரே இவ்வறிக்கை செய்ய முடியும். இரண்டாவதாக, இறந்த இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என மனதார நம்புதல். மனது என்பது மூளை செயலாற்றும் இடம் என்றும், மனிதர்கள் முடிவுகளையும், தெரிவுகளையும் எடுக்கும் இடம் என்று கருதப்பட்டது. ஆக, ஒருவர் தன் முழு அறிவாற்றலோடு இயேசுவின் உயிர்ப்பை நம்ப வேண்டும். மேலும், அவரின் இத்தெரிவு அவரின் வாழ்க்கையின் போக்கையும் மாற்ற வேண்டும்.

இவ்வாறாக, இயேசுவை நம்பி, அந்த நம்பிக்கையால் அறிக்கையிடும்போது, அந்த நம்பிக்கைக்கு ஏற்ப தன் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ளும்போது, மீட்பு என்னும் உரிமையைப் பெற்றுக்கொள்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 4:1-13), இயேசுவின் சோதனைகளை லூக்கா பதிவின்படி வாசிக்கின்றோம். யோர்தானில் திருமுழுக்கு பெற்று தூய ஆவியால் நிரப்பப் பெற்ற இயேசு, அதே தூய ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இயேசுவின் பணிவாழ்வுத் தொடக்கத்திற்கு முன் இந்த இரண்டு முக்கியான நிகழ்வுகள் அவரின் வாழ்வில் நடக்கின்றன: ஒன்று, அவரின் திருமுழுக்கு. இரண்டு, அவரின் பாலைவனச் சோதனைகள். திருமுழுக்கு நிகழ்வில், வானத்திலிருந்து (கடவுளின்) குரல், 'என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' (காண். லூக் 3:22) என்று ஒலிக்கிறது. இவ்வாறாக, தான் யார் என்பதையும், தன்னுடன் கடவுள் என்னும் தன் தந்தை இருக்கிறார் என்பதையும் இயேசு இந்த நிகழ்வில் அனுபவிக்கிறார். இந்த அனுபவத்தை அவர் நம்பிக்கை அறிக்கை செய்ய வேண்டும். அல்லது தன் தந்தையாகிய கடவுள்மேல் கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் ஒரு அறிக்கை செய்ய வேண்டும்.

இயேசுவின் நம்பிக்கை அறிக்கையைத்தான் நாம் அவரின் பாலைவனச் சோதனைகள் நிகழ்வில் வாசிக்கிறோம். கடவுளின் திட்டங்களையும் நோக்கங்களையும் சீர்குலைக்க நினைக்கும் அலகை மூன்று நிலைகளில் இயேசுவைச் சோதிக்கிறது. கடவுளின் பணிகளை இயேசுவைச் செய்யவிடாமல் தடுக்கும் அலகையின் முயற்சியே இது.

முதலில், அலகை, 'கல் அப்பமாகும்படி கட்டளையிடும்' என்று இயேசுவுக்குச் சவால்விடுகிறது. ஒருவேளை இயேசு கல்லை அப்பமாக்கியிருந்தால், தன் பசியைத் தீர்த்துக்கொள்ள, அல்லது தன்னலத்திற்காக கடவுளின் வல்லசெயலாற்றும் கொடையைப் பயன்படுத்தியதுபோல ஆகிவிடும். 'மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல ...' (காண். இச 8:3) என்று மறைநூல் வாக்கைச் சுட்டிக்காட்டி, இயேசு சவாலை மறுக்கிறார். இவ்வாறாக, இயேசு, தன்னுடைய ஆற்றலைக் கடவுளின் திருவுளத்திற்காகவும், கடவுளின் நோக்கங்களுக்காகவுமே பயன்படுத்துவேன் என்று தெளிவாக அறிக்கையிடுகின்றார்.

இரண்டாவது சோதனையில், அலகை, இயேசு தன்னை வணங்கினால் உலகின்மேல் முழு அதிகாரத்தையும் வழங்குவதாகச் சொல்கிறது. இங்கே, இயேசு தன் தலைவர் யார் என்பதைத் தெரிவு செய்ய வேண்டும் - அலகையா? கடவுளா? யாருக்குப் பணிவது? மறைநூலை மறுபடி மேற்கோள் காட்டும் இயேசு - 'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக!' (காண். இச 6:13) - அவரின் தெரிவு கடவுள் மட்டுமே என்று அறிக்கையிடுகின்றார்.

இறுதிச் சோதனை கடவுளின் பெயர் தங்கியிருக்கும் எருசலேம் ஆலயத்தின் உச்சியில் நடைபெறுகிறது. அலகை, இப்போது தானே மறைநூலை மேற்கோள் காட்டி - 'உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு ... அவர்கள் தாங்கிக்கொள்வார்கள்' (காண். திபா 91:11-12) - இயேசு, கடவுள் மேல் உள்ள நம்பிக்கையைச் சோதிக்கும் பொருட்டு, அவரை உச்சியிலிருந்து கீழே குதிக்குமாறு சோதிக்கிறது. மறைநூலில் தான் சொன்ன வார்த்தைக்குக்குக் கடவுள் பிரமாணிக்கமாக இருக்கிறாரா என்று பார்! என்று இயேசுவிடம் சொல்வதாக அமைகிறது இச்சோதனை. இயேசுவின் மனத்தில் சந்தேகத் துளியை விதைக்க நினைக்கிறது அலகை. ஏனெனில், இந்த நம்பிக்கையால்தான் இயேசு தன் வாழ்வின் பணி, பாடுகள், மற்றும் இறப்பை எதிர்கொள்ளவேண்டும். 'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' (காண். இச 6:16) என்று சொல்லி, கடவுள்மேல் தான் கொண்டுள்ள நம்பிக்கையில் சந்தேகம் இல்லை என்றும் உறுதிகூறுகிறார் இயேசு.

இம்மூன்று சோதனைகள் வழியாக, இயேசு, கடவுளின் பணியைச் செய்யவிடாமல் தடுக்க முயற்சி செய்தது அலகை. ஆனால், கடவுள் மேல் தான் கொண்டிருக்கிற நம்பிக்கையில், தன் நிலைப்பாட்டை அறிக்கையிடுகிறார் இயேசு. இவற்றின் வழியாக இயேசு தன் நம்பிக்கை, அர்ப்பணம், மற்றும் மனவுறுதியைத் தெளிவுபடுத்துகிறார். இயேசுவின் இந்த நம்பிக்கை அறிக்கை அவரின் பொதுவாழ்வைத் தொடங்க உரிமையளிக்கிறது. இயேசுவும் தன் பணியை உடனே தொடங்குகிறார் (காண். லூக் 4:14-15).

இவ்வாறாக, முதல் வாசகத்தில், இஸ்ரயேலர் இனியவர் ஒருவர், முதற்கனிகள் திருநாளில் கடவுள்மேல் கொண்ட நம்பிக்கையால் தான் பெற்ற கொடைகளுக்காக அவர்மேல் நம்பிக்கையை அறிக்கையிடுகின்றார். இரண்டாம் வாசகத்தில், ஒருவர் இயேசுவின் மேல் கொண்ட நம்பிக்கையால் செய்யும் அறிக்கை அவருக்குக் கடவுளின் மீட்பைப் பெற்றுத் தருகிறது. நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் தந்தையின்மேல் கொண்டுள்ள நம்பிக்கையால் தன் நிலைப்பாட்டை அறிக்கையிடுகின்றார். ஆக, நம்பிக்கை அறிக்கையும், நம்பிக்கையால் அறிக்கையிடுதலும் இம்மூன்று வாசகங்களிலும் இணைந்தே செல்கின்றன.

நாம் இன்று நம் நம்பிக்கையை அல்லது நம் நம்பிக்கையால் எப்படி அறிக்கையிடுவது?

1. ஒரே மனநிலை - கூடை நிறையும்போதும், வயிறு பசிக்கும்போதும்

இன்றைய இறைவார்த்தை வழிபாடு இரண்டு வகை மனநிலைகளைப் பிரதிபலிக்கிறது. நாம் முதல் வாசகத்தில் சந்திக்கும் இஸ்ரயேலர் இனியவர் பெரிய கூடையில் முதற்கனிகள் நிறையக் கடவுளின் முன்னிலையில் நிற்கிறார். நற்செய்தி வாசகத்தில் ஒன்றுமே இல்லாத பாலைநிலை வெறுமையில் பசித்த வயிறாய் இயேசு இருக்கிறார். இந்த இரண்டுபேருமே கடவுளை நம்புகின்றனர். அந்த நம்பிக்கையில் அவரைப் பற்றியும், அவரின் அருஞ்செயல்கள் பற்றியும் அறிக்கையிடுகின்றனர். ஆக, நம் கைகள் நிறைய விளைச்சலும், நிலத்தின் பலனும் இருந்தாலும், அல்லது வயிறு பசித்திருந்தாலும் நம் மனநிலை ஒன்றாக இருக்க வேண்டும். அந்த மனநிலை நம் நம்பிக்கையால் வடிவம் பெற வேண்டும். நம் கைகள் நிறையப் பலன் இருக்கும்போது கடவுளை நம்புவதும், அவரைப் பற்றி அறிக்கையிடுவதும் எளிது. ஆனால், வயிறு பசித்திருக்கும்போது மிகக் கடினம்.

2. ஒரே மனநிலை - ஆலயத்திலும் பாலைவனத்திலும்


முதல் வாசகத்தில் அறிக்கை ஆலயத்திலும், நற்செய்தி வாசகத்தில் அறிக்கை பாலைவனத்திலும் நடக்கிறது. ஆலயத்தில் எல்லாம் இனிமையாக இருக்கும். நம் மனம் ஒருமுகப்படும். அமைதியாக இருக்கும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம் நல்லதே நினைப்பார்கள். எல்லாரும் அருகிருப்பார்கள். ஆனால், பாலைவனம் அப்படியல்ல. அங்கே தனிமை இருக்கும். நம் மனம் அலைபாயும். நம்மைச் சுற்றி அலகை மட்டுமே இருக்கும். நம் வீழ்ச்சியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் அலகை. நாம் எந்த இடத்தில் இருந்தாலும் நம்பிக்கை அறிக்கை அவசியம்.

3. ஒரே மனநிலை - நம் வேர்களை நினைக்கும்போதும் நம் கிளையைப் பரப்பும்போதும்


முதல் வாசகத்தில் இஸ்ரயேலர் இனியவர் தன் வேர்களை நினைத்துப் பார்க்கிறார். தன் தந்தை ஒரு நாடோடி என்று சொல்வதன் வழியாக, இருக்க இடமற்ற, உண்ண உணவற்ற, உடுக்க உடையற்ற தன் நொறுங்குநிலையை ஒரே நொடியில் நினைத்துப்பார்க்கிறார். ஆக, இன்று கனிகள் கைகளை நிறைத்தாலும் ஒரு காலத்தில் தான் ஒரு வெறுமையே என்று உணர்கிறார். அதே போல, இயேசுவும் தான் பெற்ற திருமுழுக்கில் தன் வேர்களைப் பதித்து, இறையாட்சி என்ற இலக்கை நோக்கிக் கிளைபரப்புகிறார். இந்த இரண்டு நிலைகளிலும் நம்பிக்கை அறிக்கை நடந்தேறுகிறது.

இறுதியாக, இன்றைய இரண்டாம் வாசகம் சொல்வதுபோல, நாம் அறிக்கையிடும் எல்லா வார்த்தைகளும் - அது கடவுள்முன் என்றாலும், ஒருவர் மற்றவர்முன் என்றாலும், எனக்கு நானே என்றாலும் - செயல்வடிவம் பெற வேண்டும். நிறைவேற வேண்டும். அந்தச் செயலின் ஊற்று நம்பிக்கை. நம்பிக்கையே செயலாகும்போது, நம்பிக்கை என்ற சொல்லின் பொருள் புரியும். ஏனெனில், 'செயல்' என்பதே 'சொல்.'

 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை


I இணைச்சட்டம் 26:4-10
II உரோமையர் 10:8-13
III லூக்கா 4:1-13


கடவுளின் துணையால் சோதனையை வெல்வோம்

இயேசு இதயத்தில் இருக்கின்றார்
இடைக்காலத்தில் மார்ட்டின் என்றொரு துறவி இருந்தார். அவர் தனக்கு வந்த சோதனைகளை மிக எளிதாக வென்று வந்தார். இது அவரோடு இருந்த மற்ற துறவிகளுக்கு வியப்பைத் தந்தது. " நீங்கள் மட்டும் உங்களுக்கு வருகின்ற சோதனைகளை மிக எளிதாக வெற்றி கொள்கிறீர்களே! அது எப்படி?" என்று மற்ற துறவிகள் அவரிடம் கேட்டபோது, அவர் அவர்களிடம், " சாத்தான் என்னைச் சோதிப்பதற்காக என்னுடைய இதயக் கதவைத் தட்டி, " உள்ளே யார் இருக்கின்றார்? என்று கேட்கும். அப்போது நான் என் இதயக் கதவைத் திறக்க மாட்டேன். மாறாக, என் இதயத்தில் குடிகொண்டிருக்கும் இயேசு, என் இதயக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து, " உள்ளே மார்ட்டின் என்று ஒருவன் இருந்தான். இப்போது அவன் வெளியே போய்விட்டான். அதனால் நான்தான் உள்ளே இருக்கின்றேன்" என்று சொல்லி, தன்னுடைய கைகளிலும் கால்களிலும் விலாவிலும் ஆணிகளால் ஏற்பட்ட காயங்களைக் காட்டுவார். அவற்றைப் பார்த்ததும், சாத்தான் தலைதெறிக்க ஓடிவிடும். இப்படித்தான் நான் எனக்கு வரும் சோதனைகளை வெற்றி கொள்கிறேன்" என்றார்.

ஆம், நம்முடைய இதயத்தில் ஆண்டவரைக் குடியமர்த்துகின்றபோது அல்லது ஆண்டவர் நம்முடைய இதயத்தில் குடிகொள்கின்றபோது, நமக்கு வரும் சோதனைகளை நாம் மிக எளிதாக வென்றிடலாம். தவக் காலத்தின் முதல் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை கடவுளின் துணையால் சோதனையை வெற்றி கொள்வோம் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

சோதிக்கப்பட்ட இயேசு
" சோதனைக்கு உள்ளாதவர் மனிதரும் அல்லர்; சோதனையை வெல்லாதவர் மனிதரே அல்லர்" என்ற கூற்றிற்கு ஏற்ப, நற்செய்தி வாசகத்தில், மனுவுருவான ஆண்டவர் இயேசு கிறிஸ்து சாத்தானால் சோதிக்கப்படுவதைக் குறித்து வாசிக்கின்றோம். சாத்தானால் இயேசு பசி, குறுக்கு வழியில் மாட்சி அடைதல், இறைவனைத் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப வளைத்தல் ஆகிய மூன்று விதமான சோதனைகளுக்கு உள்ளாகின்றார்.

ஆதாமும் ஏவாளும், அதன்பிறகு பாலைநிலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கும் பசியினால் சோதனைக்கு உள்ளாகி, ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். ஆனால், இயேசு கிறிஸ்து நாற்பது நாள்கள் நோன்பிருந்து பசியோடு இருந்தபோதும், சாத்தானுடைய சோதனையில் விழுந்துவிடாமல், " மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கிறார்" (இச 8:3) என்று சொல்லி, சாத்தானின் சோதனையை முறியடிக்கின்றார்.

இரண்டாவதாக, சாத்தான் இயேசுவுக்கு வைத்த சோதனை: குறுக்கு வழியில் மாட்சியை அடைவது. கடவுளின் திருவுளம், இயேசு பாடுகள் பட்டு, இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்பதாக இருந்தது. ஆனால், சாத்தான், அதெல்லாம் வேண்டாம், " நீ என்னை வணங்கினால், அனைத்தும் உம்முடையதாகும்" என்கிறது. உடனே இயேசு, இன்றைக்கு ஒருசிலர் குறுக்கு வழியில், எந்தவொரு துன்பத்தையும் அனுபவிக்காமல் உயர்ந்த நிலையை அடைவது போன்று, சாத்தான் சொன்னதற்கு அப்படியே கீழ்ப்படிந்து மாட்சியை அடைந்துவிடவில்லை. மாறாக, அவர் கடவுளின் திருவுளத்திற்கேற்ப பாடுகள் படத் தயாராகின்றார். அதனால் அவர், " உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணிசெய்வாயாக" (இச 6:13) என்று சொல்லி, சாத்தானின் இரண்டாவது சோதனையை முறியடிக்கின்றார்.

மூன்றாவதாக, சாத்தான் இயேசுவுக்கு முன்பாக வைத்த சோதனை, கடவுளைத் தன்னுடைய விரும்பத்திற்கேற்ப வளைப்பது. நாம் ஒவ்வொரும் கடவுளின் திருவுளத்திற்கேற்ப நடக்கவேண்டும். அதுவே சிறப்பானதாகும். ஆனால், பலர் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நடக்காமல், " கடவுளே எனக்கு நீர் இதைச் செய்து தரவேண்டும்" , " என்னுடைய வாழ்வில் இப்படியெல்லாம் நடக்கவேண்டும்" என்று கடவுளைத் தங்களுடைய விருப்பத்திற்கு இழுப்பதைக் காண முடிகின்றது. இயேசுவோ இதற்கு முற்றிலும் மாறாக, சாத்தான் தன்னிடம் எருசலேம் திருக்கோயிலின் மேலிருந்து கீழே குதியும் என்று சொன்னபோது, அவர் அவ்வாறு செய்யாமல், " உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்" (இச 6:16) என்று சொல்லி, கடவுளின் விரும்பத்திற்கேற்ப நடந்து, சாத்தானின் சோதனையை முறியடிக்கின்றார். இவ்வாறு இயேசு சாத்தான் தனக்கு வைத்த மூன்று சோதனைகளையும் இறைவனின் துணையால், இறைவார்த்தையின் துணையால் சோதனையை முறியடிக்கின்றார்.

சோதனையின்போது இறை உதவியை நாடவேண்டும்
" இயேசு இறைமகன், அதனால் அவரால் சோதனையை மிக எளிதாக வெற்றி கொள்ள முடிந்தது. சாதாரண மனிதர்களாகிய நம்மால் சோதனையை வெற்றிகொள்ள முடியுமா?" என்ற கேள்வி நமக்கு எழலாம். மனிதர்கள் தங்கள் சொந்த ஆற்றலை மட்டுமே நம்பி இருந்தால், அவர்களால் தங்களுக்கு வருகின்ற சோதனையை வெற்றி கொள்ள முடியாதுதான். ஆனால், கடவுளின் துணையால் நம்மால் சோதனையை வெற்றி கொள்ள முடியும். இது குறித்து எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறும்போது, " தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவிசெய்ய இயேசு வல்லவர்" (எபி 2:18) என்கிறார்.

எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியருடைய கூற்றுப்படி, இயேசு சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதால், அவர் யாரெல்லாம் சோதனைக்கு உள்ளாகுகின்றார்களோ, அவர்களுக்கு அவர் உதவி செய்ய வல்லவராக இருக்கின்றார். அதற்கு நாம் அவருடைய உதவியை நாடவேண்டும். அவருடைய உதவியின்றி நம்மால் சோதனையை வெல்ல முடியாது.

இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், இஸ்ரயேல் மக்கள் தங்கள் நிலத்தில் விளைந்த முதற்கனிகளை ஆண்டவருக்குப் படைக்க வேண்டும் என்று சொன்னாலும், இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் துன்பப்பட்டபோது, அவர்கள் தங்கள் மூதாதையரின் கடவுளை நோக்கிக் குரல் எழுப்பியபோது, கடவுள் அவர்களுடைய குரலைக் கேட்டு, அவர்களை எகிப்திலிருந்து விடுவித்தார் என்ற செய்தியைத் தாங்கிவருகின்றது. எனில், நாம் துன்பங்களுக்கு உள்ளாகின்றபோதும், சோதனைக்கு உள்ளாகின்றபோதும், கடவுளின் உதவியை நாடவேண்டும். அப்போது அவர் நமக்கு உதவுவார்.

ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டோர் அவமானம் அடையார்
" நாம் சோதனைக்கு உள்ளாகின்றபோது, ஆண்டவருடைய உதவியை நாடினால் மட்டும் போதுமா, வேறு எதுவும் செய்யத் தேவை இல்லையா?" என்ற கேள்வி எழலாம். நாம் சோதனைக்கு உள்ளாகின்றபோது ஆண்டவருடைய உதவியை நாட வேண்டும். அதுவும் நம்பிக்கையோடு நாடவேண்டும். அதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் தெளிவாகக் கூறுகின்றார்.

" கடவுள் ஒருவரே" என்பதைப் பேய்களும் நம்புகின்றன. அத்தகைய நம்பிக்கை தேவை இல்லை. செயலில் வெளிப்படும் நம்பிக்கையே தேவை (யாக் 2:19-20). என்று யாக்கோபு தனது திருமுகத்தில் கூறுவார். செயலில் வெளிப்படும் நம்பிக்கையைத்தான் பவுலும் எதிர்பார்க்கின்றார். அதனால்தான் அவர், " இயேசு ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்" என்கிறார். இப்படி உயிர்த்த இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு, அவரோடு உயிர்த்தெழும் ஒவ்வொருவரும் மேலுலகு சார்ந்தவற்றை நாடுவர் (கொலோ 3:1). அதனால் அவர்கள் தமக்கு வரும் சோதனையை மிக எளிதாக முறியடிப்பர். இதன்மூலம் " நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்" (எசா 8:16) என்ற இறைவாக்கினர் எசாயாவின் கூற்றை உண்மையாக்குவர்.

ஆகவே , நாம் சோதனைக்கு உள்ளாகும்போது இறை உதவியை நம்பிக்கையோடு நாடி, சோதனைகளை மிக எளிதாக வெல்வோம்.

சிந்தனைக்கு
" நாம் வீழ்ந்துபோக வேண்டும் என்பதற்காகச் சோதனைகள் வருவதில்லை. மாறாக, அவற்றை நாம் வென்று, முன்பைவிட ஆற்றல் மிக்கவர்களாக வரவேண்டும் என்பதற்காகவே சோதனைகள் நமக்கு வருகின்றன" என்பார் திருவிவிலிய அறிஞரான வில்லியம் பார்க்லே. எனவே, நாம் நமக்கு வரும் சோதனைகளை வென்று, இயேசுவுக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 
 
 இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
 தவக் காலம் முதல் ஞாயிறு - ஆண்டு 3
இணைச்சட்டம் 26:4-10; உரோமையர் 10:8-13; லூக்கா 4:1-13


தவக்காலம் இறை மனித உறவைப் புதுப்பிக்கும் காலம்.

சுயநலத்தால், ஆணவத்தால், அதிகாரத்தால் தேங்கிய குட்டை போன்ற வாழ்வை ஓடும் நீரோடையாக மாற்றும் காலம். நாற்பது ஆண்டுகள் இஸ்ரயேல் மக்கள் பாலைவனச் சோதனைகளைக் கடந்து சுதந்திர பூமியில் கால் பதித்தார்கள். இயேசு நாற்பது நாட்களில் தனக்கு வந்த சோதனைகளை வென்று சாதனை படைத்தார். விவிலியத்தில் நாற்பது என்பது புனிதமான எண்ணாகும். நோவாவின் காலத்தில் நாற்பது நாட்கள் இரவும் பகலும் மழை பெய்தது. இஸ்ரயேல் மக்கள் நாற்பது ஆண்டுகள் பாலைவனத்தில் பயணம் செய்தார்கள் (இ.ச. 8:2). மோசே நாற்பது நாட்கள் சீனாய் மலையில் தங்கி இருந்தார் (வி.ப. 24:18). எலியா நாற்பது நாட்கள் உண்ணாமல் பயணம் செய்தார் (1 அரச 19:8). இயேசுவின் பாலைவன வாழ்வும் நாற்பது நாட்கள். தவக்கால 40 நாட்களும் நம்மையே சுய ஆய்வு செய்து, சோதனைகளை வென்று இறைவனின் அருளைப் பெறும் காலம். இக்காலம் நம்மையே புதுப்பிக்க அழைக்கிறது. எனவேதான் புனித பவுல் அடிகளார், இதுவே தகுந்த காலம் என்று கூறுகிறார் (2 கொரி. 2). நில், கவனி, செல் என்ற எச்சரிக்கை ஆன்மீக வாழ்விலும் தவக்கால தொடக்கத்திற்கும் பொருந்தும் இயேசுவுக்கு மூன்று சோதனைகள் வந்தன: 1. உணவைக் குறுக்கு வழியில் பெற சோதனை 2. அதிசயங்களைப் பார்க்கச் சோதனை 3. அடிமைச் சுகம் காணச் சோதனை இயேசு சோதிக்கப்பட்டார். ஆனால் வீழ்ச்சியடையவில்லை. இயேசு பாலைவன சோதனையை வென்ற பிறகு தூய ஆவியின் துணையோடு போதிக்கும் பணியை, குணப்படுத்தும் பணியை, வழிநடத்தும் பணியை, அநீதியை எதிர்க்கும் பணியைத் தொடர கலிலேயாவில் காலடி பதித்தார் (லூக். 4:14).

பணக்காரன் ஒருவன் ஒரு துறவியிடம் சென்று, எனக்கு நிறையப் பணமிருந்தும் நிம்மதியே இல்லை. எந்த வேலையைத் தொடங்கினாலும் சோதனையாகவே இருக்கிறது. என்ன காரணம்? என்று கேட்டான். துறவியானவர் பதில் சொல்லாமல், அருகில் இருந்த ஒரு குழந்தையை அழைத்து ஒரு ஆப்பிள் பழத்தைக் கொடுத்தார். வலது கையால் வாங்கிக் கொண்டது. இன்னொரு பழத்தைக் கொடுத்தார். அதை இடது கையால் வாங்கிக் கொண்டது. மூன்றாவது பழத்தையும் கொடுத்தார். முதல் இரண்டு பழங்களையும் நெஞ்சிலே அணைத்துக் கொண்டு மூன்றாவது பழத்தை வாங்க முயற்சி செய்தது. ஆனால் பழம் நழுவி கீழே விழுந்தது. குழந்தை அழுதது. இரண்டு பழங்கள் போதும் என்று நினைத்திருந்தால் இப்போது அந்தக் குழந்தை அழத் தேவையில்லை. அதுபோல, போதும் என்ற மனமிருந்தால் நிம்மதி கிடைக்கும். சோதனை இருக்காது என்றார் துறவி. இயேசுவின் மூன்று சோதனைகளும் நமக்குச் சிறந்த பாடமாக அமைகிறது. பாவத்தைத் தவிர்க்கவும், மாயக்கவர்ச்சிகளில் மயங்காமல் இருக்கவும், இயேசு நமக்கு வழிகாட்டுகிறார். சோதனையின்போது செபம், தவம் இவைகளின் வழியாக இயேசு மனவலிமையைப் பெற்றார். இன்றையச் சூழலில் நமக்கு இலக்குத் தெளிவாக இருந்தால் வெற்றி உறுதியாகும். சோதனை நேரத்தில் பேச வேண்டிய நேரத்தில் இயேசு பேசினார். அமைதி காக்க வேண்டிய நேரத்தில் அமைதி காத்தார். இதைத்தான் நாமும் இயேசுவிடம் கற்றுக் கொள்ள வேண்டும். சோதனை நேரத்தில் நாம் கடவுளோடு இருக்கிறோமா? என்பது முக்கியம். இயேசு தனது பணி வாழ்வில் தெளிவாகச் செயல்பட்டார். பணம், பதவி, புகழ் ஒரு மனிதனை ஆட்டிப்படைக்கும் சக்திகளாகும். இவைகளை இயேசு தூய ஆவியானவரின் துணையால் வென்றார். நாமும் நமது வாழ்வில் சோதனை நேரங்களில் நிதானமாகச் செயல்பட்டு சாதனை படைப்போம்.

 
 மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி

வருமுன்‌ காப்போம்‌

இன்றைய நற்செய்தி இயேசு அலகையால்‌ பாலைநிலத்தில்‌ சோதிக்கப்பட்டதை நமக்குச்‌ சுட்டிக்காட்டுகின்றது.

அலகை என்றால்‌ யார்‌ என்பதற்கு யோபு என்னும்‌ நூலில்‌ விளக்கமொன்றை நாம்‌ காண்கின்றோம்‌ (யோபு 1:1-12].

இதோ அந்த விளக்கம்‌!
ஊசு என்ற நாட்டில்‌ யோபு என்ற மனிதர்‌ ஒருவர்‌ வாழ்ந்து வந்தார்‌. அவர்‌ ஒரு நீதிமான்‌. கடவுளுக்கு அஞ்சி தீயதை விலக்கி வாழ்ந்தவர்‌. அவருக்கு ஏழு புதல்வரும்‌, மூன்று புதல்வியரும்‌ இருந்தனர்‌. அவர்‌ ஒரு பெரிய பணக்காரர்‌.

‌ என்‌ பிள்ளைகள்‌ ஒரு வேளை பாவம்‌ செய்து, உள்ளத்தில்‌ கடவுளைத்‌ தூற்றியிருக்கக்கூடும்‌ என்று யோபு நினைத்து, தினந்தோறும்‌ காலையில்‌ எழுந்து அவர்களின்‌ எண்ணிக்கைக்கு ஏற்ப எல்லாருக்காகவும்‌ எரிபலியை ஒப்புக்கொடுப்பார்‌.

ஒரு நாள்‌ அலகை, அதாவது சாத்தான்‌ கடவுள்‌ முன்னால்‌ நின்றான்‌. கடவுள்‌ சாத்தனைப்‌ பார்த்து, எங்கிருந்து வருகின்றாய்‌?என்றார்‌. அதற்கு சாத்தான்‌, நான்‌ உலகத்தைச்‌ சுற்றிப்பார்த்துவிட்டூ வருகின்றேன்‌ என்றான்‌. கடவுள்‌ சாத்தானிடம்‌, என்‌ ஊழியன்‌ யோபுவைப்‌ பார்த்தாயா? அவனைப்‌ போல மாசற்றவனும்‌, நேர்மையானவனும்‌, கடவுளுக்கு அஞ்சி, தீமையானதை விலக்கி நடப்பவனும்‌ மண்ணுலகில்‌ ஒருவனும்‌ இல்லை என்றார்‌.

சாத்தானோ கடவுளைப்‌ பார்த்து, நீர்‌ அவனைப்‌ பாதுகாப்பதால்தான்‌ அவன்‌ நீதிமானாய்‌ இருக்கின்றான்‌. அவனுக்குரியவற்றின்‌ மீது நீர்‌ கை வைத்தால்‌ அவன்‌ உன்னைப்‌ பழிப்பான்‌ என்றான்‌.

கடவுளோ, இதோ! அவனுக்குரியவையல்லாம்‌ உன்‌ கையிலே; அவன்‌ மீது மட்டும்‌ கை வைக்காதே என்றார்‌.

சாத்தான்‌ யோபுவை சோதித்தான்‌. யோபுவுக்கு சொந்தமானவை அனைத்தையும்‌ அழித்தான்‌. ஆனால்‌ யோபு எந்த சோதனைக்குள்ளும்‌ விழவில்லை! சாத்தான்‌ திரும்பவும்‌ ஆண்டவர்‌ முன்னால்‌ தோன்றி, யோபுவின்மீது கைவைக்க உத்தரவு கேட்டான்‌. ஆண்டவர்‌ சாத்தானிடம்‌, இதோ அவன்‌ உன்‌ கையிலே! அவன்‌ உயிரை மட்டும்‌ விட்டுவை (யோபு 2:6] என்றார்‌.

சாத்தான்‌ யோபுவை உள்ளங்கால்‌ முதல்‌ உச்சந்தலைவரை எரியும்‌ புண்களல்‌ வாட்டி வதைத்தான்‌ (யோபு 2:7]. ஆனால்‌ யோபு கடவுளுக்கு எதிராக எதுவும்‌ பேசவில்லை!

யோபு நூலின்‌ வழியாக, சாத்தான்‌ என்பவன்‌ மனிதர்களை கடவுளின்‌ மதிப்பீடுகளுக்கு எதிராகச்‌ [6யாபு 1:8]) செயல்படத்‌ தூண்டுகின்றவன்‌ (யோபு 2:3) என்பது நமக்குப்‌ புரிகின்றது.

இன்றைய நற்செய்தியில்‌ சாத்தான்‌ அவனது தீய செயல்பாட்டின்படி வாழ இயேசுவை அழைக்கின்றான்‌.

முதல்‌ சோதனை சுயநலத்திற்கு இடம்‌ கொடுக்கவும்‌, இரண்டாவது சோதனை மண்ணாசைக்கு இடம்‌ கொடுக்கவும்‌, மூன்றாவது சோதனை தற்புகழ்ச்சிக்கு இடம்‌ கொடுக்கவும்‌, நான்காவது சோதனை (லூக்‌ 4:13, 22:42அ) விண்ணகத்‌ தந்தையின்‌ விருப்பத்திற்கு எதிராக செயல்படவும்‌ இயேசுவை அழைக்கின்றன.

ஆனால்‌ இயேசு எல்லா சோதனைகளையும்‌ வென்றார்‌. அவரின்‌ வெற்றிக்குக்‌ காரணமாய்‌ இருந்தது யார்‌? தூய ஆவியார்‌! கடவுளின்‌ வல்லமையாகத்‌ திகழ்பவர்‌ தூய ஆவியார்‌ (லூக்‌ 4:1).

சாத்தானை அப்பாலே போ என்று சொல்லும்‌ அளவுக்கு நமக்கு ஆற்றலைத்‌ தரும்‌ வல்லமை மிக்கவர்‌ தூய ஆவியார்‌.

இன்றைய முதல்‌ வாசகம்‌ கூறுவது பால நமது ஆவி ஏக்கத்தோடு தூய ஆவியாரை நாளும்‌ பொழுதும்‌ தேட வேண்டும்‌ (எசா 26:9அ)]; தூய ஆவியாரை நோக்கி, வாரும்‌ தூய ஆவியாரே என்று மன்றாட வேண்டும்‌. இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ புனித பவுலடிகளார்‌ கூறுவது போல கடவுளை நோக்கி மன்றாடும்‌ யாவருக்கும்‌ அவர்‌ அளவற்ற நலன்களைப்‌ பொழிகின்றார்‌ (உரோ 10:12ஆ] மேலும்‌ அறிவோம்‌ :

வருமுன்னர்க்‌ காலாதான்‌ வாழ்க்கை எரிமுன்னர்‌
வைத்தூறு போலக்‌ கெடும்‌ (குறள்‌ : 435)

பொருள்‌ :
குற்றம்‌ எதுவும்‌ வருவதற்கு முன்பே அது வாராதவாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும்‌. அவ்வாறு காத்துக்கொள்ளாதவரின்‌ வாழ்வு, நெருப்பின்‌ முன்னால்‌ வைக்கப்பட்ட வைக்கோற்போர்‌ போன்று அழிந்து ஒழியும்‌!


மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்
குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
 மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்

திருமணமாகாத ஒருவர்‌ திருமணமான ஒருவரிடம்‌, "கடவுள் தரும்‌ சோதனைக்கும்‌ மனைவி தரும்‌ சோதனைக்கும்‌ உள்ள வேறுபாடு என்ன?" என்று கேட்டதற்கு அவர்‌, "மனைவியே கடவுள்‌ தந்த‌ சோதனை தானே" என்று பதிலளித்தார்‌.

நாமனைவரும்‌ பலவிதங்களில்‌ சோதிக்கப்படுகிறோம்‌. அப்போ "சோதனை மேல்‌ சோதனை போதுமடா சாமி" என்று கடவுளை நொந்‌து கொள்கிறோம்‌. ஆனால்‌, கடவுள்‌ எவரையும்‌ சோதிப்பதில்லை: மனிதர் தங்கள்‌ தீயதாட்டங்களால்‌ சோதிக்கப்படுகின்றனர்‌. தீய நாட்டங்களே கருவுற்றுப்‌ பாவத்தையும்‌. பாவம்‌ சாவையும்‌ விளைவிக்கிறது என்கிறார்‌ திருத்தூதர்‌ புனித யாக்கோபு (காண்‌, யாக்‌ 3:13-78),

"நமக்குள்‌ இயல்பாக இருக்கும்‌ தீய நாட்டங்களைப்‌ பயன்படுத்தி நம்மைச்‌ சோதிப்பது அலகை. அலகையோ தொடக்க முதல்‌ பொய்யன்‌. பொய்மையின்‌ பிறப்பிடம்‌ (யோவா 8:44). அது மனிதரை வஞ்சித்துப்‌ பாவத்தில்‌ விழச்‌ செய்கிறது. எனவேதான்‌. "எங்களைச்‌ சோதனைக்கு உட்படுத்தாதேயும்‌. தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்‌" (மத்‌ 6:13) என்று மன்றாடக்‌ கிறிஸ்து பணித்துள்ளார்‌.

கிறிஸ்துவே எல்லா வகையிலும்‌ நம்மைப்‌ போல்‌ சோதிக்கப்பட்டவர்‌. எனினும்‌ அவர்‌ பாவம்‌ செய்யாதவர்‌ (எபி 4:15). அலகை கிறிஸ்துவை மூன்று விதங்களில்‌ சோதித்தது. மூன்று முறையும்‌ அவர்‌ இறைவாக்கை மேற்கோள்‌ காட்டி அலகையை வென்றார்‌.

"உலகனைத்தும்‌ தீயோனின்‌ பிடியில்‌ இருக்கிறது (1 யோவா 5:19) என்றும்‌, இவ்வுலகைச்‌ சார்ந்தவை அனைத்தும்‌ உடல்‌ ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச்‌ செருக்கு என்றும்‌ (1 யோவா 2:16) யோவான்‌ இவ்வுலகின்‌ தீய சக்திகளை இனம்‌ காட்டுகிறார்‌. இம்முப்பெரும்‌ தீய சக்திகளைக்‌ கொண்டு அலகை கிறிஸ்துவை திசை திருப்ப முயன்றது.

முதலாவது, மனிதரிடம்‌ இயல்பாக உள்ளது உடல்‌ ஆசை; ஊன்‌ இயல்பின்‌ இச்சைகள்‌. உடலின்‌ இச்சைகளைப்‌ பூர்த்தி செய்வதில்‌ மனிதர்‌ குறியாக உள்ளனர்‌; தொகை தொகையாகச்‌ செலவழித்து வகை வகையான இன்பங்களைத்‌ துய்க்கின்றனர்‌.

40 நாள்கள்‌ பாலைநிலத்தில்‌ எதுவும்‌ உண்ணாமல்‌ நோன்பிருந்த கிறிஸ்து பசியுற்றார்‌. அவரின்‌ உடலின்‌ தேவையை நகன்கறிந்த அலகை, கல்லை அப்பமாக மாற்றிச்‌ சாப்பிடும்படி அவரைச்‌ சோதித்தான்‌. ஆனால்‌, கிறிஸ்துவோ இணைச்சட்ட நூலிலிருந்து மேற்கோள்காட்டி "மனிதா அப்பத்தினால்‌ மட்டும்‌ வாழ்வதில்லை" (இச 8:3) எனக்கூறி அலகையை வெல்லுகிறார்‌.

நமது ஐம்புலன்களின்‌ இச்சைகளைத்‌ தணித்துக்‌ கொள்ளும்படி நவீன ஊடக உலகம்‌ பல்வேறு கவர்ச்சிமிக்க விளம்பரங்களை நம்‌ கண்முன்‌ நிறுத்துகிறது. ஓர்‌ உணவு விடுதியில்‌ மக்கள்‌ கூட்டம்‌ அலைமோதுகிறது. ஏனென்றால்‌, அவ்விடுதியில்‌ குஷ்பு இட்டிலி, சிம்ரன்‌ கோழிக்‌ குழம்பு, ரம்பா தொடைக்‌ கறி கொடுக்கிறார்களாம்‌. "கோழி ருசியாய்‌ இருந்தா கோழியைத்‌ தின்பேன்‌, குமரி ருசியாய்‌ இருந்தா குமரியைத்‌ தின்பேன்‌". இது இவ்வுலகின்‌ வழி, அலகை காட்டும்‌ வழி.

நாம்‌. பசிக்காகச்‌ சாப்பிடுகிறோம்‌. வெறும்‌ ருசிக்காக மட்டும்‌ மாப்பிடுவதில்லை. வாழ்வதற்காகச்‌ சாப்பிடுகிறோம்‌, சாப்பிடுவதற்காக வாழ்வதில்லை. சாப்பாட்டிலேயே குறியாக உள்ளவர்களைப்‌ பற்றித்‌ திருத்தூதர்‌ பவுல்‌, "வயிறே அவர்கள்‌ தெய்வம்‌" (பிலி 3:19) என்கிறார்‌.

உண்டு உண்டு கொழுத்து மாரடைப்பால்‌ மாண்டு போகாமல்‌, நமக்குள்ள உணவைப்‌ பிறருடன்‌ பகிர்வோம்‌. பசியால்‌ வாடும்‌ ஒருவர்க்கு நாம்‌ உணவு கொடுக்காததால்‌ அவர்‌ இறந்தால்‌, நாம்‌ அவரைக்‌ கொல்லும்‌ கொலைகாரர்கள்‌. தவக்காலத்தில்‌ நோன்பு இருந்து பசிப்பிணி ஒழிப்பிற்காகத்‌ தாராள மனத்துடன்‌ உதவ முன்‌ வருவோம்‌.

செவிக்கு உணவு இல்லாத போதுதான்‌. வயிறுக்குச்‌ சிறிது உணவு கொடுக்கவேண்டும்‌.

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும்சயப்படும்‌... .. (குறள் 412)

"மனிதர்‌ அப்பத்தினால்‌. மட்டுமன்று, மாறாக, கடவுளின்‌ வாய்ச்சொல்‌ ஒவ்வொன்றாலும்‌ உயிர்‌ வாழ்கின்றனர்‌" (இச8:3). எனவே. தவக்காலத்தில்‌ வாழ்வு தரும்‌ வார்த்தையைப்‌ படித்து பயனடைவோம்‌.

தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 
 திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை

இந்த சோதனை எதற்கு?

சாதனையாளர்களின்‌ பேரும்‌ புகழும்‌ தான்‌ நம்‌ நினைவுக்கு வருகிறதே தவிர அவர்கள்‌ நடந்து வந்த பாதையில்‌ கடந்து வந்த சோதனைகளையும்‌ வேதனைகளையும்‌ நாம்‌ நினைத்துப்‌ பார்ப்பதில்லை.

மாமன்னன்‌ நெப்போலியன்‌ ஒருமுறை அமைச்சரவையைக்‌ கூட்டி ஏதோ முக்கியமான திட்டம்‌ பற்றி விவாதித்துக்‌ கொண்டிருந்தான்‌. அந்தக்‌ கலந்துரையாடலில்‌ நெப்போலியன்‌ பேசியபோதெல்லாம்‌ கடைசி இருக்கைகளில்‌ அமர்ந்திருந்த இரண்டு அமைச்சர்கள்‌ சிரித்துக்‌ கொண்டனர்‌. சிரிப்பா என்று மன்னனுக்கு வியப்பு! கூட்டம்‌ முடிந்தபின்‌ அந்த அமைச்சர்‌ இருவரையும்‌ தனியாக அழைத்து இதுபற்றிக்‌ கேட்டான்‌. அவர்களோ உதறல்‌ எடுத்துப்‌ பயத்தில்‌ ஒன்றுமே இல்லை என்று சத்தியம்‌ செய்தனர்‌. மன்னன்‌ விடுவதாக இல்லை. உண்மையைச்‌ சொன்னால்‌ தண்டிக்கப்‌ போவதில்லை என்று உறுதி அளித்தான்‌. உடனே அந்த அமைச்சர்கள்‌ "அரசே, நீங்கள்‌ பேசும்‌ ஒவ்வொரு முறையும்‌ இரண்டு தோள்களையும்‌ மேல்நோக்கிக்‌ குலுக்குகிறீர்கள்‌. அளவுக்கு அதிகமாகக்‌ குலுக்கிக்‌ கொண்டே பேசுவது பார்ப்பதற்குப்‌ பரிகாசமாய்‌ இருக்கிறது. எனவே சிரித்து விட்டோம்‌. மன்னித்து விடுங்கள்‌" என்றனர்‌. மன்னன்‌ அவர்களை அனுப்பிவிட்டுத்‌ தன்‌ அறைக்குச்‌ சென்று யோசித்தான்‌. தீரச்‌ சிந்தித்தவனாய்‌ திடீரென்று எழுந்து இரண்டு கூரிய வாள்களைத்‌ தன்‌ இரு தோள்களுக்கு மேலே கட்டித்‌ தொங்க விட்டு கூட்டத்தில்‌ பேசுவதுபோல்‌ பேசத்‌ தொடங்கினான்‌. தன்‌ இயல்பான, வழக்கமான தோள்‌ குலுங்கல்‌ அப்போதும்‌ ஏற்பட கூரிய வாள்கள்‌ தோள்களைப்‌ பதம்‌ பார்த்தன. குருதி கொட்டியது. மன்னன்‌ விடவில்லை. அப்பழக்கம்‌ தீருமட்டும்‌ பேசி இறுதியில்‌ வெற்றி கண்டான்‌.

வாழ்க்கை என்பது சவால்‌. சோதனைகளின்றி, போராட்டங்‌களின்றி எந்த மனீதனும்‌ மேதையானதில்லை, வீரனானதில்லை, புனிதனானதில்லை.

இந்தப்‌ பிண்ணனியில்‌ இறைவார்த்தையை நினைத்துப்‌ பாருங்கள்‌. "பாவத்திற்கு எதிரான போராட்டத்தில்‌ (சோதனையில்‌) "இரத்தம்‌ சிந்தும்‌ அளவுக்கு நீங்கள்‌ இன்னும்‌ எதிர்த்து நிற்க வில்லை".(எபி.12:4)

ஆலிவ்‌ எண்ணெய்‌ வேண்டுமா? ஒலிவ இலைகள்‌ நசுக்கப்பட வேண்டும்‌. திராட்சை மது வேண்டுமா? திராட்சைக்‌ கனிகள்‌ பிழியப்பட "வேண்டும்‌. வாசனைத்‌ திரவியங்கள்‌ வேண்டுமா? மல்லிகை போன்ற மலர்கள்‌ கசக்கப்பட வேண்டும்‌. அதுபோலத்தான்‌ நசுக்கப்படாமல்‌, பிழியப்படாமல்‌, கசக்கப்படாமல்‌, சோதிக்கப்படாமல்‌ எதையும்‌ சாதிக்க முடியாது.

புனிதர்கள்‌ எல்லாம்‌ சோதனைகளைக்‌ கண்டு புலம்பியதில்லை. மகிழ்ச்சியோடு ஏற்று தங்கள்‌ விசுவாசத்தை வெளிப்படுத்தும்‌ அரிய வாய்ப்பாகவே எடுத்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. "நாங்கள்‌ எல்லாச்‌ சூழ்நிலைகளிலும்‌ இன்னலுற்றாலும்‌ மனம்‌ உடைந்து போவதில்லை. குழப்பமுற்றாலும்‌ நம்பிக்கை இழப்பதில்லை. துன்புறுத்தப்பட்டாலும்‌ கைவிடப்படுவதில்லை. வீழ்த்தப்பட்டாலும்‌ அழிந்து போவதில்லை. இயேசுவின்‌ வாழ்வே எங்கள்‌ உடலில்‌ வெளிப்படுமாறு நாங்கள்‌ எங்கே சென்றாலும்‌ அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள்‌ உடலில்‌ சுமந்து செல்கிறோம்‌" (2 கொரி.4:3-10) என்ற திருத்தூதர்‌ பவுலின்‌ மனஉறுதி இருந்தால்‌ சோதனைகளைக்‌ கண்டு துவண்டு விடமாட்டோம்‌.

லூக்‌.22:31இல்‌ படிக்கிறோம்‌: "சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்‌ போல உங்களைப்‌ புடைக்கச்‌ சாத்தான்‌ அனுமதி கேட்டிருக்கிறான்‌ (யோபு நினைவுக்கு வரட்டும்‌). ஆனால்‌ நான்‌ உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன்‌" என்றார்‌ இயேசு. சோதனையில்‌ நாம்‌ விழாதபடி, விழுந்தாலும்‌ உடனே எழுந்துவிட இயேசு நமக்காகச்‌ செபித்துக்‌ கொண்டிருக்கிறார்‌. அதனால்தான்‌ மறுதலித்த மறுகணம்‌ பேதுருவால்‌ மனந்திரும்ப முடிந்தது!

மனிதனுக்குச்‌ சோதனைகளை அனுமதிக்கும்‌ இறைவன்‌, அனுமதிப்பதோடு வாளாவிருப்பதில்லை. திருத்தூதர்‌ பவுல்‌ மொழிவது போல்‌ "கடவுள்‌ நம்பிக்கைக்குரியவர்‌. அவர்‌ உங்களுடைய வலிமைக்கு பல நீங்கள்‌ சோதனைக்குள்ளாக விடமாட்டார்‌. சோதனை வரும்போது அதைத்‌ தாங்கிக்‌ கொள்ளும்‌ வலிமையை உங்களுக்கு அருள்வார்‌; அதிலிருந்து விடுபட வழிசெய்வார்‌" (1 கொரி.10:13)

சோதனைகளும்‌ கீழான எண்ணங்களும்‌ எழும்‌ அதே ஆன்மாவில்தான்‌ இறைவனும்‌ உள்ளார்‌ என்பதை மறந்து விடுகிறோம்‌. அவர்‌ நம்மைக்‌ கைநெகிழ்ந்து விட்டது போன்ற உணர்ச்சிக்கும்‌ உள்ளாகிறோம்‌.

இதே உணர்ச்சியின்‌ தாக்குதலுக்கு ஆளான தூய சியன்னா கத்தரின்‌ ஆண்டவரை வினவினார்‌: "ஆண்டவரே என்‌ இதயம்‌ தூய்மையற்ற எண்ணங்களால்‌ நிறைந்தபோது நீர்‌ எங்கே இருந்தீர்‌?" அவரோ அவளது இதயத்திலேயேதான்‌ அவ்வமயம்‌ இருந்ததாகக்‌ கூறினார்‌. அவளால்‌ முதலில்‌ நம்ப முடியவில்லை. அவர்‌ இருக்கும்‌ இதயத்திலும்‌ அத்தகைய எண்ணங்களா? பின்‌ ஆண்டவர்‌ அவளிடம்‌ "அச்சோதனைகள்‌ உனக்கு வேதனை தந்ததா, மகிழ்ச்சி அளித்ததா?" எனக்‌ கேட்க, தாளமுடியாத வேதனை என்று அவள்‌ கூற, ஆண்டவர்‌ "நான்‌ உன்‌ இதயத்தில்‌ இருந்ததாலேயே நீ வேதனையுற்றாய்‌. நான்‌ இல்லாதிருந்திருப்பின்‌ அவை உனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும்‌. உனக்குள்ளே இருந்து உன்‌ எதிரிகளிடமிருந்து உன்னைப்‌ பாதுகாத்தேன்‌" என்றார்‌.

சுடச்சுட ஒளிரும்‌ பொன்‌ போல்‌ சோதனையில்‌ விழாது விளங்க விளங்க நம்‌ இதயங்கள்‌ இயேசுவின்‌ திரு இருதயத்துக்கு ஏற்ற இதயங்களாகின்றன. ஏற்றவையா எனக்காணவே அவர்‌ சோதிக்கிறார்‌. "வெள்ளியை உலைக்‌ களமும்‌ பொன்னைப்‌ புடக்‌ குகையும்‌ சோதித்துப்‌ பார்க்கும்‌. உள்ளத்தைச்‌ சோதித்துப்‌ பார்ப்பவர்‌ ஆண்டவர்‌ (நீதி.17:3).

சோதனைக்கும்‌ சாதனைக்கும்‌. என்ன வேறுபாடு? சோதனையின்‌ கொம்பை முறித்தால்‌ அது சாதனை!

திருவுரைத் தேனடை
அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி

சோதனை மேல் சோதனை...

" சோதனை" என்ற வார்த்தையைக் கேட்டதும், நம்மில் பலருக்கு, அவ்விடத்தை விட்டு ஓடிவிடவேண்டும் போல் தோன்றலாம். அவ்வளவு பயம். சோதனை ஓர் எதிரிபோலவும், நம்மைத் தாக்கக் காத்திருக்கும் ஒரு மிருகம் போலவும் நம் கற்பனையில் பல உருவங்கள் உலா வருவதால், இந்த பயம். ஆர அமர சிந்தித்தால், சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்கமுடியாத ஒரு முக்கிய அம்சம் என்பது விளங்கும். சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை. இயேசுவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இயேசு சோதனைகளைச் சந்தித்ததும், அவற்றை அவர் வென்றதும் நமக்கு நல்ல பாடங்கள். ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று, இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க திருஅவை நம்மை அழைக்கிறது.

சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். நம் ஆழ் மனதில் உள்ள தீய நாட்டங்கள், மிருக உணர்வுகள் இவற்றைத் தட்டியெழுப்பும் சோதனைகள் சக்தி மிகுந்தவைதான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவற்றோடு போராடி வெற்றி பெறவும் நம்முள் நல்ல எண்ணங்களும், உறுதியான மனமும் உள்ளன. இதை நாம் நம்ப வேண்டும்.

நமது சொந்த சக்திக்கு மீறியதாய்த் தோன்றும் சோதனைகள் வரும்போது, இறைவனின் சக்தி நமக்குத் துணை வரும் என்ற நம்பிக்கையும் நம்மில் வளரவேண்டும். சின்ன வயதில் நமக்குச் சொல்லித் தந்த 'காவல் சம்மனசு' கதைகள், வெறும் கற்பனைக் கதைகளா? அல்லது, நம்மைக் காப்பதற்கு இறைவன் எப்போதும் நம்முள் இருக்கிறார் என்பதை நினைவுபடுத்தும் அடையாளங்களா? சோதனைகளுக்கும், அவற்றின் அடிப்படையான தீய சக்திகளுக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால் உள்ளத்தில் நம் உறுதி, நம்பிக்கை இவை குலைகிறதே... அதுதான் இன்று உலகத்தில் பலர் சந்திக்கும் மாபெரும் ஒரு சோதனை.

இயேசு சந்தித்த முதல் சோதனை என்ன?
பசியாய் இருந்த இயேசுவிடம் கல்லை அப்பமாய் மாற்றச் சொன்னது அலகை. இயேசுவிடம் இருந்த சக்தியைப் பயன்படுத்தி அவரது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத் தூண்டியது சாத்தான். நேரம் அறிந்து, தேவை உணர்ந்து வந்த ஒரு சோதனை. தேவைகளை அதிகமாக்கிக்கொள்ளும்போது தானே, அவற்றை எவ்வழியிலாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்ற சோதனைகளும் அதிகமாகும்?

சாத்தான் சோதனையை ஆரம்பித்த விதமே அழகானது. "நீர் இறைமகன் என்றால், இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்" என்ற சவாலை சாத்தான் முன்வைக்கிறது. சிறுவர்கள் விளையாடும்போது, இது போன்ற சவால்கள் எழும். "நீ வீரனாய் இருந்தால்... இந்தப் பூச்சியைப் பிடிச்சிடு, அந்த மரத்துல ஏறிடு..." போன்ற சவால்கள். சவால்களைச் சந்திக்காவிட்டால், அச்சிறுவன் வீரன் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு விடும். இதற்குப் பயந்து, வீர சாகசங்கள் செய்து, அடிபட்டுத் திரும்பும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம். இயேசுவிடம் இப்படி ஒரு சவாலை முன் வைக்கிறது சாத்தான்.

"நீர் இறை மகன் என்றால்..." என்று சொல்லும்போது, இறைமகன் எப்படிப்பட்டவராய் இருக்க வேண்டும் என, சாத்தான் இலக்கணம் எழுதுகிறது. இறைமகன் என்பதை நிரூபிக்க, நிலை நாட்ட, புதுமைகள் நிகழ்த்த வேண்டும், அதுவும் தன்னுடைய சுயநலத் தேவையை நிறைவு செய்யும் வண்ணம் புதுமை செய்ய வேண்டும்.

தன் சக்தியை நிலைநாட்ட புதுமைகள் செய்பவர்கள், வித்தைகள் காட்டும் மந்திரவாதிகளாய் இருக்கமுடியுமே தவிர, இறைவனாகவோ, இறைமகனாகவோ இருக்க முடியாது. தன் சுயநலனுக்கு, சுயதேவைக்குப் புதுமைகள் செய்வது, புதுமைகள் செய்யும் சக்தியை அழுக்காக்கும், அர்த்தமில்லாததாய் ஆக்கும்.

இயேசு சாத்தானுக்குச் சொன்ன பதிலும் அழகானது. இயேசு தன் உடல் பசியை விட, ஆன்மப் பசி தீர்க்கும் உணவைப்பற்றி பேசினார். " மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை" என்று, மோசே சொன்ன வார்த்தைகளைக் கூறுகிறார் இயேசு. (இணைச்சட்டம் 8:3)

தன் சொந்த பசியைத் தீர்த்துக்கொள்ள மறுத்த இயேசு, பல்லாயிரம் பேரின் பசியைத் தீர்க்க தன் சக்தியைப் பயன்படுத்தினார் என்பது நமக்குத் தெரியும். நமக்கு இறைவன் கொடுத்துள்ள சக்திகள் திறமைகள் எதற்கு? சுயத் தேவைகளை நிறைவு செய்வதற்கு மட்டுமா? சிந்திக்கலாம், இயேசுவிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம்.

இயேசு சந்தித்த இரண்டாவது சோதனை என்ன? உலகமனைத்தையும் இயேசுவிடம் ஒப்படைக்க விரும்புவதாக அலகை சொல்கிறது. உலகை வென்று, அதை தந்தையிடம் ஒப்படைக்கத்தானே இயேசு மனுவுருவானார்? இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது, ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே! அப்படி இயேசு உலகை வெல்லவேண்டுமானால், அவர் ஒரு 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்யவேண்டும். சாத்தானோடு சமரசம்... இல்லை, இல்லை, சாத்தானிடம் சரணடைய வேண்டும். இயேசு அதை திட்டவட்டமாக மறுத்தார். சாத்தான் முன் சரணடைய மறுத்த இயேசு, சிலுவையில் தொங்கியபோது, "தந்தையே, உமது கைகளில் என் ஆன்மாவை ஒப்படைக்கிறேன்" என்று இறைவனிடம் சரணடைந்தார்... உலகைத் தன் வசமாக்கினார்.

தவறான வழிகள், தவறான சக்திகளுடன் எத்தனை முறை சமரசம் செய்திருக்கிறோம்? எத்தனை முறை அவை முன் சரணடைந்திருக்கிறோம்? இப்படி சமரசம் செய்வதே, 'அட்ஜஸ்ட்' செய்வதே நம் வாழ்க்கையாகி விட்டதா என்று சிந்திப்பது நல்லது.

மூன்றாவது சோதனை? இறைமகன் உலகை வெல்வதற்கு, உலகை மீட்பதற்கு எந்தத் தொந்தரவும், துன்பமும் இல்லாத குறுக்கு வழியொன்றை அலகை காட்டுகிறது. எருசலேம் தேவாலயத்தின் மேலிருந்து இயேசு குதிக்கவேண்டும். உடனே, வானங்கள் திறந்து, விண்ணவர் ஆயிரமாய் இறங்கி வந்து, இயேசுவின் பாதம் தரையை தொடாமல் அவரைத் தாங்கிய வண்ணம், தரைக்குக் கொண்டு வருவார்கள். உலக முடிவில் அவர் மாட்சியுடன் வருவதற்கு ஓர் ஒத்திகை போல இது அமையும். எருசலேம் முழுவதும், ஏன் உலகம் முழுவதும் இயேசுவின் சீடர்களாகிவிடுவர். 30 ஆண்டுகள் மறைந்த வாழ்வு, 3 ஆண்டுகள் கடினமானப் பணி, இறுதி 3 நாட்கள் கொடிய வேதனை, இறுதி 3 மணி நேரங்கள் சிலுவையின் கொடூரச் சித்ரவதை... இவை எதுவும் தேவையில்லை. ஒரு நொடிப்பொழுது போதும். எருசலேம் தேவாலய சாகசம் ஒன்று போதும். உலகம் இயேசுவின் காலடியில் கிடக்கும். விளையாடியது போதும் என்று இயேசு சாத்தானைக் கடினமாக விரட்டியடிக்கிறார்.

மூன்றாவது சோதனையில் ஒரு கூடுதல் சிந்தனை உண்டு. முதல் இரு சோதனைகளிலும், சாத்தான் வெறும் ஆலோசனைகள் சொல்ல, சாத்தானின் வாயடைக்க இயேசு இறை வாக்குகளைப் பயன்படுத்துகிறார். மூன்றாவது சோதனையில் அலகை இறை வார்த்தையைப் பயன்படுத்தி ஆலோசனை வழங்குகிறது. சாத்தானுக்கு வேதம், விவிலியம் தெரிந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. "Even the devil can quote the Bible" என்ற பழமொழி உண்டு.

வேதங்கள், வேத நூல்கள் உட்பட நல்லவை பலவும், பொல்லாத இடங்களில், பொல்லாத காரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவது வேதனைக்குரிய ஓர் உண்மை. உண்மை, நீதி இவை அடிக்கடி விலை பேசப்படும் நமது நீதிமன்றங்களில் விவிலியத்தின் மீது அல்லது பிற வேத நூல்களின் மீது சத்தியப் பிரமாணங்கள் கொடுக்கப்படுகின்றன. வேதனை மேல் வேதனை... போதுமடா சாமி.

கண்மூடித்தனமாக நுகர்வுக் கலாச்சாரத்தைப் பின்பற்றி, சுயத்தேவைகளைப் பெருக்கிக் கொள்ளுதல், சுருக்கு வழிகளில் பலன் தேடுதல், சுய விளம்பரத்திற்காக எதையும் செய்தல், உலகின் தீயச் சக்திகளோடு சமரசம் செய்தல் என்று நம்மைக் கவர்ந்திழுக்கும் அழகான சோதனைகளுக்கு நம் பதில் என்ன? இயேசுவிடமிருந்து ஏதாவது பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியுமா? கற்றுக்கொண்டதை செயலாக்க விருப்பமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல தவக்காலம் நல்லதொரு நேரம்.

நாம் துவங்கியிருக்கும் தவக்காலம், மேன்மைதரும் மாற்றங்களை நம் ஒவ்வொருவருக்குள்ளும் உருவாக்கும் வசந்தகாலமாக விளங்க இறைவனை வேண்டுவோம். இந்த மாற்றங்கள் நமக்குள் நிகழவிடாமல் நம்மைத் தடுத்து நிறுத்தும் மனத்தளர்வு என்ற சோதனையை வெல்வதற்கு இறைவனிடம் துணிவை வேண்டுவோம்.
 
 மறையுரை முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌ பெங்களூர்

தவக்காலம்‌ முதல்‌ ஞாயிறு

முதல்‌ வாசகப்‌ பின்னணி (எசா. 26:4-10)


எகிப்தில்‌ அடிமைகளாக வாழ்ந்த மக்கள்‌ தங்களுடைய விசுவாசத்தையும்‌, நன்றிகளையும்‌ எவ்வாறு கடவுளுக்கு வெளிப்படுத்த வேண்டும்‌, கடவுளுக்கு நன்றி செலுத்த வெறும்‌ வார்த்தைகளை மட்டுமல்லாமல்‌, நம்‌ உழைப்பின்‌ முதற்கனிகளையும்‌ நன்றியாக அர்ப்பணிக்க வேண்டும்‌. இச்‌ செயல்கள்‌ நம்மை கடவுளின்‌ பிள்ளைகளாக்கும்‌ என்று எசாயா இறைவாக்கினர்‌ கூறுகின்றார்‌.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (உரோ. 10:8-13)

கடவுளின்‌ வார்த்தை ஏற்றுக்கொள்ள கூடியதாகவும்‌, ஆற்றலை அளிக்கும்‌ ஒன்றாகவும்‌ செயல்படுகின்றது என்று தூய பவுல்‌ தனது வீசுவாசத்தை வெளிப்படுத்துகின்றார்‌. இந்த விசுவாசம்‌ நம்‌ இதயத்தில்‌ மட்டும்‌ இருக்கும்‌ ஒன்றாக மட்டுமல்லாமல்‌ வாழ்வில்‌ வெளிப்படும்‌ வீசுவாசமாக இருக்க வேண்டும்‌. மனிதன்‌ தன்‌ வாழ்வையே கடவுளின்‌ நற்செய்திக்காக அர்ப்பணிக்க வேண்டும்‌. இத்தகைய வாழ்வு எத்தகைய வேறுபாடுமின்றி மனிதர்‌ அனைவருக்கும்‌ மீட்பைப்‌ பெற்று தரும்‌ என்கிறார்‌. நற்செய்தி வாசகப்‌ பின்னணி (லூக்கா 41-13)

இயேசுவின்‌ சோதனையானது அவருடையத்‌ திருமுழுக்கை ஒத்ததாக அமைந்துள்ளது. இயேசு தன்‌ பணி வாழ்வைத்‌ தொடங்கத்‌ தூய ஆவியால்‌ அபிஷேகம்‌ செய்யப்பட்டு அர்ப்பணம்‌ செய்யப்படுகின்றார்‌. சாத்தானின்‌ சோதனைகள்‌, இயேசு உலகின்‌ போக்கை முறியடிக்க வேண்டும்‌ என்பதன்‌ அடையாளமாக அமைந்துள்ளன. இயேசுவின்‌ சோதனைகளின்போது தூய ஆவியானவர்‌ அவருடன்‌ இருந்து செயல்படுகின்றார்‌, உலகை போக்கிற்கும்‌, உலக அரசுகளுக்கும்‌ அப்பாற்பட்டது கடவுளின்‌ அரசு என்பதைச்‌ சாத்தானை வென்று உணர்த்துவதாக நற்செய்தி அமைந்துள்ளது.

மறையுரை

பல ஆண்டுகளுக்கு மூன்‌ கடவுளின்‌ படைப்பான உலகம்‌ பற்றிய ஹாய்ச்சி நடைபெற்றது. பல. முடிவுகளை மனிதர்கள்‌ வெளியிட்டனர்‌. இறுதியாக அவர்கள்‌ சொன்னார்கள்‌ உலகம்‌ உருண்டையானது. என்றும்‌, உலகம்‌ தன்னைத்‌ தானேச்‌ சுற்றி வருகின்றது என்றும்‌ கண்டுபிடித்தார்கள்‌. ஆனால்‌ இந்த உலகம்‌ " துச்சாணீ" இன்றி சூரியனைச்‌ சுற்றி வருகின்றது.

இறைவனுக்கும்‌ இறைவனுடையத்‌ திட்டத்திற்கும்‌ எதிராய்‌ இருப்பவன்‌ சாத்தான்‌. ஆகவே இறைவனுடைய பிள்ளைகளாகிய நமக்கும்‌, நம்முடைய வாழ்வில்‌ நாம்‌ சரியான பாதையில்‌ செல்லும்‌ போது ஆசை காட்டி அல்லல்‌ பட வைப்பவன்‌. மகிழ்ச்சி தருபவன்‌ போலவும்‌, ஜபத்தில்‌ நம்மை காப்பாற்றுகின்றவன்‌ போலவும்‌ நம்‌ சிந்தனை வழியாக நம்‌ வாழ்க்கையில்‌ நுழைந்து நம்மை கடவுளிடமிருந்து பிரிக்கின்றான்‌. தவறான பாதையில்‌ நம்மைம்‌ கரம்‌ பிடித்து அழைத்துச்‌ சென்று பாதாளத்தில்‌ தள்ளூவானே ஒழியக்‌ கரம்‌ கொடுத்து நம்மை காப்பாற்ற மாட்டான்‌.

ஏழை ஒருவனுக்கு அமெரிக்காவைக்‌ கைப்பற்ற வேண்டும்‌. என்ற சோதனை வராது. மாறாக சாண்‌ வயிற்றைக்‌ கழுவ யார்‌ வயிற்றிலாவது அடிக்க வேண்டும்‌ என்ற சோதனையைத்தான்‌ சாத்தான்‌ கொடுப்பான்‌.

தொடக்கநூலின்‌ துவத்தில்‌ கடவுள்‌ அனைத்தையும்‌ படைத்து உலகையே ஆண்டுகொள்ளும்‌ அதிகாரத்தை ஆதாம்‌, ஏவாள்‌ பொறுப்பில்‌ ஒப்படைத்தாரென வாசிக்கின்றோம்‌. அவர்களுக்கு சோதனையோ சாதாரண பழத்தின்‌ மேல்‌. அவர்கள்‌ சோதனையை வெல்லவில்லை: மாறாகச்‌ சோதனைக்கு உட்பட்டார்கள்‌. அவர்களின்‌ வழியாகப்‌ பாவம்‌ இவ்வுலகத்தில்‌ ஆட்சி பொறுப்பேற்றது. அந்தச்‌ சாத்தானின்‌ ஆட்சியை நமதாண்டவர்‌ முடிவுக்குக்‌ கொண்டு வர மனிதணக அவதரித்து பல சோதனைகளை வென்று சாதனை படைத்து மனிதனுக்கு மீட்பை அளித்தார்‌. ஒவ்வொரு மனிதனின்‌ வாழ்விலும்‌ சோதனை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆணால்‌ நாம்‌ அவற்றை வென்று சாதனை படைக்கும்போது நமது மகிழ்ச்சி இரட்டிப்பாகும்‌ என்று இன்றைய நற்செய்தி வலியுறுத்துகின்றது.

உடல்‌ பசி: இயேசு தந்தையுடன்‌ உரையாடி இரண்டறக்‌ கலகக வேண்டும்‌ என்ற நோக்கில்‌ நாற்பது நாட்கள்‌ உண்ணவில்லை. ஆன்ம தாகத்தைப்‌ போக்கப்‌ பாலைவனம்‌ சென்றுள்ள இயேசுவைத்‌ தவறாகப்‌ புரிந்துக்‌ கொண்ட சாத்தான்‌ மூக்குடைபட்டு பின்‌ வாங்குகிறான்‌.

கடவுளின்‌ சித்தம்‌:
கடவுளின்‌ நீண்ட நாள்‌ ஆசை, சித்தம்‌ தன்னுடைய ஆட்சியை உலகில்‌ நிலைநாட்ட வேண்டும்‌ என்பது அதற்கான வழிகள்‌ செபம்‌, தபம்‌, ஒறுத்தல்‌, பாடுகள்‌, மரணம்‌. உயிர்ப்பு, இலை அனைந்தையும்‌ தன்‌ பணியாகக்‌ கருதி வாழ்கின்ற இயேசுவிடம்‌ சாத்தான்‌ கூறுகிறான்‌, ஒரு சிறிய விளம்பரம்‌ போட்டுக்‌ காட்டுகிறான்‌.

உன்னுடைய இறையாட்சியை அடைய என்னைத்‌ தெண்ட னிட்டு வணங்கியும்‌, இறைமகன்‌ என்ற மேன்மையில்‌ இருந்து பாவம்‌ என்ற பள்ளத்தில்‌ குதித்தும்‌ ஆட்சியை நிலைநாட்டலாமே என்ற விளம்பரம்‌ போன்ற ஒரு சோதனை. ஆனால்‌ இயேசுவுக்கு வந்தச்‌ சோதனைகள்‌ அனைத்தும்‌ சாதனையாக, வெற்றியாக மாறியது. காரணம்‌ அவர்‌ பற்றற்றவைகளை இருகப்‌ பற்றினார்‌. ஆழ்ந்தச்‌ செயம்‌ செய்தார்‌. ஆதாமின்‌ மூலம்‌ உலகில்‌ நுழைந்தப்‌ பாவத்தைப்‌ போக்கி மீட்பை நமக்கு வழங்குகின்றார்‌.

இங்கு இயேசுவுக்கு வந்தது சாதாரண சோதனைகள்‌ அல்ல. மாறாக அவர்‌ எதற்காக இவ்வுலகிற்கு வந்தாரோ, அதையே விட்டு விலகவைக்கக்‌ கூடிய சோதனைகள்‌. இயேசுவோ வெற்றி கொண்டார்‌. இந்தத்‌ தவக்காலம்‌ நமக்கும்‌ ஒரு வெற்றியின்‌ காரணமாக மாற வேண்டும்‌.

நம்முடைய அன்றாட வாழ்வில்‌ எண்ணிலடங்காச்‌ சோதனைகளைச்‌ சந்திக்கின்றோம்‌. மாறிவரும்‌ முன்னேற்றத்திற்கும்‌, சூழலுக்கும்‌ ஏற்ப புதிய புதிய சோதனைகளை நாமும்‌ சந்திக்‌- கின்றோம்‌. ஆங்கிலத்தில்‌ ஒரு பழமொழி உண்டு: " சோதனையில்‌ இருந்து விடுபட சிறந்த வழி, சோதனைக்கு உட்படுவதே" . அவ்வாறு நாம்‌ செய்தோம்‌ என்றால்‌ நாம்‌ கிறிஸ்துவின்‌ அன்பு பிள்ளைகள்‌ என்பதற்கும்‌, நமக்காகக்‌ கிறிஸ்து பட்டப்‌ பாடுகளுக்கும்‌ பொருள்‌ இல்லாமல்‌ போய்விடும்‌.

அனைத்து மனிதர்களையும்‌ உலகுக்கு அறிமுகப்படுத்துவது. குடும்பம்‌. இன்றோ குடும்பங்கள்‌ எளிதில்‌ அதன்‌ தன்மையில்‌ இருந்து மாறுபடுகின்றன. காரணம்‌, தவறான வாழ்க்கை வாழ்பவர்களின்‌ முன்மாதிரிகளைப்‌ பின்பற்றி நாமும்‌ அதே வழியில்‌ நடக்க முற்படுகின்றோம்‌.

மனிதத்‌ தன்மைகள்‌:

அன்பு, இரக்கம்‌, மன்னிப்பு, பரிவு போன்றவைகள்‌. ஆனால்‌ இன்றோ மனிதத்‌ தன்மைகளை இழந்து மனிதன்‌, மனித நிலையில்‌ இருந்து விலங்கு என்ற கடை நிலைக்குத்‌ தள்ளப்பட்டுள்ளான்‌. காரணம்‌, உலகப்‌ பற்றின்‌ மீது அதிக நாட்டம்‌.

அந்தக்‌ காலத்தில்‌ ஒல்வொரு வீட்டிலும்‌ செய அறை என்று ஒன்று இருக்கும்‌. ஆனால்‌ இன்று வீட்டில்‌ உள்‌ நுழைந்தவுடன்‌ முற்றத்தில்‌ இருப்பது சாத்தான்‌ அறை. அதுதான்‌ தொலைகாட்சி அறை. அலுவலகம்‌, பள்ளி செல்லும்‌ முன்பும்‌, படுக்கும்‌ முன்பும்‌, துயில்‌ எழுந்தவுடனும்‌ தொலைக்காட்சிப்‌ பெட்டியின்‌ முகத்தில்தான்‌ கண்விழிக்க ஆசைப்படுகின்றோம்‌. கடவுளை நம்மிடமிருந்து எடுத்து. விட்டு நஞ்சை நம்மில்‌ உருவாக்குகின்றது இந்தத்‌ தொலைக்காட்சிப்‌ பெட்டி.

இவ்வாறு இன்றும்‌ நாம்‌ சோதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்‌. சாத்தான்‌ நம்‌ வல்லமையைத்‌ தீண்டுவான்‌. கடவுளோ நம்‌ வலுவின்மையில்‌ வல்லமையைக்‌ காண்பவர்‌. நாம்‌ வலுலிந்தவர்கள்‌, சாதாரண மனிதர்கள்‌. நாம்‌ சோதனைகளை வென்று வெற்றி பெற வேண்டுமாயின்‌ " பற்றற்றவரை இறுகப்‌ பற்ற. வேண்டும்‌". பெரியவர்களாகிய நாம்‌ செபிக்க வேண்டும்‌, குழந்தைகளுக்கும்‌ செபிக்கக்‌ கற்றுத்தர வேண்டும்‌. செபத்தின்‌ வல்லமையை நாம்‌ நம்‌ குழந்தைகளுக்கு எடுத்துக்கற வேண்டும்‌. இயேசு செபித்தார்‌ வெற்றி கொண்டார்‌. நமது வாழ்க்கைப்‌. பயணத்தில்‌ செபமே " அச்சாணி" யாக இருக்க வேண்டும்‌. அப்படியிருந்தால்‌ எந்த ஆபத்துமின்றி நாம்‌ இவ்வுலகில்‌ பயணம்‌ செய்ய முடியும்‌. " செபிப்போம்‌ சோதனைகளை வென்று சாதனை படைப்போம்‌".

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

தவக்காலம்‌ என்பது அருளின்‌ காலம்‌, நாம்‌ கடவுளூடன்‌ கொண்டுள்ள அன்புறவைப்‌ புதுப்பித்து, அவருக்காக வாழ முனைகின்ற காலம்‌. இப்படி நாம்‌ வாழ முனைகின்ற போது தடைகள்‌ தவிர்க்க முடியாதவை. தடைகளை நாம்‌ வெல்ல கேடயம்‌ " இறைவார்த்தை" இறைவார்த்தை உயிருள்ளது. அந்த உயிருள்ள இறைவார்த்தை நம்மைக்‌ கடவுளின்‌ அன்புறவில்‌ வாழ, வளர துணை செய்யும்‌.

உலகம்‌ போக்கிலான வாழ்க்கை முறைகளைத்‌ தவிர்த்து, உழைப்பு, ஆடம்பரம்‌, பொழுது போக்கு போன்றவற்றைத்‌ தவிர்த்து, இறைமகள்‌ இறைவனைத்‌ நேடி தனிமையான இடத்திற்குச்‌ (பாலைவனத்திற்கு) சென்றது போல நாமும்‌ இறை அனுபவம்‌ பெற இறைவனை நோக்கிச்‌ செல்ல வேண்டும்‌.
 
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌ பெங்களூர்

தவக்‌ காலம்‌ முதல்‌ ஞாயிறு
பின்னணி 1

தவக்காலத்தின்‌ முதல்‌ ஞாயிறான இன்று இயேசு சோதிக்கப்பட்டது நமது தியானத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இயேசுவின்‌ சோதனைப்‌ பற்றிய குறிப்புகள்‌ எபி 2:14-18; 415; மாற்‌ 1:12-13 ஆெவற்றில்‌ நேரடியாகவும்‌, யோவா 6:14-15; 7:1-9; 12:27-28 அகிய இடங்களில்‌ மறைமுகமாகவும்‌ குறிப்‌ பிடப்பட்டிருந்தாலும்‌, மத்‌ 4:1-11 மற்றும்‌ லூக்‌ 4:1-13-ல்‌ தான்‌ அது விரிவாக விவரிக்கப்படுகின்றது. இங்கு நமது சிந்தனைக்கு லூக்கா நற்செய்தியின்படியான பகுதியை எடுத்துக்‌ கொள்வோம்‌. அதற்குமுன்‌ இப்பகுதிக்கான சில பின்னணித்‌ தகவல்களை தெரிந்து கொள்வது நல்லது. முதலாவதாக, இயேசுவின்‌ காலத்தி லும்‌ அதற்குப்‌ பிந்தைய தொடச்கத்‌ திருஅவையின்‌ காலத்திலும்‌ மெசியாவைப்‌ பற்றிய எதிர்பார்ப்புக்கு இந்தப்‌ பகுதி பதிலளிக்‌ ன்றது. முதல்‌ நூற்றாண்டு கால யூத சமயத்தில்‌ மெசியாவும்‌, இறையாட்சியும்‌ வன்முறையாகவும்‌, இராணுவப்‌ பலத்துடனும்‌, 'தீவிரவாதத்தோடும்‌ வரும்‌ எனும்‌ எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால்‌ இயேசு அத்தகைய ஒரு மெசியாவாகவோ, அவரது இறையாட்சி அத்தகைய ஒன்றாகவோ இல்லாமல்‌, அதாவது தனது உடல்‌ தேவைக்கு இயற்கையை வளைக்காமல்‌, தன்‌ புகழுக்காக பிறருக்கு அடிபணியாமல்‌, தனது பாதுகாப்புக்கு இறைவனை வளைக்காமல்‌, எசாயா முன்‌ மொழிந்த (காண்‌. லூக்‌ 4:14-30). ஊழியனாய்‌, இறைவாக்கெரரய்‌ " அமைதியின்‌ வழியில்‌' (காண்‌. லூக்‌ 1:79; 2:14, 29; திப 10:36) வருவார்‌ என்பதை நிறுவுவதற்கு இப்பகுதி பயன்படுகின்றது.

லூக்கா நற்செய்தியில்‌ இப்பகுதி தலைமுறை அட்டவணைக்கும்‌ (காண்‌. லூக்‌ 3:23-38), இயேசுவின்‌ நாசரேத்து அறிக்கைக்கும்‌ (காண்‌. லூக்‌‌ 4:14-30) இடையே வைக்கப்‌ பட்டுள்ளது. இவ்வாறு, தலைமுறை அட்டவணையின்‌ வழியாக இயேசு தூய ஆவியால்‌ பிறந்த கடவுளின்‌ மகன்‌ என்பதை நிறுவிய பிறகு, அவர்‌ எத்தகைய இறைவாக்கினராக - அருள்‌ பொழிவு பெற்றவர்‌, ஏழையருக்கு நற்செய்தி அறிவிப்பவர்‌, சிறைப்பட்டோரை விடுவிப்பவர்‌, பார்வையற்றோருக்குப்‌ பார்வை தருபவர்‌, ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை வழங்குபவர்‌ - இருக்கப்‌ போகின்றார்‌ என்பதை விவரிப்பதற்கு முன்பாக, அவர்‌ எப்படிப்‌ பட்டவராக இருக்கமாட்டார்‌ என்பதை விவரிக்க இந்தப்பகுதி பயன்படுகின்றது.

இது ஒரு போராட்டம்‌


மேலே கூறப்பட்ட விவரங்களின்‌ பின்னணியில்‌ இது ஒரு போராட்டம்‌; இறைவனுக்கும்‌ இய சக்திக்கும்‌ இடையே, இறையாட்டிக்கும்‌ அலகையின்‌ ஆட்சிக்கும்‌ இடையே நடக்கின்ற ஒரு போராட்டம்‌. இதில்‌ இயேசு தனது உள்ளத்தில்‌ தனது மெசியா வழியை தேர்ந்தெடுக்க நடத்திய போராட்டத்தில்‌ வெற்றிகண்டு இறையாட்கி சார்பாய்‌ நின்று அலகையின்‌ ஆட்சியை வென்றார்‌ என்பதையும்‌, இவ்வாறு அலகையின்‌ ஆட்சிக்கு எதிராக இறையாட்சி தொடங்கிவிட்டது என்பதையும்‌ நிரூபிக்க முயல்கிறார்‌ புனித லூக்கா (மேலும்‌ காண்‌. லூக்‌ 11:20)
விவிலிய அடையாளங்கள்‌

இனி நற்செய்திப்‌ பகுதிக்குள்‌ நுழைந்து அது தரும்‌ சில நுணுக்கமான செய்திகளை அறிந்துகொள்ள முயல்வோம்‌. இந்த நற்செய்திப்‌ பகுதியில்‌ பாலைநிலம்‌, நாற்பது, சோதனை ஆசிய அடையாளங்கள்‌ குறிப்பிடப்படுகின்றன. இஸ்ரயேலரின்‌ விவிலியப்‌ பின்னணியில்‌ ஆழ்ந்த அர்த்தங்கள்‌ உள்ளன அவற்றை இவண்‌ காண்போம்‌.

நாற்பது நாள்‌ :
இது மோசே உடன்படிககையின்‌ வார்த்தைகளை பலகையில்‌ எழுதுவதற்குமுன்‌ உண்ணா நோன்பு இருந்ததையும்‌ (காண்‌. விப 34:28), எலியா ஒரேபு மலையை நோக்கி பயணம்‌ செய்ததையும்‌ (கண்‌. 1 அர 19:8) நினைவுட்டுகின்றது.

பாலைநிலம்‌: இஸ்ரயேலர்‌ நாற்பது ஆண்டுகள்‌ சீனாய்‌ பாலைநிலத்தில்‌ பயணித்ததைக்‌ (காண்‌. இச 8:2; திபா 95:10; திபா 7:86) குறிப்பதாகக்‌ கொள்ளலாம்‌.

சோதனை: இது இஸ்ரயேலர்‌ பாலைநிலப்பயணத்தில்‌ தங்களின்‌ அடிமை நிலையில்‌ சகமான கடத்த காலத்தையும்‌, நிச்சயமான எதிர்காலத்தையும்‌ வேண்டி இறைவனை சேதித்ததைக்‌ (காண்‌. எண்‌ 11:1-3; 14:1-3 திய 7:39-41) குறிக்கும்‌, அதே வேளையில்‌ இது இறைவன்‌, இறைச்‌ சட்டத்தை இஸ்ரயேலர்‌ பாதுகாப்பார்களா இல்லையா? என்று சோதித்ததையும்‌. குறிக்கும்‌ (காண்‌. இச 8:2).

இனி இயேசுவுக்கு அலகை தந்த மூன்று சோதனைகளின்‌ பொருளைக்‌ காண்போம்‌.
மூன்று சோதனைகள்‌

இந்த மூன்று சோதனைகளும்‌ இணைந்து இயேசு யார்‌ அல்லது எத்தன்மையர்‌ என்பதைத்‌ தெளிவுபடுத்துகன்றன, அதாவது, இயேசு இந்தச்‌ சோதனைகளை இறைவார்த்தையைக்‌ கொண்டு, அதை மேற்கோள்‌ காட்டி. வெற்றி கொள்கின்றார்‌. ஆக, இறைவார்த்தை அவருக்கு விளக்காய்‌, வாளாய்‌ உதவுகின்றது (காண்‌. வச 8:3 6:13,16). மேலும்‌ இயேசு தனது பசியையும்‌, தேவைகளையும்‌, புகழையும்‌, அதிகாரத்தையும்‌, தேடாமல்‌ இறைத்தந்தையின்‌ திருவுளத்தைத்‌ தேடி, அதற்குக்‌ கீழ்ப்படிந்த இறைமகன்‌ என்பதையும்‌ இந்த மூன்று சோதனைகளும்‌ சேர்ந்து தெளிவுபடுத்துகின்றன.

இனி ஒவ்வொரு சோதனையின்‌ வழி நற்செய்தியாளர்‌ உணர்த்தும்‌ பாடம்‌ என்ன எனக்‌ காண்போம்‌.

முதல்‌ சோதனை (வச 2-4)

மானுட வாழ்வுக்கு உணவே எல்லாம்‌ அல்ல. அந்த உணவு புதுமையின்‌ வழியாய்‌ வருவதாயிருந்தாலும்‌ அதையும்‌ தாண்டி, மத்தேயு நற்செய்தியிலும்‌ (காண்‌. மத்‌ 4:4), இணைச்‌ சட்டத்திலும்‌ (காண்‌. இச 8:3) குறிப்பிடப்படுவதுபோல, இறை வார்த்தையினாலும்‌ மனிதர்‌ வாழ வேண்டும்‌. அதனால்தான்‌ இயேசு, " அழிந்துபோகும்‌ உணவுக்காக உழைக்கவேண்டாம்‌. நிலைவாழ்வுதரும்‌ அழியாத உணவுக்காகவே உழையுங்கள்‌"

இரண்டாம்‌ சோதனை

அனைத்து உயிர்களின்‌ மூலக்காரணமாகிய இறைவன்‌ ஒருவரே வணங்குவதற்கு உரியவர்‌. அவருடைய இடத்தில்‌ வைக்கப்‌ படும்‌எந்தநபரும்‌, பொருளும்‌, கருத்தியலும்‌ சிலைவழிபாட்டுச்குச்‌ சமமேயன்றி உண்மை வழிபாடு அல்ல.
மூன்றாம்‌ சோதனை (வச. 9-13)

இந்தமூன்றாவது சோதனை கொஞ்சம்‌ விஷமத்தனமானது. அலகையின்‌ முதல்‌ இரண்டு சோதனைகளையும்‌ இறை வார்த்தையைக்‌ கொண்டு வெற்றிக்கொண்ட இயேசுவை மடக்க அலகையும்‌ இிருநூலை மேற்கோள்காட்டிப்‌ (காண்‌, திபா 91:11- 12) பேசுகின்றது. இதைத்தான்‌ " சாத்தான்‌ வேதம்‌ ஓதுகின்றது" என்பது போலும்‌! அதனுடைய சோதனை இதுதான்‌ " நீர்‌ கடவுளின்‌ மசுனானால்‌ அதை இப்போது இந்த எருசலேம்‌ ஆலயத்தின்‌ உயர்ந்த பகுதியிலிருந்து குதித்து நிரூபித்துக்‌ சொள்ளாம்‌. ஏலெனில்‌ விவிலியமே " உம்மைப்‌ பாதுகாக்கும்படி கடவுள்‌ தம்‌ தூதருக்கு உம்மைக்‌ குறித்துச்‌ கட்டளையிடுவார்‌" என்றும்‌ உமது கால்‌ கல்லில்‌ மோதாதபடி அவர்கள்‌ தங்கள்‌ கைகளால்‌ உம்மைத்‌ தரங்கிக்கொள்வார்கள்‌' (வச 10-11) என்கின்றது. அருங்கச்‌ சொன்னால்‌, இயேசுவை இறைவனை, சோதிக்கச்‌ சொல்றது. ஆனால்‌ நாம்தான்‌ இறைத்‌ இட்டத்திற்கு பணிந்து நடக்கவேண்டுமேயொழிய, இறைத்‌ திட்டத்தை நமது விருப்பத்திற்கு வளைக்கக்கூடாது, இறைவனைச்‌ சோதிக்கக்‌ கூடாது என்னும்‌ பொருளில்‌ " உன்‌ கட்வுளாகிய ஆண்டவரைச்‌ சோதிக்க வேண்டாம்‌" (வச. 12,6:16) என பதிலிறுத்தி வெற்றிகொள்கின்றார்‌. அதாவது " நான்‌ கடவுளைச்‌ சோதிக்க மாட்டேன்‌" நீயும்‌ என்னைச்‌ சோதிக்காதே' என்று கூறுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
முடிவாக

இன்றைய உலகில்‌ நல்ல மனிதராகவும்‌, இறைத்திட்டத்திற்கு அமைந்த க
ிறிஸ்தவராகவும்‌ வாழ்வதற்கு வரும்‌ சோதனைகள்‌ ஏராளம்‌, ஏராளம்‌. அதையெல்லாம்‌ நாம்‌ இறைவார்த்தையின்‌ துணைகொண்டு எதிர்த்து நின்று வெற்றிகாண வேண்டும்‌. தளர்ந்து தோல்வியடையக்‌ கூடாது.
 
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.

முதல்‌ ஞாயிறு முதல் வாசகம்: இச. 26:4-10

இஸ்ரயேலரின்‌ " விசுவாச அறிக்கை" என்று கூறப்படும்‌ வாசகங்களுள்‌ (இச 6: 20-23; யோசு 24: 113; நெகே 9:7-25) இன்றைய வாசகமும்‌ (இச 26: 4-10) ஒன்று, விளைச்சலின்‌ புதுப்‌ பலனை இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க வரும்போது, இஸ்ரயேலர்‌ இவ்‌ அறிக்கையை வெளியிட்டனர்‌.

இஸ்ரயேலர்‌ அனுபவித்த துயரம்‌

நாடோடி மக்கள்‌, புதுக்குடியேற்ற மக்கள்‌, புலம்‌ பெயர்ந்த மக்கள்‌ அனுபவிக்கும்‌ அத்தனை துன்பத்தையும்‌ இஸ்ரயேலர்‌ அனுபவித்தனர்‌. வேற்று நாடு, வேற்று இனத்தாரோடு என்றும்‌ பூசலும்‌ புகைச்சலும்‌; குடியேறிய நாட்டினரோ (எகிப்தியர்‌) இவர்களுக்குக்‌ கொடுக்காத தொல்லைகள்‌ இல்லை. " நம்மை ஒடுக்கித்‌ துன்புறுத்தி, சுமக்க முடியாச்‌ சுமைகளை நம்மேல்‌ சுமத்தினர்‌" (26 : 6). இது இஸ்ரயேலர்‌ நிலை மட்டுமன்று, நமது நிலையம்கூட, நம்‌ தாயகமோ விண்ணகத்திலுள்ளது. இவ்வுலகில்‌ வாழும்‌ மட்டும்‌ நாம்‌ " அந்நியர்கள்‌, வேற்று நாட்டினர்‌" (எபே. 11: 13, 1பேது 2: 11), இவ்வுலகத்திலே நாம்‌ வாழ்ந்தாலும்‌ இவ்வுலகத்தவர்‌ போன்று வாழக்‌ கூடாது. அந்நியர்‌ என்ற முறையிலே நாம்‌ இங்கு. வாழ்க்கை நடத்தும்போது, சில எதிரிகளை நாம்‌ எதிர்ப்பட்டுத்தான்‌ ஆகவேண்டும்‌. ஏனையோரின்‌ இகழ்ச்சி, பகைமை முதலியன நாம்‌ கிறிஸ்தவர்கள்‌ என்பதனாலே, அன்பு வாழ்வு வாழ்கிறோம்‌, நீதிக்குப்‌ போராடுகிறோம்‌ என்பதனாலே, இவ்வுலக வழிமுறைகள்‌, மதிப்பீடுகளை எதிர்த்து வாழ்வதாலே நம்மைத்‌ துன்புறுத்தலாம்‌; ஏன்‌, துன்புறுத்த வேண்டும்‌. இத்தகைய துன்பங்களை நாம்‌ அனுபவிக்கிறோமா? இல்லாவிடில்‌ நம்‌ கிறிஸ்தவ வாழ்வில்‌ ஏதோ குறையிருக்கிறது எனலாம்‌. எனவே துன்பங்களை விரும்பி ஏற்போம்‌.

இறைவன்‌ அளித்த உதவி

இஸ்ரயேலின்‌ துன்பத்தின்‌ மத்தியிலேதான்‌, அவர்களுடைய சிறுமையிலும்‌ அவதிமிலும்‌ துயரத்திலும்தான்‌ (6:7-8) ஆண்டவரின்‌ உதவியும்‌‌ வலிமையும்‌ (காண்‌: " வலிய கரத்தாலும்‌ ஓங்கிய புயத்தாலும்‌) அவருடைய அருஞ்செயல்களும்‌ (அடையாள அதிசயங்களைக்‌ சாட்டி" ) வெளிப்படுகின்றன. எங்கெல்லாம்‌ கண்ணீர்‌ கசிகிறதோ அங்கெல்லாம்‌ கடவுள்‌ இருக்கிறார்‌; எங்கெல்லாம்‌ துயரம்‌ தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம்‌ துணைவர்‌ இருக்கிறார்‌; எங்கெல்லாம்‌ இன்னல்‌ இடைஞ்சல்களை எதிர்ப்படுகிறோமோ அங்கெல்லாம்‌ இறைவன்‌ இருக்கிறார்‌. இதுவே இன்றும்‌ இறைவன்‌ நமக்குக்‌ கற்றுத்‌ தரும்‌ பாடம்‌. எனவே, துன்பம்‌ கண்டு துவண்டு விடாது இறைவன்‌ கரத்தைப்‌ பற்றிக்கொள்வோம்‌. " தாழ்வற்ற நிலையில்‌ நம்மை நினைவுகூர்பவர்‌ அலர... நம்‌ எதிரிகளிடமிருந்து நம்மை விடுவிப்பவர்‌ அவரே" (திபா 135: 23 -24), அலைகளின்‌ மத்தியிலே ஆண்டவரைக்‌ காண்போமா? (மாற்‌ 4: 35-41) " ஏன்‌ அஞ்சுகிறீர்கள்‌? உங்களுக்கு இன்னும்‌ நம்பிக்கை இல்லையா?" (மாற்‌ 4: 40) என்ற இயேசுவின்‌ சொற்கள்‌ நம்‌ காதில்‌ ஒலிப்பனவாக.

இஸ்ரயேல்‌ காட்டிய நன்றி

இறைவன்‌ செய்த உதவியை இஸ்ரயேலர்‌ மறக்கவில்லை. துயர்‌ களைந்த துணைவனுக்கு நன்றிக்‌ கடன்‌ செலுத்துகின்றனர்‌ (26:10). " நன்றி பறப்பது நன்றன்று" என்பதை நாமும்‌ உணர வேண்டும்‌. அன்றாடம்‌ நமக்கு உயிர்‌, உண்டி, உடை, உறையுள்‌ அளித்துப்‌ பாதுகாத்து வரும்‌ இறைவனுக்கு நம்‌ உள்ளங்கள்‌ தினமும்‌ நன்றிப்‌ பண்‌ இசைக்கின்‌ நனவா? இறைவன்‌ நமக்கு உதவுவது தம்‌ மக்கள்‌ வழியாகவே என்பதை உணர்ந்து, நம்‌ வாழ்க்கையை வளப்படுத்த உதவும்‌ அனைவருக்கும்‌ (நம்‌ பெற்றோர்‌, ஆசிரியர்‌, குருக்கள்‌, உறவினர்‌, நண்பர்களுக்கு) நன்றிக்‌ கடன்பட்டவர்களாக வாழ்கிறோமா? நன்றி என்பது ஒரு கடமை என்பதைத்தானே " நன்றிக்‌ கடன்‌" , " நன்றிக்‌ கடப்பாடு" என்ற சொற்கள்‌ உணர்த்துகின்றன. எனவே கடமையுள்ளத்தோடு வாழ்வோம்‌ " நன்றி யென்ற சொல்‌ நம்‌ நாவில்‌ என்றும்‌ நடனமாடுவதாக..
(உன்‌ கடவுளாகிய ஆண்டவரைப் பணிந்து தொழுக்கடவாய்)

இரண்டாம் வாசகம் :உரோ10:8-13

ஒருவன்‌ மீட்பப்‌ பெற வானத்தை அளக்க வேண்டியது இல்லை; கடலைத்‌ தாண்ட வேண்டியதில்லை. கடவுளுடைய கட்டளைகளை அனுசரித்தாலே போதும்‌ என்பது இணைச்‌ சட்டத்தின்‌ போதனை (30 : 11 - 12). அக்கட்டளைகள்‌ உதட்டிலும்‌ உள்ளத்திலும்‌ இருக்க வேண்டும்‌ என்றும்‌ அதே நூல்‌ கூறுகிறது. எனினும்‌ யூதர்கள்‌ சட்டங்களின்‌ உட்பொருளை மறந்து, அவற்றின்‌ வெளித்தோற்றத்திலேயே கவனம்‌ செலுத்தினர்‌. பவலடியாரோ " கிறிஸ்துதான்‌ திருச்சட்டத்தின்‌ நிறைவு. அவர்மேல்‌ நம்பிக்கை கொள்ளும்‌ எவரும்‌ கடவுளுக்கு ஏற்புடையவர்‌ ஆவர்‌" (10: 4) எள்ற உண்மையை இன்றைய வாசகத்தில்‌ வலியுறுத்துகிறார்‌.

இயேசு ஆண்டவர்‌


உரோமைய அரசனை, அவளது குடிமக்கள்‌ ஆண்டவர்‌ என்று அழைத்தனர்‌. அரசர்கள்‌ தங்களையே தெய்வமாக்கிக்கொண்டனர்‌. ஆண்டவர்‌ என்ற சொல்‌ தெய்வத்தைச்‌ கட்டும்‌ சொல்லாகவும்‌ பயன்பட்டதால்‌, அரசர்களையும்‌ மக்கள்‌ தெய்வமாகவே எண்ணினர்‌. இஸ்ரயேல்‌ மக்கள்‌ தம்‌ ஒப்பற்ற கடவள்‌ யாவேயை ஆண்டவர்‌ என்றே அழைத்தனர்‌. அகில உலகையும்‌ ஆண்டு நடத்தும்‌ தெய்வம்‌ என்ற பொருளில்தான்‌ இயேசுவையும்‌ ஆண்டவர்‌ என்று அழைக்கிறோம்‌. இவருக்கு நிகரான கடவுள்‌ இல்லையென்பதை ஆண்டவர்‌ என்ற சொல்லினால்‌ அறிக்கையிடுகின்றோம்‌. தலைமையேற்போர்‌, அதிகாரம்‌ தாங்குவோர்‌ ஆகியோர்க்கும்‌ (கொலோ 2 : 10) படைப்பனைத்திற்குமே அவரே ஆண்டவர்‌ என்பது (பிலி 2 : 10) பவுலடியாரின்‌ உறுதியான போதனை. நமதாண்டவர்‌ இயேசுகிறிஸ்து இன்றும்‌ நம்முடன்‌ வாழ்கிறார்‌. திருத்தூதர்களின்‌ உரையைச்‌ செவிமடுத்த மக்கள்‌, இயேசுவைத்‌ தம்‌ ஆண்டவராக ஏற்று அறிக்கையிட்ட பின்னரே திருமுழுக்குப்‌ பெறுகின்றனர்‌ (தி 2:36-14; 16:30-33)

இயேசு ஆண்டவர்‌ - உதட்டிலும்‌ உள்ளத்திலும்‌

" இயேசு ஆண்டவர்‌ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக்‌ கடவுள்‌ உயிர்த்தெழச்‌ செய்தார்‌ என நீங்கள்‌ உள்ளூர நம்பினால்‌ மீட்புப்‌ பெறுவீர்கள்‌" (9) என்கிறார்‌ பவுல்‌ அடியார்‌. உள்‌ மனத்தில்‌ உறைந்து. கிடப்பதே உதடு வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. உள்ளமும்‌ உதடும்‌ ஒன்றுபடும்பொழுது அது உண்மை; மாறுபடும்‌ பொழுது அது பொய்மை. செயலற்ற விசுவாசம்‌ செத்த விசுவாசம்‌; அப்படியே விசுவாசத்தின்‌ ஆடப்படையில்‌ தோய்ந்து வராத சொற்கள்‌ வெறும்‌ ஒலிகளே. உள்ளத்தில்‌ ஆண்டவரை ஏற்றுக்கொள்வதுடன்‌, உதட்டாலும்‌ உலகறிய அவரை "அறிக்கையிட வேண்டும்‌. " என்னைக்‌ குறித்தும்‌ என்‌ வார்த்தைகளைக்‌ குறித்தும்‌ வெட்கப்படும்‌ ஒவ்வொருவரையம்‌ பற்றி மானிட மகனும்‌ தம்‌ தந்தையுடன்‌ மாட்சியோடு தூய வானதூதருடன்‌ வரும்போது வெட்கப்படுவார்‌" " (மாற்கு 8 : 38). இயேசு நம்‌ ஆண்டவர்‌ என்று உலகறிய. அறிக்கையிட்டதால்தான்‌ தம்‌ உயிரையும்‌ இழந்து இயேசுவுக்குச்‌ சான்று பகர்ந்தனர்‌ மறைசாட்சிகள்‌. பலர்‌ முன்னிலையில்‌ ஏனனத்தையும்‌, இழப்பையும்‌ பொருட்படுத்தாது என்னையே கிறிஸ்தவனாக அறிமுகப்‌ படுத்தும்‌ திடமனது எனக்குண்டா?

விசுவாசசத்தின்‌ மூலைக்கல்‌ கிறிஸ்து.

" இதோ, சீயோனில்‌ நான்‌ ஓர்‌ அடிக்கல்‌ நாட்டுகிறேன்‌. அது பரிசோதிக்கப்பட்ட கல்‌... நம்பிக்கை கொண்டோன்‌ பதற்றமடையான்‌ " என்ற எசாயா இறைவாக்கினைக்‌ குறிப்பிட்டு (28: 16) கிறிஸ்து என்ற மூலைக்கல்லின்‌ மீது விசுவாசம்‌ கொள்பவன்‌ ஏமாற்றம்‌ அடையான்‌ என்கிறார்‌ பவுல்‌ அடியார்‌ (19. என்னில்‌ விசுவாசம்‌ கொள்பவன்‌ தீர்ப்புக்கு ஆளாவதில்லை; விசுவாசம்‌ கொள்ளாதவனோ ஏற்கெனவே தீர்ப்புப்‌ பெற்றுவிட்டான்‌ என்ற நமதாண்டவரின்‌ சொற்களை (யோவா 3: 16) நாம்‌ மனத்தில்‌ இறுத்த வேண்டும்‌. இயேசுவில்‌ விசுவாசம்‌ கொள்பவர்‌ களிடையே சாதி, பொழி, செல்வம்‌, செல்வாக்கு என்ற அடிப்படையில்‌. பிளவுகள்‌ கூடாது. சாதி வெறி, பொழிப்‌ பிரச்சனை, கட்சிப்‌ பாகுபாடு. நம்மிடையே பிணக்குகளை ஏற்படுத்தும்‌ பொழுது, நமதாண்டவரையே கூறுபோடுகின்றோம்‌ என்ற அச்சம்‌ நம்மிடம்‌ ஏற்பட வேண்டும்‌. நான்‌ ஒற்றுமையின்‌ கருவிய? அல்லது எதையும்‌ கூறுபோடும்‌ கோடரியா?
(யூதர்கள்‌ என்றோ, கிரேக்கர் என்றோ, வேறுபாடில்லை.)

நற்செய்தி:லூக்கா 4:1-13

இயேசு எதிர்ப்பட்ட சோதனைகள்‌ பற்றி லூக்கா எழுதியுள்ள பகுதி இன்றைய வாசகமாயமைகிறது. முதல்‌ ஆண்டு 2 - ஆம்‌ ஆண்டுக்குள்ள நற்செய்தி விளக்கத்தைக்‌ காணவும்‌. இயேசு எதிர்ப்பட்ட சோதனைகள்‌ இன்று நாம்‌ திருச்சமையிலே எதிர்ப்படும்‌ சோதனைகளே. இயேசு அளித்த பதிலே நம்முடைய சோதனைகளிலும்‌ நாம்‌ அளிக்கும்‌ பதில்‌ ஆக இருத்தல்‌ வேண்டும்‌.

இயேசுவுக்கு வந்த சோதனைகள்‌ திருச்சபைக்கும்‌ வரும்‌ சோதனைகளே

அன்று இயேசு பசியால்‌ சோதிக்கப்பட்டார்‌. தம்‌ பசிவைத்‌ தீர்க்கப்‌ புதுமை செய்ய விரும்பவில்லை. அதே இயேசு பிறர்‌ பசியால்‌ வாடியதைக்‌ கண்டு " அவர்கள்மீது மனமிரங்கி " (மாத்‌ 6:34) , அவர்களுக்காக அப்பத்தையும்‌ மீனையும்‌ பலுக்கி, அவர்கள்‌ பசியைப்‌ போக்குகிறார்‌. நம்முடைய பசியை, இயேசுவைப்‌ போன்று நாம்‌ ஏற்றுக்கொள்வது நமக்கு நலம்‌ பயக்கும்‌. எனினும்‌ பிறர்‌ பசிக்கக்‌ காண்பது நமக்கு ஒரு சவாலாய்‌ அமைய வேண்டும்‌. இயேசு மனம்‌ இரங்கிப்‌ பிறர்‌ பசி தீர்த்தார்‌. நாம்‌ மனமிரங்கிப்‌ பசித்தோருக்கு உண்ணக்‌ கொடுப்பது மட்டுமன்று, மனம்‌ குமுறிப்‌ பசியை. பிணியை ஒழித்திடப்‌ போர்க்‌ கொடி உயர்த்த வேண்டும்‌. " தனியொரு வனுக்கு உணவில்லையெனில்‌ செகத்தினை அழித்திடுவோம்‌" என்ற பாரதியின்‌ பட்சி ஏக்கம்‌ நம்மைத்‌ தொடுமா? பசி, பிணியை நம்முடைய சூழலிலே போக்குவதற்கு நாம்‌ என்ன முயற்சிகள்‌ எடுக்கிறோம்‌? கடவுளின்‌ சாயல்கள்‌ பசியால்‌ நலியக்‌ கண்டு நாம்‌ வாளாதிருப்போமா? அடுத்து, இயேசுவுக்கு வந்த சோதனை அதிகாரம்‌, ஆட்சி, தன்‌ உயர்வு. இயேசு செய்யவேண்டிய ஒன்று தன்னுடைய தலையாய குறிக்கோளை - தந்தையின்‌ விருப்பப்படி நடப்பதை - நிறைவேற்றுவதாகும்‌. எனவே " நாள்‌" , " எனது" என்பவற்றைத்‌ தரைமட்டம்‌ ஆக்குகிறார்‌. தன்‌ விருப்பமன்று, தந்தையின்‌ விருப்பமே தலையாயது என்பார்‌. " அவரை மட்டுமே ஆராதிப்பாயாக (4: 8) என்பதே அவரின்‌ வாழ்க்கைக்‌ குறிக்கோளாக மாறுகிறது. அதிகாரம்‌, ஆணவம்‌ நம்மை ஆட்டிப்படைக்க விடுவோமா? அல்லது " நீன்பற்று அலால்‌ ஓர்‌ பற்று மற்றது உற்றிலேன்‌" என்று இறையவனுக்கு மட்டுமே தலை பணிவோமா?' இறுதியாக, இயேசு, கடவுளையே சோதிக்குமாறு சாத்தான்‌ தூண்டுகிறான்‌. புதுமை செய்வாரோ இறைவன்‌ என்பது கேள்வி. இயேசுவோ " உன்‌ கடவுளாகிய ஆண்டவரைச்‌ சோதிக்க வேண்டாம்‌ " (4: 12) என்று பதிலிறுப்பார்‌. நம்முடைய கிறிஸ்தவ வாழ்வு புதுமைகளை நம்பியே நடப்பது எல்வளவு கீழ்த்தரமானது? கடவுள்‌ - மனித உறவை லியாபாரப்‌ பொருளாகக்‌ கணிக்கும்‌ போது மதம்‌ ஒரு போதைப்‌ பொருள்‌ தாளே? " உமது திருவுளம்‌ விண்ணுலகில்‌ நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும்‌ நிறைவேறுக " என்பது நமது செயமாயமைவது எப்போது?" கடவுள்‌ சித்தம்‌ நமது பாக்கியம்‌.

இயேசுவின்‌ துணையாளரே திருச்சபையின்‌ துணயாளர்‌


லூக்கா இப்பகுதியில்‌ தாய ஆவியாருக்கு முக்கியத்துவம்‌ தருவது காணத்தக்கது. " பரிசுத்த ஆவியால்‌ நிறைந்தவராய்‌" (4 : 1) இயேசு திருமுழுக்குப்‌ பெற்று யோர்தானிலிருந்து (3 : 21-22) பாலைவனம்‌ வருகிறார்‌. " பின்னர்‌ இயேசு அதே ஆலியால்‌ பாலைநிலத்திற்கு அழைத்துச்‌ செல்லப்பட்டார்‌" (4:1). அவரின்‌ செயல்கள்‌ அனைத்தும்‌ தூய ஆலவியாரால்‌ தூண்டப்பட்டு நடைபெறுகின்றன. தூய ஆலியாருக்குப்‌ பணிந்த நிலையிலேதான்‌ அவர்‌ சோதனைகளின்‌ பேல்‌ வெற்றி கொள்கிறார்‌. பின்னர்‌ சோதனைகளின்‌ முடிவிலும்‌ " தூய ஆவியாரின்‌ வல்லமை உடையவராய்‌ கலிலேயாவுக்குத்‌ திரும்பி" (4 : 14) நற்செய்திப்‌ பணிபுரிகிறார்‌. சோதனைகளுக்கு முன்பும்‌ சரி சோதனைகள்‌ மத்தியிலும்‌ சரி, சோதனைகளின்‌ முடிவிலும்‌ சரி, தூய ஆவியாரின்‌ துணை இயேசுவுக்குத்‌ தொடர்ந்து கிடைக்கிறது. இத்தூய ஆலியாரின்‌ ஏவுதல்களுக்கும்‌, உந்துதல்களுக்கும்‌ திறந்த மனதுள்‌ எவர்களாக வாழ்வது இத்தவக்‌ காலத்தில்‌ நாம்‌ செய்யும்‌ மேலான ஒரு பக்தி முயற்சியாக இருப்பதாக.
(ஆண்டவர் ‌ ஆவியானவரால்‌ நடத்தப்‌ பெற்றார்‌.)
 
அருட்பணி. தாமஸ் ரோஜர்

சோதனைகள் வெல்வோம் சாதனைகள் படைப்போம்

மத்தேயு நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தியை யூத மக்களுக்கு எழுதுகிறார். யூதர்களுக்கு மோசே மிகப்பெரிய இறைவாக்கினர். மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை " புதிய மோசேயாக" அறிமுகப்படுத்துகிறார். அதாவது திருச்சட்டத்தை நிறைவுசெய்ய வந்த புதிய மோசே தான் இயேசுகிறிஸ்து என்கிற கருத்தியலுக்கு மத்தேயு முக்கியத்துவம் தருகிறார். எனவே தான் மோசேயின் வாழ்வோடு நடந்த நிகழ்வுகளை இயேசுவோடு ஒப்பீடு செய்கிறார். மோசே பிறந்தபொழுது குழந்தையைக்கொல்வதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் செய்யப்பட்டது போல, இயேசுவின் பிறப்பின்போது நடந்த நிகழ்ச்சிகளையும் சூழ்ச்சிகளையும் விவரிக்கிறார். மோசே இஸ்ரயேல் மக்களை பாலும், தேனும் பொழியும் நாட்டிற்கு வழிநடத்தியதுபோல, புதிய மோசே இயேசுகிறிஸ்துவும் பாவ இருளில் இருக்கிற மக்களை, ஒளிவாழ்வுக்கு அழைத்துச்செல்வதை படிப்படியாக விவரிக்கிறார். அதனுடைய முக்கியமான பகுதிதான் இயேசு அலகையினால் சோதிக்கப்படுகிற நிகழ்ச்சி.

சோதனை என்பது எல்லோருடைய வாழ்விலும் நடக்கின்ற ஒன்று. அதிலும் குறிப்பாக, நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, கடவுளின் இறையாட்சி இந்த மண்ணில் வர உழைக்கிற ஒவ்வொவருடைய வாழ்விலும் சோதனைகள் நிச்சயமாக இருக்கும் என்பதை இந்த நிகழ்ச்சி நமக்குத்தெளிவாகக்காட்டுகிறது. அத்தகைய சோதனையைக்கண்டு பயப்படாமல், துணிவோடு, இறைவனின் துணையை நாம் நாடினால் நம்மால் சோதனைகளை வெல்லமுடியும் என்பது இயேசு கற்றுத்தருகிற பாடம். இயேசு பலவீனமாக இருக்கிறார். உடலால், உள்ளத்தால் சோர்ந்து இருக்கிறார். ஆனாலும், அவர் தெளிவாக, துணிவோடு இருக்கிறார். ஒவ்வொரு முறையும் சாத்தான் அவரைச்சோதிக்கிறபொழுது, இறைவார்த்தையின் வழியாக இறைவனின் வல்லமை அவரிடமிருந்து வெளிப்படுகிறது. இறைவார்த்தையின் இறைப்பிரசன்னம் அவருக்கு உறுதுணையாக இருந்து அவரை வழிநடத்துகிறது. இறுதியில் சோதனைகளை எதிர்த்து வெற்றிபெறுகிறார்.

நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்வை அணுகும்போது, நமக்கு ஏற்படுகின்ற தடைக்கற்கள் ஏராளம், ஏராளம். அதைவிட நமக்கு வருகிற சவால்கள் நம்மை பாதாளத்திற்கு இழுத்துச்செல்லும் வலிமை படைத்தவை. ஆனால், எவற்றிற்கும் அஞ்சாமல் துணிவோடு, இறைப்பிரசன்னத்தை நாடி அவற்றை எதிர்கொண்டால், நாம் வெற்றி பெறுவோம்.
- அருட்பணி. தாமஸ் ரோஜர்
 
 
சிந்தனைப் பயணம்.  திரு சின்னப்பன் டிசில்வா. வெலிங்டன் - ஊட்டி
வணக்கத்திற்குரியவர் இறைவன் ஒருவரே.

காலச் சக்கரம் இந்த தவக்காலத்தை மீண்டும் நம் கண்முன் நிறுத்துகிறது. நற்செய்தியில் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும் வரை அலகை அவரை விட்டு அகன்றது என்று படிக்கின்றோம். அப்படி என்றால் அலகைக்கு ஏற்ற காலம் உண்டு என்றால் நமக்கும் ஏற்ற காலம் இருக்கும், அதுதான் இந்த தவக்காலம். மனிதன் - தான் அப்பா தந்தாய் என்று அழைக்கும் உரிமை பெற்ற இறை தந்தையுள், தனது உறவை மீண்டும் புரிந்து -புதுப்பொலிவோடு நிறைவாழ்வு பெற வாய்ப்பு தரும் காலம் இந்த தவக்காலம். அதுமட்டுமன்றி "த" எனும் தாழ்ச்சி "ப" எனும் பணிவு "சு" எனும் சுத்தம் கொள்ள வேண்டிய தபசுகாலம் இந்த தவக்காலம்..

இந்த தவக்காலத்தில் முதலில் நமக்குள் நாம் பெற்றுக்கொள்ள விரும்பும் உண்மையான மன மாற்றத்தை முழுமையாக பெற்றுக் கொண்டோம் என்று நம்பத் தொடங்குவோம். ஆம், நம்மையும் நமது முயற்சிகளையும் ஆசீர்வதிப்பதற்காகவே தரப்படும் தவக்காலம் இது. முதல் வாசகத்தில் எகிப்தில் பெரும் துயர்களுக்கு ஆளான இஸ்ரவேல் ஜனங்கள், தங்களை இறைவனின் பிள்ளைகள் என்று முழுமையாக நம்பினார்கள். இறைவனை அதேபோல் தங்களுடைய பாதுகாப்பாளராகவும் வழி நடத்துபவராகவும் வாழ்வைத் தரும் தந்தையாகவும் ஏற்றுக் கொண்டார்கள். இந்த இஸ்ரவேல் ஜனங்களுடைய நம்பிக்கையும் கீழ்ப்படிதலும் இதோ அவர்களின் உழைப்பின் முதல் பலனை இறைவனுக்கு நன்றி பலியாக அர்ப்பணம் செய்யும் வாய்ப்பை அவர்களுக்குத் தந்ததுள்ளது. இந்த மக்கள் தங்களைத் தொடர்ந்த துன்ப துயரங்களைவிட தங்களோடு எல்லா நிலைகளிலும் "இருக்கின்றாராகவே இருக்கும்" தங்கள் இறைவன் அவர்களோடு இருக்கின்றார் - என்ற நம்பிக்கையில் நிலைத்து நின்றார்கள். அவர்களின் வெற்றியின் ரகசியமும் இதுதான்.(இணைச் சட்டம் 26:6-10)

பசி
கிறிஸ்துவுக்குப் பின் கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்படும் நாம் இறைவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என பெருமை கொள்கிறோம். இந்தப் பெருமை வீண் பெருமை ஆகக் கூடாது என்பதற்காக ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியில் தனிமனிதனை தள்ளாடவைக்கும் இந்த பசி , உடல் சோர்வு , தனிமை என்ற மாபெரும் கொடுமைகளை கடக்கும்போது இறைவார்த்தையே நம்மை வாழவைக்கும் என்று சான்று பகர்கின்றார். 40 நாள் நோன்பிற்கு பின் அவருள் ஏற்பட்ட அகோர பசியைப் போக்க அலகை காட்டிய வாய்ப்பை உதறிவிட்டு அலகைக்கு 'மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல; மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்' என மறைநூலில் எழுதியுள்ளதே" என்று நிதானமாக சந்தேகமற்ற பதில் அளித்தார்.(மத்தேயு நற்செய்தி 4:4) இத்தகைய உன்னத உணவை எங்கும் தேட வேண்டாம் , அந்த இவ்வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் , உள்ளது. "இதுவே நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என, நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும் என இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார் (உரோமையர்10:8-13)ல் பறை சாற்றுகிறார்நம் தேடலுக்கு வாசற்கதவை திறந்து வைக்கின்றார். ஆம் இது பறை செய்தி எனவே எங்களுக்கு கேட்கவில்லை என்று யாரும் கூற முடியாது இதைத்தான் இந்த தவக்காலம் நினைவுபடுத்துகிறது.

உடல் சோர்வு
பசியின் உடன்பிறப்பு உடல் சோர்வு . உடல் சோர்வின் இருபக்கம் உழைக்க மனம்இல்லாததும், சுயவெறுப்புணர்வும் ஆகும். இப்படி இருப்பதால் உடல் சோர்வுற்ற தனிமனிதனின் மனம் எளிமையாக இலவசமாக எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள யோசிக்கும். இலவசங்களின் போட்டியில் குளிர்காயும் நாம், நமது ஜனநாயக உரிமையான, அடையாளமான வாக்கு உரிமையைக்கூட(ஓட்டைக்கூட) இலவசமாக சிறிதும் முன் யோசனையின்றி விற்று விடுகிறோம். இது நாம் வாழ்வு பெறப் பயன்படுத்தும் ஒரு குறுக்கு வழி, இந்த இலவசங்களின் மோகத்தை தீயாய் பற்றிக்கொண்டு அலையும் தனி மனிதனுக்கு இயேசு தரும்அறிவுறுத்தலைக் கவனிப்போம்.

மீண்டும் , அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி, இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன். நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்" என்றது.

ஒரு வணக்கம், ஒரே - ஒரு வணக்கம் என்ற - "உலகை ஆள கண் முன் நிறுத்தப்பட்ட ஒரு மாபெரும் குறுக்கு வழி". உழைக்காதவன் உண்ணக்கூடாது என்ற நீதி உள்ள மனிதர்களின் வாழ்க்கையில் குறுக்கு வழியை முற்றிலும் வெறுக்கும் இயேசு , அலகையிடம் மறுமொழியாக, "'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக" என்று மறைநூலில் எழுதியுள்ளது" என்றார். (லூக்கா நற்செய்தி 4:8) வணக்கம் மட்டுமல்ல, நம் உழைப்பும் (பணி செய்வதும்) இறைவனுக்கு மட்டுமே உரித்தானது என்று நிதானத்துடன் அதேவேளை விவேகத்துடன் விவரமாக உரைக்கிறார்.

நல்லது, நடைமுறையில் இறைவனை நம்புகின்றோம் அவரையே வணங்குகின்றோம் உண்மை. அதேவேளை இந்த தவக்காலம் நமக்கு, உளமாற இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, "இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" (லூக்கா நற்செய்தி 10:35) என்று வாயால் அறிக்கையிட்டு செயல் வீரரான நல்ல சமாரியனைப் போல வாழ்வு பெற்றிட அழைப்பு விடுகின்றது, குறுக்கு வழி போகாமல் உரோமையர் 10:10ல் உள்ளபடி பவுல் அடிகளார் கூற்றை வாழ்வாக்குவோமா?.

தனிமை
பசியும் உடல் சோர்வும் ஒன்று சேரும்போது அழையாத விருந்தாளியாக தனிமை நம்மைத் தேடி வரும். அப்போது, நமக்கு நம்மீதும் நம் இறைவன்மீதும் அவநம்பிக்கை அடிக்கடி வரும். "வார்த்தை எனக்கு மிக அருகில் உள்ளது; என் வாயில், என் இதயத்தில் உள்ளது." என்பதை ஏற்றுக் கொண்டவர்களாக நாம் எந்நிலையிலும் எப்போதும் தனிமையில் இல்லை நம் தேவன் நம்மோடு என்ற நிலையான நம்பிக்கையோடு தனியாக ஒரு முடிவை எடுக்காமல் நம்மோடு வாசம் செய்யும் வார்த்தையானவரின் வழி நடத்தலுக்கு ஏற்ப வாழ முடிவெடுக்க வேண்டும் ; அப்படி எடுத்த முடிவு தைரியமாக, அப்பாலே போ சாத்தானே எனத் தடைகளை விரட்டும். நிதானமும் விவேகமும் கூடிய சாதனைகளாக தூய ஆவியின் கொடையான தைரியமாக நம்முள் அனல் வீசும்.

ஆதியில் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லா நிலைகளிலும் இறைவனோடு இறைவனுக்குள் இணைந்து வாழ்ந்ததைப் போல் கடும் தவநோன்பிற்கு பின்பும் இயேசு அதன் துன்பங்களின் மத்தியிலும் இறைவனுக்குள் நிலையாக நின்றார். விளைவு அப்பாலே போ சாத்தானே என்று அலகையை விரட்டும் இறைமகன் ஆனார். இந்த தவக்காலம் நம்மைச் சுற்றியுள்ள சோதனைகளை அகற்றி விண்ணக தந்தையே என்று இறைவனை அழைக்கும் இறைமக்களாக வாழ வாய்ப்பு தருகின்றது. வாய்ப்பை பயன்படுத்துவோம், நானே வாழ்வு என்றவரை நமதாக்குவோம்.. இயேசு சோதனை வேளையில் கடைபிடித்த நிதானம், விவேகம், தைரியம் ஆகிய ஆளுமைகளை நமதாக்கிட நல்ல இறைவனை வேண்டுவோம், இறைவன் நம்மோடு என்பதை "ஒப்புரவால்" "ஆவியின் உறவால்" உயிர் பெறச் செய்வோம்.

இறைவன் என்றென்றும் வாழ்த்துப் பெறுவாராக.



சிந்தனைப் பயணம்.
திரு சின்னப்பன் டிசில்வா. வெலிங்டன் - ஊட்டி
 

 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ