ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

கிறிஸ்து அரசர் பெருவிழா ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)
கிறிஸ்து அரசர் பெருவிழா  
ஞாயிறு திருப்பலி முன்னுரை - 3ம் ஆண்டு
திபா 122: 1-2. 4-5 (பல்லவி: 1)
பல்லவி: அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

இறையரசின் மக்களே!

பொதுக்காலம் முப்பத்தி நான்காம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு, உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று, உண்மையின் அரசில் அகமகிழும் ஆனந்தத் திருவிழா. அன்பின் அரசில் அக்களிக்கும் பேரின்பப் பெருவிழா. இருளின் ஆட்சியிலிருந்து எம்மை மீட்டு, விடுதலையின் மகிழ்ச்சி ஒளிக்கு எம்மை உரிமையாக்கிய, கிறீஸ்து அரசரில் அர்ப்பணமாகும், அற்புதத் திருவிழா. உயிர்ப்பினால் அகிலத்தை அமைதிப்படுத்திய, அமைதியின் அரசரின் அருள் வார்த்தைகளைத் தியானித்து, இறையரசில்; நிலை பெற நாம் இன்று அழைக்கப்படுகின்றோம்.

இறைமகன் இயேசு திருச்சபைக்குத் தலையாகி, அன்பின் அரசராக, எம்மைக் கடவுளோடு ஒப்புரவாக்குகின்றார். சிலுவையடியில், மனம் வருந்திய நல்ல கள்வனை மன்னித்து, பேரின்ப வீட்டில் ஏற்றுக்கொண்ட, அன்பின் அரசராக எம்மை அரவணைக்கின்றார. படைவீரரின் நகையாடல்களைப் பணிவோடு ஏற்ற தரின் அரசர், துன்பங்களைத் தாங்கும் துணிவோடு பணி புரிய, எம்மை நெறிப்படுத்துகின்றார்.

சிலுவையை முடியாக ஏற்று, அரசர்க்கெல்லாம் பேரரசராகப் பெருமை படைத்த கிறீஸ்து அரசர், உண்மையின் அரசராக, எம் உள்ளங்களில் நிறைந்துள்ளார். அவரது அன்பு ஒன்றே, எமது துன்பங்களைத் துணிவோடு தாங்கும் சக்தியைக் கொடுக்கும். எனவே, அவர் காட்டிய உண்மையில், அன்பில், நீதி நெறியில் நிறைவாழ்வு காண்போம்;. இறையாட்சியின் மாற்றங்கள் இகமதில் நிறை வேற, கிறீஸ்து அரசரின் மக்களாக, எம்மை வெளிப்படுத்துவோம். அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போகும் அடியார்களாக எம்மை மாற்ற, இத்திருப்பலியில் பத்தியோடு இணைவோம்.
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1) மகிமையின் மன்னரே!
இறையாட்சி மலர நீர் தெரிந்துகொண்ட உமது மறையுடலாகிய திருச்சபைப், பணியாளர்கள், தமது பணிவாழ்வுத் துன்பங்களைத் துணிவுடன் ஏற்று, உண்மையை எடுத்துரைக்கும் பணியால், உமது இறையரசின் மாட்சியைப் பறைசாற்ற, அவர்களை உமது அன்பிலும், உறுதியான விசுவாசத்திலும் நிறைவாய்க் காத்திட வரமருள வேண்டும் என்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2) அமைதியின் அரசரே!
இருளின் ஆட்சியை வென்று நீர் அளித்த சமாதானத்தை எமது குடும்பங்கள், நாடு, உலகம் எல்லாம் பெற்று மகிழவும், எமது நாட்டை ஆளும் தலைவர்கள் நீதியின் வழியில் அமைதியைக் கண்டடையவும் அருள் புரிய வேண்டும் என்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3)இறையாட்சி மலர சிலுவையில் தலை சாய்த்த கிறீஸ்து அரசரே!
இறையாட்சியை அறிவிக்கும் அழைப்பு எமது குடும்பங்களில் பெருகவும், அன்பு, உண்மை, நீதி நிறைந்த எமது வாழ்வினால், கிறீஸ்துவை அரசராக வெளிப்படுத்தும் மக்களாக விளங்கவும், வரமருள வேண்டும் என்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4) கல்வாரித் துன்பத்தைக் கனிவாக ஏற்ற கிறீஸ்து அரசரே,!
எமது துன்பங்களைத் தண்டனைத் தீர்ப்பாகக் கருதாமல், வாழ்வளிக்கும் உமது அன்பின் வல்லமை என்பதை உணர்ந்து, உமது வார்த்தையின் வழிநடத்துதலில், இறையாட்சியை அறிவிக்கும் அன்புச் சீடர்களாகப் பணி புரிய, உமது அன்பையும், இரக்கத்தையும் அதிகமாகப் பொழிந்தருள வேண்டும் என்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5) கிறீஸ்து அரசரே இரட்சகரே!
உமது அன்பின் ஆட்சியில் பங்காளிகளாக பங்குகொள்ள அழைக்கப்பட்ட நாம், இயேசுவின் அரசு இரக்கத்தின் அரசு, நீதியைவிட இரக்கமே மேலானது என்பதை உணர்ந்து, சமூகவாழ்விலே, இரக்கம் கொண்டவர்களாக இறையரசுக்கு சாட்சிகளாக உருமாற, எம்முடைய பழைய நிலைகளிலிருந்து புதுப்படைப்பாக மாற,வேண்டும் என்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 
திருப்பலி முன்னுரை
இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா


தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்கு பெற உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கியுள்ளார். அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார்.

இறை இயேசுவில் அன்பின் சகோதர சகோதரிகளே! விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரையும் படைத்தவரான நம் இறைத் தந்தையின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள் கூறி இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா தினத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடனும், மகிழ்வுடனும் வரவேற்கின்றோம்.

அன்பு, பாசம், பரிவு, அக்கறை, மன்னிப்பு, உண்மை, நீதி, அமைதி, விடுதலை உடைய, மக்களின் குறையறிந்து நிறைவளிக்கும், மக்களைத் தேடிவரும் தலைமைத்துவத்தை இன்றைய உலக மக்கள் எதிர்பர்த்து நிற்கின்றனர். இவை அனைத்தும் நம் அண்டவர் இயேசுக்கிறிஸ்துவிடம் மாத்திரமே உண்டு என்னும் உண்மையைக் கிறிஸ்து அரசர் பெருவிழா நமக்கு எடுத்துரைக்கின்றது. ஆண்டவரது இல்லத்தில் நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன என்னும் உண்மை, இயேசுவின் தலைமைத்துவத்தின் தன்மையை நமக்கு தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

எனவே இயேசுவை நம் ஆண்டவராகவும், மீட்பராகவும், தலைவராகவும் முழுமனத்துடன் நம்பி, ஏற்றுக்கொண்டு: "ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்" என்ற அழைப்பிற்கு நிறைவாக செவிமடுத்து அவர் நமக்குக் தருகின்ற அருள்வாழ்வைப் பெற்று மகிழும் ஆர்வத்தைப் பெற்றிட அருள்வரம் கேட்டுத் தொடரும் கல்வாரிப் பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்.

1.வலிமையும், வாழ்வும் அருளுகின்ற தந்தையே இறைவா!
எமது திருத்தந்தை ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவருக்குள்ளும், தூயதோர் உள்ளத்தை உருவாக்கி, உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை அவர்களுக்கு அளித்து, அவர்கள் அனத்து மக்களுக்கும், ஆறுதலாகவும், ஆசீர்வாதமாகவும் இருந்து செயற்படுவதற்கு வேண்டிய ஆற்றலை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2..வலிமையாய்ச் செயலாற்றுகின்ற தந்தையே இறைவா!
தலைமைத்துவத்தின் நற்பண்புகளை அனைத்துத் தலைவர்களிடமும் உருவாக்கி, அவர்கள் மக்களின் நலனில் அக்கறையடையவர்களாகவும், மனித மாண்பை மதிக்கின்றவர்களாகவும், அமைதியின் கருவிகளாகவும்; வாழவும், செயலாற்றவும் அவர்களை வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.வாழ்வு அளிக்கின்றவரான தந்தையே இறைவா!இறையரசையும், அதற்கு ஏற்புடையதையும் தேடுவதில் அதிக ஆர்வமுள்வர்களாக நாங்கள் ஒவ்வொருவரும் இருந்து, எந்த வேளையிலும் உமது அருளில் மாத்திரமே நம்பிக்கை கொண்டவர்களாக உமது வார்த்தையை என்றும் கடைப்பிடித்து வாழ அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.எமக்கு அனைத்தையும் கற்றுத்தரும் தந்தையே!உம்மைப் பற்றிய அறிவிலும், ஞானத்திலும் நாமும், எமது பிள்ளைகளும் வளர எமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இறைவார்த்தையையும், திருச்சபைப் பணியாளர்கள் வழியாக நீர் வெளிப்படுத்தும் செய்திகளையும் எம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து அறிவிலும், ஞானத்திலும் வளர நாம் முயற்சிகளை மேற்கொள்ள அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


 
திருப்பலி முன்னுரை
ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா 23 11 2025



"வாருங்கள்! அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்கு போவோம்"
இறை இயேசுவின் நாமத்தில் அனைவருக்கும் கிறிஸ்து அரசர் பெருவிழா வாழ்த்துகள் கூறி அன்போடு வரவேற்கின்றோம். இன்று நம் அன்னையாம் திருஅவை அனைத்து உலகுக்கும் அரசராம் கிறிஸ்து அரசர் பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது.

அரசர் என்பதற்கும் அரசுரிமை என்பதற்கும் புதிய அத்தியாயத்தை எழுதியவர் இயேசு.
அரசர் என்பவர் அடக்கி ஆள்பவர் என்ற அடிமை சிந்தனையை மாற்றி
அன்பு செய்பவர் என்ற புதிய சிந்தனையை கொடுக்கிறார் இயேசு.
அதிகாரம் என்பது ஆட்சி செலுத்துவது அல்ல, மாறாக பணிபுரிவதே என்ற புதிய சமூக அணுகுமுறையைத் தந்தவர் இயேசு. உலகமெங்கும் மன்னராட்சி மறைந்து மக்களாட்சி மலர்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நம் அரசர் நமக்குச் சொல்வது என்ன? அன்பு, நீதி, உண்மை, மகிழ்ச்சி, இரக்கம் போன்ற இறையாட்சி பண்புகளின்படி நாம் வாழவும் இறையாட்சி மதிப்பீட்டிற்கு எதிரான பணம், பதவி, புகழ், பகட்டான வாழ்க்கை முறையை விட்டு விலகவும் நமக்கு அறிவுறுத்துகின்றார்.

இன்றைய முதல் வாசகம் கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் அரசர் என்பதையும் இரண்டாம் வாசகம் கிறிஸ்து ஒப்புரவின் அரசர் என்பதையும் அறிவுறுத்துகின்றது. எனவே நாம் அனைவரும் கிறிஸ்து ஒருவரே நம் அரசர். அவரிடமே சரணாகதி அடைவோம் என்ற உறுதிப்பாட்டுடன் கிறிஸ்து அரசரை நம் உள்ளத்திலும் இல்லத்திலும் அரசாள்வதற்கு அனுமதிப்போம். அவரின் மேய்ச்சலில் நாம் அனைவரும் நிறைவு காண இத்திருப்பலியில் இணைந்து ஜெபிப்போம்.

மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. "நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாய் இருப்பாய்" என்று கூறிய அன்பின் ஆண்டவரே!
எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் ஆசீர்வதியும். அனைவரையும் ஆசீர்வதித்து, உன் தூய ஆவியின் கொடைகளாலும் கனிகளாலும் நிரப்பி, வழிநடத்த உம் அருள் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. கிறிஸ்து அரசரே எம் இறைவா!
எம் பாரத நாட்டையும், எம் தாயாம் தமிழ்நாட்டையும் ஆசீர்வதியும். நாட்டின் நிலையை அறிந்து, நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு, மக்களின் அவசிய தேவைகளை தாமதமின்றி நிறைவேற்றி துரிதமாக செயல்படவும், பதவிக்கு அடிமையாகாமல், நாட்டு மக்களிடம் இருந்தே இந்த பதவி வந்தது என்ற எண்ணத்தோடு நாட்டை ஆள நுண்மதி அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஏழைகளையும் நோயாளிகளையும் அரவணைக்கும் அன்பு தெய்வமே!
எம் மத்தியில் வாழும் ஏழை, எளிய மக்களை கண்ணோக்கியருளும். ஒவ்வொரு ஆலய முற்றங்களிலும் இருக்கும் ஏழை, எளிய மக்களையும், மருத்துவமனைகளிலும் இல்லங்களிலும் நோயினால் வாடும் மக்களை நீர் சந்தித்து, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நிறைவாழ்வு அளிப்பேன் என்றவரே!
இன்று உமது பெருவிழா திருப்பலியில் பங்கெடுக்க வந்திருக்கும் எங்கள் அனைவரையும், அனைவரின் குடும்பங்களையும் ஆசீர்வதியும். நீரே எங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அரசராக இருந்து எங்களை ஆட்கொண்டு வழிநடத்த உம் தூய ஆவியின் வல்லமை வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

5. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள் என்றவரே!
எம் பங்குத்தந்தையை ஆசீர்வதியும். அவர்களுக்கு தேவையான உடல், உள்ள, ஆன்ம நலனைத் தந்து வழி நடத்த வேண்டும் என்றும், இன்றைய வழிபாட்டை சிறப்பிக்கும் அன்பிய குடும்பங்களையும் ஆசீர்வதித்து, சமாதான சந்தோஷத்துடன் வாழ அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
 
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய்

கிறிஸ்து அரசரின் அன்பு பிள்ளைகளே!
 உங்கள் அனைவருக்கும் நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்து அரசர் பெருவிழா வாழ்த்துக்களை கூறி மகிழ்வதில் பெருமிதம் அடைகின்றேன். இன்றைய வழிபாட்டு வாசகங்கள் அனைத்தும் நமக்கு அரசரின் பண்பு நலங்களையும் அவரின் சிறப்புக்களையும் எடுத்துரைக்கின்றன. முதல் வாசகத்தில் எபிரோன் மக்கள் தாவீதை தங்கள் அரசனாக திருநிலைப்படுத்துகின்றனர். இரண்டாம் வாசகத்தில் அரசனுக்குரிய பண்பு நலன்களும் சிறப்புகளும் சொல்லப்படுகின்றன. நற்செய்தி வாசகத்தில் உண்மையான அரசராம் இயேசுவின் செயல்பாடுகள் நிகழ்வுகளாகக் காட்டப்படுகின்றன. இயேசுவை நமது அரசராக காணும் பட்சத்தில் அவரிடம் விளங்கிய பண்புகளில் ஒன்றிரண்டிலாவது நாமும் வளர வேண்டும் என்பது அவரது விருப்பம். அவ்வாறு வளர்ந்தால் நாம் அவரது பேரின்ப வீட்டில் அவரோடு இருப்போம். கிறிஸ்து அரசரின் பெருவிழா நாளில் நமக்கு அவர் விடுக்கும் அழைப்பும் உறுதியும் இதுவே . இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய்.

பேரின்ப வீட்டில் நாமும் இடம் பெற செய்ய வேண்டியது என்ன?
கிறிஸ்து அரசரின் பண்பு நலன்களில் வளர வேண்டும். எவை எல்லாம் கிறிஸ்து அரசரின் பண்பு நலன்கள் ?
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி. அரசர்களுக்கெல்லாம் விளக்காகத் திகழ்பவன் கொடையாளானாகவும், அருள் தருபவனாகவும், செம்மையாக ஆட்சி செய்பவனாகவும், குடி மக்களை திறம்பட ஆள்பவனாகவும் இருப்பான் என்கின்றார் திருவள்ளுவர். நம் கிறிஸ்து அரசரோ அரசர்களுக்கெல்லாம் பேரரசர். அவரது ஆட்சியில் கொடைக்கும் அருளுக்கும் திறமையான ஆட்சிக்கும் குடிமக்கள் நலனுக்கும் எவ்வித குறையும் கிடையாது. அவரது அரசின் கீழ் இருக்கும் நாம் நம்மோடு உடன் வாழும் மக்கள் மீதும் அதே வித அக்கறையைக் காட்ட வலியுறுத்துகின்றார். தந்தை எவ்வழியோ அவ்வழியே தனயனும் என்பது தந்தைக்கடவுளுக்கு பின் மகன் இயேசுவுக்கு பொருந்துவது எவ்வளவு உண்மையோ அதுபோல் அவர் தம் வாரிசுகளாகிய நமக்கும் பொருந்த வேண்டும். இயேசுவின் போதனைகளில் வருவது போல, ஒரு தலைவன் தன் பணியாளனை மன்னித்து ஏற்று அவன் கடனை தள்ளுபடி செய்கின்றான். ஆனால் பணியாளன் அவனுக்கு கீழ் இருக்கும் பணியாளனை மன்னித்து ஏற்காது சிறையில் தள்ளி தண்டனை தருகின்றான். தனது தலைவனால் அவனும் தண்டனை பெறுகின்றான். அந்த நிலைமை நமக்கும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே இயேசு கிறிஸ்து அரசரின் பண்புகளில் நாமும் வளர்ந்து நமக்கு கீழ் இருக்கும் பிறரையும் வளர்த்து அவரது ஆட்சியில் அவரோடு வாழ்ந்திருப்போம்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் அரசுரிமை மிக ஆழமாக வலியுறுத்தப்படும் நிகழ்வான அவரது மனித வாழ்வின் இறுதி கட்டங்கள் பாடுகள் பகுதியிலிருந்து வாசிக்கப்பட்டன. இந்நிகழ்வில் பல விதமான மனிதர்கள் இடம் பெறுகின்றனர். ஒரு அரசன் திருநிலைப்படுத்தப்படும் போது அந்த அரசரைப் புகழ்ந்தும் அவரது வழிமரபினரை புகழ்ந்தும் பேசுவது உண்டு. அதனை அந்த பகுதி மக்கள் கேட்குமாறு உரக்கச்சொல்லி மகிழ்வர். முடி சூட்ட இருக்கும் மன்னன் இது வரை இளவரசன் இனி அவன் அரசன். அது போல தான் இயேசுவின் நிகழ்வும் இருக்கின்றது. இறை மனிதனாக இருந்தவர் இறப்பிற்கு பின் முழு இறைச்சாயலைப் பெறுகின்றார். அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். ஆட்சியாளர்கள் அவரை கடவுளின் மெசியா தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதை மனதில் ஆழமாக பதித்து, அப்படியானால் அதை நிரூபி என்கின்றனர். படைவீரர்கள் அவர் யூதர்களின் அரசன் என்பதை வெளிப்படுத்தக் கேட்கின்றார்கள். அவரை சுமந்த சிலுவையும் அதில் தொங்கிய பலகையும் அதையே வெளிப்படுத்துகின்றது இவன் யூதரின் அரசன் என்று. உடன் அறையப்பட்ட கள்வனும் நீ மெசியாதானே என்கின்றான். இவர்கள் அனைவரும் தங்கள் மனதில் கிறிஸ்து இயேசுவை அரசராக மெசியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவராக நினைத்த போதிலும் வெளிப்படுத்தும் வார்த்தைகளிலும் தொனியிலும் எதிர்மறையாக அதனை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் நல்ல கள்வன் மட்டும் தனது மனதில் நினைத்ததை பொருள் மாறாமல் தொனி மாறாமல் வெளிப்படுத்துகின்றார். இயேசுவை அரசராக நம்பினான் அவரது ஆட்சி உரிமையில் பங்கு கொள்ள நினைத்தான். அதையே தனது ஆசையாக கோரிக்கையாக வெளிப்படுத்தினான். இயேசுவும் அவனது நல்லெண்ணத்தை நிறைவேற்ற வாக்களித்தார். இன்று நீர் என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய்.

பல நேரங்களில் நாம் நினைப்பது ஒன்று சொல்வது ஒன்று. அதனாலே பல விளைவுகள் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தே பல நேரங்களில் நாம் நிகல்காலத்தில் வாழ மறந்து விடுகின்றோம். நல்ல கள்வன் போல நல்லதை நினைப்போம் நினைத்ததை சொல்வோம். அவரது பேரின்ப வீட்டில் அவரோடு இணைந்து வாழ்வோம். ஒரு நல்ல அரசனுக்கு தேவை மூன்று இயல்புகள் நிகழ் காலத்தில் வாழ்வது, பொறுமை, சரியாக செய்வது இதை ஆங்கிலத்தில் present , patience , perfect ட்ரிபிள் த்ரீ என்பர் நம் கிறிஸ்து அரசர் போல நாமும் சரியான செயல்களை பொறுமையாக அன்றே செய்யும் போது நாமும் அவரது பேரின்ப வீட்டில் அவரோடு இருப்போம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.
 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி.

நினைவிற்கொள்ளும் அரசர்!

ஒரு சாதாரண கதையோடு தொடங்குவோம்.

சிறுவன் ஒருவனுக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை. ஐஸ்க்ரீம் பார்லர் செல்கின்றான். ஒரு நாற்காலியைப் பார்த்து அமர்ந்த அவனிடம் வருகின்ற கடை ஊழியர், 'என்ன ஃப்ளேவர் வேண்டும்?' எனக் கேட்கின்றார். 'வெனில்லா' என்கிறான் சிறுவன். 'இரண்டு வகைகள் உள்ளன. ஒன்றின் விலை ரூ 45. மற்றொன்றின் விலை ரூ 55' என்கிறார் ஊழியர். 'இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?' கேட்கின்றான் சிறுவன். 'இரண்டாம் வகை ஐஸ்க்ரீமில் நிறைய முந்திரி மற்றும் பாதாம் பருப்புக்கள் சேர்க்கப்படும். அத்துடன் ஒரு சிறிய கார் பொம்மையும் இலவசமாகக் கிடைக்கும்' என்கிறார் ஊழியர். தன் பைக்குள் கையை விடுகின்ற சிறுவன் தன் பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு, 'ரூ 45க்கு உள்ள ஐஸ்க்ரீம் கொடுங்கள்' என்று ஆர்டர் செய்கிறான். 'இவனிடம் காசு இவ்வளவுதான் இருக்கிறதுபோல!' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே ஊழியர் ஐஸ்க்ரீம் கொண்டுவருகின்றார். சாப்பிட்டுவிட்டு, 'நன்றி!' என்று சொல்லிவிட்டுச் செல்கின்றான் சிறுவன். காலிக் கோப்பையை எடுக்க வந்த ஊழியர், ரூ 55ஐ சிறுவன் விட்டுச் சென்றிருப்பதைப் பார்க்கிறான். தனக்கு விருப்பமான ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்ட அந்த நேரத்தில், தன் ஆசையை விலக்கிவிட்டு, ஊழியரை நினைவுகூர்ந்து அவருக்காக டிப் வைத்த சிறுவனை நினைத்து ஆச்சர்யப்பட்டார் ஊழியர்.

நினைவுகூரும் அனைவரும் அரசர்களே!
அல்லது நினைவுகூருபவரே அரசர்!

தன்னுடைய விருப்பம் அல்லது நலனை முதன்மைப்படுத்தாமல் தேவையில் இருக்கும் பணியாளரை நினைவுகூர்ந்த அந்த இளவல் தன்னை அறியாமலேயே அந்தப் பணியாளரின் அரசர் ஆகின்றார்.

திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிற்றுக் கிழமையை இயேசு கிறிஸ்து அனைத்துலகுக்கும் அரசர் என்று கொண்டாடுகின்றோம்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 சாமு 5:1-3) வடக்கு இஸ்ரயேலுக்கு தெற்கு யூதாவுக்கும் ஏழு ஆண்டுகள் நடந்த கொடுமையான போர் முடிந்து, வடக்கு இஸ்ரயேலின் தலைவர்கள் தன்னுடைய ஊரான எபிரோனில் குடியிருந்த தாவீதிடம் செல்கின்றனர். தங்களை ஆள்வதற்கு தாவீதே சிறந்த அரசர் என்று முடிவெடுக்கின்றனர். தாவீதிடம் இருந்த பண்புநலன்களும் குணநலன்களும் ஆண்டவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட அரசர் அவர் என்று மற்றவர்களுக்குக் காட்டின. தாவீது பிலிஸ்தியர்களைக் கொன்றார் (காண். 1 சாமு 18:14-16). இப்படி நிறைய சாதனைகள் புரிந்தார். மேலும், ஆபிரகாம் முதன்முதலில் உரிமையாக்கிக் கொண்ட எபிரோன் பகுதியில் தாவீது இருந்ததாலும் வடக்கு இஸ்ரNயுல் தலைவர்கள் அவரை நாடி வந்து தங்களை அரசாளுமாறு வேண்டுகிறார்கள்.

அவர்களோடு தாவீது உடன்படிக்கை செய்துகொள்கின்றார். உடன்படிக்கை என்பது ஒருவர் மற்றவருக்கு இடையே இருக்கும் உறவுநிலையின் வெளிப்புற அடையாளம். அந்த அடையாளத்தைக் காணும்போதெல்லாம் ஒருவர் மற்றவர் மேலுள்ள கடமைகளையும் உரிமைகளையும் நினைவுகூர்வர். எடுத்துக்காட்டாக, வெள்ளப்பெருக்கிற்குப் பின் கடவுள் நோவாவுடன் உடன்படிக்கை செய்துகொள்கின்றார். அந்த உடன்படிக்கையின் அடையாளமாக கடவுள் தன்னுடைய வில்லை (வானவில்லை) பூமிக்கு மேல் நிலைநிறுத்துகிறார். அந்த வில்லைப் பார்க்கும்போதெல்லாம் அவர் நோவாவுடன் தான் செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்து பூமியை வெள்ளப்பெருக்கிலிருந்து காக்கின்றார்: 'என் வில்லை மேகத்தின் மேல் வைக்கிறேன். அதன் வில் தோன்றும்போது என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன் ... உடன்படிக்கையின் அடையாளம் இதுவே' (காண். தொநூ 9:13-17).

ஆக, தாவீது தன்னுடைய அரசாட்சியை உடன்படிக்கை என்ற நிகழ்வின் வழியாகத் தொடங்குகிறார். இந்த உடன்படிக்கையால் இவர் தன்னுடைய மக்களை என்றென்றும் நினைவுகூர்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 1:12-20) இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், பவுல் மூன்று விடயங்களுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார்: (அ) கொலோசையர்களைக் கடவுள் இமைக்களுக்கான ஒளிமயமாக உரிமைப்பேற்றில் பங்குபெற அவர்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார், (ஆ) இதன் வழியாக அவர்கள் இருளிலிருந்து விடுவிக்கப்பட்டு அன்பார்ந்த மகனின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டனர், மற்றும் (இ) அம்மகனால் அவர்கள் பாவமன்னிப்பு என்னும் மீட்பைப் பெறுகின்றனர். இரண்டாம் பகுதி, ஒரு கிறிஸ்தியல் பாடலாக அமைந்துள்ளது. கிறிஸ்துவைக் கடவுளின் சாயல் என்று வர்ணிக்கும் பாடல் ஆட்சியாளர், அதிகாரம் கொண்ட அனைவரும் அவரால்தான் படைக்கப்பட்டனர் என்றும், அவரே திருச்சபையின் தலையும் தொடக்கமும் என்று விளக்குகிறது.

கிறிஸ்து வழியாகக் கடவுள் அனைத்தையும் ஒப்புரவாக்கினார் என நிறைவு செய்கிறார் பவுல். 'ஒப்புரவு செய்தல்' என்னும் நிகழ்வில் அடுத்தவர் நினைவுகூரப்படுகின்றார். மேலும், 'ஆட்சியாளர்கள், அதிகாரம் கொண்டவர்கள் அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர்' என்று சொல்வதன் வழியாக, கிறிஸ்துவை ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆட்சியாளர்கள் என்று சொல்கிறார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 23:35-43) இயேசுவின் பாடுகள் வரலாற்றுப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதி லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்படுகின்றார். அவர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதைக் கீழே இருப்பவர்கள் பார்க்கிறார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறவர்களும் பார்க்கிறார்கள். இவ்விருவரின் எதிர்வினைகளைப் பதிவு செய்கிறார் லூக்கா. சிலுவைக்குக் கீழே நிற்கின்ற 'ஆட்சியாளர்கள்,' 'நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்' என்று எள்ளி நகையாடுகின்றனர். இவர்கள் கொஞ்ச நேரத்திற்கு முன் பிலாத்துவின் அரண்மனையில், 'எங்களுக்கு சீசரைத் தவிர வேறு அரசர் இல்லை' என்று சொன்னார்கள். மேலும், இவர்களின் வார்த்தைகளைக் கிண்டல் செய்யும் விதமாக பிலாத்துவும், 'இவன் யூதரின் அரசன்' என எழுதுகிறான். இந்தப் பலகையைப் பார்த்தவர்கள் இயேசுவைத் தங்களுடைய அரசனாக ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு இடறலாகப்பட்டது. தொடர்ந்து, சிலுவையில் அறையப்பட்டவர்களில் ஒருவர், 'நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று!' என்று பழித்துரைக்கிறார். ஆனால், மற்றவர் அவரைக் கடிந்துகொள்கிறார். மேலும், 'இயேசுவே நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்' என்று சொல்லும் அவரிடம், 'இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்' என வாக்களிக்கிறார் இயேசு. தன்னுடைய பணிக்காலத்தில் மக்கள் தன்னை அரசானக்க நினைத்தபோது தப்பி ஓடிய இயேசு, 'நீ யூதர்களின் அரசனோ?' என்று பிலாத்து கேட்டபோது அமைதி காத்த இயேசு, 'நீர் என்னை நினைவிற்கொள்ளும்' என்று ஒரு கள்வன் சொன்னவுடன், தன்னுடைய அரசாட்சியை அவனிடம் ஆமோதிக்கிறார். மேலும், லூக்கா நற்செய்தியில் இயேசுவை அவருடைய பெயரைச் சொல்லி அழைத்த ஒரே நபர் இக்கள்வன் மட்டுமே.

'நினைவிற்கொள்ளுதல்' அல்லது 'நினைவுகூர்தல்' என்பது முதல் ஏற்பாட்டில் கடவுளின் உடன்படிக்கையைக் குறிக்கும் சொல்லாடல். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் துன்பம் அனுபவிப்பதை நினைவுகூர்ந்த கடவுள் கீழே இறங்கி வருகிறார் (காண். விப 2:24). இஸ்ரயேல் மக்கள் சீனாய் மலையில் பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து வழிபட்டபோது அவர்கள்மேல் கோபம் கொண்டு எழுந்த கடவுள், தம்முடைய உடன்படிக்கையை நினைவுகூர்ந்து அமைதியாகின்றார் (காண். விப 32:13).

ஆக, இன்றைய முதல் வாசகத்தில் தாவீது தான் கடவுளின் திருமுன் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்து அவர்களை ஆட்சி செய்கின்றார். இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்துவின் ஒப்புரவுப் பணி நினைவுகூரும் பணியாக இருக்கின்றது. நற்செய்தி வாசகத்தில், நல்ல கள்வனை நினைவுகூறும் அரசராக இருக்கிறார் இயேசு.

நம்முடைய குடும்பம் மற்றும் பங்குத் தளங்களில் உள்ள தலைமைத்துவத்திலும் இதே பிரச்சினைதான் காணப்படுகிறது. குடும்பத் தலைவர் அல்லது தலைவி தன்னுடைய குடும்பத்தை நினைவுகூறும்போது நல்ல தலைவராக தலைவியாக இருக்க முடியும்.

நினைவுகூருதலுக்கு எதிர்ப்பதம் மறத்தல்.

நாம் எப்போதெல்லாம் மறக்கிறோம்? தேவையில்லாதது என நினைப்பவற்றை மறக்கிறோம், கண்டுகொள்ளாத்தன்மையால் மறக்கிறோம், அல்லது நம்மை மட்டுமே அதிகமாக நினைவுகூரும்போது மற்றவர்களை மறக்கிறோம்.

'இயேசு அரசரா? யூதர்களின் அரசரா?' என்பது இன்றைய கேள்வி அல்ல. நான் அவரை அரசராக ஏற்றுக்கொள்கிறேனா? என்பதுதான் கேள்வி.

இன்றைய நாளில் நான் அந்தக் கள்வன் போல, 'என்னை நினைவுகூரும்' என்று இயேசுவிடம் சொல்லும்போது நான் அவரை என் அரசராக ஏற்றுக்கொள்ள முடியும்.

இதை எப்படி என்னால் சொல்ல முடியும்?

நான் என் நொறுங்குநிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும். நல்ல கள்வன் தன்னுடைய வலுவற்ற நிலையில் இயேசு மட்டுமே துணைவர முடியும் என்று நம்பினான். அவனுடைய வலுவற்ற நிலையில் அவன் இயேசுவின் வல்லமையை நாடி நின்றான்.

இன்றைய உலகில் ஒவ்வொருவரும் தன்னையே வல்லமையாகக் காட்டிக்கொள்ளவும், வல்லமை உடையவர்களோடு தங்களையே அடையாளப்படுத்திக்கொள்ளவுமே விழைகின்றனர். ஆனால், வலுவற்ற கள்வன் வலுவற்ற இயேசுவில் வல்லமையைக் கண்டான்.

அந்தச் சிறுவன்போல.

வலுவற்ற அந்தச் சிறுவன் தன் வலுவற்ற நிலையில் தேவையிலிருக்கும் அப்பணியாளரைப் பார்த்தான்.

இன்று இயேசுவை நாம் அரசராகக் கொண்டாடுகிறோம். நம்முடைய வலுவின்மையை எண்ணிப் பார்ப்போம். வலுவற்ற நிலையில் சிலுவையில் தொங்கும் அவர் நம் வலுவின்மையை அறிந்தவர்.

தன்னுடைய வலுவின்மையை அறிந்த ஒருவர்தான் திருப்பாடல் ஆசிரியர்போல, "ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்' (122:1) என்று பாட முடியும். ஆண்டவருடைய இல்லத்தில் நுழையும் நம்மை அவர் ஆள்வார்.

அவரின் ஆளுகைக்கு நாம் உட்படும்போது அவர் நம்மை நினைவுகூர்வார். ஏனெனில், நாம் அங்கே நம்முடைய நொறுங்குநிலையை நினைவுகூர்கிறோம்.

 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை

அனைத்துலகின் அரசரான கிறிஸ்து பெருவிழா 20 நவம்பர் 2022

வாசகங்கள்
I 2 சாமுவேல் 5: 1-3
II கொலோசையர் 1: 12-20
III லூக்கா 23: 35-43

மன்னிக்கும் அரசர்

சிறுவயதிலேயே பெற்றோரால் கைவிடப்பட்டவன் சிறுவன் மைக்கேல். அதனால் அவன் தனக்குக் கிடைத்த வேலையைச் செய்து, கிடைத்த உணவை உண்டு, கிடைத்த இடத்தில் தங்கி வாழ்ந்து வந்தான்.

ஒருநாள் அவன் சாப்பிட எதுவும் கிடைத்ததால், வழியோரமாக மயங்கிக் கீழே விழுந்தான். தற்செயலாக அவ்வழியாக வந்த அந்நாட்டு அரசர் அவன்மீது பரிவுகொண்டு அவனை அரண்மனைக்குத் தூக்கிக்கொண்டு சென்று, உணவளித்தார். தவிர, அவனைப் பற்றிய முழு விவரத்தை அவர் அறிந்ததும் அவனிடம், "நீ இங்கேயே தங்கிக்கொள்ளலாம். இங்கிருக்கும் எல்லாமும் உனக்குத்தான் சொந்தம். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை, நீ என்னுடைய கட்டளையின்படி வாழவேண்டும் " என்றார். இதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த அவன் அரண்மனையிலேயே தங்குவதற்குச் சம்மதம் தெரிவித்தான்.

ஆண்டுகள் வேகமாக உருண்டோடின. சிறுவனாக இருந்த மைக்கேல், இப்போது இளைஞனாகி இருந்தான். அதனால் அந்த வயதிற்குரிய துடுக்குத்தனத்துடன் இருந்தான். மட்டுமல்லாமல், அரசரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வது அவனுக்குக் கடினமாக இருந்தது. ஆகவே, அவன் அரசாங்கக் கருவூலத்திலிருந்து பணத்தையும் நகைகளையும் எடுத்துக் கொண்டு, வேறோர் இடத்திற்குப் போக முடிவு செய்தான்.

ஒருநாள் இரவு எல்லாரும் தூங்கிய பின்பு, அவன் கருவூலத்திற்குச் சென்று, பணத்தையும் நகைகளையும் எடுத்துக்கொண்டிருந்தான். திடீரெனச் சத்தம் கேட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது, அங்கே அரசர் நின்றுகொண்டிருந்தார். அவன் பேயறைந்தவன் போல் நின்றபோது, அரசர் அவனிடம், "இங்குள்ள எல்லாமும் உன்னுடையதுதான் என்று சொன்னபிறகும் நீ ஏன் பணத்தையும் நகைகளையும் திருடிக் கொண்டிருக்கின்றாய்? என்றார். அவன் எதுவும் பேச முடியாமல், அவரது காலில் விழுந்தபோது, "நான் உன்னை மன்னிக்கின்றேன் " என்று அவனை மனதார மன்னித்து, அவனைத் தன் மகனாக ஏற்றுக்கொண்டார்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மைக்கேலை அரசர் மனதார மன்னித்து ஏற்றுக்கொண்டார். இன்று நாம் கொண்டாடுகின்ற, அனைத்துக்கும் அரசராம் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்கின்றார். அவர் நம்மையெல்லாம் எப்படி மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார் என்பது குறித்து நாம் சிந்திப்போம்.

இகழ்ந்தவருக்கும் இறையாட்சியில் இடமளித்தவர்:
இன்று திருஅவையானது, "நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துக்கும் அரசர் " " என்ற பெருவிழாவினைக் கொண்டாடுகின்றது; ஆனால், அவர் கள்வர்கள் நடுவில் ஒரு குற்றவாளியைப் போன்று சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதைப் பற்றி இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். இது எவ்வளவு பெரிய நகைமுரண்! அரசர் என்றால் அரியணையில் அல்லவா அமர்ந்திருக்கவேண்டும்! இயேசுவோ சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கின்றார். அப்படிப்பட்டவரை அரசர் என அழைப்பது பொருத்தமாக இருக்குமா? என்றொரு கேள்வி எழலாம். ஆனால், அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருப்பதை வைத்தே, அவர் இவ்வுலக அரசரைப் போன்றவர் அல்லர் என்று சொல்லலாம்.

அடித்தவரைத் திருப்பி அடிப்பவர்களாகவும், சமயம் கிடைக்கின்றபோது பழி வாங்குபவர்களாகவும் இவ்வுலக அரசர்கள் மற்றும் தலைவர்கள் இருக்கும்போது, இயேசு தன்னை இகழ்ந்தவருக்கும் இறையாட்சியில் இடமளிப்பவராக இருக்கின்றார். மத்தேயு நற்செய்தியில், இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள் (மத் 27: 44) என்று வாசிக்கின்றோம். எனில், இயேசு தன்னை இகழ்ந்து, பிறகு மனமாறிய கள்வருக்கு இறையாட்சியில் இடமளிக்கின்றவர் என்று சொல்லலாம். இதனாலேயே அவர் இவ்வுலக அரசரைப் போன்றவர் அல்ல என்று நாம் சொல்லலாம்.

ஒரு குற்றமும் செய்யாதவர்:
இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்வர்களில் ஒருவன் மற்றவரைப் பார்த்து, "நாம் தண்டிக்கப்படுவது முறையே, நம் செயல்களுக்கேற்ற தண்டனையைப் நாம் பெறுகின்றோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே " என்கிறார். இவ்வார்த்தைகள் மிகவும் கவனிக்கத் தக்கவை.

எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் சொல்வது போன்று, இயேசு பாவம் செய்யாதவர் (எபி 4:15). அவரைப் போன்று இன்றுள்ள அரசர்களிலும் சரி, இதற்கு முன்பு இருந்த அரசர்களிலும் சரி, பாவம் செய்யாத அரசர்கள் யாராவது இருக்கின்றார்களா? என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே! இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேலைச் சேர்ந்த அனைத்துக் குலங்களிலும் இருந்த மூப்பர்கள், எப்ரோனில் இருந்த தாவீதிடம் வந்து அவரை இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்கின்றார்கள்.

தாவீது இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்யப்படுவதற்கு மூன்று காரணங்கள் இருந்தன ஒன்று, அவர் இஸ்ரயேலர்; அன்னியர் அல்லர் (இச 17: 5). இரண்டு, அவர் மிகச் சிறந்த வீரர் மற்றும் தளபதி. மூன்று, அவர் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (2 அர 11:17). இத்தகு காரணங்களால் அவர் ஒருங்கிணைந்த இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்யப்படுகின்றார். இப்படிப்பட்டவரே உரியாவின் மனைவியான பத்சேபாவோடு பாவம் செய்துவிடுகின்றார். பின்னாளில் அவர் மனம் மாறி (திபா 51), அனைத்துலகிற்கும் அரசராம் ஆண்டவரின் மன்னிப்பைப் பெற்றாலும், அவர் பாவியே! ஆனால், ஆண்டவர் இயேசு பாவம் செய்யாதவர். அதனால் அவர் இவ்வுலக அரசர்களைவிடவும் மேலானவர்.

கடவுளோடு நம்மை ஒப்புரவாக்குபவர்:
கடவுளின் திருமுன் இருந்த மனிதர்கள் (தொநூ 3:8), அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையை மீறிப் பாவம் செய்து, அவரை விட்டு விலகிப் போனார்கள். இவ்வாறு கடவுளிடமிருந்து விலகியவர்களை, இயேசு தம்முடைய விலைமதிக்கப் பெறாத இரத்தத்தைக் கல்வாரி மலையில் சிந்தி, கடவுளோடு ஒப்புரவாக்கினார்; மீண்டுமாக அவர் அவர்களைக் கடவுளின் திருமுன்னால் கொண்டு வந்தார். இதைப் பற்றி இன்றைய இரண்டாம் வாசகத்தின் இறுதியில் பவுல், "சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால், அமைதியை நிலைநாட்டவும், விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார் " என்கிறார்.

இதன்மூலம் இயேசுதான் கடவுளோடு மனிதர்களை ஒப்புரவாக்கியவர்; ஏன், மனிதர்களோடு மனிதர்களை ஒப்புரவாக்கி, அமைதியைக் கொண்டு வந்தவர் (எபே 2: 13-14) என்று சொல்லலாம். இவ்வாறு இயேசு தன்னை இகழ்ந்தவருக்கும் இறையாட்சியில் இடமளிப்பவராய், பாவம் செய்யதவராய், கடவுளோடு மனிதர்களை ஒப்புரவாக்குபவராய் இருப்பதால் அவர் ஒப்பற்ற அரசராய் இருப்பது மட்டுமல்லாமல், அனைத்திற்கும் அரசராய் இருக்கின்றார். அப்படிப்பட்டவரின் ஆட்சியுரிமையில் நாம் பங்குபெற, அவருக்கு உகந்தவற்றை நாடித் தேடுவோம்.

சிந்தனைக்கு:
"ஓர் அரசரின் வலிமை அவரது இரக்கத்தில் உள்ளது " என்று கூறுவார் சரபி என்ற அறிஞர். எனவே, நம்மீது மிகுந்த இரக்கமும் அன்பும் கொண்டிருக்கும் அனைத்திற்கும் அரசராம் இயேசு கிறிஸ்துவின் வழி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 
 
 இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை

கிறிஸ்து அரசர் பெருவிழா.

பைத்தியக்காரர்கள் இருவர் சந்தித்தனர். ஒருவன் மற்றவனை நோக்கி, "நான் உலகத்தையே விலைக்கு வாங்கப் போகிறேன்" என்றான். மற்றவனோ, "நான் உலகத்தை விற்றால்தானே நீ அதை வாங்க முடியும். இப்போதைக்கு அதை விற்கும் எண்ணம் என்னிடமில்லை " என்றான்! ஆம். இந்தப் பைத்தியக்காரர்களைப் போலத்தான் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் ஆதிக்க வெறி பிடித்து அலைகின்றனர். மக்களை முன் நிறுத்தி, ஆனால் மக்களின் முன்னேற்றம் மறந்து, தங்களின் முன்னேற்றம் காணத் துடிக்கும் தன்னலவாதிகள் பெருகிவிட்ட சமுதாயத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிரேக்க நாட்டையே ஆண்ட, உலக நாடுகளையெல்லாம் தனது ஆதிக்கத்தில் கொண்டு வர முயற்சித்த அலெக்சாண்டர் இறந்த சமயம், ஒரு தத்துவ மேதை சொன்னார். "நேற்று வரை அலெக்சாண்டர் மண்ணை ஆண்டார். ஆனால் இன்று மண்ணோ அலெக்சாண்டரை ஆண்டு கொண்டிருக்கிறது" என்று!

மன்னர்கள் ஆட்சி, முடியாட்சி என்றெல்லாம் முடிந்து, இன்று மக்கள் ஆட்சி, குடியாட்சி மலரும் காலகட்டத்தில் நம் ஆண்டவர் இயேசுவை ஒப்பற்ற அரசராக முன் வைத்து விழாக் கொண்டாடுகிறோம்.

இயேசு ஒருவர் மட்டும்தான் உண்மையான அரசர். அவர் மூலமாக அனைத்தும். உண்டாயின (யோவா:1:3). அவர் யாக்கோப்பின் குலத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது (லூக். 1:33). இயேசுவே, நீர் ஆட்சி உரிமை பெற்று வரும்போது என்னை நினைவுகூரும் (லூக். 23:42) என்றெல்லாம் விவிலிய வெளிப்பாடு நமக்குத் தருகிறது. ஆம், இயேசு கிறிஸ்துவின் அரசு உண்மையான அரசு, நீதியின் அரசு, அமைதியின் அரசு, புனிதத்தின் அரசு, அன்பின் அரசு. ஆயுத பலத்தால் ஆட்சி செய்பவர் அல்ல. மாறாக அன்பின் பலத்தால் ஆட்சி செய்கிறார். மாமன்னன் நெப்போலியன் ஒரு தடவை கூறினார்: "நானும், அலெக்சாண்டரும் ஆயுதப் பலத்தால் அடக்கி ஆள முயன்றோம். ஆனால் எங்கள் அரசு நிலைக்கவில்லை. இயேசு கிறிஸ்துவோ அன்பினால் ஆட்சி செய்கிறார். அவரது ஆட்சி என்றும் நிலைத்து நிற்கும், முடிவிராது" என்றார்.

இயேசு தனக்காக அல்ல, மற்றவரை வாழ வைக்கவே வந்தார். எனவே எசாயா சுறுகிறார்: "அவரோ நம் குற்றங்களுக்காகக் காயப்பட்டார். நம் தீச்செயலுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிலை வாழ்வு தரும் பொருட்டு தண்டிக்கப்பட்டார்" (எசா. 53:5). நாம் மிகுதியாக வாழ்வு பெறும் பொருட்டு வந்தார் இயேசு (யோவா. 10:10).

மானிட மகன் தொண்டு ஏற்பதற்காக அல்ல. தொண்டு புரியவே வந்தார் (மத். 20:28) என்றும், ஆண்டவரும் போதகருமாகிய நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர், மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் (யோவா. 13:14) என்றும் நமக்கு வழிகாட்டியுள்ளார். இத்தகைய இயேசுவின் அரசின் மக்களாக வாழ, நாம் அவரது பணியைத் தொடர அழைக்கப்பட்டிருக்கிறோம்.

சிந்தனை: ஆங்கில பாடத்தில் பரீட்சை எழுதி வீடு திரும்பிய தன் 12 வயது மகனைப் பார்த்து தந்தை கேட்டார், "மகனே எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டன? நீ எத்தனைக்குப் பதில் எழுதினாய்?" என்று. மகனோ, "அப்பா, ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. முதல் நான்கு கேள்விகளுக்கும், கடைசி இரண்டு கேள்விகளுக்கும் பதில் எழுதவில்லை " என்றான். இது எப்படி!? நமது வாழ்வின் இறுதித் தேர்வில் நம் ஒப்பற்ற அரசர் நம்மிடம் கேட்கப் போவதும் ஆறு கேள்விகள்தான். பசியாக இருந்தேன், தாகமாக இருந்தேன், ஆடையின்றி இருந்தேன், அந்நியனாக இருந்தேன், நோயுற்று இருந்தேன். சிறையில் இருந்தேன் (மத். 25:35-45) எனக்கு உதவிக் கரம் நீட்டி உதவி செய்தாயா? என்று கேட்பார். இந்தக் கேள்விகளுக்குப் பதில் கூறும் அளவுக்கு நம் வாழ்வின் செயல்பாடுகள் அமைந்தால் நாம் அவரது இறையரசின் மக்களாக இருப்போம்.
 
 மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி

நமக்கு வாழ்வளிக்கும் அரசர் இயேசு

இவன் யூதரின் அரசன் என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது என்று இன்றைய நற்செய்தி கூறுகின்றது. ஆகவே இயேசு ஓர் அரசர். ஆனால் அவர் எப்படிப்பட்ட அரசர் என்பதைப்பற்றி நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

உலக வழக்கில் அரசன் என்பவன் நீதி தவறாது ஆட்சி செலுத்தவேண்டும்; நல்லவர்களுக்குப் பாராட்டுதலையும், குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனையையும் தரவேண்டும். இயேசு இந்த உலக அரசர்களிடமிருந்து சற்றே வேறுபட்ட அரசராக வாழ்ந்தவர்.

நல்லவர்களுக்குப் பாராட்டைத் தெரிவித்தார் (மத் 8:10, 16:16-19). ஆனால் மனம் திரும்பிய பாவிகளை, குற்றவாளிகளை, குறையுள்ளவர்களை அவர் தண்டித்ததில்லை. பாவிகளைக் கண்டித்திருக்கின்றார் (யோவா 8:11). ஆனால் அவர்களைக் கண்டனத்துக்குள்ளாக்கி பேரின்ப வீட்டின் புறம்பே தள்ளியதில்லை (நற்செய்தி).

சிலுவைச் சாவுக்குக் கையளிக்கப்படும் அளவுக்கு அந்தத் திருடன் பெரிய குற்றங்களைப் புரிந்திருந்தான். ஆனால் அவனோ, நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகின்றோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே (லூக் 23:41) என்று கூறியதாக நற்செய்தி கூறுகின்றது. அவன் அவனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதும் அவனுக்கு உடனே பாவமன்னிப்பு கிடைக்கின்றது. வான்வீடு கிடைக்கின்றது. பேரின்பம் கிடைக்கின்றது.

இன்று இயேசு நமக்குக் கூறும் நற்செய்தி என்ன? என் மகனே! என் மகளே! உன்னைத் தண்டித்து அழிக்க அல்ல உன்னை மன்னித்துக் காக்கவே நான் இந்த உலகிற்கு வந்தேன்! கடந்த காலத்தை மறந்துவிடு! நிகழ்காலத்தைக் கையில் எடு! உன் பாவங்களுக்கு மனம் வருந்தி. நீ என்னோடு வாழ ஆசைப்பட்டால் உனக்கு உடனே மன்னிப்பையும் மீட்பையும் நான் தருவேன் என்கின்றார்.

இயேசு அரசர் எதிர்மறையான எண்ணங்களை ஒருபோதும் உலகில் விதைத்தது இல்லை. பகை, சீற்றம், பிளவு, அழுக்காறு, தண்டனை போன்ற எந்த எதிர்மறையான எண்ணங்களாலும் [கலா 5:20-21) இயேசு மக்களை அச்சுறுத்தியது கிடையாது.

இதோ, கிறிஸ்து அரசர் எப்படிப்பட்டவர் என்பதைச் சுட்டிக்காட்ட ஓர் அரசனின் கதை. ஓர் அரசனும் அவனுடைய போர் வீரர்களும் போரில் ஈடுபட்டிருந்தார்கள். ஏராளமான போர் வீரர்கள் இறந்துவிட்டார்கள். போர் வீரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. மீதியிருந்த போர் வீரர்களின் மனத்தை அச்சம் கவ்விக்கொண்டது. இனி வெற்றி அடைய முடியாது என்ற எண்ணம் அவர்கள் மனத்தில் தலை தூக்கியது. எதிரியிடம் சரணடைந்துவிடுவோம் என்று அரசனிடம் சொன்னார்கள். அவர்கள் மனத்திலே நேர்மறையான எண்ணத்தை விதைக்க அரசன் விரும்பினான். வாருங்கள் எல்லாரும் கோயிலுக்குப் போவோம். என்ன செய்யவேண்டும் என்பதை கடவுள் நமக்குச் சொல்லட்டும். நான் காசு ஒன்றை வைத்திருக்கின்றேன். அதை சுண்டி விடுகின்றேன். தலை விழுந்தால் போர்புரிவோம். பூ விழுந்தால் சரணாகதி அடைவோம் என்றான் அரசன்.

எல்லாப் போர் வீரர்களும், சரி என்றார்கள். எல்லாரும் கோயிலுக்குச் சென்றார்கள். அரசன்ச் காசை சுண்டிவிட்டான். தலை விழுந்தது. கடவுள் போர் புரியும்படி சொல்கின்றார்! கடவுள் நம் பக்கம் இருக்கும்போது வெற்றி நமக்கே என்றான் அரசன். படை வீரர்கள் வீரத்தோடும் நம்பிக்கையோடும் போர் புரிந்தார்கள். போரில் பெரும் வெற்றி பெற்றார்கள். படை வீரர்களுக்கு அரசன் விருந்து வைத்தான். அந்த விருந்தின்போது அரசன் அவன் கோயிலிலே சுண்டிவிட்ட நாணயத்தைக் காட்டினான். அந்தக் காசின் இரண்டு பக்கங்களிலும் தலையிருந்தது.

அரசன் அந்தப் போர் வீரர்களின் மனத்தில் நேர்மறையான எண்ணத்தை விதைத்ததால் அப்போர் வீரர்கள் வெற்றி பெற்றார்கள். எண்ணமே வாழ்வு! வாழ்வே எண்ணம்! நாம் தோற்றுப்போவோம் என்று நினைத்தால் நாம் தோற்றுப்போவோம்; நாம் வெற்றிபெறுவோம் என்று நினைத்தால் நாம் வெற்றிபெறுவோம்.

இதனால்தான் இயேசு அவர் வாழ்க்கை முழுவதும் அன்பு, மன்னிப்பு, சமாதானம், மகிழ்ச்சி (கலா 5:22-23) போன்ற நேர்மறையான எண்ணங்களை மனிதர்கள் மனத்தில் தெளித்தார்.

இயேசு நமது நல்லாயன் (முதல் வாசகம்). அவர் ஒருபோதும் ஆடுகளாகிய நம் மனத்தில் வேண்டாத எண்ணங்களை, ஆசைகளைத் தூவமாட்டார்.

கடவுள் அதிகார உலகிலிருந்து, தண்டிக்கும் உலகிலிருந்து, மன்னிப்பு உலகிற்கு நம்மை இயேசுவின் வழியாக அழைத்து வந்திருக்கின்றார் (இரண்டாம் வாசகம்).

நாம் வாழ்ந்துகொண்டிருப்பது ஓர் இரக்க உலகம், ஒரு கனிவு உலகம், ஒரு கருணை உலகம். இங்கே பாவத்தை ஏற்றுக்கொள்ளும் எந்தப் பாவிக்கும், விண்ணுலகத்திற்குள் நுழைய விரும்பும் யாருக்கும், இயேசுவோடு வாழ ஆசைப்படும் எந்தத் மனிதனுக்கும், சமுதாயத்திற்கும் வாழ்வு உண்டு, வழி உண்டு, உயிர் உண்டு, உயிர்ப்பு உண்டு. வெற்றி உண்டு, முடிவில்லா வாழ்வு உண்டு. இது போன்ற நேர்மறையான எண்ணங்களால் நமது இல்லங்களையும் உள்ளங்களையும் மனங்களையும் நிரப்பிக்கொள்வோம். மேலும் அறிவோம் :

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை (குறள் : 594).
பொருள்: தளராது ஊக்கத்தோடு உழைப்பவனிடம் உயரிய செல்வம் சேரும் வழியைக் கேட்டுக்கொண்டு தானே சென்று அடையும்!
 
 மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
பொதுக் காலத்தின் 34-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:
2 சாமுவேல் 5: 1-3
கொலோசையர் 1: 12-20
லூக்கா 23: 35-43


மனநிலை பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் மற்றவரிடம், "நான் உலகையே விலைக்கு வாங்கப் போகிறேன்" என்று கூறியபோது, மற்றவர் கூறினார்: "நான் உலகை விற்றால்தானே, உன்னால் வாங்க முடியும்: உலகை விற்கிற எண்ணம் இப்போது எனக்கில்லை."

இன்றைய உலகில் வல்லரசுகள், வளரும் நாடுகள். அரசியல்வாதிகள், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவை உலகையே வாங்க ஆதிக்க வெறிப் பிடித்து அலைகின்றன. இந்த ஆதிக்க வெறித் தனி மனிதனையும் ஆட்டிப் படைக்கிறது.

உலக நாடுகளையெல்லாம் வென்ற மாமன்னன் அலெக்சாண்டரை அடக்கம் செய்தபோது ஒரு தத்துவ மேதை கூறினார்: "நேற்றுவரை அலெக்சாண்டர் மண்ணை ஆண்டார்; ஆனால் இன்று மண் அலெக்சாண்டரை ஆளுகின்றது." மனிதனுக்கு மண்மேல் ஆசை: மண்ணுக்கு மனிதன் மேல் ஆசை: இறுதியில் மண்தானே வெல்லுது. இந்தக் கசப்பான உண்மையை ஏனோ மனிதர்கள் மறந்து விடுகின்றனர்.

வரலாற்றில் வல்லரசுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அழிந்து கொண்டு வரும் காலக்கட்டத்தில், இன்று நாம் கிறிஸ்து அரசருடைய பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். கிறிஸ்து உண்மையில் அரசர். இன்றைய முதல் வாசகத்தில் தாவீது இஸ்ரயேல் மக்களின் அரசராகத் திருநிலைப்படுத்தப்படுகிறார் (2 சாமு 5:1-3). எருசலேமில் தாவீது ஆட்சி செய்தார். அங்கே நீதி வழங்க தாவீதின் அரியணைகள் உள்ளன என்று இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது (திபா 122:3), தாவீது 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது ஆட்சி இஸ்ரயேலின் பொற்காலம், ஆனால் தாவீதுக்குப்பின் அவரது அரசு பிளவுபட்டது; பிறகு அது சீரழிந்தது. இஸ்ரயேல் மக்கள் பல்வேறு அரசுகளுக்கு அடிமைகளாகினர். கிறிஸ்துவின் பிறப்பின் போது அவர்கள் உரோமைப் பேரரசுக்கு அடிமைகளாய் இருந்தனர். மெசியா வருவார்: அவர் தாவீதின் அரசை மீண்டும் கட்டி எழுப்புவார் என்ற எண்ணம் இஸ்ரயேல் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றியிருந்தது. எனவேதான், குருத்து ஞாயிறு அன்று யூதர்கள் கிறிஸ்துவை அரசராக எருசலேம் திருநகருக்கு அழைத்துச் சென்றபோது. "ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுவாராக! வரவிருக்கும் நம் தந்தையின் அரசு போற்றப்பெறுக" (மாற் 11:10) என்று ஆர்ப்பரித்தனர்.

கிறிஸ்துவின் பிறப்பை மரியாவுக்கு அறிவித்த வானதூதர், கிறிஸ்து தாவீதின் அரியணையில் அமர்ந்து, யாக்கோபின் குலத்தின் மீது அரசாள்வார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது (லூக் 1:32-33) என்று திட்டவட்டமாகக் கூறினார். கிறிஸ்து அறையப்பட்ட சிலுவையின் மேல் ஆளுநர் பிலாத்து எழுதிய குற்ற அறிக்கை: "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" (யோவா 19:19). கிறிஸ்து அரசர்: ஆனால் அவர் யூதர்களின் அரசர் மட்டுமல்ல: அனைத்துலக மக்களின் அரசர். இன்றைய இரண்டாவது வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுவது போல, கடவுள் நம்மை இருளின் அதிகாரத்திலிருந்து விடுவித்துத் தன் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்கு உட்படுத்தினார்; விண்ணிலுள்ளவை மண்ணி லுள்ளவை அனைத்தும் கிறிஸ்து வழியாகக் கடவுளுடன் ஒப்புரவு ஆனது ( கொலோ 1:12,20) தம் இனத்திற்காக மட்டுமன்றி, சிதறிக் கிடந்த அனைத்து மக்களுக்காகவும் கிறிஸ்து இறந்தார் (யோவா 11:52).

கிறிஸ்து அரசர்; இருப்பினும் அவர் மண்ணக அரசர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட அரசர்: அவரது அரசும் முற்றிலும் வேறுபட்டது. கிறிஸ்து அமைதியின் அரசர் (எசா 9:6); அவர் நீதியுடனும் நேர்மையுடனும் அரசாள்வார். அவரது ஆட்சியில் சிங்கமும் செம்மறியாடும் ஒன்றாகப் படுத்துறங்கும் (எசா 11:3-6). அவரது ஆட்சியில் போர் இருக்காது. போர்ப்பயிற்சி அளிக்கப்படாது; போர்க் கருவிகள் விவசாயக் கருவிகளாக மாற்றப்படும் (எசா 2:4). சுருக்கமாக, இன்றைய விழாவின் திருப்பலித் தொடக்கவுரை பட்டியலிட்டுக் காட்டுவதுபோல, கிறிஸ்துவின் அரசு "உண்மையின் அரசு; வாழ்வு தரும் அரசு: புனிதமும் அருளும் கொண்ட அரசு; நீதியும் அன்பும் அமைதியும் விளங்கும் அரசுமாகும்.

கிறிஸ்துவின் அரசை மனிதர் இரண்டு விதமாகக் கருதுகின்றனர். ஒன்று அது இம்மையைச் சார்ந்தது, மற்றொன்று அது மறுமையைச் சார்ந்தது. இன்றைய நற்செய்தியில், கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டக் குற்றவாளிகளில் ஒருவன் கிறிஸ்துவின் அரசை இவ்வுலக அரசாகக் கருதி, "நீ மெசியாவானால். உன்னையும் எங்களையும் காப்பாற்று" (லூக் 23:39) என்று கிறிஸ்துவைக் கேட்டான். ஆனால் மற்ற குற்றவாளியோ கிறிஸ்துவின் அரசு மறுமையைச் சார்ந்தது என்பதை உணர்ந்தவராய்க் கிறிஸ்துவிடம். "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற் கொள்ளும்" (லூக் 23:40) என்று விண்ணப்பித்தான்.

கிறிஸ்துவே பிலாத்துவிடம், "எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல" (யோவா 18:36) என்று தெளிவுபடுத்தினார். அதாவது அவரது அரசு இவ்வுலக அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் அப்பாற்பட்டது. கிறிஸ்துவின் அரசு இவ்வுலக வாழ்வுக்கு அன்னியமானது என்று பொருள் கொள்ளக்கூடாது. கிறிஸ்துவின் அரசு இவ்வுலக அமைப்பு முழுவதையும் புளிப்பு மாவுபோல் ஊடுருவி அதை மாற்றி அமைக்கிறது. ஆனால் இவ்வுலகில் சாவும் நோவும், துன்பமும் துயரமும் இருக்கும். மறுமையில்தான் "கண்ணீரோ, சாவோ, அழுகையோ, துன்பமோ துயரோ இராது" (திவெ 21:4).

சாகும் தறுவாயிலிருந்த ஒருவரிடம் மருத்துவர். "உங்களது கடைசி ஆசை என்ன?" என்று கேட்டதற்கு அவர், "நான் மற்றொரு மருத்துவரைப் பார்க்க வேண்டும்" என்றார். ஒரு வழி நமக்குக் கை கொடுக்காத போது மாற்று வழியைத் தேட வேண்டும். எல்லாம் தலைவிதி என்றிருக்கக் கூடாது.

ஒரு மனைவி தன் கணவரிடம் . "டி.வி.பழசாப் போச்சு, அதை மாற்றுங்க" என்று கேட்டபோது கணவர் அவரிடம், "நீயும்தான் பழசாப்போன, உன்னை மாற்றவா?" என்று கேட்டார், டி.வி.யை மாற்ற முடியும், மாற்றவும் வேண்டும். ஆனால், மனைவியை மாற்ற முடியாது; மாற்றவும் கூடாது. மாற்றக்கூடியதை மாற்றுவோம், மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளுவோம்.

"உமது அரசு வருக!": கிறிஸ்துவின் அரசு இம்மையில் வரவேண்டும் என்று மன்றாடுவோம்; அதே நேரத்தில் நிறைவு கால அரசைப் பொறுமையுடன் எதிர்பார்த்துக் காத்திருப்போம், "ஏனெனில் அரசும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே."
 
 திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை

இல்லத்திலும் இதயத்திலும் கிறிஸ்து அரசர்

"மரங்கள், தங்களுக்கு ஓர் அரசனைத் திருப்பொழிவு செய்யப் புறப்பட்டன. அவை ஒலிவ மரத்திடம் "எங்களை அரசாளும் " என்று கூறின. ஒலிவ மரம் அவற்றிடம் 'எனது எண்ணையால் தெய்வங்களும் மானிடரும் மதிப்புப் பெறுகின்றனர். அப்படியிருக்க அதை உற்பத்தி செய்வதை நான் விட்டுக் கொடுத்து மரங்களுக்கு மேல் அசைந்தாட வருவேனா?' என்றது. மரங்கள் அத்தி மரத்திடம் 'வாரும் எங்களை அரசாளும் " என்றன. அத்தி மரம் அவற்றிடம் 'எனது இனிமையையும் நல்ல பழத்தையும் விட்டுவிட்டு மரங்கள் மீது அசைந்தாட வருவேனா?' என்றது. மரங்கள் திராட்சைக் கொடியிடம் 'வாரும், எங்களை அரசாளும்' என்றன. திராட்சைக் கொடி அவற்றிடம் 'தெய்வங்களையும் மனிதர்களையும் மகிழ்விக்கும் எனது திராட்சை இரசத்தை விட்டுவிட்டு மரங்கள் மேல் அசைந்தாட வருவேனா?' என்றது.
மரங்கள் எல்லாம் முட்புதரிடம் வாரும் எங்களை அரசாளும் " என்றன. முட்புதர் மரங்களிடம் 'உண்மையில் உங்கள் மீது ஆட்சி செய்ய நீங்கள் என்னைத் திருப்பொழிவு செய்தால், வாருங்கள் என் நிழலில் அடைக்கலம் புகுங்கள்; இல்லையேல் முட்புதரான என்னிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து லெபனோனின் கேதுரு மரங்களை அழித்துவிடும் " என்றது " (நீ.த. 9:8-15).

நல்ல மரங்கள் பல இருந்தும் மனமில்லாதிருந்ததால் முட்புதர் அரசனாக நிழல் கொடுக்கும் விந்தையான திருவிவிலியக் காட்சி! தலைவர்கள் நல்லவர்களாக இருப்பதில்லை. நல்லவர்கள் தலைவர்களாக விரும்புவதில்லை என்பது தானே இன்றைய எதார்த்தம்!

கிறிஸ்தவர்கள் நமக்கு யார் தலைவன்? கிறிஸ்தவன் என்பவன் யார்? இயேசுவை ஆண்டவராக, மீட்பராக, அரசராக ஏற்றுக் கொண்டவனே! திருவழிபாட்டு ஆண்டு முழுதும் நடைபெறும் வழிபாடு எல்லாம் உலகம் இயேசுவை அரசராக ஏற்றுக் கொள்ள நம்மைத் தகுதிப்படுத்தும் முயற்சியே! அதனால்தான் திருவழிபாட்டு ஆண்டின் சிகர விழாவாக, நிறைவு விழாவாக இன்று கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய நற்செய்திக்கு வருவோம். லூக். 23:35-43 இங்கே இயேசு அரசர் என்பது மூன்று வெவ்வேறு நபர்களால் மூன்று வித உணர்வுகளுடன் வெளிப்படுகிறது.

1. "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் " INRI (லூக். 23:18, அயா19:19). இது பிலாத்து சிலுவையின் மீது எழுதி வைத்த குற்ற அறிக்கை. "அது எபிரேயம், லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது " என்று யோவான் (19:20) பதிவு செய்கிறார். இதில் ஒரு பகுதி அதாவது அரசன் என்பது சரி. இயேசு உண்மையில் அரசர்தான். அரச குலத்தில் தோன்றியவர். மன்னன் தாவீதின் வழிவந்தவர். யாக்கோபின் குலத்தின் மீது என்றென்றும் அரசாள்பவர் (லூக்.1:32)

ஆனால் அவர் யூதர்களின் அரசர் மட்டுமா? நாசரேத்து இயேசு உலகனைத்திற்கும் அரசர் அன்றோ! "கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்" (மத். 8:11). யார் வேண்டுமானாலும் இயேசு அரசின உறுப்பினர் ஆகலாம். தேவை நம்பிக்கை மட்டுமே!

2. "நீ யூதர்களின் அரசனானால் உன்னையே காப்பாற்றிக் கொள்" (லூக். 23:37). இது படைவீரர்களின் நையாண்டி. இயேசுவின் இறையாட்சி வித்தியாசமானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. மரபுப் புரிதல் மட்டுமே இருந்தது. சாகும்போதும் சவாலைச் சந்தித்தவர் இயேசு. "நீ யூதர்களின் அரசனானால் உன்னையே காப்பாற்றிக் கொள் ". தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவா இயேசு சிலுவையில் அரியணை ஏறினார். நம்மைக் காக்கவன்றோ!

3. "இயேசுவே நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவில் கொள்ளும் " (லூக். 23:42). இறையாட்சியின் முக்கிய அம்சம் இரக்கமும் மன்னிப்பும். அதை நிறைவாக அள்ளிப் பருகினான் நல்ல கள்ளன். அதற்கு அவன் பெற்ற வெகுமதி: "இன்றே நீர் என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்" (லூக். 23:43)

எப்படி நல்ல கள்ளன் இயேசு அரசர் என்பதைத் தெரிந்து கொண்டான்? ஒருவேளை பிலாத்துவின் குற்ற அறிக்கையைப் படித்தா? அல்லது "தந்தையே இவர்களை மன்னியும் " என்று தன்னைச் சாவுக்கு உட்படுத்தியவர்களுக்காக மன்றாடிய தெய்வத்தன்மையின் தூண்டுதலா? ஒன்று மட்டும் உண்மை. இயேசு அரசர் என்பதை உணர்ந்தான். அவர் இறந்தாலும் உயிரோடு வருவார் என்று நம்பினான். மனந்திரும்பினால் தனக்கும் அவரது அரசில் இடமுண்டு என்பதை உணர்ந்திருந்தான்.

இவனைப் போல மனந்திரும்பிய ஒவ்வொருவரையும் கடவுள் "இருளின் அதிகாரத்திலிருந்து விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்கு உட்படுத்தினார்" (கொலோ. 1:13). "நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றி பெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்" (தி.வெ. 3:21). இது இயேசுவின் வாக்குறுதி.

இறையாட்சி பற்றி இரு முரண்பட்ட கருத்துக்கள் அன்றும் உண்டு. இன்றும் உண்டு. அதனைக் கல்வாரிக் கள்வர்கள் எப்படி வெளிப்படுத்துகின்றனர்! அது இவ்வுலகைச் சார்ந்தது என்பது இடதுபக்கத்துக் கள்ளனின் பழிப்புரை "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று" (லூக். 23:39). அது மறு உலக நோக்குடையது என்பது வலது பக்கத்துக் கள்ளனின் பதிலுரை "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற் கொள்ளும்' (லூக். 23:42).

"எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றதல்ல " என்பதன் பொருள் என்ன? இயேசுவின் ஆட்சி இவ்வுலகில் இருந்தாலும். இவ்வுலக விழுமியங்களை, அளவுகோல்களை, எதிர்பார்ப்புக்களை அது ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக எதிர்க்கிறது. உலக அளவீட்டின்படி கிறிஸ்து அரசர் இல்லை. அன்பே அவரது ஆயுதம். பணிவிடையே அவரது கேடயம். தியாகமே அவரது கொள்கை. மக்களின் மனங்கள்தாம் அவரது கோட்டை. அரியணை!

கிறிஸ்து அரசரின் உடனிருப்பை இருவிதங்களில் உணரலாம்.
1. இயேசுவை நம் இல்லங்களில் வரவேற்கலாம் அரியணை ஏற்றலாம் - இதயங்களில் வரவேற்காமல், அரியணை ஏற்றாமல். லூக். 7:36-50. அதற்கு எடுத்துக்காட்டு, பரிசேயரான சீமோன் இயேசுவை அழைத்திருந்தான். விருந்தாளிக்குரிய வழக்கமான மரியாதை எதுவும் செய்யவில்லை. மாறாக குற்றம் கண்டுபிடிப்பதே அவனது நோக்கம். தன் இல்லத்தில் இடம் கொடுத்தானே தவிர தனது இதயத்தில் அல்ல. ஆனால் அங்கு வந்த பெண்ணோ தன் இல்லத்தில் அல்ல, இதயத்தில் இயேசுவை வரவேற்றாள். விளைவு? இயேசுவின் பாராட்டும் பாவ மன்னிப்பும் பெற்றாள்.

நாமும்கூட நம்மிலோ நம் நடத்தையிலோ எவ்விதத் தாக்கமும் ஏற்படாத வகையில் கிறிஸ்து அரசரின் திருஉருவத்தை நமது இல்லத்தில் வைத்துப் பெருமைப்படலாம். அதனால் என்ன பயன்?

2. இயேசுவை இல்லங்களில் மட்டுமல்ல நம் இதயங்களிலும் வரவேற்கலாம். யோ. 11:20-27 அதற்கு எடுத்துக்காட்டு. இயேசுவின் பெத்தானியா நண்பர்கள் - மரியா, மார்த்தா, இலாசர் இயேசுவை மீட்பராக அரசராக ஏற்றுக் கொண்டவர்கள். "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் எங்கள் சகோதரர் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதையெல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எங்களுக்குத் தெரியும் " இந்த வார்த்தைகள் அவர்களது நம்பிக்கையின் ஆழத்தைக் காட்டவில்லையா? அந்த நம்பிக்கைக்குப் பரிசு: இறந்த லாசர் உயிர்பெற்று வெளியே வந்தார்.

நம் இதயங்களும் இயேசு அரசருக்குச் சொந்தமாகட்டும்! கிறிஸ்து நம் உள்ளங்களில் குடிகொள்ளும்போது, உள்ளம் என்ற கோட்டையிலிருந்து பறக்கும் கொடியே கிறிஸ்தவ மகிழ்ச்சி. எவனிடத்தில் கிறிஸ்து குடி கொண்டுள்ளாரோ, அவனிடத்தில் இறையரசு வித்திடப்பட்டுள்ளது.

இறைமகன் இயேசு தன்னையே தாழ்த்தி நம்மோடு ஒன்றானதைப் போல நாமும் நம் சகோதர சகோதரிகளோடு அன்பில், ஒற்றுமையில், உண்மையில் ஒன்றாகும்போதுதான் நாம் கிறிஸ்துவை அரசராக ஏற்றுள்ளோம் என்பதற்குச் சான்று பகர முடியும்.

 
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி

அறையுண்ட நம் அரசர்

ஒவ்வொரு வழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறன்று அனைத்துலகின் அரசரான கிறிஸ்துவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். கிறிஸ்துவை அரசராகக் கொண்டாடும்போது, நமக்குள் ஒரு சங்கடம் எழ வாய்ப்புண்டு. அதை முதலில் சிந்திப்போம். ஆயன், மீட்பர், போதகர், செம்மறி, வழி, ஒளி, வாழ்வு என்ற பல கோணங்களில் கிறிஸ்துவை எண்ணிப்பார்க்கும்போது, மனநிறைவு பெறுகிறோம். ஆனால், கிறிஸ்துவை அரசராக எண்ணும்போது, மனதில் சங்கடங்கள் உருவாகின்றன. ஏன் இந்த சங்கடம் என்று சிந்திக்கும்போது, ஓர் உண்மை புலப்படுகிறது.

சங்கடம், "கிறிஸ்து " என்ற வார்த்தையில் அல்ல, "அரசர் " என்ற வார்த்தையில்தான்.

அரசர் என்றதும், நம் மனத்திரையில் தோன்றும் கற்பனைகள், இந்தச் சங்கடத்தின் முக்கியக் காரணம். அரசர் என்றால்?... ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ பராக்கிரம... என்ற அர்த்தமற்ற பல அடைமொழிகளைச் சுமந்துத் திரியும் உருவம்! பட்டாடையும், வைரமும் உடுத்தி, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்துவரும் கொழுத்து, பெருத்த உருவம்! ஆயிரமாயிரம் அப்பாவி மக்களைப் படிக்கற்களாக்கி, அரியணை ஏறும் அரக்க உருவம்! "அரசர் " என்றதும், குப்பையாய் வந்துசேரும் இந்தக் கற்பனை உருவங்களுக்கும், இயேசுவுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லையே. பிறகு, எப்படி இயேசுவை அரசர் என்று ஏற்றுக்கொள்வது? சங்கடத்தின் அடிப்படை, இதுதான்.

அரசர் என்ற சொல்லுக்கு நாம் தரும் வழக்கமான, ஆனால், தவறான இந்த இலக்கணத்தை வைத்துப் பார்த்தால், இயேசு நிச்சயம் ஓர் அரசர் அல்ல. ஆனால், மற்றொரு கோணத்தில், இயேசுவும் ஓர் அரசர், ஓர் அரசை நிறுவியவர்.

அவர் நிறுவிய அரசுக்கு நிலப்பரப்பு கிடையாது... அப்பாடா, பாதிப் பிரச்சனை இதிலேயேத் தீர்ந்துவிட்டது. நிலம் இல்லை என்றால், போர் இல்லை, போட்டிகள் இல்லை, அதைப் பாதுகாக்கக் கோட்டைகள் தேவையில்லை, படைபலம் தேவையில்லை... எதுவுமே தேவையில்லை.

வரலாற்றில் பதிவாகியுள்ள பல போர்களுக்கு அடிப்படை காரணம், தனிப்பட்ட அரசர்களின் அளவற்ற அதிகார வெறி. இந்த வெறியை நிலைநாட்ட அவர்கள் அடுத்த நாடுகளின்மீது மேற்கொண்ட படையெடுப்புகள், போர்களாக உருவாயின. அரசப் பரம்பரைகள் ஆண்ட வரலாறு முடிந்துவிட்டபோதிலும், இந்த அதிகார வெறியும், அடுத்த நாட்டின் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் வெறியும் இன்றும் ஒருசில தலைவர்களை ஆட்டிப்படைப்பதை நாம் காண்கிறோம். மதியிழந்த இரஷ்ய அரசுத்தலைவன் விளாடிமிர் புடின் (Vladimir Putin) உக்ரைன் நாட்டின் மீது தொடுத்துவரும் போரும், அதிகார வெறியால் ஆணவம் கொண்ட சீன அரசுத்தலைவன் ஷி சின்பிங் (Xi Jinping) இமயமலைப் பகுதிகளில் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புகள், தைவான் நாட்டின் மீது படையெடுக்க செய்துவரும் முயற்சிகள் ஆகியவை, நிலப்பரப்பின் மீது பேராசை கொள்ளும் தலைவர்களின் கேவலமான எடுத்துக்காட்டுகள்.

அத்துமீறிய தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட அரசர்கள் மேற்கொண்ட இராணுவ முயற்சிகள், முதல் உலகப் போராக உருவானதென்று நாம் அறிவோம். இந்த உலகப்போர், கிறிஸ்து அரசர் திருநாளை உருவாக்க ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. முதல் உலகப்போர் நிகழ்ந்த வேளையில், திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், அந்தப் போரை, "மதியற்றப் படுகொலை" (senseless massacre) என்றும், "கலாச்சாரம் மிக்க ஐரோப்பாவின் தற்கொலை" (the suicide of civilized Europe) என்றும் குறிப்பிட்டார்.

முதல் உலகப்போர் முடிவுற்று, நான்கு ஆண்டுகள் சென்று, 1922ம் ஆண்டு, திருஅவையின் தலைமைப்பணியை ஏற்ற திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், அரசர்கள், மற்றும், அரசுத்தலைவர்கள் கொண்டிருந்த அகந்தையும், பேராசையும் முதல் உலகப்போருக்கு முக்கியக் காரணங்களாய் இருந்தன என்பதை உணர்ந்திருந்தார். இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 1925ம் ஆண்டு, கிறிஸ்துவை, அனைத்துலகின் அரசரென அறிவித்தார். கிறிஸ்துவின் அரசத்தன்மையையும், அவர் நிறுவ வந்த அரசையும் கண்டு, மக்கள், குறிப்பாக, அரசுத்தலைவர்கள், பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென இத்திருநாள் ஏற்படுத்தப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும், கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கென திருஅவை தெரிவு செய்துள்ள நற்செய்தியை வாசிக்கும்போது, இவ்விழாவின் மையப் பொருளையும், "கிறிஸ்து அரசர் " என்ற பட்டத்தின் பொருளையும் கற்றுக்கொள்ள முடியும். கல்வாரியில் நிகழ்ந்த ஒரு காட்சி, இன்றைய நற்செய்தியில் (லூக்கா 23: 35-43) தரப்பட்டுள்ளது,. சென்ற ஆண்டு, இவ்விழாவுக்குத் தரப்பட்ட நற்செய்தி, பிலாத்து இயேசுவைச் சந்தித்தக் காட்சி. (யோவான் 18: 33-37) அடுத்த ஆண்டு இவ்விழாவுக்குத் தரப்பட்டுள்ள நற்செய்தி, இறுதித் தீர்வையன்று நடைபெறும் காட்சி. (மத்தேயு 25: 31-46) இம்மூன்று நற்செய்திகளையும் வாசிக்கும்போது, கிறிஸ்துவை அரசர் என்று அழைப்பதன் உட்பொருளை ஓரளவு உணர முடிகிறது.

இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, அவரை அரசராக எண்ணிப் பார்த்தவர்கள், அரசராக்க முயன்றவர்கள் ஒரு சிலர். நற்செய்தியில், இயேசுவை, அரசர் என்று கூறிய முதல் மனிதர்கள், கீழ்த்திசை ஞானிகள். இயேசு பிறந்ததும், அவரைக் காண நெடுந்தூரம் பயணம் செய்து வந்த ஞானிகள் செய்த ஒரே தவறு என்ன? அவர்கள் தேடி வந்த அரசர், உலக அரசரைப் போல் அரண்மனையில் இருப்பார் என்று தப்புக் கணக்கு போட்டனர். எனவே, ஏரோது அரசனின் அரண்மனைக்குச் சென்றனர். ஏரோதிடம், "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் " என்றார்கள். (மத்தேயு 2: 2) அந்த ஞானிகள், பிறந்திருக்கும் புதிய அரசரை, ஏரோது மன்னனின் அரண்மனையில் தேடிச்சென்றதும், அதுவரை அவர்களை வழிநடத்திய விண்மீன் மறைந்துபோனது. அவர்கள் தேடிய இடம் தவறானது என்பதை உணர்ந்த ஞானிகள், அரண்மனையைவிட்டு வெளியேறி, மீண்டும் அரசரைத் தேடி பயணம் மேற்கொண்டதும், அவர்களை அதுவரை வழிநடத்திய விண்மீன் மீண்டும் தோன்றி, அவர்களை வழிநடத்தியது (காண்க. மத்தேயு 2:9-10)

இரண்டாவது நிகழ்வு, யோவான் நற்செய்தி 6ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. இயேசு அப்பத்தைப் பலுகச்செய்து, மக்களின் பசியைத் தீர்த்தார். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார். (யோவான் 6 : 14-15)

மூன்றாவது நிகழ்வு, எருசலேம் வீதிகளில் நடந்தது. திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், 'ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!' என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். (யோவான் 12: 12-13) (மேலும் காண்க: லூக். 19: 38; மாற். 11: 9-10; மத். 21: 9)
வயிறார உண்டதால் மக்கள் நடுவே எழுந்த ஆர்வம், இயேசுவை அரசராக்கத் துடித்தது. தங்களை மீட்க ஒருவர் வரமாட்டாரா என்ற ஏக்கம், எருசலேம் வீதிகளில், ஆரவாரமாய், "ஓசன்னா " அறிக்கையாக மாறியது. ஆனால், இப்படி அந்தந்த நேரத்தின் தேவைக்கேற்ப மக்கள் கூட்டத்தில் தோன்றி மறையும் ஆர்வமோ, ஆரவாரமோ நிலைத்திருக்காது என்பது, தொடர்ந்த சில நாட்களிலேயே நிரூபணமானது. இயேசுவுக்கு அரச மரியாதை கொடுத்து வாழ்த்தியக் கூட்டம், அதே வீதிகளில், அவர் சிலுவை சுமந்து சென்றபோது, பயந்து ஒதுங்கியது, அல்லது, இயேசுவின் எதிரணியாகத் திரண்ட கூட்டத்தில் சேர்ந்துவிட்டது.

இயேசுவை அரசர் என்று கூறும் நான்காவது நிகழ்வு, பிலாத்துவின் அரண்மனையில் நடந்தது. இயேசுவை அரசர் என்று, பிறர் சொல்லக்கேட்டு பயம்கொண்ட பிலாத்து, இயேசுவிடமே, "நீர் அரசரா? " என்று கேட்டார். அந்தக் கேள்வியின் உண்மையான பதிலைக் கண்டுபிடிக்கவும் பிலாத்து பயந்தார். இந்த நிகழ்வை, சென்ற ஆண்டு, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, நற்செய்தியின் வழி சிந்தித்தோம். (யோவான் 18 : 37)

"அரசர் " என்று இயேசு அழைக்கப்பட்ட ஐந்தாவது நிகழ்வு, கல்வாரியில் நடந்தது. இது, இன்றைய நற்செய்தியாக நம்மை வந்தடைந்துள்ளது. இயேசுவை அரசராகப் பார்க்கமுடியாத உரோமைய வீரர்களின் ஏளனக் குரலும், இயேசுவை அரசர் என்று ஏற்றுக்கொண்ட குற்றவாளியின் ஏக்கக் குரலும் இன்றைய நற்செய்தியில் ஒலிக்கின்றன.

உரோமைய வீரர்கள், பல அரசர்களைச் சந்தித்தவர்கள். பல அரசர்களுக்குப் பணிவிடை செய்தவர்கள். அவர்களுக்குத் தெரிந்த அரசர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிலுவையில், குற்றவாளிபோல் தொங்கிக் கொண்டிருந்த இயேசு, ஒரு பரிதாபமான, போலி அரசனாகத் தெரிந்தார். அவர்களது ஏளனத்திற்குத் தூபம் போடும் வகையில், பிலாத்து, "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என்ற சொற்களை எழுதி வைத்தார். பிலாத்து இதை ஒரு குற்ற அறிக்கையாக எழுதி வைத்தார் என்று யோவான் நற்செய்தியில் வாசிக்கிறோம் (காண்க. யோவான் 19:19). இயேசுவிடம் குற்றம் ஒன்றும் காணவில்லை என்று கூறிய பிலாத்து, இயேசு தன்னையே அரசராக்கிக்கொள்ள முயற்சி செய்தார் என்று யூதமதத் தலைவர்கள் கூறியதும், அதை, இயேசு செய்த பெரும் குற்றமாக கருதினார். இதுபோல் தங்களையே அரசாக்கிக்கொள்ள முயற்சி செய்யும் ஏனைய யூதர்களுக்கு இயேசுவின் தண்டனை ஒரு பாடமாக அமையவேண்டும் என்ற எண்ணத்துடன் பிலாத்து, "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என்ற சொற்களை ஒரு குற்ற அறிக்கையாக இயேசுவின் சிலுவையில் அறையச் செய்தார். யூதர்களுக்கு பாடம் புகட்ட விரும்பி பிலாத்து செய்த இச்செயல், நம் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது. இயேசுவின் அரசத்தன்மையை, சிலுவையில் காணவேண்டும் என்ற பாடம் நம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடத்தை முதன் முதலில் பயின்றது, இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த ஒரு குற்றவாளி. கல்வாரி மலைமீது ஒலித்த ஏளனக் குரல்களுக்கு நேர்மாறாக, இயேசுவுடன் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் ஏக்கக் குரல், இயேசுவின் அரசத் தன்மையை வெளிப்படுத்துகிறது. "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும் ". (லூக்கா 23: 42) என்று, அந்தக் குற்றவாளியிடமிருந்து விண்ணப்பம் ஒன்று எழுகிறது. மனிதன் என்று கணிக்கமுடியாத அளவு காயப்பட்டு, ஒரு கந்தல் துணிபோல் சிலுவையில் மாட்டப்பட்டிருந்த அந்த உருவத்தில், ஓர் அரசரைக் கண்டார், அந்தக் குற்றவாளி. அவர் இயேசுவிடம் கண்ட அரசத்தன்மைதான் என்ன?

உலக மன்னர்களில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டபோது, அல்லது அவர்கள் தூக்கு மேடைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர்கள் காட்டிய கண்ணியம், அமைதி, ஆகியவை, எதிரிகளையும் அவர்கள் மீது மரியாதை காட்டவைத்தது என்று, வரலாறு சொல்கிறது. அந்த கண்ணியத்தை, அந்த அமைதியை, இயேசுவிடம் கண்டார், இந்தக் குற்றவாளி. அவர் கண்களில், இயேசு அறையுண்டிருந்த சிலுவை, ஒரு சிம்மாசனமாய்த் தெரிந்தது. அவர் தலையில் சூட்டப்பட்ட முள்முடி, மணி மகுடமாய்த் தெரிந்தது. எனவே, அந்த அரசரிடம், தன் விண்ணப்பத்தை வைத்தார், அந்தக் குற்றவாளி.

நாம் சிந்தித்த முதல் நான்கு நிகழ்வுகளில், இயேசு தவறான முறையில் "அரசன்" என்று கருதப்பட்டார். அவர்களில் யாருக்கும் இயேசு சரியான பதில் கூட சொல்லவில்லை. தன்னை வாழ்வில் அரசரென அழைத்த, அல்லது அரசராக்க முயன்ற பலருக்கும் பதில் தராத இயேசு, இந்தக் குற்றவாளிக்குப் பதில் தருகிறார். தனது உண்மையான அரசை, தனது உண்மையான அரசத்தன்மையை இந்தக் குற்றவாளி கண்டுகொண்டார் என்பதை இயேசு உணர்ந்ததால், அவருக்கு மட்டும் சரியான பதிலைத் தருகிறார். "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் " (லூக்கா 23: 43) என்று உறுதியளிக்கிறார், இயேசு.

1927ம் ஆண்டு வெளியான ஒரு புகழ்பெற்ற திரைப்படம், "The King of Kings". இந்த மௌனப்படம், இயேசு இவ்வுலகில் வாழ்ந்த இறுதி வாரங்களைத் திரைக்குக் கொணர்ந்தது. இத்திரைப்படம், பல கோடி மக்களால் பாராட்டு பெற்றாலும், இதன் இயக்குனர், Cecil B. DeMille அவர்கள், தனக்கு கடிதமாக வந்து சேர்ந்த ஒரே ஒரு பாராட்டு மட்டுமே தன் உள்ளத்தைத் தொட்டதென்று கூறினார். அந்த மடலை எழுதியவர், இறக்கும் நிலையில் இருந்த ஒரு பெண்.

ஒரு சில நாட்களே வாழப்போகிறோம் என்பதை உணர்ந்த அந்தப் பெண், சக்கர நாற்காலியில் அமர்ந்தவண்ணம் இத்திரைப்படத்தைப் பார்த்தார். பின்னர், அவர் இயக்குனர் DeMille அவர்களுக்கு ஒரு மடல் அனுப்பினார். "The King of Kings திரைப்படத்திற்காக உங்களுக்கு மிக்க நன்றி. சாகப்போவதை எண்ணி இதுவரை பயந்த என் மனதில், இப்போது, ஆவலுடன் மறுவாழ்வை எதிர்பார்க்கும் மகிழ்வு வந்துள்ளது" என்று அப்பெண்மணி தன் மடலில் எழுதியிருந்தார். அந்தப் பெண் உணர்ந்த எதிர்பார்ப்பு, கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் மனதிலும் எழுந்தது.

சிலுவை மரணங்கள் கொடூரமானவை. உரோமையர்கள் கண்டு பிடித்த சித்தரவதைகளின் கொடுமுடியாக, சிகரமாக விளங்கியது, சிலுவை மரணம். சிலுவையில் அறையப்பட்டவர்கள் எளிதில் சாவதில்லை. அணு அணுவாக சித்ரவதை பட்டு சாவார்கள். கைகளில் அறையப்பட்ட இரு ஆணிகளால் உடல் தாங்கப்பட்டிருந்ததால், உடல் தொங்கும். அந்த நிலையில் மூச்சுவிட முடியாமல் திணறுவார்கள். மூச்சு விடுவதற்கு உடல் பாரத்தை மேலே கொண்டுவர வேண்டியிருக்கும். அப்படி கொண்டு வருவதற்கு, ஆணிகளால் அறையப்பட்ட கைகளையே பயன்படுத்த வேண்டியிருக்கும். இப்படி, விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் அவர்கள் மரண வேதனை அனுபவித்தார்கள்.

இந்த வேதனையின் உச்சியில், சிலுவையில் அறையப்பட்டவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம், வெறுப்புடன் வெளி வரும். தங்களை, பிறரை, தங்கள் கடவுள்களைச் சபித்துக் கொட்டும் வார்த்தைகளே அங்கு அதிகம் ஒலிக்கும். அப்படிப்பட்ட ஒரு வேதனையின் கொடுமுடியிலும், தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண போராட்டம் நிகழ்த்தி வந்த இயேசு, "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் " என்று வழங்கிய வாக்குறுதி, அந்தக் குற்றவாளிக்கு மட்டுமல்ல, கடந்த 20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக, வாழ்வில் பிரச்சனைகளையும், துயரங்களையும் சந்தித்துவரும் கோடான கோடி மனிதர்களுக்கு, நம்பிக்கை வழங்கியுள்ளது. அந்த நம்பிக்கையை, நாம், கிறிஸ்து அரசர் திருவிழாவில் கொண்டாடுகிறோம்.

இறுதியாக ஓர் எண்ணம். ---- விழா, கத்தோலிக்கத் திருஅவையில் இளையோர் உலக நாளாகக் கொண்டாடப்படுகிறது. சிலுவை என்ற சிம்மாசனத்தில் அறையப்பட்டுள்ள உண்மையான அரசரும், தலைவருமான இயேசு, உண்மையான தலைமைத்துவம் எவ்வாறு அமையவேண்டும் என்பதை இளையோருக்கு நன்கு உணர்த்தவேண்டுமென மன்றாடுவோம். அத்தகைய தலைமைப் பொறுப்புக்களை ஏற்பதற்கு இளையோர் வாய்ப்பு பெறும்போது, தன் இறுதித் துளி இரத்தம் வரை சிந்திய இயேசுவைப்போல, தங்களையே மக்களுக்காக தியாகம் செய்யும் தெளிவையும், உறுதியையும் அவர்கள் பெறவேண்டும் என்றும் மன்றாடுவோம்.
 
இரக்கத்தின் அரியனையை அணுகிவர...

சென்னை, லொயோலா கல்லூரி வளாகத்தின் மையத்தில் அமைந்துள்ளது, கிறிஸ்து அரசர் ஆலயம். அந்த ஆலயத்தில், பீடத்திற்கு மேல், கிறிஸ்து அரசரின் திருஉருவம், தன் இரு கரங்களையும் விரித்தபடியே நிற்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. பீடத்தின் இடது பக்கம், சிலுவையில் இரு கரங்களும் அறையப்பட்டுத் தொங்கும் இயேசுவின் உருவமும் வைக்கப்பட்டுள்ளது. சிலுவையில் தொங்கும் இயேசுவின் உருவம், தரைமட்டத்தில் வைக்கப்பட்டிருப்பதால், பலர் அந்த உருவத்தின் தங்களைத் தொட்டபடி, கண்களை மூடிச் செபிப்பதைப் பார்த்திருக்கிறேன். கிறிஸ்து அரசரின் உருவம், எளிதில் எட்டமுடியாத உயரத்தில் இருப்பதும், சிலுவையில் தொங்கும் கிறிஸ்துவின் உருவம், மக்களின் கரங்கள் பட்டுத் தேய்ந்திருப்பதும், நமக்குச் சொல்லித்தரும் பாடங்களைக் கற்றுக்கொள்ள, இஞ்ஞாயிறு கொண்டாடப்படும் கிறிஸ்து அரசர் திருவிழா நம்மை அழைக்கிறது. கல்லூரியில் உள்ள அந்தக் கோவிலுக்கு இயேசுவை அழைத்துச் சென்று, கிறிஸ்து அரசர் உருவம், சிலுவையில் தொங்கும் உருவம் இரண்டையும் காட்டி, அவ்விரு உருவங்களில் அவருக்கு மிகவும் பிடித்த உருவம், அல்லது அவரது அரசத் தன்மையைக் காட்டும் உருவம் எது என்று கேட்டால், நம் கேள்விக்குரிய பதில், இன்றைய நற்செய்தியில் உள்ளது என்று இயேசு கூறுவார்.

இன்றைய நற்செய்தி மட்டுமல்ல, ஒவ்வோர் ஆண்டும், கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கென திருஅவை தெரிவு செய்துள்ள நற்செய்தியை வாசிக்கும்போது, இவ்விழாவின் மையப் பொருளை, அறிந்துகொள்ள முடியும். இன்றைய நற்செய்தியில் (லூக்கா 23: 35-43) தரப்பட்டுள்ளது, கல்வாரியில் நிகழ்ந்த காட்சி. சென்ற ஆண்டு, இவ்விழாவுக்குத் தரப்பட்ட நற்செய்தி, பிலாத்து இயேசுவைச் சந்தித்தக் காட்சி. (யோவான் 18: 33-37) அடுத்த ஆண்டு இவ்விழாவுக்குத் தரப்பட்டுள்ள நற்செய்தி, இறுதித் தீர்வையன்று நடைபெறும் காட்சி. (மத்தேயு 25: 31-46) இம்மூன்று நற்செய்திகளையும் வாசிக்கும்போது, கிறிஸ்துவை அரசர் என்று அழைப்பதன் உட்பொருளை ஓரளவு உணர முடிகிறது.

இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, அவரை அரசராக எண்ணிப் பார்த்தவர்கள், அரசராக்க முயன்றவர்கள் ஒரு சிலர். நற்செய்தியில், இயேசுவை, அரசர் என்று கூறிய முதல் மனிதர்கள், கீழ்த்திசை ஞானிகள். இயேசு பிறந்ததும், அவரைக் காண நெடுந்தூரம் பயணம் செய்து வந்த ஞானிகள் செய்த ஒரே தவறு என்ன? அவர்கள் தேடி வந்த அரசர், உலக அரசரைப் போல் அரண்மனையில் இருப்பார் என்று தப்புக் கணக்கு போட்டனர். எனவே, ஏரோது அரசனின் அரண்மனைக்குச் சென்றனர். ஏரோதிடம், யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள். (மத்தேயு 2: 2) கள்ளம் கபடின்றி அவர்கள் கேட்ட அந்தக் கேள்வி, பல நூறு கள்ளம் கபடற்ற குழந்தைகளின் உயிரைப் பலி வாங்க, காரணமானது.

இரண்டாவது நிகழ்வு, யோவான் நற்செய்தி 6ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. இயேசு அப்பத்தைப் பலுகச்செய்து, மக்களின் பசியைத் தீர்த்தார். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார். (யோவான் 6 : 14-15)

மூன்றாவது நிகழ்வு, எருசலேம் வீதிகளில் நடந்தது. திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், 'ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!' என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். (யோவான் 12: 12-13) (மேலும் காண்க: லூக். 19: 38; மாற். 11: 9-10; மத். 21: 9)

வயிறார உண்டதால் மக்கள் நடுவே எழுந்த ஆர்வம், இயேசுவை அரசராக்கத் துடித்தது. தங்களை மீட்க ஒருவர் வரமாட்டாரா என்ற ஏக்கம், எருசலேம் வீதிகளில், ஆரவாரமாய், ஓசன்னா அறிக்கையாக மாறியது. ஆனால், இப்படி அந்தந்த நேரத்தின் தேவைக்கேற்ப தோன்றி மறையும் ஆர்வமோ, ஆரவாரமோ நிலைத்திருக்காது என்பது, தொடர்ந்த சில நாட்களிலேயே நிரூபணமானது. இயேசுவுக்கு அரச மரியாதை கொடுத்து வாழ்த்தியக் கூட்டம், அதே வீதிகளில், அவர் சிலுவை சுமந்து சென்றபோது, பயந்து ஒதுங்கியது, அல்லது, இயேசுவின் எதிரணியாகத் திரண்ட கூட்டத்தில் சேர்ந்துவிட்டது.

இயேசுவை அரசர் என்று கூறும் நான்காவது நிகழ்வு, பிலாத்துவின் அரண்மனையில் நடந்தது. இயேசுவை அரசர் என்று, பிறர் சொல்லக்கேட்டு பயம்கொண்ட பிலாத்து, இயேசுவிடமே, நீர் அரசரா? என்று கேட்டார். அந்தக் கேள்வியின் உண்மையான பதிலைக் கண்டுபிடிக்கவும் பிலாத்து பயந்தார். இந்த நிகழ்வை, சென்ற ஆண்டு, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, நற்செய்தியின் வழி சிந்தித்தோம். (யோவான் 18 : 37)

அரசர் என்று இயேசு அழைக்கப்பட்ட ஐந்தாவது நிகழ்வு, கல்வாரியில் நடந்தது. இது, இன்றைய நற்செய்தியாக நம்மை வந்தடைந்துள்ளது. இயேசுவை அரசராகப் பார்க்கமுடியாத உரோமைய வீரர்களின் ஏளனக் குரலும், இயேசுவை அரசர் என்று ஏற்றுக்கொண்ட குற்றவாளியின் ஏக்கக் குரலும் இன்றைய நற்செய்தியில் ஒலிக்கின்றன. உரோமைய வீரர்கள், பல அரசர்களைச் சந்தித்தவர்கள். பல அரசர்களுக்குப் பணிவிடை செய்தவர்கள். அவர்களுக்குத் தெரிந்த அரசர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிலுவையில், குற்றவாளிபோல் தொங்கிக் கொண்டிருந்த இயேசு, ஒரு பரிதாபமான, போலி அரசனாகத் தெரிந்தார். அவர்களது ஏளனத்திற்குத் தூபம் போடும் வகையில், அந்தச் சிலுவை மீது "இவன் யூதரின் அரசன்" என்று ஏக வசனத்தில் எழுதி, வைக்கப்பட்டிருந்தது.

இந்த ஏளனக் குரல்களுக்கு நேர்மாறாக, இயேசுவுடன் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் ஏக்கக் குரல், இயேசுவின் அரசத் தன்மையை வெளிப்படுத்துகிறது. இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும். (லூக்கா 23: 42) என்று, அந்தக் குற்றவாளியிடமிருந்து விண்ணப்பம் ஒன்று எழுகிறது. மனிதன் என்று கணிக்கமுடியாத அளவு காயப்பட்டு, ஒரு கந்தல் துணிபோல் சிலுவையில் மாட்டப்பட்டிருந்த அந்த உருவத்தில், ஓர் அரசரைக் கண்டார், அந்தக் குற்றவாளி. அவர் இயேசுவிடம் கண்ட அரசத்தன்மைதான் என்ன?

உலக மன்னர்களில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டபோது, அல்லது அவர்கள் தூக்கு மேடைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர்கள் காட்டிய கண்ணியம், அமைதி, ஆகியவை, எதிரிகளையும் அவர்கள்மீது மரியாதை காட்டவைத்தது என்று, வரலாறு சொல்கிறது. அந்தக் கண்ணியத்தை, அந்த அமைதியை, இயேசுவிடம் கண்டார், இந்தக் குற்றவாளி. அவர் கண்களில், இயேசு, அறையுண்டிருந்த சிலுவை, ஒரு சிம்மாசனமாய்த் தெரிந்தது. அவர் தலையில் சூட்டப்பட்ட முள்முடி, மணி மகுடமாய்த் தெரிந்தது. எனவே, அந்த அரசரிடம், தன் விண்ணப்பத்தை வைத்தார், அந்தக் குற்றவாளி.

நாம் சிந்தித்த முதல் நான்கு நிகழ்வுகளில், இயேசு தவறான முறையில் "அரசன்" என்று கருதப்பட்டார். அவர்களில் யாருக்கும் இயேசு சரியான பதில் கூடச் சொல்லவில்லை. தன்னை வாழ்வில் அரசரென அழைத்த, அல்லது அரசராக்க முயன்ற பலருக்கும் பதில் தராத இயேசு, இந்தக் குற்றவாளிக்குப் பதில் தருகிறார். தனது உண்மையான அரசை, தனது உண்மையான அரசத் தன்மையை இந்தக் குற்றவாளி கண்டுகொண்டார் என்பதை இயேசு உணர்ந்ததால், அவருக்கு மட்டும் சரியான பதிலைத் தருகிறார். நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் (லூக்கா 23: 43) என்று உறுதியளிக்கிறார், இயேசு.
 
 மறையுரை முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌ பெங்களூர்
கிறிஸ்து அரசர் பெருவிழா
முதல் வாசகப் பின்னணி (2சாமு. 5:1-3)

சவுல் இறந்தப் பின்னர் தாவீது யூதாவின் அரசராக்கப்படு- கின்றார். சவுலின் மகன் இஸ்பொஸேத்தை இஸ்ராயேலின் அரசராக ஏற்படுத்துகின்றார். சவுலின் மகனிடம் இருந்த இருபடைத்தலைவர் களும் சேர்ந்து இஸ்போஸேத்தைக் கொன்று விடுகின்றனர். இந்த சூழ்நிலையில் இஸ்ராயேலின் அனைத்து குலங்களும் தாவீதிடம் சென்று நீயே எங்களுக்கும் ஆயனாக இருப்பாய்" என்று வேண்டு- கின்றனர். தொடர்ந்து யூதா, இஸ்ரயேல் ஆகிய இரண்டிற்கும் அரசனாக இருந்தாலும், தொடர்ந்து இரண்டும் தனித்தனியாகத்தான் இருந்தன. நாங்கள் உமது எலும்பும் சதையுமானவர்கள் என்பது இஸ்ராயேல் மக்களின் நெருக்கத்தை வெளிப்படுத்தவே பயன் படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் வாசகப் பின்னணி (கொலோ. 1:11-20)

கொலோசையில் இருந்தப் போலி போதகர்களின் தவறான கொள்கைகளைக் கண்டிப்பதற்காகப் புனித பவுல் கிறிஸ்துவைக் கடவுளது சாயல் என்கிறார். கிறிஸ்துவே அனைத்தையும் நிலைக்க செய்பவர், திருச்சபையின் தலைவர். அனைத்தையும் படைத்தவர். மேலும் கடவுளோடு நம்மை ஒப்புரவாக்குபவர் என்று கிறிஸ்துவின் மேன்மையை வெளிப்படுத்துவதே இப்பகுதியின் முக்கிய நோக்கமாக அமைகின்றது.
நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 23:35-43)

நான்கு நற்செய்தியாளர்களும், 'யூதரின் அரசர்' என்ற வாசகம் இயேசு தொங்கிய சிலுவையில் இருந்தது என்று வெளிப்படுத்து. கின்றனர். லூக்கா 'யூதரின் அரசன்' என்ற குற்றச்சாட்டுதான் அனைவரும் இயேசுவின் மேல் சுமத்தினார்கள். இந்தக் குற்றச்- சாட்டுக்குச் சாட்சியம் முக்கியமில்லை! "பிறரைக் காப்பாற்றினாயே, முடிந்தால் இப்போது நீ உன்னையே காப்பாற்றிக் கொள்" என்று பந்தயம் விடுத்தார்கள். ஏனென்றால் அவர்கள் பிறரை இயேசு காப்பாற்றியதை ஏற்றுக்கொண்டார்கள்! இரண்டு யூதக் கள்வர்கள் இயேசுவிடம் பேசும்பொழுது, இருவருமே இயேசுவை மெசியா என்று அறிந்து தெரிந்து கொண்டுதான் பேசுகின்றனர். நல்ல கள்வர் இயேசு உத்தமர் என்று கூறுகின்றார், கெட்ட கள்வன், நீர் மெசியா என்பதை அறிந்துகொண்டேன். ஆனால் நீர் ஏன் இன்னும் உன்னையும், என்னையும் இத்துன்பத்திலிருந்து விடுவிக்க வில்லை என்று கேட்பதாக விவிலிய அறிஞர் விளக்குகின்றனர். லூக்காவின் நற்செய்தியில் இயேசு விடுதலை கொடுப்பாராக உருவகப்படுத்த- படுகின்றார்!
மறையுரை
ஏழைகளின் அரசர்

"நாயகனைச் சிலுவையிலே சாய்த்தார்கள். ஆணிகளை நன்றாய்த் தட்டிக் காயங்கள் யாவினுக்கும் அவ்வாணிகளைக் கொடுத்தார்கள். கடைசியாக வாய்த்திருந்தச் சிலுவையினைத் தொப்பென்று பெரும்பள்ளம்தனில் வைத்தார்கள்.

பாய்ந்திருக்கும் ஆணிகள் பொன்மேனி துடிதுடித்தும் பதைத்தத் தம்மா! சிலுவையிலே யூதர்களோ சின்னத்தை அவர் தலைமேல் செதுக்கி வைத்தார்! அலகையவர் எழுதியது குற்றச்சாட்டானாலும் அகில உண்மை! நலமுடைய இஸ்ராயேலின் நசரேனாம் இயேசு இவர் யூத மன்னன்' கலகலவெனச் சிரித்தார்கள், எழுதியது வரலாறு கதையே அல்ல!" கவிக்கு அரசராகிப்போன கண்ணதாசனின் இந்த வரிகளை உற்று நோக்கினோமென்றால். "மனிதகுல வரலாற்றில் அரசருக்- கென்றே ஒரு தனி வரலாறு இருந்ததாகவும், அந்த வரலாற்றுக்- கெல்லாம் ஒரு தனிப்பெரும் வரலாறாக இயேசு என்ற அரசர் வாழ்ந்துக் காட்டினார்" என்றும் நாம் புரிந்துக் கொள்ள முடிகின்றது. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமென்றால் நங்கையர்களோடு கொஞ்சிக் குலாவி, வீரர்கள் நாலாப்பக்கமும் புடைசூழ வலம் வந்து, பட்டுப் பீதாம்பரங்களில் படுத்துறங்கி, இட்ட கட்டளைக்கு எட்டுபேர் கைகட்டி நின்று, எதிரியின் வீழ்ச்சியில் எகத்தாளச் சிரிப்பு அரண்மனையே அடைக்கலமாக வாழந்து வந்த அரசர்கள் ஏராளம்! ஏராளம்! "இந்த உலகம் முழுவதையும் நான் ஒருவனே ஆள வேண்டும்" எனக் கொக்கரித்தான் மாமன்னன் அலெக்சாண்டர். "ஐரோப்பாவின் பனிப்பிரதேசங்கள் அத்தனையும் என் பவளப் பிரதேசங்கள்" முழக்கமிட்டான் மாமன்னர் நெப்போலியன். நாடு தீப்பற்றி எரியும்பொழுது கையில் மது கோப்பையுடன் குலுங்கி, குலுங்கி சிரித்தான் மன்னன் "நீரோ".

இவ்வாறு அரசர்கள் என்றாலே ஆதிக்கம் செலுத்துபவர்கள், அதிகாரப் பட்சிகள், அத்துமீறுகிறவர்கள், அடக்கி ஆளுபவர்கள், திமிர்வாதக்காரர்கள் என்று அறிந்திருக்கும் நம்மை, ஆண்டின் இறுதி ஞாயிறான 34-வது வாரம் ஒரு அரசருக்கு விழா எடுக்க அழைப்பு விடுக்கின்றது.

உலக வரலாற்றினிலே இஸ்ராயேல் மக்களது மீட்பு வரலாற்றைக் கூர்ந்து நோக்கினோமென்றால் மிகவும் வித்தியாசமான, விசித்திரமானதொரு அரச குல வரலாற்றைக் காண முடிகின்றது. ஏனென்றால் ஆண்டவராகியக் கடவுளது விருப்பத்திற்கு எதிராக இஸ்ராயேலின் அரசாட்சி ஆரம்பமாகிறது. இருப்பினும் இந்த மக்களது பிடிவாதத்தால்' ஆண்டவர் அரசர்களை நியமிக்கிறார். தாவீது, எசேக்கியா போன்ற ஒருசில அரசர்களைத் தவிர, சவுல் தொடங்கிச் செதேக்கியா வரை எல்லா அரசர்களுமே சிலை வழிபாடு, வேற்று தெய்வ வழிபாடு, அதிகார போதை, ஆணவ செருக்கு, அடிதடி, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று வாழ்ந்து முடித்தவர்கள்.

மன்னருக்கெல்லாம் மன்னராக வருணிக்கப்படும் ஏசு கிறிஸ்துவை இந்தப் பாரம் பரியத்தில் பிறந்தவராகவும், இத்தகைய அரசர்களின் வரிசையில் 'பத்தோடு ஒன்று, பதினொன்றாகவும்' பார்ப்பது எந்த அளவுக்கு நியாயமானது? மக்கள் நினைத்தார்கள், இன்றைய முதல்வாசகம் சொல்லுகிறபடி கோட்டைகள் எழுப்பி, வெற்றிமேல் வெற்றி சூடி, 40 ஆண்டுகள் ஈடுஇணையில்லா ஆட்சி புரிந்த தாவீதைப் போல ஒரு மறப்போர் மன்னன் தோன்றுவான் என்று".

மாடமாளிகைப் புகுந்து ஏரோதுவைப் போன்ற ஒரு அரசனைத் தேடினார்கள் ஞானிகள். ஆனால் அனைத்து எதிர்ப்பார்ப்புகளையும் முறியடித்து ஏழ்மையின் உருவமாய் மாட்டுதொழுவத்தில் பிறந்து ஏழைகளின் அரசனார். அன்று பிலாத்து, நீர் யூதரின் அரசனா?" என்று கேட்டபொழுது இயேசு அவரிடம், ''அரசன் என்பது நீர் சொல்லும் வார்த்தை. உண்மையை எடுத்துரைப்பதே என் பணி" என்று கூறினார்.

அந்த உண்மைதான் என்ன? "சுமைச் சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28). நான் உங்களுக்கு நம்பிக்கைக் கொடுப்பேன். என்னை விசுவசிப்பவர்களை நான் மீட்டெடுப்பேன். சாரமற்றவர்களைச் சாரமேற்றுவேன். யூதச் சமுதாயத்தில் உயர் மட்டத்தினருக்கும் அடித்தள மக்களுக்குமிடையே மிகப்பெரிய பொருளாதார இடைவெளி இருந்தது. உயர் குடி மக்களின் கொடூரமானச் சுரண்டல்களுக்கு மத்தியில் ஏழைகள் வாழ்ந்தார்கள்: 'தாங்கள் கடவுளது சாபத்திற்கு ஆளானாவர்கள்' என்று! தொழுநோயாளிகள் ஊருக்கு வெளியே துரத்தப்பட்டார்கள், அனாதைகள், கைம்பெண்கள், முடக்குவாத- முற்றோர் போன்ற எல்லாரும் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடி ஓடாய்ப்போனார்கள். இவர்களிடம்தான் இயேசு 'இறையாட்சி உங்களுடையதே' என்று கூறுகின்றார்!

அவர்களுடைய எளிமை, பிறரன்பு, இறையன்பு, விசுவாசம், விடாமுயற்சி, தாழ்ச்சி, மனிதநேயம் ஆகியவைதான் இறையரசின் மதிப்பீடுகள் என்று கூறி அவர்களின் உள்ளத்தில் மறுவாழ்வுக்கான எழுச்சியை சாரமேற்றினார்! இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் கொலோசே நகர இறைமக்களுக்குக் கிறிஸ்துவின் மீட்பு பணியைத் தெளிவாக எடுத்து இயம்புகின்றார். "சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும், விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்" (கொலோ. 1:20).

கலிலேயா தொடங்கி, யூதேயா வரை மூலை முடுக்கெல்லாம் ஓடி, ஓடி ஒதுக்கப்பட்டவர்களையும், யாருமே கண்டு கொள்ளாதவர்- களையும் கட்டி அணைத்து முத்தமிட்டு, தன் தந்தையின் அன்பினை வாரி வழங்கியது இயேசுவின் கரங்கள்! நிம்மதி இழந்து தவித்த வீடுகளில் இயேசு நுழைந்து, இன்று இந்த வீட்டிற்க்கு மீட்பு உண்டாயிற்று" என்று முழக்கமிட்டார். சாகும் தருவாயில் கூட மனம் மாறியக் கள்வனுக்குத் தனது ஆட்சியில் நிலையான பேறுகொடுத்தார்.

நமது வாழ்வைச் சற்று சிந்தித்து பார்ப்போம்! நாம் இன்றும் "நீர் யூதர்களின் அரசனானால் உன்னையேக் காப்பாற்றிக் கொள்" என்று கூறி எள்ளி நகையாடுகிறோமா! அல்லது இயேசுவிடம், நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவில் கொள்ளும்" என்று நல்ல கள்வனைப் போல மன்றாடுகிறோமா? இயேசு ஏழைகளின் அரசனாக வாழ்ந்தார். அவரை அன்பு செய்யும் ஒவ்வொருவரும் ஏழைகளையும் அன்பு செய்ய வேண்டும் என்று விரும்புகின்றார்.

சுருங்கச் சொன்னால் இறையரசின் உண்மை! நசுக்கப்பட்டவர்- களின் வாழ்வு மீட்பைக் கண்டடைதல், ஏழைகளின் வாழ்வு மீண்டுமாகச் சாரமேற்றபடல்! இறையரசின் மதிப்பீடுகளுக்கு எதிராக நாம் ஈடுபடும், வரதட்சணை கொடுமை, கல்வி வியாபாரம், சாதிசமயப் பூசல், சமுதாய சீரழிவு, ஏழைகளை அடக்கி ஆளும் சுரண்டல் சட்டங்கள் இவையெல்லாம் நம்மை ஒருகாலும் இறையாட்சிக்கு வித்திடாது!

கிறிஸ்து அரசருக்கு விழா எடுக்கின்ற இத்தருணத்தில் நம் உள்ளமெல்லாம் பொங்கி எழ வேண்டும். இயேசுவை நம் வாழ்வின் தலைவராக ஏற்று சாரமிழந்துக் கொண்டிருக்கின்ற ஏழை எளியவர்களின் வாழ்வில் சாரமேற்ற வேண்டும். இவர்களின் மீட்பு நம் செயல்பாடுகளில் வெளிப்பட வேண்டும். ஏழைகளுக்காகத் தன்னையே ஒப்புவித்த ஏழ்மையின் அரசர் இயேசுகிறிஸ்துவை போல நாமும் நம்முடைய வாழ்வைப் பிறருக்காக இழந்து இறை- யாட்சியின் மதிப்பீடுகளைச் செயல்படுத்தி இறையாட்சியில் அடி- யெடுத்து வைப்போம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்

🕇நல்ல கள்ளன் -சாகும் தருவாயில் மனமாற்றம் பெற்று வான் வீட்டில் தஞ்சம் புகுந்தான்!
🕇கடவுள் இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார் (கொலோ. 1:13). நாம் இருளிலிருந்து வெளிவரத் தயாரா?
 
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌ பெங்களூர்
கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா

இன்று திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிற்றுக்கிழமை. தாயாம் திருஅவை இதைக் கிறிஸ்து அரசரின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. இன்றைய இறைவார்த்தைகளில், முதல் வாசகம், இஸ்ரயேல் குலங்கள் தாவீதை அரசராக இருக்கும்படி கேட்டு அவரைத் திருப்பொழிவு செய்த நிகழ்வை விவரிக்கின்றது. இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கிறிஸ்தியல் பாடலை தந்து இயேசு கிறிஸ்துவின் உயர்வைப் பற்றிப் பேசுகின்றார். இவை இரண்டும் 'இயேசு அரசர்' எனும் கருத்தியலுக்கு ஓரளவு ஒத்துப் போவதுபோலத் தோன்றுகின்றது. ஆனால் நற்செய்தியில் இயேசுவின் இறப்பு நிகழ்வு தரப்பட்டுள்ளது முரண் நகை போன்று தோன்றலாம். எனவே இப்பகுதி தரும் கிறிஸ்தியல் செய்தி என்ன என இவண் காண்போம்.
பின்னணி

இயேசுவின் மரணத்தைப் பற்றிய இந்த விவரிப்பு லூக்கா நற்செய்தியில் ஆங்காங்கே விவரிக்கப்பட்ட கருத்தியல்களின் கொடுமுடியாக அமைகின்றது. அந்த வகையில் இரு முக்கியக் கருத்தியல்களை இவண் காண்போம்.
1. புறக்கணிக்கப்பட்ட இறைவாக்கினர்

லூக்கா நற்செய்தி முழுவதும் இயேசுவை ஓர் இறை வாக்கினராகக் காட்டுவதற்கு நற்செய்தியாளர் முயற்சி எடுத்தார். இங்குச் சிலுவைச் சாவில் இயேசு பிற இறைவாக்கினர்களைப் போல புறக்கணிக்கப்படுகின்றார். இந்தப் புறக்கணிப்பில் மக்கள், ஆட்சி யாளர்கள் படைவீரர்கள், கள்வர்களில் ஒருவர் ஆகியோர் இயேசுவுக்கு எதிரானவர்களாகவும் (காண். வச. 35-39), மற்ற கள்வர் இயேசுவுக்குச் சார்பான வராகவும் காட்டப்படுகின்றார் (வச. 40- 43). இறைவாக்கினர் தனது இறைவாக்குப் பணி செய்யும்போது அவருக்கு ஏற்பும் உண்டு எதிர்ப்பும் உண்டு என்பதை இயேசுவின் இவ்வுலக வாழ்வின் இறுதி நிகழ்வில் இரு கள்வர் நிகழ்ச்சியின் வழி லூக்கா தெளிவுபடுத்துகின்றார். இரு கள்வர்களில் ஒருவன் மக்கள், ஆட்சியாளர்கள், படைவீரர்களின் கூட்டத்துடன்சேர்ந்து கொண்டு இயேசுவை ஏளனம் செய்கிறான், பழித்துரைக்கின்றான் (வச.39).அதனால் அவன் விண்ணரசை இழந்தான். மற்ற கள்வனோ தன் குற்றத்தை ஏற்றுக்கொண்டு (வச. 40-41) இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையை அறிக்கையிடுகின்றான், அவரை இறைவாக்கினராகவும் அரசராகவும் ஏற்றுக் கொள்கிறான் (வச. 42). அதன் பயனாக விண்ணரசை உரிமையாக்கிக் கொள்கிறான். எனவே இறைவாக்கினர் ஏற்கவும் - எதிர்க்கவும்படுகின்றார் என்ற செய்தியோடு அவரை ஏளனம் செய்து எதிர்ப்பவர் நிலைவாழ்வை இழந்து விடுவர். நம்பி ஏற்பவர் நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்வர் எனும் செய்தியும் தெளிவாகின்றது.
2. மீட்பரும் அரசரும்

இயேசு மீட்பர் மற்றும் அரசர் எனும் கருத்தை இப்பகுதியில் முரண்நகளுடன் விவரிக்கின்றார். இயேசுவை ஏளனம் செய்கின்ற கூட்டம் அவருக்கு ஓர் அடைமொழியுடன் கடவுளின் மெசியா, தேர்ந்தெடுக்கப்பட்டவர் (வச. 35 ஆட்சியாளர்), யூதரின் அரசர் (வச. 37, படை வீரர்), மெசியா (வச. 39 கள்வன்) அவரை அழைத்து, அவர் தன்னையும் (வச. 35, 37) தங்களையும் (வச. 39) காப்பாற்றும் படி சவால் விடுகின்றனர். எனவே ஆட்சியாளர், படைவீரர், தீய கள்வன் ஆகியோருக்கு இந்த அடைமொழிகள் இவ்வுலக அதிகாரம், ஆட்சி என்றும், தன்னை காப்பாற்றிக் கொள்வது என்பது இயேசு தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது, இன்னும் கொஞ்ச நாள் இவ்வுலகில்வாழ்வதுஎன்றும்பொருள்கொள்ளவேண்டியுள்ளது. ஆனால் நல்ல கள்வனுக்கும் இயேசுவுக்கும் அரசு, அரசாட்சி என்பதும், காப்பாற்றுவது அல்லது வாழ்வது என்பது வேறொரு பொருள் கொண்டது என்பது அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடலில் தெளிவாகின்றது.

நல்ல கள்வன் இயேசு ஆட்சியுரிமையில் வருவிருப்பதைப் பற்றிப் பேசுகின்றான். எனவே இயேசுவின் அரசாட்சி மற்றவர்கள் நினைத்தது போன்ற இவ்வுலக அரசாட்சியன்று என்பது தெளிவாகின்றது. இயேசு அவனுக்குப் பதிலளிக்கும்போது, நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் (வச. 43) என்று கூறியது இயேசு உண்மையில் எப்படிப்பட்ட மீட்பர் என்பதைத் தெளிவு படுத்துகின்றது. அதாவது இயேசு நிலைவாழ்வைத் தரவல்ல மீட்பர் என்பது புலனாகின்றது. மற்றவர்கள் இயேசு தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும் என்று ஏளனம் பேசினர். ஆனால் இந்த நல்ல கள்வனுக்குக் கூறிய வார்த்தைகளின் வழியாக இயேசு தன்னைக் காத்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளவர் என்பதோடு தன்னை நம்பும் யாவருக்கும் நிலைவாழ்வை அளிக்கவும் ஆற்றல் உள்ளவர் என்பதையும் எண்பிக்கின்றார். எனவே இத்தகைய ஓர் அரசரின், அரசாட்சியின் மக்கள் என்பதை நாம் உணர்வோம். அதற்கேற்ப வாழ்வோம்!
 
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.

பொதுக்காலம் - முப்பத்து நான்காம் ஞாயிறு
கிறிஸ்து அரசர் விழா
முதல் வாசகம் : 2 சாமு 5: 1- 3

தாவீது இஸ்ரயேலரின் அரசராக அருள் பொழிவு பெறுகிறார். தாவீதினுடைய வழித் தோன்றலாகிய இயேசுவும் அரசராகத் திருப்பொழிவு பெறுவதாக இன்றைய வாசகத்தின் வழி உணர்த்தப்படுகிறது.
இஸ்ரயேலரின் அரசர் தாவீது

ஆண்டவரே தாவீதை அரசராக நியமனம் செய்கிறார். அந்த நியமனம் மக்களின் விருப்பத்திற்கேற்ப அமைகிறது. "என்னைச் சுற்றிலுமுள்ள எல்லா வேற்றினத்தாரையும்போல, நானும் எனக்கு ஓர் அரசனை ஏற்படுத்துவேன் என்று நீ சொல்வாய். அப்போது உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் ஒருவனையே உன் அரசனாக ஏற்படுத்துவாய்" (இச. 17 : 14) என்றார் ஆண்டவர். அதே வேளையிலே ஆண்டவரே தாவீதை அரசனாக நியமிக்கிறார். "நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்" என்று உமக்கே ஆண்டவர் கூறினார் (2 சாமு 5 : 2). நம்மை வழிநடத்த நியமனம் பெற்றுள்ளவர்கள் இறைவனுடைய இடத்தில் இருக்கிறார்கள்; இறைவனின் வெளிப்பாடாக இருக்கிறார்கள். இது பாப்புவுக்கும், ஆயர்களுக்கும், குருக்கள், துறவற சபைகளின் தலைவர்கள் தலைவியருக்கும் பொருந்தும். எனவே இன்னோர் கண்காணாக் கடவுளின் மறுவுருக்கள் என்ற முறையிலே, கடவுளுக்கேயுரிய அன்பு, பரிவு, பாசம், ஒருபாற்கோடாமை, நீதி, நேர்மை முதலிய குணங்களைத் தமதாக்கிக் கொள்ள வேண்டும். அதே வேளையிலே, இவர்களிடம் ஒப்படைக்கப் பட்டவர்களும் இவர்களுக்குப் பணிந்திருத்தல் வேண்டும். குறையில்லாத மனிதர் எவரும் கிடையாது. எனவே இன்னோருடைய குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்திக் குழப்பம், இடறல் விழைவிப்பது இறைமக்களுக்கு ஒவ்வாதது. "இடறல் நிமித்தம் உலகிற்கு ஐயோ கேடு" (மத் 18:7) என்ற இயேசுவின் சொற்கள் தலைவர்கட்கும் பொருந்தும், மக்களுக்கும் பொருந்தும். இடறலைத் தவிர்க்க முயல்வோமா?
புதிய இஸ்ரயேலரின் அரசர் இயேசு

தாவீதின் மரபில் வந்த அரசர் இயேசு. உன் வாழ்நாள் முடிந்து, நீ உன் முன்னோருடன் துயில் கொள்ளும்போது உனக்குப் பிறக்கும் ஒரு மகனை உனக்குப் பின் நாம் உயர்த்தி, அவனது அரசை நிலை நாட்டுவோம். அவனே நமது பெயரால் ஓர் ஆலயத்தைக் கட்டுவான். நாமோ அவனது அரியணையை என்றும் நிலைநிறுத்துவோம்" (2 சாமு 8: 12-14) என்பது இயேசுவில் நிறைவேறுகிறது. தாவீதின் வழித்தோன்றலாக வந்ததால் மட்டுமன்று, இறைவனுடைய வாக்குறுதி முற்றுப்பெற வேண்டும் என்பதால் மட்டுமன்று, ஆதியிலிருந்தே இயேசு விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசரே. "அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன" (கொலோ 1:16-17). இவ்வாறு, அவர் படைப்பினால் மட்டும் தலைவரன்று, தம் இறப்பு உயிர்ப்பினால் மனிதகுலத்துக்கு மீட்பு அளித்தவர் என்ற முறையிலும் தலைவரே, அரசரே. திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார்" (கொலோ 1:18-20). படைப்பினாலும் மீட்பினாலும் இயேசு நம் அரசராகிறார்.

தாய் திருச்சபை கிறிஸ்து அரசர் திருநாளாகிய இன்று, சிறப்பாக, இயேசுவின் அரசத்துவத்தை நம் கண்முன் வைக்கிறது. எனினும் இயேசுவோ அதிகாரம் செலுத்தும், ஆணையிடும் அரசரன்று. அவரது அரசத்துவம் இவ்வுலகைச் சார்ந்ததன்று (யோ 18:32). மாறாக, பணிபுரியும் அரசத்துவம். "நீங்கள் என்னைப் 'போதகர்' என்றும் 'ஆண்டவர்' என்றும் அழைக்கிறீர்கள்... ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்... நான் செய்தது போலவே நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்" (யோ 13 : 13-15).

இஸ்ரயேலருக்கு நீ தலைவனாயிருப்பாய்.
இரண்டாம் வாசகம் : கொலோ 1:12-20

படைப்புக்கும் மீட்புக்கும் தலைவராக இயேசுவைக் காட்டும் இன்றைய வாசகம் ஆதித்திருச்சபையில் வழக்கிலிருந்த ஒரு பாடலாயிருக்கலாம். கிறிஸ்துவின் தனிப்பெரும் மேன்மையைக் கூறவிழைந்த பவுல் இப்பாடலைத் தம்முடைய மடலிலே எடுத்தாள்கிறார். கிறிஸ்து அரசர் விழாவன்று அவரைப் படைப்பிற்கும் மீட்பிற்கும் தலைவராக, அரசராகக் காண்பது எவ்வளவு பொருத்தமாயமைகிறது?
படைப்புக்கெல்லாம் அரசர் கிறிஸ்து

"படைப்புக்கு எல்லாம் இயேசு தலைப்பேறானவர்" (1:15). காலவரம்பில் இயேசு முதல்வரென்பது பொருளன்று; படைப்புக்களுக்கு எல்லாம் நாயகன், தலைவன், காரணன் என்பது பொருளாகும். "அவனின்றி அணுவும் அசையாது." எனவேதான் "அனைவரும் உண்டானது அவரிலேதான். அவராலேயே அவருக்காகவே அனைத்தும் ஆயின" (1: 16) எனப்படுகிறது (காண்: யோ 1:2-3). ஆம், இயேசு படைப்போற்படைக்கும் பழையோன்." அவரே அருக்கனிற் சோதி அமைத்தோன், திருத்தகு மதியில் தண்மை வைத்தோன், திண்டிறல் தீயின் வெம்மை செய்தோன், பொய்தீர் வானிற் கலப்பு வைத்தோன், மேதகு காலின் ஊக்கம் கண்டோன், நிழல் திகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட மண்ணில் திண்மை வைத்தோன் எனைப்பல கோடி எனைப்பல பிறவும் அனைத்தனைத்து அவ்வயினடைத்தோன்" (திருவா. திருவண்டப்பகுதி). எனவே அவரை, "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி, நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி, தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி, வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி, வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி (திருவா. போற்றித்திரு அகவல்) என்று வாழ்த்துவோம். நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்த இயேசுவை ஏத்துவோம். "அவை ஆண்டவரின் பெயரைப் போற்றட்டும்" (திபா. 148 : 5). படைப்புகளிலெல்லாம் தலையாய நாமும் ஆண்டவரைப் புகழ்வோம். அவரே ஆதி, அவரே அந்தம், அவரே அரசர்.
மீட்புக்கெல்லாம் அரசர் கிறிஸ்து

படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக; மனுவைப் படைத்தான் தனை வணங்க என்பது மரபு. ஆனால் மனிதன் கடவுளைப் பாடிப் பரவுவதற்குத் தடையாயிருப்பது பாவம். இயேசுவோ பாவத்தினின்றும் சாவினின்றும் நம்மை விடுவித்தார். "அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்து, தம் அன்பார்ந்த மகனுடைய அரசில் கொண்டுவந்து சேர்த்தார் (1:13) என்று கடவுளை நம் மீட்புக்குக் காரணமாகக் கூறிய பவுல் இம்மகனால் தான் நமக்கு மீட்பு உண்டு, பாவமன்னிப்பு உண்டு" (1:14) என்பார்.

இயேசு தமது இரத்தத்தைச் சிந்தி இம்மீட்பை நமக்குத் தந்ததோடு, தந்தையோடு நம்மை ஒப்புரவாக்கினார்; இயேசுவோடும் நாம் ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். பாவிகளாகிய நாம் கடவுள் தந்தையோடும் இயேசுவோடும் சமாதானம் அடைந்துள்ளோம் எனின், இவை எல்லாவற்றிற்கும் காரணம் இயேசுவின் விலைமதிக்கப்பட முடியாத இரத்தமே. "கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்" (1கொரி 6:20; 7:23) என்று கூறுவது இவ்வடிப்படையிலேயே.

எனவே இயேசு நம்மைப் படைத்ததால் அரசர்; நம்மைத் தம் இரத்தத்தால் மீட்டதாலும் அரசர். திருமுழுக்கு வழியாக இயேசுவின் மீட்பிலே பங்குபெறும் நாம் அம்மீட்புச் செயலுக்காகவும் அவரை வாழ்த்துவோம். நீர் கொல்லப்பட்டீர்; உமது இரத்தத்தால் குலம், மொழி, நாடு, மக்களினம் ஆகிய அனைத்தினின்றும் மக்களைக் கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர் (திவெ. 5 : 9) ; நீர் போற்றி! ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக (லூக் 19 : 38) என்று வாயாற வாழ்த்துவோம். நம் உள்ளத்திலும் இல்லத்திலும் அவரையே நம் தனிச் சிறந்த அரசராக ஏற்போம்.

படைப்புக்கெல்லாம் தலைப்பேறானவர்.
நற்செய்தி: லூக் 23: 35 - 43

நமதாண்டவரின் நாமங்கள் பல. ஆயிரம் நாமத்தாலும் அவரை அளந்தறிய முடியாது. மீட்பரானதால் அவர் இயேசு; அருள்பொழிவு செய்து அனுப்பப்பட்டவராதலால் அவர் மெசியா அல்லது கிறிஸ்து; நம்முடன் என்றும் அவர் இருப்பதால், எம்மானுவேல்; தாவீதின் வம்ச வழி வந்ததால் அவர் தாவீதின் குமாரன்; ஆயனைப் போல் நம்மிடம் அன்பு கொண்டதால் நல்ல மேய்ப்பன்; பாவங்களைப் போக்கியதால் இறைவனின் செம்மறி; அகில உலகை ஆண்டு நடத்துவதால் அவர் அரசர். தனது அரசில் பாவிக்கும் பங்களித்த நிகழ்ச்சியே இன்றைய நற்செய்தி.
துன்பம் வழி மகிமை

நமதாண்டவர் காலத்து எதிர்பார்ப்புகளுக்கு மாறாக எசாயா இறைவாக் கினர், யாவேயின் ஊழியனைத் துன்ப மனிதனாக முன்னுரைத்துள்ளார் (காண்: எசா.53). இந்த இறைவாக்குகள் கல்வாரியில் சிலுவையில் தொங்கும் நம் கர்த்தரில் நிறைவேறியுள்ளதைக் காண்கிறோம். கல்வாரியில் நின்ற யூதத் தலைவர்கள் இறந்து கொண்டிருக்கும் இயேசுவை ஏளனம் செய்கின்றனர். "மற்றவர்களுக்கு உதவி அளித்தவர் தன்னையே சிலுவை மரணத்தினின்று காத்துக்கொள்ளத் தெரியவில்லையே என்று வசைபாடினர். இவரது மரணமே மக்களை மீட்கும் மருந்து என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். "மெசியா இப்பாடுகளைப் பட்டன்றோ மகிமையடைய வேண்டும் என்று தம் மரணத்தை மதிப்பீடு செய்தவர் நமதாண்டவர். இவ்வசை மொழியில் படைவீரர்களும் யூதத் தலைவர் களுடன் சேர்ந்துகொண்டனர். அவர் தலைக்குமேல் தொங்கிய இவன் யூதரின் அரசன் என்ற பட்டயங்கூட நமதாண்டவரைக் கேலி செய்யும் வகையில்தான் வைக்கப்பட்டிருந்தது. பிலாத்து அரண்மனையில் முள்முடி சூட்டப்பட்டு, போலி அரசனாகக் கேலி செய்யப்பட்டதன் தொடர்ச்சியே கல்வாரி நிகழ்ச்சிகள்.'

"அவர்கள் ஆட்டுக்குட்டியோடு போர் புரிவார்கள். ஆனால் அது அவர்களை வென்றுவிடும்; கடவுளால் அழைக்கப்பெற்று, தேர்ந்தெடுக்கப் பெற்று உண்மை உள்ளவர்களாய் ஆட்டுக்குட்டியோடு இருப்பவர்களும் வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் ஆட்டுக்குட்டி ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். அரசருக்கெல்லாம் அரசர்" (திவெ. 17: 14).
மன்னிக்கும் தெய்வம் இயேசு

கள்வர்களுக்கிடையே கடவுள் குமாரன் மரணத்தைத் தழுவியதாகக் கூறப்பட்ட இறைவாக்கு கல்வாரியில் நிறைவேறியது. "நீ மெசியா அல்லவா? உன்னையும் எங்களையும் காப்பாற்று என்று ஒரு கள்வன் அவரைப் பழித்தான். மற்றவனோ அவனைக் கண்டித்து, இயேசுவுக்காகப் பரிந்து பேசினான். அதுமட்டுமன்று, அவரது அவமான மரண வேளையிலும் அவரை எல்லாம் வல்ல அரசராக ஏற்று "இயேசுவே, நீர், அரசுரிமையோடு வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்று விண்ணப்பித்தான். அவன், வேண்டுகோள் நிறைவேறியது. அவன் தட்டினான்; அவனுக்குத் திறக்கப்பட்டது. தேடினான், கண்டடைந்தான். இன்றே என்னுடன் வான்வீட்டில் இருப்பாய்" என்று இயேசு வாக்களித்தார்.

இரு கள்வர்களும் மனித சமுதாயத்தில் காணப்படும் இரு பிரிவினரின் சின்னங்கள். இயேசுவை எதிர்க்கும் கும்பல்; அவருக்காக அனுதாபப்படும் கூட்டம். எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாது அவருக்காகப் பரிந்து பேசும் கூட்டம். ஒரு வேளை மற்ற கள்வனும் "என்னையும் நினைவிற்கொள்ளும்" என்று கெஞ்சியிருந்தால், அவனும் இன்றே பரகதியில் இருப்பாய்" என்ற வாக்குறுதி பெற்றிருப்பான். சிலுவைக்கு அருகில் இருந்தும் நல்ல வாய்ப்பினை இழந்துவிட்டான். திருச்சபையில் இருப்பதாலோ, கல்வாரிப் பலியாகிய திருப்பலியில் பங்கெடுப்பதாலோ ஒருவன் மீட்புப் பெற்றுவிடுவதில்லை. எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையிலும் இயேசுவை அரசராக ஏற்றுக்கொண்ட நல்ல கள்வனிடமிருந்த ஆழ்ந்த நம்பிக்கை நம்மிடம் இருந்தால்தான் இறக்கும் வேளையில் "இன்றே பரகதியில் இருப்பாய்" என்று நாமும் கேட்க முடியும். இயேசு பிறப்பிலும், வாழ்விலும், இறப்பிலும், உயிர்ப்பிலும் எம்பேரரசர். அரசர்க்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர்' என்ற பெயர் அவருடைய ஆடையிலும் தொடையிலும் எழுதப்பட்டிருந்தது" (திவெ. 19: 16).

இயேசுவே, நீர் அரசுரிமையோடு வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்.
  
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ