தந்தையின் ஆசி பெற வந்திருக்கும்
அன்பிற்குரியவர்களே!
யோக நதி ஒன்றை யோர்தான் நதி ஒன்று திரு
நீராட்டுகின்றது! இந்த திருநீராட்டு விழாவுக்கு பாரிசுத்த ஆவி
புறா வடிவமெடுத்து வருகை தருகின்றது! வானத்து கதவைத் திறந்து
தந்தையின் குரல் ஒலியோ இவரே என் அன்பார்ந்த மகன் இவரிடம்
பூரிப்படைகிறேன் என வாழ்த்தி மொழிகின்றது!
இங்கே படைப்பின் கடவுள் தன் படைப்பிடம் தலை தாழ்த்தி
நிற்கின்றார்! தண்ணீராலும், தூய ஆவியாலும் புதிய வலுப்பெறுகிறார்.
பணிக்குப் புதிய தடம் அமைக்கிறார். விசுவாசத்தின்
வெளிப்பாடாகின்றார்.
இன்றைய திருப்பலிக்கு யோர்தான் நதி நம்மை அன்போடு வரவேற்கின்றது!
நம்மையும் யோர்தான் நதி திருநீராட்ட விரும்பி திசை திரும்பி வந்தால்,
நமது திருநீராட்டை பெற்றுக் கொள்ள நம் தலையை தாழ்த்துவோமா?
முக்கிய பணியில் இருக்கிறேன், பதவியில் இருக்கிறேன் எனக்கேன்
இந்த திருநீராட்டு என தவிர்த்து நிற்போமா? தலைதாழ்த்தி
சிந்திப்போம்!
எது எப்படியானாலும் அறியாத பருவத்தில், நமது திருமுழுக்கின்
போது நம் மீது இறங்கிய பரிசுத்த ஆவியின் செயல்பாடு, எப்போதும்
நம்மோடு உண்டு! இவரே என் அன்பார்ந்த மகன், மகள் என்ற பேரொலி நம்
செவியிலும் ஒலித்திருக்கும்! அதை அப்படியே மறு பதிவு செய்து இப்போது
நம் மனதுக்குள் ஒடவிட்டு விசுவாசத்தை உறுதிப்படுத்தும் திருப்பலி
இது. இதில் பங்கேற்போம். புதிய படைப்பாய் தடம்பதித்து நடப்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. ஆற்றலோடு ஆட்சி புரியும் இறைவா!
திருச்சபையின் தலைவர்கள் ஆற்றலோடு ஆட்சிபுரிய அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம் !
2. ஆறுதல் கூறுங்கள் என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள் என மொழிந்த ஆண்டவரே!
நாடுகளின் தலைவர்கள் ஆறுதலும் கனிமொழியும் நிறைந்த பாதையில் மக்களை வழிநடத்திச்
செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம் !
3. ஆடுகளைத் தோளில் சுமக்கும் ஆயனைப் போல எமை சுமக்கும் இறைவா!
மக்கள் எதிர் நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப் பேறாக பெற்றுக் கொள்ள
வழிகாட்டும் எமது பங்குத் தந்தையை உமது தோளில் சுமந்து பராமாரிக்க வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகிறோம் !
4. திருமுழுக்கினால் திடம் பெற்ற இயேசுவே!
நாங்களும் எங்களது திருமுழுக்கில் பெற்றுக்கொண்ட ஆவியானவாரின் அருட்துணையால்
யேசுவைப் போல வாழ அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்
5. திருமுழுக்கு பெருவிழா வழியாக எங்களோடு உரையாடிக் கொண்டிருக்கின்ற இறைவா!
வேதனையோடு இருப்பவார், கண்ணீரோடு தவிப்போர், நோயுற்றோர், புதிதாய் திருமுழுக்குப்
பெற விரும்புவோர், திருமுழுக்குப் பெற்று அதன் மகத்துவத்தை அறியாதோர் அனைவருடனும்
நீர் இருந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம் .
6. யோர்தான் நதியில் திருமுழுக்கு பெற்ற ஆண்டவரே!
தூய ஆவியினால் நிரப்பப் பெற்ற நீர், இறையாட்சியின் விழுமியங்களை
முழக்கமிட்டு அறிவித்தது போல, நாங்களும் திருமுழுக்கினால் பெற்றுக் கொண்ட அழைப்பிற்கு ஏற்ப
வாழ்க்கை நடத்திட அருள்புரியும்படி, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
இவரே என் அன்பார்ந்த மகன் இவரிடம் நான் பூரிப்படைகின்றேன். பரம ஏழையான நீக்ரோ ஒருவன் பளுவான இரண்டு பெட்டிகளை தலையில் தூக்கிக் கொண்டு நடக்க
இயலாத நிலையில் நடந்து சென்றார். அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த
வெள்ளைக்கார அமொரிக்கர் நீக்ரோவை அணுகி நீ செல்லும் திசையில் தான் நானும்
செல்கிறேன். உனது தலைச் சுமையில் ஒன்றை எனது தலையில் இறக்கி வை என்று சொல்லி தலையை
தாழ்த்தி சுமையை வாங்கிக் கொண்டார். நீக்ரோ இதைக் கண்டு மலைத்துப் போனார். அன்று
நீக்ரோவின் பெட்டியை தலையில் சுமந்த அமொரிக்கர் யார் தொரியுமா? பிற்காலத்தில்
அமரிக்க ஜனாதிபதியாகத் திகழ்ந்த தியேடார் ரூஸ்வெல்ட்.
எல்லாருக்கும் தலைவராக இருக்க ஆசை.... ஆனால் எவருமே தனக்கு தலைவராக இருப்பதில்லை....
தராசில் தாழ்ந்த தட்டுக்குத்தான் பெருமை....
தீக்குச்சி ஒருநாள் தீப்பெட்டியைப் பார்த்து
"நாம் இருவரும் உரசிக் கொள்ளும்போது
நான் மட்டும் எரிந்து போவதற்கு என்ன காரணம்?" என்று கேட்டது. அதற்குத் தீப்பெட்டி,
"உன்னுடைய தலைக்கணம் தான் அதற்குக் காரணம்" என்று பதில் சொல்லிற்று.
தாழ்ச்சியோடு இருக்கும் போதெல்லாம் வெற்றி நமதே! உயர்வானதை ஏற்றுக் கொள்ளும்
போதெல்லாம் உற்சவம் நமதே!
ஸ்பெயின் தேசத்தில் புரட்சி நடந்து கொண்டிருந்த காலம்.
அப்பொழுது அநேக குருக்களைச் சிறையில் அடைத்திருந்தார்கள். சிறையில்
அடைக்கப்பட்டிருந்தவர்களையும் கொல்வதற்கான நேரம் நெருங்கிற்று. குண்டுகளை
நிறைத்துக்கொண்டு, துப்பாக்கியைக் கொண்டு வந்தவர்களைப் பார்த்து, கை விலங்குகளோடு
இருந்த குருக்கள் எங்கள் கை விலங்குகளைச் சிறிது நேரம் அவிழ்த்து விட்டால் நாங்கள்
உங்களை ஆசிர்வதிப்போம் என்று சொன்னார்கள். இதைக் கேட்டு காவலர்கள் கோபங்கொண்டு
குருக்களின் கைகளையே வெட்டி விட்டனர். இரத்தம் வடியும் கைகளை உயர்த்தி பிடித்துக்
கொண்டு அவர்களைக் குருக்கள் ஆசிர்வதித்தனர்!
வானகத் தந்தையின் மக்கள் இவர்கள் அல்லவா? இவர்களிடம் தந்தைக் கடவுள்
பூரிப்படைந்திருப்பாரல்லவா?
நம் வானகத் தந்தை நம்மிடம் பூரிப்படைவாரா?
நம்மையே தாழ்த்திக் கொள்ளும் போதெல்லாம் புதிய பிறப்பெடுக்கிறோம் . புதிதாய் தடம்
பதித்து நடக்கிறோம் . அப்போது வானகத் தந்தை பூரிப்படைவார் என்பதை உணர்வோம்.
மறையுரைச்சிந்தனை
அருட்சகோதரி: மெரினா
O.S.M.
எதிர்பார்ப்பை
இரட்டிப்பாக்குங்கள்.
எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றம் தரும், எதிர்பார்ப்புக்களைக்
குறைத்துக் கொண்டால் எதிர்வருவது தானாக நிறையும் என்று
பலவற்றை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதிகமாக எதிர்பார்த்தால்
ஏமாற்றம் தான் வரும் என்றெண்ணி அதில் கவனமாக இருந்த நாட்கள்
கூட இருக்கலாம் இப்படியிருக்க நமது எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்க
அழைப்புவிடுக்கின்றன இன்றைய வாசகங்கள். கிறிஸ்து பிறப்பு,
ஞானியர் வருகை, திருமுழுக்கு என்று மூன்று முப்பெரும்
விழாக்களுடன் கிறிஸ்து பிறப்புக்காலத்தை நிறைவு செய்து
பொதுக்காலத்தில் அடியெடுத்து வைக்க இருக்கும் நாம் நல்லவற்றை
எதிர்பார்க்க அழைக்கப்படுகின்றோம்.
கிறிஸ்து பிறப்பு, மெசியா எங்கு பிறப்பார்? எப்படி பிறப்பார்?
என்ற எதிர்பார்ப்போடு தொடங்கி ஏழ்மையின் மன்னனாக பிறந்து
மண்ணகத்தில் மகிழ்ச்சி தந்ததோடு நிறைவடைந்தது.
ஞானியர் வருகை, யூதரின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே என்ற
எதிர்பார்ப்போடு தொடங்கி, மாடடைக் குடிலில் மரியின் மடியில்
அரியணை கொண்ட மகவின் நிறைவோடு முடிவடைந்தது.
திருமுழுக்கு விழா, யோவான் தான் மெசியாவாக இருப்பாரோ என்ற
ஏக்கத்தோடு தொடங்கி இவரே என் அன்பார்ந்த மகன் இவர்
பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்ற வாழ்த்தோடு வழிநடக்கிறது.
ஆக நாம் கொண்டாடிய அனைத்து விழாக்களும் ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு
தொடங்கி நல்ல நிறைவுடன் முடிவடைகிறது. அவ்வகையில் இன்று
நாம் கொண்டாடும் நமதாண்டவரின் திருமுழுக்கு பெருவிழாவும்
நல்லதொரு எதிர்பார்ப்பினை நம் மனதில் உருவாக்குகிறது. இன்றைய
நற்செய்தி பகுதி மூன்று நிலை மனிதர்களின் எதிர்பார்ப்பும்
அவர்களது நிறைவும் பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றன. முதல்
நிலை, இடை நிலை, கடை நிலை.
கடை நிலை;
கலிலேயா கடற்கரைப் பகுதியைச்சார்ந்த மக்கள் இந்நிலை வகையைச்சார்ந்தவர்கள்.
இவர்களின் எதிர்பார்ப்பு, மெசியா யாராக இருக்கும் என்பதில்
இருந்தது. யோவானாக இருக்குமோ ? இவர் தான் மக்களை மனம்மாற்றுகின்றார்.
ஆனால் ஆடை உணவு உறைவிடம் அனைத்தும் மிக மிக எளிமையாக இருக்கின்றதே
என்ற எண்ணம் இருந்திருக்கலாம். இவர்களது எதிர்பார்ப்பு
வெளிப்புறத்தோற்றத்தையும் செயல்பாட்டையும் பொறுத்ததாக இருந்தது.
ஆனாலும் நன்மையை நோக்கிய ஒரு எதிர்பார்ப்பாக இருந்ததால் அதுவும்
நிறைவேற்றப்படுகிறது. மெசியா யார் என்று கண்டு கொள்ளும் ஒரு
வாய்ப்பினைப் பெறுகின்றனர். யோவான் தான் இல்லையேன்று
சொல்லி இயேசுவைப் பார்த்து இவரே கடவுளின் ஆட்டுக்குட்டி என்று
சுட்டிக்காட்டுகின்றார். இவர்களது எதிர்பார்ப்பின்
நிலைக்கேற்ப நிறைவு செய்யப்படுகின்றார்கள்.
இடை நிலை :
இவ்வகை நிலையில் திருமுழுக்கு யோவான் இருக்கிறார். ஆண்டவராகிய
மெசியாவிடம் நான் திருமுழுக்கு வாங்க வேண்டும் என்று எண்ணி
எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இயேசுவே இவரிடம்
திருமுழுக்கு வாங்க வருகின்றார். தன்னைத் தாழ்த்துகிறவன்
உயர்த்தப்படுவான் என்னும் மறைநூல் வரிகள் இவர் தம்
வாழ்வாலும் வாக்காலும் நிறைவேற்றப்படுகின்றது. இவரது எதிர்பார்ப்பு
உள்ளம் சார்ந்ததாய் இருக்கின்றது. நான் தண்ணீரால்
திருமுழுக்கு கொடுக்கின்றேன் இவர் தூய ஆவியினால்
கொடுப்பார் என்று எதிர்பார்த்து அவருக்கு முன்னோடியாக இருந்து
முன்னுரை அளிக்கின்றார். விளைவு அந்த தூய ஆவியின் வல்லமையையும்
குரலையும் நேரில் கண்டு அனுபவிக்கும் நிலை பெற்றார். அதில்
நிறைவும் பெற்றார்.
முதல் நிலை ;
இவ்வகை முதல் நிலையில் இயேசு இருக்கின்றார். கடவுளின் மகனான
அவர் தன்னை தாழ்த்தி ஒரு சாதாரண மனிதர் போல் திருமுழுக்கு
பெற எண்ணினார். பாவிகளோடு பாவிகளாக தன்னையும் இணைத்து
தாழ்த்த எதிர்பார்த்தார். கடவுளோ இவரின் எண்ணத்தையும், செயலையும்
உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் அதை உடன் இருப்போரும் உணரும்படிச்
செய்தார். பாவியைப் போல இருக்க நினைத்தவர் மேல் பரிசுத்த
ஆவி பொழிந்து இவரே என் அன்பார்ந்த மகன் என்று அறிக்கையிடுகின்றார்.
இவர் தனி ஆள் அல்ல நாங்கள் மூவர் என்பதை எண்பிக்கும் வகையில்
தூய ஆவியை புறா வடிவில் அவர் மேல் தங்கச்செய்தார். அனைவர்
முன்னிலையிலும் கடவுளின் மகன் என்று அழைக்கப்படும்
பேற்றினைப் பெறச்செய்கின்றார்.
ஆக இந்த திருமுழுக்கு பெருவிழா நமக்கு விடுக்கும் அழைப்பு
இதுதான். எதிர்பாருங்கள் கடை நிலை மனிதர் போல் அல்லாமல் முதல்
நிலை மனிதர் போல. ஏனெனில் நமது எண்ணங்களும் சரி எதிர்பார்ப்புக்களும்
சரி எப்போதும் உயர்ந்தவகையாக இருக்க வேண்டும். நமது எதிர்பார்ப்புக்களை
இரட்டிப்பாக்குவோம். இதனால் வரும் பலன்கள் நமக்கு இரட்டிப்பான
மகிழ்வைத்தரும். யோவான் போல எதிர்பார்ப்போம் இயேசுவை
சுட்டிக்காட்டும் மனிதர்களாக மாறலாம் . இயேசு போல எதிர்பார்ப்போம்
இவரே என் அன்பார்ந்த மகன் என்று அழைக்கப்படும் பேறுபெறலாம்.
எனவே நமது நல்ல எதிர்பார்ப்புக்களை இரட்டிப்பாக்குவோம்.
நிறைவான பலன்களை அடைவோம். இறைவன் நம்மையும் நம் குடும்பத்திலுள்ள
ஒவ்வொருவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி.
நீர்நிலைகளுக்கு வாருங்கள்!
இன்றைய பதிலுரைப்பாடலின் பல்லவியாக,
'மீட்பளிக்கும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்'
(காண். எசா 12) தரப்பட்டுள்ளது. இயேசுவின் திருஇருதயப்
பெருவிழா அன்று திருப்பலியின் வருகைப் பல்லவியாகவும் இவ்வாக்கியம்
அமைந்துள்ளது. 'தண்ணீரை நோக்கி வருமாறு அழைத்தல்' அல்லது 'தண்ணீரை
நோக்கிச் செல்லுதல்' விவிலியத்தில் வளமை, பசுமை, மற்றும்
செழிப்பைச் சுட்டிக்காட்டுகிறது.
ஏன்? பாலஸ்தீனமும் இஸ்ரயேலின் பெரும் பகுதியும் பாலைநிலப்
பகுதி. பாலைநிலப் பகுதியில் வாழ்பவர்களுக்குத் தண்ணீர் மிகப்
பெரிய புதையல். தண்ணீர் இருக்கும் இடம் நாடி அவர்கள் செல்வது
இயல்பு. முதல் படைப்புக் கதையாடலிலும் எங்கும் தண்ணீர்
நிறைந்திருப்பதை நாம் காண முடிகிறது. மேலும், தண்ணீர்
வாழ்வின் ஊற்றாகவும் இருக்கிறது. ஏதேன் தோட்டத்திற்கு நீர்
பாய்ச்சுவதற்காக பீசோன், கீகோன், திக்ரீசு, மற்றும் யூப்பிரத்தீசு
என்னும் நான்கு ஆறுகள் ஓடுகின்றன (காண். தொநூ 2:10-14). ஆகார்
தண்ணீர் தந்து தனக்கு வாழ்வுதரும் இறைவனைக் கண்டுகொள்கின்றார்
(காண். தொநூ 21:19). தானும் தன் ஊர் மக்களும் பயன்படுத்துவதற்காக
கிணறு ஒன்றை வெட்டுகின்ற ஆபிரகாம் அபிமெலக்கோடு உடன்படிக்கை
செய்துகொள்கின்றார் (காண். தொநூ 21:22-33). யோர்தான் ஆற்றை
யோசுவாவின் தலைமையில் கடக்கின்ற இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட
நாட்டுக்குள் நுழைகின்றனர் (காண். யோசு 3). ஆண்டவரைத் தன்
ஆயர் என அழைக்கின்ற தாவீது, 'அமைதியான நீர்நிலைகளுக்கு என
அழைத்துச் செல்வார்' (காண். திபா 23:2) என்று
பாடுகின்றார்.
ஆக, புதிய வாழ்வு, புதிய தொடக்கம், புதிய திருப்பம், புதிய
நாடு, புதிய நிறைவு எனப் புதியவற்றின் ஊற்றாக இருக்கின்றது
நீர்நிலை. இன்றைய முதல் வாசகத்தில், 'நீர்நிலைகளுக்கு
வாருங்கள்' என இஸ்ரயேல் மக்களை அழைக்கின்றார் ஆண்டவராகிய
கடவுள். நற்செய்தி வாசகத்தில், 'இயேசு நீர்நிலைக்கு வருகின்றார்.'
நாமும் நம் திருமுழுக்கு நாளில் நீர்நிலைக்கு நம்
பெற்றோராலும் ஞானப் பெற்றோராலும் அழைத்துச் செல்லப்
பெற்றோம். நீர்நிலைகளுக்கு வருதல் என்பதன் பொருள்,
திருமுழுக்கின் பொருள், மற்றும் நீர்நிலைக்கு வர நாம்
செய்ய வேண்டியவை எவை என்று இன்று சிந்திப்போம்.
முதல் வாசகம் (காண். எசா 55:1-11) 'இரண்டாம் எசாயா'
நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனிய அடிமைத்தனம்
நிறைவுறும் காலத்தில் (கி.மு. 536) இந்த இறைவாக்கு உரைவாக்கப்படுகிறது.
பாபிலோனிய அடிமைத்தனத்தின் நிறைவையும், அடிமைத்தனத்திலிருந்து
விடுதலை பெறும் மக்கள் பெறும் மகிழ்ச்சியையும் முன்னுரைப்பதாக
இருக்கிறது இந்த இறைவாக்குப் பகுதி. இஸ்ரயேல் மக்கள் தங்கள்
உடன்படிக்கை உறவிலிருந்து பிறழ்வுபட்டதால் ஆண்டவராகிய கடவுள்
பாபிலோனிய நாடுகடத்தலுக்கு அவர்களை உட்படுத்தினார் என்ற
செய்தியைத் தெரிவித்த எசாயா, இன்று, அவர்கள் திரும்பி வரும்போது
மீண்டும் அதே பழைய பிரமாணிக்கமின்மையில் விழக்கூடாது என
அவர்களை எச்சரிக்கின்றார்.
முதல் வாசகம் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது: ஒன்று,
விருந்துக்கான அழைப்பு இரண்டு, மனந்திரும்புதலுக்கான கட்டளை
மூன்று, கடவுளின் வாக்குறுதியின் உறுதித்தன்மை. 'வாருங்கள்!
பருகுங்கள்! உண்ணு ங்கள்!' என்று தன் மக்களை அழைக்கின்றார்
ஆண்டவராகிய கடவுள். தண்ணீரும் உணவும் ஆண்டவராகிய கடவுள்
வழங்குகின்ற விருந்தின் உருவகங்களாக இருக்கின்றன. இந்த
விருந்தில் பங்கேற்க வேண்டுமெனில், அவர்கள் ஆண்டவராகிய கடவுளுக்குச்
செவிகொடுக்க வேண்டும். அவரை நோக்கித் திரும்ப வேண்டும்.
கடவுளின் வாக்குறுதியின் உறுதித்தன்மை இரண்டு நிலைகளில் வரையறுக்கப்படுகிறது:
ஒன்று, கடவுளின் எண்ணங்கள் மனித எண்ணங்களை விட உயர்ந்தவை.
இரண்டு, கடவுளின் வார்த்தை எதற்காகப் புறப்பட்டதோ அதைச்
செய்து முடிக்கிறது.
இரண்டாம் வாசகத்தில் (காண். 1 யோவா 5:1-9) தொடக்ககாலக்
கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும் செயல்பாடுகளின் அடிப்படை இருப்பதைக்
காண்கிறோம். இயேசுவை, 'கிறிஸ்து' என ஏற்று நம்பிக்கை அறிக்கை
செய்வதே முதன்மையானது. இந்த நம்பிக்கையால் ஒருவர் உலகை
வெல்கிறார். 'உலகு' என்பது தீமையின் அடையாளம். மேலும், இந்த
நம்பிக்கை கொண்டிருப்பவர் ஒருவர் மற்றவரை அன்பு
செய்கிறார். இரண்டாம் வாசகத்தின் இரண்டாம் பகுதி, யோவான்
கொண்டிருந்த மூவொரு இறைவன் பற்றிய புரிதலை நமக்குச் சொல்கிறது.
'நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு' என்கிறார் யோவான்.
இதன் வழியாக, இயேசுவின் பணி நீரில் (திருமுழுக்கில்) தொடங்கி,
இரத்தத்தில் (சிலுவையில்) நிறைவுறுகிறது என்று இயேசுவின்
ஒட்டுமொத்தப் பணி, பாடுகள், மற்றும் இறப்பைச் சுருங்கச்
சொல்கின்றார். தூய ஆவியார், இயேசுவின் மீட்புப் பணியின்
தாக்கத்தை நம்பிக்கையாளர்கள் இதயத்தில் நம்பிக்கை மற்றும்
அன்பு வழியாகத் தொடர்ந்து நடைபெறச் செய்கின்றார். இறுதியாக,
இயேசுவின் பணியும், தூய ஆவியாரின் செயல்பாடுகளும் கடவுளின்
அன்புக்கும் மீட்புத் திட்டத்துக்கும் சான்று பகர்கின்றன.
ஆக, கிறிஸ்தவ வாழ்வு என்பது இயேசுவை நம்புவதிலும், அந்த நம்பிக்கையில்
நிலைத்திருந்து ஒருவர் மற்றவரை அன்பு செய்வதிலும் அடங்கியுள்ளது.
நம்பிக்கையை அறிக்கையிட்டு, அன்பினால் செயல்பட நம்பிக்கையாளர்களின்
அழைக்கப்படுகின்றனர்.
நற்செய்தி வாசகம் (காண். மாற் 1:7-11), இரண்டு பகுதிகளாக
அமைந்துள்ளது. முதல் பகுதியில், திருமுழுக்கு யோவான் தன்னைப்
பற்றியும், தனக்குப் பின் வருபவர் பற்றியும் சான்று பகர்கின்றார்.
இரண்டாவது பகுதியில், இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வை
மாற்கு பதிவு செய்கின்றார். திருமுழுக்கு யோவான், இயேசு தன்னைவிட
வலிமை வாய்ந்தவர் என உரைக்கின்றார். இயேசுவின் வலிமை அல்லது
மேன்மை அவர் தரும் திருமுழுக்கில் உள்ளது: இயேசு தரும்
திருமுழுக்கு தூய ஆவியால் நிகழ்ந்தேறுகிறது. இது இயேசுவின்
உயிர்ப்புக்குப் பின்னர் நிகழும் பெந்தகோஸ்தே நிகழ்வை
முன்னுரைப்பதாக அமைந்துள்ளது. மேலும், திருமுழுக்கு யோவான்
தன்னை இயேசுவின் அடிமை அல்லது பணியாளர் என்ற நிலைக்குத் தன்னையே
தாழ்த்திக் கொள்கிறார்.
இயேசு திருழுக்கு யோவானின் திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றார்.
யோவான் மனமாற்றத்துக்கான திருமுழுக்கை வழங்கினார். இயேசு
தன் பாவங்களுக்காக அல்ல, மாறாக, தன் பணிவாழ்வின் தொடக்கத்தை
முன்னிட்டே யோவானிடம் திருமுழுக்கு பெறுகின்றார். ஆகையால்தான்,
'என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்'
என வானத்திலிருந்து குரல் கேட்கிறது. இயேசுவின் பணிவாழ்வுத்
தொடக்கத்தை கடவுள் ஏற்பதாக இக்குரல் ஒலி அமைகிறது.
ஆக,
முதல் வாசகத்தில், நீர்நிலை என்பது ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல்
மக்களுக்கு வாக்களித்த நிறைவு மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக
உள்ளது.
இரண்டாம் வாசகத்தில், நீரினால் திருமுழுக்கு பெறுகின்ற நம்பிக்கையாளர்,
இயேசுவின்மேல் நம்பிக்கை அறிக்கை செய்வதுடன், நம்பிக்கையை
அன்புச் செயல்களால் வாழ்ந்து காட் அழைக்கப்படுகின்றார்.
நற்செய்தி வாசகத்தில், நீர்நிலைக்கு வருகின்ற இயேசு இறையனுபவம்
பெறுகின்றார். அதுவே அவருடைய பணிவாழ்வின் அடித்தள அனுபவமாக
அமைகிறது.
இயேசுவின் திருமுழுக்கு பெருவிழா நமக்குத் தரும் செய்தி என்ன?
'நீர்நிலைக்கு வாருங்கள்'
நீர்நிலைக்கு வருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
(1) நீர்நிலைக்கு வருதல் ஓர் அன்றாட நிகழ்வு
நாம் குழந்தைகளாக இருந்தபோது திருமுழுக்கு பெற்றோம். அந்த
நேரத்தில், நம் பெற்றோரும் ஞானப் பெற்றோரும் திருமுழுக்கு
நீர்த் தொட்டி என்னும் நீர்நிலைக்கு நம்மை அழைத்துச் சென்றனர்.
அந்த நீர்நிலையில் நாம் கழுவப்பெற்றோம், நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு,
நாம் திருஅவையின் உறுப்பினர்களாக, கிறிஸ்துவின் மறையுடலில்
ஓர் உறுப்பாக மாறினோம். அந்த நிகழ்வில் நம் சார்பாகப் பங்கேற்றவர்கள்
நம் பெற்றோர்களும், ஞானப் பெற்றோர்களுமே! இன்று நாம் அந்த
நிகழ்வை எண்ணிப் பார்க்கலாம். திருமுழுக்குத் தொட்டி என்னும்
நீர்நிலைக்கு நான் செல்வதற்குக் காரணமாக இருந்த அவர்களுக்காக
நாம் நன்றி கூறுவதோடு, அந்த நிகழ்வு நம்மில் ஏற்படுத்திய
தூய்மை மற்றும் ஒளிநிறை வாழ்க்கையை மீண்டும் வாழ உறுதி எடுக்கலாம்.
(2) செவிகொடுத்தல்
நீர்நிலைகளுக்கு வர வேண்டுமெனில், நாம் செவிகொடுக்க
வேண்டும். ஆண்டவர் அருகில் இருக்கும்போதே அவரைத் தேட
வேண்டும். அவரின் வாக்குப்பிறழாமையில் நம்பிக்கை கொள்ள
வேண்டும். இன்று நாம் விரும்புகிறோமா விரும்பவில்லையோ நிறையக்
காணொளிகளிலும், ஒலிகளிலும் செய்திகளைக் கேட்கின்றோம்.
பெரும்பாலான செய்திகள் நமக்குப் போலியான நம்பிக்கையையே
தருகின்றன. அல்லது நம் நம்பிக்கையைக் குலைத்து நமக்கு
அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளன. ஆண்டவராகிய கடவுளின்
செய்தியும் அழைப்பும் நமக்கு ஆறுதல் மட்டுமே தருகின்றது.
இன்று நான் அவருடைய குரலுக்குச் செவிகொடுக்கத் தடையாக உள்ள
அக மற்றும் புறக் காரணிகளை நான் அகற்றிவிடத் தயாராக
இருக்கின்றேனா?
(3) இலக்குத் தெளிவும் தெரிவும்
தன் பணி என்ன என்பதையும், தன் பணியின் நேரம் என்ன
என்பதையும் தெளிந்து தெரிகின்ற இயேசு, உடனடியாகச்
செயல்படுத்துகிறார். தெளிவும் தெரிவும் கொண்டிருக்கின்ற
ஒருவர் மட்டுமே நீர்நிலைக்கு வர முடியும். மேலும்
நீர்நிலையில் இறங்கியபின் பழைய வாழ்க்கைக்கு ஒருவர்
திரும்ப முடியாது. ஆக, திரும்ப முடியாத திடம்
கொண்டிருத்தல் அவசியம்.
இறுதியாக,
இன்று நமக்கு முன் நீர்நிலைகள் போல பல கானல்நீர்த்
தடாகங்கள் இருக்கின்றன. அவற்றின்பின் நாம் செல்வதால் நம்
ஆற்றல் விரயமாவதுடன், அவற்றால் நாம் எந்தப் பயனும் அடைய
முடிவதில்லை.
'நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும்,
'இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்' என்னும் வார்த்தை
பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்' (காண். எசா
30:21).
அக்குரல் வழி சென்றால், நீர்நிலையை நாம் அடையலாம். அந்த
நீர்நிலையில் நாம் நுழைந்தால் நமக்கு மேலும் குரல்
ஒலிக்கும்!
கரை சேர்க்கும்,
கரை சேரும் கடவுள்
ரொம்ப பரிச்சியமான ஒரு கதைதான். ஆனால், இன்றைய நாளுக்கு இது
பொருந்துவதாக இருப்பதால், அக்கதையுடன் நம் சிந்தனையைத் தொடங்குவோம்.
ஒரு ஊரில் இருந்த 3 பேர் ஒரு நாள் மாலையில் குடிப்பதற்காக
ஆற்றின் அக்கரையிலுள்ள ஓர் ஊருக்குச் செல்கின்றார்கள். பரிசல்
ஒன்றை எடுத்து இவர்களே ஓட்டிக்கொண்டு போய் அக்கரையை அடைந்து
வெகு நேரம் குடிக்கிறார்கள். நன்றாக இருட்டிவிட, அவர்கள்
வீடு திரும்புவதற்காகத் தாங்கள் வந்த பரிசலில் மீண்டும் ஏறி
ஊர் திரும்பும் முகத்தான் துடுப்புப் போடுகின்றனர்.
துடுப்புப் போட்டுக்கொண்டே இருக்க விடிந்து விடிகின்றது.
ஆனால், அவர்கள் அக்கரையிலேயே இருக்கின்றனர். போதை தெளிந்த
அவர்கள் சற்றே திரும்பிப் பார்க்கிறார்கள். மது மயக்கத்தில்
தாங்கள் ஏறி அமர்ந்த பரிசலைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்க்காமலேயே
விடிய விடிய தங்கள் ஆற்றலை வீணாக்கியிருப்பதை நினைத்து வருந்துகிறார்கள்.
அவர்களின் மது மயக்கம் அவர்களைக் கரை சேர்க்கவும், கரை சேரவும்
விடாமல் தடுத்துவிட்டது. இல்லையா?
ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவோடு கிறிஸ்து பிறப்புக்
காலம் நிறைவு பெறுகிறது. திருவருகைக்காலத்தில் 4 மெழுகு
திரிகள் ஏற்றி, குடில் ஜோடித்து, நட்சத்திரங்கள் கட்டி, கேரல்ஸ்
பாடி, கேக் உண்டு, கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு,
திருக்காட்சி என விழாக்களைக் கொண்டாடிய நாம் இன்றோடு நாம்
அவற்றை நிறைவு செய்கின்றோம். இவ்வளவு நாளாக நாம் கரையின்
இந்தப் பக்கம் இருந்துவிட்டோம். கரையின் இந்தப் பக்கம் மகிழ்ச்சியாகவும்
கொண்டாட்டமாகவும் இருந்தது. இப்போது கரையின் அடுத்த பக்கமான
சாதாரண, பொதுக்காலத்திற்குக் கடந்து செல்கின்றோம். ஆனாலும்,
இப்போது நாம் செல்லும் கரையின் மகிழ்ச்சி கொஞ்சமும் சாதராணது
அல்ல.
இன்றைய நாளின் இறைவாக்கும் வழிபாடு கரை சேர்க்கும் கடவுளாக
ஆண்டவராகிய இறைவனையும், கரை சேரும் கடவுளின் மகனாக இயேசு
கிறிஸ்துவையும் முன்வைக்கின்றன. திருமுழுக்கின் வழியாக பாவக்
கரை-கறையிலிருந்து தூய்மைக்குக் கரைசேர்த்த கடவுளோடு இணைந்து
நாம் தொடர்ந்து கரை சேர இன்றைய நாள் நமக்கு அழைப்பு
விடுக்கிறது.
கி.மு. 586ஆம் ஆண்டு யூதாவில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள்
பாபிலோனியாவுக்கு அடிமைகளாக நாடுகடத்தப்படுகின்றனர். இறப்பும்,
இருளும், அழிவும் மேலோங்கி நின்ற அந்த நேரத்திலும் அவர்கள்
அந்தப் புதிய நாட்டில் இயல்பான வாழ்க்கை நடத்தக் கற்றுக்கொண்டனர்.
வாழ்க்கை என்னதான் இயல்பாக இருந்தாலும் அந்நிய மண்ணில் அவர்கள்
இருப்பது அவர்களுக்கே ஏற்புடையதாக இல்லை. அவர்கள் அன்பு
செய்த யூதா நாடு மிகவும் அழிந்த நிலையில் இருந்தது. 'சொந்த
நாட்டிற்கு இனி திரும்ப மாட்டோம்' என்ற நம்பிக்கையின்மையும்
விரக்தியும் மேலோங்கி நின்ற நிலையில், இறைவாக்கினர் எசாயா
ஆண்டவரின் வாக்கை அவர்களுக்கு அறிவிக்கின்றார்: 'ஆறுதல்
கூறுங்கள். என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள்.' இதயத்தில்
நம்பிக்கை இழந்த, சிதறுண்டு போன மக்களுக்கு மகிழ்ச்சியையும்,
ஆறுதலையும் கொண்டு செல்லுமாறு எசாயாவை அனுப்புகிறார் இறைவன்.
இந்த மிகப்பெரும் நாடுகடத்தப்படுதலுக்குக் காரணமான அவர்களின்
பாவங்கள் மறக்கப்பட்டன என்பதையும், அவர்கள் நாடு
திரும்பும் நேரம் வந்துவிட்டதையும் அறிவிக்குமாறு பணிக்கின்றார்.
ஆண்டவர் தாமே சிதறுண்ட மக்களைக் கூட்டிச் சேர்த்துத்
திரும்பக் கூட்டிவரும் நிகழ்வில் இயற்கையும் கரம் கோர்க்கிறது:
'பாழ்நிலம் சீராகிறது. பள்ளத்தாக்கு நிரப்பப்படுகிறது. மலை,
குன்று யாவும் தாழ்த்தப்படுகிறது, கோணலானது நேராக்கப்பட்டு,
கரடுமுரடானது சமதளமாக்கப்படுகிறது.
மேலும், மானிடர் தங்கள் வார்த்தைகளில் தவறிப் போவர், ஆனால்,
'நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்'
என்று தன் வாக்குறுதியின் உறுதித்தன்மையை அறிக்கையிடும் இறைவன்,
'ஆயனைப் போல அவர்களை மேய்ப்பதாக' உருவகம் செய்கிறார்.
இறைவன் இஸ்ரயேல் மக்களை பாபிலோனியாவிலிருந்து மீட்டு
மீண்டு எருசலேமில் கரை சேர்க்கும் நிகழ்வு மூன்று நிலைகளில்
நடந்தேறுகிறது: (அ) 'ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று
சேர்ப்பார்' - ஆக, ஒவ்வொருவரின் மேலும் இறைவனின் கரம் படும்.
ஆயன் குச்சியைக் கொண்டு சேர்ப்பதுபோல அவர் சேர்க்க
மாட்டார். ஏனெனில், குச்சி தண்டனையின் அடையாளமாகும். தன்
கைகளால் சிதறுண்டு போய்க்கிடக்கின்ற அனைத்து ஆடுகளையும் ஒன்று
சேர்ப்பார். (ஆ) 'அவற்றைத் தம் தோளில் சுமப்பார்' - அடிமைத்தனத்தால்
தங்களின் உடல் மற்றும் உள்ளத்தில் வலுவிழந்தவர்களை, அடிமைகளாக
இழுத்துச் செல்லப்பட்டவர்களைத் தம் தோளில் சுமப்பார். (இ)
'சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்' - அதாவது,
முதுகில் தட்டி அழைத்துக் கொண்டு போவார். சினையாடுகள் எளிதில்
சோர்ந்துவிடக் கூடியவை. அவைகளுக்கு தொடர் அரவணைப்பு அவசியம்.
அந்த அரவணைப்பை இறைவன் தருவார்.
இவ்வாறாக, சிதறுண்டவர்களை ஒன்று சேர்த்து, வலுவிழந்தவர்களைத்
தோள் மேல் சுமந்து, வலுக்குறைந்தவர்களைத் தன் வலது கரத்தால்
தாங்கி கரை சேர்க்கின்றார் கடவுள்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஆயர் தீத்து தன் குழுமத்தில்
உள்ளவர்கள் எப்படி கண்காணிக்கப்பட வேண்டும் என எழுதுகிறார்.
'நாமும் ஒரு காலத்தில் அறியாமையில் இருந்தோம். கீழ்ப்படியாமல்
இருந்தோம். நெறிதவறிச் சென்றோம். தீய நாட்டங்களுக்கும் பல்வகைச்
சிற்றின்பங்களுக்கும் அடிமைகளாய் இருந்தோம். தீமையிலும்
பொறாமையிலும் உழன்றோம். காழ்ப்புணர்ச்சி கொண்டவராய் ஒருவர்
மற்றவரை வெறுத்தோம்' (தீத் 3:3) தன் குழுமத்தின் வலுக்குறைந்த
பின்புலத்தைச் சுட்டிக்காட்டும் தீத்து, இவ்வலுவின்மையிலிருந்து
நாம் விடுபட்டது, 'நம் அறச்செயல்களை முன்னிட்டு அல்ல,
மாறாக ஆண்டவரின் இரக்கத்தை முன்னிட்டே, புதுப்பிறப்பு அளிக்கும்
நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுளால் மீட்கப்பட்டோம்'
என எழுதுகின்றார்.
ஆக, 'புதுப்பிறப்பு அளிக்கும் நீரும், புதுப்பிக்கும் தூய
ஆவியும், இவை இரண்டின் ஊற்றாக இருக்கின்ற கடவுளின் இரக்கமும்'
பாவ இயல்பிலிருந்து மனுக்குலத்தை மீட்பு என்னும் கரையில்
கொண்டு போய்ச் சேர்ப்பவைகளாக இருக்கின்றன. இங்கே 'நீர்' மற்றும்
'தூய ஆவி' ஒருவர் பெறுகின்ற திருமுழுக்கு அருளடையாளத்தை
நினைவுபடுத்துகின்றன.
இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வை, ஒத்தமைவு நற்செய்தியாளர்கள்
என்று சொல்லப்படும் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள்
மட்டுமே பதிவு செய்கின்றனர். லூக்கா நற்செய்தியாளர் மற்ற
நற்செய்தியாளர்களைவிட மூன்று விதங்களில் முரண்படுகின்றார்:
(அ) இயேசுவின் திருமுழுக்கின்போது திருமுழுக்கு யோவான்
சிறையில் இருப்பது போல பதிவு செய்கிறார் லூக்கா (காண்.
3:20). 'மக்கள் எல்லாரும் திருமுழுக்கு பெறும் வேளையில் இயேசுவும்
திருமுழுக்குப் பெற்று இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்'
என்று பதிவு செய்யும் லூக்கா, யார் இயேசுவுக்குத்
திருமுழுக்கு கொடுத்தார்கள்? என்பதைப் பதியாமல்
விடுகின்றார். (ஆ) மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில்,
இயேசு ஆற்றை விட்டு வெளியே வந்தவுடன் தந்தையின் குரல்
கேட்கிறது. ஆனால், லூக்கா நற்செய்தியில், இயேசு
திருமுழுக்குப் பெற்று இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது,
'தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்க' வானத்திலிருந்து
ஒரு குரல் ஒலிக்கிறது. (இ) மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில்
இயேசு 'தண்ணீரால்' மட்டுமே திருமுழக்கு பெறுகின்றார். ஆனால்,
லூக்காவில், 'தண்ணீர்,' 'தூய ஆவி' என இரண்டு நிலைகளில்
திருமுழுக்கு பெறுகிறார் இயேசு.
இன்றைய நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில் திருமுழுக்கு
யோவானிடம் மக்கள் வருகிறார்கள். 'அவர்கள் மீட்பரை எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ
என அவர்கள் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.'
'மெசியா எதிர்பார்ப்பு' இயேசுவின் காலத்தில் மிகவும் உச்சநிலையில்
இருந்தது. ஏனெனில், இயேசுவின் சமகாலத்து மக்கள் தாங்கள் உரோமையர்களால்
அனுபவித்த அரசியல், சமூக, சமய, கலாச்சார துன்பங்களிலிருந்து
தங்களை விடுவிக்க மெசியா வர வேண்டும் என மிகவும் எதிர்நோக்கியிருந்தனர்.
வரவிருக்கும் மெசியா முதலில் ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்துவார்
என்பதும் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆகையால்தான், 'மனமாற்றத்தை'
அறிவித்து, மனமாற்றத்திற்கான திருமுழுக்கு கொடுத்து வந்த
திருமுழுக்கு யோவான் தங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக
நினைக்கின்றனர். ஆனால், அதை மறுக்கிறார் யோவான்.
இயேசுவின் திருமுழுக்கு அனுபவம் இரண்டு நிலைகளில் இருக்கிறது:
ஒன்று, அவர் திருமுழுக்கு யோவானின் திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றார்.
ஏன்? தன்னிடம் பாவம் இருப்பதால் அல்ல. மாறாக, 'மனமாற்றம்'
என்பது 'கரைக்குத் திரும்புவது' என அறிந்திருந்தார் இயேசு.
இதுவரை நாசரேத்தில் மறைந்து வாழ்வு வாழ்ந்த இயேசு, தண்ணீரில்
மறைந்திருப்பது போல மறைந்து நின்ற இயேசு, இப்போது கரை
சேர்கின்றார். முற்காலத்தில் இதே யோர்தானைக் கடந்துதான்
யோசுவா தலைமையில் இஸ்ரயேல் மக்கள் பாலும் தேனும் பொழியும்
கானான் நாட்டிற்குக் கரை ஏறினார்கள். இந்த 'கரை சேரும் நிகழ்வு'
வழியாகத் தன் பொதுவாழ்வையும் பணிவாழ்வையும் தொடங்ககிறார்
இயேசு. இரண்டு, இயேசு தூய ஆவியால் திருமுழுக்கு
பெறுகிறார். இத்தூய ஆவியால்தான் இயேசுவின் பணி உந்தித் தள்ளப்படுகிறது.
தன் உயிர்ப்புக்குப் பின் இதே தூய ஆவியைத் தம் திருத்தூதர்கள்மேல்
பொழிகிறார் இயேசு.
தங்களைக் கரை சேர்க்க யாராவது வர மாட்டார்களா? என்று
மெசியா எதிர்நோக்கில் மேலோங்கியிருந்தவர்கள் நடுவே, தூய ஆவியால்
நிரப்பப்பட்டவராய்க் கரை சேருகிறார் இயேசு.
இவ்வாறாக, பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்தவர்களை எசாயா
இறைவாக்கினர் வழியாக எருசலேம் என்னும் கரை சேர்க்கிறார் ஆண்டவராகிய
கடவுள். பாவத்திலும் தீமையிலும் உழன்றவர்களை மீட்பு என்ற
கரையில் சேர்க்கின்றார் கடவுள். 'மெசியா வந்து எங்களை
மீட்பார்' எனக் காத்திருந்தவர்களில், 'நீ இறைவனின் அன்பார்ந்த
மகன்-மகள்' என்று கடவுள் சாயலைத் தூண்டி எழுப்பி, பணிவாழ்வு
என்னும் கரை சேர்ந்து மற்றவர்களைக் கரை சேர்க்க கரம்
குவிக்கின்றார் இயேசு.
இப்படிப்பட்ட இறைச் செயலையே இன்றைய பதிலுரைப்பாடலில்
திருப்பாடல் ஆசிரியர், 'ஆண்டவரே! நீர் எத்துனை மேன்மைமிக்கவர்!
... உமது ஆவியை நீர் அனுப்பி மண்ணகத்தின் முகத்தைப்
புதுப்பிக்கின்றீர்' (திபா 104:1,30) எனப் பாடுகின்றார்.
இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள்
எவை?
1. அக்கரைக்கும் இக்கரைக்குமான வாழ்க்கை
கிறிஸ்து பிறப்புக் காலம் என்னும் அக்கரையில் இருந்த நாம்,
பொதுக்காலம் என்னும் இக்கரைக்குள் வருகின்றோம். மகிழ்ச்சி,
கொண்டாட்டம் விடுத்து வாழ்வைத் தொடங்குவது கொஞ்சம் கடினமாகவே
இருக்கும். பழையவற்றின் நினைவுகள் நம்மை இழுக்கும். பழைய
நினைவுகள் மகிழ்ச்சி தந்தால் பரவாயில்லை. சில நேரங்களி;ல்
நாம் காயப்பட்ட நினைவுகள் நம்மைப் பின் நோக்கி இழுத்துக்கொண்டே
இருக்கும். நாம் அனைவருமே காயப்பட்டிருக்கிறோம். காயப்படுத்தியிருக்கிறோம்.
வருத்தம் தரும் தவறுகள் செய்திருக்கின்றோம். ஆனால், நாம்
எந்த நிலையில் இருந்தாலும் அவைகளிலிருந்து விடுபட்டு 'மகிழ்ச்சி'
என்ற கரையை அடைவது சாத்தியம் எனச் சொல்கிறார் கடவுள். நாம்
தயங்கி நிற்கும்போது அவரே முன்வந்து நம்மைக் கரைசேர்க்கத்
தன் கரத்தை நீட்டுகின்றார்.
2. புதுப்பிறப்பு அளிக்கும் நீர், புதுப்பிக்கும் தூய ஆவி
திருமுழுக்கு பெற்ற நாம் ஒவ்வொருவரும் புதுப்பிறப்பளிக்கும்
நீரினால் கழுவப்பட்டுள்ளோம், தூய ஆவியால் புதுப்பிக்கப்பட்டும்
உள்ளோம். மேலும், கடவுளின் இரக்கத்தை முன்னிட்டு நாம் மீட்கப்பட்டுள்ளோம்.
அந்த இரக்கத்தின் துணையால் நாம் பழைய கட்டுக்களை அவிழ்த்துவிடவும்,
பழைய இயல்புகளைக் களைந்துவிடவும் முடியும். அக்கரைக்குப்
பரிசலில் சென்றவர்கள் பரிசலின் கயிற்றை அறுக்காமல் விடிய
விடிய துடுப்புப் போட்டதுபோல, நானும் சில நேரங்களில் என்
கயிறுகளை அவிழ்த்துவிடாமல், அக்கரையிலேயே கட்டிவிட்டு நிற்கலாம்.
ஆனால், என் பழைய இயல்பு என்னும் கயிற்றை நான் அறுக்கும்போது,
அவரின் அருள்துணையால் நான் அக்கரை அடைவேன்.
3. நீரே என் அன்பார்ந்த மகன்-மகள்
இயேசுவின் வாழ்வில் திருமுழுக்கு ஓர் அடித்தள அனுபவம். இந்த
அனுபவம் அவருடைய ஒட்டுமொத்த வாழ்வை அப்படியே முழுவதுமாகப்
புரட்டிப் போட்டுவிடுகிறது. 'நீரே என் அன்பார்ந்த மகன்'
எனத் தன் தந்தையாகிய கடவுளால் அழைக்கப்பட்டதால், ஒருவர் மற்றவரை,
'நீர் என் சகோதரர், சகோதரி' என அழைக்கிறார் இயேசு. இப்படி
அவர் மற்றவர்களை அழைப்பதற்காக வெட்கப்படவில்லை. ஆகையால்
தான் அவரின் பார்வையில் அனைவரும் - யூதர்கள், சமாரியர்கள்,
புறவினத்தார்கள், பெண்கள், குழந்தைகள், தொழுநோயாளர்கள், கண்பார்வையற்றோர்,
முடக்குவாதமுற்றோர், இறந்தோர் சமமாகத் தெரிகின்றனர். அனைவரோடும்
அவரால் பழக முடிகின்றது. இறைவனின் அரசு அனைவருக்கும் சொந்தம்
எனவும் அது சமத்துவத்திலும், சகோதரத்திலும், சுதந்திரத்திலும்
அடங்கியுள்ளது எனவும் கற்பிக்கின்றார். 'நான் இறைவனின் மகன்'
என்ற அனுபவம் அவரின் முழு ஆளுமையையும் ஆட்கொள்கின்றது. இறப்பு
வரை அவருக்கு இருந்த ஒரே அடையாளமும் இதுதான். ஆகையால்
தான், 'இவன் தன்னையே இறைமகனாக்கிக் கொண்டான்' என குற்றம்
சுமத்தப்படுகின்றார். நாம் பெற்ற திருமுழுக்கின்போதும் நமக்கு
இதே அனுபவம் கிடைக்கிறது. ஆனால், அதை நாம் உள்வாங்கியிருக்கிறோமா?
திருமுழுக்கில் நாம் பாவம் என்னும் கரையைக் கடந்து தூய
வாழ்வு என்னும் கரை சேர்கிறோம். அப்பயணத்தில் நாம்
தாங்கியிருக்கும் இறையியல்பு நம்மில் புதுப்பிக்கப்படுகிறது.
திருமுழுக்கில் நாமும் நம் இறைத்தன்மையை மீட்டெடுப்பு செய்வதால்,
நாமே கடவுளாக கரை சேர்கிறோம்.
இறுதியாக, நம்மைக் கரை சேர்க்கும் கடவுள் நமக்கு ஆறுதலும்,
கனிமொழியும் கூற, அவரின் இரக்கம் அன்றாடம் நம்மைப்
புதுப்பிக்கிறது. இயேசுவோடு இணைந்து நாமும் கரை சேர்ந்தால்
நாமும் இறைவனின் அன்பார்ந்த பிள்ளைகளே.
இந்த அனுபவத்திற்கு நாம் மற்றவர்களை அழைத்துச்
செல்லும்போது நாமும் கரை சேர்க்கும், கரை சேர்க்கும் கடவுள்களே!
கடவுளோடு ஒன்றித்திருத்த வாழ்வு: கிறிஸ்துவின்மீது கொண்ட
ஆழமான நம்பிக்கைக்காக நாஜிக்களால் வதைமுகாமில் அடைக்கப்பட்டவர்
அருள்பணியாளர் ஆல்பிரட் டெல்ப் (Alfred Delp 1907-1945).
இவர் வதைமுகாமில் அடைக்கப்பட்ட பிறகும்கூட யாருக்கும்
தெரியாமல் திருப்பலி நிறைவேற்றியும், கிறிஸ்துவைப் பற்றி
எழுதியும் வந்தார்.
இந்நிலையில் இவர் 1945 ஆம் ஆண்டு, பிப்ரவரி 2 ஆம் நாள்
நாஜிக்களால் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்படுவதற்குச் சில
நாள்களுக்கு முன்பு எழுதிய வார்த்தைகள் இவை: "
கடவுளோடு ஒன்றித்திருக்கும்போதே
ஒரு மனிதன் மனிதனாக இருக்கின்றான்."
தான் நாஜிக்களால் கொல்லப்படப் போகிறோம் என்று தெரிந்தபின்பும்கூட,
கடவுளோடு ஒன்றித்து வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை என்று
வாழ்ந்த அருள்பணியாளர் ஆல்பிரட் டெல்ப், திருமுழுக்குப்
பெற்ற ஒவ்வொருவரும் எப்படி வாழவேண்டும் என்பதற்கு நமக்கெல்லாம்
முன்மாதிரி. இன்று நாம் ஆண்டவருடைய திருமுழுக்குப்
பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நம்மைக் கடவுளோடு
ஒன்றித்து வாழ அழைக்கின்றது. கடவுளோடு ஒன்றித்து வாழும் ஒருவரது
வாழ்க்கை எப்படி இருக்கும், அதனால் அவர் பெறுகின்ற
கைம்மாறு என்ன? என்பன குறித்து நாம் சிந்திப்போம்.
எதையெல்லாம் விட்டுவிட வேண்டும்?
திருமுழுக்குத் திருச்சடங்கின்போது அருள்பணியாளர்
கேட்கின்ற முதற்கேள்வி, "
பாவத்திற்குக் காரணனும் தலைவனுமாகிய
சாத்தானை விட்டுவிடுகிறீர்களா?"
என்பதுதான். இதற்கு அந்தத்
திருச்சடங்கில் பங்கேற்கிற அனைவரும் "
விட்டுவிடுகிறேன்"
என்று
பதிலளிக்கின்றார்கள். முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாவும் ஆண்டவரையும்
அவரது கட்டளையையும் விட்டுவிட்டு (தொநூ 2:16,17), பாவத்திற்குத்
தலைவனான சாத்தானைப் பற்றிக்கொண்டு, அதன்மூலம் பாவம்
செய்தார்கள். இவ்வாறு வரும் பிறப்பு நிலை பாவத்திலிருந்து
விடுவிக்கப்பட வேண்டுமெனில், ஒவ்வொருவரும் சாத்தானை
விட்டுவிட வேண்டும். அதனாலேயே அருள்பணியாளர்
திருமுழுக்குத் திருச்சடங்கின்போது, "
சாத்தானை
விட்டுவிடுகின்றீர்களா?"
என்று கேட்கின்றார்.
பவுல், தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய இரண்டாம் வாசகத்தில், நாம் இறைப்பற்றின்மையையும்
உலகு சார்ந்த நாட்டங்களையும் மறுத்து வாழவேண்டும் என்கிறார்.
நாம் ஏன் இறைப்பற்றின்மையை மறுத்து வாழவேண்டும்? என்ற எழலாம்.
"
இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் செயலாலும் சொல்லாமலும் இறப்பை
வரவழத்தார்கள்"
(சாஞா 1:16) என்கிறது சாலமோனின் ஞான நூல்.
இறைப்பற்றின்மை இறப்பை வருவிக்கும் என்பதால்தான் பவுல், இறைப்பற்றிமையை
மறுத்து வாழச் சொல்கின்றார்.
இறைப்பற்றின்மையால் இறப்பைத் தங்கள் வருவித்துக்கொண்டவர்களுக்கு
மிகப்பெரிய எடுத்துக்காட்டுதான் முதல் பெற்றோர். கடவுள் மனிதர்களை
அழியாமைக்கென்று படைத்திருந்தபோது (சாஞா 2:23), கடவுளின்
கட்டளையை மீறி அல்லது இறைப்பற்றின்மையால் இறப்பைத் தங்கள்மேல்
வருவித்துக்கொண்டார்கள் அவர்கள் (தொநூ 2:17). ஆகையால், இறைப்பற்றின்மை
இறப்பை வருவிக்கும் என்பதால் அந்த இறைப்பற்றின்மை நமக்குள்
தூண்டி எழுப்பும் சாத்தானையும் அவனுடைய மாயக் கவர்ச்சிகளையும்
விட்டு விடுவது நல்லது
யார்மீது நம்பிக்கை கொள்வது?
திருமுழுக்குத் திருச் சடங்கில் அருள்பணியாளர், "
சாத்தானை
விட்டுவிடுகிறீர்களா?"
என்று கேட்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை.
அதற்கு அடுத்ததாக, "
விண்ணையும் மண்ணையும் படைத்த எல்லாம்
வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறீர்களா?"
என்று
கேட்கின்றார். இதற்கு அனைவரும், "
நம்புகிறேன்"
என்று மறுமொழி
கூறுகின்றார்கள். எனில், பாவத்திற்குத் தலைவனாகிய சாத்தானை
விட்டுவிடுவதோடு அல்லாமல், கடவுளை நம்ம வேண்டும். அப்பொழுதுதான்
ஒருவருடைய வாழக்கை பெறும்.
இரண்டாம் வாசகத்தில் பவுல், "
இறைப்பற்றின்மையையும் உலகு
சார்ந்த நாட்டங்களையும் மறுத்துவிடுங்கள்"
என்று
சொல்லிவிட்டுத் தொடர்ந்து, "
கட்டுப்பாடுடனும் நேர்மையுடனும்
இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இறையருளால் பயற்சி
பெறுகின்றோம்"
என்கிறார். நாம் ஏன் இறைபற்றுடன் வாழவேண்டும்
என்பதற்குச் சாலமோனின் ஞான நூல், "
இறைப்பற்று எல்லாவற்றையும்விட
வலிமை மிக்கது"
(சாஞா 10:12) என்று விளக்கம் தருகின்றது.
இந்த வார்த்தைகளை நாம் இன்றைய முதல் வாசகத்தோடு இணைத்துச்
சிந்தித்துப் பார்த்தால் இன்னும் பொருள் நிறைந்ததாக இருக்கும்.
கடவுளாகிய ஆண்டவரை அன்பு செய்யாமல், அவர் கொடுத்த கட்டளையையும்
கடைப்பிடிக்காததால் யூதா நாட்டினர் பாபிலோனியரிடமிருந்து
இரு மடங்கு தண்டனை பெற்றனர். இந்நிலையில் கடவுள் அவர்களது
குற்றங்களை மன்னித்து, அவர்களது போராட்டத்தை முடிவுக்குக்
கொண்டு வந்தார். தவிர, "
ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக்
கனிமொழி கூறுங்கள்"
என்று இறைவாக்கினர் எசாயா வழியாக அழைப்பு
விடுக்கின்றார். கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக இத்தகையதோர்
அழைப்பு விடுகின்றார் எனில், யூதா நாட்டினர் தன்னை மறந்து
இறைப்பற்றில்லாமல் வாழ்ந்தால் தண்டனை பெற்றார்கள். அதனால்
அவர்கள் தன்மீது நம்பிக்கை கொண்டு இறைப்பற்றுடன்
வாழ்ந்தால் ஆறுதலையும் அரவணைப்பையும் பெறுவார்கள் என்று
கடவுள் சொல்லாமல் சொல்கின்றார். ஆதலால், யூதா நாட்டினர் என்றில்லை,
ஒவ்வொருவரும், "
மனிதர்மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம்
தஞ்சம் புகுவது நலம்"
(திபா 118:8)
ஆண்டவரின் அன்பார்ந்த மக்களாவோம்:
சாத்தானை விட்டுவிட்டுக் கடவுளை நம்புகிற ஒருவர் அவரது
பிள்ளையாகின்றார். அதன்பிறகு அவர், கடவுளின் அன்பார்த்த
மகனான இயேசுவைப் போன்று வாழ அழைக்கப்படுகின்றார்.
நற்செய்தியில் இயேசு மனிதர்களோடு தன்னை அடையாளப்படுத்திக்
கொள்ளும்விதமாய்த் திருமுழுக்குப் பெறுகின்றார். அவ்வாறு
அவர் திருமுழுக்குப் பெறுகின்றபோது, "
என் அன்பார்ந்த மகன்
நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்"
என்றொரு குரல்
வானத்திலிருந்து ஒலிக்கின்றது. இயேசு தந்தையின் திருவுளத்தை
நிறைவேற்றி (லூக் 22:42), அவரது அன்பார்ந்த மகனானார்.
திருமுழுக்குப் பெற்றதன் மூலம் சாத்தானை விட்டுவிட்டு, ஆண்டவர்மீது
நம்பிக்கை கொண்டு வாழும் நாம், இயேசுவைப் போன்று கடவுளின்
திருவுளத்தை நிறைவேற்றி வாழ்ந்தால், அவரது மக்களாவோம்.
இயேசு திருமுழுக்குப் பெற்ற பிறகு, சென்ற இடங்களில் எல்லாம்
நன்மை செய்தார் (திப 10:38). திருமுழுக்குப்
பெற்றிருக்கும் நாமும் இயேசுவைப் போன்று, செல்லும் இடங்களில்
எல்லாம் நன்மை செய்ய அழைக்கப்படுகின்றோம். இன்றைக்குப் பலர்
திருமுழுக்கில் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டுச் சாத்தனைப்
பற்றிக்கொண்டு வாழ்வது வேதனையாக இருக்கின்றது. ஆண்டவருடைய
திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நமது
வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொண்டு, ஆண்டவரோடு ஒன்றித்து
வாழ்வது நல்லது. ஏனெனில், ஆண்டவரோடு ஒன்றித்து
வாழும்போதுதான் நமது வாழ்க்கை வாழ்க்கையாகவே இருக்கின்றது.
சிந்தனைக்கு:
கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற
நீங்கள அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள்"
(கலா
3:27) என்பார் புனித பவுல். ஆகையால், திருமுழுக்கின் மூலம்
கிறிஸ்துவை அணிந்து கொண்ட நாம், அவரைப் போன்று சென்ற இடங்களில்லாம்
நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
இக்காலத்தில் பிள்ளைகள் பொதுவாகப்
பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிவதில்லை. ஓர் அம்மா தம் மகனிடம்,
"நான் உன்னைப் பெத்த அம்மாடா; என் பேச்சைக் கேளுடா" என்றதற்கு
அவன், 'என்னைப் பெத்ததினால்தான் நீ 'அம்மா', இல்லேன்னா
வெறும் 'சும்மா', பேசாம போமா' என்றான்.
ஒருவருக்கு ஐந்து ஆண்பிள்ளைகள் இருந்தும் அவரை யார்
கேட்டாலும் அவர் தமக்கு ஒரே மகன்தான் என்று பதில்
சொல்வார். ஏனெனில் அவருடைய ஐந்து மகன்களில் ஒருமகன் மட்டும்தான்
அவருடைய பேச்சைக் கேட்டு நடந்தான்.
உலக மக்கள் அனைவருமே கடவுளுடைய பிள்ளைகள் என்றாலும், கடவுளால்
சிறப்பாக அன்பு செய்யப்பட்டு அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட
இஸ்ரயேல் "இறைமக்கள்" என்று அழைக்கப் பட்டனர். ஆனால், அவர்கள்
கடவுளுக்குக் கீழ்ப்படியா மல், அவருடன் செய்துகொண்ட உடன்படிக்கையை
மீறி, திமிர் பிடித்தவர்களாகவும் வணங்காக் கழுத்துடையவர்களாகவும்
வாழ்ந்தனர்.
இஸ்ரயேல் மக்களைப் பற்றி இறைவன் இறைவாக்கினர் எசாயா வாயிலாகக்
கூறியுள்ளது நமது நெஞ்சத்தைக் கனக்கச் செய்கிறது.
"
விண்வெளியே கேள்; மண்ணுலகே செவிகொடு ... பிள்ளைகளைப் பேணி
வளர்த்தேன். அவர்களே! எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள்..,
கேடுகெட்ட மக்கள் இவர்கள், ஆண்டவரைப் புறக்கணித்து
விட்டார்கள்"
(எசா 1:2-4).
இந்நிலையில், "என் கடவுளே உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ
வருகிறேன்" (எபி 10:7) என்று கூறிக்கொண்டே இவ்வுலகுக்கு வந்த
கிறிஸ்து ஒருவரே கடவுளுக்கு உகந்த மகன். எனவேதான் கிறிஸ்து
திருமுழுக்குப் பெற்றபோது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு
நான் பூரிப்படைகிறேன்" (லூக் 3:21) என்று கடவுள்
கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்தார்.
கிறிஸ்து கடவுளுக்கு உகந்த மகன். ஏனெனில் அவர் 'கடவுளின்
துன்புறும் ஊழியன்.' உண்மையில், கிறிஸ்து திருமுழுக்குப்
பெற்றபோது, இறைவாக்கினர் எசாயா கடவுளின் துன்புறும் ஊழியன்
குறித்து எழுதியுள்ள நான்கு கவிதைகளையும் நிறைவு செய்ய
முன்வந்தார். அக்கவிதைகளில் ஒன்றுதான் இன்றைய முதல் வாசம்.
துன்புறும் ஊழியனின் சிறப்புப் பண்புகள் வருமாறு:
1. அவர்மீது கடவுளுடைய ஆவி தங்கும் (எசா 42:1).
2. நாள்தோறும் அவர் கடவுளுக்குச் செவிமடுப்பார் (எசா
50:4-5).
3. மனிதருடைய பாவங்களுக்குக் கழுவாயாக அவர் தம்மையே பலியாக
ஒப்புக்கொடுப்பார், அதன் விளைவாகக் கடவுள் அவரை மகிமைப்படுத்துவார்
(எசா 53:4-7). -
கிறிஸ்து யோர்தான் ஆற்றில் பெற்றத் திருமுழுக்கு அவர் கல்வாரியில்
சிலுவையில் பெறவிருந்த திருமுழுக்குக்கு முன் அடையாளமாகத்
திகழ்ந்தது. "நான் பெறவேண்டிய திருமுழுக்கு ஒன்று உண்டு.
அது நிறைவேறும் அளவும் நான் மிகவும் நெருக்கடிக்குள்ளாகி
இருக்கிறேன்" (லூக் 12:50) என்று கிறிஸ்து கூறியது மேலே கூறப்பட்டுள்ள
உண்மையை உறுதி செய்கிறது.
கிறிஸ்துவைப்பற்றி எபிரேயர் திருமுகம் கூறுவது நமது ஆழ்தியானத்துக்கு
உரியது. "அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக்
கற்றுக்கொண்டார்; அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர்
அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்"
(எபி5:8-9).
நாம் கிறிஸ்துவின் மகிமையில் பங்குபெற வேண்டு மென்றால் அவருடன்
துன்புறுவது இன்றியமையாத ஒன்றாகும். "நாம் கிறிஸ்துவின் பங்காளிகள்.
அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும். அப்போதுதான்
அவரோடு மாட்சியிலும் பங்குபெறுவோம்" (உரோ 8:17).
திருமுழுக்கு வாயிலாக நாம் கடவுளின் பிள்ளைகளாகும்
பேறுபெற்றுள்ளோம், கடவுள் நமக்கு அச்சத்தின் மனப்பான்மையை
அருளாமல், கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனநிலையைக்
கொடுத்துள்ளார். எனவே அவரை அப்பா, தந்தையே என அழைக்கிறோம்
(உரோ 8:15). நாம் பெயரளவில் மட்டுமல்ல, உண்மையிலேயே கடவுளுடைய
மக்கள் (1 யோவா 3:1), எனவே, நாம் எங்கும், எதற்கும் அஞ்சக்கூடாது.
உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படக்கூடாது.
மனநோயாளி ஒருவர் தன்னை எலியென்று நினைத்து, பூனையைக் கண்டால்
பயந்து ஓடுவார், மனநல மருத்துவர் அவரிடம், "நீ மனிதன், எலி
அல்ல" என்றார், அதற்கு அவர், "டாக்டர்! நான் மனிதன். எலி
அல்ல என்பது உங்களுக்குத் தெரியும்; எனக்குத் தெரியும்; ஆனால்
அது அந்தப் பூனைக்குத் தெரியுமா?" என்று கேட்டு அழுதார்.
நாம் கடவுளின் மக்கள் என்பது பேய்க்குத் தெரியுமா? என்றுக்
கேட்டு நம்மில் பலர் அஞ்சி அஞ்சி சாகிறோம். இது தேவையா?
கிறிஸ்து அலகையை இவ்வுலகின் தலைவன் என்று குறிப்பிட்டு, "இவ்வுலகின்
தலைவன் வந்து கொண்டிருக்கிறான், அவனுக்கு என்மேல் அதிகாரம்
இல்லை " (யோவா 14:31) என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
எவ்வாறு அலகைக்குக் கிறிஸ்துவின்மேல் அதிகாரம் இல்லையோ, அவ்வாறே
அதற்கு நம்மீதும் அதிகாரம் இல்லை. நாம் இடம் கொடுக்கவில்லையென்றால்,
அலகை நமக்குள் நழைய முடியாது. "அலகையை எதிர்த்து நில்லுங்கள்.
அப்போது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும். கடவுளை அணுகிச்
செல்லுங்கள். அவரும் உங்களை அணுகி வருவார்"
(யாக்கோபு
4:7).
ஆண்டவரின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடும் இன்று நமது
திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொள்வோம். ஒருமுறை
திருமுழுக்குப் பெற்றவர்கள் மீண்டும் திருமுழுக்குப் பெறத்
தேவையில்லை, திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக்
கொண்டால் போதும். தீமைக்குக் காரணமாகிய அலகையையும் அதன் செயல்பாடுகளையும்
விட்டுவிடுவோம். குறிப்பாக, காமம், குடிவெறி, களியாட்டம்,
போட்டி, பொறாமை, கட்சிமனப்பான்மை, ஜாதிவெறி, மொழிவெறி ஆகியவற்றைத்
தூக்கி எறிவோம். கடவுளையும் திருச்சபையையும் நம்பி,
புதுப்பிறப்படைந்து புதுவாழ்வு வாழ்வோம். " நாம் நெஞ்சில்
நிறுத்த வேண்டியது: "
ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது,
அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து
புதியன புகுந்தன அன்றோ"
(2 கொரி 5:17).