Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் மாடலின் சோஃபி பாரட் ✠(St. Madeleine Sophie Barat)
   
நினைவுத் திருநாள் : (மே/ May 29)
✠ புனிதர் மாடலின் சோஃபி பாரட் ✠(St. Madeleine Sophie Barat)

 *திருஇருதய சபை நிறுவனர் :
(Founder of the Society of the Sacred Heart)

*பிறப்பு : டிசம்பர் 12, 1779
ஜோய்க்னி, பர்கண்டி ஃபிரான்ஸ்
(Joigny, Burgundy, France)

*இறப்பு : மே 25, 1865 (வயது 85)
பாரிஸ், ஃபிரான்ஸ்
(Paris, France)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

*அருளாளர் பட்டம் : மே 24, 1908
திருத்தந்தை பத்தாம் பயஸ்
(Pope Pius X)

*புனிதர் பட்டம் : மே 24, 1925
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
(Pope Pius XI)

*நினைவுத் திருநாள் : மே 29

புனிதர் மாடலின் சோஃபி பாரட், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஃபிரெஞ்ச் புனிதரும், "திருஇருதய சபை" (Founder of the Society of the Sacred Heart) நிறுவனரும் ஆவார்.

புனிதர் மாடலின் சோஃபி பாரட், அவரது பெற்றோருக்கு மூன்றாம் குழந்தையாவார். இவரது தந்தையார், திராட்சை வளர்க்கும் தொழில் புரியும் "ஜாக்குவெஸ் பாராட்" (Jacques Barat) என்பவராவார். இவரது தாயாரின் பெயர், "மேடம் மடலின் ஃபௌஃப் பாரட்" (Madame Madeleine Fouffé Barat) ஆகும். 1779ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 12ம் தேதி நள்ளிவு, அவர்களது அண்டை வீடு தீ பிடித்து எரிந்தது. தீ விபத்தின் காரணமாக பதற்றமடைந்த அவரது தாயார் எட்டு மாத கர்ப்பத்திலேயே மாடலின் சோஃபியை குறை மாத குழந்தையாக பிரசவித்தார். பிறந்தவுடன் ஆரோக்கியமற்று மிகவும் நலிவடைந்திருந்த மாடலின் சோஃபி'க்கு, மறுநாளே திருமுழுக்கு அளிக்கப்பட்டது. அவரது வீட்டின் அருகாமையிலேயே உள்ள புனித "திபௌல்ட்" (St. Thibault Church) ஆலயத்தில் விடியற்காலை ஐந்து மணிக்கே திருமுழுக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது பெற்றோர் அவருக்காக ஞானப்பெற்றோரை ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், அவசரம் காரணமாக அவர்களை அழைக்க இயலவில்லை. ஆலயத்திற்கு தற்செயலாக வந்த "சோஃபி செடோர்" (Sophie Cédor) என்ற உள்ளூர் பெண் ஒருவரும், அவரது மூத்த சகோதரர் லூயிசும் அவரது ஞானப்பெற்றோராக நிறுத்தப்பட்டனர்.

பதினாறு வயதினிலே, கத்தோலிக்க குருவாக வேண்டி கல்வி கற்ற அவரது தமையன் லூயிஸ், இருபத்தொரு வயதுக்கு முன் குருத்துவம் பெற இயலாத காரணத்தால் வீட்டுக்கு திரும்பினார். அவர் தமது தங்கை மாடலின் சோஃபி பாரட்'டின் கல்வியில் கவனம் செலுத்தினார். அக்காலத்தில் இளம்பெண்களுக்கு கல்வி கற்பதில் பல இன்னல்கள் இருந்தன. ஆனாலும் அவர் தமது தங்கைக்கு இலத்தீன், கிரேக்கம், ஸ்பேனிஷ், இத்தாலியன் ஆகிய மொழிகளையும், இயற்கை அறிவியல் மற்றும் சரித்திரம் ஆகிய பாடங்களையும் கற்பித்தார்.

ஃபிரெஞ்ச் புரட்சியின்போது, 1789ம் ஆண்டு, மதகுருமார்களின் சிவில் அரசியலமைப்பு சம்பந்தமான விவாதங்களில் ஈடுபட்டு, கைது செய்யப்படும் நிலை வந்தபோது, பாரிஸ் நகருக்கு தப்பிச் சென்றார். 1793ம் ஆண்டு, மே மாதம், பாரிஸ் நகரில் கைது செய்யப்பட்ட லூயிஸ் இரண்டு வருடம் சிறையிலிருந்தார். 1795ம் ஆண்டு, விடுதலை பெற்று வீடு வந்து, தமது தங்கையையும் அழைத்துக்கொண்டு மீண்டும் பாரிஸ் நகர் வந்தார். அங்கே மாடலின் சோஃபி பாரட் ஐந்து வருடங்கள் வரை செப வாழ்க்கை வாழ்வதிலும், கல்வி கற்பதிலும், ரகசியமாக சிறார்களுக்கு மறைக் கல்வி கற்பிப்பதிலும் கழித்தார்.

பாரிஸ் நகரில் இவருக்கு "ஜோசப் வேரின்" (Joseph Varin) என்ற கத்தோலிக்க குரு அறிமுகமானார். ஜோசப் வேரின், இளம்பெண்களின் கல்வியில் ஈடுபாடு கொண்ட, இயேசுவின் திருஇருதயத்திற்கு அர்ப்பணிப்பு கொண்ட பெண்களுக்கான ஒரு சமூகத்தை நிறுவ விரும்பினார். கார்மேல் சபையில் சேரும் கனவுடனிருந்த மாடலின் சோஃபி பாரட், தமது கனவைக் கைவிட்டு, பாரிஸ் நகரில் மூன்று இளம்பெண்களுடன் இணைந்து புதிய "திருஇருதய சமூகத்தை" நிறுவினார். ஆரம்பத்தில், ஃபிரெஞ்ச் அதிகார வர்க்கம் இயேசுவின் திருஇருதயத்தை பூஜிப்பதை தடை செய்திருந்த காரணத்தால் இந்த புதிய சமூகம் "விசுவாசமுள்ள பெண்கள்" (Women of Faith) என்ற பெயரில் இயங்கியது.

ஃபிரான்சின் வட பிராந்தியத்தில் 1801ம் ஆண்டு, இச்சமூகத்தினரால் முதல் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. "திருஇருதய சமூகமும்" பள்ளியும் வேகமாக வளர்ந்தன. தமது 23 வயதில் "திருஇருதய சமூகத்தின்" தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

ஜோசப் வேரின் துணையுடன் இவரது பள்ளிகள் வளர ஆரம்பித்தன. ஃபிரான்ஸில் பல பள்ளிகள் தொடங்கப்பட்டன. இவை, வட அமெரிக்கா, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், அல்ஜியர்ஸ், இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்பெயின், ஹாலந்து, ஜெர்மனி, தென் அமெரிக்கா, ஆஸ்திரியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளிலும் தோற்றுவிக்கப்பட்டன.

1832ம் ஆண்டு, "லியோன்ஸ்" (Lyons) நகரில், "மரியாளின் குழந்தைகள்" (Congregation of the Children of Mary) எனும் சபையை தோற்றுவித்தார்.

1840ம் ஆண்டு, சோஃபியின் முயற்சியால் வத்திக்கான் (Vatican) மற்றும் பாரிசின் பேராயர் (Archbishop of Paris) ஆகியோருக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் தவிர்க்கப்பட்டன. வத்திக்கான் அல்லது பாரிஸ் பேராயர் பக்கங்களைத் தேர்வு செய்யும்படி அவருடைய எல்லா சகோதரிகளும் அழுத்தம் கொடுத்திருந்தாலும், சோஃபி அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார். அவரால் மீறுதலைக் குணப்படுத்த முடிந்தது. 65 வருடங்களுக்கும் மேலாக சோஃபியின் தலைமையில் அவரது சமூகம் நெப்போலியனின் ஆட்சி பிழைத்திருந்தது. பிரான்ஸ் இன்னும் இரண்டு புரட்சிகளை சந்தித்ததோடு, இத்தாலியின் போராட்டம் காரணமாக, முழுக்க முழுக்க தனி தேசமாக மாறியது.

திருஇருதய பள்ளிகள் விரைவில் ஒரு சிறந்த நற்பெயரைப் பெற்றன. குழந்தைகளின் பெற்றோரின் நிதி வசதிகளையெல்லாம் பொருட்படுத்தாமல் எல்லா குழந்தைகளையும் கல்வி கற்பிக்கும் கனவு கண்டார். அவர் நிறுவிய ஒவ்வொரு பள்ளிக்கும் ஈடாக ஒரு இலவச பள்ளியும் நிறுவப்பட்டது. ஒவ்வொரு ஏழைக் குழந்தைக்கும் உயர்தர கல்வி கிடைக்க உறுதிகொண்டிருந்தார்.

இவரது அறுபத்தைந்து வருடகால தலைமையில், இவரது சபை பெண்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் 3500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன், ஐரோப்பா (Europe), வட ஆபிரிக்கா (North Africa), வடக்கு மற்றும் தென் அமெரிக்க (North and South America) நாடுகளில் பரவியது.

85 வயதான மாடலின் சோஃபி பாரட், 1865ம் ஆண்டு, பாரிஸ் நகரிலுள்ள தலைமை இல்லத்தில், இயேசுவின் விண்ணேற்ற தினத்தன்று மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா