தமிழ் திருப்பயணிகள் ஆன்மீகப்
பணி மையம் உங்களை
வரவேற்கின்றது
மரியன்னை உங்களை அழைக்கிறாள்.........
இறை சித்தத்தை செயல்படுத்தும் மாபெரும் சக்தி மரியன்னை. அவள் மக்களின்
அன்னை. அன்னையிடம் வரம் கேட்க அல்ல, அன்னையையே வரமாகக் கேட்க,
லூர்து நகர் திருத்தலம் செல்வோம். குடும்பமாய்க் கூடி ஜெபமாலை
சொல்வோம். தூய ஆவியின் வரங்களும், அன்னை மரியின் பரிந்துரையும்
கிடைத்திட திருப்பலியில் விசேடமாக
தொடர்ந்து அனைவருக்காகவும் லூர்து அன்னை
மூலமாக ஜெபிக்கிறோம்.
தினம்
ஒரு நல்வார்த்தை
உங்கள்
தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய்
இருங்கள். லூக்கா 6:36
புனித வாரத்தில் நீங்கள் விரும்பியதைச்
சாப்பிடுங்கள், தியாகம் வயிற்றில் இல்லை, இதயத்தில் உள்ளது.
மக்கள் இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள், ஆனால்
அவர்கள் தங்கள் உடன்பிறந்தவர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ
பேசுவதில்லை, அவர்கள் தங்கள் பெற்றோரைப் பார்ப்பதில்லை,
தங்கள் குழந்தைகளைப் பராமரிப்பதில்லை.
அவர்கள் தங்கள் உணவை மிகவும் தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து
கொள்வதில்லை, அவர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் தந்தை/தாய்
மற்றும்/அல்லது தாத்தா பாட்டிகளிடமிருந்து விலக்கி
வைக்கிறார்கள், மற்றவர்களின் வாழ்க்கையை விமர்சிக்கிறார்கள்,
தங்கள் துணையை மோசமாக நடத்துகிறார்கள். இறைச்சி உங்களை
ஒரு கெட்ட நபராக மாற்றாது, மீன் துண்டு உங்களை ஒரு துறவியாக
மாற்றாது என்பது போல. மற்றவர்களுக்கு நல்லது செய்வதன்
மூலம் கடவுளுடன் நல்ல உறவைத் தேடுவது நல்லது. நாம்
குறைவான ஆணவத்துடனும், மனத்தாழ்மையுடனும் இருப்போம்.
*
போப் பிரான்சிஸ்*
இத்தவக்காலம் அருளின் காலம்!
எனக்கு வரும் துன்பங்களை எவ்வாறு பொறுமையோடு நான் சகித்துக்
கொள்ள வேண்டும் என்பதையும் உமது இதயத்தின்
தாழ்ச்சியும், சாந்தமும் என்னை உமதருகே குவித்துள்ளதையும்
உணர்கிறேன் என் இயேசுவே
என் ஆண்டவரே! உமது சிலுவை எனது சிலுவையாகட்டும்! உமது
கொடிய வேதனை எனது வேதனையாகட்டும்! உமது துன்பங்கள் எனது
துன்பங்களாகட்டும்! உமது மரணம் என் முடிவில்லா வாழ் வாகட்டும்!
உமது சிலுவையினடியில் நின்ற அன்பு தாயுடனும், உமது அன்பு
சீடர் புனித யோவானும் கைக் கோர்த்து தைரியத்துடனும் வலிமையுடனும்
பற்றுறுதியுடனும் உம்மைப் பின் தொடர்ந்து உறுதியுடன்
இவ்வுலக வாழ்வை வென்றிடும் வரம் தாரும். மரியன்னையின்
மாசற்ற இருதயத்துடனும், உம் திரு இருதயத்துடனும்
விசுவாசத்துடன் ஒன்றித்திருக்கும் அருள்தாரும்.
தவக்காலம் நம்மை ஒடுக்கும் காலம் அல்ல
ஒடுக்கப்பட்டவர்களை நினைக்கும் காலம்
தவக்காலம் உபவாசிக்கும் காலம் மட்டும் அல்ல
உணவில்லாதவர்களை உபசரிக்கும் காலம்
தவக்காலம் பிறரை திருத்தும் காலம் அல்ல
தன்குறையை ஆழமாய் உணரும் காலம்
தவக்காலம் அமைதியாயிருக்கும் காலம் மட்டும் அல்ல
இறைவனோடு அதிகமாய் உரையாடும் காலம்
தவக்காலம் முடங்கி கிடக்கும் காலம் மட்டும் அல்ல
தோய்ந்த இறைபணியை முடுக்கிவிடும் காலம்
தவக்காலம் தீயவற்றை விடும் காலம் அல்ல
நற்செய்தியாளர்களுக்காக திறமைகளை வளர்க்கும் காலம்
தவக்காலம் மக்களிடமிருந்து பிரியும் காலம் அல்ல
மக்களோடு ஒப்புரவாகும் காலம்
தவக்காலம் இயேசுவின் சிலுவையருகே சுற்றும் காலம் அல்ல
தம் சிலுவையை எடுத்துக்கொண்டு
புறப்படும் காலம்
தவக்காலம் இயேசுவின் மரணத்திற்காய் வருந்தும் காலம் மட்டும்
அல்ல
அந்த மரணத்திற்கு காரணம் என் பாவம் என்பதை உணரும் காலம்
தவக்காலம் வெறும் 40 நாள் பயணமல்ல
இறைவன் நமக்கு கொடுத்த நாள் முடியும் வரையிலும்
மனம் திரும்பி நல்வழியில் வாழ
அழைப்பு விடுக்கும் தவக்காலம்
இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை நினைவு
கூருவதுடன் மனிதன் பாவத்திலிருந்து விடுதலை பெற்று மனந்திரும்பி
வாழ்வதை தவக்காலம் உணர்த்துகிறது. விபூதிப் புதனுடன்
ஆரம்பமாகும்.
தவக்காலத்தின் முதல் நாளான இன்றைய தினத்தில் கத்தோலிக்கர்கள்
அனைவரும் தேவாலயம் சென்று திருப்பலியில் கலந்துகொள்வது
கட்டாயமாகும். கத்தோலிக்கத் திருச்சபையில் இன்றைய தினத்தில்
குருவானவர் மக்களுடைய நெற்றியில் "மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்,
மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே" என்று கூறி சாம்பலினால்
சிலுவை அடையாளம் வரைந்து மரணத்தை நினைவுபடுத்துகிறார்.
தவக்காலத்தின் முதல் நாள் விபூதிப் புதன்,
திருநீற்றுப் புதன், சாம்பல் புதன் என்றெல்லாம் அழைக்கப்படுவதுண்டு.
தவக்காலமானது நாற்பது நாட்கள் அனுசரிக்கப்படுகிறது.
மன மாற்றத்தின் காலமாகிய தவக்காலத்தில், நாம் அறிந்தும்
அறியாமலும் செய்த நம்முடைய தவறுகளை உணர்ந்து திருந்தவும்,
நம்மை நாமே அறிந்து நம்மை கடவுளின் வழியில் கொண்டு
செல்வதற்காகவே இந்தப் புனிதமான தவக்காலம் நமக்குத் தரப்பட்டுள்ளது.
தவக்காலத்தின் 40 நாட்களில் கத்தோலிக்கர்கள் செபம்,
தவம், ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபடுவது கட்டாயமாகும்.
மேலும், உண்ணா நோன்பு இருப்பதும், ஒருசந்தி நாட்களில்
ஒருசந்தியும் சுத்த போசன நாட்களில் சுத்த போசனம் அனுசரிப்பதும்
கட்டாயம் எனக் கூறப்படுகிறது.
நாற்பது என்பது விவிலியத்தில் மிக முக்கியமான எண்.
விடுதலைப் பயண நூலின் கதாநாயகன் மோயீசன் இஸ்ராயேல் மக்களை
எகிப்திலிருந்து மீட்டுக் கொண்டு வரும் வழியில்,
சீனாய் மலையில் மோயீசன் கடவுளோடு இருந்தது நாற்பது இரவும்,
நாற்பது பகலும் ஆகும். வாக்களிக்கப்பட்ட கானான்
நாட்டை நோக்கிய பயணத்தில் அவர்கள் பாலை நிலத்திலே அலைந்து
திரிந்த ஆண்டுகள் 40 ஆகும். அதேபோல், நோவாவின் காலத்தில்
மழை பொழிந்தது நாற்பது இரவும், நாற்பது பகலும் ஆகும்.
இவை அனைத்துக்கும் மேலாக, பூமியில் உள்ள மக்களை பாவத்திலிருந்து
மீட்பதற்காக மனித அவதாரம் எடுத்த இறைமகன் இயேசு, பாலைவனத்தில்
உண்ணா நோன்பு இருந்தது 40 நாட்கள் ஆகும். இதனை அனுஷ்டிக்கும்
முகமாக, மனிதர்கள் தங்களின் பாவங்களை நினைத்து அதிலிருந்து
மீண்டு, நல்வழிக்குத் திரும்பவும் இந்தத் தவக்காலம்
தரப்பட்டுள்ளது. தவக்காலம் நமது இயலாமைகளை, பாவங்களை,
பிழைகளைக் கண்டறியும் காலம். நமது பலவீனங்களை இறைவனின்
பலத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் காலம்.
இது இயேசுவுக்காக அழும் காலமல்ல, மாறாக நமது பாவங்களை
அறிந்து, உணர்ந்து மனம் வருந்தி மனம் திருந்தும் காலம்.
மனம் திரும்புதலே தவக்காலத்தின் அடிப்படை. அதற்கு முதலில்
எதிலிருந்து மனதைத் திருப்ப வேண்டும் எனும் புரிதல்
அவசியம். மிக முக்கியமாக பாவத்திலிருந்து நாம் திரும்ப
வேண்டும். இந்தக் காலத்தில் ஆடம்பர அணிகலன்கள், உணவு,
கேளிக்கை, பொழுது போக்கு இவற்றை வெறுத்து அதன் மூலம்
மிச்சப்படுத்தப்படும் பணத்தை ஏழை, எளியவர்களுக்கு வழங்குவதை
பலரும் கடைப் பிடிக்கின்றனர். சிலர் வெள்ளிக் கிழமை
தோறும் அன்னதானம் இடும் வழக்கத்தைக் கொண்டிருக் கின்றனர்.
இதனை "உன் வலது கை செய்வதை உனது இடது கை அறியாதிருக்கட்டும்"
என கடவுள் கூறுகிறார். நோன்பு இருப்பது பிறருக்குத்
தெரியாமல் இருப்பதே நல்லது என்கிறார் இயேசு. நோன்பு இருப்பதை
பெருமைக்காகவும், புகழுக்காகவும், சடங்கிற்காகவும்
செய்யாமல் சுய விருப்பத்தோடும் இறைவனில் சரணாகதி அடையும்
மனநிலையுடனும் செய்ய வேண்டுமென்பதையே இறைவன்
விரும்புகிறார்.
இறைவனின் அருளைப் பெற விழைபவர்கள் தங்களைத் தாழ்மை
நிலைக்குத் தள்ளி இறைவனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்தல்
அவசியம். அதையே 'சாம்பல் புதன்' நினைவூட்டுகிறது
நமது பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து தனது உயிரை
விட்டார். நாமோ தொடர்ந்து பாவம் செய்கிறோம், தண்டனைக்கான
நியாயத் தீர்ப்பு நாளை நாம் மறந்தே போய் விடுகிறோம்.
அதை நினைவில் கொள்வதற்கான அழைப்பாக நாம் இந்தத் தவக்காலத்தை
மனதில் கொண்டு மனம் திரும்பி கடவுளின் பிள்ளைகளாக வாழ
இந்தப் புனித தவக்காலம் நமக்கு வலியுறுத்துகிறது.
இன்று வீட்டிலும், நாட்டிலும் நடக்கும்
பிரச்சனைகளுக்கு காரணம் குடும்ப ஜெபமாலை இப்போது இல்லாமல்
போனதுதான். கடந்த 20 ஆண்டுகளாகத்தான் இவ்வளவு பெரிய அழிவுகள்,
அதுவும் நாம் கேள்வியே பட்டிராத அழிவுகள் நடப்பது இப்போதுதான்.
கத்தொலிக்கத்திலிருந்து பிரிந்து 100 சபைகளுக்கும்
மேல் வந்ததிற்கும் காரணம் குடும்ப ஜெபமாலை
நின்றதுதான்.
முன்பெல்லாம் நம் கத்தொலிக்க குடும்பங்கள் இரவு ஜெபமாலை
சொல்லாமல் தூங்க மாட்டார்கள். வீட்டில் இருப்பவர்கள்
எல்லாம் ஒன்றாக அமர்ந்து ஜெபமாலை சொல்வார்கள். பல வீடுகளில்
நற்செய்தி வாசித்து ஜெபமாலை ஜெபிப்பார்கள். இந்த ஜெபமாலை
கத்தொலிக்க குடும்பங்களை மட்டுமல்ல உலகையே
காப்பாற்றிக் கொண்டிருந்தது.
ஏனென்றால் ஜெபமாலை தனிப்பட்ட ஒருவருக்காக ஜெபிக்கப்படுவதில்லை.
"பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே "பாவிகளாய்
இருக்கிற எங்களுக்காக "எங்களை சோதனையில் விழவிடாதேயும்"
என்று நாம் ஜெபிக்கும் போது உலகத்தில் உள்ள அத்தனை மக்களுக்காகவும்
ஜெபிக்கிறோம். "
ஏன் குடும்ப ஜெபமாலை நின்று போனது? வீட்டிற்குள்
நுழைந்த டி.வி என்ற சாத்தான்தான் அதிலும் தனியார் சானல்கள்
வந்த பின்புதான் இத்தகையை இழிவான நிலையை நாம் சந்தித்துள்ளோம்.