Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் முதலாம் லியோ ✠(St. Leo the Great)
   
நினைவுத் திருநாள் : நவம்பர் 10
✠ புனிதர் முதலாம் லியோ ✠(St. Leo the Great)

*
45ம் திருத்தந்தை/ மறைவல்லுனர் :
(45th Pope/ Doctor of the Church)

*பிறப்பு : கி.பி. சுமார் 400
டஸ்கனி, மேற்கத்திய ரோமப்பேரரசு (Tuscany, Western Roman Empire)

*இறப்பு : நவம்பர் 10, 461
ரோம் நகரம், மேற்கத்திய ரோமப்பேரரசு (Rome, Western Roman Empire)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)

திருத்தந்தை முதலாம் லியோ (Pope Leo I) கத்தோலிக்க திருச்சபையின் 45ம் திருத்தந்தையாக கி.பி. 440ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 29ம் நாளிலிருந்து கி.பி. 461ம் ஆண்டு, நவம்பர் மாதம், 10ம் நாள் வரை ஆட்சி செய்தார். திருச்சபை வரலாற்றிலேயே முதன்முதலாக "பெரிய"/ "மகா" (Great) என்னும் அடைமொழி பெற்ற முதல் திருத்தந்தை இவரேயாவார்.

முதலாம் லியோ கி.பி. சுமார் 400ம் ஆண்டில் இத்தாலிய உயர்குடியைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்தார். "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏடு அவர் பிறந்த இடமாக இத்தாலியின் "டஸ்கனி" (Tuscany) பிரதேசத்தைக் குறிக்கிறது.

வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகள் :
திருத்தந்தை முதலாம் லியோவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளுள் மிகவும் பெயர்பெற்றதாகக் கருதப்படுவது, அவர் கி.பி. 452ம் ஆண்டில் வடக்கிலிருந்து இத்தாலியை நோக்கிப் படையெடுத்துவந்த "அட்டிலா" என்னும் "ஹுண்" (Attila the Hun) இனப் போர்த்தலைவரை சந்தித்து அப்படையெடுப்பு நிகழாமல் தடுத்து, இத்தாலியைப் பாதுகாத்தது ஆகும்.

மேலும், திருத்தந்தை லியோ திருச்சபையின் முக்கிய பொதுச்சங்கங்களுள் ஒன்றாகிய "கால்செடோன் பொதுச்சங்கத்தில்" (கி.பி. 451) (Council of Chalcedon) நிகழ்ந்த விவாதங்களுக்கு அடிப்படையான கருத்துக்கோப்புகளை வழங்கியது ஆகும். இச்சங்கமானது இயேசு கிறிஸ்து யார் என்பது பற்றி விவாதித்தது. இயேசு உண்மையிலேயே கடவுளாகவும் உண்மையிலேயே மனிதராகவும் உள்ளார் என்றும், இயேசுவின் மனித இயல்பும் இறை இயல்பும் ஒரே தெய்விக தன்மையில் குழப்பமோ பிளவோ இன்றி இணைந்துள்ளன என்றும் வரையறுத்தது.

வாழ்க்கையின் முதற்கட்டம் :
"திருத்தந்தையர் வரலாறு" (Liber Pontificalis) என்னும் பண்டைய ஏடு தரும் தகவல்படி, திருத்தந்தை லியோ, இத்தாலியின் "டஸ்கனி" (Tuscany) பிரதேசத்தில் பிறந்தார். கி.பி. 431ம் ஆண்டில் அவர் திருத்தொண்டர் (Deacon) பணியை திருத்தந்தை "முதலாம் செலஸ்டின்" (Pope Celestine I) ஆட்சியின்கீழ் தொடங்கியிருந்தார். அப்போது அலெக்சாந்திரியா நகர் மறைமுதல்வர் சிரில் (Cyril of Alexandria), பாலத்தீனத்தின்மீது "யூவனல்" (Juvenal of Jerusalem) என்பவர் ஆட்சியதிகாரம் தமக்கு உண்டு என்றதை உரோமைத் திருச்சபை கண்டிக்கவேண்டும் என்று கேட்டு லியோவுக்கு (அல்லது திருத்தந்தை முதலாம் செலஸ்டினுக்கு) கடிதம் எழுதினார். இதிலிருந்து லியோ ஒரு முக்கிய பதவியில் இருந்தார் எனத் தெரிகிறது.

ஏறக்குறைய அச்சமயத்தில் "ஜான் காசியன்" (John Cassian) என்பவர் "நெஸ்டோரியஸ்" (Nestorius) என்பவரின் திரிபுக்கொள்கையைக் கண்டித்து எழுதிய நூலை லியோவுக்கு அர்ப்பணித்தார். அத்தகைய நூலை எழுதும்படி லியோ, காசியனிடம் கேட்டிருந்தார்.

மேலும், ரோமப் பேரரசரே லியோவின் உதவியை நாடிவந்தார். ரோமைப் பேரரசின் பகுதியாக இருந்த "கால்" (Gaul) பிரதேசத்தில் இரு மேலதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்துமோதலைத் தீர்த்துவைக்க லியோ அனுப்பப்பட்டார்.

இவ்வாறு "கால்" (Gaul) பகுதிக்கு அரசு சார்பாக லியோ தூது சென்ற சமயத்தில் திருத்தந்தை "மூன்றாம் சிக்ஸ்டஸ்" (Pope Sixtus III), 440ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 11ம் நாள் உயிர்நீத்தார். அவருக்குப் பின்னர், செப்டம்பர் மாதம், 29ம் நாள், திருத்தந்தையாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரே முதலாம் லியோ.

லியோவின் திருத்தந்தைப் பணிக்காலம் கத்தோலிக்க திருச்சபையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக உரோமைத் திருச்சபையின் மைய அதிகாரம் பேரளவாக உறுதிப்படுத்தப்பட்டது.

இயேசு கிறிஸ்து பற்றிய போதனை :
திருத்தந்தை வழங்கிய போதனைகள் பெரும்பாலும் இயேசு கிறிஸ்துவின் இயல்பு பற்றியும், இயேசு கொணர்ந்த மீட்புப் பற்றியும் அமைந்தன. அவர் அளித்த மறையுரைகள், அவர் எழுதிய மடல்கள் போன்றவற்றில் இந்தப் போதனை அடங்கியுள்ளது.

திருத்தந்தைக்கு உரிய அதிகாரப் பொறுப்பு :
திருத்தந்தை லியோ தம் பணியைப் பற்றி விவரிக்கும்போது, தாம் "தூய பேதுருவின்" (St. Peter) வாரிசில் வருவதைச் சுட்டிக்காட்டினார். அதற்கு முந்திய திருத்தந்தையர் தாம் புனித பேதுருவின் பணிப்பொறுப்பில் வாரிசுகள் என்றும், பேதுரு உரோமையில் பணிசெய்து, மறைச்சாட்சியாக உயிர்துறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டிருப்பதால் உரோமைத் திருப்பீடம் தனி அதிகாரம் கொண்டது என்று மட்டுமே போதித்திருந்தனர்.

திருத்தந்தை லியோ, தாம் பதவி ஏற்ற ஐந்தாம் ஆண்டு நிகழ்வின் போது ஆற்றிய மறையுரையில் கீழ்வருமாறு கூறினார்:
"நிலையாக இருக்கின்ற பாறையான இயேசு, பாறையான பேதுருவுக்கு வழங்கிய நிலையான தன்மையைப் பேதுரு தம் வழிவருவோருக்கு வழங்கினார்."

அதிலிருந்து திருத்தந்தையர் தம்மை புனித பேதுருவின் வழித்தோன்றல்களாக மட்டுமன்றி, தாம் பிற ஆயர்கள் மேலும், நம்பிக்கைகொண்டோர் மேலும் அதிகாரம் கொண்டவர்கள் என்பதை வலியுறுத்தத் தொடங்கினர்.

திருத்தந்தை லியோ, இத்தாலி நாட்டு ஆயர்கள் தம் அதிகாரத்துக்கு உட்பட்டவர்கள் என்பதை எடுத்துரைத்தார். மிலான் மற்றும் வட இத்தாலியின் பிற பகுதிகளில் அருட்பணி ஒழுங்காக நடைபெறவும், தவறுகள் திருத்தப்படவும், கருத்து வேறுபாடுகள் அகற்றப்படவும் அவர் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.

ஸ்பெயின் நாட்டில் தோன்றிய "பிரிசிலிய கொள்கை" (Priscillianism), மனித உடல் தீமையானது என்று கூறியதை லியோ கண்டித்து, அக்கொள்கையை மறுப்பதற்கான வழிமுறைகளைக் காட்டினார்.

அதுபோலவே, வடக்கு ஆப்பிரிக்க திருச்சபையிலும் சர்ச்சைகள் ஏற்பட்டபோது அவற்றிற்குத் தீர்வுகாண ஆயர்கள் திருத்தந்தை லியோவை அணுகினர்.

பிரான்ஸ் நாட்டின் தென்பகுதி தமது ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதே என்று "ஹிலரி" (Hilary) என்னும் ஆயர் கூறியபோது, திருத்தந்தை லியோ அக்கருத்தை ஏற்க மறுத்ததோடு, ஹிலரி தமது மறைமாவட்ட எல்லைகளுக்குள் மட்டுமே அதிகாரம் கொண்டவர் என்றும் வலியுறுத்தினார்.

மறைமாவட்டங்களின் ஆயர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அந்தந்த மறைமாவட்டத்தின் குருக்கள், இறைமக்களைச் சார்ந்தது என்று லியோ கூறினார். "அனைவருக்கும் பணி புரிய அழைக்கப்பட்டவர் அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்றொரு கொள்கையை அவர் முன்வைத்தார்.

இறப்பு :
திருத்தந்தை லியோ கி.பி. 461ம் ஆண்டு, நவம்பர் 10ம் நாள் இறந்தார். அவருடைய உடல் உரோமையில், புனித பேதுரு பெருங்கோவிலின் உள்முற்றத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கி.பி. 688ம் ஆண்டில், கோவிலுக்கு உள்ளே அடக்கம் செய்யப்பட்டது. கல்லறை மீது சிறப்பான விதத்தில் ஒரு பீடமும் நிறுவப்பட்டது.

மறைவல்லுநர் பட்டம் :
கி.பி. 1754ம் ஆண்டில், திருத்தந்தை லியோவுக்கு "திருச்சபையின் மறைவல்லுநர்" (Doctor of the Church) என்னும் பட்டம் வழங்கப்பட்டது. திருச்சபையின் போதனையைத் தெளிவாகவும் விளக்கமாகவும் பல மறையுரைகள், நூல்கள், விளக்கவுரைகள் வழியாக அளித்து, திருச்சபையை மிகத் திறமையாக வழிநடத்திச் சென்றதால் அவருக்கு "பெரிய"/ "மகா" (Great) என்னும் அடைமொழி கொடுத்து அழைப்பது வழக்கம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா