Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ரோஸ் வெநேரினி ✠(St. Rose Venerini)
   
நினைவுத் திருநாள் : (மே/ May 07)
✠ புனிதர் ரோஸ் வெநேரினி ✠(St. Rose Venerini)

 *நிறுவனர் மற்றும் பெண்கள் கல்வியில் முன்னோடி :
(Foundress and Pioneer in the Education of Women)

*பிறப்பு : ஃபெப்ரவரி 9, 1656
விடெர்போ, திருத்தந்தையர் மாநிலம்
(Viterbo, Papal States)

*இறப்பு : மே 7, 1728 (வயது 72)
ரோம், திருத்தந்தையர் மாநிலம்
(Rome, Papal States)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

*முக்திபேறு பட்டம் : மே 4, 1952
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)

*புனிதர் பட்டம் : அக்டோபர் 15, 2006
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
(Pope Benedict XVI)

*நினைவுத் திருநாள் : மே 7

புனிதர் ரோஸ் வெநேரினி, பதினேழாம் நூற்றாண்டில் இத்தாலியின் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வியில் முன்னோடியும் "வெநேரினி சமய ஆசிரியர்கள்" (Religious Teachers Venerini) எனும் "ரோமன் கத்தோலிக்க பெண்களின் மறைப்பணி அமைப்பின்" (Roman Catholic Religious Institute of Women) நிறுவனரும் ஆவார்.

1656ம் ஆண்டு, மத்திய இத்தாலியின் (Central Italy) அன்றைய திருத்தந்தையர் மாநிலமான (Papal States) "லாசியோ" (Lazio) பிராந்தியத்திலுள்ள "விடெர்போ" (Viterbo) எனும் பண்டைய நகரில் பிறந்த வெநேரினி'யின் தந்தை "கொஃப்ரேடோ" (Goffredo), ஒரு மருத்துவர் ஆவார். ரோம் நகரில் தமது மருத்துவ கல்வியை நிறைவு செய்த அவர், விடெர்போ நகரின் பிரசித்தி பெற்ற மருத்துவமனை ஒன்றில் பணியாற்றினார். தமது மருத்துவ பணிகளால் புகழ் பெற்ற அவர், நகரின் பழைமையான குடும்பம் ஒன்றின் பெண்ணான "மார்ஸியா ஸம்பிசெட்டி" (Marzia Zampichetti) என்பவரை மணந்தார். இவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் "ரோஸ் வெநேரினி" மூன்றாமவர் ஆவார்.

இவரது வாழ்க்கை சரிதம் எழுதிய வரலாற்றாசிரியர் அருட்தந்தை "கிரோலோமோ ஆண்ட்ரூசி" (Father Girolamo Andreucci, S.J) அவர்களின் கூற்றின்படி, வெநேரினி தமது இருபது வயதில் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் சிறிதே காலத்தில் அவருக்கு நிச்சயம் செய்திருந்த வாழ்க்கைத் துணை மரித்துப் போனதாகவும் எழுதியிருந்தார்.

அந்த ஆண்டின் இலையுதிர் காலத்தில், தமது தந்தையின் அறிவுறுத்தலின்படி, "புனிதர் கேத்தரின் டொமினிக்கன் துறவு மடத்தில்" (Dominican Monastery of St. Catherine) வெநேரினி இணைந்தார். ஆனால், சில மாத காலத்திலேயே அவரது தந்தைக்கு நேர்ந்த அகால மரணம், அவரை தமது தாயாரை கவனிப்பதற்காக திரும்பிப் போக வைத்தது. அவரது சகோதரர் "டொமெனிக்கோ" (Domenico) தமது 27 வயதிலேயே மரித்துப் போனார். துக்கம் தாங்காத அவர்களது தாயாரும் சிறிது காலத்திலேயே மரித்தார். வெநேரினி'யின் சகோதரி "மரியா மடலேனா" (Maria Maddalena) திருமணமாகிப் போனார். வீட்டில் இவரும் இவரது சகோதரி "ஒரேஸியோ" (Orazio) ஆகிய இருவர் மட்டுமே இருந்தனர். வெநேரினி, அக்கம்பக்கத்து பெண்களையும் சிறுமிகளையும் ஒன்றுகூட்டி குழுவாக செபமாலை செபிக்க ஆரம்பித்தார்.

"டொமினிக்கன் துறவிகளுடனான" (Dominican Friars) முதல் தொடர்பின் பின்னர், இயேசு சபையினரின் (Jesuits) வழிகாட்டுதலின் பேரில், புனிதர் லயோலா இஞ்ஞாசியாரின் (St. Ignatius of Loyola) ஆன்மீக வழிகளை பின்பற்ற முடிவு செய்தார்.

ஏதாவதொரு பள்ளியில் செபம் - தியானம் செய்யும் அருட்கன்னியாக அல்லாது, இவ்வுலகில் ஒரு ஆசிரியையாக வாழவே தாம் அழைக்கப்பட்டிருப்பதாக ரோஸ் நம்பினார்.

1685ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 30ம் நாளன்று, "விடெர்போ ஆயர் கர்தினால் உர்பனோ சச்செட்டி" (Bishop of Viterbo, Cardinal Urbano Sacchetti) அவர்களின் ஒப்புதலுடன், "ஜெரோலமா" மற்றும் "போர்ஸியா" (Gerolama Coluzzelli and Porzia Bacci) ஆகிய இரண்டு நண்பர்களின் துணையுடன் தமது தந்தையின் வீட்டை விட்டு வெளியேறிய ரோஸ், ஏழை கிறிஸ்தவ பெண்களுக்கான தமது முதல் பள்ளியை இத்தாலியில் நிறுவினார்.

ஆரம்ப கட்டங்கள் அவருக்கு எளிதாக இல்லை. 1692 முதல் 1694ம் ஆண்டு வரையான காலத்தில் "மோன்டேஃபியாஸ்கோன்" (Montefiascone) என்ற நகரிலும், "போல்செனா ஏரியை"ச் (Lake Bolsena) சுற்றிலும் உள்ள கிராமங்களில் பத்து பள்ளிகளை தொடங்கினார்.

கல்வியின் மதிப்பு மற்றும் பெண் பிள்ளைகளுக்கு அதன் அவசியங்கள் பற்றின விழிப்புணர்வுகளை மக்களிடையே ரோஸ் உண்டாக்கினார். ஆசிரியைகளை பயிற்றுவித்தார். பள்ளிக்கூடங்களை ஒருங்கிணைத்தார்.

ரோஸ் வெநேரினியின் புகழ் பரவவே, ரோம் உள்ளிட்ட இத்தாலியின் பிற பாகங்களிலிருந்து பள்ளிகளை ஒருங்கிணைப்பதற்காக இவருக்கு அழைப்புகள் குவிந்தன.

ரோஸ் வெநேரினி, ரோம் நகரிலுள்ள "சேன் மார்க்கோ பேராலய" (Basilica of San Marco) சமூகத்தில், 1728ம் ஆண்டு, மே மாதம், 7ம் தேதி மரித்தார். அதுவரை அவர் தொடங்கி ஒருங்கிணைத்த பள்ளிகளின் எண்ணிக்கை நாற்பதுக்கும் மேற்பட்டதாகும்.

இவரது சமூகத்தின் அருட்சகோதரியர், 1909ம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு சென்றனர். அங்கே, இத்தாலியிலிருந்து புலம்பெயர்ந்து வரும் மக்களுக்கு உதவும் நோக்கில், ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு நகரங்களில் (Northeastern United States) முதல்நாள் பராமரிப்பு மையங்களை (First Day Care Centers) நிறுவினார்கள். பின்னர், 1971 முதல் 1985ம் ஆண்டு வரையான காலத்தில், ஸ்விட்சர்லாந்து (Switzerland) நாட்டில் சேவை புரிந்தனர். பின்னர் இவர்களது சபையின் அப்போஸ்தலிக்க நடவடிக்கைகள், இந்தியா (India), பிரேசில் (Brazil), கேமரூன் (Cameroon), ருமேனியா (Romania), அல்பேனியா (Albania), சிலி (Chile), வெனிசூலா (Venezuela), மற்றும் நைஜீரியா (Nigeria) ஆகிய நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டன.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா