பரிசுத்த
ஆவியின் அருளை நாடி வந்திருக்கும் உள்ளங்களே
பரிசுத்த ஆவியை பரிசாகப் பெற்றுக் கொள்ள இன்றைய
திருப்பலி நம்மை வரவேற்கின்றது. தூய ஆவியை நம் மீது ஊதி ஏவிவிடவும்
முன்மொழிகின்றது.
இயேசுவுக்கு மரணத்தோடு வாழ்வு முடிந்த போது....உயிர்ப்பின் வாசல்
திறந்தது.... புதிய வாழ்வு பிறந்தது....
தன்னை அனுப்பிய தந்தையிடமிருந்து தான் பெற்றுக் கொண்ட கொடைகளைத்
தான் அனுப்புகின்ற சீடர்களும் பெற்றுக் கொள்ள ஆவியை ஊதி ஏவி
விடுகின்றார்.
ஊதி ஏவிய ஆவியோ...திக்கற்ற, திகைப்புற்ற� சீடர்களுக்கு அச்சம்
அகற்றியது...
திசையைக் காட்டியது...
புதுத் தெம்பூட்டியது...
அமைதியை நிறைத்தது.....
பாவங்களை மன்னிக்க அதிகாரம் தந்தது....
அதே தூய ஆவி இதோ இப்போது இந்த திருப்பலியில் நம்மீதும் ஊதப்படுகின்றது.
நம் வாழ்வுக்கு வழிகாட்ட....
நம் சொல்லுக்கு ஒளியூட்ட....
நம் செயலுக்கு அறிவூட்ட....
நம் சிந்தனைக்கு சிறப்பூட்ட....
நம் கடமையை நினவூட்ட....
அதை சிறப்பாகச் செய்ய ஆற்றலூட்ட....
ஆன்மீக வாழ்வுக்கு அழகூட்ட.....
இந்த திருப்பலி வழியாக வலுவூட்டுகிறது.
நமது ஆன்மீக வாழ்வில் பரிசுத்த ஆவியை பரிசாகப் பெற்றுக் கொள்ள
நம் இதயத்தை சுத்தமாக்குவோம். அவரின் திருவுளப்படி நடக்க அருள்
தரும் திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. பரிசுத்த ஆவியை அனுப்பி
தேற்றுகின்ற தெய்வமே!
திருச்சபையின் திருப்பணிகளை ஒளிரச்செய்யவும், புது
வலுவுடன் செயல்படவும், கடமைகளை உம் திருவுளப்படி
நிறைவேற்றவும் திருப்பீடப் பணியாளர்களுக்கு பரிசுத்த
ஆவியை ஏராளமாக அனுப்பி திடப்படுத்த வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
2. தூய ஆவியின் கனிகளால் உலகை
நிரப்புகின்ற இறைவா!
நீதியையும் நேர்மையையும் வெளிப்படுத்துகின்ற அரசை
அமைக்க நாடுகளின் தலைவர்களுக்கு நல்லொளி வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. தூய ஆவியை திருத்தூதர்கள் மேல்
ஊதி அனுப்பிய தெய்வமே!
பாவச்சிறையில் இருக்கின்ற மாந்தரை விடுவிக்கும் பணியை
ஆற்ற பாவங்களை மன்னிக்க திருத்தூதர்கள் மீது ஊதிய அதே
ஆவியை அனுப்பி எங்கள் பங்குத் தந்தையை பராமரிக்க
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. தூய ஆவியார் வழியாக மாந்தரை
மாட்சி பெறச் செய்கின்ற தெய்வமே!
உமது தூய ஆவியார் எங்களுக்கு இருளில் ஒளியை வழங்கவும்,
வெறுப்பை அன்பாகவும், கவலையை மகிழ்ச்சியாகவும்,
எல்லாப் பிரச்சனைகளையும் விடுதலையாகவும் மாற்றி
நாங்கள் தேடும் மாட்சியை பெற்றுக் கொள்ள எங்களுக்குள்
உறைய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
ஆவியானவர் நம்மில் உறையட்டும்....
ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாள் அவரைப்பாக்க
4 பேரு வந்திருந்தாங்க...! முனிவர்கிட்ட அந்த 4
பேரும், "சாமி உலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே, அதுக்கு
என்ன வழின்னு" கேட்டாங்க..!! அதுக்கு அந்த முனிவர்
":தெரியலயேப்பா" ன்னு ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு..!
ஆனாலும் வந்தவங்க விடாம, "என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய
முனிவர் இது கூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே.!"
அப்டின்னு கேட்டாங்க.
அதுக்கு முனிவர் அவங்ககிட்ட, "சரி இப்ப நான் உங்கள ஒரு
புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில
ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட
கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா
இருந்துச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ
தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு..!! சரின்னு அந்த 4
பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல
ஏறினாங்க..!!
கொஞ்ச தூரம் போன பிறகு ஒரு இடத்துல ஒரு புலி,
குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பிறகு
தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு இரைதேடி அந்தப்
பக்கமா போனது.. அந்தப் பக்கமா ஒரு மான், அதுவும்
குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு
வந்திச்சி.. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது
மேல பாஞ்சி அதைக்கொன்னு தானும் சாப்பிட்டு தன்னோட
குட்டிகளுக்கும் குடுத்திச்சி. .!! அத சாப்பிட்ட
அந்தப் புலிக்குட்டிங்களுக்கு சந்தோசம்..!! இந்தப்
பக்கமா தன் அம்மாவ பறிகொடுத்த மான் குட்டிகளுக்கு
வருத்தம்...!!
இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப்பத்தி
உங்க கருத்து என்ன":ன்னு கேட்டாரு..!! அதுக்கு அந்த 4
பேருல ஒருத்தர் ":இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு
இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு":. உடனே அவர
அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு..!!
அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு, ":ஏம்பா உன்
கருத்து என்னன்னு.?" ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத
பாத்த ஆளு இவன், ":இல்ல இது சரிதான், ஏன்னா
புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது
அப்படின்னு சொன்னாரு..!!" ஒடனே அவரையும் விமானம் கீழ
தள்ளி விட்டுடுச்சு..!! இதையெல்லாம் பாத்துக்கிட்டு
இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான்,
":இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு":. ஒடனே அவனையும்
அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி..!!
கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு
முனிவர், ":ஏம்பா உன் கருத்து என்னன்னு":, அதுக்கு
அவன், ":தெரியலயே சாமின்னு":, சொன்னான்..!!
இந்தமுற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும்
சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி..!!
நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம்
புரிஞ்சிக்கிட்டா போதும். தேவையில்லாத விசயங்கள
தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அநாவசியம்..!! அது போல
தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்ச
மாதிரி பேசுறதும் அநாவசியம். தெரியாத விசயங்களை
தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்..!!
தெரியாததை தெரியாது என ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை
தருபவர்தான் இந்த தூய ஆவி.
நாம் செய்கின்ற செயலை சிறப்பாகச் செய்ய தூய ஆவியை
வேண்டி செயல்படும்போது அதன் பலன் பளிச்சென
வெளிப்படுவதை கண்டுணர்வோம்.
பரிசுத்த ஆவியின் அருள் வேண்டி எச்செயலையும் செய்தால்
நம் மனம் எப்போதும் சுத்தமாக இருக்கும். மனம் நிறைய
நல் உணர்வுகளை மட்டுமே சுமக்க ஆவியானவரும்
உதவியாவீருப்பார்.
முன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்தபோது பெர்லின்
நகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர்
பிரித்தது. ஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர்,
ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில்
தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள்.(அவ்வளவு
குரோதம் !)
மேற்கு பெர்லினை சேர்ந்த மக்களும் அதே மாதிரி
செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.
மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால்
பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை கொண்டுவந்து மதில்
தாண்டி இந்த கிழக்கு பெர்லின் பக்கம் அழகாக அடுக்கி
வைத்துவிட்டு போனார்கள்.
மேலும் அதன் மீது இவ்வாறு எழுதி வைத்து விட்டு
போனார்கள் :
"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான்
கொடுப்பார்கள்"
("EACH GIVES WHAT HE HAS")
எவ்வளவு நிதர்சனமான உண்மை....! நம்மிடம் இருப்பதைதான்
நம்மால் கொடுக்க முடியும்.
நமக்கு 'உள்ளே' என்ன இருக்கிறது ?
அன்பா - பகையா ?
அமைதியா - வன்முறையா ?
வாழ்வா - சாவா ?
நம் திறமை, பலம்
அழிவுப்பாதையை நோக்கியா - வளர்ச்சிப்பாதையை நோக்கியா ?
இத்தனை காலங்களில் நாம் அடைந்தது என்ன ? செய்தது என்ன?
"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான்
கொடுப்பார்கள்"
கடவுள் நமக்கு கை, கால், கண் என்று எல்லா
உறுப்புகளையும் கொடுத்ததோடு மட்டுமல்லாமல்
சிந்திப்பதற்கு புத்தியும் கொடுத்திருக்கிறார். அந்த
புத்தியால் இது நல்லது இது கெட்டது என்று செயலின்
விளைவை யோசித்து அணுகவேண்டும். அந்த யோசனையை
தூண்டிவிடுபவர் தான் தூயஆவி.
எச்செயலைச் செய்தாலும் அதனை முறையோடு செய்யப் பழகுதல்
அவசியம். முறை தவறி செய்தால் துன்பம் தான் உண்டாகும்.
நியாயமான பாதையில் நடப்பவர்கள் எப்போதும் முறை
தவறுவதில்லை.
"என் கடன் பணி செய்து கிடப்பதே'' என்பது தான் வாழ்வின்
குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். கடன் என்றால் வேண்டா
வெறுப்பாகச் செய்வது என்று நாம் அர்த்தம்
கொண்டிருக்கிறோம். ஆனால், கடமை என்பது தான் பொருள்.
எச்செயலையும் ஆர்வத்தோடு இதயப்பூர்வமாகக்
குழப்பமின்றி, நன்மையானதைச் செய்வதற்கு துணையாக
இருப்பவர் இந்தத் தூய ஆவி. அச்சம், தயக்கம், குழப்பம்,
துக்கம் நம் உடன்பிறப்பு. மனதில் உண்டாகும் அச்சம்,
தயக்கம்,, குழப்பம், வீண் எண்ணங்கள் துக்கம் இவைகளை
எல்லாம் தூய ஆவியின் துணை கொண்டு விரட்டுவோம். அப்போது
வாழ்க்கை லேசாகி விடும். மனம் நிறைய நல் உணர்வுகளை
சுமக்கும் போது மனமும் வாழ்க்கையும் லேசாகிவிடும்.
கோபம் பொறாமை கவலை இவைகளை சுமக்கும் போது மனமும்
கனத்துவிடும்.
நம்மிடம் இருப்பதை கொடுக்க மனதுக்குள் நல்லதை நிரப்ப
தூய ஆவியே துணையாக வாரும் என மன்றாடுவோம்.
அழகான உணர்வே தூயஆவி
ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு
அவதியுற்று வந்தார்..
ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர்
வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற
நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர்.
இதைப் பார்த்த சமய குரு, " நாம் அனைவரும் இவருக்காக
இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்" எனக் கூறி மனமுருகி
அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது
நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை
வேண்டத் தொடங்கினார்கள்.
பிறகு அந்த சமய குரு, "இறைவனின் அருளால், நிச்சயம்
உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள்
நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல்
நிலை சரியாகி விடும்" எனக் கூறினார்.
அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். போதகர்
சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத்
தொடங்கினான்.
"வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா?
அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?" என
கூறி சிரித்தான்.
அதற்கு அந்த சமய குரு, "இந்தக் கூட்டத்திலேயே மிகப்
பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான்" என
சொன்னார்.
இதைக் கேட்டதும் அவன், "நீங்கள் கூறியதற்கு உடனே
மன்னிப்பு கேளுங்கள். இல்லையே உங்களை அடித்து
விடுவேன்" என்றபடி அடிக்கப் பாய்ந்தான்.
பதற்றமே இல்லாத அந்த சமய குரு, "முட்டாள், மூடன்,
மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை
இப்படி மாற்றி விட்டதே, எப்படி? இந்தச் சொற்கள் உங்களை
எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால்
பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்" என்றார். இதைக்
கேட்ட அந்த நாத்திகன் வெட்கித் தலை குனிந்தான்.
நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது
என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பே, 'நல்லதையே நினை.
நல்லதையே பேசு' என அழகாக நம் முன்னோர்கள், சொல்லி
விட்டனர்.
இந்த அழகான உணர்வைத்தான் உயிர்த்த இயேசுவும் சீடர்கள்
மீது ஊதி ஏவினார். "தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
எவருடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ, அவைகள்
மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை
மன்னியாதிருப்பீர்களோ, அவைகள் மன்னிக்கப்படா என்றார்."
நாம் இன்று என்ன நிலையில் இருக்கின்றோமோ, அந்நிலையை
கொடுத்தது நம் எண்ணங்களே ....
எண்ணங்கள் அழகானால் ....எல்லாம் அழகாகும். அழகான
எண்ணங்களுக்கு அழகான வண்ணங்களைத் தீட்ட தூய ஆவியின்
கொடையை விடாது கேட்டுக் கொண்டே இருப்போம்.
கடவுள் வந்தார்...! "என்ன வேண்டும் கேளுங்கள்,
தருகிறேன்..!": என்றார்..
அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..
முதல் மனிதன் : "எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய
பிஸினஸும் வேண்டும்..!":
இரண்டாம் மனிதன்: "நான் உலகில் சிறந்தோங்கி பெரிய
பதவியை அடைய வேண்டும்..!"
மூன்றாம் மனிதன் : "உலப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப்
பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!"
நான்காம் மனுஷி: "உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..!
உலகமே அதில் மயங்க வேண்டும்..!"
இப்படி இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக்
கேட்டனர்..!
கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று
கொடுத்து விட்டார்..!
பத்தாவது மனிதன் கேட்டான்: "உலகத்தில் ஒரு மனிதன்
உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் மன
நிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு
வேண்டும்..!"
ஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்தனர்..
சிரித்தனர்..!
"மனநிம்மதி, மன நிறைவு, நாங்களும் அதுக்குதானே
இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால்
மனநிறைவு கிடைத்து விடுமே..?"
கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் : "நீங்கள் கேட்டதைக்
கொடுத்து விட்டேன்..!
நீங்கள் போகலாம்..!" என்று கூறிவிட்டு, பத்தாவது
மனிதனைப் பார்த்து : "நீ இரு..!
நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..சிறிது நேரம்
கழித்து வருகிறேன்..": என்று சொல்லிவிட்டு எங்கோ
போனார்..!
இப்போது, அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி
நின்றனர்..!
கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப்
போகிறார்; என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக
வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..!
துடித்தது..! அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில்
கிடைத்த பின்னும், இன்னும் எதுவுமே கிடைக்காத அந்த
பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம்
வெதும்பினர்..! நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..!
தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..! அதை
அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே, அந்த இடத்திலேயே,
அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல்
போனது..!
பத்தாவது மனிதன், கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும்
இல்லாமல் காத்து நின்றான்..! கடவுள் தன்னிடம் பேசப்
போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு
மனநிறைவு கிடைத்து விட்டது..!
நாம் "பத்தாவது" மனிதனா..? இல்லை "பத்தாது" என்கிற
மனிதனா..? முடிவு எடுப்போம்..
நல்ல முடிவுகளை எடுக்க மன நிறைவைத் தர வேண்டியதை
மட்டுமே பெற்றுக் கொள்ள பரிசு தருபவர் பரிசுத்த ஆவி.
இந்த பரிசுத்த ஆவி நம்முள், நம்அருகில், நமக்குள்
இருக்கிறார். நாம் எண்ணும் எண்ணங்களே நாம் யார் என
நம்மைத் தீர்மானிக்கும்.
நல்ல எண்ணங்களை எண்ண இனிமையான எண்ணங்களுடன்...வாழ தூய
ஆவியே துணையாக வாருமே என மன்றாடுவோம்.
திருடன் ஒருவன் இருந்தான். பல முறை திருடி மாட்டிக்
கொண்டு சிறை சென்று வருவான். ஒவ்வொரு முறையும் அவன்
சிக்கிக் கொள்ளும் போதும் அவனுக்காக வாதாட ஒரு
வழக்கறிஞரும் இருந்தார். ஒவ்வொரு முறையும் அவர்
அவனுக்காக வாதாட மறுத்து விடுவார். இருந்தாலும் அவன்
அவரது கையை காலைப் பிடித்துக் கெஞ்சுவான். அவரும் மனம்
இரங்கி, "இனி இந்த மாதிரி செய்தால் உனக்காக வாதாட
மாட்டேன் " என்று எச்சரிக்கை செய்து விட்டு அவனுக்காக
வாதாடி அவனது தண்டனையைக் குறைத்து விடுவார். இது
பலமுறை தொடர்ந்தது. வருடங்கள் ஓடின. இப்படியே திருடன்
எந்த வழக்கிலும் சிக்கிக் கொள்ளவில்லை.
நீண்ட நாட்களுக்கு பிறகு, ஒரு நாள் ஒரு பெரிய வழக்கில்
சிக்கிக் கொண்டான். அது கொஞ்சம் பெரிய குற்றம்.
இப்போதும் அவனது வழக்கறிஞர் திறமையாக வாதாடி அவனது
தண்டனையைக் குறைத்து விடுவார் என்று நம்பினான். ஆனால்
விசாரிக்கும்போதுதான் தெரிந்தது, அவர் இப்போது
வழக்கறிஞர் பதவியில் இருந்து பதவி உயர்வு பெற்று
நீதிபதி ஆகிவிட்டார் என்பது. அவனுக்கு மிகுந்த
சந்தோஷம்.
தனக்காக வாதாடியவரே இப்போது நீதிபதி . அவர்
நினைத்தால், தன் பேரிலுள்ள வழக்குகளை தள்ளுபடி
செய்யக்கூட முடியும். இம்முறை, அவன் சும்மா பேருக்கு
ஒரு சாதாரண வக்கீலை நியமித்துக் கொண்டு நம்பிக்கையோடு
குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்றான். நீதிபதி அவன்
முகத்தை ஏறிட்டார். ஆஹா, நமக்கு விடுதலைதான். அவனது
மனம் குதூகலமாய்த் துள்ளியது.
நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கவனித்துக் கேட்டார்.
பிறகு அவன் இதுவரை அனுபவித்திராத ஒரு பெரிய தண்டனையை
வழங்கினார். அவன், அதை எதிர்பார்க்கவில்லை. துடித்துப்
போனான். ஐயா, "எப்போதும் எனக்காகப் பரிந்து பேசும்
நீங்களே எனக்கு இப்படி ஒரு தண்டனையை விதித்து
விட்டீர்களே " என்று அவரது காலில் விழுந்து கதறினான்.
நீதிபதி கடுமையாகச் சொன்னார், ":மூடனே,
நான் வழக்குரைஞராக இருக்கும்வரை உன்னை எவ்வளவோ
எச்சரித்தேன். தொடர்ந்து உனக்கு சாதகமாக வாதாடி
வந்தேன். இப்போது நான் நீதிபதி. உன்னுடைய எல்லாக்
குற்றங்களுமே நான் அறிந்திருக்கிறேன். நீ
தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. இந்தக் கடுமையான
தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் ".
ஆம்.... இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறவர்தான்.
ஆனாலும், அவர் நீதிபதியாய் வரும்போது நமக்கான பலன்
நம்முடனேயே கூட வரும். நல்ல பலனானாலும்,
கெட்ட பலனானாலும் அனுபவித்தே தீரணும். தப்பவே
முடியாது. எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்,
இந்த எச்சரிக்கை மணியை நமது மனதுக்குள் ஓங்கி ஒலிக்கச்
செய்பவர் தூய ஆவியே. ஆவியானவரின் குரலுக்கு செவி
கொடுக்க முன்வருவோம்.
"இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப
அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைமாறு என்னிடம்
உள்ளது" திருவெளிப்பாடு 22:12 என்று ஆண்டவர்
சொல்கின்றார்.
நல்ல பலனை அனுபவிக்க வழிகாட்டும் ஆவியானவரின்
ஏவுதலுக்குக் கட்டுப்பட்டு வாழ முன்வருவோம். அப்போது
நம் செயலுக்கு ஏற்ற கைமாறு மகிழ்ச்சி மிகுந்ததாக
அமையும். நடைமுறை செயல்பாடுகளை நம் இறைவன் தூய
ஆவியானவர் வழியாக நமக்குக் கற்றுத் தருகிறார்.
ஆவியானவர் நம்மோடு உறையட்டும்!
நம் உடலில் ஏதோ மெழுகுவர்த்தியின் சூடு தெரியாமல்
படுகிறது. அதை வலி எனும் உணர்வின் மூலமாய் மூளை
தெரியப்படுத்தி, உடனே அதைவிட்டு விலகி தப்பிக்க
வைக்கிறது.
சமையல் செய்கையில் அடுப்பை அணைக்காது விட்டதால்,
அடிப்பிடித்துக் கருகல் வாசனை வருகிறது. மூக்கு அதனை
உணர்ந்து ஓடிப்போய் அடுப்பை அணைக்கவைக்கிறது. பெரும்
விபத்து தவிர்க்கப்படுகிறது.
தாகம் என்ற உணர்வால் தண்ணீர் பருகி உடல் புத்துணர்வு
பெறுகிறது. பசி உணர்வால், உணவு உண்டு பலப்படுகிறது.
இப்படி அழிவுக்கேதுவான உடல் தன்னகத்தே அநேக
உணர்வுகளைக் கொண்டிருந்து அவைகளைப் பயன்படுத்தி
ஆபத்துகளிலிருந்து தப்பிக்கிறது. அல்லது அவைகளைக்
கொண்டு பலன் பெறுகிறது. ஆனால் பரிசுத்தமாக வாழவேண்டிய
ஆவியோ, ஆவிக்குரிய உணர்வை இழந்துபோய் அழிவுக்கு நேரே
சென்றுகொண்டிருக்கிறது.
நம் இறைவன் நமக்கு போதித்து உணர்த்துகிறவர். உணர்வை
ஏற்படுத்தி ஜெபிக்க வைக்கிறவர். துதிக்க, ஆராதிக்க
வைக்கிறவர். நற்செய்தி வாசிக்க வைக்கிறவர். நற்செயல்
செய்ய வைக்கிறவர்.நற்பண்பில் வளர வைக்கிறவர்.
காலையில் நேரமே எழுந்து, முழங்கால் படியிட்டு தூய
ஆவியின் துணையை நாடுவோம். புதிய நாள் முழுவதையும்
ஆசிர்வதிக்க செபிப்போம்.
தேவையற்ற மனித சிந்தனை. தேவையற்ற உலக சிந்தனை. அத்தனை
ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் கெடுக்கும் உணர்வற்ற
வாழ்க்கை!
ஆவியானவரின் உணர்வு மிகுந்த வாழ்க்கைப் பாதையில்
பயணிப்போம்.
கண்கள் ஆவியானவரின் துணையோடு விழிக்கட்டும்.
கால்கள் ஆவியானவர் காட்டும் திசையில் நடக்கட்டும்.
கரங்கள் ஆவியானவர் ஏவும் செயலை செய்யட்டும்.
சொல் செயல் சிந்தனை ஆவியானவரின் அருளால் நிரம்பி
வழியட்டும்.
அன்றாட வாழ்க்கை ஆவியானவரின் அருட்துணையோடு நடத்தப்பட
ஒவ்வொரு வைகறை பொழுதையும் வைகறையின் ஒளியாக வரும் தூய
ஆவியிடம் ஒப்புக்கொடுப்போம்.
ஒவ்வொரு பொழுதும் பரிசுத்த ஆவியானவருடன் இணைந்து நாம்
செயல்படும் போது பரிசுத்தமடைவோம்.
ஆவியானவருக்கு செவிகொடுக்கப் பழகுவோம்... அப்போது அவர்
நம்மோடு உறைவார்..
தூய ஆவி நம்மோடு உறையட்டும்.
நிறைஉண்மையை நோக்கி வழி நடத்தட்டும்.
அவர் தரும் அமைதி நமதாகட்டும்.
விடுதலை நம் அனுபவமாகட்டும்..
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே இப்பொழுதே வாரும்
இறங்கிவாரும் எங்கள் உள்ளத்திலே.
ஆவியின் வரங்களினால் எங்களை நிரப்பிடும் எழுந்து ஒளி
வீசச் செய்யும்.
என மன்றாடி மனதுக்குள் அவரை உறைய வைப்போம்� நிறைய
வைப்போம்.
நம் வாழ்வுக்கு வழிகாட்ட
நம் சொல்லுக்கு ஒளியூட்ட
நம் செயலுக்கு அறிவூட்ட
நம் சிந்தனைக்கு சிறப்பூட்ட
நம் கடமையை நினவூட்ட
அதை சிறப்பாகச் செய்ய ஆற்றலூட்ட
ஆன்மீக வாழ்வுக்கு அழகூட்ட
நமது ஆன்மீக வாழ்வில் பரிசுத்த ஆவியை பரிசாகப்
பெற்றுக் கொள்ள நம் இதயத்தை சுத்தமாக்குவோம்.
ஆவியானவர் நம்மில் உறையட்டும்!!!!
மறையுரைச்சிந்தனை
அருட்சகோதரி: மெரினா
O.S.M.
மறையுரைச்சிந்தனை - சகோ. செல்வராணி Osm
மறையுரைச்சிந்தனை
- அருள்பணி ஏசு கருணாநிதி
வெளியேறு துணிவுகொள் - கூவியழை
இன்று நாம் கொண்டாடும் தூய ஆவியார் பெருவிழாவுடன் உயிர்ப்புக் காலம்
நிறைவுக்கு வருகிறது. இந்த நாளின் விவிலிய, வழிபாட்டு, இறையியல்,
மற்றும் ஆன்மிக வளமை மேன்மையானது. 'நற்செய்தியின் மகிழ்ச்சி' (இலத்தீன்
மொழியில், 'இவாஞ்சலி கௌதியம்') என்னும் திருத்தூது ஊக்கவுரையில்,
நற்செய்தி அறிவிப்பாளர்கள் தூய ஆவியாரால் நிரப்பப்பட வேண்டும் என
மொழிகிற திருத்தந்தை பிரான்சிஸ் (எண். 259), பெந்தகோஸ்தே நிகழ்வை
மூன்று சொல்லாடல்களால் எடுத்துரைக்கிறார்: 'வெளியேறுங்கள், துணிவு
கொள்ளுங்கள், கூவி அழையுங்கள்.' இச்சொல்லாடல்களின் துணைகொண்டு இந்நாளின்
மறையுண்மை குறித்து சிந்திப்போம்.
அ. நம் வேலிகளிலிருந்து நம்மை வெளியேற்றுகிறார் தூய ஆவியார்.
ஆ. கடவுளின் வியத்தகு செயல்களை அறிவிக்க நமக்குத் துணிவு தருகிறார்.
இ. தூய ஆவியாரை அன்றாடம் கூவி அழைத்தல் அவசியம்.
அ. நம் வேலிகளிலிருந்து நம்மை வெளியேற்றுகிறார் தூய ஆவியார்.
திருத்தூதர்கள் மேலறையில் கூடியிருக்கும்போது அவர்கள்மேல் தூய
ஆவியார் பொழியப்படுகிறார். தூய ஆவியாரால் நிறைந்த அவர்கள் முதலில்
வேறு மொழிகளில் பேசுகிறார்கள். அவர்களுடைய நாக்கு
கட்டவிழ்க்கப்படுகிறது. அவர்கள் தங்கள் மொழி என்ற வேலியிலிருந்து
வெளியேறுகிறார்கள். அப்படி வெளியேறிய அவர்கள் பல மொழிகள் பேசுகின்ற
மக்களை எதிர்கொள்கிறார்கள். ஆக, தங்களுக்குத் தாங்களே
வகுத்துக்கொண்ட வேலியிலிருந்தும், தங்களுக்கும் பிறருக்கும் இடையே
இருந்த வேலியிலிருந்தும் அவர்கள் வெளியேறுகிறார்கள்.
'வெளியே போ!' என்று தூய ஆவியார் என்னை அழைக்கிறார். நான்
உடைத்தெறிய வேண்டிய அல்லது தாண்ட வேண்டிய வேலிகள் எவை? எனக்கு நானே
வரையறுத்துக்கொண்ட வேலிகளாக, அல்லது மற்றவர்கள் எனக்கு இடுகின்ற
வேலிகளாக அவை இருக்கலாம். எனக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு
நெருக்கத்தை, இணக்கத்தை, உறவை ஏற்படுத்திக்கொள்ளத் தயாராக
இருக்கிறேனா? எனக்கு அருகில் இருக்கும் குடும்பம், நண்பர்கள்,
குழுவினரோடும், தூரமாக இருக்கும் நபர்களோடும் நான் கொள்ளும்
நெருக்கம் எப்படி இருக்கிறது? மற்றவர்கள் அனைவரும் 'வௌ;வேறு மொழி
பேசக் கூடியவர்கள்' என நான் முற்சார்பு எண்ணம் அல்லது அச்சம்
கொள்கிறேனா? நான் ஒருவர் மற்றவரோடு உரையாடும்போது தூய ஆவியார்
எனக்குக் கற்றுத் தருவதற்கு நான் அனுமதிக்கிறேனா?
ஆ. கடவுளின் வியத்தகு செயல்களை அறிவிக்க நமக்குத் துணிவு தருகிறார்
தூய ஆவியார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'பர்ரேஸியா' என்னும் கிரேக்கச்
சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறார். தூய ஆவியார் தருகிற கொடை இது
என மொழிகிறார். படைப்புத் திறத் துணிவு என்று நாம் இதை அழைக்கலாம்.
அதாவது, நம் துணிவின் வழியாக நம் வாழ்வும் மற்றவர்கள் வாழ்வும்
மேம்படுகிறது. நாம் விரும்புவதைத் தெளிவாகவும், உறுதியாகவும்,
கட்டின்மையோடும் சொல்லக் கூடிய ஆற்றலே படைப்புத் திறத் துணிவு.
திருத்தூதர்கள் குறிப்பாக பேதுரு, பெந்தகோஸ்தே நாளில்
உரையாற்றுகிறார். அவர் ஆற்றும் உரையின் தெளிவு நமக்கு வியப்பு
தருகிறது. மீன்பிடிக்கும் பின்புலத்திலிருந்து வந்த ஒருவர்
தெளிவாகவும், உறுதியாகவும் மறைநூலை மேற்கோள் காட்டிப் பேசுவது
தலைமைச்சங்கத்தாருக்கு வியப்பூட்டுகிறது. 'ஆண்டவராகிய இயேசு
உயிர்த்து விண்ணேற்றம் அடைந்து கடவுளின் வலப்பக்கம்
வீற்றிருக்கிறார்' என்பதே கடவுளின் வல்ல செயல். இரண்டாம்
வாசகத்தில் புனித பவுல், கொரிந்து நகரில் உள்ள குழுமத்தார்
பெற்றிருக்கிற கொடைகளைச் சுட்டிக்காட்டுகின்றார். இக்கொடைகள்
அனைத்தும் பொதுநன்மைக்காகவே வழங்கப்பட்டுள்ளன. அந்தப் பொதுநன்மை
என்ன? கடவுளின் வியத்தகு செயல்களைக் குழுமமாக எடுத்துரைப்பது,
மாற்று வாழ்வு வாழ்வது.
இன்று நான் துணிவிழந்து நிற்கும் பொழுதுகள் எவை? படைப்புத் திறத்
துணிவை நான் பெற என்ன செய்ய வேண்டும்? ஆண்டவர் என் வாழ்வில் எனக்கு
ஆற்றிய அரும்பெரும் செயல்களை நான் எடுத்துரைக்கத் தயாராக
இருக்கிறேனா? தூய ஆவியார் எனக்கு வழங்கியுள்ள கொடைகள் குறித்து
நான் அக்கறை உள்ளவனாக இருக்கிறேனா? தூய ஆவியாரின் கொடைகளை
முன்னிட்டு நான் மற்றவர்களை வேற்றுமைப்படுத்திப் பார்த்தால், அந்த
மனநிலை விடுக்க நான் தயாராக இருக்கிறேனா?
இ. தூய ஆவியாரை அன்றாடம் கூவி அழைத்தல் நலம்.
மூவொரு இறைவனில் அதிகமாக மறக்கப்பட்ட நபர் தூய ஆவியார்தாம். தம்
இறுதி இராவுணவில் தூய ஆவியாரைத் தம் சீடர்களுக்கு வாக்களிக்கிற
இயேசு, 'தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற
துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை
வெளிப்படுத்தும் தூய ஆவியார் ... உங்களை வழிநடத்துவார்' (காண்.
யோவா 15:26, 16:13) என மொழிகிறார். தூய ஆவியாரைப் பெற்றவுடன்
திருத்தூதர்கள் இயேசுவுக்குச் சான்று பகர்கிறார்கள். தூய ஆவியாரின்
பணிகளாக மூன்றை வரையறுக்கிறார் இயேசு: துணையாக இருத்தல், உண்மையை
வெளிப்படுத்துதல், வழிநடத்துதல். நம் வாழ்வில் நாம் பல நேரங்களில்
துணையின்றி நிற்கிறோம். உண்மையைப் பொய்யிலிருந்து பகுத்தாய இயலாமல்
நிற்கிறோம். திசை தெரியாமல் நிர்கதியாக நிற்கிறோம். இவ்வேளைகளில்
தூய ஆவியாரை நாம் கூவி அழைத்தால் அவர் நமக்குத் துணையாளராக வந்து,
உண்மையைத் தெளிவுபடுத்தி, வழிநடத்துகிறார். தூய ஆவியார் இல்லாமல்
செய்யப்படும் செயல்கள் அனைத்தும் வெறுமையே என்கிறார் திருத்தந்தை.
தூய ஆவியாரை நாம் அழைக்க வேண்டுமெனில், அவரை அறிந்தவர்களாக நாம்
இருக்க வேண்டும். நம் வாழ்வு ஊனியல்பை விடுத்து ஆவிக்குரிய இயல்பை
அணிந்திருக்க வேண்டும் (காண். கலா 5:18-24). நற்செய்தி வாசகத்தில்
தம் திருத்தூதர்கள்மேல் ஊதுகிற இயேசு தூய ஆவியாரை அவர்களுக்கு
அளிக்கிறார். அவர்கள் மகிழ்ச்சியும் அமைதியும் பெறுகிறார்கள்.
நான் ஆவியாரைக் கூவி அழைக்கிறேனா? அவருக்கு நான் என் வாழ்வில்
தரும் இடம் என்ன? அவரை அழைப்பதன் வழியாக என் வாழ்வைப்
புதுப்பித்துக்கொள்ள நான் தயாராக இருக்கிறேனா? என் உள்ளொளியாக அவர்
சுடர்விடுவதற்கு நான் அனுமதிக்கிறேனா? வாழ்வின் தெரிவுகள் கடினமாக
இருக்கும்போது, பாதைகள் தெளிவு இல்லாமல் இருக்கும்போது அவரின்
துணைகொண்டு தெரிவுகளை மேற்கொள்ளவும், தெளிவு பெறவும் தயாராக
இருக்கிறேனா? அவர் வழியாகவே நான் கடவுளை அப்பா, தந்தாய் என
அழைக்கிறேன் எனில், நான் எப்போதெல்லாம் இறைவேண்டல் செய்கிறேன்?
அவரின் நெருப்பு இன்று என் வாழ்வில் தூய்மையாக்க வேண்டிய பகுதிகள்
எவை? ஆண்டவரின் ஆவி சாமுவேலை விட்டும், சவுலை விட்டும் அகன்றது போல
என்னை விட்டும் அகன்றுவிட்டாரா?
நிற்க.
'ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி மண்ணகத்தின் முகத்தைப்
புதுப்பிக்கிறீர்!' (திபா 104) என்று இன்றைய பதிலுரைப்பாடலில்
பாடுகிறோம். நம் வாழ்வை தூய ஆவியார் புதுப்பிப்பாராக! 'தூய ஆவியின்
துணையால் நாம் வாழ்கிறோம். எனவே, அந்த ஆவி காட்டும் நெறியிலேயே
நடக்கு முயலுவோம்' (கலா 5:25) என்னும் பவுலின் சொற்களை
நினைவில்கொள்வோம். பாதுகாப்பு வளையும் மற்றும் வேலிகளை விட்டு
வெளியேறுவோம்! இறைவனின் வியத்தகு செயல்களை அறிவிக்கும் துணிவு
பெறுவோம்! அவரை அன்றாடம் கூவியழைப்போம்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக Joyful News Magazine என்ற சஞ்சிகையில்
வந்த ஒரு நிகழ்வு. நார்வேயைச் சார்ந்த நான்சென் (Nansen 1861-
1930) என்ற ஆய்வாளர், பனி படர்ந்த ஆர்ட்டிக் பகுதியில், மனிதர்கள்
வாழ்வதற்கு ஏதுவான சூழல் இருக்கின்றதா என்பது தொடர்பாக ஆய்வுகள்
மேற்கொள்ளப் புறப்பட்டுச் சென்றார். அப்படிப் புறப்படும்பொழுது நன்கு
பயிற்றுவிக்கப்பட்ட ஒரு புறாவையும் தன்னோடு கொண்டுசென்றார்.
பல நாள்கள் பயணத்திற்குப் பின்பு, ஆர்ட்டிக் பகுதியை வந்தடைந்த
நான்சென், மிகப் பொறுமையாகத் தன்னுடைய ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.
எங்கு பார்த்தாலும் பனி படர்ந்திருந்த அந்தப் பகுதியில் இருப்பது
இவருக்கு மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. இருந்தாலும், வந்த
வேலையை முடிக்காமல் பாதியில் செல்வது நல்லதல்ல என்பதை உணர்ந்த இவர்,
தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார். இப்படி இவர் தொடர்ந்து ஆய்வுகளை
மேற்கொண்டதால், நாள்கள் போனதே தெரியவில்லை; கண்மூடி முழிப்பதற்குள்
இரண்டு ஆண்டுகள் ஓடியிருந்தது இவருக்குத் தெரிந்தது.
இதனால் இவர், தன்னுடைய வீட்டில் இருப்பவர்களுக்குத் தான் பத்திரமாகத்தான்
இருக்கின்றேன் என்ற செய்தியைச் சொல்ல விரும்பினார். அதனால் இவர் ஒரு
காகிதத்தில், தான் மேற்கொண்டு வரும் ஆய்வு, நன்றாகப்
போய்க்கொண்டிருப்பது பற்றியும் தான் பாதுகாப்பாக இருப்பது பற்றியும்
எழுதி, தன்னோடு இருந்த புறாவின் காலில் கட்டி, அதனைத் தன்னுடைய
வீட்டாருக்கு அனுப்பி வைத்தார். நான்சென் இருந்த இடத்திற்கும் இவருடைய
வீடு இருந்த இடத்திற்கும் இடையே இரண்டாயிரம் கிலோ மீட்டர்கள். ஆனாலும்,
நான்சென் அனுப்பி வைத்த அந்தப் புறா, பாதுகாப்பாக, இவருடைய
வீட்டிற்குச் சென்றது. புறாவையும் அதன்காலில் இருந்த காகித்தத்தில்
பார்த்த இவருடைய மனைவியும் பிள்ளையும், நான்சென் பாதுகாப்பாகத்தான்
இருக்கின்றார் என்று மனநிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள்.
எப்படி ஆய்வாளர் நான்சென் அனுப்பி வைத்த புறாவைக் கண்டதும், அவருடைய
குடும்பத்தார், நான்சென் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றார் என்ற மனநிம்மதியும்
மகிழ்ச்சியும் அடைந்தார்களோ, அப்படி விண்ணகப் புறாவான, தூய ஆவியார்
சீடர்களிடம் வந்ததும், அவர்கள் விண்ணகத்திற்குச் சென்ற இயேசு, தந்தையின்
வலப்பக்கத்தில்தான் இருக்கின்றார் என்றும் தங்களுக்குத் துணையாகத்
தூய ஆவியார் இருக்கப்போகிறார் என்றும் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.
ஆம், இன்று நாம் தூய ஆவியார் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இயேசு
தன்னுடைய சீடர்களுக்குச் சொன்னதுபோன்றே தூய ஆவியார் அவர்கள்மீது
இறங்கி வருகின்றார். தூய ஆவியாரின் வருகை சீடர்கள் நடுவில் எத்தகைய
மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதையும் அவர் நமக்கு விடுக்கும் அழைப்பு
எத்தகையது என்பதையும் நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
துணிவைத் தரும் தூய ஆவியார்
யூதர்கள், இயேசுவைச் சிலுவையில் அறைந்துகொன்ற பிறகு, அவருடைய
சீடர்கள் யூதர்களுக்கு அஞ்சித் தாங்கள் இருந்த இடத்தின் கதவை
அடைத்தே வைத்திருந்தார்கள் (யோவா 20: 19). இத்தனைக்கும் உயிர்த்த
ஆண்டவரைக் கண்ட மகதலா மரியாவும் (யோவா 20: 18) எம்மாவு நோக்கிச்
சென்ற இரண்டு சீடர்களும் (லூக் 24: 15-16) சீமோன் பேதுருவும் (லூக்
24:34) உயிர்த்த ஆண்டவரைப் பற்றி மற்ற சீடர்களிடம் சொன்னபொழுதுகூட,
அவர்கள் அதை நம்பாமல், அச்சத்தோடே இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட
சூழலில்தான் இயேசு தன் சீடர்களுக்குத் தோன்றி, "உங்களுக்கு அமைதி
உரித்தாகுக" என்று இரண்டு சொல்லி, தன் கைகளையும் விலாவையும்
அவர்களுக்கு காட்டுகின்றார். மட்டுமல்லாமல், அவர் அவர்கள் மேல்
ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்கிறார்.
இயேசு சீடர்கள் மேல் ஊதினார் என்ற சொற்கள், ஆண்டவராகிய கடவுள்
மண்ணால் மனிதனை உருவாக்கி, அவனுடைய நாசிகளில் உயிர் மூச்சை ஊத,
மனிதன் உயிர் உள்ளவன் ஆனான் (தொநூ 2: 7) என்ற சொற்களை நமக்கு
நினைவுபடுத்துபவையாக இருக்கின்றன. மண்ணால் உண்டாக்கப்பட்ட
மனிதனுடைய நாசிகளில் ஆண்டவராகிய கடவுள், உயிர் மூச்சை ஊதும்
வரையில், அவன் உயிரற்றவனாகத்தான் இருந்தான். எப்பொழுது கடவுள்
அவனுடைய நாசிகளில் உயிர் மூச்சி ஊதினாரோ, அப்பொழுது அவன் உயிர்
உள்ளவன் ஆனான். அதுமாதிரித்தான் இயேசுவின் சீடர்களும். சீடர்கள்
தூய ஆவியாரைப் பெறும்வரையிலும் யூதர்களுக்கு அஞ்சி
வாழ்ந்துகொண்டிருந்தார்கள். எப்பொழுது அவர்கள் தூய ஆவியாரைப்
பெற்றுக்கொண்டார்களோ, அப்பொழுது அவர்கள் துணிவுள்ளவர்களாக மாறி,
இயேசுவுக்குச் சான்று பகர்ந்தார்கள். அவ்வாறெனில், இன்றைக்கும் தூய
ஆவியார் அச்சத்தோடு இருக்கின்ற நமக்குத் துணிவைத் தருகின்றார்
என்பதே உண்மை.
நற்செய்தி அறிவிக்க வல்லமையைத் தரும் தூய ஆவியார்
இன்றைய நற்செய்தியில், இயேசு தன்னுடைய சீடர்களிடம்
பேசுகின்றபொழுது, "தந்தை என்னை அனுப்பியது போல் நானும் உங்களை
அனுப்புகிறேன்" என்பார். பின்னர் அவர் விண்ணேற்றம் அடைவதற்கு
முன்பாகச் சீடர்களிடம், "தூய ஆவி உங்களிடம் வரும்பொழுது நீங்கள்
கடவுளது வல்லமையைப் பெற்று.... எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்"
(திப 1:8) என்பார். இயேசுவின் இவ்வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை.
தூய ஆவியார் சீடர்கள்மீது வரும்பொழுது, கடவுளின் வல்லமையைப்
பெற்றவர்களாய் அவர்கள் இயேசுவுக்குச் சாட்சிகளாய் இருப்பார்கள்
என்றால், தூய ஆவியார் சீடர்களுக்கும் நமக்கும் நற்செய்தியை
அறிவிப்பதற்கு வல்லமையைத் தருகின்றார் என்பதுதானே பொருள். ஆம்,
இயேசுவின் சீடர்கள் தூய ஆவியாரின் வல்லமையைப் பெற்றுக்கொண்ட பிறகு,
யாருக்கும் அஞ்சாமல் நற்செய்தியை அறிவித்தார்கள். இன்று நாம்
ஆண்டவரின் நற்செய்தி அறிவித்தால் ஆபத்து வருமோ என்று அஞ்சிக்
கொண்டிருந்தால், தூய ஆவியார் நற்செய்தியை அறிவிப்பதற்கான
வல்லமையைத் தருகின்றார். இந்த உண்மையை உணர்ந்துகொண்டு நாம்
நற்செய்தியை அறிவித்தால், இன்னும் சிறப்பாக நற்செய்தியை
அறிவிக்கலாம்.
பாவங்களை மன்னிக்கும் அருளைத் தரும் தூய ஆவியார்
உயிர்த்த ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்கள்மீது தூய ஆவியை ஊதிய
பின், எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை
மன்னிக்கப்படும்" என்கின்றார். அப்படியானால், தூய ஆவியார் பாவங்களை
மன்னிப்பதற்கான அதிகாரத்தையும் ஆற்றலையும் சீடர்களுக்குத்
தருகின்றார் என்பதுதானே உண்மை.
தூய ஆவியார் வேறு யாருமல்ல, அவர் மற்றொரு துணையாளர் (யோவா 14:16);
இயேசுதான் நமக்கு முதல் துணையாளர். இயேசுவுக்கு எப்படி எல்லா
அதிகாரமும் இருக்கின்றதோ, அப்படி தூய ஆவியாருக்கும் இருக்கும் (மத்
28: 18). ஆகையால், தூய ஆவியார் பாவங்களை மன்னிப்பதற்கான
அதிகாரத்தையும் வல்லமையும் சீடர்களுக்கும் நமக்கும் தருகின்றார்.
இது மறுக்கமுடியாத உண்மை. எனவே தூய ஆவியாளர் அளிக்கின்ற பாவ
மன்னிப்பை, நாம் ஒவ்வொருவரும் வழங்கி, அவர்கள் கடவுள் அளிக்கும்
மீட்பினைப் பெற நாம் கருவிகளாக இருந்து செயல்படவேண்டும்.
ஏனென்றால், பாவ மன்னிப்பால்தான் மீட்பு வரும் (லூக் 1: 76-77).
எனவே, தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்ட நாம், எல்லா அச்சத்திலிருந்தும்
விடுதலை பெற்று, ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை எல்லாருக்கும்
அறிவித்து, அவர்கள் பாவ மன்னிப்பினால் வரும் மீட்பை அடைய, நாம்
கருவிகளாக இருந்து செயல்படுவோம்.
சிந்தனை
கடவுள் மனிதர்களிடம் பல வழிகளில் பேசுகின்றார். அதில் முதன்மையான
வழி தூய ஆவியார் என்பார் ஹென்றி ப்ளாக்கபி என்ற எழுத்தாளர்.
ஆகையால், கடவுள், தூய ஆவியார் வழியாக நம்மிடம் பேசுகின்றபொழுது,
நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்ந்து (கலா 5:16),
ஆண்டவரின் நற்செய்தியைத் துணிவோடு அறிவித்து, அவருக்குச் சான்று
பகர்ந்து வாழ்வோம். அதவழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறையுரைச்சிந்தனை
-
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அன்று அந்தக் குடும்பத்தில்
மகிழ்ச்சி. ஒரு குழந்தையின் பிறந்த நாள் மிக ஆடம்பரமாக,
மிக மகிழ்ச்சியோடு பெற்றோர், உறவினர்கள் கொண்டாடுகிறார்கள்.
ஏனெனில் புதுவாழ்வு கிடைத்தது என்பதால்தான்.
இன்று நாம் கொண்டாடும் திருவிழா தூய ஆவியின் பெருவிழா,
ஆவியானவர் நமக்கு ஆண்டவர் இயேசுவின் விண்ணக ஏற்புக்குப்
பிறகு தந்தையால் தரப்பட்ட கொடை... தூய ஆவி பிறந்தார் என்பது
அல்ல. மாறாக தூய ஆவியானவரின் வருகையால் திருச்சபையானது
பிறப்பெடுத்தது என்பதுதான். இதன் மகிமை. இறை மக்கள் பிறந்தார்கள்.
ஆவியின் வாழ்வில் திருத்தொண்டர்கள் தொடங்கி, சீடர்கள்,
ஆதி கிறிஸ்தவர்கள் என்றெல்லாம் திருக்கூட்டமானது பெருகியது
என்பதைத் தான் இன்று நினைவுகூர்கின்றோம்.
ஆதியிலே தூய ஆவியானவர் காற்றாக, தீப்பிழம்பாக, புறாவாக,
ஏன் தண்ணீராக அடையாளம் காட்டப்பட்டுள்ளார். மனித
வாழ்வில் ஆவி, காற்று இவை மிக முக்கியம். மூச்சுவிட
காற்று, ஆவி இன்றி மனிதனால் வாழ முடியாது. அதேபோலத்தான்
மனிதவாழ்வுக்கு காற்று வடிவில் தேவ ஆவி காட்சி தருகிறார்.
தீ நாவாக மனித வாழ்வுக்குக் காட்சி தருகிறார். மனிதன்
பேசவும், போதிக்கவும் நாவு தேவை. இதை ஆவியானவர் வடிவாக
காட்சி தருகிறார். மூன்றாவது நெருப்பாகக் காட்சி தருகிறார்.
நெருப்பானது தண்ணீரைச் சூடாக்கி நீராவியாகி இயக்கும் சக்தி
பெறுகிறது. உணவுக்கு ரசி உண்டாக்குகிறது. இதேபோல்தான் மனிதரைச்
சுவையுள்ள மனிதராக மாற்றுகிறது. நான்காவதாகப் புறா வடிவில்
காட்சி தருகிறது. இதனால் தூய்மை உண்டாக்கி, இருளைப்
போக்கும் ஆவியாகக் காட்சி தருகிறார். ஐந்தாவதாக ஆவியானவர்
தண்ணீராக அழைக்கப்படுகிறார். யாரேனும் தாகமாக இருந்தால்
ஆன்ம தாகத்தைத் தீர்க்க அருளாளராகவும், நம்மைத் தூய்மை
ஆக்குபவராகவும் உள்ளார்.
ஒரு கொல்லுப்பட்டறை தொழிலாளி ஒரு இரும்புக் கம்பியைத்
தீச்சூழையில் வைத்துச் சூடேற்றுகிறார். சூடேற்ற,
சூடேற்ற அது நெருப்பாக, சிவப்பாக மாறுகிறது. அதனால் கொல்லன்
விரும்பும் சாயலை இந்த இரும்பால் உருவாக்கி விடுகிறார்.
இதேபோல்தான் நகைகளை உருவாக்கும் தங்கம் செய்யும் பணியாளரும்.
ஆனால் சூடேற்றிய இருபானது சூடு குறைந்தால் கருப்பாகி, வளைக்க
முடியாத நிலைக்கு ஆகிவிடும். இதுபோலத்தான் ஆவியானவரின்
செயல்.
நாம் ஆவிக்கு நம்மை அர்ப்பணம் ஆக்கிடும்போது நாம் செயல்
வீரர்கள் ஆவோம். உறுதியூட்டும் இறைவனால் எதையும்
செய்யும் ஆற்றல் உண்டு (பிலி. 4:18) என்பது என்
விருதுவாக்கு. ஆம் ஆவியானவரின் துணை கொண்டு செயலாக்கம்
பெற முடியும்.
கதை
ஒரு வேடன் காட்டில் வேட்டையாடிய பின் காட்டில் கிடைத்த
ஒரு முட்டையை எடுத்து வந்து கோழி முட்டையுடன் சேர்த்து
கோழியில் அடைகாக்க வைத்தான். 22 நாட்கள் சென்று குஞ்சுகள்
வெளி வந்தன. இந்தக் காட்டில் இருந்து வந்த முட்டையில்
இருந்தும் குஞ்சு வெளி வந்தது. வளர ஆரம்பித்தவுடன்தான்
அது கழுகுக் குஞ்சு என வெளிப்பட்டது. ஆனால் கோழி குஞ்சுகளுடன்
உறவாடியதால் கோழிகளின் செயல்களை மட்டும்தான் செய்ய
முடிந்தது.
ஒரு நாள் ஒரு பருந்து ஆகாயத்தில் சிறகை விரித்துப் பறப்பதைப்
பார்த்து வியந்து நின்றது. ஆனால் கோழிக் குஞ்சோ, தம்பி!
நாம் கோழிக் குஞ்சு. தரையில் வாழ்வதுதான் நமது வாழ்வு.
ஆகாயத்தில் பறப்பதோ பறவை இனத்தின் அரசனான கழுகு. அவன்
போல் உன்னால் பறக்க முடியாது என்றது. ஆனால் கழுகுக்
குஞ்சோ ஒவ்வொரு நாளும் தன் இறக்கையை விரித்துப் பறக்க
முயற்சித்தது. முதலில் தாவிக் குதிக்கப் பழகியது. இரண்டாவது,
வேலி உயரம் தாவ முடிந்தது. பின் மரத்தின் கிளையை எட்ட
முடிந்தது. இறுதியாக ஆகாயத்தில் பறந்தது. ஆம் கழுகுக்
குஞ்சு கோழிக் குஞ்சோடு இருந்தாலும் தன்னால் முடியும்
என சாதித்தது. அதேபோல்தான் அரச குல இறைமக்களாகிய ஆவியானவரின்
துணை கொண்டு நாம் ஆகாயம் என்ற விண்ணகம் பறக்க
முடியும்.
அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்?
நாம் நம் பாவத்திற்காக மகதலா மரியாளைப்போல் மனம் வருந்தி
பாவி என்ற உணர்வோடு நம்மைத் தாழ்த்தி இறைவனிடம் வரவேண்டும்
(லூக் 7 : 38, 50).
கொர்னேலியுவைப்போல் புனித பவுலைப்போல் செபத்திலும், தபத்திலும்
ஈடுபட்டு இடைவிடாது செபிக்க வேண்டும் (தி. ப. 10:44-46).
நமது மனதை கழுகுக் குஞ்சைப்போல் மேல்நோக்கி உயர்த்த
வேண்டும். உலகம் அதன் இன்பம், பொருள் இவைகளுக்கு அடிமையாகி
இருந்தால் ஆவியானவர் நம்மில் செயலாற்ற முடியாது.
நாம் தாகத்தோடு இருக்க வேண்டும். தாகம் இருந்தால்தான்
தண்ணீர் குடிக்க ஆசை வரும். அதேபோல் பாவமின்றி ஆன்ம தாகம்
இருந்தால்தான் ஆவியானவரைப் பெற முடியும் (யோவா 7 : 37).
தேவ வார்த்தையை, விவிலியத்தை எடுத்து வாசிக்க வேண்டும்.
தேவவார்த்தையைக் கவனமுடன் கேட்க வேண்டும்.
மூப்பர்கள் குருக்கள் கை வைக்க நாம் ஆவியைப்
பெற்றுக்கொள்ள முடியும் (தி. ப. 8:1 19:0).
இன்று இயேசு அவருடைய சீடர்களுக்குத் தூய ஆவியாரை அளித்த
திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம் [நற்செய்தி]. தூய
ஆவியார் என்பவர் யார் என்பதற்கு மூன்று அழகான விளக்கத்தை
இன்றைய முதல் வாசகம் நமக்கு அளிக்கின்றது .
தூய ஆவியார் யார் என்பதைச் சுட்டிக்காட்ட திருத்தூதர்
பணிகளின் ஆசிரியர் பயன்படுத்தும் முதல் அடையாளம்
காற்று [திப 2:2). காற்று உயிருக்கு அடையாளம். உள்ளே
போகும் மூச்சு வளியே வர மறந்தால் போச்சு என்பார்கள்.
ஆக, தூய ஆவியார் என்பவர் நமக்கு உயிர் தருபவர்.
இரண்டாவது அடையாளம் நெருப்பு (திப 2:3௮). நெருப்பு
தூய்மைக்கு அடையாளம். பொன்னை நெருப்பிலிட்டுப் புடம்
போடும்போது அது தூய்மை அடைந்து ஒளிவீசுகின்றது. ஆக, தூயஆவியார்
என்பவர் நம்மை தூய்மைப்படுத்துபவர்.
மூன்றாவது. அடையாளம் நாக்கு [திப 2:3]. நாக்கு
பேச்சுக்கு அடையாளம். செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள்.
ஆக, நம்மை அழகாகப் பேச வைப்பவர் தூய ஆவியார்.
நமக்கு உயிர்தரும் ஆவியாரை, நம்மைத் தூய்மைப்படுத்தும்
ஆவியாரை, நம்மை பேசவைக்கும் ஆவியாரை இரண்டாம் வாசகத்தில்
புனித பவலழிகளார் கூறுவது போல நாம் எல்லாருமே
திருமுழுக்கின் வழியாகப் பெற்றிருக்கின்றோம் [!
கொரி 12:13].
இன்றைய உலகச் சூழ்நிலை எப்படி இருக்கின்றது?
கதம்ப மாலைக்குள் கட்டுண்டு கிடந்த ரோஜாவுக்கு
நேருவின் சட்டைப் பையில் குத்தப்பட்ட ஒற்றை
ரோஜாவாய் உலா வர ஆசை. ஒற்றை ரோஜாவாகச் சுதந்தரமாக
வாழ ஆசைப்படும் இந்தியர்கள் ஆயிரம்! 125 கோழிக்கு
மேற்பட்ட மக்கள் கூட்டத்தில் அகப்பட்டு மூச்சுவிடமுழயாமல்
திண்டாடும் மனிதர்கள்தான் எத்தனை எத்தனை!
மூச்சுக்கூட விட முழயாமல் நடைபிணங்களாய்
வாழ்ந்துகொண்டிருப்போரின் சோகக் கதைகள் எண்ணிலடங்காது.
அடுத்து, இன்று எங்கு நோக்கினும் பாவத்தின் வேகம்!
ஒரு பக்கம் அதிகாரக் கலாச்சாரம் ! மறுபக்கம்
ஆயுதக் கலாச்சாரம்! பலருடைய மனத்திலே
பணத்திற்காகவும், பதவிக்காகவும் எதையும் செய்யலாம்
என்ற பாவக் கலாச்சாரம் கொடிகட்டிப் பறக்கின்றது!
அடுத்து, இன்று எத்தனையோ அர்த்தமற்ற பேச்சு
வார்த்தைகள். சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்குப்
பிறகு ஒப்பந்தத்தில் கைசயெழுத்திடப்படும்போதே,
போருக்கான தேதியும் இரகசியமாகக்
குறிக்கப்படுகின்றது. வாய்மையும், தூய்மையும்
நிறைந்த உரையாடல்களைக் கேட்பது மிகமிக அரிதாக
இருக்கின்றது. மனிதன் மனிதனோடு பேசுவதில் மட்டுமல்ல,
மனிதன் இறைவனோ பேசுவதிலும் தடுமாற்றம்.
இதோ ஒரு புதுக்கவிதை!
குலக்கொழுந்தே ஏன் கோவிலுக்குப் போனாய்?
சாமியைக் கும்பிடப் போனாயா?
ஆசாமியைக் கும்பிடப் போனாயா?
வானத்தை ஏன் பார்த்தாய்?
இடிந்துவிடும் என்று பார்த்தாயா?
பூமியை ஏன் பார்த்தாய்?
விழுங்கிவிடும் என்று பார்த்தாயா?
பக்கத்தில் ஏன் பார்த்தாய்?
யாராவது பார்க்கின்றார்களா எனப் பார்த்தாயா?
இறுதியாக ஏன் பீடத்தைப் பார்த்தாய்? எனக் கேட்க,
அதற்கு மகன், அதையெல்லாம் நான் பார்த்தேன்.
அதை ஏன் நீங்கள் பார்த்தீர்கள்? என்றான்.
சிந்தனையைச் சிதறவிடாமல் நம்மால் இறைவனோடு பேச
முடியவில்லை! இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன
செய்யலாம்? அதோ தூய ஆவியார் நம்மை அழைக்கின்றார் ;
அவர் நம்மோட பேசுகின்றார்: நான் இறைவனின் ஆவி !
என்னால் முடியாதது ஒன்றுமில்லை ! என்னிடம் வா! உன்னை
நான் என் வரங்களாலும் [1 கொரி 12:8-10)]
கனிகளாலும் [கலா 5:22-23] நிரப்புவேன்.
நீ புதிய விடியலுக்குள் நுழைவாய் ; உன் பாவங்கள்
கழுவப்பட்டு நீ வெண்பனியிலும் வெண்மையாவாய் ; உன்
நா வலிமை பெற்று நீ பெரும் இறைவாக்கினராவாய் !
உன்னில் இறந்தவை அனைத்தும் உயிர்பெற்று எழும்.
வருவாயா? ... நீ என்னிடம் வரும் வரை உனக்குள்ளே
நான் காத்திருப்பேன்.
திருமணமான ஒருவர் தன் நண்பரிடம், "ஒரு பத்திரிகையால்
என் வாழ்வு பாழடைந்து விட்டது" என்றார். "அது என்ன பத்திரிகை?"
என்று நண்பர் அவரிடம் கேட்க அவர் கூறினார்: "கல்யாணப்
பத்திரிகை." வேறொரு கணவர் தன்னுடைய முதல் ஆண்டு திருமண
நிறைவு நாளன்று தனது திருமண அழைப்பிதழைத் துருவித் தருவிப்
பார்த்தார். அதைக் கண்ட அவருடைய மனைவி அவரிடம், "அதில்
என்ன பார்க்கிறீர்கள்" என்று கேட்டதற்கு அவர் கூறினார்:
"நமது திருமண அழைப்பிதழில் நமது திருமணத்தின் "Expiry
Date" (காலாவதியாகும் நாள்) குறிப்பிடப்பட்டுள்ளதா? என்று
பார்க்கின்றேன்."
பலருடைய தனிவாழ்வும், குடும்ப வாழ்வும், அரசியல் மற்றும்
சமூக வாழ்வும் நலிவடைந்து நம்பிக்கை அற்றுத் தோன்றும்
அவல நிலையை நாம் காணும்போது இவற்றிற் கெல்லாம் விடிவு
காலம் வராதா? என்ற கேள்வி எழுகிறது. இன்று மனிதரின்
மாபெரும் தேவை வாழ்க்கையில் பிடிப்பு, நாளையதினத்தைப்
பற்றிய நம்பிக்கை.
பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு
நாடு கடத்தப்பட்டு அன்னிய மண்ணில் நம்பிக்கை இழந்த
நிலையில் அவர்கள் கூறியது: "எங்கள் எலும்புகள் உலர்ந்து
போயின: எங்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. நாங்கள்
துண்டிக்கப்பட்டோம்" (எசே 37:11). அப்போது கடவுள் அவர்களிடம்
கூறியது: "என் ஆவியை உங்கள் மீது பொழிவேன். நீங்களும்
உயிர் பெறுவீர்கள்" (எசே 37:14).
இன்று தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடு கின்றோம்.
நம்பிக்கையற்ற நமக்குத் தூய ஆவியார் நம்பிக்கையைத் தருகிறார்.
இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது: "ஆண்டவரே, உமது ஆவியை
அனுப்பி மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்"
(திப 104:1). கிறிஸ்துவின் விண்ணேற்றம் சீடர்களின் மனதில்
ஒரு சூன்யத்தை ஏற்படுத்தியது. கதிகலங்கிப் போயிருந்த சீடர்கள்மீது
தூய ஆவியார் பிளவுற்ற நாவுகள் வடிவத்தில் இறங்கிவர, அவர்கள்
பல்வேறு மொழிகளில் பேசி, யூதர்களையும் கிரேக்கர்களையும்
வியப்புறச் செய்த மாபெரும் செயலை இன்றைய முதல் வாசகம்
எடுத்துரைக்கின்றது (திப 2:1-11).
யூதர்களுக்கு அஞ்சிக் கதவுகளை மூடி வைத்திருந்த சீடர்கள்
நடுவே வந்து, அவர்களுக்கு அமைதியை அளித்து, அவர்கள்மீது ஊதித்
தூய ஆவியைப் பொழிந்து, அவர்களுக்குப் பாவ மன்னிப்பு வழங்கும்
வல்லமையை உயிர்த்த ஆண்டவர் கொடுத்ததை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது
(யோவா 20:19-23), உயிர்த்த ஆண்டவர் - இயேசு கிறிஸ்து தமது
சீடர்களுக்குத் தோன்றுகிறார்; அவர்கள் அடிமனத்திலிருந்து
அச்சத்தை அகற்றுகிறார்; புத்துயிரையும் புதிய நம்பிக்கையையும்
கொடுத்து அவர்களிடம் புதிய பணியை ஒப்படைக்கின்றார்.
தூய ஆவியார் யார்? தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும்
புறப்படுகிறவர்; உயிர் அளிப்பவர். கடவுளின் அன்பு தூய
ஆவியார் வழியாக நம்மீது பொழியப்பட்டுள்ளது (உரோ 5:5). தூய
ஆவியார் வழியாகவே நாம் கடவுளை அப்பா தந்தையே எனக்
கூப்பிடுகிறோம் (கலா 4:6). எனவே நாம் எத்தகைய
சூழ்நிலையிலும் அவநம்பிக்கைக்கு ஆளாகக்கூடாது.
ஒரு வரலாஜ்யூ ஆசிரியர் "பிரஞ்சு புரட்சியைப்" பற்றி ஒரு
நூல் வெளியிட. விரும்பி, பல ஆண்டுகளாக அவர் எழுதிய
கைப்பிரதிகளைத் தன் நண்பரிடம் கொடுத்து அவரது கருத்தை
அறிய விரும்பினார். அந்த நண்பர் அப்பிரதிகளைத் தன்
வீட்டில் ஒரு மூலையில் கட்டாக வைத்திருந்தார். அவர்
வீட்டின் வேலைக்காரி அப்பிரதிகளைப் பழைய காகிதம் என்று
எண்ணி அதை அடுப்பில் போட்டு ளித்துவிட்டாள். இச்செய்தியைக்
கேட்ட. வரலாற்று ஆசிரியர் மனமுடைந்து பல நாள்களாக உணவின்றி,
உறக்கமின்றித் தவித்தார். கடைசியில் அவர் மீண்டும் பிரஞ்சு
புரட்சிபற்றி எழுதி நூலை வெளியிட்டு, உலகப் புகழ்
பெற்றார். நம்து வாழ்வு என்ற நூல் எிந்து சாம்பலாகப்
போன புத்தகம் போன்று தோன்றலாம். இருப்பினும் அதை
மீண்டும் எழுதிப் புதுப் பதிப்பாகப் பொலிவுடன்
வெளியிட முடியும். அந்த நம்பிக்கையை நம்முன் வாழும் ஆவியார்
நமக்குக் கொடுத்துக் கொண்டே. இருக்கிறார்.
ஆனால் சீடர் கதவை அடைத்துக் கொண்டிருந்ததுபோல், தூய ஆவியார்
நுழையாத வண்ணம் நமது இதயக் கதவை அடைத்து வைத்திருப்பது
தவறாகும் "தூய ஆவியே! துணையாய் வாருமே! இப்ப வாரும்!
இறங்கி வாரும் ! எங்கள் மத்தியிலே" என்று மன்றாடுவோம்.
அவர் நிச்சயமாக நமது உள்ளத்தில் வந்து புத்துயிர் அளிப்பார்.
. தூய ஆவியார் நம்மீது பொழியப்படுவது நமது தனிப்பட்ட நன்மைக்காக
மட்டுமல்ல, மாறாக, அது திருச்சபையின் பொது நன்மைக்காகவே
என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல்
கூறுகின்றார். "அருள் கொடைகள் பலவகையுண்டு. ஆனால் தூய
ஆவியார் ஒருவரே..... பொது நன்மைக்காகவே தூய ஆவியின் செயல்பாடுகள்
ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது" (1 கொரி 12: 4,7).
இன்று திருச்சபையில் அருங்கோடைகளின் மோதல்களைக் கண்டு
வேதனை அடைய வேண்டியிருக்கிறது. அருங் கொடையாளர்கள்
திருச்சபையின் ஒற்றுமையை வளர்ப்பதற்குப் பதிலாகத்
திருச்சபையைப் பிளக்கின்றனர். கொரிந்து திருச்சபையில்
அருங்கொடைகளின் மோதல்களைக் கண்டு, "அன்பே தலைசிறந்தது"
என்று அறுதியிட்டுக் கூறுகின்றார் திருத்தூதர் பவுல்.
ஒரு வெள்ளாடு மே" என்று கத்தாமல், "லா, லூ, லே" என்று கத்தியதாம்.
ஏன் அது அவ்வாறு கத்துகிறது? என்று கேட்டதற்கு, "நான்
பரவசப்பேச்சுப் பேசுகிறேன்" என்றதாம். ஒருவர் மண்ணோர்
மொழியிலும் விண்ணோர் மொழியிலும் பேசினாலும், அவரிடம்
அன்பு இல்லை என்றால், அது வெறும் சப்தமேயன்றி
வேறொன்றும் இல்லை என்கிறார் புனித பவுல் (1 கொரி 13:1).
உயிர் அன்பில் நிலைத்துள்ளது. அன்பில்லாதவரின் உடல் எலும்பு
தோலால் போர்த்தப்பட்ட வெற்றுடம்பே என்கிறார் வள்ளுவர்.
எனவே, அருங்கொடைகளின் பெயரால் வீண் குழப்பத்தையும்
பிரிவினையையும் உருவாக்காமல், அனைத்துக் கொடைகளிலும்
தலைசிறந்த கொடையாகிய அன்பைத் தூக்கிப் பிடிப்போம். ஒற்றமையை
ஊட்டி வளர்ப்போம். அப்போது உலகின் இறுதி எல்லை வரைக்கும்
கிறிஸ்துவுக்குச் சாட்சியம் பகர்வோம்!
"தூய ஆவி உங்களிடம் வரும்போது கடவுளது வல்லமையைப்
பெற்று... உலகின் கடை எல்லை வரைக்கும் எனக்குச்
சட்சிகளாய் இருப்பீர்கள்" (திப 1:8).
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்து விண்ணேறிச் சென்றதும்
மூன்று குட்டிச் சம்மனசுக்கள் ஓடிவந்து "ஆண்டவரே, தந்தையின்
திருவுளத்தை ஏற்று உலகில் இறையாட்சியின் சின்னமாகத்
திருச்சபையை நிறுவி விட்டு வந்திருக்கிறீரே, யாரிடம் ஒப்படைத்து
விட்டு வந்தீர்? அந்தத் திருத்தூதர்களிடமா? தலைவன் என்று
நீர் நினைத்தவரே, நியமித்தவரே உம்மை "அறியேன்" என்று மறுதலித்தார்.
மற்றவர்களோ கோழைகளாகப் பயந்து ஒடி ஒளிந்து கொண்டார்கள்.
அவர்களை நம்பினால் திருச்சபை உருப்படுமா? என்றெல்லாம் புலம்பிய
போது இயேசு சொன்னாராம்: "யாரையும் - எந்தக் கொம்பனையும்
நம்பியல்ல. ஆற்றல்மிக்கத் தூய ஆவியை நம்பித்தான். அதோ,
புனித ஆவி புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர்
பார்த்துக் கொள்வார்".
"உனது ஆற்றலாலும் அல்ல, வலிமையாலும் அல்ல. ஆனால் எனது
ஆவியாலே ஆகும்" - செக்கரியா 4:6.
கிறிஸ்தவனுக்கோ திருச்சபைக்கோ தூய ஆவியே ஆற்றல், சக்கி,
இயக்கம்!
கத்தோலிக்குத் திருச்சபையின் கடந்தகால வரலாற்றில் அறியாத
கடவுளாக (Unk॥0ற G௦0) மறக்கப்பட்ட கடவுளாக (forgotten
paraclete) ஆவியானவர் இருந்த காலம் உண்டு. புதிய ஏற்பாட்டில்
தூய ஆவிக்கு வலுவான முக்கியத்துவம் இருந்தும்கூட அவர் எப்ப்டி
மறக்கப்பட்டார்? என்பது புதிரானதுதான். ஆவி என்ற சொல்லே
அதற்குக் காரணமாக இருக்குமோ!?"
கடவுள் தந்தை யாக இருக்கிறார் என்ற எண்ணமே உறவுக்கு வழிவகுக்கும்.
கடவுள் மகனாக" இருக்கிறார் என்று சொல்லும் போதே உறவுக்கு
வழிபிறக்கும். கடவுள் ஆவியாக இருக்கிறார் என்றால்...
ஆவியோடு எப்படி உறவு கொள்வது?
தூய ஆவியைப் புரிந்து கொள்ள ஐந்து அடையாளங்கள் வழியாகத்
தன்னை வெளிப்படுத்தினார்.
1 பெருங்காற்று : "திடீரென்று கொடுங்காற்று வீசுவது -
போன்று ஒர் இரைச்சல். வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள்
அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. (தி.ப.2:2)
2. தீ நாக்கு : "மேலும் நெருப்புப் போன்ற பிளவுற்ற
நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள்
கண்டார்கள் (தி.ப.2:3)
3. வெண்புறா : "தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர் மீது
இறங்கியது (லூக்.3:22)
4. நீரூற்று : "யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம்
வரட்டும்... பருகட்டும்... அவருடைய உள்ளத்திருந்து
வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஒடும்...
தூய ஆவியைக் குறித்தே அவர் இவ்வாறு சொன்னார் ' (யோவான்
7:39)
5. திரு எண்ணய் : "சாமுவேல் எண்ணெய்... எடுத்து அவனைத்
திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி
தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. (1 சாமு.16:13)
இந்த ஐந்து அடையாளங்களிலும் இழையோடும் பொதுக் கூறு
ஒன்று உண்டு. காற்று வீசுகிறது, தீ எரிகிறது, புறா
பறக்கிறது, தண்ணீர் ஓடுகிறது, எண்ணெய் ஊடுருவுகிறது...
எல்லாமே இயக்கம், சக்தி, ஆற்றல், வல்லமை.
விவிலியத்தில் தூய ஆவி வல்லமையாகவே சித்தரிக்கப்படு
கிறார். இயேசுவின் பிறப்பை முன்னறிவித்த வானதூதர்
மரியாவிடம் "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின்
வல்லமை உம்மேல் நிழலிடும்"" (லூக்.1;35) என்றார். பணி
வாழ்வைத் தொடங்கிய போது "இயேசு தூய ஆவியின்
வல்லமையுடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப்
போனார்" (லூக்.4:14) என்கிறார் லூக்கா. கொர்னேலியுவின்
இல்லத்தில் பேருரை ஆற்றிய பேதுரு குறிப்பிடுவார்:
"கடவுள் நாசரேத்து இயேசுவின் மேல் தூய ஆவியின்
வல்லமையைப் பொழிந்தருளினார் " (தி.ப.10:38). உயிர்த்த
இயேசு தன் சீடர்களுக்குத் தோன்றிச் சொன்னது: "இதோ என்
தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு
அனுப்புகிறேன் " (லூக்.24:49). விண்ணேறு முன் "தூய ஆவி
உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளின் வல்லமையைப்
பெற்று... எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் '
(தி.ப.1;8) என்று பணித்தார்.
தூய ஆவியானவர் விசுவாச அறிக்கையின் ஓர் உண்மையாக
மாறுவதற்கு மூன்னரே, தொடக்க காலத் தீராச்சபையில்
அனுயவத்தீன் ஓம் உயீருள்ள ஹய்ம்மையாக ஒருந்தார் '
என்கிறார் ஓர் இறையியல் அறிஞர். இந்தக் கூற்று
முற்றிலும் உண்மையே. திருத்தூதர் பணிகள் தொடக்க காலத்
திருச்சபையின் வரலாறாகும். அது தூய ஆவியின் வரலாறும்
கூட, காரணம்? பக்கத்துக்குப் பக்கம் தூய ஆவியின்
அருளாற்றல் செயல்படுவதைக் காணலாம்.
.. திருச்சபைக்கு வாழ்வின் உயிர் நாடி தூய ஆவி. "இதோ
இறுதி நாள்களில் நான் மாந்தர் யாவர் மேலும் என்
ஆவியைப் பொழிந்து அருள்வேன். அவர்களும் இறைவாக்கு
உரைப்பர்" (தி.ப.2:17,18) பெந்தகோஸ்து நாளில் பேதுரு
ஆற்றிய முதல் மறையுரை இது. திருத்தூதர் பவுலுக்கு
நற்செய்திப் பணியின் உயிர்நாடி தூய ஆவி. "நான்
பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில்
அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக்
காட்டுவதாக அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித
ஞானமல்ல. கடவுளின் வல்லமையே" (1 கொரி. 2:4-5).
திருத்தூதர்களைத் திடப்படுத்துபவர் மட்டுமல்ல, சிக்கலான
நேரங்களில் சரியானத் தீர்வு காண வழிநடத்துபவர் தூய ஆவி.
விருத்த சேதனப் பிரச்சனையில் "தூய ஆவியாரும் நாங்களும்
தீர்மானித்தோம் " (தி.ப.15:25) என்றார் பேதுரு. சாட்சிய
வாழ்வில் இரத்த சாட்சிகளுக்கு வலிமைக்கும்
மகிழ்ச்சிக்கும் ஊற்றாக இருந்தார் தூயஆவி.
எ.கா.ஸ்தேவான். (தி.ப.7:55)
இவ்வாறு தூய ஆவியின் வல்லமை தொடக்க காலத் திருச்சபையில்
நிறைந்திருந்தது. அந்த வல்லமையைத் தம் அருள்கொடைகளால்
வளப்படுத்தித் தொடக்க காலத் திருச்சபையின் அனுபவப்
பொருளானார் தூய ஆவி. திருமுழுக்கில், சிறப்பாக உறுதிப்
பூசுதலில் நாமும் அதே வல்லமையால் நிரப்பப்படுகிறோம்.
காது இல்லாமல் கேட்க முடியுமா? நுரையீரல் இல்லாமல்
மூச்சு விட இயலுமா? தூய ஆவி இல்லாமல் கிறிஸ்தவம் ஏது?
கிறிஸ்தவ வாழ்க்கை ஏது?
சிந்தனைப் பயணம்:
அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச
ஒருநாள் கொண்டாட்டம், வாழ்நாள் கொண்டாட்டம்
உயிர்ப்புப் பெருவிழா முடிந்து ஐம்பதாம் நாளான இன்று பெந்தகோஸ்து
எனப்படும் தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா. பெந்தகோஸ்து என்ற
சொல்லுக்கு ஐம்பதாம் நாள் என்று பொருள். இந்த ஐம்பது நாட்களில்
தொடர்ந்து பல விழா நாட்கள் வந்துள்ளன. உயிர்ப்புப்
பெருவிழாவைத் தொடர்ந்து, இறை இரக்கத்தின் ஞாயிறு, அதற்குப்
பின் நல்லாயன் ஞாயிறு. சென்ற வாரம் விண்ணேற்றப் பெருவிழா
இந்த ஞாயிறு தூய அவியாரின் பெருவிழா என்று வரிசையாக நாம்
கொண்டாடி மகிழ பல ஞாயிறுகள் நமக்குக் கிடைத்துள்ளன. இனிவரும்
நாட்களிலும் மூவொரு இறைவனின் திருவிழா, கிறிஸ்துவின் திரு
உடல், திரு இரத்தத் திருவிழா என்று விழாக்களும் கொண்டாட்டங்களும்
தொடரும். ஒவ்வொரு விழாவையும் கொண்டாடினோம் அல்லது
கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது, எதைக் கொண்டாடுகிறோம்,
எப்படி கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது.
இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற
இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான
உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன்முதலில் நிகழ்ந்தபோது,
எக்காளம் ஒலிக்க, வாண வேடிக்கைகள் கண்ணைப் பறிக்க உலகத்தின்
கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். இல்லையா? ஆனால், அப்படி
நடந்ததாகத் தெரியவில்லையே! மாறாக, இந்நிகழ்வுகள் முதன் முதலில்
நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன.
எப்போது எப்படி நடந்ததென்றே தெரியாமல் நிகழ்ந்த ஒரு
முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும்
இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம் விண்ணேற்றம். இன்று நாம்
எண்ணிப்பார்க்கும் தூய ஆவியாரின் வருகையும், அன்னை மரியாவுக்கும்,
சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும்
ஒரு விழா. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான
இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல்
நடைபெற்ற நிகழ்வுகள்.
உலக விழாக்கள் கொண்டாடப்படுவதற்கென்று குறிப்பிட்ட
'பார்முலா' அல்லது இலக்கணம் உள்ளது. கொண்டாட்டம் எதற்காக
என்பதைவிட, கொண்டாட்டம் எப்படி இருக்கவேண்டும் என்பதிலேயே
அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எவ்வளவு செலவு செய்யப்படுகிறது
என்பதைப் பொறுத்தே இவ்விழாக்களின் முக்கியத்துவம் பிறருக்குத்
தெரியவரும். பகட்டு, பிரமிப்பு, பிரம்மாண்டம் இவையே இவ்விழாக்களின்
உயிர்நாடி. ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள்? விழாவுக்கான உள்
நோக்கத்தை விட, வெளித் தோற்றங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஆரவாரங்கள்
இவற்றை பிறர் பார்த்தால், கேட்டால் போதும் என்ற நோக்கமே இவ்விழாக்களில்
முக்கியம். இவ்விழாக்களைப்பற்றி அடுத்த நாள் கேட்டால் கூட
நமக்கு ஒன்றும் நினைவிருக்காது. அல்லது, அவர்கள் செய்த ஆர்ப்பாட்டமே
நமது நினைவில் நிறைந்து, நமக்கு எரிச்சலூட்டும். உலகக்
கொண்டாட்டங்களின் இலக்கணம் இது.
கொண்டாட்டம் என்ற சொல்லுக்கே புது இலக்கணம் சொல்லும்
விழாக்களை இயேசுவும் அவரைச்சுற்றி இருந்தவர்களும் கொண்டாடினர்,
நமக்குப் பாடங்களைச் சொல்லிச் சென்றனர். கொண்டாட்டம் என்பது
எப்போதும் பிறரது கவனத்தை ஈர்ப்பதிலேயே அமையவேண்டும் என்று
இல்லை. நாம் கொண்டாடும் விழாவின் உள் அர்த்தம் எவ்வளவு தூரம்
நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில் நம் கவனம் இருந்தால்,
கொண்டாட்டங்கள் ஒருநாள் கேளிக்கைகளாக இல்லாமல்,
வாழ்நாளெல்லாம் நம்முடன் தங்கும் மாற்றங்களை உருவாக்கும்.
இத்தகையப் பாடங்களை நமக்குச் சொல்லித்தந்த விழாக்கள் - இயேசுவின்
உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய விழாக்கள்.
இருபது நூற்றாண்டுகள் சென்றபின்னரும், இவ்விழாக்களில் நாம்
புதுப்புது அர்த்தங்களைக் காண்பதற்குக் காரணம்?.. இவை முதல்முறை
கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல், ஆழமான அர்த்தங்கள்
விதைக்கப்பட்டன. இன்று அந்த விதைகள் வேரூன்றி வளர்ந்து தொடர்ந்து
கனி தந்து கொண்டிருக்கின்றன.
மறையுரைச்சிந்தனை
-அருட்திரு ஜோசப் லியோன்
மறையுரைச்சிந்தனை
-அருள்பணி
மாணிக்கம் , திருச்சி
மறையுரைச்சிந்தனை
-அருள்பணி. குழந்தைஇயேசு பாபு சிவகங்கை
உன்னோடு நான் இருக்கின்றேன் சிறுபிள்ளை என்று சொல்லாதே!
என்று சொல்லி
என் வாழ்வை நன்கு உயர்த்திடும் ஏணியாக்கினாய்! சுடர் தீபமாக்கினாய்!!