Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருளாளர் ஃபிரடெரிக் ஒஸானம் ✠(Bl. Frédéric Ozanam)
   
நினைவுத் திருநாள் : (செப்டம்பர் / Sep 07)
✠ அருளாளர் ஃபிரடெரிக் ஒஸானம் ✠(Bl. Frédéric Ozanam)
 நிறுவனர் : (Founder)

பிறப்பு : ஏப்ரல் 23, 1813
மிலன், இத்தாலி அரசு
(Milan, Kingdom of Italy)

இறப்பு : செப்டம்பர் 8, 1853 (வயது 40)
மார்செய்ல்ஸ், ஃபிரான்ஸ்
(Marseilles, France)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம் : ஆகஸ்ட் 22, 1997
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள் : செப்டம்பர் 7

ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தாத மதிப்புள்ள ஒரு மனிதனை ஒரு மனிதன் நம்புகிறான். ஃபிரடெரிக், பாரிஸ் நகரின் ஏழை மக்களுக்காக நன்கு சேவையாற்றினார். மேலும், அவர் நிறுவிய "செயிண்ட் வின்சென்ட் டி பால் சொசைட்டி" மூலம், உலகின் ஏழைகளுக்கு சேவை செய்வதற்காக மற்றவர்களை ஈர்த்தார். அவர் தொடங்கிவைத்த சேவை இன்றும் தொடர்கிறது.

ஃபிரடெரிக், ஒரு ஃபிரஞ்சு இலக்கிய அறிஞரும், வழக்கறிஞரும், பத்திரிகையாளரும் சமூக நீதி வழக்கறிஞருமாவார். இவர், சக மாணவர்களுடன் இணைந்து, "கருணையின் மாநாடு" (Conference of Charity) என்றோர் அமைப்பினை நிறுவினார். இவ்வமைப்பு, பின்னாளில் "புனிதர் வின்சென்ட் டி பாலின் சமூகம்" (Society of Saint Vincent de Paul) என்றழைக்கப்பட்டது. 1997ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 22ம் தேதி, திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அவர்கள் இவருக்கு முக்திபேறு பட்டமளித்தார்.

"ஜீன் மற்றும் மேரி ஒஸானம்" (Jean and Marie Ozanam) ஆகிய பெற்றோருக்கு 1813ம் ஆண்டு, ஏப்ரல் 23ம் தேதி பிறந்த ஃபிரடெரிக், தமது பெற்றோருக்குப் பிறந்த 14 குழந்தைகளில் ஐந்தாவது குழந்தை ஆவார். 14 பேரில், இவருடன் சேர்த்து மூன்று பேர் மட்டுமே முதிர்வயதுவரை வளர்ந்தனர். மீதமுள்ள அனைவரும் சிறுவயதிலேயே மரித்துப் போயினர்.

ஆரம்பத்தில் யூத இனத்தைச் சேர்ந்த இவரது குடும்பம், ஃபிரான்ஸ் நாட்டின் மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள "லியோன்" (Lyon) நகரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே குடியேறினர். மிலன் நகரில் பிறந்த இவர், லியோன் நகரில் வளர்ந்தார்.

தமது இளம் வயதில் தமது மதம் சம்பந்தமாக நிறைய சந்தேகங்கள் கொண்டிருந்த ஃபிரடெரிக்குக்கு, புத்தகங்களை படிப்பதுவும், செபமும் பதிலளிக்கவில்லை. ஆனால், தமது "லியான்ஸ்" கல்லூரி (Lyons College) ஆசிரியரான அருட்பணி "நொய்ரோட்" (Father Noirot) அவர்களுடன் கொண்டிருந்த நீண்ட கால கலந்துரையாடல்களில் அவற்றில் தெளிவு பெற்றார்.

ஃபிரடெரிக் இலக்கியம் கற்க விரும்பினார். ஆனால், ஒரு மருத்துவரான அவருடைய தந்தை, அவர் ஒரு வழக்கறிஞராக விரும்பினார். ஃப்ரெடெரிக் அவரது தந்தையின் விருப்பத்திற்கு இணங்கினார். 1831ம் ஆண்டு பாரிஸ் நகர் வந்த இவர், "சொர்போன்" (University of the Sorbonne) பல்கலையில் இணைந்து சட்டம் பயின்றார். அங்கே சில பேராசிரியர்கள், தமது விரிவுரைகளின்போது, கத்தோலிக்க திருச்சபையை கிண்டல் செய்வதுண்டு. ஆனால், அப்போதெல்லாம் அவர்களை எதிர்த்து, கத்தோலிக்க திருச்சபைக்கு சாதகமாக ஃபிரடெரிக் பேசுவதுண்டு.

ஃபிரடெரிக் ஏற்பாடு செய்த ஒரு "கலந்துரையாடல் கிளப்" (Discussion Club) அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த கிளப்பில், கத்தோலிக்கர்கள், நாத்திகர்கள் மற்றும் கடவுள் உண்டு என்பதிலும், இல்லை என்பதிலும் நம்பிக்கை இல்லாதவர்கள் (Agnostics) ஆகியோர் அன்றாட பிரச்சினைகள் பற்றி விவாதங்கள் புரிவதுண்டு. ஒருமுறை, மக்களின் உயர்பண்புகளில் கிறிஸ்தவம் பற்றி ஃபிரடெரிக் பேசி முடித்ததும், ஒரு உறுப்பினர் எழுந்து, "திரு ஒஸானம், நாம் வெளிப்படையாக பேசுவோம்; நமது விவாதம் மிகவும் முக்கியமானதாகவும் இருக்கட்டும்" என்றார். "உங்களுக்குள் இருக்கும் விசுவாசத்தை நிரூபிப்பதற்கு பேச்சு தவிர வேறு என்ன இருக்கிறது" என்று கேட்டார்.

இந்த கேள்வியால் காயமுற்ற ஃபிரடெரிக், தமது வார்த்தைகளுக்கான நடவடிக்கைகளுக்கு ஒரு களம் வேண்டுமென விரைவிலேயே தீர்மானித்தார். இவர் தமது நண்பர் ஒருவருடன் பாரிஸ் நகரின் குடியிருப்புகளுக்கு அடிக்கடி சென்று அங்குள்ள மக்களுக்கு தம்மால் இயன்ற அளவு உதவ ஆரம்பித்தார். விரைவில் "தூய வின்சென்ட் டி பவுலின்" (Saint Vincent de Paul) ஆதரவின் கீழ் தனிநபர்களுக்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு குழு ஃப்ரெடெரிக்கை சுற்றி உருவாக்கப்பட்டது.

கத்தோலிக்க விசுவாசத்தை விளக்கவும், அதன் படிப்பினைகளை எடுத்துரைக்கவும் மிகச் சிறந்த பேச்சாளர் அவசியம் என்பதை உணர்ந்த ஃபிரடெரிக், பாரிஸ் மறைமாவட்ட பேராயரையும் நம்ப வைத்தார். அந்நாளில் ஃபிரான்ஸ் நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளரான "டொமினிக்கன் அருட்தந்தை" (Dominican Father) "ஜீன்-பேப்டிஸ்ட் லகோர்டேய்ர்" (Jean-Baptiste Lacordaire) என்பவரை "நோட்ரே டேம் பேராலயத்தில்" (Notre Dame Cathedral) தவக்கால தொடர் (Lenten series) பிரசங்கங்களை பிரசங்கிப்பதற்காக நியமிக்க பேராயரை தூண்டி, நியமிக்க வைத்தார். இது, அதிக அளவில் மக்களை கலந்துகொள்ள வைத்ததுடன், இதனை ஒரு வருடாந்திர நிகழ்வாக நடத்தவும் பாரம்பரியமாகவும் அமைந்தது.

"சொர்போன்" (University of the Sorbonne) பல்கலையில் சட்ட படிப்பை முடித்த இவர், "லியோன்" பல்கலையில் (University of Lyons) சட்டம் பயிற்றுவித்தார். இலக்கியத்தில் முனைவர் பட்டமும் வென்றார். 1841ம் ஆண்டு, ஜூன் மாதம் 23ம் தேதி "அமலி" (Amelie Soulacroix) என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர், "சொர்போன்" (Sorbonne) திரும்பி, இலக்கியம் கற்பித்தார். மாணவர்கள் ஒவ்வொருவரின் திறமையையும் சிறந்த முறையில் வெளிப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்த ஃபிரடெரிக், மதிப்புமிக்க விரிவுரையாளரானார். இதற்கிடையே, "தூய வின்சென்ட் டி பவுலின்" (Saint Vincent de Paul) சமூகம் ஐரோப்பா முழுதும் பரவியது. ஃபிரடெரிக் மட்டுமே சுமார் 25க்கும் மேற்பட்ட மாநாடுகளை நடத்தினார்.

1846ம் ஆண்டு, ஃபிரடெரிக்கும் அவரது மனைவியும், அவர்களது மகள் "மேரியும்" (Marie) இத்தாலி சென்றனர். அங்கே அவர் தமத்து உடல் நலனுக்காக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டார். அடுத்த வருடம் நாடு திரும்பினார். 1848ம் ஆண்டின் புரட்சியால், முழு பாரிஸ் நகரும் "தூய வின்சென்ட் டி பவுலின்" சமூகத்தின் உதவிகளை எதிர்பார்த்தது. 275,000 மக்கள் வேலையற்றவர்களாய் போனார்கள். ஃபிரான்ஸ் அரசு, ஏழைகளுக்கு சேவை செய்ய உதவுமாறு ஃபிரடெரிக்கையும் அவரது உதவியாளர்களையும் அழைத்தது. ஐரோப்பா முழுதுமிருந்த "தூய வின்சென்ட் டி பவுலின்" சமூக உறுப்பினர்கள் அழைக்கப்பட்டனர்.

பின்னர், ஃபிரடெரிக் ஒரு செய்திப்பத்திரிகை தொடங்கினார். ஏழை மக்களின் பாதுகாப்புக்காக அவர் எழுத ஆரம்பித்தார். அவரது எழுத்துக்கள் சக கத்தோலிக்கர்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை. ஏழைகளின் பசியும் வியர்வையுமே மனித குலத்தை மீட்கும் தியாகம் ஆகும் என்று ஃபிரடெரிக் கூறினார்.

ஃபிரடெரிக், தமது மோசமான உடல்நிலை காரணமாக, தமது மனைவி மற்றும் மகளுடன் மீண்டும் 1852ம் ஆண்டு இத்தாலி சென்றார். 1853ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 8ம் தேதி இவர் மரித்தார்.
=================================================================================

அருளாளரான பிரெடரிக் ஓசானாம் (செப்டம்பர் 07)

எரிகின்ற விளக்காயிரு. அப்போதுதான் மற்ற விளக்குகளை ஏற்றி வைக்கலாம்" தாகூர். 

வாழ்க்கை வரலாறு

பிரெடரிக் ஓசானாம், பிரான்ஸ் நாட்டில் உள்ள லயோன்ஸ் நகரில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில், 1815 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் பக்தியான குடும்பம். அதனால் இவர் சிறுவயதிலிருந்தே பக்தி நெறியில் வளர்ந்துவந்தார்.

இவருடைய காலத்தில் பிரஞ்சுப் புரட்சியின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. பலர் திருச்சபைக்கு எதிராகச் செயல்படுவதை இவர் கண்கூடாகப் பார்த்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இவர் பாரிசுக்குச் சென்று, அங்கு சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஒருசமயம் இவருக்கு அறிமுகமான ஒருவர் இவரிடத்தில் வந்து, éகிறிஸ்தவர்கள் வெறுமனே இறைவனிடத்தில் ஜெபிப்பதும் வழிபடுவதுமாகவே இருக்கிறார்கள், அவர்கள் நற்செயலில் இறங்கமாட்டார்களா?" என்று கேட்டார். இக்கேள்வி பிரெடரிக் ஓசானாமை வெகுவாகப் பாதித்தது. அன்றே முடிவெடுத்தார். தன்னுடைய வாழ்க்கையையும் ஒவ்வொரு கிறிஸ்தவவருடைய வாழ்க்கையையும் எப்படி அர்த்தமுள்ளதாக மாற்றுவது என்று தீவிரமாக யோசித்தார். அவருடைய தீவிரமான யோசனைப் பின், முதலில் பாரிஸ் நகரில் இருக்கக்கூடிய சேரிவாழ் மக்களுக்கு உதவி செய்யலாம் என்று முடிவெடுத்தார்.

தான் மேற்கொண்ட தீர்க்கமான முடிவுக்கு ஏற்றாற்போல், அவர் சேரிவாழ் மக்களிடத்தில் சென்று பணியாற்றினார். அவருடைய இந்த சேவைக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. பலரும் அவர் ஆற்றிவந்த பணியில் தங்களையும் சேர்த்துக்கொண்டார்கள். அப்படி உருவானதுதான் வின்சென்ட் தே பவுல் சபையாகும். இன்றைக்கு இந்த சபையானது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி அற்புதமான ஒரு சேவையைச் செய்துகொண்டிருக்கின்றது. 
பிரெடரிக் ஓசானாம் தன்னோடு இருப்பவர்களிடம் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள், கிறிஸ்தவர்கள் யாவரும் தங்களுடைய இதயக் கதவை மட்டுமல்லாமல், பணப்பையையும் திறந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும்". இவருடைய வார்தைகளைக் கேட்டு, பலரும் ஏழை எளிய மக்களுக்கு தாராளமாக உதவி செய்ய முன்வந்தார்கள்.

பிரெடரிக் ஓசானாம் மக்கள் பணியை இறைப்பணியோடு செய்து வந்தாலும் தன்னுடைய மனைவிக்கு ஒரு நல்ல கணவராக, முன் மாதிரியான கணவராக இருந்து வந்தார். 

இவருடைய அயராத மக்கள் பணி இவருடைய உடல் நலனைக் குன்றச் செய்தது. அதனால் இவர் 1853 ஆம் ஆண்டு, அதாவது தன்னுடைய 38 வயதில் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1997 ஆம் ஆண்டு தூய திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் அருளாளர் பட்டம் கொடுக்கப்பட்டது. 

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

அருளாளரான பிரெடரிக் ஓசானாமின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. எளியவருக்கு இரங்கும் நல்ல மனம்

அருளாளரான பிரெடரிக் ஓசானாமிடமிருந்து நாம் கண்டு வியக்கக்கூடிய மிக முக்கியமான பண்பு, அவர் எளியவரைக் கண்டு இரங்கியதுதான். ஒவ்வொருவரும் அவரைப் போன்று எளியவரைக் கண்டு இரங்கினால், இந்த உலகில் இல்லாதவர் என்ற நிலையே இல்லாது போய்விடும். அப்படிப்பட்ட ஓர் உயர்ந்த, உன்னத நிலைக்கு நாம் வந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைக்கு எளியவரைக் கண்டு, இரங்குகின்ற மனநிலை பலருக்கு இல்லாது போனாலும், ஒருசிலர் நல்ல மனதோடு ஏழை எளியவருக்கு உதவுவதையும் அதுவும் எந்தவொரு விளம்பரமும் இல்லாமும் உதவுவதையும் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம், அவர்களைக் குறித்துக் கேள்விப்படுகின்றோம்.

பெங்களூருவில் இருக்கும் ஒரு தொழிலதிபர் குளிர்காலங்களில் உல்லன் போர்வைகள், மப்ளர்கள் மற்றும் சுவெட்டர்களைத் தனது காரில் ஏற்றுக்கொண்டு செல்வார். நகரில் ஆங்காங்கே தெருவில் குளிரால் நடுங்கிப் படுத்துக்கொண்டிருக்கும் ஏழைகள் அருகில் சென்று வைத்துவிட்டு வருவார். காலையில் எழுந்து பார்க்கும் அந்த ஏழைகள் தங்களுக்கு முன்பாக இருக்கும் உல்லன் போர்வைகள், மப்ளர்கள் சுவெட்டர்கள் இவற்றைப் பார்த்துவிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். தங்களுக்கு கொடுக்கும் அந்த மனிதரை வாயாரக வாழ்த்துவார்கள். இப்படியும் உதவுகின்ற நல்ல மனிதர்கள் இந்த சமூகத்தில் இருக்கின்றார்கள் என்பதை நினைத்துப் பார்க்கின்றபோது பெருமையாக இருக்கின்றது. 

நாம் ஏழைகளுக்கு இரங்கி உதவி செய்கின்றபோது, ஆண்டவர் நம்மை நிச்சயம் கடைக்கண் நோக்குவார் என்பது உறுதி. ஆகவே, தூய பிரெடரிக் ஓசானாமின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழைகளுக்கு இரங்குகின்ற நல்ல மனதைக் கொண்டு வாழ்வோம். ஒருவர் மற்றவருக்கு இயன்ற உதவிகளைச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். 

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா