Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருளாளர் கிளாடியோ க்ரன்ஸோட்டோ ✠(Blessed Claudio Granzotto)
     
நினைவுத் திருநாள் : (செப்டம்பர்/ Sep 06)
✠ அருளாளர் கிளாடியோ க்ரன்ஸோட்டோ ✠(Blessed Claudio Granzotto)

 மறைப்பணியாளர் :
(Religious)

பிறப்பு : ஆகஸ்ட் 23,1900
சாண்டா லூசியா டி பியாவ், ட்ரெவிசோ, இத்தாலி அரசு
(Santa Lucia di Piave, Treviso, Kingdom of Italy)

இறப்பு : ஆகஸ்ட் 15, 1947
பதுவை, இத்தாலி
(Padua, Italy)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : நவம்பர் 20, 1994
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள் : செப்டம்பர் 6

பாதுகாவல் : சிற்பிகள், கலைஞர்கள்

அருளாளர் கிளாடியோ க்ரன்ஸோட்டோ ஒரு இத்தாலிய இளநிலை ஃபிரான்சிஸ்கன் சபை (Order of Friars Minor) துறவியும், இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் புகழ்பெற்ற சிற்பியும் ஆவார். அவரது பணிகள், அவரது மத வெளிப்பாட்டிற்கான ஒரு வழியாக இருந்தன. மற்றவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்க சிற்பக் கலையை பயன்படுத்தினார்.

"ரிக்கார்டோ க்ரன்ஸோட்டோ" (Riccardo Granzotto) எனும் இயற்பெயர் கொண்ட இவரது தந்தையாரின் பெயர், "ஆன்டனியோ க்ரன்ஸோட்டோ" (Antonio Granzotto) ஆகும். தாயாரின் பெயர், "ஜியோவன்னா ஸ்கொட்டோ" (Giovanna Scott) ஆகும். ஆகஸ்ட் 23,1900 அன்று பிறந்த இவருக்கு செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி திருமுழுக்கு கொடுத்தனர். இவரது திருமுழுக்குப் பெயர், "ரிக்கார்டோ விட்டோரியோ" (Riccardo Vittorio) ஆகும். ஏழை விவசாயிகளான தமது பெற்றோரின் ஒன்பது குழந்தைகளில் கடைக்குட்டியாக பிறந்த இவர், வெகு சிறு வயதிலேயே விவசாய பணிகளை செய்ய ஆரம்பித்தார். காரணம், இவருக்கு ஒன்பதே வயதாகும் வேளையில் (1909) இவரது தந்தை இறந்து போனார். மிகவும் ஏழ்மை காரணமாக இவர் கடினமாக உழைத்தார். இவரது மூத்த சகோதரரான "ஜியோவன்னி" (Giovanni) ஒரு தொழிலாளியாக பணியாற்றினார். இவரது பக்தியான பெற்றோர்கள், தமது பிள்ளைகளுக்கு தங்களுடைய விசுவாசத்தைப் பற்றின வலுவான அறிவை அளித்திருந்தனர்.

1915ம் ஆண்டு, இவரது பதினைந்து வயதில் முதலாம் உலகப் போர் (World War I) வெடித்தது. தவிர்க்க இயலா காரங்களால் கிளாடியோ "இத்தாலிய ஆயுத படைகளில்" (Italian armed forces) சேர்ந்து போர் முனைக்கு சென்றார். அங்கே அவர், 1918ம் ஆண்டு போர் முடியும்வரை மூன்று வருடங்கள் பணியாற்றினார்.

இராணுவத்திலிருந்து வெளியே வந்த அவர், தமது கல்வியைத் தொடர்ந்தார். அத்துடன், தமது ஓவியம் மற்றும் சிற்பம் போன்ற துறைகளில் தமது திறமையை வளர்த்துக்கொண்டார். வெனிஸ் (Venice) நகரிலிருந்த மென்கலைகளுக்கான (Academy of Fine Arts) பள்ளியில் சேர்ந்து கற்று 1929ல் பட்டம் பெற்றார்.

பின்னர், 1933ம் ஆண்டு, இளம் ஃபிரான்சிஸ்கன் துறவிகள் (Order of Friars Minor) சபையில் இணைந்தார். அங்கே அவர் குருத்துவம் பெறுவதில் ஆர்வம் காட்டாமல் துறவு சபையின் உறுதிப்பிரமாணம் எடுக்காத (Lay brother) மறைப்பணியாளராக தமது வாழ்வை கழித்தார்.

தமது இறை விசுவாசத்தை தாம் கற்ற கலைகளின் மூலம் வெளிப்படுத்திய கிளாடியோ, ஜெப வாழ்விலும் ஏழைகளின் சேவையிலும் ஆர்வம் காட்டினார். பெரும்பாலும் முழு இரவுகளிலும் அவர் நற்கருணை ஆண்டவரின் முன்னே ஜெபித்தலில் கழித்தார்.

1945ம் ஆண்டு, அவருக்கு மூளையில் ஒரு கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவே அவரது மரணத்துக்கு காரணமாக இருந்தது. 1947ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 15ம் நாளன்று, "தூய கன்னி மரியாளின் விண்ணேற்பு பெருவிழாவன்று (Feast of the Assumption) மரித்த இவர், "சியாம்போ" (Chiampo) என்னுமிடத்திலுள்ள துறவிகளின் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா