Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஜோசபட் குன்ட்சேவிச் ✠(St. Josaphat Kuntsevych)
   
நினைவுத் திருநாள் : நவம்பர் 12
✠ புனிதர் ஜோசஃபட் குன்ட்சேவிச் ✠(St. Josaphat Kuntsevych)

*போலோஸ்க் பேராயர் மற்றும் மறைச்சாட்சி :(Polotsk Archbishop and Martyr)

*பிறப்பு : 1580
வோலோடிமீர், வோல்ஹைனிய வைவோடேஷிப், போலிஷ்-லித்துவானிய கூட்டமைப்பு
(Volodymyr, Volhynian Voivodeship, PolishLithuanian Commonwealth)

*இறப்பு : நவம்பர் 12, 1623
வித்டேப்ஸ்க், போலிய-லித்துவானிய கூட்டமைப்பு
(Vitebsk, Vitebsk Voivodeship, Polish-Lithuanian Commonwealth)

*ஏற்கும் சமயம் :
 -உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபை (Ukrainian Greek Catholic Church)
 -லத்தீன் திருச்சபை (Latin Church))
-ரோமானியன் கிரேக்க கத்தோலிக்க திருச்சபை (Romanian Greek Catholic Church)
-ருத்தேனிய கத்தோலிக்க திருச்சபை (Ruthenian Catholic Church)

முக்திபேறு பட்டம் : மே 16, 1643
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

*புனிதர் பட்டம் : ஜூன் 29, 1867 திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX)

*பாதுகாவல் : உக்ரைன் (Ukraine)

"லோவன் குன்ட்சேவிச்" (Loann Kuntsevych) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் ஜோசஃபட் குன்ட்சேவிச், ஒரு "போலிஷ்-லிதுவேனியன்" (Polish-Lithuanian monkெ) துறவியும், புனிதர் "மகா பாசில்" (Order of Saint Basil the Great) துறவற சபையைச் சார்ந்தவரும், உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபையின் ஆயராக இருந்து திருச்சபையின் ஒற்றுமைக்காக உழைத்து மறைச்சாட்சியாக உயிர் துறந்தவரும் ஆவார்.

1623, நவம்பர் 12ம் நாள் அவர் கிறிஸ்தவமறை விசுவாசத்துக்காக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

இவருக்கு கத்தோலிக்க திருச்சபை, புனிதர் பட்டமும் மறைச்சாட்சி பட்டமும் அளித்துள்ளது.

வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் :
1580 அல்லது 1584ம் ஆண்டு பிறந்த இவருக்கு திருமுழுக்கின்போது அளிக்கப்பட்ட பெயர் "லோவன் குன்ட்சேவிச்" ஆகும். வோல்னியா பகுதி இவர் வாழ்ந்த காலத்தில் போலிஷ் - லித்துவானிய கூட்டமைப்பின்கீழ் இருந்தது. இவர் பிறந்த நகரின் பெயர் "வொலோடிமிர்" (Volodymyr), தற்போதைய "உக்ரைன்" (Ukraine) ஆகும்.

கத்தோலிக்க திருச்சபைக்கும் மரபுவழி திருச்சபைக்கும் இடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்கான ஒரு ஒப்பந்தம் "பிரெஸ்ட் உடன்பாடு" (Union of Brest) என்று அழைக்கப்படுகிறது. இது 1596ம் ஆண்டில் நிகழ்ந்தது. இதன்படி, உக்ரைன் கிரேக்க மரபுவழி சபையானது, கத்தோலிக்க திருச்சபையோடு இணைய முன்வந்தது. மரபுவழி திருச்சபையில் பிறந்த லோவன் குன்ட்சேவிச், முதலில் "வில்னியஸ்" (Vilnius) நகரிலுள்ள புனிதர் "மகா பாசில்" (Order of Saint Basil the Great) துறவற சபையில் சேர்ந்தார். பின்னர் 1609ம் ஆண்டில் கத்தோலிக்க திருச்சபையில் குருத்துவம் பெற்றார்.

திருச்சபையின் ஒற்றுமைக்காக உழைத்தல் :

துறவற சபையில் சேர்ந்தபோது அவர் லோவன் என்ற தம் பெயரை "ஜோசஃபட்" (Josaphat) என்று மாற்றிக்கொண்டார். அவருடைய வாழ்க்கைக் குறிக்கோளே திருச்சபையில் ஒற்றுமையைக் கொணர்வதாக அமைந்தது. பண்டைக்காலத் திருச்சபையின் வழிபாட்டு முறைகள், திருச்சபைத் தந்தையர்களின் படிப்பினைகள் ஆகியவற்றையும் வரலாற்றையும் ஊன்றிப் பயின்ற ஜோசஃபட், ஆண்டவர் இயேசு நிறுவிய திருச்சபையில் பேதுருவின் வாரிசாக வருகின்ற திருத்தந்தைக்கு ஒரு முக்கிய இடம் ஒன்று உண்டு என்றும், அவருடைய தலைமையின் கீழ் திருச்சபை முறையாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

1617ல் ஜோசஃபட்டுக்கு ஆயர் பட்டம் வழங்கப்பட்டது. 1618ம் ஆண்டுஇ மார்ச் மாதத்தில் அவர் போலோஸ்க் என்னும் மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். ரோமத் திருச்சபையோடு உக்ரேய்ன் மரபுவழி திருச்சபையை ஒன்றுபடுத்தும் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டார். பலர் அவருடைய முயற்சியை எதிர்த்தனர்.

ஆயர் ஜோசஃபட் பல கோவில்களைப் புதுப்பித்தார். குருக்களின் கல்வியறிவை வளர்க்க அவர் ஒரு மறைக்கல்வி நூல் எழுதினார். குருக்களின் வாழ்வுக்கான நெறிகளை வழங்கினார். தமது மறைமாவட்டத்தைச் சார்ந்த நகரங்களில் மறை மன்றங்கள் நிறுவ ஏற்பாடு செய்தார். கீழை மரபுவழி சபைகளுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் வழங்கியது அவருக்கு விருப்பமாக இருக்கவில்லை.

அவருடைய ஆயர் பணிக்காலம் முழுவதிலும் அவர் ஒரு துறவிக்கான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தார். பல ஒறுத்தல் முயற்சிகள் செய்து கடவுள் மட்டில் தமது பக்தியையும் மக்கள் மட்டில் தமது கரிசனையையும் வெளிப்படுத்தினார்.

எதிர்ப்பு :
கத்தோலிக்க திருச்சபைக்கும், உக்ரேனிய மரபுவழி திருச்சபைக்கும் இடையே ஒற்றுமை கொணர ஜோசஃபட் உழைத்ததற்கு நல்ல பலன் கிடைத்தது. பலர் ஒற்றுமை வழியை ஆதரித்தனர். ஆனால் சிலர் அவர் மட்டில் காழ்ப்புணர்வு கொள்ளலாயினர். அவர் உக்ரேனிய சபையை முற்றிலுமாக உரோமை மயமாக்க முயற்சி செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டினர். தம் ஆயர் பணியை நிறைவேற்றுவதற்காக அவர் மொகிலேவ் நகருக்குச் சென்றபோது அவருடைய எதிரிகள் அவரை எதிர்த்தனர். அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

ஜோசஃபட்டின் மறைச்சாட்சி மரணம் :
1623ம் ஆண்டில், ஜோசஃபட்டின் எதிரிகளுள் ஒருவர் ஆயரின் இருப்பிடம் சென்று அவரை கடுமையான வார்த்தைகள் கூறி இகழ்ந்தார். இதனால் அக்குருவை அகற்றி ஓரிடத்தில் வைத்திருந்தனர். அதற்கு எதிர்வினையாக உடனே நகரத்தின் மணி ஒலிக்கப்பட்டது. மக்கள் கும்பல் ஒன்று திரண்டு வந்து, ஆயரின் இருப்பிடத்தை வன்முறையாகத் தாக்கியது. அவரை அரிவாளால் வெட்டினர். துப்பாக்கியால் சுட்டனர். அவருடைய உடல் ஆற்றில் வீசி எறியப்பட்டது. பல நாட்களுக்குப் பின் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டு, ரோமுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஜோசஃபட்டின் பக்தி வாழ்வு :
ஜோசஃபட் சிறுவயதிலிருந்தே மிகுந்த இறைபக்தி கொண்டிருந்தார். அவருக்குப் பிடித்தமான இறைவேண்டல் கீழைத் திருச்சபையின் துறவற இல்லங்களில் வழக்கமாக பயன்பட்ட ஒரு வேண்டல் ஆகும்.

"ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, பாவியாகிய என்மேல் இரக்கமாயிரும்!" என்னும் அந்த இறைவேண்டலை அவர் அடிக்கடி செபித்து வந்தார். அவர் புலால் உணவு அருந்தியதில்லை. விரதம் இருப்பதும் உடலை ஒறுப்பதும் அவரது வழக்கம். வெறும் தரையில் உறங்கினார். ஏழைகளை சந்தித்து அவர்களுக்கு உதவி செய்தார்.

திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX), ஜோசஃபட்டுக்கு 1867ம் ஆண்டுஇ ஜூன் மாதம் 29ம் நாள் புனிதர் பட்டம் வழங்கினார்.

செபம்:

ஆற்றலின் ஊற்றே எம் இறைவா! புனித யோசபாத் தூய ஆவியாரால் நிறைந்தவராய், தன் மந்தைக்காக தம் உயிரைக்கொடுத்தார். அத்தூய ஆவியை எம் திருச்சபையின் மீது பொழிந்தருளும். இப்புனிதரின் வேண்டுதலால், நாங்களும் உமதருளால் திடமடைந்து, எங்கள் சகோதர சகோதரிகளுக்காக உயிர் துறக்க தயங்கா மனம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

=================================================================================

தூய ஜோசபாத்

"நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்" (யோவா 10:10)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் ஜோசபாத், 1580 ஆம் ஆண்டு, போலந்து நாட்டில் உள்ள வில்னா என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பம். அதனால் இவருடைய பெற்றோர் இவரைப் படிக்க அனுப்பாமல், போபோவிக் என்ற ஒரு வணிகரித்தில் வேலைக்கு அனுப்பிவைத்தார்கள். ஜோசபாத்தும் குடும்பத்தின் கஷ்டத்தை உணர்ந்து, வேலை பார்த்து, அதிலிருந்து கிடைத்த வருமானத்தைக் கொண்டு குடும்பத்திற்கு ஒத்தாசை புரிந்துவந்தார்.

இதற்கிடையில் ஜோசபாத்தின் முதலாளி, அவருடைய நன்னடத்தைக் கண்டு, அவரிடத்திலே எல்லாப் பொறுப்புகளையும் ஒப்படைத்தார். அது மட்டுமல்லாமல், தன்னுடைய ஒரே மகளையும் அவருக்கு மணமுடித்துக் கொடுக்க முடிவுசெய்தார். ஆனால் ஜோசபாத்திற்கோ குருவாக மாறவேண்டும் என்ற விருப்பம் இருந்ததால், தன்னுடைய முதலாளி சொன்ன வார்த்தைகளுக்கு மறுப்பு சொல்லிவிட்டு, தன்னுடைய 24 வயதில் பசிலியாருடைய மடத்தில் சேர்ந்து, குருத்துவ வாழ்விற்கு தன்னுடைய அர்ப்பணித்து, 1609 ஆம் ஆண்டு குருவானவராக அருட்பொழிவு செய்யப்பட்டார். 

ஜோசபாத், அற்புதமாகப் போதிக்கும் திறனைப் பெற்றிருந்தார். அதைக் கொண்டு அவர் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வல்லமையோடு எடுத்துரைத்து வந்தார். இரு குழுக்களிடையே சுமூகமான உறவை ஏற்படுத்துவதில் இவர் வல்லவராக விளங்கினார். மேலும் புதிதாக பல துறவுமடங்களை உருவாக்கி, இறைப்பணி செய்வோருடைய எண்ணிக்கை பெறுவதற்கும் காரணமாக இருந்தார். இதனால் இவருடைய புகழ் எங்கும் பரவியது. இவர் செய்துவந்த பணிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட திருத்தந்தை 1617 ஆம் அண்டு, இவரை இரஷ்யாவில் உள்ள விடேப்ஸ்க் என்ற இடத்தின் ஆயரராகவும், அதன்பின்னர் போலட்ஸ்கி நகரின் பேராயராகவும் உயர்த்தினார். இந்தப் பொறுப்புகளை எல்லாம் மிகவும் தாழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட ஜோசபாத், இறைமக்கள் சமூகத்தைக் கட்டியெழுப்ப மிகவும் பாடுபட்டார்.

இவருடைய காலத்தில் மேற்கத்திய திருஅவைக்கும் கிழக்கத்திய திருஅவைக்கும் இடையே கருத்து வேறுபாடும் பிரிவும் ஏற்பட்டிருந்தது. இந்தப் பிரச்னைக்கு ஒரு சுமூகமான தீர்வினைக் கொண்டுவர நினைத்த ஜோசபாத், இரு தரப்பினரையும் சந்தித்துப் பேசினார். இவர் எடுத்த இந்த முயற்சிக்கு நிறைய பலன் கிடைத்தது. ஆனாலும் ஒருசிலர், திருத்தந்தையின் கைக்கூலியாக இருந்து செயல்படுகிறார் என்று இவருக்கு எதிராகக் கிளர்தெழுந்தார்கள். இதனால் பிரச்னை பெரிதானது. 1623 ஆம் ஆண்டில் ஒருநாள், கலகக்காரர்கள் இவரைப் பிடித்துக் கொன்று போட்டார்கள். பின்னர் இவருடைய உடலை டிவினா என்ற ஆற்றில் வீசி எறிந்தார்கள். இவருக்கு 1867 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய ஜோசபாத்தின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஆயனாக இருந்து அன்புப்பணி செய்வோம்

தூய ஜோசபாத்தின் வாழ்வு நமக்குக் கற்றுத் தருகின்ற மிக முக்கியமான பாடம், நாம் ஒவ்வொருவரும் ஆயனாக, அதுவும் நல்லாயனாக இருந்து, இறைமக்களுக்கு அன்புப் பணி செய்யவேண்டும் என்பதுதான். தூய ஜோசபாத் ஒரு நல்ல ஆயனைப் போன்று இருந்து இறைமக்களை வழிநடத்தினார். பிளவுபட்டக் கிடந்த மக்களை ஒன்றாகச் சேர்க்க எவ்வளவோ பாடுபட்டார். அதற்காக தன்னுடைய இன்னுயிரையும் ஈந்தார். இவரைப் போன்று நாம், நாம் இருக்கக்கூடிய பகுதியில் ஒரு நல்ல ஆயனாக இருந்து பணிசெய்வதுதான் நமக்கு முன்பாக வைக்கப்படுகின்ற அழைப்பாக இருக்கின்றது.

சீனாவில் லீ என்று ஒருவர் இருந்தார். மலைப்பாங்கான பகுதியில் வாழ்ந்துவந்த அவர் ஓர் ஆடு வளர்த்து வந்தார். ஒருநாள் நண்பகல் வேளையில், லீ தன்னுடைய வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது, திடிரென்று அவருடைய ஆட்டின் அலறல் சத்தம் கேட்டு விழித்தெழுந்தார். ஆட்டிற்கு என்னவாயிற்று என்று அவர் வெளியே சென்று பார்த்தபோது, ஆட்டை ஒரு பெரிய கரடியானது கடித்துக் கொண்டிருந்தது. உடனே அவர் ஒரு கம்பை எடுத்து, கரடியை விரட்டத் தொடங்கினார். ஆனால், துரதிஸ்டவசமாக கரடி அவரைத் தாக்கத் தொடங்கியது. இதற்கிடையில் லீயின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கம் வீட்டார் ஓடிவந்து அவரைக் காப்பாற்றினர். 

லீயின் உடலெங்கும் ஒரே கீறல்களாக இருந்தன. அவர் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வர, அவருக்கு ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று.

தன்னுடைய ஆட்டிற்கு எதுவும் ஆகக்கூடாது என்பதற்காக தன்னுடைய உடலில் துன்பங்களை வாங்கிக்கொண்ட லீ, நல்ல ஆயனுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். நாமும் நாம் இருக்கின்ற பகுதிகளில் நல்ல ஆயனாக இருந்து பணிசெய்கின்ற போது துன்பங்கள் வரலாம். அவற்றையெல்லாம் பொறுமையோடு தாங்கிக்கொண்டு இறைப்பணியைச் செய்வதே சிறந்தது.

ஆகவே, தூய ஜோசபாத்தின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நல்ல ஆயனாக இருந்து பணிசெய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல். 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா