தமிழ் திருப்பயணிகள் ஆன்மீகப்
பணி மையம் உங்களை
வரவேற்கின்றது
மரியன்னை உங்களை அழைக்கிறாள்.........
இறை சித்தத்தை செயல்படுத்தும் மாபெரும் சக்தி மரியன்னை. அவள் மக்களின்
அன்னை. அன்னையிடம் வரம் கேட்க அல்ல, அன்னையையே வரமாகக் கேட்க,
லூர்து நகர் திருத்தலம் செல்வோம். குடும்பமாய்க் கூடி ஜெபமாலை
சொல்வோம். தூய ஆவியின் வரங்களும், அன்னை மரியின் பரிந்துரையும்
கிடைத்திட திருப்பலியில் விசேடமாக
தொடர்ந்து அனைவருக்காகவும் லூர்து அன்னை
மூலமாக ஜெபிக்கிறோம்.
தினம்
ஒரு நல்வார்த்தை
நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்: உங்களைத்
துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். மத்தேயு 5:44
இன்று திருவருகைக் காலத்திற்குள் காலடி எடுத்து வைக்கின்றோம்.
இக்காலம் இறைமகனின் வருகைக்காக நம்மை தயாரிக்கின்ற காலம்.
விழித்திருந்து நம் மீட்பரைச் சந்திக்க நம்மை அழைக்கின்ற காலம்.
இருளின் பிடியில் இருந்தும், அடிமையின் பிடியில் இருந்தும்,
அழிவில் இருந்தும், துன்பத்தில் இருந்தும் காத்துக் கொள்ள, மானிட
மகனைச் சந்திப்பதற்காக அவரை நம் உள்ளத்தில் ஏற்று, அவரையே அணிந்து
கொள்ள அழைக்கும் அன்பின் காலம். இஸ்ராயேல் மக்கள் மெசியாவின்
வருகைக்காகக் காத்திருந்ததுபோல், நாமும் காத்திருப்போம்.
விளக்குகளுடன் அன்று இயேசு மொழிந்த பத்துத் தோழியர் உவமையில்
அக்கன்னியர் காத்திருந்தனர். அவர்களைப்போல் நாமும் விளக்குகள்
ஏற்றி மணமகனின் வருகைக்காக நம்மையே தயார் செய்வோம்.
திருவருகைக்கால
மெழுகுவர்த்திகளை ஏற்றும் முறை:
முதல் வாரம்:
இதுதான் நம்பிக்கையின் மெழுகுவத்தி. இது மீட்பரின் வருகைக்காகக்
காத்திருந்த நம் முதுபெரும் தந்தையர்களான
- ஆபிரகாம், ஈசாக்கு,
யாக்கோபு, ஆகியோரைக் குறிக்கிறது.
"கவனமாய் இருங்கள், விழிப்பாய் இருங்கள்,
ஏனெனில் அந்நேரம் எப்போது வருமென்று உங்களுக்குத் தெரியாது"
- மாற்கு: 13-33.
ஆண்டவர் நம்மை விழிப்புடன் காத்திருக்கும்படி கேட்கிறார். ஆனால்
நாமோ உலக கவலைகளிலும், உலக கவர்ச்சிகளிலும் நம் மனங்களை செலுத்தி
வாழ்ந்து வருகிறோம். இனியாவது "ஆண்டவரே பேசும் உம் அடியான்
கேட்கிறேன் என்று கூறி அவரின் வருகைக்காக நம்மையே
ஆயத்தப்படுத்துவோம்.
செபம்:
இம்மானுவேலே! இயேசுக்கிறீஸ்துவே! எல்லா நாடுகளும் எதிர்பாக்கும்
ஆண்டவரே! அனைத்து மக்களின் மீட்பரே! வந்து எங்களிடையே தங்கும்.
இரண்டாம் வாரம்:
இதுதான் அமைதியின் மெழுகுவத்தி. மீட்பரின் வருகை, வரும்காலம்,
அவரின் இயல்புகள் போன்ற அனைத்துச் செய்திகளையும் தந்த
இறைவாக்கினர்களான
- எசாயா எரேமியா, தானியேல் போன்றோரைக்
குறிக்கிறது.
"மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு
நெருங்கிவிட்டது"
- மத்தேயு 3:1
இறைவாக்கினர்கள் அனைவரும் மீட்பரின் வருகைக்காக, நாம் எவ்வகை
தயாரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என எடுத்துரைத்துள்ளனர். நாம்
அனைத்தையும் அறிந்திருந்தும், நம் வலுவின்மையாலும்,
விசுவாசக்குறைவினாலும் மீண்டும், மீண்டும் ஆண்டவரை விட்டு விலகிச்
செல்கின்றோம். இனியாவது அவரில் நம்பிக்கை கொண்டு அவரை நாடி
தேடுவோம்.
செபம்:
ஓ இயேசுக்கிறீஸ்துவே! அனைத்து உலகங்களின் அரசரே ! எல்லா
இருதயங்களின் மகிழ்ச்சியே ! விரைவில் வந்து உம் மக்களை மீட்டருளும்
மூன்றாம் வாரம்;
இதுதான் மகிழ்ச்சியின் மெழுகுவர்த்தி. இது மீட்பரின் முன்னோடியான
புனித திருமுழுக்கு யோவானைக் குறிக்கிறது.
" பாலை நிலத்தில் குரல் ஓன்று முழங்குகிறது.
ஆண்டவருக்காக வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவருக்காக பாதையை
செம்மையாக்குங்கள்.
பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும். மலை, குன்று யாவும்
தாழ்த்தப்படும். கோணலானவை நேராக்கப்படும். கரடுமுரடானவை
சமதளமாக்கப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக்
காண்பர்." - லூக்: 3:4-6
நாம் மீட்பின் காலத்தை நெருங்கிவிட்டோம். திருமகன் கிறீஸ்துவை
அறச்செயல்கள் நிறைந்த வாழ்வினால் சந்திக்க ஆவலுடன்
காத்திருக்கின்றோம்?.
அவர் வரும்போது அவரது வலப்பக்கம் நிற்கவும், விண்ணரசை அடையவும்
ஏற்புடையவர்களாவோம்.
செபம்:
உலகத்தின் ஒளியே! உண்மையின் சுடரே! இயேசுக்கிறீஸ்துவே! வந்து எம்மை
தேற்றும்.
நான்காம் வாரம்:
இது அன்பின் மெழுகுவத்தி. அன்னை மரியாவையும் அவர் கணவர் புனித
சுசையையும் குறிக்கிறது.
"அவர் பெரியவராய் இருப்பார். உன்னத கடவுளின்
மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய
கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோப்பின் குடும்பத்தின்மீது
என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது"
- லூக்: 1:32-33
மீட்பரைச் சந்திக்க அன்னை மரியாவும் புனித சூசையும் எவ்வாறு
ஆயத்தமாய் இருந்தனரோ, அவர்களைப்போல் நம்மை மீட்கவந்த பாலனை வரவேற்க,
நம்மை தயார்படுத்த இதுவே இறுதி வாய்ப்பு. அன்னையின்
எதிர்நோக்கையும், புனித சூசையின் நேர்மைத்தனத்தையும் கொண்டு வாழ
முயல்வோம்.
செபம்:
உலகைக் கடந்த ஞானமே! உண்மை கடவுளின் வார்த்தையே! இயேசுக்கிறீஸ்துவே!
வந்து மீட்பின் பாதையை எமக்கு காட்டும்.
இன்று வீட்டிலும், நாட்டிலும் நடக்கும்
பிரச்சனைகளுக்கு காரணம் குடும்ப ஜெபமாலை இப்போது இல்லாமல்
போனதுதான். கடந்த 20 ஆண்டுகளாகத்தான் இவ்வளவு பெரிய அழிவுகள்,
அதுவும் நாம் கேள்வியே பட்டிராத அழிவுகள் நடப்பது இப்போதுதான்.
கத்தொலிக்கத்திலிருந்து பிரிந்து 100 சபைகளுக்கும்
மேல் வந்ததிற்கும் காரணம் குடும்ப ஜெபமாலை
நின்றதுதான்.
முன்பெல்லாம் நம் கத்தொலிக்க குடும்பங்கள் இரவு ஜெபமாலை
சொல்லாமல் தூங்க மாட்டார்கள். வீட்டில் இருப்பவர்கள்
எல்லாம் ஒன்றாக அமர்ந்து ஜெபமாலை சொல்வார்கள். பல வீடுகளில்
நற்செய்தி வாசித்து ஜெபமாலை ஜெபிப்பார்கள். இந்த ஜெபமாலை
கத்தொலிக்க குடும்பங்களை மட்டுமல்ல உலகையே
காப்பாற்றிக் கொண்டிருந்தது.
ஏனென்றால் ஜெபமாலை தனிப்பட்ட ஒருவருக்காக ஜெபிக்கப்படுவதில்லை.
"பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே "பாவிகளாய்
இருக்கிற எங்களுக்காக "எங்களை சோதனையில் விழவிடாதேயும்"
என்று நாம் ஜெபிக்கும் போது உலகத்தில் உள்ள அத்தனை மக்களுக்காகவும்
ஜெபிக்கிறோம். "
ஏன் குடும்ப ஜெபமாலை நின்று போனது? வீட்டிற்குள்
நுழைந்த டி.வி என்ற சாத்தான்தான் அதிலும் தனியார் சானல்கள்
வந்த பின்புதான் இத்தகையை இழிவான நிலையை நாம் சந்தித்துள்ளோம்.