Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் நோர்பர்ட் ✠(St. Norbert of Xanten)
   
நினைவுத் திருநாள் : (ஜூன் / Juin 06)
✠ புனிதர் நோர்பர்ட் ✠(St. Norbert of Xanten)

 *மக்டேபர்க் பேராயர்/ நிறுவனர் :
(Archbishop of Magdeburg and Founder)

 *பிறப்பு : கி.பி. 1080
கென்னபெரிஸ், கொலோன் மறைமாவட்டம், தூய ரோம பேரரசு
(Genneperhuis, Diocese of Cologne, Holy Roman Empire)

 *இறப்பு : ஜூன் 6, 1134
மேக்டிபர்க், மேக்டிபர்க் உயர்மறைமாவட்டம் (தற்போதைய சக்ஸனி-அன்ஹல்ட், ஜெர்மனி)
(Magdeburg, Archbishopric of Magdeburg (now Saxony-Anhalt, Germany)

 *ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

 *புனிதர் பட்டம் : கி.பி. 1582
திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி
(Pope Gregory XIII)

 *நினைவுத் திருநாள் : ஜூன் 6

 *பாதுகாவல் :
பாதுகாப்பான பிரசவம், "மேக்டிபர்க்" (Magdeburg)

புனிதர் நோர்பர்ட், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஒரு பேராயரும், "ப்ரீமொன்ஸ்ட்ரேடேன்சியன்" (Premonstratensian) அல்லது நோர்பர்ட்டைன்" (Norbertines) என்று அழைக்கப்படும் சபையை நிறுவியவரும் ஆவார்.

ஜெர்மனியின் "சென்டென்" (Xanten) எனுமிடத்தில், அரச குடும்பத்தில் பிறந்த இவர், பேரரசின் இல்லத்தில் வளர்ந்தார். இவரது தந்தை, தூய ரோம பேரரசின் பிரபுவான "ஹெரிபர்ட்" (Heribert) ஆவார். இவரது தாயாரின் பெயர் "ஹெட்விக்" (Hedwig of Guise) ஆகும். உலக இன்ப சுகங்கள் இவரை தேடி வந்தன.

ஒருமுறை இவர், துணை திருத்தொண்டராக அருட்பொழிவு பெறுவதற்காக, தமது குடும்பத்தின் செல்வாக்கின் மூலமாக பங்கு தேவாலயமான புனிதர் விக்டர் தேவாலயத்திலிருந்து நிதி மானியம் கிடைக்கப்பெற்றார். தேவாலய அலுவலகத்தில் வெறுமனே உட்கார்ந்து மந்திரிப்பது மட்டுமே இவரது பணியாகும். அத்துடன், கொலோன் நகர பேரரசர் ஐந்தாம் ஹென்றிக்கு (Emperor Henry V in Cologne) மத ஆலோசகராகவும் பணி நியமனம் பெற்றிருந்தார். ஆகவே இவருக்கு இருபுறமுமிருந்து வருவாய் தாராளமாக வந்தது.

மத குருவாக அருட்பொழிவு பெறுவதை இவர் விரும்பவில்லை. கி.பி. 1113ம் ஆண்டு, ஒருமுறை "காம்ப்ராய் ஆயராக" (Bishop of Cambrai) நியமனம் கிட்டியது. அதையும் அவர் மறுத்துவிட்டார். காரணம், பணிச்சுமையே ஆகும்.

கி.பி. 1115ம் ஆண்டு, இளவேனிற்காலத்தில் "முன்ஸ்டர்லேண்ட்" (Mnsterland) என்னுமிடத்தின் மேற்கத்திய பகுதியிலுள்ள "வ்ரடென்" (Vreden) எனும் இடத்திற்கு ஒருமுறை இவர் குதிரை சவாரி சென்றார். திடீரென தோன்றிய இடி மின்னல் குதிரையின் காலை தாக்கவே, மிரண்டு போன குதிரை இவரை கீழே தள்ளிவிட்டு ஓடிச் சென்றது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சுய நினைவின்றி கிடந்தார் நோர்பர்ட்.

கிட்டத்தட்ட உயிருக்கு ஆபத்தான இந்த விபத்துக்குப் பிறகு, இவரது கடவுள் பக்தியானது சிறிதே ஆழமானது. தமது பணி நியமனங்களை கைவிட்ட இவர், தவ வாழ்வு வாழ்வதற்காக "சன்டேன்" (Xanten) நகருக்கு திரும்பிச் சென்றார். "கொலோன்" (Cologne) நகருக்கு அருகேயுள்ள "புனித சிகேபெர்க்" (St. Sigeberg) மடத்தின் மடாதிபதியான "கோனோ" (Cono) என்பவரின் வழிகாட்டுதலின்படி வாழ ஆரம்பித்தார்.

1115ம் ஆண்டு, தமது ஆன்மீக வழிகாட்டியான கோனோவுக்கு நன்றி தெரிவிக்குமுகமாக தமது சொத்தின் ஒரு பகுதியை செலவிட்டு, "ஃபர்ஸ்டென்பெர்க்" (Abbey of Frstenberg) துறவு மடத்தை நிறுவி கோனாவுக்கும் அவரை பின்பற்றும் அவரது பெனடிக்டைன் துறவியர்க்கும் அளித்தார். நோர்பர்ட் தமது முப்பத்தைந்து வயதில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். நோர்பர்ட் நற்கருணை ஆண்டவர் மற்றும் இறைவனின் அதி தூய அன்னையான மரியாளின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். அவர் ஏற்றுக்கொண்ட துறவறத்தின் கடுமை காரணமாக அவரது முதல் மூன்று சீடர்கள் மரித்துப் போயினர். இதனால் மிகவும் துயருற்ற நோர்பர்ட், தமது சொத்துக்கள் யாவையும் விற்று ஏழைகளுக்கு செலவிட்டார்.

நோர்பர்ட், திருத்தந்தை "இரண்டாம் கெலசியஸ்" (Pope Gelasius II) அவர்களை காணச் சென்றார். திருத்தந்தை அவரை குடிமக்களின் பிரசங்கியாகும்படி அறிவுறுத்தினார். நோர்பர்ட், தற்போதைய மேற்கு ஜெர்மனி (Western Germany), பெல்ஜியம் (Belgium), நெதர்லாந்து (The Netherlands) மற்றும் வட ஃபிரான்ஸ் (Northern France) ஆகிய நாடுகளில் பிரசங்கித்தார். இவரது பிரசங்கங்களின்போது, எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தியதாகவும் கூறப்படுகின்றது.

நோர்பர்ட், மத்திய ஜெர்மனியிலுள்ள "மக்டேபர்க்" (Magdeburg) உயர்மறைமாவட்டத்தின் பேராயராக ஆர்வமில்லாமலே பொறுப்பேற்றார். காரணம், அப்போதைய கால கட்டத்தில், அங்கே கிறிஸ்தவம் மற்றும் பாகனிசம் இரண்டுமே சரிசமமாக இருந்தன. இருப்பினும் நோர்பர்ட் வைராக்கியமாகவும் தைரியமாகவும் 1134ம் ஆண்டு, ஜூன் மாதம், 6ம் நாளன்று, தாம் மரிக்கும்வரை திருச்சபைக்கு தமது சேவையை தொடர்ந்து ஆற்றினார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா