Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் தாமஸ் மோர் ✠( St. Thomas More )
   
நினைவுத் திருநாள் : (ஜூன் / Juin 22)
✠ புனிதர் தாமஸ் மோர் ✠( St. Thomas More )

 உயராட்சித் தலைவர்/ மறைசாட்சி :
(Lord Chancellor/ Martyr)

பிறப்பு : ஃபெப்ரவரி 7, 1478
லண்டன், இங்கிலாந்து
(London, England)

இறப்பு : ஜூலை 6, 1535 (வயது 57)
லண்டன், இங்கிலாந்து
(London, England)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
இங்கிலாந்து திருச்சபை
(Church of England)
ஆங்கிலிக்கன் சமூகத்தினரின் சில பிற திருச்சபைகள்
(Some other churches of the Anglican Communion)

அருளாளர் பட்டம் : டிசம்பர் 29, 1886
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

புனிதர் பட்டம் : மே 19, 1935
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
(Pope Pius XI)

முக்கிய திருத்தலம் :
புனிதர் பீட்டர் அட் வின்சுளா, லண்டன், இங்கிலாந்து
(Church of St Peter ad Vincula, London, England)

நினைவுத் திருநாள் : ஜூன் 22

பாதுகாவல் :
தத்துப் பிள்ளைகள், நீதிமன்ற எழுத்தர்கள், சிவில் பணியாளர்கள்,
பெரிய குடும்பங்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், தத்துப்பெற்றோர்,
மால்ட்டா பல்கலைகழகம், கடினமான திருமணங்கள், மனைவியை இழந்தோர், "அட்டெனோ டி மணிலா சட்ட பள்ளி" (Ateneo de Manila Law School),
"ஆர்லிங்டன் மறைமாவட்டம்" (Diocese of Arlington),
"பென்சாகோலா-டலாஹேசீ மறைமாவட்டம்" (Diocese of Pensacola-Tallahassee),
"கேரளா கத்தோலிக்க இளைஞர் இயக்கம்" (Kerala Catholic Youth Movement),
"மால்ட்டா பல்கலைக்கழகம்" (University of Malta),
"புனித தாமஸ் கலை மற்றும் கடிதங்களின் ஆசிரியர் பல்கலைக்கழகம்" (University of Santo Tomas Faculty of Arts and Letters)

புனிதர் தாமஸ் மோர், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரும், தத்துவவியலாளரும் (Social Philosopher), எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர், மனிதநேய மறுமலர்ச்சியில் (Renaissance humanist) இவர் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தவர் ஆவார். இங்கிலாந்தின் அரசர் எட்டாம் ஹென்றியின் (Henry VIII) முக்கிய ஆலோசகராக இருந்த இவர், கி.பி. 1529ம் ஆண்டு, அக்டோபர் மாதம் முதல், கி.பி. 1532ம் ஆண்டு, மே மாதம், 16ம் தேதி வரை, இங்கிலாந்தின் உயராட்சித் தலைவராகப் (Lord High Chancellor of England) பணியாற்றினார். "மார்ட்டின் லூதர்" (Martin Luther) மற்றும் "வில்லியம் டின்டேல்" (William Tyndale) முதலியோரால் கொணரப்பட்ட "கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கத்தினை" (Protestant Reformation) இவர் வன்மையாக எதிர்த்தார்.

கத்தோலிக்க திருச்சபையின் பிரிவினையை இவர் எதிர்த்தார். பின்னர், கத்தோலிக்க திருச்சபையிலிருந்து இங்கிலாந்து அரசர் "எட்டாம் ஹென்றி" (Henry VIII) பிரிந்ததும், அவரை இங்கிலாந்து திருச்சபையின் தலைவராக (Supreme Head of the Church of England) ஏற்க மறுத்தார். அரசி "கேத்தரினை" (Catherine of Aragon) விவாக ரத்து செய்ய அரசன் முயற்சித்ததை எதிர்த்தார். அரசர் "ஹென்றியை" (Henry) இங்கிலாந்து திருச்சபையின் தலைவராக பிரமாணம் செய்விக்க மறுத்த காரணத்தால் தேச துரோக குற்றம் சாட்டப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு, மறைசாட்சியாக மரித்தார்.

திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் (Pope Pius XI) 1935ம் ஆண்டு இவரை மறைசாட்சியாக அருட்பொழிவு செய்வித்தார். திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II) 2000ம் ஆண்டு இவரை அரசியல்வாதிகளுக்கும், அரசுத் தலைவர்களுக்கும் பாதுகாவலராக அறிவித்தார். 1980ம் ஆண்டு முதல், இங்கிலாந்து திருச்சபை இவரை சீர்திருத்த மறைசாட்சியாக (Reformation martyr) வணங்குகின்றது. அரசியல் சமுதாய முறைகளில் இலக்கியல் வாழ்வுடை கற்பனைத் தீவு பற்றி ஒரு நூலினை 1516ம் ஆண்டு "உடோபியா" (Utopia) என்னும் பெயரில் வெளியிட்டார். இவர் எழுதிய "உடோபியா" (Utopia) புத்தகத்திலுள்ள சொத்து உரிமைகள் குறித்த இவரது கம்யூனிச அணுகுமுறைகளுக்காக "சோவியத் யூனியன்" (The Soviet Union) நாடு இவரை கௌரவித்தது.

புனிதர் தாமஸ் மோர், இங்கிலாந்தின் வெற்றிகரமான வழக்கறிஞரும் பின்னாளில் நீதிபதியுமான "சார் ஜான் மோர்" (Sir John More) என்பவரின் மகனாக, 1478ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 7ம் தேதியன்று, பிறந்தார். இவரது தாயாரின் பெயர், "அக்னேஸ்" (Agnes) ஆகும். இவரது பெற்றோரின் ஆறு குழந்தைகளில் இவர் இரண்டாவது குழந்தை ஆவார். லண்டன் மாநகரின் அப்போதைய சிறந்த பள்ளியான "புனிதர் அந்தோனியார்" பள்ளியில் (St Anthony's School) கல்வி பயின்றார்.

கி.பி. 1490ம் ஆண்டு முதல் 1492ம் ஆண்டு வரை "காண்டர்பரி" பேராயரும் (Archbishop of Canterbury), இங்கிலாந்தின் கோமானும் வேந்தருமான (Lord Chancellor of England) "ஜான் மோர்ட்டன்" (John Morton) என்பவரிடம் பணியாற்றினார். 1492ம் ஆண்டு "ஆக்ஸ்ஃபோர்ட்" (University of Oxford) பல்கலைகழகத்தில் சேர்ந்து கற்க ஆரம்பித்தார். இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் புலமை பெற்றார். பின்னர், தமது தந்தையுடன் இணைந்து சட்ட கல்வியில் பயிற்சி பெற ஆரம்பித்தார்.

அவரது இறையியல் நண்பர் "டெசிடேரியஸ் எராஸ்மஸ்" (Desiderius Erasmus of Rotterdam) என்பவரின் கூற்றுப்படி, அவர் ஒரு முறை தனது சட்ட பணித் துறையை கைவிட்டு, துறவறமாக மாற்றிக்கொள்ள விரும்பினார். கி.பி. 1503 மற்றும் 1504ம் ஆண்டுகளுக்கு இடையே, லண்டனின் சுவர்களுக்கு வெளியே "கார்தூசியன் மடாலயத்திற்கு" (Carthusian monastery) அருகே வாழ்ந்து, துறவிகளின் ஆன்மீக பயிற்சிகளில் சேர்ந்துகொண்டார். பக்தியிலும் ஆன்மீகத்திலும் ஆழ்ந்த ஈடுபாடும், நம்பிக்கையும் கொண்டிருந்தாலும், கி.பி. 1504ம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

கி.பி. 1505ம் ஆண்டு, தம்மை விட ஐந்து வயது இளைய, அமைதியான, மற்றும் நல்ல இயல்புள்ள "ஜேன் கோல்ட்" (Jane Colt) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தாமஸ் தமது இளம் மனைவிக்கு இசை மற்றும் இலக்கியம் ஆகியவற்றை வீட்டிலேயே கற்பித்தார். ஆறு வருட திருமண வாழ்க்கையில் "மார்கரெட்" (Margaret), "எலிசபெத்" (Elizabeth), "சிசிலி" (Cicely) மற்றும் "ஜான்" (John) ஆகிய நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த ஜேன், 1511ம் ஆண்டில் மரணமடைந்தார்.

தாமசுக்கு, தமது தாயில்லா குழந்தைகளை கவனித்துக்கொள்ள தகுதியுள்ள ஒரு தாய் தேவைப்பட்டார். ஆகவே, வழக்கத்துக்கு மாறாகவும், நண்பர்களின் அறிவுரைகளுக்கு எதிராகவும், மனைவி இறந்து முப்பது நாட்களுக்குள்ளேயே, தமது பரவலான நண்பர்கள் வட்டத்திலிருந்து தகுதியுள்ள "அலைஸ்" (Alice Harpur Middleton) எனும் பணக்கார விதவைப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து மறுமணம் செய்துகொண்டார். "அலைஸ்" தாமசை விட வயதில் மூத்தவர் என்பதாலும், தாமஸ் பாலியல் சிற்றின்ப தேவைகளுக்காகவும் மறுமணம் செய்துகொள்ளவில்லை என்பதாலும் அவர்களது திருமணம் முழுமையானதாக அமையவில்லை.

தாமஸ் மோர் எப்போதுமே கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவாக இருந்தார். கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்து சென்ற எதிர் மற்றும் சீர்திருத்த சபைகளை எதிர்த்தார். புராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் (Protestant Reformation) மதங்களுக்கு எதிரானது என்று உணர்ந்தார். அவை, திருச்சபை மற்றும் சமூகத்தின் ஒற்றுமைக்கெதிரான அச்சுறுத்தல் என்றுணர்ந்தார். இறையியல், ஆன்மீக விவாதங்கள் மற்றும் திருச்சபை சட்டங்கள் ஆகியவற்றை விசுவசித்தார். "கத்தோலிக்க திருச்சபையை அழிப்பதற்காக" லூதர் விடுத்த அழைப்பு, போருக்கு விடுத்த அழைப்பாகவே இவருக்கு தோன்றியது.

திருத்தந்தை மற்றும் அரசன் ஆகியோருக்கிடையேயான - திருச்சபைகளின் தலைமைப் பதவிக்கான சண்டை உச்சத்தை அடைந்தபோது, தாமஸ் திருத்தந்தைக்கு ஆதரவான தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

கி.பி. 1530ம் ஆண்டு, அரசன் எட்டாம் ஹென்றி (King Henry VIII) மற்றும் அரசி "கேதரின்" (Catherine of Aragon) உடனான திருமணத்தை ரத்து செய்யுமாறும், அரசனுடனான திருச்சபை சட்ட விவாதங்களை நிறுத்துமாறும் திருத்தந்தை "ஏழாம் கிளெமென்ட்" (Pope Clement VII) அவர்களுக்கு ஆங்கிலேய திருச்சபை தலைவர்கள் சிலரும் உயர்குடியினர் சிலரும் எழுதிய கடிதத்தில் கையெழுத்திட தாமஸ் மறுத்துவிட்டார்.

கி.பி. 1533ம் ஆண்டு, இங்கிலாந்து அரசியாக (Queen of England) "அன்னி போலின்" (Anne Boleyn) முடி சூடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தாமஸ் மோர் மறுத்துவிட்டார். தொழில்நுட்ப ரீதியாக, இது ஒரு துரோகச் செயல் அல்ல. இருப்பினும், இது "அன்னி போலினுக்கு" எதிரான கண்டனம் என பரவலாக பரப்பப்பட்டது. அரசன் ஹென்றி, தாமசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தொடங்கினான்.

1534ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 13ம் நாளன்று, தாமஸ் மோர் கைது செய்யப்பட்டு, விசாரணை ஆணைய குழுவினால் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பாராளுமன்ற சட்டங்களின்படி, "அன்னி போலின்" (Anne Boleyn) இங்கிலாந்து நாட்டின் அரசி என்பதை ஏற்றுக்கொள்வதாக கூறிய தாமஸ் மோர், அரசன் எட்டாம் ஹென்றியின் சட்டவிரோத விவாகரத்து மற்றும் இரண்டாம் திருமணம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இவருடன், "ரோச்செஸ்டர்" ஆயரான (Bishop of Rochester) "ஜான் ஃபிஷரும்" (John Fisher) அரசி கேதரினுடனான ஹென்றியின் விவாகரத்தை எதிர்த்தார். அரசர் "எட்டாம் ஹென்றியை" (Henry VIII) இங்கிலாந்து திருச்சபையின் தலைவராக (Supreme Head of the Church of England) ஏற்க தீவிரமாக மறுத்தார். நான்கு தினங்களின் பின்னர், தாமஸ் "இங்கிலாந்து டவர்" (Tower of London) சிறையிலடைக்கப்பட்டார்.

இறுதியில், மரண தண்டனை விதிக்கப்பட்டார். கி.பி. 1535ம் ஆண்டு, ஜூலை மாதம், 6ம் நாளன்று, அவருடைய மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா