Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 தூய வனத்து அந்தோனியார்✠( Antony of Egypt )
     
நினைவுத் திருநாள் : ஜனவரி 17
 ✠ புனித வனத்து அந்தோனியார் ✠ (St. Antony the Great)

* வணக்கத்துக்குரியர்; துறவிகளின் தந்தை;
கடவுளை கைகளில் ஏந்தியவர் :
(Venerable; God-bearing; Father of Monasticism)

* பிறப்பு : கி.பி. 251
ஹெராகிளியோபோலிஸ் மேக்னா,எகிப்து (Herakleopolis Magna, Egypt)

* இறப்பு : கி.பி. 356
கோல்சிம் மலை, எகிப்து (Mount Colzim, Egypt)

* ஏற்கும் சமயம் :
கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
காப்டிக் மரபுவழி திருச்சபை (Coptic Orthodox Church)
கிழக்கு அஸ்ஸிரியன் திருச்சபை (Assyrian Church of the East)
கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)
ஓரியண்ட்டல் திருச்சபை (Oriental Orthodox Churches)
ஆங்கிலிக்கன் சமூகம் (Anglicanism)

* முக்கிய திருத்தலங்கள் :
புனித வனத்து அந்தோனியார் மடம், எகிப்து
(Monastery of St. Anthony, Egypt)
புனித அந்தோனியார் திருத்தலம், மாரம்பாடி, தமிழ்நாடு
(St. Anthony Shrine, Marambadi, Tamil Nadu, India)
புனித அன்டோய்ன்-அய்'அப்பாயே, ஃபிரான்ஸ்
(Saint-Antoine-l'Abbaye, France)

* பாதுகாவல் :
தோல் நோய்கள், கூடை நெய்வோர், சவக்கிடங்கு தோண்டுவோர்
(Skin diseases, basket makers, Gravediggers)

புனித வனத்து அந்தோனியார் (Anthony of the Desert) எகிப்து நாட்டின் கிறிஸ்தவ துறவியும் தமது மரணத்தின் பின்னர் புனிதராகவும் மதிக்கப்பட்டவரும் ஆவார். இவர், தமக்குப் பின்வந்த அனைத்து துறவிகளின் தந்தை (Father of All Monks) என்றும் அழைக்கப்படுகின்றார்.

இவர் பின்வரும் பல்வேறு பட்டப்பெயர்களால் அழைக்கப்படுகிறார்:
"பெரிய அந்தோனியார்" (Anthony the Great)
"எகிப்தின் அந்தோனியார்" (Anthony of Egypt)
"மடாதிபதி அந்தோனியார்" (Anthony the Abbot)
"பாலைவனத்து அந்தோனியார்" (Anthony of the Desert)
துறவி அந்தோனியார்" (Anthony the Anchorite)

"அலெக்சான்றியாவின் அதனாசியஸ்" (Athanasius of Alexandria) எழுதிய அந்தோனியாரின் சரிதம், அதன் லத்தீன் மொழியாக்கம் மூலம், முக்கியமாக மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவ துறவறத்தின் கருவினை பரப்புவதில் உதவியது.

புனித வனத்து அந்தோனியார், எகிப்து நாட்டிலுள்ள "கோமா (Coma) என்னும் சிற்றூரில் மிக வசதி படைத்த செல்வம் மிக்க குடும்பத்தில் பிறந்தார். சுமார் பதினெட்டு வயதில் பெற்றோர்களை இழந்தார். இதனால் தம்முடைய திருமணமாகாத உடன்பிறந்த சகோதரியை கவனிக்கும் பொறுப்பை ஏற்றார்.

தினம் தவறாது திருப்பலியில் பங்கெடுத்தார். சிறிது காலத்திலேயே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி அறிவுரையான, "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. உமக்குள்ள யாவற்றையும் விற்று ஏழைகளுக்கு கொடும்; அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்." (லூக் 18:22) என்பதை பின்செல்ல முடிவெடுத்தார்.

பின்னர், தன் சொத்துக்கள் செல்வங்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு, தமது சகோதரியை கிறிஸ்தவ கன்னியர் குழுவொன்றில் விட்டார். பின்னர், இயேசுவைத் தேடி தனிமையில் வனத்திற்கு சென்று தவ வாழ்வு வாழ்ந்தார். பாலைவனத்தில் சிறிய இல்லம் ஒன்றை அமைத்து கடுமையான வாழ்வு வாழ்ந்தார். ஏறக்குறைய 20 ஆண்டுகள் காட்டிலும் பாலைவனத்திலும் வாழ்ந்தார்.

பின்னர் இவர் அரசர் மாக்சிமினஸ் டாஸா (Maciminus Daza) என்பவருடன் இணைந்து கிறிஸ்தவ மக்களுக்கு பல அறிவுரைகளை வழங்கினார். அரசர் மாக்சிமீனுசின் ஆலோசகராகவும் பணியாற்றினார். துறவிகள் பலரின் வாழ்வுக்கு வழிகாட்டினார். இவர் வாழ்ந்த வாழ்க்கையை கண்ட பல இளைஞர்கள் இவரைப் பின்பற்றி குருவானார்கள். இவர் தன்னை பின்பற்றிய மற்ற துறவிகளையும் பாலைவனத்தில் கதவு இல்லாமல் அமைக்கப்பட்ட குடிசைகளில் வாழ வைத்தார்.

இவர் தன்னுடன் வாழ்ந்த அனைத்து குருக்களுக்கும் இறைவன் தனக்களித்த அன்பை வாரி வழங்கி தந்தையாய் இருந்தார். தனது துறவிகளுக்காக எதிரிகளால் பலமுறை வேதனைக்குட்படுத்தப்பட்டார். டையோக்ளேசியன் (Diocletian) என்ற அரசன் கிறிஸ்தவர்களை துன்புறுத்தியபோது உறுதியுடன் நம்பிக்கையை அறிக்கையிடுமாறு புனித அந்தோனியார் அவர்களை ஊக்குவித்தார். ஆரியன் (Arians) ஆதரவாளர்களுக்கு எதிராக போராடிய அத்தனாசியுசுக்கு துணை நின்றார்.

கரடுமுரடான கட்டாந்தரையில் படுத்து உறங்கி உப்பும், ரொட்டித் துண்டும் உண்டு உடலை ஒருத்து வாழ்ந்தார்.

புனிதரின் பக்தி முயற்சியை முறியடிக்க சாத்தான் பல வகைகளில் சோதித்தான் முடிவு தோல்வியே. அந்தோனியார் பல மீயியற்கை சோதனைகளை எதிர்கொண்டார், பல முறை சாத்தான் அவரை சோதித்தது. ஒரு முறை சாத்தான் பெண் வேடமிட்டு வந்து சோதிக்க சிலுவை அடையாளத்தால் அவனை முறியடித்தார், மறுமுறை தங்க, வெள்ளிக்கட்டிகளை பாதையில் இட்டு பொருளாசையால் சோதிக்க, அந்தோனியார் அதை ஒரு பொருட்டாய் மதிக்காமல் இயேசுவின் பெயரால் விரட்டியடித்தார். சிலுவை அடையாளத்தினாலும், இயேசுவின் பெயராலும், செபத்தாலுமே, பேய்களை எல்லாம் சிதறடித்தார்.

இறுதிக்காலம் :
தமது இறுதிக்காலம் நெருங்கியதை உணர்ந்த வனத்து அந்தோனியார், தமது சீடர்கள் அனைவரையும் "புனித மகாரியஸ்" (Saint Macarius) என்ற துறவியைப் பின்செல்ல அறிவுறுத்தினார். தமது அங்கி ஒன்றினை "புனித அதனாசியஸ்" (Saint Athanasius) என்பவருக்கு அளிக்கும்படி அறிவுறுத்தினார். மற்றொரு அங்கியினை தமது சீடர்களில் ஒருவரான "புனித செராபியனுக்கு" (Saint Serapion) அளிக்கும்படி அறிவுறுத்தினார்.

கி.பி 356ம் ஆண்டு இறந்த அவரது விருப்பப்படி அவரது சீடர் துறவிகளைத் தவிர வேறு எவருக்கும் தெரியாமல் அவரது கல்லறை இரகசியமாக மறைக்கப்பட்டது. கல்லறை வெளிப்படையாக இருந்திருந்தால் மக்கள் தம் கல்லறையையே பெரிதாக எண்ணி, படைத்த இறைவனை மறந்துவிடுவார்கள் என்று அவர் கருதியதே இதற்கு காரணம்.

அனேகமாக, இவர் தமது தாய்மொழியான "காப்டிக்" (Coptic) மொழியையே பேசினார். ஆனால் அவரது கற்பித்தல் யாவும் கிரேக்க மொழியாக்கத்திலேயே பரவின. இவரது சரித்திரம் "புனிதர் அதனாஸியசால்" (Saint Athanasius) எழுதப்பட்டன. "புனிதர் பெரிய அந்தோனியாரின் சரித்திரம்" (Life of Saint Anthony the Great) என்று தலைப்பிடப்பட்டது. இப்புனிதர் தாமாக துறவு மடம் எதுவும் நிறுவவோ அமைக்கவோ இல்லையென்றாலும், அவரைச்சுற்றி ஒரு சமூகம், அவரையும் அவரது துறவறத்தையும் அவரது தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையையும் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு வளர்ந்தது. புனிதர் அதனாஸியஸ் எழுதிய இவரது சரிதம், இவரது கொள்கைகளை பரப்புவதில் மிகவும் உதவியாக இருந்தது.




+++++++++++++++++++++++++++++++++++++++++++
 தூய வனத்து அந்தோனியார்✠( Antony of Egypt )

நிகழ்வு

தூய வனத்து அந்தோனியார் காட்டிற்குச் சென்று, கடுந்தவம் மேற்கொண்டிருந்தபோது சாத்தான் அவரைக் கடுமையாகச் சோதித்தது. "இவ்வளவு சொத்து சுகங்களை எல்லாம் விட்டுவிட்டு, இந்தக் காட்டுக்குள் வந்து இப்படிக் கஷ்டப்படுவதா?. பேசாமல் இங்கிருந்து போய், சந்தோசமான வாழ்க்கை வாழ்" என்று சொல்லி சாத்தான் அவரை மிகவும் சோதித்தது. அத்தகைய தருணங்களில் வனத்து அந்தோனியார் சாத்தானிடம், "ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவைத் தவிர, வேறு செல்வம் எனக்குத் தேவையில்லை" என்று சொல்லி சாத்தானின் தந்திரங்களை எல்லாம் முறியடித்தார். சாத்தான் அவரை வெற்றிகொள்ள முடியாது என்பதை உணர்ந்து அவரிடமிருந்து விலகிச் சென்றது.

சாத்தான் அவரைவிட்டு விலகிச் சென்றதும், அவர் இறைவனைப் பார்த்து, "இறைவா! என்னுடைய சோதனை வேளைகளில் என்னைவிட்டு நீ எங்கே போனாய்?" என்று கேட்டார். அதற்கு அவர், "நான் உன்னருகில்தான் இருந்தேன், உனக்கு எந்தவொரு துன்பமும் வராமல் காத்திருந்தேன், இனிமேலும் காத்திடுவேன். ஆனால் என்னவனோ நீதான் என்னை அழைக்கவேயில்லை" என்றார்.

வாழ்க்கை வரலாறு

தூய வனத்து அந்தோனியார் கி.பி. 251 ஆம் ஆண்டு எகிப்தில் உள்ள கோமா என்ற இடத்தில் செல்வச் செழிப்பான ஒரு குடும்பத்தில் பிறந்தார். இவருடைய குடும்பத்திற்கு என்று ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலபுலன்கள் இருந்தன. ஆசிரியர்கள் இவருடைய இல்லத்திற்கே வந்து, இவருக்குப் பாடங்களைச் சொல்லிக்கொடுத்தார்கள்.

இவருக்கு பதினெட்டு வயது நடந்துகொண்டிருந்தபோது, ஒருநாள் இவர் ஆலயத்தில் இருந்தபோது குருவானவர் சொன்ன, "நீ நிறைவுள்ளவனாக இருக்க விரும்பினால், முதலில் போய் உன்னுடைய உடமைகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடும், பின்னர் வந்து என்னைப் பின்தொடரும்" (மத் 19:21) என்ற வார்த்தைகள் அவரை மிகவே பாதித்தன. எனவே, அவர் தன்னுடைய வீட்டிற்கு வந்து, தனக்குச் சொந்தமான 3000 ஏக்கர் நிலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை தன்னுடைய தங்கைக்குக் கொடுத்துவிட்டு, மீத எல்லாவற்றையும் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, துறவற வாழ்க்கை மேற்கொள்ளத் தொடங்கினார். தொடக்கத்தில் வனத்து அந்தோனியார் தன்னுடைய ஊருக்கு அருகிலேயே துறவற வாழ்க்கையை மேற்கொண்டார். ஆனால், சாத்தானின் சோதனைகள் அங்கே அதிகமாக இருந்ததால் அவர் காட்டிற்குச் சென்று, தனியான ஓர் இடத்தில் தவ வாழ்வினை மேற்கொண்டார். கத்தோலிக்கத் திருச்சபையில் துறவு வாழ்க்கைக்கு வித்திட்டவர் இவர்தான் என்று சொன்னால் அது மிகையாது.

இவருடைய துறவு வாழ்க்கையைப் பார்த்த இளைஞர்கள் பலர் இவரிடத்தில் சீடராகச் சேர்ந்தார்கள். அதனால் இவர் தன்னுடைய 35 ஆம் வயதில் மேலும் இரண்டு துறவற மடங்களை நிறுவினார். அதில் ஜெபத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து வந்தார். விவிலியத்தை ஆழமாக வாசித்து, அதனை தியானித்து வந்தார். கி.பி 311 ஆண்டு, ரோமையில் மாஜிமின் என்ற மன்னன் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டபோது, வனத்து அந்தோனியார் அங்கே சென்று, அவர்களைக் கிறிஸ்தவ விசுவாசகத்தில் வளர்த்தார். நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார். இப்படி கடுமையான பக்தி முயற்சிகளையும் தவ முயற்சிகளையும் மேற்கொண்டு வந்த வனத்து அந்தோனியார் கி.பி. 356 ஆண்டு தன்னுடைய நூற்று ஆறாம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய வனத்து அந்தோனியாரின் விழாவைக் கொண்டாடும் நாம், இவருடைய வாழ்விலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

பணமல்ல, பரமன் இயேசுவே நமக்கு நிம்மதியை, நிலைவாழ்க்கைத் தருவார்

தூய வனத்து அந்தோனியாரின் வாழ்க்கையை ஆழ்ந்து வாசிக்கின்றபோது பணமல்ல, பரமன் இயேசுவே ஒருவருக்கு நிலைவாழ்வைத் தருவார் என்ற உண்மையை உணர்ந்து வாழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாது. அவர் ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவுக்காக எல்லாவற்றையும் இழந்தார், மிகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்துவந்தார். கிறிஸ்தவர்களாகிய நாம் யாருக்கு? எதற்கு? முக்கியத்துவம் தந்து வாழ்கிறோம் என்று ஆழமாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பாப் இசை உலகில் மிகவும் பிரபலமானவர் ஜிம் ரீவ்ஸ் (Jim Reeves) என்பவர். அவர் சொல்லக்கூடிய செய்தி, "ஒருவருக்கு வேண்டிய மட்டும் பணம், பொருள், செல்வம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும். அப்போது அவர் உணர்ந்து கொள்வார், இவையெல்லாம் ஒருவருக்கு நிம்மதியைத் தராது என்று. இக்கூற்றிற்கு இவருடைய வாழ்க்கையே மிகப்பெரிய சான்றாக இருக்கின்றது.

ஜிம் ரீவ்ஸ் பாப் இசை உலகில் மிகவும் பிரபலமாக இருந்ததால், இவருக்கு ஏராளமான பணமும், பொருளும், புகழும் வந்து குவிந்தன. தொடக்கத்தில் இவற்றால் மிகவும் மகிழ்ச்சியடைந்த ஜிம் ரீவ்ஸ், போகப் போக இவற்றால் தனக்கு நிம்மதி இல்லை என்ற உண்மையை உணர்ந்தார். ஒருகட்டத்தில் வாழ்க்கையை வெறுத்துப்போன இவர், தற்கொலை செய்துகொள்ளத் துணிந்தார். அப்போதுதான் இவருடைய நண்பர் இவரைச் சந்தித்து, "இந்தப் புத்தகத்தை வாசி" என்று சொல்லி விவிலியத்தை வாசிக்கக் கொடுத்தார். அவர் விவிலியத்தைப் படித்தபிறகுதான், "இந்த உலகத்தில் இருக்கும் ஒருவருக்கு பணமோ, பொருளோ, செல்வமோ, புகழோ எதுவும் நிம்மதியைத் தரப்போவதில்லை, இறைவன் ஒருவரால் மட்டுமே ஒருவருக்கு நிம்மதியைத் தர முடியும் என உண்மையை உணர்ந்தார்.

"தூய வனத்து அந்தோனியாரும் கூட பணமில்ல, இறைவன் ஒருவரால் மட்டுமே தனக்கு நிம்மதியைத்தர முடியும் என்பதை உணர்ந்தார். அதனால்தான் அவர், "இவ்வுலக வாழ்வு நிலையற்றது, மேலுலக வாழ்க்கைப் பற்றி தியானிப்பது அதிக பயன்தருவது என்று அடிக்கடி சொல்லி வந்தார். அதன்படி வாழ்ந்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாமும் இறைவன் ஒருவரே நமக்கு நிலை வாழ்வினைத் தரமுடியும் என்ற உண்மையை உணர்ந்து வாழ்வோம்.


ஜெப தவ வாழ்வு


தூய வனத்து அந்தோனியார் ஜெபத்திற்கும் தவவாழ்விற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாது. அவர் தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியை ஜெப, தவவாழ்விலே செலவழித்தார்.

அவருடைய விழாவைக்கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஜெபத்திற்கு நீண்ட நேரம் ஒதுக்காவிட்டாலும் ஒருநாளைக்கு ஒரு மணிநேரமாவது செலவழிக்கலாம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, "ஒருமணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா?" என்று (லூக் 26:40). ஆம், ஒவ்வொருவரும் ஜெபத்தின் வழியாக இறைவனோடு இணைந்திருக்கவேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பமாக இருக்கின்றது. இன்றைக்கு மனிதர்களாகிய நாம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறோம், எதை எதையோ செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஜெபத்திற்கும், இறைவனோடு உறவாடுவதற்கும் போதிய நேரம் ஒதுக்குகிகிறோமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது.

ஆகவே, தூய வனத்து அந்தோனியாரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம், ஜெபம் நம்முடைய வாழ்விற்கு முக்கியத்துவம் என்பதை உணர்வோம், அதே நேரத்தில் இறைவனிடம் ஜெபிப்பதற்கு போதிய நேரம் ஒதுக்குவோம், இறைவன் ஒருவரால் மட்டுமே நமக்கு நிலைவாழ்வைத் தர முடியும் என்பதை உணர்ந்து வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். Palay, Fr. Maria Antonyraj.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா