Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் வின்சென்ட் தே பவுல் ✠(St. Vincent de Paul)
  L"image contient peut-tre : 4 personnes, personnes souriantes, personnes assises  
நினைவுத் திருநாள் : (செப்டம்பர்/ Sep 27)
✠ புனிதர் வின்சென்ட் தே பவுல் ✠(St. Vincent de Paul)

குரு, சபை நிறுவனர் :
(Priest and founder)

பிறப்பு : ஏப்ரல் 24, 1581
குயேன், காஸ்கனி, ஃபிரான்ஸ் அரசு
(Guyenne and Gascony, Kingdom of France)

இறப்பு : செப்டம்பர் 27, 1660 (வயது 79)
பாரிஸ், ஃபிரான்ஸ் அரசு
(Paris, Kingdom of France)

ஏற்கும் சமயம் :
கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)

முக்திபேறு பட்டம் : ஆகஸ்ட் 13, 1729
திருத்தந்தை 13ம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)

புனிதர் பட்டம் : ஜூன் 16, 1737
திருத்தந்தை 12ம் கிளமென்ட்
(Pope Clement XII)

முக்கிய திருத்தலங்கள் :
புனித வின்சென்ட் தெ பவுல் சிற்றாலயம்,
(St. Vincent de Paul Chapel)
95, ரியூ டி செவ்ரெஸ், பாரிஸ், ஃபிரான்ஸ்
(95, Rue de Sèvres, Paris, France)

நினைவுத் திருவிழா : செப்டம்பர் 27

பாதுகாவல் :
தொண்டு நிறுவனங்கள்; மருத்துவமனைகள்; குதிரைகள்; மருத்துவமனைகள்; தொழுநோய்; தொலைந்து போன பொருட்கள்; மடகாஸ்கர் (Madagascar); கைதிகள்; ரிச்மோன்ட் (Richmond); வர்ஜீனியா (Virginia); ஆன்மீக உதவி; புனித வின்சென்ட் தெ பவுல் சபைகள்; தன்னார்வலர்கள்; தூய இருதய பேராலய தயாரிப்பு (Sacred Heart Cathedral Preparatory); Vincentian Service Corps.

புனிதர் வின்சென்ட் தே பவுல், ஏழைகளுக்கு தொண்டு செய்வதற்காக தம்மையே அர்ப்பணித்துக்கொண்ட ஒரு ஃபிரெஞ்ச் கத்தோலிக்க திருச்சபையின் குரு ஆவார். இவர் கத்தோலிக்க திருச்சபையிலும், ஆங்கிலிக்கன் ஒன்றியத்திலும் புனிதராக போற்றப்படுகிறார். இவருக்கு 1737ம் ஆண்டு, புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இவர் தமது இரக்கம், மனத்தாழ்ச்சி, தாராள குணம் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றவர் ஆவார். மேலும், இவர் "டிரம்பெட்" எனும் இசைக் கருவிகளின் பெரிய தூதர் (Great Apostle of Trumpets) என்றும் அழைக்கப்படுகிறார். ஐக்கிய அரசு நாடுகளில் (UK) ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் நாள், தூய வின்சென்ட் தினத்தை தேசிய விடுமுறை நாளாக அனுசரிக்கின்றனர்.

வாழ்க்கை குறிப்பு :
புனித வின்சென்ட் ஃபிரான்ஸ் நாட்டில் காஸ்கனியின் பாவ்ய் பகுதியில், விவசாயக் குடும்பத்தில் 1581ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை பெயர் "ஜீன்" (Jean) ஆகும். தாயாரின் பெயர், "பெட்ரான்ட்" (Bertrande de Moras de Paul) ஆகும். இவருக்கு "ஜீன்" (Jean), "பெர்னார்ட்" (Bernard), "கேயான்" (Gayon) என்று மூன்று சகோதரர்களும், "மேரி மற்றும் மேரி-கிளாடின்" (Marie and Marie-Claudine) என்று இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.

ஃபிரான்சின், "டாக்சில்" (Dax) கலை, இலக்கியம் கற்ற இவர், 1597ம் ஆண்டு, "டௌலோஸ் பல்கலையில்" (University of Toulouse) இறையியல் படிப்பை தொடங்கினார். 1600ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 23ம் தேதி, தமது பத்தொன்பது வயதில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். அக்காலத்தில் குருத்துவ அருட்பொழிவு பெற குறைந்தபட்ச வயது இருபத்துநான்கு ஆகும். ஆனால், வின்சென்டின் பங்குத்தந்தை நியமனத்தை எதிர்த்து ரோம நீதிமன்றத்தில் (Court of Rome) வழக்கு தொடரப்பட்டது. வழக்கை எதிர்க்க விரும்பாத வின்சென்ட், பங்குத்தந்தை நியமன பதவி விலகினார். டௌலோஸிலேயே தங்கி தமது கல்வியை தொடர்ந்தார். இறையியலில் இளநிலை பட்டம் பெற்றார். 1605ம் ஆண்டு, மார்செய்ல் பகுதிக்கு திரும்பும் வழியில் "பார்பரி" (Barbary pirates) கடற்கொள்ளையரால் பிடித்துச்செல்லப்பட்டு, துனீசியா (Tunis) பகுதியில் அடிமையாக விற்கப்பட்டார்.

முதலில் ஒரு மீனவ எஜமானிடம் விற்கப்பட்ட வின்சென்ட், மீனவ பணிகள் இவருக்கு பொருந்தாமையால் மருத்துவர் ஒருவருக்கு விற்கப்பட்டார். ஒரு பயணத்தின்போது இவரது எஜமான் மரணமடைந்தார். பின்னர், மீண்டுமொருமுறை வின்சென்ட் விற்கப்பட்டார். இம்முறை இவரை வாங்கிய எஜமான் ஒரு முன்னாள் ஃபிரான்சிஸ்கன் சபையைச் சார்ந்த கத்தோலிக்க குரு ஆவார். ஃபிரான்ஸ் நாட்டின் "நைஸ்"( Nice) எனும் பிராந்தியத்தைச் சேர்ந்த இவரது பெயர், "கில்லாம் கௌடியர்" (Guillaume Gautier) ஆகும். முன்னர் ஒருமுறை இஸ்லாமியர்களிடம் அடிமையாக பிடிபட்டிருந்த இவர், அடிமைத் தளையிளிருந்து விடுபடுவதற்காக இஸ்லாம் மதத்தை தழுவினார். இவர் அங்கிருந்த மலைப் பகுதிகளில் தமது மூன்று மனைவியருடன் வசித்துவந்தார். கத்தோலிக்க விசுவாசம் பற்றின தகவல்களை வின்சென்ட் மூலம் அறிந்துகொண்ட அவரது இரண்டாம் மனைவி, அவரை மீண்டும் கிறிஸ்தவ மறையை தழுவ வற்புறுத்தினார். இதனால் மனம் மாறிய அவர்கள் அனைவரும் பத்து மாதங்கள் பொருத்திருந்தனர். பின்னர் சிறு படகு ஒன்றின் மூலம் அங்கிருந்து தப்பித்து, ஃபிரான்ஸ் நாட்டின் "ஐகேஸ் மோர்டேஸ்" (Aigues-Mortes) பகுதியில் 1607ம் ஆண்டு, ஜூன் மாதம், 28ம் தேதி இறங்கினார்கள்.

ஃபிரான்சுக்கு திரும்பியதும், ரோம் சென்ற வின்சென்ட், தனது படிப்பைத் தொடர்ந்தார். 1609ம் ஆண்டு, ஒரு பணி நிமித்தம் அரசர் 4ம் ஹென்றியிடம் ஃபிரான்ஸ் அனுப்பப்பட்டார். அங்கு அவர் மார்கரெட் டி வலோயிசின் குருவாக பணியாற்றினார். சிறிது காலம் க்ளிச்சியின் பங்கு குருவாக இருந்துவிட்டு, 1612ம் ஆண்டு முதல் புகழ்பெற்ற கான்டி குடும்பத்துக்கு குருவாக பணியாற்றினார். இவர் டி கான்டி சீமாட்டியின் ஒப்புரவாளராகவும், ஆன்ம இயக்குனராகவும் இருந்தார்; மேலும் அந்த சீமாட்டியின் உதவியோடு, பண்ணையில் பணிபுரிந்த விவசாயிகளுக்கு இயேசுவைப் பற்றி போதித்தார்.

1622ம் ஆண்டு, வின்சென்ட் தே பவுல் போர் கப்பலில் குருவாக நியமிக்கப்பட்டார்; அங்கு இவர் போர் கைதிகளுக்கும் நற்செய்தி பணியாற்றினார்.

1625ம் ஆண்டு, வின்சென்ட் மறைப்பணி சபை என்ற துறவற சபையை நிறுவினர். மறைபரப்பு பணியை மேற்கொள்ளும் இச்சபையின் குருக்கள் பொதுவாக வின்சென்டியர்கள் அல்லது லாசரிஸ்டுகள் என்று அழைக்கப்படுகின்றனர். 1633ல் லூயிஸ் தே மரிலாக்கின் வழிகாட்டுதலோடு, பிறரன்பு புதல்விகள் என்ற பெண்களுக்கான துறவற சபையை இவர் நிறுவினார். இவர் ஜான்செனிச பேதகத்திற்கு எதிராகவும் போராடினார். (பேதகம் என்பதற்கு தவறான கிறிஸ்தவ போதனை என்பது பொருள்).

பிறரன்பு பணிகளில் அதிக ஆர்வம் காட்டிய வின்சென்ட் தே பவுல், 1660ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 27ம் தேதி மரணம் அடைந்தார். வின்சென்ட் தே பவுலின் கருணை, பணிவு, தாராள குணம் ஆகியவை அவருக்கு புகழைத் தேடித் தந்திருக்கின்றன.

 
================================================================================
தூய வின்சென்ட் தே பவுல் (செப்டம்பர் 27)

நிகழ்வு

வின்சென்ட் தே பவுல் சிறுவனாக இருந்தபோது குடும்பத்தில் நிலவிய வறுமையின் காரணமாக படிக்க முடியாமல் ஆடுமாடுகளை மேய்க்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்படி இருந்தாலும் அவர் தன்னுடைய பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்து ஆடு மாடுகளை மேய்த்து வந்தார். ஒரு சமயம் வின்சென்ட் தே பவுலின் ஊரில் வாழ்ந்த கோமத் என்ற நீதிபதி அவரிடம் இருந்த ஞானத்தையும் புத்திக்கூர்மையையும் பார்க்க நேர்ந்தது. உடனே அந்த நீதிபதி வின்சென்ட் தே பவுலின் தந்தையைச் சந்தித்து அவரிடம், "உம்முடைய பையன் ஆடு மாடுகளை மேய்க்க வேண்டியவன் அல்ல, அவன் பள்ளிக்குச் சென்று படிக்கவேண்டியவன், தயவு செய்து எப்படியாவது அவனை படிக்கவையுங்கள். இல்லையென்றால் ஒரு மிகச் சிறந்த அறிவாளியை நீங்கள் இழக்க நேரிடும்" என்று புத்திமதி சொல்லிவிட்டுச் சென்றார். உடனே வின்சென்ட் தே பவுலின் தந்தை தன்னிடம் இருந்த ஆடு மாடுகளை விட்டு, அவரை பள்ளியில் படிக்க வைத்தார்.

வாழ்க்கை வரலாறு

வின்சென்ட் தே பவுல் 1581 ஆம் ஆண்டு, ஏப்ரல் 24 ஆம் நாள் பிரான்சு நாட்டில் உள்ள காஸ்காணி என்னும் ஊரில் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இருந்தனர். வின்சென்ட் தே பவுலின் வீட்டில் கடுமையான வறுமை நிலவியது. இத்தகைய வறுமையான சூழ்நிலையில் வின்சென்ட் தே பவுலால் படிக்க முடியவில்லை. எனவே, அவர் வீட்டில் இருந்த ஆடு மாடுகளை மேய்த்து குடும்பத்தாரின் கஷ்டத்தைப் போக்க ஓரளவு வழி செய்தார். அப்போதுதான் அவர் கோமத் என்ற நீதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் படிக்க அனுப்பப்பட்டார். வின்சென்ட் தே பவுலிடம் இருந்த ஞானமும் அறிவும் அவரை மிகச் சிறந்த படிப்பாளியாக மாற்றியது. இந்த சமயத்தில் அவருக்கு பெருய்ல் (Berulle) என்பரின் நட்பு கிடைத்தது. அவர்தான் வின்சென்ட் தே பவுலை குருவாகப் படிக்கச் சொன்னார். அவருடைய அறிவுறுத்தலில் பேரில் வின்சென்ட் தே பவுல் குருவாகப் படித்து, 1600 ஆம் ஆண்டு, அதாவது தன்னுடைய 19 ஆம் வயதிலே குருவாக மாறினார்.

குருவாக மாறிய பிறகு, வின்சென்ட் தே பவுல் பாரிஸ் நகருக்கு மிக அண்மையில் இருந்த கிளிசி என்னும் ஒரு கிராமப் பங்கில் பங்குக் குருவாக நியமிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சரியான பொருளாதார வசதி கிடைக்காததால் நிறையவே கஷ்டப்பட்டார். அப்போதுதான் டிகோண்டி என்று செல்வச் சீமாட்டி தன்னுடைய கணவருடன் சேர்ந்து, "ஏழை எளிய மக்களுக்கு மத்தியில் பணி செய்ய முன்வருவோருக்கு நாங்கள் உதவத் தயாராக இருக்கின்றோம்" என்ற ஓர் அறிவிப்பை விடுத்தார். அந்த அறிவிப்பைக் கேட்ட வின்சென்ட் தே பவுல் ஏழை எளிய மக்களுக்கு மத்தியில் பணி செய்யத் தான் முன்வருவதாக வாக்குக் கொடுத்தார். உடனே அந்த செல்வச் சீமாட்டி தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் வின்சென்ட் தே பவுலின் பெயருக்கு மாற்றி எழுதினார். இதனால் அவருடைய பொருளாதாரக் கஷ்டம் சற்றுக் குறைந்தது.

ஒருசமயம் அந்தச் செல்வச் சீமாட்டியிடம் கடன்பட்டிருந்த ஒருவரிடம் பணத்தை வசூலிப்பதற்காக அவர் கப்பலில் சென்றபோது துருக்கி நாட்டைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் அவரை கடத்திச் சென்று டூனீஸ் நகரில் இருந்த ஒரு முகமதியரிடம் அடிமையாக விற்றார்கள். அவர் வின்சென்ட் தே பவுலை வேறு நபரிடம் விற்றார். அவரோ வின்சென்ட் தே பவுலை ஒரு கிறிஸ்தவரிடம் விலைக்கு விற்றார். அந்தக் கிறிஸ்தவரோ ஆன்மீகக் காரியங்களில் அதிக நாட்டமில்லாது இருந்தார். ஆனால் அவருடைய மனைவியோ கடவுள்மீது அதிக நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தார். அந்தப் பெண்மணியிடத்தில் வின்சென்ட் தே பவுல் திருப்பாடல்களையும், வேறு சில கிறிஸ்தவப் பாடல்களையும் பாடிக் காட்டினார். இது அவருக்குப் பிடித்துப்போக அவர் அவருடைய கணவரிடம் வின்சென்ட் தே பவுலுக்ககப் பரிந்து பேச, அம்மனிதர் வின்சென்ட் தே பவுலை விடுதலை செய்து அனுப்பினார். வின்சென்ட் தே பவுல் அங்கிருந்து வெளியேறி நான்காம் ஹென்றி என்ற மன்னரிடம் தஞ்சம் அடைந்தார். அங்கு சிறுது காலம் ஆன்ம ஆலோசகராக இருந்துவிட்டு பின்னர் பாரிஸ் நகருக்குத் திரும்பி வந்தார்.

பாரிஸ் நகருக்குத் திரும்பி வந்த பிறகு வின்சென்ட் தே பவுல் பற்பல பணிகளை செய்யத் தொடங்கினார். அனாதைகள், கைவிடப்பட்ட முதியவர்கள் போன்றோரைப் பராமரிப்பதற்காக அனாதை இல்லங்களைத் தொடங்கினார். அதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொன்னார். ஒப்புரவு அருசாதனங்களை வழங்கி மக்களை ஆன்மீக பாதையில் வழி நடத்திச் சென்றார். அவர் ஒவ்வொரு நாள் இரவு வேளையிலும் பாரிஸ் நகரைச் சுற்றிப் பார்க்கச் செல்வார். அப்போது பாதையோரங்களில் கிடக்கும் அனாதைக் குழந்தைகளைத் தூக்கி வந்து, அவர்களை தன்னுடைய அனாதை இல்லங்களில் சேர்த்து பராமரித்து வந்தார்.

1626 ஆம் ஆண்டில் ஒருநாள், வின்சென்ட் தே பவுல் தான் செய்து வரும் பணிகளைத் தனி ஒரு மனிதராகச் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, மூன்று பேர் கொண்ட சபையை ஏற்படுத்தி அதற்கு நற்செய்தி அறிவிப்பு சபை (Congregation of the Mission (CM) என்று பெயரிட்டார். பின்னர் அந்த சபையின் வழியாக பல்வேறு பணிகளைச் செய்யத் தொடங்கினார். இதற்கிடையில் தூய பிரான்சிஸ் சலேசியாரின் நட்பு கிடைத்தது. அந்த நட்பு மிகவும் ஆழமாக வளர்ந்தது. எந்தளவுக்கு என்றால் பிரான்சிஸ் சலேசியாரின் இறப்புக்குப் பிறகு அவர் நடத்தி வந்த Sisters of Visitation என்ற சபையை இவர் தான் தலைமை ஏற்று நடத்தும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு வின்சென்ட் தே பவுல் பெண்களுக்கு என்று "அறப்பணி மகளிர் சபை"யும் ஆண்களுக்கு என்று "ஏழைகளின் பணியாளர் சபை"யையும் தோற்றுவித்தார். இச்சபைகளின் மூலமாக வின்சென்ட் தே பவுல் ஆற்றிய பணிகள் ஏராளம்.

எப்போதும் சிலுவையைத் தன்னுடைய கையில் ஏந்தியிருக்கும் வின்சென்ட் தே பவுல், இந்த சிலுவையில் அறையப் பட்ட இயேசுவின் துணையால் எப்படிப்பட்ட பணிகளையும் செய்ய முடியும் என்று குறிப்பிடுவார். இப்படி ஏழைகளில் சிரிப்பில் இறைவனைக் கண்டு, அவர்களுக்குத் தொண்டு வந்த வின்சென்ட் தே பவுல் 1660 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் இந்த மண்ணுலக வாழ்வைத் துறந்தார். 1737 ஆம் ஆண்டு இவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

திருச்சபையில் நடைபெறும் இரக்கச் செயல்களுக்கு பாதுகாவலராக விளங்கும் தூய வின்சென்ட் தே பவுலின் விழாவைக் கொண்டாடும் இன்று அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

மக்கள்பணியே இறைப்பணி

வின்சென்ட் தே பவுல் மக்களுக்குப் பணிசெய்வதில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டார். குறிப்பாக ஏழை எளியவர், அனாதைகள், கைவிடப்பட்டோர் இவர்களுடைய வாழ்வு ஏற்றம் காண தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார்.

1648 ஆம் ஆண்டிலிருந்து 1653 ஆம் வரை பிரான்சில் நடைபெற்ற உட்நாட்டுக் கலவரத்தில் நிறையப் பேர் பாதிக்கப்பட்டார்கள். ஏராளமான பேர் தங்களுடைய வீடுகளையும், உறவுகளையும் இழந்தது தவித்தார்கள். அத்தகைய தருணத்தில் மக்களுக்கு உணவு கொடுப்பதிலிருந்து மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்வது வரை வின்சென்ட் தே பவுலே பேருதவியாக இருந்தார். அவரால் பயன்பற்றவர்கள் ஐம்பதாயிரத்திற்கும் மேல் என்று சொல்லப்படுகின்றது. இது போன்று பல்வேறு பணிகளைச் செய்தது வந்த வின்சென்ட் தே பவுல் அடிக்கடி சொல்லக்கூடிய வசனம், "உயர்ந்த நோக்கத்துடன் சிந்தித்துச் செயல்படுவார்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டர்கள்" என்பதாகும். அவர் உயர்ந்த நோக்கத்துடன் சிந்தித்துச் செயல்பட்டார் அதனால் அவர் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டார். நாமும் தூய வின்சென்ட் தே பவுலைப் போன்று ஏழைகளின் வாழ்வை உயர்த்தவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு சிந்தித்துச் செயல்படும்போது கடவுளால் ஆசிர்பெற்ற மக்களாக மாறமுடியும் என்பது உறுதி.

நாம் ஏழை எளியவர்மீது உண்மையான அக்கறைகொண்டு வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் "நாம் உண்டு, நம்முடைய குடும்பம் உண்டு என்ற சுயநல வட்டத்திற்குள் முடங்கிப்போய்விடுகின்றோம். இந்நிலை மாறவேண்டும், எல்லாரும் எல்லா வளமும் பெற நாம் கருவியாக இருந்து செயல்படவேண்டும்.

இந்த வேளையில் பத்திரிகையில் வந்த ஒரு நிகழ்வை நம்முடைய கவனத்தில் கொள்வோம்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் நகரைச் சார்ந்தவர் ஸ்மிதா தண்டி என்ற பெண்மணி. இவரது தந்தை சிவக்குமார் தண்டி, சத்தீஸ்கர் மாநில காவல்துறையில் காவலராக பணியாற்றியாவர். ஒரு விபத்தில் சிக்கிய சிவக்குமாரின் உடல்நிலை மோசமாக அவர் கட்டாய ஓய்வு பெற்றுக்கொண்டார். அதேசமயம், ஸ்மிதாவும் காவல்துறையில் பணியாற்ற விரும்பியதால் 2013 ஆம் ஆண்டு காவலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான பயிற்சியில் ஸ்மிதா ஈடுபட்டிருந்தபோது, அவருடைய தந்தை சிவக்குமாரின் உடல்நிலை மேலும் மோசமானது. அப்போது அவரை குணப்படுத்தத் தேவையான பணம் ஸ்மிதாவிடம் இல்லாததால் அவர் தனது தந்தையை இழக்க வேண்டியதாயிற்று.

இந்நிலையில் தனது நிலை வேறு எந்த ஏழைக்கும் வரக்கூடாது எண்ணிய ஸ்மிதா, நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து கடந்த 2015 ஆம் ஆண்டு முகநூல் கணக்கு ஒன்றைத் தொடங்கினார். இதில் நட்பு வட்டாரத்தை வளர்த்து ஏழைகளுக்கு உதவத் தொடங்கினார். ஸ்மிதாவின் கோரிக்கையை ஏற்று பலரும் நிதியுதவி செய்யத் தொடங்கினார்கள். அதன்மூலம் ஸ்மிதா பல்வேறு மனிதர்களுக்கு உதவத் தொடங்கினார். ஸ்மிதா மூலம் உதவி பெற்ற, பிலாய் நகரின் தினேஷ் பிரதாப் சிங், "எனது 13 வயது மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஆட்டோ ஓட்டும் என்னிடம் சிகிச்சைக்கான பணம் இல்லை. ஸ்மிதா செய்யும் உதவிகள் பற்றி அறிந்து அவரை சந்தித்தேன். அவர் நேரில் வந்து பார்த்துவிட்டு உதவ முன்வந்தார். எனது மகளுக்கு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணம் அடைந்துள்ளார்" என்கிறார்.

இதனிடையே ஸ்மிதா செய்துவரும் உதவிகளைப் பாராட்டிய சத்தீஸ்கர் காவல்துறை உயரதிகாரிகள், அவரை பிலாய் மாவட்ட சமூக இணையதளப் புகார் பிரிவில் பணியமர்த்தி உள்ளனர். இந்தப் பணியுடன் ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்யும் பணியையும் ஸ்மிதா தொடர்ந்து வருகிறார். இதனால், சத்தீஸ்கர் மாநிலத்தையும் தாண்டி வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியிலும் ஸ்மிதா பிரபலமாகி இருக்கின்றார் (நவம்பர் 4, 2016, இந்து பத்திரிக்கை).

ஏழைகளுக்கு உதவும் நல்ல மனம் நம்மிடத்தில் இருந்தால்போதும் நாம் மேலும் மேலும் ஆசிர்வதிக்கப்படுவோம் என்பதற்கு மேலே சொல்லப்பட்ட ஸ்மிதாவின் வாழ்வே நமக்குச் சான்றாக இருக்கின்றது. ஆகவே, தூய வின்சென்ட் தே பவுலின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று ஏழை எளிய மக்கள்மீது இரங்கி, அவர்களுடைய வாழ்வு வளம்பெற நம்முடைய வாழ்வை அர்ப்பணிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா