Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்கா ✠ (St.Stanislaus Kostka)
   
நினைவுத் திருநாள் : நவம்பர் 13
✠ புனிதர் ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்கா ✠ (St. Stanislaus Kostka)

இயேசு சபை குரு மாணவர் : (Jesuit Novice)

பிறப்பு : அக்டோபர் 28, 1550
ரோஸ்ட்கோவோ, போலந்து (Rostkowo, Poland)

இறப்பு : ஆகஸ்ட் 15, 1568 (வயது 17)
ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள் (Rome, Papal States)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

அருளாளர் பட்டம் : அக்டோபர் 19, 1605
திருத்தந்தை ஐந்தாம் பவுல் (Pope Paul V)

புனிதர் பட்டம் : டிசம்பர் 31, 1726
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் (Pope Benedict XIII)

பாதுகாவல் :
போலந்து, இயேசு சபை குரு மாணவர்கள், உடைக்கப்பட்ட எலும்புகளுக்கு எதிராக, இறுதி அருட்சாதனங்கள்

புனிதர் ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்கா, "இயேசு சபையைச்" (Society of Jesus) சேர்ந்த ஒரு "போலிஷ் குரு மாணவர்" (Polish novice) ஆவார். தமது பதினேழாம் பிறந்த தினத்தன்று ரோம் நகரிலுள்ள இயேசுசபையில் இணைந்த இவர், தமது மரணம் பற்றி, தாம் இறப்பதற்கு சில நாட்களுக்குமுன்னர் முன்னறிவித்ததாக கூறப்படுகிறது.

இவருடைய தந்தை "ஜான் கோஸ்ட்கா" (Jan Kostka) போலந்து அரசின் அதிகார சபை அங்கத்தினர் ஆவார். தாயார், "மல்கோர்ஸட்டா க்ரிஸ்கா" (Małgorzata Kryska) ஆவார். தமது பெற்றோரின் ஏழு குழந்தைகளில் இவர் இரண்டாவது குழந்தை ஆவார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் "வியென்னா" (Vienna) நாட்டில் தொடங்கப்பட்ட "இயேசு சபை கல்லூரியில்" (Jesuit college) கல்வி பயில்வதற்காக 1564ம் ஆண்டு இவர் தமது சகோதரருடன் அனுப்பப்பட்டார். அப்போது அவரின் வயது 14. தமது அன்பான பாங்கு மட்டுமல்லாது, உற்சாக குணம் மற்றும் மத ஈடுபாடு ஆகியவற்றால் தமது மூன்றாண்டு கால மாணவ பருவத்தில், பிற மாணவர்களின் கவனத்தைக் கவரக் கூடியவராக திகழ்ந்தார்.

தனது இளம்வயதிலேயே இயேசு தன்னுடன் உரையாடுவதை உணர்ந்தார். இயேசு தன்னை துறவற வாழ்வை வாழ அழைப்பதாக உணர்ந்ததால் துறவற இல்லம் ஒன்றை நாடி சென்றார். இயேசுவின் குரலுக்கு மட்டுமே ஸ்தனிஸ்லாஸ் செவிமடுத்தார்.

இவர் 14ம் வயதில் முதன்முறையாக பெற்ற திருக்காட்சியில், பிச்சைக்காரனைப்போல் உடை உடுத்தி, வியன்னாவை விட்டு, ஆக்ஸ்பூர்க் வருமாறு கூறிய குரலைக் கேட்டார். அக்குரல் கூறியதை செய்ததன் பேரில் "டில்லிங்கன்" (Dillingen) வந்து சேர்ந்தார் ஸ்தனிஸ்லாஸ். ஒரு மாதகாலம் அங்கேயே தங்கியிருந்த அவர், அங்கிருந்து ரோமில் உள்ள இயேசு சபையின் "தூய அந்திரேயா" (Novitiate of Saint Andrew) புகுமுக துறவு மடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பயண களைப்பால் நலிந்திருந்த அவரை, அச்சபையின் தலைவராக இருந்த "தூய ஃபிரான்சிஸ் போர்ஜியா" (Saint Francis Borgia) மடத்தில் சேர்த்துக்கொள்ள நீண்ட நாட்கள் தாமதித்தார். பின்னர் அவர், ஸ்தனிஸ்லாசை அவரது 17ம் பிறந்த நாளன்று தன் சபையில் நவத்துறவகத்தில் சேர்த்தார்.

ஸ்தனிஸ்லாஸ் மிகக் குறைந்த நாட்களிலேயே புகுமுக குரு மாணவர்களாலும், குருக்களாலும் கவரப்பட்டார். அன்பு செய்யப்பட்டார். இவர் எப்போதும் மகிழ்ச்சியானவராகவும், உடனடியாக எதையும் எதிர்பாராமல் தேவையில் இருப்போருக்கு குறிப்பறிந்து உதவி செய்பவராகவும் இருந்தார். இவருக்கு மிக அருமையான எதிர்காலம் இருக்கும் என்று உடன் இருந்தவர்கள் அனைவரும் அவ்வப்போது கூறி வந்தனர். ஆனால் அனைத்தும் அதற்கு எதிர்மாறாக நடைபெற்றது.

தூய "லாரன்சின்" (Saint Lawrence) நினைவுத் திருநாள் மாலையில் (ஆகஸ்ட் 10), கடுமையான காய்ச்சலால் தாக்குண்டார். தமது மரணம் சமீபித்திருப்பதாகவும், அது என்று நிகழும் என்றும், முன்னறிவித்தார். அவரைத் தாக்கிய காய்ச்சலை குணப்படுத்தமுடியாமல் அவர் முன்னறிவித்த நாளிலேயே (ஆகஸ்ட் 15) இறந்து போனார். இவர் இறப்பதற்கு முந்தின நாள், நாளை நான் இறந்துவிடுவேன் என்பதை தன்னுடன் இருந்தவர்களை நோக்கி கூறினார். அவர் சொன்னவாறே இறைவனடி சேர்ந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா