Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் பவுல் ✠(St. Paul)
   
நினைவுத் திருநாள் : (ஜூன் / Juin 29)
✠ புனிதர் பவுல் ✠(St. Paul)
 வேற்று இனத்தவரின் திருத்தூதர் :
(Apostle of the Gentiles)

பிறப்பு : கி.பி 5
டார்சஸ், சிசிலியா, ரோம பேரரசு
(Tarsus, Cilicia, Roman Empire)

இறப்பு : கி.பி 67 (வயது 62)
ரோம், ரோம பேரரசு
(Rome, Roman Empire)

ஏற்கும் சமயம் : எல்லா கிறிஸ்தவ பிரிவுகளும்

முக்கிய திருத்தலங்கள் : மதிலுக்கு வெளியான பவுல் பசிலிக்கா ரோம்

நினைவுத் திருவிழா : ஜூன் 29

பாதுகாவல் :
மறைப்பணிகள் (Missions), இறையியலாளர்கள் (Theologians),
வேற்று இன கிறிஸ்தவர்கள் (Gentile Christians)

கிறிஸ்து இறந்து, உயிர்த்து, விண்ணகம் சென்றபின், புனிதர் இராயப்பர் (St. Peter) தலைமையில் திருச்சபை நிறுவப்பட்டு பன்னிரண்டு அப்போஸ்தலர்களும், மற்ற திருதூதர்களும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று கிறிஸ்துவை பற்றி எடுத்து கூறினர். அதிலும் மிகவும் முக்கியமான பணியை செய்தவர்களில் ஒருவர்தான் பவுல். தமிழில் லூத்தரன் திருச்சபை (Lutharan Church) மக்கள் இவரை பவுல் என்றும், கத்தோலிக்க திருச்சபை (Catholic Church) மக்கள் சின்னப்பர் என்றும் அழைப்பார்கள்.

புனிதர் பவுல் தன்னுடய வாழ் நாள் முழுவதும் புனித வாழ்க்கை வாழ்ந்தவர். தூய ஆவியின் கனிளை கொண்டவர். இயேசு கிறிஸ்து உலகின் மீது மண்டிக்கிடக்கும் பேரிருளை நீக்கிட தனது பல்கதிர்களை பரப்பி, உலகில் உள்ளோர் வியந்து போற்ற ஒளிய செய்து, அதில் மக்களை நல்வழியில் கொண்டு செல்ல இறைவன் கண்டதுதான் பவுல் அடிகளார்.

புனிதர் பவுல் ஒரு கிறிஸ்தவ புனிதராவார். இவரது இயற் பெயர் சவுல் (Saul) என்பதாகும். இவர் கி.பி. 5ம் ஆண்டு முதல், 67ம் ஆண்டு வரை வாழ்ந்தார். சிசிலியாவின் டார்சஸ் (Tarsus) பட்டினத்தைச் சேர்ந்த ரோம குடிமகனாவார். இவர் யூத மதத்தை பின்பற்றி வாழ்ந்தார். இவர் ஆரம்பத்தில், அக்காலத்தில் கிறிஸ்தவ மக்களைத் தேடி அழிக்கும் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். டமாஸ்கசில் (Damascus) கிறிஸ்தவர் பலர் இருப்பதாக அறிந்து அவர்களைக் கைது செய்து எருசலேமுக்கு கொண்டு வருவதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு டமாஸ்கஸ் செல்லும் வழியில் உயிர்த்த இயேசு ஒளி வடிவில் அவர் முன் தோன்றினார்.

பவுலாகிய சவுல் மனம் திரும்புதல் :
பின்னர் பவுல் இயேசுவை விசுவாசித்து மனம் மாறினார். இயேசுவை ஏற்ற பின்னர் மறை பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பவுல் ஆரம்பகால கிறிஸ்தவ மறை பரப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் ஆவார். கிறிஸ்து எல்லோருக்கும் பொதுவானவர்; யூதருக்கு மட்டும் உரியவரல்ல என்ற கருத்தை வலியுறுத்தினார். எனவே இவர் பிற இனத்தவரின் அப்போஸ்தலர் என அழைக்கப்படுகிறார்.

மன மாற்றத்துக்கு முன் :
புனிதர் பவுல் தன்னைப் பற்றி விவிலியத்தில் எழுதியுள்ளபடி, அவர் சிசிலியா நாட்டின் டார்சஸ் (Tarsus) பட்டணத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு ரோம குடிமகனாவார். அவரது குடும்பம் மிகவும் செல்வந்தக் குடும்பமாகும். இஸ்ரயேலின் பெஞ்சமின் கோத்திரத்தை சேர்ந்த ஒரு பரிசேயராவார். இளமையில் யூத மத சட்டங்களை கற்று தேர்ந்தார்.

அப்போது கிறிஸ்தவம் பரவத் தொடங்கிய காலமாகும். பல கிறிஸ்தவர் தமது நம்பிக்கை காரணமாகக் கொலை செய்யப்பட்டனர். பவுல் கிறிஸ்தவரை அழிக்க திடம் கொண்டு ஆட்சியாளரிடம் அதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு கிறிஸ்தவரைத் துன்புறுத்தினார். கிறிஸ்தவர் இவரது பெயரைக் கேட்டாலே அஞ்சினார்கள். இவ்வாறு செய்து கொண்டிருக்கும்போது டமாஸ்கசில் கிறிஸ்தவர்கள் இருப்பதாக கேள்விப்பட்டார். அங்கிருக்கும் கிறிஸ்தவரை கைது செய்து எருசலேம் நகருக்கு அழைத்து வருவதற்காக டமாஸ்கஸ் புறப்பட்டார்.
கிறிஸ்தவர்களை கைது செய்ய டமாஸ்கஸ் போகும் வழியில் திடீரென்று அவரது கண்பார்வை மங்கிப் போனது. குதிரையில் இருந்து விழுந்த அவருக்கு ஒர் குரல் கேட்டது. திடீரென வானத்திலிருந்து ஒரு ஒளி அவரைச் சுற்றிப் பிரகாசித்தது.
"சவுலே, சவுலே, சவுலே ஏன் என்னை துன்புறுத்துகிறாய்?"
சவுல் "ஆண்டவரே நீர் யார்?
நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே என்று குரல் கேட்டது.

கண் பார்வை பறிபோதல் :
ஆண்டவரே, நீர் யார் என்று சவுல் கேட்க, அதற்கு, நீ முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். சவுல் நடுங்கித் திகைத்து, ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றார். அதற்கு, நீ எழுந்து பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அவரோடு பிரயாணம் செய்த மனிதர்கள் குரலைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் பிரமித்து நின்றார்கள். சவுல் தரையிலிருந்து எழுந்து, தன் கண்களைத் திறந்தபோது பார்வையற்று இருந்தார். கூட இருந்தவர்கள் சவுலை கை தாங்கலாக, டமாஸ்கஸ் அழைத்துக்கொண்டு போனார்கள்.

அனனியாஸ் (Ananias of Damascus) மூலம் பார்வை பெறுதல் :
சவுல் மூன்று நாள் பார்வை இல்லாதவராய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தார். பின்பு கர்த்தர் அனனியாஸ் என்பவரை சவுலிடம் அனுப்பினார். அப்பொழுது அனனியாஸ் போய், சவுல் இருந்த வீட்டுக்குள் பிரவேசித்து, அவர்மேல் கையை வைத்து, சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான். உடனே அவர் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவர் பார்வை திரும்பியது.

ஞானஸ்நானம் பெறுதல் :
எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றார். பின்பு உணவுண்டு பலப்பட்டார். சவுல் டமாஸ்கஸிலுள்ள சீடருடனே சிலநாள் இருந்து, தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தார். கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு, எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடம் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்.

திருவிவிலியத்தில் இவரது பங்கு :
புதிய ஏற்பாட்டில் உள்ள 27 புத்தங்களில் 14 படைப்புக்கள் இவர் எழுதியது என கூறப்படுகிறது. பவுலின் எழுத்துக்களில், கிறிஸ்துவின் தன்மை இருப்பது, கிறிஸ்தவ ஆவிக்குரிய தன்மையை விவரிப்பது பற்றிய முதல் எழுத்து பதிவுகளை அவர் அளிக்கிறார். மத்தேயு மற்றும் யோவானுடைய சுவிசேஷங்களுக்குப் பிறகு புதிய ஏற்பாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க புத்தகங்களாக அவரது எழுத்துக்கள் விவரிக்கப்பட்டு காணப்படுகின்றன.

திருச்சபைகளுக்கு எழுதிய நூல்களின் தொகுப்புகள் :
❄ ரோமர்
❄ 1 கொரிந்தியர்
❄ 2 கொரிந்தியர்
❄ கலாத்தியர்
❄ எபேசியர்
❄ பிலிப்பியர்
❄ கொலோசெயர்
❄ 1 தெசலோனிக்கேயர்
❄ 2 தெசலோனிக்கேயர்
❄ 1 தீமோத்தேயு
❄ 2 தீமோத்தேயு
❄ தீத்து
❄ பிலேமோன்

பவுல் தனது நூல்களில் முதலாவதாக கிறிஸ்துவின் வாழ்த்துதல்களை முன்னுரையாகவும், முடிவுரையில் நன்றி கூறுதல் மற்றும் இறுதி வாழ்த்துதல்களையும் எழுதுவது வழக்கமாக கொண்டு இருந்தார்.

கடைசி நாட்கள் :
கைது :
பவுல் எருசலேமில் இருந்தபோது, யூதரல்லாதோரை தேவலயத்துக்குள் கூட்டிவந்ததாக பொய்யுரைத்து யூதர்கள் கூட்டமாய் ஓடிவந்து, பவுலைப் பிடித்து, அவரைத் தேவாலயத்திற்குப் புறம்பே இழுத்துக்கொண்டு போனர்கள். அவர்கள் அவரைக் கொலை செய்ய எத்தனித்தனர். எருசலேம் முழுவதும் கலக்கமாயிருக்கிறது என்று போர்ச் சேவகரின் சேனாபதிக்குச் செய்திவந்தது. உடனே அவன் போர்ச் சேவகரையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அவர்களிடத்திற்கு ஓடிவந்தான். சேனாபதியையும் போர்ச்சேவகரையும் மக்கள் கூட்டம் கண்டபோது பவுலை அடிக்கிறதை நிறுத்தினார்கள். சேனாபதி அருகேவந்து பவுலைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும், என்ன செய்தான் என்றும் விசாரித்தான். அதற்கு ஜனங்கள் பலவிதமாய்ச் சத்தமிட்டார்கள் சந்தடியினாலே உண்மையை அவன் அறியக்கூடாமல், அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். அவன் படிகள்மேல் ஏறினபோது ஜனக்கூட்டம் திரண்டு பின்சென்று, இவனை அகற்றும் என்று உக்கிரமாய்க் கூப்பிட்டபடியினாலே, போர்ச்சேவகர் பவுலைத் தூக்கிக்கொண்டு போக வேண்டியதாயிருந்தது.

கொலைச் சதி :
அவர்கள் பவுலைக்; கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில், பவுல் சேனாபதியிடம் தான் மக்களுடன் பேசும்படி அனுமதியை பெற்று கோட்டை படிகள் மேலிருந்தவாறு மக்களுக்கு இயேசுவைப் போதித்தார். இதனால் மேலும் கோபமடைந்த கூட்டம் மேலும் உக்கிரமாய் பவுலை கொலை செய்யும்படி கூக்குரலிட்டனர். பின்னர் நடந்த விசாரனைகளில் பவுலை குற்றப்படுத்த முடியாமல் போகவே, யூதர் விசாரணையின் போது கொலை செய்யச் சதி செய்தனர். இதை அறிந்த சேனாதிபதி பவுலை மிகுந்த காவலுக்கு மத்தியில் செசரியா பட்டணத்திற்குத் தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்தில் அனுப்பினான்.

சிறைவாசம் :
செசரியா பட்டணத்தில் நடந்த விசாரனைகளிலும் பவுல் வெற்றிகொண்டார். எனினும் அவர் விடுதலைக்காகக் கொடுக்க வேண்டிய பணத்தைச் செலுத்தாத காரணத்தினால் தேசாதிபதியாகிய பேலிக்ஸ் பவுலை இரண்டு வருடம் சிறையிலிட்டார். இதற்குள் புதிய தேசாதிபதியாக பொர்க்கியுபெஸ்து என்பவன் வந்து யூதரை சந்தோசப்படுத்தும் நோக்கில் பவுலின் சிறைக் காலத்தை நீடித்தான்.

மீள்விசாரனை :
புதிய தேசாதிபதியாகிய பேலிக்சை அனுகிய யூதர் வழியில் பவுலை கொலைச் செய்யும் உள்நோக்கத்துடன் விசாரணையின் பொருட்டு பவுலை எருசலேமுக்கு அனுப்பும் படி கேட்டனர். ஆனால் பவுல் தேசாதிபதியாகிய பேலிக்சிடம் உரோமில் அரசன் முன்பாக தனது விசாரணை நடத்தும் படி உத்தரவைப் பெற்று எருசலேம் செல்வதைத் தவிர்த்தார். செசரியா பட்டணத்திலிருந்து உரோம் நகர் வரை பவுலை ஒரு கப்பலில் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் கப்பல் வழியில் புயலை எதிர்கொண்டு பல நாட்களாகக் கடலிலிருந்தது. பின்பு உரோமை வந்தடைந்த பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருடம் முழுவதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தார். தேசாதிபதியாகிய பேலிக்ஸ் பவுல் மீது பற்று கொண்டவராகக் காணப்பட்டமையாலும், உரோம் நகரில் யூத மதத்தினர் பெரும்பான்மையாக இல்லாத காரணத்தினாலும் பவுல் மீதான வழக்கை யூதர் கைவிட்டனர்.

மரணம் :
பவுலின் மரணம் பற்றிய தகவல் விவிலியத்தில் காணப்படவில்லை. எனினும் அவர் ரோமில் வேத சாட்சியாக மரித்தார் என்பது மரபு. கி.பி 69ம் ஆண்டு நீரோ மன்னன் ஆட்சி காலத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டது. மரண தண்டனை ரோமானியர்கள் சிலுவை மரணத்தை பழித்தலுக்குரிய மரணம் என்று எண்ணியதால், பவுலுக்கு ரோமானியர்கள் அவரது தலையை வெட்டி கொலை செய்தனர்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா