மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற உலகில் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம். அநேக மாற்றங்கள் மிகப் பெரிய முன்னேற்றத்தை
ஏற்படுத்தி உள்ளது. மனமாற்றம்தான் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
அகமாற்றம் பெற்று முன்னேற்றமான பாதையில் பயணிக்க, தவக்கால
இரண்டாம் ஞாயிறு நம்மை அன்புடன் அழைக்கின்றது.
மாற்றம் இரண்டு விதத்தில் நிகழ்கிறது. ஒன்று உடல் ரீதியான
மாற்றம், இன்னொன்று மனரீதியான மாற்றம். உடல் ரீதியான மாற்றம்
நமது கட்டுப்பாட்டில் இல்லை. மனரீதியான மாற்றம் நமது
கட்டுப்பாட்டில் உள்ளது. நாம் நினைத்தால்தான் மனரீதியான
மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
மாற்றம் நம்மில் முளைக்க ஈரமான விதை முளைப்பது போல,
நல்லெண்ணத்தை இதயம் நிறைய நிரப்பி அதை வளரவிட வேண்டும்.
மாற்றம் மலர நல்ல சிந்தனை வேண்டும். நல்ல சிந்தனை மலர்ந்தால்,
நல்ல செயல்பாடு மலரும். நல்ல செயல்பாடு மலர்ந்தால் அது நம்
வாழ்க்கையாகும். முறையாக மாறுகின்ற இந்த மாற்றம்
முன்னேற்றத்தின் மாற்றமாகும்.
மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும், செயலுக்கு ஊக்கமூட்டும்
விதமாகவும் உள்ள மாற்றத்தைத் தருகின்ற சிந்தனைக்கு, மனதில்
இடம் தரவேண்டும். அதைத் தான் தவக்காலம் தருகிறது.
"என்னைப் பிடிக்காதவா, எனக்குப் பிடிக்காதவர், நான்
விரும்புவதை எனக்கு கொடுக்காதவர், என்னை அவமானப்படுத்தியவர்,
என்னிடம் இல்லாத ஒன்றை வைத்திருக்கிறவர் அத்தனை பேரும் அழிய
வேண்டியவர்களே" என்னும் வெறுப்பு பாசி, நம் சமூகத்தின் மீது
படர்ந்திருக்கிறது. இத்தகைய வெறுப்பு விதைக்குப் பதிலாக, அன்பு
விதையை இதயத்தில் ஊன்;றி மனமாற்றம் பெறச் செய்யவே, தவக்காலம்
ஆண்டுதோறும் நம் இதயத்தை கொத்திப் பண்படுத்துகிறது.
இறைமகன் இயேசு சமூத்தின் மீது படர்ந்து கிடந்த மாசுகளை களைய
புறப்பட்டார். பயணத்தில் துன்பத்தை தாங்கும் மனம் பெற தன்னையே
தயாரித்தார். தந்தையின் சித்தத்துக்கு மகன் பணிந்ததால். "இவரே
என் அன்பார்ந்த மகன். இவருக்குச் செவிசாயுங்கள்" என்று
தந்தையின் குரல் மேகத்தினின்று ஒலித்து, மகனின் துன்பத்தில்
ஆறுதலைத் தெளித்தது. இந்நிகழ்வு, நாமும் நம்
மனமாற்றத்துக்கும், சமூகமாற்றத்துக்கும் நம்மை தயாரிக்க
வேண்டும் என்ற சிந்தனையை, இதயத்தில் தூவி விடுகிறது.
அகமாற்றம் நிகழாமல் புறமாற்றம் நிகழாது. இது இயற்கையின் விதி.
நம்மனதில் அகமாற்றம் நிகழ, நாம் இயேசுவோடு இணைந்திருக்க
வேண்டும். மனதில் உள்ள இறைவனின் இனிய நினைவுகளால்
வெறுப்புணர்வை அகற்றி, நாம் மாற்றம் பெற்று, பிறரையும் அன்பு
உணர்வால் மனமாற்றம் பெறச் செய்வோம்.
அன்பை நம் இதயத்தில் விதைக்கும் திருப்பலி இது. "இறைவா என்னில்
விதைக்கும் அன்புவிதை விருட்சமாகி, பல நூறு உள்ளங்களில் விழுது
விட்டு முளைக்க விரும்புகிறேன். மனமாற்றம் அடைய திருப்பலியில்
என் இதயத்தைத் தருகிறேன்." என செபிப்போம்.
1.மாறும் உலகில் மாறாத தெய்வமே இறைவா!
திருச்சபையில் வளர்ச்சி மாற்றங்களை உருவாக்கும் திருத்தந்தை,
ஆயர்கள், குருக்கள், துறவியர் எத்தனை மாற்றங்கள்
தோன்றினாலும், நீர் மட்டுமே மாறாதவர் என்ற விசுவாசத்தை,
இறைமக்கள் மனதில் அழுத்தமாக பதியச் செய்ய ஆற்றல் தரவேண்டுமென்று,
மாறாத தெய்வமே உம்மை மன்றாடுகிறோம்.
2.மாற்றங்களால் வளர்ச்சியை ஏற்படுத்தும் மாபரனே!
மானிட நலனுக்கு உழைக்கும் நாட்டுத்தலைவர்களின்
செயல்கள், மக்கள் மனதுக்கு ஆறுதல் அளிப்பதாகவும்,
முன்னேற்ற வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைய வேண்டுமென்று,
ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
3.அகமாற்றம் பெற எங்களை அழைக்கும் அன்பு தெய்வமே!
இத்தவக்காலத்தில் எங்கள் ஆன்மீகத் தந்தையின் அருள்சாதன
நிகழ்வுகள் இறைமக்களை அகமாற்றம் பெற உதவும்
தூண்டுகோலாக அமைய ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
4.தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்த இயேசுவே!
உள்ளத்தில் இருந்து நன்மையானவற்றை வெளிப்படுத்தி,
தவக்கால செயல்பாடுகளை அனுசரித்து எங்கள் உள்ளத்தை
உருமாற்ற வரம் தர, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5.உயர்ந்த மலையில் தனிமையில் தோற்றம் மாறிய தெய்வமே!
எங்களை அச்சுறுத்தும் துன்ப, துயர, நோய், வெறுப்பு,
தனிமை கொடுமைகளுக்குள் அகப்பட்டு அழியும் எங்கள்
இதயத்தில், அன்பை விதைத்து உயர்த்திக் கொள்ள இயலும்
என்ற சிந்தனையை தந்தருள, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
6.மாற்றங்களால் முன்னேற்ற உலகை உருவாக்கும் உன்னதரே!
ஏமாற்றம் செய்வோர், தந்திரக்காரர்கள்,
வன்முறையாளர்கள், தீவிரவாதிகள், இயற்கைக்கு இடர்
விளைவிப்போர், நெறி பிறழ்ந்த நிலையினர் போன்றோரால்
இந்த உலகம் அமைதி இழக்கிறது. மானிட முன்னேற்றத்திற்கு
தடையான செயல்பாடுகளை அகற்றி, மாற்றம் தரும் புதிய
சிந்தனைகளால் முன்னேற்ற உலகை அமைக்க வேண்டும் என்று,
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
கடவுள் ஒருமுறை, தான் படைத்த எல்லா
உயிரினங்களுடைய குட்டிகளையும், குழந்தைகளையும் காண
விரும்பினார், ஆகவே தாவரம் முதல், மனிதர் வரையுள்ள எல்லா
உயிரினங்களுடைய கன்று, குட்டி, குழந்தை முதலியவற்றின்
ஓர் அணிவகுப்பை ஏற்பாடு செய்தார்.
மாமரம் இரண்டு மாங்கன்றுகளைக் கொண்டு வந்தது. புளியமரம்
இரண்டு புளியங்கன்றுகளைக் கொண்டு வந்தது. அதுபோலவே பறவை
இனங்கள் ஒவ்வொன்றும் இரண்டிரண்டு வீதம் தம் குஞ்சுகளையும்,
புழு, பூச்சி, விலங்குகள் எல்லாம், அதனதன் குட்டிகள்
இரண்டு வீதமும் கொண்டு வந்து அணிவகுப்பில் நிறுத்தின.
மனிதரும் இரண்டு குழந்தைகளைக் (ஆண்,பெண்) கொண்டு வந்து
அணிவகுப்பில் நிறுத்தினர். அணிவகுப்பைப் பார்வையிடக்
கடவுள் வந்தார். எல்லாமே அவருக்குப் மிகவும்
பிடித்திருந்தன. மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவற்றுள்
இரண்டு அவருக்கு மிக மிகப் பிடித்து போயின. ஆகவே அந்த
இரண்டிற்கும் சிறப்பான ஆற்றல்களைத் தந்தார்.
1.எழுந்து இரு கால்களால் நிற்கும் ஆற்றல்
2. கைகுவித்து (கடவுளை)வணங்கும் ஆற்றல்.
3.சிரிக்கும், பேசும், எழுதும்,பாடும் ஆற்றல்.
4.சிந்திக்கும் ஆற்றல்.
5.வாழ்க்கை சூழலை முன்னேற்றும் ஆற்றல்.
அந்த இரண்டும் எவை தெரியுமா? மனிதக் குழந்தைகள்.
மனிதர்களாகிய நமக்குக் கடவுள் தந்த ஆற்றல்களைப்
பார்த்தீர்களா? இந்த ஆற்றல்கள் எதற்காகத் தெரியுமா?
புதியதொரு மாற்றம் பூமியில் கொண்டு வரவே!
மாற்ற முடியாததை எல்லாம் மாற்றக் கூடிய ஆற்றல், மனிதனிடம்
மலையாய் குவிந்து கிடக்கிறது. மாறி வரும் உலகில் மனிதத்தை
பாதுகாக்கும் ஆற்றல், மனிதனின் ஆழ்மனதில்
தேங்கியிருக்கிறது. தவக்காலம், மேன்மையான மாற்றத்தை,
மாறும் உலகின் அடையாளமாக்கிட தவமிருக்கச் சொல்கிறது.
இறைவன் நமக்களித்த ஆற்றல்களை,
முதலில் நாம் வாழ்வு மேம்படத் துவங்குவதற்க்காகவும்,
நம் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்துவோம்.
இரண்டாவது இந்த ஆற்றல்களைப் பயன்படுத்தி, பிறருக்கு நன்மைகள்
செய்வோம். மூன்றாவது நம் சமூகத்துக்காகப் பயன்படுத்துவோம்.
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
நீயாக மாறுவதே நிரந்தர
மாற்றம்.
உருமாற்றம் . இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட அத்தனை படைப்புகளும்
உருமாற்றம் அடைகின்றன. விதை தளிராகி, செடியாகி, மரமாகிறது. உயிரினம்
கருவாக உருவாகி, உயிராக வடிவம் பெறுகிறது. ஓரறிவு உயிரினம் முதல்
ஆறறிவு மனிதன் வரை அனைவருக்கும் உருமாற்றம் நிகழ்கிறது. ஆனால் அந்த
உருமாற்றங்கள் எல்லாம் நம் உடனிருப்போருக்கு எந்தவிதமான தூண்டுதலையும்
பாதிப்பையும் தருவதில்லை. ஆனால் இயேசுவின் உருமாற்றம் எவ்வாறு நமக்குள்
ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை வெளிபடுத்தவே இன்றைய நற்செய்தி
வாசகம் நமக்கு அழைப்புவிடுக்கிறது.
அகில உலகத்தையும் படைத்த கடவுளின் மகனான இயேசு நம்மைப் போல் ஒரு
சாதாரண மனிதராகவே வாழ்ந்தார். தெய்வ இயல்பு முழுவதும் இருந்தும் மனித
இயல்பிலேயே தனது வாழ்க்கையை வாழ்ந்தார். இன்றைய விவிலிய நிகழ்வை ஒரு
காட்சியாக அதுவும் அரண்மனை , ராஜாங்க காட்சியாக கற்பனை செய்து
பார்ப்போம்.
முற்காலத்தில் இளவரசர்கள் மன்னராக முடி சூடுவதற்கு முன்பு மாறுவேடத்திலோ,
அல்லது சாதாரண மனிதர் வேடத்திலோ மக்களுடன் தங்கி அவர்களது இன்னல்
இடையூறுகளைக் கண்டறிந்து அதனைத் தீர்க்க முற்படுவர். அப்போது தனக்கு
மிகவும் நெருக்கமான நண்பர்களையே உடன் அழைத்துச் செல்வர். சில சமயங்களில்
மக்களில் சிலரையே தங்களது நண்பர்களாக தேர்ந்தெடுத்து உடன் அழைத்துச்
செல்வர். இறுதியில் மக்களின் துயர் களைந்து, தங்களின் வேடம் களைவர்.பின்
மணிமுடி சூடி மன்னராவர். இயேசுவின் உருமாற்றமும் அப்படி ஒரு
காட்சியாகத் தான் தோன்றுகிறது. மாமன்னர்- இறைவன்.
இளவரசர்- அவர் தம் மகன் இயேசு.
ராஜ மந்திரிகள்- மோயீசன், எலியா.
நண்பர்கள் - சீடர்கள் மூவர்.
மன்னராக இயேசு தனது இறைவல்லமையினுள் நுழைகிறார். மோயீசன் எலியா என்னும்
இரு பெரிய வல்லுநர்களோடு தனது பயணத்திட்டத்தைப் பற்றி உரையாடுகிறார்.
அவரது பேச்சிலும் உடையிலும் ராஜ வனப்பு ( இறை) மிளிர்கிறது. மக்களிலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்களான சீடர்களுக்கு இயேசுவின் இறையரசு பற்றியும்
வல்லமை பற்றியும் அதிகம் தெரியாத நேரம். திடிரென்று அவரது ராஜ வனப்பையும்
மந்திரிகளுடனான அவரது உரையாடலையும் கண்டு வாயடைத்துப் போய்
நிற்கின்றனர். இப்படியே இருந்து விடலாமே இவர்! எதற்கு இப்படி
காட்டிலும் மேட்டிலும் கால்நடையாக நடந்து துன்பப்பட வேண்டும் என்று
எண்ணுகின்றனர். நாம் இங்கேயே இருப்பது எத்துணை நலம் என்றும்,
மூன்று கூடாரங்கள் அமைத்து விடலாம் என்பது வரை அவர்கள் சிந்தனை
போகிறது. அப்போதும் கூட அந்த எளியவர்கள் தங்களைப் பற்றி சிறிதும்
எண்ணவில்லை இவரே என் அன்பார்ந்த மகன் இவருக்கு செவிசாயுங்கள் என்ற
அரசனின் குரலுக்கு அடிபணியும் சேவகர்களாய் சீடர்கள். வழக்கம் போல்
இதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்று கூறும் இயேசு. (இந்த முறை ஒரு
கால வரையறை வைக்கிறார். அதாவது மானிடமகன் இறந்து உயிர்த்தெழும் வரை
என்று). உயிர்த்தெழுதலா?அப்படி என்றால் என்ன ? என்று தங்களுக்குள்
விவாதிக்கத் தொடங்கும் அப்பாவி சீடர்கள் என காட்சி முழுவதும் ஒரு
ராஜாங்க நிகழ்வாகத் தோன்றுகிறது.
எங்கு? மலை ; தனிமையான இடத்தில் தன்னை இறைவன் முன்னிறுத்தி
செபிக்கிறார். மலையில் பெரும்பாலும் தூய காற்றும் சுகாதாரமும்
கிடைக்கும். தூய்மை இருக்கும் இடத்தில் மகிழ்வும் தெளிவும் இருக்கும்.
இத்தகைய் மகிழ்வையும் தெளிவையும் தேடி இயேசு செல்கிறார். அதை கண்டடைகிறார்.
தனது சீடர்களுக்கும் அதை வெளிப்படுத்துகிறார். எதற்காக ? தனது நோக்கத்தைக்
கூர்மைப்படுத்தவும், தனது இறை வல்லமையைப் பிறருக்கு வெளிப்படுத்தவும்,
தந்தை தன் மீது வைத்திருக்கும் அன்பை பிறர் அறியச் செய்யவும் உருமாறுகிறார்.
யாருடன்? மோசே , எலியா. மோசே இஸ்ரயேல் மக்களை எகிப்து
நாட்டிலிருந்து கானான் நாட்டிற்கு வழிநடத்தியவர். எலியா ஆண்டவரின்
வாக்கை சிதறிக்கிடந்த இஸ்ரயேல் மக்களுக்கு சென்று அறிவித்தவர். இரண்டு
பேருமே இஸ்ரயேல் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள். கடவுளின் அன்பை
வல்லமையை மக்களுக்கு வெளிப்படுத்தியவர்கள். இவர்களோடு இயேசு உரையாடுகிறார்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இங்கு இவருக்கு ஒரு படி மேலே
போய் உடையிலேயே தெரிகிறது.ஆடை பளீரென்று வெண்ணிறமாக மாறும் அளவுக்கு
உள்ளார்ந்த மகிழ்ச்சியடைகின்றார் இயேசு. இன்றைய இயேசுவின் உருமாற்றம்
நமக்கு தரும் செய்தி இதுதான். மகிழ்வும் தெளிவையும் உனக்குள் தேடு.
இறையடியார்களின் துணை நாடு, கடவுளின் அன்பு மகனா/ளாக மாறு. நீ
நீயாக மாறு அதுவே நிரந்தரமாற்றம் என்பதை நமக்கு உணர்த்தவே இயேசு உருமாறுகிறார்.
மனிதரான இயேசு இறை மனிதராக மாறுகிறார். நாமும் மாறுவோம். உடலளவில்
அல்ல உள்ளத்தளவில். காகிதம் கசக்கி எறியப்படும் போது குப்பையாகிறது
காசாக மாறும்போது, தான் அதன் மதிப்பு உயர்கிறது. மூங்கில் உடைபடும்போது
மரத்துண்டாகிறது, குழலாக ஊதப்படும்பொழுது அதன் இன்னிசை இனிமை தருகிறது.
எதுவும் அப்படியே இருந்தால் எந்த பயனுமில்லை. உருமாறிய இயேசுவுக்கு
தந்தையின் அன்பும் ஆசீரும்கிடைத்தது. நாமும் நம் உருவை மாற்ற முயல்வோம்.
எதிர்காலப் பயணத்திட்டத்தை இறை உதவியுடன் திட்டமிடுவோம். இறைவாக்கினர்களின்
பாதையில் இறையாசீர் பெறுவோம் . உருமாறுவோம் உருமாற்றுவோம் . எல்லாம்
வல்ல இறைவனின் ஆசிர் நம்மோடும் நம் குடும்பத்தோடும் என்றும் இருப்பதாக
ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
சகோ. செல்வராணி Osm
தவக்காலம் 2ஆம் ஞாயிறு
மாற்றங்கள்... நம் வாழ்வின் ஏற்றங்கள்....
மாற்றங்கள் என்ற ஒன்றே இந்த உலகில்
இறைவன் தோற்றுவித்த மாறாத நியதி. வாழ்க்கையில் இதை நாம்
புரிந்து வாழ பழகி விட்டால் யாருடைய மாறுதலும் நம்மை பலமிழக்கச்
செய்யாது. நமது அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நிகழும்
பல மாற்றங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இரவு பகலாவதும், பகல் இரவாவதும், நமது காலை உணவு சாப்பிட்டு
முடிப்பதற்குள் குளிர்ந்து விடுவதும், காலையில் புத்தம்
புதிதாக இருக்கும் பூ மாலையில் வாடிப்போவதும் நாம் கண்கூடாகக்
காணும் மாற்றங்களே. மெதுவாக மாறுவது , வேகமாக மாறுவது, தலைகீழாக
மாறுவது, திரும்பவும் மாற்ற முடியாத அளவுக்கு மாறுவது,
விரும்பக் கூடிய மாற்றம், விருப்பம் இல்லாத மாற்றம் என இந்த
உலகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன். இப்படி
மாற்றம் பற்றிய பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
தவக்காலத்தின்
2 ஆம் வாரத்தில் இருக்கின்ற நமக்கு, இயேசுவின் உருமாற்றம்
ஒரு வித்தியாசமான நிகழ்வாக, மாற்றமாக சிந்திக்கத்தூண்டுகிறது.
பேதுரு, யாக்கோபு, யோவான் என மூவரை மட்டும் தாபோர் மலைக்கு
அழைத்துச் சென்ற இயேசு, அங்கே சில மாற்றங்கள் நிகழ்வதை
காண்கிறார். அவரது முகதோற்றம் மாறியது, அவரது ஆடை மிகவும்
வெண்மையாக மாறியது, மோசேயும், எலியாவும் மீண்டும் மண்ணகத்திற்கு
வந்த மாற்றம், இத்தனை மாற்றங்களைக் கணட இயேசும் மகிழ்ந்து
போனார். அதே நேரத்தில் பேதுருவின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டது.
எப்படி? சந்தோஷமாக, நிம்மதியாக மூன்று கூடாரங்கள் அமைத்து
இங்கே தங்கிவிடுவோம். கீழே போக வேண்டாம்...... அப்படிப்
போனால் மிகப் பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்று
பேதுருவின் மனமும் மாறியது.
சென்ற இடமெல்லாம் நன்மையேச்
செய்த இயேசு, பல்வேறுபட்ட நோயாளர்களின் பிணிகளை குணமாக்கியவர்,
பல்வேறு புதுமைகள் புரிந்தவர், பசியோடு வந்தவர்களுக்கு உணவிட்டவர்,
பலரின் மனக்காயங்களுக்கு மருந்திட்டவர், இப்படி எல்லாமே மற்றவர்களுக்காக
இயேசு ஆற்றிய தொண்டு. ஆனால் தாபோர் மலையில் நிகழ்ந்த இந்த
உருமாற்றம் மட்டுமே இயேசுவுக்காக நிகழ்ந்தது. அப்படி மிக
சந்தோஷமான உருமாற்ற நிகழ்வின் போது மோசேயும், எலியாவும்,
எருசலேமில் இயேசு ஏற்க வேண்டிய பாடுகள் பற்றி பேசிக் கொண்டதாக
லூக்கா நற்செய்தியாளர் எடுத்துரைக்கிறார். பேசுவதற்கு எவ்வளவோ
காரியங்கள் இருக்க, ஒரு கஷ்டமான நிகழ்வைப் பற்றியா பேசவேண்டும்
என நினைக்கத் தோன்றுகிறது. இதன் வழியாக இயேசு நமக்கு நல்ல
பாடத்தைக் கற்றுத்தருகிறார்.
தந்தையின் திருவுளத்தை
நிறைவேற்றுவதே இயேசுவின் நோக்கம். இதற்காகவே மண்ணில் மனிதனாக
அவதரித்தார். எவ்வளவுமகிழ்வான தருணங்களிலும் தான் வந்த
நோக்கத்தை மறந்து விடக்கூடாது என்ற சிந்தனையை நமக்கு
கொடுக்கவே இந்த உருமாற்ற நிகழ்வு.
நம்முடைய வாழ்க்கையில் நாம் எவ்வளவு புகழின்
உச்சிக்குச் சென்றாலும் , நாம் ஏறிவந்த முதல் படியை மறக்க
கூடாது. பணம், புகழ், சொத்து, கார், பங்களா, என பவவேறு ஆசைகளால்
தங்களது நிம்மதியை இழக்கும் மனிதரகள் ஏராளம் பேர். தங்கள்
நோக்கத்தை தொலைத்துவிட்டு எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி.....
என்று ஏங்கித் தவிக்கும் நமக்கு இயேசு கூறுவது இதுவே: நீ
பிறந்ததன் நோக்கம் அறிந்து செயல்படு என்கிறார்.
இயேசுவுக்கு தெரிந்திருந்தது உருமாற்றத்திற்குப்
பிறகு பாடுகளின் நேரம், பாடுகளுக்கு பின்பு உயிர்ப்பு
என்று, அதனால் தான் துன்பங்களை துணிந்து ஏற்றார். வரலாற்றில்
தாமஸ் ஆல்வா எடிசன் தன் கண்டுபிடிப்பில் பலமுறை தோல்வி அடைந்து
ஏமாற்றங்களை சந்தித்த பிறகு முடிவில் பல்பை கண்டுபிடித்து
வெற்றி கண்டார். அதனால் துன்பத்திற்கு பிறகு இன்பம் உண்டு
என்பதை ஏற்று, நமது வாழ்க்கைப் பயணத்தை அர்த்தமுள்ளதாக
மாற்றி வாழ் அழைக்கப்படுகிறோம். நீங்கள் மோசமான
சூழ்நிலையில் இருந்தால் கவலைப்பட வேண்டாம் அது மாறும்.
நீங்கள் ஒரு நல்ல சூழ்நிலையில் இருந்தால் கவலைப்பட
வேண்டாம் அதுவும் மாறும் ஏனெனில் மாற்றமே வாழ்க்கையின் நியதி
காலத்தின் கட்டாயம்.
ஆகவே மாற்றங்களை ஏற்போம் அதுவே நம்
வாழ்க்கையின் ஏற்றங்கள் என்பதை உணருவோம். துன்பங்களில் இறைவனின்
துணையை நாடுவோம். அன்பர் இயேசுவின் அருளும், ஆசீரும் என்றும்
நம்மோடும், நம்மை சுற்றி வாழ்பவர்களோடும் இருப்பதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி.
சுற்றுமுற்றும் பார்த்தார்கள்!
இன்றைய முதல் வாசகத்தில் மோரியா நிலப் பகுதியின் மலையில்
நடக்கும் ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடும் நிகழ்வும், நற்செய்தி
வாசகத்தில் எருசலேமிற்கு அருகில் உள்ள ஒரு மலையில்
நெருங்கிய அன்புச் சீடர்கள் முன்னிலையில் நடக்கும் இயேசுவின்
உருமாற்ற நிகழ்வும் நமக்கு வாசகப் பகுதிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய நம் சிந்தனைக்கு இரண்டு பேரை எடுத்துக்கொள்வோம்:
(அ) ஆபிரகாம், (ஆ) சீடர்கள்: பேதுரு, யாக்கோபு, யோவான். முதலாம்
நபர் தனிநபராகவும், இரண்டாம் நபர் ஒரு குழுவாகவும் இருக்கின்றார்.
இவர்களுக்கு குறிப்பிட்ட இந்த நாளில் நடந்தேறிய நிகழ்வின்போதும்,
நிகழ்விற்குப் பின்னும் உள்ள கடவுள் அனுபவம் நம் சிந்தனையின்
மையப்பொருளாக இருக்கட்டும்.
'கடவுள் அனுபவம்'
'அந்த அனுபவம்தான் நான்' என்று கடவுள் சொல்வதாக வாழ்வின்
அனைத்து அனுபவங்களிலும் கடவுள் இருப்பதாக பதிவு
செய்கின்றார் கவிப்பேரரசு கண்ணதாசன்.
இத்தவக்காலத்தில் நாம் தொடங்கியுள்ள தவமுயற்சிகளின் இறுதி
இலக்காக இருப்பது கடவுள் அனுபவமே. நாம் அனைவருமே ஏதோ ஒரு
வகையில் கடவுள் அனுபவம் பெற ஏங்கிக்கொண்டிருக்கின்றோம்.
ஆலயத்திற்குச் செல்வதும், செபிப்பதும், நோன்பு இருப்பதும்,
பிறரன்புச் செயல்கள் செய்வதும், நம் வேலையை இன்னும் அதிக
பொறுப்புடன் செய்வதும் என எண்ணற்ற நிலைகளில் கடவுள் அனுபவம்
பெற்றுக்கொண்டிருக்கின்றோம். இவைகள்வழியாக கடவுள் அனுபவம்
கிடைக்குமா? அல்லது இவைகள் வழியாக மட்டுமே கடவுள் அனுபவம்
கிடைக்குமா? என்றும் ஏங்கிக்கொண்டிருக்கின்றோம்.
கடவுள் அனுபவம் என்பது கடவுளின் வெளிப்பாடு வழியாகவும்
கிடைக்கலாம் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன.
இந்த வெளிப்பாடு எங்கே நிகழ்கின்றன:
1. 'ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார்'
'கடவுள் ஆபிரகாமை சோதித்தார்' என்று இன்றைய முதல் வாசகம்
தொடங்குகின்றது. கடவுள் மனதரைச் சோதிக்கும் நிகழ்வுகள் எல்லாமே
கடவுளின் வெளிப்பாட்டு நிகழ்வுகளாகவே அமைகின்றன. அப்படித்தான்
இங்கும் நடக்கின்றது. 'உன் மகனை, நீ அன்புகூறும் ஒரே மகன்
ஈசாக்கை அழைத்துக்கொண்டு நான் உனக்குக் காட்டும் மலைகளில்
ஒன்றின்மேல் எரிபலியாக அவனை நீ பலியிட வேண்டும்!' என்று
கடவுள் ஆபிரகாமிடம் சொல்கின்றார்.
'நீ அன்பு கூறும் ஒரே மகன்' என்ற சொல்லாடலில்தான் கடவுளின்
சோதனை அடங்கியுள்ளது: 'உனக்கு எது பெரிது? நீ என்மேல்
வைக்கும் அன்பா? அல்லது ஈசாக்கின்மேல் வைக்கும் அன்பா?'
தான் கடவுள்மேல் வைத்துள்ள அன்பே என்று கடவுளைக் கட்டிக்கொள்கின்றார்
ஆபிரகாம். அவர் எடுக்கும் அந்த முடிவே அவரின் தொடர் செயலாக
மாறுகின்றது. குழந்தைகளை எரிபலியாகக் கொடுக்கும் சமய வழக்கம்
கீழைத்தேய மற்றும் மெசபதோமிய நாடுகளில் நிலவியுள்ளது என்பதற்கு
தொல்லியல் சான்றுகள் நிறைய உள்ளன. ஆக, இந்த நிகழ்வு நடந்திருக்க
வாய்ப்பு இருக்கிறது. ஆபிரகாம் மலைக்கு தன் மகனை அழைத்துச்
செல்கின்றார். தன் மகனையே விறகுகளைச் சுமக்க வைக்கின்றார்.
கட்டைகளின் மேல் கிடத்துகின்றார். வெட்டுவதற்கு கையை
நீட்டி கத்தியை எடுக்கின்றார். 'எரிபலியாகத்தானே கேட்டார்
கடவுள். அப்புறம் ஏன் ஆபிரகாம் வாளை எடுத்து வெட்டினார்?'
என்ற கேள்வி உங்களுக்கும், எனக்கும் எழலாம். வெட்டியபின்தான்
பலியை எரிப்பது என்பது எரிபலியின் ஒரு கூறு (காண். 1 அரசர்கள்
18:33, 38). கையை உயர்த்தும்போதுதான் அந்த அதிசயம் நடக்கிறது:
'பையன்மேல் கையை வைக்காதே. அவனுக்கு எதுவும் செய்யாதே. உன்
ஒரே மகனையும் நீ பலியிட தயங்கவில்லை என்பதிலிருந்து கடவுளுக்கு
நீ அஞ்சுபவன் என இப்போது நான் அறிந்துகொண்டேன்' என்று கடவுள்
பலியைத் தடுக்கின்றார். அதிசயம் இதுவல்ல. இதற்குப் பின் வருவதுதான்:
'ஆபிரகாம் கண்களை உயர்த்திப் பார்த்தார். முட்செடியில்
கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக்
காண்கின்றார். தன் மகனுக்குப் பதிலாக அதை பலியிடுகின்றார்.'
கொம்பு மாட்டிக்கொண்டு கிடந்த இந்த ஆடு - இதை ஆபிரகாம் கண்டுகொள்வதுதான்
கடவுள் அனுபவம். 'கண்களை உயர்த்திப்பார்க்கும் ஆபிரகாம்'
அதைக் கண்டுகொள்கின்றார். அப்படி என்றால் இவ்வளவு நேரம்
இவர் அதைப் பார்க்கவில்லையா? இல்லை.
கொம்பு மாட்டிக்கொண்டு கிடக்கும் ஆடு கத்திக்கொண்டே இருக்கும்.
மலையின்மேல் ஆபிரகாம் மற்றும் ஈசாக்கைத் தவிர வேறு
யாருமில்லை. அங்கு நிலவிய மௌனத்தில் கண்டிப்பாக ஆபிரகாமின்
காதில் ஆட்டுக்குட்டியின் கதறல் குரல் விழுந்திருக்கும்.
ஆனால், அந்தக் குரல் அவருடைய சோகத்தை ஊடுருவ முடியவில்லை.
நாமும் ரொம்ப சோகமாக அமர்ந்திருக்கும்போது அருகில் கிடக்கும்
செல்ஃபோன் அழைப்பு சத்தம்கூட நம் காதுகளில் விழுவதில்லை.
இல்லையா?
ஆபிரகாமின் சோகம் கடவுளின் வார்த்தையைக் கேட்டவுடன் மறைகிறது.
நம் வாழ்வில் இயல்பாக எழும் ஓர் உணர்வு சோகம். இந்த சோகம்
நாம் எதையாவது இழந்தால் அல்லது இழந்துவிடுவோமோ என்ற பயந்தால்
வந்து நம்மைத் தொற்றிக்கொள்கிறது. தன் மகன் தன்னைவிட்டுப்
பிரியப்போகிற சோகத்தில் குனிந்துகொண்டே நடந்த ஆபிரகாமின்
கண்களுக்கு ஆடு தெரியவில்லை. சோகம் மறைந்தவுடன் மலையில் இருக்கும்
அனைத்தும் தெரிகிறது. ஆக, ஆபிரகாம் மலையின் இந்தப் பக்கத்தில்
தன் மகனை ஏற்றிக்கொண்டு வரும்போது, கடவுள் மலைக்கு அந்தப்
பக்கத்தில் ஓர் ஆட்டை ஏற்றிக்கொண்டுவருகின்றார். இதுதான்
வாழ்வின் ஆன்மீகம். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் பாருங்களேன்.
நாம் பாதியைத்தான் செய்கிறோம். மற்ற பாதியை கடவுள்
செய்கிறார்.
நான் அரிசி வாங்க கடைக்குச் செல்கிறேன். கடவுள் யார் வழியாகவோ
அந்த அரிசியை விளையச் செய்து அங்கே கொண்டுவந்திருக்கின்றார்.
நான் பேருந்தில் ஏறச் செல்கிறேன். கடவுள் யார் வழியாகவோ அந்தப்
பேருந்தை இயக்கி அந்த இடத்திற்குக் கொண்டுவருகின்றார்.
நான் தேவை என்று தேடுகிறேன். 'இதுவா என்று பார்!' என்று
கடவுள் யார் வழியாகவோ என் தேவையை நிறைவு செய்கின்றார்.
ஆனால், நான் அரிசி வாங்க வேண்டும், பேருந்தில் ஏற
வேண்டும், தேவை நிறைய இருக்கிறது என்று மலையின் இந்தப் பக்கத்தைப்
பற்றியே நினைத்துக்கொண்டிருக்கின்றேன். ஆனால், மலைக்கு அந்தப்
பக்கம் நடக்கும் நிகழ்வுகளைக் கண்களை உயர்த்திப்பார்க்க
மறந்துவிடுகின்றேன்.
ஆக, கடவுள் அனுபவம் என்பது கண்களை உயர்த்திப் பார்த்து
கொம்பு மாட்டியிருக்கும் ஆட்டை அடையாளம் கண்டுகொள்வது.
கடவுள் அனுபவம் பெற்ற ஆபிரகாம் உடனடியாக அந்த ஆட்டைப் பலியிடுகின்றார்.
இதுதான் கடவுள் அனுபவத்தின் இரண்டாம் நிலை.
'மகனும் கிடைத்தான். வந்ததற்கு ஒரு ஆடும் கிடைத்தது' என்று
ஆபிரகாம் ஆட்டையும், மகனையும் கூட்டிக்கொண்டு கீழே இறங்கவில்லை.
வாழ்வின் அடுத்த முடிவை எடுக்கின்றார். 'ஆடா?' 'மகனா?' என்று
கேட்டு, மேலானதைப் பெற கீழானதை இழக்க வேண்டும் என்று தான்
கண்ட ஆட்டைப் பலியிடத் துணிகின்றார் ஆபிரகாம். இவ்வாறாக,
முதல் வாசகத்தில் கடவுள் அனுபவம் என்பது 'கண்களை உயர்த்திப்
பார்ப்பதிலும்,' 'தான் கண்ட முக்கியமில்லாத ஒன்றை, தான் கருதும்
முக்கியமான ஒன்றிற்காக தியாகம் செய்வதும்' ஆகும்.
2. 'அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள்'
உருமாற்ற நிகழ்வில் வரும் சீடர்கள் என்னுள் எப்போதும் ஒரு
பாவ அல்லது பரிதாப உணர்வையே தூண்டுகின்றனர். திடீர்னு உங்களையும்
எங்களையும் ஒருத்தரு மலைக்குக் கூட்டிப்போய் திடீரென அவர்
ஒரு பெரிய அமெரிக்க அதிபர் போல மாறி, அவருக்கு அருகில் பழைய
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர்கள் நின்றிருந்தால் எப்படி
இருக்கும்?
'யார்ரா இவரு?' 'இவரா அமெரிக்க அதிபர்?' 'அமெரிக்க அதிபரை
நாம ஏன் பார்க்கணும்?' இப்படி நிறைய கேள்விகள் நம்முள் எழும்.
இயேசுவின் உருமாற்ற நிகழ்வை ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் பதிவு
செய்ய, இதை நேரில் கண்ட யோவான் பதிவு செய்யாமல் விடுவது
நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.
இயேசுவின் உருமாற்றம் மூன்று அடையாளங்களில் நடந்தேறுகிறது:
(அ) யாரும் வெளுக்க முடியாத வெள்ளை வெளேரென ஒளி வீசும் ஆடைகள்,
(ஆ) எலியா மற்றும் மோசேயின் உரையாடல், (இ) மேகத்தினின்று
குரல். இந்த மூன்றும் இயேசுவின் உருமாற்றத்தை அல்லது
வெளிப்பாட்டை அடையாளப்படுத்துகின்றன. இந்த அடையாளங்களை சீடர்கள்தாம்
விரைவில் புரிந்துகொள்ள வேண்டும். 'ஒளி வீசும் ஆடை' சீயோன்
மலையை நிரப்பும் யாவே இறைவனின் பிரசன்னம் என்றும், எலியா
மற்றும் மோசே அனைத்து இறைவாக்கு மற்றும் சட்டங்களின் திலகம்
என்றும், அவற்றை நிறைவு செய்ய வந்திருப்பவர் இயேசு என்றும்,
தந்தையின் குரல் இயேசுவின் அப்பா அனுபவத்தின் முன்னோடி என்றும்
அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அவர்களின் புரிதல்கள்
வேறு மாதிரியாக இருக்கின்றன: (அ) சீமோன் பேதுரு
முந்திக்கொண்டு, 'நாம் இங்கேயே இருப்பது நல்லது' என்கிறார்.
(ஆ) 'இறந்து உயிர்த்தெழுதல்' என்றால் என்ன? என்று
பேசிக்கொள்கின்றனர்.
என்னைப் பொறுத்தவரையில் சீடர்களின் கடவுள் அனுபவம் வெளிச்சத்திலும்,
புதிய நபர்களின் வருகையிலும், தந்தையின் குரலிலும் இல்லை.
பின் எதில் இருக்கிறது?
'அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தபோது தங்கள் அருகில் இயேசு
ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை'
இதுதான் அவர்களுக்குக் கிடைத்த கடவுளின் வெளிப்பாடு.
வெளிச்சமும், புது நபர்களும், தந்தையும் மறைத்து இயேசு தனியாக
நிற்பவராக வெளிப்படுத்தப்படுகின்றார். ஆபிரகாம் எப்படி
கொம்பு மாட்டிக்கொண்டிருந்த ஆட்டைக் கண்டாரோ அப்படியே அவர்கள்
இயேசுவையும் கண்டுகொள்கின்றனர். அவர்கள் கண்முன் இருந்தவை
மறைந்துபோகின்றன. மற்றவைகள் மறைந்துபோன பின் தோன்றும்
'ப்ளைன்' இயேசுதான் அவர்களின் அனுபவம்.
இங்கே சீடர்களின் எண்ணம், ஏக்கம் அனைத்தும் ஒன்றாக இருக்கிறது:
'இயேசுவோடு நாம் தங்க வேண்டும். அல்லது இயேசு நம்மோடு தங்க
வேண்டும்.' 'இங்கே கூடாரம் அமைப்போம்' என்று பேதுரு
சொல்லும்போது தான் பெற்ற கடவுள் அனுபவத்தை அவர் அப்படியே
உறைபனியாக்க நினைக்கின்றார். ஆனால், இயேசு அவரின் அறிவுரையை
ஏற்றுக்கொள்ளவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை.
'இங்கேயே இருப்பது நல்லது. மூன்று கூடாரங்கள் அமைப்போம்'
என்று சொன்னவர்தான் மூன்றுமுறை இயேசுவை மறுதலிக்கின்றார்.
சில நேரங்களில் கடவுள் அனுபவத்தை நாம் அதிகமான வெளிச்சத்திலும்,
அந்த வெளிச்சம் நடத்தும் அற்புதங்களிலும் காண
நினைக்கின்றோம். ஆனால் இது எல்லாவற்றையும் விட தனிமையில்தான்
இறைவன் தெரிகின்றார். முதல் வாசகத்தில் சோகத்தில் தன் கடவுள்
அனுபவத்தை இழந்த ஆபிரகாம் போல, நற்செய்தி வாசகத்தில் தனிமையில்
இறைவனனின் அனுபவம் பெறுகின்றனர்.
இந்த இரண்டும் நமக்கு உந்துசக்தியும், ஊக்கமும் தருகின்றன.
இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் அடிகளாரும், 'கடவுள்
நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக யார் வாதாட
முடியும்?' என்று கேட்கின்றார்.
இவ்வாறாக, கடவுள் அனுபவம் நம்மை அவரோடு மட்டுமல்லாமல் ஒருவர்
மற்றவரோடும் ஒன்றிணைக்கச் செய்கிறது.
இன்று நாம் நம் கடவுளை எப்படி தேடுவோம்?
அ. ஆபிரகாம் போல கண்கள் உயர்த்தி
ஆ. சீடர்கள்போல சுற்றுமுற்றும்
'மேலே உயர்த்துவதும்,' 'சுற்றுமுற்றும் பார்ப்பதும்'
சிலுவையின் இரண்டு மரத்தண்டுகள் போல இருக்கின்றன. மேல்
நோக்கி இருக்கும் மரத்துண்டு நாம் அவரை நோக்கி உயர்த்துவதையும்
(இறையன்பு), சுற்றுமற்றும் பார்ப்பது ஒருவர் மற்றவரை
நோக்கி கரம் நீட்டுவதையும் (பிறரன்பு) குறைக்கிறது.
மேலே பார்க்க நமக்குத் தடையாக இருப்பது சோகம்.
சுற்றுமுற்றும் பார்க்க நமக்குத் தடையாக இருப்பது அச்சம்
மற்றும் அவசரத்தனம்.
இவ்விரண்டும் களைதலே தவக்காலத்தின் இரண்டாம் வாரத்தின் நம்
செயல்களாக இருக்கட்டும்!
இயேசுவின் உருமாற்றம் நிகழ்ந்த அதே நிகழ்வில் சீடர்கள் உளமாற்றம்
அடைகின்றனர். ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடும் நிகழ்வில் அவர்
தன்னையே கடவுளுக்கு உகந்த பலிப்பொருளாக மாற்றுகின்றார். ஆக,
கடவுள் அனுபவம் நாம் பெறும் உளமாற்றத்திலும், நாம் பலிப்பொருளாக
மாறுவதிலும் இன்னும் சிறப்படைகிறது.
இயேசுவின் ஆடை கறுப்பாக மாறினாலும், சிவப்பாக மாறினாலும்,
அல்லது மோசேக்குப் பதிலாக யோசுவாவும், எலியாவுக்குப் பதிலாக
எலிசாவும் வந்தாலும், கடவுளின் குரல் ஆண்பிள்ளைக் குரலாகவோ,
பெண்பிள்ளைக் குரலாகவோ மாறினாலும் இயேசுவின் உருமாற்றம் நிகழும்.
இயேசுவின் உருமாற்றம் இயேசுவுக்கு அல்ல. மாறாக, சீடர்களுக்கு.
ஆபிரகாமின் பலி கடவுளுக்கு அல்ல. மாறாக, ஆபிரகாமுக்கு.
நம் உருவத்தை மாற்றிக்கொள்வதில் காட்டும் அக்கறையை நம் உள்ளத்தை
நோக்கி சற்றே திருப்புவோம். அங்கே ஓர் ஆடு கொம்பு மாட்டி
நிற்கும். அங்கே ஒரு இயேசு தனியே நின்றுகொண்டிருப்பார்.
I தொடக்க நூல் 22: 1-2, 9-13, 15-18
II உரோமையர் 8: 31-34
III மாற்கு 9: 2-10
"
ஆம் ஆண்டவரே!"
ஒரு பங்கில் இளம் அருள்பணியாளர் ஒருவர் இருந்தார். அவர்
திருவழிபாட்டை வழிநடத்துவதிலிருந்து மக்களை ஒருங்கிணைப்பது
வரை, யாவற்றையும் மிகச் சிறப்பாக செய்து வந்தார். அவர்
செய்துவந்த இப்பணிகளைப் பார்த்துவிட்டுப் பலரும், "
இந்தச்
சிறுவயதில் இவ்வளவு சிறப்பாக எல்லாவற்றையும் செய்து வருகின்றாரே!"
என்று வியந்துபோயினர்.
இதற்கு நடுவில் அந்த அருள்பணியாளரை மிக அருகிலிருந்து கவனித்து
வந்த பெரியவர் ஒருவர் அவரிடம், "
சுவாமி! எல்லாவற்றையும்
நீங்கள் மிகச்சிறப்பாகச் செய்து வருகின்றீர்களே! உங்களுடைய
இந்த வெற்றிக்குக் காரணம் என்ன?"
என்று கேட்டார். அதற்கு
அருள்பணியாளர் அவரிடம், "
ஆம் ஆண்டவரே"
என்று சொல்லிக் கடவுளின்
திருவுளத்திற்குப் பணிந்து நடப்பேன்; அதுதான் எனது
வெற்றிக்குக் காரணம்"
என்றார் (The Next 500 Stories
Frank Mihalic, SVD)
இந்த நிகழ்வில் வரும் அருள்பணியாளர் தன்னுடைய விருப்பத்தை
அல்ல, கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்து, அவரது விருப்பத்தை
நிறைவேற்றி வாழ்ந்தார். அதுதான் அவரது வெற்றிக் காரணமாக இருந்தது.
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட
இறைவார்த்தை, கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்து வாழவேண்டும்,
அவரது திருவுளத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற சிந்தனையை நமக்குத்
தருகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்த ஆபிரகாம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒருமுறை இவ்வாறு
குறிப்பிட்டார்: "
கடவுளுக்குக் கீழ்ப்படிவது என்பது, அவரது
குரலுக்குச் செவிசாய்ப்பது, அவர் எந்த வழியைச்
சுட்டிக்காட்டுகின்றாரோ அந்த வழியில் திறந்த மனத்தோடு நடப்பது."
திருத்தந்தை பிரான்சிசின் இவ்வார்த்தைகளை இன்றைய இறைவார்த்தையோடு
இணைத்துச் சிந்தித்துப் பார்க்கும்பொழுது, அதற்கு முதலில்
அப்படியே பொருந்திப் போகிறவர் ஆபிரகாம். ஆண்டவராகிய கடவுள்
ஆபிரகாம் சாரா தம்பதிக்கு அவர்களது முதிர்ந்த வயதில் ஒரு
குழந்தையைக் கொடுத்தார், அந்தக் குழந்தையைக்கூட அவர் பலியிடுமாறு
சொல்கின்றார். ஆண்டவர் ஆபிரகாமிடமிருந்து சொன்னதற்கு அவர்
மறுப்பேதும் சொல்லாமல், தன் ஒரே மகனைப் பலியிட முன்வருகின்றார்.
அப்பொழுதுதான் கடவுள், "
நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால்
உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு
ஆசி கூறிக்கொள்வர்"
என்கிறார்.
ஆண்டவர் ஆபிரகாமிடம் அவரது ஒரே மகனான ஈசாக்கைப் பலியிடுமாறு
சொன்னது, அவருக்கு மிகுந்த வேதனையையும், தாங்கிக்கொள்ள
முடியாத துயரையும் நிச்சயம் தந்திருக்கும். ஆனாலும், அவர்
ஆண்டவரின் குரலுக்குச் செவிசாய்த்து வாழவேண்டும் என்பதற்காக
அவ்வாறு செய்கின்றார். இவ்வாறு ஆபிரகாம் கீழ்ப்படிதலுக்கும்
நம்பிக்கைக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.
கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்த, அவரது திருவுளம்
நிறைவேற்றிய இயேசு
இன்றைய முதல் வாசகம், ஆபிரகாம் கடவுளின் குரலுக்கு எப்படிச்
செவிகொடுத்து வாழ்ந்தார் என்பதை எடுத்துச் சொல்கின்ற
வேளையில், இன்றைய நற்செய்தி வாசகம் தந்தையின் ஒரே மகனான இயேசு
எப்படி அவரின் குரலுக்குச் செவிகொடுத்து, அவரது திருவுளத்தை
நிறைவேற்றினார் என்பதை எடுத்துச் சொல்கின்றது.
இன்றைய நற்செய்தியில் இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வானது இடம்பெறுகின்றது.
இதில் பழைய ஏற்பாட்டுச் சட்டப் பிரதிநிதியான மோசேயும், இறைவாக்கினரின்
பிரதிநிதியான இறைவாக்கினர் எலியாவும் இடம் பெறுகின்றார்கள்.
இவர்கள் இருவருமே இறைவாக்கினர் ஒருவரைக் குறித்து முன்னறிவித்தார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது (இச 18: 15-19; மலா 4: 5-6)
மேலும் இவர்கள் இருவரும், எருசலேமில் நிறைவேறவிருந்த இயேசுவின்
இறப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதும்
குறிப்பிடத்தக்கது (லூக் 9: 31)
இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வில் மேகத்தினின்று ஒலிக்கும்
குரல் சொல்லும், "
என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச்
செவிசாயுங்கள்"
என்ற வார்த்தைகள் மிகவும் கவனிக்கத்தக்கவை.
ஒருவர் தன் தந்தையின் அன்பார்ந்த மைந்தராக எப்பொழுது ஆக
முடியும் எனில், அவர் இயேசு சொல்வது போல், தன் தந்தையின்
கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்கின்றபொழுது மட்டுமே! (யோவா
14: 15). இயேசு தன் வாழ்நாள் முழுவதும் தந்தையின் கட்டளை
அல்லது அவரது திருவுளத்தை நிறைவேற்றி வாழ்ந்தார் (லூக்
2:49, 22:42; யோவா 4: 34). அதனாலேயே அவர் தந்தையின் அன்பு
மைந்தர் ஆனார்.
முன்பு இயேசு திருமுழுக்குப் பெறும்பொழுது, "
என் அன்பார்ந்த
மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் (மத்
3: 17) என்ற வார்த்தைகள் ஒலித்தன. இப்பொழுது இயேசு தோற்றமாற்றம்
அடைகின்றபொழுது ஒலிக்கின்றன. இயேசு தொடர்ந்து தந்தையின் குரலைக்
கேட்டு, அவரது திருவுளத்தை நிறைவேற்றி வந்தாலேயே இத்தகைய
வார்த்தைகள் தொடர்ந்து ஒலித்தன என்பதை நாம் நினைவுகூரத் தக்கது
நல்லது.
இயேசுவுக்குச் செவிகொடுத்து வாழ அழைப்பு
மேகத்திலிருந்து ஒலித்த குரல், "
என் அன்பார்ந்த மைந்தர்
இவரே"
என்று சொன்னதோடு நின்றுவிடவில்லை; தொடர்ந்து,
"
இவருக்குச் சாவியுங்கள்"
என்கின்றது. இக்குரல் ஒலித்தபின்பு,
பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூவரும் சுற்று முற்றும்
பார்க்கும்பொழுது, அவர்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர
வேறு எவரையும் காணவில்லை. அப்படியெனில், அவர்கள் மூவரும்,
இன்று நாமும் இயேசுவின் குரலுக்குச் செவிசாய்த்து வாழ அழைக்கப்படுகின்றோம்.
திருவிவிலியத்தில் "
செவிசாய்த்தல்"
என்றால் கேட்பது மட்டும்
கிடையாது; கேட்டதன்படி நடப்பதும் ஆகும். "
இன்று நீங்கள்
அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்"
(திபா 95:
7) என்ற இறைவார்த்தை இந்த உண்மையையே நமக்கு உணர்த்துகின்றன.
"
இவருக்குச் செவிசாயுங்கள்"
என்ற தந்தையின் குரல் கேட்டு
சீடர்கள் இயேசுவுக்குச் செவிசாய்த்து, அவரது திருவுளத்திற்கேற்ப
வாழ்ந்தது போன்று, நாம் ஒவ்வொருவரும் இயேசுவுக்குச்
செவிசாய்த்து, அவரது திருவுளத்தை நமது வாழ்வில் கடைப்பிடித்து
வாழவேண்டும். நமது விருப்பத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு,
இறைவனின் திருவுளத்தின்படி நாம் வாழ்கின்றபொழுது நமக்கு இயேசுவுக்கு
வந்ததுபோல் துன்பங்களும் போராட்டங்களும் நிச்சயம் வரலாம்.
அத்தகைய தருணங்களில் நாம் இறுதிவரை மன உறுதியோடு இருக்க
வேண்டும் (மத் 24: 13). அதுவே நாம் செய்யவேண்டிய தலையாய செயல்.
நாம் இறுதிவரை மன உறுதியோடு இருந்து, தந்தையின் திருவுளத்தை
நிறைவேற்றி, அவரது அன்பு மக்களாக இருக்கின்றோமா?
சிந்திப்போம்.
சிந்தனை
"
உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில்
அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்"
(திபா 119: 35) என்பார்
திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் இயேசுவின் கட்டளைகளின்
படி... தந்தைக் கடவுளின் திருவுளத்தின்படி நடப்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்.
கடவுளின், பரமதந்தையின் அன்புக்குரியவர்களாக வாழ
விரும்பினால் நாம் என்ன செய்யவேண்டும்? என்பதற்கு இன்றைய
வாசகங்கள் பதில் தருகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் எப்படி இறைவனின் அன்புக்கு
உரியவரானார் என்பதைப் பற்றி நாம் படிக்கின்றோம். அவர் கடவுளின்
கட்டளைக்குக் கீழ்ப்படிந்ததால், இறைவனுடைய விருப்பத்தின்படி
அவர் நடக்க முன்வந்ததால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவரானார்.
இன்றைய நற்செய்தியிலே இறைத் தந்தை, இயேசுவைக்குறித்து, "என்
அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" (மாற்
9:7) என்கின்றார். இதற்குக் காரணம் இயேசு சாவை ஏற்கும் அளவுக்கு,
அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து
தம்மையே தாழ்த்திக்கொண்டார் (பிலி 2:8). இயேசு, என்னை அனுப்பியவரின்
திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து
முடிப்பது மே என் உணவு (யோவா 4:34) என்கின்றார். யோவா
5:30-இல் "என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின்
விருப்பத்தையே நாடுகின்றேன்"
என்கின்றார் இயேசு.
கடவுளுக்கு மிகவும் பிரியமானது கீழ்ப்படிதலே (1 சாமு
15:22). பரம தந்தை விரும்பிய கீழ்ப்படிதலை அவருக்குக்
கொடுத்த இயேசு, அவரின் அன்புக்குரியவரானார்.
கீழ்ப்படிதலின் தாயாக விளங்குவது எது? நம்பிக்கைதான்
கீழ்ப்படிதலின் தாய். நம்பிக்கை என்றால் என்ன? இன்றைய
இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடிகளார் கேட்பதுபோல,
"கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக
இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம்
அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு
அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ?" (உரோ 8:31-32) என்று
கேட்பதற்குப் பெயர்தான் நம்பிக்கை. பால் குடிக்கும் தன்
மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கியவள் தன் பிள்ளை மீது
இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான்
உன்னை மறக்கமாட்டேன் (எசா 49:15) என்ற இறைவார்த்தைகளை நமது
வாழ்வின் மையமாக்கிக்கொள்வதற்குப் பெயர்தான் நம்பிக்கை.
கடவுள்மீது நம்பிக்கை வைப்பவர்களை எந்தச் சக்தியாலும்
எதிர்க்க முடியாது!
ஓர் அடர்ந்த காட்டின் வழியே ஒரு வழிப்போக்கன்
சென்றுகொண்டிருந்தான். திடீரென அவன் முன்னே வந்த ஒரு பெரிய
பூதம் அந்த மனிதனைப் பார்த்து, "உன்னை நான் ஒரு கேள்வி
கேட்பேன். அதற்குச் சரியான பதிலைச் சொன்னால் உன்னை
விட்டுவிடுகின்றேன்"
என்றது. அதற்கு அந்த மனிதன், "சரி,
கேள்" என்றான். அந்தப் பூதம் அவனைப் பார்த்து, இந்த
உலகத்திலேயே மிகவும் பலம் வாய்ந்த மனிதன் யார்?"
என்றது.
"கடவுள் மீது முழுநம்பிக்கை வைத்திருப்பவனே, இந்த
உலகத்திலேயே பலம் வாய்ந்த மனிதன்"
என்று பதில் வந்தது.
அதைக் கேட்டதும், அந்தப் பூதம், "
இவன் மீது கைவைத்தால்,
என் மீது கடவுள் கைவைத்துவிடுவார்"
எனச் சொல்லி அந்த
இடத்தைவிட்டு மறைந்துவிட்டது.
நம்பிக்கை என்பது கடையில் கிடைக்கும் பொருள் அல்ல; மாறாக,
அது ஒரு தெய்வீக வாழ்வு (1 கொரி 12:9): அது
கேட்பவர்களுக்குக் கொடுக்கப்படும் (லூக் 11:9-13). நமது
மனத்திலே நம்பிக்கை விதை முளைக்குமானால், அது செடியாக
வளருமானால், அச்செடியில் கீழ்ப்படிதல் என்னும் மலர்
மலர்வது உறுதி!
கீழ்ப்படிதல் இருக்கும் இடத்திலே இறை அன்பு
பாரங்களுக்குப் பாதமாக வரும்!
தோல்விகளுக்குத் தோளாக வரும்!
பாமரர்க்குப் பாரியாக வரும்!
இறை அன்பு - அது
நிழலை நிஜமாக்கும்!
சோதனையைச் சாதனையாக்கும்!
துயரத்தை மகிழ்ச்சியாக்கும்!
மேலும் அறிவோம்:
ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை (குறள்: 985).
பொருள்: செயல் திறமை என்று போற்றப்படுவது எல்லாருக்கும்
பணிந்து நடக்கும் பண்பாகும்! அந்தப் பணிவே சால்புடைய
பெருமக்களின் பகைவரையும் நண்பராக மாற்றும் ஆற்றல் வாய்ந்த
படைக் கருவியும் ஆகும்!
சிறுவன் ஒருவன் பள்ளிக்குச் சென்று
கொண்டிருந்போது, பெரியவர் ஒருவர் அவனிடம், 'பள்ளிக்குச்
செல்ல உனக்குப் பிடிக்கிறதா?' என்று கேட்டதற்கு, அச்சிறுவன்,
"பள்ளிக்குச் செல்லவும், பள்ளியிலிருந்து வீட்டுக்குத்
திரும்பவும் பிடித்திருக்கிறது. ஆனால், இந்த இரண்டிற்கும்
இடையே நடப்பதுதான் {வகுப்புகள்) எனக்குப் பிடிக்கவில்லை"
என்றான்.
நம்மில் பலருக்குக் கிறிஸ்துவின் பிறப்பும் உயிர்ப்பும்
பிடித்திருக்கிறது, ஆனால், இந்த இரண்டிற்கும் இடையே நடந்த
அவருடைய பாடுகளும் சிலுவை மரணமும் பிடிக்கவில்லை. கிறிஸ்து
முதன் முறையாகத் தமது பாடுகளை முன்னறிவித்தபோது, அவருடைய
சீடர்களுக்கு அது பிடிக்கவுமில்லை, விளங்கவுமில்லை. எனவேதான்
பேதுரு கிறிஸ்துவைத் தனியாக அழைத்து அவரைக் கடித்து
கொன்டார் (மாற் 8:32). மெசியாவின் சிலுவையும் சிலுவை மரணமும்
சீடர்களுக்கு மாபெரும் இடறவாக இருந்தன.
எனவே, சிலுவையின் இடறலைச் சீடர்களுடைய மனதிலிருந்து அகற்ற,
இயேசு பேதுரு, யாக்கோப்பு, யோவான் ஆகிய மூவருடன் ஒக் உயர்ந்த
மலைக்குச் சென்று அவர்கள் முன்பாகத் தோற்றம் மாறி, தமது
தெய்வீக மாட்சிமையை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். இந்த
மூன்று சீடர்கள் தான் இயேசு கெத்சமனித்தோட்டத்தில் இரத்த
வேர்வை வேர்க்கும்போதும் இயேசுவுடன் இருக்கப் போகின்றவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்ந்த மலையும் ஒளிரும் மேகமும் இறைப்பிரசன்னத்தின்
வெளிப்பாடாகும். இயேசுவுடன் மோசேயும் எலியாவும் தோன்றுகின்றனர்,
பழைய உடன்படிக்கையில் சட்டமும் இறைவாக்குகளும் முக்கியத்துவம்
பெறுகின்றன, சட்டத்தின் பிரதிநிதியாக மோசேவும் இறைவாக்கினார்களின்
பிரதிநிதியாக எலியாவும் தோன்றுகின்றனர். இவ்வாறு சட்டமும்
இறைவாக்கும் இயேசுதான் மெசியா என்று சான்று பகர்கின்றன. அத்துடன்
தந்தையாகிய கடவுளும் இயேசு தம் அன்பார்ந்த மகன் எனச்
சான்று பகர்கிறார். உயர்ந்த மலையில் நிகழ்ந்தது ஓர் இறைத்
தோற்றம் அல்லது திருக்காட்சியாகும் (Theophathy).
மோசேயும் எலியாவும் இயேசுவுடன் அவர் எருசலேமில் படவேண்டிய
அவருடைய பாடுகளைப் பற்றிச் பேசினர் என லூக்கா
குறிப்பிடுகின்றார் (லூக் 9:31). மெசியா பாடுபட்டே
மாட்சிமை அடைய வேண்டும் (லூக் 24:26) என்ற இறையியல் உண்மை
அப்போது வெளிப்படுத்தப்படுகிறது,
தவக்காலத்தில் சிலுவையின் மறைபொருளை நன்குணரவேண்டும். இறைவனுடைய
மீட்புத் திட்டம் இயேசுவின் சிலுவை வழியாகவே நிறைவேறுகின்றது.
இயேசுவைப் பின்பற்ற விரும்புவோர் சிலுவை சுமந்தே அவரைப்
பின்பற்ற வேண்டும். இயேசுவின் சீடர்களுக்குச் சிலுவை
விருப்பப்பாடமில்லை, கட்டாயப்பாடமாகும். ஒருவர் தம்மை இழந்தால்தான்
வாழ்வு பெறமுடியும், தம் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள
விரும்புபவர் அதை இழந்துவிடுவார் (மத் 16:24-25).
இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் தமது ஒரே மகன் ஈசாக்கை
இழக்க முன்வந்தார். எனவேதான் அவர் தம் மகனை மீண்டும்
பெற்றுக்கொண்டார் இயற்கையில் எந்தவொரு பொருளும் தனது பழைய
உருவத்தை இழந்த பின்னர்தான் புதிய உருவைப் பெற இயலும்.
கோதுமை மணி முளைப்பதற்குமுன் அது மண்ணில் விழுந்து மடிய
வேண்டும். சந்தனக் கட்டை மணம் கொடுப்பதற்கு முன் அது அரைக்கப்படவேண்டும்,
கரும்பு வெல்லமாக மாறுவதற்கு முன், அது பிழியப்படவேண்டும்.
மெழுகுதிரி ஒளி தருவதற்கு முன் அது கரைந்து உருகவேண்டும்,
பால் சுவை தருவதற்குமுன் அது காய்ச்சப்பட வேண்டும், தங்கம்
ஆபரணமாவதற்குமுன் அது நெருப்பில் சுடப்பட வேண்டும். பெண்
பிள்ளைப்பேறு அடைவதற்குமுன் அவர் பேறுகால வேதனையுற
வேண்டும். அவ்வாறே நாம் கிறிஸ்துவில் புதுப்படைப்பாக
மாறுவதற்குமுன், நமது ஆனவமும் சுயநலமும் இறத்து
புதைக்கப்பட வேண்டும்.
அரச பக்திமிக்க ஓர் இளைஞன் ஒவ்வொரு நாளும் தனது
உடலிலிருந்து பல துளி இரத்தமெடுத்து, அதைக் கொண்டு
அரசருடைய உருவப்படத்தை வரைந்து, அதை அரசருடைய பிறந்த
நாளன்று பிறந்தநாள் பரிசாக அவருக்குக் கொடுத்தான். நாமும்
அவ்வாறே இரத்தம் சிந்தி, அதாவது தியாகங்கள் செய்து தியாக
இரத்தத்தைக் கொண்டு இயேசுவின் உருவத்தை வரைய வேண்டும்,
அதாவது இயேசுவின் சாவுக்கு ஒத்தவர்களாக உருமாற்றமடைய
வேண்டும். " இப்போது நாம் அனைவரும் , ஆண்டவரின்
மாட்சிமையைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும்
மாட்சிமை பெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம்." ( 2கொரி
3:18).
காக்கா என்றும் கறுப்பாக இருப்பதற்குக் காரணம் என்ன? அது
இன்னும் உஜாலாவுக்கு மாறவில்லையாம்! உஜாலா சொட்டு நீலம்
ஆடைகளை வெண்மையாக்குகிறது, இயேசு உருமாற்றமடைந்தபோது,
அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்தச் சலவைக்காரரும் வெளுக்க
முடியாத அளவுக்கு வெண்மையாக ஓளிவீசின (மாற் 8:4),
நாம் திருமுழுக்குப் பெற்றபோது நமது மேன்மையின்
அடையாளமாகத் திருச்சபை நமக்கு ஒரு வெண்ணிற ஆடையைக்
கொடுத்து அதை மாசு படாமல் விண்ணக வாழ்வுக்குக் கொண்டு,
போகும்படி பணித்தது, மீட்படைந்தோர் விண்ணகத்தில்
வெண்ணிறஆடை அணிந்திருப்பர். (திவெ 7:9), இவர்கள் தங்கள்
ஆடைகளைச் செம்மறியின் இரத்தத்தில் தோய்ந்து வென்மையாக்கிக்
கொண்டனர் (திவெ 7:14), இயேசுவின் இரத்தம் நம்மை எல்லாவிதப்
பாவங்களிலிருந்தும் விடுவித்து நம்மைத் தூய்மையாக்க
வல்லது. இத்திருப்பலியில் நாம் இயேசுவின் திருவுடலை
உட்கொள்ளும் போதெல்லாம் திடமடைகிறோம், அவரது இரத்தத்தைப்
பருகும்போதெல்லாம் கழுவப்படுகிறோம். இதன் விளைவாக நாம்
இயேசுவின் சாயலுக்கு ஒத்தவர்களாய் உருமாறவேண்டும். ஒவ்வொரு
நாளும், நமது வாழ்க்கைச் சூழலில், தன்னலம் மறந்து
பிறருக்காக வாழ்ந்து நம்மையே நாம் இழக்கும்போது நாம்
இயேசுவாக மாறுகிறோம். அந்நிலையில் வாழ்வது நாமல்ல,
கிறிஸ்துவே நம்மில் வாழ்கிறார் (கலா 2:20).
நாம் சாவுக்குப் பயப்படத் தேவையில்லை, ஏனெனில், நாம்
சாகமாட்டோம், வேற்றுருப் பெறுவோம், அழிவிற்குரிய நம் உடல்
அழியாமையையும், சாவுக்குரிய நம் உடல் சாகாமையையும் அணிந்து
கொள்ளும் (1 கொரி 15:51-54), இயேசுவின் இரண்டாம்
வருகையின்போது, படைப்பனைத்தும் புத்துயிர் பெறும்போது,
நாமும் அவரைப்போலவே இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோலவே
அவரைக் காண்போம் (1 யோவா 3:2).
என்றோ எங்கோ படித்த புதுக்கவிதை இது!
''இன்றுகூட எல்லாரும்
அரிச்சந்திரன்களாக இருக்க முடியும்.
இறுதியில் இறைவன் வந்து
அருள் புரிவதாய் இருந்தால்!"
ஆபிரகாமின் விசுவாசம் அப்படி ஒரு நம்பிக்கையையா அடிப்படையாகக்
கொண்டது? இறுதியில் இறைவன் தன் மகனைப் பரிகொடுக்க விடமாட்டார்
என்ற எதிர்பார்ப்பா ஒரேப் மலையை நோக்கி அரை நடக்க வைத்தது?
இருட்டிலே நடந்தார் - எது நேர்ந்தாலும் சரி, இறை விருப்பப்படி
எல்லாம் நடக்கட்டும் என்ற மனத் தெளிவோடு! நீதிமானை வாழ பாவக்கும்
விசுவாச உறுதியோடு!
அவர் கண்முன்னே நம்பிக்கை ஒளி!
விசுவாசத்தால் மலைகளை அசைக்கலாம், பெயர்க்கலாம், அகற்றலாம்,
மலைபோல துன்பங்களையும் சோதனைகளையும் கடுகளவு நம்பிக்கை
காணாமல் செய்து விடும்.
ஆபிரகாமைப் பொருத்தவரை - கண்ணால் காண முடியாததை யெல்லாம்
காண வைக்கும் கண் விசுவாசம், காதால் கேட்க முடியாததை
யெல்லாம் கேட்கச் செய்யும் காது விசுவாசம். கரத்தால்
தொட்டு உணர முடியாததையெல்லாம் தீண்ட வைக்கும் கரம் விசுவாசம்.
இயலாது, நடக்க முடியாது என்று எண்ணுவதையெல்லாம் சாத்தியமாக்கும்
ஆற்றல் விசுவாசம்.
பறவைகளால் பறக்க முடிகிறது. நம்மால் முடிவதில்லை. ஏன்
தெரியுமா? பறவைகளுக்கு நிறைய விசுவாசம் உண்டு. விசுவாசம்
என்பது இறக்கையாகும். To have faith is to have wings.
விசுவாசமுள்ள மனிதனுக்கு விடிவதெல்லாம் புதுப்பிக்கப்பட்ட
நம்பிக்கைகளில்! அவன் விழித்து எழுவதெல்லாம் புத்துணர்வு
கலந்த எதிர்பார்ப்புக்களில்!
வானத்து விண்மீன்கள் போல உன் இனம் பலுகும் பெருகும் என்பது
வாக்குறுதி. ஆனால் இருக்கும் ஒரே மகனையும் எனக்குப் பலிகொடு
என்பது எதார்த்தம். இது எப்படி?
கடவுள் என்ன நரபலி கேட்கும் பயங்கரப் பேர் வழியா? ஆபிரகாம்
வாழ்ந்த காலத்தில் பல சமயங்களிலும் தங்கள் தெய்வங்களுக்கு
நரபலி கொடுக்கும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். அதனால்தான்
இறைவன் ஆபிரகாமின் நம்பிக்கையைச் சோதிக்க அவர் மகனைப் பலியிட
வேண்டும் என்று கேட்ட போது அது அவருக்குப் பெரும் சோதனையாகத்
தோன்றியதே தவிர பெரிய தவறாகத் தோன்றவில்லை.
முடிவில் கதையின் கருவும் நிறைவும் முற்றிலும் வேறுபட்டவை.
அதன் உச்சம் ஈசாக் பலியாகவில்லை என்பது தானே!
நெஞ்சுருக்கும் அந்த நிகழ்வின் நோக்கம் என்ன?
ஆபிரகாம் எவ்வளவு உண்மையும் நம்பிக்கையும் உள்ளவர், எவ்வளவு
பிரமாணிக்கமானவர் என்பதை அறிந்து கொள்ள அல்ல; (முக்காலமும்
உணரும் கடவுளுக்கு அது முன்கூட்டியே தெரியும்) மாறாகக் கடவுள்
எவ்வளவு பிரமாணிக்கம் உள்ளவர், வார்த்தை தவறாதவர் என்பதை
ஆபிரகாமுக்கு உணர்த்தவே இந்தச் சோதனை. ஒவ்வொரு சோதனையிலும்
சோதிக்கப்படுவது மனிதன் மட்டுமல்ல, கடவுளும் தான்!
ஈசாக்கை எரிபலியாக்கும் நிகழ்வு தந்தையான கடவுளின் பேரன்புப்
பிரதிபலிப்பு. இறைமகன் இயேசு சிலுவையில் பலியான மீட்பு வரலாற்று
நிகழ்ச்சிக்கு ஒரு முன்னோட்டம். அதனால்தான் "தம் சொந்த மகனென்றும்
பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள்" (உரோமை
8:32) ஆபிரகாமின் பலியை மறுசிந்தனை செய்தார். மாற்றுப் பலிப்பொருளுக்கு
ஏற்பாடு செய்தார். ஆனால் தன்மகன் இயேசு கல்வாரியில் பலியாக
வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கு மாற்றுப் பலிப்பொருள்
பற்றி சிந்திக்க விரும்பவில்லை. சாவிலும் கூடத் தன் உடன்படிக்கையை
முறிக்காத அன்பு இது. இப்படிப்பட்ட அன்பு எப்படி சாக
முடியும்? அதனால்தான் அது உயிர்த்தெழுந்தது. அன்பே நிரந்தரம்
என்பதற்குச் சாட்சியாக நம் நடுவே அது உயிர் வாழ்கிறது.
மீட்புப் பயணம் சிலுவை வழியே - இறைமகன் இயேசுவுக்கு
மட்டுமல்ல, அவரது சீடர்களுக்கும் கூட.
சிலுவை இயேசுவுக்குச் சுமையாகக் கனத்தது;
சீடர்களுக்கு இடறலாக இருந்தது!
இயேசு தபோர் மலையேற... இரு நோக்கங்கள்:
தன் சிலுவையைச் சுமக்க இறையாற்றல் தேடி... தன் தந்தையைப்
பார்த்துச் செபிப்பதற்காக. விண்ணரசுக்குக் குறுக்கு
வழியில்லை. குறுகிய வழிதான் உண்டு. குறுக்கு வழி
சிலுவையைத் தவிர்ப்பது; குறுகிய வழி சிலுவையைச்
சந்திப்பது! சவாலாக ஏற்பது! துன்பத்தைக் குடித்துச் சமாளி
- இது பாமரன் நிலை! துன்பத்தைச் சிரித்துச் சமாளி!
("
இடுக்கண் வருங்கால் நகுக"
) - இது வள்ளுவர் தத்துவம்
(திருக்குறள் 621) துன்பத்தைச் செபித்துச் சமாளி - இது
கிறிஸ்தவ வாழ்க்கை முறை.
சிலுவையின் இடறலை நீக்கித் தன் சீடர்களை நம்பிக்கை
வாழ்வில் வலுப்படுத்த... அனுபவிக்கப் போகும் எதிர்கால
மகிமையை அவர்களுக்கு உணர்த்தி அவர்களை உறுதிப்படுத்த.
சிலுவை யூதர்களுக்கு இடறல். கிரேக்கர்களுக்கு மடமை.
அழைக்கப்பட்ட நமக்கோ கடவுளின் ஞானமல்லவா! தெய்வ
வல்லமையல்லவா! இறைவனின் பேரன்பு அல்லவா! (1 கொரி.1:2329).
சிலுவையின்றி மகிமை ஏது? தியாகமின்றிச் செழுமை ஏது?
"அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும். அப்போது
தான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்". (ரோமை 8:17).
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி
சிந்தனை 2
தியாகம், உருமாற்றம்
தியாகம், மனம் திரும்புதல், மாற்றம் மற்றும் உருமாற்றம் அல்லது,
தோற்றமாற்றம் ஆகியவை தவக்காலத்தில் பயன்படுத்தப்படும் சில
முக்கிய கருத்துக்கள். தவக்காலத்தின் இரண்டாவது ஞாயிறன்று
வழங்கப்பட்டுள்ள வாசகங்கள், தியாகம் (ஆபிரகாமின் தியாகம்)
மற்றும் உருமாற்றம் (தோற்றமாற்றம்) பற்றிய கருத்துக்களைப்
பற்றி சிந்திக்க நம்மை அழைக்கின்றன.
ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில், நாம் ஒவ்வொருவரும், தனிப்பட்ட
முறையில் மாற்றம் பெறுவதற்கு அழைக்கப்படுகிறோம். ஆனால், அத்துடன்
நம் கடமை முடிந்துவிடுவதில்லை. நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்திலும்,
நாட்டிலும், நல்ல மாற்றங்களை உருவாக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம்.
அத்தகைய மாற்றங்களைக் கொணர, நாம் ஒவ்வொருவரும் பல்வேறு
தியாகங்களை மேற்கொள்ள முன்வரவேண்டும்.
இவ்வாண்டு, உலகின் மக்கள் தொகையில் பாதி பேர் தங்கள் தலைவர்களைத்
தேர்ந்தெடுக்கும் புனிதப் பணியில் ஈடுபடுவர் என்று
புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஏட்டளவிலாவது, மக்களாட்சி நடைபெறுவதாகச்
சொல்லப்படும் நாடுகளான இந்தியா மற்றும் அமெரிக்க ஐக்கிய
நாடுகள் இரண்டும், 2024ம் ஆண்டு தேர்தலில் ஈடுபடவுள்ளன. இவ்விரு
நாட்டு மக்களும் தங்கள் வாக்குரிமையை தகுதியான முறையில்
பயன்படுத்தி, மக்களாட்சியைக் காப்பாற்றும் வகையில் மாற்றங்களை
கொணர்வர் என்று நம்புவோம்.
மாற்றம், தியாகம் ஆகியவற்றைப் பற்றி சிந்திக்க அழைக்கும்
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு, பிப்ரவரி 25ம் தேதியன்று
சிறப்பிக்கப்படுவதை, இறைவன் நமக்கு வழங்கியுள்ள அருள்நிறைந்த
தருணமாக எண்ணிப்பார்க்கலாம். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு
முன்பு, 1986ம் ஆண்டு, பிப்ரவரி 25ம் தேதி, மக்கள் சக்தியால்
உருவான புரட்சியொன்று பிலிப்பீன்ஸ் நாட்டில் மக்களாட்சியை
மீண்டும் கொணர்ந்தது. 20 ஆண்டுகளாக அந்நாட்டில்
ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் நடத்திவந்த சர்வாதிகார ஆட்சியை
விரட்டியடித்து, மக்களாட்சி கொண்டுவரப்பட்டது. ஏறத்தாழ 20
இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும், அவர்களோடு இணைந்து
போராடிய அரசியல் மற்றும் மத அமைப்புக்களும் கொண்டிருந்த
துணிவு, மற்றும் தியாகம் ஆகியவை, இந்த மாற்றத்தைக் கொணர்ந்தது.
தற்போதைய உலகச் சூழலில் மக்களாட்சி என்ற உரிமை பெருமளவில்
சிதைந்துள்ளது. அண்மைய புள்ளிவிவரங்கள் இதை உறுதி செய்கின்றன.
2005க்கும், 2021க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில், 60க்கும்
மேற்பட்ட நாடுகளில் மக்களின் சுதந்திரம் படிப்படியாகக்
குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, உலகில், 120 முதல் 125 நாடுகளில்
மக்களாட்சி முழுமையாக, அல்லது, அரைகுறையாக உள்ளது. இந்தியாவிலும்,
அதைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், மியான்மார், நேபாளம், பங்களாதேஷ்,
இலங்கை ஆகிய அனைத்து நாடுகளிலும், மக்களாட்சி பல்வேறு வழிகளில்
சிதைந்துள்ளது.
இரஷ்ய அரசுத்தலைவன் விளாடிமிர் புடின் கட்டுப்பாடு ஏதுமின்றி
தன் நாட்டில் நடத்திவரும் அடக்குமுறைகளை நாம் அறிவோம். இந்த
அடக்குமுறைகளை எதிர்த்து, உலக நாடுகள் அனைத்தும் கண்டனம்
தெரிவித்தபோதிலும் தன்னை யாரும் எதுவும் செய்யமுடியாது என்ற
ஆணவத்தில் புடின் ஆட்சி நடைபெறுகிறது. அந்நாட்டில்,
புடினுக்கு எதிராக துணிவோடு குரல் கொடுத்துவந்த எதிர்க்கட்சித்
தலைவர், அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) அவர்கள், பிப்ரவரி
16ம் தேதி, கொல்லப்பட்டார். உலகின் வடதுருவத்தில் உள்ள ஒரு
சிறையில் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ள
இவரது உடலை, இரண்டு வாரங்களுக்குப் பின்னரே தரமுடியும் என்று
அரசு அறிவித்துள்ளது. இந்த இரு வாரங்களில், அவரது உடலில்
நடத்தப்பட்ட சித்ரவதைகள் மற்றும், அவரது உடலில் ஏற்றப்பட்ட
நச்சுப் பொருள்கள் அனைத்தின் தடயங்களும் அழிக்கப்படும் என்று
கூறப்படுகிறது. உலகின் பல நாடுகள் எழுப்பிவரும் கண்டனங்களைப்பற்றி
சிறிதும் அக்கறை கொள்ளாமல் விளாடிமிர் புடின் என்ற தனி மனிதன்
நடத்தும் அரக்கத்தனமான ஆட்சி, நமக்கெல்லாம் நல்லதொரு பாடம்.
தனி மனிதர்கள் கட்டுக்கடங்காத சக்தியை கைப்பற்றிக்கொண்டால்
என்ன நடக்கும் என்பதற்கு, இரஷ்யா, சீனா, வடகொரியா ஆகிய
நாடுகளின் தலைவர்கள் நேரடியான எடுத்துக்காட்டுகள். இந்தியா
போன்ற நாடுகள் மறைமுகமான எடுத்துக்காட்டுகள். மக்கள் சரிவர
விழித்தெழாமல் போனால், தேர்தல்களை சந்திக்கவிருக்கும் இந்தியாவிலும்,
அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் இத்தகைய அரக்கர்கள் ஆட்சியைக்
கைப்பற்றக்கூடும். இந்த ஆபத்தை தடுத்து நிறுத்த மக்களாகிய
நமக்கு சக்தி உள்ளது என்பதை பிலிப்பின்ஸ் நாடு நமக்கு உணர்த்தியுள்ளது.
மக்களின் சக்தியால் மாற்றங்கள் உருவாகும், ஆனால், அந்த
மாற்றங்களைக் கொணர, நாம் ஒவ்வொருவரும் தியாகங்களைச் செய்யவேண்டும்.
இந்த ஞாயிறு வழிபாட்டுக்கென தரப்பட்டுள்ள வாசகங்கள் வழியே,
மாற்றம், உருமாற்றம் மற்றும் அதற்குத் தேவையான தியாகம் ஆகியவற்றை
சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். இயேசு தோற்றம் மாறிய நிகழ்வு
வழியாகவும் (மாற்கு 9:2-10), ஆபிரகாம், தன் மகனையேப் பலியிடத்
துணிந்த தியாகத்தின் வழியாகவும் (தொடக்க நூல் 22:1-2, 9a,
10-13, 15-18) நம் வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களைக் கற்றுக்கொள்ள
முயல்வோம்.
தொடக்க நூலிலிருந்து வழங்கப்பட்டுள்ள முதல் வாசகத்தின் அறிமுக
வரிகள், நாம் வாழ்வில் அடிக்கடி கேட்கும் ஓர் ஆழமான
கேள்வியை நினைவுபடுத்துகின்றன:
தொடக்க நூல் 22:1-2 - அக்காலத்தில், கடவுள் ஆபிரகாமைச்
சோதித்தார். அவர் அவரை நோக்கி, "
ஆபிரகாம்!"
என, அவரும்
"
இதோ! அடியேன்"
என்றார். அவர், "
உன் மகனை, நீ அன்பு கூரும்
உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக் கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச்
செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல்
எரிபலியாக அவனை நீ பலியிடவேண்டும்"
என்றார்.
"
கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார்"
என்று இன்றைய முதல் வாசகத்தில்
காண்கிறோம். வாழ்வில் நாம் அவ்வப்போது, அல்லது, அடிக்கடி
கேட்பது: "ஏன்தான் கடவுள் என்னை இவ்வளவு சோதிக்கிறாரோ?" என்ற
வேதனை நிறைந்த கேள்வி. இப்படி ஒரு கேள்வியை மற்றவர் என்னிடம்
எழுப்பும்போது, ஓர் அருள்பணியாளர் என்ற முறையில், பல வேளைகளில்
பதில் சொல்லமுடியாமல் தவித்திருக்கிறேன். நான் சொல்ல முயன்ற
பதில்களில் எனக்கு ஓரளவு தெளிவைத் தந்த பதில் இதுதான்: "கடவுள்
யாரை அதிகம் நேசிக்கிறாரோ, அவர்களுக்கு அதிகம் சோதனைகள் தருகிறார்...
விசுவாசத்தில் யார் அதிகம் வேரூன்றியிருக்கிறார்களோ, அவர்களுக்கு
மிகவும் சக்திவாய்ந்த சவால்களை அனுப்புகிறார். அந்தச் சோதனைகளை,
சவால்களை வெல்வதன் வழியே, மற்றவர்களுக்கு நம்பிக்கைத் தரும்
ஒரு பாடமாக அவர்கள் வாழ்வு அமையவேண்டும் என்பது கடவுளின்
விருப்பமாக இருக்கலாம்" என்ற பதிலே, எனக்கும், பிறருக்கும்,
ஓரளவு தெளிவைத் தந்த பதில்.
வாழ்க்கையோடு போராடும் பலரை நாம் சந்தித்திருக்கிறோம். அந்தப்
போராட்டங்களில் அவர்கள் வெற்றி கண்டனரா, இல்லையா, என்பதைவிட,
அவர்கள் அந்தப் போராட்டங்களை எதிர்கொண்ட பக்குவம், நமக்குப்
பாடமாக அமைகின்றது. விவிலியத்தில் நாம் சந்திக்கும் பல எடுத்துக்காட்டான
மனிதர்களின் வாழ்வில் இது நடைபெற்றுள்ளது. ஆபிரகாமில் ஆரம்பித்து,
மோசே, யோபு, இறைவாக்கினர்கள், மரியா, இயேசு, சீடர்கள் என்று,
பலரும், இறைவன் மீது கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையின்
அடிப்படையில் தங்கள் போராட்டங்களை வென்றனர் என்பதை நாம்
பார்க்கிறோம்.
ஆபிரகாமை இறைவன் சோதித்த நிகழ்வின் வழியே நாம் பயிலக்கூடிய
பாடங்கள் பல உள்ளன. இறைவன் ஆபிரகாமுக்குத் தந்தது, ஒரு
கொடுமையான சோதனை. குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த ஆபிரகாமுக்கு,
ஈசாக்கு பிறந்தபோது, அவரது வயது 100 (காண்க. தொ.நூல்
21:5). ஈசாக்கு வழியாக, ஆபிரகாமின் சந்ததி, வானில் உள்ள
விண்மீன்கள் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகும் என்று
கூறிய அதே இறைவன், இப்போது அந்த நம்பிக்கையை வேரறுக்கும்
வண்ணம், ஈசாக்கைப் பலியிடச் சொல்கிறார்.
"உன் நாட்டிலிருந்து... புறப்பட்டு நான் உனக்குக்
காண்பிக்கும் நாட்டிற்குச் செல்" (தொ. நூல் 12:1) என்பதில்
ஆரம்பித்து, இறைவன் வழங்கிய கட்டளைகள் அனைத்திற்கும் மறுப்பு
ஏதும் சொல்லாமல் பணிந்து பழகிப்போன ஆபிரகாமுக்கு, மகனைப்
பலிதரவேண்டுமென இறைவன் கொடுத்த கட்டளை பேரதிர்ச்சியைத் தந்திருக்கும்.
இந்தக் கொடுமையை நிகழ்த்த இறைவன் ஓர் இடத்தையும்
தேர்ந்தெடுக்கிறார். அது ஒரு மலை.
மலைகள் இறைவனின் இருப்பிடம்; அங்கு இறைவனைச் சந்திக்கலாம்,
இறைவனின் அருள்கொடைகளால் நிறைவடையலாம் என்ற நம்பிக்கையில்
வளர்ந்தவர் ஆபிரகாம். நிறைவடைவதற்குப் பதில், தன்னிடம் உள்ளதை
பறித்துகொள்வதற்கு இறைவன் தன்னை ஒரு மலைக்கு அழைக்கிறார்
என்ற எண்ணம், ஆபிரகாமுக்குப் பெரும் சவாலாக இருந்திருக்கும்.
இருந்தாலும் புறப்படுகிறார். அவர் புறப்பட்டுச் சென்ற அந்தப்
பயணம் அணு, அணுவாக அவரைச் சித்ரவதை செய்த பயணம். இந்தப்
பயணத்தைக் கொஞ்சம் ஆழமாகச் சிந்திப்பது நல்லது.
ஒரு நொடியில் உயிர் துறப்பதற்கும், நாள்கணக்கில், அல்லது,
மாதக்கணக்கில், சித்ரவதை செய்யப்பட்டு உயிர் துறப்பதற்கும்
உள்ள வேறுபாட்டை எண்ணிப் பார்க்கலாம். அத்தகையச் சித்ரவதைக்கு,
ஆபிரகாம் உள்ளாக்கப்பட்டார். இந்தப் பலியை, ஆபிரகாம் தன்
வீட்டுக்கருகில், நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், அந்தப் பலியை
நிறைவேற்ற இறைவன் வேறோர் இடத்தைக் குறிப்பிட்டார். இறைவன்
சொன்ன அந்த மலையை அடைய ஆபிரகாம் மூன்று நாள் பயணத்தை
மேற்கொள்ள வேண்டியிருந்தது. அந்த மூன்று நாட்களும், அந்தத்
தந்தையின் மனம், எவ்வளவு சித்ரவதை அடைந்திருக்கும் என்பதை
நாம் கற்பனை செய்து பார்க்கலாம். வழியில் தந்தையும், மகனும்
என்ன பேசியிருக்க முடியும்? தன் மகனைக் கண்டபோதெல்லாம், ஆபிரகாமின்
உள்ளம், இரணமாகி, இரத்தம் சிந்தியிருக்கும்.
அவர்கள் மலையை அடைந்தபின், ஆபிரகாம், சிறுவன் ஈசாக்கின்
தோள் மீது விறகுகட்டைகளை சுமத்துகிறார். சிறுவனும், அந்தக்
கட்டைகளைச் சுமந்துகொண்டு மலைமீது ஏறுகிறான். போகும்
வழியில், தந்தையிடம், "அப்பா, இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும்
இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?" (தொ. நூல்
22:7) என்று கேட்கிறான். கள்ளம் கபடமற்ற அந்தச் சிறுவனின்
கேள்வி, ஆபிரகாமின் நெஞ்சை ஆயிரம் வாள் கொண்டு
கீறியிருக்கும். கண்களில் பொங்கியக் கண்ணீரை மறைப்பதற்கு,
தலையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு, ஆபிரகாம், "கடவுளே
பார்த்துக்கொள்வார் மகனே" என்று, ஏதோ ஒரு பதிலை, ஒப்புக்காகச்
சொல்லி, சமாளிக்கிறார்.
மகனைப் பலிதருவது என்பதே, மிக, மிக அரக்கத்தனமான கட்டளை.
அந்தக் கட்டளையை ஆபிரகாம் உடனடியாக நிறைவேற்ற விடாமல், இறைவன்
அவருக்குக் கூடுதலாக ஏன் மூன்று நாள் நரக வேதனையையும் தந்தார்?
எளிதில் பதில் சொல்லமுடியாத ஒரு கேள்வி இது. விவிலிய
விரிவுரையாளர்கள் இதற்குக் கூறும் விளக்கம் இது: இந்த நிகழ்வு,
பல வழிகளில், கல்வாரிப் பலியை நினைவுறுத்துகிறது. இயேசுவின்
பாடுகள் மூன்று நாட்கள் தொடர்ந்தன. சிறுவன் ஈசாக்கு, பலிக்குத்
தேவையான கட்டைகளைச் சுமந்து, மலைமீது ஏறியதுபோல், இயேசுவும்
சிலுவையைச் சுமந்து, கல்வாரி மலைமீது ஏறினார். ஈசாக்கு
கேட்ட கேள்விகளுக்குப் பதில்சொல்ல இயலாமல், ஆபிரகாம்
துன்புற்றார். பாடுகளின்போது, இயேசு கேட்ட கேள்விகளுக்கு,
விண்ணகத் தந்தை பதில் ஏதும் தரவில்லை. இந்த நிகழ்வில் ஆபிரகாம்
மூன்று நாட்கள் நரக வேதனை அடைந்ததைப் போல, தந்தையாம் இறைவனும்,
இயேசுவின் பாடுகளின்போது, கொடூர வேதனை அடைந்தார். இப்படி
பல ஒப்புமைகள் வழியே, இந்த நிகழ்வு, கல்வாரிப் பலியை
நினைவுறுத்துகிறது என்று, விவிலிய விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
மகனைப் பலி கேட்ட இறைவன், இறுதியில், ஆபிரகாமுக்கு, மலையுச்சியில்,
இறையனுபவத்தை அளிக்கிறார். நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள
மற்றொரு மலையுச்சியில், இயேசுவின் தோற்ற மாற்றம் என்ற இறையனுபவம்
பெற்ற சீடர்களிடம், இறைவன், பலியை எதிர்பார்க்கிறார். வேதனைகள்
மற்றும் தியாகங்களின் உச்சக்கட்டமாக இறையனுபவத்தைப் பெறுவதும்,
இறையனுபவத்தின் உச்சக்கட்டமாக, வேதனைகளையும், தியாகங்களையும்
மேற்கொள்ள துணிவு கொள்வதும், நம்பிக்கை என்ற நாணயத்தின் இரு
பக்கங்கள்.
இயேசுவின் தோற்ற மாற்ற நிகழ்வின் இறுதியில், நற்செய்தியாளர்
மாற்கு பதிவு செய்துள்ள வரிகள், நமக்கு ஒரு முக்கியப் பாடத்தைச்
சொல்லித் தருகின்றன. இயேசுவின் தோற்ற மாற்றத்தைக் கண்ட
பேதுரு, தன்னிலை மறந்து, பரவசத்தில் மூழ்கினார். பேதுரு இயேசுவைப்
பார்த்து, "ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும்
மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை
அமைப்போம்" என்றார். (மாற்கு 9:5).
அதுவரை இயேசுவை சாதாரண மனித நிலையில் கண்டு பழகிப்
போயிருந்த பேதுருவுக்கு, 'வெள்ளை வெளேரென ஒளி வீசிய' இயேசுவின்
தோற்றம், பேரானந்தத்தை அளித்திருக்க வேண்டும். அந்த இயேசுவை
விட்டுவிட மனமின்றி, பேதுரு, கூடாரம் அமைக்க முன்வந்தார்.
பேதுருவின் இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, நற்செய்தியாளர்
மாற்கு, தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை.
(மாற்கு 9:6) என்ற கூற்றை இணைத்துள்ளார்.
இது நமக்கு ஓர் எச்சரிக்கையாக ஒலிக்கிறது. ஆழமான இறையனுபவங்கள்
நம்மை நிறைக்கும் வேளையில், சுயநல எண்ணங்கள் பிறந்தால்,
கடவுளுக்கு ஒரு கூடாரம் அமைத்து, அவரை அங்கேயே
பூட்டிவைத்து, அவர்மீது தனிப்பட்ட உரிமை கொண்டாடும் தவறான
முடிவுக்கு வந்துவிடுவோம்.
சொல்வது என்னவென்று அறியாது, பேசிய பேதுருவுக்கு மேகங்களின்
வழியாக இறைவன் சொன்ன பதில்: "என் அன்பார்ந்த மைந்தர் இவரே;
இவருக்குச் செவிசாயுங்கள்" (மாற்கு 9:7) என்பதே. அந்த அன்பு
மகன் இயேசு என்ன கூறுவார்? "
இங்கே தங்கியது போதும். வாருங்கள்
மலையை விட்டிறங்கி நம் பணியைத் தொடர்வோம்"
என்று இயேசு
கூறுவார்.
கடவுள் அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை. கடவுள் தங்குவதற்கு,
கடவுளோடு தங்குவதற்கு கூடாரங்கள், கோவில்கள் அமைப்பது நல்லதுதான்.
ஆனால், கடவுளை, கோவில்களிலேயே தங்கவைப்பதோ, அங்கேயே நாம்
தங்கிவிடுவதோ தவறு. இறை அனுபவம் பெற்ற அந்த அற்புத உணர்வோடு,
மீண்டும் மலையைவிட்டு இறங்கி, சராசரி வாழ்வுக்குத் திரும்பவேண்டும்.
அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண
முடியாதவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமை பட்டிருக்கிறோம்.
தோற்றமாற்றம் அடைந்த இயேசு, சீடர்களை அழைத்துக்கொண்டு, மலையிலிருந்து
இறங்குகிறார். எதற்காக? மக்களை உருமாற்ற. மக்களை உருமாற்றும்
பணியில் நாமும் இணைவோம் வாருங்கள்! குறிப்பாக, தேர்தலை சந்திக்கவிருக்கும்
நாடுகளில், மக்களாட்சியைக் காப்பதற்கு நாம் அணி திரள்வோம்,
தியாகங்கள் செய்வதற்கு தயாராக இருப்போம்.
அருட்பணி. ஜோசப் லியோன்
வாழ்வின் சவால்களை சந்திக்க
வாழ்க்கையில் எல்லோரும் எதிர்பார்க்கிற ஒன்று எதிரிகளும்
எதிர்ப்புகளும் இல்லாத ஒரு வாழ்க்கை. அப்படியே எதிர்ப்பு
வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமத்தாக சமாதானமாக சந்தோஷமாக
எதிர்கொள்ளுகின்ற வாழ்க்கை வேண்டும் என்பது. இன்றைய வாசக
ஒளியில் அதற்கான வழியை காண்போம்.
கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர்
யார்? கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது
எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா?
இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? "உம்
பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகிறோம், வெட்டுவதற்கென
நிறுத்தப்படும் ஆடுகளாகக் கருதப்படுகிறோம்" ஆயினும், நம்மேல்
அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம்
வெற்றிமேல் வெற்றி அடைகிறோம். ஆகவே, உடல் வேதனையிலும்
நோயிலும், வாழ்க்கையின் பல்வேறு நெருக்கடியிலும், வறுமையிலும்
ஏழ்மையிலும், இவர்களால் சந்தோஷமாக வாழ்முடியும். எதிர்ப்புகள்
எதிரிகள் அனைவரையும் எதிர்கொண்டு வெற்றிவாகை சூடுவார்கள்.
"அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; தாம்
செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்."(தி.பா 1:2,3)
கடவுளை நம் சார்பில் வைத்துக்கொள்வது எப்படி? என்பது நம்
முன் இருக்கும் கேள்வி. "The best way to destroy an enemy
is to make him a friend" என்கிறார் அபிரகாம் லிங்கன். பணத்தையும்
பதவியையும் வைத்து எளிதாக எதிரியையும் எதிர்ப்பையும் முகவரி
இல்லாமல் ஆக்கிவிடலாம் என்பர் சிலர். அடியாட்களுக்கு அள்ளிக்
கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பது இன்னும் சிலரின்
சித்தாந்தம். நியாயமான முறையில் நீதியான வழியில் வாழ்வில்
சவால்களை சந்திக்கத் தயங்கும் பலர், அநீதியோடும் அதர்மத்தோடும்
கூடிக்குலாவுவதை கொள்கையாகக் கொண்டுள்ளனர். இந்த
வழிமுறையெல்லாம் கேட்க நன்றாக இருக்கும் ஆனால் பின் விழைவுகள்
பயங்கரமாக பரிதாபமாக இருக்கும். அதனால் இவை எல்லாம் கறிக்கு
உதவாத ஏட்டுச் சுரைக்காய்கள்.
ஆனால் கடவுளை நம் சார்பில் வைத்துக்கொண்டால் காரியங்கள் கன
கச்சிதமாக முடியும். நல்லவர்கள்,பெரிய மனம் படைத்தவர்கள்,
கடவுளை தங்கள் சார்பில் வைத்துக்கொண்டவர்கள் அடிக்கடி அமைதியாகச்
சொல்வார்கள்: "கடவுள் பார்த்துக்கொள்வார்" ஆபிரகாம் செயல்பட்டவிதம்
இதை உறுதிப்படுத்துகிறது. "எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?"
என்று மகன் கேட்டபோது அவர் சொன்ன பதில், "கடவுளே
பார்த்துக்கொள்வார்".இன்று அந்த மோரியா மலை " யாவேயிரே" என்று
பெயரிடப்பட்டுள்ளது.(தொ.நூ 22:14) அதே வேளையில் கடவுள்
கேட்டதுபோல தன் ஒரே மகனை பலி கொடுக்கவும் அவர் தயங்கவில்லை.
நாம் செய்ய வேண்டியவற்றைச் செய்ய வேண்டும்.
பவுலடியார் அனுபவிக்காத வேதனை இல்லை. கொடுமையாய் அடிக்கப்பட்டார்.சிறையில்
அடைக்கப்பட்டார். குழப்பங்களில் சிக்கினார்; பட்டினி கிடந்தார்.
பன்முறை சாவின் வாயிலில் நின்றார். ஐந்துமுறை சாட்டையால்
அடிக்கப்பட்டார்.மூன்றுமுறை தடியால் அடிபட்டார். ஒருமுறை
கல்லெறிபட்டார்; மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினார்.
சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள்,
நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள்.(2
கொரி 11:23-26) இப்படி எத்தனையோ எதிரிகளையும் எதிர்ப்புக்களையும்
சிக்கல்களையும் சிரமங்களையும் தாங்கி, எண்ணத்தில்
வெற்றிபெற வலிமையை பெற்றிருந்தார் என்றால், அதற்குக் காரணம்,
அவரே சொல்கிறார், "எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும்
வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ
குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி
பெற்றிருக்கிறேன்(பிலிப் 4:12).
பேதுருவை, "ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது" என்று
சொல்ல வைத்தது எது? இயேசுவோ அன்றைக்கு அவர் இருந்த நெருக்கம்.
கடவுளின் சார்பில் அன்று அவர் இருந்தார். ஆகவே வாழ்வின் சவால்களைச்
சந்திக்க வேண்டுமா? ஏதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டுமா?
செய்வது அனைத்திலும் வெற்றிபெற வேண்டுமா? கடவுளை உங்கள்
சார்பில் வைத்துக்கொள்ளுங்கள். அல்லது கடவுளைச் சார்ந்து
அவரில் சாய்ந்து கொள்ளுங்கள். தவக்காலம் அவரது சிலுவையில்
சாய்ந்துகொள்ள, அதனால் உங்கள் சுமையைக் எளிதாக்க அருமையான
வாய்ப்பு. பயன்படுத்துங்கள். வெற்றி பெறுங்கள்.
http://www.tamilcatholicdaily.com
இயேசுவின் உருமாற்றம்!
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறாகிய இன்று ஆண்டவர் இயேசுவின்
உருமாற்ற நிகழ்வை நமக்கு இறைமொழி விருந்தாகத் தருகிறது
தாய்த் திருச்சபை. இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு
வித்தியாசமான நிகழ்வுகளின் தொகுப்புதான் உருமாற்ற நிகழ்வு.
மொத்தம் எத்தனை நிகழ்வுகள்?
1. மலைமீது இயேசு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது,
2. அவரது முகத்தோற்றம் மாறியது.
3. அவருடைய ஆடையும் வெண்மையாக மாறியது.
4. மோசேயும், எலியாவும் தோன்றி அவரோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.
5. வரவிருக்கும் இயேசுவின் இறப்பைப் பற்றிப்
பேசிக்கொண்டிருந்தனர் என்கிறார் நற்செய்தியாளர்.
6. மேகத்திலிருந்து தந்தையின் குரல் ஒலித்து, இயேசுவுக்கு
ஒப்பிசைவு கொடுத்தது.
இத்தனை நிகழ்வுகளும் இணைந்ததுதான் இயேசுவின் உருமாற்றம்.
இயேசுவின் இறைத்தன்மையை, அவருடைய மாட்சிமையை வெளிப்படுத்திய
அதே வேளையில், அவருடைய பாடுகளை, கீழ்ப்படிதலையும் சீடர்களுக்கு
உணர்த்தியது.
இந்த உருமாற்ற நிகழ்விலிருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
1. நாம் இறைவேண்டலின் வழியாக, இறைவனோடு நெருக்கமான உறவுகொள்வதன்
வழியாக அவருடைய மாட்சியில் பங்குபெறலாம். அவரது சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம்
என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
2. இறைத் தந்தைக்குப் பணிந்து வாழ்வதன் மூலமே அவருடைய ஒப்பிசைவைப்
பெறமுடியும் என்பதை உணரவேண்டும்.
3. துன்பங்கள், தோல்விகள் நிரந்தரமல்ல. அவை வெற்றிக்கான படிக்கட்டுகள்.
எனவே, துணிவுடன் அவற்றை எதிர்கொள்ளலாம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
இத்தவக்காலத்தில் இந்த சிந்தனைகளை நம் சிந்தையில்
கொள்வோம்.