Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ரோசலியா ✠(St. Rosalia)
   
நினைவுத் திருநாள் : (செப்டம்பர்/ Sep 04)
✠ புனிதர் ரோசலியா ✠(St. Rosalia)

 கன்னியர் : (Virgin)

பிறப்பு : கி.பி. 1130
பலேர்மோ, சிசிலி அரசு
(Palermo, Kingdom of Sicily)

இறப்பு : கி.பி. 1166
மவுண்ட் பெலேக்ரினோ, சிசிலி அரசு
(Mount Pellegrino, Kingdom of Sicily)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர்பட்டம் : ஜூலை 15, 1625
திருத்தந்தை 8ம் அர்பன்
(Pope Urban VIII)

பாதுகாவல் :
பலேர்மோ, மான்ட்டேரி, கலிஃபோர்னியா (Monterey, California) ஆகிய இடங்களைச் சேர்ந்த இத்தாலிய மீனவர்கள்

நினைவுத் திருநாள் : செப்டம்பர் 4

இத்தாலியின் பலெர்மோ நகரைச் சேர்ந்த புனிதர் ரோசலியா, ஒரு கத்தோலிக்க புனிதர் ஆவார்.

"சார்லமக்னேயின்" (Charlemagne) வம்சாவளியைச் சேர்ந்த ஒரு உன்னத நார்மன் (Norman) குடும்பத்தில் ரோசலியா பிறந்தார்.

"சினிபால்ட் (Sinibald) என்பவரின் மகளான இவரின் இதயம் இளம் வயதிலிருந்தே இறைவனை மட்டுமே நாடியது. விவிலிய வார்த்தைகளால் தன் இதயத்தை நிரப்பினார். இறைவன் மட்டுமே தன் வாழ்வின் மையமாக இருக்க வேண்டுமென்று எண்ணினார். இறை இயேசுவின் பாதையில் தன் வாழ்வை அமைத்தார்.

தன் வீட்டைவிட்டு வெளியேறி, "பெல்லேக்ரினோ" (Mount Pellegrino) மலையிலுள்ள ஒரு குகைக்கு சென்று தனிமையில் வாழ்ந்தார். பாரம்பரியப்படி, அவரை இரண்டு சம்மனசுக்கள் வழிநடத்தி குகைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. உலக வாழ்விலிருந்து தன்னை மறைத்து வாழ்ந்த இவர், இதயம் என்னும் அவரின் வீட்டில் கடவுளுக்கு மட்டுமே இடம் கொடுத்து வாழ்ந்தார்.

அவர் வசித்த குகையின் சுவர்களில், "சினிபால்டின் மகளான ரோசலியா எனும் நான், என் ஆண்டவரான இயேசு கிறிஸ்துவின் அன்புக்காக வாழ்வதென்று தீர்மானித்துள்ளேன்" என்று எழுதப்பட்டிருந்தது.

ரோசலியா, அந்த குகையிலேயே தனிமையிலே கி.பி. 1166ம் ஆண்டு மரித்தார்.

கி.பி. 1624ம் ஆண்டு, பலெர்மோ நகரில் பிளேக் நோய் பரவியது. இத்துன்ப காலத்தில், ஒரு நோயாளிப்பெண்ணுக்கும், ஒரு வேட்டைக்காரனுக்கும் காட்சியளித்த புனிதர் ரோசலியா, தமது எலும்புகள் கிடக்கும் இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார். தமது எலும்புகளை நகருக்குள் ஊர்வலமாகக் கொண்டுவர கூறினார். மலையேறிச் சென்ற வேட்டைக்காரன், அவர் கூறியது போலவே அங்கே எலும்புகள் கிடக்கக் கண்டான். அவர் கூறியதுபோலவே மும்முறை அவரது எலும்புகளை ஊருக்குள் ஊர்வலமாக கொண்டு சென்றதும் பிளேக் நோய் முற்றிலுமாக நீங்கியது. இச்சம்பவத்தின் பிறகு, புனிதர் ரோசலியா பலெர்மோ நகரின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டார். இவரது எலும்புகள் காணப்பட்ட குகையில் இவரது நினைவுச் சரணாலயம் அமைக்கப்பட்டது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா