Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் லுயீஸ் டி மரில்லாக் ✠(St. Louise de Marillac)
 
நினைவுத் திருநாள் : மார்ச் 15
✠ புனிதர் லுயீஸ் டி மரில்லாக் ✠(St. Louise de Marillac)

*மனைவி, அன்னை, விதவை, நிறுவனர், சமூக சேவகர்:
(Wife, Mother, Widow, Foundress, Social Service worker)

*பிறப்பு : ஆகஸ்ட் 12, 1591
லி மியக்ஸ், ஒய்ஸ், ஃபிரான்ஸ்
(Le Meux, Oise, France)

*இறப்பு : மார்ச் 15, 1660 (வயது 68)
பாரிஸ், ஃபிரான்ஸ் (Paris, France)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

*அருளாளர் பட்டம் : மே 9, 1920
திருத்தந்தை 15ம் பெனடிக்ட் (Pope Benedict XV)

*புனிதர் பட்டம் : மார்ச் 11, 1934
திருத்தந்தை 11ம் பயஸ் (Pope Pius XI)

*முக்கிய திருத்தலங்கள் :
அன்னையின் அற்புத பதக்க சிற்றாலயம், ரியூ டு பக், பாரிஸ், ஃபிரான்ஸ்
(Chapel of Our Lady of the Miraculous Medal, Rue du Bac, Paris, France)

*பாதுகாவல் :
பெற்றோரை இழந்தோர் (Loss of Parents),
நோயாளிகள் (Sick People), கைம்பெண்கள் (Widows),
சமூக சேவகர்கள் (Social Workers),
ஏமாற்றமடைந்த குழந்தைகள் (Disappointing Children),
மத சபையினரால் நிராகரிக்கப்பட்ட மக்கள் (People Rejected by Religious Orders)

"புனிதர் லுயீஸ் டி க்ராஸ்" (Louise Le Gras) என்றும் அழைக்கப்படும் புனிதர் லுயீஸ் டி மரில்லாக் (Louise de Marillac), புனிதர் வின்சென்ட் தே பவுலோடு (Saint Vincent de Paul) இணைந்து "பிறரன்பின் புதல்வியர் துறவற சபையை" (Daughters of Charity) நிறுவியவரும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.

தொடக்க காலம் :
லுயீஸ் டி மரில்லாக், ஃபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 1591ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 12ம் தேதி பிறந்தார். சிறு வயதிலேயே இவர் பெற்றோரை இழந்தார். இருந்தாலும் நல்ல முறையில் வளர்க்கப்பட்டார். பெரிய துறவற மடம் ஒன்றில் கல்வி பயின்றார். இதனால் இவருக்கு துறவற வாழ்வில் ஆர்வம் ஏற்பட்டது. பாரிஸ் நகரிலுள்ள "கப்புச்சின் அருட்சகோதரிகள்" (Capuchin nuns) என்ற துறவற சபையில் சேர இவர் விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பம் மறுக்கப்பட்டது. லூயீஸ் மனமுடைந்து போனார். எனவே, 22 வயதான இவரை இல்லற வாழ்வில் ஈடுபடுமாறு குடும்பத்தினர் அறிவுறுத்தினர்.

1613ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 5ம் தேதி, "ஆன்டனி லீ க்ராஸ்" (Antoine Le Gras) என்பவருடன் "புனித ஜெர்வைஸ்" (Church of St. Gervaise) தேவாலயத்தில் இவருக்கு திருமணம் நடந்தது. மரில்லாக் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தினார். இவர்களுக்கு மைக்கேல் (Michel) என்ற குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் இவரது கணவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். மரில்லாக், தனது கணவரை அன்புடன் கவனித்துக்கொண்டார். ஆனாலும் கடவுளுக்காக துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இவரது மனதில் தொடர்ந்து நீடித்தது. இரண்டு ஆண்டுகள் வேதனைக்கு பின்பு இவரது கணவர் மரணம் அடைந்தார்.

துறவற சபை :
அந்த வேளையில் லுயீஸ் டி மரில்லாக், புனிதர் வின்சென்ட் தெ பவுலை சந்திக்க நேரிட்டது. அதன்பின் ஏழைகளுக்கும் தேவையில் இருப்பவர்களுக்கும் உதவி செய்யும் விதத்தில், இவர் துறவற வாழ்வை மேற்கொண்டார். புனிதர் வின்சென்ட் தெ பவுலுடன் இணைந்து, பிறரன்பின் புதல்வியர் என்ற துறவற சபையைத் தோற்றுவித்தார்.

இவருடன் சேர்ந்து உழைத்த துறவற சபை அருட்கன்னியர்கள், பாவிகளை மனந்திருப்புவதிலும், ஏழைகளுக்கு உதவி செய்வதிலும் ஆர்வமுடன் உழைத்தனர். நோயாளிகளை கவனிக்க மருத்துவமனைகளும், ஆதரவற்றோரை கவனிக்க முதியோர் இல்லங்களும் இச்சபை சார்பில் அமைக்கப்பட்டன.

மரில்லாக் மக்களுக்கு செய்த சேவையை, இயேசு கிறிஸ்துவுக்கு செய்த சேவையாக எண்ணினார். ஏழைகளிலும், கைவிடப்பட்டோரிலும் கடவுளைக் கண்டார். சிறப்பாக இவரது சபையினர் ஏழைப் பெண்களுக்கு உறைவிடம் அளித்து, உணவு கொடுத்து பாதுகாத்து வந்தனர். போரில் காயம் அடைந்த வீரர்களுக்கும் மருத்துவ சேவை செய்தனர்.

இயேசு கிறிஸ்துவின் பெயரால் மக்களுக்கு சேவைகள் செய்து வந்த லுயீஸ் டி மரில்லாக் 1660ம் ஆண்டு, மார்ச் மாதம், 15ம் தேதி, மரணமடைந்தார். அவரது மரணத்தின்போது, அவர் நிறுவிய சபையின் நாற்பதுக்கும் மேற்பட்ட கிளைகள் ஃபிரான்ஸ் நாடு முழுதும் பரவியிருந்தது. அவர் மரித்த ஆறாம் மாதத்திலேயே புனிதர் வின்சென்ட் தே பவுலும் (Saint Vincent de Paul) மரணமடைந்தார்.

1960ம் ஆண்டு, "திருத்தந்தை 23ம் ஜான்" (Pope John XXIII) இவரை கிறிஸ்தவ சமூக சேவகர்களின் பாதுகாவலராக அறிவித்தார். புனிதர் லுயீஸ் டி மரில்லாக்கின் அழியாத உடல், பாரிஸ் நகரில் இவர் வாழ்ந்த துறவற சபையின் சிற்றாலயத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தூய லூயிஸ் தே மரிலாக்


சமூகத்தில் விளிம்பு நிலையிலிருப்பவர்களுக்கு சேவை புரிவதில் தீவிரம் காட்டுங்கள்; அவர்கள்மீது அன்பு மழை பொழியுங்கள்; அவர்களுக்குரிய மதிப்புக் கொடுங்கள்; கிறிஸ்துவுக்கு நீங்கள் காட்டும் மரியாதைப் போல் இவர்களுக்கும் காட்டுங்கள் - தூய லூயிஸ் தே மரிலாக்

வாழ்க்கை வரலாறு

லூயிஸ் தே மரிலாக், 1591 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 12 ஆம் நாள், பாரிஸ் நகரிலிருந்த ஒரு தளபதிக்கு மகளாகப் பிறந்தார். இவர் பிறந்த உடனே இவருடைய தாயார் இறந்துபோக, இவருடைய தந்தை வேறொரு பெண்ணை மணந்தார். இதனால் லூயிஸ் தே மரிலாக் சிற்றன்னையின் கண்காணிப்பில் வளரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சிற்றன்னை இவரைக் கடுமையாகச் சித்ரவதை செய்தார். இதையெல்லாம் பார்த்த இவருடைய தந்தை, இவரை பார்சி நகரில் இருந்த சாமிநாதர் துறவுமடத்திற்கு அனுப்பி வைத்து கல்வி கற்க வைத்தார். லூயிஸ் தே மரிலாக்கும் அங்கு சிறந்த முறையில் கல்வி கற்றுவந்தார்.

நாட்கள் செல்லச் செல்ல லூயிஸ் தே மரிலாக்குக்கு தானும் துறவியாக மாறவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே, அவர் கிளாரிஸ்ட் சபை தலைமை அருட்சகோதரியிடம் சென்று, தன்னை அவர்களுடைய சபையில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அந்த தலைமை அருட்சகோதரியோ, உன்னைப் பார்க்கின்றபோது கடவுள் உனக்கென்று வேறொரு திட்டம் வைத்திருக்கிறார் என்பதுபோல் தோன்றுகிறது. ஆகவே, உன்னுடைய வாழ்வை சுய ஆய்வுக்கு உட்படுத்தி, அதன்பின் ஒருவேளை கடவுள் உன்னை இந்தப் பணிக்கென அழைத்திருந்தால் இங்கு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார். லூயிஸ் தே மரிலாக்கும் தன்னுடைய வாழ்வை சுய ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்தார். இதற்கிடையில் பிரான்ஸ் நாட்டு அரசி, இவரை தன்னுடைய அரசாங்கத்தின் ஆவணக் காப்பாளராக இருக்கக் கேட்டுக்கொண்டார். லூயிஸ் தே மரிலாக்கும் அதற்குச் சரியென்று சொல்லி, அங்கேயே பணிசெய்து வந்தார். அப்போதுதான் அவர் அன்றோய்ன் என்ற உயர்குடி இளைஞரைச் சந்தித்தார். அவர் இவர்மீது ஆழமான அன்பு கொண்டிருந்தார். எனவே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமண வாழ்வில் மகிழ்ந்திருந்த லூயிஸ் தே மரிலாக், மிசெல் என்ற குழந்தையைப் பெற்றெடுத்தார். இப்படி வாழ்க்கை இன்பமயமாகப் போய்க்கொண்டிருக்க திடிரென்று ஒருநாள் லூயிஸ் தே மரிலாக்கின் கணவர் இறந்துபோனார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த இவர், சமூகத்தில் விளிம்பு நிலையில் இருந்தவர்களின் முன்னேற்றத்திற்காக தன்னுடைய வாழ்வினை அர்ப்பணிக்கத் தொடங்கினார்.

இந்த சமயத்தில்தான் ஏற்கனவே அன்புப் பணிகளை 'அன்புப் பணிக் குழுவினர்' என்ற பெயரில் செய்துகொண்டிருந்த தூய வின்சென்ட் தே பவுலின் தோழமை கிடைத்தது. அவர் லூயிஸ் தே மரிலாக்கை வாஞ்சையோடு ஏற்றுக்கொண்டு தன்னோடு பணிசெய்ய இணைத்துக்கொண்டார். இப்படி நாட்கள் போய்கொண்டிருந்த சமயத்தில் ஒருநாள் ஆண்களுக்களு சேவை செய்ய ஏராளமான சபைகள் இருக்கின்றனவே, ஏன் பெண்களுக்கு சேவை செய்ய ஒரு சபையைத் தொடங்கக்கூடாது என்ற யோசனை வின்சென்ட் தே பவுலுக்குத் தோன்றியது. அதனடிப்படையில் அவர் லூயிஸ் தே மரிலாக்கிடம் பெண்களுக்கென்று ஒரு சபையைத் தொடங்கச் சொன்னார். அப்படித் தொடங்கப்பட்டதுதான் 'அன்பின் பணியாளர் சபை' (Sisters of Charity). இந்தச் சபையின் வழியாக, ஏழைக் குழந்தைகள், அனாதைகள், வயது முதிர்ந்தோர் இவர்களுக்குத் தொண்டு செய்யப்பட்டன. லூயிஸ் தே மரிலாக், இப்பணிகளை எல்லாம் செய்வதறிப் பார்த்து, நிறையப் பேர் இவருடைய சபையில் சேர்ந்தார்கள். இன்னொரு சமயம் போலந்து நாட்டு அரசி, லூயிஸ் தே மரிலாக்கை தன்னுடைய நாட்டிற்கு அழைத்து, சேவைகள் செய்யப் பணித்தார். அவரும் அங்கு சேவை செய்து நல்லதொரு பெயரோடு நாட்டிற்குத் திரும்பி வந்தார்.

இப்படி இறைப்பணியையும் மக்கள் பணியையும் செய்துவந்த லூயிஸ் தே மரிலாக் 1660 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1934 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய லூயிஸ் தே மரிலாக்கின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. சேவை செய்து வாழ்வோம்

தூய லூயிஸ் தே மரிலாக்கின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் சமூகத்தில் விளிம்பு நிலையில் இருந்த மக்களுக்கு சேவை செய்து வாழ்வதை தன்னுடைய இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தார் என்பது நமக்குப் புரியும். அவரைப் போன்று நாம் நம்மோடு வாழக்கூடிய எளியவர், வறியவருக்கு சேவை செய்ய முன்வருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். மத்தேயு நற்செய்தி 25 ஆம் அதிகாரத்தில் வருகின்ற இறுதித் தீர்ப்பு உவமையில் ஆண்டவர் இயேசு, மிகச் சிறிய சகோதர சகோதரிகளுக்குச் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்பார். ஆம், நாம் நம்மோடு வாழக்கூடிய எளிய எளியவருக்குச் செய்கின்ற உதவிகள் எல்லாம் இறைவனுக்குச் செய்யப்படக்கூடியவையே ஆகும்.

ஆகவே, தூய லூயிஸ் தே மரிலாக்கின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று ஏழை எளியவரில் இறைவனைக் கண்டு, அவர்களுக்குச் சேவை செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



- Fr. Maria Antonyraj, Palayamkottai.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா