மூவொரு கடவுள் பெருவிழாவின் ஆசி பெற வந்திருக்கும் அன்பு நெஞ்சங்களே!
நம் மனசுக்குள்ளும், நம் மனசாட்சிக்கு உள்ளும், நமக்கு
முன்னும், நமக்கு பின்னும், நமக்கு காவலாகவும், அரணாகவும் இருந்து,
எங்கும் பிரசன்னமாகியிருக்கும் கடவுளைத்தான், இன்றைய விழா நமக்கு
மிக அற்புதமாக விளக்குகிறது.
தந்தை, மகன், தூயஆவி என செபம் தொடங்கும் போதும், செபம்
முடிக்கும் போதும், நாம் வரையும் சிலுவை அடையாளம், நாம் எத்தகைய
மன நிலையோடு வழிபாடுகளில் பங்கேற்க வேண்டும் என சுட்டிக்
காட்டுகிறது.
தந்தை கடவுள், சிந்தை முழுவதிலும் சிதறிக் கிடக்கவும், மகன்
கடவுள், மனம் முழுவதும் ஆட்சி செய்யவும், தூய ஆவி, கடவுள், உடல்
முழுவதும் உறைந்து கிடக்கவும் அருள் வேண்டித்தான், அடிக்கடி
சிலுவை அடையாளம் வரைகின்றோம்.
நமது அறிவும் திறமையும் வளரவும், நம் மனம் நிறைய நல்ல எண்ணங்கள்
உறையும்படியும்;, நமது உடலின் நோய் நீங்கி ஆர்வமாய் உழைக்க
தேவையான சக்தி கிடைக்கும் படியும்;, நம் உடலில் வரையும் சிலுவை
அடையாளம், திருப்பலி வழியாக நமக்கு மூவொரு கடவுளை இனம்
காட்டுகிறது. இந்த திருப்பலியில் அன்றாடம் நாம் வரையும் சிலுவை
அடையாளம், நமக்கு மூவாரு கடவுளின் அருட்துணையை இன்னும்
மிகுதியாக்கி, பலன் தந்து வழி நடத்த, இறைஞ்சுவோம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. மன ஒற்றுமைக்கு
வழிகாட்டும் மூவொரு இறைவா!
திருச்சபையை வழி நடத்தும் திருத்தந்தை, ஆயர்கள்,
குருக்கள், துறவியர் பொது நிலையினர் அனைவரும், திருச்சபை
பணியில் மன ஒற்றுமையுடன் உண்மையாய் உழைக்க உமதருள்
கேட்டு, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
2. நிலை வாழ்வை தரும் மூவொரு இறைவா!
அன்பு, பரிவு ஆற்றல் இவைகளை மனம் நிறைய சுமந்து, மக்கள்
பணியே மகேசன் பணி என மனமுவந்து மக்கள் பணி செய்ய,
நாட்டுத்தலைவர்கள் உண்மையாய் உழைக்க உமதருள் கேட்டு,
ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
3 . உலகின் மீது அன்பு கொண்ட மூவொரு இறைவா!
உலகை மீட்க உம் மகனை அனுப்பியது போல, எம்மை மீட்க பங்கு
குருக்களை அனுப்பியுள்ளீர். எங்கள் பங்;குத் தந்தை உடல்
உள்ள நலத்துடன் உமதன்பை எம் மத்தியில் விதைக்க உமதருள்
கேட்டு, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்கள் நடத்தையை சீர்படுத்தும் மூவொரு இறைவா!
மகிழ்;ச்சியான நடத்தை எங்கள் நடுவில் எப்போதும் நிலவவும்,
நீர் ஒன்றாயிருப்பது போல நாங்களும் ஒன்றுபட்டு, ஒருவரை
ஒருவர் தாங்கும் சமூகமாக என்றும் வாழவும் உமதருள்
கேட்டு, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
5. எம் நலம் காக்கும் மூவொரு இறைவா!
எங்கள் அருகில் உடல் நலமின்றி மன நலமின்றி, வாழ்வா?
சாவா? என போராட்டச் சுழலில் வாழும் அனைவருக்கும், நாங்கள்
எங்களால் ஆன உதவி செய்ய உமதருள் கேட்டு, ஆண்டவரே உம்மை
மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
மறையுரைச்சிந்தனை
அருட்சகோதரி: மெரினா
O.S.M.
மறையுரைச்சிந்தனை - சகோ. செல்வராணி Osm
மறையுரைச்சிந்தனை
- அருள்பணி ஏசு கருணாநிதி
மூவொரு இறைவன் ஒரு மறைபொருள். இந்த மறைபொருளை நாம் புரிந்து கொள்ளவும்,
விளக்கிச் சொல்லவும் இயலாது.
இப்படிச் சொல்லி மறையுரையை முடித்துவிடலாம் என நினைத்தேன்.
மூவொரு இறைவன் - ஒரு அனுபவம்.
கடவுள் அனுபவம் பெற்ற ஒருவர் அல்லது ஒரு சமூகத்தவர் அல்லது ஒரே நம்பிக்கையைப்
பகிர்கின்ற மக்கள், தங்கள் கடவுள் இப்படித்தான் என்று அனுபவித்து
அதைச் சொற்களால் வடிக்க முயற்சி செய்கின்றனர். யூதர்களின் யாவே, இசுலாமியர்களின்
அல்லா, இந்துக்களின் விஷ்ணு-பிரம்மன்-சிவன், புத்தர்களின் புத்தர்,
சைனர்களின் மகாவீரர் இப்படியாக, மனிதர்கள் கடவுளர்களையும், கடவுள்-மனிதர்களையும்
கொண்டாடி வருகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கூட
கடவுள் என்பவர் ஒரு அனுபவமே.
'அவர் கடவுளுக்கும் அஞ்சுவதில்லை. மனிதர்களையும் மதிப்பதில்லை' என்று
நடுவரைப் பற்றி லூக்கா எழுதும் பதிவில் அந்த மனிதர் பெற்றிருப்பதும்
கடவுள் அனுபவமே.
ஆக, மூவொரு இறைவன் என்பது வெறும் நம்பிக்கைக் கோட்பாடு அல்ல.
மாறாக, முதலில் அது ஓர் அனுபவம்.
இந்த அனுபவத்தை விவிலியம் பல இடங்களில் பதிவு செய்துள்ளது: ஆபிரகாமுக்கு
மெம்ரே என்ற இடத்தில், மோசேக்கு இன்றைய முதல் வாசகத்தில்,
யோசுவாவுக்கு எரிக்கோவில், திருத்தூதர்களுக்கு இயேசுவில் (நற்செய்தி
வாசகம்), முதல் கிறிஸ்தவர்களுக்கு தூய ஆவியாரில் (இரண்டாம் வாசகம்).
என் வாழ்வில் மூவொரு இறைவன் அனுபவம் என்ற ஓர் அனுபவத்தைப் பெற எனக்கு
உதவியது திருப்பாடல் 23. இத்திருப்பாடலின் பின்புலத்தில் நான்
மூவொரு இறைவனைப் பற்றிய என் புரிதலை முன்வைக்கிறேன்.
முதலில், அனுபவம் என்றால் என்ன?
அனுபவம் என்பது ஒரு நிகழ்வில் பங்கேற்கும் ஒருவர், அந்த நிகழ்வை தன்னுடைய
பின்புலத்திலிருந்து கண்டு, அந்த நிகழ்வு தன்மேல் தாக்கத்தை ஏற்படுத்த
அனுமதித்து, அந்தத் தாக்கத்தை அறிவால் உணர்வது.
திருச்சியிலிருந்து மதுரைக்கு ஒரு பேருந்து செல்கிறது. பேருந்தில்
நடத்துனர், ஓட்டுநர் உட்பட 30 பேர் இருக்கிறோம். இந்த 30 பேரும்
பேருந்து நிகழ்வில் பங்கேற்கின்றனர். ஆனால், இவர்களின் பின்புலம்
வேறு. நடத்துனர், ஓட்டுநர், புதிதாய் மணமுடித்த தம்பதியினர், வயதானவர்கள்,
குழந்தைகள், வெளிநாட்டவர் இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்புலத்தைக்
கொண்டிருக்கிறார். மதுரையில் இறங்கியவுடன், ஒவ்வொருவரும் ஒவ்வொரு
மாதிரியான தாக்கத்தை உணர்வர்: 'பஸ் ஒரு பக்கம் இழுக்குதுய்யா. கியர்
சரியா விழல. ஆனா, ரோடு ஃப்ரீயா இருந்துச்சு' என்பார் ஓட்டுநர். 'இந்த
பஸ்ல ஏறுன எல்லாரும் 500 ரூபாய்த் தாளை நீட்டினாங்க. சில்லறை வாங்கப்
போகணும்' என சலித்துக்கொள்வார் நடத்துனர். 'இரண்டு நாளா தூக்கமில்லை.
பஸ்ல நல்லா தூங்கியாச்சு' என்பார் வெளியூரில் வேலைக்குச் சென்ற ஒருவர்.
'இருக்கை சாய்வா இருந்துச்சு. நான் கால அதுல தூக்கி வச்சுகிட்டேன்'
என்று சொல்லும் குழந்தை. 'வாவ்! வாட் எ லவ்லி ட்ரைவ்!' என வியப்பார்
வெளிநாட்டவர். 'என்னங்க! அதுக்குல்லயும் மதுரை வந்துடுச்சு!' என்று
தன் கணவனின் காதில் சிணுங்குவாள் புதிதாய் மணமுடித்த காதலி-மனைவி.
இதுதான் இவர்கள் பெற்ற அனுபவம்.
இரண்டாவதாக, எதற்காக நாம் கடவுளைத் தேடுகிறோம்?
நம் வாழ்வில் நாம் உணரும் பத்து எதிர்மறை உணர்வுகளில் அல்லது உணர்வுகளால்
நாம் இறைவனைத் தேடுகிறோம் என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள்:
1. பயம் - எதிர்காலம், நிகழ்காலம், மனிதர்கள், நிகழ்வுகள் பற்றிய
பயம்.
2. கோபம் - எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாததால் எழும் கோபம்.
3. குற்றவுணர்வு - நாம் செய்த தவறு அல்லது பாவத்திற்காக எழும் வருத்தம்.
4. தாழ்வு மனப்பான்மை - தன்மதிப்பு குறைந்த நிலை.
5. பொறாமை - குறைவு மனப்பான்மை கொண்டிருத்தல்.
6. பலிகடா ஆக்கப்படுவது - எல்லாரும் என்னைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்
என்று உணர்வது.
7. ஒதுக்கப்படுதல் - பிறப்பிலிருந்து அல்லது சூழ்நிலைகளால்.
8. நிராகரிக்கப்படுதல் - தகுதி பெற்றிருந்தும் தான் ஏற்றுக்கொள்ளப்படவில்லை
என்ற உணர்வு.
9. விலகிக்கொள்தல் - ஒரு நபர் தானே விலகிக் கொள்தல்.
10. இறுமாப்பு - தன்னிடம் இருப்பதை விட அதிகமாகக் காட்டிக்கொள்வது.
லேய்ஸ் சிப்ஸ் பாக்கெட் போல.
இந்த உணர்வுகளில் சில உணர்வுகளை, அல்லது எல்லா உணர்வுகளையும் உணருகின்ற
ஒருவர், அவற்றுக்கு மாற்றாக அல்லது மருந்தாக நேர்முக உணர்வுகளைத்
தேடுகின்றார். பயத்திற்கு மருந்தாக நம்பிக்கை, கோபத்திற்கு மருந்தாக
ஏற்றுக்கொள்தல், குற்றவுணர்வுக்கு மருந்தாக மன்னிப்பு, தாழ்வு மனப்பான்மைக்கு
மருந்தாக தன்மதிப்பு, பொறாமைக்கு மருந்தாக நிறைவுமனம், பலிகடா மனநிலைக்கு
மருந்தாக தலைவன் மனநிலை, ஒதுக்கப்படுதலுக்கு மருந்தாக உள்வாங்கப்படுதல்,
நிராகரிக்கப்படுதலுக்கு மருந்தாக அங்கீகரிக்கப்படுதல், விலகிக்கொள்தலுக்கு
மருந்தாக பங்கேற்றல், இறுமாப்புக்கு மருந்தாக தன்னறிவு.
மேற்காணும் மருந்து உணர்வுகளை அடையும் பயணமே இறையனுபவம்.
மூன்றாவதாக, திருப்பாடல் 23ல் மூவொரு இறைவன்.
'மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க
நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால்
எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்.
உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்' (திபா 23:4)
இந்த உலகில் எதிர்மறை உணர்வுகள் இருக்காது என்பது எதார்த்தம் அல்ல.
ஆனால், எதிர்மறை உணர்வுகளிலும் 'நீர் என்னோடு இருக்கிறீர்' என்று
தாவீது தன்னுடைய ஆண்டவரின் உடனிருப்பை உணர்கிறார். தாவீது
கொண்டிருந்த பயம், கோபம், குற்றவுணர்வு, தாழ்வு மனப்பான்மை, இறுமாப்பு,
பொறாமை போன்ற அனைத்திலும், அனைத்தின் நடுவிலும் கடவுளின் உடனிருப்பை
உணர்கின்றார். அந்த உடனிருப்பு தீங்குகளை அகற்றுவதில்லை. ஆனால்,
தீங்கு பற்றிய அச்சத்தை அகற்றுகின்றது.
கிறிஸ்தவ மரபில், இங்கே, 'நீர்' என்று தாவீது விளிப்பவரை, 'தந்தை'
என எடுத்துக்கொண்டால், 'கோல்' என்பதை 'மகன்' என்றும், 'நெடுங்கழி'
என்பதை 'தூய ஆவியார்' என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
எப்படி?
ஆடுகளை மேய்க்கும் ஒவ்வொரு ஆயனும் தன் கையில் கோல் ஒன்றையும்,
நெடுங்கழி ஒன்றையும் வைத்திருப்பான். இவை ஆயனின் கைகளில் இருப்பவை
என்று சொல்வதை விட, இவை அவனுடைய கைகளின் நீட்சிகள் என்றே சொல்ல
வேண்டும். 'ஆடுகளை வழிநடத்தவும், வரிசையை ஒழுங்கமைக்கவும், எதிரி
விலங்குகளை விரட்டவும், திருடர்களை எதிர்க்கவும், சில நேரங்களில்
அதை ஊன்றி அதில் சாய்ந்துகொண்டே தூங்கவும்' ஆயன் கோலைப்
பயன்படுத்துகின்றான். 'நெடுங்கழி' என்பது ஆடுகளுக்கு இலை, தழைகளை
மரத்திலிருந்து இழுத்துப் போடுவதற்காக, நுனியில் சிறு கத்தி
கட்டப்பட்ட ஒரு நீண்ட குச்சி. ஆக, 'கோல்' ஆடுகளுக்கு
'பாதுகாப்பையும்', 'நெடுங்கழி' ஆடுகளுக்கு 'உணவையும்' தருகிறது.
அல்லது, 'கோல்' என்பது 'பாதுகாப்பின்,' 'நெடுங்கழி' என்பது
'பசியாற்றுதலின்' அடையாளங்கள்.
யூதாவின் செங்கோலாகப் பிறந்த இயேசு தன்னுடைய இறப்பால் நமக்கு
பாவத்திலிருந்து பாதுகாப்பை உறுதி செய்தார். தன்னுடைய
அருள்வரங்களால் தூய ஆவியார் நம் பசியாற்றுகிறார்.
ஆக, ஆயன் மற்றும் ஆயனின் நீட்சிகளாக இருக்கின்ற கோலும்,
நெடுங்கழியும், மூவொரு இறைவன் அனுபவத்தைத் தருகின்றன. 'ஆடு
மேய்ப்பவன் - கோல் - நெடுங்கழி' என மூன்றும் வௌ;வேறாக இருந்தாலும்,
'உடனிருப்பு - பாதுகாப்பு - பசியாற்றுதல்' என்னும் மூன்று
செயல்களில் ஒருவரோடு ஒருவர் இணைந்தே இருக்கின்றனர்.
மேலும்,
திபா 23:6இல் இது அப்படியே தலைகீழாக இருக்கிறது:
'உம் அருள்நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்.
நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்'
இயேசு தருவது அருள்நலம். ஆவியார் உறுதிசெய்வது பேரன்பு. இந்த
இரண்டும் புடைசூழ்ந்து வர ஒருவர் ஆண்டவரின் (தந்தையின்)
இல்லத்திற்குள் நுழைகின்றார். அங்கே நெடுநாள் வாழ்கின்றார்.
இப்படித்தான்,
நான் மூவொரு இறைவன் மறைபொருளை,
'உடனிருப்பு - பாதுகாப்பு - பசியாற்றுதல்'
'ஆண்டவரின் இல்லம் - அருள்நலம் - பேரன்பு'
எனப் புரிந்துகொள்கிறேன்.
நிற்க.
வாழ்வின் ஒவ்வொரு நன்மையான, தீமையான, ஒன்றும் புரியாத சூழலிலும்,
ஏதோ ஒன்றைப் பார்த்து, அல்லது ஏதோ ஒருவரைப் பார்த்து,
'நீர் என்னோடு இருப்பதால் நான் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்'
என்று நம்மால் சொல்ல முடிந்தால்,
அதுவே, அவரே மூவொரு இறைவன்.
தந்தை, தாய், மகன் என்று மூவர் இருந்த குடும்பம் அது. அந்தக்
குடும்பத்தில் மகன் எப்போதும் உணவு உண்பதற்குத் தாமதமாகவே வந்தான்.
இதனைப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தந்தை, ஒருநாள் மகனிடம்,
"மகனே! உணவு உண்ணச் சரியான நேரத்திற்கு வரப் பார்" என்றார். அவர்
இவ்வாறு சொன்னபிறகும் அவன் முன்பை விடவும் தாமதமாக வந்தான்.
ஒருநாள் மகன் உணவு உண்ண வழக்கம்போல் தாமதமாக வந்தபோது, அவன் உணவு
உண்ணும் இடத்தில் ஒரு டம்ளரில் தண்ணீரும், ஒரே ஒரு ரொட்டித் துண்டு
மட்டுமே இருந்தன. அதைப் பார்த்ததும் அவன், நான் தாமதமாக வருவதால்தான்
தந்தை என்னை இப்படித் தண்டிக்கின்றார் என்று மனத்தில்
நினைத்துக்கொண்டு வருத்தத்தோடு உணவு உண்ண அமர்ந்தான்.
அப்போது அவனுடைய தந்தை மெதுவாக அவனுடைய இடத்தில் இருந்த ஓர் டம்ளர்
தண்ணீரையும், ரொட்டித் துண்டையும் எடுத்துவிட்டு, தன்னுடைய இடத்தில்
இருந்த அறுசுவை உணவை அவனுடைய இடத்தில் வைத்தார். பின்னர் அவர் அந்த
ஒரே ஒரு ரொட்டித் துண்டைச் சாப்பிட்டுவிட்டு, டம்ளரில் இருந்த தண்ணீரைக்
குடித்தார்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மகன், தவறு செய்தது நான்; ஆனால்,
இவர் அதற்குரிய தண்டனையை அனுபவிக்கின்றார் என்று தனக்குள்
நினைத்துக்கொண்டு அவரிடம், "அப்பா! நான் செய்தது மிகப்பெரிய தவறு.
என்னுடைய தவற்றிற்காக நீங்கள் தண்டனையை அனுபவித்துக்
கொண்டிருக்கின்றீர்கள். இனிமேலும் இப்படிப்பட்ட தவற்றினை நான்
செய்ய மாட்டேன்" என்று அவரிடம் மன்னிப்புக் கேட்டான். அதன்பிறகு
அவன் குறிப்பிட்ட நேரத்திற்கு உணவு உண்ண வரத் தொடங்கினான்.
இந்த நிகழ்வில் வருகின்ற தந்தை எப்படி மகன் செய்த தவற்றிற்காக தன்மேல்
தண்டனையை வருவித்துக் கொண்டாரோ, அப்படித்தான் கடவுளும் மக்கள்
செய்த பாவங்களுக்காக தன் ஒரே மகனையே சிலுவை சாவை ஏற்கச் செய்தார்.
அதனாலேயே அவரைப் பேரன்பு மிக்கவர் என்கிறோம். இன்று நாம்
தூய்மைமிகு மூவொரு கடவுள் என்ற பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா
நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று நாம் சிந்திப்போம்.
கடவுள் ஏன் பேரன்பு மிக்கவர்?
"எவர் ஒருவர் மூவொரு கடவுளை நம்பவில்லையோ, அவர் மீட்பினை இழக்க
வாய்ப்பிருக்கின்றது. அதே நேரத்தில் எவர் ஒருவர் மூவொரு கடவுளைப்
புரிந்து கொள்ள முற்படுகின்றாரோ, அவர் இயல்புநிலையை இழக்க
வாய்ப்பிருக்கின்றது." - இப்படிச் சொன்னவர் வேறு யாரும் அல்லர்,
புனித அகுஸ்தினே! இதனாலேயே ஒருவர் இவ்வாறு சொன்னார்: "மூவொரு கடவுளைத்
தொழுவதற்கு அவரை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையில்லை.
மாறாக, மூவொரு கடவுளோடு உள்ள உறவில் வளர அவர் அவரிடம் வேண்டினால்
போதுமானது."
மூவொரு கடவுளை முழுமையாக அறிந்துகொள்வது கடினம்தான் என்றாலும், அவரிடம்
விளங்கும் நற்பண்புகளை அறிந்துகொண்டு, அவரை போன்று நாம் வாழ முயற்சி
செய்யலாம். விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல்
வாசகத்தில், கடவுளின் ஊழியரான மோசே சீனாய் மலையில் இரண்டாம்
முறையாக ஏறிச் செல்கின்றார். அப்போது கடவுள் அவரைக் கடக்கும்போது,
"ஆண்டவர், ஆண்டவர் இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத்
தயங்குபவர்; பேரன்புமிக்கவர்; நம்பிக்கைக்குரியவர்" என்ற வார்த்தைகள்
ஒலிக்கின்றன.
கடவுள் உண்மையில் இரக்கமும் பேரன்பும் மிக்கவர். ஏனெனில், இதற்கு
முன்பு மோசே கடவுளிடமிருந்து பத்துக் கட்டளைகளைப் பெற்றுக்கொண்டு
மக்களிடம் திரும்பிபோது அவர்கள் கடவுளை மறந்து, பொன்னாலான
கன்றுக்குட்டியைச் செய்து வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். இதற்காக
கடவுள் அவர்களை அழிக்க நினைக்கும்போது, மோசே அவர்களுக்காகக்
கடவுளிடம் பரிந்து பேச, கடவுள் அவர்கள்மீது இரக்கம் கொண்டு,
அவர்களை மன்னிப்பார். கடவுள் பேரன்புமிக்கவராய் இருந்ததாலேயே
அவரால் பாவம் செய்த மக்களை மன்னித்தும் இரக்கம் காட்டியும் அவர்களை
ஏற்றுக்கொள்ள முடிந்தது. இதுபோன்று கடவுள் தம் மக்கள்மீது பலமுறை
இரக்கம் காட்டியதால், அவர் பேரன்புமிக்கவர் என
அழைக்கப்படுகின்றார்.
நம்பிக்குரியவரிடம் நம்பிக்கை கொள்
மனிதர்கள் தங்கள் பலவீனத்தால் செய்த பாவத்தினால் கடவுள் கொடுத்த
மேன்மையை இழந்தபோதும் (உரோ 3:23), கடவுள் அவர்களை அப்படியே
கைவிட்டுவிட வில்லை. மாறாக, அவர்களை மீட்பதற்காகக் கடவுள் தம் ஒரே
மகனை அனுப்புகின்றார். இதுவும் கடவுள் இவ்வுலகை எந்த அளவுக்கு
அன்பு செய்கின்றார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது.
இவ்வாறு கடவுளால் இவ்வுலகை மீட்பதற்காக அனுப்பப்பட்ட அவரது ஒரே
மகனாம் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவேண்டும். அப்போதுதான் ஒருவரால்
நிலைவாழ்வைப் பெற முடியும். இல்லையென்றால, தண்டனைத் தீர்ப்பைத்தான்
பெற முடியும். இதைப் பற்றி இன்றைய நற்செய்தியில் பேசுகின்ற இயேசு,
இன்னொரு பகுதியில், "கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற
செயல்" (யோவா 6: 29) என்பார். ஆகையால், கடவுளையும் அவர் அனுப்பிய
இயேசுவையும் நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்(கள்)
நம்பிக்கைக் குரியவர்(கள்)
ஒன்றுமையோடு இரு!
கடவுள் பேரன்புமிக்கவராக, நம்பிக்கைக்குரியவராக இருக்கும் அதே
வேளையில், அவர் ஒற்றுமைக்கும் ஒன்றிப்புக்கும் இலக்கணமாகத்
திகழ்கின்றார். அதனால்தான் கடவுள் மூன்று ஆள்களாக இருந்தாலும்,
யாதொரு வேறுபாடும் இன்றி, ஒரே அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம்,
ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மையோடு இருக்கின்றார் என்று நாம்
நம்புகிறோம்.
இவ்வாறு ஒற்றுமைக்கு உறவிற்கு இலக்கணமாக இருக்கும் மூவொரு கடவுளைப்
போன்று இறைமக்கள் இருக்கவேண்டும் என்ற அழைப்பினைப் பவுல் இன்றைய
இரண்டாம் வாசகத்தில் தருகின்றார். யூதர், கிரக்கர், ஏழை, பணக்காரர்
என்று பல்வேறு விதமாகப் பிரிந்து கிடந்தார்கள் கொரிந்து நகர
மக்கள். அவர்களிடம், பவுல், "மகிழ்ச்சியாய் இருங்கள்; உங்கள்
நடத்தையைச் சீர்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்"
என்று சொல்லிவிட்டு, "மன ஒற்றுமை கொண்டிருங்கள். அமைதியுடன்
வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு
இருப்பார்" என்கிறார்.
கடவுளின் அன்பு மக்களாகிய நாம், மூவொரு கடவுளைப் போன்று
ஒற்றுமையாய் இருக்கவேண்டும். அப்போதுதான் அவர் அளிக்கும் அன்பையும்
அமைதியையும் பெற்றுக்கொள்ள முடியும். நாம் மூன்று கடவுளைப் போன்று
அன்பாய், நம்பிக்கைக்குரியவர்களாய், ஒற்றுமையாய் இருந்து, அவர்
அளிக்கும் ஆசிகளைப் பெறுவோம்.
சிந்தனைக்கு
கடவுள் மூவொரு கடவுள் இல்லை என்றால் அவர் அன்பாய் இருக்க வாய்ப்பே
இல்லை. ஏனெனில், அன்பிற்கு அன்பு செய்பவர், அன்பைப் பெறுபவர்,
அன்பு என்ற மூன்று தேவைப்படுகின்றன" என்பார் பீட்டர் கிரீடப் என்ற
அறிஞர். எனவே, அன்பாய் இருக்கும் மூவொரு கடவுளைப் போன்று நாம்
அன்பாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறையுரைச்சிந்தனை
-
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பது எந்த ஒரு பகுத்தறிவுள்ள
மனிதரும் மறுக்க முடியாத உண்மை என்பதை நாம் அறிவோம். ஏனெனில்
காரியம் என்று ஒன்று இருந்தால் அதற்குக் காரணம் ஒன்று இருக்க
வேண்டுமே. இந்த மேசை, இந்தக் கோயில் இருக்கிறது என்றால் இதைக்
கட்டிய ஒருவர் இருக்க வேண்டுமல்லவா? குழந்தை இருந்தால் அதைப்
பெற்றெடுத்த தாய் வேண்டுமே! மரமிருந்தால் அதற்கு விதை
வேண்டுமே! இதேபோல்தான் இந்த அகில உலகமே! இந்த மாட்சிமிகு
ஒழுங்குபட்ட வானகமும், வையகமும் கடவுள் ஒருவர் உண்டு என்று
எடுத்துரைக்கிறது!
ஆனால் கடவுள் தந்தையாக, மகனாக, தூய ஆவியாக இருந்தார் என்பதை
பகுத்தறிவின் ஒளியைக் கொண்டு மட்டும் அறிய முடியாது. அதற்கு
இறை வெளிப்பாடு (Revelation) தேவை. நம் அன்றாட வாழ்வில்
நாம் செய்வதென்ன? தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே திருப்பலியைத்
தொடங்குகிறோம். ஆலயத்தில் நுழையும்போதும் சிலுவை அடையாளமிட்டு
செபிக்கும் போதும் நாம் இந்த மூவொரு தெய்வத்தை அழைக்கிறோம்.
இந்த மூவொரு தெய்வம் மூன்று ஆட்களாக இருந்தாலும் வேறு வேறு
அல்ல. ஒரு கடவுள் என்பது நமது விசுவாசம்.
ஆனால் இந்த மறை பொருளை மனிதராகப் பிறந்த நம் ஆண்டவர் இயேசுதான்
நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
நான் தந்தையிடமிருந்து வந்தேன். தந்தையிடம் மீண்டும்
போகிறேன். துணையாளராகிய தூய ஆவியானவரை உங்களுக்கு அனுப்புவேன்
(யோவா. 14:16-17) என்று இயேசு வெளிப்படுத்தியுள்ளார்.
அதே இயேசு தம் சீடர்களை நோக்கி நீங்கள் போய் எல்லா இனத்தாரையும்
சீடராக்குங்கள். தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால்
திருமுழுக்குக் கொடுங்கள் (மத். 28:19) என்று தெளிவுபட
கூறி மூவொரு கடவுளின் மறைபொருளை வெளிப்படுத்தியுள்ளார்.
மூவொரு கடவுள் நம்மோடு எத்தகைய தொடர்பு கொண்டுள்ளார் என்பதை
இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் அடிகளார்
கூறுகிறார்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின்
அன்பும், தூய ஆவியானவரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக
(2 கொரி. 13:13) என்று வாழ்த்துவதில் தந்தையின் அன்பும்,
மகனின் அருளும், ஆவியானவரின் நட்புறவும் நம்மில் செயலாற்றுவது
தெளிவாக்கப்படுகிறது.
தந்தை: பழைய ஏற்பாட்டில் யாவே: "இருக்கின்றவர் நாமே" என்று
வெளிப்படுத்திய ஆண்டவர் பேரன்பும், இரக்கமும், பரிவும்
கொண்டவர். சினம் கொள்ள தாமதிப்பவர். நம்பிக்கைக்குரியவர்
என்றெல்லாம் வெளிப்படுத்தப்படுகிறார். நம்மீது தன் அன்பையே
பொழிகின்றார். நம் மீட்புக்காக தம் மகனையே நமக்காகக் கையளித்தார்
(யோவா. 3:16). பெற்ற தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன்
(எசாயா 49:15) என்று கூறியவரின் அன்பு நம் தேவை அறிந்து
நமக்கு உதவி செய்யும் அன்பு.
மகன்: மகனாகப் பிறந்த நம் ஆண்டவர் இயேசு நம்மீது தன் அருளைப்
பொழிகின்றார். "உலகம் முடியும் மட்டும் உங்களோடு இருப்பேன்"
(மத். 28:20) என்று கூறிய ஆண்டவர் நமது மீட்பராக நமக்காக
மன்னிப்பு வேண்டி, பரிந்து பேசுபவராக, தந்தையிடம் நம்மை அழைத்துச்
செல்பவராகத் தன் அருளையே நம்மீது பொழிந்து
கொண்டிருக்கிறார். எப்படி? நீங்கள் வாழ்வு பெறும் பொருட்டு
அதுவும் மிகுதியாகப் பெறும் பொருட்டு வந்தேன் (யோவா.
10:10) என்று கூறியவர் ஆண்டவர் இயேசு. தன் வாழ்வையே நமக்காகத்
தந்து வாழ்வு தரும் உணவு நானே (யோவா.6:48) என்றும்
கூறியுள்ளார்.
தூய ஆவி: தந்தையுடையதும், மகனுடையதுமானவர்தான் தூய ஆவி.
இவர் தனித்து செயல்படுபவர் அல்ல. இணைந்து செயல்படுபவர்.
மகன் இவ்வுலகில் விட்டுச் சென்ற பணியைச் சீடர் தொடர்ந்து
செயல்படத் துணையாக நட்புறவாக இருப்பவர்தான் தூய ஆவியானவர்.
இவர் நம் உள்ளத்தில் குடிபுகுந்து நம்மைப் புனிதப்படுத்தி
இறைவனின் தூய ஆலயமாக்கி நம்மை மீண்டும் மீண்டும்
புதுப்பித்து கிறிஸ்தவ நம்பிக்கையில் நிலைத்து இருந்து இயேசுவின்
சாட்சிகளாக விளங்கச் செய்கிறார்.
இந்தப் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் செய்வது என்ன?
தந்தையின் அன்பைச் சுவைக்கும் நாம் மற்றவர்களை அன்பு செய்ய
வேண்டாமா?
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, சுயநலம் இன்றி தன் படைப்பு
அனைத்தும் வாழ வேண்டும் என்று தன் ஒரே மகனை இவ்வுலகிற்கு
அனுப்பிய இறைவனின் பேரன்பைச் சுவைக்கிறவர்களாக நாம் இருக்க
வேண்டும்.
மூவொரு கடவுளின் திருநாளைத் திருச்சபைத் தாய் இன்று
கொண்டாடி மகிழ்கின்றாள். மூன்று எப்பழ ஒன்றாக முழயும்
? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல இதோ மூன்று உதாரணங்கள்.
முதல் உதராணம் : ஒரு குடும்பத் தலைவரை உதாரணத்திற்கு
எடுத்துக்கொள்வோம். அந்தக் குடும்பத் தலைவர் அவர்
பிள்ளைகளுக்குத் தந்த ; அவருடைய அப்பாவிற்கு மகன் ;
அவருடைய நண்பர்களுக்கு நண்பர். ஒரே குடும்பத் தலைவர்
தந்தை, மகன், நண்பர் என்ற மூன்று உறவு நிலைகளில் வாழ்வதுபோல,
ஒரே இறைவன் உலகைப் படைத்த தந்தையாகவும், உலகை மீட்ட
மகனாகவும், உலகை வழிநடத்தும் தூய ஆவியாராகவும்
வாழ்கின்றார்.
இரண்டாவது உதாரணம் : மரம் ஒன்று! அதற்கு வேர் உண்டு.
அது மண்ணுள் புதைந்து கிடப்பதால், மறைந்திருப்பதால் அதை
நம்மால், நம் புறக்கண்களால் பார்க்க முழவதில்லை. அந்த
மரத்திற்கு வெளியில் தெரியும் அடிப்பாகம் உண்டு; அந்த
மரத்திற்குள் உயிர்ச்சத்து உண்டு.
மூவொரு இறைவனைப் புரிந்து கொள்ள வேரை தந்தைக்கும், அடிமரத்தை
மகனுக்கும், உயிர்ச்சத்தை தூய ஆவியாருக்கும் ஒப்பிடலாம்.
மூன்றாவது உதாரணம்: விளக்கு ஒன்று! அங்கே எண்ணெயையும்,
திரியையும், சுவாலையையும் பார்க்கின்றோம். எண்ணெயைத்
தந்தைக்கும், திரியை மகனுக்கும், சுவாலையைத் தூய ஆவியாருக்கும்
ஒப்பிடலாம்.
மூன்று உதாரணங்களும், ஒப்புமைகளும் ஓரளவு மூவொரு இறைவனின்
இயல்பை நாம் அறிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன.
தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூவரையும் ஒன்றாக
வாழவைப்பது எது என்பதற்கு இன்றைய முதல் வாசகம் பதில்
கூறுகின்றது. இறைவன் இரக்கமுள்ளவர், பரிவுள்ளவர்,
சினம் கொள்ளத் தயங்குபவர், பேரன்பு மிக்கவர்,
நம்பிக்கைக்குரியவர். இப்படிப்பட்ட அற்புதக் குணங்கள்
இருக்கும் இடத்தில் எப்பழ பகைமையோ, சண்டை சச்சரவோ,
பொறாமையோ, சீற்றமோ, கட்சி மனப்பான்மையோ, பிரிவினையோ,
பிளவோ, அழுக்காறோ [கலா 5:20-21) இருக்கமுழியும்?
இன்று நம் நடுவே எத்தனைப் பிரிவினைகள்! ஒன்றாக
இருப்பதையெல்லாம் உடைத்தெறியுங்கள் என்ற போக்கு
நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது! நான் வாழ
வேண்டும்; நான் மட்டுமே வாழ வேண்டும் என்ற எண்ணம்
எங்கும் புரையோழக் கிடக்கின்றது.
ஒன்றுமட்டும் உண்மை! இப்படிப்பட்ட வாழ்க்கை முறை
நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கும் வரை, அன்பும்,
அமைதியும் அளிக்கும் கடவுள் நம்மோடு தங்கமாட்டார் ;
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின்
அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் நம்மோடு தங்காது [2
கொரி 13:11-13].
இன்றைய உலகுக்குத் தேவையான ஒருமைப்பாட்டை, ஒற்றுமையை,
அமைதியை எந்த மாநாட்டினாலும், உச்சக்கட்டப்
பேச்சுவார்த்தையாலும், பத்திரிகையாலும், படத்தாலும்,
விளம்பரத்தாலும், அறிவுரையாலும், அறவுரையாலும் நாம்
முழுவதும் அடையமுழயாது. நாம் விரும்பும் புதிய
வானத்தையும், புதிய பூமியையும் நாம் முழுவதும் அடைய
சிறந்த வழி நாம் தொழுகின்ற மூவொரு இறைவனைப் போல நாம்
வாழ முன்வருவதாகும்.
மேலும் அறிவோம் :
உலகம் தழீஇய(கு) ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு ( குறள் : 425).
பொருள்:
உலகச் சான்றோருடன் தழுவிச் செல்வதே ஒருவருக்குரிய
இயல்பான அறிவாகும். அவ்வாறு பொருத்தி வாழும்போது,
இன்பத்தில் மகிழ்வதும் துன்பத்தில் வருந்துவதும்
இல்லாததே சிறந்த அறிவாகும்.
வாழ்நாள் முழுவதும் கடவுளை மறுத்த
நாத்திகர் ஒருவர் சாகும் தறுவாயில் இருந்தார். அவருடைய நண்பர்கள்
அவரிடம், "கடவுளே! என் ஆன்மாவை மீட்டருளும் " என்று
சொல்லும்படி வற்புறுத்தினார். அவரோ சிரித்துக் கொண்டு,
"கடவுளே! நீ இருப்பது உண்மை என்றால், என் ஆன்மாவை, அப்படி
ஒன்று எனக்கு இருந்தால், அதை மீட்டருளும்" என்று சொல்லி உயிர்விட்டார்!
பகுத்தறிவுள்ள எவரும் கடவுளை ஏற்றுக் கொள்ள வேண்டும், பகுத்தறிவு
என்பது காரணம் - காரியம் அடிப்படையில் செயல்படுகிறது. காரியம்
என்று ஒன்று இருந்தால் அதற்குக் காரணம் என்று ஒன்று இருக்க
வேண்டும்; விதையின்றி மரம் இல்லை; தாயின்றி சேயில்லை; இதை
உலகில் சான்றோர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். சான்றோர்கள் ஏற்பதை
மறுப்பவன் அலகைக்கு, அதாவது, பேய்க்குச் சமமானவன் என்கிறார்
வள்ளுவர்.
திருத்தூதர் யாக்கோபு கூறுகிறார்: "பேய்களுங்கூட கடவுளை நம்பி
அச்சத்தால் நடுங்குகின்றன" (யாக் 2:19). எனவே கடவுளை நம்ப
மறுப்பவர் பேயைவிடக் கேடுகெட்டவர் என்பது தெளிவு. கடவுள்
ஒருவர் இருக்கிறார் என்பதைப் பகுத்தறிவு நமக்கு உணர்த்துகிறது.
ஆனால் ஒரே கடவுள் தந்தையாகவும் மகனாகவும் ஆவியாராகவும் இருக்கிறார்
என்பதை அறிய பகுத்தறிவு மட்டும் போதாது. அதற்கு இறைவெளிப்பாடு
தேவை. உண்மையில், மூவொரு கடவுள் பற்றிய உண்மையைக்
கிறிஸ்துவே நமக்கு வெளிப்படுத்தி யுள்ளார். அவரே தெளிவாகக்
கூறினார்: "நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது
உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்" (யோவா 16:28).
"உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு
உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்" (யோவா 16:13).
"எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை, மகன்,
துய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்" (மத்
28:19). எனவே ஒரே கடவுள் மூன்று ஆள்களாக இருக்கிறார் என்பது
கிறிஸ்துவால் வெளிப்படுத்தப்பட்ட உண்மை. அது கிறிஸ்தவ
வாழ்வுக்கு அடித்தளம்.
மூவொரு கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவைப் புனித பவுல் இன்றைய
இரண்டாம் வாசகத்தில் தமது வாழ்த்துரையில் பின்வருமாறு எடுத்துரைக்கிறார்:
"ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய
ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக" (2
கொரி 13:18). இதே வாழ்த்துரையைத்தான் திருப்பலியில் திருச்சபை
நமக்கு வழங்குகிறது. இவ்வாழ்த்துரையின்படி தந்தையின் தனிப்பண்பு
அன்பு; மகனின் தனிப்பண்பு அருள்; ஆவியாரின் தனிப்பண்பு நட்புறவு.
இப்பண்புகளைப்பற்றிச் சிந்திப்பது நமக்கு நலம் பயக்கும்.
தந்தையின் தனிப்பண்பு அன்பு: கடவுள் அன்பாய் இருக்கிறார்
(1 யோவா 4:16). அவருடைய அன்பு எத்தகையது என்பதை இன்றைய முதல்
வாசகம் கூறுகிறது. "ஆண்டவர் இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்.
சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்கு
உரியவர்" (விப 34:6-7). தந்தையாகிய கடவுள் தமது ஒரே மகனையே
கையளிக்கும் அளவுக்கு நம்மேல் அன்பு கூர்ந்தார் என்று இன்றைய
நற்செய்தி கூறுகிறது (யோவா 3:16). தமது சொந்த மகனையே நமக்காகக்
கையளித்த தந்ைத மற்ற அனைத்தையும் நமக்குக் கொடுப்பார் என்பது
உறுதி என்கிறார் புனித பவுல் (உரோ8:82). துன்ப வேளையில்
கடவுளின் அன்பைப் பற்றி ஐயப்பாடு கொள்கிறோம்; கவலைப்பட்டுக்
கண்கலங்குகிறோம். அவ்வேளையில் புனித பேதுரு நமக்குத் தரும்
அறிவுரை: "உங்கள் கவலைகளை யெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள்.
ஏனென்றால் அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார்" (1 பேது
5:7).
மகனின் தனிப் பண்பு அருள்: அருள் என்பது கடவுளின் இலவசக்
கொடை; மனித முயற்சி அல்ல. நாம் மீட்படைந்துள்ளது நமது
கிரிகையால் அல்ல, கடவுளின் கிருபையால் என்பது முழுக்க
முழுக்க உண்மை. கிறிஸ்து தமது சொந்த இரத்தத்தால் நம்மை
மீட்டார்; நம்க்கு எதிராக இருந்த பாவக் கடன் பத்திரத்தை
அவர் சிலுவையில் அறைந்து அழித்துவிட்டார் (கொலோ 2:14).
கிறிஸ்துவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத்
தூய்மைப்படுத்துகிறது (1 யோவா 1:7). நாம் மீட்படையத்
தேவைப்படுவதெல்லாம் கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொள்வதேயாகும்.
"மன்பதை பாவம் தீர்க்க மரித்தவா போற்றி" என்று கிறிஸ்துவை
நன்றியுடன் போற்றுவோம்.
தூய ஆவியாரின் தனிப்பண்பு நட்புறவு, தோழமை: சென்ற வாரம்
நாம் கேட்டதுபோல, தூய ஆவியார் வழியாகவே கடவுளின் அன்பு
நம்மீது பொழியப்பட்டுள்ளது (உரோ 5:5); அவர் வழியாகவே நாம்
கடவுளின் பிள்ளைகள் என்ற நிலையை அடைந்து, கடவுளை அப்பா
தந்தாய் எனக் கூப்பிடுகிறோம் (கலா 4:6); அவர் நமது
பெருமூச்சு வாயிலாய் நமக்காகப் பரிந்து பேசுகிறார் (உரோ
8:26). தூய ஆவியார் காட்டும் நெறியில் நடப்போம் (கலா
5:25). தூய ஆவியின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி,
பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்
ஆகியவற்றை நமது வாழ்வில் வெளிப்படுத்துவோம் (கலா 5:22).
கடவுள் ஆள்தன்மையில் மூவராக இருந்தாலும் இறைத் - தன்மையில்
ஒருவரே. அவர்களிடையே தனித்தன்மையும் உண்டு, ஒற்றுமையும்
உண்டு. மூவொரு கடவுள் நாம் வணங்குவதற்குரிய மறைபொருள்
மட்டுமல்ல; வாழ்க்கையில், சிறப்பாக, குடும்ப வாழ்க்கையில்
பின்பற்ற வேண்டிய மறைபொருள். தந்தை, மகன், தூய ஆவியார்
ஒருவருக்கொருவர் காட்டும் அன்பு கணவன் - மனைவி -
குழந்தைகள் உறவில் பிரதிபலிக்கப்பட வேண்டும்.
ஒரு மனைவி தன் கணவரிடம், "இந்த வீட்டில் ஒன்று நான் இருக்க
வேண்டும்; இல்லையென்றால் உங்கள் அம்மா இருக்க வேண்டும்.
இரண்டுபேரும் இந்த வீட்டில் இருக்க முடியாது. உங்கள்
முடிவு என்ன?" என்று கேட்டார். அதற்குக் கணவன், "நீயும்
வேண்டாம்; என் அம்மாவும் வேண்டாம்; வேலைக்காரி இருந்தால்
போதும்" என்றார். குடும்பத்தில் மூவொரு கடவுள் பிரசன்னமாய்
இருக்க வேண்டும். ஒருவர் மற்றவரை அன்பு செய்வதிலும்
மகிமைப் படுத்துவதிலும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
துறவறக் கூட்டு வாழ்விலும் மூவொரு கடவுளின் அன்பு வெளிப்பட
வேண்டும். துறவறக் கூட்டு வாழ்வு ஒரு சிறப்புக் குடும்பம்.
அதில் ஒரு சிலர் அர்ச்சனாவாகவும், நிறைஞ்சனாவாகவும்
இருக்கலாம்; ஒரு சிலர் எரிஞ்சனாவாகவும், காஞ்சனாவாகவும்
இருக்கலாம். ஒருவர் மற்றவரை அவருடைய நிறைகுறைகளுடன் ஏற்று,
"வேற்றுமையிலும் ஒற்றுமை, பன்மையிலும் ஒருமை" என்னும்
மூவொரு கடவுளின் இயல்பைப் பிரதிபலிக்க வேண்டும்.
இவ்வாறு இல்லறத்திலும் துறவறத்திலும் மூவொரு கடவுளின்
அன்பும், அருளும், தோழமையும் நின்று நிலவுவதாக!
மனிதன் இல்லாமல், மனித சமுதாயத் தொடர்பு இல்லாமல்கடவுளுக்கு
ஏது வரலாறு? காலத்தைக் கடந்தவர் கடவுள். கால வரையரைக்கு உட்பட்டது
சரித்திரம். காலத்தைக் கடந்தவராகவே கடவுளைக் கருதும் போது
கால வரையரைக்கு உட்பட்ட வரலாறு இருக்கமுடியாது.
அப்படிச் சரித்திரமில்லாத கடவுள் எப்படி இருப்பார்? இரு
பிற இனத்து மனிதர்கள் கடவுளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தனராம்.
கிறிஸ்தவக் கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று ஒருவர்
கேட்டார். "கிறிஸ்தவக் கடவுளைப் பற்றியா கேட்கிறாய்?" பற்றவர்
பதில் சொன்னாராம் "பிதா என்று ஒருவர் இருந்தார் -
தாத்தாவாக அப்போதே தலைதாடியெல்லாம் நரைத்துப் போய், இந்நேரம்
அவர் மண்டையைப் போட்டிருப்பார், சுதன் என்று ஒருவர். இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னேயே மனிதர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து
கொன்று போட்டார்கள. ஆவி என்று ஒருவர் புறாவாகக் காடுமலையெல்லாம்
சுற்றிப் பறந்து கொண்டிருந்தார். இந்நோம் அவரைச் சுட்டுப்
பிரியாணி ஆக்கி இருப்பார்கள்.
ஆனால் நாம் வழிபடும் மூவொரு கடவுள் அப்படி நகைப்புக்கு உரியவரல்ல.
தந்தை இவ்வுலகை எவ்வளவு அன்பு செய்தார் என்றால் தன் ஒரே
மகனையே மனித இன மீட்புக்காகக் கையளிக்கத் திருவுளம்
கொண்டார் (யோ.3:16)
மகன் எப்படியெல்லாம் நம்மை அன்பு செய்தார்? சிலுவைச்
சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே
தாழ்த்திக் கொண்டார். (பிலிப்.2:8)
ஆவியார் இன்றும் ஆற்றலோடு அர்ச்சிக்கும் பணியில்
(கவனிக்கவும், வெறும் அற்புதங்கள் புரியும் பணியில் அல்ல)
ஈடுபட்டு நம்மில் இயங்கிக் கொண்டிருக்கிறார்.
ஆம் சமுதாய ஈடுபாடு உடையவராக, புதிய சமுதாயத்தைக் கட்டி
எழுப்பிக் காக்கத் துடிப்பவராகவே விவிலியக் கடவுள்
வெளிப்படுகிறார்.
பழைய ஏற்பாட்டில் எகிப்திலிருநது வாக்களிக்கப்பட்ட நாடு
நோக்கிய, பபிலோனியாவிலிருந்து புனிதநகர் எருசலேம் நோக்கிய
வரலாற்றுச் சிறப்புமிக்க விடுதலைப் பயணங்களாகட்டும், புதிய
ஏற்பாட்டில் கல்வாரி நோக்கிய இயேசுவின் மீட்புப்
பயணமாகட்டும், எல்லாமே வளமான மனித சமுதாய நோக்குடையவை.
புதிய சமூதாயம் - அதுவே இயேசுவின் இலட்சியம்.
புதிய சமுதாயம் - அதற்கே இயேசுவின் அர்ப்பணம்.
நமக்கும் கதியும் இலட்சியமும் கடவுளுக்கு அப்பால் - அது
இறையாட்சியே. நம்மை அர்ப்பணிப்பதும் இறைவனுக்கல்ல.
இறைவனுக்கு நாம் தேவையுமில்லை. ஆனால் இறைவனின் கனவான
இறையாட்சிக்கு நாம் தேவை.
நமது மூவொரு கடவுள் சமுதாய நோக்கு, சமுதாய ஈடுபாடு
கொண்டவர் மட்டுமல்ல. தானே ஒரு சமுதாயமாக - ஒரு குடும்பமாக
வாழ்பவர்.
"கடவுள் தம் உருவில் (தமது சாயலாக) மானிடரைப் படைத்தார்.
கடவுளின் உருவிலேயே (தெய்வச் சாயலாகவே) அவர்களைப்
படைத்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார் "
(தொ.நூ.1:27) அந்த உரு, அந்தத் தெய்வச் சாயல் எதில் எப்படி
வெளிப்படுகிறது? மனித உடலிலா? இருக்க முடியாது. காரணம்?
கடவுளுக்கு உடலில்லை. அரூபியான மனித ஆன்மாவிலா? மனித ஆன்மா
கடவுளின் சாயல் என்ற சிந்தனை ஒரளவு மரபுச் சிந்தனையாக
இருந்தாலும் அவ்வளவு பொருத்தமானமாகத் தோன்றவில்லை.
வானதூதர்கள் அரூபிகளே. அதற்காக அவர்கள் கடவுளின் சாயலாகப்
படைக்கப்பட்டார்கள் என்ற குறிப்புக்கு இடமில்லை. மனிதன்
மட்டுமே கடவுளின் சாயல் - அதுவும் உறவிலே. கடவுள் ஒரு
குடும்பமாக இருக்கிறார். மனிதனையும் ஒரு குடும்பமாகத் தன்
சாயல் விளங்கப் படைத்தார். குடும்பமாக வாமும் மனிதனே
மூவொரு கடவுளுக்கு சாட்சியாக இருக்கிறான்.
"மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று" (தொ.நூ.2:18) என்ற
கடவுளின் சிந்தனைக்கே காரணம் அவரது உள்வாழ்க்கைதான். தன்
சாயலாகப் படைக்கப்பட்டவன் எப்படித் தனியாக இருக்க
முடியும்? திரித்துவம் ஒரு கணிதப் புதிர் அன்று (1+1+1-1?)
மாறாக அது உறவின் பிறப்பிடம். உறவுகளின் சங்கமம்.
"நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்.
தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக்
கொடுங்கள்". (மத்.28:19) திருமுழுக்கு என்ற அருள்சாதனம்
தண்ணீருக்குள் மட்டுமல்ல, தமதிரித்துவத்திற்குள் நம்மை
மூழ்கடிக்கிறது. நாம் மூவொரு கடவுளுக்குள்ளும், மூவொரு
கடவுள் நமக்குள்ளும் உறைகிறோம். எனவே கிறிஸ்தவ வாழ்வு
என்பது மூவொரு கடவுளின் வாழ்வில் பங்கேற்பதாகும். மூவொரு
கடவுளின் வாழ்வு தந்தை மகன் தூய ஆவியில் விளங்கும் அன்பு
உறவாகும்.
கடவுளை ஒரு சக்தியாகவோ வல்லமையாகவோ மட்டும் பார்க்காமல்
தந்தை மகன் தூய ஆவி என்ற அன்புறவிலே பங்கு கொள்வதற்கு
அழைப்பதுதான் கிறிஸ்தவ நம்பிக்கை. இந்த நம்பிக்கைக்கு
சாட்சியம் பகர, தந்தையின் அன்பில் ஊன்றி நின்று ஆவியாரின்
அருள்பொழிவால் வழிநடத்த இயேசுவே கற்றுக்
கொடுத்திருக்கிறார். இவ்விதம் தந்தையோடும் ஆவியோடும் அவர்
வாழ்ந்த வாழ்வே இம்மறையுண்மையை விளக்கிக் காட்டுகின்றது.
நாமும் இத்தகைய உறவு வாழ்வை வாழ்வதற்கே நமது கிறிஸ்தவ
நம்பிக்கை அழைக்கிறது.
சிந்தனைப் பயணம்:
அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச
தூய்மைமிகு மூவொரு இறைவன் பெருவிழா
மழலையர்பள்ளி ஒன்றில் குழந்தைகள் அனைவரும் மிக மும்முரமாக
வரைந்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் ஓவியத்தையும் ஆசிரியர்
பார்த்து இரசித்தபடியே சுற்றி வந்துகொண்டிருந்தார். ஆழ்ந்த
ஈடுபாட்டுடன் எதையோ வரைந்து கொண்டிருந்த ஒரு சிறுமியை ஆசிரியர்
அணுகி, "என்ன வரைந்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்.
தன் ஓவியத்திலிருந்து கவனத்தைச் சிறிதும் திருப்பாமல்,
"நான் கடவுளை வரைந்துகொண்டிருக்கிறேன்" என்று பதில்
சொன்னாள், அக்குழந்தை. உடனே ஆசிரியர், "கடவுள் எப்படியிருப்பார்
என்று யாருக்குமே தெரியாதே!" என்று கூறினார். அக்குழந்தை,
ஆசிரியரை நிமிர்ந்துபார்த்து, "கொஞ்சம் பொறுங்கள்... இன்னும்
சிறிது நேரத்தில் அவர் எப்படியிருப்பார் என்று
தெரிந்துவிடும், பாருங்கள்!" என்று புன்சிரிப்புடன் பதில்
சொன்னாள்.
'இறைவனை யாரும் பார்த்ததில்லை' என்பது, வளர்ந்துவிட்ட ஆசிரியரின்
கணிப்பு. 'இறைவனை என்னால் எளிதில் காட்டமுடியும்' என்பது,
குழந்தையின் நம்பிக்கை. குழந்தையின் வடிவில் இறைவனைக் காணமுடியும்
என்பதையும், குழந்தைகள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்பதையும்
ஏறத்தாழ எல்லா மதங்களும் கூறுகின்றன. உலகில் பிறக்கும் குழந்தைகள்,
இறைவன் என்ற பேரொளியின் சிறு பொறிகளாக, இவ்வுலகிற்கு வருகின்றனர்.
வயது வளர வளர, இந்த ஒளி மங்கி, மறைந்துவிடுகிறது.
மங்கி, மறைந்துவரும் அந்த ஒளியை, மீண்டும் ஒளிரவைப்பதற்கு,
இந்த ஞாயிறு, நமக்கு ஓர் அழைப்பு வந்துள்ளது. இன்று நாம்
கொண்டாடும் மூவொரு இறைவன் பெருவிழாவை, குழந்தை மனதுடன் அணுகினால்
மட்டுமே, இப்பெருவிழாவின் மையப்பொருளை, ஓரளவாகிலும் நம்மால்
புரிந்துகொள்ளமுடியும். மூவொரு இறைவன் என்ற பெருங்கடலில்,
ஒரு குழந்தையின் குதூகலத்துடன் குளித்து மகிழ்வதற்குப் பதில்,
அக்கடலை, தன் அறிவுக் குழிக்குள் சிறைப்படுத்த முயன்ற
புனித அகுஸ்தின் பற்றி சொல்லப்படும் கதை நமக்கு நினைவிருக்கலாம்.
இறையியல் மேதையான புனித அகுஸ்தின், ஒருநாள், ஆழ்ந்த சிந்தனையோடு
கடற்கரையில் நடந்துகொண்டிருந்தார். இறைவன், மூன்று ஆட்களாய்,
அதேவேளையில், ஒரே கடவுளாய் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்று,
தன் மூளையைக் கசக்கிப்பிழிந்து, விடை
தேடிக்கொண்டிருந்தார். கடற்கரையில், ஒரு சிறுவன், சிறியதொரு
சிப்பியில், கடல் நீரை அள்ளி எடுத்து, கரையில் இருந்த ஒரு
குழியில் ஊற்றிவிட்டு, மீண்டும் கடலுக்குச் சென்று நீர் எடுத்து
வந்தான். சிறுவன் இவ்வாறு நான்கைந்து முறை செய்ததைப்
பார்த்த அகுஸ்தின், சிறுவனிடம் சென்று, "என்ன செய்கிறாய்?"
என்று கேட்டார். சிறுவன் அவரிடம், "பார்த்தால் தெரியவில்லையா?
நான் இந்தக் கடல் நீர் முழுவதையும், அந்தக் குழிக்குள் ஊற்றிக்கொண்டிருக்கிறேன்"
என்றான். அந்தக் குழந்தைத்தனமான பதிலைக்கேட்டு, இலேசாகப்
புன்னகைத்த அகுஸ்தின், அச்சிறுவனிடம், "இந்தக் கடல் நீர்
முழுவதையும் உன்னால் அந்தச் சிறு குழிக்குள் ஊற்றிவிட
முடியுமா?" என்று கேட்டார். அச்சிறுவன், அகுஸ்தினை ஆழமாகப்
பார்த்து, "உங்களுடைய சிறிய அறிவைக்கொண்டு, அளவுகடந்த கடவுளை
உங்களால் புரிந்துகொள்ள முடியுமா?" என்று பதில் கேள்வி
கேட்டுவிட்டு, மறைந்துபோனான்.
அன்று, புனித அகுஸ்தின், அக்குழந்தையிடம் கற்றுக்கொண்டது,
மூவொரு கடவுளைப்பற்றிய உண்மை என்பதைவிட, தன்னைப்பற்றிய உண்மை
என்று சொல்வதே பொருந்தும். அக்குழந்தையிடம் கற்றுக்கொண்ட
பாடம், புனித அகுஸ்தினை, வாழ்நாள் முழுவதும் பணிவுடன் வாழவைத்தது.
முக்கியமாக, கடவுளைப்பற்றிய சிந்தனைகளை, பணிவுடன் கற்றுக்கொள்ளவைத்தது.
பணிவுடன், தன் ஆழ்மனதில் பதியவைக்க வேண்டிய ஓர் உண்மையை,
புனித அகுஸ்தின், தன் அறிவுத்திறன் கொண்டு, அறிந்து,
தெரிந்து, புரிந்துகொள்ள முயன்றார். அதில் தோல்வியும் கண்டார்.
அறிவியலில் வியக்கத்தக்க வளர்ச்சி பெற்றுவிட்டதாக, அனைத்து
புதிர்களுக்கும் விடைகளைக் கண்டுபிடித்துவிட்டதாக எண்ணிவந்த
நம் தலைமுறையினருக்கு, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி, பணிவுப்பாடங்களைப்
புகட்டிவருகிறது. இவ்வுலகத்தில் இனி வெல்வதற்கு எதுவுமே
கிடையாது, இந்த உலகைத் தாண்டிய உண்மைகளும் கிடையாது என்ற
மமதையில் வாழ்ந்த பலர், இந்தக் கிருமியின் முழு உண்மையை அறிந்துகொள்ள
இயலாமல் தடுமாறுவதை நாம் அறிவோம். நம் ஒவ்வொருவரையும்,
நாம் வாழும் உலகையும், படைப்பு அனைத்தையும் இயக்கும் ஒரு
சக்தி உள்ளது; அந்த சக்திக்கு முன், பணிவுடன் தலைவணங்குவது
ஒன்றே, மனிதர்களாகிய நாம் செய்யக்கூடிய பொருத்தமானச் செயல்
என்பதை, அண்மைய மூன்று மாதங்களில், நாம் கற்றுவருகிறோம் என்பதை
மறுக்க இயலாது.
விடுதலைப்பயண நூலிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள முதல்
வாசகம் (வி.ப. 34: 4ஆ-6,8-9), அனைத்தையும் கடந்துநிற்கும்
கடவுளுக்குமுன் தலைவணங்கி நிற்பதைப்பற்றி பேசுகிறது. அகந்தை
கொண்டு, இன்று நாம் வாழ்வதுபோலவே, அன்று, இஸ்ரயேல் மக்கள்
வாழ்ந்தனர் என்பதை, இவ்வாசகம் நினைவுறுத்துகிறது. "அந்நாள்களில்,
ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடி, மோசே அதிகாலையில் எழுந்து,
சீனாய் மலைமேல் ஏறிச்சென்றார். தம் கையில் இரு கற்பலகைகளையும்
கொண்டு போனார்" (வி.ப. 34:4ஆ) என்று இன்றைய வாசகப்பகுதி துவங்குகிறது.
இந்த இறைவாக்கியத்தின் முதல் பகுதியில், மோசே முன்னவை
போன்ற இரண்டு கற்பலகைகளை வெட்டிஎடுத்துக்கொண்டார் என்ற
சொற்கள் இடம்பெற்றுள்ளன. மோசே எடுத்துச்சென்ற கற்பலகைகள்,
முன்னவை போன்ற கற்பலகைகள் என்ற சொற்களை வாசிக்கும்போது, முதல்முறை
உருவாக்கப்பட்ட கற்பலகைகள் உடைக்கப்பட்ட நிகழ்வின் நினைவுகள்
எழுகின்றன.
எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்களை வழிநடத்தி வந்த மோசே, அம்மக்களை
தொடர்ந்து வழிநடத்த, இறைவனின் துணையைத் தேடி, சீனாய் மலைமீது
தனியே சென்றார். அவர் திரும்பிவருவதற்குத் தாமதமாகவே,
பொறுமையிழந்த மக்கள், தங்களை வழிநடத்துவதற்கு, வேறு போலி
தெய்வங்களை உருவாக்க முடிவெடுத்து, பொன்னால் ஆன கன்றுக்குட்டி
ஒன்றை வடிவமைத்தனர். இதை நாம் விடுதலைப்பயண நூல் 32ம்
பிரிவில் காண்கிறோம். (காண்க வி.ப. 32:1)
இறைவன் வழங்கிய உடன்படிக்கை கற்பலகைகளைச் சுமந்தவண்ணம்
சீனாய் மலையிலிருந்து இறங்கிவந்த மோசே, பொற்கன்றைக் கண்டு,
சினம் கொண்டு, தம் கையிலிருந்த பலகைகளை மலையடிவாரத்தில்
வீசியெறிந்து உடைத்துப்போட்டார். (வி.ப. 32:19) இதைத்தொடர்ந்து,
அம்மக்களுக்கு பல்வேறு தண்டனைகளையும் வழங்கினார் என்று
32ம் பிரிவில் வாசிக்கிறோம். இப்பிரிவின் இறுதி இறைவாக்கியம்,
இன்று நாம் வாழும் நிலையை படம்பிடித்துக் காட்டுவதைப்போல்
தெரிகின்றது: ஆரோன் செய்த கன்றுக்குட்டி மக்களால் உருவாக்கப்பட்டதால்
ஆண்டவர் அவர்கள்மேல் கொள்ளைநோயை அனுப்பினார் (வி.ப. 32:35)
என்று, இப்பிரிவு நிறைவடைகிறது.
ஆண்டவர் அவர்கள்மேல் கொள்ளைநோயை அனுப்பினார் என்ற சொற்களை
வாசிக்கும்போது, மனித வரலாற்றில் வந்த பெரும் நோய்கள், இறைவன்
அனுப்பிய தண்டனை என்ற கூற்று, மீண்டும், மீண்டும் சொல்லப்பட்டுள்ளதை
நாம் உணர்கிறோம். கோவிட் 19 கொள்ளைநோயை, ஆண்டவர் அனுப்பியுள்ளார்
என்று ஒரு சிலர் கூறிவருவதை அறிவோம். இவ்வாறு சொல்வது, நமது
தவறுகளை மூடி மறைத்து, கடவுள் மீது பழியைப்போட்டு, மிக எளிதாக
தப்பித்துக்கொள்ளும் வழியாகத் தெரிகிறது.
சுயநலம், பேராசை என்ற பொற்கன்றுகளை உருவாக்கி, அந்த போலி
தெய்வங்களுக்கு, நமது சுற்றுச்சூழல், பூமிக்கோளம், உயிரினங்கள்
அனைத்தையும் நாம் பலியிட்டு வருகிறோம். வர்த்தக வெறியினால்
தூண்டப்பட்டு, ஆடு, மாடு, கோழி போன்ற ஏனைய உயிரினங்களை,
அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில், சுகாதாரமற்றச் சூழல்களில்
அடைத்துவைத்துள்ளோம். அவற்றை செயற்கையான முறையில் பெருக்கவும்,
வளர்ககவு்ம், வேதியியல் கலவைகளை உணவாகக் கொடுத்துள்ளோம்.
அந்த உயிரினங்களை உட்கொள்ளும் மனிதர்களுக்கு உருவாகக்கூடிய
பக்க விளைவுகளை மறைத்து, அவற்றை விற்பனை சேய்வதில் மட்டும்
நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இவை போதாதென்று, அரியவகை விலங்குகளை,
வேட்டையாடுவதிலும், விற்பனை செய்வதிலும் ஆர்வம்
கொண்டுள்ளோம். அத்துமீறிய இத்தகையப் பேராசையே, இந்தத்
தொற்றுக்கிருமி உருவாக வழியானது. எனவே, நமது சுயநல போலி
தெய்வங்களின் தீராத பசியைத் தீர்க்க நாம் உருவாக்கிய சூழல்,
ஒரு கொள்ளைநோயாக வெடித்துக் கிளம்பியது என்று சொல்வதுதான்
உண்மையே தவிர, கடவுள் இந்தக் கொள்ளைநோயை அனுப்பினார் என்று
கூறுவது தவறு.
நாம் வாழும் இன்றைய உலகில், உண்மை இறைவனை உதறித் தள்ளிவிட்டு,
பல்வேறு பொற்கன்றுகளை நாம் பீடமேற்றி வழிபட்டு வந்துள்ளோம்.
இந்தப் பொற்கன்றுகள் எதுவுமே நம்மைக் காக்கமுடியாது என்பதை,
கோவிட் 19 தொற்றுக்கிருமியின் தாக்கம், கடந்த சில மாதங்களாக
நமக்கு உணர்த்திவருகிறது.
இந்நிலையில், மோசேக்கு இறைவன் வழங்கிய இரண்டாவது வாய்ப்பை
இன்றைய முதல் வாசகத்தில் கேட்கும்போது, இறைவன், நமக்கும்,
இந்தக் கொள்ளைநோயைத் தொடர்ந்துவரும் காலத்தில், இரண்டாவது
வாய்ப்பை வழங்கியுள்ளார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இரண்டாவது முறையாக, கற்பலகைகளை எடுத்துக்கொண்டு மலையேறும்
மோசே, தன்னைப்பற்றியும், தன் மக்களைக் குறித்தும் தெளிவான
கண்ணோட்டம் கொண்டிருந்ததால், ஆண்டவரிடம் முழுமையாக சரணடைகிறார்.
உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, "என் தலைவரே!
நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால்,
இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே!
நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும்
மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்" என்றார்
(வி.ப. 34:8-9) இவ்வாறு, இன்றைய முதல் வாசகம் நிறைவுபெறுகிறது.
இத்தகையப் பணிவுடன், இறைவனை நெருங்கி வருவது, இன்றைய உலகில்
வாழும் நம் அனைவருக்கும் தேவை.
கோவிட் 19 தொற்றுக்கிருமியின் வீரியம் குறைந்து, நாம்
மீண்டும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பும் வேளையில், நம்மைப்பற்றி,
உலகைப்பற்றி, கடவுளைப்பற்றி பல அழகான உண்மைகளை பணிவுடன் கற்றுக்கொள்ள
முயல்வோம்.
அனைத்தையும் ஆர்வத்துடனும், பணிவுடனும் கற்றுக்கொள்ளும் பக்குவம்,
குழந்தைகளுக்கு, இயல்பாகவே உள்ளது. எனவேதான், அவர்கள், பல
ஆழமான உண்மைகளை, எளிதாகப் புரிந்துகொள்கிறார்கள். குழந்தைகளைப்
போன்ற மனம் கொண்டிருந்தால் மட்டுமே, இறைவனைப்பற்றி
புரிந்துகொள்ளமுடியும் என்பதை, இயேசு ஆணித்தரமாக நம்பினார்.
எனவே, அவர், இறைவனைப்பற்றி நீண்ட விளக்கங்களைத் தருவதற்குப்பதில்,
குழந்தைகளும், குழந்தைமனம் கொண்டோரும் புரிந்துகொள்ளும் வகையில்,
எளிய கதைகள் வழியே விளக்கினார்.
நம் இறைவன், தனிமையில், தானாய் உறைந்திருக்கும் ஒருவராக அல்ல,
மாறாக, மூவராக உறவுகொண்டிருப்பவர் என்ற பாடத்தை நமக்குச்
சொல்லித்தந்தவர், இயேசு. அவர் இவ்விதம் இறைவனை அறிமுகம்
செய்தது, பலரை வியப்பில் ஆழ்த்தியது; வேறு பலரை கோபத்தில்
ஆழ்த்தியது. இயேசுவின் காலம்வரை, தனித்திருக்கும், தனித்து
இயங்கும் ஒரு கடவுளை, இஸ்ரயேல் மக்கள் நம்பி, தொழுதுவந்தனர்.
தனித்திருக்கும் கடவுளை ஒரு கூட்டு உறவாய், குடும்பமாய் அறிமுகம்
செய்தவர் இயேசு
இயேசு சொன்னதைப் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் மறுத்த
இஸ்ரயேல் மக்களும், மதத்தலைவர்களும் தவறு செய்தனர் என்று,
நாம், வழக்கம்போல், தீர்ப்பிட துடித்துக்கொண்டிருந்தால்,
ஓர் ஆன்ம ஆய்வை மேற்கொள்வோம். இயேசு அறிமுகம் செய்துவைத்த
மூவொரு இறைவனை நாம் எவ்விதம் புரிந்துகொள்கிறோம்? ஏற்றுக்கொள்கிறோம்?
மூவொரு இறைவன், உயிரோட்டம் மிகுந்த உறவாக நம் மத்தியில்
வாழ்கிறாரா? அல்லது, வெறும் அறிவுப்பசியைத் தீர்க்கும் கருத்தாக
வலம் வருகிறாரா? என்ற கேள்விகளை இன்று எழுப்பி விடைகள்
தேடுவது நல்லது.
நாம் வாழ்வில் உருவாக்கியுள்ள பல்வேறு பொற்கன்றுகளை, போலி
தெய்வங்களை அடையாளம் கண்டுகொள்ளும் தெளிவையும், அவற்றை அழிக்கும்
துணிவையும் இறைவன் நமக்குத் தரவேண்டும் என்று மன்றாடுவோம்.
நாம் வழிபடும் மூவொரு இறைவனின் இலக்கணமே, உறவு என்றால்,
நாமும் உறவுகளுக்கு முதன்மையான, முக்கியமான இடம் தரவேண்டும்
என்பதே, இன்றைய விழாவின் முக்கியப் பாடம்.
உறவுகளை வளர்ப்பதைவிட, செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது,
என்ற மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக்
கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும்
வழிகளை, உறவுகளின் ஊற்றாய் விளங்கும் மூவொரு இறைவன்
நமக்குச் சொல்லித்தரவேண்டும் என்று, இன்று சிறப்பாக
மன்றாடுவோம்.
உன்னோடு நான் இருக்கின்றேன் சிறுபிள்ளை என்று சொல்லாதே!
என்று சொல்லி
என் வாழ்வை நன்கு உயர்த்திடும் ஏணியாக்கினாய்! சுடர் தீபமாக்கினாய்!!