Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

  ✠ புனிதர் மார்கரெட் ✠ (St. Margaret of Scotland)
   
நினைவுத் திருநாள் : நவம்பர் 16
 ✠ புனிதர் மார்கரெட் ✠(St. Margaret of Scotland)

*ஸ்காட்லாந்து அரசி :  (Queen of Scotland)

*பிறப்பு : கி.பி. 1045 :     ஹங்கேரி அரசு  (Kingdom of Hungary)

*இறப்பு : நவம்பர் 16, 1093
எடின்பர்க், ஸ்காட்லாந்து அரசு
(Edinburgh Castle, Edinburgh, Kingdom of Scotland)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)

*புனிதர் பட்டம் : 1250
திருத்தந்தை நான்காம் இன்னொசென்ட் (Pope Innocent IV)

*முக்கிய திருத்தலம் :
டுன்ஃபெர்ம்லின் மடம், ஃபிஃப், ஸ்காட்லாந்து (Dunfermline Abbey, Fife, Scotland)

*பாதுகாவல் :
ஸ்காட்லாந்து (Scotland), டுன்ஃபெர்ம்லின் (Dunfermline), ஃபிஃப் (Fife), ஷெட்லேண்ட் (Shetland), அரசியின் பயணப்படகு (The Queen's Ferry), ஆங்கிலோ-ஸ்காட்டிஷ் உறவுகள் (Anglo-Scottish relations)

புனிதர் மார்கரெட், "ஆங்கிலேய இளவரசர் எட்வர்ட்" (English prince Edward the Exile) மற்றும் "அகதா" (Agatha) ஆகியோரின் மகள் ஆவார். ஆங்கிலேய இளவரசியும் (English princess), ஸ்காட்டிஷ் அரசியுமான (Scottish queen) இவர், "ஸ்காட்லாந்தின் மார்கரெட்" (Margaret of Scotland) என்றும், "வெஸ்செக்ஸின் மார்கரெட்" (Margaret of Wessex) என்றும் அறியப்படுகிறார். சில சமயம், "ஸ்காட்லாந்தின் முத்து" (The Pearl of Scotland) என்றும் அழைக்கப்படுகிறார்.

ஹங்கேரி அரசில் பிறந்த இவரும் இவரது குடும்பத்தினரும் 1057ம் ஆண்டு, இங்கிலாந்து இராச்சியத்துக்குத் திரும்பினார்கள். மார்கரெட் 1057ம் ஆண்டிலிருந்து தன் மாமாவின் கண்காணிப்பில் இங்கிலாந்தில் வளர்ந்தார். 1066ம் ஆண்டு "நார்மன்" இங்கிலாந்தை வெற்றி கொண்டதும், (Norman conquest of England) இவரின் 20ம் வயதில் ஸ்காட்லாந்திற்கு திரும்பிச் சென்றார். அங்கே, 1070ம் ஆண்டின் இறுதியில், ஸ்காட்லாந்தின் அரசர் 3ம் மால்கோம் (King Malcolm III of Scotland) என்பவரிடம் பழகி, பின்னர் அவரையே திருமணம் செய்து, ஸ்காட்லாந்தின் அரசியானார். அவருடைய கணவர், அவரை கிறிஸ்தவ மறையை தழுவக்கூடாது என்று கட்டளையிட்டார். ஆனால் அவர் தன் கணவரின் பேச்சை மறுத்து, மேலும் தன் கிறிஸ்தவ விசுவாசத்தில் வேரூன்றி இருந்தார்.

பக்தியுள்ள பெண்ணான அரசி, ஏழை மக்களின் வாழ்வில் அதிக அக்கறை கொண்டு வாழ்ந்தார். அவர்களுக்கு பலவிதங்களில் உதவினார். ஏழைகளை தன் இதயத்தில் சுமந்து உதவினார். தான் ஓர் அரசியாக இருந்தபோதும், துறவிகளைப் போலவே, ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். தவறாமல் நோன்பிருந்து செபித்து பல நலன்களை பெற்றார். பலவிதங்களிலும் ஒறுத்தல் செய்து வாழ்ந்தார். அநேக தொண்டு பணிகளைச் செய்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒரு போரில் (Battle of Alnwick) கலந்துகொள்ள சென்ற இவரது கணவரான அரசர் "மூன்றாம் மால்கானும்" (Malcolm III) அவரது இருபத்தியிரண்டே வயதான மூத்த மகன் "எட்வர்டும்" (Edward) 13 நவம்பர் 1093 அன்று கொல்லப்பட்டனர். ஐம்பது வயதுகூட பூர்த்தியாகாத மார்கரெட் ஏற்கனவே தொடர் நோன்பு மற்றும் ஒருத்தல்களினால் பலவீனமாக இருந்தார். தமது கணவரும் மூத்த மகனும் மரித்துப் போன செய்தியைக் செவியுற்ற அவர், மூன்றாம் நாளே (1093ம் ஆண்டு, நவம்பர் மாதம், 16ம் நாள்) மரித்தார். 1250ம் ஆண்டு, திருத்தந்தை "நான்காம் இன்னசன்ட்" (Pope Innocent IV) இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.


ஸ்காட்லாந்து தூய மார்கரெட் 

"மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்" (லூக் 12:48)

வாழ்க்கை வரலாறு

மார்கரெட், 1045 ஆம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டில் இருந்த அரச குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை எட்வர்ட், தாய் ஆகத்தா என்பவர் ஆவார். எல்லா வசதிகளும் வாய்க்கப்பெற்ற மார்கரெட்டின் வாழ்க்கை தொடக்கத்தில் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், கனூத் என்பவன் இங்கிலாந்து நாட்டின்மீது தாக்குதல் நடத்தியபோது, அவனுடைய தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், மார்கரெட்டின் தந்தை அவரையும் அவருடைய தாய் மற்றும் அவருடன் பிறந்தவர்களையும் கூட்டிக்கொண்டு ஹங்கேரி நாட்டிற்குப் பயணமானார். இதனால் சில காலத்திற்கு மார்கரெட் ஹங்கேரியில் வளரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

1057 ஆம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டில் நிலைமை சரியானதால், மார்கரெட்டின் தந்தை எல்லாரையும் கூட்டிக்கொண்டு இங்கிலாந்துக்குப் பயணமானார். ஆனால் துரதிஷ்டம் அவரைச் சும்மா விடவில்லை. 1066 ஆம் ஆண்டு, நார்மன் படைவீரர்கள் இங்கிலாந்தைத் தாக்கி, எட்வர்டைக் கொன்றுபோட்டதால், மார்கரெட்டின் தாய் ஆகத்தா பிள்ளைகள் அனைவரையும் கூட்டிக்கொண்டு மீண்டுமாக ஹங்கேரிக்குப் பயணமானார். ஆனால், அவர்கள் பயணமான கப்பல் மிகப்பெரிய சூறாவளியில் மாட்டிக்கொண்டு, ஸ்காட்லாந்தில் போய் நின்றது. இதனால் மார்கரெட்டின் குடும்பம் ஸ்காட்லாந்து மன்னர் மூன்றாம் மால்கம் என்பவரிடத்தில் தஞ்சம் அடையவேண்டிய நிலை ஏற்பட்டது. 

மன்னர் மூன்றாம் மால்கமின் அரண்மனையில் மார்கரெட் ஞானத்தோடும் அறிவுத் தெளிவோடும் நடந்துகொண்டார். அவரிடத்தில் விளங்கிய ஞானத்தைக் கண்டு வியந்துபோன மன்னர், 1070 ஆம் ஆண்டு அவரைத் தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டார். இதற்குப் பின்பு மார்கரெட்டின் வாழ்கை முற்றிலுமாக மாறிப்போனது. 

ஆம், மால்கம் மன்னர் எல்லாப் பொறுப்புகளையும் மார்கரெட்டிடமே ஒப்படைத்தார். இதனால் மார்கரெட் மிகவும் பொறுப்புணர்வுடன் எல்லாப் பணிகளையும் செய்யத் தொடங்கினார். அவர் மக்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த பெரிதும் உழைத்தார். நிறைய ஆலயங்கள், துறவற மடங்கள் கட்டி எழுப்பப்பட நிதி உதவிகளை வழங்கினார்; மக்களுடைய கலை மற்றும் கலாச்சாரம் உயர பெரிதும் உறுதுணையாக இருந்தார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சமுதாயத்தில் விளிம்புநிலையில் இருந்த ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர், நோயாளிகள் போன்றோரோடு தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டார். தன்னை நாடிவந்தவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தார். இதனால் மக்கள் அனைவரும் மார்கரெட் அரசியை தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டார்கள்.,

இப்படி மார்கரெட்டின் வாழ்க்கை மிகவும் சந்தோசமாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில், 1093 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கும் பக்கத்து நாட்டிற்கும் இடையே நடந்த போரில் மார்கரெட்டின் கணவரும் அவருடைய மூத்த மகனும் கொல்லப்பட்டனர். இச்செய்தி கேட்டு, மார்கரெட் மிகவும் மனமுடைந்து போனார். இது அவருடைய உடல் நலனை வெகுவாகப் பாதித்தது. இதனால் மன்னர் இறந்த அடுத்த நான்காம் நாளிலே மார்கரெட்டும் இறந்து போனார். இவருக்கு 1250 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய மார்கரெட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. எளியவர்களோடு நம்மை இனம்காண்போம்

தூய மார்கரெட்டின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம், நாம் ஒவ்வொருவரும் நம்மை எளியவர்கள் மற்றும் வறியவர்களோடு இனம்கண்டு கொள்ளவேண்டும் என்பதுதான். ஆண்டவர் இயேசுவும் இப்படிதான், வழிதவறிப் போன ஆடுகளாக பாவிகள், அனாதைகள், ஏழைகள் இவர்களோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார். அவர்களுடைய வாழ்வு உயர, தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார்.
தூய மார்கரெட்டின் நினைவுநாளைக் கொண்டாடுகின்ற இந்த நாளில், நாம் ஒவ்வொருவரும் அவரைப் போன்று, நம் ஆண்டவர் இயேசுவைப் போன்று, நம்மை எளியவர்களோடும் வறியவர்களோடும் ஐக்கியமாக்கிக் கொள்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத ஒரு பணக்கார தம்பதியர், ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம் என்று ஒரு குழந்தைகள் காப்பத்திற்குச் சென்று, அங்கிருந்த பொறுப்பாளரிடம் தங்களுடைய விருப்பத்தை எடுத்துச் சொன்னார்கள். உடனே அந்த குழந்தைக் காப்பகத்தின் பொறுப்பாளர், அங்கிருந்த குழந்தைகளில் மிகவும் அழகாக இருந்த ஒரு குழந்தையைக் காட்டி, "இதை வேண்டுமானால் தத்தெடுத்துக் கொள்ளுங்கள்" என்றார். இதைக் கேட்ட அந்தத் தம்பதியர், "அப்படியெல்லாம் வேண்டாம். இந்த காப்பகத்தில் எந்தக் குழந்தை யாராலும் விரும்பப்படாமல் இருக்கின்றதோ, அந்தக் குழந்தையை நாங்கள் தத்தெடுத்துக் கொள்கின்றோம். ஏனெனில், அந்தக் குழந்தைக்குத்தான் மிகுதியாக அன்பும் பராமரிப்பும் தேவைப்படுகின்றது" என்றனர். 

யாராலும் விரும்பப்படாமல் இருந்த குழந்தையை தத்தெடுத்துக் கொண்டதன் மூலம், வறியவரிலும் வறியவரோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட அந்தத் தம்பதியர் நம்முடைய பாராட்டுக்கு உரியவராக இருக்கின்றனர். நாமும் நம்மை எளியவர்களோடும் வறியவர்களோடும் ஐக்கியப்படுத்திக்கொள்வது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

ஆகவே, தூய மார்கரெட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைவனுடைய கையில் வல்லமையுள்ள கருவியாக விளங்கி, ஏழை எளியவரோடு நம்மை ஐக்கியமாக்கிக் கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா