தாய் தன் குழந்தையை சாப்பிடக் கூப்பிடுவது போல, வாழ்வு தரும் உணவு
ஒன்று நம்மை சாப்பிடக் கூப்பிடுகிறது. அது மட்டுமல்ல வாழ்வு தரும்
உணவை சாப்பிட்ட பின் நம்மையே நம் அயலாருக்கு வாழ்வு தரும் உணவாக பகிர்ந்து
கொடுக்க முன் மொழிகின்றது.
மண்ணில் முளைக்கும் உணவு உடல் பசி தீர்க்கிறது. உடலை வளர்க்கிறது.
உடலின் களைப்பை அகற்றுகிறது. உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. விருந்து
கொண்டாட்டங்களில் முதலிடம் பெறுகிறது. மண்ணக வாழ்வை அனுபவிக்கும்
மையப் பொருளாகிறது. நிலையில்லா உலகின் நிஜமான உணவாக பரிணமிக்கிறது.
அழிந்து போகும் வாழ்க்கையின் அடையாளம் ஆகிறது.
விண்ணில் இருந்து வரும் உணவோ ஆன்மாவை வளர்க்கிறது. ஆன்மாவின் தாகம்
தீர்க்கிறது. ஆன்மாவுக்கு வரும் ஆபத்தை அகற்றுகிறது. வாழ்நாள்
சிறப்பை அனுபவிக்க வழிகாட்டுகிறது. நிலையான வாழ்வின் நிஜமான
உணவாகப் பரிணமிக்கிறது. அழியா வாழ்க்கையின் அடையாளம் ஆகிறது.
இப்படியான அந்த உணவை உண்டு அழிவில்லாத பாதையில் பயணிக்கவேண்டும்.
நம் அயலாரையும் அதே பாதையில் பயணிக்கச் செய்ய நாமே அந்த உணவாக
மாறிடவேண்டும்.
வாழ்வு தரும் உணவை நமக்கு அளிக்கும் திருப்பலி இது. இந்த உணவை
நம்பிக்கையுடன் உண்போம். பிறருக்கு வாழ்வளிக்கும் உணவாக நம்மையே
கொடுப்போம். அழியா வாழ்வை நோக்கி பயணித்து நிலையான வாழ்வைப்
பெற்றுக் கொள்வோம். அருள் கேட்டு இணைந்து செபிப்போம்.
1. வாழ்வு தரும் உணவாகிய இறைவா! திருத்தந்தை ஆயர்கள்
குருக்கள் துறவியர் அனைவரும் அன்றாட திருப்பலியில்
திருவுணவை உட்கொண்டு வாழ்வளிக்கும் அப்பமாக தங்கள்
வாழ்வை அர்ப்பணிக்க இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. நலன் தரும் திருவுணவே எம் இறைவா! உணவின்றி வாடும்
ஏழை எளிய மக்களுக்கு முன்னேற்றம் தரும் உணவாக
நாட்டுத்தலைவர்கள் வாழ்ந்து காட்டவும் பசியால்
வாடுகின்ற மக்கள் பசி போக்க சீரான கொள்கை முடிவுகளை
நாட்டுத்தலைவர்கள் வாழ்ந்து காட்டவும் பசியால்
வாடுகின்ற மக்கள் பசி போக்க சீரான கொள்கை முடிவுகளை
நாட்டுத் தலைவர்கள் எடுப்பதற்கு அருள் புரியும்படி
ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
3. விண்ணக உணவாகிய இறைவா! மாபெரும் ஊட்டச் சத்தாகிய
நற்கருணையை அனுதின உணவாக அன்றாடம் அருந்திடத்
துணைபுரியும் எமது ஆன்மீகத் தந்தையின் பணியால்
இறைமக்கள் இறைவனில் சங்கமித்து விண்ணகம் நோக்கிய
திருப்பயணத்தை அனுபவித்து வாழ அருள்புரியும்படி இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
4. நற்கருணையே எமது வாழ்வின் மையம் என உணர்த்தும்
ஆண்டவரே!
நாங்கள் அருந்தும் இவ்வுலக உணவின் மீது அதிக நாட்டம்
கொள்ளாமல் நற்கருணை அருட்சாதனத்தின் வழியாக ஊட்டம்
பெற்று உம்மைப் போல வாழ மாற்றம் பெற்று உமக்கேற்ற
சாட்சிகளாக வாழ அருள்புரியும்படி ஆண்டவரே உம்மை
மன்றாடுகிறோம்.
5. உயிர்களுக்கு வாழ்வையும் வளர்ச்சியையும்
கொடுக்கின்ற இறைவா!
எங்கள் வேண்டுதல் கேட்டு எங்களின் இயலாமையை நீக்கி
ஒற்றுமை அன்பு மகிழ்ச்சி இவைகளில் எம் குடும்பங்கள்
வளர்ச்சி அடைய வாழ்வளிக்கும் உணவை தேடிச் செல்லும்
மனநிலையை தரும்படி ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்
மறையுரை சிந்தனைகள்
அவர் ஒரு வங்கியின் உயர் அதிகாரி. பேருந்து ஒன்றிற்காக
காத்திருந்தார். நீண்ட நேரம் காத்திருந்ததால் அருகில் உள்ள
பெஞ்சில் அமர்ந்து பிஸ்கெட் பாக்கெட் ஒன்றை பிரித்து சாப்பிட ஆரம்பித்தார்.
அருகில் இருந்த சிறுவன் ஒருவன் அவரிடம் அனுமதி எதுவுமே கேட்காமல்
பிரித்து இருந்த பாக்கெட்டுக்குள் கையை விட்டு அவனும் பிஸ்கட் ஒன்றை
எடுத்து சாப்பிட்டான். அதைக் கண்ட வங்கி அதிகாரிக்கு கோபம் வந்தது.
கொஞ்சம்கூட மரியாதை தெரியவில்லை என்று மனதுக்குள் நொந்து கொண்டார்.
மீண்டும் அடுத்த பிஸ்கட் எடுத்து சாப்பிட ஆரம்பித்ததார். அப்போதும்
அந்த சிறுவன் அந்தப் பாக்கெட்டுக்குள் மீண்டும் கையைவிட்டு பிஸ்கட்
எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். முன்பைவிட இப்போது அதிகமாக கோபம் வந்தது.
பெற்றோர் நல்ல மரியாதையை சிறுவனுக்கு சொல்லிக் கொடுத்திருந்தால் இப்படிச்
செய்வானா? பெற்றோர் வளர்ப்பு சரி இல்லை என்று முணுமுணுத்தார்.
மூன்றாவதாக. ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட ஆரம்பித்தார். அப்போதும்
அவன் கையை விட்டு பிஸ்கெட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். சிறுவன்
என்பதால் எரிச்சல்பட்டவர் எதுவும் சொல்ல இயலாது முணுமுணுத்தார். இறுதியாக
ஒரே ஒரு பிஸ்கட் மீதி இருந்தது. சிறுவன் அதை எடுத்து பாதியைப்
பிட்டு அவன் எடுத்துக் கொண்டு மீதி பாதியை அந்த வங்கி உயர் அதகாரிக்குக்
கொடுத்தான். கோபத்தின் உச்சிக்கு சென்ற அதிகாரி மனதுக்குள் அவனைத்
திட்டிக் கொண்டே வாங்கிக் கொண்டார். சிறிது நேரம் கழித்து தன்
பையைத் திறந்தவருக்கு பேரதிர்ச்சி. காரணம் அவரது பையில் அவரது பிஸ்கட்
பாக்கெட் அப்படியே இருந்தது. அவர் எடுத்து சாப்பிட்டதோ அந்த சிறுவனின்
பிஸ்கட் பாக்கெட்..
கொடுக்கும் மனநிலை நமதாக வேண்டும். கொடுப்பதற்கு வயது வரம்பு
கிடையாது. இதைத்தான் கொடுக்க வேண்டும் என்று கொடுக்கும்
பொருளுக்கும் வரையiறை கிடையாது.
இருப்பதைக் கொடுப்பது மாண்புக்கு உரியது.
அதனால் தான் நம் கடவுள் நமக்கு உணவாகத் தன் தசையைத் தருகிறார்.
நாம் குடிக்கும் பானமாக தன் குருதியைத் தருகிறார்.
நம் கடவுள் மட்டுமே நமக்குஉணவாகத் தன் உடலைத் தருகிறார்.
நம்மிடம் இருப்பதை கொடுக்க நமக்கு இருப்பது தாராள மனமா? தயக்கமா?
சிறுவன் தன்னிடம் இருப்பதை பகிர்ந்து கொடுத்து இயேசுவை பிரதிபலித்து
விட்டான்.
நாமும் இப்படித்தான் வாழவேண்டும் என நம் பெருமான் இயேசு ஆசிக்கிறார்.
பகிர்தலுக்குத் தேவை பணமல்ல மனம்தான்
என்ன கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல எத்தகைய மனநிலையுடன்
கொடுக்கிறோம் என்பதே முக்கியம்.
உழைப்பைக் கொடுப்போம். பிறர் கற்றுக் கொள்ளும் வரை. பகிர்ந்து
கொடுப்போம் உண்டபின் மனம் நிறைவடையும் வரை!
அலெக்ஸாண்டிரினா என்ற பெண் பாத்திமாவிற்கு அருகிலுள்ள பாலசர் என்ற
நகரில் 1904 ஆம் ஆண்டு தன்னை கற்பழிக்க முயற்சி செய்த மூன்று கயவர்களிடம்
இருந்து தன் கன்னிமையைக் காக்கும் பொருட்டு வீட்டின் மேலிருந்து சன்னல்
வழியாக குதித்ததினால் தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுத்தப் படுக்கையானார்.
நற்கருணையில் தினமும் ஆண்டவரை நெருங்கிச் சென்றார். 1931ஆம் ஆண்டிலிருந்து
காட்சிகள் கண்டார். ஆண்டவரின் பாடுகளை தன் உடலில் உணர ஆரம்பித்தார்.
1942 ஆம் ஆண்டு புனித வாரத்தில் ஆண்டவர் அலெக்ஸாண்டிரினாவுக்குத்
தோன்றி இனி இவ்வுலகில் உணவு உண்ணமாட்டாய். உன் உணவு என் தசையே! இரத்தமோ
இனி நீ குடிக்கும் தண்ணீர் என்றார். அன்றிலிருந்து தனது மரணம் வரை
ஏறக்குறைய பதிமூன்று ஆண்டுகளுக்கும் அதிகமாக தினமும் நற்கருணையை மட்டுமே
உட்கொண்டு உயிர் வாழ்ந்தார். அறிவியல் ஆராய்ச்சிகள் இந்த புதுமையை
விளக்க முடியவில்லை. ஆண்டவர் அலெக்ஸாண்டிரினாவை நோக்கி நற்கருணையினால்
மட்டுமே உயிர் வாழ்கின்றாய். இதன் மூலம் நற்கருணையின் வல்லமையை உலகிற்கும்
ஆன்மாக்களின் மீது என் வாழ்வின் தாக்கத்தையும் தெரிவிக்கவே இதைச்
செய்தேன் என்றார்....
"வாழ்வு தரும் உணவு நானே"
இயேசு அலெக்ஸாண்டிரினாவிடம் நான் நற்கருணை பேழையில் இரவு பகலாய்
காத்திருக்கின்றேன். என்னை அண்டி வருகின்றவர்களுக்கு என் அன்பையும்
அருளையும் வாரி வழங்கக் காத்திருக்கின்றேன் என்றார். நற்கருணை ஒரு
மாபெரும் சக்தி அருட்கொடை. விண்ணகம் சேர்க்;கும் வானின்று இறங்கி
வந்த உயிருள்ள உணவு.
நற்கருணையை அண்டிச் சென்று ஆண்டவன் தரும் அற்புதத்தை
பெற்றுக்கொள்ள தடையாக இருப்பது என்ன?
ஓட்டல் இல்லாத ஊரே இல்லை எனலாம். இப்போதல்லாம் உணவை ஒட்டலில்
வாங்கிச்
சாப்பிடுவது என்பது நாகரீகமாகி விட்டது. ஒரு காலக்கட்டத்தில் ஓட்டல்
சாப்பாடுதாங்க சாப்பிடுறேன் என்று தாழ்ந்த குரலில் சொன்னது இப்போது
மாறி ஐயா ஓட்டல் சாப்பாடுதான் சாப்பிடுவார் என்று பெருமையாய்ப்
பேசிகொள்வதாய் மாறிவிட்டது. வீட்டில் கிடைக்காத உணவு ஓட்டலில்
கிடைக்கும் என்றாகி விட்டது. 5 ஸ்டார் 3ஸ்டார் உடுப்பி ஒட்டல்
சரவணபவன் ஒட்டல் தாஜ் முனியாண்டி விலாஸ் என்றெல்லாம் பல மையங்கள்
மனிதனுக்கு உணவு கொடுப்பதற்காகவே இடைவெளி விடாமல் தயாராக இருக்கின்றன.
அப்படி இருந்தும் மனிதனுக்கு உணவு கொடுப்பதற்காகவே இடைவெளி விடாமல்
தயாராக இருக்கின்றன. அப்படி இருந்தும் மனிதனுக்குப் பசி தீர்ந்தபாடில்லை.
மனித வாழ்வின் மையம் உணவு அந்த உணவைப் பெற மனிதன் உழைத்தாக
வேண்டும்.
உழைப்பு விண்ணக வாழ்வின் முன் சுவையை நமக்கு இனம் காட்டுவதாகப்
பார்த்துக் கொள்ள வேண்டும்.
வாழ்வு தரும் உணவு நானே என்று சொல்லி நமக்கு தசையை உண்ணக்
கொடுத்தார். அந்த உணவை உண்ணும் போது அந்த உணவின் இயல்பு நமதாகிறது.
இந்த உண்மையை விசுவசிக்கும்போது அந்த இயல்பு நமதாகிறது. அடிக்கடி
திருவிருந்தை உண்டு வாழ்வளிக்கும் அப்பமாக மாறவேண்டும்.
அடுத்த ஊருக்குப் பயணிக்கும் போது கட்டுச்சோறு பயன்படுவது போல
நமது விண்ணகம் நோக்கிய பயணநாட்களில் நமக்கு ஊட்டமளிப்பது நற்கருணை
என்னும் திருவுணவே!
இந்த பூமியில் வாழும் காலங்களில் நற்கருணையை மட்டும் உண்டு வாழ
முடியும் என்ற விசுவாச மனநிலை நமக்குள் ஏற்படுகிறதா?
திருவுணவை உண்ணும் போது இயேசுவாக மாறுகிறோம்.
இயேசுவாக மாற தகுந்த முறையில் திருவுணவை உண்போம்.
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
நல்ல பசியார்வம் ஏற்பட வாழ்த்துக்கள்
மேலை நாடுகளில் உணவு உண்ணத் தொடங்குமுன் நல்ல பசியார்வம்
ஏற்பட வாழ்த்துக்கள் (Have a good appetite. buonappetito)
என்று ஒருவர் மற்றவர்க்கு வாழ்த்து கூறி மகிழ்வர். இதனால்
உண்பவர் நல்ல பசி ஏற்பட்டு உண்டு மகிழ வேண்டும் என்பது
அவர்கள் விருப்பம். நம்மிடையே அப்படிச் சொல்லும் வழக்கம்
இல்லை. அதற்கு மாறாக நல்லா சாப்பிடுங்கள், இதைக் கொஞ்சம்
அதிகமாக எடுத்து சாப்பிடுஙள், இது உடம்புக்கு நல்லது என்று
கூறி நாமே பசியைத் தூண்டி விடும் ஊக்கியாக மாறிவிடுவோம். இப்படி
நம்மை அறியாமலே நாம் கிரியா ஊக்கியாக செயல்படும் தருணங்கள்
பல. இயேசு அவரது பிள்ளைகளாகிய நாம் நல்ல வாழ்க்கை வாழ
வேண்டும், நலமுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பல
வழிமுறைகளை தனது நற்செய்தியின் மூலம் கூறி இருக்கிறார். பல
இடங்களில் உணவினை மேற்கோளாக்கி இருக்கிறார். எதற்காக உணவினை
அவர் எடுத்துக்காட்டாக நமக்கு கூற வேண்டும்??? ஏன்?
எதற்காக?
ஏனெனில் உணவு அனைத்து நிலை மனிதர்களும் அறிந்த ஒன்று. ஏழை
பணக்காரன் இருப்பவன் இல்லாதவன் என்று எல்லா நிலையினரும்
அவரவர் நிலைக்கேற்ப உணவினை உண்பர். உணவு உறவின் சின்னம் ,
உடல் நலத்தின் அடித்தளம். சத்தான உணவினை சமாதானமான
சூழலில் உண்டு வாழ்ந்தால், உறவும் உடல் நலமும் ஆரோக்கியமாக
இருக்கும். நமது அன்பினை நாம் அதிகமாக பிறருக்கு
வெளிப்படுத்துவது உணவு வேளையின் போதுதான். விருந்துக்கு
அழைப்பது, விரும்பியதை சமைப்பது, சுவையானதைத் தருவது,
சுகமான இருத்தலைக் கொடுப்பது என அனைத்தையுமே விருந்தோம்பலின்
போது மட்டுமே ஆர்வத்தோடு செய்வோம் எனவே தான் இயேசு இத்தகைய
மேன்மையான உணவின் மூலம் தனது போதனைகளை எடுத்துரைக்கிறார்.
அவரது போதனைகள் பெரும்பாலும் உணவுக்கு முன், உணவுக்கு பின்,
உணவின் போது என அதைச்சுற்றியே இருக்கும். இன்றைய நற்செய்தியில்
இயேசு ஒருபடி மேலே போய், நானே வாழ்வு தரும் உணவு என்று தன்னையே
உணவாய் மாற்றிக் கூறுகின்றார். இதைக் கேட்ட யூதர்கள்
முணுமுணுக்கின்றனர், நிலைவாழ்வு பெற விரும்புகிறாயா என்னைப்
பின் தொடர்..... என்று துணிவுடன் கூறி அவர்களுக்கும் வாழ்வின்
பாதையைக் காட்டிச் செல்கின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் எலியா இறைவாக்கினர்க்கு வானதூதர்
உணவு கொடுத்து வலுப்படுத்தியதை வாசிக்கக் கேட்டோம்.
இறைவாக்கினரின் இன்றைய வாசக நிகழ்வும் நமது வாழ்க்கை
நிகழ்வும் பல நேரங்களில் ஒத்துப்போகும். சாக வேண்டும் என்று
கடவுளிடம் கேட்டவர், கடைசியில் உணவு உண்டு வலிமை பெற்று
பயணத்தைத் தொடங்குகிறார். நாமும் பல நேரங்களில் இவரைப்
போலத்தான். எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம், எனக்கு வாழ
பிடிக்கவில்லை என்று உதட்டளவிலும் உள்ளத்தளவிலும் புலம்பி
இருப்போம். கடவுளின் அருள் எலியாவிற்கு வானதூதர் வடிவில்
அப்பம், நீர் மூலம் பொழியப்பட்டது போல , நமக்கும் ஏதாவது
சூழல், மனிதர்கள் வழியாக பொழியப்பட்டிருக்கும்.
இல்லையென்றால் இனி மேல் மாற்றப்பட இருக்கும்.
எலியா இறைவாக்கினர் ஒருநாள் பாலைவனத்தில் பயணம் செய்து
களைப்புற்றவர், ஆனால் ஒரே நாளில் உணவு உண்டு நாற்பது நாள்
இரவும் பகலும் பயணம் செய்து ஒரேபு மலையை அடைகிறார். இதற்கு
காரணம் வானதூதரால் இரண்டு முறை உணவு உண்டது மட்டுமல்ல.
இறைவனைக் காண வேண்டும், இறைவன் பணியைச் செய்ய ஆற்றல்
வேண்டும் என்ற செயல் ஆர்வம் பசியார்வம் அவரிடம் இருந்ததால்
தான். ஆண்டவர் என்னை அழைத்தார், அவர் இட்ட பணியை முழுமையாக
என்னால் செய்ய இயலவில்லை, நான் பலவீனமாயிருக்கிறேன், நான்
பலம் பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் வானதூதர்
எழுப்பி உணவு கொடுத்ததும் உண்கிறார். உண்மையிலேயே சாக வேண்டும்
என்று எண்ணி இருந்தால், உணவு உண்ணாமல் பட்டினியால் மாண்டு உயிர்
விட்டிருக்கலாம். ஆனால் எலியா வாழ விரும்பியவர். அதனால் தான்
உணவை உண்டு பலம் பெற்றதும் பயணத்தை மேற்கொள்கிறார்.
எவனொருவன் தனது பலவீனத்தை உணர்ந்து, அதை மாற்றிக் கொள்ள
விழைகிறானோ, அவனே பலம் பெற்று செழிப்படைவான்.
வாழ்வைப் பெற வேண்டும் என்ற ஆர்வத்தால்
ஊக்குவிக்கப்பட்டதால், சாக வேண்டும் என்று எண்ணி
சூரைச்செடியின் அடியில் படுத்து உறங்கியவர், உயரமான ஒரேபு
மலையை அடைகிறார். நான் என் மூதாதையரை விட நல்லவன் அல்லன்
என்று கூறியவர், மனம்மாறி, நற்செயல்கள் செய்யத்
தொடங்குகின்றார். இறைவன் தந்த உணவினை உண்டு பலம் பெற்ற
எலியா இறைவாக்கினர் போல நாமும் நமது பலவீனத்தை உணர்ந்து
பலம் பெறவும், இறைபராமரிப்பில் முழு நம்பிக்கை கொண்டு
வாழவும் அருள் வேண்டுவோம்.
இன்றைய முதல் வாசகம் உணவை உண்டு வாழ்வு பெற்றதைப்
பற்றிக்கூறும் நேரத்தில் இன்றைய இரண்டாம் வாசகத்தில்
பவுலடியார் உணர்வினை கொண்டு வாழ்வது பற்றி நமக்கு
எடுத்துரைக்கின்றார். நன்மை செய்து பரிவு காட்டுங்கள், ஒருவர்
ஒருவரை மன்னியுங்கள், அன்பு கொண்டு வாழுங்கள் என்கிறார். இவை
அனைத்தையும் நாம் பெற்று அதன் பயனாக தூய ஆவியின் முத்திரையை
நாம் பெற்றுக் கொள்ள அழைப்பு விடுக்கிறார். பரிவு, மன்னிப்பு ,
அன்பு இவை மூன்றும் மனிதன் மனிதனாக, மனித உணர்வு
உள்ளவனாக வாழ மிகவும் தேவை. நாட்டின் சுதந்திர தின ஆண்டு
விழாவை சிறப்பிக்க நம்மை நாம் தயாரித்துக் கொண்டிருக்கும்
இந்நாட்களில் நம்மிடத்தில் இவை மூன்றும் நிலைக்க
முயற்சிப்போம். பெயரளவில் சுதந்திரம் பெற்றோம் என்றில்லாமல்
பெயர் சொல்லும் அளவிற்கு சுதந்திரம் பெற விரும்புவோம்
உள்ளத்து சுதந்திரமே உலக சுதந்திரத்திற்கு முதல் புள்ளி .
இந்த முதல் புள்ளிக்கு முன்னுரை இந்த பரிவு மன்னிப்பு அன்பு
மூன்றும். எனவே நமது உள்ளத்து வளர்ச்சி என்ன? வீழ்ச்சி
என்ன? துவக்கம் என்ன? தேக்கம் என்ன என்று கண்டறிந்து
அப்பகுதிகளில் வளர முயற்சிப்போம். இல்லை முதலில் வளர
ஆர்வப்படுவோம்.
உணவினை, உணர்வினை உண்டு நிலை வாழ்வு பெற விரும்புபவர்களே
எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களுக்கான அழியா உணவினையும்,
ஆழமான உணர்வினையும் நான் உங்களுக்கு தருகிறேன் என்கிறார்
இயேசு. உணவும் உணர்வும் மனிதனுக்கு மிகவும் முக்கியம்.
இரண்டில் ஒன்றில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டாலும்
பிரச்சனைதான். இனிப்பு இருக்க வேண்டிய இடத்தில் காரமோ,
மகிழ்வு இருக்க வேண்டிய இடத்தில் வருத்தமோ இருந்தால் அங்கு
குழப்பமே நிலைக்கும். வாழ்வு தரும் உணவாகிய இயேசுவை நாம்
உண்டோமானால், அவரை நிலையாக பெற்றுக்கொண்டோமேயானால், அவருடன்
நிலைத்து வாழ்வோம். அதற்கு நமக்கு தேவை, ஆர்வம். அவரைப் பெற
வேண்டும், நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்னும்
ஆர்வம். நாம் வாழ அவர் தனது சதையை உணவாகக் கொடுத்தார்.
எனவே வாழ ஆசைப்படுவோம். ஆர்வப்படுவோம். பசியுள்ள வயிறே
உணவை ரசித்து ஏற்றுக்கொள்ளும். ஆண்டவரின் சதையை உண்ண
ஆர்வமுடையவர்களாய் வாழ்வோம். எப்போதும் நல்ல பசியார்வம்
கொண்டவர்களாய் வாழ்வோம். இறையருள் என்றும் நம்மோடு, நம்
குடும்பத்தாரோடும் தங்குவதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருட்சகோதரி: செல்வராணி O.S.M.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
அவர் எத்துணை இனியவர்!
'ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்' எனத்
துள்ளிக் குதிக்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா
34).
ஆனால், இன்றைய முதல் வாசகத்தில் எலியா துவண்டு கிடக்கின்றார்.
நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் எளிய பின்புலம் கண்டு மக்கள்
இடறல்பட்டு நிற்கின்றனர். இரண்டாம் வாசகத்தில் தங்களின் பழைய
வாழ்க்கை நிலைகளில் சிக்கிக் கிடக்கின்றனர் எபேசு நகர இறைமக்கள்.
இந்தப் பின்புலத்தில் நம் ஆண்டவரை இனியவர் என்று எப்படிப்
புரிந்துகொள்வது?
பாகால் இறைவாக்கினர்கள் நானூறு பேரை நேருக்கு நேராக எதிர்கொண்டு,
அவர்களை வெட்டி வீழ்த்திய எலியா, ஈசபேல் தன்னை விரட்டுவது
கண்டு, பயந்துபோய் அகதியாகப் பாலைநிலத்தில் அலைகின்றார்.
சில நேரங்களில் நம் வாழ்க்கையின் மிக இனிமையான பொழுதுகள்
மிகவும் துன்பமான பொழுதுகளாகவும், வெற்றியில் களிக்க
வேண்டிய பொழுதுகள் தோல்வியில் துவண்ட பொழுதுகளாகவும் ஆகிவிடுகின்றன.
'அச்சமுற்று, தன் உயிரைக் காத்துக்கொள்ளுமாறு தப்பி ஓடுகின்ற'
எலியா, சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, 'ஆண்டவரே,
நான் வாழ்ந்தது போதும். என் உயிரை எடுத்துக்கொள்ளும். நான்
என் மூதாதையரை விட நல்லவன் அல்ல' என்கிறார். ஒரே நேரத்தில்
எலியா நான்கு எதிர்மறை உணர்வுகளால் அவதியுறுகிறார்: ஈசபேல்
பற்றிய பயம், தன் செயல்மேல் கோபம், தன் கடந்த காலம் பற்றிய
குற்றவுணர்வு, தன்நிலை பற்றிய தாழ்வு மனப்பான்மை.
'உயிரைக் காத்துக்கொள்ளுமாறு' ஓடிய எலியா, 'உயிரை எடுத்துக்கொள்ளும்'
என ஆண்டவரிடம் கேட்பது ஏன்? தன் உயிரை எடுக்குமாறு தன்னைத்
துரத்துகின்ற ஈசபேலிடம் அதைக் கொடுத்திருக்கலாமே! புலம்பிக்
கொண்டே இருந்த அவர் அப்படியே தூங்கிவிடுகின்றார். மனச்சோர்வும்
தூக்கமும் உடன்பிறந்த சகோதரர்கள். வானதூதர் அவரைத் தட்டி
எழுப்பி, 'எழுந்து சாப்பிடு!' என்கிறார். தணலில் சுட்ட அப்பமும்
தண்ணீரும் கண்டு, அவற்றை உண்டபின் மீ;ண்டும் உறங்கிப்
போகின்றார். 'நீ நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும்' என்று
இரண்டாம் முறை வானதூதர் உணவு வழங்கியபோது, உண்டு வலிமை
பெறுகின்றார். நாற்பது நாள்கள் அவர் மேற்கொள்ளும் பயணமே
அவருடைய இறையனுபவப் பயணமாக மாறுகின்றது. அந்த மலையில் அவர்
புதிய மனிதராகப் பிறக்கின்றார்.
ஆக, 'இறந்து போக வேண்டும்' என வந்தவர், புதிய வாழ்வுக்குப்
பிறக்கின்றார். ஆண்டவர் அவருக்குப் பரிமாறிய உணவினால் அவருடைய
வாழ்க்கை மாறுகின்றது. ஆண்டவராகிய கடவுள் அவருக்குக்
கொடுத்தது அப்பம் என்றாலும், அது அவருடைய உடல் வலிமைக்குப்
பயன்பட்டதோடு, அவர் ஆன்மிக வலிமை பெறுவதற்கான பயணத்திற்கும்
உதவியாக இருந்தது. மனச்சோர்வு மற்றும் விரக்தியானால் வருந்திய
இறைவாக்கினர் நம்பிக்கையும் எதிர்நோக்கும் பெறுகின்றார்.
ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை உணர்கின்றார்.
இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்தவ வாழ்வின் அடையாளம் பற்றிய
கருத்துரு தொடர்கின்றது. கிறிஸ்தவ அடையாளம் என்பது தெளிவாகத்
தெரிந்துகொள்ள வேண்டியது. இந்தத் தெரிவு நிபந்தனையற்றதாகவும்
உறுதியாகவும் இருக்க வேண்டும். எப்படிப்பட்ட தடைகள் வந்தாலும்
தெரிவில் ஒருவர் உறுதியாக இருத்தல் வேண்டும். கிறிஸ்தவக்
குழும வாழ்விற்கான ஆறு தடைகளைப் பவுல் பட்டியலிடுகின்றார்:
'மனக் கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல், தீமை'.
இவை கிறிஸ்தவ அடையாளத்தை வலுவிழக்கச் செய்வதோடு, தூய ஆவியாருக்கும்
துயரம் வருவிக்க வல்லவை எனப் பவுல் எச்சரிக்கின்றார்.
மேலும், கிறிஸ்தவ அடையாளத்திற்கு வலுவூட்டும் காரணிகளையும்
அவர் முன்மொழிகின்றார்: 'நன்மை செய்தல், பரிவு காட்டுதல்,
மன்னித்தல், அன்புகொண்டு வாழ்தல்.' கிறிஸ்துவையே அன்பிற்கான
முன்னுதாரணமாக வைக்கின்றார் பவுல். அன்பில் தற்கையளிப்பு
இருக்க வேண்டும் என்பது பவுலின் பாடம்.
ஆக, மனக்கசப்பு கொண்டு வாழும் எபேசு நகர மக்களுக்கு இனிமையாக
வருகின்றது கிறிஸ்துவின் அன்பு. கிறிஸ்துவுடைய அன்பின் தற்கையளிப்புப்
பண்பை அறிந்தனுபவிக்கும் அவர்கள், அந்த அன்பை தங்கள்
வாழ்வின் மேல்வரிச்சட்டாக ஏற்க வேண்டும்.
நற்செய்தி வாசகம் கடந்த வார வாசகத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.
தன்னைத் தேடி வந்தவர்களின் தேடலைக் கூர்மைப்படுத்துகின்ற
இயேசு, இந்த வாரம், அந்தத் தேடலின் தேடுபொருள் தானே என்பதை
அவர்களுக்குத் தெளிவுபடுத்துகின்றார். இயேசு, தன்னையே,
'வானிலிருந்து இறங்கி வந்த உணவு' என்று முன்மொழிந்தபோது,
அதைக் கேட்கின்ற மக்கள் முணுமுணுக்கின்றனர். இரண்டு காரணங்கள்:
ஒன்று, இயேசு வானிலிருந்து இறங்கி வரவில்லை. ஏனெனில், அவர்
நாசரேத்தூரில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய எளிய பின்புலம்
அவர்களுக்குத் தெரிந்திருந்தது. மேலும், 'இவர் யோசேப்பின்
மகனல்லவா!' என்று அவரைக் கேலி செய்கின்றனர். இயேசு ஒரு கன்னியிடமிருந்து
பிறந்தார் என்றும், எந்தவொரு ஆண்தொடர்பும் இல்லாமல் அவருடைய
அன்னை வியத்தகு முறையில் கருத்தாங்கினார் என்றும் இயேசுவின்
சமகாலத்தவர்கள் அறிந்திருந்தனர். அந்தப் பின்புலத்தில்தான்
அவரைக் கேலி செய்யும் நோக்குடன், 'யோசேப்பின் மகனல்லவா!'
என்று அவருடைய பிறப்பு பற்றியும் இடறல்படுகின்றனர். இப்படிச்
சொல்வதன் வழியாக இயேசுவின் பிறப்பில் எந்தவொரு இறைத்தொடுதலும்
இல்லை என்பதை உறுதிபடச் சொல்கின்றனர்.
'கடவுள் ஈர்த்தாலொழிய தன்னிடம் யாரும் வர இயலாது' என உறுதிபடச்
சொல்கின்றார் இயேசு. மேலும், தன்னை அவர்கள் உண்ண வேண்டும்
என முன்வைக்கின்றார். உண்ணப்படும் பொருள் தன்னையே இழக்கின்றது.
சிலுவையில் இயேசு தன்னையே இழப்பார் என்பதை இது முன்னுணர்த்துகிறது.
இயேசுவின் எளிய பின்புலம் கண்டு இடறல்பட்டவர்களுக்குத் தன்னையே
உணவாக அளிக்க முன்வருகின்றார் இயேசு.
ஆக,
முதல் வாசகத்தில் மனச்சோர்வடைந்த எலியா, ஆண்டவராகிய கடவுள்
தருகின்ற அப்பம் என்ற உணவின் வழியாக, அவரது இனிமையைச்
சுவைக்கின்றார்.
இரண்டாம் வாசகத்தில், மனக்கசப்பில் வாழ்ந்த எபேசு நகர நம்பிக்கையாளர்கள்,
இயேசுவின் அன்பில் திகழ்ந்த தற்கையளிப்பு வழியாக, அவருடைய
இனிமையைச் சுவைக்கின்றனர்.
நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் எளிய பின்புலம் கண்டு அவரைப்
பற்றி இடறல்பட்டவர்கள், தந்தையால் ஈர்க்கப்பட்டு, அவரிடம்
வந்து அவருடைய இனிமையைச் சுவைக்கின்றனர்.
இவ்வாறாக, ஆண்டவர் இனியவராக இருக்கின்றார்.
இது நமக்கு இரண்டு நிலைகளில் சவாலாக அமைகின்றது:
இரண்டு, 'நானும் ஓர் இனியவராக இருக்கின்றேனா?'
எலியா போலச் சோர்ந்து விழும் பொழுதுகள் பல. மனக்கசப்பினால்
குடும்ப மற்றும் குழும உறவுகளில் நாம் எதிர்கொள்ளும் துன்பங்கள்
பல. இயேசுவின் ஊர்க்காரர்கள்போல மற்றவர்களின் பின்புலம் கண்டு
இடறல் படும் பொழுதுகள் பல.
ஆனால், இவற்றையெல்லாம் கடந்த இனிமை நம் இறைவனிடம் உள்ளது
என உணர்ந்துகொள்தல் நலம்.
'அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்.
அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை' என்னும் பதிலுரைப்பாடலின்
வரிகள் நம் வாழ்வியல் அனுபவமாக மாறட்டும். .
நமக்குத்
தெரியாதா?
'தெரியும்' என்ற தமிழ் வார்த்தை 'நம் கண்கள்
பார்ப்பதையும்,' 'நம் மனம் அறிவதையும்' குறிக்கிறது.
உளவியிலில் ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ளக் கற்பிக்கும்
நுணுக்கத்தில் 'ஜோஹரி ஜன்னல்' (Johari Window) என்ற
ஒன்றைப் பயன்படுத்துகிறார்கள். இந்த ஜன்னலில் நான்கு
கட்டங்கள் இருக்கும்: (அ) எனக்குத் தெரியும், பிறருக்குத்
தெரியும், (ஆ) எனக்குத் தெரியாது பிறருக்குத் தெரியும்,
(இ) எனக்குத் தெரியும் பிறருக்குத் தெரியாது, (ஈ) எனக்கும்
தெரியாது பிறருக்கும் தெரியாது. எ.கா. 'நான்
அணிந்திருக்கும் சட்டையின் நிறம் கறுப்பு' - இது எனக்கும்
தெரியும், பிறருக்கும் தெரியும். 'என் சட்டையின்
பின்பக்கம் கிழிந்திருக்கிறது' - இது எனக்குத் தெரியாது,
பிறருக்குத் தெரியும். 'நான் இப்போது தனிமையாக உணர்கிறேன்'
- இது எனக்குத் தெரியும், பிறருக்குத் தெரியாது. 'நாளை மழை
வரும்' - இது எனக்குத் தெரியாது, பிறருக்கும் தெரியாது.
இந்த நான்கு கட்டங்களில் நம் வளர்ச்சியை நிர்ணயிக்கும்
மற்றும் தடை செய்யும் கட்டம் 2வது கட்டம். எப்படி?
'என் சட்டையின் பின்பக்கம் கிழிந்திருப்பது' எனக்குத்
தெரியாது. ஆனால் அது பிறருக்குத் தெரியும். நான்
வகுப்பிற்குச் செல்கிறேன் என வைத்துக்கொள்வோம். கிழிந்த
சட்டையோடு நான் மாணவர்முன் நின்றால் அது நான் என்னைப்
பற்றி அக்கறையில்லாதவனாய் இருக்கிறேன் என்ற ஒரு உருவத்தை
அவர்கள் மனத்தில் உருவாக்கும். அல்லது கிழிந்த சட்டை
போட்டிருப்பதால் எனக்கே அது எதிர்மறையான உணர்வைத் தரும்.
நான் பாதிவழி போய்க்கொண்டிருக்கும்போது வழியில் வரும் ஒரு
மாணவர், 'ஃபாதர் உங்க சட்டை பின்னால் கிழிந்திருக்கு' என
சுட்டிக்காட்டும்போது, நான் உடனடியாக அறைக்குச் சென்று
சட்டையை மாற்றிக்கொள்கிறேன். ஆக, அந்த மாணவர்
சுட்டிக்காட்டியதால் நான் இங்கே வளர்கிறேன். ஆனால், அதே
வேளையில், 'எனக்குத் தெரியவில்லை என்றாலும், 'எனக்குத்
தெரியாதா?' நீ வேலையைப் பார்த்துக்கொண்டு போ' என்று
சொல்லும்போது, அதுவே என் வளர்ச்சியைத் தடை செய்கிறது.
ஆக, எனக்குத் தெரியவேண்டுமென்றால் மற்றவர் எனக்குக்
கற்றுக்கொடுக்க வேண்டும்.
'தெரிதலும், கற்றுக்கொடுத்தலும்' என்ற இரண்டு வார்த்தைகள்
நம் வாழ்நாள் வரை நம்மோடு வரக்கூடிய வார்த்தைகள். ஏனெனில்
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும், பொழுதிலும் நாம்
தெரிந்துகொள்கிறோம், கற்றுக்கொடுக்கப்படுகிறோம்.
'தெரிதல்' 'கற்றுக்கொடுத்தல்' என்ற இரண்டு வார்த்தைகளை
மையமாக வைத்து இன்றைய வாசகங்கள் சுழல்கின்றன:
அ. 'நான் நல்லவன் அல்ல. நான் சாக வேண்டும்' என்று தன்னைத்
தெரிந்து வைத்துள்ளார் எலியா. ஆனால் இறைவன், 'நீ எழுந்து
சாப்பிடு. நீண்ட பயணம் செய்ய வேண்டும்' எனக்
கற்றுக்கொடுக்கின்றார்.
ஆ. 'இயேசுவின் சிலுவை இறப்பு என்பது ஒரு சோகம், தோல்வி,
அவமானம்' என இயேசுவைப் பற்றித் தெரிந்து வைத்துள்ளனர்
எபேசுத் திருச்சபை மக்கள். ஆனால், 'அது நறுமணம் வீசும்
பலியும் காணிக்கையும்' என கற்றுக்கொடுக்கின்றார் பவுல்.
இ. 'இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு என்பதும், இவருடைய தாய்
மற்றும் தந்தை யார் என்று தெரியும்' என இயேசுவைத் தெரிந்து
வைத்துள்ளனர் யூதர்கள். ஆனால், 'நான் வானிலிருந்து இறங்கி
வந்த உணவு' எனக் கற்றுக்கொடுக்கின்றார் இயேசு.
இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். 1 அர 19:4-8) நம்
சிந்தனையைத் தொடங்குவோம்.
இஸ்ரயேலின் அரசன் ஆகாபு சமாரியாவில் இருந்துகொண்டு ஆட்சி
செய்தபோது சீதோனிய நாட்டு ஈசபேலை மணக்கின்றார். மணமகளாக
வருகின்ற ஈசபேல் தன்னோடு தன் பாகால் தெய்வத்தையும்
சமாரியாவுக்குள் கொண்டு வருகின்றார். தன் மனைவியை
திருப்திப்படுத்த நினைக்கும் ஆகாபு தன் இறைவனாம் யாவேயை
மறந்துவிட்டு பாகாலுக்கு கோவிலும் பலிபீடமும்
கட்டுகின்றான் (1 அர 17:32). பாகால் வழிபாட்டைக் கண்ணுற்ற
யாவே வானங்களை அடைத்து மழைபொழியாமால் செய்துவிடுகிறார்.
கொடிய பஞ்சம் நிலவுகிறது. 'பஞ்சத்தைப் போக்கும் வழி என்ன?'
என்று தன் இறைவாக்கினர் எலியாவைக் கேட்கின்றான் ஆகாபு.
'பாகால் தெய்வ வழிபாடும், பாகாலின் இறைவாக்கினர்களும்
அழிக்கப்பட வேண்டும்!' என்கிறார் எலியா. சொன்னதோடு
மட்டுமல்லாமல், கர்மேல் மலையில் (1 அர 18:20) அரசன்
மற்றும் மக்கள் முன்னிலையில் பாகால் இறைவாக்கினருக்கு
சவால் விட்டு, பாகால் பொய் என்றும், யாவே இறைவனே
உண்மையானவர் என்றும் நிரூபிக்கின்றார். வானம் திறக்க, மழை
கொட்டுகின்றது. பாகால் தெய்வத்தின் பீடமும், அதன்
பொய்வாக்கினரும் அழிக்கப்பட்டதைக் கேள்வியுற்ற அரசி ஈசபேல்
எலியாவைக் கொல்லத் தேடுகின்றார். எலியா இப்போது
அவளிடமிருந்து தப்பி ஓடுகின்றார். அப்படித் தப்பி ஓடும்
வழியில் நடக்கும் நிகழ்வே இன்றைய முதல் வாசகம்.
தன் உயிரை எடுத்துக்கொள்ளுமாறு எலியா இறைவனிடம்
முறையிடுகின்றார் (19:4). வானதூதர் 'எழுந்து சாப்பிடு!' என
உணவு தருகின்றார் (19:5). மீண்டும் படுத்துக் கொள்கிறார்
எலியா (19:6). வானதூதர் மறுபடியும் சாப்பிட அழைக்கின்றார்
(19:7). அப்பத்தினால் நிறைவுபெற்ற எலியா நீண்ட பயணம்
மேற்கொள்கின்றார் (19:8). 'சாக வேண்டும்', 'தூங்க
வேண்டும்', 'நடக்க வேண்டும்' என்று எலியாவின் வாழ்க்கை
படுக்கையிலிருந்து நடத்தலுக்குக் கடந்து போகின்றது.
வானதூதர் இரண்டு முறை உணவு தருகின்றார்: முதல் முறை அவரது
உயிருக்கு, இரண்டாம் முறை அவரது உடலுக்கு.
இஸ்ரயேலின் மாபெரும் இறைவாக்கினராக எலியா இருந்தாலும்,
யாவே இறைவனின் உடனிருப்பை மக்களுக்கு அவர்
வெளிப்படுத்தினாலும், யாவே இறைவனின் எதிரியான பாகாலின்
ஆலயத்தை இடித்து, பொய்வாக்கினர்களைக் கொன்றாலும்,
வெறுமையும், தனிமையும், பயமும் அவரைப் பற்றிக்கொள்கின்றன.
ஈசபேலின் வாள்தான் தன் கண்முன் தெரிகின்றது. உயிரைக்
காத்துக்கொள்ளுமாறு தப்பி ஓடும் (19:3) எலியா அதை
எடுத்துவிடுமாறு இறைவனிடம் இரண்டுமுறை வேண்டுகின்றார்
(19:4). அதாவது, வாழ்வதற்கு இன்னும் வாய்ப்பில்லை
என்றவுடன் மனம் எளிதாகத் தப்பித்துக்கொள்ள
தேர்ந்தெடுக்கும் குறுகிய வழிதான் 'மறைசாட்சி மனப்பான்மை'
(Martyr Complex). மேலும், தான் அளப்பரிய பணியைச் செய்து
முடித்தாலும், 'நான் அவர்களைவிட நல்லவன் அல்ல' எனப்
புலம்புகின்றார்.
எலியா தன்னைப் பற்றித் தெரிந்து வைத்திருந்ததோ
இவ்விரண்டும்தான்: 'நான் சாக வேண்டும்,' 'நான் நல்லவன்
இல்லை.'
ஆனால், இறைவனின் கற்றுத்தருதல் இங்கே வேறுவிதமாக
இருக்கிறது. மூன்று அற்புதங்கள் இந்த நிகழ்வில்
நடந்தேறுகின்றன. ஒன்று, பாலைவனத்தில் சூரைச் செடி
இருக்கிறது. அந்த சூரைச்செடியின் நிழலில் ஒருவர்
படுத்துறங்கும் அளவிற்கு நிழல்தரக்கூடியதாக இருக்கிறது.
இரண்டு, தணல் மூட்டப்பட்டு அதில் அப்பம்
சூடாகிக்கொண்டிருக்கிறது. மூன்று, குவளையில் தண்ணீர்
இருக்கின்றது. பாலைநிலத்தில் மரங்கள் வளர்வதில்லை. ஏனெனில்
பாலைநிலக் காற்றை மரங்களால் எதிர்த்து நிற்க முடிவதில்லை.
ஆக, நம் காலுயரச் செடிகள்தான் அதிக அளவில் இருக்கும்.
காலுயரச் செடிகள் நிழல் தருவதுமில்லை. ஆனாலும், இறைவனின்
பராமரிப்பால் நிழல்தரும் சூரைச்செடி கிடைக்கின்றது. மரம்
அல்லது நிழல் என்பது நமக்கு மேல் இருக்கும் ஒருவகையான
கூரை. யாரின் தலைமேல் கூரை இருக்கிறதோ அவர்தான்
பாதுகாப்பானவர் என்கிறோம்.தலையின் மேல் கூரையாக மரத்தைத்
தருவதன் மூலம் எலியாவின் பாதுகாப்பை உறுதி செய்கின்றார்
இறைவன். இரண்டாவதாக, அப்பம். அப்பம் சுடுவது (அன்றைய
நாளில்) மிக நீண்டகால வேலை. மாவு பிசைய வேண்டும். அது
புளிக்க வேண்டும். நெருப்பு மூட்ட வேண்டும். பின்
பக்குவமாக செய்ய வேண்டும். இந்த எந்த உழைப்பும் இல்லாமல்
எலியாவின் பசி ஆற்றப்படுகிறது. மூன்று, குவளையில் தண்ணீர்
குடிப்பவர்கள் வீட்டில் வசிப்பவர்கள் மட்டும்தான்.
பயணத்தில் அல்லது பாலைநிலத்தில் தோல்பைகள்தாம்
தண்ணீர்கொள்ளப் பயன்படுத்தப்படும். ஆக, ஒரு வீட்டில்
இருப்பது போல பாதுகாப்பையும், பசிதாகம் ஆற்றப்படும்
பாக்கியத்தையும் பெறுகின்றார் எலியா.'சாக வேண்டும்' என
மன்றாடிய எலியா 'படுத்துக் கொள்கிறார்'. தான் சொன்னதை
செயலில் காட்டுகின்றார். அதாவது, ஒருவர் அதிகம்
தூங்குகிறார் என்றால் அவரின் மனச்சோர்வு அல்லது மனச்சுமை
அதிகம் என்பது அர்த்தம். தூக்கம் ஒரு தற்காலிக சுதந்திரம்
தருகிறது. தூக்கத்தில் இந்த உலகம் நமக்கு
இருட்டாகிவிடுகிறது. நம் எதிரிகள் எல்லாம் மறைந்துவிட்டதாக
ஒரு மாயை பிறக்கிறது. 'நான் இனி எந்தச் செயலையும்
செய்யப்போவதில்லை' என்பதைச் சொல்லாமல் மற்றவர்களுக்குச்
சொல்வதும் தூக்கம்தான். இப்படித் திரும்பப்
படுத்துக்கொள்வது நம்மை எதார்த்தத்திலிருந்து தப்பிக்க
உதவினாலும், இந்தத் தீர்வு தற்காலிகமானதுதான். நாம்
எழுந்து இந்த உலகைச் சந்தித்தே ஆக வேண்டும். இவ்வாறாக,
உணவு கொடுத்து நீண்ட பயணத்திற்கு எலியாவை அனுப்புகிறார்
இறைவன்.
'என் வாழ்வு முடிந்துவிட்டது' எனத் தெரிந்துவைத்துள்ளார்
எலியா. ஆனால், 'முடிவு அல்ல இது. இன்னும் நீ செல்லவேண்டிய
பாதை இருக்கிறது' எனக் கற்றுக்கொடுத்து அனுப்பி வைக்கிறார்
இறைவன்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 4:30-5:2),
கிறிஸ்துவின் உடலில் துலங்கும் ஒற்றுமையையும்,
ஒருமைப்பாட்டையும் மாதிரியாக தன் எபேசுத் திருச்சபைக்கு
அளிக்கும் பவுலடியார், அவர்கள் அந்த மாதிரியில் தங்கள்
வாழ்வை கட்டமைத்துக்கொள்ள வாழ்வியல் விதிமுறைகளைத்
தருகின்றார். 'மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல்,
பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு
நீக்குங்கள்!' (4:31), 'ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு
காட்டுங்கள். ஒருவரையொருவர் மன்னியுங்கள்' (4:32),
'நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப் போல்
ஆகுங்கள்!' (5:1), என்று அறிவுரை சொல்கின்ற பவுல் இறுதியாக
ஒரு அழகிய உருவகத்தைக் கையாளுகின்றார்.
தொடக்கக் கிறிஸ்தவர்கள் இயேசுவை நம்புவதற்குத் தடையாக
இருந்தது அவருடைய சிலுவை மரணம். குற்றவாளிகளில் ஒருவராக,
இரண்டு குற்றவாளிகளுக்கு நடுவே, கொடிய சிலுவை மரணத்தைத்
தழுவிய இயேசுவை ஏற்றுக்கொள்ள அவர்களுக்குச் சிலுவை இடறலாக
இருந்தது. இவ்வாறாக, அவர்களுக்குத் தெரிந்த இந்த உண்மை
அவர்களுடைய நம்பிக்கைக்குத் தடையாக இருந்தது. இந்தத் தடையை
நீக்க புதிய இறையியலைக் கற்றுக்கொடுக்கின்றார் பவுல்:
'கிறிஸ்து உங்களுக்காக தம்மை
நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாக கடவுளிடம்
ஒப்படைத்து ...'
இயேசுவின் இறப்பு அவருக்கான இறப்பு அல்ல, மாறாக,
அனைவருக்குமான இறப்பு. மேலும், தூசியும், துர்நாற்றமும்,
எலும்புக் கூடுகளும், கழுகளின் ஓலமும், இரத்தமும்,
வியர்வையும், அழுக்கும், புளித்த காடியும் இருந்த கல்வாரி
மலை சிலுவைப் பலியை, ஏதோ ஒரு ஆலயத்தில், தூய்மையான
இடத்தில் நடந்தேறிய 'நறுமணம் வீசும் பலியும் காணிக்கையும்'
எனக் கற்றுத்தருகின்றார் பவுல். இவ்வாறாக, தெரிந்த
ஒன்றிலிருந்து தெரியாத ஒன்றுக்கு அவர்களை அழைத்துச்சென்று,
அந்த நிகழ்வையே வாழ்வியல் மற்றும் நம்பிக்கை பாடமாக
ஆக்குகின்றார் பவுல்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 6:41-51) கடந்த வார
வாசகத்தின் தொடர்ச்சியே. யூதர்களுக்கும், இயேசுவுக்கும்
இடையே 'வாழ்வுதரும் உணவு' விவாதம் தொடர்கிறது. 'யூதர்கள்'
என்பவர்கள் யூத மதத்தை அல்லது சமூகத்தைச் சார்ந்தவர்கள்
எனச் சொன்னாலும், இங்கே 'யூதர்கள்' என்பதை 'இயேசுவுக்கு
எதிரானவர்கள், அவரை ஏற்றுக்கொள்ள இடறல்படுபவர்கள்' என்ற
அர்த்தத்தில்தான் பொருள் கொள்ள வேண்டும்.
'வாழ்வு (6:48), நிலைவாழ்வு (6:47), இறுதிநாளில் உயிர்ப்பு
(6:44)' - இந்த மூன்று வார்த்தைகளும் இன்றைய நற்செய்தியில்
வருகின்றன. வாழ்வு என்பது சாவிற்கு எதிர்ப்பதம் அல்ல.
மாறாக, நிறைவாழ்வு. நிலைவாழ்வு அல்லது இறுதிநாளில்
உயிர்ப்பு என்பது மறுவாழ்வைக் குறிப்பது போல தோன்றினாலும்,
அவை மறுவாழ்வைக் குறிப்பதில்லை. மறுவாழ்வு குறித்த சிந்தனை
இன்னும் அதிகமாக வேரூன்றாத சூழலில்தான் யோவான் தன்
நற்செய்தியை எழுதுகின்றார். மேலும், இயேசுவின் இரண்டாம்
வருகை மிக சீக்கிரமாக இருக்கும் என அவர்கள் நம்பினார்கள்.
ஆக, இறுதிநாள் என்பது அந்த இரண்டாம் வருகையின் நாள் (ஒரு
மாதம், இரண்டு மாதங்களுக்குள் நடைபெறும் என்றுதான் அவர்கள்
நினைத்தனர்!). 'நிலைவாழ்வு' என்பதை 'நிறைவாழ்வு' (யோவா
10:10) எனவும் எடுத்துக்கொள்ள முடியாது.
யோவான் கிரேக்க சிந்தனை மற்றும் 'அறிவுவாதம்' (Gnosticism)
கருத்தியலால் அதிகம் கவரப்பட்டவர். அவர்காலத்தில் நிலவிய
கிரேக்க சிந்தனைப்படி மனிதர் என்பவர் உடல் மற்றும்
ஆன்மாவின் கலவை என்று கருதப்பட்டார். ஆக, உடல் அழியக்
கூடியது. ஆன்மா அழியாததது. மனிதர்கள் உடலைச்
சார்ந்தவற்றைத் தேடினால் அவர்கள் அழிவைத் தேடுகிறார்கள்.
ஆன்மா சார்ந்தவற்றைத் தேடினால் அழியாததைத் தேடுகிறார்கள்.
ஆகவேதான், செக்ஸ், குடி, போசனப்பிரியம் மற்றும் விபச்சாரம்
என்று வாழ்ந்தவர்கள் தாழ்வானவர்களாகக் கருதப்பட்டனர்.
இதற்கு மாறாக, அறிவு, புகழ், வெற்றி, கணிதம், ஆராய்ச்சி,
தத்துவம் என தேடியவர்கள் அழியாததைத் தேடியவர்களாகக்
கருதப்பட்டனர். உடல்-ஆன்மா பிளவு யோவான் நற்செய்தியில்
அதிகம் புலப்படுகிறது. இந்த உடல்-ஆன்மா பிளவை யோவான்,
'உலகம்-கடவுள்', 'இரவு-பகல்', 'கீழ்-மேல்' என்ற
சொல்லாடல்கள் வழியாகவும் வெளிப்படுத்துகின்றார். வாழ்வு
பற்றி யோவான் எழுத மற்றொரு காரணம் அவருக்கு யூத விவிலியம்
(அதாவது, நம் முதல் ஏற்பாடு) நன்றாகத் தெரிந்தது.
யூதர்களின் தோரா நூலின் படி மனிதர்களுக்கு இறுதியாக கடவுள்
மோசே வழியாகக் கொடுத்த கட்டளை வாழ்வைத் தேடுங்கள்
என்பதுதான்: 'இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும்
தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன்.
நீயும் உன் வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத்
தேர்ந்துகொள்!' (காண் இச 30:15-20). மனிதர்கள் தேட வேண்டிய
வாழ்வு இயேசுதான் என்று இயேசுவை யூத சட்ட மற்றும்
இறைவாக்கு நூல்களின் நிறைவாக முன்வைக்கின்றார் யோவான்.
இங்கே, யோவான் நற்செய்தியில் வரும் 'எதிர்மறை நேர்கருத்து'
(irony) என்னும் இலக்கியப் பண்பை புரிந்துகொள்வோம். இவ்வகை
இலக்கியப் பண்பில் இரண்டு பேருக்கும் இடையில் உரையாடல்
நடக்கும். அந்த உரையாடலில் ஒருவர் மேல் கோட்டிலும்,
மற்றவர் கீழ் கோட்டிலும் இருப்பார். இந்த உரையாடலை
வாசிக்கும் நபர் இந்த மேல் கோட்டிற்கும், கீழ்
கோட்டிற்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டு உரையாடலின்
அர்த்தத்தைப் புரிந்துகொள்வார். இந்த இலக்கியப் பண்பு
யோவான் நற்செய்தியில் பல இடங்களில் உள்ளன: 'ஒருவர்
மீண்டும் பிறக்க வேண்டும்' என மேல் கோட்டில் பேசுவார்
இயேசு. 'மீண்டும் எப்படி தாய் வயிற்றுக்குள் நுழைந்து
பிறக்க முடியும்' என கீழ்கோட்டில் பேசுவார் நிக்கதேம்
(3:1-8). 'அவர் வாழ்வு தரும் தண்ணீரை உனக்குக் கொடுப்பார்'
என்பார் இயேசு. 'உம்மிடம் வாளி இல்லையே' என்பார் சமாரியப்
பெண் (4:1-42). இந்த நிகழ்வுகளை வாசிக்கும் வாசகர், இந்த
இரண்டு கோட்டு அர்த்தங்களையும் பார்த்து ஒரு நொடி
புன்னகைப்பார். அந்தப் புன்னகையில் உரையாடலின் அர்த்தம்
அவருக்கும் புரிந்துவிடும். இதுதான் இந்த இலக்கியப்
பண்பின் சிறப்பு. இன்றைய நற்செய்தியிலும் இந்த இலக்கியப்
பண்பு இருக்கிறது. 'விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு
நானே' என மேல் கோட்டில் இயேசு சொல்ல, 'இவர் அப்பா - அம்மா
நமக்குத் தெரியுமே' எனக் கீழ் கோட்டில் யூதர்கள்
சொல்கின்றனர். வாசிக்கும் நமக்குப் புரியும் இந்த யூதர்கள்
இயேசுவைப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள் என்று.
இவ்வாறாக, 'எங்களுக்குத் தெரியும்' என்ற அவர்கள்
நிலையிலிருந்து சற்று உயர்த்துகின்றார். 'கடவுள்தாமே
கற்றுத்தருவார்' என்று அவர்கள் தெரிந்திருந்தும், கடவுளின்
கற்றுத்தருதலுக்கு அவர்கள் திறந்த மனம் இல்லாமல்
இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். எசாயா
இறைவாக்கினரின் இறைவாக்கு (54:13) இங்கே மேற்கோள்
காட்டப்பட்டுள்ளது.
இந்தக் கற்றல் யாருக்குச் சாத்தியம்? 'தந்தையால்
ஈர்க்கப்படுபவர்களுக்கே' அது சாத்தியம். கடவுளை
நம்புவதற்கும் கடவுள்தான் அருள்தர வேண்டும். தந்தை
தன்னிடம் ஈர்ப்பது என்பது அவரது கற்றுக்கொடுத்தலில் நிறைவு
பெறுகிறது (யோவா 6:45). இஸ்ரயேல் மக்களை தன் மகனாக, மகளாக
நினைத்து தன்னிடம் அழைக்கின்றார் யாவே இறைவன். யூதர்களின்
பொய்யைத் தோலுரித்துக் காட்டுகின்றார் இயேசு: 'உங்க கடவுள்
உங்களை மகன் என்றார், ஆனால் அந்தக் கடவுளின் மகனை நீங்கள்
ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவர் யோசேப்பின் மகன் என்று
சொல்லித் தப்பிக்கப்பார்க்கிறீர்கள்.' இவ்வாறாக, இயேசுவின்
உடல் பற்றி தெரிந்தவர்களுக்கு, அவர்கள் அறியாத
'விண்ணிலிருந்த உணவு' என்ற சிந்தனையை அவர்களுக்குக்
கற்றுத்தருகின்றார் இயேசு.
இன்றைய இறைவாக்கு வழிபாடு வைக்கும்
வாழ்வியல் சவால்கள் எவை?
நாம் சிலவற்றைத் தெரிந்துவைத்துள்ளோம். சிலவற்றை
மற்றவர்கள் கற்றுத்தருகிறார்கள். அப்படி அவர்கள்
கற்றுக்கொடுக்கும்போது அந்தக் கற்றலை நாம் ஏற்றால்தான் நம்
தெரிதல் வளரும்.
அ. மூன்று நிலைகள்
'சாகப்போகிறேன்,' 'தூங்கப் போகிறேன்,' 'நடக்கப் போகிறேன்'
என்ற நிலையில்தான் கற்றல் நடக்கிறது. 'சாகப்போகிறேன்
மனநிலையில்' கற்றலுக்கு இடமே இல்லை. 'தூங்கப் போகிறேன்
மனநிலையில்' கற்றல் பாதி நடைபெறுகிறது. 'நடக்கப் போகிறேன்
மனநிலையில்தான்' கற்றல் முழுமை அடைகிறது. ஆக, நான் என்
வாழ்வில் இந்த மூன்றில் எந்த நிலையில் இருக்கிறேன்?
எனக்குத் தெரிவதுதான் உலகம் என நான் நினைத்துவிடக்கூடாது.
நாளை நான் புதியவற்றைத் தெரியலாம். எனக்குச் சிந்தனை
மாற்றம் வரலாம். ஆக, ஒன்றை நாம் கேட்டவுடன், உணர்ந்தவுடன்,
'இதுதான் எல்லாம்!' என்ற முடிவுக்கு வந்துவிடாமல்,
நம்பிக்கையோடும், துணிவோடும் காத்திருக்க வேண்டும்.
ஆ. தெரிதல் வாழ்வில் வெளிப்பட வேண்டும்
'தெ ப்ருஃப் ஆஃப் புட்டிங் இஸ் இன் தெ ஈட்டிங்' ('the
proof of pudding is in the eating') என்பார்கள். புட்டு
நன்றாக இருக்கிறது என்றால், அது சாப்பிடுபவருக்கு இனிக்க
வேண்டும். ஆக, எனக்கு வாழ்வில் தெரிதல், அறிதல் இருக்கிறது
என்றால், அந்தத் தெரிதல் என் வாழ்வில் செயல்களாக, என்
பழக்கமாக வெளிப்பட வேண்டும்.
இ. எனக்குத் தெரியாதா?
கற்றுக்கொள்வதற்கு மிகவும் பெரிய தடையாக இருப்பது இதுதான்.
'எனக்குத் தெரியாதா?' என்று நான் சொல்லும்போதே,
கற்றுக்கொடுப்பவர் உள்ளே வந்துவிடாமல் நான் கதவுகளை
அடைத்துவிடுகிறேன். மேலும் இந்த மனநிலை நம் முற்சார்பு
எண்ணங்களே உண்மை என்ற கிட்டப்பார்வைக்கும்
இட்டுச்செல்கின்றன.
இறுதியாக,
'எனக்குத் தெரியாது, பிறருக்கும் தெரியும்' ஜன்னலை நான்
எனக்கும் எனக்கும், எனக்கும் பிறருக்கும், எனக்கும்
இறைவனுக்கும் உள்ள உறவுநிலைகளில் சரி செய்ய, எனக்குத்
தெரிவதிலிருந்து, அடுத்தவரின் கற்றுத்தருதலுக்கு என் மனம்
திறக்க வேண்டும். அப்படி மனம் திறந்தால் என் வாழ்விலும்
சோர்வு, துயரம், முற்சார்பு எண்ணம் மறையும். இவைகள்
மறைந்தால் மகிழ்ச்சி பிறக்கும்.
- அருள்பணி ஏசு கருணாநிதி.
I 1 அரசர்கள் 19: 4-8 II எபேசியர் 4:
305: 2 III யோவான் 6: 41-51
கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்
தருவார்
இங்கிலாந்தைச் சார்ந்த மிகப்பெரிய நற்செய்திப் பணியாளர்
ஜீ.சி. மோர்கன் (G.C. Morgan 1863-1945). கடவுளின்
வார்த்தையை சிறந்த விதமாய்க் கற்பித்த இவருக்கு நான்கு மகன்கள்
இருந்தார்கள். இந்த நான்கு பேருமே தங்கள் தந்தையைப் போன்று
கடவுளின் வார்த்தையை மிகுந்த வல்லமையோடு மக்களுக்குக் கற்பித்து
வந்தார்கள்.
ஒருநாள் செய்தியாளர் ஒருவர் மோர்கனின் நான்காவது மகனான
ஹார்வரிடம், உங்களுடைய தந்தையோடு சேர்த்து உங்களது குடும்பத்தில்
ஐந்து பேர் கடவுளின் வார்த்தையைக் கற்பித்து வருகின்றீர்கள்.
இதில் யார் சிறந்த முறையில் கடவுளின் வார்த்தையைக் கற்பித்து
வருகின்றார் அல்லது உங்களில் யார் சிறந்த போதகர் என்று
நினைக்கிறீர்கள்? என்றார். இதற்கு ஹார்வர்ட் மிகவும் உறுதியான
குரலில், என்னைப் பொறுத்தவரையில், கடவுளின் வார்த்தையை எங்கள்
ஐந்து பேரையும்விட, என் தாய்தான் சிறந்த விதமாய்க் கற்பித்து
வருகின்றார் என்று சொல்வேன். ஏனெனில், அவர்தான் எங்கள் அனைவர்மீதும்
அன்பையும் பாசத்தையும் பொழிந்து வருகின்றார். எங்களுக்குத்
தேவையானதை அவர் தருகின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்
தன் வாழ்வால் எங்களுக்குக் கடவுளின் வார்த்தையைக் கற்பிக்கின்றார்.
அதனால் அவரே எங்கள் எல்லாரையும் விட சிறந்த போதகர் என்றார்.
(தன்) தாய்தான் சிறந்த போதகர், ஆசிரியர். அவரே கடவுளின்
வார்த்தையை மிகச் சிறந்த விதமாய்க் கற்பிக்கின்றவர் என்று
ஹார்வர்ட் சொன்ன வார்த்தைகள் கவனிக்கத் தக்கவை. பொதுக்காலத்தின்
பத்தொன்பதாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை,
கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார் என்ற செய்தியை
நமக்குத் தருகின்றது. கடவுள் நமக்குக் கற்றுத் தருகின்றபொழுது,
அதைக் கேட்கின்ற நமது வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்பதைக்
குறித்து நாம் சிந்திப்போம்.
கற்றுத் தருகின்ற கடவுள்
எல்லாராலும் கற்றுத்தர முடியாது. கற்றுத் தருகின்ற எல்லாராலும்
போதகராக, ஆசிரியராகிவிட முடியாது. கடைப்பிடித்துக் கற்பிக்க
வேண்டும் அவரே சிறந்த போதகர், ஆசிரியர். அப்படிப்பட்டவரே
விண்ணரசில் மிகப்பெரியவர் (மத் 5: 19). யூதர்கள் நடுவில்
கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார் (எசா 54: 13)
என்ற நம்பிக்கை இருந்தது. நற்செய்தியில் இயேசு கிறிஸ்து,
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே! என்று சொன்னபிறகு,
அது எப்படி நம்மோடு இருக்கின்ற ஒருவர் விண்ணகத்திலிருந்து
இறங்கி வந்த உணவாக உணவாக முடியும்... இவன் கடவுளைப் பழிக்கின்றான்
என்று யூதர்கள் இயேசுவுக்கு எதிராக முணுமுணுத்தபோதுதான்,
இயேசு இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறும், கடவுள்தாமே
அனைவருக்கும் கற்றுத் தருவார் என்ற இறைவார்த்தையை
மேற்கோள் காட்டிப் பேசுகின்றார்.
கடவுளைவிடவும் சிறந்த ஆசிரியர் இருக்க முடியாது. ஏனெனில்,
மனிதர்கள் கற்பிப்பது ஒன்றும், கடைப்பிடிப்பது வேறொன்றுமாக
இருக்கும். ஆனால், கடவுள் சொல்லிலும் செயலிலும் வல்லவர்
(லூக் 24: 19) நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகளைக்
கொண்டிருப்பவர் (யோவா 6: 68). அப்படிப்பட்டவர் அனைவருக்கும்
கற்றுத் தருகின்றவர். ஆதலால், அவர் கற்றுத் தருவதற்கு அல்லது
அவரது வார்த்தைக்குச் செவிசாய்க்கின்ற ஒருவர் இயேசுவை இறைமகன்
என்றும், அவர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு என்றும்
ஏற்றுக்கொள்வார். யூதர்கள் இயேசுவை விண்ணகத்திலிருந்து இறங்கி
வந்த உணவாக ஏற்றுக்கொள்ளாததை வைத்துப் பார்க்கும்பொழுது,
அவர்கள் கடவுள் கற்றுத்தந்ததற்குச் செவிசாய்க்க வில்லை என்று
எண்ணத் தோன்றுகின்றது.
கடவுளிடமிருந்து கற்றுக்கொண்டவர் தீமை செய்வதில்லை
கடவுளிடமிருந்து கற்றுக்கொண்ட ஒருவர் இயேசுவை விண்ணகத்திலிருந்து
இறங்கி வந்த உணவு என்று நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது
ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்று பார்த்தோம். அடுத்ததாக,
கடவுளிடமிருந்து கற்றுக்கொண்ட ஒருவர் தீமையை
விட்டுவிடுவேண்டும் என்பதைக் குறித்துச் சிந்திப்போம்.
எபேசியருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், கடவுளின் தூய ஆவியார்க்குத்
துயரம் வருவிக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு, தீமை அனைத்தையும்
உங்களைவிட்டு நீக்குங்கள் என்கிறார். நம்மிடமிருந்து தீமை
அனைத்தையும் விட்டு நீக்குவதற்கும், கடவுளின் தூய ஆவியார்க்குத்
துயரம் வருவிப்பதற்கும் என்ன தொடர்பிருக்கின்றது என்று
தெரிந்துகொள்வது நல்லது. யோவான் நற்செய்தியில் இயேசு தூய
ஆவியரைக் குறித்துப் பேசுகின்றபொழுது, தூய ஆவியாரே உண்மையை
வெளிப்படுத்துபவர் (யோவா 14: 17) என்பார். கடவுளின் தூய ஆவியார்
உண்மையை வெளிப்படுத்துவர் எனில், அல்லது கற்றுத்தருபவர் எனில்,
அவரிடமிருந்து கற்றுக்கொண்ட ஒருவர் தீமையை ஒருபோதும் செய்யமாட்டார்.
அதன்மூலம் அவருக்குத் துயரமும் வருவிக்கமாட்டார்.
அரசர்கள் முதல்நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில்,
இறைவாக்கினர் எலியா பாலைநிலத்தில் பயணம் செய்வதைக்
குறித்துப் படிக்கின்றோம். அவர் ஏன் பாலைநிலத்தில் பயணிக்க
வேண்டும் எனில், ஆகாபு மன்னனும் அவனுடைய மனைவி ஈசபேலும்
பாகால் தெய்வ வழிபாட்டை ஊக்கப்படுத்தியதற்காக, எலியா அவர்களைச்
சாடியதைத் தொடர்ந்து, அவர்கள் அவரைக் கொல்லத் துணிகிறார்கள்.
இதனால் அவர் பாலைநிலத்தில் பயணிக்க வேண்டியதாயிற்று. ஒருவேளை
ஆகாபு மன்னன் ஆண்டவர் கற்றுக்கொடுத்ததற்குச்
செவிசாய்த்திருந்தால், அவன் எலியாவைக் கொல்லத்
துணிந்திருக்கமாட்டேன். இன்னும் பல தீமைகளை அவன்
செய்திருக்க மாட்டான். அவன் கடவுள் கற்றுக்கொடுத்ததற்குச்
செவிசாய்க்காததாலேயே இப்படியெல்லாம் நடந்துகொண்டான். ஆதலால்,
ஆண்டவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டார் எனில், அவர்
தீமையை விட்டுவிடவேண்டும்.
கடவுளிடமிருந்து கற்றுக்கொண்ட ஒருவர் அன்புசெய்து வாழவேண்டும்
கடவுளிடமிருந்து கற்றுக்கொண்ட ஒருவர் தீமையைத் தன்னிடமிருந்து
விட்டொழிப்பது மட்டும் போதுமா என்றால் நிச்சயமாக இல்லை.
மாறாக, அவர் நன்மை செய்து பரிவு அடுத்தவரிடம் காட்டவேண்டும்.
இவையெல்லாவற்றையும் விட ஆண்டவர் இயேசு நம்மீது அன்பு
கூர்ந்துபோல, ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டு வாழவேண்டும்.
இதைப் புனித பவுல், இன்றைய இரண்டாம் வாசகத்தின், இரண்டாவது
பகுதியில் மிக அழகாக விளக்குகின்றார்.
இன்றைக்குப் பலர் கடவுள் தன் அடியார்கள் வழியாகக் கற்றுத்தருவதைக்
கேட்பதற்குத் தயாராக இல்லை. கற்றுத்தருவதைக் கேட்டாலும்,
அதன்படி வாழத் தயாராக இல்லை. எவர் ஒருவர் கடவுள் கற்றுத்தருவதற்குச்
செவி சாய்க்கின்றாரோ, அவர் இயேசுவை விண்ணகத்திலிருந்து இறங்கி
வந்த உணவாகவும், இறைமகனாகவும் ஏற்றுக்கொள்வார். மட்டுமல்லாமல்,
அவர் தன்னிடம் இருக்கின்ற தீமைகள் அனைத்தையும்
விட்டொழித்து, ஒருவர் மற்றவரை அன்பு செய்வார். எனவே, நாம்
கடவுள் கற்றுத்தருவதற்குச் செவிசாய்த்து, இயேசுவை விண்ணகத்திலிருந்து
இறங்கி வந்த வாழ்வளிக்கும் உணவாக ஏற்று, தீமையை
விட்டொழித்து, நன்மை செய்வோம்; ஆண்டவர் நம்மை அன்பு செய்தது
போன்று ஒருவர் மற்றவரை அன்புசெய்து, அவரது அன்பிற்குச்
சாட்சிகளாத் திகழ்வோம்.
சிந்தனை:
உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத் தாரும் (திபா 119:
29) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் கடவுளிடம்
அவரது திருச்சட்டத்தை நமக்குக் கற்றுத் தரக்கேட்போம்; அவர்
கற்றுத் தந்ததன்படி, நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டு
வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
ஒரு குகையிலே வாழ்ந்த ஒரு ஞானி சாகாமைக்கு மருந்து கண்டு
பிடித்திருப்பதாகவும், அதைப் பெற விரும்புவோர் குறிப்பிட்ட
ஓர் இடத்தில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து
கூடும்படியும் விளம்பரம் செய்தார். கடல் அலையென ஏராளமான மக்கள்
வந்து குவிந்தார்கள். ஞானியார் வந்தவுடன், மக்கள் பரபரப்போடு
அவர் சொல்வதைக் கேட்க ஆவலோடு இருந்தார்கள். மக்கள் கூட்டத்தைப்
பார்த்து நீங்கள் இறவாமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள்
பிறவாமல் இருந்திருக்க வேண்டும் என்றார். வந்தவர்கள் அனைவரும்
வெட்கத்தால் தலைகுனிந்து வீடு திரும்பினார்கள்.
அருமையான சகோதரனே! சகோதரியே! சாகாமைக்கு மருந்து இல்லை. பிறப்பு
ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று வந்தே தீரும். இது இயற்கையின்
நியதி. காலத்தின் கட்டாயம். ஆனால் இயேசு கிறிஸ்து
சாகாமைக்கு மூன்று வகையான மருந்துகளை வழங்குகிறார். இந்த
மூன்றையும் நமதாக்கிக் கொண்டால் நாம் நிலை வாழ்வு
பெறுவோம். சாவு நம்மைப் பாதிக்காது.
சாகாமைக்கு இயேசு வழங்கும் முதல் மருந்து என்ன? அவரில் நம்பிக்கை
கொள்வதாகும். இன்றைய நற்செய்தியிலே என்னை நம்புவோர் நிலை
வாழ்வைக் கொண்டுள்ளனர் (யோவா. 6:47). மேலும் வாசரை உயிர்த்தெழச்
செய்யும் முன் மார்த்தாவிடம் சொன்னார் : உயிர்த்தெழுதலும்
வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே
சாகமாட்டார் (யோவா. 11:25-26).
சாகாமைக்கு இயேசு வழங்கும் இரண்டாவது மருந்து
அவருடைய வார்த்தையைக் கடைப்பிடித்தலாகும்.
என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்
(யோவா. 8:51) என்று இயேசு கூறுகின்றார். நான் கூறிய
வார்த்தைகள் ஆவியும் உயிரும் ஆகும் (யோவா. 6:63) என்கிறார்.
நாங்கள் யாரிடம் செல்வோம்? வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்
தானே உள்ளன. (யோவா. 6:68).
சாகாமைக்கு இயேசு வழங்கும் மூன்றாவது மருந்து
அவருடைய திருவுடலாகும். இன்றைய நற்செய்தியில் வாழ்வு தரும்
உணவு நானே! இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே
வாழ்வார் (யோவா. 6:51).
பகுதி - II
ஆண்டவருடைய அருள் வாக்கைக் கேட்டு அதைச் சுவைத்த பின்னரே
ஆண்டவருடைய திருவுடலாகிய நற்கருணையை உட்கொள்வது
முறையாகும். எனவேதான் ஒவ்வொரு திருப்பலியிலும் அருள்வாக்கு
வழிபாடு முதல் பகுதியாகவும் - நற்கருணை வழிபாடு இரண்டாம்
பகுதியாகவும் அமைந்துள்ளன. இந்த நற்கருணையானது இறைவனின்
திருப்பிரசன்னம், ஒரு திருப்பலி, அதோடு ஒரு திருவுணவு என்ற
மூன்று முக்கிய பரிமாணங்களை உள்ளடக்கியது.
இன்றைய முதல் வாசகத்தைப் பாருங்கள் (1 அரச 19:4-8)
எலியா தீர்க்கதரிசி மனச்சோர்வினால் சாக விரும்புகிறார். இருப்பதைவிட
இறப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்து உறங்கும் வேளையில்
வானதூதர் இரண்டு முறை அவரைத் தட்டி எழுப்பி எழுந்து
சாப்பிடு என்று கூறி அப்பமும் தண்ணீரும் கொடுக்கிறார். எலியா
அந்த உணவினால் வலிமைப் பெற்று நாற்பது நாட்கள் நடந்து ஒரேபு
என்ற கடவுளின் மலையை அடைகிறார். எலியாவுக்கு உணவு தேவைப்பட்டது
போல் பயணம் செய்யும் திருச்சபையில் இருக்கும் நமக்கும் உணவு
தேவைப்படுகிறது. நமது வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு ஏற்படும்
இளைப்பு, களைப்பு, ஏக்கம், மனச் சோர்வை நீக்க ஆண்டவர் நமக்கு
வழங்கும் பயண உணவு அவருடைய அருள்வாக்கும் அவரது திருவுடலுமாகும்.
இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க இயலாத வகையில்
இணைந்துள்ளது.
உம் சொற்கள், என் நாவுக்கு எத்துணை இனிமையானவை. என்
வாய்க்குத் தேனினும் இனிமையானவை (தி. பாடல் 119:103) என்று
திருப்பாடல் ஆசிரியர் பாடுகிறார்.
ஆண்டவர் எவ்வளவு இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள் (தி.
பா. 34:8) என்றும் பாடுகிறார் திருப்பாடல் ஆசிரியர்.
எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்களுக்கு உயிர்த்த ஆண்டவர்
கொடுத்தது முதலில் அருள்வாக்கு, மறைநூலை விளக்கினார். அதன்
பின்னரே அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தார். அவர்கள் இயேசுவைக்
கண்டு கொண்டார்கள் (லூக். 24:25-31).
முடிவுரை:
இயேசுவை நாம் உண்டால் மட்டும் போதாது. நாம் இயேசுவாக மாற
வேண்டும். என்னை உண்போர் என்னால் வாழ்வர் (யோவா. 6:57) என்ற
வார்த்தை அந்த உண்மையை உணர்த்துகிறது. வாழ்வது நானல்ல. இயேசுவே
என்னில் வாழ்கிறார் (கலாத். 2:20) என்று கூற வேண்டும். இயேசுவாக
மாறுவது என்றால் மனக்கசப்பு, சீற்றம், சினம், கடுஞ்சொல் ,
தீயவை தவிர்த்து பிறர்பால் பரிவு காட்டி மன்னித்து வாழ அழைக்கப்படுகிறோம்.
இயேசு விரும்பிய இறையாட்சியை நாம் வாழும் இம்மண்ணில் இப்போதே
மலரச் செய்ய நாம் இயேசுவாக மாற வேண்டும். இதற்குத் துணையாக
இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு, அவர் தந்த அருள்வாக்கைக் கடைப்பிடித்து,
அவரது திருவுடலை உண்டு, சாகா வரம் பெற்றவர்களாக நாம்
வாழ்வோம்.
ஆப்பிரிக்கா கண்டத்தில் வாழும் ஒருவகையான காட்டுப்பூனைகளுக்கும்,
காடுகளில் வாழும் நஞ்சு நிறைந்த பாம்புகளுக்குமிடையே அடிக்கடி
சண்டை நடக்கும். எப்பொழுதெல்லாம் சண்டை நடக்கின்றதோ அப்பொழுதெல்லாம்
காட்டுப்பூனைகள் வெற்றி பெறும்.
தன்னை பாம்பு கடித்துவிட்டால், பூனை உடனே ஓடிப்போய் ஒரு
குறிப்பிட்ட புல்லின் மீது புரளும். அந்தப் புல் அந்தப்
பூனையின் மீது பட்ட காயத்தின் வழியாக நஞ்சை உறிஞ்சி எடுத்துவிடும்;
பூனை பிழைத்துக்கொள்ளும். போரிலே வெற்றிபெறும் வரை, காயப்படும்போதெல்லாம்,
பூனை புல்லைப் பயன்படுத்திக்கொள்ளும்.
பல நேரங்களில் நம்மையே நாம் காயப்படுத்திக்கொள்கின்றோம்;
அல்லது மற்றவர்களால் காயப்படுத்தப்படுகின்றோம். இப்படி காயப்படும்போது
அந்தக் காயங்களால் ஏற்படும் வலியிலிருந்து. பாதிப்புகளிலிருந்து
விடுதலை அடைய ஓர் அருமையான வழி, இனி வாழ்பவன் நானல்ல ;
கிறிஸ்துவே என்னில் வாழ்கின்றார் (கலா 2:20) என்று கூறிய
புனித பவுலடிகளாரைப் போல நற்கருணை ஆண்டவரோடு ஐக்கியமாவதாகும்.
நற்கருணை ஆண்டவர் ஓர் அற்புத மருந்து, மூலிகை. அன்று பாலை
நிலத்தில் கிடைத்த உணவு (முதல் வாசகம்) மக்களின் உடல் பசியை
மட்டும்தான் தீர்த்தது. ஆனால் நம்மை எல்லா விதமான பாதிப்புகளிலிருந்தும்
காக்கும் ஆற்றல் இயேசுவின் உடலுக்கு உண்டு (யோவா 2:1-11,
மத் 9:27-31, லூக் 7:36-50, மாற் 1:21-28, யோவா 11:1-44).
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடிகளார் காட்டும்
வழியில் நம்மை நடக்க வைக்கும் சக்தி நற்கருணைக்கு உண்டு.
மேலும் அறிவோம் :
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின் குறள்; 217
பொருள் : உலக நலம் பேணும் பெருந்தகையாளனிடம் செல்வம் திரளுமானால்,
அது பூ, இலை, தளிர், காய், கனி, வேர், பட்டை ஆகிய அனைத்து
உறுப்புகளாலும் பிணி போக்கும் மருந்து மரத்துக்கு இணையானதாகும்.
பழங்காலத்தில் வாழ்ந்த ஒரு ஞானி, சாகாமைக்கு அவர் மருந்து
கண்டுபிடித்திருப்பதாகவும், அதைப் பெற விரும்புவோர்
குறிப்பிட்ட ஒரு வளாகத்தில், குறிப்பிட்ட நாளில்,
குறிப்பிட்ட நேரத்தில் வரும்படியும் விளம்பரம் செய்தார்.
கடல் அலையென பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து குவிந்தனர்,
ஞானியார் அவர்களைப் பார்த்து, நீங்கள் இறவாமல் இருக்க
வேண்டு மென்றால், நீங்கள் பிறவாமல் இருந்திருக்க வேண்டும்"
என்றார். வந்தவர்கள் அனைவரும் வெட்கத்தால் தலை குனிந்து
விடு திரும்பினர்.
சாகாமைக்கு மருந்து இல்லை. பிறப்பு என்று ஒன்றிருந்தால்
இறப்பு என்று ஒன்று இருந்தே தீரும். இது இயற்கையின் நியதி;
காலத்தின் கட்டாயம். ஆனால் இயேசு கிறிஸ்து சாகாமைக்கு மூவகையான
மருந்தை நமக்கு வழங்குகிறார். இம்மூன்றையும் இணைத்துச்
சாப்பிட்டால் நாம் நிலை வாழ்வு பெறுவோம்; சாவு நம்மைப்
பாதிக்காது.
சாகாமைக்கு இயேசு வழங்கும் முதல் மருத்து: அவரில் நம்பிக்கை
கொள்வதாகும். இன்றைய நற்செய்தியில், என்னை நம்புவோம் நிலை)
வாழ்வைக் கொண்டுள்ளனர்" (யோவா 6:47) எனகிறார். மேலும், இலாசரை
உயிர்த்தெழச் செய்யுமுன் மாத்தாவிடம், *உயிர்த்தெழுதலும்
வாழ்வும் நானே. . . என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே
சாகமாட்டார்" (யோவா 11:25 28) என்று திட்டவட்டமாகக்
கூறினார்.
சாகாமைக்கு இயேசு வழங்கும் இரண்டாவது மருந்து: அவருடைய
வார்த்தையைக் கடைப்பிடித்தலாகும். "என் வார்த்தையைக் கடையிடிப்போர்
என்றுமே சாக மாட்டார்கள" (யோவா 3:51).
சாகாமைக்கு இயேசு வழங்கும் மூன்றாவது மருந்து: அவருடைய
திருவுடலாகும், இன்றைய நற்செய்தியில், வாழ்வு தரும் உணவு
நானே ... உண்பவரை இறக்காமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து
இறங்கி வந்த இந்த உணவே" (யோவா 6:48 - 50) என்று இயேசு
சுட்டிக் காட்டுகிறார்,
நற்கருணையை உட்கொள்ளுமுன் கிறிஸ்துவை நம்பி, அவருடைய
வார்த்தையைக் கடைப்பிடிக்க வேண்டும். கிறிஸ்துவை நம்பி,
அவருடைய வார்த்தையைக் கடைப்பிடிப்பதின் உச்சக் கட்டமே நற்கருணையை
உட்கொள்வதாகும். கிறிஸ்துவின் வார்த்தைக்கு மதிப்புக்
கொடுக்காமல், அவருடைய திருவுடலுக்கு மட்டும் மதிப்புக்
கொடுத்தால் போதுமா? என்று உண்மையையே பேசுபவர் (2 கொரி
1:19). அவர் நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் (எபி
13:8). உண்மையும் நம்பிக்கையும் உடைய அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதும்
உண்மையும் நம்பிக்கையும் பற்றுறுதியுமாகும்.
கடவுளிடம் நாம் எவ்வாறு பற்றுறுதியுள்ளவர்களாக இருக்க
வேண்டும் என்பதற்கு இன்றைய முதல் வாசகத்தில் யோசுவாவும்,
நற்செய்தியில் பேதுருவும் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகத்
திகழ்கின்றனர்.
இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளுக்கு ஊழியம் புரிந்தாலும்
பிற இனத்தெய்வங்களையும் வழிபட்டு, இருமனத்தோராய் திகழ்ந்தனர்.
இந்நிலையில் யோசுவா அம்மக்களிடம், "நானும் கால் வீட்டாரும்
ஆண்டவருக்கே கோழியம் புரிவோம்" (யோசு 24:15) என்று திட்டவட்டமாகக்
கூறினார். அவ்வாறே, எல்லாரும் இயேசுவை விட்டுச் சென்ற கட்டத்திலும்
பேதுரு இயேசுவிடம், "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலை
வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" (யோவா
6:67) என்று திண்ணமாக அறிக்கையிடுகிறார். ஒருவருக்குக்
கேடுகாலம் வருவதும் ஒருவிதத்தில் நல்லது; ஏனெனில் அப்போதுதான்
அவருடைய உண்மையான நண்பர்கள் யார் என்பதை இனம் காண முடியும்
என்கிறார் வள்ளுவர்,
கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைநரை
நீட்டி அளப்பதோர் கோல் (குறள் 796)
குளத்தில் தண்ணீர் இருக்கும்போதுதான் அதில் கொக்கும்
மீனும் இருக்கும். தண்ணீர் வற்றி வறண்டு விட்டால் பறவைகள்
வேறிடத்திற்குப் பறந்து போய்விடும். மாறாக, அக்குளத்திலுள்ள
செடிகொடிகன் அக்குளத்திலேயே இருந்து அதிலேயே மாண்டுவிடும்.
இன்பத்தில் நட்புரிமை கொண்டாடி துன்பத்தில் காலை வாரிவிடுபவர்கள்
நண்பர்கள் அல்ல. நயவஞ்சகர்கள்.
ஓர் உண்மைக் காதலன் தன் காதலியிடம், "நீ மாலையானால் நான்
அதில் மலராவேன். நீ பாலையானால் நான் அதில் மணலா வேன்" என்கிறான்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள
உறவு கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையேயுள்ள பிரிக்க
முடி யாத உறவு என்பதை விளக்குகிறார் புனித பவுல். இன்பத்திலும்
துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் வெட்டிப்
பிரித்தாலும் விட்டுப் பிரியாமல் இருப்பவர்களே உண்மையான தம்பதியர்.
அவ்வாறே இயேசுவுக்கும் அவருடைய அன்பின் அருள் அடையாளமாகிய
நற்கருணைக்கும் நாம் என்றும் உண்மையுள்ளவர்களாக இருக்க
வேண்டும்.
யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான், அவனுக்கு இயேசுவின்
மீதோ நற்கருணை மீதோ உண்மையான பற்றுறுதி இல்லை. நற்கருணை பற்றி
இயேசு கொடுத்த விளக்கத்தின் இறுதியில் அவர் யூதாசை "அலகை"
என்று அழைத்தார் (யோவா 6:70). இயேசுவின் இறுதி உணவின்போது
அவளுக்குள் அலகை நுழைந்தது: நற்கருணையில் பங்கேற்காமல் அலகை
அவனை இருளில் அழைத்துச் சென்றது (யோவா 13:27-30).
யூதாசு நமக்கெல்லாம் ஓர் எச்சரிக்கை, இன்றும் கத்தோலிக்கக்
கிறிஸ்துவர்களில் சிலர் நற்கருணையை விட்டு விலகிப்
பிரிவினை சபைகளுக்குச் செல்கின்றனர், அவர்கள் மீண்டும் நற்கருணையிடம்
திரும்பி வருவது அரிது.
ஒரு பெண்மணியிடம் பிரிவினை சபையினர், "நீங்கள் எங்கள் சபைக்கு
வாருங்கள். உங்களின் தீராத நோயை எடுத்துவிடுகிறோம்" என்று
அழைத்தனர். அப்பெண்மணியோ, "நற்கருணை ஆண்டவர் என்னைக் குணப்படுத்தாவிட்டால்,
வேறு எந்த சபைக்கும் போக, நான் தயாராக இல்லை " என்று உறுதிபடக்
கூறினார், சுண்டல் கொடுக்கிற கோவில்களுக்கெல்லாம் ஒடும்
சிறு பிள்ளைகளைப்போல், இங்கும் அங்குமாகப் புற்றீசல்போல்
பலுகிவரும் பிரிவினை சபைகளுக்கு ஒடும் இழிநிலையைக் கைவிட
வேண்டும். அல்கையின் வஞ்சக வலையில் வீழ்ந்து நம் ஆன்மாவை
இழக்கக் கூடாது.
எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்களுக்கு அப்பத்தைப் பிட்டுக்
கொடுத்து, தம்மை அவர்களுக்கு அடையாளம் காட்டிய உயிர்த்த ஆண்டவர்.
அவர்கள் கண்கள் திறந்தவுடன் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார்,
ஏன்? இனிமேல் இயேசுவின் இரண்டாம் வருகைவரை, அவரை நாம் அப்பம்
பிடுவதில், அதாவது நற்கருணைக் கொண்டாட்டத்தில் காண
வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாகும். இயேசுவின்
விருப்பத்தை ஏற்காதவர்கள் இயேசுவின் சீடர்கள் அல்ல. அவர்கள்
யாரோ? யான் அறியேன் பராபரமே!
ஜெர்மனி நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் ஒரு
விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளச் சென்றார்கள். அவர்கள்
பயணம் செய்த விமானம் பனிமலை ஒன்றில் விபத்துக்குள்ளானது.
ஏழு பேர் இருந்த அந்த விமானத்தில் ஐந்துபேர் இறந்துவிட்டனர்.
இருவர் உயிர் தப்பினர். இந்த விமானம் எங்கு விழுந்து
நொறுங்கியது என்பதை இரண்டு மாதங்களுக்குப் பின்தான் ஜெர்மனி
அரசால் கண்டுபிடிக்க முடிந்தது. பிறகு உயிரோடிருந்த இரண்டு
பேரையும் மீட்டு நாட்டுக்கு அழைத்துச் சென்றபோது பலர் இவர்களை
நாட்டுக்குள் நுழையவிடக்கூடாது என்றார்கள். காரணம் இந்த
இரண்டு மாதங்களும் அவர்கள் உணவு கிடைக்காத நிலையில் தங்களோடு
இருந்து இறந்துபோன தங்கள் நண்பர்கள் ஐவரின் உடலையும்
தின்று தங்கள் உயிரைத் தக்கவைத்துக் கொண்டிருந்தனர். மனித
இறைச்சியை உண்ட இவர்களை எப்படி நாட்டு மக்களாக ஏற்றுக்
கொள்வது என்பதுதான் பிரச்சனை.
' இந்தச் சூழ்நிலையில் இறந்துபோன வீரர்களின் பெற்றோர்கள் *
ஒன்றிணைந்து ஓர் அறிக்கை விட்டனர். அதில் இறந்துபோன எங்கள்
பிள்ளைகளை நாங்கள் இந்த உயிரோடு இருக்கும் விளையாட்டு வீர்களில்
காண்கிறோம். எங்கள் பிள்ளைகள் இவர்களில் உயிர் வாழ்வதாகக்
கருதுகிறோம் என்று சொன்னதும் மக்கள் அந்த விளையாட்டு வீரர்களை
ஏற்றுக் கொண்டார்களாம்.
இங்கே மனித இறைச்சியை உண்டு அதனால் இறக்காமல் உயிர்வாழ்ந்த
ஒரு நிகழ்வைப் பார்க்கின்றோம். ஆனால் வரலாற்றில் அந்த
விளையாட்டு வீரர்கள் இறப்பது உறுதி. இயேசு இன்றைய நற்செய்தியில்
வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர்
என்றுமே வாழ்வார்'' (யோ. 6:51) என்று அழுத்தமாகக்
சொல்கிறார். வழக்கமான முணுமுணுப்பு., எனினும் தன் உடல்
சாகா வரம் தரும் உணவு என்கிறார் இயேசு.
சாகா வரம் தரும் உணவு என்றால் என்ன பொருள்? நற்கருணை அருந்துபவர்கள்
எல்லாரும் இந்த உடலில் சாகமாட்டார்கள் என்றா பொருள்? "உங்கள்
முன்னோர்கள் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.
உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து
இறங்கி வந்த இந்த உணவே" (யோ. 6:49, 50). உங்கள் முன்னோர்கள்
மன்னாவை உண்டனர். ஆயினும் இறந்தார்கள். அதாவது மன்னாவை உண்டும்
தங்கள் இலக்கான வாக்களிக்கப்பட்ட நாட்டினுள் நுழையவில்லை.
மோசே உள்பட எவருக்கும் அந்தப் பேறு கிட்டவில்லை. ஆனால் இயேசுவை
உண்பவர்கள் இலக்கை அடைவார்கள்.
வாழ்க்கை என்பது இலக்கு நோக்கிய பயணம். அப்படியானால் பயணத்தின்
இலக்கு எது? பயணத்தின் தன்மை என்ன? பயணத்துக்கு வலிமை தருவது
எது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தருகிறது இன்றைய
வழிபாடு.
1. பயண இலக்கு. விண்ணகம் நோக்கியது நம் வாழ்க்கைப் பயணம்.
"நிலையான நகர் நமக்கு இங்கு இல்லை. வரப்போகும் நகரையே நாம்
நாடிச் செல்கிறோம் " (எபி. 13:!4). இவ்வுலகில் நாம்
வழிப்போக்கர்களே!முதல் வாசகத்தில் வரும் இறைவாக்கினர் எலியாவின்
பயணம் மனித வாழ்க்கைப் பயணத்தின் ஒரு முன்னடையாளமே! அவர்
எங்கே போகிறார்? ஒரேபு மலையை நோக்கி, அதாவது சீனாய் மலை
நோக்கி. அங்குதானே மோசே கடவுளைச் சந்தித்தார்!
பொதுவாக மலைகள் கடவுளின் உறைவிடமாகவே கருதப்படுகின்றன.
குன்றுதோறும் குடியிருக்கும் குமரா என்றுதானே பிற சமயத்தினர்
கூடத் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். ஒரேப் மலையை
நோக்கி எலியா செல்கிறார் என்றால் கடவுளை நோக்கிப் பயணிக்கிறார்
என்று பொருள். நமக்கும் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கு கடவுளே!
'ஆடி அடங்கும் வாழ்க்கை ஆறடிக் குழிக்குள்ளே' என்று நாம்
வாழக்கூடாது. ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ' என்று விரக்திக்
கீதம் பாடக்கூடாது. இதையே இயேசு நற்செய்தியில் "நிலை
வாழ்வு" என்று குறிப்பிடுகிறார். இயேசுவை உண்பவர்கள் இலக்கை
அடைவார்கள்.
2. பயணத்தின் தன்மை. அது பாலைவனப்பாதை. இறைவாக்கினர் எலியா
தன் உயிரைக் காத்துக் கொள்ள மேற்கொண்ட சாவுப்பயணம். எதிர்ப்புக்களையும்
இடற்பாடுகளையும் இழிவுகளையும் ஏளனங்களையும் எதிர்கொள்ள
மனவலிமை இழந்த விரக்திப் பயணம். இறைவனை அடையக்கூட இறைவனின்
அருள் வேண்டும். சொந்த முயற்சியாலும் முனைப்பாலும் சொர்க்கத்துக்கான
கோபுரம் கட்ட முயன்றவர்களின் கதி (தொ.நூ. 11) நாம் அறிந்ததுதானே!இயேசுவே
நம் வழி. "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாயன்றி
எவரும் தந்தையிடம் வருவதில்லை " (யோ. 14:6).
நாம் நமக்காக மட்டும் படைக்கப்படவில்லை. இறைவனுக்காகவும்
நாம் சார்ந்த சமுதாயத்திற்காகவும் படைக்கப்பட்டுள்ளோம். ஆற்ற
வேண்டிய கடமைகள் நிறைய உண்டு. எனவே "எழுந்து சாப்பிடு. ஏனெனில்
நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்'' என்று வானதூதர் அப்பமும்
தண்ணீரும் கொடுக்க "அவ்வுணவினால் வலிமை அடைந்த எலியா நாற்பது
பகலும் நாற்பது இரவும் நடந்து ஒரேபு என்ற கடவுளின் மலையை
அடைந்தார்" (1 அரசர் 19:7-8).
3. பயணத்துக்கான வலிமை. வாழத் தேவையான வலிமையையும் நம்பிக்கையையும்
தருவது. நோயில் பூசுதலில் "வழி உணவைப் பெற்றுக் கொள்" என்று
சொல்லி நற்கருணை வழங்கப்படுகிறது. அது வழி உணவு மட்டுமல்ல.
பயண முடிவில் உயிர்ப்பின் உறுதிப்பாடு மகிமையின் அச்சாரம்.
"எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலை
வாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதிநாளில் உயிர்த்தெழச்
செய்வேன்" (யோ. 6:54).
புனித பிரான்சிஸ் சலேசியார் கூறுவார்: "வலிமை வாய்ந்தோர்
(புனித வாழ்வு நடத்துவோர்) வலிமை இழக்காமல் இருக்கவும். வலிமையற்றோர்
(ஆன்ம வாழ்வில் பலவீனர்கள்) வலிமை பெறவும் அடிக்கடி நற்கருணை
உட்கொள்ள வேண்டும்". இறைவாக்கினர் எலியாவுக்கும் உணவுக்கும்
நெருங்கிய தொடர்பு உண்டு. நற்கருணைக்கு முன்னோடி நிகழ்வுகள்
அவை கடவுளே நேரடியாக இருமுறை எலியாவுக்கு உணவளிக்கிறார்.
1. யோர்தானுக்கு அப்பால் கெரீத்து என்ற ஓடைக்கருகில் காகங்கள்
வழியாக அப்பமும் இறைச்சியும் (1 அர. 17:6).
2. சூரைச் செடியின் கீழ் தளர்ந்து படுத்திருந்த போது வான
தூதர் வழியாக அப்பமும் தண்ணீரும் (1 அர. 19:7-8).
எலியா தாமே வல்லமையோடு உணவு வழங்குவது இருமுறை.
1. சாரிபாத் கைம்பெண்ணின் வீட்டில் அள்ள அள்ள அமுத சுரபி
போல (1 அர. 17:14).
2. குகைகளில் தங்க வைக்கப்பட்ட இறைவாக்கினர் நூறு பேருக்கு
(1 அர. 18:4).
பயணத்தின் இலக்கும் இயேசுவே. பயணத்தில் வழி நடத்துபவரும்
அவரே. வலிமையாக இருப்பவரும் அவரே.
சாகாமைக்கு ஒரே மருந்து பிறவாமை. பிறப்பு என்ற ஒன்று இருந்தால்
இறப்பு என்ற ஒன்று இருந்தே தீரும். இது இயற்கையின் நியதி.
ஆனால் இயேசு சாகாமைக்கு மூன்று வகையான மருந்தை வழங்குகிறார்.
மருந்து1: இயேசுவில் நம்பிக்கை கொள்வதாகும். "என்னை நம்புவோர்
நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்" (யோ. 6 : 47).
மருந்து2: இறைவார்த்தையைக் கடைப்பிடித்தலாகும். "என்
வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள்" (யோ
. 8: 51).
மருந்து3: இயேசுவின் திருஉடலை உண்பதாகும். "உண்பவரை இறவாமல்
இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த
உணவே" (யோ. 6 : 50).
அருள்பணி: இ லூர்து ராஜ்
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
வன்முறையை விரும்பும் ஒரே உயிரினம் - மனிதர்கள்
சென்ற வார ஞாயிறு சிந்தனையில் நாம் எண்ணிப்பார்த்த ஒரு
குறும்படத்தை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். இரு
சிறுத்தைகளும், ஒரு மானும் இணைந்து விளையாடும் அழகை,
அந்தப் படம் வெளிக்கொணர்ந்தது. அந்த குறும்படத்தின்
இறுதியில் திரையில் தோன்றும் சொற்கள், இன்றைய நம்
சிந்தனைகளை ஆரம்பித்து வைக்கின்றன. "மிருகங்களுக்குப்
பசியில்லாதபோது, வன்முறையும் இல்லை. மனிதர்கள் மட்டும் ஏன்
காரணம் ஏதுமின்றி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்?" என்ற
கேள்வியுடன் அந்தக் குறும்படம் முடிவுற்றது.
பசியையும், வன்முறையையும் இணைக்கும் இந்தக் கேள்விக்கு,
எளிதான விடைகள் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதிலும் குறிப்பாக, நாம் வாழும் இன்றைய உலகில், காரணம்
ஏதுமின்றி வெடிக்கும் வன்முறைகளால், அப்பாவி மக்கள்
கொல்லப்படுவதையும், குழந்தைகள், குறிப்பாக, பெண்
குழந்தைகள் துன்புறுவதையும் காணும்போது, வன்முறைகளுக்கு
முடிவே கிடையாதா என்ற விரக்திக்கு நாம் அடிக்கடி
தள்ளப்படுவதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மனிதர்களுக்குப் பசி வந்தால், பத்து பண்புகள் பறந்து
போய்விடும் என்பதை, தமிழ் மூதறிஞர் ஔவைப்பாட்டி சொல்லிச்
சென்றார். மானம், குலப்பெருமை, கற்ற கல்வி, அழகிய தோற்றம்,
பகுத்தறிந்து பார்க்கும் அறிவு, தானம் செய்வதால் வரும்
புகழ், தவம் மேற்கொள்ளும் ஆற்றல், முன்னேற்றம்,
விடாமுயற்சி, பெண்மீது கொள்ளும் காதல் உணர்வு ஆகிய பத்து
பண்புகளும், பசியால் வாடும் ஒருவரிடமிருந்து ஓடிவிடும்
என்பதை 'நல்வழிப்பாடல்' என்ற தொகுப்பில்
பட்டியலிட்டுள்ளார், ஔவைப்பாட்டி.
அவர் இங்கு 'பசி' என்று குறிப்பிடுவது, நமது வயிற்றுப்
பசி. உடல் தொடர்புடைய இந்தப் பசி, நமக்கும், ஏனைய
உயிரினங்களுக்கும் பொதுவானது. ஆனால், அதைத் தாண்டி,
மனிதர்கள் மட்டும் அறிவுப்பசி, அதிகாரப்பசி, ஆணவப்பசி,
ஆசைப்பசி, காமப்பசி, கோபப்பசி என்று, வேறு பல
வடிவங்களிலும் 'பசி'யால் வாடுகின்றனர். வயிற்றை வாட்டும்
பசி என்றால், அதை உணவைக்கொண்டு தீர்த்துவிடலாம். ஆனால்,
நமது மனதையும் அறிவையும் வாட்டும் வேறு பல பசிகளை,
தீர்க்கும் வழியறியாது தவிக்கும்போது, வன்முறை என்ற வழியை
தெரிவு செய்கிறோம்.
கடந்த இரு ஞாயிறு வழிபாடுகளில், பசியையும், உணவையும்
இணைக்கும் விவிலியப் பகுதிகளைச் சிந்தித்து வந்துள்ளோம்.
இன்று, மூன்றாவது வாரமாக, பசியும், உணவும் நம் சிந்தனைகளை
மீண்டும் நிறைக்கின்றன. இந்த வாசகங்களில், வயிற்றுப்பசி,
உணவளித்தல் என்ற கருத்துக்கள் மையமாகக் காணப்பட்டாலும்,
இவற்றைச் சிறிது ஆழமாக அலசும்போது, மனிதர்களை
ஆட்டிப்படைக்கும் பல்வேறு பசிகள், இந்த வாசகங்களில்
வெளிப்படுவதையும் நாம் உணரலாம்.
எடுத்துக்காட்டாக:
பாலைநிலத்தில் அமர்ந்து, தாம் சாகவேண்டுமென்று மன்றாடிய
இறைவாக்கினர் எலியாவுக்கு, வானதூதர் உணவளிக்கும் நிகழ்வு,
இன்றைய முதல் வாசகமாகத் தரப்பட்டுள்ளது (1அர.19:4-8).
இப்பகுதியை மேலோட்டமாக சிந்திக்கும்போது, பசித்திருந்த
இறைவாக்கினருக்கு வானதூதர் உணவளித்தார் என்ற அளவில் நமது
சிந்தனைகள் நின்றுபோக வாய்ப்புண்டு. ஆனால், எலியா ஏன் பாலை
நிலத்திற்குச் சென்றார் என்பதை சிந்திக்கும்போது, இந்த
நிகழ்வில் புதைந்திருக்கும் வேறுவகையானப் பசிகளும், அவை
உருவாக்கும் வெறிகளும் வெளிப்படுகின்றன.
இஸ்ரயேல் அரசன் ஆகாபுவின் மனைவி ஈசபேல், எலியாவைக்
கொல்லும் வெறியில் பசியில் - இருந்ததால், எலியா, பாலை
நிலத்திற்கு ஓட வேண்டியதாயிற்று. அரசி ஈசபேல் வணங்கிவந்த
பாகால் தெய்வம், பொய்யான தெய்வம் என்பதை, இறைவாக்கினர்
எலியா, அரசருக்கும், மக்களுக்கும் உணர்த்தியதால், ஈசபேல்,
எலியாவைக் கொல்லும் வெறி கொண்டார்.
தெய்வ வழிபாடு என்பது, மனிதர்கள் மேற்கொள்ளும் ஓர் உன்னத
முயற்சி. ஆனால், உண்மை தெய்வங்களை புறந்தள்ளிவிட்டு, பணம்,
பதவி, போன்ற பொய் தெய்வங்களை வழிபடும் மனிதர்களை
அவ்வப்போது சந்தித்து வருகிறோம். அத்தகைய வழிபாடுகளில்
ஈடுபட்டிருப்போரிடம், அத்தெய்வங்கள் பொய்யானவை என்பதைத்
துணிந்து சொன்ன மனிதர்களை, அவர்கள், தங்கள் கொலைப்பசிக்கு
இரையாக்கியுள்ளதையும் நாம் அறிவோம். அவர்களில் ஒருவரான
அரசி ஈசபேல், எலியாவைக் கொல்லத் துரத்துகிறார்.
தமிழகத்தில், 'ஸ்டெர்லைட்', கூடங்குளம், 'டாஸ்மாக்' என்ற
பல அரக்கர்களை வழிபட்டு வரும் அரசுக்கும்,
முதலாளிகளுக்கும் எதிராக மக்கள் மேற்கொண்ட போராட்டங்கள்,
நம் நினைவுகளை கீறுகின்றன. இந்தப் போராட்டங்களில் உயிர்
துறந்த தியாக உள்ளங்கள் இறைவனின் அமைதியில் இணையவேண்டும்
என்றும், இவர்கள், தொடர்ந்து, மக்களின் போராட்டங்களுக்கு
உந்துசக்தியாக இருக்கவேண்டும் என்றும் சிறப்பாக
வேண்டிக்கொள்வோம்.
போலி தெய்வங்களோடும் அவற்றை வழிபடும் மனிதரோடும்
மேற்கொள்ளும் போராட்டம் நீண்டது என்றும்,
அப்போராட்டத்திலிருந்து தப்பித்துச் செல்லாமல், அதைத்
துணிவுடன் சந்திக்க, இறைவன் நமக்குத் தேவையான சக்தியை, தன்
வானதூதர் வழியாக, வழங்குவார் என்றும் இன்றைய முதல் வாசகம்
சொல்லித் தருகிறது. வானதூதர் தந்த உணவினால் ஊட்டம் பெற்ற
இறைவாக்கினர் எலியா, தன் போராட்டத்தைத் தொடர, இறைவனின்
மலையை அடைந்தார் என்று இன்றைய முதல் வாசகம் நிறைவு
பெறுகிறது.
பொதுவாகவே, உண்மைகள் கசக்கும். அந்தக் கசப்பான மருந்தை
அருந்தி, குணம் பெறுவதற்குப் பதில், மருந்தைத் துப்பிவிட
முயல்கிறோம். ஒருசில வேளைகளில், அந்த மருந்தைத் தந்தவர்
மீதும் நமது கோபத்தைக் காட்டுகிறோம். இத்தகைய ஒரு சூழலை
இன்றைய நற்செய்தி சித்திரிக்கிறது. இதோ, இன்றைய
நற்செய்தியின் ஆரம்ப வரிகள்:
யோவான் நற்செய்தி 6: 41-51
அக்காலத்தில், விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே
என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக
முணுமுணுத்தார்கள். இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு
அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா?
அப்படியிருக்க, நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்
என இவர் எப்படி சொல்லலாம்? என்று பேசிக்கொண்டார்கள்.
இயேசு கூறிய உண்மைகளைக் கேட்பதற்கு, அவரைத் தேடி
ஆயிரக்கணக்கான மக்கள், பாலைநிலம் சென்றனர் என்பதையும்,
அவர்களது உள்ளப் பசியைப் போக்கிய இயேசு, அவர்களது
வயிற்றுப் பசியையும் தீர்த்தார் என்பதையும்
இருவாரங்களுக்கு முன் நற்செய்தியாகக் கேட்டோம். தங்கள் பசி
போக்கும் எளிதான குறுக்கு வழி, இயேசு, என்றெண்ணிய மக்கள்,
அவரைத் தேடி மீண்டும் சென்றனர் என்பதை, சென்ற வார
நற்செய்தியில் கேட்டோம். தன்னை தேடி வந்த மக்களைப்
பயன்படுத்தி, தன் புகழை வளர்த்துக்கொள்ளும் பசிகொண்ட
சாதாரண அரசியல் தலைவராக இயேசு வாழ்ந்திருந்தால், உணவைப்
பலுகச் செய்த புதுமையை மீண்டும், மீண்டும் அவர்கள் நடுவில்
நிகழ்த்தி, தன் புகழ் பசியைத் தீர்த்திருக்க வேண்டும்.
அதற்குப் பதிலாக, இயேசு, மக்களின் நலனை முன்னிறுத்தி,
அவர்களுக்கு சில உண்மைகளைக் கூறினார்.
மக்கள் பேராசைப் பசி கொண்டதும், அதைத் தீர்க்க, தன்னை ஒரு
குறுக்கு வழியாகக் கருதி, அவர்கள் தேடி வந்ததும் தவறு என்ற
உண்மைகளை, இயேசு, வெளிப்படையாகக் கூறினார். அவர் வழங்கிய
கசப்பு மருந்தை ஏற்க மறுத்த யூதர்கள், மருந்தைக் கொடுத்த
இயேசுவை எதிர்க்கும் முயற்சிகளில் இறங்கினர்.
உண்மையைக் கூறும் ஒருவரை, கருத்தளவில் எதிர்க்க
முடியாதவர்கள், பொதுவாகப் பயன்படுத்தும் மற்றொரு வழி,
உண்மையைச் சொன்னவரின் பிறப்பு, குலம் இவற்றை கேள்விக்கும்,
கேலிக்கும் உள்ளாக்குவது! இத்தகைய எதிர்ப்புக் கணைகளையே,
யூதர்கள் இயேசுவின் மீது தொடுத்தனர். தனது பிறப்பைக்
குறித்து அவர்கள் ஏவியக் கணைகளைப் பொருட்படுத்தாத இயேசு,
மனம் தளராமல், மக்களுக்கு நலம் தரும் உண்மைகளைத் துணிவுடன்
சொன்னார். இந்த உண்மைகளை இன்னும் இரு வாரங்கள் நமது ஞாயிறு
வழிபாட்டில் தொடர்ந்து பயில முயல்வோம்.
இறுதியாக ஓர் எண்ணம்... கடந்த வாரம், ஆகஸ்ட் 6, 9 ஆகிய இரு
தேதிகளைக் கடந்துவந்தபோது, உலகின் கவனம் மீண்டும் ஜப்பானை
நோக்கித் திரும்பியது. 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி
ஹிரோஷிமா நகரிலும், 9ம் தேதி நாகசாகி நகரிலும் அமெரிக்க
ஐக்கிய நாடு அணுகுண்டுகளால் தாக்கியபோது,
1,29,000த்திற்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள்
கொல்லப்பட்டனர். அணுக்கதிர் வீச்சுக்களால் பாதிக்கப்பட்ட 1
இலட்சத்திற்கும் அதிகமானோர், பல்வேறு நோய்களால் துன்புற்று
இறந்துள்ளனர்.
1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு
விழுந்தபோது, சடக்கோ சசாக்கி (Sadako Sasaki) என்ற பெண்
குழந்தைக்கு 2 வயது. பத்தாண்டுகள் கழித்து, அப்பெண்ணுக்கு,
இரத்தத்தில் புற்றுநோய் உள்ளதென்று கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் இனி ஓராண்டு வாழக்கூடும் என்றும் கூறப்பட்டது.
சடக்கோவின் தோழிகள் அவரிடம் ஜப்பானில் நிலவும் ஒரு புராணக்
கதையைக் கூறினர். அதாவது, ஒருவர், 1000 காகித நாரைகளைச்
செய்தால், அவர் விழையும் ஓர் ஆசை நிறைவேறும் என்ற கதையைச்
சொன்னார்கள். அதன்படி, சிறுமி சடக்கோ, காகித நாரைகளைச்
செய்ய ஆரம்பித்தார். அவர் 644 நாரைகள் செய்து முடித்த
வேளையில் இறந்தார். அவர் இறந்ததும், அவரது தோழிகள்
சேர்ந்து, பல்லாயிரம் காகிதக் நாரைகளைச் செய்து, நிதி
திரட்டி, சிறுமி சடக்கோ நினைவாக ஒரு சிலையை உருவாக்கினர்.
சிறுமி சடக்கோ, 1000 நாரைகளைச் செய்யத் துவங்கிய வேளையில்,
அவர் மனதில் என்னென்ன ஆசைகள் இருந்திருக்கும் என்பதைச்
சிறிது கற்பனை செய்து பார்க்கலாம். தான் உயிர் வாழவேண்டும்
என்ற ஆசை, கட்டாயம் அச்சிறுமியின் மனதில் இருந்திருக்கும்.
அத்துடன், தான் துன்புறுவதுபோல், இனி உலகில் எந்தக்
குழந்தையும் துன்புறக் கூடாது என்ற ஆசையும் அவர் மனதில்
இருந்திருக்கும் என்று நம்பலாம்.
இன்றளவும், சிறு குழந்தைகள், காகித நாரைகளை செய்து, அந்தச்
சிலைக்கருகே காணிக்கையாக வைக்கின்றனர். ஹிரோஷிமா,
நாகசாகியில் நிகழ்ந்தது, இனி, உலகில் ஒருபோதும்
நிகழக்கூடாது என்ற ஆசையுடன், குழந்தைகள் இந்தக்
காணிக்கையைச் செலுத்துகின்றனர். அக்குழந்தைகள் ஆசைப்படும்
அமைதியான உலகை உருவாக்குவது, நமது தலைமுறையின், குறிப்பாக,
இளைய தலைமுறையினரின் கடமை.
2015ம் ஆண்டு, ஆகஸ்ட் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆனதால்,
அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஹிரோஷிமா, நாகசாகி
தாக்குதல்களின் 70ம் ஆண்டு நினைவை தன் மூவேளை செப உரையில்
குறிப்பிட்டார். அவ்வேளையில் அவர் கூறிய சொற்களுடன் இன்றைய
நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:
"ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டு வீசப்பட்டது, ஓர்
அடையாளமாக விளங்குகிறது. அறிவியலையும்,
தொழில்நுட்பத்தையும் தவறாகப் பயன்படுத்தும்போது,
மனிதர்களிடம் வெளிப்படும் அழிவு சக்திக்கு ஓர் அடையாளமாக
இந்நிகழ்வு விளங்குகிறது" என்று தன் துயரங்களைப்
பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இறுதியில், "போரை வெல்வதற்கு
ஒரே வழி, போரிடாமல் இருப்பது" என்று அழுத்தந்திருத்தமாக
கூறி முடித்தார்.
போரற்ற, வன்முறையற்ற பூமி உருவாகவேண்டும்; போர்க்கருவிகளை,
அணு ஆயுதங்களை உருவாக்கி, வர்த்தகம் செய்யும் மனிதர்களின்
வெறி அடங்கவேண்டும்; என்ற நமது ஆவல், வெறும் காகிதப்
பறவைகளாக தொங்கிக் கொண்டிராமல், உண்மையானப் பறவைகளாக
விடுதலை வானில் சிறகடித்துப் பறக்கவேண்டும் என்று
மன்றாடுவோம்.
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
அருள்பணி. குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை
பிறர் வாழ்வு பெற உன்னை தரத்
தயாரா?
ஒரு பங்கில் பங்குப் பணியாளர் ஒருவர் ஒவ்வொரு தெருவாக
சென்று திருப்பலி நிறைவேற்றலாம் என முடிவு செய்திருந்தார்
அப்போது அந்த தெருவில் உள்ள அனைவரும் இணைந்து
திருப்பலிக்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்து கொண்டிருந்தனர்.
வீடுவீடாகச் சென்று ஒலி அமைக்கவும் சிற்றுண்டிகள்
வாங்கவும் பணம் வசூலித்துக்கொண்டிருந்தனர் சிலர். அப்போது
அத்தெருவிலே வசிக்கும் ஒரு ஏழைத்தாய் " என்னிடம் தருவதற்கு
பணமில்லை. என்னால் முடிந்த அளவு என் உடலுழைப்பைத்
தருகிறேன்" என்று கூறி திருப்பலி நிறைவேற்றப்படுகின்ற
இடத்தை சுத்தம் செய்வது, பிறர் அமர்வதற்காக நாற்காலிகளை
போடுவது போன்ற வேலைகளையெல்லாம் செவ்வனே செய்து திருப்பலி
நல்லமுறையில் நிறைவேற்றப்பட சிறப்பாக உதவினார். எல்லாம்
முடிந்தவுடன் அத்தெருவிலே உள்ள சிலர் அத்தாயிடம் சென்று
"நாங்கள் கொடுத்த பணத்தினாலல்ல உங்களுடைய சுயநலமற்ற
உழைப்பினால்தான் இத்திருப்பலி சிறப்பாக நடந்தேறியது.
இறையாசிரை நாங்கள் அனைவரும் பெற நீங்கள்தான் மிக முக்கிய
காரணம்" எனக் கூறி அத்தாயை வாழ்த்தினர்.
"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே.
இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது
சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே
கொடுக்கிறேன்." என்று இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர்
இயேசு கூறுகிறார். என் சதையை கொடுக்கிறேன் என இயேசு
கூறியதன் பொருள் என்ன?
சதை என்பது மனிதனுக்கு உருவத்தைக் கொடுக்கும் ஒன்று. சதை
இல்லாத மனிதன் வெறும் எலும்புக்கூடாகத்தான் இருப்பான். சதை
அல்லது திசுக்கள் தான் நமது உடலின் மிக முக்கிய
உள்ளுறுப்புக்களை மூடிப் பாதுகாக்கிறது. நமது உடலில்
ஏற்படும் காயங்கள் எல்லாம் சதையைத் தாண்டிதான்
உறுப்புக்களைத் தீண்டும்.சதை என்பது ஒரு முழுமனிதனை அவன்
உணர்வுகளைக் கூட குறிப்பதாக இருக்கிறது.
இயேசு தன் சதையை நமக்குத் தருகிறார் என்றால் அவர் தம்முடைய
எல்லாவற்றையும் நமக்குத் தருகிறார் என்பது தான் பொருள்.
அவருடைய ஆற்றலை, பாதுகாப்பு ,நல்லுணர்வுகள் என அனைத்தையும்
தன் சதையைத் தருவதன் மூலம் இயேசு நமக்குத் தந்து வாழ்வை
அருளுகின்றார்.
அன்புக்குரியவர்களே பிறர் நலனுக்காக, அவர்களின்
நல்வாழ்வுக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலுமே நம் சதையைக்
கொடுப்பதற்கு சமம் என்ற ஆழமான செய்தியை இன்று நாம்
உணர்ந்துகொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்கள்
பிள்ளைகளுக்காக செய்யும் அனைத்தின் வழியாகவும் தங்கள்
சதையை அல்லவா தருகின்றனர். அவர்களின் உழைப்பும்
வியர்வையும் தியாகமும் குடும்பத்திற்கு வாழ்வளிக்கிறது.
கடமை உணர்வுடன் பணிபுரியும் தொழிலாளிகள் தங்ளுடைய
நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக உழைக்கும் பொழுது அவர்களின்
சதையை தங்கள் கடின உழைப்பின் வழியாகக் கொடுக்கின்றனர் .
எத்தனையோ சமூக ஆர்வலர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் அவல
நிலையை முன்னேற்ற தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி
உழைத்து தங்களையே முழுமையாகக் கையளிக்கின்றனர்.
எனவே நம்முடைய வாழ்விலும் இயேசுவைப் போல பிறர் வாழ்வு பெற
நம்மையே கொடுக்க தயாராவோம். நம் உழைப்பையும் ஆற்றலையும்
தியாகத்தையும் பிறர் வாழ்வு பெறும் பொருட்டு கையளிப்போம்.
இறைவேண்டல்
உம்மையே எமக்காகக் கையளித்த இயேசுவே பிறர் வாழ்வு பெற
எம்மையே கொடுக்கும் மனம் தாரும். ஆமென்.
அருள்பணி. குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை
அருள்பணி. மாணிக்கம் விமல் -
திருச்சி
இறையுணவால் ஊட்டம் பெறுவோம்!
மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு அருகில் ஒரு சில
ஆண்டுகளுக்கு முன்பாக குப்பையோடு குப்பையாக, புழுதியிலே
புரண்டு, கைகள் அழுகிய நிலையில் ஒருவர் இருந்தார். அவரைப்
பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாய் இருந்தது. மக்கள் அங்கும்
இங்குமாக செல்கிறார்கள். அனைவரின் கண்ணிலும் அம்மனிதர்
படுகிறார். ஆனால் உதவிடவோ அல்லது அவருக்கு என்ன தேவையென்று
புரிந்துகொண்டு அவரை மீட்டெடுப்பதற்கோ யாரும்
முன்வரவில்லை. அச்சமயம்தான் லண்டனிலுள்ள மறைமாவட்டத்தில்
அருள்பணியாளராக இருந்த தந்தை ஒருவர் எதேர்ச்சியாக
மதுரைக்கு வந்திருக்கிறார். இந்த மனிதனின் அவலநிலையைக்
கண்டு, இவருக்கு எதாவது செய்ய வேண்டுமென்று நினைக்கிறார்.
அதற்கேற்ப தன் நண்பரின் உதவியுடன் அவரை மீட்கிறார்.
காயங்களுக்கு கட்டுப்போடுகிறார். குளிப்பாட்டுகிறார். நல்ல
உடை கொடுக்கிறார். உறங்க வைக்கிறார். அப்போது அம்மனிதன்
தந்தையிடத்திலே, 'பசிகிறது என்று சொல்கிறான்', தந்தையும்
அவருக்கு வயிராற சாப்பிட உணவு கொடுக்கிறார். மனநிறைவுடன்
அம்மனிதன் உணவு உண்டான். திடன் அடைகிறான். ஊட்டம்
பெறுகிறான். அவரின் வாழ்வு இறக்கும் வரையில் வசந்தமாய்
மாறிற்று. இப்படியாய் ஒருவருக்கு மட்டுமல்ல இவரைப் போன்று
இருக்கும் அனைவருக்குமே உணவு அளிக்க வேண்டும். தங்க வைக்க
வேண்டும். வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். உடல்நலத்தைப்
பேணிக் காக்க வேண்டும். அனாதையாய் வருபவருக்கு நாமே உறவாக
வேண்டும் என்று சொல்லி மிகச் சிறப்பாக இந்த அன்புப்பணியை
ஆற்றிக் கொண்டிருப்பவர்தான் அருள்தந்தை. தாமஸ் அவர்கள்.
திண்டுக்கல் கொடைரோடுக்கு அருகிலுள்ள ST.JOSEPH'S HOSPICE
என்பதுதான் இவரின் இல்லம். இங்குதான் பலரும் அன்பென்னும்
உணவாலும், பாசமென்னும் உணவாலும், உறவு என்னும் உணவாலும்
ஊட்டம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இறைவுணவாம்
இயேசுவின் உடனிருப்பால் என்றென்றும் மகிழ்கின்றார்கள்.
இறைஇயேசுவில் இனியவர்களே!
மனித வாழ்வின் அடிப்படை தேவைகள் மூன்று உணவு, உடை,
இருப்பிடம். இம்மூன்றில் எதாவது ஒன்று குறைப்பட்டாலும்
முழுமையான வாழ்வு பெறாத சூழல் உருவாகிறது. உணவு இருக்கும்
போது உடையும், இருப்பிடமும் இல்லாமல் இருந்தால், உண்ட
உணவுகூட ஒழுங்காய் செல்லாது. இப்படிப்பட்ட தருணத்தில்தான்
நாம் நம்முடைய அடிப்படை தேவைகளை எப்படியாவது பூர்த்திச்
செய்ய விரும்புகின்றோம். இன்றைய வாசகங்கள் அனைத்துமே
இத்தகைய கருத்தைத்தான் வலியுறுத்தி நிற்கின்றது.
'இறைவுணவால் நாம் ஊட்டம் அடைய வேண்டும்' என்பதுதான் இன்றைய
இறைவாக்கு வழிபாட்டின் மையச் சிந்தனை. இறைவனை நம்பி
வந்தோருக்கும், இன்று நம்பி வரும் நம் ஒவ்வொருவருக்கு
இறைவன் உணவின் வழியாய் நமக்கு ஊட்டம் கொடுக்கிறார்.
அவ்வுணவை ஏற்க தகுதியுள்ளவராய் நம்மையும் மாற்றுகிறார்
என்பதுதான் அடிப்படையான சிந்தனை.
முதல் வாசகத்தில், எலியா இறைவாக்கினர் பற்றி
வாசிக்கின்றோம். நேர்மையானவராக, துணிச்சல் மிக்கவராக,
நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டவராக வலம் வந்த எலியா
அரசியான ஈசபேலுக்கு பயந்து, அங்கிருந்து தப்பியோடுகிறார்.
யாவேதான் உண்மையான கடவுள் என்று உரைத்ததன் விளைவாகவும்,
போலி இறைவாக்கினர்களின் போதனைக்கும், பாகால் குறித்த
பார்வைக்கும் எதிராகவும் நின்றதாலும், ஆண்டவருக்குரிய
வகையில் வாழ்ந்து காட்டியதாலும் ஏற்றுக்கொள்ள முடியாத அரசி
அவரைக் கொலை செய்ய திட்டமிடுகிறார். ஆனால் எலியா
அங்கிருந்து தப்பி ஓடுகிறார். இடையில் முடியாத பட்சத்தில்
"ஆண்டவரே நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை
எடுத்துக்கொள்ளும்" என்று கடவுளிடத்திலே முறையிடுகிறார்.
ஆனால் முறையிட்ட கடவுள் அவரை முறையான வழிக்கு
இட்டுச்செல்ல, சோர்வுற்ற அவனுக்கு தெம்பை அளிக்கிறார்.
அவர் உறங்கிக் கொண்டிருக்கின்ற போது இரண்டு முறை
வானத்தூதர் அவருக்கு உணவளிக்கிறார். அதன் வழியாய் ஊட்டம்
கொடுக்கிறார். அந்த ஊட்டம் உடனிருப்பாய் அமைந்து ஓரேபு
மலையை நோக்கி வழிநடத்திச் செல்கிறது.
நற்செய்தியில், இயேசுவின் வாழ்வு அடுத்தவருக்கு எல்லா
வகையிலும் ஊட்டமளிப்பதாய் அமைந்துள்ளது.
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே
என்று தன்னை வெளிப்படுத்தும் இயேசு தன்னால் மற்றவர்கள்
வாழ்வார்கள் என்ற மாபெரும் சிந்தனையை வழங்குகிறார்.
எனவேதான் என்னை நம்புவோர் நிலைவாழ்வைப் பெறுகிறார் என்று
சொல்கிறார். இருப்பினும் அவரின் உடனிருப்பை ஏற்றுக்கொள்ளாத
மனிதரின் முணுமுணுப்பைக் கண்டு, முறைத்துகொள்ளாமல் முறையாக
அங்கே அவற்றை இயேசு கையாள்வதன் அடையாளமே அவரை நம்பி வரும்
மக்கள் யாவரும் ஊட்டம் பெற வேண்டும் என்பதற்காகவும்,
நிறைவான வாழ்வைப் பெற வேண்டுமென்பதற்காகவும், நிலையான
மகிழ்ச்சியை அவர் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காகவும்
எல்லாவற்றையும் செய்கிறார். உலகு வாழ்வதற்காகவே வந்தேன்
என்ற கூற்று ஒன்றே போதும் எந்தளவு இயேசு நம்
ஒவ்வொருவருக்கும் ஊட்டமளிக்க தன்னையே உணவாக்கியிருக்கிறார்
என்று. இதைத்தான் மத்; 28:20 இல் "இதோ உலகம் முடியும்வரை
எந்நாளும் உங்களுடன் இருப்பேன்" என்று மொழிகிறார். இத்தகைய
உணர்வினை நாம் ஆழமாய் புரிந்துகொள்ள, உணர்ந்துகொள்ள,
இயேசுவின் உடனிருப்பை முழுமையாய் அறிந்துகொள்ள பாதையமைத்து
கொடுக்கிறது இன்றைய இரண்டாம் வாசகம்.
இறைவனின் உடனிருப்பை நாம் பல நேரங்களில் உணராமலும், அவர்
கொடுக்கின்ற ஊட்டத்தை முழுமையாய் அனுபவிக்காமலும்
இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு
சிலவற்றைத்தான் புனித பவுல் எபேசு நகர மக்களின் வழியாக
நமக்கும் வழங்குகிறார். மனக்கசப்பு, சீற்றம், சினம்,
கூச்சல், பழிச்சொல்;, தீமையான காரியங்கள் இவையனைத்தும்
கடவுள் கொடுக்கின்ற ஊட்டத்தையும், உடனிருப்பையும்
புறக்கணிக்கும் காரணிகளாகவே பவுல் சொல்கிறார்.
மனக்கசப்பு இருக்குமிடத்தில் மனமகிழ்ச்சி இருக்காது,
சீற்றம் இருக்குமிடத்தில் சீர்மிகு எண்ணங்கள் இருக்காது,
சினம் இருக்குமிடத்தில் நல்ல மனம் இருக்காது, கூச்சல்
இருக்குமிடத்தில் கூட்டு தோழமையும், கூட்டுறவும்
இருக்காது, பழிச்சொல் இருக்குமிடத்தில் பாசமும்,
பகிர்வும், பண்பட்ட செயல்முறையும், பக்குவமுள்ள
வாழ்க்கைமுறையும் இருக்காது, தீமையான காரியங்கள்
இருக்குமிடத்தில் நன்மை ஒருபோதும் இருக்காது. ஆக தன்
உடனிருப்பை ஒவ்வொரு நாளும் வெண்ணிற அப்பத்தின் வடிவில்
கொடுக்கும் இயேசு முழுமையான ஊட்டத்தையும், திடத்தையும்,
உடனிருப்பையும், அன்பையும் வழங்குகிறார். அதை ஏற்க தடையாக
இருக்கும் தீய சிந்தனைகளை நாம் களைய முற்படும் போது
நிறைவான ஆசீர்வாதத்தை பெறுகிறோம் என்ற நம்பிக்கையை
வழங்குகிறது இன்றைய ஞாயிறு வழிபாடு.
இறைஇயேசுவில் பிரியமானவர்களே,
நம்முடைய வாழ்வில் இறைவன் கொடுக்க விரும்பும் உடனிருப்பை,
ஊட்டமுள்ள வாழ்வை எப்படிப் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான
வழிமுறைகள் என்ன என்பதை இப்போது சிந்திப்போம். இயேசுவின்
தொடர் பிரசன்னம் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும்
இருக்கின்றது. அதைப் புரிந்துகொண்டாலே போதும் நாம் நிறைவான
ஊட்டத்தையும், உடனிருப்பையும் பெற்று மகிழலாம். இத்தகு
ஆசீரைப் பெற்றிட கீழ்க்காணும் நான்கு வழிகள் நமக்கு
உதவட்டும்:
ஆண்டவர் காப்பார் என்ற நம்பிக்கை
ஆவிக்குரிய வாழ்வை நடத்துதல்
தகுதியுள்ள மனநிலையில் நற்கருணை பெறுதல்
என்னால் அல்ல கடவுளால் என்ற சிந்தனை தெளிவு
ஆண்டவர் காப்பார் என்ற நம்பிக்கை:
முதல் வாசகத்தில் எலியாவை ஆண்டவர் தன் உடனிருப்பால்
காப்பாற்றியது போல, நம் ஒவ்வொருவரையும் கடவுள் நித்தமும்
காப்பார் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். இiத்தான் எசாயா
புத்தகம் 48:17இல் இவ்வாறாகப் பார்க்கிறோம்: 'உன்
கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக்
கற்பிப்பவரும் செல்ல வேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும்
நானே!" இத்தகைய நம்பிக்கை இருக்கையில் ஆண்டவரின்
உடனிருப்பு என்றென்றும் நம்மில் நிலைக்கும்.
ஆவிக்குரிய வாழ்வை நடத்துதல்:
இறைவனின் உடனிருப்பை நாம் பெற்று வாழ்ந்திட நம் வாழ்வை
ஆவிக்குரிய விதத்தில் அமைதல் அவசியம். இதைத்தான் புனித
பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் 6:8இல்
"ஆவிக்குரிய வாழ்வாகிய நிலத்தில் விதைப்போர் அந்த ஆவி
அருளும் நிலைவாழ்வை அறுவடை செய்வர்" என்று கூறுகிறார்.
இறைவனின் தொடர் பராமரிப்பை உடனிருப்பாய் கண்டு மகிழ நம்
தீய வழிகளை விட்டுவிட்டு நேரிய வழியைத் தேர்ந்தெடுத்து,
ஆவிக்குரிய மனிதர்களாய் வாழ்ந்தால் நிச்சயம் இறைஉடனிருப்பு
நம்மில் நிறைவாய் இருக்கும்.
தகுதியுள்ள மனநிலையில் நற்கருணையை பெறுதல்:
இயேசு தன் உடனிருப்பை நற்கருணை வழியாக கொடுத்து தன்னையே
நமக்காகக் கையளித்தார். எனவே உலகம் முடியும் வரை உலகு
வாழ்வதற்காகவே வந்திருக்கிறேன் என்று சொல்கிறார். ஆகவே
இவரின் இத்தகு சிறப்புமிக்க உடனிருப்பை நாம் அடிக்கடி
நற்கருணையைப் பெறுவதன் வழியாக அடைகின்றோமென்றால், அதற்கு
நம்மை நாமே தகுதியுள்ளவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
தகுதியற்ற மனநிலையில் ஏற்கையில் அது நமக்கு பாவமே.
இதைத்தான் புனித பவுல் கொரிந்து நகர மக்களுக்குச்
சொல்கிறார்: "எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை
உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால், அவர்
ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராக குற்றம்
புரிகிறார்" (1கொரி 11: 27) என்று அர்த்தம். எனவே
தகுதியுள்ள மனநிலையோடு நற்கருணையை உட்கொள்வோம்.
அதிலிருந்து தவறிச் செல்கிறபோது நாம் இறைஉடனிருப்பை இழந்து
தவிக்கின்றோம் என்ற படிப்பினையை ஏற்று பக்குவமடைவோம்.
'என்னால் அல்ல கடவுளால்' என்ற சிந்தனை தெளிவு
என் வாழ்வில் நடக்கும் எல்லாமே என்னால் நடக்கிறது என்று
சிலர் எண்ணுகின்றனர். ஆனால் என்னால் அல்ல கடவுளால்
நடக்கிறது என்ற சிந்தனை தெளிவு நமக்கு நிச்சயம் தேவை.
அப்போதுதான் இறையுணவின் ஊட்டத்தால் பாவ வாழ்விலிருந்து,
முழுமையான விடுதலை பெற்று நிலையான மகிழ்ச்சியை நமதாக்கிக்
கொள்ள முடியும்.
இத்தகைய சிந்தனைகளை இதயத்தில் ஏற்றவர்களாக நாம் வாழ்வோம்!
அப்போது ஆண்டவர் கொடுக்க விரும்பும் நிறைவான உடனிருப்பு
என்றென்றும் நம்மில் தங்கும்!!
அருள்பணி. மாணிக்கம் விமல் -
திருச்சி
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ