திருமுழுக்கு பெருவிழா ஆசி பெற வந்திருக்கின்ற
அன்புள்ளங்களே!
யோக நதி ஒன்றை யோர்தான் நதி ஒன்று திரு நீராட்டுகின்றது! இந்த
திருநீராட்டு வைபவ விழாவுக்கு பரிசுத்த ஆவி புறா வடிவமெடுத்து வருகை
தருகின்றது! வானத்து கதவைத் திறந்து தந்தையின் குரல் ஒலியோ இவரே என்
அன்பார்ந்த மகன் இவரிடம் பூரிப்படைகிறேன் என வாழ்த்தி மொழிகின்றது!
இங்கே படைப்பின் கடவுள் தன் படைப்பிடம் தலை தாழ்த்தி நிற்கின்றார்!
தண்ணீராலும், தூய ஆவியாலும் புதிய வலுப்பெறுகிறார். பணிக்குப்
புதிய தடம் அமைக்கிறார். விசுவாசத்தின் வெளிப்பாடாகின்றார்.
இன்றைய திருப்பலிக்கு யோர்தான் நதி நம்மை அன்போடு வரவேற்கின்றது!
நம்மையும் யோர்தான் நதி திருநீராட்ட விரும்பி திசை திரும்பி
வந்தால் நமது திருநீராட்டை பெற்றுக் கொள்ள நம் தலையை தாழ்த்துவோமா?
முக்கிய பணியில் இருக்கிறேன், பதவியில் இருக்கிறேன் எனக்கேன் இந்த
திருநீராட்டு என தவிர்த்து நிற்போமா? தலைதாழ்த்தி சிந்திப்போம்!
எது எப்படியானாலும் அறியாத பருவத்தில் நமது திருமுழுக்கின் போது
நம் மீது இறங்கிய பரிசுத்த ஆவியின் செயல்பாடு எப்போதும் நம்மோடு
உண்டு! இவரே என் அன்பார்ந்த மகன், மகள் என்ற பேரொலி நம் செவியிலும்
ஒலித்திருக்கும்! அதை அப்படியே மறு பதிவு செய்து இப்போது நம்
மனதுக்குள் ஒடவிட்டு விசுவாசத்தை உறுதிப்படுத்தும் திருப்பலிஇது.
இதில் பங்கேற்போம். புதிய படைப்பாய் தடம்பதித்து நடப்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. ஆற்றலோடு ஆட்சி புரியும் இறைவா!
திருச்சபையின் தலைவர்கள் ஆற்றலோடு ஆட்சிபுரிய அருள் தர
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்!
2. ஆறுதல் கூறுங்கள் என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள்
என மொழிந்த ஆண்டவரே!
நாடுகளின் தலைவர்கள் ஆறுதலும் கனிமொழியும் நிறைந்த
பாதையில் மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்!
3. ஆடுகளைத் தோளில் சுமக்கும் ஆயனைப் போல எமை
சுமக்கும் இறைவா!
மக்கள் எதிர் நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்
பேறாக பெற்றுக் கொள்ள வழிகாட்டும் எமது பங்குத்
தந்தையை உமது தோளில் சுமந்து பராமரிக்க வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகிறோம்!
4. திருமுழுக்கினால் திடம் பெற்ற இயேசுவே!
நாங்களும் எங்களது திருமுழுக்கில் பெற்றுக்கொண்ட
ஆவியானவரின் அருட்துணையால் யேசுவைப் போல வாழ அருள் தர
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்!
5. திருமுழுக்கு பெருவிழா வழியாக எங்களோடு உரையாடிக்
கொண்டிருக்கின்ற இறைவா!
வேதனையோடு இருப்பவர், கண்ணீரோடு தவிப்போர், நோயுற்றோர்,
புதிதாய் திருமுழுக்குப் பெற விரும்புவோர்,
திருமுழுக்குப்பெற்று அதன் மகத்துவத்தை அறியாதோர்
அனைவருடனும் நீர் இருந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
இவரே என் அன்பார்ந்த மகன் இவரிடம் நான் பூரிப்படைகின்றேன்.
பரம ஏழையான நீக்ரோ ஒருவன் பளுவான இரண்டு பெட்டிகளை தலையில்
தூக்கிக் கொண்டு நடக்க இயலாத நிலையில் நடந்து சென்றார். அவருக்குப்
பின்னால் வந்து கொண்டிருந்த வெள்ளைக்கார அமெரிக்கர் நீக்ரோவை
அணுகி நீ செல்லும் திசையில் தான் நானும் செல்கிறேன் உனது தலைச்
சுமையில் ஒன்றை எனது தலையில் இறக்கி வை என்று சொல்லி தலையை
தாழ்த்தி சுமையை வாங்கிக் கொண்டார். நீக்ரோ இதைக் கண்டு மலைத்துப்
போனார். அன்று நீக்ரோவின் பெட்டியை தலையில் சுமந்த அமெரிக்கர்
யார் தெரியுமா? பிற்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாகத் திகழ்ந்த
தியேடர் ரூஸ்வெல்ட்.
எல்லாருக்கும் தலைவராக இருக்க ஆசைஆனால் எவருமே தனக்கு தலைவராக
இருப்பதில்லை...
தராசில் தாழ்ந்த தட்டுக்குத்தான் பெருமை....
தீக்குச்சி ஒருநாள் தீப்பெட்டியைப் பார்த்து "நாம் இருவரும்
உரசிக் கொள்ளும்போது நான் மட்டும் எரிந்து போவதற்கு என்ன காரணம்?"
என்று கேட்டது. அதற்குத் தீப்பெட்டி, "உன்னுடைய தலைக்கணம் தான்
அதற்குக் காரணம்" என்று பதில் சொல்லிற்று.
தாழ்ச்சியோடு இருக்கும் போதெல்லாம் வெற்றி நமதே! உயர்வானதை
ஏற்றுக் கொள்ளும் போதெல்லாம் உற்சவம் நமதே!
ஸ்பெயின் தேசத்தில் புரட்சி நடந்து கொண்டிருந்த காலம். அப்பொழுது
அநேக குருக்களைச் சிறையில் அடைத்திருந்தார்கள். சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களையும்
கொல்வதற்கான நேரம் நெருங்கிற்று. குண்டுகளை நிறைத்துக்கொண்டு,
துப்பாக்கியைக் கொண்டு வந்தவர்களைப் பார்த்து, கை விலங்குகளோடு
இருந்த குருக்கள் எங்கள் கை விலங்குகளைச் சிறிது நேரம் அவிழ்த்து
விட்டால் நாங்கள் உங்களை ஆசிர்வதிப்போம் என்று சொன்னார்கள். இதைக்
கேட்டு காவலர்கள் கோபங்கொண்டு குருக்களின் கைகளையே வெட்டி விட்டனர்.
இரத்தம் வடியும் கைகளை உயர்த்தி பிடித்துக் கொண்டு அவர்களைக்
குருக்கள் ஆசிர்வதித்தனர்!
வானகத் தந்தையின் மக்கள் இவர்கள் அல்லவா? இவர்களிடம் தந்தைக்
கடவுள் பூரிப்படைந்திருப்பாரல்லவா?
நம் வானகத் தந்தை நம்மிடம் பூரிப்படைவாரா?
நம்மையே தாழ்த்திக் கொள்ளும் போதெல்லாம் புதிய பிறப்பெடுக்கிறோம்.
புதிதாய் தடம் பதித்து நடக்கிறோம். அப்போது வானகத் தந்தை
பூரிப்படைவார் என்பதை உணர்வோம்.
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்குங்கள்.
எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றம் தரும், எதிர்பார்ப்புக்களைக்
குறைத்துக் கொண்டால் எதிர்வருவது தானாக நிறையும் என்று பலவற்றை
நாம் கேள்விப்பட்டிருப்போம். அதிகமாக எதிர்பார்த்தால் ஏமாற்றம்
தான் வரும் என்றெண்ணி அதில் கவனமாக இருந்த நாட்கள் கூட இருக்கலாம்
இப்படியிருக்க நமது எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்க
அழைப்புவிடுக்கின்றன இன்றைய வாசகங்கள். கிறிஸ்து பிறப்பு, ஞானியர்
வருகை, திருமுழுக்கு என்று மூன்று முப்பெரும் விழாக்களுடன்
கிறிஸ்து பிறப்புக்காலத்தை நிறைவு செய்து பொதுக்காலத்தில்
அடியெடுத்து வைக்க இருக்கும் நாம் நல்லவற்றை எதிர்பார்க்க
அழைக்கப்படுகின்றோம்.
கிறிஸ்து பிறப்பு, மெசியா எங்கு பிறப்பார்? எப்படி பிறப்பார்? என்ற
எதிர்பார்ப்போடு தொடங்கி ஏழ்மையின் மன்னனாக பிறந்து மண்ணகத்தில்
மகிழ்ச்சி தந்ததோடு நிறைவடைந்தது.
ஞானியர் வருகை, யூதரின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே என்ற
எதிர்பார்ப்போடு தொடங்கி, மாடடைக் குடிலில் மரியின் மடியில் அரியணை
கொண்ட மகவின் நிறைவோடு முடிவடைந்தது.
திருமுழுக்கு விழா, யோவான் தான் மெசியாவாக இருப்பாரோ என்ற
ஏக்கத்தோடு தொடங்கி இவரே என் அன்பார்ந்த மகன் இவர் பொருட்டு நான்
பூரிப்படைகிறேன் என்ற வாழ்த்தோடு வழிநடக்கிறது.
ஆக நாம் கொண்டாடிய அனைத்து விழாக்களும் ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு
தொடங்கி நல்ல நிறைவுடன் முடிவடைகிறது. அவ்வகையில் இன்று நாம்
கொண்டாடும் நமதாண்டவரின் திருமுழுக்கு பெருவிழாவும் நல்லதொரு
எதிர்பார்ப்பினை நம் மனதில் உருவாக்குகிறது. இன்றைய நற்செய்தி
பகுதி மூன்று நிலை மனிதர்களின் எதிர்பார்ப்பும் அவர்களது நிறைவும்
பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றன. முதல் நிலை, இடை நிலை, கடை நிலை.
கடை நிலை;
கலிலேயா கடற்கரைப் பகுதியைச்சார்ந்த மக்கள் இந்நிலை
வகையைச்சார்ந்தவர்கள். இவர்களின் எதிர்பார்ப்பு, மெசியா யாராக
இருக்கும் என்பதில் இருந்தது. யோவானாக இருக்குமோ ? இவர் தான்
மக்களை மனம்மாற்றுகின்றார். ஆனால் ஆடை உணவு உறைவிடம் அனைத்தும் மிக
மிக எளிமையாக இருக்கின்றதே என்ற எண்ணம் இருந்திருக்கலாம். இவர்களது
எதிர்பார்ப்பு வெளிப்புறத்தோற்றத்தையும் செயல்பாட்டையும்
பொறுத்ததாக இருந்தது. ஆனாலும் நன்மையை நோக்கிய ஒரு எதிர்பார்ப்பாக
இருந்ததால் அதுவும் நிறைவேற்றப்படுகிறது. மெசியா யார் என்று கண்டு
கொள்ளும் ஒரு வாய்ப்பினைப் பெறுகின்றனர். யோவான் தான் இல்லையேன்று
சொல்லி இயேசுவைப் பார்த்து இவரே கடவுளின் ஆட்டுக்குட்டி என்று
சுட்டிக்காட்டுகின்றார். இவர்களது எதிர்பார்ப்பின் நிலைக்கேற்ப
நிறைவு செய்யப்படுகின்றார்கள்.
இடை நிலை:
இவ்வகை நிலையில் திருமுழுக்கு யோவான் இருக்கிறார். ஆண்டவராகிய
மெசியாவிடம் நான் திருமுழுக்கு வாங்க வேண்டும் என்று எண்ணி
எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இயேசுவே இவரிடம் திருமுழுக்கு வாங்க
வருகின்றார். தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்னும்
மறைநூல் வரிகள் இவர் தம் வாழ்வாலும் வாக்காலும்
நிறைவேற்றப்படுகின்றது. இவரது எதிர்பார்ப்பு உள்ளம் சார்ந்ததாய்
இருக்கின்றது. நான் தண்ணீரால் திருமுழுக்கு கொடுக்கின்றேன் இவர்
தூய ஆவியினால் கொடுப்பார் என்று எதிர்பார்த்து அவருக்கு
முன்னோடியாக இருந்து முன்னுரை அளிக்கின்றார். விளைவு அந்த தூய
ஆவியின் வல்லமையையும் குரலையும் நேரில் கண்டு அனுபவிக்கும் நிலை
பெற்றார். அதில் நிறைவும் பெற்றார்.
முதல் நிலை;
இவ்வகை முதல் நிலையில் இயேசு இருக்கின்றார். கடவுளின் மகனான அவர்
தன்னை தாழ்த்தி ஒரு சாதாரண மனிதர் போல் திருமுழுக்கு பெற
எண்ணினார். பாவிகளோடு பாவிகளாக தன்னையும் இணைத்து தாழ்த்த
எதிர்பார்த்தார். கடவுளோ இவரின் எண்ணத்தையும், செயலையும்
உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் அதை உடன் இருப்போரும் உணரும்படிச்
செய்தார். பாவியைப் போல இருக்க நினைத்தவர் மேல் பரிசுத்த ஆவி
பொழிந்து இவரே என் அன்பார்ந்த மகன் என்று அறிக்கையிடுகின்றார்.
இவர் தனி ஆள் அல்ல நாங்கள் மூவர் என்பதை எண்பிக்கும் வகையில் தூய
ஆவியை புறா வடிவில் அவர் மேல் தங்கச்செய்தார். அனைவர்
முன்னிலையிலும் கடவுளின் மகன் என்று அழைக்கப்படும் பேற்றினைப்
பெறச்செய்கின்றார்.
ஆக இந்த திருமுழுக்கு பெருவிழா நமக்கு விடுக்கும் அழைப்பு இதுதான்.
எதிர்பாருங்கள் கடை நிலை மனிதர் போல் அல்லாமல் முதல் நிலை மனிதர்
போல. ஏனெனில் நமது எண்ணங்களும் சரி எதிர்பார்ப்புக்களும் சரி
எப்போதும் உயர்ந்தவகையாக இருக்க வேண்டும். நமது எதிர்பார்ப்புக்களை
இரட்டிப்பாக்குவோம். இதனால் வரும் பலன்கள் நமக்கு இரட்டிப்பான
மகிழ்வைத்தரும். யோவான் போல எதிர்பார்ப்போம் இயேசுவை
சுட்டிக்காட்டும் மனிதர்களாக மாறலாம் . இயேசு போல எதிர்பார்ப்போம்
இவரே என் அன்பார்ந்த மகன் என்று அழைக்கப்படும் பேறுபெறலாம். எனவே
நமது நல்ல எதிர்பார்ப்புக்களை இரட்டிப்பாக்குவோம். நிறைவான பலன்களை
அடைவோம். இறைவன் நம்மையும் நம் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரையும்
நிறைவாக ஆசீர்வதிப்பாராக ஆமென்.
சகோதரி மெரினா
இன்று ஆண்டவரின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடுகின்றோம்.
இந்த விழாவின் பின்புலத்தில் நமக்கு இயல்பாக மூன்று கேள்விகள்
எழுவதுண்டு:
(அ) இயேசுவே வயது வந்தபின்னர்தான் திருமுழுக்கு பெற்றார்.
அப்படி இருக்க, கத்தோலிக்கத் திருஅவையில் நாம் குழந்தைகளாக
இருக்கும்போதே திருமுழுக்குப் பெறுவது ஏன்?
(ஆ) பாவ மன்னிப்புக்கான திருமுழுக்கை யோவான் வழங்கினார் எனில்,
பாவமே அறியாத இயேசு அத்திருமுழுக்கைப் பெற வேண்டியதன் நோக்கம்
என்ன?
(இ) 'அவர் தூய ஆவியால் திருமுழுக்கு கொடுப்பார்' என்று இயேசுவைப்
பற்றி யோவான் முன்னுரைக்கிறார் எனில், நாம் பெற வேண்டிய இந்த
இரண்டாவது திருமுழுக்கு என்ன? இதுதான் 'முழுக்கு ஸ்நானமா'?
அல்லது இதுதான் 'அபிஷேகம், இரட்சிப்பு பெறுதலா?'
விரைவாக இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுவிட்டு, நம் சிந்தனைக்குள்
நுழைவோம்.
(அ) திருமுழுக்கு நாம் தொடக்கப் பாவத்தைக் கழுவுகிறது.
மேலும், திருமுழுக்கு என்பது திருஅவை என்னும் சமூகத்திற்குள்
உறுப்பினராக மாறும் நுழைவுச் சடங்கு. ஆக, குழந்தையாக இருக்கும்போதே
திருமுழுக்கு கொடுப்பதை கத்தோலிக்கத் திருஅவை முன்மொழிகிறது.
(ஆ) இயேசு திருமுழுக்கு பெறுவதன் நோக்கம் பாவமன்னிப்பு அல்ல.
மாறாக, இது மனுக்குலத்தோடு அவர் முழுமையாக ஒன்றித்திருந்ததையும்,
மற்றும் அவருடைய பொதுவாழ்வு அல்லது பணிவாழ்வின் தொடக்கத்தையும்
குறிக்கிறது.
(இ) 'தூய ஆவியால் திருமுழுக்கு' என்பது லூக்கா நற்செய்தியில்
திருத்தூதர்பணிகள் நூலில் வரப் போகின்ற ஆவியார் அருள்பொழிவைக்
குறிக்கின்றது. தூய ஆவியாரின் கொடைகளை நாம் உறுதிப்பூசுதல்
அருளடையாளத்தில் பெறுகின்றோம். திருமுழுக்கில் நம்மேல்
பொழியப்பட்ட ஆவி தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் - இந்த
அருளடையாளத்தில் உறுதிசெய்யப்படுகின்றார். ஆக, நாம்
முழுக்கு ஸ்நானம், அல்லது ஆவியின் அபிஷேகம் அல்லது இரட்சிப்பு
பெறத் தேவையில்லை.
நம் திருமுழுக்குச் சடங்கில், 'எப்பத்தா' ('திறக்கப்படு')
என்னும் ஒரு பகுதி உண்டு. அதில், திருத்தொண்டர் அல்லது அருள்பணியாளர்,
'செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும், ஆண்டவர் இயேசு செய்தருளினார்.
நீ விரைவில் அவரது வார்த்தையை தந்தையாகிய இறைவனின் புகழும்
மகிமையும் விளங்கக் காதால் கேட்கவும், அந்த நம்பிக்கையை
நாவால் அறிக்கையிடவும் அவரே அருள்செய்தருள்வாராக!' என்று
சொல்லி, குழந்தையின் உதடுகள் மற்றும் காதுகளில் சிலுவை அடையாளம்
வரைகிறார்.
'குரல் கேட்டல்' என்பது திருமுழுக்கு நிகழ்வில் முதன்மையான
ஒன்றாக இருக்கிறது. 'அவரது குரல் கேட்டல்' என்பதை நாம் இன்றைய
நாளின் மையச் சிந்தனையாக எடுத்துக்கொள்வோம்.
முதல் ஏற்பாட்டில், 'குரல்' பற்றிய மூன்று பகுதிகள் முக்கியமானவை:
(அ) ஆதாம் கேட்ட குரல். நம் முதற்பெற்றோர் விலக்கப்பட்ட கனியை
உண்கின்றனர். ஆண்டவராகிய கடவுள் தோட்டத்தில் உலவிக்
கொண்டிருந்த ஓசை 'கேட்டு,' அவர்கள் மரங்களுக்கு இடையே ஒளிந்துகொள்கின்றனர்.
'நீ எங்கே இருக்கின்றாய்?' என்று ஆண்டவர் கேட்டபோது, 'உம்
குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக
இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன்' என்கிறார்
(காண். தொநூ 3:8-10). இந்நிகழ்வில், 'குரல்' அச்சம் தருகிறது.
(ஆ) பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டுக்குள் இஸ்ரயேல்
மக்கள் நுழையுமுன் மோசே வழியாக ஆண்டவர் பேசுகின்றார்:
'நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும்
கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்து, உன் கடவுளாகிய ஆண்டவரின்
குரலுக்குச் செவிகொடு' (இச 15:5). இங்கே, 'குரல்' என்பது
கீழ்ப்படிதலுக்கான அழைப்பாக இருக்கின்றது.
(இ) இஸ்ரயேல் மக்கள் அசீரிய மற்றும் பாபிலோனிய அடிமைத்தனத்தில்
இருந்தபோது, ஆண்டவராகிய கடவுள் தங்களைவிட்டு விலகியதாக
நினைத்தனர். அவர்களுக்குத் தன் உடனிருப்பை முன்மொழிகின்ற
ஆண்டவர், 'நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம்
சென்றாலும், 'இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்' என்னும்
குரல் பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்'' (எசா
30:21). இங்கே, 'குரல்' உடனிருப்பின் மற்றும் வழிகாட்டுதலின்
அடையாளமாக இருக்கிறது.
ஆண்டவரின் குரல் அச்சம் தருவதாகவும், கீழ்ப்படிதலுக்கான அழைப்பாகவும்,
உடனிருப்பின் அடையாளமாகவும் இருக்கிறது. சில நேரங்களில் ஆண்டவரின்
குரல் அரிதாக இருக்கிறது (காண். 1 சாமு 3:1).
இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வை, ஒத்தமைவு நற்செய்தியாளர்கள்
என்று சொல்லப்படும் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா மட்டுமே
பதிவு செய்கின்றனர். லூக்கா மற்ற நற்செய்தியாளர்களைவிட
மூன்று விதங்களில் முரண்படுகின்றார்:
(அ) இயேசுவின் திருமுழுக்கின்போது திருமுழுக்கு யோவான்
சிறையில் இருப்பது போல பதிவு செய்கிறார் லூக்கா (காண்.
3:20). 'மக்கள் எல்லாரும் திருமுழுக்கு பெறும் வேளையில் இயேசுவும்
திருமுழுக்குப் பெற்று இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்'
என்று பதிவு செய்யும் லூக்கா, யார் இயேசுவுக்குத்
திருமுழுக்கு கொடுத்தார்கள்? என்பதைப் பதியாமல்
விடுகின்றார்.
(ஆ) மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில், இயேசு ஆற்றை
விட்டு வெளியே வந்தவுடன் தந்தையின் குரல் கேட்கிறது. ஆனால்,
லூக்கா நற்செய்தியில், இயேசு திருமுழுக்குப் பெற்று இறைவனிடம்
வேண்டிக் கொண்டிருந்தபோது, 'தூய ஆவி புறா
வடிவில் தோன்றி அவர்மீது இறங்க' வானத்திலிருந்து ஒரு குரல்
ஒலிக்கிறது.
(இ) மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் இயேசு 'தண்ணீரால்'
மட்டுமே திருமுழக்கு பெறுகின்றார். ஆனால், லூக்காவில், 'தண்ணீர்,'
'தூய ஆவி' என இரண்டு நிலைகளில் திருமுழுக்கு பெறுகிறார் இயேசு.
இந்த வேறுபாடுகளின் வழியாக, லூக்கா, இயேசு திருமுழுக்கு
பெறும் நிகழ்வுக்கு முக்கியத்துவம் தராமல், அந்த நிகழ்வின்
பொருள் என்ன என்பதை முதன்மைப்படுத்துகின்றார்.
இயேசு, தந்தையின் குரல் கேட்கும் நிகழ்வு மூன்று நிலைகளில்
நடக்கிறது:
(அ) திருமுழுக்கு பெறுகின்றார்
(ஆ) இறைவேண்டல் செய்கின்றார்
(இ) தூய ஆவியாரால் நிரப்பப் பெறுகின்றார்.
இந்த மூன்றும் நடந்தேறும்போதுதான், 'அவரது குரல்' ஒலிக்கின்றது.
நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில், தான் மெசியா அல்ல
என்பது யோவான் மறுப்பதோடு, இயேசு தருகின்ற திருமுழுக்கின்
மேன்மையை தூய ஆவியாரால் திருமுழுக்கு எடுத்துரைக்கின்றார்.
நம்பிக்கையாளர்கள் பெறுகின்ற தூய ஆவியாரை இது குறிக்கிறது.
யோவான், ஆண்டவரின் குரலைக் கேட்டவராக, தான் மெசியா அல்ல என
ஏற்றுக்கொள்கிறார். மேலும், அவர் தன்னையே பாலைவனத்தில் ஒலிக்கும்
குரலாக மட்டுமே அடையாளப்படுத்துகின்றார்.
இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வுக்குப் பின்னர் மூன்று நிகழ்வுகள்
விரைவாக நடந்தேறுகின்றன:
(அ) தூய ஆவியால் இயேசு பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்
(லூக் 4:2)
(ஆ) தூய ஆவியின் வல்லமையால் கலிலேயாவுக்குப் போய்த் தன் பணியைத்
தொடங்குகின்றார் (4:14), மற்றும்
(இ) 'ஆண்டவரின் ஆவி என்மேல் உளது' என்று நாசரேத்து
தொழுகைக்கூடத்தில் அறிக்கையிடுகின்றார் (4:18).
பாலைநிலத்தில் இயேசு அலகையை எதிர்கொள்கின்றார். இறையாட்சிப்
பணியைத் தொடங்குகின்றார். தானே அருள்பொழிவு பெற்றவர் என்பதை
அறிக்கையிடுகின்றார். இந்த மூன்று நிகழ்வுகளுக்கும் அடிநாதமாக
இருப்பது, 'தந்தையின் குரல்' கேட்ட இயேசுவின் அடித்தள அனுபவம்தான்.
'என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்'
என்னும் இந்தக் குரல்தான் இயேசுவைப் பொதுவாழ்வுக்கு அறிமுகம்
செய்கிறது. இந்தக் குரல்தான் இயேசுவோடு என்றும் உடனிருக்கிறது.
முதல் வாசகத்தில், தன் தூதரை பாபிலோனியாவுக்கு அனுப்புகின்ற
கடவுள், அங்கே அடிமைத்தனத்தில் வாழ்ந்த மக்களை நோக்கித் தன்
குரலை ஒலிக்கச் செய்கின்றார். இறப்பும், இருளும், அழிவும்
மேலோங்கி நின்ற அந்த நேரத்திலும் அவர்கள் அந்தப் புதிய
நாட்டில் இயல்பான வாழ்க்கை நடத்தக் கற்றுக்கொண்டனர்.
வாழ்க்கை என்னதான் இயல்பாக இருந்தாலும் அந்நிய மண்ணில் அவர்கள்
இருப்பது அவர்களுக்கே ஏற்புடையதாக இல்லை. அவர்கள் அன்பு
செய்த யூதா நாடு மிகவும் அழிந்த நிலையில் இருந்தது. 'சொந்த
நாட்டிற்கு இனி திரும்ப மாட்டோம்' என்ற நம்பிக்கையின்மையும்
விரக்தியும் மேலோங்கி நின்ற நிலையில், இறைவாக்கினர் எசாயா
ஆண்டவரின் வாக்கை அவர்களுக்கு அறிவிக்கின்றார்: 'ஆறுதல்
கூறுங்கள். என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள்.' இதயத்தில்
நம்பிக்கை இழந்த, சிதறுண்டு போன மக்களுக்கு மகிழ்ச்சியையும்,
ஆறுதலையும் கொண்டு செல்லுமாறு எசாயாவை அனுப்புகிறார் இறைவன்.
இந்த மிகப்பெரும் நாடுகடத்தப்படுதலுக்குக் காரணமான அவர்களின்
பாவங்கள் மறக்கப்பட்டன என்பதையும், அவர்கள் நாடு
திரும்பும் நேரம் வந்துவிட்டதையும் அறிவிக்குமாறு பணிக்கின்றார்.
ஆண்டவர் தாமே சிதறுண்ட மக்களைக் கூட்டிச் சேர்த்துத்
திரும்பக் கூட்டிவரும் நிகழ்வில் இயற்கையும் கரம் கோர்க்கிறது:
'பாழ்நிலம் சீராகிறது. பள்ளத்தாக்கு நிரப்பப்படுகிறது. மலை,
குன்று யாவும் தாழ்த்தப்படுகிறது, கோணலானது நேராக்கப்பட்டு,
கரடுமுரடானது சமதளமாக்கப்படுகிறது.
ஓர் ஆயன் தன் ஆடுகளைத் தன் குரலால் வழிநடத்துகிறார் (காண்.
யோவா 1:1-10). இதே உருவகத்தைக் கொண்டு, ஆண்டவராகிய கடவுள்
மூன்று நிலைகளில் தன் மக்களை வழிநடத்துகிறார்: (அ) 'ஆட்டுக்குட்டிகளைத்
தம் கையால் ஒன்று சேர்ப்பார்' - ஆக, ஒவ்வொருவரின் மேலும்
இறைவனின் கரம் படும். ஆயன் குச்சியைக் கொண்டு சேர்ப்பதுபோல
அவர் சேர்க்க மாட்டார். ஏனெனில், குச்சி தண்டனையின் அடையாளமாகும்.
தன் கைகளால் சிதறுண்டு போய்க்கிடக்கின்ற அனைத்து ஆடுகளையும்
ஒன்று சேர்ப்பார். (ஆ) 'அவற்றைத் தம் தோளில் சுமப்பார்' -
அடிமைத்தனத்தால் தங்களின் உடல் மற்றும் உள்ளத்தில் வலுவிழந்தவர்களை,
அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டவர்களைத் தம் தோளில் சுமப்பார்.
(இ) 'சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்' - அதாவது,
முதுகில் தட்டி அழைத்துக் கொண்டு போவார். சினையாடுகள் எளிதில்
சோர்ந்துவிடக் கூடியவை. அவற்றுக்குத் தொடர் அரவணைப்பு அவசியம்.
அந்த அரவணைப்பை இறைவன் தருவார்.
ஆக, ஆண்டவருடைய குரல் செயல்பாடாகவும் மாறுகிறது.
இரண்டாம் வாசகத்தில், கடவுளின் அருள் இயேசு கிறிஸ்து
வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகின்ற
புனித பவுல், திருமுழுக்கு மற்றும் தூய ஆவியார் பொழிவில்
நாமும் பங்கேற்பதை நினைவுபடுத்துகின்றார்.
இன்றைய விழா நமக்கு முன்வைக்கும் பாடங்கள் எவை?
(அ) அவரது குரல் கேட்கும் தளங்கள். கூட்டொருங்கியக்கத்துக்கான
மாமன்ற கலந்தாலோசித்தல் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கும்
இக்காலத்தில், நாம் ஒருவர் மற்றவருடைய குரலைக் கேட்கும்
முன்னர், ஆண்டவரது குரலைக் கேட்பது அவசியமாகிறது. ஆண்டவருடைய
குரல் கேட்கும் தளங்கள் எவை? பாலைநிலத்தில், அந்நிய
நாட்டில், யோர்தான் நதிக்கரையில், இறைவேண்டலில்,
கிறிஸ்துவின் வெளிப்பாட்டில், அருளடையாளங்களில் என அவருடைய
குரல் கேட்டுகொண்டே இருக்கிறது. அவருடைய குரலை நாம் கேட்பதற்குத்
தடையாக நாம் கொண்டுள்ள உள் மற்றும் வெளி ஓசைகளை அடையாளம்
கண்டு அவற்றின் சப்தங்களைக் குறைத்துக்கொள்தல் நலம்.
(ஆ) அவரது குரலாக நாமும் மாற வேண்டும். 'ஆறுதல் கூறுங்கள்.
கனிமொழி கூறுங்கள்' என ஆண்டவர் தன் இறைவாக்கினரைப் பணிக்கின்றார்.
இயேசு திருமுழுக்கு நிகழ்வுகளுக்குப் பின்னர் நற்செய்தி அறிவிப்புக்குப்
புறப்பட்டுச் செல்கின்றார். அவருடைய குரலைக் கேட்கின்ற
நாம், அவருடைய குரலாக நம் வாழ்வியல் தளங்களில் மாற
வேண்டும். குடும்பங்களில், பணியிடங்களில், சமூகத்தில் அவருடைய
குரலாக, ஆறுதலின் குரலாக நாம் ஒலிக்க என்ன செய்ய வேண்டும்?
(இ) திருமுழுக்கின் அருளைப் புதுப்பித்தல். குழந்தையாக இருந்தபோது
நாம் பெற்ற திருமுழுக்கு அருளடையாளத்தை நினைவுகூருவோம். நம்
பெற்றோர், ஞானப் பெற்றோர் நம் சார்பாக நம்பிக்கை அறிக்கை
செய்தனர். திருமுழுக்கின் உரிமைகளை நமக்குப் பெற்றுத் தந்ததோடு
கடமைகளையும் ஏற்றனர். அவர்களை நாம் நன்றியோடு எண்ணிப்
பார்ப்போம். இன்று வயது முதிர்ந்த நிலையில், நாம் அந்த அருளின்
தன்மையை உணர்ந்துள்ளோமா? திருமுழுக்கின் முதற் கடமையான நற்செய்தி
அறிவித்தலை நாம் செய்கின்றோமா?
'என் உயிரே, ஆண்டவரைப் போற்றிடு!' என ஆண்டவரைப் புகழும் பதிலுரைப்
பாடல் ஆசிரியர் (திபா 104), ஆண்டவருடைய குரல் இந்த உலகில்
ஏற்படுத்தும் மாற்றத்தை அறிக்கையிடுகின்றார். 'அவரது குரல்'
கேட்கும் நாம், அவரது குரலாக இவ்வுலகில் மாறும்வரை, அருள்
என்னும் அக்கரையில் இறைவேண்டல் செய்வோம்.
கரை சேர்க்கும்,
கரை சேரும் கடவுள்
ரொம்ப பரிச்சியமான ஒரு கதைதான். ஆனால், இன்றைய நாளுக்கு இது
பொருந்துவதாக இருப்பதால், அக்கதையுடன் நம் சிந்தனையைத் தொடங்குவோம்.
ஒரு ஊரில் இருந்த 3 பேர் ஒரு நாள் மாலையில் குடிப்பதற்காக
ஆற்றின் அக்கரையிலுள்ள ஓர் ஊருக்குச் செல்கின்றார்கள். பரிசல்
ஒன்றை எடுத்து இவர்களே ஓட்டிக்கொண்டு போய் அக்கரையை அடைந்து
வெகு நேரம் குடிக்கிறார்கள். நன்றாக இருட்டிவிட, அவர்கள்
வீடு திரும்புவதற்காகத் தாங்கள் வந்த பரிசலில் மீண்டும் ஏறி
ஊர் திரும்பும் முகத்தான் துடுப்புப் போடுகின்றனர்.
துடுப்புப் போட்டுக்கொண்டே இருக்க விடிந்து விடிகின்றது.
ஆனால், அவர்கள் அக்கரையிலேயே இருக்கின்றனர். போதை தெளிந்த
அவர்கள் சற்றே திரும்பிப் பார்க்கிறார்கள். மது மயக்கத்தில்
தாங்கள் ஏறி அமர்ந்த பரிசலைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்க்காமலேயே
விடிய விடிய தங்கள் ஆற்றலை வீணாக்கியிருப்பதை நினைத்து வருந்துகிறார்கள்.
அவர்களின் மது மயக்கம் அவர்களைக் கரை சேர்க்கவும், கரை சேரவும்
விடாமல் தடுத்துவிட்டது. இல்லையா?
ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவோடு கிறிஸ்து பிறப்புக்
காலம் நிறைவு பெறுகிறது. திருவருகைக்காலத்தில் 4 மெழுகு
திரிகள் ஏற்றி, குடில் ஜோடித்து, நட்சத்திரங்கள் கட்டி, கேரல்ஸ்
பாடி, கேக் உண்டு, கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு,
திருக்காட்சி என விழாக்களைக் கொண்டாடிய நாம் இன்றோடு நாம்
அவற்றை நிறைவு செய்கின்றோம். இவ்வளவு நாளாக நாம் கரையின்
இந்தப் பக்கம் இருந்துவிட்டோம். கரையின் இந்தப் பக்கம் மகிழ்ச்சியாகவும்
கொண்டாட்டமாகவும் இருந்தது. இப்போது கரையின் அடுத்த பக்கமான
சாதாரண, பொதுக்காலத்திற்குக் கடந்து செல்கின்றோம். ஆனாலும்,
இப்போது நாம் செல்லும் கரையின் மகிழ்ச்சி கொஞ்சமும் சாதராணது
அல்ல.
இன்றைய நாளின் இறைவாக்கும் வழிபாடு கரை சேர்க்கும் கடவுளாக
ஆண்டவராகிய இறைவனையும், கரை சேரும் கடவுளின் மகனாக இயேசு
கிறிஸ்துவையும் முன்வைக்கின்றன. திருமுழுக்கின் வழியாக பாவக்
கரை-கறையிலிருந்து தூய்மைக்குக் கரைசேர்த்த கடவுளோடு இணைந்து
நாம் தொடர்ந்து கரை சேர இன்றைய நாள் நமக்கு அழைப்பு
விடுக்கிறது.
கி.மு. 586ஆம் ஆண்டு யூதாவில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள்
பாபிலோனியாவுக்கு அடிமைகளாக நாடுகடத்தப்படுகின்றனர். இறப்பும்,
இருளும், அழிவும் மேலோங்கி நின்ற அந்த நேரத்திலும் அவர்கள்
அந்தப் புதிய நாட்டில் இயல்பான வாழ்க்கை நடத்தக் கற்றுக்கொண்டனர்.
வாழ்க்கை என்னதான் இயல்பாக இருந்தாலும் அந்நிய மண்ணில் அவர்கள்
இருப்பது அவர்களுக்கே ஏற்புடையதாக இல்லை. அவர்கள் அன்பு
செய்த யூதா நாடு மிகவும் அழிந்த நிலையில் இருந்தது. 'சொந்த
நாட்டிற்கு இனி திரும்ப மாட்டோம்' என்ற நம்பிக்கையின்மையும்
விரக்தியும் மேலோங்கி நின்ற நிலையில், இறைவாக்கினர் எசாயா
ஆண்டவரின் வாக்கை அவர்களுக்கு அறிவிக்கின்றார்: 'ஆறுதல்
கூறுங்கள். என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள்.' இதயத்தில்
நம்பிக்கை இழந்த, சிதறுண்டு போன மக்களுக்கு மகிழ்ச்சியையும்,
ஆறுதலையும் கொண்டு செல்லுமாறு எசாயாவை அனுப்புகிறார் இறைவன்.
இந்த மிகப்பெரும் நாடுகடத்தப்படுதலுக்குக் காரணமான அவர்களின்
பாவங்கள் மறக்கப்பட்டன என்பதையும், அவர்கள் நாடு
திரும்பும் நேரம் வந்துவிட்டதையும் அறிவிக்குமாறு பணிக்கின்றார்.
ஆண்டவர் தாமே சிதறுண்ட மக்களைக் கூட்டிச் சேர்த்துத்
திரும்பக் கூட்டிவரும் நிகழ்வில் இயற்கையும் கரம் கோர்க்கிறது:
'பாழ்நிலம் சீராகிறது. பள்ளத்தாக்கு நிரப்பப்படுகிறது. மலை,
குன்று யாவும் தாழ்த்தப்படுகிறது, கோணலானது நேராக்கப்பட்டு,
கரடுமுரடானது சமதளமாக்கப்படுகிறது.
மேலும், மானிடர் தங்கள் வார்த்தைகளில் தவறிப் போவர், ஆனால்,
'நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்'
என்று தன் வாக்குறுதியின் உறுதித்தன்மையை அறிக்கையிடும் இறைவன்,
'ஆயனைப் போல அவர்களை மேய்ப்பதாக' உருவகம் செய்கிறார்.
இறைவன் இஸ்ரயேல் மக்களை பாபிலோனியாவிலிருந்து மீட்டு
மீண்டு எருசலேமில் கரை சேர்க்கும் நிகழ்வு மூன்று நிலைகளில்
நடந்தேறுகிறது: (அ) 'ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று
சேர்ப்பார்' - ஆக, ஒவ்வொருவரின் மேலும் இறைவனின் கரம் படும்.
ஆயன் குச்சியைக் கொண்டு சேர்ப்பதுபோல அவர் சேர்க்க
மாட்டார். ஏனெனில், குச்சி தண்டனையின் அடையாளமாகும். தன்
கைகளால் சிதறுண்டு போய்க்கிடக்கின்ற அனைத்து ஆடுகளையும் ஒன்று
சேர்ப்பார். (ஆ) 'அவற்றைத் தம் தோளில் சுமப்பார்' - அடிமைத்தனத்தால்
தங்களின் உடல் மற்றும் உள்ளத்தில் வலுவிழந்தவர்களை, அடிமைகளாக
இழுத்துச் செல்லப்பட்டவர்களைத் தம் தோளில் சுமப்பார். (இ)
'சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்' - அதாவது,
முதுகில் தட்டி அழைத்துக் கொண்டு போவார். சினையாடுகள் எளிதில்
சோர்ந்துவிடக் கூடியவை. அவைகளுக்கு தொடர் அரவணைப்பு அவசியம்.
அந்த அரவணைப்பை இறைவன் தருவார்.
இவ்வாறாக, சிதறுண்டவர்களை ஒன்று சேர்த்து, வலுவிழந்தவர்களைத்
தோள் மேல் சுமந்து, வலுக்குறைந்தவர்களைத் தன் வலது கரத்தால்
தாங்கி கரை சேர்க்கின்றார் கடவுள்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஆயர் தீத்து தன் குழுமத்தில்
உள்ளவர்கள் எப்படி கண்காணிக்கப்பட வேண்டும் என எழுதுகிறார்.
'நாமும் ஒரு காலத்தில் அறியாமையில் இருந்தோம். கீழ்ப்படியாமல்
இருந்தோம். நெறிதவறிச் சென்றோம். தீய நாட்டங்களுக்கும் பல்வகைச்
சிற்றின்பங்களுக்கும் அடிமைகளாய் இருந்தோம். தீமையிலும்
பொறாமையிலும் உழன்றோம். காழ்ப்புணர்ச்சி கொண்டவராய் ஒருவர்
மற்றவரை வெறுத்தோம்' (தீத் 3:3) தன் குழுமத்தின் வலுக்குறைந்த
பின்புலத்தைச் சுட்டிக்காட்டும் தீத்து, இவ்வலுவின்மையிலிருந்து
நாம் விடுபட்டது, 'நம் அறச்செயல்களை முன்னிட்டு அல்ல,
மாறாக ஆண்டவரின் இரக்கத்தை முன்னிட்டே, புதுப்பிறப்பு அளிக்கும்
நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுளால் மீட்கப்பட்டோம்'
என எழுதுகின்றார்.
ஆக, 'புதுப்பிறப்பு அளிக்கும் நீரும், புதுப்பிக்கும் தூய
ஆவியும், இவை இரண்டின் ஊற்றாக இருக்கின்ற கடவுளின் இரக்கமும்'
பாவ இயல்பிலிருந்து மனுக்குலத்தை மீட்பு என்னும் கரையில்
கொண்டு போய்ச் சேர்ப்பவைகளாக இருக்கின்றன. இங்கே 'நீர்' மற்றும்
'தூய ஆவி' ஒருவர் பெறுகின்ற திருமுழுக்கு அருளடையாளத்தை
நினைவுபடுத்துகின்றன.
இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வை, ஒத்தமைவு நற்செய்தியாளர்கள்
என்று சொல்லப்படும் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள்
மட்டுமே பதிவு செய்கின்றனர். லூக்கா நற்செய்தியாளர் மற்ற
நற்செய்தியாளர்களைவிட மூன்று விதங்களில் முரண்படுகின்றார்:
(அ) இயேசுவின் திருமுழுக்கின்போது திருமுழுக்கு யோவான்
சிறையில் இருப்பது போல பதிவு செய்கிறார் லூக்கா (காண்.
3:20). 'மக்கள் எல்லாரும் திருமுழுக்கு பெறும் வேளையில் இயேசுவும்
திருமுழுக்குப் பெற்று இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்'
என்று பதிவு செய்யும் லூக்கா, யார் இயேசுவுக்குத்
திருமுழுக்கு கொடுத்தார்கள்? என்பதைப் பதியாமல்
விடுகின்றார். (ஆ) மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில்,
இயேசு ஆற்றை விட்டு வெளியே வந்தவுடன் தந்தையின் குரல்
கேட்கிறது. ஆனால், லூக்கா நற்செய்தியில், இயேசு
திருமுழுக்குப் பெற்று இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது,
'தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்க' வானத்திலிருந்து
ஒரு குரல் ஒலிக்கிறது. (இ) மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில்
இயேசு 'தண்ணீரால்' மட்டுமே திருமுழக்கு பெறுகின்றார். ஆனால்,
லூக்காவில், 'தண்ணீர்,' 'தூய ஆவி' என இரண்டு நிலைகளில்
திருமுழுக்கு பெறுகிறார் இயேசு.
இன்றைய நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில் திருமுழுக்கு
யோவானிடம் மக்கள் வருகிறார்கள். 'அவர்கள் மீட்பரை எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ
என அவர்கள் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.'
'மெசியா எதிர்பார்ப்பு' இயேசுவின் காலத்தில் மிகவும் உச்சநிலையில்
இருந்தது. ஏனெனில், இயேசுவின் சமகாலத்து மக்கள் தாங்கள் உரோமையர்களால்
அனுபவித்த அரசியல், சமூக, சமய, கலாச்சார துன்பங்களிலிருந்து
தங்களை விடுவிக்க மெசியா வர வேண்டும் என மிகவும் எதிர்நோக்கியிருந்தனர்.
வரவிருக்கும் மெசியா முதலில் ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்துவார்
என்பதும் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆகையால்தான், 'மனமாற்றத்தை'
அறிவித்து, மனமாற்றத்திற்கான திருமுழுக்கு கொடுத்து வந்த
திருமுழுக்கு யோவான் தங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக
நினைக்கின்றனர். ஆனால், அதை மறுக்கிறார் யோவான்.
இயேசுவின் திருமுழுக்கு அனுபவம் இரண்டு நிலைகளில் இருக்கிறது:
ஒன்று, அவர் திருமுழுக்கு யோவானின் திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றார்.
ஏன்? தன்னிடம் பாவம் இருப்பதால் அல்ல. மாறாக, 'மனமாற்றம்'
என்பது 'கரைக்குத் திரும்புவது' என அறிந்திருந்தார் இயேசு.
இதுவரை நாசரேத்தில் மறைந்து வாழ்வு வாழ்ந்த இயேசு, தண்ணீரில்
மறைந்திருப்பது போல மறைந்து நின்ற இயேசு, இப்போது கரை
சேர்கின்றார். முற்காலத்தில் இதே யோர்தானைக் கடந்துதான்
யோசுவா தலைமையில் இஸ்ரயேல் மக்கள் பாலும் தேனும் பொழியும்
கானான் நாட்டிற்குக் கரை ஏறினார்கள். இந்த 'கரை சேரும் நிகழ்வு'
வழியாகத் தன் பொதுவாழ்வையும் பணிவாழ்வையும் தொடங்ககிறார்
இயேசு. இரண்டு, இயேசு தூய ஆவியால் திருமுழுக்கு
பெறுகிறார். இத்தூய ஆவியால்தான் இயேசுவின் பணி உந்தித் தள்ளப்படுகிறது.
தன் உயிர்ப்புக்குப் பின் இதே தூய ஆவியைத் தம் திருத்தூதர்கள்மேல்
பொழிகிறார் இயேசு.
தங்களைக் கரை சேர்க்க யாராவது வர மாட்டார்களா? என்று
மெசியா எதிர்நோக்கில் மேலோங்கியிருந்தவர்கள் நடுவே, தூய ஆவியால்
நிரப்பப்பட்டவராய்க் கரை சேருகிறார் இயேசு.
இவ்வாறாக, பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்தவர்களை எசாயா
இறைவாக்கினர் வழியாக எருசலேம் என்னும் கரை சேர்க்கிறார்
ஆண்டவராகிய கடவுள். பாவத்திலும் தீமையிலும் உழன்றவர்களை
மீட்பு என்ற கரையில் சேர்க்கின்றார் கடவுள். 'மெசியா வந்து
எங்களை மீட்பார்' எனக் காத்திருந்தவர்களில், 'நீ இறைவனின்
அன்பார்ந்த மகன்-மகள்' என்று கடவுள் சாயலைத் தூண்டி
எழுப்பி, பணிவாழ்வு என்னும் கரை சேர்ந்து மற்றவர்களைக் கரை
சேர்க்க கரம் குவிக்கின்றார் இயேசு.
இப்படிப்பட்ட இறைச் செயலையே இன்றைய பதிலுரைப்பாடலில்
திருப்பாடல் ஆசிரியர், 'ஆண்டவரே! நீர் எத்துனை
மேன்மைமிக்கவர்! ... உமது ஆவியை நீர் அனுப்பி மண்ணகத்தின்
முகத்தைப் புதுப்பிக்கின்றீர்' (திபா 104:1,30) எனப்
பாடுகின்றார்.
இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல்
சவால்கள் எவை?
1. அக்கரைக்கும் இக்கரைக்குமான வாழ்க்கை
கிறிஸ்து பிறப்புக் காலம் என்னும் அக்கரையில் இருந்த நாம்,
பொதுக்காலம் என்னும் இக்கரைக்குள் வருகின்றோம். மகிழ்ச்சி,
கொண்டாட்டம் விடுத்து வாழ்வைத் தொடங்குவது கொஞ்சம்
கடினமாகவே இருக்கும். பழையவற்றின் நினைவுகள் நம்மை
இழுக்கும். பழைய நினைவுகள் மகிழ்ச்சி தந்தால் பரவாயில்லை.
சில நேரங்களி;ல் நாம் காயப்பட்ட நினைவுகள் நம்மைப் பின்
நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கும். நாம் அனைவருமே
காயப்பட்டிருக்கிறோம். காயப்படுத்தியிருக்கிறோம். வருத்தம்
தரும் தவறுகள் செய்திருக்கின்றோம். ஆனால், நாம் எந்த
நிலையில் இருந்தாலும் அவைகளிலிருந்து விடுபட்டு
'மகிழ்ச்சி' என்ற கரையை அடைவது சாத்தியம் எனச் சொல்கிறார்
கடவுள். நாம் தயங்கி நிற்கும்போது அவரே முன்வந்து நம்மைக்
கரைசேர்க்கத் தன் கரத்தை நீட்டுகின்றார்.
2. புதுப்பிறப்பு அளிக்கும் நீர், புதுப்பிக்கும் தூய ஆவி
திருமுழுக்கு பெற்ற நாம் ஒவ்வொருவரும்
புதுப்பிறப்பளிக்கும் நீரினால் கழுவப்பட்டுள்ளோம், தூய
ஆவியால் புதுப்பிக்கப்பட்டும் உள்ளோம். மேலும், கடவுளின்
இரக்கத்தை முன்னிட்டு நாம் மீட்கப்பட்டுள்ளோம். அந்த
இரக்கத்தின் துணையால் நாம் பழைய கட்டுக்களை
அவிழ்த்துவிடவும், பழைய இயல்புகளைக் களைந்துவிடவும்
முடியும். அக்கரைக்குப் பரிசலில் சென்றவர்கள் பரிசலின்
கயிற்றை அறுக்காமல் விடிய விடிய துடுப்புப் போட்டதுபோல,
நானும் சில நேரங்களில் என் கயிறுகளை அவிழ்த்துவிடாமல்,
அக்கரையிலேயே கட்டிவிட்டு நிற்கலாம். ஆனால், என் பழைய
இயல்பு என்னும் கயிற்றை நான் அறுக்கும்போது, அவரின்
அருள்துணையால் நான் அக்கரை அடைவேன்.
3. நீரே என் அன்பார்ந்த மகன்-மகள்
இயேசுவின் வாழ்வில் திருமுழுக்கு ஓர் அடித்தள அனுபவம்.
இந்த அனுபவம் அவருடைய ஒட்டுமொத்த வாழ்வை அப்படியே
முழுவதுமாகப் புரட்டிப் போட்டுவிடுகிறது. 'நீரே என்
அன்பார்ந்த மகன்' எனத் தன் தந்தையாகிய கடவுளால்
அழைக்கப்பட்டதால், ஒருவர் மற்றவரை, 'நீர் என் சகோதரர்,
சகோதரி' என அழைக்கிறார் இயேசு. இப்படி அவர் மற்றவர்களை
அழைப்பதற்காக வெட்கப்படவில்லை. ஆகையால் தான் அவரின்
பார்வையில் அனைவரும் - யூதர்கள், சமாரியர்கள்,
புறவினத்தார்கள், பெண்கள், குழந்தைகள், தொழுநோயாளர்கள்,
கண்பார்வையற்றோர், முடக்குவாதமுற்றோர், இறந்தோர் சமமாகத்
தெரிகின்றனர். அனைவரோடும் அவரால் பழக முடிகின்றது.
இறைவனின் அரசு அனைவருக்கும் சொந்தம் எனவும் அது
சமத்துவத்திலும், சகோதரத்திலும், சுதந்திரத்திலும்
அடங்கியுள்ளது எனவும் கற்பிக்கின்றார். 'நான் இறைவனின்
மகன்' என்ற அனுபவம் அவரின் முழு ஆளுமையையும்
ஆட்கொள்கின்றது. இறப்பு வரை அவருக்கு இருந்த ஒரே
அடையாளமும் இதுதான். ஆகையால் தான், 'இவன் தன்னையே
இறைமகனாக்கிக் கொண்டான்' என குற்றம் சுமத்தப்படுகின்றார்.
நாம் பெற்ற திருமுழுக்கின்போதும் நமக்கு இதே அனுபவம்
கிடைக்கிறது. ஆனால், அதை நாம் உள்வாங்கியிருக்கிறோமா?
திருமுழுக்கில் நாம் பாவம் என்னும் கரையைக் கடந்து தூய
வாழ்வு என்னும் கரை சேர்கிறோம். அப்பயணத்தில் நாம்
தாங்கியிருக்கும் இறையியல்பு நம்மில்
புதுப்பிக்கப்படுகிறது. திருமுழுக்கில் நாமும் நம்
இறைத்தன்மையை மீட்டெடுப்பு செய்வதால், நாமே கடவுளாக கரை
சேர்கிறோம்.
இறுதியாக, நம்மைக் கரை சேர்க்கும் கடவுள் நமக்கு ஆறுதலும்,
கனிமொழியும் கூற, அவரின் இரக்கம் அன்றாடம் நம்மைப்
புதுப்பிக்கிறது. இயேசுவோடு இணைந்து நாமும் கரை சேர்ந்தால்
நாமும் இறைவனின் அன்பார்ந்த பிள்ளைகளே.
இந்த அனுபவத்திற்கு நாம் மற்றவர்களை அழைத்துச்
செல்லும்போது நாமும் கரை சேர்க்கும், கரை சேர்க்கும்
கடவுள்களே!
நிகழ்வு
சீனாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் எட்டு வயது சிறுமி
ஒருத்தி இருந்தாள். அவள் ஒருநாள்கூடத் தவறாமல்
ஆலயத்திற்குச் சென்றுவிடுவாள். ஆலயத்தில், குருவானவர்
(Missionary) ஜெபிப்பதையும், மறையுரை ஆற்றுவதையும் மிக
நுணுக்கமாகக் கவனித்து வந்தாள். இது மட்டுமல்லாமல்,
குருவானவர் ஊரில் இருக்கக்கூடிய நோயாளிகளைச்
சந்திப்பதையும், அவர்களிடத்தில் ஆறுதலான வார்த்தைகளைப்
பேசுவதையும், ஏழை எளிய மக்களுக்கு உதவுவதையும், பெரியவர்
முதல் சிறியவர் வரை எல்லாரிடத்திலும் அன்புடன் பழகுவதையும்
அவள் தொடர்ந்து கவனித்து வந்தாள்.
இதற்கிடையில் அவளுக்கு பள்ளியில் விடுமுறை நாட்கள் வந்தன.
எனவே அவள் விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காக தூரத்தில்
இருந்த தனது பாட்டி வீட்டுக்குச் சென்றாள். ஒரு
ஞாயிற்றுக்கிழமையின்போது அவளுடைய பாட்டி அவளை அந்த ஊரில்
இருந்த ஆலயத்திற்குக் கூட்டிக் கொண்டுபோனாள். ஆலயத்தில்
குருவானவர் இல்லாததால், ஒரு அருட்சகோதரி எல்லாருக்கும்
மறைக்கல்வி சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். எனவே
பாட்டி சிறுமியை மறைக்கல்வி வகுப்பில் விட்டுவிட்டு,
மறைக்கல்வி வகுப்பு முடியும் மட்டும் வெளியே அவளுக்காகக்
காத்திருந்தார்.
அந்த நாளில் அருட்சகோதரி ஒரு கதையோடு மறைக்கல்வி வகுப்பைத்
தொடங்கினார். ஓர் ஊரில் ஒரு மனிதர் இருந்தார். அவர்
இறைவனிடத்தில் நம்பிக்கையோடு ஜெபிக்கக்கூடியவர். அதே
நேரத்தில் மக்களையும் அவர் அளவுகடந்த விதமாய் அன்பு
செய்யக்கூடியவர். நோயாளிகள், ஏழைகள், பெரியவர், சிறியவர்
என எந்தவொரு வித்தாசமில்லாமல் எல்லாரிடத்திலும் அன்பாய்
பழகக்கூடியவர்... இயேசுவின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப
வாழக்கூடிய இப்படிப்பட்ட ஒரு மனிதரை யாராவது, எங்காவது
பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். உடனே
விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு வந்திருந்த அந்த சிறுமி,
"சிஸ்டர், நீங்கள் சொன்னது போன்று நான் ஒரு மனிதரைப்
பார்த்திருக்கிறேன். அவர் வேறு யாருமல்ல, எங்கள் ஊரில்
இருக்கின்ற குருவானவர்" என்றார்.
"அருமை" என்று சொல்லி அந்தச் சிறுமியைப் பாராட்டிய
அருட்சகோதரி, திருமுழுக்குப் பெற்றிருக்கின்ற நீங்கள்
ஒவ்வொருவரும் அந்த குருவானவரைப் போன்று இயேசுவின்
மதிப்பீடுகளின்படி வாழவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை
சொன்னார்.
வாட்ச்மேன் நீ (Watchman Nee) என்ற பிரபல எழுத்தாளர்
சொல்வார், "நம்பிக்கைக்கு செயல்வடிவம் கொடுப்பதே
திருமுழுக்கு" (Baptism is Faith in Action) என்று.
எவ்வளவு அர்த்தம் நிறைந்த வார்த்தைகள் இவை.
பாவிகளுக்காகக் கொடுக்கப்பட்ட திருமுழுக்கை, பாவமற்ற இயேசு
ஏன் பெறவேண்டும்?
இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழாவை
அல்லது ஆண்டவர் இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப்
பெற்றதை நினைவுகூர்ந்து பார்க்கின்றோம். மக்கள் யாவரும்
பாவமன்னிப்புப் பெற்று, மனம்மாறவேண்டும் (லூக் 3:3)
என்பதற்காக யோவான் திருமுழுக்குக் கொடுத்து
வந்துகொண்டிருந்த வேளையில், ஒரு பாவமும் அறியாத இயேசு
திருமுழுக்குப் பெறுவது முறையா? என நாம் கேள்வி
எழுப்பலாம். இது ஒருபக்கம் இருந்தாலும், இயேசு பெற்ற
திருமுழுக்கு எந்தெந்த விதத்திலெல்லாம் முக்கியத்துவம்
பெறுகின்றது? அது என்னென்ன செய்திகளை நமக்கு எடுத்துச்
சொல்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு பெற்ற திருமுழுக்கு நமக்கு மூன்று முதன்மையான
செய்திகளை எடுத்துச் சொல்கின்றது. ஒன்று, அவர் மக்களில்
ஒருவராகத் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வதற்காகத்
திருமுழுக்குப் பெறுகின்றார் என்பதாகும். முன்னமே
பார்த்ததுபோல, பாவிகள் யாவரும் மனம்மாறி, ஆண்டவரிடத்தில்
திரும்பிவர வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்ட
திருமுழுக்கில், இயேசு பங்கு பெறுவதன் வழியாக மனிதர்களில்
ஒருவராகி, அவர்களுடைய சுய துக்கங்கள், கஷ்ட, நஷ்டங்களில்
கலந்துகொள்ளத் தயாராகின்றார்.
இரண்டு, இயேசு பெற்ற திருமுழுக்கு, அவர் தன்னுடைய
பணிவாழ்வைத் தொடங்கியதன் அடையாளமாக இருக்கின்றது.
எப்படியென்றால், இயேசு யோவானிடமிருந்து திருமுழுக்குப்
பெற்றபிறகு பாலைவனத்திற்குச் சென்று, நாற்பது நாட்கள்
நோன்பிருக்கின்றார். அதற்குப் பின்பு அவர் மனம்மாறுங்கள்.
ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என்று
நற்செய்தியைப் பறைசாற்றத் தொடங்கிவிடுகின்றார் (மத் 4:17).
ஆகையால், இயேசு பெற்ற திருமுழுக்கு அவர் தன்னுடைய
பணிவாழ்வைத் தொடங்குவதற்கான ஓர் அடையாளம் என உறுதியாகச்
சொல்லலாம். மூன்றாவதாக, இயேசு பெற்ற திருமுழுக்கு, அவர்
கல்வாரி மலையில் மானிடர் யாவருடைய மீட்புக்காக, தன்னை
பலியாகத் தருவதன் ஒரு வெளிப்பாடாக இருக்கின்றது (மத்
20:22). இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வாழ்வினைக்
கொடுக்க வந்தார். அந்த வாழ்வினை அவர் உறுதியாகத்
தரப்போகிறார் என்பதை எடுத்துக் காட்டுவதன் அடையாளமாக
இருப்பதுதான் அவர் யோர்தானில் பெற்ற திருமுழுக்கு ஆகும்.
இயேசுவின் திருமுழுக்கு நமக்குக் கொடுக்கும் அழைப்பு என்ன?
யோர்தான் ஆற்றில் இயேசு திருமுழுக்குப் பெறும்போது, தூய
ஆவியார் அவர்மீது புறவடிவில் இறங்கி வருவதையும், தந்தைக்
கடவுள், "இவரே என்னுடைய அன்பார்ந்த மைந்தர், இவர் பொருட்டு
நான் பூரிப்படைபடைகிறேன்" என்று சொல்வதையும், பின்னர்
இயேசு நற்செய்தி அறிவிக்கத் தொடங்குவதையும் நாம்
நற்செய்தியில் வாசிக்கின்றோம். திருமுழுக்கின் வழியாக
பாவங்கள் கழுவப்பட்டு, ஆண்டவரின் அன்பு மக்களாக மாறுகின்ற
நாம் ஒவ்வொருவரும், இயேசுவின் இறையாட்சியின் -
மதிப்பீடுகளின்படி வாழவேண்டும் என்பதுதான் இந்த நாள்
நமக்குத் தருகின்ற மேலான அழைப்பாக இருக்கின்றது.
இதைக் குறித்துக் காட்டும் விதமாகத்தான் திருமுழுக்கு
அருளடையாளக் கொண்டாட்டத்தின்போது குருவானவர், சாத்தானை
விட்டுவிடுகிறீர்களா? என்று கேட்டுவிட்டு, இவை
இவையெல்லாம் நம்புகிறீர்களா? என்று கேட்பார். ஆம், நாம்
ஒவ்வொருவரும் பாவத்திற்கு மரித்து, கிறிஸ்துவால்
உயிர்பெற்று, கிறிஸ்துவின் மதிப்பீடுகளான அன்பு, இரக்கம்,
பரிவு, பாசம், மன்னிப்பு போன்றவற்றின்படி நடக்கவேண்டும்.
அப்போதுதான் நாம் பெற்ற திருமுழுக்கு முழுமை பெறும்.
சிந்தனை
ரேய்மென்ட் ப்ரவுன் என்ற அறிஞர் சொல்வர், "ஒருவர்
குருவாகவோ அல்லது ஆயராகவோ அருட்பொழிவு செய்யப்பட்ட
நாளைவிடவும், அவர் திருமுழுக்குப் பெற்ற நாள் மிகவும்
முக்கியமானது" என்று. இவ்வார்த்தைகளை நாம் ஆழமாக
சிந்தித்துப் பார்த்தோம் எனில், திருமுழுக்கின்
முக்கியத்துவம் நமக்குப் புரிந்துவிடும். ஏனெனில்,
திருமுழுக்கின்போது ஒருவர் மறுபிறப்பு அடைகிறார். எனவே
அத்தகைய மறுபிறப்பினை நாம் அர்த்தமுள்ளதாக மாற்ற,
இயேசுவின் மதிப்பீடுகளின்படி நடப்போம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
I எசாயா 40: 1-5, 9-11
II தீத்து 2: 11-14; 3:4-7
III லூக்கா 3: 15-16, 21-22
"விட்டுவிடுகிறீர்களா? நம்புகிறீர்களா?"
கடவுளோடு ஒன்றித்திருத்த வாழ்வு:
கிறிஸ்துவின்மீது கொண்ட ஆழமான நம்பிக்கைக்காக நாஜிக்களால்
வதைமுகாமில் அடைக்கப்பட்டவர் அருள்பணியாளர் ஆல்பிரட்
டெல்ப் (Alfred Delp 1907-1945). இவர் வதைமுகாமில் அடைக்கப்பட்ட
பிறகும்கூட யாருக்கும் தெரியாமல் திருப்பலி
நிறைவேற்றியும், கிறிஸ்துவைப் பற்றி எழுதியும் வந்தார்.
இந்நிலையில் இவர் 1945 ஆம் ஆண்டு, பிப்ரவரி 2 ஆம் நாள்
நாஜிக்களால் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்படுவதற்குச் சில
நாள்களுக்கு முன்பு எழுதிய வார்த்தைகள் இவை: "கடவுளோடு ஒன்றித்திருக்கும்போதே
ஒரு மனிதன் மனிதனாக இருக்கின்றான்."
தான் நாஜிக்களால் கொல்லப்படப் போகிறோம் என்று தெரிந்தபின்பும்கூட,
கடவுளோடு ஒன்றித்து வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை என்று
வாழ்ந்த அருள்பணியாளர் ஆல்பிரட் டெல்ப், திருமுழுக்குப்
பெற்ற ஒவ்வொருவரும் எப்படி வாழவேண்டும் என்பதற்கு நமக்கெல்லாம்
முன்மாதிரி. இன்று நாம் ஆண்டவருடைய திருமுழுக்குப்
பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நம்மைக் கடவுளோடு
ஒன்றித்து வாழ அழைக்கின்றது. கடவுளோடு ஒன்றித்து வாழும் ஒருவரது
வாழ்க்கை எப்படி இருக்கும், அதனால் அவர் பெறுகின்ற
கைம்மாறு என்ன? என்பன குறித்து நாம் சிந்திப்போம்.
எதையெல்லாம் விட்டுவிட வேண்டும்?
திருமுழுக்குத் திருச்சடங்கின்போது அருள்பணியாளர்
கேட்கின்ற முதற்கேள்வி, "பாவத்திற்குக் காரணனும் தலைவனுமாகிய
சாத்தானை விட்டுவிடுகிறீர்களா?" என்பதுதான். இதற்கு அந்தத்
திருச்சடங்கில் பங்கேற்கிற அனைவரும் "விட்டுவிடுகிறேன்" என்று
பதிலளிக்கின்றார்கள். முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாவும் ஆண்டவரையும்
அவரது கட்டளையையும் விட்டுவிட்டு (தொநூ 2:16,17), பாவத்திற்குத்
தலைவனான சாத்தானைப் பற்றிக்கொண்டு, அதன்மூலம் பாவம்
செய்தார்கள். இவ்வாறு வரும் பிறப்பு நிலை பாவத்திலிருந்து
விடுவிக்கப்பட வேண்டுமெனில், ஒவ்வொருவரும் சாத்தானை
விட்டுவிட வேண்டும். அதனாலேயே அருள்பணியாளர்
திருமுழுக்குத் திருச்சடங்கின்போது, "சாத்தானை
விட்டுவிடுகின்றீர்களா?" என்று கேட்கின்றார்.
பவுல், தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய இரண்டாம் வாசகத்தில், நாம் இறைப்பற்றின்மையையும்
உலகு சார்ந்த நாட்டங்களையும் மறுத்து வாழவேண்டும் என்கிறார்.
நாம் ஏன் இறைப்பற்றின்மையை மறுத்து வாழவேண்டும்? என்ற எழலாம்.
"இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் செயலாலும் சொல்லாமலும் இறப்பை
வரவழத்தார்கள்" (சாஞா 1:16) என்கிறது சாலமோனின் ஞான நூல்.
இறைப்பற்றின்மை இறப்பை வருவிக்கும் என்பதால்தான் பவுல், இறைப்பற்றிமையை
மறுத்து வாழச் சொல்கின்றார்.
இறைப்பற்றின்மையால் இறப்பைத் தங்கள் வருவித்துக்கொண்டவர்களுக்கு
மிகப்பெரிய எடுத்துக்காட்டுதான் முதல் பெற்றோர். கடவுள் மனிதர்களை
அழியாமைக்கென்று படைத்திருந்தபோது (சாஞா 2:23), கடவுளின்
கட்டளையை மீறி அல்லது இறைப்பற்றின்மையால் இறப்பைத் தங்கள்மேல்
வருவித்துக்கொண்டார்கள் அவர்கள் (தொநூ 2:17). ஆகையால், இறைப்பற்றின்மை
இறப்பை வருவிக்கும் என்பதால் அந்த இறைப்பற்றின்மை நமக்குள்
தூண்டி எழுப்பும் சாத்தானையும் அவனுடைய மாயக் கவர்ச்சிகளையும்
விட்டு விடுவது நல்லது
யார்மீது நம்பிக்கை கொள்வது?
திருமுழுக்குத் திருச் சடங்கில் அருள்பணியாளர், "சாத்தானை
விட்டுவிடுகிறீர்களா?" என்று கேட்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை.
அதற்கு அடுத்ததாக, "விண்ணையும் மண்ணையும் படைத்த எல்லாம்
வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறீர்களா?" என்று
கேட்கின்றார். இதற்கு அனைவரும், "நம்புகிறேன்" என்று மறுமொழி
கூறுகின்றார்கள். எனில், பாவத்திற்குத் தலைவனாகிய சாத்தானை
விட்டுவிடுவதோடு அல்லாமல், கடவுளை நம்ம வேண்டும். அப்பொழுதுதான்
ஒருவருடைய வாழக்கை பெறும்.
இரண்டாம் வாசகத்தில் பவுல், "இறைப்பற்றின்மையையும் உலகு
சார்ந்த நாட்டங்களையும் மறுத்துவிடுங்கள்" என்று
சொல்லிவிட்டுத் தொடர்ந்து, "கட்டுப்பாடுடனும் நேர்மையுடனும்
இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இறையருளால் பயற்சி
பெறுகின்றோம்" என்கிறார். நாம் ஏன் இறைபற்றுடன் வாழவேண்டும்
என்பதற்குச் சாலமோனின் ஞான நூல், "இறைப்பற்று எல்லாவற்றையும்விட
வலிமை மிக்கது" (சாஞா 10:12) என்று விளக்கம் தருகின்றது.
இந்த வார்த்தைகளை நாம் இன்றைய முதல் வாசகத்தோடு இணைத்துச்
சிந்தித்துப் பார்த்தால் இன்னும் பொருள் நிறைந்ததாக இருக்கும்.
கடவுளாகிய ஆண்டவரை அன்பு செய்யாமல், அவர் கொடுத்த கட்டளையையும்
கடைப்பிடிக்காததால் யூதா நாட்டினர் பாபிலோனியரிடமிருந்து
இரு மடங்கு தண்டனை பெற்றனர். இந்நிலையில் கடவுள் அவர்களது
குற்றங்களை மன்னித்து, அவர்களது போராட்டத்தை முடிவுக்குக்
கொண்டு வந்தார். தவிர, "ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக்
கனிமொழி கூறுங்கள்" என்று இறைவாக்கினர் எசாயா வழியாக அழைப்பு
விடுக்கின்றார். கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக இத்தகையதோர்
அழைப்பு விடுகின்றார் எனில், யூதா நாட்டினர் தன்னை மறந்து
இறைப்பற்றில்லாமல் வாழ்ந்தால் தண்டனை பெற்றார்கள். அதனால்
அவர்கள் தன்மீது நம்பிக்கை கொண்டு இறைப்பற்றுடன்
வாழ்ந்தால் ஆறுதலையும் அரவணைப்பையும் பெறுவார்கள் என்று
கடவுள் சொல்லாமல் சொல்கின்றார்.
ஆதலால், யூதா நாட்டினர் என்றில்லை, ஒவ்வொருவரும்,
"மனிதர்மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவது
நலம்" (திபா 118:8)
ஆண்டவரின் அன்பார்ந்த மக்களாவோம்:
சாத்தானை விட்டுவிட்டுக் கடவுளை நம்புகிற ஒருவர் அவரது
பிள்ளையாகின்றார். அதன்பிறகு அவர், கடவுளின் அன்பார்த்த
மகனான இயேசுவைப் போன்று வாழ அழைக்கப்படுகின்றார்.
நற்செய்தியில் இயேசு மனிதர்களோடு தன்னை அடையாளப்படுத்திக்
கொள்ளும்விதமாய்த் திருமுழுக்குப் பெறுகின்றார். அவ்வாறு
அவர் திருமுழுக்குப் பெறுகின்றபோது, "என் அன்பார்ந்த மகன்
நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்றொரு குரல்
வானத்திலிருந்து ஒலிக்கின்றது. இயேசு தந்தையின் திருவுளத்தை
நிறைவேற்றி (லூக் 22:42), அவரது அன்பார்ந்த மகனானார்.
திருமுழுக்குப் பெற்றதன் மூலம் சாத்தானை விட்டுவிட்டு, ஆண்டவர்மீது
நம்பிக்கை கொண்டு வாழும் நாம், இயேசுவைப் போன்று கடவுளின்
திருவுளத்தை நிறைவேற்றி வாழ்ந்தால், அவரது மக்களாவோம்.
இயேசு திருமுழுக்குப் பெற்ற பிறகு, சென்ற இடங்களில் எல்லாம்
நன்மை செய்தார் (திப 10:38). திருமுழுக்குப்
பெற்றிருக்கும் நாமும் இயேசுவைப் போன்று, செல்லும் இடங்களில்
எல்லாம் நன்மை செய்ய அழைக்கப்படுகின்றோம். இன்றைக்குப் பலர்
திருமுழுக்கில் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டுச் சாத்தனைப்
பற்றிக்கொண்டு வாழ்வது வேதனையாக இருக்கின்றது. ஆண்டவருடைய
திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நமது
வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொண்டு, ஆண்டவரோடு ஒன்றித்து
வாழ்வது நல்லது. ஏனெனில், ஆண்டவரோடு ஒன்றித்து
வாழும்போதுதான் நமது வாழ்க்கை வாழ்க்கையாகவே இருக்கின்றது.
சிந்தனைக்கு:
கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற
நீங்கள அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள் (கலா
3:27) என்பார் புனித பவுல். ஆகையால், திருமுழுக்கின் மூலம்
கிறிஸ்துவை அணிந்து கொண்ட நாம், அவரைப் போன்று சென்ற இடங்களில்லாம்
நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
இதோ என் ஊழியன்! இவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்
(எசா. 42:1) என்று எசாயா ஒலித்த குரல், இதோ என் அன்பார்ந்த
மகன். இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் (மாற் 1:11) என்று
இயேசுவைப் பார்த்து ஒலித்தது. இயேசுவின் திருமுழுக்கில்
கடவுளின் குரலை இயேசு புரிந்து கொள்கிறார். இதனால் இறைவனின்
வல்லமை, ஆற்றல், சக்தி இறங்கி வந்து இயேசுவைப் புதிய தலைவராக
உலகிற்குப் பிரகடனப்படுத்தி உலகத்திற்குள் அவரை அனுப்பி
வைத்தது. புதிய உலகம் படைக்க, அதாவது மக்களினங்களுக்கு
நீதி வழங்க, அறத்தை நிலைநாட்ட, குருடர்களுக்குப் பார்வை அளிக்க,
கட்டுண்டவர்களை விடுவிக்க, இருளில் வாழ்வோருக்கு ஒளியாகத்
திகழ இயேசு புறப்படுகிறார்.
மனித வாழ்வில் இயேசு சில நேரங்களில் போதிக்கிறார். சில நேரங்களில்
வாதாடுகிறார். சில நேரங்களில் அமைதி காக்கிறார். சில நேரங்களில்
நழுவிச் சென்றுவிடுகிறார். இவை அனைத்திற்கும் காரணம் அவர்
பெற்ற திருமுழுக்கும், மன உறுதியும்தான் காரணமாகிறது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அகதியாகச் சென்ற ஒருவர் கடினமாக
உழைத்து ஓர் அழகிய வீட்டைக் கட்டினார். சில ஆண்டுகளுக்குப்
பிறகு உள் நாட்டுக் கலவரத்தில் ஊரே சூறையாடப்பட்டது. ஊரோ
யுத்த பூமியானது. அதில் இவரது வீடும் தரைமட்டமாக்கப்பட்டது.
அப்போது இவரது மனைவி அழுகிறாள். பிள்ளைகள் கதறுகிறார்கள்.
இவர் மட்டும் அமைதியாக இருக்கிறார். இவரது நண்பர்கள் இவருக்கு
ஆறுதல் சொன்னபோது அவர் சொன்னார்: இந்தியாவிலிருந்து நான்
அகதியாக வந்தபோது எதையும் நான் கொண்டு வரவில்லை. அனைத்தையும்
இங்கேயே மன உறுதியுடன் உழைத்துச் சம்பாதித்தேன். அதை இப்போது
இழந்துவிட்டேன். என் வீட்டை மட்டும்தான் இழந்துள்ளேன். ஆனால்
என் அறிவையோ, மன உறுதியையோ, திறமையையோ இழக்கவில்லை. என் மனைவி,
மக்களை இழக்கவில்லை. நான் எதை இங்கு இழந்தேனோ அதை நிச்சயம்
பெறுவேன் என்ற மன உறுதி எனக்குள்ளது என்றார். ஆம்! நம் ஆண்டவர்
இயேசு தந்தையே! உமது கரங்களில் எனது ஆவியை ஒப்படைக்கிறேன்
(லூக். 23:46) என்று சொல்லும்வரை மன உறுதியோடு மனித குல அநீத
சக்திகளோடு போராடினார். சாதனை படைக்கும் சரித்திர நாயகனாக
திகழ்ந்தார். மன உறுதியோடு பசித்தவர்க்கு உணவு கொடுக்கவும்,
வறுமையில் உள்ளவர் வளமை பெறவும், இருளில் இருப்பவனை ஒளிக்குக்
கொண்டு வரவும், இருட்டடிப்பு செய்யப்பட்ட சமூகம் விடுதலை
பெறவும் தம்மையே அர்ப்பணித்துக் கொண்டார்.
நாம் பெற்ற திருமுழுக்கு அனுபவம் நீதியை நிலைநாட்டவும், மன
உறுதி பெறவும், சோதனைகளை வென்று சாதனை படைக்கவும், இறையரசுப்
பணியில் ஈடுபடவும் நம்மை அழைக்கிறது. இயேசுவின் பணியில்
நாம் தவறினால் நாம் பெற்ற திருமுழுக்கு வெறும் அர்த்தமற்ற
சடங்காகிவிடும். அது தூய ஆவியை நமக்கு அளித்து, நம்மைப்
புதுப்படைப்பாக மாற்றி நம்மை புதிய உலகம் படைக்க அழைக்கும்
ஓர் இறை அழைப்பு.
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
இறைத் தந்தைக்கு இயேசுவை மிகவும் பிடிக்கும் (முதல் வாசகம்).
காரணம் அவரது அன்பை நூற்றுக்கு நூறு பிரதிபலித்தவர் இயேசு
(இரண்டாம் வாசகம்).
நன்மையைத் தவிர வேறு எதையும் இயேசு செய்யவில்லை (இரண்டாம்
வாசகம்). இதோ ஓர் அழகான கதை ! இது நூற்றுக்கு நூறு கட்டப்பட்ட
கதை : ஒருமுறை புனித யோசேப்பு, மரியா, புனிதர்கள், புனிதைகள்,
வானதூதர்கள் எல்லாரும் இயேசுவிடம் போய், பூலோகத்திற்கு ஒருநாள்
பிக்னிக் போயிட்டு வரலாம் அப்படின்னு சொன்னாங்க.
சரின்னு ஆண்டவர் டூருக்கு ஏற்பாடு செய்தாரு. மோட்சத்தை
பார்த்துகிறணுமே! அதுக்கு புனித பேதுருவை காவலுக்கு வச்சிட்டுப்
போயிட்டாங்க. போறதுக்கு முன்னாடி புனித பேதுருவுக்கு ஒரு
கட்டளை கொடுத்திட்டு போனாரு இயேசு. நான் வரும்வரைக்கும்
யாரையும் மோட்சத்துக்குள்ளே அனுமதிக்கக்கூடாது. இதுதான் கட்டளை.
சரின்னாரு பேதுரு.
எல்லாரும் பூமிக்கு டூர் கிளம்பிட்டாங்க. அந்தச் சமயம்
பார்த்து ஒரு டெய்லர் மோட்சத்துக்கு வந்திட்டார். தையல்காரர்
மோட்சத்துக் கதவைத் தட்டினாரு. நீங்க இயேசு வரும்வரைக்
காத்திருக்கணும் ! ஆண்டவரோடும், மாதாவோடும் எல்லாரும் டூர்
போயிருக்காங்க, அவுங்க வந்தாத்தான் நீங்க உள்ளே போகமுடியும்.
ஆண்டவருடைய உத்தரவு இல்லாம யாரையும் நான் உள்ளே விடக்கூடாது.
இது ஆண்டவரின் கட்டளை என்று சொன்னார் பேதுரு.
அதற்கு டெய்லர், என்னை உங்களுக்கு அடையாளம் தெரியலியா?
நான் வருஷா வருஷம் குழந்தை இயேசுவுக்குச் சட்டை தச்சிக்கொடுக்கிற
டெய்லர். என்னை உள்ளே விட்டிடுங்க. இயேசு ஒன்னும் சொல்லமாட்டாரு
அப்படின்னாரு.
ஓ! அந்த டெய்லரா நீங்க? சரி எப்படியோ நான் இயேசுவை சமாளிச்சிக்கிறேன்;
நீங்க யாருக்கும் தெரியாம இந்த மூளையிலே அமர்ந்திருங்க அப்படின்னாரு
பேதுரு. மோட்சத்தின் கதவு சாத்தப்பட்டது. வழக்கம்போல
பேதுருவும் தூங்கிட்டாரு. நம்ம டெய்லர் அந்த சமயம்
பார்த்து மோட்சத்தைச் சுத்திப் பார்க்கலாம்னு கிளம்பிட்டாரு.
அவருக்கு ஓர் ஆசை! ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து பூமியைப்
பார்த்தாரே! நாமும் ஒருமுறை இந்த மோட்சத்திலிருந்து பூலோகத்தைப்
பார்ப்போமேன்னு சொல்லி எட்டிப்பார்த்தார்.
அங்கே ஒரு கடை. எதை எடுத்தாலும் பத்து ரூபா அப்படிங்கிற கடை.
அந்தக் கடையிலேயிருந்து 10 ரூபா பொறுமான பொருள் ஒன்றை ஒரு
பொடியன் எடுக்கிறதை டெய்லர் பார்த்திட்டார்.
டெய்லருக்கு கோபம் வந்திட்டு. அந்தச் சிறுவனைத் தண்டிக்க
விரும்பினாரு. சுத்திப்பார்த்தாரு. அங்கே மேரி பிஸ்கட்
பாக்கெட்டுகளை மாதா அடுக்கி வச்சிருந்தாங்க. இயேசுவுக்கு
என்ன பிஸ்கட் பிடிக்கும்? மேரி பிஸ்கட் ! ஏன்னா அவுங்க அம்மா
பேரு மேரிதானே . பாக்கெட்டுகளில் ஒன்றை எடுத்து திருடின பையனை
அடிச்சாரு டெய்லரு. அந்த சமயம் பார்த்து நீர் போனவங்க எல்லாரும்
திரும்பி வந்திட்டாங்க. இயேசுவுக்குச் சரியான பசி. மேரி
பிஸ்கெட்டை எடுத்து சாப்பிடப் போனாரு. ஒரு பாக்கெட்
கொறைஞ்சிருந்ததை இயேசு கண்டுபிடிச்சிட்டாரு. பேதுருவைக்
கூப்பிட்டு என்ன நடந்திச்சுன்னு கேட்டார் இயேசு. பேதுரு உண்மையைச்
சொல்லிட்டாரு. டெய்லர் போயி இயேசு கால்லே விழுந்து அவருக்கிட்ட
தான் செஞ்சதைச் சொல்லிட்டாரு.
அப்போ ஜீஸஸ் சிரிச்சிக்கிட்டே டெய்லருகிட்டே, உலகத்திலே தப்பு
செய்றவங்களையெல்லாம் தண்டிக்க நினைச்சீன்னா, இந்த மோட்சத்திலே
உள்ள பொருள்கள் உனக்குப் பத்தாது அப்படின்னாரு. அந்த டெய்லர்
கொஞ்சம் குறும்புக்காரரு. ஜீசஸைப் பார்த்து, தப்பு செய்றவங்களைப்
பார்த்தா உங்களுக்குக் கோபமே வராதா? அப்படின்னாரு.
அதற்கு இயேசு, நான் கோபப்படுவேன். ஆனால் யாரையும் என் கோபம்
காயப்படுத்தாது; நான் தண்டிக்கமாட்டேன், கண்டிப்பேன் அப்படின்னாரு.
இயேசு- அவர் காயப்பட்டவர்களை நேசிப்பார் ; நேசிப்பவர்களைக்
காயப்படுத்தமாட்டார்.
இதனால்தான் நேசமே உருவான , அன்பே உருவான (1 யோவா 4:8) இயேசுவை
விண்ணகத் தந்தைக்கு மிகவும் பிடிக்கும் (நற்செய்தி). அவரைப்
போல விண்ணகத் தந்தையின் அன்பான மகள்களாக, மகன்களாக வாழ ஆண்டவர்
இயேசு நமக்கு அருள்புரிவாராக.
மேலும் அறிவோம் :
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து (குறள் : 155).
பொருள் : அயலார் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளாமல் அவரைத்
தண்டிப்போரைச் சான்றோர் ஒரு பொருளாகக் கருதி மதிக்கமாட்டார்கள்.
ஆனால் அயலார் செய்திடும் தீமையைப் பொறுத்தாற்றிக் கொள்வோரை
அறவோர் அருமையும் அழகும் மதிப்பும் மிக்க பொன்னைப் போன்று
போற்றிப் பேணிக்கொள்வர்.
இன்றைய வாசகங்கள்:-
எசாயா 40:1-5,9-11
தீத்து. 2:11-14,3:4-7
லூக்கா 3: 15-16,21-22
இக்காலத்தில் பிள்ளைகள் பொதுவாகப் பெற்றோர்களுக்குக்
கீழ்ப்படிவதில்லை . ஓர் அம்மா தம் மகனிடம், "நான் உன்னைப்
பெத்த அம்மாடா; என் பேச்சைக் கேளுடா" என்றதற்கு அவன்,
'என்னைப் பெத்ததினால்தான் நீ 'அம்மா', இல்லேன்னா வெறும்
'சும்மா', பேசாம போமா' என்றான்.
ஒருவருக்கு ஐந்து ஆண்பிள்ளைகள் இருந்தும் அவரை யார்
கேட்டாலும் அவர் தமக்கு ஒரே மகன்தான் என்று பதில்
சொல்வார். ஏனெனில் அவருடைய ஐந்து மகன்களில் ஒருமகன்
மட்டும்தான் அவருடைய பேச்சைக் கேட்டு நடந்தான்.
உலக மக்கள் அனைவருமே கடவுளுடைய பிள்ளைகள் என்றாலும்,
கடவுளால் சிறப்பாக அன்பு செய்யப்பட்டு அவரால்
தேர்ந்துகொள்ளப்பட்ட இஸ்ரயேல் "இறைமக்கள்" என்று அழைக்கப்
பட்டனர். ஆனால், அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியா மல்,
அவருடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறி, திமிர்
பிடித்தவர் களாகவும் வணங்காக் கழுத்துடையவர்களாகவும்
வாழ்ந்தனர்.
இஸ்ரயேல் மக்களைப் பற்றி இறைவன் இறைவாக்கினர் எசாயா
வாயிலாகக் கூறியுள்ளது நமது நெஞ்சத்தைக் கனக்கச்
செய்கிறது. "விண்வெளியே கேள்; மண்ணுலகே செவிகொடு ...
பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன். அவர்களே! எனக்கெதிராகக்
கிளர்ந்தெழுந்தார்கள்.., கேடுகெட்ட மக்கள் இவர்கள்,
ஆண்டவரைப் புறக்கணித்து விட்டார்கள்"(எசா 1:2-4).
இந்நிலையில், "என் கடவுளே உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ
வருகிறேன்" (எபி 10:7) என்று கூறிக்கொண்டே இவ்வுலகுக்கு
வந்த கிறிஸ்து ஒருவரே கடவுளுக்கு உகந்த மகன். எனவேதான்
கிறிஸ்து திருமுழுக்குப் பெற்றபோது, "என் அன்பார்ந்த மகன்
நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (லூக் 3:21)
என்று கடவுள் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்தார்.
கிறிஸ்து கடவுளுக்கு உகந்த மகன். ஏனெனில் அவர் 'கடவுளின்
துன்புறும் ஊழியன்.' உண்மையில், கிறிஸ்து திருமுழுக்குப்
பெற்றபோது, இறைவாக்கினர் எசாயா கடவுளின் துன்புறும் ஊழியன்
குறித்து எழுதியுள்ள நான்கு கவிதைகளையும் நிறைவு செய்ய
முன்வந்தார். அக்கவிதைகளில் ஒன்றுதான் இன்றைய முதல் வாசம்.
துன்புறும் ஊழியனின் சிறப்புப் பண்புகள் வருமாறு:
1. அவர்மீது கடவுளுடைய ஆவி தங்கும் (எசா 42:1).
2. நாள்தோறும் அவர் கடவுளுக்குச் செவிமடுப்பார் (எசா
50:4-5).
3, மனிதருடைய பாவங்களுக்குக் கழுவாயாக அவர் தம்மையே பலியாக
ஒப்புக்கொடுப்பார், அதன் விளைவாகக் கடவுள் அவரை
மகிமைப்படுத்துவார் (எசா 53:4-7).
கிறிஸ்து யோர்தான் ஆற்றில் பெற்றத் திருமுழுக்கு அவர்
கல்வாரியில் சிலுவையில் பெறவிருந்த திருமுழுக்குக்கு முன்
அடையாளமாகத் திகழ்ந்தது. "நான் பெறவேண்டிய திருமுழுக்கு
ஒன்று உண்டு. அது நிறைவேறும் அளவும் நான் மிகவும்
நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்" (லூக் 12:50) என்று
கிறிஸ்து கூறியது மேலே கூறப்பட்டுள்ள உண்மையை உறுதி
செய்கிறது. கிறிஸ்துவைப்பற்றி எபிரேயர் திருமுகம் கூறுவது
நமது ஆழ்தியானத்துக்கு உரியது. "அவர் இறைமகனாயிருந்தும்,
துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்; அவர்
நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும்
என்றென்றும் மீட்படையக் காரணமானார்"(எபி5:8-9).
நாம் கிறிஸ்துவின் மகிமையில் பங்குபெற வேண்டு மென்றால்
அவருடன் துன்புறுவது இன்றியமையாத ஒன்றாகும். "நாம்
கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு
பெற வேண்டும். அப்போதுதான் அவரோடு மாட்சியிலும்
பங்குபெறுவோம்" (உரோ 8:17).
திருமுழுக்கு வாயிலாக நாம் கடவுளின் பிள்ளைகளாகும்
பேறுபெற்றுள்ளோம், கடவுள் நமக்கு அச்சத்தின் மனப்பான்மையை
அருளாமல், கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனநிலையைக்
கொடுத்துள்ளார். எனவே அவரை அப்பா, தந்தையே என அழைக்கிறோம்
(உரோ 8:15). நாம் பெயரளவில் மட்டுமல்ல, உண்மையிலேயே
கடவுளுடைய மக்கள் (1 யோவா 3:1), எனவே, நாம் எங்கும்,
எதற்கும் அஞ்சக்கூடாது. உயர் இரத்த அழுத்தத்தால்
அவதிப்படக்கூடாது.
மனநோயாளி ஒருவர் தன்னை எலியென்று நினைத்து, பூனையைக்
கண்டால் பயந்து ஓடுவார், மனநல மருத்துவர் அவரிடம், "நீ
மனிதன், எலி அல்ல" என்றார், அதற்கு அவர், "டாக்டர்! நான்
மனிதன். எலி அல்ல என்பது உங்களுக்குத் தெரியும்; எனக்குத்
தெரியும்; ஆனால் அது அந்தப் பூனைக்குத் தெரியுமா?" என்று
கேட்டு அழுதார்.
நாம் கடவுளின் மக்கள் என்பது பேய்க்குத் தெரியுமா? என்றுக்
கேட்டு நம்மில் பலர் அஞ்சி அஞ்சி சாகிறோம். இது தேவையா?
கிறிஸ்து அலகையை இவ்வுலகின் தலைவன் என்று குறிப்பிட்டு,
"இவ்வுலகின் தலைவன் வந்து கொண்டிருக்கிறான், அவனுக்கு
என்மேல் அதிகாரம் இல்லை " (யோவா 14:31) என்று தெளிவாகக்
கூறியுள்ளார்.
எவ்வாறு அலகைக்குக் கிறிஸ்துவின்மேல் அதிகாரம் இல்லையோ,
அவ்வாறே அதற்கு நம்மீதும் அதிகாரம் இல்லை. நாம் இடம்
கொடுக்கவில்லையென்றால், அலகை நமக்குள் நழைய முடியாது.
"அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்போது அது
உங்களிடமிருந்து ஓடிப்போகும். கடவுளை அணுகிச் செல்லுங்கள்.
அவரும் உங்களை அணுகி வருவார்"(யாக்கோபு 4:7).
ஆண்டவரின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடும் இன்று நமது
திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொள்வோம்.
ஒருமுறை திருமுழுக்குப் பெற்றவர்கள் மீண்டும்
திருமுழுக்குப் பெறத் தேவையில்லை, திருமுழுக்கு
வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொண்டால் போதும்.
தீமைக்குக் காரணமாகிய அலகையையும் அதன் செயல்பாடுகளையும்
விட்டுவிடுவோம். குறிப்பாக, காமம், குடிவெறி, களியாட்டம்,
போட்டி, பொறாமை, கட்சிமனப்பான்மை, ஜாதிவெறி, மொழிவெறி
ஆகியவற்றைத் தூக்கி எறிவோம். கடவுளையும் திருச்சபையையும்
நம்பி, புதுப்பிறப்படைந்து புதுவாழ்வு வாழ்வோம். " நாம்
நெஞ்சில் நிறுத்த வேண்டியது: "ஒருவர் கிறிஸ்துவோடு
இணைந்திருக்கும்போது, அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய்
இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ "(2
கொரி 5:17).
ஆதிக்கவர்க்கத்தினரால் அப்பாவி
மக்களுக்கு அநீதிகளும் அக்கிரமங்களும் இழைக்கப்படும்
பொழுதெல்லாம் நம்மைக் காக்க யாரும் வரமாட்டார்களா என
ஒட்டுமொத்த மக்களும் ஏங்கித் தவிப்பார்கள். அந்நேரத்தில்
ஒரு மாஸ் ஹீரோ திடீரென அங்கே அவதரித்தால் எப்படி
இருக்கும்? திரைப்படங்களில் மட்டுமே இத்தகைய காட்சிகளைப்
பார்த்துப் பார்த்துப் பழகிப்போன மக்களுக்கு, நிஜ
வாழ்க்கையில் நிகழ்ந்தால் எப்படி இருக்கும்? மக்கள்
மத்தியில் ஈடுஇணையற்ற மகிழ்ச்சி பொங்கிவழியும் அல்லவா?
நான் மட்டுமே நலமாக இருந்தால் போதாது, மாறாக, எல்லோரும்
நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணும் சில நல்மனம்
படைத்தவர்களால்தான் சமூக மாற்றம் அன்றும் இன்றும்
நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. இவர்கள்தாம் தலைவர்களாகவும்
ஆயர்களாகவும் வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்கள்.
1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற காலக்கட்டத்தில்தான்
தென்னாப்பிரிக்காவில் நிறவெறித் தாண்டவமாடிக்
கொண்டிருந்தது. கருப்பர் இன மக்கள்மேல் வெள்ளையினத்தவர்
நடத்திய அடக்குமுறைகளும் அட்டூழியச் செயல்களும் கணக்கில்
அடங்காதவை. கடவுளின் உருவிலும் சாயலிலும் ஒரே இனத்தவராய்ப்
படைக்கப்பட்ட மனித இனம், நிறத்தால் தன்னைக்
கூறுபோட்டுக்கொண்ட மிக மோசமான காலக்கட்டம் அது. 1948ல்
தென்னாப்பிரிக்கா முழுவதிலும் நிறவெறிக்கொள்கை
அடங்காப்பிடாரித்தனமாக நிறைவேறிக் கொண்டிருந்த பொழுது,
கருப்பர் இன மக்கள் துயரத்தின் பிடியில் சிக்கித்
தவித்தார்கள். அப்போது, எங்களைக் காப்பாற்ற யார் வருவார்?
எங்கள் கண்ணீரை யார் துடைப்பார்? என மக்கள் அழுது
புலம்பிக்கொண்டிருந்தனர். அந்நேரத்தில் இளமைத்துடிப்புடன்,
தெளிந்த சிந்தனைக் கொண்ட ஓர் இளைஞனாய்
படித்துக்கொண்டிருந்த மண்டேலா, தன் இனத்து மக்களுக்கு
எதிராகப் பற்றி எரிந்துக்கொண்டிருந்த வேற்றுமைத் தீயை
அணைக்க வெகுண்டெழுந்து வந்தார்.
"நாம் இன்று அடிமைகளாக இருக்கின்றோம், நமது வளமான தேசம்
வெள்ளையர்களின் கரங்களில் இருக்கின்றது, இந்த
அவமானத்திலிருந்து என்று நாம் விடுபடப்போகிறோம்? என்
மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக யார்
தீர்ப்பு கொடுக்கப்போகிறார்கள்?" என்ற இரண்டு கேள்விகள்
அவரது உள்ளத்தைத் துளைத்தெடுத்தன. இந்தக் கேள்விகளுக்கு
விடைதேட வீறுகொண்டெழுந்தார் நெல்சன் மண்டேலா.
1948ம் ஆண்டு, அவர் தொடங்கி வைத்த மிகப்பெரும்
போராட்டங்கள் கருப்பர் இன மக்களின் விடுதலைக்கு வித்தாக
அமைந்தன. அவரது விடுதலைவேட்கை நிறைந்த போராட்டங்களைக் கண்ட
வெறிகொண்ட வெள்ளையினத்தவர், அவரைச் சிறையில் அடைத்தனர்.
இம்மக்களின் விடுதலைக்காக அவர் 27 ஆண்டுகள் 27 நாட்கள்
சிறைத் தண்டனை அனுபவித்தார். தனது சிறைப் பயணத்தின்போது
அவருக்கு இழைக்கப்பட்ட கொடிய வேதனைகளையும்
சித்திரவதைகளையும் மிகுந்த மனவலிமையுடன் தாங்கிக்கொண்டார்.
உலகத் தலைவர்கள் கொடுத்த கடும்நெருக்கடிகளால், 27 ஆண்டுகால
சிறை வாழ்க்கைக்குப் பிறகு, 1990ம் ஆண்டு பிப்ரவரி மாதம்
11ம் தேதி மண்டேலா விடுதலையடைந்தார். 1994ம் ஆண்டு நடந்த
பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று தென்னாபிரிக்காவின் முதல்
கருப்பினத் தலைவரானார். 1993ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான
நொபேல் பரிசு வழங்கப்பட்டது.
இன்று நாம் இயேசுவின் திருமுழுக்கை நினைவு கூருகின்றோம்.
சமநிலையற்ற இந்த உலகை சமன்படுத்த வந்தவர் நமதாண்டவர்.
ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, மாறுபாடுகளை மாற்றி, வேறுபாடுகளை
வேரறுத்து, புதியதோர் சமுதாயம் படைக்க வந்தவர். இதைத்தான்
இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். தியானச்
சிந்தனையோடு இப்போது அந்த இறைவார்த்தைகளைக் கேட்போம்.
குரலொலி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக
வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக
நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம்
நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்;
கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.
ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும்
ஒருங்கே இதைக் காண்பர்; (இச 40: 3-5)
இயேசுவின் ஆட்சி எப்படி இருக்கும், அவர் எத்தகைய ஆயராக
இருப்பார் என்பதும் முதல் வாசகத்தின் இறுதிப் பகுதியில்
தொடர்ந்து எடுத்துக்காட்டப்படுகிறது. "இதோ என் தலைவராகிய
ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்;அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய
இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து
வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன.
ஆயனைப்போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்;
ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத்
தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன்
நடத்திச் செல்வார்" (எச 40:10-11).
நமது இந்திய தேசத்தில், சாதியின் பெயராலும் மதத்தின்
பெயராலும் மனிதத்தை வீழ்த்தும் எத்தனையோ வேண்டத்தகாத
செயல்கள் நடந்தேறியுள்ளன. இன்றும் கூட அவற்றின் தாக்கத்தை
நம்மால் காண முடிகிறது. காந்தியும், பெரியாரும்,
அம்பேத்கரும், காமராசரும், கக்கனும் இவற்றையெல்லாம்
தகர்த்தெறியப் பொறுப்புள்ள நல்ல ஆயர்களாகப் போராடினார்கள்.
இன்றும் அவர்கள் வழியில் பலரும் போராடிக்கொண்டுதான்
இருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக
இந்தியாவில் நிகழ்ந்துவரும் சம்பவங்களை ஒட்டுமொத்த உலகமும்
ஒன்றுசேர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
ஒடுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட விவசாயிகள், இன்று
ஒன்றுதிரண்டுவந்து பாரத பிரதமரையே பஞ்சாபிற்குள்
வரவேண்டாம் என்று தடுக்கிறார்கள். ஆக, வேற்றுமை வேர்கள்
இன்னும் அழிந்தபாடில்லை, வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது
என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
"மக்களை தாழ்ந்த சாதிகளாக ஆக்குவதற்கு கடவுள் அல்லது
மதக்கோட்பாடுகளை மேற்கோள் காட்டுவது அபத்தமானது" என்றார்
பெரியார். கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும்
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இயேசுவும் குரல்
எழுப்புவதைக் காண்கிறோம். "ஐயோ! திருச்சட்ட அறிஞரே,
உங்களுக்கும் கேடு! ஏனென்றால், நீங்கள் தாங்க முடியாத
சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச்
சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்." (லூக் 11:46).
நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 6ம் தேதி
திருக்காட்சிப் பெருவிழாவிற்காகத் தான் வழங்கிய
மறையுரையில், "நமது விசுவாசப் பயணத்தில் நாம் எங்கே
இருக்கிறோம்?, நம் இதயங்களை இனிமையாக்கி, நம் வாழ்க்கையை
மாற்றாத ஒரு வழக்கமான, வெளிப்புற, மற்றும் சம்பிரதாயமான
மதத்தின் உள்ளே நாம் நீண்ட காலமாக சிக்கிக்கொண்டு
தவிக்கிறோமா?, நமது வார்த்தைகளும் வழிபாட்டு முறைகளும்
கடவுளை நோக்கி நகரவேண்டும் என்ற ஆசையை நம் இதயங்களில்
தூண்டுகிறதா, அல்லது அவை தன்னைப் பற்றியும் தன்னைப் பற்றி
மட்டுமே பேசும் உயிரற்ற மொழியா?, என்பதையெல்லாம் குறித்து
நாம் சிந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இன்றைய நமது சமுதாய, அரசியல், மற்றும் ஆன்மிகப் பணிகளின்
தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் உண்மையிலேயே ஆடுகளைக்
காக்கும் ஆயர்களாக இருக்கிறார்களா? என்பதைக் குறித்து நாம்
சிந்திக்கவேண்டும். பதவி நாற்காலியில் அமர்வதற்காக
ஆடுகளின் கால்களைப் பிடிப்பது, பதவியில் அமர்ந்த பின்பு,
அதே ஆடுகளைப் பலிகொடுப்பது என, இரக்கமற்ற செயல்களைச்
செய்வதைக் காண்கிறோம். மக்களின் அழுகுரல்களும் துயரங்களும்
அவர்களின் செவிகளை எட்ட முடியாத அளவிற்குத் தூரமாய்ப்
போய்விடுகிறார்கள். ஆனால், இயேசு எப்படிப்பட்ட ஆயராக
இருந்தார்? அவருடைய அணுகுமுறைகள் எப்படி இருந்தன? என்பதைக்
குறித்தெல்லாம் இன்றைய வாசகங்கள் நமக்கு
எடுத்தியம்புகின்றன.
நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை.
அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக்
கண்டுகொள்வர். திருடுவதற்கும் கொல்வதற்கும்
அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை.
ஆனால், நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும்
நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன். நல்ல ஆயன் நானே.
நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார் (யோவான்
10:9-11)
இயேசு என்னும் ஆயர், பெயரையும் புகழையும் விரும்பாத ஆயர்,
தன் மந்தையாகிய மக்களுக்காக எவ்வித நிந்தை அவமானங்களையும்
தாங்கிக்கொள்ள முன்வரும் ஆயர், ஆடுகளுக்கு ஆபத்து
வரும்போதெல்லாம் தன் உயிரைப் பணயம் வைத்து காக்கத்
துடிக்கும் ஆயர், வேறுபாடுகளைக் களைந்து எல்லாரையும் தன்
கொட்டிலுக்குள் ஒன்றுசேர்க்க விரும்பும் ஆயர், குறிப்பாக,
பாவிகளோடும், புறந்தள்ளப்பட்டவர்களோடும் தன்னை
ஐக்கியப்படுத்திக்கொள்ளும் ஆயர் என, ஓர் உண்மையான
ஆயருக்குரிய பண்புகளோடு மிளிர்கிறார் நமதாண்டவர் இயேசு.
இயேசுவின் திருமுழுக்கு, அவருடைய பணிவாழ்வில் ஒரு மைல்கல்.
ஏனென்றால், தந்தையின் ஆசீர்பெற்று அவருடைய அன்பு மகனாக
அவராலேயே உலக மக்களுக்கு அறிமுகம் செய்து
வைக்கப்படுகிறார். இந்த மகனை நமக்காக கையளிப்பதில்
பெருமிதம் கொள்கிறார் என்பது, இறைத்தந்தையின் குரலில்
வெளிப்படுகிறது. திருமுழுக்கிற்குப் பின்பு, இயேசு தனது
பணிவாழ்விற்கான பயணத்தைக் தொடங்குகின்றார். இயேசுவின்
திருமுழுக்கில் மூவொரு இறைவனின் பிரசனத்தையும் நாம்
காண்கின்றோம். மனிதரை மீட்கும் செயலில் மூவொரு கடவுளும்
ஒன்றிணைந்து செயல்படுவதைப் பார்க்கிறோம். இப்போது மூவொரு
இறைவனின் பிரசன்னத்தை நமக்கு வெளிப்படுத்தும்
இறைவார்த்தைகளைக் கேட்போம்.
"மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும்
திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக்
கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில்
தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, "என் அன்பார்ந்த
மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று
வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது (லூக் 3:21-22).
இயேசு, தான் இறைமகனாய் இருந்தும் கூட, பாவிகளோடுத் தன்னை
ஐக்கியப்படுத்திக் கொள்வதையும் பார்க்க முடிகிறது.
"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை,
நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்"
(லூக் 5:31) என்ற இயேசுவின் வார்த்தைகள் இங்கு
நிறைவேறுகின்றன.
ஆகவே, இயேசுவின் திருமுழுக்கு அனுபவத்தை நாமும்
பெறவேண்டும். நமது அன்றாட வாழ்வில், நாம் பெறுகின்ற
திருமுழுக்கு அனுபவங்கள்தான் இந்தச் சமுதாய
முன்னேற்றத்திற்கான வழிகளாக அமைய முடியும். "எங்கெல்லாம்
அடக்கப்படுபவர்களின் குரல் கேட்கிறதோ அங்கெல்லாம் என்
கால்கள் இருக்கும்", என்றார் புரட்சியாளர் சேகுவேரா.
இவ்வுலகின் உன்னதத் தலைவர்களாக வலம்வந்தவர்கள் அனைவருமே,
தங்கள் வாழ்வில் எதோ ஓர் இடத்தில் திருமுழுக்கு
அனுபவங்களைப் பெற்றவர்கள்தான் என்பதை நாம் நினைவில்
கொள்வோம். அடிமைத்தளைகளை அறுத்தெறிவதும், ஆதிக்கத்தனங்களை
அழித்தொழிப்பதும், வேறுபாடுகளகற்றி, அனைவரையும்
ஒற்றைக்குடையின்கீழ் ஒன்றுசேர்க்க தன் வாழ்வையே
அர்ப்பணிப்பதும், இயேசுவின் வழியில் நாம் பெறும்
திருமுழுக்கு அனுபவங்களே என்பதை உணர்ந்திடுவோம். இயேசுவின்
வழியில் நல்லாயர்களாக வாழ்ந்திட இந்நாளில் இறையருள்
வேண்டுவோம்.
செல்வராஜ் சூசைமாணிக்கம்
அருட்திரு பவுல் லியோன்
''என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான்
பூரிப்படைகிறேன்''
இயேசுவின் அன்புக்குரியவரே!
இயேசு ஏன் திருமுழுக்குப் பெற்றார் என்னும் கேள்வி
மக்களின் மனத்தில் குழப்பத்தை உருவாக்கக் கூடும். தொடக்க
காலத் திருச்சபையிலும் இக்கேள்வி எழுந்ததுண்டு. நற்செய்தி
நூல்கள் நான்கும் இயேசு திருமுழுக்குப் பெற்றதைக்
குறிப்பிடுகின்றன (காண்க: மத் 3:13-17; மாற் 1:9-11; யோவா
1:32-34). என்றாலும், பாவ மன்னிப்புப் பெறுவதற்காக
வழங்கப்பட்ட திருமுழுக்கை இயேசுவும் பெற்றுக்கொண்டதால்
அவரிடத்தில் பாவம் குடிகொண்டிருந்ததா, அவர் கடவுளின் மகனாக
நம்மிடையே வந்ததால் அவரிடம் பாவம் உண்டு என நாம் கருதுவது
சரியல்லவே என்றெல்லாம் ஐயப்பாடு அந்நாளில் எழுந்ததுண்டு.
இயேசு கடவுளோடு ஒன்றித்திருந்தார் என்பதால் அவரிடத்தில்
பாவம் குடிகொண்டிருக்கவில்லை. கடவுளின் அன்பிலிருந்து அவர்
ஒருநாளும் பிரிந்ததில்லை. என்றாலும், இயேசு நம்மைப் போல
மனிதராகப் பிறந்தவர்; நம்மோடு தம்மை முழுமையாக
ஒன்றித்துக்கொண்டவர். எனவே, பாவம் தவிர அனைத்திலும் அவர்
நமக்குச் சமமானார். ஆக, அவர் திருமுழுக்குப் பெற்றது
கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நடந்த ஒரு நிகழ்ச்சி என்பதை
நற்செய்தி நூல்கள் தெளிவுபடுத்துகின்றன.
இயேசு திருமுழுக்குப் பெற்றபோது வானிலிருந்து வந்த குரல்
ஒரு பேருண்மையை வெளிப்படுத்தியது. ''இயேசு கடவுளின்
அன்புமிக்க மகன்; கடவுள் அவரைக் குறித்து
மகிழ்ச்சியடைகிறார்'' (காண்க: மத் 3:17; மாற் 1:11; லூக்
3:22; யோவா 1:33-34). நாம் பெறுகின்ற திருமுழுக்கு நம்மைக்
கடவுளின் பிள்ளைகளாக மாற்றுகிறது. இதனால், நீரினால்
முறையாகத் திருமுழுக்குப் பெறாத ஆயிரக்கணக்கான மக்கள்
கடவுளின் பிள்ளைகள் அல்ல என்று பொருளாகாது. மாறாக,
திருமுழுக்கின் வழியாக நாம் கடவுளின் பிள்ளைகள் என்னும்
உண்மை வெளிப்படையாக அறிக்கையிடப்படுகிறது; நாம்
கிறிஸ்துவின் சீடர் என்னும் தகுதி வழங்கப்பட்டு,
பறைசாற்றப்படுகிறது. அதன் அடிப்படையில் நாம் புதிய
மனிதர்களாக, புதுப்பிறப்பு அடைந்தவர்களாக வாழ்ந்திட
அழைக்கப்படுகிறோம். கிறிஸ்தவ வாழ்வு என்பது திருமுழுக்கின்
நீட்சி என நாம் கூறலாம்.
மன்றாட்டு
இறைவா, நீரினாலும் ஆவியினாலும் புதுப்பிறப்புகளாக மாறிய
நாங்கள் இயேசுவைப் புத்துணர்வோடு பின்செல்ல அருள்தாரும்.
அருட்திரு பவுல் லியோன்
அருள்பணி. குமார்ராஜா
நமது திருமுழுக்கை நினைவுகூர்வோம் !
இன்று ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு விழா. இவ்விழாவில்
தந்தை இறைவனாலும், தூய ஆவியாலும் வலிமைப்படுத்தப்பட்டார்.
அவரது பணிவாழ்வின் தொடக்கமாக அவரது திருமுழுக்கு அமைந்தது.
இந்த நாளில் நாம் நமது திருமுழுக்கைக் கொஞ்சம்
நினைவுகூர்வோமா? நாம் திருமுழுக்கு பெற்ற அன்று பின்வருவன
நடைபெற்றன:
1. தந்தை இறைவன் நம்மை ஆண்டவர் இயேசு வழியாகத் தமது
சொந்தப் பிள்ளைகளாக்கிக் கொண்டார். அன்றிலிருந்து நாம்
இறைவனின் பிள்ளைகள். இந்த உணர்வோடு நான் வாழ்கிறேனா?
இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேனா?
2. நாம் திருச்சபையின் உறுப்பினர்களானோம். தாய்த்
திருச்சபையின் அன்புப் பிள்ளையாக நான் வாழ்கிறேனா?
திருச்சபைக்குரிய கடமைகளை நான் நிறைவேற்றுகிறேனா?
3. திருமுழுக்கால் நற்செய்தி அறிவிக்கும் கடமையைப்
பெற்றோம். அந்தக் கடமையை நான் ஆற்றுகிறேனா? எனது நற்செய்தி
அறிவிக்கும் பணி என்ன என்பது பற்றிச் சிந்தித்து, ஏதாவது
செய்கிறேனா?
ஆண்டவரின் திருமுழுக்கு நாளில் நமது திருமுழுக்கை
நினைவுகூர்ந்து, நமது கடமைகளை ஆற்ற முன்வருவோம்.
மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப்
போற்றுகிறேன். திருமுழுக்கின் வழியாக என்னை உமது அன்புப்
பிள்ளையாக ஏற்றுக்கொண்டதற்காக நன்றி கூறுகிறேன். இறiவா,
திருமுழுக்கால் திருச்சபைக்கு ஆற்றவேண்டிய கடமைகளையும்,
நற்செய்தி அறிவிக்கும் பணியையும் நான் நன்கு செய்திட
ஆவியின் ஆற்றலை எனக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே
நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
- பணி. குமார்ராஜா
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ