பல்லைத் துலக்கும் போதே மனதில் எழும் சொல்லையும் துலக்கினால் பரிசுத்தமாய்
வாழும் பரிசு பெறுவோம். என்ற தகவலை பகிர்ந்து கொள்ள பரிசுத்த யேசு
இன்று நம்மை இந்த ஞாயிறு வழிபாட்டின் வாயிலாக வரவேற்கின்றார்.
சுத்தம் பேணுவதில் இன்று அனைவரும் மிகுந்த அக்கறை காட்டுகிறோம்.
உணவில் சுத்தம், உடையில் சுத்தம், மற்றவர்களுடன் தொட்டுப் பேசுவதில்
தயக்கம், தொற்று நோயுள்ளவரை பார்த்தபின் உடைகளை துவைப்பதுடன்
குளிப்பது, வெளியில் போட்ட செருப்புடன் வீட்டிற்குள் வராதிருப்பது
என ஒவ்வொருவரும் தமது அறிவுக்கு எட்டியவிதத்தில் சுத்தத்திலும்
சுகாதாரத்திலும் கவனமாயிருக்கிறோம்.
காலை எழுந்தவுடன் உடலை சுத்தமாக்கும் செயலை கடமையாக எண்ணிச்
செய்கிறோம். உடலின் சுத்தத்தைப் பேணத் தவறினால் அதன் விளைவுகளை சந்தித்தே
ஆக வேண்டும்.
புறத்திலும் அகத்திலும் உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள தினமும் பல செயல்களைச்
செய்கிறோம் நாம். நமது மனதில் அசுத்தம் தங்கினால் ஏற்படும் விளைவுகளை
சிந்தித்திருக்கிறோமா? அசுத்தத்தை நீக்கி மனதினை சுத்தமாக வைத்துக்
கொள்வதால் ஏற்படும் நன்மைகளை அறிந்திருக்கிறோமா?
நமது மனதில் பொய், வஞ்சகம், கோபம், பொறாமை, எரிச்சல், புறங்கூறுதல்
என எத்தனை எத்தனை அசிங்கங்களை தேக்கி வைத்திருக்கிறோம்.
காலையில் எழுந்தவுடன் மனதில் உள்ள அசுத்தங்களை நீக்க முயற்சிப்போம்.
மண்ணில் படைக்கப்பட்ட நாமே உண்ணும் உணவில், அணியும் ஆடையில், அருந்தும்
நீரில், சுத்தம் எதிர்பார்க்கும் போது நம்மைப் படைத்த பரிசுத்தர்
நம்மிடம் பரிசுத்தத்தை எதிர்பார்க்க மாட்டாரா?
வெளி ஆடம்பரங்களில் சுத்தம் எனப் பேசிவிட்டு மனதுக்குள் தீய எண்ணங்களை
சுமந்து செயல்படுவது கடவுளுக்கு பிரியம் தருமா?
உண்மையான பரிசுத்த வாழ்வு கடவுளின் கட்டளைக்குப் பணிந்திருப்பதும்
அயலாருக்கு உகந்த நல் எண்ணங்களால் மனதை எப்போதும் நிரப்பி இருப்பதும்.
என இன்றைய நற்செய்தி நமக்கு விளக்குகிறது..
கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படியவும் ஏழை எளியவர்களின் நலவாழ்வுக்கும்,
ஆதரவற்ற கைம்பெண்களையும், குழந்தைகளையும் கவனிக்கவும், குடும்பம்,
உலகம் வெறுக்காதபடி நடந்து கொள்ளவும் தேவையானது மனதின் மன சுத்தமே!
மனதை கறைப்படுத்தும் எண்ணத்தை அகற்ற அருள் தரும் திருப்பலி இது.
நமது மனதில் குடியிருக்கும் வஞ்சக எண்ணங்களால் உருவாகும் களவு,
கொலை, விபச்சாரம், பேராசை, பொறாமை, பழிப்புரை, செருக்கு ஆகிய
அசுத்தத்தை அழிக்க அருள் வேண்டுவோம்;. மனதை செம்மையாக்கி
காணுமிடமெல்லாம் அன்பும் அமைதியும் ஊற்றுத் தண்ணீராய் பெருகிட
அருள் தாரும் இறைவா என மன்றாடுவோம்.
2. பாருலகைப் படைத்தாளும் பரிசுத்த பரமனே!
நாடுகளின் தலைவர்களின் உள்ளத்தை ஏழை எளிய மக்களின் தேவைகளை நிறவேற்றும்
நல் எண்ணங்களால் நிரப்ப வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. மக்களை பரிசுத்த பாதையில் பயணிக்கச் செய்ய வரம் தருகின்ற தேவனே!
குருக்கள் தங்களிடம் கொடுக்கப் பட்டுள்ள சிறுமந்தைகளை மேய்க்க
தங்கள் இதயத்தின் தூய்மையைப் பேணிப் பாதுகாக்கவும், அதன்
வழியாக இறைமக்களின் மனங்களைத் தூய்மையாக்க உழைக்கவும் அருள் தர
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. "
நாம் பரிசுத்தர் ஆகவே நீங்களும் பரிசுத்தராய் ஆகுங்கள்"
என
எமை அழைக்கும் தேவா!
அன்றாட வாழ்க்கையில் வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகள் தான்
மனித உறவை வசப்படுத்தும், வாழ்வை வளப்படுத்தும், என்பதை உணர்ந்து
பயனுள்ள வார்த்தைகளைப் பேசி மகிழவும், பிறரை குறை கூறும்
வார்த்தைகளைத் தவிர்க்கவும் இங்கே கூடியிருக்கின்ற இறைமக்கள்
அனைவருக்கும் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. மனிதனை மாசுபடுத்தும் அனைத்தையும் அகற்றும் இறைவா!
இந்த பூமியை மாசுபடுத்தும் மாசுகள் பிளாஸ்டிக் நச்சுக் காற்று
மட்டுமல்ல மனித மனதில் குடியிருக்கும் வஞ்சக எண்ணங்களும் தான்.
அப்பாவி மக்களை இரத்தக் கறைபடியச் செய்யும் தீவிரவாத எண்ணங்களையும்
மனிதத்தை மாசுபடுத்தும் அனைத்து உணர்வுகளையும் பூமியை விட்டு
அப்புறப்படுத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
அது ஒரு அன்பு நிறைந்த தம்பதியர் வீடு. கணவர் அரசு ஊழியர் மனைவியும்
நல்ல வேலையில் இருக்கிறார். கை நிறைய சம்பளம்வாங்கும் கணவர்
மிக நல்லவர். டிப் டாப்பாகத்தான் பணிக்குச் செல்லும் போது ஆடை
அணிவார். வேளாங்கன்னிக்கு பாதை யாத்திரையாக வருடம் தோறும்
சென்று வருபவர். செபமாலை போட்டவுடன் சுத்தமாக இருப்பார். காவி
உடைதான் அணிவார். உணவிலும் சுத்தம் மாலை போடும் நாட்களில் கறி
மீன் சாப்பாடு கிடையாது. அப்படி ஒரு சுத்தம் அனுசரிப்பார். இது
ஆண்டு தோறும் வேளாங்கன்னித் திருவிழாவின் போது நிகழும்
வாடிக்கையான சுத்தம். இந்த ஆண்டு பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்குச்
செல்ல புறப்படும் போது அவரது மனைவியிருக்க பக்கத்து வீட்டுக்காரரின்
மனைவியும் வந்து வழியனுப்பினார். அவரது மனைவிக்கு சந்தேகம் வலுத்தது.
கணவன் மனைவியிடையே சண்டையும் வலுத்தது. பாதயாத்திரையாக சென்ற
கணவன் செபமாலையைக் கழட்டும் போது உன்னையும் கழட்டிவிடுவேன்.
உனக்கு டைவர்ஸ் பாரம் வாங்கிவிட்டேன் வந்த பிறகு டைவர்ஸ் என்று
போனில் சொல்கிறார். 28 ஆண்டு திருமண வாழ்க்கையில் கை நீட்டி அடிக்காதவர்
பக்கத்து வீட்டு பெண்ணின் தொடர்பால் பாதயாத்திரை புறப்படும்
போது என்னை அடித்து விட்டு செல்கிறார். அவர் நலமாகத் திரும்பி
வரவேண்டும் என செபித்துக் கொண்டிருக்கிறார். அவரின் அன்பு மனைவி
இந்த சுத்தம் எப்படி?
மிகப் பெரிய பள்ளியில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் திருமண
வயதைக் கடந்த அந்த லீமாவுக்கும், ரோஸிக்கும் அருட்சாதனங்கள்
நடைபெறவில்லை.
அருகில் உள்ள தொண்டு நிறுவனக் குழந்தைகளின் வயிற்றுப் பசிபோக்க
லிஸ்ட் போட்டு பொருட்கள் வாங்கிக் கொடுக்கிறார்கள்.
உயர்ந்த வேலையில் இருக்கும் அவரது பேச்சு சுத்தமாக இல்லை.
எவ்வளவு வேலை என்றாலும் செய்து விடுவேன் அந்த அருட்சகோதரியின்
பேச்சை என்னால் தாங்க இயலவில்லை.
அந்த அம்மாவுக்கு அடுத்தவர்களைக் குறைசொல்வதே வேலை.
தவறாகப் பேசியதால் அந்த மாணவன் அவமானம் தாங்காமல் தற்கொலை
செய்து கொண்டான்.
அழுக்கு ஆடை அணிந்து மெக்கானிக் வேலை செய்யும் டேவிட் ரொம்ப
நல்ல பையன். அவன் மனசு ரொம்ப வெள்ளை யாரையும் தவறாக கணிக்க
மாட்டான் நியாயமாகப் பேசுவான்.
குளித்து பல நாட்களான அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்
பக்கத்தில் உள்ள சிறுமியின் வடியும் கண்ணீரைத் துடைத்து கலைந்த
தலை முடியை சரி செய்தாள்.
வெளியில் இருந்து உள்ளே செல்லும் உணவு மாசுபடுத்துவது
கிடையாது. மாறாக மனித வார்த்தைகள் தான் மனிதனை
மாசுபடுத்துகிறது.
காலையில் எழுந்து பல்லைத் துலக்கும் போது மனதில் எழும்
சொல்லையும் துலக்கினால் குடும்பத்தில் மனதில் பணிசெய்யும்
இடங்களில் குழப்பம் உண்டாகுமா?
பேராசை, பொய், பொறாமை, வஞ்சகம் காமம், பரத்தமை, எரிச்சல்
இவைதான் மனித மனதை மாசுபடுத்துகிறது.
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
பட்டை தீட்டுங்கள் --- எண்ணம் சொல்
செயலை......
இறை இயேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே இன்றைய வாசகங்கள்
அனைத்தும் நமது உள்ளத்தைப் பட்டை தீட்ட, இறைவனின் வார்த்தை கொண்டு
மெருகேற்ற அழைக்கிறது. பெரும்பாலும் நாம் தீட்டு என்று சொன்னவுடன்
உடல் தீட்டைத் தான் முதலில் நினைவு கூர்வோம். நமது முன்னோர்கள் தமிழர்கள்,
தீண்டத்தகாததை தீண்டுவது தீட்டு. தீட்டுள்ளவர்(ரால்) தூய இறைவனை
வழிபட இயலாது என்பர். ஏன்? எதனால்? அப்படியானால் தீண்டத்தகாதது எது?
காமம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம் ஆகிய ஐந்துமே தீட்டு.
முதலாவது காமம் என்னும் ஆசை. ஆசைப்பட்ட பொருளை அடைய நினைப்பது.(உறவுகள்
மட்டுமல்ல உடைமைகள் மீதும் ஆசைப்படுதலும் காமம் தான்) அதை தனதாக்கும்
காலம் வரை சதா அதே நினைப்பாக இருப்பது. வேறு எதிலும் கவனம்
செலுத்தாது இருப்பது. இதில் இவர்களால் கடவுளை எப்படி நினைக்க
முடியும்.
இரண்டாவது குரோதம் என்னும் கோபம். சிலர் இதனை செயல் மூலம் வெளிப்படுத்துவர்,
(நமது வீட்டு பொருள்கள் சொல்லும் இதனை) சிலர் வார்த்தைகள் மூலம்
வெளிப்படுத்துவர். கோபத்தில் கடவுளை அல்ல கண்ணில் காணும் நபரைக்
கூட நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியாது.
மூன்றாவது லோபம் என்னும் சுயநலம். தான், தனது என்று தன்னை பற்றி மட்டுமே
நினைத்து செயல்படுபவர். இவர்களால் பிறரைப் பற்றியும் எண்ண முடியாது
இறைவனைப் பற்றியும் நினைக்க முடியாது.
நான்காவது மதம் என்னும் கர்வம் ஆணவம். என்னால் மட்டுமே இதை செய்ய
முடியும் என்ற ஆணவம் அகங்காரம் இருப்பவர்களால் நிச்சயம் கடவுளை
துதிக்க முடியாது.
ஐந்தாவது மாச்சர்யம் என்னும் பொறாமை. இவர்கள், தான் நன்றாக இருந்தாலும்
பிறர் நன்றாக இருக்கிறார்களே என்று எண்ணி பெருமூச்சு விடுபவர்கள்
இவர்களாலும் கடவுளை வழிபட முடியாது. ஆக இந்த ஐந்தும் தான் தீட்டு
தீண்டத்தகாதவைகள். இவர்களால் கடவுளை முழுமனதுடன் அணுக இயலாது. எனவே
தான் இறைவனின் ஆலயத்திற்கு செல்லும் முன் குளித்து விட்டு உடல்
அழுக்கோடு மன அழுக்கையும் அகற்றி விட்டு செல்ல சொல்வர். இதனால்
உடல் தூய்மையால் உள்ள மாற்றத்திலும் சிறிதளவாவது மாற்றம் வரும்
என்று நம்பிக்கை. தீட்டு என்பதற்கு வேறு பல அர்த்தங்களும் தமிழ்
மொழியில் உண்டு. வர்ணம் தீட்டுதல், வைரத்திற்கு பட்டை தீட்டுதல்,
கூர்மை தீட்டுதல் மை தீட்டுதல் என்று சொல்லிக் கொண்டே போகலாம்
.நிற்க...
இன்றைய அனைத்து வாசகங்களும் நாம் நமது உள்ளத்தின் தீட்டு எவை?
எவைகளெல்லாம் நம் உள்ளத்தை தீட்டுப்படுத்துகின்றன என்பதைப்
பற்றியும், அவற்றை இறைவார்த்தை மூலம் களைந்து நல்ல முறையில் பட்டை
தீட்டுதல் பற்றியும் நமக்கு எடுத்துரைக்கின்றன. முதல் வாசகம்,
கடவுளின் கட்டளைகளை நீங்கள் கடைபிடித்தால் ஞானமும் அறிவாற்றலும்
கொண்ட பேரினம் என பிற மக்கள் உங்களைப் போற்றுவர் என்கிறது.
இரண்டாம் வாசகம், இறைவார்த்தையை கேட்கின்றவர்களாக மட்டும் இல்லாமல்
அதன் படி நடக்கின்றவர்களாகவும் இருங்கள் என்கிறது. நற்செய்தி
வாசகமோ, உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் இறைவனைப் போற்றுங்கள்
என்கிறது.
மனிதனுக்கு இறைவன் கொடுத்த கட்டளைகள் அனைத்தும் அதன் வழி இறைவனை
அடைவதற்காக தான். உதாரணத்திற்கு நமது புறவழிச்சாலைகள் அனைத்தும்
நாம் சென்றடைய வேண்டிய இடத்தை நல்ல முறையில் அடைவதற்காக
ஏற்படுத்தப்பட்டவை. அதைவிடுத்து எனக்கு சாலை தான் முக்கியம் எனது
இலக்கு முக்கியமல்ல என்று இருந்தால் அதனால் பாதிக்கப்படுவது நாம்
தான். சாலைகளை பராமரித்து விட்டு பயணத்தை கைவிட்டால் யாருக்கு
லாபம்.? நம்முடைய பல செயல்பாடுகள் பல நேரங்களில் அப்படித்தான்
இருக்கின்றன. நம்முடைய சட்ட திட்டங்களும் கோட்பாடுகளும்
கொள்கைகளும் நம்மை இறைவனிடம் அழைத்துச்செல்வதற்காகத் தான் என்பதை
நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். அப்படி உணர்ந்து செயல்பட சிறிது
நேரம் நின்று நமது இலக்கை பற்றிய செயலைக் கூர்மைப்படுத்தி அதன்
பின் நமது பயணத்தைத் தொடங்க வேண்டும்.
வைரம் மாணிக்கம் பவளம் போன்ற விலை மதிக்க முடியாத கற்கள்
பெரும்பாலும் சாதரண மண்ணோடும் கற்களோடும் இணைந்து காணப்படும். எனவே
அந்த தேவை இல்லாத பொருள்களிலிருந்து தேவையான அந்த கற்களை
எடுப்பதற்கு பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுவர். பின் எடுத்த
கற்களை பட்டை தீட்டீ மெருகேற்றி காண்போர் கண்களைக் கவரும்
கவின்மிகு கற்களாக அதனை உருமாற்றுவர். நமது உள்ளமும் இந்த
விலைமதிக்க முடியாத கற்களைப் போன்றதே. நமது உள்ளத்தை சுற்றி மேலே
சொன்ன இந்த ஐந்து வகை மண் கற்களும் படிந்திருக்கின்றன. இவற்றை
இறைவார்த்தை கொண்டு பிரித்தெடுத்து, நமது நற்செயல்கள் மூலம்
மெருகேற்ற இறைவன் அழைக்கிறார். முதலில் நமது எண்ணத்தை பட்டை
தீட்டுவோம் நல்லவற்றை சிந்திப்பதன் மூலம். நமது நல்ல எண்ணம் நம்மை
மட்டுமல்லாது நம்மை சுற்றி இருப்பவர்களையும் நல்ல விதத்தில்
பாதிக்கும். உதாரணத்திற்கு கொட்டாவி நாம் விட்டால் நம் அருகில்
இருப்பவரும் உடனே கொட்டாவி விடுவார். ஒருவர் தூங்கி வழிந்தால் உடனே
அடுத்தவருக்கும் தூக்கம் கண்ணைச்சுற்றி வரும். சாதாரண ஒரு நடைமுறை
செயலே அருகில் இருப்பவரை எளிதில் மாற்றும் போது நம்முடைய ஆக்கமுள்ள
ஒரு நல்ல எண்ணம் நிச்சயம் நம் அருகில் இருப்பவரை மாற்றும் என்று
நம்புவோம்.
ஒரு செயலை செய்யத் தொடங்கும் முன் அது நல்லபடியாக நடக்கிறது,
நடக்கப் போகிறது, நடந்து முடிகின்றது என்று எண்ணுவோம். அது
அப்படியே நடக்கும். நமது நல்ல எண்ணம் நல்ல சொல்லாகும் . நல்ல சொல்
நல்ல செயலாகும் . நமது உள்ளத்திலிருந்து வெளியே வருகின்ற நல்ல
வார்த்தை பிற மனித உள்ளங்களிலும் நல்ல பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் இறைவனை வழிபடுபவர்களாக
நாம் மாறுவோம். நல்ல கொடைகளையும் நிறைவான வரங்களையும் இறைவனிடம்
இருந்து பெறுபவர்களாவோம். நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் கடவுள்
நம்மோடு இருக்கும் அருள் பெறுவோம். எனவே அன்பு உள்ளங்களே தீட்டு
தீட்டு என்று உடல் தீட்டையும், கட்டளைகளை கடைபிடிக்கும் வரைமுறைத்
தீட்டையும் பற்றி எண்ணாது நமது உள்ளத்தை இறைவன் பக்கம்
திருப்பும்படி எண்ணத்தை சொல்லை செயலை பட்டை தீட்டுவோம். பட்டை
தீட்ட தீட்ட பளிச்சிடும் பவளக் கற்கள் போல நம் வாழ்வும் இறை
ஒளியால் சுடர் வீச அருள் வேண்டுவோம் .இறைவன் நம்மையும் நம்
குடும்பத்தையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருட்சகோதரி: செல்வராணி O.S.M.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
இதய உருவாக்கம்
'கல்வியின் இதயம் என்பது, இதயத்திற்குக் கல்வி புகட்டுவது'
என்பது ஆங்கிலப் பழமொழி. சமயங்களின் விதிமுறைகளின் நோக்கம்
இதய உருவாக்கமே என்று முன்மொழிகிறது இன்றைய இறைவார்த்தை
வழிபாடு.
முதல் மற்றும் இரண்டாவது ஏற்பாடுகளில் 'கட்டளை' என்ற
வார்த்தை முதன்மையானதாக இருக்கின்றது. முதல் ஏற்பாட்டில்
ஆண்டவராகிய கடவுள் பத்துக் கட்டளைகளை வழங்குகின்றார். இரண்டாம்
ஏற்பாட்டில் இயேசு இரண்டு கட்டளைகளாக இவற்றைச் சுருக்கித்
தருவதுடன், புதிய கட்டளை என்று அன்புக் கட்டளை ஒன்றையும்
வழங்குகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தின் சூழல் மோசேயின் இரண்டாம் கட்டளை
வழங்குதல். அதாவது, சீனாய் மலையில் ஆண்டவராகிய கடவுள் பத்துக்
கட்டளைகளை வழங்குகின்றார். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள்
பயணத்தில் அத்தலைமுறை மறைந்து புதிய தலைமுறை பிறக்கின்றது.
புதிய தலைமுறைக்கு ஆண்டவராகிய கடவுளின் கட்டளைகளையும்
விதிமுறைகளையும் நியமங்களையும் மீண்டும் அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார்
மோசே. மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை உரிமையாக்கிக் கொள்ளவும்,
அதில் நீடித்து வாழவும் வேண்டுமென்றால் இக்கட்டளைகளை அவர்கள்
கடைப்பிடித்தல் அவசியம்.
விவிலியத்தில் சட்டம் என்பதை நாம் இன்றைய சட்டம் பற்றிய
புரிதலிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக,
கொரோனா பெருந்தொற்று தடுப்பு பற்றிய விதிமுறைகளையும்
நெறிமுறைகளையும் அரசு வெளியிடுகின்றது. அதன்படி, சிலவற்றைத்
தடுக்கிறது. சிலவற்றை அனுமதிக்கிறது. அரசுக்கு மக்கள்மேல்
உள்ள அக்கறையினால் இதைச் செய்தாலும், அரசுக்கும் மக்களுக்கும்
நேரடியான எந்த உறவும் இல்லை. ஆனால், முதல் ஏற்பாட்டில் சட்டங்கள்
அல்லது கட்டளைகள் என்பவற்றை நாம் உடன்படிக்கையோடு இணைத்துப்
பார்க்க வேண்டும். 'நாம் உங்கள் கடவுளாக இருப்போம். நீங்கள்
எம் மக்களாக இருப்பீர்கள்' என்று இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை
செய்துகொள்கின்ற ஆண்டவராகிய கடவுள், அவர்களைத் தம் உரிமைச்
சொத்து என ஆக்கிக்கொள்கின்றார். ஆண்டவர் தருகின்ற உணவும்,
பாதுகாப்பும், உறவும் உடன்படிக்கை அவர்களுக்கு வழங்குகின்ற
உரிமைகள் ஆகும். உரிமைகளின் மறுபக்கமே கடமைகள். இஸ்ரயேல்
மக்கள் உடன்படிக்கை உறவில் நிலைத்து நிற்க சில கட்டளைகளைக்
கடைப்பிடிக்க வேண்டும். ஆக, கட்டளைகளை மீறுவது என்பது உடன்படிக்கை
உறவை மீறுவதற்கு ஒப்பானது.
ஆகையால்தான், 'இஸ்ரயேலரே! கேளுங்கள்!' என்கிறார் மோசே. ஏனெனில்,
'கேள்' என்பதற்கு, தமிழில் இருப்பது போலவே, 'செவிகொடு' மற்றும்
'கீழ்ப்படி' என்று இரு பொருள்கள் உண்டு. ஆக, கட்டளைகளைக்
கேட்டுக் கீழ்ப்படிதலின் முதல் நோக்கம் உடன்படிக்கை உறவில்
நிலைத்து நிற்பது. இதையே, 'மக்களுக்கு நெருங்கிய கடவுளைக்
கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?' என்று மோசே
கேட்கின்றார். இரண்டாவதாக, கட்டளைகள் வழியாக இஸ்ரயேல் மக்கள்
ஞானமும் அறிவாற்றலும் பெற்றனர். அறிவாற்றல் என்பது
தேர்ந்து தெளிதல். எடுத்துக்காட்டாக, திருமண உறவில் பிரமாணிக்கமாக
இருக்கவா அல்லது வேண்டாமா என்ற குழப்பம் வரும்போது, 'விபசாரம்
செய்யாதே!' என்ற கட்டளை, அவர்கள் எளிதாகத் தேர்ந்து தெளிய
உதவி செய்தது.
இவ்வாறாக, கட்டளைகள், நெறிமுறைகள், மற்றும் நியமங்கள் இஸ்ரயேல்
மக்களின் இதயங்களை நெறிப்படுத்தி உடன்படிக்கை உறவில் அவர்கள்
நிலைத்திருக்கவும், ஒவ்வொரு சூழலிலும் தேர்ந்து தெளியவும்
அவர்களுக்கு உதவி செய்கின்றன.
இரண்டாம் வாசகம் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
திருத்தூதர் யாக்கோபு எருசலேம் திருஅவையின் தலைவராக விளங்கியவர்.
இவர் இயேசுவின் சகோதரர். இவருடைய பெயரில் இத்திருமுகம் எழுதப்பட்டுள்ளது
எனவும், இத்திருமுகத்தின் ஆசிரியர் ஒரு யூதக் கிறிஸ்தவராக
இருந்திருக்கலாம் என்பது பரவலான கருத்து. இணைச்சட்ட நூலில்
நாம் காண்பது போலவே, பல வாழ்வியல் பாடங்களும் அறிவுரைகளும்
இத்திருமுகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் ஏற்பாட்டில்
இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையைக்
கடவுளிடமிருந்து கொடையாகப் பெற்றனர். இரண்டாம் ஏற்பாட்டில்
புதிய இஸ்ரயேல் மக்கள் பெற்றிருக்கின்ற மீட்பு என்ற கொடை
கடவுளிடமிருந்து வருகின்றது என்பதை ஆசிரியர் முதலில் பதிவு
செய்கின்றார்: 'நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம்,
ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன.'
உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் பெற்றெடுக்கப்பட்ட மக்கள்,
இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் அல்லாமல், அதன்படி
நடக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்.
சமய வாழ்வு என்பது இரண்டு நிலைகளில் வெளிப்பட வேண்டும் என
ஆசிரியர் அறிவுறுத்துகின்றார்: ஒன்று, 'துன்புறும் அனாதைகளையும்
கைம்பெண்களையும் கவனிக்க வேண்டும்.' அன்றைய கிரேக்க-உரோமை
சமூகத்தில் சொத்துரிமையும் சமூக மேனிலையும் ஆண்களை மையப்படுத்தியதாகவே
இருந்தது. தந்தையரை இழந்த பிள்ளைகளும், கணவர்களை இழந்த மனைவியிரும்
எந்தவொரு உரிமையும் இன்றி இருந்தனர். ஆக, சமூக மற்றும்
பொருளாதார ஆதாரத்தை இவர்களுக்கு நம்பிக்கையாளர்கள் வழங்க
வேண்டும். அல்லது சமூக நீதியுணர்வு கொண்டிருக்க வேண்டும்.
இரண்டு, 'உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வது.'
தங்களைச் சுற்றியுள்ள புறவினத்து மக்களின் சமய மற்றும் அறநெறி
வாழ்வியல் முறையை விட நம்பிக்கையாளர்கள் சிறந்த வாழ்வியல்
முறையைக் கொண்டிருக்க வேண்டும்.
ஆக, கிறிஸ்தவர்கள் தாங்கள் பெற்றுள்ள சமய அடையாளம் அல்லது
கிறிஸ்தவ நம்பிக்கையைக் கொண்டு, தாங்கள் சமூக நீதியுணர்விலும்,
மேலான வாழ்வியல் நெறியிலும் வளர்வதே இதய உருவாக்கம்.
இயேசுவுக்கும் அவருடைய சமகாலத்து சமயத் தலைவர்களுக்கும் இடையே
எழுந்த உரசல் ஒன்றை நம் கண்முன் கொண்டு வருகின்றது இன்றைய
நற்செய்தி வாசகம். இயேசுவின் சமகாலத்துப் பரிசேயர்களும் மறைநூல்
அறிஞர்களும் கட்டளைகளை மிகவும் நுணுக்கமாகக் கடைப்பிடித்தனர்.
கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இருக்க வேண்டும் என்ற பேராவலில்
கட்டளைகளின் பின்புலத்தில் நிறைய சடங்குகள் மற்றும்
விதிமுறைகளை உருவாக்கி, அவற்றுக்கு, 'மூதாதையர் மரபு' என்று
பெயரிட்டனர். அப்படிப்பட்ட மரபில் ஒன்றுதான் கைகளைக் கழுவுதல்,
கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்றவை.
இயேசுவின் சீடர்கள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. தங்களைப்
போன்ற போதகர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இயேசு அவர்களின்
செய்கையைக் கண்டிக்காமல் இருப்பதை அவர்கள் இயேசுவிடம்
சுட்டிக்காட்டுகின்றனர். இச்சூழலைப் பயன்படுத்திக்கொள்கின்ற
இயேசு, கடவுளின் கட்டளையின் நோக்கம் என்ன என்பதையும், அதை
எப்படிப் பின்பற்றுவது என்பதையும் அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.
கட்டளைகளைப் பின்பற்றுவதை இயேசு தடை செய்யவில்லை. மாறாக,
அதற்கு ஒரு புதிய புரிதலைக் கொடுக்கின்றார். வெளிப்புறச்
செயல்பாடுகளும் நடைமுறைகளும் சட்டத்தைப் பின்பற்றுவதற்கான
அடையாளங்கள் என்று பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும்
முன்மொழிந்தபோது, இதய உருவாக்கமே சட்டத்தைப் பின்பற்றுவதன்
அடையாளம் என்ற புதிய புரிதலைக் கொடுக்கின்றார். பரிசேயர்களும்
மறைநூல் அறிஞர்களும் வெளிப்புறச் சடங்குகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்த போது, இயேசு மேன்மையான அறநெறி வாழ்வுக்கு முக்கியத்துவம்
கொடுக்கின்றார்.
எசாயாவின் இறைவாக்குப் பகுதியை மேற்கோள் காட்டி அவர்களின்
வெளிவேடத்தைத் தோலுரிக்கின்றார். மனிதக் கட்டளைகளைக் கடவுளின்
கோட்பாடுகள் என்று கற்பிக்கும் அவர்களின் ஆன்மிகம் உதட்டளவில்
மட்டுமே உள்ளது என்று எச்சரிக்கின்றார். முதல் ஏற்பாட்டில்
ஆண்டவராகிய கடவுள் கட்டளைகளை வழங்கியதன் நோக்கம் உடன்படிக்கை
உறவை நிலைப்படுத்தவே. கைகளைக் கழுவுவதாலும், பாத்திரங்களைக்
கழுவுவதாலும் அந்த உடன்படிக்கை உறவு மேம்படுவதில்லை.
மாறாக, தூய்மையான மனச்சான்றும், சமத்துவமான பார்வையுமே உடன்படிக்கை
உறவை மேம்படுத்துகின்றன. யூதர்கள்-புறவினத்தார்கள், ஆண்கள்-பெண்கள்
என்று மனிதர்களை வெளிப்புறத்தில் தூய்மை-தீட்டு என்று பாகுபடுத்திய
பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் தங்கள் உள்ளத்திலிருந்த
தீட்டு பற்றிக் கண்டுகொள்ளவில்லை. அல்லது அகத்தீட்டு அவர்களிடம்
அதிகம் இருந்ததால்தான் மக்களை புறத்தில் தீட்டாக்கிப்
பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
ஆக, அவர்கள் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதால் இதய உருவாக்கம்
நடைபெறவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றார் இயேசு.
இவ்வாறாக, முதல் வாசகத்தில், கட்டளைகளைக் கடைப்பிடிப்பது
என்பது உடன்படிக்கை உறவை ஆழப்படுத்தி, இஸ்ரயேல் மக்களின்
அறிவாற்றலைக் கூர்மைப்படுத்துகின்றது. இவ்வாறாக, இதய உருவாக்கம்
நிகழ்கிறது.
இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்தவர்கள், தங்களுடைய சமய வாழ்வை
நீதியான சமூகத்தைக் கட்டியெழுப்புவதிலும், மேன்மையான
அறநெறி வாழ்வை வாழ்வதிலும் வெளிப்படுத்த வேண்டும். அதுவே,
இதய உருவாக்கம்.
நற்செய்தி வாசகத்தில், கட்டளைகளை நுணுக்கமாகக்
கடைப்பிடிக்கின்றோம் என்ற எண்ணத்தில், கடவுள் நம்மிடம்
பார்க்கின்ற அகத்தின் தூய்மையைக் கண்டுகொள்ளாமல் விடக்
கூடாது. புறத்தூய்மையை விடுத்து, அகத்தைத் தூய்மையாக வைக்க
முயற்சி செய்யும்போது இதய உருவாக்கம் நடைபெறுகின்றது.
பெருந்தொற்றுக் காலத்தில், சமூக இடைவெளி, முகக்கவசம்,
கிருமி நாசினி ஆகியவற்றைப் பயன்படுத்துவது நெறிமுறையில்
இருக்கின்றது. இவை சடங்குகள் அல்ல. மாறாக, இவற்றால் தூய்மை
பற்றிய உணர்வும், மற்றவர்கள்மேல் நாம் கொள்ள வேண்டிய
பொறுப்புணர்வும் தூண்டப்படுகின்றது. இப்படியாக, சமூக
வாழ்வு, சமய ஆன்மிகம், அரசியல், பொருளாதாரம், மற்றும்
சட்டம் என அனைத்து நிலைகளிலும் விதிமுறைகள் நம் இதயங்களை
உருவாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. அந்த
நோக்கத்தை நாம் மறந்துவிடும்போது, நாம் அகம் நோக்கிப்
பார்ப்பதை விடுத்துப் புறம் நோக்கிப் பார்த்து
மற்றவர்களைத் தீர்ப்பிடத் தொடங்குகின்றோம்.
இதய உருவாக்கம் என்றால் என்ன?
கடவுளுக்கும் நமக்கும், நமக்கும் பிறருக்கும் உள்ள உறவின்
ஒழுங்கமைவே இதய உருவாக்கம். இயேசு சுட்டிக்காட்டுகின்ற
'பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல்,
வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு'
ஆகியவை மேற்காணும் உறவின் ஒழுங்கமைவைச் சீர்குலைக்கின்றன.
பல நேரங்களில் இதய உருவாக்கத்தை விடுத்து, மரபு
உருவாக்கத்திற்கும், சடங்குகள் உருவாக்கத்திற்கும் நாம்
முக்கியத்துவம் கொடுக்கின்றோம். ஏனெனில், அது நமக்கு
எளிதாகவும், மற்றவர்களால் பாராட்டப்படக் கூடியதாகவும்
இருக்கிறது.
'ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்திடத் தகுதியுள்ளவர் யார்?'
என்று திருப்பாடல் ஆசிரியர் கேட்கும் கேள்வியே (காண். திபா
15) நம் உள்ளத்திலும் எழ வேண்டும். அந்தக் கேள்விக்கு
விடையளிக்கின்ற கடவுள், 'அவரையும் மற்றவர்களையும் நோக்கிய
நேரிய இதயத்தின் உருவாக்கமே தகுதி' என வரையறுக்கின்றார்.
நாம் வாசிக்கின்ற இறைவார்த்தை, பங்கேற்கின்ற திருப்பலி,
மேற்கொள்கின்ற திருப்பயணம், உச்சரிக்கின்ற செபங்கள்,
உருட்டுகின்ற செபமாலை மணிகள் அனைத்தும் நம் இதய
உருவாக்கத்தை நோக்கியதாக இருந்தால் நலம். அவை வெறும்
'மூதாதையர் மரபு அல்லது வெளிப்புறச் சடங்கு' என்று
சுருங்கிவிட்டால் நம் இதயம் அவரிடமிருந்து தூரமாகி விட்டது
என்று பொருள்.
கிறிஸ்தவ அடையாளம்
இன்று நாம் ஐக்கன்-சூழ் உலகில் வாழ்ந்து
கொண்டிருக்கின்றோம்: 'G' என்றால் 'கூகுள்,' 'f' என்றால்
'ஃபேஸ்புக்,' 't' என்றால் 'டுவிட்டர்,' 'O' என்றால் 'ஓலா,'
'ஹார்ட்' என்றால் 'ஹெல்த்.' நம்முடைய செயலிகள் வெறும் எழுத்துக்களாகவும்,
நம்முடைய வார்த்தைகள் வெறும் ஸ்மைலிகளாகவும்
மாறிக்கொண்டிருக்கின்றன. 2009ஆம் ஆண்டு - மேற்காணும் ஐக்கன்கள்
பிரபலமாகாத நேரம் - உலகெங்கும் ஒரு சர்வே எடுக்கப்பட்டது.
அதில், 'சிலுவை' (+), 'எம்' (M) என இரண்டு அடையாளங்கள்
முன்னிறுத்தப்பட்டு, வாக்காளர்கள் ஓட்டுப் பதிவு செய்ய அழைக்கப்பட்டனர்.
அதாவது, இந்த இரண்டு அடையாளங்களில் தங்களுக்கு பரிச்சயமான
அடையாளத்திற்கு அவர்கள் 'டிக்' செய்ய வேண்டும். 'சிலுவை'
அடையாளத்தை விட உலகெங்கும் உள்ள பலர், 'மெக்டொனால்டை'
குறிக்கும் 'எம்' அடையாளத்தையே 'டிக்' செய்திருந்தனர்.
இந்த அடையாளங்கள் வெறும் அடையாளங்கள் அல்ல. இவை ஒவ்வொன்றும்
கலாச்சாரக் குறியீடுகள். எப்படி? மெக்டொனால்ட் உணவகத்திற்கு
உணவருந்தச் சென்றிருக்கிறீர்களா? மெக்டொனால்ட் உணவகத்திற்கு
உணவருந்தச் செல்பவர் நேரே 'ஆர்டர்' கவுண்டருக்குச் செல்ல
வேண்டும். அங்கிருக்கும் 'டிஸ்ப்ளே' அல்லது 'மெனு
கார்டில்' நமக்கு வேண்டியதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பில்லுக்கு பணம் கட்ட வேண்டும். அதே நேரம் நம் முன்னால் சிகப்பு
கலரில் செவ்வக டிரே ஒன்று வைக்கப்படும். நாம் ஆர்டர் செய்த
அனைத்தும் ஒவ்வொன்றாக அதில் வைக்கப்படும். நம் ஆர்டர்
நிறைவேறும் வரை அடுத்தவர் ஆர்டர் கொடுக்க முடியாது. எல்லாம்
வைத்தவுடன் பில் போட்டவர் அந்த தட்டை நம் கையில் எடுத்துத்
தருவார். அவருக்கு மூட் சரியில்லை என்றால் நம்மையே எடுத்துக்கொள்ளுமாறு
சொல்வார். அப்படியே நாம் தட்டை எடுத்துக்கொண்டு நமக்குப்
பின்னால் நிற்கும் கூட்டத்திற்கு நடுவே மேஜிக் செய்து
யாரையும் தட்டிவிடாமல், யாரும் நம்மைத் தட்டிவிடாமல் கவனமாக
வந்து, அமர்வதற்கு ஒரு இடம் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு ஆளுக்கு
சுவரைப் பார்த்து இருக்கை, இரண்டு பேருக்கு சுவரோடு இருக்கை,
நான்கு பேருக்கு மேல் நடுவில் இருக்கை என இருக்கைகள் இருக்கும்.
அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, நாமே தட்டை எடுத்து,
குப்பைக்கூடையைத் தேடி, 'ப்ளீஸ் இன்செர்ட் தெ ப்ளேட்' என்று
சொல்லும் உருளையின் முன் ப்ளேட்டை நீட்டி, குப்பையைக்
கொட்டிவிட்டு, ப்ளேட்டை இன்னொரு உருளைக்குள் போட்டுவிட்டு,
அப்படியே திரும்பி வெறிக்க எல்லாரையும் பார்த்துவிட்டு,
நாமே கதவைத் திறந்து வெளியே வர வேண்டும். இதுதான்
'மெக்டொனால்ட் கலாச்சாரம்.' ஆக, இந்த உலகில் உள்ள எந்த
மெக்டொனால்ட் உணவகம் சென்றாலும் இதே கலாச்சாரம்தான். இப்படியாக,
'கேஎஃப்சி,' 'மேரி பிரவுன்,' 'ஸ்டார் பக்ஸ்,' 'வால்மார்ட்'
என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் உருவாகிறது. இந்த
கலாச்சாரத்தைப் பின்பற்றினால்தான் உள்ளே சென்று உணவருந்த
முடியும்.
நம்ம ஊரு செட்டிநாடு ஹோட்டல் கலாச்சாரம் முற்றிலும் வேறானது.
நமக்கு ஒருவர் ஓட்டல் கதவைத் திறந்து விடுவார். உள்ளே
நுழைந்தவுடன் நம்மை ஒருவர் வரவேற்பார். ஒருவர் நமக்கு அமர
இடம் கண்டுபிடிப்பார். ஒருவர் தண்ணீர் ஊற்றுவார். ஒருவர்
இலை போடுவார். ஒருவர் ஆர்டர் எடுப்பார். ஒருவர் உணவு பரிமாறுவார்.
சாப்பிட்டு முடிக்க ஒருவர் இலை எடுப்பார். ஒருவர் டேபிள்
துடைப்பார். ஒருவர் பில் போடுவார். ஒருவர் பணம்
வாங்குவார். ஒருவர் மீண்டும் கதவு திறந்துவிடுவார். ஒருவர்
நம் காரை எடுக்க காருக்குப் பின் நின்று விசில் அடிப்பார்.
இது செட்டிநாடு உணவக கலாச்சாரம்.
ஆக, ஒருவர் எந்த ஐக்கன் அல்லது அடையாளத்தைத்
தேர்ந்தெடுக்கிறாரோ அந்த ஐக்கன் அல்லது அடையாளத்தை அப்படியே
வாழ்வாக்க வேண்டும். இது நாம் உண்ணும் உணவுக்கு மட்டுமல்ல.
நாம் பின்பற்றும் சமயவாழ்விற்கும் பொருந்தும். இந்து சமயம்,
கிறிஸ்தவம், இசுலாம், பௌத்தம், சமணம் என ஒவ்வொரு சமயவாழ்விற்கும்
ஒரு அடையாளம் உண்டு. அந்த அடையாளம் முன்வைக்கும் கலாச்சாரம்
உண்டு. ஒரு அடையாளத்தை ஏற்பவர் அத்தோடு சேர்ந்து அதன் கலாச்சாரத்தையும்
எடுக்க வேண்டும். தான் எடுக்கும் கலாச்சாரம் அவருக்குக்
கொடுக்கப்படுவது. அவர் அதைக் கூட்டவோ, குறைக்கவோ முடியாது.
மேக்டொனால்டில் சாப்பிட்ட தட்டை எடுக்குமாறு நாம் யாரிடமும்
கேட்க முடியாது. செட்டிநாடு உணவகத்தில் நாமே இலையை எடுத்துப்
போடவும் முடியாது. அப்படிக் கூட்டினால், குறைத்தால் அங்கே
கலாச்சார குறைவு அல்லது குளறுபடி வந்துவிடும்.
இன்றைய இறைவாக்கு வழிபாடு யூத சமய வாழ்வு என்ற அடையாளத்தையும்,
அத்தோடு வருகின்ற கலாச்சாரத்தையும் பற்றிப் பேசுகிறது.
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, வாக்களிக்கப்பட்ட
நாட்டிற்கு அருகில் மோவாபு சமவெளிப்பகுதியில்
நின்றுகொண்டிருக்கும் இஸ்ராயேல் மக்களுக்கு இன்றைய முதல்
வாசகத்தில் (காண்க. இணைச்சட்டம் 4:1-2, 6-8) இறைவனின் சட்டம்
குறித்தும், இறைமக்களின் மேன்மை குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார்
மோசே. இங்கே இறைவனின் சட்டம் இஸ்ரயேல் மக்களின் 'அடையாளமாக'
முன்வைக்கப்படுகிறது. மேலும், இந்தச் சட்டத்தின்படி இவர்கள்
ஒழுகுவது இவர்களின் 'கலாச்சாரம்' என்று அறிவுறுத்தப்படுகிறது.
'இவை போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம்
உண்டா?' என்ற கேள்வி இஸ்ரயேல் சமயத்தின் தனிப்பட்ட அடையாளமாக
'கடவுளின் கட்டளைகளை' முன்வைக்கிறது. இந்த அடையாளம் இன்னும்
மிக முக்கியமானது. ஏனெனில் இது கடவுளின் கைகளால் கொடுக்கப்பட்டது.
ஏனெனில் 'மக்களோடு மிக நெருங்கிய கடவுளைக் கொண்ட' இனமும்
இஸ்ரயேல் இனமே. இவர்கள் இந்தக் கட்டளைகளை 'வாழ' வேண்டும்.
மேலும், 'எதையும் சேர்க்கவோ, அவற்றிலிருந்து எதையும் நீக்கவோ
கூடாது.'
இப்படியாக, இறைவனே இவர்களின் அடையாளமாகவும், இறைவனின் கட்டளைகள்
வழியாக அவரோடு இணைந்திருப்பதுமே இஸ்ரயேல் மக்களின் கலாச்சாரமுமாக
இருக்கிறது.
இந்த அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் பின்பற்றுமாறு அறிவுறத்தப்பட்ட
இஸ்ரயேல் மக்கள், காலப்போக்கில் மாற்றுகின்றனர். தங்கள்
மூதாதையரின் மரபுகளை முன்னிறுத்துகின்றனர். இவர்கள் இப்படிச்
சேர்க்க சேர்க்க, கடவுளின் கட்டளைகளின் நோக்கம் மறைந்துவிடுகிறது.
இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண்.
மாற்கு 7:1-8, 14-15, 21-23) சாடுகின்றார்.
சீனாய் மலையருகில் கூடி நின்ற இஸ்ரயேல் மக்களிடம் ஆண்டவராகிய
இறைவன், 'நான் எகிப்திற்குச் செய்ததையும், கழுகுகளின் இறக்கைகளின்
மேல் உங்களை ஏந்தி என்னிடம் வந்து சேரச் செய்ததையும் நீங்களே
கண்டீர்கள். நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என்
உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால், அனைத்துலகும் என் உடைமையேயெனினும்,
நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச்சொத்தாவீர்கள்.
மேலும், எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும்
இருப்பீர்கள்' (காண். விப 19:4-6) என்கிறார். ஆக, கடவுளின்
கலாச்சாரத்தின் அடையாளமாக இருந்தது 'தூய்மை.' கடவுள்
குறிப்பிடும் அகத்தூய்மையை மிக எளிதாக மறந்துவிட்டு, காலப்போக்கில்
புறத்தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கின்றர்
இஸ்ரயேல் மக்கள்.
இப்படிப்பட்ட 'தூய்மை-தீட்டு' நிகழ்வையே நாம் நற்செய்தி வாசகத்தில்
பார்க்கிறோம்.
இன்றைய நற்செய்தியின் சூழல் என்ன? சாப்பாட்டு அறை!
சாப்பாடு உண்ணுமுன் சீடர்களைக் கூர்ந்து கவனிக்கின்ற பரிசேயர்கள்,
அவர்கள் கைகளைக் கழுவாமல் உண்பதைப் பார்த்து, 'தீட்டு!
தீட்டு!' என்கின்றனர். இந்தச் சீடர்கள் உண்மையிலேயே கைகளைக்
கழுவவில்லையா? அல்லது இவர்கள் கைகள் கழுவாமல் இருப்பது இயேசுவின்
போதனைக்கு தேவைப்பட்டதா? எனத் தெரியவில்லை. சீடர்களின் காலத்தில்
ஸ்பூன்-ஃபோர்க் பயன்படுத்தும் பழக்கமும் இருந்திருக்க
வாய்ப்பில்லை. 'ஆம்! பரிசேயர்களே! உங்களுக்கு என்ன ஒரு அக்கறை!
கைகழுவாமல் சாப்பிட்டால் கையில் உள்ள கிருமிகள் உணவின்
வழியே உள்ளே புகுந்து அவை 18 வகையான சரும மற்றும் உடல் உபாதைகளை
ஏற்படுத்திவிடலாம்! இனி நாங்கள் கைகழுவி சாப்பிடுகிறோம்!
இனி என்ன, இப்போது கைகள் கழுவுகிறோம்! தண்ணி எங்கப்பா?' என்று
கேட்டால் பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால் பிரச்சினை இங்கே
சுகாதாரமோ, கிருமியோ அல்ல. பின் என்ன? வீட்டிற்கு உள்ளே யூதர்களாகிய
நாம் மட்டும் இருக்கிறோம். ஆனால் வீட்டிற்கு வெளியே புறவினத்தார்களும்
இருக்கிறார்கள். பொதுவிடங்களில் அவர்களும் நடக்கிறார்கள்.
நாம் தொட்ட கைப்பிடியை அவர்களும் தொடுகிறார்கள். அவர்கள்
தொட்ட காய்கறிகளை நாமும் தொட நேரிடுகிறது. இதில் சிலர் பாசத்தோடு
நம்முடன் கைகுலுக்கவும் செய்கின்றனர். ஆக, அவர்கள் தொட்ட
இடத்தை நாம் தொடும்போதும், அல்லது அவர்களைக் தொடும்போதும்
நம் கைகளும் தீட்டாகிவிடுகின்றன. ஆக, இங்கே பிரச்சினை யூதரா?
அல்லது புறவினத்தாரா? தூய்மையா? அல்லது தீட்டா? என்பது.
மேலும் கைகளைக் கழுவுவது மூதாதையரின் மரபு என்றும், அந்த
மரபு ஒருபோதும் மீறப்படல் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கின்றனர்
பரிசேயர். 'பரிசேயர்' என்றாலே 'தனித்து வைக்கப்பட்டவர்' என்றுதான்
அர்த்தம். ஆக, கடவுள் தங்களைத் தனித்து தூய்மையாக
வைத்திருக்கிறார் என்ற முதல் ஏற்பாட்டு மேன்மையான எண்ணம்
காலப்போக்கில் அடுத்தவர்களைத் தீட்டானவர்கள் என்று
மாறிவிடுகிறது.
இயேசுவின் போதனை இவர்களின் வெளிவேடத்தைத் தோலுரிக்கின்றது.
'உங்கள் அக்கறை சுகாதாரம் சார்ந்தது அன்று! மாறாக, யூதர்-புறவினத்தார்
ஏற்றத்தாழ்வு சார்ந்தது!' என்கிறார் இயேசு. இறைவாக்கு
தெரிந்த இந்த பரிசேயர்களுக்கு எசாயாவின் இறைவாக்கை
மேற்கோள் காட்டுகின்றார்: 'இம்மக்கள் உதட்டினால் என்னைப்
போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு
தொலைவில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக்
கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்!' (எசாயா
29:13). எசாயாவின் காலத்தில் இருந்த எருசலேமின் மக்களுக்கு
எதிராக அவர் சொல்லிய வார்த்தைகள் இவை.
மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து,
'வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக்
கூடியது ஒன்றுமில்லை என்றும், உள்ளத்திலிருந்தே தீயன வெளிவருகின்றன!'
என்றும் சொல்கின்றார்.
ஆக, இயேசுவின் போதனை இறைவார்த்தையா? அல்லது மனித கோட்பாடா?
என்று தொடங்கி, 'எது தீட்டு?' என்பதோடு முடிகிறது.
மோசேயின் காலத்தில் யூதர்களின் முக்கிய அடையாளமான, கலாச்சாரமாக
இருந்த பத்துக்கட்டளைகள் இப்படி மனிதக் கோட்பாடுகளாக மாறியது
வேதனைக்குரிய ஒன்று.
இஸ்ரயேல் இனம் தூய இனம் என்ற அடையாளத்தை இழந்து, இயேசுவின்
காலத்தில் 'வெளிப்புறத்தூய்மையை வலியுறுத்தும் மரபுகளை'
தூக்கிப்பிடிக்கும் இனம் என்ற அடையாளத்தைப் பெறுகிறது.
இயேசுவுக்குப் பின், கிறிஸ்தவம் மலர்கின்ற வேளையில் யூதர்களின்
இந்த 'தூய்மை-தீட்டு' பிரச்சினை தங்களுடைய சமூகத்திற்குள்ளும்
வந்துவிடுமோ என்ற அச்சம் திருத்தூதர்களுக்கு இருந்தது.
கிறிஸ்தவர்களுக்கான அடையாளமாக எதை எடுப்பது? 'பத்துக்கட்டளைகளையா?'
அல்லது 'மரபுகளையா?' என்ற பிரச்சினை வரும்போது, இரண்டையும்
விடுத்து, 'இறைவார்த்தையை' - 'இயேசுவின் வார்த்தைகளை'
தெரிவு செய்கின்றார் எருசலேம் திருச்சபையின் தலைவர்
யாக்கோபு. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண்க.
யாக்கோபு 1:17-18, 21ஆ-22, 27) நாம் வாசிக்கின்றோம்: கடவுள்
மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. மனிதர்களும் அவர்களின்
போதனையும் நிழல்கள். ஆக, உங்களுள் ஊன்றியிருக்கும் இறைவார்த்தையை
கேட்பவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள
வேண்டாம்! மேலும், 'கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான
சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அநாதைகளையும், கைம்பெண்களையும்
கவனித்தலும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும்
ஆகும்.'
ஆக, கிறிஸ்தவம் என்ற ஐக்கன் அல்லது அடையாளமாக இறைவார்த்தையையும்,
இறைவார்த்தையைப் பின்பற்றுதலோடு இணைத்து நலிவுற்றோர்
பாதுகாப்பையும் கிறிஸ்தவ கலாச்சாரமாக முன்வைக்கிறார்
திருத்தூதர் யாக்கோபு.
'கட்டளை - மரபு - இறைவார்த்தை' - இதுவே கிறிஸ்தவம் கடந்து
வந்த பாதை. ஆக, இன்னும் நாம் 'கட்டளைகளையும்,' 'மரபுகளையும்'
பிடித்துக்கொண்டு நின்றால் நாம் யூதர்களாக இருக்கிறோமே தவிர,
கிறிஸ்தவர்களாக இன்னும் மாறவில்லை. அல்லது பெயரளவில்தான்
மாறியவர்களாக இருக்கிறோம்.
கிறிஸ்தவர்களாகிய நாம் இன்று நம் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும்,
'தூய்மையும் மாசற்றதுமான சமயவாழ்வையும்' மேற்கொள்ள இன்றைய
இறைவாக்குவழிபாடு நமக்கு வைக்கும் பாடங்கள் எவை?
1. தேர்ந்தெடுக்கப்பட்ட நிலை
இன்றைய முதல்வாசகத்தில் இஸ்ரயேல் மக்களை பேறுபெற்றவர்கள்
அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று மோசே சொல்வதற்குக்
காரணம் இரண்டு: அ. அவர்களுக்கு சட்டம் உண்டு. ஆ. அவர்களின்
இறைவன் அவர்களுக்குத் துணையிருக்கின்றார். இதே பின்புலத்தில்
இயேசுவை முன்னிறுத்தி எழுதும் தூய பேதுரு, 'நீங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர்,
தூய மக்களினத்தினர். அவரது உரிமைச் சொத்தான மக்கள்' (1
பேதுரு 2:9) என கிறிஸ்துவில் திருமுழுக்கு பெற்றவர்களையும்
இந்த வட்டத்திற்குள் சேர்க்கின்றார். இவ்வாறாக, நாம்
தேர்ந்தெடுக்கப்பட்ட நிலை நமக்குக் கடவுளின் கொடையாக வந்தாலும்,
கட்டளையைக் கடைப்பிடிக்கும் அனைவரும் இந்த நிலையை அடைகின்றனர்.
முதல் ஏற்பாட்டின் பத்துக் கட்டளைகளைச் சுருக்கி, 'இறையன்பு
- பிறரன்பு' என ஒற்றை அன்புக் கட்டளையாகக்
கொடுத்துவிடுகின்றார் இயேசு. யாரெல்லாம் இந்தக் கட்டளையின்படி
நடக்கிறார்களோ அவர்கள் எல்லாருமே கடவுளின் மக்கள் என்ற
நிலையைப் பெறுகின்றார்கள். இதைத்தான் இரண்டாம் வத்திக்கான்
சங்க ஏடு 'லூமன் ஜென்ஷியம், எண் 6' பதிவு செய்கிறது. ஆக,
நம் தேர்ந்தெடுக்கப்பட்டநிலை அடுத்தவர்களைப் பேயாக்கப் பயன்படுவதை
விடுத்து, நாம் இன்னும் அதிக பொறுப்புணர்வோடு செயல்பட நம்மைத்
தூண்ட வேண்டும்.
2. மரபின் தேவை
சமூகவியலில் மரபு என்பது மிக முக்கியமான கருத்தியல். மரபின்
வழியாகவே ஒரு குழந்தை சமூகத்தின் உறுப்பினராக மாற்றப்படுகிறது.
மரபு என்று சொல்லும்போது அதில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது.
மரபு நம்மை நம் முன்னோர்களோடும், அவர்களின் வரலாற்றோடும்
கட்டிப்போடுகின்றது. மரபு நமக்கு அடையாளம் தருகின்றது.
நாம் வேறு வேறு நாடுகளில் இருந்தாலும் நாம் தை முதல் நாளன்று
வைக்கும் பொங்கல் நாம் தமிழர்கள் என்ற அடையாளத்தையும், நம்
மரபையும் உறுதி செய்துவிடுகிறதே! மரபில் பல நல்ல விஷயங்கள்
இருக்கின்றன. நாம் சோர்ந்து விழும்போது நம்மைத் தூக்கிவிடுவதும்
நம் மரபுதான். இப்படி மரபு எந்த அளவிற்கு நேர்முகமானதோ, அந்த
அளவிற்கு எதிர்மறையாகவும் இருக்கிறது. மரபு நம் சிந்தனையை
முடக்கிவிடுகிறது. பரந்து சிந்திக்கும் ஒருவரைக் குற்றவாளியாக்கிவிடுகிறது.
மரபு நம்மில் அடிப்படைவாதத்தை விதைத்து, அடுத்த மரபு
சார்ந்தவரை 'கீழானவர்!' அல்லது 'தாழ்வானவர்!' என்று நமக்குக்
கற்பிக்கத் தொடங்குகின்றது. மரபு மனித வளர்ச்சிக்கு
முட்டுக்கட்டையாக இருக்கிறது. நம் கத்தோலிக்க திருஅவை ஒரு
கையில் இறைவார்த்தை, மறு கையில் மரபு என இரண்டையும் பற்றிக்கொண்டிருக்கின்றது.
இந்த மரபு நமக்குத் தந்ததுதான் புனிதர்கள், வழிபாட்டு
விதிமுறைகள், திருச்சபைச் சட்டங்கள், சுற்றுமடல்கள்,
திருச்சங்கங்கள். இறைவார்த்தை மரபிற்கு வலுசேர்க்கிறது என்றும்,
மரபு இறைவார்த்தையைப் பின்பற்றுகிறது என்றும் சொல்கிறது
இரண்டாம் வத்திக்கான் சங்கம். இந்த மரபில் இருந்த கறையை
வெறுத்த மார்ட்டின் லூத்தர், 'இறைவார்த்தை மட்டும்
போதும்!' எனப் புறப்பட்டுவிட்டார். ஆனால், இன்று அவர்கள்
பெயரளவில் 'இறைவார்த்தை மட்டும்!' என்று சொன்னாலும் அவர்களும்
தங்களையறியாமல் ஒரு மரபைக் கொண்டவர்களாகத்தான் இருக்கின்றனர்.
ஆக, மரபு தவறு என்று நாம் ஒதுக்கி வைக்கத் தேவையில்லை. நம்
மனித மூளை இறந்தகாலத்தையும், எதிர்காலத்தையும் பற்றிச்
சிந்திக்கும் திறன் கொண்டிருக்கும் வரை இந்த மரபும், பாரம்பரியமும்
நம்மிடம் இருக்கும். ஆனால், மரபையும் தாண்டி சிந்திக்கும்
பக்கவம் வந்தால் அது போதும். மேலும், நம் திருஅவையில் இறைவார்த்தையைவிட
சில நேரங்களில் திருச்சபைச் சட்டம் மற்றும் வழிபாட்டு
விதிமுறைகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இறைவார்த்தையை
மரபுகளைத் தாண்டி நாம் கொண்டு செல்ல வேண்டும்.
3. உதட்டு ஆன்மீகா? உள்ளத்து ஆன்மீகமா?
இறைவனின் வார்த்தை உள்ளம் சார்ந்தது. மனிதக் கோட்பாடு உதடுகள்
சார்ந்தது. இறைவனுக்கு உள்ளம் தெரியும். ஆனால், மனிதர்களுக்கு
உதடுகள் மட்டுமே தெரியும். உதடுகளில் தொடங்கி, உதடுகளில்
முடிந்துவிடுகின்றன மனிதக் கோட்பாடுகள். இறைவனின் வார்த்தை
நம் உள்ளத்தை தொடுகின்றது. ஆனால் மனித மரபு, அந்த மரபு
சார்ந்தவர்களின் உதடுகளில் மட்டுமே இருக்கின்றது. ஆக, நாம்
உதடுகளைக் கடந்த ஒரு ஆன்மீகம் பெற வேண்டும். இதைத்தான் இன்றைய
இரண்டாம் வாசகத்தில் யாக்கோபு தன் திருச்சபைக்கு எழுதும்போது,
இறைவார்த்தை வெறும் பகிரப்படும் வார்த்தையாக இல்லாமல், வாழப்படவும்
வேண்டும் என்று சொல்கின்றார். இது இன்று நமக்கு வைக்கும்
சவால் என்னவென்றால் 'உதட்டு ஆன்மீகம்'. இதைப்
புரிந்துகொள்ள நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
விமானப் பணிப்பெண்கள், விடுதிகள் வரவேற்பறைப் பெண்கள், ஐந்து
நட்சத்திர உணவகப் பணியாளர்கள் இவர்கள் பணிக்குப் பயிற்றுவிக்கப்படும்போது
கற்றுக்கொடுக்கப்படும் முதல் பாடம் 'புன்முறுவல் -
சிரிப்பு'. என்ன நடந்தாலும், யார் வந்தாலும், உங்களுக்கு
தனிப்பட்ட பிரச்சினையிருந்தாலும், உங்கள் உள்ளத்தில் சோகம்
இருந்தாலும், வாடிக்கையாளர் உங்களைத் திட்டினாலும் நீங்கள்
உங்கள் உதடுகளில் கொண்டிருக்க வேண்டியது சிரிப்பு. இவர்களின்
சம்பளமும் இந்தச் சிரிப்பிற்கே.
4. உள்ளே-வெளியே!
'களவு செய்யாதே!' 'பொய்ச்சான்று சொல்லாதே!' 'கொலை
செய்யாதே!' 'விபச்சாரம் செய்யாதே!' 'பிறர் மனைவியை அல்லது
பொருளை விரும்பாதே!' என்ற கட்டளைகள் இறைவனால் நம் உள்ளத்தில்
எழுதப்பட்டவை. இவை சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டால் நம் உள்ளத்தில்
பரத்தைமை, களவு, கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம்,
காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு என எதுவும்
இருப்பதில்லை. ஆனால், நான் உள்ளத்தில் இறைவனின் கட்டளைகளை
அனுபவிக்காததால்தான், வெளியில் உள்ள மரபு நோக்கி ஓடுகிறேன்.
ஆக, இறைவார்த்தையை நான் எவ்வித சமரசமும் இல்லாமல் கடைப்பிடித்தால்
என் உள்ளமும் சுத்தமாகும். என் உள்ளிருந்து வெளியே வருவதும்
சுத்தமாக வரும்.
5. அனிச்சை செயல்
நம்மை யாராவது முத்தமிட நெருங்கினால் நம்மையறியாமல் நம் கண்கள்
மூடிக்கொள்கின்றன. அல்லது நம் கண்களை நோக்கி வரும் ஒளி,
மரக்கட்டை, தூசி என அனைத்திலிமிருந்தும் நம் கண்களைக்
காப்பாற்ற இமைகள் தானாகவே மூடிக்கொள்கின்றன. ஏன்? கண்ணைவிட
பெரிய பொருள் கண்ணுக்கு அருகில் வந்தால் ஆபத்து! அந்த ஆபத்திலிருந்து
நம் கண்களைக் காத்துக்கொள்ள இமைகள் போட்டுக்கொள்ளும் ஒரு
பாதுகாப்பு வளையமே இந்த அனிச்சை செயல். நாம்
சார்ந்திருக்கும் மனித மரபுகளும் பாதுகாப்பு வளையங்களே! அவைகள்
ஆபத்திற்குத்தான் பயன்படவேண்டுமே தவிர, எப்போதும் நம்மை ஆக்கிரமித்துக்கொள்வதாய்
இருத்தல் கூடாது. ஏனெனில், எந்நேரமும் நம் இமைகள் மூடினால்
எல்லாமே இருட்டாகத்தானே இருக்கும்!
இறுதியாக,
நம் மொபைலில் உள்ள செயலி எந்த ஐக்கன் கொண்டிருக்கிறதோ, அந்த
ஐக்கனுக்குரிய வேலையைச் செய்கிறது. அப்படிச் செய்தால்தான்
அது சரியான செயலி. இல்லை என்றால் அது வைரஸ். அதுபோல,
கிறிஸ்தவம் என்னும் ஐக்கன் என்னில் இருந்தால், அதற்கேற்ற
ஆன்மீகமும், சமயவாழ்வும் கொண்டிருந்தால் தான் என் வாழ்வு
நான் இருக்கும் உலகில் கனி தரும். இல்லையென்றால், என் இருப்பு
தேவையற்றதாகவும், தீங்கானதாகவும் மாறிவிடும்.
I இணைச்சட்டம் 4: 1-2, 6-8
II யாக்கோபு 1: 17-18, 21b-22 ,27
III மாற்கு 7: 1-8, 14-15, 21-23
"
துன்புறுபவர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள்"
ஒருமுறை செய்தியாளர் ஒருவர் அமெரிக்காவைச் சார்ந்த பிரபல
மானுடவியலாரும், நோபல் பரிசு பெற்றவருமான மார்கரெட் மீட்
(Margaret Mead) என்பவரிடம், "
நாகரிகம் எப்போது தோன்றியது?"
என்றொரு கேள்வியைக் கேட்டார். இதற்கு மார்கரெட் மீட்,
எப்பொழுது மீன்பிடிக்கும் தூண்டில், மண்பாண்டம், மாவரைக்கும்
கல் என ஏதாவது ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதோ, அப்பொழுது நாகரிகம்
தொடங்கியது என்று பதில் சொல்வார் என்று எதிர்பார்த்தார்
செய்தியாளர்.
ஆனால், செய்தியாளர் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக,
மார்கரெட் மீட் இவ்வாறு பதிலளித்தார்: "
ஆபத்திலிருந்த ஒரு
மனிதனுக்கு எப்பொழுது இன்னொரு மனிதன் உதவி செய்தானோ அப்பொழுதுதான்
நாகரிகம் தொடங்கியது. ஏனெனில், ஒரு விலங்கு அடிப்பட்டுக்
கிடக்கும் இன்னொரு விலங்குக்கு உதவுவதும் இல்லை; காயத்திற்குக்
கட்டுப்போட்டு நலப்படுத்துவமில்லை. மனிதன்தான் இன்னொரு மனிதன்
அடிபட்டுக் கிடக்கின்றபோது, அவனுக்கு உதவுகின்றான்; அவனுடைய
காயத்திற்குக் கட்டுப்போட்டு, அவனை நலப்படுத்துகின்றான்.
அதனால் ஆபத்திலிருந்த ஒரு மனிதனுக்கு எப்பொழுது இன்னொரு மனிதன்
உதவினானோ அப்பொழுதுதான் நாகரிகம் தொடங்கியது."
மார்கரெட் மீட் சொன்ன இத்தகையதொரு பதிலைக் கேட்டுச்
செய்தியாளர் மிகவும் வியந்து போனார்.
ஆம், துன்பத்தில் இருக்கின்ற ஒரு மனிதனுக்கு எப்பொழுது இன்னொரு
மனிதன் உதவுகின்றானோ, அப்பொழுதுதான் அவன் நாகரிகம் அடைந்த
மனிதனாகின்றான். பொதுக்காலம் இருபத்து இரண்டாம் ஞாயிறான இன்று
நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் இறைவார்த்தையைக்
கேட்பவர்களாக மட்டும் இருந்துவிடாமல், துன்புறுபவர்களைக்
கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது
குறித்து நாம் சிந்திப்போம்.
இறைவார்த்தையைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்போம்
சொல்லில் சிறந்த சொல் செயல் என்பர். "
என்னை நோக்கி
ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள்
செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி
செயல்படுவரே செல்வர்"
(மத் 7: 21) என்று நாம் சொல்வீரர்களாக
மட்டும் இருந்துவிடாமல், செயல்வீரர்களாகவும் இருக்கவேண்டும்
என்ற அழைப்பினைப் தருவார் நம் ஆண்டவர் இயேசு.
யாக்கோபு திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம்
வாசகமும் நாம் செயல்வீரர்களாக இருக்க அழைக்கின்றது. அதற்குச்
சான்றாக இருப்பதுதான், "
இறைவார்த்தையைக் கேட்கின்றவர்களாக
மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அதன்படி
நடக்கின்றவர்களாகவும் இருங்கள்"
என்ற இறைவார்த்தை.
யாக்கோபு கூறும் இவ்வார்த்தைகளின் ஆழமான பொருளை உணர்ந்துகொள்வதற்கு,
அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப்
பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
யாக்கோபு வாழ்ந்த காலத்தில் அல்லது அவர் இருந்த திருஅவையில்
ஏழை பணக்கார் என்ற பாகுபாடு இருந்தது. இன்னும்
குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், பணக்காரர் என்றால்,
அவருக்கு ஒருவிதமான கவனிப்பும், ஏழை என்றால் அவருக்கு ஒருவிதமான
கவனிப்பும் இருந்தது. இதனால் ஏழைகள், அனாதைகள், கைம்பெண்கள்
ஆகியோரின் வாழ்க்கை கேள்விக்குள்ளானது. இத்தகைய
சூழ்நிலையில்தான் யாக்கோபு, "
....இறைவார்த்தையின் படி நடக்கிறவர்களாகவும்
இருங்கள்"
என்று கூறிவிட்டு, துன்புறும் அனாதைகளையும்
கைம்பெண்களையும் கவனித்தலே உண்மையான சமய வாழ்வு என்று
குறிப்பிடுகின்றார். இங்கே யாக்கோபு கூறுகின்ற வார்த்தைகள்,
"
ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு
நீதி வழங்குங்கள்; கைம்பெண்களுக்காக வழக்காடுங்கள்"
(எசா
1: 17) என்ற எசாயாவின் வார்த்தைகளை எதிரொலிப்பவையாக இருக்கின்றன.
ஆதலால், நாம் நம்மோடு வாழும் துன்புறும் மக்களைக் கவனித்துக்
கொள்வது கடவுள் விடுக்கும் மேலான அழைப்பு என்று உணர்ந்து
வாழவேண்டும்.
வெளிவேடம் இறைவனுக்கு ஏற்புடையது அல்ல
நம்மோடு இருக்கும் துன்புறுபவர்களைக் கவனித்துக்கொள்வதே
கடவுள் விடுக்கும் மேலான அழைப்பு, அதுவே உண்மையான சமய
வாழ்வு என்று யாக்கோபு கூறுகையில், அதற்கு முற்றிலும் எதிராகச்
செயல்பட்டவர்கள் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள்
மற்றும் மறைநூல் அறிஞர்கள் (இன்றும் பலர் அப்படித்தான் இருக்கின்றார்கள்).
இவர்கள், கைம்பெண்கள், துன்புறுவோரைக் கவனித்துகொள்வது கடவுள்
விடுத்த மேலான அழைப்பாக இருக்கும்பொழுது, அதற்கு
முற்றிலும் மாறாகக் கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்
கொண்டார்கள் (மாற் 12: 40). இவற்றோடு நின்றுவிடாமல், வறியவர்களை
இவர்கள் மேலும் நசுக்கினார்கள்.
இன்றைய நற்செய்தியில் இவர்கள் இயேசுவின் சீடர்கள் கைகளைக்
கழுவாமல் உண்டதை, பெரிய குற்றமாக இயேசுவிடம்
முறையிடுகின்றார்கள். உண்மையில் இயேசுவின் சீடர்கள் கைகளைக்
கழுவித்தான் உண்டார்கள்; ஆனால் அவர்கள் மூதாதையர் மரபுப்படி
கைகளைக் கழுவாததாலேயே (மத் 15: 2), மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும்
இயேசுவின் சீடர்கள்மீது குற்றம் சுமத்துகின்றார்கள். இங்கே
சீடர்கள் கைகளைக் கழுவாமல் உண்டதற்கு மறைநூல் அறிஞர்களும்
பரிசேயர்களும் ஏன் இயேசுவிடம் முறையிட்டார்கள் எனத்
தெரிந்துகொள்ள வேண்டும். இயேசு ஒரு இரபியாக, போதகராக இருந்துகொண்டு,
தன் சீடர்களுக்கு மூதாதையர் மரபுப்படி முறையாகக் கைகளைக்
கழுவதற்குக் கற்றுத் தரவில்லை என்பதற்காகவே இவர்கள் இயேசுவிடம்
அவருடைய சீடர்களைப் பற்றி முறையிடுகின்றார்கள். அப்பொழுதான்
இயேசு அவர்களுடைய வெளிவேடத்தைச் சாடிவிட்டு (எசா 29: 13),
"
நீங்கள் கடவுளின் கட்டளையைக் கைவிட்டு, மனித மரபைப் பின்பற்றி
வருகிறவர்கள்"
என்கிறார்.
மறைநூல் அறிஞர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் கடவுளுக்கு
உண்மையாய் இருந்திருந்தால், தங்களோடு இருந்த
துன்புறுவோரைக் கவனித்திருப்பர். அவர்கள் அவ்வாறு இல்லாததாலேயே
துன்புறுவோரை மேலும் துன்பப்படுத்தி, வெளிவேடத்தனமான
வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
இறைவார்த்தையின் படி நடக்கும்போது ஆசி
மறைநூல் அறிஞர்களைப் போன்று வெளிவேடமாக வாழாமல், நம்மோடு
வாழும் துன்புறும் மக்களைக் கவனித்துக் கொள்வதே கடவுள்
விடுக்கும் மேலான அழைப்பு என்று சிந்தித்துப் பார்த்தோம்.
இத்தகையதொரு வாழ்க்கை வாழ்வோருக்குக் கடவுள் எத்தகைய ஆசிகளைத்
தருகின்றார் என்று இன்றைய முதல்வாசகம் மிக அழகாக எடுத்துரைக்கின்றது.
அதைப் பற்றிப் பார்ப்போம்
நம்மோடு வாழும் துன்புறும் மக்களைக் கவனித்துகொள்வது உட்பட்ட
கடவுளின் முறைமைகள், கட்டளைகளின்படி நாம் வாழ்கின்றபொழுது
(வாக்களிக்கப்பட்ட) நாட்டை உரிமையாக்கிக் கொள்வோம் என்கிறார்
ஆண்டவர். அடுத்ததாக, நாம் கடவுள் நமக்குச் சொன்னவற்றை மறைநூல்
அறிஞர்களைப் போன்று கூட்டாமல், குறைக்காமல் அப்படியே கடைப்பிடித்து
வாழ்கின்றபொழுது, நாம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களினமாவோம்.
நிறைவாக, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழும்போது
கடவுள் எப்பொழுதும் நம்மோடு இருப்பார்.
ஆகையால், கடவுள் அளிக்கும் இந்த மூன்றுவிதமான ஆசிகளைப்
பெற்றுக்கொள்வதற்கு நாம் நம்மோடு வாழும் துன்புறும் மக்களைக்
கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து
வாழ்வது மிகவும் இன்றியமையாதது. இன்றைக்குத் துன்புறும் ஏழைகள்,
அனாதைகள், கைம்பெண்கள் ஆகியோர் மேலும் மேலும் வஞ்சிப்படுவது
மிகவும் வேதனையளிப்பதாக இருக்கின்றது. இவர்களில் இறைவன் இருக்கின்றார்
(மத் 25: 40) என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், அவர்களை நாம்
கவனித்துக்கொண்டு உண்மையான சமய வாழ்ந்து வாழ்ந்து, கடவுளின்
அளிக்கும் மேலான ஆசிகளைப் பெறுவோம்.
சிந்தனை
மக்களிடையே இரக்கமும் சகோதர அன்புமே மனித வாழ்வில் பெறுவதற்கு
முயல வேண்டிய பேருணர்ச்சிகளாகும் என்பார் மார்லி என்ற அறிஞர்.
நாம் இரக்கத்தையும் சகோதர அன்பையும் மற்றவர்களிடமிருந்து
பெறுபவர்களாக அல்லாமல், தருபவர்களாக இருந்து, துன்புறுபவர்களைக்
கவனித்துக் கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
சில வாரங்களாகச் செய்தித் தாள்களிலும், தொலைக்
காட்சியிலும் தொடர்ந்து வரும் செய்தி, பெப்சி, கொக்கோ கோலா
போன்ற பானங்கள் பற்றியது. இதில் கான்சர் (புற்று நோயை) உண்டாக்கும்
நச்சுத் தன்மையுள்ளது என்பதை சோதனையில் கண்டு
பிடித்துவிட்டோம் என்பது.
கட்சி வேறுபாடு இன்றி, ஆளும் கட்சியும் சரி, எதிர்க்கட்சியும்
சரி பாராளுமன்றத்தில் பெரிய அமளி ஏற்படுத்தியது. அதன் வளாகத்தில்
அப்பானங்கள் கொண்டு வரத் தடைசெய்யப்பட்டன. தெருக்களில் ஆர்ப்பாட்டம்,
கூடி நின்று பெப்சி, கொக்க கோலா பாட்டில்களை உடைத்து தரையிலே
கொட்டிய காட்சி . கடைகளிலே, அலுவலகங்களிலே, வீட்டிலே
பேச்சு. நாடே விழித்துக் கொண்டது போல ஒரு காட்சி! இது
பாராட்டத்தக்க செயல்தான்!
ஆனால் பெப்சி, கொக்கோ கோலாவை விட அதிக நச்சுத் தன்மை உள்ள
காரியங்கள் அறுபத்து மூன்று ஆண்டுகளாகச் சுதந்திர இந்தியாவில்
மலிந்து கிடக்கின்றனவே! அதைப்பற்றி யாருக்கும் கவலை உண்டா?
அக்கறையுண்டா?
மருத்துவத் துறையிலே போலித்தனம், கல்வித் துறையிலே வியாபாரம்,
காவல் துறையிலே காம வெறியர்கள். லஞ்சம் என துறைக்குத் துறை
நிறைந்து கொண்டிருக்கும் நாசகார நச்சுக் கிருமிகள் எத்தனை
எத்தனை? ஏராளம்? ஏராளம்?
இது மட்டுமா? தூங்கிக் கிடக்கும் நல்ல சமுதாயத் திட்டங்கள்,
சாதி, மத, மொழிப் பிளவுகளால் மனித நேயத்தைப் பிளக்கும் தீயச்
சக்திகள். சிறையுள்ளே இருக்க வேண்டியவர் செல்வாக்கோடு
வெளியே உலவி வரும் தீயவர்கள், லஞ்சக் கடலிலே மூழ்கிக் கிடக்கும்
அரசியல்வாதிகள், சமயவாதிகள், அரசு ஊழியர்கள் எனப் பல நச்சுத்
தன்மையுடைய நாசக் கிருமிகள் இந்த நாட்டிலே நிறைந்து கிடக்கின்றனரே?
இதுதான் வெளிவேடம்! பரிசேயத் தன்மை! கொக்கோ கோலா, பெப்சி
தயாரிக்க அமெரிக்காவிலிருந்தா தண்ணீர் கொண்டு வந்தார்கள்?
நம் ஊர் தண்ணீர்தானே! அது மாசுபட்டுள்ளதே! நஞ்சடைந்துள்ளதே
! சாக்கடையோடு கலந்து வருகிறதல்லவா! இதைப்பற்றி யாருக்காவது
அக்கறை, கவலை உண்டா?
சமீபத்தில் இந்து பத்திரிக்கையில் ஒரு கார்ட்டூன் வரையப்பட்டு
இருந்தது. பிரதமர் வாஜ்பாய்க்குப் பல முகங்கள் உண்டு என்று
காட்டும் விதத்தில் கற்பனையோடு வரையப்பட்ட கார்ட்டூன் அது.
ஆனால் சிந்தித்துப் பார்த்தால் இதே போன்று பல முகங்கள்
கொண்டவர்களாகப் பரிசேயத் தன்மையோடு நாம் வாழ்கிறோம் என்பது
அப்பட்டமான உண்மை!
பகுதி - II
இயேசுவின் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி. அன்றைய மக்கள் தலைவர்கள்
எனப்படும் பரிசேயர், மறைநூல் அறிஞர் இயேசுவிடம் வந்து
முறையிடுகிறார்கள்.
உம் சீடர்கள் மூதாதையர் மரபுகளைப் பின்பற்றுவது இல்லையே.
தீட்டான கைகளால் உணவு அருந்துகிறார்கள் (மாற்கு 7:5) என்றார்கள்.
இயேசு இதற்குத் தெளிவாகப் பதில் கொடுக்கிறார்.
எது அவசியமோ அதை விட்டு விட்டு உப்பு சப்பு இல்லாத மரபுகளைக்
கடைப்பிடித்துக் கொள்கிறீர்கள்.
இந்த மக்களோ உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள்
உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. ஏனெனில்
கடவுளின் கட்டளைகளான நீதி, நேர்மை, நியாயம், உண்மை , நன்மை,
அன்பு இவைகளைப் பின்பற்றாமல் போலித்தனமான மரபுகளுக்கு அல்லவா
நீங்கள் அடிமையாகக் கிடக்கிறீர்கள் (மாற் 7:6-7) என்பதை அழுத்தம்
திருத்தமாகச் சொல்கிறார்.
ஓர் ஆளைப்பற்றி இரண்டே வரிகளில் சுருக்கமாக எழுது என்றால்
அவ்வளவு எளிதல்ல! ஆனால் விவிலியத்தை முழுதும் இரண்டே வரிகளில்
எழுது என்றால் அது இயலுமா? ஆம் நிச்சயமாக இயலும். இதைத்தான்
உன் கடவுளாகிய ஆண்டவரை முழு உள்ளத்தோடு அன்பு செய். உன்னைப்போல
உன் அயலானையும் அன்பு செய் (இணை . சட். 6: மத். 2:37-39)
என்று இயேசு சொன்னார். திருச்சட்டமும், இறைவாக்கும் இவ்விரு
கட்டளை களுக்கு அடிப்படை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரிசேயர்கள், கைகளையும், கால்களையும் பாத்திரங்களையும் கழுவும்
புறத்தூய்மையில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர். ஆனால் அகத்
தூய்மையை மறந்தனர். எனவேதான் இன்று இயேசு பரிசேயர்களின்
வெளி வேடத்தைக் கண்டிக்கிறார். எந்த அளவுக்கு என்றால்
கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்கும்,
வெள்ளை யடிக்கப்பட்ட கல்லறைகள் (மத். 23:24, 27) என்றும்
சாடினார்.
கதை
தோட்டக்காரர் அழகான பூச்செடிகளின் விதைகளை 40 தொட்டிகளில்
விதைத்து வேலைக்காரனைக் கூப்பிட்டுத் தண்ணீர் ஊற்றும்படி
சொல்லி ஒரு மாதம் வெளியூர் சென்றார். திரும்பி வந்தபோது
வெண்டைச் செடிகள் முளைத்திருந்தன. எங்கே பூச்செடி எனக்
கேட்டபோது, தண்ணீர் ஊற்றினேன், முளைக்கவில்லை. எனவே வெண்டை
விதைத்தேன். முளைத்தன விரைவில். அதன் பிறகுதான் வேறு விதைகள்
முளைத்தன. அவைகளைக் களைகள் என்று நினைத்து பிடுங்கி எறிந்து
விட்டேன் என்றான் கூலியாள்.
இதேபோலத்தான் பரிசேயர்கள் நிலை. கடவுள் கட்டளையைக்
காற்றில் பறக்கவிட்டு, மனித மரபுகளைக் கட்டிக் காத்தார்கள்.
எனவே இயேசு சொன்னார், "நீங்கள் கடவுள் கட்டளையைக்
கைவிட்டுவிட்டு மனித மரபுகளைப் பின்பற்றி வருகிறீர்கள்"
(மாற் 7:8).
முடிவுரை மதம் மக்களைப் பாவி, தூயவன், தீண்டதக்கவன், தீண்டத்
தகாதவன் என்ற பிரிவினைக்கு ஆளாக்காமல், மனிதர்களை ஒருங்கிணைக்க
வேண்டும். இறையனுபவத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும். மனிதனின்
ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்திற்கும் இட்டுச்
செல்ல வேண்டும். இதற்கு நம் ஆண்டவர் இயேசு நமக்கு
வழிகாட்டியாக உள்ளார். புனித பவுல் அடிகளார் பிலிப்பியருக்கு
எழுதிய திருமடலில் கூறுவதுபோல நாமும் கிறிஸ்துவின் மனநிலையைக்
கொண்டிருப்போம் (பிலி. 2:5).
இறைவனுக்கு ஏற்புடையவர்கள் யார்? என்பதற்கு இன்றைய நற்செய்தி
பதில் கூறுகின்றது. கடவுள் அகத்தில் அழகுள்ளவர்களையே அதிகம்
அன்பு செய்கின்றார் என்பதை சுட்டிக்காட்ட இதோ மீட்பின் வரலாற்றில்
நடந்த நிகழ்வு ஒன்று.
1 சாமு 16:1-13 முடிய உள்ள பகுதி!
கடவுள் தமக்குக் கீழ்ப்படியாத சவுல் அரசனுக்குப் பதிலாக,
இஸ்ரயேல் நாட்டுக்கு வேறோர் அரசனைத் தேர்ந்தெடுக்க
விரும்பினார். ஆகவே கடவுள் சாமுவேல் என்னும் இறைவாக்கினரை
அழைத்து, பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகின்றேன்;
ஏனெனில் அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன்
(1 சாமு 16:1) என்றார்.
ஈசாய் முதல் மகனை சாமுவேல் முன்னால் நிறுத்தினார்.
சாமுவேல் கடவுளைப் பார்த்து. இவனைத் திருப்பொழிவு செய்யலாமா?
என்றார். கடவுளோ சாமுவேலிடம், அவன் தோற்றத்தையும், உயரத்தையும்
பார்க்காதே;ஏனெனில் நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர்
பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை ; மனிதர் முகத்தைப்
பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார் (1 சாமு
16:7) என்று கூறிவிட்டார்.
ஈசாய் ஏழு குழந்தைகளை சாமுவேல் முன் நிறுத்தினார். கடவுள்
அந்த ஏழு குழந்தைகளையும் தேர்ந்தெடுக்கவில்லை! பிறகு
சாமுவேல் ஈசாயிடம், உன் பிள்ளைகள் இத்தனை பேர்தானா? (1
சாமு 16:11) என்று கேட்க, ஈசாய் ஆடுகளை
மேய்த்துக்கொண்டிருந்த தாவீது என்னும் சிறுவனை அழைத்துவரச்
சொல்கின்றார். தாவீதின் உள்ளம் தூய்மையாக இருந்ததால் அவனைத்
திருப்பொழிவு செய்யுமாறு சாமுவேலுக்கு கடவுள் ஆணையிடுகின்றார்.
திருப்பொழிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஆண்டவரின் ஆவி
தாவீதின் மேல் நிறைவாக இருந்தது (1 சாமு 16:13).
கடவுள் தந்த கட்டளைகளை (முதல் வாசகம்) புறத்தில் பின்பற்றினால்
போதும் என இஸ்ரயேலர் நினைத்தபோது, இயேசுவோ கடவுளின் கட்டளைகளைப்
புறத்தில் கடைப்பிடித்தால் மட்டும் போதாது, அகத்திலும் அவருடைய
கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்; உடல் தூய்மையாக இருந்தால்
மட்டும் போதாது, உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருக்க
வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தியின் வழியாக அவர்களுக்குச்
சுட்டிக் காட்டினார்.
நமது மனம் தூய்மையாக இருந்தால்தான் கடவுளின் ஆசி
கிடைக்கும்! ஓர் ஊரிலே பெரிய பணக்காரன் இருந்தான். அவன் இல்லை
என்று சொல்பவர்களுக்கு இல்லை என்று சொல்வதில்லை! ஒருநாள்
ஏழை ஒருவர் அவரிடம் சென்று சாப்பாடு கேட்டார். பணக்காரர்
கையில் சோறு இருந்தது! ஆனால் பிச்சைக் கேட்டவரின் பாத்திரத்தில்
உணவைப் போட தயங்கினார். காரணம் பிச்சைக் கேட்டவர் பாத்திரத்தில்
தூசிபடிந்து அது அசுத்தமாக இருந்தது. உன் பாத்திரத்தை சுத்தமாக்கு;
சோறு போடுகின்றேன் என்றார் பணக்காரர். பிச்சைக் கேட்டவர்
பாத்திரத்தை சுத்தம் செய்தார். அவருக்கு உணவு கிடைத்தது.
இந்தக் கதையில் வந்த பணக்காரரைப் போன்றவர் கடவுள்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு, நமது உள்ளத்தையும்
மனத்தையும் தூய்மைப்படுத்தக்கூடிய ஆற்றல், துன்புறும் அனாதைகளுக்கும்,
கைம்பெண்களுக்கும் நாம் செய்யும் உதவிகளுக்கு உண்டு என்கின்றார்.
மேலும் அறிவோம் :
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு (குறள் : 231).
பொருள் : வறியவராகிய ஏழைக்கு உணவு முதலானவற்றை வழங்குவதால்
புகழ் பெருகும். அத்தகைய புகழாகிய பயன்தரும் ஆக்கத்தைத்தவிர,
வாழும் மாந்தர்க்கு எழுச்சி தருவது வேறு எதுவும் இல்லை.
"இரண்டாவது குலோத்துங்க சோழனைப் பற்றி இரண்டே வரிகளில் எழுதுக"
என்ற கேள்விக்கு, ஒரு மாணவன், "இரண்டாம் குலோத்துங்க சோழன்
முதலாம் குலோத்துங்க சோழனுக்கு பின்னால் இருந்தவன்;
மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு முன்னால் இருந்தவன்' என்று
எழுதியிருந்தான். அவனுடைய அபார மூளையை அருங்காட்சியத்தில்
வைக்க வேண்டும்!
கடவுளுடைய கட்டளைகளை, குறிப்பாகப் பத்துக் கட்டளைகளைக் கடைப்பிடித்து.
கடவுளுக்கும் மனிதருக்கும், மனிதருக்கும் மனிதருக்கும் இடையே
உள்ள உறவைச் சீர்படுத்தி, செம்மைப்படுத்தி, புனிதப்படுத்தி
கடவுளை மகிமைப்படுத்துவதற்குப் பதிலாக, பரிசேயர்கள் கைகளையும்
கால்களையும், கிரகணங்களையும் தட்டுகளையும் கழுவித் தங்களைத்
தூய்மைப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாயிருந்தினர். புறத்தூய்மைக்கு
முக்கியத்துவம் கொடுத்து, அகத்தூய்மையில் கோட்டை விட்டனர்.
கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்கினர். எனவே, இன்றைய நற்செய்தியில்
கிறிஸ்து பரிசேயர்களின் வெளிவேடத்தைக் கண்டித்து அகத்தூய்மையை
வலியுறுத்துகிறார், வெளியிலிருந்து உள்ளே செல்வது மனிதனை
மாசுபடுத்துவதில்லை, மாறாக மனிதருடைய உள்ளத்திலிருந்து
வெளியே வருபவை. அதாவது கொலை, களவு, பாத்தமை, காமவெறி ஆகியவை
(பத்துக் கட்டளைகளுக்கு எதிரானவை) மனிதனை மாசுபடுத்துகின்றன
என்கிறார் இயேசு.
அறன் என்பது அகத்தூய்மையே; மற்றனைத்தும் பகட்டுத் தன்மையைக்
கொண்டுள்ளன என்கிறார் வள்ளுவர்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து
அறன்: ஆகுல நீர பிற (குறள் 34 )
"நெஞ்சகமே கோவில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசை
கொள்ள வா ராய் பராபரமே",
ஒரு ஞாயிற்றுக்கிழமை, இரண்டு நண்பர்களில் ஒருவன் தன் அம்மாவுக்குப்
பயந்து கொண்டு ஞாயிறு திருப்பலிக்குச் சென்றான். மற்றவன்
புத்தம் புதிய திரைப்படத்திற்குச் சென்றான். மறுநாள் இருவருமே
ஒரு விபத்தில் இறந்தனர். திரைப்படத்திற்குச் சென்றவனுக்கு
விண்ணகமும் கோவிலுக்குச் சென்றவனுக்கு நரகமும் கிடைத்தது.
ஏன்? திரைப்படத்திற்குச் சென்றவன் திரை அரங்கில் இருந்தாலும்
அவனுடைய எண்ணம் ஆலயத்தில் இருந்தது. மாறாக, ஆலயத்திற்குச்
சென்றவனுடைய எண்ணமெல்லாம் திரை அரங்கில் இருந்தது. நாம் எங்கே
இருக்கிறோம் என்பதைவிட, நம் உள்ளம் எங்கே இருக்கிறது என்பதுதான்
முக்கியம். 'நீ எங்கே என் நினைவுகள் அங்கே!'.
உதட்டளவில் கடவுளைப் புகழ்ந்து, உள்ளத்தளவில் கடவுளுக்கு
அந்நியமாக வாழ்ந்த பரிசேயர்களை, இறைவாக்கினர் எசாயாவை
மேற்கோள் காட்டி கடிந்துரைக்கிறார் இயேசு கிறிஸ்து. "இம்மக்கள்
உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு
வெகு தொலைவில் இருக்கிறது" (மாற் 7:6).
தோட்டக்கலையில் ஆர்வம் கொண்ட ஒருவர் நாற்பது தொட்டிகளில்
அபூர்வரக விதைகளை நட்டு. தனது வேலைக்காரனைக் கூப்பிட்டு,
தான் வெளியூர் சென்று பத்து நாள்கள் கழித்துத் திரும்புவதாகவும்
அதுவரை பூத்தொட்டிகளில் தண்ணீர் ஊாற்றும்படியாகவும் கூறி
வெளியூர் சென்றார். பத்து நாள்கள் கழித்து அவர் திரும்பி
வந்தபோது பூத்தொட்டிகளில் வெண்டை விதைகள் முளைத்திருப்பதைக்
கண்டு, அதிர்ச்சியுற்று வேலைக்காரனிடம் விளக்கம் கேட்டார்.
வேலைக்காரன் அவரிடம், "முதலாளி! ஐந்து நாள்கள் நான்
பூத்தொட்டிகளில் தண்ணீர் மாற்றியும் ஒன்றும் முளைக்கவில்லை.
எனவே வெண்டை விதைகளை ஊன்றி தண்ணீர் விட்டேன்; அவை விரைவாக
முளைத்துவிட்டன. அதன் பிறகு வேறு விதைகள் முளைத்தன; அவைகளைக்
களையென்று நினைத்து பிடுங்கி எறிந்து விட்டேன்" என்றான்.
அவ்வேலைக்காரன் முதலாளி நட்ட பூ விதைகளையெல்லாம் பிடுங்கி
எறிந்துவிட்டு, தான் நட்ட வெண்டை விதைகளை வளர்த்தான். அவ்வாறே
பரிசேயர்களும் கடவுளுடைய கட்டளைகளைக் காற்றில் பறக்க
விட்டு, மனித மரபுகளைக் கட்டிக் காத்தார்கள், இதைத்தான் இன்றைய
நற்செய்தியில் இயேசு அவர்களுக்குச் சுட்டிக் காட்டுகிறார்,
"நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி
வருபவர்கள் (மாற் 7:8).
இறையன்பு பிறரன்பில் வெளிப்பட வேண்டும், இன்றைய இரண்டாம்
வாசகத்தில் உண்மையான சமயம் என்ன என்பதைப் புனித யாக்கோபு
விளக்குகின்றார். தூய்மையான, மாசற்ற சமய வாழ்வு என்பது அனாதைகளையும்
கைம்பெண்களையும் கவனிப்பதாகும் (யாக் 1:27). "ஏழை விதவைகளையும்
அனாதைகளையும் ஆதரிக்காத எந்த மதத்தையும் நான் நம்பத் தயாராக
இல்லை"
என்கிறார் சுவாமி விவேகானந்தர். பரிசேயர்கள் கிண்ணத்தையும்
தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மைப்படுத்தினர். அதற்குப்
பதிலாக, கிண்ணத்திற்குள்ளே உள்ளதை. அதாவது உணவை ஏழைகளுக்குத்
தர்மமாகக் கொடுத்தால் உள்ளும் புறமும் அனைத்துமே
தூய்மையாகும் என்கிறார் இயேசு கிறிஸ்து (லூக் 11:41).
எனவே, இறையன்பையும் பிறரன்பையும் வளர்க்கவே சமயங்கள் உள்ளன.
இவை இரண்டையும் வளர்க்காத சமயங்களின் கோட்பாடுகளும்,
வழிபாட்டு முறைகளும் சாரமற்ற சக்கைகள்! சமுதாயத்தின் சாபக்கேடுகள்!
இறைவனைக் குழிதோண்டி புதைக்கும் சவக் குழிகள்!!!
சிரிப்பு, புன்முறுவல் எல்லாமே நட்பின் அடையாளம். நல்லுறவின்
வெளிப்பாடு. எனினும் நம்மைப் பார்த்துச் சிரிப்பவன் எல்லாம்
நண்பனாக இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. வில்லனாகக்கூட
இருக்கலாம். வெறும் கிறுக்கனாகக் கூட இருக்கலாம். A
man may smile and smile and be a villan என்று ஆங்கிலக்
கூலிஞன் ஷேக்ஸ்பியர் சொல்லவில்லையா? சிரித்துச்
சிரித்துக் கழுத்தை அறுப்பவன் என்று நாம் சொல்வதில்லையா?
மனிதன் மனிதனோடு கொள்ளும் இந்த உறவுக் கோளாறுகள் பணிதன்
கடவுளோடு கொள்ளும் உறவிலும் வெளிப்படலாம். அதுபோலவே
வழிபாடு எப்போதும் எல்லாருக்கும் பக்தியின் அடையாளமாக
அல்ல, வெறும் வாடிக்கையாகக் கூட இருக்கலாம்.
வாழ்க்கைத் தாக்கம் இல்லாத வெறும் கடமைக்காகச்
செய்யும் சடங்காகக் கூட இருக்கலாம்.
'பறவையின் பாடல்"
என்ற நூலில் ஒரு குட்டிக் கதை உண்டு.
'ஞானி வளர்த்த பூனை"
என்பது தலைப்பு. மாலை வழிபாடு நடந்த
போதெல்லாம் மடத்தில் ஞானி வளர்த்த பூனை குறுக்கும்
நெடுக்குமாக டடியது. மிகவும் இடையூறாக இருந்தது. எனவே
மாலை வழிபாடு டெகொடங்குமுன்னே முதலில் பூனையைக் கட்டிப்போட
ஆணையிட்டார் நுறவியான ஞானி. ஒரு நாள் துறவி இறந்துவிட்டார்.
அவர் இறந்து வெகு நாளாகியும் அவருடைய சீடர்கள் மாலை
வழிபாட்டின்போது தொடர்ந்து பூனையைக் கட்டிப்போட்டனர்.
சிறிது காலத்திற்குப் பின் அந்தப் பூனையும் இறந்துவிடவே
சீடர்களிடையே சலசலப்பு. மாலை வழிபாட்டின்போது கட்டிப்போட
பூனை வேண்டாமா? பூனையைக் கட்டிப் பொடாமல் வழிபாட்டை எப்படித்
தொடங்குவது? என்று நினைத்த சீடர்கள் தேடி அலைந்து வேறொரு
பூனையை விலை கொடுத்து வாங்கி வந்தனர். பூனையைக் கட்டிப்போட்ட
பின் தான் அவர்களால் நிம்மதியாக வழிபாடு நடக்கு முடிந்தது.
பூனை கட்டப்பட்டதன் நோக்கத்தையே மறந்து பூனையைக் கட்டுவதை
ஒரு சடங்காகவே மாற்றிவிட்டார்கள். ஆண்டுகள் பல கடந்தன.
மாலை வழிபாட்டில் பூனையின் பங்கு"
என்று இறையியல் ஆய்வுக்
கட்டுரையையே எழுதி வைத்தனர்.
Tradition is the law of fools என்றான் ஒருவன். இது எதிர்மறைச்
சிந்தனைதான். எனினும் மரபு என்பது முட்டாள்களின் சட்டமாகும்
வாய்ப்பு உண்டு. வழிபாட்டுக்கு: இடையூறு என்று பூனையைக்
கட்டச் சொன்னால் பூனையைக் கட்டுவதே வழிபாட்டின் ஓர்
அங்கமாகி விடுவதா?
அன்பு உணர்வு கலவாத கட்டளைகளின் கடையப்பிடிப்பு வெறும்
அடிமைத்தனம். கட்டளைகளின் கடைப்படிப்பு இல்லாத அன்பின்
வெளிப்பாடு வெறும் போலித்தனம்.
இஸ்ரயேல் மக்களின் தலைவர்களாகக் கருதப்பட்ட பரிசேயர்களும்
ஒரு சில மறைநூல் அறிஞர்களும் இயேசுவை அணுகி முறையிடுகின்றனர்.
"
உங்கள் சீடர்கள் நம் முனனோரின் மரபுகளைப் பின் பற்றுவதில்லையே,
நீங்கள் எல்லாம் மரபுக்கு அப்பாற்பட்டவர்களா? நமது
மூதாதையரின் பழக்க வழக்கங்கள் தவறானவை என்பது உங்கள் எண்ணமா?
இக்குற்றச்சாட்டுக்கு இயேசு பதிலளிக்கிறார். "
எது இன்றியமையாததோ
அதை விட்டுவிட்டு உப்புசப்பில்லாத மரபுகளை இறுகப்
பிடித்துத் தொங்குகிறீர்களே"
"
என்று சொல்லி, இறைவாக்கினர்
எசாயாவின் கூற்றை மேற்கொள் காட்டி அவர்களின் வெளிவேடங்களை
வெட்ட வெளிச்சமாக்குகிறார். "
இம்மக்கள் உதட்டினால் என்னைப்
போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு
தொலைவில் இருக்கிறது."
(மார்க். 7:6, எசா. 29:13).
இறைவனின் கட்டளைகளை வெறும் முன்னோரின் மரபுகளாக்கும்
ஆபத்தைக் கண்டிக்கிறார் இயேசு. அத்தகையோரை "
அப்பன்
வெட்டிய கிணறு என்று உப்புத் தண்ணீரைக் குடிக்கும் மூடர்"
என்று சாடுவார் பாரதி. மரபு, மரபு என்பதற்காக அல்ல, இறைவனின்
விருப்பம் என்பதற்காகவே அருத்தம் பெறுகிறது.
கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்த மேலான கொடைகள்
இரண்டு:
1. அவர் வாக்களித்து நாடு. "
உங்கள் மூதாதையரின் கடவுளாகிய
ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று
அதை உரிமையாக்குவீர்கள்'' (இ.ச. 4:2).
* உடன்படிக்கை உறவின் வெளிப்பாடக அமைந்த அவரது கட்டளைகள்.
"
நீங்கள் போய் உரிமையாக்கிக் கொள்ளும் நாட்டில் அவற்றைப்
பின்பற்ற வேண்டும்"
(இ.ச. 4:5).
* அந்தக் கட்டளைகள் இறைவனின் விருப்பத்தை வெளிப்படுத்தின.
*அக்கட்டளைகளை அறிந்து ஏற்றுக் கொண்டபோது ஞானத்தில், அறிவாற்றலில்
வளர்ச்சி தந்தன (இ.ச. 4:6).
*அக்கட்டளைகள் கடவுளோடு உறவை ஆழப்படுத்தின (இ.ச. 4:7).
*அக்கட்டளைகள் தன்னிலே முழுமையானவை. அதனால்தான்
"
அவற்றோடு எதையும் சேர்க்கவோ நீக்கவோ வேண்டாம்"
(.ச.
4:2) என்றார் மோசே.
மேற்கூறியவை அனைத்தும் கடவுளது கட்டளைகளின் மேன்மையை உணர்த்துகின்றன.
"
ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம்
ஈறும் பேனும்" என்பதுபோல அகத்தூய்மை பற்றிய உணர்வின்றி
புறத்தூய்மை பற்றி அலட்டிக் கொள்ளும் பரிசேயரின் போலித்தனத்தைத்
தோலுரித்துக் காட்டுகிறார் இயேசு. "
நீங்கள் கடவுளின்
கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்...
உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப்
புறக்கணித்து விட்டீர்கள் ' (மார்க். 7:8-9) என்று
சாட்டை எடுக்கிறார்.
புறத்தே இருக்கின்ற பொருள்களோ சூழ்நிலைகளோ ஒருக்காலும் மனிதனைக்
கடவுளிடமிருந்து பிரித்துவிட முடியாது. எனவே வெளியே உள்ள
எதையும் நல்லது தீயது எனப் பிரிப்பது தவறு. ஒருவன் தன்னுடைய
மனநிலையாலும் நடத்தையாலுமே கடவுளிடமிருந்து பிரிக்கப்படலாம்.
இதனையே "
வெளியே இருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத்
தீட்டுப்படுத்தக்கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளே இருந்து
வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும் ' (மார்க்
7:15) என்று சொல்லும் இயேசு தொடர்ந்து அப்படித் தீட்டுப்படுத்துபவை
பற்றிய ஒரு பட்டியலையே தருகிறார் (மார்க். 7:21-23).
குடிக்கிற நீர், உண்ணுகிற உணவு, உடுக்கிற உடை எல்லாமே
சுத்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையெனில்
எவ்வளவு அருவெறுப்பு, முகச்சுளிப்பு! இவை அனைத்தையும் விட
மனம் தூய்மையாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க
வேண்டாமா?
"
உண்மையை அறிவிக்கும் வாக்கினால் நம்மை ஈன்றெடுத்த இறைவன்
அவ்வாக்கின்படி வாழ நம்மை அழைக்கிறார். "
இறைவார்த்தையைக்
கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக் கொள்ள
வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்"
(யாக்.
1:18,22).
தலைக்கவசம் பற்றி அரசு சட்டம் வகுத்தது என்றால், கவசமின்றிப்
பயணம் செய்யும் நம் சுதந்திரத்தைப் பறித்துக் கொள்ள
அன்று. மாறாக நம் உயிரைக் காத்துக் கொள்ளவே. இதனைப்
புரிந்து கொள்ளாமல் விபத்துக்குள்ளாகும் வேளையில் தவறை
எண்ணி வருந்துவதால் என்ன பயன்? சட்டங்களும் கட்டளைகளும்
மனித நல் வாழ்விற்கே!
சட்டம் என்பது வெறும் எழுத்தாலானது அல்ல. எழுத்துக்களிடையே
இழையோடும் உணர்வாலானது. எழுத்துககள் மனிதன் தருவது. உணர்வுகள்
கடவுள் தருவது.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
சடங்குகளால் இடம்
பெயரும் கடவுள்
ஐசக் ஒலே (Isaac Ole) என்ற இளையவர், தன் பாட்டி சொன்ன கதைகளைக்
கேட்டு வளர்ந்தவர். அவர்கள் குடும்பத்தில் நிலவும் பெருமை
மிகுந்த ஒரு பாரம்பரியத்தைப்பற்றி பாட்டி சொன்னது, ஐசக்கை
அதிகம் கவர்ந்தது. அதாவது, ஐசக்கின் அப்பா, தாத்தா,
கொள்ளுத்தாத்தா என்று, மூன்று தலைமுறையினர், தங்கள் 21வது
பிறந்தநாளன்று, ஊருக்கு நடுவே இருந்த ஏரியில் நடந்து
சென்று, மறுகரையில் இருந்த 'கிளப்'பில் முதல் முறையாக, சட்டப்பூர்வமாக
மது அருந்திவிட்டு, மீண்டும் ஏரியில் நடந்து, வீட்டுக்குத்
திரும்பினர் என்று பாட்டி சொன்னது, ஐசக்கின் மனதில் ஆழப்
பதிந்தது.
ஐசக் ஒலே, தன் 21வது பிறந்தநாளன்று, நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு
ஏரிக்குச் சென்றார். இருவரும் ஒரு படகில் ஏறி, ஏரியின் நடுப்பகுதிக்குச்
சென்றனர். அங்கிருந்து அடுத்தக் கரைக்கு நடந்து செல்ல, ஐசக்
படகைவிட்டு இறங்கி, நீரில் கால் வைத்தபோது, தண்ணீரில்
மூழ்கினார். படகிலிருந்த நண்பர் அவரைக் காப்பாற்றி, கரை
சேர்த்தார்.
அவமானமும், ஆத்திரமும் நிறைந்தவராய், வீடு திரும்பிய ஐசக்,
பாட்டியிடம் சென்று, "என் கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பா,
எல்லாரும் 21வது வயதில் ஏரியில் நடந்தார்கள் என்றால், என்னால்
மட்டும் ஏன் அது முடியாமல் போனது?" என்று கத்தினார்.
பாட்டி அவரை அமைதிப்படுத்தி, அமரவைத்து, "ஏனெனில், உன் அப்பா,
தாத்தா, கொள்ளுத்தாத்தா எல்லாரும் சனவரி மாதம் பிறந்தவர்கள்.
எனவே, அவர்களுடைய பிறந்தநாளன்று, ஏரி பனியால் உறைந்திருந்தது.
நீயோ, வெப்பம் நிறைந்த ஜூலை மாதம் பிறந்தவன்" என்று அன்பாக
விளக்கமளித்தார்.
இது ஒரு சிரிப்புத் துணுக்கு என்றாலும், சிந்தனையைத்
தூண்டும் கதை இது. பாரம்பரியம் என்ற போர்வைக்குள் மிக எளிதாக
மறைக்கப்படும் உண்மைகளைப்பற்றி சிந்திக்க, இந்தத் துணுக்கு
உதவியாக இருக்கும். கொள்ளுத்தாத்தா, தன் 21வது பிறந்தநாளன்று
ஏரியில் நடந்தார்; தாத்தா, தன் 21வது பிறந்தநாளன்று ஏரியில்
நடந்தார்; அப்பா, தன் 21வது பிறந்தநாளன்று ஏரியில் நடந்தார்...
என்று வரிசையாகச் சொல்லி, 21ம் பிறந்தநாளன்று, ஆண் வாரிசுகள்
ஏரியில் நடப்பது, அக்குடும்பத்தின் பாரம்பரியம் என்பதில்,
குடும்பத்தினர் பெருமைப்பட்டனர். ஆனால், அந்த சாகசத்தின்
பின்னணியில், சனவரி மாதம், குளிர்காலம், ஏரி நீர் உறைந்திருப்பது
போன்ற விவரங்கள், பாரம்பரியம் என்ற போர்வைக்குள் மறைந்துவிட்டன.
பின்னணிகளை மறைத்துவிட்டு, ஏரியில் நடப்பதை மட்டும், ஒரு
பாரம்பரியச் சடங்காக மாற்றிவிட்டது அக்குடும்பம். பாரம்பரியச்
சடங்குகளுக்கு உள்ள சக்தி இது.
குடும்பங்களில், சமுதாயத்தில், பணியாற்றும் இடங்களில் பல
பாரம்பரிய வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றை ஏன்
செய்கிறோம் என்பதற்குக் காரணங்களும் உள்ளன. ஆனால், காலப்போக்கில்,
காரணங்கள் மறக்கப்பட்டு, அல்லது, மறைக்கப்பட்டு, 'இப்படித்தான்
செய்யவேண்டும்' என்ற கட்டாயமாக மாறும்போது, அவை சடங்குகளாகின்றன.
இத்தகையைச் சடங்குகள், சம்பிரதாயங்கள், கடவுளோடும்,
கோவிலோடும் இணைக்கப்படும்போது, அவை, இம்மியளவும் மாற்றப்பட
முடியாத மதச் சடங்குகளாக மாறிவிடுகின்றன. பல வேளைகளில், இந்தச்
சடங்குகளும், பாரம்பரியங்களும் கடவுளைவிட முக்கியமான இடம்
பெறும் ஆபத்தும் உள்ளது. இத்தகைய ஓர் ஆபத்தைப்பற்றி
சிந்திக்க, இந்த ஞாயிறு வாசகங்கள், நம்மை, அழைக்கின்றன.
வெறுமையான சடங்குகளை மதம் என்று சொல்லும் விபரீதத்தை ஆய்வு
செய்ய, இன்றைய வாசகங்கள் வாய்ப்பளிக்கின்றன.
இன்றைய நற்செய்தியில், கழுவுதல் என்ற மரபு பற்றிய விவாதம்
எழுகிறது. கழுவாதக் கைகளுடன் இயேசுவின் சீடர்கள் உண்பது,
பெரும் சர்ச்சையை உருவாக்குகிறது. சம்பிரதாயக் கழுவுதல் (Ritual
Washing) என்பது யூதர்கள் மத்தியில் மிகக் கவனமாகப் பின்பற்றப்பட்ட
ஒரு சடங்கு. இன்றைய நற்செய்தியில் காணப்படும் வரிகள், இதனை
உறுதி செய்கின்றன: மாற்கு நற்செய்தி 7: 3-4
பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப்
பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து
வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள்,
பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள்
கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.
மேலோட்டமாகப் பார்த்தால், இச்சடங்கு மக்களின் உடல் நலனை
மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட வழிமுறை என்று நாம்
பொருள்கொள்ள முடியும். சந்தையிலிருந்து வாங்கிவரும் பொருள்கள்
சுத்தமில்லாமல் இருக்க வாய்ப்புண்டு. அதேபோல், வெளியில்
சென்று வீடு திரும்புவோரும் கிருமிகள் பலவற்றைச் சுமந்து
வர வாய்ப்புண்டு. எனவே, கைகளையும், பொருள்களையும் கழுவுவது,
உடல்நலனுக்கு உகந்தது என்பதை, யாரும் மறுக்க இயலாது.
ஆனால், பரிசேயர்களும், யூதர்களும் கழுவுதலை ஒரு சடங்காக
மேற்கொள்ள அவர்களை அதிகம் தூண்டிய காரணம், புற இனத்தவருடன்
அவர்கள் கொண்ட தொடர்புகள். சந்தையில் வாங்கிய பொருள்கள்,
வெளி உலகில் அவர்கள் நடமாடிய இடங்கள் ஆகியவை, புற இனத்தவரும்
பயன்படுத்திய இடங்கள், அல்லது, பொருள்கள் என்பதால், அவை
'தீட்டுப்பட்டவையாக' மாறுகின்றன. இந்தக் காரணமே, அவர்களை,
இந்த கழுவுதல் சடங்கை மிக கவனமாக மேற்கொள்ளத் தூண்டியது.
இத்துணை முக்கியத்துவம் பெற்ற கழுவுதல் சடங்கைச் செய்யாமல்,
இயேசுவின் சீடர்கள் தங்கள் உணவை உண்டது, அதிர்ச்சியையும்,
சர்ச்சையையும் உருவாக்கியது என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது.
இஸ்ரயேல் மக்கள் மத்தியில் இதுபோன்ற பல நூறு சம்பிரதாயங்கள்,
மரபுகள், சடங்குகள் கூடிக்கொண்டே சென்றன. இவற்றை, கூட்டவோ,
குறைக்கவோ வேண்டாம் என்று, மோசே, மக்களுக்கு தெளிவாக அறிவுறுத்தியதை,
இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம். இணைச்சட்டம் 4: 1-2
இஸ்ரயேலரே! கேளுங்கள்: நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள்
முறைமைகளின்படி ஒழுகுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச்
சொல்பவற்றோடு எதையும் சேர்க்கவும் வேண்டாம். அதிலிருந்து
எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின்
கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத்தருகிறேன்: அவற்றைப்
பின்பற்றுங்கள்.
சேர்க்கவும் வேண்டாம், நீக்கவும் வேண்டாம், கடவுளின் கட்டளைகளைப்
பின்பற்றுங்கள் என்று மோசே கூறிய தெளிவான அறிவுரையை மறந்துவிட்டு,
அவர் தந்த கட்டளைகளில் புதிய புதிய அர்த்தங்களைக் கண்டுபிடித்து,
சிறிய, அல்லது பெரிய மாற்றங்களை உருவாக்கி, அவற்றை எழுதப்படாத
மரபுகளாக, சட்டங்களாக மாற்றுவதில் பரிசேயர்களும் மறைநூல்
அறிஞர்களும் முழு கவனம் செலுத்தினர். இறைவன் தந்த பத்து கட்டளைகளை
சிறு, சிறு பகுதிகளாகப் பிரித்து, பரிசேயர்களும், மறைநூல்
அறிஞர்களும் 613 சட்டங்களை வகுத்து வைத்தனர். (Hebrew:
"613 mitzvot") (ஒரு சில மரபுகளின்படி, 685 சட்டங்கள் இயற்றப்பட்டன
என்று சொல்வோரும் உண்டு.)
சட்டங்கள், சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், மரபுகள் என்ற பல
பாரங்களைச் சுமந்து, பழகிப்போகும் ஒரு சமுதாயம், விரைவில்,
இவற்றையே கடவுள் நிலைக்கு உயர்த்திவிடும் ஆபத்து உண்டு. இப்படிப்பட்ட
ஒரு நிலை உருவாகும்போது, மக்கள் இறைவனை மறந்துவிட்டு, சட்டங்களை
வணங்கும் ஆபத்து உண்டென்று இறைவாக்கினர் எசாயா ஓர் எச்சரிக்கை
விடுத்தார். அந்த எச்சரிக்கையை இயேசு இன்றைய நற்செய்தியில்
மீண்டும் நினைவுறுத்துகிறார். எசாயா தந்த எச்சரிக்கை இதுதான்:
எசாயா 29 : 13
என் தலைவர் கூறுவது இதுவே: வாய்ச்சொல்லால் இம்மக்கள் என்னை
அணுகுகின்றனர்: உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்: அவர்கள்
உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது: அவர்களது இறையச்சம்
மனனம் செய்த வெறும் மனித கட்டளையைச் சார்ந்ததே!
மனப்பாடம் செய்த சட்டங்களை, மந்திரங்களை, உதடுகள்
சொன்னாலும், உள்ளத்தில் இறையுணர்வும், மனித உணர்வும்
சிறிதும் இல்லாமல் வாழமுடியும் என்பதை, விவிலிய அறிஞர்
வில்லியம் பார்க்லே அவர்கள், ஒரு குட்டிக்கதை வழியே
கூறியுள்ளார்.
மதப்பற்று அதிகம் உள்ள ஒருவர், தன் எதிரியைக் கொல்வதற்காக
அவரைத் துரத்திச் செல்கிறார். இருவரும் குதிரையில் ஏறி,
பறந்து கொண்டிருக்கின்றனர். அவ்வேளையில், நண்பகல்
வழிபாட்டுக்காக அழைப்பு ஒலிக்கிறது. எதிரியைக் கொல்ல துரத்திச்
செல்பவர், அந்த அழைப்பைக் கேட்டதும், குதிரையை விட்டு
குதித்து, அவ்விடத்திலேயே முழந்தாள் படியிட்டு, சொல்லவேண்டிய
செபங்களை அவசரம் அவசரமாகச் சொல்லி முடிக்கிறார். பின்னர்,
மீண்டும் குதிரையில் ஏறி, கொலைவெறியோடு, தன் எதிரியைத் துரத்திச்
செல்கிறார். அவர் உதடுகள் அந்நேரத்தில் சொன்னது செபமா? சாபமா?
தெரியவில்லை.
மதத்தின் உண்மைப் பொருள் மறைந்துவிடும் நேரங்களில், அந்த
வெற்றிடத்தை, சடங்குகளும், சட்டங்களும் நிரப்பிவிடுகின்றன.
இந்த எண்ணத்தை உணர்த்தும் மற்றொரு கதை இதோ - 'தாத்தா சாகக்கிடக்கிறார்'
என்ற அவசரச் செய்தியைக் கேட்டு, இரவு நேரத்தில் பங்குத்தந்தை,
அந்த முதியவர் வாழ்ந்த இல்லம் நோக்கிச் சென்றார். அப்போது,
திடீரென, ஒருவர், பங்குத்தந்தையை துப்பாக்கி முனையில் மிரட்டி,
பணம் கேட்டார். தன் 'பர்ஸை' எடுப்பதற்காக பங்குத்தந்தை முயன்றபோது,
அவர் குரு என்பதைக் கண்டுகொண்ட மனிதர், "மன்னிக்கவும்
சாமி. நீங்கள் ஒரு குரு என்று தெரியாமல் இப்படி
செய்துவிட்டேன். நீங்கள் போகலாம்" என்று கூறினார். இரவு
குளிராக இருந்ததால், பங்குத்தந்தை, அம்மனிதரிடம் 'சிகரெட்
பாக்கெட்'டை நீட்டினார். உடனே, அம்மனிதர், "வேண்டாம் சாமி.
நான் வெள்ளிக்கிழமைகளில் சிகரெட் குடிப்பதில்லை" என்று
கூறினார்.
மதத்தின் சடங்குகளையும், சட்டங்களையும் பின்பற்றுவதில்
நாம் காட்டும் ஆர்வம், மதத்தின் உண்மைப் பொருளை உணர்ந்து
பின்பற்றுவதில் காணாமல் போய்விடுகிறது. இத்தகைய 'குருட்டு'
ஆர்வத்தை தவறாகத் தூண்டிவிட்டு, அரசியல்வாதிகளும், சுயநலம்
மிக்க மதத்தலைவர்களும் மதத்தை ஓர் ஆயுதமாக மாற்றி, அதை அழிவிற்குப்
பயன்படுத்த, அனைவரையும், குறிப்பாக, இளையோரை, தூண்டி வருகின்றனர்
என்பது, நாம் வேதனையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஓர் உண்மை.
உண்மையான மதம், அல்லது சமயம் சார்ந்த வாழ்வு எப்படி இருக்கவேண்டும்
என்பதை, இன்றைய இரண்டாம் வாசகத்தில், யாக்கோபு தெளிவாகக்
கூறியுள்ளார்: யாக்கோபு எழுதிய திருமுகம் 1:27
தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான
சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும்
கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும்
ஆகும்.
புனித யாக்கோபு வரையறுத்த இந்த சமயவாழ்வை தன் சொந்த
வாழ்வாக மாற்றி, வறியோருடன் மிக நெருங்கி வாழ்ந்த அன்னை
தெரேசா செய்துவந்த பணியைக் கண்டு வியந்த ஒரு பத்திரிகையாளர்
அவரிடம் ஒருநாள், "உங்களால் எப்படி இவ்வளவு மகிழ்வாக இப்பணிகளைச்
செய்ய முடிகிறது?" என்று கேட்டார். அன்னை அவரிடம், "நான்
18 வயதில் என் குடும்பத்தினரை விட்டு, துறவற வாழ்வில் இணைந்தபோது,
'இயேசுவின் கைகளில் உன் கைகளை இணைத்துக் கொள்... அவருடன்
நடந்து செல்' என்று சொல்லி, என் அம்மா என்னை வழி அனுப்பி
வைத்தார்கள்... அம்மா அன்று சொன்ன வார்த்தைகளே என்னை இதுவரை
மகிழ்வுடன் வைத்துள்ளன" என்று அன்னை தெரேசா அவர்கள், அந்த
பத்திரிகையாளரிடம் சொன்னார்.
இறைவனுக்கு நெருக்கமாக வாழ்ந்த புனித அன்னை தெரேசாவின்
திருநாளை, செப்டம்பர் 5, வருகிற வியாழனன்று சிறப்பிக்கிறோம்.
அந்த அன்னையின் பரிந்துரையால், நாம் பின்பற்றும் மதத்தின்
உண்மைப் பொருளை உணர்ந்து, நம் சொல்லாலும், செயலாலும், இறைவனையும்,
மக்களையும் நெருங்கி வாழும் வரத்தை வேண்டுவோம்.
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
மறையுரை புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம்
பெங்களூர்
பொதுக்காலம் 22-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (இ.ச. 4:1-2,6-8)
இணைச்சட்ட நூலில் வரும் பெரும்பான்மையான பகுதிகள் ஏற்கனவே
கொடுக்கப்பட்ட லேவியர் ஆகமம், விடுதலைப்பயண நூல், எண்ணாகமம்
போன்ற புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. சீனாய் மலையிலிருந்து
யோர்தான் பள்ளத்தாக்கு வரையிலான பயணத்தின் வரலாற்று நிகழ்வுகள்
இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீண்ட மூன்று சொற்பொழிவுகளை
மோசே இதில் அளிக்கின்றார். இறைவனுக்கும் மக்களுக்கும்
இணைப்பாளராக விளங்கிய மோசே எந்நிலையிலும் இறைவனுக்கு கீழ்படிந்து
வாழ வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றார். மேலும்
மோசே உடன்படிக்கையின் வரலாற்றை நினைவூட்டி இறைவனின் சட்டங்களை
விளக்குகின்றார். இறைவனின் சட்டங்கள் ஞானத்தை உள்ளடக்கியது
என்றும் அவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார்.
இரண்டாம் வாசகப் பின்னணி யாக். 1:17-18,21-22:27)
இந்நூலின் ஆசிரியர் யாக்கோபு. மரபுக் கருத்துப்படி
யாக்கோபு ஆண்டவரின் சகோதரர், எருசலேம் திருச்சபையின்
தலைவர். பவுலுடன் தொடர்பு கொண்டிருந்தவர்.(கலா. 1:19;
2:9,12; தி.ப. 15:13) இந்நூல் சிதறுண்டு வாழும் பன்னிரு
குலத்தவர்க்கு (யாக். 1:1) எனத் தொடங்குவதின் மூலம்
சிரியா மற்றும் பாலஸ் தீனத்தில் வாழ்ந்த யூதக் கிறிஸ்தவங்களை
குறிக்கலாம். இன்றைய வாசகப் பகுதியில் ஞான
வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய மூன்று கருத்துகளை யாக்கோபு
கூறுகின்றார். அவை
1). இறைவன் நல்லவர். நல்லவை அனைத்தும் அவரிடமிருந்தே வருகின்றன.
2) சினமற்ற வாழ்வு சிறப்பான வாழ்வு.
3) விசுவாச வாழ்வின் அளவுகோல் பிறர்நலம் பேணல்.
மேலும் அனைவராலும் கைவிடப்பட்டவர்களுக்குப் புரியும்
தொண்டே சிறப்பானதாகும் எனவும் அனாதைகளையும் விதவைகளையும்
ஆதரிக்க வேண்டும் எனவும் இறைச் சட்டங்கள் மூலம் எடுத்துக்
காட்டுகிறார் (யாக். 1:27).
நற்செய்தி வாசகப் பின்னணி (மாற்கு 7:1-8,14-15,21-23)
பெரும் பாலான அறிஞர்களின் கருத்துப்படி முதலாவதாக எழுதப்பட்ட
மாற்கு நற்செய்தி பிற இனத்துக் கிறிஸ்தவர்களைக் குறிப்பாகக்
கண்முன் கொண்டு எழுதப்பட்டதாகும். இந்நூல் கி.பி.
64-70-ஆம் ஆண்டுக்குள் எழுதப்பட்டது. மாற்கு நற்செய்தியாளர்
இன்றைய நற்செய்தி மூலம் பரிசேயரும் மறைநூல் அறிஞர்களும்
மற்றும் பூதர் அனைவரும் பின்பற்றி வந்த மூதாதையர் மரபை
எடுத்துக்காட்டுகிறார். கை, கால் சுத்தம் செய்தல்,
பாத்திரங்களை கழுவுதல் அவற்றை பயன்படுத்துவதற்கு முன்
தூய்மை செய்தல் போன்ற சுத்திகரிப்பு மரபை விளக்குகிறார்.
அதைத் தொடர்ந்து பழமைக்கும் புதுமைக்கும் உள்ள போராட்டம்,
அகத்தூய்மைக்கும் புறத்தூய்மைக்கும் உள்ள தொடர்பு,
வெளிவேடத்தன்மை மற்றும் அவற்றால் ஏற்படும் தீமைகள் ஆகியவை
பற்றிய விளக்க உரையையும் இன்றைய நற்செய்தியில் காணலாம்.
மேலும் யூத சமூகத்தில் சடங்குமுறைகளையும் சம்பிரதாயங்களையும்
கடை பிடிப்பது புண்ணியம். கடை பிடிக்காதது பாவம் என்ற
நிலை இருந்து வந்தது. எனவே யூதர்கள் சட்டங்களை மட்டும்
பின்பற்றி அதில் இருக்கும் உண்மையான நிலைபாட்டினை, சட்டங்கள்
கூறும் 'நல்வாழ்வுக்கான நெறிகளை வாழத்தவறினர். இத்தகைய
நிலையை இயேசு பகிரங்கமாகச் சாடூவதை நற்செய்தி விளக்குகிறது.
"
இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்: இவர்கள்
உள்ளமோ என்னை விட்டு வெகுதொலைவில் இருக்கிறது (மாற்கு
7:6; எசா. 29:13).
மறையுரை
"
சட்டம் ஒரு இருட்டறை"
என்பதை நாம் கேள்விபட்டிருக்
கிறோம். ஆம் அந்த இருட்டறையிலே அடிமைப்பட்டு
கிடந்தவர்கள் சாதாரண யூத மக்கள். சட்டம் என்பது ஒரு
மீன் வலை. அதில் பெரிய மீன்கள் வலையை கிழித்துக்கொண்டு
வெளியே செல் கின்றன. சின்ன மீன்கள் மாட்டிக்கொள்கின்றன
என்ற வாக்கியங்கள் யூத சமூகத்திற்கு பொருத்தமானவை.
ஏனெனில் பெரிய மீன்களான பரிசேயர்கள் சதுசேயர்கள்
மற்றும் மறைநூல் வல்லுநர்கள் சட்டங்கள் என்ற
பெயராலும் மரபுகள் என்ற பெயராலும் சாதாரண யூத
குடிமக்களை பிறர் அன்பு, மனித அன்பு, மனித மாண்பு
இல்லாமல் நடத்தி வந்தனர். யூதர்களின் சட்டங்களும்
நெறிமுறை களும் பழக்கவழக்கங்களும் கழுதை போன்றுதான்
இருந்தது. கழுதையானது ஒருவர் அதன் பின்னே சென்றால்
உதைக்கும் அதன் முன்னே சென்றால் கடிக்கும். இதே
நிலைமைதான் யத மக்களுக்கும் சட்டங்கள் சம்பிரதாயங்கள்
என்ற பெயரால் இருந்து வந்தது. இந்த நிலையில்தான் இயேசு
ஆன்மீகப் புரட்சியை மட்டு மல்ல சமுதாயப் புரட்சியையும்
ஏற்படுத்தினார். அகவிடுதலையுடன் புறவிடுதலையும்
அளித்தார்.
இயேசு கிறிஸ்து தமது காலத்திலிருந்த எல்லாவிதமான
அநீதிகளையும் வன்முறையாகக் கண்டனம் செய்தார். சாரமற்ற
சக்கை போன்ற சமயச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும்
சாடினார். பரிசேயரின் வெளிவேடத்தை தோலுரித்துக்
காட்டினார். செபக் கூடங்களில் முதல் இருக்கைகளையும்
பொதுவிடங்களில் வணக்கத்தையும் விரும்பும் பரிசேயரின்
வெளிவேடமாகிய புளிப்பு மாலைக் குறித்து
எச்சரிக்கையாயிருக்கும் படி நம் ஆண்டவர் இயேசு
கூறினார் லூக்கா 12:2).
சட்டம் மனிதனுக்காக இருக்கின்றதே தவிர மனிதன்
சட்டத்திற்காக இல்லை என்பதை கோடிட்டுக் காட்டினார். மனித
நலன்களை மனித மாண்பை மேம்படுத்தாத சமயம் மற்றும்
சட்டங்கள், பழக்கவழக்கங்கள் போலியானது பொய்யானது என்பதை
உணர்த் தினார். சமுதாய விடுதலை, சமய விடுதலை இரண்டும்
இறையரசின் பரிமாணமாகும் என்பதை சுட்டிக்காட்டினார்.
ஆம் சம்பிரதாய சடங்குகளின் அர்த்தங்களைப் புரிந்து
கொள்ளாமல் அதற்குள் போய்ச் சிக்கிக் கொள்வது அல்ல சமய
வாழ்க்கை.
ஒருமுறை வேதம், உபநிஷத்துகள் என்று எல்லாவற்றிலும்
தேர்ந்த ஞானம் கொண்ட சாமியார் ஒருவர் இருந்தார். அவர்
தனது. சீடர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது பூனை
ஒன்று. சாமியாருக்கு எதிரே குறுக்கும் நெடுக்குமாக நடந்து
கொண்டி-. ருந்தது. இதனால் அந்த சாமியாரின் கவனம்
சிதறவில்லை. ஆனால். சீடர்களின் கவனம் சிதறியது. ஆகவே
பூனையை பிடித்துப் பக்கத்து. தூணில் கட்டும் படி
சாமியார் சொல்ல பூனையும் தூணில் கட்டப் பட்டது. அடுத்த
நாள், அதற்கு அடுத்த நாள் என்று அடுத்தடுத்து வந்த
நாட்களிலும் பூனை தொந்தரவு கொடுத்ததால் சாமியார் பாடம்
எடுக்கும் போதெல்லாம் தவறாமல் பூனை தூணிலே கட்டப்
பட்டது. சில வருடங்களில் சாமியார் இறந்துவிட்டார்.
சீடர் ஒருவர் அந்த ஆசிரமத்தின் புதிய சாமியார் ஆனார்.
அவர் சீடர்களுக்குப் பாடம் எடுக்கும் போதெல்லாம் பூனை
தவறாமல் தூணில் கட்டப்பட்டது. சில மாதங்களில் அந்தப்
பூனையும் இறந்தது. அடுத்த நாள் பாடம் எடுக்க வந்த
சாமியார், "
பாடம் எடுக்கும் போத பூனை கட்டப்பட
வேண்டும் என்று தெரியாதா? உடனே புதிய பூனையைப் பிடித்து
வந்து தூணில் கட்டுங்கள்"
என கட்டளை யிட்டார். இந்த
புதிய சாமியாருக்கு பாடத்தை விட பூனைதால் முக்கியமான
ஒன்றாகியது. இதே நிலைதான் யூதர்களின் சமுதாயத் திலும்
இருந்தது என்று கூறினால் மிகையாகாது.
கை கழுவுதல் என்பது தூய்மைக்காக ஏற்படுத்தபட்ட ஒரு
செயலாகும் அதுவே யூத குலத்தின் ஒரு காலகட்டத்தில் மாறி
கைகழுவினால்தான் சாப்பிட வேண்டும் என்றானது. இப்படி
ஏகப்பட்ட சட்டங்களை சம்பிரதாயங்களை வைத்துக்கொண்டு
உண்மையான இறைவனை மனித மாண்பிலும் உதறிதள்ளினார்கள் யூத
தலைவர்கள், இதனால் எசாயா, "
மனித கட்டளைகளை கோட்பாடு:
களாக கற்பிக்கின்றார்கள். இவர்கள் என்னை வழிபடுவது
வீண்"
என்று எழுதியுள்ளார் (எசா. 29:13).
மேலும் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்துமே நல்லவை ஏனெனில்
மனிதருக்கும் உள்ளேயிருந்து வருவதே அவர்களை
தீட்டுப்படுத்தும் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு,
கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம்,
காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றை
செய்ய தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய
இவை யனைத்தும் உள்ளத்திலிருந்து மனிதரை
தீட்டுப்படுத்துகின்றன, என இயேசு உள்ளொன்று வைத்து
வெளியொன்று செய்வதை இன்றைய நற்செய்தி வழியாக சாடுகிறார்.
(மாற்கு 7:20-23) எனவே வெளிசுத்திகரிப்பை விட உள்ளார்ந்த
சுத்திகரிப்பு அவசியமான தாகும்.
இறைவனின் பார்வையில் சட்டங்கள் மனித மாண்புக்கும்
சமுதாய வளர்ச்சிக்கும் தேவையான ஒன்றுதான். ஏனெனில்
சட்டங்கள் சம்பிரதாயங்கள் இல்லாத சமுதாயத்தை ஒழுக்கம்
என்பது இருக்காது. சுருங்கச் சொன்னால் அது கடிவாளம்
இல்லாத குதிரை போன்றது. ஆகையால்தான் இறைவன் இஸ்ராயேல்
மக்களின் வளர்ச்சிக்காக சட்டங்கள் தருவதை முதல் வாசகம்
சுட்டிக்காட்டுகிறது. நான் இன்று நேர்மை மிகு சட்டங்களை
உங்களுக்குத் தந்துள்ளேன். என (இ.ச. 4-7) இறைவன்
கூறுகிறார். இரண்டாம் வாசகத்தில் யாக்கோபு மனித நேயத்தை
வளர்க்கும் சட்டங்களை தருகிறார். அது என்னவென்றால்
துன்புறும் அனாதை- களையும் கைம்பெண்களையும்
கவனிப்பதிலும் உலகத்தால் கறை- படாதபடி தம்மை
காத்துக்கொள்வது ஆகும் (யாக். 1-27).
ஆனால் யூதர்களே சட்டங்களை பிறரின் வளர்ச்சிக்காக
பயன்படுத்தாமல் பிறரை நசுக்கவும் தற்பெருமைக்காகவுமே
பயன்- படுத்தினார்கள். சக்கையை வைத்துக்கொண்டு சாரை
தாக்கி எறிவது போல வார்த்தைகளை பிடித்துக்கொண்டு உண்மையான
வாழ்வின் பாதையினை தொலைத்தனர்.
இன்று நமது நடைமுறை வாழ்வினை எடுத்துக்கொள்வோம். நாம்
நம்முடைய சமுதாயத்தில் உள்ள சட்டதிட்டங்களை எம்-
முறையில் அணுகுகிறோம் இயேசுவின் பார்வையில் சட்டங்களை
பார்த்து பின்பற்றுகிறோமா? அல்லது யபூததலைவர்களின்
பார்வையில் சட்டங்களை பார்த்து பின்பற்றுகிறோமா? இன்றைய
நற்செய்தியின் மூலம் ஆண்டவர் நமக்கு எச்சரிக்கை மணி
அடிக்கிறார். வெளிப் படையான செயல்களை மட்டும் செய்து
வெளிவேடங்களுக்காக நீதிமானாக, பக்திமானாக காட்டிக்கொள்ள
முனையும் நம்மை எச்சரிக்கிறார். மாட்டின் வாலை
பிடித்துக்கொண்டு மூக்கு கையிரை விட்டவர்கள் போலத்தான்
நாம் பெரும்பான்மையான சமயத்தில் இருக்கின்றோம்.
ஆலயத்திற்கு வருவது ஜெபிப்பது விவிலியம் வாசிப்பதோடு
நாம் பெரும்பான்மையான சமயத்தில் நின்றுவிடுகின் றோம்.
நமது வீட்டின் அருகே இருக்கும் ஏழை எளியவர்களை மறந்து
விடுகின்றோம். நாம் செய்யும் குற்றங்களை மறைக்க பிறர்
மீது பழி போடுகிறோம். பொய் சான்று பகர்கின்றோம்.
எப்போது வாசிக்கும் இறைவார்த்தைக்கு உருவம் கொடுத்து
வார்த்தையை வாழ்வாக்க போகிறோம்?
நமது இதயத்தில் கசப்புணர்வு, காழ்ப்புணர்ச்சி, போட்டி,
அகங்காரம், ஆணவம் இருக்கும் வரை நம்முடைய சட்டங்கள்,
பழக்க வழக்கங்கள், நம்மை நேர்மையாளனாக நீதிமானாக மாற்ற
முடியாது. இதன் விளைவாக, நாமும் கெட்டு, சட்டங்களையும்
கெடுத்து, பிறரையும் கெடுப்போம் என்பது தான் உண்மை.
எனவே மனிதனை மாற்றி மனிதத்தை உயர்த்த கடவுள் தந்த
சட்டங்களை முழுமையாக புரிந்து, அதன் சக்கையை விட்டு
சாற்றினை சுவைப்போம். இயேசு, சட்டங்களை குருட்டுத்தனமாக
அல்ல. மாறாக, மனப்பக்குவத்தோடு, சரியாக அவற்றை கடைபிடிக்க
நம்மை அழைக்கிறார். அழைத்தலுக்கு செவிமடுத்து அவற்றை
வாழ்வாக்கு வோம் பிறருக்க அந்த அருளின் வாழ்வை
பகிர்ந்தளிப்போம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
* இன்று நம்முடைய. வாழ்வில் நம் பங்கில் வெளி
ஆடம்பரங்- களுக்கு முக்கியத்துவம் தருகிறோமா? அல்லது
ஒப்புரவு அருட்- சாதனத்திற்கு முக்கியம் தந்து
அகவாழ்வுக்கு, அகத்தூய்மைக்கு முக்கியத்துவம் தருகிறோமா?
* உள்ளத்தில் இருப்பதை அறிவார். அப்படியிருக்க நாம்
மட்டும் உள்ளத்தை மறைத்து, உதட்டில் ஒன்று பேசுவதேன்?
* திருச்சட்டங்களுக்கு நாம் எவ்வித்தில் மரியாதை
செய்கிறோம்? யூதர்களைப்போலவா? அல்லது இயேசுவைப் போலவா?
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ