சட்டங்களின் நலன் அல்ல, மனிதனின் நலனே முக்கியம். சமூகம்
உருவாக்கிய சட்டத்தை நேசிப்பதைவிட, சட்டம் ஒதுக்கிய
தொழுநோயாளியை நேசிப்பது கடவுளுக்குப் பிடித்தமானது. மனித குல
மனசைத் தொடும் மனித நேய விதி செய்ய முன்வருவோம். இதுவே
சொர்க்கம் விரும்பும் நற்செயல் என்ற செய்தியை, இந்த வார ஞாயிறு
எடுத்து இயம்புகிறது.
சட்டத்தின் கொடுமைக்குள் அகப்பட்டு, சங்கடங்களை அனுபவித்து
வரும் சகோதரர்களை பார்த்துக் கொண்டு, ஒன்றும் செய்யாமல்
இருக்கும் நம் உணர்வுகளை உலுக்குவதற்காகவே, சமூகம் ஒதுக்கிய
தொழுநோயாளியை இயேசு தொட்டுக் குணப்படுத்துகிறார்.
சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் அஸ்திவாரமாக்கி இருக்கும்
மனிதத்தை இழிவுபடுத்தும் கொடுமைகளை மீறுவது தவறு அல்ல. ஏழைக்கு
ஒரு நீதி, பணக்காரனுக்கு ஒரு நீதி, சாதியின் பெயரால் வீதிக்கு
வீதி சண்டைகள், இனத்தின் பெயரால் கலவரம், மதங்களின் பெயரால்
விபரீதம், நாடுகளின் எல்லைக் கோட்டுக்கு போட்டி, சட்டத்தில்
ஓட்டை இருந்தால் எட்டுக்கால் பூச்சி கூட கூடு கட்டுமாம்.
சமூக அமைப்புகள் சிக்கல் கொண்டதாக இருந்தாலும், மனிதநேயமும்
பேரன்பும் நம் மனிதில் சிக்கியிருந்தால், சுற்றி இருப்பவர்கள்
எல்லாம் அநீத அமைப்புக்குள் அகப்பட மாட்டார்கள். உண்மையான மனித
நேயம் துளிர்க்கவும், அநியாயத்தைக் கண்டு மனம் துடிக்கவும்,
சொர்க்கம் விரும்பும் நற்செயல் செய்யவும் இந்த திருப்பலியில்
இறைவன் நம்மை தொடுகிறார்.
காற்று நம்மைத் தொடுவதை உடல் தெரிவிக்கின்றது. கடவுள் நம்மைத்
தொடுவதை இந்தத் திருப்பலி தெரிவிக்கின்றது. பக்தியுடன் நம்மைத்
தொடும் இறைவனை உணர்வோம்.
'தொழுநோயாளர் ஒருவர்' என்று இன்றைய நற்செய்தி வாசகம்
(காண். மாற்கு 1:40-45) தொடங்குகிறது. ஆனால், நற்செய்தி வாசகத்தில்
இறுதிக்கு வரும்போது 'தொழுநோயாளர் இருவர்' என்று இன்றைய நற்செய்தி
வாசகம் தொடங்கியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
யார் அந்த இரண்டாவது தொழுநோயாளர்?
புத்தமதத்தில் 'போதி சத்துவா' என்ற கருதுகோள் உண்டு. 'போதி
சத்துவா' என்பவர் ஏற்கனவே மீட்படைந்தவர். இவரின் பணி என்னவென்றால்
மீட்படைய கஷ்டப்படுகின்ற ஆன்மாக்களுக்காக இவர் முயற்சி
செய்து மீட்பைப் பெற்றுக்கொடுப்பார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் சர்க்கஸ் போடுகிறார்கள் என
வைத்துக்கொள்வோம். சர்க்கஸ் பார்க்க 500 ரூபாய் தேவை. என்னிடம்
500 ரூபாய் இல்லை. ஆனால் சர்க்கஸ் பார்க்க வேண்டும் என்ற
ஆசை இருக்கிறது. ஆக, நான் கேட்டிற்கு முன் நின்று எட்டி எட்டி
பார்க்கிறேன். என்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்ற 'போதி சத்துவா'
என்ன செய்வார் தெரியுமா? தன்னிடம் இருக்கும் நிறைய 500
ரூபாய் நோட்டுக்களில் ஒன்றை எடுத்து என்னிடம் கொடுத்து
டிக்கெட் எடுக்கச் சொல்லி உள்ளே அனுப்பிவிடுவார். என்னிடம்
அல்லது எனக்காக கொடுப்பதால் 500 ரூபாய் அவரிடம் குறைவுபட்டாலும்
அதை என் மீட்புக்காக செலவிடுவதால் அந்த செலவை பெரியதாக எடுத்துக்கொள்ளமாட்டார்.
இப்படி நிறைய பேருக்கு உதவி செய்தவுடன் தன் கடைசி 500
ரூபாயை வைத்து இவரும் சர்க்கஸ்க்குள் வந்துவிடுவார்.
இவ்வாறாக, அடுத்தவரின் நலனுக்காக தன் நலனை
விட்டுக்கொடுக்கும் அல்லது தியாகம் செய்யும் நிலையின்
பொருளை போதி சத்துவா நமக்கு உணர்த்துகிறார். புத்த மதத்தின்
போதி சத்துவா தான் இறந்தபின்தான் மற்றவர்களுக்கு உதவி
செய்ய முடியும். ஆனால், தான் வாழும்போதே அத்தகைய உதவியைச்
செய்கிறார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச்
சொல்கிறது.
'தொழுநோய்' என்ற வார்த்தையை மையமாக வைத்து இன்றைய முதல் மற்றும்
மூன்றாம் வாசகங்கள் சுழல்கின்றன. 'தொழுநோய்' இன்று
பூமித்தாயின் முகத்திலிருந்து முற்றிலம் துடைத்தெடுக்கப்பட்ட
நோய் என்றாலும் இங்கொன்றும், அங்கொன்றும் சிலர் இந்த
நோயினால் அவதிப்படுவதை நாம் பார்க்கிறோம். மருத்துவ
வார்த்தைகளால் சொல்லப்போனால் இது ஒரு தோல் நோய். இந்தத்
நோய் தோலின் அடுத்தடுத்த அடுக்குகளுக்குள் பரவி தொடு உணர்வு
இல்லாமல்போகச் செய்கிறது. ஒருவர் மற்றவர்மேல் உள்ள தொடுதலால்,
அவர்கள் பயன்படுத்திய பொருள்களைப் பயன்படுத்துவதால் பரவக்கூடியது.
இது பார்வை, கேட்கும்திறன் என அனைத்தின்மேலும் பாதிப்பை ஏற்படுத்தவல்லது.
இதன் கனாகனத்தை நாம் 'ரத்தக்கண்ணீர்' திரைப்படத்தில்
பார்க்கலாம்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். லேவி 13:1-2,44-46)
தொழுநோய் பிடித்தவர் செய்ய வேண்டியதும், தொழுநோய் பிடித்தவருக்கும்
செய்ய வேண்டியது என்ன என்பதை மோசே ஆரோனுக்கு அறிவுறுத்துகின்றார்.
எதற்காக மோசே ஆரோனிடம் சொல்ல வேண்டும்? ஆரோன்தான் தலைமைக்குரு.
இஸ்ரயேல் சமூக அமைப்பில் குரு தான் எல்லாம். மேலும்,
தூய்மை - தீட்டு என்றால் என்ன என்பதை தீர்மானித்து
முன்வைப்பவரும் குருவே. தொழுநோய் வரக் காரணம் பாவம் என்ற
சிந்தனை விவிலிய மரபில் இருந்தது.
தொழுநோய் பிடித்தவர் 'கிழிந்த ஆடை அணிந்து தலை வாராமல்
மேலுதட்டை மறைத்துக்கொண்டு 'தீட்டு, தீட்டு' என்று கத்த
வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்றையாவது நம்மால் செய்ய
முடியுமா? சட்டையில் சிறு பகுதி கிழிந்திருந்தாலே அதை உடனடியாக
மாற்றவிட நினைக்கின்றோம். தலை வாராமல் நம்மால் இருக்க
முடியுமா? தூங்கும்போது கூட நம் சிகை சரியாக இருக்கிறதா என்று
கண்ணாடி முன் நின்று சரி செய்துகொள்கிறோம். 'நான் தீட்டு,
நான் தீட்டு' என்று என்னால் கத்த முடியுமா? கண்டிப்பாக இல்லை.
ஆக, இந்த மூன்று காரியங்களையும் செய்யும் தொழுநோய் பிடித்தவர்
எந்த அளவிற்கு தன்னிலிருந்தே அந்நியப்படுத்தப்படுகின்றார்.
'தீட்டுள்ள அவர் பாளையத்திற்கு வெளியே தனியாகக்
குடியிருப்பார்' என்கிறார் மோசே. மோசேயின் இந்த அறிவுரையில்
பிறர்மேல் கொண்டிருக்கின்ற அக்கறை இருந்தாலும், பாளையத்தில்
குடியிருக்கும் அடுத்தவர்கள்மேல் உள்ள நலனின் அக்கறை இருந்தாலும்,
அவர் இவரை மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறார் என்பதை
நாம் மறுக்க முடியாது. பாளையத்திற்கு வெளியே தனியாகவோ அல்லது
தன்னைப்போல நோய்பிடித்தவர்களோடோதான் இவர் தன் வாழ்வைக் கழிக்க
வேண்டும்.
இ. இறைவனிடமிருந்து அந்நியப்படுதல்
'அவர் நோய் அவர் தலையில் உள்ளது' என்கிறார் மோசே. தலை என்றால்
என்னைப் பெற்றவர். வாழையடி வாழையாக அல்லது என் முன்னோர் மற்றும்
பெற்றவர் செய்த பாவம் தொழுநோயாக மாறுகிறது. நாம் பேச்சுவழக்கில்
ஒருவர் பாவம் செய்யும்போது, 'இப்படிச் செய்யாதே! ஒருநாள்
இது உன் தலையில் விழும்!' என்று சாடுகின்றோம். தொழுநோய் பாவத்தின்
விளைவு என்பதால் இறைவனிடமிருந்தும் அந்நியப்பட்டவராகின்றார்
தொழுநோயாளர்.
இந்த மூன்றுவகை அந்நியப்படுத்துதல் அவசியம் என்பது இன்றைய
முதல் வாசகம் அறிவுறுத்துகின்றது.
லேவியர் நூலில் உள்ள சட்டங்களும், விதிமுறைகளும், ஒழுங்குகளும்
சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்று கண்களில் விளக்கெண்ணெய்
ஊற்றிச் சுற்றிக்கொண்டிருந்த குருக்கள், மறைநூல் அறிஞர்கள்,
பரிசேயர்கள் வாழ்ந்த வந்த காலத்தில்தான் இன்றைய நற்செய்தி
வாசகத்தின் நிகழ்வு நடந்தேறுகிறது:
தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். 'தொழுநோயாளர்
தன் உதடுகளை மறைத்துக்கொண்டு 'தீட்டு,' 'தீட்டு' எனக் கத்தவில்லை.'
மாறாக, 'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால்
முடியும்' என்று கனிந்த குரலில் மொழிகின்றார். இந்த உரையாடலை
வைத்துப் பார்க்கும்போது ஒருவேளை இயேசு தொழுநோயாளர்கள் தங்கியிருக்கும்
பகுதியில் உலா வந்தாரோ என்று கேட்கத் தோன்றுகிறது.
தொழுநோயாளர் உறைவிடப்பகுதிக்குதான் அவர் வந்திருக்க
வேண்டும். ஏனெனில், குணமாக்குதலின் இறுதியில், 'நீர் போய்
உம்மைக் குருவிடம் காட்டும்' என்று ஊருக்கு வெளியே இருந்த
அவரை ஊருக்கு உள்ளே அனுப்புகின்றார்.
இயேசுவின் குணமாக்குதல் இரண்டு நிலைகளில் நடந்தேறுகிறது:
அ. அவரின் அந்நியப்படுதலிலிருந்து விடுதலை
'இயேசு அவர் மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத்
தொட்டு' என பதிவு செய்கிறார் மாற்கு நற்செய்தியாளர். அவர்மீது
கொண்ட பரிவால் இறைவனுக்கும் அவருக்கும் இடையே இருந்த அந்நியப்படுத்துதலிலிருந்தும்,
அவரை நோக்கி கையை நீட்டியதால் பிறருக்கும் அவருக்கும் இடையே
இருந்த அந்நியப்படுத்துதலிலிருந்தும், அவரைத் தொட்டதால்
அவர் தன்னிடமிருந்து அந்நியப்பட்டதிலிருந்தும்
விடுவிக்கின்றார் இயேசு.
ஆ. தொழுநோயிலிருந்து விடுதலை
தொடர்ந்து, 'நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக!' என்று
அவரது நோயிலிருந்து அவரை விடுவிக்கின்றார் இயேசு.
இயேசுவின் இந்தக் குணமாக்குதல் அவரின் உடல்நலத்தை மட்டுமல்லாமல்,
சமூகம் மற்றும் சமயம் அவர்கள்மேல் சுமத்தியிருந்த தேவையற்ற
சுமைகளையும் இறக்கி வைப்பதாக இருக்கிறது.
விளைவு என்ன?
இயேசு தொழுநோயாளர் ஆக்கப்படுகின்றார். எப்படி?
தொழுநோய் குணமானவர் ஊருக்குள் சென்று எல்லாருக்கும்
செய்தியை அறிவிக்க அந்த ஊர் மக்கள் இயேசுவைப் பாராட்டுவதற்குப்
பதிலாக, 'ஓ நீ அவனைத் தொட்டு குணமாக்கினாயா?' என்று
சொல்லி, இயேசுவை அந்நியப்படுத்துகின்றனர்.
முதல் தொழுநோயாளர் குணமடைந்தார்.
இரண்டாமவர் தொழுநோய் ஏற்றார்.
இந்த நிலையை இயேசுவால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிந்தது?
அதற்கான விடை இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1 கொரி
10:31-11:1) இருக்கிறது: 'நான் எனக்குப் பயன் தருவதை நாடாமல்,
பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே
நாடுகிறேன்.'
இயேசு தனக்குப் பயன்படுவதை நாடியிருந்தால் தொழுநோயாளர் உறைவிடத்திலிருந்தும்,
அவரின் பிரசன்னத்திலிருந்தும் விலகிச் சென்றிருப்பார். ஆனால்,
அவர் தன் பயன் நாடாது பிறர்பயன் நாடுகின்றார். அது தன் பயனுக்கு
குறைவு ஏற்படுத்தினாலும்கூட.
இந்த மனநிலை நம்மில் வளர நாம் என்ன செய்ய வேண்டும்?
இயேசுவிடமிருந்த மூன்று பண்புகள் நமதாக வேண்டும்:
'பரிவு,'
'அருகில் செல்லுதல்,'
'தொடுதல்.'
இறுதியாக, இன்று தொழுநோய் நம்மிடமிருந்து துடைத்தெடுக்கப்பட்டாலும்,
நம்மை அறியாமலேயே தொழுநோயின் மறுஉருவங்கள் வலம் வருகின்றன:
பாலியல் நோய், சாதியம், நிறப் பாகுபாடு, மொழிப் பாகுபாடு,
மாற்றுக் கலாச்சாரம். இதில் என்னவொரு கொடுமை என்றால், இவர்களோடு
நாம் வாழ்ந்து, பழகி, உணவு உண்டாலும்கூட ஏதோ ஒரு நிலையில்
நான் இவர்களைவிட பெரியவராக, நல்லவராக, தூய்மையானவராக
நினைத்துக் கொள்கிறேன். அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய்
நான் வாழ என்னில் தடையாக இருப்பது எது? அந்த நிலைக்கு நான்
கடந்து செல்ல, இரண்டாம் தொழுநோயாளராய் நான் ஆக்கப்பட்டாலும்,
என்னிடம் துணிச்சல் குறைவுபடுவது ஏன்?
இன்றைய முதல் வாசகமும் மூன்றாம் வாசகமும்
தொழுநோயாளியின் நிலையையும், இயேசு தொட்டு குணமாக்கியதையும்
விவரிக்கிறது.
1. இயேசு வாழ்ந்த காலத்தில் தொழுநோயாளியின் நிலை என்னா?
ஒரு மனிதனுக்குத் தொழுநோய் உண்டு என்று தெரிந்தால்
குருவிடம் கொண்டு வருவார்கள். அவன் தீட்டு உடையவன் என
அறிவிப்பார். உடனே அவனை அடைத்து வைக்க வேண்டும். பின்
தொழுநோயால் பாதிக்கப்பட்டவருக்குக் கிழிந்த உடை அணிந்து
தலைவாராமல் மக்கள் நடமாட்டம் இல்லாத மலைகள், பாளையங்களுக்கு
அவர் அனுப்பப்படுவார். ஊரிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்.
தீண்டத்தகாதவர்களாக கருதப்படுவார். யாராவது அந்தப் பக்கம்
வந்தால் இந்தத் தொழுநோயாளி தீட்டுத் தீட்டு என்று சத்தம்
கொடுத்து அல்லது மணி அடித்துச் சொல்ல வேண்டும். யாரும்
இந்த மனிதனைத் தொடக்கூடாது. இவனும் யாரையும் தொடக்கூடாது.
மனித நடமாட்டம் உள்ள பகுதிக்கும் இந்த தொழுநோயாளி வரக்கூடாது
என்பது கட்டளை. சுருங்கச் சொல்ல வேண்டுமானால் தீண்டத்தகாதவர்களாக,
ஊர்கள், நகரங்களை விட்டு, மலைகள் பாளையங்களிலே தனிமைப்படுத்தப்
பட்டவர்கள் இவர்கள். இந்தக் காட்சியைப் பென்கர் (Bengur)
என்ற திரைப்படத்தில் அழகாகச் சித்திரித்திருப்பதை நீங்கள்
பார்த்திருக்கலாம்.
2. இயேசு எவ்வாறு தொழுநோயாளியிடம் நடந்துகொள்கிறார்?
ஒரு தொழுநோயாளி, சமுதாயக் கட்டுப்பாடுகளையும் மீறி, கடந்து
இயேசுவிடம் வருவதைப் பாருங்கள். எந்த மணியையும் அவன்
அடிக்கவில்லை. தீட்டுத் தீட்டு என்று சத்தமும் போடவில்லை.
ஆனால் இயேசுவின் முன்பாக மண்டியிட்டு, இயேசுவே! நீர்
விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும் (மாற்கு
1:40) என்றார். கூடியிருந்த மக்கள் எல்லோரும் இங்கே உன்னிப்பாகக்
கவனிக்கிறார்கள்! என்ன நடக்கப் போகிறது என்பதைப்
பார்க்கிறார்கள். இயேசுவின் மனநிலையைப் பாருங்கள்! அவர்
அவனை அதட்டி விரட்டுகிறாரா? அல்லது பார்த்தும் பாராதது
போல கடந்து செல்கிறாரா? மாறாக இயேசு தன் கரத்தை நீட்டித்
தொட்டு நான் விரும்புகிறேன், நீ குணமாய் இரு என்றார்
(மாற்கு1:41) அவன் குணமடைகின்றான். தீண்டத் தகாதவனாகக்
கருதப்பட்ட இந்த மனிதனைக் கிறிஸ்து மனித நேயத்தோடு
பார்க்கிறார். இவனும் இறைவன் சாயலாகப் படைக்கப்பட்டவன்.
மனித மாண்புக்குரியவன் என்பதை வெளிப்படுத்தும் வண்ணம்
... அவனைத் தொட்டு மீண்டும் மனித சமுதாயத்தோடு இணைக்கிறார்.
இயேசு தொழுநோயாளியைத் தொடுவதற்குத் தயங்கவில்லை. இரத்தப்போக்கினால்
துன்புற்ற ஒரு பெண்ணைத் தொட அனுமதித்தார் (மாற்கு
5:24-29). பாவி மரிய மதலேனாள் தொட அனுமதித்தார்.
பாவியையும், பிணியாளனையும் தொட்டார். ஏனெனில் இயேசுவின்
உள்ளம் இரக்கம், மன்னிப்பு, அன்பு, பரிவு இவைகளால் ஆட்கொள்ளப்பட்டது.
மனிதனால் வெறுக்கப்பட்ட மக்களை மதிக்கிறார், அன்பு
காட்டுகிறார்.
3. நமது பதில் என்ன?
இந்த உன்னதமான உயர்ந்த எண்ணம் கொண்ட இயேசுவை நினைத்துப்
பெருமைப்படும் நாம் எந்த நிலையில் உள்ளோம். ஏதோ ஆச்சரிய
கண்களோடு இயேசுவை நோக்குவதோடு இருக்கிறோமா! இதோடு மட்டும்
இருந்தால் நாம் கிறிஸ்தவர்கள் அல்ல!!! நான் செய்தது
போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்
மாதிரிகை காட்டினேனே! (யோவா. 13:15) என்கிறார் இயேசு.
நிகழ்ச்சி
ஒரு தடவை ஒரு பெண்மணி தன் 5 வயது சிறுவனோடு பலியில் பங்கெடுக்கச்
சென்றாள். பலி முடிந்து ஆலயத்தில் உள்ள சுரூபங்களையெல்லாம்
பக்தியோடு தொட்டுக் கும்பிட்டு, தன் மகன் ஜானையும்
தொட்டுக் கும்பிட வைத்து வீட்டிற்கு வீதி வழியாக வந்து
கொண்டிருந்தாள். வீதியிலே இருவரும் நடந்து வரும்போது
ஜானின் பள்ளித்தோழன் சேகர் ஓடோடி வந்து ஜானின் கையைப்
பிடித்தான். தாயோ கையைத் தட்டிவிட்டாள். ஜான் பயந்தான்!
அம்மா ஏன் அவனைத் தொடவிடவில்லை என்று கேட்க, அவன் தீண்டத்
தகாதவன். அவனைத் தொடக்கூடாது என்றாள் தாய். ஆனால் அம்மா
கோவிலில் சுருபங்களைத் தொட்டோமே! என்றான், அதில் கடவுள்
உண்டு என்றாள் தாய். ஜான் அம்மாவை நோக்கி, அம்மா அந்த
மண்ணுக்குள்ளே கடவுள் உண்டு என்றால், இந்த மனிதனுக்குள்ளே
கடவுள் இல்லையாம்மா என்று கேட்டபோது தாய் பேசமுடியாது அமைதியானாள்.
ஆம் இதுதான் வழிபாட்டுக்கும், வாழ்க்கைக்கும் இடையே உள்ள
முரண்பாடு. இன்று கடவுளை மறுப்பதற்குக் காரணமாக இது உள்ளது.
ஏழைகளின் உடலிலும் இரத்தத்திலும் உள்ள கிறிஸ்துவை மதிக்காதவன்,
நற்கருணையிலுள்ள கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும்
எப்படி மதிக்க முடியும்? கிறிஸ்துவே ஏழையாக,
தொழுநோயாளியாக, ஒடுக்கப்பட்டவராக இருக்கிறாரே!!
1985-ஆம் ஆண்டு பெங்களூரில் டெக்கான் கெரால்டு என்ற பத்திரிக்கையிலே
சிலுவையிலிருந்து ஓம் கடந்தேன் என்ற செய்தியானது பிரசுரிக்கப்பட்டது.
ஒரு தலித், கிறிஸ்தவராக மாறினார். ஏனென்றால் இயேசு சாதிகளைக்
கடந்து மனித மாண்பை மதிப்பவர் என்று. ஆனால் நான் கிறிஸ்தவனாக
மாறிய பின் எனக்குப் பெருத்த ஏமாற்றம்! வேதனை!! ஏனென்றால்
கிறிஸ்தவத்தில், குருக்கள், துறவிகள், கிறிஸ்தவர்கள்
வேறுபாடு காட்டி என்னை தீட்டுப்பட்டவனாகவே நடத்தினார்கள்.
ஏனெனில் கிறிஸ்து இந்த சீடர்களிடத்தில் தோல்வி அடைந்துவிட்டார்.
எனவே திரும்பவும் இந்து மதம் வந்துவிட்டேன் என எழுதினார்
அந்த மனிதன்.
முடிவுரை
அருமையான சகோதரனே! சகோதரியே! தீண்டத்தகாதவர் என்று
யாரும் நம் அகராதியில் இருக்கக்கூடாது. கிறிஸ்தவர்களுக்கு
- தீண்டாமை என்பது ஒரு பாவம் மட்டுமல்ல அது ஒரு தெய்வ
நிந்தனையும் ஆகும்.
இரண்டாவது, உடலை அழுகச் செய்யும் தொழுநோயைவிட ஆன்மாவை அழுகச்
செய்யும் பாவத் தொழுநோய் மிகவும் பயங்கரமானது. அதற்கு
மருந்து என்ன? தொழுநோயாளியிடம் உம்மைக் குருவிடம்
காட்டு (மாற். 1:44) என்கிறார் இயேசு. ஆம்! பாவ
நோயினின்று விடுதலை பெற நாம் குருவிடம் செல்ல வேண்டும்.
அதாவது ஒப்புரவு அருட்சாதனத்தை அணுக வேண்டும். எப்படித்
தொழுநோய் பெற்றவன் உடலில் உணர்ச்சி மழுங்கிவிடுகிறதோ,
அதேபோலத்தான் ஒப்புரவு அருட்சாதனத்தை அணுகாதவர்களிடத்தில்
காலப் போக்கில் பாவ உணர்வும் மழுங்கிவிடும்.
யாருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ அவை மன்னிக்கப்படும்
(யோவா. 20:23). திருச்சபையில் தண்ணீரும் உண்டு, கண்ணீரும்
உண்டு என்கிறார் புனித அம்புரோஸ். தண்ணீர்
திருமுழுக்கைக் காட்டுவது. கண்ணீர் ஒப்புரவு அருட்சாதனத்தைக்
குறிக்கிறது.
எனவே போலியான காரணங்களைக் காட்டி ஒப்புரவு அருட்சாதனத்தைத்
தவிர்க்காமல், அதை அடிக்கடி பெற்று பயன்பெறுவோம். ஏனெனில்
இந்த அருட்சாதனத்தில் இயேசு நம்மைத் தொடுகிறார். அன்புடன்
அரவணைத்து முத்தமிடுகிறார். உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன
என்கிறார் (லூக். 7:48).
ஏழை எளியவரோடு தம்மையே ஐக்கியப்படுத்திக்கொண்டவர் இயேசு.
ஏழ்மையிலே பிறந்து, ஏழ்மையிலே வாழ்ந்து, ஏழ்மையிலே இறந்தவர்
இயேசு. அவர் பிறந்தபோது பிறப்பதற்கு இடமில்லை; வாழ்ந்தபோது
தலைசாய்க்க இடமில்லை; அவர் இறந்தபோது அவருக்கென்று ஒரு
சொந்தக் கல்லறை இல்லை! ஓர் ஏழைப்பங்காளனாகத் தம்மை அறிமுகப்படுத்திக்
கொண்டவர் இயேசு (லூக் 4:16-22).
பணமில்லாதவர்கள் மட்டும் ஏழைகள் அல்ல! உடல் நலம் இல்லாதவர்களும்
ஏழைகள்தான். இல்லை என்ற சொல்லுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரும்
ஏழைகள்தான்! இதோ இன்றைய நற்செய்தியிலே உடல் அழகு இல்லாத ஒரே
காரணத்திற்காக சமுதாயத்தைவிட்டுத் தள்ளிவைக்கப்பட்டிருந்த,
அனைவராலும் புறக்கணிக்கப்பட்டிருந்த (முதல் வாசகம்)
தொழுநோயாளிகளைத் தேடிச்சென்று அவர்களை இயேசு குணமாக்குவதைப்
பார்க்கின்றோம்!
ஏழைகளின் மீதும், இல்லாதவர்கள் மீதும் இயேசுவுக்கு எப்பொழுதுமே
தனிப் பிரியம்! இதை தெள்ளத்தெளிய அவர் மத்தேயு 25:30-41-இல்
வெளிப்படுத்தியுள்ளார்.
இயேசுவிடமிருந்து வரம்பெற ஓர் அழகான, எளிய வழி அவர்
வழியில் நடக்க முன்வருவதாகும்! கிறிஸ்துவைப் போல நம்மால்
வாழமுடியுமா? இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார்:
நான் கிறிஸ்துவைப்போல் நடப்பது போன்று நீங்களும் என்னைப்போல்
நடங்கள் (1 கொரி 11:1) என்கின்றார். ஆக, கிறிஸ்துவைப்போல்
வாழ்ந்தவர்கள் இந்த உலகத்திலே வாழ்ந்திருக்கின்றார்கள்!
அன்று மட்டும் அல்ல, இன்றும் கிறிஸ்துவின் மதிப்பீடுகளை தங்கள்
வாழ்க்கையில் கடைப்பிடித்து, ஏழைகளோடு தங்களையே சங்கமமாக்கிக்கொள்ளும்
உயர்ந்த மனிதர்கள் நம் நடுவே இல்லாமலில்லை!
இதோ ஓர் உண்மை நிகழ்வு!
பொள்ளாச்சியிலே இந்திய - சோவியத் நட்புறவு பற்றிய ஒரு
பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்கு
ஏற்பாடு செய்திருந்த தலைவர்களுக்குக் கூட்டத்தை நல்லமுறையில்
நடத்தப் போதிய நிதி இல்லை. ஆகவே பி.எம்.சுப்ரமணியம் என்பவர்
பேசியபோது, தோழர் மா.வேலாயுதம் துண்டு ஏந்தி வருவார். உங்களால்
முடிந்த அளவு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று
கேட்டுக்கொண்டார்.
திரு.மா.வேலாயுதம் அவர்களுக்கு நிதி வசூலிக்க ஒரு துண்டு
தேவைப்பட்டது. மேடையில் இருந்தவர்களில் திரு .பி.எம். சுப்ரமணியத்திடம்
மட்டும்தான் ஒரு துண்டு இருந்தது. ஆகவே மா.வேலாயுதம் அவர்கள்
அவரிடம் சென்று துண்டைக் கொடுங்கள். நிதி வசூலித்துவிட்டு
திருப்பித் தருகின்றேன் என்றார். பி.எம்.சுப்பிரமணியம்
துண்டைக் கொடுக்க மறுத்துவிட்டார். பிறகு எப்படியோ ஒரு மஞ்சள்
பையைக் கொண்டு நிதி வசூலைச் செய்தார் திரு.மா.வேலாயுதம்.
பொதுக்கூட்டம் முடிந்தது. திரு. பி.எம்.சுப்ரமணியம் திரு.
மா.வேலாயுதத்தைப் பக்கத்தில் அழைத்து, தோளில் போட்டிருந்த
துண்டை எடுத்து, விரித்து உதறிக் காட்டினார். துண்டில் ஆயிரம்
கண்கள். ஆம், அத்தனைக் கிழிசல்கள். அதைப் பார்த்தவரின் கண்கள்
குளமாயின. இன்று உலகில் பலகோடி மக்கள் வறுமைக்கோட்டிற்குக்
கீழே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். தினமும் ஆயிரக்கணக்கான
மக்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இன்று எய்ட்ஸால் பாதிக்கபட்டவர்களின் கண்களில் ஒன்று கங்கை,
மற்றொன்று காவிரி! அவர்களை ஆற்றுவாருமில்லை,
தேற்றுவாருமில்லை! இயேசுவைப் போல வாழ நமது மனத்தை பதப்படுத்திக்கொள்வோம்.
பழுத்த தென்னங்கீற்றை தண்ணீர் பதப்படுத்துகின்றது.
தூண்டில் கம்பை நெருப்பு பதப்படுத்துகின்றது.
ஆன்மிக வாழ்வைப் பொறுத்தவரையில் நமது மனத்தை பதப்படுத்தும்
தெய்வீகத் தண்ணீர், தெய்வீக நெருப்பு, தெய்வீகக் காற்று
தூய ஆவியார். தூய ஆவியாரே உண்மையான அன்பால் என்னை அருள்பொழிவு
செய்தருளும்.
மேலும் அறிவோம் :
மனத்தான்ஆம் மாந்தர்க்(கு) உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல் ( குறள் : 453)
பொருள் :
மனிதர் ஒவ்வொருவருக்கும் தோன்றும் உணர்வு அவரவர் உள்ளத்தைச்
சார்ந்து அமையும் ! ஆனால், அவர் தம் பண்பு அவர் பழகும்
கூட்டத்தாரைச் சார்ந்ததாகவே விளங்கும்!
இளவரசி ஆலிசின் மகள் 'டிப்தீரியா" என்னும் தொண்டை அழற்சி
நோயால் புழுவாகத் துடித்தாள், இந்நோய் ஒரு பயங்கரத் தொற்று
நோய், எக்காரனாத்தை முன்னிட்டும் தன் மகளைக் கட்டிப்
பிடிக்கவோ முத்தமிடவோ கூடாது என்று மருத்துவர் ஆலிசை எச்சரித்திருந்தார்,
ஆனால், ஆலிசின் மகள் மூச்சு விடமுடியாமல் திணறிக் கொண்டு,
'அம்மா, என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடும்மா' என்று
கதறி அழுதபோது, ஆலிசு மருத்துவரின் எச்சரிக்கையையும் மறந்து,
தன் மகளைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான், அத்நோய்
அந்நேரமே அவரைத் தொற்றிக் கொள்ள ஒரு சில நாள்களில் ஆவிசு
இறந்தார். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!
தொழுநோயாளிகளைத் தொடக்கூடாது என்ற சட்டத்தை மீறி இன்றைய நற்செய்தியில்
கிறிஸ்து ஒரு தொழுநோயாளியைத் தொட்டுக் குணமளிக்கிறார். அவ்வாறே
இரத்தப் போக்கினால் துன்புற்ற ஒருவர் தன்னைத் தொட்டுக் குணமடைய
அவர் அனுமதித்தார் (மாற் 5:24- 20), கிறிஸ்து பாவிகளையும்
பிணியாளர்களையும் தொட்டார், பாவிகளும் பிணியார்களும் அவரைத்
தொட அனுமதித்தார், அவர் எவரையும் தீண்டத்தகாதவராகக் கருதவில்லை.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!
இக்காலத்தில் தொழுநோய் ஏறக்குறைய ஒழிக்கப்பட்டு விட்டது,
தொழுநோயாளிகளுக்கு, மருத்துவ மனைகளும் புனர்வாழ்வு மையங்களும்
உள்ளான, ஆனால் கிறிஸ்துவின் காலத்தில் தொழுநோய் ஒரு
வியாதியாக மட்டுமல்ல, தீட்டாகக் கருதப்பட்டது, தொழு நோயாளிகள்
ஊரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார்; தீண்டத் தகாதவம்யாகக்
கருதப்பட்டனர். ஆனால் கிறிஸ்து அவர்களை மனித நேயத்துடன்
பார்க்கிறார். அவர்களும் இறைவனுடைய சாயலாகப் படைக்கப்பட்டவர்கள்,
மனித மாண்புக்குரியவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வண்ணம்
அவர்களைத் தொட்டுக் குணமாக்கி, மீண்டும் மனித சமுதாயத்துடன்
இணைக்கிறார்.
ஒருமுறை பள்ளி மாணவிகள் என்னிடம், 'காலாண்டுத் தேர்வு பாவம்,
அரையாண்டுத் தேர்வு குற்றம்: முழு ஆண்டுத் தேர்வு மனித நேயமற்ற
செயல் என்றனர். ஆனால் உண்மையில், 'தீண்டாமை ஒரு பாவம்;
தீண்டாமை ஒரு குற்றம்; தீண்டாமை மனித நேயமற்றச் செயல்,' இதை
நாம் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டாலும், நடைமுறையில்
தீண்டாமை முற்றிலும் வேரறுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது,
ஓர் உணவகத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்காகத் தனிப்பட்ட "டம்ளர்கள்'
இருந்தன, அங்கு வந்த தாழ்த்தப்பட்ட ஒருவர், "இவ்வுணவகத்திற்கு
வரும் ஈக்கள் எல்லா டம்ளர்களிலும்' உரிமையுடன் உட்காருகின்றன.
இந்த மக்களுக்கு இருக்கின்ற உரிமை கூட தாழ்த்தப் பட்டவர்களுக்கு
இல்லையே'' என்று ஆதங்கப்பட்டார், பசுக்களைத் தெய்வமாகக் கருதும்
இப்பாரதநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்கள் உயிருடன் தோலுரிக்கப்
படுகின்றனர், மனிதக் கழிவைச் சாப்பிடும் இழிநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்,
நெஞ்சுப் பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மானிடரை
நிணைந்துவிட்டால்! -
தன் சிறிய மகனுடன் ஆலயத்திற்குச் சென்ற ஒரு தாய், அவனிடம்
அங்கிருந்த சிலையைத் தொட்டுக் கும்பிடும்படி கேட்டபோது, அச்
சிறுவன், 'அது சாமியில்லை களிமண் பொம்மை" என்றான். அம்மா
கோபத்துடன் அவனைக் கன்னத்தில் அறைந்து, 'உன் வயசுக்கு மேலே
பேசுற: அதுதான் நம்ப குலதெய்வம், தொட்டுக் கும்பிடு' என்றார்.
வேறுவழியின்றி அச்சிறுவன் அச்சிலையைத் தொட்டு வணங்கினான்.
ஆலயத்திலிருந்து வெளியே வந்தபோது அவனுடன் ஒரே வகுப்பில் படித்துக்
கொண்டிருந்த 'நவீன்' என்ற பையனைப் பார்த்தவுடன் அவனுடன்
விளையாடச் சென்றான். அம்மா அவனைப் பார்த்து, 'டேய் அவனுடன்
விளையாடாதே; அவன் கீழ் சாதிப். பையன்; தீட்டு ஒட்டிக்கும்'
என்றார், அதற்கு அவன், 'என்னம்மா களிமண் பொம்மையிலே சாமி
இருக்குதுன்னு சொல்றே, மனிதனைத் தொடாதே என்று சொல்றே' என்று
கேட்டான், நமது வழிபாட்டிற்கும் வாழ்க்கைக்கும் இடையேயுள்ள
முரண்பாடுதான் இன்று பலர் கடவுளை மறுப்பதற்குக் காரணமாக உள்ளது.ஏழைகளின்
உடலிலும் இரத்தத்திலும் உள்ள கிறிஸ்துவை மதிக்காதவர் நற்கருணையிலுள்ள
கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் மதிக்கமுடியாது.
கிறிஸ்துவே ஏழையிலே ஏழையாக, தொழுநோயாளியிலே தொழுநோயாளியாக
இருக்கிறார், புனித பிரான்சிஸ் அசிசியார் ஒரு தொழுநோயாளியை
ஆரத்தழுவி முத்தம் கொடுத்தபோது, அத்தொழுநோயாளியின் முகம்
கிறிஸ்துவின் முகமாக மாறியதைக் கண்டார், தொழுநோயால் பீடிக்கப்பட்ட
ஓர் இந்து பூசாரியை, அன்னை தெரசா தன் மடியில் வைத்து முத்தம்
கொடுத்தபோது, அந்த அன்னையின் முகத்தில் காளி தேவதையைப்
பார்த்தார் அத்தொழுநோயாளி!
மற்றவர்களை நாம் தொடவேண்டும்; மற்றவர்களும் தம்மைத் தொடவிட
வேண்டும், நமது தொடுதலானது குண மளிக்கும் தொடுதலாக இருக்கவேண்டும்.
தீண்டத்தகாதவர்கள் என்று யாரும். நமது அகராதியில் இருக்கக்கூடாது.
கிறிஸ்துவர்களுக்குத் தீண்டாமை ஒருபாவம் மட்டுமல்ல; அது ஒரு
தெய்வ நிந்தனையுமாகும்.
உடலை அழுகச் செய்யும் தொழுநோயைவிட ஆன்மாவை அழுகச் செய்யும்
பாவத் தொழுநோய் மிகவும் பயங்கரமானது. அதற்கு மருந்து என்ன?
தொழுநோயாளியிடம், 'உம்மைக் குருவிடம் காட்டு' என்கிறார்
கிறிஸ்து. ஆம், பாவத்தொழுநோயினின்று விடுதலைபெற குருவிடம்
செல்ல வேண்டும், அதாவது ஒப்புரவு அருள் அடையாளத்தை அணுக
வேண்டும். இக்காலத்தில் மக்கள் இந்த அருள் அடையாளத்தைத் தவிர்க்கின்றனர்,
உடலில் தொழுநோய் கண்ட இடத்தில் உணர்வு மழுங்கிவிடும், அவ்வாறே
ஒப்புரவு அருள் அடையாளத்தை அணுகாதவர்களிடம் காலப்போக்கில்
பாவ உணர்வு மழுங்கிவிடும்.
பல்வேறு வகையில் பாவமன்னிப்பு அடைய முடியும் என்றாலும்,
பாவ மன்னிப்பிற்காக இயேசு வழங்கியுள்ள சாதாரண வழி ஒப்புரவு
அருள் அடையாளமாகும். 'எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ
அவை மன்னிக்கப்படும்' (யோவா 20:23). 'திருச்சபையில் தண்ணீரும்
உண்டு; கண்ணீரும் உண்டு' (புனித அம்புரோஸ்), தண்ணீர்
திருமுழுக்கையும், கண்ணீர் ஒப்புரவு அருள் அடையாளத்தையும்
குறிக்கிறது,
போலியான காரணங்களைக் காட்டி ஒப்புரவு அருள் அடையாளத்தைத்
தவிர்க்காமல், அதை அடிக்கடி அணுகுவோம். இந்த அருள் அடையாளத்தில்
கிறிஸ்து நம்மைத் தொடுகிறார்; அன்புடன் அரவணைத்து முத்தமிடுகிறார்,
'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' (லூக்கா 7:48) என்றும், 'அமைதியுடன்
செல்க' (லூக் 7:50) என்றும் உறுதியளிக்கின்றார், உலகம் தர
முடியாத அமைதியை அவர் நமக்கு வழங்குகிறார்.
தொழுநோயாளிகளின் திருத்தூதர் என்று அழைக்கப்படுபவர் தமியான்.
அவர் பெல்ஜியம் நாட்டில் 1840ஆம் ஆண்டு பிறந்தார்.
1864இல் குருவாக அருள்பொழிவு பெற்றார். 33 ஆவது வயதில்
அன்னை தெரசாவைப் போல் "
அழைப்புக்குள் அழைப்புப்
பெற்றார். தொழுநோயாளிகளின் பூமியான மொலோக்கா தீவில் அவர்
ஆற்றிய பணி வியப்புக்குரியது.
45ஆவது வயதில் ஒரு நாள் தற்செயலாக கொதிநீர் அவரது கால்களில்
கொட்டியது. அவருக்கு ஆச்சரியம்! கொதிநீரின் சூட்டையோ அதன்
வலியையோ கொஞ்சம் கூட உணரவில்லை. புரிந்து கொண்டார் -
தொழுநோய் தன்னையும் தொற்றிக் கொண்டதை. இதனை மறுநாள்
திருப்பலியில் உடன் தொழுநோயாளர்களுக்கு எப்படி வெளிப்படுத்தினார்
தெரியுமா? மறையுரையில் சகோதரர்களே என்று அழைக்காமல்
"
தொழுநோயாளர்களாகிய நாம்"
( We Lepers ) என்று தொடங்கினார்.
அங்கிருந்த அனைவருமே அப்போது தமியான் தங்களுக்காகத் தன்னை
அர்ப்பணித்தவர் மட்டுமல்ல, தங்களில் ஒருவராகிவிட்டவர்
என்று உணர்ந்தார்கள்.
1889ஆம் ஆண்டில் தமியான் இறந்ததும் இங்கிலாந்து
நாட்டில் இருந்த அவருடைய நண்பர்கள் பளிங்காலான சிலுவையை
அவருடைய கல்லறையில் நாட்டி அதனடியில் பொறித்திருந்த
வார்த்தைகள் "
தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட
சிறந்த அன்பு யாரிடமும் இல்லை"
(யோ. 15:13).
"
நம் பிணிகளைத் தாங்கிக் கொண்ட, நம் துன்பங்களைச் சுமந்து
கொண்ட"
(மத். 8:17, எசாயா. 53:4) இயேசு தொழு நோயாளிகளின்
மீது கொண்டிருந்த பரிவுக்கு உயிருள்ள சாட்சியம் தமியானின்
வாழ்வும் சாவும்.
தொழுநோய் ஒருவன் செய்த பாவத்தின் பயனா என்று ஆராய்வதைவிடப்
பாவத்தால் பீடிக்கப்பட்ட ஆன்மாவன் அடையாளம் என்று கொள்வதே
பொருத்தமானது.
எல்லா நோய்களுமே மனிதனுக்கு ஒரு வேதனை தான். ஆனாலும் சில
நோய்கள் மனிதனைப் பிரித்தாளுகின்றன - எய்ட்ஸ் போல். இன்று
கூட பலர் எய்ட்ஸ் நோயாளிகளை அருவெறுப்புடன் பார்ப்பதும்,
ஏளனமாக ஒதுக்குவதும் நிகழத்தானே செய்கின்றன!
எகிப்து நாட்டினர் தொழுநோயை "
சாவுக்கு முன் சாவு"
(Death
before death) என்கிறார்கள். காரணம் அது உயிர்
பறிக்கும் நோய் மட்டுமல்ல, உறவு பறிக்கும் நோய்.
இயேசுவின்: காலத்தில் தொமுநோய் தீராத கொடிய நோயாக
மட்டுமல்ல. தீண்டத்தகாத தீட்டாகவும் கருதப்பட்டது.
(யூதர் பார்வையில் தீண்டத்தகாத நான்கு பிரிவினர்: 1.
தொழுநோயாளர், 2. மாதவிடாய்ப் பெண்கள், 3. தூய்மைச்
சடங்குவரை பிள்ளை பெற்ற பெண்கள், 4. புற இனத்தவர்).
தீண்டாமை என்பது பாவம் என்று சிறு வயதிலிருந்தே பாடப்
புத்தகங்களில் பதிவு செய்து கற்றுக் கொடுத்தாலும்
தீண்டாமை ஒழிந்தபாடில்லையே! மத்திய அமைச்சராக இருந்த பாபு
ஜெகஜீவன்ராம் பீகார் மாநிலத்தில் சசராம் என்னும்
நகரில் அண்ணல் காந்தியின் உருவச்சிலையைத் திறந்து
வைத்தார். நிகழ்ச்சி முடிந்து ஜெகஜீவன்ராம் சென்றபிறகு
காந்தியின் சிலையைக் கங்கை நீரால் கழுவினார்கள்.
ஏனென்றால் தொட்டுத் திறந்து வைத்தவர் ஒரு தலீத்
இனத்தவர் என்பதால் சிலையே தீட்டுப்பட்டு விட்டதாம்.
என்ன கொடுமை இது!
தொழுநோயாளி தீட்டுப்பட்டவர், அவரோடு தொடர்பு கொள்பவரும்
தீட்டுப்பட்டவர் என்பது மோசேயின் சட்டம் (லேவி.
13:1-2). பாதுகாப்புச் சட்டம் என்றாலும் அது மனித
நேயமற்றது. இருப்பினும் இந்தச் சட்டத்தைச் சாபமாகக்
கருதி மனமுடைந்து போகாமல், நம்பிக்கையோடு இயேசுவை நாடி
வருகிறார் இந்தத் தொழுநோயாளர். நோயைப் பெரிதுபடுத்தி
மனீதனை வீரட்டிய சமூகத்திலிருந்து மாறுபட்டு, நோயை விரட்டி
மனிதத்தை முதன்மைப்படுத்தி மறுவாழ்வு வழங்குகிறார்
"
இயேசு. மனிதனின் மதிப்பு அவனுக்குள்ளே இருக்கிறது. உடல்
நலியலாம், ஊனமுறலாம். ஆனால் உடலுக்குள் இருக்கும்
மனிதனோ தொடர்ந்து கடவுளின் சாயலைத் தாங்குகிறான்.
கடவுளின் கைகளுக்குத் தீண்டத் தகாதவர் என்று
யாருமில்லை. தொழுநோயாளியை உலகம் விரும்பவில்லை,
அருவெறுக்கிறது. ஆனால் கடவுள் விரும்புகிறார். எனவே
உடல் அழுகியவனாய் உள்ளம் நொறுங்கியவனாய் வேதனையில்
வீழ்ந்து துடித்த அந்தத் தொழுநோயாளிமேல்
மனமிரங்குகிறார். அவனைத் தொடுகிறார். அவனும்
நலமடைகிறான்.
நம்பிக்கை * முயற்சி - வெற்றி. கடவுளை நம்பினோர் கை
விடப்படார். முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார்.
"
செயலற்ற நம்பிக்கை பயனற்றது"
(யாக். 2:20). தொழுநோயாளி
தான் இருக்கும் நிலையிலிருந்து மாறி நலம் பெற
விரும்புகிறார். நீதியற்ற சமூக அமைப்பை மீறி இயேசுவிடம்
வருகிறார். இயேசுவும் சட்டத்தை மீறி அவனைத் தொட்டுக்
குணப்படுத்துகிறார்.
மாற்றங்களை நாம் விரும்பவில்லையெனில் கடவுள் கூட
நம்மில் செயலாற்ற இயலாது. நம்நிலை மாற்றப்பட
வேண்டுமென்றால் முதலில் அதை நாம் விரும்ப வேண்டும்.
அப்போதுதான் அது நம் செபமாக மாறும்.
செபம் இறைவனை மாற்றுவதில்லை. மாறாக செபிப்பவரை
மாற்றுகிறது.
அடுத்து இம்மாற்றங்களை விரும்பினால் மட்டும் போதாது. அவை
நடைபெற 'நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இயேசுவிடம் துணிந்து வரத் தொழுநோயாளி முயன்றார். எனவே
வெற்றி பெற்றார். "
Do not pray for anything that you are
not ready to work for" என்பது ஆங்கிலப் பொன்மொழி. அதாவது
நாம் எதற்காகச் செபிக்கிறோமோ, அதற்கான தடைகளையும் மீறி
உழைக்கவும் தயாராக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக
ஏழைகள் வாழ்வில் வளமை வரவேண்டும் என்று செபித்தால்
ஏழைகள் நலனுக்காக உழைக்க வேண்டும். படிக்காமல்
இறைவனிடம் செபித்தால் போதுமா? ஒவ்வொரு மாற்றமும் நம்
உழைப்பை எதிர்பார்க்கிறது.
"
துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள். உங்களைக்
காத்திடுவேன். அப்போது நீங்கள் என்னை
மேன்மைப்படுத்துவீர்கள்"
"
(தி.பா. 50:15). அந்த
நம்பிக்கையில் தொழுநோயாளர் இயேசுவிடம் வந்து "
நீர்
விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் "
என்று
முழந்தாள் படியிட்டு வேண்டினார் (மார்க். 1:40).
நம் செபம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஓர்
அற்புதமான எடுத்துக்காட்டு. கடவுள் என்றாலே அவரது வல்லமை
மட்டுமல்ல (முடியுமா முடியாதா என்பதல்ல கேள்வி. அவரால்
இயலாதது என்ன?) அவரது விருப்பம் நம் நினைவுக்கு வர
வேண்டும். இறைவன் நம் நன்மையையே விரும்புகிறவர் என்ற
அடிப்படையில் எழுவது இச்செபம் "
நீர் விரும்பினால்..."
இறைவன் நம்மை அன்பு செய்கிறார். அன்பு செய்வது என்பது
என்ன? அன்பு என்பது பிறர் நலம் வீரும்புவது. பிறர்
நன்மையை விரும்புவது. அவர் விரும்புவதுதான் நம்
நன்மையாக இருக்க முடியும் என்ற விசுவாச வெளிப்பாடுமாகும்
அது.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி
அன்பே மிக உன்னத சிகிச்சை
நோயாளரின் உலக நாள்
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள்,
பார்கின்சன்ஸ் (Parkinsons) நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்
என்ற உண்மை, 1991ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தான்
ஒரு நோயாளர் என்பதை உணர்ந்ததும், நோய்களால் துன்புறும்
கோடான கோடி மக்களுடன் தன்னையே அவர் இணைத்துக்கொண்டார்.
நோயுற்றோரை மையப்படுத்தி, 1992ம் ஆண்டு, நோயாளரின் உலக
நாளை அவர் உருவாக்கினார். ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி
11ம் தேதி, லூர்துநகர் அன்னை மரியாவின் திருநாளன்று,
இந்த உலகநாள் சிறப்பிக்கப்படுகிறது. பிப்ரவரி 11ம்
தேதி, இந்த ஞாயிறு, 32வது முறையாக, நோயாளரின் உலக நாளை
நாம் சிறப்பிக்கின்றோம்.
நோயாளருக்கென ஓர் உலக நாளை அர்ப்பணிப்பது குறித்து, நம்மில்
பலர் கேள்வி எழுப்பலாம். நோய் என்றதும், எதிர்மறையான
எண்ணங்கள் பெருமளவு நம் மனதில் உருவாவதால், இந்தக்
கேள்வியை எழுப்புகிறோம். நோயை நாம் கொண்டாடவில்லை,
மாறாக, நோயுற்றோர் காட்டும் நம்பிக்கை, துணிவு, இவற்றையும்,
நோயுற்றோர் மீது மற்றவர் காட்டும் அக்கறை, பரிவு இவற்றையும்,
நாம் கொண்டாடுகிறோம்.
பார்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட புனித இரண்டாம்
ஜான்பால் அவர்கள், இந்த நோயோடு, தன் வாழ்வின் இறுதி 14
ஆண்டுகள் எவ்விதம் வாழ்ந்தார் என்பதையும், நோயுற்றோர்
பலருக்கு நம்பிக்கையாகத் திகழ்ந்தார் என்பதையும் நாம்
அறிவோம். நோயுறுதல், நலமடைதல் என்ற அனுபவங்களிலிருந்து
நமக்குத் தேவையான, தெளிவானப் பாடங்களைப் பயில,
நோயுற்றோரை இயேசு குணமாக்கும் மற்றொரு நிகழ்வை, இந்த
ஞாயிறன்றும் சிந்திக்க வந்திருக்கிறோம்.
நலம் பெறுவதற்கு, மருத்துவ உதவிகள் தேவை என்பதை
மறுப்பதற்கில்லை. ஆனால், ஒருவர் நலமடைவதற்குத் தேவையான
முதல் படி, தான் நலமடைவோம் என்று, அவர் உள்மனதில்
எழும் நம்பிக்கை. இந்தக் கருத்தை சென்ற ஞாயிறு நாம்
சிந்தித்தோம். நமது நம்பிக்கையின் ஊற்றான இறைவனை
நாடிவருவதால் குணமடைகிறோம் என்பதை, ஒரு மருத்துவரே
தெளிவாகக் கூறியுள்ளார்.
ஹென்றி மிச்செல் (Henry Mitchell) என்ற பேராசிரியர்,
கடுமையான ஒரு நோயிலிருந்து குணமடைந்தார். குணமளித்த
மருத்துவருக்கு அவர் நன்றி சொன்னபோது, அந்த மருத்துவர்
தந்த பதில், பேராசியரை வியப்புறச் செய்தது. மருத்துவர்
சொன்னது இதுதான்: "முதலில் கடவுளுக்கு நன்றி
சொல்லுங்கள். அடுத்து, உங்களைச் சுற்றியிருந்து,
செபித்தவர்களுக்காக நன்றி சொல்லுங்கள். நீங்கள்
குணமடைந்ததில் என் பங்கு மிகக் குறைவே" என்று
மருத்துவர் சொன்னதும், அவர் மிக அதிக அளவு
தாழ்ச்சியுடன் பேசுவதாக பேராசிரியர் மிச்செல் அவரிடம்
சொன்னார். மருத்துவரோ, மறுமொழியாக, "நான் சொல்வதை
நீங்கள் நம்பாமல் போகலாம். ஆனால், இதுதான் உண்மை.
மருத்துவர்களாகிய நாங்கள் யாரையும் குணப்படுத்துவது
கிடையாது. குணமடைவதற்குத் தடையாக உங்களுக்குள்
இருக்கும் கிருமிகளை நீக்குவது ஒன்றையே, நாங்கள்
திறம்படச் செய்கிறோம். மற்றபடி, நீங்கள் குணமடைவது,
எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை" என்று கூறினார்.
இதைத்தான் புகழ்பெற்ற அறிஞர் ஒருவர் (Banjamin
Franklin), வேறுவிதமாகக் கூறியுள்ளார்: "கடவுள்
குணப்படுத்துகிறார்; குணப்படுத்தியதற்கான பணத்தை
மருத்துவர் வசூல் செய்கிறார்" என்று.
ஒருவர் நலம் அடைவதற்கு, முதலில், இறைவனின் அருள்,
இரண்டாவது, நோயாளியிடமும், அவரைச்
சுற்றியிருப்போரிடமும் உருவாகும் நம்பிக்கை,
மூன்றாவது, மருத்துவரின் திறன் என்ற இந்த வரிசையில்,
நம் சிந்தனைகள் அமையவேண்டும்.
நோயாளரின் உலக நாளை எண்ணிப் பார்க்கும்போது, அண்மையில்
நாம் சிறப்பித்த மற்றொரு முக்கியமான நாளும் நினைவுக்கு
வருகிறது. மகாத்மா காந்தி கொலையுண்ட சனவரி 30ம் தேதி,
அல்லது, அதற்கு அருகில் வரும் ஞாயிறன்று,
தொழுநோயாளரின் உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இவ்வாண்டு, சனவரி 28, ஞாயிறன்று, நாம் தொழுநோயாளரின்
உலக நாளைக் கடைபிடித்தோம். நோயுற்றோரைப் பற்றி,
சிறப்பாக தொழுநோயுற்றோரைப் பற்றி சிந்திக்க, இன்றைய
ஞாயிறு வாசகங்கள் நமக்கு வாய்ப்பைத் தருகின்றன.
இன்றைய நற்செய்தியின் அறிமுக வரிகள் இதோ: ஒரு நாள்
தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "
நீர்
விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்"
என்று
முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது
பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம்,
"
நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!"
என்றார்.
உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.
(மாற்கு நற்செய்தி 1:40-42)
இப்போது நாம் கேட்ட இப்பகுதியை, "
ஆண்டவர் வழங்கும்
நற்செய்தி"
என்று, உரத்தக் குரலில்,
அழுத்தந்திருத்தமாகக் கூறலாம். இப்பகுதியில்
சொல்லப்பட்டுள்ள கருத்து மட்டுமல்ல, அக்கருத்தைச்
சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களும் நற்செய்தியாக
ஒலிக்கின்றன. தொழுநோயுற்ற ஒருவர் நலமடைகிறார் என்ற
நிகழ்வு, நல்ல செய்திதான். சந்தேகமேயில்லை. இந்த
நிகழ்வைச் சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களும், நல்ல
செய்திதான். அந்த சொற்களைப் பற்றி நாம் முதலில்
சிந்திப்பது நல்லது. இன்றைய நற்செய்தியில்,
தொழுநோயாளரைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டுள்ள
சொற்கள், மரியாதை கலந்த சொற்களாக ஒலிக்கின்றன. இந்த
அழகிய மாற்றம், கடந்த சில ஆண்டுகளாக, நம் சமுதாயத்தில்
உருவான மனமாற்றம்.
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன், நாம் பயன்படுத்திய
விவிலியத்தில், தொழுநோயாளருக்குச் சரியான மரியாதை
வழங்கப்படவில்லை. 1986ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்
விவிலியத்தில், இன்றைய நற்செய்தி பகுதி எவ்விதம்
எழுதப்பட்டிருந்தது என்பதையும், 1995ம் ஆண்டு
வெளியிடப்பட்டு, இப்போது நாம் பயன்படுத்தும்
விவிலியத்தில் இதே பகுதி எவ்விதம் எழுதப்பட்டுள்ளது
என்பதையும் இணைத்துப் பார்த்தால் நாம் அடைந்துள்ள
மனமாற்றத்தைப் புரிந்து கொள்ளலாம். 1986 வெளியான
விவிலியப் பதிப்பில் நாம் வாசிப்பது இதுதான்: ஒரு நாள்
தொழுநோயாளி ஒருவன் இயேசுவிடம் வந்து முழந்தாளிட்டு,
"
நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்"
என்று வேண்டினான். (மாற்கு 1:40)
இதே இறைவாக்கியம், 1995 வெளியான விவிலியப் பதிப்பில்
இவ்வாறு கூறப்பட்டுள்ளது: ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர்
இயேசுவிடம் வந்து, "
நீர் விரும்பினால் எனது நோயை நீக்க
உம்மால் முடியும்"
என்று முழந்தாள்படியிட்டு
வேண்டினார். (மாற்கு 1:40)
பழைய விவிலியப் பதிப்பில் தொழுநோயாளியைச்
சுட்டிக்காட்ட, அவன், என்ற சொல்
பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய விவிலியப் பதிப்பில்,
தொழுநோயாளரை, அவர், என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம்.
தொழுநோயாளரை, ஒரு மனிதராக மதித்து, அவருக்குரிய
மரியாதையை வழங்குவது, நாம் அண்மைய ஆண்டுகளில்
பின்பற்றும் அழகான முன்னேற்றம்.
தொழுநோய், தொழுநோயாளர் என்ற வார்த்தைகளைப் பற்றி
கொஞ்சம் சிந்திப்போம். 1986க்கும் முந்தைய விவிலியப்
பதிப்புக்களில், தொழுநோயாளர் என்ற சொல்லுக்குப்
பதில் குஷ்டரோகி என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளோம்.
ஆங்கிலத்தில், leper என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
குஷ்டரோகி என்பதற்கும், தொழுநோயாளர் என்பதற்கும்
எத்தனையோ வேறுபாடுகள். Leper என்பதற்கும் leprosy
patient என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள் உள்ளன.
வெறும் சொற்களில் காணப்படும் வேறுபாடுகள் அல்ல. மாறாக,
அவர்களைக் குறித்து நாம் கொண்டிருக்கும் எண்ணங்களை,
அச்சொற்கள் வெளிப்படுத்துகின்றன. இப்போது,
ஆங்கிலத்திலும், தமிழிலிலும் சரியானச் சொற்களைப்
பயன்படுத்தும் அளவு நாம் பக்குவமடைந்துள்ளோம்.
நாம் பயன்படுத்தும் வார்த்தைகளின் வலிமையைப் பற்றி
நாம் நன்கறிவோம். ஒருவரை நாம் எவ்வித வார்த்தைகள்
கொண்டு அழைக்கிறோம் என்பதிலேயே, அவரைக் குறித்து நாம்
கொண்டிருக்கும் மதிப்பு, அல்லது, அவமதிப்பு ஆகியவை
தெளிவாகத் தெரிந்துவிடும். ஒருவரை, குஷ்டரோகி என்று
சொல்லும்போது, அவர் அந்த நோயாகவே மாறிவிட்டதைப்போன்ற
உணர்வு எழுகிறது. அதற்குப் பதில், அவரை, தொழுநோயாளர்
என்று சொல்லும்போது, சந்தர்ப்பச் சூழ்நிலையால் அவர்
அந்த நோயில் துன்புறுவதை ஏற்றுக்கொள்கிறோம்.
அப்படிப்பட்ட புரிதலில், அவரைப்பற்றி சிறிதளவாகிலும்
உள்ளத்தில் மரியாதை பிறக்கும். சாதிய மடமை என்ற நோயால்
துன்புறும் இந்திய சமுதாயத்தில், ஒரு சில குலங்களில்,
குடும்பங்களில், இடங்களில் பிறந்தவர்களுக்கு,
அவர்களுக்கென்று உரிய பெயரை மறந்துவிட்டு, அல்லது,
மறுத்துவிட்டு, அவர்கள் பிறந்த சாதியை அவர்களது
அடையாளமாக மாற்றிவிடுகிறோம். இந்தியாவின் சாபக்கேடாக
விளங்கும் இந்தச் சமுதாயக் குற்றத்திற்கு,
இந்நேரத்தில் இறைவனிடம் மன்னிப்பு வேண்டுவோம்.
முத்திரைகள் குத்தி, மக்களைப் பிரிப்பதில் யூத மதத்
தலைவர்கள் கைதேர்ந்தவர்கள். நோயுற்றோரை,
இறைவனிடமிருந்து பிரிந்தவர்கள், எனவே பாவிகள் என்று
அவர்கள் தீர்மானித்தனர். அதிலும், தொழுநோயால்
பாதிக்கப்பட்டவர்கள், மனிதர்களுடன் வாழத் தகுதியற்ற
பெரும் பாவிகள் என்ற முத்திரை குத்தப்பட்டது. தொழுநோய்
என்ற முத்திரை குத்தப்பட்டவர்கள் அனுபவிக்க வேண்டிய
கொடுமைகளை, இன்றைய முதல் வாசகம் இவ்வாறு சொல்கிறது:
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை
வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு, தீட்டு, தீட்டு,
என குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர்
தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு
வெளியே தனியாகக் குடியிருப்பார். (லேவியர் 13:44-46)
இஸ்ரயேல் மக்கள் தொழு நோயாளர்களை நடத்திய விதம் மிகக்
கொடுமையானது. அந்த நோய் உடையவர் ஊருக்கு வெளியே
தங்கவேண்டும், ஊருக்குள் வரவேண்டிய அவசியம் இருந்தால்,
தீட்டு, தீட்டு, என குரலெழுப்பியவாறு வரவேண்டும்.
அதைக் கேட்டதும், எல்லாரும் விலகி விடுவார்கள்.
தொழுநோயாளி யாரையாவது தீண்டிவிட்டால், அவர்களும்
தீட்டுப்பட்டவர் ஆகிவிடுவார்கள். ஒரு சில சமயங்களில்,
இப்படி நேர்ந்த தவறுகளுக்கு, அந்த நோயாளி கல்லால்
எறியப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்.
இந்தப் பின்னணியில் நாம் இன்றைய நற்செய்தி நிகழ்வைக்
கற்பனை செய்து பார்க்கவேண்டும். இயேசுவைச் சுற்றி
எப்போதும் கூட்டம் இருந்தது. அந்நேரத்தில், அங்கு வந்த
தொழுநோயாளியின் மனதில், பெரும் போராட்டம்
நிகழ்ந்திருக்கும். அந்தக் கூட்டத்தின் நடுவே
சென்றால், அவர்கள் கோபத்திற்கு ஆளாகலாம், அந்தக்
கோபம், வெறியாக மாறினால், கல்லால் எறியப்பட்டு,
கொல்லப்படலாம். இதெல்லாம் தெரிந்திருந்தும், அந்தத்
தொழுநோயாளி, இயேசுவை அணுகிச் சென்றார். அந்த
நம்பிக்கையே, அவர் குணமடைந்ததற்கு முதல் படியாக
அமைந்தது.
இயேசு, தூரத்தில் நின்றபடி, அவரைக்
குணமாக்கியிருக்கலாம். ஆனால், இயேசு, தன்னைச்
சுற்றியிருந்தவர்களையும் குணமாக்க விரும்பினார். எனவே,
தன் கரங்களை நீட்டி தொழுநோயாளரைத் தொட்டார். இயேசு
இவ்வாறு செய்தது, சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சிக்கு
உள்ளாக்கி இருக்கும். அதிர்ச்சியை உண்டாக்கவேண்டும்
என்பது, இயேசுவின் நோக்கம் அல்ல. மாறாக, அவர்களும்
நலம் பெறவேண்டும் என்பதே, அவர் எண்ணம். மதத் தலைவர்கள்
தவறாகக் கற்பிக்கும் சட்டங்களால் கட்டுண்டு,
மனிதர்களை, விலங்குகளிலும் கேவலமாக நடத்திவந்த
இஸ்ரயேல் மக்களைக் குணமாக்கவே, இயேசு இதைச் செய்தார்.
தொழுநோயாளியின் உடலைத் தொட்டு குணமாக்கிய இயேசு, சூழ
இருந்தவர்களின், மனதைத் தொட்டு, குணமாக்க முயன்றார்.
மூன்றாவது வாரமாக, இயேசுவின் குணமளிக்கும் நிகழ்வுகளை
நாம் ஞாயிறு நற்செய்திகளில் கேட்டுவருகிறோம். குணம்
பெறுவோம் என்ற நம்பிக்கை ஒருவர் மனதில் உதிப்பதுதான்
அவர் குணம் பெறுவதற்கான முதல் படி என்று, சென்ற வாரம்
சிந்தித்தோம். நோயுற்றவர்கள், மனிதப்பிறவிகளுக்குரிய
மரியாதையைப் பெறுவது அவர்கள் குணம் பெறுவதற்குத்
தேவையான மற்றொரு முக்கிய வழி என்பதை, இன்றைய
நற்செய்தியில் நாம் கற்றுக்கொள்கிறோம்.
இன்றைய உலகில், தொழுநோய் ஒழிக்கப்பட்டுவிட்டதாக நாம்
கூறிவந்தாலும், இன்னும் ஆயிரக்கணக்கானோர் இந்த பயங்கர
நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும்
வெளிப்படையான நிராகரிப்பு மற்றும் மறைமுகமான
புறக்கணிப்பு ஆகியவற்றை சந்தித்து வருகின்றனர்.
கோவிட்-19 பெருந்தொற்றின் வேளையில், நாம் அனைவரும்
'சமூக தூரம்' மற்றும் 'தனிமைப்படுத்துதல்' ஆகியவற்றின்
வேதனைகளை உணர்ந்திருக்கிறோம். கோவிட் பெருந்தொற்று
மட்டுமல்ல, சாதிவெறி மற்றும் இனவெறி ஆகிய கிருமிகள்
இன்னும் நம் சமுதாயத்தில் அர்த்தமற்ற பிளவுகளை
உருவாக்கியுள்ளன. நம் சமுதாயத்திலிருந்து இந்நோய்கள்
நீங்கவேண்டும் என்று, பிப்ரவரி 11ம் தேதி நாம்
கொண்டாடும் லூர்துநகர் அன்னைமரியாவின் பரிந்துரையை
இறைஞ்சுவோம்.
நாம் ஏற்கனவே கூறியதுபோல், ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி
11ம் தேதி, லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளாக
மட்டுமல்லாமல், நோயாளரின் உலக நாளாகவும்
சிறப்பிக்கப்படுகிறது. இவ்வாண்டு சிறப்பிக்கப்படும்
நோயாளரின் 32வது உலக நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், "மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று" -
உறவுகளை குணமாக்குவதன் வழியே, நோயுற்றோரை குணமாக்க...
என்ற மையக்கருத்துடன் தன் செய்தியை வெளியிட்டுள்ளார்.
இச்செய்தியில் அவர் கூறும் ஒரு சில எண்ணங்களுடன் நம்
சிந்தனைகளை நிறைவு செய்வோம்:
கோவிட்-19 பெருந்தொற்றின்போது யாரையும் காண
அனுமதியின்றி, தனித்து விடப்பட்ட நோயாளிகளை நினைத்துப்
பார்க்கிறேன். போர் மற்றும் அதன் துயரமான விளைவுகளால்,
ஆதரவும் உதவியும் இல்லாமல் தவிப்பவர்கள் படும்
வேதனையில் நானும் பங்கு கொள்கிறேன். இன்றைய
சமுதாயத்தில், போர், மிக பயங்கரமான நோய்.
அமைதி மற்றும் அதிக வளங்களை பெற்றிருக்கும்
நாடுகளிலும், முதியோர், மற்றும் நோயுற்றோர்
தனிமையிலும், ஒருசில வேளைகளில், கைவிடப்பட்ட
நிலையிலும் வாழ்வதை நாம் அறிவோம். சுயநலத்தை போற்றி
வளர்க்கும் நம் கலாச்சாரத்தின் ஒரு வெளிப்பாடு, தனிமை
என்ற இந்த நோய். வாழ்க்கையில் இந்த மைய உண்மையை
நினைவில் கொள்வோம்: யாரோ நம்மை வரவேற்றதால், நாம்
உலகிற்கு வந்தோம்; நாம் அன்பிற்காக படைக்கப்பட்டோம்.
சமுதாயத்தின் நோய்களைக் குணப்படுத்த நாம் அனைவரும்
பின்பற்ற வேண்டிய முதல் சிகிச்சை, அன்பு ஒன்றே.
தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு, மனநலத்தையும், உடல்
நலத்தையும் இறைவனிடமிருந்து பெற்றுத்தரும் லூர்துநகர்
அன்னை மரியாவின் பரிந்துரை வழியே, நாம் அனைவரும், உடல்
நோய்கள் மற்றும், சமுதாய நோய்கள் அனைத்திலுமிருந்து
நலம் பெற்று வாழ, இறையருளை இறைஞ்சுவோம்.
ṣ
மறையுரைச்சிந்தனை திரு.
சின்னப்பன் டிசில்வா.வெலிங்டன்.ஊட்டி
ஞாயிறு மறையுரை அருள்பணி. குழந்தைஇயேசு
பாபு சிவகங்கை