Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஃபிரான்சிஸ் டி சலேஸ்✠ (Francis De Sales)
   
நினைவுத் திருநாள் : ஜனவரி 24
  ✠ புனிதர் ஃபிரான்சிஸ் டி சலேஸ் ✠ (St. Francis de Sales)

*ஜெனீவா நகர ஆயர்/ மறைவல்லுநர் : (Bishop of Geneva/ Doctor of the Church)

*பிறப்பு : ஆகஸ்ட் 21, 1567
சாடேயு டி சலேஸ், சவோய், தூய ரோம பேரரசு
(Chteau de Sales, Duchy of Savoy, Holy Roman Empire)

*இறப்பு : டிசம்பர் 28, 1622 (அகவை 55)
லியோன்ஸ், லியோன்னைஸ், ஃபிரான்ஸ் அரசு
(Lyons, Lyonnais, Kingdom of France)

*ஏற்கும் சபை :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)

*முக்திப்பேறு பட்டம் : ஜனவரி 8, 1661
திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டர் (Pope Alexander VII)

*புனிதர் பட்டம் : ஏப்ரல் 8, 1665
திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டர் (Pope Alexander VII)

*சித்தரிக்கும் வகை :
இயேசுவின் தூய இருதயம், முள் முடி

*பாதுகாவல் :
ரொட்டி செய்பவர் (Baker); ஓரிகன் (Oregon);
சின்சினாட்டி (Cincinnati); எழுத்தாளர்கள் (Writers);
செய்தியாளர்கள் (Journalists); கொலம்பஸ் (Columbus);
ஓஹியோ (Ohio); காது கேட்காதவர்கள் (Deaf people);
கல்வியாளர் (educators); அபிங்டன் (Upington);
தென் ஆப்பிரிக்கா (South Africa); வில்மிங்டன் (Wilmington);
டெலவெயர் (Delaware); செய்தியாளர் (Catholic press);
பாவ மன்னிப்பாளர் (Confessors)
கிறிஸ்து அரசர் பேரரசு குருவின் கல்வி நிலையம் (The Institute of Christ the King Sovereign Priest)

*முக்கிய திருத்தலங்கள் :
அன்னசி, ஹௌட்-சவோய், ஃபிரான்ஸ் (Annecy, Haute-Savoie, France)

புனிதர் ஃபிரான்சிஸ் டி சலேஸ், ஜெனீவா நகரின் ஆயரும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் சீர்திருத்தத் திருச்சபையினரை மீண்டும் கத்தோலிக்க திருச்சபையோடு சேர்க்க அரும்பாடுபட்டார். இவர் ஒரு சிறந்த மறை சொற்பொழிவாளர். இவரின் புத்தகங்கள், குறிப்பாக "Introduction to the Devout Life" மற்றும் "Treatise on the Love of God" ஆகியன, ஆன்மீக உருவாக்கம் மற்றும் ஆன்மீக வழிகாட்டலுக்கு பெரிதும் பயன்படுகின்றன.

இளமைக் காலம் :
1597ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 21ம் நாள், ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள சவோய் (Savoy) குடும்பத்தில் பிறந்த இவரது தந்தையார், "ஃபிரான்காய்ஸ் டி சலேஸ்" (Franois de Sales) ஆவார். தாயார், "ஃபிரான்காய்ஸ் டி சியோன்னஸ்" (Franoise de Sionnaz) ஆவார். இவரது திருமுழுக்குப் பெயர் "ஃபிரான்சிஸ் பொனவென்ச்சுரா" (Francis Bonaventura) ஆகும்.

இவர், தமது பெற்றோருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளுள் முதல் குழந்தை ஆவார். இவருடைய தந்தையார், இவர் எதிர்காலத்தில் சிறந்ததோர் நீதிபதியாக வரவேண்டும் என்ற எண்ணத்தில், இவருக்கு அருகேயிருந்த நகரத்தில் உயர்தர கல்வி அளிக்கப்பட ஏற்பாடு செய்தார். எட்டு வயதில், அன்னேசி நகரிலுள்ள கப்புச்சின் கல்லூரியில் (Capuchin college in Annecy) கல்வி பயின்றார்.

கல்வி :
1583ம் ஆண்டு, பாரிஸ் நகரில் உள்ள, இயேசு சபையின் கல்வி நிறுவனமான "காலேஜ் டி கிலர்மோண்டில்" (Collge de Clermont) "சொல்லாட்சி" மற்றும் "மனிதநேயம்" ஆகியவற்றில் உயர் கல்வி கற்க சென்றார்.

1584ம் ஆண்டு, இறையியலில் விதி அல்லது நியதி பற்றின ஒரு விவாதத்தில் கலந்துகொண்டார். அப்போது, தான் கண்டிப்பாக நரகத்திற்கு செல்வது உறுதி என எண்ணி மிகவும் வருந்தினார். அதனால் ஏற்பட்ட துக்கத்தினால் 1586ம் ஆண்டு, டிசம்பர் மாதம், உடல் நலம் குன்றியது. 1587ம் ஆண்டு, ஜனவரி மாதம், தெற்கு ஃபிரான்ஸில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு திருப்பயணம் மேற்கொண்டார். அங்கே, "கருநிற மடோன்னா" (Black Madonna) என்றழைக்கப்படும் அர்ச்சிஷ்ட "மீட்பு" அன்னை கன்னி மரியாளின் (Our Lady of Good Deliverance) திருச்சொரூபத்தின் முன்னே செபம் செய்தார். கடவுளுக்கு தன் வாழ்வினை அர்ப்பணிக்க முடிவு செய்தார். தம்மை இறை அன்னைக்கு ஒப்புக் கொடுத்தார். கடவுள் அன்பாய் இருகின்றார் என விவிலியம் கூறுகின்றது; ஆதலினால், அவரிடம் முழு நம்பிக்கை வைத்து அவர் காட்டும் பாதையில் செல்ல தீர்மானித்தார்.

1592ம் ஆண்டு, சட்டம் மற்றும் இறையியல் துறைகளில் முனைவர் பட்டத்தை பதுவா பல்கலைக்கழகத்தில் பெற்றார். இங்கே தான் தனக்கு இறை அழைத்தல் இருப்பதாக முதன் முதலில் உணர்ந்தார். படிப்பு முடிந்ததும், உடனே வீடு திரும்பாமல், இத்தாலியின் "லொரெட்டோ" (Loreto) என்னுமிடத்திலுள்ள மரிய அன்னை திருத்தலத்திற்க்கு திருப்பயணம் சென்றார்.

மனித நேயம், சொல்லாட்சிக் கலை, இறையியல், மற்றும் சட்டம் படித்தப் பின்னர், தன் தந்தை பார்த்து வைத்திருந்த செல்வந்தக் குடும்பப்பெண்ணை மணக்காமல் குருவாக தீர்மானித்தார். அப்போதய ஜெனீவா நகர ஆயரின் அழைப்பை ஏற்று, 1593ம் ஆண்டு, குருமடத்தில் சேர்ந்து, குருத்துவம் பெற்று, அம்மறைமாவட்ட தேவாலயத்தில் பணிபுரிந்தார்.

ஆயராக :
1517ம் ஆண்டு, கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் ஆரம்பமானதிலிருந்து, சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரின் கத்தோலிக்க ஆயர்கள் ஃபிரான்ஸில் உள்ள அன்னெசி என்னும் இடத்தில் தங்கியிருந்தனர், ஃபிரான்சிஸ் பேராலயத்தில் பணிசெய்து கொண்டுருந்ததால், சவாய் நகரில் இருந்த சீர்திருத்தத் திருச்சபையினரிடமும் மறை பரப்பலானார், இவரின் முயற்ச்சியால் பலரும் கத்தோலிக்கத்திற்க்கு திரும்பலாயினர்.

இவர் ரோம் நகரம் மற்றும் பாரிஸ் நகருக்கு பயணம் செய்து திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் மற்றும் ஃபிரெஞ்ச் அரசன் ஆறாம் ஹென்றியும் உடன்பாடு செய்ய வைத்தார்.

1602ம் ஆண்டு, ஜெனீவா ஆயரின் இறப்புக்குப் பின், ஃபிரான்சிஸ் டி சலேஸ் புதிய ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டார். இவரின் ஆயத்துவ பணியின்போது, எல்லோரும் இவரை சிறந்த மறையுரையாளராகவும், ஏழை எளியவரின் நண்பராகவும் கண்டனர். இவரின் புத்தகங்களில் இவரின் ஃபிரெஞ்ச், இத்தாலிய மற்றும் இலத்தீன் மொழிகளின் புலமை வெளிப்பட்டது.

1610ம் ஆண்டு, ஜூன் மாதம், ஆறாம் தேதி, "புனித ஜேன் ஃபிரான்சிஸ் டி சான்ட்டலுடன்" (St. Jane Frances de Chantal) இணைந்து, "மாதா மிணவுதல் சபை" (Order of the Visitation of Holy Mary) என்னும் பெயரில், பெண்களுக்கான துறவர சபையினை நிறுவினார். இவர், "புனித பிலிப் நேரியின் சொற்பொழிவுக்கலை சபை" (Oratory of St. Philip Neri) என்ற பெயரில் ஆண்களுக்கான ஒரு சிறு சபையையும் தோற்றுவித்தார்.

1622ம் ஆண்டு, டிசம்பர் மாதம், "சவோயின் பிரபு முதலாம் சார்லஸ் இம்மானுவலின்" (Charles Emmanuel I, Duke of Savoy) பரிவாரங்களுடன் பயணித்துக்கொண்டிருந்த ஃபிரான்சிஸ் டி சலேஸ், "லியொன்" (Lyon) சென்று சேர்ந்ததும், "விசிட்டேன்டைன் துறவு மடத்தின்" (Visitandine monastery) தோட்டக்காரரின் குடிலில் ஓய்வெடுப்பதற்காக தங்கினார். டிசம்பர் மாதம், 28ம் தேதி, மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இவர், இறைவனடி சேர்ந்தார்.

இறப்புக்குப் பின் :
திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டர், ஃபிரான்சிஸ் டி சலேஸுக்கு 1661ம் ஆண்டு, அருளாளர் பட்டமும், நான்கு வருடத்துக்கு பின் புனிதர் பட்டமும் அளித்தார்.
1877ம் ஆண்டு, திருத்தந்தை ஒன்பதாம் பயஸ், இவரை திருச்சபையின் மறைவல்லுநராக பிரகடணம் செய்வித்தார்.

இவரின் நினைவுத் திருவிழா நாள் ஜனவரி 24 ஆகும்.
 தூய பிரான்சிஸ் சலேசியார்

நிகழ்வு

"தூய பிரான்சிஸ் சலேசியார் என்னுடைய வாழ்வின் முன்மாதிரி; அவருடைய வாழ்க்கை வரலாற்றை நான் பலமுறை படித்திருக்கிறேன். அவருடைய அறிவுரைகள் என் வாழ்வில் எவ்வளவு பொருத்தமாக உள்ளன! அவரது முன்மாதிரிகையால், தாழ்ச்சி, சாந்தகுணம், அமைதி இவைகளின் மீது என் உள்ளம் தணியாத வேட்கை கொண்டுள்ளது. நாள்தோறும் நான் சாதாரண அலுவல்களையும் மிக மேலான நோக்கத்துடன் செய்தாலே போதும் என்று இப்போது புரிந்துகொண்டேன். பிரான்சிஸ் சலேசியார் அமைதிப் பண்பு உள்ளவராகவே மக்கள் அனைவரிடத்திலும் நடந்துகொண்டார் என்பதை அவரைத் தேடி வந்த யாவரும் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது"

இப்படிச் சொன்னவர் வேறு யாருமல்ல திருத்தந்தை இருபத்தி மூன்றாம் யோவான். அவர் தூய பிரான்சிஸ் சலேசியாரை முன்மாதிரிகையாகக் கொண்டு, தன்னுடைய வாழ்கையை இறைவனுக்கு உகந்ததாக மாற்றிக்கொண்டார்.

வாழ்க்கை வரலாறு

தூய பிரான்சிஸ் சலேசியார் 1567 ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 21 ஆம் நாள், பிரான்சில் உள்ள சாவாய் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் செல்வச் செழிப்பான குடும்பம். இவருடைய தந்தை, இவரை சட்டம் படிக்க பதுவாவிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் பிரான்சிஸ் சலேசியாரோ சட்ட மேதையாக மாறுவதற்குப் பதிலாக குருவாக மாறி வந்தார். இது இவருடைய தந்தைக்குப் பிடிக்கவே இல்லை. இருந்தாலும் இவர், இறைவன் தன்னை ஒரு குருவாகப் பணிசெய்யவே அழைத்திருக்கிறார் என்று தன்னுடைய தந்தையிடம் எடுத்துச் சொல்லி குருத்துவப் பணியை தொடர்ந்து ஆற்றினார்.

குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டவுடன் இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா என்ற இடத்தில் பணிசெய்ய நியமிக்கப்பட்டார். அந்தக் காலத்தில் கால்வின் பதிதத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. எனவே, இவர் கால்வின் பதிதத்தை மிகவும் முழுமூச்சோடு எதிர்த்து, கிறிஸ்தவர்களை கத்தோலிக்க மறைக்குள் கொண்டு வந்தார். 1603 ஆம் ஆண்டு ஜெனிவாவில் இருந்த ஆயர் இறந்துவிட, இவர் ஆயர் பொறுப்பை ஏற்றார். அதன்பிறகு இவர் இன்னும் தீவிரமாக கால்வின் பதிதத்தை எதிர்த்து, ஏறக்குறைய எழுபதாயிரம் கிறிஸ்தவர்களை கத்தோலிக்க மறைக்குள் கொண்டுவந்து சேர்த்தார்.

பிரான்சிஸ் சலேசியார் மிகப்பெரிய மறைபோதகராக விளங்கினார். இவருடைய போதனைகள் எல்லா மக்களையும் ஈர்ப்பதாக இருந்தது. அதனால் இவர் நிறைய மக்களை மனமாறச் செய்தார். கடவுள் இவருக்கு நன்றாக எழுதும் திறமையையும் கொடுத்திருந்தார். அதன் வழியாக இவர் Introduction to Devout Life, Treastise on the Love of God and Spiritual Conferences என்ற இரண்டு புத்தகங்களைப் படைத்திருக்கிறார். இவை இரண்டுமே ஆன்மீக வாழ்விற்கு பேருதவியாக இன்றுவரை இருக்கின்றன. இவர் ஒரு சபையையும் ஏற்படுத்தினார். அந்தச் சபையின் பெயர் "Orders Of the Sisters of Visitation". இயல்பிலே இவர் மிகவும் தாழ்ச்சியும் சாந்தகுணம் உள்ளவராக இருந்தார். அதனால் நிறைய மக்கள் இவரை எளிதாக அணுகமுடிந்தது.

இப்படி திருச்சபையின் வளர்ச்சிக்குப் பேருதவியாகவும், மக்களின் ஆன்மீக வாழ்விற்கு உற்றத் துணையாகவும் இருந்த பிரான்சிஸ் சலேசியார் 1622 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் நாள், பிரான்சில் உள்ள லியோன் என்ற இடத்தில் இறைவனடி சேர்ந்தார். 1665 ஆம் ஆண்டு இவர் புனிதராக உயர்த்தப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பிரான்சிஸ் சலேசியாரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

தாழ்ச்சி

தூய பிரான்சிஸ் சலேசியார் தாழ்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாது. தன்னுடைய உள்ளத்தில் தாழ்ச்சி, செயலிலும் தாழ்ச்சியோடு விளங்கினார். அதனால்தான் நிறைய மனிதர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார். நீதிமொழிகள் புத்தகம் 18:12 ல் வாசிக்கின்றோம், "மேன்மையடைய தாழ்சியே வழி" என்று. நாம் தாழ்ச்சியோடு இருக்கின்றபோது இறைவனால் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம் என்பது உண்மை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கூறுவார், "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே, என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் (மத் 11:29). நாம் ஆண்டவர் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடமும் இதுவாகத்தான் இருக்கின்றது. எனவே, நம்முடைய வாழ்க்கையில் நாம் தாழ்ச்சி என்ற புண்ணியத்தை கடைப்பிடித்து வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஓர் ஊரில் மக்களை அதிகமாக அன்பு செய்த, மிகவும் தாழ்ச்சியான மகான் ஒருவர் இருந்தார். மக்களும் பதிலுக்கு அவரை அதிகமாக அன்புசெய்தார்கள். ஒருநாள் அவருக்கு முன்பாக வானதூதர் ஒருவர் தோன்றி, "கடவுள் நீங்கள் வாழும் வாழ்க்கை முறையைப் பார்த்துவிட்டு பெரிதும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். ஆதலால், அவர் என்னை உங்களிடத்தில் அனுப்பி, உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டுவரச் சொன்னார்" என்றார். அதற்கு அவர், "எனக்கு ஒரு வரமும் வேண்டும், கடவுள் என்னை இந்த நிலையில் வைத்திருக்கிறாரே அதுவே போதும்" என்றார். உடனே வானதூதர், "அப்படியில்லை கடவுள் உங்களுக்கு ஏதாவது வரத்தைத் தந்துவிட்டுத்தான் வரவேண்டும் என்று என்னிடத்தில் சொல்லி அனுப்பியிருக்கிறார். ஆகையால் உங்களுக்கு ஏதாவது ஒரு வரத்தை கட்டாயம் தரவேண்டும். நோயாளிகளைக் குணப்படுத்தும் வரத்தைத் தரவா? என்றார். மகானோ, "நோயாளிகளைக் குணப்படுத்துவது கடவுளுக்கு மட்டுமே உரித்தான ஒரு சக்தி. தயவுசெய்து அந்த வரத்தை எனக்குக் கொடுத்து என்னைக் கடவுளுக்கு இணையாக்கி விடாதீர்" என்றார்.

"அப்படியானால், உங்களுக்கு பாவிகளை மனந்திரும்பச் செய்யும் வரத்தைத் தரட்டுமா?" என்றார் வானதூதர். "பாவிகளை மனந்திருப்பும் பணி வானதூதர்களுக்குச் சொந்தமானது, எனக்கு அந்த வரம்வேண்டாம்" என்றார் மகான். "எதுவுமே வேண்டாம் வேண்டாம் என்று சொல்கிறீர்கள். பின்பு என்ன வரத்தைத்தான் உங்களுக்குத் தருவது?" என்று கெஞ்சிக் கேட்டார் வானதூதர். சற்று நிதானமாக யோசித்த மகான், "நான் செய்யும் நல்ல செயல் எதுவும் யாருக்குமே தெரியாமல் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட வரத்தை எனக்குத் தாரும். ஏனென்றால் என்னால் ஒரு நல்ல செயல் நடைபெறுகிறது என்று எனக்குத் தெரிந்தால், அது எனக்குள் ஆணவத்தை உண்டு பண்ணும். ஆகையால் நான் செய்யும் நல்ல செயல் யாருக்குமே தெரியாமல் நடக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒரு வரத்தைத் தாரும்" என்றார்.

உடனே வானதூதர் அவருக்கு, அவர் சூரிய ஒளியைப் பார்த்து நடக்கின்றபோது, அவருடைய நிழல்படும் மக்களைக் குணப்படுத்தும் வரத்தைத் தந்தார். அந்த மகான் சூரிய ஒளியை நோக்கி நடந்தபோது, அவருடைய நிழல் அவருக்குப் பின்னால் விழுந்தது. இதனால் அவருக்கு, அவருடைய நிழல் யார்மீது விழுகிறது என்றோ, அதனால் யார் குணமடைகிறார் என்றோ தெரியவில்லை. அவருக்குத் தெரியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் குணமடைந்தார்கள்.

இப்படி, தான் செய்யும் நற்செயல் யாருக்குமே தெரியக்கூடாது என்று மிகவும் தாழ்ச்சியோடு வாழ்ந்த மகானால் ஏராளமான பேர் நன்மைகளை அடைந்தார்கள். அவரும் கடவுளுடைய பார்வையில் மேன்மைமிக்கவராக விளங்கினார்.

"தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்படுவார்" என்பார் இயேசு. மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் மகானும் சரி, நம் புனிதர் பிரான்சிஸ் சலேசியாரும் சரி தாழ்ச்சிக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்கள். ஆகவே, நாமும் தாழ்ச்சி என்ற புண்ணியத்தை நமது வாழ்வில் கடைப்பிடித்து வாழும்போது கடவுளால் மேலும் மேலும் உயர்த்தபடுவோம் என்பது உறுதி.

இயற்கையில் இறைவனைக் காணுதல்

தூய பிரான்சிஸ் சலேசியார், தான் படித்தபோதும் சரி, குருவாக மாறியபிறகும் சரி இயற்கையில் இறைவனைக் காண முயன்றார். இதனை நாம் அவர் எழுதிய Introduction to Devout Life, Treastise on the Love of God and Spiritual Conferences என்ற இரண்டு புத்தங்களிலும் காணலாம்.

இப்புனிதரின் விழாவைக் கொண்டாடும் நாம் இறைவன் இயற்கையில் உறைந்திருக்கிறார் என உணர்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இளைஞன் ஒருவன் கடவுளைக் காண்பதே தன்னுடைய இலட்சியம் என்று முடிவு செய்தான். அதனால் அவன் ஒரு வனத்துக்குள் போய் அமர்ந்தான். "கடவுளே! உன் குரலைக் கேட்க வேண்டும்" என்று கத்தினான். குயிலோசை மட்டும் கேட்டது. அவன் கவனிக்கவில்லை. "கடவுளே! என்னிடம் பேச மாட்டாயா" என்று அழுது புரண்டான். இடி ஓசை எழுந்தது. அவனுக்குப் புரியவில்லை. "கடவுளே உன்னைப் பார்க்கவேண்டும்" என்று அலறினான். ஒரு நட்சத்திரம் "பளீர்" என்று ஒளி வீசியது. அவன் பார்க்கவில்லை. "கடவுளே என்னை வந்து தீண்ட மாட்டாயா?" என்று கெஞ்சினான். ஒரு வண்ணத்துப்பூச்சி பறந்து வந்து தோளில் வந்து அமர்ந்தது. அவனோ அதனைத் தட்டிவிட்டு "கடவுள் இல்லை என்பதுதான் நிஜம் போலிருக்கிறது" என்று சொல்லிக்கொண்டு எழுந்து நடக்கத் தொடங்கினான்.

பிரபஞ்சத்தின் மொழி புதியாத அந்த இளைஞனால் கடவுளின் மொழியை எப்படிப் புரிந்துகொள்ள முடியும் என்றுதான் தெரியவில்லை. கதையில் வரும் இளைஞனைப் போன்றுதான் நாமும் இறைவன் இயற்கையில் உறைந்திருக்கிறார் என்பதை உணராமல், இயற்கையை அழிக்கின்றோம், அதனை மாசுபடுத்துகின்றோம். ஆகவே, இத்தகைய ஒரு நிலையை மாற்றி இறைவன் இயற்கையில் உறைந்திருக்கிறார் என்பதை உணர்ந்து, இயற்கையை காக்க முயற்சிப்போம்.

எனவே, தூய பிரான்சிஸ் சலேசியாரின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாமும் அவரைப் போன்று தாழ்ச்சியோடு வாழ்வோம், இயற்கையில் இறைவனைக் காண முயற்சிப்போம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Maria Antonyraj, Palayamkottai.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா