ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

       பொதுக்காலம் 26ஆம் வாரம் - ஞாயிறு

    திருப்பலி முன்னுரை

வருடாந்த
ஞாயிறு வாசகம்
    pdf/Calendrier-litrugique2021.pdf
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
பிறரின் வாழ்வுக்கு படிக்கற்களாக வாழ வரம் வேண்டி வந்திருக்கும் அன்புள்ளங்களே!
B தவக்காலம்1
ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு வழிபாட்டிற்கு படிக்கற்கள் வந்து நின்று நம்மை வரவேற்கின்றன. பிறரின் வாழ்விற்கு நாம் படிக்கற்களாக இல்லாவிட்டாலும் தடைக்கற்களாக இருக்கக்கூடாது என்ற செய்தியை இன்றைய நற்செய்தி நமதாக்குகிறது. நாம் உடுத்தும் உடை, பேசும் பேச்சு, செய்யும் செயல், நடக்கும் நடை கூட பிறருக்கு நல் மாதிரியாக அமைய ஆசைப்படுகிறார் நம் இயேசு.

மனித உறுப்புகள் அனைத்தும் புனித நிகழ்வுகளுக்காக, மனித நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் விரும்புகிறார். நமது நடை, உடை, சொல், செயல் அனைத்தும் பிறரை பாதிக்கக்கூடாது. நம்மைப் பார்த்து பிறர் நடக்கும்படி நம்மை தயாரிக்கவேண்டும். அதற்கு அடிப்படையான ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும்.

தனிமனித ஒழுக்கம் சிறப்பாக அமைந்தால் நம்மை குறை சொல்வார் எவருண்டு. உயிரை விட மேலான ஒழுக்கத்தை, உடுத்தும் உடையில், பேசும் பேச்சில், நடக்கும் நடையில், செய்யும் செயலில் கடைப்பிடித்து விட்டால் ஒழுக்கமான குடும்பம், ஒழுக்கமான மனிதன், ஒழுக்கமான வீடு, ஒழுக்கமான சமுதாயம் என தலைமுறை தாண்டி பேசப்படுவோம்.

ஒழுக்கமாக வாழ்பவர்கள், தானும் நிம்மதியாக இருப்பார்கள் அடுத்தவரையும் ஆனந்தமான வாழ்வின் பக்கம் அழைத்துச் செல்வார்கள். அப்போது நமது வாழ்வு நம்மோடு வாழும், அயலாருக்கு படிக்கற்களாக அமையும் என்பதில் சந்தேகமில்லையே!

ஒழுக்க குறைபாடு இருக்கும் இடத்தில் குறை சொல்லுக்கு இடமுண்டு. இருளை பழிப்பதைவிட விளக்கை ஏற்றுவது நல்லது. பாராட்டு மொழி இல்லை என்றாலும் குறைசொல் சொல்லக்கூடாது. உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யக்கூடாது. இறைபணி புரிய நம்மால் இயலாவிட்டாலும், செய்து கொண்டிருப்பவர்களுக்கு, செய்ய விரும்புகிறவர்களுக்கு தடைக் கல்லாக இருக்கக்கூடாது.

அடுத்தவர் வாழ்வுக்கு படிக்கற்களாக நமை மாற்றும் அருள் தர, நம்மைத் தேடி வந்திருக்கும் திருப்பலி இது. "உதவும் கரம், பகிரும் மனம், ஒளி நிறைந்த பேச்சு இருளகற்றும் செயல், ஒழுக்கம் மிக்க வாழ்வு என வாழ அருள்தாரும் இறைவா! அப்போது தடைக்கல்லாய் அல்ல, படிக்கல்லாய் நானிருப்பேன்" என மன்றாடுவோம். திருப்பலியில் இறைவனைக் கண்டு பேச முயற்சிப்போம்

 
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. இறைவாக்கு உரைக்க திருப்பணியாளர்களை தேர்ந்தெடுத்த இறைவா!
இறைவாக்குப் பணியால் தீமையை வேரறுத்து நன்மையை படைக்க திருச்சபைத் தலைவர்களுக்கு அருள்வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. மனித கலாச்சாரங்களிலும், மதங்களிலும், சிந்தனைகளிலும் மறைந்திருந்து செயலாற்றும் ஆண்டவரே!
நாடுகளிடையே நிலவும் வேற்றுமையை ஒற்றுமையாக மாற்றிட நாட்டுத் தலைவர்களுக்கு அருள்வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார் என மொழிந்த ஆண்டவரே!
நலம் தரும் போதனையாலும், நற்செய்திப் பணியாலும் விடுதலை நாயகன் இயேசுவுக்கு சார்பாக உழைக்கவும், இயேசுவுக்கு சார்பாக மக்களை உருவாக்கவும் எமது பங்குத்தந்தைக்கு தேவையான ஆற்றலைத் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நடை, உடை, பாவனையால் பிறருக்கு நன் மாதிரியாக வாழ எமை அழைக்கும் இறைவா!
எங்கள் சொல், செயல், நடை, உடை இவைகள் பிறருக்கு மாதிரியாக இருக்கவும், பிறருக்கு உதவி செய்யாவிட்டாலும், உபத்திரவம் செய்யாமலும், பிறரை பாராட்டாவிட்டாலும் குறை சொல்லாமல் இருக்கவும், யாருக்கும் இடையூறாய் இல்லாமல் குறைகளிடையே நிறை காண்பவராய் நாங்கள் வாழ, இங்கே கூடியுள்ள அனைவருக்கும் அருள் வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. நல்லவைகள் எங்கிருந்தாலும் அதை எமதாக்க அழைக்கும் இறைவா!
எங்கள் குடும்பங்களில் நிலவுகின்ற வருத்தங்கள், உடல்நலக்குறைபாடு, பணத்தட்டுப்பாடு, வேலை வாய்ப்பின்மை, வரன்தடை, கணவன் மனைவி கருத்து வேறுபாடு ஒழுக்கக் குறைபாடுள்ள பிள்ளைகள், கலாச்சார போக்குக்கு அடிமையாகித் திரியும் அவல நிலை அனைத்திலும் இருந்து மீண்டு வரவும், இவைகளால் நல்லவைகள் எங்கிருந்தாலும் அதைக் கண்டு ஏற்று, எம்மிடையே வாழ்வோருக்கு தடைக்கற்களாக இல்லாது படிக்கற்களாக வாழ அருள் வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. என் பெயரால் சிறியோருக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுத்தாலும் கைமாறு பெறுவார் என்று மொழிந்த இயேசுவே!
சிறுவர்கள், தேவையில் இருப்போர், நலிவுற்ற நிலையில் வாடுவோர், வாழ்வாதரமின்றி அந்நிய நாட்டில் ஆறுதலின்றி அலைவோர் என அனைத்து உள்ளங்களுக்கும் அரவணைப்பான சூழ்நிலையை தந்து காத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 
மறையுரை சிந்தனைகள்
 
சொர்க்கத்தையும், நரகத்தையும் சுற்றிப்பார்க்க ஒரு குழுவினர், கடவுளிடம் அனுமதி பெற்றிருந்தனர். தேவதூதர்கள் நரகத்தை அந்த குழுவினருக்கு காண்பித்தார்கள். அங்கே அரச உடையில் ஒரு கால் இழந்த மனிதர் நெருப்பில் எரிந்து கொண்டிருந்தார். நிறைய மனிதர்கள் நெருப்புக்கு நடுவில் வேதனையோடு இருந்தார்கள்.

அதனைக் கடந்து கொஞ்ச தூரத்தில் சொர்க்கம் இருந்தது. அங்கே ஒரு சிம்மாசனத்தில் ஒரு கால் மட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்தக் காலைக் கண்டவுடன் சுற்றுலா வந்தவர்கள் "அந்தக் காலுக்கு மட்டும் இந்த சொர்க்கத்தில் அப்;படி என்ன மரியாதை" என்று வினவினார்கள்.

நரகத்தில் நெருப்புக்கு மத்தியில் ஒற்றைக் காலில்லாமல் நிற்கின்ற அந்த அரசனுடைய கால் தான் இந்த சிம்மாசனத்தில் இருப்பது.
இந்த அரசன் பூலோகத்தில் வாழ்ந்த காலத்தில் ஒரு போதும் எவருக்கும் நல்லது செய்ததே இல்லை.

ஒரு முறை காட்டு வழியே குதிரையில் வேகமாகச் சென்றபோது, வழியில் ஒரு ஒட்டகம் தண்ணீருக்கு அலை மோதியது. அருகில் இருந்த தண்ணீர் வாளியை எட்டமுடியாது, அதன் கயிறு வழக்கத்தை விட குட்டையாகக் கட்டப்பட்டிருந்தது. தண்ணீரை குடிக்க பல முறை முயன்று தோற்றுப் போய் தாகத்தால் வாடியது.

குதிரையில் சென்ற அரசனின் கண்ணில் இந்நிகழ்வு பட்டது. வேண்டா வெறுப்பாக மன்னன் தனது காலால் தண்ணீர் இருந்த வாளியை எட்டி உதைத்து குதிரைக்கு அருகில் தள்ளி விட்டு வேகமாகப் போய்விட்டான். குதிரை தணணீரை குடித்ததா என்று கூட நின்று திரும்பி பார்க்கவில்லை. இருப்பினும் அவன் செய்த அச்செயல்களுக்காக அவனது கால் சிம்மாசனத்தில் இடம் பெற்றிருக்கிறது, என்று தேவதூதர்கள் கூறினார்கள்.

நமது உடலின் எந்த உறுப்பு நற்செயல் செய்கிறதோ அந்த உறுப்புக்கு விண்ணகத்தில் நிச்சயம் இடம் உண்டு.

மன்னன் ஒருவன் அமைதியாக மக்களை ஆட்சி செய்தான். மக்களின் நல்வாழ்வுக்கு தேவையான செயல்களை எவருக்கும் குறைவின்றி செய்து வந்தான். மக்கள் எல்லோரும் மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். வளங்கள் பொங்க உழைத்தனர், உண்டு மகிழ்ந்தனர். விழாக்கள் பல கொண்டாடி இன்புற்றனர்.

அண்டை நாட்டில் கொடுங்கோல் ஆட்சி செய்த மன்னனுக்கு இது கண்டு பொறாமை மிகுந்தது. எனவே அமைதியாக ஆட்சி செய்த மன்னனின் நாட்டுக்கு போர் தொடுக்க விரும்பினான். முரசு அறிவிப்பவனை அழைத்து போர் பற்றி முரசு அறிவிக்கச் சொன்னான்.

முரசு அறிவிப்பவனும் போர் செய்தி அறிவித்தான். இரு நாட்டினரும் போரிட்டுக் கொண்டனர். போரில் அமைதியாக ஆட்சி செய்த மன்னனே வெற்றி பெற்றான். ஆனால் மக்கள் பலர் இரத்த வெள்ளத்தில் மிதந்தனர். பலர் மாண்டு போயினர். கொடுங்கோல் மன்னன் சரணடைந்தான். வெற்றி பெற்ற மன்னன், போரில் மக்கள் அடைந்த துயர் கண்டு வேதனைப்பட்டான். அமைதியாக வாழ்ந்த மக்கள் வாழ்வில், போர் முரசு அறிவித்து போருக்கு ஏற்பாடு செய்யச் சொன்ன மன்னனை விட்டு விட்டான்.

ஆனால் முரசு கொட்டி போர் செய்தி முழக்கி போரிடத்தூண்டிய முரசு அறிவிப்பவனை அழைத்து, அவனுக்கே தண்டனை வழங்கினான்.
அவனால் தான் இத்தனை பெரிய இரத்த வெள்ளம் என்று அவனை சிறையில் அடைத்தான்.

தவறு செய்தவனைவிட தவறு செய்ய தூண்டுபவர்களுக்கு கடுமையான தண்டனை சட்டத்திலும் உண்டு.

கொலை செய்தவனைவிட கொலை செய்ய கொலைஞனை ஏவி விட்டவனே கொடுமையானவன். அவனே தண்டனைக்கு உரியவன்.

தவறுகள் செய்ய ஆயிரம் வழி இருக்கு. ஆனால் தவறு செய்யாமல் இருக்க, ஒரே ஓரு வழி தான் இருக்கு அதுதான் ஓழுக்கம்.

தலைமுறை தாண்டி பேசப்படும் ஒழுக்கத்தை நமதாக்குவோம்

நமது உடலின் எந்த உறுப்பு தீமை செய்கிறதோ அந்த உறுப்புக்கு விண்ணகத்தில் இடம் இல்லை.

இரு காலுடன் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் காலனாய் வாழ்வில் புகுவது நலம்.

தவறு செய்யத் தூண்டுபவர்கள் மீண்டும் தலை தூக்கக் கூடாது என்பதற்கே இடையூறாக இருப்போர் கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி கடலில் தள்ளச் சொல்கிறார் நம் தலைவர் இயேசு.

முரண்பாடு நிறைந்த உலகில் படிக்கல்லா? தடைக்கல்லா? நம் வாழ்வு!
சிற்பி ஒருவன் கல்லை எடுத்து பாதிக்கல்லில் தெய்வச் சிலை ஒன்று வடித்தான். மீதிக்கல்லில் தெய்வத்தின் சந்நிதிக்கு படிக்கட்டு அமைத்தான். படிக்கட்டில் மிதித்து பலரும் தெய்வத்தை தொட்டு கும்பிட்டுச் சென்றனர். படிக்கட்டு தெய்வச் சிலையிடம் நீயும் நானும் ஒரே கல் தானே, என்னையோ காலால் மிதிக்கிறார்கள். உன்னையோ கையால் தொழுது வணங்கி மதிக்கிறார்கள் எனப் புலம்பியது. பதில் சொன்னது தெய்வச் சிலை "நீ இல்லை என்றால் ஒருவரும் என்னை சீண்ட மாட்டார்கள். உன்னை மிதிப்பதால் தான் என்னை மதிக்கிறார்கள் உன்னால் தான் எனக்கு இந்த மரியாதையே!"

படிக்கல்லால் தான் கடவுளுக்குக் கூட மரியாதையே கிடைக்கிறது.

படிக்கல்லாய் வாழ்ந்து நாமும் நம் அயலாரும் கடவுளை இனம் கண்டு கொள்ள முன்வருவோமா?
 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.

எல்லோரும் இறைவாக்கினர்களே

நாம் எல்லோரும் இறைவாக்கினர்கள் என்று கூறி அதன் படி வாழ நம்மை அழைக்கிறது இன்றைய வாசகங்கள் அனைத்தும். இறைவாக்குரைப்பது ஒரு கொடை அதை அனைவராலும் செய்ய முடியாது. இறைவார்த்தையை எவனொருவன் உள் வாங்கி அதை தன் வாழ்வில் செயல்படுத்துகிறானோ அவனே உண்மையான இறைவாக்கினராக இருக்க முடியும். இறைவாக்குரைக்கும் திறன் நம்மில் மறைந்திக்கிறது. நாம் தாம் அதை நம் செயல்களாலும் சொற்களாலும் வெளிப்படுத்தவேண்டும். இதனையே மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் இவ்வாறு கூறுவார், "இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகத்தையே படிக்க வைப்பது நம் ஒவ்வொருவரின் கைகளில் இருக்கிறது" என்பார். அது உண்மை தான். நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை எது என்பதை கண்டறிந்து அதை வெளிப்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இதற்கு உறுதுணையாகவே நமது புலனுறுப்புகள் இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி நமக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய உறுப்புகள் நமது நன்மைக்கு உதவாது நம்மை தீமை செய்யும் பாவத்தில் விழச்செய்தால் அதை வெட்டி எறிந்து விடவும் தயங்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார் இயேசு. கண் கை கால் இவை மனிதனுக்கு மிகவும் முக்கியமான உறுப்புகள். அதுவும் இன்றைய தலைமுறையினராகிய நமக்கு கண்ணும் கையும் மிக மிக முக்கியம். அலைபேசியில் நம்மை ஐக்கியப்படுத்த...

இன்றைய முதல் வாசகத்தில் நிகழ்வது போலவே நற்செய்தியிலும் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அது நம்மைச்சாராத ஒருவர் நம் பணியைச்செய்கிறார் என்ற புகார். அதற்கு மோயீசனும் இயேசுவும் கூறும் பதில் ஒன்று. நமக்கு எதிராக இராதவர் நமக்கு சார்பாக இருக்கிறார் என்று உறுதி தருகிறார் இயேசு. ஆண்டவரின் மக்கள் அனைவரும் இறைவாக்கினராகும்படி அவர் அவர்களுக்கு தம் ஆவியை அளிப்பது எத்துணை சிறப்பு என்று எண்ணி மகிழ்கிறார் மோயீசன் . முதல் இரண்டாம் வாசகத்தில் இறைவாக்குரைக்கும் பணி நற்செய்தியில் பேயோட்டும் பணி என்று அவரவர் பெற்ற கொடைகளுக்கேற்ப இறைப்பணியாற்றுகின்றனர் இறைப்பணி ஆற்றுபவர்களால் தூண்டப்பட்டவர்கள். நாமும் இறைவாக்கினர்கள் என்றால் நமது நற்பணியால் நாம் பிறரை தூண்டி இழுக்க வேண்டும். நமது செயல்பாடுகளால் நாம் பிறரை நற்செயல் செய்ய தூண்டுகிறோமா என்று சிந்திப்போம்.

இறைவன் ஏராளமான அருட்கொடைகளால் நம்மை நிரப்பியுள்ளார் . பேசுதல், பார்த்தல், செய்தல், நடத்தல், உணர்தல், எழுதுதல், வரைதல், பாடுதல், என எல்லாவிதமான செயல்களையும் செய்யும் அளவிற்கு ஆற்றல் தந்திருக்கிறார். இந்த திறன்களின் ஆற்றல் உணர்ந்து நம்மை நாம் வளப்படுத்தி கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் மிக முக்கியமானது பேசும் திறன். பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். நமது வார்த்தைகளுக்கு வலிமை உண்டு. அவை நம்மை நல்ல வழிக்கும் இட்டுச் செல்லும், தீய வழிக்கும் இட்டுச் செல்லும். வார்த்தைக்கும் வாழ்விற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. துறவி ஒருவர் தனது சீடர்களுக்கு வார்த்தையின் வலிமை பற்றி போதனை செய்து கொண்டிருந்தார். வார்த்தை வலிமையானது அதை கவனமாக கையாள வேண்டும். எதை நீங்கள் சொல்கீன்றீர்களோ அதுவாகவே மாறுகின்றீர்கள் எனவே நல்லவற்றை சொல்லுங்கள் நல்லவர்களாக வாழுங்கள் என்றார். சீடன் ஒருவனுக்கு சந்தேகம் எனவே உடனே எழுந்து துறவியிடம் தனது சந்தேகத்தைக் கேட்டான். குருவே நான் கடவுளாகிறேன் கடவுளாகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் கடவுளாகி விடுவேனா இல்லை. சாத்தானாகிறேன் சாத்தானாகிறேன் என்று சொல்வதனால் சாத்தானாகி விடுவேனா . அதனால் வார்த்தைக்கும் வாழ்வின் செயலுக்கும் சம்மந்தம் இல்லை என்பதே என் கருத்து என்றான். துறவி சற்று நேரம் அமைதியாயிருந்து விட்டு சீடனைப் பார்த்து, முட்டாளே அதிகமாகப் பேசாதே உட்கார் என்றார். முட்டாள் என்ற வார்த்தையைக் கேட்டதும் கோபமடைந்த சீடன் கொதித்தெழுந்து, நானா முட்டாள் , தெளிவான விளக்கம் சொல்லத் தெரியாத நீ தான் முட்டாள் உன்னிடம் சீடனாய் சேர்ந்தது என் தவறு என்று தனது கோபத்தை எல்லாம் வார்த்தைகளால் கொட்டித் தீர்த்தான். சற்று நேரத்துக்கு பின் துறவி அவனிடம், உன்னை முட்டாள் என்று சொன்னதற்காக என்னை மன்னித்து விடு தெரியாமல் சொல்லி விட்டேன் என்றார். அவரது மன்னிப்பு என்ற வார்த்தையைக் கேட்டதும் சீடனும் தன் தவறினை உணர்ந்து அமைதியானான். துறவி, வார்த்தைக்கு வலிமை உண்டு அது நம் வாழ்வின் செயல்பாடுகளை மாற்றும் என்பதை இப்போது உணர்ந்து கொண்டீர்களா? முட்டாள் என்று சொன்னதும் வந்த கோபம் மன்னித்துவிடு என்றதும் மறைந்து விட்டது கவனித்தீர்களா? என்றார். எனவே தான் சொல்கிறேன் வார்த்தை வலிமையானது என்றாராம்.

பலநேரங்களில் நமது வாழ்க்கையையும் நமது வார்த்தைகள் தான் தீர்மானிக்கின்றன. நாம் தான் அதை கண்டுணர்வதில்லை. நமக்கு வாழ்வை கொடுப்பதும் நம் வாழ்வைக் கெடுப்பதும் நம் வார்த்தைகள் தான். நமது நல்ல வார்த்தைகளினால் செல்வங்களான விலையுயர்ந்த ஆடை,பொன் வெள்ளியையும் பெருக்கிக் கொள்கிறோம். நமது தீய வார்த்தைகளினால் அவற்றை மக்கிப் போக அரித்துப் போக,துருப்பிடிக்கச்செய்கிறோம். வார்த்தைகளில் கவனம் செலுத்துவோம். வளமாக வாழ்வோம். பெரும்பாலும் நமது வாழ்வின் சிக்கல்களுக்கு காரணம் நமது வார்த்தைகள் தான் தகுந்த நேரத்தில் சொல்லாமல் விட்ட வார்த்தைகளும், தேவை இல்லாத இடத்தில் சொல்லிவிட்ட வார்த்தைகளும் தான். ஒரு தவறு நடந்தால் முதலில் பிழைகளை நம்மிடம் இருந்து தேடுவோம். பிறரில் தேடத்துவங்கினால் மீண்டும் தவறுகள் பெரிதாகும் சூழல் ஏற்படும். பிள்ளைகள் வைத்திருக்கும் அலைபேசி பழுதனால் பிள்ளைகளால் தான் அவ்வாறு ஆனது என்று குழந்தைகளை திட்டுகிறோம். அதே பிள்ளைகள் படிக்காமல் போனாலோ காதல் வயப்பட்டு பழுதானாலோ அலைபேசியால் தான் அவ்வாறு ஆனார்கள் என்று அலைபேசியைத் திட்டுகிறோம். தவறை நம்மிடம் இருந்து களைய முற்படுவோம். அன்பான வார்த்தைகளினால் அனைவரையும் கவர முயல்வோம். நமது இறைவாக்குப் பணியை நம் இல்லத்தில் இருந்து தொடங்குவோம். சிறு துளி பெரு வெள்ளம். சிறு கனல் பெரு நெருப்பு என்பதை உணர்ந்து செயலாற்றுவோம். எனவே அன்பு உள்ளங்களே நாம் அனைவரும் இறைவாக்கினர்களாக வாழ அழைக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல. இறைவாக்கினர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதை உணர்வோம். எதிர்கால இறைவாக்கினர்கள் அல்ல நிகழ்கால இறைவாக்கினர்கள். எனவே நம் குரலை இரக்கத்துக்காகவும், காதுகளை கருணைக்காகவும், கைகளைக் கொடைகளுக்காகவும் மனதை உண்மைக்காகவும் கொடுத்து வாழ்வோம். நமது இறைவாக்குப் பணியால் பிறரையும் நற்செயல் செய்யத் தூண்டுவோம். வரலாற்றின் பக்கங்களில் நமது பக்கத்தை அலங்கரிக்க அழகான செயல்களை அன்பாக செய்ய தொடங்குவோம் இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.

 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 
கொடைகளைக் கொண்டாடுங்கள்!

'கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிந்ததுபோல' என்னும் சொலவடையை நாம் கேள்விப்பட்டிருப்போம். இச்சொலவடை எப்படி உருவாகியிருக்கும்? பாட்டி ஒருத்தி தன் வீட்டில் சோறு சமைக்கு முற்பட்டாள். அடுப்பு இருந்தது. பாத்திரம் இருந்தது. தண்ணீர் இருந்தது. அரிசி இருந்தது. அடுப்பு எரிக்க விறகும் இருந்தது. ஆனால், அடுப்பின் விறகைப் பற்ற வைக்கும் நெருப்புதான் இல்லை. நெருப்பு பெட்டி காலியாகிவிட்டது. இந்நேரமும் கடையும் சாத்தியிருக்கும். என்ன செய்வது என்று தெரியாத பாட்டி தன் பக்கத்து வீட்டிற்குள் சென்று நெருப்பு பெட்டி கேட்கிறாள். அந்த வீட்டின் பெண்மணியோ, 'எனக்கும் நெருப்பு பெட்டியில் ஒரு குச்சிதான் இருந்தது. ஆனால், ஒன்று செய். என் வீட்டில் எரிந்துகொண்டிருக்கும் அடுப்பிலிருந்து ஒரு கட்டையை எடுத்துக் கொடுக்கிறேன். நீ சென்று அதை வைத்து உன் வீட்டில் அடுப்பு பற்ற வைத்துக்கொள்.' 'சரி' என்று வாங்கிய பாட்டி 'எரிகின்ற, எரிந்து மின்னுகின்ற கொள்ளிக்கட்டையுடன் தன் வீடு நோக்கி வேகமாகச் செல்கிறாள். தன் வீட்டிற்குள் வரும்போது தன் வீட்டின் நிலையில் தன் தலை இலேசாக உரச, அந்த இடம் அரிக்கத் தொடங்குகிறது. வழக்கமாக கட்டையாலேயே தன் உடலையும், தலையையும் சொறிந்த பழகிய பாட்டி, தன் கையில் இருப்பது கொள்ளிக்கட்டை என்று தெரியாமல், தன் தலையில் அதை தேய்க்க ஆரம்பிக்கிறாள். விளைவு? அவளின் தலை வெந்துபோயிருக்கும். கட்டை அணைந்து போயிருக்கும். ஆக, உணவு சமைக்க கொடுக்கப்பட்ட நெருப்புக்கட்டை அவளின் தலையை சமைத்துவிடுகிறது.
கொடையாகப் பெற்ற கொள்ளிக்கட்டை ஆபத்தாக முடிகிறது.

இப்படிப்பட்ட வருத்தமான நிகழ்வு மூன்று மனிதர்கள் வழியாக நடப்பதை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

கடவுளின் பணியாளர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட கொடையைக் கொண்டாடாமல், தங்கள் பொறாமை உணர்வால் அவற்றைத் தங்களுக்கென வைத்துக்கொள்ள நினைக்கும்போது, அது அவர்களையே அழிக்கும் கருவியாக மாறிவிடுகிறது என்பதே இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சொல்லும் பாடம்.

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். எண் 11:25-29) நம் சிந்தனையைத் தொடங்குவோம். எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை மோசேயின் தலைமையில் விடுவிக்கும் யாவே இறைவன், அவர்களை மோவாபு பாலைநிலத்தில் வழிநடத்திச் செல்கின்றார். நாற்பது ஆண்டுகளாக பாலைவனத்தில் பயணம் செய்யும் மக்களின் வாழ்வை எடுத்துச் சொல்கிறது எண்ணிக்கை நூல். இந்த மக்களால் தான் அடையும் 11 துன்பங்களை வரிசையாக இறைவனிடம் முறையிடுகின்றார் மோசே. மோசேயின் 11 முறையீடல்களுக்குப் பின் யாவே இறைவனின் பதில் என்னவாக இருக்கிறதென்றால், மோசேயிடமும், மக்களிடமிருந்தும் யாவே இறைவனின் கை ஒருபோதும் அகலாது என்பதுதான். மோசே தன் பணிக்கு வலுவூட்டுவம், பணியை எளிதாக்கி இன்னும் விரிசல்படுத்தவும் 70 மூப்பர்களைத் தேர்ந்தெடுக்கின்றார். இந்த மூப்பர்களைத் தெரிவு செய்து அவர்களின் மேல் தூய ஆவியைப் பொழியும் நிகழ்வே இன்றைய முதல் வாசகம். சந்திப்புக்கூடாரத்தின் மேகத்தின்மேல் இறங்கி வருகின்ற யாவே இறைவன், மோசேயிடமிருந்த தன் ஆவியை எடுத்து, அதை எழுபதின்பர் மேல் அனுப்புகின்றார். ஆக, இந்த எழுபதின்மர் இனி மோசேயின் ஆவியைக் கொண்டிருக்கின்றனர். மோசே போல கடவுளின் அருட்செயலில் பங்குபெறுகின்றனர்.

எழுபதின்மர் மேல் ஆவி இறங்கி வந்த நேரத்தில். தங்கள் கூடாராங்களில் தங்கியிருந்த வேறு இருவர் மேலும் - எல்தாது, மேதாது - தூய ஆவி இறங்கி வருகின்றது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத யோசுவா, மோசேயிடம் அதைப்பற்றி புகார் தருகின்றார். ஆனால், மோசே அவரை கடிந்து கொள்கின்றார்.

யோசுவாவை பொறுத்தவரையில், ஆண்டவரின் கொடை என்பது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும், அதிலும் குறிப்பாக சந்திப்புக் கூடாரத்தில் கூடியிருந்தவர்களுக்கு மட்டும் சொந்தமானது என அவர் நினைக்கிறார். ஆகையால்தான், சந்திப்புக் கூடாரத்தில் இல்லாமல் தங்களின் சாதாரண கூடாரங்களில் இருந்த இருவர்மேலும் ஆண்டவரின் ஆவி பொழியப்பட்டதை யோசுவாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. யோசுவா, இவ்வாறாக, சந்திப்புக் கூடாரத்தில் இருந்தவர்கள் மற்றவர்களை விட தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லது உயர்ந்தவர்கள் என்ற நிலையில் சிந்திக்கிறார். இவருடைய சிந்தனை, 'நாங்கள் - அவர்கள்' என்ற இரண்டு பிரிவை உருவாக்குவதுபோல இருக்கிறது. ஆனால், மோசேயின் சிந்தனையோ, 'நாம்' என்ற ஒற்றைச் சிந்தனையாக இருக்கிறது. கடவுளின் கொடை அனைவர் மேலும் பொழியப்படலாம் என்பதும், கடவுளிடம் பாரபட்சம், பாகுபாடு இல்லை என்பதும் மோசேயின் புரிதலாக இருக்கிறது. மோசே தரும் பதில் ஆச்சர்யமாக இருக்கிறது: 'ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணை சிறப்பு!' இவ்வாறாக, தான் பெற்ற கொடையை மற்றவரும் பெற்றிருக்கிறார் என்பதைக் கண்டு, கொடையைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, தன் பொறாமை உணர்வால் தன்னையே அழித்துக்கொள்கிறார் யோசுவா.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். யாக் 5:1-6) யாக்கோபு தன் திருஅவையில் விளங்கிய 'தற்சார்பு' மற்றும் 'தன்நிறைவு' போக்கைக் கண்டிக்கிறார். தற்சார்பும், தன்நிறைவும் நல்லதுதானே? அடுத்தவரின் கையை நாடாமல், நானே நிறைவோடு வாழ்வது நல்லதுதானே? 'தற்சார்பும்,' 'தன்நிறைவும்' நல்லதுதான். எப்போது? அது 'தன்மையப்போக்கு' இல்லாதபோது. யாக்கோபின் திருச்சபையில் வாழ்ந்த பணக்கார நிலக்கிழார்களையும், செல்வந்தர்களையும் நோக்கி இருக்கிறது அவருடைய கண்டனமும், அறிவுரையும். இந்த இரண்டு குழுக்களும், 'தற்சார்பு,' மற்றும் 'தன்நிறைவு' கொண்டிருப்பதாக நினைத்து, தன்மையப்போக்கைக் கொண்டிருந்தனர். எப்படி?

முதலில், இவர்கள், 'கடவுள் எங்களுக்குத் தேவையில்லை' என நினைத்தனர். தாங்கள் இவ்வுலக வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்றுக்கொண்டதால், மறுவுலகமும், மறுவுலகம் தருகின்ற மகிழ்வும் தேவையில்லை என எண்ணினார்கள். இவ்வாறாக, தங்கள் வாழ்வை இவ்வுலகம் சார்ந்த வாழ்வாக மட்டுமே வாழ்ந்தனர். இவர்களின் பணம், பகட்டான ஆடை, பொன், வெள்ளி அனைத்தும் அழுகிப்போனவை என்றும், பயனற்றவை என்றும், கடவுளின் முன் செல்லாதவை என்றும் கடிந்துகொள்கிறார் யாக்கோபு. செல்வம் அழியக்கூடியது. இயற்கைச் சீற்றமோ, பூச்சிகளோ, துருவோ, திருடர்களோ நம் செல்வத்திற்கு ஆபத்தாகவே இருக்கின்றனர். யாக்கோபு இந்த மடலை எழுதிய காலத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. மக்கள் பணத்தையும், பொருளையும் தங்கள் இல்லங்களில்தான் சேமித்து வைத்திருப்பர். ஆக, செல்வம் எளிதில் அழியக்கூடிய பொருளாகவே இருந்திருக்கும். இரண்டாவதாக, இவர்கள் சம்பாதித்த செல்வம் அனைத்தும் அடுத்தவர்களை ஏமாற்றி, அடுத்தவர்களின் உரிமைகளை மறுத்து சம்பாதித்தவை. தாங்கள் நிறைவு பெற வேண்டும் என்பதற்காக, இவர்கள் பணியாளர்களுக்கு தகுந்த ஊதியம் தரவில்லை. அவர்களின் உழைப்பை இவர்கள் சுரண்டினர். எளியவர்க்கு உரியதை இவர்கள் மறுத்தனர். யாக்கோபு குறிப்பிடும் செல்வர்கள் மற்றவர்களைச் சுரண்டிச் செல்வம் சேர்த்தவர்கள். அதாவது, தங்களின் வயல்களில் வேலை செய்யும் கூலிக்காரர்கள் மற்றும் அறுவடை செய்பவர்களின் கூலியைக் கொடுக்காமல் அவற்றை தங்களின் ஆடம்பர வாழ்வுக்குப் பயன்படுத்திக் கொண்டவர்கள்.

இவ்வாறாக, உணவு, செல்வம், வாய்ப்பு, ஆடம்பரம் ஆகிய கொடைகளை இவர்கள் பெற்றிருந்தாலும், இவர்கள் அவற்றைப் பகிராமல் தங்களுக்கே வைத்திருந்ததால், அக்கொடைகளே அவர்களின் அழிவுக்கும் காரணமாகிவிடுகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகம் (மாற் 9:38-48) மூன்று உட்பிரிவுகளைக் கொண்டிருக்கிறது.

அ. நம்மைச் சாராத ஒருவர் பேய் ஓட்டுகிறார் என்று இயேசுவிடம் புகார்
ஆ. சின்னஞ்சிறியவர்களுக்கு இடறலாக இருத்தல் வேண்டாம்
இ. பாவத்தில் விழுவது பற்றிய எச்சரிக்கை


முதலில், முதல் வாசகத்தின் யோசுவா மோசேயிடம் புகார் அளித்தது போல, யோவானும் இயேசுவிடம் ஒரு முறையீடு செய்கின்றார். இயேசுவின் பெயரால் ஒருவர் பேயை ஓட்டுகின்றார். ஆனால், அந்த நபர் 12 திருத்தூதர்களோடு சேராதவர். திருத்தூதர்கள் தாங்கள் ஏற்கனவே பேய்களை ஓட்டியிருந்ததால், இந்தக் கொடை தங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு உரிமை என நினைத்தனர். இயேசுவின் பெயரில் தங்களுக்கு மட்டுமே பங்கு உண்டு எனக் கருதினர். இதன் காரணமாக, தங்களோடு சேராத அந்த நபரைக் கடிந்துகொள்கின்றனர். அவர் அப்படி வல்ல செயல்கள் செய்வதைத் தடுக்கவும் செய்கின்றனர். ஆனால், இயேசு, மோசே செய்ததைப் போல, 'அவரை ஒன்றும் செய்ய வேண்டாம்' என அறிவுறுத்துகின்றார்.இயேசுவின் பதில் இரண்டு கூறுகளை உள்ளடக்குகின்றது: ஒன்று, தன் பெயரால் வல்ல செயல் செய்பவர் ஒருபோதும் தனக்கு எதிராக கிளர்ந்தெழ மாட்டார். இரண்டு, 'நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்' என்னும் பழமொழி. இந்த இரண்டின் வழியாகவும் பேய் ஓட்டுபவர் இயேசுவுக்கு எதிரானவர் அல்லர் என்ற செய்தியை இயேசு முன்வைத்து, 'கொடைகள் அனைவருக்கும் பொதுவானவை' என்று தன் திருத்தாதர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.

இரண்டாவதாக, 'யாருக்கும், குறிப்பாக, சின்னஞ்சிறியவர்களுக்கு இடறலாக இருக்க வேண்டாம்' எனக் கற்பிக்கிறார் இயேசு. 'சின்னஞ்சிறியவர்கள்' என்பவர்கள் திருத்தூதர்குழாமைச் சேராதவர்கள். அதாவது, திருத்தூதர்குழாமைச் சேர்ந்தவர்கள் ஏதாவது ஒரு தவறு செய்தால் - எடுத்துக்காட்டாக, பொறாமைப்பட்டால், குறுகிய மனப்பான்மை கொண்டிருந்தால் - அது, குழுவைச் சாராதவர்களுக்கு எதிர்சான்றாய் அமையும். அவர்களின் நம்பிக்கை அதனால் பாதிக்கப்படும். ஆக, கடவுளின் கொடையை தங்கள் குறுகிய மனப்பான்மையால், பொறாமையால் அதை தங்களுக்கு உரிய உரிமைப் பொருளாகப் பாவித்துக்கொள்ள வேண்டாம் என்றும், மாறாக, கொடைகளை மற்றவர்களோடு பகிரும்போது, இடறல் குறையும் என்றும் கற்பிக்கிறார் இயேசு.

மூன்றாவதாக, பாவத்தில் விழுவது பற்றிய எச்சரிக்கை. இங்கே பாவம் என்பது யோவான் மற்றும் திருத்தூதர்களின் பொறாமை அல்லது குறுகிய மனப்பான்மையைக் குறிப்பதாக இருக்கிறது. பாவத்திற்கு இட்டுச் செல்லும் கை, கால், மற்றும் கண் - இடறலாக இருந்தால் - அவற்றை வெட்டி அல்லது பிடுங்கி எறிய வேண்டும் என்கிறார் இயேசு. இங்கே பயன்படுத்தப்படும் இலக்கிய நடை 'மிகைப்படுத்துதல்'. கை, கால், கண் என்னும் மூன்றும் பாலியல் சார்ந்த பாவங்களுக்குக் காரணமாக இருக்கிறது என்பது ரபிக்களின் போதனை. அதாவது, கையால் செய்யப்படும் சுயஇன்பம் ஒருவர் தன்னோடு செய்து கொள்ளும் விபச்சாரம் என்றும், கண்களால் பார்த்து, அந்தக் கண்களை நோக்கி கால்கள் நடந்து செய்யும் பாவம் பிறரோடு செய்யும் விபச்சாரம் எனவும் அவர்கள் போதித்தனர். தன் சமகாலத்தில் நிலவிய போதனையை இயேசு அப்படியே தன் போதனையில் சேர்த்திருக்கலாம். மூன்று உறுப்புகள் மட்டும் சொல்லப்பட்டிருப்பது எதற்காக என்றால், இந்த மூன்று என்ற எண்ணின் வழியாக எல்லா உறுப்புகளும் சொல்லப்படுகின்றன என்பதும் கருத்து. உடலை வெட்டுவது என்னும் கொடூரத்தை 2 மக்கபேயர் 7ல் வாசிக்கின்றோம். அங்கே தீய அரசன் நல்லவர்களுக்கு அந்த தண்டனையைக் கொடுக்கிறான். இங்கே தீமை நிகழாமல் இருக்க உறுப்பு சேதம் அவசியமாகிறது. உறுப்பு சேதம் இயேசுவின் சமகால கும்ரான் போதனையிலும் அதிகமாக இருந்தது. மேலும் கிரேக்க இலக்கியத்தில் நாம் காணும் இடிபஸ் தன் தாய் வழியாக தான் பெற்றெடுத்த குழந்தைகளைக் காண இயலாமல் தன் கண்களைத் தானே பிடுங்கிக் கொள்கிறான். உறுப்பு சேதம் பாவத்தின் கொடுமையான தன்மையைக் குறிப்பதாகவும் இருந்தது. தின்னும் புழு, அவிக்கும் நெருப்பு. புழுக்களும், நெருப்பும்தான் நரகத்தில் மனிதர்களை வதைப்பவை என்று நம்பினர் யூத முன்னோர். இங்கே நரகம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பது பற்றி இயேசு பேசவில்லை. மாறாக, பாவத்தில் விழும் சீடர்களுக்கு என்ன நிகழும் என்பதையே இயேசு சொல்கின்றார்.

இவ்வாறாக, திருத்தூதர்கள் தாங்கள் பெற்றிருக்கின்ற கொடையைக் குறித்து குறுகிய மனப்பான்மை கொள்ளாமல் இருத்தல் வேண்டும். மேலும், கொடைகளைப் பெற்றவர்கள் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தாமல், மற்றவர்களுக்கு இடறலாக இருக்குமாறு பயன்படுத்தினால் அது அவர்களுக்கே தீங்காய் முடியும்.

இப்படியாக, இன்றைய இறைவாக்கு வழிபாடு, கொடைகள் கொண்டாடப்படவில்லை என்றால், அவை ஆபத்தாக முடியும் என எச்சரிக்கை விடுக்கின்றது.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு முன்வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

ஒட்டுமொத்த மனித இனத்தையும், கிறிஸ்தவர்களாகிய நம்மையும் பாதிக்கும் ஒரு பிரச்சினை என்னவென்றால், 'கொடையினால் வரும் உரிமை.' அப்படின்னா என்ன?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரச பதவியில் இருக்கின்றவர்கள், தங்கள் பதவியை மக்களின் கொடையாகப் பெற்றுள்ளார்கள். ஆனால், இது கொடை என்பதை மறந்துவிட்டு அவர்கள் தங்கள் உரிமைகளின்மேல் நிறைய அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். தங்களுக்கென்று வீடு, வாகனம், மருத்துவ வசதி என எல்லாவற்றையும் பெற்றாலும், மக்களின் தேவைக்குரியது அனைத்தையும் ஊழல் செய்து, ஊழல் செய்வதை தங்கள் உரிமைபோல நினைத்து, அனைத்தும் அவர்களுக்குரியது ஆக்கிக்கொள்கின்றனர். மண், தண்ணீர், பால், சாலை, போக்குவரத்து, நாட்டின் பாதுகாப்பு என அனைத்திலும் ஊழலைப் பரவச் செய்து, பாமர மக்களின் உரிமைச் சொத்துக்களைச் சுரண்டி தங்களுக்குரியது ஆக்கிக்கொள்கின்றனர். நம்மைவிட இவர்களுக்கு என்ன கூட இருக்கிறது? இவர்கள் என்ன படித்தவர்களா? வெகுசிலர் படித்திருக்கலாம். இவர்கள் நல்லவர்களா? இவர்கள் நேர்மையானவர்களா? இப்படி இருக்க, இவர்கள் தங்கள் கொடைகளை ஏன் தங்களுக்கு சாதகமாக்கி, தங்கள் தன்நிறைவு மற்றும் தற்சார்பு பற்றியே நினைக்கின்றனர்?

கிறிஸ்தவர்களாகிய நாமும் சில நேரங்களில், 'தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாங்கள்' என்று சொல்லிக்கொண்டு மற்றவர்களை 'பேய்களாகவும்,' 'அழிவுக்குரியவர்களாகவும்' நினைக்கிறோம். நமக்குள்ளே எழும் பல்வேறு சபையினர், தங்களுக்கு மட்டுமே ஆவி அருளப்பட்டதாகவும், மற்ற திருச்சபையினர் போதிப்பதெல்லாம் பொய் என்றும் சொல்லிக்கொள்ளத் தொடங்கிவிடுகிறோம். இப்படிச் செய்யும்போது, நாமும் இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் காணும் யோசுவா, செல்வந்தவர்கள், மற்றும் யோவான் போலத்தானே இருக்கின்றோம்? நம் குறுகிய எண்ணங்களிலிருந்து நம்மால் ஏன் விடுதலை பெற முடியவில்லை?

நாம் பெற்றிருக்கும் கொடைகளை எப்படி கொண்டாடுவது?

1. தாராள குணம் கொண்டிருத்தல்
பரந்த மனம் நாம் பெற வேண்டிய பெரிய சொத்து. இன்றைய முதல் வாசகம் மோசேயின் பரந்த குணத்தையும், நற்செய்தி வாசகம் இயேசுவின் பரந்த மனத்தையும் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. பரந்த மனம் கொண்டவர்கள் பாகுபாடு பார்க்க மாட்டார்கள். அவர்கள் தீமையைக் கடிந்துகொள்வார்களே தவிர, தீயவர்களைக் கடிந்துகொள்ள மாட்டார்கள். நன்மையைக் கொண்டாடுவார்கள். மேலும், இவர்கள் கடவுளைப் போல பார்க்கத் தொடங்குவார்கள். கடவுள் அனைவரையும் இணைத்துப் பார்ப்பவர். அவர் யாரையும் பிரித்துப் பார்ப்பவர் அல்லர். அடுத்தவர்கள் நம்மைச் சாராதவர் என்று பார்ப்பதை விடுத்து அவர் நம் சார்பாக இருக்கிறார் என்ற நிலையில் பார்க்கிறார் இயேசு. நல்லதைச் சொல்லவோ, செய்யவோ ஒருவர் இப்படித்தான் இருக்க வேண்டும், இந்த ஆடைதான் அணிய வேண்டும் என்று வரையறுப்பதை விட எல்லோரும் செய்யலாம், செய்ய வேண்டும் என்ற பரந்த மனப்பான்மைக்கு அழைப்பு விடுக்கின்றார். 'சார்ந்தவர்', 'சாராதவர்' என்பதெல்லாம் மேலோட்டமாக எழுகின்ற உணர்வுகள். அதிலிருந்து கடந்து செல்வதுதான் பரந்த மனப்பான்மை.

2. பொறாமை அகற்றுதல்
மோசேக்குப் பின் மக்களை வழிநடத்தும் தலைவராக நியமனம் பெற்றவர் யோசுவா. அப்படியிருக்க, தனக்கு போட்டியாக இந்த எழுபதின்மர் அல்லது எல்தாவு அல்லது மேதாது வந்து, தன் இடத்தைப் பறித்துவிடலாம் என்ற நினைப்பில் அவர்கள் மேல் பொறாமை கொண்டிருக்கலாம். அதுபோல, யோவானும், இயேசுவின் பெயரால் பேயை ஓட்டிய இயேசுவைச் சாராதவர் தன்னைவிட பெரியவர் ஆகிவிடலாம் என நினைத்திருக்கலாம். பொறாமையோடு கைகோர்த்துவரும் மற்றொரு நோய் 'தன்மைய அல்லது தன்வெற்றிமைய மனநிலை.' 'பொறாமை' என்பதை 'தீமையான கண்' என பதிவு செய்கிறது கிரேக்கப் பாடம். ஆக, தீமை என்ற உணர்வு உள்ளத்திலிருந்து ஏறி, நம் கண்களை நிரப்பிவிடுவதால் நம்மால் யாரையும் முழுமையாக அல்லது நலமானதாகப் பார்க்க முடிவதில்லை. நம்மிடம் இல்லாத ஒன்று மற்றவரிடம் இருக்கும்போது, அந்தக் குறையைப் பெரிதாக்கி நம்மையே நாம் தாழ்வாக மதிப்பிடுவதற்குப் பெயர்தான் பொறாமை என்று திருக்குறள் பொருள் கூறுகிறது. பொருள், குணம், செயல், பண்பு, கொடை, நட்பு - இவை நமக்குக் கிடைக்காமல் மற்றவருக்குக் கிடைக்கும்போது, அல்லது நமக்குக் கிடைத்தாலும், மற்றவருக்கும் கிடைக்கும்போது நம்மில் எழுகின்ற ஒரு உணர்வு ஒப்பீடு. இந்த ஒப்பீட்டின் உடன்பிறப்பு பொறாமை. இந்தப் பொறாமை நம்மிடமிருந்து விரட்டும் ஒரு நல்ல குணம் சகிப்புத்தன்மை.

3. கொடைகளைப் பயன்படுத்துதல்
நம்மிடம் நிறைய பணம் இருந்தும், அந்தப் பணம் அடுத்தவருக்குப் பயன்படவில்லை என்றால், அந்தப் பணம் நம்மிடம் இல்லை என்றே பொருள். ஏனெனில், அந்தப் பணம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? யாக்கோபின் திருச்சபையிலிருந்து பெரிய பிரச்சினை இதுதான். செல்வந்தர்களும், நிலக்கிழார்களும் தங்கள் செல்வத்தைப் பெற்றிருந்தாலும், அவற்றைப் பயன்படுத்துவதைவிடுத்து, அவற்றை இன்னும் அதிகமாக்கவம், அதிகமாக்கியதைப் பேணிப் பராமரிப்பவும் அக்கறை காட்டுகின்றனர். தங்கள் உழைப்பைக் கொடுத்தவர்களுக்குக் கூட இழப்பீடு செய்ய இவர்கள் தயாராக இல்லை. மேலும், கொடைகள் பயன்படுத்தப்படுவது மற்றவர்களுக்கு இடறலாகவும் இருத்தல் கூடாது. ஏனெனில், இடறல் மற்றும் பாவச்சூழல்களுக்கு கொடைகள் பயன்பட்டால், அக்கொடைகளைப் பெற்றிருப்பவருக்கே அவை ஆபத்தாக முடியும்.

இறுதியாக, நம் கொடைகள் கொண்டாடப்படவில்லை என்றால், அவைகள் ஆபத்தாக முடியும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. கொடைகளை நாம் அடையாளம் காணவும், அடையாளம் காணும் கொடைகளைப் பகிர்ந்து கொள்ளவும், பகிர்ந்து கொள்ளும் கொடைகளைப் பேணிக்காக்கவும் வேண்டும். மோசேயும், இயேசுவும் தங்களின் தான்மையை, தங்களின் கொடைகளை உணர்ந்திருந்ததால், அவர்களால் அனைவரையும், அனைத்தையும் கொண்டாட முடிந்தது.

கொடைகள் நம் கைகளில் இருக்கும் கொள்ளிக்கட்டைகள். இவற்றை வைத்து நாம் அடுப்பில் விறகு ஏற்றுவதே சால்பு. அதைவிடுத்து, அக்கைகளை நம்நோக்கித் திருப்பினால், அது நமக்கே ஆபத்தாகிவிடும். சில நேரங்களில் நாம் தடுமாறி விழலாம். நாம் விழும் இடத்தைப் பார்க்காமல், நாம் சறுக்கிய இடத்தைப் பார்த்து நம் வாழ்வைச் சரி செய்யும்போது நம் கொடைகளை நாமும் கொண்டாட முடியும்.
- அருட்பணி. இயேசு கருணாநிதி.
 
அறியாப் பிழை!

'தம் தவறுகளை உணர்ந்துகொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும்' (திபா 19:12). தன் ஆண்டவராகிய கடவுளின் திருச்சட்டத்திற்கு புகழாரம் சூட்டுகின்ற திருப்பாடல் ஆசிரியர் (இன்றைய பதிலுரைப்பாடல்), 'ஆண்டவரின் நியமங்கள் சரியானவை. இதயத்தை மகிழ்விக்கின்றன' என்று துள்ளிக் குதிக்கின்றார். ஆண்டவரின் திருச்சட்டம் அல்லும் பகலும் தன்னை எச்சரித்தாலும், சில நேரங்களில் தன் அறியாமையால் தவறு செய்வதாகவும், தன் அறியாப் பிழைக்காகத் தன்னை மன்னிக்குமாறும் ஆண்டவரிடம் மன்றாடுகின்றார் அவர்.

மெய்யியலில் அனைத்துத் தவறுகளுக்கும் அடிப்படைக் காரணம் அறியாமை என்று சொல்லப்படுகிறது. அல்லது மெய்யறிவு பெறுதலே தவறுகளைக் களைவதற்கான வழி.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு மூன்று நபர்களின் அறியாப் பிழையை நமக்குச் சுட்டிக்காட்டி, அதே பிழை நம்மிடமும் இருந்தால் நாம் இறைவனால் மெய்யறிவு புகட்டுப்பட்டு, அவற்றைச் சரி செய்ய நம்மை அழைக்கின்றது.

முதல் வாசகம் (எண் 11:25-29) எண்ணிக்கை நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை மோசேயின் தலைமையில் விடுவிக்கும் யாவே இறைவன், அவர்களை மோவாபு பாலைநிலத்தில் வழிநடத்திச் செல்கின்றார். நாற்பது ஆண்டுகளாக பாலைவனத்தில் பயணம் செய்யும் மக்களின் வாழ்வை எடுத்துச் சொல்கிறது எண்ணிக்கை நூல். பாலைவனத்துப் பயணம் அவர்களுக்கு அலுத்துப் போய்விடுகின்றது. 'நமக்கு உண்ண இறைச்சி யார் தருவார்? எகிப்தில் செலவின்றி உண்ட உணவு நினைவுக்கு வருகிறது. நம் வலிமை குன்றிப் போயிற்று. மன்னாவைத் தவிர வேறெதுவும் கண்களில் படுவதில்லையே!' (எண் 11:4-6) என்று முறையிடுகின்றனர். மக்களின் அழுகுரல் ஆண்டவருக்கு சினம் தருகின்றது. மோசேயும், 'எனக்கு ஏன் இந்தத் தீராச் சுமை? இவர்களை நானா கருத்தரித்தேன். இது எனக்கு மிகப்பெரிய பளு. இப்படியே எனக்குச் செய்வீரானால் உடனே என்னைக் கொன்றுவிடும்!' என்று ஆண்டவரிடம் அழுது முறையிடுகின்றார். இந்த நேரத்தில் மோசேயின் பணிக்கு உதவி செய்வதற்காக இஸ்ரயேலின் மூப்பரில் எழுபது பேரைத் தன்னிடம் அழைத்து வருமாறு சொல்கின்றார் ஆண்டவர். இந்த மூப்பர்களைத் தெரிவு செய்து அவர்களை ஆண்டவர் திருமுன் நிறுத்துகின்றார் மோசே. மோசேயிடம் உள்ள தன் ஆவியில் கொஞ்சத்தை எடுத்து அவர்கள்மேல் பொழிகின்றார் கடவுள். எழுபதின்மேர் ஆவி இறங்கிய நேரத்தில் ஆண்டவரின் சந்திப்புக் கூடாரத்திற்குள் இல்லாமல், தங்கள் இல்லங்களில் - அதாவது, தூய்மையற்ற மக்களின் வாழ்விடத்தில் - இருந்த எல்தாது மற்றும் மேதாது என்னும் இளவல்கள்மேலும் ஆவி பொழியப்பட அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்குரைக்கின்றனர். இதைக் காண்கின்ற யோசுவா, 'அவர்களைத் தடுத்து நிறுத்தும்!' என்று மோசேயிடம் சொல்கின்றார். அவரைக் கடிந்துகொள்கின்ற மோசே, 'என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? அதாவது, எனக்கு அது தெரிந்தும் நான் அமைதி காப்பது குறித்து பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணை சிறப்பு!' என்று அறிவுறுத்துகின்றார்.

தூய்மையான இடத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே ஆண்டவரின் ஆவி என்னும் கொடை வழங்கப்பட வேண்டும் என்றும், தூய்மையற்ற இடத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படக் கூடாது என்றும் யோசுவா நினைத்ததோடு, தனக்குக் கிடைப்பது தன் தகுதியால் வந்தது என்றும், தகுதியற்றவர்கள் அதைப் பெறக் கூடாது என்றும் பொறாமைப்படுகின்றார். யோசுவாவின் பொறாமையே அவருடைய அறியாப் பிழை.

ஆண்டவரின் கொடை அனைவருக்கும் பொதுவானது என்றும், ஆண்டவர் தான் விரும்பியவாறு செயல்படுகின்றார், அவருடைய நன்மைத்தனத்தை நாம் தடை செய்ய முடியாது என்றும் சொல்லி யோசுவாவின் அறியாப் பிழை போக்குகின்றார் மோசே.

இரண்டாம் வாசகம் (யாக் 5:1-6) யாக்கோபின் திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மெய்யான சமய வாழ்வு, குழும வாழ்வில் பாரபட்சம், செயலுடன் இணைந்த நம்பிக்கை, உள்ளத்தில் உள்ள தீய எண்ணம் ஆகியவை பற்றித் தன் குழுமத்திற்கு அறிவுறுத்திய யாக்கோபு, தொடர்ந்து. தன் திருச்சபையில் வாழ்ந்த பணக்கார நிலக்கிழார்கள் மற்றும் செல்வந்தர்களிடம் விளங்கிய தன்மையப் போக்கைக் கண்டிக்கின்றார். அதாவது, யாக்கோபின் குழுமத்தில் வாழ்ந்த செல்வந்தர்கள், 'தற்சார்பு' மற்றும் 'தன்நிறைவு' என்னும் பண்புகளைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். தற்சார்பு உணர்வு, 'எங்களுக்கு யாரும் - கடவுள்கூட தேவையில்லை' என்ற எண்ணத்தை விதைத்துவிட்டால் அது ஆபத்தாகிவிடுகிறது. ஏனெனில், இவர்கள், மறுவுலகமும் மறுவுலகம் தருகின்ற மகிழ்ச்சியும் தேவையில்லை என நினைத்தனர். இவர்களின் பணம், பகட்டான ஆடை, பொன், வெள்ளி அனைத்தும் அழுகிப்போனவை என்றும், பயனற்றவை என்றும், கடவுளின் முன் செல்லாதவை என்றும் கடிந்துகொள்கிறார் யாக்கோபு. மேலும் இவர்கள், தங்கள் தற்சார்பு நிலையில் தொடர்ந்து நிலைத்திருக்கும் பொருட்டு எளியவர்களையும் பணியாளர்களையும் சுரண்டத் தொடங்கினர்.

யாக்கோபின் குழுமத்தில் உள்ள செல்வந்தர்களின் அறியாப்பிழை பேராசை. தங்களின் இன்பமான வாழ்க்கை நிலைக்கு எந்தவொரு இடர்ப்பாடும் வந்துவிடக் கூடாது என்ற நிலையில் பேராசை கொண்டு அடுத்தவர்களுக்கு உரியதையும் தங்களுக்கென வைத்துக்கொள்கின்றனர். செல்வத்தின் நிலையாமை பற்றி எடுத்துச் சொல்லியும், கடவுளின் கொடை அனைவருக்கும் பொதுவானது என்று கூறியும் அவர்களை எச்சரிக்கின்ற யாக்கோபு அவர்களின் அறியாப் பிழை போக்க முயல்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (மாற் 9:38-48) மூன்று உட்பிரிவுகளைக் கொண்டிருக்கிறது: (அ) 'நம்மைச் சாராத ஒருவர் பேய் ஓட்டுகிறார்' என்று இயேசுவிடம் புகாரளிக்கின்றார் யோவான். (ஆ) சின்னஞ்சிறியவர்களுக்கு இடறலாக இருத்தல் வேண்டாம். (இ) பாவத்தில் விழுவது பற்றிய எச்சரிக்கை.

முதல் வாசகத்தில் யோசுவா மோசேயிடம் புகார் அளித்தது போல, யோவானும் இயேசுவிடம் ஒரு முறையீடு செய்கின்றார். இயேசுவின் பெயரால் ஒருவர் பேயை ஓட்டுகின்றார். ஆனால், அந்த நபர் பன்னிருவர் குழாமைச் சேராதவர். திருத்தூதர்கள் இயேசு வழங்கிய கொடை தங்களுக்குரியது என்று நினைத்தனர். ஆக, தங்களைச் சாராத ஒருவர் அதே கொடையைக் கொண்டிருப்பதை அவர்களால் சகித்துக்கொள்ள இயலவில்லை. 'அவரைத் தடுக்க வேண்டாம்' என்றும், தன் பெயரால் செய்பவர் தனக்கு எதிராகத் திரும்ப மாட்டார் என்றும் சொல்கின்றார் இயேசு. அதாவது, இயேசுவின் பெயர் என்பது தன்னிலேயே ஆற்றல் கொண்டது.

பன்னிருவரின், குறிப்பாக யோவானின், சகிப்புத்தன்மை என்னும் அறியாப் பிழையைக் கடிந்து கொள்கின்ற இயேசு, இரண்டு அறிவுரைகள் வழங்குகின்றார்: ஒன்று, 'யாருக்கும், குறிப்பாக, சின்னஞ்சிறியவர்களுக்கு இடறலாக இருத்தல் வேண்டாம்.' 'சின்னஞ்சிறியவர்கள்' என்பவர்கள் 'பன்னிருவர்' குழாமைச் சேராதவர்கள். மாறாக, தன்னைச் சார்ந்தவர் என்ற நிலையில் அனைவரையும் ஏற்றுக்கொள்தலும் உபசரித்தலும் பெரிய கைம்மாற்றைப் பெற்றுத்த தரும் என்றும் சொல்கின்றார். இரண்டு, பாவத்தில் விழுவது பற்றி எச்சரிக்கின்றார். இங்கே பாவம் என்பது யோவான் மற்றும் திருத்தூதர்களின் பொறாமை அல்லது குறுகிய மனப்பான்மையைக் குறிப்பதாக இருக்கிறது. பாவத்திற்கு இட்டுச் செல்லும் கை, கால், மற்றும் கண் - இடறலாக இருந்தால் - அவற்றை வெட்டி அல்லது பிடுங்கி எறிய வேண்டும் என்கிறார் இயேசு. இங்கே பயன்படுத்தப்படும் இலக்கிய நடை 'மிகைப்படுத்துதல்' (ஆங்கிலத்தில், 'ஹைப்பர்போல்') என்பதாகும். கை, கால், கண் என்னும் மூன்றும் பாலியல் சார்ந்த பாவங்களுக்குக் காரணமாக இருக்கிறது என்பது ரபிக்களின் போதனை. தன் சமகாலத்தில் நிலவிய போதனையை இயேசு அப்படியே தன் போதனையில் சேர்த்திருக்கலாம். மூன்று உறுப்புகள் மட்டும் சொல்லப்பட்டிருப்பது எதற்காக என்றால், இந்த மூன்று என்ற எண்ணின் வழியாக எல்லா உறுப்புகளும் சொல்லப்படுகின்றன என்பதும் கருத்து. உடலை வெட்டுவது என்னும் கொடூரத்தை 2 மக்கபேயர் 7ல் வாசிக்கின்றோம். அங்கே தீய அரசன் நல்லவர்களுக்கு அந்த தண்டனையைக் கொடுக்கிறான். இங்கே தீமை நிகழாமல் இருக்க உறுப்பு சேதம் அவசியமாகிறது. உறுப்பு சேதம் இயேசுவின் சமகால கும்ரான் போதனையிலும் அதிகமாக இருந்தது. மேலும் கிரேக்க இலக்கியத்தில் நாம் காணும் இடிபஸ் தன் தாய் வழியாக தான் பெற்றெடுத்த குழந்தைகளைக் காண இயலாமல் தன் கண்களைத் தானே பிடுங்கிக் கொள்கிறார். உறுப்பு சேதம் பாவத்தின் கொடுமையான தன்மையைக் குறிப்பதாகவும் இருந்தது. தின்னும் புழு, அவிக்கும் நெருப்பு. புழுக்களும், நெருப்பும்தான் நரகத்தில் மனிதர்களை வதைப்பவை என்று நம்பினர் யூத முன்னோர். இங்கே நரகம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பது பற்றி இயேசு பேசவில்லை. மாறாக, பாவத்தில் விழும் சீடர்களுக்கு என்ன நிகழும் என்பதையே இயேசு சொல்கின்றார்.

ஆக, இயேசுவைப் பொருத்தவரையில் அறியாப் பிழை களையப்படுவதுடன், அறியாப்பிழைக்குக் காரணமாக இருக்கின்ற எதுவும் வேருடன் அழிக்கப்பட வேண்டும். குறிப்பாக, சகிப்புத்தன்மையின்மை என்னும் அறியாப்பிழையை நீக்க, திருத்தூதர்கள் பரந்த பார்வை கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.

இவ்வாறாக, யோசுவாவின் பொறாமை என்னும் அறியாப் பிழையும், யாக்கோபு குழுமத்தின் செல்வந்தர்களின் பேராசை என்னும் அறியாப் பிழையும், பன்னிருவரின் (யோவானின்) சகிப்புத்தன்மை என்னும் அறியாப் பிழையும் நம் கண் முன் நிறுத்தப்படுகின்றன.

இவர்களின் தங்களின் அறியாப் பிழையை எப்படிக் களைகின்றனர்?
கடவுளின் நன்மைத்தனத்தைக் கண்டுகொண்டால் பொறாமை விலகிவிடும் என்று யோசுவாவுக்குக் கற்பிக்கின்றார் மோசே.

அனைத்தும் அனைவருக்கும் பொதுவானது, நாம் இறைவனையும் ஒருவர் மற்றவரையும் சார்ந்தவர்கள் என்று கற்றுக்கொண்டால் பேராசை விலகிவிடும் என்று தன் குழுமத்துக்குக் கற்பிக்கின்றார் யாக்கோபு.

சின்னஞ்சிறியவர்களைப் பொறுத்துக்கொள்தலும், தீமையை அகற்றுவது தன்னகத்தே தொடங்க வேண்டும் என்று தன் திருத்தூதர்களுக்கு அறிவுறுத்தி அவர்களின் சகிப்புத்தன்மையின்மையைக் களைந்து, அனைவரையும் கொண்டாடவும், சிறியவர்களையும் தங்களுடன் இணைத்துக்கொள்ளவும் அழைக்கின்றார்.

இப்பாடங்களை நாம் நம் வாழ்வில் எப்படிச் செயல்படுத்துவது?
(அ) பொறாமை
'பொறாமை' என்பது 'தீய பார்வை' அல்லது 'தீய கண்' என்று சொல்லப்படுகின்றது. நமக்கு முன்பின் தெரியாதவர்கள்மேல் உள்ள பொறாமையைவிட, நம் அன்புக்குரியவர்கள்மேல் நாம் கொள்ளும் பொறாமை ஆபத்தானது. தெருவில் நான் நடந்துசெல்லும்போது, நான் காண்கின்ற ஓர் அழகான வீட்டைப் பார்த்து, 'ச்சே! இப்படி எனக்கொரு வீடு இல்லையே!' என்று அந்த நபர்மேல் நான் கொள்ளும் பொறாமை என்னையும் பாதிப்பதில்லை, அவரையும் பாதிப்பதில்லை. ஏனெனில், அடுத்த தெருவுக்கு நான் சென்றவுடன் அதை மறந்துவிடுவேன். நம் அன்புக்குரியவர்கள் நற்செயல் செய்யும்போது, அழகாக இருக்கும்போது, நன்றாக வாழும்போது, அறிவுடன் செயல்படும்போது, நிறையத் திறமைகள் பெற்றிருக்கும்போது அவர்களைக் கண்டு பொறாமைப்படுகின்றோம். இது ஆபத்தானது! ஏனெனில், இந்தப் பொறாமையே கோபம் அல்லது எரிச்சலாக மாறுகிறது. யோசுவா எந்த முகம் கொண்டு தன் பாளையத்துக்குச் சென்றிருப்பார்? எல்தாது மற்றும் மேதாதை அவர் எப்படி எதிர்கொள்வார்? பொறாமை நம் அன்புக்குரியவர்களை நம்மிடமிருந்து அந்நியப்படுத்திவிடுகின்றது. மற்றவர்களின் நற்குணங்களையும், நன்னிலையையும் பாராட்டும்போது, அவர்களை நம்மவர்கள் என்று உரிமை கொண்டாடும்போது பொறாமை மறைகிறது.

(ஆ) பேராசை
ஆசை என்பதை நாம் நிறைவேற்றியவுடன் அது அடுத்த ஆசையாக வளர்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. மேலும், நம் எண்ணத்திற்கு அளவு இல்லாதது போல ஆசைக்கும் அளவு இல்லை. எண்ணத்தைக் கட்டுப்படுத்தும்போது ஆசைப்படுதல் என்னும் செயல் குறைய வாய்ப்பு உண்டு. மேலும், நீதியுணர்வு கொண்டிருக்கும்போதும் பேராசை கட்டுக்குள் இருக்கும்.

(இ) சகிப்புத்தன்மையின்மை
சகியாத்தன்மை அல்லது சகிப்புத்தன்மையின்மை என்பது அடுத்தவரின் பிரசன்னத்தை இல்லாமல் செய்துவிடுகிறது. தன் சகியாத்தன்மையால்தான் காயின் ஆபேலைக் கொல்கின்றார். நாம் கொலை செய்யும் அளவிற்குச் செல்வதில்லை என்றாலும், மற்றவர்களின் பெயர் அல்லது தன்மதிப்பைக் கொலைசெய்கின்றோம் நம் சகியாத்தன்மையால். மற்றவர்களின் தோல்வியில் அல்லது இழப்பில் அவர்களுடன் துணைநிற்பது எளிது. ஆனால், வெற்றியிலும் நிறைவிலும் உடன்நிற்பது கடினம்.

இன்று நம் இறைவேண்டல் எல்லாம், 'என் அறியாப் பிழையை மன்னியும்!' என்பதாகவே இருக்கட்டும்.
அறிந்தவுடன் பிழைகள் அகன்றுவிடும்.
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
 
அனைவருமே இறைவாக்கினர்கள்"

நிகழ்வு
ஒரு நகரில் ஒரு மூதாட்டி இருந்தார். அவர் பார்வையற்றவரும்கூட. அந்தநிலையிலும் அவருக்குக் கடவுள் வார்த்தையை அறிவிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆகவே, அவர் தனது பங்குப்பணியாளரிடம் சென்று, கடவுளின் வார்த்தையை அறிவிப்பது குறித்துத் தனக்கிருக்கும் ஆர்வத்தை எடுத்துச் சொன்னார். பின்னர் அவர் பங்குப்பணியாளரிடம், தனக்கு ஒரு திருவிவிலியத்தைத் தருமாறும், அதில் யோவான் 3: 16 இல் இடம்பெறும் இறைவார்த்தையை அடிக்கோடிட்டுத் தருமாறும் கேட்டார். பங்குப்பணியாளரும் அவர் கேட்டுக்கொண்டது போன்றே செய்தார்.

பங்குப் பணியாளர் தான் சொன்னதுபோன்றே செய்ததும் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றார் மூதாட்டி. இதற்கு நடுவில் பங்குப்பணியாளருக்கு, " நம்மிடமிருந்து திருவிவிலியத்தை வாங்கிக்கொண்டு போகும் இந்த மூதாட்டி, அதைக்கொண்டு என்ன செய்யப் போகிறார்?" என்று அவரைக் கூர்ந்து கவனித்தார்.

பங்குப் பணியாளரிடமிருந்து திருவிவிலியப் பெற்றுக்கொண்ட அந்த மூதாட்டி, நகரில் இருந்த ஒரு பிரபல பள்ளிக்கூடத்திற்கு முன்புநின்றுகொண்டு, பள்ளிக்கூடம் விட்டு வெளியே வரும் மாணவர்களிடம் திருவிவிலியத்தில் அடிக்கோடிட்ட பகுதியைக் காட்டி, "இதை உன்னால் வாசிக்க முடிகின்றதா?" என்று கேட்டார். "வாசிக்க முடிகின்றது" என்று சொல்லும் மாணவர்களிடம் அவர், "இதற்கான அர்த்தம் உனக்குத் தெரியுமா?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டார். அவர். அந்த மாணவர், "தெரியாது" என்றதும், அவர் அதற்கான விளக்கம் கொடுத்தார். இப்படியே அந்த மூதாட்டி பல ஆண்டுகளாகச் செய்துவந்தார். இதன் பயனாக இருபத்து நான்கு மாணவர்கள் பின்னாளில் அருள்பணியாளர்களாக உயர்ந்தார்கள்.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த நிகழ்வு, யார் வேண்டுமானாலும் இறைவாக்கினராக உயர்ந்து, இறைவாக்குப் பணியைச் செய்யலாம் என்ற செய்தியைத் தருகின்றது. பொதுக்காலம் இருபத்து ஆறாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, அனைவரும் இறைவாக்கு உரைக்க ஆண்டவர் தம் ஆவியைப் பொழிகின்றார் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

ஆண்டவரின் மக்கள் அனைவரும் இறைவாக்கு உரைக்கலாம்:
ஒருசிலர் இருக்கின்றார்கள், அவர்களின் நினைப்பெல்லாம், ஒருசில பணிகளை " குறிப்பிட்ட சிலர்" தான் செய்யவேண்டும், வேறு யாரும் செய்யக்கூடாது என்பதாக இருக்கும். ஒருவேளை அவர்கள் நினைத்ததற்கு மாறாக, வேறு யாரும் அந்தப் பணியை செய்துவிட்டால், அதை பெரிய குற்றம்போல் அவர்கள் கருதுவார்கள். இதற்கு எடுத்துக்காட்டுகளாக இருப்பவர்கள்தான் முதல்வாசகத்தில் வரும் யோசுவாவும், நற்செய்தியில் வருகின்ற யோவானும்!

ஆண்டவராகிய கடவுள் தன் ஊழியரான மோசேயிடமிருந்து ஆவியை எடுத்து, அதை எழுபது மூப்பருக்கு அளித்திருப்பார். அவர்களோடு சேர்த்து பாளையத்திலேயே தங்கிவிட்ட எல்தாதிற்கும் மேதாதிற்கும் அளித்திருப்பார். இச்செய்தியை யோசுவா, மோசேயிடம் சொல்கின்றபொழுது, மோசே அவரிடம், "ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அ;ளிப்பது எத்துணைச் சிறப்பு" என்கிறார். ஆண்டவர் தம் ஆவியைத் தம் மக்கள் அனைவர்மீதும் பொழிய, அவர்கள் இறைவாக்கு உரைப்பர் என்று மோசே சொன்னது, பின்னாளில் இறைவாக்கினர்கள் எசேக்கியேல் (36: 22-27), எரேமியா (31: 31), யோவேல் (2: 28) ஆகியோரால் அறிவிக்கப்பட்டுப் பெந்தக்கோஸ்து நாளில் நிறைவேறுகின்றது.

ஆம், ஆண்டவர் தம் ஆவியை மக்கள் அனைவர்மீது பொழிந்திருக்க, அவர்கள் இறைவாக்கு உரைப்பதை யார் தடுக்க முடியும்? நற்செய்தியில் யோவான், இயேசுவிடம், "ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம்" என்று சொல்கின்றபோது, இயேசு அவரிடம், அவரைத் தடுக்க வேண்டாம். ஏனெனில், நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கின்றார் என்கிறார். ஆதலால், இறைவாக்குரைக்கும் பணியை எல்லாரும் செய்யலாம் என்ற பரந்த பார்வையைக் நாம் கொண்டு வாழவேண்டும்.

பாவத்தில் விழச்செய்வோரின் கழுத்தில் எந்திரக் கல்!
ஆண்டவர் தம் ஆவியை மக்கள் அனைவருக்கும் அளித்து, அவர்களை இறைவாக்குரைப்பவர்களாக மாற்றியிருந்தாலும், ஒருசிலர் உடலளவிலும் மனத்தளவிலும் வலுக்குறைந்தவர்களாகவே இருக்கின்றார்கள். இவர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் காவலாளியாக இருக்கவேண்டும் (தொநூ 4: 9). அதை விடுத்து நாம் அவர்களைப் பாவத்தில் விழச் செய்தால் அல்லது அவர்களுக்கு இடறலாக இருந்தால் அது மிகப்பெரிய குற்றம்.

உமது பெயரால் ஒருவர் பேயை ஓட்டுகின்றார் என்று சொன்ன யோவானுக்குப் பதிலளித்துவிட்டு, இயேசு தொடர்ந்து பேசக்கூடிய வார்த்தைகள்தான், "என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளுவதே அவர்களுக்கு நல்லது" என்பதாகும். இங்கே இயேசு சொல்லக்கூடிய "என்மீது நம்பிக்கை கொண்டுள்ள சிறியோர்" என்பதை, உடலளவிலும் மனத்தளவிலும் வலுக்குறைந்தவர்கள் என்று மட்டும் பொருள் எடுத்துக்கொள்ளாமல், ஆண்டவரின் ஆவியாரால் நிரப்பப்பட்டு, அவர்மீது நம்பிக்கைகொண்டு, அவருடைய வார்த்தையை அறிவிக்கின்றவர்கள் என்றும் பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

இத்தகையோரைப் பாவத்தில் விழச் செய்வோருடைய அல்லது இத்தகையோருக்கு இடறலாக இருப்போருடைய கழுத்தில் எந்திரக்கல் கட்டப்பட்டு கடலில் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆதலால், ஆண்டவரின் ஆவியைக் கொண்டு அவருடைய வாக்கை அறிவிப்போருடைய வளர்ச்சிக்குக் காரணமாக இருக்க வேண்டுமே ஒழிய, தடைக்கல்லாக இருக்கக் கூடாது.

நேர்மையாளரைக் குற்றவாளி எனத் தீர்ப்பிட்டோருக்குத் தண்டனை:
ஆண்டவர் தம் ஆவியைத் தம் மக்கள் அனைவருக்கும் வழங்கி இருக்கின்றார் எனில், அந்த ஆவி அவரையே நம்பியிருக்கும் ஏழைகளிடமும் நேர்மையாளர்களிடமும் இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இத்தகையோரை வசதி படைத்தவர்களும் வலியவர்களும் வஞ்சித்தால், அவர்களின் கூக்குரல் ஆண்டவரின் செவிகளை எட்டும். பின்னர் அதுவே அவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பாய் அமையும். இக்கருத்தினை யாக்கோபு தனது திருமுகத்தில் மிக ஆழமாக வலியுறுத்திக் கூறுகின்றார்.

ஆம், யாக்கோபு வாழ்ந்த காலத்தில் சிலர் தங்களுடைய வயலில் வேலைபார்த்து வந்தவர்களுக்குச் சரியான கூலி கொடுக்காமல் வஞ்சித்தார்கள். நேர்மையாளர்களைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துக் கொலை செய்தார்கள். இத்தகையோரின் செல்வம் மட்கிப் போகும்; அவர்களுடைய பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிடும்; அந்தத் துருவே நெருப்புப் போல அவர்கள் சதையை அழித்துவிடும் என்று மிகவும் கண்டிப்பாய்ச் சொல்கின்றார் யாக்கோபு.

ஆண்டவரின் ஆவியைப் பெற்று, அந்த ஆவியாரால் இயக்கப்படும் அனைவரும் அவரது மக்கள் (உரோ 8: 14). அப்படி இருக்கையில், அவர்களைப் பாவத்தில் விழச் செய்வோருக்கும், அவர்களை வஞ்சிப்போக்கும் அழிவு என்பது உறுதி. ஆகையால், ஆண்டவரின் ஆவியால் நிரப்பப்பட்டிருக்கும் அவரது மக்களின் வளர்ச்சிக்குத் தடையாக இல்லாமல், படிக்கட்டுகளாக, இறுதி, அவரது வார்த்தை எங்கும் பரவச் செய்வோம்.

சிந்தனை:
" தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" (திப 1: 8) என்பார் இயேசு. எனவே, நாம் கடவுளின் ஆவியைப் பெற்றுக்கொண்டவர்களாய் அவரது வார்த்தையை எல்லாருக்கும் அறிவித்து அவருக்குச் சான்றுபகர்வோம். அதே வேளையில் பிறருக்குத் தடையாய், இடறலாய் இருப்பதை விடுத்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
 
தூய ஆவியானவரின் செயல்பாடு

ஜோசப், மேரி என்ற படித்த பட்டதாரிகள் இருவரும் திருமண வாழ்வில் கணவன் மனைவியாக தங்களை இணைத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்களின் திருமண வாழ்வு நீடிய நாட்கள் நிலைக்கவில்லை. காரணம் ஜோசப் பரம்பரை சம்பிரதாயத்தில் கலந்தவர், பழமைவாதி. எப்போதும் ஆண் அதிகாரம் காட்டுபவர். ஆனால் மேரியோ காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்ளும் புதுமைப்பெண். அடிக்கடி ஜோசப் சொல்வான்: நான் உன் கணவன். நீ என் மனைவி. நீ எனக்குக் கட்டுப்பட்டுத்தான் இருக்க வேண்டும். இந்த நிலை மேரியைப் பொறுமையற்ற, சகிக்க இயலா நிலைக்கு இட்டுச் சென்றது.

இதனால் சில மாதங்களிலே திருமண முறிவுக்கு இட்டுச் செல்லப்பட்டார்கள்.

இன்று சகிக்க இயலா நிலைக்குச் சமுதாயத்தில் பலர் தள்ளப்படுகிறார்கள். குடும்பத்திலே கணவன், மனைவி, பெற்றோர் பிள்ளைகள், மாமி, மருமகள் எல்லாரிடமும் இந்த நிலை அதிகமாக நிற்கிறது. இன்றைய இந்தியாவிலே பரம்பரைவாதிகள் தான் பெரும்பான்மையினர், சக்தி வாய்ந்தவர்கள் என்பதை நினைத்து சிறுபான்மையோருக்கு உரிமை கிடையாது என்கின்ற மனநிலை உருவாவதைப் பார்க்கிறோம். இதனால் சிறுபான்மையோரின் உரிமையைப் பறிக்கப் பார்க்கிறார்கள். அரசியலிலும், கலாச்சாரத்திலும் சாதிக் குருக்கள், மற்றவர்களைத் தடை செய்வதை நாம் பார்க்கிறோம்.

காரணம் என்ன?.

இதற்கெல்லாம் அடிப்படையாக அமைவது நான் என்ற அகந்தை. அகந்தையான மனிதன் தான் நினைப்பதும், செய்வதும் சரிதான் என கருதுகிறான். என்னை எதிர்ப்பவர் எல்லாம் தவிடுபொடியாவார்கள் என்ற நிலைக்கு இவன் தள்ளப்படுகிறான். .

இதைத்தான் புனித யாகப்பர் ஒரு மனிதனின் துருப்பிடித்த இதயம் அவனை அணு அணுவாகக் கொல்லும் (யாக. 5:3) என்று அழகாக எச்சரிக்கை தருகின்றார். அகங்காரம் கொண்டவன் ஆவியின் தூண்டுதலுக்குத் தன்னை ஆளாக்குவதில்லை (தி. பாடல் 19:13).

இன்றைய நற்செய்திக்கு வாருங்கள். இரண்டுபேர் கூடாரத்தில் இறைவாக்கு உரைத்தபோது ஒருவனைத் தடுக்க யோசுவா மோயீசனைக் கேட்டார். மோயீசனோ அதைக் கடிந்து கொண்டார் (எண் 11:25-29). ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தூதர்கள் மட்டும்தான் பேய்களை ஓட்ட வேண்டும். மற்றவர் கூடாது எனத் தடை போட்ட சீடர்களைப் பார்த்து: தடுக்காதீர்கள், ஆவியானவர் எங்கும் ஆற்றல் புரிபவர் என்றார். நற்செய்தியிலே இரு இடங்களில் ஆண்டவர் இயேசுவின் பெரும் பாராட்டைப் பெற்றவர்கள் யார் தெரியுமா? புறவினத்தார்கள் தான். இஸ்ரயேல் மக்களிடத்தில் இத்தகைய விசுவாசத்தை நான் கண்டதே இல்லை. ஆனால் என்னே இந்த செந்தூரியன் விசுவாசம் (மத். 8:10) என்றார் இயேசு. அம்மா உன் விசுவாசம் பெரிது என்று கனானியப் பெண்ணைப் பார்த்து இயேசு பாராட்டவில்லையா (மத். 15:28)..

அன்பார்ந்தவர்களே ஆவியானவரால் நிரப்பப்பட்டு அப்போஸ்தலர்களின் வாரிசான ஆயர்கள், உரோமையில் கூடிய இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் முழக்கமிட்ட ஓர் உண்மையை நாம் மறந்து விடக்கூடாது. அதாவது, மற்ற மறைகளில் மனித மீட்புக்காகச் சிதறிக்கிடக்கும் உண்மைகளைத் திருச்சபை என்றும் ஏற்க மறுக்காது..

ஏன்! நம் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் கடந்த காலங்களில் சகிப்புத் தன்மையற்ற நிலையிலே, ஆணவத்தால் எடுத்த சில நிலைகளுக்குப் பொது மன்னிப்பு கேட்கும் நிலைக்குத் தன்னைத் தாழ்த்தினார் அல்லவா. நாம் இன்று ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்க வேண்டும். நாம் புனித பவுல் அடிகளார் கூறுவதுபோல இயேசுவின் மனநிலையை (பிலி. 2:5) கொண்டிருக்கிறோமா? தன்னையே வெறுமையாக்கி, சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்த நம் ஆண்டவரின் மனநிலை நம்மிடம் உண்டா! அல்லது நம் மனித ஆவியின் தூண்டுதலுக்கு அடிமையாகி அடுத்தவனை வரவிடாது, வாழவிடாது நாம் நினைப்பதும் செய்வதும் தான் சரி என்ற நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறோமா?

 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
கொடுப்பவர்களுக்குக் கொடுக்கப்படும்.

இன்றைய நற்செய்தியின் வழியாக, கொடுப்பவர்களுக்குக் கடவுள் தவறாது கைம்மாறு, பரிசு தருவார் என்ற உண்மையை ஆணித்தரமாக இயேசு நமக்குக் கற்பிக்கின்றார். மீட்பின் வரலாற்றிலே, கொடுத்தவர்கள் அத்தனை பேரையும் கடவுள் தவறாது ஆசிர்வதித்திருக்கின்றார். இதோ சில விவிலியச் சான்றுகள். தொநூ 18:1-14 : ஆபிரகாமுக்கும், சாராவுக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் கொஞ்சி விளையாட பிஞ்சு நெஞ்சம் ஒன்று அந்த வீட்டில் பிறக்கவில்லை ! ஒரு நாள் கவலையால் கலங்கி நின்ற ஆபிரகாம் மூன்று மனிதர்களைக் கண்டார். கூடாரத்தை விட்டு வெளியே சென்று அந்த மூன்று மனிதர்களையும் கூடாரத்திற்கு அழைத்து வந்தார். அவர்களது களைப்பு நீங்க அவர்களுக்கு விருந்து படைத்தார். அந்த மனிதர்கள் மூவரும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள், தங்கள் மீது அன்பைப் பொழிந்த ஆபிரகாமைப் பார்த்து, ஆண் ட வரால் ஆகாதது எதுவும் உண்டோ ? சாராவுக்கு ஒரு மகன் பிறப்பான் என்றார்கள். கடவுளால் வாக்களிக்கப்பட்ட படியே ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் ஈசாக்கு பிறந்தார் (தொநூ 21:1-8). ஆம். கொடுப்பவர்களுக்குக் கொடுக்கப்படும்..

1 அர 17:8-16 : ஊரெல்லாம், நாடெல்லாம் பஞ்சம் ! அப்போது இறைவாக்கினர் எலியா ஒரு கைம்பெண்ணிடம் கொஞ்சம் அப்பமும், தண்ணீரும் கேட்டார். அந்தக் கைம்பெண்ணோ , வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை : பானையில் கையளவு மாவும், கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன்பின் சாகத்தான் வேண்டும் என்றாள். ஆனால் எலியாவோ, கொடு, உனக்குக் கொடுக்கப்படும் என்றார். அவள் கொடுத்தாள். பானையிலிருந்த மாவும் தீரவில்லை. கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை. ஆம், கொடுப்பவர்களுக்குக் கொடுக்கப்படும்..

யோவான் 2:1-11: கானாவூர் திருமண வீட்டார் இயேசுவிடம் தண்ணீரைக் கொடுத்தார்கள். அவர்களுக்குத் திராட்சை இரசம் கிடைத்தது. யோவான் 6:1-13: கூட்டத்திலிருந்த சிறுவன் ஒருவன் ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொடுத்தான். கூட்டத்திலிருந்த எல்லாருக்கும் உணவு கிடைத்தது. ஆம். கொடுப்பவர்களுக்கு கொடுக்கப்படும். கொடுக்கப்படாதவை அனைத்தும் அழிந்து போகும் ; அழிந்து போனவை கொடுக்காதவர்களின் உயிருக்கு உலை வைக்கும் (இரண்டாம் வாசகம்). நமது கடவுள் எடுக்கின்ற கடவுள் அல்ல ; கொடுக்கின்ற கடவுள். தனது ஒரே மகனையே உலகுக்குக் கொடுத்தவர் நம் கடவுள் (யோவா 3:16). தமது ஆவியை அனைவர் மீதும் பொழிந்தவர் நம் கடவுள் (முதல் வாசகம்). சுயநலவாதிக்கும் சொர்க்கத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது..

மேலும் அறிவோம் :

கொடுப்பதூம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் (குறள் : 1005).

பொருள் :
பிறருக்கு வழங்கவும் தாம் நுகர்வதும் ஆகிய செல்வத்தின் இரு பயன்பாடும் இல்லாதவரிடம் கோடிக்கணக்கில் பொருள் குவிந்திருந்தாலும் அவை செல்வமாக மதிக்கப்படாமல் போகும்!

 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கும் லூத்தரன் சபைக் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியைக் காண்பதற்காகக் கிறிஸ்துவும் வந்திருந்தார், முதலில் லூத்தரன் சபையினரும் பின்னர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும் 'கோல்" போட்டபோது கிறிஸ்து பலமாகக் கைதட்டி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் அவரிடம், "ஆண்டவரே! நீங்கள் எந்த சபையில் இருக்கிறீர்கள்? கத்தோலிக்க சபையிலா? அல்லது லூத்தரன் சபையிலா?" என்று கேட்டனர், அதற்குக் கிறிஸ்து, "நான் இப்போது கால்பந்து விளையாட்டை ரசித்துக் கொண்டிருக்கிறேன். எந்தச் சபை 'கோல்' போட்டாலும் எனக்கு மகிழ்ச்சியே" என்றார்..

இக்கதை நமக்கு உணர்த்தும் உண்மை ; "கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர், உண்மையும் நன்மையும் எங்கிருந்தாலும் அவை கடவுளுக்கே உரித்தானவை. அவற்றைக் கண்டு கடவுள் மகிழ்ச்சி அடைகிறார்," சுருக்கமாக, "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை. எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்" (திப 10:34). கடவுளின் செயல்பாட்டை ஒரு குறுகிய வட்டத்திற்குள் வரையறுக்க முடியாது என்ற கருத்தை இன்றைய அருள்வாக்கு வழிபாடு உணர்த்துகிறது..

பழைய உடன்படிக்கையில் மோசேவுக்கு உதவி செய்வதற்காக 70 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அவர்களும் மோசேயிடம் இருந்த கடவுளின் ஆவியில் பங்கு பெற்று இறைவாக்கு உரைத்தனர். ஆனால் இக்குழுவைச் சாராத இருவர் இறைவாக்கு உரைத்தபோது, யோசுவா அவர்களைத் தடை செய்யும்படி மோசேயிடம் கேட்டார், மோசே அவ்வாறு தடை செய்யாமல், எல்லாருமே கடவுளுடைய ஆவியைப் பெற்று இறைவாக்கு உரைத்தால் நலமாயிருக்கும் என்றார் (எண்11:25 29). தமக்கிருந்த வல்லமை மற்றவர்களிடமும் விளங்கியதைக் கண்டு மோசே பொறாமை அடையாது மகிழ்ச்சி அடைகிறார், அவரிடம் குறுகிய மனப்பான்மை இல்னல்), "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த மனப்பான்மை கொண்டு விளங்கினார்.

இன்றைய நற்செய்தியில், கிறிஸ்துவின் சீடர்களைச் சாராத ஒருவர் கிறிஸ்துவின் பெயரால் பேயோட்டுவதைக் கண்ட சீடர்கள் அவரைத் தடை செய்ய முயன்றனர், ஆனால் கிறிஸ்துவோ அவ்வாறு தடைசெய்ய வேண்டாம் என்று கூறியதோடு, தமக்கு எதிராக இல்லாதவர் தமக்குச் சார்பாக இருக்கின்றார் என்றும் கூறினார் (மாற் 1:39-40).

குருக்கள் மட்டும் தானே நோயாளிகா மீது கைகளை விரித்துக் செபிக்கலாம், ஆனால், இப்போது பொதுநிலையினரும் அவ்வாறு செய்கின்றார்களே என்று ஒரு சிலர் ஆதங்கப் படுகின்றனர். அவர்களுடைய ஆதங்கம் தேவையற்றது. கடவுள் தமது வல்லமையை அருள்பணியாளர்கள் வாயிலாக மட்டுமல்ல, பொதுநிலையினர் வாயிலாகவும் வெளிப்படுத்தலாம். திருமுழுக்குப் பெற்ற அனைவரும் தூய ஆவியால் திருநிலைப்படுத்தப்பட்டு, கிறிஸ்துவின் பொதுக்குருத்துவத்தில் பங்கு பெறுகின்றார், 'நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினார்' (1பேது 2:9), "நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவு உங்களுள் நிலைத்திருக்கிறது" (1 யோவா 2:27), தூய ஆவியாரையும் கடவுளுடைய வார்த்தையையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்த இயலாது. க சற்று தாம் விரும்பும் திசையில் வீசுகிறது. ஆவியின் செயல்பாடும் அவ்வாறே உள்ளது (யோவா 3:8) கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது (2 திமொ 2:9). கடவுள் எல்லாருக்கும் தந்தை; இயேசு கிறிஸ்து எல்லாருக்கும் மீட்பர்.

ஓர் ஊரில் இரண்டு பைத்தியங்கள் இருந்தன. முதல் பைத்தியம், "நான் உலகத்தையே விலைக்கு வாங்கப் போகிறேன்" என்றதற்கு, இரண்டாவது பைத்தியம், "நான் இப்போதைக்கு உலகத்தை விற்கிற மாதிரி இல்லை " என்றது. உலகமெல்லாம் எள் னு டையது என்று நினைப்பது பைத்தியக்காரத்தனம், அவ்வாறே உண்மையெல்லாம் என்னுடையது என் று மார் தட்டுவதும் பைத்தியகாரச் செயலாகும். "மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்" என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சமயங்கள் தங்களிடையே பிணக்குகளை வளர்த்துக் கொள்ளாமல் மனித நேயத்தை வளர்க்க வேண்டும்.

ஓர் இந்து ஆசிரமத்தில் இருந்த தலைமைச் சந்நியாசி முதுமை அடைந்து விட்ட நிலையில், தமது மறைவுக்குப் பிறகு தம்முடைய பத்து சீடர்களில் யாரை ஆசிரமத் தலைவராக நியமனம் செய்வது என்பதை முடிவு செய்ய விரும்பினார். தமது 13 சீடர்களையும் அழைத்து, அவர்களிடம் உணவுப் பொட்டலங்களைக் கொடுத்து, பக்கத்து ஊருக்குச் சென்று, அவ்வூரில் பட்டினியாகக் கிடந்த இந்துக்களுக்கு மட்டும் உணவுப் பொட்டலங்களை வழங்கிவிட்டு வரும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஒன்பது சீடர்கள் இந்துக்களுக்கு மட்டும் உணவு வழங்கினர். பத்தாவது சீடரோ முகமதியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் கூட உணவுப் பொட்டலங்களை வழங்கினார். ஏன் அவ்வாறு செய்தார்? என்று அவரைக் கேட்டதற்கு அவர் கூறிய பதில்: "பசியாய் இருந்தவர்களை நான் இந்துக்களாகவோ முகமதியர்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ பார்க்கவில்லை. அவர்களை மனிதர்களாக மட்டுமே பார்த்தேன்." உடனே அச்சீடரை ஆசிரமத்தின் தலைமைச் சந்நியாசியாக அந்த வயதான சந்நியாசி நியமித்தார்..

மதம், மொழி, இனம், சாதி ஆகிய வேறுபாடுகளைக் கடந்து எல்லாரையும் மனிதர்களாகப் பார்க்கக் கற்றுக் கொள்வதுதான் காலத்தின் கட்டாயம். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" (திருமூலர் ); "யாதும் ஊரே யாவரும் கேளிர்" (கனியன் பூங்குன்றனார்], ஏழைகளை வாழவைப்பதுதான் உண்மையான சமயப்பற்று. உழைப்பவர்களின் கூலியைக் கொடுக்காமல், செல்வத்தை சேமித்து வைக்கும் பணக்காரர் களுக்குப் பேரழிவு காத்துக் கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கிறார் திருத்தூதர் யாக்கோபு (இரண்டாம் வாசகம், யாக் 5:1-5).

நாம் நமது செல்வத்தை வங்கியில் அல்ல, ஏழைகளின் வயிற்றில் சேமித்து வைக்கவேண்டும், ஏழைகளின் வயிறே நமது பொருளைக் காக்கும் வங்கி, பாதுகாப்புப் பேழை என்கிறார் வள்ளுவர்..

அற்றார் அழிபசி தீர்த்தல் அல்லது ஒருவன்
பெற்றான் பொருள்வைப்புழி (குறள் 226)

 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 
சமயத்தின் மேன்மை சமயத்தில்‌ இல்லை

"மகிழ்வாரோடு மகிழுங்கள்‌. அழுவாரோடு அழுங்கள்‌ " (ரோமை. 12:15). திருத்தூதர்‌ பவுல்‌ சுட்டிக்காட்டும்‌ கிறிஸ்தவ நெறி இது. மகிழ்வாரோடு மகிழ முடிகிறதோ இல்லையோ, பொறாமைப்படாமல்‌ இருந்தாலே போதும்‌ என்று சொல்லத்‌ தோன்றுகிறது.

அக்பர்‌ தன்‌ அமைச்சரைப்‌ பார்த்துக்‌ கேட்டாராம்‌: "என்‌ உடலெங்கும்‌ முடியிருக்க என்‌ உள்ளங்கையில்‌ மட்டும்‌ முடி இல்லையே, அது ஏன்‌?" "தாங்கள்‌ வாரி வாரி வழங்குவதால்‌ தேய்ந்து உதிர்ந்து விட்டது" என்றார்‌ அமைச்சர்‌. "மக்களிடம்‌?" என்று மன்னர்‌ கேட்க, "தவர்கள்‌ வாங்கி வாங்கிப்‌ பழகி அந்த நிலை ஏற்பட்டுவிட்டது" என்றிருக்கிறார்‌ அமைச்சர்‌. "அதுசரி, துறவிகள்‌ கொள்வதும்‌ இல்லை கொடுப்பதும்‌ இல்லை. பின்‌ ஏன்‌ அவர்கள்‌ உள்ளங்கைகளிலும்‌ முடி இல்லை?" என்று தொடர்ந்து கேட்க, அமைச்சர்‌ சொன்னாராம்‌ "பொறாமையால்‌ கைகளைப்‌ பிசைந்து பிசைந்து" என்று.

சமயங்களிடையே இன்று தென்படும்‌, பிளவுகள்‌ பிணக்குகள்‌ அனைத்தையும்‌ உற்று நோக்கும்போது, நினைவுக்கு வருகிற கதை இது.

சமயப்‌ பொறாமை இறைவனுக்குச்‌ சேவை செய்வதுபோல நடிக்கத்‌ தூண்டும்‌. இன்றைய முதல்‌ வாசகத்தில்‌ இஸ்ரயேல்‌ மக்களை வழிநடத்த மூப்பரில்‌ எழுபது பேரை மோசே தேர்ந்தெடுத்து ஆண்டவரின்‌ கூடாரத்தின்‌ முன்‌ நிறுத்தினார்‌. ஆனால்‌ அவர்களில்‌ இருவர்‌ கூடாரத்துக்கு வராமல்‌ தாங்கள்‌ இருந்த இடத்திலேயே தங்கி விட்டனர்‌. அவர்கள்‌ மீது இறைவனின்‌ ஆவியார்‌ இறங்கி அவர்களும்‌ இறைவாக்குரைப்பதைக்‌ கேட்ட யோசுவா, "மோசே, என்‌ தலைவரே, அவர்களைத்‌ தடுத்து நிறுத்தும்‌" என்று சொல்ல மோசே, "என்னை முன்னிட்டு நீ பொறாமைப்‌ படுகிறாயா? ஆண்டவரின்‌ மக்கள்‌ அனைவருமே இறைவாக்கினர்‌ ஆகும்படி ஆண்டவர்‌ அவர்களுக்குத்‌ தம்‌ ஆவியை அளிப்பது எத்துணை சிறப்பு" என்றார்‌ (எண்‌ 11: 28-29).

இன்றைய நற்செய்தியிலும்‌ இயேசுவின்‌ சீடர்‌ குழுவைச்‌ சாராத ஒருவர்‌ இயேசுவின்‌ பெயரால்‌ பேயோட்டுவதைக்‌ கண்ட சீடர்கள்‌ அவரைத்‌ தடுக்கப்பார்த்தனர்‌. இயேசுவோ, "தடுக்க வேண்டாம்‌... ஏனெனில்‌ நமக்கு எதிராக இராதவர்‌, நம்‌ சார்பாக இருக்கிறார்‌" (மார்க்‌. 9:39-40) என்றார்‌.

இறைவனுடைய ஆவியையும்‌ ஆற்றலையும்‌ கட்டுப்படுத்த நாம்‌ யார்‌? ஆவியாரின்‌ செயல்பாட்டுக்கு, அருள்‌ பொழிவுக்கு மனிதன்‌ வரையரை செய்வதா? முட்டுக்கட்டை போடுவதா? சூரியனைச்‌ சொந்தம்‌ கொண்டாட அது தனியுடைமை அல்ல! ஆவியார்‌ உடலில்‌ உள்ள கண்‌ போல. அது உடலுக்குச்‌ சொந்தம்‌, உடலும்‌ அதற்குச்‌ சொந்தம்‌. அதற்காக உடலுக்குள்‌ மட்டுமல்ல உடலுக்கு அப்பாலும்‌, வெளியிலும்‌ செயல்பட முடியும்‌.

கடவுள்‌ எவ்வளவு பரந்த மனமுள்ளவர்‌!
பெருந்தன்மையானவர்‌! அதன்‌ முன்னால்‌ நாம்‌ குன்றி, கூனி, குறுகிப்‌ போய்‌ நிற்கிறோம்‌. இனம்‌, மதம்‌, சாதி, சமயம்‌ எனக்‌ குறுகிய வட்டங்களை அமைத்துக்‌ கொண்டு அவற்றுள்‌ கிடந்து புழுங்கிக்‌ கொண்டிருக்கிறோம்‌.

ஒரு சமயத்தின்‌ மேன்மை அந்தச்‌ சமயத்தில்‌ அல்ல. அந்தச்‌ சமயத்தைச்‌ சார்ந்தவர்களின்‌ வாழ்க்கை முறையில்‌ மட்டுமே! இந்தப்‌ பின்னணியில்‌ 1883 செப்டம்பர்‌ 15இல்‌ "நாம்‌ ஏன்‌ ஒத்துப்போவதில்லை?" என்ற தலைப்பில்‌ விவேகானந்தரின்‌ "சிக்காக்கோ சொற்பொழிவுகள்‌" என்ற நூலிலிருந்து ஒரு மேற்கோள்‌:

ஒரு கிணற்றில்‌ தவளை ஒன்று நீண்டகாலமாக வாழ்ந்து வந்தது. ஒரு நாள்‌ கடல்தவளை ஒன்று அங்கு வந்து அந்தக்‌ கிணற்றில்‌ விழுந்து விட்டது. "நீ எங்கிருந்து வருகிறாய்‌?" கேட்டது கிணற்றுத்‌ தவளை. "கடலிலிருந்து". "கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு இருக்குமா?" என்று கேட்டு ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்துக்குத்‌ தாவிக்‌ குதித்தது கிணற்றுத்‌ தவளை. "நண்பா இந்தச்‌ சின்னக்‌ கிணற்றோடு எப்படிக்‌ கடலை ஒப்பிட முடியும்‌?" என்றது கடல்‌ தவளை. கிணற்றுத்‌ தவளை மறுபடியும்‌ ஒரு குதி குதித்து "உனது கடல்‌ இவ்வளவு பெரிதாய்‌ இருக்குமா?" என்று கேட்டது. "சேச்சே, என்ன முட்டாள்தனம்‌, கடலை இக்கிணற்றோடு ஒப்பிடுவதா?" சர்ச்சையை முடித்துக்‌ கொண்டது கடல்‌ தவளை. "நீ என்ன சொன்னாலும்‌ சரி, என்‌ -கிணற்றைவிட எதுவும்‌ பெரிதாக இருக்க முடியாது. இவன்‌ பொய்யன்‌. இவனை வெளியே விரட்டுங்கள்‌ என்று கத்தியது". கிணற்றுத்‌ தவளை... காலம்‌ காலமாக இருந்து வரும்‌ தொல்லை இதுதான்‌. நான்‌ இந்து. நான்‌ என்‌ சிறிய கிணற்றுக்குள்‌ இருந்து கொண்டு என்‌ சிறு கிணறுதான்‌ முழு உலகம்‌ என்று நினைக்கிறேன்‌. இவ்வாறே கிறிஸ்வன்‌, முகமதியன்‌. எல்லா மத்த்தவனும்‌ நினைக்கிறான்‌.

சமய சகிப்புக்கூட கிறிஸ்தவப்‌ பண்பு அல்ல என்று கருதும்‌ கத்தோலிக்கத்‌ திருஅவை சமயங்களைப்‌ புரிந்து கொள்ளுதல்‌ ஏற்றுக்கொள்ளுதல்‌ என்ற அடிப்படையில்‌ வலியுறுத்தும்‌ கருத்துக்கள்‌, வெளிப்படுத்தும்‌ உணர்வுகள்‌ வேறு எந்தச்‌ சமயச்‌ சிந்தனைக்கும்‌ குறைந்தது அல்ல என்பதுதானே எதார்த்தம்‌! "உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ போற்றுதற்குரியவை எவையோ..." (பிலிப்‌. 4:8) அவை அனைத்தும்‌ கிறிஸ்து இயேசுவுக்குச்‌ சொந்தம்‌.

பொறாமை சாத்தானின்‌ வலிய ஆயுதம்‌. விவிலியமே பொறாமையின்‌ கதைதான்‌. "தின்றால்‌ கடவுள்‌ ஆவாய்‌" (தொ.நூ. 3:5). மனிதன்‌ கடவுளாகிவிட்டால்‌ கடவுளின்‌ கதி? பொறாமையால்‌ கடவுள்‌ தந்த கட்டளையே "விலக்கப்பட்ட கனி". இதுதானே சாத்தானின்‌ சிந்தனை. பின்‌ தலைமுறை தலைமுறையாய்‌ பொறாமை மனிதனைத்‌ தீய்த்தது. காயின்‌ ஆபேலைக்‌ கொன்றது, மன்னன்‌ சவுல்‌ தாவீது மீது கொண்டிருந்த, கொலை வெறி, யாக்கோபின்‌ மக்களிடையே நிலவிய பொறாமையால்‌ விளைந்த எகிப்திய அடிமைத்தனம்‌. ஏன்‌, இயேசுவின்‌ சிலுவைச்‌ சாவுக்கே காரணம்‌ பரிசேயர்களின்‌ பொறாமையே. "தலைமைக்‌ குருக்கள்‌ பொறாமையால்தான்‌ அவரை ஒப்புவித்தார்கள்‌ என்று பிலாத்து உணர்ந்திருந்தான்‌ " (மார்க்‌. 15:10).

"பொல்லாங்கு செய்வோரைக்‌ கண்டு பொறாமைப்‌ படாதே" (தி.பா. 37:1). கடவுள்‌ சிலரை உயர்ந்த நிலைக்குக்‌ கொண்டு வரும்போது அந்த நல்லவர்களைக்‌ கண்டும்‌ பொறாமைப்படாதே. எண்‌. 12:2இல்‌ மிரியாமும்‌ ஆரோனும்‌ "ஆண்டவர்‌ உண்மையில்‌ மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்‌? அவர்‌ எங்கள்‌ வழியாகவும்‌ பேசவில்லையா?". என்றனர்‌. ஆண்டவர்‌ இதைக்‌ கேட்டார்‌. விளைவு? எண்‌. 12:10. "கடவுளின்‌ சினம்‌ மூண்டது." மிரியாமுக்குத்‌ தொழுநோய்‌. 7 நாள்‌ ஊர்விலக்கு. பொறாமையால்‌ ஆசீர்‌ இழப்பும்‌ சிக்கலுமே. பொறாமை என்னும்‌ தீயை எண்ணெய்‌ ஊற்றி வளர்க்காதே. அது அடுத்தவனை எரிக்காது. உன்னையே எரிக்கும்‌. பொறாமை தான்‌ பிறந்த இடத்தையே அழிக்கிறது. துரு இரும்பில்தான்‌ தோன்றுகிறது. ஆனால்‌ அது கடைசியில்‌ இரும்பையே அரித்து அழிக்கிறது அல்லவா! திருத்தூதர்‌ பவுல்‌ எழுதியிருப்பது போல்‌ "வீண்பெருமையைத்‌ தேடாமலும்‌ ஒருவருக்கொருவர்‌ எரிச்சல்‌ படாமலும்‌ ஒருவர்‌ ஒருவர்‌ மேல்‌ பொறாமைப்படாமலும்‌ இருப்போமாக" (கலா. 5:26).

இவன்‌ நம்மைச்‌ சாராதவன்‌, நம்‌ சாதியைச்‌ சாராதவன்‌, நமது மதத்தைச்‌ சாராதவன்‌, நமது ஊரைச்‌ சாராதவன்‌, நமது மொழியைச்‌ சாராதவன்‌, நமது கலாச்சாரத்தைச்‌ சாராதவன்‌ போன்ற எண்ணங்களே வெறுப்புணர்வுகளுக்கும்‌ பிளவு பிரிவினைகளுக்கும்‌ காரணம்‌. நம்மைச்‌ சாராதவர்கள்‌ நமக்கு எதிரானவர்கள்‌ என்ற எண்ணம்‌ தவறானது என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார்‌. மாறி வரும்‌ உலகில்‌ அனைவரும்‌ நம்மைச்‌ சார்ந்தவர்கள்தான்‌. மனித குலத்தின்‌ ஒருமைப்பாட்டில்‌ தான்‌ இறையரசு மலரும்‌.

"நாம்‌ மீட்புப்‌ பெறுமாறு வானத்தின்‌ கீழ்‌ மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப்‌ பெயரும்‌ கொடுக்கப்படவில்லை" (தி.ப. 4:12). இந்த மீட்பையோ, மீட்புத்‌ தரும்‌ இயேசு என்ற பெயரையோ (உரோ. 10:13) யாரும்‌ தங்களுக்கு மட்டுமே என்‌ று சொந்தம்‌ கொண்டாட முடியாது. இயேசுவின்‌ பெயர்‌ மீது நம்பிக்கையும்‌ மரியாதையும்‌ கொண்ட அனைவரும்‌ நமக்கு நண்பர்களே!

 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
இந்தச் 'சிறியோருக்கு' எதிரான பாவம்

கிரேக்க நாட்டில் வாழ்ந்த விளையாட்டு வீரர் ஒருவர், பல போட்டிகளில் வெற்றிபெற்று, நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். மக்கள், அவருக்கு சிலையொன்றை செய்து, நகர சதுக்கத்தில் வைத்தனர். அந்த வீரருடன் பலமுறை போட்டியிட்டு, தோற்றுப்போன மற்றுமோர் இளையவர், அச்சிலையைக் கண்டபோதெல்லாம், பொறாமையில் பொங்கினார். ஓர் இரவு, ஊரெல்லாம் உறங்கியபின், அவர் அந்த சிலையை உடைத்து வீழ்த்த, நகரச் சதுக்கத்திற்கு சென்றார். இருளில், தட்டுத்தடுமாறி, சிலை வைக்கப்பட்டிருந்த பீடத்தின் மீதேறி, அச்சிலையைச் சுற்றி கயிற்றைக் கட்டினார். பின்னர், கீழே இறங்கிவந்து, தன் வலிமை அனைத்தையும் சேர்த்து, அந்தக் கயிறை இழுத்தார். சிலை, அவர் மீது விழுந்து, அவரைக் கொன்றது.

பொறாமை என்ற நோயால் பீடிக்கப்பட்டவர்களில், வென்றவர்களை விட, கொன்றவர்களும், கொல்லப்பட்டவர்களுமே அதிகம் என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது. காயின், ஆபேல் காலம் முதல், மனிதர்களை வதைத்துவரும் பொறாமை என்ற நோயைக் குறித்து சிந்திக்கவும், இந்த நோயைக் குணமாக்கும் வழிகளைக் கற்றுக்கொள்ளவும், இந்த ஞாயிறு வாசகங்கள் நமக்கு வாய்ப்பளிக்கின்றன.

பொறாமை என்ற உணர்வின் ஊற்றாக இருப்பது, 'நான்-நீ', நாங்கள்-நீங்கள்' என்ற பாகுபாடுகள். மற்றவர்களைவிட நம்மை உயர்வாகக் கருதி, நாம் என்றும், நம்மைச் சாராதவர் என்றும் வேறுபாடுகளை உருவாக்கும்போது, பொறாமை பொங்கியெழுகிறது.

மோசேயுடன் சேராத இருவர், இறைவாக்குரைத்தனர் என்பதைக் கேள்விப்படும் யோசுவா, அவர்களைத் தடுத்து நிறுத்தும்படி, மோசேயிடம் விண்ணப்பிக்கிறார் என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. இதையொத்த மற்றொரு நிகழ்வை நாம் நற்செய்தியிலும் காண்கிறோம்.

மாற்கு 9: 38
அப்பொழுது யோவான் இயேசுவிடம், "போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்" என்றார்.

இவ்விரு நிகழ்வுகளிலும், பொறாமையால் தூண்டப்பட்டு, தவறான முடிவுகள் எடுத்தவர்கள், இறை ஊழியர்கள் என்ற உண்மை நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. இறைவாக்குரைத்தல், இறைவன் பெயரால் பேய்களை ஓட்டுதல் ஆகிய புனிதமான பணிகளிலும், பொறாமை நுழையக்கூடும் என்ற உண்மை, வேதனை தருகிறது. பாடங்களும் சொல்லித்தருகிறது.

நாம் வாழும் இன்றைய உலகில், கடவுள் பெயரால், மதங்களின் பெயரால் பொறாமைத் தீ கட்டுக்கடங்காமல் பற்றியெரிவதை ஒவ்வொரு நாளும் நாம் உணர்ந்து வருகிறோம். நமது பொறாமை உணர்வுகள் பொருளற்றவை என்பதை, மோசேயும், இயேசுவும் கூறும் பதிலுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.

யோசுவாவுக்கு, மோசே, பெருந்தன்மையோடு தரும் பதில் மிக அழகானது.

எண்ணிக்கை 11:29
மோசே அவரிடம், "என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!" என்றார்.

அதேவண்ணம், யோவானிடம் இயேசு கூறும் பதிலும், பரந்ததோர் உள்ளத்தை வளர்த்துக்கொள்ள அழைப்பு விடுக்கிறது.

மாற்கு 9: 39
அதற்கு இயேசு கூறியது; "தடுக்கவேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார்" என்றார்.

பொறாமையால் உங்கள் பார்வையை இழந்துவிடாதீர்கள் என்று கூறும் இயேசு, அடுத்து வரும் வரிகளில், உங்கள் பார்வையைப் பறிகொடுத்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தை, மற்றொரு காரணத்திற்காகப் பரிந்துரைக்கிறார். இப்பகுதியில், இயேசு கூறும் சில அறிவுரைகள், கேட்பதற்கு கடினமாக உள்ளன.

சிறியோருக்கு இடறலாக இருப்பவர்களின் கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி, அவர்களை கடலில் தள்ளிவிடுவது மேல் என்றும், நம்மைப் பாவத்தில் விழச்செய்யும் உடல் உறுப்புக்களை வெட்டி எறியவேண்டும் என்றும், இயேசு கூறும் ஆலோசனைகள், கேட்பதற்கு மிகக் கடினமாக உள்ளன.

நாம் உட்கொள்ளும் பல மருந்துகள் கசப்பானவையெனினும் உடல் நலனை மனதில் கொண்டு அவற்றை உட்கொள்கிறோம், அல்லவா? அதேபோல், இயேசுவின் கூற்றுகள் நம் ஆன்மாவின் நலனுக்கு வழங்கப்பட்டுள்ள மருந்துகள் என்ற கண்ணோட்டத்துடன் இன்றைய நற்செய்தி சொல்லித்தரும் கசப்பான உண்மைகளைப் பயில முயல்வோம்.

உடலுக்கு நலம் தராத பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்... கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும்... தேவையற்ற ஆபத்துக்களை தேடிச்செல்வது, மதியீனம்... என்ற அறிவுரைகள், எல்லாருக்குமே நல்லதுதானே!

இத்தகைய அறிவுரைகளைத்தான், இயேசு, இன்றைய நற்செய்தியில், கொஞ்சம் ஆழமாக, அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். அவர், இவற்றை, கோபமாக சொல்கிறாரா, சாந்தமாகச் சொல்கிறாரா என்ற ஆய்வுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, அவர் சொல்வதில் உள்ள உண்மையை உணரவும், அதன்படி வாழவும் முயல்வோம்!

"இவ்வுலகில் நீ காணவிழையும் மாற்றம் உன்னில் ஆரம்பமாகட்டும்" - " You must be the change you want to see in the world." என்று சொன்னவர், மகாத்மா காந்தி. "நான் செல்லும் கடல் பயணத்தில், வீசும் காற்றை என்னால் திசை திருப்ப இயலாது, ஆனால், அந்தக் காற்றுக்கு ஏற்றவாறு, என் பாய்மரத்தை திருப்பி, நான் செல்லவேண்டிய கரையை அடையமுடியும்" என்று சொன்னவர், ஜிம்மி டீன் என்ற புகழ்பெற்ற பாடகர்.

"I can't change the direction of the wind, but I can adjust my sails to always reach my destination." Jimmy Dean

அரண்மனையைவிட்டு ஒருபோதும் வெளியே வராத ஓர் அரசர், ஒருநாள், மாறுவேடத்தில், நகர வீதிகளில் நடந்துசென்றார். ஆனால், வெகு சீக்கிரமே அரண்மனைக்குத் திரும்பிவிட்டார். அவரிடம் மந்திரி காரணம் கேட்டபோது, தான் நடந்து சென்ற பாதையில் கல்லும், முள்ளும் இருந்ததால், அவை, தன் காலைக் காயப்படுத்திவிட்டன என்று அரசர் சொன்னார். அத்துடன், அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. இனி வீதிகளில் நடக்கும் யாருக்கும் முள் குத்தக்கூடாது என்பதற்காக, ஊர் முழுவதும், அனைத்து வீதிகளிலும், மாட்டுத் தோலை பரப்பவேண்டும் என்று ஆணை பிறப்பிக்க நினைத்தார் அரசர். இதைக் கேள்விப்பட்ட மந்திரி, அரசரிடம், "அரசே, ஊரெங்கும் மாட்டுத் தோலைப் பரப்புவதற்குப் பதில், உங்கள் கால்களைமட்டும் மாட்டுத் தோலால் மூடிக்கொண்டு நடந்தால், பிரச்சனை தீர்ந்துவிடுமே" என்று ஆலோசனை கூறினார்.

ஊரையும், உலகத்தையும் மாற்றுவதற்கு ஓர் ஆரம்பமாக, நம்மை மாற்றிக் கொள்வது நல்லது. அந்த மாற்றம் இன்றே ஆரம்பமானால், மிகவும் நல்லது.
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 மறையுரை

இந்த ஆண்டு/ முன்‌ தயாரிப்பாக நான்கு ஞாயிறுகளிலும்‌
- பணிவோடு ஏற்கப்பட வேண்டிய இறைவார்த்தை (யாக்‌ 1:21)
- சமத்துவ வாழ்வை வலியுறுத்தும்‌ இறைவார்த்தை (யாக்‌ 2:1-5)
- செயல்பாட்டுக்கு அழைக்கும்‌ இறைவார்த்தை (யாக்‌ 2:14-18)
- தொண்டாற்றத்‌ தூண்டும்‌ இறைவார்த்தை (மாற்‌ 9:30-37)

என்ற அருமையான மையப்‌ பொருள்களில்‌ நாம்‌ திருவிவிலிய மாதத்தைக்‌ கொண்டாடி வருகிறோம்‌.

கடந்த திங்கள்‌ முதல்‌ நேற்றுவரை பல மையப்‌ பொருள்களில்‌ பல குழுக்களாகப்‌ பணிகளைப்‌ பிரித்துக்கொண்டு கொண்டாடினோம்‌.
தூய ஆவியாரின்‌ தூண்டுதல்‌ இன்றி யாரும்‌ இறைவாக்கு உரைக்க முடியாது. அவரது தூண்டுதலில்‌ செய்யப்படும்‌ எந்தச்‌ செயலையும்‌ யாராலும்‌ தடை செய்ய முடியாது.
எந்த இடத்தில்‌, எப்படி இறைவாக்கு முழங்கப்பட வேண்டுமோ அப்படி நடைபெற இறைவன்‌ திட்டமிட்டுச்‌ செயல்பட்டு வருகிறார்‌. அதற்கு ஒத்துழைக்க வேண்டியது நம்‌ ஒவ்வொருவரின்‌ கடமையாகும்‌.
செல்வரைக்‌ கடவுள்‌ வெறுப்பதில்லை; அவர்களது இறையாட்சிக்கு எதிரான, இவ்வுலகப்‌ போக்கிலான செயல்பாடுகளைத்தான்‌ இறைவன்‌ வெறுக்கிறார்‌.
கொடுக்கப்படாத கூலி கூக்குரலிடும்‌. அது எதிர்வினைகளை ஏற்படுத்தும்‌.
செல்வனின்‌ செயல்பாட்டைச்‌ சீர்படுத்துவது இறைவார்த்தை. அது நேர்மையாஎரைக்‌ குற்றவாளி எனத்‌ தீர்ப்பிடுவதைக்‌ கண்டிக்கிறது.
கிறிஸ்துவுக்கு எதிராக இல்லாத அனைவரும்‌ அவரது பற்றாளர்கள்‌ தான்‌ தன்‌ பெயரின்‌ பொருட்டு சிறு உதவி செய்பவர்‌ எவரும்‌ கைம்மாறு பெறாமல்‌ போவதில்லை என்று அவரே கூறியிருக்கிறார்‌.
இறைவார்த்தைக்கு எதிராயில்லாதவர்‌ அதனை இதயப்‌ பற்றோடு ஏற்கிறார்‌ என்பதே பொருள்‌.
எல்லாச்‌ சூழலையும்‌ வெல்லக்‌ கூடிய இறைவார்த்தையை இதயத்தில்‌ பதிப்போம்‌.
ஆண்டவருடைய வார்த்தைதான்‌ உண்மை. அதனால்‌ நாம்‌ அர்ப்பணமாக்கப்பட ஆவல்‌ கொள்வோம்‌.
 
 
மறையுரை புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌ பெங்களூர்
பொதுக்காலம்‌ 26-ஆம்‌ ஞாயிறு

முதல்‌ வாசகப்‌ பின்னணி (எண்‌. 11:25-29) பாலைவனத்தில்‌ இருந்த இஸ்ராயேல்‌ மக்கள்‌ மோசேவுக்கு எதிராக முணுமுணுக்கின்றனர்‌. இதனால்‌ அவர்‌ மக்களை நினைத்து வேதனைப்பட்டு இறைவனிடம்‌, " இம்மக்களை தனியாக சுமப்பது எனக்கு மிகப்பெரிய பளுவாக இருக்கிறது. என்னை கொன்றுவிடும்‌" என்று முறையிடுகிறார்‌. இதனால்‌ இறைவன்‌ மோசேயிடம்‌ 70 மூப்பர்‌களை இஸ்ராயேலிலிருந்து தேர்ந்தெடுத்து அவர்களை கூடாரத்தை சுற்றிலும்‌ நிற்கவைக்கச்‌ சொல்கின்றார்‌. அவர்களின்‌ மூலம்‌ மோசேயின்‌ பளுவை குறைக்க நினைக்கின்றார்‌. அவ்வாறு தேர்ந்‌தெடுக்கப்பட்ட மூப்பர்கள்‌ கூடாரத்தை சுற்றி நிற்கும்‌ போது ஆவியானவர்‌ அவர்கள்‌ மீது இறங்கி வர அவர்கள்‌ இறைவாக்கு உரைக்‌கின்றனர்‌. கூடாரத்திற்கு வராத இரண்டு மூப்பர்களும்‌ ஆவியைப்‌ பெற்று உரைக்கின்றனர்‌. இதனைக்‌ கண்ட யோசுவா மோசேயிடம்‌ கூறுகின்றார்‌. ஆனால்‌ மோசே அந்த இரண்டு மூப்பர்களையும்‌ பரந்த மனப்பான்மையோடு ஏற்றுக்கொள்கின்றார்‌. நம்மையும்‌ மதிக்‌கின்ற மனப்பான்மையோடு ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கின்றது.
இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி யாக்‌. 5:1-6)

இப்பகுதியானது பணக்காரர்களுக்கு விடுக்கப்படும்‌ எச்சரிககையாக அமைந்துள்ளது. ஏனென்றால்‌ பணம்‌ திரட்டூவதிலும்‌, சேமிப்பதிலும்‌, வணிகம்‌ செய்ய வெளிநாடுகள்‌ செல்வதிலும்‌ தான்‌ அன்றைய நாட்களில்‌ பணக்காரர்களின்‌ செயலாய்‌ இருந்தது. மேலும்‌ அவர்கள்‌ தங்கள்‌ வயல்களில்‌ வேலை செய்யும்‌ கூலியாட்‌களுக்கு உரிய ௯லியை உரிய நேரத்தில்‌ கொடுக்காமலும்‌ இருந்தனர்‌. எந்த ஒரு வேலைக்கான கூலியையும்‌ அந்த நாளின்‌ மாலைக்குள்‌ கொடுக்க வேண்டும்‌ என்பது மோசே சட்டமாக இருந்தது. இதை கடைபிடிக்காமல்‌ ஏழைகளுக்கு தீங்கு செய்து கொண்டிருந்ததால்‌ யாக்கோபு பணக்காரர்களை எச்சரிக்கின்றார்‌.
நற்செய்தி வாசகப்‌ பின்னணி (மாற்கு 9:38-48)

இன்றைய நற்செய்தி வாசகமானது இயேசு பாவத்தில்‌ புரண்டுகொண்டிருக்கும்‌ மக்களை பாவத்திலிருந்து விடூவித்து விண்ணுலகிற்கு அவர்களை அழைத்துச்‌ செல்ல கடவுளால்‌ அனுப்பப்பட்ட " இரண்டாம்‌ மோசே" என்பதை பிரதிபலிக்கின்றது. உலகத்தை மீட்க வந்த இயேசு யாருடைய உதவியும்‌ இன்றி தம்மாலே உலகத்தை மீட்க முடியும்‌. இருந்தாலும்‌ பன்னிரண்டு திருத்தூதர்களை தேர்ந்தெடுக்கின்றார்‌. இவர்கள்‌ அனைவரும்‌ தூய ஆவியால்‌ ஆட்கொள்ளப்பட்டார்கள்‌. இந்த திருத்தூதர்கள்‌ தங்களின்‌ பணியை தொடர்ந்தாற்ற மற்றவர்களை தேர்ந்தெடுக்கின்றனர்‌. இன்று திருச்சபையிலே திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும்‌ கிறிஸ்துவின்‌ பணியை தொடர்ந்தாற்ற ௮ழைக்கப்படூகின்றனர்‌. ஆனால்‌ சில சமயங்களில்‌ சில குருக்கள்‌, தூய ஆவி தங்களுக்கு மட்டும்‌ கிடைத்திருக்கிறது என்று எண்ணி, குருக்கள்‌ அல்லாத ஒருவர்‌ இயேசுவின்‌ பணியை ஆற்றும்போது அவர்களை விரும்புவதில்லை. இதேப்போல இன்றைய நற்செய்தி வாசகத்தில்‌ திருத்தாதர்களை சாராத ஒருவர்‌ பேயோட்டிக்‌ கொண்டிருந்ததைக்‌ கண்டு மற்ற சீடர்கள்‌ இதைப்பற்றி இயேசுவிடம்‌ கூறுகின்றனர்‌. இயேசுவோ அவனை கடிந்து கொள்ளாமல்‌ பெருந்தன்மையோடு ஏற்றுக்‌கொள்கிறார்‌.

மறையுரை

இவ்வுலகத்தில்‌ பிறந்த ஒவ்வொரு மனிதனும்‌ மற்றவர்களை சார்ந்தே வாழ்கிறான்‌. அதனால்தான்‌ மனிதனை " ஒரு சமூகவிலங்கு" என்று சமூகவியல்‌ அறிஞர்கள்‌ கூறுகின்றனர்‌. ஏனெனில்‌ எல்லா- வற்றிற்கும்‌ மந்றவர்களையே சார்ந்திருக்கின்றான்‌. தனக்கு தேவை- யான எல்லாவற்றையும்‌ தன்னால்‌ நிவர்த்தி செய்ய முடியாத நிலையில்‌ இருக்கிறான்‌. இத்தகைய மனிதன்‌ வெளிபுறத்திலிருந்து வரும்‌ துன்பங்கள்‌, துயரங்கள்‌ போன்றவற்றிலிருந்து தன்னை பாதுகாக்க ஏதாவது முற்படுகின்றான்‌. இந்த குழு மதநம்பிக்கையின்‌ அடிப்படையில்‌ உருவான குழுவாக இருக்கலாம்‌ அல்லது சாதியின்‌ அடிப்படையில்‌ உருவான ஒரு குழுவாக இருக்கலாம்‌ அல்லது மொழியின்‌ அடிப்படையில்‌ உருவான ஒரு குழுவாக இருக்கலாம்‌. இவ்வாறாக தன்னை ஒரு குழுவில்‌ அடையாளம்‌ கண்டு: கொண்டமனிதன்‌ தன்னுடைய மதநம்பிக்கைதான்‌ உயர்ந்தது மற்றவர்களுடைய மதநம்பிக்கை தாழ்ந்தது அல்லது தன்னுடைய சாதி தான்‌ உயர்ந்தது மற்றவர்களுடைய சாதி தாழ்ந்தது அல்லது தன்னுடைய மொழிதான்‌ உயர்ந்தது மற்றவர்களுடையது தாழ்ந்தது என்று ஒரு குறுகிய வட்டத்தில்‌ வாழ்கிறான்‌. ஆனால்‌ இன்றைய வாசகங்கள்‌ நம்மை சூழ்ந்திருக்கின்ற இந்த குறுகிய வட்டத்தை உடைத்தெரிந்து பெருந்தன்மையோடும்‌, பரந்த மனப்பான்மையோடும்‌ "மற்றவர்களை ஏற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது.

இன்றைய முதல்‌ வாசகத்தில்‌ பார்ப்பதுபோல மோசே எழுபது மூப்பர்களை கூடாரத்தை சுற்றிலும்‌ நிறுத்திவைக்கின்றார்‌. ஆண்டவர்‌ தன்னுடைய ஆவியை அவர்களுக்கு அளிக்கின்றார்‌. உடனே அவர்கள்‌ இறைவாக்கு உரைக்கின்றனர்‌. ஆவியைப்பெற்ற எழுபது மூப்பர்களும்‌ ஆண்டவர்‌ தங்களுக்கு மட்டும்‌ தான்‌ ஆவியை அளித்‌திருக்கின்றார்‌, இறைவாக்கு தங்களால்‌ மட்டும்‌ தான்‌ உரைக்க முழயும்‌, ஆவியானவர்‌ தங்களுக்கே சொந்தம்‌ என்று எண்ணி ஒரு குறுகிய வட்டத்திலே இருக்கின்றார்கள்‌. அதனால்தான்‌ கூடாரத்‌திற்கு வராமலே ஆவியைப்‌ பெற்ற எல்தாதும்‌, மேதாதும்‌ பாளையத்‌திலே இறைவாக்கு உரைப்பதைக்‌ கண்டு அவர்களை தடுத்து நிறுத்தும்படி மோசேயிடம்‌ கூறுகின்றனர்‌. இவ்வாநாக மற்றவர்களை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல்‌ ஒரு குறுகிய வட்டத்திலே வாழ்கின்‌றார்கள்‌. இதேப்போல்‌ இன்றைய நற்செய்தி வாசகத்திலும்‌ பார்க்கின்‌றோம்‌ சீடர்‌ அல்லாத ஒருவர்‌ இயேசுவின்‌ பெயரால்‌ பேய்‌ ஓட்டுவதை கண்டு இயேசுவின்‌ சீடர்கள்‌ அவனை தடுக்க முற்படுகின்றனர்‌, காரணம்‌ தங்களுக்கு மட்டும்‌ தான்‌ பேய்களை ஓட்டும்‌ அதிகாரத்தை: யும்‌, நோய்களையும்‌ பிணிகளையும்‌ போக்கும்‌ அதிகாரத்தையும்‌ இயேசு அளித்திருக்கின்றார்‌, தங்களால்‌ மட்டும்தான்‌ அதனை செய்ய முடியும்‌ மற்றவர்களால்‌ செய்யமுடியாது என்று எண்ணி இயேசுவின்‌ சீடர்கள்‌ ஒரு குறுகிய வட்டத்திலே வாழ்கின்றார்கள்‌. அதனால்‌ தான்‌ சீடர்‌ அல்லாத ஒருவர்‌ எப்படி பேய்களை ஓட்டமுடியும்‌? அதுவும்‌ இயேசுவில்‌ பெயரால்‌ எப்படி பேய்களை ஓட்டமுடியும்‌? என்று கேட்டு அவனை தடுக்க முற்படுகின்றனர்‌. இவ்வாறு சீடர்கள்‌ மற்றவர்களை ஏற்றுக்‌ கொள்ள மனம்‌ இல்லாதவர்களாக ஒரு குறுகிய வட்டத்திலே வாழ்கின்றார்கள்‌.

ஆனால்‌ முதல்‌ வாசகத்தில்‌ பார்ப்பது போல கூடாரத்திற்கு வராமலேயே ஆவியைப்‌ பெற்று இறைவாக்குரைத்துக்‌ கொண்டிருந்த மேதாதுவையும்‌, எல்தாதுவையும்‌ மோயீசன்‌ தடுக்கவில்லை. மாறாக ஏற்றுக்கொள்கிறார்‌. அதேப்போல்‌ நற்செய்தில்‌ இயேசுகிறிஸ்து சீடர்‌ அல்லாத ஒருவர்‌ தன்னுடைய பெயரால்‌ பேய்‌ ஓட்டுவதைக்‌ கண்டு தடுத்து நிறுத்தவில்லை மாறாக " எனக்கு எதிராக இராதவர்‌ நம்‌ சார்பாக இருக்கின்றார்‌" என்று கூறி பெருந்தன்மையோடு அவனை ஏற்றக்‌ கொள்கிறார்‌.

நாமும்‌ நம்முடைய வாழ்க்கையில்‌ மூப்பர்களைப்போல்‌ சீடர்களைப்போல்‌ என்னுடைய மதம்‌, என்னுடைய ஜாதி, என்னுடைய கலாச்சாரம்‌, என்னுடைய மொழி, என்னுடைய குடும்பம்‌ என்று ஒரு குறுகிய வட்டத்திலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்‌. கத்தோலிக்க கிறிஸ்துவம்‌ தான்‌ மக்களுக்கு பல நல்ல பணிகளை செய்கிறது. மக்கள்‌ முன்னேற பலவழிகளை காட்டுகிறது, மனிதன்‌ ஓழுக்கமுடன்‌ வாழ பல போதனைகளை கற்பிக்கின்றது என்று எண்ணி நமக்கு நாமே ஒரு வட்டத்தை அமைத்துக்‌ கொண்டு வாழ்கின்றோம்‌. அதனால்‌ கிறிஸ்துவை பின்பற்றாதவர்கள்‌ பல நல்ல காரியங்களை மக்களுக்கு செய்யும்போது குறிப்பாக மக்கள்‌ முனனேற வழிகாட்டுவது, ஒழுக்கமான வாழ்வு வாழ துணைபுரிவது. நல்ல ஒரு குடும்ப வாழ்வு வாழ வழிகாட்டுவது போன்ற பணிகளை செய்யும்போது நாம்‌ அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை.

இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ வாசித்தது போல்‌ சிலர்‌ தமக்கென்று மிகுந்த செல்வங்களை சேர்க்கின்றனர்‌. தான்‌ மட்டும்‌ நன்றாக இருந்தால்‌ போதும்‌ என்று சுயநலத்தில்‌ வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள்‌. மற்றவர்களைப்‌ பற்றி கவலைப்படுவதும்‌ இல்லை அவர்களை ஏற்றுக்‌ கொள்வதும்‌ இல்லை.

அதேப்போல்‌ சிலர்‌ சாதி என்ற குறுகிய வட்டத்திலே வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள்‌. தன்னுடைய சாதி தான்‌ உயர்ந்தது என்று எண்ணி தன்னுடைய மகன்‌ அல்லது மகளுக்கு தன்னுடைய ஜாதியை சார்ந்தவரே மருமகளாக அல்லது மருமகனாக வர வேண்டும்‌ என்று எண்ணுகின்றனர்‌. மற்ற சாதியை சார்ந்தவர்‌களை இவர்கள்‌ ஏற்றுக்‌ கொள்வதில்லை. சிலர்‌ தன்னுடைய குடும்பத்தில்‌ மகனோ மகளோ நல்ல மதிப்பெண்கள்‌ பெரும்போதோ அல்லது நல்ல பெயர்‌, புகழ்‌ கிடைக்கும்‌ போதோ மிகுந்த மகிழ்ச்சி: யைடைகின்றனர்‌. ஆனால்‌ பக்கத்து வீட்டு பையனோ, பெண்ணோ அதைப்‌ பெறும்போது அதை ஏற்றுக்கொள்வதில்லை. அதைப்போல எவ்வளவுதான்‌ தவறு செய்தாலும்‌ மற்றவர்கள்‌ நம்மை ஏற்றுக்‌- கொள்ள வேண்டும்‌ என்று நினைக்கும்‌ நாம்‌ ஏற்றுக்கொள்ள முற்படுவதில்லை.

இத்தகைய சூழ்நிலையில்‌ இன்று இயேசு கிறிஸ்து நம்முடைய குறுகிய வட்டங்களை " என்னுடைய மதம்‌' " என்னுடைய ஜாதி்‌ " என்னுடைய மொழி " என்னுடைய இனம்‌ " என்னுடைய குடும்பம்‌" போன்றவற்றை உடைத்தெரிந்து மற்றவர்களை பெருந்தன்மையோடும்‌ பரந்த மனப்பான்மையோடும்‌ ஏற்றுக்கொள்ள அழைப்பு விடூக்கின்றார்‌. இதற்கு நம்முடைய பலம்‌ மட்டும்‌ போதாது கடவுளின்‌ பலமும்‌ தேவைப்படுகிறது. அதற்கான வரங்களை வேண்டி இத்திருப்பலியில்‌ மன்றாடுவோம்‌.

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

பொறாமை கொள்ளாமல்‌ மற்றவர்களை நாம்‌ ஏற்றுக்கொள்ள வேண்டும்‌.
நம்மிடம்‌ உள்ள அதிகாரத்தை மற்றவர்களிடம்‌ பகிர்ந்து கொள்ள வேண்டும்‌.
நமக்கு எதிராக இல்லாதவன்‌ நம்‌ சார்பாக இருக்கிறான்‌.
 
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.

உண்ணுவதற்கு மன்னாவும்‌, குடிப்பதற்கு நல்நீரும்‌ கொடுத்துதவிய இறைவனுக்கெதிராக, பாலைவனத்திலே இஸ்ரயேலர்‌ முறுமுறுக்கின்றனர்‌. மோசே இறைவனிடம்‌ முறையிடுகிறார்‌. " இவர்கள்‌ எல்லோரையும்‌ நான்‌ ஒருவனாகத்‌ தாங்கக்‌ கூடுமா? இது என்னாலே இயலாது " (11 : 11 - 15) என்று மோசே கூற, இறைவன்‌ அவருக்கு உதவியாக எழுபதின்மரைத்‌ தேர்ந்தெடுக்கக் செய்து அவர்கள்‌ மேல்‌ தம்‌ ஆவியைப்‌ பொழிகிறார்‌. இந்நிகழ்ச்சி வழி, அதிகாரம்‌ ஆண்டவரிடமிருந்து வருகிறது என்பதும்‌, ஆவியார்‌ எல்லோருக்கும்‌ அருளப்படுகிறார்‌ என்பதும்‌ புலனாகின்றது.

ஆண்டவரிடமிருந்தே அதிகாரம்

ஆண்டவர்‌ ஒருவரே தலைவர்‌. நாம்‌ எல்லோரும்‌ அவரின்‌ பணியாளர்களே. நம்‌ பணிகளுக்கேற்ப அவரே தம்‌ ஆவியாரையும்‌ அருட்கொடைகளையும்‌ நமக்கு அளிக்கிறார்‌. மோசேக்குத்‌ தம்‌ ஆவியை அளித்தவர்‌, " அவ்‌ ஆவியை எழுபது பேருக்கும்‌ பிரித்துக்கொடுத்தார்‌ (11:25) . ஆவியார்‌ ஏதோ ஓரிருவருக்கு மட்டும்‌ கொடுக்கப்பட்டுள்ள தனிச்‌ சொத்தன்று. சிறப்பாக, திருச்சபைத்‌ தலைவர்கள்‌,துறவறசபைத்‌ தலைவர்கள்‌ இதை அறிவது இன்றியமையாதது. " நீங்கள்‌ யாவரும்‌ சகோதர சகோதரிகள்‌. இம்மண்ணுலகில்‌ உள்ள எவரையும்‌ தந்தை என நீங்கள்‌ அழைக்க வேண்டாம்‌. ஏனெனில்‌ உங்கள்‌ தந்தை ஒருவரே. அவர்‌ விண்ணகத்தில்‌ இருக்கிறார்‌". (மத்‌, 23:6 - 12).

அதிகாரம்‌ ஆண்டவரிடமிருந்து வருமாயின்‌, அவர்‌ ஒருவரே அனைவருக்கும்‌ தலைவராயின்‌, அதிகாரம்‌ கொண்டுள்ளோர்‌ அவ்‌அதிகாரத்தைப்‌ பலரோடு பிரித்துப்‌ பகிர்ந்துகொள்வது தேவை. அதிகாரக்‌ குவியல்‌ ஆணவத்திற்கும்‌ அழிவுக்குமே இட்டுச்‌ செல்லும்‌. நாம்‌ எத்தகைய அதிகாரத்தைக்‌ கொண்டிருந்தாலும்‌ அதைப்‌ பிறரோடு பகிர்ந்துகொள்கிறோமா? அல்லது தன்னிச்சைப்படி தான்தோன்றித்‌ தனமான வாழ்வு வாழ்கின்றோமா?

அதிகாரம்‌ இறைவாக்குரைக்கவும்‌, பணிபுரியவும்‌

எழுபதின்மர்‌ ஆவியைப்‌ பெற்று " இடைவிடாது இறை வாக்குரைத்தனர்‌ " (11 : 25) என்பதிலிருந்து, அதிகாரம்‌ சுய நலத்திற்காகக்‌ கொடுக்கப்‌ பட்டதன்று, மாறாக, பிறர்‌ பணிக்காகத்‌ தரப்பட்டது என்பது புலனாகின்றது. ஆவியாரைப்‌ பெற்றுள்ள நாமும்‌ இறைவாக்கினராக, கடவுளின்‌ தூதுவர்களாக, கடவுளால்‌ அனுப்பப்பட்டவர்களாக, மக்களுக்குப்‌ பணிபுரிபவர்களாக வாழ்கிறோமா?

கூடாரத்திற்கு எழுபதின்மரோடு வராத எல்தாது, மேதாது என்ற இருவரும்‌ பாளையத்தில்‌ இறைவாக்குரைக்கின்றனர்‌. மோசேயோ அவர்களைத்‌ தடுக்க விரும்பவில்லை. " மக்கள்‌ எல்லோருமே இறைவாக்கினர்‌ ஆக ஆண்டவர்‌ அவர்கள்‌ மேல்‌ தம்முடைய ஆவியைத்‌ தந்தால்‌ நலமாயிருக்கும்‌" (11:29) என்கிறார்‌. இது ஒரு விருப்பம்‌ மட்டுமன்று. வேண்டுதல்‌ மட்டுமன்று, மக்கள்‌ எல்லோருமே ஆவியாரைக்‌ கொண்டிருக்கிறார்கள்‌; எனவே அவர்கள்‌ இறைவாக்கினர்கள்‌ என்று கூறுவதாயமைகிறது. திருமுழுக்குப்‌ பெற்றோரை நோக்கி, " நீங்களோ, தேர்ந்தெடுக்கப்பட்ட இனம்‌... இறைவனின்‌ புகழ்ச்சிகளை அறிவிப்பது உங்கள்‌ பணி" ( 1 பேதுரு 2 : 9 - 10) என்று பேதுரு சொல்வது இவ்‌ உண்மையையே விளக்குகிறது. எனவே, நம்‌ எல்லோரையும்‌ ஆவியானவர்‌ தம்‌ அருட்‌ கொடைகளால்‌ நிரப்புகிறார்‌ என்பது உண்மை. அவ்‌ அருட்கொடைகளைக்கொண்டு நாமும்‌ இறைவாக்குரைக்கும்‌ திருக்கூட்டமாக, மக்கள்‌ பணிபுரியும்‌ திருச்சபையாக ஒன்றுபட்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம்‌ என்பது உண்மை. " ஒன்றுபட்டால்‌ உண்டு வாழ்வு" . " ஆவியாரின்‌ ஏவுதலின்படி நடங்கள்‌" (கலா. 5 :16). " ஒருவருக்கொருவர்‌ அன்பின்‌ அடிமைகளாய்‌ இருங்கள்‌ " ' (கலா. 5:13).
ஆவியை அவ்‌ எழுபது பேருக்கும்‌ பிரித்துக்‌ கொடுத்தார்‌.

இரண்டாம் வாசகம் யாக்: 5:1-6

பணம்‌ இவ்வுலகிலும்‌ சரி, மறுவுலகிலும்‌ சரி, தீமையையே கொணரும்‌ என்று கூறி, பணம்‌ படைத்தோருக்கு எச்சரிக்கை விடுக்கிறார்‌ யாக்கோபு. இங்குப்‌ பணம்‌ என்பது சொத்தை மட்டும்‌ குறிக்காது, நமது ஏனைய உடைமைகளான பொருட்கள்‌, " நான்‌ என்ற முனைப்பு முதலியவற்றையும்‌ குறிக்கும்‌

பணம்‌ எதிர்காலத் தீமை

பணம்‌ மிகுதியாக வைத்திருப்பவன்‌ அப்பணத்தையே கடவுளாகத்‌ தொழுவான்‌. கடவுள்பற்றி, எதிர்காலம்பற்றி எண்ணவே அவனுக்கு நேரமிருக்காது. எனவே அவன்‌ எதிர்காலத்திற்குத்‌ தன்னைத்‌ தயார்‌ செய்ய முடியாத நிலையிலிருக்கிறான்‌. அவன்‌ எதிர்காலத்தில்‌ அவல நிலையையே, நரகத்‌ தண்டனையையே எதிர்பார்க்க முடியும்‌ (5 : 1. எனவே " உங்களுக்கு வரப்போகும்‌ அவல நிலையை நினைத்து அலறி அழுங்கள்‌ (5 : 1) என்பார்‌ யாக்கோபு. அப்பணமே எதிர்காலத்தில்‌ அவனுக்குக்‌ எதிர்‌ சாட்சியாயுமிருக்கும்‌ (5 : 3). இறுதிநாள்‌ என்பது அவனுக்கு அழிவு நாளாகவே இருக்கும்‌ (5 : 5). " * எவரும்‌ இரு தலைவர்களுக்குப்‌ பணிவிடை செய்ய முடியாது ' (மத்‌. 6 : 24), ஒன்றைச்‌ சார்ந்தால்‌ மற்றதை வெறுக்க வேண்டிய நிலை ஏற்படும்‌. இவ்வாறு கடவுளை இவ்வுலகில்‌ வெறுத்தொதுக்கியவன்‌ மறுவுலகில்‌ அவரால்‌ வெறுத்தொதுக்கப்படுவான்‌ என்பது படிப்பினை. எனவே மறுவுலகை எண்ணி, மறுவுலகத்‌ தண்டனையைக்‌ கண்முன்‌ வைத்து, பணமுடையோன்‌, பணப்பேய்க்குத்‌ தான்‌ அடிமையாகிவிடாது, அப்பணத்தைத்‌ தனக்கு அடிமையாக்கி, நல்வழிகளில்‌ செலவிடக்‌ கற்றுக்‌ கொள்ளவேண்டும்‌. " " அற்கா இயல்பிற்றுச்‌ செல்வம்‌, அது பெற்றால்‌ அற்குப ஆங்கே செயல்‌" (குறள்‌ 333). பணம்‌ தற்காலத்தும்‌ தீமை பணம்‌ எதிர்காலத்தில்‌ மட்டுமன்று, நம்‌ வாழ்நாளிலும்‌ நமக்குத்‌ தீமை இழைக்கவல்லது. பணத்தின்மேல்‌ பேராசை வளர்வது ஒரு பக்கம்‌, தேடிச்‌ சேர்த்த பணத்தைப்‌ பாதுகாக்க வேண்டுமே என்ற பயம்‌ மறுபக்கம்‌. ஆம்‌, பணம்‌ இவ்வுலகில்‌ நமக்கு ஈட்டித்‌ தருவது அமைதியற்ற வாழ்வே. பேராசையால்‌ தூண்டப்பட்டு, நீதியைக்‌ கொலை செய்வான்‌ பணக்காரன்‌. பெரும்‌ பணத்தை அடைய எத்தகைய கொடுமையையும்‌ செய்யத்‌ தயங்கான்‌. " ஈீதிமானுக்குத்‌ தண்டனைத்‌ தீர்ப்பளித்துக்‌ கொலை செய்தீர்கள்‌ (5:6), ங்கள்‌ வயலில்‌ அறுவடை செய்தவர்களுக்குரிய கூலியைப்‌ பிடித்துக்‌ கொண்டீர்கள்‌ ' (5: 4) என்று இன்னார்‌ மீது குற்றம்‌ சாட்டுவார்‌ யாக்கோபு. " பணம்‌ பத்தும்‌ செய்யும்‌" என்பதற்கிணங்க, பணக்காரன்‌ பணம்‌ வரும்‌ வழிகளிலெல்லாம்‌ சென்று அநீதியும்‌ அக்கிரமும்‌ செய்யப்‌ பின்வாங்க மாட்டான்‌. " தீங்கிழைக்கும்‌ யாவரும்‌ அறிவை இழந்துவிட்டார்களோ? உணவை விழுங்குவதுபோல்‌ என்‌ மக்களை விழுங்கப்‌ பார்க்கிறார்களே! அவர்கள்‌ ஆண்டவரை நோக்கி மன்றாடுவதுமில்லை' (திபா. 14 : 4) என்பது பணக்காரனுக்குக்‌ கூறப்பட்ட தன்றோ? " கண்டதே காட்சி, கொண்டதே கோலம்‌" என்ற முறையிலே தாறுமாறான வாழ்வை நடத்துவான்‌ பணக்காரன்‌. " கடவுள்‌ இல்லை என அறிவிலிகள்‌ தம்‌ உள்ளத்தில்‌ சொல்லிக்‌ கொள்கின்றனர்‌ (திபா. 14: 1). இத்தகையோனின்‌ பகட்டு வாழ்வு எல்லாம்‌ ஏமாற்றமே, வெறும்‌ போலிக்காட்சியே. " உங்கள்‌ பொன்னும்‌ வெள்ளியும்‌ துருப்பிடித்துவிட்டன. அந்தத்‌ துருவே உங்களுக்கு எதிர்ச்சான்றாக இருக்கும்‌ ' (யாக்‌. 5:3). நீங்கள்‌ " கொடுக்காத கூலி கூக்குரலிடு கிறது" (5 : 4) . இவ்வார்த்தைகள்‌ நம்மைப்‌ பார்த்துக்‌ கூறப்பட்டதாகக்‌ கொள்ளலாமே. " வேண்டாமை என்னும்‌ விழுச்செல்வம்‌ ஈண்டில்லை, ஆண்டும்‌ அஃதொப்பது இல்‌" (குறள்‌ 363) என்பதை உணர்வோம்‌.
( உங்கள்‌ செல்வம்‌ மக்கிப்போயிற்று. )

நற்தெசய்தி: மார்க் 9:38-48

இயேசுவின்‌ படிப்பினைகள்‌ பலவற்றை இப்பகுதியில்‌ தொகுத்துத்‌ தருகிறார்‌ மாற்கு. இன்றைய வாசகம்‌ இயேசுவின்‌ பெயரால்‌ பேயோட்டியோர்‌ பற்றி, சீடர்கள்பால்‌ கொள்ளவேண்டிய தாராள மனப்பான்மை. செயலன்பு பற்றி, அவர்களுக்கு இழைக்கப்படும்‌ இடறல்களுக்குரிய தண்டனைபற்றிக்‌ கூறுகிறது.

சாராதார்‌ மேல்‌ பற்று

இங்கு, புதுமை செய்பவன்‌ இயேசுவின்‌ பெயரால்‌ செய்கிறான்‌. ஆனால்‌ அவன்‌ இயேசுவைச்‌ சாராதவன்‌ (9:38). எனவே அவனை வெறுக்க வேண்டும்‌ என்பதில்லை. பிறர்வீட்டு ரோசாப்பூவும்‌ மணக்கத்தானே செய்கிறது. வினோபா, காந்தி, புத்தர்‌ போன்றோர்‌ " கிறிஸ்தவர்கள்‌ என்ற பெயர்‌ கொள்ளவில்லை. எனவே அவர்கள்‌ கடவுளைச்‌ சாராதவர்கள்‌ ஆகிவிடுவார்களா? இன்றும்‌ நம்மிடையே வாழும்‌ பிறமதத்தினருள்‌ பலர்‌, கிறிஸ்தவர்களுக்கும்‌ மேலான முறையிலே நல்வாழ்வு வாழ்வதைக்‌ காண்பதில்லையா? அவர்கள்‌ தவத்தாலும்‌ செபத்தாலும்‌ புதுமைகளும்‌ செய்வதில்லையா? இவர்களை நாம்‌ தள்ளிவிடுதல்‌, ஒதுக்கி விடுதல்‌ ஆகாது. இவர்கள்‌ வழியும்‌ இறைவன்‌ செயல்‌ ஆற்றுகிறார்‌ என்பது உண்மை. எங்கெல்லாம்‌ அன்பு, நீதி, சமத்துவம்‌ முதலியவற்றிற்காக உழைக்கிறோமா, அங்கெல்லாம்‌ கடவுளே செயல்படுகிறார்‌. யாரெல்லாம்‌ அன்பு செய்கிறார்களோ, நீதிக்காக உழைக்கிறார்களோ அவர்களெல்லாம்‌ கடவுளின்‌ பிள்ளைகள்‌ என்ற முறையிலே இவர்கள்‌ எல்லோருக்கும்‌ அன்பு செய்வோம்‌.

தாராள மனப்பான்மை

அன்பின்‌ வெளிப்பாடு கொடுத்தல்‌. " தம்‌ ஒரே மகன்‌ மீது நம்பிக்கை கொள்ளும்‌ எவரும்‌ அழியாமல்‌ நிலைவாழ்வு பெறும்‌ பொருட்டு அந்த மகனையே அளிக்கும்‌ அளவுக்குக்‌ கடவுள்‌ உலகின்மேல்‌ அன்புகூர்ந்தார்‌ ' (யோ. 3 : 16). கொடுப்பதிலே, அளவின்றிக்‌ கொடுப்பதில்தான்‌ அன்பின்‌ உயர்வு அடங்கியுள்ளது. இன்னும்‌ கொடுப்பதற்கு இல்லையே என்று ஏங்கும்‌ அளவுக்கு நமது அன்பு, தாராள உள்ளம்‌ வளர வேண்டும்‌. அதுவும்‌, சகக்‌ கிறிஸ்தவர்கள்பால்‌ இத்தாராள மனப்பான்மை நம்மிடம்‌ மிகவும்‌ வேண்டும்‌. ஏனெனில்‌ நாமெல்லோரும்‌ ஒரே கிறிஸ்துவின்‌ சகோதரர்கள்‌. அந்தியோக்கியத்‌ திருச்சபை, எருசலேம்‌ மக்கள்‌ பஞ்சத்தால்‌ நலிவுற்றபோது ஓடோடி வந்து உதவியது எனத்‌ திருத்தூதர்‌ பணியில்‌ (11 : 29 - 30) வாசிக்கிறோம்‌. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலும்‌ கிறிஸ்தவர்கள்‌ ஒருவர்‌ ஒருவருக்குச்‌ செய்த பணிகள்‌ குறிப்பிடப்படுகின்றன (எபி. 10 : 33 - 34). நாமும்‌ துன்புறும்‌ திருச்சபை மக்களுக்கு, ஏழைக்‌ கிறிஸ்தவர்களுக்கு, நலிந்த பங்குகளுக்கு நம்மால்‌ இயன்ற உதவிகளைச்‌ செய்யவேண்டும்‌. கொடுங்கள்‌, உங்களுக்கு மேலும்‌ கொடுக்கப்படும்‌. " மிகச்‌ சிறியோராகிய என்‌ சகோதரர்‌ சகோதரிகளுள்‌ ஒருவருக்கு நீங்கள்‌ செய்ததையெல்லாம்‌ எனக்கே செய்தீர்கள்‌ என உறுதியாக உங்களுக்குச்‌ சொல்கிறேன்‌ " (மத்‌. 25 : 40) என்ற இயேசுவின்‌ வாக்கு நம்மில்‌ உண்மைப்படுமா? " சாதலின்‌ இன்னாதது இல்லை, இனிது அதுவும்‌ ஈதல்‌ இயையாக்‌ கடை" (குறள்‌ 230)
இடறல்‌ தவிர்த்தல்‌

நாம்‌ குற்றம்‌ செய்தல்‌ தீயது; நாம்‌ பிறரைக்‌ குற்றம்‌ செய்யத்‌ தூண்டுதல்‌ அதைவிடத்‌ தீயது. எனவே பிறருக்கு இடறலாயிருக்கும்‌ நமது உறுப்புக்களை நாம்‌ வெட்டியெறிய வேண்டும்‌ என்கிறார்‌ இயேசு (10 : 41- 48), இக்கட்டளையை நாம்‌ பின்பற்றினோமாயின்‌ இன்று நம்மிடையே கையில்லாதோர்‌, காலில்லாதோர்‌, கண்‌, காதில்லாதோர்‌ நூற்றுக்குத்‌ தொன்னூற்றொன்பது விழுக்காடு இருக்கவேண்டும்‌! எனினும்‌ இக்கட்டளையின்‌ பொருள்‌ இதுவன்று. பிறருக்கு இடறலாய்‌ இருப்பதைப்‌ போல்‌ கொடிய பாவம்‌ இருக்கவே முடியாது என்பதை மிகைப்படுத்திய உருவகம்‌ வழி ஆண்டவர்‌ விளக்குகிறார்‌ எனலாம்‌. பிறருக்கு நல்லவற்றைக்‌ கற்றுக்கொடுக்க முடியாவிடினும்‌, அவர்களை நமது தீய மாதிரிகையால்‌ பாவங்களுக்கு இட்டுச்‌ செல்லாத ஒரு வாழ்வை வாழ்வோமா? நமது வாழ்வு உண்மையாகவே பிறருக்கு மாதிரிகையாயமைகிறதா ? அல்லது, நம்மால்‌ பிறர்‌ பாவத்தில்‌ விழ நாம்‌ காரணமாயிருக்கிறோமா?
நமக்கு எதிராக இல்லாதவன்‌ நம்‌ சார்பாக இருக்கிறான்‌.
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி

 
 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ