Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் சிரில் ✠(St. Cyril of Jerusalem)
   
நினைவுத் திருநாள் : மார்ச் 18
 ✠ புனிதர் சிரில் ✠(St. Cyril of Jerusalem)

*ஆயர்/ ஒப்புரவாளர்/ மறைவல்லுநர் :
(Bishop, Confessor and Doctor of the Church)

*பிறப்பு : கி.பி. 313
ரோமானிய பாலஸ்தீனிய பிரதான நகரங்களில் ஒன்றான இஸ்ரேலின் மெடிட்டெரேனியன் கரையோரத்தில் உள்ள, "சீசரே மாரிடிமா" எனும் ஒரு பண்டைய துறைமுகம் அருகில், சிரியா பாலஸ்தீனம் (தற்போதைய இஸ்ரேல்)
(Possibly near "Caesarea Maritima", an ancient port on the Mediterranean coast of Israel, one of the principal cities of Roman Palestine, Syria Palaestina (Modern-day Israel)

*இறப்பு : கி.பி. 386 (வயது 73)
எருசலேம், சிரியா பாலஸ்தீனம்
(Jerusalem, Syria Palaestina)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodoxy)
ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)
லூதரன் திருச்சபை (Lutheran Church)

தற்போதைய காலகட்டத்தில் திருச்சபைக்குள்ள நெருக்கடிகள் - அந்நாளைய நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்திற்கு எதிரான கொள்கைகளைக்கொண்ட ஆரியர்களால் (Arian heresy) திருச்சபைக்கு நேரிட்ட நெருக்கடிகளுக்கும் பயமுறுத்தல்களுக்கும் முன்னே மிகவும் சாதாரணமானதேயாகும். கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையையே மறுதலித்த ஆரியர்கள் கிட்டத்தட்ட கிறிஸ்தவத்தை இல்லாது செய்தனர்.

புனிதர் சிரில், ஆரம்பகால திருச்சபையின் புகழ்பெற்ற இறையியலாளராக விளங்கினார். அனைத்துக் கிறிஸ்தவ திருச்சபைகளாலும் புனிதராக கொண்டாடப்பட்ட இவர், பாலஸ்தீனிய கிறிஸ்தவ சமூகத்தினரால் மிகவும் உயர்வாக மதிக்கப்பட்டவர். இவர், 1883ம் ஆண்டு, திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) அவர்களால் திருச்சபையின் மறைவல்லுனர் என பிரகடணம் செய்விக்கப்பட்டார்.

"மாக்ஸிமசுக்குப் (Maximus) பின்னர் இவர் ஜெருசலேம் நகரின் ஆயராக பொறுப்பேற்றார். ஆனால், ஆரியனிச (Arians) ஆயர் "அகஸியஸ்" (Acacius of Caesarea) என்பவரது பகைமையாலும் பல்வேறு பேரரசர்களின் மாறுபட்ட கொள்கைகளாலும் இவர் ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் நாடு கடத்தப்பட்டார்.

பாலஸ்தீன நகரில் அல்லது அதன் அருகாமையில் பிறந்த சிரில், சிறப்பாக கல்வி கற்றார். ஜெருசலேம் நகரின் ஆயர், புனிதர் "மகாரியஸ்" (St. Macarius of Jerusalem) அவர்களால் 335ம் ஆண்டு திருத்தொண்டராக அருட்பொழிவு செய்யப்பட்டார். சுமார் எட்டு ஆண்டுகளின் பின்னர் அருட்தந்தையாக அருட்பொழிவு செய்யப்பட்டார். சுமார் 350ம் ஆண்டின் பிற்பகுதியில் "மாக்ஸிமசுக்குப் (Maximus) பின்னர் ஜெருசலேம் நகரின் ஆயராக பொறுப்பேற்றார்.

அவர் ஜெருசலேமின் ஆயராகப் பொறுப்பேற்ற சூழ்நிலை பற்றி முரண்பட்ட தகவல்கள் உள்ளன. பிராந்திய ஆயர்களால் அவர் முறையாக அருட்பொழிவு செய்யப்பட்டார் எனவும், அதற்கு எதிராகவும் தகவல்கள் நிலவின. அவருக்கு எதிரான மற்றும் விரோதங்களைக்கொண்ட ஆரியனிச ஆயரான "அகஸியஸ்" சிரிலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினான். ஜெருசலேம் திருச்சபையில் சிரிலுக்கு முக்கியத்துவம் அதிகரிப்பது கண்டு பொறாமை கொண்டான். ஜெருசலேம் கிறிஸ்தவர்களின் முக்கிய ஸ்தலமாகவும் யாத்திரை ஸ்தலமாகவும் மாறுவது கண்டு மென்மேலும் பொறாமை கொண்டான். தேவாலயங்களின் பொது சொத்துக்களை சிரில் விற்பதாக குற்றம் சாட்டினான். ஒருமுறை, ஜெருசலேம் நகரில் உணவுப் பற்றாக்குறையினால் பஞ்சம் ஏற்பட்டது. தமது மக்களுக்கு உணவுப்பொருட்களை வாங்குவதற்காக அவர் அங்ஙனம் செய்ததாக ஒரு நம்பிக்கை நிலவியது.

சிரில் மீதுள்ள குற்றங்களுக்கான விசாரணைக்காக "அகஸியஸ்" 'அழைப்பாணை' (Summons) அனுப்பினான். ஆனால், இரண்டு வருடம் வரை சிரில் அவற்றினை எதிர்த்தார். ஆனால், அகஸியஸின் செல்வாக்கின் காரணமாக கூடிய விசாரணை சபை, 357ம் ஆண்டு, சிரில் இல்லாத சமயம் பார்த்து அவரை பதவி இறக்கம் செய்தது. சிரில் "டாரஸ்" ஆயர் "சில்வானஸ்" (Silvanus) என்பவருடன் தஞ்சமடைந்தார்.

359ம் ஆண்டு, சூழ்நிலைகள் அகஸியஸுக்கு எதிராக மாறின. அப்போது கூடிய "செலூஸியா" (Council of Seleucia) விசாரணை சபை, சிரிலின் ஆயர் பதவியை உறுதி செய்ததுடன், அகஸியசை பதிவியிறக்கம் செய்து தீர்ப்பளித்தது. இருப்பினும் 360ம் ஆண்டு, இத்தீர்ப்பு பேரரசன் "கான்ஸ்டன்ஷியசால்" (Emperor Constantius) மாற்றி எழுதப்பட்டது. சிரில் மீண்டும் தண்டனைக்குள்ளானார். ஜெருசலேமிலிருந்து நாடு கடத்தப்பட்டார். ஒரு வருடத்தின் பின்னர் பேரரசர் "ஜூலியன்" (Emperor Julian) இவரை நாடு திரும்ப அனுமதித்தார்.

367ம் ஆண்டு, சிரில் மீண்டுமொருமுறை ஆரிய பேரரசன் "வலேன்ஸ்" (Arian Emperor Valens) என்பவரால் நாடு கடத்தப்பட்டார். மறு வருடம் 378ம் ஆண்டு, பேரரசன் "கிரேஷியன்" (Emperor Gratian) அவரை நாடு திரும்ப அனுமதித்தார். நாடு திரும்பிய அவர் மதங்களுக்கு எதிரான கொள்கைகள், பிளவு, கலவரம், குற்றங்கள் ஆகியவற்றால் ஜெருசலேம் சீர்குழைந்து போயிருப்பதைக் கண்டார். அவரது உதவிக்காக அனுப்பப்பட்ட புனிதர் கிரகோரி கூட (Saint Gregory of Nyssa) விரக்தியுற்று திரும்பினார். இருவரும் 381ம் ஆண்டு, நடந்த "கான்ஸ்டன்டினோபில்" சபையில் (Council of Constantinople) கலந்துகொள்ள சென்றனர். "நிசென்" ஒப்பந்தம் (Nicene Creed) பிரகடணப்படுத்தப்பட்டது. கிறிஸ்து, அதே பொருள் கொண்ட தந்தை என்று சிரில் ஏற்றுக்கொண்டார். சிலர் அதனை மனம் திரும்புதலின் நடவடிக்கை என விமரிசித்தனர். ஆனால், ஆயர் பேரவையோ ஆரியர்களுக்கெதிரான ஆச்சாரப் பணிகளின் வெற்றியாளர் என சிரிலை புகழ்ந்தனர்.

பின்னர், 386ம் ஆண்டு, அவர் மரிக்கும்வரை பிறர் தொந்தரவுகள் இல்லாதிருந்தார்.
==================================================================================

எருசலேம் நகர தூய சிரில்.

நிகழ்வு

எருசலேமின் ஆயராக தூய சிரில் இருந்த காலகட்டத்தில், எருசலேமில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களெல்லாம் உணவின்றிப் பட்டினியில் தவித்தார்கள். இதைப் பார்த்த சிரில் ஆலய உடைமைகளை விற்று, அதிலிருந்து கிடைத்த வருமானத்தைக் கொண்டு மக்களின் பசியைப் போக்கினார். இது பிடிக்காத ஒருசில தலைவர்கள், சிரில் ஆலயச் சொத்துகளை வீணடிக்கின்றார் என்று குற்றம் சுமத்தினார்கள். அப்போது அவர் அவர்களுக்கு அளித்த பதில், "திருச்சபையும் மக்களும் வேறு வேறா என்ன... மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், அதற்கு திருச்சபையின் - ஆலயத்தின் உடைமைகளை விற்றுக்கொடுப்பதிலே என்ன தவறு இருக்கின்றது?" என்றார். இதற்கு அவருடைய எதிரிகளால் ஒன்றும் பேச முடிவில்லை.

நல்மனதோடு நாம் மக்களுக்கு நல்லது செய்கின்றபோது, அதற்கு எதிராக ஒருசிலர் பேசித்திரிவார்கள். அத்தகையவர்களுக்கு நாம் எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதை சிரிலின் வாழ்வில் நடைபெற்ற இந்த நிகழ்வின் வழியாக அறிந்துகொள்ளலாம்.

வாழ்க்கை வரலாறு

சிரில், எருசலேம் நகரில் 315 ஆம் ஆண்டு ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். சிரிலின் தந்தை அவர்மீது அதிகமான அன்பு வைத்திருந்த படியாலும் அவருக்கு நல்ல கல்வியைக் கொடுக்கவேண்டும் என்பதாலும் அன்றைய காலத்தில் எருசலேமில் தலைசிறந்த ஆசிரியராக இருந்த ஒருவரிடம் அனுப்பி வைத்து, அவருக்கு கல்வியறிவைக் கொடுத்தார். சிரிலும் கல்வியில் சிறந்தவராய் விளங்கி வந்தார். குறிப்பாக சிரிலின் விவிலிய அறிவைக் கண்டு எல்லாரும் வியப்படைந்தார்கள்.

படிப்பை நிறைவு செய்த சமயத்தில், சிரிலுக்கு குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன்படியே அவர் குருவானவராக மாறினார். அப்போது சிரிலிடம் இருந்த அறிவையும் ஞானத்தையும் கண்ட எருசலேம் நகர ஆயர் மார்க்கஸ் அவரை புகுமுக பயிற்சி பெறுவோருக்குப் பொறுப்பாளராக நியமித்தார். சிரிலும் தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை மிகச் சிறப்புடனே செய்தார். சிரில் புகுமுகப் பயிற்சி பெறுவோருக்கு பொறுப்பாளராக இருந்த சமயத்தில், திருமுழுக்குப் பெறுகின்றபோது எத்தகைய மனநிலையோடு பெறவேண்டும், அதற்காக ஒருவர் எப்படியெல்லாம் தன்னைத் தயார் செய்யவேண்டும் என்பதை பற்றிய நிறைய எழுதினார். அது மட்டுமல்லாமல், நற்கருணை வாங்குகின்றபோதும் எத்தகைய நிலையோடு வாங்கவேண்டும் என்பதைப் பற்றி நிறைய எழுதினார். இன்னும் சொல்லப்போனால் சிரில் அளவுக்கு நற்கருணையைக் குறித்து யாரும் அதிகமாகப் பேசியதில்லை என்று சொல்லலாம்.

இப்படி பல்வேறு கருத்துகளை குறித்து திறம்பட எழுதியும் புகுமுகப் பயிற்சிபெறுவோருக்கு நல்லவிதமாகப் பயிற்சியும் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் எருசலேமின் ஆயர் மார்க்கஸ் இறந்துபோனார். இதனால் சிரில் எருசலேம் நகர ஆயராகப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இச்சமயத்தில்தான் கிறிஸ்துவின் இறைத்தன்மையை மறுத்துப் பேசும் ஆரியபதம் தலைவிரித்து ஆடியது. இதனை சிரில் மிகக் கடுமையாக எதிர்த்து பேசினார். இதனால் ஆரிய பதத்தைத் தூக்கிப் பிடித்த அக்கரியாஸ் என்ற செசாரிய நகர், அவரோடு சேர்ந்து ஒருசிலர் சிரிலுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். இதனால் சிரில் மூன்று முறை நாடு கடத்தப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இறுதியில் இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைக்கும்பொருட்டு, ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் சிரிலின் வாதம் சரியானது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால் அவர் மீண்டுமாக எருசலேமின் ஆயராக உயர்ந்தார். சில காலம் ஆயர் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்த சமயத்தில் அவர் நோய்வாய்ப்பட்டு 386 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சிரிலின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

தகுதியான நிலையோடு நற்கருணையை உட்கொள்ளுதல்

தூய சிரிலின் நினைவுநாளைக் கொண்டாடும் இந்த சமயத்தில், அவர் சொல்லக்கூடிய ஒரே ஒரு செய்தியை மட்டும் நம்முடைய மனதில் இருத்திக்கொள்வோம், அது வேறொன்றுமில்லை நற்கருணையை தகுதியான உள்ளத்தோடு உட்கொள்வது என்பதாகும். நற்கருணையை உட்கொள்ளும் நாம், சில நேரங்களில் ஏனோ தானோவென்று அதற்குரிய மரியாதை கொடுக்காமல் உட்கொள்கின்றோம். இந்த நேரத்தில் நாம் தகுதியான உள்ளத்தோடுதான் நற்கருணையை உட்கொள்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில், தகுதியற்ற நிலையில் ஆண்டவரின் திருவிருந்தில் பங்குகொள்வோர் பாவம் செய்கின்றார் என்று சொல்வார். ஆகவே, தகுதியான விதத்தில் நற்கருணை உட்கொள்வதே சரியான ஒரு வழிமுறையாகும்.

ஆகவே, தூய சிரிலின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம், தகுதியான உள்ளத்தோடு நற்கருணை உட்கொள்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா