Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இயேசுவின் வழியினிலே

   

           

     

Mother Teresa Tamil Song
புனிதர் பட்டமளிப்பு நிகழ்வு
 
 
 
               
                  
 

                                         
வர் அல்பேனியாவில் பிறந்து, துறவற சபையினில் சேர்ந்து ஒரு ஆசிரியையாக இந்தியா வந்தார், ஆனால் பள்ளிக்கு செல்லும் வழியில் சாலையோரம் கிடந்த நோயாளிகள், முதியவர்கள், பசியாளர்களை தாண்டிச் செல்லும்பொழுது அம்மக்களின் தேவைகளில் இயேசுவைக் கண்டார், அவர்களுக்கு உழைப்பதே இயேசுவிற்கு செய்யும் பணி என அதைச்செய்ய முன் வந்தார்.

மேலிடம் ஒழுங்காக பாடம் மட்டும் நடத்து என்றது. அவர் அசரவில்லை மாறாக சபையினை விட்டே வெளியேறினார். மாற்று உடை இல்லை, தங்க இடமில்லை, அடுத்தவேளைக்கு உத்திரவாதமில்லை கையில் இருந்ததோ 5 ரூபாய், அதோடு கிளம்பினார்.

அந்த நோயாளிகளை அரவணைத்தார், நல்ல செய்தி சொன்னார். நான் இருக்கின்றேன் உன் துயரம் போக்குவேன் என தாழ கிடப்பவனிடம் சொல்வதே நற்செய்தி. முதலில் ஓட அடித்தார்கள், அவமானப் படுத்தினார்கள், கொஞ்சமும் தளராமல் போராடினார் தெரசா. தன் அவமானத்தையும், கண்ணீரையும் எல்லாம் இயேசுவோடு மட்டும் பகிர்ந்துகொண்டார். அவர் சபையோ, இதர சபைகளோ அவரைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் கடவுள் அவளை கண்காணித்துகொண்டே இருந்தார்: கூடவே கல்கத்தா மக்களும்.

யார் இவள்? எங்கிருந்தோ வந்தாள், நமது மக்களுக்கு பாடுபடுகின்றாள் என சிந்திக்க தொடங்கினர். தெரசாவிற்கு ஒரு அங்கிகாரம் கிடைத்தது. முதலில் பழைய பொருள், மீதி உணவு கொடுத்தனர். அதன் பின் கொஞ்ச கொஞ்சமாக உதவி கரங்கள் நீண்டன‌.

தொழுநோயாளிகளை, சாக்கடை புழுக்களாக சாலையோரம் சுருண்டு கிடந்த மக்களை, மானிட நேயத்தில் அவர் தொட்டு அவரணைத்த பொழுது: கல்கத்தா நகரம் கண்ணீர் விட்டு அவரிடம் மண்டியிட்டது.

இப்படி தனி ஆளாகத்தான் வளர்ந்தார் தெரசா, பின்னாளில் உலகெல்லாம் அறியப்பட்டார். அவருக்கு முதல் சிக்கல், அப்பகுதி சங் பரிவார கும்பலிடம் இருந்து வந்தது. அவர் மதமாற்றம் செய்கிறார், அவரை நாடு கடத்துங்கள் என முழக்கமிட்டு நேரு முன்னால் வெடித்தது சர்ச்சை.

நேரு அவர்களின் தலைவர்களுடன் அன்னையின் ஆசிரமம் சென்றார், அங்கே நோயாளிகளுக்கு மருந்து இடுதல், முதியவருக்கு உணவூட்டுதல் போன்ற பணிகள் நடந்துகொண்டிருந்தன. இந்துக்கள் கீதையும் இஸ்லாமியர் குரானும் படித்துகொண்டிருந்தனர்

தெரசா அமைதியாகச் சொன்னார், மனிதர்களின் தேவையில் நான் என் இயேசுவை காண்கிறேன், அவருக்கு பணி செய்கிறேன். இவர்கள் எம்மதமோ, என்ன இனமோ எனக்கு பிரச்சினையே அல்ல. மனிதர்கள் அது போதும்.


இப்படித்தான் பரமன் இயேசு எங்களுக்கும் கற்பித்தார், அதனைத்தான் செய்கின்றோம், இந்த சேவைதான் கிறிஸ்தவ மதம், இப்படி தன்னலமற்ற சிலுவையினை சுமக்கத்தான் எங்களுக்கு கற்பிக்கபட்டிருக்கின்றது. சுமக்கின்றோம், எங்களோடு அச்சிலுவை சுமக்க வருபவர்களை சேர்க்கின்றோமே தவிர, வேறு ஒன்றுமல்ல. எங்கள் சபையில் இருக்கும் சகோதரிகள் எல்லாம் அச்சிலுவை சுமக்க வந்தோரே.

எனக்கு தேவை மதமாற்றம் அல்ல, மாறாக நம் மனமாற்றம். இம்மானிடருக்கு, சக மனிதருக்கு மனிதனாய் உதவும் மனமாற்றம். மதங்களை தாண்டிய மானிட நேய மனமாற்றம்.

நேரு சொன்னார், இவள் அந்நிய நாட்டுக்காரி, ஆனால் சேவை செய்வது நம் மக்களுக்காக, உங்கள் வீட்டு பெண்கள் இதற்கு தயார் என்றால் இவளை அனுப்பிவிடலாம்.

தலைகுனிந்த பரிவாரங்கள், அதன் பின் வம்பு வளர்க்கவே இல்லை. அந்த மனமாற்றம் அங்கே நடந்தது, அதன் பின் தெரசாவின் சேவைக்கு எல்லோரும் உதவினார்கள்.

உலகமே கொட்டி கொடுத்தது, அவருக்கு கிடைக்காத பரிசுகள் இல்லை, குவியாத காணிக்கை இல்லை. கிரிக்கெட் வீரர்கள் கூட கல்கத்தாவில் விளையாடினால் வெற்றி பணத்தில் ஒரு பங்கினை எடுத்து வைத்தார்கள்.

எப்படி அவ்வளவு பெரும் சேவை நிறுவனத்தை அவரால் இயக்க முடிந்தது? எளிதான விஷயம், பைபிளில் 5 ஆயிரம் ஏழைகளுக்கு உணவளித்தார் இயேசு, பல இடங்களில் அது காணக் கிடக்கின்றது, எத்தனையோ பேருக்கு நோய் தீர்த்தார் என்பதும் இருக்கின்றது

அன்னை தெரசா கல்கத்தா நகரில் அந்த பைபிள் காட்சியினைத்தான் நிகழ்த்தினார்..
தெரசாவின் தன்னலமற்ற சேவையில் மகிழ்ந்தார் கிறிஸ்து, உயிர்த்து நின்றார் இயேசு. அவர் உயிரோடுதான் இருப்பார். தெரசா போன்றோரின் சேவையில் அவர்தான் தெரிந்தார், அவருக்கு அங்கு மரணமில்லை.
அன்னை தெரசா தன்னை விளம்பரம் செய்யவில்லை. தெருவோரம் கண்ட அனாதைகளிடம் சேவை செய்தார், அவர்களிடம்தான் கிறிஸ்துவத்தின் தேவை இருந்தது, கண்டார், அடைந்தார்.


அவருக்கு செப்டம்பர் 4ம் நாள் புனிதர் பட்டம் வழங்குகின்றார்கள், புனிதர் என்றால் கத்தோலிக்க பாரம்பரியபடி சில கட்டுப்பாடுகள் இருக்கலாம், ஆனால் தன்னலமற்று பிறருக்காக வாழ்வினை அர்பணித்த எல்லோரும் புனிதரே.

பிறருக்காக வாழ்ந்த புனிதர்கள் வரிசையில் தெரசாவும் வருவதில் ஆச்சரியமில்லை, புனிதர் எனும் வார்த்தைக்கு அன்றே திருவள்ளுவன் குறள் எழுதி வைத்தான்

வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்தில் வைக்க படும்


இக்குறளுக்கு லத்தீனில் விளக்கம் அளித்து அங்கீகாரம் கொடுக்கும் நிகழ்வே அந்த புனிதர் பட்டம். அடுத்தவருக்காக வாழ்வினை அர்பணித்து வாழ்பவர்கள் வரிசை, வானில் வாழும் தெய்வத்தின் வரிசை

அன்னை தெரசாவும் அந்த தெய்வ வரிசையினை பெற்றுவிட்டார்,


மானிடனுக்கு அடிப்படை உதவி தேவைபடும் இடங்களில் எல்லாம் இயேசு இருப்பார், நான் உலக முடிவுவரை உங்களோடு இருப்பேன் என அவர் சொன்ன தத்துவமும் அதுவே.

"மனம் மாறுங்கள், வானுலக அரசினை படைப்போம்" என பரமன் இயேசு ஏன் அழைத்தார்? ஏழைகளுக்கு உதவ "மனம் மாறுங்கள்", ஒடுக்கப்பட்டோருக்கு உதவ "மனம் மாறுங்கள்", பாவிகளை ஏற்றுகொள்ள, நோயுற்றோரை அரவணைக்க "மனம் மாறுங்கள்" என அழைத்தார்

"மனம் திரும்புங்கள் கடவுளின் அரசு சமீபத்திலிருக்கின்றது." எனும் வசனத்திற்கு நாம் மனம் திரும்பினால் கடவுளின் அரசினை படைப்பது, அதாவது சமத்துவ உலகினை படைப்பது மிக அருகில் இருக்கின்றது என்ற பொருளும் உண்டு.

இப்படித்தான் மனம் திரும்ப அழைத்தார் இயேசு.
இந்த தத்துவத்தை சரியாக படித்து, அதற்காக வாழ்ந்து மானிடரை நேசிக்கும் மனிதராக மனம் மாறுங்கள் என பறைசாற்றி நின்றவர்தான் அன்னை தெரசா, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்று இந்த ஞாயிறன்று அன்னை தெரேசா அவர்களை, புனிதராக அறிவிக்கும் திருப்பலியில், அன்னை தெரேசா அவர்களின் உறவினர் ஒருவரும் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தாலியின் சிசிலியில் வாழ்ந்துவரும் அன்னை தெரேசா அவர்களின் சகோதரர் மகளான, 70 வயது நிரம்பிய Agi Bojaxhiu ரை அவர்கள், இத்திருப்பலியில் கலந்துகொள்ளவுள்ளார்.

இளவயதிலே இத்தாலியில் குடியேறிய Agi Bojaxhiu ரை அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், அன்னை தெரேசா அவர்கள், இயல்பாகவே மிகவும் கடினமான வேலைகளைச் செய்பவர் என்றார்.
அன்னையவர்கள், மனிதரின் புண்களையும், காயங்களையும் தொட்டது, பிறருக்கு உதவியது, தொடர்ந்து வேலை செய்தது போன்றவற்றைப் பார்த்தபோது, அவை தனக்கு ஒரு பாடமாக அமைந்து, மிகுந்த திருப்தியைக் கொடுத்ததாகத் தெரிவித்தார் Agi.

மேலும், அன்னை தெரேசா அவர்கள் இறந்த கடந்த 19 ஆண்டுகளில், அவர் தொடங்கிய பிறரன்பு மறைப்பணியாளர் சபையினர், விசுவாசத்திலும், சேவையிலும் மட்டுமின்றி, உலகில், எண்ணிக்கையிலும் அதிகரித்து உள்ளனர் என்று கூறப்படுகிறது.

கல்கத்தாவில், 1950ம் ஆண்டில், 12 பேரைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சபையில், 1997ம் ஆண்டில், 3,914 அருள்சகோதரிகளும், 363 அருள்சகோதரர்களும் இருந்தனர். ஆனால், 2016ம் ஆண்டில், 5,161 அருள்சகோதரிகளும், 416 அருள்சகோதரர்களும் உள்ளனர். அன்னை இறந்த 1997ம் ஆண்டில், 120 நாடுகளில் பணியாற்றிய இச்சபையினர், தற்போது, 139 நாடுகளில், 758 இல்லங்களை நடத்துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

அவருக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழாவில் ரோமில் பலபேர் கூடுகின்றனர், அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலமையில் இந்தியர் செல்வதை உலகமே கவனிக்கின்றது, காரணம் அந்த மானிட தேவதை உழைத்தது நமக்காக, நம் இந்திய சகோதரர்களுக்காக‌.

இந்த தேசமும் அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவித்தது, தன் பங்கிற்கு அவரை போற்றிகொண்டுதான் இருக்கின்றது, மறக்கவில்லை.

இனி அவர் புனிதர் தெரேசா அதாவது அவரிடம் வேண்டினால் அது நடக்கும் என கத்தோலிக்க தலமை பீடம் அறிவிக்க போகின்றது. அவர் பெயரில் ஆலய பீடங்கள் இனி எழும்பும். எல்லோரும் பிரார்த்தனை செய்வோம்

ஆனால் கடவுளிடம் அன்னை தெரசாவும் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்?

"எனக்கு மிக பிடித்தமான இந்த இந்திய மக்கள், மதம் கடந்த மானுட நேயத்திலும், உதவி செய்யும் சகோதர மனப்பான்மையிலும் ஒற்றுமையாய் வளர்ந்து, உன்னத சமூகமாக திகழ அருள்புரிவாய் இறைவா" என வேண்டுவார்.

இந்தியாவிலும், உலகில் எல்லா இடங்களிலும் மானுடம் வாழட்டும், மனிதநேயம் செழிக்கட்டும், சகமனிதனை புறந்தள்ளாமல் அரவணைக்கும் தெய்வீகப் பண்பு ஓளிவீசட்டும், அவர்கள் துன்பமெல்லாம் தீர அருள்செய்" இதுதான் அவரின் பிரார்த்தனையாக இருக்கும். உலகில் உள்ள எல்லா மானிடருக்காகவும் இருக்கும். அவர்கள் துன்பம் தீர்க்கும் பிரார்த்தனையாகவும் இருக்கும்.
அன்னை தெரசா இயேசுவின் உண்மைச் சீடராய் வாழ்ந்தார். இதோ இன்று இந்நாளில் புனிதர் பட்டம் பெறும் பேறுபெற்றார். இந்த நாளின் இறைவார்த்தைக்கு முன் உதாரணமாக வாழ்ந்து காட்டிவிட்டார்.
இறைவனைப் பின் தொடர்வதற்கு ஆர்ப்பாட்டம் தேவை இல்லை. அன்பும் எளிமையும்தான் தேவை, என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார்.


இவ்வுலக இன்பத்தின் மீது மனதைச் செலுத்தாமல் பிறரின் இன்பத்தை மிகுதியாக்க தன் மனதைச் செலுத்தினார்.
எவரொருவர் தன் மனதை ஆளப் பழகி இருக்கிறாரோ அவரே இறைவனைப் பின் தொடர முடியும் என விளக்கிக் காட்டிவிட்டார்.

 
மனம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டு, தெரிந்து கொண்டதை புரிந்து கொண்டு, புரிந்து கொண்டதை நடைமுறை படுத்தி.!
அதனோடு ஒன்றி, கரைந்து, காணாமல் போவதுதான் ஆன்மீகம். இந்த ஆன்மீக உணர்வுதான் ஆளுமைத் திறனை மட்டுமல்ல சீடராக்கும் திறனை வளர்க்கும். மனதை ஆளும் திறனே ஆளுமைத் திறன்....
இந்த ஆளுமைத் திறனில் வெற்றி கண்டார். இயேசுவைப் பின்தொடர்ந்தார்
.

ஆளுமையை தவிர வேறு எந்த வெளிப்புற ஆர்ப்பாட்டமும் ஆண்டவனைப் பின் தொடர உதவாது. மனதைப் பற்றி ஆராயும் போது மனம் ஆர்ப்பரிக்கும், ஆர்ப்பாட்டம் அகத்திலே நிலவினால் ஆளுமையை பெருக்கிக் கொள்ள முடியும். புறத்திலே நிலவினால் போராட்டத்திற்கே வழி வகுக்கும்.

"சிந்தனை செய்வோம் சிந்தித்து செயல்பட்டால் இயேசுவின் நல்ல சீடராக இருப்போம். பயனுள்ள நற்சிந்தனைகள் சிந்தித்து இயேசுவின் உண்மைச் சீடராக வாழ்ந்த அன்னை தெரசாவையும் பின்தொடர்வோம்.

அன்னை தெரேசாவின் வாழ்க்கை வரலாறு


அன்னை தெரேசாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
-
பிறந்தது யூகோஸ்லோவியாவில் உள்ள ஸ்கோப்ஜி நகரம்.
- பிறந்த தேதி 26-08-1910
- இயற்பெயர் : ஆக்னஸ் கோஞ்செ பொயாஜியூ (
Agnes Gonxha Bojaxhin).
- செல்லப்பெயர் : கோன்ஸா
- தந்தையின் பெயர் நிகோலா பொயாஜியூ (
Nikola Bojaxhin).
- தந்தையின் தொழில் பிரபலமான கட்டட ஒப்பந்தக்காரர் (யுகோஸ்லோவியாவின் ஸ்கோப்ஜி என்ற 
   நகரின் மிக உயர்ந்த கட்டடங்கள் அவரது பெயரை அலங்கரித்துக் கொண்டு இருந்தன).
-  தாயின் பெயர் திரானி பெர்னாய் (
Drane Bernai)
- தாயின் தொழில் : வீடு, குடும்பம் மற்றும் கடவுள் இந்த மூன்றும் தான் இவரது உலகம்.
- உடன் பிறந்தவர்கள் : அக்கா அகா (
Aga) மற்றும் அண்ணன் லாஸர் (Lasar).

"விளையும் பயிர் முளையிலேயே தெரியும்" என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக தனது ஐந்து வயதிலேயே அனைத்து பாடங்களையும் நுனி நாக்கிலேயே வைத்திருப்பார். அவரது பாடல்கள் மற்றும் பாடங்களைப் பற்றிய பேச்சு "மடை திறந்த வெள்ளம் போல்" காணப்படும். படிப்பு தவிர நகைச்சுவை உணர்வும் மிக அதிகமாக இருந்தது. இதனாலேயே எல்லோருடைய கவனத்தையும் எளிதில் வசீகரித்து விட்டார் ஆக்னஸ்.
ஆக்னஸின் சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்ததால் தனது துள்ளித் திரிந்த வாழ்க்கை ஒரு மூலைக்கு தள்ளப்பட்டது.
குடும்ப வருமானம் : தன் கணவனின் இறப்பிற்கு பிறகு பெர்னாய் தனக்கு தெரிந்த மற்றும் காலத்துக்கு ஏற்றவாறு அலங்கார ஆடைத் தயாரித்து விற்று மற்றும் ஸ்கோப்ஜி நகரின் முக்கியமான பாதிரியார் ஜாம்பிரான் கோவ்க், பெர்னாயின் குடும்பத்தின் சூழ்நிலை அறிந்து, குழந்தைகளின் கல்விக்காக சில உதவிகளை செய்தார்.

1922-ம் ஆண்டு
தனது 12-ம் வயதில் 1922-ம் ஆண்டு தனது "சமூகச் சேவை" செய்வது பற்றி சிந்திக்க ஆரம்பித்தார்.
=ஏழை, எளியவர்களுக்கு சேவை செய்தல்.
=உடல் ஊனமுற்றோர்க்கு உதவி செய்தல்.
=பள்ளியில் உள்ள மாணவ மாணவியருக்கு உதவி செய்தல்.
=தேவாலயங்களைப் பெருக்கி சுத்தம் செய்தல்.
=மருத்துவ மனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு மருந்து போட்டு விடுதல்.
இதைப்பற்றி பள்ளிக்குச் செல்லும் முன் தன் தாயாரிடமும் பள்ளியில் நுழைந்தவுடன் ஆசிரியர்களிடமும், வீட்டுக்கு வருகின்ற வழியில் பேசுவார். இதைப்பற்றி பலரிடமும் விசாரிக்கும் போது "லொரெட்டோ சகோதரிகள்" (
Loreto Nuns)) என்ற அமைப்பு இருப்பதை அறிந்தார். அவர்கள் மூலம் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் "சமூக சேவை" செய்வதை பற்றி அறிந்தார்.

1923-ம் ஆண்டு
சமூக சேவை செய்வதே முடிவாகக் கொண்ட அவர் 1923-ம் ஆண்டு பொதுச் சேவையில் ஆர்வம் இருக்கின்ற பெண்களுக்கான சமுதாய இயக்கமான
Sodality of Children of Mary  எனற அமைப்பில் சேர்ந்தார். இதனை ஆரம்பித்தவர் பாதிரியார் ஜாம்பிரன் கோவிக் (Jambiran Covic) ஆவார். இந்த அமைப்பில் சேர்ந்த சில நாட்களிலேயே இந்த அமைப்பின் முக்கிய "கருப்பொருளாக" மாறினார். தனது சேவையின் மூலம் "அனைவரின் உள்ளத்திலும் இடம்பிடிக்க" ஆரம்பித்தார். இந்த சூழ்நிலையில் "மேற்கு வங்காளம்" சென்று திரும்பிய சகோதரிகளை சந்திக்கலானார். அப்போது அவர்களிடம் இந்தியாவைப் பற்றிய அனைத்து விசயங்களையும் திரட்டினார். இந்தியாவின் மீதான "கனவுகள் விரிய அரம்பித்தன". உடனே பாதிரியார் ஜாம்பிரனிடம் சென்று பேசினார். பாதிரியாரின் பதில், "உனது முடிவு இதுதான் என்றால் நல்லது, உன்னுடைய தாயாரிடம் அனுமதி வாங்க வேண்டும்" என்றார். அன்று இரவே தாயாரிடம் பேசினார். தாயாரின் முடிவு சாதகமாகவே அமைய, தாயின் அனுமதியோடு சேவையில் ஈடுபட தொடங்கினார். அப்போது இராணுவத்தில் பணியாற்றி வந்த தனது அண்ணன் லாகஸிற்கும் கடிதம் எழுதினார். "கன்னியாஸ்திரியாகப் போவதற்கு உறுதியாக இருக்கிறாயா?" என்றார் லாகஸ். தனது சமூக சேவை மீதுள்ள பற்று, தனது அண்ணனின் கேள்விக்கு இவ்வாறு பதில் கூறினாள். "நீ இரண்டு மில்லியன் வீரர்களை நிர்வகிக்கும் மன்னனுக்குச் சேவை செய்து கொண்டிருக்கிறாய். நான் உலகையே நிர்வகிக்கும் கடவுளுக்குச் சேவை செய்யப்போகிறேன்".

1928-ம் ஆண்டு
தனது 18-ம் வயதில் 12 அக்டோபர், 1928-ம் ஆண்டு ராத்பர்ன்ஹாம் (
Rathfarnham) என்று அழைக்கப்படும் அயர்லாந்தில் உள்ள சிஸ்டர்ஸ் ஆஃப் லொரேட்டோ (Loreto Abbey) என்கிற கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டார். அதுவரை ஆங்கிலப் புலமை இல்லாத அவர் மிகக் குறுகிய காலத்தில் ஆங்கிலத்தில் மிகச் சரளமாகப் பேச எழுத புரிந்து கொள்ளக் கற்றுக் கொண்டார். அடுத்த கட்டமாக "ஒரே தேவை சேவை". பாரபட்சம் இல்லாமல் குழந்தை, நோயாளி, முதியவர், ஏழைகள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சேவை செய்வதற்கான நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். இறுதியாக வங்காளத்தைச் சென்றடைய விரும்பினார். ஆனால் நிர்வாகம் தயக்கம் காட்டியது. காரணம் "இவ்வளவு திறமையான பெண்ணான உன்னை அனுப்ப எங்களுக்கு மனம் இடம் கொடுக்கவில்லை". அவளது விடாப் பிடிவாதத்தின் காரணமாக இந்த "இளம் புயலை" வங்காள மாநிலம், கல்கத்தா நகருக்கு அனுப்புவதற்கு சம்மதித்தது.

1929-ம் ஆண்டு
1929-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபையை வந்தடைந்தார். வந்த சில நிமிடங்களிலேயே கத்தோலிக்க சபை ஒரு கட்டளையை பிறப்பித்தது. "சட்ட விதிகளின் படி" புதிதாக வந்து சேர்பவர், பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று. அதன்படி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சகோதரி தெரசா மார்டின் ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் பணிவிடை செய்வதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொள்ள நினைத்தவர். அதற்கு அவரது உடல்நிலை இடம் கொடுக்க வில்லை. "காசநோய்" காரணமாக தனது 24-ம் வயதில் இயற்கை எய்தினார். அவர்களது நினைவாக தனது பெயரை "தெரசா" என்று மாற்றிக் கொண்டார்.

கல்கத்தாவில் சில நாட்கள் தங்கி இருந்த தெரசா, அவர்களுக்கு அங்கு நிலவிய வறுமையான சூழல், ஏழைத் தொழிலாளர்கள், வேலையில்லாத் திண்டாட்டம், பசியுடன் காத்திருக்கும் குழந்தைகள், சாக்கடை அருகிலேயே சமையல், சுகாதாரமற்ற குடியிருப்புகள், தொற்று வியாதிகள் ஆகியவைகள் அவரது மனதை மிகவும் பாதித்தது. இந்த சூழ்நிலையில் டார்ஜிலிங்கில் உள்ள லொரேட்டா இல்லத்தின் பள்ளியில் ஆசிரியர் பணி நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் அங்கு வரலாறு, புவியல் பணி காலி இடங்களாக இருந்தன. தெரசாவின் ஆர்வம் காரணமாக அந்த பாடங்களுக்கு ஆசிரியையாக நியமிக்கப்பட்டார். தெரசாவின் உதடுகளில் புன்னகை திரும்பி இருந்தது. உற்சாகம் கொப்பளிக்க பாடம் சொல்லி கொடுக்க தொடங்கினார். பள்ளிக்கு ஏற்ற ஆசிரியையாகவும், குழந்தைகள் மீது அன்பாகவும், பாசத்தோடு இருந்தாலும், படிப்பு, பாடம், மற்றும் பழக்க வழக்கம் என்று வந்து விட்டால், கண்டிப்பான ஆசிரியையாக மாறி விடுவார்.

 இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய உடனேயே அவரின் மனதில் தோன்றிய எண்ணங்கள்:
= இந்தியா தான் என் தாய்நாடு
= இந்தியா தான் என் வாழ்க்கை
= இந்தியா தான் என் எதிர்காலம்
இதற்கு கூடுதலாக "இந்தி மொழி" முக்கியமானதாக அமைந்தது. இதனையும் மேலோட்டமாக கற்றுக் கொண்டார்.

1940-ம் ஆண்டு
இந்த சமயத்தில் மீண்டும் கல்கத்தாவிற்கே பணிமாற்றம் செய்யப்பட்டார். அங்கு கல்வியோடு சமூக சேவையும் செய்ய வேண்டியதாயிற்று. பிள்ளைகளுக்கு கல்வி அளிப்பதோடு மட்டும் நின்று விடாமல் பிள்ளைகளைக் குளிப்பாட்டுவது, சாக்கடை சுத்தம் செய்வது என பல சேவைகளை மற்ற ஆசிரியர்களோடு இணைந்து செய்ய ஆரம்பித்தாள். பள்ளிக்கூடம், குடிசை மக்களுக்கு சேவை என்று மாறி மாறிப் போய்க் கொண்டிருந்த தெரசாவின் வாழ்க்கை குறுகிய காலத்தில் "பள்ளி முதல்வர்" தெரசா வாக மாறினார். பள்ளி முதல்வராக பணியாற்றிய காலத்திலேயே, 1940-ம் ஆண்டு கல்கத்தாவில் வசித்து வந்த பாதிரியார் செலஸ்டி வான் எக்செம் (
Celeste Van Exem) என்பவரை தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டார். பதினேழு ஆண்டுகள் அந்தப் பள்ளியிலேயே பணியாற்றிய தெரசா, இதில் ஏராளமான நல்ல அனுபவங்களைப் பெற்றார்.

1942-43-ம் ஆண்டு
1942-43-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த காலம். பஞ்சம் வாட்டி வதைக்க ஆரம்பித்தது. கையில் வேலையின்றி, பணமின்றி மக்கள் திண்டாடினார்கள். பசிக்கொடுமை தாங்காமல் பலமுதியவர்கள் மயக்கத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர். ஒரு புறம் போர், இன்னொரு புறம் பஞ்சம், இன்னொரு புறம் விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. இந்த சமயத்தில் முஸ்லிம் லீக் என்கிற கட்சி இயக்கம் உருவானது. இந்தியாவை இரண்டாக பிரித்து பாகிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோஷம் வலுத்தது. பஞ்சத்தின் பிடியில் இருந்த அவர்களை விடுவிக்க வேண்டும். அவர்களுடைய சுகாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். சிந்திக்க ஆரம்பித்தார்!!! ஆனால் லொரோட்டாவின் விதிமுறைகள் கடுமையானவை. ஆகையால் அந்த சிக்கலான விதிமுறைகள் தெரசாவின் சேவையை முழு நேரமாகவோ அல்லது அதிக நேரம் செலவழிக்கவோ அனுமதி கொடுக்கவில்லை. இதன் காரணமாக லொரேட்டாவில் இருந்த விலகுவதாக முடிவு செய்த தெரசா தனது ராஜினாமா கடிதத்தை பேராயர் மூலமாக ரோமுக்கு அனுப்பினார். நாள்கள், வாரங்கள், மாதங்கள் கடந்தன. இறுதியாக ஏப்ரல் 12, 1948 அன்று உத்தரவாதக் கடிதம் வந்துவிட்டது. "இனிமேல் என்னுடைய விருப்பத்திற்கு ஏற்றவகையில் ஏழைகளுக்குச் சேவை செய்வதில் எந்தத் தடையும் இல்லை" = உற்சாகம் பொங்க கூறிக்கொண்டார் தெரசா.

1948-ம் ஆண்டு
"ஐந்து ரூபாய் பணம். நீல நிறத்தில் மூன்று சேலைகள்". இதுவே தெரசாவின் சொத்து லொரேட்டாவில் இருந்து வெளியேறியபோது. வெள்ளை ஆடையுடன் அழுக்கான குடிசைப் பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த மக்களைப் பார்த்து பேசினார். அவர்களுடைய நல்வாழ்வுக்காகத் தன்னால் முடிந்ததைச் செய்து தருவதாக கூறினார்.

தன்னை "செவிலியர்" பணியில் மேம்படுத்திக் கொள்ள விரும்பிய தெரசா, அதற்காக பாட்னாவில் உள்ள செயின்ட் பேமிலி மருத்துவமனையில் மருத்துவ பயிற்சிகளை எடுத்துக்கொண்டார். அங்கு அவர் பலவிதமான நோய்கள் பற்றியும், அவற்றுக்குச் சகிச்சை அளிக்கும் முறைகள் பற்றியும் முறையாக கற்றுக் கொண்டார். தனது பயிற்சி காலங்களில் மருத்துவர்கள் தெரசாவைப்பற்றி கூறியது = மருத்துவப் பயிற்சிக்குத் தேவையான மூன்று குணங்களான மிகுந்த உற்சாகம், ஆர்வம் மற்றும் பொறுப்பு ஆகியவற்றை ஒருங்கே பெற்றுள்ளார் தெரசா.

தெரசாவின் சிஷ்யைகள் பத்துப் பேரைக் கொண்ட முதல் சேவைக்குழு உருவானது. அவர்கள் அனைவருமே லொரேட்டாவில் முன்னாள் மாணவிகள். சமூக சேவைகளுக்கான ஆரம்பம் பள்ளிக்கூடம் கட்டுவதுதான் தனது முதல் நோக்கமாகக் கொண்டு, முதலில் குடிசை வாழ் ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டுவோம் என்று நினைத்தனர்.

1949-ம் ஆண்டு
 1949-ம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மோத்திஜில் என்ற பிரபலமான குடிசைப் பகுதிக்குச் சென்றனர். அது பல பகுதிகளைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களும், ஏழைகளும் ஒன்றாக வசித்த பகுதி. முதல் கட்டமாக அங்குள்ள ஏழைக்குழந்தைகள் பற்றிய தகவல்களை குறித்துக்கொண்டு, குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்தித்தார். "விரைவில் இந்த பகுதியில் பள்ளி ஒன்றைத் தொடங்க இருக்கிறேன். அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். முதலில் வெறும் 5 குழந்தைகளுடன் கரும்பலகை கூட இல்லாமல் தண்ணீர்த் தொட்டியின் நிழலில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடம் குறுகிய நாட்களில் மெல்ல மெல்ல எண்ணிக்கை உயர்ந்து 46 குழந்தைகளை எட்டியது.

நோயால் தனது வீட்டின் வாசற்படியில் மயங்கிக்கிடந்த ஒரு பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றும், பண வசதி இல்லாத கால தாமதத்தால் அந்த பெண் இறக்க நேரிட்டாள். இந்த "கோர சம்பவத்தை" அனுபவித்த அன்னை தெரசா "சிறிய அளவில் மருத்துவமனை" ஆரம்பிப்பது என முடிவு செய்தார். அரசாங்கமே முடியாமல் விட்டு வைத்துள்ள சூழ்நிலையில் "கடுமையாக முயற்சி செய்தால்" சாத்தியமாகி விடும் என்று தனக்குத்தானே நம்பிக்கையை வளர்த்துக் கொண்டார். இதன் முதற்கட்டமாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்று "உபரி மருந்துகளை கொடுத்து உதவுங்கள். எல்லாம் ஏழை மக்களுக்குத்தான்" என்று உதவிக் கேட்டார்.

1950-ம் ஆண்டு
அக்டோபர் 7, 1950-ம் ஆண்டு மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டிஸ் என்ற அறக்கட்டளையை துவங்கினார். இதன் மூலம் பசியால் வாடுகின்றவர், வீடின்றி தவிக்கின்றவர், கண்பார்வை இல்லாதவர், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர் என தன்னால் முயன்ற அத்தனை உதவிகளையும் பாரபட்சம் இல்லாமல் செய்து வந்தார். கவனிப்பார் இல்லாமல், வாரிசுகளால் புறக்கணிக்கப்படுகின்ற முதியவர்களுக்கு கருணை இல்லம் உருவாக்க விரும்பினார் அன்னை தெரசா. அரசாங்க உதவியுடன் "காளிகட்" என்னுமிடத்தில் ஹீக்ளி நதிக்கரையின் அருகில் கிடைக்கப்பெற்ற "நிர்மல் ஹ்ருதய்" என்ற கட்டிடத்தை முதியோர் காப்பகமாக மாற்றினார். இதன் பெயர்தான் பின்னாளில் "காளிகட் இல்லம்".

1955-ம் ஆண்டு
செப்டம்பர் 23, 1955-ம் ஆண்டு முதன் முறையாக சிசுபவன் ஆரமப்பிக்கப்பட்டது. இதன் மூலம் ஊனமுற்ற குழந்தைகள், மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள், குப்பைத்தொட்டி மற்றும் சாக்கடைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் என அனைவரும் இந்த காப்பகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

1957-ம் ஆண்டு
1957-ல் முதல் முறையாக தொழுநோயாளிகளுக்கான நடமாடும் மருத்துவமனையைத் தொடங்கினார். பிறகு அதே ஆண்டில் தொழுநோய் மருத்துவமனை ஒன்றையும் ஆரம்பித்தார். இங்கு இலவசமாக உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன. இதற்கு "காந்தி பிரேம் நிவாஸ்" என்று பெயரிடப்பட்டது. மேலும் "தொழுநோயாளிகளின் தினம்" என்ற ஒன்றை அறிவித்து அந்நாளில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினார்.

அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்கு முன் சென்று நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர் தெரசாவை கோபமாக பார்த்து விட்டு ""தெரசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்". அப்போது சற்றும் மனம் தளராமல் "மிக்க நன்றி!!! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்" அந்தக் கடைக்காரர் "இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்" என்று கூறி விட்டு நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். இறுதி வெற்றி தெரசாவுக்குத்தான். இப்படி தெரசாவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன.

ஒரு முறை போப்பாண்டவர் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தனது சுற்றுப்பயணத்திற்காக பயன்படுத்திய விலையுயர்ந்த காரை அன்னை தெரசாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சொகுசு காரில் பயணம் செய்வதற்கு சிறிதளவும் விருப்பமில்லை. ஆனாலும் அதனை மறுக்கவும் விருப்பமில்லை. எனவே புன்னகையோடு ஏற்றுக்கொண்டார். அடுத்த நிமிடமே அந்தக் காரை ஏலம் விடுமாறு கோரிக்கை விடுத்தார். அந்தப் பணத்தை அறகட்டளை நிதியில் சேர்த்துக் கொண்டார். இது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த சம்பவம். இது போன்று தாம் பெறும் அனைத்து பரிசுகளையும் ஏலமிட்டு அந்தப் பணத்தை அறக்கட்டளை நிதியில் சேர்த்தார்.

தனது முழுநேரமும் ஏழைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும், குடிசை வாசிகளின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துக்காவும் செலவழித்தார். இதனால் அனைவரும் அன்னை தெரசாவை "குடிசை சகோதரி" என்று அழைக்க ஆரம்பித்தனர்.
 

சேவைக்காக உலகம் ஒரு சுற்றுப் பார்வை :


=1963-ல் ஏழைச் சிறுவர்களுக்கான பிரத்யோக பள்ளிக்கூடம் ஜீலியன் ஹென்றி மற்றும் பிஷப் ஆல்ப்ரட்
                 ஆகியோரது உதவியுடன் கட்டப்பட்டது.
=1965-ல் வெனிசூலாவில் இருக்கும் ஏழைகளுக்கு உதவி செய்தார். குறிப்பாக குடிசை பகுதிகளுக்குச் 
                 சென்று தங்கி சேவை செய்தார். அதே ஆண்டில் ஆஸ்திரேலியா சென்று போதை பழக்கத்துக்கு 
                 அடிமையானவர்கள், சிறைக்கைதிகள் மற்றும் அன்புக்கு ஏங்கும் அனாதைக் குழந்தைகள் 
                 ஆகியோர்க்கு சேவை செய்தார்.
=1970-ல் ஐந்து கன்னியாஸ்திரிகளுடன் ஜோர்டன் சென்று அங்குள்ள அகதிகளுக்கு பணிவிடை செய்தார்.
                 அதே ஆண்டில் இலண்டன் சென்று அங்கு சாலையோரத்தில் மிகவும் மோசமான நிலமையில்
                 வாழ்ந்தவர்களுக்கு உதவி செய்தார்.
=1971-ல் மேற்கு பாகிஸ்தானில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார். ஆதரவற்ற 
                 பெண்களுக்குத் தங்களுடைய குழந்தைகளை காப்பாற்றுவதற்காக சிறு தொழில்களையும்
                 கற்றுக் கொடுத்தார்.
=1973-ல் எத்தியோப்பியாவுக்குச் சென்று அங்கு வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார். 
                 அதே ஆண்டு ஜோர்டன், இங்கிலாந்து, அமெரிக்கா, பங்களாதேஷ், மொரீஷியஸ், இஸ்ரேல், 
                 பெரு, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் தனது சேவை மையங்களை ஆரம்பித்தார்.
=1977-ல் ஆந்திரப்பிரதேசம் கடும் புயலால் தாக்கப்பட்ட போது அங்கு தெரசாவும், அவரது சகோதரிகளும் 
                 விரைந்து சென்று உதவி செய்தனர்.
=1978-ல் தனது சொந்த ஊரான ஸ்கோப்ஜிக்கு யூகோஸ்லேவிய அழைப்பின் பேரில் சென்றார்.
=1981-ல் ஜப்பான் பேமில் லைஃப் அசோசியேஷன் என்கிற அமைப்பு விடுத்த அழைப்பினை ஏற்று 
                 டோக்கியோவில் தனது சேவை மையத்தை ஆரம்பித்தார்.
=1985-ல் அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
=1988-ல்  ரஷ்யா, க்யூபாவுக்குச் சென்று சேவை மையங்களை ஆரம்பித்தார். அதே ஆண்டு 
                 தென்னாப்பிரிக்கா சென்ற தெரசா "எனக்கு வெள்ளை, கறுப்பு, பச்சை மற்றும் மஞ்சள் எனகிற 
                 எந்த வித நிற பேதமும் கிடையாது. நாம் எல்லோரும் அன்பைப் பெறுவதற்காக, அன்பு 
                 செலுத்துவதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோம்" என்று பேசினார்.
=1991-ல் அமெரிக்கா மற்றும் ஈராக் அதிபர்களுக்கு வளைகுடாப் போரை நிறுத்த வலியுறுத்தி கடிதம்
                  எழுதினார்.
=1992-ல் பிரதமர் சதாம் உசேன் அழைப்பின் பேரில் ஈராக் சென்று மறு நிர்மாண நடவடிக்கையில் பங்கு
                 கொண்டார்.
                 உலகம் முழுவதும் மொத்தம் 123 நாடுகளில் நான்காயிரம் தன்னார்வு தொண்டர்களோடு கூடிய 
                  600 சேவை மையங்கள் உருவாக்கப்பட்டன.
மார்ச் 13, 1997-ல் அறக்கட்டளையின் பொறுப்புக்கள் அனைத்தையும் நிர்மலாவிடம் ஒப்படைத்துவிட்டு 
                  சாதாரண தொண்டராகவே தனது பணியினை தொடர்ந்தார் அன்னை தெரசா.

செப்டம்பர் 5, 1997-ம் ஆண்டு அதிகாலையிலேயே விழித்த அவர் "நெஞ்சு வலிப்பது போல் இருக்கிறது" என்று முனகியபடியே பேசினார். தெரசாவுக்குச் சிகிச்சை அளித்துவரும் சிறப்பு மருத்துவர் வந்து பார்த்தார். சிறதளவு முன்னேற்றம் ஆனாலும் பேசுமளவுக்கு கூட தெம்பில்லை. அன்று இரவு 9.30 மணிக்கு "நெஞ்சு வலிக்கிறதே" என்று மெல்லிய குரலில் மீண்டும் முனகினார் தெரசா. "கடவுளே இவருக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்று பிராத்தித்தார்கள், பதறினார்கள்". ஓசைகள் நின்று போய் படுத்திருந்தார். ஆத்மா சாந்தியடைந்தது. இன்றும் அவர்களது சேவைகள் மற்றும் தொண்டுள்ளம் நம் மனதில் நீங்கா இடம் பெற்றுக் கொண்டு இருக்கிறது.

 

கிடைத்த விருதுகள் :

=1962 = பத்ம ஸ்ரீ விருது
=1971 = 23வது போப் ஜான் அமைதி விருது
=1971 = குட் சமரிட்டன் விருது
=1971 = கென்னடி விருது
=1972 = சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது
=1973 = டெம் பிள்டன் விருது
=1977 = இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
=1979 = அமைதிக்கான நோபல் பரிசு
=1982 = பெல்ஜியம் நாட்டு பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
=1985 = சுதந்திரத்துக்கான பிரிசிடென்ஷியல் விருது
=1996 = அமெரிக்காவின் கெளரவப் பிரஜை

வடக்கு கல்கத்தாவைச் சேர்ந்த மோனிகா பெர்ஸா என்ற பெண்மணி நீண்ட நாட்கள் தீரா வயிற்று வலியால் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தார். ஒரு நாள் "வீட்டில் யாரும் இல்லாத நேரம் வயிற்று வலி வந்து விட்டது. சுடு மணலில் விழுந்த மீன் போலத் துடித்தார்". படுக்கைக்கு அருகே அன்னை தெரசாவின் படம் இருந்தது. "அன்னையே என் வீட்டில் யாரும் இல்லை. உங்களுடைய பாதுகாப்பில்தான் இருக்கிறேன். நீங்கள்தான் என்னுடைய தீரா வயிற்று வலியைய் குணமாக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டு அங்கு இருந்த அன்னை தெரசாவின் உருவப் படத்தை வயிற்றின் மீது வைத்ததாகவும் அதன் பிறகு பெர்ஸாவுக்கு "வயிற்று வலி" வரவே இல்லை எனவும் கூறப்படுகிறது.

கிறிஸ்தவ மரபின்படி ஒருவர் இறந்த பிறகு அடுத்த ஐந்து வருடங்களில் ஏதாவது ஒரு அதிசயம் அவரது பெயரில் நிகழ்ந்தால் "ஆசிர்வதிக்கப்பட்டவர்" என்ற பட்டம் வழங்கப்படும். இங்கு பெர்ஸா வாழ்வில் நிகழ்ந்த அதிசயம் அன்னை தெரசா ஆசிர்வதிக்கப்பட்டவர் என்ற பட்டம் பெற காரணமாக இருந்தது.
அக்டோபர் 19, 2003-ல் வாடிகன் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் 3 இலட்சம் பேர் முன்னிலையில் சுமார் இரண்டரை மணி நேர விழா நடைபெற்றது. இரண்டாம் ஜான் பால் விழாவிற்கு வருகை தந்திருந்தார். அவரது முன்னிலையில் தெரசாவுக்கு "ஆசிர்வதிக்கப்பட்டவர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.
புனிதர் பட்டம் : அவரது பெயரால் இரண்டாவது அதிசயம் ஒன்று நிகழ வேண்டும். அது நிகழ்ந்து விட்டால் புனிதர் பட்டம் உறுதி செய்யப்படும். அதற்காக காத்திருப்போம்.
"அன்னை தெரசா" நிச்சயம் புனிதராவார். அவர் புனிதராகும் இப்பூவுலகில் அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்வது பெரும்பேறு அல்லவா?

 

மனத்தைக் கவர்ந்த அன்னை தெரேசாவின் வரிகள்:


1) இறக்கத்தான் பிறந்தோம். இருக்கும்வரை இரக்கத்தோடு இருப்போம்.

2) அன்பு சொற்களில் அல்ல; வாழ்க்கையில் வடிவம் பெறுகின்றது.

3) குற்றம் காணத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது.

4) வெறுப்பவர் யாராக இருந்தாலும் நேசிப்பவர் நீங்களாக இருங்கள்.

5) வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல; பிறர் மனதில் வாழும் வரை.

6) அன்புதான் உன் பலவீனம் என்றால் அதுவே உன் ஆற்றல்.

7) மனம்விட்டுப் பேசுங்கள், அன்பு பெருகும்.

8) தண்டனைத் தர தாமதி; மன்னிக்க மறுசிந்தனை வேண்டாம்.

9) உனக்கு உதவியோரை மறக்காதே.

10) உன்னை நேசிப்பவரை வெறுக்காதே.

11) உன்னை நம்பியவரை ஏமாற்றாதே.

12) சிறியவற்றில் நம்பிகைக்கு உரியவராய் இருப்பதே உன் பேராற்றல்.

13) ஆனந்தம் ஆற்றல் மிக்கது.

14) புன்முறுவலோடு உதவி செய்வோரை ஆண்டவர் அன்பு செய்கின்றார்.

15) நோய்களிலே மிகக் கொடிய நோய் அடுத்தவர்மீது அக்கறையற்று இருப்பதே.

16) உண்மையான அன்பு வலிக்கும், வதைக்கும், வெறுமையாக்கும்.

17) பிறர் நலனுக்காக வாழாத வாழ்வு வாழ்வல்ல.

18) செபமே நம் இல்லங்களை இணைக்கும் காரை.

19) தீர்ப்பிடத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் கிடைக்காது.

20) தனிமையே நவீனத் தொழுநோய்.

21) அவமானங்களின் வழியேதான் தாழ்ச்சியைக் கற்றுக் கொள்கின்றோம்.

22) உதவும் கரங்கள்இ செபிக்கும் உதடுகளைவிட மேலாவை.

23) எவ்வளவு கொடுக்கின்றோம் என்பதல்ல; எந்த மனநிலையில் கொடுக்கின்றோம் என்பதே முக்கியம்.

24) குற்றமற்றவரைப் பிறரின் அபிப்பிராயங்கள் பாதிக்காது.

25) ஒரு சிறு புன்முறுவலின் ஆற்றலை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.

26) புன்னகையே அன்பின் ஆரம்பம்.

27) உன் உதவியால் உலகை நீ குணமாக்குகின்றாய்.

28) நீ வாழஇ பிறரை அழிப்பதே மிகப் பெரிய வறுமை.

29) உதவி செய்; அஃது உன்னை வருத்தும்வரை உதவி செய்.

30) வாழ்க்கையால் நற்செய்தியை அறிவி; வார்த்தையால் அல்ல.

31) வெற்றிக்காகச் செபிக்காதே; பற்றுறுதிக்காகச் செபி.

32) உலகின் பிளவு, குடும்பத்தில் ஆரம்பிக்கின்றது.

33) புன்னகையே அமைதியின் ஆரம்பம்.

34) உன் வெற்றி அல்ல, முயற்சியே கடவுளுக்குத் தேவை.

 


"பிறரன்பு என்பது, ஒவ்வொரு நாளும், நாம் சந்திக்கும், சமூகத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட நிலையில் வாழும் மனிதர்களுக்கு மிக நெருக்கமாகச் செல்வதாகும்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இவ்வெள்ளியன்று வெளியாயின.
மேலும், வருகிற ஞாயிறன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நடைபெறவுள்ள அன்னை தெரேசா அவர்களின் புனிதர்பட்ட நிகழ்வை முன்னிட்டு, இவ்வெள்ளியன்று, பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசினார். இப்புனிதர் பட்டத்திற்கான வேண்டுகையாளர் அருள்பணி  Brian Kolodiejchuk..

அன்னை தெரேசா அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டுக்கு மிகவும் பொருத்தமான புனிதர் எனவும், அன்னையவர்கள் சொல்லியது போன்று, நம் அகவாழ்வு வறுமையை, கல்கத்தாவின் இதயம் என்று சொல்லலாம் எனவும் கூறினார் அருள்பணி Kolodiejchuk..
பிறருக்கு இரக்கத்தையும், மன்னிப்பையும் காட்டுவதற்கு, அன்னையவர்கள் எப்போதும் தயாராக இருந்தார் என்றும், மன்னிப்பதற்கு, மிகுந்த அன்பும், மறப்பதற்கு மிகுந்த தாழ்மையும் தேவை என அன்னை தெரேசா கூறியிருக்கிறார் என்றும் தெரிவித்தார் அருள்பணி Kolodiejchuk..
அன்னை தெரேசா அவர்கள் அனுபவித்த இருளான நேரங்கள், ஆண்டவரின் இரக்கத்தின் மாபெரும் வல்லமையில், தொடர்ந்து மிகுந்த நம்பிக்கை கொண்டு, அதனைச் சார்ந்திருக்கச் செய்தன என்றும் கூறினார் அருள்பணி Kolodiejchuk..

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

                     
 
 
 

அன்புப் பணியைத் தொடரவே அன்னை மரி இங்கெழுந்தாள்