Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  தவக்காலம்

     
                                       திருப்பாடுகளின் தியானம்
சர்வேசுரா சுவாமி, நிகரில்லாத தயையினாலே உலகத்தை மீட்டு இரட்சிக்கிறதற்காகத் தேவரீர் மனிதனாக பிறந்து விருத்தசேதனப்படவும், யூதர்களினாலே புறக்கணிக்கப்படவும், குருத் துரோகியான யூதாசென்பவன் உம்மை கன்னத்தில் முத்தம்செய்து காட்டிக்கொடுக்கப்படவும், தேவரீா் கயிறுகளினாலே கட்டுண்டு குற்றமில்லாத செம்மறிப்புருவையைப்போல பலிக்கு ஏவப்படவும், அன்னாஸ், கைப்பாஸ், பிலாத்து, ஏரோது என்கிற இவா்களண்டைக்கு அவமானமாகக் கூட்டிக் கொண்டுபோய் விடப்படவும், பொய்ச் சாட்சிகளினாலே குற்றம் சாட்டப்படவும், திருக்கன்னத்தில் கைகளினாலேயும் திருமேனியில் கசைகளினாலேயும், அடிக்கப்படவும், திருமுகத்திலே துப்பப்படவும் தூஷணங்களினாலே நிந்திக்கப்படவும், முள்முடி தரிக்கப்படவும், மூங்கிற்றடியால் அடிக்கப்படவும், உம்முடைய திருமுகம் வஸ்திரத்தினாலே மூடப்படவும், திருத்தோளில் பாரமான சிலுவை மரத்தைச் சுமத்திக் கபாலமலை மட்டும் கூட்டிக்கொண்டு போகப்படவும், திருச்சட்டை உரியப்படவும், இரும்பாணிகளினாலே அறையுண்டு இரண்டு கள்ளருக்கு நடுவில் சிலுவையோடு உயர்த்தப்படவும், தாகத்திற்குப் பிச்சோடே கலந்த காடியைக் குடிக்கக் கொடுக்கப்படவும், திருவிலாவானது ஈட்டியால் குத்தித் திறக்கப்படவும், திருவுளமானீரே சுவாமி;
பாவியாயிருக்கிற அடியேன் இவையெல்லாம் பக்தியோட தியானிக்க அநுக்கிரகஞ் செய்தருளும். தேவரீருடைய அர்ச்சியஷ்ட இந்த நிர்ப்பந்தங்களையும், சிலுவையையும், திருமரணத்தையும் பார்த்து, நரக வேதனையை விட்டு அகற்றி அடியேனை இரட்சித்து உம்முடைய வலது பாரிசத்திலிருந்த பச்சாதாபக் கள்ளனுக்குத் தந்தருளுளிய மோட்ச பாக்கியத்தில் அடியேனையும் கூட்டிக்கொண்டு போகக் கிருபை பண்ணியருளும் சுவாமி. பிதாவோடேயும், இஸ்பிரீத்து சாந்துவோடேயும், சதாகாலஞ் சீவியருமாய் இராட்சிய பரிபாலனம் பண்ணுகிறவாயிருக்கிற ஆண்டவரே - ஆமென்.

இயேசுக்கிறிஸ்துவே சுவாமி, தேவரீர் சிலுவையிலே அறையுண்டிருக்கிற பொழுது அளவில்லாத கஸ்தி நோவுகளை அனுபவித்தீரே, விசேஷமாய் உம்முடைய திருஆத்துமம் திருசரீரத்தை விட்டுப் பிரியும்பொழுது மிகுந்த துக்கத்தை அடைந்தீரே. அந்தத் துக்கத்தைப் பார்த்து பாவியாயிருக்கிற அடியேன் சாகிற தருவாயிலே உலகம், பசாசு, சரீரம் என்கிற சத்துருக்களாலே என் ஆத்துமத்துக்கு யாதொரு மோசம் வரவொட்டாமல் கிருபை பண்ணி இரட்சியும் சுவாமி - ஆமென்.

பிதாவாகிய சர்வேசுரா, தேவரீருக்கு உகந்த குமாரனுமாய் எங்களுக்குக் கர்தருமாயிருக்கிற இயேசுக்கிறிஸ்துநாதர் எங்களுக்காக இத்தனை பாடுகளைப் பட்டாரே, அவருடைய திருமுகத்தைப் பார்த்து எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி. (மூன்று முறை சொல்லவும்).
               
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்