ஆண்டின் பொதுக்காலம்
28 ஆம் ஞாயிறு திருப்பலி
முன்னுரை - 3ம் ஆண்டு
நன்றி சொல்ல வந்திருக்கும் நல் உள்ளங்களே!
அரும் பெரும் செயலாற்றும் கடவுளுக்கு, நன்றி சொல்லும் நல்ல உள்ளமே
நாளெல்லாம் உயர்வு பெறும் என்ற உணர்வை வழங்க வரவேற்கிறது இந்த
ஞாயிறு.
தொழுநோயால் வாழ்வைத் தொலைத்த நோயாளிகள் பத்துபேர் இயேசுவைத் தேடி
சுகம் கேட்கிறார்கள். தொல்லை தந்த தொழுநோய் தொலையட்டும் என
இயேசுவும் ஆசீர்வதிக்க, தொழுநோயாளிகள் பத்துப்பேரும்
சுகமாகிவிட்டனர்.
நன்றி சொல்ல ஒருவர் மட்டுமே ஓடிவந்தார். "
சுகம் பெற்ற மற்ற ஒன்பது
பேர் எங்கே"
? எனத் தேடுகிறார் இயேசு. நன்றி மறப்பது ஒரு நச்சுப்
பண்பு. பெற்றுக் கொண்ட நலன்கள் அனைத்திற்கும் நன்றி சொல்வதோ
நற்பண்பு. நன்றி சொல்லும் போது நன்றி சொல்பவருக்கு ஒரு
நற்பண்பையும் அதைக் கேட்பவருக்கு ஒரு உற்சாகத்தையும் இருவர் இடையே
ஒரு நல்லுறவையும் ஏற்படுத்துகிறது.
நன்றி சொல்கின்ற மனம் ஆன்மீக வாழ்வுக்கும், அன்றாட உலக
வாழ்வுக்கும் அடிப்படைத் தேவையானது. நன்றி சொல்வது மனமகிழ்ச்சிக்கு
வழியாகும். துன்புறுத்தும் மனசோர்வுக்கு மருந்தாகும்.
நன்றி சொல்லச் சொல்ல நலன்கள் மேலும் மேலும் கூடுதலாகும். நன்றி
சொல்லும் நற்பண்பை வாரி வழங்கும் திருப்பலி இது. நன்றி சொல்லும்
நற்பண்பால் எமை நிரப்பும் நலன் யாவும் பெற்று வளமாய் வாழச்செய்யும்
இறைவா என திருப்பலியில் மன்றாடுவோம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. நன்றியின் மேன்மையை எமக்கு உணர்த்தும் இறைவா!
நீர் எமக்குத்தந்த திருச்சபைக்காக நன்றி நவில்கின்றோம்.
திருப்பீடப்
பணியாளர்கள் ஆற்றும் திருப்பணி உம்மைக் கண்டு கொள்ளவும்,
உமக்கு நன்றி செலுத்தும் போது உமது எல்லையற்ற அன்பையும்,
அருளையும் பெற்றுக் கொண்டு, மீட்பின் பாதையில் எங்களை
அழைத்துச் செல்ல உதவும் என்ற நன்றியின் உணர்வைத் தூண்டவும்,
அருள் பொழிய இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்.
2. நன்றி உள்ளவர்களாய் வாழ எமை அழைக்கும் இறைவா!
நாடுகளின் தலைவர்கள் நன்மைகள் பல மக்களுக்குச் செய்த,
படைத்த
இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாக வாழ்ந்து மேன்மையான
புண்ணியங்களை தடையின்றி பெற்றுக் கொள்ள அருள் பொழிய
இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்.
3. ஆன்ம நோயையும் குணமாக்கி மீட்பளிக்க வந்த இறைவா!
ஆன்மீகத் தொழுநோயை விரட்ட எமக்களித்த எம் பங்குத்தந்தைக்காக
நன்றி சொல்கிறோம். உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட
இறைமக்களுக்கு ஒப்புரவு அருட்சாதனத்தின் வழியாக நோய்
நீங்கி மன
ஆறுதல் பெற்று நன்றி நிறை மனம் கொண்டவர்களாய் வாழ
வழிகாட்டும் பணியைச் சிறப்பாக செய்ய அருள் பொழிய இறைவா
உம்மை இறைஞ்சுகிறோம்.
4. நன்றியுள்ளவர்களாய் வாழ்ந்து காட்டுவோரை ஆசீர்வதிக்கும்
இறைவா!
உடலிலும் உள்ளத்திலும் பல்வேறு பாவப் பழக்கத்தால்
பீடிக்கப்பட்ட
நாங்கள் அவைகளில் இருந்து விடுதலை பெறவும், உம் வழியாக
நாங்கள் பெற்றுக் கொண்ட நலன்கள் அனைத்திற்கும் நன்றி
சொல்லி
வாழவும் அருள் பொழிய இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
என்ன நேர்ந்தாலும்... நன்றி
சொல்லி மகிழ்வோம்.....
சென் துறவிகளில் மிகச் சிலர் பெண்களாகவும் இருந்தார்கள்.
அவர்களில் ஒருவர் ரெங்கட்சு.
ஒரு நாள், அவர் பயணம் சென்று கொண்டிருந்தபோது ஒரு கிராமத்தில்
இரவு தங்கியிருந்து மறுநாள் அதிகாலையில் பயணம் தொடர
நினைத்தார் அவர்.
அந்த ஊர்க்காரர்களுக்கு சென் என்றாலே பிடிக்காது. சென்
வழியில் வாழ்பவர்கள், கலகக்காரர்கள், புரட்சியாளர்கள்
என்று அவர்கள் நினைத்தார்கள். சென் தியான முறையை ஆதரிப்பதால்
தங்களின் பழமையான சிந்தனைகளுக்குப் பங்கம் வரும்.
வாழ்க்கை முறையே மாறிவிடும் என்று பயந்தார்கள். அதனால்
சென் கொள்கை முறையை வெறுத்தார்கள்.
அந்த அம்மையார் சென் குரு எனத் தெரிந்ததும் தங்கள் கதவுகளை
மூடிக்கொண்டார்கள். தங்க இடம் கொடுக்கவில்லை. வேறு
வழியில்லாமல் கிராமத்திற்கு வெளியே வெட்டவெளியில் தங்க
நேர்ந்துவிட்டது அவருக்கு.
ஒரு செர்ரி மரத்துக்கடியில் அவர் தங்கிக் கொண்டார். கடுங்குளிர்,
இரவு நேரம் தூரத்தில் காட்டு விலங்குகளின் ஓலமும், ஊளைச்சத்தமும்
கேட்டுக் கொண்டே இருந்தன. நீண்ட தூரம் நடந்த களைப்பால்
கண்ணயர்ந்து அவர் தூங்கிவிட்டார். திடீரெனக் கண்விழித்துப்
பார்க்கும் போது வானில் முழுநிலவு ஒளி
வீசிக்கொண்டிருந்தது. செர்ரி மலர்கள் பூத்துக்
குலுங்கி சிரித்துப் பூ மழையாக உதிர்ந்து கொண்டிருந்தன.
அந்த மனோரம்மியமான காட்சியின் அழகில் மயங்கிப் போனார்.
அந்த அம்மையார்.
அந்த கிராமத்து மக்கள் விரட்டாமல் இருந்திருந்தால், தன்னை
வெறுக்காமல் இருந்திருந்தால் இந்த வாய்ப்புக்
கிடைத்திருக்குமா? என நினைத்துக் கொண்டார். நன்றிப்
பெருக்கோடு கிராமத்தைப் பார்த்தார். அவர் இதயத்தில் இனிய
பாடல் ஒன்று பிறந்தது.
"தங்க இடமில்லை என விரட்டியதால் தங்க நிலாவைக் கண்டேன்.
பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்களைக் கண்டு மகிழ்ந்தேன்0
இந்த கிராம மக்களுக்கு இனிய நன்றிகள். இவர்களின்
வெறுப்புக்கு இன்னும் கோடி நன்றிகள்" எனப் பாடினார்.
விரட்டியடித்தோருக்கும் வெறுத்து ஒதுக்கியோருக்கும் நன்றிகளாம்!
எந்த நிலையிலும் நன்றி சொல்லும் போது வாழ்க்கையில் நம்மால்
ஒரு அர்த்தம் காண முடியும். வாழ்க்கை உற்சாகமாக இருக்கும்
மனச்சோர்வு நீங்கும். தன்னலம் தோன்றாது.
பேராபத்தில் இருந்து காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி என்று
சொல்லி மகிழ்பவர் முதல் வகையினர்.
சின்னச் சின்ன கொடைகளுக்கும் நன்றி சொல்பவர்கள் இரண்டாம்
வகையினர்.
இன்பம் துன்பம் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்பவர்
மூன்றாம் வகையினர்.
நாம் எந்த வகை? என சிந்திப்போம்....
நலன் யாவும் பெற்றுக் கொண்டு நன்றி என்ற
வார்த்தைக்குப் பொருள் தராத உள்ளம் இன்று மிகுதியாகி
விட்டது.
சின்னக் குழந்தைகட்கு நன்றி சொல்ல கற்றுத்தருகிறோம்.
பெரியவர்கள் ஆனதும் நன்றி என்ற சொல் நம்
வாழ்க்கையிலிருந்து நழுவிவிடுகிறது. என்ன காரணத்தினாலோ
அதைக் கவனிக்கத் தவறுகிறோம்.
ஏழை மனிதர் ஒருவர் தன் பிள்ளைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார்.
எப்படியோ சிறிது பணம் தயார் செய்து 12 வயது மூத்த மகன்
பெனோவை நகரத்தில் வேலை செய்து பிழைக்க அனுப்பி
வைத்தார். பெனோ வேலைக்கு சேர்ந்தபோது கார் வாடகைக்கு
விடும் ஒரு முதலாளியிடம் வேலைக்கு சேர்ந்தார். ஆரம்பத்தில்
கடையில் கார் துடைக்கும் வேலை கொடுக்கப்பட்டது. பின்
ப்யூன் வேலை தரப்பட்டது. வேலையில் மிகுந்த கவனத்துடன்
வேலை செய்த பெனோவுக்கு, மூன்றே மாதத்தில் வாடகைப் பணம்
வசூலிக்கும் வேலை கிடைத்தது.
முதலாளிக்கு சொந்தமாக 10 கார் இருந்தது. அந்த காரை வாடகைக்கு
எடுத்துச் சென்றவர்கள் முகவரியும், ஒரு சைக்கிளும், மதிய
உணவும் தரப்படும். காலை முதல் மாலை வரை வேலை இருக்கும்.
யாரெல்லாம் கார் வாடகைக்கு எடுத்தார்களோ, அவர்களது முகவரியை
தேடிக் கண்டுபிடித்து வாடகைப் பணத்தை வசூலித்து வருவார்.
மதிய வேளையில் உணவை அருகில் இருக்கும் இடத்தில் மரத்தின்
நிழலில் அமர்ந்து உண்ணுவார். மாலையானதும் வசூலித்தப்
பணத்தைக் கொண்டு வந்து முதலாளியிடம் தருவார். பெனோவின்
அயராத அவரது உழைப்புக் கண்டு ஓட்டுனர் பயிற்சி பெறும்படி
அறிவுரை கூறினார் முதலாளி. அவரது பணிவு நிறைந்த உழைப்புக்
கண்டு வியந்தார் முதலாளி. முதலாளி தன்னிடம் இருந்த பழைய
கார் ஒன்றை அவருக்குப் பரிசாக வழங்கினார். அந்த காரை
வைத்து பிழைப்பு நடத்திய பெனோவுக்கு இன்று 300 கார்கள்
உள்ளன.
தனது குடும்பத்தில் எந்த ஒரு விழா என்றாலும், தனது முதலாளியை
அழைத்து அவரது கால்களில் விழுந்து நன்றி தெரிவிப்பதை,
தனது கடமையாக நினைத்து செய்கின்றார். அவர் மட்டுமல்ல
அவரது பிள்ளைகள், மனைவி எல்லோருமே தங்களது குடும்ப
முன்னேற்றத்திற்கு வேலை கொடுத்து உதவிய தருணங்களை நன்றி
உணர்வுடன் எண்ணிப் பார்த்து நெகிழ்ந்து போகிறார்கள்.
அவரது முதலாளியோ அவர் காட்டும் இந்த நன்றி உணர்வால்
அவர் இன்னும் மேலும் மேலும் ஆசீர்வாதமாக நிறைவாக
வாழ்வார் என வாழ்த்துகிறார். முதலாளி மட்டுமல்ல, அவர்
வீட்டு மங்கல வைபவங்களில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்கள்
எல்லோருமே அவரது நன்றி உணர்வை வெகுவாகப்
பாராட்டுகிறார்கள்.
நன்றி உணர்வு நம்மை மேலும் மேலும் ஆசீர்வாதங்களால் நிரப்பும்.
நன்றி உணர்வு நம்மை மகிழ்ச்சியால் பொங்கி எழச்செய்யும்.
தன்னலம் மறக்கச் செய்யும். நற்பண்புகள் அத்தனையின்
விளைவிடம் நன்றியை வெளிப்படுத்துவதே!!
நமது குடும்பங்களில் சின்னச் சின்ன செயல்களுக்கும் நன்றி
சொல்வதை வழக்கமாக்குவோம். நன்றி சொல்லாவிட்டால், நன்றியை
மறந்தால் தன்னலம் தலைதூக்க ஆரம்பிக்கும் பாவப் பழக்கவழக்கங்கள்
வளர ஆரம்பித்துவிடும்.
பூக்கள் பூத்துக் குலுங்க பூச்செடிகளுக்கு நீர் ஊற்றுவது
போல நல்ல பழக்க வழக்கங்கள் மனதில் வளர்வதற்கு நன்றி என்ற
உணர்வை மனதுக்குள் ஊற்றெடுக்கச் செய்ய வேண்டும்.
துகிலி முருகானந்தம் என்பவர் குவைத்தில் ஒரு வீட்டில்
டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த வாரத்தில் ஒரு
நாள் இரவு 12 மணிக்கு அந்த வீட்டின் முதலாளி, துகிலி
முருகனை தொலைபேசியில் வீட்டுக்குள் வருமாறு அழைத்தார்.
வீட்டுக்குள் சென்றால் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது.
அலங்கரிக்கப்பட்ட மேசையில் கேக் இருந்தது. குடும்ப உறுப்பினர்கள்
எல்லாரும் ஒன்று கூடி நின்று கொண்டு இருந்தார்கள்.
துகிலி முருகனை கேக் வெட்டும்படி சொன்னார்கள். துகிலி
முருகனுக்கோ இன்ப அதிர்ச்சி. இன்றுடன் நீ எங்கள்
வீட்டிற்கு வந்து 12 ஆன்டுகள் நிறைவு பெறுகின்றது. எங்கள்
வீட்டுக்கு வந்த நாள் முதல் எங்களுக்கு வேண்டிய எல்லா
உதவிகளையும் மிகுந்த அன்புடனும், அக்கறையுடனும் எங்கள்
வீட்டுப் பிள்ளையாக இருந்து சிறப்பாக செய்தாய். எங்கள்
நன்றியை உனக்கு தெரிவிக்க இந்த ஏற்பாடு என்று சொல்லி
அன்பளிப்பாக கைபேசி ஒன்றையும் வழங்கி மகிழ்ந்தார்கள்.
நாம் வேலை செய்யச் சொல்லி கட்டளை இடுகிறோம். அந்த
வேலையை மிகச் சிறப்பாக செய்ய வேண்டும் என ஆர்வத்தோடு
செய்து முடிக்கும் நமது நண்பர்களுக்கு எத்தனை முறை
பாராட்டு தெரிவிக்கிறோம்.
நன்றி மனப்பான்மையை வளர்க்க... நம் பிள்ளைகளுக்கு கற்றுக்
கொடுப்போம்.
நம் பிள்ளைகளுக்கு பிறந்த நாளுக்காக, அல்லது வேறு ஏதேனும்
நல்ல நிகழ்வுக்காக யாரேனும் அன்பளிப்பு வழங்கும் போது,
அவர்கள் பிள்ளைகள் மீது கொண்ட பிரியத்தை, அன்பளிப்பு
வழங்குவதற்காக கடைக்குச் சென்று பொருட்கள் வாங்க எடுத்துக்
கொண்ட சிரமத்தை, எடுத்துச் சொல்லி நம் வீட்டில் குழந்தைகளுக்கு
நன்றி மனப்பான்மை வளர உதவலாம்.
பிறருக்கு நன்றி ஏன் சொல்லவேண்டும், அவர்கள் கடமை அது
செய்துதான் ஆகவேண்டும் என நினைக்கும் போது, ஏன் சிறப்பாகச்
செய்யவேண்டும் என்ற உணர்வு பணியாளர்களுக்கு தோன்றும்.
இருவருக்கும் இடையே தூரம் அதிகரிக்கும். பணியில்
தொய்வு ஏற்படும். உண்மையான உறவும் நட்பும் அங்கே இராது.
இப்போதெல்லாம் வேலையை வாங்கிவிட்டு, நன்றி சொல்லவும்
உரிய கூலியை கொடுக்கவும், விரும்பாத உள்ளங்கள் எங்கு
பார்த்தாலும் பெருகிக் கிடக்கின்றன. இப்படியான சூழலில்
தான் போட்டி, பொறாமை, தன்னலம், ஆங்காரம் தலை தூக்கி
கலவரமான நிலவரங்களை ஏற்படுத்துகின்றன.
என்னால் வேலைக்கு வந்தார். இன்று நன்றி இல்லாமல்
திரும்பி பார்க்காமல் செல்கின்றார் எனப் புலம்புவதை
பார்த்திருக்கிறோம்.
"சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தேவைப்படும் போது, கொஞ்சிப்
பேசி வேலை வாங்கி விட்டு வேலை முடிந்ததும் நல்லவார்த்தை
சொல்ல மறந்து, அவதூறாகப் பேசி மனதை நோகச் செய்து
விடுவார் எங்கள் மேனேஜர்" என்கிறார் ராபர்ட்
"எனக்கு அவர் செய்த உதவியை ஒரு போதும் மறக்கவே
முடியாது . மிக அற்புதமாக அவர் பாராட்டிப் பேசுகின்ற
வார்த்தை என்னை உற்சாகப்படுத்தும். புதிய புதிய
வேலையைச் செய்யத்தூண்டும்". என தன் முதலாளியைப் பற்றி
பெருமைபாராட்டுகின்றார் ஆன்ட்ரூஸ்.
நமது நன்றி மனநிலையை எண்ணிப் பார்ப்போம்.
கடவுள் தந்த நலன்கள் ஏராளம் அவைகளுக்கு நன்றி
சொல்வோம். நம் நண்பர்கள் வழியாக பெற்றுக் கொண்ட நலன்கள்
ஏராளம் அவைகளுக்கு நன்றி சொல்வோம்.
நல்லவீடு, நல்லகுடும்பம், நல்லகணவன், நல்லபிள்ளைககள்
போதுமான செல்வங்கள், வேலைவவாய்ப்பு இருப்பினும் ஏதோ ஒன்று
குறையும் போது, மனதுக்குள் குறைவை நினைத்து புலம்பும்
போது, நன்றி சொல்ல மறந்த அந்த ஒன்பது பேரோடு நாமும் இணைந்து
விடுகிறோம்.
நமது வாழ்வில் அநேக வேளைகளில் பெற்றுக் கொண்ட நலன்கள்
பலவற்றை மறந்து, கிடைக்காத ஒன்றை நினைத்து நன்றி சொல்ல
மறந்து, கிடைத்த ஆசியை இழந்து விடுகிறோம்.
எப்பொழுதும் மகிழ்ந்திருப்போம் இடைவிடாமல் செபிபோம்,
என்ன நேர்ந்தாலும் நன்றி சொல்லுவோம்.
உலகைப் படைத்த உன்னத தேவனுக்கு நன்றி சொல்வோம்.
இயற்கையை படைத்த இறைவனுக்கு இதயம் நிறைந்த நன்றி
சொல்வோம்
நாம் பயணிக்கும் சமூகத்தில் நமக்காய் உழைக்கும் நல்ல
உள்ளங்களுக்கு நன்றி சொல்வோம்.
உலகை அழகுபடுத்தும் கலைஞர்களுக்கு நன்றி சொல்வோம்.
புதியன கண்டுபிடித்து வாழ்க்கையின் வசதிகளை லேசாக்கிய
கண்டுபிடிப்பாளர்களுக்கு நன்றி சொல்வோம்.
பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு நன்றி சொல்வோம்...
நீதியை, தருமத்தை கடை பிடிப்பவர்களுக்கு நன்றி
சொல்வோம்.
மனித நேயத்தை கடை பிடிப்பவர்களுக்கு நன்றி சொல்வோம்.
ஆதரவற்ற சிறுவர் காப்பகங்கள் முதியோர் காப்பகங்கள்
வைத்து பிறர் நலம் பேணுவோருக்கு நன்றி சொல்வோம்.
பெற்றோருக்கு, பெரியோருக்கு ஆசிரியர்களுக்கு, நல் உறவுகளுக்கு,
நண்பர்களுக்கு, நம்மை வெறுப்பவர்களுக்கு, நமது
முன்னேற்றத்துக்கு தடைச் சுவர் அமைப்பவர்களுக்கு, இறைவனுக்கு
என பட்டியலிட்டு இவர்கள் வழியாக நாம் பெற்ற நலன்களுக்கு
நன்றி சொல்வோம்.
நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை எத்தனை பேருக்கு
கிடைக்கவில்லை என நாம் தெரிந்து கொண்டால், ஆண்டவனுக்கு
நன்றி சொல்லமட்டுமே நாம் ஆலயத்திற்கு செல்வோம்.
கிடைத்த வாழ்க்கைக்கு நன்றி சொல்லி மகிழ்வோம்.அந்த
வாழ்க்கை அழகான வாழ்க்கையாகட்டும்.
என்ன நேர்ந்தாலும்... நன்றி சொல்லி மகிழ்வோம்.....
மறையுரைச்சிந்தனை
அருட்சகோதரி: மெரினா
O.S.M.
மறையுரைச்சிந்தனை - சகோ. செல்வராணி Osm
மறையுரைச்சிந்தனை
- அருள்பணி ஏசு கருணாநிதி
திரும்பி வருதல்
அவள் பெயர் அன்னா. அவளுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. அவளுடைய
ஓரகத்தி அவளைக் கேலி செய்கின்றாள். அவளுடைய கணவன் கண்டுகொள்ளாமல்
இருக்கின்றான். அவள் ஆண்டவருடைய சந்நிதிக்கு ஓடுகின்றாள். மண்டியிட்டுச்
செபிக்கின்றாள். சந்நிதியில் இருந்த குருவும் இவளைச் சாடுகின்றார்.
இறுதியில் நம்பிக்கை வார்த்தைகள் கூறுகின்றார். அன்னா வீடு
திரும்புகிறாள். ஆண்மகவைப் பெற்றெடுக்கிறாள். குழந்தையின் பால்குடி
காலம் முடிந்ததும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆண்டவரின் இல்லம் ஓடுகிறாள்.
கடவுளிடம் சென்றவள் அவரிடமே திரும்பிச் செல்கின்றாள்.
அவர் பெயர் அலங்காரம். அவருடைய மகளுக்குத்
திருமணம்
. திருமண நாள்
நெருங்கி வர அவர் சேமித்து வைத்திருந்த நிதி நிறுவனம் தலைமறைவாகிவிட்டது.
திருமண நாளை மாற்றவும் விருப்பமில்லை. திருமணத்திற்குப் பணமும் கைவசம்
இல்லை. கையறுநிலையில் இருக்கின்ற அவரிடம் வருகின்ற அவருடைய நண்பர்
அவருக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து, 'திருமணத்தை நன்றாக நடத்து.
அப்புறம் பார்க்கலாம்!' என்று
சொல்லிவிட்டுச் செல்கின்றார். திருமணம் நன்றாக முடிந்தது. அலங்காரம் தன் மகளையும் மருமகனையும் அழைத்துக்கொண்டு
முதல் வேலையாக அந்த நண்பரின் இல்லம் நோக்கிச் செல்கின்றார். 'உன்
உதவியால் திருமணம் நடந்தது' என்கிறார் அலங்காரம். 'உன்னுடைய நட்பால்
திருமணம் நடந்தது' என்று வழியனுப்புகிறார் நண்பர். நண்பரிடம் சென்றவர்
அவரிடமே திரும்பிச் செல்கின்றார்.
மேற்காணும் அனுபவங்கள் நமக்கும் நடந்திருக்கலாம். வேளாங்கண்ணி அல்லது
பூண்டி திருத்தலத்தில் நாம் செய்த நேர்ச்சை நிறைவேறி, நாம் நன்றிக்கடன்
செலுத்த அத்திருத்தலங்களுக்குத் 'திரும்பச் செல்கின்றோம்.' அல்லது
நமக்குத் தேவையில் உதவியவர்களிடம் திரும்பச் சென்று அவர்களுக்கு நன்றி
கூறுகின்றோம்.
இவ்வாறு திரும்பி வருதலின் இனிமையை நமக்கு எடுத்துரைக்கின்றது இன்றைய
திருவழிபாடு.
இன்றைய முதல் வாசகத்தின் (காண். 2 அர 5:14-17) கதாநாயகன் நாமான்.
இவர் சிரிய நாட்டுப்படைத்தலைவர். 'வலிமைமிக்க வீரர். மதிப்பிற்குரிய
தலைவர். ஆனால், தொழுநோயாளர்.' மற்ற நோய் என்றால் கூட மூடி மறைத்துவிடலாம்.
தோல் தொடர்பான நோய் என்பதால் எளிதாக மற்றவர்களுக்குத் தெரியக்கூடிய,
அதனால் மற்றவர்கள் விலகி ஓடக்கூடிய ஒரு நோய். இவருடைய வீட்டில் அடிமைச்
சிறுமியாக இஸ்ரயேல் சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் நாமானின் மனைவியிடம்,
'என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில்
சென்றால் அவர் இவரது நோயைக் குணமாக்குவார்' என்கிறார். இங்கே
சிறுமியின் வார்த்தைகள் நமக்கு ஆச்சர்யமாக இருக்கின்றன. ஒருவன் தன்னை
அடிமையாகக் கடத்தி வந்திருக்கிறான் என்ற கோபம் அந்தச் சிறுமிக்கு
இல்லை. தன்மேல் விழும் கடப்பாரையைத் தாங்கும் நிலம் போல தன் தலைவனைத்
தாங்குகிறாள் அவள். தலைவனின் நலத்தை நாடுகிறாள். நாமான் இதை உடனடியாகச்
செயல்படுத்துகிறார். ஆனாலும், அவரிடம் மூன்று தயக்கம் இருந்திருக்க
வேண்டும்: ஒன்று, சிறுமியின் பேச்சைக் கேட்பதா? என்பது. இரண்டு,
வேற்று நாட்டுக்குச் செல்வதா? அப்படி என்றால், என் ஊர் மருத்துவத்தை
நான் கேலி செய்வது போல் ஆகாதா? மூன்று, ஒருவேளை அங்கு சென்று சரியாகாவிட்டால்
இந்த ஊர் இன்னும் அதிகம் கேலி பேசுமே? தயக்கங்களை ஒதுக்கிவிட்டு
உடனே செல்கின்றார் என்றால் அவருடைய அவசியம் நமக்குப் புரிகிறது.
சிரியா மன்னரும் பரிந்துரைக் கடிதம் கொடுத்து அனுப்புகின்றார்.
நாமான் ஏறக்குறைய 400 கிலோ வெள்ளிக்காசு, 6000 பொற்காசுகள், 10 பட்டாடைகள்
என எடுத்துக்கொண்டு புறப்படுகிறார். இறைவாக்கினருக்கு இவர் வழங்க
நினைத்த பரிசாக இருக்கலாம் இது. இஸ்ரயேல் அரசன் பரிந்துரைக் கடிதம்
பெற்றவுடன், ஆடைகளைக் கிழித்துக் கொண்டு சிரியா அரசன் தன்னை வம்புக்கு
இழுப்பதாக நினைக்கிறார்: 'நானென்ன கடவுளா?' என்று கேட்கின்றார். அக்காலத்தில்
தொழுநோய் குணமாக்க முடியாத நோயாக இருந்தது. கடவுள் மட்டுமே குணமாக்க
முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் இருந்தது. அரசன் தன்னுடைய
ஆடைகளைக் கிழித்ததை எலிசா அறிகின்றார். கடவுளின் மனிதர் எப்படி தொடர்பில்
இருக்கிறார் என்று பாருங்கள்! நாம் கடவுளோடு தொடர்பில் இருக்கும்போது
மற்ற எல்லாத் தொடர்புகளும் மிகவும் பொருத்தமாகவும், ஒருங்கமைந்தும்
இருக்கின்றன. ஆளனுப்பி, 'நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக்
கொண்டீர்? அவன் என்னிடம் வரட்டும். இஸ்ரயேலில் ஓர் இறைவாக்கினர் உள்ளார்
என அவன் அறியட்டும்' என்கிறார் எலிசா. 'இறைவாக்கினர் ஒருவர் உள்ளார்'
என்றால், 'இறைவன் ஒருவர் உள்ளார்' என்று பொருள். ஆக, இப்போது
சிரியாவின் கடவுளுக்கும் இஸ்ரயேலின் கடவுளுக்குமான போட்டியாக
மாறுகிறது நிகழ்வு.
நாமான் படை பரிவாரங்களுடன் எலிசாவின் வீட்டு வாசலில்முன் வந்து
நிற்கிறார். எலிசா பதற்றமில்லாம் வீட்டிற்குள் அமர்ந்திருக்கிறார்.
படை பரிவாரங்களைக் கண்டு பயப்படவோ, அவனுடன் வந்திருக்கும் பரிசுகளைக்
கண்டு கையேந்தவோ இல்லை. அவருடைய தன்மதிப்பைக் காட்டுகிறது இது. அல்லது
கடவுளே போதும் என்றிருப்பவருக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்பதும்,
கடவுளுக்கு பணிகிற ஒருவர் வேறு எவருக்கும் பணியத் தேவையில்லை என்பதும்
தெரிகிறது. தன்னுடைய வேலைக்காரர் ஒருவரை அனுப்பி, 'நீ போய்
யோர்தானில் ஏழு முறை மூழ்கினால் உன் உடல் நலம் பெறும்' என்று
சொல்லி விடுகின்றார். கூடவும் பேசவில்லை, குறைவாகவும் பேசவில்லை.
நாமானுக்கு கோபம், சினம்! தன்னை இறைவாக்கினர் அவமானப்படுத்திவிட்டார்
என்றும், என் படைவீரர்கள்முன் அவமானப்படுத்திவிட்டார் என்றும் கோபம்!
மேலும், 'எங்க ஊர் ஆறுகளைவிடவா யோர்தான் சிறந்தது?' என்கிறார்.
யோர்தான் வெறும் ஓடைதான்! அப்பொழுது, அவருடைய வேலைக்காரருள் ஒருவர்,
'எம் தந்தையே! இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குச் சொன்னால்
செய்திருப்பீர் அல்லவா! குளிக்கிறதுதானே! குளித்துவிடுங்கள்!' என்கிறார்.
அங்கே சிறுமி! இங்கே வேலைக்காரர்! கடவுள் சின்னஞ்சிறியவர்கள்
வழியாக அவரைத் தொடுகின்றார். நாமானின் குழந்தையுள்ளத்தை இங்கே
பார்க்கிறோம். 'நீ யாருடா எனக்கு புத்தி சொல்ல!' என்று வேலைக்காரரைப்
பார்த்துக் கோபிக்காமல், உடனே போய் யோர்தானில் மூழ்கி எழுகின்றார்
ஏழுமுறை! அதிசயம்! அற்புதம்! அவருடைய தோல் சிறுபிள்ளையின் உடல்
போல் மாறினது. சிறுமியின் வார்த்தையைக் கேட்ட வந்த பெரியவர் ஒருவரின்
உடல் சிறுபிள்ளையின் உடல் போல மாறுகிறது - மிகப்பெரிய அற்புதம்! அந்த
நேரம் அவர் தன்னுடைய அவமானம் எல்லாம் அழிந்ததாக உணர்ந்திருப்பார்!
ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார்! எல்லாரையும் கட்டிப்பிடித்துக்
கதறியிருப்பார்! அங்கேயே மண்ணில் புரண்டு கொண்டாடியிருப்பார்! 'அவர்
கடவுளின் அடியவரிடம் திரும்பினார்' என்று சொல்கிறார் ஆசிரியர். 'இஸ்ரயேலைத்
தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லை என உறுதியாக அறிந்துகொண்டேன்'
என்கிறார். எவ்வளவு பெரிய வார்த்தைகள் இவை! தொழுநோயைக் கடவுள்தான்
குணமாக்க முடியும். நான் எங்கெங்கோ சென்று குணமாகவில்லை. இங்கே குணமாகியிருக்கிறது.
ஆக, இங்கே மட்டுமே இறைவன் இருக்கிறார். திரும்பி வந்தவர் அன்பளிப்புக்கள்
கொடுக்கிறார் எலிசாவுக்கு. ஆனால், 'நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன்!'
என்கிறார் எலிசா. வற்புறுத்தியும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது
நாமான் ஒரு வேண்டுகோள் வைக்கிறார். 'இங்கிருந்து இரண்டு பொதி மண்
எடுத்துச் செல்ல அனுமதியும்!' அந்த மண்ணில் இறைவன்
குடியிருக்கிறார் எனவும், அந்த இறைவனைத் தான் வணங்க விரும்புவதாகவும்
சொல்கின்றார். இறைவாக்கினரும் அனுமதிக்கின்றார்.
நாமான் நம்பிக்கையால் கடவுளின் அடியவரிடம் திரும்பி வருகின்றார்.
அவருக்கு நிகழ்ந்த அற்புதம் அவருடைய நம்பிக்கையை உறுதி செய்கிறது.
அவர் உடல் அளவில் தொழுநோய் நீங்குகிறார். உள்ளத்தளவில் உண்மையான
கடவுளைக் கண்டு கொள்கிறார். இவ்வாறாக, முதல் வருகை அவருடைய உடல்
நோயையும், திரும்பி வருதல் அவருடைய உள்ளத்து நோயையும் குணமாக்குகிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 திமொ 2:8-13), நம்பிக்கையில்
தான் பெற்றெடுத்த பிள்ளை திமொத்தேயுவிடம், 'நீ ஒரு நல்ல படைவீரனாய்,
விளையாட்டு வீரனாய், நிலத்தில் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளராய் இருக்க
வேண்டும்' என்று அறிவுறுத்துகின்ற பவுல், தான் சிறைப்பட்டிருப்பதையும்
சொல்கின்றார். தொடர்ந்து, அக்காலத்தில் பரவலாக மொழியப்பட்ட இறையியல்
கூற்று ஒன்றை மேற்கோள் காட்டுகின்றார்: 'நாம் அவரோடு இறந்தால் அவரோடு
வாழ்வோம். அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார்' - இரண்டு நிபந்தனை
வாக்கியங்கள் இவை. 'இதைச் செய்தால் அது நடக்கும்' என்று
சொல்லிவிட்டு, 'நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர். ஏனெனில்
தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது' என்று கடவுளின் நம்பகத்தன்மையை
அடிக்கோடிடுகின்றார். இங்கே, 'அவரோடு இறத்தல்' என்பதை 'அவரிடம்
திரும்பி வருதல்' என்று நாம் பொருள்கொள்ளலாம். நம்பிக்கை
கொண்டால்தான் ஒருவர் அவரிடம் திரும்பி வர முடியும்.
திமொத்தேயு தன்னுடைய நம்பிக்கையால் கடவுளிடம் திரும்பி வர வேண்டும்
என்று சொல்வதோடு, இதையே அவர் தன்னுடைய சபையிலும் கற்பிக்க வேண்டும்
என்றும் சொல்கின்றார் பவுல்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 17:11-19) முதல் வாசகத்தின்
நீட்சியாக இருக்கிறது. இயேசு தொழுநோயாளர் ஒருவரைக் குணமாக்குவதை
(காண். மத் 8:1-4) அல்லது தொழுநோயாளர்களைக் குணமாக்கும் அதிகாரத்தை
திருத்தூதர்களுக்கு வழங்குவதை (காண். மத் 10:8) மத்தேயு
நற்செய்தியில் பார்க்கிறோம். ஆனால், இயேசு பத்து தொழுநோயாளர்களைக்
குணமாக்கும் நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே உள்ளது. இயேசு
நயீன் நகர நுழைவாயிலில் கைம்பெண்ணின் மகனுக்கு உயிர்தந்த நிகழ்வின்
இறுதியில், 'நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர்
தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்'
என்று மக்கள் ஆர்ப்பரிக்கின்றனர். இஸ்ரயேலில் பெரிய
இறைவாக்கினர்கள் என்று மக்களால் எண்ணப்பட்டவர்கள் எலியாவும்,
எலிசாவும். இந்த இரண்டு இறைவாக்கினர்கள் செய்ததை இயேசுவும்
செய்ததாக எழுதுவதன் வழியாக, இயேசுவை பெரிய இறைவாக்கினர் என்று
அறிமுகம் செய்கிறார் லூக்கா. எலியா சாரிபாத்துக் கைம்பெண்ணின்
மகனுக்கு உயிர் தருகிறார் (காண். 1 அர 17:17-24). அதே போல இயேசு
நயீன் நகரப் பெண்ணின் மகனுக்கு உயிர் தருகின்றார். எலிசா
தொழுநோயாளர் நாமானுக்கு நலம் தருகிறார் (காண். முதல் வாசகம்). அது
போல இயேசு பத்துத் தொழுநோயாளர்கள் நோயை நீக்குகின்றார். நாமான்
சிரிய நாட்டினர் - புறவினத்தவர். இங்கே, திரும்பி வருகின்ற ஒருவர்
சமாரியர் - புறவினத்தவர். அங்கே நாமான் யோர்தான் ஆற்றில் ஏழு முறை
மூழ்கி ஏழுகின்றார். இங்கே இவர்கள் குருக்களை நோக்கிச்
செல்கின்றனர். அங்கே நாமான் திரும்பி வந்து இஸ்ரயேலின் கடவுளே
உண்மையான கடவுள் என அறிக்கையிடுகின்றார். இங்கே இவர் இயேசுவின்
காலில் முகங்குப்புற விழுகின்றார் - கடவுளைத் தொழுதலின் அடையாளம்.
ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறார் லூக்கா. தொழுநோய்
நீக்கிய அந்த நொடியில் அவரை எலிசா போன்ற இறைவாக்கினர் எனவும்,
தொழுநோய் நீங்கியவர் காலில் விழுவதால் யாவே கடவுள் போல இயேசுவே
ஆண்டவர் என்றும் சொல்கின்றார்.
திரும்பி வந்த அந்த நபரை மட்டும் எடுத்துக்கொள்வோம். 'மற்ற ஒன்பது
பேர் எங்கே?' மற்ற ஒன்பது பேர் இங்கே இல்லை. அவ்வளவுதான் விடை.
மற்றவர்கள், 'இன்னும் நாங்கள் நலமாகவில்லை' என்றோ, அல்லது 'அவர்
சொன்னபடி குருக்களிடம் செல்வோம்' என்றோ, அல்லது 'நலம்
பெற்றாயிற்று. நாம் வீட்டிற்குச் செல்வோம்' என்றோ
நினைத்திருக்கலாம். யாரையும் இயேசு திரும்பிவரச் சொல்லவில்லையே.
அப்புறம் ஏன் இந்த ஒரு நபர் திரும்பி வந்தார்? இவர் சமாரியர்
என்பதால் குரு இவரைச் சோதிக்கமாட்டார் என எண்ணி இயேசுவிடம் இவர்
திரும்பினாரோ? ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இவர் மற்றவர்களைப்
போல இருக்கவில்லை. வித்தியாசமாக இருந்தார். அவர்கள் குருவைத்
தேடிச் சென்றனர். இவரோ கடவுளைத் தேடி வந்தார். இதுதான் அந்த
வித்தியாசம். முதலில், 'இயேசுவே நலம் தந்தார்' என நம்புகிறார்.
இரண்டாவது, 'நான் திரும்பிப் போவேன்' என முடிவெடுக்கின்றார்.
மூன்றாவது, 'நான் திரும்பிப் போனால் இவர் என்ன நினைப்பார் அவர்
என்ன நினைப்பார்' என்று தன் கூட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல்
துணிவுடன் இயேசுவிடம் வருகின்றார். நான்காவது, 'நலம் பெற்ற பிறகு
ஏன் தொழுநோயாளரின் குழு? உடனே புது வழியைத் தேடுவேன்' என
தேடுகிறார் இயேசுவை. ஆக, இந்தச் சமாரியர் நமக்கு நன்றிக்கான பாடம்
அல்ல. அதைவிட, நம்பிக்கைக்கான பாடம். மேற்காணும் நான்கு
வழிகளும்தான் நம்பிக்கைக்கான வழிகள்.
ஆக, முதலில் இயேசுவிடம் வந்தபோது உடல்நலம் பெற்றவர், திரும்பி
வந்தபோது உள்ள நலம் பெறுகின்றார்.
இன்று நாம் ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் கடவுளிடம்
வருகின்றோம். ஆனால், என்றாவது ஒருநாள் திரும்பி வந்திருக்கிறோமா?
திரும்பி வருதலுக்கான அற்புதம் நம் வாழ்வில் நடந்ததா? நாம்
கடவுளிடம் தினமும்கூட வரலாம். ஆனால், அவரிடம் திரும்பி வரும் அந்த
ஒரு நாளே நம் வாழ்வைப் புரட்டிப் போடும். சில நேரங்களில்
அற்புதங்கள் பெற்ற நமக்கு மற்ற வேலைகள் வந்துவிட்டதால் அல்லது மற்ற
கவனச் சிதறல்கள் வந்துவிட்டதால் அவரிடம் திரும்பி வருவதற்கு நாம்
தாமதம் செய்யலாம். அல்லது அவரிடம் திரும்பி வந்தார் இன்னும் அவர்
நம்மைக் குணமாக்கிவிடுவார் என்ற பயத்தில், 'அரைகுறை குணமே போதும்'
என்று ஓய்ந்திருந்து, நாமே நம் நோய்க்கு மருந்திட்டுக் கொள்ளும்
மடமையில் இருக்கலாம்.
இன்று அவரிடம் திரும்பி வர நாம் என்ன செய்ய வேண்டும்?
அ. அவரால்தான் எல்லாம் என்ற உறுதியான நம்பிக்கை வேண்டும் - இந்த
நம்பிக்கை நாமானுக்கும், பவுலுக்கும், திமொத்தேயுவுக்கும்,
சமாரியருக்கும் இருந்தது. தொழுநோய் என்பது தோலை மூடும் அல்லது
சிதைக்கும் ஒரு திரை. நம்பிக்கையின்மைகூட தொழுநோய்தான். கடவுளை அது
நம் வாழ்விலிருந்து மூடிவிடுகிறது அல்லது கடவுளின் முகத்தை
அடையாளம் தெரியாதவாறு சிதைத்துவிடுகிறது. இதிலிருந்து வெளிவர நாம்
சில நேரங்களில் கொஞ்சம் நடந்தால் போதும். இன்னும் சில நேரங்களில்
நாம் ஏழு முறை மூழ்கி எழ வேண்டிய நிலையும் வரும். ஆனால், அற்புதம்
நடந்தவுடன் அங்கே அவரின் கைவன்மையைக் காண வேண்டும். 'ஆண்டவரால் இது
நிகழ்ந்துள்ளது. நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!' (திபா 118:23)
என்று ஆச்சர்யப்பட வேண்டும்.
ஆ. அவரோடு இணைய வேண்டும் - முதலில் 'அவரால்தான்' என்று
அறிகின்றோம். பின், 'அவரோடு' என இணைந்துகொள்ள வேண்டும். இரண்டு
பொதி மண் எடுத்துக் கொண்டு தன் நாட்டிற்குச் செல்வதன் வழியாக
எப்படியாவது இஸ்ரயேலின் கடவுளோடு தன்னை இணைத்துக்கொள்கிறார்
நாமான். இயேசுவின் காலடிகளில் விழுந்து நன்றி செலுத்துவதன் வழியாக
அவரோடு தன்னை இணைத்துக்கொள்கிறார் சமாரியர். இன்று நான் இயேசுவோடு
என்னை இணைத்துக்கொள்கின்றேனா? எந்த அளவிற்கு?
இ. அவரே என்று நம் வழி புறப்பட வேண்டும் - குணம் பெற்ற நாமான்
எலிசாவிடமும், சமாரியர் இயேசுவிடமும் தங்கிவிடவில்லை. தங்கள் வழி
திரும்புகின்றனர். மீண்டும் தங்கள் வாழ்வை வாழப் புறப்படுகின்றனர்.
'நானே' என்று வாழ்ந்தவர்கள் 'அவரே' என்று வாழப் புறப்படுகின்றனர்.
இவ்வாறாக, 'அவரால்,' 'அவரோடு,' 'அவரே' என்ற இறைமையமே நம்மை
திரும்பி வரச் செய்கிறது. நலமுடன் திரும்பி வருக! ஏனெனில்,
திரும்பி வருதலே நலம்!
I 2 அரசர்கள் 5: 14-17
II 2 திமொத்தேயு 2: 8-13
III லூக்கா 17: 11-19
நன்றியுணர்வும் நலமான வாழ்வும்
எத்தனை பேர் நன்றி சொன்னார்கள்?
சில ஆண்டுகளுக்கு முன்பு மிக்சிகன் ஏரியில் சென்றுகொண்டிருந்த
"
லேடி எல்கின்"
என்ற படகானது எதிர்பாராத விதமாக உடைந்து, ஏரிக்குள்
மூழ்கத் தொடங்கியது. அந்தப் படகில் பயணம் செய்த பயணிகள் யாவரும் உயிருக்காகப்
போராடிக் கொண்டிருந்தபோது, அதே படகில் பயணம் செய்த ஸ்பென்சர் என்ற
இளைஞன் பதினேழு பேர்களைக் காப்பாற்றிக் கரையில் கொண்டு போய்ச்
சேர்ந்தான். இதனால் அவனுடைய உடல்நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்குப் பிறகு ஸ்பென்சர் என்ற அந்த இளைஞனுக்கு அறிமுகமான
பெரியவர் ஒருவர் அவனிடம் வந்து, ஏரியில் நடந்த விபத்தில் நீ உன்
உயிரைப் பணயம் வைத்துப் பதினேழு பேர்களைக் காப்பாற்றியதாகக்
கேள்விப்பட்டேன். அவர்களில் எத்தனை பேர் உனக்கு நன்றி சொல்ல வந்தார்கள்?
என்று கேட்டார். இளைஞன் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாகவே
இருந்தான். பின்னர் அவன் அவரிடம், யாவருமே வரவில்லை என்பதுபோல்
கையை அசைத்தான். அதைப் பார்த்துவிட்டுப் பெரியவர் அதிர்ந்துபோனார்.
கடவுளிடமிருந்தும் சகமனிதர்களிடமிருந்தும் ஏராளமான நன்மைகளைப்
பெறுகின்றவர்கள் அதற்கு நன்றி சொல்கின்றார்களா? என்றால், இல்லை என்றே
பதில் வரும். பொதுக் காலத்தின் இருபத்து எட்டாம் ஞாயிறான இன்று
நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நன்றியுணர்வோடு இருப்பவர்கள் நலமான
வாழ்வினைப் பெறுகிறார்கள் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது
குறித்து நாம் சிந்திப்போம்.
பிறவினத்தாரின் நன்றியுணர்வு:
நன்றியுணர்வே நற்பண்புகளின் தாய் என்று பேரறிஞர் சிசரோ சொல்வார்.
அது முற்றிலும் உண்மை. ஏனெனில், நன்றியுணர்விலிருந்தே ஆண்டவரைப் புகழ்தல்,
மனநிறைவு, மகிழ்ச்சி போன்ற நற்பண்புகள் பிறப்பெடுக்கின்றன. ஒருசிலர்,
கடவுள் எங்களுக்குப் பெரிதாக என்ன செய்துவிட்டார்? நான் அவருக்கு
நன்றி சொல்ல? என்று கேட்பதுண்டு கடவுள் நமக்கு எவ்வளவு நன்மைகளைச்
செய்திருக்கின்றார் என்பது முக்கியமல்ல. மாறாகப் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு
நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம் என்பது முக்கியம்.
ஆண்டவரின் அடியாரான எலிசாவின் வாக்கிற்கிணங்க, தொழுநோயால் பாதிக்கப்பட்ட
சிரியா நாட்டுப் படைத்தலைவனான நாமான் யோர்தான் ஆற்றில் ஏழு முறை
மூழ்கி எழுகின்றான். அவன் மூழ்கி எழுந்ததும், தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த
அவனுடைய உடல் சிறுபிள்ளையின் உடல் போன்று ஆகின்றது. இதைத் தொடர்ந்து
அவன் தனது நன்றியுணர்வின் அடையாளமாக, தன் பரிவாரங்களுடன் அன்பளிப்புகளை
எடுத்துக்கொண்டு எலிசா இறைவாக்கினரிடம் வருகின்றான். அவரோ, "
புகழ்
அனைத்தும் ஆண்டவர் ஒருவருக்கே"
என்று அவன் கொடுத்த அன்பளிப்புகளை
வாங்க மறுத்துவிடுகின்றார்.
நற்செய்தியில் இயேசு பத்துப் பேர்களிடமிருந்து தொழுநோயை
நீக்கியிருக்க, அவர்களில் ஒருவர் மட்டுமே, அதுவும் அன்னியராகிய சமாரியர்
மட்டுமே இயேசுவுக்கு நன்றி செலுத்த வருகின்றார். இவ்வாறு முதல் வாசகத்தில்
வரும் நாமானும், நற்செய்தியில் வரும் சமாரியரும் பிறவினத்தாராக இருந்தாலும்,
தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்குக் கடவுளுக்கு நன்றியுடையவர்களாக
இருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.
கடவுளுக்கு நன்றி செலுத்துவதால் அவரது மாட்சியை ஏற்றம் பெறுமா? என்ற
கேள்வி எழலாம். கடவுளுக்கு நன்றி செலுத்துவதால் அவரது மாட்சி ஏற்றம்
பெறாது. மாறாக. அது நாம் மீட்படைய அது பயன்படுகின்றது. அதனால் நாம்
கடவுளுக்கு நன்றி செலுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்வோம்.
யூதர்களின் நன்றியின்மை:
சிரியா நாட்டுப் படைத்தளபதியான நாமான் தன்னுடைய நன்றியுணர்வினால்
மட்டுமல்ல, ஆண்டவரைத் தவிர வேறு தெய்வங்களுக்கு எரிபலியோ, வேறு பலியோ
செலுத்த மாட்டேன் என்று சொன்னதாலும் உயர்ந்து நிற்கின்றான். இந்தப்
பின்னணில் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட இஸ்ரயேல் மக்கள், அவருக்கு
நன்றியோடும் உண்மையோடும் இருந்தார்களா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஆண்டவராகிய கடவுள் மோசேயிடம், நானே உன் கடவுளாகிய ஆண்டவர். அடிமை
வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். என்னைத்
தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது (விப 20:1-3) என்று
சொல்லியிருந்தார். ஆனால், இஸ்ரயேல் மக்களோ, தங்களை எகிப்திலிருந்து
வெளியேறச் செய்து, பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டை வழங்கிய
கடவுளை மறந்து, பாகால் தெய்வத்தை வழிபட்டார்கள்; அவருக்கு உண்மையில்லாமல்
இருந்தார்கள் (1 அர 18:21).
நற்செய்தியில் இயேசுவிடமிருந்து நலம்பெற்றவர்களில் சமாரியர் ஒருவரைத்
தவிர்த்து மற்ற ஒன்பது பேர்களும் யூதர்கள். தொழுநோய் என்பது அந்தக்
காலகட்டத்தில் உடல் நோயாக மட்டுமல்லாமல், கடவுளின் சாபமாகவும்
பார்க்கப்பட்டது. அதனால் அவர்கள் ஊருக்கு வெளியே வைக்கப்பட்டார்கள்
(லேவி 13:46, எண் 5:23). இப்படி உடலளவிலும் மனத்தளவிலும் பாதிக்கப்பட்டு,
தீண்டத் தகாதவர்களைப் போன்று கருதப்பட்ட ஒன்பது யூதர்களுக்கு இயேசு
நலமாளித்தார் எனில், அவர்கள் அவருக்கு எந்தளவுக்கு நன்றியுள்ளவர்களாக
இருந்திருக்கவேண்டும்! ஆனால், அவர்கள் அவ்வாறு இல்லாமல் போனதே மிகவும்
வேதனை கலந்த உண்மை. இதனால் அந்த ஒன்பது யூதர்களும் சமாரியரைப்
போன்று முழுமையாக அல்லது உடல் உள்ள நலம் பெறாமல் போகின்றார்கள்.
இதன்மூலம் நன்றியுணர்விற்கும் நலமான வாழ்விற்கும் எவ்வளவு
நெருங்கிய தொடர்பிருக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
ஆண்டவரில் நிலைத்திருப்போம்.
"
பலர் ஆண்டவரிடமிருந்து நன்மைகளைப் பெற்றும், அவருக்கு நன்றி
செலுத்தாமல் இருக்கின்றார்களே! அது ஏன்?"
என்ற கேள்வி நமக்கு
எழலாம். இதற்கான பதிலைப் பவுல் இன்றைய இரண்டாம் வாசத்தில்
கூறுகின்றார்.
ஆண்டவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செலுத்துவோம் என்று
சொல்லும் பவுல், மறைமுகமாக ஆண்டவரோடு நிலைத்திராத ஒருவரே
ஆண்டவருக்கு நன்றி செலுத்துவதில்லை என்கின்றார். இயேசு கிறிஸ்து
இறந்து உயிர்த்தெழுந்தார் என்ற செய்தியை மக்களுக்கு
அறிவித்ததற்காகப் பவுல் சிறைத் தண்டனை உட்பட பலவிதமான
துன்பங்களையும் அனுபவித்தார். அவர் ஆண்டவரில் நிலைத்திருந்தாலேயே
அவரால், எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள் (1 தெச 5:18)
என்று சொல்ல முடிந்தது. நாமும் பவுலைப் போன்று ஆண்டவரில்
நிலைத்திருந்தால், அவரைப் போன்று எல்லாச் சூழ்நிலையிலும் அவருக்கு
கூறமுடியும். ஏனெனில், நன்றியுணர்வே நலமான வாழ்விற்கு அடிப்படை!
சிந்தனைக்கு:
"
நான் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம், நான் நன்றியுணர்வுடன்
இருப்பதால்தான்! நான் எப்போதும் நன்றியுணர்வுடன் இருப்பேன்.
ஏனெனில், அதுவே என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றது"
என்பர் வில்
அர்னட் என்ற அறிஞர். எனவே, நாம் நம்முடைய வாழ்வில் ஏரளாமான
நன்மைகளைச் செய்திருக்கும். ஆண்டவருக்கும், அடுத்திருப்பவருக்கும்
நன்றியுணர்வோடு இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
விண்ணரசின் மதிப்பை உணராமல் வாழும் மானிடர்கள்!
நிகழ்வு
ஜூலியன் என்றொரு பெருஞ்செல்வந்தர் ஒருவர் இருந்தார். இவருக்கு ஒரு
பண்ணை வீடு இருந்தது. அந்தப் பண்ணை வீட்டில்தான் இவர் தன்னுடைய
பெரும்பாலான நேரங்களைச் செலவழித்தார். இவருடைய பண்ணை வீட்டின் ஒருபுறம்
அருமையானதொரு தோட்டம் இருந்தது. அதில் வண்ண வண்ண மலர்கள்
பூத்துக்குலுங்கின. பண்ணை வீட்டின் இன்னொரு பக்கம், மீன்குளம் ஒன்று
இருந்தது. அதில் அரியவகை மீன்களெல்லாம் இருந்தன.
இப்படிப்பட்ட ஓர் அருமையான பண்ணைவீட்டில் எப்பொழுதும் இருந்து பழகியதால்,
ஜூலியனுக்கு அந்தப் பண்ணைவீடு பிடிக்காமல் போனது. அதை எப்படியாவது
விற்றுவிட்டு, வேறோர் இடத்தில் நிலம் வாங்கிப் பண்ணை டு கட்டி அதில்
வாழலாம் என்று முடிவுசெய்தார் ஜூலியன். இதைத் தொடர்ந்து இவர், நிலங்களை
வாங்கி விற்கும் ஓர் இடத் தரகரிடம் தன்னுடைய விருப்பத்தைத்
தெரிவித்தார். அவரும் இவரிடம் அப்படியே செய்துவிடுவோம் என்று
சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
மறுநாள் செய்தித்தாளில் இப்படியொரு விளம்பரம் வந்திருந்தது: பண்ணை
வீடு ஒன்று விற்பனைக்கு வருகின்றது. அதன் ஒருபுறம் அருமையான தோட்டமும்,
இன்னொரு புறம் மீன் குளமும் உள்ளது. சொர்க்கத்தில் இருப்பது போன்ற
உணர்வைத் தரும் இந்தப் பண்ணை வீட்டின் விலை மிகவும் குறைவுதான். இதை
வாங்க விருப்பமுள்ளோர் கீழ்க்காணும் தொலைபேசி எண்ணை அழைக்கவும்.
செய்தித்தாளில் வந்த இந்த விளம்பரத்தைப் பார்த்ததும், ஜூலியன் மிகவும்
உற்சாகமடைந்து, "
எப்படியாவது அந்தப் பண்ணை வீட்டை வாங்கிவிடவேண்டும்"
என்று நினைத்துக்கொண்டு, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணைத்
தொடர்புகொண்டு பேசினார். கடைசியில்தான் தெரிந்தது, அது தன்னுடைய பண்ணை
வீடுதான் என்று. இப்படிப்பட்ட பண்ணை வீட்டையா நாம் விற்கத்
துணிந்தோம் என்று நினைத்து, ஜூலியன் தன்னுடைய பண்ணை வீட்டை
விற்கும் எண்ணத்தைக் கைவிட்டார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற ஜூலியன், எப்படித் தன்னுடைய பண்ணை
வீட்டின் அருமையையும் மகத்துவத்தையும் உணராமல் இருந்தாரோ, அப்படித்தான்
இன்றைக்குக் பல கிறிஸ்தவர்கள் விண்ணரசின் மகத்துவத்தை உணராமல்
வாழ்த்துகொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்,
பொதுக்காலத்தின் இருபத்து எட்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட
இறைவார்த்தை, எல்லாருக்கும் உரிய விண்ணரசின் மகத்துவத்தை நாம் உணரவும்,
அந்த விண்ணரசில் நாம் பங்குபெற என்ன செய்யவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது.
அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கொடுக்கப்பட்ட அழைப்பைப் புறக்கணிக்கும் மக்கள்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, விண்ணரசைப் பெரிய விருந்துக்கு ஒப்பிடுகின்றார்.
இந்த உவமையில் வருகின்ற மன்னர் தன்னுடைய மகனுக்கு நடத்திய திருமணத்திற்கு
ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொள்வதற்கு, ஏற்கெனவே அழைப்புப்
பெற்றிருந்தவர்களிடம். "
விருந்து ஏற்பாடாகிவிட்டது"
என்ற
செய்தியைச் சொல்ல தன் பணியாளர்களை அனுப்பி வைக்கின்றார். ஆனால், அழைப்புப்
பெற்றவர்களோ மன்னர் அனுப்பி வைத்த பணியாளர்களிடம் ஒவ்வொரு காரணத்தைச்
சொல்லி திருமண விருந்துக்குக் வராமல் போகின்றார்கள். இன்னும் ஒருசிலர்
அனுப்பப்பட்டவர்களைப் பிடித்துக் கொலைசெய்கின்றார்கள்.
இங்கு மன்னர் ஏற்பாடு செய்திருந்த திருமண விருந்து என்பது விண்ணரசைக்
குறிக்கின்றது; அழைப்புப் பெற்றவர்கள் யூதர்களைக் குறிக்கின்றார்கள்.
யூதர்கள் கடவுளால் சிறப்பாக அழைப்புப் பெற்றிருந்தார்கள். ஆனாலும்
அவர்கள் கடவுளால் அனுப்பப்பட்ட இறைவாக்கினர்களைப் பிடித்துக்
கொன்றொழிக்கின்றார்கள். இதனாலேயே அவர்களுக்கு கிபி. 70 ஆம் ஆண்டு
மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது. அன்று யூதர்கள் கடவுளின் அழைப்பைப் புறக்கணித்ததுபோல்,
இன்று நாம் விண்ணரசில், ஆண்டவருடைய திருவிருந்தில் கலந்துகொள்ளாமல்,
ஏதோவொரு சாக்குப் போக்கைச் சொல்லிப் புறக்கணித்துக்
கொண்டிருக்கின்றோம். இத்தகைய நிலையை நாம் மாற்றிக்கொள்வது மிகவும்
நல்லது.
விண்ணரசில் எல்லாருக்கும் இடமுண்டு
திருமண விருந்துக்கு அழைப்புப் பெற்றவர்கள் அதாவது யூதர்கள் கடவுளின்
அழைப்பு உதறித் தள்ளியதால், அந்த அழைப்பானது எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றது.
இதன்மூலம் விண்ணரசு என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்ல,
அது எல்லா மக்களுக்கும் உரியது என்ற செய்தியானது சொல்லப்படுகின்றது.
இந்த உண்மையை, இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
முதல் வாசகம் இன்னும் அழகாக, ஆழமாக எடுத்துக்கூறுகின்றது.
படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு
விருந்தை ஏற்பாடு செய்வார் என்று இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற
வரிகள், விண்ணரசு மக்கனினங்கள் அனைவருக்கும் உரியது என்ற செய்தியை
மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்கின்றது. மேலும் இந்த விருந்தில் கலந்துகொள்வோருடைய
முகத்தை மூடியுள்ள முக்காட்டையும், துன்ப துகிலையும் அகற்றி, கண்ணீரைத்
துடைத்துவிடுவார் என்கின்றார் ஆண்டவர்.
இப்படி எல்லாருக்கும் உரிய... நம்முடைய துன்ப துயரங்கள் எல்லாம்
நீங்கும்... திருவிருந்தில் அல்லது விண்ணரசில் பங்குபெறுவதற்கு நமக்கு
ஒரு முக்கியமான தகுதி அல்லது நாம் ஒரு முக்கியமான செயலைச் செய்யவேண்டும்.
அது என்ன என்று தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.
விண்ணரசில் பங்குபெற தகுதியுள்ளவர்களாய் மாறவேண்டும்
மன்னர் கொடுத்த விருந்தை, அழைப்புப் பெற்றவர்கள் புறக்கணித்ததால்,
மன்னர் தன் பணியாளரிடம், நீங்கள் சாலையோரங்களில் காணும்
எல்லாரையும் அழைத்து வாருங்கள் என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே
செய்கிறார்கள். மன்னர் செய்த இத்தகையதொரு செயல், விண்ணரசு
எல்லாருக்குமானது என்ற செய்தியை உணர்த்துகின்றது என்று மேலே
பார்த்தோம். இவ்வாறு சாலையோரங்களில் இருந்து அழைக்கப்பட்டவர்களுள்
ஒருவர், திருமண ஆடையின்றி இருப்பதைக் கண்டு, அவரை இருளில்
தள்ளுமாறு தன்னுடைய பணியாளர்களுக்குக் கட்டளையிடுகின்றார் மன்னர்.
மன்னரின் இச்செய்தி, விண்ணரசு எல்லாருக்கும் உரியது என்றாலும்,
அதில் கலந்துகொள்வதற்கு தகுதி வேண்டும் என்ற செய்தியை நமக்குச்
சுட்டிக்காட்டுகின்றது. இங்கு திருமண ஆடை அல்லது விண்ணரசுக்குள்
நுழைவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய தகுதி "
நேர்மை"
என்று
திருவிவிலிய அறிஞர்கள் குறிப்பிடுவார்கள். இதை இன்னும் தெளிவாகப்
புரிந்துகொள்வதற்கு இறைவாக்கினர் எசாயா நூல் 61: 10 இல் வருகின்ற,
நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார் என்ற வரிகளோடு
இணைத்துப் பார்ப்பது நல்லது. திருமண விருந்தில் பங்கு பெறுவதற்குத்
திருமண ஆடை எப்படித் தேவையானதாக இருக்கின்றதோ, அப்படி நாம்
விண்ணரசுக்குள் நுழைய நேர்மை என்ற பண்பானது தேவையானதாக
இருக்கின்றது.
பலநேரங்களில் நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நேர்மை
இல்லாமலும், உண்மை இல்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இந்நிலையை நாம் நம்மிடமிருந்து தவிர்த்து, நேர்மையோடு வாழ்ந்து
கடவுள் தருகின்ற விண்ணரசை உரிதாக்கிக் கொள்ள முயற்சி செய்வோம்.
சிந்தனை
"
கடவுள் படைப்பில் நேர்மையான மனிதனே, தலைசிறந்தவன்"
என்பார் போப்
என்ற அறிஞர். ஆகையால், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நேர்மையோடு
நடந்து, இறைவன் தருகின்ற விண்ணரசை உரித்தாக்கிக் கொள்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறையுரைச்சிந்தனை
-
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனுக்கு
திடீரென ஒரு அச்சம் தோன்றியது: கடலில் விழுந்து விட்டால்
தான் எப்படி உயிர் பிழைப்பது என்ற எண்ணம் அவனை வாட்டியது.
கப்பல் தலைவனிடம் சென்று தன் அச்சத்தை விளக்கினான். கவலைப்படாதே
, உனக்குத்தான் நன்கு நீந்தத் தெரியுமே என்றான் கப்பல் தலைவன்.
உடனே அவன், இல்லை ! நேற்று கூட நன்கு நீந்தத் தெரிந்த ஒருவன்
கடலில் விழுந்து மூழ்கி இறந்து போனானே என்றதற்கு கப்பல் தலைவன்
அம்மனிதன் கடலில் வீழ்ந்தபோது தன்னுடைய பொருட்கள் அடங்கிய
இரண்டு பெட்டிகளை தன் இரு கைகளிலும் பிடித்திருந்தான். அப்பெட்டிகளின்
எடை அவனை நீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. எனவேதான் எங்களால்
கூட அம்மனிதனைக் காப்பாற்ற இயலவில்லை என்று சொன்னான். இக்கதை
தரும் பாடத்தை நமக்கு அளிப்பதே இன்றைய வாசகங்கள். மனிதன்
படைக்கப்பட்ட போது கள்ளங்கபடம் இல்லாமல் (Innocence) இருந்தான்.
அவன் வளர வளர அவனுக்குள் பல மூட்டைகள் ஏறிக் கொண்டன. நல்லவைகள்
பஞ்சு மூட்டையைப் போல இலேசாக இருந்தன. தீயவையே பாறாங்கற்களைப்போல
கடினமாயின. இதுபோன்ற மூட்டைகள் அவனுக்குள் இருக்கும் வரை
குழப்பம்தான்.
கட்டளைகளை யெல்லாம் கடைப்பிடித்த இளைஞன் ஒருவனுக்குத் தனக்கு
நிலைவாழ்வு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆண்டவர் இயேசுவிடம்
சென்று வினவினான். பாதி கிணற்றைத் தாண்டும் சக்தி கொண்ட அவுனுக்கு
மீதிப் பாதி கிணற்றைத் தாண்ட ஆண்டவர் வழிவகைச் சொன்னார்.
உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை
விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் செல்வராய்
இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் (மாற்.10:21)
என்றார். ஆண்டவர் காட்டிய வழி அவனுக்கு உகந்ததாக இல்லை. நீ
கட்டளைகளையெல்லாம் கடைப்பிடிப்பதால் மீட்பு அடைந்துவிட்டாய்
என்று இயேசு சொல்வார் என்று எண்ணி வந்த இளைஞனுக்கு, இன்னும்
அதிகமாக, எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்தையும் இழக்கச்
சொல்கிறாரே என்று முகம் வாடி வருத்தத்தோடு சென்றான்.
நாமும் மீட்படைய வேண்டும் என்று விரும்புகிறோம். நம்மை
மீட்க வேண்டும் என்பது இறைத்தந்தையின் விருப்பம். அவ்விருப்பத்தை
நிறைவேற்ற இயேசு தன்னுயிரைத் தந்தார். இன்னும் குறைவாக இருப்பது
என்ன? நம் ஒத்துழையாமை. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
நாம் சேகரித்தவற்றை, நாம் அடைந்தவற்றைக் காப்பாற்றுவதற்காக
நாம் நடத்துகின்ற போராட்டம் பெரிது. நாம் சேர்த்தவைகள்:
பணம், பதவி, படிப்பு, பட்டம், பகைமை, சொத்து, சொந்தம்...
போன்ற சுமைகளே நம்மை மூழ்கடிக்கும். இவற்றையெல்லாம்
விடுத்துக் கள்ளம் கபடற்ற முதல் நிலைக்கு நாம் செல்ல
வேண்டும். அறிவு நம்மை அனைத்தையும் துறக்க வைக்கும். வளர்ந்தாலும்,
பெரியவரானாலும் ஞானம் என்கிற கொடை நம்மைக் குழந்தைகளாக்கும்.
இது தனி மனித முயற்சியால் இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல,
கடவுளால் எல்லாம் இயலும் (மாற் 10:27). பின்பு வந்து என்னைப்
பின்பற்றும் (மாற் 10:21) என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்குச்
செவிமடுத்து ஞானத்தைப் பெறுவோம். இலவசமாய் இறைவன் தரும்
நிறை வாழ்வைப் பரிசாகப் பெற்றுக்கொள்வோம்.
அந்தப் பள்ளிக்கூடத்தில் அந்த வகுப்பில் அவன்தான் கணக்கில்
முதல் மாணவன். அவன் 99 மதிப்பெண் பெற்று
முன்னிலையிலிருந்தான். ஆனால் அவனுடைய கணித ஆசிரியர்
அவனைக் கடுமையாகக் கண்டித்தார். கண்டிக்கப்பட்டவன் கண்டிப்புக்குக்
காரணம் கேட்டான். ஆசிரியரோ ஒரு வெள்ளைத்தாளில் ஒரு கரும்புள்ளியை
வைத்துவிட்டு, மாணவனைப் பார்த்து, நீ பெற்றிருக்கின்ற
மதிப்பெண் இந்த வெள்ளைத் தாளிலுள்ள கருப்புப் புள்ளி
போல் இருக்கின்றது. நீ முழுவதும் வெள்ளையாக இருப்பதையே
நான் விரும்புகின்றேன் என்றார். இயேசு இன்றைய நற்செய்தியிலே
அவரைச் சந்திக்க வந்த மனிதரிடம் ஒரு கறுப்புப் புள்ளி
இருப்பதை, ஒரு குறை இருப்பதைக் கண்டார். நிலை வாழ்வை,
இறைவனுடைய நிறை ஆசியை உரிமையாக்கிக்கொள்ள விரும்பிய அந்தச்
செல்வர் மோசே கொடுத்திருந்த கட்டளைகளை அப்பழுக்கில்லாமல்
பின்பற்றியவர். இருப்பினும் இயேசுவின் சீடத்துவத்துக்கு
ஒவ்வாத ஒன்று அவரிடமிருந்தது. அது என்ன? அவருக்கு அடிமையாக
இருக்க வேண்டிய சொத்து அவரை அடிமைப்படுத்தி வைத்திருந்தது.
ஞானம் நிறைந்த (முதல் வாசகம்), உயிருள்ள, ஆற்றல் மிக்க
(இரண்டாம் வாசகம்) இயேசுவின் வார்த்தைகள் அந்தப் பணக்காரரின்
மனத்துக்குள் புகாதவாறு அவருடைய பண ஆசை அவரைத் தடுத்து
நிறுத்திவிட்டது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் பணம் ஒன்றுதான்.
இயேசுவின் அறிவுரை, விண்ணகம், விண்ணக வாழ்வு போன்ற மதிப்பீடுகளெல்லாம்
அவருடைய அகராதிக்கு அப்பாற்பட்டவை. அவர் பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன்
மனிதனில்லே என்று பாடித்திரிந்தவர். இயேசுவின் சீடர்களாக
வாழ விரும்புகின்றவர்கள் நூற்றுக்கு நூறு அவருடைய
வார்த்தைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
எவ்வளவுக்கு எவ்வளவு நாம் பற்றற்றவர்களாகத் திகழ்கின்றோமோ
அந்த அளவுக்கு அம்மையும், அப்பனுமாகிய கடவுள் நம்மைத்
தாங்கிப்பிடித்து வாழவைப்பார். பணத்தைச் சோற்றுக்கு ஊறுகாய்
போலப் பயன்படுத்துவது நல்லது.
கடவுள் இரண்டு வானதூதர்களை வையகத்துக்கு அனுப்பினார். ஒரு
வானதூதரை மக்களின் விண்ணப்பத்தையும், மற்றொரு வானதூதரை மக்களின்
நன்றியறிதலையும் பெற்று வரும்படி கேட்டார். மக்களின் விண்ணப்பங்களையெல்லாம்
சேகரித்த வானதூதர் அவற்றைப் பெரிய சாக்கு ஒன்றில் போட்டுச்
சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு வந்தார். ஆனால் மக்களின்
நன்றியறிதலைச் சேகரித்த வானதூதரோ அவற்றை ஒரு சிறிய பையில்
போட்டுக் கொண்டுவந்தார். இக்கதை கூறும் செய்தி: கடவுளிடம்
வரங்கள் கேட்டு விண்ணப்பம் செய்வோர் பலர்; பெற்ற வரங்களுக்காகக்
கடவுளுக்கு நன்றி செலுத்துவோர் ஒரு சிலரே!
மனிதர் செய்யும் எத்தகைய பாவங்களுக்கும் மன்னிப்பு உண்டு;
ஆனால் செய்நன்றி மறந்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்கிறார்
வள்ளுவர். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு (குறள் 10)
இன்றைய முதல் வாசகத்தில், எலிசா என்ற இறைவாக்கினர் சீரிய
நாட்டுத் தொழுநோயாளி நாமான் என்பவரைக் குணப்படுத்துகிறார்.
நாமான் எலிசாவுக்கு நன்றி செலுத்தும் வண்ணம் அவருக்கு அன்பளிப்பு
வழங்குகின்றார். ஆனால் எலிசா அந்த அன்பளிப்பை வாங்க மறுத்தபோது,
இஸ்ரயேலின் கடவுள் ஒருவரே உண்மையான கடவுள் என்று அறிக்கையிடுகிறார்
நாமான். அவர் பிற இனத்தைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து பத்துத் தொழுநோயாளிகளைக் குணப்படுத்துகிறார்.
ஆனால் அவர்களில் ஒருவர் மட்டும் கிறிஸ்துவுக்கு நன்றி
செலுத்துகிறார். அவர் பிற இனத்தவர். கிறிஸ்து மிகவும் மனம்
வருந்திக் கூறுகிறார்: "பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா!
மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப்புகழ அன்னியராகிய
உம்மைத்தவிர வேறு எவரும் திரும்பி வரக் காணோமே? (லூக் 17:
17-18),
இன்றும்கூட கிறிஸ்தவத் திருத்தலங்களுக்கு வரும் பிற சமயத்தவர்
தான் அதிகமாகக் காணிக்கை செலுத்துகின்றனர். கடவுளுக்கும்
மாதாவுக்கும் நன்றியுள்ளவர்களாகத் திகழ்கின்றனர். ஓர் இந்து
மனிதர் சகாய அன்னையிடம் விண்ணப்பித்து அவருக்கு வேலை
கிடைத்தது; அவர் தனது முதல் மாதச் சம்பளம் ஆயிரம்
ரூபாயையும் அப்படியே மாதாவுக்குக் காணிக்கையாகக்
கொடுத்தார். அவரிடம் இருந்த நன்றி உணர்வு எத்தனைக் கிறிஸ்தவர்களிடம்
இருக்கின்றது?
நமது புகழுரையும் நன்றியறிதலும் கடவுளுக்குத் தேவையில்லை.
மாறாக, அவை நாம் மீட்படைய பயன்படுகின்றது. என்று திருச்சபை
தனது திருவழிபாட்டில் எடுத்துரைக்கின்றது.
நாம் கடவுளுக்குப் புகழுரையும் நன்றியும் செலுத்த வேண்டும்
என்பதற்குக் கிறிஸ்து சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்.
விண்ணரசின் மறைபொருளை ஞானிகளுக்கு வெளிப்படுத்தாமல் குழந்தைகளுக்கு
வெளிப்படுத்தியதற்காகக் கடவுளைப் போற்றுகிறார் (லூக்
10:21). ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கும்
முன் கடவுளைப் போற்றுகிறார் (மாற் 6:41). அவ்வாறே ஏழு அப்பங்களைக்
கொண்டு நாலாயிரம் பேருக்கு உணவளிக்கு முன் கடவுளுக்கு நன்றி
செலுத்துகிறார் (மாற் 8:6). இலாசரை உயிர்த்தெழச்
செய்யுமுன் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார் (யோவா 11:41).
இறுதி இரவு உணவின் போது அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி
செலுத்துகிறார் (லூக் 22:19). உயிர்த்தபின் எம்மாவு சீடர்களுடன்
பந்தியில் அமர்ந்து அப்பத்தை எடுத்து, கடவுளைப்
போற்றுகின்றார் (லூக் 24:30), எனவே கிறிஸ்துவைப் பின்பற்றி
நாமும் கடவுளைப் போற்றி அவருக்கு நன்றி செலுத்துவது தகுதியும்
நீதியுமாகும்.
இன்பத்தில் கடவுளைப் போற்றவும் அவருக்கு நன்றி செலுத்தவும்
இயலும். ஆனால், துன்பத்தில் துவளும்போது, சோதனை வாட்டி வதைக்கும்
போது கடவுளை எவ்வாறு புகழ்வது? திருத்தூதர் பவுல்
கூறுகிறார்: எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்" (1
தெச 5:18). இது சாத்தியமாகுமா? சாத்தியம் என்பதற்குத்
திருத்தூதர் பவுலே நமக்கு ஓர் எடுத்துக்காட்டு. பிலிப்பு
நகரில் பவுலும் சீலாவும் சிறையில் அடைக்கப்பட்டனர்;
கையிலும் காலிலும் விலங்குகள்; அந்நிலையிலும் "நள்ளிரவில்
பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்பாடி இறைவனிடம் வேண்டினர்"
(திப 16:24-25),
ஒரு தாய் தனது ஒரு வயது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது,
அவரைக் கருந்தேள் ஒன்று கொட்டி விட்டது. வலியால் துடித்த
அவர் : "கடவுளே! இத்தேள் என் குழந்தையைக் கொட்டாமல், என்னைக்
கொட்டியதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்" என்றார்.
எத்தீமையிலும் ஒரு நன்மை உண்டு. உண்மையில் கடவுளின்மேல் அன்பு
செலுத்துபவர்களுக்கு அனைத்தும் நன்மையாக மாறும். இன்றைய
இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்துவுக்காகப் பல துன்பங்களை ஏற்ற
பவுல் கூறுகிறார்: "நாம் அவரோடு இறந்தால், அவரோடு
வாழ்வோம்; ஆட்சி செய்வோம்" (2 திமொ 8:13). ஒவ்வொரு
சாவிலும் ஓர் உயிர்ப்பு உண்டு.
கடவுளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் நமது நன்றியுணர்வைக்
காட்ட வேண்டும், குறிப்பாக நமது பெற்றோர்களுக்கு நன்றி
காட்ட வேண்டும். ஏழை விதவை ஒருவர் தன் வீட்டின் முன் தென்னம்பிள்ளை
வைத்து, தன் மகனைப் படிக்க வைத்தார். மகன் படித்து அமெரிக்காவில்
வேலை பார்த்தான். அம்மா அடக்கத்திற்கு அவன் வரவில்லை . அம்மா
இறக்குமுன் மகனுக்குப் பின்வருமாறு கடிதம் எழுதி வைத்தார்:
"மகனே. நீ பிறந்தபோதுதான் நம் வீட்டின் முன் தென்னம்பிள்ளை
நட்டேன்; நீயும் வளர்ந்தாய், தென்னம்பிள்ளையும் வளர்ந்தது;
அது கொடுத்த தேங்காய்களை விற்று உன்னைப் படிக்க வைத்தேன்.
இன்று அமெரிக்காவில் இருந்து கொண்டு என் அடக்கத்திற்குக்
கூட வர உன்னால் முடியவில்லை. ஆனால் நான் வளர்த்த தென்னம்பிள்ளையின்
பாளை என்னோடு கல்லறைக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்துகிறது."
இது கதையல்ல நிஜம். தென்னையைப் பெத்தா இளநீர்; பிள்ளையைப்
பெத்தா கண்ணீர்!
'நற்கருணை' என்ற சொல்லுக்கு 'நன்றியறிதல்' என்பது பொருள்.
ஒவ்வொரு திருப்பலியிலும் கடவுளைப் போற்றி நன்றி
கூறுகிறோம். அப்ப, இரசத்தை எடுத்து. ஆண்டவரே! அனைத்துலகின்
இறைவா! உம்மைப் போற்றுகிறோம் என்கிறார் குரு. இவர்
வழியாக இவரோடு, இவரில்" என்ற இறுதிப் புகழுரை நன்றிப் புகழுரை.
கடவுளுக்கு உதட்டால் மட்டுமல்ல, உள்ளத்தால் நன்றி
செலுத்துவோம். நமது வாழ்வே ஓர் இறைபுகழாக, நன்றியுரையாக அமையட்டும்.
கிரேக்க நாட்டுத் தத்துவமேதை ஒருவர் தம்
வீட்டிற்கு முன்புறம், "ஞானம் இங்கே விற்கப்படும்" என்று
ஒரு விளம்பரப் பலகையில் எழுதி வைத்திருந்தார், இந்த நூதனமான
விளம்பரத்தைப் படித்த ஒரு பணக்காரர் தமது வேலைக்காரரிடம்
பணம் கொடுத்து, ஞானம் வாங்கி வரும்படி அவரை அம்மேதையிடம்
அனுப்பினார். அம்மேதை அப்பணத்தை வாங்கிக் கொண்டு, ஒரு காகிதத்
துண்டில், "நீ எதைச் செய்தாலும் தன் இறுதி முடிவை
நினைத்துக்கொள் என்று எழுதிக் கொடுத்தார், அப்பணக்காரர்
அவவாக்கியத்தைப் பொன் எழுத்துக்களால் பொறித்து, சட்டம் கட்டி,
தம் வீட்டின் மையப் பகுதியில் தொங்கவிட்டு, நாள்தோறும் படித்து,
வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, தம் செல்வத்தின் பெரும் பகுதியை
ஏழைகளுக்குக் கொடுத்து உதவி, உண்மையில் ஞானியாக வாழ்ந்து
நல்ல மரணமடைந்தார்.
நாம் எதைச் செய்தாலும் நம் வாழ்வின் இறுதி முடிவை நம் கண்முன்
நிறுத்த வேண்டும். இருப்பது பொய், போவதுமெய்." இதுதான்
வாழ்வு. "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்
ளை, கடைசிவரை யாரோ?" திலையற்ற வாழ்வை எண்ணிப்பார்த்ததால்தான்
பலர் ஞாளிகளாக மாறினர். இன்றைய பதிலுரைப் பாடலும், "எங்கள்
வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்போது ஞானமிகு
உள்ளத்தைப் பெற்றிடுவோம்" (திபா 30:12) எனக் கூறுகிறது.
இன்றைய முதல் வாசகம் ஞானத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றது.
ஞானத்திற்கு ஈடு இணையானது இவ்வுலகில் வேறெதுவுமில்லை. ஞானத்திற்கு
முன் வெள்ளி வெறும் களிமண்; தங்கம் வெறும் தவிடு; செல்வம்
வெறும் குப்பை: அழகு வெறும் மாயை; புகழ் வெறும் புகை.
அறிவு ஞானமாகக் கனிய வேண்டும். அறிவைப் புத்தகம் வாயிலாகவும்
பல்கலைக் கழகங்கள் மூலமாகவும் பெற முடியும். நவீனக்கலையைக்
கலைக்கணிப் பொறிவாயிலாகக் கற்றுக் கொள்ள முடியும், இவ்வுலகம்
முழுவதையும் இணையதளம் மூலமாக இணைக்க முடியும். சின்னத்
திரைகளும் பெரிய திரைகளும் நமக்குக் கேளிக்கைகளை வழங்க
முடியும். ஆனால் ஞானமானது கடவுள் நமக்கு அளிக்கும் மேலான
கொடை; தூய ஆவியார் நம் மீது பொழியும் ஒப்புயர்வற்ற வரம் சாலமோன்
அரசர் கடவுளிடமிருந்து செல்வத்தையோ புகழையோ ஆயுளையோ கேட்காமல்
ஞானத்தைக் கொடையாகக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். பகுத்தறிவு
இறைஞானமாகக் கனிய வேண்டும். மெய்யறிவு சூன்யத்தில் அல்ல,
பூரணத்தில் சங்கமிக்கும்: கடவுளிடம் சரண் அடையும். பழங்காலத்தில்
அறுவது வயது நிறைவடைந்த கணவனும் மனைவியும் இல்லறம் துறந்து
வனவாசம் மேற்கொள்ளக் காட்டுக்குச் சென்றனர். முன்னே சென்ற
கணவர் தரையில் கிடந்த ஏதோ ஒரு பொருளைக் காலால் மணலைக்
கொண்டு மறைத்தார். அதைக் கவனித்த மனைவி அவரிடம், "எதைக்
காலால் மூடி மறைக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு, கணவர், "தரையில்
மாணிக்கக் கல் ஒன்று கிடக்கிறது. அதை உன் கண்களில் படாதபடி
மூடி மறைத்தேன்" என்றார், அதற்கு மனைவி, என்னங்க, துறவறம்
மேற்கொண்ட பிறகும், உங்களுக்கு மண்ணுக்கும் மாணிக்கத்திற்கும்
வேறுபாடு தெரிகிறதா?" என்று கேட்டார். ஞானத்தில் தம் கணவரையே
விஞ்சி விட்டார் அந்த மனைவி!
கடவுளை யார் தேடுவர் ? மண்ணையும் மாணிக்கத்தையும் சமமாகப்
பார்ப்பவர்கள். ஒட்டையும் செல்வத்தையும் ஒன்றாகக் காண்பவர்கள்
தான் கடவுளை நாடுவர் என்கிறார் தாயுமானவர்.
"ஓடும் இருநிதியம் ஒன்றாகக் கண்டவர்கள் நாடும் பொருளான நட்பே
பராபரமே".
இன்றைய நற்செய்தியில், கடவுளுடைய ஞானம் எனப்படும்
கிறிஸ்துவை (1கொரி 1:24) பணக்கார வாலிபர் ஒருவர் மேலோட்டமாகப்
பின்பற்ற விரும்பினார். ஆனால் கிறிஸ்துவோ தம்மை வேரோட்டமாக,
நெருக்கமாகப் பின்பற்ற அவருக்கு அழைப்பு விடுத்தார், அவருடைய
உடமைகளை எல்லாம் விற்று, அவற்றை ஏழைகளுக்கு வாரி வழங்கிவிட்டு,
வெறுங்கையுடன் தம்மைப் பின்பற்ற அழைத்தார், ஆனால் அப்பணக்கார
வாலிபர் தமது உடமைகளைத் துறக்க மனமின்றி முகவாட்டத்துடன்
போய் விட்டார், அவருக்கு மண்ணக அறிவு இருந்தது. ஆனால் விண்ணக
ஞானமில்லை . கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் புரிய
அவர் விரும்பினார். ஆனால் கிறிஸ்துவோ, "எவரும் கடவுளுக்கும்
செல்வத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது" (மத் 6:24) என்பதை
அவருக்குத் திட்டவட்டமாக உணர்த்தினார்.
கிறிஸ்து இவ்வுலகச் செல்வத்தின் அவசியத்தை மறுக்க வில்லை.
பொருட்பால் இல்லை என்றால், காமத்துப் பாலும் வாங்க
முடியாது. ஏன், ஆவின்பால் கூட வாங்க முடியாது என்பது
கிறிஸ்துவுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், கிறிஸ்துவோடு ஒப்பிடும்
போது, இவ்வுலகச் செல்வங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இரண்டாம்
நிலையை அடைகின்றன, கிறிஸ்து எல்லாவற்றையும் இரண்டாம்
நிலைக்குத் தள்ளி விடுகிறார். இவ்வுண்மையைத் திருத்தூதர்
பவுல் தன்குனர்ந்திருந்தார், எனவே தான் அவர், கிறிஸ்துவை
ஆதாயமாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பையாகக் கருதுகிறேன்
(பிலி 3:8) என்றார். இவ்வுலக செல்வங்களுக்கு அடிமை ஆகிறவர்கள்
கடவுளுக்கு அடிமை ஆகமுடியாது.
அரிது, அரிது, பணக்காரர் விண்ணரசில் நுழைவது அரிது என்று
ஆணித்தரமாக அறிக்கையிடும் கிறிஸ்து, பணக்காரர்களும் இறையருளால்
விண்ணகம் செல்ல முடியும் என்பதையும் எடுத்துக்கூறத் தயங்கவில்லை
, பணக்கார சக்கேயு ஓர் ஊழல் பெருச்சாளி: இறையருளால், அதாவது
கிறிஸ்துவின் பிரசன்னத்தால் மனமாற்றம் அடைந்தார். அதன்
விளைவாகத் தாம் இழைத்த அநீதிகளுக்கு நான்கு மடங்கு ஈடு
செய்யவும், தமது செல்வத்தில் பாதியை ஏழைகளுக்கு வழங்கவும்
முன் வந்தார்; மீட்படைந்தார் (லூக் 19:8-10).
எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாது எச்சரிக்கையாக இருக்க
வேண்டும், ஏனெனில் செல்வப் பெருக்கால் வாழ்வு வந்துவிடாது.
(லூக் 12:15). நிலையற்ற செல்வத்தை ஏழைகளுக்குக் கொடுத்து
அதன்மூலம் நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் (லூக்
18:9), உலகச் செல்வத்தைப் பயன்படுத்தும் போது அவற்றில்
மூழ்கி ஆன்மாவை இழக்காமல் இருக்கக் கற்றுக்கொள்வதுதான்
வாழ்க்கைக் கலையாகும் (1 கொரி 7:31).
கணவர் ஒருவர் தம் மனைவிக்குக் குடைபிடித்துக் கொண்டு
போனார், ஏன் அவர் அவ்வாறு செய்தார்? என்று அவரைக் கேட்டதற்கு
அவர் தந்த பதில்: "போகும் வழியில் துணிக்கடை, நகைக்கடைகள்
உள் ளன், அக்கடைகளை என் மனைவி பார்க்காதப்டி கு கடை யை இருபக்கங்களிலும்
வளைத்துப்பிடித்து மிகவும் தந்திரமாக அவளை வீட்டிற்குத் தள்ளிக்கொண்டு
போய் விடுவேன்."
இவ்வுலக மாயை நமது கண்களில் பட்டு நம்மைத் திசை திருப்பாமல்
செய்ய நமக்கொரு குடை தேவைப்படுகிறது. அதுதான் கடவுளுடைய
வார்த்தை : உயிருள்ள, ஆற்றல்மிக்க, இருபக்கமும் வெட்டக்கூடிய
கூர்மையான வாளான, உள்ளத்தை சாடுருவுகிற கடவுளுடைய
வார்த்தையால் மெய்யறிவும் ஞானமும் பெற்று ஞானிகளாக வாழக்
கற்றுக் கொள்வோம். பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களால் நாம்
நசுக்கப்பட்டு, பிழியப்பட்டு பெறுகின்ற பட்டறிவினால் நாம்
ஞானிகளாக மாறவேண்டும், வாழ்க்கை அனுபவம்தான் நமது சிறந்த
ஆசான். கெட்ட பின்னாவது ஞானியாக வேண்டாமா?
தொட்டிலுக்கு அன்னை, கட்டிலுக்குக் கன்னி, பட்டினிக்குத்
தீனி, சுட்டபின் நெருப்பு, கெட்டபின் ஞானி! "நீ எதைச்
செய்தாலும் உன் இறுதி முடிவை நினைத்துக் கொள்"
மருத்துவர் ஒரு நோயாளியிடம் கவலைப்படாதீர்கள். கண்டிப்பாக
உங்கள் உயிரைக் காப்பாற்றி விடுவேன் என்று கூறித்
தேற்றும்போது இறைவன் சிரிக்கிறார். காரணம்? உயிரை எடுப்பதும்
கொடுப்பதும் மருத்துவர் கையிலோ இருக்கின்றது? அடுத்தது
இரு சகோதரர்கள் தங்கள் நிலத்தைப் பிரித்துக் கொள்கின்றபோது
இது என்னுடையது' என்கிறான் ஒருவன். இல்லை தன்னுடையது
என்கிறான் மற்றவன். சிரித்துக் கொண்டே கடவுள் தனக்குள்
சொல்கிறார்: இந்த உலகம் அனைத்தும் என்னுடையது. ஆனால்
இவர்களோ இது என்னது அது உன்னது எனச் சொல்லிச் சண்டையிட்டுக்
கொள்கின்றனர்.
அன்று பேதுருவும் யோவானும் ஆலய முற்றத்தில் முடவனைச்
சந்திக்கின்றனர். பிச்சை கேட்ட அவனிடம் பேதுரு
பொன்னும் வெள்ளியும் என்னிடம் இல்லை. என்னிடம் உள்ளதை
நான் தருகிறேன். இயேசுவின் பெயரால் உனக்குச்
சொல்கிறேன். எழுந்து நட (தி.ப. 3:6) என்றார். அவனும்
எழுந்து நடக்கிறான்.
திருத்தந்தை 13ம் சிங்கராயர் ஒரு மனிதரைப் பேதுரு பேராலயத்துக்கும்
தனது மாளிகைக்கும் அழைத்துச் சென்றார். அங்குள்ள ஆடம்பரப்
பொருள்களையெல்லாம் காட்டி, 'பேதுருவோடு சேர்ந்து
வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை என்று இனி எங்களால்
கூற முடியாது என்றாராம். உடனே அந்த மனிதர் திருத்தந்தையைப்
பார்த்து, ஆகவேதான் உங்களால் எழுந்து நட என்றும் சொல்ல
இயலவில்லை என்று பதில் கூறினாராம்.
பணத்துக்கோ பணக்காரர்களுக்கோ எதிரானவரல்ல இயேசு. நிக்கதேம்,
சக்கேயு போன்ற செல்வந்தர்களின் நெருங்கிய 'நண்பர் அன்றோ!
பணத்தால் வரும் தீமைகள், ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கிறார்.
பணம் என்ற தேவதைக்குப் பலியாகாதது எது? கற்பு பலியாக்கப்படுகிறது.
அதுதான் விபச்சாரம். உண்மை பலியாக்கப்படுகிறது. அதுதான்
பொய்ச்சாட்சி, நீதி பலியாக்கப்படுகிறது. அதுதான் அநீதத்
தீர்ப்பு. அன்பு பலியாக்கப்படுகிறது. அதுதான் வஞ்சனை.
நேர்மை பலியாக்கப்படுகிறது, அதுதான் ஊழல். நியாயம் பலியாக்கப்படுகிறது,
அதுதான் சுரண்டல். இப்படிப் பணத்துக்காக பலியாக்கப்படுபவை
பல. அவை ஒவ்வொன்றிலும் கிறிஸ்துவின் சீடன் . என்ற
நிலையும் பலியாக்கப்படுகிறது. எவரும் இரு தலைவர்களுக்குப்
பணிவிடை செய்ய முடியாது (மத். 6:24).
பணத்தை மட்டும் நம்பி இருப்பவர்கள் கடவுளின் அரசில்
நுழைவது எவ்வளவு அரிது! (மார்க் 10:23). ஆலமரம் எதை
நம்பி வாழ வேண்டும்? வேரையா, விழுதையா? ஐயமில்லாமல்
வேரைத்தான். அதற்காக விழுதுகளை விட்டுவிட வேண்டும்
என்றில்லை. ஆனால் விழுதான செல்வத்தை மட்டுமே
நம்பிக்கொண்டு ஆணி வேரான ஆண்டவனை மறக்கும்போது முன்னுரிமை
கொடுப்பதில் முறைகேடு அல்லவா ஏற்பட்டுவிடுகிறது! பணநிலை
அல்ல, மனிதனின் மனநிலையே நம்பிக்கையின் உரைகல்.
ஒருவன் யாரை நம்பி வாழ்கிறான் என்று கண்டறிய இறைவன்
சோதனைகளை நடத்தி இருக்கிறான். 2 எடுத்துக்காட்டுகள்.
1. ஆபிரகாமிடம் மகனைப் பலிகொடுக்கக் கேட்டது. ஆபிரகாம்
நம்பி இருந்தது வேரான கடவுளையா, விழுதான மகனையா?சோதனையில்
வென்றார். மனநிறைவோடு திரும்பினார்.
2. இயேசு சந்தித்த பணக்கார இளைஞனை அழைத்தது. அவன் நம்ப
வேண்டியது வேரான இறைவனையா, விழுதான சொத்து சுகத்தையா?
சோதனையில் தோற்றான் மனம் வாடித் திரும்பினான்.
கிறிஸ்தவ வாழ்க்கை கட்டளைகளுக்கு அப்பால். பத்துக்
கட்டளைகள் மனிதன் மனிதனாக வாழத்தானே தவிர மனிதன்
கிறிஸ்தவனாக வாழ அல்ல. திருஅவைக் கட்டளைகள் கடமை மறந்த
கிறிஸ்தவனுக்கு ஒரு குறைந்த நிலை -வடிவமைப்பே தவிர இலட்சிய
வாழ்க்கைக்கான வழியல்ல.
வானக வாழ்வு ஒரு மாளிகை என்றால், அம்மாளிகையைக் கட்டி
எழுப்பக் கடவுள் அமைத்துத் தந்த சாரம்தான் இவ்வுலகம்.
உலகம் தரும் செல்வம். செல்வத்தால் வரும் இன்பம்.
வீடு எதற்காகக் கட்டுகிறோம், இருக்கவும், அமரவும்,
படுக்கவும் நடமாடவும்தானே, சாரத்திலும் ஒரளவு அவற்றைச்
செய்யலாமே என்றெண்ணி வீட்டைக் கட்டுவதை விடுத்து,
சாரத்திலேயே குடியிருக்க நினைப்பவனை என்னவென்பது?
இன்று நாம் யாரை நம்பி வாழ்கிறோம் என்றறிய இறைவன்
நம்மைச் சோதித்தால் ... சோதனையில் வெற்றி பெறத்
தேவையான ஞானத்தை நாடுவோம். ஒழுங்காக ஒரு புள்ளிவிவரம்
எடுத்தால், உலகத்தில் அருள் இல்லாமல் அல்லது பொருள்
இல்லாமல் துன்புறுபபர்களை விட அறிவில்லாமல்
ஞானமில்லாமல் அல்லல்படுபவர்கள் தாம் அதிகம் என்பது
தெரியவரும். ஞானத்தின் ஆவியோடு ஒப்பிடும்போது செல்வம்
ஒன்றுமே இல்லை. (சா.ஞா. 7:7-11)
கருத்தரங்கு ஒன்றில் பெண் அடிமைத்தனம், வரதட்சணை போன்ற
சமூகத் தீமைகள் பற்றி அலசப்பட்டது. வரதட்சணை ஒழிக்கப்பட
வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு எடுக்கப்பட்டது. சில
நாள்களுக்குப் பின் அதில் கலந்து கொண்ட இளைஞனுக்கு
திருமணம், வரதட்சனை ஐந்து லட்சமாம்!
இன்று நம்மிடையே நல்ல கருத்துக்கள், தீர்மானங்கள்
இல்லாமல் இல்லை. ஆனால் செயல்பாடுதான் கேள்விக்குறி.
இத்தகைய நடைமுறையை எரிக் புரோம் என்ற உளவியல் நிபுணர்
அது சரி, ஆனால் (yes, but game) என்ற உளவியல்
விளையாட்டு என்கிறார். நல்ல நல்ல கருத்துக்களை
மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு 'ஆம்' என்பது. தொடர்ந்து
'ஆனால்' என்று சொல்லி மறுத்துவிடுவது. இன்று
சமுதாயத்திலும் அரசியலிலும், திருஅவையிலும் உள்ள பெரிய
நோய் இதுதான்!
பணக்கார இளைஞன் வருகிறான். வருத்தத்தோடு.
திரும்புகிறான். நிகழ்ச்சியின் தொடக்கத்தில்
நம்பிக்கையும் உற்சாகமும். இறுதியில் வருத்தமும்
விரக்தியும். நல்ல மனம் மட்டும் போதாது. அது வெறும்
கற்பனையே. உழைப்பும் உற்சாகமான முயற்சியும் எந்தத்
தடையையும் மேற்கொள்ளும் துணிவும் தேவை.
வாழ்வதற்குப் பொருள் வேண்டும்.
வாழ்வதிலும் பொருள் வேண்டும்.
ஒர் இளைஞன் ஒரு துறவியிடம் நான் இதுவரை பொய்
சொன்னதில்லை. திருடியதில்லை. யாருக்கும் தீங்கு
நினைத்ததில்லை. எனக்கு விண்ணகப் பேறு கிடைக்குமா?'' என்று
கேட்டான். துறவியோ மரமும் மண்ணும் மட்டையும் முக்தி
பெறுமாயின் உனக்கும் முக்தி உண்டு: என்றார். அதாவது
மரமும் மண்ணும் பொய் சொல்வதில்லை. திருடுவதில்லை.
எவருக்கும் தீங்கு இழைப்பதில்லை. நீ மோட்சம் செல்ல
வேண்டுமானால் அதை நிர்ணயிப்பது நீதான் எனவே நீ நல்லவனாக,
குறிப்பாக உன்னிடம் உள்ளதைப் பிறரோடு பகிர்ந்து
கொள்பவனாக வாழும் போது நிலை வாழ்வு என்பது நிச்சயம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு இலக்குகள் உண்டு.
1. இந்நேரத்து இலக்கு (Immediate goal)
2. இறுதி இலக்கு (ultimate goal)
அனைவருக்கும் இறுதி இலக்கு நிலை வாழ்வை உரிமையாக்கிக்
கொள்வதாகும். இன்றைய இலக்கு அன்றாடம் உண்மையிலும்
நீதியிலும் தூய்மையிலும் புனிதத்திலும், பாசத்திலும்
பகிர்விலும் வாழ்வதாகும்.
சிந்தனைப் பயணம்:
அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச
மறையுரைச்சிந்தனை
-- Fr. M. Arul
நன்றி
அமெரிக்கா ஜனாதிபதியாக ஆகுமுன் ஆப்ரகாம் லிங்கன் ஒரு தடவை உணவருந்த
ஒரு உணவு விடுதிக்குச் சென்றிருந்தார். உணவு அருந்தியபின், உணவுக்கு
உரிய பணத்தை சர்வரிடம் கொடுத்து, உன் அன்பான சேவைக்கு நன்றி' என்று
சொன்னார். அந்தப் பணியாளர் உள்ளத்தில் பெருமகிழ்ச்சியோடு, 'ஐயா!
நான் இந்த உணவு விடுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். இங்கு
வரும் ஒவ்வொருவரையும் அன்போடு உபசரித்துள்ளேன். ஆனால் நீங்கள் மட்டும்தான்
அன்பாகப் பேசி, எனக்கு நன்றி சொன்னீர்கள். உங்களை ஒருபோதும் நான்
மறக்க மாட்டேன்' என்றான். மறு ஆண்டே ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக
தேர்ந்தெடுக்கப்பட்டார். நன்றியுள்ளவர்கள் அனைவராலும் போற்றப் படுவார்கள்!
எல்லா பண்புகளுக்கும் தாயாக இருப்பது நன்றிதான் என சீசர்
கூறுகிறார். எத்தகைய குற்றங்களுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் செய்
நன்றி மறந்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்கிறார் திருவள்ளுவர்.
இறைவாக்கினர் எலிசா சீரியா நாட்டு நாமான் என்பவனைக் குணமாக்குகிறார்.
நாமான் திரும்பி வந்து நன்றி கூறி , அன்பளிப்பு வழங்குகிறார். ஆனால்
எலிசா அன்பளிப்பை வாங்க மறுத்தபோது, இஸ்ரயேலின் கடவுள் ஒருவரே உண்மையான
கடவுள், (2 அர. 5:15) என்று அறிக்கையிடுகிறார் நாமான். இவர் ஒரு யூதரல்லாத
பிறவினத்தைச் சேர்ந்தவர் (முதல் வாசகம்).
இன்று வாசித்த நற்செய்தியிலே, இயேசு பத்து தொழு நோயாளிகளைக் குணமாக்குகிறார்.
குணம் பெற்றவர்களில் யூதரல்லாத சமாரியன் மட்டும் திரும்பி வந்து இயேசுவுக்கு
நன்றி சொல்லுகிறான். "ஆனால் பத்து பேர் குணமாகவில்லையா? மற்ற ஒன்பது
பேர் எங்கே ? (லூக். 17:17-18) கடவுளைப் போற்றிப் புகழ, இந்த அந்நியராகிய
உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பி வரக் காணோமே" என்கிறார் இயேசு
(மூன்றாம் வாசகம் ). இன்று கூட கிறிஸ்தவ திருத்தலங்களுக்குப், பிற
சமயத்தவர்தான் நன்றி உணர்வோடு அதிகமாகக் காணிக்கை செலுத்த வருகிறார்கள்.
நாம் கடவுளுக்குப் புகழுரையும், நன்றியும் செலுத்த வேண்டும் என்பதற்கு
நம் ஆண்டவர் இயேசுவும், அன்னை மரியாவும் நமக்கு எடுத்துக்காட்டாகத்
திகழ்கின்றனர். இலாசரை உயிர்பிக்கும் முன்பாகக் கடவுளுக்கு நன்றி
கூறுகிறார் இயேசு (யோவா. 11:41). இறுதி உணவின் போது அப்பத்தை எடுத்து
கடவுளுக்கு நன்றி கூறித்தான் தன் உடலாக , இரத்தமாக மாற்றுகிறார்
(லூக். 22:19).
"இதோ என் உள்ளம் ஆண்டவரைப் போற்றிப் பெருமைப் படுத்துகிறது. என்
மீட்பராம் கடவுளை நினைத்து என் மனம் பேருவகை கொள்ளுகிறது (லூக்.
1:46-47) என்று அன்னை மரியா புகழ்ச்சிப் பாடல் இசைக்கிறார்.
திருப்பாடல் ஆசிரியர் பாடிய 150 பாடல்களில், பாதிக்குமேல் நன்றியும்,
புகழ்ச்சியும் கலந்த கீதங்கள் அல்லவா.
அன்பார்ந்தவர்களே, கடவுளைப் போற்றுவது இன்பத்தில் மட்டுமல்ல, துன்பத்திலும்
நாம் கடவுளைப் புகழக் கற்றுக்கொள்ள வேண்டும். துன்பம் வந்தால் கடவுள்
தான் காரணம் என்று திட்டுகிறோம். நல்லது நடந்தால் கடவுள் காணாமற்போய்
விடுகிறார்! ஒரு தாய் தன் பச்சிளங் குழந்தையோடு தூங்கிக்
கொண்டிருந்தபோது கருந்தேள் ஒன்று அந்தத் தாயைக் கொட்ட வேதனையால்
துடி துடித்தாள். ஆனால் இந்த வேதனையிலும், என் குழந்தையைக் கொட்டாமல்,
என்னைக் கொட்டியதற்காக, இறைவா! உமக்கு நன்றி என்றாள். இந்த மனநிலைதான்
இன்று நமக்குத் தேவை என்பதை உணருவோம்.
- Fr. M. Arul
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ